யூனியன் கல்லூரி பழைய மாணவர் சங்க பிரித்தானிய கிளையால் ஒரு கேளிக்கை நிகழ்வு எதிர்வரும் 25ம் திகதி கார்த்திகை மாதம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இது எமது தாயக விடுதலைக்கு தங்கள் உயிரை அர்ப்பணித்த மாவீரர்களை நினைவு கூறும் வாரத்தில் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை சுட்டிக்காட்டி பாடசாலை அதிபர், யாழ்ப்பாணத்தில் இயங்கும் பழையமாணவர் தாய் சங்கம், ஏனைய நாடுகளில் இயங்கும் பழையமாணவர் சங்க நிர்வாகிகள், உலகமெங்கும் வாழும் பழையமாணவர்கள், மற்றும் பிரித்தானிய பழையமாணவர்கள், நலன் விரும்பிகள் என பலர் தங்கள் கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவு செய்தும், பிரித்தானிய பழையமாணவர் சங்கம் இந்நிகழ்வை நடத்தியே தீர்வது என்று அனைவரின் எதிர்ப்பையும் மீறி முடிவு எடுத்துள்ளது.
மார்கழி 9 மற்றும் 16 திகதிகளில் அதே மண்டபம் கிடைக்க கூடிய வாய்ப்பு இருந்தும் அவர்கள் மாற்றுவதற்கு தயார் இல்லை. மேலும் இந்தவருட பழைய மாணவர்கள் ஒன்று கூடல் கடந்த ஆனி மாதமளவில் பிரித்தானிய நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அதுமட்டும் அல்லாது மேற்படி நிர்வாக சபை குறிப்பிட்டது போல் இது ஒரு இலாபநோக்கம் அல்லாத மற்றும் பாடசாலையுடன் தொடர்பில்லாத களியாட்ட நிகழ்வு. மேற்குறிப்பிட்ட காரணங்களில் இருந்து அறியக்கூடிய விடயம் யாதெனில், இது ஒரு நன்கு திட்டமிட்ட செயல். நிர்வாக குழுவில் இடம்பெற்று இருக்கும் ஒரு சிலர் தங்கள் தனிப்படட இலாபத்துக்காக அல்லது வேறு சிலரின் நோக்கத்தை நிறைவேற்ற இந்த நிகழ்வை பயன்படுத்துகிறார்கள். வருடத்தில் 52 கிழமைகள் உள்ளன. ஏன் இந்த வாரத்தில் தான் இக்களியாட்ட நிகழ்வை ஒழுங்கு செய்ய வேண்டும்? எனவே இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்ட திகதி எங்கள் கல்லூரியின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்துவதாக அமைகின்றது.
பழைய மாணவர் அமைப்புக்கள் பாடசாலை வளர்ச்சிக்காகவே உருவாக்கப்பட்டன அன்றி அவைகளின் கண்மூடித்தனமான நடவடிக்கைகளால் பாடசாலையின் புனிதத்தன்மையான பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவதற்காக இல்லை. இதை அந்த பழைய மாணவர் அமைப்பை பிழையான வழியில் இயக்கிக்கொண்டிருக்கும் வயதில் பெரியவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். நாங்கள் அதிக பணம் கொடுத்த அமைப்பு, ஆகவே நாங்கள் என்ன செய்தாலும் நீங்கள் யாரும் கேட்க முடியாது என்று நினைப்பது மிகவும் தவறான விடயம்.
உங்களது நடவடிக்கையானது எங்களது பாடசாலையின் பெயருக்கும் அதில் கல்வி கற்ற எங்களுக்கும் மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்திவிடும் என்பதை மறந்துவிட வேண்டாம். இனியாவது மனத்தை மாற்றி நல்ல முடிவாக எடுக்கவும். இல்லையெனில் இதனை அனைவரும் ஒன்று இணைந்து தடுக்காது விட்டால், எதிர்வரும் காலத்தில் இவ்வாறான நிகழ்வுகள் புற்றீசல்கள் போல் பெருகும்.