Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மொழியின் முகங்கள்
#1
இக்கட்டுரை நான் அண்மையில் படித்தது நீங்களும் படித்தது பயன் பெற இங்கே இணைக்கிறேன்.


- <b>மொழிபற்றி ஓர் அறிவுப்பதிவு</b> -

மொழி என்பது என்ன ?


மொழி என்பது உயிருக்கு நிகரானது; மாந்தனின் அடிப்படை உரிமை மொழியாகும் என்றெல்லாம் உலக மாந்தர் தத்தம் மொழியினைப்பற்றிக் கூறிடுவர். இஃது உணர்வு நிலைப்பட்ட கூற்றாகும் . இதில் தப்பேதும் இல்லை. தாய் தன் பிள்ளைகளைப் பொத்திக் காக்கும் செயற்பாட்டிற்கும் மேலானது; மாந்தன் தான் சார்ந்திருக்கும் மொழியைக் காக்கும் செயல்.


காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சென்று மிக
இயல்பாய் மொழியும் தமிழர் வாய்ச்சொல்லில் பொருள் பொதிந்துள்ளது. தமிழ் எங்கள் உயிருக்கும் மேலென்று கூறிய பெருமகனாரின் கூற்றில் குறை கிஞ்சித்தும் இல்லை.

தாயைப் பழித்தாலும் தமிழைப் பழிக்காதே என்று கதைத்த பாட்டனின் பூட்டன் பேருள்ளம் வியப்பிற்குரியதாகும் .

கல்தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கு முன்னே முகிழ்த்த மூத்தகுடி, மூத்த மொழி தமிழ் என்பதுவும் தமிழே அனைத்து மொழிகளுக்கும் அன்னை என்பதுவும் உணர்வின் அடிப்படையில் அமைந்த கருத்தூற்றுகள். இதில் உணர்வு உண்டு, தெளிந்து அறிதல் இல்லை. ஆய்ந்தறிந்த நிலைப்பாடில்லை. இவ்வாறான கூற்றுகளில் அறிவும் உணர்வும் ஒன்றுபடவில்லை. ஆனால் இவ்வாறான மொழிச்சிந்தல்களால் தப்பேதும் இல்லை. ஒரு மனிதன் தன் தாய்மொழியின் ஆளுமையையும் ஆற்றலையும் உற்றுணர்ந்து கொண்டிட இதுபோன்ற சொல்லாடல்கள் பயன்படுகின்றன.

அறிவின் தளத்தில் உற்றுநோக்கின், இவையெல்லாம் உயர்வுநவிற்சியின் பொருட்டான சொல்லாடல்கள். இவற்றால் மொழியின்பம் கூடிடும், மனம் குளிரும். இவ்வகை உணர்வுகளை அனுபவித்திட வேண்டும். மாறாக, அறிவின் தளத்தில் நின்று கொண்டு கேள்விகள் கேட்கலாகாது.

தமிழ் எப்படி உலக மொழிகளுக் கெல்லாம் தாயாகியது?

கல் தோன்றி மண் தோன்றா முன்னே, தமிழர் தோன்றியது எவ்வாறு ?

மொழித் தொடர்பு கருவிதானே, அதைப் பழித்தல் கூடாது ஏன் ?


இதுபோன்ற கேள்விகளுக்கு அறிவார்ந்த பதில் இல்லை. இவை பொருட்டான சான்றுகளுடைய ஆய்வு களும் இல்லை. இருந்தும் இவ்வாறு கேட்பதே அறிவிலித்தன்மையாகும். இதில் உணர்வினைத் தவிர வேறொன்றும் இல்லை என்பதனை முதலில் அறிந்து தெளிதல் வேண்டும்.

மொழியின் பேராற்றலைக் கண்டு இவ்வாறு கூறுவதெல்லாம் உணர்வு நிலைப்பட்டது. உளவியல் தளத் தினைக் கொண்டியங்குவது. உயிர், உரிமை, உடைமை என்ற சொல்லா டல்களின் கட்டமைப்பில் இயங்கு கின்றது.

இவற்றினைத் தாண்டி , மொழிக்கு அறிவுநிலை சார்ந்த முகமும் உண்டு. மனிதனின் அறிவாற்றல் விரிவாக்கத்திற்கு மிகப் பொருத்தமான தெளிவுகளைக் கொடுக்கும் ஆற்றலைக் கொண்டியங்குகின்றது. இங்கு மொழி என்பது உலகளாவிய மொழியியல் சிந்தனைக்குரியதாகும். உலகில் தனிப்பட்ட ஒரு மொழியின்பால் கூறிடும் கருத்தன்று.

மொழி என்பது மாந்தரினத்திற்கான முழுமை பெற்ற தொடர்புக் கருவி என்றே அறிவியல் ஆய்வுகள் முன்மொழிகின்றன. ஒலிகளின் துணையுடன் மொழியாளுமை நிகழ்கின்றது. கால வளர்ச்சியால் மொழியைக் கையாள்வதில் பல்வேறு ஒழுங்குகள் உருவாக்கப்பட்டன; இலக்கண வரையறைகள் உருவாக்கப்பட்டன . இவற்றிற்கு இயற்கை துணை நின்றது. பின்னாளில் குறிப்பிட்ட ஒரு மாந்தர் குழுவினரைக் குறிக்கும் குறியீடாக மொழி மறுஉருமாற்றம் பெற்றது. இது மாந்தரினத்தின் ஒட்டுமொத்த அறிவால் ஏற்பட்டது.

தமிழர்களாகிய நாம் மொழியைப் பெருவாரியாக உணர்வின் அடிப்படையில் கண்டுணர்ந்து பழகிவிட்டோ ம். அதன்பொருட்டான சிந்தனைகளும் செயற்பாடுகளும் உணர்வின் தளத்திலேயே கண்டியங்குகின்றன. எல்லாவற்றிலும் அறிவைவிட உணர்வே முந்தி நிற்கின்றது.

மொழி ஒத்த இனம் சார்ந்துள்ள மக்களிடையே கருத்துப் பரிமாற்றம் செய்திடுவதற்குரிய ஊடகம். ஒரு மனிதன் தன் குழுவைச் சார்ந்துள்ள இன்னொருவனுக்குத் தான் கண்டுணர்ந்தவற்றினை வெளிப்படுத்த மொழி பயன்படுகின்றது. அதன் பயன்பாட்டுத்தளம் விரிவாக்கம் கொள்ளும்போழ்தில் வேறுபட்ட இனத்தாரிடையேயும் கருத்துப் பரிமாறிக்கொள்வதற்குரிய ஊடகமாகவும் மறுஉருப் பெறும். இந்நாட்டில் வழங்கப்படும் மலாய்மொழி, மலாய் இனத்தாரிடையே கருத்துப் பரிமாற்றம் நிகழ்த்தவும் இந் நாட்டில் வாழும் பிற இன மக்களான தமிழர், சீனர் ஆகியோரிடையே தொடர்பினை ஏற்படுத்தும் கருவியாகவும் இருக் கின்றது. இது பயன்பாட்டுத் தளத்தினை விரிவாக்கிய நிலை. ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற மொழிகள் பயன்பாட்டுத் தளத்தில் உச்சத்தில் இருக்கின்றன. பல்வேறு இன மாந்தரை இணைப்ப தோடு, பல்வேறு துறைகளில் பயன்படுத்தும் முகாமை மொழியாகவும் அம் மொழிகள் விளங்குகின்றன. உலகில் அதிகமான மக்களால் பேசப்படும் மொழியாகவும் அதிகமான துறைகளில் பயன்படுத்தும் முகாமை மொழியாகவும் ஆங்கிலம் விளங்குகின்றது. இந் நிலைப் பாட்டினை அடைவது எளிதன்று. மிக நேர்த்தியான திட்டங்களாலும் கடின உழைப்பாலும் மட்டுமே இந் நிலையினை அடைய இயலும். இஃது அறிவின் நிலைப்பாட்டில் அடைந்த வெற்றியாகும்.

உலக மொழிகளில் பல்வேறு சிறப்பியல்புகளைக் கொண்டுள்ள மொழியாக நம்மவரால் கருத்துரைக் கப்படும் தமிழ்மொழியின் நிலைப்பாடும் இம் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள வாழ்வியல் தளத்தினையும் சற்று உற்றுணர்ந்து பாருங்கள். நம் மொழிக்குரிய அறிவார்ந்த நிலைப்பாடெங்கே?

தமிழர்களின் வாழ்வியல் வரலாற்று அடிப்படை யின்பால் உற்று நோக்கின், மொழி நிலைப்பாட்டில் தமிழர்கள் பெரும்பாலும் உணர்வு தளத்தின் அடிப்படையி லேயே செயற்பட்டிருக்கின்றனர். சங்ககால வாழ்வியல் தொடங்கி, நாட்டுடைமைப் போர் முதலாக இன்றைய வாழ்வியல் வரையிலாகத் தமிழர்தம் உள்ளத்தினை உண ர்வே முற்றும் முழுமாக ஆட்கொண்டுள்ளது. உணர்வார்ந்த நிலையும் செயலும் வேண்டியதில்லை என்பது பொரு ளன்று. மாறாக முற்றும் முழுதும் உணர்ச்சியாக இராமல், அறிவும் சரிபாதியாகக் கலந்திருத்தல் வேண்டியதாகிறது.

தமிழ்நாட்டில் உருவாக்கப்படும் தமிழ்ப் படங்களுக்குத் தமிழில் பெயரிட வேண்டுமென்பது இயற்கையின் இயல்பாய் உள்ளது. இது எந்தவிதமான கேள்விகளுக்கும் இடமில்லாமல், கிஞ்சித்தும் சிந்திக்காமல் செயல்படவும் செயல்படுத்தவும் வேண்டியதாகும். இஃது அறிவின் அடிப்படையில் துலங்க வேண்டியது. இருந்தும் மாற்றுக் கருத்தும் செயலும் தோன்றுவதற்குரிய காரணம் என்ன? தமிழர்கள் அறிவார்ந்த நிலைப்பாட்டில் செயற்படாததே இதற்குரிய முகாமைக் காரணமாகும்.

அரசியல், பொருளியல், சமூகவியல் என்ற மூன்று நிலைப்பாடுகளிலும் தமிழர்களுக்குரிய அடிப்படை உரிமைகளைப் பிறர் கையில் தாரைவார்த்துக் கொடுத்ததன் விளைவே இன்றைய உணர்வின் விளிம்பான போராட் டங்கள். ஆளுமையும் ஆற்றலுமற்ற தலைவர்களை நம்பி ஏமாந்துப் போகின்றனர், தமிழர்கள். தமிழர்களின் ஏமாற்றம் என்பது தமிழின் ஏமாற்றமாகும்.

ஏதோவொரு காலகட்டத்தில் உணர்வின் உச்ச ங்களின் எதிரொலிகளாய் நிகழ்ந்த தமிழ்மொழிப் போராட்டங்களில் கலந்து கொண்டவர்கள் என்பதற்காப், பின்னாளில் மொழியின் வளர்ச்சிக்கு மாறாக அவர்கள் ஆற்றிய அறம் துறந்த செயல்களுக்கெல்லாம் அறம் கற் பித்தல் எந்த வகையில் அறமாகும் ? தமிழர்களின் அறிவெங்கே வீழ்ந்துகிடக்கின்றது?

இந்தக் கருத்தின்பால் மாற்றுச் சிந்தனை உடையவர்கள் :

வரலாற்றினை மறப்பதா ?
தமிழ் காத்த ஆன்றோரைத் துச்சமென நினைப்பதா?

தமிழ்பால் ஆற்றும் செயல்பாடுகள் உணர்வு நிலைப்பட்டதா ? என்றவாறெல்லாம் கேள்விகள் எழுப்பலாம்.

இதுகாறும் உலகெங்கும் நிகழ்ந்தேறிய பல்நிலைப்பட்ட மாநாடுகள், பெருங்கூட்டங்கள் இவற்றால் விளைந்த பயன்கள் யாவை ? எட்டு மாபெரும் உலக ளாவிய மாநாடுகளைக் கண்டபின்பு தமிழ்மொழியின் வளர்ச்சி யாது ?

முழுக்க முழுக்க உணர்வின் செயலாக்கத் தளத்தில் நிகழும் மேடைப் பேச்சுகளால் அடைந்த அடைவுகள் என்னென்ன ?

உணர்வும் அறிவும் சமநிலையில் இயங்கிச் செயற்பட்ட தமிழ்த்தென்றல் திரு.வி.க. திரு. உ.வே.சாமிநாதனார், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார் ஆகியோரின் இயங்குதளத்தினைத் கண்ணுற்றுப் பாருங்களேன். இச் சான்றோர்கள் மொழியினை அறிவும் உணர்வுமாய்க் கண்டுணர்ந்தவர்கள். அதனால் அன்னவர் மொழிக்கு ஆற்றியபாடு பெரும்பாடாயிற்று.

இனி, தமிழர்கள் அறிவுத் தளத்திற்கு மொழியைக் கொண்டு சென்றிட வேண்டும். தமிழின் பயன்பாட்டுத்தளம் விரிவு பெற்றிடல் வேண்டும். சிந்திப்போம்...செயற்படுவோம்


தொடரும்...............

நன்றி செம்பருத்தி.


----- -----
Reply
#2
<b>மொழியின் முகங்கள் பாகம் - 2
- மறுநடவு - </b>

மொழியெனப்படுவது உணர்வினால் முளைப்பது !
மொழியெனப்படுவது மாந்தனின் முனைப்பு !
மொழியெனப்படுவது கல்விக்கு அடிப்படை !
மொழியெனப்படுவது பண்பொளிர் விளக்கம் !
மொழியெனப்படுவது உள்ளுயிர் முழக்கம் !
மொழியெனப்படுவது இனநல முயக்கம் !
[பாவலரேறு பெருஞ்சித்திரனார்]


உலகெங்கும் வாழும் தமிழர்கள் மொழியின்பொருட்டான அறிவினையும் உணர்வினையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்விரண்டும் உச்சத்தின் அடைவாய் இருந்திடல் வேண்டும். இல்லாவிடில் காலத்தின் நகர்வால், களத்தின் ஆளுமையால் தமிழர்கள் தம் மொழி துறந்து வாழ்ந்திடுவர். மொழியற்ற மாந்தரை எம்மொழிக்கூற்றால் விளிப்பது? மொழி அற்றுப்போனால் இனம் அற்றுப்போகும்.

இந் நிலையின் தொடக்கத்தினை இன்று நாம் கண்டு வருகின்றோம். உலக நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த தமிழர் பலர் தம் தாய் மொழியின்பால் போதுமான கவனத்தைக் கொள்ளவில்லை; தம் தாய்மொழிக்கான பயன்பாட்டுத் தளத்தினை விரிவுபடுத்தவில்லை. தாய்மொழிப்பற்றினைவிட வயிற்றுப்பற்றே அவர்களுக்கு முகாமையானதாக இருந்துள்ளது. இது அவர்களுக்கு ஏற்பட்ட வாழ்வியல் போராட்டத்தின் கரணியத்தால் அமைந்த கேடாகும். மொழியைப் பற்றி சிந்திப்பதற்கோ அதுதொடர்பாக வினையாற்றுவதற்கோ புலம் பெயர்ந்த தமிழர்கள் முன்வர வில்லை. மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த தமிழர்கள் இக்கூற்றிலிருந்து சற்று விலகியுள்ளனர். இவர்கள், தங்களது வாழ்வியல் போராட்டத்தில் மொழியினையும் இணைத்துக் கொண்டனர்.

இன்னபிற நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழர்கள், மொழி காக்கும் வினையாற்றலில் உணர்வு நிலைப்பாட்டிலேயே நின்று கொண்டனர். வாழும் நாட்டுடை மொழியினை முற்றும் முழுதுமாக உள்வாங்கிக் கொண்டு வாழ்ந்தனர், இற்றைநாள்வரை அவ்வாறே வாழ்ந்து கொண்டுமிருக்கின்றனர். இவர்கள் பெயரளவில் மட்டுமே தமிழர்களாக வாழ்கின்றனர்; மொழியளவில் வீழ்ந்து கிடக்கின்றனர். மொழியற்று முகமிழந்தவர்களாக வாழ்கின்றனர். ஏதோவொரு முகமூடி இவர்களுக்குப் பொருத்தப்பட்டுள்ளது.

இற்றைநாளில், இவர்கள் மொழியினூடாகப் பெறப்படும் பண்பாட்டுக்கூறுகளின் தேவையினைச் சற்று உணர்ந்துள்ளனர். அமெரிக்காவில் தமிழ் மரபார்ந்த ஒரு குடும்பத்தில், மகன் தந்தையை " மிஸ்டர். ராம்சாம் (இராமசாமி) " என்றழைக்கிறான். வேற்று மொழியினூடாகப் பெறப்பட்டது இத்தகைய வாழ்வியல் தன்மை. தமிழ் மரபார்ந்த தந்தை மனம் வெதும்புகின்றார். இதனூடாகப் பெறப்படும் வலியின் அழுத்தம் தந்தையின் உள்ளத்தில் மேலோங்கியுள்ளது.

செர்மனியில் வாழும் தமிழ்க்குடும்பமொன்றில், தம் மகள் நேரம் கடந்து வீட்டிற்கு வந்ததைத் தந்தை கண்டிக்கின்றார். அப் பிள்ளை செர்மானிய மொழியில் தந்தையை ஏசிவிட்டு வெளிக்கிளம்புகிறாள். பின்னர்த் தன் தந்தை தன்னை அடித்துவிட்டாரெனக் காவல்நிலையத்தாரிடம் மனு கொடுக்கிறாள்.

இவ் விரண்டு சூழல்களும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்க்குடும்பங்களில் அன்றாட நிகழ் வுகளாகிவிட்டன. மொழியினூடாகப் பெறப்படும் பண்பாட்டினை இழந்ததே இதற்குரிய முகாமைக் கரணியமாகும். இதன் தொடர்பான வாழ்வியல் அழுத்தமே, இன்று இவர்கள் தம் சிந்தனையினையும் செயலினையும் மொழியின்பால் திசைதிருப்புவதற்கான கரணிய மாகும். மொழியினூடான பயன் பாட்டுத்தளத்தினைக் கண்டறி வதற்கும் கையாள்வதற்கும் அவர்களுக்குப் போதுமான கால நிலை தேவைப்படுகின்றது. அதற்குள் என்னென்ன ஆக்கங்களும் அழிவு களும் நிகழ்ந்திடுமோ, அவையாவும் தடம் மாறாமல் நிகழ்ந்திடும்.

பிற நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த தமிழர்களை, தாய்த் தமிழகம் வேற்றுலக மாந்தரென எண்ணி மயக்கமுறுகின்றது. புலம்பெயர்ந்தோர் தாய்த்தமிழையும் தாய்த்தமிழகத்தினையும் தொப்புள்கொடி உறவாய் எண்ணி உறவறுக்கின்றனர். இருவேறு வாழ்வியல் நிலைப்பாடுடைய இம் மக்களிடையேயுள்ள உறவுகள் வேரறுந்து போகின்றன. போற்றிக்காக்க வேண்டிய தாய், பொல்லாப்பு உறவென்று எண்ணி வீழ்கின்றாள். மொழி, கலை, பண்பாட்டுக்கூறுகள் எல்லாவற்றையும் புதிய மொழியும் மண்ணும் விழுங்கிக் கொள்கின்றது. தனதுரிமையைப் பொத்திக் காத்து பேணி வளர்த்திட அவன் உச்சமான உகந்த முயற்சியும் முனைப்பும் கொள்ள வேண்டியிருக்கின்றது.

தென்னாப்பிரிக்கா தொடங்கி மொரிசியஸ் வரையிலாக, வியட்நாம், செர்மன், நோர்வே எனப் பரந்துபட்ட நிலப்பகுதிகளில் வாழும் தமிழர்கள் மொழியறிவாலும் மொழியுணர்வாலும் தம்மைப் புறந்தள்ளி வாழ்கின்றனர் - வீழ்கின்றனர். பல்வேறு கரணியங்களை முன்வைத்துப், புலம்பெயர்ந்தோர் தமிழ்ப்பற்று தாய்த்தமிழகம் என்ற சிந்தனையைக் கழற்றிவீசிப் போலிமுகம் அணிந்து கொள்கின்றனர். அதற்கு ஏதுவாகத் தாய்த்தமிழகம் புலம்பெயர்ந்த தம் மக்கள் மீதான அன்பினைப் பொழிவதுமில்லை. "யாதும் ஊரே யாவரும் கேளிர் " என்னும் கணியன் பூங்குன்றனாரின் சொல்லாடலைத் தம் நெற்றிப்பொட்டில் சூட்டி மகிழ்வெய்தி கொண்ட தமிழினம். புலம் பெயர்ந்தவனுக்கு அந்நாட்டுடைய அரசும் மக்களும் கேளிராக இருப்பர், என்றெண்ணிக் கை கழுவி விட்டது தாய்த்தமிழகம்.

உடல் வலுவினையும் தாய்த்தமிழையும் மட்டுமே வாழ்வுத்தளமாகக் கொண்டு சென்றார்கள். கால மாற்றத்தாலும் களத்தின் அழுத்தத்தாலும் இவர்களின் மொழியுரிமையும் மொழியுணர்வும் அடிபட்டுப் போயிற்று. இந்தப் பழிநிலைக்குப் புலம்பெயர்ந்தோரும் தாய்த்தமிழகமும் மரபார்ந்த பொறுப்பினை ஏற்றுக்கொண்டிடல் வேண்டும். இவரால்தான் இந் நிலை ஏற்பட்டதென ஒருவர்மீது மற்றொருவர் பழிபோடுவது ஆகாத செயலாகும். தகுந்த முயற்சியும் முனைப்பும் இரு சாராரிடமிருந்தும் வரவேண்டும். ஒருவரையொருவர் கை கழுவி விட்டதால் ஏற்பட்ட விளைவு இது. இந் நிலையினைக் கண்டும் தாய்த்தமிழகம் கடுகளவும் வேதனையோ வெட்கமோ கொள்ளவில்லை.

" மொழியைத் துறந்து கால்போன போக்கில் வாழ்கின்றனர். வாழும் இடத்தின் பண்பாடுகளையும் வாழ்வியல் தன்மைகளையும் கைமாற்றிக் கொண்டு வாழும் நன்றி கொன்றவர்கள் " என்ற இழிச்சொல்லால் இவர்களைப் பழித்துரைக்கின்றது தாய்த்தமிழகம். இவ்வாறு கதைப்பதற்குத் தாய்த்தமிழகத்திற்கு ஏதுவான உரிமையும் தகுதியும் இல்லை. அழும் பிள்ளைக்குப் பாலூட்ட மறுத்த தாயின் தன்மையை எப்படி அறமாகக் கொள்வது ?

வாய்ப்புக் கிட்டியபோழ்தெல்லாம், தமிழ்நாட்டுப் பேச்சாளர்கள் இந்நாடுகளுக்கு வருகை புரிந்து ஆரவார மேடைகளில் பேசி நமது தொன்மங்களைச் சுரண்டிப்பார்த்து மீள்கின்றனர். தாமே புறநானூற்றுக்குரிய கடை மாந்தன் என்ற நிலைப்பட பேசி மீள்கின்றனர். வருமானம் பெறுதல், பேசிக்கற்றல், தொன்மைக் குறியீடுகளால் சொறிந்து கொள்ளுதல் என்ற வினைகளே இவற்றினூடாகப் பெறப்படுகின்றன.

1840- களில் மொரிசியசு நாட்டு கரும்புத் தோட்டங்களுக்குக் கொண்டு செல்லப்பட்ட தமிழ்மக்களின் எண்ணிக்கை இன்று பன்மடங்காகப் பெருக்கம் கண்டுள்ளது. இந் நாட்டில் தமிழிய மரபுவழியானவர் 22,000 (1993 Johnstone) பேர் வாழ்கின்றனர். இற்றைநாளில் மொரிசியசின் மக்கள் தொகையில் 10 விழுக்காட்டினர் தமிழர்களே. இவர்களின் பேச்சுமொழியாக இருப்பது கிரியோல்மொழியும் (Creal Morisyen), ஆங்கிலமொழியுமாகும். பெயரளவில் தமிழாய்ந்த பெயரினை வைத்துக்கொண்டு தமிழர் என்ற சூழலுக்குள் தம்மை இருத்திக்கொண்டு வாழ்கின்றனர். இவர்களின் வாழ்வு, கறுத்த முகத்திற்கு வெளுத்த உடல் இணைத்தாற்போல் உளது.

இன்று அதிக எண்ணிக்கையினாலும் உடல் வலுவின் ஆளுமையினாலும் வாழும் மொரிசியசு தமிழர்கள், தமிழ்ப்பெயர் ஏந்திக் கிரியோல்மொழி பேசி வாழும் சூழலை மனமார ஏற்றுக்கொண்டுள்ளனர்; அகமும் புறமுமாகத் தமிழ் அறுத்து வாழ்கின்றனர். தமிழ்மொழியினைப் பேசுவதற்குரிய முனைப்பும் முயற்சியும் இவர்களிடம் இல்லை. காலம் கடந்தவர்களின் பிதற்றல் மொழியாகத் தமிழைக் கருதுகின்றனர் இன்றைய இளைஞர் கூட்டம். இதற்கான மரபார்ந்த பொறுப்பினைத் தாய்த்தமிழகம் ஏற்றுக் கொண்டிடல் வேண்டும். மொழி வளர்ச்சிக்கான மறுநடவுச் செயலாக்கத்தினை மேற்கொண்டிடல் வேண்டிய தாய்த்தமிழகம், அங்குத் தமிழ்மொழி வீழ்வதைக் கண்டு வாளா கைகட்டி நிற்கின்றது தாய்மண்ணிற்கான அறம் துறந்து வீழ்ந்த தமிழகம். வெற்று மேடைப்பேச்சுகளால் செவிகளை இன்புறச் செய்வதில் மட்டுமே வல்லவர்களாக இயங்குகின்றனர் பொறுப்பாளுமை கொண்டவர்கள்.

தென்னாப்பிரிக்காவிற்கான தமிழர்களின் புலம்பெயர்வு 1860-1911- களில் தொடங்கியது. குவாலு நத்தால் (Kwazulu-Natal) என்ற பகுதியே தமிழர்களின் குழுமங்கள் உருவாக்கப்பட்ட இடமாக இருந்தது. இன்று டர்பன் (Durban) போன்ற இடங்கள் தமிழர்களின் வாழ்வுத் தளமாக உருவாகியுள்ளது.

இன்று தென்னாப்பிரிக்கத் தமிழர்களின் வாழ்வியல் மொழியாகியுள்ளவை ஆப்பிரிக்கமொழியும் ஆங்கிலமொழியுமாகும். இங்கு வழங்கப்படும் ஆப்ரிகன்ஸ் (Afrikans), பிர்வா (Birwa), கம்தோ (Camtho), ஃபராகோலா (Faragola), எகாய்ல் (Gail), எக்கோரறா (Korara), எக்சூ (Kxoe), நுலூ (Nulu), நாம்மா (Nama), நெடிபி (Ndebee), ஊர்லாம்ஸ் (Oorlams), ரொங்கா (Ronga), சோத்தோ (Sotha), சவாலி (Swahili), சுவாதி (Swahiti) ஆகிய மொழிகள் பல்வேறு குழுக்களால் பேசப்படுகின்றன. இவற்றில் ஒவ்வொரு தமிழரும் குறைந்தளவிற்கு ஒரு மொழியினையாவது பேசும் ஆற்றலினைப் பெற்றிருக்கின்றனர். இம் மொழிகளைப் பேசுவதற்கான முனைப்பும் முயற்சியும் இவர்களிடம் உண்டு. இம் மொழிகளைக் கற்றுக்கொள்வதற்கும் கையாள்வதற்குமான ஆளுமையும் ஆற்றலும் இவர்களிடம் உண்டு.


தொடரும்.......


----- -----
Reply
#3
தகவல்களை இங்கு இனைத்தமைக்கு நன்றி

Reply
#4
ம்ம் மொழியைப்பற்றி அறியத்தந்தமைக்கு நன்றிகள்
அறிந்த கருத்துக்களையும், உணர்ந்த
உணர்வுகளையும் அளந்து உரைப்பதற்கு
பயன்படும் கருவியே மொழியாகும் என்று படித்த ஞாபகம்
<b> .. .. !!</b>
Reply
#5
Rasikai Wrote:அறிந்த கருத்துக்களையும், உணர்ந்த
உணர்வுகளையும் அளந்து உரைப்பதற்கு
பயன்படும் கருவியே மொழியாகும் என்று படித்த ஞாபகம்



என்ன ரசிகை மொழியின் பயன்பாடு இவ்வளவுதான ??

மொழியெனப்படுவது உணர்வினால் முளைப்பது !
மொழியெனப்படுவது மாந்தனின் முனைப்பு !
மொழியெனப்படுவது கல்விக்கு அடிப்படை !
மொழியெனப்படுவது பண்பொளிர் விளக்கம் !
மொழியெனப்படுவது உள்ளுயிர் முழக்கம் !
மொழியெனப்படுவது இனநல முயக்கம் !

இன்னும் பல உள்ளது. 8) <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


----- -----
Reply
#6
கரிகாலன் Wrote:<b>மொழியின் முகங்கள் பாகம் - 2
- மறுநடவு - </b>

மொழியெனப்படுவது உணர்வினால் முளைப்பது !
மொழியெனப்படுவது மாந்தனின் முனைப்பு !
மொழியெனப்படுவது கல்விக்கு அடிப்படை !
மொழியெனப்படுவது பண்பொளிர் விளக்கம் !
மொழியெனப்படுவது உள்ளுயிர் முழக்கம் !
மொழியெனப்படுவது இனநல முயக்கம் !
[பாவலரேறு பெருஞ்சித்திரனார்]

மிக்க நன்றி கரிகாலன்.
Reply
#7
கரிகாலன் Wrote:என்ன ரசிகை மொழியின் பயன்பாடு இவ்வளவுதான ??

மொழியெனப்படுவது உணர்வினால் முளைப்பது !
மொழியெனப்படுவது மாந்தனின் முனைப்பு !
மொழியெனப்படுவது கல்விக்கு அடிப்படை !
மொழியெனப்படுவது பண்பொளிர் விளக்கம் !
மொழியெனப்படுவது உள்ளுயிர் முழக்கம் !
மொழியெனப்படுவது இனநல முயக்கம் !

இன்னும் பல உள்ளது. 8) <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஆமாம் நீங்கள் சொல்வதும் சரியே. தகவலுக்கு நன்றிகள்
<b> .. .. !!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)