தேசத்தின் முகம் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன்!
தமிழீழத் தேசியம் தனது புன்னகையின் இருப்பிடத்தைப் பறி கொடுத்து இன்றோடு ஓராண்டு பூர்த்தியாகிவிட்டது.
அந்தப் புன்னகையின் இருப்பிடத்தின் நினைவாக என்னால் எழுதி மெல்போர்னில் நித்திய புன்னகை அழகனின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளன்று படிக்கப் பட்ட கவிதையினை இப் பதிவில் உங்களுக்காகத் தருகின்றேன்.
இங்கு சில விடயங்கள் சிலேடையாகவும் மறைமுகமாகவும் இன்றைய கள யதார்த்த நிலமைகளுக்கு அமைவாகச் சொல்லப்பட்டுள்ளன.
ஏன் இங்கு வந்துள்ளோம்??
காரிருள் அகற்றக் களமாடும்
வீரர்கள் மண்ணில் பிறந்தவனாய்
ஊரிழந்து உணர்விழந்து உயிர் காக்க வழி தேடி
தேசம் விட்டுக் குளிர் வாட்டும்
நாடு வந்து அவர் பெயரால் இங்கு
கவி பாடும் தெருவோரப் பாடகன் யான் வந்துள்ளேன்!
அபையோர் அனைவருக்கும் வணக்கம்!
தேசமே விடுதலை எமை வதைக்கும்
தென்னிலங்கையே நீசறு! /
தேசமே விடுதலை எமை வதைக்கும்
தென்னிலங்கையே நீயறு!
மாசறு வேள்வியாம் விடுதலைத் தீயில் கலந்து
அன்னை மண்ணுக்காய் உயிர் துறந்த
அனைவரையும் நினைத்தபடி,
நெஞ்சமதில் நிலை நிறுத்தி இங்கு நுழைகின்றேன்!
ஏன் இங்கு வந்துள்ளோம்?
எதற்காக இங்கு நாம் கூடியிருக்கின்றோம்?
வேர்களாய் இருந்து எமையெல்லாம் தாங்கி நின்றோர்
வீழ்ந்து விட்டார் என்றா??
சந்ததி வாழ்வதற்காய்(த்) தம் வாழ்வைச்
சரித்திரமாக்கியவர்கள் போய்விட்டார்கள் என்றா?
ஏன் இங்கு வந்துள்ளோம்?
இல்லை! இல்லை! இல்லை!
வீரர்கள் எப்போதும் இறப்பதில்லை!
தமிழ்ச்செல்வன்!
பெயர் உச்சரிக்கும் போதே மனதில்
மட்டற்ற மகிழ்ச்சி பிறக்கும்!
காரணம்?
புன்னகையின் இருப்பிடம்!
நாற்றாய் இருந்த விடுதலை நெருப்பு
முகிழ்த்து வளரும் காலமதில்
விடுதலையின் பாதையிலே தன்னையும்
இணைத்த தமிழ் மன்னன் வழி வந்தோன்!
ஆற்றல் மிக்க அண்ணன் சொல்லும்
கூற்றைக் கேட்டு(ப்) பகையின்
குரல் வளையைக் கடிக்கப் புறப்பட்டவன்!
Taanko சேரா எனும் செல்லப் பெயர் கொண்டவனாய்
மக்கள் மனங்களைக் கவரும்
அரசியல் பணியாளனாய்
அனைவரின் நெஞ்சிலும் இடம் பிடித்தவன்!
தாக்குதல் நுட்பம் மிக்க தென்மராட்சித்
தானைத் தளபதியாய் விளங்கியவன்!
புன்னகைக்குப் பல பேர்
பலவாறு அர்த்தம் சொல்லுவார்கள்!
இவன் புன்னகைக்குள் புதைந்துள்ள
அர்த்தங்கள் தான் எத்தனையோ?
அப் புன்னகையின் அர்த்தங்களை
இன்று தான் தென்னிலங்கை உணர்ந்து தெளிகிறதோ?
பட்டறிவால் கைவரப் பெற்ற சமயோசிதம்!
எதையும் நின்று நிதானித்து(ப்)
புன்னகையோடு பதில் சொல்லும் அரசியல் சாணக்கியம்!
மெது மெதுவாய் அனைவரையும்
உள்வாங்கிப் பணிசெய்யும் தந்திரம்!
தலைவன் என்பவன் ஒருவன் தான் நிரந்தரம்!
இவை அனைத்தும் எங்கள் புன்னகை அழகனின்
சிரிப்பில், நுட்பத்தில், காய் நகர்த்தல்களில் கண்டு நாம் தெளிந்துள்ளோம்!
இவனின் பல வார்த்தைகளுக்கு
அர்த்தங்கள் கண்டு விட்டோம்!
இன்னும் சில வார்த்தைகளுக்கு
அர்த்தங்கள் புரிந்து கொண்டிருக்கிறோம் - ஆனால்
இனித்தான் மிகப் பல பல வார்த்தைகளுக்கு
விளக்கங்கள் காணவிருக்கிறோம்!
'எல்லாம் முடிந்து விட்டதென்றெண்ணி ஏன் தலை மீது கை வைப்பு!
வன்னி மீது ஏன் இந்த வக்கிரப் பார்வை??'
'இப்போது உலை மூட்டலும் வழி மறிப்பும் மட்டுமே!
விரைவில் பெரு நெருப்புப் புயல் வீசப் போகிறது!
'அரசன் அன்றறுப்பான்! தெய்வம் நின்றறுக்கும்!
இனிமேல் தான் பேரினத் தென்னிலங்கைக்கும்,
பேய்களின் அரசிற்கும் பெரும் புயல்,
பெரும் இடி எப்படி எனப் புரியும்?
''பெரு நெருப்பு ஆங்காங்கே இப்போது
சிறு சிறு கீற்றாய் வெடிக்கிறது!
இனித்தான் மிளாசி எரியவிருக்கிறது"!
''பெரு நெருப்புப் பீறிட்டு வீசுகையில்
ஊழிப் பேய்கள், சாத்தான்கள்,
மண் பிடி மமதையில் தவிக்கும் பொன்சேகப் புல்லுருவிகள்
அனைத்தும் அகப்பட்டுச் செத்துவிடும்!
தப்பி ஓட எவருக்கும் அங்கே தனிப் பாஸ்போர்ட் கிடையாது!
ஓட வழி இன்றி(ச்) சுற்றி அடி விழும்!'
வீரர்கள் சொல் எப்போதும் பொய்ப்பதில்லை!
போரின் வலியது எப்படி என்று
தென்னிலங்கையும் உணரும் எனும் தமிழ்ச்செல்வனின் சொல்
இப்போது பேரூந்துகளிலும், வீதிகளிலும்,
வானூர்திகளாலும் நிருபணமகிறது!
""இது தான் ஆரம்பம்! ஓ அப்படி என்றால் அமர்க்களம் எப்போது என்று கேட்பது புரிகிறது!
எல்லாமே இனித்தான் அதுவும் விரைவில் தான்!
கதிர்காமர் என்றொருவர் இருந்தார்!
அவர் புலிகளையும் தமிழர்களையும் கழுத்தறுக்க
உலகெங்கும் கடிவாளங்கள் பல போட்டார்!
ஆனால் புலிகள் பற்றி, தமிழர் சேனை பற்றி
உலகெங்கும் பூசப்பட்ட பொய் முலாம்கள்,
பொய் முகங்கள் இந்தப் புன்னகை மன்னனின்
பூவிழியால் துடைத்தழிக்கப் பட்டதனைக் கண்டுள்ளோம்!
இன்றும் காணுகிறோம்!
நித்தம் உந்தன் புன்னகையால்
அந்த நீசர் விழி அழித்தவனே!
நீ எங்கு சென்று வாழுகிறாய்?
நீ செத்து விட வில்லையடா! செல்வா!
உன் செந்தமிழால் எல்லோர் மனங்களிலும்
நிறைந்து விட்டுச் சென்றுள்ளாய்!
இலட்சிய வீரர்கள் செத்ததாய்
எப்போதும் தத்துவம் இருந்ததில்லை!
அவர்கள் என்றும் வாழ்வார்கள்!
எம் மண்ணில் ஆயிரம் ஆயிரம்
வேங்கைகளாய் மீண்டும் எழுவார்கள்!
புலம் தனில் இருந்து எங்கள்
நிலம் தனை மீட்க நித்தமும் பணி பல செய்வோம்- அடிமை
விலங்கினை உடைத்து எம்
அன்னை மண் காக்கும் பெரும் தமிழ்க்
குலம் தனைத் தளைக்கச் செய்வோம்!
எங்கள் புன்னகை அழகனின்
இலட்சியக் கனவினை நனவாக்குவோம்!
''கடைசித் தமிழன் உள்ளவரைக்கும்
கரிகாலன் படையை வெல்ல முடியாது!
உலகில் தமிழன் உள்ளவரைக்கும்
அவர் உணர்வையும் உதவும் பண்பையும்
எவரும் அழிக்க முடியாது!
உலகத் தமிழர் உணர்வுகள் உருக்குலையாது
ஒன்றாகக் கட்டியெழுப்பப் பட வேண்டும்
என்ற புன்னகை அழகனின் கூற்றினைச்
செயலில் காட்டுவோம்! விரைவில் காட்டுவோம்!
இலட்சிய வீரர்கள் செத்ததாய் எப்போதும்
சரித்திரம் வரலாறு வரைந்ததில்லை!
அவர்கள் என்றும் எப்போதும் எம்மோடு வாழ்வார்கள்!
நன்றி!
2 Comments
Recommended Comments