Jump to content

ரஞ்சித்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    8269
  • Joined

  • Last visited

  • Days Won

    100

Everything posted by ரஞ்சித்

  1. மொஸ்க்கோவில் அப்பாவிகள் படுகொலை செய்யப்பட்டபோது ஒருநாள் மெளனம் காத்த புட்டின், அவர்கள் உக்ரேனுக்குள் தப்பிச் செல்ல எத்தனித்ததால், அவர்களை உக்ரேனே பின்னால் இருந்து இயக்கியதாகக் கூறினார். ஆனால், புட்டினின் நண்பரான பெலாருஸ் ஜனாதிபதி அந்த நால்வரும் தமது எல்லையைக் கடக்க முனைந்தபோதுதான் தாம் அவர்களை மடக்கியதாகக் கூறுகிறார். கேள்வி என்னவென்றால், இங்கு யார் சொல்வது உண்மை? புட்டினா அல்லது அவரது நண்பரா? இது போதாது என்று, இந்த நால்வரும் ரஸ்ஸியாவிற்குள் வேலை தேடி வந்த தஜிக்கிஸ்த்தான் நாட்டுப் பிரஜைகள் என்று ரஸ்ஸியர்கள் சொல்கிறார்கள். ஐஸிஸ் அமைப்பு இந்த நால்வரும் தாக்குதலில் ஈடுபடுமுன்னர், அல்லாவின் மீது சத்தியம் செய்தபோது எடுத்த ஒளிப்படங்களையும், தாக்குதலின்போது எடுத்த ஒளிப்படங்களையும் தனது பிரச்சார காணொளியில் பதிவேற்றியிருக்கிறது.
  2. உண்மைதான். ஆனால், மனிதர்கள் இப்படி மிருகங்களாகத் தோன்றுவது யார் செய்த பாவம்? அப்பாவிகள் அழிக்கப்படுவது யார் செய்த பாவம்? எல்லாவற்றையும் படைப்பது இறைவன் என்றால், எதற்காக மனித வடிவில் அரக்கர்களைப் படைத்து உலவ விடுகிறார்? அண்ணை, 2009 வரை கடவுள் என்றொரு சக்தி இருக்கிறதென்று நம்பியவன் நான். ஆனால், எதுவுமே அறியாத பச்சிளம் பாலகர்களும், வயோதிபர்களும், தாய்மார்களும் அடங்கலாக ஒன்றரை லட்சம் பேரைத் துடிக்கத் துடிக்கக் கொன்றபோது இந்த தெய்வங்கள் எல்லாம் எங்கே போய்விட்டன என்கிற கேள்வி எழுந்தது. அதன்பின்னர் கடவுளைத் தேடிச் செல்வதில்லை.
  3. ரொமேஷ் பண்டாரியின் பிடிவாதமும், யாழ்ப்பாண பொலீஸ் நிலையத் தாக்குதலும் ரஜீவ் காந்தி கடைப்பிடிக்க ஆரம்பித்த "நல்ல அயலான்" கொள்கையின்படி தமிழர்களுக்குச் சார்பாகச் செயற்படுகிறார் என்று சிங்களவர்கள் விமர்சித்த பார்த்தசாரதி ஓரங்கட்டப்பட்டு புதிய வெளியுறவுச் செயலாளராக ரொமேஷ் பண்டாரி நியமிக்கப்பட்டார். ஜெயவர்த்தனவுடன் தொடர்புகொண்ட ரஜீவ், நேரடிப் பேச்சுக்களுக்கு முன்னர் உயர் அதிகாரியொருவரை கொழும்பிற்கு அனுப்புமாறு ஜெயார் கேட்டுக்கொண்டமையினைத் தான் வர‌வேற்பதாகவும், அதன்படி தனது புதிய வெளிவிவகாரச் செயலாளர் ரொமேஷ் பண்டாரியை இனப்பிரச்சினைக்கான தீர்வுகுறித்த ஆரம்ப கட்டப் பேச்சுக்களை நடாத்த‌ தான் அனுப்பிவைப்பதாகவும் கூறினார். பண்டாரிக்கு வழங்கப்பட்ட பணி இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதுதான். கொழும்பிற்கு வந்து ஜெயவர்த்தனவுடனும் அவருடைய அமைச்சர்களுடனும் பேசி, கள நிலவரம் தொடர்பான விடயங்களைத் தெளிவாக புரிந்துகொள்ள அவர் ஒப்புக்கொண்டார். செளமியமூர்த்தி தொண்டைமான் பங்குனி 25 ஆம் திகதி கொழும்பிற்கு விஜயம் செய்த பண்டாரி ஜெயவர்த்தன, லலித், காமிணி, ரொனி டி மெல், தொண்டைமான் மற்றும் தேவநாயகம் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். பண்டாரியுடனான சந்திப்பின் பின்னர் தொண்டைமானுடன் பேசும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. "இந்த மனிதனுக்கு எதுவுமே புரியவில்லை. நிரந்தரமான தீர்வொன்றிற்கு வடக்கும் கிழக்கும் இணைவது அத்தியாவசியமானது என்று நான் கூறியபோது, இணைப்பு அவசியமில்லை என்று என்னிடமே கூறுகிறார். ஜெயவர்த்தன முன்வைக்கும் மாவட்ட சபைகளைப் போதுமான தீர்வென்று வாதாடிய பண்டாரி, இச்சபைகளுக்குக் கொடுக்கப்படும் அதிகாரங்களூடாக தமிழர்களின் நலன்களைக் காத்துக்கொள்ள முடியும் என்று வாதாடுகிறார். இங்குள்ள பிரச்சினையின் ஆளம் குறித்து உங்களுக்கு எதுவுமே தெரியவில்லை என்று அவரது முகத்திற்கு நேரே கூறினேன்" என்று தொண்டைமான் ஆத்திரத்துடன் கூறினார். கொழும்பு விஜயத்தை முடித்துக்கொண்டு தில்லி திரும்பும் வழியில் சென்னையில் தரித்து, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்களை பண்டாரி சந்தித்தார். தன்னிடம் பேசிய பண்டாரி "ஜெயவர்த்தன மீது நம்பிக்கை வையுங்கள், புதிய பேச்சுவார்த்தைகளில் திறந்த மனதுடன் பங்குபற்றுங்கள்" என்று கேட்டுக்கொண்டதாக அமிர்தலிங்கம் என்னிடம் தெரிவித்தார். அமிர்தலிங்கத்திடம் பேசிய பண்டாரி, போராளி அமைப்புக்களுடன் இந்தியா விரைவில் பேசும் என்றும், பேச்சுவார்த்தைகளில் அவர்களும் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும், பேச்சுவார்த்தைக்கு முன்னோடியாக யுத்த நிறுத்தம் ஒன்றும் இந்தியாவால் கொண்டுவரப்படும் என்றும் கூறினார். "ஜெயவர்த்தனவை நம்பாதீர்கள் என்று நாம் அவரிடம் மன்றாட்டமாகக் கேட்டுக்கொண்டோம், ஆனால் எமது கோரிக்கைகள் எதனையும் அவர் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்" என்று பண்டாரி குறித்து அமிர்தலிங்கம் கூறினார். தில்லி திரும்பியதும் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த பண்டாரி, "இலங்கையில் நடக்கும் போர் வெகுவிரையில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டு, அங்கு பேச்சுவார்த்தைகள் உடனே ஆரம்பிக்கப்படும்" என்று கூறினார். இலங்கையின் இனப்பிரச்சினையினை மிக இலகுவாகத் தீர்த்துக்கொள்ள முடியும் என்கிற மாய விம்பத்தை ரஜீவிடம் அவர் அழகாக முன்வைத்தார். பண்டாரி தனக்கு வழங்கிய அறிக்கையினை அடிப்படையாக வைத்து சித்திரை 10 ஆம் திகதி இந்தியப் பாராளுமன்றத்தில் பேசிய ரஜீவ், "சுரங்கப்பாதையின் முடிவில் வெளிச்சம் தெரிகிறது" என்று உற்சாகமாகக் கூறினார். சில நாட்களுக்குப் பின்னர் கொழும்பிலிருந்து விடைபெற்றுச் செல்லும் இந்தியத் தூதர் சத்வாலுக்கு விருந்துபசாரம் ஒன்று நடைபெற்றது. அங்கு பேசிய தொண்டைமான், ரஜீவின் பேச்சிற்குப் பதிலடியாக, "சுரங்கப்பாதையோ முடிவின்றி நீண்டு செல்கிறது, வெளிச்சத்தைக் காண்பதற்குப் பதிலாக, இருளே சூழ்ந்து வருகிறது" என்று கூறினார். பண்டாரியின் கொழும்பு விஜயத்தினையடுத்து உடனடியாக செயலில் இறங்கிய ரஜீவும் அவரது ஆலோசகர்களும் ஜெயவர்த்தன கேட்டுக்கொண்டதன்படி இரு நாட்டு எல்லைகளுடாகவும் நடைபெற்று வந்த போராளிகளின் போக்குவரத்தினைத் தடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கினர். தமிழ்நாட்டிலிருந்து யாழ்க்குடா நாட்டிற்கு ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு சென்ற‌ அதிவேகப் படகு ஒன்றை இந்தியக் கரையோர ரோந்துப் படையினர் கைப்பற்றினர். அப்படகில் இயந்திரத் துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், கிர்ணேட்டுக்கள் என்பன காணப்பட்டதுடன், அப்படகில் பயணித்துக்கொண்டிருந்த சீருடை தரித்த இரு ஈ.பி.ஆர்.எப்.எப் போராளிகளும் இந்தியர்களால் கைதுசெய்யப்பட்டனர். இச்செய்தியை தமக்குச் சாதகமாகப் பாவித்த இலங்கையரசும், ஊடகங்களும், இந்தியா போராளிகளை முடக்க ஆரம்பித்து விட்டதாகவும், இதன் மூலம் பயங்கரவாதச் செயல்கள் குறைவடைந்து வருவதாகவும் பேசத் தொடங்கின. போராளிகளை முடக்க இந்தியா எடுத்துக்கொண்ட முயற்சிகள் குறித்து லங்கா கார்டியனின் ஆசிரியர் மேர்வின் டி சில்வாவுக்கு ரஜீவ் காந்தி பங்குனி மாதத்தின் இறுதி வாரத்தில் வழங்கிய செவ்வியில், "நாம் அவர்களை முடக்கும் செயற்பாடுகளில் இறங்கியிருக்கிறோம், இலங்கையில் நடைபெற்றுவரும் வன்முறைகளைத் தணித்து சுமூகமான சூழ்நிலையினை உருவாக்கவே எத்தனிக்கிறோம்" என்று கூறியதன் மூலம் தனது அரசு போராளிகளை முடக்குவதை உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார். மகாவலி ஆற்றின் விக்டோரியா அணைக்கட்டினைத் திறந்துவைக்கும் இங்கிலாந்துப் பிரதமர் மாக்கிரெட் தட்சர், காமிணி திசாநாயக்க, ஜெயவர்த்தன மற்றும் லலித் - சித்திரை 11, 1985 பங்குனி மாதத்தின் இறுதிப்பகுதியிலும், சித்திரையின் ஆரம்பத்திலும் போராளிகளின் தாக்குதல்கள்கள் எதுவும் நடைபெறவில்லை. இதற்குக் காரணம் இலங்கைக்கு விஜயம் செய்யும் இங்கிலாந்துப் பிரதமர் மாக்கிரெட் தட்சரின் வருகையின்போது யாழ்ப்பாணத்தில் அமைந்திருக்கும் பொலீஸ் நிலையம் மீது பாரிய தாக்குதல் ஒன்றினை நடத்தும் ஏற்பாடுகளில் பிரபாகரன் இறங்கியிருந்தமையாகும். இலங்கையின் விசேட பொலீஸ் அதிரடிப்படைக்கான பயிற்சிகளை வழங்க கீனி மீனி கூலிகளை இங்கிலாந்து அரசே இலங்கை அரசாங்கத்திற்கு சிபாரிசு செய்திருந்ததுடன், தொடர்புகளையும் ஏற்படுத்தி, பயிற்சிக்கான ஏற்பாடுகளையும் செய்துகொடுத்திருந்தது. சித்திரை 10 ஆம் திகதி இரவு, தளபதி கிட்டு தலைமையில் 200 புலிப் போராளிகள் நான்கு மினிபஸ்கள், மோட்டார் சைக்கிள்கள், துவிச்சக்கர வண்டிகள் ஆகியவற்றின் மூலம் யாழ்நகரிற்குள் பிரவேசித்தார்கள். பொலீஸ் நிலையத்திற்கு எதிரே அமைந்திருந்த யாழ்ப்பாணக் கோட்டையின் முற்பகுதியைத் தவிர்த்து, பொலீஸ் நிலையத்தின் ஏனைய பகுதிகளை அரைவட்ட வடிவில் சூழ்ந்து நிலையெடுத்துக்கொண்டார்கள். அருகில் இருந்த தொலைத்தொடர்பு பரிவர்த்தனை மையத்திற்குச் சென்ற போராளிகள் அங்கிருந்த ஊழியர்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தனர். இன்னொரு குழுவினர் யாழ் வைத்தியசாலைக்கு அருகில் இருந்த இலங்கை மின்சாரச் சபைக்குச் சென்று மின்சாரத்தினைத் துண்டித்தனர். நகர் முழுவதும் இருளில் மூழ்கிக்கொள்ள, இரவு 9:45 மணியாகியிருந்தது. நகரை இருள் சூழ்ந்து கொண்டதே தாக்குதலை ஆரம்பிப்பதற்கான சமிக்ஞையாக இருந்திருக்க வேண்டும். உடனடியாக பொலீஸ் நிலையம் மீதும், அருகிலிருந்த உதவிப் பொலீஸ் மா அதிபரின் அலுவலகம் மீதும் புலிகள் தாக்குதலை ஆரம்பித்தனர். சுமார் 100 பொலீஸார் நிலை கொண்டிருந்த பொலீஸ் நிலையம் மீது மோட்டார்கள், கிர்ணேட் உந்துகணைச் செலுத்திகள் மற்றும் எறிகுண்டுகளைப் பயன்படுத்திப் புலிகள் தாக்கினர். சுமார் 3 மணிநேரம் நடந்த தாக்குதலில் நான்கு பொலீஸார் கொல்லப்பட, இருவர் ஆயுதங்களுடன் புலிகளிடம் சரணடைய, மீதமானோர் அருகிலிருந்த கோட்டை இராணுவ முகாமிற்குள் ஓடிச்சென்று தஞ்சமடைந்தனர். கட்டிடத்திற்குள் நுழைந்த புலிகள் அங்கிருந்த ஆயுதங்களைக் கைப்பற்றியபின், கட்டடத்திற்குக் குண்டுவைத்துத் தகர்த்துவிட்டுச் சென்றனர். சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருந்த குருநகர் இராணுவ முகாமிற்கு பொலீஸ் நிலையம் தாக்கப்படுவது தெரிந்திருந்தும், தாக்குதலை முறியடிக்க இராணுவத்தினரை அனுப்ப விரும்பவில்லை. தமது முகாமும் தக்கப்பட்டால் திருப்பித் தாக்குவதற்கான நிலையெடுத்து அவர்கள் முகாமிலேயே காத்திருந்தனர். பொலீஸ் நிலையத்தைத் தக்கவைக்க இராணுவம் முயலும் பட்சத்தில் அந்த முயற்சியைத் தோற்கடிக்க புலிகளும் தமது அணிகளை அப்பகுதியில் நிறுத்தியிருந்தனர். பொலீஸ் நிலையம் நோக்கிச் செல்லும் வீதிகளில் அமைந்திருந்த மதகுகளைத் தகர்த்து, வீதிகளில் கண்ணிவெடிகளைப் புதைத்து வைத்ததுடன், யாழ்நகர் முழுவதும் புலிகளின் கண்காணிப்பின் கீழ் அன்றிரவு கொண்டுவரப்பட்டிருந்தது. இத்தாக்குதலில் 35 உப இயந்திரத் துப்பாக்கிகள் (எஸ்.எம்.ஜி), 80 தானியங்கித் துப்பாக்கிகள் (சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்டவை), ஒரு கிர்ணேட் உந்துகணைச் செலுத்தி, 175 கிர்ணேட்டுக்கள், 100 புகைக்குண்டுகள், 50 கைத்துப்பாக்கிகள் மற்றும் பெருமளவு துப்பாக்கி ரவைகள் என்பன புலிகளால் எடுத்துச் செல்லப்பட்டிருந்தன. சென்னையிலிருந்த புலிகளின் அலுவலகம் இத்தாக்குதலுக்கு உரிமை கோரியிருந்தது. அவர்கள் விடுத்த அறிக்கையில், "இந்தப் பிரதேசத்தின் முன்னொருபோதும் இல்லாதளவிற்கு நவீன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டன, இவ்வாறான குண்டுச் சத்தத்தினை இப்பகுதி இதற்கு முன்னர் கேட்டதில்லை" என்று கூறப்பட்டிருந்தது. ஜெயாரினால் எதுவுமே பேச முடியவில்லை. மாக்கிரெட் தட்சரை அவமதிக்கவே புலிகள் இதனைச் செய்தார்கள் என்றும், தமிழர்கள் மீது பழிவாங்கும் தாக்குதல்களை நடத்தச் செய்வதன் மூலம் அவர்களைப் போராளிகளை நோக்கித் தள்ளவே இதனைச் செய்தார்கள் என்றும் அவர் கூறினார். ரஜீவ் காந்தியின் புதிய வெளியுறவுக் கொள்கைக்குப் பதிலாகவும், ஜெயவர்த்தனவின் தமிழ் மக்களின் மீதான படுகொலைகளுக்கு பதிலடியாகவும் தாக்குதல்களைத் தீவிரப்படுத்திய போராளிகள், தமக்குள் ஒருமித்த முன்னணி ஒன்றை உருவாக்கும் செயற்பாட்டிலும் இறங்கினார்கள்.
  4. கொல்லப்பட்ட 133 அப்பாவிகளுக்கும் ஆழந்த இரங்கல்கள். இதனை எவர் செய்திருப்பினும் கண்டிக்கப்பட வேண்டியதே. உக்ரேன் இத்தாக்குதலில் பங்குபற்றியிருக்கலாம் என்று கூறுவது பிரச்சாரத் தந்திரமே அன்றி வேறில்லை. இதனை ரஸ்ஸிய மக்களே ஏற்றுக்கொள்ளவில்லை. உக்ரேன் எல்லைகளூடாகத் தப்பிச் செல்ல முனைந்தார்கள், ஆகவே உக்ரேனில் இருந்து வந்தவர்கள் தான் என்று வாதிடுவது போலத் தெரிகிறது. ஆனால், இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளார்கள். மிகக் கொச்சையாக ரஸ்ஸிய மொழி பேசும் இவர்கள் தஜிக்கிஸ்த்தான் மொழியை ஒத்த மொழொயைப் பேசுபவர்கள் போலத் தெரிகிறது..90 களின் ஆரம்பத்தில் சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்து போன முஸ்லீம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேசங்களில் ரஸ்ஸியா நடத்திய போர்களின்போது பாதிக்கப்பட்ட முஸ்லீம்களே இதனைச் செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. செச்சென் இஸ்லாமிய பயங்கரவாதிகள் முன்னரும் ரஸ்ஸியாவில் தியெட்டர்கள், பாடசாலைகள் போன்றவற்றின் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். அவ்வாறனதொரு தாக்குதல்தான் இது. இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகள் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறார்கள் என்பதையும், அவர்கள் எவ்விலை கொடுத்தாவது அழிக்கப்பட வேண்டும் என்பதையே இது காட்டுகிறது.
  5. இந்தியாவின் புதிய வெளியுறவுக் கொள்கை பாலசிங்கத்திற்கும், அமிர்தலிங்கத்திற்கும் பார்த்தசாரதியினால் கூறப்பட்டதற்கமைய, இந்திய உளவுத்துறை அதிகாரிகள் ரஜீவ் காந்தி அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் புதிய வெளியுறவுக் கொள்கை குறித்த விளக்கங்களைப் போராளி அமைப்புக்களின் தலைவர்களுக்கு வழங்கினார்கள். இச்சந்திப்புக்கள் பங்குனி மாதத்தின் ஆரம்பத்தில், ரஜீவிற்கு ஜெயார் அனுப்பிய கடிதத்திற்கு சில நாட்களுக்குப் பின்னர், சென்னையிலும், இந்துக்களின் புனித தலமாகிய காசியிலும் இடம்பெற்றிருந்தன. ரோ அமைப்பின் தலைவரான கிரிஷ் சந்திர சக்சேனா சென்னையில் போராளி அமைப்புக்களின் தலைவர்களைச் சந்தித்து இதுகுறித்துப் பேசினார். புலநாய்வுப் பணியகத்தின் இயக்குநரான எம்.கே.நாராயணன் (2009 இல் இனக்கொலையினை நடத்திய அதே நாராயணன் தான்) காசி சந்திப்பை நடத்தினார். கிரிஷ் சந்திர சக்சேனா இந்தச் சந்திப்புக் குறித்த தகவல்களை போரும் சமாதானமும் எனும் புத்தகத்தில் பாலசிங்கம் குறிப்பிட்டிருக்கிறார். சென்னையில் இரகசிய இடமொன்றில் நடந்த இச்சந்திப்பில் தானும் பிரபாகரனும் கலந்துகொண்டதாக அவர் குறிப்பிடுகிறார். உயரமான உடற்கட்டமைப்பும், மாநிறமும் கொண்ட சக்சேனா அதிகாரம் மிக்க தொனியில் தம்முடன் பேசியதாக பாலசிங்கம் கூறுகிறார். அது கலந்துரையாடல் போன்று இருக்கவில்லை, மாறாக எமக்குக் கட்டளையிடுவது போன்றே இருந்தது என்று பாலசிங்கம் எழுதுகிறார். இந்திரா காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குறித்து ஆரம்பத்தில் விளக்கிய சக்சேனா, பின்னர் ரஜீவின் அரசாங்கத்தில் வெளியுறவுக் கொள்கையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் மாற்றங்கள் குறித்துப் பேசினார். இந்திராவின் காலத்தில், தமிழர்களின் போராட்டத்தினை நசுக்குவதற்காக ஜெயார் இந்தியாவின் நலன்களுக்கு எதிரான வெளிநாட்டுச் சக்திகளை இலங்கைக்குள் கொண்டுவந்தபோது இந்தியா சர்வதேச அரசியல் அழுத்தங்களை எதிர்நோக்க வேண்டி வந்தது என்று கூறினார். 1983 ஆம் ஆண்டின் இனக்கலவரம் இனக்கொலைக்கு நிகரான குணவியல்புகளைக் கொண்டிருந்ததோடு, லட்சக்கணக்கான தமிழ் அகதிகள் இந்தியாவிற்கு அடைக்கலம் தேடி வரவும் காரணமாகியது என்று சக்சேனா கூறினார். இதனால் தமிழ்நாட்டில் பாரிய உணர்வலைகள் உருவாகி இந்தியாவின் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படும் நிலையும் ஏற்படுத்தப்பட்டது என்றும் அவர் கூறினார். இதனாலேயே இந்தியா இவ்விவகாரத்தில் தலையிட வேண்டிய தேவை உருவாகியது என்று அவர் மேலும் கூறினார். பாலசிங்கத்திடமும் பிரபாகனிடமும் பேசிய சக்சேனா. இந்தியாவின் நோக்கம் தமிழ் மக்கள் மீதான வன்முறைகளைக் கட்டுப்படுத்துவது, சமாதானத்தை மீள உருவாக்குவது, இனங்களுக்கிடையிலான இணக்கப்பட்டினை ஊக்குவிப்பது என்பவற்றுடன், மிக முக்கியமாக பிராந்தியத்தில் உறுதிப்பாட்டினை உருவாக்குவதுதான் என்று கூறினார். மேலும், தமிழ் மக்களைப் பாதுகாக்கவும், அரச இராணுவத்தின் பிரசன்னத்தைக் கட்டுப்படுத்தவுமே தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டன என்றும் அவர் கூறினார். மேலும், இலங்கையின் இறையாண்மையினையும், ஒருமைப்பாட்டையும் கேள்விக்குள்ளாக்கும் எந்த செயற்பாட்டிற்கும் இந்திரா காந்தி உங்களுக்கு ஆயுதங்களை வழங்கவில்லை என்று அவர்களைப் பார்த்து மேலும் கூறினார் சக்சேனா. இராணுவ ரீதியில் தீர்வொன்றினை ஏற்படுத்த நினைத்த ஜெயாரை பேச்சுவார்த்தை மேசைக்கு வரப்பண்ணுவதனூடாக, ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் ரீதியிலான தீர்வொன்றிற்கு உந்துவதற்காகவே உங்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டன என்றும் அவர் கூறினார். இந்தியாவிற்குள்ளும் பல பிரிவினைவாதப் போராட்டங்களை தாம் முகம்கொடுத்து வரும் வேளையில், இலங்கையில் பிரிவினைக்கு இந்தியா உதவுவதென்பது, உள்நாட்டில் கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதால், இந்தியா தமிழ்ப் போராளிகளின் தனிநாட்டிற்கான கோரிக்கையினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்றும் கூறினார். பின்னர் ரஜீவ் காந்தி இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்கள் குறித்து விளக்குவதில் ஈடுபட்டார் சக்சேனா, இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு எழுதுகிறார், "பிரபாகரனைப் பார்த்துக்கொண்டே தனது குரலை உயர்த்திப் பேசத் தொடங்கினார் சக்சேனா. "நீங்கள் இந்தியாவினது நிலைப்பாட்டினை புரிந்துகொண்டு, ஏற்றுக்கொள்வத்கைத் தவிர வேறு வழியில்லை" என்று கட்டளையிடுமாற்போல் அவர் பேசினார். இந்தியாவின் புதிய பிரதமர் அயல் நாடுகளுடன், குறிப்பாக இலங்கையுடன் சிநேகபூர்வமான உறவினை ஏற்படுத்தவே விரும்புகிறார். இலங்கையில் சமாதானத்தையும், சுமூகமான சூழ்நிலையினையும் உருவாக்க அனைத்துத் தரப்புக்களையும் இணைத்து புதிய சமாதானச் செயற்பாடுகளை ஆரம்பிக்க அவர் உறுதி பூண்டிருக்கிறார். ஆகவே, தமிழ் போராளி அமைப்புக்கள் தமது ஆயுதப் போராட்டத்தை முழுமையாகக் கைவிட்டு இந்தியாவின் மத்தியஸ்த்தத்துடன், இலங்கை அரசாங்க‌த்துடன் பேச்சுவார்த்தைகளுக்குச் செல்லும் காலம் விரைந்து உருவாகி வருகிறது என்று கூறிவிட்டு கூட்டத்திலிருந்து எழுந்து சென்றார், அத்துடன் அந்தச் சந்திப்பும் முடிவிற்கு வந்தது" என்று பாலசிங்கம் குறிப்பிடுகிறார். ரஜீவ் காந்தியின் புதிய வெளியுறவுக் கொள்கை குறித்து அறிந்துகொண்டபோது பிரபாகரன் அதிர்ச்சியோ, ஏமாற்றமோ அடையவில்லை என்று பாலசிங்கம் கூறுகிறார். "ஜெயவர்த்தன தொடர்பான ரஜீவ் காந்தியின் கணிப்பு அடிப்படையிலேயே மிகவும் தவறானது என்று பிரபாகரன் கூறினார். இந்தியா அழுத்தம் கொடுத்த போர்நிறுத்தம் குறித்து பிரபாகரன் அதிருப்தியடைந்தார், இந்தியா அவசரப்பட்டு எடுத்த முடிவு என்று அதனை வர்ணித்தார். அரச இராணுவத்தின் போரிடும் வலு பலவீனப்படுத்தப்பட்டு, அவர்களின் போரிடும் மநோநிலை சிதைவடையப்பட்டாலன்றி ஜெயவர்த்தன ஒருபோதும் தமிழருக்கான நீதியினைத் தரப்போவதில்லை" என்று பிரபாகரன் கூறினார். 1985 இலிருந்து 2009 வரை தமிழர்களின் இனவழிப்பில் நேரடியாகப் பங்காற்றிய எம்.கே.நாராயணன் அவ்வாறே காசியில் இடம்பெற்ற சந்த்திப்பில் கலந்துகொண்ட புலநாய்வுப் பணியகத்தின் இயக்குநர் எம்.கே.நாராயணனும், ரஜீவ் காந்தியின் புதிய வெளியூரவுக் கொள்கையினை விளக்கியதோடு, அரசியல் ரீதியிலான சமரசப் பேச்சுக்களூடாக தீர்வினைக் காணும் இந்தியாவின் முயற்சிகளுக்கு அனைத்து போராளி அமைப்புக்களும் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், நாடுகளுக்கிடை யிலான பிணக்குகளைத் தீர்த்துக்கொள்வதற்காக ரஜீவ் காந்தி புதுமையான யோசனைகளைக் கொண்டிருக்கிறார் என்றும் நாராயணன் தம்மிடம் கூறியதாக பாலசிங்கம் குறிப்பிடுகிறார். பிரபாகரனிடமும், பாலசிங்கத்திடமும் பேசிய நாராயணன், தென்னாசியப் பிராந்தியத்தை சமாதானமும், அமைதியும் கொண்ட வலயமாகவும், பிறச் சக்திகளால் அடிபணிய வைக்க முடியாத பிராந்தியமாகவும் உருவாக்க ரஜீவ் காந்தி முயல்கிறார் என்று கூறினார். ரஜீவின் தலைமையில், இப்பிராந்தியத்தின் வல்லரசு என்கிற ரீதியில், இந்தியா, புதிய ஒழுங்கினையும், அமைதியையும், நாடுகளுக்கிடையே சிநேகபூர்வமான உறவினை உருவாக்குவதன் மூலம் அடைந்துகொள்ள முயல்கிறது என்றும் அவர் கூறினார். ரஜீவின் இச்சிந்தனையூடாக இனப்பிரச்சினைக்கு சமரசத் தீர்வொன்றினை உருவாக்க சமாதானப் பேசுக்களை ஆரம்பிக்க இந்தியா விளைகிறது என்று நாராயணன் கூறினார். ஆகவே தமிழர்களின் உண்மையான அரசியல் அபிலாஷைகளை அடைந்துகொள்ள அனைத்துத் தமிழ் அமைப்புக்களிடமிருந்தும், குறிப்பாக தமிழ்ப் போராளி அமைப்புக்களிடமிருந்து ஒத்துழைப்பினை இந்தியா எதிர்பார்க்கிறது என்றும் அவர் கூறினார். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மாற்றம் தொடர்பாக பிரபாகரனின் கருத்தை அறிந்துகொள்ள நாராயணன் முயன்றபோது, பிரபாகரன் பின்வரும் விடயங்களைக் கூறினார், 1. அரச அடக்குமுறையே தமிழர்களின் ஆயுதப் போரட்டத்திற்குக் காரணமாக அமைந்தது. 2. புலிகள் ஆயுத மோகத்தால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் அல்ல. ஆனால், தமிழர்களின் இருப்பையும், அவர்களின் அடையாளத்தையும் காத்துக்கொள்ள வேறு வழியின்றியே ஆயுதத்தினைக் கைகளில் எடுத்திருக்கிறார்கள். 3. நீதியும், சமத்துவமானதுமான தீர்வொன்றினை சமாதான வழிமுறைகள் மூலம் இந்தியா பெற்றுக்கொடுக்கத் தயாராக இருந்தால் தமிழ் மக்கள் அதனை நன்றியுடன் வரவேற்பார்கள். 4. மீண்டுவர முடியாத இனவாதச் சிந்தனைகளில் அமிழ்ந்துபோய் இருக்கும் சிங்கள அரசியல்த் தலைமைகள் குறித்து பலத்த சந்தேகங்கள் தமிழ் மக்களின் மனங்களில் இருக்கிறது. 5. ஜெயவர்த்தன தொடர்பாக ரஜீவ் காந்தி கொண்டிருக்கும் நிலைப்பாடு குறித்தும் தமிழர்கள் மிகுந்த சந்தேகம் கொண்டிருக்கிறார்கள். என்று கூறியதோடு, தமிழர்களின் நலன்களுக்குக் குந்தகம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ரஜீவ் காந்தியைத் தள்ளிவிடும் கைங்கரியங்களில் ஜெயவர்த்தனவின் குள்ளநரித்தினம் இறங்கியிருக்கிறது என்றும் நாராயணனிடம் பிரபாகரன் தெரிவித்தார்.
  6. ரஜீவிற்கு ஜெயார் அனுப்பிய தந்திரக் கடிதமும், தெரிந்தே வலையில் வீழ்ந்த ரஜீவும் வட்டுவாகல் பெளத்த தூபி, முள்ளிவாய்க்கால் பிரதேசத்திற்கான நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்பின் சின்னம் ஐக்கிய தேசியக் கட்சியின் இனவன்மத்திற்கு நிகரான வெறுப்பினை எதிர்க்கட்சியான சுதந்திரக் கட்சியும் உமிழத் தொடங்கியது. தமிழரின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வை அடைய எத்தனிக்காமைக்கும், பயங்கரவாதிகளை முற்றாக அழிக்க முடியாமற்போனமைக்காகவும் அரசாங்கத்தை எதிர்க்கட்சியின் தலைவரான சிறிமா கடுமையாகக் கண்டித்திருந்தார். "உங்களால் வடக்கில் ஒரு கூட்டத்தையோ அல்லது எந்தவொரு நிகழ்வையோ இன்று நடத்த முடியுமா?" என்று அவர் அரசிடம் வினவினார்.தனது தவறுகளை மறைக்கவே நாட்டினைக் கொதிநிலையில் வைத்திருக்க அரசாங்கம் முயல்கிறது என்றும் அவர் கண்டித்தார். எதிர்க்கட்சியினர் நாடு முழுவதும் மேற்கொண்டு வந்த அரசிற்கெதிரான பிரச்சாரத்தை மழுங்கடிக்க ஐக்கிய தேசியக் கட்சியினர் "பயங்கரவாதத்தை முறியடிக்க அரசிற்கு உதவுவோம்" எனும் தலைப்பில் தமது பிரச்சாரத்தை முடுக்கிவிட்டனர். "உன்னை விடவும் நானே தீவிரமான சிங்கள பெளத்தன்" எனும் தொனியில் ஒருவரையொருவர் விஞ்சும் வகையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். சிங்கள பெளத்தர்களின் நலன்களைக் காத்துக்கொள்ள தமது எதிரிகளை விடவும் தாமே சிறந்தவர்கள் எனும் பிரச்சாரத் தந்திரம் 1952 ஆம் ஆண்டு சிங்கள இனவாதத்தின் பிதாமகன் என்று என்று அறியப்பட்டவரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்த்தாபகருமான எஸ். டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே இன்றைய பிரச்சாரங்கள் அரசாலும், சுதந்திரக் கட்சியினராலும் முன்னெடுக்கப்பட்டு வந்தன. நாட்டில் வலிந்து உருவாக்கப்பட்ட தமிழர்களுக்கெதிரான வன்மத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வைத் தரவும் பொறுப்புணர்வு மிக்க பொருத்தமான அரசியல்த் தலைவர் தானே என்று இந்தியாவுக்கும், சர்வதேசத்திற்கும் காட்டுவதற்கு இத்தருணத்தை ஜெயார் பாவித்துக்கொண்டார். பங்குனி 1 ஆம் திகதி ஜெயார் ரஜீவிற்கு எழுதிய கடிதத்தில் சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு முன்னோடியாக ஒரு அதிகாரியை இலங்கைக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொண்டார். அரசியல் ரீதியிலான தீர்விற்கு தான் விருப்பம் கொண்டிருப்பதாகவும் அக்கடிதத்தில் அவர் தெரிவித்திருந்தார்.மேலும், மாகாணசபைகளை அமைப்பது தொடர்பிலும் தான் சாதகமான கருத்தினைக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், இவை எல்லாவற்றிற்கும் முட்டுக்கட்டையாக இருப்பது பயங்கரவாதம் என்றும், அதனை முற்றாக இல்லாதொழிக்க ரஜீவ் காந்தி தனக்கு உதவ முன்வரவேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார். ஜெயார் ரஜீவுக்கு எழுதிய தந்திரக் கடிதம் "அன்பான ரஜீவிற்கு. 1978 ஆம் ஆண்டு இந்தியாவுக்கான எனது பயணத்தின்போது நான் ஆற்றிய உரையின் ஒரு பகுதியுடன் இக்கடிதத்தை ஆரம்பிக்க அனுமதி கொடுங்கள். "நான் இந்தியாவினதும் அதன் மக்களினதும் நண்பன். அதன் கலாசார பாரம்பரியத்தை இரசிப்பவன். இந்தியாவின் மிகப்பெரும் மகனான மகாத்மா காந்தியின் சீடன்". நான் இலங்கையின் ஜனாதிபதி என்கிற ரீதியில் மட்டுமல்லாமல், நேரு குடும்பத்தின் நெருங்கிய நண்பன் என்கிற ரீதியிலும் இக்கடிதத்தை எழுதுகிறேன். உங்களின் பேரனாரை 1939 ஆம் ஆண்டு எனது இல்லத்தில் வரவேற்று விருந்தளித்தவன் என்கிற வகையில், உங்களின் குடும்பத்தை நன்றாக அறிந்துகொண்டவன் என்கிற வகையில், அந்தக் குடும்பத்தின் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த உங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகிறேன். உண்மைக்காக, அகிம்சை முறையில் இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடிய பல தலைவர்களில் ஒருவரான உங்களின் பேரனாரை நான் ஒரு வீரனாக ஏற்றுக்கொண்டிருக்கிறேன். இன்றும் அதே கொள்கைகளைக் கடைப்பிடிக்க நான் முயன்று வருகிறேன். 1941 ஆம் ஆண்டு இந்தியக் காங்கிரஸ் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற ராம்கார் நிகழ்வில் நான் பங்கேற்றபோது நேருவின் அலகாபாத் வீட்டிலேயே நான் தங்கியிருந்தேன். பின்னாட்களில் அவர் சிறையிலடைக்கப்பட்டபோது அவரோடு கடிதத் தொடர்பில் நான் இருந்தேன். எமக்கிடையிலான கடிதத் தொடர்பின் நகல்களை நேருவின் நினைவு ஆவணக் காப்பத்திற்கு நான் அனுப்பியிருக்கிறேன். அவற்றினை உங்களை நேரில் சந்திக்கும்போது உங்களுக்குக் காட்டுவதிலும் ஆர்வமாயிருக்கிறேன். 1942 இல் இந்தியாவை விட்டு வெளியேறு எனும் போராட்டத்தின்போது பொம்பேயில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியினரின் கூட்டத்திலும் நான் கலந்துகொண்டிருந்தேன். நான் அன்று தங்கியிருந்த திருமதி ஹூத்தி சிங் வீட்டில் உங்கள் பேரனாரும், உங்கள் தகப்பனாரும் தங்கியிருந்தனர். இக்கடிதத்தின் ஆரம்பத்தில் நான் எழுதிய வாக்கியங்களை நீங்கள் சந்தேகிக்கக் கூடாது, அவை எனது மனதில் ஆழமாகப் பதிந்துவிட்ட நிகழ்வுகளின் எண்ணங்களாகும். ஆனால் துரதிஷ்ட்டவசமாக, எமது நாடுகள் இரண்டிற்கும் இடையில் அண்மைக்காலமாக சில சிக்கல்கள் உருவாகியிருப்பதை நாம் அனைவரும் அறிவோம். எனது மனதில் இச்சிக்கல்கள் பலமான தாக்கத்தை ஏறபடுத்தியிருப்பதுடன், இவற்றினை மிக விரைவில் நாம் தீர்த்துக்கொள்ளமுடியும் என்றும் நம்புகிறேன். அந்த வகையில், சில வாரங்களுக்கு முன்னர் எனது அமைச்சருடனான‌ உங்களின் கலந்துரையாடல்களில் நீங்கள் குறிப்பிட்ட சில விடயங்களுக்காக உங்களுக்கு நான் நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கிறேன். நான் இன்று எதிர்நோக்கும் முட்டுக்கட்டைகளை உடைத்துப்போட இந்தக் கலந்துரையாடல் உபயோகமாகியிருக்கிறது என்று நான் நம்புகிறேன். இதனைச் செய்வதற்கு, உங்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடுவது அவசியம் என்று கருதுகிறேன். ஆனபோதிலும், அவ்வாறான சந்திப்பொன்று நிகழ்வதற்கு முன்னோடியாக உங்களின் மூத்த இராஜதந்திரியொருவரை இங்கு அனுப்பி என்னுடன் பேச ஒழுங்குசெய்வது சாலப் பொறுத்தம் என்று எண்ணுகிறேன். இவ்வாறான ஒரு ஒழுங்கினை நான் மிகவும் வரவேற்பதோடு, உங்களுடனான பேச்சுவார்த்தைகளுக்கு முன்னர், தீர்வுதொடர்பான உங்களின் மனவோட்டத்தினை என்னால் சரிவரப் புரிந்துகொள்ள இது உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். தற்போது நாம் முகம் கொடுக்கும் சில பிரச்சினைகளுக்கான ஒருமித்த தீர்வினை அடைந்துகொள்ள எம்மிருவருக்கும் இது துணைபுரியும் என்பது எனது நம்பிக்கை. எமது பாராளுமன்றத்தில் மாசி மாதம் 20 ஆம் திகதி நான் ஆற்றிய உரையில் காத்திரமான அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தேன். ஆனால், எனது கருத்துக்களை தவறான வழியில் சில வெளிநாட்டு ஊடகங்கள் வெளிக்கொண்டு வந்தன. ஆகையால், எனது பேச்சின் பிரதிகளை உங்களின் பார்வைக்காக இத்தாள் அனுப்பிவிடுகிறேன். எமது எதிர்காலம் குறித்த நம்பிக்கைகளை உங்களின் அண்மைய அறிக்கைகள் ஏற்படுத்தியிருக்கின்றன. எனது பாராளுமன்ற உரையில் சில விடயங்கள் குறித்து நான் பேசியிருந்தேன். எமது நாட்டின் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் நடைபெற்றுவரும் அசம்பாவிதங்கள் உள்ளடக்கிய சூழ்நிலைக்கு ஒத்த சூழ்நிலையினை பஞ்சாப் போன்ற பகுதிகளில் இந்தியாவும் எதிர்நோக்கியிருக்கிறது. மேலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் பயங்கரவாதிகள் தமது அரக்க முகங்களை வெளியே நீட்டிக்கொண்டு வருகிறார்கள். இலங்கை போன்ற சிறிய நாட்டில் நடக்கும் பயங்கரவாத நடவடிக்கைகள் இந்த நாட்டின்மீது கடுமையான தாக்கங்களை உண்டுபண்ணினாலும், இங்கிருந்து பல நூறு மைலகள் தொலைவில் இருக்கும் இந்தியாவின் தலைநகரான தில்லிக்கு எமது நாடு முகம்கொடுத்திருக்கும் பயங்கரமான சூழ்நிலை தெரிவதற்கான சந்தர்ப்பங்கள் குறைவானவையே. சர்வகட்சி மாநாட்டில் நான் ஆற்றிய பேச்சில் இருவிடயங்கள் குறித்த இணக்கப்பாடுகளை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் என்னால் எட்ட முடியவில்லை. அதாவது, வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணைந்த ஒரு அலகு மற்றும் இரண்டாவது சபைக்கான யோசனைகள் என்பனவே அவையாகும். ஆனால், ஒரு மகாணத்திற்குற்பட்ட மாகாணசபைகளை அமைக்கும் யோசனையினை நான் வரவேற்கிறேன். அரசியல்த் தீர்விற்கான முயற்சிகள் மேற்கொள்ளும் அதேவேளை, மாகாணசபையூடாக அதிகாராப் பரவலாக்கக் குறித்த பேச்சுக்களில் தொடர்ந்தும் ஈடுபட நான் தயார இருப்பதை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கும் நான் அறியத் தந்திருக்கிறேன். உங்களிடம் நான் கேட்பது மிகச்சிறிய விடயங்கள் மட்டுமே. இந்தியாவில் அமைக்கப்பட்டிருக்கும் பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்கள், அங்கிருந்து இலங்கைக்கெதிராக அவர்கள் முன்னெடுத்துவரும் நாசகார வேலைத்திட்டங்கள் குறித்து நாம் மறந்துவிடலாம். ஆனால், அங்கிருந்து எமது நாட்டிற்குள் ஆயுதங்களுடன் அவர்கள் நுழைவதைத் தடுக்க எமக்கு உதவும் அதேவேளை தமிழ் அகதிகள் உவ்விடம் வருவதை தடுக்கவேண்டாம் என்றும் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். இதனைச் செய்வதற்கு எமது இரு நாடுகளினதும் கடற்படைகள் இணைந்து கண்காணிப்பில் ஈடுபடும் நடைமுறை ஒன்றினை உருவாக்குவதன் மூலம், வடக்குக் கிழக்கில் நிலைகொண்டிருக்கும் எமது இராணுவத்தினரை போரிடுவதில் இருந்து எம்மால் விலகியிருக்கச் செய்ய முடியும் என்பதோடு, நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை முடிவிற்குக் கொண்டுவரவும், வடக்குக் கிழக்குப் பகுதிகளை சுமூகமான சூழ்நிலைக்கு எம்மால் திருப்பிக்கொள்ளவும் முடியும் என்றும் நம்புகிறேன். உங்களின் அயலில் அமைந்திருக்கும் சிநேகபூர்வமான அயலாராகிய எங்களின் நாட்டில் இன்று நடைபெற்றுவரும் உயிரழிவுகளும், சொத்தழிவுகளும் நிறுத்தப்பட்ட நீங்கள் உண்மையாகவே அக்கறை கொண்டு செயற்படுவீர்கள் என்று நான் நம்புகிறேன். நாம் இருவரும் எமது மக்களின் பிரதிநிதிகள். இருவரும் பெரும்பான்மையான வாக்குகளைத் தேர்தலில் பெற்றுக்கொண்டவர்கள். நாட்டில் உள்ள வாக்காளர்களில் 50 வீதத்திற்கும் அதிகமானோர் எம் இருவருக்கும் வாக்களித்திருக்கிறார்கள். அத்துடன், பாராளுமன்றத்தில் இருவரும் ஆறில் ஐந்து பெரும்பான்மையினைப் பெற்றிருக்கிறோம். எல்லை தாண்டிய பயங்கரவாதம் எமது நாடுகளின் ஜனநாயகத்திற்கு மிகவும் ஆபத்தானது. இனப்பிரச்சினைத் தீர்விற்குத் தடையாக இருக்கும் பல விடயங்களில் மிகமுக்கியமானதும், அழிக்கப்படவேண்டியதும் இந்தப் பயங்கரவாதமே என்பதில் எமது நாட்டின் அரசியற் கட்சிகள் அனைத்தும் ஒருமித்த நிலைப்பாட்டினை எடுத்திருக்கின்றன. இன்று நாம் முகம்கொடுக்கும் ஆபத்தினை உணர்ந்துகொண்டு, உங்களுக்கும் பிரச்சினையாக மாறியிருக்கும் எல்லை கடந்த தமிழ்ப் பயங்கரவாதத்தை அழிக்க எமக்கு உதவுவீர்களா?" ஆனால், இக்கடிதத்திற்குப் பின்னரான ரஜீவின் நடவடிக்கைகள் அவர் ஜெயார் விரித்த தந்திர வலையில் முற்றாக வீழ்ந்துவிட்டார் என்பதனையே காட்டியிருந்தது.
  7. இளைய சமுதாயம் போதைவஸ்த்து, மது போன்ற இன்னொரென்ன கலாசார சீரழிவுகளில் ஈடுபட்டிருக்க, வரலாறு தெரியாது ஆக்கிரமிப்பாளனின் போர்க்கருவிகளில் வியந்துபோயிருக்க இன்னொரு பகுதி மாணவர்கள் அரசியலைச் சரியான முறையில் பேசுவது நம்பிக்கை தருகிறது. புலம்பெயர் தமிழர்களின் குழுபேதங்களும், பிரிவினைகளும், பணத்திற்காக இனம் விற்கும் துரோகங்களும், ஆக்கிரமிப்பாளனிற்கு விலைபோகும் கைங்கரியங்கள் தவறானவையே. அவை நிச்சயம் சுட்டிக்காட்டப்பட்டுத் தோலுரிக்கப்பட வேண்டும். இவ்வாறானவர்கள் தமிழனின் அபிலாஷைகள் குறித்து பேசுவதற்கு எவ்விதத்திலும் அருகதையற்றவர்கள் என்பது சரியானதே. மேலும், சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராதென்று சேடமிழுக்கும் அப்புக்காத்துமாரின் இணக்க அரசியலால் உந்தப்பட்டு விஷம் கக்கும் நாகங்களைக் கடந்து இளைய சமுதாயம் விளிப்புணர்வு பெற எடுக்கப்படும் எந்த முயற்சியும் பாராட்டிற்குரியதே. சரியான திசையில் எடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஒருபடி. நடக்கட்டும், வாழ்த்துக்கள் !
  8. அரச அதிகாரமும், நாட்டின் தலைவர் என்கிற சர்வதேச அங்கீகாரமும் கொண்ட ஒருவர் செய்யக்கூடிய அரசியல் சித்துவிளையாட்டுக்களை அரச அதிகாரமும், சர்வதேச அங்கீகாரமும் அற்ற ஒரு சிறிய இனத்தினைப் பிரதிநிதித்துவம் செய்யும் சாதாரண அரசியல்வாதிகளால் செய்ய முடியும் என்று நாம் நம்பவில்லை. ஆகவேதான் சர்வதேச அங்கீகாரமும், நடைமுறை அரசுக்கான முயற்சியும் எம்மைப் பொறுத்தவரை அவசியமாகியது. அந்த முயற்சியைத்தான் இலங்கையும், இந்தியா தலைமையிலான சர்வதேசமும் சேர்ந்து அழித்தன.
  9. ரஜீவின் கூற்றினைத் தமக்குச் சார்பாகப் பாவித்த சிங்கள இனவாதிகள் அத்துலத் முதலியுடன் மேலும் பேசிய ரஜீவ், அதிகரித்த இராணுவத்தினரின் பிரசன்னத்தினால் தமிழ் அகதிகள் பிரச்சினை உருவாகியிருக்கிறது என்று கூறினார். 1983 ஆம் ஆண்டு இனக்கொலையின் பின்னர் சுமார் 50,000 தமிழ் அகதிகள் தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்திருப்பதாகவும் அவர் கூறினார். கிழக்கு மாகாணத்தில் அதிகரித்துவரும் இராணுவத்தினரின் அட்டூழியங்களால் மேலும் பல தமிழ் அகதிகள் தமிழ்நாட்டிற்குத் தப்பி வரும் சூழ்நிலை தோன்றியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தனது அதிகாரிகளின் கூற்றுப்படி சுமார் 9 நீண்ட மணித்தியாலங்கள் கடலில் பயணம் செய்து காலை புலரும் முன்னர் இராமேசுவரம் கடற்கரையினைத் தமிழ் அகதிகளின் படகுகள் அடைய ஆரம்பிக்கின்றன என்று கூறினார் ரஜீவ். மாசி மாதம் 5 ஆம் திகதி மட்டுமே ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 21 தமிழ் அகதிகள் இராமேஸுவரத்தை அடைந்திருந்தார்கள். மாசி மாதம் 9 ஆம் திகதி அதிகளவான‌ தமிழ் அகதிகள் அங்கு வந்து சேர்ந்தனர். இராமேசுவரம் தனுஷ்கோடி ஆகிய கடற்கரைகளில் அன்று மட்டுமே வந்திறங்கிய அகதிகளின் எண்ணிக்கை 363 ஆகும். மாசி 10 முதல் 12 வரையான மூன்று நாட்களில் நாளொன்றிற்குச் சராசரியாக 300 இலிருந்து 400 வரையான தமிழ் அகதிகள் தமிழ்நாட்டை வந்தடைந்திருந்தனர். இந்த எண்ணிக்கை இனிவரும் நாட்களில் அதிகரிக்கலாம் என்று தனது அதிகாரிகள் எதிர்பார்ப்பதாகவும், இது தமிழ்நாட்டில் கொந்தளிப்பான நிலைமையினை ஏற்படுத்தும் என்றும் அவர் லலித்தை எச்சரித்தார். லலித்தின் மூன்றாவது நோக்கம் தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கு இந்தியா வழங்கிவரும் ஆயுதப் பயிற்சியினையும், ஆயுதங்களையும் நிறுத்துவதும், தமிழ் நாட்டிலிருந்து வரும் அழுத்தத்தைச் சமாளிப்பதும் ஆகும். இவ்விடயத்தின் தனக்கு உதவுவதற்கென்று உதவிப் பொலீஸ் மா அதிபர் சிறில் ஹேரத்தையும் அவர் அழைத்துச் சென்றிருந்தார். இப்பயணத்தின்போது தமிழ்நாட்டில் இயங்கிவரும் தமிழ்ப் போராளி அமைப்புக்களின் பயிற்சி முகாம்கள், இந்தியப் பயிற்றுவிப்பாளர்களின் பெயர் விபரங்கள், பயிற்சிகளின் போது பாவிக்கப்படும் ஆயுதங்களின் வகை மற்றும் எண்ணிக்கை தொடர்பான பல விடயங்களை சிறில் தன்னுடன் எடுத்துச் சென்றிருந்தார். இந்த விடயங்களை தம்மால் கைதுசெய்யப்பட்ட ஆயுத அமைப்புக்களின் உறுப்பினர்களிடமிருந்தும், இலங்கையரசிற்குப் பணத்திற்காக தகவல்களை விற்கும் இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் பெற்றுக்கொண்டதாக சிறில் கூறினார். சிறில் முன்வைத்த ஆவணங்களில் தமிழ் நாட்டில் போராளிகளின் பயிற்சிகளுக்குப் பொறுப்பாகவிருந்த இந்திய உளவு அமைப்பின் அதிகாரியான மலையாளி உன்னிகிருஷ்ணன் மற்றும் இன்னொரு மலையாளியும் தமிழ்நாட்டு உளவுத்துறையின் தலைவருமான மோகன் தாஸ் ஆகியோரது பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இவ் அதிகாரிகள் இருவரும் இலங்கையரசாங்கத்துடன் தொடர்புடையவர்கள் என்பதை போராளி அமைப்புக்களும் உறுதிப்படுத்தியிருந்தன. பின்னாட்களில் அமெரிக்க உளவு அமைப்பினருக்கு இந்தியாவின் இரகசியங்களை விற்றார் என்று குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் ரோ அதிகாரி உன்னிகிருஷ்ணன் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தம்மால் சேகரிக்கப்பட்ட இவ்விடயங்களை ரஜீவ் காந்தியின் முன்னால் வைத்த லலித், "இவை தொடர்பாக நீங்கள் அறியாமல் இருக்கலாம்" என்று அப்பாவித்தனமான முறையில் ரஜீவைப் பார்த்து வினவினார். கலவரமடைந்த ரஜீவ் காந்தி, "இதுகுறித்து நிச்சயம் விசாரிக்கிறேன்" என்று பதிலளித்தார். மேலும், இலங்கை கோரியிருந்த பாக்கு நீரிணையில் இந்திய இலங்கைக் கடற்படைகளின் கூட்டு ரோந்து குறித்து தான் ஆராயப்போவதாகவும் அவர் உறுதியளித்தார். ரஜீவ் காந்தி, லலித் அதுலத் முதலி மற்றும் ஜயவர்த்தன‌ ரஜீவ் காந்தியுடனான லலித்தின் சந்திப்பு அரசாங்கத்திற்குள்ளும், ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்களுக்குள்ளும் புதிய உத்வேகத்தினையும், நம்பிக்கையினையும் ஏற்படுத்தியிருந்தது. இந்திய இலங்கை உறவுகளை புதுப்பிக்கும் நிகழ்வு இது என்று பல அரசியல் அவதானிகள் கருதினர். இந்திய அரசாங்கத்தினதும், கொள்கை வகுப்பாளர்களினதும் மனமாற்றம் என்று இதனை வர்ணித்து டெயிலி நியூஸ் பத்திரிக்கை ஆசிரியத் தலையங்கம் தீட்டியிருந்தது. இந்தியாவின் வெளியுறவுத்துறையின் இராஜாங்க அமைச்சர் குர்ஷெட் அலாம் கான் பாராளுமன்றத்தில் விடுத்த அறிக்கையில், இலங்கையில் ஏற்பட்டுவரும் நெருக்கடியான சூழ்நிலை மற்றும் அவற்றால் இந்தியாவில் ஏற்பட்டுவரும் சிக்கல்கள் குறித்து ரஜீவ் காந்தியும் லலித் அதுலத் முதலியும் விரிவாகப் பேசியதாகக் குறிப்பிட்டார். மேலும், லலித்திடம் பேசிய ரஜீவ் காந்தி, இலங்கை வேண்டிக்கொண்டால் இனப்பிரச்சினையினைத் தீர்ப்பதற்கு இந்தியா உதவக் கூடும் என்றும் ஆனால், இனப்பிரச்சினைக்கான அரசியல்த் தீர்வினை இலங்கை அரசாங்கமே கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கூறியதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழர்களின் வாழிடங்களில் அதிகரித்துவரும் இராணுவப் பிரசன்னம். அதனால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அகதிகள் பிரச்சினை குறித்து ரஜீவ் இந்தியாவின் கரிசணையினை லலித்திடம் பகிர்ந்து கொண்டதாகவும், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படைச் சுட்டு கொல்லுதல், காயப்படுத்துதல் மற்றும் கைதுசெய்தல் ஆகிய செயற்பாடுகளுக்கெதிராக கடுந்தொணியில் தனது கண்டனத்தினை லலித்திடம் முன்வைத்ததாகவும் அவ்வறிக்கை மேறும் கூறியது. பாக்கு நீரிணை பாக்கு நீரிணைப் பகுதியைத் தடைசெய்யப்பட்ட வலயமாக இலங்கை அரசாங்கம் 1984 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் அறிவித்ததிலிருந்து இலங்கைக் கடற்படைக்கும் இந்திய மீனவர்களுக்குமிடையிலான பிணக்கென்பது ஆரம்பமாகியிருந்தது. இதனைச் சந்தர்ப்பமாகப் பாவித்த தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கையின் கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டு வரலாயினர். மேலும், பொருட்களைக் கடத்துதல், தமிழ்ப் போராளி அமைப்புக்களின் போராளிகளையும் பொருட்களையும் தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையே கொண்டுசேர்த்தல் ஆகிய செயற்பாடுகளிலும் தமிழ்நாட்டு மீனவர்களின் ஒருபகுதியினர் ஈடுபட்டு வந்தனர். ஐப்பசி மாதத்தில் மட்டும் 74 தமிழ்நாட்டு மீனவர்களைக் கைதுசெய்த இலங்கை கடற்படை, அவர்களுக்குச் சொந்தமான 17 ட்ரோலர் படகுகளையும் பறிமுதல் செய்திருந்தது. அநுராதபுரம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட இவர்களில் பெரும்பாலானவர்கள் கடுமையான எச்சரிக்கைகளுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தனர். ஆனால், ட்ரோலர்களின் நடத்துனர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். 1985 ஆம் ஆண்டு தை மாதத்தின் ஆரம்பத்தில் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில் இரு மீனவர்கள் கொல்லப்பட்டனர். இந்திய கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இரு இந்திய மீனவர்களைச் சுட்டுக் கொன்றதற்காக தில்லியில் இருந்த இலங்கை உயர்ஸ்த்தானிகரை தனது அலுவலக‌த்திற்கு வரவழைத்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருந்தனர். இதற்குப் பதிலளித்த இலங்கை அதிகாரிகள் கொல்லப்பட்ட இரு மீனவர்களும் இலங்கையின் கடற்பரப்பிற்குள் மீன்பிடித்துக்கொண்டு நின்றார்கள் என்று நியாயப்படுத்தியிருந்தனர். இந்திய மீனவர்களைப் பாதுகாக்க இந்திய கரையோர ரோந்துப் படையினரை இந்தியா நிறுத்தியது. இந்தியாவின் கடற்பரப்பிற்குள் நுழைந்தார்கள் என்கிற குற்றச்சாட்டில் இலங்கைக் கடற்படையினரின் ரோந்துக் கப்பல் ஒன்றினைக் கைப்பற்றிய இந்திய கடலோர ரோந்துப் படை, இலங்கைக் கடற்படைக் கப்பலில் இருந்த கடற்படை அதிகாரிகளைக் கைதுசெய்தது. பாக்கு நீரிணையில் தனது ரோந்துகளையும் இந்தியக் கடற்படை அதிகரித்தது. இந்தியக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட தமது கடற்படை அதிகாரிகளையும், கைப்பற்றப்பட்ட ரோந்துக் கப்பலையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொண்டது. பதிலளித்த இந்திய அதிகாரிகள், இலங்கையால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ட்ரோலர் உரிமையாளர்களையும் 17 ட்ரோலர்களையும் உடனடியாக விடுவித்தால் மாத்திரமே இலங்கைக் கடற்படை அதிகாரிகளும் அவர்களது ரோந்துக் கப்பலும் விடுவிக்கப்படும் என்று கூறவும், இரு நாடுகளும் இணங்கி பரஸ்பர விடுவிப்பு இடம்பெற்றது. இந்தப் பிணக்கினைத் தனக்குச் சார்பாகப் பாவிக்க நினைத்த ஜெயவர்த்தன, இலங்கை - இந்திய கடற்படையினர் இணைந்து ரோந்துக்களில் ஈடுபட வேண்டிய அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியதுடன், போராளிகள், அவர்களுக்கான ஆயுதங்கள் மற்றும் ஏனைய பொருட்கள் என்பன கடத்தப்படுவதை இதன் மூலம் தடுத்துவிடலாம் என்றும் ரஜீவிடம் கூறினார். ஆரம்பத்தில் இதுகுறித்துச் சிந்திக்க இணங்கிய ரஜீவ் பின்னர் அதனை நிராகரித்துவிட்டார். தில்லியில் தன்னைச் சந்தித்து, ஜெயாரின் கோரிக்கைக்கு இணங்கவேண்டாம் என்று தமிழ்நாட்டு முதல‌மைச்சர் எம்.ஜி.ஆர் கேட்டுக்கொண்டதையடுத்தே ரஜீவ் ஜெயாரின் கோரிக்கையினை நிராகரித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. கூட்டு ரோந்தினை ரஜீவ் நிராகரித்து விட்டதனால் கொழும்பில் நிலவிவந்த உற்சாகச் சூழ்நிலை சற்றும் மாறவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கை வகுப்பாளர்கள் ரஜீவ் கூறிய "மாவட்ட சபைகளை இணைக்கத் தேவையில்லை, மாவட்டங்களுக்கு சட்டம் ஒழுங்கு அதிகாரத்தினை எவ்விதத்திலும் பகிர்ந்தளிக்கத் தேவையில்லை" போன்ற கூற்றுக்களைப் பயன்படுத்த நினைத்ததுடன், "மாவட்ட சபைகளுக்கு மேலதிகமாக தமிழர்களுக்கு எதனையும் தரமாட்டோம்" என்கிற தமது நிலைப்பாட்டை மீண்டும் தூக்கி நிறுத்த முடிவெடுத்தார்கள். தமது நிலைப்பாட்டிற்கு வலுச்சேர்க்க பாரிய பிரச்சாரமொன்றினை ஐக்கிய தேசியக் கட்சியினர் முன்னெடுத்தனர். இப்பிரச்சாரத்தின் முக்கிய இலக்கே இலங்கைப் பிரச்சினை தொடர்பாக புது தில்லிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே இருக்கும் வேறுபாட்டினை ஆளமாக்குவதுதான். தில்லி மத்திய அரசின் நிலைப்பாடு இலங்கையரசாங்கத்திற்குச் சாதகமானதென்றும், வடக்குக் கிழக்கிற்கு அதிகாரங்களைக் கொடுப்பதென்பது இலங்கைக்கு மட்டுமல்லாமல், இந்தியாவின் நலன்களுக்கும் பாதகமாக அமையும் என்றும் இலங்கை பிரச்சாரம் செய்யத் தொடங்கியது. பிரேமதாஸ இன்னொரு படி மேலே சென்று, "அவர்கள் பிரிவினைவாதிகள் மட்டுமல்ல, மார்க்ஸிஸ சிந்தனை கொண்ட பிரிவினைவாதிகள். ஆகவே அவர்கள் எவ்விலை கொடுத்தாவது அழிக்கப்படுதல் அவசியம்" என்று முழங்கினார். பின்னணியில் பிரமாண்டமான வாத்திய இசை முழங்க பிரேமதாச இனவன்மத்தைக் கக்கும் பேச்சுக்களைக் கொழும்பின் மேடைகளில் நிகழ்த்தி வந்தார். அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டாலும் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகித்த சிறில் மத்தியூ உடனடியாக பாரிய யுத்தம் ஒன்றினை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். பாராளுமன்ரறத்திற்குள்ளேயும், வெளியேயும் தொடர்ச்சியாக பேசிவந்த அவர், தமிழ்ப் போராளிகள் முற்றாக அழிக்கப்பட வேண்டும் என்று முழங்கினார். தன்னால் முடுக்கிவிடப்பட்ட இனவன்மம் மீண்டும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியதையடுத்து அதனைப் பாராளுமன்றத்திற்குள் எடுத்து வந்த ஜெயார், தனது மாசி 20 ஆம் திகதிய பேச்சில் "தமிழ்ப் பிரிவினைவாதிகள் முடிவானதும், இறுதியானதுமான தாக்குதலுக்குத் தயாராகிறார்கள்" என்று கூறி தமிழர்களுக்கெதிரான சிங்களவர்களின் உணர்வினை மேலும் பற்றியெரியச் செய்தார். இதனால் தமிழர்கள் அச்சத்துடன் வாழ ஆரம்பித்தனர். ஏக காலத்தில் ஜெயவர்த்தனவின் அடியாட்களாகச் செயற்பட்ட காமிணி, லலித் ஆகியோரும் தமிழர்களுக்கெதிராக சிங்களவர்களைத் தூண்டிவிடும் இனவன்மப் பேச்சுக்களைத் தொடர்ச்சியாக நிகழ்த்தத் தொடங்கினர். மாசி மாதம் 24 ஆம் திகதி, பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய லலித் அதுலத் முதலி தமது இறுதி யுத்தத்தை பங்குனி அல்லது சித்திரையில் நடத்த தமிழ்ப் போராளிகள் தயாராகி வருவதாகக் கூறினார். "நாம் அந்த யுத்தத்திற்குத் தயாராகவே இருக்கிறோம். அவர்களைத் தோற்கடித்து, நாம் வெற்றிபெறுவோம்" அன்று அவர் அங்கு கர்ஜித்தார்.
  10. மாவட்டங்களை இணைத்து மாகாணங்களை உருவாக்குவதோ, மாவட்டங்களுக்கு சட்டம் ஒழுங்கு அதிகாரங்களை வழங்குவதோ தேவையற்றது ‍- ரஜீவ் காந்தி மிகுந்த விவாத் திறமை கொண்டவரான லலித் அதுலத் முதலி, ஜெயவர்த்தனவின் வாழ்த்துக்களுடன் ரஜீவைச் சந்தித்து, சர்வதேச அளவில் மிகப் பெரும் தலைவராக ரஜீவ் வருவார் என்று ஜெயார் வாழ்த்தியதாகவும் தெரிவித்திருந்தார். அவர் கூறியவாறே ரஜீவ் பாராளுமன்றத் தேர்தலில் பெருவெற்றி பெற்றிருந்தார். மேலும், நேருகுடும்பத்தின் நெருங்கிய நண்பன் என்கிற ரீதியில் ரஜீவிற்கு ஜெயவர்த்தன வழங்கிய ஆலோசனைகளைச் செவிமடுத்ததற்காகவும் அவருக்கு லலித் நன்றி கூறினார்.அடுத்ததாக‌, இதுவரை காலமும் இந்தியா இலங்கை தொடர்பாகக் கைக்கொண்ட நடைமுறை காரணமாக சிங்கள மக்களிடையே இந்தியா ஆக்கிரமிப்பில் இறங்கப்போகிறது என்கிற எண்ணம் வேரூன்றி பெரு விருட்சமாக வளர்ந்து விட்டிருப்பதாகவும் கூறினார். ஜெயாரும், லலித்தும் விரித்த வலையில் ரஜீவ் வீழ்ந்து போனார். இலங்கை மீது இந்தியா எக்காலத்திலும் ஆக்கிரமிப்பில் ஈடுபடாது என்று லலித்திடம் உத்தரவாதம் அளித்தார் ரஜீவ். இதன் மூலம் ஜெயவர்த்தனவைக் கட்டுக்குள் வைத்திருக்க அதுவரை தான் கொண்டிருந்த சாட்டையினை இந்தியா இழந்தது. அதன் பிறகு தனது இரண்டாவது கோரிக்கைகள் குறித்துப் பேச்சை ஆரம்பித்தார் லலித். பேச்சுவார்த்தைகளை புதிதாக ஆரம்பிப்பதும், பார்த்தசாரதியை பேச்சுக்களில் இருந்து முற்றாக அகற்றுவதும் தான் அவை. லலித் எதிர்பார்த்திருந்த சந்தர்ப்பத்தை ரஜீவே அவருக்கு வழங்கினார். சர்வகட்சி மாநாட்டினை ஜெயார் திடீரென்று கலைத்துப்போட்டது தொடர்பான இந்தியாவின் ஏமாற்றம் குறித்து ரஜீவ் பேசியபோது, சிங்கள மக்களின் பங்களிப்பும், ஆதரவுமின்றி சர்வகட்சி மாநாட்டினைத் தொடர்ந்து நடத்துவது இயலாத காரியம் என்று லலித் கூறினார். எதிர்க்கட்சித் தலைவியான சிறிமாவின் நடவடிக்கைகள் சர்வகட்சி மாநாட்டினை ஸ்த்தம்பித நிலைக்குக் கொண்டுவந்திருப்பதாக லலித் கூறினார். மேலும் சிங்கள மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத தீர்வினை பார்த்தசாரதி ஜெயார் மீது திணிப்பதாக லலித் குற்றஞ்சாட்டினார். சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளும் தீர்வு ஒன்றுபற்றி கலந்தாலோசிக்க புதிதாக பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் பார்த்தசாரதி மிகவும் நெருங்கிச் செயற்பட்டு வருவதாக சிங்கள மக்கள் நம்புவதாகவும், ஆகவே புதிய பேச்சுவார்த்தைகளில் சிங்கள மக்கள் நம்பிக்கை கொள்ளவேண்டுமானால் பார்த்தசாரதி பேச்சுக்களில் கலந்துகொள்ளக் கூடாது என்றும் லலித் வாதிட்டார். ரஜீவினால் நியமிக்கப்பட்ட இந்தியாவின் புதிய வெளியுறவுச் செயலாளர் ரொமேஷ் பண்டாரி - ஐப்பசி 31, 1985 லலித் கேட்டுக்கொண்டபடியே பேச்சுவார்த்தைகளைப் புதிதாக ஆரம்பிக்க ஒத்துக்கொண்ட ரஜீவ், அவை நடுநிலையானவையாகவும், இலக்கை அடையும் நோக்கிலும் நடைபெறும் என்று உத்தரவாதம் அளித்தார். மேலும், தனது புதிய வெளியுறவுச் செயலாளரான ரொமேஷ் பண்டாரியே பேச்சுவார்த்தைகளுக்கு பொறுப்பாக இருப்பார் என்றும் கூறினார். ஜெயாருடன் தொடர்பாடுவது குறித்து பார்த்தசாரதி தன்னிடம் தெரிவித்த கருத்துக்களையும், எச்சரிக்கைகளையும் ரஜீவ் முற்றாக நிராகரித்ததுடன், அவரை அரசியல் விவகார குழுவிற்கு இடமாற்றம் செய்தார். ஜெயவர்த்தனவை சிறிதும் நம்பாத பார்த்தசாரதி, கிளட்டு நரியின் கபடத்தனம் குறித்து ரஜீவ் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று முன்னர் கூறியிருந்தார். ஆனால், ஜெயவர்த்தனவை மிகச் சிறந்த இராஜதந்திரியென்றும், உண்மையான பெளத்தன் என்றும் எடைபோட்ட ரஜீவ், பார்த்தசாரதியின் எச்சரிக்கையினை எள்ளளவும் கண்டுகொள்ளவில்லை. லலித்திடம் பேசிய ரஜீவ், ராணுவத்தினரின் பிரசன்னத்தை தமிழர் பகுதிகளில் குறைத்து, அவர்களால் மேற்கொள்ளப்படும் படுகொலைகளை நிறுத்தி, தமிழர்களுக்கு ஓரளவிற்கான தன்னாட்சி அதிகாரத்தை வழங்குவது இலங்கைக்கு நண்மை பயக்கும் என்று கூறினார். தமிழ் மக்களின் பிரச்சினைக்கான அரசியல்த் தீர்வுகுறித்து ரஜீவும் லலித்தும் நீண்டநேரம் பேசினார்கள் என்று கூறப்படுகிறது. ரஜீவுடன் பேசும்போது தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் கோரும் மாகாணசபைகளை வழங்கும் நிலையில் தமது அரசாங்கம் இல்லையென்று லலித் கூறினார். மாவட்ட சபைகளே அரசாங்கத்தல் வழங்கப்படக் கூடிய அதிகபட்ச அதிகார அலகு என்று கூறிய லலித், தேவையேற்படின் மாவட்ட சபைகளுக்கான அதிகாரங்களை மீள்பரிசீலினை செய்ய அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் கூறினார். லலித்தின் கூற்றுடன் ஒத்துப்போன ரஜீவ், மாவட்டங்கள் ஒன்றாகச் சேர்ந்து மாகாணங்களாக உருவாக்கவேண்டிய தேவை இல்லை என்று கூறியதுடன், சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டும் பொறுப்பினை அவற்றிற்குக் கொடுக்கவேண்டிய தேவையும் இல்லையென்று கூறினார். "லலித் அதுலத் முதலியைப் பொறுத்தவரை, மாகாணங்களுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பாக இந்திரா காந்தி கொண்டிருந்த அறிவைக் காட்டிலும், ரஜீவ் காந்தி பரந்துபட்ட அறிவைக் கொண்டிருந்தார்.மேலும், மாவட்ட சபைகள் ஒன்றிணைக்கப்பட்டு மாகாணங்களாகச் சேர்க்கப்படுதல் அவசியமில்லையென்கிற நிலைப்பாட்டையும் ரஜீவ் ஏற்றுக்கொண்டார். இதன்மூலம், இலங்கை அரசாங்கத்தின் தீர்வு தொடர்பான நிலைப்பாட்டுடன் ரஜீவ் ஒத்துப் போவதும், பார்த்தசாரதியின் நிலைப்பாட்டிலிருந்து அவர் விலகிச் செல்வதும் தெரிந்தது. மேலும், லலித்தும் ரஜீவும் மாவட்ட சபைகளுக்கான அதிகாரங்கள் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்தினைக் கொண்டிருந்தார்கள். மேலும், இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டைப் போன்றே மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் கொடுக்கப்படத் தேவையில்லை என்ற நிலைப்பாட்டினை ரஜீவும் கொண்டிருந்தமை லலித்திற்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தது. மேலும், பஞ்சாப் விவகாரத்தில் இந்தியா இதே தவறை இழைத்திருந்தது என்றும், ஆகவே இனிமேல் இவ்வாறான தவறுகள் ஏற்படாது என்று ரஜீவ் உறுதியளித்தார்" என்று ஜெயவர்த்தனவின் சுயசரிதையினை எழுதிய கே.எம்.டி.சில்வாவும், ஹவார்ட் ரிக்கின்ஸும் குறிப்பிட்டிருக்கிறார்கள். பொதுமக்கள் கொலைகள் குறித்து இலங்கை அரசாங்கத்தை தான் எச்சரித்ததாக ரஜீவ் காந்தி லொஸ் ஏஞ்ல்ஸ் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். "நீங்கள் பயங்கரவாதிகளைக் கொல்லலாம், அது பரவாயில்லை, ஆனால், பயங்கரவாதிகள் அல்லாத பொதுமக்களைக் கொல்லும்போது இந்தியாவில் ஏற்படும் உணர்வுகள் குறித்து நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். பொதுமக்கள் கொல்லப்படும் வேளை எம்மால் உதவுவது கடிணமாக இருக்கும் என்று லலித்திடம் நான் கூறினேன்" என்று ரஜீவ் மேலும் தெரிவித்தார்.
  11. கடவுள் இல்லை, இருந்தால் தீமைகள் நடைபெற வாய்ப்பில்லை.
  12. அரசியல் கற்றுக்குட்டியான ரஜீவை தமது வலைக்குள் வீழ்த்திய ஜெயவர்த்தனவும் லலித் அதுலத் முதலியும் ரஜீவ் காந்திக்கும் லலித் அதுலத் முதலிக்குமிடையிலான சந்திப்பு நடைபெறவிருந்த நாளான மாசி மாதம் 13 ஆம் திகதி புலிகள் நடத்திய கொக்கிளாய் இராணுவ முகாம் மீதான தாக்குதல் அவர்கள் எதிர்பார்த்தளவிற்கு வெற்றியளிக்கவில்லை. தாக்கிவிட்டு மறையும் உத்தியை அதுவரை காலமும் கடைப்பிடித்துவந்த போராளிகள், பலப்படுத்தப்பட்ட முகாம் ஒன்றினை நேரடியாகத் தாக்கும் நிலைக்கு வந்துவிட்டார்கள் என்பதை ஜெயார் உணர்ந்துகொண்டபோதிலும், இத்தாக்குதல் பிரபாகரன் திட்டமிட்ட வகையில் இடம்பெற்றிருக்கவில்லை. இத்தாக்குதலின் மூலம் அவர் அடைய எதிர்ப்பார்த்த இலக்கினை அவர்களால் அடைய முடியவில்லை. இத்தாக்குதலின் மூலம் கொக்கிளாய் முகாமினை முற்றாக அழித்துவிட பிரபாகரன் திட்டமிட்டிருந்தார். ஆகவே இத்தாக்குதலினால் ஏற்பட்ட சரிவைச் சரிசெய்ய அடுத்த தாக்குதல் வெற்றிகரமாக அமையவேண்டும் என்று அவர் உறுதிபூண்டார். அடுத்த தாக்குதலுக்கான திட்டத்தினை வகுத்த அவர், அதற்காக தனது போராளிகளை பயிற்றுவிக்க ஆரம்பித்தார். பிரபாகரனுடன் கிட்டு பண்டிதரின் மறைவிற்குப் பின்னர் கிட்டுவே டயாழ்ப்பாணத்தின் தளபதியாக பிரபாகரனால் நியமிக்கப்பட்டிருந்தார். கிட்டுவே யாழ்ப்பாணத் தாக்குதலை நடத்துவார் என்றும் பிரபாகரன் முடிவெடுத்தார். யாழ்ப்பாண மாவட்டத்தின் பொலீஸ் தலைமைக் காரியாலயமான யாழ்ப்பாண பொலீஸ் நிலையமே புலிகளின் இலக்காக இருந்தது. சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நாள் ஒன்றினையே யாழ் பொலீஸ் நிலையத் தாக்குதலுக்கும் பிரபாகரன் தேர்வுசெய்தார். சித்திரை 10 ஆம் திகதியான அன்றே இங்கிலாந்தின் பிரதமர் மாக்கிரெட் தட்சர் கொழும்பிற்கு விஜயம் செய்யவிருந்தார். இராணுவத்தினருடனும், பொலீஸாருடனும் நேரடியாக மோதும் நிலைக்குத் தமிழ்ப் போராளிகள் வந்துவிட்டார்கள் எனும் செய்தியை சர்வதேசத்திற்குச் சொல்ல இத்தாக்குதலைப் பயன்படுத்த பிரபாகரன் எண்ணினார். 70 களில் தாக்கிவிட்டு மறையும் கெரில்லாத் தாக்குதல்களில் ஈடுபட்ட போராளிகள், பின்னர் 1984 வரை, நின்று சண்டையிடும் கெரில்லாக்கள் எனும் நிலைக்கு உயர்ந்து, அதன் பின்னரான காலத்தில் இராணுவ முகாம்கள் மீதும் பொலீஸ் நிலையங்கள் மீதும் நேரடியான தாக்குதல்களை நடத்தும் அளவிற்கு முன்னேறியிருந்தார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. பிரபாகரனின் திட்டங்கள் குறித்து எந்தவித தகவலும் அறிந்திராத லலித் அதுலத் முதலி, ரஜீவ் காந்தியை எவ்வாறு ஜெயாரின் வலைக்குள் வீழ்த்தலாம் என்பது குறித்துக் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார். சிறந்த திட்டமிடலாளரும், ராணுவ விடயங்கள் குறித்து அறிந்து வைத்திருந்தவருமான ஜெயவர்த்தன, ஆரம்பம் முதலே தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டமும் இந்தியாவின் நலன்களும் ஒரே திசையில் பயணிக்கப்போவதில்லை என்பதை நன்கு அறிந்தே இருந்தார். இந்தியாவின் தேசிய நலன்கள் என்று வருகையில், தனது நலன்களை உறுதிப்படுத்திக்கொள்வதில், இலங்கை தன்னிடம் முற்றான சரணாகதியினை அடையவேண்டும் என்று இந்தியா எதிர்பார்த்தது. ஆகவேதான் தனது வெளியுறவுக் கொள்கையின் வழியே இலங்கையை வீழ்த்துவதற்கு தமிழ் மக்களை அழுத்தம் கொடுக்கும் கருவியாகப் பாவிக்க இந்தியா விரும்பியது. இதனால் இலங்கையிலிருந்து தமக்கான தனிநாட்டினை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு போரிட்ட தமிழ்ப் போராளி அமைப்புக்களின் அவாவும் இந்தியாவின் தேசிய நலன்களும் நேர் எதிரானவையாக மாறிப்போயின‌. தமது திட்டத்தின்படி, தாம் முன்வைக்கவிருக்கும் கோரிக்கைகளுக்கு ரஜீவ் காந்தியை இணங்கப்பண்ணுவதனூடாக தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தைப் பலவீனப்படுத்தலாம் என்று லலித் திட்டமிட்டார். அவையாவன, 1. இலங்கையை இந்தியா ஒருபோதும் ஆக்கிரமிக்காது எனும் உத்தரவாதம். 2. சமரசப் பேச்சுவார்த்தைகளை மீள புதிதாக ஆரம்பிப்பது. 3. தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கான ஆயுத உதவிகளை இந்தியா நிறுத்திக்கொள்வது. 4. பார்த்தசாரதியைப் பேச்சுவார்த்தைகளிலிருந்து முற்றாக விலக்குவது. 5. தமிழ் நாட்டிலிருந்து மத்திய அரசாங்கத்தின் மேல் கொடுக்கப்படும் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் இருப்பது. 6. பாக்கு நீரிணையில் இந்திய ‍- இலங்கைக் கடற்படைகளின் கூட்டு ரோந்துகளை ஆரம்பிப்பது. சுமார் இரண்டு மணித்தியாலங்களாக தனது உதவியாளர் ஒருவர் உடனிருக்க, ரஜீவுடன் பேச்சுக்களில் ஈடுபட்ட லலித் அதுலத் முதலி, தனது கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றிற்கு ரஜீவின் சம்மதத்தைப் பெறுவதில் வெற்றி பெற்றார். தில்லியிலிருந்து ஜெயவத்தனவைத் தொடர்புகொண்ட லலித், "ரஜீவுடனான பேச்சுக்கள் சிநேகபூர்வமாகவும், மிகுந்த பலனளிப்பவையாகவும் இருந்தன" என்று அறிவித்தார். பேச்சுக்களை ஆரம்பிக்கும்போது ரஜீவ் "பாக்கிஸ்த்தான் உள்ளடங்கலாக, தென்னாசியாவின் அனைத்து நாடுகளுடனும் நட்பான தொடர்பாடல்களை ஆரம்பிக்க மிகுந்த விருப்பம் கொண்டுள்ளேன்" என்கிற தலைப்புடனேயே ஆரம்பித்தார். மேலும், "ஜெயவர்த்தனவின் தில்லி வருகையினை மிகுந்த ஆவலுடன் நான் எதிர்பார்த்திருக்கிறேன்" என்றும் லலித்திடம் அவர் கூறினார்.
  13. உத்தேச பேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே தனது பக்க நிலைப்பாட்டினை இந்தியாவுக்கு தெரிவித்த ஜெயார் கோபாலசாமி பார்த்தசாரதி இந்தியாவின் கொள்கை மாற்றம் குறித்து பிரபாகரன் அனுமானித்திருந்தார் என்று எழுதும் பாலசிங்கம், அதனாலேயே பாரத்தசாரதி தன்னிடம் கூறிய விடயங்களை பிரபாகரனிடம் தான் விபரித்தபோது அவர் அதிர்ச்சியடையவில்லை என்று தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், யுத்தநிறுத்தம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டினை ஏற்றுக்கொள்ள மறுத்த பிரபாகரன், புதிய தாக்குதல்கள் குறித்துச் சிந்தித்து வந்தார். இவ்வாறு பிரபாகரனால் திட்டமிடப்பட்ட தாக்குதல்களில் முதலாவது கொக்கிளாய் இராணுவ முகாம் மீதான தாக்குதலாகும். இது குறித்து மேலே பார்த்தாயிற்று. அடுத்த தாக்குதல் யாழ்ப்பாணத்தின் பிரதான பொலீஸ் நிலையம் மீதானது. இது குறித்து இனிவரும் அத்தியாயங்களில் பார்க்கலாம். அமிர்தலிங்கத்துடனான தனது சந்திப்பு நிறைவடைந்து நான்கு நாட்களின் பின்னர், தை மாதம் 18 ஆம் திகதி (1985), இந்தியாவிற்கான இலங்கையின் தூதுவர் பேர்ணாட் திலகரத்னவை தனது அலுவலகத்திற்கு அழைத்த ராஜீவ் காந்தி, இலங்கையின் இனப்பிரச்சினையினைத் தீர்த்துவைக்க இந்தியா விருப்பம் கொண்டிருப்பதாகக் கூறினார். ஆகவே, ஜெயவர்த்தனவுடன் இதுகுறித்து பேசுவதற்கு சந்திப்பொன்றினை ஒழுங்குசெய்யுமாறு அவர் திலகரத்னவைக் கேட்டுக் கொண்டார். இச்சந்திப்புக் குறித்து ஜெயவர்த்தன அறிந்துகொண்டபோது அதனைத் தவிர்க்க முடிவுசெய்தார். ஆகவே, லலித் அதுலத் முதலியை இலங்கை அரசாங்கத்தின் விசேட தூதுவர் என்கிற பெயரில் இச்சந்திப்பில் கலந்துகொள்ள அனுப்புவதென்று முடிவெடுத்தார். இச்சந்திப்பு 1985 ஆம் ஆண்டு மாசி மாதம் 13 ஆம் திகதி தில்லியில் நடைபெற்றது. அந்த நாளினை இராணுவம் மீது பாரிய தாக்குதல் ஒன்றிற்கான நாளாக பிரபாகரன் குறித்துக்கொண்டார். ரஜீவுடன் சந்திப்பொன்றிற்கான கோரிக்கை விடுக்கப்பட்ட நாளான தை மாதம் 18 ஆம் திகதியிலிருந்து லலித்தை ரஜீவ் சந்தித்த நாளான மாசி மாதம் 13 ஆம் திகதி வரையான காலப்பகுதியை இந்தியாவின் சமாதானத் தூதுவர் பார்த்தசாரதியை விமர்சிக்கவும், மாகாணசபை முறைமையினைக் கோரிவந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை அரசியல் ரீதியாகப் பலமிழக்கப் பண்ணும் கைங்கரியங்களிலும் ஜெயவர்த்தன ஈடுபடலானார். பார்த்தசாரதி மீதான விமர்சனத்தை முன்வைத்த அரச ஊடகங்கள், அவர் ஒரு தமிழர் என்பதால், தமிழர்களுக்குச் சார்பாக நடக்கிறார் என்றும், அவரது மத்தியஸ்த்தத்தினை சிங்களவர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் கூறத் தொடங்கின. மேலும், மாவட்ட சபைகளுக்கு மேலதிகமான எந்தத் தீர்வையும் தமிழர்களுக்கு வழங்கச் சிங்களவர்கள் தயாரில்லை என்று அவை எழுதிவந்தன. பிரதமர் பிரேமதாசா, "மாவட்ட சபைகளே, அதற்கு மேல் எதுவும் இல்லை" என்கிற பிரச்சாரத்தைத் தொடர்ச்சியாக நடத்தி வந்தார். நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தைகளில் தமது பக்க கோரிக்கையாகவும், தீர்வாகவும் இவற்றை இந்தியாவுக்கு மறைமுகமாகத் தெரிவிக்க இதனை இலங்கையரசு செய்திருந்தது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.