பட்டியல் சாதி இளைஞரை திருமணம் செய்த பெண்ணை புளியமரத்தில் தூக்கிட்டு கொலை செய்த பெற்றோர் - பிபிசி கள ஆய்வு
படக்குறிப்பு,
பட்டியல் சாதியைச் சேர்ந்த நவீனும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யாவும் கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வந்தனர்
கட்டுரை தகவல்
-
எழுதியவர், பிரபாகர் தமிழரசு
-
பதவி, பிபிசி தமிழ்
-
11 ஜனவரி 2024
(எச்சரிக்கை: இந்தக் கட்டுரையின் சில உள்ளடக்கங்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக் கூடும்)
பட்டியல் சாதியை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்ததற்காக மகளை கொலை செய்து யாருக்கும் தெரியாமல் எரித்த பெற்றோரை தஞ்சாவூர் மாவட்ட போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பூவாளுர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர். அவரது மகன் நவீன். இவர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர். இவர் கடந்த 7 ஆம் தேதி வாட்டத்திக்கோட்டை காவல்நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார்.
அதில், பக்கத்து கிராமமான நெய்வவிடுதியைச் சேர்ந்த ஐஸ்வர்யா(19) என்ற பெண்ணை தான் திருமணம் செய்திருந்த நிலையில், பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து கொலை செய்துவிட்டு ஊருக்குள் யாருக்கும் தெரியாமல் சுடுகாட்டிற்கு கொண்டு சென்று எரித்துவிட்டதாக கூறியிருந்தார்.
அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், பெண்ணின் தந்தை பெருமாள் மற்றும் அவரது மனைவி ரோஜா ஆகியோர் இந்த கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதை உறுதி செய்து, கைது செய்துள்ளனர். பெருமாளும், அவரது மனைவியும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
இச்சம்பவம் தொடர்பாக என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ள பிபிசி சார்பில் ஐஸ்வர்யாவின் சொந்த கிராமமான நெய்வவிடுதிக்கும், நவீனின் சொந்த கிராமமான பூவாளுருக்கும் நேரடியாகச் சென்றிருந்தோம்.
ஐஸ்வர்யா கொலை செய்யப்பட்டது எப்படி? இரண்டு கிராமத்திலும் தற்போதைய நிலவரம் என்ன? காவல்துறையினர் என்ன சொல்கிறார்கள்?
படக்குறிப்பு,
நவீன் கடந்த இரண்டு வருடங்களாக திருப்பூரில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றினார்.
என்ன நடந்தது?
கடந்த 7 ஆம் தேதி வாட்டத்திக்கோட்டை காவல்நிலையத்தில் நவீன் புகார் கொடுத்துள்ளார். அதன்படி, "பட்டியல் சாதியைச் சேர்ந்த நவீனும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யாவும் கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வந்தனர்.
நவீன் கடந்த இரண்டு வருடங்களாக திருப்பூரில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றினார். ஐஸ்வர்யா கடந்த ஒன்றரை வருடங்களாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் உள்ள ஒரு தறி மில்லில் பணியாற்றினார்.
இந்நிலையில், நவீன் பட்டியல் பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் ஐஸ்வர்யாவின் அப்பாவும், உறவினர்களும், அவர்கள் இருவரும் காதலிப்பதைத் தெரிந்துகொண்டு அவர்களை பிரிப்பதற்காக திருப்பூர் வருவதாகக் கேள்விப்பட்டு, கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி அவரப்பாளையத்தில் உள்ள விநாயகர் கோயிலில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்" என்று அந்த புகார் மனுவில் நவீன் கூறியுள்ளார்.
படக்குறிப்பு,
ஐஸ்வர்யாவை அவரது தந்தையான பெருமாள், புளியமரத்தடிக்கு இழுத்துச் சென்று தூக்கிட்டு கொலை செய்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
ஐனவரி 2 ஆம் தேதி, ஐஸ்வர்யாவைத் தேடி பல்லடம் வந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள், பல்லடம் போலீசில் புகார் அளித்துள்ளனர். வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார், ஐஸ்வர்யாவை நவீனிடமிருந்து அழைத்துச் சென்று, அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
“மதியம் 2 மணியளவில், ஐஸ்வர்யா, அவரது தந்தை மற்றும் அவரது உறவினர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்குள் சென்றனர். அரை மணிநேரம் கழித்து பல்லடம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து ஐஸ்வர்யாவை அவரது தந்தையும், உறவினர்களும் அழைத்துக்கொண்டு, வெளியே நின்றுகொண்டிருந்த ஒரு காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டனர்,” என நவீன் தனது புகாரில் கூறியுள்ளார்.
நவீன் புகாரின் அடிப்படையில் பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில், ஜனவரி 3 ஆம் தேதி அதிகாலையே ஐஸ்வர்யாவை கொலை செய்துவிட்டு, ஊருக்குள் யாருக்கும் தெரியாமல் சுடுகாட்டில் எரித்துவிட்டது தொடர்பாக தனக்கு தகவல் கிடைத்ததாகவும், அதனை உறுதிப்படுத்திய பின் பயந்துகொண்டு வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
படக்குறிப்பு,
ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாளும், அவரது மனைவி ரோஜாவும் கைது செய்யப்பட்ட பின், சம்பவ இடத்திற்கு அழைத்து வந்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்
ஐஸ்வர்யாவுக்கு என்ன நடந்தது?
ஐஸ்வர்யாவின் கிராமமான நெய்வாவிடுதிக்குள் நுழையும்போதே, போலீசார் நடமாட்டத்தை பார்க்க முடிந்தது. தொடர்ந்து போலீசார் வந்து செல்வதால், அப்பகுதியில் உள்ள அனைவரது வீட்டின் கதவுகளும் அடைக்கப்பட்டு இருந்தன.
சம்பவம் நடந்ததாகக் கூறப்படும், நெய்வவிடுதி கிராமத்தின் மூலையில் இருந்த ஐஸ்வர்யாவின் வீட்டிற்கு சென்றோம். அங்கு பாதுகாப்பு பணிக்காக அமர்த்தப்பட்டிருந்த போலீசாரோ, யாரையும் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் அனுமதிக்கவில்லை.
நவீனின் புகாரை பெற்று வழக்குப்பதிவு செய்த காவல் துறை துணை ஆய்வாளர் நவீன்பிரசாத் கொலை நடந்ததாகக் கூறப்படும் இடத்தை ஆய்வு செய்து கொண்டிருந்தார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், ஐஸ்வர்யா தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டதை உறுதி செய்தார். விசாரணை முடித்துவிட்டு கிளம்பிய அவரிடம், எங்கே வைத்து கொலை செய்தார்கள் எனக் கேட்க, “அதோ அங்க இருக்கே அந்த புளியமரம், அதில் தான் கயிற்றைப்போட்டு இழுத்திருக்கிறார்கள். தடயங்கள் உள்ளன. அருகில் செல்ல வேண்டாம்,”எனக் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார் நவீன் பிரசாத்.
படக்குறிப்பு,
பிபிசி தமிழிடம் பேசிய காவல் ஆய்வாளர் ஐஸ்வர்யா தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டதை உறுதி செய்தார்.
தொடர்ந்து, அக்கம் பக்கத்தில் இருக்கும் மக்களிடம் பேச பிபிசி முயற்சித்தது.
ஐஸ்வர்யாவின் வீட்டிற்கு அருகில் சிலர், கொலையை பார்த்ததை ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், ஐஸ்வர்யாவை அவரின் அப்பா இழுத்துச் சென்றதைப் பார்த்ததாகக் கூறினர்.
“தேதி ஞாபகம் இல்லை. அது ஒரு இரவு நேரம் தான். ஒரே கூச்சல். அந்த சத்தம் கேட்டுதான் வெளியே வந்து பார்த்தோம். அந்தப் பெண்ணை அப்படியே தரத்தரவென நேராக அந்த புளியமரத்துக்கிட்டத்தான் இழுத்துக்கிட்டு போனார். அதற்குள் என் கணவர் என்னை உள்ளே போகச் சொல்லிவிட்டார்,” என்றார் அந்த பெயர் குறிப்பிட விரும்பாத பெண்.
ஐஸ்வர்யா கொல்லப்பட்டது எப்படி?
இந்த கொலை வழக்கை விசாரித்து வரும் விசாரணை அதிகாரிகளில் ஒருவர் பிபிசி தமிழிடம் பேசினார். அவர், பெருமாளும், அவரது மனைவி ரோஜாவும் கைது செய்யப்பட்ட பின், சம்பவ இடத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தபோது, கொலை நடந்த நேரத்தில் இருவரும் என்ன செய்தார்கள் என்பதை செய்து காண்பித்ததாகக் கூறினார்.
“அவர் (பெருமாள்) அந்தப் பெண்ணை காரைவிட்டு கீழே இறங்கியதும் வீட்டிற்குள்கூட அழைத்துச் செல்லவில்லை. நேராக புளியமரத்தடிக்குத்தான் இழுத்துச் சென்றுள்ளார். அங்கு போகும்போதே, மனைவியை நாற்காலியும், கயிறும் எடுத்துவரச் சொல்லியுள்ளார். மனைவி கயிறைக்கொடுக்க, அந்த மரத்தின் கிளையில் கயிற்றைப்போட்டு தூக்கு போடுவதைப்போல சுருக்கு போட்டிருக்கார்,” என விசாரணையின்போது பார்த்ததைப் பகிர்ந்தார் அந்த அதிகாரி.
தொடர்ந்து பேசிய அவர், “அப்பாவை மன்னிச்சுருமா. எனக்கு வேற வழி தெரியல. நீயே மாட்டிக்கோமா என மிரட்டியுள்ளார். பின் அந்தப் பெண் கழுத்தில் மாட்டிக்கொள்ள, இவன் கயிற்றின் மறுமுனையைப் பிடித்து, இழுத்து மரத்தில் கட்டியுள்ளார். பின், அந்தப்பெண்ணின் பெரியம்மா ஒருவர் வந்து அந்தக்கயிறை அரிவாளால் வெட்டியுள்ளார்."
"அதில், ஐஸ்வர்யா கீழே விழுந்துள்ளார். விழுந்த பெண்ணிற்கு உயிர் இருப்பதை தெரிந்துகொண்டு கழுத்தை நெரித்துக்கொலை செய்துள்ளார். இவை அனைத்தையும் அவனே சம்பவம் நடந்த இடத்தில் செய்து காண்பித்தான். இதைத்தான் வாக்குமூலமாகவும் கொடுத்துள்ளார்,” என்றார் அந்த விசாரணை அதிகாரி.
பிபிசியிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத்தும் அதனை உறுதிப்படுத்தினார்.
“பெண்ணின் தந்தை கொடுத்த வாக்குமூலத்தின்படி, அவர்கள் அந்தப் பெண்ணை தூக்கிலிட்டு, பின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். அவர் கூறிய வாக்குமூலத்தை, மற்றவர்களின் வாக்குமூலங்களோடு ஒப்பிட வேண்டும்.
இதில், வேறு யாரேனும் ஈடுபட்டுள்ளனரா, இது முன்னதாகவே திட்டமிடப்பட்டு நடந்ததா உள்ளிட்டவையை விசாரித்து வருகிறோம். இது திட்டமிடப்பட்டு இருந்தால், கூடுதலாக சில பிரிவுகளின் கீழ் வழக்கு மாற்றப்படும். ஆனால், அதனை தற்போதே முடிவு செய்ய முடியாது,” என்றார்.
பள்ளி காலம் முதலே சாதி சொல்லி விலக்கி வைத்த பெற்றோர்
இச்சம்பவத்தில், புகார்தாரராகவும், முக்கிய சாட்சியாகவும் உள்ள ஐஸ்வர்யாவின் கணவர் நவீனின் கிராமத்திற்குச் சென்றோம். கிராமத்தின் நுழைவாயிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர். “உயர் அதிகாரிகளின் அனுமதியின்றி வெளியாட்கள் உள்ளே செல்லக் கூடாது,” என்றார் பாதுகாப்புக்காக இருந்த அந்த காவல்துறை அதிகாரி.
உரிய அனுமதிபெற்று நவீனின் பூவாளுர் கிராமத்திற்கள் நுழைந்தோம். நவீனின் வீட்டிற்கு அருகே சென்றதும் காவல்துறையினர் சுற்றிவளைத்து, காட்சிகள் பதிவு செய்வதற்கு அனுமதி மறுத்தனர். “தற்போது, இரண்டு கிராமங்களுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுவதால், யாரையும் அவர்களின் வீட்டிற்கு அருகே அனுமதிப்பதில்லை,” என்றார் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை அதிகாரி.
தொடர்ந்து, காவல்துறையின் விசாரணையில் உள்ள நவீனின் தந்தை பாஸ்கரை வாட்டத்திக்கோட்டை காவல்நிலையத்தில் வைத்து சந்தித்தோம். அப்போது அவர், தன் மகனை ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே எச்சரித்ததாகக் கூறினார்.
படக்குறிப்பு,
இந்தப் பிரச்னைக்கு காரணமே திருமணமானது ஊரில் உள்ள அனைவருக்கும் தெரிந்தது தான் என்றார் பூவாளுரைச் சேர்ந்த பெண்.
நவீனின் தந்தை பாஸ்கர், பிபிசி தமிழிடம் பேசும் போது, “அவர்கள் இருவரும் வேறு வேறு பள்ளியில்தான் படித்தார்கள். ஆனால், பள்ளிக்கு ஒரே அரசுப்பேருந்தில் செல்லும் போது தான் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே இரு வீட்டாரும் எச்சரித்தோம். பின், எனக்கு பயமாகிவிட்டது. அதனால், அவனை நான் பத்தாம் பகுப்புக்கு மேல் பட்டுக்கோட்டையில் பள்ளிக்கு அனுப்பாமல், வேறு பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் அனுமதித்தேன். ஆனால், கொரோனாவிற்கு பிறகு, அவன் கல்லூரி செல்வதை நிறுத்திவிட்டு, வேலைக்குச் செல்லத் தொடங்கிவிட்டான்,” என்றார்
இச்சம்பவத்திற்கு முன், நவீனின் தந்தை பாஸ்கரும், ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாளும் ஒருவருக்கு ஒருவர் தெரிந்தவர்களாகவே இருந்துள்ளனர்.
“இருவரும் நெருங்கிய நண்பர்கள் இல்லை என்றாலும், பக்கத்து பக்கத்து கிராமம் என்பதால் நல்ல பழக்கம்தான். இந்த சம்பவம் தெரிந்தபோது கூட, இரண்டு பேரும்போய் யாருக்கும் தெரியாமல் அழைத்து வந்துவிடுவோம் என்று என்னை அழைத்தான். ஆனால், அப்போது இவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை,” என்றார் பாஸ்கர்.
நவீன் - ஐஸ்வர்யா திருமணம் எப்படி ஊருக்கு தெரிந்தது?
இந்தப் பிரச்னைக்கு காரணமே திருமணமானது ஊரில் உள்ள அனைவருக்கும் தெரிந்தது தான் என்றார் பூவாளுரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி.
“இதுபோன்று பட்டியல் சாதியினர், பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்களை இதற்கு முன்பும் கூட திருமணம் செய்துள்ளனர். அவர்கள் பெரும்பாலும் சில வருடங்களுக்கு ஊருக்குள் வர மாட்டார்கள். ஏன் அவர்கள் திருமணம் செய்தது கூட ஊருக்குள் யாருக்கும் தெரியாது. ஆனால், இவர்கள் விஷயத்தில், இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் வீடியோ வாட்ஸ் அப் மூலம் ஊரில் உள்ள அனைவருக்கும் பரவிவிட்டது. அதுதான் இவ்வளவு பெரிய சம்பவத்திற்கு காரணம்,” என்றார் தமிழ்ச்செல்வி.
படக்குறிப்பு,
பல்லடம் காவல் நிலைய ஆய்வாளர் முருகையா பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்
பல்லடம் காவல் ஆய்வாளர் இடைநீக்கம்: நடந்தது என்ன?
பல்லடம் காவல்நிலையத்தில் இருந்து தான் ஐஸ்வர்யா அழைத்துச் செல்லப்பட்டதாகவும், தனக்கு கொலை மிரட்டல் இருப்பதாக போலீசார் கூறியதாகவும் நவீன் தனது புகார் மனுவில் கூறியிருந்தார்.
இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய பல்லடம் டிஎஸ்பி விஜயகுமார், " பெண்ணின் தந்தை பெருமாள் கொடுத்த புகாரின் பேரில் ஐஸ்வர்யா மற்றும் நவீனை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்திருந்தோம். ஆனால், நவீன் விசாரணைக்கு ஆஜராகவில்லை. ஐஸ்வர்யாவிடம் நாங்கள் விசாரணை நடத்திய போது அவர் எங்களிடம், நான் என் பெற்றோருடன் ஊருக்கு செல்கிறேன். எங்கள் திருமணம் குறித்து பெற்றோரிடம் பேசி ஒப்புக்கொள்ள வைக்கிறேன் எனக்கூறினார். ஐஸ்வர்யாவின் சம்மதத்தின் பேரில் தான் அவரை பெற்றோருடன் அனுப்பி வைத்தோம். நாங்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கவில்லை," என்றார்.
'கொலை மிரட்டல் இருந்ததால் தான் நவீன் விசாரணைக்கு ஆஜராகவில்லையா?' என்ற கேள்வியை டிஎஸ்பி விஜயகுமாரிடம் நாம் முன்வைத்தோம்.
அதற்கு விளக்கமளித்த அவர், "நவீன் விசாரணைக்கு ஆஜராகியிருந்தால் தானே கொலை மிரட்டல் இருந்ததா இல்லையா என்பது தெரியவரும். அவர் விசாரணைக்கு ஆஜராகவும் இல்லை, கொலை மிரட்டல் இருந்ததாக எதுவும் தெரிவிக்கவில்லை," என்கிறார் அவர்.