மண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன்!
எழுத்து: இ.பு.ஞானப்பிரகாசன் நாள்: 27.11.15 பகுப்பு: அஞ்சலி, இனப்படுகொலை, இனம், ஈழம், கவிதை, தமிழர், தமிழ், விடுதலைப்புலிகள்
‘மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்’ எனும் இறையுணர்வுப் பாடலை ஈழத் தமிழுணர்வுப் பாடலாய் மாற்றி இந்த ‘மாவீரர் திருநா’ளில் என் தமிழஞ்சலியாய்ச் சாற்றுகிறேன்!
பல்லவி
மண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன் - ஒரு
மரமானாலும் பதுங்கும் குழிமேல் பனையாவேன் - நான்
மண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன் - ஒரு
மரமானாலும் பதுங்கும் குழிமேல் பனையாவேன்
கல்லானாலும் துயிலும் இல்லக் கல்லாவேன் - கருங்
கல்லானாலும் துயிலும் இல்லக் கல்லாவேன் - பசும்
புல்லானாலும் கரிகாலன் கை வில்லாவேன் - நான்
மண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன் - ஒரு
மரமானாலும் பதுங்கும் குழிமேல் பனையாவேன்
உருவடி - ௧
பொருளானாலும் விடுதலைக்கே எரிபொருளாவேன் - வெறும்
கரியானாலும் தமிழை எழுதத் துணையாவேன்
பேச்சானாலும் தமிழர் உரிமைப் பேச்சாவேன் - தமிழ்ப்
பேச்சானாலும் தமிழர் உரிமைப் பேச்சாவேன் - விடும்
மூச்சானாலும் ஈழத்துக்காய் நான்விடுவேன் - நான்
மண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன் - ஒரு
மரமானாலும் பதுங்கும் குழிமேல் பனையாவேன்
உருவடி - ௨
சொல்லானாலும் மானம் என்னும் சொல்லாவேன் - உதிர்
சருகானாலும் தமிழ் மண்ணுக்கே உரமாவேன்
துகளானாலும் பகைவர் விழிக்கு வினையாவேன் - தூசித்
துகளானாலும் பகைவர் விழிக்கு வினையாவேன் - தனி
உயிரானாலும் மீண்டும் நற்றமிழ்ப் பயிராவேன் - நான்
மண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன் - ஒரு
மரமானாலும் பதுங்கும் குழிமேல் பனையாவேன்
சுட்டி: http://agasivapputhamizh.blogspot.com/2015/11/maaveerar-naal-tribute.html