அன்றுபோல் இன்று இல்லையே!
***************************************
அதுவொரு கடல் சூழ்ந்த அழகிய கிராமம்
அதிகாலைப் பொழுதும் அந்திமாலையும்
அத்தியும்,இத்தியும் ஆலமரமும் அதிலிருந்து
கத்திடும்,கொஞ்சிடும் பறவை இனமும்
ஏரும் கலப்பையும் வண்டிலும் மாடும்
உழைப்போர் வியர்வையில் வளரும்
சாமையும்,வரகும்,குரக்கனும்,சோளனும்
பனையும்,தென்னையும் பனாட்டும்,ஒடியலும்.
வேலிகள் தோறும் கொவ்வையும்,குறிஞ்சாவும்
தரவை நிலமெங்கும் மூலிகைச் செடிகளும்
கடலும் காற்றும் மீன்களும்,இறாலும்
இயற்கை மாறாத மாரியும்,கோடையும்
இனிமை தருகின்ற கருப்பணிக் கள்ளும்
இனிக்க இனிக்க பேசிடும் தமிழும்
கொடுத்து கொடுத்தே மகிழ்திடும் மனிதரும்
குடும்பங்கள் பிரியா வாழ்ந்த இணையோரும்.
உறவும் உரிமையும் கூட்டுக் குடும்பமும்
உயிர்கள் அனைத்திலும் காட்டிடும் அன்பும்
பொருட்களை மாற்றும் பண்டமாற்றமும்
பொழுது முழுதும் உழைத்திடும் தன்மையும்
பள்ளியும் படிப்பும் உள்ளத்து தூய்மையும்
பண்பும் அடக்கமும் மரியாதைச் சொற்களும்
பாயில் கிடக்காத பலமுள்ள தோற்றமும்
நோயில்லா உணவும் நூறாண்டு வாழ்வும்.
ஆயுள்வேதமும் ஆயாக்கள் மருந்தும்
வீட்டில் பிறந்தே விளையாடும் குழந்தையும்
தலைமுடி கொட்டாத ஆவரசுக் கொழுந்தும்
தாவணி மயில்களும் தமிழ் கலாச்சார உடையும்
கிட்டியும் புள்ளும் தாச்சியும் கொடியும்
கிராமத்து பேச்சும் கிளு கிளு கொஞ்சலும்
சுத்தக் காற்றும் சுதந்திரப் போக்கும்-எம்
பக்கத்தை விட்டு பறந்துமேன் போனதோ?
-பசுவூர்க்கோபி.