தமிழகச் செய்திகள்

அய்யா வைகுண்டர் யார்? அவர் சனாதனத்தைப் பாதுகாத்தாரா?

3 weeks 1 day ago
அய்யா வைகுண்டர் சனாதனத்தைப் பாதுகாத்தாரா? ஆளுநர் பேச்சுக்கு எதிர்ப்பு எழுவது ஏன்?

பட மூலாதாரம்,FACEBOOK

கட்டுரை தகவல்
  • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
  • பதவி, பிபிசி தமிழ்
  • 6 மார்ச் 2024, 08:09 GMT
    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

“சனாதன தர்மத்தைக் காப்பதற்கே அய்யா வைகுண்டர் தோன்றினார்” என, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது, அவரின் சமீபத்திய சர்ச்சைகளுள் ஒன்றாக மாறியுள்ளது. ஆளுநரின் பேச்சுக்கு எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன. என்ன நடந்தது?

அய்யா வைகுண்டரின் 192-ஆவது அவதார தின விழா மற்றும் ‘வைகுண்டசாமி அருளிய சனாதன வரலாறு' என்ற புத்தக வெளியீடு ஆகிய நிகழ்ச்சிகள், சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் மார்ச் 4 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “அய்யா வைகுண்டர் தோன்றிய காலகட்டம் சனாதன தர்மத்திற்கு பாதிப்பு ஏற்பட்ட காலம்; சனாதன தர்மத்தை காப்பதற்கே அய்யா வைகுண்டர் தோன்றினார்” என என்றார்.

இதுதொடர்பாக ஆளுநர் அலுவலகத்தின் அதிகாரபூர்வ ‘எக்ஸ்’ பக்கத்தில், “அய்யா வைகுண்டர் சனாதன தர்மத்துக்கு புத்துயிரூட்டி, பெரிதும் வளப்படுத்தினார். சமூக பாகுபாடுகளுக்கு எதிராகப் போராடி, விளிம்புநிலை மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு சமூக நீதியை உறுதி செய்தார்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
அய்யா வைகுண்டர் சனாதனத்தைப் பாதுகாத்தாரா? ஆளுநர் பேச்சுக்கு எதிர்ப்பு எழுவது ஏன்?

பட மூலாதாரம்,RAJ BHAVAN, TAMILNADU/X

படக்குறிப்பு,

தலைப்பாகை அணிந்துகொண்டு அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் ஆர்.என். ரவி.

வலுக்கும் எதிர்ப்பு

வைகோ வெளியிட்ட அறிக்கையில், “சாதி சமய வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை வலியுறுத்திய, சனாதனத்தின் எதிரியாகத் திகழ்ந்த அய்யா வைகுண்டரை சனாதனத்தின் காவலர் என்று ஆளுநர் உளறிக் கொட்டியிருக்கிறார். இந்துத்துவா கோட்பாட்டுக்கு ஆதரவாக ஆர்.எஸ்.எஸ் பிரசாரகர் போல ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து செயல்பட்டு வருவது கடுமையான கண்டனத்துக்குரியது” என தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சாமிதோப்பு தலைமை பதி அடிகளார் பாலபிரஜாபதி, “ஆளுநர் வெளியிட்ட புத்தகம், அய்யா வைகுண்டர் வரலாற்றை திரிக்கும் முயற்சி. சனாதனத்தின் வேராக மனுதர்மம் இருக்கிறது. சனாதனத்திற்கு எதிரான செயல்களைத்தான் அய்யா வைகுண்டர் செய்திருக்கிறார்."

"பெண்ணடிமைத்தனம், சாதியத்திற்கு எதிரானவற்றை தான் செய்திருக்கிறார். இவை இரண்டுக்கும் ஆதரவானது சனாதனம். புராணமும் ஆகமங்களும் பொய்யானவை என கூறியிருக்கிறார். வைகுண்டரை அறிந்துகொண்டு தான் பேச வேண்டும். அவர் பேசியது தவறானது” என்றார்.

மேலும் பேசிய அவர், “பெண்கள் மேலாடை அணியக் கூடாது, குடத்தில் தண்ணீர் பிடிக்கக் கூடாது, தெருவுக்குள் வரக்கூடாது என்ற அடக்குமுறையெல்லாம் எதிர்த்தவர் அய்யா. இந்த வழிபாட்டில், உருவ வழிபாடு, பூஜை, புனஸ்காரம், ஹோமம் வளர்த்தல், யாகங்கள், மந்திரங்கள் இல்லை, அவரவர் தாய்மொழியிலேயே வழிபட முடியும். சமஸ்கிருதத்தில்தான் மந்திரம் சொல்ல வேண்டும் எனக்கூறும் சனாதனத்தை இதில் ஒப்பிடக் கூடாது” என்றார்.

அய்யா வைகுண்டர் வழிபாட்டின் தனித்துவம் என்ன? அய்யா வைகுண்டர் உண்மையில் சனாதனத்தைப் பாதுகாத்தவரா? அய்யா வைகுண்டர் வழிபாட்டை பின்பற்றுபவர்கள் என்ன சொல்கின்றனர்?

 
அய்யா வைகுண்டர் சனாதனத்தைப் பாதுகாத்தாரா? ஆளுநர் பேச்சுக்கு எதிர்ப்பு எழுவது ஏன்?

பட மூலாதாரம்,FACEBOOK

அய்யா வைகுண்டர் யார்?

19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்பு பகுதியில் பிறந்தவர் அய்யா வைகுண்டர். “அவரின் இயற்பெயர் முத்துக்குட்டி” என்கிறார், வரலாற்று ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன்.

அக்காலத்தில், கன்னியாகுமரி, திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ளடங்கியிருந்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மன்னரின் ஆட்சியின்கீழ் நாடார்கள், ஈழவர்கள் உள்ளிட்ட 18 தாழ்த்தப்பட்ட சாதியினர் மீது ஒடுக்குமுறைகள் நிலவிவந்தன.

பெண்கள் மேலாடை அணியக் கூடாது, குடத்தில் தண்ணீர் பிடிக்கக் கூடாது, தெருவுக்குள் வரக்கூடாது என பல அடக்குமுறைகள் நிலவியதாக கூறுகிறார், ஆ.சிவசுப்பிரமணியன்.

பெண்கள் தங்கள் மார்பகங்களை மறைக்க வேண்டுமானால் வரி செலுத்த வேண்டும் என திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் கொடும் அடக்குமுறைகள் நிலவியதாக குறிப்பிடுகிறார் அவர். இத்தகைய அடக்குமுறைகளை எதிர்த்து அய்யா வைகுண்டர் மக்களை ஒன்றுதிரட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தியதாக வரலாற்று ஆய்வாளர்களும் அவரை பின்பற்றுபவர்களும் கூறுகின்றனர்.

“அய்யா வைகுண்டரை நாடார்கள் அதிகம் வழிபடுகின்றனர். அந்த சமூகத்தினருக்கு அவர் ஓர் எழுச்சியை உருவாக்கினார். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் முலை வரி போட்டிருக்கின்றனர். இதுதவிர, பல்வேறு வரி கொடுமைகளுக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் ஆளாகியிருக்கின்றனர். என்னென்ன வரிகள் போட்டிருக்கின்றனர் என்பதை அவரே பாடியிருக்கிறார். வரி கொடுக்கவில்லை என்றால் அடிப்பார்கள்.

‘கருப்பட்டி கேட்டடிப்பான். பனை நுங்கு கேட்டடிப்பான்’ என அய்யா வைகுண்டரே பாடியிருக்கிறார்” என்கிறார், சிவசுப்பிரமணியன்.

அத்தகைய கொடுமைகளுக்கு ஆளான மக்கள், தங்களை மீட்க வந்தவராக அய்யா வைகுண்டரை கருதி அவரை கடவுளாக வழிபடும் போக்கு தோன்றியுள்ளது. ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்காக இயங்கினார்” என்கிறார் அவர்.

 
அய்யா வைகுண்டர் சனாதனத்தைப் பாதுகாத்தாரா? ஆளுநர் பேச்சுக்கு எதிர்ப்பு எழுவது ஏன்?
படக்குறிப்பு,

ஆ. சிவசுப்பிரமணியன்

அய்யா வைகுண்டர் வழிபாடு

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இந்த வழிபாடு அகிகமாக இருக்கிறது. சென்னையில் மணலி புதூர் பகுதியில் இதற்கென வழிபாட்டுத்தலம் உள்ளது. கேரளாவில் பத்தனம்திட்டா, பொன்னானி உள்ளிட்ட பகுதிகளிலும் பெங்களூரு, மும்பையில், இடம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் சில பகுதிகளிலும் வழிபடப்படுகிறது.

சாதிக்கு அப்பாற்பட்டு இந்த வழிபாடு நடத்தப்பட்டாலும் நாடார் சமுதாயத்தினரே அய்யா வைகுண்டரை பெரும்பாலும் வழிபடுகின்றனர்.

அய்யா வைகுண்டர் வழிபாட்டில் உருவ வழிபாடு இல்லை. வழிபாட்டு தலத்தில் நிலைக்கண்ணாடியைத்தான் வைத்து வழிபடுவர். பூஜைகள், அர்ச்சனைகள் இல்லை. பலியிடுதல், தீப ஆராதனைகள் கிடையாது. விளக்கேற்றி அதன் ஒளியைத்தான் வழிபடுவர்.

அகிலத்திரட்டு அம்மானை, அருள் நூல் ஆகிய இரண்டு நூல்கள்தான் இந்த வழிபாட்டின் அடிப்படை.

“அகிலத்திரட்டு அம்மானை முற்றோதல் விழா ஊர்கூடி பத்து நாட்கள் நடத்துவர்” என்கிறார் சிவசுப்பிரமணியன்.

அய்யா வைகுண்டர் கோவிலுக்கு வரும் ஆண்கள், சட்டை அணிந்திராமல், தலைப்பாகை அணிந்திருக்க வேண்டும்.

“தலைப்பாகை அணிவது, சாதிய ஒடுக்குமுறைகளின் ஓர் அங்கம். எல்லோராலும் தலைப்பாகை அணிய முடியாது. அதை ஒழிக்கவே, தலைப்பாகை அணிந்து அவரை வழிபடுகின்றனர். இதுவொரு வகையில் மரபு மீறல்” என்கிறார், ஆ. சிவசுப்பிரமணியன்.

ஹோமம் வளர்த்து, வேதங்கள் ஓதுவது அய்யா வழி திருமணங்களில் இல்லை, கணவர் இறந்தால் தாலியை கழற்றும் வழக்கமும் இல்லை என வழிபாட்டாளர்கள் கூறுகின்றனர்.

“இப்படி, ஆகம, வேதங்களுக்கு எதிராகத்தான் வைகுண்டர் இருந்திருக்கிறார். ஆளுநர் ஆர்.என். ரவி சான்று வலு இல்லாமல் பேசக்கூடாது. குழந்தை திருமணம், கல்வி மறுப்பு, உடன்கட்டை ஏறுதல் எல்லாவற்றையும் தான் சனாதனமும் வைதீகமும் போதிக்கிறது. இதனை எதிர்த்தவர் வைகுண்டர். புனித நூல்களை எல்லோராலும் படிக்க முடியாது என்பதுதான் சனாதனம். வேதம் ஓதுவதை மறைந்திருந்து கேட்டவர்களின் காதுகளில் ஈயத்தைக் கரைத்து ஊற்றுவதுதான் சனாதனம். ஆளுநரின் பேச்சு முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்று உள்ளது.” என்றார், ஆ.சிவசுப்பிரமணியன்.

 
வழிபடுபவர்கள் என்ன சொல்கின்றனர்?

தன் தாத்தாவின் காலத்திலிருந்து அய்யா வைகுண்டரை தங்கள் குடும்பம் வழிபடுவதாக கூறுகிறார், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரேம்சங்கர்.

“அகிலத்திரட்டு அம்மானையில் வாழ்க்கை நெறிமுறைகள் கூறப்பட்டிருக்கும். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிறைய ஏற்றத்தாழ்வுகளும் பிரிவினைகளும் இருந்தன. சாதிய அடக்குமுறைகள் அதிகமாக இருந்தன. தீண்டாமையும் வரிகளும் விதிக்கப்பட்டன. அப்போது பனையேற்று தொழில்தான் முதன்மை தொழில். பதநீர் எடுப்பதற்கும் நுங்கு, ஓலை எடுப்பதற்கும் வரிகள் விதிக்கப்பட்டன. இதுகுறித்து அகிலத் திரட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டர் இதை எதிர்த்து சண்டை போடவில்லை, மக்களை ஒன்றுதிரட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்” என்கிறார் அவர்.

'விளக்கொளி போலே வீரம தாயிருங்கோ’ என கூறியிருக்கிறார். `இறைவன் முன்பு அனைவரும் சமம்` என்று கூறியவர். அனைத்து சாதி மக்களும் ஒன்றாக அமர்ந்து அன்னதானத்தில் சாப்பிடும் முறை பின்பற்றப்படுகிறது” என இந்த வழிபாட்டு முறை குறித்து பிரேம் சங்கர் தெரிவித்தார்.

அய்யா வைகுண்டர் சனாதனத்தைப் பாதுகாத்தாரா? ஆளுநர் பேச்சுக்கு எதிர்ப்பு எழுவது ஏன்?

பட மூலாதாரம்,BHAVAN, TAMILNADU/X

வாக்குக்காக கவர நினைக்கிறதா பாஜக?

பாஜக குறித்து பாலபிரஜாபதி கூறுகையில், “அய்யா வைகுண்டரை அவர்கள் (பாஜக) எடுத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால், அது நடக்காது. அதற்கு முந்தைய ஆண்டுகளில் இதுகுறித்து பேசியிருக்கிறாரா? தேர்தல் நேரத்தில், 4-5 மாவட்டங்களில் அய்யா வைகுண்டரை கணிசமான எண்ணிக்கையில் வழிபடுபவர்களை கவர வேண்டும் என பார்க்கிறார்கள்” என்றார்.

பாஜக என்ன சொல்கிறது?

“ஆளுநர் தன் கருத்தை தெரிவித்திருக்கிறார். அதுகுறித்து பாஜக சார்பாக என்ன சொல்ல முடியும்? ஆளுநரிடம்தான் கேட்க வேண்டும்” என, பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்தார்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே அய்யா வைகுண்டர் அவதார விழா அன்று, அவரை நினைவுகூர்ந்து, தமிழ்நாடு பாஜக, பிரதமர் மோதியின் அதிகாரபூர்வ பக்கங்களில் பதிவுகள் பகிரப்பட்டுள்ளன.

இந்தாண்டும் பிரதமர் ‘எக்ஸ்’ தளத்தில்,“அய்யா வைகுண்ட சுவாமிகளின் பிறந்த நாளில் அவரை வணங்குகிறேன். பிறருக்கு சேவை செய்வதற்கும், அனைவருக்கும் சமமான நீதியுடைய சமுதாயத்தை வளர்ப்பதற்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் அய்யா வைகுண்டர். மனிதகுலத்திற்கான அவரது பார்வையை நிறைவேற்றுவதற்கான, எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.” என பதிவிட்டுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/cg3q65xy8n8o

தமிழ்நாட்டில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோதி குற்றம்சாட்டு

3 weeks 1 day ago
சூடோபெட்ரின்: மெத்தபெட்டமைன் தயாரிக்கப் பயன்படும் இந்தப் பொருள் தமிழ்நாட்டுக்குள் எப்படி வருகிறது?
தமிழ்நாட்டில் போதைப் பொருள் பரவல்

பட மூலாதாரம்,HANDOUT

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாட்டில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோதி குற்றம்சாட்ட, அதனை மறுத்திருக்கிறது தமிழக காவல்துறை. போதைப் பொருள் பயன்பாடு தொடர்பான கவனம் தமிழ்நாட்டின் மீது திரும்பியிருக்கும் நிலையில், கடும் நடவடிக்கைகள் எடுத்துவருவதாகக் கூறுகிறது தமிழக அரசு. இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது?

கடந்த சில நாட்களுக்கு முன்பாக, மேற்கு தில்லியின் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் சூடோபெட்ரின் (Pseudoephedrine) என்ற தடைசெய்யப்பட்ட பொருள் 50 கிலோ அளவுக்குக் கைப்பற்றப்பட்டது.

மெத்தாஃபெட்டமைன் என்ற போதைப் பொருளைத் தயாரிக்க இந்த சூடோபெட்ரின் உதவும் என்பதால், இவ்வளவு பெரிய அளவில் அந்தப் பொருள் பிடிபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 
தமிழ்நாட்டில் போதைப் பொருள் பரவல்

பட மூலாதாரம்,@BJP4TAMILNADU/X

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் இருந்து வந்த தகவல்களின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இந்தியாவில் இருந்து தேங்காய்த் தூள் என அனுப்பப்பட்ட பொட்டலங்களில் சூடோபெட்ரின் இருந்ததாக இந்த நாடுகள் தெரிவித்திருந்தன. இதையடுத்துத்தான் சம்பந்தப்பட்ட கிடங்கில் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது அங்கிருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 2,000 கோடி ரூபாய் மதிப்பிற்கு 45 முறை இதுபோல வெளிநாடுகளுக்கு இந்த போதைப் பொருள் அனுப்பப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதன் பின்னணியில் ஜாபர் சாதிக் என்பவர் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரைத் தேடுவதற்கான பணிகள் துவங்கின. சென்னையில் இருந்த அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டு, ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அவர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க விமான நிலையங்களுக்கு 'லுக் அவுட்' நோட்டீஸும் விடுக்கப்பட்டது. அவரது 8 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன.

ஜாபர் சாதிக் தி.மு.கவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்து வந்த நிலையில், அவரைக் கட்சியைவிட்டு நீக்குவதாக தி.மு.க. அறிவித்தது. அவருடைய சகோதாரர் அ. முகமது சலீம் என்பவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்து செயல்பட்டு வந்தார். அவர் வி.சிகவிலிருந்து நீக்கப்படுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது. இன்னமும் ஜாபர் சாதிக்கும் முகமது சலீமும் தலைமறைவாகவே இருந்து வருகின்றனர்.

ஆனால், இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் உடனடியாக கையில் எடுத்துக்கொண்டன. முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.கவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிச்சாமி. பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை இதனை முன்வைத்து ஆளும் கட்சி மீது கடுமையான தாக்குதலை நடத்தினர்.

எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் இது தொடர்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றையும் அ.தி.மு.க. நடத்தியது.

இதன் உச்சகட்டமாக மார்ச் 4ஆம் தேதியன்று சென்னைக்கு வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும் இதைச் சுட்டிக்காட்டிப் பேசினார். "ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சியின் சார்பில், போதைப் பொருட்கள் தங்குதடையின்றி அனைத்து இடங்களிலும் புழங்கிவருகிறது என்பது என் மனதை உருக்கும் கவலை" என்று குறிப்பிட்டார் மோதி.

 
தமிழ்நாட்டில் போதைப் பொருள் பரவல்
தமிழ்நாடு காவல்துறை கூறுவது என்ன?

பிரதமரின் பேச்சுக்கு பதில் சொல்லும் வகையில், கடந்த ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் எவ்வளவு போதைப் பொருட்கள் தமிழ்நாட்டில் பிடிபட்டன என்பது குறித்த விவரத்தை தமிழக காவல்துறை வெளியிட்டது. காவல்துறை வெளியிட்ட தகவல்களின்படி, போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக 470 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

மாநிலம் முழுவதும் சேர்த்து 1914 கிலோ கஞ்சா, 2 கிலோ மெத்தபெட்டமைன், வலி நிவாரணியான டெபென்டடால் 100 எம்ஜி மாத்திரைகள் 70, 321 நைட்ரேசன் மாத்திரைகள், 2200 டைடால் மாத்திரைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டிருக்கின்றன.

இதற்கிடையில், தமிழ்நாட்டின் இரண்டு இடங்களில் மத்திய அரசின் வருவாய் புலனாய்வுத் துறையினரால் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டிருப்பதும் நடந்திருக்கிறது.

மார்ச் 1ஆம் தேதி அதிகாலை மதுரைக்கு வந்த சேர்ந்த பொதிகை ரயிலில் இருந்து இறங்கிய நபரிடமிருந்து 15 கிலோ பவுடர், 15 கிலோ திரவ வடிவிலான மெத்தம்பெட்டமைன் (Methamphetamine) போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. போதைப் பொருளுடன் பிடிபட்ட நபர், சென்னையைச் சேர்ந்த பிள்ளமன் பிரகாஷ் என அடையாளம் காணப்பட்டார்.

அவர் தந்த தகவல்களின் அடிப்படையில், சென்னையில் இருந்து 3 பொட்டலங்களில் ஆறு கிலோ எடையுள்ள மெத்தபெட்டமைனை கைப்பற்றப்பட்டது. இந்த போதைப் பொருளை இலங்கைக்கு கடத்த அவர் திட்டமிட்டிருந்ததாக வருவாய் புலனாய்வுத் துறை கூறியது. மொத்தமாக மதுரையிலும் சென்னையில் மொத்தமாக கைப்பற்றப்பட்ட 36 கிலோ எடையுள்ள மெத்தம்பெட்டமைனின் சர்வதேச மதிப்பு 180 கோடி ரூபாய் இருக்கும், என்றும் வருவாய் புலனாய்வுத் துறை குறிப்பிட்டது.

 
தமிழ்நாட்டில் போதைப் பொருள் பரவல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கைக்கு கடத்தப்பட்ட போதைப் பொருள்

இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பே, மார்ச் ஐந்தாம் தேதி ராமேஸ்வரம் கடல் பகுதியில் இலங்கையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த படகை வழிமறித்த வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள், அந்தப் படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து சாக்குப் பைகளைக் கைப்பற்றியதாகவும் அந்த சாக்குப் பைகளில் இருந்து 99 கிலோ எடையுடைய 111 பாக்கெட்களை எடுத்ததாகவும் தெரிவித்தனர்.

அந்தப் பாக்கெட்டுகளில் இருந்த பழுப்பு நிற பிசுபிசுப்பான பொருளை ஆய்வு செய்ததில், அது தடைசெய்யப்பட்ட போதைப் பொருளான ஹஷீஷ் என்பது தெரியவந்ததாக வருவாய் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. படகிலிருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

தங்களுக்கு இந்தப் பொருளை பாம்பனில் இருந்த ஒருவர்தான் தந்து, இலங்கையைச் சேர்ந்த ஒருவரிடம் தரச் சொன்னதாக கூறியதையடுத்து, அந்த நபரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

தொடர்ந்து நடந்த விசாரணைகளில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து எடுத்துவரப்பட்ட இந்த போதைப் பொருள் இலங்கைக்குக் கடத்தப்படுவதற்காக இங்கே கொண்டுவரப்பட்டதாக வருவாய் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.

 
தமிழ்நாட்டில் போதைப் பொருள் பரவல்
போதைப் பொருள் பயன்பாடு தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளதா?

தமிழ்நாட்டில் போதைப் பொருள் அதிகரித்துள்ளதா, இல்லையா என்பதைச் சொல்லும் வகையில் நடப்பு வருடத்திற்கான புள்ளிவிவரங்கள் ஏதும் இதுவரை பதிப்பிக்கப்படவில்லை. 2022ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் தான் மிக சமீபத்திய புள்ளிவிவரம்.

மதுவிலக்குத் துறையின் 2023-24ஆம் ஆண்டிற்கான கொள்கை விளக்கக் குறிப்புகளின்படி பார்த்தால், 2022ஆம் ஆண்டு 10,665 வழக்குகள் இது தொடர்பாக பதிவுசெய்யப்பட்டுள்ளன. 28,383 கிலோ கஞ்சா பிடிபட்டுள்ளது. 63,848 மாத்திரைகள் பிடிபட்டுள்ளன. 98 கிலோ இதர போதைப் பொருட்கள் பிடிபட்டுள்ளன.

2022ஆம் ஆண்டில், கஞ்சாவைத் தவிர்த்த பிற பொருட்கள் மிகக் குறைவாகவே பிடிபட்டுள்ளன. ஓபியம் அடிப்படையிலான ஹெராயின் 21 கிலோ 360 கிராமும், கொக்கையின் 104 கிராமும் சூடோஎஃபிட்ரின் 27 கிலோவும் எல்.எஸ்.டி. 1 கிலோ 640 கிராமும் மெதாபெட்டமைன் 18 கிலோ 111 கிராமும் பிடிபட்டுள்ளன.

தமிழ்நாட்டில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்திருக்கிறதா என்பதை உடனடியாகச் சொல்ல முடியாது என்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள்.

"சூடோஎஃபிட்ரின் கடத்தப்படுவது பல காலமாக நடந்துவருகிறது. சூடோஎஃபிட்ரின் என்பது ஒரு மருந்துப் பொருள். அது இருமல் மருந்துகளில் சேர்க்கப் பயன்படுத்தப்படுகிறது. இதனை தனி மனிதர்கள் யாரும் தயாரிக்க முடியாது. மருந்து நிறுவனங்கள்தான் தயாரிக்க முடியும். இந்திய அளவில் எந்தெந்த மருந்து நிறுவனங்கள் இதனைத் தயாரிக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரியும்."

"அங்கிருந்து கசியும் மருந்துகள்தான் இப்படி கடத்தப்படுகின்றன. இந்த சூடோஎஃபிட்ரினை வைத்துத்தான் மெத்தபெட்டமைன் தயாரிக்கப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கஞ்சாதான் அதிகம் பிடிபடும் போதைப் பொருளாக இருக்கிறது. தமிழ்நாட்டில் அதீதமான அளவில் திடீர் அதிகரிப்பு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை" என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத காவல்துறை அதிகாரி ஒருவர்.

ஆனால், கடந்த சில நாட்களில் போதைப் பொருள் தொடர்பாக வெளியாகும் செய்திகளை வைத்துப் பார்த்தால், தமிழ்நாட்டில் திடீரென போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்ததைப் போன்ற தோற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில், ஆளும்கட்சி உடனடியாக சேதத் தடுப்பு நடவடிக்கையில் இறங்கியது.

 
அரசு கூறுவது என்ன?

நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்து இதுதொடர்பாக விளக்கமளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, குஜராத்தில்தான் போதைப் பொருள் அதிகம் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

"தமிழ்நாட்டில் கஞ்சா விளைவிக்கப்படுவதில்லை. ஆந்திர மாநிலத்தில் விளைகிறது. அந்த மாநில டிஜிபியுடன் பேசி அதனைத் தடுக்க முயற்சித்து வருகிறோம். கடந்த ஆட்சியில் அமைச்சரே கஞ்சா வியாபாரத்திற்கு ஆதரவாக இருந்தார். இப்போது அவர் மீது வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. "

"2019இல் 11,418 கிலோ கஞ்சாவும் 2020இல் 15,144 கிலோ கஞ்சாவும் 2021இல் 20,431 கிலோ கஞ்சாவும் 2022இல் 28,383 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் 23,364 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தவிர, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தாம்பரம், ஆவடி, செங்கல்பட்டு, பெரம்பலூர் பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஒரு கட்சியில் பொறுப்பில் இருப்பவர்கள்" என்று குறிப்பிட்ட அமைச்சர் ரகுபதி, அவர்கள் பா.ஜ.கவில் என்ன பொறுப்பில் இருக்கிறார்கள் என்பதை வாசித்தார்.

மேலும், குஜராத்தில்தான் போதைப் பொருள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

இதற்கிடையில் சில குறிப்பிட்ட ரக மருந்துகளை வாங்கி போதைப் பொருளாக பயன்படுத்துவதைத் தடுக்க சென்னை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, X, H, H1 ஆகிய பிரிவுகளின் கீழ் வரும் மருந்துகளை விற்கக்கூடிய மருந்துக் கடைகள் அனைத்தும் ஒரு மாதத்திற்கு சிசிடிவிகளை பொருத்த வேண்டுமெனக் கூறியுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/ckmv0mz33v7o

சென்னை கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள அதிவேக ஈனுலை ஆபத்தானதா? எவ்வாறு செயல்படும்?

3 weeks 1 day ago
அதிவேக ஈனுலை ஆபத்தானதா?

பட மூலாதாரம்,X/ANI

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 4 மார்ச் 2024
    புதுப்பிக்கப்பட்டது 5 மார்ச் 2024

தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் அமைந்துள்ள அணுமின் நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள அதிவேக ஈனுலையின் எரிபொருள் நிரப்பப்படுவதை பிரதமர் மோதி பார்வையிட்டுள்ளார். ஆனால், இந்த ஈனுலை ஆபத்தானது என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். இதில் உண்மையில் பிரச்னை இருக்கிறதா?

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அதிவேக ஈனுலை

கல்பாக்கத்தில் உள்ள அணுஉலை வளாகத்தில் இந்த முதலுறு அதிவேக ஈனுலை அமைக்கப்பட்டிருக்கிறது. இதனை இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் (IGCAR) வடிவமைத்துச் செயல்படுத்துகிறது. அதிவேக ஈனுலைகளை உருவாக்கும் திட்டம் 1980களில் திட்டமிடப்பட்டது.

இதன் கட்டுமானப் பணிகள் 2004ஆம் ஆண்டில் துவங்கப்பட்டன. இந்தப் பணிகள் 2010ல் முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. பிறகு, ஒவ்வொரு ஆண்டாக இது தள்ளிச் சென்றது. கட்டுமானத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, இந்தத் திட்டத்திற்கான செலவு கிட்டத்தட்ட இரு மடங்காகியிருக்கிறது. ஆரம்பத்தில் இந்தத் திட்டம் 3,492 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2019 நவம்பரில் இந்தத் திட்டத்திற்கான மதிப்பு 6,840 கோடி ரூபாயாக இருக்கும் என மாநிலங்கள் அவையில் அரசு தெரிவித்தது.

கடந்த ஆண்டு கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவடைந்து குளிர்விப்பானான சோடியத்தை நிரப்பும் பணி, 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் பத்தாம் தேதி துவங்கி 15ஆம் தேதி முடிக்கப்பட்டது. 2024 மார்ச் 4ஆம் தேதியன்று எரிபொருள் நிரப்பப்பட்டிருக்கிறது.

இந்த அணு உலை வெற்றிகரமாகச் செயல்படும் நிலையில், இந்தியாவில் அதிகம் கிடைக்கும் தோரியத்தை இந்த அணு உலையில் பயன்படுத்த முடியும். இந்த அணு உலை 500 மெகா வாட் உற்பத்தித் திறனைக் கொண்டது. 40 ஆண்டுகளுக்கு இந்த அணு உலை பயன்பாட்டில் இருக்கும்.

இந்த அணு உலையில் ஆரம்ப கட்டத்தில் யுரேனியமும் புளுட்டோனியமும் கலந்த எரிபொருள் பயன்படுத்தப்படும். எரிபொருள் தண்டுகளை தாராப்பூரில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையம் தயாரித்து அளிக்கும்.

 
அதிவேக ஈனுலைக்கு எதிர்ப்பு
சுற்றுச்சூழலியலாளர்கள் எதிர்ப்பு

சென்னைக்கு வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, கல்பாக்கத்தில் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் உள்ள முதலுறு அதிவேக ஈனுலை (Prototype Fast Breeder Reactor - PFBR)ல் எரிபொருள் நிரப்பப்படுவதை பார்வையிட்டார்.

ஆனால், இந்த அதிவேக ஈனுலைகள் அமைக்கப்படுவதற்கு சுற்றுச்சூழலியலாளர்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்த அதிவேக ஈனுலைகள் எளிதில் விபத்து ஏற்படக்கூடிய அபாயம் கொண்டவை என்கிறார்கள் அவர்கள்.

இது தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஈனுலை தொழில்நுட்பம் பாதுகாப்பற்றது, தேவையற்றது, அதிக பொருளாதாரச் சுமையை ஏற்படுத்துவது உள்ளிட்ட காரணங்களால் அதை விட்டுவிட்டன. இந்த வகை உலைகளில் குளிர்விப்பானாக பயன்படுத்தப்படும் திரவ சோடியம் கசிந்த காரணத்தால் பிரான்ஸ், ஜப்பான் நாடுகளில் இத்திட்டம் தாமதம் அல்லது கைவிடப்பட்டது" என சுட்டிக்காட்டியுள்ளனர்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்.

"அதிவேக ஈனுலைகள் தேவையே இல்லை"

"அதிவேக ஈனுலைகளை உருவாக்கும் முயற்சியில் பல நாடுகள் தோற்றுவிட்டன. இந்த அதிவேக ஈனுலைகளில் திரவ சோடியம் கட்டுப்படுத்தும் காரணியாகவும் (Moderator) குளிர்விப்பானாகவும் பயன்படுத்தப்படுகிறது. திரவ சோடியம் எளிதில் தீப்பிடிக்கக் கூடியது. ஈரம் பட்டாலே தீ விபத்து ஏற்படும் சாத்தியங்கள் இதில் உள்ளன. ஜப்பானின் மோஞ்சுவில் உள்ள அணு உலையில் இதேபோல, சோடியம்தான் குளிர்விப்பானாக பயன்படுத்தப்பட்டுவந்தது. 1995ல் அந்த அணு உலையில் சோடியம் செல்லும் பைப்பில் இருந்து, சோடியம் கசிந்து பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

மேலும், யுரேனியத்தைப் பயன்படுத்தும் அணு உலைகளைவிட, இந்த அணு உலைக்கான செலவு மிக அதிகம். ஒரு காலகட்டத்தில் உலகில் யுரேனியம் மிக அரிதாகவே கிடைத்துவந்தது. அணு உலை எரிபொருளுக்கான தேவை அதிகம் இருந்ததால், இப்படி ஒரு தொழில்நுட்பம் யோசிக்கப்பட்டது. ஆனால், இப்போது பெரிய அளவில் யுரேனிய சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன. ஆகவே இந்தத் திட்டத்திற்கான தேவையே இப்போது இல்லை" என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த கோ. சுந்தர்ராஜன்.

அதிவேக ஈனுலைக்கு எதிர்ப்பு

பட மூலாதாரம்,T.V.VENKATESWARAN

"அதிவேக ஈனுலை பற்றிய அச்சம் வேண்டாம்"

ஆனால், இந்த அணு உலை குறித்த அச்சங்கள் தேவையற்றவை என்கிறார் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானியான முனைவர் த.வி. வெங்கடேஸ்வரன்.

"இந்த அதிவேக ஈனுலை குறித்த அச்சங்கள் தேவையற்றவை. கடந்த ஐம்பது ஆண்டுகளாக இதேபோன்ற 'Fast Breeder Test Reactor' செயல்பட்டு வருகிறது. அதில் கிடைத்த அனுபவம் இந்த ஈனுலையை இயக்குவதற்கு உதவும். தவிர, இந்த சோதனை ரியாக்டரில் சோடியம் கசிந்து விபத்து ஏற்பட்டதில்லை. கடந்த ஐம்பதாண்டுகளில் ஆபத்து ஏற்படும் அளவுக்கு எந்த விபத்தும் ஏற்பட்டதில்லை.

உலகில் எல்லா அதிவேக ஈனுலைகளிலும் புளுட்டோனியத்தையே பயன்படுத்துகிறார்கள். நாம் தோரியத்தை பயன்படுத்துகிறோம். தோரியத்தை வைத்து அணுகுண்டு தயாரிக்க முடியாது" என்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன்.

இந்த அணு உலை செயல்படும் விதம் குறித்தும் விளக்கும்போது, "இயற்கையில் யுரேனியம் இரண்டு விதங்களில் கிடைக்கும். ஒன்று யுரேனிம் - 235. மற்றொன்று யுரேனியம் 238. இதில் யுரேனியம் 235 மட்டுமே அணு உலைகளில் பயன்படும். இயற்கையில் 1/141 என்ற விகிதத்தில்தான் யுரேனியம் 235ம் யுரேயனியம் 238ம் கிடைக்கின்றன. அதிவேக ஈனுலைகளில் யுரேனியம் - 238ஐ blanketஆக பயன்படுத்தினால் அது, புளுட்டோனியம் 239ஆக மாறிவிடும். இதனை மீண்டும் எரிபொருளாக பயன்படுத்தலாம். அல்லது அணுஆயுதம் தயாரிக்கவும் பயன்படுத்தலாம்.

ஆனால் இங்குள்ள அதிவேக ஈனுலையில், தோரியம்தான் blanketஆக பயன்படுத்தப்படுகிறது. தோரியத்தை blanketஆக பயன்படுத்தினால் அது யுரேனியம் 233ஆக மாறிவிடும். இந்த யுரேனியம் 233ஐ மூன்றாம் கட்ட அணுஉலைகளில் எரிபொருளாக பயன்படுத்தலாம். இப்படி இன்னொரு அணு உலைக்கு எரிபொருள் தருவதால், இதனை ஈனுலைகள் என்கிறோம். இந்த யுரேனியம் 233ஐ வைத்து வைத்து அணுகுண்டு செய்ய முடியாது" என்கிறார்.

தற்போது உலகில் யுரேனியம் போதுமான அளவுக்குக் கிடைத்தாலும், இந்தியாவில் அது மிக அரிதாகவே கிடைக்கிறது. தோரியம் அதிக அளவில் கிடைக்கிறது. எனவே, எரிசக்தி பாதுகாப்பு எனும் நோக்கில் இந்த ஈனுலைகள் அவசியமானவைதான் என்கிறார் வெங்கடேஸ்வரன்.

 
அதிவேக ஈனுலையால் ஆபத்தா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதிவேக ஈனுலை தயாரிக்கும் 'பாவினி' கூறுவது என்ன?

இந்த அதிவேக ஈனுலைகள் Bharatiya Nabhikiya Vidyut Nigam Limited - பாவினி - என்ற பொதுத்துறை நிறுவனத்திற்குச் சொந்தமானவை.

இந்தியாவில் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், யுரேனியத்தைக் குறைவாகவும் தோரியத்தை அதிகமாகவும் பயன்படுத்தும் வகையில் மூன்று கட்டங்களாக தனது அணுசக்தித் திட்டத்தைச் செயல்படுத்துவதாக பாவினி கூறுகிறது.

இதில் ஒவ்வொரு கட்டமும் அடுத்த கட்டத்தோடு தொடர்புடையவை. ஒரு கட்டத்தில் எரிக்கப்பட்ட எரிபொருள், அடுத்த கட்டத்தில் எரிபொருளாக பயன்படுத்தும் வகையில் இந்த அணுசக்தித் திட்டம் உருவாக்கப்பட்டிருப்பதாக பாவினி கூறுகிறது.

அதன்படி, முதல் கட்டத்தில் அழுத்தமூட்டப்பட்ட கனநீர் அணு உலைகள் அமைக்கப்படும். இதில் யுரேனியம் எரிபொருளாக இருக்கும். இரண்டாம் கட்ட அதிவேக ஈனுலைகளில் புளுட்டோனியம் எரிபொருளாக இருக்கும். இதிலிருந்து யுரேனியம் -233 கிடைக்கும்.

மூன்றாவது கட்ட அணுஉலைகளில் முந்தைய கட்டத்தில் கிடைத்த யுரேனியம் - 233 எரிபொருளாக பயன்படுத்தப்படும் என்கிறது பாவினி.

https://www.bbc.com/tamil/articles/c970egezvl8o

புதுச்சேரியில் மாயமான 9 வயது சிறுமி வாய்க்காலில் சடலமாக மீட்பு: பொதுமக்கள் சாலை மறியல் - போலீஸ் குவிப்பு

3 weeks 1 day ago

புதுச்சேரி: புதுச்சேரியில் மாயமான 9 வயது சிறுமி, வீட்டின் அருகே உள்ள வாய்க்காலில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சிறுமி மாயம்: புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியை சேர்ந்த தம்பதியரின் இரண்டாவது மகளுக்கு 9 வயது. அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். இதனிடையே கடந்த 2-ம் தேதி பிற்பகல் வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த நிலையில் சிறுமி திடீரென மாயமானார்.

மாயமான சிறுமியை பெற்றோரும், உறவினர்களும் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் நாராயணன் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிறுமியைத் தீவிரமாகத் தேடினர்.

அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்ததனர். அதில் ஒரு சிசிடிவி கேமிராவில் மட்டும் சிறுமி நடந்து செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. போலீஸார் அந்த பகுதியில் வீடு, வீடாக தேடினர். அப்போதும் சிறுமி பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை. சந்தேகத்தின் பேரில் சிலரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் எந்த துப்பும் கிடைக்கவில்லை. சிறுமியை விரைந்து மீடக்கக் கோரி குடும்பத்தினரும், உறவினர்களும் முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

17096481783061.jpeg

கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட சடலம்: தொகுதி எம்எல்ஏ பிரகாஷ்குமாரும், போலீஸ் டிஜிபியை சந்தித்து சிறுமியை விரைந்து கண்டறிய கோரினார். இந்நிலையில், இன்று சோலை நகர் பகுதியில் அம்பேத்கர் வீதி - கண்ணதாசன் வீதி இடையே செல்லும் கழிவுநீர் கால்வாயில் சாக்கு மூட்டை மிதப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து முத்தியால்பேட்டை போலீஸார் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது, சிறுமியின் கை, கால்கள் கட்டப்பட்டு வேட்டி துணியால் சுற்றி கால்வாயில் வீசப்பட்டிருந்தது தெரியவந்தது. சிறுமியின் தந்தையும் கால்வாயில் மிதப்பது தனது மகள்தான் என்பதை உறுதி செய்தார்.

உறவினர்கள் போராட்டம்: கால்வாயில் இருந்து சிறுமியின் உடல் கிடைத்ததையடுத்து, அப்பகுதியில் பொதுமக்கள் உறவினர்கள் என நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். சிறுமியின் உடலை எடுத்துச் சென்ற காவல் துறையினர், உடலை பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை. இதனால் பொதுமக்களுக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளு நடந்தது.

இதையடுத்து போலீஸார் சிறுமியின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் சிறுமி கொலை செய்து கால்வாயில் வீசப்பட்டிருப்பது தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில் போலீஸார் 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

17096481943061.jpeg

இதற்கிடையே, கொலையாளிகள் மீது நடவடிக்கை கோரியும், மெத்தனமாக நடந்து கொண்ட போலீஸாரை கண்டித்தும் சிறுமியின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சோலை நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறும்போது, “இப்பகுதியில் கஞ்சா நடமாட்டம் அதிகம் உள்ளது. அதனை தடுக்க வேண்டும். சிறுமிக்கு நடந்தது போன்ற சம்பவம் இனிமேல் நடக்கக் கூடாது. கொலையாளிகளை விரைந்து கைது செய்து கொலையாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்படுபவர்கள் யாராக இருந்தாலும் உறுதியான நடவடிக்கை இருக்க வேண்டும்" என்றனர்.

சமாதான பேச்சுவார்த்தை தோல்வி: சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீஸார் பலமுறை சமாதானம் பேசினர். ஆனால், அவர்கள் மறியலை கைவிட மறுத்ததால் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக மறியல் தொடர்ந்தது. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த எம்எல்ஏக்கள் பிரகாஷ்குமார், நேரு ஆகியோர் பொதுமக்களிடம் பேசி சமாதானம் செய்தனர்.

நீண்ட நேரமாக போலீஸார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இளைஞர் ஒருவர் போலீஸாரை ஆவேசமாக சாடி பேசினார். இதனால் கோபமடைந்த போலீஸார் அந்த இளைஞரை தாக்கி கைது செய்ய முயன்றனர். அதனை மறியலில் ஈடுபட்டவர்கள் தடுத்தனர்.

17096482073061.jpeg

துணை ராணுவப்படை வருகை: இதனால் போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் கடுமையான தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் மறியலும் தொடர்ந்தது. இதையடுத்து புதுச்சேரிக்கு தேர்தல் பாதுகாப்புக்கு வந்த துணை ராணுவப்படையினர் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களை கண்டு மேலும் பொதுமக்கள் ஆவேசமடைந்தனர். மறியலை கைவிட மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், போக்குவரத்து வேறு பாதைகளில் திருப்பிவிடப்பட்டுள்ளது.

நாளை பிரேத பரிசோதனை: இதனிடையே, சிறுமியின் உடல் நாளை (மார்ச் 6) பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே சிறுமியின் இறப்பு குறித்த விவரங்களும், கொலைக்கான காரணங்களும் தெரியவரும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

புதுச்சேரியில் மாயமான 9 வயது சிறுமி வாய்க்காலில் சடலமாக மீட்பு: பொதுமக்கள் சாலை மறியல் - போலீஸ் குவிப்பு | Puducherry girl child found dead in sewage canal: relatives Protest - hindutamil.in

“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்

3 weeks 1 day ago

சென்னை: கரும்பு விவசாயி சின்னம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை இன்று சந்தித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயலாகத்தான் பார்க்கிறேன்" என்று கூறியுள்ளார்.

கரும்பு விவசாயி சின்னம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் கூறியது: "கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பது கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு பதிவு செய்யப்பட்ட கட்சிக்குத்தான். கடந்த தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டுள்ள அந்தக் கட்சி 71 வாக்குகளைப் பெற்றுள்ளது.

அந்தக் கட்சி கர்நாடகாவுக்கு கேஸ் சிலிண்டர் சின்னமும், ஆந்திராவுக்கு கேஸ் ஸ்டவ் சின்னம் வாங்கியிருக்கிறது. அக்கட்சியின் தலைவரே சொல்லியிருக்கிறார், கரும்பு விவசாயி சின்னத்தை நான் கேட்கவில்லை; அவர்களாகவே கொடுத்தார்கள் என்று. அதில், தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 11 மாநிலங்களுக்குச் சேர்த்து கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் தொடங்கி, இடைத்தேர்தல், சட்டமன்றம் மற்றும் மக்களவைத் தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டிருக்கிறது. 7 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருக்கிறோம். தமிழகத்தில் இருப்பதிலேயே தனித்துவமான கட்சி என்று பார்த்தால், திமுக, அதிமுகவுக்குப் பிறகு நாம் தமிழர் கட்சிதான். அதை கணக்கில் கொள்ளாமல், அவர் முதலில் மனு கொடுத்ததாக கூறுகின்றனர்.

வெள்ள பாதிப்பு பணிகள் காரணமாக, நாங்கள் மனு அளிப்பதில் கால தாமதம் ஏற்பட்டது. ஆனாலும், தேர்தல் ஆணையம் நிர்ணயித்திருந்த கால அளவுக்குள்தான் நாங்களும் மனு அளித்தோம். டார்ச் லைட் சின்னத்தை மநீமவுக்கு ஒதுக்கியப் பிறகுதான் எங்களுக்கு கரும்பு விவசாயி சின்னம் வேறொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் விஷயமே எங்களுக்குத் தெரியவந்தது.

உண்மை என்னவென்றால், கர்நாடகாவில் இருந்து வந்தவர், கடந்த டிசம்பர் 17-ம் தேதி மனு கொடுத்திருக்கிறார். அவருக்கு முதல் நாளே கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருக்கிறது. ஆனால், நாம் தமிழர் கட்சிக்கு இந்த சின்னம் எப்படி வந்தது தெரியுமா?

தேர்தல் அறிவித்து 10 நாட்களுக்குப் பிறகு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்தனர். ஆனால், இந்த முறை தேர்தல் அறிவிக்கவே இல்லை. டிசம்பர் 17-ம் தேதியே எப்படி அந்த சின்னத்தை ஒதுக்கீடு செய்தார்கள்?

எனவே, திட்டமிட்டு செய்யப்பட்ட செயலாகத்தான் இதை நான் கருதுகிறேன். நாம் தமிழர் கட்சிக்கு இந்த சின்னம் இருக்கக் கூடாது என்றுதான் நான் இதைப் பார்க்கிறேன். நாங்கள் கட்சி ஆரம்பித்தது, விவசாயி சின்னம் என்ற எண்ணத்தில் ஆரம்பிக்கவில்லையே? நான் கொண்டுபோனதால்தான் அந்த சின்னம் விவசாயி” என்றா சீமான்.

“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல் | Seeman met CEO of TamilNadu regarding Election Symbol issue - hindutamil.in

சீமான் தொடர்ந்த வழக்கில் விஜயலட்சுமி மார்ச் 19-ல் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

3 weeks 1 day ago
சீமான் தொடர்ந்த வழக்கில் விஜயலட்சுமி மார்ச் 19-ல் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு 1210946.jpg  
 

சென்னை: தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த வழக்கில் நடிகை விஜயலட்சுமி மார்ச் 19-ல் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக, நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக கடந்த 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், ‘கடந்த 2011-ம் ஆண்டு அளித்த புகாரை 2012-ம் ஆண்டிலேயே திரும்பப் பெற்துக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கடிதம் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில், காவல்துறை விசாரணை மேற்கொண்டு வழக்கை முடித்து வைத்தனர். இந்நிலையில், தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. அதை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யபட்டது. அதில், வழக்கை ரத்து செய்வது தொடர்பாக விளக்கம் பெறுவதற்காக நடிகை விஜயலட்சுமி செப்டம்பர் 29-ல் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்பிறகு இந்த வழக்கு விசாரணைக்குப் பட்டியலிடப்பட்வில்லை.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, புகார்தாரரான நடிகை விஜயலட்சுமி, மார்ச் 19-ம் தேதி பிற்பகல் 2:15மணிக்கு ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்..

சீமான் தொடர்ந்த வழக்கில் விஜயலட்சுமி மார்ச் 19-ல் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு | Madras High Court orders Vijayalakshmi to appear on March 19 in Seeman case - hindutamil.in

சீமான் குடும்பத்தினர் பழனிசாமியுடன் சந்திப்பு ஏன்?

3 weeks 2 days ago
சீமான் குடும்பத்தினர் பழனிசாமியுடன் சந்திப்பு ஏன்? 10-2.jpg

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சார்பில், அவரது குடும்ப உறுப்பினர்கள் இருவர் நேற்று சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணிக்கு இணையாக, பலம் பொருந்திய கூட்டணியை உருவாக்க, பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., தலைமை விரும்புகிறது. அதாவது, தி.மு.க., ஆட்சியின் அதிருப்தி அலையை அறுவடை செய்ய வசதியாக, தன் தலைமையில் மெகா கூட்டணி அமைத்து, 20 தொகுதிகளை கைப்பற்றுவதற்கான தேர்தல் வியூகத்தை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வகுத்துள்ளார்.

அதன் அடிப்படையில், பா.ம.க., – தே.மு.தி.க., புதிய தமிழகம், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி போன்றவற்றிடம், கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு பற்றியும் பேச்சு நடத்தப்பட்டு உள்ளது.

பா.ம.க.,விற்கு, தர்மபுரி, கடலுார், விழுப்புரம், ஆரணி, திருவண்ணாமலை உள்ளிட்ட ஆறு தொகுதிகளையும், கள்ளக்குறிச்சி, விருதுநகர் உள்ளிட்ட மூன்று தொகுதிகளை, தே.மு.தி.க.,விற்கும், புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியையும், சமத்துவ மக்கள் கட்சிக்கு திருநெல்வேலி தொகுதியையும் ஒதுக்கீடு செய்ய தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

அதேநேரத்தில், பா.ம.க., – தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகளை தவிர, ஓட்டு வங்கி கூடுலாக வைத்துள்ள நாம் தமிழர் கட்சியையும் கூட்டணியில் சேர்த்தால், தி.மு.க., கூட்டணிக்கு இணையான பலத்தை, அ.தி.மு.க., அணி பெறும் என, பழனிசாமி நம்புகிறார்.

நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னத்தை, தேர்தல் கமிஷன் ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால், பா.ஜ., மீது சீமான் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். பா.ஜ., வுக்கு எதிராக, தீவிரமாக தேர்தல் பிரசாரம் செய்யவும் முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில், கூட்டணி தொடர்பாக, சீமான் தரப்பினரிடம் பழனிசாமி தரப்பினர் பேச்சு நடத்தினர். ‘இரு திராவிட கட்சிகளுடனும், தேசிய கட்சிகளுடனும் கூட்டணி இல்லை’ என்று கூறி வந்த சீமானுக்கு, விவசாயி சின்னம் விவகாரத்தால், கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.

எனவே, பழனிசாமியை சீமானின் குடும்ப உறுப்பினர்கள் இருவர் நேற்று சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து சீமானுக்கு நெருக்கமானவரிடம் கேட்ட போது, ‘முதல் கட்டமாக 20 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுஉள்ளோம்.

அ.தி.மு.க.,வுடன் கூட்டணி என்றால், குறிப்பிட்ட சில தொகுதிகளில் உடன்பாடு வைக்கலாமா அல்லது 40 தொகுதிகளிலும் கூட்டணியா என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. அ.தி.மு.க., கூட்டணியில், ஆறு தொகுதிகள் தருவதற்கு பேச்சு நடத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், சீமான் முடிவு தான் இறுதியானது’ என்றார்.

 

https://akkinikkunchu.com/?p=270197

தமிழ்நாடு, கர்நாடகா உட்பட 7 மாநிலங்களில் 17 இடங்களில் என்ஐஏ சோதனை

3 weeks 2 days ago
05 MAR, 2024 | 11:50 AM
image

புதுடெல்லி: தமிழகம், கர்நாடகா உள்பட 7 மாநிலங்களில் 17 இடங்களில் தேசிய புலனாய்வு முகமையான (என்ஐஏ ) சோதனை நடத்தி வருகிறது. தீவிரவாத செயல்களுக்கு ஹவாலா பணம் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் மண்ணடியில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. ராமநாதபுரத்தில் சோதனை நடைபெறுகிறது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் குண்டு வெடித்தது. இதில் உணவக ஊழியர்கள் உள்பட 10 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் இத்தாக்குதல் தொடர்பாக விசாரணை என்ஐஏ வசம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) கர்நாடகா, தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது. ஆனால், அந்தச் சம்பவத்துக்கும் இன்றைய சோதனைகளுக்கும் நேரடித் தொடர்பு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

சோதனையின் பின்னணி என்ன? முன்னதாக கடந்த ஜனவரி மாதம், கர்நாடகாவில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த உட்பட 8 பேர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. சிறையில் தீவிரவாதத்தைப் பரப்பியது, தற்கொலைத் தாக்குதல் சதியில் ஈடுபட திட்டமிட்டது உள்ளிட்ட குற்றங்களுக்காக தலைமறைவாக உள்ளவர்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் பெங்களூரு மத்திய சிறையில் உள்ள கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த நசீர், வெளிநாடு தப்பிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் ஜுனைத் அகமது, சல்மான் கான். தவிர சையத் சுஹைல் கான், முகமது ஒமர், ஜாகித் தப்ரேஸ், சையத் முதாசீர் பாஷா, முகமது ஃபைசல் ரப்பானி ஆகியோர் தான் அந்த 8 பேர்.

முதன்முதலில் கடந்த ஜூலையில், பெங்களூரு மாநகரப் போலீஸார் 7 பிஸ்டல், 4 கையெறி குண்டுகள், ஒரு மேகசின், 45 லைவ் ரவுண்ட் தோட்டாக்கள், 4 வாக்கி டாக்கிகளை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்தது. 2023 அக்டோபரில் இவ்வழக்கில் என்ஐஏ விசாரணையைத் தொடங்கியது. டிசம்பர் 13, 2023-ல் இது தொடர்பாக பல்வேறு இடங்களில் சோதனை செய்தது. 2024 ஜனவரியில் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று (மார்ச் 5) தமிழகம், கர்நாடகா உள்பட 7 மாநிலங்களில் 17 இடங்களில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது.

https://www.virakesari.lk/article/177933

சாந்தனின் மரணத்திற்கு தமிழக அரசே காரணம் – எடப்பாடி பழனிச்சாமி

3 weeks 4 days ago
palaniswami-pti-750x375.jpg சாந்தனின் மரணத்திற்கு தமிழக அரசே காரணம் – எடப்பாடி பழனிச்சாமி.

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை தமிழரான சாந்தன், தாயகம் திரும்ப காத்திருந்த நிலையில் உடலநல குறைவால் உயிரிழந்தமைக்கு தமிழக அரசே காரணம்  என அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

சாந்தன் உயிரிழப்பு தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக சிறையில் 32 ஆண்டுகால நீண்ட சிறைவாசம் அனுபவித்த இலங்கைத் தமிழர்களான ராபர்ட் பயஸ், ஜெயகுமார், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோர் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் திகதி உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

இலங்கை குடிமக்கள் என்பதால் அயல் நாட்டிற்கு அனுப்பும்வரை நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதித்து திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், கடந்த மாதம் சிறப்பு முகாமின் மனிதாபிமானம் அற்ற நிர்வாகத்தின் காரணமாக சாந்தனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து.

எழுந்து நிற்கக்கூட முடியாமல் பல நாட்கள் அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த மாதம் 28ஆம் திகதி உடல்நலக் குறைவால் காலமானார்.

இது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இனியாவது, மீதமுள்ள மூன்று பேரின் கோரிக்கைகளை உடனடியாகப் பரிசீலித்து, கண் பார்வை குறைபாடு ஏற்பட்டு தவறான சிகிச்சையில் ஒரு கண்ணில் பார்வையை இழந்த ஜெயகுமார் மற்றும் உடல்நலக் குறைவால் அவதியுறும் இராபர்ட் பயஸ் மற்றும் முருகன் ஆகியோரது எஞ்சிய வாழ்நாளை அவர்களுடைய குடும்பத்தினருடன் கழிப்பதற்கு திருச்சி முகாமில் தனிமைச் சிறையில் இருந்து அவர்கள் விரும்பும் நாடுகளுக்குச் செல்ல தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, இந்திய வெளியுறவுத் துறையையும், திமுக அரசின் முதலமைச்சரையும் வலியுறுத்துகிறேன் என அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1371988

முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமாருக்கு உண்மையான விடுதலை வழங்குக: எடப்பாடி பழனிசாமி

3 weeks 4 days ago
02 MAR, 2024 | 05:03 PM
image

சென்னை: திருச்சி முகாமில் தனிமைச் சிறையில் உள்ள முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் அவர்கள் விரும்பும் நாடுகளுக்குச் செல்ல தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, இந்திய வெளியுறவுத் துறையையும், திமுக அரசின் முதல்வரையும் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று (சனிக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “32 ஆண்டுகால நீண்ட சிறைவாசத்திற்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட வயது முதிர்ந்த 3 இலங்கைத் தமிழர்களுக்கு உண்மையான விடுதலை வழங்காத திமுக அரசுக்கு கண்டனம்.

தமிழக சிறையில் 32 ஆண்டுகால நீண்ட சிறைவாசம் அனுபவித்த இலங்கைத் தமிழர்கள் ராபர்ட் பயஸ், ஜெயகுமார், முருகன் சாந்தன் ஆகியோர் 11.11.2022 அன்று உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். இலங்கை குடிமக்கள் என்பதால் அயல் நாட்டுக்கு அனுப்பும்வரை நடமாட்டத்துக்கு கட்டுப்பாடுகள் விதித்து திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், கடந்த மாதம் சிறப்பு முகாமின் இத்தகைய மனிதத் தன்மையற்ற நிர்வாகத்தின் காரணமாக திரு. சாந்தன் அவர்களின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து, எழுந்து நிற்கக்கூட முடியாமல் பல நாட்கள் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திரு. சாந்தன், கடந்த 28.2.2024 அன்று உடல்நலக் குறைவால் மரணமடைந்துள்ளது, தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அங்கு அவர்கள், சக முகாம்வாசிகள் யாருடனும் பேசவோ பழகவோ, உடற்பயிற்சி நடைபயிற்சி செய்யவோ அனுமதி மறுக்கப்பட்டு தனிமை அறையில், சிறை போலவே அடைக்கப்பட்டிருந்தனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே 32 ஆண்டுகள் சிறையில் வாழ்க்கையை இழந்தவர்கள், விடுதலைக் காற்றை சுவாசிக்கப் போகிறோம் என்று பெருமூச்சு விடும்பொழுது, மீண்டும் சிறப்பு முகாம் எனும் கொடூரம் அவர்களது வாழ்க்கையில் அரங்கேறும் என்று சற்றும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். அதிலும், சிறையில் இருக்கும் அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு, மூச்சு முட்ட தனிமைச் சிறையினில் அடைக்கப்படுவோம் என்று நிச்சயமாக எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

இதனால், கடுமையான மன உளைச்சலுக்கும், உடல் உபாதைகளுக்கும் ஆளாக்கப்பட்டு இவர்கள் அனைவரும் தவித்து வந்துள்ளனர். சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டதன் நோக்கமே அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பது தான்.

 

முகாமில் அடைக்கப்படுவதற்கு முன்பே கூட, எந்த நாட்டுக்குச் செல்லப்போகிறீர்கள் என்று அவர்களுடைய விருப்பத்தை அரசு அதிகாரிகள் கேட்டபொழுது, அவர்கள் இலங்கை சென்றால் ஆபத்து மற்றும் தங்களுக்கு அங்கு வாழ்வாதாரம் எதுவும் இல்லை என்றும், அதனால் வெளி நாடுகளில் வாழும் தங்களுடைய குடும்பத்தினருடன் செல்ல விரும்புவதாகவும் தெரிவித்திருந்தனர். ஆனால், இன்றைய நாள்வரை அவர்கள் விரும்பும் வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு எந்தவித முடிவும் எடுத்ததாகத் தெரியவில்லை.

இது தொடர்பாக, விடுதலையானவர்கள் தங்களை இலங்கை துணைத் தூதரகத்துக்கு அழைத்துச் செல்லும்படியும், முகாமில் மறுக்கப்படும் அடிப்படை மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு முதல்வர், UNHCR என தொடர்ச்சியாக பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தபோதும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்தபாடில்லை என்று தெரிவித்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

உதாரணமாக, நடைபயிற்சிக்கு அனுமதி கேட்டு பல மாதங்கள் ஆன நிலையில், இந்த விடியா திமுக அரசு குறைந்தபட்சம் இந்த கோரிக்கைக்குக் கூட செவி சாய்க்கவில்லை என்பதில் இருந்தே அவர்கள் எத்தகைய மனிதத் தன்மையற்ற முறையில் நடத்தப்படுகிறார்கள் என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.

கருணாநிதி முதலமைச்சராக இருந்தபொழுது, ஏப்ரல் 2010-ஆம் ஆண்டு பிரபாகரன் அவர்களுடைய வயதான தாயார் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சைக்காக முதலில் சென்னைக்கு வந்தபொழுது, அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க மறுத்து விமானத்தில் இருந்து இறங்கவிடாமல் திருப்பி அனுப்பியது அப்போதைய மைனாரிட்டி திமுக அரசும், மத்திய காங்கிரஸ் அரசும்தான்.

அதேபோன்று இன்று, விடுதலை பெற்ற திரு. சாந்தனை காலத்தே வெளிநாடு செல்ல மத்திய அரசுடன் பேசி, உரிய அனுமதி வாங்கித் தராத காரணத்தால், இறுதிக் காலத்தில் தனது குடும்பத்தினருடன் வாழ முடியாமல் மரணமடைந்துள்ளதற்கு இந்த நிர்வாகத் திறனற்ற, மனிதாபிமானமற்ற விடியா திமுக அரசே முழு பொறுப்பை ஏற்க வேண்டும்.

இனியாவது, மீதமுள்ள மூன்று பேரின் கோரிக்கைகளை உடனடியாகப் பரிசீலித்து, கண் பார்வை குறைபாடு ஏற்பட்டு தவறான சிகிச்சையில் ஒரு கண்ணில் பார்வையை இழந்த ஜெயகுமார் மற்றும் உடல்நலக் குறைவால் அவதியுறும் ராபர்ட் பயஸ் மற்றும் முருகன் ஆகியோரது கடைசி காலத்தில், எஞ்சிய வாழ்நாளை அவர்களுடைய குடும்பத்தினருடன் வசிப்பதற்கு, திருச்சி முகாமில் தனிமைச் சிறையில் இருந்து அவர்கள் விரும்பும் நாடுகளுக்குச் செல்ல தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, இந்திய வெளியுறவுத் துறையையும், விடியா திமுக அரசின் முதலமைச்சரையும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/177757

தருமபுர ஆதீனம் மிரட்டல் புகார் விவகாரத்தில் தொடர் திருப்பங்கள் – என்ன நடக்கிறது?

3 weeks 5 days ago
தருமபுரம் ஆதீனம்
கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 1 மார்ச் 2024

மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுர சைவ மடத்தின் மடாதிபதியை பணம் கேட்டு மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதில் ஒருவரது பெயரை நீக்கவேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. அது உண்மையா, இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது?

மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்திருக்கிறது தருமபுர ஆதீனம். இந்த ஆதீனத்தின் 27-வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் என்பவர் மடாதிபதியாக இருந்து வருகிறார்.

மடாதிபதியின் சகோதரரான விருதகிரி என்பவர், அவருடைய உதவியாளராகவும் இருந்து வருகிறார். அவர் கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதியன்று மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அந்தப் புகாரில் 'ஆடுதுறையைச் சேர்ந்த வினோத் என்பவரும் திருவையாறைச் சேர்ந்த மடாதிபதியின் சேவகராகப் பணிபுரியம் செந்தில் என்பவரும் சேர்ந்துகொண்டு, மடாதிபதி சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோவும் ஆடியோவும் தங்களிடம் இருப்பதாகவும் அதை சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால் பணம் தர வேண்டும் என்றும் கூறி மிரட்டியதுடன் என் கழுத்தை நெரித்துக் கொலைசெய்யவும் முயற்சி செய்தார்கள்,' எனத் தெரிவித்திருந்தார்.

மேலும், 'எங்கள் சார்பில் திருவெண்காட்டைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் தொடர்புகொள்வார்' என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

 
என்ன நடந்தது?
தருமபுரம் ஆதீனம்

மேலும், 'விக்னேஷ் என்பவர் இந்தப் பணத்தைக் கேட்டு தன்னை கழுத்தை நெரித்து கொல்ல முயற்சித்ததாகவும்' செம்பனார் கோவிலில் உள்ள கலைமகள் பள்ளிக்கூடத்தின் உரிமையாளர் கொடியரசு, செய்யூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெயச்சந்திரன், விஜயகுமார், பா.ஜ.கவின் மாவட்டத் தலைவர் அகோரம் ஆகிய நான்கு பேரின் தூண்டுதலின் அடிப்படையிலேயே விக்னேஷும் வினோத்தும் தன்னையும் மடாதிபதியையும் மிரட்டுவதாகவும் இதன் காரணமாக மடத்தில் உள்ளவர்கள் மன உளைச்சலில் இருப்பதால், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்திருந்தார்.

இதைனையடுத்து வினோத், விக்னேஷ், கொடியரசு, செந்தில், ஜெயச்சந்திரன், விஜயகுமார், அகோரம் ஆகியோர் மீது 323, 307, 389, 506, 120 B ஆகிய பிரிவுகளின் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.

இந்த வழக்கின் அடிப்படையில் ஆடுதுறை வினோத், செம்பனார் கோவிலில் உள்ள கலைமகள் பள்ளிக்கூடத்தின் உரிமையாளர் கொடியரசு, சீர்காழி ஒன்றிய பா.ஜ.கவின் முன்னாள் தலைவர் திருவெண்காடு விக்னேஷ், திருவிடைமருதூர் நெய்குப்பை கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் ஆகிய நான்கு பேரை மயிலாடுதுறை காவல்துறை கைதுசெய்துள்ளது. மேலும் ஐந்து பேர் தேடப்பட்டு வருகின்றனர்.

மடம் சார்பாக விளக்கம்
தருமபுரம் ஆதீனம்

பட மூலாதாரம்,DHARUMAPURAM ADHEENAM

தருமபுர மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் தற்போது உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் நிலையில், இந்தப் புகாரை விருதகிரி அளித்திருக்கிறார். தவிர, மடாதிபதியின் உதவியாளரான செந்தில் என்பவர் மீது புகார் அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவரும் உத்தரப்பிரதேசம் சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில் மடத்தின் சார்பில் செய்திக் குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. "சில நாட்களாக தருமபுரி மடத்தில் சில அடையாளம் தெரியாத நபர்கள் மற்றும் சில ரவுடிகள் சேர்ந்து மடம் சம்பந்தமான சில போலியான ஆடியோ மற்றும் வீடியோக்களைத் தயாரித்து, மடத்தில் வேலை செய்பவர்களையும் மடத்தின் விசுவாசிகளையும் அணுகி மன உளைச்சலுக்கு ஆளாக்கி வந்தனர். இதை சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டுமென நாங்கள் காவல்துறையை நாடினோம். காவல்துறை தமிழக முதல்வரின் ஆணைப்படி இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது மிகத் துரிதமாக நடவடிக்கை எடுத்துள்ளது.

"மிகத் துரிதமாக நடவடிக்கை எடுத்து எங்களையும் எங்கள் மடத்தின் பெருமையையும் காத்த காவல்துறைக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். தருமபுர மடத்தையும் எங்களையும் ரவுடிகளிடமிருந்து மீட்டெடுத்த தமிழ்நாடு முதல்வருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்," என கூறப்பட்டிருந்தது.

இதற்குப் பிறகு, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் இந்த கைது தொடர்பாக செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டது.

திடீர் திருப்பம்
தருமபுரம் ஆதீனம்

இதற்கிடையில் திடீர் திருப்பமாக மடத்தின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் பிரதானமாக குற்றம்சாட்டப்பட்ட செந்தில் என்பவரின் பெயரை நீக்க காவல்துறையிடம் விருதகிரி மனு ஒன்றை அளித்ததாக செய்திகள் வெளியாயின. இந்த மனுவை மடத்தைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவர் எடுத்துவந்து மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்ததாகச் சொல்லப்படுகிறது.

அந்தக் கடிதத்தில், "நான் தங்களிடம் கொடுத்துள்ள புகாரில் எங்கள் மடத்தில் சேவை செய்யும் செந்தில் என்பவரும் கூட்டாக, தொடர்பு கொண்டு என்று பதற்றத்தில் கணிணியாக்கம் செய்யும்போது கவனமின்மையால் குறிப்பிட்டுவிட்டேன்.

"அவர் எங்கள் மடத்தின் நேர்மையான உண்மையான பணியாளர். ஆதீனத்தின் நேரடி உதவியாளராகப் பணிபுரிந்து இதுநாள்வரை தவறான நிலைப்பாட்டை எடுத்ததில்லை.

"நான் அவரை புகாரில் குறிப்பிட்டுள்ளது எனது கவனமின்மையே காரணமாகும் அவருக்கும் இந்தப் புகாருக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. ஆகவே நான் கொடுத்துள்ள புகாரின் பேரில் பதியப்பட்டுள்ள வழக்கிலிருந்து அவரை விடுவிக்கவேண்டும்," எனக் கூறியிருந்தார்.

"அவர்கள் கேட்கும் தொகையைக் கொடுத்து விஷயத்தை பிரச்சனையில்லாமல் முடித்துக்கொள்ளுங்கள், வீணாக ரவுடிகளிடம் பிரச்சனை வைத்துக்கொள்ளாதீர்கள். அவர்கள் சொல்வதைச் செய்யக்கூடியவர்கள் என மடாதிபதியின் உதவியாளர் செந்தில் கூட்டாகச் சேர்ந்துகொண்டு மன உளைச்சலை ஏற்படுத்துகிறார்," என்று முதல் தகவல் அறிக்கையில் புகார் அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரை புகாரிலிருந்து விடுவிக்க மனு கொடுக்கப்பட்டதாக வெளியான செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இப்படி மாற்றி மாற்றி செய்திகள் வெளியான நிலையில், புகார்தாரரும் மடாதிபதியின் சகோதரருமான விருதகிரியிடம் தொடர்புகொண்டு பேசியபோது, "நான் எந்த புகாரையும் வாபஸ் வாங்கவில்லை. இதுபோல செய்தி வெளியிடுவதற்கு முன்பாக என்னிடம் எந்த ஊடகமாவது உறுதிசெய்திருக்க வேண்டாமா? செந்தில் மீது தான் அளித்த புகார் அப்படியே இருக்கிறது," என்று குறிப்பிட்டார். இது தவிர வேறு எந்தக் கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை.

தருமபுர மடாதிபதி ஊரில் இல்லாத நிலையில், காவல்துறையில் இவ்வளவு பெரிய புகார் அளிக்கப்பட்டிருப்பதும் அது தொடர்பாக கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

https://www.bbc.com/tamil/articles/c3glnjr3793o

சென்னையில் ஜாபர் சாதிக் வீட்டிற்கு சீல் - ரூ.2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் பற்றி அதிகாரிகள் கூறுவது என்ன?

4 weeks ago
ஜாபர் சாதிக், போதைப்பொருள் கடத்தல்
26 பிப்ரவரி 2024
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

திமுக,வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளர் உட்பட கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு வரை அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஜாபர் சாதிக் நீக்கப்பட்டார். சமீபத்தில் டெல்லியில் போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள், தமிழகத்தைச் சேர்ந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளரின் தலைமையில் இயங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக, மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு அவர் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். இதனால், சென்னையில் உள்ள அவரது வீட்டை சோதனை செய்த அதிகாரிகள், அதற்கு சீல் வைத்துள்ளனர்.

ஜாபர் சாதிக் எங்கே? டெல்லியில் கைதான 3 பேருக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு குறித்து அதிகாரிகள் கூறுவது எனன? திமுகவில் அவர் என்ன பொறுப்பு வகித்து வந்தார்?

டெல்லியில் பிடிபட்ட போதைப்பொருள் கடத்தல் கும்பல்

டெல்லியில் ஒரு குடோன் வைத்து இயங்கிக்கொண்டிருந்த கும்பலை சமீபத்தில் டெல்லி சிறப்பு போலீசார் மற்றும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் இருந்தும் சுமார் 50 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

இந்தக்கடத்தல் கும்பல், சர்வதேச அளவில், பல ஆண்டுகளாக போதைப்பொருள் கடத்தி வந்ததாக போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இந்தப் போதைப்பொருள் கடத்தல் கும்பல் குறித்து பிபிசியிடம் பேசிய ஒரு அதிகாரி, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகளே தங்களுக்கு தகவல் கொடுத்ததாகக் கூறினார்.

“நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகள், இந்தியாவில் இருந்து சூடோபெட்ரைன்(pseudoephedrine) என்ற போதைப்பொருள் கிலோக்கணக்கில் அவர்களின் நாட்டிற்கு அனுப்பப்படுவதாகக் கூறினர். அதுவும் சத்து மாவு, தேங்காய் பொடி உள்ளிட்ட பொருட்களுடன் கலந்து இந்த போதைப்பொருளை அவர்களின் நாட்டிற்கு இந்தியாவின் டெல்லியில் இருந்து அனுப்புவதாகத் தகவல் கொடுத்தனர்,”என்றார் அந்த அதிகாரி.

தகவலின் பேரில், சுமார் 30 நாட்களுக்கும் மேலாக, விமான நிலையத்திற்கு வந்து செல்வோர், பொருட்களை ஏற்றுமதி செய்வோர், மற்றும் அவர்களின் சந்தேகிக்கும் வகையில் இருப்பவர்களை கண்காணித்து வந்ததாகக் கூறினார் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவில் உள்ள அந்த அதிகாரி.

கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல் கும்பல்

பட மூலாதாரம்,HANDOUT

அப்படி கண்காணித்து வந்தபோது, மேற்கு டெல்லியில் உள்ள ஒரு குடோனில் இருந்து போதைப்பொருள்கள் கலவை தயார் செய்யப்பட்டு, உணவுப்பொருள்கள், சத்துமாவு உள்ளிட்டவையுடன் கலந்து ஏற்றுமதி செய்வது தெரியவந்ததாகவும் அந்த அதிகாரி கூறினார்.

“சுமார் ஒரு மாதம் கண்காணித்ததில், உறுதியான தகவலின் அடிப்படையில், அந்த குடோனை பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி சோதனை செய்தோம். சோதனையின்போது, போதைப்பொருளை பொட்டலம் போட்டுக்கொண்டிருந்த 3 பேர் கையும் களவுமாக பிடிபட்டனர்,”என்றார் அந்த அதிகாரி

கைது செய்யப்பட்டவர்களில் முகேஷ் மற்றும் முஜ்பீர் ஆகியோர் சென்னையை சேர்ந்தவர்கள் என்றும், அசோக் குமார், விழுப்புரத்தைச் சேர்ந்தவர் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட மூவரிடம் இருந்தும் சுமார் 50 கிலோ சூடோபெட்ரைன் கைப்பற்றப்பட்டுள்ளது. சூடோபெட்ரைன் என்ற இரசாயனம், மெத்தாம்பெட்டமைன் என்கிற போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படக் கூடியது.

உலகளவில், மெத்தாம்பெட்டமைன் என்கிற போதைபொருளுக்கு சந்தை மதிப்பு மிகவும் அதிகம். போலீசாரின் கூற்றுப்படி, இந்த போதைப்பொருள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில், ஒரு கிலோ சுமார் ரூ 1.5 கோடியில் இருந்து ரூ 2 கோடி ரூபாய் வரை விற்கப்படுகிறது.

 
போதைப்பொருள் கடத்தல் கும்பலின் மூளையாக செயல்பட்டாரா ஜாபர் சாதிக்?
ஜாபர் சாதிக்

பட மூலாதாரம்,ARJAFFERSADIQ/X

படக்குறிப்பு,

ஜாபர் சாதிக்

கைது செய்யப்பட்ட மூன்று பேரிடமும் மேற்கொண்ட விசாரணையில், திமுக சென்னை மேற்கு மண்டல அயலக அணியின் முன்னாள் அமைப்பாளரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் உத்தரவின் பேரில் அவர்கள் செயல்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி ஒருவர், “கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களை அவர்கள் வெளிநாடுகளுக்கு கடத்தியிருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் நடத்திய விசாரணையில் ஜாபர் சாதிக் மூளையாக செயல்பட்டதும், அவரது சகோதரர்கள் மைதீன் மற்றும் சலீம் ஆகியோர் அவருக்கு துணையாக இருந்ததும் தெரியவந்துள்ளது,”என்றார்.

இதுதொடர்பாக, போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், ஜாபர் சாதிக்கிற்கு டெல்லியில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் அவர் ஆஜராகவில்லை.

ஜாபர் சாதிக் வீட்டிற்கு சீல்? அவர் எங்கே?
ஜாபர் சாதிக் வீட்டிற்கு சீல்

ஜாபர் சாதிக் தொடர்ந்து தலைமறைவாக உள்ள நிலையில், சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

மயிலாப்பூர் சாந்தோம் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். சோதனை முடிந்த பிறகு, அந்த வீட்டை சீல் வைத்துவிட்டு அதிகாரிகள் வெளியேறினர்.

தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கை போதைப்பொருள கடத்தல் தடுப்புப் பிரிவும், காவல்துறையினரும் தேடி வருகின்றனர்.

 
ஜாபர் சாதிக்கை திமுக நீக்க என்ன காரணம்?

ஜாபர் சாதிக் நீக்கம் தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரை முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் அ.ஜாபர் சாதிக், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் நிரந்தரமாக நீக்க வைக்கப்படுகிறார். இவரோடு கட்சியினர் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், அவர் கட்சிக்கு என்ன அவப்பெயர் ஏற்படுத்தினார் என்பது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதேபோல, திமுக,வைப் பொறுத்தவரையில், எப்போதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்போது, முதலில் தற்காலிகமாக நீக்கிவிட்டு, உரிய கால அவகாசத்திற்கு பிறகு, நிரந்தரமாக நீக்கப்படுவர். அரிதாகவே, இவ்வாறு முழுமையாக கட்சியில் இருந்து நீக்குவார்கள்.

“அவர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரியவந்ததாலேயே அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அது இப்போதுதான் தெரியவந்தது. தெரியவந்ததும், அவரை நீக்கினோம்,” என பிபிசியிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ். பாரதி கூறினார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து கேட்க, பிபிசி சார்பில் ஜாபர் சாதிக்கை தொடர்புகொள்ள முயன்றோம். ஆனால், அவரை தொடர்புகொள்ள முடியவில்லை.

திரைத்துறையில் ஜாபர் சாதிக்
ஜாபர் சாதிக் இயக்கிய படங்கள்

பட மூலாதாரம்,ARJAFFERSADIQ/X

ஐஎம்டிபி அளிக்கும் தகவலின்படி, ஜாபர் சாதிக், வெற்றிமாறன் எழுதி, அமீர் இயக்கும் இறைவன் மிகப்பெரியவன் திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இதைத் தவிர, இந்திரா, மங்கை மற்றும் மாயவலை ஆகிய படங்களையும் அவர் தயாரித்துள்ளார். இதில், மங்கை படத்தின் முதல் பாடலை இயக்குனர் கிருத்திகா உதயநிதி கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்டிருந்தார்.

தமிழ்த் திரையுலகில் ஜாபர் சாதிக் தயாரித்து வந்த படங்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு விட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

https://www.bbc.com/tamil/articles/cjrkr9xq7pwo

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தனின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டது!

1 month ago
24-65cd981c76f10-600x375.jpg ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தனின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டது!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த  சாந்தன் உடல்நலக்குறைவால் இந்தியாவால் இன்று  காலமாகியுள்ளதாக சற்று முன்னர் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து அவருக்கான தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதன் பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இதேவேளை சாந்தன் இலங்கையை சேர்ந்தவர்  என்பதால், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமில் முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருடன் சாந்தன் தங்க வைக்கப்பட்டார்.

மேலும் தன்னை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் எனக் கோரி வந்தார் சாந்தன். இன்னிலையில் சாந்தனை இலங்கை அனுப்பி வைக்க மத்திய அரசு அண்மையில் அனுமதி வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1371513

தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்

1 month ago
தமிழ்நாட்டில் கூட்டணி அமைவதில் சிக்கல்கள் நீடிப்பது ஏன்?
ஸ்டாலின்

பட மூலாதாரம்,MK STALIN / FACEBOOK

படக்குறிப்பு,

தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி ஆகியவையும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இடங்களை எதிர்பார்க்கின்றன.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 27 பிப்ரவரி 2024, 04:49 GMT

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், தேர்தல் கூட்டணிகளை அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. கட்சிகளுக்குள் என்ன நடக்கிறது?

இந்தியாவின் 18வது நாடாளுமன்றத்தை தேர்வுசெய்வதற்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. நாடளுமன்றத் தேர்தலுக்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாகச் செயல்படும் நிலையில், இந்தியா முழுவதுமே அரசியல் கட்சிகள் கூட்டணிக்கான பேச்சு வார்த்தைகளில் தீவிரமாக இருக்கின்றன.

தமிழ்நாட்டில் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க - அ.தி.மு.க. தலைமையில் பிரதான கூட்டணிகளும் வேறு சில கட்சிகள் தனித்தும் போட்டியிடும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த சில மாதங்களில் தமிழக அரசியல் சூழல் வெகுவாக மாறியிருக்கிறது.

தற்போது தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணி, அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணி, பா.ஜ.க. தலைமையில் ஒரு கூட்டணி, நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி உருவாகியிருக்கிறது.

இதில் தி.மு.க. கூட்டணியைப் பொறுத்தவரை, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இருந்த கூட்டணியில், இந்திய ஜனநாயகக் கட்சிக்குப் பதிலாக கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் இடம்பெறும்; அதைத் தவிர வேறு மாற்றங்கள் இருக்காது எனக் கூறப்பட்டது.

 
தேர்தல் கூட்டணிகள் தமிழ்நாட்டில் தாமதமாவது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஸ்டாலின்-ராகுல் (கோப்புப்படம்)

பேச்சுவார்த்தையில் முன்னேற்றமில்லை

தற்போதுவரை இந்தக் கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் இந்திய யூனியன் முஸ்லீம் லீகிற்கு ராமநாதபுரம் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மற்ற கட்சிகளுடனான பேச்சு வார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. தி.மு.க. கூட்டணியில் தேசியக் கட்சியான காங்கிரஸ் கட்சி கடந்த முறை தமிழ்நாட்டில் 9 இடங்களிலும் புதுச்சேரியில் ஒரு இடம் என பத்து இட போட்டியிட்ட நிலையில் இந்த முறை எப்படியாவது இரட்டை இலக்க தொகுதிகளில் போட்டியிட விரும்பியது.

இந்த நம்பிக்கையில்தான் கடந்த ஜனவரி 28ஆம் தேதி சல்மான் குர்ஷித் தலைமையில் அப்போதைய மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, முகுல் வாஸ்னிக், அஜய் குமார் ஆகியோர் அறிவாலயத்திற்கு வந்து தி.மு.கவுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், அந்தப் பேச்சு வார்த்தையில் இடங்களை அதிகரிக்க எந்த வகையிலும் வாய்ப்பில்லை என்பதை தெரிவித்த தி.மு.க குழுவினர், 7-8 இடங்களையே தர முடியும் என்றும் தொகுதிகளிலும் மாற்றம் இருக்கலாம் என்றும் கூறியது. இதற்குப் பிறகு அடுத்தகட்டப் பேச்சு வார்த்தை இதுவரை நடக்கவில்லை.

தி.மு.கவுடன் பேச்சு வார்த்தையை இறுதி செய்து அறிவிக்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தமிழ்நாட்டிற்கு வருவதாக இருந்தது. ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், அவரது வருகை ஒத்திப்போடப்பட்டிருக்கிறது.

கடந்த முறை தி.மு.க. கூட்டணியில் சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளைப் பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சிதம்பரத்தில் பானைச் சின்னத்திலும் விழுப்புரத்தில் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட்டது. இந்த முறை தனது சின்னத்தில் போட்டியிடவும் கூடுதலாக ஒரு பொதுத் தொகுதியில் போட்டியிடவும் விரும்புகிறது அக்கட்சி. ஆனால், தி.மு.க. தரப்பில் கூடுதல் தொகுதிகளைத் தர மறுப்பதால் பேச்சு வார்த்தையில் பெரிய முன்னேற்றமில்லை.

இடதுசாரிக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளையே எதிர்பார்க்கின்றன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகப்பட்டனம், திருப்பூர் தொகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை, கோயம்புத்தூர் தொகுதிகளிலும் போட்டியிட்டன. ஆனால், இந்த முறை கோயம்புத்தூர், திருப்பூர் தொகுதிகளில் தாமே போட்டியிட விரும்புகிறது தி.மு.க.

 
தேர்தல் கூட்டணிகள் தமிழ்நாட்டில் தாமதமாவது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இந்தத் தேர்தலில் தி.மு.கவுடன் இணைந்து போட்டியிடும் என்று பேச்சுகள் அடிபட்டாலும் வெளிப்படையாக பேச்சுவார்த்தைகள் இன்னும் துவங்கவில்லை

கமல்ஹாசனின் நிலை என்ன?

இந்த நிலையில் திங்கட்கிழமையன்று பேச்சு வார்த்தை நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவினர், பேச்சு வார்த்தை சுமுகமாக இருந்ததாக மட்டும் தெரிவித்தனர். மார்ச் 3ஆம் தேதி மீண்டும் பேச்சு வார்த்தை நடக்குமெனக் கூறப்பட்டிருக்கிறது.

ம.தி.மு.கவைப் பொறுத்தவரை கடந்த முறை, மக்களவையில் ஒரு இடமும் மாநிலங்களவையில் ஒரு இடமும் அளிக்கப்பட்டன. ஈரோடு தொகுதியில் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். மாநிலங்களவைத் தொகுதி வைகோவுக்கு அளிக்கப்பட்டது. இந்த முறை ம.தி.மு.கவுக்கு ஒரு மக்களவை இடத்தை மட்டுமே அளிக்க தி.மு.க. முன்வந்திருக்கிறது. விருதுநகர் அல்லது திருச்சி தொகுதியை தி.மு.க. முன்வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த இரு தொகுதிகளுமே காங்கிரசின் தொகுதிகள் என்பதால் இழுபறி நீடிக்கிறது.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இந்தத் தேர்தலில் தி.மு.கவுடன் இணைந்து போட்டியிடும் என்று பேச்சுகள் அடிபட்டாலும் வெளிப்படையாக பேச்சுவார்த்தைகள் இன்னும் துவங்கவில்லை.

கடைசி கட்டத் தகவல்களின்படி, இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களில் காங்கிரசுடனான கூட்டணி இறுதிசெய்யப்படும் என்றும் அன்றைய தினமே மக்கள் நீதி மய்யத்திற்கான இடங்களும் முடிவுசெய்து அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. காங்கிரசிற்கு வழங்கப்படும் இடங்களில் இருந்து ம.நீ.மவுக்கு இடங்கள் ஒதுக்கப்படும் வகையில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகலாம்.

சி.பி.ஐ.யைப் பொறுத்தவரை மக்களவை இடம் ஒன்றும் மாநிலங்களவை இடம் ஒன்றும் ஒதுக்கி, கூட்டணி இறுதிசெய்யப்படலாம். சி.பி.எம்மிற்கு மதுரை, கோயம்புத்தூர் தொகுதிகளே திரும்ப வழங்கப்படலாம். அல்லது மதுரை, திண்டுக்கல் தொகுதிகள் அளிக்கப்படலாம் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி ஆகியவையும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இடங்களை எதிர்பார்க்கின்றன. ஆனால், அதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகவே தெரியவருகிறது.

2021 சட்டமன்றத் தேர்தலில் ஒன்றாகப் போட்டியிட்ட அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் தற்போது தனித்தனியாகப் போட்டியிடுவதால் ரொம்பவும் திண்டாடிப் போயிருப்பது அந்தக் கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகள்தான்.

 
தேர்தல் கூட்டணிகள் தமிழ்நாட்டில் தாமதமாவது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

பாட்டாளி மக்கள் கட்சி, தே.மு.தி.க. ஆகிய இரு கட்சிகளை கூட்டணியில் இணைப்பதில் அதிமுக தீவிரம் காட்டுகிறது.

அதிமுக, பாஜக என்ன செய்கிறது?

அ.தி.மு.கவைப் பொறுத்தவரை, பாட்டாளி மக்கள் கட்சி, தே.மு.தி.க. ஆகிய இரு கட்சிகளை கூட்டணியில் இணைப்பதில்தான் தீவிரம் காட்டுகிறது. பாட்டாளி மக்கள் கட்சியுடன் தீவிரமாக பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன. சில நாட்களில் அறிவிப்புகள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தே.மு.தி.கவைப் பொறுத்தவரை பா.ஜ.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுடனுமே பேச்சு வார்த்தை நடத்திவருகிறது. ஆனால், அக்கட்சியின் எதிர்பார்ப்புகள் அதிகம் இருப்பதால் இரு கட்சிகளுமே இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை.

"அடுத்த திங்கட்கிழமையை ஒட்டி அறிவிப்புகள் வெளியாகலாம். பெரிய கட்சிகள் எங்களுடன்தான் கூட்டணி அமைப்பார்கள்" என்கிறார் அ.தி.மு.கவைச் சேர்ந்த தலைவர் ஒருவர்.

பிரதமர் தமிழ்நாட்டுக்கு வரும்போது அந்த மேடையில் பா.ம.க., தே.மு.தி.க. இடம்பெறாவிட்டால், அக்கட்சிகள் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் குறைவுதான்.

பா.ஜ.கவுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கப்போவதாக ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி ஏ.சி. சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் அறிவித்திருக்கின்றன.

இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தேவநாதன் யாதவ் இந்தக் கூட்டணியில் ஒரு இடத்தை எதிர்பார்க்கிறார். பிரதமர் நரேந்தர மோதி தமிழ்நாட்டிற்கு வரும்போது அவருடன் மேடையில் பா.ம.க., தே.மு.தி.க. போன்ற பெரிய கட்சிகளை கூட்டணிக் கட்சிகளாக மேடை ஏற்ற நினைத்தது பா.ஜ.க. ஆனால், ஜி.கே. வாசன், பாரிவேந்தர், ஏ.சி. சண்முகம், ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் மட்டுமே கூட்டணிக் கட்சிகளாக பிரதமரைச் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
தேர்தல் கூட்டணிகள் தமிழ்நாட்டில் தாமதமாவது ஏன்?

பட மூலாதாரம்,FACEBOOK

படக்குறிப்பு,

டிடிவி தினகரன்

கூட்டணிகள் எப்போது இறுதியாகும்?

இதற்கிடையில், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடனும் பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து வருகின்றன. ஓ. பன்னீர்செல்வம் பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற ஆர்வம் காட்டினாலும், அதே போன்ற ஆர்வம், பா.ஜ.க. தரப்பிலிருந்து வெளிப்படவில்லை.

ஆனால், கூட்டணிகள் எல்லாம் இறுதிசெய்யப்பட இன்னும் காலம் இருக்கிறது என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஷ்யாம்.

"இதையெல்லாம் தாமதம் என்றே சொல்ல முடியாது. ஏப்ரல் மாதம்வரை கூட்டணியை இறுதிசெய்யலாம். முன்பே கூட்டணிகளை அறிவித்து, இடங்களையும் அறிவிப்பதில் பல சிக்கல்கள் இருக்கும். கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் உள்ள கட்சிக்காரர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவார்கள், வெளியேறுவார்கள். அதையெல்லாம் பெரிய கட்சிகள் தவிர்க்க நினைக்கும். ஆகவே இன்னும் பல நாட்கள் கழித்தே கூட்டணிகள் இறுதியாகும்" என்கிறார் ஷ்யாம்.

https://www.bbc.com/tamil/articles/c9040gp3y7do

தூத்துக்குடியின் கிராமத்தின் நிலை

1 month ago
Tuticorin Flood: 2 மாதங்களாக நீரில் மூழ்கிக்கிடக்கும் ஊர். 'வீட்டை மீட்கவே முடியாது'

தூத்துக்குடியின் வெள்ளாளன்விளை கிராமத்தின் நிலை இதுதான்.... இது இன்று நேற்று பெய்த மழையால் தேங்கிய தண்ணீர் அல்ல... கடந்த டிசம்பரில் பெய்த வரலாறு காணாத கனமழை பாதிப்பின் நீட்சி. 2 மாதங்களாகியும் வெள்ளநீர் இன்னும் வடிந்தபாடில்லை...

பாலாற்றின் குறுக்கே புதிய அணை

1 month ago
பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் ஆந்திரா; தமிழ்நாடு என்ன செய்யப் போகிறது?
பாலாற்றின் குறுக்கே புதிய அணை: முனைப்பு காட்டும் ஆந்திர அரசு - எதிர்க்கும் தமிழக விவசாயிகள்

பட மூலாதாரம்,FACEBOOK / YSJAGAN

படக்குறிப்பு,

ஜெகன் மோகன் ரெட்டி

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சுஜாதா
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 27 பிப்ரவரி 2024, 06:52 GMT
    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

பாலாற்றின் குறுக்கே ஏற்கனவே 22 தடுப்பணைகளை கட்டியுள்ள ஆந்திர அரசு, மேலும் ஒரு தடுப்பணை கட்டுவதற்கு ரூ. 215 கோடி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருப்பதற்கு தமிழ்நாட்டு விவசாயிகள் பெரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். புதிய தடுப்பணை கட்டப்படுவதைத் தடுக்க, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றம் சென்று உடனடியாக தடையாணை பெற வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தியுள்ளனர்.

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் ஆந்திர அரசின் முடிவை தமிழ்நாடு விவசாயிகள் எதிர்ப்பது ஏன்? கீழ்பகுதி மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் ஆற்றின் குறுக்கே எந்தவித கட்டுமானங்களையும் மேற்கொள்ளக் கூடாது என்ற நீதிமன்ற தீர்ப்பை மீறி ஆந்திர அரசு செயல்படுகிறதா? தமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது? இந்த பிரச்னையின் பின்னணி என்ன?

கர்நாடகாவின் நந்தி மலையில் உற்பத்தியாகி ஆந்திரா வழியாக தமிழ்நாட்டுக்குள் நுழைகிறது பாலாறு. இந்த நதி, கர்நாடகாவில் 93 கி.மீ. தொலைவு ஆந்திராவில் 33 கி.மீ. தொலைவும் பாய்கிறது. தமிழ்நாட்டில் தான் அதிகமாக, 222 கி.மீ. தொலைவு பாலாறு பாய்கிறது. தமிழ்நாட்டின் வட மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்கள் பாலாற்றினால் பயன்பெறுகின்றன. விவசாயம், குடிநீர் ஆகியவற்றுக்கான முக்கிய ஆதாரமாக பாலாறு திகழ்கிறது.

சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் எழுதிய `நீர் எழுத்து` புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில பகுதிகள் பாலாற்றின் முக்கியத்துவத்தை விளக்கும்.

அதில், "பாலாறு ஓர் ஆறு மட்டுமல்ல, அது பெரிய நீர்த்தேக்கம். ஆற்றின்கீழ் மற்றொரு ஆறு ஓடுகிறது என்பார்கள். ஒரே நேரத்தில் கால்வாயாகவும் நீர்த்தேக்கமாகவும் விளங்கும் ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியோ கால்வாய் (California Aquaduct) நவீனத் தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆனால், இதையே பாலாறு என்ற பெயரில் இயற்கை நமக்கு இலவசமாக வடிவமைத்துத் தந்துள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

 
பாலாற்றின் குறுக்கே புதிய அணை: முனைப்பு காட்டும் ஆந்திர அரசு - எதிர்க்கும் தமிழக விவசாயிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

வைகோ

எதிர்க்கும் தமிழ்நாடு

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பாலாற்றில் சிறியதும் பெரியதுமாக 22 தடுப்பணைகளை ஆந்திர அரசு கட்டியுள்ளது. இப்போது 23-வது தடுப்பணை கட்ட ரூ. 215 கோடி ஒதுக்கி ஆந்திர அரசு அரசாணை வெளியிட்டுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆந்திர மாநிலம் குப்பம் தொகுதிக்குட்பட்ட கணேசபுரம் என்ற பகுதியில்தான் தற்போது 22 அடி உயரத்தில் தடுப்பணை கட்ட ஆந்திர அரசு ஆர்வம் காட்டி வருகிறது.

இதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பல தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வைகோ தன் அறிக்கையில், "ஆந்திர அரசின் இந்த நடவடிக்கை 1892-ம் ஆண்டு மைசூர் மாகாணத்திற்கும், சென்னை மாகாணத்திற்கும் இடையேயான நதிநீர் பங்கீடு ஒப்பந்தங்களுக்கு எதிரானது. அதுமட்டுமின்றி, குப்பம் பாலாறு படுகை முழுவதும் யானை வழித்தடம் ஆகும். யானைகள் வழித்தடத்தில் கணேசபுரம் எனும் இடத்தில் அணை கட்டக் கூடாது என உச்சநீதிமன்றம் தடையானை வழங்கியுள்ளது. எனவே கணேசபுரத்திலிருந்து புல்லூர் வரை யானைகள் வழித்தடம் என்பதால் அந்தப் பகுதிகளில் புதிய திட்டம் எதையும் செயல்படுத்தக் கூடாது" என தெரிவித்துள்ளார்.

இதே கருத்தை தெரிவித்துள்ள வேல்முருகன், "எந்த ஒரு மாநிலமும், தன் கீழ் பகுதி மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் ஆற்றின் குறுக்கே எந்தவித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று நீதிமன்ற தீர்ப்பு உள்ளது. ஆனால், ஆந்திர அரசு இதையெல்லாம் கடைபிடிக்காமல், பல்வேறு கட்டுமான பணிகளை பாலாற்றின் குறுக்கே மேற்கொள்வது வேதனை அளிக்கிறது" என தெரிவித்துள்ளார்.

 
பாலாற்றின் குறுக்கே புதிய அணை: முனைப்பு காட்டும் ஆந்திர அரசு - எதிர்க்கும் தமிழக விவசாயிகள்

பட மூலாதாரம்,FACEBOOK/M.K.STALIN

பேச்சுவார்த்தையில் தொய்வு

இதுதொடர்பாக பிபிசியிடம் பேசிய பாலாறு நீர்வள ஆர்வலர் அம்பலூர் அசோகன், "தடுப்பணை கட்டுவதற்கு கட்டுமான பொருட்கள் அனைத்தும் ஆந்திர அரசு பகுதியில் கொண்டு சென்ற விஷயத்தை அறிந்த தமிழக பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதை தொடர்ந்து, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், அணை கட்டுவது தடுத்து நிறுத்தப்பட்டது. இடைக்காலத் தடை வாங்கிய பிறகும் ஆந்திர அரசு வனப்பகுதியில் மேலும் 10 தடுப்பணைகளை கட்டியுள்ளது" என்றார்.

மேலும், இதுதொடர்பாக பாமகவும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அந்த உத்தரவில், இரு மாநில அரசுகளும் பேசி தீர்த்துக் கொள்ளுமாறு நீதிமன்றம் கூறியது. "பேச்சுவார்த்தைக்கான முன்னெடுப்புகளை தமிழக அரசு இதுவரை மேற்கொண்டதில்லை. தமிழக அரசை சார்ந்த அதிகாரிகளும் ஆந்திர அரசை சார்ந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி அந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவில்லை. அதிமுக, திமுக அரசு இரண்டுமே ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதில் கவனம் செலுத்தவில்லை" என்றார் அசோகன்.

ராமாதாஸும் தன் அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார். "உச்ச நீதிமன்றம் வரை சென்று பாமகவும், தமிழக அரசும் வழக்கு தொடர்ந்ததால் கணேசபுரம் தடுப்பணை திட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டு விட்டது. அதன்பிறகு பாலாற்றில் புதிய அணை கட்டமுடியாமல் இருந்தது. ஆனால், இப்போது அந்த வழக்கில் சிக்கல் தீர்ந்து விட்டதாகவும், அதனால் புதிய அணையை கட்டப்போவதாகவும் ஆந்திர அரசு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. அப்படியானால், ஆந்திராவில் தடுப்பணை கட்டுவதற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் ஏதேனும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறதா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

10 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது குறித்த பிரச்னையை இப்போதைய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் கேள்வி எழுப்பியபோது, "ஏற்கனவே கட்டிய தடுப்பணைகளை என்ன செய்வது? அவற்றை இடிக்க சொல்கிறீர்களா?" என்று கேட்டதாக அசோகன் குறிப்பிடுகிறார்.

புதிய தடுப்பணை கட்டாதவாறு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும் என வலியுறுத்துகிறார்.

 
பாலாற்றின் குறுக்கே புதிய அணை: முனைப்பு காட்டும் ஆந்திர அரசு - எதிர்க்கும் தமிழக விவசாயிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"தமிழகமும் தடுப்பணைகள் கட்ட வேண்டும்"

இதுதொடர்பாக, பிபிசியிடம் பேசிய திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த விவசாயி வடிவேலு சுப்பிரமணியம், "ஆந்திர அரசுக்கு தடுப்பணை கட்ட வேண்டிய எந்த அவசியமும் இல்லை. அப்படி இருக்கும்போது அவர்கள் நீராதாரத்தை காப்பாற்றுவதற்காக தொடர்ந்து தடுப்பணைகளை கட்டி வருகின்றனர்" என்றார்.

தடுப்பணை பிரச்னை தவிர்த்து, தோல் மற்றும் சாக்கடை கழிவுகளும் பாலாற்றில் கலப்பதால் தண்ணீர் மாசடைந்திருப்பதாக அவர் வேதனை தெரிவிக்கிறார். பாலாற்றில் மணல் அள்ளுவதும் தொடர் பிரச்னையாக இருப்பதாக அவர் குற்றம்சாட்டுகிறார்.

"மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குப்பம் கணேசபுரத்தில் யானை வழித்தடங்களில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளக்கூடாது என அரசாணை வாங்கி தடுத்து நிறுத்தினார். இதற்கான வழக்கு தற்பொழுது வரை நிலுவையில் உள்ளது. அதையும் மீறி ஆந்திரா அரசு கட்டுவது சட்டத்தை மீறிய செயல்" என்றார்.

தமிழ்நாட்டுப் பகுதியிலும் சிறு சிறு தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதுதொடர்பாக, திமுக செய்தித்தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கூறுகையில், "நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இதுகுறித்து நீதிமன்ற தீர்ப்பை மீறி ஆந்திர அரசு எதுவும் செய்யக்கூடாது என ஏற்கனவே தெரிவித்திருந்தார்" என்றார்.

அனைத்து நதிகளினுடைய பாதுகாப்பும் மத்திய அரசின் கைகளில் உள்ளதால், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்றார். சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து இதுதொடர்பாக முடிவெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c1v1vr7nxrko

கடலில் வீசப்பட்ட தங்கக் கட்டிகளை தேடும் பணி தோல்வி

1 month ago
இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்டு கடலில் வீசப்பட்ட தங்கக் கட்டிகளை தேடும் பணி தோல்வி

Published By: DIGITAL DESK 3    27 FEB, 2024 | 10:43 AM

image

இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்டு தமிழகத்தில் கடலில் வீசப்பட்ட தங்கக் கட்டிகளை தேடும் பணி ஐந்தாவது நாளாக தொடரப்பட்டு தோல்வியில் முடிந்தது.

ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை சிங்கி வளைகுச்சி கடற்கரைக்கு இலங்கையில் இருந்து நாட்டுப்படகு மூலம் தங்க கட்டிகள் கடத்தி வருவதாக தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல்  கிடைத்துள்ளது.

இதனை அடுத்து, வியாழக்கிழமை (22)  அதிகாலை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள்  மண்டபம் இந்திய கடலோர காவல் படை வீரர்களுடன்  இணைந்து நாட்டுப்படகை மடக்கி பிடிக்க முயன்ற போது நாட்டுப்படகில் இருந்த மூவரில் ஒருவர் கடலில் குதித்து தப்பினர்.

மேலும், படகில் இருந்த இருவரை படகுடன் மடக்கி பிடித்த அதிகாரிகள் அவர்களை  மண்டபம் கடலோர காவல் படை முகாமிற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை  நடத்தினர்.

நாட்டுப்படகு வேதாளையை சேர்ந்தது என்பதும், படகில் இருந்த இருவரும் அதே பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் இலங்கையில் இருந்து சுமார் 10 கிலோ தங்கத்தை  கடத்தி வந்த போது  அதிகாரிகளை கண்டதும் தங்க கட்டிகள் அடங்கிய பொதியை கடலில் வீசியதையும் ஒப்புக்கொண்டனர்.

ஸ்கூபா வீரர்கள் மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துக்குளிக்கும் மீனவர்களை கொண்டு தங்கத்தை கடலுக்கு அடியில் தீவிரமாக தேடி வந்தனர்.

தங்கம் கிடைக்காததால் கேரளாவில் இருந்து  வரவழைக்கப்பட்ட கடலுக்கு அடியில் கிடக்கும் பொருட்களை ஸ்கேன் செய்யும் அதிநவீன கருவிகளை பயன்படுத்தி தொடர்ந்து தேடினர்.

இருப்பினும், தங்கம் குறித்து எந்தவிதமான தகவல் கிடைக்காததால் தேடும் பணியை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் ஐந்து நாட்களுக்குப் பின்பு நேற்று மாலை கைவிட்டனர்.

மேலும், மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பிடித்து வைத்திருந்த  இருவரிடமும் எழுத்துபூர்வமாக  எழுதி வாங்கி கொண்டு படகுடன் திருப்பி அனுப்பினர்.

வேதாளை, மறைக்காயர்பட்டினம் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில்  மத்திய வருவாய் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும்,  நாட்டுபடகு  மீனவர்கள் சட்டவிரோத கடத்தல் சம்பவங்களால் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/177398

தமிழ்நாடு மீனவர்களுக்கு என்ன பிரச்னை?

1 month ago
இலங்கை கடற்படை கைது செய்யும் மீனவர்களை தண்டிக்க புதிய நடைமுறை - தமிழ்நாடு மீனவர்களுக்கு என்ன பிரச்னை?
தமிழ்நாடு - இலங்கை மீனவர் பிரச்னை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

அண்மையில், ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 23 மீனவர்களில் 20 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

அவர்களில், இரண்டு பேருக்கு ஆறு மாத சிறை தண்டனையும், ஒரு மீனவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இலங்கை கடற்படை கைது செய்யும் தமிழ்நாடு மீனவர்களை தண்டிக்க கடைபிடிக்கப்படும் புதிய நடைமுறை இராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழாவைப் புறக்கணித்து பக்தர்களிடம் இருந்து பெற்ற தொகையை மீண்டும் அவர்களிடமே அளிக்க இருப்பதாக மீனவர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் கூறியிருக்கின்றனர்.

மறுபுறம் இலங்கை கடற்பரப்பில், இந்திய மீனவர்கள் நுழைவதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், அத்துமீறிய பிரவேசத்தை தடுக்க தண்டனையை அதிகரிக்க வேண்டும் என்று இலங்கை மீனவர்கள் கூறுகின்றனர்.

'இலங்கை கடைபிடிக்கும் நடைமுறையால் மீனவர் வாழ்வாதாரம் பாதிப்பு'
இந்தியா இலங்கை மீனவர்கள் கச்சத்தீவு

இலங்கை கடல் எல்லைப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடிப்பதாகக் கைது செய்யப்படும் தமிழ்நாட்டின் மீனவர்கள் இரண்டு வார சிறையடைப்புக்கு பின் விடுதலை செய்யப்படுவார்கள். மேலும், சிறைபிடிக்கப்படும் விசைப் படகுகள் அதன் உரிமையாளர் நேரில் சென்று நீதிமன்றத்தில் ஆஜராகினால் படகு விடுவிக்கப்படும். ஆனால், தற்போது அந்த நிலை மாறியிருக்கிறது என்கின்றனர் இந்திய மீனவர்கள்.

விசைப்படகை இயக்கும் மீனவருக்கு ஆறு மாதம் சிறையும், இரண்டாவது முறையாக எல்லை தாண்டி மீன் பிடித்த மீனவருக்கு ஓராண்டுச் சிறையும் விதித்து இருப்பதன் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

“எங்களது முன்னோர்கள் மீன்பிடித்த கச்சத்தீவில் தான் நாங்கள் மீன்பிடிக்கிறோம். இந்தியக் கடல் பகுதிகளிலும் இலங்கை மீனவர்களும் மீன் பிடிக்கிறார்கள்", என்கின்றனர் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள்.

 
இலங்கையில் வீணடிக்கப்படும் விசைப்படகுகள்
இந்தியா இலங்கை மீனவர்கள் கச்சத்தீவு

பிபிசியிடம் பேசிய இராமேஸ்வரம் விசைப்படகு சங்கத் தலைவர் எமிரேட், "பாஜகவின் 2014ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான ஆட்சி காலத்தில் 135 விசைப்படகுகள் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு அதில் 25 படகுகள் மட்டுமே மீட்கப்பட்டன். மற்றவை இலங்கையிலேயே பயனற்றுப் போயின. அதேபோல் 2019 முதல் தற்போது வரை 15 நாட்டுப் படகுகள் உட்பட 151 படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்திருக்கிறது. ஆனால் அவற்றை மீட்பதற்கான நடவடிக்கை ஏதும் மத்திய அரசு எடுக்கவில்லை. இலங்கை அரசும் பறிமுதல் செய்யப்படும் படகுகளை நாட்டுமையாக்கி வருகிறது,” என்கிறார் .

"இது கடலை நம்பித் தொழில் செய்யும் மீனவனின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாகச் சிதைத்து விடும். தமிழ்நாடு அரசு மத்திய அரசுடன் நல்லுறவில் இல்லாததால், மாநில அரசை பழிவாங்குவதற்காக மீனவர்கள் கைது செய்யப்படும் போது மீட்பு நடவடிக்கைகள் எடுக்காமல் மத்திய அரசு தாமதப்படுத்தி எங்களை வஞ்சிக்கிறது." என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கச்சத்தீவு திருவிழா புறக்கணிப்பு
இந்தியா இலங்கை மீனவர்கள் கச்சத்தீவு

2017-ஆம் ஆண்டு கச்சத்தீவு திருவிழா நேரத்தில் ராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதால் கச்சத்தீவு திருவிழாவை இராமேஸ்வரம் மீனவர்கள் புறக்கணித்தனர்.

அதேபோல் இந்த ஆண்டும் கச்சத்தீவு திருவிழா நெருங்கி வரும் நேரத்தில் இராமேஸ்வரம் மீனவர்களுக்கு சிறை தண்டனை விதித்து இருக்கிறது இலங்கை அரசு.

"இது கச்சத்தீவுக்கு இராமேஸ்வரம் மீனவர்கள் வரக்கூடாது என்று மறைமுகமாக தாக்குவது போல இருக்கிறது. இராமேஸ்வரம் மீனவர்கள் கைதைக் கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தம், கருப்புக்கொடி படகில் ஏந்தி போராட்டம் செய்து வருகிறோம்," என்றார் எமிரேட்.

இது தொடர்பாக மத்திய மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரை மீனவப் பிரதிநிதிகள் சந்தித்து முறையிட்டுள்ளனர்.

'படகுகளை அரசுடமையாக்குவது சேமிப்பை அழிக்கும்'

"தமிழக மீனவர்களின் விசைப் படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து நாட்டுடைமையாக்குவது மீனவர்கள் சிறுகசிறுக சேமித்த சேமிப்பை அழிக்கிறது. இது மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்.

இந்திய நாட்டின் பிரதமர் மோதி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதில் தலையிட்டு நமது மீனவர்களை விடுதலை செய்வதையும், படகுகள் விடுவிக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்", என தனது சமூக வலைதளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

Facebook பதிவை கடந்து செல்ல
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Facebook பதிவின் முடிவு

10 ஆண்டு சிறை தண்டனை
இந்தியா இலங்கை மீனவர்கள் கச்சத்தீவு

இந்திய மீனவர்களின் போராட்டம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய யாழ் மாவட்ட சங்கங்கள் சம்மேளனத்தின் உபத் தலைவர் அந்தோணி பிள்ளை பிரான்ஸிஸ் ரத்னகுமார், "இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய நான்கு மாவட்டங்களின் கடல் பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறி தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலையை பயன்படுத்தி சிறிய மீன்களையும் அள்ளிச் செல்வதால் கடல் வளங்கள் முழுவதுமாக அழிகிறது" என்றார்.

மேலும், "இலங்கை மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக விரித்து வைத்திருக்கும் வலைகளையும் அறுத்து செல்கின்றனர். இது ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மீனவர்களுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும்" என்றார்.

இலங்கை எல்லைக்குள் மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு ஆறு மாத முதல் ஓராண்டு சிறை தண்டனையை இலங்கை அரசு விதிக்கிறது.

ஆனால் சிறை தண்டனையை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்று இலங்கை மீனவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். இலங்கை பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களுக்கு பத்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கினால் மட்டுமே, இந்திய மீனவர்கள் இங்கு வருவது குறையும் என்று இலங்கை மீனவர் தரப்பு கோரிக்கையை முன்வைக்கிறது.

இந்திய மீனவர்களின் அத்துமீறிய பிரவேசம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் முன்பு இலங்கை மீனவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

அப்போது, இந்திய மீனவர்களின் வருகையை தடுக்கும் வகையில், சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை மீனவர்கள் வலியுறுத்தினர்.

கச்சத்தீவு தொடர்பாக பேசிய இலங்கை மீனவர்கள், “இந்திய மீனவர்களை விடுதலை செய்ததால் கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்போம் என்று இராமேஸ்வரம் மீனவர்கள் கூறுவது தவறானது. ஒரு தொழிலை சமய வழிப்பாட்டுடன் சேர்த்து நிபந்தனையாக விதிப்பது ஏற்புடையதாக இருக்காது. எனவே, இந்திய மீனவர்கள் கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க வேண்டும், நாங்களும் பங்கேற்போம்", என்றனர்.

 
"சட்டத் திருத்தம் தேவையில்லை"
இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிக்கும் வெளிநாட்டு மீனவர்களுக்கு எதிராக சட்டத்தில் மீண்டும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமா என இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம், பிபிசி தமிழ் வினவியது.

இதற்கு பதிலளித்த அமைச்சர், 'வெளிநாட்டு மீனவர்கள் அத்துமீறி நாட்டிற்குள் பிரவேசித்தால், அவர்களுக்கான தண்டனை வழங்கும் சட்டம் ஏற்கனவே இலங்கையில் அமலில் உள்ளது. அந்த சட்டத்தின் இப்போது மாற்றம் கொண்டு வரப்படாது, என்றார்.

“2018ம் ஆண்டு அந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. முதல் தடவை பிடிப்பட்டால், பிணையில் விடலாம் என்றும், இரண்டாவது, மூன்றாவது முறை மீண்டும் பிடிபடும் போது அவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் சட்டம் உள்ளது. சட்டவிரோத படகுகள் எல்லாம் அரசுடமையாக்கப்படும் என்று ஏற்கெனவே சட்டம் உள்ளது.

இந்திய மீனவர்கள் தொப்புள் கொடி உறவு என்று சொல்கிறார்கள். ஆனால் இலங்கை கடல் வளத்தை அழிக்கின்றனர். கடற்றொழில் உபகரணங்கள் அழிக்கப்படுகின்றது. எங்கள் மீனவர்கள் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்படுகிறது. இது தடுக்கப்பட வேண்டும்." என இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முதலமைச்சர்களுடன் கலந்துரையாட முயற்சி எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c5166517n5no

உறுதியானது அதிமுக - பாமக கூட்டணி: விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

1 month ago
25 FEB, 2024 | 10:00 AM
image

மக்களவைத் தேர்தலில் 7 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியுடன் அதிமுக - பாமக இடையே கூட்டணி உறுதியானது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் பாமகவை தங்கள் கூட்டணியில் சேர்க்க அதிமுகவும், பாஜகவும் தீவிர முயற்சியில் இறங்கின. இரு கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர், பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணியை நேரிலும், தொலைபேசியிலும் பேச்சு வார்த்தையை நடத்தினர். மேலும் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க பாமக திட்டமிட்டுள்ளது.

இதற்கு இந்த மக்களவைத் தேர்தலில் தேசிய கட்சிகளை தவிர்த்து மாநில கட்சியுடன் கூட்டணி அமைப்பதுஎன முடிவு செய்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது அதிமுகவுடன் கூட்டணி உறுதியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இரு கட்சிகளும் வெளியிடவுள்ளன.

இது தொடர்பாக பாமக மூத்த நிர்வாகிகள் கூறியதாவது: 2026-ல் வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தலைமையில் கூட்டணி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு, இந்த மக்களவைத் தேர்தலில் மாநில கட்சியுடன் கூட்டணி அமைத்தால்தான் சரியாக இருக்கும். அதனால் தான் அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்திருக்கிறோம்.

கடந்த மக்களவைத் தேர்தலில் தர்மபுரி, விழுப்புரம், அரக்கோணம், கடலூர், மத்திய சென்னை, திண்டுக்கல், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 7 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டன.

இந்த முறை தருமபுரி, ஆரணி, அரக்கோணம், சிதம்பரம் (தனி ), விழுப்புரம் (தனி), சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய 7 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்கப்பட்டுள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு தெரிவித்தனர்.

https://www.virakesari.lk/article/177227

ஸ்டெர்லைட்: துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க திமுக அரசு மறுப்பது ஏன்?

1 month ago
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு
கட்டுரை தகவல்
  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி தமிழ்
  • 57 நிமிடங்களுக்கு முன்னர்

ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூடு நடத்திய, அதற்குக் காரணமான அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு திமுக அரசு மறுப்பதால் சர்ச்சை உருவாகியுள்ளது.

2018-ஆம் ஆண்டு நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு அன்றைய அதிமுக அரசின் மீது வலுவான எதிர்ப்பலைகளை உருவாக்கியது.

திமுகவும் அதனை தனக்கு சாதகமாக்கி, ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தது. அருணா ஜெகதீசன் அறிக்கையை சட்டமன்றத்தில் முன்வைத்து அதிமுகவை கடுமையாக சாடியது.

இருப்பினும், காவல் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கும் விவகாரத்தில் திமுக தலைமையிலான அரசு குழப்பமான நிலைப்பாட்டை எடுத்திருப்பது புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

 
திமுக

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது 13 பேர் கொல்லப்பட்டதை எதிர்க்கட்சியாக இருந்த திமுக கடுமையாகக் கண்டித்தது.

சுட்டுக் கொல்லப்பட்ட ஸ்னோலின் தாயார் தொடுத்த வழக்கு

2018ம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலையினால் ஏற்பட்ட தீவிர சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் உடல்நல பாதிப்புகளையும் கண்டித்து, ஆலையை மூட வலியுறுத்தி நீண்ட போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தின் நூறாவது நாளில் (மே 22ம் தேதி) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி மக்கள் ஊர்வலமாக சென்றனர். அப்போது நிகழ்த்தப்பட்ட கடும் வன்முறை மற்றும் துப்பாக்கிச்‌ சூட்டில் 12 பேர் குண்டுகள் பாய்ந்தும், ஒருவர் கூட்ட நெரிசலில் நெஞ்சில் மிதிப்பட்டும் உயிரிழந்தனர்.

இறந்தவர்கள் சிலரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் துப்பாக்கி குண்டுகள் மிக அருகிலிருந்து சுடப்பட்டதும், சிலருக்கு தலையில் சுடப்பட்டதும் தெரிய வந்தது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட 18வயது ஸ்னோலினின் என்ற பெண்ணின் தலையின் பின் பகுதியில் நுழைந்த குண்டு வாய்வழியாக வெளியே வந்ததை பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவித்தது.

இந்த சம்பவத்துக்கு காரணமான காவல் அதிகாரிகள் மீது இந்திய தண்டனை சட்டம் 302-ன் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்து கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஸ்னோலினின் தாய் வனிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். மேலும் அவர் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகை ரூ.1 கோடியாக உயர்த்தி தரவும், அரசு நினைவு மண்டபம் கட்ட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணையில் தமிழக அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அதனால் கிரிமினல் நடவடிக்கை கோரும் மனுவை தள்ளுபடி செய்ய கேட்டுக்கொண்டார். தமிழக அரசின் இந்த நிலைப்பாடு, துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

 
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு
படக்குறிப்பு,

அதிமுக ஆட்சிக் காலத்திலேயே நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அமைக்கப்பட்டது

அருணா ஜெகதீசன் அறிக்கை சொல்வது

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக கடந்த அதிமுக ஆட்சிக் காலத்திலேயே நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அமைக்கப்பட்டது.

-துப்பாக்கிச்சூட்டுக்கான காரணங்கள், சூழல்கள் குறித்து கண்டறிதல்,

-சூழலுக்கு ஏற்ப தேவையான படைகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டனவா, துப்பாக்கிச்சூட்டின் போது எல்லா விதிகளும் பின்பற்றப்பட்டனவா என கண்டறிதல்

-காவல் அதிகாரிகள் தரப்பில் அதிக பலம் பயன்படுத்தப்பட்டனவா, அப்படி இருந்தால் அதற்கான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசனை கூறுதல்

-இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க தகுந்த நடவடிக்கைகள் பரிந்துரைத்தல்

ஆகிய நான்கு நோக்கங்களை விசாரித்த ஆணையம் தனது இறுதி அறிக்கையை 2022 ஜூன் 6 அன்று அரசிடம் வழங்கியது.

 
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு
படக்குறிப்பு,

17 காவல் அதிகாரிகளை பட்டியலிட்ட அருணா ஜெகதீசன் ஆணையம், அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.

அருணா ஜெகதீசன் அறிக்கை காவல் அதிகாரிகள் தேவையானதை விட அதிகமான பலத்தை பயன்படுத்தியுள்ளனர் என்று கண்டறிந்து கூறியது.

இந்த சம்பவத்துக்கு காரணமாக 17 காவல் அதிகாரிகளை பட்டியலிட்ட அருணா ஜெகதீசன் ஆணையம், அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கையும் கிரிமினல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.

மாவட்ட ஆட்சியர், மூன்று தாசில்தார்களை இந்த சம்பவத்துக்கு காரணமாக கண்டறிந்தது. அப்போதைய தென்மண்டல ஐ.ஜி சைலேஷ் குமார் யாதவ் மற்றும் டிஐ ஜி கபில்குமார் சி ஆகிய ஐ பி எஸ் அதிகாரிகள், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன், துணை கண்காணிப்பாளர் லிங்க திருமாறன், ஆய்வாளர்கள் திருமலை, ஹரிஹரன், பார்த்திபன் உள்ளிட்டோர் அருணா ஜெகதீசன் ஆணையத்தால் பட்டியிலிடப்பட்டிருந்தனர்.

மேலும், உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சமும் கொடுக்க பரிந்துரைத்தது.

 
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு
படக்குறிப்பு,

உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் என்ற நிவாரணத் தொகையாக தரவேண்டும் என்பதையும் ஏற்பதற்கில்லை என தமிழ்நாடு அரசு வாதிட்டுள்ளது

'எல்லா பரிந்துரைகளையும் ஏற்பதற்கில்லை' - தமிழ்நாடு அரசு

அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரைகளை முழுவதுமாக ஏற்கவேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது தமிழக அரசு.

காவல் அதிகாரிகள் தேவைக்கு அதிகமான பலத்தை அதிகமாக பயன்படுத்தினர் என்பதையும் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் ஏற்கும்போதிலும், கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பரிந்துரையையும் ரூ.50 லட்சம் என்ற நிவாரணத் தொகையாக தரவேண்டும் என்பதையும் ஏற்பதற்கில்லை என வாதிட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கூறும்போது "உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சமும், தீவிர காயமடைந்த 40 பேருக்கு தலா ரூ.5 லட்சமும், லேசாக காயமடைந்த 64 பேருக்கு தலா ரூ.1.5 லட்சமும் வழங்கப்பட்டன. உயிரிழந்த 18வயது ஸ்னோலினின் சகோதரன் ஜான்ராஜ் உட்பட 21 பேரின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

மேலும் “சிபிஐக்கு மாற்றப்பட்ட வழக்குகள் தவிர சம்பந்தப்பட்டவர்கள் மீது தொடுக்கப்பட்ட 38 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. போராட்டத்தின் போது, கைது செய்யப்பட்டு காவல் கட்டுப்பாட்டில் இருந்த 93 பேருக்கு தலா ஒரு லட்சம் முதல்வர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. பரோலில் வெளியே வந்த ஆயுள் தண்டனை கைதியான பாரத்ராஜ், போராட்டத்தில் பங்கேற்றதற்காக காவலர்களால் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர். அந்த ஆண்டு மே மாதம் 30ம் தேதி உயிரிழந்துவிட்டார். அவரது குடும்பத்துக்கு 5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மேற்படிப்பு மேற்கொள்ள தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டது” என தமிழக அரசு தான் எடுத்த நடவடிக்கைகளை நீதிமன்றத்தில் பட்டியலிட்டுள்ளது.

 
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு
படக்குறிப்பு,

கொல்லப்பட்ட ஸ்னோலின் குடும்பத்தின் சார்பில் வாதாடும் வழக்கறிஞர் ரஜினி, துறை ரீதியான நடவடிக்கைகள் கண் துடைப்பு மட்டுமே என்கிறார்

துறை ரீதியிலான நடவடிக்கைகள் போதுமா?

தவறு செய்த அதிகாரிகள் மீது துறை ரீதியிலான நடவடிக்கைகளே போதும் என்ற நிலைப்பாட்டை மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கடுமையாக விமர்சிக்கின்றனர்.

“சிபிஐ இந்த விவகாரத்தில் இரண்டு ஆண்டுகள் விசாரணை செய்து ஒரே ஒரு காவலர் அதுவும் கீழ் நிலையில் உள்ள திருமலை என்ற டிஎஸ்பி மீது மட்டும் தான் குற்றம் சுமத்தியுள்ளது” என்கிறார் ஹென்றி திபேன்.

ஸ்னோலின் குடும்பத்தின் சார்பில் வாதாடும் வழக்கறிஞர் ரஜினி துறை ரீதியான நடவடிக்கைகள் கண் துடைப்பு மட்டுமே என்றார். “ஆணையத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள சைலேஷ் குமார் யாதவ் ஐ பி எஸ், வழக்கமான பதவி உயர்வு பெற்றுள்ளார். இது எப்படி சாத்தியம்? யாரை ஏமாற்றுகிறார்கள்?” என்கிறார்.

தமிழக அரசு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஆவணத்தில், “சிபிஐ எல்லா காவல் அதிகாரிகளையும் விசாரித்தது. அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கும் வகையிலான அம்சங்களை சிபிஐ கண்டறியவில்லை (மேற்குறிப்பிட்ட நபர்கள் தவிர) . எக்ஸ்கியுடி மேஜிஸ்திரேட் உத்தரவின் படி தான் காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். எனவே அந்த வகையில் காவலர்களின் நடவடிக்கைகளை சிபிஐ ஏற்கெனவே நியாயப்படுத்தியுள்ளது. அவர்களுக்கு கிரிமினல் மற்றும் விதிமீறல் பார்வையிலிருந்து விலக்கு அளித்துள்ளது” என்று கூறுகிறது.

"தவறு செய்த அதிகாரிகள் மீது எப்படி கிரிமினல் நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியும்? பழிக்கு பழி வாங்க வேண்டும் என்ற நோக்கில் கேட்கவில்லை, சட்டரீதியான நியாயம் கிடைக்க வேண்டுமல்லவா? " என்று பிபிசி தமிழிடம் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட ஸ்னோலின் தாயார் வனிதா தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

‘‘கிரிமினல் நடவடிக்கை எடுக்க சிபிஐ பரிந்துரைக்கவில்லை என்று கூறுகிறார்கள். சிபிஐ என்பது யார்? அவர்கள் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக நிற்பவர்கள். போராடிய மக்கள் மீது வழக்கு தொடுத்துள்ளது சிபிஐ என்பது நினைவிருக்கட்டும். இதுவரை அரசால் அமைக்கப்பட்ட ஆணையங்கள் எல்லாமே அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்துள்ளன. இந்த ஆணையம் உண்மையை கூறியதால் அதை ஏற்க மறுக்கிறார்கள். குண்டடிபட்டு தான் இறந்தார் ஸ்னோலின் என்று பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது. இதை அரசு உட்பட யாரும் மறுக்கவில்லையே. இன்னும் வேறு என்ன வேண்டும்?" என்கிறார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரஜினி.

 
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு
படக்குறிப்பு,

ஸ்னோலினின் தாய் வனிதா

அதிகாரிகளை பாதுகாக்கிறதா அரசு?

தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்த வழக்கை எடுத்த ஐந்து மாதங்களில் மூடிவிட்டது. அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் மனித உரிமை செயற்பாட்டாளர் ஹென்ரி திபேன்.

அரசாங்கம் அதிகாரிகளையே நம்பியிருப்பதுதான் இதற்கெல்லாம் காரணம் என்கிறார் அவர். ,"இந்த வழக்கை விசாரித்த சிபிஐ இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னர் ஒரே ஒரு காவலரை மட்டும் தான் குற்றம் புரிந்ததாக அடையாளம் கண்டது. அவரும் கீழ் நிலையில் உள்ள காவலர்தான். இந்த அரசு, அதிகாரிகளையே நம்பியிருப்பது துர்திருஷ்டவசமானது. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை பாதுகாக்கிறது." என்றார்.

ஒரு முறை வழக்கில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே வெளியானது கூட தெரியாமல், அறிக்கை இனிமே வெளி வரும் என்று கடந்த மாதம் நீதிமன்றத்தில் கூறியதை சுட்டிக்காட்டுகிறார் அவர்.

தவறு செய்த அதிகாரிகளின் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக தமிழ்நாடு அரசாங்கம் கூறுகிறது.“தூத்துக்குடி மாவட்ட முன்னாள் ஆட்சியர் வெங்கடேஷ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். இந்நிலையில், இது குறித்து மேலும் விசாரிக்க 2023ம் ஆண்டு மே மாதம் முதல் தீரஜ்குமார் ஐ.ஏ.எஸ். தலைமையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதன் அறிக்கை இன்னும் இறுதி செய்யப்படவில்லை” என்றும் கூறியது. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஐ பி எஸ் அதிகாரிகள் மீதும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது.

ஆனால், இந்த நடவடிக்கைகள் போதுமானதல்ல என்று விமர்சிக்கும் ஹென்றி திபேன், "2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போதும்,2021 ன் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போதும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமானவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்போம் என்று திமுக கூறியது. அந்த நடவடிக்கை எங்கே என்று தான் கேட்கிறோம்." என‌ கேள்வியெழுப்பினார்.

‘‘13 உயிர்கள் பறி போகின. கடந்த ஆறு ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவிடல்லை. இனிமேலும் திறக்க விடமாட்டார் கடவுள். என் மகளை இழந்து நான் படும் வேதனை எனக்கும் கடவுளுக்கும் மட்டுமே தெரியும்" என்கிறார் ஸ்னோலின் தாயார் வனிதா.

இது குறித்து அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘இந்த விவகாரத்தில் தேவையான துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விட்டன. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த நிலைப்பாடு அரசுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது’’ என்றார்.

https://www.bbc.com/tamil/articles/c191drwmj4po

Checked
Thu, 03/28/2024 - 13:25
தமிழகச் செய்திகள் Latest Topics
Subscribe to தமிழகச் செய்திகள் feed