Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கலாச்சார ரீதியிலான இனத்தற்கொலைக்கு முடிவு கட்டுவோம் வாரீர்!
#21
TRAITOR Wrote:தாய்மன் எழுதியது: "அதென்னய்யா எப்ப பாத்தாலும் பாரதியார் தமிழ் வளத்தார் காத்தார் என்டு கொண்டு இருக்கிறியள்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதும் கிடையாது எனடு யாருக்கு சொன்னவர்? அமெரிக்க காரனுக்கே?லண்டன் காரனுக்கே? தமிழை பற்றி தமிழனுக்கே சொல்லீட்டு போய்ட்டார். இது தமிழ் வளக்கிறதா? இதையே வெளிநாட்டுக்கானுக்கு சொல்லி இருந்தா அவனுக்கும் தமிழை பற்றி தெரிஞ்சிருக்கும். தமிழும் தன்னால வளந்திருக்கும். தமிழை வளக்கிறதுக்கே முதல்ல வேற மொழி தேவைப்படுது." :?

பாரதியார் சில மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார் அதன் காரணமாகத் தான் தமிழ்மொழிபோல் இனிது என்று கூறியிருந்தார்.


"நானும் ஒரு காலத்தில தமிழ் மேல அக்கறை கொண்டிருந்தனான் தான். தமிழ் படிச்ச நேரம் இங்கத்தேயான் மொழி படிச்சிருந்தா இப்ப நான் பல்கலைகழகத்தில இருந்திருப்பன்".
பாரதியார் சில மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார் அதன் காரணமாகத் தான் தமிழ்மொழிபோல் இனிது என்று கூறியிருந்தார்.

ஐயா உங்களின் ஆதங்கம் புரிகிறது. தமிழில் முறையாகப் படித்திருந்தால் அந்த அறிவுடன் இங்கு கட்டாயம் பல்கலைக்கழகத்தில் படித்திருப்பீர்கள். :!:

சிலபேர் அதையே சாட்டாகச் சொல்லிக்கொண்டு தங்களது முயற்சி திறமை நம்பிக்கை எல்லாவற்றையும் ஒரு மூலையில் போட்டு விடுகின்றார்கள். நானும் எனது அண்ணாவும் தமிழில் தான் இலங்கையில் படித்தோம். நானாவது தரம் 9ல் கனடா வந்துவிட்டேன். அண்ணா உயர்தரம் படித்துக் குறையுடன் இங்கு வந்தார். இங்கு வந்து இரண்டு வருடம் ஆங்கிலத்தில் படித்து பல்கலைகழகத்திற்கு எடுபட்டு தற்பொழுது "PhD" பட்டத்திற்குப் படித்துக் கொண்டு இருக்கிறார். நானும் இங்து வந்து "high school"படித்துவிட்டு தற்பொழுது பல்கலைக்கழகத்தில் 2ம் வருட மாணவியாகவுள்ளேன்.
நல்ல நம்பிக்கை வேண்டும் முதலில். தமிழ்மொழியான என் தாய் மொழியில் ஆரம்பக்கல்வியைப் படித்தபடியால் இரண்டாம் மொழியான ஆங்கிலமும் சேர்ந்து ஒரு நல்ல தராதரத்தையடைய எங்களுக்கு உதவியது.
பெருந்தன்மையில் கூறவில்லை. உதாரணத்திற்குத் தான் என் குடும்பத்தையெடுத்து விளக்கினேன்.

அப்பிடி போடுங்க அருவால.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#22
thaiman.ch Wrote:பிள்ளையளுக்கு தமிழ் பேச விருப்பம் இல்லாமல் இருக்கலாம். அதுக்கு பெற்றோர்கள் என்ன செய்ய முடியும்? தந்தை மாடு மேச்சா பிள்ளையும் அதையே பண்ணனும். தமிழ் வளர்க்கிற சங்கங்கள் தமிழ் மேல பற்று உடையவயளுக்கு தான். தமிழ் பேசு என்டு பிள்ளையளுக்கு அடிச்சா தமிழ் பற்று வந்திடுமே? பிள்ளையளுக்கு அடிக்கிறது மனித உரிமை மீறல்! முதல்ல அதை கண்டியுங்கோ. தமிழ் மேல பிள்ளைகளுக்கு ஆசை வர வைக்க முடியும்.அதுக்கு மேல ஒன்டும் பெரிசா பண்னேலா என்டு நினைக்கிறன். பெரிசுவள் தமிழ்ழ கதைக்க அதுவள் கதச்சு பழகினா தான் உண்டு. மற்றும் படி அதுக்கு நேரம் ஒதுக்கி படிக்கிற அளவுக்கு இங்க பெடியளும் பெட்டயளும் இல்லை. தமிழை படிச்சு இங்க என்ன வேலை செய்யிற? நானும் ஒரு காலத்தில தமிழ் மேல அக்கறை கொண்டிருந்தனான் தான். தமிழ் படிச்ச நேரம் இங்கத்தேயான் மொழி படிச்சிருந்தா இப்ப நான் பல்கலைகழகத்தில இருந்திருப்பன். தமிழ் பேசுற ஒரு நாட்டில தமிழ் வளக்கிறது நல்ல விசயம். அடுத்தவன்ர நாட்டில வந்து தமிழ் வளத்து என்ன பண்ணப்போறம்?முதல்ல பிள்ளையள் இருக்கிற நாட்டு மொழி படிச்சா தானே மேற்கொண்டு படிக்க முடியும்.அதிகமா பேசப்படுகிற சீன மொழிக்காரங்களும் இன்டைக்கு அவையின்ர நாட்டை விட்டு வந்தா இங்கிலிசில தான் பேசனும். அதுக்காக இங்கிலீச படிக்க சொல்லேலை. தமிழை வழக்கிறதுக்காக தமிழ் படிக்கிறது என்டது இங்க இருக்கிற இளைஞர்களுக்கு கடினமான விடயம்.

நீங்கள் இருக்கும் நாட்டின் மொழியினைப்படிக்கவேண்டாம் என்று யார் உங்களுக்குச் சொன்னது?. கட்டாயம் படிக்கவேண்டும். அம்மொழியினைப்படித்துக்கொண்டு தமிழினையும் படியுங்கள். அவுஸ்திரேலியாவினை எடுத்துக்கொண்டால் பிறந்து 2மாதத்தின் பின்பு புலம் பெயர்ந்த சிறுமி ஒருவர் தமிழில் மொழியிலும், தமிழ் ஈழத்திலும் ஆர்வம் கொண்டவர். இப்பொழுது மருத்துவர் துறையில் இறுதியாண்டு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கிறார். வன்னிக்குச் சென்று எமது உறவுகளுக்கு மருத்துவ சேவையினை வருடத்தில் ஒரு முறை செய்து வருபவர். யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியில் படித்த பல மருத்துவர்கள் இங்கு வந்து ஆங்கில மொழியில் படித்து வேலை பாக்கிறார்கள்.

பிரான்சில் சில தமிழர்கள் தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றதுடன் மட்டுமல்லாது, பிரேன்சு மொழியில் படித்து வைத்தியர்களாக உள்ளார்கள்.

லண்டன் சிற்றிப்பல்கலைக்கழகத்தில் 90 ஆரம்பத்தில் மின்சாரப்பொறியியல் துறையில் வகுப்பில் உள்ள 40 பேரில் 30க்கு மேல் தமிழர்கள் தான் கல்வி கற்றார்கள். இன்று இவர்கள் பல நிறுவனங்களில் உயர் பதவி வகிக்கிறார்கள்.அவர்கள் அனைவரும் ஈழத்தில் தமிழ் மொழியில் க.பொ.த உயர்தரத்தில் சித்தி பெற்றவர்கள். கனடாவினைச்சொல்லத்தேவையில்லை. 700,800 என ஒவ்வொரு பல்கலைக்கழகத்தில் ஈழத்தில் தமிழில் படித்த பலர் சாதனை படைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

நானும் க.பொ.த உயர்தரத்தினை யாழ்ப்பாணத்தில் தமிழில் தான் படித்தேன். பிறகு லண்டனில் பொறியியல் துறையில் கல்விகற்றேன். எனக்கும், என்னுடன் படித்த ஈழத்தமிழர்களுக்கும் வெள்ளைக்காரர்களினைவிட கூடுதல் புள்ளிகள் கிடைத்தன. அதன் பிறகு நான் கணணித்துறையில் மேல் படிப்பினைத்தொடர்ந்து தற்பொழுது சிட்னியில் உள்ள பல்கலைக்கழகத்தில் வேலை செய்கிறேன். இதனை நான் பெருமையுடன் சொல்லவில்லை. உதாரணத்துக்குத்தான் சொல்கிறேன்.

தமிழ் மொழியில் கல்விகற்ற பலர் இன்று அமெரிக்கா, கனடா,லண்டன், அவுஸ்திரெலியா, நியுசிலாந்து போன்ற நாடுகளில் உயர் பதவிகளினை வகிக்கிறார்கள். அண்மையில் அந்திராக்ஸுக்கு எதிர்ப்பு மருந்தினை கண்டுபிடித்தவர் ஈழத்தில் தமிழில் கல்வி கற்று பின்பு யாழ் பல்கலைக்கழகத்தில் பெளதிகவியல் துறையில் கல்விகற்று, பிறகு நியுசிலாந்தில் ஆராச்சியினைத் தொடர்பவர்(சிவானந்தன்) பற்றி யாழ் களத்தில் சில வாரங்களுக்கு முன்பு படித்திருந்தோம். அவர் இத்தனை ஆராச்சிகளுக்கு மத்தியிலும் நியுசிலாந்து கன்றபரி தமிழ் அமைப்பிலும் முக்கிய பணியில்(Editor-Canterbury Tamil Society Christchurch, NewZealand) இருக்கிறார்.
http://www.phys.canterbury.ac.nz/people/do...s/Siva%20CV.pdf
http://www.yarl.com/forum/viewtopic.php?p=...ghlight=#175016
,
,
Reply
#23
புலத்தில் தமிழ் அடையாளம்!
By ரூபன்
Jan 1, 2003, 03:07



புலம் பெயர் தேசங்களில் வாழும் இளைய தலைமுறையினர் தாய்நிலத்தின் எண்ணங்களோடும் உணர்வோடும் வாழ்கின்றார்களா? அல்லது புலச் சமூகத்தோடு ஒன்றி வாழ்கின்றார்களா? என்பது பலர் மனங்களில் எழுகின்ற கேள்வியாக இருக்கின்றது. அத்தோடு "இங்கேயே பிறந்து வளரும் குழந்தைகளின் எதிர்காலம் இங்கேதான் நிச்சயிக்கப்படுகின்றது. ஆகவே அவர்களுக்கு தாயகம் பற்றிய சிந்தனை அவசியமற்றது" என்ற கருத்துடைய சிலரும் இருக்கத்தான் செய்கின்றார்கள். ஆகவே இப்படியான கேள்விகளுக்கு விடை காணும் நோக்குடன் தமிழ் அடையாளத்தின் தன்மைகள் அலசப்படவேண்டும். இளைய சந்ததியினர் மத்தியில் தமிழ் அடையாளம பற்றிய விரிவானதும் தெளிவானதுமான பார்வையை உருவாக்க வேண்டிய தேவையும் இன்றியமையாததாகின்றது.

ஓரு இனத்தின் அடையாளத்தை உறுதிப்படுத்துவது அந்த இனத்தின் மொழியும் அம்மொழி சார்ந்த பண்பாட்டு விழுமியங்களுமே. உலகத்தின் எந்த மூலையில் வாழ நேரும் போதும் இனத்தின் தனித்துவம் பேணப்படவேண்டும். நாம் வாழும் நாடுகளின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப எமது வாழ்க்கை முறைகளை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய தேவை எமக்குண்டு. அதுவே அறிவுக்கும் நாகரிக வளர்ச்சிக்கும் பொருத்தமான செயலும் ஆகும். வாழுகின்ற சமூகம் பற்றிய தெளிவான அறிவை உள்வாங்குவதன் மூலமே எம்மை வளர்த்துக்கொள்ள முடியும். ஆனாலும் எமது இனத்துவ அடையாளங்களை நீங்கி "எப்படியும் வாழலாம்" என்ற முடிவுக்கு வருவோமாயின், நாகரிகமற்ற பண்பாடற்ற மனிதர்களாக, வாழ்வின் அர்த்தங்களை இழந்தவர்களாக வாழ நேரிடும்.

நோர்வேயில் வாழும் இளைய தமிழ்த் தலைமுறையினருக்கு இந்நாட்டு மக்களின் வாழ்க்கை முறையின் பாதிப்புக்கள் இருப்பதற்குரிய வாய்ப்புக்கள் அதிகம். இருமொழிப் பண்பாட்டுக்குள் சிக்கித் தடுமாறித் தவிக்க வேண்டிய சூழ்நிலைகளும் நிறையவே உண்டு. இந்த மக்களிடமுள்ள நல்ல பண்புகளையும் சிந்தனைகளையும் வரவேற்று பின்பற்றுவதே அறிவுடமையாகும். ஆனால் நாம் எமது சுயத்தை இழந்து விடலாகாது. தமிழ் உணர்வை விட்டுவிடக் கூடாது. புலம்பெயர் நாடுகளில் வாழும் பலருக்கு தமது பிள்ளைகள் தமிழை கற்க வேண்டும், பேச வேண்டுமென்ற ஆர்வம் நிறையவுண்டு. பெற்றோர்களுடைய இந்த ஆர்வமும் எண்ணமும் பல சமயங்களில் பல்வேறு காரணங்களால் ஈடேறுவதில்லை. ஆனாலும் மற்றைய புலம்பெயர் நாடுகளுடன் ஒப்பிட்டு நோக்குகையில் நோர்வேயில் வாழும் தமிழ் மழலைகள் தமிழை தெளிவான உச்சரிப்போடு சரளமாகப் பேசுகின்றார்கள். இது மகிழ்ச்சிக்குரியதே. ஆனபோதும் இன்னும் பலர் தமது நண்பர்களுடனும் தம்மை ஒத்த வயதுடையவர்களுடனும் மிக அதிகமாக நோர்வேஜிய மொழியிலேயே உரையாடுகின்றார்கள் என்பது வேதனை நிறைந்த உண்மையாகும்.

இந்நிலை மாறவேண்டும். தமிழர் என்று சொல்வதையும் தமிழ்ப் பெயர் தாங்கி நிற்பதையும் பெருமையாகக் கொள்ளுகின்ற மனநிலை எல்லாத்தமிழ் இளைஞர்கள் நெஞ்சங்களிலும் உருவாக வேண்டும். எமது தாய் தேசத்தில் தமிழர்கள்
சொல்லில் அடங்காத துன்பங்ளுக்கும் அவலங்களுக்கும் முகம்கொடுத்தபடி வாழ்கின்றார்கள். போர்த்தீயில் தேசம் எரிந்த போதும் விடியல் வருமென்ற நம்பிக்கையோடு முன்னேறும் எமது உறவுகளின் உறுதி நிறைந்த வாழ்வு பற்றி அறிய வேண்டும். அவர்களின் அன்றாட வாழ்வின் வலிகளை இங்கு வாழும் இளைய சந்ததி உணர்ந்து கொள்ளவேண்டும்.

இன்று புலம்பெயர் மண்ணில் வாழும் முதல் தலைமுறையினர் தமிழீழத்தில் பிறந்தவர்கள். அவர்களுடைய வேர் தமிழீழ மண்ணிலிருந்து படர்ந்தது என்பதால் உள்ளத்தில் கலந்த இன உணர்வும் மொழி உணர்வும் அவர்களின் காலம் வரை நிலைத்திருக்கும் என்ற உத்தரவாதமுண்டு. ஆனால் அடுத்த தலைமுறையை வழிநடத்தும் பொறுப்பை இங்கு பிறந்து வளர்பவர்களே கையேற்கப் போகின்றார்கள். அந்த கடமையை செழுமையாகச் செய்ய வல்ல ஆற்றலை அவர்கள் பெற்றிருக்க வேண்டுமல்லவா! அந்த வழிநடத்தலுக்குரிய நேர்த்தியான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு ஒவ்வொரு இளைய தலைமுறையினரின் பெற்றோருக்கும் உண்டென்பதை யாராலும் மறுக்கமுடியாது.

இங்கு பிறந்து வளர்ந்து வரும் தமிழ்ச்சந்ததிக்கும் தமிழீழத்திற்கும் இடையேயுள்ள தொப்புள்க்கொடி உறவு பலப்படுத்தப்படவேண்டும். தாயகம் நோக்கிய சிந்நனைகளும் செயற்பாடுகளும் வளரவேண்டும். தமிழர் வரலாறு, தமிழீழ விடுதலைப்போராட்ட நியாயங்கள் பற்றிய தெளிவான விளக்கங்களை இங்குள்ள இளையவர்கள் பெற வேண்டும். நாளை மலரப்போகும் எங்கள் தாயகத்திற்கு அவர்கள் தமிழ்ப்பிள்ளைகளாகச் சென்று வரவேண்டுமென்ற எண்ணம் எல்லாப் பெற்றோர்களின் நெஞ்சங்களிலும் ஆழப் பதிந்திருக்க வேண்டும்.

ரூபன் சிவராஜா
http://www.yarl.com/m_pulam/article_91.shtml
,
,
Reply
#24
புலம்பெயர்வாழ்வில் எம் இளைய சமூகத்தின் கல்வி
By
Jan 6, 2003, 22:50


சொந்த மண்ணிலிருந்து வேரோடு பிடுங்கியெடுக்கப்பட்டு, ஒரு அந்நியச்சூழலில், புலம்பெயர் நாடுகளில் தம் இருப்பை நிலை நாட்டும் எம் சமூகத்தின் ஏக்கமும் அக்கறையும் எம் வருங்காலத் தலைமுறை சார்ந்து இருப்பது உண்மை. குறிப்பாக கல்வித் தகைமையே பெருமளவில் எம் தலைமுறையின் எதிர்காலத்தை இப்புலம்பெயர் நாடுகளில் நிர்ணயிக்கப் போகின்றது என்பதில் சந்தேகமில்லை. அத்துடன் போர்ச் சூழலின் மத்தியில் கல்வி கற்பதற்கான அனைத்து அடிப்படை வசதிகளும் மறுக்கப்பட்டு, எம் மண்ணில் நாம் பாரம்பரியமாகக் காத்து வந்த கல்விச் சொத்தை எம் மாணவ சமூகம் இழந்து நிற்கும் இக்காலகட்டத்தில் புலம்பெயர் நாடுகளில் கல்விக்கான அனைத்து வசதிகளையும் கொண்டு வாழும் இளைய சமுகத்திற்கு, "தமிழன்" என்ற ரீதியில் சிறந்த கல்வியைப் பெற்று எம் தாய்நிலத்தின் நாளைய வரலாற்றைக் கட்டியெழுப்ப வேண்டிய தார்மீகக் கடமையுமுண்டு. இவற்றைக் கருத்திற் கொண்டு புலம்பெயர் வாழ்வில் எம் இளம் சமுதாயத்தின் கல்வி சம்பந்தமான சில கருத்துக்களை முன்வைப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

தாய்மொழிக்கல்வி

தமிழ்மொழிக் கல்வியின் அவசியம் சம்பந்தமாக புலம்பெயர்நாடுகளில் வெளிவரும் எம்மவரின் சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் பல கட்டுரைகள் வெளிவந்துள்ளன 1-2. இருப்பினும் எம் வருங்காலச் சந்ததியின் கல்வி பற்றிய இக்கட்டுரையில் தாய்மொழிக்கல்வி பற்றிய கருத்துக்கள் சேர்க்கப்படாவிடின் இக்கட்டுரை முழுமை பெறாது. எனவே, முதலில் தாய்மொழிக்கல்வியின் அவசியம் பற்றியும் தமிழ்க்கல்விப் போதிப்பில் கவனிக்கப்பட வேண்டிய விடயங்களையும் பற்றிச் சிறிது கவனிப்போம். மொழி என்பது வெறுமனே உணர்வுகளை வெளிப்படுத்தப் பயன்படும் ஒரு கருவி மட்டுமல்ல. மொழியே மனிதனை, அவன் சார்ந்த சமுகத்தை அடையாளப்படுத்தும் அதிமுக்கியமான தனித்துவம் மிக்க அம்சம். தாய்மொழி என்றால் என்ன? தாயின் அல்லது தந்தையின் மொழியா? அல்லது புலம் பெயர்நாடுகளில் பெற்றோர் இருவரும் தொழில் செய்ய வேண்டிய கட்டாயத்தின் காரணமாகக் குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் நாளின் பெரும் பகுதி பெரும்பான்மையினரின் மொழியையே "சுவாசிக்கும்" குழந்தைகளுக்கு பெரும்பான்மையினரின் மொழி தான் தாய்மொழியா? ஓருவன் உரையாடல் மூலம் தன் கருத்துக்களை வெளியிடவும், பிறர் கருத்துக்களை உரையாடல் மூலம் உள்வாங்கிக் கொள்ளவும் எந்த மொழி பயன்படுகிறதோ அம்மொழியே தாய் மொழி என UNESCO விளக்குகிறது. தாய்மொழி என்பதற்கு வரைவிலக்கணம் எப்படியிருந்த போதிலும் தாய்மொழிக் கல்வியால் என்ன பயன் என்று வினாவெழுப்பும் மாணவர்களும் ஒரு சில பெற்றோர்களும் எம்மத்தியில் காணப்படுகிறார்கள் என்பது மறைக்கமுடியாத உண்மை. குறிப்பாக, ஆங்கிலம் பெரும்பான்மையினரின் மொழியாக உள்ள நாடுகளிலே பல பெற்றோர் தமிழ் மொழிக்கல்வி குழந்தைகளின் ஆங்கில மொழி வளர்ச்சியைப் பாதிக்கின்றது என்றும், பிள்ளைகளுக்கு தமிழ் மொழிக்கல்வி ஒரு சுமையாகவே இருக்கின்றது என்றும் கருதுவதைக் காணக் கூடியதாகவுள்ளது. இதற்குக் காரணம் காலம் காலமாக எம்மக்கள் மத்தியில் ஆங்கில மொழி மீது இருக்கும் மயக்கம் தான் என்று ஒரு குற்றச்சாட்டு இருப்பினும், தாய்மொழிக் கல்வி பற்றிய சரியான சிந்தனைத் தெளிவு இல்லாமையே, பெற்றோரின் இந்நிலைப்பாட்டுக்கு முக்கிய காரணமெனலாம்.

மொழியாராய்ச்சியாளரின் கருத்துக்களின்படி, ஒரு நான்கு வயதுக் குழந்தை ஒரே சமயத்தில் பல மொழிகளைக் கற்றுக் கொள்ளக்கூடிய வல்லமையைக் கொண்டுள்ளது. இதற்கு உதாரணமாக யப்பானிலே பாலர் பாடசாலைகளிலே நான்கு மொழிகள் கற்பிக்கப்படுவதைக் குறிப்பிடலாம். எனவே, தமிழ் மொழிக் கல்வி அந்தந்த நாடுகளின் பெரும்பான்மை மொழிக் கல்வியைப் பாதிக்கும் என்ற வாதம் அபத்தமானது. இது தவிர, குழந்தையானது, தாயின் வயிற்றிலிருக்கும் போதே தாயிடமிருந்து மொழியைக் கற்றுக் கொள்ளும் திறனைப் பெறுகிறது என்பதும், நான்கு வயது சராசரிக் குழந்தை கிட்டத்தட்ட 4000 சொற்களை அறிந்து வைத்திருக்கும் என்பதும் மனோதத்துவ ஆராய்ச்சியாளரின் கணிப்பு. இவ்வளத்தை அடித்தளமாகக் கொண்டு தாய்மொழியை மேலும் விருத்தி செய்வது மிக முக்கியமென்பதை மொழியாராய்ச்சியாளர் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர் 3. இந்நிலையில் தமிழ் மொழியை தமக்கிடையே அன்றாட சம்பாசனை மொழியாக உபயோகிக்கும் பெற்றோரின் குழந்தைகள் இயல்பாகவே தமிழ் மொழியை தமது சிந்தனா மொழியாகக் கொள்ளும் பக்குவத்தைப் பெறுகின்றனர். பெற்றோர் தம் குழந்தையின் சிந்தனாமொழியை வளப்படுத்துவதில் பங்களிப்பதானால், அம்மொழி அவர்களின் தாய் மொழியாகவும் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். புதிய ஒரு மொழியை கற்றுக் கொள்ள தாய்மொழியின் பதங்களும் அர்த்தங்களுமே அடிப்படையாக அமைகின்றன. இதற்கு உதாரணமாக, நோர்வேயில் 2000-2001ஆம் ஆண்டுகளில் வேற்று மொழிப் பெற்றோரைக் கொண்ட பாடசாலை மாணவரிடையே நடாத்தப்பட்ட ஆய்வைக் குறிப்பிடலாம். இவ்வாய்வின்படி 4 தம் தாய்மொழிகளில் திறமை பெற்ற மாணவர்கள் நோர்வேஜிய மொழி, மற்றும் அனைத்து பாடசாலைப் பாடங்களிலும் நோர்வேஜிய மாணவருக்கு நிகராகக் காணப்படுவதும், அதேவேளை தாய்மொழிக்கல்வி பெறாத மாணவர் அனைத்துப் பாடங்களிலும் பின் தங்கிய நிலையில் காணப்படுவதும் தெரிய வந்துள்ளது. வளமான தாய்மொழியே வேற்று மொழியைக் கற்பதற்கும், துறைசார் கல்விக்கும் அடிப்படை என்ற பல்நாட்டு மொழியறிஞர்களின் கூற்றையே மேற்படி ஆய்வு மீண்டும் உறுதிசெய்துள்ளது.

மேலும், தாய்மொழியானது ஒரு சமூகத்தின் பண்பாட்டு விழுமியங்களை பேணிக்கொள்ளவும், வளர்த்துக்கொள்ளவும், சுய அடையாளத்தை உணர்ந்து கொள்ளவும், புலம்பெயர் நாட்டுக்கு அப்பால் சொந்த உறவுப்பாலங்களை பேணிப் பாதுகாக்கவும் உறுதுணையாக அமைகிறது என்பதும் பலரும் அறிந்த உண்மையே. அதிலும் விடுதலைக்காகப் போராடும் ஒரு சமூகம் என்ற வகையில் நாளை விடுதலை பெறும் நிலத்தின் மைந்தராக எம் இளைய சமூகம் இருக்க வேண்டுமானால் அவர்கள் தமிழ் மொழிக் கல்வியைப் பெறுவது மிகவும் அவசியமாகிறது. இது தவிர "உலகமயமாக்கல்" என்ற கோட்பாட்டிற்கமைய உலகம் வர்த்தக ரீதியில் சுருங்கிவரும் இக் காலகட்டத்தில் பன்மொழிகளில், அதிலும் குறிப்பாக பெரும்பான்மையினர்க்குப் பரிச்சயமான ஐரோப்பிய மொழிகள் தவிர்ந்த மொழிகளில் தேர்ச்சி பெற்றவரின் தகைமை தொழில் ரீதியில் மிகவும் கவர்ச்சிகரமானதாயமையும். இதற்கு உதாரணமாக, அண்மைக் காலங்களில் சீனா, வியட்நாம், இந்தோனேசிய நாடுகளில் தமது வியாபாரத் தொடர்புகளை விஸ்தரிக்க நோர்வேஜிய நிறுவனங்களான Norsk Hydro, Statoil உதவி நிறுவனமான NORAD போன்றவை நோர்வேயில் வாழும் அந்தந்த நாட்டு வழித்தோன்றல்களை பயன்படுத்துவதைக் காணக்கூடியதாகவுள்ளது. மேற்படி காரணங்களே தமிழ் மொழிக் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தப் போதுமானவை. ஆனால், தமிழ்மொழிக்கல்வி சரியான முறையில் புலம்பெயர் நாடுகளில் போதிக்கப்படுகிறதா? என்பது விவாதத்துக்குரிய விடயம்தான்.


தமிழ் மொழிப் போதனை

மொழியின் பிறப்பிடமல்லாத அந்நியச் சூழலில் புலம்பெயர் நாடுகளில் தமிழ் மொழிப் போதனை என்பது இலகுவான காரியமல்ல. நவீன கற்பித்தல் முறைகளுக்குப் பழகிய மாணவ சமுதாயத்தின் மத்தியில் புரையேறிப்போன, பழைய தலைமுறைகளுக்குப் பழகிப்போன கற்பித்தல் முறைகள் இன்னமும் பயன்படுத்தப்பட்டு, மாணவரின் ஈடுபாட்டைக் குலைப்பதும், வாழ்வியல் சூழலுக்குப் பொருத்தமில்லாத பாடத் திட்டங்களைப் பயன்படுத்தி, மாணவரை அந்நியப்படுத்துவதும் இன்றும் பல இடங்களில் தமிழ்மொழிப் போதனைகளில் உள்ள குறைபாடுகள். இலங்கை, இந்திய சூழல்களைக் கருத்திற்கொண்டு தயாரிக்கப்பட்ட புத்தகங்களை, செயல் நூல்களை எந்தவித மீளாய்வோ, பரிசீலிப்போ இல்லாது பாவித்தல் நடந்த வண்ணமேயுள்ளது. புகலிடம் வந்த வளர்ந்தவர்க்கே தெரியாத கடின இலக்கணத்தை மாணவர்க்குப் போதிப்பதும், அதை மாணவர் விளக்கமில்லாமல் மனப்பாடம் செய்து ஒப்புவித்தலையே திறமையாகக் கருதுவதும், இன்னமும் நடந்து கொண்டுதானிருக்கிறது. புலம்பெயர்நாடுகளில் காலத்திற்கு, சூழலுக்கு ஏற்ற பாடத்திட்டங்களும் அவற்றுக்குகந்த புத்தகங்களை உருவாக்கலும் அத்தியாவசியத் தேவையாக இருக்கும் அதே வேளையில் தமிழ் மொழிப் போதனையின் உள்ளடக்கம் பற்றிய விவாதமும் அவசியமானது. அண்மையில் தமிழ்நாட்டுப் பேராசிரியர் ஒருவர்; "ல","ள","ழ" உச்சரிப்பு தமிழ்நாட்டில் மாணவர்க்கு சிரமமாயிருப்பதாகவும் "ல","ள","ழ" வித்தியாசத்தை தமிழ்மொழியிலிருந்து அகற்றி ஏதாவது ஒரு "ல" உச்சரிப்பை மட்டும் உபயோகப்படுத்தல் சிறந்தது என்றும் குறிப்பிட்டிருந்தார். தமிழ் மொழியின் இனிமைக்கும் சிறப்புக்கும் ஒரு காரணியாய் உள்ள "ல","ள","ழ" உச்சரிப்பை தவிர்ப்பது என்பது தமிழின் வளத்திற்கே ஊறு நினைப்பது போலாகும். இருப்பினும் அப் பேராசிரியரின் கருத்தின் ஒரு பகுதி கவனத்திற்குரியது. தமிழ் நாட்டிலேயே, "ல","ள","ழ" உச்சரிப்பில் வித்தியாசம் தெரியாது மாணவர் திணறுகையில், புலம்பெயர் சூழலில் எம் மாணவர் சிலர் சிரமப்படுவது எதிர்பார்க்கக்கூடியதே. மொழியை சரியாக கற்றுக்கொள்வது முக்கியமென்பது ஒரு புறமிருக்க, மாணவரின் "ல","ள","ழ" உச்சரிப்பில், எழுதுவதில் உள்ள சிரமங்களை அளவுக்குமீறி மிகைப்படுத்தி, மாணவரின் தாய்மொழிக்கல்வி மீதான ஈடுபாட்டைக் குலைத்து, சலிப்புத்தன்மையை ஏற்படுத்தாமல் சரியான பயிற்சியை அளித்து ஒரு சமநிலையைப் பேணுவது முக்கியமானது. மேற்குறிப்பிடப்பட்டது ஒரு உதாரணமே. அத்துடன் தம் உணர்வுகளை, சமூகப் பிரச்சினைகளை ஆராய்ந்து ஆணித்தரமான தம் கருத்துக்களை தமிழில் மாணவர் எடுத்துச் சொல்லக்கூடிய விதத்தில் பாடங்கள் அமைவது மிகவும் முக்கியம். வெறுமனே ஆசிரியரால் மட்டும் முடிவெடுக்கப்பட்டு, வற்புறுத்தலுடன் திணிக்கப்படும் பாடங்களாக அமையாமல், மாணவர் விருப்புடன் தாமே தமது கற்கும் திறனை வளர்க்கும் வகையில் பாடங்கள் தெரிவு செய்யப்படவேண்டும். மனனம் செய்வதினால் மட்டும் மொழியை வளப்படுத்த முடியாது. ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டதுபோல் தமிழன் என்ற சுய அடையாளத்தைத் தரும் தமிழ் மொழிப்போதனை புலம்பெயர் வாழ்வுக்கான காரணங்கள், தமிழ் மொழி, எம் மண், மக்களின் வரலாறு, இன்றைய நிலை போன்றவற்றை இருட்டடிப்புச் செய்து அல்லது புறக்கணித்து நடாத்தப்படுமானால், அத்தகைய போதனை எம் மாணவர்க்கும் எம் சமூகத்துக்கும் மாபெரும் துரோகத்தையே செய்கிறது என்பதைத் துணிந்து சொல்லலாம்.

வித்தியாசமான கல்வித்திட்டங்களும் பெற்றோரும்

இங்கிலாந்து கல்வித் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இலங்கைக் கல்வித் திட்டங்களின் வாரிசுகளான நாம் புலம்பெயர் நாடுகளில் வித்தியாசமான புதிய கல்வித் திட்டங்களுக்கு முகம் கொடுக்கையில் பல சிக்கல்களை எதிர்கொள்வது எதிர்பார்க்கக்கூடியதே. இவ்வகையில், ஆங்கில மொழி மேல் எம்மவர் கொண்ட மயக்கத்தைப் போலவே ஆங்கிலம் பேசப்படும் நாடுகளின் கல்வித் திட்டங்களிலும் வேற்று ஐரோப்பிய நாடுகளில் வாழும் எம்மவர் பலருக்கும் ஒரு மயக்கம் உண்டு. நோர்வே, டென்மார்க், சுவீடன், ஜேர்மனி, பிரான்ஸ், சுவிற்சலாந்து போன்ற நாடுகளில் வாழும் எம்மவரில் பலர் தம் குழந்தைகளின் எதிர்கால கல்வி நலனிற்காக இங்கிலாந்து, கனடா செல்லலாமா? என்ற சலனத்தில் வாழ்வதும், பலர் ஏற்கனவே இடம் மாறியுள்ளதும் நாம் அறிந்த ஒன்றே. இத்தகைய சஞ்சலத்தைத் தீர்க்க சரியான வழி அந்தந்த நாட்டுக் கல்வித் திட்டங்களை சரிவர அறிந்து கொண்டு நடவடிக்கையில் இறங்குவதே. மொழிப்பிரச்சினை காரணமாகவும், சிக்கலான கல்வித்திட்டங்கள் காரணமாகவும் சுவிற்சர்லாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் எம்மவர்கள் தம் குழந்தைகளின் எதிர்காலக் கல்வி பற்றிய முடிவுகளை எடுக்கும் முழுப்பொறுப்பையுமே பிள்ளைகளிடமே விட்டுவிடும் துர்ப்பாக்கிய நிலையே காணக்கூடியதாகவுள்ளது. இந்நாடுகளின் கல்வித்திட்டங்கள் சம்பந்தப்பட்ட அறிவை எம்மாணவர்க்கும் பெற்றோர்க்கும் கொடுக்க வேண்டிய பாரிய கடமை தமிழர் அமைப்புக்களுக்கும் துறைசார் வல்லுனர்க்குமுரியது.

நோர்வேயில் துறைசார் கல்வியும் எம் இளைய சமூகமும்
இனிவரும் பகுதிகளில் நோர்வேயில் எம்மாணவரின் கல்வி சம்பந்தமான சில கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. சில வாரங்களுக்கு முன் OECD (Organization for Economic Co-operation and Development) அமைப்பினால் 15 வயது மாணவர்களிடையே 32 நாடுகளில் கணிதம், விஞ்ஞானம், வாசிப்புத்திறன் ஆகியவற்றில் நடாத்தப்பட்ட கணிப்பின்படி5, நோர்வே அனைத்துத் துறைகளிலும் சராசரி இடத்தையே பிடித்துள்ளமை நோர்வேஜியக் கல்வித்திட்டம் சம்பந்தமான காரசாரமான விவாதங்களைக் கிளப்பியுள்ளது. இக் கணிப்பில் கலந்து கொண்ட யப்பான், தென் கொரியா ஆகிய இரு ஆசிய நாடுகளுமே முதல் இரண்டு இடங்களையும் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. நோர்வேக்குள் NIFU (Norsk Institutt for studier av forskning og utdanning) அமைப்பினால் 2000ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட இன்னுமொரு கணிப்பின்படி6, நோர்வேஜிய மொழியைத் தாய்மொழியாகக்கொண்ட மாணவரை விட வேற்று மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர் அனைத்துத் துறைசார் கல்விகளிலும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன் 1997ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட கணிப்பும்7 இதே முடிவையே தெரிவித்திருந்தது. அதே வேளை, தொழிற்கல்விக்கான பயிற்சிகளில் வேற்று நாட்டுப் பெயர்களைக் கொண்ட மாணவர் புறக்கணிக்கப்படுவதும், பரீட்சைகளில் சிறந்த புள்ளிகளை எடுத்தாலன்றி பயிற்சிக்கான இடங்களை இம்மாணவர்க்கு வழங்க தனியார் நிறுவனங்கள் பின்னிற்கின்றன என்பதையும் புள்ளிவிவரங்களுடன் 2001ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட NIFU அறிக்கை8 தெரிவிக்கிறது.

இக்கணிப்புகள் நோர்வேஜிய கல்வித்திட்டம் பற்றியும் எமது இளம் சமுதாயத்தின் எதிர்காலக் கல்வி சம்பந்தமாயும் எம்மவர் மத்தியில் சஞ்சலத்தை ஏற்படுத்துவது இயல்பானதே. நோர்வேஜிய ஆரம்பப் பாடசாலைகளில் பயிலும் எம் தமிழ் மாணவர் பலர் நோர்வேஜிய மாணவர்க்கு நிகராக கணிதம், விஞ்ஞானம் போன்ற பாடங்களில் ஆரம்பத்தில் திகழ்ந்தாலும் 6,7 ஆம் வகுப்புகளில் எம் மாணவர் இப்பாடங்களில்கூட பிரச்சினைகளைச் சந்திக்கத் தொடங்குவதை அனுபவங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கணிதத்துறையில் வசனக் கணக்குகளைப் புரிந்து கொண்டு அவற்றைத் தீர்ப்பதில் எம் மாணவர் வெகுவாகச் சிரமப்படுவதையும், விஞ்ஞானத்துறையில் நோர்வேஜிய தாவரங்கள், உயிரினங்கள் பற்றிப் போதிய அறிவைக் கொண்டிராமலிருக்கும் தன்மையையும் காணக்கூடியதாகவுள்ளது. இதுதவிர, நோர்வேஜிய கலாச்சாரத்துடன் பின்னிப்பிணைந்த சமூகம், இலக்கியம், கலைகள் சம்பந்தப்பட்ட பாடங்களிலும் எம்மாணவர் பலர் பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர். நோர்வேஜிய சமூகத்துடன் போதியளவு தொடர்பில்லாத தமிழ் மாணவரின் வாழ்வியல் சூழலும் பெற்றோர் பாடசாலைப் பாடங்களில் உதவி செய்யமுடியாத நிலையுமே இப்பாடங்களில் எம் மாணவர் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமெனலாம்.

இதே வேளை நோர்வேஜிய கல்வித் திட்டத்தைப் பொறுத்தவரை, ஆரம்பப்பாடசாலைக்கும், உயர்தரப் பாடசாலைக்குமிடையில் தரத்தினடிப்படையில் பாரிய இடைவெளியிருப்பதையும் காண்கிறோம். நோர்வேஜிய மாணவர் கூட 6,7ஆம் வகுப்புக்களைக் கடந்து 8ஆம் வகுப்பை அடைகையில் முதல் அதிர்ச்சியையும், 10ஆம் வகுப்பைக் கடந்து உயர்தரக்கல்வியை (Gymnas, V.g.skole) ஆரம்பிக்கையில் இரண்டாவது அதிர்ச்சியையும், பின்னர் பல்கலைக்கழகம், உயர்கல்விப் பாடசாலை (Høyskole) ஆரம்பிக்கையில் பெரிய அதிர்ச்சியையும் எதிர் கொள்கின்றனர். உயர்தர வகுப்பில் (Gymnas, V.g.skole) முதலாவது வருடமே பல மாணவர் கணிதப் பரீட்சைகளில் தோல்வியடைவதும், விஞ்ஞானத்துறையைக் குறிப்பாக, பௌதீகவியலை தேர்ந்தெடுக்காது புறக்கணிப்பதும் இன்று சாதாரண விடயமாகிவிட்டது. கணித விரிவுரையாளர் ஒருவர், சில மாதங்களுக்கு முன் உயர்தர இரண்டாம் ஆண்டில் (2. Gymnas) கற்கும் மாணவர் மத்தியில் 1960 களில் 9ஆம் வகுப்பில் கொடுக்கப்பட்ட கணிதச் சோதனைத்தாளைப் பரீட்சித்தபோது 95 வீதமானோர் தோல்வியடைந்துள்ளனர். இன்றைய நோர்வேஜிய மாணவர் கடந்த தலைமுறையை விட குறைந்தது 2 வருடங்கள் கணித, விஞ்ஞான அறிவில் பின்னிற்பதாக அண்மையில் கணிக்கப்பட்டுள்ளது9. இதே போலவே, பல்கலைக்கழகங்களிலும் Høyskole எனப்படும் உயர்கல்விப் பாடசாலைகளிலும் கணிதத்துறையில் பெருமளவில் நோர்வேஜிய மாணவர் தோல்வி காண்பதும் இன்று சகஜமாகிவிட்டது.

பொறியியல், தகவல், கணணித்துறையில் ஆளுமை செலுத்தும் அறிவாளருக்காக பல மேற்குலக நாடுகளும் போட்டிபோடும் நிலையில், நோர்வேயில் மேற்படி துறைகளைத் தேர்ந்தெடுக்கும் மாணவரின் தொகை மிகக்குறைவாகவே காணப்படுகிறது. அண்மையில் வெளிவந்த ஒரு கணிப்பின்படி, இதே நிலையே இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளிலும் காணப்படுவது தெரிய வந்துள்ளது. நோர்வேயைப் பொறுத்தவரை இன்னும் 10 வருடங்களில், உயர்தரக் கல்விக் கூடங்களில் பௌதிகவியலைக் கற்பிப்பதற்கு போதியளவு தேர்ச்சி பெற்ற ஆசிரியர் இல்லாத பிரச்சினை தோன்றும் என அஞ்சப்படுகிறது. நோர்வேஜிய் கல்வித்திட்டமும் கல்வியில் அசமந்தமான போக்குமே இந்நிலைக்கு முழுக்காரணமெனலாம். தனியே ஆரம்பப்பாடசாலைக்கான கல்வித்திட்டம் மட்டுமன்றி ஆசிரியரை உருவாக்கும் ஆசிரியர் கல்விக்கான திட்டமுமே இத் துர்ப்பாக்கிய நிலைக்கு காரணமாகும். இன்று பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களில் பெரும்பான்மையோர் விஞ்ஞானப்பாடங்களில் கற்பிப்பதற்கான தகுதியைக் கொண்டிருக்கவில்லை என அண்மையில் வெளிவந்த கணிப்பு ஒன்று தெரிவிக்கிறது10 . இதற்கு உதாரணமாக, கடந்த வருடம் (2001) பேர்கனிலுள்ள ஆசிரியர் பயிற்சி உயர்கல்வி நிலையத்தில் (Høgskolen i Bergen, Læreutdanning) முதலாண்டில் நடாத்தப்பட்ட கணிதப்பரீட்சையில் 60% மாணவர் சித்தி பெறாததைச் சுட்டிக்காட்டலாம். பொதுவாக ஆசிரியர் கல்விக்கு தெரிவாகும் மாணவருக்கு கணித, விஞ்ஞானப் பாடங்களில் தேவையான அளவு தேர்ச்சியிருப்பதுமில்லை. இது ஒரு வகையில் மீளாமல் தொடரும் ஒரு சங்கிலிப் பிரச்சினையாகவே உள்ளது. அதாவது பாடசாலைகளில் கற்பிக்கப்படும் விஞ்ஞானம், கணிதக் கல்வியின் தரம் போதாதிருப்பதும், இப்பற்றாக்குறைக் கல்வியைப் பெற்ற மாணவர், ஆசிரியர் பயிற்சியின்போதும் போதியளவு விஞ்ஞான, கணித அறிவைப்பெறாத நிலையில் ஆசிரியர்களாக பாடசாலைகளில் நியமிக்கப்படுவதும், தாம் கற்ற அதே பற்றாக்குறைக் கல்வியை தம் மாணவர்க்குப் பயில்விப்பதுமாக இச்சங்கிலித் தொடர் நீள்கிறது. நோர்வேக் கல்வித்திட்டங்களில் பாரிய மாற்றங்களைச் செய்ய வேண்டுமென்பதை அரசு உணர்ந்ததினாலேயே Læreplan 97 என்ற புதிய கல்வித்திட்டம்11 1997ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆசிரியரின் திறமைகளுக்குச் சவாலாயமையும் மிகவும் தரமான இத்திட்டத்தினை அமுல்படுத்துவதற்கான தேர்ச்சி ஆசிரியர்க்கு இன்னமும் இல்லாமல் இருப்பதே இன்றைய பிரச்சினை. பழைய கல்வித்திட்டங்களின் வாரிசுகளான ஆசிரியர்க்கு மேலும் மேலும் பயிற்சிகளையும் கல்வியையும் வழங்குவதன் மூலமும், ஆசிரியர் பயிற்சிக் கல்வியின் தரத்தை உயர்த்துவதன் மூலமுமே தரமான கணித, விஞ்ஞானக் கல்வியை இனிவரும் காலங்களில் பாடசாலைகளில் வழங்கக்கூடியதாயிருக்கும்.

பற்றாக்குறைக் கல்வியைப் பெறும் நோர்வேஜிய மாணவரின் நிலையே இதுவென்றால் தமிழ் மாணவரின் நிலை எப்படியாகும் என்ற கேள்வி நியாயமானதே. அதற்காக எம்மாணவரின் எதிர்காலம் இருண்டதாயிருக்கப்போகிறது என மனமுடையவோ, இலண்டன், கனடா எனக் கனவு காணவோ அவசியமில்லை. மாறாக, எம் தமிழ் மாணவர்க்கு கணித, விஞ்ஞானத் துறையைப் பயில்விப்பதில் பெற்றோரும் எம் சமூகத்திலுள்ள அறிவாளரும் நம்பிக்கையுடன் கவனம் செலுத்தவேண்டும். விஞ்ஞானத்தை வெறும் மனனம் செய்வதற்கே உண்டான விதிகளும், சமன்பாடுகளும் கொண்ட புத்தகக்கல்வியாக ஆக்காமல், எம் அன்றாட வாழ்வுடன் விஞ்ஞானம் எவ்வாறு தொடர்பு பெறுகின்றது என்பதை 4,5 வயது தொடக்கமே எம் குழந்தைகளுக்குப் புரிய வைப்பது மிகவும் முக்கியமானது. உதாரணமாக 5 வயதுக்குழந்தை மழை நீரில் விளையாடுவதைக் கண்டதும் எம்மவர் என்ன செய்கிறோம்? குழந்தை நனையாமல் இருக்கவேண்டும் என்று காட்டுக்கூச்சல் போடுவதுதான் வழக்கமேயன்றி அக்குழந்தை நீருடன் விளையாடி நீரின் குணாதிசயம்பற்றி (உதாரணமாக சில பொருட்கள் மிதக்கின்றன, சில தாழ்கின்றன. இரும்பு தாழ்கிறது. ஆனால் இரும்பினால் செய்யப்பட்ட கப்பல் மிதக்கிறது) பரிசோதனையே செய்கிறது என்பதை உணரமறுக்கிறோம். நீர், வளி, ஒளி, ஒலி, வானியல் என இயற்கையுடன் கூடிய அனைத்துமே விஞ்ஞானத்துடன் தொடர்புடையவை என்பதைச் சிறுவயதிலிருந்தே எம் சிறார்க்கு உணர்த்தி, விஞ்ஞானத்தை வாழ்வுடன் இயல்பாகவே இணைத்துக் கொள்ள பழக்கிக்கொள்ளவேண்டும். அதே போல், அன்றாட வாழ்வுடன் சம்பந்தப்பட்ட விதத்தில் கணிதத்தைத் தொடர்புபடுத்துவதிலும் சிறு வயதிலிருந்தே கவனம் செலுத்தவேண்டும்.

நோர்வேப் பாடசாலைகளில், எல்லா மாணவரும் கல்வித்திட்டத்திற்கமைய சம தகுதி பெறவேண்டுமென்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்படுவதால், அதி திறமையான மாணவர்க்கு உகந்த வேலைத் திட்டங்களை வகுப்பதற்கான நேரமோ, வசதியோ பெரும்பாலான வகுப்பாசிரியர்க்குக் கிடைப்பதில்லை. இதனால் திறமையான மாணவரே நோர்வே பாடசாலைகளில் அபாக்கியசாலிகள் என்று சொல்லப்படுவதில் உண்மையில்லாமலில்லை. எனவே, பெற்றோர் உதவி செய்யக்கூடிய கணிதத்துறையில் தமது அறிவை வளர்த்துக்கொள்வது எம்மாணவர்க்கு மற்றப்பாடங்களிலும் தன்னம்பிக்கையைக் கொடுக்குமென்பதால், பாடசாலையில் கொடுக்கப்படும் கல்வியில் மட்டும் திருப்திகண்டு நின்றுவிடாது அவர்களுக்கு மேலும் பயிற்சிகளைக் கொடுக்க வேண்டியது அவசியம். இது தவிர, எமது சமூகத்தின் துறைசார் வல்லுனரையும், இந்நாட்டுக் கல்வித்திட்டத்தில் கல்வியைப் பெற்ற அறிவாளரையும் கொண்டு எம் மாணவர்க்கான உதவிக்கல்வியை வழங்கும் முயற்சிகளை எமது சமூக அமைப்புக்கள் மேற்கொள்ள வேண்டும்.

நோர்வேஜிய கல்வி முறையில் குறைகளிருப்பினும் பல நிறைகளும் உள்ளன என்பதை யாரும் மறுக்கமுடியாது. பாடசாலைக் கல்வியானது, வெறும் ஏட்டுச் சுரைக்காய்க் கல்வியாக இல்லாது, சுய அடையாளத்தை, மனித நேயத்தை நாடும் மனிதாபிமானிகளை, சூழலை, இயற்கையை நேசிப்போரை, விஞ்ஞான ரீதியில் சிந்தித்து, புதியதைப் பிரசவிக்கும் படைப்பாளிகளை, கலைகள், விளையாட்டுகள், அரசியல், சமூகம் பற்றி அறிந்து, கூட்டுணர்வுடன் இயங்கக்கூடிய சமூகப்பிராணிகளை, அனைத்து இயக்கங்களையும் உள்வாங்கி, தானே சிந்தித்துச் செயலாற்றக்கூடிய முழுமனிதரை உருவாக்கும் கல்வியாக அமையவேண்டும். அதற்கேற்ப போதனை முறைகளும் மாற்றம் பெற வேண்டும். எம் இளம் சமூகத்தின் கல்விமேல் அக்கறை கொண்ட அனைத்துச் சக்திகளும் இதை உணரவேண்டும். இவ்வகையில், 1997இல் அறிமுகப்படுத்துப்பட்ட நோர்வே கல்வித்திட்டம் சரியான ஒரு ஆரம்பமே. இருப்பினும், அசட்டு நம்பிக்கையோடு, முழுப்பொறுப்பையும் பாடசாலையிடமே விட்டுவிடாது, நோர்வேஜியக் கல்வி முறையிலுள்ள நல்ல விடயங்களையும், எமக்குப் பழகிப் போன கல்வி முறையிலுள்ள சிறப்பான அம்சங்களையும் தேர்ந்தெடுத்து, எம் இளையவரை வளம்படுத்துதலே சிறந்தது. அதே வேளை, நாளை கட்டியெழுப்பப்படும் எம் தேசத்தின் நிர்மாணத்தில் பங்கெடுக்க வேண்டிய வரலாற்றுக் கடமையைக் கொண்டுள்ள எம் இளையவர்க்கு, பொருத்தமான துறைகளை வழிகாட்டும் பொறுப்பும் எம்மவரையே சாரும்.



--------------------------------------------------------------------------------

1. ச.சச்சிதானந்தம், தாய்மொழியும், ஐரோப்பிய முதன்மொழிகளும், "இன்னுமொரு காலடி", 54-58, 1998.

2. காமில் ஓசார்க், மொழி, அனுபவ, பாடசாலைக் கல்வி விருத்தி ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தவையே, அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம், ஐந்தாம் ஆண்டு விழாச் சிறப்பிதழ், 36-41, 1997.

3. Katarina Magnussen, Undervisning i modersmål – en tidsfråga?, 2001, http://modersmal.skolverket.se/pdf/defmodersmal.pdf

4. Sunil Loona, En flerkulturell skole?, Administrasjon for språklige minoriteter i Bergens hjemmeside, 2001.

5. OECD PISA Study, International Comparative data on schooling outcomes, 2001.

6. Berit Lodding, Gjennom videregående opplæring? Evaluering av Reform 94: Sluttrapport fra prosjektet Etniske minoriteter, NIFU (Norsk Institutt for studier av forskning og utdanning), 1998.

7. Svein Lie, Marit Kjærnsli, Gard Brekke, TIMSS, Third International Mathematics and Science Study, 1997.

8. Berit Lodding, ’Norske får liksom første rett’, NIFU (Norsk Institutt for studier av forskning og utdanning), 2001, ISBN 82-7218-442-7.

9. Aftenposten, ’Gamle matteprøver for vanskelige’, 12.12.01

10. Aftenposten, ’Nye lærere kan lite for skole’, 30.01.02

11. Læreplanverket for den 10-årige grunnskolen, KUF, 1997.


ஆக்கம்: கலாநிதி வேலாயுதபிள்ளை தயாளன் (Associate Professor, Høgkolen i Bergen, Bergen, Norway)

நன்றி: மகுடம் - அன்னைபூபதி கலைக்கூட சிறப்பிதழ்

(இவ்வாக்கம் நோர்வேஜிய சூழலை மையமாகக் கொண்ட எழுதப்பட்டாலும் புலம்பெயர்ந்தவர்கள் அனைவருக்கும் பொருந்தும் என்ற அடிப்படையில் இங்கு மீள்பிரசுரம் செய்யப்படுகின்றது. இடையிடையே வரும் நோர்வேஜிய சொற்களுக்கு மன்னிக்கவும்)

http://www.yarl.com/m_pulam/article_196.shtml
,
,
Reply
#25
நன்றி (அரவிந்தன் அண்ணா) உங்கள் அறிவுபூர்வமான ஆக்கத்திற்கு!!!
Respect human talent
Respond to genius
Recognize reality
Admire truth and beauty
With Love Traitor
Reply
#26
SUNDHAL Wrote:
thaiman.ch Wrote:பிள்ளையளுக்கு தமிழ் பேச விருப்பம் இல்லாமல் இருக்கலாம். அதுக்கு பெற்றோர்கள் என்ன செய்ய முடியும்? தந்தை மாடு மேச்சா பிள்ளையும் அதையே பண்ணனும். தமிழ் வளர்க்கிற சங்கங்கள் தமிழ் மேல பற்று உடையவயளுக்கு தான். தமிழ் பேசு என்டு பிள்ளையளுக்கு அடிச்சா தமிழ் பற்று வந்திடுமே? பிள்ளையளுக்கு அடிக்கிறது மனித உரிமை மீறல்! முதல்ல அதை கண்டியுங்கோ. தமிழ் மேல பிள்ளைகளுக்கு ஆசை வர வைக்க முடியும்.அதுக்கு மேல ஒன்டும் பெரிசா பண்னேலா என்டு நினைக்கிறன். பெரிசுவள் தமிழ்ழ கதைக்க அதுவள் கதச்சு பழகினா தான் உண்டு. மற்றும் படி அதுக்கு நேரம் ஒதுக்கி படிக்கிற அளவுக்கு இங்க பெடியளும் பெட்டயளும் இல்லை. தமிழை படிச்சு இங்க என்ன வேலை செய்யிற? நானும் ஒரு காலத்தில தமிழ் மேல அக்கறை கொண்டிருந்தனான் தான். தமிழ் படிச்ச நேரம் இங்கத்தேயான் மொழி படிச்சிருந்தா இப்ப நான் பல்கலைகழகத்தில இருந்திருப்பன். தமிழ் பேசுற ஒரு நாட்டில தமிழ் வளக்கிறது நல்ல விசயம். அடுத்தவன்ர நாட்டில வந்து தமிழ் வளத்து என்ன பண்ணப்போறம்?முதல்ல பிள்ளையள் இருக்கிற நாட்டு மொழி படிச்சா தானே மேற்கொண்டு படிக்க முடியும்.அதிகமா பேசப்படுகிற சீன மொழிக்காரங்களும் இன்டைக்கு அவையின்ர நாட்டை விட்டு வந்தா இங்கிலிசில தான் பேசனும். அதுக்காக இங்கிலீச படிக்க சொல்லேலை. தமிழை வழக்கிறதுக்காக தமிழ் படிக்கிறது என்டது இங்க இருக்கிற இளைஞர்களுக்கு கடினமான விடயம்.


நாரதர் அண்ணா வந்து பதில் தருவார்...

ஏன் தம்பி சுண்டல் நாரதரினைக்கூப்பிடுகிறாய். நீரே ஒரு உதாரணம். நீரும் ஒஸ்ரேலியாவில் தமிழ் அழியக்கூடாது என்று இன்பத்தமிழ் வானொலியில் நல்ல நிகழ்ச்சிகள் செய்கிறனீர்தானே. தமிழினை வளர்க்கும் சுண்டலுக்கு எனது ஆசி எப்பவும் இருக்கும்.
! ?
'' .. ?
! ?.
Reply
#27
தம்பிமார் ,அன்மையில் ஒரு தமிழ் பாடசாலை பரிசளிப்பு விழாக்கு சென்றிந்தென் ஒரு சிறுவன் பேச்சு போட்டியில் முதலாம் பரிசு பெற்றீருந்தார் ,நான் அவரிடம் சென்று அவரைப் பாரட்டினென்.தமிழ்ல். உடனே அருகில் இருந்த தாயார் சொன்னார் அவருக்கு தமிழ் தெரியாது என்றூ . புலத்தில் தமிழ் என்பது நடமுரைக்கு சரிவராது
"To think freely is great
To think correctly is greater"
Reply
#28
[size=18]மொழிதான் நம் அடையாளம் மொழிதான் நமக்கு விழி - சுப.வீரபாண்டியன்

'தாய் மொழியைப் போற்றி வீழ்ந்த நாடும் இல்லை!, தாய் மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடும் இல்லை! என்பது மூத்தோர் வாக்கு தமிழர்களே! ஏனெனில், மொழி என்பது ஒரு வார்த்தை மட்டுமே இல்லை, அதுதான் நம் வாழ்க்கை 'அறம் செய்ய விரும்பு என்று வாழ்வைச் சொல்லித் தருவது மொழி அகரத்தைக்கூட இப்படி அறமாகச் சொல்லிப் போதிப்பது நம் பண்பாடு!

தமிழின் மேன்மைதான் தமிழரின் மேன்மை தமிழின் அழிவு என்பது தமிழரின் அழிவு!

சாதியோடு யாரும் வாழ வேண்டாம், மதம் இல்லாமலும் வாழலாம் ஆனால், ஒரு மொழி இல்லாமல் யாரும் வாழ முடியாது. கருவி என்பது புறவயமானது மொழி என்பதோ அகவயமானது கணினி

என்ற கருவி இல்லாமல் என்னால் வாழ்ந்துவிட முடியும் ஆனால், எப்படி நான் சிந்திக்காமல் இருக்க முடியும்? ஏனெனில் மொழி என்பது மூளையோடு பின்னிப் பிணைந்தது'தாய் மொழி படி! என்று சொன்னால், வேறு மொழி எதையும் படிக்காதே என்று அர்த்தமல்ல ஒவ்வொருவரின் தேவைக்கும் திறமைக்கும் தகுந்தபடி எத்தனை மொழிகளை வேண்டுமானாலும்

படிக்கலாம் ஆனால், நீங்கள் எந்த மொழியைச் சரியாகப் படிப்பதற்கும் முதல் மொழி ஒன்று அவசியம் அந்த முதல் மொழி தாய் மொழியாகத்தான் இருக்க முடியும்பாரதிதாசன் புதுவையில் ஆசிரியராக இருந்தபோது 'அ எழுத்தை சொல்லித் தர 'அணில் படம் வரைந்திருப்பதைக் கண்டித்து பிரெஞ்சு அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார். 'குழந்தையின்

வாழ்க்கை அம்மாவில் இருந்து தொடங்க வேண்டுமே தவிர, அணிலில் இருந்து தொடங்கக்கூடாது என்று அவர் சொன்ன கருத்தை பிரெஞ்சு அரசாங்கம் ஏற்றுக்கொண்டு பாடப்

புத்தகத்தில் மாற்றம் செய்தது. ஆனால் இன்றோ, நம் பிள்ளைகளின் வாழ்க்கையை 'ஆப்பிள் முதல் தொடங்குகிறார்கள். அந்நிய உலகத்தைத் தெரிந்துகொள்வது நல்லதே ஆனால், தாய் மொழியைத் தவிர்ப்பதால், நாம் நம் வாழ்க்கைக்கே அந்நியமாகப்

போவதை எப்போது புரிந்துகொள்ளப் போகிறோம்?உலகமே கிராமமாகிவிட்ட பிறகு 'தமிழ் தமிழ் என்று ஏன் கூப்பாடு போடுகிறீர்கள் என்று எங்கள் மீது கோபம் வரலாம் உலகம் கிராமமாகவில்லை. உலகம் அமெரிக்காவாகி வருகிறது! அவர்கள் அங்கே விழித்திருக்கும்போது, அவர்களுக்காக இங்கே நம் கணிப்பொறிப்பிள்ளைகள் உறங்காமல் வேலை பார்க்கிறார்கள் எஜமானர்கள் தூங்கும்போது அடிமைகள் எப்படி உறங்க முடியும்?மாமாவுக்கும் சித்தப்பாவுக்கும் நம்மிடம் தனித்தனி உறவுப் பெயர்கள் உண்டு. அந்த உறவுகள் இல்லாத, கூட்டுக் குடும்ப வாழ்க்கையற்ற ஒரு மொழியில் இரண்டு வெவ்வேறு உறவுகளை

'அங்கிள் என்று அழைப்பதை நாமும் பயன்படுத்துவது மூடத்தனம்தானே?

மொழி கடந்து மனிதன் சிந்திக்க வேண்டும் என்பவர்களுக்கும் ஒரு செய்தி.

நீங்கள் சொல்வதும் நியாயம்தான் இந்தியாவும், பாகிஸ்தானும் பிரியும்போது ஒரு லட்சம் இந்துக்கள், ஒரு லட்சம் இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டார்கள் என்று பாடம் நடத்துவதைவிட, 'மொத்தமாக இரண்டு லட்சம் மனிதர்கள் கொல்லப்பட்டார்கள் என்று சொல்வது தான் மனிதநேயம். இந்தியாவின் பிரிவு, மதத்தால் வந்ததாகச் சொல்லலாம் ஆனால், பாகிஸ்தானும், வங்காள தேசமும் ஏன் பிரிந்தன?

இரண்டு நாட்டிலும் ஒரே மதம்தான் ஆனாலும், 'எங்கள் வங்காள மொழியின் செழுமையை எங்களால் இழக்க முடியாது என்று மதம் கடந்து மொழி நின்றதுதான் வரலாறு! ஆம், மனிதனையும் மொழியையும் பிரிக்க முடியாது நண்பர்களே!

'பணம் சேர் என்று கட்டளையிடாமல் 'திறமைக்கும், தகுதிக்கும் உரிய பணம் சம்பாதிக்க வேண்டும் 'தீதின்றி ஈட்டல் பொருள் என அந்தப் பணம் முறையற்ற வழியில் வரக் கூடாது என்று போதிப்பதும் மொழியின் வேலை அப்போதுதான் மனிதம் தழைக்கும்!

இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவு மொழி விழிப்பு உணர்வு தமிழகத்தில்தான் தொடங்கியது இன்று இந்தியாவிலேயே மொழி அறியாமை உள்ளவர்களும்

தமிழர்களாகத்தான் இருக்க முடியும். தமிழகத்திடம் இருந்து மொழி உணர்வைப் பெற்றன பக்கத்து மாநிலங்கள். இன்று, கன்னடம் தெரியாமல் யாரும் கர்நாடகாவில் படிக்க முடியாது,

மலையாளத்தை உயிருக்கு இணையாகக் கருதுகிறார்கள். மலையாளிகள் சுந்தரத் தெலுங்குதான் ஆந்திராவின் வீடுகளில் இன்றைக்கும் ஒலிக்கிறது. ஆனால், தமிழகத்தின் தமிழ்த்

தெருவில் மட்டும் தமிழ் இல்லை தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்பதை என்று நாம், நம் குழந்தைகளை வெறும் மதிப்பெண்களுக்காக இந்தப் பாடல்களை மனப்பாடம்

செய்யவைத்தோமோ, அன்று தொடங்கியது நம் வீழ்ச்சி!

முனுசாமிக்கும், கண்ணம்மாவுக்கும் பிறந்த குழந்தை பள்ளியில் தமிழில் பேசியதற்காக தண்டனை விதிக்கிறார்கள் 'அம்மா என்று மகன் அழைத்தால் அகம் மகிழாமல், 'இவ்வளவோ செலவு பண்ணி 'அம்மான்னு கூப்பிடவா உன்னை இங்கிலீஷ் மீடியம் சேர்த்தேன் 'மம்மீன்னு கூப்பிடு மகனே! என்று பிள்ளையை அடிக்கிறாள் தமிழ்த் தாய்!

ஆம், தமிழர்களின் பிள்ளைகள் ஆங்கில வழிக் கல்வி பயில்கிறார்கள் தமிழ் தெரியாத ஒரு தலைமுறை தமிழ்நாட்டிலேயே உருவாகி வருகிறது.

மருத்துவம் ஆங்கிலத்தில் இருந்தாலும் நோயாளிகள் தமிழர்களாகத்தானே வருகிறார்கள். நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் ஆங்கிலம் தெரிந்தவர்களாக இருக்கலாம் ஆனால், குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றம் வருபவர்கள் தமிழர்களாக இருக்கும்போது, தமிழ்தானே அங்கே தேவை.

'உள்ளதும் போச்சு நொள்ளக் கண்ணா! என்று கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு. தமிழர்கள் ஆங்கிலம் படிக்க விரும்பி, அதுவும் தெரியாமல், தமிழையும் சேர்த்துத் தொலைக்கிறார்கள்.தாய்மொழியைச் சரிவரக் கற்காத எந்த மனிதனும், வேறு மொழிகளை ஆழமாகக் கற்க இயலாது என்பது, அறிவியல் 'வல்லமை உள்ள மொழி வாழாதா? அதை ஏன் நாம் காப்பாற்ற வேண்டும் என்று சிறுபிள்ளைத்தனமாகக் கேட்கிறார்கள்.

மொழி வாழ்ந்தால்தான் அந்தச் சமூகம் வாழும், பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் மிகச் சிறிய அளவே உள்ள இங்கிலாந்து வல்லரசாக இருப்பதற்கு, அவர்கள் மொழி உலகம் முழுவதும் பரவி இருப்பதுதான் காரணம்!

தொழிலறிவு பெற தாய் மொழிக் கல்விதான் சிறந்த வழி என்பதற்கு ஜப்பான் நாடு கண்ணுக்கு முன்னால் இருக்கும் ஓர் உதாரணம். விதவிதமான கண்டுபிடிப்புகள், ரோபோக்களைத்

தாண்டியும் ஜப்பானியர்களிடம் கவிதையும் மொழியும் அதனோடு பிணைந்த வாழ்க்கையும் முக்கியமாக இருக்கிறது. வல்லரசுகளை மிரட்டுகிற தொழில்நுட்பம் இருக்கிற சீனாவில் பெருமையே அதன் தாய் மொழிப் பற்றுதான்.

போரினால் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்துபோன தமிழர்கள்தான் ஈழ விடுதலையில் முன்னெப்போதும் இல்லாத அளவு ஈடுபாடு காட்டுகிறார்கள்.

ஜெர்மன் மொழியை இலக்கணச் சுத்தமாகப் பேசினாலும், 'நீ ஜெர்மானியன் இல்லையே என்று புறக்கணிக்கப்படுவதன் துயரத்தை உணர்ந்தால்தான் முடியும் ஆனால், இங்கேயோ தலைகீழ் தமிழில் படிக்கிற பிள்ளைகளுக்கு வேலையில் முன்னுரிமை இல்லாமல் போவது தமிழகத்தின் அவலம் நம் குடும்ப உறவுகளில் சிக்கல் பெருகியதற்கும் நாம் தாய் மொழியை மறந்ததற்கும் இறுக்கமான தொடர்பு உண்டு. நாம் நம் அறிவுச் செல்வத்தை இழந்து கொண்டு இருக்கிறோம் என்கிற உணர்வு நமக்கு எப்போது வரும்?

'கர்ணனுக்குப் பிறகு கொடையும் இல்லை, கார்த்திகைக்குப் பிறகு மழையும் இல்லை என்று ஒரு சமூகம் பழமொழி சொல்வது எளிதன்று எம் முன்னோர் எத்தனை கார்த்திகைகளுக்குக் காத்திருந்து, அனுபவத்தால் உணர்ந்து இந்தப் பழமொழியை உருவாக்கி இருக்க வேண்டும்? ஆனால், சுட்டெரிக்கும் வெயில் பகுதியில் வாழும் என் பிள்ளைகள் 'ரெயின் ரெயின் கோ அவே என்று பாடுவது அறிவுடைமை ஆகாதே!

எம் வருத்தம் பிள்ளைகளின் மேல் இல்லை அதைச் சொல்லித்தருகிற கல்வி முறைக்கே வெட்கம் இல்லை அடுத்த தலைமுறை பற்றி அக்கறை இல்லாத அரசியல் தலைவர்கள் வாய்ப்பது சமூகத்துக்கு நன்மையாகாது வீடு, தமிழை விட்டு விட்டது அரசியல், தமிழை விற்றுவிட்டது இது உடனடியாகத் திருத்தப்பட்டு அடையாளம் நிலை நிறுத்தப்பட வேண்டும் ஏனெனில் அடையாளமின்றி யாரும் வாழ இயலாது

நாம் எந்த மொழியின் மூலம் உலகத்தைத் தெரிந்துகொள்கிறோமோ அதுவே நம் அடையாளம் இதை நமக்குச் சொல்வதும் நம் முன்னோர்தான். தன் பெயர், இனம், மதம், நாடு எதையும் தன் இலக்கியத்தில் சொல்லாத திருவள்ளுவர், தன் முதல் குறளிலேயே. முதல் சொல்லிலேயே தன்னைத் தமிழர் என்று சொல்லிக்கொள்கிறார். இறைவனுக்கு இணையாக மொழியைக் கருதியவர் திருவள்ளுவர்

'அகர முதல எழுத் தெல்லாம் என்று தன் மொழியின் அடையாளத்தோடு ஒப்பற்ற இலக்கியத்தைப் படைத்திருக்கிறார் திருக்குறளைப் புறக்கணிக்கிற சமூகம், வளர்ச்சிக்குரிய சமூகமாகாது.

மொழிதான் நம் அடையாளம் மொழிதான் நமக்கு விழி தன் விரல் கொண்டு தன் விழியைக்குத்திக்கொள்கிற சமூகத்தை யார் தான் காப்பாற்ற முடியும்?

தமிழர் ஒன்றுபடு!
தமிழால் ஒன்றுபடு!


நன்றி-ஆனந்தவிகடன்
,
,
Reply
#29
நல்ல விஞ்ஞான பூர்வமான கட்டுரைகளை இணைத்தமைக்கு நன்றிகள் அரவிந்தன்,
மேலே பலர் கூறியவற்றை நாம் வெகு ஆளமாகவும் நடைமுறை ரீதியாகவும் ஆராய வேண்டி உள்ளது.

முதலில் தாய் மொழி என்றால் என்ன என்பதில் பல பிரச்சினைகள் உள்ளன,இது புலத்தில் பிறந்து வளரும் பிள்ளைகளை அடிப்படையாக வைத்துச் சொன்னால், அவர்களின் தாயின் மொழி தான் தாய் மொழியா?அல்லது அவர்கள் அதிகமாக கேட்கும் அல்லது அமிழ்ந்துள்ள மொழி தான் தாய் மொழியா,இதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.

உதாரணத்திற்கு ஒரு பிள்ளை மூன்றுவயதை அடையும் மட்டும் பேசமால் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.கவலை அடையும் பெற்றோர் அவரை தமது வைத்திய நிபுணரிடம் அழைத்துச் செல்கின்றனர்.அவர் குழந்தயைப் பரிசோதிப்பதற்காக தமது உள்ளூர் மொழியில் கேள்விகளைக் கேட்கிறார்.குழந்தயோ தாய் தந்தையரின் மொழியயே அறிந்துள்ளது.இதனால் அக் குழந்தை குழப்பம் அடையாதா?
மேலும் ஆரம்பப் பாடசாலைகளில் மொழிக் கல்வியும்,அடிப்படை கணித பாடமும் படிப்பிக்கப் படிகிறது ,வீட்டில் அந்த அந்த மொழியிலயே கதைக்கும் குழந்தைகளுக்கு பாடசாலையில் சிறப்பாகச்செய்ய கூடிய அளவு சாத்தியம் இருகிறது.ஆரம்பப் பாடசாலைகளிலயே குழந்தைகளைத் தரம் பிரித்து அவர்களின் திறமைகளுக்கு முத்திரை இடும் பழக்கம் எல்லா மேற்கத்திய பாடசாலைகளிலும் இருக்கிறது.இந்த தரத்திற்கு அமைவாகவே ஒரே வகுப்பில் இருக்கும் பிள்ளைகளுக்கு வெவ்வேறாக பாடங்கள் நடாத்தப் படுகின்றன.இப்போ ஒரே வகுப்பிலயே இங்கிலாந்தை பொறுத்தவரை இரு வேறு தரத்தில் ஆங்கிலமும்,கணிதமும் படிப்பப்பிக்கப் படிகிறது.இதில் திறமையானவர்களாக ஆசிரியர்கள் மதிப்பிடும் பிள்ளைகள் மேலும் திறமை உடயவர்களாக ஆகக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.இதன் படி உள்ளூர் மொழியில் அவ்வளவாக பரீட்சயமயற்ற பிள்ளை திறமை குறைந்தவராக மதிப்படிடப் பட்டு அவரிற்கான போதனை மட்டுப் படுத்தப் பட்ட தரத்திலேயே நிகழ்கிறது.

மேலும் மொழிகளை கிரகிக்கும் திறன் என்பது மூளையின் ஒரு பகுதியில் இருக்கும் மடிப்புக்களின் எண்ணிக்கயில் தங்கி இருகிறது எனவும் சில ஆராச்சிகள் கூறுகின்றன.ஆகவே ஒரு குழந்தயில் இருந்து இன்னொரு குழந்தைக்கு மொழிகளை கிரகிக்கும் தன்மையும் வேறு படுகிறது.

நடைமுறையில் பெற்றோர் தமிழில் உரை ஆடினாலும் பிள்ளைகள் பதிலை உள்ளூர் மொழியிலயே அழிக்கிறார்கள்.மேலே சொன்னது போல் குழந்தைகளை வெருட்டி இங்கே எதனையும் செய்ய முடியாது.அது அவர்களுக்கு தமிழ் மேல் வெறுப்பையே உண்டு பண்ணும்.பெற்றோருடன் ஆன உறவும் மோசமாகும்.அவர்களுக்கு தமிழ் விளங்கினாலும் தமக்கு மிகவும் பரீட்ச்சயமான,தாம் அமிழ்ந்துள்ள மொழியிலயே அவர்கள் பதிலை அழிக்கிறார்கள்.இது எதனைக் காட்டுகிறது, அவர்கள் தாம் அதிகமாக அமிழ்ந்துள்ள மொழியிலயே அவர்கள் சிந்திக்கிறார்கள் என்றல்லவா?
ஆகவே தாய் மொழி தமிழாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்பினாலும் நடைமுறை ரீதியாக இது எவ்வளவுக்கு சாத்தியமானது?

எனது அனுபவத்தில் இது சாத்தியப் படதா ஒன்றாகவே இருக்கும்.மேலெ எழுதிய பலர் இது அமைப்பு ரீதியாகச் செய்யப் பட வேண்டும் என்று எழுதிகிறார்கள் ஒழிய, நடை முறயில் எமக்கெல்லாம் தெரியும் இவ்வாறான அமைப்புக்களை அமைத்துச் செயற்பட ஒருவரும் இல்லை என்பதே புலத்தில் நிதர்சனமான உண்மை.

தமிழர் என்ற அடயாளம் ஏன் அவசியமானது என்பதற்கான காரணங்கள் மேலே சுட்டிக் காட்டப் பட்டுள்ளன,ஆனால் ஒரு நான்கு வயதுக் குழந்தைக்கு பெற்றோரால் மேலே சொன்ன வற்றை எவ்வாறு விளக்கப் படுத்த முடியும்?உனது தேசிய அடயாளத்தை,உனது வரலாற்றை நீ அறிய உனக்குத் தமிழ் தெரிய வேணும் என்று சொன்னால் எந்தக் குழந்தைக்கு அது விளங்கும்? புலம் பெயர்ந்த நீ என்றுமே ஆங்கிலேயனாக முடியாது என்பது எப்படி ஒரு குழந்தைக்கு விளங்கும்?டிவியில் நல்ல நல்ல காட்டூன் எல்லாம் ஆங்கிலத்தில போகுது ,எனது நண்பர்கள் எல்லாம் அதைப் பாக்கினம் அப்பா என்னடா எண்டா இந்த கிழவி ஒண்டு கரும்பலகைக்கு முன்னால் நிண்டு கொண்டு சோக்காலா எழுதி தமிழ் படிப்பிகிறன் எண்டு சொல்லிக் கொண்டு விசர் அலம்பிக் கொண்டிருக்கிற , நிகழ்ச்சியப் பாக்கச் சொல்லிறார் எண்டு தான் அந்தக் குழந்தை நினைக்கும்.

ஆகவே இரண்டாம் மொழியாகவேனும் தமிழ் படிப்பிக்கப் படுவதே நடை முறை ரீதியாக புலத்தில் சாதியப்படக் கூடிய ஒன்றாகும். நாம் என்ன தான் விரும்பினாலும் இதுவே நிதர்சனம்.புலத்தில் பெற்றோராக இருக்கும் எல்லாருக்கும் இது விளங்கும்.

மேலும் ஏன் தமிழ் படிக்க வேணும் என்பதற்காகச் சொல்லப்படும் காரணங்கள் கூட பிள்ளையை மையமாக வைக்காமல், அம்மா அப்பாவின் பராமரிப்பு முதற்கொண்டு இனோரன்ன பிற வெளிக் காரணங்களை மையமாக வைத்தே கூறப் படுகின்றன.இதனை எவ்வாறு வளர்ந்த சிந்திக்கும் ஆற்றல் உள்ள பிள்ளைகள் கூட ஏற்றுக் கொள்வார்கள்?

ஆகவே தமிழை ஏன் படிக்க வேன்டும் என்பதற்கான காரணங்கள் ,புலத்தில் உள்ள குழந்தைகளை மையமாக வைத்தே கூறப் பட வேணும்.ஏன் அவர்களுக்கு ஒரு தமிழ் அடையாளம் வேணும் என்பது, அவர்கள் தாம் வாழும் சமூகத்தில் எவ்வாறு நோக்கப் படுகிறார்கள்,அவர்களை ஏன் அந்தச் சமூகம் வெளியில் இருந்து வந்தவர்களாகக் கருதுகிறது என்பன போன்ற விடயங்கள் விளக்கப் படுத்தப் பட வேண்டும்.இது ஓரளவு சிந்திக்கத் தெரிந்த வயசிலயே சாத்தியப் படும்.இங்கிருக்கும் சிக்கல் சிந்திக்கும் வயசை அடையும் பிள்ளை தமிழை இரண்டாம் மொழியாகக் கற்கும் திறனை அந்த வயசில் இழந்து விடுகிறதா? இவை விஞ்ஞான பூர்வமாகவும் ஆரயப் பட வேணும்.

மேலும் யாழ்க்களத்தில் இருக்கும் இளயவர்களிடம் அதாவது புலத்தில் சிறு பிராயம் முதல் வளர்பவர்களிடம் அவர்கள் எந்த வயதில் எப்படி தமிழைக் கற்றார்கள்,அவர்கள் எந்த மொழியில் சிந்திக்கிறார்கள்? தமிழை ஆரம்பம் முதலே கற்ற படியால் அவர்களின் கல்விச் செயற்பாடுகளில் தாக்கம் எதாவது இருந்ததா? என்று அறிய முடியுமா.உங்கள் அனுபவங்கள் எண்ணங்கள் என்ன?
Reply
#30
தமிழில் பேசுங்கள் என்று சொன்னதற்கு யாழில் அவிப்பதா/ சமைப்பதா தமிழ் என்றும் 'கந்தப்பு நீ பேசுவது தமிழா? என்று ஒருவர் கேக்கிறார்.

தமிழகத்தில் தமிழ் பாதுகாவலர்களின் போராட்டத்தினை நடத்தி வரும் மருத்துவர் தமிழ் குடிதாங்கியின் பெயர் ராமதாஸ் தமிழ்ப் பெயரா என்றும், அவரது மகன் அன்புமணியின் பிள்ளைகள் ஆங்கிலத்தில் படிக்கிறார்கள் என்றும் தமிழ் விரோதிகள் கேக்கிறார்கள். ராமதாஸ் என்னமாதிரியும் இருக்கட்டும். ஆனால் அவர் நடத்தும் தமிழ் பாதுகாப்புப் போராட்டத்தினைக் கொச்சைப்படுத்தலாமா?. கன்னடகர்களுக்கு முன்னால் கன்னடகமொழியினைக் கேவலப்படுத்த முடியுமா?. சிட்னியில் சினர்கள் தங்களுக்குள் சின மொழியில் தான் பேசுகிறார்கள்.

சிட்னியில் ஒரு நிகழ்ச்சியின் போது தமிழ் தேசியத்துக்கு ஆதரவான பேச்சாளார் தலைமை வகித்துப் பேசினார். அவர் வருடத்தில் ஒருமாதம் வன்னிக்குச் சென்று அங்குள்ள மக்களுக்கு உதவி செய்பவர்.அவருடைய கருத்துக்களினை எல்லோரும் கேட்டார்கள். தேசியத்தலைவர்,போராளிகளின் வீரச்செயல் பற்றி அருமையாகச் சொன்னார். மறுனால் ஒரு பிறந்த நாள் விழாவுக்குச் சென்றிருந்தேன். அங்குள்ள சிலருடன் பேச்சாளரின் கருத்துக்கள் பற்றிச் சொன்னேன். அங்குள்ள ஒரு பெண்மணி சொன்னார் 'பேச்சாளரின் மனைவி அந்த விழாவுக்கு சுரிதாரில் வந்தவர், சிலை உடுத்துக் கொண்டு வந்திருக்கலாம் தானே' என்றார். அத்துடன் 'பேச்சாளர் முன்பு ஆங்கிலத்தில் கதைப்பவர். இப்ப தமிழில் கதைக்கிறார். தமிழ் வளர்க்கவேண்டும் என்று சொல்கிறார் என்று நக்கலடித்தார். இதில் என்ன வேடிக்கை என்றால் அந்தப் பெண்மணியும் விழாவுக்குச் சுரிதார் அணிந்து போனதுதான். பேச்சாளர் முன்பு ஆங்கிலத்தில் கதைத்துக் கொண்டிருத்தவர் என்றாலும், வன்னி சென்று வந்தபின் தமிழ் மீது காதல் கொண்டு தமிழினை வளர்ப்பவர். தமிழில் பிள்ளைகளுடன் கதைப்பவர். எமது தமிழர்களில் உள்ள கேட்டபழக்கம் என்னவென்றால் யாராவது தமிழ் சார்பாகவும், தமிழ் ஈழம் சார்பாகவும் கதைத்தால், அவர்கள் கதைப்பவர்கள் மீது குறை காணும் பழக்கமே உடையவர்கள். தங்கள் பிள்ளை ஆங்கிலத்தில் கதைத்தால் அது பற்றி அவர்களுக்கு கவலையில்லை.
! ?
'' .. ?
! ?.
Reply
#31
நன்றி நாரதர் உங்கள் கருத்துக்கு, நான் லண்டனில் வசித்தபின்பு தற்பொழுது அவுஸ்திரெலியாவில் வசிக்கிறேன். லண்டனைவிட அவுஸ்திரெலியாவில் தான் கூடுதலாகப் பிள்ளைகள் தமிழ் கதைக்கிறார்கள். ஆனால் லண்டனில் அவுஸ்திரேலியாவினை விட கூடுதலாக மக்கள் தாயகப்போராட்டத்திற்கு பங்களிப்புச் செய்கிறார்கள். லண்டனை விட அவுஸ்திரேலியாவில் தான் கோவில்களுக்கும், கல்யாணவீடுகளுக்கும் ஆண்கள் வேட்டி அணிவது வழக்கம். லண்டனில் சில நிகழ்ச்சிகளில் மேற்கத்திய கலாச்சராங்கள் காணப்படுகின்றன. அவுஸ்திரேலியாவில் இது குறைவு.
,
,
Reply
#32
மொழிபற்றி ஓர் அறிவுப்பதிவு -

மொழி என்பது என்ன ?


மொழி என்பது உயிருக்கு நிகரானது; மாந்தனின் அடிப்படை உரிமை மொழியாகும் என்றெல்லாம் உலக மாந்தர் தத்தம் மொழியினைப்பற்றிக் கூறிடுவர். இஃது உணர்வு நிலைப்பட்ட கூற்றாகும் . இதில் தப்பேதும் இல்லை. தாய் தன் பிள்ளைகளைப் பொத்திக் காக்கும் செயற்பாட்டிற்கும் மேலானது; மாந்தன் தான் சார்ந்திருக்கும் மொழியைக் காக்கும் செயல்.


காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சென்று மிக
இயல்பாய் மொழியும் தமிழர் வாய்ச்சொல்லில் பொருள் பொதிந்துள்ளது. தமிழ் எங்கள் உயிருக்கும் மேலென்று கூறிய பெருமகனாரின் கூற்றில் குறை கிஞ்சித்தும் இல்லை.

தாயைப் பழித்தாலும் தமிழைப் பழிக்காதே என்று கதைத்த பாட்டனின் பூட்டன் பேருள்ளம் வியப்பிற்குரியதாகும் .

கல்தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கு முன்னே முகிழ்த்த மூத்தகுடி, மூத்த மொழி தமிழ் என்பதுவும் தமிழே அனைத்து மொழிகளுக்கும் அன்னை என்பதுவும் உணர்வின் அடிப்படையில் அமைந்த கருத்தூற்றுகள். இதில் உணர்வு உண்டு, தெளிந்து அறிதல் இல்லை. ஆய்ந்தறிந்த நிலைப்பாடில்லை. இவ்வாறான கூற்றுகளில் அறிவும் உணர்வும் ஒன்றுபடவில்லை. ஆனால் இவ்வாறான மொழிச்சிந்தல்களால் தப்பேதும் இல்லை. ஒரு மனிதன் தன் தாய்மொழியின் ஆளுமையையும் ஆற்றலையும் உற்றுணர்ந்து கொண்டிட இதுபோன்ற சொல்லாடல்கள் பயன்படுகின்றன.

அறிவின் தளத்தில் உற்றுநோக்கின், இவையெல்லாம் உயர்வுநவிற்சியின் பொருட்டான சொல்லாடல்கள். இவற்றால் மொழியின்பம் கூடிடும், மனம் குளிரும். இவ்வகை உணர்வுகளை அனுபவித்திட வேண்டும். மாறாக, அறிவின் தளத்தில் நின்று கொண்டு கேள்விகள் கேட்கலாகாது.

தமிழ் எப்படி உலக மொழிகளுக் கெல்லாம் தாயாகியது?

கல் தோன்றி மண் தோன்றா முன்னே, தமிழர் தோன்றியது எவ்வாறு ?

மொழித் தொடர்பு கருவிதானே, அதைப் பழித்தல் கூடாது ஏன் ?


இதுபோன்ற கேள்விகளுக்கு அறிவார்ந்த பதில் இல்லை. இவை பொருட்டான சான்றுகளுடைய ஆய்வு களும் இல்லை. இருந்தும் இவ்வாறு கேட்பதே அறிவிலித்தன்மையாகும். இதில் உணர்வினைத் தவிர வேறொன்றும் இல்லை என்பதனை முதலில் அறிந்து தெளிதல் வேண்டும்.

மொழியின் பேராற்றலைக் கண்டு இவ்வாறு கூறுவதெல்லாம் உணர்வு நிலைப்பட்டது. உளவியல் தளத் தினைக் கொண்டியங்குவது. உயிர், உரிமை, உடைமை என்ற சொல்லா டல்களின் கட்டமைப்பில் இயங்கு கின்றது.

இவற்றினைத் தாண்டி , மொழிக்கு அறிவுநிலை சார்ந்த முகமும் உண்டு. மனிதனின் அறிவாற்றல் விரிவாக்கத்திற்கு மிகப் பொருத்தமான தெளிவுகளைக் கொடுக்கும் ஆற்றலைக் கொண்டியங்குகின்றது. இங்கு மொழி என்பது உலகளாவிய மொழியியல் சிந்தனைக்குரியதாகும். உலகில் தனிப்பட்ட ஒரு மொழியின்பால் கூறிடும் கருத்தன்று.

மொழி என்பது மாந்தரினத்திற்கான முழுமை பெற்ற தொடர்புக் கருவி என்றே அறிவியல் ஆய்வுகள் முன்மொழிகின்றன. ஒலிகளின் துணையுடன் மொழியாளுமை நிகழ்கின்றது. கால வளர்ச்சியால் மொழியைக் கையாள்வதில் பல்வேறு ஒழுங்குகள் உருவாக்கப்பட்டன; இலக்கண வரையறைகள் உருவாக்கப்பட்டன . இவற்றிற்கு இயற்கை துணை நின்றது. பின்னாளில் குறிப்பிட்ட ஒரு மாந்தர் குழுவினரைக் குறிக்கும் குறியீடாக மொழி மறுஉருமாற்றம் பெற்றது. இது மாந்தரினத்தின் ஒட்டுமொத்த அறிவால் ஏற்பட்டது.

தமிழர்களாகிய நாம் மொழியைப் பெருவாரியாக உணர்வின் அடிப்படையில் கண்டுணர்ந்து பழகிவிட்டோ ம். அதன்பொருட்டான சிந்தனைகளும் செயற்பாடுகளும் உணர்வின் தளத்திலேயே கண்டியங்குகின்றன. எல்லாவற்றிலும் அறிவைவிட உணர்வே முந்தி நிற்கின்றது.

மொழி ஒத்த இனம் சார்ந்துள்ள மக்களிடையே கருத்துப் பரிமாற்றம் செய்திடுவதற்குரிய ஊடகம். ஒரு மனிதன் தன் குழுவைச் சார்ந்துள்ள இன்னொருவனுக்குத் தான் கண்டுணர்ந்தவற்றினை வெளிப்படுத்த மொழி பயன்படுகின்றது. அதன் பயன்பாட்டுத்தளம் விரிவாக்கம் கொள்ளும்போழ்தில் வேறுபட்ட இனத்தாரிடையேயும் கருத்துப் பரிமாறிக்கொள்வதற்குரிய ஊடகமாகவும் மறுஉருப் பெறும். இந்நாட்டில் வழங்கப்படும் மலாய்மொழி, மலாய் இனத்தாரிடையே கருத்துப் பரிமாற்றம் நிகழ்த்தவும் இந் நாட்டில் வாழும் பிற இன மக்களான தமிழர், சீனர் ஆகியோரிடையே தொடர்பினை ஏற்படுத்தும் கருவியாகவும் இருக் கின்றது. இது பயன்பாட்டுத் தளத்தினை விரிவாக்கிய நிலை. ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற மொழிகள் பயன்பாட்டுத் தளத்தில் உச்சத்தில் இருக்கின்றன. பல்வேறு இன மாந்தரை இணைப்ப தோடு, பல்வேறு துறைகளில் பயன்படுத்தும் முகாமை மொழியாகவும் அம் மொழிகள் விளங்குகின்றன. உலகில் அதிகமான மக்களால் பேசப்படும் மொழியாகவும் அதிகமான துறைகளில் பயன்படுத்தும் முகாமை மொழியாகவும் ஆங்கிலம் விளங்குகின்றது. இந் நிலைப் பாட்டினை அடைவது எளிதன்று. மிக நேர்த்தியான திட்டங்களாலும் கடின உழைப்பாலும் மட்டுமே இந் நிலையினை அடைய இயலும். இஃது அறிவின் நிலைப்பாட்டில் அடைந்த வெற்றியாகும்.

உலக மொழிகளில் பல்வேறு சிறப்பியல்புகளைக் கொண்டுள்ள மொழியாக நம்மவரால் கருத்துரைக் கப்படும் தமிழ்மொழியின் நிலைப்பாடும் இம் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள வாழ்வியல் தளத்தினையும் சற்று உற்றுணர்ந்து பாருங்கள். நம் மொழிக்குரிய அறிவார்ந்த நிலைப்பாடெங்கே?

தமிழர்களின் வாழ்வியல் வரலாற்று அடிப்படை யின்பால் உற்று நோக்கின், மொழி நிலைப்பாட்டில் தமிழர்கள் பெரும்பாலும் உணர்வு தளத்தின் அடிப்படையி லேயே செயற்பட்டிருக்கின்றனர். சங்ககால வாழ்வியல் தொடங்கி, நாட்டுடைமைப் போர் முதலாக இன்றைய வாழ்வியல் வரையிலாகத் தமிழர்தம் உள்ளத்தினை உண ர்வே முற்றும் முழுமாக ஆட்கொண்டுள்ளது. உணர்வார்ந்த நிலையும் செயலும் வேண்டியதில்லை என்பது பொரு ளன்று. மாறாக முற்றும் முழுதும் உணர்ச்சியாக இராமல், அறிவும் சரிபாதியாகக் கலந்திருத்தல் வேண்டியதாகிறது.

தமிழ்நாட்டில் உருவாக்கப்படும் தமிழ்ப் படங்களுக்குத் தமிழில் பெயரிட வேண்டுமென்பது இயற்கையின் இயல்பாய் உள்ளது. இது எந்தவிதமான கேள்விகளுக்கும் இடமில்லாமல், கிஞ்சித்தும் சிந்திக்காமல் செயல்படவும் செயல்படுத்தவும் வேண்டியதாகும். இஃது அறிவின் அடிப்படையில் துலங்க வேண்டியது. இருந்தும் மாற்றுக் கருத்தும் செயலும் தோன்றுவதற்குரிய காரணம் என்ன? தமிழர்கள் அறிவார்ந்த நிலைப்பாட்டில் செயற்படாததே இதற்குரிய முகாமைக் காரணமாகும்.

அரசியல், பொருளியல், சமூகவியல் என்ற மூன்று நிலைப்பாடுகளிலும் தமிழர்களுக்குரிய அடிப்படை உரிமைகளைப் பிறர் கையில் தாரைவார்த்துக் கொடுத்ததன் விளைவே இன்றைய உணர்வின் விளிம்பான போராட் டங்கள். ஆளுமையும் ஆற்றலுமற்ற தலைவர்களை நம்பி ஏமாந்துப் போகின்றனர், தமிழர்கள். தமிழர்களின் ஏமாற்றம் என்பது தமிழின் ஏமாற்றமாகும்.

ஏதோவொரு காலகட்டத்தில் உணர்வின் உச்ச ங்களின் எதிரொலிகளாய் நிகழ்ந்த தமிழ்மொழிப் போராட்டங்களில் கலந்து கொண்டவர்கள் என்பதற்காப், பின்னாளில் மொழியின் வளர்ச்சிக்கு மாறாக அவர்கள் ஆற்றிய அறம் துறந்த செயல்களுக்கெல்லாம் அறம் கற் பித்தல் எந்த வகையில் அறமாகும் ? தமிழர்களின் அறிவெங்கே வீழ்ந்துகிடக்கின்றது?

இந்தக் கருத்தின்பால் மாற்றுச் சிந்தனை உடையவர்கள் :

வரலாற்றினை மறப்பதா ?
தமிழ் காத்த ஆன்றோரைத் துச்சமென நினைப்பதா?

தமிழ்பால் ஆற்றும் செயல்பாடுகள் உணர்வு நிலைப்பட்டதா ? என்றவாறெல்லாம் கேள்விகள் எழுப்பலாம்.

இதுகாறும் உலகெங்கும் நிகழ்ந்தேறிய பல்நிலைப்பட்ட மாநாடுகள், பெருங்கூட்டங்கள் இவற்றால் விளைந்த பயன்கள் யாவை ? எட்டு மாபெரும் உலக ளாவிய மாநாடுகளைக் கண்டபின்பு தமிழ்மொழியின் வளர்ச்சி யாது ?

முழுக்க முழுக்க உணர்வின் செயலாக்கத் தளத்தில் நிகழும் மேடைப் பேச்சுகளால் அடைந்த அடைவுகள் என்னென்ன ?

உணர்வும் அறிவும் சமநிலையில் இயங்கிச் செயற்பட்ட தமிழ்த்தென்றல் திரு.வி.க. திரு. உ.வே.சாமிநாதனார், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார் ஆகியோரின் இயங்குதளத்தினைத் கண்ணுற்றுப் பாருங்களேன். இச் சான்றோர்கள் மொழியினை அறிவும் உணர்வுமாய்க் கண்டுணர்ந்தவர்கள். அதனால் அன்னவர் மொழிக்கு ஆற்றியபாடு பெரும்பாடாயிற்று.

இனி, தமிழர்கள் அறிவுத் தளத்திற்கு மொழியைக் கொண்டு சென்றிட வேண்டும். தமிழின் பயன்பாட்டுத்தளம் விரிவு பெற்றிடல் வேண்டும். சிந்திப்போம்...செயற்படுவோம்.

நன்றி செம்பருத்தி.
,
,
Reply
#33
மொழியின் முகங்கள் பாகம் - 2
- மறுநடவு -

மொழியெனப்படுவது உணர்வினால் முளைப்பது !
மொழியெனப்படுவது மாந்தனின் முனைப்பு !
மொழியெனப்படுவது கல்விக்கு அடிப்படை !
மொழியெனப்படுவது பண்பொளிர் விளக்கம் !
மொழியெனப்படுவது உள்ளுயிர் முழக்கம் !
மொழியெனப்படுவது இனநல முயக்கம் !
[பாவலரேறு பெருஞ்சித்திரனார்]

உலகெங்கும் வாழும் தமிழர்கள் மொழியின்பொருட்டான அறிவினையும் உணர்வினையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்விரண்டும் உச்சத்தின் அடைவாய் இருந்திடல் வேண்டும். இல்லாவிடில் காலத்தின் நகர்வால், களத்தின் ஆளுமையால் தமிழர்கள் தம் மொழி துறந்து வாழ்ந்திடுவர். மொழியற்ற மாந்தரை எம்மொழிக்கூற்றால் விளிப்பது? மொழி அற்றுப்போனால் இனம் அற்றுப்போகும்.

இந் நிலையின் தொடக்கத்தினை இன்று நாம் கண்டு வருகின்றோம். உலக நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த தமிழர் பலர் தம் தாய் மொழியின்பால் போதுமான கவனத்தைக் கொள்ளவில்லை; தம் தாய்மொழிக்கான பயன்பாட்டுத் தளத்தினை விரிவுபடுத்தவில்லை. தாய்மொழிப்பற்றினைவிட வயிற்றுப்பற்றே அவர்களுக்கு முகாமையானதாக இருந்துள்ளது. இது அவர்களுக்கு ஏற்பட்ட வாழ்வியல் போராட்டத்தின் கரணியத்தால் அமைந்த கேடாகும். மொழியைப் பற்றி சிந்திப்பதற்கோ அதுதொடர்பாக வினையாற்றுவதற்கோ புலம் பெயர்ந்த தமிழர்கள் முன்வர வில்லை. மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த தமிழர்கள் இக்கூற்றிலிருந்து சற்று விலகியுள்ளனர். இவர்கள், தங்களது வாழ்வியல் போராட்டத்தில் மொழியினையும் இணைத்துக் கொண்டனர்.

இன்னபிற நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழர்கள், மொழி காக்கும் வினையாற்றலில் உணர்வு நிலைப்பாட்டிலேயே நின்று கொண்டனர். வாழும் நாட்டுடை மொழியினை முற்றும் முழுதுமாக உள்வாங்கிக் கொண்டு வாழ்ந்தனர், இற்றைநாள்வரை அவ்வாறே வாழ்ந்து கொண்டுமிருக்கின்றனர். இவர்கள் பெயரளவில் மட்டுமே தமிழர்களாக வாழ்கின்றனர்; மொழியளவில் வீழ்ந்து கிடக்கின்றனர். மொழியற்று முகமிழந்தவர்களாக வாழ்கின்றனர். ஏதோவொரு முகமூடி இவர்களுக்குப் பொருத்தப்பட்டுள்ளது.

இற்றைநாளில், இவர்கள் மொழியினூடாகப் பெறப்படும் பண்பாட்டுக்கூறுகளின் தேவையினைச் சற்று உணர்ந்துள்ளனர். அமெரிக்காவில் தமிழ் மரபார்ந்த ஒரு குடும்பத்தில், மகன் தந்தையை " மிஸ்டர். ராம்சாம் (இராமசாமி) " என்றழைக்கிறான். வேற்று மொழியினூடாகப் பெறப்பட்டது இத்தகைய வாழ்வியல் தன்மை. தமிழ் மரபார்ந்த தந்தை மனம் வெதும்புகின்றார். இதனூடாகப் பெறப்படும் வலியின் அழுத்தம் தந்தையின் உள்ளத்தில் மேலோங்கியுள்ளது.

செர்மனியில் வாழும் தமிழ்க்குடும்பமொன்றில், தம் மகள் நேரம் கடந்து வீட்டிற்கு வந்ததைத் தந்தை கண்டிக்கின்றார். அப் பிள்ளை செர்மானிய மொழியில் தந்தையை ஏசிவிட்டு வெளிக்கிளம்புகிறாள். பின்னர்த் தன் தந்தை தன்னை அடித்துவிட்டாரெனக் காவல்நிலையத்தாரிடம் மனு கொடுக்கிறாள்.

இவ் விரண்டு சூழல்களும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்க்குடும்பங்களில் அன்றாட நிகழ் வுகளாகிவிட்டன. மொழியினூடாகப் பெறப்படும் பண்பாட்டினை இழந்ததே இதற்குரிய முகாமைக் கரணியமாகும். இதன் தொடர்பான வாழ்வியல் அழுத்தமே, இன்று இவர்கள் தம் சிந்தனையினையும் செயலினையும் மொழியின்பால் திசைதிருப்புவதற்கான கரணிய மாகும். மொழியினூடான பயன் பாட்டுத்தளத்தினைக் கண்டறி வதற்கும் கையாள்வதற்கும் அவர்களுக்குப் போதுமான கால நிலை தேவைப்படுகின்றது. அதற்குள் என்னென்ன ஆக்கங்களும் அழிவு களும் நிகழ்ந்திடுமோ, அவையாவும் தடம் மாறாமல் நிகழ்ந்திடும்.

பிற நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த தமிழர்களை, தாய்த் தமிழகம் வேற்றுலக மாந்தரென எண்ணி மயக்கமுறுகின்றது. புலம்பெயர்ந்தோர் தாய்த்தமிழையும் தாய்த்தமிழகத்தினையும் தொப்புள்கொடி உறவாய் எண்ணி உறவறுக்கின்றனர். இருவேறு வாழ்வியல் நிலைப்பாடுடைய இம் மக்களிடையேயுள்ள உறவுகள் வேரறுந்து போகின்றன. போற்றிக்காக்க வேண்டிய தாய், பொல்லாப்பு உறவென்று எண்ணி வீழ்கின்றாள். மொழி, கலை, பண்பாட்டுக்கூறுகள் எல்லாவற்றையும் புதிய மொழியும் மண்ணும் விழுங்கிக் கொள்கின்றது. தனதுரிமையைப் பொத்திக் காத்து பேணி வளர்த்திட அவன் உச்சமான உகந்த முயற்சியும் முனைப்பும் கொள்ள வேண்டியிருக்கின்றது.

தென்னாப்பிரிக்கா தொடங்கி மொரிசியஸ் வரையிலாக, வியட்நாம், செர்மன், நோர்வே எனப் பரந்துபட்ட நிலப்பகுதிகளில் வாழும் தமிழர்கள் மொழியறிவாலும் மொழியுணர்வாலும் தம்மைப் புறந்தள்ளி வாழ்கின்றனர் - வீழ்கின்றனர். பல்வேறு கரணியங்களை முன்வைத்துப், புலம்பெயர்ந்தோர் தமிழ்ப்பற்று தாய்த்தமிழகம் என்ற சிந்தனையைக் கழற்றிவீசிப் போலிமுகம் அணிந்து கொள்கின்றனர். அதற்கு ஏதுவாகத் தாய்த்தமிழகம் புலம்பெயர்ந்த தம் மக்கள் மீதான அன்பினைப் பொழிவதுமில்லை. "யாதும் ஊரே யாவரும் கேளிர் " என்னும் கணியன் பூங்குன்றனாரின் சொல்லாடலைத் தம் நெற்றிப்பொட்டில் சூட்டி மகிழ்வெய்தி கொண்ட தமிழினம். புலம் பெயர்ந்தவனுக்கு அந்நாட்டுடைய அரசும் மக்களும் கேளிராக இருப்பர், என்றெண்ணிக் கை கழுவி விட்டது தாய்த்தமிழகம்.

உடல் வலுவினையும் தாய்த்தமிழையும் மட்டுமே வாழ்வுத்தளமாகக் கொண்டு சென்றார்கள். கால மாற்றத்தாலும் களத்தின் அழுத்தத்தாலும் இவர்களின் மொழியுரிமையும் மொழியுணர்வும் அடிபட்டுப் போயிற்று. இந்தப் பழிநிலைக்குப் புலம்பெயர்ந்தோரும் தாய்த்தமிழகமும் மரபார்ந்த பொறுப்பினை ஏற்றுக்கொண்டிடல் வேண்டும். இவரால்தான் இந் நிலை ஏற்பட்டதென ஒருவர்மீது மற்றொருவர் பழிபோடுவது ஆகாத செயலாகும். தகுந்த முயற்சியும் முனைப்பும் இரு சாராரிடமிருந்தும் வரவேண்டும். ஒருவரையொருவர் கை கழுவி விட்டதால் ஏற்பட்ட விளைவு இது. இந் நிலையினைக் கண்டும் தாய்த்தமிழகம் கடுகளவும் வேதனையோ வெட்கமோ கொள்ளவில்லை.

" மொழியைத் துறந்து கால்போன போக்கில் வாழ்கின்றனர். வாழும் இடத்தின் பண்பாடுகளையும் வாழ்வியல் தன்மைகளையும் கைமாற்றிக் கொண்டு வாழும் நன்றி கொன்றவர்கள் " என்ற இழிச்சொல்லால் இவர்களைப் பழித்துரைக்கின்றது தாய்த்தமிழகம். இவ்வாறு கதைப்பதற்குத் தாய்த்தமிழகத்திற்கு ஏதுவான உரிமையும் தகுதியும் இல்லை. அழும் பிள்ளைக்குப் பாலூட்ட மறுத்த தாயின் தன்மையை எப்படி அறமாகக் கொள்வது ?

வாய்ப்புக் கிட்டியபோழ்தெல்லாம், தமிழ்நாட்டுப் பேச்சாளர்கள் இந்நாடுகளுக்கு வருகை புரிந்து ஆரவார மேடைகளில் பேசி நமது தொன்மங்களைச் சுரண்டிப்பார்த்து மீள்கின்றனர். தாமே புறநானூற்றுக்குரிய கடை மாந்தன் என்ற நிலைப்பட பேசி மீள்கின்றனர். வருமானம் பெறுதல், பேசிக்கற்றல், தொன்மைக் குறியீடுகளால் சொறிந்து கொள்ளுதல் என்ற வினைகளே இவற்றினூடாகப் பெறப்படுகின்றன.

1840- களில் மொரிசியசு நாட்டு கரும்புத் தோட்டங்களுக்குக் கொண்டு செல்லப்பட்ட தமிழ்மக்களின் எண்ணிக்கை இன்று பன்மடங்காகப் பெருக்கம் கண்டுள்ளது. இந் நாட்டில் தமிழிய மரபுவழியானவர் 22,000 (1993 Johnstone) பேர் வாழ்கின்றனர். இற்றைநாளில் மொரிசியசின் மக்கள் தொகையில் 10 விழுக்காட்டினர் தமிழர்களே. இவர்களின் பேச்சுமொழியாக இருப்பது கிரியோல்மொழியும் (Creal Morisyen), ஆங்கிலமொழியுமாகும். பெயரளவில் தமிழாய்ந்த பெயரினை வைத்துக்கொண்டு தமிழர் என்ற சூழலுக்குள் தம்மை இருத்திக்கொண்டு வாழ்கின்றனர். இவர்களின் வாழ்வு, கறுத்த முகத்திற்கு வெளுத்த உடல் இணைத்தாற்போல் உளது.

இன்று அதிக எண்ணிக்கையினாலும் உடல் வலுவின் ஆளுமையினாலும் வாழும் மொரிசியசு தமிழர்கள், தமிழ்ப்பெயர் ஏந்திக் கிரியோல்மொழி பேசி வாழும் சூழலை மனமார ஏற்றுக்கொண்டுள்ளனர்; அகமும் புறமுமாகத் தமிழ் அறுத்து வாழ்கின்றனர். தமிழ்மொழியினைப் பேசுவதற்குரிய முனைப்பும் முயற்சியும் இவர்களிடம் இல்லை. காலம் கடந்தவர்களின் பிதற்றல் மொழியாகத் தமிழைக் கருதுகின்றனர் இன்றைய இளைஞர் கூட்டம். இதற்கான மரபார்ந்த பொறுப்பினைத் தாய்த்தமிழகம் ஏற்றுக் கொண்டிடல் வேண்டும். மொழி வளர்ச்சிக்கான மறுநடவுச் செயலாக்கத்தினை மேற்கொண்டிடல் வேண்டிய தாய்த்தமிழகம், அங்குத் தமிழ்மொழி வீழ்வதைக் கண்டு வாளா கைகட்டி நிற்கின்றது தாய்மண்ணிற்கான அறம் துறந்து வீழ்ந்த தமிழகம். வெற்று மேடைப்பேச்சுகளால் செவிகளை இன்புறச் செய்வதில் மட்டுமே வல்லவர்களாக இயங்குகின்றனர் பொறுப்பாளுமை கொண்டவர்கள்.

தென்னாப்பிரிக்காவிற்கான தமிழர்களின் புலம்பெயர்வு 1860-1911- களில் தொடங்கியது. குவாலு நத்தால் (Kwazulu-Natal) என்ற பகுதியே தமிழர்களின் குழுமங்கள் உருவாக்கப்பட்ட இடமாக இருந்தது. இன்று டர்பன் (Durban) போன்ற இடங்கள் தமிழர்களின் வாழ்வுத் தளமாக உருவாகியுள்ளது.

இன்று தென்னாப்பிரிக்கத் தமிழர்களின் வாழ்வியல் மொழியாகியுள்ளவை ஆப்பிரிக்கமொழியும் ஆங்கிலமொழியுமாகும். இங்கு வழங்கப்படும் ஆப்ரிகன்ஸ் (Afrikans), பிர்வா (Birwa), கம்தோ (Camtho), ஃபராகோலா (Faragola), எகாய்ல் (Gail), எக்கோரறா (Korara), எக்சூ (Kxoe), நுலூ (Nulu), நாம்மா (Nama), நெடிபி (Ndebee), ஊர்லாம்ஸ் (Oorlams), ரொங்கா (Ronga), சோத்தோ (Sotha), சவாலி (Swahili), சுவாதி (Swahiti) ஆகிய மொழிகள் பல்வேறு குழுக்களால் பேசப்படுகின்றன. இவற்றில் ஒவ்வொரு தமிழரும் குறைந்தளவிற்கு ஒரு மொழியினையாவது பேசும் ஆற்றலினைப் பெற்றிருக்கின்றனர். இம் மொழிகளைப் பேசுவதற்கான முனைப்பும் முயற்சியும் இவர்களிடம் உண்டு. இம் மொழிகளைக் கற்றுக்கொள்வதற்கும் கையாள்வதற்குமான ஆளுமையும் ஆற்றலும் இவர்களிடம் உண்டு.
,
,
Reply
#34
நீ தமிழன்; எப்படி?
மொழியால், இனத்தால் பண்பாட்டால் நீ தமிழன். இந்த அளவுகோல்படி நீ தமிழனாக இருக்கிறாயா? இது என் கேள்வியல்ல _ தந்தை பெரியாரின் கேள்வி.

அறிஞர் அண்ணா தமிழர்கள் என்பதற்கு விளக்கம் சொன்னார் _ மொழியால், வழியால், விழியால் (பண்பாட்டில்) தமிழர் என்றார்.

உன் பெயர் முதலில் உன் தாய்மொழியில் இருக்கிறதா? உன் தாய்மொழி உன் வீதியில் இருக்கும் கோயிலுக்குள் ஒலிக்கிறதா?

உன் வீட்டு நிகழ்ச்சிகளில் தாய் மொழிக்கு இடம் உண்டா?

தமிழா, நீ கட்டிய கோயில் கருவறைக்குள் தமிழன் உள்ளே சென்று பூசை செய்ய முடியுமா?

முடியாது! காரணம் என்ன? நீ ‘‘சூத்திரன்’’, ‘‘பஞ்சமன்’’ _ சாஸ்திரப்படி மட்டுமல்ல; இன்றைய அரசமைப்புச் சட்டப்படியும் கூட!

அதனால்தானே தந்தை பெரியாரும் 10 ஆயிரம் கறுப்புச் சட்டைத் தொண்டர்களும் 1957 நவம்பர் 26_இல் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 25, 26_வது மதப் பாதுகாப்பு பிரிவினை _ ஜாதியைப் பாதுகாக்கும் பகுதியைத் தீயிட்டுக் கொளுத்தினர். மூன்றாண்டுகள் வரை கடுந்தண்டனையும் ஏற்றனர்.

இன்று வரை அதில் மாற்றம் இல்லையே _ பின் எப்படி நாம் மானமுள்ள தமிழர்கள்?

தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழ் மக்களின் காணிக்கைகளைப் பெற்றுக் கொண்டு, தமிழ் ‘‘நீச்ச பாஷை’’ என்பவர்தானே உமக்கு ஜெகத்குரு?

நீ கொண்டாடுவது ‘‘பண்டிகைகளே’’ தவிர விழாக்கள் அல்லவே!

தீபாவளியாக இருந்தாலும், வேறு எந்தத் தெருப் புழுதியாக இருந்தாலும் ‘‘தேவர்கள், அசுரர்களைக் கொன்றார்கள்’’ என்கிற கதை வராத பண்டிகைகள் உண்டா?

அசுரர்கள் எனக் கூறப்படுபவர்கள் எல்லாம் சுராபானம் குடிக்க மறுத்த திராவிடர்கள்தானே? சுரர்கள் எனப்படுபவர்கள் எல்லாம் சுரா பானம் குடித்த ஆரியர்கள் என்று விவேகானந்தர் முதல் நேரு உள்ளிட்டு பி.டி.சீனிவாச அய்யங்கார்கள் வரை எழுதியுள்ளனரே _ அவற்றைப் பற்றி ஒரு நொடி நேரம் அறிவைச் செலுத்தி சிந்தித்தது உண்டா?

சுரர்கள் அசுரர்களைச் சூழ்ச்சியால் அழித்தார்கள் என்று எழுதி வைத்த கதைகளை நம்பி அசுரர்களாக்கப்பட்ட நாமே நமது அழிவைப் பெருமைப்படுத்திக் கொண்டாடுவது, ஒரு இனத்தின் தன்மானத்துக்கு அழகாக இருக்க முடியுமா?

இதனைத் தானே அறிவுலக ஆசான் தந்தை பெரியார் 60 ஆண்டு காலத்திற்குமேல் படித்துப் படித்துச் சொன்னார். _ இதற்கு மேலும் நம் தோல் மரத்துக் கிடக்கலாமா?

தமிழன் படிக்க வேண்டும்; ஒடுக்கப்பட்ட மக்கள் படித்து மேல் நிலைக்குச் செல்ல வேண்டும் என்றுதானே ஓயாது பாடுபட்டோம். குலக் கல்வியை பெரியார் ஒழித்ததால்தானே தமிழன் இன்று படிப்பும், பதவியும் பெறும் நிலை!

ஜாதியால் பிளவுபட்டுக் கிடக்கிறாயே! தமிழா, நீ தமிழனாக, மானம் உள்ள மனிதனாக இருக்கவேண்டாமா? அதனைத் திசை திருப்பும் ஜாதிச் சாவுக் குழி வெட்ட வேண்டாமா? உன் உடன்பிறப்பையே ‘‘தீண்டத்தகாதவன்’’ என்கிறாயே _ உன்னைச் சூத்திரன் என்பவனை ‘சாமி’ என்கிறாயே!

படித்த இளைஞனே _ இரண்டு பேர் நீங்கள் சந்தித்தால் உங்களின் உரையாடல் என்ன? நம் இனத்தைப் பற்றியா _ மொழி உணர்வைக் குறித்தா? பண்பாட்டுத் தளத்தைப் பற்றியா? இல்லையே!

சினிமாவைப்பற்றிதானே சிரித்துச் சிரித்துப் பேசுகிறாய்!

சீரழிக்கும் சினிமாக்கள்தான் உன் குருதி ஓட்டமா? சினிமாக்காரர்கள்தான் உங்கள் கனவு லோக லட்சியப் புருடர்களா?

உலகில் சினிமாக்காரர்களுக்காக டிக்கெட்டுகளை விற்பதும், திரைப்படப் பெட்டிகளுக்கு ஊர்வலம் விடுவதும், அதில் யார் முந்தி என்பதில் அடித்துக் கொண்டு கொலை வரை நடப்பதும் இங்கல்லாமல் வேறு எங்கு?

இந்த நாட்டைப் பீடித்துள்ள அய்ந்து நோய்களுள் சினிமாவும் ஒன்று என்று தொலைநோக்கோடு தந்தை பெரியார் கூறியதை ஒரு கணம் நினைத்துப் பார்ப்பாயா?

விஞ்ஞானம் வளர்ந்தால் அறிவு வேட்கை வளரும் என்பது பொது நியதி. ஆனால், இந்த நாட்டில் என்ன நடக்கிறது?

தொலைக்காட்சி என்னும் அறிவியல் சாதனம் மற்றும் ஏடுகள், இதழ்கள் மூடத்தனத்தின், பிற்போக்குத்தனத்தின் மொத்த குத்தகையாகத்தானே செயல்படுகின்றன?

அஞ்ஞானத்தை, விஞ்ஞானத்தின் மூலம் பரப்புகிறார்களே _ இது அறிவு நாணயமா? படித்த தமிழனே, பகுத்தறிவை இழந்து இந்த வலையில் வீழ்வது விவேகம் தானா?

செல்போன், இணைய தளம் என்பது தேவையான விஞ்ஞான சாதனங்கள்தான். சினிமாக் கலாச்சாரத்தால் சீரழிந்துபோன உன் சிந்தனை அவற்றில் எவற்றைத் தேடிக் கொண்டு இருக்கிறது?

இளைஞனே, இலட்சியங்கள் உன்னை கொள்ளை கொள்ள வேண்டாமா? அவற்றிற்கு மாறாக பல்வேறு ‘‘போதைகள்’’ அல்லவா உன்னைப் பாதை மாற்றத்திற்குச் செலுத்துகின்றன.

போதைகளால் தடுமாறும் உனக்கு நாடு எக்கேடு கெட்டால் என்ன _ சமுதாயம் சீரழிந்தால் என்ன _ மொழி மூக்கறுபட்டால் என்ன _ பண்பாடு பாழ்பட்டால்தான் என்ன?

அளவுக்கு மீறி கேளிக்கை உணர்ச்சிகள் ஒரு சமூகத்தில் புகுத்தப்படுவதற்கு உள்நோக்கம் உண்டு என்பது உனக்குத் தெரியுமா?

உணவுக்கு உப்பு தேவைதான். ஆனால், உப்பே உணவாகலாமா?

தமிழனிடத்தில் இன உணர்வும், நாட்டு உணர்வும், இலட்சியக் கோட்பாடுகளும் ஆட்கொண்டு விடக் கூடாது என்கிற சூழ்ச்சிதானே!

கறுப்புச் சட்டை உனக்குச் சுயமரியாதையை ஊட்டியது _ பகுத்தறிவைக் கொடுத்தது _ சமூக நீதியைச் சொல்லிக் கொடுத்தது _ பெண்ணுரிமையைப் பேணும் பண்பாட்டை உணர்த்தியது.

அந்த மண்ணில் இவற்றையெல்லாம் தலைகீழாகப் புரட்ட காவிகள் காலடி எடுத்து வைத்தால், பழைய சரிதம் மறந்து, அவற்றிற்கு நடைபாவாடை விரிக்க மல்லுக்கட்டி நிற்கலாமா?

உன் இனத்தின் முன்னேற்றத்துக்கு உழைத்த தலைவர்களை உள்நோக்கத்தோடு கொச்சைப்படுத்த சிலர் துடிக்கும் பொழுது, ‘ஏதோ ஒரு மயக்கத்தில்’ அவர்களுக்குக் கைலாகு கொடுக்கிறாய். கேட்டால் விமர்சனம் என்கிறாய் _ விமர்சனத்தின் விளக்கம் தெரியுமா உனக்கு?

திராவிடன், தமிழன் ஆராய்ச்சியில் ஈடுபட்டு கடைசியில் எதிரிகளின் காலடிக்குள் உன்னை அறியாமல் பதுங்கப் பார்க்கிறாய். புத்தம் அழிந்த வரலாறு தெரியுமா உனக்கு?

நண்பன் யார்? பகைவன் யார்? என்று அடையாளம் காணத் தெரியாவிட்டால் உன் எதிர்காலம் எங்கே போய் முடியும்?

‘போதை’யை விடு _ சமுதாயப் பாதையை தேர்ந்தெடு! இலட்சிய மிடுக்குடன் வீறு நடை போடு!

5 நட்சத்திர ஆடம்பர வாழ்வுக்கு ஆசைப்படுகிறாய். சிக்கனம் என்பதைச் சிறுமையாகக் கருதுகிறாய் _ இது உன்னை எங்கு கொண்டு சேர்க்கும் என்று சிந்திக்க மறுக்கிறாய்.

தாயை முதியோர் இல்லத்தில் தள்ளிவிட்டு, தாய் மூகாம்பிகைக் கோயிலுக்குக் கடன் வாங்கிக் குடும்பத்துடன் செல்கிறாய்!

ஏனிந்த போதைகள்?

உரத்தின் மூலம் உணவு விளையும் உண்மைதான்; அதற்காக உரத்தையே உண்ண முடியுமா?

-கீ.வீரமணி- நன்றி குமுதம்
,
,
Reply
#35
யாழில் முன்பு வந்த பார்க்கவும்
http://www.yarl.com/forum/viewtopic.php?t=8123
,
,
Reply
#36
வணக்கம்...நானும் புலத்தில் தான் தமிழ் படித்தேன். நல்ல ஆசிரியர்கள் எங்களுக்கு படிப்பித்தார்கள் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=15]
..


Reply
#37
துயா எத்தினை வயதில் இருந்து படித்தீர்கள்?ஏன் படித்தீர்கள்?
பெற்றோரின் வற்புறுத்தலாலா?ஏன் கேட்கிறேன் என்றால் நீங்கள் சிறு வயதில் இருந்து படிதீர்கள் என்றால் அந்த வயதில் ஏன் தமிழ் படிக்கிறேன், ஏன் இதைப் பெற்றோர் படிக்கச் சொல்கிறார்கள் என்ற கேள்விகள் உங்களுக்கு எழுந்ததா?இதற்கான பதில்கள், அந்தவயதில் உங்களுக்குச் சொல்லப் பட்டதா?அவை உங்களுக்குச் சரி எனப் பட்டதா?

ஏனெனில் பலரும் உணர்வுத் தளத்தில் இருந்து மட்டுமே இதனை நோக்குகின்றனர் குழந்தைகளின் நிலையில் இருந்தோ,பெற்றோரின் வாழ்வியல் நிலையில் இருந்தோ இதைப் பார்ப்பதில்லை.என்று நாம் இதனை குழந்தைகளின் நிலயில் இருந்தோ அன்றி புலத்தில் இருக்கும் பெற்றோரின் வாழ்வியல் நிலையில் இருந்தோ பார்கிறோமோ அப்போது தான் தமிழ் பரந்து பட்ட அளவில் புலத்தில் பாவிக்கப் படக் கூடிய வகையிலான அணுகுமுறைகளைக் கண்டு அறிய முடியும்.

மேலும் சும்மா உணர்வு ரீதியான மேடைப் பேச்சுக்களால் இது சாதியப் படப் போவதில்லை.தமிழ் அமைப்புக்கள்,ஆசிரியர்கள்,ஊடகங்கள்,பல்கலைக் கழகங்கள் இணைந்து ,பெற்றோரையும்,குழந்தைகளையும் கவரக் கூடிய வகயிலான நவீன கல்விகற்றல் நடைமுறைகளை தமிழ் கற்க புலத்துச் சூழலை, வாழ்வியல் நடைமுறையை மைய்யமாக வைத்து உருவாக்க வேண்டும்.இன்று இணயத்தில் எத்தனை தளங்கள் இருகின்றன தமிழில் பிள்ளைகளை மையமாக வைத்து?எத்தினை புத்தகங்கள் இருகின்றன?எத்தினை நிகழ்ச்சிகள், புல ஊடகங்களில் குழந்தைகளை மையமாக வைத்து இருகின்றன?அவற்றில் எத்தினை தரமானவையாக குழந்தைகளைக் கவரக் கூடிய வகையில் இருகின்றன?
Reply
#38
நான் சின்னனில இருந்து படித்தேன். (இப்பவும் படிக்கிறேன்)

என்னுடைய முதல் தமிழ் ஆசிரியர் என்னுடைய தாயாருக்கு ஊரில் படிப்பித்தவர். எனக்கு அவவில நல்ல விருப்பம்.

நான் படிக்க போக மாட்டன் என்று அழுததில்லை.

விருப்பமா தான் போனனான்.ஏன் விருப்பம் என்றூ கேட்காதீர்கள்?

எங்களது குடும்ப பின்னனி காரணமாக இருக்கலாம். எல்லாரும் தமிழ் கதைப்பார்கள்.

எனக்கு லண்டலில், கனடாவில், நோர்வேயில் எல்லாம் உறவினர்கள் இருக்கிறார்கள். அவர்களும் தமிழ் படித்தார்கள்.

அப்பப்பா..அப்பாச்சிக்கு ஆங்கிலம் தெரியாது. எனக்கு அவையில விருப்பம்.அவர்களுக்கு கடிதம் எழுத தமிழ் படித்தேன்.

நாங்கள் தமிழில் தான் எல்லாரும் கதைப்பது. எனக்கு இவ்வளவு நாட்களில் ஒரு தமிழ் பிள்ளை கூட உடன் படித்ததில்லை. பாடசாலையிலும் சரி, பல்கலைக்கழகத்திலும் சரி..அதனால் கூட இருக்கலாம் <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->

அம்மா அப்பா வற்புறுத்தியதில்லை...

அண்ணாக்களை விட தமிழ் படிக்க வேண்டும் என்பது தான் எனக்கு குறிக்கோளாக இருந்தது.

சனிக்கிழமை தானே தமிழ் படிக்க போவன்..என்னை படிக்க விட்டுவிட்டு அம்மாவும் அப்பாவும் கடைக்கு போட்டு வருவினம்..

நான் படிக்கும் போது இணையதளம் இல்லை...இருந்ததாக எனக்கு தெரியவில்லை..

மாமா தமிழ் புத்தகங்கள் அனுப்புவார்..(கதை புத்தகம்) <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> அதிலயும் படித்தேன்

மற்றபடி நான் விடும் எழுத்து பிழைகளை பார்த்தாலே தெரிய வேணுமே <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> தமிழ் எனக்கு எவ்வளவு வரும் என்று <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->

ஓ எழுத மறந்திட்டன்..நான் இருந்த இடங்களில் ஆங்கிலேயர்கள் மற்றைய மொழிகளையும் மதிப்பார்கள் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
என்னிடம் தமிழ் சொற்களை படித்துவிட்டு எனக்கே சொல்லுவார்கள்.

சின்னனில நாங்கள் இருந்த வீட்டிற்கு பின் வீடு ஆங்கி;ஏயர்களாம்...எங்கட வீட்டு வசலால தான் அவை வெளிய போகலாம்..

அந்த வீட்டு மனிதர் ஆங்கிலத்தில் என்னோட கதைச்சா, நான் தமிழிழ தான் கதைப்பனாம்...கடைசியில அந்த மனிதருக்கு தமிழில் விருப்பம் வந்து எங்களோட ஊருக்கு எல்லாம் வந்தவர்கள் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=15]
..


Reply
#39
உண்மையில் தூயாவைப் பார்க்கப் பெருமையாக இருக்கிறது. புலம் பெயர்ந்த நாட்டில் தமிழ் மீது ஆர்வம் கொண்டு, தமிழ் படித்து, யாழில் கருத்தெழுதும் தூயாவுக்கும் அவரது பெற்றோர்களுக்கும் தமிழன் என்ற ரிதியில் வாழ்த்துச் சொல்கிறேன்.
! ?
'' .. ?
! ?.
Reply
#40
கந்தப்பு எதோ நீங்களாவது என்னை பற்றி நல்லா சொல்லுறிங்களே...நல்ல வடிவா சொல்லுங்க, இதை பார்த்து தன்னும் எங்கட அண்ணாக்கள் திருந்தினா சரி தான் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=15]
..


Reply


Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)