https://www.facebook.com/magudeswaran.govindharajan/posts/4478643308840790
கீழடி அகழாய்வின் பலப்பல மட்பொருள்கள் கிடைக்கின்றன. கீழே படத்தில் உள்ளதும் அவ்வாறு கிடைத்த பெருமட்பாண்டம்தான்.
கையாளத்தக்க அளவில் உள்ள மட்பொருள்களைச் சட்டி, பானை, கலயம் எனலாம். சற்றே பெரிதாக இருப்பதனைத் தாழி எனலாம். அது இறந்தோரை இட்டு மண்ணில் புதைக்கும் கலமாக இருப்பின் ’முதுமக்கள் தாழி’ ஆகிவிடும்.
சேர்த்து வைக்கப் பயன்படும் பெருமட்பாண்டங்களை என்னென்று அழைப்பது ? அதற்கு ‘மொடா’ என்று ஒரு சொல் இருக்கிறது.
அளவிற்பெரிய, அடுக்கத்தக்க, மட்பானையைத்தான் மொடா என்பார்கள். இது ‘மொடு’ என்ற சொல்லிலிருந்து பெறப்படுவது.
‘மொடு’ என்பதற்குப் பருமை, மிகுதி என்னும் பொருள்கள் உள்ளன. முகிழ்த்து முனைகுவிந்து பருக்கும் மலர்ப்பொருள் ‘மொட்டு’ எனப்படுவதும் இவ்வாறே. மொடாப் பானையின் வடிவமும் மொட்டு வடிவில் வாய் குவிந்திருப்பதைக் காண்க.
தாழிக்கும் மொடாவுக்கும் உள்ள வேறுபாடு இது. இரண்டும் பேரளவுப் பொருள் இட்டு வைக்கும் கலன்கள் என்றாலும் தாழி வாயகன்றது. மொடா வாய்குவிந்தது. வாயகன்று இருப்பதால்தான் தாழியை ஆடு மாடுகட்குத் தண்ணீர் காட்டப் பயன்படுத்துவார்கள்.
‘மொடா’ என்ற சொல்லை மக்கள் எப்போதும் பயன்படுத்தினார்கள். மொடாக்களை அடுக்கி வைக்கும் பழக்கம் இருந்தது.
அடுக்கிலுள்ள கீழ் மொடா அளவிற் பெரிது. அதன்மேல் வைக்கப்படும் மொடா ஒப்பீட்டில் சற்றே சிறிது. அந்த அடுக்கம் கூம்பு வடிவில் மேலேறிச் செல்லும். அதற்கு ‘அடுக்கு மொடா’ என்று பெயர். “அந்த அடுக்கு மொடாகிட்ட வெச்சிருக்கேன் பாரு” என்று சொல்வார்கள்.
கள்ளு வடித்துச் சேர்க்கவும் சாராயம் ஊறவைக்கவும்கூடப் பயன்படுத்தப்பட்டது மொடா. அதனால்தான் பெரிய குடிகாரர்களை ‘மொடாக்குடியன்’ என்றார்கள். ஒரு மொடா அளவிற்குக் கள்ளூற்றி வைத்திருந்தாலும் குடித்துவிடுபவர்கள். “ஒரு சட்டி சோறும் ஒரு மொடாக் கள்ளும்” நன்கு உண்டு திளைப்பவர்களின் தேவையாக இருந்தவை. “கிடா கிடாக் கறி அடுப்பில கிடக்கு, மொடா மொடாக் கள்ளு ஊத்து” என்ற திரைப்பாடலும் உண்டு. அதனால் பெரும்பானைகளைக் குறிப்பிடுவதற்கு ‘மொடா’ என்ற சொல்லைத் தவறாமல் பயன்படுத்துங்கள்.
அடிப்பாகம் தரைப்பொருத்தமாய் உள்ளதால் சமதரையில் ஒரு மொடா எப்படிச் சாயாமல் நிற்கும் ? தஞ்சாவூர் பொம்மையைப்போல் ஆடுமே. அப்படிச் சாயாமல் ஆடாமல் அடிப்பகுதியில் நிறுத்துதற்கு ஒரு பொருள் உண்டு. அதற்குப் ’புரிமணை’ என்று பெயர். பேச்சு வழக்கில் சிலர் ‘பிரிமணை’ என்பார்கள்.
வைக்கோலையோ அல்லது வேறு நார்க்கொடிகளையோ புரிபுரியாய்ச் சேர்த்து வட்டமாய்ப் பின்னுவதால் கிடப்பது புரிமணை. புரிகள் சேர்த்து மணையிடப் பயன்படுவது.
ஆண்பாவம் படத்தில் தம்மிரண்டு பிள்ளைகளும் பெண்டாட்டிக்கு அடிபணிந்து வாழ்வார்கள் என்பதை உணர்ந்து வி. கே. இராமசாமி தம் தாயாரிடம் ஒன்றைச் சொல்வாரே, நினைவிருக்கிறதா ?
“மருமக வந்தவுடனே அவதான் சாணி தெளிச்சு கோலம் போடுவான்னு நீ நினைக்கறியா ? அவளுக்கு இவனுகதான் எல்லா வேலையும் செய்யப் போறானுக. வேண்ணா பாரு, பொண்டாட்டிக்குச் சரியான பிரிமணையா இருக்கப் போறானுக.”
புரிமணை எப்படிப் பயன்பட்டிருக்கிறது, பாருங்கள் !
- கவிஞர் மகுடேசுவரன்
https://www.facebook.com/magudeswaran.govindharajan/posts/4478643308840790