Jump to content

Leaderboard

  1. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      21047

    • Posts

      76535


  2. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      15129

    • Posts

      42961


  3. suvy

    suvy

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      13840

    • Posts

      28874


  4. கிருபன்

    கிருபன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7484

    • Posts

      33654


Popular Content

Showing content with the highest reputation since 12/14/09 in Posts

  1. இந்தக் கட்டுரையை சென்ற வருடம் இதே நாளில் எழுதியிருக்க வேண்டியது, கொரோனா வந்து திசைமாற்றி விட்டது. எழுத நினைத்த கட்டுரையை ஒரு வருடத்தின் பின்னர் வேறு விதமாக எழுதுகிறேன். ஐம்பதிலும் ஆசை என்பதில் எனக்கு உடைபாடில்லை. சென்ற வருடம் ஐம்பதாவது வயதை எட்டியிருந்தேன். முன்பெல்லாம் ஒவ்வொரு பத்தை எட்டும்போதும் வயதாகிக் கொண்டே போகிறதே எதையும் சாதிக்கவில்லையே என்ற விரக்தியும் எதிர்பார்த் இலக்குகளை எட்டவில்லையே என்ற கவலையும் தோன்றும். இப்போது ஆறுதலாக நான் கடந்துவந்த பாதையை யோசித்துப் பார்க்கும்போது பரவாயில்லையே என்று தோன்றுகிறது. எனது பாட்டனார் எனக்குச் சின்ன வயதில் தனது அனுபவங்களைக கதை போல் சொல்வார். பன்றி வேட்டையாடியது, வயலில் சூடு அடிக்கும்போது யானை வந்தது, சகோதரங்களுடன் முரன்பட்டு வேறு ஊர் சென்று கடின உழைப்பால் முன்னேறியது போன்ற பல கதைகள் சொல்வார். அன்று ஆவற்றைப் பெரிதாகக் காதில் வாங்கியதில்லை. அவர் சொன்னவற்றில் நினைவில் இருந்த சிலவற்றை பல வருடங்கள் கழித்து மீட்டபோது அவரைப்போல் எனக்கு சொல்லத்தக்கவாறு அனுபவங்கள் எதுவும் இல்லையே என்று தோன்றும். இப்போது அந்த ஏக்கம் இல்லை. இப்போது என்ன நிலையில் உள்ளேனோ அதைத் திருப்தியாக ஏற்றுக் கொண்டு அதனை மேம்படுத்தி எதிர்காலத்தைத் திட்டமிடுவதே புத்திசாலித்தனம் என்பதில் உறுதியாக உள்ளேன். வாழ்வதற்கு வாழ்க்கை இன்னும் ஏராளம் உள்ளது. அதற்கு எனது உடல் ஆரோக்கியம் முக்கியம். என்னுடைய உடலைக் கவனமாகப் பார்க்காவிட்டால் உள்ளத்தால் என்னை நிறைவாக உணர முடியாது. எனது இனம் நிலைக்க வேண்டுமானால் முதலில் நான் நன்றாக இருக்க வேண்டும். ஏனென்றால் எனது இனத்தில் நானும் ஒரு அங்கம். *** முன்பு ஒரு திரியில் ஓட்டப் பயிற்சி செய்வதாக எழுதியிருந்தேன். ஆரம்பத்தில் 15 நிமிடங்கள் - 2 கிலோமீற்றர் தூரம் ஓடினேன். ஓடி முடிந்ததும் மிகக் களைப்பாக இருக்கும். அதன்பின்னர் இன்னும் தூரம் ஓட வேண்டும் என்பதற்காக 3 கிலோமீற்றராக மாற்றிக் கொண்டேன். அது காலப்போக்கில் கடினமான பிரயத்தனத்துடன் 35-40 நிமிடங்களில் 5 கிலோமீற்றர்களாக ஆக மாறியது. அதுவே எனது அதி உச்ச எல்லை என்று நினைத்திருந்தேன். சில காலங்களின் பின்னர் படிப்படியாக நின்று ஓய்வெடுத்து ஒரு மணி நேரம் 7 கிமீ வரை ஓட முடிந்தது. இப்படியே சுமார் ஒரு வருடம் சென்றது. நான் இருக்கும் ஊரில் ஒரு உடற்பயிற்சி நிலைய உறுப்பினர்கள் சிலரைத் தற்செயலாக சந்திக்க நேரிட்டது. ஓட்டப் பயிற்சி செய்தால் இன்னும் முன்னேறலாம் என்று உற்சாகப் படுத்தினார்கள். அது நகரசபையால் நடத்தப்படுவதால் வருடத்துக்கு 75 யூரோ, முயற்சித்தும் பார்ப்போம் என்று ஆரம்பித்தேன். வாரத்தில் 3 நாள் பயிற்சி. மாலை 6.30 க்கு ஆரம்பிக்கும். வேலை காரணமாக வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு தடவைகள் மட்டுமே பங்குபற்ற முடியும். 6 மாதப் பயிற்சியின் பின் 10 கிமீ ஓட்டப் போட்டி ஒன்றில் பங்குபெற முடிந்தது மட்டுமல்லாது சில மாதங்களுக்குப் பின்னர் அரை மரதன் ஓடும் அளவுக்கு வந்துவிட்டேன். முதலாவது 10 கிமீ போட்டி சரி, 50 வயதாகிறது ஒரு தடவை மரதன் ஓடினால் என்ன என்று தோன்றியது. மரதன் ஓடுபவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கு இருக்கும். ஓடியோ நடந்தோ தவழ்ந்தோ முடிவு எல்லை ஓட வேண்டும் என்பதே எனது இலக்கு. இந்த எல்லையைத் தாண்டுவதென்பது விவரிக்க முடியாத இனிய அனுபவம் என்று ஓடி முடித்தவர்கள் கூறிக் கேட்டுள்ளேன். சிலர் எல்லையில் காத்திருக்கும் தமது பிள்ளைகள், மனைவி அல்லது உறவினர்களைக் கட்டி அணைத்துக் ஆனந்தக் கண்ணீர் வடிப்பதைக் காணொலிகளில் கண்டிருக்கிறேன். ஆகவே கால்கள் சரியாக இயங்கும்போதே வாழ்க்கையில் ஒரு தடவை ஓடிப் பார்க்க முடிவு செய்தேன். எனக்குப் பயிற்சி தருபவராகிய ஸாஹிர் என்பவனிடம் சொன்னேன். மகிழ்ச்சியாக உற்சாகப்படுத்தினான். ஆனால் கடுமையான பயிற்சியைப் பின்பற்றினால் நான் நிர்ணயித்த இலக்கை விட நன்றாக ஓடலாம் என்றான். அதன்படி பரிசில் ஏப்ரல் 2020 இல் நடக்கவிருந்த சர்வதேச மரதன் போட்டியில் பதிவு செய்தேன். உலகம் முழுவதிலும் இருந்து 65 ஆயிரம் பேர் பதிவு செய்திருந்தனர். இது மரதன் வரலாற்றில் உலகில் அதிகம் பேர் பங்குகொள்ளும் மிகப் பெரிய போட்டியாகக் கருதப்பட்டது. போட்டிக்கு 4 மாதங்களுக்கு முன்னர் கடுமையான பயிற்சி ஆரம்பமாகியது. மழை குளிர் காற்று என்று எதையும் பார்க்க முடியாது. ஓட வெளிக்கிட்டால் ஓட வேண்டியதுதான். கிளப் உறுப்பினர்கள் 3 குழுவாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். முதலாவது குழு முயல் வேகத்தில் ஓடக் கூடியது. நான் 3 ஆவது ஆமை வேகக் குழு. நான் ஒரு தடவை முதல் முழுவோடு சேர்ந்து ஓடி ஆவஸ்தைப்பட்ட அனுபவம் இருந்ததால் அவர்களோடு சேர்வதில்லை. மழையிலும் பனி உறைந்த குளிரிலும் கொட்டும் வியர்வையுடன் அன்றொருநாள் மார்கழி மாதம் குளிர் மழை தூறிக்கொண்டிருந்தது, சிலர் பயிற்சிக்கு வரவில்லை. வேகமாக ஓடுபவர்களே அதிகமாக இருந்தனர். பழைய உறுப்பினர் ஒருவவன் அன்று வந்திருந்தான். அவன் பெயர் பிரெடெரிக், கரிபியன் தீவைச் சேர்ந்தவன். தனது ஊரில் சில காலம் தங்கிவிட்டு பிரான்சுக்குத் திரும்பியிருந்தான். அன்றைய இருளில் அவனது முகம் சரியாகத் தெரியவில்லை. அதிகம் நின்று பேசிக் கொண்டிருந்தால் குளிரில் நடுங்கத் தொடங்கும் ஆகவே மெதுவாக ஓட்டத்தை ஆரம்பிப்போம் என ஸாஹிர் கூறிவிட்டு பிரெடெரிக்கை அறிமுகப்படுத்தி நீங்கள் இருவரும் மட்டுமே இரண்டாவது முழுவில் பயிற்சி செய்யப் போகிறீர்கள் என்று கூறி நாங்கள் ஓட வேண்டிய பாதையையும் வேக மாற்றங்களையும் அவசரமாக் விளக்கிவிட்டு முதல் குழுவுடம் பறந்துவிட்டான். நானும் பிரெடெரிக்கும் தனியே நின்றிருந்தோம். ஓரிரு வார்த்தைகள் பரிமாறிக் கொண்டு ஓட ஆரம்பித்தோம். வீதியின் மின் வெளிச்சத்தில் சில நிமிடங்கள் மௌனமாக ஓடிக் கொண்டிருந்தோம். பிரெடெரிக் மெதுவாக ஓடுவதற்கே சற்றுச் சிரமப் படுவதாகத் தோன்றியது. 15 நிமிடங்களுக்குப் பிறகு வேகத்தைச் சற்றே அதிகரிக்க வேண்டும் ஆனால் வேகம் அதிகரித்ததாகத் தெரியவில்லை. 30 நிமிடத்தின் பின் வேகம் அடுத்த கட்டத்தை அடைய வேண்டும். ஆனால் அவன் கொஞ்சம் மூச்சு வாங்குவது தெரிந்தது. பேசாமல் முதல் குழுவோடு ஓடியிருக்கலாம் என்று தோன்றியது. பேச்சு வாக்கில் உனக்கு எத்தனை வயது என்று கேட்டேன். 71 என்றான். ஒரு கணம் எனது நாடி நரம்புகள் எல்லாம் செயலிழந்து அதிர்ச்சியிலிருந்து மீழ சில வினாடிகள் ஆனது. வாயிலிருந்து அப்படியா, நன்றாக ஓருகிறாய் என்ற வார்த்தைகள் மட்டுமே வந்தது. ஓடுவதற்கு வயது எல்லை கிடையாது என்பதை அன்றுதான் புரிந்து கொண்டேன். இன்றுவரை பிரெடெரிக் எனக்கு மரியாதைக்குரிய நண்பனாகவும் அறிவுரை கூறும் ஆசானாகவும் இருக்கிறான். படத்தில் இடது பக்கத்தில் பிரெடெரிக் பயிற்சி தொடர ஆர்வம் அதிகரிக்க இலக்குகளும் மாறிக்கொண்டிருந்தன. மரதன் ஆரம்பமாவதற்குச் சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பரவல் காரணமாகக் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது மிகுந்த ஏமாற்றத்தைத் தந்தது. *** ஓட்டப் பயிற்சியோ போட்டியோ ஏனைய விளையாட்டுகள் போல் போட்டி மனப்பான்மையுடன் அமைவதல்ல. ஒவ்வொருவரும் தமது தகமைக்கேற்ப தாங்களே ஒரு வரயறையை அல்லது தமது சொந்த இலக்கை வைத்து ஓடுவதால் மனதளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை. இன்னொருவர்போல் ஓடவேண்டும் என்ற போட்டி மனப்பான்மையும் ஏற்படாது. மரதன் போட்டியிலும் 50 ஆயிரம் பேர் ஓடினால் அதில் முதல் 100 பேருக்குள்தால் சரியான போட்டி இருக்கும். ஏனையவர்கள் தமது சொந்த இலக்கை வைத்தே ஓடுவார்கள். ஆகவே 5கிலோமீற்றர் ஓடும் ஒருவர் ஒருவர் தன்னால் 10 கிலோமீற்றர் ஓட முடியவில்லையே என்ற கவலை தேவையில்லை. உடல் அமைப்பும் இவ்வாறுதான். எல்லோருக்கும் உடல் அமைப்பு ஒரே மாதிரி இருக்காது. என்னை விட உயரம் மிகக் குறைந்த ஒருவர் என்னைவிட மிக வேகமாக ஓடுகிறார். அதேபோல் என்னைவிட எடை கூடிய ஒருவர் என்னைவிட வேகமாக ஓடுகிறார். அதற்காக நான் இந்த இருவரையும் விட வேகமாக ஓட முடியவில்லையே என்று ஏங்க முடியாது. ஓடுவதால் உள்ள நன்மைகளில் முக்கியமானவை சில வேக ஓட்டத்தின்போது இதயம் அதிகமான இரத்தத்தினை வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவதால் இதயத் தசைகள் வலுவடைந்து இதயம் விரிவடைந்து ஒரே இதயத்துடிப்பில் அதிகமான இரத்தைதை உடலுக்கு வழங்கம் ஆற்றலைப் பெற்றுக் கொள்ளும். இதன் மூலம் இதயத்துக்கும் வேலைப்பழு குறைந்து நீண்ட காலம் இயங்கும் ஓடும்போது கால்கள் தரையில் படும்போது ஏற்படும் மைக்க்ரோ அதிர்வுகளால் தசைகளும் எலும்பும் சிறிய சிதைவுகளுக்குள்ளாகொன்றன. பின்னை ஓய்வின்போது சிதைவுகள் மறுசீரமைக்கப்பட்டு தசைகளும் எலும்புகளிம் புத்துயிர் பெறுகின்றன இரத்தத்தில் மேலதிக சீனியும் கொலஸ்ரரோலும் சக்தியாக எரிக்கப்படும் போட்டி மனப்பான்மையற்ற பயிற்சியாதலால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். ஒவ்வொரு பயிற்சியின்போதும் ஓடும்போது ஏற்படும் களைப்பு சோர்வு ஏக்கம் தளர்வு அவஸ்தை எல்லாவற்றையும் ஓட்ட முடிவில் மறந்து வர்ணிக்க முடியாத மகிழ்ச்சியை உணர முடியும் நோய்களை எதிர்க்கும் ஆற்றல் அதிகரிக்கும். இன்னும் பல உடலை அசைத்து அதிக நேரம் வேலை செய்கிறேன், ஆகவே உடற்பயிற்சி தேவையில்லை என்று நினைப்பது தவறு. இரண்டும் ஒன்றல்ல. 1 மணி நேர உடற்பயிற்சியினால் கிடைக்கும் நன்மைகள் உடலை வருத்திச் செய்யும் வேலையால் கிடைக்காது. *** ஆரம்ப ஓட்டப் பயிற்சி இது ஓட விருப்பம் இருந்தாலும் தயங்குபவர்களுக்கும் நாளைக்கு ஓடலாம் என்று இன்றுவர ஆரம்பிக்காமல் இருப்பவர்களுக்கும். முக்கிய குறிப்பு : உடல், இதயம் பலவீனமானவர்கள் உங்களது வைத்தியரின் ஆலோசனைக்குப் பின்னர் இதனைப் பின்பற்ற வேண்டும். சரியான சப்பாத்து உடை மற்றும் இதர உபகரணங்கள் இருந்தால்தான் ஓடுவேன் என்று நினைக்க வேண்டாம். இதையெல்லாம் பின்னர் பார்க்கலாம். முதலில் இருப்பவற்றை அணிந்து கொண்டு வெளியே வாருங்கள். எப்போது உங்கள் வயது, உயரம், நிறை, உருவம் எல்லாவற்றையும் விட்டு ஓட முன்வருகிறீர்களோ அதுவே உங்களது முதல் வெற்றி. உங்கள் உடையையோ உடலையோ ஓட்டத்தையோ பார்த்து யாராவது சிரிப்பார்களோ என்ற தயக்கம் சிறிதும் வேண்டாம். எல்லா அனுகூலங்களும் இருந்தும் ஓட்டத்தால் கிடைக்கும் அத்தனை நன்மைகளையும் புறக்கணித்து ஓடாதிருக்கும் கோடிக்கணக்கானவர்கள் மத்தியில் நீங்கள் ஓட முன்வந்துள்ளீர்கள். பாராட்டுக்கள். எடுத்த உடனேயே ஓட முயற்சிக்க வேண்டாம். தசைகளையும் இதயத்தையும் தயார்படுத்த வேண்டும். படிப்படியாகப் பயிற்சியை ஆரம்பிப்போம். நாள் 1 15 நிமிட வேக நடை அதைத் தொடர்ந்து 10 நிமிடங்கள் உங்களால் எவ்வளவு மெதுவாக ஓட முடியுமோ அவ்வளவு மெதுவாக ஓடுங்கள். அது வேகமாக நடப்பதை விட வேகம் குறைந்ததாகக் கூட இருக்கலாம். இந்த 10 நிமிடங்களை எட்ட முடியாமல் போனல் நீங்கள் மெதுவாக ஓடவில்லை என்று அர்த்தம். 10 நிமிடம் சாதாரண நடை நன்றாகச் சாப்பிட்டு நிறைய நீர் அருந்தி நன்றாகத் தூங்குங்கள். நாள் 2 பயிற்சி இல்லை நாள்3 1 மணி நேர வேக நடை நாள் 4 பயிற்சி இல்லை நாள் 5 15 நிமிட வேக நடை 30 நிமிட ஓட்டமும் நடையும். 1நிமிட மெதுவான ஓட்டம், 30 விநாடிகள் நடை என்பதைச் சுழற்சியாகச் செய்யுங்கள் 15 நிமிட நடை நாள் 6 பயிற்சி இல்லை நாள் 7 10 நிமிட வேக நடை விரும்பிய அளவு நேரம் மெதுவான ஓட்டம். கடைசி 1 நிமிடத்தை உங்களால் முடிந்தவரை வேகமாக ஓடுங்கள். 10 நிமிட நடை மெதுவாக ஓடும்படி வற்புறுத்தக் காரணம் அதிகமாகக் களைத்து அரைவாசியில் பயிற்சியை முடிக்கக் கூடாது என்பதற்காக. அத்துடன் மெதுவான ஓட்டம் என்பது ஓட்டப் பயிற்சியில் முக்கியமான அங்கம். மெதுவாக ஆரம்பிப்பது படிப்படியாக இதயத் துடிப்பை அதிகரிப்பதற்கு. சடுதியாக ஆரம்பித்தால் 10 நிமிடத்தில் களைப்பு ஏற்பட்டு பயிற்சியைத் தொடர முடியாமல் போய்விடும். தொடரும் நாட்களில் வேகத்தையும் நேரத்தையும் படிப்படியாக அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். *** வேகத்தை அதிகரிப்பதற்கான பயிற்சி இதும் ஏற்கனவே ஓரளவு ஓட முடியுமானவர்களுக்கானது. ஆரம்ப நிலையில் ஓடுபவர்களும் தாராளமாகச் செய்யலாம். பயிற்சியின் அங்கங்கள். A. Warm up : மிக மெதுவாக ஆரம்பித்து படிப்படியாக இதயத் துடிப்பை அதிகரித்து அதிக வேகம் எடுக்காமல் அதிக களைப்பு இல்லாமல் ஓடுவது. இது இதயத்தை சாதாரண நிலையில் இருந்து வேகத் துடிப்பிற்குத் தயார் படுத்துவது மட்டுமே. உங்கள் அதிகபட்ச வலுவில் 50-60% போதுமானது. B. மெதுவான ஓட்டம் : ஓட்டப் பயிற்சியில் இதுவும் மிக முக்கியமானது. இதயத் துடிப்பைக் குறைத்து தொடர்ச்சியாக சக்தியை உடலுக்கு வழங்குவது. மெதுவான ஓட்டத்தின் இறுதியில் களைப்பு உண்டாகக் கூடாது. C. தயார்படுத்தல் 1 - கால்களைப் பின்னால் மடித்து ஓடுதல். முன்னர் குறிப்பிட்டது போல இந்தத் தடவை கால்களை எந்த அளவு பின்னால் மடிக்க முடியுமோ அவ்வளவு மடித்து வேகமாகக் கால்கள அசைக்க வேண்டும். ஒவ்வொர அடிக்கும் (steps) 20 - 30 cm அளவான தூரம் நகர வேண்டும். D. தயார்படுத்தல் 2 - முழங்கால்களை உயர்த்தி ஓடுதல். முழங்கால்களைச் சமாந்தரமாக மேலே தூக்கி வேகமாக ஓடுதல். ஒவ்வொரு அடிக்கும் (steps) 20 - 30 cm அளவான தூரம் நகர வேண்டும். ஏறத்தாள நின்ற இடத்திலேயே ஓடுவது போன்றது. E. தயார்படுத்தல் 3 - கால்களை மடிக்காமல் ஓடுதல். முழங்கால்களை மடிக்காமல் கால்களை முன்னே மட்டும் உயர்த்தி வேகமாக ஓட வேண்டும். ஒவ்வொரு அடிக்கும் (steps) 20 - 30 cm அளவான தூரம் நகர வேண்டும். கிட்டத்தட்ட நின்ற இடத்திலேயே ஓடுவது போன்று இருக்கும். இந்த 3 பயிற்சிகளும் (C, D, E) இந்த வீடியோவில் 1:22 முதல் 2:18 வரை உள்ளது. F. Jamping jack - இது உங்களுக்குத் தெரிந்திருக்கும். G. ஓய்வு : கை கால்களைத் தளர விட்டு ஆழமாகச் சுவாசித்தல். நீர் அருந்தலாம். H. Stretching - அவசியமில்லை. செய்வதாக இருந்தால் 2 மணி நேரத்துக்குப் பிறகு அல்லது அடுத்த நாள் செய்யலாம். இனி பயிற்சியை ஆரம்பிக்கலாம். நீங்கள் ஏற்கனவே நன்றாக ஓடுவதால் நேரடியாகவே இரண்டாவது நிலை பயிற்சிக்கே போகலாம். 1 வாரத்தில் 4 நாட்கள் செய்ய வேண்டியவை. பயிற்சி 1 15 நிமிட Warm up (A) 1 நிமிட ஓய்வு 15 வினாடிகள் மெதுவான ஓட்டம் B 15 வினாடிகள் C 15 வினாடிகள் மெதுவான ஓட்டம் B 15 வினாடிகள் D 15 வினாடிகள் மெதுவான ஓட்டம் B 15 வினாடிகள் E 30 வினாடிகள் ஓய்வு. நீர் அருந்தலாம். மேலே குறிப்பிட்ட 15 வினாடிப் பயிற்சிகளை மீண்டும் 2 தடவை செய்யுங்கள் மிகவும் களைப்பாக இருக்கும். 15 நிமிட மெதுவான ஓட்டம் B. பயிற்சி முடிவடைகிறது. அடுத்த நாள் கால்களில் வலி இருக்கும். ஒரு நாள் ஓய்வெடுக்கலாம். பயிற்சி 2 10 நிமிட Warm up (A) 1 நிமிட ஓய்வு 1 நிமிட Jamping jack F 1 நிமிட மெதுவான ஓட்டம் B 1 நிமிட Jamping jack F 1 நிமிட மெதுவான ஓட்டம் B 30 நிமிட ஓட்டம். முதல் 10 நிமிடங்கள் உங்கள் உச்ச வலுவில் 60 வீதமாக இருக்க வேண்டும். அடுத்த 7 நிமிடங்கள் 70 வீதமாக அதிகரியுங்கள். அதற்கடுத்த 7 நிமிடங்கள் உங்களால் எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ அவ்வளவு ஓட வேண்டும் ஆனால் களைத்து ஓட்டத்தைக் கைவிடும்படியாக ஓடக் கூடாது. மீதி நேரத்தை மெதுவாக ஓடி முடிக்க வேண்டும். பயிற்சி முடிவடைகிறது. அடுத்த நாள் ஓய்வெடுக்கலாம். பயிற்சி 3 interval running 20 நிமிட Warm up (A) 30 வினாடிகள் ஓய்வு. 30 வினாடிகள் மெதுவான ஓட்டம் B 30 வினாடிகள் வேகமான ஓட்டம். இந்த 30 விநாடி ஓட்டங்கள் இரண்டையும் 10 தடவைகள் நிற்காமல் மாறி மாறிச் செய்ய வேண்டும். வேகமான ஓட்டத்தின்போது 80-90 வீதமான உச்ச வலுவுடன் ஓடலாம். 10 தவடவை ஓடி முடிக்க முடியாது போனால் நீங்கள் 90 வீதத்துக்கு மேலான வலுவுடன் ஓடியிருக்கிறீர்கள் என்று அர்த்தம். மறுபடி இன்னொரு தடவை 30 வினாடிகள் மெதுவான ஓட்டம் B 30 வினாடிகள் வேகமான ஓட்டம். இந்த 30 விநாடி ஓட்டங்கள் இரண்டையும் 10 தடவைகள் நிற்காமல் மாறி மாறிச் செய்ய வேண்டும். 5 நிமிட மெதுவான ஓட்டம் B. பயிற்சி முடிவடைகிறது. மிகவும் களைப்பாக இருக்கும், அடுத்த 1 அல்லது 2 நாள் ஓய்வெடுக்கலாம். பயிற்சி 4 விரும்பியபடி ஓட்டம் உங்க விருப்பத்திற்கேற்ப நேர எல்லை வைத்தோ தூர எல்லை வைத்தோ விரும்பிய வேகத்தில் ஓடலாம். இந்த 4 பயிற்சிகளையும் சுழற்சியாகச் செய்யுங்கள். *** ஐம்பதுக்கு வருவோம். பிள்ளைகள் வளர்ந்து விட்டனர். ஊரில் இருந்திருந்தால் பிள்ளைகளின் படிப்பு முடிந்தால் அவர்களுக்கான வேலை, திருமணம், செலவு பற்றியெல்லாம் நினைத்துக் கவலைப்பட வேண்டும். இங்கு அதொன்றும் இல்லை. பொருளாதார ரீதியாக சாதாரனமாக வாழ்வதற்கான தன்நிறைவை அடைந்துவிட்டேன். வேலையிலிருந்து ஓய்வு பெறும் எல்லை தொலைவில் தெரிகிறது. எனக்கான எதிர்காலத்தைத் திட்டமிட்டு விட்டேன். என்மேலுள்ல அழுத்தங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைவதுபோல் உணர்வு. சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் மனதில் இளமையுடனும் வாழ்க்கையைத் தொடர இதுவே பொற்காலம். நீங்களும் வாருங்கள் ஓடி வாழ்ந்திடலாம்.
    33 points
  2. அன்று போருக்கும் போராடியவர்களுக்கும்.. அதற்கு துணை நின்றவர்களுக்கும் கை தடியாய் நின்றது யாழ். இன்று போர் செய்தவர்களும் இல்லை, போராடியவர்களும் இல்லை.. போராட்டுத்துக்காக குரல் கொடுத்தவர்களும் இல்லை. கைத்தடி மட்டும் தனியே நிற்கிறது. கை தாங்கலாய் போராட்டத்தை தாங்கியவர்கள் எல்லோருமே உடலாலும் மனதாலும் கை கால் இழந்து நிற்கின்றனர், இழந்தது மட்டும் இல்லை அது தரும் வலியைகூட வெளியே சொல்ல முடியாமல் அவஸ்தை படுகின்றனர். பலர் நம்பிக்கையிழந்து இந்த மாற்று திறனாளி வாழ்வு இனிமே வேண்டாம் என்று ஓடியே போய்விட்டனர். சிலர் மாற்றங்கள் இனிமேலும் வரும் என்ற ஒற்றை புள்ளி நம்பிக்கையில் இந்த கைதடியை பிடித்தபடி காலம் கழிக்கின்றனர். அன்று நமக்கெதிராய் சிவப்பு புள்ளி உயிர் செலவாய் தெறித்த போரில் கோபம் கொண்டு இக் களத்தில் ஒன்று சேர்ந்தவர்கள், இனிமே எதுவும் ஆகபோவதில்லை என்று ஓடியே போய்விட்டனர். அவர்கள் ஓடி போன பின்பும் பச்சை புள்ளிகளை மட்டும் வரவாய் வைத்துக்கொண்டு சிலர் இந்த தளத்தில் உயிர் நகர்த்துகிறார்கள். எங்களுக்கு வடக்கு அரசியல்வாதிகளை பிடிக்காது, கிழக்கு அரசியல் வாதிகளையும் பிடிக்காது, எங்களுக்கு பிடித்தது எல்லாம் வடக்கு கிழக்கு என்ற வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாதபடி வரிபுலி சீருடையில் இருந்த போராளிகள் மட்டுமே. இன்று வடக்கும் கிழக்கும் எங்கள் தாயகம் என்று போரிட்ட எம் தேச வீரர்களும் எங்கள்கூட இல்லை. ஆனால் அவர்கள் விரும்பியிருக்காத பிரதேச வாதங்கள் மட்டும் வடக்கும் கிழக்கும் சேர்ந்த சிலரிடம் விரும்பபட்டு எங்கள்கூட பயணிக்கிறது. அவர்களுக்கு சொல்ல விரும்புவது ஒன்றுதான்.. உதிப்பது கிழக்கு, மறைவது மேற்கு, இதுக்கு சம்பந்தமேயில்லாம வடக்கு கிழக்கு பிணக்கு பற்றி பேசுகிறவர்கள் உருபடாதவர்கள், அவர்கள் கருத்துக்கள் சபையேறாது. யாழ் எனும் கைத்தடி தனிப்பட்ட எவருக்கும் உரித்தானதொன்றல்ல, இனவிடுதலையில் சோர்வானவர்கள் எவர் வேண்டுமானாலும் அதை பற்றிக்கொண்டு ஓய்வெடுத்துவிட்டு மறுபடியும் அவர்கள் பணத்தில் நகரலாம் என்று நம்புகிறவர்களில் நானும் ஒருவன். அகவைகள் வருசம் வருசம் அதிகரிக்கும்போது சராசரி மனிதனுக்கு நாடி நரம்பு தளர்ந்து வயசாகிறது என்றே பொருள்படும். ஆனால் இனத்துக்கான காலபதிவுகளை ஒரு பணியாக தொடரும் தளங்களுக்கு காலம் செல்ல செல்ல நரம்புகள் இன்னும் முறுக்கேறுமே தவிர முடிவுக்கு வராது., வாழிய உங்கள் இன பணி.
    30 points
  3. நீண்ட நாட்களின் பின்பு முருகனிட்ட விசிட் பண்ணினேன்.கொரானாவை சாட்டாக வைத்து அவரிட்ட போகாமால் காலம் கடத்திக்கொண்டுவந்தேன்.மனைவி முருகன் கோவிலுக்கு போக கேட்டாலும் முருகன் ஒன்லைனில் என்னிட்ட வாரார் ஏன் நான் போக வேண்டும் என்று கேட்டு கடத்தி வந்தேன் .இனிமேலும் காலம் கடத்தினால் எம்பெருமான் ஆத்திரமடைந்து என்னை மறந்து விடுவார் பயம் காரணமாக 2021 இங்கிலிஸ் வருடப்பிறப்புக்கு சென்றேன் .முருகன் தமிழ் கடவுள் ,நான் சைவதமிழன் ஏன் போக வேண்டும் என்று மனசு கேள்வி எழுப்ப "டேய் அவங்கன்ட லீவுகளை வீட்டிலிருந்து உற்சாக பாணம் அடிக்க பாவிக்க முடியும், என்னிடம் வாரது என்றால் மட்டும் நீ சைவம் /தமிழ் என்று எஸ்கியுஸ்களை தெடுகின்றாய் என்ன ?"அதே மனசு மல்டிபல்பெசனல்டிக்கு மாறி கேள்வி கேட்க நான் பயந்து வருடப்பிறப்புக்கு விசிட் பண்ண முடிவெடுத்தேன். "மாஸ்க் எடுத்தாச்சே" அர்ச்சனைக்கு சாமாங்களை எடுத்தாச்சே என்ற காலம் போய் மாஸ்க் எடுத்தாச்சோ என்று வந்திட்டு என புறுபுறுத்தபடி "போட்டாச்சு" என்றேன் "வெள்ளை வேஸ்டி நீல சேர்ட் போட்டுவிட்டு ஏன் கறுப்பு மாஸ்க் போட்டிருக்கிறீங்கள் ,நீல மாஸ்க் புதுசு வாங்கி காரில் வைத்திருக்கிறேன் போய் போடுங்கோ" ரொம்ப முக்கியம் என்ற படி "சரி கோவிலுக்கு கிட்ட போய் போடுவோம்" "என்ன புறுபுறுக்கிறீயள் ,காரில் கான்ட் சனிட்டைசர் இருக்குத்தானே" "முடியப் போகின்றது நாளைக்கு புதுசு வாங்குவோம்" "என்னை மட்ச் பண்ணுகிற மாஸ்க் போட சொல்லி போட்டு ,நீர் மல்டி கலர் மாஸ்க் போட்டிருக்கிறீர்" "பிளவுஸின்ட கலர் இந்த மாஸ்கில் இருக்கு ,உங்களுக்கு இந்த லெடஸ்ட் வசயன்கள் ஒன்றும் தெரியாது" "வழமையா பிரசாதம். எதாவது கொண்டு போவீர் இன்றைக்கு எங்க ஒன்றையும் காணவில்லை" "கொரானாவால் பிரசாதம் கோவிலில் கொடுக்க கூடாதாம் அரசாங்க சட்டமாம்" "அரசாங்க சட்டங்களை சுழிச்சு ஒடுறதில் நாங்கள் கில்லாடிகள் ஆச்சே" "உண்மைதான் ஆனால் உந்த கொரானா எங்களுக்கு நல்ல பாடம் கற்று தந்துவிட்டது" கோவிலுக்கு முன்னாலயே வாகன தரிப்பதற்க்கு இடமிருந்தது, வழமையாக இப்படி இலகுவாக கார் பார்க் பண்ணகூடியதாக இருப்பதில்லை கொரணா காரணமாக முருகனிட்ட வருகின்ற விசிட்டர்கள் குறைந்து விட்டார்கள் . கார்கள் குறைவாக இருந்தது ஆனால் முருகனின் வாசல்படியில் வரிசையாக‌ மக்கள் நின்று கொண்டிருந்தார்கள்.நானும் போய் வரிசையில் நின்றேன் .முருகனை கொள்ளையடிக்க வந்தமாதிரி எல்லோரும் முக கவசம் அணிந்திருந்தார்கள் யார் முன்னுக்கு நிற்கிறார்கள் ,மனைவிக்கு பின்னால் யார் நிற்கிறார்கள் என்று தெரியாமல் இருந்தது.தொண்டர் ஒருவர் நெற்றிக்கு அருகாண்மையில் துப்பாக்கி மாதிரி ஒன்றை கொண்டுவந்தார் நான் திடுக்கிட்டு போனேன் பிறகு சுதாகரித்து கொண்டு "முபத்தாறோ,முப்பதேழே என்றேன் " "35 நல்ல கூலா இருக்கிறீயள் போல " "முருகனிட்ட வந்தா கூல் தானே அவனே கூலானவ‌ன் தானே" மனிசி பின்னுக்கு நின்று கிள்ளி முழிசி பார்த்த படியே ,மாஸ்க் போட்டபடி முழிசினால் எப்படியிருக்கும் "கோவிலுக்குள்ள வந்தாலும், உந்த லொள்ளு நக்கல் கதையை விடாமாட்டியள் என்ன‌ ?" "டேய் உங்கன்ட தொல்லை தாங்க முடியாமல் தான் இதை செய்தன் ஆனால் நீங்கள் என்னடா என்றால் மாஸ்க்,சனிட்டைசர் எல்லாம் போட்டு கொண்டு வந்து என்னை தொல்லை படுத்துறீங்களேயடா?" "எல்லாம் உன் மீது கொண்ட அன்பு " " அன்போ? வார கோபத்துக்கு தும்மி விட்டன் என்றால் தெரியும்" " முருகா முருகா முருகா ஏன் இந்த ஆவேசம்" " பின்ன ? கொரனா என்று கொஞ்சம் நிம்மதியா இருப்பம் என்றால் நீங்கள் உங்கன்ட வழமையான பிரச்சனை கொண்டு வந்து மூட்டை மூட்டையாக கொட்டுறீயள்" முந்தி மாஸ்க் போடாமல் நீங்கள் சொல்லுறதையே கேட்கிறதே கஸ்டம்,மாஸ்க் போட்டுகொண்டு நீங்கள் கேட்கிற இந்த கேள்விகள் எனக்கு புறியப்போகுதே? எப்ப பிளைட் ஓடும் எப்ப கொமிட்டி கூடும் எப்ப தேர் கட்டலாம் எப்ப திருவிழா வைக்கிறது ,எவன் அடுத்த கொமிட்டி தலைவன்,எப்ப வக்சீன் வரும்,வக்சீன் போடலாமா? oh my dad lord Siva முருகன் புலம்ப தொடங்க நான் நடுங்கிபோனேன்
    27 points
  4. முன்குறிப்பு இந்தக் கட்டுரை எழுதியதன் நோக்கம் எனது திட்டத்திற்கான உங்கள் ஆலோசனை உதவிகளைப் பெறுவதும் தகவல்களைப் பரிமாறுவதன் மூலம் வேறு யாராவது பயனடையலாம் என்பதே. புலம்பெயர்ந்த சாதாரண தமிழனுக்கே இக் கட்டுரை பொருந்தும். யாரையும் புண்படுத்தும் நோக்கமும் இல்லை. இதில் குறிப்பிட்டவைகளை 100 வீதம் பின்பற்றுவேன் என்ற உறுதி இப்போது கிடையாது. எழுத்தாழுமை இல்லாமல் கட்டுரை எழுத வெளிக்கிட்டுள்ளேன். பந்திகளைச் சரியான முறையில் கோர்த்து எழுதுவதும் நினைப்பதை எல்லோருக்கும் புரியும் வகையிலும் எழுத முடியவில்லை. புரிதாதவற்றைக் குறிப்பிடுங்கள். எழுத்து, இலக்கணப் பிழைகளை மன்னியுங்கள். *** எனது பாதை எங்கு செல்கிறது? சிறுவனாக இருந்தபோது வெளிநாட்டு மோகம் மனதில் விதைக்கப்பட்டது. வெளிநாடு போய்வந்தவர்களின் புழுகல்கள் மூலமாக கனவுகளை வளர்த்துக் கொண்டேனே தவிர யதார்த்தமான நிலமையைச் சிறிதளவேனும் கற்பனை செய்து பார்க்கக்கூட முடியாத நிலமை. பட்டப்படிப்பில்லாமல் எங்கோ எப்படியோ நுளைந்து சுமாராக முன்னேறியிருந்தாலும் தற்போதைய வாழ்க்கையைக் கனவிலும் நினைத்திருக்க வாய்ப்பில்லை. பிள்ளைகள் வளர்ந்து விட்டதால் அவர்கள் படிப்பில் நேரடியாகத் தலையிடுவதில்லை. படிப்பு என்பது முதலில் எமது அறிவை வளர்த்துக் கொள்ளவே, வேலை இரண்டாம் பட்சம் என்றே கருதுகிறேன். அவர்கள் பிற்காலத்தில் ஓரளவு வசதியாக வாழக்கூடிய வகையில் சொத்து சேர்த்துவிட்டேன் என்று நினைக்கிறேன். இனி என்ன பிரச்சனை? எதுவும் இல்லையே ! நான் குறைந்தது 5 வருடங்களாவது திட்டமிட்டு செயற்படுவது வழக்கம். ஆனாலும் பல தடவைகள் இலக்குகள் மாறி வேறு விதமாக அமைந்து விடுகிறது. எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து நான் எதிர்பார்த்த/எதிர்பாராத விதமாக வாழ்க்கை நகர்ந்தாலும் அன்று முதல் என்னுள் மாறாமல் இருப்பது நான் தமிழன் என்ற பெருமை மட்டுமே. நான் மேலே குறிப்பிட்டதுபோல் எனது உழைப்பில் தேடிய சொத்தினை (அது சிறிதாக இருந்தாலும்) எனது பிள்ளைகள் அனுபவிக்கப் போகிறார்கள். அவர்கள் ஓரளவு தமிழ் பேசுவார்கள். எழுத்துக்கூட்டி வாசிக்கவும் முடியும். இலங்கையில் எமது உறவினர்களுடன் நெருக்கமான தொடர்பினைக் கொண்டுள்ளனர். மற்றப்படி எமது பழக்கவழக்களோடு ஒன்றியிருந்தாலும் அவர்களின் தமிழ் கலாச்சாரம் என்பது பொலிவூட், சாமத்தியவீடு போன்ற கொண்டாட்டங்களுடனேயே மட்டுப்படுகிறது. இதையெல்லாம் நியாயப்படுத்தி அவர்களைத் தமிழர்கள் என்று சொல்ல முடியாது. பிரெஞ்சுக்காரர்கள். சில பெற்றோரைப்போல் தமிழர்களுக்குள் தமது பிள்ளைகளைத் திருமணம் செய்து வைத்துத் திருப்திப் பட்டாலும் கூட அடுத்த சந்ததி என்னவாகும் என்பது நிச்சயமில்லை. 80-90 களில் வந்தவர்களே இன்று வெள்ளைக்காரப் பேரப்பிள்ளைகளுடன் இருக்கும் நிலையில் எனது உழைப்பினை எனது பிள்ளைகளுக்குப் பின் வெள்ளைக்காரர்களே அனுபவிக்கப் போகிறார்கள். புலம்பெயர்ந்த பெரும்பாலான தமிழர்களின் நிலை இதுவாகத்தான் இருக்கும். இக் கருத்தினை வைத்து என்னை இனவெறியனாகக் கருத வேண்டாம். தொடர்ந்து படியுங்கள். *** முதுமையும் தாழ்வும் மனித நாகரிகம் தோன்றிய முற் பகுதிகளில் மக்கள் வீடு கட்டுவதும் விவசாயம் செய்வதுமாகவே பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்தன. இதற்கான காரணம் பெற்ற அனுபவத்தினை இலகுவாக அடுத்த சந்ததிக்குக் கடத்த முடியாததாக இருக்கலாம். இலகுவான எழுத்து வடிவங்கள் தோன்றியபோது மனித வளர்ச்சி வேகமடைய ஆரம்பித்தது. சில நூற்றாண்டுகள் இடைவெளியில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன. 20 ஆம் நூற்றாண்டில் சமுதாயத்தில் வயது முதிர்ந்தவர்களின் ஆலோசனைகளும் முடிவுகளும் அவர்கள் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கணணி, தொலைத்தொடர்பு வருகைக்குப் பின் வயது வித்தியாசமின்றி எல்லோராலும எல்லாத் தகவைகளையும் இலகுவாகப் பெற்றுக் கொள்ளவும் அலசி ஆராயக் கூடியதாகவும் உள்ளது. வீட்டில் 70 வயதானவரை விட 20 வயதான ஒருவருக்கு அதிகமான தகவல்கள் தெரிய வாய்ப்புள்ளதால் வயதானவர்கள் முடிவுகளை எடுக்கும் திறன் குறைந்து போகின்றது. சென்ற வருட ஆரம்பத்தில் (2022) நான் வேலை செய்யும் நிறுவனத்தில் பாரிய மாற்றங்கள் நிகழ்ந்தன. பலர் வேலையை விட்டு விலகும்படி நிர்ப்பந்திக்கப்பட்டனர் அல்லது வேறு நிறுவனங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். நான் விளிம்பில் தப்பிப் பிழைத்திருந்தேன். இந்த வயதில் இதுபோன்ற வேலை தேடி எடுப்பது கடினம். வருட முடிவில் எல்லோருக்கும் தமது வேலைகளில் ஜனவரி முதல் தகமைகளை மேம்படுத்த முயல வேண்டும் என்ற அறிவுரையை வழங்கியுள்ளனர். அதாவது புதிய தகமைகளைப் படிக்க வேண்டும். நான் மீண்டும் படிக்கும் மனநிலையில் இல்லை. ஆனாலும் முயற்சி செய்து ஏதாவது படித்து ஒரு சான்றிதளாவது பெற முயற்சிக்க வேண்டும். ஆரம்ப வாழ்வு முதல் தகமைகளையும் அனுபவங்களையும் கடும் முயற்சியில் பெற்றுக் கொள்கிறோம். ஆரம்பப் படிப்பில் பரீட்சையில் அதிக புள்ளிகள் பெற வேண்டிய நிர்ப்பந்தத்தை மேற்படிப்பு உருவாக்குகிறது. மேற்படிப்பின் எல்லை தொழிலை நோக்கி உள்ளது. தொழிலிலும் தொடர்ந்து இறுதிவரை முன்னேற வேண்டும். எல்லா முயற்சிகளின் பெறுபேறுகளுக்கும் அனுபவங்களுக்கும் ஓய்வூதியத்தை எட்டியதும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு தொலைக்காட்சி நாடகங்களுக்கு முன்னால் மீதி வாழ்க்கையைத் தொடர வேண்டியுள்ளது. என்னைச் சுற்றியுள்ள பலரின் வாழ்க்கை இப்படித்தான் உள்ளது. ஏன் இந்த நிலமை ? வாழ்நாள் முழுவதும் பெற்ற விலைமதிப்பற்ற அனுபவங்களை என்ன செய்வது ? *** எனது தேசியம் 2006 இலும் பின்னர் 2012 இலும் இலங்கை சென்றிருந்தேன். 2012இல் கொழுப்பிலிருந்து யாழ் நோக்கி பிரயாணம் செய்துகொண்டிருந்தேன். கிளிநொச்சிப் பகுதியை A9 ஊடாக வாகனத்தில் கடந்து சென்றபோது எனது மனதில் ஏற்பட்ட சோகம் கோபம் இயலாமை ஏமாற்றம் தோல்வி எல்லாமே கலந்த உணர்ச்சிகளை வார்த்தைகளில் எழுதிவிட முடியாது. அதன்பின் இலங்கையில் எனக்குடனான தொடர்பு அங்குள்ள உறவினர்கள் மட்டுமே என்று தோன்றியது. நான் பிறந்த நாட்டில் எனக்கு மறுக்கப்பட்ட உரிமைகளையும் சுதந்திரத்தையும் பிரான்ஸ் எனக்குத் தந்துள்ளது. இனிமேல் பிரான்ஸ்தான் எனது நாடு என்று முடிவு செய்திருந்தேன். காலம் எல்லாவற்றையும் மாற்றுகிறது. என்னைப்பொறுத்தவரை எமக்கான தீர்வு என்றாவது கிட்டும் என்ற நம்பிக்கையில் வாழ்வதை விட இனி எதுவுமே கிடைக்காது என்ற சிந்தனையிலிருந்து பாதையை வகுப்பது புத்திசாலித்தனம். பிரான்ஸ் தேர்தலின்போது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அரசியல் வேட்பாளர்களின் கலந்துரையாடலின் ஒரு பகுதியைத் தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது. அதில் வேட்பாளரிடம் கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. ‘பிரெஞ்சுக்காரன்(ரி) என்றால் என்ன?’ என்பதே அக் கேள்வி. அவரது இவ்வாறு பதிலளித்திருந்தார். பிரெஞ்சுக்காரன் என்பவன் : தன்னை உருவாக்கிக் கொள்வான் (கல்வி, அறிவு) எதிர்காலத்தை நோக்கி நகரத் தலைப்படுவான் (திட்டமிடல், உழைப்பு) சொத்துக்களை உருவாக்குவான் இந்த மூன்றாவது விடயம் சொத்துகள் தனியே பணம் பொருள போன்றவை மட்டுமல்ல. ஒருவர் தனது வீட்டு முற்றத்தைத் துப்பரவு செய்து பூமரங்கள் நட்டுப் பராமரிப்பதும் சொத்துத்தான். இவ்வாறு பலரும் செய்தால் அந்த ஊரே அழகாகிவிடும் அல்லவா. இந்த வரைவிளக்கம் என்னுள் பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் அடிப்படையில் அடுத்த 9-13 வருடங்களில் ஓய்வுபெற்றபின்னான வாழ்க்கைக்கு இப்போது அத்திவாரமிடப் போகிறேன். மீதி இரண்டாம் பகுதியில் தொடரும்.
    26 points
  5. முற்குறிப்பு: சிலருக்கு வாசிக்கும் போது சங்கடமாக இருக்கலாம் கதை: வழக்கமாக ராசுக்குட்டி சுச்சு போகின்றபோது ஒரு பாட்டை விசிலடிச்சுக் கொண்டோ, இல்லை ஊரில சுவரில் எட்டுப் போட்ட காலத்தை நினைச்சுக் கொண்டோ அல்லது விட்டத்தை பார்த்துக் கொண்டோ தான் போவது வழக்கம். ஆனால் அன்றைக்குப் பார்த்து ஏதோ ஒரு நினைவில் போய் கொமர்ட்டில் (commode) நீரில் கலந்தும் கலக்காமலும் விட்ட சுச்சுவை உற்றுப்பார்த்து வினையை தேடிக்கொண்ட கதைதான் இப்ப நான் சொல்லப் போற கதை. உற்றுப்பார்த்த ராசுக்குட்டிக்கு திடுக்கிட்டுப் போனார். சிவப்பாக ஒன்றிரண்டு துளிகள் சின்னஞ் சிறு வட்டங்களாக மிதந்து கொண்டு இருந்ததை கண்டு வெலவெலத்துப் போனார். ஐயய்யோ சுச்சுவில் இரத்தம் கலந்து வருகின்றதோ என்று ஆடிப்போயிட்டார். வாழ்வே மாயம் படத்தில் கமலஹாசன் இருமின பின் இரத்தம் வெளியேறிய சீனை தன் மனக்கண் முன் கொண்டு வந்து பார்த்தார். இது புற்று நோயாக இருக்குமோ அல்லது வேறு ஏதும் பாரதூரமான பிரச்சனையோ என்று ஒரு கையால பிடிச்சபடியே யோசிச்சுக் கொண்டு இருந்த ராசுக்குட்டியை, "என்னப்பா இவ்வளவு நேரம் என்ன செய்றீஙள்..." என்று கேட்ட மனைவியின் குரல் தான் மீண்டும் தன் நிலைக்கு கொண்டு வந்தது, ஆனாலும் பயம் விடவில்லை ராசுக்குட்டிக்கு. வீட்டில் நண்பர் குடும்பம் வந்து கதைத்து கொண்டு இருக்கும் போது தான் இது நிகழ்ந்து இருந்தது. ராசுக்குட்டி அவர்களுடன் கதைத்துக் கொண்டு இருந்த விடயத்தை மீண்டும் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தாலும் மனசில் சிவப்பாக பயம் மிதந்து கொண்டுதான் இருந்தது. எப்படியும் இது என்ன என்று அறியாவிடின் தலை உடனே சுக்கு நூறாக உடைந்து சிதறி விடுமோ என்று உள்ளூர அஞ்சிக் கொண்டு இருந்தார். எப்ப நண்பர் குடும்பம் போகும், எப்ப கூகிள் ஆண்டவரிடம் போய் என்ன விடயம் என்று அறியலாம் என்ற நினைப்பிலேயே இருந்தமையால் சரியாக அவரால் கதைக்க கூட முடியவில்லை. நண்பர் குடும்பம் அரை மணி நேரம் மேலும் கதைத்து விட்டு போன மறுகணம், ஓடிப் போய் தன் மொபைலில் இணையத்தில் கூகிள் ஆண்டவரை கூப்பிட்டு "blood in the urine" (சிறு நீரில் இரத்தம்) என்று டைப் செய்து தேடு பொறியை தட்டி விட்டார். கூகிள் ஆண்டவரும் வஞ்சகம் இல்லாமல் பின்வருவன ஒன்று காரணமாகவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட விடயங்களோ காரணஙள் என்று பட்டியலிட்டார்: 1. தொற்று - Urinary tract infections 2. சிறு நீர்ப்பையில் கல்லு -A bladder or kidney stone 3. சிறு நீரகத்தில் தொற்று Kidney infections (pyelonephritis). 3. புரஸ்ரேட் பெரிசாவது -Enlarged prostate. 4. புற்றுநோய் - Cancer 5. சீறு நீரக காயங்கள்- Kidney injury என்று வகை வகையாக பட்டியலிட்டார் கூகிள் ஆண்டவர். அவ்வளவு தான் ராசுக்குட்டி ஆடிப் போயிட்டார். அவர் மனக் கண் முன் மனைவியும் பிள்ளைகளும் பரதேசி கோலத்தில் நிற்பது போலவும், ஹீமோ தெரபி எடுத்து தலை முடி எல்லாம் உதிர்ந்து வயக்கெட்டுப் போய் தான் படுக்கையில் கிடப்பது போலவும், நண்பர்கள் எல்லாம் கண் ஓரத்தில் கண்ணீர் வழிய தான் வளர்த்தப்பட்டு இருக்கும் பெட்டியை சுற்றி ஒரு வட்டம் போட்டு நடப்பது போலவும் காட்சிகள் வழியத் தொடங்கி விட்டன ராசுக்குட்டிக்கு. முதல் வேலையாக உடனடியாக உயில் எழுதி வைக்க வேண்டும் என நினைத்தார். பின் அப்படி உயில் எழுதும் அளவுக்கு ஒரு சொத்தும் இல்லையே என அங்கலாய்த்தார். சொத்து கித்து சேர்த்து வைக்காமல் குடும்பத்தை நடுத்தெருவில் விடப்போகின்றேனே என தழுதழுத்தார். ஆயுள் காப்புறுதியில் கிடைக்கும் சில இலட்சங்கள் குடும்பத்துக்கு போதுமாக இருக்குமா என கணக்குப் போட்டார். தான் செத்த பின் எப்படியும் மறுமணம் செய்து கொள் என்று மனிசியிடம் சத்தியம் வாங்க வேண்டும் என உறுதி பூண்டார். புரண்டு புரண்டு படுத்தார், நடுக் கட்டிலில் எழும்பி இருந்து தன்னை தொட்டுப் பார்த்து எல்லாம் சரியாக இருக்குதோ என்று செக் பண்ணினார். இறுதியில் அடுத்த நாள் எழும்பியவுடன் குடும்ப மருத்துவருக்கு போன் போட்டு விடயத்தை சொல்லி உடனடியாக மருத்துவம் செய்ய தொடங்க வேண்டும் என்று நினைத்தார். எந்த நோயும் ஆரம்பத்தில் கண்டு பிடிக்கப்பட்டால் அதில் இருந்து பிழைக்கலாம் என எங்கோ வாசித்ததை பல தரம் மீள மனக்கண் முன் கொண்டு வந்து வாசித்தார். அப்படி நினைத்தது கொஞ்சம் மனசுக்கு ஆறுதல் கொடுக்க படுக்க போனார். நித்திரையானார். தான் செத்துப் போன பின் நண்பர்கள் எல்லாம் பியர் அடிச்சு அதைக் கொண்டாடுகின்றனர் என கனவு ஒன்றைக் கண்டு திடுக்கிட்டு எழும்பினார். உலகமே இப்படித்தான் போலியானது என்று கவலைப்பட்டார். சுருண்டு படுத்தார். அடுத்த நாள் மருத்துவரிடம் கதைக்க, மருத்துவர் இவர் சொல்வதை பெரிசாக கணக்கெடுக்கவில்லை போலிருந்தது. கொரனா காலத்தின் முதல் மாதம் என்பதால், மருத்துவர் கடும் யோசனையின் பின் இவர் கொடுத்த ஆக்கினையால "சரி வா வந்து சிறுனீரில் ஒரு டெஸ்ட் எடு... அதுக்குப் பிறகு பார்ப்பம் ": என்று சொல்லிய அடுத்த அரை மணி நேரத்தில் கிளினிக்கு போய் விட்டார். சிறு நீர் டெஸ்ட் செய்தார், 10 நிமிடங்களில் அதன் ரிசல்ட்ஸ் வந்தது. (தொடரும்....)
    26 points
  6. காவலூர்க் கனவுகள் கடலோரம் அலைவந்து கரைமீது மோதும் காதோரம் ஆலய மணி வேதம் ஓதும் இனிதான தென்றலும் இடை வந்து வீசும் எங்கெங்கு நோக்கினும் தெய்வீகம் பேசும் இல்லங்கள் எங்குமே இறை புகழ் பாடும் இயம்பிடும் செபமாலை தினம் சாரல் தூவும் அதிகாலைத் திருப்பலி அரங்கேறும் நேரம் அற்புத கானங்கள் அகமெங்கும் மோதும் நிலவோடு கடல் வந்து நிதம் சங்கமிக்கும் கடலோடு மேகங்கள் தலை கோதிச் செல்லும் செம் பருத்திப் பூக்கள் வேலியில்; ஆடும் செவ்வந்திப் பூக்களும் பொன் அள்ளித் தூவும் அதி காலைச் சேவல்கள் அறை கூவிப் பாடும் அதை மிஞ்சும் திருந்தாதி மணி நாதம் கேட்கும் வான் முட்டும் ஆலய கோபுரம் நான்கும் ஆன்மீக தாகங்கள் தீர்த்திடும் பாங்கும் அறிவூட்டும் அதிசய கலைக்கூடம் எங்கள் அறிவுக்கண் திறந்திடும் அற்புதம் செய்யும் குயிலோசை காதிலே இன்னிசை பாடும் அலையோசை காற்றோடு சுதிதாளம் போடும் வெள்ளிக் கொலுசொலி வீதியில் சிந்தும் துள்ளும் வனிதையர் சிரிப்பொலி மிஞ்சும் காலைச் சந்தையும் களைகட்டிக் கூடும் காவலூர்த் துறைமுகம் கலகலப் பூட்டும் மாலைச் சூரியன் மறைந்திடும் வேளை மஞ்சள் குளித்திடும் கடல் மகள் நாணம் கண்டு களித்திட காளையர் கூடும் கடற்கரை பொன்மணற் பரப்பென மின்னும் பூவரசம் பூக்கள் சாமரம் வீசும் மாமரக் காற்றிலும் தமிழ் மணம் வீசும் காவலூர்க் கனவினைக் கண்களில் சுமக்கும் கண்மணிகள் வாழ்வில் வசந்தமே வீசும் --
    26 points
  7. பரிசு. விழியில் விழுந்து இதயம் கலந்த உறவு. அன்று எனது பிறந்தநாள் நிறைய நண்பர்கள், நண்பிகள் ஏராளம் ! வாழ்த்துக்கள்,பரிசுகள் தங்க ஆபரணங்கள் தங்கி விட்டன தந்தப் பேழையில் வெள்ளிப் பாத்திரங்கள் படுத்திருக்கின்றன பரண்மேல் எதுவும் என் இதயத்தில் தங்கவில்லை ! தங்கியது பாவையவள் பரிசளித்தாள் வாசமுள்ள ரோஜா மலர் மலரின் மணம் நாசிகளில் மங்கை முகம் மனக்கண்ணில் இதயம் சுமந்து கொண்டிருக்கின்றது விலை மதிப்பற்ற அம் மலரை மட்டும் இன்று --- அவள் சங்கு கழுத்தில் முகம் புதைக்க மூச்சின் சுவாசம் சீராகியது செவ்விதழில் முத்தமிட செவ்வாயில் அமிலம் சுரந்தது பிடியிடை தழுவிட மூலாதாரம் முழுதும் துடிக்குதடி கண்ணை விட்டு தூரம் நீ மறைந்தாய் கண்களுக்குள் நிறைந்து நின்றாய் கண்களுக்குள் உன்னைப் பார்த்து யானை பார்த்த குருடனானேன்......! யாழ் அகவை 23 க்காக ஆக்கம் சுவி.......!
    26 points
  8. லொக்டவுண் வதனிக்கு அதிகாலையிலேயே விழிப்பு வந்து விட்டது. பக்கத்தில் தூங்கிக்கொண்டிருந்த நந்தனை திரும்பிப் பார்த்தாள் நல்ல தூக்கம். இன்று சனிக்கிழமை வேலையில்லாததால் அசந்து தூங்கிக்கொண்டிருந்தான். இப்பொழுதெல்லாம் இந்த லொக்டவுணால் வீட்டில் இருந்தேதான் வேலை செய்கிறார்கள். வீட்டில் வேலை செய்வதென்பது இலேசான காரியமில்லை. வேலையிடத்துக்கு போனோமா வேலை செய்தோமா நாலு நண்பர்களுடன் அரட்டை அடித்து வெளி உலகம் பார்த்து கடைக்கு போய் மாலையில் பிள்ளைகளுடன் விளையாடி என்று இருந்த காலம் மாறி இப்பொழுதெல்லாம் வீடே கதி என்று வீட்டின் சுவர்களுக்குள்ளேயே முட்டி மோதி பேசிக்கொண்டு சீ இதென்ன வாழ்க்கை? அடிக்கடி மனதுக்குள் அங்கலாய்ப்;பு ஏற்பட்டாலும் இதுவும் கடந்து போகும் என்று மனதைத் தேற்றிக்கொண்டனர். வதனியும் வீட்டில் வேலை செய்தாலும் இப்பவெல்லாம் விதவிதமாகச் சமையல் செய்வதும் பழைய நண்பிகளையெல்லாம் தேடிப்பிடித்து கதைப்பதுமாக ஒன்லைன் வட்ஸ்அப் என்று ஒருமாதிரி பொழுதைப் போக்கிக் கொண்டாள். இந்த வருடம் நந்தனின் 50வது பிறந்த நாளை பெரிய மண்டபம் எடுத்து விமரிசையாகக் கொண்டாட வேண்டுமென்ற அவளது கற்பனைகளெல்லாம் கனவாகிப் போகுமென்று யார் நினைத்தார்கள். இத்தனை வருடமாக அவர்களது வாழ்க்கையில் எத்தனையோ மேடு பள்ளங்கள் வந்தபோதும் இருவரும் மனம் ஒத்த தம்பதிகளாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பிள்ளைகள் இருவரும் படித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் படித்து முடிக்கும்வரை தம் பொறுப்புக்களை உணர்ந்து தம் பிள்ளைகளை வளர்ப்பதிலேயே அவர்களது இத்தனை ஆண்டுகளும் கழிந்து விட்டன. நேற்று நந்தனுக்கு 50வது பிறந்தநாள். நாள் முழுவதும் தொலைபேசியிலும் வட்ஸ்சப்புக்களிலுமாக வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருந்தன. வதனியும் தன் பங்கிற்கு கேக் இனிப்புவகைகள் பிரியாணி என்று செய்து அசத்தியிருந்தாள். இருந்தாலும் வதனி நந்தனுக்குத் தெரியாமல் பிள்ளைகளுடன் சேர்ந்து நந்தனின் பிறந்தநாளை வீட்டிலாவது பெரிதாகக் கொண்டாட வேண்டுமென்று திட்டமிட்டாள்;. அந்த திட்டத்திற்கு ஆப்பு வைப்பதுபோல் “வீட்டிற்குள் இருங்கள் வெளியே திரியாதீர்கள்” என்று மேஜர் முதல் பிரதமமந்திரி வரை தொலைக் காட்சிகளில் அறிவித்து மக்களின் நலனைப் பாதுகாக்கும்படி அறிவுறுத்தியது மட்டுமன்றி வீட்டிலும் 5 பேருக்கு மேல் ஒன்றுகூடுவது தண்டனைக்குரிய குற்றமாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் வதனிக்கோ எப்படியாவது சேப்பிரைஸ் பாட்டி வைத்து நந்தனை பிரமிக்க வைக்க வேண்டுமென மனம் குறுகுறுத்துக் கொண்டிருந்தது. புது வீடு வாங்கியபின் வீட்டில் எந்த கொண்டாட்டமும் வைக்க அவளுக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. உறவுகளைச் சந்தித்தும் பல மாதங்களாகி விட்டன. எனவே நெருங்கிய உறவுகளை நந்தனுக்குத் தெரியாமல் ரகசியமாக சனிக்கிழமை வீட்டிற்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தாள். அத்துடன் நந்தனை மகிழ்விப்பதற்காக அவனது நண்பர்கள் தனது நெருங்கிய நண்பிகள் என்று ஒவ்வொன்றாக சொல்லி 20-25 பேர் ஆகி விட்டது. சனிக்கிழமை மதியம் வரை வீட்டில் எந்த மாறுதலும் தெரியாதபடி ரகசியமாகவே அனைத்து ஆயத்தங்களும் நடந்தன. வீடும் என்றும் போல் அமைதியாக இருந்தது. மத்தியானத்துக்கு மேல் ஒரு நண்பன் மூலம் நந்தனை வெளியே அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்திருந்தபடி அனைத்து திட்டங்களும் சரியாக நடைபெற்றுக்கொண்டிருக்கவும் வதனி பூரண திருப்தியுடன் மளமளவென்று காரியங்களை மேற்கொண்டாள். அவசர அவசரமாக வீட்டை அலங்கரித்து ஓடர் பண்ணியிருந்த கேக்கை மேசையில் வைத்து அலங்கரித்து மற்றைய ஒழுங்குகளையெல்லாம் சரிவர செய்து முடித்தாள். திட்டமிட்டபடி அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றன. மத்தியானத்துக்குமேல் ஒரு நண்பனின் மூலம் நந்தனை வெளியே வெளியே அழைத்துச் செல்லவும் திட்டமிட்டிருந்தாள்; நீண்ட நாட்களின் பின் சந்தித்த நெருங்கிய நண்பனுடன் தத்தமது 50 வயது அனுபவங்களை மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டே சுற்றியதில் நேரம் போனது தெரியவில்லை. மாலை மங்கத் தொடங்கியதும் வீட்டிற்கு போகலாம் என நந்தன் கேட்கவும் சரி என்ற நண்பனும் வதனிக்கு மெசேஜ் அனுப்பி விட்டு நந்தனுடன் வீட்டிற்கு வந்தான். வீடு அமைதியாகத்தான் இருந்தது. தன்னுடன் வந்த நண்பனை வீட்டிற்குள் அழைப்பதா விடுவதா என நந்தன் சிந்தித்த மறுகணம் நந்தன் தன்னை பின் தொடர்வதைக் கவனித்து “ வா வா வந்து ரீ குடிச்சிற்றுப் போகலாம்” என அழைத்தான். வீட்டின் கதவைத் திறக்கவும் “சேப்பிரைஸ்” என்று அனைவரும் கூக்குரலுடன் கைதட்டி நந்தனை வரவேற்கவும் நந்தன் திகைப்பில் திக்குமுக்காடிப் போனான். என்ன இது? லொக்டவுண் காலத்தில் இப்படிச் செய்கிறார்களே என மனம் அங்கலாய்த்தாலும் நீண்ட நாட்களாகச் சந்திக்காத நண்பர்களையும் உறவுகளையும் சந்தித்த சந்தோசத்தில் மனம் குதூகலமாகி மகிழ்ச்சியில் மூழ்கிப் போனான். வீட்டிற்குள் கலகலப்பும் சிரிப்பும் கும்மாளமுமாக இருந்தது. எங்கட ஆக்களின்ர பிறந்தநாள் கொண்டாட்டம் என்றால் சும்மாவா? ஏல்லோரும் வண்ண வண்ண உடைகளுடனும் விதவிதமான அலஙகாரங்களுடனும் வந்து இறங்கி வீட்டிற்குள் செல்வதையும் வீட்டிற்குள் நடந்த குதூகலத்தையும் அவதானித்த யாரோ காவல் துறைக்கு செய்தி அனுப்பி விட்டார்களோ அல்லது தற்செயலாக அந்த வீதியில் பயணித்த காவல் துறையினருக்கு மூக்கில் வியர்த்து விட்டதோ யாரறிவார்? மக்களின் நலனுக்காகத்தானே சட்டங்களும் ஒழுங்குகளும் என்று சிந்திக்காமல் மனம் போல திட்டமிட்ட வதனி கதவைத் தட்டிய காவல் துறையினரைக் கண்டதும் திகைத்து விட்டாள். வீதியில் நிறைய வாகனங்களைக் கண்ட காவல் துறையினர் சந்தேகத்தில் ஒவ்வொரு வீடாக தட்டி சோதித்ததில் இவர்கள் வீட்டில் அதிகம் பேர் நின்றது கையும் மெய்யுமாக பிடிபட்டு விட்டது. என்ன செய்வது என்ற தெரியாமல் சிலர் மேல் அறைகளுக்குள்ளும், சிலர் நிலக்கீழ் அறைகளுக்குள்ளும் ஓடி ஒழிந்தனர். இருந்தும் யாராலும் காவல் துறையினரை ஏமாற்ற முடியவில்லை. அனைவருக்கும் குற்றப் பணமாக ஆளுக்கு ஆயிரம் டொலர் ரிக்கற் எழுதி கொடுக்கப்பட்டது. உறவுகள் நட்புக்கள் அனைவரும் திகைத்து என்ன செய்வது என்று அறியாது வருத்தத்துடனும் ஏமாற்றத்தடனும் நிற்க வதனியோ பலமுறை காவல் துறையினரிடம் மன்னிப்புக் கேட்டும் அவர்கள் எதற்கும் செவிசாய்க்கவில்லை. தமது கடமையில் கண்ணாயிருந்த காவல்துறையினர் இறுதியில் நந்தனின் கையிலும் பத்தாயிரம் டொலருக்கான குற்றப்பணத்திற்கான ரிக்கற்றை திணிக்கவும்; நந்தன் வெலவெலத்துப் போனான். காவல் துறையினர் தமது கடமையை முடித்து விட்டு வெளியே போய் நின்று அனைவரையும் வெளியேறும்படி பணித்து விட்டு தம் வாகனத்தினுள் காத்திருந்தனர். நந்தன் வதனியை திரும்பிப் பார்த்த பார்வையில் வதனி எரிந்து போகாத குறை. வந்திருந்த அனைவரும் தலையைத் தொங்கப் போட்டபடி வெளியேற வதனியோ கையைப் பிசைந்தபடி கண்கலங்க பார்த்துக்கொண்டு நின்றாள். உறவுகள் சிலர் “அவள் வதனிதான் கூப்பிட்டாள் என்றால் எங்களுக்கு எங்கே அறிவு போனது” என்று தம்மை நோவது போல வதனியை திட்டியபடி வெளியேறினர். ஆசைஆசையாக பார்த்துப் பார்த்து செய்த அலங்காரங்கள் கேக் இனிப்பு பலகாரங்கள் உணவுகள் அனைத்தும் தேடுவாரற்று கிடந்தது. இத்தனை ஆண்டு வாழ்வில் இதுவரை நந்தனின் இந்தமாதிரியான கோபத்தைப் பார்த்தறியாத வதனிகூட ஒருகணம் திண்டாடிப் போனாள். மெதுவாக பக்கத்தில் போய்” என்ன நந்தன் நான் உங்கட பிறந்தநாளை வடிவாகக் கொண்டாட வேணுமெண்டுதானே இப்படிச் செய்தனான்” என்ற ஆரம்பிக்கவும் நந்தன் கட்டுக்கடங்காத கோபத்துடன் “உன்னை நான் கேட்டனானா பிறந்தநாள் கொண்டாடச் சொல்லி அறிவு கெட்ட ஜென்மம்”என்று ஆவேசத்துடன் அவளைப் பிடித்து தள்ளி விட்டான். இந்த தாக்குதலை எதிர் பார்க்காத வதனி நிலை தடுமாறி பக்கத்தில் இருந்த மேசையைப் பிடிக்க முயற்சித்தும் பிடி நழுவிப் போக அவளுக்கிருந்த மனக் குழப்பமும் சோர்வும் அவளை பெலவீனப்படுத்த தட்டுத் தடுமாறி அருகிலிருந்த சுவரில் மோதி கீழே விழுந்து விட்டாள். சத்தம் கேட்டு பிள்ளைகள் ஓடி வந்தனர். நந்தனும் ஒருகணம் திகைத்தாலும் ஆத்திரம் அடங்காமல் விறைப்புடன் நின்றான். வதனியின் தலையிலிருந்து இரத்தம் கொட்டியதை கண்ட பின்தான் நந்தனுக்கு நிலமையின் தீவிரம் மனதை உறுத்தியது. உடனடியாக அவளைத் தூக்கி செற்றியில் படுக்கவைத்துவிட்டு அம்புலன்சுக்கு அழைத்தனர். இந்த கொரோனா காலத்தில் அவசர சிகிச்சைப் பிரிவுகளும் அதிக வேலைப் பழுவுடன் இருப்பதால் சிறிது தாமதித்தே உதவி கிடைத்தது. வதனியை அம்புலன்சில் ஏற்ற, நந்தனை கைது செய்து பொலிஸ் விசாரணைக்காக கொண்டு சென்றனர். நந்தன் இதை எதிர்பார்க்கவில்லை. நந்தன் திட்டமிட்டு எதுவும் செய்யா விட்டாலும் குற்றவாளியாகத்தான் பார்க்கப்பட்டான். நந்தன் பயத்திலும் திகைப்பிலும் உறைந்து போனான். தன் பிறந்தநாள் கொண்டாட ஆசைப்பட்டு வதனிக்கு இப்படி ஆகிவிட்டதே என்று நினைக்க வேதனையில் துவண்டு போனான். நிறைய இரத்தம் இழந்து விட்டதால் வதனியும் மிகவும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாள். நந்தனையும் விசாரணை முடியும்வரை பொலிஸ் காவலில் வைத்து விட்டார்கள். பிள்ளைகளோ என்ன செய்வதென்று தெரியாத நிலையில் . இதில் யாரை நோவது? கணவனது பிறந்தநாள் கொண்டாட ஆசைப்பட்ட வதனியையா? ஆத்திரப்பட்ட நந்தனையா? அல்லது அவனது 50வது பிறந்த நாளையா? லோக்டவுணையா? எதை?
    26 points
  9. அன்புள்ள அம்மா அறிவது! நான் நல்ல சுகம். அது போல் நீங்களும் நீங்கள் விரும்பிய இறைவனின் பாதடியில் இளைப்பாறுவீர்கள் என நம்புகின்றேன். அம்மா நீங்கள் என்னை/எங்களை பிரிந்த மாசி மக நாள் வருகின்றது. அம்மா நீங்கள் நான் தினசரி வணங்கும் தெய்வம். அம்மா நான் உங்களுக்கு கடிதம் எழுதி நீண்ட காலமாகிவிட்டது. அதனால் நிறைய எழுத வேண்டும் போல் இருக்கின்றது. அம்மா நான் உங்கள் கடைசிப்பிள்ளை. அதனால் அதிக செல்லம் தந்து வளர்த்து விட்டீர்கள் .அந்த வாழ்க்கை இனி வராது. பொறுப்புகள் கூடி விட்டது.அக்கா அண்ணா பாசங்கள் விரிவடைந்து விட்டது.ஒரு முற்றத்தில் தவழ்ந்து விளையாடிய நாங்கள் வெவ்வேறு உலகில் இருக்கின்றோம். வெவ்வேறு கலாச்சாரத்துக்குள் கட்டுப்பட்டு விட்டோம். சகோதரங்களுடன் முன்னரைப்போல் கதைக்க முடியவில்லை அம்மா.அவர்களுக்கும் எனக்குமிடையில் பெரிய பாசங்கள் குறுக்கிட்டுவிட்டதுஅம்மா.பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என்கிறார்கள். எனது உரிமையை அவர்கள் எடுத்து விட்டார்கள் அம்மா. அன்றிருந்த ஒரு முற்றத்து பாசங்கள் இன்று இல்லையம்மா. உலகம் நாடு ஊர் எல்லாம் இருந்த இடத்தில் இருக்கும் போது பாசங்களும் பிணைப்புகளும் மட்டும் விரிந்து விரசல்கள் ஆகி விட்டதம்மா. அம்மா நீங்கள் அன்று அது உனக்கு இது உனக்கு என எனக்காக சேர்த்ததெல்லாம் இன்று எனக்காகவே இல்லையம்மா. என்னிடமும் இல்லையம்மா. என்னால் அதிகம் எழுத முடியவில்லையம்மா. பலர் வயது போய் விட்டது என்கிறார்கள் அம்மா. ஆனால் நான் உங்களுக்கு இன்றும் பாலகன் தானே அம்மா. இன்னும் புதினம் சொல்வேன் அம்மா......
    26 points
  10. நீண்ட நாட்களாக சன்பிரான்ஸ்சிஸ்கோவில் இருந்து லாஸ் அங்கிலஸ் கடற்கரை ஓரமாக உள்ள ஒற்றையடிப் பாதையில் (அனேகமான இடங்கள்)போக வேண்டுமென்று ஒரு கனவு இருந்தது. ஒரேஒரு முறை ஒரு 50 மைல் தூரம்வரை குடும்பமாக ஒரு நிகழ்வுக்கு போயிருந்தோம்.அப்போதே இந்த பாதையின் மகத்துவம் பற்றி சொன்னார்கள்.அப்போதே எல்லாவற்றையும் கேட்ககேட்க கடற்கரையையும் பார்க்க ஒருமுறை இந்த பாதையில் போனால் என்ன என்று யோசித்தேன். அதன் பின் 2012-14 (சரியாக ஆண்டு நினைவில் இல்லை)ஆண்டளவில் அவுசிலிருந்து அண்ணனின் மகன் நண்பியுடன் வந்திருந்தான்.அவனும் இந்த பாதையை கேள்விப்பட்டோ ஏதோ இதே பாதையில் கொன்வேட்டர் கார் வாடகைக்கு எடுத்து அதுவும் கோடை காலத்தில் மேலே துறந்துவிட்டுட்டு அவ்வளவு தூரமும் இருவரும் பயணம் செய்தனர்.பயணம் முடிந்து அடுத்தநாள் தூக்கத்தால் எழும்பினால் முகம் முழுக்க தோலுரிந்து இருந்தது வேறுகதை. ஏற்கனவே எனக்குள் இருந்த ஆசை இவனும் போன அனுபவங்களை சொல்லசொல்ல இன்னும் வேகம் கூடியது.ஆனாலும் நடக்குமா இல்லையா பத்தோடு பதினொன்றாக இதுவும் போயிடுமா என்று எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில்த் தான் இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அதுவும் முழு தூரமும் நானே கார் ஓடிக் கொண்டு போவேன் என்று நினைத்திருக்கவில்லை. ஒருநாள் காலை 9 மணிபோல புறப்பட்டோம்.ஆங்காங்கே தங்கிதங்கி இடங்கள் பார்த்து போவதற்காக மகளும் மருமகனும் முக்கியமான இடங்கள் என்று 8 இடங்கள் வரை படத்தில் அடையாளமிட்டிருந்தனர்.இந்த பாதையில் பல இடங்களில் கைபேசி வேலை செய்யாது.எனவே வரைபடத்தையும் முன்னரே சேமித்துக் கொண்டேன். வழமை போன்று போகும் பாதையை தேடினால் நெடுஞ்சாலையையே காட்டும்.நெடுஞ்சாலை ஐந்தரை மணிநேரமும் 101 ஆறரை மணிநேரமும் ஆகும்.ஆனால் நான் விரும்பிய பாதையில் தொடர்ந்து ஓடினால் 9 மணிநேரமாகும். இதுதான் நாங்கள் போனபாதை மிகுதி தொடரும்.
    23 points
  11. காலம் தான் எவ்வளவு விரைவாக ஒடி விடுகின்றது....? இப்போதெல்லாம் இந்தக் கடற்கரை வெறிச்சுப் போய்க் கிடப்பது போல அவனுக்கு ஒரு பிரமை...! அந்த நாட்களில் எத்தனை கிடுகுக் கொட்டில்கள் இதே இடத்தில் முளைத்திருந்தன? மயிலிட்டி, வடமராட்சி, பேசாலை, வங்காலை போன்ற இடங்களிலிருந்தெல்லாம் சூடை மீனும், கீரி மீனும் அள்ள வந்தவர்களுடன் உள்ளூர் மீனவர்களிளின் கொட்டில்களும் நிறைந்திருக்கும்! ஒருவரும் தீண்டாத சாளை மீன்களையும் கொழும்பு கோழித்தீன் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் செல்வார்கள்! அரை வாசி வள்ளங்கள் கடலில் நங்கூரமிட்டிருக்க, மிச்சக் கட்டு மரங்கள் கரைகளில் கிடந்தது வெயில் காயும்! கிடுகு பின்னுபவனிலிருந்து...கள்ளிறக்குபவன் வரைக்கும் முகமெல்லாம் புன்னகை நிறைந்திருக்கும்! சுருக்கமாகச் சொல்லப் போனால்....அந்தக் காலப் பகுதியில் புங்குடுதீவின் பொருளாதாரம்....அதி உச்சத்துக்கு உயர்ந்து போயிருக்கும்! சந்திரனின் மனதிலிருந்து ஒரு பெரு மூச்சு அதிக வெப்பத்தைச் சுமந்தபடி வெளியில் போனது! நீண்ட நாட்களின் பின்னர் நெடுந்தீவு போகும் வள்ளத்திற்காகக் குறிகாட்டுவான் கரையில் அவன் காத்திருக்கிறான்! இராஜேஸ்வரி, சில்வர் ஸ்பிறெ, அலை அரசி, குமுதினி, எலாறா என்று வள்ளங்களின் பெயர்கள் நினைவில் வந்து போயின! குமுதினியின் நினைவு வந்த போது...கண்களில் இரண்டு துளிகள் கண்ணீர்த் துளிகள் தோன்றிக் கீழே விழுவதா என்று யோசித்தன!! அவனுக்குச் சிறுவயதில் படிப்பித்த அந்த ஆசிரியையின் முகமும் ஒரு கணம் தோன்றி மறைந்தது! தம்பி...என்ன கனவு கொண்டிருக்கிறீரோ என்று ஒரு பெரியவரின் குரல் அவனை இவ்வுலகத்துக்குக் கொண்டு வந்தது! வள்ளம் வெளிக்கிடப் போகுது...கெதியா ஓடி வாரும்! அந்தக் காலத்தில்...வள்ளத்தின் கொண்டக்ரரிலிருந்து வள்ளத்தின் ஓட்டுனர் வரை, எல்லாரது பெயரும் அவனுக்கு அத்து படி..! இப்போது அவனை ஒருவருக்கும் தெரியாது..! ஆரோ வெளிநாட்டுக்காரர் போல கிடக்குது என்று யாரோ ஒருவர் சொல்லுவது கேட்டது! சில வருடங்கள் அவனை ஒரு வெளிநாட்டுக் காரனாக்கி விட்டதை நினைக்கக் காலம் எவ்வளவு வலிமையானது என தனக்குள் நினத்துக் கொண்டான்! வள்ளம் புறப்பட்ட போது ...தன்னை யாரும் அடையாளம் கண்டு விடக் கூடாது என்பதற்காக...தனது கறுப்புக் கண்ணாடியை ஒரு முறை துடைத்து விட்டுப் போட்டுக் கொண்டான்! நயினாதீவு நாக பூஷணி அம்மனின் கோபுரம் கிட்டக் கிட்ட நகர்ந்து வந்தது! அம்மன் கோபுரத்தைப் பார்க்கும் ஒவ்வொரு தடவையும்...இடையில் நகர்ந்து போய் விட்ட வருடங்களை நினைத்துக் கொள்வான்! ஒவ்வொரு தடவையும்...அந்தக் கோபுரம் உரு மாறிக் கொண்டேயிருக்கும்! நயினாதீவு மக்களின் பொருளாதர நிலையையும். அவர்கள் அப்போதைய மனோ நிலையையும் அந்தக் கோபுரம் பிரதி பலிப்பதாக, அவன் நினைத்துக் கொள்வதுண்டு! தேர்த் திருவிழா பார்க்க வந்து அனியாயமாகக் கடலில் சங்கமித்த அந்த இருபத்தியொரு பேரும் ஒரு முறை வந்து நினைவில் போனார்கள்! வள்ளம் எழாத்துப் பிரிவைத் தாண்டும் போது..தாலாட்டும் அந்தத் தாலாட்டு அவனுக்கு எப்போதுமே மிகவும் பிடித்தமான ஒன்று! இன்றும் அப்படித் தான்! ஒரு மெல்லிய தூக்கம் கூட அப்போது எட்டிப்பார்த்த்து! கண்களை மூடிய படியே சிந்தனையில் மெதுவாக மூழ்கத் தொடங்கினான்! கொஞ்சம் தங்களைச் சிலாகித்துக் கொண்ட ஊரவர்கள் சிலர், வள்ளத்தின் மேல் தளத்திலிருந்து '304' விளையாடத் தொடங்க, அவர்களுக்கிடையே கதையும் களை கட்டத் தொடங்கியது! முதலாமவர் ...இந்த வள்ளங்களுக்கு ஏன் இந்த அறுவாங்கள் பொம்பிளையளின்ர பேரை மட்டும் வைச்சுத் துலைக்கிறாங்க்ளோ தெரியாது! இரண்டாமவர்.... அதுக்கு இப்ப என்ன பிரச்சனை...சூறாவளியளுக்கும் தானே...அவையளின்ர பேரை வைக்கிறாங்கள்! முதலாமவர்.....அது பரவாயில்லை...வள்ளங்களுக்குப் பொம்பிளைப் பெயர் இனிமேல் வைக்கக் கூடாது எண்டு சட்டம் கொண்டு வர வேண்டும்! இரண்டாமவர்....உம்மட மனுசி உம்மை விட்டிட்டு ஓடிப் போனத்துக்காக இப்பிடியே..! முதலாமவர்.. உனக்கு விசயம் விளங்கேல்லைப் போல கிடக்கு...நீ எப்பவுமே ரியூப் லயிற் தானே! இந்தப் பேருகளை வைக்கிறதால மாததத்திலை இரண்டு மூண்டு நாளைக்கு வள்ளம் ஓடாமையெல்லோ கிடக்குது! வள்ளத்தில் உள்ளேயிருந்த பலர் சிரித்தார்கள்....சில பெண் பயணிகள் மெதுவாக நெளிந்தார்கள். அவர்களில் ஒருவர்...அப்புமாரே...கதையை மாத்துங்கோ....உங்கட எலாறா மட்டும் பெரிசாக் கிழிச்சு விட்டுதாக்கும்! இந்தக் கதைகள் பொழுது போவதற்காகவே கதைக்கப் படுகின்றன என்று எல்லோருக்கும் தெரிந்தாலும், சில வேளைகளில்....அடிபிடியிலும் முடிந்த நாட் களும் இல்லாமல் இல்லை! இடையில் கொஞ்சம் அவன் அயர்ந்து போயிருக்க வேண்டும்! தூரத்தில்...பனை மரங்கள் பச்சை வரிசையாகத் தெரியத் தொடங்கி விட்டன! ஊரைக் கண்ட புழுகத்தில்...கறுப்புக் கண்ணாடியைக் கொஞ்சம் கழற்றினான்! அப்போது ஒரு இளம் பெண் சந்திரனைப் பார்த்துச் சிரிக்க...அவனும் மரியாதைக்காகப் பதிலுக்குச் சிரித்து வைத்தான்! இப்போதெல்லாம் அவனுக்குள், அவனையறியாமலே ஒரு விதமான பயம் வந்து குந்திக் கொண்டது! அவனது சாதகக் குறிப்பை எழுதிய பண்டிதர் ஒருவர்....சாதகன் பிறக்கும் போது கன்னி ஸ்தானத்தில் சந்திரன் உச்சம் பெற்று நின்ற காரணத்தால்...சாதகன் குளிர்ந்த கண்களை உடையவனாகவும், பர தார மனம் கொண்டவனாகவும் இருப்பான் என்று எழுதியிருந்தார்! பர தார மனம் என்பதன் பொருள் அவனுக்கு விளங்கா விட்டாலும், ஏதோ பாரதூரமான வார்த்தை என்ற அளவில் அவனுக்குப் புரிந்திருந்தது! சாதகங்களை அவன் நம்புவதில்லை எனினும்....மனதில் ஒரு விதமான பயம் நிரந்தரமாகவே குடி கொண்டு விட்டது! தனது உணர்ச்சிகளை வெளியே காட்டாது மறைக்கும் எண்ணத்துடன்...கறுத்தக் கண்ணாடியை எடுத்து மீண்டும் போட்டுக் கொண்டான்! மாவலி இறங்கு துறையில், கால் வைத்தவுடன்...உடம்பெல்லாம் ஒரு விதமான புத்துணர்ச்சி ஒன்று தோன்றியது போல இருந்தது! அருகிலிருந்த குமுதினிப் படகில் இறந்தவர்களின் நினைவுக் கல்லைக் கண்டதும்...அந்த உணர்ச்சி வந்த மாதிரியே போயும் விட்டது..! அதிலிருந்த பெயர்களை ஒரு முறை வாசித்துப் பார்த்தான்! பல பெயர்கள் மிகவும் பரிச்சயமாக இருந்தன! அந்த ஆசிரியை, மீண்டுமொரு முறை நினைவில் வந்து போனார்! சங்கக்கடைக்குப் பக்கத்திலிருந்த பொன்னம்மா ஆச்சியின் கடையை இப்போது காணவேயில்லை! அந்த நாட்களில் பணம் எதுவும் வாங்காமலே, யானை மார்க் ஒரேன்ஜ் பார்லியை அந்த ஆச்சி அன்புடன் உடைத்துத் தரும்போது, வள்ளத்தில் வந்த களைப்பு உடனேயே பறந்து போய் விடுவது நினைவுக்கு வந்தது! அடுத்த பகுதியில் முடியும்…!
    23 points
  12. என் பிள்ளையின் திருமணம் இப்போதெல்லாம் பிள்ளைகளை மணவறை வரை கொண்டு வருவதென்பது பெற்றோருக்கு மிகக் கடினமானதொரு செயலாகி வருகிறது. அந்த வகையில் எனது மூத்த மகனுக்கு அத்தருணம் கைகூடி வந்தவேளை.... எந்த நிலை வந்த போதும் பெற்றோர் கேட்டதை செய்து முடித்த பிள்ளைகளின் கனவுகளை நிறைவேற்றுவதை தவிர வேறேன்ன பேறு வேண்டும் எமக்கு. வருக மருமகளே வாழ்க மணமக்கள் வாழ்க வளமுடன் ❤️ இப்படி திரிந்தவர்... இப்ப .....
    22 points
  13. ஊரில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும்,…..நெடுந்தீவின் அடிப்படை அடையாளங்கள் இன்னும் மாறாது அப்படியேயிருந்தன ! கற்களால் அடுக்குப்பட்ட பயிர் வேலிகள், எவரோ தாட்டு விட்டுப் கிழங்கு பிடுங்க மறந்து போன பனம் பாத்திகளிலிருந்து முளைத்த பனங்கூடல்கள், மாட்டு வண்டித் தடங்கள் என்பன இன்னும் இருந்தன! முள்ளிவாய்க்காலில் மரணித்துப் போனவர்களில், விகிதாசார அடிப்படையில் பார்த்தால், நெடுந்தீவு தான் அதிக விலை கொடுத்தாக இருக்கும் என்பது சந்திரனின் அனுமானமாக இருந்தது! ஸ்ரீ மாவோ அம்மையார் கொண்டு வந்த மரவள்ளி வளர்க்கும் திட்டத்தினாலும் , முத்தையன்கட்டுப் பிரதேசத்தில் இலவசக் காணி பகிர்ந்தளிப்புத் திட்டத்தினாலும் கவரப்பட்டு அங்கு சென்றவர்களில் பலரும் , அவர்களது சந்ததியினரில் சிலரும் அவர்களுக்குள் அடங்குவர்! குறிப்பாக, இசைப்பிரியா போன்றவர்களின் இழப்பு அவனை மிகவும் பாதித்திருந்தது! தம்பி, இஞ்சையோ நிக்கிறியள் என்று கேட்ட படியே, குறிகாட்டுவானில் வள்ளத்துக்கு வரும்படி கூப்பிட்ட அந்தப் பெரியவர் அருகில் வந்தார்! வந்தவர், எங்க தங்கப் போறீங்கள் தம்பி என்று கேட்டார் ! மகா வித்தியாலயத்துக்குப் பக்கத்தில , எங்கையாவது ஒரு ஹோட்டல்ல நிக்கலாம் எண்டு யோசிக்கிறன்! தம்பி, இப்ப வெளிநாட்டுக் காசு புழக்கத்துக்கு வந்த பிறகு எல்லாம் அவையின்ர ஹோட்டல்களாய்த் தான் இருக்குது! தம்பிக்குக் கனநாள் நிக்கிற பிளானோ? அந்தப் பெரியவரது பேச்சின் சாராம்சம் அவனுக்குள் ஓடி வெளிப்பதற்கு அவனுக்குக் கொஞ்சக் கால அவகாசம் தேவைப் பட்டது! அவையின்ர என்றால்…...ம்ம்ம்….இன்னும் நெடுந்தீவு மாறவேயில்லை என்று தனக்குள் நினைத்துக் கொண்டான்! அது சரி…..இவருக்கு எப்படித் தெரிந்தது , நான் அவையின்ர ஆக்களில் ஒருவன் இல்லையென்று…! அவன் யோசிக்கும் போதே பெரியவர் தொடர்ந்தார்! தம்பி, நெழுவினிப் பிள்ளையார் கோவிலடிக்குப் பக்கத்தில ஒரு வீடு இருக்குது! வீட்டுக்காரர் எல்லாரும் வெளிநாட்டிலை தான் இருக்கினம்! இப்ப வீடு சும்மாதான் கிடக்குது! உங்களுக்கு விருப்பமெண்டால் தாராளமாக அங்கு நிற்கலாம்! வேணுமெண்டால் என்னிட்ட ஒரு மோட்டச் சைக்கிளும் இருக்குது! உங்களுக்குத் தேவையான இடத்தில நான் கொண்டுபோய் இறக்கி விடுவன் என்றும் கூறினார்! சரி பெரியவர், எவ்வளவு காசு எண்டும் பேசுவமே என்று சந்திரன் சொல்லவும், என்னடா தம்பி….மீன் கரைஞ்சா எங்க போகப்போகுது….ஆணத்துக்கை தானே கிடக்கப் போகுது! நீங்களாய்ப் பாத்துத் தாறதைத் தாங்கோவன் எண்டு சொல்லவும் சந்திரனுக்கு கொஞ்சம் உதறலெடுக்கத் தொடங்கியது! ஒரு வேளை பெரியவர் தன்னைப் பற்றி ஏதாவது மணந்து கிணந்து இருப்பாரோ? இருந்தாலும் குறுக்கால வந்த தெய்வத்தையும் திருப்பி அனுப்ப மனம் வரவில்லை! பெரியவரே, நான் நீங்கள் சொல்லுற இடத்தில நிக்கிறன்! ஆனால் ஒரு கொண்டிசன்! எனக்கு உங்கட பழைய சைக்கிள் ஏதாவது இருந்தால் அதைத் தந்தால் போதும்! சாப்பாட்டுக்கு கிட்டடியில கடையள் ஏதாவது இருக்கும் தானே...என்று கேட்கவும்….என்ன தம்பி நீர், நாங்கள் என்னத்துக்கு இருக்கிறம்? நீர் என்ன விருப்பம் எண்டு சொல்லும் , நான் செய்விச்சுத் தாறன் எண்டு சொல்ல சந்திரனும் சம்மதித்தான்! இருந்தாலும் , பெரியவரை ஒரு முறை ரெஸ்ற் பண்ணிப் பார்க்கவேணும் என்று நினைத்தவனாக, ஐயா….ஒருக்கால் ஈச்சங்காட்டுப் பக்கம் போகவேணும், கொண்டு போய் விடுவீங்களோ எண்டு கேட்கவும் , பெரியவர் திடுக்கிட்டவர் போலச் சந்திரனைப் பார்த்தார்! தம்பிக்கு இடங்கள் தெரியுமோ என்று மிகவும் ஆச்சரியமாகக் கேட்கவும்….இவனுக்கு கொஞ்சம் மனதில் நிம்மதி வந்தது! இல்லை ஐயா, எனது நண்பனொருவன் தன்னுடைய பழைய வீடடைப் பார்த்து வரும்படி சொல்லியிருந்தான்! ஈச்சங்காட்டில எவடம்? விளாத்தி மரத்துக்கு கிட்டவாக! சரி, எதுக்கும் இதை வைச்சிருங்கோ எண்டு சொல்லி கொஞ்சக் காசை அவரிடம் கொடுக்க, அவர் என்ன தம்பி இப்பவே எண்டு சொல்லிக் சிரிக்கப் பெரியவருக்கு கடவாய்ப்பற்கள் ஒன்று கூட இல்லை என்பதும் அவனுக்கு நன்றாகத் தெரிந்தது! உடனேயே அங்கே நின்ற பெடியன் ஒருவனைக் கூப்பிட்டுத் தம்பி இந்த ஐயாவைக் கொண்டு போய் ஈச்சங்காட்டிலே இறக்கி விடு என்று கூற…..அவனும் பின்னால் திரும்பிப் பார்த்து விட்டுத் தான் தான் அந்த ஐயா என்று உறுதி படுத்திய பின்னர் மோட்டார் சைக்கிளில் லாவகமாக ஏறி அமர்ந்து கொண்டான்! ஈச்சங்காட்டில் ஒரு ஈச்ச மரங்களையும் இப்போது காணவில்லை! விளாத்தி மரத்தடியில் வீடு இருந்த இடம் வெறிச்சோடிப்போய்க் கிடந்தது! அந்த விளாத்தி மரம் மட்டும் இன்னும் அப்படியே நின்றது! தனது மூதாதைகளின் மூச்சுக்காற்றை இந்த மரமும் சுவாசித்திருக்கும் என்ற நினைவே...அவனுக்கு இதமாக இருந்தது! இங்கு தான் இந்தக் கதையின் கதாநாயகியை அடிக்கடி சந்திரன் இரகசியமாகச் சந்திப்பதுண்டு! இவன் கதைகள் சொல்லும்போது விழிகளை அகல விரித்தபடியே...அவள் கேட்டுக் கொண்டிருப்பாள்! இந்த விளாம்பழங்களை யானை எப்படிச் சாப்பிடும் எண்டு உனக்குத் தெரியுமா? இல்லை என்று அவள் தலையாட்ட ‘ஒரு சின்ன ஓட்டை மட்டும் போட்டுவிட்டு, அதன் உள்ளடையை அப்படியே உறிஞ்சி எடுத்து விடும்! அப்போ விதைகளை என்ன செய்யும்? அதை அப்படியே பழத்துக்குள் விட்டு விடும்! அவள் , அது உனக்கெப்படித் தெரியும்? சாப்பிட்ட பழத்தை யானை ஒருமுறை குலுக்கிப் பார்க்கும்! அப்போது அருகில் நிற்பவர்களுக்குக் கிலுக்கட்டி கிலுக்குவது போல ஒரு சத்தம் கேட்கும்! இதிலிருந்து உனக்கு என்ன தெரிகின்றது? அவளின் பதில் உடனடியாகவே வந்தது! யானை தனது அடுத்த தலைமுறையை மனதில் கொண்டு….விதைகளைச் சாப்பிடாமல் அப்படியே விட்டு விடுகிறது…! அடுத்து வரும் மழைக்கு விளாம்பழத்தின் கோது உடைய விளாத்தி மரங்கள் முளைக்கும்! இப்படியான பதில்கள் தான்...சந்திரனுக்கு அவளிடம் ஒரு விதமான ஈர்ப்பை உருவாக்கியிருக்க வேண்டும்! அவளை முதலில் சந்தித்த சம்பவம் இன்னும் தெளிவாகவே அவனது நினைவில் இருந்தது! வீட்டில் விருந்தினர்கள் வந்திறங்கியிருந்தார்கள்! பொழுது பின்னேரமாகி விட்டிருந்தது! சந்திரனின் தாயார் சந்திரனிடம் கொஞ்சம் காசைக் கொடுத்துத் தம்பி, கடற்கரைக்குப் போய் மீன் ஏதாவது வாங்கிக் கொண்டு வா என்று கூற….அம்மா உங்களுக்கென்ன விசரே, இந்த நேரத்தில கடற்கரையிலே ஒரு வள்ளமும் வராது என்று பின்னடிக்க அம்மாவும், ஆராவது வீச்சு வலைக்காரர் நிப்பாங்கள், போய்ப்பார் என்று சொல்லத் தயக்கத்துடன் கடலுக்குப் போனவனுக்கு ஆச்சரியமாக இருந்தது! அவன் அம்மா சொன்ன மாதிரியே ஒரு வீச்சு வலைக்காரன் நின்று கொண்டிருந்தான்! அவனது இடுப்பில் தொங்கிய பறியும் காற்றில் அசையவில்லை! ம்ம்ம்...பறிக்குள்ள என்னவோ பாரமான சாமான் என்னவோ கிடக்குது! பிரச்சனை என்னவென்றால், அவன் கரைக்கு வரும் வரை பார்த்துக் கொண்டிருந்தால், கரையில் கன சனம் நிண்டு...மீனுக்கு விலையைக் கூட்டிப் போடும்! கடல் கொஞ்சம் வத்தாக இருந்ததால்...மீன் காரனிடம் நடந்தே போக முடிவு செய்தான்! மீன் காரனுக்கு கிட்டப் போனதும் அவனது அதிஸ்ட்டத்தை நினைத்து...தனது முதுகில் தட்டித் தன்னைத் தானே பாராட்டியும் கொண்டான்! ஆம், அந்த மீன் பறிக்குள் ஒரு பால் சுறாவும் இருந்தது! பால் சுறா, அதுவும் ஆண் சுறா எல்லாருக்கும் பிடிக்குமென அவனுக்குத் தெரியும்! பின்னேரமானதால் ….குழல் புட்டும் அவித்து சுறா வறையும் வைக்க அந்த மாதிரி இருக்கும்! விலையும் சரியாக இருக்கவே...வாலைப் பிடித்த படி...அந்தப் பால் சுறாவைத்...தண்ணீருக்குள் விட்ட படி இழுத்துக் கொண்டு கரைக்கு நடந்து வந்தான்! அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன! ,முதலாவது சுறா பழுது படாமல் இருக்கும்! இரண்டாவது…..தமிழர்களுக்கே ,,தனித்துவமான குணமான...ஆற்றையும் கண்பட்டு விடக்கூடாது என்ற ஆதங்கமும் தான்! கரைக்கு ஒரு இருபதடி தூரம் கூட இருக்காது! ‘கிளிக்’ என்றொரு சத்தம் கேட்டது! தண்ணீரில் ஒரு வட்டம் போட்டுவிட்டுப் பால் சுறா, அவைனப் பார்த்துக் கண்ணை ஒரு முறை அடித்து நன்றி சொல்லி விட்டுப் போயே விட்டது! இப்போது அவனிடம் காசுமில்லை! கறிக்குச் சுறாவுமில்லை! கண்ணீரும் கட்டுப்படுத்த முடியாமல்…...வரத் தொடங்கியது! அப்போது ‘கிளுக்” என்று யாரோ கரையில் நின்று சிரிப்பதும் தெளிவாகச் சந்திரனுக்குக் கேட்டது! அடுத்த பகுதியில் தொடரும்….!
    22 points
  14. இனி இளவேனில் காலம் - நிழலி வெயில் சரம் பிடித்து நிலம் நோக்கி இறங்குகின்றது வானை வகுந்தெடுத்து பெரும் காற்று வீசுகின்றது பனிக்காலத்தை பெயர்த்து இளவேனில் விதைகளை விதைத்து செல்கின்றது வசந்தகாலத்தின் முதல் பாடல்களை சுமந்த வண்ணம் வனக் குருவிகள் ஊர் திரும்புகின்றன குளிர்காலம் இராப்பாடகனின் தொலைதூர குரலை போல் மெல்ல தேய்கின்றது முதன் முதலில் குறுக்கு கட்டியவளின் மார்பின் சரிவுகளில் தேங்கிய நீர்த் துளி போல் இலைகள் துளிர்க்க தொடங்குகின்றன வனம் இனி சூல் கொள்ளும் சிற்றாறுகள் உறைவிலிருந்து உருக்கொள்ளும் முத்தங்களுக்கிடையில் பரிமாற ரோசாக்கள் பூக்கத்தொடங்கும் கட்டைக் கால் தாராக்கள் குஞ்சுகளுடன் வெளிவரும் ரக்கூன்கள் குட்டிகளுடன் முற்றத்தில் வந்து நின்று விடுப்பு பார்க்கும் ஒரு நாளும் கேட்காத பாடல்களை சிறுகுருவிகள் பாட புதிய காலைகள் மலரும் பகல் ஒரு நீண்ட ரயிலாக வளைந்து செல்ல இரவு கடைசிப் பயணியாக வந்து அமரும் காலம் மீண்டும் தப்பாமல் இளவேனில் காலத்தை கொண்டுவரும் (இன்று நீண்ட நாட்களின் பின் வெப்பநிலை நேர் 11 இற்கு வருகின்றது. என் சிறு பூந்தோட்டத்தின் செடியில் இவ் வருத்தின் முதல் துளிர் தெரிகின்றது)
    22 points
  15. முழுப்பெயர் - முதற்பெயர், இடைப்பெயர், குடும்பப்பெயர் ... அண்மையில் பிள்ளைகளுடன் எனது பெயர் பற்றிய உரையாடல் வந்தது. அவர்களுக்கு எனது முதற்பெயர் என்ன என்பதில் குழப்பம். ஆனால் அதை தெளிவாக்க முயன்று இன்னும் குழப்பிவிட்டேன் என்று நினைக்கின்றேன்.🥴 இந்தப் பெயர்ச் சிக்கல் தமிழர்களுக்கு நிறையவே உண்டு. புலம்பெயர்ந்து வரும்வரை பிரச்சினை தராத பெயர், இலண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் பாஸ்போர்ட் இல்லாமல் வந்து இறங்கியதும் பிரச்சினையாகி விட்டது. சகாரா பாலைவனத்தின் வெம்மையை பல்லாயிரம் அடிகளுக்கு மேலால் பறந்துகொண்டிருந்த விமானத்தில் உணர்ந்தபோதே விமானத்தின் ரொய்லட்டில் பாஸ்போர்ட்டை, அதை வெட்டிக்கிழிக்க என்று முன்னேற்பாடாக எடுத்துச்சென்ற சின்னக்கத்தரிக்கோலால் வெட்டி ஃபிளஷ் பண்ணிவிட்டேன்! ஆனால் எங்கிருந்து விமானம் வந்தது, பாஸ்போர்ட் கிழித்தது எல்லாம் “ரூட்” அடிபடக்கூடாது என்று குடிவரவு அதிகாரிகளுக்குச் சொல்லவில்லை. ஆவணங்கள் இல்லாமல் வந்து இறங்கியவர்களை விசாரித்து அனுபவப்பட்டவர்கள். வழமையான முதலாவது கேள்வியாக பெயரைக் கேட்டபோது எனது ஒற்றைப்பெயரைச் சொன்னேன். அது போதாது இரண்டு பெயர்களையும் சரியாகச் சொல்லுங்கள் என்றபோது, எனக்கு “திக்” என்றது. எனக்கு இரண்டு பெயர்கள் இருப்பதை (பெயர் இடையில் மாற்றப்பட்டது தனிக்கதை) என்னுடன் கூட வந்தவர்களே அறியாதபோது எப்படி இவர்கள் கண்டுபிடித்தார்கள் என்று ஆடிப்போய் முழியைப் பிதுக்கினேன். இரண்டு பெயர்கள் வந்த கதையைச் சொல்லும் அளவுக்கு ஆங்கில அறிவும் இல்லை, தவிர அதைச் சொல்லும் நோக்கமும் துளியும் இல்லை என்பதால் திரும்பவும் எனக்கு ஒரு பெயர்தான் என்று எனது ஒற்றைப்பெயரைச் சொன்னேன். அவர்களின் பார்வை அப்பன் பெயர் தெரியாத அனாதைப்பயலைப் பார்க்கிற மாதிரித் தெரிந்தது. தங்கள் நேரத்தை வீணாக்கவேண்டாம் என்று கொஞ்சம் மிரட்டுவதுபோல எனது முழுப்பெயரை எழுதச் சொன்னார்கள். குடும்பப்பெயரையும் அடிக்கோடிடவேண்டும் என்றார்கள். முழுப்பெயர் விளங்கியது. அது என்ன குடும்பப்பெயர்? இப்படி ஒன்றும் எங்கள் குடும்பத்தில் இல்லையே! தமிழர்களின் முழுப்பெயர்கள் இன்னாரின் பிள்ளை இவன்/இவள் என்று இருக்கும் அல்லது இன்னாரின் மனைவி இவள் என்று இருக்கும். தந்தை அல்லது கட்டிய கணவன் பெயர் முன்னுக்கும் பிள்ளைகளினதும் மனைவியினதும் பெயர் பின்னுக்கும் எழுதுவதுதான் மரபு. உதாரணமாக செல்லையாவின் செல்லமகள் சிவகாமி என்றால் முழுப்பெயர் “செல்லையா சிவகாமி” என்று இருக்கும். அதுவே சிவகாமி செந்தூரனைத் திருமணம் செய்தால் “செந்தூரன் சிவகாமி” என்று மாறிவிடும். இப்படி முழுப்பெயர் எழுதும்முறை தெரிந்திருந்தாலும், எனது பெயரை எண்சோதிடப்படி பாட்டனார், தந்தையாரின் முதலெழுத்துக்களுடன் பாவிக்கவேண்டும் என்று பெயர் மாறியபோது வீட்டில் சொல்லியிருந்ததால் பாட்டனார், தந்தையார் பெயர்களுடன் எனது பெயரையும் எழுதினேன். இடமிருந்து வலமாக மூன்றாவதாக இருந்த எனது தனிப்பெயருக்கு அடிக்கோடிட்டேன். இப்படியாக, எனது தனிப்பெயர் குடும்பப்பெயராகியது! அப்படியே வங்கி, கல்லூரி, பல்கலைக்கழகம், வேலை என்று எல்லா ஆவணங்களிலும் முழுப்பெயர் மூன்றாகவும், எனது பெயர் குடும்பப்பெயராகவும் வருமாறு பார்த்துக்கொண்டேன். எனினும் விமானப் பயணச் சீட்டுக்கள் பதிவு செய்யும்போதும், விசா எடுக்கப் போகும்போதும் படிவங்கள் நிரப்புவதில் குழப்பங்கள் வரும். நான் மூன்று பெயர்களை வேறு வைத்திருப்பதால் படிவங்களில் உள்ள கட்டங்கள் கூட போதாமல் இருக்கும். எனது முழுப்பெயரை ஆங்கிலத்தில் எழுத இரண்டு இடைவெளிகளுடன் 31 கட்டங்கள் வேண்டும்! நண்பன் ஒருவனின் பாட்டன் தனது தமிழ் மீதான பற்றைக்காட்ட நச்சினார்க்கினியனார், பரிமேலழகனார் என்று அதி நீளமான பெயர்களை வைத்ததுபோல, எனது பாட்டனார் செய்யவில்லை. என்றாலும் தனது முப்பாட்டன் முருகன் மேல் கொண்ட பக்தியால் முருகனின் பெயர்களையே மூன்று ஆண் பிள்ளைகளுக்கும் வைத்திருந்ததால் கடைக்குட்டியான தந்தையாருக்கு ஒரு முருகனின் பெயர்! அது எனது முழுப்பெயரின் நடுவில் உள்ளது. சிங்களவர்களில் சில பிரபலங்களின் பெயர்கள் இன்னும் நீளமாக இருப்பதால், உதாரணமாக வர்ணகுலசூரிய பத்தபெந்திகே உஷாந்த ஜோசேஃப் சமிந்த வாஸ், அவர்களுடன் ஒப்பிடும்போது பரவாயில்லை என்று சமாதானம் அடைந்துவிடுவேன். பிச்சைக்காரன் தன்னைவிட வசதிகுறைந்த பிச்சைக்காரனைப் பார்த்துத்தானே திருப்தியடைய முடியும். அதிலும் இவர்கள் சிங்களவர்கள் வேறு!😊 முன்னைய காலங்களில் தமிழின் மீதான பற்றினால் பொதுவாக நீளமான பெயர்களைத் தமிழர்கள் விரும்பி வைப்பதுண்டு. எனினும் பெயர்களின் நீளங்கள் சமூகக்கட்டமைப்பின் பிரமிட் நிலையையும் காட்டும் குறிகாட்டிகளாகவும் கருதப்பட்டதுண்டு. சமூகப்படிநிலையில் கீழே இருப்பவர்கள் நீளமான பெயர்களை வைக்க விரும்பி விண்ணப்பித்தவேளைகளில், பதிவாளர்களாக இருந்த உயர்குடியினர் கந்தன், செல்லன் என்று சுருக்கிவிட்ட வரலாறும் தமிழ் சமூகத்தில் உண்டுதானே. இப்படியாக நீளமான பெயர் ஒருபக்கம் பிரச்சினையாக இருந்தாலும் முக்கியமாக குடும்பப்பெயர் என்று ஒன்றில்லாதது பொதுவாக தமிழர்களுக்கான பிரச்சினையாக இருக்கின்றது போலுள்ளது. இணையத்தில் தேடினால் தமிழர்களைப் போலவே வேறு இனங்களிலும் குடும்பப்பெயர் எழுதுவது ஒரு சிக்கலாக இருப்பதாகத் தெரிகின்றது. சிங்களவர்களும், வட இந்தியர்களும், ஐரோப்பியர்களின் கொலனியாக இருந்த காலத்தில் அவர்களுக்கு சேவகம் செய்தவர்களும், மதம் மாற்றப்பட்டவர்களும் குடும்பப் பெயர்களைப் பாவித்து வருகின்றார்கள். தமிழர்களுக்குத்தான் இந்த Last name/Surname/Family name என்று ஒன்றில்லை. அதனால் தமிழருக்கு இந்த குடும்பப்பெயர் விடயம் இன்னும் நீடித்துக்கொண்டிருக்கும் சிக்கலாக இருக்கின்றது! எனக்குத் தெரிந்து தமிழ் மக்கள் எல்லோருக்குமே ஒரேயொரு பெயர்தான். சுருக்கியபெயர், செல்லப்பெயர், பட்டப்பெயர், புனைபெயர், இயக்கப்பெயர் இதெல்லாம் கணக்கில் எடுப்பதில்லை. இலங்கையில் பிறந்திருந்தால் சட்டபூர்வமாக பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் இருக்கும் Given name என்பதுதான் எங்களைக் குறிக்கும் தனிப்பெயர். ஆறுமுகம், கந்தசாமி என்று எதுவானாலும் ஒரே ஒரு பெயர்தான். நாங்கள் பெயர் எழுதும் முறையில் எங்கள் தனிப்பெயர் குடும்பப்பெயராக வருவதும் குழப்பங்களை ஏற்படுத்துகின்றது. மேற்கத்தையரின் வழக்கப்படி ஒரு குடும்பத்தில் எல்லோருக்கும் குடும்பப்பெயர் ஒன்றாகத்தான் இருக்கவேண்டும். ஆனால் நாங்கள் எங்கள் தனிப்பெயரை தமிழ் மரபுப்படி பின்னுக்கு எழுதி குடும்பப்பெயராகப் பாவிக்கும்போது கணவன், மனைவி பிள்ளைகளுக்கு வேறு வேறு குடும்பப்பெயர்கள் வந்துசேர்கின்றது. மேற்கத்தையர் ஒரு மாதிரி மேலேயும் கீழேயும் எங்களைப் பார்க்கவைக்கின்றது. சகோதரர்களுக்கு ஸ்பொன்சர் கடிதம் எழுதும்போது அவர்கள் தங்கள் தனிப்பெயரை குடும்பப்பெயராகப் பாவித்தால், குடும்பப்பெயர் ஏன் வேறாக இருக்கின்றது என்பதற்கு கூடுதலாக விளக்கம் வேறு கொடுக்கவேண்டும். இதை நான் கவனமாகச் செய்ததுண்டு. அதிலும் சகோதரர்கள் என்னைப்போல மூன்று பெயர்களைப் பாவிக்காமல் தந்தை, தமது பெயர் என்று இரண்டுடன் உள்ளதால் (எதை குடும்பப்பெயராகப் பாவிக்கின்றார்கள் என்பதே இன்னமும் குழப்பம்தான்) விலாவாரியான விளக்கங்கள் கொடுத்திருக்கின்றேன்! புலம்பெயர் நாட்டில் வசிக்கும் ஒருவர் தனது தந்தையின் பெயரை குடும்பப்பெயராக வைத்திருந்தால், அவர் இலங்கைசென்று திருமணம் முடித்து வரும்போது, கட்டிய மனைவி தனது மாமானாரின் பெயரைத் தனது குடும்பப்பெயராக வைத்திருக்க சங்கடப்படுவதும் உண்டு. உதாரணமாக கந்தசாமி மகன் கேதீஸ்வரன் குடும்பப்பெயராக கந்தசாமி என்று பாவித்தால் அவர் சுப்பிரமணியம் மகள் வதனாவை திருமணம் செய்த பின்னர், வதனா குடும்பப்பெயரை மாற்றினால் “வதனா கந்தசாமி” என்று வரும். இதில் கேதீஸ்வரன் பெயரே காணாமல் போய்விடும்! வதனா மாமனாரின் பெயரை தனது குடும்பப்பெயராக எழுதுவதை விரும்பாமலும் இருக்கலாம்! அதே போல பிள்ளைகள் பிறக்கும்போது பிள்ளைக்கு வைக்கும் பெயரை முதற்பெயராகப் பாவிப்பதா அல்லது குடும்பப்பெயராகப் பாவிப்பதா என்பதிலும் குழப்பங்கள் உண்டு. தந்தையின் பெயரைக் குடும்பப்பெயராக வைத்தால் ஒவ்வொரு தலைமுறைக்கும் குடும்பப்பெயர் மாறிக்கொண்டிருக்கும். இது குடும்பப்பெயரின் நோக்கமாகிய பரம்பரையை இலகுவாக அறிவதையே இல்லாமல் ஆக்கிவிடும். மறுவளமாக எங்கள் தனிப்பெயரை குடும்பப்பெயராக மாற்றியதுபோல, பிள்ளைகளின் தனிப்பெயரை குடும்பப்பெயராக மாற்றினாலும் நிலைத்த குடும்பப்பெயர் உருவாகாது. அதுவே பெண்பிள்ளையாக இருந்தால் அவரின் தனிப்பெயரை குடும்பப்பெயராகவும் வைப்பதும் சிக்கல்தான். ஏனெனில் பெண்பிள்ளைகளின் பெயரை குடும்பப்பெயராகப் பாவிக்கும் நடைமுறை இல்லை. உதாரணத்திற்கு ஞானவேல் மகன் எழில்வேந்தன் தனது பெயராகிய எழில்வேந்தனை குடும்பப்பெயராகக் கொண்டிருக்கின்றார் என்று வைப்போம். அவருக்கு மூத்த பிள்ளையாக பிறந்த மகனுக்கு அர்ஜுன் என்று பெயர்சூட்டி, பிள்ளையின் தனிப்பெயரையே குடும்பபெயராகவும் பதிந்துவிட்டார். பின்னர் பெண்பிள்ளை பிறந்தபோது சஹானா என்று பெயரைவைத்து பெண்பிள்ளை என்பதால் தனது பெயராகிய எழில்வேந்தனை குடும்பப்பெயராக வைத்தால் பிள்ளைகள் இருவருக்கும் வேறு வேறு குடும்பப்பெயராகிவிடும். இவ்வாறு பல வேறுபட்ட குழப்பங்கள் நம்மவரிடையே உண்டு. கணணிமயமாக்கப்பட்ட இக்காலத்தில் பெயர்களில் குடும்பப்பெயர்தான் தரவுத்தளங்களில் முதன்மைத் திறவியாக (primary key) உள்ளது. எனவே, குடும்பப்பெயர்களை எப்படி பயன்படுத்தவேண்டும் என்பதில் கவனம் தேவை. முழுப்பெயர் பொதுவாக இரண்டு அல்லது மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. முழுப்பெயர் மூன்று பகுதிகளாக எழுதும்போது இப்படி வரும்: [முதற்பெயர்] [நடுப்பெயர்] [குடும்பப்பெயர்] முழுப்பெயர் இரண்டு பகுதிகளாக எழுதும்போது நடுப்பெயர் இல்லாது வரும்: [முதற்பெயர்] [குடும்பப்பெயர்] ஆங்கிலத்தில் First name, Forename, Given name, Christian name என்று விதம்விதமாகச் சொல்லப்படுபவை எல்லாம் ஒருவரை அழைக்கும் முதற்பெயரைத்தான் குறிக்கின்றன. அதேபோல Last name, Second name, Surname, Family name என்று சொல்லபடுபவை எல்லாம் குடும்பப்பெயரைத்தான் குறிக்கின்றன. Middle name கிறீஸ்த்த மதத்தினர் ஞானஸ்நானத்தின்போது பெற்றுக்கொள்ளும் பெயர். எனினும் வேறு வகைகளிலும் இதனைப் பாவிக்கலாம். அவை பற்றியும் பின்னர் சுருக்கமாகப் பார்க்கலாம். அத்துடன் குடும்பப்பெயரைத் தவிர மற்றைய பெயர்கள் அனைத்தையும் முதற்பெயர் என்றும் கொள்ளலாம்! இப்படி பெயர் என்பதே ஒரே குழப்பம் நிறைந்து இருக்கின்றது! இந்த முழுப்பெயர் எழுதும் முறை வந்த வரலாற்றைப் பார்ப்போம். ரோமானிய ஆண்கள் மூன்று பெயர்களைக் கொண்டிருந்தார்களாம். ஒருவரை அடையாளப்படுத்தும் தனிப்பெயர் (praenomen); அவரது குடும்பப்பெயர் (nomen); அவரது குடும்பக்கிளைப் பெயர் (cognomen). அதிகமான குடும்பக்கிளைப் பெயர்களைக் கொண்டு ஒருவரின் பெயர் மிக நீளமாக அமைந்திருந்தால் அவரின் சமூக மதிப்பு கூடியிருக்கும். ஏனெனில் நீளமான பெயர் வம்ச விருட்சத்தை (family tree) இலகுவாக அடையாளம் காண உதவும். ஆனால் பெண்களுக்கு அவர்களது தனிப்பெயரும் குடும்பப்பெயரும் மட்டும்தான் இருந்தன. அடிமைகளுக்கோ வெறும் தனிப்பெயர்தான்! இப்படிப் பெயரானது பல பெயர்களின் தொடராக குறிப்பிடப்படும் மரபு 17-18 ஆம் நூற்றாண்டுகளில் மேற்கு நாடுகளுக்கும் பரவியது. அதிகாரம் மிக்க பிரபுத்துவ வம்சத்தினர் தமது குழந்தைகளுக்கு மிக நீளமான பெயர்களைச் சூட்டி சமூகத்தில் தமது உயர்நிலையை உறுதிப்படுத்தினர். அது இன்றளவும் தொடர்கின்றது. பிரித்தானிய இளவரசர் வில்லியத்தின் மகன் இளவரசர் ஜோர்ஜின் முழுப்பெயர் George Alexander Louis Mountbatten-Windsor என்றுள்ளது. ஸ்பானியர்களும், அரேபியர்களும் தமது குழந்தைகளின் பெயர்களில் தந்தைவழியோடு, தாய்வழி பரம்பரைப் பெயர்களையும் சூட்டி வம்ச விருட்சங்களை பெயர்களிலேயே நிலைநிறுத்தினர். எனினும் ஐரோப்பியர்கள் இடைப்பெயராக (Middle name) எதைச் சூட்டுவது என்பதில் ஆரம்பத்தில் சற்றுக் குழம்பியதாகத் தெரிகின்றது. குடும்பக் கிளைப்பெயரையா அல்லது புனிதர்களின் (saint) பெயரையா சூட்டுவது என்று தீர்மானிக்க முடியாமல், பின்னர் ஞானஸ்நானப் பெயரை இடைப்பெயராகச் சூட்டினர். இவ்வாறு முதற்பெயர், இடைப்பெயர், குடும்பப்பெயர் என்று பெயர் வைக்கும் மரபு அமெரிக்கா போன்ற குடியேற்ற நாடுகளுக்கும், ஐரோப்பியர்களின் கொலனிகளுக்கும் பரவியது. எனினும் இக்காலத்தில் பலர் இடைப்பெயரை சுத்தமாகப் பாவிப்பது இல்லை. அத்தோடு பலர் மதம் சார்ந்த இடைப்பெயரைத் தவிர்த்து வேறு புதுமையான முறைகளில் இடைப்பெயர்களைச் சூட்டிக்கொள்கின்றார்கள். பொதுவாக தாயின் கன்னிப்பெயரை (Maiden name) இடைப்பெயராக பாவிக்கும் வழக்கம் அதிகரித்து வருகின்றது. திருமணமான பெண்கள் கணவர்களின் குடும்பப்பெயரை ஏற்றுக்கொள்வது வழமை. ஆனாலும் பெண்கள் தங்கள் தனித்துவத்தை இழக்க விரும்பாத தற்காலத்தில் கன்னிப்பெயரை தொடர்ந்தும் குடும்பப்பெயராக பாவிப்பதும், அல்லது கன்னிப்பெயரை இடைப்பெயராகப் பாவிப்பதும் உண்டு. உதாரணமாக முன்னாள் சிறிலங்கா ஜனாதிபதியின் முழுப்பெயர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க என்றுள்ளது. இதில் அவரின் கன்னிப்பெயர் இடைப்பெயராக அமைந்துள்ளது. பெயர் வைப்பதில் இவ்வளவு சிக்கல்கள் இருக்கும் என்பதை தமிழர்கள் அறிந்திருக்கவில்லை போலிருக்கின்றது. ஏற்கனவே வேறு எவருக்குமில்லாத பெயராக இருக்கவேண்டும், பிறந்த நேரத்துக்கான நட்சத்திரப்படி பஞ்சாங்கத்தில்/சாதகத்தில் உள்ள எழுத்துக்கள் வரத்தக்கதாக பெயர் இருக்கவேண்டும், ஆங்கிலத்தில் எழுதும்போது எண்சாத்திரத்திற்கு அமைவாக இருக்கவேண்டும் என்று ஒருவரைச் சுட்டும் தனிப்பெயரான முதற்பெயருக்கே மூளையைக் கசக்குகின்றவர்கள், இடைப்பெயர், குடும்பப்பெயர் என்று இன்னும் பலவற்றை ஆராயவெளிக்கிட்டால் கதிகலங்கித்தான் போயிருப்பார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொருமாதிரி இந்தப் பெயர்ச்சிக்கலைக் கையாளுகின்றார்கள். சில ஐரோப்பிய நாடுகளில் தந்தையாரின் பெயர் அல்லது கணவனின் குடும்பப்பெயராக விளங்கும் கணவனின் தந்தையின் பெயரைக் குடும்பப்பெயராக்க கட்டாயப்படுத்துகின்றார்கள். இதுவே இப்போது தமிழர்களிடையே பொதுவான நடைமுறையாக உள்ளது. எனினும் பிரித்தானியாவில் எதுவிதமான கட்டாயப்படுத்தல்களோ, வழிமுறைகளோ இருப்பதாகத் தெரியவில்லை. நான் எனது தனிப்பெயரை குடும்பப்பெயர் (Surname) ஆகவும், எனது தந்தையின் பெயரை இடைப்பெயராகவும் (Middle name) ஆகவும், பாட்டனாரின் பெயரை முதற்பெயர் (First name) ஆகவும் ஆரம்பத்தில் பாவித்தேன். இது ஒன்றும் திட்டம்போட்டுச் செய்ததில்லை. தமிழர்கள் வலமிருந்து இடமாக தந்தை பெயர், எம்மைச் சுட்டும் தனிப்பெயர் என்று எழுதும் பழக்கத்தால் வந்தது. கூடுதலாக பாட்டனாரின் பெயரும் இருப்பதால் அது முதலாவதாக வந்துவிட்டது! ஆனாலும் இடைப்பெயர் குழப்பமாக இருந்ததால், இடைப்பெயரைக் கைவிட்டு பாட்டனாரினதும் தந்தையாரினதும் பெயர்களையே முதற்பெயராக இப்போது எழுதுகின்றேன். இந்த மூன்றையும் சேர்த்து எழுத நீளமாக வரும் என்பது வேறு ஒரு பிரச்சினை! ஐரோப்பிய நாட்டில் இருப்பதாலும், எனது பெயர் நூற்றாண்டுகளாக நிலைத்து இருக்கவேண்டும் என்ற சிறிய ஆசை உள்ளதாலும் எனக்கு இடையில் வைத்த பெயரையே எனது குடும்பப்பெயராக்கி உள்ளேன். அதற்காக குடும்பப்பெயரை சுருக்கி/வெட்டி, ஆங்கிலப் பெயர் மாதிரி உச்சரிப்பு வரும்மாதிரிச் செய்ய எல்லாம் விருப்பமில்லை. பிறநாட்டவரின் நாக்கு சுளுக்கிக் கொண்டாலும் இதுவே தலைமுறை தலைமுறையாக நிலைத்து நிற்கட்டும்! ஆயினும் முழுப்பெயர் கட்டாயமாகக் கொடுக்கவேண்டி ஏற்படாத இடங்களில் எல்லாம் முதற்பெயராக இருக்கும் பாட்டனாரின் பெயரை பாதியாகக் கத்தரித்து பாவிக்கின்றேன்!. தந்தையாரின் பெயர் எனது சுருக்கிய முதற்பெயரில் இருந்து சுத்தமாக நீங்கிவிட்டது! மேற்கத்தேயரின் வழக்கப்படி பொதுவாக மற்றவர்களுக்கு அறிமுகம் செய்யும்போது முதற்பெயரையும், குடும்பப்பெயரையும் கட்டாயம் சொல்லி மரியாதை செய்யவேண்டும். முதற்பெயரை மிக நெருங்கியவர்கள்தான் அழைப்பதற்குப் பாவிப்பார்கள். நமது முதற்பெயரை (அதையும் நாம் சுருக்கி ஓரசை, ஈரசை என வைத்திருந்தாலும்) சொல்லவே பிறநாட்டவருக்கு நாக்கு சுளுக்கிவிடுகின்றது. இதற்குள் பல அசைகள் (syllables) உள்ள எங்கள் குடும்பப்பெயரை சொல்ல அவர்கள் முயலும்போது நமக்கே கேட்கச் சிரமமாக இருக்கும். எனது ஆஸ்திரிய நண்பர் ஒருவர் என்னுடைய நீண்ட குடும்பப்பெயரை மிகவும் எளிதாகச் சொன்னபோது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. எப்படி கற்றுக்கொண்டாய் எனக்கேட்டபோது, எனது நண்பர் சொன்னபதில் இன்னும் ஆச்சரியமாக இருந்தது. அவர் எனது குடும்பப்பெயரை எழுத்துப் பிழைகள், உச்சரிப்புப் பிழைகள் இன்றி எழுதுவதற்கும், சொல்லுவதற்கும் அரைமணி நேரத்துக்கும் மேலாக பயிற்சியில் செலவளித்தாராம். முதற்பெயரையும், குடும்பப்பெயரையும் மரியாதையுடன் சொல்லவேண்டும் என்பதற்காகவே ஐரோப்பியர் இப்படியும் கஸ்டப்படுகின்றார்கள். தமிழர்கள் மத்தியில் பெயர் குறித்த விழிப்புணர்வு மிகக் குறைவு. தமது பிள்ளைகளுக்கு தமிழ்ப் பெயர் வைப்பது அரிதிலும் அரிது. இதனால் அடுத்து வரும் தலைமுறைகளை சேர்ந்த தமிழர்களுக்கு தமது பூர்வீகமே மறந்து போகலாம். பிறகு மரபணுச் சோதனை செய்து தான் அவர்களது வேர்களைக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும். எனினும், சரியான பெயர் எழுதும் முறை எதுவென்று இலகுவாகச் சொல்லமுடியாது. தமிழர்கள் தங்கள் தனித்துவத்தைப் பேணும் வகையிலும், பரம்பரையை அடையாளம் காணும் வகையிலும் ஒரு பெயர் வைக்கும் பொறிமுறையை உருவாக்குவது பற்றிச் சிந்திக்கவில்லை என்றுதான் தோன்றுகின்றது. ஆகவே, பெயர்க் குழப்பங்கள் தொடர்கதையாகவே இருக்கும். குறிப்பு: எனது பெயர் மாறிய கதையை எழுதவேண்டுமென்றால் பெயர்களை வெளிப்படுத்தாமல் எழுதுவது இலகு அல்ல! ——
    22 points
  16. திரும்பும் வரலாறு: நாசிகள் அண்மைக் காலமாக "திரும்பும் வரலாறு" (repeat of history or historic recurrence) என்பது பிரபலமான ஒரு சொற்றொடராக மாறியிருக்கிறது. வரலாறு மீள மீள நிகழ்வதற்கு பிரதான காரணம் வரலாற்றிலிருந்து தலைவர்களும், தலைவர்களைத் தேர்வு செய்யும் மக்களும் பாடங்கள் கற்றுக் கொள்ளாமை தான் என்பது ஒரு தெளிவான அவதானம். எனவே, வரலாற்றின் மைல் கற்களாக விளங்கிய சம்பவங்கள், நபர்கள் பற்றிய தரவுகளைப் பதிவு செய்யலாம். முதலில் ஹிற்லர், நாசிகள் பற்றி ஆரம்பித்து, இரண்டாம் உலகப் போர், ஸ்ராலின், அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் என்று ஒரு சுற்று வரலாம். ஆர்வமுடையோர் இணைந்திருங்கள். மூலங்கள் பற்றிய தகவல்களை ஒவ்வொரு பகுதியும் நிறைவுறும் போது தருகிறேன். ஆனால், விக்கிபீடியா மூலமாகப் பயன்படுத்தப் படவில்லை என்பதை உறுதி செய்கிறேன்! ஹிற்லர் எப்படிப் பதவிக்கு வந்தார்? முதலாம் உலகப் போர் 1918 இல் முடிவுக்கு வந்த போது ஐரோப்பாவின் எல்லைகள் பாரிய மாற்றங்களையடைந்தன. முதல் உலகப் போரின் போது கடல் வழியிலும், தரைவழியிலும் ஜேர்மனியின் படைகள் விளைவித்த மனிதப் பேரழிவு அளப்பரியது (முதலில் நீர்மூழ்கிக் கப்பல்களை பெருமளவில் பாவித்த நாடாக ஜேர்மனி இருந்தது, அனேக தாக்குதல் இலக்குகள் சிவிலியன் போக்கு வரத்துக் கப்பல்களாக இருந்தன!). ஜேர்மனி தோல்வியடைந்த போது வெர்சை உடன்படிக்கையின் வழியாக கடுமையான தண்டனைச் சுமைகள் ஜேர்மனி மீது சுமத்தப் பட்டன. 33 பில்லியன் டொலர்கள் வரையான போர் நட்ட ஈடு, காலனிகள் உட்பட்ட பல நிலப் பரப்பின் இழப்பு, இராணுவ ஆளணிக் குறைப்பு, ஆயுதங்கள் வாங்க, உற்பத்தி செய்வதற்கான கட்டுப் பாடுகள், என்பன ஜேர்மனியின் தண்டனைகளில் அடங்கின. இந்தப் போரில் காயமடைந்து மீண்ட படையினனான ஹிற்லர் ஆரம்பித்த கட்சி தான் "தேசிய சோசலிஸ்ட் கட்சி" எனப்பட்ட நாசிக் கட்சி. நாசிக் கட்சியின் நோக்கம் ஆட்சியைப் பிடிப்பது. இதற்கு உகந்த நுட்பமாக அவர்கள் தேர்ந்து கொண்டது, அண்மைய வரலாற்றில் ட்ரம்ப், பொல்சனாரோ, மோடி, ப்றெக்சிற்றின் தலைமைச் சிற்பியான நைஜல் பரார் போன்றோர் தேர்ந்து கொண்ட அதே ஜனத்திரள்வாத முறை. ஜனத்திரள் வாதம் நேர்மையான விடயங்களால் பலம் பெறுவதை விட மறைத்தன்மையான மனித உணர்வுகளால் பலம் பெறுவது தான் வரலாற்றில் அதிகம் நிகழ்ந்திருக்கிறது. நாசிக் கட்சி தங்கள் ஜனத்திரள் வாத வெற்றிக்காகத் தேர்ந்து கொண்ட அந்த மறைத்தன்மையான உணர்வு யூதர்கள் மீதான சந்தேகமும், எதிர்ப்புணர்வும். ஏன் யூதர்கள் மீது எதிர்ப்புணர்வு? ஏனெனில், ஜேர்மனியில் அந்தக் காலப்பகுதியில் வசித்த வேற்றினத்தவர்களுள், யூதர்கள் தான் பல வழிகளில் பிரபலமான இனக் குழுவாக இருந்தனர். பொருளாதார நடவடிக்கைகளில் மேலாண்மை மட்டுமன்றி, அரசியல் கலாச்சாரப் பரப்பிலும் யூதர்கள் முன்னணி வேற்றினத்தவராக இருந்தனர். கால் மார்க்ஸ் ஒரு யூதர், ஜேர்மனியுட்பட பல ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிசக் கட்சிகளின் தலைமையில் அதிகம் யூதர்கள் இருந்தனர். விஞ்ஞானத் துறையிலும் (ஐன்ஸ்ரைன் சிறந்த உதாரணம்) அவர்களுக்கு தனியிடம் இருந்தது. இவ்வாறு ஜேர்மன் மக்கள் ஏற்கனவே உணர்ந்திருந்த ஒரு "யூத மேலாண்மை பற்றிய அச்சம்" நாசிக் கட்சியின் மக்கள்திரள்வாத ஆயுதமாயிற்று! ஆனால், யூதர்களுக்கு மேலதிகமாக, ஏனைய மத, இனக்குழுக்கள், ரஷ்யாவின் சிலாவிக் இன மக்கள் ஆகியோரும் நாசிக்கட்சியின் வெறுப்பிலக்குகளாக விளங்கினர். இந்த சிலாவிக் இன மக்கள் மீதான வெறுப்பிற்கு வளங்களைக் கொள்ளையடிக்கும் ஜேர்மனியின் நீண்ட கால இலக்கும் ஒரு காரணமாக இருந்தது. ஆரிய இனமான நீலக் கண்ணும், வெள்ளைத் தோலும் கொண்ட ஜேர்மனியர்கள், லூதரன் கிறிஸ்தவ நெறிப்படி குடும்பங்களில் நிறையப் பிள்ளைகள் பெற்றுப் பெருகும் போது, அவர்கள் வாழ அவசியமான நிலம், சோவியத் ரஷ்யாவிடமிருந்து பறிக்கப் பட வேண்டுமென்பது நாசிக் கட்சியின் கொள்கை. எனவே, சிலாவிக் மக்கள், "மனித இனத்திற்குக் கீழானவர்கள்" என்ற வெறுப்புணர்வை நாசிக் கட்சியினர் பரப்பத் தயங்கவில்லை. இந்தக் “கீழ்மனிதர்களான” சிலாவிக் மக்களை விடக் கீழான நிலையில் தான் யூதர்கள் வைத்துப் பார்க்கப் பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 1921 அளவில், நாசிக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக ஹிற்லர் வெளிப்படையாக இந்தக் கொள்கைகளைப் பேசி வந்திருக்கிறார். சாதாரண அரசியல் கட்சிகள் போலல்லாது, நாசி கட்சிக்கு ஒரு ஆயுதப் படையும் இருந்தது. Storm troopers என்று அழைக்கப் பட்ட இந்தப் படையில், ஹிற்லர் போலவே முதல் உலகப் போரிலிருந்து அவமானத்துடன் திரும்பி வந்த முன்னாள் படையினர் இருந்தனர். பல்லாயிரம் உறுப்பினர்கள் கொண்ட இந்த படை, பவாரியாவின் மாநில அரசைக் கவிழ்க்க முயன்று தோற்ற போது தான் ஹிற்லர் மற்றும் நாசிக் கட்சி பற்றிய முதல் எச்சரிக்கை ஜேர்மன் அரசுக்குக் கிடைத்தது. ஜேர்மன் அரசினால் ஒரு வருடம், இதற்காக சிறை வைக்கப் பட்ட போது தான் ஹிற்லர் தனது ஜனத்திரள்வாத, இனவெறிக் கொள்கைகளை நூலாக (Mein Kampf) எழுதினார். இந்த நூல், 1932 இல் ஜேர்மன் பாராளுமன்றத்தில் மிகப் பெரிய கட்சியாக நாசிக் கட்சி விளங்க ஒரு முக்கிய காரணியாக இருந்தது. இதனால், ஜேர்மன் ஜனாதிபதியினால், ஹிற்லர் வேந்தராக நியமிக்கப் படும் நிலையும் உருவானது. ஜேர்மன் மக்கள் என்ன நினைத்தனர்? தீவிர இனவெறிக் கொள்கை கொண்ட ஹிற்லரையும், நாசி கட்சியையும் 1932 பொதுத் தேர்தலில் ஜேர்மன் வாக்காளர்கள் ஆதரித்துப் பெரும்பான்மை வழங்க பல காரணங்கள் அப்போது இருந்தன. ஜேர்மனி முதல் உலகப் போரில் மிகவும் அவமானப் படுத்தப் பட்டதாக ஜேர்மனிய மக்களில் பெரும்பகுதியினர் உணர்ந்தனர். அதன் பின்னான தண்டனைகளால் ஜேர்மனியின் பணவீக்கம், வேலையில்லாதோரின் வீதம், என்பன கட்டுக்கடங்காமல் அதிகரித்தன. ஜேர்மன் ஜனாதிபதியாக இருந்த வொன் ஹிண்டன்பேர்க் வயசாளி, நோய்வாய்பட்ட நிலையில் தனது ஓய்வு வாசஸ்தலத்தில் இருந்தவாறே, கீழதிகாரிகளூடாக ஆட்சி செய்து கொண்டிருந்தார். இந்தப் பின்னணியில், மூன்று இளமையும், துடிப்பும் கொண்ட அரசியல் தலைவர்கள் மக்கள் முன் வலம் வந்தனர்: ஹிற்லர், ஹெஸ், கோயபல்ஸ் ஆகிய மூவரும் தான் அந்த "ஜனத்திரள்வாத" இளம் தலைவர்கள். எனவே, ஒரு நம்பிக்கையான எதிர்காலம் வேண்டி, ஜேர்மன் வாக்காளர்கள் நாசிக் கட்சிக்கு வாக்களித்தனர். இந்த மானசீகமான ஆதரவோடு, நாசிக் கட்சியின் ஆயுதப் படையினர் நாசிக் கட்சி எதிர்ப்பாளர்களுக்குக் கொடுத்த வன்முறை அச்சுறுத்தலும் சேர்ந்து தான் நாசிக் கட்சியும், ஹிற்லரும் ஜேர்மனியின் ஆட்சியைப் பிடித்தனர். பதவிக்கு வந்த பின்னர் ஹிற்லரின் நடவடிக்கைகள் ஹிற்லர் வேந்தராகப் பதவியேற்று சில மாதங்களில், ஜேர்மன் பாராளுமன்றம் தீயூட்டப் பட்டது. இந்த எரியூட்டலுக்கு ஜேர்மன் கம்யூனிஸ்டுகள் காரணமெனப் பிரச்சாரம் செய்த நாசிகள், ஒரு ஒல்லாந்து நாட்டு கம்யூனிஸ்டைக் கைது செய்தனர். ஹிற்லரின் விமானப் படையைப் பின்னாளில் கட்டியெழுப்பிய தீவிர நாசியான ஹேர்மன் கோறிங் நேரடியாக நீதிமன்றம் சென்று, கைது செய்யப் பட்ட ஒல்லாந்துக் கம்யூனிஸ்டின் மரண தண்டனையை உறுதி செய்தார். அதே நேரம் மிக முக்கியமான இன்னொரு விடயமும் நாசி ஜேர்மனியின் எதிர்காலப் போக்கை நிர்ணயித்தது: பாராளுமன்றம் எரிக்கப் பட்ட சம்பவத்தைக் காரணம் காட்டி, ஹிற்லர் ஜேர்மன் ஜனாதிபதியை அவசரகாலச் சட்டத்தை அமல் படுத்தத் தூண்டினார். இதனால், சகல அரசியலமைப்பு வழியான மக்கள் உரிமைகளும் ஒரே இரவில் ரத்துச் செய்யப் பட்டன. இந்த உரிமைகள் ரத்தினால், நாசிகளை ஆதரித்த ஜேர்மனியர்களுக்கு ஒரு பாதிப்பும் வரவில்லை- ஆனால், யூதர்கள், கம்யூனிஸ்ட்டுகள், நாசி எதிர்ப்பாளர்கள், ஊடக சுதந்திரம் என்பன நன்கு பாதிக்கப் பட்டன. ஹிற்லரின் கட்சிக் கொள்கைகள் செயல் வடிவம் பெற ஆரம்பித்தன! -இன்னும் வரும் ஜஸ்ரின்
    21 points
  17. மீண்டும் அந்த பாழடைந்த கொட்டிலில் உள்ள இழையறுந்த மின்குமிழ் மங்கலான ஒளியில் அங்குமிங்கும் ஆடத்தொடங்கியது, மின்தொடுப்பற்று இருந்த ரோனியோ இயந்திரத்தின் கைப்பிடி சுழல தொடங்க , எலும்பும் தோலுமாக கிடந்த இரு நாய்களும் அந்த அரவம் கேட்டு கோரைப்பற்கள் வெளியே தெரிய வில்லிருந்து கிளம்பிய அம்பு போல் சீறிப்பாய்ந்தன, சபை பொறுப்பாளருக்கு விளங்கி விட்டது, இனி ஆட்டம் ஆரம்பம் என்று...... (தொடரும்) சொந்த அனுபவம், செவிவழி,கற்பனை கலந்து யாழின் 23 ம் அகவைக்காக அக்னி எழுதும் அமானுஷ்ய தொடர்
    21 points
  18. நாமும் நம் பழக்க வழக்கங்களும்.. அனேகமாக நான் ஏதாவது எழுதினால் அது அப்படியே தேடுவார் இல்லாமல் கிடப்பதை பல முறை அவதானித்த படியால் தனித்து எழுத மனம் எழுவதில்லை.. ஆனாலும் சில சங்கடங்களை சந்திக்கும் போது எழுத வேண்டும் போலவும் இருக்கிறது.. எழுதுகிறேன்.. ஆண்டவன் படைப்பில் ஆண், பெண் என படைப்பில் அவை அவைக்கு ஏற்ப அவயவங்களையும் சேர்த்தே படைத்திருக்கிறார்.அதை நாம் இடம் பொருள் ஏவல் அறியாது நாகரீகமற்ற முறையில் பேபசிக்கொள்வது அவர்கள் மேல் உள்ள மதிப்பை எப்படியும் குறைத்து விடும். அதுவம் நாம் போகும் கடை தெருக்களில் பேசும் போது மிகவும் கவனமாக ஒன்றுக்கு இரண்டு தடவைகள் யோசித்து பேச வேண்டும்.. சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றம் வேண்டும்,மாற வேண்டும்.. நேற்று நான் ஒரு தமிழ் கடைக்கு போயிருந்தேன்.அங்கு மூன்று வாடிக்கையாளர்கள் நின்றோம்.இருவர் பெண்கள் ஒருவர ஆண்.அந்ந ஆண் முக கவசத்தை சரியாக அணியாமல் வநீதிருந்திருந்தார்.எனக்கு சற்று தள்ளி நின்ற பெண் பிள்ளை கவனித்து விட்டார் போலும்.மாஸ்க்கை சரியாக பார்த்து போடுங்கள் என்றார். சொன்னது தான் தாமதம் அந்த ஆண் நீங்கள் விட்டால் கால் சட்டைக்குள் போடடு இருப்பதையும் கழட்டி மாத்தி போடச் சொல்லுவீங்க போலிருக்கே என்று சத்தம் போட்டார்.. கொரோனாவோடு எல்லோருக்கும் ஒரு மாதிரி ஆகி விட்டது.அவ்வப்போது குடுத்தால் தான் அடங்குவார்களாம். அது உங்கள் வீட்டுப் பெண் பிள்ளையாக கூட இருக்கலாம், இல்லாமலும் போகலாம் கொஞ்சம் அனுசரிப்பு வேண்டாமா.வெளியில் கேட்பவர்களுக்கு எவ்வளவு அசௌகரியம் புரிகிறதா. கடைக்காரருக்கு எப்படி சமாளிப்பது பேச்சை என்ற மாதிரி நின்றார்.ஏன் தமிழ் மக்களே போகும் இடத்திலுமா நாம் இப்படித் தான் என்பதை காட்ட வேண்டுமா...எப்போ மாறப் போகிறோம்..???
    21 points
  19. பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு. "மிஷேல்" ஒரு குடும்பத் தலைவன். 👨‍🦰 சாதாரண... வேலை பார்க்கும், இழகிய மனம் கொண்ட பண்பான மனிதன் அவனுக்கு... அன்பான மனைவியும், 💖 பத்து வயதை நெருங்கிய... மகனும், மகளும் உண்டு. 💗 வாடகை வீட்டில் வசிக்கும் மிஷேலுக்கு... ஒரு கவலை. ☹️ தனது வருமானத்தால், தன் குடும்பத்திற்கு, சொந்தமாக... ஒரு வீடு 🏦 வாங்க வேண்டும் என்று, கிழமைக்கு ஒரு முறை... லொத்தர் போட்டு வருவது வழக்கம். 🎰 நல்ல மனிதர்களுக்கு... 🙏"கூரையை... பிச்சுக் கொண்டு கொடுப்பாளாம், லட்சுமி அம்மாள்" 🙏 என்ற மாதிரி... மூன்று மில்லியன் ஐரோ.... பரிசு விழுந்து விட்டது. தான்... கும்பிட்ட தெய்வம், தன்னை கைவிட வில்லை என்று.... ஆனந்தப் பட்டு, தன்னிடம் அதிக வேலை வாங்கி... குறைவான சம்பளம் தந்த, முதலாளிக்கு... "நடு விரலை காட்டி", 🖕 போய்யா... நீயும், உன் சம்பளமும்... நானும், உன்னை மாதிரி... முதலாளி ஆகி காட்டுறேன் என்று... "சணல் பறக்க" பேசி விட்டு... வந்து விட்டான். 😎 மிகுதி... அடுத்த... வெள்ளிக் கிழமைக்குள், தொடரும்... யாழ். களத்தின், சுய ஆக்கத்திற்காக.. தமிழ் சிறி. 🤣
    21 points
  20. சுதந்திரம் எம் சுவாசம். "சுதந்திரம் விரும்பி சுவாசத்தை நிறுத்திய அத்தனை வீரர்களுக்கும் வந்தனம்". மரத்தினின்று வீழ்ந்த பழுத்த சருகுகள் வேருக்கு உரமாகின்றன மரணித்த வீரனின் பாச நினைவுகள் மனதில் தடுமாறுகின்றன சுதந்திரம் ஒரு பசுஞ்சுனைதான் அதை நோக்கி நாம் கொடும் பாலையில் அல்லவா நடக்கின்றோம் கண்தொடும் தூரம் கானல் நீர் நாம் எதைத் தொலைத்தோம் எங்கே தொலைந்து போனோம் எம் மூதாதையர் வாழ்ந்தார்களே நிறைவாகவும் நிம்மதியாகவும் வாழ்ந்தார்களே சுதந்திரமாய் வாழ நினைத்தோமே சுவாசத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்திவிட முயன்றோமே யூதாசும்,ப்ரூட்டசும், எட்டப்பனும் காக்கை வன்னியனும், கருணா நிதியும் நிதிக்காகவே அலைவார்களா --- நிகரில்லா சுதந்திரத்தை விற்பார்களா காலங்கள் தோறும் பிறந்து வருவார்களா ஓ ....வீரனே ...... திறந்திருக்கும் உன் விழிகளில் இலட்சிய ஒளி மட்டுமல்ல --- களமாடி விழுந்து கிடக்கும் உன் உடல்கூட முட்களையும், கற்களையும் ஓநாய்களையும், நரிகளையும் --- எமக்கு இனம் காட்டி விட்டல்லவா விதையாகியது.......! யாழ் அகவை 23 க்காக ஆக்கம் சுவி.........!
    21 points
  21. 31.03.2020 மாலை 17.22. எனது செல்லுலாபேசி ஒலிக்கிறது. கைகளில் இருந்த கையுறைகளைக் கழற்றி எறிந்துவிட்டு தொலைபேசியைப் பார்த்தேன். பார்த்திபனின் அழைப்பது. அது எனது தனிப்பட்ட தொலைபேசி. அந்த இலக்கம் பிள்ளைகள் இருவருக்கும் இன்னும் மூன்று பேருக்கு மட்டுமே தெரிந்த இலக்கம். அப்போது பகுதிநேர வேலையை ஆரம்பித்து 22நிமிடங்களாகியிருந்தது. 29.02.20 தொடக்கம் இன்று வரை ஒருமாதமாக இடையிடை வட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறான். இன்று தான் நீண்ட நாளின் பிறகு தொலைபேசியில் அழைத்திருந்தான். பார்த்திக்குட்டி..., அழைத்தவுடனேயே ஓம் என மறுமுனையில் அவன் குரல் வந்தது. எப்பிடி செல்லம் இருக்கிறீங்கள் ? நல்ல சுகம் . நீங்கள் ? அவன் தொடர்ந்து கதைத்துக் கொண்டு வந்தான். இடையில் கேட்டான். தங்கைச்சி எல்லாம் சொன்னவா தானே ? இல்லைக்குட்டி. என்ன ? சொல்லுங்கோ ? ஓகே. எனக்கும் என்ர றூம்மேற்சுக்கும் கொரோனா வந்தது. அவனது நண்பன் ஒருவனின் பெயரைச் சொல்லி 'அவர் கொஸ்பிற்றலில இருந்து வந்திருக்கிறார். அவருக்கு கொஞ்சம் கடுமையா இருந்தது. மற்றைய நண்பனுக்கும் கடுமை தான். ஆனால் இப்ப பறாவாயில்லை. நாங்க வெளியில போகேலாது. அடுத்தவனையும் தன்னையும் மருத்துவமனையில் இடப்பற்றாக்குறையால் வீட்டில் தனிமைப்படுத்தி விட்டுள்ளதாகச் சொன்னான். அப்ப சாப்பாடுகள் என்னமாதிரி செல்லம் ? பிள்ளைகள் கொண்டு வந்து தருகினம். நாங்கள் வெளியில போகேலாது. தடை போட்டிருக்கினம். வெளியில நாங்கள் போனால் போலிஸ் பிடிக்கும் தண்டனைக்காசு கட்ட வேணும் , சிறையில அடைச்சிடுவினம். அவன் சொல்லச் சொல்ல நெஞ்சு பதறத் தொடங்கியது. கால்களைத் தாங்கிக் கொண்டிருந்த நிலம் என்னை தூரமாய் இழுத்துச் செல்வது போலிருந்தது. எங்கெல்லாமோ வந்த செய்தி என் குழந்தைக்கும் வந்துவிட்டதை நம்ப முடியவில்லை. வந்த அழுகையை அவனுக்கு வெளிக்காட்ட முடியாதிருந்தது. எனக்குள் நிகழ்ந்த அதிர்வை பயத்தை கண்ணீரை எனக்குள்ளேயே விழுங்கிக் கொள்கிறேன். கவனமா இருங்கோ செல்லக்குட்டி. பிள்ளைக்கு அம்மாவும் தங்கைச்சியும் இருக்கிறம். ஓண்டுக்கும் யோசிக்க வேண்டாம். பிள்ளையளிட்டைச் சொல்லி நல்ல சாப்பாடு வாங்கிச் சாப்பிடுங்கோ குட்டி. நீங்களும் கவனமாயிருங்கோ. எல்லா இடமும் தான் இது பரவுது. ஓம்குட்டி அம்மா கவனமாயிருக்கிறேன். பிள்ளைக்கு காசு கூட தேவையெண்டா சொல்லுங்கோ அம்மா அனுப்புவன் செல்லம். ஒண்டும் யோசிக்க வேண்டாம் செல்லக்குட்டி அம்மா இருக்கிறன் பிள்ளையளுக்காக. நான் ஒருக்கா உங்களைப் பாக்க வரலாமோ செல்லம் ? இங்கை ஒருவரும் வரேலாது பொலிஸ் தடைபோட்டிருக்கினம். இந்த செமெஸ்டரும் படிக்கேலாது போல. பாப்பம். நான் தங்கைச்சிக்கு கதைக்கப் போறன். உங்களுக்கு இன்னொருநாள் திரும்ப எடுக்கிறன். நீங்கள் கவனமாயிருங்கோ. கண்டபடி வெளியில திரியாதையுங்கோ. கனக்க வேலை செய்யாமல் வீட்டில இருங்கோ. பலமுறை கவனம் சொல்லி 14.நிமிடம் 52 வினாடிகள் கதைத்தான். அவன் விடைபெற்றுக் கொண்டு தொலைபேசியழைப்பை நிறுத்தினான். என்னால் நிற்க முடியவில்லை. தலைசுற்றியது. வயிற்றினுள் ஏதொவெல்லாம் செய்தது. உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. அங்கிருந்த கதிரையொன்றில் இருந்து கால்களை மேலுயர்த்திச் சாய்ந்தேன். தாழ் இரத்த அழுத்தத்தை உணர்கிறேன். கண்முன்னால் நீலநிறத்தில் பூச்சிகள் பறக்கத் தொடங்கியது. காதுக்குள் கூவென்ற இரைச்சல் ஆழமாக ஆழமாகக் கேட்டுக் கொண்டிருந்தது. கைகள் கால்கள் உடலெல்லாம் தளர்ந்து சோர்கிறது. என்னை நானே நினைவிழக்க விடாமல் காக்க வேண்டிய கட்டாயத்தை உணர்கிறேன். கண்களை மூடி என்னை ஆசுவாசப்படுத்த முயல்கிறேன். அரைமணித்தியாலத்திற்கும் மேலாக அப்படியே இருந்தேன். ஓரடி நிமிர நாலடி வீழ்த்திவிடுகிற காலத்தை நினைக்க நினைக்க கோபம் வருகிறது. கடந்த வருடம் அவன் இளமானிப்பட்டப்படிப்பை முடிக்கும் பரீட்சைக் காலத்தில் நடந்த விபத்து , இதேகாலம் என் குழந்தை தன்னை மறந்து போயிருந்தான். என் இருள் நிறைந்த நாட்களின் சூரியனாக இருந்தவன். வவுனீத்தாவின் ஒரே நம்பிக்கை வேராக நின்ற எங்கள் இருவரின் எல்லாமுமானவன். அவனைக் காலம் தன் கைகளிலிருந்து இடுங்கி வீழ்த்திய காலமது. அவனைத்தேடித் தெருத்தெருவாய் அலைந்த இதே நாட்கள் ஒவ்வொன்றாய் நினைவுகளிலிருந்து இறங்கிக் கண்ணீராக வழிந்து கொண்டிருந்தது. எல்லாம் ஒரு மர்மமாக கிட்டத்தட்ட 11மாதங்கள் கண்ணீரோடு வவனீத்தாவும் நானும் அழுதழுது அலைந்த காலங்கள் மாறியதாக 2019 நவம்பர் 25ம் திகதி அவன் கணிசமானளவு ஞாபகங்களை மீளப்பெற்று அம்மா தங்கைச்சியை ஏற்றுக் கொண்டான். இன்னும் மர்மமாகவே அந்தக் காலத்தின் முடிச்சுகள் முழுமையாக தழராத கதைகள் கோடியுண்டு. அவன் மீண்டு வந்தது போதுமென்றேன். பரீட்சையெழுத தயாராயிருந்தவன் படித்த படிப்பையெல்லாம் மீளவும் படிக்க வேண்டுமென்ற போது அவன் சோர்ந்து போகாமல் படிக்க முடிவெடுத்தான். ஒருவருடகால போராட்டம் தன்னைத் தானே தேடிக்கண்டடைந்து எங்கள் நம்பிக்கையை மீண்டும் அவன் தான் புதுப்பித்தான். அவனை அழுத்திய பொருளாராதச் சுமையை எனது ஒருபகுதி உதவியோடு வாரம் 40மணித்தியாலம் வேலைசெய்து முழுநேரம் பல்கலைக்கல்வியையும் தொடர்ந்து கொண்டிருந்தான். அவனது ஓய்வற்ற உழைப்பை நினைக்காத நொடியில்லை. நின்றால் நடந்தால் இயங்கினால் எல்லா நேரமும் அவன் தான் எனக்குள் அந்தக் காலத்துயரைக் கடந்துவர நான் அடைந்த சுமைகள் இதுவரை கால அலைவுகளெல்லாம் ஒற்றைத்தூசியாயிருந்தது. மருத்துவ உலகம் கைவிட்ட பிறகு அவன் தன்னைப் புதுப்பிக்க தன்மீதுதான் நம்பிக்கையோடு போராடினான். அவனது நம்பிக்கை அவனது துணிச்சல் அவனை எங்களுக்குத் திரும்பத் தந்தது. முன்பைவிட அவன் பலமடங்கு உடல் உள ஆரோக்கியத்தோடு தன்னை மீட்டான். எங்களை ஏற்றுக் கொள்ள மறுத்தவன் அம்மாவை தங்கைச்சியை தன் உறவுகளாக ஏற்றுக் கொண்டது எனக்கும் வவுனீத்தாவுக்கும் எதுவும் வேண்டாம் அவன் மட்டுமே போதுமென்ற அமைதி. 2020 தொடக்கம் எங்களுக்கு நிமிர்வு காலம் இனி வீழமாட்டோமெனப் பிள்ளைகளுக்குச் சொன்ன எனது வார்த்தைகளைக் கண்ணீர் துடைத்தெடுத்துக் கொண்டிருந்தது. என் குழந்தை தனிமையில் வலிப்பட ஒரு தேனீர் கூட வைத்துக் கொடுக்க முடியாத துயரை எந்தச் சொற்களாலும் மொழிபெயர்க்கத் தெரியாத துயரம். துயரை என்னுள் தொடர்ந்து புதைத்து அழ வைக்கும் காலத்தின் தொடர் தொல்லைகளை ஒவ்வொன்றாய் தாண்டுகிற போதும் இனிமேல் துயரில்லை. இப்படித்தான் நினைத்துக் கொள்வேன். ஆனால் காலம் ஏனோ என்னோடு மல்லுக்கு நிற்கிறது. அடுத்து மகள் அழைத்தாள். செல்லக்குட்டி அண்ணா எடுத்தவனம்மா நான் சொல்ல அவளும் தொடங்கினாள். அம்மா நீங்கள் யோசிக்காமல் இருங்கோ. அண்ணா சுகமாகீட்டார். அண்ணா மீண்டது அதிசயமம்மா. மற்றவையளுக்கு கூட அண்ணாவுக்குத்தான் தாக்கம் குறையவாம். அவர் சுகமாகினது போதும். அதைவிட வேறையேதும் நினைச்சு யோசிக்காமல் இருங்கோ. எல்லாம் நல்லதே நடக்கும். ஏன் பிள்ளை எனக்கு நீங்கள் சொல்லேல்ல ? அண்ணா முதல் கேட்டவர் உங்களுக்குச் சொல்லட்டோண்டு. நான் தான் சொன்னனான் கொஞ்சம் பொறுக்கச் சொல்லி. நீங்கள் முதல் சொல்லியிருந்தா உடனும் ரெயினேறி போயிருப்பீங்கள் எங்களுக்கும் சொல்லாமல் அதுதானம்மா உங்களுக்குச் சொல்லேல்ல. அண்ணா தொடர்ந்து என்னோடை கதைச்சுக் கொண்டிருந்தவரம்மா. என் தேவதை என்னை ஆறுதற்படுத்திக் கொண்டிருந்தாள். நான் யோசிக்கக்கூடாதென்று நினைக்கிறாள். அவனுக்கு சாதாரணமாக காலநிலை மாறும் போது வரும் காச்சல் இருப்பதாக 2வாரங்கள் முதல் சொல்லியிருந்தாள். நானும் அப்படித்தான் நம்பியிருந்தேன். ஆனால் மனம் அமைதியைத் துறந்து நித்திரையைப் பறித்து நானடைந்த மனவுளைச்சல். தினமும் ஏதாவது பயங்கரமான கனவுகளால் நித்திரையறும் போதெல்லாம் எழுந்திருந்து நெஞ்சு பதறும் அந்தரத்தை பிள்ளைகளுக்குச் சொல்லாமல் என்னோடு மறைத்து உலவிக் கொண்டிருக்கும் காலமிது. எனினும் உலகை உலுக்கும் கொரோனா என் வீட்டுக்குள் வராதென்ற துணிச்சலில் இருந்தேன். அது என் நம்பிக்கையை உடைத்து என்னைச் சோர வைத்துள்ளது. கடுமையான கட்டத்தை கடந்து அண்ணா வந்திட்டாரம்மா. இனி பயமில்லை. சீனாவுக்கு அடுத்து இத்தாலி உலகை மிரட்டிக் கொண்டிருக்கிறது. அந்த இத்தாலியில் இருந்து கொண்டு என்னை என் மகள் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள். அம்மா நீங்கள் அமைதியா வேலையை முடிச்சிட்டு வீட்ட வந்து எடுங்கோ கதைப்பம். சொல்லிவிட்டு தொலைபேசியை வைத்தாள் வவுனீத்தா. எனக்கு ஆறுதல் சொல்லும் என் மகள் தனிமையில் அண்ணாவுக்காக அழுவாள் என்பது தெரியும். அவள் அழுதால் என்னால் இனி இயங்கவே முடியாதென்பதை அறிவேன். அவளோடு இயல்பாக இயன்றவரை பேசி முடித்தேன். என்னால் தொடர்ந்து வேலையைச் செய்ய முடியாதிருந்தது. மனம் அடைந்த அந்தரிப்பை பயத்தை துயரை வெளியில் காட்ட முடியவில்லை. ஓடியோடி வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தேன்.வேலை முடிந்து வீட்டுக்கு வந்தும் மனம் ஆறாத அந்தரிப்பு தொடர்கிறது. இன்னும் நித்திரை வரவில்லை. விழித்திருக்கிறேன். இப்போது விடியற்காலை 3.47. அன்றைக்கு பிறகு ஒருவாரம் கழித்து பார்த்திபன் சட்பண்ணினான். இன்னும் ரெண்டு கிழமையில நான் எனக்கு வேண்டிய எதிர்ப்பு சக்தியைப் பெற்றுவிடுவேன். கொரோனா யாருக்கும் வரக்கூடாது. அதுவொரு பொல்லாத நோய். நான் மற்றவைக்கு இனி உதவப் போறன். கவனமாயிருங்கோ. கண்டபடி வெளியில போக வேண்டாம். என் பாதுகாப்பை அடிக்கடி சொல்லிக் கொண்டான். கொரோனா வந்தவர்களுக்கு உதவுதற்கு வானொலிகள் அழைக்கிறது. துணிந்து செல்ல யாரும் அதிகம் விரும்பாத காலமிது. என் குழந்தை அவர்களுக்கு தானாக உதவப் போகிறேன் எனச் சொன்னதை மறுக்க முடியவில்லை. 08.04.20 மீண்டும் பார்த்திபன் தொலைபேசினான். நீண்ட நேரம் சட்பண்ணினான். நான் திரும்பப் படிக்க வேணும். இன்னும் 2 தொடக்கம் 3 வருடங்கள் படிக்க வேணும். முழுநேரம் வேலைசெய்து கொண்டு படிக்க கஸ்ரமாயிருக்கு. நீங்கள் எவ்வளவு காலம் எனக்கு உதவ முடியும் ? நான் படிச்சு முடிய உங்களுக்கு எல்லாம் திருப்பித் தருவன். அவன் மீண்டும் படிக்க வேண்டுமென்ற தன் கனவைச் சொல்லிக் கொண்டிருந்தான். நீங்கள் படிச்சு முடியும் வரை அம்மா உதவுவேன் செல்லம். நீங்கள் அமைதியா வடிவா சாப்பிட்டு நிம்மதியா இருந்து படியுங்கோ. எனக்கு நீங்கள் ஒண்டும் திருப்பித் தரத்தேவையில்லை. நீங்கள் ஆரோக்கியமா இருந்தால் அதுவே எனக்குக் காணும் செல்லம். காலம் மீண்டும் என்னையும் என் குழந்தைகளையும் எழுந்து ஓட வைத்திருக்கிறது. ஓடத் தொடங்கியிருக்கிறேன். நாங்கள் 3பேரும் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் காலமொன்று எங்களை ஒரு புள்ளியில் சேர்க்குமென்ற நம்பிக்கையை இன்னும் அதிகமாக விதைத்தபடி ஓடுகிறேன். அச்சம் துரத்தும் கனவுகளை ஆழ்மன வெளியின் அலைவுகளை கனவுகள் பெருகிக் கண்களை நிறைத்துக் கண்ணீர் கடலாய் இரவின் கருமையில் நிறைகிற பொழுதையும் தாண்டிக் கடந்தோடும் தைரியத்தைத் தரும் பிள்ளைகளின் ஞாபகங்கள் அவர்களது வெற்றிகள் பற்றிய நினைவுகளோடு நதியாகி ஓடுகிறேன். 02.05.2020 சாந்தி நேசக்கரம்
    21 points
  22. புரட்டாதி 2020 ஐரொப்பா எங்கும் கொரோனா பயங்கரமாக தலைவிரித்தாடிய மாதம் ஐரொப்பிய நாடுகள் தம்மிடையேயும் பிற நாடுகளுக்கிடையேயும் எல்லைகளை மூடியும் விமானப்பறப்புக்களை புறக்கணிக்கவும் தொடங்கிய நேரம். பிள்ளைகளுடன் ஆவணி மாத விடுமுறை முடியும் வேளை நான் 10 நாள் வேறு ஒரு பயணம் போகப்போறேன் என்றேன் அதிசயமாகப்பார்த்தார்கள் (ஆனால் ஆவணி மாதமே வழமையாக பூட்டப்படும் எனது தொழில் புரட்டாதி மத்திவரை பூட்டப்பட்டது அவர்களுக்கு ஏற்கனவே கேள்விக்குறி ஒன்றை தந்திருந்தது) விமானம் ஓடாது என்றார்கள் விமான ரிக்கற் ஏற்கனவே எடுத்தாச்சு என்றேன். விமானம் ஓடாவிட்டால் என்றார்கள் காரில் போவேன் என்றேன் (அப்பா 1400 கிலோமீற்றரை 9 மணித்தியாலத்தில் போவார் என்பதால் எதிர்ப்பில்லை) அப்போ அங்க நீங்கள் சந்திக்கப்போறவரின் வயது கருதி உங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யணும் என்றார்கள். அதற்கென்ன செய்தாப்போச்சு என்றவுடன் மலைப்பகுதியிலேயே பரிசோதனைக்கு நேரம் எடுத்து தந்தார்கள் கொரோனா தொற்று இல்லை என்று வைத்தியர் தந்த அந்த பத்திரத்தை கவனமாக என்னுடன் வைத்துக்கொண்டேன் (விமான நிலையத்தில் உதவலாம் என்பதற்காக) ஓய்வு முடித்து வந்த அடுத்த நாள் விமானநிலையத்தில் விட்டு விட்டு சென்றார்கள் (அவர்களுக்கு நம்பிக்கையில்லை நான் பறப்பேன் என்று) விமான நிலையத்தில் எந்த எதிர்ப்புமில்லை. தொடர்ந்து ஒவ்வொரு வாசலாக முன்னேறிக்கொண்டிருக்கின்றேன். விமானம் ஏறும் கடைசி வாசலைப்பார்க்கின்றேன் நீண்ட வரிசையில் நிற்க வைத்து துப்பாக்கி போல் எதையே நெற்றியில் வைக்கிறார்கள். ஏற்கனவே Mask போட்டிருப்பதால் மூச்சு சூடாக இருக்கு அது வேற நெற்றியை சூடாக்கிக்கொண்டிருக்கு அதைவிட வெய்யில் வேற??? நெற்றியை தொட்டுப்பார்க்கிறேன் சூடாகத்தான் இருக்கு அடப்பாவிகளா அவ்வளவு தானா??? ஆனால் அடிக்கடி பிரெஞ்சு அரசாங்கம் சொன்னபடியே உள்ளது வயதானவர்களை இந்த நேரத்தில் அரவணையுங்கள் சென்று பாருங்கள் அவர்களை தனிமையில் விட்டு விடாதீர்கள்... அது ஒன்று மட்டுமே எனது மனதில் ஓடியபடி???? தொடர்வோம்
    21 points
  23. சமீபத்தில் தாயகம் போயிருந்தேன். நீண்ட வருடங்களின் பின்னர் ஒரு மாவீரர் நாளில் தாயகத்தில் இருக்க முடிந்தது. கொழும்பில் வசிக்கும் எனது பழைய நண்பன் ஒருவன் என்னை தன்னுடனே தங்க வைத்துக் கொண்டான். அவன் ஒரு சட்டத்தரணி. இப்பொழுது என்னைப் போலவே அவனும் ஓய்வில் இருக்கிறான். அவனுக்கு இரண்டு பிள்ளைகள். இருவரையும் வெளிநாடு அனுப்பி விட்டு குடியும் குடித்தனமுமாக இருக்கிறான். முற்றம் கூட்டவும் எடுபிடி வேலைகளுக்கும், சமையல், துவையல் போன்ற வேலைகளுக்கும் என இரண்டு வேலையாட்களை வைத்திருக்கிறான். ஏகப்பட்ட தமிழ் தொலைக்காட்சிகள் இருப்பதால் பழைய பாடல்கள் திரைப்படங்களுடன் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தவனிடம் நான் சிக்கிக் கொண்டேன். நண்பனுக்கு இங்கே நான் வைத்திருக்கும் பெயர் மணியன். இலங்கையில் சுற்றுலாவுக்குத்தான் இம்முறை போயிருந்தேன். பொது வேலைகள் என்று பரந்த நோக்கம் எதுவும் என்னிடம் இருக்கவில்லை. புறப்படுவதற்கு முன்னர் மணியனுக்கு நான் எனது வரவைப் பற்றி அறிவித்திருந்தேன். “நீ சிறிலங்காவில், எங்கே வேணுமெண்டாலும் போ. ஆனால் உன்ரை முக்கிய இருப்பிடம் எனது வீடுதான். என்னுடனேயே தங்குகிறாய்” என்று மணியன் சொல்லி விட்டான். புதுக் கட்டிடங்கள் உயர்ந்திருந்தாலும், தமிழ் பெயர்களுடன் கடைகள் பல இருந்தாலும், பாசி பிடித்து கறுப்பாக இருக்கும் மதில்கள், வீட்டுச் சுவர்கள், பள்ளம் விழுந்த வீதிகள்... என வெள்ளவத்தை முன்னர் போலவே, மாறாமல் அப்படியே இருந்தது. வெள்ளவத்தையில் கடற்கரை ஓரமாக ஆறாவது மாடியில் உள்ள மூன்று அறைகள் கொண்ட ஒரு வீட்டுக்கு மாத வாடகையாக இரண்டு இலட்சங்கள் ரூபா கேட்டார்கள். அப்படி ஒரு வீட்டில் தங்கிக் கொண்டு பல இடங்களைச் சுற்றி வரத்தான் முதலில் தீர்மானித்திருந்தேன். ஆனால் மணியன் அதற்குச் சம்மதிக்கவில்லை. அவனது விருப்பத்துக்கு ஏற்ப அவனது வீட்டில் தங்கிக் கொள்ள வேண்டியதாயிற்று. மணியன் வீட்டின் மாடியில் ஒரு அறை எனது இருப்பிடமாகிப் போனது. முதல் நாளே இரவு படுக்கப் போகும் போது மணியன் என்னிடம் சொன்னான், “காலையில் ஏழு மணிக்கு கீழே வந்து விடு” என்று. ஏழு மணிக்கு 'சூடாக தேநீர் கிடைக்கும்' என்று மாடியை விட்டு கீழே வந்தால், “வா…வா கடைக்குப் போவம்” என்று மணியன் அவசரம் காட்டினான். பருத்தித்துறை,கிராமக்கோட்டுச் சந்தியில் இருந்த தாமோதரத்தார், நாகேந்திரத்தின் தேநீர் கடைகள் இரண்டும் நினைவுக்கு வந்தன. இளைஞர்களாக இருந்த போது நானும் மணியனும், பொன்னையா அண்ணனின் உளுந்து வடையை பேப்பரில் வைத்து அழுத்தி எண்ணை நீக்கி, நன்னாரி சேர்ந்த ‘பிளேன் ரீ’யை பல மாலை வேளைகளில் சுவைத்து மகிழ்ந்திருந்திருக்கிறோம். ஆக மணியனும் நானும் இப்பொழுது ஏதோ ஒரு தேநீர் கடைக்குப் போகப் போகிறோம் எனக் கணித்துக் கொண்டேன். மணியனின் காரில் ஏறிக் கொண்டேன். கார் புறப்படும் போது ‘சீற் பெல்டை’ போட முயன்ற போது, “இதெல்லாம் இங்கே அவசியம் இல்லை” என்று மணியன் சொன்னான். காலை நேரம். காலி வீதியில் வாகனங்களின் சத்தம் அதிகமாக இருந்தது. ‘கோன்’ அடிக்காமல் எந்த வாகனங்களும் நகர்ந்ததாகத் தெரியவில்லை. மணியனின் கார் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது. பல வாகனங்கள் எங்களைத் தாண்டிச் செல்லும் போது அதில் இருந்தவர்கள் எங்களை முறைத்துப் பார்த்தார்கள். அல்லது எரிச்சலுடன் பார்த்தார்கள். நான் மணியனைப் பார்த்த போது, மணியன் புன்முறுவலுடன் சொன்னான், “கண்டு கொள்ளாதை. எனக்கு என்ரை கார் முக்கியம். அவையளுக்கு அவசரம் எண்டால், என்னை முந்திக் கொண்டு போகட்டும்”. ஊர்ந்து ஊர்ந்து சென்று ஒருவாறு தனது காரை ஒரு தரிப்பிடத்தில் நிறுத்தினான். ஒரு பேக்கரிக்குள் நுளைந்தான். நான் அவனைப் பின் தொடர்ந்தேன். பாண் வாங்கும் எல்லோர் கைகளிலும் பிளாஸ்ரிக் பைகள் இருந்தன. ‘Slice Bread என்று கேட்டு அவனும் பிளாஸ்ரிக் பையில் பாண் வாங்கிக் கொண்டான். “மச்சான் சம்பலோடை பாண் சாப்பிட நல்லா இருக்கும்” என்றான். “காலமைக்கு பாண்தான் சாப்பாடோ?” “ஏன்டா, பாண் விருப்பமில்லையே? நேற்று ராத்திரிச் சாப்பாட்டுக்கு சரஸ்வதி விலாஸிலே வேண்டின இடியப்பம், வெந்தயக் குழம்பு, சொதி எல்லாம் மிஞ்சிப் போச்சுடா. சூடாக்கித் தாரன். வேணுமெண்டால், நீ அதைச் சாப்பிடு. நான் பாண் சாப்பிடுறன்” சொல்லிவிட்டு என்னைப் பார்த்தவனுக்கு, இதமான காலை வெய்யிலிலும் என் முகம் வாடி இருந்தது புரிந்திருக்கும். “நீ காலமை ரீயும் குடிக்கேல்லை என்ன? வா, பால் வாங்கிக் கொண்டு போவம்” என்றவன், ஒரு பெட்டிக் கடையில் இரண்டு பால் பக்கெற்றுகளும் வீரகேசரி பேப்பரும் வாங்கினான். “வீரகேசரி வாங்கினால் தினத்தந்தி இலவசமடா” என்று சொன்னவன் அடுத்து ஒரு பழக்கடைக்கு முன்னால் நின்று கப்பல் வாழைப்பழத்துக்கு விலை கேட்டான். “ஐயா, இந்தப் பழம் இப்ப உடனை சாப்பிடலாம். இந்தச் சீப்பை வெட்டட்டே?” என்ற கடைக்காரரிடம் “ஆறு பழம் போதும்” என்று சொல்லி வாங்கிக் கொண்டான். “நல்ல பழம்தானேடா. ஒரு சீப்பாவே வேண்டி இருக்கலாம்” என்று கேட்ட என்னை மணியன் உடனே இடை மறித்தான். “நல்ல பழம்தான். நான் ஒரு பழம்தான் சாப்பிடுவன். சீப்பா வேண்டிக் கொண்டே வைச்சால் எல்லாத்தையும் ஒரேநாளிலே சாப்பிட்டு முடிச்சிடுவாங்கள்” மணியன் தன் வேலையாட்களை குறிப்பிடுகிறான் என்பது புரிந்தது. அவனுக்கு ஒரு பழம்.அவன் மனைவிக்கு ஒன்று. ஒன்றுதான் எனக்கும் வருமா? இல்லை இரண்டு தருவானா? யேர்மனியில் கிடைக்கும் பெரிய வாழைப்பழத்துக்கு இந்தச் சின்ன கப்பல் பழம் ஈடு கொடுக்குமா? கார் தரிப்பிடத்தில் ஒருவன் பச்சை உடுப்போடு காத்திருந்தான். மணியன் அவனுக்கு ஐம்பது ரூபாத் தாளை எடுத்துக் கொடுத்தான். “எதுக்கு அவனுக்கு ஐம்பது ரூபா ?” “பார்க்கிங் சார்ஜ். காரை ஒருக்கால் நிப்பாட்டி எடுத்தாலே எழுபது ரூபா. ரிசீற்றை வேண்டாமல் விட்டால் ஐம்பது” “அப்போ இந்தக் காசு அரசாங்கத்துக்குப் போகாது” “போகாது” காருக்கு வெளியே பார்த்தேன். அழுக்கான நடைபாதையில் கைகளை நீட்டிக் கொண்டு ஏதாவது கிடைக்குமா என்று பலர் இருந்தார்கள். பச்சை உடையுடன் ஒருவன் ஓடியோடி கௌரவமாக ஐம்பது ரூபாப்படி பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். “சமையலுக்குத்தானே வீட்டிலை ஆள் வைச்சிருக்கிறாய்? பிறகேன் கடையிலை வாங்கிச் சாப்பிடுகிறாய்?” என்று மணியனைக் கேட்டேன். “வேலைக்காரரை நாலு மணிக்கு அனுப்பிப் போடுவன். இரவுச் சாப்பாடு எனக்கும் மனுசிக்கும்தானே. ஒருநாள் இடியப்பம், அடுத்தநாள் புட்டு, பிறகு அப்பம், மசாலா தோசை, பொங்கல், கொத்து எண்டு விரும்பினதை வாங்கிச் சாப்பிடுவம். மிஞ்சுறதை அடுத்தநாள் காலமை சூடாக்கி சாப்பிடுவம். அது சுகமான வேலை” “மத்தியானத்தை எதுக்கு விட்டாய். அதுக்கும் கடையிலை வாங்கலாம்தானே?" “வாங்கலாம். எங்களுக்குத் தேவையான மரக்கறிகள் அதுவும் எங்கடை பாணிச் சமையல், மீன்,இறைச்சி எண்டு வேணும்தானே” காலை எழுந்தவுடன் பால்,பாண்,பழங்கள் வாங்குவது. பத்து மணியளவில் மரக்கறிகள், மீன் வாங்குவது, மாலையில் ஏதாவது ஒரு உணவு விடுதியில் இரவுச் சாப்பாடு வாங்குவது என்று ஓரிரு நாட்களிலேயை வெள்ளவத்தை எனக்கு பழகிப் போனது. கூடுதலான வரையில் மணியன் தனது பேர்ஸைத் திறக்காமல் இருக்கப் பார்த்துக் கொண்டேன்.
    20 points
  24. கிட்டதட்ட இரண்டு வருடங்களின் பின் கொழும்பிற்கு வைகறை பொழுது ஒன்றில் வந்திறங்கிய பொழுது மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை!!! முன்னைய பயணங்களைப்போல் இல்லாது, சஞ்சலத்துடனும் பயத்துடனும் தான் பயணம் இருந்தது.. ஆனாலும் ஊருக்கு போகும் ஆர்வம் இந்த பயங்களை கொஞ்சம் பின்னோக்கி தள்ளியதையும் மறுக்கவில்லை.. ஊரில் தங்கியிருந்த நாட்களில் பார்த்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!! கொழும்பு வெயிலின் தாக்கத்தை கூட்டியது கல்யாண தரகரின் சில கேள்விகள்! கேள்விக்கொத்தை பிரசுரிக்க முடியுமோ தெரியாது என்பதால் அந்த படத்தைப்போடவில்லை.. ஆனால் கேள்விகளைப் பார்த்த பொழுது இந்த கேள்விகளை பெற்றோர் கேட்கிறார்களா இல்லை மணமக்கள் கேட்கிறார்களா தெரியவில்லை!! அதே போல ஓரிரு கேள்விகளுக்கு உண்மையான பதில்கள் எழுதப்படுமா என்பது சந்தேகமே!! ஆனாலும் கொழும்பின் சூட்டை தணித்தது இந்த மண்ணின் குளிர்மை.. கிட்டதட்ட 27/28 வருடங்களாக மனிதர்களின் காலடி படாமல் காடு போல கிடந்த இடத்தை மாற்றிபயனுள்ள தோட்டமாக்கியதைப் பார்த்து ஒரு சந்தோஷம்!! தொடரும்…
    20 points
  25. ஈழப் போராட்டம் பற்றி செயற்கையான புனைவுகள், அந்நியமான வசன நடைகள், வரலாற்றுக்கு புறம்பான பதிவுகள் இல்லாமல், தெளிவான கதை சொல்லும் பாங்குடன், முடிந்தளவு யதார்த்ததை ஒட்டி இதுவரை வந்த ஆகச்சிறந்த திரைப்படம் எது என்றால் கண்ணை மூடிக் கொண்டு சொல்லலாம் - மேதகு. முதல் பிரேமிலேயே தமிழரின் தொன்மையை தொட்டு படம் ஆரம்பிக்கிறது. குமரிக்கண்டம் வரை ஆண்ட இனம் என்ற முகவுரை படத்தின் வரலாற்றுப் புரிதல் பற்றிய ஐயப்பாட்டை ஆரம்பத்தில் தோற்றுவித்தாலும், அடுத்த காட்சிலேயே - 1995 இன் மதுரை மாவட்ட கிராமம் ஒன்றில் நடக்கும் “மாவீரன் கூத்தோடு” அண்மைய வரலாற்றில் ஆழமாக படம் இறங்கும் போது அந்த ஐயப்பாடு மறைந்து விடுகிறது. குழந்தை பிறந்து, வளரும் பருவம் என்று மெதுவாக நகரும் கதை, சிறுவன் பிரபாகரன் “ நாம் ஏன் அப்பா திருப்பி அடிக்கவில்லை” என்று கேட்கும் காட்சியில் இருந்து டாப் கியரில் எகிறுகிறது. படத்தின் அத்தனை பாத்திரத்தேர்வுகளும் அபாரம். குறிப்பாக அந்த பதின்மவயது பிரபாகரன் வேடம் ஏற்கும் கதாநாயகன், முக அமைப்பும், வார்த்தை தேர்வும், தொனியும், உடல் மொழியும், கண் அசைவும், தலைவரை பின்னாளில் கண்ட பலர் கற்பனை செய்து வைத்திருக்கும் “தம்பி”யை அப்படியே கண் முன் கொண்டு வருகிறார். அதே போல் பார்வதி அம்மாள், வேலுப்பிள்ளை ஐயா, தந்தை செல்வா, துரையப்பா, சிறிமா, பண்டரநாயக்க, குட்டிமணி பாத்திரங்களும் கச்சிதம். பொதுவாக பெரிய பாத்திரங்கள் எல்லாமுமே 70-90% ஈழத்தமிழை ஒத்து பேசுவது சிறப்பு. அதுவும் அந்த பார்வதி அம்மாள் பாத்திரத்தின் ஈழத் தமிழ் அதி சிறப்பு. சில இடங்களில் இலக்கிய தமிழ் வலிந்து தொனிப்பதாக படுகிறது. குறிப்பாக சிறு பாத்திரங்களில். பெளத்த பிட்சுகள் பேசும் சிங்களம் கர்ணகடூரமாக இருக்கிறது. ஒருவகையில் பழி தீர்கிறார்களோ என்னமோ🤣. படத்தை நகர்த்தி செல்லும் கூத்து ஒரு நல்ல கதை சொல்லும் உத்தி. ஆனால் அரிதாக சில இடங்களில் கொஞ்சம் இழுபடுவதான உணர்வு. பச்சை நிற பஸ், யாழ் மாவட்ட சூழலில் காடு, மலை என்று பொருத்தாமல் இருந்தாலும், இவை கதை ஓட்டத்தை பாதிக்கவில்லை. இளவயது பிரபாகரன் கடற்கரையோரத்தில் தன் தந்தைக்கு தன் நியாயத்தை எடுத்து சொல்லும் காட்சியை இன்னும் அழகாக செதுக்கி இருக்கலாம். சில காட்சிகளுக்கு கொஞ்சம் சினிமாதனமும் தேவைதான். இந்த காட்சியில் அதற்குரிய பவர் மிஸ்ஸிங். தியாகி சிவகுமாரனுக்கு அவருக்குரிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது 🙏🏾. படத்தின் மைனஸ் என்றால் அந்த தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை காட்சிகள்தான். வரலாற்றுக்கு அமைவாகவும் இல்லாமல், நாடகதனமாக காட்சிகள் அமைகிறது. ஆனால் ஸ்ரீ எதிர்ப்பு கலவர காட்சிகள் தத்துரூபமாக படமாக்கப்பட்டுள்ளன. படம் ஒரு சாராரின் கருத்தை மட்டுமே பதிகிறது என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஆனால் பிராசார படம் போல கொள்கை முழக்கம் செய்யாமல், தமது பார்வையை மட்டுமே முன் வைக்கிறது. படம் நாயகர்கள் என்றும் வில்லனகள் என்றும் துரோகிகள் என்றும் வர்ணிப்பவர்களை பெரும்பாலனா ஈழத்தமிழ் மக்களும் அவ்வாறே கருதுவார் என்பது என் முடிவு. முடிவாக இதுவரை இந்தியாவில் இருந்து வந்த ஈழம் பற்றி பேசிய படங்களை விட மட்டும் அல்ல, நிதர்சனம் படைப்புகளை விடவும் கூட இந்த படம் ஒரு படி மேல் என்றேபடுகிறது. மேதகு - பெயர் சொல்லும் பிள்ளை
    20 points
  26. 2021´ம் ஆண்டு கார்த்திககை 29´ம் திகதியன்று வேலையிடத்தில் நடந்த விபத்தின் பின்... நோயாளர் காவு வண்டியில்.. வேலையிடத்தை விட்டு சென்ற நான், 15 மாத தொடர் சிகிச்சை, தெரப்பியின் பின்... இன்று முதன் முதலாக மீண்டும் வேலையிடத்துக்கு சென்றேன். 🙂 வைத்தியரின் அறிவுரைப்படி... முதல் இரண்டு கிழமைகள் தினமும் 3 மணித்தியாலமும், மூன்றாம், நான்காம் கிழமைகள் தினமும் 5 மணித்தியாலமும், ஐந்தாம், ஆறாம் கிழமைகள் 7 மணித்தியாலமும் வேலை செய்து பார்த்து சரி வந்தால், தொடர்ந்து எட்டு மணித்தியாலப் படி வேலை செய்யலாம் என்று சொன்னார். இன்று முதல் நாள் என்னை வேலை இடத்தில் கண்டது பலருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. வேலை இடத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இருவர் ஓய்வெடுத்து போய் விட்டார்கள். இருவருக்கு... ஒரு கால் கழட்டி நிரந்தரமாக வேலை செய்ய முடியாத நிலையில் உள்ளார்கள். அதில் ஒருவருக்கு சீனி வருத்தத்ததால் கால் கழட்டியதாம், மற்றவர்.... பல வருடமாக அதிக சிகரெட் புகைத்ததால், கால் கழட்ட வேண்டி வந்ததாம். எல்லோரையும் இன்று கண்ட போதும், எனக்கு விபத்தை ஏற்படுத்தியவர் எனக்கு கிட்ட வர இல்லை, தூரத்தில் அவரின் முகம் தெரிந்தது. நான் பார்த்தவுடன், ஒளித்து விட்டார். குற்ற உணர்ச்சி... எப்படி முகத்தில் முழிப்பது என நினைத்தாரோ தெரியவில்லை. 😎 எல்லோரும் எனக்கு... உடம்பு கூடியிருப்பதாக சொன்னார்கள். ஆஸ்பத்திரி சாப்பாடு செய்த வேலை என்று பகிடிக்கு சொன்னேன். 🙂 உண்மைதான்... முன்பு இருந்ததை விட பத்து கிலோ கூடியுள்ளேன். வேலை செய்த உடம்பு திடீரென சும்மா இருக்கும் போது, கூடுவது வழமை தானே. இனி வரும் காலங்களில்... குறையும் என நினைக்கின்றேன். 😋 விபத்தின் பின் நடந்த சிகிச்சைகளையும், தெரப்பிகளையும் நினைவில் வருபவற்றை அவ்வப்போது தொடர்ந்து பதியலாம் என நினைக்கின்றேன். உங்களுக்கு வாசிக்க விருப்பமா? 😃 பிற் குறிப்பு: கால் விரலுக்கு, Qtex பூசுறனீங்களா என்று கேட்டு, கடுப்பேத்த வேண்டாம். 😂 🤣
    20 points
  27. என்னுடன் தற்போது Reha Clinic‘ல் தெரப்பி செய்து கொண்டு இருக்கும், 25 வயதுடைய ஜேர்மன் இளைஞனும் அவனது நண்பியும், சென்ற வருடம் 2022 மாசி மாதமளவில் “Gotha Go Home“ போராட்டம் மும்முரமாக நடந்து கொண்டிருந்த போது இலங்கைக்கு நான்கு கிழமை ✈️ சுற்றுலாவில் 🛩 சென்றவர்கள். பெடியனுக்கு… 25 வயது என்ற படியால், அவன் என்றே தொடர்ந்து குறிப்பிடுகின்றேன். 😁 அவன் போன நேரம்… காலி முகத் திடல் மட்டுமல்லாது பல இடங்களிலும் ஆர்ப்பாட்டாங்கள் நடந்து கொண்டு இருந்தாலும்… தங்களை அது பெரிதாக பாதிக்கவில்லை என்றும், பார்ப்பதற்கு சுவராசியமாக இருந்ததாக குறிப்பிட்டார். ஶ்ரீலங்கா போய் இறங்கிய நேரம் ஒரு ஐரோ 280 ரூபாய் இருந்தது என்றும், பிறகு தினமும் 📈 அதிகரித்து சென்று 380 ரூபாயில் வந்து நின்றது மகிழ்ச்சியாக இருந்தது என்று சொன்னார். ஒரு முறை 🚅 ரயிலில் போக… ரயில் நிலையத்துக்கு சென்று பயணசீட்டு கேட்ட போது, அங்கு இருந்த அரச 👨🏻‍✈️ ஊழியர் இனி ரயில் ஒண்டும் ஓடாது, வேண்டுமென்றால் மலிவான விலையில் வாடகைக் 🚙 கார், சாரதியுடன்… ஒழுங்கு செய்து தருவதாகவும், இலங்கையில் நிற்கும் காலம் முழுக்க அதனையே பாவிக்கலாம் என்றும்… ஒரு நாள் வாடகை 250 ஐரோ படி, மிகுதி மூன்று கிழமைக்கும் மொத்தமாக முற்பணம் செலுத்த வேண்டும் என்றும் அந்த ரயில் நிலைய அரச அதிகாரி கேட்டாராம். தான் ஹோட்டேலுக்கு போய் யோசித்து சொல்வதாக சொல்லிவிட்டு வந்துவிட்டாராம். அடுத்த நாள் பார்த்தால்… வழமை போல் ரயில் ஒடுவதாகவும். நல்ல காலம் ஒரு ஏமாற்று பேர் வழியிடம் இருந்து தப்பி விட்டதாகவும் குறிப்பிட்டார். 🚂 ரயிலில்… கதவருகே இருந்து… அவனும், நண்பியும் தொங்கிக் கொண்டு சாகசம் செய்தபடி போன தருணங்கள் மிக இனிமையான நிகழ்வுகளில் ஒன்றாக குறிப்பிட்டார். 🐘 யானையில் சவாரி செய்ததையும், யானையை தொட்டு குளிப்பாட்டியதையும் அடிக்கடி குறிப்பிடுவதோடு… மற்றைய ஜேர்மன்காரருக்கும் அந்தப் படங்களை காட்டி பெருமைப் பட்டுக் கொள்வார். 😀 நான் இலங்கையில் வசிக்கும் போது…. சிவனொளிபாத மலை, சிகிரியா போன்றவற்றை பார்க்கவில்லை என்று அறிந்ததும்… நான் பார்க்காததை, தான் பார்த்து விட்டதாக… அவருக்கு அற்ப சந்தோசமும் உள்ளது. 😂 உணவு வகைகளில்…. விதம் விதமான 🥬 மரக்கறி வகைகள் தமக்கு மிகவும் பிடித்தவை என்றும், தாம் மாமிசம் சாப்பிடாதவர்கள் என்பதால், தம் வாழ் நாளில் சாப்பிடாத 🥒 மரக்கறிகளை உண்டதாகவும், அதிலும் பிலாக்காய் கறியின் 🌶 சுவையையும் பாராட்டினார். 🍌 வாழைப்பழம் எல்லாம்… ஒரே மாதிரி என்று நினைத்துக் கொண்டிருந்த தனக்கு…. இலங்கை சென்ற பின்தான் தெரிந்ததாம் சிவப்பு, பச்சை நிறங்களிலும்… வித்தியாசமான அளவுகளிலும், சுவைகளிலும் வாழைப்பழங்களை பார்த்து ஆச்சரியப் பட்டதாக கூறினார். ஒரு முறை, தான் வாங்கிய ரயில் பயணச் சீட்டு குறிப்பிட்ட ரயிலுக்கு செல்லாது என தெரிந்து கொண்ட உள்ளூர் தம்பதிகள்.. தம்முடைய செலவிலேயே புதிய ரயில் பயணச் சீட்டை வாங்கித் தந்ததை நன்றியுடன் குறிப்பிட்டார். எப்போ, எங்கு… சாப்பிடப் போனாலும் தினமும் பருப்புக் கறியை தந்து, தனக்கு வெறுப்பு ஏற்படுத்தி விட்டார்களாம். 😂 ஜேர்மனிக்கு வந்து ஒரு வருடமாகியும் பருப்பை கண்டால் வெறுப்பாக இருக்குதாம். 🤣 பெடியன்… யாழ்ப்பாணம், நயினாதீவு எல்லாம் போயிருக்கிறான். 🥰யாழ்ப்பாண பயணம்தான்… இலங்கையிலேயே தனக்குப் பிடித்த இடம் என்றான். அது வரை, நான் அங்கு பிறந்ததாக அவனுக்கு சொல்லவில்லை. அவனாகவே சொன்ன கருத்து அது. ஏன் யாழ்ப்பாணம் பிடிக்கும் என்று கேட்ட போது… வெள்ளைக்காரர் ஒருவரும் இல்லாமல் தாங்கள் மட்டும் அந்த மக்களிடையே வித்தியாசமாக இருந்தது தனக்கு மிகவும் பிடித்துக் கொண்டதாக கூறினார். பிற்குறிப்பு: கிளினிக்கில் இருந்து கைத்தொலை பேசியில் எழுதியதால், பதிவை… வர்ணமயமாக மெருகூட்ட முடியாமைக்கு மன்னிக்கவும். இன்னும் இரண்டு நாள்தான் இங்கு இருப்பேன். பெடியனிடம் உங்கள் சார்பாக கேட்க வேண்டிய கேள்விகள் இருந்தால் கீழே எழுதவும். கேட்டு பதில் சொல்கின்றேன். 😁 புதன் கிழமை வீட்டிற்கு செல்வதால்… அதற்குப் பின் கேட்கும் கேள்விகளுக்கு பதில் வராது. 🤪 🤣
    20 points
  28. நான் யாழ் தளத்தை பல ஆண்டுகளாக அறிவேன் என்றாலும் இப்பொழுது தான் உறுப்பினர் ஆக இணைந்து கொண்டேன். நான் உக்ரைனில் 2006 புரட்டாசி மாசம் மருத்துவம் படிக்க போனேன்.2014 - 2015 அளவில் இலங்கைக்கு திரும்பினேன். இலங்கையில் சில வருடம் வேலை செய்து விட்டு இப்பொழுது கனடாவில் Alberta வில் வசிக்கிறேன். Canadian emergency Ambulance service இல் வேலை செய்கிறேன். படிக்க போன இடம் luhansk ( லூகான்ஸ்க்,டன்பாஸ் இல் உள்ள Donesk (டோனேஸ்க் ) க்கு அடுத்த பெரிய province. போன புதிதில் நான்கு இலங்கை மாணவர்கள் தான்போனோம். அப்பொழுது நாங்கள் தான் ஒரே இலங்கை மாணவர்கள். கொஞ்சம் தமிழ் நாட்டு மாணவர்களும் இருந்ந்தார்கள்.லீவு கிடைக்கும் பொழுது பல வெளிநாட்டு மாணவர்கள் இந்தியா இலங்கை போய் விடுவார்கள். நான் டிக்கெட் செலவு கூட என்பதால் ukraine க்குள் சுத்துவது வழக்கம். அப்படி போன இடங்களில் ஒன்று தான் மரிப்புல். இது தவிர கிரீமியா கீவ் கார்க்கிவ்,liviv, zaporizhzhia போன்ற இடங்களில் ஓரிரு மாதங்கள் ஆவது இருந்து இருப்பேன். டன்பாஸ் பிறதேசத்தில் இருப்பவர்களில் 90 வீதம் பேர் ரஷியன் தாய் மொழி ஆக கொண்டவர்கள். பலர் சுரங்க தொழிலாளிகள். ரஷ்யாவுடன் குடும்பம் பிணைப்புகள் அதிகம் கொண்டவர்கள். நானே சில தடவைகள் ரஷ்யாவுக்குள் போனேன் என்று தெரியாமலே உள்ளுக்குள் போய் இருக்கின்றேன் இவர்களுடன். குணம் என்று வரும் பொழுது மிகவும் பொதுவாக நல்ல மனிதர்கள் தான். நான் இளம் வயது ஆட்களை வைத்து அந்த சமூகத்தை மதிப்பிடக்கூடாது என்று நம்புகிறேன். ஆகவே 60 கடந்தவர்கள் என்று பார்த்தால் ஓரளவுக்கு நல்லவர்கள் தான் அவர்கள். என்றாலும் எல்லோரையும் அப்படி சொல்ல ஏலாது. கம்யூனிஸ்ட் சித்தாதத்தில் பற்று கொண்டவர்கள். வெளியே சொல்லிக்கொண்டு இருக்க மாட்டினம் ஆனால் உள் மனது அது தான். நான் கூட பழகியது பாட்டிகள் தாத்தாக்களுடன் தான். சில வருடங்கள் அவர்கள் வீட்டில் வாடகைக்கு வாழ்ந்தும் இருக்கின்றேன். Danbaas உண்மையில் ukraine க்கான பிரதேசம் தான். ஆனாலும் சோவியத் காலத்தில் ஸ்டாலின் சைபிரியாவுக்கு நாடு கடத்திய கிரிமினல்களில் ஓரளவுக்கு குறைவான பிழைகள் செய்தோரை இங்கே டன்பாசில் குடியெற்றி அங்குள்ள சுரங்க வேலைக்கு பயன்படுத்திக்கொண்டார். அவர்களின் பரம்பரை தான் இப்போது அங்கே இருப்போர். வெள்ளை இன வெறி உண்டு. அதுவும் எல்லோரும் அப்படி என்று ஒரேஅடியாக சொல்ல முடியாத அளவுக்கு நல்ல மனிதர்களின் ஞாபகங்கள் வந்து போகின்றது. இரவில் வெளியே நம்பிக்கையோடு சுற்ற முடியாது நன்கு ரஷியன் தெரியாவிட்டால். நான் பல முறை மாட்டி இருக்கின்றேன். குடிகாரர் குடித்து விட்டு காசுக்கு வெளிநாட்டு ஆக்களை அடித்து காசு வாங்குவது வளமை.. அப்படி அடிக்கும் பொழுதே அங்குள்ள இன்னொருவர் காப்பாற்றியும் விடுவார். நான் ஒருமுறை இரவு கடைக்கு போய் சாமான் வாங்கி வெளியே வரும் பொழுது சைக்கிள் செயின் கொண்டு அடிக்க ஒருவர் வந்து இருந்த காசை கொடுத்து தப்பிய சம்பவம் ஞாபகம். எல்லோருக்கும் ஒரு வீடு அங்கு உண்டு. குவர்த்திரா ( அப்பார்ட்மெண்ட் ) என்று சொல்வோம். ஏற்கனவே சொன்னது போல வாயோதிப்பர்கள் பழக இனிமையானவர்கள். அவர்களிடமும் வெள்ளை இன வெறி, உடைந்து போன சோவியத் பற்றிய கனவுகள், ரஷியன் மொழி மீதான தீரா தாகம், conservetive மனநிலை, மனிதாபிமானம், கடவுள் பக்தி, வெளியே காட்டாத அமெரிக்க வெறுப்புணர்வு, இந்தியா மீது பாசம்,உழைப்பு, சுற்றதாருடன் மனித பன்புடன் பழகுவது, இயலுமான வரை மற்றவர்களுக்கு உதவி, சிக்கனம், உபசரிப்பு என்று எல்லாம் கலந்த சாதாரண மனிதர்கள் அவர்கள். இவர்கள் கிழக்கு உக்ரைனியர்கள்.mariupol zaporizhzhia, கார்கிவ் போன்ற இடங்களில் வாழ்வோரும் இப்படி பட்டவர்கள் தான் என்றாலும் கார்கிவ் மேற்கத்தேய நாகரிக மோகம் கொஞ்சம் அதிகம் கொண்ட பகுதி. மேற்கு ukraine இல் உள்ள மக்கள் அப்படியே வேறு ஒரு மக்கள் கூட்டம். ரஷியன் தெரிந்தாலும் விடாப்பிடியாக பேச வேண்டாம் என்று இருக்கும் மக்கள் அவர்கள். ஒப்பீட்டளவில் மிகவும் நாகரிகம் ஆன மக்கள். ஒரு காலத்தில் யூதர்கள் சோவியட் ரஷ்யா உடன் சேர்ந்து இவர்களை அடக்கிபலரை படுகொலை செய்தது எவ்வளவு உண்மையோ அவ்வளவுக்கு இவர்கள் பின்னர் ஜெர்மனிஉடன் சேர்ந்து யூதர்களை படுகொலை செய்ததும் உண்மை. கம்யூனிஸ்ட் சித்தாந்தம், Soviet ரஷ்யா இந்த இரண்டும் இவர்களை முன்னேற விடாமல் இறுக்க பிடித்திருக்கிறது என்று மனதார உணருகின்றர்கள்.யூத வெறுப்புணர்வு ஓரளவு உண்டு என்பது உண்மை என்றாலும் எல்லோரிடமும் சமமாக இழையோடி இல்லை. இவர்களில் பலருக்கு poland ருமேனியா, அஸ்திரியா நாடுகளோடு குடும்ப பிணைப்பு உண்டு. கிழக்கு மக்கள் ரஷியன் ஆர்த்தோடோக்ஸ் என்றால் இவர்ககளில் பலர் கத்தோலிக்கார்கள். யாழ்ப்பாண மொழியில் சொல்வது என்றால் புழுத்த கத்தோலிக்கர்கள். இங்கே குடி போதையில் அடிப்பவன் இல்லை. எங்களை கறுப்பு குரங்கே என்று கூவி நக்கல் அடிப்பவர்களும் இல்லை.சுதந்திர நாட்டுக்கான தணியாத தாகம் கொண்டவர்கள். இங்கே liviv என்று ஒரு இடம் உண்டு அழகான இடம். ஒரு போட்டோ கூட எடுக்கவில்லை என்று இப்போது நினைத்து வருந்துகிறேன் கிவ் இது இன்னொரு அற்புதம். இங்குள்ள டேனிப்பர் ஆற்றின் கரையோரங்களில் நடந்து திரிந்த நாட்கள் பசுமையான நினைவுகள். மிகவும் ஆழத்தில் இருக்கும் மெட்ரோ ரயில் நிலையங்கள் எந்த குண்டு வெடிப்பிலும் இருந்தும் உங்களை பாதுக்காக்கும். இங்கே உள்ளவர்கள் அனைவரும் நன்கு ரஷியன் பேசுவார்கள், ரஷியன் தான் இங்கேயும் பெரும்பாலும் பேசப்படும் மொழியும், எனினும் கம்யூனிஸ்ட் சித்தாதம் மீது எந்த ஈடுபாடும் இல்லை. (கொழும்பு தமிழர்க்கு தமிழ் பாசம் போல.) ரஷியன் தான் இவர்களின் தாய் மொழி எனினும் பெரிய பற்று என்று ஒன்றும் இல்லை. Ukraineனை நேசிப்பவர்கள் என்பதை விட கீவை நேசிப்பவர்கள். எப்படி யாவது யூரோப் இல் இணைந்து விட்டால் தமது செல்வ செழிப்புக்கு நல்லது என்று கருத்துப்பவர்கள். கிரிமியா இது வரலாற்று முக்கியத்துவம் உள்ள குடா நாடு. Turkey யும் ரஷ்யாவும் பிரித்தானியாவும் சண்டை போட்டு களைத்துபோன இடம். இங்கே கருங்கடலில் குளித்து தான் நான் நீந்தவே பழகினேன். இரண்டாவது உலகப்போர் நிறுத்தபடவும் சர்வதேச சங்கம் ஐக்கிய நாடுகள் சங்கமாக மாறவும் கையெழுத்து போடப்பட்ட இடம். இங்கே உள்ளவர்கள் கொஞ்சம் பழுப்பு தோல் கொண்டவர்கள். ரஷியன் போல் அவித்த றால் போல் இருக்க மாட்டினம். அரேபிய, ஒஸ்மானிய, யூத, ரஷிய, உக்கரைன் கலப்பு மக்கள் தான் இங்கு அதிகம். நல்ல திராட்சை ரசத்துக்கு பெயர் போன இடம்.பல மேற்கு நாட்டவர்கள் summer ஹாலிடேக்கு வந்து போகும் இடம். 2014 இல் மைதான் ( தமிழில் மைதானம் ) புரட்சிக்கு பின் அப்போதைய அதிபர் விக்டர் யானுக்கோவிச் பதவியில் இருந்து அகற்றப் பட்ட பின் கிரீமியா ரஷ்யாவால் சண்டை இன்றி பிடிக்கப்பட்டது. பின்னர் நான் இருந்த luhansk மற்றும் donesk இல் ரஷ்ய சார்பு ஆட்களால் பிரச்னை ஏற்படுத்தப்பட்டு அங்குள்ள போலீஸ் ஸ்டேஷன்,நிர்வாக அலகுகள் கைப்பற்றபட்டது. அங்குள்ள வேலை இல்லாத ரவுடிகளுக்கு ரஷ்யா பணம் ஆயுதம் கொடுத்து தான் இது நடந்தது. அப்பொழுது நான் அங்க தான் இருந்தேன். படிப்பு முடிந்து பட்டமளிப்பும் முடிந்தது விட்டது ஆனால் இன்னும் கையில் எல்லாம் செர்டிபிகேட் documents வரவில்லை என்பதால் கொஞ்ச நாள் கஷ்டத்திலும் அங்கு நாங்கள் இருந்தோம். பின்னர் குண்டு சத்தம் கேட்க நான் கார்கிவ் போய் விட்டேன். வரமால் அங்கு மாட்டிய ஆபிரிக்க மாணவர்களை இந்த ரவுடிகள் பிடித்து அமெரிக்கன் army uniform போட்டு அங்குள்ள டிவி களில் அமெரிக்க ராணுவம் இங்கு வந்து விட்டது என்றும் தாம் அவர்களை பிடித்து விட்டோம் என்றும் சனங்களுக்கு பேய்க்காட்டினர்கள்.அங்கு ( கார்கிவ் )கிட்டதட்ட ஒரு வருடம் இருந்து பின்னனர் lugansk வந்தேன் என்னுடைய documents எடுக்க வரும் பொழுது முகமாலை ஆனையிறவு வழியில் வருவதை விட செக்கிங் அதிகம். luhansk railway station இல் வைத்து என்னை ரஷியன் பிரிவினைவாதிகள் பிடித்து கிழே ஒரு இடத்துக்கு கொண்டு போய் இரண்டு மணி நேரம் ஆவது விசாரித்து இருக்கிற காசை பிடுங்கி விட்டு அனுப்பி விட்டார்கள். நான் இவர்கள் காசு வாங்கமல் விட மாட்டார்கள் என்று ஏற்கனவே தெரியும் என்பதால் வேறு பணம் ஒழித்து வைத்து இருந்தேன். விட்டுக்கு போனால் தண்ணி இல்லை, மின்சாரம் இல்லை, பெரிய விற்பனை நிலையன்கள், சந்தை, நகரம் என்று எல்லாம் சுக்கு நூறாய் கிடந்தது. ஒரு கிழமை சமாளித்து விட்டு எல்லா documents ம் எடுத்துக்கொண்டு இலங்கைக்கு வந்து விட்டேன். இவை வெகு சுருக்கமான தகவல்கள் மட்டுமே.. அனுப்பவ படிப்பினைகள் இவைதான் 1) ஒரு நாட்டுக்கு போனால் உங்கள் மொழி பேசுபவர்கள், உங்கள் நாட்டவர்கள் உடன் மட்டுமே தொடர்பில் இருக்காதீர்கள். நான் கார்கிவ் போன பொழுது கையில் உடனடியாக பணம் இல்லை. தங்கியது எல்லாம் அங்குள்ள எனது உக்கீரைன் நண்பர் வீட்டில். 2) நன்கு அந்த நாட்டின் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும். கடையில் போய் பால் வெங்காயம் வாங்கும் அளவில் தான் இன்று பலரின் மொழியறிவு . 3) பிரச்சனைக்கு உள்ளான இடங்களில் பிரச்னை மீண்டும் வரும். அது தீர்ந்து விட்டதாக தோன்றும். அந்த மாயத்துக்குள் உட்பட்டு விடாதீர்கள்.luhansk இல் இருந்த பொழுது போர் எல்லாம் வரவே வராது என்று தான் 99 வீதம் பேர் சொன்னார்கள். சொன்னவர்களில் பலர் இன்று உயிரோடு இல்லை. 4)கொஞ்சம் நிலைமை சரி இல்லை என்றால் அந்த இடத்தை விட்டு ஓட தயங்க வேண்டாம். நாங்கள் சவாகச்சேரியில் இருந்து வவுனியா 1991 இல் வந்தோம்.. ஆகவே எந்த பெரிய சண்டையிலும் சிக்கவில்லை. Luhansk திரும்பிய பொழுது ஒரு தெரிந்த குடும்பம் நான் இலங்கை போவதாக சொன்ன பொழுது இரவு சாப்பிட்டுக்கு அழைத்தார்கள். அவர்கள் முன்று மாசம் உருளைக்கிழங்கு, உள்ளி இந்த இரண்டும் மட்டுமே உண்டு வாழ்ந்து இருக்கிறார்கள்.அவர்கள் இலக்குவாக வேறு ஒரு இடத்துக்கு போய் இருக்கலாம். 4) எப்பொழுதும் எங்கு வாழ்ந்தாலும் அவசரம் என்று வெளியில் ஓட வேண்டி வரலாம். ஒரு bag இல் ஒரு மூன்று நாளைக்கு தேவையான உணவு, இதர அவசிய பொருட்கள், மற்றும் உங்கள் டாக்குமெண்ட்ஸ் அதில் வைத்துக்கொள்ளுங்கள்.
    20 points
  29. வெறும் கள் வடிக்கும் பன்னாடை அல்ல இது...! அது வெறும் பூச்சிகளை மட்டும் வடிக்கும்...! இது கொஞ்சம் வித்தியாசமானது...! மனிதர்களை மட்டும் வடிக்கும் வல்லமை கொண்டது...! மேலைத் தேசங்களின் மகத்தான கண்டு பிடிப்பு...! மண்டலாவை வடித்த போது..., கறுப்பன் இவன்...அரைக் காச்சட்டை போதுமென்றது..! மகாத்மாவை வடித்த போது, கொஞ்சம் வெளிர் நிறம்..முழுக்காச்சட்டை போடு என்றது...! அரேபிய அகதிகளுக்கு..., அதன் வடி கண்களை இறுக்கிப் பிடித்தது,,,! பாலஸ்தீனக் குழந்தைகள் அழுகையில்..., தன் காதுகளை முழுதாக மூடியது...! முள்ளி வாய்க்காலில்..., முகத்தையே மூடியது..! பன்னாடைக்கு என்ன நடந்தது...? எல்லோரும் தேடினார்கள்...! மனித உரிமைகள் சபையில் குந்தியிருந்தது...! ஒன்று...இரண்டல்ல..., பத்து வருடங்கள்..! வேலையில்லாத ஒரு பட்டதாரியைப் போல..! போர்க் குற்றமா..? எங்கே நடந்தது...? புதினம் கேட்டது, பன்னாடை..! உக்ரெயினில் யுத்தமாம்..! ஓடோடி வந்தது...பன்னாடை..! தங்கத்தின் நிறத்தில்..தலை மயிர்....! அங்கத்தின் நிறமோ, வெள்ளை...! கண்களின் நிறமோ....மரகதம்..! கச்சிதமாக வடி கட்டி எடுத்தது, பன்னாடை...! உக்ரெயின் யுத்தம் தொடங்கி..., இன்னும் பத்து நாள் ஆகவில்லை...! நாலாயிரம் அகதிகள் வருகிறார்களாம்...! ஆயிரம் பேர் வந்தும் விட்டார்களாம்..! எவ்வளவு வேகமாகிறது, பன்னாடை..! அகதி முகாமில் பிறந்த குழந்தயை..., ஆயிரம் கேள்விகள் துளைக்கின்றன...! அந்தக் குழந்தயை...., பன்னாடை வடிகட்டாது...! ஏனெனில்.., அவள் ஒரு ஈழத்து அகதி...!
    20 points
  30. வார இறுதிநாட்களில் அநேகமாக இங்கிலிசு பிரேக் பாஸ்ட் சாப்பிடுவது அடியேனின் வழமை.அதற்காக நீங்கள் நினைக்க கூடாது அடியேன் ஆங்கிலபட்டதாரி என்று ..முட்டை பொறியள்,சொசெஜ்,பேக்கன், பாணை டொஸ்ட் பண்ணி தக்காளி சோசுடன் சாப்பிடுவது வழமை.. முட்டையையும்,சொசெஜ்யையும் தாயார் பண்ணி கோப்பையில் வைத்து விட்டு பேக்கனை போட்டேன் சட்டி நல்லா சூடா இருந்திருக்க வேணும் அத்துடன் சட்டியில் எண்ணையும் இருக்கவில்லை ,புகையும் கறுகிய மணம் வீட்டினுள் பரவ, தொலைகாட்சியில் பக்தி சணலில் பக்திபரவசத்துடன் எதோ பார்த்து கொண்டிருந்த சம்சாரம் "என்னப்பா செய்யிறீங்கள் கறுகி மணக்குது" "பேக்கன் பொரிச்சனான் அது கொஞ்சம் எரிஞ்சு போய்விட்டது ,உமக்கும் பேக்கன் பொரிக்கவா" "ஐயோ கடவுளே இன்றைக்கு நல்லூர் தேர் , ஆகஸ்ட் மாதமென்றால் நல்லூர் கலகலப்பாக இருந்த காலம் அது.நல்லூரானுக்கு கொடியேற்றிவிட்டார்கள் என்றால் யாழ்ப்பாணமே கலகலப்பாகி விடும் .ஊர்களில் உள்ள சைக்கிள்களில் முக்கால்வாசி இரவுபகலாக நல்லூரானின்ட பக்த போடிகளை தாங்கியபடி ஓடிக்கொண்டே இருக்கும்.இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்துகளும் கிழங்கு அடுக்கிய கணக்கில் சனத்தை ஏற்றிகொண்டு ஓடித்திரியும்.எங்களை போன்ற பெடியள் பக்தி பரவசத்தில் வேஸ்டியுடன் முருகனை காணும் ஆவலுடன் சைக்கிளில் செல்வோம்.கோவிலுக்கு செல்வது என்றால் வீட்டில் இலகுவில் அனுமதி கிடைத்து விடும், அப்பாவும் கவனமாக பாவிக்கும் தனது சைக்கிளையும் தந்து விடுவார். கோவிலுக்கு அருகாமையில் செல்ல செல்ல நடந்து செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிவிடும் .முருகனின் தரிசனத்திற்கு வெளிக்கிட்ட எங்களுக்கு வீதிகளில் தரிசனம் கிடைக்க தொடங்கிவிடும் .சைக்கிள் தரிப்பிடத்திற்க்கு ஒரு ரூபா கொடுக்க வேண்டும் அது பெரிய காசு...5 ரூபா கொண்டு போவது என்பது பெரிய விடயம். சைக்கிளை தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு தரிசனத்திற்கு உள்ளே சென்று விடுவோம்.முருகனின் தரிசனத்தை விட எங்களுக்கு விரும்பிய அழகு தரிசனத்தை தேடி அலைந்து திரிவோம்.அநேகமாக விரக்தியடைந்து வெளியே வருவோம் .காரணம் முருகனும் எங்களை கண்டு கொள்வதில்லை ..நாங்கள் தரிசனம் தேடி சென்ற பெண்களும் கண்டு கொள்வதில்லை.கடலை ஆச்சி மட்டும் எங்களை தனது வருமானத்திற்காக வாங்கோ வாங்கோ என கூவி அழைப்பார் .சைக்கிள் பார்க் காசை தவிர மிகுதி பணத்திற்கு கச்சான் சோளப்பொறியல் மற்றும் குச்சி ஐஸ்கிறீம் வாங்கி சாப்பிட்டபடியே வீடு சென்று விடுவோம். நாங்கள் கடலை வாங்க வெளி வீதி வலம் வந்து கொண்டிருக்கும் பொழுது கொஞ்சம் எஙகளைவிட அலங்காரம் அதிகம் போட்ட ஆண்களும் பெண்களும் நடுத்தர வயது த‌ம்பதியினர் வீதிகளில் வலம் வந்து கொண்டிருப்பார்கள் . மச்சான் ஆட்களை தெரியுதே என நண்பர்கள் கேட்பார்கள் தெரியவில்லை மச்சான் என்று சொன்னால் ,என்னடா மச்சான் உவையள் கொழும்பில் வேலை செய்கின்ற கோஸ்டிகள் திருவிழாவுக்கு வந்திருக்கினம். பார்க்க தெரியுது பசையுள்ள கோஸ்டிகள் என்று என‌ சொல்லி விட்டு "நாங்களும் இப்படி வருவோமல்ல" என அடுத்த பில்டப்பை போடுவோம். இந்த வழமை நாங்கள் தொழில் மற்றும் உயர்கல்வி தேடி செல்லும் வரை தொடர்ந்தது. ஒரு நாள்திருவிழா முடிந்து வீடு வந்த பொழுது அம்மா சொன்னார் "தம்பி உனக்கு தபால் வந்திருக்கு எதோ வேலைக்கு நேர்முக பரீட்சைக்கு கூப்பிடிருக்கிறாங்கள் போல தெரியுது, நீ ஒவ்வோரு நாளும் போய் கும்பிட்ட அந்த நல்லூரான் கைவிட மாட்டான்" "ஒம் அம்மா" அம்மாவுக்கு தெரியுமோ நாங்கள் என்னத்துக்கு முருகனிட்ட போனோம் என்று, இல்லை நான் தான் சொல்ல முடியுமோ விசயத்தை... இரண்டு நாளில் கொழும்புக்கு செல்ல வேண்டியிருந்தது எனது மாமா கொழும்பில் வாழ்ந்த காரணத்தால் பெரிய பிரச்சனைகள் இருக்கவில்லை .இரவு நேர (மெயில்) தபால் வண்டியில் செல்வதற்கு நண்பர்கள் கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு சைக்கிளில் அழைத்து சென்றார்கள். நல்லூரானின் தேர் திருவிழா முடிந்த கையுடன் கொழும்புக்கு பயணமானேன்.கோண்டாவில் புயையிரத நிலையத்தில் பிலாப்பழசீமேந்து பைகளுடனும் முருங்கைகாய் கட்டுகளுடனும் சனம் முண்டியடித்து கொண்டு நின்றது .அப்ப தான் புரிந்தது கொழும்பில் பணிபுரியும் இளைஞர்கள் ,குடுமபத்தினர் நல்லூரானை தரிசித்து விட்டு மீண்டும் கொழும்புக்கு செல்வதறகு நிற்கின்ரனர் என்பது.அதை பார்த்தவுடன் எனக்கு வேலை கிடைத்தால் நானும் இப்படி வந்து போகலாம என்று நம்ம மனசு கற்பனையில் மிதக்க தொடங்கி விட்டது பல கற்பனைகளில் அதுவும் கடந்து போனது கொழும்பில் முருகன் எனக்கு வேலை தரவில்லை ..ஆனால் ஒவ்வொரு வருட உறசவத்திற்க்கும் தன‌து பக்தர்களை தாங்கி வரும் வேலைய யாழ்தேவிக்கு கொடுத்துகொண்டிருந்தான். நாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் மக்கள் வெளியேற யாழ்தேவி,மெயில் வண்டி போகுவரத்து துண்டிக்கப்பட கொழும்பு பக்தர்கள் வருவது தடைப்பட, யாழ் பக்தர்களை எம்பெருமான் அலங்கார கந்தன் வெளிக்கிடுங்கோடா வெளிநாட்டுக்கு என ஆணையிட அந்த ஆணையை நிறைவேற்ற யாழ்தேவியை பிடித்து கொழும்பு வந்து சேர்ந்தவர்களில் நானும் ஒருத்தன், வெளிநாடு செல்வதற்காக கொழும்பில் இருக்கும் பொழுது கதிர்காமம் போகும் வாய்ப்பு ஏற்பட்டது.பூசாரி பூட்டிய திரைக்கு பின்னால் வாயையும் மூக்கையும் கட்டி பூஜை செய்து விட்டு எங்களுக்கு தீபத்தை தொட்டு வழிபட நீட்டிக்கொண்டு வந்தார். "என்ன மச்சான் ஐயர் பூணுலை மறைக்க , சேர்ட்டும் அணிந்து கொண்டு வாரார் " "இவர் ஐயர் இல்லை இவரை கபராலை என்று சொல்லுறவையள், பரம்பரை பரம்பரையாக அவையள் இப்படித்தான் செய்யிறவையள் " " கேள்வி பட்டனான் இப்ப தான் பார்க்கிறேன்" " ஏன் செல்வசந்நிதியிலும் இப்படித்தானே" " அங்க நான் போகவில்லை" "சனம் சன்னதியிலிருந்து இங்க நடந்து வாரவர்கள்" "முருகா வெளிநாட்டுக்கு போக உதவி செய் என்று தமிழிலும் ,தெரிந்த சிங்களத்திலயும் விண்ணப்பத்தை போட்டு விட்டு வந்தேன்" முருகா நீ தமிழனா சிங்களவனா என்ற கேள்வியை எழுப்பியவாறு பஸில் கொழும்பு திரும்பிகொண்டிருந்தோம் . "டேய் வெளிநாட்டுக்கு போகவேணும் என்று விண்ணப்பம் போடுறாய் எந்த நாட்டுக்கு என்று கேட்டியா? ஒழுங்கா அப்பிளிகேஷன் போடத் தெரியாது இதில நான் சிங்களவனா தமிழனா என்ற கேள்வி..பே...." தெகிவள பயின்டா.... சத்தம் கேட்டு திடுகெட்டு எழுந்து பஸிலிருந்து இறங்கினேன். வெளிநாட்டிலயே வேலை செய்யும் வாய்ப்புக்கள் கிடைத்தது. தமிழர்களில் பலர் வெளிநாடுகளில் தங்கள் அரைவாசிகாலத்தை கழிகின்றனர் அந்த வகையில் எனக்கும் அந்த சந்தர்ப்பம் கிடைத்து. சிங்கள முருகன் கொடுத்ததோ தமிழ் முருகன் கொடுத்தானோ என்ற பிரச்சனை இல்லை காரணம் நமக்கு இப்ப‌ அவுஸ் முருகன் இருக்கிறான் . நல்லூரானின்ட தேர் காலத்தில் மச்சம் சாப்பிட்டு விட்டேன் என்ற பயத்தில் அடுத்த நாள் காலையில் குளித்து வெளிக்கிட்டு நம்ம சிட்னி முருகனிட்ட போனேன் . கோவிலில் கந்தர் நின்றார்.மூக்கு வாய்க்கு ஒழுங்காக கச்சை கட்டியிருக்கினமோ என்று பார்த்து ஆட்களை எண்ணி உள்ளே அனுப்பி கொண்டிருந்தார். என்னை கண்டவுடன். " இப்ப நல்லூரானிட்ட நின்று இருக்க வேணும் இந்த கொரானா கோதாரி எல்லாத்தையும் கெடுத்து விட்டது" "அதுதான் இன்றைக்கு நானும் கோவிலுக்கு வந்தனான்" " என்ன நீ மச்சம் சாப்பிட்டு போட்டியாம் நல்லுரானின்ட திருவிழா காலத்தில்" முருகன் மறந்தாலும் இந்த சுற்றியிருக்கிற சனம் விடாது போட்டு கொடுத்துவிடுவாங்கள் முருகனிட்ட என்று புறுபுறுத்த வாறு "மறந்து போய் சாப்பிட்டு விட்டேன் ,எஸ்கியூஸ் மீ மூருகா" என்றேன்...... கண்ணை திறந்தேன் ஐயர் வாயை கட்டியிருநந்தார் மாஸ்க் என்ற போர்வையில் தீபத்தை நீட்டினார் தொட்டு கும்பிட்டுவிட்டு முருகா தொண்டைமானாறு சன்னிதியிலிருந்து சிட்னி வரை மெளன‌மாக இருந்து உன்னுள் என்னை தேடு என்று சொல்லுறாய் போல.....என்று நானும் மெளனமாக வீடு திரும்பினேன்.
    20 points
  31. ஒரு வளியாக இந்த வருடம் பரிசில் நடைபெற்ற மரதன் போட்டியில் கலந்து கொள்ள முடிந்தது. 3 மாத கடும் பயிற்சியின் பின் சென்ற ஞாயிறு ஓடி முடித்துள்ளேன். கோவிட் காரணமாக இந்தத் தடவை சுமார் 30000 பேர் மட்டுமே போட்டியில் பங்குபற்றினர். 3 மணித்தியாலங்களும் 39 நிமிடங்களும் ஓடி 6890 ஆவது இடத்துக்கு வந்துள்ளேன். இதோ சில படங்கள் 🙂
    20 points
  32. பிலோமினாவின் தந்தையாருடன் அளவளாவிக் கொண்டிருந்த சந்திரன் ஒரு சிறுவன் வீட்டை நோக்கி ஓடி வருவதை அவதானித்தான்! அதே சுருண்ட முடியும், நீல நிறக் கண்களும்...! அந்தக் குழந்தை யாருடையது என்பதற்குப் பெரிய அறிமுகம் எதுவும் அவனுக்குத் தேவைப்படவில்லை! சந்திரனைக் கண்ட குழந்தையின் கண்களில் ஒரு மிரட்சி தெரிந்தது! அப்பன் பயப்பிடாதை...இவர் உனக்கு மாமா! வெளி நாட்டில இருந்து வந்திருக்கிறார்! குழந்தை தாத்தாவைக் கட்டிப் பிடித்த பிடித்த படி....அவனைக் கூர்ந்து கவனித்தபடியே இருந்தது! இருவரில் ஒருவருமே...பிலோமினாவைப் பற்றிய கதையை ஆரம்பிக்கவில்லை! நான் அப்ப போயிற்று...நாளைக்குக் காலமை வாறன்! பிலோமினா நிப்பா தானே எனச் சந்திரன் கேட்கவும், தந்தையார் ஓமோம்...நான் அவவிட்டைச் சொல்லி விடுகிறன் மகன் என்று கூறினார்! அவரது கண்களில் ஏதாவது செய்தி இருக்கின்றதா என்று உற்றுப் பார்த்த போதும் ஒரு வெறுமை மட்டுமே....அதில் தெரிந்தது! பின்னர் சைக்கிளை உழக்கும் போது கொஞ்சம் எதிர்க் காத்து வீசவே, சைக்கிளைத் தூக்கித் தோள்களில் வைத்த படி நடக்கலாமா என்று யோசித்தவன்...தான் இன்னும் சிறு பிள்ளையில்லை என்று நினைத்துச் சைக்கிளை உருட்டிய படியே நடக்கத் தொடங்கினான்! செல்லும் வழியில் சில வீட்டுத் தோட்டங்கள் தெரிந்தன! பொதுவாகச் சின்ன வெங்காயமும், மிளகாய், கத்தரி, வெண்டி போன்ற சில மரக்கறி வகைகளும் நடப்பட்டிருந்தன! அதன் பின்னால் உள்ள உழைப்பின் அளவை அவன் ஓரளவுக்குத் தெரிந்திருந்தான்! வெறும் கல் படர்ந்த நிலத்தின் மீது கொஞ்சம் மண்ணை உயர்த்தி..அதன் மீது தான் நாற்றுக்களை நட்டிருப்பார்கள்! தரவை நிலங்களில் நிறையக் காய்ந்த எருக்கள் கிடைக்கும்! அதையும் மழையையும் மட்டும் நம்பியே அந்தத் தோட்டங்கள் இருந்தன! வீட்டுக்கு வந்த பின்னரும் பிலோமினாவைப் பற்றிய சிந்தனை அவனை விட்ட பாடில்லை! இன்னும் நல்ல வெளிச்சம் இருந்ததால்...கால் போன திசையில் கொஞ்ச நேரம் நடக்கத் தொடங்கினான்! வீதிக்குக் கொஞ்சம் தார் காட்டியிருந்தார்கள்! இப்போதெல்லாம் வீட்டு நாய்களைக் காணும் போது...உள்ளுக்குள் கொஞ்சம் பயமாக இருந்தது! அந்த நாட்களில் நாய்கள் துரத்தும் போது, கால்களைத் தூக்கிச் சயிக்கிள் ஹாண்டிலில் வைத்து ஓடி, நாய்களுக்கே நிலாக் காட்டியதை நினைத்துப் பார்த்தான்! ஓரு இடத்தில் நிறைய ஆவரம் மரங்கள் சிறு..சிறு பற்றைகளாக இருந்தன! இவற்றின் காய்கள் சீயாக்காய் போல நீளமாக இருக்கும்! இவற்றைத் தலையில் வைத்துக் கழிகளில் குளித்ததும் நினைவுக்கு வந்தது! இப்போதும் அவ்வாறு குளிக்க வேண்டும் போல இருந்தது! இப்போது அவனுக்கு ஒரு உண்மை...ஓடி வெளித்தது! எவ்வளவு நாட்கள் பிற தேசங்களில் வசித்தாலும்...இளமைக் கால நினைவுகள் ஒரு போதும் அழிந்து போவதில்லை! அதே சூழலுக்குள் திரும்பப் போகின்ற போது...அந்த நினைவுகள் அப்படியே திரும்பவும் வரும்! இப்போது பிற் காலத்தில் இங்கு வந்து வசிக்க வேண்டும் என்ற அடி மனத்து ஆசை மேலும் வீறு கொண்டெழுந்தது! மறு நாள் காலையில் விடிந்தும் விடியாத வேளையிலேயே கண் விழித்தவன் இன்றைய நாளைப் பெரும் எதிர்பார்ப்புகளோடு வரவேற்றான்! அவனுக்கே பிடித்தமான பிட்டும், கப்பல் வாழைப்பழமும், சம்பலும் பெரியவர் அவனுக்காகச் செய்து வைத்திருந்தார்! பின்னர் காலையின் வாசனையை முகர்ந்த படியே சைக்கிளை எடுத்துக் கொண்டு அவன் புறப்படவும்....வெளியே யாரோ வருவது போல அரவம் கேட்கவே, பிலோமினாவும் அவளது குழந்தையைக் கையில் பிடித்த படியே நடந்து வந்து கொண்டிருந்தாள்! அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவனின் மனதில் பெரியவரின் நினைவு திடீரென வந்ததும், அவளை வரவேற்பதற்காக வெளியே ஒடினான்! அதற்குள் பெரியவர் முந்திக்கொண்டார்! என்ன பிள்ளை இந்தப் பக்கம்? பேச்சு நடை விபரீதமாகப் போய் விடக் கூடாது என்பதற்காக, இவ எனது நண்பனின் உறவினர்...என்னிடம் தான் வந்திருக்கிறா என்று கூறியவன் பிலோமினாவை அழைத்துக் கொண்டு விறாந்தையில் கிடந்த கதிரையில் உட்காரச் சொன்னான்! அவனது கைகளில் தோன்றிய நடுக்கம்...வெளியே தெரிந்து விடுமோ என்று அவன் அஞ்சிய மாதிரித் தெரிந்தது! தான் எவ்வளவு கோழையாகிப் போனேன் என்று அவனுக்கே வெட்கமாக இருந்தது! பெரியவரிடம் இவள் என்னோடு ஒரே பாடசாலையில் படித்தவள் என்றோ....எனக்கு மிகவும் நெருக்கமானவள் என்றோ அறிமுகப் படுத்தியிருக்கலாமே என்று மனதுக்குள் புழுங்கிக் கொண்டான்! ஒரு ராஜதந்திரப் பார்வை ஒன்றை அவள் மீது வீசிய படியே பெரியவர் அப்பால் நகர்ந்து போனார்! பெரியவர் போன பின் அவளது கரங்களை இறுகப் பற்றிய படியே வெகு நேரம் நின்று கொண்டிருந்தவனை....எப்படி இருக்கின்றீர்கள் என்ற அவளது குரல் இவ்வுலகத்துக்கு அவனை திரும்பவும் கொண்டு வந்தது! ஓம்...ஓம்...சுகத்துக்கு ஒரு பிரச்சனையும் இல்லை! நான் உங்களை மறந்து போகேல்லை! ஆனாலும் வெளி நாடு சென்றதும் எதிர்பாராத எவ்வளவோ பிரச்சனைகள், படிப்பு...வேலை என்று சிந்திக்கவே நேரம் கிடைக்கேல்ல! தமிழனுக்கே உரித்தான தனித்துவமான பொறுப்புக்கள், எதையுமே நனைச்சுச் சுமக்க வைக்கும் எமது சமுதாய அமைப்பு எல்லாமே சேர்ந்து எனது வாழ்வைத் தின்று விட்டன! எல்லாம் முடிந்து கண்ணாடியைப் பார்த்த போது....காதோரத்தில் நரை முடி அரும்பிப் போயிருந்தது! அவன் சொல்லி முடிக்க, அவளும் சிரித்த படியே தனது புத்தம் புதிய நரை முடிகளைத் தடவிக் கொண்ட்டிருந்தாள்! இதையெல்லாம் பற்றி நீங்கள் கவலைப் படவே வேண்டாம்! எழுதிச் செல்லும் விதியின் கை, யாருக்காகவும் எழுதுவதை நிறுத்துவதில்லை! எப்படி உங்கள் குடும்பம் என்று அவள் விசாரித்த போது...அவனது மௌனமே அவளுக்கான பதிலாக அமைந்தது! அதன் பின்னர் அவளும் அந்தக் கேள்வியை மீண்டும் கேட்கவேயில்லை! வானத்துச் சந்திரனைப் போலவே.....நீங்கள் என்னிடமிருந்து வெகு தூரம் போய் விட்டீர்கள்! நீங்கள் அண்மையில் இருந்திருந்தாலும் இந்த உலகம் எம்மிருவரையும் சேர்ந்து வாழ ஒரு போதும் அனுமதித்திருக்க மாட்டாது! ஏன், இன்றும் கூட அது பெரிதாக மாறி விடவில்லை! நான் இந்த வீட்டின் படலையத் தாண்டி வந்த போது...அந்தப் பெரியவரின் முகத்தில் தோன்றிய கோடுகளை, நீங்களும் பார்த்தனீங்கள் தானே? நீங்கள் வெளி நாடு போய், ஐந்து வருடங்கள் ஆனதும், எங்களுடன் படித்த பீற்றர் என்னைக் கட்டித் தரும்படி அப்பாவிடம் கேட்க, நானும் கழுத்தை நீட்டினேன்! பீற்றரும் அவனது நண்பர்களும் சேர்ந்து ஒரு வள்ளம் வாங்கி வைத்திருந்தார்கள்! பிடிக்கும் மீன்களை எல்லோருமே பங்கிட்டுக் கொள்வார்கள்! ஒரு வருடத்துக்கு முன்பு வரை எல்லாமே நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது! ஒரு நாள் இந்திய இழுவைப்படகுகள் இவர்கள் போட்டிருந்த வலைகளை அப்படியே சேதப் படுத்தி விட்டுப் போய் விட்டன! இவர்களது வலைகள் மட்டுமல்ல, இன்னும் பலரது வலைகளுக்கும் அதே கதி தான்! இப்போதெல்லாம் இந்தியப் படகுகள் கரைக்கு அருகேயே வருகின்றன! நீங்கள் வந்து பார்த்தால் அவற்றின் எஞ்சின் சத்தத்தைக் கூடக் கரையிலிருந்தே நீங்கள் கேட்கலாம்! சந்திரன் நீண்ட நேரம் யோசித்து விட்டு....என்னால் ஓரளவுக்கு உதவ முடியும்! ஆனால் இதை நீங்கள் நிச்சயம் மறுக்கக் கூடாது என்றான்! இதைக் கேட்டுத் திடுக்கிட்ட பிலோமினா, சந்திரன் நீங்கள் எந்தப் பிராயச்சித்தமும் செய்ய வேண்டிய அவசியமில்லை! உங்கள் மீது எந்தத் தவறுகளும் இல்லையே என்று கூறினாள்! இல்லை, எனது ஆத்ம திருப்திக்காக என்னால் முடிந்த ஒரு உதவியை உனக்காகச் செய்ய என்னை அனுமதிக்க வேண்டும் என்று வற்புறுத்தவே, அவளும் ஒரு நிபந்தனையுடன் ஒப்புக் கொண்டாள்! மறு நாள் வங்கிக்குச் சென்று பிலோமினா பெயரிலும், அவளது குழந்தையின் பெயரிலும், அவனது பெயரிலும் ஒரு வங்கிக்கணக்கு ஒன்றைத் திறந்து வலைகளுக்குத் தேவையான பணத்துடன் மேலதிகமாகக் கொஞ்சப் பணத்தை மேலதிகமாகவும் போட்டு, மாதம் ....மாதம் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை அந்தக் கணக்குக்குத் திரும்பக் கட்டுமாறு கூறியவன்...அந்தக் கடன் கட்டி முடியும் வரை...அந்த வங்கிப் புத்தகம் தன்னிடமேயிருக்கும் என்றும் கூறிய படியே, அந்தக் குழந்தையின் தலையை வருடிய படியே விடை பெற்றான்! சில நாட்களின் பின்னர்..அவனது வீட்டில் அவன் விடிகாலையில் நித்திரையால் கண் விழிக்கும் போது, அவனது மனைவி 'என்னப்பா...ராத்திரி முழுக்கப் பிலோ...பிலோ எண்டு பினாத்திக் கொண்டிருந்தீங்கள், தலைகணி விலகிப் போச்சோ என்று கேட்கவே, ம்ம்...தலையே விலகிப் போச்சுது என்ற படி....அன்றைய நாளுக்கான கடமைகளில் மூழ்கத் தொடங்கினான்! அடுத்த வருசம் இந்தப் பாஸ் புத்தகத்தை எப்படியாவது பிலோமினாவிடம் சேர்த்து விட வேண்டும்! இனிமேல் அவன் ஊருக்குப் போக மாட்டான்! முற்றும்....!
    20 points
  33. நம்பினால்... நம்புங்கள். யாழ்ப்பாணத்தில்... வீட்டுடன் உள்ள பெரிய காணி. அங்கு வசித்தவர்கள்... புலம் பெயர்ந்து வெவ்வேறு நாடுகளுக்கு சென்று விட. ஊரில்... இருக்கும் அவர்களின் உறவினர், அந்த வீடு, சும்மா இருக்கப் படாது என்று, பல்கலைக் கழக மாணவர்களுக்கு, சிறிய வாடகையுடன் கொடுத்து வந்ததுடன், மூன்று, நான்கு மாதங்களுக்கு ஒரு முறை... அந்தக் காணியையும்... சுற்றிப் பார்த்து விட்டு வருவார். எல்லாம்... நல்ல படியாக இருந்ததால், அவரும், அங்கு போவதை சிறிது குறைத்துக் கொண்டார். இப்படியிருக்க.... ஸ்ரீலங்காவில், ஒரு ஐரோ..... 235 ரூபாய் போகுது என்றவுடன், அந்தக் காணிக்கு... இப்ப ஒரு, சுற்று மதிலை கட்டுவம் என்று, ஊரில், உள்ள உறவினருக்கு... சொல்ல, அவரும், நல்ல விசயம். உடனே செய்வம் என்று, ஆட்களைப் பிடித்து, நல்ல நாள் ஒன்றில்... வேலையை ஆரம்பித்து, மதில் கட்ட... வேலியை வெட்டி, அத்திவாரம் கிண்டும் போது, அயல் காணியில் இருந்து... ஒரு குழாய், குறுக்கே வந்து நிற்கிறது. 😮 அவரும்... அதைப் பார்த்து, திகைத்துப் போய்... "தொல் பொருள் ஆராய்ச்சி திணைக்களத்துக்கு", அறிவிக்க வேண்டிய... விசயம் போலுள்ளது , என்று குழம்பி நிற்க... 🤣 பக்கத்து காணிக்காரன், தனது காணியில்.. "கக்கூசை" கட்டி விட்டு, 🚽 பராமரிப்பு அற்று இருந்த, அயல் வீட்டு காணியில்... குழாயை நீட்டி... ஆழமாக "கக்கூஸ்" குழியை, தோண்டி.. தனது, அன்றாட... மலசல கடன்களை, சிறப்பாக செய்து கொண்டிருந்ததை... காலம் கடந்து அறிந்தார். இது... என்ன கோதாரியாய் கிடக்கு, "போனது... போனது தான்", அதனை திருப்பி... அவனது காணிக்குள், தள்ள முடியாது. இதுக்கு.... வக்கீல் வைத்து, நீதிமன்றத்துக்குப் போனால்... தீர்ப்பு வர, பத்து வருசம் எடுக்குமே, என்று விட்டு... யாழ். மாநகரசபைக்குப் போய்... நடந்த விடயத்தை சொல்ல, அவர்கள்... அந்த விடயத்தை, தமது, அதிகாரத்துக்கு உட்பட்டு... உடனே... தீர்த்து, வைத்து விட்டார்கள்.
    20 points
  34. 1960களின் கடைசியில் யாழ் இந்துவில் இருந்து வெளியே தலைகாட்ட தொடங்கிய நேரம். முதலாவது பாடம் முடிந்ததும் ஆசிரியர் வெளியேற ஓரிரு நண்பர்களும் நானும் அவர் பின்னாலேயே வெளியேறிவிடுவோம். ஆரம்பத்தில் ஒரு பாடம் இரண்டு பாடமாக தொடங்கி நாளடைவில் அரைநாள் முழுநாளாக மாறிவிட்டது. பாடசாலைக்கு 2 வருடமாக வாகனத்திலேயே வந்து போனேன்.அப்போது மாதம் 10 ரூபா மட்டுமே.வீட்டிலிருந்து வாகனம் வந்துபோகும் பாதை மாத்திரமே தெரியும்.வேறு பாதை தெரியாது. ஒருநாள் படம் பார்க்க போகலாமா என்று நண்பர் கேட்டார்.அவர் மனோகரா திரையரங்குக்கு அருகாமையில் வசிப்பராகையால் யாழில் கூடுதலான இடங்கள் தெரியும். சரி நண்பன் தான் கேக்கிறானே ஆனால் ரிக்கற் எவ்வளவு அதுக்கு என்ன செய்வது என்று யோசிக்க உங்களிடம் காசில்லாவிட்டால் பரவாயில்லை நாளைக்கு தாங்கோ என்றான்.நானும் மற்ற நண்பனும் கோவில் மாடு போல தலையாட்டினோம். ஒரு நண்பனின் தலமையில் பின் தொடர்கிறோம்.பெருந் தெருக்களுக்கு போகாமல் சிறிய ஒழுங்கைகள் வழியாக 10.30 க்குத் தான் படம் தொடங்கும் 10.25 க்கு போனால் சரி என்றான்.நெஞ்சு திக்குதிக்கென்று இருந்தாலும் படம் பார்க்க போகிறோமே என்று சந்தோசமும் ஏதோ சாதனையுமாக இருந்தது. நாங்களும் உள்ளுக்கு போக முதலாவது மணியும் அடிக்கிறது.படம் தொடங்கிய பின் தான் ஒரு ஆங்கிலப் படத்துக்கு வந்திருக்கிறோமே என்று.முதன்முதலாக களவாக பார்த்த படம் ஜேமஸ் பாண்ட் நடித்த கோல் பிங்கர்(Gold Finger) படம் முடிந்து பிற்பகல் முதல்பாடம் இடாப்பு கூப்பிட முதல் போக வேண்டுமே என்று ஓட்டமும் நடையுமாக போய் சேர்ந்துவிட்டோம். அன்று வீட்டுக்குப் போனால் 65 சதம் கொடுக்க வேண்டுமே எப்படி கொடுப்பது?இரவுவரை ஒரு வழியும் தெரியவில்லை. காலையில் குளித்து சாமி கும்பிடும் போது தான் ஒவ்வொரு சாமிப்படத்தின் முன்பும் சில்லரை காசுகள்.ஆகா இதைவிட்டால் வேறு வழியே கிடையாது.பொறுக்கி எடுத்து காற்சட்டை பொக்கற்றுக்குள் போட்டு கிலிங்கி சத்தம் கேக்காமல் ஒரு நுhலாலும் கட்டி கடன் கொடுத்தாயிற்று. இது தான் பள்ளியிலும் வீட்டிலும் தொடங்கிய முதல் களவு.முதல் தவறு செய்வது தான் மிகவும் கஸ்டம்.அப்புறம் அதுவே பழக்கமாயிடும். பின்னர் வின்சர் ராஜா திரையரங்குகளில் 10.30 படம்.காசில்லை அல்லது புதுப்படம் வரவில்லை என்றால் எங்காவது சும்மா சுற்றுவது. ஒருநாள் கஸ்தூரியார் வீதி வழியாக வின்சர் திரையரங்கு நோக்கி போகும் போது நிறைய நேரமிருக்கு என்று அதற்கு முதல் சந்தியில் இடதுபக்கமாக திரும்பி போனால் சிறிய வாசிகசாலை பெயர் அண்ணா அறிவகம். வாசிகசாலை சிறிதாக இருந்தாலும் நிறைய புத்தகங்கள் குறைந்த சனம்.புத்தகங்களுடன் இருந்தில் நேரம் போனதே தெரியவில்லை.படத்துக்கும் நேரம் போய்விட்டது. இதுக்குப் பின் படம் இல்லாவிட்டால் அண்ணா அறிவகம் என்றாகிவிட்டது.நாளாந்தம் போகப் போக படத்துக்கு போகாவிட்டாலும் வாசிகசாலைக்கு போய்வந்தோம். இதுவரை யாழ் பொதுசன நுhலகத்திற்குப் போனதில்லை. ஆனாலும் அண்ணா அறிவகம் மாதிரி ஒரு வாசிகசாலையை இன்னமும் காணவில்லை.அனேகமாக சுவியருக்கு இந்த வாசிகசாலையும் இடங்களும் நன்கு தெரிந்திருக்கலாம்.
    20 points
  35. கொழும்பில எல்லோருக்கும் தெரிந்த ஒரு இடம் அல்லது விடயம் அங்கொட. அதோட அங்க போற இபோச BUS இலக்கம் 134 என்றதும் தெரியும். காரணம் என்ன? எதுக்கு கொழும்பில இவ்வளவு இடம் இருக்க இந்த இடமும் BUS இலக்கமும் நமக்கு பாடம் என்று கொஞ்சம் மண்டைய சுத்தினால் நமக்கே உறைக்கும் மற்றவரை பைத்தியம் அல்லது மட்டம் தட்ட நமக்கு இருக்கும் ஆர்வம் தான் காரணம் என்று. தம்பி 134 இல் ஏறியே வருகிறீர் என்பதும் இவனை 134 இல் ஏற்றி விடுங்கோ என்பதும் பெரிய பகிடி அப்ப. ஏன் இப்பவும் தான். அதாவது ஒருவருடைய மனதில் ஏற்படும் சிறு பிசகை அல்லது சிறியதொரு மன அழுத்தத்தை நாம் ஏளனமாக அல்லது விளையாட்டாக எடுத்துக்கொள்கின்றோம்? நான் பிரான்சுக்கு வந்தும் இந்த மனநிலை தான். நான் இருக்கும் வீட்டிலிருந்து ஒரு 100 மீற்றரில் மனநிலை வைத்தியசாலை இருக்கிறது. மனைவி மக்களுடன் சிரிப்பதுண்டு. உங்களை அடிக்கடி கொண்டு திரிய முடியாது என்று தான் பக்கத்தில் வீடு எடுத்தனான் என்று. ஆனால் இது பற்றி கொஞ்சம் ஆளமாக அல்லது தற்போதைய சூழ்நிலைப்படி பார்த்தால் மனநிலை வைத்தியரைப்பார்ப்பது என்பது சிறியவர் தொடக்கம் பெரியவர்கள் வரை இன்று சாதாரணமாகிவிட்டது நித்திரை வராததிலிருந்து வேலை மற்றும் படிக்க ஆர்வமில்லாதவர் வரை சர்வசாதாரணமாக மனநிலை சார்ந்த வைத்தியர்களின் ஆலோசனைகளைக்கேட்பது அவர்களுடன் தொடர்பில் இருப்பது நாளாந்த நிகழ்வாகிவிட்டது. இன்றைய இயந்திர வாழ்வு காரணமாக அதற்கு அடுத்த கட்டமாக அதற்கு தேவையான மாத்திரைகளை பாவிப்பதும் சாதாரண நிகழ்வுகள். ஆனால் தமிழர்கள் நாம் இன்றும் இவை கொஞ்சம் குறைவான ஆட்கள் என்ற மனநிலையுடன்??? அவர்களை ஒதுக்கியபடி??? நமது குடும்பத்தில் கூட அவ்வாறு யாருக்கும் இவ்வாறான வைத்திய தேவைகள் இருப்பின் சமூதாய பயத்தைக்காட்டி நாம் எதை விதைத்தோமோ அதையே இந்த சமூகம் பரிசாக நமக்கு தந்துவிடக்கூடும் என்ற தேவையற்ற பயம் மற்றும் குறுகிற மனப்பான்மையுடன் எவ்வளவு நாளைக்கு இன்னும்??? 25வது சுய ஆக்கத்திற்காக விசுகு...
    19 points
  36. யாழ் இணைய உறவுகளுக்கு வணக்கம், உலகத் தமிழரை இணையவெளியில் ஒன்றிணைத்து, தமிழ்மொழியில் தனித்துவமாகக் கருத்தாடுவதை ஓர் உன்னதமான நோக்காகக் கொண்டு யாழ் இணையம் எனும் கருத்துக்களத்தை, கடந்த 24 வருடங்களுக்கு மேலாக பல்லாயிரம் மணித்துளிகளைச் செலவழித்து கட்டியமைத்த சிற்பி மோகன் அவர்கள் யாழ் இணைய நிர்வாகத்தில் இருந்து முழுமையாக ஒதுங்கியுள்ளார். யாழ் இணையத்தை மாறிவரும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப தொடர்ந்தும் புதுப்பித்து, உலகத் தமிழரின் காலக்கண்ணாடியாக யாழ் இணையம் விளங்க தனது வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்த மோகனுக்கு எமது நன்றிகள் என்றென்றும் இருக்கும். கடந்த மாதத்தின் இறுதியுடன் யாழ் கருத்துக்களத்தை முற்றாக மூடி வாசிப்புக்கு மாத்திரம் திறந்து வைத்திருக்க முடிவு எடுத்திருந்தும், அது தொடர்பான கள உறுப்பினர்களின் ஆதங்கங்களை உள்வாங்கிக்கொண்டு, கருத்துக்களத்தை மூடுவதை தற்காலிகமாக ஒத்திவைத்ததும் யாழ் இணைய உறுப்பினர்கள் ஏலவே அறிந்த விடயம். பல்வேறு சமூகவலைத் தளங்கள் உலவும் இன்றைய ஆசுவாசமற்ற அவசர உலகில், ஆழமானதும், காத்திரமானதுமான உரையாடல்களை எதிர்பார்ப்பாகக்கொண்ட யாழ் இணையமானது தனது சேவையின் அந்திமக் காலத்தை நெருங்கிக்கொண்டுவருகின்றது என்பது ஓர் கசப்பான யதார்த்தம். முகநூல், ற்விற்றர் போன்ற சமூகவலைத் தளங்களில் வருகையினால் கருத்தாடல்களின் கண்ணியம் குறைந்தது ஒரு சமூகமாற்றமாகவே உள்ளது. அத்தகைய கண்ணியமில்லாத கருத்துக்களும் யாழ் கருத்துக்களத்தில் தொடர்ச்சியாக வந்துகொண்டிருப்பதும், காத்திரமான விவாதங்கள் இல்லாதததும், யாழ் இணையத்தின் ஆக்கற்களத்தில் கள உறுப்பினர்களின் படைப்புக்கள் அருகிவருவதும் கண்கூடு. களவிதிகளை மீறும் பதிவுகளை நிர்வாகத்திற்குச் சுட்டிக்காட்ட ஒவ்வொரு பதிவுகளிலும் முறைப்பாடு வசதி உள்ளது. எனினும் கள உறுப்பினர்கள் விதிகளை மீறும் பதிவுகளை முறைப்பாடு செய்வது ஏறக்குறைய பூச்சியமாகவே உள்ளது. மாறாக, சில கள உறுப்பினர்கள் களவிதிகளை மீறும் பதிவுகள் உள்ள திரிகளில் தொடர்ச்சியாக விதிகளை மீறும் பதிவுகளை இடுவதும், அவை நிர்வாகத்தின் பார்வைக்கு வந்து மட்டுறுத்தப்பட்டால் நிர்வாகத்தைக் குற்றம் சாட்டுவதையும் ஒரு வழமையாகக்கொண்டிருக்கின்றனர். இவ்வாறான சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்வதற்கு முக்கிய காரணம் யாழ் கருத்துக்கள விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் வாசிக்காமல் உள்ளமைதான். அத்தோடு யாழ் இணையத்தின் பார்வையாளர்களிலும், கருத்தாடலில் பங்குகொள்ளும் உறுப்பினர்களின் எண்ணிக்கையிலும் சரிவு தொடர்ந்துகொண்டிருக்கின்றது. மேலும், யாழ் கருத்துக்களம் மூடப்படும் என அறிவித்தல் விடுக்கப்பட்டபோது, தொடர்ந்தும் நடாத்தவேண்டும் என விரும்பிய கள உறுப்பினர்களில் பலர்கூட கருத்தாடலில் பங்குகொள்ளாமல் பார்வையாளர்களாக அல்லது யாழ் இணையத்தைப் பார்க்காமலேயே உள்ளனர். நேரமின்மை என்பதுதான் முக்கிய காரணம் என்பதை நிர்வாகம் உணர்ந்துகொள்கின்றது. இதே நேரமின்மையால்தான் நிர்வாகமும் களவிதிகளை மீறும் பதிவுகளை மட்டுறுத்தமுடியாமல் உள்ளது. இவ்வாறான யதார்த்த நிலைகளைப் புரிந்திருந்தும், தமிழில் விவாதிக்கவும், நட்போடு பழகிடவும், தேடல் கொள்ளவும், யாழ் கருத்துக்களம் பிற இணையச் செய்திகளினதும், ஆக்கங்களினதும் திரட்டியாக மட்டும் இல்லாது தமிழ் சமூகத்திற்கு தேவையான ஆக்கபூர்வமானதும் தரமானதுமான கருத்தாடல் தளமாகவும் ஓர் குறிப்பிட்ட காலம் வரை தொடர நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இம்முடிவு பற்றிய முக்கிய குறிப்புக்கள்: யாழ் கருத்துக்களம் 25ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கும் நாள் (30.03.2023) வரை இப்போது உள்ள யாழ் கருத்துக்கள விதிமுறைகள் பதிப்பு 4.0 க்கு அமைய நடாத்தப்படும். கருத்துக்களத்தில் தொடர்ந்தும் கருத்தாடலை அனுமதிப்பதா அல்லது தனியே பார்வைக்கு மட்டும் அனுமதிப்பதா என்பது பற்றிய தீர்மானம் யாழ் களம் 25 ஆவது அகவைக்குள் செல்லும் நாளில் (30.03.2023) தெரியப்படுத்தப்படும். யாழ் கருத்துக்களத்தின் போக்கு, கருத்துக்களின் பார்வை எண்ணிக்கை, கருத்தாடல்களின் தரவுகளின் அடிப்படையில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்படும். இணையவன், நிழலியுடன், நியானியும் யாழ் கருத்துக்களப் பொறுப்பாளர்களாக இருப்பார்கள். நுணாவிலான் தொடர்ந்தும் கருத்துக்கள நிர்வாகத்தில் இருந்து மட்டுறுத்தலுக்கு துணைபுரிவார். யாழ் இணையத்தை நடாத்த கள உறுப்பினர்களிடம் இருந்து பண உதவி ஏதும் கோரப்படமாட்டாது. கள உறுப்பினர்கள் கட்டண விளம்பரங்களைப் பெற்றுக்கொள்ள உதவ முடிந்தால் நன்றியுடன் ஏற்றுக்கொள்ளப்படும். கருத்தாடலில் கண்ணியத்தைக் கடைப்பிடிக்காமலும், களவிதிகளை மதிக்காமலும் கருத்துக்கள் வைக்கும் கள உறுப்பினர்கள் மீது இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவை நிரந்தர மட்டுறுத்துனர் பார்வையாகவோ, நிரந்தரத் தடையாகவோ கூட இருக்கலாம். யாழ் கருத்துக்களம் தொடர்ந்தும் இயங்க யாழ் கள உறவுகளின் பங்களிப்பும், ஒத்துழைப்பும் மிகவும் அவசியமானது என்பதை இத்தருணத்தில் குறிப்பிட விரும்புகின்றோம். "நாமார்க்கும் குடியல்லோம்" நன்றி யாழ் இணைய நிர்வாகம்
    19 points
  37. ஊர் வம்பும், கைபேசியும்..! ********************* அந்தக்காலம்.. நல்லதண்ணிக் கிணத்தில நாலுபேர் கூடுமிடத்தில பக்கத்து வீட்டு பழசுகள்-2 பவ்வியமாய் வந்தாலே குலநடுங்கி போகுமாம் குடும்பங்கள் எல்லாம். மூல வீட்டுப் பெட்ட முளங்காலுக்கு மேல போடுது சட்ட ஓல வீட்டுப் பொடியன் ஒருத்தியோட ஓடிட்டான். வேலைக்கு அவன் போக-வீட்ட வேறொருவன் நிக்கிறான் காலக் கொடுமையென கதிராச்சி முடிக்க முன்ன.. குப்பத்தொட்டியில ஒரு குழந்த கிடந்தது-அது பக்கத்து வீட்டு பணக்காரச் சமாச்சாரம். எண்டு தொடங்கி எல்லா வரலாறும் சொண்ட நெளிச்சு சொல்லி முடிக்குமாம் மற்றது.. கடுகளவு உண்மையை மடுவளவு பெரிதாக்கி வதந்திய பரப்பிவிட்டு வாயமூடு நமக்கேன்-ஊர் வம்பு என்று சொல்ல.. வந்த சனமெல்லாம் வாயும் காதும் வைத்து சொந்தங்களுக்குள்ளே சொறிநாயாய் கடிபட்டு வெட்டுக்குத்தில போய்-ஊரே வெடிச்சு பிளந்து உண்மை பொய் தெரியாமல் ஓராயிரம் பிரச்சனைகள். கலியாணக்குளப்பமும் கருமாரியும்-வதந்தி கதை பேச்சால் நடந்த அந்தகாலம். இன்றும் வேறு வடிவில வீட்டுக்குள்ள திரியுதாம் எச்சரிக்கை.. கையில இருக்கிற கை பேசியை நம்பிறதால் பொய் வதந்தியெல்லாம் பொட்டளமாய் கொட்டி குடுப்பத்தை குலைத்து கொடுமை நடக்கிறது. கணவனுக்கு போண் வந்தால் மனைவிக்கு தூக்கமில்லை மனைவிக்கு மெசேச் வந்தால் கணவனுக்கு வாழ்க்கையில்லை. உள்ளத்து தூய்மையில்லா உணர்வு எமக்கிருந்தால் கள்ளப் போண் வருகுதென்று கணவன் மனைவிக்கே கை பேசி மூட்டி விட்டு-பல கலவரங்கள் அது பார்க்கும். பிள்ளைகளை வழி நடத்த முதலில்.. பெற்ரோரே முடிவெடுங்கள் இல்லையேல் ஒவ்வொரு மூலையாய் உங்களைப் போல் பிள்ளைகளும். குரோதம் தவிர்த்து குடும்பத்துக்குள்ளே திறந்த மனதுடன் திறப்பின்றிப் “போணை” அனைவரும் பார்க்க அனுமதித்தாலே வதந்திகள் பயப்படும் வாழ்வே ஒளி பெறும். அன்புடன் -பசுவூர்க்கோபி- 07.03.2021
    19 points
  38. பிரபாகரன் தமிழ்த் தேசிய அரசியலினைப் பின் தொடர்ந்து பல தாசாப்த்தங்களாக ஆய்வுகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டுவந்த மூத்த பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான த. சபாரட்ணம் அவர்கள் எமது தேசியத் தலைவர் மேதகு வேலுபிள்ளை பிரபாகரன் அவர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தினை 2002 ஆம் ஆண்டிலிருந்து 2005 வரையான காலப்பகுதியில் சங்கம் இணையத்தளத்தில் எழுதிவந்தார். செய்திச் சேகரிப்பில் பல்லாண்டுகள் பயணித்த சபாரட்ணம் அவர்கள், இனச் சிக்கல் தோன்றியதற்கான மூலக் காரணங்கள் தொட்டு, போரினூடான காலம், இனச்சிக்கலின் பின்னால் இருந்தவர்கள், அவர்களின் செயற்பாடுகள் ஆகியவற்றினை ஒரு செய்தியாளன் எனும் நிலையில் இருந்துகொண்டு எழுதுகிறார். முதலாவதாக, இவரால் தொகுக்கப்படும் செய்திகளின் விபரங்கள் வேறு எந்த இணையத்திலோ அல்லது அச்சாகவோ இதுவரை வெளிவரவில்லை என்பதாலும், இவரால் சங்கம் இணையத்தில் தரவேற்றப்பட்ட இத்தொடரின் சில அத்தியாயங்கள் அழிந்துவிட்டதனாலும், இவரால் பதியப்பட்ட பல பிரச்சினைகள் இன்றுவரை அவ்வாறே உயிர்ப்புடன் இருப்பதாலும் இத்தொடரினை முழுமையாக மீள்பிரசுரம் செய்கிறோம் என்று சங்கம் இணையம் கூறுகிறது. திரு சபாரட்ணம் அவர்கள் நீண்டகால செய்தியாளராக கடமையாற்றியதால் தமிழர் சரித்திரத்தின் மிக முக்கியமானவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினை அவர் பெற்றிருந்தார் என்றும், ஒரு வரலாற்றாசிரியராக அவரால் எமது போராட்டம்பற்றியும், தேசியத் தலைவர் பற்றியும் இதுவரை எவரும் எழுதாதாத கோணத்திலிருந்து எழுத முடிந்ததாகவும் சங்கம் கூறுகிறது. மூன்று பாகங்களாக இத்தொடரினை எழுதிய சபாரட்ணம் அவர்கள் , பாகம் ஒன்றினை 1954 இலிருந்து 1983 வரையான காலப்பகுதியென்றும், பாகம் இரண்டினை 1983 இலிருந்து 1986 வரையான பகுதியென்றும், பாகம் மூன்றினை 1985 இற்குப் பிற்பட்ட காலத்திலிருந்தும் எழுதி வந்திருந்தார். ஆனால், 2010 இல் அவரது மறைவுடன் பாகம் 3 பதிவேற்றப்பட முடியாது போய்விட்டது. பாகம் மூன்று பதிவேற்றப்படாதுவிட்டாலும் கூட, பாகம் ஒன்று மற்றும் பாகம் இரண்டு ஆகியவற்றின் தொகுப்பினை யாழில் பதிவிடலாம் என்று நான் நினைக்கிறேன். எமது போராட்டச் சரித்திரம், தலைவர் மற்றும் போராளிகள் பற்றிய பதிவொன்று எம்மிடம் இருப்பது நண்மையானதே. இத்தொடர் தமிழில் மொழிபெயர்த்து எழுதப்படுவது தேவையானது என்று யாழ்க்கள நண்பர்கள் நினைக்குமிடத்து, இதனைத் தொடர்ந்து தமிழில் மொழிபெயர்த்து எழுத யோசிக்கிறேன். உங்களின் கருத்துக்களைச் செவிமடுக்க விரும்புகிறேன், ரஞ்சித் https://sangam.org/pirapaharan-volume-1-and-2-by-t-sabaratnam-reposted/
    18 points
  39. 2007, நான் அத்தொழிற்சாலையில் இணைந்து கிட்டத்தட்ட ஒருவருடம் ஆகியிருந்தது. என்னைப்போலவே இங்குவந்து, தம்மை நிலைநிறுத்திக்கொள்ள பல இந்தியர்களும், இலங்கையர்களும் பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காலம். வெள்ளை நிறத்தவரின் தொழிற்சாலை, வேலைத்தளத்தில் அணியின் மேலாளர்களில் இருந்து அதியுயர் நிர்வாகத் தலைவர்கள் எல்லோருமே வெள்ளை நிறத்தவர்கள். அவர்களுடன், அவர்கள் பேசும் மொழியினையும், பேசும் சங்கேத வார்த்தைகளும் விளக்கமேயின்றிக் கேட்டுக்கொண்டு, அருகில் இருப்பவன் சிரித்தால், நாமும் சிரித்துக்கொண்டு, வேலைத்தளத்தில் சமூகப் படிகளில் நாம் ஏறலாம் என்று நினைத்திருந்த காலம். எனது வேலைத்தள அணியில் 20 பேர் இருந்தோம். எமது மேலாளர் ஒரு வெள்ளையினத்தவர். சுவிட்ஸர்லாந்தில் பிறந்து, இங்கு வளர்ந்தவர். சிலவேளைகளில் அவர் பேசுவதைக் கிரகிப்பதற்குள் அவர் அடுத்த வசனத்தைத் தொடங்கிருப்பார். புரிந்துகொள்வதற்குச் சிரமப்பட்டுக்கொண்டே பணிபுரிந்த காலம். சிலவேளைகளில் நாம் அவர்கள் பேசும் ஆங்கிலத்தைப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே ஆறுதலாய்ப் பேசுவர்கள். அதுகூட சிலவேளை சிரமாகத் தெரிந்தது. என்ன உலகமடா இது என்று சலித்துக்கொண்ட பொழுதுகள். ஆனால், அணியிலிருந்த வெள்ளையர்களை விட நம்மவர் வேலைகளில் சுறுசுறுப்பானவர்கள். ஊரில் கஸ்ட்டப்பட்டு வேலை தேடி, அதனைத் தக்கவைத்துக்கொள்ள அதைவிடக் கஸ்ட்டப்பட்டு வேலை செய்யும் எமக்கு இங்குள்ள வேலை கடிணமானதாகத் தெரியவில்லை. ஆகவே, வேலையென்றால் கூப்பிடுங்கள் இலங்கையர்களையும் இந்தியர்களையும் என்று வெள்ளையர்களே அவ்வப்போது பேசுவது கேட்கும். கடிண உழைப்பாளிகள் என்கிற பெயரும் எமக்கு இருந்தது. அதனால், வழமை போலவே மேலாளரின் செல்லப்பிள்ளைகள் யாரென்பதில் எமக்குள்ப் போட்டி ஏற்படுவதுண்டு. எம்மிடம் வேலை வாங்கலாம் என்று அவர் எண்ணி வந்தபோதிலும், நாம் அதனை ஒரு கெளரவமாக பார்க்க ஆரம்பித்தோம். ஆகவே, எம்மைத்தவிர வேறு எவரும் மேலாளரின் மதிப்பிற்கு பாத்திரமாயிருப்பது எமக்கு எரிச்சலைத் தரும். அந்தக் காலமொன்றில்த்தான் அவன் வந்தான். என்னை விட வயதில் சிறியவன். 26 அல்லது 27 வயதிருக்கலாம். மிகவும் திடகாத்திரமானவன். வெள்ளையினத்தவன். சுருள் சுருளான மயிர்க்கற்றைகள் பொன்னிறத்தில் வளர்ந்திருக்க தனது பெயர் சொல்லி ஒருநாள்க் காலையில் அணியின் கூட்டத்தில் அறிமுகப்படுத்திக்கொண்டான். அவன் பற்றி மேலாளர் அறிமுகம் கொடுத்தபோது மனதிற்குள் சிறிய எரிச்சல். "எமக்கெல்லாம் இந்த அறிமுகம் கொடுத்தார்களா, இல்லையே? இவனுக்கு மட்டும் எதற்கு இந்த அறிமுகம்?" என்கிற கேள்வி. விடை எமக்குத் தெரியவில்லை. அணியில் பணிபுரிந்தவர்களில் கீழ்மட்ட வேலைகள், இடைநிலை வேலைகள், உயர் நிலை வேலைகள் என்று மூன்று பிரிவுகளாகாப் பிரிக்கப்பட்டிருந்தோம். இடைநிலை வேலைகளை பெரும்பாலும் இந்தியர்களும் இலங்கையர்களும் செய்துகொள்ள கீழ்மட்ட வேலைகளையும் உயர் மட்ட வேலைகளையும் வெள்ளையர்களே பார்த்துக்கொண்டார்கள். அவனும் கீழ்மட்டத்திலிருந்தே ஆரம்பித்தான். எமக்குக்கீழ் இருக்கிறான் என்பதால் அவன் பற்றி அதிக அக்கறை காண்பிப்பதை நாம் மறந்துவிட்டோம். ஆனால், அடிக்கடி அணிக் கூட்டங்களில் அவனின் பெயர் அடிபடும். அவனது பெயரை அணியின் மேலாளர் உச்சரிக்கும்போது வியப்பும், எரிச்சலும் ஒருங்கே வந்து போகும். ஆனாலும் அவன்குறித்து அதிகம் அலட்டிக்கொள்ளத்தேவையில்லை என்று இருந்துவிட்டோம். நாட்கள் செல்லச் செல்ல அவன் அணியில் முக்கியமானவர்களில் ஒருவனாகிப் போனான். கூட்டங்களில் அவன் பேசுவதை மேலாளர் உன்னிப்பாகக் கேட்பது புரிந்தது. அவன் ஈடுபட்டிருக்கும் வேலைத்திட்டங்கள் குறித்து அவர் அடிக்கடி பெருமையுடன் பேசும்பொழுதுகளில் அதே எரிச்சல் வந்து போகும். ஆனால், அவன் குறித்த எமது பார்வைகள் தவறானவை என்பதை அவன் தொடர்ச்சியாக நிரூபித்து வந்தான். இலங்கையில் பொறியியல் படித்துப் பட்டம் பெற்றவன் என்கிற பெருமையும், இங்கிருக்கும் வெள்ளைக்காரனை விடவும் நாம் படித்தவர்கள் என்கிற எண்ணமும் அவனை எம்மிலும் கீழானவனாகப் பார்க்கத் தூண்டியது எமக்கு. அதனாலேயே அவனின் திறமைகளை ஏறெடுத்தும் பார்க்க நாம் நினைக்கவில்லை. ஆனால் எமது எண்ணங்களையும், பெருமைகளையும் அவன் மிக இலகுவாக உடைத்துக்கொண்டே எம்மை நோக்கி வந்துகொண்டிருந்தான். ஒருநாள் திடீரென்று கீழ்மட்ட அணியில் இருந்த அவனை எமது, அதாவது நடுத்தர வர்க்க அணியில் கொண்டு வந்து இணைத்தார் மேலாளர். எமக்கோ தூக்கிவாரிப் போட்டது. "இது எப்படித் தகும்? நாம் படித்தவர்கள் இல்லையா? பண்ணைகளில் ஆடு மாடு மேய்த்துக்கொண்டு நின்றவனை எம்மோடு, சரிக்குச் சமமாக கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். வெள்ளைக்காரன் என்பதால்த்தானே இதுவெல்லாம்?" என்கிற எண்ணம் தலையில் ஏறி அமர்ந்துகொள்ள அவன் மீது தேவையில்லாமல் எரிச்சலை வாரியிறைக்கத் தொடங்கினோம். ஆனால், அவனுக்குத்தான் நாம் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறோம் அல்லது எமக்குள் என்ன பேசிக்கொள்கிறோம் என்பதுபற்றி எதுவும் தெரியாதே? அவனோ எம்மிடம் மிகவும் சகஜமாகப் பழகினான். சில வேளைகளில் எம்மிடமே வந்து சில விடயங்களை எப்படிச் செய்யலாம் என்று கூடக் கேட்பான். விரும்பாதுவிடினும் கூட, அவன் கேட்கும்போது நாம் உதவியிருக்கிறோம். அவனும் நன்றியுடன் சென்றுவிடுவான். சில காலத்தின் பின்னர் இந்தியர்கள் மற்றும் இலங்கையர்கள் என்று கிட்டத்தட்ட ஒரே காலப்பகுதியில் வேலையில் இணைந்தவர்களுக்கு அணியில் மேல்த்தட்டுப் பிரிவில் பதவி உயர்வு கிடைத்தது. அவ்வாறு பதவி உயர்வு கிடைத்துச் சென்றவர்களில் நானும் ஒருவன். மூன்று அல்லது நான்கு வருடங்கள் இருக்கலாம். 2010 வாக்கில் அவனையும் பதவியுயர்வு கொடுத்து எமக்குச் சமனானவனாக ஆக்கி அழகுபார்த்தது நிர்வாகம். இத்தனைக்கும் அவன் எம்மை வெறுக்கவில்லை. நிர்வாகத்திற்கு நெருக்கமானவன் என்பதைத்தவிர அவனை நாம் வெறுப்பதற்கு வேறு எந்த காரணங்களும் எமக்கு இருக்கவில்லை. அவன் குறுகிய காலத்தில் காட்டிய அதீத வளர்ச்சி எமக்குள் அச்சத்தை ஏற்படுத்தியிர்ந்தாலும் கூட, அவன் எமக்குப் போட்டியாக வரலாம் என்று ஒருபோதும் நினைத்ததில்லை.
    18 points
  40. இலங்கையில் ஆறு மாதங்கள் நீண்ட நாட்களாகவே எம்மூரில் சென்று வாழவேண்டும் என்ற ஆசை என்னை அலைக்கழித்தபடியே இருந்ததுதான். அதிலும் ஆறு மாதங்களாவது நின்மதியாய் கணவர் பிள்ளைகளின் தொல்லைகள் இன்றி நினைத்த நேரத்தில் தூங்கி எழுந்து, நினைத்ததை உண்டு மகிழ்ந்து, நினைத்த இடங்களுக்குப் போய்வந்து இப்படி இன்னும் சின்னச் சின்ன ஆசைகளை எல்லாம் செய்து முடிக்க வேண்டும் என்ற என் எண்ணத்தை கனடாவில் இருக்கும் என் நண்பியுடன் கதைத்துக்கொண்டிருந்தேன். அடியே நல்ல யோசனை எனக்கும் உப்படித் திரியவேண்டும் என்று ஆசை இருக்கடி. நானும் நீயும் சேர்ந்து போவோமாடி என்றாள். இந்தியா சென்று ஒரு மாதமாவது எல்லா இடங்ககளையும் சுற்றிப் பார்த்துவிட்டு இலங்கை வந்து அங்கு ஒரு மாதம் நின்றபின் அங்கிருந்து ஒஸ்ரேலியா சென்று இரண்டு மூன்று வாரங்கள் அங்கு பார்த்தபின் மீண்டும் இலங்கை வந்து நின்றுவிட்டு திரும்புவதே திட்டம் என்றேன். எனக்கு இந்தியா செல்வதில் விருப்பம் இல்லை என்றவளை நீ முன்னர் அங்கு சென்றுள்ளீரா என்று கேட்க இல்லை என்றாள். நீர் ஒருமுறை சென்றால் மீண்டும் போக ஆசைப்படுவீர் என்று கூறி இந்தியாவில் எந்த இடங்களுக்குப் போகலாம் என்று அவளுக்குக் கூறினேன். நான் விபரித்ததைக் கேட்டபின் அவளுக்கும் ஆசை வந்ததோ என்னவோ சரி உமக்காக வாறன் என்றாள். எனக்கோ மட்டற்ற மகிழ்ச்சி ஒருபுறமாயினும் இவளே எனக்கு இடைஞ்சலாய் வந்திடுவாளோ என்னும் யோசனையும் ஓடிக்கொண்டிருந்தது. அவளை நான் ஒரேயொரு தடவைதான் சந்தித்திருந்தேன். தொலைபேசியில் என்னதான் கதைத்தாலும் அவர்களோடு கூட இருக்கும்போதுதான் அவர்களது குணம் முழுவதுமாகத் தெரியவரும் என்பதும், என் நினைத்ததைச் செய்து முடிக்கும் குணமும் அவளுக்கும் எனக்குமான நட்பில் விரிசலை ஏற்படுத்துமா என்னும் யோசனையையும் தந்தது. இந்தியாவைப் பொறுத்தவரை தங்கு விடுதிகளில் தங்கும்போது சுத்தமான நல்ல விடுதிகளிலேயே தங்கவேண்டி இருக்கும். பணமும் அதற்கேற்ப அதிகமாகவும் இருக்கும். தூர இடங்களுக்குச் செல்லும்போது பொது வாகனங்களில் செல்வது எமக்குச் சரிவாராது. அதற்கும் பாதுகாப்பான வாகனங்களில் செல்வதாயின் அதிக செலவாகும். இதற்கெல்லாம் அவளால் ஈடுகட்டமுடியுமா என்னும் யோசனையும் ஓடியது. சரி உனக்குத் துணையாக அவள் வருகிறாள் தானே. அதுவே பெரிய விடயம். அதனால் பணத்தைப் பற்றி யோசிக்காதே என்றது மனம். இலங்கையில் எனக்கு வசிப்பதற்கு எனது சிறியதாயார் வசிக்கும் என் கனடாத் தங்கையின் வீட்டில் மலசலக்கூட வசதியுடன் ஒரு அறை உண்டு. அந்த அறையுள் 120 - 200 அளவுள்ள கட்டிலும் உண்டு. நானும் கணவரும் சென்றாலோ அல்லது உறவினர்கள் சென்றாலோ இருவர் மட்டும் அங்கு தங்கலாம். அதாவது கணவன் மனைவி ஒட்டி உரசிக்கொண்டு சகித்துக்கொண்டு படுத்தாலும் தனியாக அக்கட்டிலில் படுப்பதுதான் சுகமானது என்பதும் ஒரு நண்பியுடன் அக்கட்டிலைப் பகிரவே முடியாது என்றும் என் மனம் கூற, அவளுடன் கதைக்கும்போது அவளுக்கும் இதைக் கூறினேன். ஒரே ஒரு அறை தான் உங்கள் வீட்டில் இருக்கா? வேறு அறைகளே இல்லையா என்று குத்தலாகக் கேட்டாள் இன்னும் மூன்று அறைகள் இருந்தாலும் ஒரு அறையில் என் சிறிய தாயாரும் மிகுதி இரு அறைகளிலும் இவ்விரண்டு பேராக நான்கு இராமநாதன் அக்கடமியில் கற்கும் மாணவிகளும் இருக்கின்றனர் என்றேன். அப்ப நாங்கள் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இருப்போம். செலவை இருவருமாகப் பங்கிட்டுக்கொள்வோம் என்றாள் அவள். அது ஒருவிதத்தில் நல்ல யோசனையாக இருந்தாலும் வாடகையே காட்டாமல் இருக்க வீடு இருக்கும்போது எனக்கு ஏன் வீண் செலவு என எண்ணியபடி நீர் உமது அம்மாவுடன் தங்கியிரும். ஒவ்வொருநாளும் வெளியே போகும்போது இருவரும் சேர்ந்து போவோம் என்றேன். உமக்கு என் அம்மாவைப் பற்றி சொன்னால் விளங்காது. நான் அவவிடம் சென்றால் அவதான் எனக்கு முழுப் பாதுகாப்பும் என நினைத்துக்கொண்டு எங்கை போறாய் ? ஆரோடை போறாய்? எத்தினை மணிக்கு வருவாய் என்று சின்னப்பிள்ளை போலவே நடத்துவா. அதுமட்டுமில்லை அயலட்டைக்கெல்லாம் அது இது என்று வாங்கிக் குடு என்று கரைச்சல் வேறை. அதுமட்டுமில்லை இல்லாத கடனெல்லாம் சொல்லி கண்ணீர் விட்டால் எனக்கு ஒண்டும் செய்ய ஏலாமல் போயிடும். அதனால அவவிட்டை நிக்கிறது சரிவாராது என்றாள். சரி யோசிப்பம் என்றுவிட்டு என கணவனின் சகோதரி வீட்டிலும் எல்லா வசதியும் உண்டு. சரி நான் அங்கு நின்றுகொண்டு இவளை எங்கள் வீட்டில் தங்கவைப்போம் என மனதுள் எண்ணிக்கொள்கிறேன். பேச்சு வாக்கில் கணவர் பிள்ளைகளிடம் கூறியபோது உங்களுக்கு விருப்பம் என்றால் போய் நின்றுவிட்டு வாருங்கள் எனப் பிள்ளைகளும்,” நீ போய் இரு. நாங்களும் கொஞ்சநாளைக்கு நின்மதியாய் இருப்பம்” என மனிசனும் கூற இத்தனை இலகுவாகச் சம்மதித்துவிட்டனரே என மகிழ்வும், நான் இல்லாமல் ஆறு மாதம் இருந்து பாருங்கோ. அப்ப தெரியும் என்அருமை என விசனமும் ஏற்பட்டது. அதன் பின் அங்கு போய் எங்கு எல்லாம் செல்வது, யாரை எல்லாம் சந்திப்பது என்று மனதுள் கூட்டிக் கழித்துப் பார்த்ததில் எல்லாமே சரியாக இருப்பதாய்ப் பட நின்மதியுடன் வேலைத் தலத்திலும் நான் ஆறுமாத காலம் அங்கு தங்கியிருப்பது பற்றி கூறத் தொடங்கினேன். நான் வேலை செய்வது எனது நண்பனின் தபாற் கந்தோரில் என்பதனால் அவருக்கும் பகிடிபகிடியாக விடயத்தைக் கூற அவரோ நம்பவில்லை. 2019 ம் ஆண்டு கோவிட் வந்தபோது மெசெஞ்சரில் ஒரு குழுவை உருவாக்கி அதில் “சமூக மீட்சிக்கான உலகளாவிய நண்பர்கள்” என்னும் குழுவை உருவாக்கி அதில் 143 பேர் அப்போது இணைந்திருந்தனர். அதனூடாக அனைவரின் பங்களிப்புடன் பலருக்கும் உணவுப் பொருட்கள் முதல் பல உதவிகளையும் செய்தபடி இருந்தார் சுப்பிரமணிய பிரபா என்னும் முகநூல் பெயருடைய ஒருவர். அவரை உங்களுக்கும் தெரிந்திருக்கலாம். அவரின் செயற்றிட்டம் எமக்குப் பிடித்திருந்தமையால் அவரின் திட்டப்படி ஒருங்கிணைந்த பண்ணை ஒன்றை கிளிநொச்சியில் உருவாக்கி பலருக்கும் வேலைவாய்ப்பைக் கொடுக்கலாம் என்னும் நல்லெண்ணத்தில் புலம்பெயர்ந்து வாழும் எனைப் போன்ற எட்டுப் பேரும் இலங்கையில் இருக்கும் இன்னொருவருமாக பத்துப்பேர் கொண்ட குழு இதில் இணைந்தோம். கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரேயொருவர் மட்டும் நாட்டுக்குச் சென்று வந்தாலும் பண்ணையை யாருமே சென்று பார்க்கவில்லை. பிரபா அனுப்பும் படங்களிலும் வீடியோவிலும் பண்ணை பரந்து விரிந்து செழிப்பாகக் காணப்பட்டது. நான் அதைப் போய் பார்க்கப்போகிறேன் என்பதும் எனக்கு மகிழ்வையும் ஒரு எதிர்பார்ப்பையும் தந்திருந்தது. ஆரையும் நம்பிக் காசைக் குடுத்திட்டு. உனக்கு வேறை வேலை இல்லை. நான் சொன்னால் கேட்கப் போகிறாயோ? என்ணெண்டாலும் செய்துகொள் என்று பலதடவை மனிசன் புறுபுறுத்தும் நான் கவலைப்படவே இல்லை. என கண்முன்னே பெரிதாய் விரிந்தது பண்ணை. ஒன்று
    18 points
  41. இரண்டாவது உலக யுத்தத்தின் போது நான் வசிக்கும் நகரமான Schwäbisch Hall, அந்த மாநிலம் முழுவதற்குமே உணவுப் பொருட்களை வழங்கியது மட்டுமல்லாமல் குண்டுத் தாக்குதலுகளுக்குத் தப்பிய ஒரு அழகான நகரமும் கூட. ஒரு சிறிய நகரமானாலும் தனது கடந்த கால கட்டிடங்கள், நினைவுச் சின்னங்கள், விளையாட்டுக்கள் கலைகள்,கலாச்சாரங்கள் என எல்லாவற்றையும் காத்து அதை இன்றும் பேணி வருகிறது. நான் இருப்பது சின்ன நகரம் என்பதாலோ என்னவோ ஒரே ஒரு தமிழ்க்கடை மட்டும்தான் இருக்கிறது. பணப் பரிமாற்றங்களால் பெருமளவளவில் இலாபம் கிட்டுவதால் பொருட்களை கொள்வனவு செய்வதில் முதலாளி அம்மாவுக்கு அவ்வளவு நாட்டம் இல்லை. ஏதாவது மனதுக்கு விருப்பமானதை சமைத்து சாப்பிட விரும்பி அந்தப் பொருளைக் கேட்டால், “முடிஞ்சுது அண்ணை. வியாழக்கிழமை ஒருக்கால் வந்து பாருங்கோ” என்பார். வியாழக்கிழமை போனால் மீண்டும் அதே பதில்தான் வரும். அவரது பதிலைக் கேட்கும் பொழுதெல்லாம், ‘நாளை கடன்’ என்று ஊர்ப் பலசரக்கு, தேனீர்க் கடைகளில் அன்று தொங்கிக் கொண்டிருந்த பதாதைதான் எனக்கு நினைவுக்கு வரும். நீண்ட நாட்களாக நண்டு சமைத்துச் சாப்பிட ஆசை இருந்தும் நண்டுகளை எங்களூர் கடையில் காணக் கிடைக்கவில்லை. இப்பொழுது யேர்மனியில் அறிமுகப் படுத்தி இருக்கும் 9 Euro Ticket எனக்கான வழியை காட்டியிருக்கிறது. ஒரு மாதத்துக்கு செல்லுபடியாகும் 9 Euro Ticketஇல் யேர்மனியின் எந்தப் பகுதிக்கும் பயணிக்கலாம். அத்தோடு கொரோனா வீச்சும் குறைந்திருந்தது. ஆக எனது மாநிலத்தின் தலைநகரத்துக்குப் பயணித்து நண்டு வாங்கிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு அங்கு அமைந்திருந்த ஒரு தமிழ்க்கடைக்கு அழைப்பை ஏற்படுத்தினேன். “Fress நண்டு இருக்கோ?” “நீலக்கால் நண்டோ அண்ணை. ஓமோண்ணை இருக்கு” “இண்டைக்கு வந்தால் எடுக்கலாமோ?” “எத்தினை கிலோ வேணும்? எடுத்து வைக்கிறன்” “விலை?” “என்னண்ணை பெரிய விலை. பக்கெற் நண்டு 9யூரோ. ப்ரஸ் நண்டு 17 யூரோ. நீங்கள் வாங்கோண்ணை பாத்துச் செய்யலாம்” “இரண்டு வருசத்துக்கு முன்னர் 12யூரோக்கு வாங்கினனான்” “அண்ணை.. இரண்டு வருசமெண்டால் அது கனகாலம் எல்லோ. எங்களுக்குத் தாறவங்கள விலை ஏத்துறாங்கள். நாங்களென்ன செய்யிறது…?” உண்மையிலேயே அந்தக் கடை முதலாளியில் எனக்கு அவ்வளாக நம்பிக்கையில்லை. முன்பு ஒரு தடவை, “தேங்காய் எப்பிடி நல்லதோ?” என்று இதே முதலாளியிடம் நான் கேட்ட போது, “அது, அவனவனுக்குப் பெண்சாதி வாய்ச்ச மாதிரி” என்று ஒரு அற்புதமான பதிலைத் தந்து என்னை நிறையவே கவலைப்பட வைத்து விட்ட ஆள்தான் அவர். நம்பிக்கையோடு பஸ் ஏறி, ஒன்றரை மணித்தியாலம் ரெயினில், பத்து நிமிசம் S bahnஇல் பயணித்து கொஞ்சம் நடந்து தமிழ்க் கடைக்கு வந்து சேர்ந்தேன். “நண்டு கேட்டனீங்கள் என்ன? அதுக்குள்ளை இருக்கு, பாருங்கோ. இரண்டு கிலோவா கட்டி வைச்சிருக்கிறன்” அவர் காட்டிய குளிர்சாதனப் பெட்டிக்குள் பிளாஸ்ரிக் பைக்குள் கட்டி வைச்ச நண்டுகளின் நீலக்கால்கள், ஜஸில் உறைந்திருந்த போதும் வெளியே தெரிந்தன. “அண்ணை நான் கேட்டது ப்ரெஸ் நண்டு” “அண்ணை அதுதான் அண்ணை. போன சனிக்கிழமை வந்தது. ப்ரெஸ்தான்” திரும்பி எனது நகரத்துக்கான பயணத்தின் போது “முதலாளி எல்லோரோடையும் இப்படித்தானா? இல்லை என்னோடை மட்டும்தானா?” என்ற யோசனையுடனேயே இருந்தேன். -கவி அருணாசலம்
    18 points
  42. இறந்தவர்களது இறுதி நிகழ்வு ஒவ்வொரு மதங்களிலும் மாறுபட்டிருக்கின்றது. ஆனாலும் கால ஓட்டத்தில் சடங்குகளில் ஆங்காங்கே மாற்றங்கள் நிகழ்கின்றன. சைவர்களைப் பொறுத்தளவில் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்த வழிமுறைகள் ஏனென்ற விளக்கங்கள் இல்லாமல் இன்றும் தொடர்வதுதான் புரியவில்லை. கொஞ்சம் உற்றுப் பார்த்தால் புலம்பெயர் நாடுகளில் அது ஒரு வியாபாரமாகவே தென்படுகின்றது. சமீபத்தில் உறவினர் ஒருவரது இறுதி நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். இறந்தவரை தூய்மையாக்கி, அழகுபடுத்தி, நல்ல உடை அணிவித்து மரப்பெட்டிக்குள் வைத்திருந்தார்கள். தூரத்தில் இருந்து மட்டுமல்ல அருகில் சென்று பார்க்கும் போது கூட அவர் அமைதியாக உறங்குவது போன்ற தோற்றமே தெரிந்தது. இறந்து விட்டார் என்ற எண்ணமே தோன்றாத வகையில் முகத்தில் ஒரு சிறிய புன்னகை தவள அவர் உறங்கிக் கொண்டிருந்தார். அந்தளவுக்கு அழகாக எல்லாவற்றையும் சிரத்தையோடு செய்திருந்தார்கள். இதற்காக உறவினர்கள் அந்த நிறுவனத்துக்கு பணம் கொடுத்திருப்பார்கள் என்பது வெள்ளிடை மலை. இப்பொழுது சைவர் அல்லது சவுண்டி ஐயர் கிரிகை செய்வதற்காக, தன் மனைவியுடன் மண்டபத்திற்குள் வந்தார். சைவர் என்று நான் குறிப்பிட்டிருப்பதில் சிலருக்கு ஒரு குழப்பம் இருக்கலாம். அதற்காக ஒரு சிறிய தகவல். பிராமணர்கள் இறந்தால் மட்டும் குருக்கள் கிரிகை செய்வார். மற்றவர்களுக்கு நான் குறிப்பிட்ட சைவர் (அல்லது சவுண்டி ஐயர்)தான் கிரிகை செய்வார். நான் கலந்து கொண்ட அந்த இறுதிக் கிரிகையில் அந்த சவுண்டி ஐயர் மனைவியுடன் வந்ததற்குக் காரணம் இருக்கிறது. நான் விசாரித்து அறிந்து கொண்ட வரையில் யேர்மனியில் சவுண்டி ஐயர் கிடையாது. பக்கத்தில் சுவிஸ் நாட்டில் இருந்துதான் வரவேண்டும். ஆக யேர்மனி வாழ் சைவ மதத்தார் ஒருவரது இறுதிக் கிரிகை செய்வதாயின் சவுண்டி ஐயர் சுவிஸில் இருந்து வந்து யேர்மனியில் தங்குவதற்கு முதலில் ஹோட்டலில் அறை ஒன்றை பதிவு செய்ய வேண்டும். அதுவும் இரண்டுபேர் தங்குவதற்கான வசதிகள் இருக்க வேண்டும். இங்கே சவுண்டி ஐயர் மனைவியையும் அழைத்துக் கொண்டு வருவதில் அவருக்கு பல அனுகூலங்கள் இருக்கலாம் அது இங்கு தேவை இல்லாத விடயம் என்பதால் விட்டு விடுகிறேன். ஆனால், பொதுவாக இறுதிக் கிரிகைகளில் பெண்கள் முன்னிலைப் படுத்தப் படுவதில்லை அதுவும் ஒரு கணவனுடன் வாழும் ஒரு பெண் அதாவது சுமங்கலி, இறுதிக் கிரிகையில் முன்னிலைப் படுத்தப் படுவதில்லை. ஆனால் சவுண்டி ஐயரிடம் இதுவரை இந்தக் கேள்வியை யாரும் கேட்டதாகத் தெரியவில்லை. சவுண்டி ஐயர் விபரமானவர். இறந்த உறவினர்களில் அதுவும் வேட்டி கட்டிக் கொண்டு வந்த இருவரை இனம் கண்டு தன்னுடன் இணைத்துக் கொண்டார். அரப்பு வைத்து, இளநீர் தெளித்து, கற்பூரம் காட்டி, தேவாரம் பாடி ஏதேதோ செய்தார். ஏற்கனவே தூய்மையாகப் படுத்திருப்பவருக்கு ஏன் அரப்பும் இளநீரும் என்று எனக்கு விளங்கவேயில்லை. “யாராவது சிவபுராணம் தெரிஞ்சவர்கள் பாடுங்கோ” என்று சவுண்டி ஐயர் வேண்டுகோள் விடுக்க, அதற்கென்று காத்திருந்தவர்கள் போல் இரண்டு பெண்கள் எழுந்து பாடத் தொடங்கினார்கள். “….வேகங் கொடுத்தாண்ட வேந்தனடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க….” அவர்களது சிவாபுராணத்திற்கு நடுவில் பக்கத்தில் அமர்ந்திருந்தவரது முணுமுணுப்பு எனக்குக் கேட்டது. அவரைப் பார்த்தேன். எனக்கு நன்கு பரிச்சயமானவர் என்பதால் மெதுவாகச் சொன்னார். “இரண்டு மணித்தியாலங்கள்தான் கிரிகைக்கு நேரம் ஒதுக்கித் தந்திருக்கினம். இவர் இப்ப சிவபுராணம் முடிச்சு பொற்சுண்ணம் இடிச்சு…” அவரது பேச்சில் உயிரில்லை. எதற்கு வில்லங்கம் என்று நான் ஏதும் பேசாமல் இருந்தேன். அவரே தொடர்ந்தார், “இறந்தவரின்ரை பெருமை பேச பலர் காத்திருக்கினம். போற போக்கைப் பாத்தால் அது முடியாது போல இருக்கு” அவர் ‘பொற்சுண்ணம்’ என்று சொன்ன போது எப்போதோ நான் படித்தது நினைவுக்கு வந்தது. தில்லையம்பல வீதியில் பெண்கள் ஆடிப் பாடிக் கொண்டு வாசனைத் திரவியங்களை உரலில் போட்டு இடித்த காட்சியைக் கண்ட, நரியை பரியாக்கிய மாணிக்கவாசகருக்கு அந்தப் பாடல்கள் பிடித்துப்போக அதை சிவனுக்காக ‘உல்டா’ செய்து பொற்சுண்ணத்தை உருவாக்கி அன்பர்களுக்குத் தந்திருந்தார். தமிழ்நாட்டில் கோவில் கொடியேற்றம், கொடியிறக்கம் நிகழ்ச்சியில் பாடப்படும் பொற்சுண்ணத்தை யாழ்ப்பாணத் தமிழர் இறந்தவர்களின் கிரிகைகளுக்கு எடுத்துக் கொண்டார்கள். ஒருவழியாக சிவபுராணம் முடிஞ்சு சவுண்டி ஐயர் பொற்சுண்ணம் பாடத் தொடங்கினார் பாடல்களில் நடுவே கொங்கைகள், மங்கைகள், செவ்விதழ்கள் எல்லாம் வந்தன. ஒன்பதாம் நூற்றாண்டில் தணிக்கைக் குழுவினர்கள் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆனாலும் சிவன் அதை இரசித்திருப்பார். பக்கத்தில் இருந்தவர் சொன்னார், “இப்பவே ஞாயமான நேரம் போட்டுது. பேசுறதுக்கு நேரம் போதாது” இப்பொழுதுதான் நான் என் திருவாய் மலர்ந்தேன். பொற்சுண்ணம் முடிஞ்ச கையோடை உடனேயே நீங்கள் போய் பேசுங்கோ. உங்களைப் பாத்திட்டு மற்றைவையளும் வருவினம்” யாராவது ஒரு ‘சப்போர்ட்’ தர மாட்டினமா என்ற நிலையில் இருந்த அவர் நிமிர்ந்து உட்கார்ந்தார். பொற்சுண்ணம் இருபது பாடல்களும் முடிந்து ஐயர் இருக்கையை விட்டு எழும்பும் முன்னரே இவர் ஓடிப் போய், இறந்தவரது பெருமையைப் பேச ஆரம்பித்தார். நான் நினைத்தபடியே அவரைத் தொடர்ந்து பலர் வந்தார்கள். நான் முந்தி நீ முந்தி என்று அங்கே முண்டியடித்ததால் இறந்தவரைச் சுற்றி ஒரு கும்பல் கூடிவிட்டது. என்னதான் இறந்தவரைப் பற்றிய பேச்சுக்களில் விடயங்கள் இருந்தாலும், சவுண்டி ஐயர் அப்பப்ப மணி அடித்து தன் வேலையிலேயே கவனமாக இருந்தார். சவுண்டி ஐயரினுடைய பெயர் கெட்டுப் போகக் கூடாது என்பது அவருக்குத் தெரியாதா? இரண்டு மணி நேரம் போய்விட்டது. பலரால் பேச முடியவில்லை என்பது ஒரு புறமாக இருந்தாலும் எனது இறுதி வணக்கத்தைத் தெரிவிக்க இறந்தவர் படுத்திருக்கும் இடத்திற்குச் சென்றேன். அவரது நெற்றியில் பட்டையாக விபூதி, கண்களில் மஞ்சள் களி, அதன்மேல் அவரது கண்ணாடி. ஆங்காங்கே அவர் முகத்தில் எண்ணெய், தண்ணீர், வாய்க்கரிசி, பூக்கள் என பரவி இருந்தன. கிரிகைக்கு முன்னர் நான் பார்த்த இறந்தவரின் சாந்தமான முகத்தை இப்பொழுது காணவில்லை. தூய்மையாகக் கொண்டு வந்து வைக்கப்பட்டிருந்தவரை சவுண்டி ஐயர் ஒரு பாடு படுத்தியிருந்தார். விசாரித்ததில் இறந்தவரைத் தகனம் செய்வதற்காகக் கொடுக்கப் படும் தொகைக்கு சற்றுக் கீழாக சவுண்டி ஐயரின் சன்மானம் இருந்தது. “புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் தங்களோடு ஆன்மீகத்தையும் சேர்த்துக் கொண்டு புலம் பெயர்ந்தது மிகவும் கவலை அளிக்கிறது” என்று பேராசிரியர் சுப வீரபாண்டியன் அவர்கள் சொன்னது நினைவுக்கு வந்தது. வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக “நான் இறந்து விட்டால் சமயச்சடங்குகள் செய்ய வேண்டாம்” என எழுதி வைத்தேன். - கவி அருணாசலம்
    18 points
  43. நான் இப்போது யாழ்ப்பாண த்தில் தான் நிற்கிறேன் கோமகனின் இழப்பை யாழ் ஊடாக அறிந்து இருந்தேன் . இன்றைய பேப்பரில் அவருடைய இறுதி சடங்கு பற்றி காணக் கிடைத்தது காலை 10 மணி அளவில் அவருக்கு இறுதி அஞ்சலி செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தது . யாழ் இணையம் சார்பாக மலர்வளையம் வைத்து கருத்துக்கள உறவுகள் சார்பாகவும் இறுதி வணக்கம் செலுத்தி விட்டு வந்தேன். அதிக நேரம் அங்கு நிற்க முடியவில்லை. காரணம் எனது மனைவியின் தந்தையின் இறுதிச் சடங்குகள் இன்று மாலைதான் நடை பெற்றது விபரமாக பின்னர் நேரம் கிடைத்தால் எழுதுகிறேன்
    18 points
  44. 🙏 சந்தையில் கிட்டும் கணிப்பொறியின் இதயமான முத்து சிப்பி(Micro Processor) பெரும்பாலும் அமெரிக்காவிலுள்ள இன்டெல்(Intel) என்ற நிறுவனத்தால் வடிவமைத்து உற்பத்தி செய்து, இன்றுவரை பல வகை திறன் கொண்ட சிப்பிகள் (ப்ராசசர்) சந்தைப்படுத்தபடுகின்றன. சுமார் 35 வருடங்களுக்கு முன்னர் முதல் இவற்றை தொழில்வாரியாக பயன்படுத்த ஆரம்பித்து இன்றுவரை பல முத்து சிப்பிகளை கண்டுள்ளேன். அதில் முக்கியமானது இன்டெல் பென்டியம்(Intel Pentium) என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட ப்ராசசர் மிக முதன்மையாக அதிக திறன் கொண்டது. அந்த வகை சிப்பியைக் கொண்டு நான் வடிமைத்த கணிப்பொறியை பற்றிய கட்டுரையை உங்களுக்கு சிறிய தொகுப்பாக இங்கே எழுதலாமென உள்ளேன்..🌹
    18 points
  45. உலகம் பூராவும் வயதானவர்களையும் குழந்தைகளையும் தாக்கும் முக்கியமான நோய் தாக்கங்களில் ஒன்றாக செப்சிஸும் (Sepsis) மாறி வருகிறது.. செப்சிஸ் என்பது நுண்ணுயிர் நோய் தொற்றும் அதற்கு எதிரான உடலின் வினைத்திறனாற்றலும்.. மோதிக்கொள்ளும் போது.. குறிப்பாக உடலின் நோய் எதிர்ப்பு தன்மை குறைவடையும் வேளையில்..உடல் பகுதி பகுதியாக செயலிழந்து இறப்பு ஏற்படுகிறது. செப்சிஸ் காரணமாக ஒருவர் சில மணி நேரத்தில் இருந்து சில வாரங்களுக்குள் இறப்பை சந்திக்கலாம். அதிதீவிர சிகிச்சையும் உடலின் நோய் எதிர்ப்பு வலிமையும் இதில் இருந்து மீள உதவலாம். குறிப்பாக பிறந்த குழந்தைகளிலும்.. வயதானவர்களிலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால்.. உடலில் உள்ள சாதாரண பக்ரீரியாக்கள் கூட உடலின் பிறபகுதிகளுக்குள் செல்வதால் கூட இந்த நிலை ஏற்படலாம். குறிப்பாக குடலில் உள்ள பக்ரீரியாக்கள்.. இரத்தத்தை அடைவதால் கூட.. அவை உடலால் அழிக்கப்படாது பல்கிப் பெருகி உடலங்கங்களை பாதித்து உயிரிழப்பை ஏற்படுத்தலாம். குறிப்பாக வயதானவர்களில்.. (60 வயதினருக்கு மேல்) நோய் எதிர்ப்பு சக்தி குன்றியவர்கள்.. நாட்பட்ட நோய் கண்டவர்கள்.. தொடர்ந்து படுக்கையில் இருக்கும் வயதானவர்கள்.. நடமாட்டம்.. உடற்பயிற்சி அற்ற நிலையில் வாழ வேண்டி உள்ள வயதானவர்கள்.. நீரிழிவு நோய் கண்டவர்கள்.. தைரொயிட் உட்பட்ட ஹார்மோன் பிரச்சனை உள்ளவர்கள்.. உடற்தசையிழப்பை கண்டு வரும் நோயாளிகள்.. விற்றமின் டி குறைபாடுள்ளவர்கள்.. போதிய உணவின்மை.. போதிய ஊட்டச்சத்தின்மை.. வைத்தியக் கவனிப்பு சரிவரயின்மை.. போதிய சுகாதார வசதிகள் இன்மை.. தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வாழுதல்.. போதிய வைத்திய பரிசோதனைகள் இன்மை.. இப்படி பல காரணிகள் தனித்தோ கூட்டாகவோ.. இந்த செப்ஸிஸ் உருவாக வாய்ப்பளிக்கின்றன. செப்சிஸ் தாக்கத்தின் பொதுவான அறிகுறிகளாவன.. 1.காய்ச்சல்/ குளிரும் காய்ச்சலும் 2. உடற்சோர்வு 3.சிறுநீர் உற்பத்தி குறைவு 4.மயக்க நிலை 5. அதிகரித்த இதயத்துடிப்பு 6. வாந்தி மற்றும் பேதி 7. தோலின் நிறம் வெளிர்ப்படைதல் 8. குறை குருதி அழுத்தம் சுவாசத்தொற்று எனில் சளி.. மூச்சு விடுவதில் சிரமம்.. மூச்சடைப்பு இவையும் சேர்ந்து கொள்ளும்.. அம்மாவின் விடயத்தில்.. அவருக்கு தைரொயிட் பிரச்சனை இருந்தது உண்டு. நடமாட்டம் வீட்டுக்குள் மையப்படுத்தி தான் இருந்தது. ஆனால் தொடர் வைத்திய கண்காணிப்பு.. மற்றும் எல்லா அடிப்படை வசதிகளும் கொடுக்கப்பட்டே வந்தன. அப்போ எப்படி செப்ஸிஸ் வந்தது.. எப்படி அதனை வைத்தியர் கண்டுபிடிக்கத் தவறினார்..??! இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன் தோல் சம்பந்தப்பட்ட சின்னப் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அதன் விளைவாக.. காய்ச்சல் ஏற்பட்டிருந்தது. ஆனால்.. இது தொடர்பாக குடும்ப வைத்தியர் வந்து காய்ச்சலுக்கு மருந்து கொடுத்துச் சென்றிருக்கிறார்.. ஆனால்.. குருதி பரிசோதனையோ.. சிறுநீர் பரிசோதனையோ செய்யவில்லை. சில நாட்களின் பின் உடல்நிலை தீவிரமாக பாதிப்பட்ட நிலையில்.. அதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதும் உயிரைக் காக்க முடியவில்லை. செப்சிஸ் (Sepsis).. செப்சிஸ் தாக்கம்/ அதிர்சி (Septic shock) என்பது.. குறிப்பாக.. சுவாச பாதிப்பை அதிகம் ஏற்படுத்தும்.. அதற்கு அடுத்த படியாக.. சிறுநீரகத்தை பாதிக்கும். அதன் தொடர்ச்சியாக இதயத்தாக்கு ஏற்படும்.. மூளை செயலிழப்பு ஏற்படும். இதில் குருதி நஞ்சாதல்.. என்பது சிறுநீரக பாதிப்பின் விளைவாக ஏற்படுவதோடு.. சிறுநீர் தொற்று.. சிறுநீர் உற்பத்தி அளவு குறைவு என்பன செப்சிஸ் தாக்க விளைவுகளாகின்றன. குறிப்பாக மருந்துகளுக்கு எதிர்ப்புக்காட்டும் பக்ரீரியா வகை நுண்ணங்கள் உடலில் தொற்றாகி பெருகுவதால்.. சரியான பகுப்பாய்வுகள் செய்யப்பட்டால் அன்றி சரியான மருந்துகளை கொடுக்க வைத்தியரால் முடியாது. அந்த வகையில்.. குருதிப் பரிசோதனை மற்றும் Blood culture மற்றும்.. சிறுநீர் பரிசோதனை மற்றும் சிறுநீர் மாதிரியில் இருந்தான Urine culture என்பன செய்யப்படுதல்.. செப்சிஸ் தாக்கத்தினை இலகுவாக ஆரம்பத்தில் கண்டறிந்து கொள்ளலாம். ஆனால்.. இலங்கையில் வைத்தியர்கள்.. Blood culture மற்றும் Urine culture செய்வதை அரிதாகவே காண முடிகிறது. அதிலும் High Risk நோயாளிகளுக்கு கூட இவற்றை பரிந்துரைப்பதில்லை. அம்மா விடயத்தில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்ட வேளையில்.. குருதிப் பரிசோதனை.. சிறுநீர் பரிசோதனையுடன் Urine culture மற்றும் Blood culture செய்யப்பட்டு தொற்றுக்கான நோய்க்காரணி கண்டறியப்பட்டு சரியான சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பின் அவரின் வாழ்நாளை நிச்சயம் அதிகரித்திருக்க முடியும். அதைவிடுத்து.. அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு எடுத்துச் சென்ற பின்.. பரிசோதனைகளையும்.. கண்காணிப்பையும் செய்வதால் மட்டும் High Risk நோயாளிகளை பாதுகாக்கலாம் என்பது சரியான வழிமுறையாக தெரியவில்லை. உலகில் எங்கு என்றாலும் செப்சிஸ் மரணங்கள் வயதானவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில்.. இந்த அனுபவப் பகிர்வு உங்களுக்கும் உதவலாம்.. என்பதால் பகிர்ந்து கொள்கிறோம். தீவிரமான உடற்தொற்று கண்டால்.. நிச்சயமாக உங்கள் வைத்தியர்.. குருதி.. சிறுநீர் பரிசோதனைகளுக்கு மேலதிகமாக.. Urine culture செய்யச் சொல்லி கோருவது.. தேவை எனின் Blood culture செய்யச் சொல்லிக் கோருவது சரியான நோயாக்கியை கண்டறியவும் சரியான மருந்துகளை கன்டறிந்து.. தெரிவு செய்து வழங்கவும்.. உதவும். இது நோயாளிகளின் சடுதியான தேவையற்ற மரணங்களை கட்டுப்படுத்த உதவும். உசாத்துணை: https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3956061/ (யாழிற்கான சுய ஆக்கம்)
    18 points
  46. முன்குறிப்பு பகுதி 1 இங்கே *** மீள்குடியேற்றம் நாம் ஏதோகாரணங்களுக்காகப் புலம்பெயர்ந்து விட்டாலும் எமது சரியான நோக்கம் அல்லது இலக்கு எதுவென்று தெரியாமல் வாழ்கிறோமா என்று அடிக்கடி யோசிப்பதுண்டு. வெளிநாட்டில் எனது குடும்பத்தை உருவாக்கியபோது அது தனது அடுத்த சந்ததியுடன் தமிழர் என்ற ஆலமரத்தின் விழுதுகளிலிருந்து பிரிந்து போகப்போவதைப் பற்றிச் சிந்திக்கவில்லை. தமிழன் என்ற பேருணர்வு என்னுடன் முற்றுப் பெறுகிறது. மேற்கூறிய நிலையிலிருந்து மாற்றங்களை ஏற்படுத்தவோ எதிர்பார்க்கவோ முடியாது. வேறு என்ன செய்யலாம் ? அங்கு சென்று குடியேறுவதன் மூலம் எமது பணம் அனுபவம் ஆகியவற்றைப் பயனுள்ள முறையில் அங்கே வாழ்ந்தபடியே பயன்படுத்தலாம். அண்மைய நாட்களாக பல திரிகளிலும் இது பற்றி மேலோட்டமாகப் பேசப்படுவதுதான். அங்கு வாழலாம் வாழ முடியாது என்பது ஒவ்வொருவரினது தனிப்பட்ட முடிவு. இதில் சரி பிழை என பிரிவினை பேச வேண்டாம். எனக்கு இது அனுகூலமாக இருப்பதால் எனது பார்வையில் எனது நிலையிலிருந்து இதன் சாத்தியங்களை விபரிக்கிறேன். எல்லோராலும் மீளக் குடியேற முடியாது என்பதும் அதன் காரணங்களும் புரியும். ஒருவேளை தனிநாடு கிடைத்திருந்தாலும் எம்மில் பெரும்பான்மையானவர்கள் எமது நாட்டிற்குத் திரும்பியிருக்க மாட்டார்கள். இதற்குப் பல காரணங்கள் உண்டு. இவற்றை ஒவ்வொன்றாக ஆராய்ந்து மாற்று வழிகளுக்கான பதில்களை நானே தேட முயல்கிறேன். ஓய்வூதியத்தில் வெளிநாட்டு வாழ்க்கை எப்படி உள்ளது என்பது பற்றிய எனது அவதானிப்புதான் மீள் குடியேற்றத்துக்கான முதலவது காரணம். என்னைச் சுற்றியுள்ள வயதானவர்களின் அன்றாட வாழ்க்கை இப்படி உள்ளது . சமையல், வீட்டு வேலைகள பேரப்பிள்ளையைப் பராமரித்தல் உலகம் முழுவதுமுள்ள உறவினர்களுடன் தொலைபேசியில் பேசுவது பெரும் பகுதி தொலைக்காட்சிக்கு முன்னால் இத்தனையும் நான்கு சுவருக்குள்ளேயே நடக்கும். வீட்டை விட்டு வெளியே வருவது மிகக் குறைவு. ஆனாலும் தொலைபேசி உரையாடல்களின்போது இலங்கையில் வாழ்ந்த ஏக்கம் அடிக்கடி அசைபோடப்படும். சிலர் விடுமுறைக்குப் போவதுபோல் அடிக்கடி இலங்கை சென்றாலும் ஆகக் கூடியது இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் திரும்பி விடுவார்கள். ஏனென்றால் மேலே சொல்லப்பட்டதுதான் அவர்களது வாழ்க்கை முறையாக மாறி விட்டது. இதே வட்டத்துக்குள் நான் அடிமையாக விரும்பவில்லை. நான் வாழ்வதற்கு வாழ்க்கை உள்ளது. அதை அனுபவித்து வாழ விரும்புகிறேன். இதற்காகச் சில தடைகளைத் தாண்டி வர வேண்டும். தடைகள் துணை வாழ்க்கைத் துணையின் அனுகூலம் இல்லாமல் முதலாவது அடியை எடுத்து வைக்க முடியாது. இது எனது தனிப்பட்ட விடயமாதலால் விவாதத்திலிருந்து கடந்து செல்கிறேன். உறவுகள் நாம் பிரதானமாகச் சொல்லும் காரணம், பிள்ளைகள் பேரப்பிள்ளைகளைப் பிரிந்து வாழ முடியாது. நியாயமானது. ஆனால் நாம் இலங்கையிலிருந்து இங்கு வரும்போது எமது தாய் தந்தை மனைவி பிள்ளைகளைப் பாதுகாப்பற்ற சூழலில் விட்டுவிட்டு வந்துள்ளோம். இப்போது அவர்களைப் பாதுகாப்பான சூழலில் அல்லவா இருக்கவிட்டுத்தான் போகப் போகிறோம். அவசியப்படும்போது திரும்பி வந்து சில நாட்கள் அவர்களுடன் இருந்து செல்லலாம். அதேபோல் அவர்களும் அடிக்கடி இலங்கை வரலாம். பிரிவு என்பது நீண்டது கிடையாது. எப்படியோ பிள்ளைகள் திருமணம் செய்தவுடன் பிரிந்துதான் வாழப் போகிறார்கள். எனது மகளிடம், உன்னைச் சின்ன வயதிலிருந்து பாட்டி தாத்தா பராமரித்ததுபோல் என்னை அதிகம எதிர்பார்க்க வேண்டாம் என்று அடிக்கடி சொல்வேன். பார்க்கலாம். மருத்துவம் இது ஒரு பெரிய பிரச்சனை. நோய் வராமல் ஆரோக்கியத்தைப் பேணுவதே சிறந்த வழி. ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, நல்ல நித்திரை அவசியமாகும். நீண்டகால நோய்களை வருடத்துக்கு ஓரிரு தடவை வெளிநாட்டுக்கு வரும்போது கவனித்துக் கொள்ள வேண்டும். பாதுகாப்பு அங்குள்ள பாதுகாப்பற்ற காரணங்களையும் தவிர்ப்பதற்கான வழிகளை அடைப்புக் குறிக்குள்ளும் தருகிறேன் - இராணுவ அச்சுறுத்தல் (அரசியல் - குழுக்கள் - இனவாதம போன்ற வில்லங்கங்களில் நுளையக் கூடாது) - உள்ளூர் சண்டித்தனம் (உள்ளூர் பிரச்சனைக்குள் தலையிடக் கூடாது கூடாது. முடிந்தவரை அயலவர்கள் எல்லோருடனும் நட்பாகப் பழக வேண்டும்) - கொள்ளை (நவீன தொழில்நுட்பம் மூலம் பாதுகாத்துக் கொள்ளலாம்) - பாம்பு பூச்சி நுளம்பு (பாதுகாப்பு வழிகள் உள்ளன) வாழ்க்கை வசதி குடியேறுவதற்கு முன் ஆடம்பரம் இல்லாமல் அதற்குரிய வசதிகளைச் செய்து கொள்ள வேண்டும். இப்போது மேலத்தேய வீடுகளைப் போன்ற வசதிகளை அங்கே செய்து கொள்ளலாம். வெப்ப காலநிலை உலக வெப்பமாதலில் இலங்கையிலும் கோடை காலத்தில் வெளியே போக முடியாத அளவு வெப்பம் அதிகரித்துள்ளது. இதற்கும் முன்னேற்பாடான வழிமுறைகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். சுதந்திரம் உண்மையில் வெளிநாடு வந்தபின்தான் சுதந்திரம் என்றால் என்னவென்று தெரிந்தது. நான் மேலே குறிப்பிட்டது போல் வெளிநாட்டில் ஓய்வூதியத்தில் குறுகிய வாழ்க்கைமுறைக்குள் அடிமைப்பட வேண்டாம் என்று கருதுவதால் இதுவும் பெரிய பிரச்சனையாக இராது என்றே கருதுகிறேன். நோக்கம் ஓய்வுபெற்ற பின் இங்கு இருக்கக் கூடாது என்று சில வருடங்களுக்கு முன்னரே யோசிக்க ஆரம்பித்தேன். அப்போது இருந்த மனநிலை வேறு. முதல் பகுதியில் சொன்னதுபோல் பிரான்ஸ் மட்டுமே எனது நாடு என்றிருந்தேன். Guadeloupe, Martinique போன்ற கரிபியன் தீவு அல்லது ரெயுனியன் தீவு போன்ற இடம் ஒன்றில் குடியேறலாமா என்றும் யோசித்திருந்தேன். மகிழ்ச்சியன வாழ்க்கைதான் எனது நோக்கம் என்றால் அதற்கு ஒரு அர்த்தமும் இருக்க வேண்டாமா என்ற சிந்தனையில் காலப்போக்கில் இலங்கையில் குடியேறுவதையே விரும்புகிறேன். சில நாட்களுக்கு முன் அங்கு சென்றிருந்தபோது வெளிநாட்டிலிருந்துவிட்டு நிரந்தரமாக மீழ் குடியேறிய இருவரைச் சந்தித்தேன். எனது ஆவல் மேலும் அதிகமானது. என்னதான் நாம் இங்கிருந்து தமிழ்த் தேசியம் பேசினாலும் அங்கிருப்போருக்கு சிங்கள அரசின் கீழிருக்கும் இலங்கைதன் அவர்களது நாடு. எமது இனம் அழிந்து போகாமல் இருக்க வேண்டுமானால் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வழியில் முயற்சிப்போம். அங்கு அவர்களோடு வாழ்வதன் மூலம் என்னாலான ஒரு சிறு முன்னேற்றத்தை ஒரு கிரமத்த்திலாவது ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறேன். இயற்கையைப் பாதுகாக்கும் வாழ்க்கை முறையை வாழ்ந்து காட்டப் போகிறேன். இது எனது பூமி என்ற பரந்த சிந்தனையில் பார்த்தால் எல்லாமே எனது மண்தான். அந்த மண்ணைப் பாதுகாப்பது எனது கடமை. நான் இத்தனை காலமும் வாழ்வதற்காக பூமியிலிருந்து எடுத்ததை மறுபடி பூமியில் வைக்கப் போகிறேன். இறுதியாக, நான் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கும் கற்பனைக் கோட்டை பற்றிய சில குறிப்புகளோடு விடை பெறுகிறேன். எனது வீடு யாழிலோ அல்லது வேறு பெரு நகரிலோ இல்லமல் நில ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்காக பிந்தங்கிய கிராமம் ஒன்றில் இருக்கும். சீமெந்து பாவிக்காமல் இயற்கை மூலப்பொருட்களைக் கொண்டு கட்டப்படும் வீட்டில் இயற்கையான முறையில் (மிகக் குறைந்த சூரிய ஒளி மின்சாரத்தில்) குளிரூட்டப்பட்ட தன்னிறைவானதாக இருக்கும். விசாலமான காணியில் மழைநீர் சேகரிப்புடன் கூடிய இயற்கை வீட்டுத் தோட்டம் இருக்கும். அருகி வரும் மருத்துவச் செடிகள், நிழல் தரும் மரங்கள் பூஞ்செடிகள் புல் வெளி என்று எல்லாமே பசுமையாக இருக்கும். காணியைச் சுற்றி குறைந்தது 500 மீற்றராவது நிழலுடன் கூடிய ஓடுபாதை, உடற்பயிற்சிக் கூடம் இருக்கும். தேனீ, கோழி வளர்ப்பு என்ற இன்னும் பல… இது எத்தனை வீதம் சாத்தியமாகுமோ தெரியாது, தொடர்ந்து முயற்சி செய்து பார்க்கலாம். இதுவே எனது தேசியம். நன்றி.
    17 points
  47. தைரொய்ட் குறைபாடும் அதற்கான நிவர்த்திகளும் தைரொய்ட் சுரப்பி வண்ணத்தி பூச்சி போன்ற அமைப்பில் கழுத்தடியில் உள்ளது. இது சுரக்கும் தைரொக்சின் எமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஒவ்வொரு நிமிடமும் தேவையானது.மூளையில் உள்ள கபச்சுரப்பியின் TSH (ஹோர்மோன் ) உத்தரவுப்படி செயல்படும். சிலவேளைகளில் TSH போதிய அளவு இருந்தாலும் தைரொய்ட் சுரப்பி தேவையான அளவு தைரொக்ஸினை சுரக்காது. இதற்கு முக்கிய காரணம் மரபு அணு சம்பந்தப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி செயல்பாடாகும். Autoimmune என்று சொல்லப்படும், எமது வெண்குருதி கலங்கள் தமக்கு கொடுக்கப்பட்ட நோய் எதிர்ப்பு வேலையை செய்யாமல் எமது உடலின் பல பாகங்களையும் தாக்கும். அந்த வழியில் தைரொய்ட் சுரப்பியையும் தாக்கும். அதனால் தைரொக்சின் அளவு குறைந்து எமது உடல் செல்கள் சில முக்கிய வேலைகளை செய்ய முடியாமல் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். ஒவ்வொருவருக்கும் இந்த விளைவுகள் மாறுபடும். பொதுவாக சோர்வு, நித்திரைஇன்மை, மனச்சோர்வு, உடல் பருமனடைதல், தோலில் சொறிவு , முடி உதிர்வு, குரல் மாற்றம் இவைகள் பொதுவானவை. சிலருக்கு ஐயோடின் குறைபாடால் சுரப்பி பெருக்கும் . ஐயோடின் supplement, சத்திர சிகிச்சை மூலம் இதனை குணப்படுத்தலாம்.தைரொக்சின் எமது உடலை அடிக்கடி திருத்தி நல்ல நிலையில் வைத்திருக்கும். உணவை எரித்து சக்தியும் வெப்பத்தையும் தரும். இதனால் தான் தைரொக்சின் குறைபாட்டால் குளிர் உணர்வு, உடல் பருமனாதல் , சோர்வனவு ஏற்படுகிறது. கொலெஸ்டெரோல் அளவும் கூடும். நன்றாக உடல் பயிற்சி செய்து, புரத சத்து அதிகமான உணவுகளை உண்டு selenium நிறைந்த உணவுகளான sardine, tuna, Brazil nuts , முட்டை, எல்லாவிதமான தானியங்கள் மற்றும் zinc நிறைந்த உணவுகளான நண்டு, கணவாய், றால், கோழி இறைச்சி , அன்னாசி பழம் , கல்லுப்பு , ஹிமாலயன் உப்பு, மீன் சாப்பிட்டு வந்தால் தைரொய்ட் சுரப்பிகள் மேலும் பழுதடையாமல் பாதுகாக்கலாம். ஆனால் கட்டாயம் மருத்துவ உதவி பெற்று Leveothyroxine வகையான மருந்தை ஒவ்வொரு நாள் அதிகாலையில் எடுக்க வேண்டும். இது மற்ற மருந்துகளுடன் ஒத்துபோகக்கூடியது. அதனால் சேர்த்து எடுக்கலாம். இது மரபு வழி சம்பந்தப்பட்டது. உங்கள் குடும்ப உறுப்பினருக்கு இருந்தால் உங்களுக்கும் வர சந்தர்ப்பம் அதிகம். எனவே சோர்வு, உடல் பருமனடைதல், மனச்சோர்வு , முடி உதிர்தல் இருந்தால் கட்டாயம் ரத்த பரிசோதனை செய்து பாருங்கள். மருந்து ஒவ்வொரு நாளும் அதிகாலையில் தவறாமல் எடுக்க வேண்டும். முக்கியமாக அன்னாசி, நண்டு, கணவாய் , றால், கோழி , அவரைக்காய் , nuts , முட்டை , tuna சாப்பாட்டில் சேர்க்கவும். மரக்கறி மட்டும் உண்பவர்கள் நிறைய தானியம், Brazil nut சேர்த்து சாப்பிடவும்
    17 points
  48. உ பார்வை ஒன்றே போதுமே கண்கள் பேசும் காதல் மொழிக்கு வார்த்தைகள் வெறும் சுமையே. இருநாட்கள் தொடர்ந்து பெய்த மழையால் அந்த மண்சாலை குண்டும் குழியும் சேறும் சகதியுமாக இருந்தது.இரு மருங்கிலும் வயல்கள். கதிர்கள் அலைபோல் அசைய பச்சைபசேல் என்று குளிர்ச்சியாக இருந்தது. கதிர்களைத் தழுவிவரும் காற்றில் மண்மணம் கமழ்ந்து உடலுக்கு புத்துணர்சியைத் தருகின்றது. அந்தப் பாதையில் ஒரு மனிதர் தனது வீட்டை விட்டு வெளியேறி பல நாட்களாக இலக்கின்றி நடந்து கொண்டே இருக்கின்றார்.நாளும் கிழமையும் கூட அவருக்கு மறந்து விட்டது.தான் வாழ்ந்த நகரத்தையும் தனது சொகுசான வீடு, ஆடம்பரமான கார்கள்,அன்பான மனைவி வளர்ந்துவிட்ட அழகழகான ஆணும் பெண்ணுமாய் இரண்டு பிள்ளைகள் எல்லாவற்றையும் விட்டு விட்டு வந்தாயிற்று. மேலே அண்ணாந்து பார்க்கையில் சூரியன் மதியத்தை நெருங்கி வந்து கொண்டிருந்தது.இவ்வளவு நாளும் பசியும்,களைப்பும் தெரியவில்லை.ஆனால் இப்பொழுது வயிறு பசி பசி என்று ஓலமிடுகின்றது.பசி ஒன்றும் அவருக்கு புதிதல்ல.சிறுவயது மற்றும் இளமைப் பருவங்களில் பசியோடு பங்காளியாக இருந்தவர்தான்.கடந்த பதினைந்து இருபது வருடங்களுக்கும் மேலாக அவரது இடைவிடாத உழைப்பின் பயனாக அது அவரை விட்டு வெகுதூரம் விலகியே இருந்தது.ஆனால் இப்பொழுது அவருக்கு பசித்ததும் கூடவே சிரிப்பும் வந்தது. இப்பொழுதுதான் உடல் உபாதையும் தொடர்ந்து நன்றாகத் தோய்ந்து குளிக்கவேண்டும் என்ற எண்ணமும் வந்தது.எங்காவது வாய்க்காலோ, குளமோ தென்படுகின்றதா என்று சுற்றிவரப் பார்த்துக்கொண்டே நடக்கின்றார்.அவர் எதிர்பார்த்த படியே அங்கு ஒரு குளத்தைக் கண்டதும் ஸ்நானம் செய்வதற்காக தனது கோட்சூட் சேர்ட் பூட்ஸ் எல்லாவற்றையும் கழட்டி ஓரமாக வைத்துவிட்டு அருகில் இருந்த பற்றைக்குள் ஒதுங்கிவிட்டு வந்து குளத்தில் அலுப்புத்தீர நன்றாக முங்கி முங்கி தோய்ந்து விட்டு வெளியே வந்தார். அங்கே பார்த்தால் அவர் கரையில் கழட்டிவைத்த ஆடைகள், பொருட்கள் எதுவும் அங்கில்லை.யாரோ வீதியால் சென்றவர்கள் அவற்றை எடுத்து சென்றிருக்க வேண்டும். அவரது கைபேசி மட்டும் கீழே புல்லுக்குள் கிடந்தது. அவர்கள் அவசரத்தில் எடுக்கும்போது இது நழுவி கீழே விழுந்திருக்க வேண்டும். எடுத்துப் பத்திரப் படுத்திக் கொண்டார். இவ்வளவு நாளும் கோபத்தில் மழுங்கிக் கிடந்த மூளை இப்பொழுதுதான் தன் உணர்வடைந்திருந்தது. தான் இப்பொழுது எங்கிருக்கிறோம் என்பது கூட அவருக்குத் தெரியவில்லை.தன்னை ஒருமுறை நன்றாகப் பார்த்துக் கொண்டதும் மீண்டும் அவருக்கு சிரிப்பு வந்தது. இடுப்பில் ஒரு ஜட்டி, கழுத்தில் டாலருடன் கூடிய தடிமனான தங்கச் சங்கிலி,கையில் தங்கச் செயின் போட்ட கடிகாரம்,விரல்களில் வகைக்கொன்றாக நாலு மோதிரங்கள் இப்படி இருந்தால் யாருக்குத்தான் சிரிப்பு வராது. அப்படியே வயலுக்குள் இறங்கி வரப்புகளில் மேல் வெறுங் கால்களுடன் யாராவது தென்படுகினமா எனப் பார்த்துக் கொண்டு நடந்து போகிறார்......! பார்வை .....(1) 👁️ பார்ப்போம் இனி ......! ✍️
    17 points
  49. மேலே உள்ளது தான் நெடுஞ்சாலையின் பெயர்.பெயர் தான் நெடுஞ்சாலை ஆனால் ஒற்றையடிப் பாதையே.வேகமும் ஒரு சில இடங்கள் 55 மைல்கள்.கூடிய தூரம் 15-20-25 இப்படியாகவே இருந்தது.நாங்கள் விரும்பினால்க் கூட வேகமாக ஓட முடியாது. படங்கள் எடுக்கக் கூடிய இடங்கள் இருந்தன.ஆனாலும் எமது கைபேசியினால் பரந்த தேசங்களை எடுக்க முடியாது.ஆரம்பத்தில் இருந்து முடியும்வரை மிகவும் ரசிக்கக் கூடிய இடமாக இருந்தது.நின்றுநின்று போகிறபடியால் தொடர்ந்து கார் ஓட வேண்டாமென்று பிள்ளைகள் இடையில் ஒரு கொட்டேலும் போட்டிருந்தனர். பிற்பகல் 6 மணிபோல் கொட்டலை சென்றடைந்தோம்.இரவு நல்ல சாப்பாடு நல்ல தூக்கம்.நீண்ட தூரம் கார் ஓடுவதானால் நிறைய சாப்பிடுவதில்லை.காலை சாப்பாடு கொட்டேலில் மீண்டும் பகல் 9.30 போல புறப்பட்டோம்.அன்றைய தினம் அதிகம் நின்று செல்லவில்லை.ஒரேஒரு இடம் தான் பார்க்க திட்டமிட்டிருந்தோம்.வேறோன்றுமில்லை வண்ணாத்தி பூச்சிகளே. குறிப்பிட்ட ஒரு அரைமைல் சுற்றளவில் தேனீக்கள் எப்படி இருக்குமோ அதே மாதிரி வண்ணாத்தி பூச்சிகள்.மிகவும் ஆச்சரியமாக இருந்தது.படமெடுக்கலாம் என்று கைபேசியில் பார்த்தா எல்லா வண்ணாத்தி பூச்சிகளும் சிறிய தேனீக்கள் போல தெரிந்தன. அங்கிருந்கு நேராக மகளாக்கள் நின்ற இடத்துக்கு போய் சேர்ந்தோம். அடுத்த நாள் கொலிவூட் என்ற பெரிய எழுத்துக்கள் உள்ள விளம்பரத்தை பார்க்க போனோம். நான் நினைத்திருந்தது வேறு.கண்ட காட்சியோ வேறு. இதுவரை நான் நினைத்தது கொலிவூட் நடிகர் நடிகைகள் அதனுடன் சம்பந்தப்பட்டவர்களே அந்தப் பகுதியில் இருப்பார்கள்.உள்ளே போய் பார்க்க கட்டணம் அறவிடுவார்களோ பெரிய கட்டுப்பாடுகள் இருக்கும் என்று கனக்க எண்ணியிருந்தேன்.நான் தான் இதை ஒருதரமாவது பார்க்க வேண்டும் என்று சொல்ல பிள்ளைகள் சிரிக்கிறார்கள்.இதைப்போய் என்னத்தை பார்க்க போறீங்கள் என்று. ஒரு மலைப் பிரதேசத்தில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.காரில் போக பல பாதைகள் இருக்கும் என எண்ணுகிறேன்.நாங்கள் போன பாதை மலையில் கொஞ்ச தூரம் போனபின் குடிமனைகள் உள்ள இடத்தால் ஒரு கார் மட்டுமே போக கூடியவாறு வீதிகள் இருந்தன.அங்குள்ள மக்கள் இதை பார்க்க வருபவர்களின் தொல்லை தாங்க முடியாமல் இந்த றோட்டால் போக கூடாது தனியார் றோட்டு வாகனம் நிறுத்தக் கூடாது என்று பலவாறு எச்சரிக்கை பலகைகள் தொங்கவிட்டிருந்தனர். ஓரளவுக்கு மேல் எமக்கும் யோசனை.ஏதோ கிடைத்த இடத்தில் நிறுத்திவிட்டு மலையில் சிறிது தூரம் ஏறி போய் பார்த்தோம்.வழமையில் நல்ல காலநிலையாக இருந்த இடம் நாங்கள் போனகிழமை மிகவும் குளிராக இருந்தது.காலநிலை நன்றாக இருந்தால் நிறைய கூட்டம் அந்த கொலிவூட் என்ற விளம்பர பலகையிலேயே ஏறி படங்களெல்லாம் எடுப்பார்களாம். இதனிடையே நீர்வேலியானை சந்தித்தது பற்றி எழுதியிருந்தேன். கடைசியாக ஒரு கோவிலுக்கு போய் தரிசனத்துடன் எமது லாஸ் அங்கிலஸ் சுற்றுலாவை முடித்துக் கொண்டு புறப்பட்டோம். வரும்போது நெடுஞ்சாலை 5 வழியாக 6 மணிநேரத்தில் வீடு வந்து சேர்ந்தோம். நன்றி. இனிவராது. யாராவது கலிபோர்ணியா போனால் நிச்சயம் இந்த பாதையில் பயணித்து பாருங்கள்.
    17 points
  50. பெ ண்மை எனும் நல் மனையாள் . பெண் என்பவள் ,என் தாய்க்கு பிறகு , அவளுக்கு நிகராக, என்னையும் எல்லா விதத்திலும் கரிசனை கொள்ள வந்த தாரமானவள். என் மனைவி , எனக்கானவள் . என்னை நம்பி வந்தவள். என் உயிர் தாங்கி பத்து மாதம் சுமந்து வலி தாங்கி என் மகவை பெற்றவள் . செல்வி என வாழ்ந்தவள். திருமதியானவள். தன் பெயர் மாற்றி என் பெயர் தாங்கியவள். (ஒரு சில விதிவிலக்குண்டு ) என் பசியாற்றுபவள் என் வாரிசுகளுக்கு அம்மா . என் மகனுக்கு/மகளுக்கு , அப்பா என அறிமுகம் செய்தவள்.தாலி எனும் வேலி தாங்கி எனக்காக வாழ்பவள். தன பசி மறந்து நம் பசி போக்கியவள். உதிரத்தை பாலாக்கி உணவூட்டியவள். விலையில்லாதவள் . என் தாய்க்கு மகளாக என்தந்தைக்கு மறு மகளாக (மரு மகளாக ) என் மக்களுக்கு தாயாக வாழ்ந்தவள் . ஆண்மைக்கு உயிர் கொடுத்தவள் தனக்கு நிகராக என்னையும் மக்களையும் நேசித்தவள் சபையிலே எனக்கு கெளரவம் தந்தவள் . மக்கள் பேற்றின் மூலம் உலகை உருவாக்கியவள் . என் குடும்ப நிர்வாகி , நல்ல வழி காட்டி. தாய்மையை போற்று வோம் . சகல பெண்களுக்கும் இன்றைய தினத்தில் சமர்ப்பணம். இப்படிக்கு ஆண்மை (ஆண்மக்கள் )
    17 points
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.