எனக்குப் பிடித்த பாடல்களில் இந்ததப் பாடல் முதன்மையானது. 2014இல் இந்தப் பாடலைப் பற்றி நான் எழுதியதை கீழே பதிகிறேன்
பி. ஆர் பந்துலு தயாரித்து இயக்கிய திரைப் படம் சபாஸ் மீனா. 1958இல் வெளிவந்தது. சிவாஜி கணேசன், மாலினி, சந்திரபாபு, சரோஜாதேவி நடித்த ஒரு வெற்றிப் படம். சந்திரபாபுவுக்கு இரட்டை வேடம். இந்தப் படம் நகைச்சுவைப் படமானதால், சிவாஜி கணேசனை விட சந்திரபாபுவுக்குத்தான் படத்தில் அதிக வாய்ப்பு. இதனால் பி.ஆர் பந்துலுவுக்கு சிவாஜி கணேசனை திருப்திப் படுத்த வேண்டிய நிலை. எனவே சபாஸ் மீனா படத்துக்காக அவருக்கான ஒரு மெலடி நிறைந்த பாடல் உருவாகிறது.சிவாஜி கணேசனுக்கு குரல் கொடுப்பவர் டி. ஏ. மோதி. இவர் ஐம்பதுகளில் ஒரு சில பாடல்களைப் பாடி இருந்தாலும் கண்டசாலா, சிதம்பரம் ஜெயராமன் ஆகியோருடன் போட்டி போட்டு முன்னுக்கு வருவது முடியாமல் இருந்தது. அதிகமாகப் பேசப்படாத அவரால் பாடப் பட்ட இந்தப் பாடலுக்கு இணைந்து குரல் தருபவர் பி.சுசிலா.மழையில் நனைந்து கொண்டு காதலனும் காதலியும் பாடும் பாடல் காட்சியில் குதூகலத்தைக் காட்ட வேண்டும் என்று இயக்குனர் சொன்னாரோ என்னவோ தேவைக்கு அதிகமாகவே சிவாஜி கணேசன் குதூகலத்தைக் காட்டி பாடல் காட்சியில் நடித்திருப்பார். இதில் நடித்த மாலினி பின்னர் சபாஸ் மாப்பிள்ளை திரைப் படத்தில் எம்ஜிஆருடன் நடித்திருந்தார். பிறகு திரையில் அவரைப் பார்க்கவே முடியவில்லை. வானம் சிந்தும் மாமழை எல்லாம்
வானோர் தூவும் தேன்மலரோ?
மேகம் யாவும் பேரொலியோடு
மேளம் போலே முழங்குவதாலே
கன்னல் மொழியே மின்னல் எல்லாம்
விண்ணில் வாண வேடிக்கையோ?
மண்ணில் பெருகும் வெள்ளம் போலே
மனதில் பொங்கும் ப்ரேமையினாலே
காணா இன்பம் கனிந்ததேனோ
காதல் திருமண ஊர்வலந்தானோ...என்று கு.ம. பாலசுப்பிரமணியம் அவர்களது பாடல் வரிகள் மழை போல் அழகாக இருக்கும்.இவ்வளவு பெரும் மழையில் நனைந்து காதலர்கள் இப்படி மகிழ்ந்திருப்பது போன்ற காட்சிகள் பின்னாளில் திரைப் படங்களில் வந்ததா தெரியவில்லை. அப்படி வந்திருப்பின் இதுவே முன்னோடி.இதே மெட்டில் அதே ஆண்டு வெளிவந்த எங்கள் குடும்பம் பெரிது என்ற திரைப்படத்துக்கும் 'ராதா மாதவ வினோத ராஜா எந்தன் மனதின் ப்ரேம விலாசா..' பாடலை டி.ஜி. லிங்கப்பா இசை அமைத்திருப்பார். ஆனாலும் காணா இன்பம் கனிந்ததேனோ.. பாடலில் டி.ஏ.மோதியின் குரல் இனிமையும் பி.சுசிலாவின் கம்மிங்கும் சிவாஜி கணேசன் மாலினியின் நடிப்பும் பாடலுக்கான வரிகளும் அதற்கேற்ற இசையும் குறிப்பாக அந்த பெரு மழையும் அற்புதம்.மழை பிடிப்பதால் குடை பிடிக்காதவர்களுக்கு இந்தப் பாடல் பிடித்துப் போகும்.