Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அந்த இனிமைக் குரல்...........
#1
தான் வாழும் போது மட்டுமல்ல... அவன் மரணித்த பிறகும் கூட மக்கள் மனங்களில் - அவர்கள் நினைவலைகளில் நீங்காமல் நிலைத்திருப்பவனே நிஜமான கலைஞன்! தென்னகத்து கலைத்துறையாக இருந்தாலென்ன நம் ஈழத்து கலைப் பரப்பாக இருந்தாலென்ன மொத்தத்தில் கலை- இலக்கிய தடத்தில் இதுவரை எத்தனையோ கலைஞர்கள் தோன்றி சுடர்விட்டு பிரகாசித்து பிற்பாடு நிரந்தரமாக இவ்வுலகை விட்டு பிரிந்தாலும் அவர்களின் கலைப் பொக்கிஷங்கள் ஏதோ ஒரு வகையில் அவர்களை நினைவூட்டிக் கொண்டேதான் இருக்கும்.

அந்த வகையில் அண்மையில் தனது கணவருடன் அகால மரணமடைந்த இலங்கையின் தமிழ் ஒலி(ளி) பரப்புத்துறையில் மிகச்சிறந்த செய்தி வாசிப்பாளரும் அறிவிப்பாளருமான திருமதி ரேலங்கி செல்வராஜாவின் கலை, இலக்கிய, ஒலி(ளி) பரப்புச் சேவை சிறப்பானதும் மறக்க முடியாததுமாகும். இலங்கை வானொலி- ரூபவாஹினி ஆகியவற்றில் அறிவிப்பாளராக இணைவதற்கு முன்னோடியாக 1980 களின் முற்பகுதியில் யாழ். பஸ் நிலையத்தில் `மணிக்குரல்'விளம்பர சேவையில் அறிவிப்பாளராக அறிமுகமானார். அதன் பின்னர் தனது மாமா ஒருவரின் தூண்டுதலின் பேரில் இலங்கை வானொலியில் அறிவிப்பாளர் பதவிக்கு விண்ணப்பித்து நேர்முகப் பரீட்சையிலும் குரல் பரிசோதனையிலும் சித்தியடைந்து 1987 ஆம் ஆண்டிலிருந்து அறிவிப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் பணிபுரிய ஆரம்பித்த ரேலங்கி செல்வராஜா, 1989 ஆம் ஆண்டிலிருந்து ரூபவாஹினியில் செய்தி வாசிப்பாளராகவும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் ஈடுபட ஆரம்பித்தார். மொத்தத்தில் இலங்கை வானொலியிலும் ரூபவாஹினியிலும் ஒரே நேரத்தில் அறிவிப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் முழு மூச்சாக தன்னை ஈடுபடுத்தி A தர அறிவிப்பாளராக மிளிர்ந்து இலங்கையிலும் தமிழர்கள் வாழும் புலம்பெயர் நாடுகளிலும் பிரபல்யமானார்.

இலங்கை வானொலியில் அறிவிப்பாளராக வர விரும்புபவர்கள் பொதுவாகவே வர்த்தக சேவையில் இணைந்து அதன்மூலம் பிரபல்யம் பெறவே விரும்புவார்கள். ஆனால், `மணிக்
குரல்' விளம்பர சேவையில் தனது ஒலிபரப்பு பயணத்தை ஆரம்பித்த ரேலங்கியோ வர்த்தக சேவை அறிவிப்பாளருக்குரிய அத்தனை தகுதிகளும் ஆளுமைகளும் திறமைகளும் இருந்தும்கூட வர்த்தக சேவையை நாடாமல் தேசிய சேவையில் தானாக விரும்பி இணைந்து கொண்டது அந்நாட்களில் அவரது சக ஒலிபரப்பாளர்களுக்கும் ஏன் என் போன்றோர்க்கும் கூட பெரும் ஆச்சரியமாகவே இருந்தது. இலங்கை வானொலியில் அநேகமான சந்தர்ப்பங்களில் ரேலங்கி, ஒரே நாளில் காலை, நண்பகல், மாலை, இரவு என நான்கு செய்தி அறிக்கைகளையும் வாசிக்கும் நிலையையும் கொண்டிருந்தார். ஊடகங்களும் இவருக்கு சிறந்த வாய்ப்பினை வழங்கி இவரது ஒலி(ளி)பரப்புத் திறனை நன்கு பயன்படுத்திக் கொண்டன.

கலைத்துறையில் நடனத்தாரகையாக அறிமுகமான ரேலங்கி, `தெய்வம் தந்தவீடு' என்ற இலங்கைத் திரைப்படத்தில் நடித்துள்ளார். அதிலும் ஓர் நடனத்தாரகை பாத்திரம் ஏற்று நடித்துள்ளார். இவர் செய்தி வாசிக்கும்போது நடனத்தாரகைக்குரிய அவரது கண்களும் கழுத்தும் ஆடுவதை தொலைக்காட்சியில் நேயர்கள் அவதானித்திருப்பார்கள். 1995 இல் இலங்கை வானொலியின் சிட்டி எப்.எம். (City FM) சேவையில் நேயர்களின் `உங்கள் விருப்பம்' தபாலட்டை நிகழ்ச்சியையும் 30 நிமிட `குடும்ப விருப்பம்' நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி இலங்கையின் பட்டி தொட்டி எங்கும் இவர் பிரபல்யம் ஆனார்.

ரேலங்கி செல்வராஜா, வானொலி- தொலைக்காட்சியைத் தவிர, மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பாணி அலாதியானது.
எந்தவொரு அவசர மேடை நிகழ்ச்சியானாலும் அவற்றை கையில் குறிப்புகளேதும் இல்லாமல் சொல்லவேண்டியவற்றை முன்னமே நன்கு கிரகித்துக் கொண்டு தொகுத்து வழங்குவதில் ரேலங்கிக்கு நிகர் ரேலங்கிதான். சமகாலத்தில் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் இவரது செய்தி வாசிப்புக்கு ஒரு சிறு இடைவெளி ஏற்பட்டாலும் ரூபவாஹினியில் `உதய தரிசனம்' நிகழ்ச்சியை வாரந்தோறும் தொகுத்து வழங்கி வந்தார். ஒலி(ளி) பரப்புத்துறையில் இன்னும் பல சாதனைகளை நிலைநாட்டி இருந்த ரேலங்கி செல்வராஜாவின் திறமைகள் அவரதும் அவரது கணவர் சின்னத்துரை செல்வராஜாவினதும் அகால மரணத்துடன் அழிக்கப்பட்டுள்ளன. அவருடன் பணியாற்றிய ஊடகத்துறையினர் மத்தியிலும் அவரது அமைதியான மழலைக் குரலை யாஸித்த அபிமான நேயர்கள் மத்தியிலும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தனது ஒலி(ளி)பரப்புத் துறை வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் எத்தகைய சவால்களை இவர் எதிர்கொண்டாலும் அவற்றை எல்லாம் துணிச்சலுடன் எதிர்கொண்டு தனது இறுதி உயிர்மூச்சு வரை அஞ்சாநெஞ்சத்துடன் போராடி அமரத்துவம் எய்தியவர் ரேலங்கி செல்வராஜா.
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
அந்த இனிமைக் குரல்........... - by MUGATHTHAR - 08-23-2005, 10:47 AM
[No subject] - by vasanthan - 08-23-2005, 02:34 PM
[No subject] - by Niththila - 08-23-2005, 03:19 PM
[No subject] - by kuruvikal - 08-23-2005, 04:45 PM
[No subject] - by Rasikai - 08-23-2005, 04:50 PM
[No subject] - by narathar - 08-23-2005, 06:59 PM
[No subject] - by Rasikai - 08-23-2005, 07:01 PM
[No subject] - by வினித் - 08-23-2005, 07:56 PM
[No subject] - by MUGATHTHAR - 08-23-2005, 08:15 PM
[No subject] - by sathiri - 08-23-2005, 08:29 PM
[No subject] - by கீதா - 08-23-2005, 09:45 PM
[No subject] - by ப்ரியசகி - 08-26-2005, 12:52 PM
[No subject] - by MUGATHTHAR - 08-26-2005, 08:04 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)