தமிழகச் செய்திகள்

தமிழ்நாடு: சோஃபா சிறுவன் முதல் டிடிஎஃப் வாசனின் மஞ்சள் வீரன் வரை - 2023 வைரல் சம்பவங்கள்

3 months 2 weeks ago
தமிழ்நாடு: சோஃபா சிறுவன் முதல் டிடிஎஃப் வாசனின் மஞ்சள் வீரன் வரை - 2023 வைரல் சம்பவங்கள்

பட மூலாதாரம்,NIFYAFURNITURE/INSTAGRAM

3 மணி நேரங்களுக்கு முன்னர்

ஒவ்வோர் ஆண்டும் பல விஷயங்கள் வைரலாகி சமூக ஊடகங்களை ஆக்கிரமிக்கும். இந்த வைரல் சம்பவங்களில் பிரபலங்கள் மட்டும் அல்லாமல் சாமானியர்களும் இடம் பெறுவார்கள்.

அப்படி, தமிழ்நாட்டில் 2023ஆம் ஆண்டில் நூற்றுக்கணக்கான வைரல் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. முக்கியமான, சுவாரஸ்யமான 10 வைரல் நிகழ்வுகளை மீண்டும் திரும்பிப் பார்ப்போம்.

600 மதிப்பெண்கள் எடுத்த நந்தினி
மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம்,MK STALIN/X

கடந்த மே மாதம், 2022-2023 கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில், இதற்கு முன்பு நடக்காத முன்மாதிரியாக, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நந்தினி என்ற மாணவி 600க்கு 600 என முழு மதிப்பெண்களையும் பெற்றார். அவருக்கு சமூக ஊடகங்களிலும் நேரிலும் வாழ்த்துகள் குவிந்தன.

அரசு உதவிபெறும் பள்ளியில் படித்த அந்த மாணவி, ‘படிப்புதான் சொத்து’ என்பதை உணர்ந்து கவனத்துடன் படித்ததாக ஊடக பேட்டிகளில் தெரிவித்தார். அவரை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் நேரில் அழைத்துப் பாராட்டினார்.

தச்சு தொழிலாளியின் மகளான நந்தினி, ’பாடங்களை மனப்பாடம் செய்யாமல், அவற்றைப் புரிந்து படித்ததே’ தன்னுடைய சாதனைக்குக் காரணம் என்றும் தெரிவித்திருந்தார். முழு மதிப்பெண்கள் பெற்றதன் மூலம் சமூக ஊடகங்களில் மிகுந்த கவனத்தைக் குறுகிய காலத்திலேயே பெற்றார் நந்தினி.

 
பேரிடரில் வெளிப்பட்ட அன்பு
மிக்ஜாம் புயல்

பட மூலாதாரம்,@CHENNAIPOLICE_/X

டிசம்பர் மாதத் தொடக்கத்தில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னையில் கனமழை-வெள்ளம் சென்னை மாநகரையே புரட்டிப்போட்டது. இதனால், தாழ்வான பகுதிகளைச் சேர்ந்த மக்களும் வேளச்சேரி, பள்ளிக்கரணை போன்ற நீர்நிலைகளுக்கு அருகில் அமைந்த குடியிருப்புகளும் வெகுவாகப் பாதிக்கப்பட்டன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது, வெள்ளநீரை அகற்றுவது உள்ளிட்ட மீட்புப் பணிகளுக்கு மத்தியிலும் சில சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தன. அதில், துரைப்பாக்கம் காவல் நிலையத்தின் தலைமைக் காவலர் தயாளன் என்பவர், வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும்போது, குழந்தை ஒருவரை அவரே தூக்கிக்கொண்டு சிரித்த முகத்துடன் நடந்து வந்த காட்சிகளும் புகைப்படங்களும் உடனே வைரலாகின.

குழந்தையைப் பத்திரமாக மீட்க வேண்டும் என்பதால் தாமே தூக்கிக்கொண்டு வந்ததாக தயாளன் ஊடக பேட்டிகளில் தெரிவித்தார். ‘குழந்தையைப் பார்த்தவுடன் களைப்பு பறந்து போய்விட்டது’ எனவும் தன் எண்ணத்தைப் பகிர்ந்துகொண்டார்.

இதுதவிர, பெருங்களத்தூரில் சாலையொன்றில் ‘சாதாரணமாக’ கடந்து சென்ற முதலையும் கவனம் பெற்றது. மேலும், வெள்ளம் காரணமாக புளியந்தோப்பில் வீட்டிலேயே பிரசவித்த பெண் ஒருவருக்கு குழந்தை இறந்தே பிறந்தது. அப்பெண் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, குழந்தையை அட்டைப்பெட்டியில் வைத்து குழந்தையின் தந்தையிடம் மருத்துவமனை நிர்வாகம் தந்ததாக எழுந்த சர்ச்சையும் கவனம் பெற்றது.

 
‘பிறந்து 9 நாளில் நடந்தேன்’
ஜோயல் இமானுவேல்

பட மூலாதாரம்,INSTAGRAM

படக்குறிப்பு,

ஜோயல் இமானுவேல்

சென்னையைச் சேர்ந்த ஜோயல் இமானுவேல் என்ற 14 வயது சிறுவன், கிறிஸ்தவ நம்பிக்கையைப் பரப்பும் ஊழியம் செய்து வருகிறார்.

அதுகுறித்த காணொளியில், “நான் 5 கிலோ எடையில் பிறந்தேன், பிறந்து 9 நாட்களிலேயே நடந்தேன், நானாகவே எல்லா வேலைகளையும் செய்வேன்’ எனப் பேசியது சமூக ஊடகங்களில் வைரலானது.

அந்தச் சிறுவனின் காணொளியைப் பகிர்ந்த பலரும் அவரை கேலி செய்து பதிவிட்டனர். மேலும் அச்சிறுவன் பேசியது கடும் விவாதங்களையும் எழுப்பியது.

இதையடுத்து, ‘நான் தவறாகப் பேசிவிட்டேன், நான் 9 நாட்களில் நடக்கவில்லை. 9 மாதங்களில் நடந்தேன் என்பதை 9 நாட்கள் எனக் கூறிவிட்டேன்’ என விளக்கம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார்.

ரஞ்சனா நாச்சியார்
ரஞ்சனா நாச்சியார்

பட மூலாதாரம்,RANJANA_NACHIYAAR

படக்குறிப்பு,

ரஞ்சனா நாச்சியார்

பேருந்தில் படிக்கட்டுகளில் பயணித்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை அடித்து, அவதூறாகப் பேசியதாக துணை நடிகை ரஞ்சனா நாச்சியார் மீது புகார் எழுந்த சம்பவம் வைரலானது. இவருடைய நடவடிக்கைக்கு சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்புகள் எழத் தொடங்கின.

அந்த மாணவர்களைத் தன் குழந்தைகளாகப் பாவித்து, அவர்களின் நலனுக்காகவே தாம் அப்படிச் செய்ததாக அவர் விளக்கம் அளித்திருந்தார். இதுதொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டது. பின்னர் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

 
வைரலான சோஃபா சிறுவன்
வைரல் சோஃபா சிறுவன்

பட மூலாதாரம்,NIFYAFURNITURE/INSTAGRAM

சென்னையில் சோஃபா கடை ஒன்றில் முகமது என்ற 13 வயது சிறுவன் ஒருவன் ‘படபட’வென மூச்சுவிடாமல் பேசி வியாபாரம் செய்யும் காணொளிகள் இன்ஸ்டாகிராமில் வைரலாகின.

அதுதொடர்பான வீடியோக்களை அவரே தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார். தன் தந்தையின் கடையைப் பிரபலப்படுத்தும் நோக்கில் அவர் இந்தக் காணொளிகளைப் பதிவிட்டு வருகிறார்.

இந்த வயதிலேயே சோஃபாக்களை விற்பதில் உள்ள வியாபார உத்தி, அதுகுறித்த அறிவு உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டு பலரும் பாராட்டினாலும் அந்தச் சிறுவனை விமர்சிப்பவர்களும் உண்டு.

அதற்குப் பதிலளித்த அந்தச் சிறுவன் 8ஆம் வகுப்பு படிக்கும் தான் நள்ளிரவில் படித்துவிட்டு அதிகாலையில் தன் தந்தையின் கடைக்கு வந்து வேலைகளைச் செய்வதாகத் தெரிவித்தார். இதன்மூலம், அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமானது.

டி.டி.எஃப் வாசனின் ‘மஞ்சள் வீரன்’
டி.டி.எஃப் வாசன்

நெடுஞ்சாலைகளில்கூட அதிவேகமாக பைக் ஓட்டுவது, சாகசங்களை செய்வது எனத் தன்னுடைய காணொளிகள் மூலம் யூடியூபராக பிரபலமானவர் டி.டி.எஃப் வாசன்.

இவர் செந்தில் செல்.அம் என்பவரின் இயக்கத்தில் ‘மஞ்சள் வீரன்’ என்ற படத்தில் நடிப்பதாகவும் 2024ஆம் ஆண்டு அந்தப் படம் வெளியாகும் எனவும் செய்திகள் வெளியாகி மேலும் பிரபலம் அடைந்தார் வாசன்.

ஆனால், செப்டம்பர் மாதம் காஞ்சிபுரத்தில் இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்றபோது வாசன் விபத்துக்குள்ளானார். இதுதொடர்பான வழக்கில் அவர் புழல் சிறையிலும் அடைக்கப்பட்டார். மேலும், அவரது ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகள் ரத்து செய்தும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பைக் சாகசங்கள் தொடர்பான படம் என்றே ‘மஞ்சள் வீரன்’ போஸ்டர் உணர்த்திய நிலையில், உரிமம் இல்லாத நிலையில் அப்பட வேலைகள் தொடருமா என்ற கேள்வியும் எழுந்தது.

 
அரசியல் வைரல்
செந்தில் பாலாஜி

பட மூலாதாரம்,ANI

தமிழக அரசியலில் பல வைரல் நிகழ்வுகள் நடந்திருந்தாலும் குறிப்பாக, மின்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டது தமிழக அரசியலில் பேசுபொருளானது.

அமலாக்கத்துறை அதிகாரிகள் நீண்ட நேர விசாரணைக்குப் பிறகு செந்தில் பாலாஜியை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல முற்பட்டபோது, காரில் ஏறி அமர்ந்த செந்தில் பாலாஜி, திடீரென நெஞ்சு வலிப்பதாகக் கூறி இருக்கையில் படுத்தபடியே துடித்தார். இந்த காணொளி காட்சிகள் அன்றைய நாளில் தேசிய அளவில் கவனம் பெற்றது. சமூக ஊடகங்களிலும் டிரெண்ட் ஆனது.

இதுதவிர, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியின் ‘சனாதன ஒழிப்பு’ குறித்த சர்ச்சைப் பேச்சு, ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம், சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் வளைவின் முன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை எழுப்ப தமிழக அரசு முயல்வதாக அதன் உரிமையாளர் எழுப்பிய குற்றச்சாட்டு, தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவு போன்ற பல சம்பவங்கள் தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

’பருத்தி வீரன்’ சர்ச்சை
இயக்குனர் அமீர்

பட மூலாதாரம்,HUW EVANS PICTURE AGENCY

படக்குறிப்பு,

இயக்குனர் அமீர்

கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான ‘பருத்தி வீரன்’ திரைப்படம் தொடர்பாக இயக்குநர் அமீர் மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா எழுப்பிய குற்றச்சாட்டு சினிமா உலகில் பல சர்ச்சைகளைக் கிளப்பி, விவாதங்களை எழுப்பியது.

“படத்திற்கு சொன்ன கணக்கைவிட அதிகமாகச் செலவு செய்து பணத்தைத் திருடிவிட்டார். பணத்தை உழைத்து சம்பாதிக்காமல் திருடிச் சம்பாதிக்கிறார்” என, ஞானவேல் ராஜா யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டிதான் சர்ச்சைகளுக்கு ஆரம்பப்புள்ளி.

"என்னுடைய நற்பெயரைக் கெடுக்கும் வகையில் அவர் என்னைப் பற்றிப் பேசி இருக்கிறார்” என அமீர் தன் தரப்பை முன்வைத்தார். இதைத் தொடர்ந்து இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரகனி, சேரன் எனப் பல இயக்குநர்களும் அத்திரைப்படத்தில் நடித்த பலரும் அமீருக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கைகளை வெளியிட்டனர்.

ஆனால், படத்தில் நடித்த கார்த்திக், தயாரிப்பு விஷயத்தில் தலையிட்டதாகக் கூறப்படும் சூர்யா, சிவகுமார் போன்றோர் இதுகுறித்து எந்தக் கருத்துகளையும் தெரிவிக்காமலேயே இந்த சர்ச்சை அடங்கிப் போனது.

இதுதவிர, மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா குறித்து ‘இழிவாக’ பேசியதும் அதைத் தொடர்ந்து எழுந்த கண்டனங்களும் வைரலாகின.

மேலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படத்தில் கூறப்பட்ட ‘பிளாஷ்பேக்’ போலியானது என லோகேஷ் கூறியதும், அதற்கு ரசிகர்கள் தங்கள் கற்பனையில் ‘உண்மையான’ பிளாஷ்பேக் எனப் பல கதைகளை சமூக ஊடகங்களில் எழுதியதும் கவனம் பெற்றது.

 
’இந்தாம்மா ஏய்’
நடிகர் மாரிமுத்து

பட மூலாதாரம்,MARIMUTHU

படக்குறிப்பு,

நடிகர் மாரிமுத்து

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர் நீச்சல்’ தொடரில், ’ஆதி குணசேகரன்’ கதாபாத்திரத்தில் நடிகர் மாரிமுத்து பேசிய எதார்த்தமான வசனங்கள் ரசிகர்களிடையே இந்த ஆண்டு மிகுந்த கவனம் பெற்றன.

அதில், தன் வீட்டுப் பெண்களை ‘இந்தாம்மா ஏய்’ என அழைப்பது எதிர்மறை விமர்சனங்களைக் கிளப்பினாலும் அவருடைய உடல் மொழியும் வசனங்களை வெளிப்படுத்தும் தனி பானியும் அவருக்கு பாராட்டுகளைப் பெற்றுத் தந்தன.

‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் மூலம் கவனம் பெற்ற மாரிமுத்து, இந்தத் தொடர் மூலம் தனக்கெனப் பெரும் ரசிகர் பட்டாளத்தை சமூக ஊடகங்கள் மூலம் பெற்றிருந்தார். அவருடைய ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக செப்டம்பர் மாதம் மாரடைப்பு ஏற்பட்டு மாரிமுத்து காலமானார்.

’மறக்குமா நெஞ்சம்’
ஏ.ஆர். ரகுமான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

செப்டம்பர் மாதம் நிகழ்ந்த ஏ.ஆர்.ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியில் தவறான நிர்வாகம் காரணமாகக் கூட்ட நெரிசல், டிக்கெட் வாங்கியவர்களுக்கு அனுமதி இல்லாதது, இடம் கிடைக்காதது, கூட்ட நெரிசலில் பெண்களுக்குப் பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட நிகழ்வுகள் நிகழ்ந்ததாகப் புகார் எழுந்தது. இதற்கு தாம் பொறுப்பு ஏற்பதாக ஏ.ஆர். ரகுமான் விளக்கம் அளித்தார்.

அதுகுறித்து மின்னஞ்சலுக்கு புகார் அளித்தால் டிக்கெட்டுக்கான பணம் திருப்பி அனுப்பப்படும் என்றும் தெரிவித்தார். ஆனாலும், தங்களுக்கு அந்தப் பணம் திரும்பி வரவில்லை எனப் பலரும் சமூக ஊடகங்களில் புகார் தெரிவித்திருந்தனர்.

https://www.bbc.com/tamil/articles/cn497ldnzryo

திருப்பூர்: 'சாமி பயம் காட்டி' பட்டியலின மக்கள் செருப்பு அணிவதை தடுத்த ஆதிக்க சாதியினர்

3 months 2 weeks ago
திருப்பூரில் சாதி தீண்டாமை
கட்டுரை தகவல்
  • எழுதியவர், ச.பிரசாந்த்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 29 டிசம்பர் 2023

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை அடுத்த கொண்டவநாயக்கன்பட்டி கிராமத்தில், ஆன்மிகத்தின் பெயரால் இன்னமும் தீண்டாமை பின்பற்றப்படுவதால், பட்டியலின மக்கள் ஆதிக்க சாதியினர் வீதியில் செருப்பு அணியாமல் நடக்கின்றனர்.

அதுமட்டுமின்றி, இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோவிலுக்குள்ளேயே செல்ல முடியாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

சாதி தீண்டாமை நடைபெறுவதாகப் புகார் கிடைத்ததால், கிராமத்தில் ஆய்வு செய்த மாவட்ட நிர்வாகத்தினர் பட்டியலின மக்களை செருப்பு அணிய வைத்தும், கோயிலுக்குள் கூட்டியும் சென்றுள்ளனர்.

என்ன நடக்கிறது கிராமத்தில்?

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை அடுத்து அமைந்துள்ளது கொண்டவநாயக்கன்பட்டி கிராமம். அங்கு இன்னமும் தீண்டாமை பின்பற்றப்படுகிறது, பட்டியலின மக்கள் ஆதிக்க சாதியினர் வசிக்கும் பொதுவான வீதியில் செருப்பு அணிந்து நடக்க முடியவில்லை, அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோவிலுக்குள் நுழைய முடியவில்லை எனக் கூறி, திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தில் சமூக செயற்பாட்டாளர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து டிசம்பர் 23ஆம் தேதி, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் பட்டியலின மக்களை, ஆதிக்க சாதி வீதியில் நடக்க வைத்தும், கோவிலுக்குள் அழைத்துச் சென்றும் வழிபட வைத்துள்ளனர்.

இப்படியான நிலையில், டிசம்பர் 27ஆம் தேதி, தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் இயக்குநர் ரவிவர்மன் இந்தக் கிராமத்துக்கு வந்து, தீண்டாமை பின்பற்றப்படும் கோவில் மற்றும் ஆதிக்க சாதியினரின் வீதியைப் பார்வையிட்டு, மக்களிடம் விசாரணை நடத்தினார்.

 
திருப்பூரில் சாதி தீண்டாமை

உண்மையில் இந்தக் கிராமத்தில் என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிய பிபிசி தமிழ் கொண்டவநாயக்கன்பட்டி கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டது.

உடுமலை நகரில் இருந்து 6 கி.மீ. தொலைவு பயணித்து, சுற்றிலும் தென்னை மரங்கள், சோளம் சாகுபடியென இருந்த விளைநிலங்களுக்கு மத்தியில் அமைந்திருந்த கொண்டவநாயக்கன்பட்டி என்ற ராஜவூரை அடைந்தோம். அங்கு ஆதிக்க சாதியினர் 90 குடும்பங்களும், பட்டியலின மக்கள் 60 குடும்பங்களும் வசித்து வருகின்றனர்.

ஆதிக்க சாதி மக்களின் விவசாய நிலங்களில் விவசாயத் தொழிலாளர்களாக வேலைகளுக்குச் சென்று பட்டியலின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

கிராமத்தின் நுழைவுப்பகுதியில் இருந்து 700 மீட்டர் தொலைவில் அமைந்திருந்தது தீண்டாமை பின்பற்றப்படும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ராஜகாளியம்மன் கோவில்.

தீண்டாமை பின்பற்றப்படும் கம்பள நாயக்கர் வீதி கிராமத்தின் மையப் பகுதியில் வெறும் எட்டு அடி அகலத்தில் அமைந்திருந்தது. கோவிலையும் வீதியையும் பிபிசி தமிழ் பார்வையிட்டது. அங்குள்ள பட்டியலின மக்களிடம், ‘ஏன் நீங்கள் கோவிலுக்குள் செல்வதில்லை? கம்பள நாயக்கர் வீதியில் செருப்புடன் நடப்பதில்லை, காரணம் என்ன?’ என விசாரித்தோம்.

 
'பல ஆண்டுகளாக இப்படித்தான் இருக்கிறோம்'
திருப்பூரில் சாதி தீண்டாமை

பட்டியலின மக்களுக்காக பிபிசி தமிழிடம் பேசிய முத்துலட்சுமி, ‘எங்கள் ஊரில் நடந்த குடும்பப் பிரச்னையை சாதிப் பிரச்னையாக மாற்றிவிட்டார்கள். நாங்கள் எப்போதும் போல சாதிப் பாகுபாடு இல்லாமல் ஒற்றுமையாகத்தான் வாழ்கிறோம்,’’ என்றார்.

‘ஒற்றுமை எனச் சொல்கிறீர்கள். ஆனால் ஏன் அந்த வீதியில் செருப்பு அணிவதில்லை, கோவிலுக்குள் பட்டியலின மக்கள் நுழைவதில்லை? யாராவது மிரட்டுகிறார்களா?' என்று கேட்டோம்.

அதற்குப் பதிலளித்த முத்துலட்சுமி, ‘‘செருப்பு போட வேண்டாம், கோவிலுக்குள் வர வேண்டாம் என ஆதிக்க சாதியைச் சேர்ந்த யாரும் சொல்வதில்லை. ஆனால், எங்கள் அப்பா, தாத்தா காலத்தில் இருந்தே நாங்கள் பரம்பரையாக செருப்பு அணியாமல்தான் கம்பள நாய்க்கர் வீதியில் நடக்கிறோம்.

கோவிலுக்கு வெளியில் இருந்துதான் சாமி கும்பிடுகிறோம். பல ஆண்டுகளாக இப்படித்தான் இருக்கிறோம். இது பாரம்பரியமாகத் தொடர்வதால் எங்களுக்கு அதை மீறுவதில் விருப்பமில்லை, இனியும் இப்படித்தான் இருப்போம்," என்றார் அவர்.

 
'சாமிக்கு பயந்துதான் போவதில்லை'
திருப்பூரில் சாதி தீண்டாமை

பிபிசி தமிழிடம் பேசிய காளியம்மாள், ‘‘எனக்கு 60 வயதாகிறது. எனக்குத் தெரிந்த வரையில் நாங்கள் பல ஆண்டுகளாக ராஜகாளியம்மன் கோவிலுக்கு வெளியில் நின்றுதான் வழிபடுகிறோம்.

ஆண்டுதோறும் இந்தக் கோவிலின் பண்டிகையின்போது கம்பள நாயக்கர் வீதி வழியாகத்தான் அம்மன் சிலை எடுத்து வரப்படும்.

இந்த வீதியில் நாங்கள் செருப்பு அணியாமல்தான் சென்று வருகிறோம். அது பல ஆண்டுகளாக இருக்கும் கட்டுப்பாடு. நாங்கள் சாமிக்குப் பயந்து அதை மீறுவதில்லை, கோவிலுக்கு உள்ளேயும் போவதில்லை,’’ என்பதுடன் முடித்துக்கொண்டார்.

 
ஆன்மிகத்தின் பெயரால் மிரட்டல்!
திருப்பூரில் சாதி தீண்டாமை

நம்மிடம் பேசிய பெயர் தெரிவிக்க விரும்பாத பட்டியலின இளைஞர்கள் சிலர், அங்கு தீண்டாமை நிலவுவதாகக் கூறினர்.

‘‘நாங்கள் இந்தத் தீண்டாமையைத் தகர்த்து கோவிலுக்குள் சென்று வழிபடவும், செருப்பு அணிந்து பொதுவான அந்த வீதியில் நடக்கவும் முயன்றாலும், எங்கள் பெற்றோரே ஆதிக்க சாதியினருக்குப் பயந்து எங்களைத் தடுக்கின்றனர்.

அந்த அளவுக்கு இங்குள்ள பட்டியலின மக்கள் மனதில் தீண்டாமை கட்டமைக்கப்பட்டுள்ளது. இவற்றையும் மீறி தீண்டாமையை நாங்கள் தகர்க்க நினைத்தால், ஆதிக்க சாதியினர் பில்லி சூனியம் நடக்கும், காளியம்மாள் தண்டிப்பாள் என ஆன்மிகத்தின் பெயரிலும், தோட்ட வேலை தரமாட்டோம் எனவும் மிரட்டுவதாக,’’ அவர்கள் வருத்தத்துடன் கூறினார்கள்.

‘பாரம்பரியத்தை அனைவரும் பின்பற்றுகின்றனர்’

ஆதிக்க சாதியினர் சார்பாக பிபிசி தமிழிடம் பேசிய கிருஷ்ண குமார், ‘‘நாங்கள் பட்டியலின மக்களிடம் செருப்பு அணிய வேண்டாம், கோவிலுக்குள் நுழைய வேண்டாம் என யாரும் தெரிவிப்பதில்லை.

எங்கள் ஊருக்குள் காலம் காலமாகப் பழைய நடைமுறை, பாரம்பரியம் எப்படி இருக்கிறதோ அதை அனைவரும் பின்பற்றுகின்றனர். அதனால், பட்டியலின மக்கள் அவர்களாக செருப்பு அணிவதில்லை, கோவிலுக்குள் வருவதில்லை,’’ என்றார்.

 
ஆன்மிகத்தின் பெயரில் மறைமுக ஆதரவு?
திருப்பூரில் சாதி தீண்டாமை

பிபிசி தமிழிடம் பேசிய அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி, ‘‘கம்பள நாயக்கர் வீதியில்தான் காளியம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது. கடவுளுக்குப் பயந்துதான் பட்டியலின மக்கள் வீதியில் செருப்பு அணிய மாட்டார்கள்; காளியம்மன் கோவிலுக்குள் வரமாட்டார்கள். நாங்கள் யாரும் அவர்களை கோவிலுக்குள் நுழைய வேண்டாம், செருப்பு அணிய வேண்டாம் எனக் கூறுவதில்லை,’’ என்றார்.

ராஜலட்சுமி நம்மிடம் பேசிக்கொண்டருந்த போதே கோபத்தில் திடீரென, ‘‘அசலூர்காரங்க சொல்லிக் கொடுத்துதான் இப்படியெல்லாம் பிரச்னை நடக்குது. இங்க அவுங்க (பட்டியலின மக்கள்) செருப்பு போட்டுட்டு வரமாட்டாங்க, அதையும் மீறி வந்தா அவுங்கள (பட்டியலின மக்கள்) காளியாத்தா பாத்துக்கும், அப்றம் அனுபவிப்பாங்க,’’ என மிரட்டும் தொனியில் பேசினார்.

ஆதிக்க சாதியைச் சேர்ந்த பலரிடம் பிபிசி தமிழ் பேசியதில் பெரும்பாலானவர்கள், ‘பட்டியலின மக்கள் செருப்பு அணிந்து வந்தாலோ, கோவிலுக்குள் வந்தாலோ ராஜகாளியம்மாள் தண்டிப்பார், அவர்கள் எப்போதும் ஊர் கட்டுப்பாட்டை மீற மாட்டார்கள்,’ என, ஆன்மிகத்தின் பெயரால் தீண்டாமையை மறைமுகமாக ஆதரிக்கும் மனநிலையில்தான் இருந்தனர்.

 
மாவட்ட நிர்வாகம் சொல்வது என்ன?
திருப்பூரில் சாதி தீண்டாமை

இந்த விவகாரம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், ‘‘ஒரு குடும்ப பிரச்னை தொடர்பான வழக்கின் போதுதான், இந்தக் கிராமத்தில் தீண்டாமை நடப்பதாகப் புகார் வந்தது.

விசாரித்தபோது, 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிக்க சாதியைச் சேர்ந்த சிலர் பட்டியலின மக்கள் கோவிலுக்குள் வரக்கூடாது, செருப்பு அணியக்கூடாது என கட்டுப்பாடுகள் விதித்திருந்தனர் என்பது தெரிய வந்தது. ஆனால், அவர்கள் யாரும் தற்போது உயிருடன் இல்லை.

இப்போது யாரும் கட்டுப்பாடுகள் விதிப்பதும் இல்லை. ஆனால், பல ஆண்டுகளாக தீண்டாமையைப் பின்பற்றிய பட்டியலின மக்கள் இன்னமும் அதைப் பின்பற்றுகின்றனர்,’’ என்கிறார் அவர்.

மேலும், ‘‘தீண்டாமை தொடர்பான புகாரைப் பெற்ற பின் டிசம்பர் 23ஆம் தேதி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாங்கள் பட்டியலின மக்களை கோவிலுக்குள் அழைத்துச் சென்றும், கம்பள நாயக்கர் வீதியில் செருப்பு அணிய வைத்து நடந்து அழைத்துச் சென்றும் தீண்டாமையைத் தகர்க்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அந்தக் கிராமத்தைக் கண்காணித்து வருகிறோம், தீண்டாமையை யார் கட்டவிழ்த்தாலும் நடவடிக்கை எடுப்போம்,’’ என்றார் ஜஸ்வந்த் கண்ணன்.

 
‘மிரட்டினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’
திருப்பூரில் சாதி தீண்டாமை

தீண்டாமை நடந்ததாகக் கூறப்பட்ட கோவில் மற்றும் வீதியில் ஆய்வு செய்த, தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் இயக்குநர் ரவிவர்மன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘கொண்டவநாயக்கன்பட்டி கிராமத்தில் தீண்டாமை பின்பற்றப்படுவதாக புகார் எழுந்ததால் ஆய்வு செய்துள்ளோம்.

நாங்கள் பார்த்த வரையில் பட்டியலின மக்கள் கோவிலுக்குள் நுழைய முடிகிறது. செருப்பு அணிந்து நடக்க முடிகிறது, இதில் மற்ற சாதியினரால் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், பட்டியலின மக்களாக முன்வந்துதான் இதைப் பழக்கத்தில் கொண்டு வர வேண்டும்,’’ என்றார்.

பேட்டியின்போது, ‘கோவில் நுழைவு, செருப்பு அணிந்து நடக்க பட்டியலின மக்கள் முயன்றால், வேலையைக் காரணம் காட்டி ஆதிக்க சாதியினர் மிரட்டுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது’ என்ற கேள்வியை இயக்குநர் ரவிவர்மனிடம் முன்வைத்தோம்.

அதற்கு விளக்கமளித்த ஆதிதிராவிடர் ஆணையத்தின் இயக்குநர் ரவிவர்மன், ‘‘போலீஸார், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்துதான் இந்தக் கிராமத்தில் ஆய்வு செய்துள்ளோம். அப்படி யாரேனும் மிரட்டினால், பட்டியலின மக்கள் எங்களிடம் புகாரளிக்கலாம். மிரட்டுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார் அவர்.

 
சுதந்திரமாக உணர்ந்தேன்!
திருப்பூரில் சாதி தீண்டாமை

அரசு அதிகாரிகளுடன் சேர்ந்து வீதியில் செருப்புடன் நடந்து தீண்டாமையைத் தகர்த்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர், தனது அனுபவத்தை பிபிசி தமிழுடன் பகிர்ந்துள்ளார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "எனக்கு 40 வயசாகுது. இத்தனை ஆண்டுகளாக நான் கம்பள நாயக்கர் வீதியுடைய நுழைவுப் பகுதியிலேயே செருப்பை விட்டுவிட்டு வெறும் காலில்தான் அந்த வீதிக்குள் போய் வருவேன்.

அந்த வீதியில் ஒரு கடை இருக்கிறது. அங்கு பொருட்களை வாங்கக்கூட செருப்பைக் கழற்றிவிட்டுத்தான் செல்வேன். ராஜகாளியம்மன் கோவிலுக்குச் சென்றால் குடும்பத்துடன் கோவிலுக்கு வெளியில் நின்றுதான் சாமி கும்பிடுவேன்.

அதிகாரிகள் சமூக செயற்பாட்டாளர்கள் முயற்சியால் செருப்பு அணிந்து அந்த வீதியில் முதல் முறையாக நடந்தேன். கோவிலுக்குள் சென்று வழிபட்டபோது, சுதந்திரமாக உணர்ந்தேன். எங்கள் கிராமத்தில் எப்போதும் நாங்கள் இதேபோல் சுதந்திரமாக இருந்தால் நன்றாக இருக்கும்," என்றார் மகிழ்ச்சியுடன்.

https://www.bbc.com/tamil/articles/cv2m84l79jdo

Checked
Fri, 04/19/2024 - 05:37
தமிழகச் செய்திகள் Latest Topics
Subscribe to தமிழகச் செய்திகள் feed