Jump to content

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    18776
  • Joined

  • Last visited

  • Days Won

    12

Posts posted by ஏராளன்

  1. சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் அடுத்த மாதம் (மே) 15ஆம் திகதியுடன் பதவி விலகவுள்ளதாக அறிவித்துள்ளார்.

    சிங்கப்பூரீன் 3வது பிரதமரான இவர், கடந்த 2004ஆம் ஆண்டு முதல் மக்கள் செயல் கட்சியின் பொதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார்.

    சிங்கப்பூரில் பிரதமர் லீ சியென் லூங் தலைமையிலான மக்கள் செயல் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகின்றது.

    அண்மைக் காலமாக இந்த கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன.

    இதன் காரணமாக 02 பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர். பிரதமர் லீ சியென் லூங்கும் அடுத்த மாதம் (மே) 15ஆம் திகதி பதவி விலகப் போவதாக அறிவித்துள்ளார்.

    பதவி விலகும் அதேநாளில் லாரன்ஸ் வோங் பிரதமராக பதவியேற்பார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    https://thinakkural.lk/article/299288

  2. தினமும் பரோட்டா சாப்பிடலாமா

    பட மூலாதாரம்,GETTY IMAGES

    3 மணி நேரங்களுக்கு முன்னர்

    மைதா உணவு என்றாலே பலரது நினைவுக்கும் உடனே வருவது ‘பரோட்டா’ மட்டும் தான்.

    “நான் மைதா உணவே எடுத்துக்கொள்வதில்லை, எப்போதாவது மாதம் ஒருமுறை மட்டுமே பரோட்டா. அதுவும் கோதுமை பரோட்டா தான்” என்பார்கள்.

    ஆனால், மைதா என்பது பரோட்டாவில் மட்டுமில்லாமல் நமது பெரும்பாலான அன்றாட உணவுகளில் கலந்துள்ளது. உதாரணமாக, பல மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் பிரெட்கள் மைதாவால் செய்யப்பட்டவையே.

    இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் பீட்சா, பர்கர், பாஸ்தா, நூடுல்ஸ், ஆகிய உணவுகளில் இருப்பது மைதாவே. கேக்குகள் மற்றும் பாதுஷா, குலாப் ஜாமுன், ஜிலேபி, சோன் பப்டி போன்ற பல பிரபலமான இனிப்புகளை மைதா இல்லாமல் செய்ய முடியாது.

    மாலை வேளையில் தேநீருடன் எடுத்துக்கொள்ளும் பிஸ்கட், சமோசா, பகோடா, ரஸ்க், பப்ஸ், இவை அனைத்திலும் மைதா உள்ளது. இப்படியிருக்க தினமும் ஏதேனும் ஒரு வகையில் நாம் மைதாவில் செய்யப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்கிறோம்.

    நீண்டகாலமாக மக்கள் மனதில் பதிந்துள்ள ஒரு விஷயம் மைதா உடலுக்கு கெடுதல் என்பது தான். அது உண்மையா? மைதாவின் மூலப்பொருள் என்ன? கோதுமை, மைதா, ரவை எல்லாம் ஒன்று தானா? யாரெல்லாம் மைதா உணவுகளை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்?

     
    தினமும் பரோட்டா சாப்பிடலாமா

    பட மூலாதாரம்,GETTY IMAGES

    மைதா எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

    “மைதா மாவு எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது என தெரியுமா?” என்று பொது மக்கள் சிலரிடம் கேட்டோம்,

    “மரவள்ளிக்கிழங்கில் இருந்து தான் மைதா தயாரிக்கப்படுகிறது. பரோட்டா சாப்பிட்டாலே அது தெரியும்” என்று ஒருவர் கூறினார்.

    மற்றொருவர், “மரவள்ளிக்கிழங்கைப் பொடித்து தான் மைதா மாவு செய்கிறார்கள். கேரளாவில் அதைக் கப்பக்கிழங்கு என்பார்கள், அதனால் தான் பரோட்டா அங்கு பிரபலமான உணவு” என்றார்.

    “எதிலிருந்து வந்தால் என்ன, மைதா கண்டிப்பாக உடலுக்கு கேடு” என்று சமோசாவை சாப்பிட்டுக் கொண்டே ஒரு இளைஞர் கூறினார்.

    “கோதுமையின் கழிவு தான் மைதா, அந்த கழிவில் ஒரு ஆபத்தான ரசாயனத்தை கலந்து மைதா செய்கிறார்கள்” என்றார் ஒரு பெண்.

    உண்மையில் மைதா எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது, அதன் மூலப்பொருள் என்னவென தெரிந்துகொள்ள குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் உணவு ஆலோசகர் அருண் குமாரிடம் கேட்டோம்.

    “நெல்லில் உமி, தவிடு, உள்ளிருக்கும் அரிசி என மூன்று விதமான லேயர்கள் இருக்கும். உமியை நாம் அகற்றிவிடுவோம். தவிடுடன் இருக்கும் அரிசியைத் தான் பிரவுன் அரிசி என்போம். தவிட்டை நீக்கிவிட்டால் பட்டைத் தீட்டப்பட்ட அரிசி (Polished) என்கிறோம்.

    அதே போல கோதுமையிலும் உமியை நீக்கிவிட்டு தவிடுடன் மாவாக்கி பயன்படுத்தினால் வழக்கமான கோதுமை. அதுவே தவிடு நீக்கப்பட்ட கோதுமையை மிகவும் மிருதுவாக அரைத்தால் அது மைதா, வெளிநாட்டில் 'ஆல் பர்பஸ் ஃப்ளோர்' (All purpose flour) என்பார்கள். மைதா என்பது பாஸ்மதி அரிசி போன்ற ஒரு அரிசி வகைக்கு சமமான ஒன்று தான்” என்கிறார் மருத்துவர் அருண் குமார்.

    தொடர்ந்து பேசிய அவர், “அதே தவிடு நீக்கிய கோதுமையை மிருதுவாக இல்லாமல் சாதாரணமாக அரைத்து கிடைப்பதே ரவை. எனவே ரவைக்கும் மைதாவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. மைதாவை அதிகம் எடுத்துக்கொள்வது கண்டிப்பாக ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல தான். ஆனால் அதற்காக மைதா மீது மட்டும் இருக்கும் இந்த அதீத பயமும் தேவையில்லை. இணையத்தில் உலவும் சில தவறான தகவல்கள் இதற்கு காரணம்” என்றார்.

    தினமும் பரோட்டா சாப்பிடலாமா

    பட மூலாதாரம்,DRARUNKUMAR/FACEBOOK

    படக்குறிப்பு,குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் உணவு ஆலோசகர் அருண் குமார்.

    மைதாவின் வெள்ளை நிறம் எப்படி பெறப்படுகிறது?

    கோதுமையை அரைத்து தான் மைதா கிடைக்கிறது என்றால், கோதுமை மாவு போல பழுப்பு நிறத்தில் இல்லாமல் பளிச்சென்ற வெள்ளை நிறத்தில் மைதா இருப்பது எப்படி, இப்படி வெள்ளை நிறத்திற்கு மைதாவை கொண்டுவர ஏதேனும் ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறதா என மருத்துவர் அருண்குமாரிடம் கேட்டோம்.

    “மைதா என்பதே அதன் வெள்ளை நிறத்திற்காக தான் அறியப்படுகிறது. மைதாவில் இருந்து செய்யப்படும் பிரெட், பன், கேக், பிஸ்கட், பரோட்டா என அந்த வெள்ளை நிறமும், மிருதுவான தன்மையும் தான் மைதாவை ஒரு முக்கிய உணவுப் பொருளாக மாற்றியுள்ளது."

    "கோதுமையின் பழுப்பு நிறம் மைதாவில் வரக்கூடாது என்பதற்காக ப்ளீச் (Bleach) எனப்படும் முறை கடைப்பிடிக்கப்படுகிறது. இதைச் சுற்றி தான் பல சர்ச்சைகள் உள்ளன. ப்ளீச் என்பது ஆக்சிசனேற்றம் (Oxidation) எனும் செயல்முறை தான். பள்ளியில் இதைப் பற்றி படித்திருப்போம். இந்த வேதியியல் செயல்முறை மூலம் கோதுமையின் பழுப்பு நிறமியை நீக்கிவிடலாம்."

    "இதற்காக குளோரின் வாயு, பென்சாயில் ஃபெராக்ஸைடு போன்ற சில ப்ளீச்சிங் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ரசாயனங்களை எந்த அளவில் பயன்படுத்த வேண்டும் என சில கட்டுப்பாடுகள் உள்ளன. அது சரியான அளவில் கடைப்பிடிக்கப்பட வேண்டும். "

    "இதையெல்லாம் தாண்டி, ப்ளீச்சிங் செயல்முறை முடிந்து இறுதியாக மைதா கிடைக்கும்போது அதில் இந்த ரசாயனங்கள் இருக்காது என்று தான் உணவுத்துறை வல்லுநர்கள் கூறுகிறார்கள்” என்கிறார் மருத்துவர் அருண்குமார்.

     
    தினமும் பரோட்டா சாப்பிடலாமா

    பட மூலாதாரம்,GETTY IMAGES

    மைதா நீரிழிவை ஏற்படுத்துமா?

    மைதாவை ப்ளீச் செய்யும்போது அலோக்ஸன் எனும் ரசாயனம் அதில் சேர்க்கப்படுகிறது என்றும், இந்த ரசாயனம் நீரிழிவை உண்டாக்கும் என்றும் கூறப்படுகிறது, இது குறித்து மருத்துவரிடம் கேட்டபோது,

    “2016இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது, மைதாவில் நீரிழிவை உண்டாக்கும் அலோக்ஸன் சேர்க்கப்படுகிறது, எனவே மைதாவை தடைசெய்ய வேண்டுமென மனுதாரர் கூறியிருந்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், மைதா கொண்டு செய்யப்படும் உணவுகளை ஆய்வு செய்ய உணவுத் துறைக்கு உத்தரவிட்டது."

    "அவ்வாறு உணவுத் துறை ஆய்வு செய்து பார்த்ததில், ஆபத்து விளைவிக்கக்கூடிய ரசாயனங்கள் மைதாவில் இல்லை என்பது உறுதியானது. இந்த அலோக்ஸன் குறித்துப் பார்த்தால், அது மைதாவில் ப்ளீச்சிங் முறைக்கு கலக்க மாட்டார்கள். மாறாக அது ஆக்சிசனேற்றம் முறையின் போது தானாக உருவாகக்கூடிய ஒருதுணைப் பொருள். எல்லா மைதாவிலும் குறைந்தபட்ச அளவில் அது இருக்கும்."

    "பயம் ஏன் வருகிறது என்றால், எலிகளை வைத்து செய்யும் ஆய்வுகளில் அவற்றுக்கு செயற்கையாக நீரிழிவு நோய் வரவைக்க இந்த அலோக்ஸன் பயன்படும். ஆனால் மைதாவில் இருக்கும் அலோக்ஸனை அந்த ஆய்வுகளுக்கு பயன்படும் அலோக்ஸன் 25,000 மடங்கு வீரியமானது. அதனால் அதையும் இதையும் ஒப்பிட முடியாது. அப்படி பார்த்தால் பிஸ்கட், பரோட்டா உண்ணும் பலர் இன்று நீரிழிவு நோயாளிகளாக மாறியிருக்க வேண்டுமல்லவா."

    "எனக்கு மைதா உணவுகள் வேண்டாம் என்று ஒதுக்குவது சரிதான், காரணம் மைதாவில் மாவுச்சத்து அதிகம் மற்றும் நார்ச்சத்து மிகக் குறைவு. எனவே அதைவிட்டு அறிவியல் ஆதாரமற்ற காரணங்களுக்காக மைதாவை ஒதுக்கத் தேவையில்லை” என்கிறார் மருத்துவர் அருண்குமார்.

     
    தினமும் பரோட்டா சாப்பிடலாமா

    பட மூலாதாரம்,GETTY IMAGES

    மைதாவுக்கு மாற்றா கோதுமை?

    “இன்று கோதுமையில் செய்யப்படும் பிரெட், பிஸ்கட், பரோட்டா இவையெல்லாம் மைதா உணவுகளுக்கு மாற்றாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் உண்மை என்னவென்றால், கோதுமை பரோட்டாவிலும் கூட மைதா சேர்க்கப்படுகிறது."

    "அதேபோல வெறும் கோதுமையை வைத்து கோதுமை பிரெட் அல்லது கோதுமை பிஸ்கட் தயாரிக்க முடியாது, அதில் குறிப்பிட்ட அளவு மைதா சேர்க்கப்பட வேண்டும். காரணம் மைதாவின் மிருதுவான தன்மை."

    "எனவே 2 மைதா பரோட்டாவிற்கு பதிலாக, கோதுமை ஆரோக்கியமானது என்பதற்காக 5 அல்லது 6 சப்பாத்தி சாப்பிட்டாலும் அது அதிக மாவுச் சத்து தான். அதனால் மைதா சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களை அளவாக அல்லது மிகக்குறைவாக எடுத்துக்கொள்வது நல்லது” என்றார் மருத்துவர் அருண்குமார்.

    தினமும் பரோட்டா சாப்பிடலாமா
    படக்குறிப்பு,ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன்.

    மைதாவில் உள்ள சத்துக்கள் என்ன?

    மைதாவில் உள்ள சத்துக்கள் குறித்து நம்மிடம் பேசினார் ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன், “கோதுமையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் மைதாவில் மாவுச் சத்து தான் அதிகமாக உள்ளது. உதாரணமாக 100 கிராம் மைதாவில் 351 கலோரிகள் உள்ளது. மேலும் 10.3 கிராம் புரதம், 0.7 கிராம் கொழுப்பு, 2.76 கிராம் நார்ச்சத்து, 74.27 மாவுச்சத்து உள்ளது.” என்றார்.

     
    தினமும் பரோட்டா சாப்பிடலாமா

    பட மூலாதாரம்,GETTY IMAGES

    மைதாவால் ஏற்படும் உடல்நலப் பிரச்னைகள் என்ன?

    “பொதுவாக மைதா கொண்டு செய்யப்படும் உணவுப் பொருட்களில் அதிகமான கொழுப்பு சேர்க்கப்படுகிறது. பரோட்டாவில் அதிக எண்ணெய் சேர்க்கப்படுகிறது. சோலே பட்டூரா, மிகப் பிரபலமான மைதா கொண்டு செய்யப்படும் உணவுப் பொருள். அதை எண்ணெயில் பொரித்து தான் எடுக்கிறார்கள்."

    "இதுபோக மைதா கொண்டு செய்யப்படும் பிஸ்கட்டுகள், பலகாரங்கள் என அனைத்தும் அளவுக்கு அதிகமான இனிப்பும் எண்ணெயும் கொண்டு தான் செய்யப்படுகிறது. ஏற்கனவே அதிக மாவுச் சத்துள்ள மைதாவில் இதுபோன்ற துணைப்பொருட்களும் சேரும்போது அது உடலுக்கு கேடாக மாறுகிறது” என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன்.

    தொடர்ந்து பேசிய அவர், “நீரிழிவு உள்ளவர்கள் கண்டிப்பாக அதை எடுக்கக்கூடாது. காரணம் எந்த நார்ச்சத்தும் இல்லாத மைதா சேர்த்த உணவை குறைவாக எடுத்தாலும் கூட இரத்த சர்க்கரை அளவு உடனே கூடும். உடல்பருமன் உள்ளவர்களும் இதைத் தவிர்க்க வேண்டும்."

    "முக்கியமாக எடை அதிகமாக உள்ள பெண்களும் மைதா உணவுகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மேலும் எடை கூடும்போது, மாதவிடாய் தள்ளிப்போவது முதல் பல பிரச்னைகள் ஏற்படலாம்” என்று கூறுகிறார் தாரிணி கிருஷ்ணன்.

    https://www.bbc.com/tamil/articles/cxwvmjjlxdxo

  3. பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் சனிக்கிழமை…!

    Former MP Palitha Thewarapperuma passes away - DailyNews

    மறைந்த பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை குடும்ப மயானத்தில் இடம்பெறவுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பிரதி அமைச்சருமான பாலித தெவரப்பெரும நேற்று (16) காலமானார்.

    இறக்கும் போது 64 வயதான தெவரப்பெருமவின் மரணத்திற்கு மின்சாரம் தாக்கியதே காரணம் என மருமகன் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

    1960 ஆம் ஆண்டு பிறந்த பாலித குமார தெவரப்பெரும இலங்கை அரசியலில் பேசப்பட்ட ஒரு புரட்சிகர பாத்திரம்.

    2002 ஆம் ஆண்டு மத்துகம பிரதேச சபையின் தலைவராக இருந்த பாலித தெவரப்பெரும மேல் மாகாண சபை உறுப்பினராகவும் கடமையாற்றினார்.

    2010 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினராகவும், உள்நாட்டு அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதி அமைச்சராகவும், வனவிலங்கு பிரதி அமைச்சராகவும் பணியாற்றினார்.

    பாலித தெவரப்பெரும அவர் உயிருடன் இருக்கும் போதே அவரது புதைகுழியை வடிவமைத்துள்ளார் என்பதும் நாட்டில் பேசப்பட்ட மற்றுமொரு விடயமாகும்.

    https://thinakkural.lk/article/299317

  4. வடகிழக்கில் 50 வீத்திற்கு மேல் வாக்குகளைப் பெறக்கூடிய ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்க வேண்டும் - ஞானமுத்து ஸ்ரீநேசன்

    Published By: DIGITAL DESK 3    17 APR, 2024 | 09:56 AM

    image
     

    வடக்கு கிழக்கிலும், வடகிழக்கிற்கு வெளியிலும், தமிழ் பேசுகின்ற மக்களின் விருபுக்களைப் பெறுகின்ற ஆளுமையுள்ள, வடக்கு கிழக்கில் 50 வீத்திற்கு மேல் வாக்குகளைப் பெறக்கூடிய ஒருவரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்க வேண்டும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். 

    மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்கிழமை(16.04.2024) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

    இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

    தமிழர் ஒருவரை பொதுவேட்பாளரை நிறுத்தக்கூடாது என்று கூறுகின்றவர்கள், ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்கள் ஊடாக என்ன தீர்வைத் தருவார்கள்? அவ்வாறு தரக்கூடியவர்கள் யார்? என்பதை தெரிவிக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். 

    எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்த்தலில் தமிழ் மக்கள் சரியாகவும் நிதானமாகவும் முடிவெடுக்க வேண்டும் என்பது எதிர்பார்க்கப்படுகின்றது. சிவில் சமூகமும், புத்திஜீவிகளும், இத்தேர்தலை எவ்வாறு கையாளப்படல் வேண்டும் என்பது தொடர்பில் சிந்திக்கின்றார்கள். இந்நிலையில் தமிழ் தேசிகள் கட்சிகள் இத்தேர்தலை எவ்வாறு கையாளப்படல் வேண்டும் என்பதும் எதிர்பார்க்கப்படுகின்றது.

    இலங்கை சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்துள்ளன. ஜனாதிபதித்துவ ஆட்சிமுறை கொண்டுவரப்பட்டு 46 ஆண்டுகள் கடந்திருக்கின்றன, யுத்தம் முடிவடைந்த 15 ஆண்டுகள் கடக்கும் நிலமை காணப்படுகின்றது. இந்நிலையில் தமிழர்களின் இனப்பிரச்சனை சுந்தரத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்து வருகின்றது. இதனைத் தீர்ப்பதற்காக அகிம்சை ரீதியாக தழிர் தேசியக் கட்சிகள் பல முயற்சிகளைச் செய்து வந்திருக்கின்றன. அதற்கு எந்தவொரு தீர்வும் கிடைக்கவில்லை. 30 வருடகாலமாக ஆயுதரீதியாகப் போராடினார்கள், பலநாடுகளின் யுக்திகளின் மூலமாக அந்த போராட்டமும் மௌனிக்கப்பட்டுள்ளது. அதன்மூலமும் தமிழர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை. இராஜதந்திர ரீதியாக பேச்சுவார்த்ததை மூலமாக இப்பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என்றால் அதுவும் நிறைவேற்றப்படவில்லை.

    1978 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஜனாதிபதித்துவ ஆட்சிமுறை கொண்டுவரப்பட்டது. தேசியஇனப்பிரச்சனைக்குரிய தீர்வை ஜே.ஆர்.ஜெயவர்த்தன யுத்தம் என்ற ரீதியில்தான் சிந்தித்தார். பின்னர் இந்தியாவில் நிர்ப்பற்த்தின் மூலம் 13 வது திருத்தத்தின் மூலம் 1987 ஆம் ஆண்டு மாகாணசபை முறை கொண்டுவரப்பட்டது. அந்த மாகாணசபையிலும்கூட இலங்கை இனப்பிரச்சனைக்கு முழுமையான தீர்வு இல்லை.

    மாகாணசபை தேர்தல் நிறுத்தப்பட்டு 6 வருடங்களாகின்றன, மைலத்தமடு மேச்சல்தலைப் பிரச்சனையைக்கூட மாகாணசபை முறையால் தீர்க்கப்படாமலுள்ளன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை முழுமையாக்கப்படல் வேண்டும் என்பதற்காக அப்பகுதி மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். இதற்குக்கூட 13வது திருத்ததின்மூலம் கிடைத்த அதிகாரத்தைக் கொண்டு தீர்க்க முடியவில்லை. 1987 ஆம் ஆண்டிலிருந்து கொண்டுவரப்பட்ட மாகாணசபை முறைமை எமக்குத் தீர்வாக அமையவில்லை.

    இந்நிலையில் 1994 நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அவர் நியாயமான தீர்வைத்தருவார் என் நம்பி சந்திரிக்காவை ஆதரித்தோம், பின்னர் 2015 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனவிற்கும் வாக்களித்தோம், எக்குரிய தீர்வு கிடைக்கும் என எம்மை நம்பவைத்தார்கள். இவ்வாறு இரு ஜனாதிபதித் தேர்லிலும் நம்பி வாக்களித்தும் எமக்கு எதுவும் கிடைக்கவில்லை.

    தற்போதைய நிலையில 3 ஜனாதிபதி வேட்பாளர்கள் முகம் காட்டுகின்றார்கள். நான் 13 வதுதிருத்தத்தையோ, சமஸ்ட்டியைத் தருவேன் என்றோ கூறமாட்டேன் என அனுரகுமார திசாநாயக்க தெரிவிக்கின்றார். 13 வதுதிருத்தச் சட்டத்தை தரலாம் என சஜித் பிரேமதாஸ தெரிவிக்கின்றார் ஆனாலும் சிங்கள பேரினவாதம் குறுக்கிடுகின்றபோது பொலிஸ் அதிகாரத்தை அவரும் தரக்கூடிய வாய்ப்பு இல்லை.

     தற்போதைய ஜனாபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மைலத்தமடு, பிரச்சனை, கல்முனை பிரதேச செயலக பிரச்சனை, உள்ளிட்ட மிகவும் சாதாரண பிரச்சனையைத் தீர்க்க அவர் இன்னும் முன்வரவில்லை. 13வது திருத்தத்தை தரலாம் பொலிஸ் அதிகாரம் தரமுடியாது என தெரிவிக்கின்றார். எனவே நாம் கடந்த காலத்திலும் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம், நிகழ்காலத்திலும் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். எதிர்காலத்திலும் எந்தவொரு வேட்பாளரும் நம்பிக்கையூட்டக்கூடிய கருத்துக்களைத் தெரிவிக்கவில்லை.

    ஜனாதிபதி வேட்பாளர்களை தமிழ் தேசியக் கட்சிகள் சந்தித்து உங்களிடம் என்ன தீர்வு உள்ளது என்பதைக் கேட்கவேண்டும். அதனை மக்களிடதில் தெரிவிக்கவேண்டும். இந்நிலையில் பேரினவாதத்திலுள்ளவர்கள் எமக்கான தீர்வைத் தருவதற்கு மிகவும் பின்னடித்துக் கொண்டு வருகின்றார்கள்.

    யுத்தத்தின் பின்னர் வடக்கு கிழக்கு மக்களின் மக்கள் ஆணையைப் பெறவேண்டும். அதற்கான தேர்தல் விஞ்ஞாபனங்களைத் தெரிவித்துக் கொண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் ஒருவர் பொதுவேட்பாளராக களமிறங்கினால் என்ன என்ற கேள்ளி கேட்க்கப்படுகின்றது. இது தொடர்பில் வடக்கு கிழக்கிலுள்ள பலரும் ஆர்வம் காட்டிவருகின்றார்கள். எனவே ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் ஒருவரை பொது வேட்பாளராக போட்டியிடச் செய்து அதன்மூலம் வடக்கு கிழக்கு மக்களின் மக்கள் ஆணையை சர்வதேசத்திடம் தமிழ பேசும் மக்கள் உரத்த குரலில் கூறுவதற்குரிய சந்தர்ப்பமாக பயன்படுத்தினால் என்ன என்ற கேள்வி எழுகின்றது.

    எமது வேட்பாளர் வடக்கு கிழக்கிலும், வடகிழக்கிற்கு வெளியிலும், தமிழ் பேசுகின்ற மக்களின் விருபுக்களைப் பெறுகின்ற ஆளுமையுள்ளவதராக இருக்க வேண்டும். எனவே வடக்கு கிழக்கில் 50 வீத்திற்கு மேல் வாக்குகளைப் பெறக்கூடிய ஆளுமையுள்ள ஒருவரைகளமிறக்க வேண்டும்.

    தமிழர் ஒருவரை பொதுவேட்பாளரை நிறுத்தக்கூடாது என்று கூறுகின்றவர்கள், ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்கள் ஊடாக என்ன தீர்வைத் தருவார்கள்? அவ்வாறு தரக்கூடியவர்கள் யார்? என்பதை தெரிவிக்க வேண்டும்.

    எனத் தெரிவித்த அவர் மகாணசபை, உள்ளுராட்சிமன்றம் போன்ற தேர்தல்கள் இன்னும் நடாத்தப்படவில்லை. எனவே மக்கள் தங்களது பிரதிநிதிகளைக்கூட தெரிவு செய்ய முடியாத ஜனநாயக முறை இங்கு காணப்படுகின்றது. தேர்தல் தொடர்பில் சுயவிருப்பு வெறுப்புக்களைப் பார்த்துக் கொண்டிருக்கினார்கள்.

    நாடு வங்குறோத்து நிலையில், உள்ள இக்காலகட்டத்தில் உலக நாடுகளிலிருந்து கடன்பெற்று ஆங்காங்கே சில அபிவிருத்திகள் இடம்பெறுகின்றன. இச்சந்தர்ப்பத்திலும் லஞ்சம், மோசடி, என்பன இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. எனவே கடன்பெற்று வந்த பணத்திலும் கையூட்டுப் பெறுகின்ற நிலமைதான் காணப்படுகின்றது. உதாரணமாக ஒரு முட்டையிலிருந்து சுமார் 15 ரூபா கொள்ளையடிக்கப்படுகின்றது.

    கச்சதீவை இந்தியா மீள பெறவேண்டும் என எழுந்துள்ள சர்சையானது இலங்கையின் இறைமைக்கு ஓர் சவால் விடுகின்ற விடையமாகவும், மீனர்களுக்கும் அச்சுறுத்தல் விடுகின்றதாகவும் அமைந்துள்ளது. இது இந்திய தேர்தலுக்காக கொள்ளப்படுகின்ற உத்தியாகவே பார்க்கப்படுகின்றது. அந்நாட்டில் தேர்தல் முடிவுறதும் இவ்வடையம் பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தாது என அவர் இதன்போது தெரிவித்தார்.

    https://www.virakesari.lk/article/181271

  5. பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

    Clean and Safe Water Projects: UNICEF's Mission | UNICEF USA

    நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

    அதன்படி வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

    எனவே சிறுவர்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் இந்த நிலைமை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

    அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்து கொள்வதற்காக போதியளவு நீரைப் பருகுமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    https://thinakkural.lk/article/299313

  6. கொல்கத்தாவிடம் இருந்து 'நம்பமுடியாத' வகையில் வெற்றியைப் பறித்த பட்லர்

    பட்லர்

    பட மூலாதாரம்,GETTY IMAGES

    கட்டுரை தகவல்
    • எழுதியவர், க.போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
    • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

    14-ஆவது ஓவர்வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்று வர்ணனையாளர்களும், ரசிகர்களும் நம்பி கருத்துக்களைத் தெரிவித்தனர். கணினி கணிப்புகளும் 0.30 சதவீதம் மட்டுமே ராஜஸ்தான் வெற்றிக்கு வாய்ப்பு இருப்பதாக கணித்தது.

    ஆனால், கடைசி 6 ஓவர்களில் தனிஒருவனாக இருந்து சாதித்த ஜோஸ் பட்லர் சதம் அடித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வெற்றி பெற வைத்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகமும், வீரர்களுமே ஒரு கட்டத்தில் தோல்வியை ஏற்கும் மனநிலைக்குச் சென்றிருப்பார்கள். அத்தகைய சூழலில் இருந்து, கடினமான வெற்றியை பட்லர் சாதித்துக் காட்டினார்.

    கடைசி 6 ஓவர்கள் என்ன நடக்கிறது என்றே தெரியாமல், வெற்றி தங்களின் கரங்களை விட்டு மெல்ல மெல்ல நழுவுகிறது என்பதை அறியாமல் கொல்கத்தா அணியினர் திகைத்துபோய் பந்துவீசியதைக் காண முடிந்தது. அணி நிர்வாகத்திடம் இருந்து அவ்வப்போது, அறிவுரைகள் வந்து கொண்டிருந்தன. ஆயினும் தோல்வியைத் தடுக்க முடியவில்லை.

    புள்ளிப்பட்டியலில் முதலிரு இடங்களில் இருக்கும் அணிகள் மோதிய ஆட்டம் என்பதால் இரு அணி வீரர்களுமே அதிக நுட்பங்களை, உத்திகளை போட்டியில் கையாண்டனர். எந்த பேட்டருக்கு யாரை பந்துவீசச் செய்வது, யாரை எப்படி வீழ்த்துவது, திட்டங்களை எப்படி முறியடிப்பது என ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதுபோல் ஆட்டம் அமைந்திருந்தது.

     
    ஐபிஎல் - கொல்கத்தா - ராஜஸ்தான்

    பட மூலாதாரம்,SPORTZPICS

    முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் சேர்த்தது. 224 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் சேர்த்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

    இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 போட்டிகளில் 6 வெற்றி, ஒரு தோல்வி என 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. ஆனால், நிகர ரன்ரேட்டை பொருத்தவரை பெரிதாக முன்னேற்றமில்லாமல் 0.677 என்ற அளவிலேயே 3வது இடத்தில் இருக்கும் சிஎஸ்கே(0.726) அணியை விட குறைவாக இருக்கிறது. அடுத்துவரும் ஆட்டங்களில் ராஜஸ்தான் அணி மிகப்பெரிய வித்தியாசத்தில் வென்றால்தான் நிகர ரன்ரேட்டை உயர்த்த முடியும்.

    அதேசமயம், கொல்கத்தா அணி 6 போட்டிகளில் 4 வெற்றி, 2தோல்விகளுடன் 8 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கிறது. ஆனால், நிகர ரன்ரேட்டைப் பொருத்தவரை, 1.399 என்று அனைத்து அணிகளையும் விட வலுவாக இருக்கிறது அந்த அணிக்கு பலவகையிலும் சாதகமாக அமையும்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜாஸ் பட்லர் 107 நாட்அவுட்(60 பந்துகள்,6 சிக்ஸர், 9பவுண்டரி) தவிர வேறு எந்த பேட்டரும் பெரிதாக பங்களிப்பு செய்யவில்லை. ரியான் பராக்(34), ரோவ்மென் பாவெல்(26) ஆகியோர் மட்டும் சிறிய கேமியோ ஆடினர். மற்றவகையில் அனைத்து பேட்டர்களும் ஏமாற்றினர்.

     
    ஐபிஎல் - கொல்கத்தா - ராஜஸ்தான்

    பட மூலாதாரம்,GETTY IMAGES

    ‘ரியல் இம்பாக்ட் பிளேயர்’ ஜாஸ் பட்லர்

    தொடக்க ஆட்டக்காரராக, இம்பாக்ட் ப்ளேயராக களமிறங்கிய ஜாஸ் பட்லர், தனது ஆட்டத்தின் மூலம் “பெரிய இம்பாக்ட்டை” நிகழ்த்திவிட்டார். சதம் அடித்தபோதுகூட கொண்டாடாத பட்லர் அணியை கடைசிப்பந்தில் வென்று கொடுத்தபின்புதான் தனது ஹெல்மெட்டையும், பேட்டையும் தூக்கி எறிந்து வெற்றியைக் கொண்டாடினார். ராஜஸ்தான் அணிக்கு சாத்தியமில்லாத வெற்றியை பெற்றுக் கொடுத்த ஜாஸ் பட்லர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

    ஜாஸ் பட்லர் இந்த ஐபிஎல் சீசனில் அடித்த 2ஆவது சதமாகும். இதற்கு முன் ஆர்சிபி அணிக்கு எதிராக கோலி சதத்துக்குப் பதிலடியாக பட்லர் சதம் அடித்திருந்தார். ஐபிஎல் வரலாற்றில் அதிகசதம் அடித்த பேட்டர்களில் 7 சதங்களுடன் பட்லர் 2-ஆவது இடத்தில் இருக்கிறார்.

    அதேபோல சேஸிங்கில் அதிக சதங்களை அடித்தவர்கள் வரிசையில் கோலிக்கு அடுத்ததாக பட்லர் 3 சதங்களுடன் உள்ளார். டி20 சதங்களைப் பொருத்தவரை அதிகமான சதங்களை அடித்த இங்கிலாந்து பேட்டர் என்ற பெருமையையும் பட்லர் பெற்றார். இந்த 8 சதங்களுமே பட்லர் கடந்த 3 ஆண்டுகளுக்குள் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    கடைசி 6 ஓவர்களில் ஜாஸ் பட்லர் அதிரடியாக பேட் செய்தார். அவரின் கண்களுக்கு வெற்றியைத் தவிர வேறு ஏதும் தெரியவில்லை என்றே கூற வேண்டும். பட்லர் கடைசியாக சந்தித்த 27 பந்துகளில் 6 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் உள்பட 65 ரன்கள் சேர்த்து 240.74 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்தார். ஆனால் 7ஆவது ஓவர் முதல் 14-ஆவது ஓவர்வரை பட்லர் ஆமை வேகத்தில் 21 பந்துகளில் ஒரு பவுண்டரி உள்பட 22ரன்கள் மட்டுமே சேர்த்த்திருந்தார்.

     
    ஐபிஎல் - கொல்கத்தா - ராஜஸ்தான்

    பட மூலாதாரம்,GETTY IMAGES

    ‘நம்பமுடியாத வெற்றி’

    ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்ஸன் கூறுகையில் “ இந்த வெற்றியால் பெருமகிழ்ச்சி. நம்பமுடியவில்லை. 6 விக்கெட்டுகள் சென்றபின் சிறிது நம்பிக்கையற்று இருந்தோம். ஆனால் பாவெல் களமிறங்கி சிக்ஸர்கள் விளாசியபின் நம்பிக்கை ஏற்பட்டது, போட்டி கையைவிட்டுச் செல்லவில்லை என்று எண்ணினோம். தோல்வியிலிருந்து மீண்டு வந்து வெற்றி பெற்று அழகான நிகழ்வு, இதற்கு அதிர்ஷ்டமும் தேவை. நரைன், வருண் இருவருமே அற்புதமாக பந்துவீசி நடுப்பகுதி ஓவர்களில் எங்கள் ரன்ரேட்டை இறுக்கிப் பிடித்தனர். இந்த விக்கெட் இருவருக்குமே அருமையாக ஒத்துழைத்தது.”

    “கடந்த 7 ஆண்டுகளாக ஜாஸ் பட்லர் எங்கள் அணிக்காக அற்புதமாக பேட் செய்து வருகிறார். அவரின் பேட்டிங் நிலைத்துவிட்டால் கடைசி 20 ஓவர்கள்வரை நின்றுவிளையாடுவார் என டக்அவுட்டில் பேசிக்கொள்வோம். பட்லரின் 20வது ஓவர் பேட்டிங், ரன் எடுக்காத அவரின் புத்திசாலித்தனம், யாராலும் அவரை தோற்கடிக்க முடியாது என்பதை வெளிப்படுத்தியது” எனத் தெரிவித்தார்.

     
    ஐபிஎல் - கொல்கத்தா - ராஜஸ்தான்

    பட மூலாதாரம்,SPORTZPICS

    ராஜஸ்தான் செய்த சாதனை

    6 விக்கெட்டுகளை இழந்தநிலையில், கடைசி 6 ஓவர்களில் மட்டும் ராஜஸ்தான் அணி 103 ரன்களைச் சேர்த்துள்ளது. 6-வது விக்கெட்டை இழந்தபின், 100க்கும் மேற்பட்ட ரன்களை சேஸிங் செய்த அணி என்ற பெருமையை ராஜஸ்தான் ராயல்ஸ் பெற்றது.

    ராஜஸ்தான் அணி 15-வது ஓவரை பேட் செய்ய எதிர்கொண்டபோது வெற்றிக்கு 96 ரன்கள் தேவைப்பட்டது. 36 பந்துகளில் 96 ரன்கள் என்பது சாத்தியமில்லாதது. ஆனால் கடைசி 6 ஓவர்களில் இதுபோன்ற மிகப்பெரிய ஸ்கோரை சேஸிங் செய்த முதல் அணி என்ற பெயரை ராஜஸ்தான் ராயல்ஸ் பெற்றது.

    ராஜஸ்தான் அணி 14.1 ஓவர்களின்போது 6 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் சேர்த்திருந்தது. கணினியின் வெற்றிக் கணிப்பின்படி, ராஜஸ்தான் அணி வெல்வதற்கு 0.32 சதவீதம் மட்டுமே வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தது. ஆனால், அதன்பின் கூடுதலாக 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, 96 ரன்களை சேஸிங் செய்தது ராஜஸ்தான் அணி.

    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திலும் சரி, ஐபிஎல் தொடரிலும் சரி ராஜஸ்தான் அணி சேஸிங் செய்த 224 ரன்கள்தான் அதிகபட்ச சேஸிங்காகும்.

     
    ஐபிஎல் - கொல்கத்தா - ராஜஸ்தான்

    பட மூலாதாரம்,SPORTZPICS

    கடைசி 6 ஓவர்களில் நடந்தது என்ன?

    ராஜஸ்தான் அணி வெற்றிக்கு கடைசி 36 பந்துகளில் 96 ரன்கள் தேவைப்பட்டது. பட்லர் 42 ரன்களுடனும், பாவெல்2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். வருண் வீசிய 15வது ஓவரில் பட்லர் 4 பவுண்டரிகளை விளாசி 17 ரன்கள் சேர்த்துதனது அரைசதத்தை நிறைவு செய்தார்.

    கடைசி 5 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 79 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை ஆந்த்ரே ரஸல் வீசினார். ரஸல் ஓவரில் பாவெல் ஒரு சிக்ஸரும், பட்லர் ஒரு சிக்ஸரும் விளாசி 17 ரன்கள் சேர்த்து பதற்றத்தைத் தணித்தனர்.

    கடைசி 4 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 62 ரன்கள் தேவை. நரைன் வீசிய 17-வது ஓவரை பயன்படுத்திய பாவெல் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்களை விளாசி, 4வது பந்தில் கால்காப்பில் வாங்கி 26 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 16 ரன்கள் மட்டுமே கிடைத்தது. பாவெல் சென்றபின் ராஜஸ்தான் அணியில் பெரிதாக பேட்டர்கள் யாரும் இல்லை என்பதால், பட்லரையும் தூக்கிவிட்டால் ராஜஸ்தான் தோல்வி உறுதி என்று வர்ணனையாளர்கள் தெரிவித்தனர்.

    கடைசி 18 பந்துகளில் ராஜஸ்தான் வெற்றிக்கு 46 ரன்கள் தேவை. அடுத்த 3 ஓவர்களையுமே பட்லர் தனி ஒருவனாக இருந்து களமாடி, கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சை துவம்சம் செய்தார். கடைசி 3 ஓவர்களில் ஒரு பந்தைக் கூட ஸ்ட்ரைக்கில் ஆவேஷ் கானுக்கு பட்லர் வழங்கவில்லை. 2 ரன்கள், கடைசிப்பந்தில் ஒரு ரன் எடுத்து ஸ்ட்ரைக்கை தனது பக்கவே பட்லர் வைத்திருந்து பேட் செய்தார் .

     
    ஐபிஎல் - கொல்கத்தா - ராஜஸ்தான்

    பட மூலாதாரம்,GETTY IMAGES

    மிட்ஷெல் ஸ்டார்க் வீசிய 18-வது ஓவரில் பட்லர் ஒரு சிக்ஸர், பவுண்டரியும் அடித்தார், அந்த ஓவரில் வைடில் பைஸ் 5 ரன்கள் என 18 ரன்கள் ராஜஸ்தானுக்குக் கிடைத்தது. ஆட்டத்திலும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.இந்த ஓவரின் கடைசிப்பந்தில் ஒரு ரன் எடுத்து பட்லர் ஸ்ட்ரைக்கை தக்கவைத்தார்.

    கடைசி 12 பந்துகளில் ராஜஸ்தான் வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்டது. ஹர்சித் ராணா வீசிய 19-வது ஓவரில் பட்லர் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி என 19 ரன்கள் விளாசி கடைசிப்பந்தில் ஒரு ரன் எடுத்து ஸ்ட்ரைக்கை தக்கவைத்து அணியை வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார்.

    கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 9 ரன்கள் தேவை. வருண் சக்ரவர்த்தி கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தில் லாங்-ஆன் திசையில் சிக்ஸரை விளாசி பட்லர் அதிர்ச்சி அளித்தார். அடுத்த 3 பந்துகளும் ரன் சேர்க்க வாய்ப்புக் கிடைத்தும் பட்லர் ஓடவில்லை, ஒரு ரன் எடுத்தால் ஆவேஷ் கான் ஸ்ட்ரைக்கில் வருவார், அவரை எளிதாக ஆட்டமிழக்கச் செய்துவிடுவார்கள் என்பதால் 3 பந்துகளையும் பட்லர் டாட் பந்துகளாக கழித்தார். 4வது பந்தில் லாங் ஆப் திசையில் தட்டிவிட்டு 2 ரன்களை பட்லர் சேர்த்தார். ஸ்கோர் சமநிலைக்கு வந்ததையடுத்து, ராஜஸ்தான் தோல்வியிலிருந்து தப்பியது. ஆனால், கடைசிப்பந்தில் ரன் அடிக்காவிட்டால் சூப்பர் ஓவருக்கு போட்டி சென்றுவிடும் என்பதால் ரசிகர்களும், வீரர்களும் பதற்றத்தில் இருந்தனர்.

    வருண் வீசிய கடைசிப்பந்தை லெக் திசையில் தட்டிவிட்டு பட்லர் ஒரு ரன் எடுக்க ராஜஸ்தான் அணி ‘சாத்தியமில்லாத’ வெற்றியை பெற்றது. சதம் அடித்தபோதுகூட தனது பேட்டை உயர்த்தி பட்லர் கொண்டாடவில்லை, ஆனால், ராஜஸ்தான் வென்றவுடன், தனது ஹெல்மெட்டையும், பேட்டையும் தூக்கி எறிந்து பட்லர் வெற்றியைக் கொண்டாடினார்.

     
    ஐபிஎல் - கொல்கத்தா - ராஜஸ்தான்

    பட மூலாதாரம்,GETTY IMAGES

    நரைன் அடித்த முதல் சதம் வீணாகியது

    கொல்கத்தா அணி 223 ரன்கள் அடித்ததில் பெரும்பகுதி காரணம் சுனில் நரைன்தான். டி20 போட்டிகளில் அதிகபட்சமாக 80 ரன்கள்வரை சேர்த்திருந்த நரைன் முதல்முறையாக சதத்தைபதிவு செய்து 109 ரன்களில் ஆட்டமிழந்தார். கொல்கத்தா அணியிலும் சுனில் நரைனைத் தவிர வேறு எந்த பேட்டர்களும் பெரிதாக ரன் சேர்க்கவில்லை.

    கொல்கத்தா அணியில் இதுவரை 2 பேட்டர்கள் மட்டுமே சதம் அடித்திருந்தனர். முதலாவது மெக்கலம்(158), 2வதாக வெங்கேடஷ் ஐயர்(104), 3வதாக தற்போது நரைன்(109) சதம் அடித்துள்ளார்.

    ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் சதமும் அடித்து, பல விக்கெட்டுகளை 3 வீரர்கள் மட்டுமே நிகழ்த்தியுள்ளனர். கிறிஸ் கெயில் இருமுறையும், ஷேன் வாட்சன் ஒருமுறையும் நிகழ்த்தினர், 3வது வீரராத நரைன் சதமும் அடித்து, 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

    ஐபிஎல் வரலாற்றிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வீரரும், சதம் அடித்த வீரரும் என்ற ஒருசேரப் பெருமை பெற்றவர் சுனில் நரைன் மட்டும்தான். வேறு எந்த ஆல்ரவுண்டரும் சதம் அடித்திருந்தால் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதில்லை, 5 விக்கெட்டுகளை எடுத்தவர்கள் சதம் அடித்தது இல்லை. இந்த இரு அம்சங்களை நிகழ்த்தியவர் நரைன் மட்டும்தான்.

    2வது விக்கெட்டுக்கு ரகுவன்ஷியுடன் சேர்ந்து நரைன் 85 ரன்கள் சேர்த்ததுதான் பெரிய பார்ட்னர்ஷிப்பாகும். ரகுவன்ஷி(30) ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக பேட் செய்த நரைன் 29 பந்துகளில் அரைசதம் அடித்து, அடுத்த 20 பந்துகளில் அடுத்த 50 ரன்கள் சேர்த்து 49 பந்துகளில் தனது முதல் சதத்தை நிறைவு செய்தார். நரைன் தனது ரன் கணக்கில் 6 சிக்ஸர்கள், 9பவுண்டரிகளை விளாசினார்.

     
    ஐபிஎல் - கொல்கத்தா - ராஜஸ்தான்

    பட மூலாதாரம்,GETTY IMAGES

    சஹல், அஸ்வினை பந்துகளைப் பறக்க விட்ட நரைன்

    நரைன் தனது 109 ரன்களில் 67 ரன்கள் சஹல், அஸ்வின் ஓவர்களில் அடித்ததாகும்.

    அஸ்வின்,சஹல் ஓவரை வெளுத்து வாங்கிய நரைன், சிக்ஸர், பவுண்டரி என தெறிக்கவிட்டார். அஸ்வின் வீசிய ஓவரில் 17 பந்துகளைச் சந்தித்த நரைன் 34 ரன்களையும், சஹல் வீசிய ஓவரில் 11 பந்துகளில் 33 ரன்களையும் விளாசி, இருவரையும் ஓடவிட்டார். நரைன் கடைசியாக தான் சந்தித்த 14 பந்துகளில் மட்டும் 35 ரன்கள் சேர்த்தார். அஸ்வின், சஹல் இருவரும் ஓவருக்கு 12 ரன்கள் வீதம் வாரி வழங்கினர். அஸ்வினைப் பொருத்தவரை இந்த சீசன் அவருக்கு தொடக்கம் முதலே மோசமாக இருந்துவருகிறது.

    மற்றவகையில் கொல்கத்தா அணியில் பேட்டர்கள் அதிகம் இருந்தும் யாரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கேப்டன் ஸ்ரேயாஸ்(11), ரஸல்(13), வெங்கடேஷ்(8), பில் சல்ட்(10) என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இவர்களும் கேமியோ ஆடி இருந்தால் ஸ்கோர் 250 ரன்களைக் கடந்திருக்கும். ரிங்கு சிங் கடைசி நேரத்தில் கேமியோ ஆடி 9 பந்துகளில் 20 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

     
    ஐபிஎல் - கொல்கத்தா - ராஜஸ்தான்

    பட மூலாதாரம்,GETTY IMAGES

    கொல்கத்தா கோட்டைவிட்டது எங்கே?

    கொல்கத்தா அணியின் தொடக்கத்தில் இருந்தே நெருக்கடி கொடுத்து பந்துவீசியதால் ராஜஸ்தான் அணி சீராக விக்கெட்டுகளை இழந்தது. ஜெய்ஸ்வால்(19), சாம்ஸன்(12), ஜூரைல்(2), அஸ்வின(8), பராக்34) என சீராக விக்கெட்டுகளை இழந்தது. அதிலும் 97 ரன்கள்வரை 2 விக்கெட்டுகளை இழந்திருந்த ராஜஸ்தான் அணி, அடுத்த 24 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. நரைன், வருண் இருவரும் நடுப்பகுதி ஓவர்களில் ராஜஸ்தான் ரன்ரேட்டை இறுக்கிப் பிடித்து, விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி கொடுத்தனர். இதனால் வெற்றி கொல்கத்தா பக்கம் என்றுதான் அனைவரும் நம்பினர்.

    ஆனால், 15வது ஓவருக்குப்பின் கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சு படுமோசமாக மாறியது. குறிப்பாக 15வது ஓவரில் இருந்து ராஜஸ்தான் அணி சராசரியாக 17 ரன்களுக்குள் குறைவில்லாமல் சேர்த்தது, அந்தஅளவுக்கு கொல்கத்தா பந்துவீச்சு மோசமாக இருந்தது.

    தொடக்கத்தில் சிறப்பாக பந்துவீசிய நரைன், வருண் கடைசி ஸ்பெல்லில் பவுண்டரி, சிஸ்கர் வழங்கினார். மிட்ஷெல் ஸ்டார் கடைசி ஓவரில் பைஸ் உள்பட 18 ரன்கள், ராணவின் கடைசி ஓவர் என கொல்கத்தாவின் பதற்றத்தை பட்லர் பயன்படுத்தினார்.

    https://www.bbc.com/tamil/articles/c4n1zvgd4vko

    ipl-pt-16-04.jpg

    • Like 2
  7. தேர்தலில் சமூக ஊடகங்கள்
    கட்டுரை தகவல்
    • எழுதியவர், அஷ்ஃபாக்
    • பதவி, பிபிசி தமிழ்
    • 16 ஏப்ரல் 2024

    “நீங்க எப்போ திருமணம் பண்ணிக்க போறீங்க?” பரபரப்பான பாரத் ஜோடோ யாத்திரைக்கு நடுவே, ஓர் இரவு உணவுடன் கூடிய கலந்துரையாடலில் காமியா ஜானி எனும் யூடியூபர் ராகுல் காந்தியிடம் கேட்ட கேள்வி இது.

    இந்திய அரசியலில் சில தொலைக்காட்சி நேர்காணல்கள் அதிர்வுகளை கிளப்பியிருக்கின்றன. சில கேள்விகள் அரசியல் தலைவர்களுக்கு கடும் நெருக்கடி அளித்திருக்கிறது. ஆனால் இது சமூக ஊடகங்களின் யுகம். இன்று, அரசியல் தலைவர்கள் மக்களைச் சென்றடைய வெகுஜன ஊடகங்களை தாண்டியும் பல உத்திகளை கையாள்கின்றனர்.

    பொது வாழ்க்கையில் இருக்கும் அவர்கள் மக்களுக்குத் தெரியாத தங்களது மென்மையான மறுபக்கத்தை காட்டுவதற்காக சமூக ஊடக பிரபலங்களுக்கு நேர்காணல் அளிப்பது சமீபத்திய உத்தியாக மாறி வருகிறது. இதன் மூலம் மக்களின் கவனத்தை ஈர்க்கும் உத்தி, தேர்தலில் அவர்களுக்கு ஆதரவு வாக்குகளாக மாறுமா? விரிவாக அலசுகிறது இந்த கட்டுரை

    யூடியூபருடன் குப்பைகளை அகற்றிய பிரதமர்

    கடந்த ஆண்டு அக்டோபரில் குப்பைகள் இல்லா இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக ஹரியானாவைச் சேர்ந்த சமூக ஊடக பிரபலமான அன்கித் பையன்பூரியாவுடன் பிரதமர் நரேந்திர ஒரு காணொளியை வெளியிட்டார். அதில் அன்கித்துடன் உடன் கலந்துரையாடியவாறே நரேந்திர மோதி குப்பைகளையும் அகற்றினார்.

    PM Modi

    பட மூலாதாரம்,ANI

    படக்குறிப்பு,யூடியூபர் அன்கித் உடன் நரேந்திர மோதி

    இதுபோன்ற யூடியூபர்களுடன், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியும் தோன்றியுள்ளார். ஆனால் ஊடகங்களை காட்டிலும் யூடியூபர்களிடம் அதிகம் பேசுவது ஏன் என்கிற கேள்விக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் வேறு ஒரு காரணத்தை முன்வைக்கிறார். 2023 ஜூன் மாதம் யூடியூபர்களுக்கு மத்தியில் பேசிய ராகுல் காந்தி

    “ஊடகங்கள் ஒருசிலரை கட்டுப்படுத்தப்படுகின்றன. அவர்களுக்கு அழுத்தம் தரப்படுகிறது. நம்மிடம் (எதிர்க்கட்சிகள்) பேச விருப்பம் இல்லை. வெகுஜன ஊடகங்கள் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்கிற முடிவுகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டன. எனவே, அவர்களிடம் பேசுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை” என்றார்

    செப்டம்பர் 2023-ல் INDIA கூட்டணியின் ஊடகக் குழு, தொலைக்காட்சி ஊடகங்களைச் சேர்ந்த 14 ஊடகவியாளர்களை புறக்கணிப்பதாக அறிக்கை வெளியிட்டது. இந்த தொலைக்காட்சி பிரபலங்கள் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும் நாட்டில் வெறுப்பை பரப்புவதாகவும் INDIA கூட்டணி குற்றம்சாட்டியது.

    Rahul

    பட மூலாதாரம்,CURLYTALES

    படக்குறிப்பு,ராகுல் யூடியூபர் காமியா உடன்

    ‘யூடியூபராக’ மாறிய நரேந்திர மோதி

    இந்திய பிரதமர் நரேந்திர மோதி தன்னை ஒரு யூடியூபராக அடையாளப்படுத்தியிருக்கிறார். செப்டம்பர் 2023-ல் நடந்த யூடியூப் ஃபேன்பெஸ்ட் இந்தியா (YouTube Fanfest India) நிகழ்ச்சியில் நரேந்திர மோதி பெரும்பாலான யூடியூபர்கள் சொல்வதுபோல தன்னுடைய சேனலை சப்ஸ்கிரைப் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

    உலகிலேயே யூடியூபில் அதிக சப்ஸ்கிரைபர்களை கொண்ட அரசியல் தலைவராக நரேந்திர மோதி திகழ்கிறார். சுமார் 2 கோடிக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களை அவர் கொண்டிருக்கிறார். இது கிட்டத்தட்ட இலங்கை மக்கள் தொகைக்கு நிகரானது.

    “சமூக ஊடகங்களை அரசியலுக்கு பயன்படுத்த வேண்டும் என்கிற கலையில் முதலில் வெற்றிபெற்றவர் பிரதமர் நரேந்திர மோதிதான்” என்கிறார் எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான ஆழி செந்தில்நாதன்

    “2014 தேர்தலிலேயே சமூக ஊடகங்களை மிகப்பெரியளவில் பயன்படுத்திக்கொண்ட கட்சியாக பாஜக இருந்தது. அதன் பிறகு, அதே சமூக ஊடகங்களில் இந்துத்துவ பிரசாரம் அல்லது வெறுப்பு பிரசாரத்தை மேற்கொண்டதன் மூலமாக 10 ஆண்டுகளாக வலதுசாரி அமைப்புகளே சமூக ஊடகங்களை ஆக்கிமிரமித்திருந்தன. தற்போது இதற்கு எதிர்வினையாக, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளும் சமூக ஊடகங்களில் அதிக கவனம் செலுத்துகின்றன” என ஆழி செந்தில்நாதன் கூறுகிறார்.

    Narendra Modi

    பட மூலாதாரம்,NARENDRA MODI/YT

    படக்குறிப்பு,நரேந்திர மோதி

    அரசியல் தலைவர்கள் யூடியூபர்களை நாடுவது ஏன்?

    சென்னையில் வசிக்கும் யூடியூபரான சமீஹாவுக்கு 22 வயது. நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்கிறார். சமீபத்தில் இவர், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியை தன்னுடைய யூடியூப் சேனலுக்காக நேர்காணல் செய்திருந்தார். யதார்த்தமான உரையாடலுடன் வெளிவந்த அந்த காணொளி சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது. அரசியல் தலைவர்கள் யூடியூபர்களை நாடுவது ஏன்? என்கிற கேள்வியை சமீஹாவிடம் முன்வைத்தோம்.

    “அரசியல் தலைவர்கள் சமூக ஊடக படைப்பாளிகளை நோக்கி ஏன் வரக்கூடாது? வெகுஜன ஊடகங்கள் மிக நீண்ட பாரம்பரியம் கொண்டவை. அதே நேரம், சோசியல் மீடியா அப்படியல்ல. இதனை பலதரப்பட்ட மக்களும் பயன்படுத்துகின்றனர். புது வகையான பார்வையாளர்கள் உள்ளனர். அவர்களிடம் சென்றடையவே அரசியல் தலைவர்கள் யூடியூபர்களை நோக்கி வருகிறார்கள்” என்றார் சமீஹா.

    திமுக எம்.பி கனிமொழியுடான நேர்காணலை சமீஹா தயாரிக்க விரும்பிய விதம் குறித்து கேட்டோம், “அதிகமாக அரசியல் பேசாமல், ஒரு யதார்த்தமான நேர்காணலை தயாரிக்க விரும்பினேன். எனக்கு என்ன கேள்விகள் கேட்கத் தோன்றியதோ அதைத்தான் கேட்டேன்” என்று சமீஹா பதிலளித்தார்.

    Sameeha
    படக்குறிப்பு,யூடியூபர் சமீஹா மர்யம்

    தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்றொரு யூடியூபரான இர்ஃபானும் திமுகவைச் சேர்ந்த கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரை நேர்காணல் செய்திருக்கிறார். கனிமொழியுடன் இர்ஃபான் நேர்காணல் செய்தபோது அவருக்கு சுவாரஸ்யமான உணவு சவால் ஒன்றை (Weird Food Challenge) முன்வைத்திருந்தார்.

    "இயல்பாகவே எந்த ஒரு எம்.பியும் எம்.எல்.ஏவும் இதுபோன்ற சுவாரஸ்யமான சவாலை செய்ய மாட்டார்கள். தமிழில் இப்படி ஒரு நேர்காணலை யாருமே எடுத்ததில்லை. ஆனால் கனிமொழி ஸ்போர்ட்டிவாக இதை செய்திருந்தார். அந்த காணொளி மிகவும் நன்றாக வந்திருந்தது" என நினைவுகூர்ந்தார் இர்ஃபான்.

    Irfan
    படக்குறிப்பு,யூடியூபர் இர்ஃபான்

    ஜனநாயக நாட்டில் வெகுஜன ஊடகங்களின் பங்கு என்ன?

    மேலே தலைப்பிடப்பட்ட அதே கேள்வியை முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலசந்திரனிடம் கேட்டோம்.

    'இடிப்பார் இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்' என்கிறார் திருவள்ளுவர். இந்த குரலுக்கு ஏற்றாற்போல நாட்டில் எங்கு தவறு நடந்தாலும் அதை எடுத்துச் சொல்லும் மிகப்பெரிய கடமை ஊடகங்களுக்கு இருக்கிறது. விமர்சன கண்ணோட்டத்தோடு நாட்டில் நடப்பவற்றை எந்தவித பக்கச் சார்பும் இன்றி, செய்தியாக வெளியிட வேண்டிய பொறுப்பு ஊடகங்களைச் சார்ந்தது. ஆனால் தற்போது ஊடகங்களின் மீதான நம்பகத்தன்மை குறைந்து வருகிறது” என பாலச்சந்திரன் குறிப்பிட்டார்.

    Balachandran
    படக்குறிப்பு,முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலச்சந்திரன்

    வெகுஜன ஊடகங்கள் மீது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டும் அதே வேளையில், ஆட்சியில் இருக்கும் பிரதமர், சில முதலமைச்சர்கள் முன்பு போல பத்திகையாளர்களை தொடர்ச்சியாக சந்திப்பதில்லை. அவர்களின் கேள்விகளை எதிர்கொள்வதில்லை எனும் குற்றச்சாட்டும் அவ்வப்போது முன்வைக்கப்படுகிறது. இது குறித்து பேசிய பாலச்சந்திரன்,

    “நாட்டில் அதிகாரத்தில் இருக்கும் பிரதமர், அமைச்சர்கள் உள்பட யாராக இருந்தாலும் அவர்கள் கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும். அதுதான் ஆரோக்கியமான நடைமுறை. பிரதமர் பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்ப்பது அனைவருக்கும் தெரியும். இது குறித்து கேள்வி எழுப்பாமல் ஊடகங்கள் ஏன் வாய்மூடி மெளனம் காக்கின்றன. இது ஓர் ஆரோக்கியமற்ற சூழல். ஆனால் இந்த சூழலை ஏற்படுத்தியதும் ஊடகங்கள்தான்" என்கிறார்

    தேசிய படைப்பாளிகளுக்கான விருதுகள்

    தேர்தலில் சமூக ஊடகங்கள்

    பட மூலாதாரம்,ANI

    படக்குறிப்பு,யூடியூபர் மைத்திலி உடன் பிரதமர் நரேந்திர மோதி

    மும்பையின் முன்னணி யூடியூபர்களில் ஒருவரான ரன்வீர் அல்லாஹ்பாடியா மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர் உள்பட சிலரை நேர்காணல் செய்திருக்கிறார். கடந்த மார்ச் மாதம் டெல்லியில் மத்திய அரசு நடத்திய National Creators Award எனும் தேசிய படைப்பாளிகளுக்கான விருது விழாவில் ரன்வீருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி (Disruptor of the Year) விருது வழங்கினார்.

    ரன்வீரை போலவே 23 பேருக்கு வெவ்வேறு பிரிவுகளின் கீழ் விருது வழங்கப்பட்டது. அதேசமயம், ரன்வீர் உள்பட பெரும்பாலனவர்கள் வலதுசாரி கருத்துகளைக் கொண்ட காணொளிகளை தங்கள் சமூக ஊடக பக்கங்களில் தொடர்ச்சியாக தயாரித்து வெளியிடுவதையும் கவனிக்க முடிகிறது.

    ஆனால், நாட்டில் சிறந்து விளங்கும் சமூக ஊடக படைப்பாளிகளை கெளரவிக்கும் விதமாக முதல்முறையாக இப்படியொரு விழாவை நடத்துவதாக பாஜக அரசு அறிவித்திருந்தது. இந்த நிகழ்ச்சிக்கும் தேர்தலுக்கும் சம்மந்தம் இல்லை என விழாவிலேயே பிரதமர் நரேந்திர மோதி பேசியிருந்ததும் கவனிக்கத்தக்கது.

    அந்த விழாவில் சமூக ஊடக பிரபலங்களுடன் நரேந்திர மோதி சகஜமாக கலந்துரையாடினார். பெரும்பாலான படைப்பாளிகள் நரேந்திர மோதியை மேடையில் புகழ்ந்து பேசினர். சிலர் பிரதமரும் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். லட்சக்கணக்கானோர் பின்தொடரும் அவர்களின் சமூக ஊடக பக்கங்களிலும் பதிவிட்டனர்.

    சமூக ஊடகங்களை பயன்படுத்துவது குறித்து மோதியே தனிப்பட்ட முறையில் அதிக கவனம் செலுத்துவதாக பாஜகவின் முன்னாள் தேர்தல் ஆலோசகர் சிவம் சங்கர் சிங் இந்தியத் தேர்தல்களை வெல்வது எப்படி? (How to win an Indian Elections) என்கிற தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    தேர்தலில் சமூக ஊடகங்கள்

    “கோடிகளில் காசு புரளுகிறது"

    சமூக ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்த அரசியல் கட்சிகள் என்ன செய்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள தேர்தல் வியூக நிறுவனமான ஐ-பாக்கில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் ஒருவரிடம் பேசினோம்.

    “டிவி, பிரிண்ட் மீடியாக்களை காட்டிலும் சோசியல் மீடியாவில்தான் அனைத்து கட்சிகளும் அதிக கவனம் செலுத்தும். டிஜிட்டல் மார்க்கெட்டிங்க்கிற்கு மட்டுமே பல கோடி ரூபாயை மிகச் சாதாரணமாக செலவிடுவார்கள். எல்லா கட்சிகளுக்கும் சமூக ஊடகங்களில் குறிப்பிட்ட அளவில் ஆதரவு இருக்கிறது.

    யூடியூபர்களின் ஆதரவு வட மாநிலங்களில் பாஜகவுக்கு அதிகம். தமிழ்நாட்டில் திமுகவுக்கு அதிகம். தேர்தல் நெருங்கும்போது புதுப்புது யூடியூப் சேனல்கள் முளைக்கும். செய்திச் சேனல்கள் என்கிற போர்வையில் சின்ன சின்ன யூடியூப் சேனல் வைத்திருப்பவர்கள், பத்திரிகையாளர் என்கிற பெயரில சிலரிடம் நேர்காணல் எடுத்து வெளியிடும். அனைத்திற்கும் இங்கே காசுதான்.” என்றார் அந்த முன்னாள் ஐ-பாக் ஊழியர்.

    தொடர்ந்து பேசிய அவர், “நடுநிலை என காட்டிக்கொண்டு ஒரு குறிப்பிட்ட கட்சி சார்ந்து பேச தனியான யூடியூப் சேனல், நேர்மறையான விளம்பரத்திற்கு தனியான யூடியூப் சேனல், எதிராளியை விமர்சிக்க தனியான சேனல்கள் இயங்குகின்றன. இவை அனைத்தையும் செய்ய பணம் தரப்படுகிறது. சமூக ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்த, எவ்வளவு கோடிகளை வேண்டும் என்றாலும் செலவிட அரசியல்வாதிகள் தயாராக உள்ளனர்” என முன்னாள் ஐ-பாக் ஊழியர் தெரிவித்தார்

    சமூக ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா

    Social Media

    பட மூலாதாரம்,GETTY IMAGES

    படக்குறிப்பு,இந்தியாவில் உள்ள சமூக ஊடக பயனர்களின் எண்ணிக்கை

    2023 ம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் சமூக ஊடக பயனர்களின் எண்ணிக்கை சுமார் 58 கோடி என்கிறது இண்டர்நெட் & மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (Internet and Mobile Association of India) ஆன்லைன் தரவுகளை சேகரிக்கும் ஜெர்மனியின் ஸ்டாடிஸ்டா நிறுவனத்தின் கூற்றுப்படி. உலகளவில் யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் அதிக பயனர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.

    ஜனவரி 2024 வரை இந்தியாவில் மட்டும் சுமார் 46.2 கோடி பயனர்களை யூடியூப் கொண்டிருப்பதாக ஸ்டாடிஸ்டா தெரிவிக்கிறது. ஃபேஸ்புக் 36.6 கோடி பயனர்களையும், இன்ஸ்டாகிராம் 36.2 கோடி பயனர்களையும் கொண்டிருக்கிறது.

    உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா தற்போது தேர்தல் திருவிழாவை எதிர்கொள்கிறது. அதேவேளை, RSF (Reporters Without Borders) எனும் அமைப்பு சர்வதேச அளவில் 180 நாடுகளில் பத்திரிகை சுதந்திரம் குறித்து ஆய்வு செய்து தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதில் 2023-ம் ஆண்டு நிலவரத்தின்படி இந்தியாவுக்கு 161-வது இடம் அளிக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.

    https://www.bbc.com/tamil/articles/cn0wyy2954yo

  8. இன்று முதல் புதிய விசா முறை அமுல்

    Published By: DIGITAL DESK 3    17 APR, 2024 | 09:48 AM

    image
     

    இன்று புதன்கிழமை (17) புதிய விசா  முறை மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணியை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்  நடைமுறைப்படுத்தவுள்ளது.

    "புதிய விசா  நடைமுறைகள், அதற்கான கட்டணங்கள், பூர்த்தி செய்யவேண்டிய தேவைப்பாடுகள் மற்றும் இலங்கையில் தங்கியிருக்க முடியுமான காலப் பிரிவு என்பன இலக்கம் 2360/24 மற்றும் 2023.11.27 ஆம் திகதி விசேட வர்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. 

    தற்போது நடைமுறையிலுள்ள ETA (Electronic Travel Authorization) முறைக்குப் பதிலாக அறிமுகம் செய்யப்படும் இணைய வழிமுறையான E-Visa முறைமை GBS Technology Service & IVS Global நிறுவனத்துடன் இணைந்து செயற்படுத்துவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதோடு அந்த இணையத்தளத்தின் தொடர்பு கீழே தரப்பட்டுள்ளது. www.srilankaevisa.lk

    வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் முதலீட்டாளர்களை கவரும் வகையில், புதிய இணைய வழிமுறையை  அறிமுகப்படுத்துவதன் மூலம் விரைவான மற்றும் திறமையான விசா விண்ணப்ப செயல்முறையை வழங்க உத்தேசித்துள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

    52.jpg

     

    22.jpg

    https://www.virakesari.lk/article/181269

    • Like 1
  9. டிரம்ப்

    பட மூலாதாரம்,GETTY IMAGES

    கட்டுரை தகவல்
    • எழுதியவர், சாம் காப்ரால்
    • பதவி, பிபிசி செய்திகள்
    • 16 ஏப்ரல் 2024

    முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு எதிரான முதல் குற்றவியல் விசாரணை தற்போது நடந்து வருகிறது.

    அண்மையில் டிரம்ப் இரண்டு தனித்தனி நியூயார்க் சிவில் வழக்கு விசாரணைகளில் நீதிபதிகளை எதிர்கொண்டார். ஆனால் அவர் மீதான குற்றவியல் விசாரணைகள் சற்று வித்தியாசமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டிரம்ப் மீது, 2016 தேர்தலுக்கு முன்னர், ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக 34 மோசடி வழக்குகள் சுமத்தப்பட்டன.

    இவ்வழக்கில், தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் `கிரிமினல்’ ரகம் அல்ல என்று வாதிட்ட அவர், தான் குற்றமற்றவர் என்றும் தெரிவித்துள்ளார்.

    எட்டு வாரங்கள் நடைபெறவிருக்கும் இவ்வழக்கின் விசாரணை, குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்பின் பரப்புரையில் விளைவுகளை ஏற்படுத்தும். பரப்புரையில் ஈடுபடுவதிலிருந்து அவர் அடிக்கடி விலகியிருக்க நேரிடும்.

     
    டொனால்ட் ட்ரம்ப், ஸ்டார்மி டேனியல்ஸ், அமெரிக்கா, நீதிமன்றம்

    பட மூலாதாரம்,GETTY IMAGES

    படக்குறிப்பு,ஸ்டார்மி டேனியல்ஸ்

    டிரம்ப் எதிர்கொள்ளும் வழக்கு என்ன?

    கடந்த 2006-ஆம் ஆண்டு டொனால்ட டிரம்ப் உடன் உடலுறவு கொண்டதாக ஆபாசப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதனை டிரம்ப் மறுத்தார். மேலும் 2016-ஆம் ஆண்டு தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு முன்னதாக இந்த விவகாரம் பற்றி வெளியே பேசாமல் இருக்க தனக்கு பணம் கொடுக்கப்பட்டதாக டேனியல்ஸ் கூறியுள்ளார்.

    டிரம்ப் தனது முன்னாள் தனிப்பட்ட வழக்கறிஞரும் ஆலோசகருமான மைக்கேல் கோஹனுக்கு ‘சட்டச் செலவுகள்’ என பதிவு செய்து பணம் அளித்த விவகாரத்தையே இந்த விசாரணை மையமாகக் கொண்டுள்ளது.

    டிரம்புடனான தொடர்பு குறித்து மௌனமாக இருப்பதற்காக, டேனியல்ஸுக்கு 1,30,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 1 கோடி ரூபாய்) செலுத்துமாறு தனக்கு டிரம்ப் உத்தரவிட்டதாக கோஹென் கூறுகிறார். சட்டச் செலவுகள் என்று பதிவு செய்து அந்த பணத்தை தனக்கு ட்ரம்ப் கொடுத்ததாகவும் கோஹென் குறிப்பிட்டுள்ளார். இந்தச் செயலை 2016 தேர்தலில் "சட்டவிரோதமாக செல்வாக்கு செலுத்தும்" முயற்சி என்று வழக்கறிஞர்கள் விவரித்துள்ளனர்.

    வெளியே பேசாமல் இருப்பதற்கான பணம் (Hush Money) செலுத்துவது சட்டவிரோதமானது அல்ல. ஆனால் மான்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம், டிரம்ப் ஆபாச நடிகைக்கு அளித்த பணத்தை, ‘சட்டச் செலவுகள்’ என்று குறிப்பிட்டு கோஹனுக்குச் செலுத்தியது தவறு என்று குற்றம்சாட்டுகிறது.

    மொத்தத்தில், பொய்யான வணிகப் பரிவர்த்தனைகளைப் பதிவு செய்ததாக டிரம்ப் மீது 34 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.

     
    டொனால்ட் ட்ரம்ப், ஸ்டார்மி டேனியல்ஸ், அமெரிக்கா, நீதிமன்றம்

    பட மூலாதாரம்,GETTY IMAGES

    படக்குறிப்பு,மைக்கேல் கோஹன்

    டிரம்பின் தேர்தல் பரப்புரை பாதிக்கப்படுமா?

    எதிர்வரும் 2024 தேர்தலுக்கான குடியரசுக் கட்சி வேட்பாளராகக் கருதப்படும் ட்ரம்ப், பகலில் நீதிமன்றத்தில் இருக்கவும், இரவில் பிரசாரம் செய்யவும் உறுதிபூண்டிருந்தார். சட்டப்படி அவர் நீதிமன்றத்தில் இருக்க வேண்டும்.

    இருப்பினும், அவர் வரும் மே 17-ஆம் தேதி தனது மகனின் உயர்நிலைப் பள்ளி பட்டமளிப்பு விழா நடக்கும் நாளில் விசாரணையில் கலந்து கொள்ள முடியாது என்று தெரிவித்திருக்கிறார். விசாரணை நாளுக்கு சில தினங்கள் முன்னர் இதுகுறித்து முடிவு எடுப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

    இதற்கு முன்பு ட்ரம்ப் இவ்வாறு நடந்து கொண்டதில்லை. சமீபத்தில் முடிவடைந்த இரண்டு சிவில் வழக்குகளிலும் அவர் அவ்வப்போது விசாரணைக்கு வந்துவிடுவார். அவர் விருப்பப்படி நீதிமன்றத்துக்கு வந்துப் போவார். ஆனால் இம்முறை நடக்கும் விசாரணையில், அவர் ஒரு குற்றவியல் பிரதிவாதி என்பதால், ட்ரம்ப் செயல்பாட்டில் மாற்றம் தெரிகிறது.

    ட்ரம்ப் தனது குற்றவியல் விசாரணையில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று சட்ட நிபுணர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். அவ்வாறு செய்யாவிட்டால், அவரைக் கைது செய்ய ஆணை பிறப்பிக்கப்படலாம்.

    நீதிமன்றத்திற்கு வராமலிருப்பதை ஞாயப்படுத்த சில வரையறுக்கப்பட்ட காரணிகள் உள்ளன. மற்றொரு விசாரணைக்குச் செல்ல அல்லது ஒரு முக்கியமான நிகழ்வுக்குச் செல்ல ட்ரம்பை நீதிபதி அனுமதிக்க முடியும்.

    ஆனால் விசாரணையில் ஆஜராகாமல் தவிர்ப்பது பெரிய குற்றமாகப் பார்க்கப்படும் என்று முன்னாள் வழக்கறிஞரும் வெஸ்ட் கோஸ்ட் ட்ரையல் வழக்கறிஞர்களின் தலைவருமான நேமா ரஹ்மானி கூறினார்.

    மேலும், “ஜூரியாக இருக்கப் பொதுவாக யாரும் விரும்புவதில்லை. ஆனால் ஜூரியாக இருக்கும் போது, வழக்கில் ஒரு தரப்பினர் தங்கள் நேரத்தை மதிக்காமல் இருப்பதை கண்டால், அது தண்டனை பெறுவதற்கான உறுதியான வழி," என்றும் அவர் கூறினார்.

    முன்னாள் அதிபர் ட்ரம்ப் ஏற்கெனவே குடியரசுக் கட்சி வேட்பாளருக்கான போட்டியை வென்றுவிட்ட நிலையில், தற்போது குடியரசுக் கட்சி வேட்பாளராக கருதப்படுகிறார். இனி அவர் கவலைப்பட வேண்டியது நவம்பர் மாதப் பொதுத் தேர்தல் பற்றி மட்டுமே.

    ஆனால் தற்போது நடக்கும் ஆறு முதல் எட்டு வார விசாரணை அவரது பரப்புரைக்கு இடையூறாகவும், அதிபர் ஜோ பைடனை எதிர்கொள்வதில் சிக்கலாகவும் அமையும். மேலும், வழக்குச் செலவுகள் அவரது பரப்புரை நிதியையும் பாதிக்கும்.

     
    டொனால்ட் ட்ரம்ப், ஸ்டார்மி டேனியல்ஸ், அமெரிக்கா, நீதிமன்றம்

    பட மூலாதாரம்,GETTY IMAGES

    விசாரணை எப்படி நடக்கும்?

    கடந்த ஆண்டு, டிரம்புக்கு எதிரான வரி மோசடி விசாரணையை மேற்பார்வையிட்ட மான்ஹாட்டன் உச்ச நீதிமன்ற நீதிபதி ஹுவான் மெர்சன், 16 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அமர்வில் செயல்படுகிறார். ஆனால், ஒரு முன்னாள் அமெரிக்க அதிபரின் குற்றவியல் விசாரணை நீதிபதியாக அவர் இருப்பது இதுவே முதல் முறையாகும். இது அவரது வாழ்நாளில் முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக இருக்கும்.

    முன்னதாக ட்ரம்ப், “நீதிபதி என்னை வெறுக்கிறார். எனவே அவர் இந்த வழக்கில் இருந்து விலக வேண்டும்” என்று வாதிட்டார். ஆனால், நீதிபதி மெர்சன் இந்த வாதத்தை நிராகரித்துவிட்டார்.

    ட்ரம்ப் தனது பல்வேறு வழக்குகளுக்காக பல சட்ட வல்லுனர்கள் குழுவை அமர்த்தியுள்ளார். அவரை இங்கு பிரதிநிதித்துவப்படுத்துவது சூசன் நெசெல்ஸ் மற்றும் டோட் பிளான்ச் தலைமையிலான குழுவாகும்.

    ட்ரம்ப் மீது குற்றம்சாட்டிய முதல் நபரான மான்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் ஆல்வின் ப்ராக், வழக்குத் தொடர எட்டு அனுபவமுள்ள வழக்குரைஞர்களைக் கொண்ட குழுவைக் கூட்டியுள்ளார். வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் தங்கள் வாதத்தை முன்வைக்க குறைந்தபட்சம் 15 முதல் 17 நாட்கள் தேவைப்படும் என்றும், சில நிபந்தனைகளில் இரு தரப்பினரும் உடன்படவில்லை என்றால் இன்னும் அதிக அவகாசம் தேவைப்படலாம் என்றும் கூறியுள்ளனர்.

    ட்ரம்பின் முன்னாள் தனிப்பட்ட வழக்கறிஞர் கோஹன் அரசு தரப்பு சாட்சியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது கடந்த காலம் குறித்த தீவிரமான குறுக்கு விசாரணைகளை அவர் எதிர்கொள்ள நேரிடும்.

    இதற்கிடையில், ட்ரம்ப் தன்மீதான குற்றச்சாட்டுகள் ‘ஆதாரமற்றவை’ என்றும் ‘அரசியல் நோக்கம் கொண்டவை’ என்றும் வாதிட்டார். ஆனால் இந்தக் கூற்றுகளை நிரூபிக்க அவர் எந்த ஆதாரங்களையும் வழங்கவில்லை.

    நீதிபதி மெர்சனின் விதிகளின்படி, புதன்கிழமைகள் அல்லது ஏப்ரல் 29 அன்று நீதிமன்றம் இயங்காது. ட்ரம்பின் சட்டக் குழுவின் சில உறுப்பினர்கள் அனுசரிக்கும் யூதர்களின் பாஸ்கா பண்டிகையை முன்னிட்டும் விசாரணை இடைநிறுத்தப்படலாம்.

     
    டொனால்ட் ட்ரம்ப், ஸ்டார்மி டேனியல்ஸ், அமெரிக்கா, நீதிமன்றம்

    பட மூலாதாரம்,GETTY IMAGES

    நீதிபதிகள் எப்படித் தேர்வு செய்யப்படுவார்கள்?

    நியூயார்க் குற்றவியல் விசாரணைகளுக்கு ஆறு மாற்று நீதிபதிகள் உட்பட 12 நீதிபதிகள். விசாரணை தொடங்குவதற்கு முன்னர், நீதிபதிகளாகப் பொறுப்பேற்க உள்ளவர்கள், பலவிதமான கேள்விகளை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளனர். ட்ரம்ப் பற்றிய செய்திகளை எங்கிருந்து தெரிந்துகொள்கிறார்கள், என்பது தொடங்கி, அவர்கள் முன்னர் டிரம்ப் பேரணியில் கலந்து கொண்டார்களா என்பது வரை பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

    ட்ரம்பின் புத்தகங்களில் ஏதேனும் ஒன்றைப் படித்தீர்களா அல்லது கோஹனின் பேச்சுகளில் ஏதாவது கேட்டிருக்கிறீர்களா என்றும் அவர்களிடம் கேட்கப்படுகிறது.

    ரஹ்மானியின் கூற்றுப்படி, நீதிபதிகளின் தேர்வு விசாரணையின் பெரும்பகுதியை எடுத்துக்கொள்ளக்கூடும். ஏனெனில் "டொனால்ட் ட்ரம்ப் யார் என்பது அனைவருக்கும் தெரியும். அவரைப் பற்றி அனைவருக்குமே ஒரு கருத்து உள்ளது," என்கிறார்.

    "யாரும் எந்தச் சார்புகளுமற்று நீதிமன்ற அறைக்குள் வருவதில்லை," என்றும் ரஹ்மானி கூறினார். எனவே, பாரபட்சமற்ற ஒரு நீதிபதிக் குழுவைத் தேர்வு செய்ய, வாதப் பிரதிவாதக் குழுக்கள் 500 நீதிபதிகளில் இருந்து சல்லரை போட்டுத் தேடலாம்.

    நீதிபதி மெர்சன் கேள்விகள் கேட்பதற்கான நேரத்தை வரையறுக்கக்கூடும்.

    ஸ்டார்மி டேனியல்ஸ்

    பட மூலாதாரம்,GETTY IMAGES

    டிரம்ப் விசாரணை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுமா?

    அமெரிக்காவில், நீதிமன்ற விசாரணைகளின்போது ஒளி-ஒலி பதிவுகள் முற்றிலுமாகத் தடைசெய்யப்பட்ட மூன்று நீதிமன்றங்களில் நியூயார்க்கும் ஒன்றாகும்.

    நீதிமன்ற அறைகளுக்குள் கேமராக்களை அனுமதிப்பது நீதிபதிகளின் சொந்த விருப்பம் சார்ந்தது. பெரும்பாலான நாட்களில் டிரம்பின் சிவில் மோசடி விசாரணையில் இருந்து ஒரு சில காணொளிகள் கிடைத்தன. ஆனால் ஆரம்பக்கட்ட விசாரணையின்போது நீதிபதி மெர்ச்சன் தனது நீதிமன்ற அறையில் கேமராக்களை அனுமதிக்கவில்லை. எனவே இந்த விசாரணையிலும் கேமராக்கள் அனுமதிக்கப்பட வாய்ப்புகள் குறைவு.

    எனவே, இந்த வழக்கின்மீது பரவலான ஆர்வம் இருந்தபோதும் விசாரணையை நேரில் பார்க்க மன்ஹாட்டன் நீதிமன்றத்திற்குள் வெகுசில பொதுமக்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

    எஞ்சியுள்ள மக்கள், ஊடகச் செய்திகள் மூலமாகவும், ஓவியங்கள் மூலமாகவும், டிரம்பின் சமூக வலைதளப் பதிவுகள் மூலமகவுமே இவ்வழக்கைப் பற்றிய செய்திகளைத் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கும்.

    https://www.bbc.com/tamil/articles/cyx6kk6gp3do

  10. எம்.எஸ்.சி ஏரிஸ்

    பட மூலாதாரம்,MSC

    கட்டுரை தகவல்
    • எழுதியவர், சாரதா வி
    • பதவி, பிபிசி தமிழ்
    • 16 ஏப்ரல் 2024

    இரான் சிறைபிடித்த கப்பலில் இருக்கும் இந்தியர்களை விரைவில் மீட்க வேண்டும் என்று அவர்களின் குடும்பங்கள் கோருகின்றனர். இந்திய வெளியுறவுத் துறையின் கோரிக்கைக்கு இணங்க கப்பலில் இருப்பவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பேசுவதற்கு ஒரு மணி நேரம் செல்போன் அனுமதி திங்கள்கிழமை மாலை வழங்கப்பட்டது.

    இந்தியா நோக்கி வந்துக் கொண்டிருந்த சரக்கு கப்பலை நடுக்கடலில் இரான் கடந்த 13ம் தேதி சிறைபிடித்தது. அந்தக் கப்பலில் சிக்கியுள்ள 25 மாலுமிகளில் 17 பேர் இந்தியர்கள், அதில் நான்கு பேர் தமிழர்கள். இஸ்ரேலுக்கும் இரானுக்கும் இடையில் மோதல் நிலவி வரும் நிலையில், இஸ்ரேலிய தொழிலதிபருடன் தொடர்புடைய இந்த கப்பலை இரான் சிறைப்பிடித்துள்ளது. போர் சூழலில் சிறைபிடிக்கபட்டிருக்கும் இந்தியர்களை பத்திரமாக மீட்டு வர வேண்டும் என்று அவர்களின் குடும்பங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கப்பலில் உள்ள தமிழர்களின் நிலை என்ன?

    கப்பலில் சிக்கியுள்ள தமிழர் ஒருவரின் சகோதரர் மைக்கேல், பிபிசி தமிழிடம் பேசும் போது, “நேற்று ஒரு மணி நேரம் செல்போன் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. எனது சகோதரனுடன் பேசினோம். துன்புறுத்தல்கள் எதுவும் இல்லை. கப்பல் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் போது, வழக்கமாக என்ன நடவடிக்கைகள் இருக்குமோ அவை நடைபெற்று வருகின்றன. உணவுப் பொருட்கள் போதிய அளவு உள்ளன. கப்பல் முழுவதும் இரானின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. யாரிடமும் செல்போன், லேப்டாப் வைத்துக் கொள்ள அனுமதி இல்லை.

    இராக்கிலிருந்து இந்தியாவில் மும்பை அருகே ஜவஹர்லால் நேரு துறைமுகம் நோக்கி வந்து கொண்டிருந்த கப்பல், அபுதாபியை தாண்டிய பிறகு இரானால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு இரானுக்கு நல்ல உறவுகள் இருப்பதால் தான் அவர்களுடன் செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முடிந்தது. போர் அல்லாத சூழலில் இப்படி நடந்திருப்பதால் அவர்களின் பாதுகாப்பு குறித்து கவலை இல்லை. ஆனால் இப்போது நிலைமைகள் அப்படி இல்லை. 17 பேரையும் விடுவிப்பது குறித்து அரசு உறுதியளிக்க வேண்டும், எப்படி திருப்பி கூட்டி வரப் போகிறார்கள் என்பது குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும் ” என்று கூறுகிறார்.

     
    எம்.எஸ்.சி ஏரிஸ்

    பட மூலாதாரம்,STRAIT OF HORMUZ

    படக்குறிப்பு,ஹெலிகாப்டரில் இருந்து எம்.எஸ்.சி ஏரிஸ் கப்பல் மீது துருப்புகள் தாக்குதல் நடத்தும் காட்சிகள்

    28 வயதான அவரது சகோதரர் மெக்கானிக்கல் பொறியியல், பின்பு கடல்சார் பொறியியல் படித்துள்ளார். ஐந்து வருடங்களாக கப்பலில் பணிபுரிந்து வருகிறார். ஜனவரி மாதம் இறுதியில் தமிழ்நாடு வந்திருந்த அவர், பிப்ரவரியில் இந்த கப்பல் பயணத்தை தொடங்கினார்.

    தூத்துக்குடி ஆலந்தலை கிராமத்தை சேர்ந்தவரும், புன்னக்காயல் கிராமத்தை சேர்ந்தவரும் இந்த கப்பலில் உள்ளனர். மேலும் தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவரும், கடலூரை சேர்ந்த மற்றொருவரும் என நான்கு தமிழர்கள் உள்ளனர். இவர்களை மீட்க வேண்டும் என்று தூத்துக்குடி மாலுமிகள் சங்கம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தது.

    மாலுமிகளின் குடும்பங்கள் தமிழக அரசை தொடர்பு கொண்டு உதவி கோரியுள்ளனர்.

    வெளிநாடுவாழ் தமிழர்கள் நல ஆணைய அதிகாரி ஒருவர் பிபிசியிடம் கூறுகையில், “கப்பலில் உள்ள தமிழர்களில் இரண்டு பேர் தூத்துக்குடியை சேர்ந்தவர்கள், ஒருவர் கடலூர், மற்றொருவர் மன்னார்குடியை சேர்ந்தவர். இதில் கடலூரை சேர்ந்தவருடன் குடும்பத்தினரால் இன்னும் தொடர்புக் கொள்ள இயலவில்லை. இந்த விவகாரம் குறித்து வெளியுறவுத்துறையின் இந்தியன் மிஷனுக்கு கடிதம் எழுதியுள்ளோம். நேற்று ஒரு மணி நேரம் செல்போன் மூலம் குடும்பத்தினருடன் பேச அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

    கேரளாவை சேர்ந்த ஒரு பெண் உட்பட நான்கு பேரும் இந்த கப்பலில் சிக்கியுள்ளனர்.

     
    எம்.எஸ்.சி ஏரிஸ்

    பட மூலாதாரம்,MSC

    படக்குறிப்பு,போர்த்துகீசிய கொடியுடன் மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்தை நோக்கி வந்துக் கொண்டிருந்த எம்.எஸ்.சி ஏரிஸ் கப்பல், இஸ்ரேலிய பணக்காரர் இயால் ஓஃபருடன் தொடர்புடையது.

    கப்பல் எங்கு கைப்பற்றப்பட்டது?

    அரபிக்கடலில் ஹார்முஸ் ஜலசந்தி அருகே, ஐக்கிய அரபு அமீரகத்தின் கடற்கரையில் இருந்து 50 மைல் (80 கி.மீ.) தொலைவில் எம்.எஸ்.சி ஏரிஸ் (MSCAries) என்ற கப்பலை இரானிய சிறப்புப் படையினர் கைப்பற்றினர். இந்த தகவல் அந்த கப்பல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    போர்த்துக்கீசிய கொடியுடன் மும்பை அருகே ஜவஹர்லால் நேரு துறைமுகத்தை நோக்கி வந்துக் கொண்டிருந்த கப்பல், இஸ்ரேலிய பணக்காரர் இயால் ஓஃபருடன் தொடர்புடையது. இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு சில மணிநேரத்திற்கு முன்பு இந்த கப்பலை இரான் கைப்பற்றியுள்ளது.

    கடைசியாக உள்ள கண்காணிப்பு தரவுகளின்படி, ஐக்கிய அரபு அமீரக கடற்கரையில் எம்.எஸ்.சி. ஏரிஸ் கப்பல், 18 மணிநேரத்திற்கு முன்பு ஹார்முஸ் ஜலசந்தியை நோக்கி சென்றதைக் காட்டியது. அதன்பின் அதன் கண்காணிப்புத் தரவு முடங்கியதாகத் தெரிகிறது. இப்பகுதியில் இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்களில் இத்தகைய முடக்கம் வழக்கமானது.

    தற்போது இந்த கப்பல், இரானின் பந்தர் அப்பாஸ் கரைக்கு அருகில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

     
    எம்.எஸ்.சி ஏரிஸ்

    பட மூலாதாரம்,GETTY IMAGES

    படக்குறிப்பு,எம்.எஸ்.சி ஏரிஸ் கப்பலை இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் (IRGC) கடற்படைக் கிளை கைப்பற்றியுள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.

    கப்பலை சிறைபிடித்தது யார்?

    இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் (IRGC) கடற்படைக் கிளை எம்.எஸ்.சி ஏரிஸ் கப்பலைக் சிறைபிடித்துள்ளதாக, அந்நாட்டின் அரசு செய்தி ஊடகமான இர்னா தெரிவித்துள்ளது. அக்கப்பல், “இஸ்ரேலுடன் தொடர்புடையது" என்றும் அது தெரிவித்துள்ளது.

    தாக்குதலுக்குப் பதிலளிக்கும் விதமாக, இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், "இரானிய புரட்சிகர காவலர் படையை உடனடியாக பயங்கரவாத அமைப்பாக அறிவித்து, இரானுக்கு தடை விதிக்க வேண்டும்" என்று ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழைப்பு விடுத்தார்.

    இதுதொடர்பாக, X தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், அந்த சரக்குக் கப்பல் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினருக்குச் சொந்தமானது எனத் தெரிவித்தார். 2019ஆம் ஆண்டிலிருந்து அப்பிரதேசத்தில் பல கப்பல்களை இரானிய படைகள் சிறைபிடித்துள்ளன.

     
    எம்.எஸ்.சி ஏரிஸ்

    பட மூலாதாரம்,DR. S. JAISHANKAR / X

    படக்குறிப்பு,இந்த விவகாரம் குறித்து இந்தி வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் - அப்துல்லா ஹியனுடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.

    இந்திய வெளியுறவுத்துறையின் நடவடிக்கைகள்

    இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் - அப்துல்லா ஹியனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

    இந்த உரையாடலுக்கு பின் இரான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கப்பலில் உள்ள 17 இந்தியர்களின் நிலைமை குறித்து ஜெய்சங்கர் கவலை தெரிவித்ததாகவும், உதவி கேட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. "சிறைப்பிடிக்கப்பட்டுள்ள கப்பலின் விவரங்களை நாங்கள் சேகரித்து வருகிறோம், விரைவில் இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகள், விரைவில் சிக்கியுள்ள குழுவினரை சந்திக்கக் கூடும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தனது X பக்கத்தில், “எம் எஸ் சி ஏரிஸ் கப்பலின் இந்திய குழுவினர் 17 பேரை விடுவிக்கும் விவகாரம் குறித்து இரானிய வெளியுறவுத்துறை அமைச்சருடன் பேசினேன். பிராந்தியத்தில் நிலவும் நிலைமைகள் குறித்து பேசினேன். நிலைமைகளை தீவிரப்படுத்தாமல், கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினேன். ” என்று பதிவிட்டார்.

    அதே போன்று, இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சருடனும் இந்த விவகாரம் குறித்து பேசியதாக அவர் தனது X தளத்தில் பதிவிட்டிருந்தார். இந்திய தூதரக அதிகாரிகள் கப்பலில் உள்ள இந்தியர்களை சந்திக்க வேண்டும் என்று இரானிடம் கோரியிருந்தனர். ‘விரைவில்’ அனுமதி அளிக்கப்படும் என்று இரான் கூறியிருந்தது. கப்பலில் சிக்கியவர்கள் தங்கள் குடும்பங்களுடன் திங்கள்கிழமை பேசினர்.

     
    எம்.எஸ்.சி ஏரிஸ்

    பட மூலாதாரம்,GETTY IMAGES

    படக்குறிப்பு,எம்.எஸ்.சி ஏரிஸ் கப்பல் கைப்பற்றப்பட்ட சம்பவத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது அமெரிக்க வெள்ளை மாளிகை

    வெள்ளை மாளிகை அறிக்கை

    வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஏட்ரியன் வாட்சன் கூறுகையில், இந்தக் குழுவில் இந்தியா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், ரஷ்யா மற்றும் எஸ்டோனியா குடிமக்கள் உள்ளனர்."கப்பலையும் அதிலுள்ள சர்வதேச பணியாளர்களையும் உடனடியாக விடுவிக்க இரானுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்" என்று ஏட்ரியன் வாட்சன் அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளார்.

    "ஆத்திரமூட்டும் நடவடிக்கை இல்லாமல் ஒரு கப்பலைக் கைப்பற்றுவது சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறுவதாகும். மேலும், வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பான இஸ்லாமிய புரட்சிகர காவலர்களால் நடத்தப்பட்ட கடற்கொள்ளை” என அவர் தெரிவித்துள்ளார்.

    "இது சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கப்பட வேண்டும். மேலும் இரானை இந்த நடவடிக்கைகளுக்குப் பொறுப்பேற்க வைக்க எங்கள் கூட்டாளர்களுடன் நாங்கள் பணியாற்றுவோம்" என அவர் கூறியுள்ளார்.

    இரான் - இஸ்ரேல் இடையே மோதல் ஏன்?

    ஏப்ரல் 1ஆம் தேதியன்று டமாஸ்கஸில் உள்ள இரான் தூதரக கட்டடத்தில் நடைபெற்ற தாக்குதலில், இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் மூத்தத் தளபதி ஒருவர் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேலை இரான் குற்றம்சாட்டி வருகிறது.

    டமாஸ்கஸ்-ல் உள்ள இரானிய தூதரகத்தை தாக்கிய சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது தனது இரான் நேரடி தாக்குதல் நடத்தியது. சனிக்கிழமை இரவு முதல் இஸ்ரேல் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி இரான் தாக்குதல் தொடுத்துள்ளது. இரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான சிக்கலான உறவுகளின் சமீபத்திய அத்தியாயம் இது.

    https://www.bbc.com/tamil/articles/cpvgwezwy3po

  11. 21 minutes ago, goshan_che said:

    தாபம் இருக்கு - ஆனால் உங்கள் மேல் அல்ல, ஜான்வி கபூர், அனுபமா பரமேஸ்வரன், ராஷ்மிக்கா மந்தானா…….

    அண்ணை எல்லாம் அந்த அக்கரைப்பற்று அங்கிள்(63) தந்த உசார் தான் காரணமோ?!

    • Haha 1
  12. 03-5.jpg

    200 கோடி சொத்தை தானம் செய்துவிட்டு துறவறம் மேற்கொள்ளும் தம்பதி தம்பதியினர் பற்றி குஜராத் மாநிலம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

    அதாவது ஜெயின் மதத்தைப் பின்பற்றும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கோடீஸ்வரர், பவேஷ் பண்டாரி.

    இவரின் 19 வயது மகளும், 16 வயது மகனும் 2022-ம் ஆண்டு துறவற வாழ்க்கையை மேற்கொண்டனர். இது குஜராத் மாநிலம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

    இந்த நிலையில், பவேஷ் பண்டாரியும், அவரின் மனைவியும் துறவறத்தை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்திருக்கின்றனர். அதற்காக தங்களின் ரூ.200 கோடி சொத்துகளையும் கடந்த பிப்ரவரி மாதம் தர்மம் செய்திருக்கின்றனர்.

    ஜைன மதத்தில், ‘தீக்ஷா’ எடுப்பது என்பது ஒரு குறிப்பிடத்தக்கத் துறவறமாகும் .

    இந்த துறவறத்தில் ஈடுபடும் தனிநபர் பொருள் வசதிகள் இல்லாமல், யாசகம் செய்து உயிர்வாழ வேண்டும். மேலும், நாடு முழுவதும் வெறுங்காலுடன் திரியவேண்டும். அவர்களின் தனிப்பட்ட பயன்பாட்டுக்கென இரண்டு வெள்ளை ஆடைகள், யாசகம் செய்ய கிண்ணம், இருக்கும் இடத்தில் உள்ள பூச்சிகளை அப்புறப்படுத்த “ரஜோஹரன்” எனும் ஒரு வெள்ளை விளக்குமாறு இவற்றைத் தவிர வேறு பொருள்களைப் பயன்படுத்த அனுமதி இல்லை..

    இதன் காரணமாக இந்த துறவற வாழ்வில் நுழைய ஏப்ரல் 22ஆம் திகதி இந்த தம்பதி உறுதிமொழி ஏற்கவிருக்கின்றனர். அவர்களின் உறுதிமொழி ஏற்புக்குப் பிறகு அனைத்து குடும்ப உறவுகளையும் துண்டித்து, துறவற வாழ்வை மேற்கொள்வார்கள். அபரிமிதமான செல்வத்திற்குப் பெயர் பெற்ற பவேஷ் பண்டாரி குடும்பத்தின் இந்த துறவற முடிவு, குஜராத் மாநிலம் முழுவதும் கவனம் ஈர்த்துள்ளது.

    https://thinakkural.lk/article/299196

  13. வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? - ஏஐ ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை

    16 APR, 2024 | 02:27 PM
    image
     

    தென்சென்னையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ரோபோவிடம் கலந்துரையாடினார்:

    தமிழிசை: வணக்கம் என் பெயர் தமிழிசை சவுந்தரராஜன்.

    ஏஐ ரோபோ: எனக்கு நன்றாகவே தெரியும். இரண்டு மாநில ஆளுநர் பதவியை விட்டுவிட்டு, மக்கள் பணியாற்ற வந்துள்ளீர்கள். உங்கள் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.

    தமிழிசை: பாஜகவுக்கும், தமிழ் மொழிக்கும் உள்ள உறவு எப்படி இருக்கிறது?

    ஏஐ ரோபோ: தமிழ் மொழிக்கு பாஜக தரும் முக்கியத்துவம் மக்களை கவர்ந்துள்ளது. தற்போதைய தேர்தல் அறிக்கையில் தமிழக கட்சிகளே இதுவரை கொடுக்காத தமிழை மேன்மைப்படுத்தும் வாக்குறுதிகள், தமிழ் மக்களை கவரும். அதனால், தமிழ் வளரும்.

    தமிழிசை: தென் சென்னை தொகுதியில் எனக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

    ஏஐ ரோபோ: தென்சென்னை மக்கள் நல்ல திட்டங்களுக்காக ஏங்குகிறார்கள். உங்களால் தான் அதனை தர முடியும் என்று நம்புகிறார்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். வாழ்த்துகள். தென்சென்னைக்கு அக்கா வந்தாச்சி. முன்னேற்ற வேலையை ஆரம்பிச்சாச்சி.

    ஏஐ ரோபோவுடன் கலந்துரையாடிய வீடியோவை சமூக வலைதளத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

    https://www.virakesari.lk/article/181229

  14. பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் - அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் - காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டிஸ் மருத்துவர்

    Published By: RAJEEBAN   16 APR, 2024 | 11:40 AM

    image
     

    சமீபத்தில் காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டனை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தான் யுத்தத்தினால் காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரகிசிச்சை செய்ததாக தெரிவித்துள்ளார்.

    காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரசிகிச்சை செய்தேன் அந்த எண்ணிக்கை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார்.

    16 வயதிற்கு உட்பட்ட பலருக்கு சத்திரசிகிச்சை செய்ததாக தெரிவித்துள்ள அவர் அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

    துப்பாக்கி சூட்டு காயங்கள் எரிகாயங்கள் ஏனைய காயங்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சிகிச்சையளித்தேன் என அவர்தெரிவித்துள்ளார்.

    gaza_hos_37.jpg

    போதிய உணவு இன்மையால் காசாவில் காயமடைந்தவர்களின் காயங்கள் குணமாவது பிரச்சினைக்குரிய விடயமாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ள அவர் காசாவில் மருத்துவமபணியில் ஈடுபட்டிருந்தவேளை என்னை விட வயது கூடிய ஒருவருக்கு மாத்திரமே -53 -சத்திரகிசிச்சைசெய்தேன் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்

    ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் பலர் 16வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகளவானவர்கள் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள்இது அதிக கவலையளித்தது என அவர்தெரிவித்துள்ளார்.

    எரிகாயங்கள் துப்பாக்கிசூட்டு காயங்கள்  திசுக்களில் காணப்பட்ட வேறு பொருட்களை அகற்றுதல் முகங்களில் காணப்பட்ட பாதிப்புகளை சத்திரகிசிச்சை மூலம் சரிசெய்தல் தாடையில் காணப்பட்ட துப்பாக்கி ரவைகளை அகற்றுதல் போன்றவற்றில் ஈடுபட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

    காசாவில் பட்டினி நிலைமை எவ்வேளையிலும் உருவாகலாம் என ஐநா எச்சரித்துள்ளது போதிய உணவின்மை காணப்படுகின்றது 

    இதன் காரணமாக காயமடைந்தவர்கள் நோயாளிகள் அதிலிருந்து உடனடியாக மீள்வது கடினமாக உள்ளது என  என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார்.

    எனது சத்திரசிகிச்சை மேசையில் காணப்பட்டவர்கள் போசாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

    https://www.virakesari.lk/article/181212

  15. crime-300x200.jpg

    யாழில் இரண்டு பெண்களை வெட்டிக் காயப்படுத்தியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    இன்று (16) அதிகாலை 4 மணியளவில், குடும்பத்தகராறு காரணமாக குறித்த இரண்டு பெண்கள் மீதும் அவர் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளார்.

    அதன் பின்னர் 37 வயதான தாக்குதல்தாரி தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

    உயிரிழந்தவரின் அவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

    காயமடைந்த பெண்கள் இருவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

    https://thinakkural.lk/article/299300

  16. Published By: VISHNU

    16 APR, 2024 | 07:48 PM
    image
     

    முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தேவரப்பெரும மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக நாகொட வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    வீட்டில் இரண்டு மின்சுற்றுகளை இணைக்கச் சென்ற போது மின்சாரம் தாக்கியதில் பாதிக்கப்பட்ட அவர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் தெரிவித்தார்.

    பாலித தேவரப்பெரும ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை  மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வனவிலங்கு இராஜாங்க அமைச்சரும் ஆவார்.

    https://www.virakesari.lk/article/181258

  17. பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

    16 APR, 2024 | 12:43 PM
    image

    (நெவில் அன்தனி)

    பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது.

    இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது.

    கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது.

    1_FLAME.jpg

    பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது.

    2_FLAME.jpg

    3_FLAME.jpg

    2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார்.

    4_joyce_didonato...jpg

    ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது.

    ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார்.

    கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர்.

    5_laure_manaudou_torch_bearer_france.png

    ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார்.

    பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும்.

    https://www.virakesari.lk/article/181219

  18. 16 APR, 2024 | 03:39 PM
    image
     

    ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது.

    சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.

    பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார்.

    https://www.virakesari.lk/article/181235

  19. அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

    Published By: DIGITAL DESK 7   16 APR, 2024 | 02:42 PM

    image
     

    நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள ஊர்தியானது இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது.

    இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா. ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன் மற்றும் தாயார் மலர்மாலை அணிவித்து அடுத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    20240416_093223.jpg

    https://www.virakesari.lk/article/181216

  20. Published By: DIGITAL DESK 3    16 APR, 2024 | 12:07 PM

    image

    யாழ்ப்பாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி சுமார் 50 இலட்ச ரூபாயை மோசடி செய்ததாக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசித்து வருகின்றார். அவருக்கு திருமணமாகி பிள்ளைகள் உள்ள நிலையில் சுவிஸ் நாட்டில் கணவனை பிரிந்து பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார். 

    இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குறித்த பெண் யாழ்ப்பாணம் வந்திருந்த போது, பெண்ணின் பூர்வீக சொத்துக்கள் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகள் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய சென்று இருந்தார். 

    முறைப்பாடு செய்ய சென்ற நேரத்தில் பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த தமிழ் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

    அந்த பழக்கம் பெண் வெளிநாடு சென்ற பின்னரும் தொடர்ந்து உள்ளது. ஒரு கட்டத்தில் அது காதலாக மலர்ந்துள்ளது. அதனை அடுத்து சுவிஸ் நாட்டு பெண், இங்குள்ள பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு பணம், நகை என்பவற்றுடன் அன்பளிப்பு பொருட்கள் என பலவற்றை வழங்கி வந்துள்ளார். 

    ஒரு கட்டத்தில் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தரை சுவிஸ் நாட்டிற்கு எடுப்பதற்கான முயற்சிகளையும் அப்பெண் மேற்கொண்டுள்ளார். அதற்கு பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தர் மறுப்பு தெரிவித்து, தான் நாட்டை விட்டு வர மாட்டேன் என கூறியுள்ளார். 

    அதனால் அப்பெண் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்திய வேளை , அதற்கு அவர் உடன்படாத நிலையில், அது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். 

    அதனை அடுத்து, இப்பெண்ணிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஒரு தொகை நகை, பணம் என்பவற்றை மீள அளித்துள்ளார். மிகுதியை சிறு கால இடைவெளியில் மீள கையளிப்பதாக உறுதி அளித்துள்ளார். 

    அதன் பிரகாரம் உரிய காலத்தில் மிகுதி பணம் நகையை மீள கையளிக்காததால், அப்பெண் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.

    https://www.virakesari.lk/article/181215

  21. Published By: DIGITAL DESK 3

    16 APR, 2024 | 11:19 AM
    image
     

    கொவிட் தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார்.

    யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொவிட்தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளநிலையில், மக்கள் மத்தியில் தேவையற்ற சந்தேகங்களை தீர்க்கும்வகையில் குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

    இதன்படி 2023 ஒக்டோபர் 10ம் திகதி முதல் கீழ்வரும் 7 விடயங்கள் சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டு பின்பற்றப்படுகிறது.

    1. கொவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஏனைய சுவாசத் தொற்று நோய்கள் ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற அதே உரிய பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும். பொருத்தமான சிகிச்சையும் வைத்தியசாலையில் வழங்கப்படும். 

    (பொதுவாக சுவாச தொற்று வருத்தம் இன்னொருவருக்கு இலகுவாக பரவலாம். ஆகவே சுவாசத் தொற்று உடையவர்கள் உரிய அடிப்படை சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறே தொற்று உடையவருக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் பராமரிப்பவர்கள் உரிய சுகாதார பழக்கவழக்கங்களைப்  பேண வேண்டும்.)

    2. எதாவது நோய் ஒன்றின் சிகிச்சைக்கு முன்னர் அல்லது சத்திர சிகிச்சை ஒன்றிற்கு முன்னர்  கொவிட் தொற்றும் இருக்கின்றதா என பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை.

    3. கொவிட் தொற்று உடையவரிற்கு அருகில் இருந்தவர்களிற்கு அல்லது அவருக்கு அருகில் சென்று சிகிச்சை அளித்தவர்களுக்கு கோவிட் தொற்று இருக்கின்றதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை.

    4. இருமல் மற்றும் தடிமன் போன்ற சுவாசத் தொற்று ஏற்பட்டவர்கள் இன்னொருவருக்கு தொற்று ஏற்படாத வகையில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும்.

    5. கொவிட் இறப்பு ஏற்படும் போது உரிய சுகாதார விதிகளைக் கடைப்பிடித்து வீடுகளில் இறுதிச் சடங்கை செய்யமுடியும்.

    6. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சமுதாயத்தில் கொவிட் தொற்று இருக்கின்றதா என பலருக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை.

    7. தனியார் சிகிச்சை நிலையங்களும் இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

    https://www.virakesari.lk/article/181205

  22. இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொடர்பில் வெளியான தகவல்கள்!

    16 APR, 2024 | 11:03 AM
    image
     

    இலங்கையின் தென் கடற்பரப்பில் கடந்த 12ஆம் திகதி  இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட  சுமார் 380 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், துபாயில் உள்ள இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால் அனுப்பப்பட்டமை  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

    இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கையின்போது இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்ரரக்க்ஷா’ என்ற கப்பலினால் 133 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் இந்த ஹெரோயின் மற்றும் ஐஸ்  கைப்பற்றப்பட்டுள்ளன.  

    கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 179 கிலோ 906 கிராம் ஐஸ் மற்றும் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் அடங்குகின்றன.

    அத்துடன், இந்தப் போதைப்பொருளைக் கொண்டு வந்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன் 6 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

    https://www.virakesari.lk/article/181204

  23. Published By: DIGITAL DESK 3

    16 APR, 2024 | 10:39 AM
    image
     

    பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார். 

    இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன.

    உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது.

    இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.

    5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

    https://www.virakesari.lk/article/181192

  24. கல்முனை வடக்கு பிரதேச செயலகம் : பிரதமர் தினேஷுக்கு கஜேந்திரன் எம்.பி. கடிதம்

    15 APR, 2024 | 04:09 PM
    image

    ஆர்.ராம்

    கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எம்.பி. கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

    கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது தொடர்பாகவும், கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகத்தில் முறைகேடுகளால் பொது மக்கள் முகங்கொடுக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளை கவனத்துக்குக் கொண்டு வருவதற்காகவும் அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    அக்கடிதத்தில் மூன்று தசாப்தங்களாக கல்முனை வடக்கு தமிழ் சமூகம் தீர்க்கப்படாத சவால்களை எதிர்கொண்டுள்ளது. இது அவர்களின் அத்தியாவசிய அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான திறனை கணிசமாகத் தடுக்கிறது. இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நெருக்கடியான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர்.

    கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பகுதி மக்கள் பல தசாப்தங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

    பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் அவ்வாறே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். இருந்தும் கணக்காளர் நியமனம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

    காலங்காலமாக எமது கோரிக்கைகள் மதிக்கப்படாத நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரமிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரம் தாழ்த்துவதற்கான நோக்கத்தினாலும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளரின் ஜனநாயக விரோத மற்றும் சட்ட விரோதமான செயற்பாடுகளினாலும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் முறுகல் நிலை உருவாகியுள்ளது.

    கல்முனை தெற்கு பிரதேச செயலகச் செயற்பாடுகளுக்கு உரிய அதிகாரிகள் அனுசரணையாக செயற்படுவதால் தமிழ் சமூகம் மத்தியில் அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேசத்தில் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் தமிழ் மக்கள், கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கோரியும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமிறக்குவதை நிறுத்துமாறு கோரியும் தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அமைதியான போராட்டத்தின் மூலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்த போதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்கள் 20 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், எந்தவொரு அரச அதிகாரியும் அங்கு செல்லவில்லை அல்லது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இந்த நிலைமையை சீர்செய்ய உடனடியாக தாங்கள் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வினைத்திறனான அரச சேவைகளுக்கான அணுகல் இல்லாமை, முறையான நிர்வாக ஆதரவைப் பெறுவதற்கான அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதைப் பிரதிபலிக்கிறது.

    இவ்விடயத்தில் தாங்கள் உடனடி கவனம் செலுத்துமாறும் கல்முனை வடக்கில் வசிப்பவர்களின் குறைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.

    எங்கள் சமூகத்தின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்வதில் உங்கள் தலையீடு முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    https://www.virakesari.lk/article/181136

  25. Published By: DIGITAL DESK 7   15 APR, 2024 | 04:06 PM

    image

    ஆர்.ராம்

    ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் தவத்திரு வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன், விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார்.

    இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

    ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளராக களமிறக்குமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன தவத்திரு வேலன் சுவாமிகளை தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார்.

    எனினும் அரசியல் செயற்பாடுகளில் கட்சி சார்ந்து தான் செயற்படுவதற்கு விரும்பவில்லை என்று வேலன் சுவாமிகள் பதிலளித்துள்ளார்.

    இருப்பினும் அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டிணைந்து பொதுவேட்பாளர் விடயத்தில் செயற்படுவதற்குரிய சாத்தியமான நிலைமைகள் இருப்பதால் தாங்கள்(வேலன் சுவாமிகள்) கட்சி சார்ந்த நபாராக அடையாளப்படுத்த மாட்டீர்கள் என்று சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

    இதனையடுத்து குறித்த விடயம் சம்பந்தமாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு சிலநாட்கள் கால அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

    வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன்,  விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார்.

    https://www.virakesari.lk/article/181134

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.