Jump to content

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    33697
  • Joined

  • Days Won

    157

Posts posted by கிருபன்

  1. கோத்தாவின் புத்தகத்துக்கு எகிறிய கிராக்கி!

    441397231.jpg
     

    (புதியவன்)

    முன்னாள் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவினால் எழுதப்பட்ட “என்னை அரச தலைவர் பதவியில் இருந்து வெளியேற்ற சதி” என்ற புத்தகத்தின் முதல் கையிருப்பு நேற்று (07) முற்றாக விற்று தீர்ந்ததாக விஜித யாப்பா பதிப்பகத்தின் தலைவர் விஜித யாப்பா தெரிவித்தார்.

    சமூகத்தின் பல்வேறு தரப்பு மக்களும் தமது புத்தகக் கடைகளில் இருந்து புத்தகத்தை வாங்கியதாகவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் எம்.பி.க்கள் மற்றும் அரசியல்வாதிகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்நூலின் பிரதான விற்பனையாளர் தமது நிறுவனம் எனத் தெரிவித்த விஜித யாப்பா, மேலும் ஒரு தொகுதி அச்சிடப்பட்ட புத்தகங்களை விற்பனை செய்ய இன்று (08) கொண்டுவரவுள்ளதாக தெரிவித்தார்.

    இந்நூலை வாங்குவதற்கு நாடளாவிய ரீதியில் உள்ள புத்தகக் கடைகளில் இருந்து பல ஆர்டர்கள் கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.

    “புத்தகத்திற்கு அதிக கிராக்கி உள்ளது. எதிர்பார்த்ததை விட வேகமாக விற்பனையாகிறது” என்றும் தெரிவித்திருந்தார். (ஏ)

     

    https://newuthayan.com/article/கோத்தாவின்_புத்தகத்துக்கு_எகிறிய_கிராக்கி!

  2. கனடா தலைநகர் ஒட்டாவாவில் 4 குழந்தைகள் உட்பட 6 இலங்கையர்கள் வெட்டிக்கொலை.

    UPDATED:

    உயிரிழந்தவர்களில் 5 பேர் இலங்கையிலிருந்து கனடாவுக்கு புதிதாக வந்தவர்கள் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். 

    • 35-year-old Darshani Banbaranayake Gama Walwwe Darshani Dilanthika Ekanyake.
    • Seven-year-old Inuka Wickramasinghe.
    • Four-year-old daughter Ashwini Wickramasinghe.
    • Two-year-old Rinyana Wickramasinghe.
    • Two-month-old Kelly Wickramasinghe.
    • தர்ஷனி பண்டாரநாயக்கா / ஏகநாயக்க (மனைவி – 35 வயது)
    • இனுக்கா விக்கிரமசிங்க (மகன் 7 வயது)
    • அஷ்வினி விக்கிரமசிங்க (மகள் 4 வயது)
    • றினாயனா விக்கிரமசிங்க (மகள் 2 வயது)
    • கெலி விக்கிரமசிங்க (மகள் 2 மாதம்)

    கணவன் தனுஷ்கா விக்கிரமசிங்க (மதுரங்கா) உயிர் தப்பியிருந்தும் கை விரல்கள் மற்றும் ஒரு கண்ணில் காயங்களுண்டாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அறியப்படுகிறது.  குடும்ப நண்பரான 40 வயதுடைய அமரக்கூன் முபியயான்செல (40-year-old Amarakoonmubiayansela Ge Gamini Amarakoon) (காமினி) என்பவரும் இச்சமபவத்தின்போது கத்திக்குத்துக்கு உள்ளாகி மரணமடைந்திருக்கிறார்.

    19 வயதான ஃபெப்ரியோ டி-சோய்சா (Febrio De-Soyza), முதல் தரத்தில் கொலை செய்ததாக ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளார். அவர் கனடாவில் மாணவராக இருந்ததாக நம்பப்படும் இலங்கைப் பிரஜை என பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் கைதுசெய்யப்பட்டார்.

    நான்கு குழந்தைகள் உட்பட ஆறு பேர் புதன்கிழமை இரவு பார்ஹேவனில் (Barrhaven, Ottawa) உள்ள பெரிகன் டிரைவில் உள்ள ஒரு வீட்டில் இறந்து கிடந்ததை ஒட்டாவா காவல்துறை வியாழக்கிழமை உறுதிப்படுத்தியது.

    புதன் இரவு 11 மணிக்கு (March 06, 2024) 911 அழைப்புகளுக்கு பதிலளித்ததாக போலீசார் கூறுகின்றனர்.

    spacer.png

    இலங்கையர்கள் என அடையாளம் காணப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதன்போது , தாய் மற்றும் பிள்ளைகள் உயிரிழந்துள்ளதுடன் தந்தை பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இக்குடும்பம் வெவ்வேறு காலங்களில் கனடாவுக்கு வந்தவர்கள் எனவும் கடைக் குழந்தை கனடாவில் பிறந்தவரெனவும் தெரியவருகிறது. சம்பவம் நடைபெற்ற வீடு இக்குடும்பத்திற்குச் சொந்தமானதெனவும் 2013 இலிருந்து இவ்வீடு அவர்களுக்குச் சொந்தமாக இருக்கிறதெனவும் வீட்டு பதிவுகள் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது.

    mass-shooting-ottawa-sinhala-family.webp

    இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். “பொது பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை” என்று போலீசார் கூறுகின்றனர்.

    பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்படவில்லை. ஆனால் அவர்கள் இலங்கை பிரஜைகளின் குடும்பம் என்று ஒட்டாவாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

    இறந்தவர்கள் இலங்கையின் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் வீட்டு பேஸ்ட்மென்டில் (Basement) வாடகைக்கு குடியிருந்த சிங்கள இளையராலேயே இந்த கொலை நடந்ததாகவும் தெரியவருகின்றது.

    கனடாவின் அல்கோனிகின் கல்லூரியின் (Algonquin College) மாணவரே இந்த படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் எனவும் இறுதியாக கடந்த 2023ம் ஆண்டில் இவர் கல்லூரிக்கு சென்றிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

     

    https://www.torontotamil.com/sinhala-srilankan-family-six-people-dead-including-four-children-ottawa-canada/#google_vignette

    • Sad 1
  3. முல்லையில் 8 ஆம் திகதி பெரும் போராட்டம்!

    370355167.PNG

    காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் அறிவிப்பு

    (ஆதவன்) 

    வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் பெரும் கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்றை எதிர்வரும் 8ஆம் திகதி மேற்கொள்ளவுள்ளனர் என்று முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைவி ம.ஈஸ்வரி நேற்றுத் தெரிவித்தார்.

    வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தங்கள் உறவுகளை வெளிப்படுத்தவும் விடுவிக்கவும் வலியுறுத்தி மேற்கொண்டுவரும் தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 7 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இந்தக் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

    "நாளை 8ஆம் திகதி சர்வதேச மகளிர் தினம் முன்னெடுக்கப்படுகின்றது. தற் போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை கள் பேரவையின் அமர்வு நடைபெற்று வருகின்றது. இலங்கையில் பெண்களாகிய நாம் இன்னமும் எமது உறவுகளைத் தேடிக்கொண்டிருக்கின்றோம் என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் போராட்டம் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக நடத்தப்படவுள்ளது. அதேநேரம் கொக்குத்தொடுவாயில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப்புதை குழி தொடர்பாகவும் விரைவான தீர்வு வேண்டும்" என்றும் ம.ஈஸ்வரி மேலும் தெரிவித்தார். (ஏ) 
     

    https://newuthayan.com/article/முல்லையில்_8_ஆம்_திகதி_பெரும்_போராட்டம்!

  4. யாழ் வல்வெட்டித்துறை முதியோர் இல்லத்தின் நடவடிக்கைகளுக்கு தடை!

    adminMarch 7, 2024
     

    யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் எவ்வித அனுமதியும் இன்றி செயற்படும் முதியோர் இல்லத்தின் நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் விடுத்த பணிப்புரைக்கு அமைய, ஆளுநரின் செயலாளரால் பருத்தித்துறை பிரதேச செயலாளருக்கு கடிதம் ஊடாக அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

    அத்துடன், வல்வை முதியோர் இல்லம் எவ்வித வசதிகளும் இன்றியும் இதுவரை பதிவு செய்யாமலும் இயங்கியமை தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    வல்வை முதியோர் இல்லம் தொடர்பில், வடக்கு மாகாண ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் ‘அபயம்’ 24 மணித்தியால குறைகேள் வலையமைப்பிற்கு முறைப்பாடு கிடைத்தது.

    இந்த முறைப்பாடு தொடர்பில் பருத்தித்துறை பிரதேச செயலாளரிடமிருந்து பெறப்பட்ட கள விஜய அறிக்கை ஆளுநரிடம் சமர்பிக்கப்பட்டது.

    விடயங்களை ஆராய்ந்த வடக்கு மாகாண ஆளுநர் குறித்த முதியோர் இல்லம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
     

    https://globaltamilnews.net/2024/200991/

     

  5. யாழ் தையிட்டி விகாரை குறித்து மீண்டும் சர்ச்சை!

    adminMarch 7, 2024
    Thaiyiddi-Viharai.jpg

    யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி விகாரைக்கு காணியைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையில் இராணுவம் களமிறங்கியுள்ள நிலையில் குறித்த விடயத்துக்கு நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    தையிட்டி விகாரையுள்ள 8.04 ஏக்கர் காணியை சட்டப்படி வழங்குமாறு நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவுக்கு இராணுவம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.

    சர்ச்சைக்குரிய விகாரை அமைந்துள்ள பகுதியில் 21 ஆயிரம் சிங்களக் குடும்பங்கள் வசித்ததாகவும் தமிழ் மக்கள் தங்களுடைய காணி என்று உரிமை கோருவதை ஏற்க முடியாது.

    சிங்களவர்கள் வாழ்ந்த காணியில் தான் விகாரை அமைக்கப்பட்டுள்ளது என்று கூறும் இராணுவம், தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு சட்டப்படி காணி அனுமதியைக் கோரியுள்ளது.

    தையிட்டி விகாரை தொடர்பில் அண்மையில் தேசிய பாதுகாப்பு மேற்பார்வைக்குழுவில் ஆராயப்பட்டபோது கடும் எதிர்ப்பு காட்டப்பட்டநிலையில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.

    இரண்டு மணி நேரம் வரை நடைபெற்ற இக்கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, சமல் ராஜபக்ஷ , தமிழ் அரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன், காணி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண காணி ஆணையாளர், தெல்லிப்பழை பிரதேச செயலாளர், நில அளவை நாயகம், பௌத்த பிக்குகள், சட்டத்தரணிகள், இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

    இதன்போது தையிட்டி விகாரை அமைந்துள்ள பிரதேசமான 8 ஏக்கர் நிலமும் விகாரைக்குரிய பிரதேசம், அங்கே 1960 ஆம் ஆண்டு முதல் வாழ்ந்த 406 சிங்கள மக்களுக்கு அது சொந்தமானது, இருந்தபோதும் சில தமிழ் மக்களும் உரிமை கோரு கின்றனர், விகாரை உள்ள 8 ஏக்கர் நிலத்தையும் சிங்கள மக்களோ அல்லது தமிழ் மக்களோ உரிமை கோர முடியாது, அது முழுமையாக விகாரைக்குரியது, அங்கே நிலம் இழக் கப்பட்டதாக எவராவது நிரூபணம் செய்தால் அதற்கு மாற்றுக் காணி வழங்கலாம் என பௌத்த சாசன அமைச்சு சார்பில் கலந்துகொண்டவர்களால் தெரிவிக்கப்பட்டது.

    இதன்போது கருத்துரைத்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன், தையிட்டியில் விகாரை அமைத்துள்ள விகாரையின் பௌத்த பிக்கு 2017 ஆம் ஆண்டு தெல்லிப்பழை பிரதேச செயலாளருக்கு எழுத்தில் விண்ணப்பித்துள்ளார். அந்த விண்ணப்பத்தில் தனது 20 பரப்பு நிலத்தை அடையாளம் காட்டுமாறு கோரியிருந்தார்.

    அதாவது 1956ஆம் ஆண்டு விகாரையின் பெயரில் ஒருவர் அனபளிப்பாக வழங்கிய உறுதி பௌத்த பிக்குவிடம் உள்ளது. அது அவர்களிற்கு உரித்தான நிலம் என நாமும் ஏற்றுக்கொள்கின்றோம்.

    இதே நேரம் 2022 ஆம் ஆண்டு அப் பகுதி இராணுவ அதிகாரி விகாரை அமைந்துள்ள 8 ஏக்கர் நிலத்தையும் விகாரையின் பெயரில் ஆவணத்தை கோரி மீண்டும் தெல்லிப்பழை பிரதேச செயலகத்திறகு விண்ணப்பித்துள்ளார்.

    அவ்வாறானால் இதற்கான அளவீடு யாரால், யாரினுடைய அனுமதியில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப் பட்டது? தையிட்டியில் விகாரைக்குரிய 1.45 ஏக்கர் நிலம் மட்டுமே. 1956 ஆம் ஆண்டு அன்பளிப்பாக வழங்கப்பட்ட நிலம் மட்டுமே விகாரைக்குரியது.

    இருந்தபோதும் அங்கே எந்தக் காலத்திலும் விகாரை இருந்த ஆவணங்களும் கிடையாது. இவை தவிர 13 தமிழ் குடும்பங்களிற்கு உரித்தான 6.54 ஏக்கர் நிலத்தையும் அபகரித்தே தற்போது 8 ஏக்கரில் விகாரை உள்ளது.

    அந்த 6.54 ஏக்கர் நிலத்தை நீங்கள் எவ்வாறு சுவீகரிக்க முடியும்? அது முழுமையான சட்ட மீறல் .அந்த 6.54 ஏக்கர் நிலமும் நில உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டே ஆக வேண்டும் என்றார்.

    இதன்போது குறுக்கிட்ட இராணுவ அதிகாரி, அந்த நிலம் இராணுவ நில அளவையாளர்களால் அளவீடு செய்யப்பட்டு வரைபடம் வழங்கப்பட்டது எனப் பதிலளித்தபோது பெரும் சர்ச்சை ஏறபட்டது.

    மக்களிற்குச் சொந்தமான நிலத்தை இராணுவம் மூலம் அடாத்தாகப் பிடித்து வைத்துக்கொண்டு, அந்த நிலத்தை இராணுவமே அளவீடு செய்து, சுவீகரித்துத் தருமாறு கோருவது எந்தச் சட்ட ஏற்பாட்டில் உள்ளது? மக்களின் நிலத்தை அளவீடு செய்ய இராணுவத்திற்கு உரிமை கிடையாது.

    இவர்கள் யார் அதனை அளப்பதற்கு? – என நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் வேள்விகளை எழுப்பினார்.

    அவ்வாறானால் அதனை நில அளவைத் திணைக்களம் அளவீடு செய்து சமர்ப்பியுங்கள் என சரத் வீரசேகர கோரிக்கை விடுத்தார்.

    மக்களின் நிலத்தை அவர்களின் சம்மதம் அல்லது பகிரங்க அறிவித்தல் இன்றி அளவீடு செய்ய முடியாது என நில அளவைத் திணைக்கள நாயகத்தால் பதிலளிக்கப்பட்டது.

    இவற்றை ஆராய்ந்த குழு எழுத்தில் பதிலளிப்பதாக தெரிவித்து முடிவுகள் இன்றி கூட்டத்தை ஒத்திவைத்தது.
     

     

    https://globaltamilnews.net/2024/200984/

  6. போதமும் காணாத போதம் – 20

    வளும் நானும் முதன்முறையாக போகித்த போழ்து மழைபெருத்து இறங்கியது. அரவமற்ற இரவைத் துளிகள் பிளந்தொலித்தன. ஆவேசத்தின் வாசலில் வீசியடித்த காற்றிலும் சரீரங்களின் சுகச்சுருதி குலையாமல் வீற்றிருந்தது. அடங்காத குளிர் திசையெங்கிலும் திளைத்து தரித்தது. உயிர்த்து வீறிடும் உச்சத் தந்தியில் நறுமுகையின் கனம் தாங்கிக் கிடந்தேன். மழையின் நடுவே விழுந்து வளர்ந்தது மின்னல் எச்சம். அசதியிலும் நெரிந்து கிடந்தோம். அவிந்த புழுங்கல் அரிசியின் வாசனையைத் துளிர்த்தது ஊர்ந்திறங்கிய அவளது வேர்வை. நறுமுகை எழுந்து கூந்தல் முடிந்தாள். உடுப்புக்களைத் தேடியணிந்தாள். ஒளி குறைந்து மூலையில் தனித்திருந்த லாம்பையெடுத்து திரிதீண்டினாள். பேரொளியில் மூச்சின் நிறைவு சூழ்ந்தது. ஓயாமலும் தீராமலும் கிளர்ந்து பெருக்கும் மழையின் கனல் என்னிலேயே மூள்கிறது. நறுமுகையின் சரீரம் ஈகும் சுகந்தம் குருதிப் பூவென விரிகிறது. ததும்பிப் பெருகும் வெள்ளத்தின் ஓசையோடு நிலம் பிணைய, மீண்டும் நெளிந்து கிடந்து விழித்தோம் நம்பசி. கசியும் உடற்கிளையின் ஈரத்துடன் நறுமுகை கமழ்ந்திருந்தாள். கூடல் மகத்துவத்தின் தித்திப்பு. பசியமிழ்ந்த சர்ப்பம் போல் அசைந்தேன். நறுமுகையின் அதரங்கள் கனிந்து சிவந்தன. நீந்தி நீந்தி வளரும் மீன்தானோ காமம். எத்தனை சுழிப்புக்கள். எத்தனை உந்தல்கள். முயக்கத்தின் நரம்புகள் அலைகளாய் எழுந்து அதிர்ந்தன.

    “நீங்கள் எனக்கொரு புல்லாங்குழல் வாங்கித் தருவியளோ?” நறுமுகை கேட்டாள்.

    “கொஞ்ச நேரத்துக்கு முன்பு, என்னை நீ புல்லாங்குழல் என்றாயே. அது பொய்யோ” கேட்டேன்.

    “அதுவும் உண்மைதான்”

    “அடுத்த தடவை வருகிற போது, உறுதியாக புல்லாங்குழல் கொண்டு வருவேன்.”

    “அந்த அடுத்த தடவை, எப்ப வரும்?”

    “விரைவில் வரும்” என்று சொல்லி அவளிடமிருந்து விடைபெற்றேன்.

    பிறகான நாட்கள் கடுமையான வேலைத்திட்டங்கள் இருந்தன. வீட்டிற்கு செல்லமுடியாமல் ஊர் ஊராகத் தங்கவேண்டியிருந்தது. மாதக்கணக்காக யாரையும் சந்திக்க முடியாமல் போயிற்று. மெல்ல மெல்ல வன்னிப்பெருநிலம் வதங்கிச் சுருண்டது. ஆக்கிரமிப்பாளர்களின் கொடும்பாதங்கள் முன்னேறி வென்றன. சமாதனத்திற்கான யுத்தம் என்றொரு நரகத்தின் இருள் எம்மில் இறங்கியது.  ஊரை இராணுவம் ஆக்கிரமித்து நாட்கள் ஆகியிருந்தன. வீசப்பட்ட விதைகளைப் போல இடம்பெயர்ந்து சிதறியவர்களைத் தேடினேன். அம்மாவும் தம்பியும் சுகமாய் இருப்பதாக வழியில் கண்ட சொந்தக்காரர் சேதி சொன்னார். அவர்களிருக்கும் இடத்திற்குச் செல்ல வேண்டுமென விரும்பினேன். ஆனால் தர்மபுரத்திலிருக்கும் என்னுடைய சிநேகிதனை ஏதோவொரு திருட்டுக் குற்றச்சாட்டில் காவல்துறை கைது செய்திருப்பதாக அறிந்து, அங்கு சென்றேன். அவன் மீது சந்தேகம் மட்டுமே இருப்பதாகவும் விசாரணை முடிந்து அனுப்பி வைப்பதாகவும் சொல்லிய காவல் அதிகாரியிடம் அவன் யாரெனச் சொன்னேன். சிநேகிதன் அடுத்தநாள் காலையில் விடப்பட்டான். அவனுடைய வீட்டிற்கு வந்த காவல் அதிகாரி, ஒத்துழைப்புக்கு நன்றியும் மன்னிப்பும் என்று வருத்தம் தெரிவித்தார்.  நான் தர்மபுரத்திலிருந்த மாவீரர் நினைவு மண்டபத்தில் நின்று வீதியில் போவோர் வருவோரை வேடிக்கை பார்த்தேன். அதுவொரு ஆசுவாசமான செயல். நகம் கடிப்பது போல, சிறு இளைப்பாறல். இடம்பெயரும் சனங்களின் நெருக்கமான வரிசை, வீழ்ச்சியின் நிமித்தமென்று உணர்ந்தேன்.

    போர் விமானங்களின் அதிர்வொலிகள் வானிலிருந்து இறங்கின. அண்ணார்ந்து பார்த்தவர்கள் பலர். வீதியின் மருங்கிலிருந்த பதுங்குகுழிக்குள் பாய்ந்தவர் சிலர். பதிந்து இறங்கிய கிபிரின் கொஞ்சம் தூரத்தில் குண்டுகள் வீழ்ந்து வெடித்தன. மூன்று போர் விமானங்கள் வீசிய ஆறுக்கு மேற்பட்ட குண்டுகளின் அதிர்வில் கிளைதரித்து நின்ற குருவிக்கூடொன்று கீழே விழுந்தது. வான் நோக்கி அலகுகளைத் திறந்து வைத்திருக்கும் குஞ்சுகளின் அப்பாவித்தனம் நினைத்து வருந்தினேன். எங்கள் குழந்தைகள் இந்தக் குருவிக்குஞ்சுகளா!

    போர் விமானங்களின் மிலேச்சத்தனமான தாக்குதலில் காயப்பட்ட பொதுசனங்கள் தர்மபுரம் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகின்றனர் என்ற செய்தியறிந்து ஓடினேன். ஒரு சிறுமியின் குடல் சூனியத்தின் பெருவெளியில் தொங்கியது. அவளுடைய மூச்சிலும் கசிந்து வழிந்தது குருதி. நான் அவளைத் தூக்கிச் செல்லும் போது உயிர் நீத்தாள். காயப்பட்டவர்களுக்கு நிவாரணமளிக்க மருந்துகள் இல்லை. ஆனாலும் அறுவைச் சிகிச்சைகள் நடந்தன. மருத்துவமனையின் வாசலில் குவிக்கப்பட்டிருக்கும் உடலங்களைத் தாண்டி அதிவேகமாய் வந்தவொரு சிறிய வாகனத்திலிருந்து பெண்ணொருத்தி தூக்கி வரப்பட்டாள். அவளுடைய இரண்டு கால்களும் கந்தல் துணியைப் போல பிய்ந்திருந்தன. ரத்த வெடில் வயிற்றைக் குமட்டியது. அவளது கைகள் சோர்ந்து நிலத்தை தொட்டன. மருத்துவமனையின் தரையில் கிடத்தப்பட்டு அவளுக்கு சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டன. கரும்புகையும் குருதிச்சேறும் அப்பியிருந்த அவளது முகத்தை துடைத்த பொழுதே நறுமுகை இவளென இனங்கண்டேன். நெஞ்சடைத்து மூச்சுக்குத் திணறினேன். அவள் பக்கமாய் ஓடிச்சென்று “என்ர நறுமுகை” என்று கதறினேன். துயரின் பாத்திரத்தில் நிறைக்கப்பட்ட பிச்சையா நம் நித்தியம்! நறுமுகை மயங்கிக்கிடந்தாள். ரத்தப்போக்கினை மருத்துவர்கள் கட்டுப்படுத்தினர் என்று நம்புவதற்கு இல்லை. அது முழுதும் தீர்ந்து போயிருந்தது.

    இரண்டு நாட்கள் கழித்து சுயநினைவுக்குத் திரும்பிய நறுமுகை என்னை அணைத்து முத்தமிட்டு என்னுடைய புல்லாங்குழல் எங்கேயென்று கேட்டாள். “நான் வாங்கி வைத்துவிட்டேன், இப்போது இல்லை” என்றேன். எப்போது உன் விரைவு வருமென்று கேட்டுப் புன்னகைத்தாள். தன்னுடைய இரண்டு கால்களும் அகற்றப்பட்டது தொடர்பாக நறுமுகையிடம் எந்தவித அரற்றலும் இல்லாமலிருந்தது. அவ்வப்போது காயத்தின் வலியால்  கண்ணீர் சிந்தினாள். பகலும் இரவும் அவளுடனே அமர்ந்திருந்தேன். பசுமரமொன்று விறகென ஆவதைப் போல நறுமுகையை ஆக்கியது போரா? விதியா?. யாருக்காக யார் அழுவர்.

    “உனக்கு ஒன்று சொல்லமறந்து விட்டேன். என் கால்களின் எலும்புகளில் புல்லாங்குழல் செய்து வாசிப்பதைப் போல, சில நாட்களுக்கு முன்னதாக ஒரு கனவு கண்டு மகிழ்ந்தேன். உடல் பிளந்து எலும்புகளை நொறுக்கிய குண்டுச் சிதறல்களின் குரூரக் குதூகலம் என் நினைவுகளில் வெடிக்கின்றது” என்றாள்.

    அவளை இறுக அணைத்துக் கொண்டேன். கண்ணீருக்கு வந்தனை செய்யும் காலத்தின் வலியுறும் சடங்கில் கரைந்தோம்.

    “உன்  புல்லாங்குழலுக்காகவே உயிர் பிழைத்திருக்கிறேன். எப்போது தருவாய்?”

    “இடத்திற்குச் சென்று எடுத்து வரவேண்டும். நாளைக்கு செல்கிறேன்” என்றேன்.

    “எனக்கு இரண்டு கால்களும் போய்விட்டதென்று மயக்கமடைவதற்கு முன்பாகவே தெரிந்துவிட்டது. நெருப்புத் திறந்து என்னை நோக்கி வருகையில் ஓடமுடியாமல் நிலத்தில் தளும்பிய குருதியின் மீது தத்தளித்தேன். அப்போது உன்னையே நினைத்தேன். நீயென்னை குருதிப் பூவென்று கூடலில் வியந்தாய் அல்லவா” என்று கேட்டு சிரித்தாள்.

    WhatsApp-Image-2024-02-11-at-5.50.45-PM-

    நறுமுகை  உருவம் அழிந்திருக்கிறாள். கதைகள் தீர்ந்து போகுமொரு யுகத்தின் பாதச்சுவட்டின் மீது அங்கவீனமாய் கிடத்தப்பட்டிருக்கிறாள். இருளின் வீறல்கள் பெருகி, வெறிக்கச் செய்யும் திகைப்புகள் விழிக்கூட்டில் திடுக்கிட்டு பதுங்கின. பிணத்தின் பிம்பமென நிலம் தவித்தது. நறுமுகைக்கு மருந்துகள் ஏற்றப்பட்டன. வெளிறிய அவளுடலில் தடமின்றி உள்ளிறங்கிய யுத்த நடுக்கங்களை வெட்டியெடுக்க முடியாது. நறுமுகைக்கு இளநீரும், தண்ணீரும் கொடுத்தேன். இடியப்பம் வாங்கிவந்து தாயார் தீத்திவிட்டாள். புல்லாங்குழலை எங்கே வாங்கமுடியும்? திசையறுந்து ரத்த நாளங்கள் அதிரும் ஊழ்வெளியில் புல்லாங்குழலைத் தேடி அலையும் பித்தன் நான்.  அதிகாலையிலேயே மருத்துவமனையிலிருந்து புறப்பட்டேன். ஈருருளியைப் பழுது பார்க்கவேண்டும். முன்னஞ்சில்லு அங்குமிங்கும் ஆடியது. தர்மபுரத்திலிருந்து  விசுவமடு செல்லும் வழியிலிருந்த  தேத்தண்ணிக் கடையில் சாயம் கூடவாப் போட்டு ஒரு தேத்தண்ணி என்றேன். வாங்கில் அமர்ந்திருந்து ஈழநாடு நாளேட்டினை அவதானமாக வாசித்துக்கொண்டிருந்தவர் “ பெடியள் என்ன செய்யப்போறாங்கள் எண்டு விளங்கேல்ல. இப்பிடி ஒவ்வொரு இடமாய் விட்டுவிட்டு பின்னால வந்தாங்கள் எண்டால், இவங்களை நம்பியிருக்கிற சனங்களுக்கு என்ன கதியோ” என்றார். ஆவி பறந்தது. தேத்தண்ணிக்கு கொஞ்சம் சீனி தேவைப்பட்டது. ஆனாலும் கசந்து குடித்தேன். புராதனச் சூரியன் கிழக்கில் எழுந்தான். பறவைகள் பகல் வானின் சிறகசைக்கும் நட்சத்திரங்கள். உதித்த பகலின் திருமுகப்பில் வன்னியின் வடிவுத் திமிர் உறக்கத் தியானம் முடித்தது. நறுமுகைக்கு ஒரு புல்லாங்குழலை எப்படியேனும் வாங்கிக் கொடுக்க வேண்டும்.

    உடையார்கட்டு புலவர் மாமா வீட்டிற்கு அருகிலிருந்த இசை வித்துவானைச் சந்தித்து புல்லாங்குழல் வேண்டுமென்றேன். நான்கு புல்லாங்குழலை எடுத்து வந்து காட்டினார். பார்ப்பதற்கு வடிவான ஒன்றைத் தெரிவு செய்தேன். ஐயாயிரம் ரூபாய் என்றார். பேரம் பேசினேன். படிவதாயில்லை. அவ்வளவு காசு என்னிடமில்லை என்று கூறினேன். எப்போது ஐயாயிரம் ரூபாய் இருக்கிறதோ, அன்று வாருங்கள் தருகிறேன் என்றார். நறுமுகைக்கு நேர்ந்தவற்றைக் கூறி, அவளுக்காகத் தான் இதனை வாங்குவதாகவும் சொன்னேன். அதனாலென்ன காயப்பட்டிருப்பதாக சொல்லுகிறீர்கள் ஒரு ஐநூறு ரூபாய் குறைக்கிறேன் என்றார். என்னிடம் ஆயிரத்து இருநூறு ரூபாய் மட்டுமே இருக்கிறது என்றேன். வாய்ப்பில்லை என்று வழியனுப்பினார்.

    அன்றிரவே தாவீது அண்ணாவின் வீட்டிற்குச் சென்றேன். எனக்கொரு புல்லாங்குழல் வேண்டும். அந்த வாத்தியக்காரன் இவ்வளவு விலை சொல்கிறான் என்று கடிந்தேன். தாவீது அண்ணா கடுமையான நிர்வாகப் பணி அழுத்தங்களில் இருந்தார். கிளிநொச்சி விடுபட்டால் எல்லாமும் போய்விடுமென இயக்கத்திலிருந்தவர்கள் பலர் அஞ்சியிருந்தனர். தாவீது அண்ணா எனக்கு உதவுவதாகக் கூறினார். ஆனால் நாளைக்கு காலையிலேயே தனக்கு பணியிருப்பதாகவும், முடித்துவிட்டு வருவதாகவும் கூறினார். நான் அங்கேயே தங்கியிருந்தேன். தாவீது அண்ணாவின் திருமணப் புகைப்படமொன்று பெரிய அளவில் ப்ரேம் செய்யப்பட்டிருந்தது. அண்ணியின் முகத்தில் செறிந்து இறங்கிய வடிவும் சந்தோசமும். அவள் வித்துடலாக இருந்தபோதும் இப்படித்தான் இருந்தாள். தலைவர் இரட்டை நாடி தெரிய புன்னகைத்தபடி மணமக்களோடு நின்றார்.

    தாவீது அண்ணா இரவாகியும் வரவில்லை. அவர்களுக்கு இயக்க வேலைதான் முக்கியம். பிறகுதான் எல்லாமும். தாவீது அண்ணா அதிலும் மோசம். வீடு மறந்து இயக்கமே தவமென இருப்பவர். பத்து மணியிருக்கும் வாகனமொன்று வீட்டு வாசலில் நின்றது. அதிலிருந்து இறங்கிய போராளிகள் இருவர் வீட்டினுள் நுழைந்து ஆவணங்கள் சிலவற்றை எடுத்தனர். அவர்களிடம் சென்று “தாவீது அண்ணா இண்டைக்கு வரமாட்டாரா” என்று கேட்டேன். “இனிமேலும் வரவேமாட்டார்” என்றார். அய்யோ எனக்கு புல்லாங்குழல் வேண்டும். நறுமுகைக்கு என்ன பதில் சொல்வேன் என்ற பதற்றம் மட்டுமே சுழன்றடித்தது. “பெரிய பொறுப்பாளர் வீரச்சாவு என்கிறேன், நீ புல்லாங்குழல் வேண்டுமென அழுகிறாயே, உனக்கு தாவீது அண்ணாவின் மீது பாசமில்லையா” என்று போராளி கேட்டார்.

    “பாசமிருக்கு. நீங்கள் சொன்ன செய்தி துயரத்தை தருகிறது. ஆனால் அவர் சாவதற்கு தயாரானவர். நறுமுகை அப்பிடியில்லை. அவளுக்கு கால்களிரண்டும் போய்விட்டது. அவளது புல்லாங்குழல் எரிந்துவிட்டது. தாவீது அண்ணாவிற்கு வீரவணக்கம். எனக்கு புல்லாங்குழல் வேண்டும். அவர் வாங்கித் தருவதாகச் சொல்லிவிட்டு போனவர். நீங்கள் அவரின் கனவுகளை, சத்தியங்களை பின் தொடர்பவர்கள் தானே. எனக்கு அந்த வாத்தியக்காரரிடமிருந்து புல்லாங்குழலை வாங்கித் தாருங்கள்” என்றேன்.

    போராளியொருவர் கைதட்டிச் சிரித்தார்.

    தாவீது அண்ணா வாகனத்தை விட்டு இறங்கி வந்தார்.

    “ஏனடா நான் செத்துப்போனாலும் பரவாயில்லை. உன்ர ஆளுக்கு புல்லாங்குழல் வேணும். அப்பிடித்தானே”

    “உறுதியாய் அப்பிடித்தான் அண்ணா” என்றேன்.

    என்னை இறுக கட்டியணைத்து உன்னோடு கதைத்து வெல்லமுடியாது என்றார். பையிலிருந்து புல்லாங்குழலை எடுத்துத் தருவித்து “உன்ர நறுமுகையிட்ட கொண்டு போய்க் குடு” என்றார்.

    நள்ளிரவில் புறப்பட்டேன். வீதியில் சனங்களின் நடமாட்டம் பெரிதாகவில்லை. போராளிகளின் வாகனங்கள் நிமிடத்திற்கு நிமிடம் கடந்து போயின. போர்விமானங்களின் இரைச்சல் வானத்திலிருந்து இறங்கியது. ஈருருளியை நிறுத்தி மேல் நோக்கிப் பார்த்தேன். எதுவும் தெரியவில்லை. உக்கிரமான அதிர்வோடு இரவின் கனவு குலைந்தது. மீண்டும் மீண்டும் தாக்குதல்கள் தொடர்ந்தன. ஊகத்தில் திசையுணர்ந்தேன். விசுவமடு, வட்டக்கச்சி, நெத்தலியாறு, பிரமந்தனாறு இங்கே தான் எங்கேயோ என நினைத்தேன். வழியோரத்து மரங்களின் கீழே போராளிகள் சிலர் நின்று கொண்டிருந்தனர். போர் விமானங்களின் தாக்குதலை முறியடிக்கும் படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள். அவர்களது பாரத்தையும் சேர்ந்து சுமந்தது இரவு.

    பத்து நிமிடங்கள் கழித்து காயக்காரர்களை ஏற்றிக்கொண்டு வாகனங்கள் விரைந்து போயின. அழுகுரல்களால் நிறைந்த வழியில் தனியனாக நின்று கொண்டிருந்தேன். தெய்வமே! குழந்தைகளுக்கு எதுவும் நேர்ந்து விடக்கூடாது என்று வேண்டினேன். நான் நெத்தலியாற்றுப் பாலத்தை தாண்டும்போது வீதியில் நின்ற ஒருதொகைச் சனங்கள் “தர்மபுரம் ஆசுபத்திரியல தான் கிபிர் அடிச்சிருக்கு” என்றார்கள்.

    அய்யோ! என் நறுமுகையென ஈருருளியை வேகங்கொண்டு உழக்கினேன்.  மருத்துவமனை எரிந்துகொண்டிருந்தது. போராளிகள் சனங்களுக்கு உதவிக்கொண்டிருந்தனர். “நறுமுகை… நறுமுகை…” என்று கதறியழுதபடி அனல் ஊற்றுக்குள் புகுந்தேன். அவள் கிடத்தப்பட்ட இடத்திலேயே இருந்தாள். தீயின் வெக்கையில் சிவந்திருந்தாள். அவளுடைய கைகளில் புல்லாங்குழலை வைத்தேன். நறுமுகை! உனக்காக வாங்கி வந்த புல்லாங்குழல். நீ இசையடி. என்னுயிரை நீ இசையடி நறுமுகை என்று சொன்னேன். அவளுடைய உதடுகள் திறவாமல் கிடந்தன. கண்கள் புல்லாங்குழலின் துளைகளைப் போல விழித்திருந்தன. யுத்தத்தின் எலும்புகள் நாம். எம்மைத் துளையிட்டு விரல் வைத்து அது ஊதுகிறது. எல்லாமும் சூனிய இரைச்சல். எல்லாமும் சூனியச் சுரம்.

    குருதிப் பூவென விரிந்து தகிக்கும் இந்தத் தீ வெளியில் நறுமுகையை அணைத்துகொண்டு உதடுகளை முத்தமிட்டேன். புல்லாங்குழலிலிருந்து எழுந்தது அவளது நாதம். யுத்தம் தப்பி ஓடும் சாத்வீகத்தின் இழையை இசையால் நெய்தாள்.

    “மனிதக் காயங்களில் எரியும் யுத்தம் நாதத்தினால் அழியும்”

    “யுத்தம் அழியட்டும் சகியே!”

    “என் குருதிக்காயத்தின் புல்லாங்குழல் துளைகளை மூடவும் திறக்கவும், யுத்தம் அழியும்”

    “யுத்தம் அழியட்டும் என் குருதிப் பூவே” என்றது நானா? நிலமா? யாரறிவார்!
     

    https://akaramuthalvan.com/?p=1837

     

  7. வெடுக்குநாறிமலை சிவராத்திரி வழிபாடுகளை குழப்ப முற்படும் விகாராதிபதி

    Oruvan

    வவுனியா, வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகாசிவராத்திரி தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 8 ஆம் திகதி விசேட பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு ஆலய நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இவ்வாறான நிலையில், மின்பிறப்பாக்கி இயந்திரங்களை பயன்படுத்தி நிகழ்வுகளை நடத்துவதானால், நீதிமன்றில் அனுமதி பெறப்படவேண்டும் என நெடுங்கேணி பொலிஸாரால் ஆலயநிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அதனையடுத்து வவுனியா நீதிமன்றில், ஆலயநிர்வாகம் சார்பாக கடந்தவாரம் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான விசாரணைகள் நேற்று மன்றில் இடம்பெற்றபோது, ஏற்கனவே வழங்கப்பட்ட கட்டளையின் பிரகாரம் செயற்படுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதேவேளை, முல்லைத்தீவு, குருந்தூர்மலை விகாராதிபதி, வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய மகா சிவராத்திரி நிகழ்வை குழப்பும் வகையில் செயற்பட்டு வருகிறார் என ஆலய நிர்வாக சபை உறுப்பினர் தமிழ்ச் செல்வன் குற்றஞ்சாட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    https://oruvan.com/sri-lanka/2024/03/05/vedukunarimalai-viharadhipathi-tries-to-confuse-the-shivratri-worshippers

  8. சீமான் குடும்பத்தினர் பழனிசாமியுடன் சந்திப்பு ஏன்?

    10-2.jpg

    அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சார்பில், அவரது குடும்ப உறுப்பினர்கள் இருவர் நேற்று சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணிக்கு இணையாக, பலம் பொருந்திய கூட்டணியை உருவாக்க, பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., தலைமை விரும்புகிறது. அதாவது, தி.மு.க., ஆட்சியின் அதிருப்தி அலையை அறுவடை செய்ய வசதியாக, தன் தலைமையில் மெகா கூட்டணி அமைத்து, 20 தொகுதிகளை கைப்பற்றுவதற்கான தேர்தல் வியூகத்தை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வகுத்துள்ளார்.

    அதன் அடிப்படையில், பா.ம.க., – தே.மு.தி.க., புதிய தமிழகம், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி போன்றவற்றிடம், கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு பற்றியும் பேச்சு நடத்தப்பட்டு உள்ளது.

    பா.ம.க.,விற்கு, தர்மபுரி, கடலுார், விழுப்புரம், ஆரணி, திருவண்ணாமலை உள்ளிட்ட ஆறு தொகுதிகளையும், கள்ளக்குறிச்சி, விருதுநகர் உள்ளிட்ட மூன்று தொகுதிகளை, தே.மு.தி.க.,விற்கும், புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியையும், சமத்துவ மக்கள் கட்சிக்கு திருநெல்வேலி தொகுதியையும் ஒதுக்கீடு செய்ய தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

    அதேநேரத்தில், பா.ம.க., – தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகளை தவிர, ஓட்டு வங்கி கூடுலாக வைத்துள்ள நாம் தமிழர் கட்சியையும் கூட்டணியில் சேர்த்தால், தி.மு.க., கூட்டணிக்கு இணையான பலத்தை, அ.தி.மு.க., அணி பெறும் என, பழனிசாமி நம்புகிறார்.

    நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னத்தை, தேர்தல் கமிஷன் ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால், பா.ஜ., மீது சீமான் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். பா.ஜ., வுக்கு எதிராக, தீவிரமாக தேர்தல் பிரசாரம் செய்யவும் முடிவு செய்துள்ளார்.

    இந்நிலையில், கூட்டணி தொடர்பாக, சீமான் தரப்பினரிடம் பழனிசாமி தரப்பினர் பேச்சு நடத்தினர். ‘இரு திராவிட கட்சிகளுடனும், தேசிய கட்சிகளுடனும் கூட்டணி இல்லை’ என்று கூறி வந்த சீமானுக்கு, விவசாயி சின்னம் விவகாரத்தால், கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.

    எனவே, பழனிசாமியை சீமானின் குடும்ப உறுப்பினர்கள் இருவர் நேற்று சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதுகுறித்து சீமானுக்கு நெருக்கமானவரிடம் கேட்ட போது, ‘முதல் கட்டமாக 20 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுஉள்ளோம்.

    அ.தி.மு.க.,வுடன் கூட்டணி என்றால், குறிப்பிட்ட சில தொகுதிகளில் உடன்பாடு வைக்கலாமா அல்லது 40 தொகுதிகளிலும் கூட்டணியா என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. அ.தி.மு.க., கூட்டணியில், ஆறு தொகுதிகள் தருவதற்கு பேச்சு நடத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், சீமான் முடிவு தான் இறுதியானது’ என்றார்.

     

    https://akkinikkunchu.com/?p=270197

  9. டிரம்பிற்கு கறுப்பினத்தவர்கள் ஆதரவு என்பதை காண்பிப்பதற்கு போலி செயற்கை நுண்ணறிவு படங்கள் – டிரம்பின் ஆதரவாளர்கள் சர்ச்சை நடவடிக்கை

    3-7.jpg

    போலியான செயற்கை நுண்ணறிவு படங்களை உருவாக்கி டிரம்பின்  ஆதரவாளர்கள் கறுப்பின வாக்காளர்களை இலக்குவைத்துவருகின்றனர்.

    முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு கறுப்பினத்தவர்கள் ஆதரவளிக்கின்றனர்  என்ற உணர்வை ஏற்படுத்தும் விதத்தில் டிரம்புடன் கறுப்பினத்தவர்கள் காணப்படும் போலிவீடியோக்கள் படங்களை  டிரம்பின் ஆதரவாளர்கள் உருவாக்குவது தெரியவந்துள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.

    2020 தேர்தலில் பைடன் வெற்றிபெறுவதற்கு கறுப்பினத்தவர்களின் ஆதரவு முக்கியமானதாக காணப்பட்ட நிலையில் டிரம்ப் தற்போது அவர்களின் ஆதரவை பெறுவதற்கான முயற்சிகளில் வெளிப்படையாக ஈடுபட்டுள்ளார்.

    இவ்வாறான போலியான படங்கள் கறுப்பினத்தவர்களின் ஆதரவு  டிரம்பிற்குள்ளது என்பதை காண்பிப்பதற்கு பயன்படுத்தப்படுவதாக பிளக்வோட்டர்ஸ் மட்டர் அமைப்பின் ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்

    இவ்வாறான படங்கள் உண்மையானவை என நான் தெரிவிக்கவில்லை என இந்த படங்களை உருவாக்கி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி டிரம்ப் ஆதரவாளர்கள் உருவாக்கும் போலி படங்கள் அமெரிக்க தேர்தலிற்கு முந்தைய புதிய போக்காக காணப்படுகின்றது.

    அமெரிக்க வாக்காளர்களே இவற்றை உருவாக்கி பயன்படுத்திவருகின்றனர்.

    இவ்வாறான படங்களை உருவாக்கியவர்களில் மார்க்கை குழுவினர்களும் உள்ளனர் இவர்கள் டிரம்ப் கறுப்பின பெண்களுடன் காணப்படுவது போன்ற படத்தை உருவாக்கி முகநூலில் பதிவிட்டனர்.இந்த குழுவினரை ஒரு மில்லியனிற்கும் மேற்பட்டவர்கள் பின்தொடர்கின்றனர்.

    முதல் பார்வைக்கு அது உண்மையான படம் போல தோன்றினாலும் உற்றுப்பார்த்தால் பல உண்மைகள் புலனாகும்.

     

    https://akkinikkunchu.com/?p=270254

  10. சாந்தனைத்தான் இழந்துவிட்டோம்; எஞ்சியோரையாவது காப்பாற்றுங்கள்

    713633176.jpg

    தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சட்டத்தரணி புகழேந்தி மன்றாட்டம்....

    உயிரோடு தாயிடம் அனுப்பிவைப்போம் என்ற நம்பிக்கையுடன் இருந்த நிலையில் இன்று சாந்தனை நாம் இழந்துவிட்டோம். எஞ்சிய மூவரையாவது காப்பாற்றுவதற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன் வரவேண்டும் என தமிழ்நாட்டைச் சேர்ந்த சட்டத்தரணி புகழேந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

    உடுப்பிட்டி கற்பகப் பிள்ளையார் ஆலய முன்றிலில் அவ்வூர் பொதுமக்களால் நேற்று நண்பகல் முன் னெடுக்கப்பட்டிருந்த சாந்தனின் இறுதி அஞ்சலி நிகழ்வில் தமிழ்நாட்டில் இருந்து வருகைதந்த சட்டத்தரணி புகழேந்தி ஆற்றிய அஞ்சலி உரையின் போது இந்தக்கோரிக்கையை முன்வைத்திருந்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-

    சாந்தனை எப்படியாவது காப்பாற்றித் தாயிடம் அனுப்பி வைப்போம் என்றே நம்பியிருந்தோம். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்த சாந்தனின் உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டு நினைவிழந்த நிலைக்குச் சென்றார். அந்த நிலையில் கூட எயார் அம்புலன்ஸ் மூலமாக கட்டுநாயக்கா ஊடாக அனுப்பிவைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தோம். இருந்தும் அனைத்துப் போராட்டங்களும் பயனற்றுப்போகும் வகையில் அவர் உயிரிழந்தார்.


    ஈழத்தில் இருக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றேன். நீங்கள் அனைவரும் தமிழ்நாட்டுக்கு உடனடியாக வர வேண்டும். திருச்சி சிறப்பு முகாமில் உள்ள எஞ்சிய மூவரும் எவ்வாறான கொடும் சிறையில் இருக்கின்றார்கள் என்பதை நேரடியாகப் பாருங்கள். தமிழ் நாடு முதலமைச்சரை நேரில் சந்தித்து, எஞ்சிய மூவரும் விரும்பிய இடங்களுக்குச் செல்வதற்கு உரிய அனுமதி கிடைக்கும் வரை அவர்களை தமிழ்நாட் டில் உள்ள உறவுகளிடம் கையளிக்குமாறு கோரிக்கை வையுங்கள். அது நடைபெற்றால் மட்டுமே அவர்களையாவது நாம் காப்பாற்ற முடியும். திருச்சி சிறப்பு முகாமில் உள்ள எஞ்சிய மூவரையும் காப்பாற்றி அவர்கள் விரும்பும் நாட்டுக்குச் சென்று அவர்களுடைய குடும்பத்துடன் நிம்மதியாக வாழவைப்பதற்கான சட்டப்போரட்டத்தை தமிழ்நாடு திரும்பிய கையோடு முழுவீச்சோடு முன்னெடுக்க உள்ளேன் - என்றார்.

    சட்டத்தரணி புகழேந்தி, ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட சாந்தன், முருகன் உள்ளிட்டோரின் வழக்கு விடயங்களை 2005 ஆம் ஆண்டு முதல் எவ் விதக் கட்டணங்களும் வாங்காது இலவசமாக முன்னெடுத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.  

     

     

    https://newuthayan.com/article/சாந்தனைத்தான்_இழந்துவிட்டோம்;_எஞ்சியோரையாவது_காப்பாற்றுங்கள்;

    • Like 1
  11. 19 hours ago, nedukkalapoovan said:

    சைக்கிள் ஓடினம் சரி.. எவ்வளவு காசு எப்படி வசூல் பண்ணினம்..??! வெளிநாட்டில் இருந்து போய் உள்ளுர் மக்களிடம் வசூல் பண்ணினமா.. இல்லை உதவி செய்யுறம் என்பதற்கு விளம்பரமா..??! இல்லை ஆல் இன் ஒன்னா. 

    நம்ம நண்பர்கள் (அவுஸ், கனடா, இங்கிலாந்து) ஓரிரு வருடங்களுக்கு முன்னர் சைக்கிள் ஓடினார்கள். Online மூலமாக பணம் சேர்த்தார்கள்.

    http://www.ride4ceylon.com

    இந்தமுறை கண்டியில் இருந்து மானிப்பாய் வந்திருக்கின்றனர்.

     

    • Like 1
  12. யாழில் நடந்த களியாட்டக் குழப்பங்களினால் புதிய டிக்டொக்டர்கள் உருவாகியது நல்லவிடயம்! நல்ல கிரியேட்டிவிட்டியுடன், யாழ்ப்பாண மண்ணில் இருந்தே பலர் வீடியோக்கள் போட்டிருந்தனர்!

     

     

  13. சாந்தன்: இரண்டு ஆயுள் தண்டனைகள் ; இரண்டு பிரேத பரிசோதனைகள் - நிலாந்தன்

    429919057_7322181917827800_7751763333685

    சாந்தன் இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டவர். பொதுவாக இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் ஆயுள் தண்டனை எனப்படுவது விடுமுறை நாட்களைக் கழித்து பார்த்தால் 15 ஆண்டுகள். சிறை, சிறப்பு முகாம் போன்ற இடங்களில் சாந்தன் தடுத்து வைக்கப்பட்டிருந்தது 33 ஆண்டுகள். அப்படிப்பார்த்தால் அவர் இரண்டு ஆயுள் தண்டனைகளை முடித்துவிட்டார். அதற்கு பின்னரும் அவர் தாயகம் திரும்புவதற்கு அனுமதிக்கப்படவில்லை. தமிழகத்தில் உள்ள சட்டச் செயற்பாட்டாளர்கள்  தமிழக அரசைக் குற்றஞ்சாட்டுகின்றார்கள்.

    இந்த விடயத்தில் தாயகத்தில் உள்ள அரசியல்வாதிகளும் பொறுப்புணர்ந்து செயல்படவில்லை. இந்திய மண்ணில் பாரதூரமான குற்றச் செயல்களுக்காக தண்டிக்கப்பட்டவர்கள், விடுவிக்கப்பட்ட பின் அவர்கள் இந்தியர்களாக இருந்தால் வீட்டுக்கு போகலாம். வெளிநாட்டவர்களாக இருந்தால் நாடு கடத்தப்படுவார்கள். அல்லது இந்தியாவில் அவர்களைப் பொறுப்பேற்கக்கூடிய உறவினர்கள் இருந்தால் அவர்களிடம் போகலாம். சாந்தன் தாயகத்துக்கு வர விரும்பினார். தன் தாயுடன் இறுதிக் காலத்தைக் கழிக்க விரும்பினார். அவரோடு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏனையவர்கள் இப்பொழுதும் திருச்சி சிறப்பு முகாமில்தான். தண்டனைக் காலம் முடிந்த பின் விடுதலை செய்யப்ட்ட வெளிநாட்டவர்கள் அவர்களுடைய நாட்டுக்குத் திரும்பும் வரையிலும் அவ்வாறு தடுத்து வைக்கப்படுகின்றார்கள்.

    விடுவிக்கப்பட்ட சாந்தன் நாட்டுக்குத் திரும்பினால் இலங்கைச் சட்டங்களின் பிரகாரம் அவருக்கு ஆபத்து ஏற்படுமா என்ற ஒரு பயம் அவருக்காக உழைத்த சட்டச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் காணப்பட்டது. நாட்டிலுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி, உரிய அமைச்சரிடம் உத்தியோகபூர்வமாக ஒரு பதிலை பெறுவது நல்லது என்றும் அவர்களிற் சிலர் அபிப்பிராயப்பட்டார்கள். ஆனால் அது தொடர்பாக எடுக்கப்பட்ட முயற்சிகள் எவையும் வெற்றி பெறவில்லை. தமிழ் அரசியல்வாதிகளில் ஒருவருக்கு அது தொடர்பாக எழுதப்பட்ட மின்னஞ்சலுக்குப் பதில் கிடைக்கவில்லை. சில அரசியல்வாதிகள் எங்கே, யாரிடம் அதைக் கேட்க வேண்டுமோ அங்கே கேட்காமல், சாந்தனின் வீட்டுக்கு போய் அவருடைய தாயாரைக் கண்டு படமெடுத்துக் கொண்டார்கள்.

    இவ்வாறு சாந்தனை விடுவிப்பதற்கு யாரிடம் கதைக்க வேண்டும்? எங்கே போராட வேண்டும்? என்பது தொடர்பாக தமிழ் அரசியல் சமூகம் தெளிவற்றுக் காணப்பட்டது. அல்லது பொறுப்போடு நடந்து கொள்ளவில்லை. அல்லது மூத்த சட்ட மற்றும் சிவில் சமூகச் செயற்பாட்டாளரான  ஒருவர் கூறுவது போல அதற்கு வேண்டிய அரசியல் பெருவிருப்பம்-political will-அவர்களிடம் இருக்கவில்லை.

    திருச்சி சிறப்பு முகாமானது இதற்கு முன்னிருந்த சிறைகளை விடக் கொடுமையானது என்று அங்கு இருப்பவர்கள் கூறுகிறார்கள். அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த போதைப் பொருள் வியாபாரிகள் சிறப்பு முகாமுக்குள் இருந்தபடியே தமது வியாபாரத்தைத் தொடர்ந்தமை கண்டு பிடிக்கப்பட்டது. அதன்பின்  முகாமில் கட்டுப்பாடுகள் அதிகரித்தன. அது அரசியல் கைதிகளையும் பாதித்தது. சாந்தனைப் போன்றவர்கள் ஏனைய கைதிகளிடமிருந்து பிரிக்கப்பட்டு தனியறைகளில் வைக்கப்பட்டார்கள். சுற்றிவரக் கண்காணிப்பு. உடற்பயிற்சி செய்ய முடியாது. அவர்கள் தடுத்து வைக்கப்பட்ட அறைகளோடு கழிப்பறைகளும் இணைக்கப்பட்டிருந்தபடியால் வெளியே நடமாடுவதற்கும் வரையறைகள் இருந்தன. சிறைக்குள் சாந்தன் பெருமளவுக்கு ஒரு சன்னியாசி போலாகிவிட்டார் என்று வழக்கறிஞர் ஒருவர் சொன்னார். பெருமளவுக்குத் தனித்திருப்பதாகவும் எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டவர் போல காணப்பட்டதாகவும் அவர் சொன்னார். சிறப்பு முகாமில் அவர் சோறு சாப்பிடாமல் கஞ்சி மட்டும் தருமாறு கேட்பதாகவும் கூறப்பட்டது. சிறப்பு முகாமும் சாந்தனின் உடல் கெடுவதற்கு ஒரு காரணம். முடிவில் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் ஒரு நிலை வந்த பொழுது மீண்டும் அவரது குடும்பத்தவர்கள் தமிழ்த் தேசிய அரசியற் சமூகத்தை அணுகினார்கள்.

    அப்பொழுதும் தமிழ்த் தேசிய அரசியற் சமூகம் அதே மந்தத்தனத்தோடு பொறுப்பின்றி நடந்து கொண்டது. சாந்தனை நாட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பான முடிவை இலங்கையில் எடுக்க வேண்டியது வெளிவிவகார அமைச்சும் பாதுகாப்பு அமைச்சும்தான். சம்பந்தப்பட்ட அமைச்சுக்களோடு மிகவும் பிந்தித்தான், அதாவது அவர் இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு கிட்டத்தட்ட 14 மாதங்களின் பின்னர்; அதிலும் குறிப்பாக அவர் இறப்பதற்குச் சில கிழமைகளுக்கு முன்புதான் தொடர்பு கொள்ளப்பட்டிருக்கிறது.

    தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த விடயத்தில் ஜனாதிபதியை, வெளி விவகார அமைச்சரை அணுகிய அதே காலப்பகுதியில் சாந்தனின் குடும்பத்தவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அணுகியிருக்கிறார்கள். மற்றொரு யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினராகிய அங்கஜனும் அதில் அக்கறை காட்டியிருக்கிறார். அதாவது சாந்தனின் விடயத்தில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல, அதற்கு வெளியே உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சரும் அரசாங்கத்தை அணுகியதன் விளைவாகத்தான் நாடு திரும்புவதில் சாந்தனுக்கு இருந்த தடைகள் அகற்றப்பட்டன.

    ஆனால், அப்பொழுது எல்லாமே பிந்திவிட்டது. விமானத்தில் பயணம் செய்ய முடியாத அளவுக்கு  சாந்தன்  நோயாளியாகி விடடார் என்று ராஜீவ் காந்தி மருத்துவமனையின் டீன் ஒரு வழக்கறிஞரிடம் கூறியுள்ளார். முடிவில், சாந்தனின் உயிரற்ற உடலைத்தான் அவருடைய தாய்க்குக் காட்ட முடிந்தது. விடுதலை செய்யப்பட்ட பின்னரும் அவர் ஒரு கைதியாகவே இறந்தார். உயிருடன் இருக்கும் போது அவர்  இரண்டு ஆயுள் தண்டனைகளை அனுபவித்தார். உயிர் பிரிந்தபின் அவருடைய உடலை இரண்டு தடவைகள் போஸ்மோர்டம் செய்திருக்கிறார்கள். முதலில் இந்தியாவில் பின்னர் இலங்கையில்.

    சாந்தனுக்காக தாயகத்தில் உள்ள தமிழ் அரசியல் சமூகம் பெரிய அளவில் போராடவில்லை. இப்பொழுதும் சிறப்பு முகாம்களில் இருப்பவர்களை விடுதலை செய்யவதற்காக யார்  போராடுகிறார்கள்? சாந்தனோடு சிறையில் வைக்கப்பட்டிருந்த இந்தியப் பிரஜையாகிய பேரறிவாளனை விடுவிப்பதற்காக அவருடைய தாயார் அற்புதம்மாள் தொடர்ச்சியாகப் போராடினார். ஒரு தாயின் நிகரற்ற போராட்டங்களில் அதுவும் ஒன்று. கிழக்கில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த அன்னை பூபதியின் போராட்டத்தைப்போல அது முன்னுதாரணமானது. ஈழத் தமிழ் அரசியலில் தாயக களத்துக்கு வெளியே நடந்த ஓர் அன்னையின் மகத்தான போராட்டமாக அற்புதம்மாளின் 32 ஆண்டுகாலப் போராட்டம் காணப்பட்டது.

    சாந்தனை விடுவிப்பதற்காக அல்லது நாட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழ் அரசியல் சமூகம் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய போராட்டம் எதையும் முன்னெடுத்திருக்கவில்லை. அது மட்டுமல்ல, சாந்தனை நாட்டுக்குள் கொண்டு வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதிலும் தமிழ் அரசியல்வாதிகளிடம் பொருத்தமான அணுகுமுறைகள் இருக்கவில்லை. சாந்தனின் குடும்பம் சலிப்படைந்து, களைப்படைந்து, ஒரு விதத்தில் விரக்தியடைந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நோக்கிப் போனது.

     

    429931246_911388340989428_65808419120999

     

    ஆனால் தமிழ் தேசியக் கட்சிகள் தங்கள் சொந்தக் கட்சிக்குள் பதவிப் போட்டி என்று வரும் பொழுது எப்படியெல்லாம் போராடுகிறார்கள்? கடந்த வாரம் தமிழ்த் தேசிய அரசியலின் இயலாமைகளை நிரூபித்த ஒரு வாரம். முதலாவது சாந்தனின் மரணம். இரண்டாவது தமிழரசுக் கட்சி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டமை. அங்கே அவர்கள் புத்திசாலித்தனமாக நடந்தார்களா இல்லையா என்பது வேறு கதை. கட்சிக்குள் வந்த பிணக்கை கட்சிக்குள்ளேயே தீர்க்க முடியவில்லை என்பது ஒரு பாரதூரமான தோல்வி. அதனைத் தீர்ப்பதற்கு கட்சிக்கு வெளியேயும் சிவில் சமூகங்கள் இல்லை என்பது மற்றொரு தோல்வி. கடந்த 15 ஆண்டு காலத் தோல்விகளுக்கு அந்தக் கட்சி பொறுப்பு என்ற படியால் அது அழியட்டும்; அதன் வாக்குகள் தென்னிலங்கைக் கட்சிகளுக்குப் போனால்கூட பரவாயில்லை என்று கருதுமளவுக்கு சில சிவில் சமூகப் பிரதிநிதிகள் காணப்படுகிறார்கள் என்பது அதைவிடத் தோல்வி.

    இது ஒரு தேர்தல் ஆண்டு. ஜனாதிபதித் தேர்தலில் தற்போதுள்ள நிலவரங்களின்படி அரச தரப்பு; எதிர்க்கட்சி; ஜேவிபி என்று மூன்று அணிகள் போட்டியிடக்கூடிய வாய்ப்புகள் தெரிகின்றன. தென்னிலங்கையில் படித்த நடுத்தர வர்க்கத்தின் மத்தியில் ஜேவிபி ஆதரவு அலை ஒன்று வீசுகிறது. அது வாக்குகளாக மாறுமா? இல்லையா?அல்லது அதை கண்டு பயந்து ஏனைய வலதுசாரிக் கட்சிகள் தங்களுக்கு இடையே ஐக்கியத்துக்கு போகுமா? இல்லையா? என்பதனை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

    மேற்சொன்ன மூன்று தரப்புக்களும் போட்டியிட்டால், சிங்கள மக்களின் வாக்குகள் மூன்றாகப் பிரியும். அப்பொழுது தமிழ்த் தரப்பு ஒரு தீர்மானிக்கும் சக்தியாக மேலெழக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகும். ஆனால் அவ்வாறு  அரசியல் களத்தில் துணிந்து புகுந்து விளையாடுவதற்கு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. உள்ளதில் பெரிய கட்சி நீதிமன்றம் ஏறத் தொடங்கிவிட்டது. மற்றொரு கட்சி தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துவிட்டது. அதாவது துணிந்து புகுந்து விளையாடத் தயாரில்லை. ஒரு பொது வேட்பாளரை நிறுத்தப் போவதாகக் கூறிய குத்து விளக்குக் கூட்டணி அதைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறதே தவிர செயல்படுவதாகத் தெரியவில்லை. தமிழரசுக் கட்சி தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்காவிட்டால் குத்துவிளக்குக் கூட்டணி அந்தப் பரிசோதனையில் இறங்குமா?

    இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெல்லப்போகும் கட்சி அல்லது கூட்டு, அடுத்த ஆண்டு அனேகமாக பொது தேர்தலை வைக்கும். தொடர்ந்து மாகாண சபைத் தேர்தல், உள்ளுராட்சி சபைத் தேர்தல் போன்றன வைக்கப்படலாம். அதாவது வரும் இரண்டு ஆண்டுகளும் தேர்தல் ஆண்டுகளாக அமையக்கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. தமிழ் மக்கள் மத்தியில் இப்பொழுது மக்கள் இயக்கம் எதுவும் இல்லை. இருப்பதெல்லாம் தேர்தல் கேட்கும் கட்சிகள்தான். அடுத்தடுத்து வரும் இரு தேர்தல் ஆண்டுகளை எதிர்கொள்ள தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளிடன் என்ன உபாயம் உண்டு? நிர்ணயகரமான ஒரு காலகட்டத்தில், அரங்கில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக்கூடிய தரப்புக்களை இந்தியாவும் அமெரிக்காவும் ஏனைய பேரரசுகளும் அணுகிக் கையாள முற்படும் ஒரு காலகட்டத்தில், அரங்கில் துணிந்து புகுந்து விளையாட வேண்டிய தமிழ்த் தரப்பு என்ன செய்து கொண்டிருக்கிறது?

    அரசியலில் துணிந்து புகுந்து விளையாடும் தரப்புகள்தான் ரிஸ்க் எடுக்கும். ரிஸ்க் எடுக்கும் தரப்புகள்தான் கனவுகளை நோக்கி யதார்த்தத்தை வளைக்கும். தலைமை தாங்கும். துணிந்து புகுந்து விளையாடும் தரப்புகள்தான் வரலாற்றை உருவாக்குகின்றன. உட்கட்சிச் சண்டையை நீதிமன்றத்துக்கு கொண்டு போகும் கட்சிகள் வரலாற்றை உருவாக்குவதில்லை. அதுமட்டுமல்ல தேர்தல் வரும்பொழுது தமிழ்த் திரைப்படங்களில் கடைசி நேரத்தில் விசிலடித்துக் கொண்டு வரும் போலீஸ்போல அறிக்கை விடும் சிவில் சமூகங்களும் வரலாற்றைத் தீர்மானிப்பதில்லை.

     

    https://www.nillanthan.com/6582/

    • Thanks 1
    • Sad 1
  14. அநுரகுமாரவின் இந்திய விஜயம்; ஜே.வி.பியின் இந்திய விரோத கடந்த காலத்தை பொருட்படுத்தாத மோடி அரசு

    on March 1, 2024

    GFjedoSW4AAHFrA.jpeg?resize=1200%2C550&s

    Photo, X, @DrSJaishankar

    தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவும் அவரது மூன்று தோழர்களும் ஐந்து நாள் விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியிருந்தார்கள். தங்களையும் கூட இந்திய அரசாங்கம் அழைத்துப் பேசவேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகி வேண்டுகோள் விடுத்திருப்பதாக செய்திகள் வருகின்றன. அந்தளவுக்கு தேசிய மக்கள் சக்தி தலைவரின் இந்திய பயணம் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்புடன் கூடிய கவனத்தை ஈர்த்திருக்கிறது.

    இந்தியா வழமையாக  தமிழ் அரசியல் கட்சிகளுக்குப் புறம்பாக ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போன்ற பெரிய கட்சிகளுடனேயே ஊடாட்டங்களைச் செய்துவந்திருக்கிறது; ஆனால், தேசிய ஐக்கிய மக்கள் சக்தி போன்ற இடதுசாரிக் கட்சிகளை அழைத்துப் பேசியதில்லை.

    இந்திய, இலங்கை இடதுசாரி அரசியல்வாதிகள் அவர்களின் கட்சிகளின் மகாநாடுகளில் கலந்துகொள்வதற்காக பரஸ்பரம் விஜயங்களை மேற்கொள்வதுண்டு. அத்தகைய விஜயங்கள் குறிப்பிட்ட கட்சி வட்டாரங்களுக்கும் ஒரளவுக்கு ஊடக கவனிப்புக்கும் அப்பால் பெரிதாகக் அக்கறைக்குரியவையாக  இருப்பதில்லை.

    ஆனால், இந்தத் தடவை தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களின் இந்திய பயணத்துக்கு அதிவிசேட முக்கியத்துவம் ஒன்று இருக்கிறது. திசாநாயக்கவையும் தோழர்களையும் இந்திய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அழைத்து இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கிறது. இலங்கை அரசியல் கட்சியொன்றின் தலைவர்களை இந்திய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அழைத்துப் பேசியிருப்பது அண்மைய தசாப்தங்களில் இதுவே முதற்தடவையாக இருக்கவேண்டும்.

    திசாநாயக்கவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் கலாநிதி நிஹால் அபேசிங்க, தேசிய நிறைவேற்று குழு உறுப்பினர் பேராசிரியர் அனில் ஜயந்த ஆகியோரும் இந்தியா சென்றிருந்தனர்.

    அவர்களுடன்  இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் மற்றும் வெளியுறவு செயலாளர் வினாய் மோகன் கவாட்ரா ஆகியோர் இலங்கையின் பொருளாதாரம், அரசியல் நிலைவரம், எதிர்கால அரசியல் மற்றும் பிராந்தியப் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடியதாக செய்திகள் கூறின.

    திசாநாயக்கவுடனான சந்திப்புக்குப் பிறகு கலாநிதி ஜெய்சங்கர் ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தில் “இலங்கையின் தேசிய மக்கள் சக்தியினதும் ஜனதா விமுக்தி பெரமுனவினதும் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவை  சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி. இருதரப்பு உறவுகள், பரஸ்பர நலன்கள், இலங்கையின் பொருளாதாரச் சவால்கள், முன்னோக்கிச் செல்வதற்கான பாதை குறித்து நல்ல பேச்சுவார்த்தையை நடத்தினேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

    ஐந்து நாள் விஜயத்தின்போது தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்துக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியில் உள்ள தென்னிந்திய மாநிலமான கேரளாவுக்கும் சுற்றுலாவை மேற்கொண்டு சிந்தனைக் குழாம்கள் உட்பட பல்வேறு தரப்புகளுடனும் கலந்துரையாடினார்கள்.

    இவ்வருட பிற்பகுதியில் இரு தேசிய தேர்தல்களுக்கு இலங்கை தயாராகிவரும் நிலையில், ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக தன்னை அறிவித்திருக்கும் திசாநாயக்கவின் மக்கள் செல்வாக்கு பெருமளவுக்கு அதிகரித்திருப்பதாக தோன்றும் ஒரு நேரத்தில் இந்திய அரசாங்கம் அவரை அழைத்துப் பேசியிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.

    இரு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மக்கள் கிளர்ச்சிக்கு பின்னரான அரசியல் சூழ்நிலையைப் பயன்படுத்தி மக்கள் மத்தியில் ஆதரவைப் பெருமளவுக்கு வளர்த்துக்கொண்ட கூட்டணியாக கட்சியாக தேசிய மக்கள் சக்தி விளங்குகிறது. அதன் தலைமைக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனவின்  (ஜே.வி.பி.) பொதுக் கூட்டங்களிலும் ஊர்வலங்களிலும் மக்கள் பெருமளவில் அணிதிரண்டாலும் அந்த திரட்சி தேர்தல்களில் வாக்குகளாக மாறுவதில்லை என்ற ஒரு வரலாறு இருக்கிறது. ஆனால், அதே வரலாறு இனிமேலும் தொடரும் என்று கூறமுடியாது என்றே தோன்றுகிறது.

    மக்களால் பெரிதும் விரும்பப்படும் ஜனாதிபதி வேட்பாளரா திசாநாயக்கவே விளங்குவதாக கொழும்பை தளமாகக் கொண்டியங்கும் ‘சுகாதாரக் கொள்கைக்கான நிறுவனம்’ என்ற ஆய்வு அமைப்பு ஜனவரியில் செய்த கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்திருக்கிறது.

    ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 50 சதவீதமானவர்கள் தேசிய மக்கள் சக்தியின் தலைவருக்கே வாக்களிக்கப்போவதாக கூறியிருக்கும் அதேவேளை, 33 சதவீதமானவர்கள்  ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாகக் கூறியிருக்கிறார்கள்.

    ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வெறுமனே 9 சதவீதமானவர்கள் மாத்திரமே ஆதரிப்பதாக கருத்துக்கணிப்பு கூறுகிறது. இந்த பிந்திய ஆய்வு கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு கருத்துக் கணிப்புகளின் முடிவுகளை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது.

    தேசிய மக்கள் சக்தி அமைக்கப்பட்ட சில மாதங்களில் நடைபெற்ற 2019 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட திசாநாயக்க 3.1 சதவீத வாக்குகளையே பெறக்கூடியதாக இருந்தது. மக்கள் கிளர்ச்சிக்கு பிறகு தேசிய மக்கள் சக்தியின் ஆதரவு எவ்வளவுதான் அதிகரித்திருந்தாலும் திசாநாயக்க அடுத்த  ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறவேண்டுமானால் அவரின் வாக்குகள் அந்த மூன்று சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக அதிகரிக்கவேண்டும். அது சாத்தியமா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

    எது எவ்வாறிருந்தாலும், இலங்கையின் இன்றைய அரசியல் நிலைவரத்துக்கு மத்தியில் தேசிய மக்கள் சக்தியை புதுடில்லிக்கு உத்தியோகபூர்வமாக அழைத்துப் பேசும் அளவுக்கு முக்கியமான அரசியல் சக்தியாக இந்திய அரசாங்கம் நோக்குகிறது என்பது தெளிவானது.

    இந்திய விரோத கடந்த காலம்

    ஜே.வி.பியைப் பொறுத்தவரை அதன் ஆரம்பம் முதலிருந்தே மிகவும் வெறித்தனமான இந்திய விரோதக் கொள்கையைக் கடைப்பிடித்த வரலாற்றைக் கொண்டிருக்கிறது.

    காலஞ்சென்ற கம்யூனிஸ்ட் தலைவர் என். சண்முகதாசன் தலைமையிலான சீனச்சார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் வாலிபர் இயக்கத்தின் முக்கிய தலைவராக இருந்த ரோஹண விஜேவீர 1960 களின் பிற்பகுதியில்  கட்சியில் இருந்து வெளியேறி புதிதாக அமைத்துக்கொண்ட ஜே.வி.பியின் கொள்கைகளில் இந்திய விரோதம் முக்கியமான ஒரு கூறாக இருந்தது.

    இலங்கையின் ஏனைய சமூகங்களின் தொழிலாளர் வர்க்கத்தினருடன் ஒப்பிடும்போது மெய்யான  பாட்டாளி வர்க்கத்தினராக நோக்கக்கூடிய  தமிழர்களான இந்திய வம்சாவளி மலையக தோட்டத்தொழிலாளர்களை இந்தியாவின் ஐந்தாம் படையென்றும் இந்திய விஸ்தரிப்புவாதத்தின் கருவிகள் என்றும்  விஜேவீர வர்ணித்தார்.

    மலையக பெருந்தோட்டங்களில் தேயிலைச் செடிகளை அகற்றிவிட்டு உருளைக் கிழங்கை பயிரிடுவது குறித்து அவர் பேசியதாகவும் கூறப்பட்டது.

    1980 களின் பிற்பகுதியில் கைச்சாத்திடப்பட்ட இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கையை ‘இரண்டாவது மலைநாட்டு உடன்படிக்கை’ (Second Upcountry Pact) என்று விஜேவீர வர்ணித்ததாக இலங்கையில் இந்தியாவின் தலையீடுகள் தொடர்பில் அவரின் சிந்தனைகள் குறித்து 2019ஆம் ஆண்டில் உதேனி சமன் குமார என்ற என்பவர் எழுதிய விரிவான கட்டுரையொன்றில் பதிவு இருக்கிறது.

    கண்டி பிரதானிகளுக்கும் பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகளுக்கும் இடையில் கைச்சாத்திப்பட்ட உடன்படிக்கையே இறுதியில் முழு இலங்கையும் பிரிட்டிஷாரின் ஆட்சியின் கீழ் வருவதற்கு வழிவகுத்தது. அதுவே முதலாவது மலைநாட்டு உடன்படிக்கை எனப்படுகிறது. இந்தியாவுடனான சமாதான உடன்படிக்கையை இலங்கை முழுவதும் இந்தியாவின் ஆதிக்கத்தின் கீழ் வருவதற்கு வழிவகுக்கக்கூடியது என்று விஜேவீர சிங்கள மக்களுக்கு கூறினார் என்பதை இதில் இருந்து புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.

    அந்த சமாதான உடன்படிக்கையை அடுத்து இரண்டாவது ஆயுதக்கிளர்ச்சியை முன்னெடுத்த ஜே.வி.பி. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணமுடியும் என்ற நம்பிக்கையில் மாகாண சபை முறையை ஆதரித்த தென்னிலங்கை அரசியல்வாதிகள் பலரை படுகொலை செய்தது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் கணவர் விஜய குமாரதுங்கவும் அவர்களில் ஒருவர். ஆனால், விஜேவீரவின் மறைவுக்கு பிறகு சில வருடங்கள் கழித்து ஜே.வி.பி. தேர்தல்களில் போட்டியிட்டு மாகாண சபைகளில் அங்கம் வகித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆனால், ஜே.வி.பியும் அதன் நவீன அவதாரமான தேசிய மக்கள் சக்தியும் மாகாண சபை முறைக்கு வழிவகுத்த அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றன. அந்த திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு தனக்கு இருக்கும் விருப்பத்தை ஜனாதிபதி விக்கிரமசிங்க கடந்த வருட முற்பகுதியில்  வெளியிட்டபோது  கடும்போக்கு சிங்கள பௌத்த தேசியவாத சக்திகளுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத அளவுக்கு தேசிய மக்கள் சக்தி அதை எதிர்த்தது.

    ஆனால், தற்போதைய புவிசார் அரசியல் நிலைவரங்களுக்கு மத்தியில் ஜே.வி.பியின் இந்திய விரோதக் கடந்தகாலத்தை மோடி அரசாங்கம் பொருட்படுத்தவில்லை. தேசிய மக்கள் சக்தியும் அதன் இந்தியா தொடர்பிலான அதன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது.

    இந்தியாவின் முக்கியமான ஆங்கிலப் பத்திரிகைகளில் ஒன்றான சென்னை இந்துவின் கொழும்பு செய்தியாளர் மீரா ஸ்ரீனிவாசனுக்கு கடந்த டிசம்பரில் திசாநாயக்க வழங்கிய நேர்காணலில் இலங்கையின் நெருங்கிய அயல்நாடான இந்தியா முக்கியமான அரசியல் மற்றும் பொருளாதார மையமாக மாறிவிட்டது என்றும் அரசியல், பொருளாதாரத் தீர்மானங்களை எடுக்கும்போது அவை இந்தியாவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை எப்போதும் கவனத்திற்கொண்டே செயற்படப்போவதாகவும் கூறினார்.

    சீனாவுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் இந்திய விஜயத்தின் பின்னர் சீனாவை எவ்வாறு கையாளுவார்கள் என்பது முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியதாகும்.

    கடந்த வாரம் கொழும்பு ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரியவிடம் அவரது கட்சி வல்லரசுகளுடனான உறவுகளை எவ்வாறு கையாளும் என்று கேள்வியழுப்பப்பட்டது.

    அதற்கு அவர், “எமக்கு சிறப்பான முறையில் பொருத்தமாக அமையக்கூடிய நிகழ்ச்சித்திட்டத்தின் அடிப்படையிலேயே நாம் எந்த நாட்டுடனும் விவகாரங்களைக் கையாளவேண்டும். சீனாவோ, இந்தியாவோ அல்லது அமெரிக்காவோ அவர்களுக்கென்று ஒரு நிகழ்ச்சித்திட்டம் இல்லாமல் எம்முடன் விவகாரங்களைக் கையாள வரப்போவதில்லை. எமக்கென்று ஒரு நிகழ்ச்சித்திட்டம் இல்லாவிட்டால் அவர்களின் நிகழ்ச்சித் திட்டத்தின் பிரகாரமே நாம் செயற்படவேண்டியிருக்கும்” என்று பதிலளித்தார்.

    சீனாவின் வியூகங்கள் பற்றிய அக்கறை 

    இலங்கை உட்பட இந்து சமுத்திரத்தின் கரையோர நாடுகளில் சீனா அதன் செல்வாக்கைத் திணிக்கும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கியிருக்கும் பினபுலத்தில், இந்திய வெளியுறவு அமைச்சரும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் வெளியுறவுச் செயலாளரும் தங்களது நாட்டின் அக்கறைகளை தேசிய மக்கள் சக்தியின் தலைவரின் கவனத்துக்குக் கொண்டுவருவந்திருப்பார்கள் என்பது நிச்சயம்.

    இலங்கையில் இந்தியாவின் நலன்கள் உறுதிசெய்யப்படுவதை ஆதரிக்கக்கூடிய மாற்றுக் கட்சியொன்றை புதுடில்லி தேடுவதன் அறிகுறியே தேசிய மக்கள் சக்திக்கு நீட்டப்பட்ட நேசக்கரமாகும் என்று இலங்கையில் சில அவதானிகள் உணருகிறார்கள்.

    ஆனால், திசாநாயக்கவின் புதுடில்லி விஜயத்தை விக்கிரமசிங்க அரசாங்கம் முழுமையாக ஆதரிக்கிறது போன்று தெரிகிறது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவருவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவித் திட்டத்துக்கு தேசிய மக்கள் சக்தியின் ஒத்துழைப்பைப் பெறுவதில்  ஜனாதிபதி அக்கறையாக இருக்கிறார். இது இந்திய நலன்களுடனும் ஒத்துப்போகக்கூடியது  என்று கொழும்பை மையமாகக்கொண்டியங்கும் இந்தியப்  பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான பி.கே. பாலச்சந்திரன் கூறுகிறார்.

    பொருளாதார மறுசீரமைப்பு செயற்திட்டத்துக்கு சகல கட்சிகளினதும் ஒத்துழைப்பை நாடிநிற்பதாக நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை ஆரம்பித்துவைத்த பிறகு  கொள்கைவிளக்க உரையில் விக்கிரமசிங்க கூறினார்.

    தமிழர்களின் மனநிலை

    அதேவேளை, சமஷ்டி அரசாங்க முறையையோ அல்லது குறைந்தபட்சம் 13ஆவது திருத்தத்தையோ கூட ஆதரிக்காத தேசிய மக்கள் சக்தியுடனான இந்தியாவின் ஊடாட்டத்தை தமிழர்கள் விரும்பமாட்டார்கள் என்பது நிச்சயம். ஆனால், இந்தியாவுடன் ஆரம்பித்திருக்கும் நெருக்கம் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுதொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடுகளில் தளர்வுகளை ஏற்படுத்துவதற்கு உதவவும் கூடும் என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுவதாகவும் பாலச்சந்திரன் கூறுகிறார்.

    ஆனால், தற்போதைய சூழ்நிலையில் இனப்பிரச்சினையுடன் தொடர்புடைய விவகாரங்கைளை திசாநாயக்க குழுவினருடன் இந்திய அதிகாரிகள் கலந்துரையாடியிருப்பார்கள் என்று பெரும்பாலும்  எதிர்பார்ப்பதற்கில்லை.

    இது இவ்வாறிருக்க, இந்தியா நேசக்கரத்தை நீட்டியிருக்கும் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தென்னிலங்கையில் உள்ள இந்திய விரோத அரசியல் சக்திகள் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக பிரசாரங்களை முன்னெடுக்கத் தொடங்கியிருப்பதையும்  காணக்கூடியதாக இருக்கிறது.

    பெரும்பாலான இலங்கையர்கள் எதிர்க்கும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு ஆதரவைப் பெறும் நோக்குடனேயே தேசிய மக்கள் சக்திக்கு இந்தியா அழைப்பை அனுப்பியதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கூறியிருக்கிறார்.

    தங்களுக்குக் கிடைத்திருக்கும் தகவல்களின்படி இந்தியா அந்த உடன்படிக்கையில் விரைவில் கைச்சாத்திடவிருக்கிறது என்று செய்தியாளர்களிடம் கூறிய வீரவன்ச, இலங்கையின் வர்த்தகத்தையும் தொழிற்சந்தையையும் இந்தியாவுக்கு திறந்துவிடுவதே அந்த உடன்படிக்கையின் நோக்கம். இலங்கையை தனது காலனி நாடாக மாற்றவிரும்பும் இந்தியா சகல அரசியல் கட்சிகளையும் பூனைக்குட்டிகள் போன்று கட்டுப்படுத்தி வைத்திருக்க விரும்புகிறது என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

    ஸ்ரீலங்கா ரெலிகோமுடன் இந்தியா உடன்பாடு ஒன்றுக்கு வருவதற்கான சாத்தியம் இருக்கும் பின்புலத்திலேயே தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் புதுடில்லிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பொதுஜன பெரமுனவின் தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான அனில் ஹேவத்த நெத்திக்குமார  கூறியிருக்கிறார்.

    தேசிய மக்கள் சக்தி தலைவர்களின் இந்திய விஜயத்துக்கு எதிரான பிரசாரங்கள் தேசிய தேர்தல்களுக்கு இலங்கை தயாராகும் சூழ்நிலையில் புதிய இந்திய விரோத உணர்வு அலைக்கு வழிவகுக்கக்கூடிய சாத்தியம் இருப்பதாக சில அவதானிகள் கருதுகிறார்கள்.

    இலங்கையில் இந்திய முதலீடுகளுக்கு எதிராக குரலெழுப்பிவந்த தேசிய மக்கள் சக்தி இனிமேல் அத்தகைய முதலீடுகள் தொடர்பில் எத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் என்பதும் இந்திய விஜயம் தொடர்பில் தேசியவாத சக்திகளினால் முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு எவ்வாறு பதிலளிக்கும் என்பதும் முக்கியமான கேள்விகள்.

    இந்திய விஜயம் தேசிய மக்கள் சக்திக்கும் அதன் தலைவர்களுக்கும் பிராந்திய மட்டத்தில் ஒரு பெரிய அரசியல் மற்றும் இராஜதந்திர வெற்றி என்று நோக்கப்படுகின்ற போதிலும், இலங்கையின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் மிக முக்கியமான ஒரு அரசியல் சக்தியாக அவர்களை இந்தியா நோக்குவது எந்தளவுக்கு விவேகமானது, பொருத்தமானது என்ற கேள்வி பல மட்டங்களில் எழுப்பப்படுகிறது.

    Thanabalasingam-e1660548844481.jpeg?resiவீரகத்தி தனபாலசிங்கம்
     

    https://maatram.org/?p=11249

     

  15. “அன்னம்” சின்னத்தில் களம் இறங்க ரணில் திட்டம்? கட்சி சாா்பற்ற வேட்பாளராக போட்டி

    March 3, 2024
     

    ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுக் கூட்டணியில் ‘அன்னம்’ சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பு செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.

    ஜனாதிபதித் தேர்தலில் தனது நட்புக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேசிய வேட்பாளராக போட்டியிடுவதே ரணில் விக்கிரமசிங்கவின் விருப்பமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    ரணில் விக்கிரமசிங்க சார்ந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி தற்போது நிமல் லான்சா குழு மற்றும் பொதுஜன பெரமுன கட்சியைச் சிரேஷ்டர்கள் குழுவின் தலைமையிலான பல சிறு கட்சிகளின் ஆதரவைப் பெற திட்டமிட்டுள்ளது.

    அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் போன்றவர்கள் ஏற்கனவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நெருங்கிய தொடர்புள்ள பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினா்கள் சிலரையும் தனது பக்கத்துக்குக் கொண்டுவரும் முயற்சியிலும் ரணில் தரப்பினா் ஈடுபட்ள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன் மூலமாக கட்சி சாா்பற்ற ஒரு வேட்பாளராககக் களமிறங்குவதற்குத்தான் அவா் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகின்றது.
     

    https://www.ilakku.org/அன்னம்-சின்னத்தில்-களம/

  16. பெருந்திரளானோரின் கண்ணீருடன் யாழ்ப்பாணம் நோக்கி பயணமாகும் சாந்தனின் பூதவுடல்

    Screenshot-2024-03-03-at-11.45.50%E2%80%

    இந்தியாவில் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல் பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் இன்று யாழ்ப்பாணம் நோக்கி கொண்டு செல்லப்படுகின்றது.

    முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நிலையில் விடுதலை செய்யப்பட்டு உடல் நலக் குறைவால் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று காலை வவுனியா போராளிகள் நலன்புரி சங்கத்திற்கு முன்பாகவும்,பழைய பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    இதனைதொடர்ந்து காலை 9 மணிக்கு மாங்குளத்திலும், காலை 10.30 இற்கு கிளிநொச்சியிலும் தொடர்ந்து 11.30 இற்கு இத்தாவில் பகுதியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு,கொடிகாமம் ஊடாக பூதவுடல் எடுத்துச்செல்லப்பட்டு பிற்பகல் 2 மணிமுதல் வல்வெட்டித்துறை தீருவிலில் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், இன்றைய தினம் சாந்தனின் புகழுடல் காலை 8:00 மணிக்கு வவுனியா பழைய பஸ் நிலையத்தில் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ள அதே வேளையில் தொடர்ந்து காலை 9:00 மணிக்கு மாங்குளத்திலும் காலை 10:30 ற்கு கிளிநொச்சியிலும் அதனைத்தொடர்ந்து கொடிகாமம் ஊடாக புகழுடல் எடுத்துச்செல்லப்பட்டு பிற்பகல் 2: 00 மணி தொடக்கம் 3:00 மணி வரை வல்வெட்டித்துறை தீருவிலில் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படும் என ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேவேளை நாளைய தினம் கேளிக்கை நிகழ்வுகளை தவிர்த்து அனைத்து இடங்களிலும் கறுப்புக்கொடிகளை கட்டி தமிழ்த்தேசிய துக்கநாளாக அனுஷ்டிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இதேவேளை சாந்தனின் இறுதிக்கிரியை (திங்கட்கிழமை) நாளை காலை 10 மணிக்கு அவரது பிறந்த மண்ணான உடுப்பிட்டியில் நடைபெறவுள்ளது.

    இந்த இறுதி கிரியையில் உறவினர்கள் ஊர் மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் அஞ்சலி செலுத்துவதற்கு இடமளிக்குமாறு குடும்பத்தார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
     

    https://akkinikkunchu.com/?p=270107

  17. மத்திய கல்லூரி பெண் அதிபர் நியமனம் இரத்து!

    1251534651.jpg

    மாதவன்)

    யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு புதிதாக நியமன கடிதம் வழங்கப்பட்ட பெண் அதிபராக திருமதி செல்வ குணபாலனின் நியமனத்தை தற்காலிகமாக இடம் நிறுத்துவதாக கல்வி அமைச்சின் செயலாளர் வசந்த பெரகரா எழுத்து மூலமான கடிதத்தை அனுப்பியுள்ளார்.

    குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது செயலாளரினால் (22.02.2024) ல் திகதி இடப்பட்ட Ese/App/SLPS/04/11/2023 கடிதத்தின் பிரகாரம் மத்திய கல்லூரி அதிபராக நியமிக்கப்பட்ட உங்கள் நியமனத்தை தற்காலிகமாக இடை நிறுத்துவதாக தெரிவித்துக் கொள்கிறேன்.

    பொதுச் சேவை ஆணைக்குழுவின் கீழ்  நிறுவப்பட்ட கல்வி சேவை குழு வழங்கிய அறிவுறுத்தலின் பிரகாரம் கல்வி அமைச்சின் செயலாளர் குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.(ப)
     

    https://newuthayan.com/article/மத்திய_கல்லூரி_பெண்_அதிபர்_நியமனம்_இரத்து!

  18. 13 hours ago, ஏராளன் said:

    இந்த ஆய்வை நடத்த முடிக்க ஐந்து வருடங்கள் சென்றது. இலங்கைத் தமிழர்கள் (88), சிங்களவர்கள் (129 ), இலங்கையைச் சேர்ந்த இந்தியத் தமிழர்கள் (56),  இந்தியாவைச் சேர்ந்த இந்தியத் தமிழர்கள்  (562 ) ஆகியோரிடமிருந்து 834 மரபணு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

    Sample size போதாது. இப்படியான ஆய்வுகளை முறையான Statistical methods ஐப் பாவித்துச் செய்யவேண்டும்.  எனினும், சிங்களவர்கள் இந்தியாவின் வடமேற்கு பகுதியில் இருப்போருக்கு நெருக்கமானவர்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது. 

    தவிர, 88 இலங்கைத் தமிழர்களும் முன்னைய போர்களில் சிறைபிடிக்கப்பட்ட சிங்களப் போர்வீரர்களின் வம்சாவழியினராக இருக்கலாம்😃

     

  19. வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் மகா சிவராத்திரியினை தடுத்து நிறுத்த சதித்திட்டம்!

    9-1.jpg

    வடக்கில் வவுனியா மாவட்டத்தில் உள்ள வெடுக்கு நாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் எதிர்வரும் 8 ஆம் திகதி மகா சிவராத்திரி வழிபாட்டில் சைவ மக்கள் ஈடுபடவுள்ளார்கள் இதனை தடுத்து நிறுத்தும் நோக்கில் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பௌத்த பீடம் ஒன்று பிக்கு மார்கள் இணைந்து செயற்படவுள்ளதாக அவர்களின் முகநூலில் பதிவுகளை செய்து வருகின்றார்கள் என்று தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தி.தவபாலன் தெரிவித்துள்ளார்.

    முல்லைத்தீவு மாவட்டதில் நேற்றையதினம்(1) நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

    தமிழர்களின் தீர்வு

    இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் தமிழர்களின் நில ஆக்கிரமிப்புக்களில் குருந்தூர் மலையாக இருக்கலாம் வெடுக்குநாறி மலையாக இருக்கலாம் எந்த விடயங்களாக இருந்தாலும் தமிழர் தேசத்தில் நாங்கள் போராடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

    மேலும் சிங்கள பௌத்த மனநிலை உள்ள தலைவர்கள் தமிழர்களின் தீர்வினை தாம்பாளத்தில் வைத்து தரமாட்டார்கள் என்று எங்கள் தலைவர்கள் சொல்லி இருக்கின்றார்கள் அதை காலம் உணர்த்திக்கொண்டிருக்கின்றது.

    ஆகவே எவராக இருந்தாலும் தமிழர்களின் தீர்வினை தருகின்ற மனநிலையில் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
     

     

    https://akkinikkunchu.com/?p=270032

  20. சாந்தனின் மறைவுக்கு அனுதாபம் வெளியிடாத தமிழ்த் தேசிய கட்சிகள்

    Oruvan

    சந்தனின் மறைவுக்குத் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்த்தேசியக் கட்சிகள் இதுவரை அனுதாபம் எதனையும் வெளியிடவில்லை. 

    தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ரூவிற்றர் தளத்தில் அனுதாபம் வெளியிட்டிருக்கிறார். 

    நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலும் அவர் அனுதாபம் தெரிவித்திருந்தார்.

    தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தனிப்பட்ட முறையில் அனுதாப அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

    ஆனால் கட்சிகளாகவோ அல்லது தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் இணைந்த கூட்டு அனுதாபமாகவோ இதுவரை அறிக்கைகள் எதுவும் வெளியிடப்படவில்லை. 

    யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தனர். இந்தியா மீது குற்றம் சுமத்திப்பட்டிருந்த அந்த அறிக்கையில் ஈழத்தமிழர் மீதான அரசியல் பழிவாங்கல் குறித்தான பின்புலங்கள் வெளிப்பட்டிருந்தன. 

    மாணவர்களின் அறிக்கையில் காந்தி தேசத்தின் செயற்பாடுகள் பற்றிய விமர்சனங்களும் உள்ளடங்கிருந்தன.

    சென்னையில் இருந்து கொழும்புக்குக் கொண்டுவரப்பட்ட சாந்தனின் பூதவுடலை வவுனியாவில் வைத்து அல்லது யாழ்ப்பாணத்தில் வைத்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பொறுப்பேற்க விரும்பியிருந்தனர்.

    ஆனாலும் சாந்தனின் பூதவுடலைப் பொறுப்பேற்று அஞ்சலி நிகழ்வுகளையும் செய்யும் ஏற்பாடுகளை சாந்தனின் குடும்ப உறுப்பினர்கள், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் முருகையா கோமகனிடம் கையளித்துள்ளனர்.

    இது தொடர்பாக ஒருவன் செய்திச் சேவையிடம் கருத்து வெளியிட்ட கோமகன், பொதுமக்கள் சாந்தனின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தும் ஏற்பாடுகளைத் தமது அமைப்பு மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். 

    அதேவேளை தமிழ்த்தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் எவரும் அஞ்சலி நிகழ்வில் உரையாற்ற இடமளிக்க முடியாதென சாந்தனின் குடும்ப உறுப்பினர்கள் கூறியதாகவும் அறியமுடிகின்றது. 

    கட்டுநாயக்க விமான நிலையத்தில் சாந்தனின் சட்டத்தரணி புகழேந்தியை வரவேற்ற கோமகன், அவருடன் இணைந்து சாந்தனின் பூதவுடலை பொறுப்பேற்றார். 

    இலங்கை ஒற்றை ஆட்சி அரசின் சட்டவிதிகளுக்கு அமைவாக சாந்தனின் பூதவுடல் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையிடம் ஒப்படைக்கப்படும் வரை அங்கு நின்ற கோமகன், அஞ்சலி நிகழ்வு ஏற்பாடுகளுக்காக நேற்றிரவு யாழ்ப்பாணம் சென்றிருந்தார்.
     

    https://oruvan.com/sri-lanka/2024/03/02/tamil-politician-not-tribute-to-santhan

  21. 55 minutes ago, ஈழப்பிரியன் said:

    என்ன இப்படி ஒரு குண்டைத் தூக்கி போடுகிறீர்கள்.

    திகதிகளும், போட்டி மைதானங்களும் இல்லாவிட்டாலும் பிரச்சினை இல்லை. ஆனால் அணிகளின் போட்டி  விபரங்கள் தேவை. எங்காவது கிடைத்தால் இந்த வாரம் தொடங்கலாம்

  22. 10 minutes ago, Kavi arunasalam said:

    காந்தி யப்பானுக்கு போயிருந்த போது எடுத்த படம். எதற்கு குளப்பம்? புதிதாக ஒன்றை இணைத்து விடுகிறேன்

    காந்தியின் பிரமச்சரியப் பரிசோதனைகளை அண்மையில் ஒரு புத்தகத்தில் படித்தேன். அத்தோடு அவர் மீது இருந்த கொஞ்சநஞ்ச மரியாதையும் போய்விட்டது.

     

    • Like 1
    • Haha 2
  23. On 22/12/2023 at 07:38, கிருபன் said:

    @ஈழப்பிரியன் ஐயா,

    போட்டிகளுக்கான அட்டவணை எப்போது வருகின்றதோ அப்போது பார்க்கலாம். குறைந்தது பத்துபேர் கலந்துகொண்டால்தான் நடத்தமுடியும்

    போட்டிகளின் முழுமையான அட்டவணையை வெளியிடாமல் 21 மட்சுகளின் அட்டவணையை மாத்திரம் வெளியிட்டுள்ளமையால் இந்தமுறை யாழ் களத்தில் ஐபிஎல் போட்டியை நடத்துவது கடினம். 

    • Sad 1
  24. மீண்டும் பிரதே பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் சாந்தனின் உடல்

    Oruvan

    முன்னாள் போராளி சாந்தனின் உடலானது இலங்கையில் மீண்டும் பிரதேச பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதனால், ஞாயிற்றுக்கிழமை (03) இறுதிக் கிரியைகள் இடம்பெறுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    பூதவுடலை எடுத்துச் செல்வதில் தாமதம்

    சாந்தனின் பூதவுடல் கட்டுநாயக்க சர்வதேச விமான நீண்ட இழுபறிகளின் பின்னராக உறவினரிடம் கையளிக்கப்பட்டது.

    எனினும் உடலம் மீதான பிரேத பரிசோதனைக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதால் யாழ்ப்பாணத்துக்கு பூதவுடலை எடுத்துச் செல்வதில் தாமதமாகியுள்ளது.

    தற்போது பிரேத பரிசோதனைக்காக நீர் கொழும்பு வைத்தியசாலையில் பூதவுடல் கையளிக்கப்பட்டுள்ளது. 

    பிரேத பரிசோதனைகளின் பின்னர் உடலத்தை யாழ்ப்பாணத்துக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சாந்தனின் உறவினர் ஒருவன் செய்தி சேவைக்குத் தெரிவித்தனர்.
     

    https://oruvan.com/sri-lanka/2024/03/01/the-plane-carrying-shantans-lotus-leaves

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.