Jump to content

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    33690
  • Joined

  • Days Won

    157

Posts posted by கிருபன்

  1. தமிழரசுக் கட்சிக்கு எதிரான நீதிமன்ற தடை வழக்கு விசாரணை

    இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு தொடர்பான வழக்கானது இன்றையதினம் திருகோணமலை மற்றும் யாழ்ப்பாண நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

    குறித்த வழக்குத்தாக்கலானது மாவை சேனாதிராஜா, சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், குகதாசன், குலநாயகம், யோகேஸ்வரன் ஆகிய ஆறு பேருக்கு எதிராகவே செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், குறித்த வழக்கனது கடந்த 15 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது பெப்ரவரி 27ஆம் திகதி வரை தேசிய மாநாட்டை நடத்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில் வழக்கனது இன்றைய தினம் யாழ் மற்றும் திருகோணமலை நீதிமன்றங்களால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 

    திருகோணமலை மாவட்ட நீதிமன்றம்

    கடந்த 19 ஆம் திகதி இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு இடம்பெறவிருந்த நிலையில் திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இம்மாநாட்டிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறிப்பித்தது.

    தமிழரசுக் கட்சிக்கு எதிரான நீதிமன்ற தடை இன்று விசாரணைக்கு | Interim Restraining Order Issued Against Tna

    திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் இவ்வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது 15.02.2024 முதல் எதிர்வரும் 27.02.2024 ஆம் திகதி வரை குறித்த மாநாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது.

    இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர் சந்திரசேகரம் பரா தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இவ்வாறு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இவ்வழக்கின் மனுதாரரின் பதிவு செய்யப்பட்ட சட்டத்தரணி ஐஸ்வர்யா சிவக்குமாருடன் அதிபர் சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்ணம் மற்றும் சட்டத்தரணி புரந்தன் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

    தமிழரசுக் கட்சிக்கு எதிரான நீதிமன்ற தடை இன்று விசாரணைக்கு | Interim Restraining Order Issued Against Tna

    இதன்போது கடந்த 21.01.2024மற்றும் 27.01.2024ஆம் திகதிகளில் நடைபெற்ற பொதுச்சபை கூட்டங்ளும், குறித்த இரண்டு கூட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தெரிவுகளும் சட்டத்திற்கு முரணானதும் செல்லுபடியற்றதும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

    யாழ்ப்பாண நீதிமன்றம்

    அனுமதிக்கின்ற தொகையை விட அதிகளவான உறுப்பினர்கள் பொதுச்சபை கூட்டங்களில் பங்குபற்றி குறித்த தெரிவுகளின் போது வாக்களித்துள்ளமையினால் குறித்த கூட்டம் சட்டமுரணானது எனவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

    தமிழரசுக் கட்சிக்கு எதிரான நீதிமன்ற தடை இன்று விசாரணைக்கு | Interim Restraining Order Issued Against Tna

    குறித்த சமர்ப்பணங்களின் அடிப்படையில் கடந்த 19ஆம் திகதி நடைபெற இருந்த மாநாட்டிற்கு திருகோணமலையில் மாவட்ட நீதிமன்றம் இரு வாரங்களுக்கு இடைக்கால தடை உத்தரவு விதித்தது.

    மேலும், இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 29ஆம் திகதி திறந்த நீதிமன்றில் அழைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அத்துடன் இந்த வழக்கில் மாவை சேனாதிராஜா, சி. ஸ்ரீதரன், எம்.சுமந்திரன், சண்முகம் குகதாசன் உட்பட தமிழரசு கட்சியின் ஏழு முக்கியஸ்தர்கள் எதிர் மனுதாரர்களாக பெயர் குறிப்பிடப்பட்டு அவர்களுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

    இதேவேளை, தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு தடைகோரி யாழ்ப்பாண நீதிமன்றத்திலும் பீற்றர் இளஞ்செழியனால் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

    இதன்படி தமிழரசுகக் கட்சிக்கு எதிராக நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையுத்தரவை கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையாக எதிர்கொள்ளவோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பிப்பினர் மாவை சேனாதிராஜா உறுதியளித்துள்ளார் கிளிநொச்சியில் கடந்த 23.02.2024 அன்று இடம்பெற்ற கட்சியின் கலந்துரையாடளில் சுட்டிக்காட்டியிருந்தார்.

    மேலும் 29 ஆம் திகதிக்கு முன்னர் ஒற்றுமையாக எதிர்கொண்டு தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க கூடிய வகையிலான நடைமுறை தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம் என்றும் கூறியுள்ளார்.

    அத்தோடு, கட்சியின் சிரேஷ்ட வழக்கறிஞ்சர்களுடன் கலந்துரையாடி இந்த வழக்கு தொடர்பில் நிலையான தீர்வை பெற்றுக்கொள்ள மற்றும் நீதிமன்றினை அணுகுதல் தொடர்பில் ஆராய்ந்துள்ளோம் என்றார்.

    https://tamilwin.com/article/interim-restraining-order-issued-against-tna-1709183990#google_vignette

     

  2. வடமாகாண தனியார் பேருந்து சேவைகள் முற்றாக இடைநிறுத்தம்!

    978823095.jpg

    இனியபாரதி.

    யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை(29) உள்ளூர் மற்றும் நெடுந்தூர தனியார் பேருந்து சேவைகள் அனைத்தும் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

    மேலும்,  யாழ்ப்பாணத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு சேவையில் ஈடுபடும்  பேருந்துகள், அத்தோடு வெளி மாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

    நேற்று யாழ்ப்பாணத்தில் உள்ளூர் தனியார் பேருந்து சேவைகள் சேவையை முன்னெடுத்த நிலையில் நொடுந்தூர பேருந்து சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டிருந்தன. ஆனால் இன்று உள்ளூர் மற்றும் நெடுந்தூர பேருந்து சேவைகள் அனைத்தும் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாததால் நேற்று(28) முதல் தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது எனவும் வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தலைவர் சி.சிவபரன் நேற்று முன்தினம்(27) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் இரண்டாவது நாளாகவும் தனியார் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.

     

    https://newuthayan.com/article/வடமாகாண_தனியார்_பேருந்து_சேவைகள்_முற்றாக_இடைநிறுத்தம்!

  3. சாந்தன் பற்றிய சிறு குறிப்பு:           (வரலாறுகள் அறியவேண்டும் என்பதற்காக)

    சொந்தப்பெயர்: தில்லையம்பலம் சுதேந்திரராசா.
    வேறு பெயர்:சாந்தன்
    சொந்த ஊர்: உடுப்பிட்டி, யாழ்ப்பாணம்.
    பிறந்த ஆண்டு:-1969
    ராஜீவ் கொலை சம்பவம் நடக்கும்போது வயது:22
    இறக்கும்போது வயது:55.

    ஏன்கைது செய்யப்பட்டார்.?

    1991 மே 21 ஸ்ரீபெரும்புதூரில் நிகழ்ந்த ராஜீவ் காந்தி கொலை சம்பவத்தில் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்ட நிலையில்,              

    1991 ஜூலை 22 ஆம் தேதி சாந்தன் கைது செய்யப்பட்டார். இவருடன் கைது செய்யப்பட்ட 26 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில்,                             

    1998 ஜனவரி 28 ஆம் தேதி, 26 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கியது பூந்தமல்லி தடா நீதிமன்றம்.

    அதனைத் தொடர்ந்து 1999 ஆம் ஆண்டு மே 11 தேதி 26 பேரில் 19 பேர் விடுவிக்கப்பட்டனர்.                               

    ஆனால் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய நான்கு பேருக்கு தூக்கு உறுதி செய்யப்பட்டது.                               

    1999 அக்டோபர் 8 ஆம் தேதி தூக்கு தண்டனையை குறைக்கக் கோரிய சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.                   

    1999 அக்டோபர் 10ஆம் தேதி நால்வரும் ஆளுநருக்கு கருணை மனு அனுப்பினர்.               

    1999 அக்டோபர் 29ஆம் தேதி அப்போதைய ஆளுநர் பாத்திமா பீவி கருணை மனுக்களை தள்ளுபடி செய்தார்.

    1999 நவம்பர் 25 ஆம் தேதி ஆளுநரின் உத்தரவை இரத்து செய்து அமைச்சரவை முடிவு மீது ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவு கொடுக்கப்பட்டது.                

    2000ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.                    

    ஆனால் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்படவில்லை.

    2000 ஏப்ரல் 26ஆம் தேதி பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட மூவரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினர்.                                                          

    குடியரசுத் தலவர்களாக இருந்த கே.ஆர்.நாராயணன் அவருக்குப் பிறகு வந்த ஏ.பி.ஜே. அப்துல்கலாம் ஆகியோர் கருணை மனுக்களின் மீது முடிவு எடுக்காமல் கிடப்பில் போட்டனர்.

    அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவராக இருந்த பிரதீபா பாட்டீல் 2011 ஆகஸ்ட் 12ஆம் தேதி கருணை மனுக்களை தள்ளுபடி செய்து அறிவிப்பு வெளியிட்டார். 

    அதன் விளைவாக தமிழ்நாட்டில் அதனைக் கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடந்தது.

    2014 பிப்ரவரி 18ஆம் தேதி பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து சதாசிவம் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது.

    2014 பிப்ரவரி 19ஆம் தேதி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கிய கைதிகள் விடுதலை என ஜெயலலிதா அறிவித்திருந்தார்.    

    2015 டிசம்பர் 2 மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் அவர்களை விடுவிக்க முடியாது என நீதிபதி இப்ராஹீம் கலிபுல்லா அமர்வு தீர்ப்பளித்தது.

    2016 மார்ச் 2 ஆம் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிக்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியிருந்தது. 

    2018 மார்ச் 6, 7 பேரை விடுவிப்பு தொடர்பாக ஆளுநர் முடிவெடுக்கலாம் என ரஞ்சன் கோகாய் அமர்வு தீர்ப்பளித்தது.                             

    2018 டிசம்பர் 6ஆம் தேதி 161 சட்ட விதிப்படி ஆளுநர் இறுதி முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் அதிகாரம் வழங்கியது.

    அதனைத் தொடர்ந்து பேரறிவாளன் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நிலையில் சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.                                       

    ஆனால் அவர்களில் பேரறிவாளனைத் தவிர மற்றவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள். அதனால் அவர்கள் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தனர்.                                    

     வரலாற்றில் இடம்பிடித்த துயர சம்பவமான ராஜீவ் கொலை வழக்கில், கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட 7 பேரில், சாந்தன் சொந்த நாடு திரும்பாமலேயே 55, வயதில் உயிரிழந்துள்ளார்.

    22, வயது இளைஞரான சாந்தன் 1991, ல் சென்னை சென்றவர் 32, வருடங்கள் இந்திய சிறையில் வதைபட்டு 53, வயதில் விடுதலை பெற்று 55, வயதில் மரணித்தார் என்பதே துயரமான செய்தி…!

    -பா.அரியநேத்திரன்-
    29/02/2024

  4. சாந்தனின் மரணத்தில் சந்தேகமா?

    Oruvan

    சாந்தனின் மரணம் கல்லீரல் பாதிப்பினால் ஏற்பட்ட இயற்கையான மரணம் என அவரது சட்டத்தரணி புகழேந்தி “ஒருவன்” செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார். 

    சாந்தனின் மரணம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் சந்தேகம் வெளியிட்டுவரும் நிலையில் சட்டத்தரணி புகழேந்தி விளக்கமளித்துள்ளார். 

    உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த சாந்தன், சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

    சாந்தனின் மரணம் படுகொலை என தாம் கூறியதாக வெளிவரும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும், தாம் அத்தகைய ஒரு கருத்தினை தெரிவிக்கவில்லை எனவும் சட்டத்தரணி புகழேந்தி குறிப்பிட்டுள்ளார். 

    மேலும் சாந்தனின் பூதவுடல் நாளை வியாழக்கிழமை அல்லது நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்படும் எனவும் சட்டத்தரணி புகழேந்தி குறிப்பிட்டுள்ளார்.
     

    https://oruvan.com/sri-lanka/2024/02/28/is-there-any-doubt-about-santhans-death-attorney-at-law-pugazhendhi-explained

  5. தமிழரசுக்கட்சியை விமர்சிக்கலாமா?

    தமிழரசுக்கட்சியை விமர்சிக்கலாமா?

    — கருணாகரன் —

    “தமிழரசுக் கட்சியைப் பற்றி தொடர்ந்து எதிர்மறையாகவே எழுதி வருகிறீர்கள். ஆனால் தமிழ் மக்களுடைய பேராதரவைப் பெற்றதாகவும் 75 ஆண்டுகாலப் பாரம்பரியத்தைக் கொண்டதாகவும் தமிழரசுக் கட்சிதானே உள்ளது! அதுமட்டுமல்ல, ஒப்பீட்டளவில் உட்கட்சி ஜனநாயகத்தைக் கொண்டிருக்கும் தமிழ்க்கட்சியும் அதுதான். அண்மையில் நடந்த தலைமைக்கான தேர்தலே இதற்கொரு உதாரணம். இப்படியெல்லாம் இருக்கும்போது எப்படி நீங்கள் அந்தக் கட்சியைக் குறைத்து மதிப்பிட முடியும்?” என்று கேட்கிறார் நண்பர் ஒருவர். 

         கூடவே தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரான சிவஞானம் சிறிதரனையும் அவருடைய தலைமைத்துவத்தையும்  நான் உட்படப் பலரும் அவசரப்பட்டு விமர்சித்துள்ளதாகவும் குற்றம் சாட்டுகிறார். இத்தகைய அபிப்பிராயத்தை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ‘ஈழநாடு’ பத்திரிகையும் தெரிவித்திருந்தது.  

    நண்பருடைய கேள்வியில் சில நியாயமுண்டு. அல்லது அதற்கான தருக்க உண்மையுண்டு. இதை நாம் சற்று ஆழமாகவும் விரிவாகவும் நோக்க வேண்டும்.

    முதலில் தமிழரசுக் கட்சியைப் பற்றிப் பார்க்கலாம்.

    தமிழரசுக் கட்சிக்கு வடக்குக் கிழக்கில் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் உண்டு. (ஏனைய கட்சிகளுக்கு முழு மாவட்டங்களிலும் உறுப்பினர்களில்லை). கூடுதலான மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டுள்ள கட்சியும் அதுதான். 75 ஆண்டுகால வரலாற்றையும் அதற்கான கட்டமைப்பையும் கொண்ட கட்சியும் அதுதான். ஜனநாயக அடிப்படையிலான போட்டி முறையில் கட்சிக்கான தலைவர், செயலாளர் போன்ற பதவி நிலைகளைத் தேர்ந்தெடுக்கக் கூடிய யாப்பையும் நடைமுறையையும் தமிழரசுக் கட்சி கொண்டிருப்பதும் உண்மையே. 

    இப்படியான சிறப்புகளைக் கொண்ட கட்சிதான் ஜனநாய மறுப்பில் ஈடுபட்டு, இப்பொழுது சீரழிவை நோக்கி, உள்ளும் புறமுமாகக் குத்துப் பட்டுக் கொண்டிருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும். அது கடைப்பிடிப்பதாகக் கூறும் ஜனநாயக மீறலையும் யாப்பு விரோதச் செயற்பாட்டையும் அது தொடர்ந்து செய்து வந்திருக்கிறது. என்றபடியால்தான் மாவை சேனாதிராஜா 10 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமைப்பதவியில் இருந்தார். இன்னும் அவருடைய பிடி முற்றாகத் தளரவில்லை.  மட்டுமல்ல, பொதுச் சபையில் தெரிவு செய்யப்பட்ட குகதாசனை ஏற்க முடியாது என்று இந்த ஜனநாயகவாதிகள் மறுப்புத் தெரிவித்திருக்கிறார்கள். யாப்பு மீறலையும் ஜனநாயக மீறலையும் செய்தபடியால்தான் நீதி, நியாயம் கேட்டு அதனுடைய உறுப்பினர்களில் ஒருசாரார் நீதிமன்றத்துக்குச் சென்றிருக்கிறார்கள். 

    கட்சிகளுக்குள், இயக்கங்களுக்குள் முரண்பாடுகள் ஏற்படுவதும் பிளவுகள் உண்டாகி உடைவுகள் நிகழ்வதும் அரசியலில் சகஜம். சிலவேளை கட்சிப்பிரச்சினைக்காக நீதிமன்றம்வரையில் செல்வதும் வழமை. இதொன்றும் புதுமையில்லை. அண்மையில் தமிழகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிடக் கழகம் கூட இப்படி நீதிமன்றப்படியேறியது. ஏற்கனவே ஒரு கட்டுரையில் சுட்டிக்காட்டியதைப்போல, ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் ஈரோஸ் போன்றனவும் நீதிமன்றத்தை நாடியவைதான். 

    ஆகவே தமிழரசுக் கட்சிக்குள் நிலவும் உள்ளகப் போட்டிகளையோ முரண்களையோ நாம் குற்றமாகவோ குறையாகவோ பார்க்கவில்லை. ஆனால், அந்தக் கட்சி சமகால – எதிர்கால அரசியல், சமூக, பொருளாதாரப் பார்வைகளை – அதற்கான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. அதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக பழைய – தோற்றுப்போன அரசியலில் நின்று கொண்டு அதிகாரப் போட்டிக்காகத் தன்னை அழித்துக் கொண்டிருப்பதுவே அதன் மீதான விமர்சனமாகும்.

    கூடவே இந்தளவுக்கு அவசரப்பட்டு நீதிமன்றத்துக்குச் செல்லவேண்டியதில்லை என்றும் கூறலாம். கட்சிக்குள்ளேயே இதற்குத் தீர்வு கண்டிருக்கலாம். கண்டிருக்க வேண்டும். அதாவது யாப்பின் (ஜனநாயக) அடிப்படையில் பேசி உடன்பட்டுத் தீர்வைக் கண்டிருக்க முடியும்.

    என்றாலும் யாப்பு, அரசியல் பார்வைகள் – நோக்கு நிலைகள், கொள்கை மற்றும் அபிலாசை போன்ற காரணங்களால் முரண்பாடுகள் எழுவது இயல்பு. அதைச் சரியாகக் கையாளத் தவறும் தலைமைகள் இருக்கும்போது நீதிமன்றத்தை நாடுவது தவிர்க்க முடியாதது. அப்படியான ஒரு சூழலே இப்பொழுது தமிழரசுக் கட்சிக்கும் நேர்ந்துள்ளது. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

    பொதுச்சபையைக் கூட்டுவதற்குத் தடையுத்தரவு கோரி, யாழ்ப்பாணம், திருகோணமலை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு வழக்குகளிலும் இதுவே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

    இதைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் சிறிதரனும் மூத்த தலைவர்களும் இணைந்து நின்று சமாதானப்படுத்தியிருக்க முடியும். அப்படிச் செய்திருந்தால் கட்சியின் மீது கொஞ்சமாவது மதிப்பு ஏற்பட்டிருக்கும். அத்துடன், புதிய அரசியல் உள்ளடக்கத்தைப் பற்றியும் புதிய தலைமை ஆய்வு ரீதியாகச் சிந்தித்திருக்க வேண்டும். 

    அடுத்தது, “தமிழரசுக் கட்சிக்குத்தான் மக்களின் பேராதரவுண்டு. ஆகவே அதை நாம் விமர்சிக்கவோ கேள்வி கேட்கவோ முடியாது”  என்று கருதுவது தவறு. 

    ஏனென்றால், தமிழரசுக் கட்சிக்குள்ளதையும் விட பேராதரவோடு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது ராஜபக்ஸக்களின் பொதுஜன பெரமுன. இன்றும் பெரும்பான்மையான மக்களிடம் ராஜபக்ஸவினருக்குச் செல்வாக்குண்டு. என்பதால், பெரமுனவையும் ராஜபக்ஸவினரையும் நாம் விமர்சிக்க முடியாது, கேள்வி கேட்க முடியாது, அவர்களுடைய அரசியல் தவறுகளைச் சுட்டிக்காட்ட முடியாது. அவர்களை எதிர்க்க முடியாது என்று கூறமுடியுமா?

    இவ்வாறு  நோக்கினால், இந்தியாவில் மக்கள் ஆதரவைப் பெற்றிருக்கும் பாரதிய ஜனதாக் கட்சியையும் (BJP), அதனுடைய ஜனநாயக விரோத செயற்பாடுகளையும் மதவாதத்தையும் நாம் கேள்விக்கிடமின்றி ஏற்க வேண்டுமே. 

    இப்படிப் பல உதாரணங்கள் உலகமெங்கும் உண்டு. 

    மக்கள் எப்போதும் சரியானவர்களைத்தான் தெரிவு செய்வார்கள். சரியான தரப்புகளுக்கே ஆதரவளிப்பார்கள் என்றில்லை. அவர்களைத் திசைதிருப்பும் காரணிகள் (இனவாதம், மதவாதம், சாதியவாதம், பிரதேசவாதம் மற்றும் கையூட்டு, மோசமான பரப்புரைகள், திருப்தியடையக் கூடிய பிற அரசியற் சக்திகள் தென்படாமை போன்றவை) தவறான தரப்புகளை வெற்றியடையச் செய்து விடுகின்றன. 

    சமகால உதாரணம் இஸ்ரேல். காசாவின் மீது இஸ்ரேல் இனரீதியான தாக்குதலைச் செய்கிறது. இதை இஸ்ரேலியர்கள் அனைவரும் ஆதரிக்காது விட்டாலும் பெரும்பான்மையானோர் ஆதரிக்கின்றனர். அதற்காக தன்னுடைய மக்களின் ஆதரவுடன்தான் இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்துகிறது என்று யாரும் நியாயப்படுத்திவிட முடியாது.

    கடந்த கால உதாரணம், ஹிட்லரின் யூதர்களுக்கு எதிரான யுத்தம். அன்றைய நாஸிகள் (ஜேர்மனியர்கள்) ஹிட்லரை ஆதரித்தனர் என்பதற்காக மக்கள் ஆதரவுடன்தான் ஹிட்லர் யுத்தத்தை நடத்தினார் என்று சொல்ல முடியுமா? 

    ஆகவே மக்கள் ஆதரவு உண்டு என்பதற்காக அந்தத் தரப்புச் சரியாகச் செயற்படுகிறது என்று நாம் சொல்ல முடியாது. மக்கள் ஆதரவைப் பெற்றுக் கொண்டு தவறாகச் செயற்படுகின்ற தரப்புகளை மக்களின் முன்பு விமர்சனம் செய்ய வேண்டும். அவற்றைக் கேள்விக்குள்ளாக்க வேண்டும். அதுவே அறிவுசார் புலத்தினருடைய கடப்பாடாகும். அதையே நாம் செய்கிறோம். 

    1.      தமிழரசுக் கட்சியின் அரசியல் போதாமைகளும் அரசியல் வரட்சியையும்.

    2.      அதனுடைய கட்டமைப்பின் பலவீனங்களை.

    3.      அதன் தலைமையின் பலவீனங்கள், தவறுகளையும் மூத்த  தலைமைத்துவ நிலையில் உள்ளோரின் பொறுப்பின்மைகளையும் தொடரும் தவறுகளையும்.

    இதைச் செய்வது தவறல்ல. அவசியமே. ஏனென்றால் அது மக்களுக்கான பணி. வரலாற்றுக் கடமை. 

    தான் ஒரு மூத்த, பொறுப்புள்ள, மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள கட்சி என்றால் அதற்குத் தக்கதாக, தகுதியானதாக பொறுப்புடன் அந்தக் கட்சியும் அதன் தலைமையும் நடந்து கொள்ள வேண்டும். உள்ளகப் பிரச்சினையை உரிய முறையில் அணுகித் தீர்க்க வேண்டும். சந்தி சிரிக்க வைக்க முடியாது. மட்டுமல்ல, எதிர்த்தரப்புகளுக்கு வாய்ப்பை இது வழங்குவதாகவும் அமைந்து விடும். புதிய – இளையோருக்கு இது சலிப்பையும் அவநம்பிக்கையையும் அளிக்கும். 

    தமிழரசுக் கட்சியை ஆதரிப்போரும் அதனை மதிப்போரும் செய்ய வேண்டிய கடமை இது. புரிந்து கொள்ள வேண்டிய நியாயம் இது. 

    அடுத்தது, சிறிதரனுடைய தலைமைப்பொறுப்பைப் பற்றியது. 

    சிறிதரன் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுச் சிறிய காலமாக இருக்கலாம். ஆனால், அவர் கடந்த மூன்று தடவை தொடர்ச்சியாகப் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். இன்னொரு கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எவ்விலிருந்து கட்சி தமிழரசுக் கட்சிகுள் வந்தவராக இருக்கலாம். ஆனால், இப்பொழுது தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்படும் அளவுக்கு அதற்குள் செல்வாக்கைப் பெற்றவர். தமிழரசுக் கட்சியின் தலைவராகப் போட்டியிடும்போதே கட்சியின் நிலை, அதற்குள்ளிருக்கும் பிரச்சினைகள், அவற்றைத் தீர்க்க வேண்டிய கடப்பாடுகள், அதற்கான வழிமுறை பற்றிய புரிதலோடும் திட்டத்தோடும்தான் அவர் களமிறங்கியிருக்க  வேண்டும். 

    மட்டுமல்ல, போட்டிச் சூழலில் தொடர்ந்து ஏற்படக்கூடிய நெருக்குவாரங்கள், பிரச்சினைகள், அணிப் பிளவுகள் போன்றவற்றைக் கையாளக் கூடிய ஆற்றலையும் தனக்குள் தயார்ப்படுத்தியிருக்க வேண்டும். அதுதான் தலைமைக்கான தகுதி நிலையாகும். இல்லையென்றால் அந்தப் பதவிக்கு வந்திருக்கவே கூடாது. வேறு வேலைகளைப் பார்த்திருக்க வேண்டும். 

    இப்பொழுது வழக்குகளை எதிர்கொள்ளும் நிலைக்குக் கட்சி வந்திருக்கிறது. அதாவது சிறிதரனும் வந்திருக்கிறார். கட்சியை அரசியல் உள்ளடக்கத்தின் அடிப்படையில் புதிதாக்கும் சிந்தனை எந்தத் தரப்புக்கும் வரவில்லை. அதிகாரத்தைக் கைப்பற்றுவதில்தான் அனைத்துத் தரப்பின் கவனமும் உள்ளது. என்பதால்தான் தமிழரசுக் கட்சியைக் கடுமையாக விமர்சிக்க வேண்டியிருக்கிறது. இதற்கு சமாதானங்களை யாரும் சொல்லக் கூடாது.

    இதேவேளை தமிழரசுக் கட்சியின் இன்னொரு அணியான சுமந்திரன் தரப்புப் பலமடைகிறதா? பலவீனப்படுகிறதா? என்ற கேள்வியைச் சிலர் எழுப்பலாம். அதை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

    00
     

    https://arangamnews.com/?p=10505

  6. மேய்ச்சல் தரையை மீட்க போராடும் தமிழ் பண்ணையாளர்கள்: தொடரும் போராட்டங்கள்

    ஐந்து மாதங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமக்கும், தமது கால்நடைகளுக்கும், சிங்கள பெரும்பான்மையின விவசாயிகளால் இழைக்கப்படும் அட்டூழியங்களும், அநியாயங்களும் அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாணத்தின் தமிழ் பாற்பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    பெரும்பான்மையின சிங்கள விவசாயிகள் தமது கால்நடைகளை தொடர்ச்சியாக துன்புறுத்தி வருவதோடு கொலை செய்வதாக, தொடர்ச்சியாக 160 நாட்களைக் கடந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, மயிலத்தமடு, மாதவனை தமிழ் பால் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    “அதிகூடிய மின்சாரத்தைக் கொடுத்து குறைமாதத்தில் கன்றை ஈன்றுள்ளது. குறை மாதத்தில் பிறந்த கன்றால் எழும்பிகூட நிற்க முடியவில்லை. இந்த கன்று குட்டி. இது அநியாயம்தானே? இது வாய்பேச முடியாத மிருகம் தானே இது? இது மின்சாரக் கம்பியா? இல்லையா என இதுக்கு தெரியுமா? பௌத்த தர்மத்தை மதிக்கும் அனைவரும் பாருங்கள்.

    வாய்பேச முடியாத ஜீவன்களுக்கு இவ்வாறு செய்கிறீர்கள்? சுடுகிறீர்கள். வாய் வெடியை போடுகிறீர்கள். கட்டுத் துப்பாக்கியை கட்டுகிறீர்கள். வெட்டுகிறீர்கள். நீங்களா, பௌத்த தர்மத்தை மதிப்பவர்கள்?” என கால் பண்ணையாளர் ஒருவர் கவலை வெளியிடுகின்றார்.

    மயிலத்தமடு, மாதவணையில் மேய்ச்சல் தரையை பலவந்தமாக ஆக்கிரமித்துள்ள சிங்கள விவசாயிகளை அகற்றுமாறு தமிழ் பண்ணையாளர்கள் தொடர்ச்சியாக கோரிக் விடுத்து வருகின்றனர்.

    கடந்த வருடம் செப்டெம்பர் 13ஆம் திகதி, மட்டக்களப்பு மாவட்ட விவசாயக் குழுக் கூட்டத்தில் பாற்பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்க முடியாது என மாவட்டத்தின் அப்போதைய செயலாளர் கமலாவதி பத்மராஜா தெரிவித்ததை அடுத்து, செப்டெம்பர் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு சித்தாண்டி பாடசாலைக்கு முன்பாக தமிழ் பாற்பண்ணையாளர்கள் முதன் முதலாக ஆரம்பித்த போராட்டம் இன்றும் தொடர்கிறது.

    தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தம்மை சந்திப்பதாக நேற்று (பெப்ரவரி 25) தெரிவித்த, மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச, தம்மை சந்திக்கவில்லை என மயிலத்தமடு மாதவணை பால் பண்ணையாளர் சங்கத்தின் தலைவர் சீனிதம்பி நிமலன் தெரிவிக்கின்றார்.

    அத்துமீறி மேய்ச்சல் தரையை பலவந்தமாக ஆக்கிரமித்துள்ள சிங்கள விவசாயிகள், போராட்டம் ஆரம்பித்த நாள் முதல் இதுவரை 275 மாடுகளை கொலை செய்துள்ளதாகவும் இதுத் தொடர்பில் கரடியனாறு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளபோதிலும் இதுவரை எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் சீனிதம்பி நிமலன் தெரிவிக்கின்றார்.

    குறித்த 275 மாடுகளும் 22 பண்ணையாளர்களுக்கு சொந்தமானதென அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

    மேய்ச்சல் தரையை கைப்பற்றியுள்ள சிங்கள விவசாயிகள் சிறிய குளங்கள் மற்றும் ஆறுகளையும் ஆக்கிரமித்துள்ளமையால் மாடுகளின் தாகத்தைத் தீர்க்க வழியின்றி பண்ணையாளர்கள் தடுமாறுவதாக அவர் வலியுறுத்துகின்றார்.

    சுமார் 6,500 ஏக்கர்களைக் கொண்ட குறித்த மேய்ச்சல் தரை காணியில் 5,000 ஏக்கர் வரையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயப் பணியில் ஈடுபடுவதற்கென அந்த பிரதேசத்தில் சுமார் 700 பேர் வரையில் தங்கியிருப்பதாகவும் பால் பண்ணையாளர் சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டுகின்றார்.

    தனக்கு சொந்தமான 50 மாடுகளில், 15 மாடுகளை விவசாயிகள் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கும் பண்ணையாளர் ஒருவர், தமது வாழ்வதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் குறிப்பிடுகின்றார்.

    “காலங்காலமாக மாடுகள் கொண்டுவந்து கட்டும் இடம். இவர்கள் அத்துமீறி குடியேறியமைால் எங்கள் மாடுகளை கட்ட முடியாமல் உள்ளது. வெட்டுவதும், சுடுவதும், இதோடு வெட்டிடி போட்டுள்ளார்கள். இதோடு 15 மாடுகள். என்னுடைய 50 பதிவு செய்து, 15 மாடுகள் இவ்வாறு கிடக்கின்றன. இதற்கு அரசாங்கம்தான் பொறுப்புக்கூற வேண்டும். எங்களுக்கு ஒரு ஆதாரமும் இல்லை. மாடுதான் எங்களின் வாழ்வாதாரம். இவர்கள் வந்ததால்தான் இந்த அழிவு கூட.”

    மயிலத்தமடு, மாதவணையில் மேய்ச்சல் தரையை நம்பி 982 பால் பண்ணையாளர்களுக்குச் சொந்தமான சுமார் இரண்டு இலட்சம் மாடுகள் காணப்படுவதோடு, இந்த மாடுகளை தமது வாழ்வாதாரமாக நம்பி சுமார் 3,000 குடும்பங்கள் வாழ்கின்றன.

    இவர்கள் அனைவரது வாழ்வதாரமும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளதாக மயிலத்தமடு மாதவணை பால் பண்ணையாளர் சங்கத்தின் தலைவர் சீனிதம்பி நிமலன் தெரிவிக்கின்றார்.
     

    http://www.samakalam.com/மேய்ச்சல்-தரையை-மீட்க-போ/

  7. துவாரகா கடலிற்குள் மூழ்கிய பிரதமர் மோடி! … கிருஷ்ணருக்கு மயில் இறகுகள் காணிக்கை!!

    24-65dc2d36beaa2.png

    இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க இடமான துவாரகா கடற்கரையில் மூழ்கி, பிரதமர் நரேந்திர மோடி செய்த பிரார்த்தனை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

    தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அகழ்வாராய்ச்சி செய்வதற்காக பேய்ட் துவாரகா தீவுக்கு அருகில் உள்ள துவாரகா கடற்கரையில் ஸ்கூபா டைவிங் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில், பல நூற்றாண்டுகளுக்கு முன் கடலுக்கு அடியில் மூழ்கியதாக அறியப்படுகிற, துவாரகா நகரத்தை பார்க்க வேண்டும் என்ற நோக்கில் இந்திய பிரதமரும் ஸ்கூபா டைவிங் செய்துள்ளார்.

    பிரதமர் மோடி ஸ்கூபா கியர் அணிந்து கடலில் இறங்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இது குறித்து நரேந்திர மோடி கூறிய போது, தண்ணீரில் மூழ்கியிருக்கும் துவாரகா நகரில் பிரார்த்தனை செய்வது மிகவும் தெய்வீகமான அனுபவத்தை வழங்குகிறது.

    ஆன்மீக மகத்துவம் மற்றும் காலத்தால் அழியாத பக்தி கொண்ட ஒரு பண்டைய சகாப்தத்துடன் நான் இணைந்திருந்தேன். பகவான் ஸ்ரீ கிருஷ்ணா எங்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கவும் என குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை தரிசிப்பதற்காக மயில் இறகுகளை காணிக்கை வைத்து வழிபட்டுள்ளார்.
     

     

    https://akkinikkunchu.com/?p=269617

  8. தமிழரசுக் கட்சி நிர்வாகத் தெரிவை நடைமுறைப்படுத்தினால் வழக்கை வாபஸ் பெறத் தயார்!

     

    இலங்கை தமிழரசு கட்சியின் நிர்வாகத் தெரிவினை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் வழக்கினை மீளப் பெறவுள்ளதாக சந்திரசேகரம் பரா தெரிவித்துள்ளார்.

    ஜனவரி மாதம் 27 ஆம் திகதி திருகோணமலையில் நடைபெற்ற நிர்வாகத் பிரிவினை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் வழக்கினை மீளப் பெறுவதாக ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் உறுதியளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

    இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த சிரேஷ்ட தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் மற்றும் செயலாளர் வைத்தியர் சத்தியலிங்கம் மன்னார் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் சரவணபவன் ஆகியோர் மற்றும் திருகோணமலை மறை மாவட்ட ஆயர் நோயல் இம்மானுவேல் ஆகியோர் முன்னிலையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

    இலங்கை தமிழரசு கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள்ளக பிரச்சினையை தீர்க்கும் முகமாக சமரச பேச்சுவார்த்தை இடம் பெற்ற வேளை திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் வழக்கைத் தாக்கல் செய்த சாம்பல்தீவு வட்டார கிளையின் செயலாளர் சந்திரசேகரம் பரா, கட்சியின் உயர்மட்ட குழுவினரிடம் கடந்த ஜனவரி 27 ஆம் திகதி நடைபெற்ற நிர்வாக தெரிவினை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் வழக்கினை மீள பெறுவதாக மனுதாரர் சார்பில் ஆயர் முன்னிலையில் உறுதியளித்தார்.

    இந்நிலையில் இலங்கை தமிழரசு கட்சியின் உயர்மட்ட குழு இதனை நடைமுறைப்படுத்துவதாக உறுதியளித்த தாகவும் தெரியவந்துள்ளது.

    இக்கலந்துரையாடலின் போது தெரிவு செய்யப்பட்ட இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் சண்முகம் குகதாசன் மற்றும் சாம்பல் தீவு வட்டார கிளையின் பொருளாளர் ராசையா பிரதீபன் ஆகியோர் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
    -(3)

     

    http://www.samakalam.com/தமிழரசுக்-கட்சி-நிர்வாகத/

  9. ரஷ்யா, உக்ரைன் நாட்டவர்களை வெளியேற விடுத்த அறிவிப்பு தொடர்பில் விசாரணை

    - அமைச்சரவை அனுமதியின்றி குடிவரவு திணைக்கள ஆணையாளர் நாயகம் அறிவித்ததாக ஊடகங்களில் செய்தி

    Rizwan Segu MohideenFebruary 25, 2024
    Ukraine-Russia-Tourist-Visa.jpg

    – உடன் விசாரிக்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு

    ரஷ்யா மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகளை 14 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென விடுக்கப்பட்ட அறிவித்தல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

     

    அமைச்சரவையின் முன் அனுமதியின்றி குறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குறித்த நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு, இதற்கு முன்னர் வழங்கப்பட்ட வீசா கால நீடிப்புகளை இரத்துச் செய்ய இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக முடிவு செய்யவில்லை எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

    ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையில் ஆக்கிரமிப்பு யுத்தம் ஆரம்பமானதில் இருந்து, ஆயிரக்கணக்கான ரஷ்யர்கள் மற்றும் உக்ரைனியர்கள் இலங்கையில் தங்கியிருப்பதற்கு அனுமதி வழங்கும், நீண்ட சுற்றுலா வீசா நீட்டிப்புகளை இலங்கை அரசாங்கம் வழங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், அரசாங்கம் மேலும் இந்த வீசா நீடிப்புகளை வழங்காது எனவும், 14 நாடகள் காலக்கெடுவுடன், மார்ச் 07 ஆம் திகதி அதனை நிறைவுக்கு கொண்டு வருவதாக, குடிவரவு குடியகல்வு திணைக்கள ஆணையாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

     

    https://www.thinakaran.lk/2024/02/25/breaking-news/44833/ரஷ்யா-உக்ரைன்-நாட்டவர்க/

     

  10. ரணிலை இரகசியமாக சந்திக்கும் பொன்சேகா!

     

    சரத் பொன்சேகா இரவு நேரங்களில் டயனா கமகேவின் வீட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து வருவதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

    நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

    “தமது பணி இடைநிறுத்தம் மற்றும் பதவி நீக்கத்தை தடுக்குமாறு சரத்பொன்சேகா நீதிமன்றில் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

    சரத் பொன்சேகாவிடம் நாம் ஒரு விடயத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

    அதாவது பணி இடைநிறுத்தம் பதவி நீக்கத்தை தடுக்குமாறு கோரி சரத் பொன்சேகா நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்வதாயின் அதற்கான காரணத்தை நாம் கூறுகின்றோம்.

    அதுமாத்திரமல்ல நேற்று இணையதளம் ஒன்றில் ஒரு செய்தி பதிவாகியிருந்தது.

    அதாவது சரத்பொன்சேகா இரவு நேரங்களில் டயனா கமகேவின் வீட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து வருவதாக தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

    டயனா கமகேவின் கணவர் சரத்பொன்சேகாவின் முன்னாள் செயலாளராவார். சரத் பொன்சேகாவின் இவ்வாறான செயற்பாடுகள் மிகவும் அருவருக்கத்தக்கவை.

    ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிப்பதாயின் கட்சியுடன் இணைந்து செயற்பட வேண்டும்.

    கட்சிக்குள் முரண்பாடுகள் ஏற்படுவது சகஜமான ஒன்றாகும் அவ்வாறு ஏற்படும் பிரச்சினைகளுக்கு கட்சிக்குள்ளேயே பேச்சுவார்த்தை நடத்தி அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும்.

    அவ்வாறு இல்லாமல் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதாயின் ஜனாதிபதியுடன் இணைய வேண்டும்.
    இருவேறு நிலைப்பாட்டில் ஐக்கிய மக்கள் சக்தியில் எவரும் அங்கம் வகிக்க முடியாது.

    எனவே சரத்பொன்சேகா கட்சியில் இருந்து வெளியேறுவதாயின் எம்மிடம் அறிவித்துவிட்டு செல்லலாம்” என எஸ்.எம்.மரிக்கார் மேலும் தெரிவித்துள்ளார்.

    http://www.samakalam.com/ரணிலை-இரகசியமாக-சந்திக்க/

  11. கோர்ட்டுக்கு இழுக்கப்படும் கட்சி? - நிலாந்தன்

    B4Xoq6sCIAAnsTL-1024x681.jpg

    2014ஆம் ஆண்டு மன்னாரில், முன்னாள் ஆயர் ராயப்பு ஜோசப் ஆண்டகையின் தலைமையில் ஒரு சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது. தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சித் தலைவர்களின் சந்திப்பு அது. ஆயர் அப்பொழுது தமிழ் சிவில் சமூக அமையத்தின் நிறுவனர்களில் ஒருவராகவும் அதன் அழைப்பாளராகவும் இருந்தார். அச்சந்திப்பில் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் பங்குபற்றினார்கள். சந்திப்பின் முடிவில் சம்பந்தர் ஆயரைப் பார்த்து பின்வருமாறு சொன்னார்… ”பிஷப் நீங்கள் சொல்லுறதச் சொல்லுங்கோ, ஆனால் கடைசியா முடிவெடுக்கிறது நாங்கள்தான்” என்று. அப்பொழுது அப்படிச் சொல்லக்கூடிய பலம் சம்பந்தருக்கு இருந்தது. ஆனால் அவர் எடுத்த முடிவுகளின் விளைவு என்ன? அப்படிச் சொன்ன சம்பந்தர் இப்பொழுது எங்கே நிற்கிறார்? அவருடைய முடிவுகளின் விளைவாக தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய மிகவும் வித்தியாசமான ஒரு கூட்டு உடைந்து போய்விட்டது. அதுமட்டுமல்ல அவருடைய சொந்த கட்சியே இப்பொழுது இரண்டாகி நீதிமன்றத்தில் நிற்கிறது. அது மட்டுமல்ல, அன்றைக்கு அப்படித் திமிராகச் சொன்ன சம்பந்தரை இன்றைக்கு அவருடைய சொந்த கட்சிக்காரர்களே மதியாத ஒரு நிலை. ஆம். “வரலாறு ஒரு கண்டிப்பான கிழவி. அவள் யாரையும் மன்னிப்பதில்லை”

    இப்பொழுது தமிழரசுக் கட்சி உடையக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகத் தெரிகின்றன. கடந்த வெள்ளிக்கு கிழமை கிளிநொச்சியில் நடந்த சந்திப்பின் பின் கட்சி நீதிமன்றதுக்குப் போக வேண்டிய வாய்ப்புக்கள் மேலும் அதிகரித்துள்ளனவா?

    ஒரு குடும்பத்துக்குள் பிணக்கு வந்தால் அதை அக்குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் தீர்த்து வைப்பதுண்டு. அல்லது அந்தக் குடும்பத்தின் நலனில் அக்கறை கொண்ட வெளியாட்கள் அதைத் தீர்த்து வைப்பதுண்டு. அதுவும் முடியாது போனால், விவகாரம்  போலீஸ் நிலையத்துக்கோ, நீதிமன்றத்துக்கோ போகும். தமிழரசுக் கட்சிக்குள் நடப்பவற்றைப் பார்த்தால் அங்கே இரண்டு அணிகளுக்கும் இடையிலான மோதலைத் தீர்த்துவைக்க கட்சிக்குள் மூத்தவர்கள் யாரும் இல்லையா என்று கேட்கத் தோன்றுகிறது. கட்சிக்குள் மூத்தவர்களாகக் காணப்படும் சம்பந்தர், மாவை, குலநாயகம், கனகசபாபதி, சிவஞானம்… போன்றவர்கள் ஏதோ ஒரு பக்கம் உலாஞ்சுவதாகத் தெரிகிறது. அதனால் அவர்கள் நடுநிலையாக நின்று விவகாரத்தைக் கையாள முடியாதவர்களாகக் காணப்படுகிறார்கள் என்று தோன்றுகிறது. சம்மந்தரும் மாவையும் கனகசபாபதியும் அதிகம் சிறீதரனுக்கு நெருக்கமாகக் காணப்படுகிறார்கள். குலநாயகமும் சிவஞானமும் அதிகம் சுமந்திரனுக்கு நெருக்கமாகக் காணப்படுகிறார்கள். இப்படிப்பட்ட ஒரு பின்னணியில், கட்சிக்குள் வெடித்திருக்கும் பிளவைத் தீர்த்து வைப்பதற்கு கட்சியின் மூத்தவர்களால் முடியவில்லை. அதன் விளைவாகத்தான் விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றிருக்கின்றது.

    இப்பொழுதும் கட்சியைப் பாதுகாக்க வேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் முடிவெடுத்தால், விவகாரத்தைச் சுமூகமாகத் தீர்க்க முடியும். ஆனால் அப்படிப்பட்ட மூப்போடும்; முதிர்ச்சியோடும்; பக்குவத்தோடும்;  மிடுக்கோடும்  கட்சிக்குள் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.

     

    428629921_963001089159625_84983433091088

     

    கொழும்பில் நிகழ்நிலைப் பாதுகாப்பு சட்டத்துக்கு எதிராக சுமந்திரன் வழக்கு தொடுத்த அதே காலப்பகுதியில், திருகோணமலையிலும் யாழ்ப்பாணத்திலும் அவருக்கு இணக்கமானவர்கள் என்று கருதப்படுகின்றவர்களால் இரண்டு வழக்குகள் கொடுக்கப்பட்டன. தென்னிலங்கையில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக சர்ச்சைக்குரிய ஒரு சட்டத்தை சுமந்திரன் எதிர்க்கிறார். ஆனால் அவருடைய சொந்தக் கட்சியை உடைக்கும் வேலைகளை அவர் தன்னுடைய விசுவாசிகளுக்கு ஊடாகச் செய்கிறார் என்று அவருடைய எதிரணி அவரை குற்றம் சாட்டுகின்றது.

    ஆனால் தான் அந்த வழக்குகளுடன் சம்பந்தப்படவில்லை என்று சுமந்திரன் மறுத்திருக்கிறார். எனினும், அவர்தான் எல்லாவற்றின் பின்னணியிலும் நிற்கிறார் என்ற அபிப்பிராயம் பரவலாகக் காணப்படுகின்றது. அவருடைய பெயர் மேலும் கெட்டுக்கொண்டே போகிறது.

    பிரச்சனை ஒரு சட்ட விவகாரம் ஆக்கப்பட்டதும் சிறீதரன் தன்னுடைய முகநூலில் “தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும். தர்மம் மறுபடியும் வெல்லும்” என்று எழுதினார். அதன்பின் அவருக்குப் பதில் கூறுவது போல, சுமந்திரனுக்கு ஆதரவான வடமாராட்சியைச் சேர்ந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் அதே வசனத்தை தனது முகநூலில் எழுதினார். இதில் யார் தர்மத்தின் பக்கம் நிற்கின்றார்கள்? யார் அதர்மத்தின் பக்கம் நிற்கின்றார்கள்? எது தர்மம்?

    கட்சி பல ஆண்டுகளாக யாப்பை மீறி வழி நடத்தப்பட்டிருக்கிறது என்று சிவகரன் கூறுகிறார். அவர் தமிழரசு கட்சியின் இளைஞரணித் தலைவராக இருந்தவர். பின்னர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர். பல ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக சிவில் சமூகச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவர். கட்சிக்குள் இரண்டு அணிகள் உருவாகிய போது அவர் சுமந்திரனின் பக்கம் நிற்கிறார் என்ற குற்றச்சாட்டு எதிரணியால் முன்வைக்கப்படுகின்றது. கட்சியின் யாப்பு நடந்து முடிந்த தேர்தலில் மட்டும் மீறப்படவில்லை. தேர்தலுக்கு முன்னரே அது மீறப்பட்டு விட்டது. அதற்குக் கட்சியின் முக்கியஸ்தர்களாகக் காணப்பட்ட எல்லாச் சட்டத்தரணிகளும் பொறுப்பு. சிவகரனின் வார்த்தைகளில் சொன்னால், கட்சிக்குள் “வழிப்போக்கர்கள்” தலையெடுத்ததே யாப்புக்கு முரணாகத்தான்.

    சிங்கள பௌத்த அரசு கட்டமைப்பின் யாப்பானது தமக்கு நீதியைத் தரவில்லை என்று கூறிப் போராடும் ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியில் உள்ள மூத்த பெரிய கட்சியானது தனது சொந்த யாப்பையே மீறிச் செலுத்தப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் கட்சியின் பொறுப்பு வாய்ந்த பதவிகளில் சட்டத்தரணிகள் பலர் உண்டு. சட்டத்தரணிகளின் அரசியல் அல்லது அப்புக்காத்துக்களின் அரசியல் ஒரு மூத்த பெரிய கட்சியை நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

    கட்சிக்குள்ளேயே விவகாரத்தைத் தீர்த்து வைக்க முடியவில்லை என்பது கட்சி தோற்றுப் போய்விட்டதைக்  காட்டுகின்றது. கட்சிக்குள் மூத்தவர்களாகக் காணப்படும் யாரும் அதைத் தீர்த்து வைக்கும் தகமையோடும் முதிர்ச்சியோடும் இல்லை என்பதையும் அது காட்டுகின்றது. கட்சிக்குள் மட்டுமல்ல கட்சிக்கு வெளியேயும் விவகாரத்தைத் தீர்த்து வைப்பதற்குப் பொதுவான யாரும் இல்லையா என்ற கேள்வி எழுகிறது.

    முன்பு கட்சிகளுக்கு இடையில் ஐக்கியத்தை ஏற்படுத்த முனைந்த சிவில் சமூகங்கள் இப்பொழுது கட்சிக்குள் ஐக்கியத்தை ஏற்படுத்தும் ஒரு விடயத்தில் தலையிடுவதாகத் தெரியவில்லை. வழமையாக கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் ஈடுபடும் சிவகரன் இப்பொழுது சுமந்திரனுக்குச் சார்பானவராகப் பார்க்கப்படுகிறார்.  ஆங்கிலம் பேசும் உலக சமூகத்துடன் அதிகம் இடையூடாடும் தமிழ் சிவில் சமூக அமையம்-இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்படும் அமைப்பு- அதுவும் தலையிடும் நிலமைகளைக் காணவில்லை. அந்த அமைப்பின் நிறுவுனர்களில் ஒருவரான குருபரன் தமிழரசுக் கட்சிக்கு எதிரான ஒரு  வழக்கில் தோன்றுகிறார். இவ்வாறு சிவில் சமூகங்கள் இரு தரப்பையும் ஒரு மேசைக்கு அழைத்துக் கொண்டுவரும் சக்தியற்றிருக்கும் ஒரு சூழலில், மதத் தலைவர்களும் இந்த விடயத்தில் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. பொதுவாக சிவில் சமூகங்கள் முன்கை எடுக்கும் போதுதான் மதத் தலைவர்களும் அவற்றோடு இணைந்து செயல்படுவதுண்டு. இம்முறை சிவில் சமூகங்கள் இந்த விடயத்தில் அக்கறை காட்டவில்லை. கடந்த 15 ஆண்டுகளிலும் கட்சிகளுக்கு இடையே ஐக்கியத்தை ஏற்படுத்தும் விடயத்தில் சிவில் சமூகங்கள் தலையீடு செய்திருக்கின்றன. ஆனால் ஒரு கட்சிக்குள் பிணக்குகள் ஏற்படும்போது அதைத் தீர்ப்பதற்கு சிவில் சமூகங்கள் தலையிட்டது குறைவு.

    தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் மணிவண்ணன் அணி உடைந்து வெளியே வந்த பொழுது, சில தனிநபர்கள்தான் தலையிட்டார்கள். எனினும் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. இப்பொழுது தமிழரசுக் கட்சிக்குள்ளும் உடைவு வந்திருக்கிறது. அதைத் தீர்ப்பதற்குச் சிவில் சமூகங்கள் தலையிடாத ஒரு நிலை காணப்படுகிறது.

    240462736_2290343991103191_5848486233724

    அதாவது தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள மூத்த கட்சிகளில் ஒன்றாகவும் உள்ளவற்றில் பெரியதாகவும் காணப்படும் ஒரு கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிணக்கைத் தீர்த்துவைக்க கட்சிக்குள் மூப்பாக உள்ளவர்களாலும் முடியவில்லை; கட்சிக்கு வெளியேயும் யாரும் இல்லையா? இது தமிழரசுக் கட்சியின் சீரழிவை மட்டும் காட்டவில்லை. தமிழ் அரசியலின் சீரழிவையும் காட்டுகின்றது.  ஒரு பொதுவான, பலமான மக்கள் இயக்கம்; ஒரு தேசிய இயக்கம் இல்லாத பாரதூரமான வெற்றிடத்தை அது காட்டுகின்றது.

    அரங்கில் உள்ள புத்திஜீவிகள், கருத்துருவாக்கிகள், குடிமக்கள் சமூகங்கள், மதத்தலைவர்கள், ஊடகவியலாளர்கள் போன்ற யாருமே இந்த விடயத்தில் தலையிடாத ஒரு நிலை. பெரும்பாலானவர்கள் இது தங்களுக்குச் சம்பந்தமில்லாத ஒரு விடயம் என்று கருதிக்கொண்டு பார்வையாளர்களாகக் காணப்படுகிறார்கள். சிலர் அரசியற் கூர்ப்பின் வழியில், சிதைய வேண்டியது சிதையட்டும் என்று கூறுகிறார்கள். இது தமிழ் மக்கள் ஓர் அரசியல் சமூகமாகப் பலமாக இல்லை என்பதைக் காட்டுகின்றது. இது தமிழரசுக் கட்சிக்கு வந்த சோதனை மட்டுமல்ல, தமிழ் அரசியல் சமூகம் முழுவதற்கும் வந்த ஒரு சோதனை.

    அவ்வாறு கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியேயும் விவகாரத்தைத் தீர்த்து வைப்பதற்கு நீதியான, மூப்பான ஆட்கள் இல்லாத ஒரு வெற்றிடத்தில்தான் விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றிருக்கிறது. இந்த நிலை தொடருமாக இருந்தால், கட்சியின் எதிர்காலத்தை நீதிமன்றம்தான் தீர்மானிக்கும். நீதிமன்றத்தில் இப்பொழுது தொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகளுக்கான  தீர்ப்புக்களின் அடிப்படையில் அது தீர்மானிக்கப்படும்.

    தமக்கு எதிராக இழைக்கப்பட்ட  இனப்படுகொலை, போர்க் குற்றம், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றுக்கு எதிராக நீதி கேட்டுப் போராடும் ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியில் காணப்படும், உள்ளதில் பெரிய ஒரு கட்சி தனக்குள் நீதி கேட்டு நீதிமன்றத்தை நாடியிருக்கிறது. எந்த உள்நாட்டு நீதியை ஏற்றுக்கொள்ள மறுத்து பன்னாட்டு நீதியைக் கேட்கின்றதோ, அதே உள்நாட்டு நீதியின் முன் போய் நிற்கின்றது. இது, தமிழ் மக்கள் தொடர்ந்து தோற்றுக் கொண்டிருப்பதைத்தான் காட்டுகின்றதா? அல்லது அப்புக்காத்துமாரின் அரசியல் தமிழ் மக்களைத் தொடர்ந்தும் தோற்கடித்துக் கொண்டிருப்பதைக் காட்டுகின்றதா?
     

     

    https://www.nillanthan.com/6573/

     

  12. 8 hours ago, Kandiah57 said:

    பொதிகளை  தீரவுகளை. ஒரு தனி நபர் எழுதி என்ன பிரயோஜனம்??? பாராளுமன்றம் அங்கீகரிக்க மாட்டாது என்று அனைவருக்கும் தெரியுமில்லையா. ?? இதனை விட சிறந்த தீர்வினை எழுத முடியும்  ....எழுதி என்ன பலன்?? 

    இலங்கைப் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கமுடியாத தீர்வின் வரைபை எழுத உதவியர் கொலை செய்யப்படவேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வியையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

    • Like 2
  13. போதமும் காணாத போதம் – 19

     

     

    தா ஆடையுற்பத்தி நிறுவனத்தில் வேலை முடித்து வெளியேற இரவு ஏழு மணியாகியிருந்தது. பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்தாள். உந்துருளியில் வந்து சேர்ந்தான்  சமிந்த. ஏறியிருந்து அவனைக் கட்டியணைத்துக் கொண்டாள். சமிந்தவின் சீருடையில் கமழ்ந்த வாசனை நாசியை அரித்தது. லேசாக மழை துமித்தது. சமிந்தவின் தோளில் நாடி நிறுத்தி நெருக்கியிருந்தாள். அறிவியல் நகரிலிருந்து மாங்குளம் நோக்கி உந்துருளி மெல்ல விரைந்தது. ஆதாவுக்கு அப்போழ்து சுகமாயிருந்தது. இராணுவத்தினனோடு நெருக்கமாக அமர்ந்து ஆதா செல்வதை எதிர்த்திசையில் வந்த வைத்தியலிங்கம் கண்டார்.

    அன்றிரவே “இவளொரு பட்டை வேசை. ஆர்மிக்காரங்களோட படுத்து சீவியத்தைப் போக்கிறாள்” ஆதாவின் வீட்டின் முன்பாக நின்று வைத்தியலிங்கம் வெறிபிடித்துக்  கத்தினார். அவரோடு கூடியிருந்தவர்களும் பக்கப்பாட்டு பாடினார்கள். அவளுடைய வீட்டின் கூரையில் கற்கள் வீசினர். நாய்கள் குரைத்தன. பதிலுக்கு எதுவும் செய்யாமல் நகத்திற்கு வண்ணப் பூச்சிட்டுக் கொண்டிருந்தாள் ஆதா. சமிந்த அவளைத் தொடர்பு கொண்டான். அடுத்தமாதம் விடுமுறையில் வீட்டிற்குச் செல்லும் போது, அவளையும் வருமாறு அழைத்தான். வெளியே நாய்களின் குரைப்பொலி இன்னும் அடங்கவில்லை. ஆதாவுக்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை. பார்க்கலாமெனச் சொல்லி அலைபேசியைத் துண்டித்தாள்.

    அதிகாலையில் எழுந்து மதியத்திற்கும் சேர்த்து சமைத்து, வேலைக்கு புறப்படுகையில் காலை எட்டு மணியாகியிருந்தது. பேருந்து தரிப்பிடத்திற்கு ஓட்டமும் நடையுமானாள். வைத்தியலிங்கம் தனது வீட்டுக்கு முன்பாக அமர்ந்திருந்து ஆதாவை அவர் பெயர் சொல்லியழைத்தார். அவள் பொருட்படுத்தாமல் நகர்ந்தாள். வைத்தியலிங்கம் கொதித்து வெருண்டார். “எடியே வேசை நில்லடி. உன்ர சாமானில அவ்வளவு கொழுப்போடி” என்றார். ஆதாவுக்குள் குருதியின் ஓட்டம் கலவரப்பட்டது. இறந்தகாலத்தின் நிழல் விழுத்திய சூரியோதயமென அவ்வளவு கம்பீரமான ஒளிக்கதிர்கள் திடுமென நிலமெங்கும் விரவியது. அழியாத காயத்தின் கண்களில் நீசப்படை எதிர்த்த வனத்திமிர். எதுவும் மிச்சமற்றவளின் சலிப்புடன் வைத்தியலிங்கத்தை நோக்கி வந்தாள். நெடும்பொழுதின் புயலென ஓருதையில் கீழே வீழ்த்தினாள். மல்லாந்து விழுந்த அவனின் நெஞ்சில் கால்கள் விரித்து அமர்ந்தாள். குரல்வளையில் உயிரின் மின்சொடுக்கு ஏறியிறங்கித் தவித்தது. கூந்தல் விரிந்த ஆதாவின் கைகள் நெரித்த குரல்வளையில் ஒருநொடி அசைவின்மை. “பிழைத்துப் போ மானங்கெட்டவனே” என்ற கட்டளையில் இருமிக்கொண்டெழுந்தது வைத்தியலிங்கத்தின் உடல்.

    “எப்ப பார்த்தாலும் ஒருத்தியை வேசை, தாசையெண்டால் தாங்குவாளோ. உவன் வைத்திக்கு இன்னும் எப்பன் கூடவா அடி கிடைச்சிருக்க வேணும்” மாடன் சொன்னதும் சூழவிருந்தவர்கள் கைதட்டம் கொட்டிச் சிரித்தனர்.

    “அவளென்ன, வைத்தியலிங்கத்தின்ர நோஞ்சான் மனிசியே. இயக்கத்தில கொமாண்டோ ரெய்னிங் எடுத்தவள்.  பெரிய சண்டைக் காயெல்லே” மாடன் மீண்டுமுரைத்தான்.

    அவள் எழுந்து மிகவேகமாக நடந்தாள். வேலைக்குப் போகப்பிடிக்காமல் பிரதான வீதியிலிருக்கும் வாதா மரத்தின் கீழே அமர்ந்திருந்து சமிந்தவைத் தொடர்பு கொண்டாள். நிர்வாக வேலையொன்றுக்காக முல்லைத்தீவுச் செல்ல ஆயத்தமாவதாகச் சொன்னான். கூடவருவதாக அவள் சொன்னாள். சமிந்த சிலநொடிகள் தயங்கி யோசித்தான் போலும்! ஆதாவுக்கு விளங்கியது. “சரி நீ போய்விட்டு வேகமாகத் திரும்பி வா. நான் காத்திருக்கிறேன்” என்றாள்.

     

    இலைகள் உதிர்ந்தன. வீதியில் வாகனங்களின் மூர்க்க இரைச்சல். நிலத்தின் அடியில் வேட்கைச் சுவடுகளின் நடப்பொலிகள் அலைந்து ஓயமறுக்கும் சப்தத்தை கேட்டுத்துடித்தாள். நான் பிறந்தநாள் சபிக்கப்படுவதாக, என் தாயார் என்னைப் பெற்றநாள் ஆசிர்வதிக்கப்படாதிருப்பதாக! உமக்கு ஒரு பெண்பிள்ளை பிறந்ததென்று என் தாய்க்கும், தகப்பனுக்கும் நற்செய்தி அறிவித்து அவர்களை மிகவும் சந்தோசப்படுத்தினவர்கள் சபிக்கப்படக்கடவர். என் தாயார் எனக்குப் பிரேதக் குழியும், நான் என்றைக்கும் பிரசவியாத சூழலுமாய் இருக்கும்படியாய் கர்ப்பத்திலே நான் கொலை செய்யப்படாமற் போனதென்ன? என்று கலங்கினாள். ஒளியுள்ள ஒரு மேகம் அவள் மேல் நிழலிட்டது.  யுத்தம் சூதாடிக் கழிந்த சபையில் மிச்சம் வைக்கப்பட்ட கிருஷ்ணை. விடுதலை யாகத்தின் தீயில் தோன்றியவளின் முன்பாக எல்லாச் சிறுமைகளும் சாம்பலாகும். கருக்கலின் பாதையில் சமிந்த வருவது தெரிந்தது. விம்மிக் கசியும் தனது விழிகளைத் துடைத்து பெருமூச்செறிந்தாள். ஆவேசமாகச் சுழன்று வீசிய காற்றில் புழுதி கிளம்பியது. தூசெழுந்த வெளியில் வாதையின் சிலுவை சுமந்து நின்றாள் ஆதா!

    சமிந்த யுத்தக் களத்தில் பெரிய அனுபவம் கொண்டவனல்ல. ஆனாலும் இறுதியாக நடந்த யுத்தத்தில் பங்கெடுத்திருக்கிறான். புதுக்குடியிருப்பு பகுதியில் போராளிகளோடு நடந்த மோதலில் காயப்பட்டுமிருக்கிறான். ஆதாவுக்கும் அவனுக்குமிடையே காதல் பிறந்த தொடக்க நாட்களில் இருவரும் தங்களுடைய போர்முனை அனுபவங்களை கதைப்பது வழக்கமாயிருந்தது.

    ***

    ஒருநாள் இருவருமாகச் சேர்ந்து புளியம்பொக்கணை நாகதம்பிரான் கோவிலுக்குச் சென்று திரும்பிய மாலைப் பொழுதில் மழை பெய்யத் தொடங்கிற்று. இருவரும் தொப்பலாக நனைந்து வீடு திரும்பினர். அவளை வீட்டில் இறக்கிவிட்டு இராணுவ முகாமிற்கு செல்ல ஆயத்தமானான் சமிந்த. ஆனால் அவனை வீட்டிற்குள் வருமாறு அழைத்தாள். சமிந்த வேண்டாமென மறுத்தான். தன்னால் ஆதாவுக்கு எந்தக் கெட்ட பெயரும் வந்துவிடக்கூடாதென எண்ணினான். பொழியும் தூரவானின் பொருள் விளங்கிய காதலின் பாலிப்பு. சமிந்தவின் தலையைத் துவட்டிவிட்டு ஆடைகளை மாற்றுமாறு பணித்தாள். ஏற்கனவே அவனுக்கு வாங்கி வைத்திருந்த புத்தாடைகளைக் கொடுத்தாள். சுகநாதம் சூடிக்கொண்ட கூந்தலாய் அப்பொழுது குளிர்ந்தும் உலரத்தொடங்கியது. சமிந்த ஆடையை மாற்றும் போதுதான் முதுகிலிருந்த காயத்தழும்பைக் கண்டாள்.

    “சமிந்த, இதுதான் புதுக்குடியிருப்பு காயமா?” என்று தழும்பைத் தொட்டுக் கேட்டாள். அவன் ஓமெனத் தலையசைத்து, உங்களுடைய “பசீலன் ஷெல்தான்” சொல்லிச் சிரித்தான்.

    “நீங்கள், எங்களைக் கொல்ல இஸ்ரேல், இந்தியாண்டு ஓடியோடி ஆயுதம் சேர்க்க, நாங்கள் மட்டும் பனை மட்டையை வைச்சு உங்களைச் சுட ஏலுமோ. அதுக்குத் தான் இதுமாதிரியான ஏற்பாடுகள் எல்லாம். எங்கட ஒரு பசீலன் ஷெல்லுக்கு முன்னால உங்கட ஆயுதங்கள் எல்லாம் கொஞ்சம் சிறிசு தான்” ஆதா சொன்னாள்.

    “பட்ட எனக்கு நோவு தெரியும். நீ சொல்வதை ஒத்துக்கொள்கிறேன்” என்றான் சமிந்த.

    இருவரும் ஒன்றாக அமர்ந்திருந்து தேத்தண்ணி அருந்தினர். அரியதரமிரண்டையும் எடுத்து வந்து கொடுத்தாள். “கொஞ்சம் இனிப்புக் குறைந்து போய்விட்டது, அடுத்த தடவை சரியாய் செய்வேன்” என்றாள். மழை குறையவேயில்லை. வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சமிந்தவின் உந்துருளியைப் பார்த்துச் சென்ற சிலர், அந்த மழையிலும் விடுப்புக் கதைத்துக் கொண்டு போயினர்.

    வெளியிலொரு வெளியிருப்பதை வீட்டினுள் இருந்த இருவரும் மறந்தனர். ஆதா தன்னுடைய போர்முனை அனுபவங்களின் சுவாரஸ்யமான கதைகளைச் சொல்லிக் கொண்டிருந்தாள். ஐந்து தடவைகளுக்கு மேலாக களத்தில் விழுப்புண் அடைந்ததை அறையதிரும் வண்ணமுரைத்தாள். இனியும் என் நிலத்திற்காக அழுது துக்கங்கொண்டாடுவேன்; வனாந்தரத் தாபரங்களுக்காகப் புலம்புவேன். புகையிட்டு வேட்டையாடும் தேனடை போல பொஸ்பரஸ்களால் இரையாக்கப்பட்ட உடல்களின் மீந்த துண்டு நான். ஆகாசத்துப் பறவைகளும் மிருகஜீவன்களும் ஓடிச் சிதறிப்போன என் தேசம் யாராலும் கடந்து போகாதவண்ணமாக பாழாக்கப்பட்டுக் கிடக்கின்றது.  என் காயங்களின் மீது நட்சத்திரங்கள் நிரம்பியிருக்கின்றன. அவையொருநாள் அதிகாலை வானில் விடியலோடு ஒளிரும் என்றாள். சமிந்த அவளைத் தன்னோடு அணைத்துக்கொண்டான். பேரூழின் அவயங்கள் நதிமறந்து நீந்தத்தொடங்கின. ஆதாவின் மேனி திறந்தது. தீயின் சண்டமாருதம் இறங்கி அமர  திடுமென மழை விட்டது. ஆதாவின் வீட்டுப்படலையை தட்டும் சத்தம் கேட்டு விழிப்புச் சீவியது. ஆதா ஆடைகளை சரிசெய்தபடி கதவைத் திறந்து வெளியேறினாள். வாடியுதிர்ந்த முகத்தோடு பிச்சை கேட்டு நின்றாள் சிறுமியொருத்தி. அவளுடைய தந்தை இரண்டு காலுமற்று முச்சக்கர சைக்கிளிலிருந்தார். தன்னிடமிருந்த காசையும், சமிந்தவிடமிருந்த காசையும் வாங்கி வீட்டிலிருந்த உணவுப் பொருட்களையும் கட்டிக்கொடுத்தாள்.

    “மலர்களை ஏந்திநின்று புன்னகைக்க வேண்டிய இந்தச் சிறுமியின் கையில் திருவோட்டைக் கொடுத்து, பிச்சை கேட்க வைத்தது யுத்தம்தான். நீ அதனை உணர்கிறாயா சமிந்த?” ஒத்துக்கொள்வதைப் போல தலையாட்டினான் அவன்.

    ***

    WhatsApp-Image-2024-02-03-at-3.56.59-PM-

    இன்றைக்கு காலையில் வைத்தியலிங்கத்தை அடித்ததை சமிந்தவிடம் சொன்னாள். முல்லைத்தீவுக்குச் சென்று திரும்பிய களைப்பிலிருந்தவனுக்கு அவள் சொன்னதைக் கேட்டதும் கலக்கமாயிருந்தது.  அவன் உயிருக்கு ஏதும் தொந்தரவில்லையே என்று கேட்டான். செல்லமாக அவனுடைய காதைப்பிடித்து திருகி “என்னைப் பார்த்தால் கொலைகாரி மாதிரியா இருக்கு?” என்று கேட்டாள்.

    “இல்லையா பின்ன. ஒருநாள், நீ எத்தனை ஆர்மிய சுட்டுக்கொன்றிருப்பாய் என்று கேட்ட போது, நானூறுக்கும் மேலே இருக்கும் என்றாயே”

    “ஓம். ஆனாலும் இந்த எண்ணிக்கையில் இப்போது ஒன்று அதிகமாக வாய்ப்பிருக்கு” என்றாள்.

    “இனியுமா!”

    “ஓம், இப்ப நினைச்சாலும் – இந்தக் கணமே நானூற்று ஒன்றாய் ஆக்குவேன்” என்று விளையாட்டாக அவனது குரல் வளையைப் பிடிக்கப்போனாள்.

    சமிந்த அவளை இறுக அணைத்துக் கொண்டான். இருவர் உயிருனுள்ளும் ஊர்ந்து தொங்கும் மதுரக் குலையிலிருந்து ஏந்தவியலாதபடிக்கு துளிகளின் சொட்டுதல். விரல்கள் நெய்யும் துணியென உடல்கள் விரிந்தமை பெரிய ஆறுதலாயிருந்தது. காலாதீதத்தின் நறுமணம் உதடுகுவித்து இருவரையும் முத்தமிட்டது. கனவில் தளிர்த்துப் பெருகும் சுடர் செடியைப் போல சமிந்தவின் சரீரத்தில் நீண்டிருந்தாள் ஆதா. அவர்கள் எப்போதும் சந்தித்துக் கொள்ளுமிடமிது. எவரின் வருகையும் நிகழாத துரவடி. தண்ணீரும் மரங்களும் சாட்சியாய் நாணமுற்று பார்க்க கூடினர். ஆதாவின் சரீரத்துக் காயத்தழும்புகள் போரின் கொம்புகள். மொழியின் தொன்ம எழுத்துக்கள். வயிற்றைக் குறுக்கறுத்து கொழுத்த நீளமெழுகுப் புழுவெனத் திரண்டிருக்கும்  தழும்பின் மீது சமிந்த கைகளைப் பதிந்தான். கற்பாறையின் தகிப்பு. விசுக்கென கைகளை மீட்டான்.

    “என்ன! தாங்கமுடியாதபடி சுடுகுதோ” ஆதா கேட்டாள்.

    “ஓம் ஏன் இப்பிடிச் சுடுகுது” என்றான்.

    “இது என்ர கடைசிக் காயம். இரணைப்பாலையில நடந்த சண்டையில வந்தது. மிச்ச எல்லாக் காயத்துக்கும் ஒரு நம்பிக்கை இருந்தது. ஆனால் இதுக்கு எதுவும் இல்லை. எல்லாமும் தலைகீழானதற்கு பிறகு, கனவும் பசியுமாக தியாகத்தின் முன்னே பலிகொடுத்த குருதியூற்று இங்கிருந்துதான் பீறிட்டது.” என்றாள்.

    சமிந்த அந்தக் காயத்தின் மீது முத்தம் ஈன்றான். இருவரில் பெருகும் கண்ணீரால் சரீரங்கள் சிலும்பின. உலை மூண்டு கொதித்தது. பட்டயங்களும், துப்பாக்கிகளும், ஆட்லறிகளும், வன்புணர்வுகளும், பெருங்கொடுமைகளும், போரும், போராட்டமும், மிலேச்சத்தனங்களும்   இருளில் நின்று மிரண்டு பார்த்தன. கூடலின் முயக்கவொலியில் அலையோசை கனன்று பெருங்கடல் தாகித்தது.

    “நீயும் நானும் காதலிப்பதை உன்னுடைய ஊரவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். வைத்தியலிங்கம் மாதிரியானவர்கள் கடுமையான வசவுகளால் உன்னைத் திட்டுகிறார்கள். எனக்காக நீ எவ்வளவு துன்பப்படுகிறாய் என்று நினைத்தால் பெருந்துயரமாய் இருக்கிறது” சமிந்த சொன்னான்.

    “துயரப்படு. சனங்கள் கோபப்படுவதில் நியாயம் இருக்கிறது. தலைமுறை தலைமுறையாக எங்களை வன்புணர்ந்து கொன்று புதைத்த வன்கவர் வெறிப்படையைச் சேர்ந்தவன் நீ. அவர்கள் சந்தேகப்படுவார்கள். எதிர்ப்பார்கள். உன் பொருட்டு என்னையும் விலக்குவார்கள். அது சரியானதுதான்”

    “இவ்வளவு நெருக்கடிக்கு மத்தியில் நாம் ஏன் காதலித்தோம் ஆதா!”

    “படபடக்காதே. காதலிப்பதற்கு நெருக்கடிகள் அவசியமானவைதான். நீயும் நானும் வாழ்ந்து முடியும் வரை நெருக்கடிகள் நீளும் பெலன்கொண்டவை. அதற்காக…அழிந்து போன போரின் தனிமையை நீ விட்டுச் செல்வாயா, சொல்!”

    “போரின் தனிமையா?”

    நீ புணர்ந்து பருகிய தழும்பின் நறுமணம் சுரந்த உன்னுடைய ஆதா போரின் தனிமையல்லாமல், வைத்தியலிங்கம் சொன்னதைப் போல வேசையில்லை என்பது உனக்குத் தெரியாதா!

    “ஆதா!”

    என் தனிமையின் வெறுமை எரியட்டும். அதன் சடசடப்பொலியில் எறிகணைகள் வீழ்ந்து தோன்றிய பள்ளங்கள் தூர்ந்து போகட்டும். என் கடைசிக்காயத்தின் தழும்பில் முத்தம் ஈன்று மூர்ச்சையாகும் வரை இயங்கி முயங்குவோம் என்றாள்.

    ஆதா!….எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கும் சத்தம் கேட்கிறது.

    “எனக்கும் கேட்கிறது. ஆனால் நாம் எதிரும் புதிருமாய் போரில் மிஞ்சியவர்கள். இனிமேலும் காயப்படமாட்டோம் பயப்பிடாதே” என்ற ஆதாவின் வார்த்தைகள் நிலத்திற்கு ஆசுவசமாய் இருந்தது.
     

    https://akaramuthalvan.com/?p=1787

    • Like 2
    • Thanks 1
  14. வெளிநாட்டு மோகம் : யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

    6-24.jpg

    இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு மக்கள் குடிபெயர்வது தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகும் போலியான விளம்பரங்களை நம்ப வேண்டாமென யாழ் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஜகத் விசாந்த கோரியுள்ளார்.

    யாழ்ப்பாணம் உள்ளிட்ட இலங்கையில் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி போலி முகவர் நிறுவனங்கள் மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    இவ்வாறான போலி முகவர்களுள் பலர் கொழும்பை அடிப்படையாக கொண்டு இயங்குவதாக அவர் ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு தெரிவித்துள்ளார்.

    போலி முகவர்கள்

    கனடாவுக்கு அனுப்புவதாக கூறி யாழ் மக்கள் உள்ளிட்ட பலரிடம் போலி முகவர்கள் பணம் பெற்றுக் கொண்டுள்ளதாக ஜகத் விசாந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

    இதன்படி, ஒருவரிடம் சுமார் 20 இலட்சம் முதல் 90 இலட்சம் வரையான தொகை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    வெளிநாடுகளில் குடிபெயர வேண்டுமென்ற ஆசை காரணமாக பலர் குறித்த தொகையை செலுத்தி, ஏமாற்றமடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

    இதில் அதிகளவானோர் யாழ் மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

    முறைப்பாடுகள்

    சமூக ஊடகங்களில் வெளியாகும் போலி விளம்பரங்களை கண்டு மக்கள் ஏமாறுவதாகவும், குறித்த விளம்பரங்களில் கூறப்பட்டுள்ள தொகையை முகவர்களுக்கு அவர்கள் வழங்குவதாகவும் யாழ் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

    இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் தற்போது பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருந்தாலும், முறைப்பாடு செய்யாத பலர் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    போலி முகவர்களால் ஏமாற்றப்பட்ட தரப்பினரை உடனடியாக அருகில் உள்ள காவல்நிலையங்களில் முறையிடுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

    அத்துடன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட இரண்டு முகவர் நிறுவனங்கள் மாத்திரம் யாழ் மாவட்டத்தில் இருப்பதாகவும், வெளிநாட்டு வேலைவாய்ப்பை தேடுவோர் அவர்களை மாத்திரம் நாடுமாறும் ஜகத் விசாந்த அறிவுறுத்தியுள்ளார்.



    https://akkinikkunchu.com/?p=269368

     

  15. சதுரங்க ஆட்டமாடும் இலங்கை தமிழரசுக் கட்சி

    முருகாநந்தன் தவம்

    இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைமையை மிரட்டி, அடி பணிய வைத்து, தாம் நினைக்கும் காரியங்களை நிறைவேற்ற, தமது ஆதரவாளர்களை பதவிகளில் அமர்த்த, அது முடியாமல் போனால், கட்சியின் செயற்பாடுகளை வழக்குகள் மூலம் ஒரு சில வருடங்களேனும் முற்றாக முடக்கி அதன் மூலம் தனது தோல்விக்கு பழிவாங்க கட்சிக்குள் ‘தோற்றுப்போன’ தரப்பு ஒன்று மேற்கொள்ளும் சதுரங்க ஆட்டமாகவே இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிரான நீதிமன்ற வழக்குத் தாக்கல்கள் அமைந்துள்ளன.

    கடந்த ஜனவரி 21 மற்றும் 27ஆம் திகதிகளில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்சபைக் கூட்டங்கள் சட்டத்துக்கு முரணானது, செல்லுபடியற்றது. எனவே, குறித்த இரண்டு பொதுச்சபைக் கூட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தெரிவுகள் சட்டத்திற்கு முரணானதும் செல்லுபடியற்றதுமென தெரிவித்து திருகோணமலையில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று தமிழரசுக் கட்சியின் மாநாட்டை நடத்துவதற்கு எதிராக யாழ்.

    மாவட்ட நீதிமன்றில் முல்லைத்தீவைச் சேர்ந்த ஒருவரினால் இன்னொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தொடரப்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, தமிழரசுக் கட்சியின் மாநாட்டுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குத் தாக்கல்களின் பின்னணியில்தான் ‘தோற்றுப்போன தரப்பின்’ சட்ட விளையாட்டுகள் இருப்பதாக உள் ‘வீட்டு’த் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு கடந்த ஜனவரி 21ஆம் திகதி திருகோணமலை நகர மண்டபத்தில் நடத்தப்பட்டு, அதில் சிவஞானம் ஸ்ரீதரன் தலைவராகப் பெரும்பான்மை வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட நிலையில், தலைவர் பதவிக் கனவுடனும் அனைத்து தகுதிகளையும் கொண்டவன் என்ற தலைக் கனத்துடனும் களமிறங்கியவர் அடைந்த எதிர்பாராத தோல்வி மற்றும் கடந்த ஜனவரி 27ஆம் திகதி திருகோணமலையில் இடம்பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவின்போது, தலைவர் பதவி நனவாகாத நிலையில், பொதுச் செயலாளர் பதவியையாவது அடைந்து விட வேண்டுமெனத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டவர் மீண்டும் ஆசைப்பட்டு அதுவும் கிடைக்காத நிலையில், தனது விசுவாசியான திருகோணமலையைச் சேர்ந்த குகதாசனை பொதுச் செயலாளராக நியமிக்க வேண்டுமென மேற்கொண்ட சதிகள், குழிபறிப்புக்கள் கட்சியைப் பிளவு படுத்தும் காய் நகர்த்தல்கள் மத்தியில் குகதாசன் தெரிவு செய்யப்பட்டபபோதும், அதற்குக் கிளம்பிய கடும் எதிர்ப்புக்களினால் இன்று வரை அவர் அந்த பதவியை ஏற்க முடியாத நிலை ஆகிய இரு காரணங்களின் பின்னணியிலேயே தற்போது இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பது ஒன்றும் ரகசியமானதல்ல.

    ‘தோற்றுப்போன’ தரப்பின் விசுவாசிகளினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உள் ‘வீட்டு’தரப்புக்களினால் கூறப்படும் இவ்வழக்கைத் தாக்கல் செய்தவர்கள், ‘இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக ஜனவரி 27இல் தெரிவான குகதாசனையே நியமிக்க வேண்டும். பொதுச் செயலாளர் பதவிக்கு மீள் தெரிவு இடம்பெறக்கூடாது. அத்துடன், பொதுச் செயலாளர் பதவி பங்கிடவும் படக்கூடாது. இதற்கு கட்சியின் புதிய தலைமை இணங்கினால் வழக்குகள் வாபஸ் பெறப்படும்.

    இல்லையேல் இன்னும் இன்னும் வழக்குகள் தாக்கல் செய்வோம்’ என்ற முடிவில் இருப்பதாக தெரியவருகின்றது. இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளில் ஒன்று, கட்சியின் யாப்புக்கு முரணாக பொதுச் சபையில் பலர் இடம் பெற்றிருந்தனர் என்ற குற்றச்சாட்டைக் கொண்டது. இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து வழக்கைத் தாக்கல் செய்தவரும் அதனைத் தெரிந்து கொண்டே வாக்களித்த ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அப்போது தனது விருப்பத்துக்குரிய தலைவர் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையில் வாக்களித்துள்ளார்.

    ஆனால், அவர் எதிர்பாராதவிதமாகத் தோல்வியடைந்ததாலேயே இப்போது வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். தான் விரும்பிய தலைவர் வெற்றி பெற்றிருந்தால் கட்சியின் யாப்புக்கு முரணாக பொதுச்சபையில் பலர் இடம்பெற்றிருந்தனர் என்ற குற்றச்சாட்டை இவர் முன்வைத்திருக்க மாட்டார்.

    இதனால்தான் இந்த வழக்குத் தாக்கல் சூழ்ச்சிகளின் பின்னணியில் ‘தோற்றுப்போனவர்’ இருப்பதாக தமிழரசுக் கட்சியின் தமிழ்த் தேசியத்தைப் பாதுகாக்கும் தரப்பு பகிரங்கமாகவே குற்றம் சாட்டுகின்றது. அதாவது இலங்கை தமிழரசுக் கட்சியை உடைக்கும், புதிய தலைமையைச் செயற்படவிடாது தடுக்கும், கட்சியின் பொதுச் செயலாளராகத் தனது விசுவாசியையே நியமிக்க வேண்டும் என விடாப்பிடியாக நிற்கும் தோற்றுப்போனவரின் நடிப்பில் உருவாக்கப்பட்டதே இந்த வழக்குகள் என்பதே தமிழ்த் தேசிய விசுவாசிகளின் குற்றச்சாட்டு.

    வழக்கு தாக்கல் செய்தவர்களின் இந்த நோக்கம் அல்லது நிபந்தனை இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைமைக்குக் காற்றுவாக்கில் தெரிவிக்கப்பட்ட போதும், ‘தமிழரசுக் கட்சிக்கு எதிரான ‘உள் வீட்டு’ சூழ்ச்சிகளை முறியடிப்போம். வழக்குகளைச் சந்திக்கத் தயார்’ என கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனும் புதிய தலைவர் சிவஞானம் ஸ்ரீதரனும் உறுதியாக இருப்பதனால். தமது நிபந்தனைகளை ஏற்காது விட்டால் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவும் நீதிமன்ற சவாலுக்குட்படுத்தப்படும் என்ற மறைமுக மிரட்டல்களிலும் ‘தோற்றுப்போன’ தரப்பினர் ஈடுபட்டுள்ளதாகவும் ‘உள் வீட்டு’ தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

    இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள்ளும், வெளியிலும் பல சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்த சூழ்ச்சிகள் பற்றிப் புரிதல்களும் எமக்குத் தெளிவாக உள்ளன. 75 வருட கால அரசியல் பாரம்பரியத்தினைக் கொண்ட தமிழரசுக் கட்சிக்கு எதிராக தற்போது வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தொடர்பில் நீதிமன்றத்தின் ஊடாக கட்சி அதனை முறையாகக் கையாளுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

    அதேநேரம், கட்சியின் நிர்வாகம் தொடர்பில் புதிய தெரிவுகள் இடம்பெற்றுள்ளமையானது யாப்பு விதிகளுக்கு முரணானது என்றும் கூறப்பட்டுள்ளது. என்னைப் பொறுத்தவரையில், எனது தலைமைத் தெரிவு உட்பட கட்சியின் அனைத்து பதவி நிலைகளுக்கான புதிய தெரிவுகளையும் மீளவும் செய்வதற்கு நான் தயாராகவே உள்ளேன். விசேடமாகக் கட்சியின் மூலக்கிளை தெரிவுகளில் இருந்து அனைத்தும் மீள நடைபெறுவதாக இருந்தால் கூட அதனை ஏற்றுக்கொள்வதில் எனக்கு எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை.

    மேலும், தற்போது புதிய தெரிவுகள் சம்பந்தமான விடயங்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பிலேயே தங்கியுள்ளன. ஆகவே, நீதிமன்றத்தின் தீர்மானத்தினைப் பின்பற்றுவதற்கும் நான் தயாராக உள்ளேன். விசேடமாக, நீதிமன்றம் தெரிவுகள் தவறாக இருக்கின்றன என்று தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டுமாக இருந்தால் நீதிமன்றத்தின் மேற்பார்வையுடன் அதனை மீளச் செய்வதில் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. எனவே, அனைத்து தடைகளையும் முறையாகக் கையாண்டு அவற்றைக் கடந்து எமது பாரம்பரிய அரசியல் கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக தற்போது செயற்பட்டு வருகின்றோம் என தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

    2010ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான இரா. சம்பந்தன் எடுத்த வரலாற்றுத் தவறான முடிவினால் அவர் இலங்கை தமிழரசுக் கட்சிக்குள் பற்ற வைத்த தீ இன்று தான் பற்றி எரிய அண்மையில் இரா.சம்பந்தன் எம். பி. பதவியிலிருந்து விலக வேண்டுமெனக் கோரியது. தற்போது சம்பந்தன் விதைத்த வினையின் விளைவாக அவரின் கட்சியையே அறுக்கத் தொடங்கியுள்ளது என்றே கூற வேண்டும்.

    இதேவேளை, கடந்த வாரம் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புத்திஜீவிகள் உள்ளிட்ட சிலரைச் சந்தித்துக் கலந்துரையாடிய போது ‘தமிழ் கட்சிகளின் பிளவு ஆபத்தானது.

    பிளவுகள் சரி செய்யப்பட்டு அரசியல் பயணங்கள் தொடர வேண்டும். தமிழ்க் கட்சிகளின் பிளவு வருத்தமளிக்கின்றது. இந்தக் கட்சிகள் மேலும் பிளவடையாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்’ என்று வலியுறுத்தியிருந்தார். தமிழ் கட்சிகள் பிளவடைந்து முடிந்து தற்போது கட்சிக்குள் பிளவுகள் ஏற்படுத்தப்படுவதை அவர் அறியவில்லை போலும். தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் முச்சந்தியில் நிற்கும் நிலையில், இவ்வாறானதொரு நெருக்கடி தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். தங்களின் தனிப்பட்ட நலன்களுக்கும் வறட்டு கௌரவங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்காது விட்டிருந்தால் இலங்கை தமிழரசுக் கட்சி இன்று ஸ்ரீதரன் தலைமையில் தலை நிமிர்ந்து நின்றிருக்கும். இந்தப் பிரச்சினையைச் சுமுக தீர்வு காணாது கௌரவப் பிரச்சினையாக, இரு அணிகளின் பிரச்சினையாக மாற்றினால் தந்தை செல்வா சொன்னதைச் சற்று மாற்றி, ‘இலங்கை தமிழரசுக் கட்சியை இனிக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று கூறவே நேரிடும். 

    22.02.2024
     

    https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சதுரங்க-ஆட்டமாடும்-இலங்கை-தமிழரசுக்-கட்சி/91-333668

     

     

  16. யாழ் வல்வை பட்டப் போட்டியில் முதலிடம் பெற்ற இளைஞன் தாய்லாந்தில் புதிய சாதனை

    Oruvan

    யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற மாபெரும் பட்டம் போட்டியில் முதலிடம் பிடித்த விநோதன் தாய்லாந்திலும் சாதனை புரிந்து உலகவாழ் மக்களின் கவனத்தினை ஈர்த்துள்ளார்.

    வல்வை பட்டப் போட்டித் திருவிழாவில் போர்தாங்கி ஆகாயவிமானத்தை பறக்கவிட்டு உலகில் உள்ள அனைத்து தமிழர்களையும் விநோதன் வியக்க வைத்திருந்தார்.

    இதனை தொடர்ந்து தாய்லாந்தில் 36 நாடுகள் பங்குபற்றிய பட்டக் காட்சியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டு, இரண்டு வித்தியாசமான பட்டங்களை பறக்கவிட்டுள்ளார்.

    தாய்லாந்தில் விநோதனின் சாதனை 

    கடந்த ஐந்து நாட்களில் விநோதன் தாய்லாந்துக்கு சென்று இரண்டு பட்டங்களை கட்டி முடித்து அதனை ஒப்பணை பார்த்து பல நாட்டு மக்கள் முன்னிலையில் பறக்க விட்டுள்ளார். 

    அத்துடன் அங்கு பங்குப் பற்றிய பல நாட்டுக் கலைஞர்களும் விநோதனின் கைவண்ணப் பட்டத்தினை பாராட்டியுள்ளனர்.

    உலக வரலாற்றில் இலங்கையை பிரதிநிதித்துவப் படுத்தி தாய்லாந்தில் நடைபெறும் பட்டப் காட்சியில் பங்குபற்றுவது இதுவே முதன்‌முறை என்பதால் விநோதனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.
     

    https://oruvan.com/diaspora/2024/02/24/jaffa-youth-vinodhans-achievement-in-thailand

  17. 9 minutes ago, Elugnajiru said:

    ஏன் சார் அவர்களது தீர்வுப்பொதியை நீங்களோ அல்லது நம்பிக்கையான வேறி யாராவதோ 13 க்கு மேல் அதிகரமுள்ளதாகத் தயாரித்ததாகச் சொல்லப்படும் நகலைப்பற்றிய விபரம் தரமுடியுமா?

    சுத்தமான பொய்


    சந்திரிக்கா காலத்து பொதியைப் பற்றி அறிய பக்கம் 4-6 படிக்கவும் (ஆங்கிலத்தில் உள்ளது)

    https://noolaham.net/project/36/3532/3532.pdf

  18. முற்றவெளி மந்திரம்

    sudumanalFebruary 18, 2023
    bild1.jpg?w=640

    யாழ் முற்றவெளியில் 09.02.24 அன்று நடந்த இந்திய சினிமா நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சி கட்டற்ற மக்கள் அலையில் தத்தளித்தது. அதில் சில மீறல்களை இளைஞர்கள் நிகழ்த்தியதால் பரபரப்பாகி நிகழ்ச்சி தடைப்பட்டு பின் தொடர்ந்து நடந்து முடிந்தது.

    சமூகவலைத்தளங்கள் எப்போதுமே தூண்டிலோடு அலைவதால் முற்றவெளியில் பேத்தைவால் குஞ்சு அகப்படவும் அதைப் பிடித்து இராட்சத மீனாக படம் காட்டி அமர்க்களப்படுத்திவிட்டன. இதற்குள் புகுந்து “யாழ்ப்பாணிகளின் கலாச்சாரச் சீரழிவு” என இளைஞர்கள் மீதான ஒழுக்காற்று குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டன. அலம்பல்கள், வன்மங்கள், வகுப்பெடுப்புகள் என அடித்த அலைகளுக்கு நடுவே பொறுப்பான விதத்தில் இப் பிரச்சினையை அணுகி எழுதியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அது முக்கியமானது என நம்புகிறேன்.

    எப்போதுமே சந்ததி இடைவெளி என்பது வரலாறு பூராவும் இருந்துகொண்டேதான் வருகிறது. அப்பர் நடந்துவந்த தடத்தில் நான் நடக்க சாத்தியமில்லை. நான் நடந்த தடத்தில் என் பிள்ளைகள் நடக்க சாத்தியம் இல்லை. காலம் இயக்கமுறாமல் நிலைகுத்தி நின்றால் மட்டுமே இது சாத்தியம். காலம் இயங்கியபடியே இருக்கிறது என்ற நினைப்பு இந்த விடயத்தில் பல பேருக்கு வருவதில்லை.

    அதுவும் 40 வருடங்களுக்கு முன் இருந்த சந்ததி இடைவெளி போலன்றி பின்னர் ஏற்பட்ட இணையம், சமூக வலைத்தளம் என்பன போன்ற தொடர்பாடல் தொழில்நுட்பக் கடல் ஒரு சுனாமி போல் எழத் தொடங்கி அந்த இடைவெளியை அதிகரிக்கிறது. இது அதை கையாளத் தொடங்கிய வளர் இளம் பருவ அல்லது இளைஞர் பட்டாளத்தின் தகவல் அறிதல் திறனையும் கொள்ளளவையும் அறிவுப் பரம்பலையும் மாற்றி உலகை விரல் நுனியில் நிறுத்தியுள்ளது. இளஞ் சமுதாயத்தின் உலகை முதிய சமுதாயம் புரிந்து கொள்வதில் தமது இளம்பராய ஒப்பீடுகளை தவிடுபொடியாக்கியது. புதிய வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து தம்மை ‘இற்றைப்படுத்த’ (update) முடியாதவர்கள் இளஞ் சமுதாயத்தின் மேல் குற்றப் பத்திரிகை வாசிக்கும் இயலாமைக்குள் சென்றார்கள்.

    இந்த மனப்பாங்குடனே யாழ் முற்றவெளி சம்பவத்தை அவர்கள் அணுகுகிறபோது கலாச்சாரச் சீரழிவு, ஒழுக்கமின்மை என்ற எளிய சூத்திரத்திரத்தை பாவித்தார்கள். எம்மையும்விட அடுத்தடுத்த சந்ததிகள் அறிவிலும், உலகை அறிதலிலும் வளர்ச்சிகண்டு கொண்டே போவதற்கான வெளிகள் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன என்பதை நாம் ஏற்றுத்தான் ஆக வேண்டும். அதை நாம் அனுபவத்தில் எமது பிள்ளைகள் ஊடாக கண்டுகொண்டே இருக்கிறோம். ஒட்டுமொத்தமாக அவர்களை “அறிவுலக வெளிக்குள் தம்மை ஆட்படுத்திக் கொண்டவர்கள்” என எவரும் சான்றிதழ் கொடுத்துவிட முடியாது என்றபோதும், அதை ஒரு வளர்ச்சிப் போக்காக வரையறுக்க முடியும். யாழ் முற்றவெளியில் நிகழ்ச்சிக்கு வந்த இளைஞர்கள் நிகழ்த்திய மீறல் ஒன்றும் குற்றமாக எனக்குத் தெரியவில்லை. அங்கு ஏற்பட்ட இடைஞ்சல்களுக்கான பொறுப்பை நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளாகள்தான் ஏற்க வேண்டும். அந்த விடயங்கள் பலராலும் பேசப்பட்டாயிற்று.

    அந்த மீறலை ஒரு வன்முறைபோல சித்தரித்தல் அபத்தமானது. ஆனால் ஒரு கும்பல் தனமான வன்முறை அல்லது panic நிலைக்கு மாறக்கூடிய சந்தர்ப்பம் இருந்தது என்பதையும் மறுக்க முடியாது. அந்தளவில் இளைஞர்களுக்கும், அதேபோல் பொலிசாருக்கும் பொறுப்புணர்வு இருந்திருக்கிறது. அதன்படியான செயல் இயல்பாகவே குளவிக்கூட்டுக்கு கல்லெறியாத, ஒரு கண்ணீர்ப்புகையிடம் உதவிகோராத, அதன்மூலம் ஒருவித panic நிலையை உருவாக்காத பொலிஸாரின் பொறுப்புணர்வில் தெரிகிறது. அதேபோல் வன்முறையை அன்றி ஆர்வக்கோளாறை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட மீறலின் எல்லைக்குள் செயற்பட்ட இளசுகளின் பொறுப்புணர்விலும் தெரிகிறது. எந்நேரமும் உடைந்து நொருங்கக்கூடிய அந்தப் பொறுப்புணர்வின் எல்லை ஓர் அனர்த்தத்தின் வாயிலை எட்டாதது ஒரு பெரும் நிம்மதிதான்.

    இளைஞர்களின் போக்கை கிண்டலடிப்பவர்களுக்கு இது விளங்காமலே போய்விட்டது. இவ்வாறான நேரம்சங்களைக் கவனத்தில் எடுக்காமல், எப்போதும் எதிரம்சங்களை மோப்பம் பிடிக்கும் வேட்டைமனிதர்களே ஆபத்தானவர்கள். மாறாக இந்த இளைஞர்கள் அல்ல. இந்த வேட்டை மனிதர்கள் தமக்கான ஆதாரங்களை கும்பலாக ஓடிக்கொண்டிருப்பவர்களின் கால்களுக்குள் அகப்பட்டு முறிந்த சில கதிரைக் கால்களிலும், சரிந்து விழுந்த தண்ணீர்த் தாங்கியிலும், கதிரையைக் களவெடுத்துக் கொண்டு ஓடிய ஒருசில கள்ளப் பயல்களிடமும் கண்டடைந்து சொன்னார்கள். விலையுயர்ந்த கமராக்கள் ஒலிபெருக்கிகள் தொழில்நுட்ப சாதனங்கள் எதுவுமே அடித்து நொருக்கப்படாமல் பாதுகாப்பாக இருந்ததும், மேடைமீது பாய்ந்து ரகளை பண்ணாமல் இருந்ததும் என எல்லாமே இளைஞர்களின் மீறல் ஒரு வன்முறையல்ல, அது அவர்களின் நோக்கமுமல்ல என்பதற்கான ஆதாரங்கள்.

    பல உலக நாடுகளில் கால்பந்து விளையாட்டு மைதானங்களில் இப்படியான ரசிகர்களின் மீறல்கள் இருப்பது நாம் பார்க்காததல்ல. யாழ் முற்றவெளி மீறல் மட்டும் ‘யாழ்ப்பாணியின் கலாச்சார சீரழிவாக’ ஒரு பகுதியினருக்கு தெரிவது அறிவின் ஓர் அவலம். கலாச்சார காவிகளாக பெண்களை அமர்த்திவிட்டு, கலாச்சார காவலர்களாக ஆண்கள் இருப்பதே ஆணாதிக்க முறைமை கொண்ட சமூகத்தில் நிலவும் வழிமுறை. ஆண்களின் கலாச்சார மீறல்களை இயல்பானதாக எடுக்கும் அதேவேளை, பெண்களின் கலாச்சார மீறல்களை ‘குய்யோ முறையோ’ என கூச்சலிட்டு எதிர்ப்பதுதான் ஆணாதிக்கக் கலாச்சாரக் கடமையாக இருந்தது. இதில் ஆண்கள் மீது நியாயமான விமர்சனங்களை முன்வைப்பவர்கள்கூட, முற்றவெளி விடயத்தில் இந்த இளைஞர்களை (ஆண்களை) முன்வைத்து கலாச்சாரச் சீரழிவு பற்றி பேசும் முரண்நகையை என்னவென்பது. அதுவும் முற்றவெளிக்கு வராத ஒரு மிகப் பெரும் பகுதி இளைஞர்கள் இவர்கள் கவனத்திற்குள் வரவேயில்லை. ஒரு சிறு பகுதி இளைஞர்களை வைத்து பொதுவாக ‘யாழ்ப்பாணிகளின் கலாச்சார சீரழிவு’ என பிரதேசவாத வாடையுடனும், ஒரு கொசிப்பு மனநிலையுடனும் வந்து களமாடியவர்கள் உண்டு.

    அடுத்தது ஒரு சமூகத்தின் கலாச்சார பங்காளிகளில் ஒரு பகுதியினர் மட்டுமே இளைஞர்கள். அதுவும் ஆணாதிக்க பங்காளிகள். ஒரு கலாச்சார முழுமையில் பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் பங்கை வசதியாக மறைத்துவிட்டு முற்றவெளிக்கு வந்த இளைஞர்களை மட்டும் முன்னிறுத்தி ‘தமிழ்க் கலாச்சார சீரழிவு’ என விரிவுபடுத்தி பேசுபவர்களும் இருந்தார்கள். இது இன்னொரு அபத்தம் அல்லது மோசடி. இளம் பெண்கள் முற்றவெளியில் நடந்த மீறலில் இளைஞர்களுடன் சமனான அல்லது முன்னணிப் பாத்திரம் கொண்டிருந்திருந்தால் கலாச்சார சீரழிவு மதிப்பீட்டாளர்கள் இன்னும் பத்து மடங்கு எகிறியிருப்பார்கள். புலத்தில் மட்டுமல்ல புலம்பெயர் நாட்டிலும் இந்த கலாச்சார மதிப்பீட்டாளர்கள் கலாய்த்தபடிதான் இருந்தார்கள், இருக்கிறார்கள். 

    இந்துத்துவ இந்தியாவின் மத மற்றும் சாதியப் பண்பாட்டு பரவலாக்கம் அல்லது தீவிரப்படுத்தல் மட்டுமல்ல, சினிமாவை முதன்மையில் வைக்கும் ஜனரஞ்சக பண்பாட்டு ஆதிக்கமும் இலங்கைத் தமிழ் மக்களை நோக்கி திட்டமிடப்பட்ட வகையில் இந்துத்துவ நிகழ்ச்சி நிரலின்படி படிப்படியாக நகர்த்தப்படுகிறது. தெரிந்தோ தெரியாமலோ இம் முற்றவெளி கலைநிகழ்ச்சி ஏற்பாடும் அதற்குத் துணைபோனதாக ஒருவர் மதிப்பிடுவதை இலகுவில் நிராகரிக்க முடியாது. ஒரு சிலமணி நேர நிகழ்ச்சிக்கு இவளவு பெருந்தொகையான சினிமாத்தள ‘கலைஞர்களை’ கொண்டுவந்து இறக்கிய செயல் அதனடிப்படையிலானதாகவும் இருக்கலாம். அதுவும் முந்தநாள் மழையில் நேற்று முளைத்தவர்களும் இந்த படைபெடுப்பினுள் அடக்கம்.

    இந்தியப் பெருநகரங்களில் இல்லாத பெருமெடுப்பில் யாழ்ப்பாணத்தில் கலாச்சார மண்டபம் கட்டித் தந்திருக்கிறோம் எனவும் எதிர்காலத்தில் இந்தியாவுக்கும் தமிழ் நிலத்துக்குமான தொடர்பானது தரை, கடல், ஆகாயம் வழி இறுகப் பற்றிக் கொள்ளும் எனவும் இரண்டு கைகளின் விரல்களையும் ஒன்றாகக் கோர்த்து யாழ்ப்பாணத்தில் மேடையில் நின்று உறவுப்பாலம் அமைத்துக் காட்டினார் அண்ணாமலை. அயோத்தியில் தொன்மைமிகு மசூதியை உடைத்து இராமர் கோயில் கட்டிமுடிய, இப்போ இராமர் பாலம் இலங்கையை கொழுவி இழுத்து கட்ட ஆயத்தமாகிறார்கள். இந்த பண்பாட்டு ஆதிக்கம் அல்லது பரவலாக்கலுக்கு இளைஞர்கள் படிப்படியாக இரையாகுவது குறித்து விழிப்படைய வேண்டும். ஒவ்வொரு பண்பாட்டிலுமிருந்து நல்லனவற்றையும் பொருத்தமானவற்றையும் உள்வாங்கி சொந்தப் பண்பாட்டை வளமாக்குதல் முக்கியம். அதேநேரம் மற்றைய கசடுகளை கழித்துக் கட்ட வேண்டியதும் அவசியம். முற்றவெளி நிகழ்ச்சி இந்தக் கசடுகளின் பிரமாண்டம்.

    சினிமா ஓர் அற்புதமான கலை. எல்லாக் குறைபாடுகளையும் காட்டி அந்தக் கலையை நாம் ஒருபோதுமே நிராகரிக்க முடியாது. பெண்ணுடலை பாலியல் பண்டமாக்கும் கருத்துநிலைக்கு ஏற்ப அதன் காட்சிப் படிமங்கள், பாடல்கள் என சினிமாவானது ஒரு காலத் தொடர்ச்சி கொண்டது. அதற்கு இரசிகர்களாகி பலியாகியபடிதான் வந்துகொண்டிருக்கிறோம். அத் தொடர்ச்சி தமன்னா வடிவில் இப்போ இந்த இளைஞர்களை மேடைக்கு அருகில் இழுத்துவந்து விட்டதிலும், பனை மரத்தில் கம்பங்களில் என ஏற்றியதிலும் பெரும் பங்கை ஆற்றியது எனலாம். இரசனை வேறு மோகம் வேறு. இதுகுறித்து இளைஞர்கள் விழிப்புற வேண்டும். தமன்னாவுடன் புகைப்படம் எடுப்பதற்கு சிலரிடமிருந்து 30’000 ரூபாவை பறித்து விசுக்கியது இந்த மோகம்தானே ஒழிய சினிமா இரசனை அல்ல என்பதை அவர்கள் அடையாளம் காண வேண்டும்.

    ஈழத்தில் 70 களில் வீச்சம் பெற்று எழுந்த பொப் இசை வடிவம் என்பது சினிமாவிலிருந்து கிளைத்ததல்ல. அது தனித்துவம் கொண்டது. அதன் தொடர்ச்சியை போர் முறித்தெறிந்துவிட்டது. இந்தியாவிலோ ‘பாடலிசை’ சினிமாவுக்குள் அடக்கமாகிப் போனது. பாடலிசையை இரசிப்பது என்பதை சினிமாவுக்கு வெளியில் பிம்பமுறாதபடி இரசிகரின் மனதை கட்டிப் போட்டுள்ளது. பல நாடுகளில் பாடலிசை என்பது சினிமாவுக்கு வெளியே வளர்ச்சியுறும் கலை வடிவம். இசையை இரசிப்பது, ஆடுவது என்பதெல்லாம் இளம் உடலின் துடிப்புத்தனத்துக்கும் அகத் தூண்டலுக்கும் அதிகம் இதமளிப்பது. மகிழ்ச்சியை சுற்றி வாழ்வை அமைத்துக் கொள்ள உதவுவது.

    திரையில் உலவிய கதாநாயகன் அரசியலில் அறிவுக்கூச்சமின்றி முதலமைச்சராக நினைக்கிறான். தொலைக்காட்சி முழுவதும் கேளிக்கை நிகழ்ச்சியிலிருந்து அறிவை முன்னிறுத்துவதாக படம் காட்டும் போட்டி அல்லது உரையாடல் நிகழ்ச்சி எல்லாமே திரையுலகம் சுற்றியே சுழல்கிறது. நடிகர்களின் கட் அவுட்டுக்கு பால் வார்க்கவும், கோயில் கட்டவும்கூட மனித அறிவை இழிநிலைக்கு கொணர்ந்து விட்டிருக்கிறது இந்தியத் திரையுலகம். இவையெல்லாம் இனி ஈழத்திலும் நடக்காது என்பதற்கான உத்தரவாதத்தை இந்தியாவிலிருந்து வரும் இந்தக் கிழிசல் பண்பாட்டு அம்சங்கள் உடைத்து நொருக்க நாளாகாது என்றே தோன்றுகிறது. இதுகுறித்து இளைஞர்கள் எச்சரிக்கையடையவும் வேண்டும்.

    யுத்தங்கள் நடந்து முடிந்த பிரதேசங்களிலெல்லாம் திட்டமிட்டே போதைப்பொருளை பரவலாக்குவதன்மூலம் இளைஞர்களை அதற்கு அடிமையாக்கி, சமூகம்சார் அரசியலிலிலிருந்து தூரப்படுத்தி தமது அதிகாரங்களுக்கு எதிராக எழுந்துவிடாதபடி பார்த்துக் கொள்வது அதிகாரவெறியர்களின் உத்திகளில் ஒன்று. இலங்கைக்குள் அதுவும் குறிப்பாக தமிழ்ப் பகுதியினுள் போதைப் பொருள் இந்தியாவிலிருந்து பெருமளவு வருகிறது என சொல்லப்படுகிறது. இலங்கை அரசு அதிகார வெறியர்களின் உத்திக்கு இசைவாக, இந்திய வியாபாரிகளின் காசு பார்க்கும் குறியும் அமைவதால் அந்தக் காட்டில் ஒரே மழைதான்.

    இலாபமீட்டும் தொழிலாக போதைப் பொருள் வியாபாரம் உலகின் மூலைமுடக்குகளெல்லாம் ஒரு சமூகவிரோத கிருமியாகப் பரவத் தொடங்கி நாளாகிவிட்டது. அதற்கு எதிராக இருப்பதும், அதை பொலிஸாரின் சட்டபூர்வ நடவடிக்கைகள் மூலமும், சிவில் சமூக நிறுவனங்களின் அறிவூட்டல் செயற்பாடுகள் மூலமும் எதிர்கொள்வது அவசியமானது.

    ஆனாலும் போதைப் பொருளை ‘கடந்து போதல்’ என்பது இளம் சந்ததியால் முடியாததல்ல. புலம்பெயர் நாட்டில் மது, சிகரெட், போதைப் பொருள், பாலியல் தொழில் விடுதிகள் என சட்பூர்வமாகவும் சட்டபூர்வமற்றும் கண்முன்னே விரிகிற சந்தர்ப்பங்கள் இருக்கிறபோதும், இவைகளுக்கு அடிமையாகுபவர்கள் ஒப்பீட்டளவில் மிக மிகக் குறைவானவர்கள். அது தனக்கானது அல்ல என்கின்ற அறிவு மற்றும் மனவளத்தால் பெரும்பான்மை மனிதர்கள் கடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். எனவே இலங்கையிலும் பெரும்பான்மை மனிதர்கள் அல்லது இளைய சமுதாயம் இதற்கு (கடந்துபோதலுக்கு) விதிவிலக்காக இருக்க நியாயமில்லை.

    முற்றவெளி நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்களுக்கு ஒரு பாடம். இளைஞர்களுக்கு ஒரு சுயவிசாரணை!
     

    https://sudumanal.com/2024/02/18/முற்றவெளி-மந்திரம்/#more-5984

    • Like 2
    • Thanks 1
  19. உயிரிழந்த பல்கலைக்கழக மாணவன் குறித்து அதிர்ச்சி செய்தி

    யாழ்ப்பாணம் - நீர்வேலியில் நேற்று (21) விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவன் குறித்து அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது.

    குறித்த மாணவன், வீடொன்றில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டு வாகனத்துக்கு தீவைத்து விட்டு திரும்பிய போதே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

    அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுப்பிட்டி பகுதியில் நேற்று அதிகாலை நாய் குறுக்காக ஓடியதால் மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாமல் விபத்துக்குள்ளாகி பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்தார்.

    யாழ். பல்கலைக்கழகத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள  மானிப்பாய், வேம்படி பகுதியைச் சேர்ந்த ரமேஸ் சகீந்தன் (22) என்ற மாணவனே இதில் உயிரிழந்துள்ளார்.

    மாணவன் உயிரிழந்த விவகாரம் மர்மமாக இருந்த நிலையில், மானிப்பாயை சேர்ந்த மற்றொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், உயிரிழந்த பல்கலைக்கழக மாணவனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்து, விபத்தில் சிக்கியவர் என்பது தெரியவந்தது.

    இந்த நிலையில், வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுப்பிட்டியில் உள்ள வீடொன்றில்  தாக்குதல் முயற்சி நடந்தது. இது குறித்து பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியபோது, குறித்த  வீட்டிற்குள் நுழைந்து துடுப்பு மட்டையை பயன்படுத்தி தாக்குதல் நடத்தி, வானுக்கு தீ வைத்து விட்டு திரும்பி வரும் போதே பல்கலைக்கழக மாணவன் விபத்தில் சிக்கியது தெரிய வந்தது.

    உயிரிழந்த பல்கலைக்கழக மாணவனும் காயமடைந்தவரும் இணைந்து வன்முறை தாக்குதலில் ஈடுபட்டு விட்டு திரும்பி வரும் போது நீர்வேலியில் விபத்தில் சிக்கினர்.

    விபத்தை தொடர்ந்து, நண்பரொருவருக்கு அறிவித்து அவர் மூலம் சம்பவத்தை மறைக்க அந்த இடத்தை சுத்தம் செய்து, தடயங்களை அழிக்க முற்பட்டதுடன், காயமடைந்தவரை நோயாளர் காவு வண்டியில் ஏற்றி அனுப்பியுள்ளனர்.

    அத்துடன், விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றையவர், மோட்டார் சைக்கிளை மறைத்து வைத்து விட்டு, சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

    ஒரு தலைக்காதல் விவகாரத்தினால் இந்த வன்முறை தாக்குதல் நடத்ததாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

    நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்து தடயத்தை அழிக்க முற்பட்டவரையும் வைத்தியசாலையில் காயமடைந்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளவரிடமும் அச்சுவேலி பொலிஸார் மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  R
     

     

    https://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/உயிரிழந்த-பல்கலைக்கழக-மாணவன்-குறித்து-அதிர்ச்சி-செய்தி/71-333708

  20. பௌர்ணமி பொங்கலை தடுத்து நிறுத்திய பொலிஸார்

    அப்துல்சலாம் யாசீம்

    திருகோணமலை - தென்னைமரவாடி மக்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கந்தசாமி மலை முருகன் ஆலயத்தின் மாதாந்த பௌர்ணமி தின பொங்கல் நிகழ்வினை இன்று (23) தடுத்து நிறுத்தியதாக தெரிய வந்துள்ளது.

    மாதாந்தம் பௌர்ணமி தினத்தன்று தென்னமரவாடி கிராம மக்களால் நடத்தப்படும் பொங்கல் விழா வழமை போன்று இன்றைய தினமும் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.

    இப்பொங்கல் விழாவிற்கு கிராம மக்கள் மற்றும்  திருகோணமலை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலிருந்து பக்தர்கள் உட்பட சிவில் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள்  கலந்து கொண்டனர்.

    இச்சந்தர்ப்பத்தில் இக்கிராம மக்களால் பொங்கலுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் ஆலய வளாகத்திற்குள் திடீரென நுழைந்த 100க்கு மேற்பட்ட பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர் ஆயுதங்களுடன் வருகை தந்து அப்பிரதேசத்திலிருந்த கிராம மக்களையும் வெளி பிரதேசத்திலிருந்து வருகை தந்த மக்களையும் விரட்டினர்.

    இதன் போது இப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்ட சிவில் செயற்பாட்டாளரான திரு. லவகுசராசா அவர்களுக்கும் அவருடன் வருகை தந்திருந்த செயற்பாட்டாளர்களுக்கும் நீதிமன்ற தடையுத்தரவினை வழங்கி அவ்விடத்திலிருந்து வெளியேற்றியிருந்ததுடன் பொங்கலை தடுத்து நிறுத்தி அக்கிராம மக்களையும் வெளியேற்றி கிராம சூழ்நிலையை பதற்றத்திற்குள்ளாக்கினர்..

    இச்சம்பவம் இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த தமிழ் சமுகத்தினுடைய கலாசார மற்றும் மத வழிபாட்டு உரிமையினை மீறும் செயலாகும். ஆகவே இச்சம்பவத்தை கிராம மக்களும் சிவில் சமுகங்களும் கண்டிப்பதுடன் இதற்கான நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். R

    image_d442a86723.jpg

    image_2fa5760b11.jpgimage_a9f577fcd6.jpgimage_4f1f3efeed.jpg



     

    https://www.tamilmirror.lk/திருகோணமலை/பரணம-பஙகல-தடதத-நறததய-பலஸர/75-333709

  21. 34 வருடங்களின் பின்னர், வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் ஆலய வழிபாடு!

    adminFebruary 23, 2024
    VALI-VADAKKU.png?fit=756%2C416&ssl=1

    வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் 34 வருடங்களின் பின்னர் ஆலயங்களுக்கு சென்று பொதுமக்கள் இன்று வழிபாடுகளில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதற்கமைவாக,  290 பக்தர்கள் ஆலய வழிபாடுகளை மேற்கொள்வதற்காக,  தமது பெயர் விபரங்களை தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் பதிவு செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில்  இன்று காலை முதல் பலாலி இராணுவ தலைமையகத்தில் இருந்து பக்தர்கள் இராணுவத்தின் பேருந்து மூலம் ஆலயங்களுக்கு கொண்டு செல்லப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    எனினும், இலத்திரனியல் உபகரணங்கள், தொலைபேசிகள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதோடு, பூசைப் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    கடந்த 14ஆம் திகதி வலி.வடக்கு காணி விடுவிப்பு தொடர்பில் யாழ் மாவட்ட செயலர், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர், மாவட்ட செயலக அதிகாரிகள், தெல்லிப்பழை பிரதேச செயலர், யாழ் மாவட்ட இராணுவ தளபதி ஆகியோருக்கிடையில் பலாலி இராணுவ தலைமையகத்தில் கூட்டம் இடம்பெற்றது.

    இன்றைய தினம் ஆலய வழிபாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் வழிபாட்டு தலங்களை புனர்நிர்மாணம் அல்லது புனரமைப்பு பணிகள் செய்வதற்கு அனுமதிகள் வழங்கப்படவில்லை என இராணுவம் குறிப்பிட்டுள்ள போதிலும் ஆலயத்தினர் விரும்பினால் முறையான கோரிக்கையினை மாவட்ட செயலகத்திடம் முன் வைப்பதன் ஊடாக இராணுவத்தினர் மூலம் ஆலயங்களை புனர்நிர்மாணம் செய்யமுடியும் என யாழ் மாவட்ட செயலர் அம்பலவானர் சிவபாலசுந்தரம் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
     

    https://globaltamilnews.net/2024/200747/

     

    • Like 1
  22. 1 minute ago, Kandiah57 said:

    நீலனின். வரைபு தீர்வு என்பது தவறு ஆகும்  அது சதி திட்டம்  என்று உறுதியாக சொல்லுகிறேன்

    அதனால்தான் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் முதல் வரைபை சிலாகித்திருந்தார்😃

     

  23. 46 minutes ago, நன்னிச் சோழன் said:

    புலிகளின் அரசியல் ஆலோசகரான "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்களும் இப்பொதியினை ஒரு கட்டத்தில் ஏற்றுக்கொண்டிருந்தார் (1995 ஓகஸ்டில் (ஆரம்ப கட்டத்தில்) இதற்கு மறுத்தாலும் போர்நிறுத்த மற்றும் அமைதி உடன்படிக்கை ஒன்றிற்கு ஓமென்றிருந்தார். 2000/03/13 அன்று இப்பொதி "சரியான வரைபு... ஏற்கக்கூடியது" என்றார்).

    ஆனால் இது தனது மெய்யான மிளிர்வில் அப்படியே நாடாளுமன்றத்திற்கு அன்றைய காலகட்டத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.

    நல்லது நன்னி. மிகவும் ஆழமாகவே ஆராய்ந்துள்ளீர்கள். நீலன் மிளிர்வான வரைபை உருவாக்குவதற்கு உதவினார். எனினும் நீர்த்துப்போகச் செய்தது சிங்கள அரசியல் கட்சிகளினது செயற்பாடு. பொதி தீர்வாக வந்திருக்கும் என அந்தக் காலத்திலேயே நம்பவில்லை. ஆனால் எழுத்து மூலம் ஒரு தீர்வுத் திட்டத்தை தயாரிக்க உதவியது கொலை செய்யவேண்டிய அளவுக்கு துரோகமான செயல் இல்லை. புலிகள் இராணுவ ரீதியில் பலமான நிலையில் இருந்த காலகட்டத்தில் தமிழ் ஈழத்திற்குக் குறைவான தீர்வு ஒன்றை அவர்களின் அனுமதி இல்லாமல் வரைய உதவியதுதான் நீலன் கொல்லப்பட்டதற்கான காரணம்.

     இன்றைய காலகட்டத்தில் “மிளிர்வான” பொதியையோ அல்லது நீர்த்துப்போன அதன் மறுவரைபுகளையோ கூட ஒரு அரசியல் பேச்சுவார்த்தைக்கு எடுத்துச் செல்லமுடியாத அரசியல் வலிமையற்ற இடத்தில்தான் தமிழர்கள் நிற்கின்றார்கள். 

    • Like 1
    • Thanks 1
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.