ஓடுகிற வண்டியோட- இது கதையல்ல நிஜம்
அது 1993ம் ஆண்டு தை மாதத்தின் நடுப்பகுதி.கொழும்பு செல்லும் அப்பாவை ஏற்றிக்கொண்டு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தேன்.பிரதான பாதையிலிருந்து கிளாலி செல்லும் கிளைப்பாதை பிரியும் இடத்தில் நான் முதன்முதலில் அந்த அண்ணனைச் சந்தித்தேன்.
இருபது அல்லது இருபத்தி ஒரு வயது இருக்கும் படிய வாரிய தலையும் இளைய அரும்பு மீசையும் காய்ந்து கறுத்திருந்த தேகமும் "புலி"யண்ணன் என்பதை சொல்லாமல் சொல்லின.
திடீரெனக் கைகாட்டி மோட்டார் சைக்கிளை நிறுத்தினான்.என்னை ஒருமுறை பார்த்துவிட்டு அப்பாவுடன் கதைக்கத் தொடங்கினான்.
"அண்ணை கிளாலிக்கோ போறியள்"
"ஓமோம்"
"நாங்கள் வந்த மோட்டச்சைக்கிள் பழுதாகிப்போச்சுது.கூட வந்த பொடியன் கராச்சுக்குக் கொண்டு போயிட்டான்,நானும் உங்களோடை வரட்டோ."
அப்பா எதுவும் பேசவில்லை,ஏறிக்கொள் என்கின்ற மாதிரி முன்னால் நகர்ந்தார்.
"அண்ணை தம்பி ரண்டு பேரையும் வைச்சு ஓடமாட்டார் நான் ஓடுறன் என்ன"?
ஏற்கனவே எப்படி ஓடுவது என்ற யோசனையில் இருந்த நான் எதுவும் பேசாது பின்னால் நகர்ந்து கொண்டேன்.
மோட்டார் சைக்கிள் கிளாலியை நோக்கி விரைந்தது.குண்டும் குழியுமான வீதியில் லாவகமாக மோட்டார் சைக்கிளை செலுத்திக் கொண்டே பொதுவாக பேச்சை ஆரம்பித்தான்.
"இறன்டு பேரும் போறியளோ"
"இல்லை நான் மட்டும்" அப்பா பதில் சொன்னார்
"அண்ணை அடிக்கடி போவியளோ"
"ஓமோம் பிஸ்னஸ் விசயமா அடிக்கடி போவன்"
"இப்ப கொஞ்சம் பயம் என்ன? கொஞ்ச நாளைக்கு முன்னுக்குத் தனே நேவி சனத்தின்ரை போட்டுகளை அடிச்சது".
அப்பா பதில் பேசவில்லை.
கிளாலிக்கரையில் இறங்கியவுடன் "நன்றி அண்ணை" என்றவாறே பதிவுகளை மேற்கொள்ள அமைத்திருந்த கொட்டிலை நோக்கிப் போகின்றான் அவன்.அப்பா கொட்டிலின் ஓரத்தில் நீண்டிருந்த வரிசையில் சேர்ந்து கொண்டார்.நான் வழமையாக மோடார் சைக்கிள் விடும் இடத்தில் நிற்பாட்டிவிட்டு வரிசையின் அருகில் நின்று கொண்டேன்.
கொட்டிலின் உள்ளே இருந்து வெளியே வந்த அவன் நீண்டிருந்த வரிசைக்கருகில் வந்து சுற்றும் முற்றும் பார்த்தான்.ஒரு ஓரத்தில் நின்றிருந்த என்னை அடையாளம் கண்டு கொண்டவனாக என்னருகில் வந்தான்.பக்கத்திலேயே நின்றிருந்த அப்பாவிடம்
"அண்ணை சின்ன உதவியொண்டு."
"சொல்லுங்கோ" இது அப்பா
"கராச்சுக்கு ஒருக்காப் போகவேணும் மோட்டச்சைக்கிளைத் தாறியளோ"
அப்பா பதில் சொல்லவில்லை.
அவன் கேள்விக்குறியுடன் அப்பாவை நோக்கியவனாக.. "தம்பியும் வரட்டும்"
அப்பா சரி எனத் தலை அசைக்கின்றார்.
இப்படித்தான் அந்த இளைஞன் எனக்கு அறிமுகமானான்
கராச்சுக்குப் போய்த் திரும்பும் வரை கேள்விகள் கேள்விகள் கேள்விகள்
"தம்பி என்னடா செய்யுறாய்"?
"படிக்கிறன்"
"எங்கை"?
பாடசாலை பெயர் சொல்கின்றேன்.
"எத்தனையாம் வகுப்பு?"
"6 ஆம் வகுப்பு"
"நல்லாப் படிப்பியோ"?
"ஓம்"
இதற்குள் நானும் கொஞ்சம் சகஜமாகக் கதைக்க ஆரம்பித்திருந்தேன்.எனக்கு ஒரு பழக்கம், ஒருவர் கொஞ்சம் அறிமுகமாகிவிட்டால் பலநாள் பழகியவன் போல் கதைக்க ஆரம்பித்துவிடுவேன்.பார்த்தால் அந்த அண்ணன் என்னைவிட இதில் கெட்டிக்காரனாக இருந்தான் குறுக்கும் மறுக்குமாக நிறையக் கேள்விகள் கேட்டான் "படித்து என்னவாக வரப்போறாய்"?,"யாராவது புலியண்ணாக்கள் சொந்தமோ"?,இப்படிநிறைய
எனக்கும் ஏதோ ஒரு ஈர்ப்பு இவ்வளவு சகஜமாக ஒருவனால் கதைக்க முடியுமா.எதைச் சொன்னாலும் முகபாவனை அப்படியே இருக்கும் குரல் மட்டும் ஏறி இறங்கும்.
கராச்சால் திரும்பி வரும் போது திடீரெனக் கேட்டான்
"நீ கொழும்புக்குப் போகேல்லையோ"?
ஏன் அப்படிச் சொன்னேன் என்பது தெரியவில்லை ஆனால் வெடுக்கெனப் பதில் சொன்னேன். "நீங்கள் பாஸ் தரமாட்டியளாம்"
.அவன் சடாரெனத் திரும்பி என்னைப் பார்த்தான் முகத்தில் மட்டும் அந்தப்புன்னகை மாறாமல்.
மறுபடியும் கிளாலிக்கரை வந்து சேர்ந்தோம்.நான் மோட்டார் சைக்கிளை வழமையான இடத்தில் விட்டுப் பூட்டி விட்டு கொட்டிலை நோக்கி நடந்தேன்.அப்பா பதிவுகளை முடித்துக் கொண்டு படகில் ஏறியிருந்தார்.கரைக்கு அண்மையில் பதிவு இல்லாமல் யாரும் படகில் ஏறிவிடாமல் தடுப்பதற்காக தடிகள் நட்டு கயிற்றினால் எல்லைப் படுத்தியிருந்தது.நான் அந்தக் கயிற்றினைப் பிடித்தபடி படகைப் பார்கிறேன் அப்பா ஏறியிருந்த படகில் அனேகம் பேர் பெண்களாக இருந்தனர் ஓட்டிகள் இருவரும் இன்னும் ஒருவருமே இளைஞர்கள்.கரையையே பார்த்துக் கொண்டிருந்த அப்பா என்னைக் கண்டுகொண்டவராக கையசைத்தார்.படகு புறப்படுவதற்கு ஆயத்தமாக ஓட்டியும் அந்த இளைஞனும் படகை நீரில் தள்ள ஆரம்பித்தனர்.அது ஆழம் குறைந்த கடற்பகுதி இடுப்புவரை நீரில் படகைத் தள்ளிய பின்னரே எஞ்சின் உதவியால் ஓட ஆரம்பிக்கும்.
படகு கனம் காரணமாக அசைய மறுத்தது.அணியத்தில் நின்றிருந்த ஓட்டி அப்பாவை நோக்கி கத்தினான் "அண்ணை கொஞ்சம் இறங்கித் தள்ளுங்கோ".அப்பா கலக்கத்துடன் இறங்க முயலும் வேளையில் எனக்குப் பின்னால் குரல் கேட்டது
"டேய் ஏன்ரா அந்த வயசானவரைக் கஸ்டப்படுத்துறியள்? பொறு நான் வாறன்".
என்னுடன் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் கூட இன்னொருவனுடன் கடலுள் இறங்கித் தள்ள ஆரம்பிக்கின்றான் சரியான ஆழம் வந்ததும் படகு ஓட ஆரம்பிக்கின்றது.நான் வழமையாக நான் படுத்திருக்கும் பூவரசு மரத்தின் அடியை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
பூவரசின் ஓரத்தில் ஓட்டோக்கள் கார்கள் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.கொழும்பால் வருபவர்களை ஏற்றிச்செல்வதற்கு காத்திருந்தன.வழமையாக அப்பாவை கிளாலிக்கரையில் கொண்டுவந்து விட்டவுடன் நான் திரும்பிப் போவதிலை விடியும்வரை அங்கேயே இருந்துவிட்டு காலையிலேயே வீடு செல்வேன் இரவு அந்தப்பூவரசின் அடியில் தான் கழியும் ஓட்டோ ஓட்டுபவர்கள் ஓரமாக உட்கார்ந்து கடதாசி விளையாடுவார்கள்.கொட்டிலில் வைக்கப்படிருக்கும் பெற்றோல்மாக்சின் வெளிச்சம் பூவரசின் ஓரம் நீளும்.வெளிச்சம் கண்ணைக் குத்தாத மறைவில் உட்கார்ந்து கையுடன் கொண்டுவந்த வானொலியைத் திருப்புகின்றேன்.
"டேய் நீ வீட்டுக்குப் போகேல்லையோ"? மீண்டும் அதே குரல் அனேகமாக எல்லோரும் போய்விட்டிருந்ததால் வெறிச்சோடியிருந்த பதிவுக் கொட்டிலிலிருந்து அவன் நடந்து வந்துகொண்டிருந்தான்.
நான் இல்லையெனத் தலையசைக்கின்றேன்
"ஏன் தனியப் போகப் பயமோ? ஆரோடையாவது சேர்த்து விடட்டுமோ"?
நான் சிரித்தவாறே "இல்லை விடியத் தான் போவன்"
"ஏன்"?
"சும்மா இதிலை இருந்து பார்த்திட்டுப் போவம் எண்டுதான்"
"அப்பசரி"
"இதென்ன றேடியோ சினிமாப் பாட்டுக் கேட்கிறியோ"?
"இல்லை புலிகளின் குரல்"
"நல்லதாய்ப் போச்சு நானும் கேட்பம். அதுசரி அப்போதை பேர் கேட்க மறந்து போனன் என்ன பெயர்"?
நான் சொல்கிறேன்...
நம்பாமல் பார்க்கிறான்
"பேப்பரோ"? (ஈழநாதம் பத்திரிகை)
"இல்லை ....உண்மைப் பெயர்,உங்கடை பெயர் என்ன"?
"என்னத்துக்கு"?
"கூப்பிடத்தான்"
"இப்ப எப்பிடிக் கூப்பிடுறாய்"?
"அண்ணையெண்டு"
"அப்பிடியே கூப்பிடன்"
இப்போதுதான் அவன் சுபாவம் தெரிந்துகொண்டேன். என்னை மாதிரியே வெடுக் வெடுக்கெனப் பதிலளிப்பான். என்னை மடக்கிவிட்ட சந்தோஷம் முகத்தில் தெரிந்தது.
"அப்போதை என்ன சொன்னனீ"
"எப்ப"?
"மோட்டச்சைக்கிள்ளை திரும்பி வரேக்கை"
நான் பதில் சொல்லவில்லை என்ன சொன்னேன்?,....யோசித்தேன்
"நீங்கள் கொழும்பு போக பாஸ் தரமாட்டியளாமோ"?
"ஓம் அது உண்மைதானே"
"நீங்களெல்லாம் கொழும்பு போனா ஆர் இஞ்சையிருந்து போட் தள்ளிவிடுறது"?
என்னால் பதில் சொல்ல முடியவிலை.
"நீ படி நல்லாப் படிச்சு எங்கடை நாட்டுக்கு சேவை செய்"
நான் விளங்கியமாதிரித் தலையாட்டுகின்றேன்.
அன்றைய இரவு உரையாடல்களிற் கழிந்தது பலதும் பத்தும் கதைத்தான் என்ன படிக்கின்றேன் பாடங்கள் பற்றியெல்லாம் விசாரித்தான் அவனைப் பற்றி நான் துருவியபோதெல்லாம் வேறேதாவது சொல்லி மடக்கினான்.அவனைப் பற்றி நான் தெரிந்து கொண்டது இரண்டே இரண்டு விசயங்கள் தான் ஒன்று அவனது சொந்த இடம் மட்டக்களப்பு,மற்றது இராணுவ நடவடிக்கை ஒன்றில் ஒரு காலை இழந்து செயற்கைக் கால் பொருத்தியிருந்தான்.பெற்றோரை இழந்துவிட்டிருப்பான் என ஊகித்தேன் கடைசி வரை தன் பெயரைக் கூட சொல்லவில்லை.
அவனுக்கு நான் வைத்த பட்டப்பெயர் "பிரைம் மினிஷ்டர்".அதற்குக் காரணமாக இருந்தது இந்தக் கேள்வியும் பதிலும்.நீங்கள்
"ஏன் இயக்கத்திலை சேர்ந்தனீங்கள்"?
மௌனம்.... தொலைவை வெறித்தபடி ஒன்றும் பேசாமலிருந்தான்.
அடுத்த கேள்வி "இயக்கத்திலை சேராமல் இருந்தால் இப்ப என்ன செய்து கொண்டிருந்திருப்பியள்?"
"ஆ..............பிரைம் மினிஷ்டர் ஆகியிருப்பேன்"
சிரிக்காமல் ஆனால் அதே மலர்ச்சியுடன் பதில் சொன்னான்.
எனக்கு வெட்கமாகப் போய்விட்டது இவனை மடக்கவே முடியாதா.அன்று அவனுக்கு வைத்த பெயர் "பிரைம் மினிஷ்டர்".இரவு இருவரும் சேர்ந்து சாப்பிட்டோம் ஒன்றாகப் புலிகளின் குரல் கேட்டோம் கதைகளின் நடுவே மாறி மாறித் தூங்கி வழிந்தோம்.
இப்படியாகத் தான் நான் அந்த அண்ணனை "பிரைம் மினிஷ்டரை"ச் சந்திக்க நேர்ந்தது.அப்பா அடிக்கடி கொழும்பு போவதால் நானும் அடிக்கடி கிளாலிக் கரைக்குப் போனேன் போனபோதெல்லாம் என் கண்கள் கொட்டிலில் "பிரைம் மினிஷ்டரைத்" தேடும் சில வேளைகளில் நிற்பான்.நின்றால் என்னைக் கண்டவுடன் நக்கலாக சல்யூட் ஒன்ரை அடித்து விட்டு வேலைகளில் மூழ்கிவிடுவான் ஆளடங்கிய பின்னர் பூவரசின் அடியில் இருவரும் கதைத்துக் கொண்டிருப்போம்.அவனுக்கு போராட்டம் பற்றி நிறைய விடயங்கள் தெரிந்திருந்தன தனக்குத் தெரிந்ததைச் சொல்வதை விட என் வாயைக் கிண்டுவதில் தான் அவனுக்கு சந்தோஷம்.ஒவ்வொரு முறையும் தன் கேள்விகளாலும் பதில்களாலும் என்னை மடக்கி விட்டு சிரிப்பான்.
நாட்கள் நகர்ந்தன தொடர்ந்தாற்போல சில வாரங்கள் காணமற் போனான் மறுபடியும் வந்தபோது கேட்டேன்
"எங்கை கனநாளாக காணவில்லை"?
"சரியான வேலையடாப்பன்".
அன்று ஆகஸ்ட் மாதம் 25ம் திகதி என நினைக்கின்றேன்.அப்பாவைக் கரையில் இறக்கிவிட்டு மோடார்சைக்கிளை விட்டுப் பூட்டிவிட்டு கொட்டிலை நோக்கி வந்தேன்.அன்றைக்கு முன்பு சிலநாட்கள் தொடர்ச்சியாக நேவியும் விமானங்களும் பயணிகள் மீது தாக்குதல் நடத்தியிருந்ததால் கொழும்பு செல்லும் பயணிகள் குறைவாகவே இருந்தனர்.அனைவர் முகத்திலும் கலக்கம் குடிகொண்டிருந்தது நான் அப்பாவைப் பார்த்தேன் அப்பாவின் முகத்திலும் சிந்தனைக் கோடுகள்.
வரும் போதே அம்மா சொல்லிக் கொண்டிருந்தா
"கொஞ்சநாள் கழிச்சுப் போகலாம் தானே"
அப்பா அம்மாவைச் சமாதானப்படுத்திவிட்டு வந்திருந்தாலும் அவர் மனது குழம்பியிருந்தது தெரிந்தது.நான் கொட்டிலில் பிரைம் மினிஷ்டரைத் தேடினேன் காணவில்லை கடைசியாக ஒருநாள் வீடியோ கமெராவுடன் பார்த்ததுதான் அதன் பின்னர் பார்த்ததில்லை ஏதாவது கடுமையான வேலையாக இருக்கும்.
அப்பா பதிவுகளை முடித்துக் கொண்டு என்னை நோக்கி வந்தார்
"தம்பி இண்டைக்கு இஞ்சை நிற்கவேண்டாம் வீட்டை போம்"
"ஏனப்பா"?
"செல் அடிப்பாங்கள் நேற்றும் ரண்டு மூண்டு செல் விழுந்ததாம்"
"பங்கர் இருக்குத் தானே நான் இருப்பன்"
அப்பா பதில் பேசவில்லை.
முதலில் ஒரு தொகுதி படகுகள் புறப்பட்டுப் போயின.அப்பாவுக்கு இரண்டாவது தொகுதி.நடுச்சாமத்திற்கு கொஞ்சம் முன்னதாக அப்பாவை ஏற்றிய படகுத் தொகுதி புறப்பட்டுப் போனது.
நான் என்னுடைய இடத்தில் வந்து அமர்ந்து கொள்கின்றேன்.மனம் இருப்புக் கொள்ளவில்லை அப்பா ஏன் அப்படிச்சொன்னார்.எழுந்து சென்று சிறிது தள்ளி வெட்டப்பட்டிருந்த ஒடுங்கிய பதுங்குகுழியை நோக்கி நடதேன்.மணற்தரை ஆகையால் சிறிது தூர்ந்திருந்தது ஆனாலும் இரண்டு மூன்று பேர் பதுங்கலாம்.திரும்பவும் பூவரசின் அடியில் வந்து அமர்ந்து கொள்கின்றேன்
சிறிது நேரம் கழிந்திருக்கும் திடீரென பூநகரிப்பகுதியிலிருந்து தேடுதல் வெளிச்சம் கடலில் பாய்ந்தது.அது படிப்படியாக படகுகள் செல்லும் பாதையை நோக்கி வருவது தெரிந்தது.கொஞ்ச நேரம்தான் கிளாலிக் கடனீரேரி அல்லோலகல்லோலப்பட்டது துப்பாக்கி வேட்டுகள் தீர்க்கப்பட்டன கடலின் இருளைக் கிழித்துக் கொண்டு வாணவேடிக்கை போல ஒளிப்பொட்டுக்கள் சிதறின.
"நேவியை இவங்கள் மறிச்சு அடிக்கிறாங்கள் போல".மரத்தடியில் இருந்த ஒருவர் சொன்னார்.எனக்கும் அப்படிப் போல்தான் பட்டது சரமாரியாக குண்டுகள் வெடிக்கும் ஓசை எழுந்தது இரவைப் பகலாக்கும் வண்ணம் சரம் சரமாக ஒளிப்பொட்டுகள் சிதறின.
"கடவுளே அப்பா போன போட்டுக்கு ஒண்டும் நடக்கக் கூடாது".நான் வேண்டிக்கொண்டேன்.ஒருகணம் வேட்டொலி குறைந்த மாதிரித் தெரிந்தது மறுகணம் காதைப்பிளக்கும் பேரோசையுடன் கடனீரேரி ஒளிவெள்ளமாக மாறியது "கரும்புலி" அடிச்சிருக்கும் என் மனது சொல்லிக் கொள்கிறது.ஓய்ந்த வேட்டொலி உக்கிரமடைகின்றது.மண்டைதீவிலிருந்தும் பலாலியிலிருந்தும் ஏவப்பட்ட ஷெல்கள் கரையோரத்தில் விழுந்து வெடித்தன போதாக்குறைக்கு கடல் மீது தாழப்பறந்த உலங்கு வானூர்தியொன்று ரொக்கட் தாக்குதலை ஆரம்பித்தது ஏறக்குறைய அரைமணிநேரம் சண்டை நடந்தது நேவி பின்வாங்கிச் செல்வது குறைந்துவரும் சத்தத்திலிருந்தும் படகுப்பாதையை விட்டு விலகிச் செல்லும் நேவிக்கலங்களின் வெளிச்சப்பொட்டுகளிலிருந்தும் தெரிந்தது.மீண்டும் ஒரு இடியோசை காதைச் செவிடு படுத்தும் ஒலியுடன்.. வேட்டொலிகள் உக்கிரமாகச் சீறிவிட்டு ஓய்ந்து போகின்றன.அங்கொன்றும் இங்கொன்றுமாக விட்டு விட்டு வேட்டோலி கேட்டது.நான் இருந்த இடத்தில் குப்புறப் படுத்திருந்தேன்.பதுங்கு குழிக்குப் போகவில்லை.
மனம் ஒரே பாரமாக இருந்தது.அப்பாக்கு என்ன நடந்ததோ தெரியாது.அதிகாலையளவில் அக்கரையிலிருந்து வந்த போட்டுகள் சேதி சொல்லின.சனத்தின்ரை போட்டுகளை இடையிலை தாக்க வந்த ஆமியை கடற்புலிகள் மறித்து சண்டையிட்டிருக்கிறார்கள்.கடற்கரும்புலித்தாக்குதலும் நடந்திருக்கிறது பயணிகள் எவருக்கும் சேதமில்லை.என் மனதில் நிம்மதி.விடிந்ததும் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்படுகின்றேன்.
ஊரை அடைந்த போது நன்றாக விடிந்துவிட்டிருந்தது கடையில் வாங்கிய ஈழநாதம் பத்திரிகையில் தலைப்புச் செய்தி
"கிளாலிக் கடனீரேரியில் தாக்குதல் இரண்டு கடற்படைக் கலங்கள் மூழ்கடிப்பு"
பத்திரிகையை வாங்கிக் கண்களை ஓடவிடுகின்றேன்.
செய்திகளின் கீழே "தாக்குதலில் வீரகாவியமான இரு கரும்புலிகள்" என இருவரின் படம் போட்டிருந்தது.
இருவரில் ஒருவனாக......... அதே புன் முறுவலுடன்............
"பிரைம் மினிஷ்டர்"..........
கடைசிவரை எனக்குப் பெயர் சொல்லாமல் போய்விட்ட "பிரைம் மினிஷ்டர்"
http://www.kavithai.yarl.net
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>