02-23-2004, 01:18 PM
யாழ்/yarl Wrote:(ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் / ஆசிரியர்: சி. புஸ்பராஜா / 632 பக்கங்கள் / அடையாளம் வெளியீடு, 1204 - 05, இரண்டாவது தளம், கருப்பூர் சாலை, புத்தாநத்தம் - 621 310, தமிழ்நாடு / விலை ரூ. 275 / இலங்கை விலை ரூ. 675.)
இந்த நூலைப்பற்றிய தமிழக எழுத்தாளரும் பத்திரிகையாளரும் பாரதியபாஷா வருது பெற்றவருமான திரு பா.ராகவனின் சுயமான விமர்சனம் ஒன்றை அவரது http://writerpara.blogspot.com/உருவி இங்இடுகிறேன்.
நன்றி பாரா
-யாழ்-
நம்பகமான சரித்திரம்
போக இருபத்தியெட்டு மணிநேரம், வர முப்பத்திரண்டு மணிநேரம். ஆகமொத்தம் அறுபது மணிநேரம். இதில் உறங்கிய இருபது மணி நேரங்களைக் கழித்தால் மிச்சமிருந்த நாற்பது மணிநேரங்களும் என்னுடையதாகவே இருந்தது. தொலைபேசி அழைப்புகள் இல்லை, ஈமெயில் இல்லை, மெசஞ்சர் இல்லை, நண்பர்கள் இல்லை, உறவு மக்கள் உடன் இல்லை. இந்தக் கல்கத்தா பயணத்தில் என் ஒரே துணை, ஒரு புத்தகம்தான்.
'ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்' என்பது அந்தப் புத்தகத்தின் பேர். ஆசிரியர், சி. புஷ்பராஜா. (அவர் புஸ்பராஜா
என்றுதான் எழுதுகிறார்.) விஷய ரீதியிலும் சரி, பக்க ரீதியிலும் சரி. மிக கனமான புத்தகம்.
என்னை மாதிரி பிறவி தமிழ்நாட்டுக்காரத் தமிழர்களுக்கு ஈழப் போராட்ட விவரங்கள் எல்லாமே புகட்டப்பட்டவையாக மட்டுமே இருக்கும். போராளிகளுக்குச் சாதகமாகச் சிலரும் எதிராகச் சிலரும் காலகாலமாகத் தொடர்ந்து முன்வைத்ததெல்லாமே மதிப்புரைகள், விமரிசனங்கள்தானே தவிர, செய்திகள் அல்ல. ஈழத்தில் நடப்பது என்ன என்பது குறித்த - முழு அளவில் சரியான, திட்டவட்டமான செய்திகள் ஒருபோதும் தமிழகத்துக்கு நானறியக் கிடைத்ததில்லை.
மேற்சொன்ன இரு தரப்பு மதிப்புரைகள், விமரிசனங்கள்கூட அதனளவில் அதிகபட்ச உணர்ச்சி வெளிப்பாட்டுடன் தான் தரப்பட்டிருக்கின்றனவே தவிர, விஷயத்தின் இயல்புநிலை பேணப்பட்டதில்லை. ராஜிவ் காந்தி படுகொலைக்கு முன்னர்
ஒட்டுமொத்த தமிழகமும் ஈழப்போராளிகளின்மீது அனுதாபம் கொண்டிருந்ததும், படுகொலைக்குப் பின் தீர்மானமாகப் போராளிகளைத் தீவிரவாதிகளாக மட்டுமே பார்க்கத் தொடங்கியதும் இதனால்தான்.
ஈழத்தில் நடப்பதென்ன என்பது பற்றிய யோக்கியமான ஒரு தகவல் அறிக்கை கூட இன்றுவரை தமிழில் பதிவாகாத நிலையில் புஷ்பராஜாவின் இந்நூல் அந்த மிகப்பெரிய வெற்றிடத்தை நிரப்பும் முயற்சியில் தன்னாலான அதிகபட்ச சாத்தியத்தைத் தொட்டிருக்கிறது.
இத்தனைக்கும் புஷ்பராஜா ஒரு முன்னாள் போராளி. எழுபதுகளின் தொடக்கத்தில் 'ஈழத்தமிழ் இளைஞர் இயக்கம்' என்று ஜனநாயக ரீதியில் போராடிய அமைப்பில் முதலில் பங்குகொண்டு, பிறகு தமிழ் மாணவர் பேரவை என்கிற அமைப்பின் சார்பில் போராட்டத்தைத் தொடர்ந்து, அதன்பின் 'தமிழ் இளைஞர் பேரவை' கண்டு, பிறகு பாலஸ்தீன விடுதலை இயக்கமான PLO மாதிரி செயல்படவேண்டும் என்று முடிவு செய்து TLO என்கிற தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தைத்
தோற்றுவித்து, வழிநடத்தி, அந்த இயக்கம் கலைந்தபிறகு அனைத்துப் போராளிகளின் இயக்கங்களுக்கும் தம்மாலான உதவிகள் செய்து, இறுதியில் பத்மநாபாவின் EPRLFக்காக அதன் பிரான்ஸ் கிளையின் பொறுப்பை ஏற்றுத் திறம்பட வழிநடத்தி, பிரான்ஸில் ஈபிஆர்எல்எ·ப் கூடாரம் கலைக்கப்படும்வரை அதற்காகச் செயல்பட்டவர் புஷ்பராஜா.
பிறவிப் போராளிதான். துப்பாக்கியும் தோளுமாக அலைந்தவர்தான். ஆனாலும் \"சிங்களர்களை இனவெறியர்கள் என்று சொல்லும் எம்மவர்கள் மட்டுமென்ன? அதே வெறியுடந்தானே ஆயிரக்கணக்கான அப்பாவிச் சிங்களப் பெண்களையும் குழந்தைகளையும் கொன்று குவித்திருக்கிறோம்?\" என்று சுயவிமரிசனம் செய்துகொள்ளூகிற நேர்மை அவரிடம் இருக்கிறது.
புஷ்பராஜாவின் இந்நூல் இரண்டு பகுதிகள் கொண்டது. நேரடியாகத் தான் சம்பந்தப்பட்ட விஷயங்கள் பற்றிய மிக விரிவான தகவல்களை முதல் பகுதியிலும் கேள்விப்பட்டவை, அலசி ஆராய்ந்தவை, சரித்திரக் குறிப்புகள், விமரிசனங்கள், சுய விமரிசனம் ஆகியவற்றை அடுத்தப் பகுதியிலும் அளித்திருக்கிறார்.
0
சிங்களர்களின் இனவெறிக்குத் துல்லியமாக வயது சொல்லுவது கஷ்டம். ஆனால் 1948ல் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதிலிருந்து போராட்டம் அதன் தீவிரத்தன்மையை நோக்கி நகரத் தொடங்கியதாக நாம் கொள்ளலாம். முதலில் உரிமைப்போராட்டமாகத்தான் அது இருந்திருக்கிறது. பிறகு படிப்படியாகப் பரிணாம வளர்ச்சி கண்டு விடுதலைப் போராட்டமாகி விட்டதாகச் சொல்லுகிறார் புஷ்பராஜா.
விடுதலைப் போராட்டமே கூட ஆரம்பத்தில் ஜனநாயக ரீதியில் தான் நடத்தப்பட்டிருக்கிறது. பொதுக்கூட்டங்கள், ஊர்வலம், கண்டனப்பேரணி இத்தியாதி. அப்போதெல்லாம் ஈழத்தில் தமிழரசுக் கட்சி மிகுந்த செல்வாக்குடன் இருந்திருக்கிறது. அரசியல் தீர்வு ஒன்றைத்தவிர யாரும் எதையும் சிந்தித்துக்கூடப் பார்த்திருக்கவில்லை.
ஆனால் எழுபதுகளின் தொடக்கத்திலிருந்தே தமிழ் இளைஞர்கள் ஜனநாயகப்பாதையின்மீது அவநம்பிக்கை கொண்டு, ஆயுதப்போராட்டம் தான் இதற்குத் தீர்வாக முடியும் என்று நம்பத்தொடங்கியதன் விளைவுதான் ஏராளமான ஆயுதப்போராட்டக்குழுக்கள் தமிழ் ஈழத்தில் உதித்தன. இந்த ஜனநாயக அவநம்பிக்கை ஏற்பட்டதற்கான காரணங்களைப் படிப்படியாக விவரிக்கிறது இந்தப் புத்தகம். சத்தியாகிரக யுத்தத்தின்மூலம் பிரிட்டனிடமிருந்து இந்தியா சுதந்தரம்
பெற்றது போல சிங்கள மேலாதிக்கத்தினிடமிருந்து ஏன் சாத்திய மில்லை என்பதை வெளிப்படையாக அல்லாமல் ஒரு நீரோட்டமாக நூலெங்குமே மௌனமாகத் தெரிவிக்கிறார் புஷ்பராஜா.
ஆயுதம் தான் தீர்வு என்று நம்பி ஏற்றுக்கொண்டவர்களுள் அவரும் ஒருவர். தனது நோக்கத்தில் வெற்றியடைய முடியாமல் உயிர் பிழைக்கவென்று தப்பியோடிப் புலம்பெயர்ந்து வாழ்வது குறித்த குற்ற உணர்வும் கொண்டவர். இந்த இரு சொற்றொடர்களுக்கு இடையில் மறைபொருளாகக் கிடக்கிற கோடி சங்கதிகளைக் கோத்துக் கொடுத்திருக்கிறது இந்தப் புத்தகம்.
ஏன் ஆயுதம் தான் தீர்வு என்று தமிழ் இளைஞர்கள் முடிவு செய்தார்கள்? அப்படி முடிவு செய்தவர்கள் ஏன் ஒரே இயக்கமாக அல்லாமல் தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்து நின்று போராடினார்கள்? ஏன் ஒரு குழுவுக்கும் இன்னொரு குழுவுக்கும் ஒத்துப் போக வேயில்லை? இணைப்பு நடவடிக்கைகளெல்லாம் ஏன் தோற்றுப் போயின? சுமார் நாற்பது போராளிக்குழுக்கள் ஈழப்போராட்டத்தில் பங்குபெற்றபோதும் ஐந்து குழுக்களால் (LTTE, TELO, EPRLF, PLOT, EROS)
மட்டும்தான் ஓரளவேனும் தாக்குப்பிடிக்க முடிந்திருப்பது ஏன்? இந்த ஐந்திலேயே நான்கு குழுக்கள் அழிந்தது ஏன்? LTTE ஏன் தன் சகோதரக் குழுக்களைச் சிதறடித்து, ஒருத்தர் விடாமல் ஓட ஓட விரட்டிக் கொன்றது? சக போராளிகளையே அழித்த விடுதலைப்புலிகள் அமைப்பு எப்படி ஈழத்தின் தனிப்பெரும் விடுதலை இயக்கமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது? மற்ற அனைத்துக் குழுக்களைக்காட்டிலும் புலிகள் அமைப்பு மட்டும் எப்படி அத்தனை பலம் பெற முடிந்தது? பிரபாகரன் என்ன தவறே செய்யாதவரா? காதல் வலையில் விழுந்தார் என்கிற ஒரே காரணத்துக்காக உமாமகேஸ்வரனை இயக்கத்தைவிட்டே துரத்தியவர், இறுதியில் தான் மதிவதனியைக் காதலிக்கத் தொடங்கியதும் இயக்கத்தின் சட்டதிட்டத்தையே மாற்றக்கூடியவராக இருந்தும் எப்படி அவரை விமரிசனம் இன்றி மற்றப் புலிகள் ஏற்றுக்கொண்டார்கள்? மற்ற எந்தப் போராளி இயக்கத் தலைவர்களிடமும் இல்லாத எந்த அம்சம் பிரபாகரனை அப்படியரு நிகரற்ற தலைவனாக்கியது? அப்படிப்பட்ட தலைவர், மற்ற இயக்கங்களில் இருந்தாலும் அனைத்துத் தரப்பினருடனும் நட்புடன்
பழகக்கூடிய, ஒரு அவசர ஆத்திரத்துக்கு உதவக்கூடிய அனுபவம் மிக்க போராளிகள் அத்தனைபேரையும் ஏன் பயன்படுத்திக்கொள்ள விரும்பவில்லை?
இப்படித் தொடரும் அத்தனைக் கேள்விகளுக்கும் பக்கம் பக்கமாக இந்தப் புத்தகம் சொல்லிக்கொண்டுவரும் விடைகளைத் தொகுத்துப் பார்த்தால் இறுதியில் புஷ்பராஜாவும் அவரையத்த பல போராளிகளும் போராட்டத் தாகம் இருந்தும் எதனால் இன்றைக்குப் புலம் பெயர்ந்து வாழவேண்டி இருக்கிறது என்கிற கேள்விக்கான பதில் அகப்படுகிறது.
இதில் வியப்புக்குரிய அம்சம், புஷ்பராஜாவின் குரல் நூலில் ஓரிடத்தில் கூட பாதிக்கப்பட்டவனின் குரலாக ஒலிக்கவில்லை. மாறாக, சுதந்தர தாகம் மேலோங்கிய ஒரு வீரனின் குரல்வளை நசுக்கப்பட்டு, கீச்சுகீச்சென்று அலறும் கதவிடுக்கு பல்லிக்குரலாகவே கேட்கிறது.
தான் சார்ந்த இயக்கம் செய்த குளறுபடிகளைக்கூட பகிரங்கமாக முன்வைக்கிறார் என்பதனால் இந்நூலின் சார்பு நிலை குறித்த சந்தேகம் கூட அடிபட்டுப் போய்விடுகிறது. அதே சமயம் பத்மநாபா என்கிற ஒரு தனிமனிதன்பால் புஷ்பராஜாவுக்கு இருக்கிற அபரிமிதமான அன்பின் காரணமாக அவரைப் பற்றிய விவரணைகளை மட்டும் உணர்ச்சியின் வசப்பட்டு எழுதியிருப்பதையும் குறிப்பிட வேண்டும். ஈபிஆர்எல்எ·ப்பின் தலைவரான பத்மநாபாவை ஒரு மகாத்மா அளவுக்கு புஷ்பராஜா சித்திரிப்பதை ஜீரணிப்பது மிகவும் கஷ்டமான காரியம். சென்னை, கோடம்பாக்கம் சக்கரியா காலனியில்
வெகுகாலம் தங்கியிருந்த பத்மநாபாவை (அங்கேதான் அவர் விடுதலைப்புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.) தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அளவுக்குத் தமிழகத்துப் பத்திரிகையாளர்களும் மிக நன்றாக அறிவார்கள். ஆளும் கட்சியின் ஆசீர்வாதம் பெற்ற ஒரு அயல்தேசத்துப் போராளி இயக்கத் தலைவராக அவரும் அவரைச் சார்ந்தோரும் தமிழகத்தில் - குறிப்பாகச் சென்னையில் புரிந்த பல சட்டமீறல்கள் குறித்தும் அடாவடிகள் குறித்தும் பலர் சொல்ல நானே கேள்விப்பட்டிருக்கிறேன்.
மக்களிடம் கொள்ளையடிப்பதுதான் தவறு; ஆனால் அரசின் சொத்துகளைக் கொள்ளையடித்து, அரசு இயந்திரத்தை நிலைகுலைய வைப்பதில் தவறில்லை என்று சொல்லுகிற புஷ்பராஜாவால் இதையெல்லாம் ஒரு பிழையாக ஏற்கமுடியாமல் போகலாம். ஆனால் இதுவிஷயத்தில் ஒரு போராளியின் குரல் பொதுவான குரலாக இருக்கமுடியாது என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.
பத்மநாபா விஷயம் ஒன்றைத்தவிர இந்நூலில் புஷ்பராஜா உணர்ச்சிவசப்பட்டு வேறு யாரையும் தூக்கிவைக்கவோ, பாராட்டவோ, போட்டு மிதிக்கவோகூட இல்லை என்று சொல்லலாம். பிரபாகரன் செய்த பிழைகளை தக்க ஆதாரங்களுடன் வரிசைப்படுத்தும் புஷ்பராஜா, அத்தனையையும் மீறி அவரது நல்ல குணங்களை, தலைமைத் தகுதிக்கான சிறப்பியல்புகளை, அவரது அற்பணிப்பு உணர்வை, இயக்கத்தைக் கட்டுக்கோப்புடன் நடத்திச் செல்லும் பாங்கைச் சுட்டிக்காட்டத் தவறுவதில்லை. எல்.டி.டி.ஈ. இயக்கத்தை 'தமிழ் புதிய புலிகள்' என்கிற பெயரில் முதல்முதலில்
தோற்றுவித்தவரான செட்டி எனப்படும் தனபாலசிங்கத்தை ஓரிடத்தில் கூட ஒரு போராளியாக புஷ்பராஜா குறிப்பிட மறுக்கிறார். அவர் கருத்தில் செட்டி ஒரு கொள்ளைக்காரர். வங்கிகளைக் கொள்ளை யடித்து, இயக்கத்தின் பேரில் சம்பாதிக்க விரும்பியவர். அவருடன் சேர்ந்தே பிரபாகரன் தன் பயணத்தைத் தொடங்கினாலும் பிரபாகரனின் நோக்கம் கொள்ளையடிப்பதல்ல என்கிறார் புஷ்பராஜா. இந்த வரிகளைப் படியுங்கள்:
<b>"பிரபாகரன், தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் மிகவும் ஆர்வம் கொண்டவராகவும், பணம் சம்பந்தப்பட்ட விடயங்களில் செட்டியைப் போல் அல்லாது மிகவும் நேர்மையானவராகவும், கடுமையான கட்டுப்பாடுகளில் நம்பிக்கை கொண்டவராகவும், அதே வேளையில் தனிமையை விரும்பும் அமைதி கொண்டவராகவும் இருந்தார். தனது நெருங்கிய சகாக்களுடன் கூடத் தேவைக்கு அதிகமாகப் பேசமாட்டார். நம்பவும் மாட்டார். தன்னைச் சுற்றியுள்ளவர்களில் எந்த நேரமும் கவனமான கண்ணோட்டமுள்ளவர் பிரபாகரன்..."</b>
மிகத்தேர்ந்த எழுத்தாளர்களுக்கு மட்டுமே இப்படி மிகச்சில வரிகளில் ஒரு நபரின் புகைப்படத்தையும் எக்ஸ்ரேவையும் ஒருங்கே காட்டமுடியும். ஆச்சர்யம், புஷ்பராஜா ஒரு எழுத்தாளர் அல்லர்! அநேகமாக இந்தப் புத்தகம்தான் அவரது முதல் புத்தகமாகவும் இருக்கவேண்டும். ஆனால் இந்த நூல் முழுவதுமே இத்தகைய சிலவரி விவரணைகளில் நூற்றுக்கணக்கான இலங்கைத் தமிழ்ப் போராளிகள் பற்றியும் அரசியல் தலைவர்கள் பற்றியுமான பிம்பங்களை வெகு அநாயாசமாகத் தந்துகொண்டேபோகிறார் புஷ்பராஜா. சிறை அதிகாரிகள் பற்றி - குறிப்பாகத் தன்னை பெண்டுகழற்றிய பஸ்தியாம்பிள்ளை என்கிற ஒரு போலீஸ் ஆபீசர் பற்றி புஷ்பராஜா எழுதுகிற இடங்களெல்லாம் மிகவுமே ஆச்சர்யமாக இருக்கிறது. ஒரு சிறுகதைக்கான இறுக்கமும் கட்டுக்கோப்பும் கொண்டதாக அவரது எழுத்து காணக்கிடைக்கிறது.
"நான் இங்கு குறித்துள்ள வரலாற்று நிகழ்வுகள் சரியானவை என்ற திடம் என்னிடம் உண்டு. ஆனால் நான் கூறியுள்ள கருத்துக்கள், எனது விமர்சனங்கள் இப்புத்தகத்தை வாசிப்பவர்களுக்குச் சரியாக இருக்கவேண்டும் என்ற கடப்பாடு இல்லை என எண்ணுகிறேன்" என்று முன்னுரையில் புஷ்பராஜா சொன்னாலும் ஒரு விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன்.
உண்மைக்கும் சார்புநிலை எடுத்த கருத்துக்கும் இடைப்பட்ட வித்தியாசம், எழுத்தில் மிக எளிதாகத் தெரிந்துவிடும். பெரிய பிரயத்தனங்களே வேண்டாம். ஏனெனில் அரிதாரம் பூசிப்பூசி மெழுகினாலும் உண்மை அதன் முகத்தைப் பூச்சுக்கு வெளியேதான் எப்போதும் வைத்திருக்கும்.
தன் போராட்ட முயற்சிகளில் சந்தேகமில்லாமல் தோல்வி கண்டு, அந்தத் தோல்வியை முழுப்பிரக்ஞையுடன் ஏற்றுக்கொண்டு, உயிர்தப்பி வாழப்போன இடத்தில் ஆத்ம பரிசோதனை செய்துகொண்டே புஷ்பராஜா இந்நூலை எழுதியிருக்கிறார். எந்தச் சார்பும் எடுத்தாகவேண்டிய கட்டாயம் அவருக்கில்லை. யாரையும் குளிர்விக்க வேண்டிய அவசியமும் இல்லை. அவரைச் சார்ந்த எல்லாருமே இப்போது கொல்லப்பட்டவர்கள். எஞ்சியிருக்கும் ஒரு சருகு மட்டுமே
அவர். தனது தாயகத்தின் சுதந்தரம் ஒன்றைத்தவிர வேறெதிலும் விருப்பமற்றவராகத்தான் அவர் இந்நூலெங்கும் தென்படுகிறார். அந்தச் சுதந்தரத்துக்கு இனி தான் செய்யக்கூடியது எதுவுமில்லை என்பதையும் நன்கு உணர்ந்துஇருக்கிறார். ஆகவே அறிக்கை அளிக்கும் தலைவராக அல்லாமல் தொகுத்து எழுதும் பத்திரிகையாளனாக
மட்டுமே செயல்பட்டிருப்பதை மிக எளிதாக வாசகர்கள் உணர்ந்து கொள்ள முடியும்.
எனக்கென்னவோ இந்நூல் ஒரு நம்பகமான சரித்திர ஆவணமாகத்தான் தோன்றுகிறது. ஈழத்தமிழ் நண்பர்கள் யாராவது
படித்துவிட்டு, கருத்தைப் பகிர்ந்துகொண்டால் எனக்கு மட்டுமல்ல; சமூகத்துக்கே உபயோகமானதொரு காரியமாக அமையும்.
(ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் / ஆசிரியர்: சி. புஸ்பராஜா / 632 பக்கங்கள் / அடையாளம் வெளியீடு, 1204 - 05, இரண்டாவது தளம், கருப்பூர் சாலை, புத்தாநத்தம் - 621 310, தமிழ்நாடு / விலை ரூ. 275 / இலங்கை விலை ரூ. 675.)
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

