1 day 6 hours ago
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியில் ரோகித், கோலி இடம் பெறுவதில் என்ன பிரச்னை? கோலியால் பிசிசிஐ-க்கு என்ன சவால்?
பட மூலாதாரம்,GETTY IMAGES
கட்டுரை தகவல்
எழுதியவர், விமல் குமார்
பதவி, மூத்த விளையாட்டு செய்தியாளர், பிபிசி இந்தி
26 மார்ச் 2024
“டி20 கிரிக்கெட் என்று வரும்போது, அதனை பிரபலப்படுத்த என் பெயர் உலகின் பல்வேறு பகுதிகளிலும் பயன்படுத்தப்படுகிறது என்பதை நான் அறிவேன். என்னுள் இன்னும் கிரிக்கெட் (டி20) இருப்பதாக உணர்கிறேன்.”
விராட் கோலியின் இந்த கருத்து எதிர்பார்த்தது போலவே, சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதற்காக கோலி கடந்த சில மாதங்களாக கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்தார். சமீபத்தில், இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் கூட அவர் விளையாடவில்லை.
இதற்கிடையில், ஜூன் மாதம் நடைபெறவுள்ள டி-20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் கோலி தேர்வு செய்யப்படுவது கடினம் என்பது போன்ற ஊகங்கள் தொடர்ந்து எழுந்தன.
மனம் திறந்து பேசிய விராட் கோலி
அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா இருப்பார் என்பதை சில வாரங்களுக்கு முன்பு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உறுதிப்படுத்தினார். அதே நேரம், உலகக் கோப்பை தொடரில் கோலி விளையாடுவது குறித்த கேள்வியை அவர் தவிர்த்துவிட்டார்.
இதைத் தொடர்ந்து பல்வேறு ஊடகங்கள், உலகக் கோப்பை தொடருக்கான அணியில் கோலி இடம்பெற மாட்டார் என்று தங்களுக்கு தகவல் கிடைத்ததாக செய்திகளை வெளியிட்டன.
இதற்கெல்லாம் மேலாக, இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும் கோலிக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படுபவருமான ரவி சாஸ்திரியும், குஜராத் டைட்டன்ஸ் மும்பை இந்தியன்ஸ் இடையேனான ஐபிஎல் போட்டியின் வர்ணனையின்போது, வரவிருக்கும் உலகக் கோப்பையில், இளம் வீரர்கள் மற்றும் ஃபார்முக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.
கோலியின் பெயரை அவர் நேரடியாக குறிப்பிடவில்லை என்றாலும், கோலி குறித்துதான் அவர் கூறினார் என்பது தெளிவானது. காரணம், இதே போட்டியில் சக வர்ணனையாளராக இருந்த இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன், "சர்வதேச அளவில் டி20 கிரிக்கெட்டின் பரவலை விரிவுபடுத்துவதற்காக கிரிக்கெட்டின் உச்ச அமைப்பான ஐசிசி, கோலி போன்ற ஜாம்பவான்களையும் அவரது பிராண்டையும் பயன்படுத்துகிறது. அப்படியிருக்கும் போது, உலகக் கோப்பையில் கோலி இல்லாத இந்திய அணியை எப்படி நினைத்துப் பார்க்க முடியும்" என்று பேசியிருந்தார்.
பட மூலாதாரம்,ANI
படக்குறிப்பு,
கோலி
மார்ச் 25ஆம் தேதி நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 49 பந்துகளில் 77 ரன்கள் குவித்த கோலி அணியின் வெற்றிக்கு உதவியதோடு ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
போட்டிக்கு பின்னர், ஹர்ஷா போக்லேவுக்கு விராட் கோலி அளித்த பேட்டியில் மனம் திறந்துபேசினார்.
அவரது இந்த பேச்சு ரசிகர்களுக்கு சென்றடைய பேசப்பட்டவை அல்ல, மாறாக பிசிசிஐ தேர்வாளர்களை சென்றடைவதற்காக பேசப்பட்டவை.
இந்த பேட்டிக்கு பின்னர், இந்திய அணியின் தேர்வாளரான அஜித் அகர்கர் மற்றும் அவரது குழுவினர் பக்கம் பந்தை கோலி திருப்பிவிட்டுள்ளார்.
உலகக் கோப்பை தொடர்பான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோரின் திட்டங்களுடன் தான் தற்போதும் பொருந்தி போவதை கோலி நன்கு அறிந்துள்ளார். ஆனால், இதில் தேர்வாளர்களுக்கு சில தயக்கங்கள் உள்ளன.
பட மூலாதாரம்,ANI
படக்குறிப்பு,
டிராவிட்- அஜித் அகத்கர்
ரோகித், கோலி இருவரும் ஒருசேர இடம் பெறுவதில் என்ன பிரச்னை?
2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தோல்விக்கு இந்தியாவின் டாப் ஆர்டர் மூவரும்தான் (ரோகித்-கே.எல். ராகுல்-கோலி) காரணம் என்பதில் சந்தேகமில்லை.
ஆங்கர் ரோலில் மூவரும் ஒரே மாதிரி பேட் செய்கிறார்கள். ஒருநாள் உலகக் கோப்பையின் போது, கேப்டன் ரோஹித் முற்றிலும் ஆக்ரோஷமான அணுகுமுறையைக் கடைப்பிடித்தார். 50 ஓவர் கிரிக்கெட்டில் டி20 போட்டி போன்ற அதிரடியை வெளிப்படுத்தினார்.
கே.எல். ராகுலை விட இடது கை ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறந்த தேர்வாகத் தெரிகிறார். இப்போது தேர்வாளர்கள் முன் இருக்கும் கேள்வி மூன்றாவது இடத்துக்கு கோலியை தேர்வு செய்வதா அல்லது சுப்மன் கில்லை தேர்வு செய்வதா என்பதுதான்.
ஏனெனில் மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் இடம் உறுதியாகி இருக்கிறது.
கோலி அல்லது கில் விளையாடினால், ரிங்கு சிங்கை ஆறாவது இடத்தில் பினிஷராக பயன்படுத்த முடியாது.
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,
விராட் கோலி - ரோகித் சர்மா
அத்தகைய சூழ்நிலையில், தேவைப்பட்டால், விளையாடும் 11 பேர் பேர் கொண்ட அணியில் கில்லை தேர்வு செய்யாமல் இருக்கலாம். ஆனால், விராட் கோலியை அப்படி செய்ய முடியாது. கோலி அணியில் நீடிக்கலாமா என்ற விவாதம் இங்கிருந்து தொடங்கியது.
அனுபவம் மிக்க தற்போதைய கேப்டனை மேட்ச் வின்னராக கருதும்போது, முன்னாள் கேப்டனிடம் ஏன் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மை என்று கோலியின் ஆதரவாளர்களும் ரோகித் சர்மாவின் விமர்சகர்களும் கேள்வி எழுப்புகின்றனர்.
சராசரி மற்றும் ஸ்ட்ரைக் ரேட் இரண்டிலும் ரோகித்தை விட கோலி சிறப்பான நிலையில் இருக்கிறார்.
ஆனால், ஒருநாள் உலகக் கோப்பையின் போது ஹர்திக் பாண்டியா காயமடையாமல் இருந்திருந்தால் ரோகித் இந்த அணியில் இருந்திருக்க மாட்டார் என்றும், ரோகித் தனது ஆட்டத்தில் திடீரென்று இவ்வளவு பெரிய மாற்றத்தை கொண்டு வந்திருக்க மாட்டார் என்றும் பிசிசிஐ மற்றும் தேர்வாளர்கள் கருதுகின்றனர்.
ரோகித், கோலி ஆகிய இரண்டு ஜாம்பவான்களையும் ஆடும் லெவனில் ஒருசேர வைத்திருப்பது அணியின் சமநிலையை பாதிக்கக் கூடும் என்ற சிக்கலும் உள்ளது.
கோலியால் பிசிசிஐ-க்கு புதிய சவால்
ரோகித் உலகக் கோப்பையின் ஒரு அங்கமாக இருந்தால், அவரை யாரும் அணியில் இருந்து நீக்க முடியாது என்பது கோலிக்கு தெரியும்.
காரணம், ரோஹித்தின் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருந்தாலும் டி20 கிரிக்கெட்டில் மற்ற எந்த வீரரையும் விட மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்களை அவர் அதிகம் விளையாடியுள்ளார் என்பதற்கு வரலாறு சாட்சி.
எல்லாவற்றிற்கும் மேலாக, மெல்போர்னில் 2022 உலகக் கோப்பையின் போது பாகிஸ்தானுக்கு எதிரான அவரது வரலாற்று இன்னிங்ஸை ஒருவரால் எப்படி மறக்க முடியும்?
ஒட்டுமொத்தமாக, தற்போது சிறப்பான இன்னிங்ஸை விளையாடியதன் மூலம் அணி தேர்வாளர்களுக்கு கோலி சவால் விடுத்துள்ளார்.
பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரராக கோலி விளையாடி வருவதால், ரோகித்துடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக விளையாட வேண்டும் என்பதும் அவரது வாதமாக இருக்க வேண்டும்.
ஆனால் இந்த இரண்டு வீரர்களும் தொடக்க ஜோடியாக இணைந்து சில போட்டிகளில் மட்டுமே விளையாடியிருப்பது தேர்வாளர்களுக்குப் பிரச்னையாக இருக்கும்.
வரும் வாரங்களில் கோலி மீண்டும் சிறப்பான ஸ்கோர்களை குவித்தால், தேர்வாளர்களின் வாதம் முறியடிக்கப்படலாம்.
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,
ரோகித் சர்மா - டிராவிட்
ஐபிஎல்லில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவதால்தான் கோலி ரன்களை குவிக்கிறார், ஃபார்மில் இருக்கிறார். மாறாக, இந்திய அணியில் அவர் மூன்றாவது இடத்தில் களமிறங்குகிறார் என்றும் தேர்வாளர்கள் கூறக் கூடும்.
உண்மையை சொல்ல வேண்டுமென்றால், கோலியின் தேர்வு தொடர்பான விசயத்தில் பிரச்னை தீர்க்கப்படுவதற்கு பதிலாக தற்போது தேர்வாளர்களுக்கு பெரிய சவாலாக மாறியுள்ளது.
கோலியின் சமீபத்திய கருத்துகளால் தேர்வாளர்களின் பிரச்னை மேலும் அதிகரித்துள்ளது. ஆனால், டி-20 போட்டிகளுக்கு கோலிக்கு பதிலாக இளம் வீரரை தேர்வு செய்யுமாறு பிசிசிஐ, அணி தேர்வாளர்களுக்கு (மறைமுகமாக) செய்தி கொடுத்திருந்தால், இந்த கடினமான முடிவை எடுப்பதில் அகர்கர் சற்று ஆறுதல் அடையக் கூடும்.
ஆனால், பதினோரு பேர் கொண்ட அணியில் கோலிக்கு இடம் இல்லை என்பதை பயிற்சியாளர் டிராவிட்டும் கேப்டன் ரோகித் சர்மாவும் ரசிகர்கள் முன் எப்படி நியாயப்படுத்த முடியும்?
ஒட்டுமொத்தமாக, இந்த விஷயம் தற்போது சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியுள்ளது. ஐபிஎல் தொடரின் சில வாரங்கள் கோலியின் பேட்டிங்கிற்கு மிகவும் முக்கியமான காலகட்டமாக இருக்கக் கூடும்.
https://www.bbc.com/tamil/articles/cz4z8wl831no