-
Posts
33807 -
Joined
-
Days Won
157
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Posts posted by கிருபன்
-
-
தனிமைப்படுத்தல் ஊரடங்கு 21ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்
September 15, 2021
நாடுமுழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு இந்த மாதம் 21ஆம் திகதி அதிகாலை வரை அமுலில் இருக்கும் என அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ரமேஸ் பத்திரண தொிவித்துள்ளாா்.
இந்த உத்தரவால் நாட்டில் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், ரடங்கு உத்தரவு தொடர்பில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுமாயின் அது தொடர்பில் உரிய முறையில் அறிவிக்கப்படும் எனவும் ஊரடங்கு உத்தரவினை நீக்குவது குறித்து, கொரோனா ஒழிப்பு தொடர்பான செயலணியின் தீர்மானத்துக்கு அமையவே தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளாா்.
நேற்றையதினம் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை
அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பெயரளவில்
இருப்பதுடன், இதனால் சிறிய வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள்
பாதிக்கப்பட்டுள்ளனர் என,ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அமைச்சா் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். -
எதிர்வரும் வாரம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நீக்கப்படும் என எதிர்பார்ப்பு -அமைச்சர் ரமேஷ் பத்திரண
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவின் விளைவாக கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.எவ்வாறாயினும் கொரோனா பணிக்குழு பரிசீலனை செய்த பின்னரே இந்த விடயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று மேலும் தெரிவித்தார்.இன்று நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போது எதிர்வரும்வாரம் ஊரடங்கு உத்தரவு நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.(15)
-
களிறன்ன நறுமாமலர் – ஜெயமோகனின் இரவு: கா.சிவா – அகழ்
எழுத்தாளர் ஜெயமோகன் விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல், காடு, கொற்றவை போன்ற பெருநாவல்களையும் வெண்முரசு என்ற பெயரில் 26 நாவல்கள் கொண்ட தொகுதியையும் படைத்துள்ளார். பிரமாண்டமான இவற்றின் நிழலில், அவர் எழுதிய சிறு நாவல்களான ரப்பர், கன்னியாகுமரி, ஏழாம் உலகம், அனல் காற்று, இரவு, உலோகம் போன்றவை மறைந்து கிடக்கின்றன. இவை மட்டுமல்லாமல் குறு நாவல்களும் சிறுகதைகளும் தனியாக குவிந்துள்ளன. இவற்றுள் கன்னியாகுமரி, அனல் காற்று, இரவு மூன்றும் மனிதர்களுக்குள் காமத்தினால் ஏற்படும் சிக்கல்களையும் அதனால் மனதில் உண்டாகும் உலைதல்கள், கொந்தளிப்புகளை பேசுபொருளாகக் கொண்டவை. இவற்றுள் இரவு முதன்மையான நாவலாகும்.
எல்லாவற்றையும் பட்டவர்த்தனமாய் சுட்டிக் காட்டி வெம்மையின் மொழியில் பேசும் பகல் தந்தையைப் போல. பகலை முழுக்க அறியமுடிவதால் சற்று விலக்கம் ஏற்படுகிறது. பெரும்பாலானவற்றை மறைத்து தேவையானதை மட்டும் காட்டி, தண்மையான மொழியில் பேசும் இரவு தாய் போல. இதை முழுவதுமாய் அறியமுடியாததாலேயே அணுக்கமானதாகவும் பிரியத்திற்குரியதாகவும் உள்ளது. பிரபஞ்சத்தில் பல்லாயிரக்கணக்கான சூரியன்களில் ஒன்றை மட்டுமே பகலில் காணமுடிகிறது. ஆனால், இரவில் அளவிட முடியாத தொலைவுகளில் இருக்கும் எண்ணிலடங்கா நட்சத்திரங்களைக் காணமுடிகிறது. இப்படி பகலுக்கில்லாத இரவின் தனித்துவ சிறப்புகள் பலபல. அவற்றுள் இரவு நாவலும் ஒன்று.
மனிதர்கள் அனைவருமே இரவு வாழ்வை அறிந்தவர்கள்தான். பகலின் வெம்மையை தணித்துக் கொள்ள, பகலின் ஓட்டத்திலிருந்து ஓய்வு கொள்ள, பகலின் கொந்தளிப்புகளை ஆற்றிக்கொள்ள இரவு தேவைப்படுகிறது. ஆறுதல் கொள்ள இரவு இருக்கிறது என்ற நம்பிக்கையில்தான் பலர் பகலையே எதிர் கொள்கிறார்கள். இரவில் துளிர்க்கும் இன்பத்தை சுவைக்காத எவரும் இப்புவியில் இல்லை. ஆனால், இரவு வாழ்க்கை திணிக்கப்பட்ட காவலர்கள், பாதுகாவலர்கள், மருத்துவப் பணியாளர்கள், மென்பொருள் பணியாளர்கள் போன்ற சிலரைத் தவிர பிறருக்கு இரவில் மட்டும் வாழ்வதைப் பற்றி ஒருபோதும் எண்ணம் எழுவதில்லை. கடமைக்கென இல்லாமல் இயல்பான இரவு வாழ்க்கை அமைந்தால் எப்படியிருக்கும் என்பதைக் காட்டுகிறது இந்நாவல்.
சென்னையில் பெரும் வருமானம் ஈட்டும் ஆடிட்டர் சரவணன் ஒரு மாதம் தனிமையிலிருந்து பணியாற்றுவதற்காக கேரளாவின் எர்ணாகுளத்தை ஒட்டிய காயல்களுக்கு அருகில் அமைந்த இடத்திற்குச் செல்கிறான். அங்கே, அண்டை வீடு இரவில் களியாட்டங்களுடனும் பகலில் தூங்கி வழிந்து கொண்டிருப்பதையும் கண்டு, ஓர் ஆர்வத்தினால் மறுநாள் இரவு அங்கு செல்கிறான். அங்கிருப்பவர்கள் அவனைப் பார்த்தவுடனேயே அன்புடன் வரவேற்று தங்களில் ஒருவனாக உணர வைக்கிறார்கள். இரவுலாவிகளாக வாழும் அவர்களுடைய இனிமையும் உற்சாகமும் அதீதமாக உடைய வாழ்வை, புதிதாக பள்ளிக்கு செல்லும் இளம் பிள்ளையின் ஆர்வத்துடன் பார்க்கிறான். இதுவரை உணராத அந்த வாழ்வின் மாயத்தால் ஈர்க்கப்படும் சரவணன் அவ்வாழ்வில் நீடித்தானா வெளியேறினானா என்பதை நாவல் இரவுக்கேயுரிய நளின மொழியில் கூறுகிறது.
அருமையான வாசிப்பனுபவத்தைத் தரும் இந்நாவலின் கதையை கூறி அவ்வின்பத்தைக் குலைக்காமல், அதன் சிறப்புகள் என நான் எண்ணுபவற்றை மட்டும் கூறுகிறேன். விஜயன் மேனன் – கமலா தம்பதிகள் மட்டுமே இரவின் இனிமையை உணர்ந்து அதற்குள் வந்தவர்கள். நீலிமா, மஜீத், பிரசண்டானந்தா, முகர்ஜி, தாமஸ் போன்றவர்களெல்லாம் பகலில் வாழமுடியாமல் இரவு வாழ்க்கைக்கு வந்தவர்கள். இரவு வாழ்க்கைக்குள் வந்தவுடன் தேனில் சிக்கிய சிற்றுயிரென அதன் இனிமையிலிருந்து வெளியேற முடியாதவர்களாகிறார்கள். இரவின் கொந்தளிப்பும் பரவசமும் துயரும் உச்சத்திலேயே உள்ள வாழ்வை ஏற்றுக் கொண்டு வாழ்கிறார்கள்.
சாக்த வழிமுறைகளை கடைபிடிக்கும் பிரசண்டானந்தா சீடர்களுடன் இரவுக்கு ஏற்ற மாதிரி தனது ஆசிரமத்தில் வழிபாடுகளை நடத்துகிறார். பாதிரியார் தாமஸ் தன்னிடம் பாவமன்னிப்பு கோரி வருபவர்களுக்காக இரவு பிரார்த்தணை நடத்துகிறார். பெரும் துயரத்தால் உண்டான அதிர்ச்சியில் மூளை நரம்பில் பிரச்சனை ஏற்பட்டதால், பகலைக் காண முடியாமலான நீலிமா இரவு வாழ்க்கைக்குள் வருகிறாள். இவளுக்காக இவளுடைய அப்பாவும். இவர்களின் வாழ்க்கை முறை கற்பனை என்று ஒரு கணமும் எண்ணமெழுந்திடாத வகையில் இயல்பாக காட்டப்பட்டுள்ளது.
சரவணனை நீலிமா பாலைமணல் நீரை ஈர்த்துக் கொள்வதுபோல ஏந்திக் கொள்கிறாள். சரவணனை முதலில் கவர்வதும், தொடர்ந்து அவளை நோக்கி அவனை ஈர்ப்பதும் அவளின் மனமல்ல உடல்தான். இரவின் மயக்கும் பூடகத் தன்மையுடன் அவளும் இருப்பதனாலேயே இவன் மனம் ஏனென்றே புரியாமல் அவளை நோக்கியே அலைவுறுகிறது. அவள் நடத்தைகள் ஒருவித அசௌகரியத்தை அளித்தாலும், பிரிந்து சென்றாலும் கவலையில்லை என அவள் கூறினாலும் கடுமணத்தின் மேல் உண்டாகும் பிரியம்போல சரவணனின் மனம் அவளை நோக்கியே செல்கிறது. தன் புதிர்த்தன்மையாலேயே விலக்கவும் ஈர்க்கவும் செய்யும் இரவின் ஒரு குறியீடு போலவே நீலிமா பாத்திரம் படைக்கப்பட்டுள்ளது.
இரவுதான் அனைத்து உயிர்களும் வாழ்வதற்கான பொழுது என்பதை பல்வேறு தர்க்கப்பூர்வமான காட்சிகளினால் விவரிக்கிறது நாவல். காணும் காட்சிகளில் வெளிப்படும் அழகு, தண்மையான வெளி, மென்மையான ஒளி, உற்சாகமான மனநிலை எல்லாம் இரவில்தானே அமைந்துள்ளது. மனிதனின் அத்தனை கலை வடிவங்களும் இரவில் நிகழ்த்துவதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன எனக் கூறுவதையும் யாராலும் மறுக்கமுடியாது.
ஆசிரியரின் பெரும்பாலான கதைகளில் வாசகர்கள் தங்களின் உணர்வால் சிந்தனையால் முன்சென்று உணர்வற்கான இடைவெளி இருக்கும். ஆனால் இந்நாவலில் ஒரு அத்தியாயத்தில் வாசகனின் தர்க்க மனம் ஏற்காதவாறு ஒரு சம்பவம் நிகழும். அடுத்த அத்தியாயங்களில் ஏன் அப்படி நிகழ்ந்தது என்பதை தர்க்கப்பூர்வமாக விவரிக்கப் பட்டிருக்கும். உதாரணமாக சரவணனை முதல் முறையாக பார்த்தவுடனேயே நீலிமா காதல் கொள்வதாக காட்டப்பட்டிருக்கும். இதை வாசித்தவுடன் இதென்ன திரைப்படக் காட்சிபோல பெரும் கற்பனையாக உள்ளதே எனத் தோன்றும். சில அத்தியாயங்களுக்குப் பிறகு வாசிப்பவர் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் இதற்கான விளக்கம் இருக்கும். ஒரு நிர்வாண சடங்கு முறையைக் கண்டவுடன் சரவணன் மயங்கி விழுகிறான். ஏன் இது நிகழ்கிறது என்பதற்கான பதில் அடுத்த அத்தியாயங்களில் விவரிக்கப் பட்டிருக்கும். பொதுவாக இம்மாதிரியானவற்றை வாசகனே உய்த்துணருமாறு விடுபவர் இதில் விவரிப்பதற்கு காரணம், தவறான ஒன்றை எண்ணிக் கொள்வதற்கான சாத்தியம் அதிகமிருப்பதால்தான் என நான் கருதுகிறேன்.
இரவில் மட்டும் மீன் பிடிக்கும் தோமா, பெரியச்சன் பாத்திரங்கள் மூலம் பொருளீட்டுவதற்காக இரவு வாழ்க்கை அமைத்துக் கொண்டவர்களையும் அறிய முடிகிறது. அம்மீனவர்களுக்கு உணவு அளிக்கும் கடைக்காரர்களும் இரவுலாவிகள்தான். ஆனால் இவர்களெல்லாம் பெரும் பரவசம் ஏதுமின்றி, பெரும் கலைக்கோவிலினுள் அதன் சிற்பத்தையோ மரபையோ அறியாது கடமைக்கென பணியாற்றும் அதிகாரிகள் போல, விதிக்கப்பட்டதெனவே இரவு வாழ்வை வாழ்கிறார்கள்.
மீனவர்களுடன் சிறு படகில் காயல் வழியாக கடலுக்குள் செல்லும் சரவணன் சுற்றிலும் விளக்கொளி இல்லாத இருளில், தொலைவில் வானில் சுடரும் விண்மீன்களையும் கடலில் பிரதிபலிக்கும் அவற்றின் ஒளியையும் கண்டு இயற்கையின் பிரமாண்ட அழகையும் விரிவையும் உணர்கிறான். இதனால், பெரும் மனவெழுச்சியடைந்து இரவு வாழ்க்கையை விட்டு விலகுவதென எடுத்த முடிவை கைவிடுகிறான். இக்காட்சி இரு பேரிலக்கிய காட்சிகளை நினைவுக்கு கொண்டுவருகிறது. ஒன்று, லேய் தல்ஸ்தாயின் “போரும் அமைதியும் ” நாவலில் நீல வானின் பின்னணியில் நெப்போலியனைக் காணும் போது மனிதர்களின் இருப்பும், அவன் லட்சியமும், வாழ்வும் எத்தனை சிறியது என பிரின்ஸ் ஆண்ட்ரூஸ் அடையும் தரிசனம். மற்றொன்று, பியோதர் தஸ்தவேஸ்கியின் “கரமோசவ் சகோதரர்கள்” நாவலில் அல்யோஷா, முதியவர் ஸோசிமாவின் உடலில் இருந்து துர்நாற்றம் வெளிவந்ததால் உண்டான மன சஞ்சலத்துடன் இருக்கும்போது, கருநீல வானத்தையும் நட்சத்திரங்களையும் கண்டு உள்ளெழுச்சியுடன் மனமுறுகி பூமியை முத்தமிட்டு உலகிலுள்ள அனைவரையும் மன்னிக்கவும், அனைவரிடமும் மன்னிப்பு கேட்கவும் விரும்பும் இடம். இம்மூன்று காட்சிகளையும் ஒன்றோடொன்று இணைத்துப் பார்க்கும்போது பெரும் மனயெழுச்சி உண்டாகிறது. அதே நேரத்தில், சூழ்ந்து, விரிந்திருக்கும் ஒளிர் வானத்தை பார்க்காமல் வாழும் மனிதர்கள்தான் குறுகிய மனதுடன் வாழ்கிறார்களோ, அதனைக் கண்டால் மனம் விரிந்துவிடுவார்களோ என்றும் எண்ணம் தோன்றுகிறது.
நாவல், சரவணனின் எண்ணவோட்டங்களாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. முதல் இரு அத்தியாயங்களில் இரவை பற்றிய அவன் எண்ணங்கள் பொதுவான மன நிலையுடன் ஒரு தட்டையான பார்வையாகவே உள்ளது. பிறகு மெல்ல மெல்ல அவ்வாழ்க்கைக்குள் நுழையும்போது, அவன் பார்வையும் எண்ணவோட்டமும் இரவின் நுணுக்கமான செதுக்குகளையும் உணரும் அளவிற்கு கூர் கொள்வதைக் காட்டி அவனின் பரிணாமத்தைச் சுட்டுகிறது. வாசிப்பவர்களின் உள்ளமும் அதில் தோய்கிறது. மேனன் இரவை அறியும் கணம் ஒரு கவித்துவ தருணமாக உள்ளது.
மரநாயின் மரகதக்கல் போன்ற பசும் விழிகள் அவரை இரவின் அற்புதத்திற்குள் இழுக்கிறது. கொன்னைப் பூக்குவியலில் செய்யப்பட்டது போன்ற சிறுத்தையின் மீசை முடிகளில் தண்ணீர்த்துளி ஜொலித்ததை கண்டவுடன் மேனனின் இரவுக்கான அகவிழிகள் திறக்கின்றன. சரவணனின் அகவிழி திறக்கும் கணமும் பெரும் தரிசனம் போலவே காட்டப்பட்டுள்ளது. இதுவரை வானத்தை சாவகாசமாய் பார்த்தேயிராதவன் பார்க்க ஆரம்பிக்கிறான். பல்லாயிரம் விழிகளென சூழ்ந்து, விண்மீன்கள் இவனை பார்க்கின்றன. அவையும் சில கணங்களில் உணர்வுகள் வெளிப்படும் மிருகங்களின் விழிகளாக தெரிய ஆரம்பிக்கின்றன. அவை இரவின் விழிகளேதான். இந்தப் பார்வை மூலம் மேனன் மற்றும் சரவணனின் அகவிழிகள் திறப்பதாக ஓர் எண்ணம் எழுந்தாலும் இரவு தன்னை இவர்களுக்கு காட்டி உள்ளிழுக்கிறது என்பதே உண்மையெனத் தோன்றுகிறது.
இந்நாவலை உவமைகளாலேயே கட்டமைத்துள்ளார் ஆசிரியர். ஒவ்வொரு உவமைகளையும் வாசித்து அதை கற்பனையில் காண்பது பேரனுபவமாக உள்ளது. உதாரணமாக இரவு வாழ்க்கைக்கு பழகியபின் சரவணன் பகலைக் காணும் காட்சி.
//அதிக வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் போல பளீரென்று வெளிறிக்கிடந்தது தென்னந்தோப்பு. மரநிழல்கள் நடுவே பீய்ச்சியிருந்த ஒளி சுண்ணாம்பு நீரை வீசி வீசிக் கொட்டியது போலிருந்தது. கீழே கிடந்த காய்ந்த தென்னையோலைகள் சாம்பல்நிறமாக, செத்து மட்கிய கால்நடைகளின் விலா எலும்புகள் போலக் கண்களை உறுத்தின. தென்னைமரங்களின் தடியே இந்த அளவுக்கு அசிங்கமான சாம்பல்நிறம் என்பதை அப்போதுதான் கவனித்தேன். ஓலைகள் உதிர்ந்த வடுக்கள் புண்தழும்புகள் போலிருக்க பிரம்மாண்டமான சிலந்தியொன்றின் நூற்றுக்கணக்கான கால்கள் போல அவை நின்றன. முற்றத்தில் மண் மீது தென்னை ஓலைகளின் நிழல்கள் ஆடிய வெயில் வழுவழுப்பான திரவம் போல சிந்திப் பரவிக் கிடந்தது // மேலும் ஒரு திகைக்க வைக்கும் உவமை “தூங்கும் மிருகம் ஒன்றின் உடல் வழியாக ஊர்ந்து செல்லும் பேன் போல நகரில் சென்றது டாக்ஸி”. இன்னும் ஒரு புதுமையான உவமை “ஜெட் விமானத்தின் பின் பக்கம் நெருப்பு உமிழும் உக்கிரமான இயந்திரம் போல என் இலக்குகள் என்னை ஒவ்வொரு கணமும் தூக்கிச் சென்று கொண்டிருந்தன”. இவற்றைப் போன்ற உவமைகள்தான் வாசிப்பவரை நாவலுக்குள்ளேயே லயித்திருக்கச் செய்கின்றன.
ஜெயமோகன் எழுதி, இப்போது வெளிவந்துள்ள “பத்து லட்சம் காலடிகள்” சிறுகதைத் தொகுப்பிலுள்ள ஔசேபச்சன் கதைகளுக்கு சுவைகூட்டும் உரையாடல்களுக்கு முன்னோடியான தொடக்கம் இந்நாவலில் உள்ளது. நாயருக்கும் தாமஸுக்குமான உரையாடலின் போது //இந்த நாயர்கள் அடிப்படையில் போலீஸ்காரர்கள். அதாவது படைவீரர்கள். அவர்கள் தத்துவஞானிகளாக இருக்கலாம். கலைஞர்களாக இருக்கலாம். அரசியல்வாதிகளாக இருக்கலாம். ஒரு லார்ஜ் உள்ளே போனால் எல்லா நாயரும் படைநாயர்தான். அதன் பிறகு லெ·ப்ட் ரைட் மட்டும்தான் மண்டைக்குள் இருக்கும்// என்று தாமஸ் கூறுவதும், அதற்கு நாயர்
//இவனோட பிஷப்புக்கு ஒரு நான்கு லார்ஜ் ஊற்றிக்கொடுத்துப்பாரு. சங்ஙனாச்சேரியிலே அவன் அப்பூப்பன் பரட்டுக்காட்டு தோமாச்சன் வாத்து மேய்க்கிறப்ப சொல்ற எல்லா கெட்டவார்த்தையும் அவன் வாயிலேயும் வரும்//. எல்லா மதத்தவரும் பிற மதத்தினருடன் எத்தனை இணக்கமாக இருந்திருந்தால் இத்தனை உரிமையோடு பேசிக் கொண்டிருக்கமுடியும் என்ற எண்ணத்துடன் பெருமூச்சு எழுகிறது.
ஜெயமோகன், யட்சிகளை மையமாக வைத்து பல சிறுகதைகளை எழுதியுள்ளார். இந்நூலை யட்சி நாவல் என்றும் சொல்லலாம். கமலா மற்றும் நீலிமாவின் பாத்திரங்கள் யட்சிகளைப் போலவே படைக்கப்பட்டுள்ளன. பகலில் பெண்களாயிருப்பவர்கள் இரவில் யட்சிகளாகிறார்கள் என்ற விளக்கம் பொருத்தமாக உள்ளது. நள்ளிரவில் ஆம்பல் குளத்தருகே புழக்கமின்றி இருக்கும் யட்சி கோவிலும், அதன் அருகே அரவம் சூழ பூத்திருக்கும் நிஷாகந்தி மலரை பறித்து வரும் நீலிமாவைப் பற்றிய சித்தரிப்பும், கொடுங்கல்லூர் ஆலய வழிபாட்டைக் கூறும் காட்சியும் மெய்சிலிர்க்கும் அனுபவத்தைத் தருகிறது.
அந்த வாழ்வுக்குள்ளேயே இருப்பவர்கள் இதற்கு மேல் அடுத்து என்ன என உந்தும் மனதிற்கு செவிகொடுப்பதன் மூலம், உள்ளிழுத்து அழிக்கும் சுழலில் சிக்கிக் கொள்கிறார்கள். ஆனால் புதிதாக நுழையும் சரவணன் இடுப்பில் கயிறு கட்டிக் கொண்டு நீருக்குள் இறங்குபவனைப் போல எப்போதும் திரும்புவதற்கான ஒரு கதவை திறந்து வைத்தபடியே உள்நுழைகிறான். சற்று விலகி நின்று ஐயத்துடனேயே அணுகுகிறான். இதனால் அவர்கள் போல உக்கிரத்துடன் சென்று மாட்டிக் கொள்ளாமலும் மேல்மட்டத்திலேயே நின்று தவிக்காமலும் அவ்வாழ்வில் திளைக்கிறான். அவ்வாழ்வினால் ஏற்படக் கூடிய இன்னல்களை லாவகமாகத் தவிர்த்து இனிமையாக வாழத் தொடங்குகிறான்.
இயல்பாக செல்லும் கதை சட்டென ஒரு உச்சத்தை அடைந்துவிடுவதாக எனக்குத் தோன்றுகிறது. அந்த அதிர்ச்சியளிக்கும் நிகழ்வை மனம் ஏற்கத் தயங்குகிறது. எல்லாச் சம்பவங்களுக்கும் விளக்கமிருக்கையில் பலரின் வாழ்வைப் பாதிக்கும் முதன்மையான திருப்பத்திற்கு விளக்கம் சரிவர அளிக்கப்படவில்லை எனத் தோன்றுகிறது. மேலும், இரவுலாவிகளாய் இருப்பவர்கள் பகலில் சந்திப்பதாக கூறப்படுவது சற்று முரணாகவும் படுகிறது. ஆனால் வாசித்து முடித்தபின் நாவலைப்பற்றி எண்ணினால் மேனன் மற்றும் சரவணன் இரவு வாழ்க்கையில் அடைந்த பரவச கணங்கள் மட்டுமே மனதில் இனிமையாக நீடிக்கிறது. இதற்கு காரணம், நாவலின் கட்டமைப்பில் அந்த பரவசக் காட்சிகள் நேரடியாக காட்டப்பட்டுள்ளதும், அதிர்ச்சி அளிக்கும் சம்பவங்கள் மற்றொருவரின் கூற்றாக அமைந்துள்ளதும்தான். இரவின் சிறப்பான கூறுகளில் ஒன்றான தேவையானதின் மீது மட்டும் ஒளி பாய்ச்சி பார்த்துக் கொள்ளலாம் என்பதை சுட்டும் வண்ணம் முக்கியத்துவம் எனத் தான் கருதுவதை மட்டும் காட்சிப் படுத்தியுள்ளார் ஆசிரியர்.
இந்த இலக்கிய நாவலை சுவாரசியமான த்ரில்லராக ஜெயமோகன் எழுதியுள்ளார். இதைப் போன்றே இவரின் “உலோகம்” நாவலும் விறுவிறுப்பான கதையோட்டத்துடன் எழுதப்பட்டிருந்தாலும் வாழ்வு முறையின் பல்வேறு சாத்தியங்களை காட்டுவதிலும், நிகர் வாழ்வனுபவத்தைத் தருவதிலும் “இரவு” நாவல் வேறுபட்டு முன்நிற்கிறது.
பல்லாயிரம் ஆண்டுகளாக பகலில் விழித்து வாழ்ந்து பழகிய முன்னோர்களைக் கொண்ட வாசகனின் உள்ளத்தில் இரவு வாழ்க்கைக்குள் செல்ல வேண்டுமென்ற விழைவை, அந்த இனிமையை சுவைத்துவிட வேண்டுமென்ற பேராவலை ஒரு கணமேனும் ஏற்படுத்திவிடுவது இந்நாவலின் வெற்றியாகும்.
ஆனால் அந்த எண்ணத்தை இரண்டு காரணிகள் தடுக்கின்றன. ஒன்று உக்கிரமான இன்ப வாழ்வை உணர்த்தபின் எளிய அன்றாட வாழ்க்கைக்கு திரும்ப முடியாதென்பது. மற்றொன்று, பெரும் பணம் சேமிப்பிலிருக்க வேண்டுமென்பது.
ஒரே இரவில் வாசித்து முடிக்கக் கூடிய வகையில் எழுதப்பட்டுள்ள இந்நாவலை வாசிப்பதற்கு முன் மனதில் இருந்த மர்மமான, அழகான, தண்மையான இரவைப்பற்றிய சித்திரம் வாசித்து முடித்தபின் பல மடங்கு அதிகமாகிவிட்டது. இதுவரை சாதாரண கல்லென எண்ணிப் புழங்கிக் கொண்டிருந்த ஒன்றின் மீது ஒளியைப் பாய்ச்சி, அது இதுவரை காணாத பலவித வணணங்களாக பிரதிபலிப்பதை சுட்டிக்காட்டி அதனை வைரமென உணரவைப்பதைப் போல இரவின் பல பரிமானங்களைக் காட்டுகிறார் ஆசிரியர். இருளுக்குள் உறைந்திருக்கும் பிரமாண்ட விஷ்ணு சிலையை காண்பதற்காக காட்டப்படும் தீபம், இன்னும் பல மடங்கு பெரியதாக,அரூபமானதாக, எண்ணும் போதெல்லாம் பரவசத்தை தருவதாக மனதுள் நிலைக்க வைப்பதைப் போல இந்நாவல் மூலம் இரவை விளக்க முற்படுவதான பாவனையில் அதனை பரவசமாக எண்ணித் திளைக்குமாறு வாசகர் மனதில் பெரும் படிமமாக உறையவைக்கிறார் ஜெயமோகன்.
பொதுவாக விமர்சனக் கட்டுரைகள் நூலை இயந்திரத்தின் பாகங்களை பிரித்து பரப்பி வைத்து இப்பாகங்கள் இதனுடன் இணைகிறது. இப்பாகத்தின் சிறப்பு இது. இவை இணைவதன் பயன் இவை என விளக்குவதாகவோ அல்லது படம் வரைந்து பாகங்களைக் குறிப்பதாகவோ இருக்கும். ஆனால், அழுத்தினாலே கசங்கி கன்றிவிடும், மெல்லிய கடுமணம் வீசும் வெண்மையான மென் நிஷாகந்தி மலர் போன்ற இரவு நாவலை அவ்வாறு பிரித்து ஆராய என் மனம் ஒப்பவில்லை. அது என் மனதில் ஏற்படுத்திய உணர்வுகளையும் அது தொட்ட நினைவுகளையும் மட்டுமே கூறியுள்ளேன். விமர்சனத்தை எதிர்பார்த்தவர்களுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடைசியாக ஒன்று… “மிருகங்களிலேயே யானையை பழக்குவதுதான் மிகமிக எளிமையானது. ஆனால் ஒருபோதும் முழுமையாக பழக்கிவிட முடியாத மிருகமும் யானைதான்” என்று இரவை வரையறுக்க முயலும் ஒரு கூற்று இந்நாவலில் உள்ளது. இது “இரவு” நாவலுக்கும் பொருந்தும். வாசிக்க எளிமையான நாவல்தான் இது. ஆனால் ஒரு போதும் முழுமையாக வாசித்துவிடவும் முடியாது.
கா. சிவா
கா.சிவா ‘விரிசல்’ சிறுகதைத்தொகுப்பின் ஆசிரியர். பல்வேறு இதழ்களில் தொடர்ச்சியாக எழுதி வருகிறார்.
https://akazhonline.com/?p=3533
-
அனைத்துலக ரீதியில் உணர்பூர்வமாக நடைபெற்ற 15 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு!
AdminSeptember 12, 2021தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து, மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் தற்பொழுது அனைத்துலகத் தொடர்பகத்தின் மாவீரர் பணிமனையால் உறுதிப்படுத்தப்பட்ட வீரவேங்கை அஜந்தி, வீரவேங்கை அறிவு, வீரவேங்கை இதயன், வீரவேங்கை பிரியவதனா, வீரவேங்கை புலியரசன், வீரவேங்கை புதியவன், வீரவேங்கை தீப்பொறி, வீரவேங்கை அன்பரசன்/லோறன்ஸ், வீரவேங்கை கவியரசி/ அமலா, வீரவேங்கை முகிலன், வீரவேங்கை நிறையிசை, வீரவேங்கை கரிகாலன், வீரவேங்கை சுதாகரி, வீரவேங்கை இசைவாணன், வீரவேங்கை பல்லவன் உட்பட 15 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு யேர்மனி, பிரான்சு, பிரித்தானியா, நோர்வே, நெதர்லாந்து, பெல்சியம், இத்தாலி, பின்லாந்து, டென்மார்க் ஆகியநாடுகளில் மிகவும் உணர்பூர்வமாக நடைபெற்றுள்ளது.
-
11.09.2007 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் புதியதொரு வரலாற்றை படைத்துச் சென்ற ஆழக்கடலோடிகள்
உலக வல்லரசுகள் இலங்கைக்கு வழங்கிய செய்மதித் தகவல்களின் அடிப்படையில். 10.09.2007அன்று இலங்கையிலிருந்து ஆயிரத்து ஐநூறு கடல்(1500NM )மைல்களுக்கப்பால் அதாவது சர்வதேசக் கடற்பரப்பில் தமிழீழத்திற்க்குப் பலம் சேர்க்கின்ற நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் இரு வணிகக் கப்பல்களும் அவைகளுக்கு எரிபொருள் வழங்குவதற்காக வந்த எண்ணெய்க் கப்பலும் தமது வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் கடற்படையின் கப்பல் வருவதை (எந்த நாட்டுக் கடற்படையென்று அவருக்குத் தெரியாது )அவதானித்த வணிகக் கப்பலொன்றின் தலைவரான எழில்வேந்தன் கப்பல்களை பிரிந்து வெவ்வேறு திசைகளில் செல்லப் பணித்ததுடன் இத்தகவல்களை தமிழீழத்திலுள்ள கட்டளை மையத்திற்க்கும் அறிவித்தார்.
மூன்று கப்பல்களும் வெவ்வேறு திசைகளில் பயணித்துக் கொண்டிருக்கும் போது முறையே மதியம் ஒருமணியளவில் லெப்.கேணல் சோபிதன் தலைமையிலான வணிகக் கப்பலும் லெப் கேணல் செம்பகச்செல்வன் தலைமையிலான எண்ணெய்க்கப்பலும் தாக்குதலுக்குள்ளாகி மூழ்கின .
இச்சம்பவத்தில் அதிலிருந்த போராளிகளும் இயக்க மரபிற்கிணங்கசயனைற் அருந்தி கடலிலே காவியமானார்கள்.முன்றாவது வணிகக்கப்பலான லெப் கேணல் எழில்வேந்தனது கப்பலை நோக்கி வந்த கடற்படையினர் மீது கப்பலிலிருந்த மோட்டாரை பயன்படுத்தி கடற்படையினர் மீது தாக்குதல் நாடாத்த கடற்படையின் கப்பலுக்கருகில் வீழ்ந்த எறிகணையால் சற்று நிலைகுலைந்த கடற்படையினர் கிட்டநெருங்காமல் தொலைவிலிலிருந்தே தாக்குதலை தொடர்ந்தனர் .
இருந்தாலும் இவர்களும் தாக்குதல்களை தொடர்ந்து நாடத்தியவாறு ஓடிக்கொண்டிருந்தனர்.ஒரு கட்டத்தில் அதாவது அடுத்தநாள் அதிகாலை மூன்றுமணியளவில் கடற்படைக்கப்பலின் பாரிய குண்டுத் தாக்குதலொன்று இவர்களது கப்பலின் அடிப்பகுதியில் தாக்க கப்பல் கடலிலே மூழ்கியது. இந்த இடைப்பட்ட நேரத்தில் இவர்களது தியாகமும் வீரமும் கற்பனைபண்ணிக்கூடப் பார்க்கமுடியாது இக்கப்பலிலிருந்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சயனைற் இல்லாதிருந்ததால் அங்கிருந்த மருத்துவப் போராளியான லெப் கேணல் தமிழ்மாறன் இருமருந்துகளைக் கலந்து நஞ்சாக்கி ஊசியில் ஏற்றி சயனைற் இல்லாதிருந்தவர்களுக் கொடுத்தார்.
அடுத்தது லெப்.கேணல் வேங்கை மற்றும் லெப் கேணல் திருவருள் தரையில் மட்டுமே பயன்படுத்தும் 120mm மோட்டாரை கப்பலில் வெல்டிங் பண்ணி நிலைப்படுத்திக்கொடுக்க சகபோராளிகள் அம்மோட்டாரின் மூலம் கடற்படைக்கெதிராக தாக்குதல் நடாத்தினார்கள் .
இதற்கிடையில் மேஐர் தமிழ்நம்பி கப்டன் அருணன் கப்பலின் ஒருபகுதியை எரித்தபோது
அத்தீயை அணைத்து கொண்டிருக்கும் சமநேரத்திலும் அத்தீக்குள்ளாலும் சகபோராளிகள் மோட்டார் எறிகணைகளை எடுத்து வந்து கடற்படைகெதிராக தாக்குல் நடாத்தினார்கள் இறுதிவரை மிகவும் மூர்க்கத்தோடும் உறுதியோடு களமாடி 11.09.2007 அன்று கடலிலே புதியதொரு வரலாற்றை படைத்துச் சென்றார்கள்.
எழுத்துருவாக்கம்.சு.குணா.
https://www.thaarakam.com/news/d29d99ce-e2f0-4ac9-a4ad-1a121e646ea1
-
யாழ்ப்பாணம் காரைநகரில் ஊரடங்கு வேளை பந்தல் அமைத்து திருமணம் – 13 சிறார்கள் உட்பட 34 பேருக்கு கொரோனா தொற்று
யாழ். காரைநகரில் ஊரடங்கு வேளை பந்தல் அமைத்து நூற்றுக்கும் அதிகமானோர் பங்கு கொண்டிருந்த திருமண நிகழ்வில் பங்கேற்ற 13சிறார்கள் உட்பட 34 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது.யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை களில் குறித்த தொற்றாளர்கள் அடை யாளம் காணப்பட்டுள்ளனர். திருமண நிகழ்வில் பங்கேற்றவர்களே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதாரத் தரப்பினர் உறுதிப்படுத்தினர்.
காரைநகரைச் சேர்ந்த 81 பேரின் பிசிஆர் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன. அவற்றில் 34 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 05, 07, 08, 09, 10, 11, 12, 13, 14, 15வயதுடைய 13 சிறார்களும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.குறித்த திருமண நிகழ்வில் பங்கேற்றவர்களை தனிமைப்படுத்தி அவர்களை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்த முற்பட்டவேளை வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதார உத்தியோகத்தர் உட்பட்டவர்களை தாக்க முற்பட்ட குற்றச்சாட்டில் 03 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.(15)
http://www.samakalam.com/யாழ்ப்பாணம்-காரைநகரில்-ஊ/
-
பின்லாந்தின் நாட்டுப்புறக் காவியக் கதைப்பாடல் கலேவலா: அஸ்கோ பார்பொலா
written by கால.சுப்ரமணியம்August 29, 2021நாட்டுப்புறவியல் துறை உயர்நிலையை அடைந்த நாடுகளில் பின்லாந்து முதன்மையானது. இந்த உச்சத்தை அந்த நாட்டு ஆய்வாளர்கள் தம் தேசியக் கதைப்பாடலான ‘கலேவலா ’ (Kalevala) என்ற வாய்மொழிக் காவியத்தைத் திரட்டிச் செம்மைப்படுத்தி வெளியிட்டதன் மூலம்தான் அடைந்தார்கள் என்றுகூடச் சொல்லலாம். தம் தேசியக் காவியத்தை உலகம் முழுதும் பரப்புவதற்காக நிறைய முயற்சியும் மானிய நிதியுதவிகளும் செய்துள்ளார்கள். அப்படித் தமிழிலும் மிக அட்டகாசமாக அதன் தமிழ் வடிவம் வெளிவந்து எல்லோருக்கும் பெரும்பாலும் இலவசமாக அன்பளிப்பாக விநியோகிக்கப்பட்டது. ஆனால் என்ன துரதிர்ஷடம் என்றால் அதை படித்து இரசிக்க முடியாத யாப்பு வடிவத்தில் அது இருந்தது. பெரும்பாலான சோவித் வெளியீட்டுத் தமிழ்ப் படைப்புகளுக்கு நிகழ்ந்ததுதான் இதுவும். ஆனால் இது அதையெல்லாம் ஒன்றுமில்லை என்று ஆக்கிவிட்டது. நல்லவேளையாக இதை எப்படியோ உணர்ந்த பின்லாந்து அரசும் அதன் பிரசுரத்துறையும் தமிழ் மொழிபெயர்ப்பாளரும் அந்தக் காவியத்தின் வசன / உரைநடை வடிவையும் தொடர்ந்து வெளியிட்டார்கள். இதுவும் முன்வடிவு போலவே விநியோகிக்கப்பட்டதா என்று தெரியவில்லை. ஆனால் காமன் காப்பிரைட் என்னும் முறையில் யார் வேண்டுமானாலும் பெறக்கூடிய வகையில் இணையத்தில் இதை (இரு வடிவையும்) வெளியிட்டுப் பெருமை சேர்த்துக்கொண்டார்கள். இதன் தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஏராளமான தமிழ்த் தொடர்கதை மரபின் பிரபல அங்கமான சரித்திர நாவல்களை எழுதிக் குவித்தவர்.
அஸ்கோ பார்பொலா, Asko Parpolaஇந்த கலேவலா காவித்தைக் தமிழ்ப்படுத்தியதில் செலுத்திய அவரது உழைப்பு மதிக்கப்படத்தான் வேண்டும். என்றாலும் கலேவலா இன்னும் செழுமைப்படுத்தப்பட்டு வெளிவந்தால் பின்லாந்தின் செவ்வியல் நாட்டுப்புற தேசியப் படைப்பு மேலும் பரவலையும் வாசிப்பின்பத்தையும் பெறும். இதன் இரு வடிவுகளுக்கும் நல்லவேளையாக இந்தியச் சிந்துவெளி ஆய்வில் முதல் இடத்தில் உள்ள அஸ்கோ பார்பொலா முன்னுரை அறிமுகம் வழங்கியுள்ளார். மேலை இந்தியவியல், திராவிடவியல் ஆய்வாளர்களுக்கே உரித்தான, இலக்கியத்தின் பல்வேறு வகைமைகளிலும் புலமை உடையவர்களில் அவரும் ஒருவர். கோவையில் நடந்த தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் உயர்தனிச் சாதனையாளர் விருது அளிக்கப் பெற்றவர். கலேவலாவின் உரைநடை வடிவுக்கு அவர் தந்த முன்னுரை இணையப் பிரதிகளில் காணக் கிடைக்கிறது. அதை ஓரளவு செம்மையாக்கம் செய்து தந்த முயற்சியின் வடிவம் இந்தக் கட்டுரை. அந்தப் புகழ்பெற்ற காவியத்தை முழுதும் செம்மைப்படுத்தி வெளியிட வேண்டும் என்ற இன்னும் நிறைவுறாத நோக்கமும் உண்டு.
*
பல வருடங்களாகக் கடினமாக உழைத்ததின் பலனாகத் திரு. ஆர். சிவலிங்கம் கலேவலா என்னும் காவியம் முழுவதையும் கவிதைநடையில் தமிழாக்கி 1994-ல் வெளியிட்டிருந்தார். இது ஓர் உயர்ந்த உன்னதமான இலக்கியப்படைப்பாக வெளிவந்திருந்த போதிலும், பின்லாந்து நாட்டின் தேசியக் காவியமான இந்த அரிய இலக்கியச் செல்வத்தின் தமிழாக்கம், உலக இலக்கியத்திலும் நாட்டுப்பாடல்களிலும் ஆர்வமுள்ள அறிஞர்களால் மட்டுமே படிக்கப்படுமோ என்ற அச்சமும் அவர் உள்ளத்தில் எழுந்தது. இந்த அற்புதமான ஆக்கம் சாதாரணமான தமிழ் வாசகர்களை, குறிப்பாக, இளம் தலைமுறையினரைச் சென்றடையாது விட்டால், அது வருத்தப்படக்கூடிய செயலாகும் என்றும் அவர் கருதினார். எனவே கலேவலாவின் முழுக்கதைகளையும் எளிமையான உரைநடையில் மீண்டும் தமிழில் மொழிபெயர்க்கத் தீர்மானித்தார்.
கவிதைநடையில் வெளிவந்த தமிழாக்கத்துக்குத் தகவல்பூர்வமான ‘அறிமுக உரை’ ஒன்றை நான் எழுதியிருந்தேன். கலேவலா என்னும் இந்தக் காவியத்தின் பின்னணி என்ன, இது எப்படி எப்பொழுது ஓர் உருவத்தைப் பெற்றது என்பன போன்ற பல விஷயங்களை அதில் கூறியிருந்தேன். நாடோடி இலக்கிய, வரலாற்றுத் தகவல்கள் பற்றியெல்லாம் அந்த அறிமுக உரையில் நான் அலசி ஆராய்ந்து இருப்பதால், ‘உரைநடையில கலேவலா’ என்னும் இந்தத் தமிழாக்கத்துக்கு ஒரு முன்னுரை எழுதி, அதில் பின்லாந்து நாட்டைப் பற்றிய பொதுப்படையான சில விவரங்களைத் தமிழ் வாசகர்களுக்குக் கூறும்படி திரு சிவலிங்கம் என்னைக் கேட்டிருந்தார். இது ஒரு நல்ல ஆலோசனை என்று எனக்குத் தோன்றியது. அதனால் பின்லாந்து பற்றிய சில அடிப்படைத் தகவல்களை இங்கு சொல்ல விரும்புகிறேன். ஆனால் இன்றைக்குக் கவிதைநடைத் தமிழாக்கத்தை எல்லோரும் பார்க்க வாய்ப்பில்லாமல் போகலாம் என்ற காரணத்தால், அதன் ‘அறிமுக உரை’யில் கூறப்பட்ட சில விஷயங்களையும் இதில் சுருக்கமாகக் கூறுவேன்.
பின்லாந்தும் அதன் இயற்கை வளமும்
பின்லாந்து, ஐரோப்பாவின் வடகரையில் 1600 கிலோமீட்டர் நீளம்கொண்ட ஒரு மிகப்பெரிய நாடு. மேற்குப் பக்கத்தில் ஸ்காண்டிநேவிய நாடுகாளான நார்வே, சுவீடன் நாடுகளுக்கும் கிழக்கே ரஷ்யாவுக்கும் நடுவில் அமைந்திருக்கிறது. இந்த நாட்டின் பெரும்பகுதியில் காடுகள் மண்டிக்கிடக்கின்றன. இந்த நாட்டைப் போன்ற சமஅளவு குளிருள்ள இந்தியாவின் இமயமலைப் பிரதேசத்தில் வளரக்கூடிய தேவதாரு மரஇனங்களை (Spruce, Pine, Birch) பின்லாந்தின் காடுகளில் காணலாம். பின்லாந்து ஒரு தட்டையான நாடு அல்ல; இமயமலைத் தொடர்போலப் பாரிய மலைகள் நிறைந்த நாடுமல்ல; பதிந்த குன்றுகள் நிறைந்த நாடு. பென்னம்பெரிய பாறைகளைப் பெரும்பாலும் எங்கும் காணலாம். இங்கே சிறிதும் பெரிதுமாக இரண்டு லட்சம் ஏரிகள் இருக்கின்றன. பின்லாந்தின் மேற்குத் தெற்குப் பக்கங்களில் பால்டிக்கடல் (Baltic Sea) இருக்கிறது. தென்மேல் கரையோரத்தில் ஏராளமான தீவுகளும் இருக்கின்றன. கடலிலும் ஏரிகள் ஆறுகளிலும் மக்கள் நீந்துவார்கள்; படகுச்சவாரி செய்வார்கள்; மீன் பிடிப்பார்கள். சிலர் காடுகளில் வேட்டைக்குப் போவார்கள். ஓநாய்களும் கரடிகளும் வாழும் காடுகளில் வேட்டையாடுவது ஒருகாலத்தில் ஆபத்து மிகுந்ததாக இருந்தது. இந்த நாட்களில் மாமிசப்பட்சணிகள் அருகி வருகின்றன. பெரிய காடுகளில் பயணம் செய்த சிலர் வழிதவறிப்போன சம்பவங்களும நடந்திருக்கின்றன – ஏன், இன்னமும் நாட்டின் பெரும்பகுதிகளில் மக்கள் அடர்த்தியாக வாழவில்லை. பின்லாந்து நாட்டின் மொத்தக் குடிசனத்தொகையே ஐம்பது லட்சம்தான். அந்த நாட்களில் ஜனத்தொகை இன்னமும் குறைவாகவே இருந்தது.
காடுகளையும் சதுப்பு நிலங்களையும் தவிர, விவசாய வயல்களும் ஏராளம். இங்கே நெல் விளைவிப்பதில்லை. வேறு தானியங்களான பார்லி, கோதுமை, புல்லரிசி வகைகள் (Oats, Rye) விளைவிக்கப்படுகின்றன. இவைகளுடன் உருளைக்கிழங்கும் உணவு எண்ணெய் தயாரிப்பதற்கு Rypsi (Brassica rapa oleifera) என்னும் செடியும் பெருமளவில் பயிரிடப்படுகின்றன. பின்லாந்தின் தென்பகுதியில் மட்டுமே விவசாயம் செய்யலாம். அதுவும் மூன்று நான்கு மாதங்கள் இருக்கக்கூடிய குறுகிய கோடையில் மட்டுமே செய்யலாம். அந்த நாள்களில் காலநிலை பொதுவாக 10-30 பாகையாக (Centigrade) இருக்கும். இதுவும் வெய்யில் மழை மப்பு மந்தாரத்தைப் பொறுத்து ஏற்ற இறக்கமாக இருக்கும். விவசாயிகள் பசுக்கள், கோழிகள், பன்றிகள், செம்மறி ஆடுகளை வளர்த்து, அவற்றிலிருந்து பால், முட்டை, இறைச்சி, கம்பிளி ஆகியவற்றைப் பெறுவார்கள். வட பின்லாந்தில் கலைமான் (Raindeer) வளர்த்தல் ஒரு முக்கியத் தொழில். குளிர்காலமும் மூன்று நான்கு மாதங்கள் நீடிக்கும். அப்போது காலநிலை கடும் குளிராக இருக்கும். +5லிருந்து -40 பாகை வரை (plus 5 to minus 40 degrees centigrade) இருக்கும். குளிர்காலத்தில் பனிமழை (Snow) பெய்து நாடு முழுவதையும் மூடியிருக்கும். சில நேரங்களில் சில இடங்களில் ஒரு மீட்டர் தடிமனான பனிக்கட்டி தரைக்கு மேல் இருக்கும். வெப்ப வலைய நாடுகளில் தண்ணீரில் நடப்பது ஒரு மந்திர தந்திர நிகழ்ச்சி என்பார்கள். ஆனால் இங்கே குளிர் காலத்தில் கடல் ஏரி ஆறுகளில் சாமானிய மனிதர்கள் சாதாரணமாக நடந்து போகலாம். அந்த அளவுக்கு நீர் உறைந்து கட்டியாகி வயிரமாகிப் பாறையாகிப் போயிருக்கும். நடப்பது மட்டுமல்ல, பனிக்கட்டி மேல் மோட்டார் காரிலேயே பயணம் செய்து அக்கரைக்குப் போகலாம். குளிர்கால விளையாட்டுகளில் வழுக்கியோடுதலும் சறுக்கிப் பாய்தலும் முக்கியமானவை.
வசந்த காலத்தில், அதாவது மார்ச், ஏப்ரல் மாதங்களில் பனிமழையும் பனிக்கட்டியும் உருகும். மரங்களில் பசுந்தளிர்கள் தோன்றும். இலையுதிர் காலத்தில், அதாவது அக்டோபர் மத்தியில் பசுமரம் என்றழைக்கப்படும் தோவதாரு இனத்தைச் சேர்ந்த spruce, pine தவிர்ந்த மற்ற எல்லா மரங்களும் இலைகள் அனைத்தையும் உதிர்த்துவிட்டு மொட்டையாய் சலனமற்று நிற்கும். அதைத் தொடர்ந்து குளிர்காலம் ஆரம்பிக்கையில் நிறைய மழையும் பெய்யும். கோடைகால வெப்பமும் குளிர்காலத் தட்பமும் கதிரவனிலேயே தங்கியிருக்கிறது. பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியா, இலங்கை நாடுகளைப் போலல்லாமல் இங்கே சூரிய உதயமும் மறைவும் வித்தியாசமானவை. குளிர்காலத்தில் பின்லாந்தின் வடகோடியில் இரண்டு மாதங்களுக்குச் சூரியன் உதிப்பதில்லை. அங்கே கோடையில் இரண்டு மாதங்களுக்குச் சூரியன் மறைவதுமில்லை. வசந்த இலையுதிர் காலங்களில் வரும் சமராத்திரி நாட்களில், அதாவது சூரியன் பூமத்திய ரேகையைத் தாண்டும் நாட்களில் உலகின் ஏனைய இடங்களைப் போலவே இங்கேயும் சூரியன் காலை ஆறுமணிக்கு உதித்து மாலை ஆறுமணிக்கு மறையும். கடக மகர ரேகைகளுக்கு நேராகச் சூரியன் பிரகாசிக்கும் காலங்களில், அதாவது பூமத்திய ரேகைக்கு அதிக தூரத்தில் சூரியன் இருக்கக்கூடிய நடுக்கோடை நடுக்குளிர்கால நாட்களில் (solstice) பகல் மிகவும் நீண்டதாக இருக்கும். இந்த நாள்களில் தென் பின்லாந்தில்கூட இரண்டொரு மணி நேரமே சூரியன் மறைந்திருக்கும். கோடையின் மத்தியநாள் விழாவைப் பின்லாந்து மக்கள் நள்ளிரவில் Bonfire எரித்துக் கொண்டாடுவார்கள். இந்த நாட்களில் நள்ளிரவில் சூரியனைப் பார்ப்பதற்காக உலகின் பல பாகங்களில் இருந்தெல்லாம் மக்கள் வடபின்லாந்தில் திரளுவார்கள். இதிலிருந்து சூரியன் தாமதமாக உதித்து முன்னதாக மறையத் தொடங்கும். இப்படியே பகல் பொழுது குறைந்து குறைந்து மிகச்சிறிய பகல் பொழுதான நடுக்குளிர்கால நாள் வரை செல்லும். இன்றைக்குப் பின்லாந்து மக்கள் யேசுநாதர் பிறந்தநாளை (நத்தார்) கொண்டாடுகிறார்கள். ஆனால் முந்திய நாள்களில், அதாவது கி.பி. 12ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதம் பின்லாந்துக்கு வருவதற்கு முன்பு இது சூரியனின் பிறந்தநாளாகவே கருதப்பட்டது. கோடையில் பகல் பொழுது நீளமாக இருப்பதாலும் அளவான வெப்பம் இருப்பதாலும் போதிய மழை பெய்வதாலும் எங்கும் இயற்கை பச்சைப்பசேல் என்றிருக்கும். மரஞ்செடிகள் செழித்து வளர்ந்து கண்ணுக்குக் குளிர்ச்சியாகவும் மனத்துக்கு மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
இன்றைய பின்லாந்தின் பொருளாதாராம், சமூகம், கலாச்சாரம்
குளிர்காலத்தில் பல மாதங்கள் கடும் குளிராக இருப்பதால் வீடுகளை அதற்குத் தகுந்தபடி கட்டி வெப்பமூட்ட வேண்டியது அவசியமாகிறது. தொழில் நுட்பத்தில் முன்னேறியுள்ள இந்த நாள்களில் இதுவொன்றும் சிக்கலான காரியமல்ல. பெரும்பான்மையான மக்கள் இப்போது நகரங்களிலும் மாநகரங்களிலும் பலமாடிக் கல்வீடுகளில் வசிக்கிறார்கள். இவை பெரும்பாலும் வெப்பமூட்டும் வசதிகள் உடையவை. உதாரணமாக, தலைநகரான ஹெல்சிங்கியில் ஒரு அனல்சக்தி நிலையம் நிலக்கரியை எரித்து மின்சக்தியை உண்டுபண்ணுகிறது. அதேவேளையில் அந்த நிலையம் பெருமளவு நீரைக் கொதிநிலைக்குக் கொதிக்க வைக்கிறது. இந்தக் கொதிநீர், வெப்பம் கடத்தாத அடிநிலப் புதை குழாய்கள் மூலம் அநேகமாக ஹெல்சிங்கி நகரத்து அனைத்துக் கட்டிடங்களுக்கும் அனுப்பப்படுகின்றது. இந்தக் கொதிநீர், வெப்பத்தைப் பரவச் செய்யும் சாதனங்களுக்கு அனுப்பப்படுவதால், வெளியே உறைபனிக்குளிராக இருந்தாலும் கட்டிடங்களின் உள்ளே +20 பாகையாகவே (plus 20 degrees centigrade) இருக்கும். வீட்டுக்குழாய்களில் தண்ணீரும் வெந்நீரும் சாதாரணமாக வந்துகொண்டிருக்கும்.
இங்கே பெருமளவு காடுகள் இருப்பதால், இந்த நாட்டின் பொருளாதாரம் உயர்தரமான காகிதம், மரப்பொருள் ஆகியவைகளிலேயே தங்கியிருக்கிறது. கப்பல் கட்டுதல், தகவல் தொழில்நுட்பம் போன்றவை மேலதிகத் தொழில்களாகும். சமீபகாலமாகத் தகவல் தொழில்நுட்பத்திலும் கணிசமான வளர்ச்சி காணப்படுகிறது. உதாரணமாகக் கைபேசி (Mobile Phone) உற்பத்தியில் நோக்கியா (Nokia) நிறுவனத்தின் துரித முன்னேற்றத்தைக் குறிப்பிடலாம். பின்லாந்து அரசு, கல்வித்துறைக்கு நிறையச் செலவு செய்கிறது. வெகுகாலமாகவே பின்லாந்து மக்கள் நூறு சதவிகிதம் படிப்பறிவு உள்ளவர்கள். இந்த நாட்களில் பெரும்பான்மையான மக்கள் மேல்நிலைக் கல்லூரி, பல்கலைக்கழகக் கல்வியறிவு உடையவர்கள். பெருமளவில் கணினியைப் பயன்படுத்துதல், இணையத் தொடர்பு வசதிகள் ஆகியவைகளில் முன்னேறிவரும் உலகநாடுகளில் ஒன்றாகப் பின்லாந்தும் விளங்குகிறது. இந்த நாடு 1917-ல் சுதந்திரம் அடைந்த பின்பு ஒரு ஜனநாயக நாடாளுமன்ற அமைப்பையும் கொண்டுள்ளது.
பின்லாந்து, குறிப்பாக 1950களில் தொழில்மயமாக்கப்பட்டது. இரண்டாவது உலக யுத்தத்தின்போது, பின்லாந்து மண்ணை ஆக்கிரமிக்கும் எண்ணம் கொண்டிருந்த சோவியத் யூனியனுடன் ஐந்து ஆண்டுகளாகப் போர்புரிந்து, கடைசியில் பின்லாந்து தோல்விகண்டது. அப்பொழுது ஏற்பட்ட அமைதி உடன்படிக்கை விதிகளின்படி, சோவியத் யூனியனுக்குப் போரினால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளைப் பின்லாந்து ஈடுசெய்ய வேண்டிவந்தது. இதன் பிரகாரம் கப்பல்கள், டிராக்டர்கள், போரில் அழிந்த கவச வாகனங்கள், விமானங்கள், துப்பாக்கிகள் ஆகியவைகளுக்குத் தேவையான பொருள்களையும் கொடுக்க நேர்ந்தது. இந்தச் சூழ்நிலை தொழில்சாலைகளைக் கட்டியெழுப்ப வேண்டிய அவசியத்தை உண்டாக்கியதோடு விவசாயத்தையும் காட்டுத் தொழிலையும் எந்திரமயமாக்க வழியமைத்துத் தந்தது. அதுவரை வயல்களில் கலப்பைகளை இழுத்துவந்த குதிரைகளை அவிழ்த்துவிட்டு டிராக்டர்களைக் களத்தில் இறக்கினார்கள். அதிலிருந்து நாட்டின் வளர்ச்சியில் ஒரு வேகம் காணப்பட்டது. பின்லாந்து இப்பொழுது ஐரோப்பியச் சமூகத்தில் அங்கம் வகிப்பதோடு ஓர் உலகளாவிய கலாச்சாரத்தையும் கொண்டுள்ளது. அதே வேளையில் பின்லாந்து தனது சொந்தக் கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பேணிப் பாதுகாப்பதில் கவனமாக இருக்கிறது. இதில் ‘கலேவலா’ என்னும் இந்த நாட்டின் தேசியக் காவியத்துக்குப் பெரும் பங்கு உண்டு.
கலேவலாவும் பின்லாந்திய தேசிய அடையாளமும்
எழுதப்பட்ட பின்லாந்தின் வரலாறு உண்மையில், சுவீடனால் பின்லாந்து கைப்பற்றப்பட்ட கி.பி. 12ஆம் நூற்றாண்டில்தான் ஆரம்பமாகிறது. அப்பொழுது தமது இனத்துக்கென ஒரு சொந்த மதத்தைக் கொண்டிருந்த பின்னிஷ் மொழி பேசும் குடிமக்கள் பலவந்தமாகக் கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றப்பட்டார்கள். பின்லாந்து சுவீடனின் ஆட்சியின் கீழ் 800 வருடங்கள் இருந்தது. பெரும்பான்மையான குடிமக்கள் பின்லாந்து மொழியைப் பேசிய போதிலும் நிர்வாகம், கல்வித்துறைகளில் இலத்தீன், சுவீடன் மொழிகளே ஆட்சி மொழிகளாக இருந்தன. 1809-ல் சுவீடனுக்கும் ரஷ்யாவுக்கும் ஏற்பட்ட போரில் சுவீடன் தோல்வி கண்டதால், பின்லாந்து ரஷ்யாவின் கைகளுக்குப் போய்ச் சேர்ந்தது. புதிய ஆளுநரான ரஷ்ய மன்னர் பின்லாந்துக்குக் கணிசமான அளவு சுய ஆட்சியைக் கொடுத்திருந்தார். அதனால் பின்லாந்தின் சட்டசபை (senate), பல அரசியல் விவகாரங்களைத் தாங்களே தீர்மானிக்கக்கூடியதாக இருந்தது. எனினும், 19ஆம் நூற்றாண்டு முடிவடையும் காலகட்டத்தில், ரஷ்ய ஆட்சியாளர்கள் ரஷ்யமயப்படுத்தும் இயக்கம் ஒன்றைத் தொடங்கினார்கள். அதை எதிர்த்த பின்லாந்து மக்கள் சுதந்திரத்துக்கான பல்வேறு திட்டங்களை ஆரம்பித்தார்கள். எனவே கடைசியில், கம்யூனிஸ்ட் புரட்சியோடு பின்லாந்து சுதந்திரம் பெறும் வாய்ப்பு வந்தது.
சுவீடனின் ஆட்சிக்காலம் முழுவதிலும் பெரும்பான்மையான மக்களின் தாய்மொழியாக இருந்த பின்னிஷ் மொழி, பின்னர் பின்லாந்தியர் அனைவரையும் ஒன்று சேர்க்கக்கூடிய ஒரு தேசிய அடையாளத்தை உருவாக்க உறுதுணையாக அமைந்தது. சமூகத்தில் மேல்மட்ட மக்கள் சுவீடன் மொழி பேசுபவர்களாக இருந்தபோதிலும், 19ம் நூற்றாண்டில் பல உயர் வகுப்புக் குடும்பத்தினர் தங்கள் சொந்த மொழியாகப் பின்னிஷ் மொழியை ஏற்கத் தீர்மானித்தார்கள். பின்லாந்தின் பாரம்பரிய நாடோடி இலக்கியங்களை உயர்கல்வி வட்டாரங்களில் படிக்கத் தொடங்கினார்கள். அத்துடன், தொலைதூர இடங்களில் வாழ்ந்த சாமானிய கிராமத்து மக்கள் அரிய பழைய நாடோடிப் பாடல்களைப் பாதுகாத்து வைத்திருந்ததையும் கண்டுபிடித்தார்கள். அத்தகைய பாடல்கள், பல பாரம்பரியக் கதைகளைக் கூறின; கிறிஸ்துவுக்கு முந்தைய காலத்துக் கடவுள்கள், மாவீரர்கள் பற்றிய கதைகளையும் கூறின. அவற்றைச் சேகரித்துப் படித்து ஆராய்ந்து பார்த்ததின் உச்சப் பயன், பின்லாந்தியர் சுயவிழிப்புணர்வையும் தேசியப் பற்றையும் தூண்டும் சக்தி படைத்த ‘கலேவலா’ என்னும் காவியத்தின் வெளியீடாக விளைந்தது. ஆயிரம் ஆண்டுகளாக சுவீடனும் ரஷ்யாவும் ஆண்டுவந்த போதிலும், பின்லாந்தியர் ஒரு பாரம்பரிய வீரவரலாற்றுக் காவியத்தைத் தமக்கெனப் பெற்றிருக்கிறார்கள். அதனால் உலக நாடுகளில் தமக்கென ஓர் இடத்தையும் பெருமையுடன் பெற்றிருக்கிறார்கள்.
பின்லாந்தின் நாடோடிப் பாடல்களைச் சேகரித்தலும் கலேவலா வெளியீடும்
எலியாஸ் லொன்ரொத் (Elias Lonnrot 1802-1884), தானும் தன் முன்னோடிகளும் கரேலியாக் காட்டுப் பிரதேசங்களில் சேகரித்த, சிறந்ததும் பாடபேதங்கள் நிறைந்ததுமான பின்லாந்தின் நாட்டுப் பாடல்களிலிருந்து கலேவலாவைத் தொகுத்து வெளியிட்டார். ஒரு மருத்துவராகத் தனது தொழிலைத் தொடங்கிய லொன்ரொத், ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்தில் பின்னிஷ் மொழியின் பேராசிரியராக மாறினார். பாரம்பரியச் சொத்தை அழிவிலிருந்து காத்து உலக இலக்கியத்துக்கு லொன்ரொத் செய்த சேவையை, பழந்தமிழ்ச் சங்க இலக்கியங்களுக்கு உயிரூட்டிய புகழ்பெற்ற உ.வே. சாமிநாதையரின் அரும்பணிக்கு ஒப்பிடலாம். ஜீன் சிபெலியூஸ் (Jean Sibelius 1865-1957) கலேவலாப் பாடல்களுக்கு இசையமைத்துப் பின்லாந்து மக்களின் இதயங்களில் பிடித்த இடம் தமிழ் மக்களின் இதயங்களில் தியாகையரின் கீர்த்தனைகள் பெற்ற இடத்துக்கு இணையாகும். கலேவலாவின் பாடல்கள் பின்லாந்தின் மிகச்சிறந்த ஓவியக் கலைஞர்களுக்கும் ஊக்கத்தையும் உள்ளக்கிளர்ச்சியையும் உண்டாக்கியிருக்கின்றன. அவர்களில் ஒருவரான அக்செலி கல்லேன்-கல்லேலவின் (Akseli Gallen-Kallela 1865 -1931) ‘போர்ப்பாதையில் குல்லர்வோ’ என்ற வர்ண ஓவியம், இந்தக் ‘கலேவலா’ தமிழ் உரைநடை நூலின் அட்டையை அலங்கரிக்கிறது.
‘பழைய கலேவலா’ என்னும் முதற் பதிப்பை லொன்ரொத் 1935-ல் வெளியிட்டார். முதற் பதிப்பிலும் பார்க்க இரண்டு மடங்கு நீளமானதும் முழுமையானதுமான இரண்டாவது பதிப்பு 1849-ல் வெளிவந்தது. ‘கந்தலேதார்’ என்னும் ஓர் இசைநூலின் தொகுப்பை லொன்ரொத் 1840-41ல் வெளியிட்டார். கலேவலாவுக்கும் கந்தலேதாருக்கும் அடிப்படையாக அமைந்த மூல நாடோடிப் பாடல்களின் ஒரு மாபெரும் தொகுதி ‘பின்லாந்து மக்களின் பண்டையப் பாடல்கள்’ என்ற பெயரில் 33 பெரிய பாகங்களாக 1909-1948ல் வெளியிடப்பட்டது. இந்தப் பாரிய செயல்பாடுகள்கூட நூற்றுக்கணக்கான கல்வியாளர்களாலும் தாமாக முன்வந்த சேவையாளர்களாலும் பின்னிஷ் இலக்கிய மன்றத்தின் ஆவணக்காப்பகத்தில் குவித்து வைக்கப்பட்ட செழிப்புமிக்க சேகரிப்புச் செல்வங்களை வற்றச்செய்ய முடியவில்லை. பின்னிஷ் இலக்கிய மன்றம் 1831-ல் நிறுவப்பட்டது. லொன்ரொத் சில அடிகளைத் தானும் இயற்றிக் கலேவலாவில் சேர்த்திருந்த போதிலும், பாரம்பரிய மூலக்குறிப்புகளையும் கதைகளையும் ஒழுங்குபடுத்தி முரண்பாடில்லாத இசைவான முழுமையான நூலைத் தந்த பெருமை அவரையே சாரும்.
தப்பிப்பிழைத்த பின்லாந்தின் நாட்டுப்பாடல்கள்
கி.பி. 1155-ல் சுவீடன் மக்கள் கிறிஸ்தவ மதத்தை மேற்கிலிருந்து பின்லாந்துக்குக் கொண்டுவந்தார்கள். அதோடு பின்லாந்தில் நிலைகொண்ட ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையினர், கிறிஸ்துவுக்கு முந்தைய காலத்து மதநம்பிக்கையுள்ளவர்களின் பரம்பரை வழக்கங்களைச் சகிக்க முடியாதவர்களாக இருந்தார்கள். 16ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட சீர்திருத்தத்துடன் மேற்படி திருச்சபையினரின் இடத்தைப் பிடித்த லுத்தரன் சபையினர் இந்தப் பரம்பரை வழக்கங்களை வேரறுக்கும் முயற்சியில் தீவிரமானதோடு அதை இன்னமும் தொடர்கிறார்கள். ஆனால் ரஷ்யாவில் நிலவிய கிரேக்க ஆர்தடாக்ஸ் கிறிஸ்தவர், உள்நாட்டு நாடோடி நம்பிக்கைகளைப் பொறுத்துக்கொண்டார்கள். எந்த நாட்டுப்பாடல்களின் அடிப்படையில் கலேவலா தோன்றியதோ அந்த நாட்டுப்பாடல்கள் கரேலியாவில் தப்பிப் பிழைத்திருந்தன. இப்பொழுது இந்தக் கரேலியாவின் பெரும்பகுதி பின்லாந்தின் கிழக்கு எல்லைக்கு அப்பால் ரஷ்யாவில் இருக்கிறது. நெடுந்தொலைவுகளினாலும் காடுகளின் அடர்த்தியில்லாத குடியிருப்புகளாலும் பின்னிஷ்-கரேலியக் கலாச்சாரத்தின் பரிமாணம் ஏனைய கலாச்சார மையங்களுடன் தொடர்பில்லாமலே இருந்தது. லொன்ரொத்தும் அந்தக் காலத்து நாடோடி இலக்கிய வேட்டைக்குப் புறப்பட்ட மற்றைய சேகரிப்பாளர்களும் பாதைகளேயில்லாத காட்டுவழிப் பயணங்களில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் காகிதமும் பேனாவுமாக நடந்து திரிந்தே குறிப்பெடுத்தார்கள். ஒலிப்பதிவுக் கருவிகளெல்லாம் அந்த நாட்களில் இருந்ததில்லை.
பின்லாந்து மொழியும் மக்களின் முற்கால வரலாறும் கலேவலாவின் பொருளடக்கமும்
1548-ல் அச்சிடப்பட்ட புதிய ஏற்பாட்டின் மைக்கேல் அகிரிகோலாவின் (Mikael Agricola) மொழிபெயர்ப்பே பின்னிஷ் மொழியில் இருக்கும் மிகப்பழைய நூலாகும். பின்னிஷ் மொழியுடன் நெருங்கிய தொடர்புடைய கரேலிய மொழியில் கிடைக்கும் மிகக் குறுகிய மேற்கோள் நூற்பா அடிகள் மூன்று நூற்றாண்டுகள் பழையன. அவைகளில் மிலாறு மரப்பட்டையில் எழுதப்பட்ட மந்திரக் குறிப்புகள் இருக்கின்றன. இவை ரஷ்யாவில் நொவ்கொராட் (Novgorod) நகரில் கண்டெடுக்கப்பட்டன. பழைய எழுத்து மூலபாட ஆதாரங்கள் எதுவும் இல்லாதபோதிலும், பின்னிஷ் மொழியையும் அதனுடன் தொடர்புடைய பிற மொழிகளையும் கட்டிடக்கலைக் பாடத்துடன் இணைத்து ஆராயும்போது பின்லாந்தியரின் முந்தைய வரலாறு பற்றிக் கொஞ்சம் அறிய முடிகிறது. பின்னிஷ் மொழி, இன்றைக்கு மொத்தமாகச் சுமார் இரண்டுகோடி மக்களால் பேசப்படும் யூராலிக் மொழிக் குடும்பத்தைச் (Uralic language family) சேர்ந்தது. இந்தத் தொகுதியில் அதிக மக்களால் பேசப்படுவன ஹங்கேரிய, பின்லாந்திய, எஸ்தோனிய மொழிகளாகும். இவை முறையே ஒரு கோடியே நாற்பது லட்சம், ஐம்பது லட்சம், பத்து லட்சம் மக்களால் பேசப்படுகின்றன. மற்றைய மொழிகள் ரஷ்யாவில் சிறிய சிறுபான்மையினரால் பேசப்படுகின்றன. இந்த மொழிகளைப் பேசுவோரின் முன்னோர் வேட்டையாடியும் மீன்பிடித்தும் உண்ணும் சமுதாயமாக தென்கிழக்கு ஐரோப்பாவின் காட்டுப் பிரதேசங்களில் கற்காலத்திலிருந்தே வாழ்ந்திருக்கிறார்கள். இரவல் கடன் சொல்கள் பற்றிய ஓர் ஆய்வு, தென் ரஷ்யாவில் தொல்-இந்தோ-ஐரோப்பிய மொழி (Proto-Indo-European language) பேசி வாழ்ந்த நாடோடி இனத்தவருக்கும் யூராலிக் மக்களுக்கும் 6000 வருடங்களுக்கு முன்பே தொடர்பிருந்தது என்பதைக் காட்டுகிறது.
சுமார் 5000 – 4000 ஆண்டுகளுக்கு முன்னர், இத்தகைய தென்புலத்து அயலவர்களின் மொழி, சமஸ்கிருதத்தின் தாய்மொழியான தொல்-ஆரியமாக (Proto-Aryan) மாறியது. கி.மு. 2000-ல் மத்திய ஆசியா வழியாக வந்த மேற்படி நாடோடி இனத்தவரில் ஒரு பகுதியினர் இம்மொழியை இந்தியாவுக்குக் கொண்டுவந்தார்கள். பின்னிஷ் மொழியில் இன்னமும் நூறு எனப் பொருள்படும் ‘sata’ என்ற சொல் சமஸ்கிருதத்தில் ‘சத’ என்ற சொல்லுடன் தொடர்புடையது. ஆதியில் இருந்த பின்லாந்து மதம், ஆரியக் கொள்கைகளின் தாக்க விளைவாகக்கூட இருந்திருக்கலாம். இவ்வாறு ‘கடவுள்’ என்னும் பொருளுடைய ‘jumala’ என்ற பின்னிஷ் மூலச்சொல், ரிக்வேதப் பாடல்களில் போருக்கும் இடிமுழக்கத்துக்கும் தெய்வமான இந்திரனைக் குறிப்பிடும் ‘பிரகாசித்தல்’ என்னும் பொருளுடைய ‘dyumat’ என்ற பழைய ஆரியச் சொல்லிலிருந்து வந்திருக்கலாம். பண்டைய இந்தோ-ஆரிய தெய்வக்கூட்டத்துள் இந்திரன் முதன்மைப் பதவியை வகித்திருக்கிறார். அப்படியே பின்லாந்தின் கடவுள்களிலும் ‘உக்கோ’ (Ukko) என்னும் இடிமுழக்கத்தின் கடவுள் உயர்ந்தவராகக் கருதப்பட்டிருக்கிறார். இன்னொரு எடுத்துக்காட்டு, கலேவலாவில் வரும் ‘சம்போ’ என்னும் அற்புத ஆலை ஆகும். சுற்றிச் சுழலும் சுவர்க்கத்தின் நட்சத்திரப் புள்ளிகள் இசைந்த பிரபஞ்ச ‘ஆலை’யிலிருந்து இந்த அற்புத ஆலைக்கான எண்ணம் ஏற்பட்டிருக்கலாம் என்று ‘சம்போ’வின் ‘புள்ளிகளுள்ள மூடி’ என்ற நிலைத்த அடைமொழி கருத வைக்கிறது. ‘சம்போ’ (sampo) என்னும் சொல்லிலிருந்து வரும் ‘தூண்’ என்னும் பொருள் உள்ள திரிபுருவான sammas என்பது, skambha அல்லது ‘ஸ்தம்பா’ என்ற சமஸ்கிருதச் சொல்லை நினைவூட்டுகிறது; வேதத்தில் இது வானத்தைத் தாங்கி நிற்கும் பூவுலக அண்டத்துக்குரிய ஸ்தாணு (தூண்) என்பதைக் குறிக்கிறது.
5000 – 4000 ஆண்டுகளுக்கு முன்னர், முன்-இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் (Proto-Indo-European language) வழிவந்த வேறு சில மொழிகளின் தாக்கமும் பின்னிஷ் மொழியில் ஏற்படத் தொடங்கியது. இத்தகைய மொழிகள், சுவீடன் மக்களின் முன்னோர் பேசிய தொல்-ஜெர்மானிக் (Proto-Germanic) மொழியும் லித்துவேனிய லத்வியா நாட்டு மக்களின் முன்னோர் பேசிய தொல்-பால்டிக் (Proto-Baltic) மொழியுமாகும். ஆதியில், ரஷ்யமொழி பேசியோரின் முன்னோர் பின்னிஷ் மொழி பேசியோருடன் தொடர்பில்லாமல் வெகு தொலைவில் தெற்கில் வாழ்ந்தார்கள். ஆனால் பின்னர் அவர்களும் பின்லாந்து மக்களின் அண்டைநாட்டவராகி அந்தத் தாக்கமும் ஏற்பட்டது.
5000 ஆண்டுகளுக்கு முன்னர் பின்லாந்தைச் சுற்றியுள்ள பகுதியில் வாழ்ந்த யூராலிக் மக்கள் இரு வகுப்பினராகப் பிரிந்திருந்தார்கள். அப்போது ஒரே மொழியைப் பேசிய பின்லாந்து எஸ்தோனிய நாடுகளது மக்களின் முன்னோர்கள், இந்தோ-ஐரோப்பியரின் விவசாயம், கால்நடை வளர்த்தல் ஆகியவற்றைச் செய்துகொண்டு பின்லாந்து எஸ்தோனிய நாடுகளின் தென்கரைகளில் அயலவராக வாழ்ந்துவந்தார்கள். தற்கால லாப்பியரின் முன்னோர் வேட்டையாடுவோராகவும் மீன்பிடித்து வாழ்வோராகவும் பழைய யூராலிக் முறையில் தென் பின்லாந்தில் வாழந்து வந்தார்கள். தென்பகுதியைச் சேர்ந்த கலேவலாப் பாடல்கள், பின்லாந்தியரின் வடதிசை நகர்வையும் லாப்பியர்பால் இருந்த பகையுணர்வையும் அவர்களுடைய மொழியுறவையும் பிரதிபலிக்கிறது. இந்த லாப்பியர் ஸ்காண்டிநேவிய நாடுகளான பின்லாந்து சுவீடன் நார்வேயின் வடகோடியில் வடகடலுக்கு அருகில் குறைந்த சிறுபான்மையராக வாழ்கிறார்கள். அவர்கள் இன்னமும் வேட்டையாடுவோராகவும் கலைமான் வளர்க்கும் நாடோடி இடையராகவுமே வாழ்கிறார்கள். கி.பி. 98-ல் ரோமன் நூலாசிரியர் டஸிட்டஸ் (Tacitus) ஐரோப்பிய வடபுற எல்லைகளைப் பற்றி விவரிக்கையில் வேட்டையாடி, உணவுகள் சேகரித்து வாழ்ந்த நிரந்தர வீடுகளில்லாத ‘பென்னி’ (Fenni) என்ற ஓர் இனத்தவரைப் பற்றிக் கூறியிருக்கிறார். இது பெரும்பாலும் இந்த லாப்பியராக இருக்கலாம்.
கலேவலாப் பாடல்களின் வேறு கருப்பொருள்கள்
கி.பி. 800 – 1100 காலகட்டத்தில், வைக்கிங் கடலோடிகளின் தாக்குதல்களும் கலேவலாவின் போர்ப் படையெடுப்புக்குப் பின்புலமாய் இருந்திருக்கின்றன. ஸ்காண்டிநேவிய நாடுகளான சுவீடன், நார்வே, டென்மார்க் நாடுகளில் – அனேகமாகப் பின்லாந்தில் இருந்தும் என்றும் சொல்லலாம் – வைக்கிங் கடலோடிகள் மேற்கு, தெற்கு ஐரோப்பாவில் இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் கிழக்கே ரஷ்யா ஊடாகக் கருங்கடலிலும் தாக்குதல்களை நடத்தினார்கள்.
எனினும், கலேவலாப் பாடல்கள் போர் நடவடிக்கைகளை மட்டும் கருப்பொருளாகக் கொண்டவையல்ல. அவை பண்டைய பின்லாந்தியரின் அன்றாட வாழ்க்கை பற்றியும் கூறுகின்றன. அவைகளுள் திருமணங்கள், மருத்துவ நோய்ச் சடங்குகள், தத்துவங்கள், இளைஞரின் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், உலகநோக்குகள், மதங்கள் ஆகிய பலதரப்பட்ட நாடோடிப் பழக்க வழக்கங்கள் அடங்குகின்றன. யூராலிக் மொழிகள் பேசிய மக்களின் மிகப் பழைய மதம் அனேகமாகச் ‘ஷமானிசம்’ (Shamanism) ஆக இருந்திருக்கலாம். ஆனால் கலேவலாவில் பிரதிபலிக்கும் மதம், பால்டிக் பின்லாந்தியருடன் தொடர்புபட்ட வேறு இன மக்களின் தாக்கத்தால் ஏற்பட்டதாகத் தெரிகிறது. உண்மையில், கலேவலாவில் உலகின் பல நோக்குகளைக் காணலாம். எடுத்துக்காட்டாக, கற்காலம் வரை பின்னோக்கிச் செல்லக்கூடிய புராணக் கதைகள், மாபெரும் சிந்தூர மரத்தைப் படைத்தலும் வீழ்த்தலும், வைக்கிங் காலத்து வீரர்களின் பரம்பரை வீரயுகக் கதைகள், கிறிஸ்தவ மதமும் பின்லாந்தில் அதன் வெற்றியும் (கலேவலாவின் கடைசிப்பாடல் கிறிஸ்துவின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டது), உழவர்கள், பெண்களின் பாடல்கள் ஆகியவைகளைக் குறிப்பிடலாம். ஏற்கனவே வெளிவந்த கலேவலாவின் யாப்புநடைத் தமிழாக்கத்தில் மொழிபெயர்ப்பாளர் போதிய விளக்கக் குறிப்புகளைத் தந்திருக்கிறார். எனவே, நான் மேற்கொண்டு விரிவாகக் கூறாமல் சில முக்கிய விஷயங்களைப் பற்றி மட்டும் சொல்லப் போகிறேன். பாடல்களே வாசகர்களுடன் பேசட்டும்.
சில முக்கிய கதாபாத்திரங்கள் பற்றிய குறிப்புகள்
‘கலேவலா’ என்னும் பெயர் பின்லாந்திய இடப்பெயர் விகுதியான ‘-லா’ (-la) வில் முடிவடைகிறது. ‘கலேவா’ என்னும் பெயர்ப் பகுதி பின்லாந்தியரின் சந்ததியின் ஆதிமூலவரின் பெயராகக் கருதப்படுகிறது. அவருக்குப் பன்னிரண்டு ஆண் மக்கள் இருந்தார்கள் என்றும் அவர்களுள் கலேவலாவின் முக்கியக் கதைமாந்தர்களான வைனாமொயினனும் இல்மரினனும் அடங்குவார்கள் என்றும் சொல்வார்கள். பின்னிஷ் மொழியில் ‘கலேவா’ என்பது, நட்சத்திரங்களின் பல பெயர்களுள் ஒன்றாக வருகிறது. கையில் கத்தியும் அரைக்கச்சும் உடைய போர்வீரன் போன்ற உருவமுள்ள நட்சத்திரக் கூட்டத்தைக் ‘கலேவாவின் வாள்’ என்று அழைப்பார்கள். இடிவிழுந்து அழித்தல் (இடியேறு) போன்ற வானுலகக் காட்சியை ‘கலேவாவின் நெருப்பு’ என்பார்கள். கலேவாவின் ஆண்மக்களை, வயல்களை உண்டாக்குவதற்காகக் காட்டுமரங்களை எரித்தழித்த காட்டு வேளாண்மையின் அதிசக்தி வாய்ந்த பூதகணங்கள் என்பார்கள். கலேவா என்னும் பெயரின் சொல்லாக்க விளக்கம் உறுதியாகச் சொல்வதற்கில்லை. கொல்லன் என்னும் பொருள் வரும் Kalvis என்னும் லித்துவேனியச் சொல்லும் பழைய பால்டிக் கொல்லுவேலைத் தெய்வம் Kalevias என்பதும்தான் தொடர்புபடுத்தக்கூடிய மிக நெருக்கமான விளக்கமாகும்.
கலேவலாவின் முக்கியக் கதைப்பாத்திரங்களில் ஒருவனான இல்மரினன், தெய்வக் கொல்லன் (விஸ்வகர்மா என்ற தேவசிற்பி போல / இருப்புக்கொல்லர் நாரிவீஜிய புராணங்களில் முக்கியத்துவம் பெற்றவர்கள் – கா.சு.) என்னும் தனிச்சிறப்புடையவன். இவனுடைய முக்கிய அருஞ்செயல்களில் சில- இரும்பைப் பதப்படுத்தியது, சம்போ என்னும் அற்புத ஆலையைக் கொல்லுலையில் உருவாக்கியது, தங்கத்தில் ஒரு மங்கையைத் தட்டி உருவாக்கியது, விண்ணுலக் கதிரொளிகளை வடபுலப் பாறைகளில் இருந்து விடுவித்தது என்பனவாகும். இல்மரினன் சம்போவைச் செய்தது போலவே விண்ணுலகின் கவிகை விமானத்தையும் செய்தவன் என்று பண்டைய நாட்டுப் பாடல்கள் கூறுகின்றன. லாப்புலாந்திலிருந்து கிடைத்த 1692ஆம் காலத்தைய ‘ஷமானிச’ முரசு (drum) என்பதிலிருந்து, இல்மரிஸ் என்னும் அதிதெய்வம் காற்றையும் காற்று வீச்சையும் ஒழுங்கிசைவுக்கு உட்படுத்தியதாகச் தெரியவருகிறது. பின்னிஷ் மொழியில் ‘இல்மா’ (ilma) என்னும் சொல்லுக்குக் காற்று என்று பொருள். ரஷ்யாவில் வாழும் வொத்யாக்ஸ் (Votyaks) இனத்தவர் இன்னமும் இன்மர் (Inmar) அல்லது இல்மெர் (Ilmer) என்னும் வான்கடவுளை வழிபட்டு வருகிறார்கள்.
கலேவலாவின் முதன்மைப் பாத்திரமான வைனாமொயினன், தெய்வச் சிறப்பு – மனிதச் சிறப்பு எனப் பன்முகம் கொண்ட படைப்பாகும். புராணவியல் தனித்தன்மைகளின் அடிப்படையில் லொன்ரொத் (Lonnrot) மனிதச் சிறப்பு என்பதற்கே சாதகமாக இருந்திருக்கிறார் என்று தெரிகிறது. முதலாவது பாடலில் வைனாமொயினனே ஆதிகாலத்துக் கடலில் பிறந்த படைப்புக் கடவுளாகிறான். அகன்ற ஆறு அல்லது விரிகுடா என்னும் பொருளுடைய வைனா (Vaina) என்னும் சொல்லிலிருந்து வந்ததால், அவன் தண்ணீருடன் தொடர்புடைய கடவுளாகவும் இந்தியப் புராணங்களில் வரும் வருணனைப் போலவும் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. வைனாமொயினன் ஒருவிதப் பண்பாட்டுக் கதைத்தலைவனாகவும் விளங்குகிறான்: படகு ஒன்றை முதலில் கட்டி உருவாக்கியவன் அவனே. ஒரு யாழை முதலில் செய்து இயற்கை முழுவதையும் தனது இசையால் வசப்படுத்தியவனும் அவனே. வைனாமொயினனின் பண்பை விளக்கும் சிறப்புப்பெயர்கள் அவனுடைய வயதையும் அறிவையும் வலிறுத்திக் கூறுகின்றன. அவன் உலகியலுக்கு அப்பாற்பட்ட அறிவு படைத்த வல்லமைமிக்க சித்தன்; மந்திரப் பாடல்களாலும் சக்திவாய்ந்த சொல்களாலும் தனது அருஞ்செயல்களை நிகழ்த்தியவன். ஒரு மந்திரச் சூனிய மதகுருவைப் போல பாதாள உலகத்துக்குச் சென்று ஒரு பழமையான மரணமடைந்த பூதத்திடம் தனக்குத் தேவையான மந்திரச் சொல்களைப் பெற்று வந்தவன். வைனாமொயினன் ஒரு போர்வீரனைப் போல பல இடங்களில் படைக்கப்பட்டிருந்தாலும், அவனுடைய போர்வீரனுக்குரிய செயலாற்றல் அவனுடைய ஞானத்தின் தேர்ச்சியளவுக்குப் பாராட்டப்படவில்லை. இதன் தொடர்பாக, நாயகன், வீரன் என்பதைக் குறிக்கும் பின்னிஷ் சொல் sankari, பாடகன் என்னும் பொருளுள்ள பழைய நார்டிக் (Old Nordic) சொல்லான sangare வரை பின் நோக்கிச் செல்வதைக் கவனித்துப் பார்த்தால் நம் மனதுள் ஆர்வம் கிளர்வதைக் காணலாம். வைனாமொயினனின் பாத்திரப் பண்பை எளிமையான முறைகளில் தெரிந்துகொள்ளப் பல்வேறு கல்வித்துறை ஆய்வாளர்கள் எடுத்த முயற்சிகள் மிகவும் வித்தியாசமான முரண்பாடான முடிவுகளையே தந்திருக்கின்றன. கலேவலாவில் வரும் வேறு பல பாத்திரங்களுக்கும் இந்தப் பார்வை பொருந்தும்.
பின்லாந்து இலக்கியம்
பின்லாந்து இலக்கியம் பற்றி மேலெழுந்தவாரியாகச் சில முக்கியமான தகவல்களை மட்டும் இங்கு கூற விரும்புகிறேன். 1809இன் முந்திய பகுதிகளில் தேசியக் கலாச்சாரத்தையும் பின்னிஷ் மொழி இலக்கியத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற மனமார்ந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஸ்நெல்மன் (J.V.Snellman 1806 – 1881) என்பவர் ஓர் அரசியல் அறிவர். இவரது தலைமையிலும் எலியாஸ் லொன்ரொத் போன்ற அறிஞர்களின் முயற்சியிலும் 1831-ல் பின்னிஷ் இலக்கிய மன்றம் நிறுவப்பட்டது. அரச அனுசரணையுடன் இம்மன்றம் இன்றுவரை சிறப்பாகச் செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
செருப்புத் தைப்பவர்கள் நாடகம் (Heath Cobblers)கலேவலா, கந்தலேதார் நூல்களின் காலகட்டத்துக்குப் பின்பு, ருனேபேர்க் (J.L.Runeberg 1804-1877) என்பவர் தனது படைப்புகளால் ஓர் அழுத்தமான முத்திரையைப் பதித்துத் தேசிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இவருடைய ‘எங்கள் நாடு’ என்ற பாடலே இன்று பின்லாந்து நாட்டின் தேசியகீதமாக விளங்குகின்றது. பின்லாந்து இலக்கியத்தின் இரண்டாவது பெருந்தூண் என்று அலெக்ஸிஸ் கிவியை (Aleksis Kivi 1834-1872) அழைப்பார்கள். இவருடைய ‘செருப்புத் தைப்பவர்கள்’ ஒரு வித்தியாசமான நாடகம். இது ஒரு செருப்புத் தைப்பவரின் மகன் திருமண முயற்சிகளில் தோல்வியடைவதை நகைச்சுவையாகச் சொல்கிறது. அலெக்ஸிஸ் கிவியின் படைப்புகள் அனைத்திலும் தலைசிறந்தது ‘ஏழு சகோதரர்கள்’ என்ற நாவலாகும். ஷேக்ஸ்பியரின் படைப்புகளில் காணப்படும் அழகும் அலங்காரமும் இந்த நாவலில் இருக்கிறது என்பதும், மனத்தை இலகுவாக்கவல்ல நல்ல நகைச்சுவையும் மனத்தை இறுக்கவல்ல ஆழ்ந்த சோகமும் அருகருகாய்ச் செல்வது ஒரு சிறப்பம்சம் என்பதும் விமர்சகர்களின் கருத்து. இது இருபதுக்கும் மேற்பட்ட உலக மொழிகளில் வெளிவந்திருக்கிறது.
அலெக்ஸிஸ் கிவியைத் தொடர்ந்து 1900 வரையில் பல படைப்பாளிகளைப் பின்லாந்தின் இலக்கிய வரலாற்றில் காண முடிகிறது. சிலர் மிக ஆழமான சுவடுகளைப் பதித்துவிட்டுப் போயிருக்கிறார்கள். 1939-ல் இலக்கியத்துக்கு நோபல் பரிசு பெற்றவர் பின்லாந்து எழுத்தாளர் சில்லன்பா (F.E.Sillanpaa 1888-1964). மரியா ஜோத்துனியும் (Maria Jotuni 1880-1943) ஐனோ கல்லாஸும் (Aino Kallas 1878 – 1956) பெண் எழுத்தாளர்களில் பிரபலமாகப் பேசப்படுபவர்கள்.
உலகளவில் பெரும் புகழ்பெற்ற எழுத்தாளர் மிக்கா வல்தரி (Mika Waltari 1908-1979). இவர் தனக்கென்று ஒரு சிறப்பான நடையையும் கதைசொல்லும் முறையையும் அமைத்துக்கொண்டு இருபதுகளில் இளைமைத் துடிப்புடன் புறப்பட்டார். 1928-ல் வெளியான இவருடைய ‘மாபெரும் மாயை’ என்ற நாவல் இவரை ஓர் இளம் ஹெமிங்வே என அடையாளம் காட்டியது. இரண்டாவது உலகப் போரையடுத்து இவர் எழுதிய சரித்திர நாவல்கள் உலகப்புகழ் பெற்றதோடு பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. இவருடைய ‘சினுஹே என்னும் எகிப்தியன்’ என்ற நாவல் 29 மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்டது.
Väinö Linnaகொஞ்சம் விரைந்து இருபதாம் நூற்றாண்டின் மத்திக்கு வருவோம். அடுத்தடுத்து நடந்த யுத்தங்கள், உள்நாட்டு வெளிநாட்டுக் கொள்கைகளில் ஏற்படுத்திய மாற்றங்களினால் தேசிய வரலாற்றில் ஒரு சுயதேடலையும் மறுமதிப்பீட்டு முயற்சியையும் எழுத்தாளர்களிடையே காண முடிந்தது. இந்தக் காலகட்டத்தில், 1920-ல் பிறந்த வைனோ லின்னா (Väinö Linna) முன்னணியில் நிற்கிறார். இவருடைய போர் பற்றிய நாவலான ‘அறிமுகமற்ற போர்வீரன்’ நாடெங்கும் விவாதத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்திப் பெரும் வெற்றியையும் அள்ளித் தந்தது. போர் பற்றிய எதார்த்தமான வர்ணனைகளையும், இராணுவ அதிகாரிகளுக்கும் போர்வீரர்களுக்குமிடையே நிலவும் உறவுகள் பற்றிய உண்மைகளையும் உள்ளத்தைத் தொடும் வகையில் தருகிறார். இது ஒரு நிதர்சமான நேர்மையான புதிய பார்வை. இந்த நாவலின் பாத்திரங்கள் மக்களின் மனங்களில் ஆழமாகப் பதிந்து தேசிய அளவில் பேசப்பட்டன.
கலேவலாவின் தமிழ் மொழிபெயர்ப்பு
கலேவலாவின் தமிழ் மொழிபெயர்ப்பாளரான, இலங்கையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திரு. ஆர். சிவலிங்கம் ஓர் அனுபவம் நிறைந்த தமிழ் எழுத்தாளர்; ‘உதயணன்’ என்ற புனைபெயரில் ஏராளமான சிறுகதைகள் நாவல்களைப் படைத்து தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். பின்லாந்தில் பதினாறு வருடங்கள் வாழ்ந்து இந்த நாட்டு மொழியுடனும் கலாச்சாரத்துடனும் நன்கு பழக்கப்பட்டவர். 1994-ல் வெளிவந்த இவருடைய கவிதைநடைத் தமிழாக்கம் பின்னிஷ்-கரேலிய மூலப்பிரதியிலிருந்து நேரடியாகத் தமிழுக்குக் கொண்டுவரப்பட்டது. அவ்வாறே இந்த உரைநடைத் தமிழாக்கமும் பின்னிஷ் மூல நூலிலிருந்து நேரடியாகத் தமிழுக்கு வந்திருக்கிறது. பல ஆண்டுகளாக அலசி ஆராய்ந்து கவிதைநடைத் தமிழாக்கத்தை வெளியிட்ட இவருடைய அனுபவம், இந்த உரைநடைத் தமிழாக்கம் மிகச் சிறப்பாக அமைய உதவியிருக்கிறது.
கலேவலா நூலின் கெய்த் பொஸ்லி (Keith Bosley) என்பவரின் ஒரு புதிய ஆங்கில மொழிபெயர்ப்பை ‘உலகளாவிய இலக்கியங்கள்’ என்ற வரிசையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக அச்சகம் (Oxford University press) 1989-ல் வெயிட்டது. மற்றும் கிர்பி (W.F.Kirby-1907), மகோன் (F.B.Magoun jr-1963) என்பவர்களின் மொழிபெயர்ப்புகளுடன் வேறு சில ஆங்கில மொழிபெயர்ப்புகளும் ஆய்வு நூல்களும் இந்த இரு தமிழாக்கங்களுக்கும் துணை நூல்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
எழுத்தாளர் உதயணன்தமிழ்நாடு, இலங்கை போன்ற நாடுகளிலும் பார்க்க, நிலவியலிலும் கலாச்சாரச் சூழலிலும் முற்றிலும் மாறுபட்ட இது போன்ற மொழிபெயர்ப்பு வேலைகள் ஏராளமான சிக்கல்களைத் தரக்கூடியன. நவீன தொலைத்தொடர்பு வளர்ச்சிகள் ஏற்படுவதற்கு முன்னர் பனிமழையும் பனிக்கட்டியில் சறுக்குதலும் தமிழ் மக்கள் முற்றிலும் அறியாத சங்கதிகள் என்பதை இங்கு நினைவுகூர்வோம். தென்ஆசியாவில் வளராத செடிகளுக்கும் சிறுபழங்களுக்கும் எப்படிப் பெயர் தருவது? கவிதைநடையில் வெளிவந்த தமிழாக்கத்தில் சுமார் ஐம்பது பக்கங்களை இதற்காகவே ஒதுக்கிப் போதிய விளக்கங்கள் தந்ததை வாசகர்கள் அறிவார்கள் என்று நம்புகிறேன்.
தமிழ் மக்கள் ஆர்வமுள்ள வாசகர்கள் என்பதையும் கலாச்சாரத்தில் ஈடுபாடுடையவர்கள் என்பதையும் நான் அறிவேன்; இவர்கள் கலேவலாப் பாடல்களின் காலத்துக் காவியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, கம்பராமாயணம் போன்ற இலக்கியப் படைப்புகளைக் கொண்டிருப்பதற்காகப் பெருமைப்படுபவர்கள். உலகளாவிய இலக்கியங்களில் ஒன்றான கலேவலாவைச் சிறப்பாகக் கவிதை நடை உரை நடை ஆகிய இரு வடிவங்களில் தந்து தமிழ் மக்களின் கலாச்சாரத்துக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் வளமூட்டிய ஆர். சிவலிங்கம் அவர்களின் சேவையைத் தமிழ்மக்கள் பாராட்டுவார்கள் என்று நம்புகிறேன்; அதேபோல, பின்லாந்திய மக்களாகிய நாங்களும் எங்களுடைய பண்டைய பாரம்பரியச் செல்வம் இந்தத் தமிழாக்கங்கள் மூலம் பூகோளத்தின் மறுபக்கத்தில் இருக்கும் நல்ல இலக்கியப் பிரியர்களை அடையமுடிகிறது என்று மகிழ்ச்சியடைகிறோம். முழுமையான கலேவலா, தமிழ் உட்பட, முப்பத்தைந்து மொழிகளிலும் சுருக்கமான மொழிபெயர்ப்புகள் பதினொரு மொழிகளிலும் வெளிவந்திருக்கின்றன.
ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்தின் ஆசிய ஆபிரிக்க நாடுகளின் கல்வி தொடர்பான நிறுவனம், பின்னிஷ் இலக்கிய மன்றம் (பொதுச் செயலாளர்: உர்போ வெந்தோ (Urpo Vento)], பின்னிஷ் ஓரியண்டல் மன்றம் ஆகியவை இந்தத் தமிழாக்கக் கலேவலாச் செயல் திட்டத்துக்கு உதவின. ‘போர்ப்பாதையில் குல்லர்வோ’ என்ற அக்செலி கல்லேன்-கல்லேல (Akseli Gallen-Kallela) என்பவரின் ஓவியத்தை இந்நூலின் அட்டையில் மறுபிரசுரம் செய்ய அனுமதித்த அதன் பதிப்புரிமையாளர்களுக்கும் இந்நூலைக் கவர்ச்சியாக அச்சிட்டு இலக்கியப் பிரியர்களான தமிழ் மக்களுக்கு எட்டக்கூடிய விலையில் சிறப்பாக வெளியிட்டு அதன் விநியோகப் பொறுப்பையும் ஏற்ற தென்னிந்திய சைவச் சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் உரிமையாளர் முனைவர் முத்துக்குமாரசாமி அவர்களுக்கும் நன்றி கூறுகிறோம்.
கலேவலா தொடர்பாகப் படிக்கக்கூடிய வேறு நூல்கள்:
The Kalevala: An epic poem after oral tradition by Elias Lonnrot. Translated from the Finnish with an introduction and notes by Keith Bosley, and a foreword by Albert B.Lord (The World’s Classics). Oxford & New York: Oxford University Press. 1989. Lvi+679 pp.
Religion, myth and folklore in the world’s epics: The Kalevala and its predecessors (Religion and Society 30). Lauri Honko (ed.). Berlin & New York: Mouton de Gruyter. 1990, xii+587 pp.
Finnish folk poetry: Epic, Matti Kuusi, Keith Bosley and Michael Branch (ed. and transl.). Helsinki: Finnish Literature Society. 1977. 607 pp. 46 photographs.
Finnic religions (pp.323-330), Anna-Leena Siikala.. in : Mircea Eliade (ed. in chief). Encyclopedia of Religion – Vol. 5. New York and London: Macmillan. 1987.
The Great Bear. Lauri Honko. Helsinki: The Finnish Literature Society. 1993.
அஸ்கோ பார்பொலா,
Institute for Asian and African Studies, University of Helsinki, Finland.
29.1.1999.
(உதயணன் மொழிபெயர்த்த பார்பொலாவின் உரைநடைக் கலேவலாவின் முன்னுரையைச் திருத்திச் செம்மைப்படுத்தியவர் கால.சுப்ரமணியம்)
-
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் கொரோனோவால் மரணமடைந்தவர்களின் சடலங்களை குளிரூட்டியில் வைத்து பேண முடியாத நிலை
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் கொரோனோவால் மரணமடைந்தவர்களின் சடலங்களை குளிரூட்டியில் வைத்து பேண முடியாத நிலையில் சடலங்கள் தேங்கி காணப்படுவதால் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக வைத்தியசாலை பதில் பணிப்பாளர் வே.கமலநாதன் தெரிவித்துள்ளார்.எமது வைத்திய சாலையில் கடந்த மே மாதம் 17ஆம் திகதி கொரோனோ நோயாளர் விடுதி ஆரம்பிக்கப்பட்ட பின்னர் 556 பேர் கொரோனோ தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களில் 21 பேர் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
பிரேத அறையில் 6 சடலங்களையே குளிரூட்டியில் வைத்து பாதுகாக்க கூடிய வசதிகள் உள்ள நிலையில் இன்றைய நிலவரப்படி 11 சடலங்கள் காணப்படுகின்றன. எதிர்வரும் நாட்களில் மரணங்கள் ஏற்பட்டால் சடலங்களை பாதுகாப்பதில் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.யாழில் ஒரு மின் தகன மயானம் உள்ளது. அதிலையே யாழ். மாவட்டத்தில் கொரோனோ தொற்றுக்கு உள்ளாகி உயிரிழப்பவர்களின் சடலங்கள் எரியூட்டப்பட்டு வருவதனாலையே சடலங்களை எரியூட்டுவதில் தாமதங்கள் ஏற்படுகின்றன. தாமதங்களை கருத்தில் கொண்டு வெளி மாகாணத்தில் உள்ள மின் தகன மயானங்களுக்கு சடலங்களை கொண்டு சென்று எரியூட்டுவதற்கு உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை.
20 பேர் வெளிநோயாளர் பிரிவில் உயிரிழந்துள்ளனர். கொரோனோ தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்களை மின் தகனம் செய்வதற்கு உள்ள நெருக்கடி நிலைமைகள் காரணமாக வைத்தியசாலை பிரேத அறையில் சடலங்கள் தேங்கி காணப்பட்டுகின்றன.பிரேத அறையில் 6 சடலங்களையே குளிரூட்டியில் வைத்து பாதுகாக்க கூடிய வசதிகள் உள்ள நிலையில் இன்றைய நிலவரப்படி 11 சடலங்கள் காணப்படுகின்றன. எதிர்வரும் நாட்களில் மரணங்கள் ஏற்பட்டால் சடலங்களை பாதுகாப்பதில் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.
இதேவேளை தியாகி அறக்கொடை நிறுவன ஸ்தாபகர் , வெளிமாகாணங்களில் சடலங்களை அடக்கம் செய்வதற்கு உறவினர்கள் சம்மதம் தெரிவித்தால் , அதற்கான போக்குவரத்து செலவுகள் உள்ளிட்டவற்றை தாம் பொறுப்பேற்பதாக முன் வந்துள்ளார். அதேவேளை , உயிரிழந்தவர் வறுமை கோட்டிற்கு உட்பட்டவர் எனில் மின் தகன செலவு உள்ளடங்கலாக அனைத்து செலவுகளையும் தாம் பொறுப்பேற்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அவற்றை நாம் நோயாளர் நலம்புரி சங்கத்தின் ஊடாக முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அதேவேளை வீட்டில் உயிரிழந்தவர்களுக்கு கொரோனோ தொற்று உறுதியானால் உறவினர்கள் வைத்தியசாலைக்கு அறிவித்தால் , அது தொடர்பிலான நடவடிக்கைகளையும் வைத்தியசாலை பொறுப்பெடுக்கும்.
அவர்கள் வசதி குறைந்தவர்கள் எனில் நோயாளர் நலன்புரி சங்கத்தின் ஊடாக , தியாகி அறக்கொடையை தொடர்பு கொள்ள முடியும் அவர்கள் அனைத்து செலவீனங்களை பொறுப்பேற்றுக்கொள்வார்கள். எனவே மக்கள் தமக்கு சளி , தடிமன் , காய்ச்சல் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் பயமின்றி வைத்திய சாலைக்கு சிகிச்சைக்கு வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்.அத்துடன் வைத்திய தேவைகள் உள்ளிட்ட தேவைகளுக்கு வைத்தியசாலையின் பொது தொலைபேசி இலக்கங்களான 0212263261 மற்றும் 0212263262 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ள முடியும் என தெரிவித்தார்.(15)
-
கரும்புலி லெப். கேணல் வினோதன் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!
கரும்புலி லெப். கேணல் வினோதன், கரும்புலி லெப். கேணல் மதியழகி, கரும்புலி மேஜர் நிலாகரன், கரும்புலி மேஜர் ஆனந்தி, கரும்புலி கப்டன் எழிலகன், கரும்புலி கப்டன் கனிமதி, கரும்புலி கப்டன் நிமலன், கரும்புலி கப்டன் அறிவுத்தமிழ், கரும்புலி கப்டன் அகிலன், கரும்புலி கப்டன் முத்துநகை ஆகிய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள வன்னி கூட்டுப்படைத் தலைமையகம் மீதும், அங்கு பொருத்தப்பட்டிருந்த வானூர்தி கண்காணிப்பு கருவி (விமான ராடர்) மீதும் 09.09.2008 அன்று மேற்கொள்ளப்பட்ட விடுதலைப் புலிகளின் மும்முனை (கரும்புலித்) தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக்கொண்டகரும்புலி லெப். கேணல் வினோதன், கரும்புலி லெப். கேணல் மதியழகி, கரும்புலி மேஜர் நிலாகரன், கரும்புலி மேஜர் ஆனந்தி, கரும்புலி கப்டன் எழிலகன், கரும்புலி கப்டன் கனிமதி, கரும்புலி கப்டன் நிமலன், கரும்புலி கப்டன் அறிவுத்தமிழ், கரும்புலி கப்டன் அகிலன், கரும்புலி கப்டன் முத்துநகை ஆகிய கரும்புலி மாவீரர்களின் 13 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
வான் புலிகள் மற்றும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணி ஆகியவற்றின் துணையுடன் 09.09.2008 அன்று இப்பத்து கரும்புலி வீரர்களும் வவுனியாவில் அமைந்துள்ள வன்னி கூட்டுப்படைத் தலைமையகத்திற்குள் ஊடுருவி சிறிலங்கா படையினருக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இத் தாக்குதலில் சிறப்பாக செயற்பட்ட படையணிப் தளபதிகளும், பொறுப்பாளரும், போராளிகளும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் பாராட்டுப் பெற்று பல விருதுகள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
“தேசப்புயல்களின் நினைவில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள்”
“வெற்றிக்கு வித்திட்டு தாய்மண்ணின் விடியலின் கனவுடன் புயலாக வீசிய தேசத்தின் புயல்கள்”
https://www.thaarakam.com/news/c29a5345-f250-40f8-a456-beea4b7acfe6
-
18 முதல் 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு சினோபோர்ம் கொரோனா தடுப்பூசியை வழங்க இலங்கை மருத்துவ சங்கம் பரிந்துரை
18 முதல் 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு சினோபோர்ம் கொரோனா தடுப்பூசியை வழங்க இலங்கை மருத்துவ சங்கம் பரிந்துரைத்துள்ளது.தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 30 முதல் 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பைசர், மொடர்னா, அல்லது அஸ்ட்ராசெனெகா கொரோனா தடுப்பூசிகளை 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 3 வது மருந்தாக வழங்க பரிந்துரைத்தது.இதேவேளை மத்திய கிழக்கில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் சினோபோர்ம் தடுப்பூசி 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு குறைவான செயற்திறன் அளிப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் கூறியுள்ளது.
இந்நிலையில் 18 முதல் 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு எந்த தீவிர நோய்களாலும் பாதிக்கப்படாதவர்களுக்கு செலுத்த சினோபோர்ம் தடுப்பூசியை பயன்படுத்தப்படலாம் என்றும் இந்த வயது பிரிவில் இருப்பவர்களுக்கு தீவிர நோய்கள் இருந்தால், அவர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு பைசர், மொடர்னா அல்லது அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி பரிந்துரைக்கப்படும் என அச்சங்கத்தின் தலைவர் வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்தார் (15)
http://www.samakalam.com/18-முதல்-60-வயதிற்குட்பட்டவர/
-
தேசியத் தலைவரின் கைக்கு இறுக்கமாக வலுவூட்டிய குடும்பத்தில் பிறந்த கப்டன்அக்கினோ...
போராட்டம். ....
இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று வாழ்ந்த நாம் 'விடுதலை இயக்கம்' என்ற விரிந்த பரப்புக்குள் வந்ததால் , எத்தனை விதமான உள்ளங்களை , சந்தோசங்களை, பிரிவுத்துயரங்களை வாழ்வின்உண்மைகளைக் கண்டுகொண்டிருக்கிறோம்.
எமது போராட்ட வாழ்வில் உன்னதமான உள்ளங்களோடு பழகும்போது சந்தோசப்படும் நாங்கள், பிரிவு என்று வருகின்ற போது அதிகமாகத்தாக்கப்படுவதென்னவோ உண்மைதான். கப்டன் அக்கினோவின் உள்ளம் கூட அந்த உன்னதமான உள்ளங்களில் ஒன்றுதான்.
மிகவும் வசதியான குடும்பம். வாழ்வில் பொருளாதாரக் கஸ்டங்களையோ , துன்பங்களையோ கண்டிராத செல்வந்தமானகுடும் பச்சூழலின் கடைசிப்பிள்ளை தான் அக்கினோ.
"நாங்கள் செல்லமாக வளந்தனாங்கள், போராட்ட கஸ்டங்களை எங்களால் தாங்க ஏலாது" என்று சொல்கின்றவர்களுக்கு அக்கினோ வாழ்ந்து காட்டி இருக்கின்றாள். விடுதலை உணர்வுக்கு முன்னால் வேறெந்தப்புறஉலக உணர்வுகளும் தாக்குப்பிடிக்க முடியாது என நிரூபித்திருக்கின்றாள். ஏனென்றால் ?
அக்கினோவும் ஒரு செல்லப்பிள்ளைதான். பாடசாலை நாட்களில் அக்கினோவைக் கண்டவர்கள், பழகியவர்கள் அக்கினோவைப் பற்றிக்கூறும் தகவல்கள். "இவள் எப்படி இந்த வாழ்வை ஏற்றுக்கொண்டாள்?" என ஆச்சரியப்படவைக்கும்.
அக்கினோவின் எடுப்பான தோற்றம் அவளைப் பற்றியபார்வையில் ஒரு தவறான கணிப்பைக் கொடுத்திருக்கலாம். ஏன்? நாம் கூட. "இவள் எப்படி எல்லாப் போராளிகளோடும் ஏற்றத் தாழ்வின்றிப் பழகப் போகிறாள்?" என நினைத்ததுண்டு. ஆனால் பழகிய போது புரிந்தது. அவள் இதயத்தில் ஏற்றத் தாழ்வுக்கு இடமில்லை என்று .
அக்கினோவின் அப்பா தமிழீழத்தின் நேதாஜி மாமனிதர். (நன்றி வேர்கள் இணையம்)தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் எங்கள் தலைவனின் கைக்குஇறுக்கமாகவலுவூட்டியவர்.
உண்மைதான் இப்படி ஒரு தந்தைக்குப் பிறந்த குழந்தைகள் எப்படி எங்கள் மண்ணை நேசிக்காமல் இருக்கமுடியும்? அக்கினோவின் அப்பா மட்டுமல்ல அவளது அக்கா கூட எங்கள் அமைப்பில்தான் இருக்கின்றாள்.அப்பாவின் தலைமறைவு வாழ்க்கைக்காலத்திலும், அப்பாவின்நிரந்தரமறைவின் பின்னான வாழ்க்கைக் காலத்திலும், அந்தத் துன்ப நிகழ்வுகளின் தாக்கம் அம்மாவை அதிகம் தாக்காது இருப்பதற்காக தனது கலகலப்பையே தாயின் கவசமாக்கினாள் அக்கினோ.
இன்று எல்லாத் துயரங்களைமே அம்மா தனியாகச் சுமந்துகொண் டிருக்கிறாள் . அக்கினோ எம்மோடு இருந்த போது ஒருநாள்.
'அப்பாவின்ரை படத்துக்கு இட துபக்கம் என்ரை படமும் வலது பக்கம் அக்காவின்றை படமும் வைக்க இடம் விடுங்கோ அம்மா' என்று தாயிடம் சொன்னதாகச் சொன்னாள்.
எங்களுடைய ஒவ்வொரு போராளிகளும் ஒன்றை ஆழமாக உணர்ந்திருக்கிறார்கள்.என்றோ ஒருநாள் அது இன்றோ.......
நாளையோ .......
அல்லது இன்னும் சில காலங்களில் பின்னோ. இந்த மண்ணிற்கான மரணத்தை நாம் சந்திப்போம் என்ற உண்மை தான் அது. அதனால் தான் என்னவோ , சண்டைக்கு போக வேண்டும் என்று எல்லோரும் சண்டை பிடித்துக்கொள்கிறார்கள்.
அப்படித்தான் அக்கினோவும்.
சண்டை என்றதும் அவள் சந்தோசப்படுகின்ற கணங்களைத் தான் பார்த்திருக்கின்றோம்.
விடுதலைபுலிகள் எல்லோருமே கூறுகின்ற, 'நல்லா அடிபட வேணும். நிறைய அயுதங்கள் எடுக்கவேணும் அதுக்குப்பிறகுதான் சாகவேணும் என்பதைத் தான் அக்கினோவும் சொல்லிக் கொண்டிருப்பாள்.
கட்டுவன்சந்தி இராணுவ மினி முகாம் முன்னால் இவள் காவல்நின்ற காலம்......
இவள் தான் குழுவின் இரண்டாவது பொறுப்பாளர் பலாலி இராணுவத்தினர் அடிக்கடி வெளியேற முற்படும் முக்கிய பாதைகளில் கட்டுவன் சந்தியும் ஒன்று. இந்தமினிமுகாமிற்கு முன்னால் காவல்நிற் கும் எங்கள் குழுவில் அடிக்கடி உறுப்பினர்களை மாற்றவேண்டிவரும். ஏனென்றால் அடிக்கடி தாக்குதல் நடக்கும்போதோ, அல்லது வெளியேறும்போதோ எம்மில் பல போராளிகள் வீழ்ந்திருப்பார்கள். அல்லது காயப்பட் டிருப்பார்கள்.
அக்கினோ வருவதற்கு ஐந்து நாட்கள் முதல்தான் கட்டுவன் நிலையிலிருந்து வெளியேற முற்பட்ட இராணுவத்தினருடன் மோதியதில் சுந்தரியுடன் எட்டுப் போராளிகள் வீரமரணமடைந்தனர். அக்கினோ சென்ற நான்கு நாட்களுக்குள் திரும்பவும் அந்த இடத்தில் இராணுவம் வெளியேறியது. கப்டன் சுந்தரி வீரச்சாவடைந்த தாக்குதலில் ஏற்பட்ட எமது தரப்பு இழப்பு அவளை உற்சாகப்படுத் தியிருந்தது போலும், அனால் அன்றைய சண்டை முடிவோவேறு மாதிரி இருந்தது. அன்று எதிரிகளை பின்வாங்கச் செய்ததில் அக்கினோவின் துப்பாக்கிக்கு அதிகபங்குண்டு.
அக்கினோவுக்கு கணிசமான ஆங்கில அறிவுண்டு. அத்தோடு எந்தத்துறையிலும் விடயங்களை கிரகிக்கும் ஆற்றலுண்டு. தான் பெற்றிருக்கும் அறிவினை சக போராளிக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற துடிப்பு அவளுக்கு நிறையவே இருந்தது. அதனால்தான் பயிற்சி முகாமில் கூட கடும் பயிற்சிகளுக்கு நடுவேயும் அவள் இரவில் அவர்களுக்காக ஒரு மணிநேரம் ஒதுக்கி வைத்திருந் தாள்.
வவுனியாவில் இராணுவம் வெளியே வந்த காலத்தில் காட்டின் ஒரு பக்கத்தில் இவளின் குழுவும் நின்றது. திசைகாட்டியை (கொம்பாஸ்) எவ்வாறு படிக்க வேண்டும், என்று எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டும். எந்த நேரமும்வந்து விழுந்து வெடித்துக் கொண்டிருக்கும் செல்களுக்கும் நடுவே ஒரு இடத்தைக் குறிவைத்து திசைகாட்டி மூலம் அந்த இடத்துக்குப் போய் வந்து, பின்னர் தனது குழுவினருக்கும் அவ்வாறே காட்டிக் கொடுத்து, போய்வரப் பழக்கினாள்.
காட்டிலே போர் நடக்கும் போது காடுமாற நேரிட்டால் அதுவே போராளிகளின் இழப்புக்கு மிகப் பெரிய காரணமாகிவிடும். போராளிகளின் இழப்பு ஒரு புறமும், இராணுவ முன்னேற்றம் மறுபுறமுமாகப்பாதகமான தாக்கங்களுக்கு, தான்காரணமாயிருக்கக் கூடாது என்பதில் அவள் உறுதியாக இருந்தாள்.வவுனியாவில் இருந்து வந்தவுடன் ஆனையிறவுச்சண்டை ஆரம்பித்துவிட்டது. வெட்ட வெளிகளில் இராணுவத்தினரை இறக்க விடாது காவல் செய்யும்பகுதியில் அவள்கடமையிலீடுபட்டிருந்தாள்.
அடுத்தடுத்துச் சண்டைகள். ஓய்வெடுக்க எமது போராளிக ளுக்கு நேரமில்லை . குண்டுச்சத்தங்களுக்கும் குருதிவெள்ளத்துக்கும் நடுவே எங்கே நாங்கள் ஓய்வைத் தேடுவது?
எப்படி ஓய் வெடுப்பது?
முப்படைத் தாக்குதலுக்கும் முகம் கொடுத்தபடி முன்னேற வேண்டியவர்களாயிற்றே நாங்கள். களைப்பும் அலுப்பும் இருக்கத்தான் செய்யும். ஆனால் அவையே எங்களைக் கட்டுப்படுத்திவிட முடியுமா?
நித்திரை என்பது எங்களை விட்டு நிரந்தரமாகவே வெளியேறிவிட்டால் என்ன வென்று எண்ணுபவர்கள் நாங்கள். கண்ணுக்குள் நித்திரைசுழன்று
கொண்டிருக்கும். அரைக் கண்ணில் ஆடி ஆடித் தான் நடந்தாலும் கண் மூடிவிடமுடியுமா? கண்முடக் கண் மூட எம் தேசம் காணாமல் போய் விடுமல்லவா?
அதனால் தான்.....
ஓய்வு இல்லாத தேசத்தின் எந்த எல்லையில் சண்டை நடந்தாலும் அங்கு எட்டி நடந்து கொண்டிருக்கின்றோம்.
ஆனையிறவுச்சண்டையின் வேகம் குறைய மணலாற்றில் சண்டை ஆரம்பித்துவிட்டது. அக்கினோவின் குழுவும் மணலாற்றிற்கு விரைகிறது. மணலாறு எங்கள் தேசத்தின் மையப்புள்ளி. மணலாற்றுக்காடு தான் எங்கள் தாய்வீடு. பிராந்துகளிடமிருந்து செட்டைக்குள்ளாய் எமை வளர்த்த தாய்க் கோழி. பிராந்திய வல்லரசு ஒன்றை எமது பிரதேசத்திலிருந்து பின்வாங்கச் செய்யுமளவிற்கு அவர்களுக்கு இழப்பைஏற்படுத்திய இடம். அங்குலம் அங்குலமாக அந்நிய இராணுவம் கால் பதித்து தேடியபோதும் தமிழீழத் தின் தலைவரை தக்க வைத்துக் காத்த பெருமை மணலாற்றிற்கு மட்டும் தான் உண்டு. குண்டு களைத்தாங்கித் தாங்கியே மணலாற்றுக்காடு வலிமை பெற்றுவிட்டது. உரிமைப்போர் அல்லவா.
உக்கிரமான சண்டைதான். காடு பற்றி எரிகின்றது. எங்கும் ஒரே புகை மண்டலம் தான். மண லாறு மண் அதிர்ந்து கொண்டே இருக்கின்றது. முதல் நாள் சண்டையின் போது அக்கினோ நின்ற பக்கமாக இராணுவம் முன்னேறியது. அங்குல நிலம் கூட எதிரியை அசையவிடாத சண்டை. அக்கினோவின் குழுவில் இரண்டு போராளிகள் விழுந்து விட்டார்கள். ஒரு உடல் கைப்பற்றக் கூடியதாக இருந்தது. ஆனால் அடுத்த து......
எங்களுக்கும் அவர்களுக்குமிடையில் ......
அவர்களுக்கு மிக நெருக்கமாக.....
வீழ்ந்த போராளிகளின் உடல்களை மீட்பதற்காகவே புதிய போராளிகள் விழுகின்றவரலாறுதானே எம்வரலாறு. போர்நிலமை உடனுக்குடன் பொறுப்பாளருக்கு அறிவிக்கப்படவேண் டும். அக்கினோ அறிவிக்கின்றாள்."உடலை எடுப்பது கஸ்டம் தான் அக்கா. ஆனால் எப்படியும் நான் எடுப்பேன்"தலைநிமிர்த்த முடியாதளவுக்கு தரையோடு தரையாக வரும் துப்பாக்கி சூடுகளுக்கு அடியில் ஊர்ந்து முன்னேறினாள். எப்படியோ உடலை எடுத்துவிடுகிறாள். அந்த இடத்தில் அனைவருக்கும் ஒரு உறுதி பிறக்கிறது. கடைசிவரைக்கும் இச்சண்டை யில் எந்த உடலும் எம்மால் கைவிடப்படக் கூடாது என்பதில் எல்லோரும் முனைப்பாக இருந்தோம்.
ஒத்துழைக்க மறுத்தகாட்டுச் சூழலாலும், நித்திரையோ குளிப்போ இல்லாத கடமையின் இறுக்கத்தாலும் அநேகமான போராளிகளுக்கு காய்ச்சல் வந்துவிடுகின்றது. அக்கினோவுக் கும்காய்ச்சல் தான்.காய்ச்சலுடன்தான் மணலாற்றுப்பகுதியில் மகளிர் பிரிவுக்கான மருந்து, உணவு, ரவை விநியோகங்களைப் பொறுப்பெடுத்துச் செய்து கொண்டிருந்தாள்.
இராணுவத்தினர் ஒரு பக்கமாக முன்னேற முயற்சிக்க, அக்கினோ அந்த இடத்துக்கு விரைந்து, போராளிகளுக்கு நிலைமையை விளங்கிக் கொண் டிருக்கும்போது, அவளது அடுத்த குழு நின்ற பக்கமாக விமானம் பதிந்து எழுந்தது. நிலைமையை நேரில் பார்ப்பதற்காகஅக்கினோ அந்த இடத்திற்கு ஓடினாள்.
உருக்கும்போது விளங்கிகளுக்குஇன்னொரு தடவை அந்த விமானம் பதிந்து எழுந்தது.
அக்கினோவின் தசைத்துணுக்குகளும், குருதித்துளிகளும் மணலாற்று மரங்களில் தெறித்தன. அக்கினோபோன்ற நூற்றுக்கணக்கானோரின் இறுதிக் கணங்களை அறிந்து கொண்ட அந்த மணலாற்றுக்காடு இன்று மீட்கப்பட்டுவிட்டது. இந்தியப் போரின் பின் இது இரண்டாவது சண்டை, முன்னையை விட இப்போது உறுதியாய் நிற்கும். மணலாற்றுக் காடு இனி வரும் காலங்களில் இன்னும் உறுதியாய் எழுந்து நிற்கும். ஏனென்றால் அதற்குத் தெரியும் தன்னுள் உறங்கும் எங்கள் நண்பர்களைப்பற்றி.
|வெளியீடு -களத்தில்
|நன்றி வேர்கள் இணையம்
https://www.thaarakam.com/news/827bdd36-a986-4d5c-bd67-558c0c87063b
-
சில மதத்தலைவர்களின் போதனைகள் காரணமாக தடுப்பூசிக்கு எதிரான உணர்வுகள் உருவாகியுள்ளன – மருத்துவ நிபுணர்கள் கவலை
—–
தடுப்பூசிக்கு எதிரான அமைப்புகள்நாட்டில் உருவாவது குறித்து அச்சம்;
—–
தடுப்பூசிகள் கருவுறுதல் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என சில பகுதிகளில் மதத்தலைவர்கள் போதிக்கின்றனர்
——————பொதுமக்கள் ஒரு குறிப்பிட்ட தடுப்பூசியை மாத்திரம் செலுத்திக்கொள்ளும் நோக்கத்த்தை தவிர்த்துவிட்டு கிடைக்கின்ற எந்த தடுப்பூசியையும் தவிர்த்துக்கொள்ளவேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணங்களிற்காக தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாமல் இருக்கும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களை தவிர ஏனைய 60 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவேண்டும் எனவும் வேண்டுகோள் வெளியாகியுள்ளது.
இன்னமும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாத 30 மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களை தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு முன்வருமாறு சுகாதார அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.தடுப்பூசிக்கு எதிரான அமைப்புகள்நாட்டில் உருவாவது குறித்த அச்சத்தின் மத்தியிலேயே சுகாதார அதிகாரிகள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
சில மதத்தலைவர்களின் போதனைகள் புராதன எண்ணங்கள் தவறான எண்ணங்கள் காரணமாக தடுப்பூசிக்கு எதிரான உணர்வுகள் தோற்றம் பெற்றுள்ளன.
தடுப்பூசிகள் கருவுறுதல் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என சில பகுதிகளில் மதத்தலைவர்கள் போதிக்கின்றனர்,மருத்துவநிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தடுப்பூசிகள் பாதிப்புகளை ஏற்படுத்தும் என சிலர் உறுதியாக நம்புகின்றனர்.
இதன் காரணமாக 30வயதிற்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இன்னமும் தடுப்பூசியை செலுத்திக்கொள்வில்லை,டெல்டாவின் புதிய மாறுபாடுகள் குறித்த எச்சரிக்கை வெளியாகியுள்ள சூழலிலும், மேல்மாகணத்திற்கு வெளியே டெல்டா பரவும் நிலையிலும் சுகாதார தரப்பினர் மத்தியில் இது குறித்து கரிசனை உருவாகியுள்ளது.
60வயதிற்கு மேற்பட்டவர்களில் இன்னமும் 225000 பேர் இன்னமும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவில்லை என சுகாதார பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட வயதினை சேர்ந்த அனைவரும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள மருத்துவர்கள் மதத்தலைவர்கள் சிலர் போதிக்கும் பிழையான விடயங்களை நம்பவேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தடுப்பூசி மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் ஆண்மைக்குறைவை ஏற்படுத்தும்,தவறான கருத்துக்களின் பிடியிலிருந்து விடுபடுவது கடினம் எனினும் இதில் உண்மையில்லை,பொதுமக்கள் இந்த தவறான தகவல்களிற்கு பலியாகாமல் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளவேண்டும் என மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
https://thinakkural.lk/article/135575
-
வீடுகளில் இருக்கும் நோயாளர்கள் கட்டாயம் வைத்தியரின் ஆலோசனையைப் பெற வேண்டும் -யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர்
நாட்டில் வேறு இடங்களில் உள்ள சடலங்களை எரியூட்டும் நிலையங்களுடனும் தொடர்பிலேயே உள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ். போதனா வைத்தியசாலையில் நான்கு விடுதிகளில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான 123 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. கொரோனா நோயாளிகள் உரியநேரங்களில் வைத்தியசாலைக்கு வருவதில்லை என்பது பெரும் குறைபாடாக இருக்கின்றது. குறிப்பாக தொற்று ஏற்பட்டு மூன்று, நான்கு நாட்களுக்குப் பின்னர் நியூமோனியா காய்ச்சல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
தங்களைத் தாங்களே பார்த்துக்கொண்டாலும் சில நாட்களின் பின்னர் நோய் நிலை அதிகரித்து உடல் செயலிழப்பு ஏற்படும். இவ்வாறு சில நாட்கள் பிந்தி வருகின்றமையால், சில சமயங்களில் அவர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும். அதிகளவான காய்ச்சலுடன் ஏனைய வருத்தங்கள் இருக்கின்போது கட்டாயம் வைத்திய ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். சிலர் வீடுகளில் இருந்து தங்களைத் தாங்களே சிகிச்சை அளித்துக்கொண்டு இருப்பினும் அனைவருமே வைத்தியரின் ஆலோசனை பெற்றுக்கொள்வது மிகச் சிறந்தது என தெரிவித்தார்.
20 சடலங்களை பாதுகாப்பதற்கான குளிரூட்டி வசதிகள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் காணப்படுகின்றன. இந்த நிலையில் 15 சடலங்கள் தற்போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. வைத்தியசாலையில் மேலதிகமாக சடலங்களை வைத்திருக்காமல் எரியூட்டும் நிலையங்களுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். இரண்டு சடலங்களை அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள எரியூட்டல் நிலையங்களுக்கு அனுப்பி இருக்கிறோம்.
இதுதவிர யாழ். மாவட்டத்தில் உள்ள எரியூட்டும் நிலையத்திலும் சடலங்களை எரியூட்ட கிரமமான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறோம். தற்போது நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. முன்னாயத்த நடவடிக்கைக்காக நாட்டிலுள்ள வேறு இடங்களில் உள்ள எரியூட்டல் நிலையங்களுடனும் தொடர்பில் இருக்கிறோம். மரணமடைந்தவரின் உறவினர்கள் சிலரை எரியூட்டும் பகுதிக்கு அனுப்புவதுடன் உரிய முறையில் உடல் தகனம் செய்யப்பட்டு சாம்பலை கையளிக்கும் விடயத்தில் நாங்கள் சரியான முறையில் செயற்படுவோம் என தெரிவித்தார்.(15)
http://www.samakalam.com/வீடுகளில்-இருக்கும்-நோயா/
-
-
பொதுமக்கள் அனைவரும் இரண்டு முகக்கவசங்களை அணிய வேண்டும் – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே
பொதுமக்கள் அனைவரும் இரண்டு முகக்கவசங்களை அணிய வேண்டும் என இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே கேட்டுக்கொண்டுள்ளார்.கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், வீடுகளை விட்டு வெளியேறும்போது முக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும் வெளிநாடுகளுக்கு செல்வதற்காக தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாமல் சிலர் காத்திருப்பதாகவும் முதலில் நாம் வாழ வேண்டும், பின்னர் வெளிநாடுகளுக்கு செல்வது குறித்து சிந்திக்கலாம் என மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை தேர்வு செய்தி தடுப்பூசி செலுத்துவதற்கு செல்லாமல் அருகில் உள்ள தடுப்பூசி நிலையங்களுக்கு சென்று தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறும் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே கேட்டுக்கொண்டார்.(15)
-
யாழ்ப்பாணம் கைதடி முதியோர் இல்லத்தில் 41 முதியவர்களுக்கு கொரோனா தொற்று
யாழ்ப்பாணம் கைதடி அரச முதியோர் இல்லத்தில் பராமரிக்கப்படும் 48 முதியவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.அவர்களில் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரையும் வட்டுக்கோட்டை மற்றும் கோப்பாய் இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்ப பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் 98 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் அவர்களில் 28 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.இவ்வாறு இன்று அடையாளம் காணப்பட்ட 28 பேரையும் அவர்களது உடல் நிலையைக் கணித்து ஒரு பகுதியினர் வீடுகளில் பராமரிக்கவும் மற்றொரு பகுதியினர் கொரோனா இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்களில் கண்காணிக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.இந்நிலையில் யாழ்ப்பாணம் – சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் நேற்று செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
http://www.samakalam.com/யாழ்ப்பாணம்-கைதடி-முதியோ/
-
9 minutes ago, தமிழ் சிறி said:
அட... கண்டி பெரஹராவில், வாங்கி வந்த கொரோனா.
பெரஹரா நடத்தி கொரோனாவைப் பரப்பிவிட்டு இப்போது வேடர்களையும் அல்லாட வைத்துள்ளனர்.
-
தம்பானே பழங்குடியினர் 44 பேருக்கு கொரோனா தொற்று
தம்பானே பழங்குடிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியலத்தோவின் மனைவி உட்பட குடும்ப உறுப்பினர்கள் 44 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிய வருகிறது.
அவர்கள் சிலர் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தம்பானே பழங்குடித் தலைவர் ஊருவரிகே வன்னியலத்தோவின் மனைவி மஹியங்கனை வைத்தியசாலையிலுள்ள கொவிட் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொதுச் சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, பண்டைய கிராமமான தம்பானே மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 115 பேருக்கு நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் போது 44 பேருக்கு கொவிட் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களில் 44 பேருக்கு கொவிட் இருப்பது கண்டறியப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
அண்மையில் கண்டியில் நிறைவடைந்த தலதா எசலபெறஹராவின் போது தேன் பூஜைக்காக தம்பானே பழங்குடிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியலத்தோவன் குழுவினர் சென்றிருந்தனர். அத்துடன் அவர்களுக்கு ஏற்கவே பெரஹரா கலைஞர்களுக்கு வழங்கிய தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-
-
இலங்கையில் ‘சுப்பர் டெல்டா’ பரவுகிறதா?: ஆய்வு நடத்தப்படுகின்றது என்கிறார் சந்திம ஜீவந்திர
இலங்கையில் புதிய கொவிட் திரிபுகளுடனா ‘சுப்பர் டெல்டா’ உருவாகின்றதா? என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளதாக ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீடத்தின் ஒவ்வாமை, எதிர்ப்புச் சக்தி மற்றும் மரபணு ஆய்வுப் பிரிவின் பிரதானியான கலாநிதி சந்திம ஜீவந்திர தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தமது ஆய்வுகளின் பிரகாரம் டெல்டா தொற்று பரவுகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன்படி கொழும்பில் நூறுவீதம் டெல்டா திரிபின் பரவலே காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் வெளி மாகாணங்களிலும் இந்தத் திரிபில் பரவல் இருக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.
எனினும் தற்போது இங்கு சுப்பர் டெல்டா உருவாகி வருகின்றதா என்ற சந்தேகங்கள் எழுவதாகவும், இது குறித்த ஆய்வு அறிக்கையை இன்னும் ஒருவாரத்தில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
-(3)
-
மட்டக்களப்பில் டெல்டா, அல்பா வைரஸ்கள் அடையாளம் : ஒரேநாளில் கொரோனாவுக்கு 10 பேர் பலி - பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
மட்டக்களப்பில் டெல்டா மற்றும் அல்பா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனாவினால் 10 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து 211 ஆக உயிரிழப்பு அதிகரித்துள்ளதுடன் 274 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா. மயூரன் தெரிவித்தார்.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா. மயூரன் இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேரும், களுவாஞ்சிக்குடி, ஏறாவூர், செங்கலடி, வெல்லாவெளி, வாழைச்சேனை, வவுணதீவு, ஆரையம்பதி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் தலா ஒருவர் வீதம் 7 பேர் உட்பட 10 பேர் கடந்த 24 மணித்தியாலயத்தில் உயிரிழந்துள்ளதையடுத்து மாவட்டத்தில் 211 பேராக அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் இருந்து எழுமாறாக எடுக்கப்பட்ட 3 பேரின் பிசிஆர் பரிசோதனையின் மாதிரிகள் கொழும்பு ஜெயவர்தன பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதனையடுத்து இதில் இருவருக்கு டெல்டா வைரசும். ஒருவருக்கு அல்பா வைரசும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மாவட்டத்தில் டெல்டா வைரஸ் தொற்று பரவியிருக்கின்றதுடன் ஒருவாரத்தில் 1982 கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் நாளாந்தம் 300 தொற்றாளர்கள் கண்டறியப்படுவதுடன் 5 க்கு மேற்பட்டோர் மரணமடைந்து வருகின்றனர்.
ஆகவே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் அப்போது தான் தொற்றை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
https://www.virakesari.lk/article/112169
-
மரண தண்டனைக்கு எதிரான இறுதி உயிராக இருக்கட்டும் -தோழர் செங்கொடி.!
வீரமங்கை தோழர் செங்கொடியின் நினைவு வணக்கநாள் இன்றாகும்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் சாவு ஒறுப்பை நிறைவேற்ற இந்திய அரசு முயன்ற வேளை அம்மூவரின் உயிர் காக்க (மரண தண்டனைக்கு எதிராக) 28.08.2011 அன்று தமிழகத்தில் காஞ்சிபுரம் தாலுகா பணிமனையின் முன்பு தன்னுடலில் தீமூட்டி ஈகைச் சாவைத் தழுவிக்கொண்ட “வீரத்தமிழிச்சி” தோழர் செங்கொடி ஆகிய வீரமங்கையின் 10ம் ஆண்டு நினைவு வணக்கநாள் இன்றாகும்.
தூக்குத் தண்டனையை இரத்துசெய்யக் கோரி வட்டாட்சியர் அலுவலகம் முன் (28.08.2011) ஞாயிற்றுக்கிழமை மாலை தீக்குளித்துத் தன் உயிரை ஆகுதியாக்கிய காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சேர்ந்த செங்கொடிஅவர்களுக்கு ஈகவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றோம். பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கை ரத்து செய்யக்கோரி காஞ்சீயில் இளம்பெண் தீக்குளித்து இறந்தார். காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சேர்ந்தவர் செங்கொடி இவர் மக்கள் மன்றம் இயக்கத்தில் உள்ளார். காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கை எதிர்த்து முழக்கமிட்டபடி தீக்குளித்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செங்கொடி உயிரிழந்தார். இந்நிலையில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் உயிரை காப்பாற்ற அரசுக்கு உருக்கமான கடிதம் எழுதி உள்ளார் செங்கொடி. “தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியதுபோல் என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன்” – இப்படிக்கு தோழர் செங்கொடி.
21 ஆண்டுகளாக சிறையில் வாடும் மூவரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கடிதத்தில் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். இவர் ஈகி முத்துக்குமாரின் விவரணப்படத்தை இயக்கிய மகேந்திரன் அவர்களின் உடன்பிறந்த சகோதரி என்பது குறிப்பிடத் தக்கது. மூவரைக் காப்பாற்றக் கோரி சென்னை கோயம்பேட்டில் உண்ணாவிரதம் இருந்து வரும் பெண் வக்கீல்களின் போராட்டத்தில் அன்றைய சனிக்கிழமை கலந்துவிட்டுச் சென்றுள்ளார். பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் மரணதண்டனையை ரத்துச் செய்யக் கோரி இந்தப் பெண் தீக்குளித்து மரணமானதாக தெரிவித்துள்ளார். மரண தண்டனையை குறைக்குமாறு அனுப்பப்பட்ட கருணை மனுவை இந்திய உள்துறை அமைச்சும் ஜனாதிபதியும் நிராகரித்த நிலையில் மக்கள் மன்றத்தின் முக்கியஸ்த்தர் செங்கொடி பெரும் மன உளைச்சலுக்கு உள்ளானதாகவும் இந்நிலையில் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மூன்று தமிழர்களின் தூக்கு தண்டனையை இரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் பெருகிவரும் நிலையில் காஞ்சீபுரத்தில் தமிழச்சி செங்கொடி தீக்குளித்து இறந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீரமங்கை செங்கொடிதொடர்பாக பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை….
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 3 தமிழர்களின் உயிர்களை காக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து காஞ்சிபுரத்தில் செங்கொடி எனும் இளம் பெண் தீக்குளித்து தன்னுயிரை தியாகம் செய்த செய்தி கேட்டு அதிர்ச்சியும் அளவற்ற வேதனையும் அடைந்தேன். முதல்வரிடம் முறையிடுவது, நீதி மன்றத்தில் வாதாடுவது, மக்களை திரட்டிக் குரல் கொடுப்பது ஆகிய வழிகளில் நாம் இணைந்து ஒன்று பட்டுப் போராடுவதின் மூலமே மூவரின் உயிர்களை காக்க முடியும். நம்மை நாமே அழித்துக் கொள்வதின் மூலம் அதை செய்ய முடியாது என்பதை உணருமாறு அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன்.
3 உயிர்களை காக்கத் தொடர்ந்து போராடுவதற்கு பதில் நமது உயிர்களை அழித்துக் கொள்வது என்பது நமது நோக்கத்திற்கே முரணானதாகும். இத்தகைய செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாமென வேண்டிக் கொள்கிறேன். என்றார்
வீரமங்கை செங்கொடி தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசும்போது,
இன்று தன் சகோதரன்…, உடன் பிறவா சகோதரன், நம் தமிழ் சகோதரன், பேரறிவாளன், சாந்தன், முருகன்…. “குற்றமற்றவன்” என்பதை மெய்ப்பிக்க வேண்டி காஞ்சிபுரத்தில் தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டு நெருப்பாகிவிட்டாள் செங்கொடி என்கிற ஒரு தமிழ் சகோதரி. அந்த கன்னகியின் சாபத்திலும் நீதியிருந்தது… இந்த செங்கொடியின் சாவிலும் நீதி இருக்கிறது…. நீதி வென்றே தீரும், நம் தேசபிதா காந்தியவர்கள் 1931 வருடத்திலேயே தூக்கு தண்டனை கூடாது என்றார். பண்டித நேரு அவர்களும், ஒரு மனிதனை தேதி குறித்து வைத்து கொல்லும் கொடுரம் கூடாது என்றார்கள். 1941-ம் வருடத்தில் இந்திய அரசியல் சட்ட அமலாக்க விவாதத்தில் பேசிய அண்ணல அம்பேத்கார் அவர்களும் தூக்கு தண்டனை கூடாது என்றார்கள். இன்று உலகில் உள்ள 137 முன்னேறிய நாடுகள் தூக்கு தண்டனையை ஒழித்து விட்டார்கள். ஆனால் நம் நாட்டில் கூட நீன்ட நாட்களாக தூக்கு தண்டனை கொடுப்பதில்லை. அன்று திருப்பெரும்புதூரில் நடந்த சம்பவத்திற்கும் இந்த பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவருக்கும் சம்பந்தமில்லை….. முதலில் இதே வழக்கில் 24 நபர்களுக்கு தூக்கு கொடுத்தார்களே. பின்னர் எப்படி அவர்கள் மீது குற்றமில்லை என்று முடிவு செய்யப்பட்டதோ அது போலவே, இவர்கள் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டும் பொய்யானது. அதை நிருபிக்க இன்னும் ஒரு வாய்ப்பு அவர்களுக்கு கொடுக்க வேண்டும். அன்று பாண்டிய மன்னன் அரண்மனையில் நடந்த கொடூரம் இப்போது தமிழகத்தில் நடந்துவிடக்கூடாது.. தமிழக முதல்வர் அவர்களால் இதை தடுக்கும் வாய்ப்புள்ளது… நாடே இப்போது முதல்வரின் முடிவை எதிர்பார்க்கிறது’’என்று பேசினார் வைகோ. இப்படியான அநியாய உயிர் இழப்புகளைத் தமிழக உறவுகள் தவிர்க்க வேண்டும். இந்த போராட்டத்தின் வெற்றி இந்த மூவரின் விடுதலையோடு மட்டும் சுருங்கி விடக்கூடாது. ஒட்டுமொத்த மரணதண்டனையையும் ஒழிப்பதிலேயே நமது விடுதலை பூரணப்படும் என்பதையும் உறுதியாக நினைவில் கொள்வோம் தோழர்களே! புகலிடத்தில் இன்னமும் இப்போராட்டத்துக்கு ஆதரவாக தேவையான அளவு போராட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை என்பது கவனத்துக்குரியது.. கண்டனத்துக்குரியது.
தன்னுயிரை ஆகுதியாக்கிய இந்த வீரத் தமிழிச்சியை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.வீரமங்கை செங்கொடிக்கு எங்கள் வீர வணக்கம்.!
https://www.thaarakam.com/news/d984c101-bd2a-4d84-94fa-949b8e7fcfb5
-
-
இலங்கையின் ஒருநாள் உயிரிழப்பு 209ஐ தொட்டது.
August 26, 2021
இலங்கையில் கொரோனா வைரஸ் தொடர்பிலான 209 உயிரிழப்புகள் இன்று ஏற்பட்டதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அந்தவகையில், கொரோனா பரவல் ஆரம்பித்ததிலிருந்து முதற் தடவையாக நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் தொடர்பிலான உயிரிழப்புகள் 200ஐ கடந்துள்ளன.
இதேவேளை, இதனுடன் இலங்கையில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 8,000ஐத் தாண்டி, 8,157ஆக உயர்ந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 108 ஆண்களும், 101 பெண்களும் என்ற நிலையில் 30 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள் எவரும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 30 தொடக்கம் 59 வயதுக்குட்பட்டோர் 46 பேர் என்பதுடன், ஏனையோர் 60 மற்றும் அதற்கு மேற்பட்டோர் 163 பேர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் முதலாம் நாள்…!
in மாவீரர் நினைவு
பதியப்பட்டது
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் முதலாம் நாள்…!
செப்.15 – 1987
🔴தியாக பயணத்தின் முதலாவது நாள்!
காலை ஒன்பது மணியிருக்கும் பாடசாலைப் பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனை சந்தித்து விடை பெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாக பேசுகிறார். வாக்கி டோக்கியில் தலைவருடன் சில நிமிடங்கள் பேசுகிறார்.
பேசிவிட்டு அந்த மண்ணிற வாகனத்தை நோக்கி நடக்கிறார். எல்லோரும் பின் தொடர்ந்தோம். ஆம் அவரது தியாகப் பயணம் ஆரம்பமாகிவிட்டது. மிக மிடுக்காக நடந்து முன் ஆசனத்தில் போய் ஏறினார்.
அவரது பக்கத்தில் சொர்ணம், அன்ரன் மாஸ்ரர், முரளி. பின் ஆசனத்தில் காசி ஆனந்தன், ராஜன், நான் வேறும் சிலர்.வாகனம் நல்லூர் கந்தசாமி கோவிலை நோக்கி ஓடுகிறது. பாதையின் இரு பக்கத்திலும் மாணவர்களும், பொதுமக்களும் கையசைத்து வழியனுப்புகிறார்கள். நல்லூர் கந்தசாமி கோவிலை சென்றடைந்தோம். வாகனம் நின்றது. திலீபன் உண்ணாவிரத மேடை நோக்கிச் செல்கிறார். நாங்களும் பின்னால் போய்க்கொண்டிருக்கிறோம்.
🔴தமிழீழ தாயின் எதிர்பாராத ஆசியினை பெறுகின்றார்
எதிர்பாராத விதமாக அந்த நிகழ்ச்சி நடந்தது. வயதான ஓர் அம்மா தள்ளாத சிவந்த நிற மேனி, பழுத்த தலை, ஆனால் ஒளிதவளும் கண்களில் கண்ணீர் மல்க திலீபனை மறித்து தன் கையில் சுமந்து வந்த அர்ச்சணை சரையில் இருந்து நடுங்கும் விரல்களால் திரு நீற்றை எடுத்து திலிபனின் நெற்றியில் பூசுகிறார்.
சுற்றியிருந்த கமராக்கள் எல்லாம் அந்த காட்சியை கிளிக் செய்தது. வீரத் திலகமிடுகிறார் அந்தத் தாய். தாயற்ற திலீபன் அந்த தாயின் பாச உணர்வில் மூழ்கிப் போனார்.
🔴போராளி பிரசாத் இன் ஆரம்ப உரை (மேஜர் பிரசாத்)
காலை மணி 9.45 உண்ணாவிரத மேடையிலே நாற்காலியிலே திலீபனை அமர வைத்தோம். திலீபனின் அருகே நான், ராஜன், பிரசாத், சிறி ஆகியோர் அமர்ந்திருந்தோம். திலீபனின் தியாகப் பயணம் ஆரம்பமாகிவிட்டது.
அன்று பக்கத்திலிருந்த மேடையில் பிரசாத்தின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. திரு. நடேசன், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் திலீபனின் உண்ணா விரதம் எதற்காக ஆரம்பிக்கப்படுகிறது என்பதனைபற்றி விளக்கம் அளித்தார்கள்.
தமிழ் மக்களினதும், தமிழர் தாயகத்தினதும் உரிமைகளை பேணும் நோக்கமாக இந்தியமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் முன் வைக்கப்பட்ட ஜந்து கோரிக்கைகளும் விளக்கப்பட்டன.
🔴ஐந்து அம்ச கோரிக்கை
1) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்படல் வேண்டும்.
2) புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நாடாத்தப்படும் சிங்கள குடியேற்றங்கள் உடணடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
3) இடைக்கால அரசு நிறுவப்படும் வரை புனர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்படல் வேண்டும்.
4) வடகிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
5) இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப்பெறப்பட்டு தமிழ்க் கிராமங்கள், பள்ளிக் கூடங்களில் குடி கொண்டுள்ள இராணுவ , பொலிஸ் நிலையங்கள் மூடப்படவேண்டும்.
பிரசாத் அவர்களால் மேற்படி ஜந்து கோரிக்கைகளும் வாசிக்கப்பட்டன. இதே கோரிக்கையை இரண்டு தினங்களுக்கு முன்பு இந்திய உயர்ஸ்தானிகரின் கையில் நேரடியாக கிடைக்கக் கூடியதாக அனுப்பி 24 மணித்தியால அவகாசமும் விடுதலைப் புலிகளால் வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் 15 திகதி வரையும் தூதுவரிடமிருந்து எந்த பதில்களும் கிடைக்காத காரணத்தினால் சாகும் வரை உண்ணா விரதமும் மறியல் போராட்டமும் நடத்துவது என தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதேசப் பொறுப்பாளர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
🔴வாசிப்பதற்கு புத்தகங்கள் கேட்ட திலீபன்
அதன்படிதான் இந்த தியாகச்செம்மலின் தியாகப் பயணம் ஆரம்பித்தது. பிற்பகல் 2.00 மணி இருக்கும் திலீபன் கம்பீரமாக வீற்றிருந்தார். உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மணித்தியாலங்கள் முடிந்து விட்டன.
இரண்டாவது மேடையிலே நடைபெற்றுக் பொண்டிருந்த உண்ணாவிரத விளக்கக் கூட்டம் முடிவடைந்து விட்டது. படிப்பதற்கு புத்தகம் வேண்டும் என என்காதில் குசுகுசுத்தார் திலீபன். நான் ராஜனிடம் சொன்னேன்.
15 நிமிடங்களில் பல அரிய நூல்கள் மேடைக்கு வந்தன. விடுதலைப் போராட்டங்கள் பற்றி அறிவதற்கு திலீபனுக்கு ஆர்வங்கள் எப்போதும் உண்டு. பிடல் காஸ்ரோ, சேகுவரோ, கொஜுமின், யசிர் அரபாத் போன்றவர்களின் வாழ்க்கையை பற்றிய நூல்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிப்பார். பலஸ்தீன மக்களி்ன் வாழ்க்கையை பற்றி படிப்பதென்றால் அவருக்கு பலாச்சுழை மாதிரி பிடிக்கும். பலஸ்தீன கவிதை என்ற நூலை அவரிடம் கொடுத்தேன்.
🔴மாணவர்கள் இளையோர்களின் உணர்ச்சி கவிதைகள்…
அதை மிகவும் ஆர்வத்துடன் படிக்கத் தொடங்கினார். மாலை ஜந்து மணிக்கு பக்கத்து மேடையில் மீண்டும் நிகழ்ச்சிகள் ஆரம்பமாயிற்று.
பாடசாலை மாணவிகள் போட்டி பாட்டுக் கொண்டு கவிதைகளை வாசிக்கத் தொடங்கினர். சுசிலா என்ற மாணவி மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் தனது கவிதையை வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு கட்டத்தில் அவர் அழுதேவிட்டார்.
“அண்ணா திலீபா இளம் வயதில் உண்ணாமல் தமிழினத்திற்காக நீ தவமிருக்கும் கோலத்தைக் காணும் தாய்க் குலத்தின் கண்களில் வடிவது செந்நீர்.” சுசிலாவின் விம்மல் திலீபனின் கவனத்தை திருப்பியது.
கவிதைத் தொகுப்பை மூடிவைத்து விட்டு கவிதை மழையில் நனைய தொடங்கினார். அவர் விழிகளில் முட்டிய நீர் தேக்கத்தை ஒருகணம் என் கண்கள் காணத் தவறவில்லை. எத்தகைய இளகிய மனம் அவருக்கு இந்த இளம் குருத்து இன்னும் எத்தனை நாட்களுக்கு ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் வாடி வதங்க போகிறது. அகிம்சை போராட்டத்திற்கே ஆணி வேராக திகழ்ந்த அண்ணல் காந்தியடிகள் கூட தன்னுடைய உண்ணா விரத போராட்டங்களை நீராகாரம் அருந்தித்தானே நடத்தினார்.
🔴திலீபனின் தியாகப் பயணம் ஓர்…..
ஐரிஸ் போராட்ட வீரர் பொபிஸ் ஆன்ஸ் என்ன செய்தார்? சிறைக்குள் நீராகாரம் அருந்தித்தான் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்து உயிர் நீத்தார். இந்த உண்ணாவிரதம் அரசின் தலையீட்டினால் வெற்றி பெறுமானால் அந்த வெற்றி திலிபனையே சாரும். அதுபோல் இந்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் இறுதி உண்ணாவிரதம் இருந்தே திலீபன் இறக்க நேரிட்டால் அதில் கிடைக்கும் தோல்வியும் திலீபனுக்கு கிடைக்கும் மாபெரும் வெற்றிதான்.
🔴நல்லூர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் இடம்….
உலகின் புதிய அத்தியாயம் ஒன்றின் சிருஸ்டி கர்த்தா என்ற பெருமை அவனையே சாரும். ஆனால் அதற்காக எங்கள் குல விளக்கை நாமே அணைக்க வேண்டுமா?
இறைவா திலீபனை காப்பாற்றிவிடு. கூடியிருந்த மக்கள் நல்லூர் கந்தனிடம் அடிக்கடி இப்படி வேண்டிக் கொள்கிறார்கள். இதை நான் அவதானித்தேன். பழம் தமிழ் மன்னனாகிய சங்கிலியன் அரசாண்ட நல்லூர் அரச தானியிலே, தமிழ்க் கடவுள் ஆகிய குமரனின் சந்நிதியில் ஓர் இளம் புலி உண்ணாமல் துவண்டு கிடந்தது.
ஒரு நல்ல முடிவு கிடைக்க வேண்டும். இல்லையேல் உலகில் நீதி செத்து விடும். எனக்குள் இப்படி எண்ணிக்கொண்டேன்.
அப்போது ஒர் மேடையில் முழங்கிக் கொண்டிருக்கிறான். திலீபன் அண்ணாவின் கோரிக்கைகள் மட்டுமல்ல, தமிழ் மக்களின் கோரிக்கைகளும் இதுதான் இதை நிறைவேற்ற வேண்டியது இந்திய அரசின் கடமையாகும். அவர் தமிழீம் தாருங்கள் என்பதற்காக உண்ணாவிரதம் இருக்கவில்லையே. இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஜந்தே ஜந்து கோரிக்கைகளை நிறைவேற்றும்படி வற்புறுத்தித்தான் சாகும் உண்ணா விரதத்தை ஆரம்பி்த்திருக்கிறார்.
🔴தமிழீழ தேசிய தலைவர் திலீபனை பார்க்க வருகின்றார்.
இந்தக் காரணத்தாலாவது இந்திய அரசு இதை நிறைவேற்ற தவறுமானால் திலீபன் அண்ணா இறப்பது நிச்சயம்.
திலீபன் அண்ணா இறந்தால் ஒரு பூகம்பம் இங்கே வெடிக்கும். ஒரு புரட்சி இங்கே வெடிக்கும். இதுதான் என்னால் கூற முடியும். அவரின் பேச்சு முடிந்ததும் அங்கு கூடியிருந்த மக்கள் அப்பேச்சை வரவேற்பது போல் கைகளை தட்டி ஆரவாரித்தனர்.
அந்த ஒலி அடங்க வெகு நேரம் பிடித்தது. அன்று இரவு 11.00 மணியளவில் தலைவர் பிரபாகரன் திலீபனை பார்ப்பதற்காக மேடைக்கு வருகிறார்.
அவருடன் சொர்ணம், இம்ரான், அஜித், சங்கர், ஜொனி இப்படி பலரும் வருகின்றனர். வெகுநேரம் வரை தலைவருடன் உரையாடிக் கொண்டிருந்தார் திலீபன். யாரையும் அதிக நேரம் பேச அனுமதிக்க வேண்டாம் என்று போகும் போது என்னிடம் கூறிவிட்டுச்சென்றார் தலைவர். நீர், உணவு உட்கொள்ளாத ஒருவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தால் விரைவில் களைப்படைந்து விடுவார். இதனால் தான் தலைவர் அப்படி கூறிவிட்டுச் சென்றார்.
ட வருகை!
அன்றிரவு பத்திரிகை நிருபர்களும் பத்திரிகை துறையை சார்ந்தவர்களும் திலீபனை பார்க்க மேடைக்கு வந்திருந்தனர். முரசொலி ஆசிரியர் திருச்செல்வம், ஈழமுரசை சேர்ந்த பசீர் போன்றோருடன் திலீபன் மனம் திறந்து பேசினார். அவரை கட்டுப்படுத்த எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது.
அதிகம் பேசி உடம்பை கெடுத்துக் கொள்ள போகிறாரே என்பதால் அவரை அன்பாக கடிந்து கொண்டேன். இரவு 11.30 மணியளவில் கஸ்டப்பட்டு சிறுநீர் கழித்து விட்டு 12.00 மணியளவில் படுக்கைக்குச் சென்றார்.
முதல் நாள் முடிவு, அதிகாலை 1.30 இற்கு உறங்கினார்.
அவர் ஆழ்ந்து உறங்கத் தொடங்கிய போது நேரம் 1.30 மணி. அவரின் நாடித்துடிப்பை பிடித்து அவதானித்தேன். நாடித்துடிப்பு 88. சுவாசத்துடிப்பு 20. அவர் சுய நினைவோடு இருக்கும் போது வைத்திய பரிசோதனைக்கு அனுமதிக்க மாட்டார்.
தனக்கு உயிர் மீது ஆசை இல்லை என்பதால் பரிசோதனை தேவை இல்லை என்று கூறுவார். அவர் விருப்பத்திற்கு மாறாக உணவோ, நீரோ, மருத்துவமோ இறுதிவரை அளிக்கக் கூடாது என்று முதல் நாளே என்னிடம் சத்தியம் வாங்கிவிட்டார். மேடைக்கு முன்பாக மகளிர் அமைப்பு உறுப்பினர்களும், பொதுமக்களும் கொட்டக் கொட்ட கண்விழித்துக் கொண்டிருந்தனர்.
இந்த தியாக தீபத்தி்ன் உண்ணாவிரத போராட்டத்தின் முதல்நாள் முடிவு பெற்றது.
– தியாக வேள்வி தொடரும்….
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
http://www.errimalai.com/?p=56007