Aggregator
எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் இந்தியர்கள் இலங்கையின் நிரந்தர குடியேற்றவாசிகளாவர் - விமல் வீரவன்ச சாடல்
கடும் வெப்பம்; வைத்திய நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
கடும் வெப்பம்; வைத்திய நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
Published By: DIGITAL DESK 3 21 FEB, 2024 | 05:17 PM
நாட்டில் நிலவும் வெப்பமான வானிலையின் காரணமாக சூரிய ஒளியில் அதிகமாக இருப்பதை தவிர்க்குமாறும், அடிக்கடி நீராகாரங்களை எடுத்து கொள்ளுமாறும் வைத்திய நிபுணர்கள் மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
இது குறித்து சிரேஷ்ட வைத்திய ஆலோசகர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்கிரம தெரிவித்துள்ளதாவது,
செயற்கை குளிர்பானங்களை பருகுவதை தவிர்த்து, நீர், இளநீர் போன்ற இயற்கை குளிர்பானங்களை பருகுவதன் மூலம் உடலில் நீர்வற்றிப் போகாமல் பாதுகாக்கலாம்.
அதிகம் வெப்பத்தினால் சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள் மற்றும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெறுபவர்கள் உடலில் நீர்வற்றும் அபாயத்தில் உள்ளனர்.
எனவே, இவர்கள் அதிக வெப்பம் உள்ள நேரங்களில் முடிந்த வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் மற்றும் உடலில் நீர்வற்றிப் போகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். ஆகையால் 2.5 லீற்றர் தண்ணீரை பருக வேண்டும்.
இதேவேளை, பாடசாலை சிறுவர்கள் அனாவசியமாக வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
அத்தோடு, சிறுவர்கள் வீட்டிற்குள் அல்லது நிழலில் விளையாட இடமளிக்க வேண்டும். சிறிய பிள்ளைகள் வெளியில் செல்லும்போது பாதுகாப்பிற்காக தொப்பிகளை அணிய ஊக்குவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
'இந்தியாவின் ஒரு பகுதி இலங்கை' - இரு நாடுகளும் நெருங்கி வருவது பற்றி அமைச்சர் என்ன பேசினார்?
'இந்தியாவின் ஒரு பகுதி இலங்கை' - இரு நாடுகளும் நெருங்கி வருவது பற்றி அமைச்சர் என்ன பேசினார்?
பட மூலாதாரம்,FB/HARINI FERNANDO
- எழுதியவர், ரஞ்சன் அருண்பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
-
27 நிமிடங்களுக்கு முன்னர்
இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, இந்தியாவில் அண்மையில் தெரிவித்த கருத்து தற்போது பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றம், செய்தியாளர் சந்திப்புகள், அரசியல் மேடைகள் என பல்வேறு பகுதிகளிலும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு, போராட்டங்களும் நடாத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தன்மீதான குற்றச்சாட்டுக்களுக்கு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளார்.
''இலங்கையிலுள்ள விமான நிலையங்களை இந்திய நிறுவனங்கள் பொறுப்பேற்கவுள்ளன. மூன்று விமான நிலையங்களை முகாமைத்துவம் செய்யவுள்ளன. உண்மையில் எமக்கு உதவியாக இருக்கின்றது. எமது எரிபொருள் நிரப்பு தாங்கிகளை இந்திய நிறுவனம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. சூரிய சக்தியிலான மின்சாரத்தை இந்திய நிறுவனம் வழங்குகின்றது.
இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என்பதற்காகவே, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், இந்திய சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு செல்லுமாறு கோரியுள்ளார்." என இந்தியாவின் மும்பை நகரில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ கூறியிருந்தார்.
அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவின் இந்த கருத்தானது, பாரதூரமான கருத்து என தெரிவித்து இலங்கையில் எதிர்ப்புகள் எழுந்தன.
பட மூலாதாரம்,FB/UDAYA PRABHATH GAMMANPILA
இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்த கருத்தானது, பாரதூரமான கருத்து என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் ஒருவர் இவ்வாறான கருத்துகளை வெளியிடுவதன் ஊடாக, இலங்கையின் அரசியல் சாசனம் மீறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அமைச்சரின் இந்த கருத்தானது, நாட்டின் இறையாண்மைக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறையாண்மை கொண்ட நாடாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இலங்கை, இந்தியாவின் ஒரு பகுதி என கூறிய கருத்தை மீளப் பெற்றுக்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவின் கருத்துக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
அமைச்சரின் இந்த கருத்தானது, இலங்கையின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை மீறும் செயல் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அமைச்சராக நியமிக்கப்படும் போது, அரசியலமைப்பின் பிரகாரம் எடுக்கப்பட்ட சத்திய பிரமாணத்தை மீறும் செயல் இதுவென கூறிய அவர், அமைச்சர் பதவியை வகிப்பதற்கு தகுதியற்றவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையை வேறொரு நாட்டுடன் இணைப்பது தேசத்துரோகம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ வெளியிட்ட கருத்து தொடர்பில் நாடாளுமன்றத்திலும் கருத்துகள் வெளியிடப்பட்டன.
இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தனது எதிர்ப்பை வெளியிட்டார்.
''விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் இந்தியாவிற்கு சென்று கருத்தொன்றை முன்வைத்திருந்தார். இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என கூறியிருந்தார். அது அமைச்சரவையின் கருத்தா? அரசாங்கத்தின் கருத்தா? அல்லது அவரது தனிப்பட்ட கருத்தா?. அவ்வாறு தனிப்பட்ட கருத்து என்றால், தான் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடு குறித்து இவ்வாறான கருத்தை வெளியிட அமைச்சர் ஒருவருக்கு உள்ள அதிகாரம் என்ன?" என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கேள்வி எழுப்பினார்.
இதற்கு அளும் கட்சி சார்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பதிலளித்தார்.
''இது அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்ட விடயம் அல்ல." என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பதிலளித்தார்.
அத்துடன், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவும் இது குறித்து பதிலளித்தார்.
''இலங்கைக்கு சுற்றுலா வருமாறு அழைப்பு விடுத்த சந்தர்ப்பத்தில், வசனங்களை இணைத்து, குறைத்து சமூக ஊடகங்களினால் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. முழுமையான கருத்தை கேட்டால், இந்த விடயத்தை சரி செய்துக்கொள்ள முடியும்" என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிக்கின்றார்.
அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கொழும்பில் பாரிய போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கொழும்பிலுள்ள சுற்றுலாத்துறை அமைச்சுக்கு முன்பாக போராட்டத்திற்கான பிரஜைகள் அமைப்பு இந்த போராட்டத்தை நடாத்தியிருந்தது.
ஹரின் பெர்ணான்டோவை அமைச்சர் பதவியிலிருந்து விரட்டியடிப்போம் - இந்தியாவின் நாடு விற்பனை செய்யப்படுவதை நிறுத்துவோம்" என்ற தொனிப்பொருளில் இந்த போராட்டம் நடாத்தப்பட்டது.
''இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ இந்தியாவின் கருத்துகளை முன்வைக்கின்றார். ஐ.ஓ.சி இலங்கையில் இருக்கின்றது. அதானி இலங்கையில் இருக்கின்றார். அதனால், இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என உணர்கின்றேன் என்ற வகையில் அவர் கூறுகின்றார்.
அவர் வீதியில் செல்லும் சாதாரண பொதுமகன் கிடையாது. ஹரின் பெர்ணான்டோ உடனடியாக அமைச்சு பொறுப்பிலிருந்து விலக வேண்டும். அதற்கான சிவப்பு எச்சரிக்கையையே இன்று நாம் வெளிப்படுத்த இந்த இடத்திற்கு வந்தோம்." என இலஞ்ச, ஊழல், வீண்விரயத்திற்கு எதிரான பிரஜைகள் அமைப்பின் தலைவர் ஜாமுனி கமந்த துஷார தெரிவிக்கின்றார்.
''அமைச்சரவையில் இருப்பதற்கு ஹரின் பெர்ணான்டோவிற்கு உரிமை கிடையாது. சட்டரீதியிலும் அவருக்கு அதிகாரம் கிடையாது. அமைச்சரவையிலிருந்து உடனடியாக அவரை பதவி விலக்க ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்." என போராட்டக்காரர்கள் குறிப்பிட்டனர்.
இலங்கை கஷ்டத்தில் இருந்த போது இந்தியா உதவி செய்ததைக் குறிப்பிட்ட விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, இலங்கை இந்தியாவின் பகுதி என கூறியதை கீழ்தரமாக எடுத்துக் கொண்டவர்கள் குறித்து தான் வெட்கமடைவதாக தெரிவிக்கின்றார்.
நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
''இந்தியாவின் நான் தெரிவித்த கருத்து நேற்று மற்றும் நேற்று முன்தினங்களில் பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. ஏன் இணையத்தள சட்டமூலம் அவசியம் என்ற கேள்வியை பலரும் எழுப்புகின்றனர். அது கவலையளிக்கின்றது.
15 நிமிட உரையாடலொன்றை நடாத்திய போது, ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஒரு நிமிடம், இரண்டு நிமிடம், மூன்று நிமிடம் மாத்திரமே ஒளிபரப்பு செய்வார்கள். தமது அரசியல் நோக்கத்திற்காக அந்த கருத்துக்களை திரிவுப்படுத்தும் வகையில் தயாரிக்க முடியும். அதுவே இணையத்தளத்திலுள்ள பாரிய அச்சுறுத்தல் என்பதை நாம் முன்பிருந்தே கூறிவருகின்றோம்.
இந்தியாவிலிருந்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகின்ற இந்த தருணத்தில், வரலாற்றில் தொடர்புகள் குறித்து பார்க்கும் போது, இலங்கை இந்தியாவின் பகுதி என்பது அரசியலமைப்பு ரீதியில் தவறானது என்ற விதத்தில் அர்த்தத்தை ஏற்படுத்தும் விதத்தில் கருத்து வெளியிட்ட ஒருவர் இந்த நாடாளுமன்றத்தில் இருந்தார். அது குறித்து கவலையடைகின்றேன்.
பட மூலாதாரம்,FB/HARINI FERNANDO
அதற்கான காரணம், கடந்த 13 முதல் 14 மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் இலங்கையை இந்தியா பாதுகாத்தமைக்கான நன்றி கூறியிருந்தேன். இரண்டு நாடுகளும் பல விதமான ஒற்றுமையை கொண்டுள்ளமையினால், இலங்கை இந்தியாவின் பகுதி என கூறினேன். நான் இலங்கையை இந்தியாவிற்கு விற்பனை செய்யவில்லை. கஷ்டத்தில் இருந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் இந்தியா எமக்கு உதவியுள்ளது.
இந்தியா கடனுதவியை வழங்கும் போது இந்தியா சிறந்தது. இந்தியா எமக்கு மருந்து வகைகளை கொடுக்கும் போது இந்தியா சிறந்தது. வேறு எந்தவொரு நாட்டு கிரிக்கெட் அணியும் இலங்கைக்கு வருகைத் தராத போது, இந்தியா வந்தது சிறந்தது. இந்திய சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்த போது இந்தியா சிறந்தது.
இந்திய முதலீட்டாளர்களை அழைக்கும் போது மாத்திரம் இந்தியா மோசமானது. முதலீடுகள் இல்லாமல் எவ்வாறு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வது?. சீனாவிற்கும் மேலே சென்ற நாடாக இந்தியா காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில், இந்தியாவுடனான தொடர்புகளை கூறி பேசியதை கீழ்த்தரமான முறையில் எடுத்துக்கொண்டமை குறித்து வெட்கப்படுகின்றேன்."என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவிக்கின்றார்.
பௌத்த பிக்குகள் பாராளுமன்றத்துக்கு வர கூடாது, விகாரைகளில் இருக்க வேண்டும் - இராஜாங்க அமைச்சர் டயனா கமகே
பௌத்த பிக்குகள் பாராளுமன்றத்துக்கு வர கூடாது, விகாரைகளில் இருக்க வேண்டும் - இராஜாங்க அமைச்சர் டயனா கமகே
Published By: VISHNU 21 FEB, 2024 | 05:55 PM
(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
பௌத்த பிக்குகள் பாராளுமன்றத்துக்கு வர கூடாது. விகாரைகளில் இருந்து அறத்தை போதிக்க வேண்டும். காவியுடை அணிந்து வருபவர்களுக்கு மக்கள் இனிமேல் வாக்களிக்க கூடாது, விகாரையிலேயே இருக்க சொல்லுங்கள். பாராளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரர், நாலக கொடஹேவா ஆகியோரின் ஆலோசனைகளினால் தான் கோட்டபய ராஜபக்ஷ பாரிய நெருக்கடிக்கு உள்ளானார் என சுற்றுலாத்துறை அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.
எனது வீட்டுக்கு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மாத்திரமல்ல, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் வருகை தந்துள்ளார்கள். ஆகவே கீழ்த்தரமான கருத்துக்களை குறிப்பிடுவதை எஸ்.எம்.மரிக்கார் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
வெளிநாட்டு முதலீடுகளுடனான அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபடுவது தற்போதைய கலாச்சாரமாக காணப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் அதிவேக நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் நடு வீதியில் படுத்து எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால் அவர்கள் தான் இன்று அதிகளவில் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்துகிறார்கள்.
அனைத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடும் 'காலத்தை வீணடிப்பவர்களை' வைத்துக் கொண்டு நாடு என்ற ரீதியில் ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது. ஆகவே தேவையற்ற எதிர்ப்பு போராட்டங்களுக்கு இடமளிக்கக் கூடாது, பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்துள்ள நாடுகளில் இவ்வாறான காலத்தை வீணடிக்கும் செயற்பாடுகள் ஏதும் கிடையாது.
பௌத்த பிக்குகள் பாராளுமன்றத்துக்கு வருகை தர கூடாது, அவர்கள் விகாரைகளில் இருந்து தர்மத்தைப் போதிக்க வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரர் அனைத்து அபிவிருத்தி செயற்பாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கிறார். அன்று ஆளும் தரப்பிலிருந்தார். இன்று எதிரணியில் இருக்கிறார். நாளை எங்கிருப்பார் என்று தெரியவில்லை. சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற் போல் கட்சி தாவுவதை பிரதான அறமாக கொண்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரர் கசினோ நிலையங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகக் குறிப்பிடப்படுகிறது, ஆனால் ஒரு சிலரிடம் சென்று 'வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாத்திரமா கசினோ அனுமதி வழங்கப்படும், உள்நாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி இல்லையா ?' என்று கேட்டுத் திரிகிறார். ஆகவே இனிவரும் காலங்களில்' காவி உடை அணிந்து வருபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது. விகாரையில் இருந்து தர்மத்தை போதியுங்கள்' என்று குறிப்பிட வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பொருளாதார ரீதியில் எடுத்த தவறான தீர்மானங்களால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். சேதன பசளை தொடர்பான தவறான ஆலோசனையைப் பாராளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரரே, அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு வழங்கினார்.
அதேபோல் பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவாவும் கோட்டபய ராஜபக்ஷவுக்கு தவறான ஆலோசனைகளை வழங்கி அவரை வீட்டுக்கு அனுப்பினார். தற்போது எதிர்க்கட்சி பக்கம் சென்றுள்ளார். நாலக கொடஹேவாவின் ஆலோசனைகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்டால் அவருக்கும் கோட்டபய ராஜபக்ஷவின் நிலையே ஏற்படும்.
பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் சிங்கள வாக்குகளில் பாராளுமன்றத்துக்கு வருகை தந்து விட்டு சிங்கள தலைவரை தாக்குகிறார். பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எனது வீட்டுக்கு இரவில் வருகை தந்ததாக குறிப்பிட்டுள்ளார். எனது வீட்டுக்கு முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸநாயக்க ஆகியோர் வருகை தந்துள்ளார்கள். எனது வீடு ஒன்றும் தடை செய்யப்பட்ட பகுதியல்ல. அரசியலில் எனக்கு யாரும் எதிரிகளல்ல, ஆகவே கீழ்த்தரமான கருத்துக்களை குறிப்பிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
2025 ஆம் ஆண்டுக்கான அவுஸ்திரேலிய பல்கலைக்கான புலமைப்பரிசில்!
2025 ஆம் ஆண்டுக்கான அவுஸ்திரேலிய பல்கலைக்கான புலமைப்பரிசில்!
2025 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கவுள்ள அவுஸ்திரேலிய பல்கலைக்கழகங்களுக்கான புலமைப்பரிசில் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதியுடன் முடிவடையும்.
இந்த புலமைப்பரிசில் விருதுகள் ஆண்டுதோறும் அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் சுமார் 150 நாடுகள் உள்ளிட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு புலமைப்பரிசில் விருதுகளை வழங்குகிறது.
இந்த புலமைப்பரிசில் விருதுகள் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அவுஸ்திரேலியாவின் உயர் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கும் உலக தரம் வாய்த கல்வி சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்கும் வாய்ப்புகள் கிடைக்கின்றன.
மேலும் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களின் கல்விசார்ந்த செலவுகள் , விமான பயண செலவுகள் மற்றும் அவுஸ்திரேலியாவில் கல்வி கற்கும் காலம்வரை உள்ள வாழ்வாதார செலவுகள் ஆகியன வெளிநாட்டு மாணவர் உடல்நலம் காப்புறுதி (OSHC) உத்தரவாதமளிக்கிறது.
இந்த புலமைப்பரிசில் விருதுகளுக்கான விண்ணப்பங்களுக்கு தகுதியுடையவர்களை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகள் திறந்த மற்றும் அனைவருக்கும் சமனிலையானதாக காணப்படும்.
இந்த புலமைப்பரிசில் விருதுகள் தொடர்பில் விண்ணப்பதாரர்களுக்கு மத்தியில் ஏற்படும் கேள்விகளை அவுஸ்திரேலியா விருதுகள் வழங்கும் குழுவிடம் முன்வைக்க முடியும்.
விண்ணப்பதாரர்கள் தங்களது தகவல்களை அவுஸ்திரேலியா புலமைப்பரிசில் விருதுகள் அலுவலகங்களில் அல்லது www.australiaawardssrilanka.org என்ற இணையத்தளம் மூலம் பதிவு செய்ய முடியும்.