எண்பத்தி மூன்றினிலே எண்பத்தி மூன்றினிலே -ஆ இலங்கைத் தீவினிலே எண்பத்தி மூன்றினிலே இந்து மா கடலுக்கு நடுவினிலே - ஆடி ஈர்பத்து மூன்றிற் தொடங்கியதே துயர் இலங்கைத் தீவினிலே கண்பட்டதோ இத் தமிழினத்திற்கென கண்டவர் யாரும் வருந்திட எங்களைப் புண்படச் செய்தனரே - ஒரு போக்கிடமற்ற அகதிகளாக்கியே எண்பட்ட யாவரையும் தமிழ் என்றறிந்தால் உடன் கொன்றெறிந்தார் - அந்தோ (எண்பத்தி...)
நெஞ்சங் குமுறிடவே-கற்பு நீங்கிடச் செய்த கொடுமையிலே - அந்தப் பஞ்சைத் தமிழ் மகளிர் - கொடும் பாவிகளாற் தங்கள் ஆவியை விட்டிட அஞ்சிய பாலகர்கள் - தங்கள் அன்னையர் மார்பில் அமுதமருந்தியே துஞ்சிய செய்திகளும் - பல துயரக் கதைகளும் மறந்திடுமோ - அந்த (எண்பத்தி...) தேயிலைத் தோட்டத்திலே - அந்தத் தெற்கு இலங்கையிலே ஆயிரமாயிரமாய்த் தமிழ்ச் சோதரர் அன்று இனவெறியாற் கொலையுண்டதும் நாயிலும் கீழ்க்கடையாய் - எம்மை நாடற்ற பேர்களாய் ஆக்கிய பின்னரும் காயும் இனவெறியால் - எம்மேல் காறியுமிழ்ந்ததும் நெஞ்சை விட்டேகுமோ (எண்பத்தி...)
வெலிக்கடைச் சிறையில்-மனம் வெம்பிக் கிடந்த எம் சோதரர் தன்னையே... சிலிர்க்குதேயுடலம்...அந்தோ! சிந்தனை செய்திடவும் மனம் கூசுதே... பலிக்கு வெட்டினரே... பத்மாசனப் புத்தன் முன் கண்களைக் குத்தியே படையலிட்டனரே - அந்த பாதகம் எங்களின் நெஞ்சை விட்டேகுமோ (எண்பத்தி...) ஆண்ட அரச படை - எங்கள் அன்னையர் தங்கையர் மானம் பறித்ததும் மூண்ட பெருந்தீயில் - செல்வம் முற்றும் இழந்து நாம் ஏதிலரானதும் மாண்டவர் கண்களையே - அந்த மானமிலாதவர் தோண்டி மகிழ்ந்ததும் மீண்டும் நினைவலையில் - வந்து மேவிட வெந்துயர் ஆவியைத் தீய்க்குது (எண்பத்தி...)
சிங்கள பௌத்தவெறி - எங்கள் செந்தமிழ்த் தாயைச் சிதைத்த கொடுமையை எங்கு முறையிடுவோம் - எமக்(கு) ஈழத்தையன்றியே யாதும் புகலுண்டோ! தங்கையர் தம்பிகளே! - தமிழ் ஈழ சரித்திரம் நாளும் படித்து நீர் பொங்குக பொங்குகவே - ஒரு போக்கிடமற்ற அகதிகளாயினோம் (எண்பத்தி...)
மேற்குலகந்தனிலே - பொருள் மேவிய வாழ்வொடு வாழினும் எங்களின் நாட்டை மறப்போமோ! - எந்த நாளினிப் போயதைக் காண்பதென்றே-அன்னை வீட்டை மறப்போமோ! - என்று விம்மியழுது புலம்பிடும் எம்குரல் கேட்டிருப்பாய் காற்றே - அந்த கேவலைக் கீழ்த்திசை சென்றெமதீழத்தில் மீட்டு முரையாயோ - நாங்கள் விம்மியழவும் திறன் கெட்டுப் போயினோம் (எண்பத்தி...)
ஆற்றல் இழந்தவராய்- எங்கள் அன்னை மொழியை மறந்தவராய்ப்-பெருங் காற்றிற் கலந்தவராய் - கலாச் சாரம் கலைகள்அழிந்தவராய்- நாம் மாற்றினமாகுவதோ - இல்லை மானத் தமிழர்களாய் என்றும் வாழ்வதோ சாற்றிடுவாய் தாயே - ஹே! சாமுண்டி காளீ! வீரகராளீ! (எண்பத்தி...)
1983 ஆடி 24 இல் எம்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன வன்முறையை நினைவு கூர்வோம்.
பாடியோர்: மாட்டின் சோபியா பாடல்களும் மெட்டும்: யுகசாரதி (எஸ். கருணானந்தராஜா)
இசை: சதீஸ் குழுவினர்
பாடலும் ,பாடல் வரிகளும், இசையும் மீண்டும் நினைவுக்கு கொண்டு செல்கிறது. ஆடி மாதம் என்றாலே ஈழத்தமிழருக்கு சோக கீதங்கள் நெஞ்சை வாட்டும். கண்களிலே கலக்கம் மாறாத வடுக்களும் தீராத சோகமும் நிழலாடும்.
பகிர்வுக்கு மிக்க நன்றி