Jump to content

shanthy

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    4644
  • Joined

  • Last visited

  • Days Won

    29

Posts posted by shanthy

  1. கரும்புலி ரெட்ணாதரனுக்கு வணக்கம் செய்த அனைவருக்கும் நன்றிகள். வாழும் போது கற்பூரமாக வாழ்ந்து கடைசியில் காற்றாகிப் போன ரெட்ணாதரன் போன்ற பலரின்  நினைவுகளை வரலாறுகளை இயன்றவரை சேமிப்போம். 

  2. வாகரையில் கரைந்த வரலாறு மேஜர் ரெட்ணாதரன்.

     
    Karumpuli-Mejar-Radnaatharan-600x849.jpg

    கரும்புலி மேஜர் ரெட்ணாதரன்

    குமாரசாமி ஆனந்தன்

    வீரப்பிறப்பு – 04.05.1975

    வீரச்சாவு - 09.08.1999

    கோடைமேடு எருவில்

    களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு.

    அழகின் இரகசியங்களையெல்லாம் தனக்குள்ளே பூட்டி வைத்திருக்கும் கிழக்கின் கிராமங்களில் களவாஞ்சிக்குடி கோடைமேடு கிராமத்தின் அழகையும் வளத்தையும் வற்றா ஊற்றாய் வடித்தால் அது பொய்யாகாது.

    நீரை நிறைத்த அழகான குளமும் அதன் மீது தன் இதழ்களால் வர்ணங்களை அப்பிடி வைத்திருக்கும் பூக்களும் , பறவைகளும் , மீன்களும் பசுமையின் ரம்மியத்தில் கரைந்து போய்விடும் மனசு.

    இத்தனை ரம்மியங்கள் நிறைந்த கோடைமேடு கிராமத்தில் குமாரசாமி , பூரணிப்பிள்ளை இணையருக்கு ஆனந்தன் என்ற குழந்தை வந்துதித்தான். ஆனந்தன் அர்ச்சுனனின் வீரத்தையும் அபிமன்யுவின் விவேகத்தையும் கொண்டவனாகவே வந்து பிறந்தான்.

    கிழக்கின் விடிவெள்ளிகளில் ஒருவனாகி அவன் ஒருநாள் விடி நட்சத்திரமாவான் என்ற உண்மையை காலம் எழுதி வைத்தது. அவன் கடவுளின் குழந்தையாகவே பிறந்தான் வளர்ந்தான் வாழ்ந்தான் வரலாறாகினான் என்பதையும் காலம் தன் பொன்னேட்டில் பொறித்தும் கொண்டது.

    கல்வியில் சிறந்த மாணவனான ஆனந்தன் விவசாயத்தை நம்பிய உழைப்பாழியான அவனது தந்தைக்கு கல்வி நேரம் தவிர்ந்த நேரங்களிலெல்லாம் கைகொடுத்துக் கொண்டிருந்த தர்மன் அவன்.

    புயலின் வீச்சையும் வேகத்தையும் அவன் பங்கு கொள்ளும் விளையாட்டுகளில் வெளிப்படுத்தும் சிறந்த விளையாட்டு வீரன். அமைதியான நீரோடையின் அசைவில் கேட்கும் மெல்லிய சங்கீதம் போல எப்போதுமே அவனது பார்வையும் பேச்சும் தன்னடக்கமும் எல்லோரையும் மதிக்கும் பண்பையும் கொண்ட மகத்தானவன்.

    அடக்குமுறையாளர்களின் அக்கிரமங்களை , ஆதிக்க வெறியர்களின் அநியாயங்களையெல்லாம் அவனது கிராமமும் காலத்துக்குக் காலம் சந்தித்துக் கொண்ட சோகவரலாறுகள் பலதைத் தன்னோடு சுமந்து கொண்டிருந்த துயரங்கள் ஆனந்தனையும் தாக்காமல் கடந்து போகவில்லை.

    பயமும் , பதற்றமும் , பலியெடுப்புகளின் இரத்த வாடையும் ஆனந்தனின் ஞாபகப்பதிவில் பதியப்பட்ட ஆறாத வடுக்கள் அவனது குழந்தை நெஞ்சில் நீங்காத துயரத்தை நிரந்தரமாக்கியது.

    2ம் கட்ட ஈழப்போர் தொடங்கிய 90களின் நடுப்பகுதியில் அவனது பிறந்த ஊரையும் அவனது மாவட்டத்தையும் பிணக்காடாக்கிக் கொண்டிருந்தது இனவாத சிங்களம். 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்கள இராணுவ வெறியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வெட்டியும் குத்தியும் சுட்டும் தமிழ் உயிர்கள் பலியெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த  கொடுமை நிறைந்த நாட்கள்.

    12.06.1990அன்று கழுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினரைச் சுற்றிவளைத்துப் புலிகள் தாக்குதலைத் தொடுத்திருந்தார்கள். எதிரி கிராமங்களை நோக்கி உட்புகுந்து கொண்டிருந்தான். வீடுகளில் சமைக்கப்பட்ட உணவுகள் , சொத்துகள், உடமைகள் யாவையும் விட்டுவிட்டு தங்கள் சொந்த ஊர்களை விட்டு வெளியேறி அயல்கிராமங்களில் அடைக்கலம் புகுந்தார்கள்.

    ஊர்கள் அமைதியாகியது. கொலைஞர்கள் தங்கள் முகாம்களுக்குப் போயிருப்பார்கள் என நம்பினர் மக்கள். முதல்நாள் பசியோடு ஊரைத்துறந்தவர்கள் மறுநாள் பசிக்களைப்போடு தங்கள் வீடுகளை அடைந்தார்கள். ஆனந்தனும் அவனது குடும்பமும் தங்கள் சொந்த வீட்டிற்கு வந்தார்கள். முதல்நாள் சமைத்து வைத்த உணவை ஆனந்தனும் அவனது குடும்பத்தினரும் சாப்பிடத் தொடங்க அங்கே பேரதிர்ச்சி அவர்களைத் தாக்கியது.

    ஊரைவிட்டுப் போய்விட்டார்களென நம்பி ஊர் வந்தவர்களின் வளவுகளில் ஒளித்திருந்த சிங்களப்படைகள் துப்பாக்கி முனையில் அவர்களைச் சூழ்ந்தார்கள். ஆனந்தனின் குடும்பத்தோடு அயலவர்களையும் சேர்த்து 17பேரை களவாஞ்சிக்குடி முகாமுக்கு அழைத்துச் சென்றார்கள். தங்கள் பாதுகாப்புக்காக அவர்களைத் தங்கள் முகாமுக்கு அழைத்துச் சென்ற சிங்களப்படைகள் அந்தப் 17பேரையும் வீடுகளுக்குச் செல்லுமாறு பணித்தார்கள்.

    உயிர் தப்பிய நிம்மதியில் அவர்கள் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள். வெடிச்சத்தங்கள் அவர்களின் நடையின் வேகத்தைத் தளர்த்திப் போட்டது. செல்லும் வழியெங்கும் வெட்டியும் , குத்தியும் , சுட்டும் படுகொலை செய்யப்பட்ட பிணங்களை எண்ணிக் கொண்டே அவர்கள் வீடுகளை அடைந்தார்கள்.

    அன்று 43அப்பாவித் தமிழ் உயிர்கள் சிங்கள கொலைகாரப்படைகளால் கொன்றொழிக்கப்பட்டிருந்தார்கள். ஆனந்தனின் அமைதியான முகத்தில் ஆயிரக்கணக்கான கேள்விகள்.....! அவன் கண்முன்னே பிணங்களாகக் கிடந்த மனிதர்களின் நினைவுகள் அவனது அமைதியைக் கொன்றது.

    எருவில் கண்ணகி வித்தியாலயத்தின் கல்வி பயின்று கொண்டிருந்தவனின்   பாதையை மாற்றிய ஆதிக்க சிங்கள வெறியர்களின் பலியெடுப்புகள் அவனது கல்வியைத் தொடர முடியாமல் தடுத்தது. க.பொ.தா.சாதாரணதரத்தோடு கல்வியை நிறுத்திவிட்டு விடுதலை வேண்டிய புனிதப்பாதையில் ஆனந்தன் புலியாகினான்.

    மென்மையான இயல்பும் மிருதுவான சிந்தனைகளையும் கொண்ட ஆனந்தன் பயிற்சிக்குச் சென்று பயிற்சி முடித்து ஆயுதம் ஏந்திய போது இரும்பின் இறுக்கத்தையும் இமயம் வெல்லும் ஒழுக்கத்தையும் இலட்சிய உறுதியையும் பெற்றுக் கொண்டு வெளி வந்தான்.

    ஒரு போராளியாக களமாடும் புலிவீரனாக பரிணமித்த ஆனந்தன் என்ற சொந்தப் பெயரைக் கொண்ட ரெட்ணாதரனென்ற ஆற்றளானனை புலிகள் இயக்கம் பெற்றுக் கொண்டது.

    களமாடும் தருணத்தில் நெருப்பின் மையமாக போரிடும் ரெட்ணாதரனின் திறமையை மருத்துப்பிரிவு உள்வாங்கிக் கொண்டது. மருத்துவப் போராளியாக துப்பாக்கி ஏந்திய கையில் மருத்துவக் கருவியைத் தாங்கிக் கொண்டு களங்களில் நின்றான்.

    அவனது முதல் மருத்துவப்பணி பூனகரி கூட்டுப்படைத்தளம் மீதான புலிகளின் தாக்குதலின் போதே ஆரம்பமானது. முதல் களமருத்துவ அனுபவத்திலிருந்தும் அவன் கற்றுக் கொண்ட விடயங்களிலிருந்தும் தன்னை மேலும் வளர்த்துக் கொள்ளும் தனது தேடலையும் முயற்சியையும் கைவிடாமல் கடமையை மறவாத செயல்வீரனாகினான்.

    1994இல் மீண்டும் மட்டக்களப்பிற்கு வந்தான். களமாடும் போராளிகளுக்கு மருத்துவனாக மட்டுமன்றி தாயாக , தந்தையாக அவர்களின் எண்ணங்களின் செயலாக மாறியிருந்தான். மட்டக்களப்பு கட்டுமுறிப்பு முகாம் மீதான தாக்குதலில் ஜெயந்தன் படையணியின் முதன்மை மருத்துவப் போராளியாகக் கடமையை ஏற்று அவன் செய்த மருத்துவப்பணியானது காலத்தால் மறக்காத சாதனை.

    மருத்துவத்துறை சார்ந்து தனது ஆற்றலை வளர்த்துக் கொள்ளும் முகமாக மருத்துவத்துறையில் தன்னை அதிகம் ஈடுபடுத்தி கற்றுக் கொண்டான். கற்ற மருத்துவத்தை களத்தில் செயற்படுத்துகிற போது புதிய புதிய அனுபவங்களையும் தந்திரங்களையும் கற்றுக் கொண்டான்.

    ஒவ்வொரு போராளிக்கும் அவன் தாயாக தந்தையாக மருத்துவனாக மட்டுமன்றி அண்ணனான தம்பியாக நல்லாசானாக அவன் எடுத்த அவதாரங்கள் பல. எத்தனை கடுமையான ஆபத்து நிறைந்த காயங்களோடு போராளிகள் வந்தாலும் அவர்களை அவனது வார்த்தைகளே உயிர் கொடுத்து அவர்களை இயங்க வைத்துவிடும். அப்படித்தான் அவன் எல்லோர் மனங்களையும் வென்ற மருத்துவப் போராளி.

    ரெட்ணாதரனின் ஆற்றல் அவதானிக்கப்பட்டு 1994 சந்திரிகா அரசுடனான பேச்சுவார்த்தை காலத்தில் மாவடி முன்மாரி கோட்ட மருத்துவப் பொறுப்பாளராக நியமனம் பெற்று தனது பணியைத் தொடர்ந்திருந்தான்.

    மருத்துவப் போராளியாக போராளிகளுக்கெல்லாம் சிறந்த மருத்துவனாகச் செயற்பட்ட ரெட்ணாதரன் அல்சரால் பாதிக்கப்பட்டிருந்தும் ஒரு போதும் அந்த வலிகளை வெளிக்காட்டாமல் சாதனையொன்றுக்கான கனவோடு வாழ்ந்த சரித்திரம்.

    அவனது மருத்துவப் பொறுப்பாளர் லெப்.கேணல்.சாண்டோவுடன் தனது கனவுகளையெல்லாம் சொல்லிச் சொல்லி இலட்சிய நெருப்பை இதயத்தில் மூட்டித் திரிந்த கரும்புலி. கரும்புலியாய் கனவு வளர்த்த புலிவீரன் 1998ஆடிமாதம் அம்பாறையைச் சென்றடைந்தான்.

    மிகுந்த சவால்கள் நிறைந்த அந்நாட்களில் சிங்களவர்களாலும் முஸ்லீம்களாலும் பாதிப்பையும் பயத்தையும் சந்தித்த காலமது. அத்தனை சிரமங்களையும் அம்பாறையின் ஆறுகளோடும் கடலோடும் போராடி நீரோடும் நிலத்தில் உலவும் எதிரிகளின் அச்சுறுத்தல்களோடும் சோர்ந்து போகாமல் உணவு எடுத்துக் கொண்டு போய் சக போராளிகளுக்கு உணவளித்து உயிரளித்து களமாடும் போராளிகளோடு தனது மருத்துவப் பணியைச் செய்யச் சென்றிருந்தான் ரெட்ணாதரன்.

    அம்பாறைக்காட்டில் வாழ்ந்த போராளிகளோடு தானும் வாழ்ந்து களமாடித் திரும்பும் வீரர்களின் மருத்துவனாகினான். அம்பாறை மண் சந்தித்த அனைத்து அவலங்களையும் தானும் அனுபவித்து அவலம் தந்தவர்களுக்கு அதைத் திருப்பிக் கொடுக்கும் நாளின் விடிவுக்காக விழித்திருந்து களமாடிய மருத்துவப்புலி ரெட்ணாதரன் 1999மாசிமாதம் சிவமூர்த்தி மேட்டுப்பிரதேசத்தின் மருத்துவனாகி பணிபுரிந்த கடவுள்.

    திறமைகள் சார்ந்து போராளிகளை வளர்த்து ஆற்றல் மிக்கவர்களாக ஆக்கிவிடும் ஆசானாக பலரை உருவாக்கினான். என்றும் கருணையே நிறைந்த அவனது கவனிப்பில் விழுகிற அனைவரையும் ஆற்றல் மிக்கவர்களாக்கிய பெருமைகளையெல்லாம் கொண்ட பெருவிருட்சம் அவன். எல்லோரையும் எளிதில் கவர்ந்துவிடும் அவனது அன்பும் பேச்சும் ஒவ்வொரு போராளியின் மனசிலும் அவனை நிரந்தரமாகினான்.

    000             000           000

    அழகான வாகரை மண்ணில் புலிகளின் வரலாறு முக்கியம் வாய்ந்த பெருமைகளையெல்லாம் கொண்டிருக்கிறது. விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணியினால் வாகரையில் 1990இல் நடாத்தப்பட்ட வாகரை மகாநாடு ஒரு வரலாற்றின் சாட்சியம்.

    இந்த வாகரை மண்ணில் 22.06.1998 வாகரைச் சந்தியை தளமாகக் கொண்டு முகாமை அமைத்துக் கொண்டது. வாகரை முகாமின் பொறுப்பதிகாரிகளில் ஒருவனான இரண்டாவது கட்டளையதிகாரி கருணநாயக்கா என்ற சங்கிலி என்பவன் அங்கு அதிகாரியாக வந்திருந்தான்.

    தனது சண்டைத் திறனாலோ அல்லது திறமையாலோ அவனுக்கு அதிகாரிப் பொறுப்பு கிடைக்கவில்லை. கிழக்கில் அவன் தமிழர்கள் மீது நடாத்திய படுகொலைகளுக்கான கௌரவமாகவே பொறுப்பதிகாரியாக தகைமை உயர்ந்தான் கருணநாயக்கா.

    மட்டக்களப்பு மக்களின் உழைப்பில் விளைந்த பணம் , பொருள் , பொன் எல்லாவற்றையும் தனது அதிகாரத்தால் பறித்துக் கொண்டவன் கருணநாயக்க. தமிழரின் உழைப்பில் பெறப்பட்ட பொன்னையெல்லாம் கொள்ளையடித்த கருணநாயக்கவுக்கு தமிழர்கள் வைத்த பெயரே சங்கிலி.

    சங்கிலி வருகிறான் என அறிந்தால் குழந்தைகள் முதல் பெரியவர் சிறியவர் பேதமின்றி காலனைக்காணும் பீதியை உணர்வார்கள். அத்தனை கொடுமைக்காரன் அவன். அவன் ஆசைப்படுகிற பெண்கள் யாரையும் விட்டுவைத்ததில்லை. தனது ஆயுதத்தின் துணையோடு அவனால் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்களின் தொகை கணக்கில் எழுதப்படாதவை.

    22.05.1987 அன்று மட்டக்களப்பு தோணித்தாண்டமடு பிரதேசத்தில் வயல்வேலை செய்யும் தொழிலாளிகள் தமது வாடிகளில் வேலையின் களைப்பில் உறங்கிக் கொண்டிருந்தார்கள். உழைப்பின் களைப்பில் உறங்கிய அந்த அப்பாவி உயிர்களுக்கு சங்கிலியும் அவனோடு 60இற்கும் மேற்பட்ட சிங்களப்படைகளும் இரவோடிரவாகச் சுற்றி வளைத்திருந்தது தெரியாது. அந்த வாடிகளில் உறங்கிய பெண்கள், குழந்தைகள், ஆண்கள் யாவரையும் வெட்டையொன்றுக்கு அழைத்துச் சென்று துப்பாக்கிகளால் சுட்டுக் கொன்றவன்.

    அதுபோலவே 2ம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்த 1990இல் வந்தாறுமூலை பல்கலைக்கழக்கத்திலிருந்த 158தமிழ் மாணவர்களைக் கொன்றழித்த கொலைகாரன். மாவடி ஓடையில் 36பொதுமக்களை ஈவிரக்கமின்றிக் கொன்று தின்ற கொடியவன் கல்முனை , ஒந்தாச்சிமடம், காயங்கேணி பகுதிகளில் செய்த கொலைகளுக்கும் கொடுமைகளுக்கும் எண்ணிக்கையோ பதிவுகளோ இல்லாத சாட்சியமற்ற படுகொலைகளின் பிரதானி அவன்.

    வாகரைமுகாமின் அதிகாரியாக வந்த சங்கிலி அங்குள்ள பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திலிருந்து பொதுமக்களுக்கான நிவாரணப் பொருட்களை வழங்கும் பொறுப்பையும் தானே முன்னின்று செய்தான். மக்களோடு பழகி போராளிகள் பற்றிய தகவல்களைத் திரட்டி அவன் செய்த கொலைகளின் இரத்த சாட்சியங்கள் வாகரை மண்ணால் என்றுமே மறக்க முடியாதது.

    எதிரியின் கையோங்கியும் , காட்டிக் கொடுப்புகளும் எதிரிக்கு சாதகமாக இருந்தமையால் புலிகளால் அதிகம் அங்கு எதையும் செய்ய முடியாது போனது. ஆனால் சங்கிலியின் கொடுமையை தினமும் வாகரைமண் அனுபவித்துக் கொண்டேயிருந்தது.

    பெரும் தொல்லையாகவும் கொலைகளைச் செய்து கொண்டிருந்த சங்கிலியை வாகரையிலிருந்து அழித்தால் மட்டுமே நிம்மதியென்பதனை அந்த மண்ணும் மக்களும் உணர்ந்த நேரமது. மட்டு அம்பாறை தளபதிகளில் ஒருவரான தளபதி ஜீவன் அவர்களுக்கு கரும்புலித் தாக்குதல் ஒன்றை நடாத்த கட்டளை கிடைத்தது.

    சங்கிலியையும் அவனது அநியாயத்தையும் முடிவுக்குக் கொண்டு வரும் தாக்குதலாகவே திட்டமிடப்பட்டது. இத்தாக்குதலுக்கான ஆலோசனையை தளபதி நாகேஷ் அவர்களிடம் பெற்று இத்தாக்குதலுக்கு பொறுப்பாக செயற்பட்ட தளபதி ரமணன் அவர்களின் ஆலோசனையோடு திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

    வேவுப்புலிவீரர்கள் சங்கிலியைத் தொடர்ந்து வேவுத்தரவுகள் சேகரிக்கப்பட்டது. வேவுத்தரவுகளின் அடிப்படையில் கரும்புலித் தாக்குதல் நடாத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டது. நான் நீயென கரும்புலிகள் காத்திருந்தார்கள். அவர்கள் போல ஆறுவருடங்கள் கரும்புலியாகும் கனவோடு ரெட்ணாதரனும் காத்திருந்தான்.

    அவனுக்கான இலக்கையடையும் நாளுக்காக அவன் காத்திருந்த நாட்களெல்லாம் அவனது இலட்சியத்தின் உறுதியை உரமாக்கி அவனையொரு கரும்புலி நெருப்பாகவே வளர்த்தெடுத்திருந்தது.

    எண்ணுக்கணக்கின்றி கிழக்கு மண்ணின் உயிர்களைக் கொன்று குவித்த சங்கிலிக்கு சாவையனுப்பும் நாளை நிர்ணயித்துக் காத்திருந்தான் கரும்புலி ரெட்ணாதரன்.

    02.08.1999அன்று தனது இலக்கையடையும் கனவோடு கதிரவெளி மண்ணில் மக்களோடு கலந்தான். அவன் தங்கியிருந்த வீட்டாருக்கு அவன் ஒரு மருத்துவப் போராளியாகவே அறிமுகமானான். மேற்படிப்பை மேற்கொள்ளும் போராளியாகவே அவனை அவர்கள் நினைத்திருந்தார்கள்.

    கதிரவெளி மண்ணில் அவன் உறவாகாதவர்களே இல்லாத அளவு அவன் சிறுவர்கள் பெரியோர்கள் வரை அன்பைப் பெற்றிருந்தான். அந்த ஊரின் விளையாட்டு வீரர்களோடு விளையாடி ஒவ்வொரு நுண்ணிய விடயங்களிலும் அவதானமாக தனது இலட்சியத்தை வீச்சாக்கிய நெருப்பு.

    09.08.1999 அன்று தனது தாக்குதல் இலக்கு நோக்கிப் பயணிக்கவிருந்தான். கரும்புலிகளின் இறுதிநாள் இறுதிப் பிரியாவிடை அவர்களது இறுதியாசைகள் என அவர்கள் சொல்லிவிட்டும் எழுதிவிட்டும் போகும் கதைகள் ஓராயிரம். ரெட்ணாதரனும் எழுதவும் சொல்லவும் நிறையவே வைத்திருந்தான். ஆனால் தனக்கான இலக்கையடையும் கவனத்தில் அவன் ஒவ்வொரு கரும்புலிக்குமான திடமும் திறமும் கொண்ட வீரனாயே விரைந்தான்.

    பொறுப்பாளர்கள் , போராளிகள் சூழ அவர்களோடு அவன் இறுதி விடைபெறும் நாள். அவனுக்காக கோழிக்கறியும் இடியப்பமும் தயாராகியிருந்தது. அவன் 2இடியப்பங்களைத் தனது தட்டில் வைத்துச் சாப்பிடத் தொடங்கினான். அருகில் இருந்த போராளி மேலும் 2இடியப்பங்களை அவனது கோப்பையில் வைத்தான். இதையும் சாப்பிடு...! இல்ல இது போதும் கனக்கச் சாப்பிட்டா யக்கற் கட்ட சிரமாகீடும்....! என மறுத்து 2இடியப்பங்களை மட்டுமே சாப்பிட்டு முடித்துக் கையைக் கழுவினான்.

    இந்தப் பிரியாவிடை நடந்து 2மாதங்களின் பின்னர் ரெட்ணாதரன் தனது இலட்சியத்தில் வெற்றி பெற்று உறங்கினான். அந்த இரண்டு மாதங்களும் அவன் உணவை உறக்கத்தை மறந்து செயலாற்றிக் கொண்டேயிருந்தான்.

    ஒரு விடுதலைப் போராளி ஒரு விடுதலைவீரன் எப்படி வாழ வேண்டுமே அவற்றுக்கெல்லாம் அடையாளமாக வாழ்ந்தவன் ரெட்ணாதரன். தனது உணவில் கூட கவனமாக இருந்து உணவைக்கூட ஒறுத்து தனது இலக்கிலும் இலட்சியத்திலும் உறுதியோடிருந்த அந்தக் கணத்தை மறக்கவா முடியும் ?

    அவனுக்கு மேலும் 2 இடியப்பங்களை கோப்பையில் வைத்த போராளியின் கண்களில் ஈரத்தையும் துயரத்தையும் தந்து போன அவனது நினைவுகளை இன்றும் நினைத்து அவனது இலட்சியத்தின் முன்னால் தோற்றுப்போனதை நினைத்துக் கொள்கிறான் அந்தப் போராளி.

    09.08.1999 அன்று விடியற்காலை ரெட்ணாதரன் தயாராகினான். சங்கிலியும் அவனது படைகளும் அவனது தியாகத்தில் அழியும் நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தது மணித்துளிகள். கதிரவெளியிலிருந்து நடந்து சென்று வாகரையை அடைந்தான் கரும்புலி ரெட்ணாதரன்.

    வாகரையில் அவன் நடாத்தவிருந்த தாக்குதலின் இலக்கான முகாமிலிருந்து 50மீற்றர் தூரத்தில் வீடொன்றில் வெடியங்கியை அணிந்து காத்திருந்தான். காற்றோட்டம் குறைந்த அந்த அறையில் அவன் காத்திருந்தான். மக்கள் நிவாரணம் பெறுவதற்காக வரத் தொடங்கியிருந்தார்கள். வயிற்றுப்பசியோடு அவன் அந்தக் குகையில் இலட்சியப்பசியை வெல்லும் கனவோடு காத்திருந்தான். நாவரண்டது தண்ணீர் குடிக்க வேண்டும் போலிருந்தது. ஆனால் அவனோ நாவரண்டு பசி உடலை வருத்திய போதும் உயிர்குடிக்கும் சங்கிலியின் கதை முடிக்க காத்திருந்தான்.

    காலை 5.15இலிந்து 12.04 வரையும் எதிரியின் பிரதேசத்தினுள் ஒளிந்து கிடந்தான். முகாம் அதிகம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. கம்பிவேலிகள், தடுப்புகள் , மண்ணரண்கள் என எதிரி தனது எல்லையை கடுமையான பாதுகாப்பு வியூகத்தினால் காத்து வைத்திருந்தான்.

    முகாமிற்குள் செல்லும் பிரதான பாதையில் வட்டக்கொட்டில் அமைக்கப்பட்டிருந்தது. அங்கேதான் பிரதான அதிகாரிகள் சந்தித்து கூடும் இடமாகவும் அது அமைந்திருந்தது.

    நிவாரணப் பொருட்கள் காவிவரும் லொறியைத் தொடர்ந்து 4பேரூந்துகளிலும், 3இராணுவ றக் வண்டிகளிலும் சிங்களப் படைகளின் பாதுகாப்பு கவச வாகனங்களுடனும் வந்து கொண்டிருந்தது சிங்களப்படைகள். சயிக்கிளில் வந்த சங்கிலி வட்டக்கொட்டிலில் போய் அமர்ந்தான். சங்கிலியின் நடமாட்டத்தை ரெட்ணாதரன் அவதானித்தபடியே இருந்தான். இலக்கை நெருங்கும் கடைசி மணித்துளிகள் நெருங்கிக் கொண்டிருந்தது.

    சிங்களப்படைகளின் நடமாட்டம் வளமைபோலவே அதிகரித்திருந்தது. மக்கள் நிவாரணப் பொருட்களை பெற்றுச் செல்வோரும் வரிசையில் நிற்போருமாக பொழுது தனது இயல்பான நாள் போல இயங்கிக் கொண்டிருந்தது.

    உடலில் வெடியங்கி பொருத்திய கரும்புலி ரெட்ணாதரன் எழுந்தான். ஒரு கையில் உரப்பையில் அரிசியும் , கையில் கூப்பன் அட்டையும் கொண்டு நடக்கத் தொடங்கினான். எதுவுமறியாதவன் போல தானும் ஒரு பொதுமகன் போலவே சென்றான்.

    அவனை வழியனுப்பிய இதயம் துடிதுடித்துக் கொண்டிருந்தது. அவன் பசியை வெல்ல அரிசி சுமக்கும் மனிதன் போல மாறியிருந்தான். அழகான அந்த முகம் ஆளமான விடுதலையின் பாசம் விடியப்போகும் தேசத்தின் கிழக்கு விடிவெள்ளியாக அவன் நடந்தான். தடைகள் எதுவுமின்றி சங்கிலியையும் அவனது கூட்டத்தையும் அழிக்கும் இலக்கின் தூரம் சில அடிகளில் கைகூடிவிடும் தூரத்தில் இருந்தது.

    கும்மாளமடித்துக் கொண்டிருந்த சிங்களப்படைகளின் முன்னால் கரும்புலி ரெட்ணாதரன் இலக்கை நெருங்கிக் கொண்டிருந்த போது திடீரென ஒருவன் அவன் மீது சந்தேகம் கொண்டு இடை மறித்தான். எங்கே போகிறாயென விசாரித்தான்.

    அரிசி அளவு குறைவாக இருக்கிறது கருணாநாயக்க ஐயாவிடம் காட்டிச் சொல்லப் போகிறேன்...! என அவனைத் தாண்டி நடக்க முனைந்தான். அவனில் சந்தேகம் கொண்ட அந்தச் சிங்களப்படைவீரன் அவனைக் கட்டிப்பிடித்தான். ரெட்ணாதரனோ புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என உரக்கச் சொல்லியபடி வெடித்தான்.

    அத்தனை காலம் கிழக்கில் கொலைகள் ,கொள்ளைகள், பாலியல்வதைகள் செய்த கருணாநாயக்கவும் அவனது சகாக்களும் அங்கே அடையாளங்களின்றி அழிந்து போனார்கள்.

    அழிவுகளையும் இழப்புகளையும் சிறுவயது முதலே பார்த்து வளர்ந்து அதன் தாக்கங்களோடு விடுதலைப் போராளியாகி களமாடிய வேங்கை, மருத்துவப்புலியாகி மருத்துவனாகி இறுதியில் கரும்புலியாகும் கனவோடலைந்து தன் கனவை நிறைவேற்றி வாகரை மண்ணுக்குப் பெரும் தொல்லையாயிருந்த பகைவனையும் அவனது கூட்டத்தையும் அழித்து ரெட்ணாதரன் கரும்புலி மேஜர் ரெட்ணாதரனாக வாகரைக்காற்றோடு கரைந்தான்.

    அன்பின் வடிவாய் ஆற்றலின் உருவாய் இலட்சியப் போராளியாய் இறுதி வரை சுமந்த கனவை நனவாக்கும் தோழர்களையும் தேசமக்களையும் நம்பித் தனது கடமையை முடித்துக் காற்றான மேஜர் ரெட்ணாதரனின் கனவுகள் இன்றும் வாகரை மண்ணிலும் அந்த மண்ணின் உயிரிலும் கலந்தேயிருக்கிறது.

    என்றோ ஒருநாள் அவனது கனவுகள் நிறைவாகும் நம்பிக்கையை ஆயிரக்கணக்கானவர்கள் இதயங்களில் விதைத்துவிட்டு உறங்குகிறான் ஆனந்தன் என்ற மட்டுமண்ணின் மைந்தன் கரும்புலி மேஜர் ரெட்ணாதரன்.

    - சாந்தி ரமேஷ் வவுனியன் -

     

    http://mullaimann.blogspot.de/2014/08/blog-post.html

     

    • Like 1
  3. கருத்திட்ட விருப்பிட்ட அஞ்சலித்த அனைவருக்கும் நன்றிகள். மாதவன் மாஸ்ரர் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் முதுகெலும்பென்றால் அது மிகையாகாது.  இன்னும் பலநூறு விடயங்கள் எழுதப்படவில்லை. காலம் கைகூடும் போது மீதி விவரங்களும் எழுதப்படும்.


    90அல்லது 91 காலப்பகுதியில் தென்னிலைங்கையில் நின்று வேலை செய்வது கடினம் என்று போராளிகள் கூறுயது கேட்டு பொட்டம்மான் தான் புறப்பட்டு மட்டக்களப்பில் இருந்து கொழும்பு சென்று இங்கிருத்து ஓமந்தை ஊடா வன்னி வந்தார் அவர் வந்து மூன்றாம் நாள்தான் பொட்டம்மான் தென்னிலங்கை வந்த செய்தி அரசுக்கு தெரிந்திருந்தது என்று சொன்னார்கள் ...அவர் ஒரு லாரி ரைவருக்கு உதவியாளனா வெற்றிலையும் போட்டு ..தலைப்பா கட்டுடன் வந்திறங்க போராளிகளே இனம் காணவில்லையாம் ...

     

    இது ஒரு புலனாய்வு போராளி சொல்லி கேட்டு இருக்கிறேன் உண்மையா சாந்தி அக்கா .

     

    இவ்விடயம் பற்றி எனக்கு தெரியாது அஞ்சரன். ஒரு முதுநிலைத் தளபதியை இப்படி ஒரு பகுதியில் சென்று வரக்கூடிய அனுமதியை சக தளபதிகள் சரி போராளிகள் சரி அனுமதித்திருக்கமாட்டார்கள். ஏனெனில் புலனாய்வுத்துறையின் அதிவேக வளர்ச்சியானது 89களில் வேகப்படுத்தப்பட்டு 90களில் அதி வளர்ச்சி கண்டது. அதில் பொட்டம்மான் அவர்களை நம்பியே தலைவர் அப்பொறுப்பையும் ஒப்படைத்திருந்தார். இப்படியிருக்க நீங்கள் குறித்தது போல ஒரு விசப்பரீட்சையை செய்திருக்க வாய்ப்பிருக்காது என்றே நினைக்கிறேன்.

    கருணாவுடனான முறுகல் தொடங்கிய காலமும் 90 என்பதால் நடைமுறையில் இத்தகைய பலப்பரீட்சையை பரீட்சித்துப் பார்க்கக்கூடிய வழிகள் இருக்க முடியாது.

  4. காற்றுள்ள வரை வாழும் காவியம் மேஜர் சிட்டு

    July 31st, 2014chiddu
     

    1011576_415011448608492_575841641_n-212x

    இயற்பெயர் – சிற்றம்பலம் அன்னலிங்கம்

    பிறந்த இடம் – வடமராட்சி கிழக்கு உடுத்துறை

    வீரனாய் – 04.11.1971 – வித்தாய் – 01.08.1997.

    கடலும் கடல்சார்ந்த அழகையும் கொண்ட உடுத்துறைக் கிராமத்தில் 04.11.1971 அன்று சிற்றம்பலம் தம்பதிகளின் கடைசி மகனாக வந்துதித்தான் அன்னலிங்கம். 9வது குழந்தையாக 5அண்ணன்களுக்கும் 3அக்காக்களுக்கும் கடைக்குட்டியாக வீட்டின் செல்லப் பிள்ளையாகப் பிறந்தவன்.

    பெருமையோடு அவனை எல்லோரும் கொண்டாடிக் கொள்ளும் அளவுக்கு அவனது குழந்தைக்காலம் வித்தியாசமானது. 12வயதில் புலிவீரனாக தடியால் துப்பாக்கியை வடிவமைத்து விளையாட்டுக் காட்டிய பிள்ளையவன்.

    ஆரம்பக்கல்வியை உடுத்துறை மகாவித்தியாலயத்தில் கற்றவன் க.போ.த.சாதாரண தரத்திற்கு வந்த போது தெல்லிப்பழை மகாஜனாக்கல்லூரியின் மாணவனாகினான். அவன் சாதிக்கப் பிறந்த பிள்ளையாகவே அம்மாவின் கனவை நிறைத்த கடைக்குட்டி. எதிர்காலத்தில் ஒரு அறிஞனாகவே அம்மாவின் மனசில் எழுந்த கோட்டையின் இராசகுமாரன் அவன்.அது இந்திய இராணுவ காலம். 1987களில் அளவெட்டியில் வாழ்ந்த அவனது அண்ணனுடன் அன்னலிங்கமும் போயிருந்து படிக்கத் தொடங்கினான். தமிழ் ஆசிரியரான அண்ணன் கற்பித்த தனியார் கல்வி நிறுவனமான தெல்லிப்பழை கல்வி நிலையமொன்றில் மாணவனாகினான்.

    இயல்பிலேயே அமைந்த இனிமையான அவனது குரல் கல்வி நிலையத்தில் நண்பர்கள் சூழ்ந்திருக்க அவர்களுக்காய் அவன் பாடிய அன்றைய சினிமாப்பாடல்கள் ஒவ்வொன்றிலும் அவன் இசைக்கலைஞனாய் அடையாளமாகினான். மேசையில் தாளம் போட்டு அவன் பாடும் காதல் பாடல்கள் தொடக்கம் தத்துவப்பாடல்கள் வரை அவனது குரலின் தனித்துவம் என்றுமே அவனுக்கான சிறப்பு.

    அன்னலிங்கத்தின் மூத்த சகோதரர் திரு.பாலச்சந்திரன் அவர்கள் சிறந்த பொப்பிசைப்பாடகர். இலங்கை வானொலியில் ஒருகாலம் கொடிகட்டிப்பறந்த அந்தப்பெயரை இன்றும் இசை ரசிகர்கள் மறந்துவிடவில்லை. அந்த மாபெரும் கலைஞனின் கடைசித் தம்பியான அன்னலிங்கத்தின் இசைத்திறனை அந்தக் கல்வி நிலையம் மட்டுமல்ல அவனது குரலுக்கு வசமான அனைவருமே ரசித்த காலமது.

    கம்பன் வீட்டுக்கட்டுத்தறியும் கவிபாடுமாம் என்பார்கள். ஆனால் அன்னலிங்கம் உலவும் இடமெங்கும் வீசும் காற்றும் இசையாலேயே நிரம்பியிருக்கும். ஏனெனில் அவனது வாய் எப்போதும் ஏதோவொரு பாடலை இசைத்துக் கொண்டேயிருக்கும். அவன் மாணவனாய் இருந்த காலத்தில் அவனது இசையின் மீதான ஆழுமையின் வெளிப்பாடானது அவனது நண்பர்கள் நினைவுகளில் நீங்காத பசுமையான நினைவு.

    எப்போதுமே முகம் நிறைந்த சிரிப்பும் எல்லோரையும் சிரிக்க வைக்கும் அவனது பண்பு என அவனது புன்னகைக்கும் அன்புக்கும் ஆட்பட்டவர்களே அதிகம். எதிரிகள் என்று எவருமே அவனுக்கு இருந்ததில்லை. எல்லோரையும் நேசித்தான். எல்லோர் மீதும் அன்பைச் சொரிந்தான். அன்னலிங்கம் அன்புக்கு அர்த்தம் சொல்லும் தோழன்.

    000 000 000

    chiddu2014.jpg

    இந்திய இராணுவம் ஊர்களை உழுது வீதியில் வீடுகளில் காணுமிடங்களில் மறிப்பதும் புலிவீரர்களைத் தேடி அலைவதுமான காலம் அது. புடிப்பும் , பாட்டும் , இசையுமென இருந்தவனை இந்திய இராணுவத்தின் கொலைகள் , வன்புணர்வுகள் என அனைத்து அக்கிரமங்களையும் அனுபவித்த ஊர்களை அவனும் பார்த்தான்.

    தமிழினத்தைத் தேடித்தேடி அழித்துக் கொண்டிருந்த இந்தியப்படைகளுடன் யுத்தம் செய்து கொண்டிருந்த புலிகளுடன் அவனுக்கு உறவு மலரக்காரணமானது கூட இந்தியப்படைகளே. புலிப்போராளிகளுக்கான மறைமுக ஆதரவுகளை காலத்தின் கடனை அவன் மாணவனாக இருந்தபடியே செய்து கொண்டிருந்தான்.

    அப்போது தேசிய இராணுவம் என்ற பெயரில் EPRLF பிள்ளைபிடியில் இறங்கிய நேரம். இளைஞர்களைக் கட்டாயமாகப் பிடித்து பயிற்சிகள் வழங்கி கைகளில் ஆயுதங்களைத் திணித்த பொழுதுகள். அப்போதுதான் EPRLF குழுவினால் அன்னலிங்கமும் கைது செய்யப்பட்டு கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டான்.

    விடுதலை செய்யப்பட்ட பின்னரும் நிம்மதியாய் உறங்க முடியாது இந்தியப்படைகள் கண்ணிலும் EPRLFகைகளில் சிக்காமலும் தப்பிக்க அவன் அலைந்த அந்த நாட்கள் மிகவும் கொடியவை. ஊரில் நிம்மதியாய் வாழ விடாமல் கொடியவர்கள் துரத்திக் கொண்டிருந்தார்கள்.

    அந்த வதையின் பின்னரேயே அவன் விடுதலைப் போராட்டம் பற்றி விடுதலைப்புலிகள் பற்றியும் சிந்திக்கத் தொடங்கினான். ஆனால் அவனை உயிரோடு காத்து வாழ வைக்கும் கனவில் அவனது அக்காக்களும் , அம்மாவும் வெளிநாடு அனுப்பி வைக்க ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்தார்கள்.

    இந்திய இராணுவ காலத்தில் கொழும்பில் வாழ்வது பாதுகாப்பானதாக இருந்த காலம் அது. அன்னலிங்கம் சில மாதங்கள் கொழும்பில் தங்கியிருந்த போது வெளிநாடு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் குடும்பத்தினரால் மேற்கொள்ளப்பட்டது.

    தாய்நிலத்தைப் பிரியும் நினைவே இல்லாதிருந்தவனால் புலம்பெயர்ந்து அன்னியத் தெருவில் அலைவதில் உடன்பாடிருக்கவில்லை. பயண முகவருக்கு பணம் கட்டி அவன் வெளிநாட்டுக்குச் செல்லும் நாளை பயண முகவர் தீர்மானித்து முடிவு வர முதலே திடீரென கொழும்பிலிருந்து ஊர் திரும்பியவன் நீண்ட கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு 1989களின் இறுதியில் காணாமற்போனான்.

    காடுகளில் கடுமையான தூரங்கள் நடந்து கடந்து சென்றான். மணலாற்றுக் காடுகள் அவனுக்கு புதிய வாழ்வை புலிகளின் வாழ்வை அடையாளம் காட்டியது. காட்டில் உருவாகிய போராளிகள் பலரோடு ஆயுதப்பயிற்சியைப் பெற்றுக் கொண்டான். அன்னலிங்கமாய் பிறந்தவன் அன்னலிங்கமாய் வாழ்ந்தவன் சிட்டு என்ற பெயரைத் தாங்கிப் புலிவீரனானான்.

    இசை பலருக்கு வரம் அதேபோல அருமையான குரல் சிலருக்குத்தான் வரம். அந்த வரத்தைப் பெற்றிருந்தான் சிட்டு. காட்டில் போராளிகளின் களைப்பைப் போக்கவும் உற்சாகத்தை வலுப்படுத்தவும் ஒரே மருந்து அவனது இனிமையான குரலென்பதனை அவனோடு கூடவிருந்த போராளிகள் நினைவு கூரும் அளவுக்கு இசையை நேசித்தான். இசையில் அவன் தனது களப்பணிகளையும் மேற்கொண்டான் என்பதனை வரலாறு மறந்து போகாது.

    1990களில் இந்தியப்படைகள் ஈழமண்ணை விட்டு வெளியேறிப் போக யாழ்மண்ணில் வந்திறங்கிய புலிகளுடன் சிட்டுவும் வந்தான். பழைய குறும்பு , குழந்தைத்தனம் எல்லாம் மாறி பொறுப்பு மிக்க போராளியாய் வந்திருந்தான். அந்தக் காலம் பெரும் எழுச்சியின் மாற்றத்தை மிக மிக வேகமாக உருவாக்கிய காலம். போராளிகள் தனித்துவமான சீருடைகளணிந்து யாழ் மண்ணில் பணிகளில் இறங்கிய காலம் அது.

    பள்ளிக்கால உறவுகளை அவன் மறந்து போகவில்லை வீதிகளில் சந்திக்கிற போது பழைய நட்பையெல்லாம் புதுப்பித்துக் கொண்டான். ஒவ்வொருவரும் போராட வேண்டுமென்ற வீரத்தை ஒவ்வொருவருக்கும் ஊட்ட முனைந்தான்.

    000 000 000

    1990 யூன் மாதம் 2ம் கட்ட ஈழப்போர் ஆரம்பமாகியிருந்தது. மணலாற்றிலிருந்து வந்திருந்த 600 வரையான போராளிகளை உள்ளடக்கி 1990 இறுதியில் முதல் முதலாக புலிகளின் அரசியல் பாசறை மட்டுவில் பகுதியில் நடைபெற்றது.

    6மாதங்கள் நடைபெற்ற அரசியல் பாசறையிலிருந்து மக்களோடு இறங்கி பணிசெய்யக்கூடிய திறமையாளர்களை உருவாக்கியது மட்டுவில் அரசியல் பாசறை. ஒற்றைக் கைத்துப்பாக்கியோடு தலைவர் பிரபாகரனால் ஆரம்பிக்கப்பட்ட கரந்தடி போராளி அமைப்பாக உருவாகிய புலிகள் அமைப்பானது மரபுவழி இராணுவமாக மாற்றம் காணத் தொடங்கிய காலம் அது.

    chi.jpg

    இராணுவ ரீதியிலான முன்னேற்றம் மரபுவழி இராணுவமாக பரிணமித்த சம காலத்தில் அரசியலிலும் புலிகளின் மாற்றம் அரசியலில் வளர்ச்சியையும் மாற்றத்தையும் காணத்தொடங்கி முக்கியமான காலகட்டத்தில் தான் மட்டுவில் அரசியல்பாசறை உருவாக்கம் பெற்றது.

    அதுவரையில் அரசியல் பணிகளையும் சரி , படையணியைத் திரட்ட போராளிகளை இணைப்பதிலும் சரி , சமூகப்பிரச்சனைகள் தொடக்கம் மொத்தப் பணிகளையும் ஒவ்வொரு ஊர்களுக்கும் நியமிக்கப்பட்ட ஊர்களுக்கான பொறுப்பாளர்களே செய்து கொண்டிருந்தார்கள். குறிப்பாக ஒரு கிராமசேவகர் போல ஒவ்வொரு ஊரின் பொறுப்பாளரின் தலையிலும் கிராமங்களின் சுமைகள் யாவும் தேங்கியிருந்தது.

    துறைசார் திறமையாளர்களை உருவாக்குவதன் மூலம் அவரவர் திறமைகளுக்கு ஏற்ப பணிகளை பகிர்ந்தளிக்கவும் , பணிகளை இலகுபடுத்தவும் விடுதலைப்புலிகளால் திட்டமிடப்பட்டு ஆரம்பிக்கப்பட்டதே மட்டுவில் அரசியல் பாசறை.

    அரசியல்துறையின் ஆரம்ப வித்தும் அடையாளமும் தியாகி திலீபன் அவர்கள். அவரே அரசியல் பணிகளுக்காக ஆரம்பத்தில் போராளிகளை உருவாக்க முனைந்து அதற்கான தோற்றத்தின் மூலமாக இருந்தார்.

    மட்டுவில் அரசியல் பாசறையில் கட்டம் கட்டமாக உள்வாங்கப்பட்டு பயிற்றப்பட்ட போராளிகளில் இருந்தே பின்னர் அந்தந்த பிரிவுகளுக்கான பொறுப்பாளர்கள் போராளிகள் தெரிவு செய்யப்பட்டார்கள்.

    இங்கு உருவாக்கப்பட்ட போராளிகள் அரசியல் நிர்வாகப் பொறுப்பாளரிடம் கொடுக்கப்பட்டார்கள். அரசியல் நிர்வாகப் பொறுப்பாளரே அந்தந்த பிரிவு சார்ந்த இடங்களுக்கு போராளிகளை பொறுப்பாளர்களை நியமித்து அனுப்பும் பொறுப்பை ஏற்றிருந்தார்.

    இங்கிருந்தே கலைபண்பாட்டுக்கழகம், மாணவர் அமைப்பு , பிரச்சாரப்பிரிவு என துறைகள் பிரிக்கப்பட்டு தனித்தனியான அலகுகளின் கீழ் அரசியல் போராளிகள் பணிகளில் நியமிக்கப்பட்டார்கள். அரசியல் நிர்வாகத்துறையிலிருந்தே கோட்டங்களுக்குத் தேவையான துறைசார் அரசியல் போராளிகள் அனுப்பப்பட்டனர். அரசியல் நிர்வாகப்பொறுப்பாளருக்கு அடுத்தே அரசியல் பொறுப்பாளர்கள் பணிகளில் இறக்கப்பட்டார்கள்.

    பின்னாட்களில் அரசியல்துறையின் வளர்ச்சிக்கும் சிறந்த பணிகளுக்கும் அரசியல் வளர்ச்சியின் வெற்றிக்கும் வேராக அமைந்ததே மட்டுவில் அரசியல்பாசறை.

    மட்டுவிலில் ஆரம்பித்த அரசியல் பயிற்சிப்பாசறையில் சிட்டுவும் அரசியல் போராளியாக வந்திருந்தான். அங்கேயும் சிட்டுவின் இனிமையான குரலே போராளிகளின் களைப்பை அலுப்பை சலிப்பை ஆற்றும் மருந்தாகியது. பாசறை சோர்வடைந்தால் சரி சிட்டுவை பாடச்சொல்லி எழுப்பி விடுவார்கள்.

    தெய்வப்பாடல்களுக்கு புரட்சி வடிவம் கொடுத்து தெய்வப்பாடல் மெட்டுக்களுக்கு புரட்சி வரிகளை அமைத்துப் பாடல்களைப் பாடத் தொடங்கினான். காலத்துக்கு ஏற்ற வரிகளும் அவனது குரலும் அன்றைய அரசியல் பாசறைப் போராளிகளின் நினைவுகளில் சிட்டுவை என்றும் மறந்ததில்லை. ஏனெனில் அவனது குரலுக்கு அத்தனை வசீகரம் இருந்தது.

    போராட்டத்திற்காக ஆள்பலத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டிய காலமாக இருந்தது அந்தக்காலம். மக்களை இலகுவாய் சென்றடையக்கூடிய ஊடகமாக இசையே முதன்மையாக இருந்தது. அப்போதுதான் விடுதலைப்புலிகளால் வெளியிடப்பட்ட இசை வெளியீடுகளும் மெல்ல மெல்ல மிகுந்த சிரமத்தின் மத்தியில் வெளியாகிக் கொண்டிருந்தது.

    தென்னிந்தியப்பாடகர்களால் இசைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்பாடல்கள் முதல் முதலாய் 90களில் தனித்த ஆழுமையுடன் விடுதலைப்புலிகள் கலைபண்பாட்டுக்கழகத்தால் மிகவும் சிறப்பான முறையில் எங்களது கலைஞர்களின் இசையமைப்பில் எங்களது கலைஞர்களின் குரல்களில் ஈழதேசமெங்கும் ஒலிக்க வகை செய்யப்பட்டது.

    அப்போது தான் எங்கள் சிட்டுவும் முதல் முதலாக மேஜர் செங்கதிர் அவர்களால் எழுதப்பட்ட‚’கண்ணீரில் காவியங்கள்’ என்ற பாடலைப்பாடி இசையுலகில் தனக்கான அத்தியாயத்தை எழுத அடியெடுத்து வைத்திருந்தான். அப்போதைய பாடகர்களில் சிட்டு தனித்துவமானவனாகப் பரிணாமம் பெற்றான்.

    இசையில் கலந்தவனை அவனது ஆற்றலை அவதானித்த அரசியல் நிர்வாகம் சிட்டுவை யாழ்மாவட்ட கலைபண்பாட்டுக்கழகத்தின் பொறுப்பாளனாக்கி அவனைப் பொறுப்புகளைச் சுமக்கும் திறனையுடையவன் என்பதனை இனங்காட்டியது.

    கலைபண்பாட்டுக்கழகத்தின் பொறுப்பாளனாய் வந்த போது மக்களுடன் மாணவர்களுடன் இணைந்தான். கருத்தரங்குகள் விழிப்பூட்டல் செயற்பாடுகளை முன்னெடுத்த அரசியல் போராளிகளோடு சிட்டுவின் பங்கும் காத்திரமானதாகியது.

    அடுத்து புலிகளின் குரல் பொறுப்பாளனாகி வானொலி ஊடகத்தின் மூலம் மக்களிடம் சென்று சேரும் போராட்ட விழிப்பை ஏற்படுத்துவதில் கணிசமான பங்கைச் செய்த பெருமை சிட்டுவிற்கும் உண்டு.

    பிறேமதாசா அரசால் பொருளாதாரத்தடை விதிக்கப்பட்டு வடக்கில் வளங்கள் மட்டுப்படுத்தப்பட்டிருந்த மிகவும் சிரமம் நிறைந்த காலமது. எரிபொருட்கள் தொடக்கம் எல்லாமே தடைப்பட்டிருந்தது. வானொலிக்காகவும் சரி தனது பணிகளுக்காகவும் சரி மிகுந்த பொறுமையோடு மக்களை அணுகி தேவைகளைப் பெற்றுக் கொள்வதில் அவனுக்கு நிகர் அவன்தான்.

    களத்தில் நிற்கிற போராளிகளுக்கு நிகராக அவன் நிலத்தில் மக்களோடு மக்களாகி கலையூடகம் மூலம் மக்களை விழிக்கச் செய்தான். தனது இனிய குரலால் இளையோர்களைக் கவர்ந்தான். அவனது குரலில் அவனது கருத்தில் ஈர்க்கப்பட்டு விடுதலையின் தேவையை உணர்ந்து போராளியாகியவர்களால் கூட சிட்டு நினைவு கொள்ளப்படும் மக்கள் கலைஞன் ஆகினான்.

    சாதனையாளன் தன்னை அடையாளம் காட்ட ஒரு சிறுபொறி போதும். சிட்டுவின் ஆற்றலை இனங்காண அவனுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளே அந்தப் பொறியை பற்றவைத்த ஆதாரமாகியது.

    மிக விரைவாக சிட்டு மக்கள் கலைஞன் ஆகினான். மறக்க முடியாத குரலுக்குரிய சிறந்த பாடகனாக மக்களோடு கலந்தான். காலம் அவனை ஒரு போராளியாய் மட்டுமன்றி உலகறிந்த பாடகனாய் ஈழத்தமிழ் இதயங்களில் இசையாய் என்றென்றும் நிலைப்பானென்று கூட எவரும் அறிந்திருக்காத ஒரு குழந்தையை காலம் மாற்றியது மட்டுமன்றி அவனைச் சிறந்த போராளியாக்கியது வரலாறு.

    சிட்டு இல்லாத இசைநிகழ்ச்சிகள் இல்லையெனும் அளவு சிட்டுவின் இசைக்குக் கூடிய மக்கள் வெள்ளம் அவனது இசையுலகின் வெற்றியின் சாட்சிகள். ஒரு பாடகனுக்கு உரிய சகல தகுதிகளையும் கொண்டிருந்தவன் இலகுவில் மக்கள் மனங்களில் இசைக்கலைஞனாகவே நினைவில் நின்றான்.

    அவன் பாடிய ஒவ்வொரு பாடலிலும் அவன் அந்தத் தருணங்களாகவே வாழ்ந்திக்கிறான். உயிரில் உணர்வைக் கலந்து உணர்வில் தன் உயிரைக் கலந்து மக்களிடம் போய்ச் சேர்ந்தது அவனது பாடல்கள்.

    1995 யாழ்மண் பகைவனிடம் இழக்கப்பட்டு மக்கள் இடம்பெயர்ந்து வெளியேறிக் கொண்டிருந்த போது கூட அவனது குரலிலும் ஏனைய தமிழீழப்பாடகர்களின் குரலிலும் பாடல்கள் வெளியிட்டுக் கொண்டிருந்தது கலைபண்பாட்டுக்கழகம். சோர்ந்து வெளியேறிக் கொண்டிருந்தவர்களின் ஆற்றுப்படுத்தலாக சிட்டுவின் குரலும் இருந்ததை அந்த நாட்கள் மறக்காது.

    யாழிலிருந்து பின்வாங்கி வன்னியில் புலிகள் தளமிட்டு மக்கள் அரங்கச் செயற்பாடுகளை மேற்கொண்ட காலங்களில் வன்னியின் மூலையெங்கும் சிட்டுவும் இசையாய் கலைவடிவங்களாய் வாழ்ந்திருந்தான். கலைபண்பாட்டுக்கழகம் முன்னெடுத்த கலையரங்கம் அல்லது தெருநாடகங்கள் மூலம் மக்களை விழிப்படையச் செய்யும் பணிகள் யாவிலும் சிட்டுவும் கலந்தேயிருந்தான்.

    நோயாளியாகிப் போன அம்மாவிற்காக வீடு திரும்பிவிடக் கேட்ட சகோதர சகோதரிகளின் வேண்டுதலையெல்லாம் புறம்தள்ளி தமிழீழக்கனவோடு அலைந்த பாடகன் அவன். இறுதி மூச்சை நிறுத்துவதானால் தான் நேசித்த மண்ணிலேதானென எல்லோருக்கும் சொல்லியதோடு மட்டுமன்றி அவன் நேசித்த அவனை நேசித்த உறவுக்கும் மடல் எழுதினான். தனது மாற்றங்களை கடிதங்கள் மூலம் தெரியப்படுத்திக் கொண்டு விடுதலை வானில் சிறகடித்துக் கொண்டிருந்ததான் சிட்டு.

    வன்னியைக் கைப்பற்றி கண்டிவீதியூடே சென்று யாழ் மண்ணில் கொடியேற்றும் கனவில் அப்போதைய பாதுகாப்பமைச்சர் ரத்தவத்தையின் கனவை நனவாக்க பெருமெடுப்பிலான இராணுவ முன்னேற்றமும் ஓயாத சண்டையும் நடந்து கொண்டிருந்த ஜெயசிக்குறு சமர். 18மாதகாலம் நீடித்த அச்சமரே விடுதலைப்புலிகளின் சண்டை வரலாற்றிலேயே பெரும் வரலாற்றுச் சமராக காலம் பதிவு செய்து கொண்டது.

    அத்தகைய வரலாற்றுச்சமரில் பங்கேற்க சிட்டுவும் ஆசைப்பட்டான். தானாகவே விரும்பி சண்டைக்குப் புறப்பட்டான். கலையோடு கலைஞனாய் மக்களின் மனங்களில் நிலைத்தவனைக் காலம் களத்திற்கு வாவென்றழைத்தது.

    ஒலிவாங்கியோடு மேடைகளில் பாடல் இசைத்தவன் கையில் வோக்கிரோக்கியுடன் களத்தில் நின்றான். களமே பலமென்ற காலத்தில் களத்தில் நிற்கும் போராளிகளுக்கு முன்னால் அவர்களது களைப்பைப் போக்க அவன் ஒலிவாங்கியோ இசைக்கருவிகளோ இல்லாமல் பாடினான். அவன் நின்றிருந்த களமுனைப் போராளிகளின் வேண்டுகோளையெல்லாம் சலிக்காமல் ஏற்றுக் கொண்டு மக்களின் முன் பாடிய குயில் சக போராளிகள் முன்னால் பாடிக் கொண்டிருந்தான்.

    எதிரியின் ஓயாத எறிகணை வீச்சு மழைபோல் பொழியும் துப்பாக்கிச்சூடு ஒவ்வொரு போராளியும் சாவிற்குள் நின்று போராடிக்கொண்டிருந்த களம். ஏ9நெடுஞ்சாலையின் ஊடாக ஆனையிறவைத் தொடுவதற்கு எதிரி முன்;னேறுவதும் புலிகளின் எதிர்த்தாக்குதலும் களநிலமை இதோ அதோ என்ற வேகத்தில் அங்கே போராளிகளின் ஆயுதங்களே எதிரியுடன் பேசிக் கொண்டிருந்தது. கிடைக்கிற சின்ன இடைவெளியில் சிரித்து சண்டை பிடித்து மகிழ்ச்சியோடு போராளிகள் ஒவ்வொருவரின் களவாழ்வும் கழிந்து கொண்டிருந்தது.

    அன்றைக்கு ஒருநாள். சிதைவுகளையும் அழிவுகளையும் கொண்ட ஏ9வீதியின் இருமருங்கும் எறிகணைகளின் தாக்குதலிலும் துப்பாக்கி சன்னங்களினாலும் உருக்குலைந்து ஒரு சூனியவெளியில் நிற்பதான உணர்வைக் கொடுத்த நேரமது.

    பெரியமடுப் பகுதியில் ஒரு வலிந்த தாக்குதலைச் செய்யும் நோக்கில் தயரானது படையணி. எதிரியுடனான சமருக்குத் தயாராக ஆண் பெண் போராளிகள் வரிச்சீருடைகளில் வீதிக்கு வலப்பக்கமும் இடப்பக்கமும் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் அடையவிருந்த முன்னணிக்களத்தின் தூரத்தையடையும் வேகத்தில் படையணி நகர்ந்து கொண்டிருந்தது.

    அரும்புமீசைக்கனவறுத்து எதிரியைத் தேடிப்போய்க் கொண்டிருந்த ஆண்போராளிகளுக்கு நிகராக சமூகத்தின் விலங்குடைத்து இரட்டைப்பின்னல் அழகை வெறுத்து இதயம் முட்டிய கனவுகளைத் தூக்கியெறிந்து ஒரு சமூகத்தின் முன்னோடிகளாகிய பெண்போராளிகளும் அணிவகுத்துச் சென்று கொண்டிருந்தார்கள்.

    மருத்துவ அணிகள் முதல் வழங்கல் அணிகள் வரை அவரவர் தங்களது கடமைகளை முடிக்கும் கனவோடு நகர்ந்து சென்று கொண்டிருந்தார்கள். களங்களில் பணிசெய்யும் மருத்துவ அணியின் பங்கானது மிகவும் சாவல்கள் நிறைந்தது. சமர் இடம்பெறும் இடங்களினை அண்டி நின்று போராளிகளைக் காப்பாற்றும் கடவுளர்கள் மருத்துவப் போராளிகளே. அத்தகைய பணியை முடிக்க மருத்துவ அணியும் போராளிகளுடன் இணைந்தார்கள்.

    பொதுவான மருத்துவ அணியின் சேவைகள் போலில்லாமல் அச்சமருக்கான ஏற்பாடு வித்தியாசமாக இருந்தது.

    இதுவரைகாலச் சண்டைகளில் மருத்துவத்துக்குத் தேவையானவற்றை வாகனங்களில் கொண்டு சென்று மருத்துவ அணி தயாராகும். ஆனால் இம்முறை மருத்துவப் போராளிகள் தங்கள் தோழ்களில் சுமந்தே செல்ல வேண்டியிருந்தது. அக்களத்தின் நெஞ்சுக்கூட்டினுள் இறங்கி நடக்கவிருந்த சமராகையால் மருத்துவப் போராளிகளின் பயணமும் அதற்கேற்றாற்போல அமைந்திருந்தது.

    சற்று பிசகினால் கூட நிலமை தலைகீழாகிவிடும் அபாயம் நிறைந்த அந்தக் களத்தில் அதிக இழப்புகளையும் அதேநேரம் எதிரியின் குகையில் மாட்டுப்படக்கூடிய எதிரியே சுற்றிவரச் சூழ்ந்த களம் அது.

    தாக்குதலை ஆரம்பிக்கும் அணியானது குறித்த நேரத்தில் வென்று எதிரியின் பிரதான முகாம்களையும் மினிமுகாம்களையும் கைப்பற்ற வேண்டும். மருத்துவ அணியானது கிழக்கிலிருந்து மேற்காக வீதியை ஊடறுத்து குறைந்தது 2கிலோமீற்றர் தொலைவில் மருத்துவத்தை ஆரம்பிக்க வேண்டும். திட்டமிடப்பட்ட ஆயத்தங்களோடு போராளிகளுடன் மருத்துவ அணியும் பயணிக்கத் தொடங்கியது.

    சிட்டு அந்தக்களத்தின் போராளிகளுக்கான காவும் குழுவிற்கான பொறுப்பாளனாக நியமிக்கப்பட்டு நகர்ந்த அணிகளோடு சென்று கொண்டிருந்தான். காயமடையும் போராளிகளை மருத்துவ அணியிடம் கொடுத்தல் , தொடக்கம் எதிரியிடமிருந்து கைப்பற்றப்படும் ஆயுதங்களை உரிய இடத்திற்கு அனுப்புதல் , களமுனைக்குத் தேவையான விநியோகத்தையும் செய்யும் பொறுப்பு காவும் அணிக்கானதாக அமைந்தது.

    தேவையேற்படும் போது காவும்குழுவினர் சண்டையில் பங்கெடுக்கவும் தயாராகவே செல்வார்கள். எல்லாவற்றிற்கும் தயாராகச் சென்ற காவும் அணியோடு ஏற்கனவே காயமுற்று கட்டையாகிய காலோடு சென்று கொண்டிருந்த வீரர்களுக்குச் சமனான வேகத்தில் போனான் சிட்டு.

    இரும்பாய் கனத்த இதயங்களும் பனித்துளியாய் மாறும் என்பதற்கு அடையாளமாக பல்வகைப்பட்ட முகங்கள் அந்த நகர்வில் நடந்து கொண்டிருந்தார்கள். எல்லோர் முகங்களும் ஜெயசிக்குறுவை வெல்வோம் என்ற உறுதியோடே பயணித்துக் கொண்டிருந்தார்கள்.

    000 000 000

    மதியம் வெளிச்சத்தில் புறப்பட்ட சமரணியானது மாலையில் முகாமின் முன் காவலரணைத் தாண்டி நிறுத்திக் கொண்ட பயணம் நன்றாக இருள் படர்ந்ததும் மீண்டும் தங்களது சண்டை நிலைகளை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள். ஒவ்வொரு போராளியும் எதிரியை விழிக்கவிடாமல் மிகவும் அவதானமாகத் தங்களது பாதங்களை அடியெடுத்து வைத்து அந்த இருளோடு பயணத்தைத் தொடர்ந்தார்கள்.

    எதிரியின் முகாமைச் சுற்றி எதிரியால் அமைக்கப்பட்ட மண்ணணைகளையும் தாண்டி முட்கம்பி வேலிகள் தடையரண்கள் யாவையும் தாண்டி அணிகள் குறித்த இடங்களைச் சென்றடைந்திருந்தது. இருள் முழுவதுமாகச் சூழ்ந்திருந்தது.

    சண்டை மூண்டது. எதிரி உசாரடைந்துவிட்டான். தனது அனைத்துப் பலத்தையும் ஒன்று திரட்டி போராளிகளுக்கு எதிராக தாக்குதலைத் தொடங்கினான். வெற்றி அல்லது வீரமரணம் என்ற முடிவோடு போராளிகளின் அணிகள் எதிரிக்கு சவாலாகச் சண்டை பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

    எதிரியால் செலுத்தப்பட்ட எறிகணைகள் மழைக்காலம் போல இடி மின்னல் வேகமாய் ஏவப்பட்டுக் கொண்டிருந்தது. இரு பகுதியினராலும் ஒளிபரவச்செய்த பராவெளிச்சத்தில் போராளிகள் முன்னேறிக் கொண்டிருந்தார்கள்.

    டோபிடோக்களைக் கொண்டு சென்று கம்பிவேலிகளில் பொருத்திவிட்டு கண்ணிமைக்குள் நொடிக்குள் நிலையெடுத்துக் கொள்ளும் கண நேரத்தில் எதிரியின் கம்பிச்சுருள்களும் கம்பிவேலியும் காணாமற்போய்க் கொண்டிருக்க அப்பாதைகளினூடு துப்பாக்கிகளோடு பாய்ந்து சென்று கொண்டிருந்தார்கள் வீரர்கள்.

    கைக்குண்டுகள் , ரைபிள் கிரனைட்கள் வீசப்பட்டு எதிரியின் காவலரண்கள் பற்றியெரிந்து கொண்டிருந்தது. யுத்த களமானது தீப்பொறிகளால் நிறைந்து கந்தகப்புகையால் காற்றை நிறைத்தது. இரவு பகற்பொழுது போல பராவெளிச்சத்தால் நிலவின் வரவாய் வானம் வெழுத்தும் நெருப்புத் துண்டங்களால் நிறைந்தது அந்தப்பகுதி.

    நிலமையை உணர்ந்து கொண்ட எதிரி பிரதான தளம் நோக்கி பின்வாங்கி ஓடிக்கொண்டிருந்தான். புலிகள் வசம் அப்பகுதி வீழ்ந்திருந்தது. தப்பியோடிய எதிரி பிரதான தளத்திலிருந்து புலிகளின் பகுதி நோக்கி நெருப்பை விதைத்தாற் போல கனரகங்களால் தாக்கிக் கொண்டிருந்தான்.

    காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் காவும் குழுவும் மருத்துவப் போராளிகளும் வேகவேகமாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். காயமடைந்தவர்களைத் தேடித்தேடிச் சிகிச்சைகளைச் செய்யத் தொடங்கியது மருத்துவ அணி. புலிகளின் கட்டுப்பாட்டினுள் வந்திருந்த அப்பகுதியை நோக்கிய எதிரியின் எறிகணைத் தாக்குதல் பலமாகியது. நிலமை ஆபத்தானதாகிறது. போராளிகள் காயமடைந்து கொண்டிருந்தார்கள். அதிக குருதிப்பெருக்கால் வீரமரணங்களும் நடந்து கொண்டிருந்தது.

    மருத்துவப்போராளிகள் ஓடியோடி உயிர்காப்பைச் செய்து கொண்டிருந்தார்கள். அந்த இருளில் மருத்துவப்போராளியொருவன் அங்கே காயமடைந்து முனகிக் கொண்டிருந்த ஒரு போராளியைப் புரட்டுகிறான். வானை அறுத்து வெளிச்சத்தைப் பரப்பிய பராவெளிச்சத்தில் பார்க்கிறான் அந்த மருத்துவப் போராளி.

    அங்கே வயிற்றில் பெரும் காயமடைந்து சிட்டு முனகிக்கொண்டிருந்தான். அடுத்து தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் சிட்டுவை இழந்துவிடக்கூடிய அபாயத்தை உணர்த்திக் கொண்டிருந்தது. அவ்விடத்திலிருந்து மீட்கப்பட்டு உடனடியாகச் சிகிச்சை வழங்கினால் மட்டுமே சிட்டுவைக் காப்பாற்ற முடியும். அந்தப் போராளி வேகமாக அவனை அப்புறப்படுத்த முனைகிறான்.

    காற்றையும் அந்த இரவையும் அறுத்தெடுத்துக் கொண்டு எறிகணைகள் வீழ்ந்து கொண்டிருந்தது. அவர்களுக்கு அருகாய் எறிகணைகள் நெருங்கி விழுந்து கொண்டிருந்தது. அடுத்தடுத்து வீசப்பட்ட எறிகணைகள் அவர்கள் அருகில் விழப்போவதை உணர்ந்த மருத்துவப்போராளி நிலத்தில் குப்புறப்படுக்கிறான். மிக அருகில் விழுந்து வெடித்த எறிகணையில் அவனும் காயமடைகிறான்.

    அடுத்த வினாடி மருத்துவப் போராளிகளில் யாவரும் காயமடைந்திருந்ததை அவதானிக்கிறான். உடனடியாக பீல்ட் கொம்பிறசறை எடுத்து தனது காயத்துக்கும் கட்டிவிட்டு ஓடியோடி ஏனைய போராளிகளுக்கும் கட்டுகிறான். அதேநேரம் பின்னுக்கு அனுப்ப வேண்டியவர்களை அனுப்பிக் கொண்டு சிட்டுவிடம் வந்தான்.

    காற்றே ஒருகணம் மௌனித்து சுவாசமே நின்றுவிடும் போலிருந்தது. அடுத்து விழுந்த எறிகணையில் சிட்டு மேலும் காயமடைந்திருந்தான். அவனிடமிருந்து எவ்வித சத்தமும் வரவில்லை. அமைதியாய்க் கிடந்தான்.

    ஆம் பாடித்திரிந்த குயில் பேச்சின்றி மூச்சின்றி தன் இறுதி மூச்சை அந்த மண்ணில் நிறுத்திக் கொண்டு மீளாத்துயில் கொண்டான். 01.08.1997 அன்று எங்கள் இதயங்களில் இதய ராகமாக எங்கள் நினைவுகளில் என்றுமே நீங்காதவனாக தமிழீழ விடியலைத்தேடிய பாதையில் தங்கள் சுவடுகளைப் பதித்து அன்றைய சமரில் வீரகாவியமான வீரர்களோடு அவனும் விழிகளை மூடிக்கொண்டான்.

    அவனுக்குள்ளும் போராட்ட வாழ்வோடு பூத்த காதலும் அவனோடு புதைந்து போனது….! காதலைவிட தாயகத்தை அதிகமாய் காதலித்தவன் காலம் முழுவதும் வாழும் காவியமாக அவன் வீரமும் பாடலும் அவன் வாழ்வும் என்றென்றும் அழியாத நினைவுகளாக…..!

    75இற்கும் மேற்பட்ட விடுதலைப் பாடல்களைப் பாடி எங்கெல்லாமோ வாழும் தமிழ் ரசிகமனங்களில் நிரந்தரமாகினான் சிட்டு. அவன் அடிக்கடி சொல்வது போல அவனில்லாது போனாலும் அவனது குரலில் நிறைந்த பாடல்கள் ஒவ்வொன்றும் அவனை உயிர்ப்பித்துக் கொண்டேயிருக்கிறது. மௌனமாய் கரையும் காற்றின் நுண்ணிய இளைகளில் சிட்டு இசையாய்….!

    ஈழவிடுதலைக் கனவோடு காவியமானவன் முள்ளியவளை துயிலுமில்லத்தில் துயில்கொண்டான். மூசியெறியும் அலைகளின் முகமாய் , வீசிச்செல்லும் தென்றலில் தளிராய் , மூண்டெரிந்த விடுதலை மூச்சில் அவன் பாடலாய் மனங்களில் நிறைகிறான் மரணத்தை வென்றவனாக….! மேஜர் சிட்டு என்றென்றும் மறக்க முடியாதவானாக எங்கள் மனங்களில் நிறைந்து காற்றுள்ள வரை வாழும் காவியமாக…..!

    - சாந்தி ரமேஷ் வவுனியன் -

    http://chiddu.com/chiddu.222.html

     

     

    • Like 2
  5. புலனாய்வின் தந்தை மாதவன் மாஸ்ரர் 56வது பிறந்தநாள் நினைவுகளோடு…..!

    ஜூலை 23, 2014 | வீரத்தளபதிகள்.   Edit Post
    இயற்பெயர் – ரகுநாதன்

    தந்தை – பத்மநாதன்
    பிறந்த ஊர் – அளவெட்டி
    பி.திகதி – 24.07.1958

    Maathavan-Maasrar--600x222.jpg

    அளவெட்டிக் கிராமம் தந்த சொத்து ரகுநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட மாதவன் மாஸ்ரர். காலம் பல கல்விச்சாதனையாளர்களை களம் அனுப்பியது வரலாறு. அத்தகைய பலரைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாறு தன்னோடு அழைத்துச் சென்று நடந்திருக்கிறது.

     

    அந்தத் தடங்களில் மாதவன் மாஸ்ரரும் நடந்து உயர்ந்து விடுதலைப்புலிகள் புலனாய்வுத்துறையின் வேர்களில் ஒருவராகியிருந்தார். காலங்கள் கடந்தும் அழியாத வரலாற்றுப் பொக்கிசமாக முள்ளிவாய்க்கால் முடிவோடு இன்னும் முடியாத வரலாறாக வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களில் மாதவன் மாஸ்ரரையும் காலம் கௌரவப்படுத்திக் கொள்கிறது.

     

    மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் மாணவனாக படித்துக் கொண்டிருந்த ரகுநாதன் என்ற இளைஞன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைந்ததும் அந்த இளைஞன் ஒரு காலத்தின் கதையானதும் நாங்கள் வாழ்ந்த காலத்தில் நடந்த அதிசயம் அல்ல அற்புதம்.

    சிங்களத்தின் கொடிய இனவாதம் தமிழர்களின் உயிரையும் உடமைகளையும் தின்ற காலத்தில் தான் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த ரகுநாதனின் வாழ்வும் மாற்றத்தைக் கண்டது.

     

    தலைவர் பிரபாகரன் அவர்களின் துணைவியார் மதிவதனி மற்றும் வினோஜா, லலிதா, ஜெயா ஆகிய பெண்களின் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்ற அந்த நாளில் இத்தகைய போராட்டங்களில் தன்னையும் இணைத்து விடுதலைப்பாதையில் நடக்கத் தொடங்கிய ரகுநாதன் 83 தமிழர் மீதான இனக்கொலையின் பின்னர் இந்தியாவிற்கு படிப்பை தொடர்வதற்காக பெற்றோரால் அனுப்பப்பட்டார்.

     

    நாட்டைப்பிரிந்த துயர் சொந்த நாட்டில் தொடர்ந்து வாழ முடியாத அவலம் அயல்நாட்டில் கல்வியைத் தொடர முடியாத மனவுளைச்சலைக் கொடுத்தது. அப்போது இந்தியாவில் விடுதலைப்புலிகளுடன் தொடர்பினைத் தானே தேடி அவர்களுடன் தனது பணிகளை ஆரம்பித்தார். இந்தியாவில் 4வது பயிற்சிப் பாசறையில் பயிற்சியை முடித்து ரகுநாதன் மாதவனாகினார்.

     

    அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் , புலிகளின் புலனாய்வுத்துறையின் இரண்டாவது பொறுப்பாளராக இருந்த கபிலம்மான் ஆகியோர் உட்பட பலரை உருவாக்கியது 4வது பயிற்சிப்பாசறையாகும். இங்கிருந்து உருவாகிய பலர் பின்னாட்களில் அரசியல் இராணுவ புலனாய்வுத் துறைகள் என பல்பரிமாண ஆற்றலோடு பல்லாயிரம் பேரை உருவாக்கும் பேராற்றலைப் பெற்றார்கள்.

     

    அக்காலத்தில் ‘போர்க்களம்’ என்ற பெயரில் நூலொன்று உள்ளகச் சுற்றாக வெளியிடப்பட்டுக் கொண்டிருந்தது. இந்த நூலானது தமிழ் மொழியில் உலக இராணுவ நுணுக்கங்கள், பயிற்சிகளின் நெ(பொ)றிமுறைகள் யாவையும் கற்பித்தலுக்கும் போராளிகள் கற்றுக் கொள்ளவும் பயன்பட்டது.

     

    தலைவர் பிரபாகரன் அவர்களால் தமிழில் இராணுவப் பயிற்சியை போராளிகளுக்கு வழங்க வேண்டுமென்ற விருப்பத்தை இந்த நூல் நிறைவு செய்திருந்தது. போர்க்களம் நூலின் உருவாக்கத்தில் மாதவன் மாஸ்ரரின் பங்கானது வரலாற்றில் அழிக்க முடியாதது.

    வெளிநாட்டு இராணுவப் பயிற்சிகள்,  இராணுவ வெளியீடுகள் , ஆயுதங்கள் பற்றிய நூல்களையெல்லாம் பெற்று அவற்றை தமிழாக்கம் செய்து போராளிகளுக்கு இலகுவாய் கற்பிக்கும் வகையில் வடிவமைத்து முதல் முதலில் தமிழில் இராணுவ பயிற்சியை போராளிகளுக்கு வழங்கிய பெருமையில் மாதவன் மாஸ்ரருக்கு கணிசமான பங்கு உண்டு.

     

    ஆயுதப்பயிற்சியை முடித்துக் கொண்ட மாதவன் மாஸ்ரர் தலைவரோடு பணிகளில் இணைந்து 1987களில் தாயகம் வந்து சேர்ந்தார். தாயகம் திரும்பிய பின்னரும் தலைவருக்கு அருகாமையிலேயே பணிகள் நிறைந்தது. எல்லோருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்பை பெற்றவர்களுள் மாதவன் மாஸ்ரரும் ஒருவர். பின்பு இந்திய இராணுவ காலத்தில் தலைவருடன் இணைந்திருந்தவரை யாழ்மாவட்டத்திற்கான பணிகளுக்காக தலைவரால் அனுப்பப்பட்டார்.

     

    26.10.1987 இந்திய இராணுவம் மாதவன் மாஸ்ரர் பிறந்த ஊரான அளவெட்டியில் நிகழ்த்திய படுகொலைச் சம்பவமானது வரலாற்றில் அளவெட்டி கிராமத்தினால் மறக்க முடியாதது. இந்திய இராணுவத்தினரின் முதலை என்னும் எம்.ஐ.24 ரக உலங்குவானூர்தியால் நிகழ்த்தப்பட்ட வான் தாக்குதலில் அளவெட்டி இந்து ஆச்சிரமத்திலிருந்த வயோதிபர்கள் சிறுவர்கள் உட்பட 15பேருக்கு மேல் கொல்லப்பட்டார்கள். மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கியிருந்த அந்தக்காலத்தில் காட்டிலிருந்து 1988இல் யாழ்மண்ணை வந்தடைந்தார் மாதவன் மாஸ்ரர்.

     

    ஊரெங்கும் இந்தியப்படைகள் சுற்றி நிற்க மக்களுடன் வாழ்ந்த போராளிகளில் மாதவன் மாஸ்ரரும் அந்தக் காலத்து சவால் நிறைந்த நாட்களையெல்லாம் கடந்து சென்றார். உறக்கமில்லை உணவில்லை அலைவும் மரணப் பொழுதுகளுமாக விடிந்த பொழுதுகள். எனினும் மாறாத தேசக்காதலோடு மக்களோடு ஊரெங்கும் நடந்து திரிந்த கால்கள் ஓயாது உழைத்துக் கொண்டேயிருந்தது.

    அப்போதைய யாழ் மாவட்ட பொறுப்பாளராக இருந்த லெப்.கேணல்.மதி அவர்கள் திருநெல்வேலியில் இந்திய ராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டார். 10.12.1988 இந்தியப்படைகளிடம் பிடிபடாமல் தன்னைத் தானே சுட்டு வீரகாவியமான மதி அவர்களின் இழப்போடு தொடர்புகள் யாவும் அறுபட்டு தனித்துப் போனார் மாதவன் மாஸ்ரர். மீண்டும் காட்டுக்குச் செல்வதற்குமான வழிகளும் தொடர்புகள் அற்றுப்போய்விட்டது.

     

    கடல்வழியாக தனது முயற்சியில் தமிழகத்திற்குச் சென்றடைந்து கிட்டண்ணா, பாலாண்ணா ஆகியோரின் தொடர்புகளை எடுத்து அவர்களோடு பணிகளைத் தொடர்ந்தார். எங்கிருந்தாலும் விடுதலைப் போராளிக்கு ஓய்வில்லையென்பதனை தனது உழைப்பால் உணர்த்திய போராளி. பின்னர் 1989களில் பிறேமதாச அரசோடு பேசும் காலம் வந்த போது தாயகம் வந்து பாலமோட்டைக் காட்டுப்பகுதியைச் சென்றடைந்தார்.

     

    ஒவ்வொரு போராளியின் நினைவிலும் மாதவன் மாஸ்ரரின் கலகலப்பும் நகைச்சுவையுமே நினைவில் நிற்கும் மறக்க முடியாத மனிதன். மென்மையான அந்த இதயத்தினுள் ஒரு மாபெரும் புலனாய்வாளன் புலனாய்வு ஆசான் புதைந்து கிடந்ததை காலமே கைபற்றி வெளியில் காட்டியிருந்தது.

     

    புலிகளின் புலனாய்வுத்துறை பெரு வளர்ச்சி கண்டு உலகை அதிசயிக்க வைத்த எல்லா வெற்றிகளின் பின்னாலும் மாதவன் மாஸ்ரரும் வெளியில் தெரியாத வேராக இருந்தார்.

    000                000                  000
     

    அந்தக்காலம் தலைவருக்கும் தளபதிகளுக்கும் சோதனைகளும் தடைகளுமே சூழ்ந்திருந்தது. எனினும் புலிகளின் அமைப்பின் துறைசார் வளர்ச்சிகள், மாற்றங்கள் மேம்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தது. அதன் ஒரு பிரிவாக புலனாய்வுப்பிரிவின் தேவையும் அதன் எதிர்கால பணிகளும் உணரப்பட்டு தனித்த சிறப்பான புலனாய்வுத்துறையை உருவாக்க தலைவரின் சிந்தனையின் செயல்வடிவமாக போராளிகள் செயற்படத் தொடங்கியிருந்தனர்.

     

    அப்போதைய பிரதித்தலைவரான மாத்தையாவின் நிர்வாகத்தில் சலீம் அவர்களின் பொறுப்பின் கீழ் மாதவன் மாஸ்ரரினால் பயிற்சிகள் வழங்கப்பட ஆயத்தங்கள் தயராகியது.

     

    புலனாய்வுப்பிரிவின் பயிற்சிகள் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளின் முடிவில் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் போராளிகள் தெரிவு செய்யப்பட்டு பாலமோட்டைக்கு உள்வாங்கப்பட்டார்கள். புலனாய்வுத்துறையின் வளர்ச்சியின் ஆரம்பம் இங்கேதான் உருவாகியது. இதுவே பின்னாளில் புலனாய்வுத்துறையின் பல்பரிமாண மாற்றத்தின் ஊற்றாகியது.

     

    பாலமோட்டைக் காடுகளே இந்திய இராணுவ காலத்தில் புலிகளின் வரலாற்றில் முக்கிய பங்கை வகித்த வரலாற்றைத் தன்னகத்தே தாங்கிக் கொண்டிருந்தது. பிரேமதாசா அரசுடனான பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற காலம் அது.

     

    பாலமோட்டையிலிருந்தே அரசியல் போராளிகளை இலங்கை விமானப்படையின் உலங்குவானூர்தி கொழும்புக்கு ஏற்றிச் செல்லும். அரசியல் பேச்சுக்குச் சென்று திரும்பும் போராளிகளை மாதவன் மாஸ்ரரால் வளர்க்கப்பட்ட புலனாய்வுப்போராளிகள் பத்திரமாக பாதுகாப்பாக கொண்டு போய்ச் சேர்க்கும் பொறுப்பினையும் ஏற்றிருந்தார்கள்.

     

    யாழ்மாவட்டத்திலிருந்து அதிகளவிலான போராளிகளும் இதர மாவட்டங்களிலிருந்து ஐந்து ஐந்து போராளிகளுமாக பாலமோட்டைக்கு வந்து சேர்ந்தார்கள். புலனாய்வுப் பயிற்சிக்கு வந்திருந்த போராளிகள் தனித்தனியே நேர்முகம் செய்யப்பட்டார்கள். பயிற்சியின் கடுமை கட்டுப்பாடுகள் யாவும் விளங்கப்படுத்தப்பட்டு அனைத்து விதிகளையும் ஏற்றுக் கொள்ளும் துணிச்சல் மிக்கவர்களை மட்டுமே பயிற்சியில் பங்கெடுக்க அனுமதியும் வழங்கப்பட்டது.

     

    பயிற்சியின் கடினம் கட்டளைகளை ஏற்றுக் கொண்டு போராளிகள் புலனாய்வுப்பயிற்சிக்குத் தயாரானார்கள். 37என்ற சுட்டுப்பெயரைக் கொண்டு இயங்கிய முகாம் புலனாய்வுப்பயிற்சி முகாமாக அமைக்கப்பட்டது.
    லெப்.கேணல் கிறேசி அனைத்து முகாம்களுக்கு பொறுப்பாகவும் புலனாய்வுப் பகுதிக்கு சலீம் அவர்களும் பொறுப்பாக புலனாய்வுப் பயிற்சியில் ஆண் பெண் போராளிகள் தயாராகினர்.

     

    பயிற்சிக்கான முதல் நாள் கலந்துரையாடலில் பயிற்சி பெறும் போராளிகளுக்கான பயிற்சி விதிகள் விளக்கப்பட்டது. பயிற்சியின் போது தினமும் 10கிலோ மண்மூடையைச் சுமந்தபடியே பயிற்சிகளைச் செய்ய வேண்டும். நித்திரைக்குச் செல்லும் நேரம் தவிர்த்த இதர நேரமெல்லாம் 10கிலோ மண்மூடையை யாரும் கழற்றவே கூடாதென்று அறிவுறுத்தப்பட்டது. இப்பயிற்சியின் நெறிப்படுத்துனர்களாக மாதவன் மாஸ்ரர் மற்றும் சலீம் ஆகியோர் கவனிப்பர் எனவும் விளக்கப்பட்டது.

     

    புலனாய்வுத்துறை பயிற்சிகளில் மாதவன் மாஸ்ரரின் சிரத்தையும் கவனமும் அனைத்துப் போராளிகளையும் அப்பயிற்சியில் அக்கறையோடு பயிற்சியைத் தொடர வைத்தது. அதுமட்டுமன்றி குறும்புகள் ,குழப்படிகள் நிறைந்த இளவயதுக்காரர்களால் நிறைந்த அந்தப் பயிற்சி முகாமில் பயிற்சியாசிரியராக மட்டுமின்றி ஒரு தந்தையின் கண்டிப்பும் கவனமும் ஒவ்வொரு போராளிக்கும் பொதுவாகவே இருந்தது.

     

    குறும்புகள் செய்வோருக்கு தண்டனைகள் வழங்குவதில் தந்தையாகவும் அவர்களின் வளர்ச்சியில் தாயின் அக்கறையோடும் புலனாய்வுப்பயிற்சிகளை நடாத்தி புலனாய்வுத்துறையின் வளர்ச்சியில் தனது பங்களிப்பை காத்திரமாக வழங்கியிருந்தார். மாதவன் மாஸ்ரரினலேயே உருவாக்கப்பட்ட போராளிகள் புலனாய்வுத்துறையின் பல்துறைசார் ஆற்றல்களோடும் வளர்ந்தார்கள். அனைத்து புலனாய்வுப் போராளிகளின் உருவாக்கத்திலும் மாதவன் மாஸ்ரரே ஆதாரமாக ஆசானாக இருந்தார்.

    000          000           000

    யாழ்மாவட்டத்தின் பொறுப்பாளராக தலைவரால் நியமிக்கப்பட்டிருந்த பொட்டு அம்மான் 1989 இறுதியில் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு தளபதி பானு அவர்கள் யாழ்மாவட்டத்தின் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார்.

    காரணம் சொல்லப்படாமல் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு பொட்டு அம்மான் அவர்கள் தலைவரால் பாலமோட்டைக்கு அழைக்கப்பட்டார். தனது ஒவ்வொரு அசைவிலும் பணியிலும் புலனாய்வுக்கான திறனையும் ஆழமையையும் வெளிப்படுத்தியது மட்டுமன்றி அதுவே சிந்தனையாயிருந்த பொட்டு அம்மான் அவர்கள் புலிகளின் புலனாய்வுத்துறையின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

     

    பொட்டு அம்மானிடம் திறமை வாய்ந்த தளபதிகளான லெப்.கேணல் சூட், லெப்.கேணல். மாதகல் ராஜன், மாதவன் மாஸ்ரர் ,கபிலம்மான் போன்றவர்களைக் கொடுத்த தலைவர் புலனாய்வுத்துறையின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான தளத்தையும் வழியையும் உருவாக்கும் பொறுப்பை பொட்டு அம்மான் அவர்களிடம் கையளித்திருந்தார்.

     

    பொட்டு அம்மான் தலைமையில் புலனாய்வுத்துறையின் உருவாக்கம் புதிய வடிவத்தில் காலடி வைத்த காலம் 1990. இக்காலம் இந்தியப்படைகள் ஈழத்தை விட்டு வெளியேறியிருந்தது. புலிகள் நாட்டுக்குள் வந்திறங்கி மக்களோடும் மக்களின் பணிகளோடும் தங்கள் பணிகளை ஆரம்பித்திருந்தார்கள்.

    புலனாய்வுத்துறையின் முக்கிய மாற்றமும் வளர்ச்சியும் புதிய பாய்ச்சலை நோக்கிய பயணம் ஆரம்பித்திருந்த இந்நேரத்தில் பொட்டு அம்மான் அவர்களால் மாவட்டங்களுக்கான புலனாய்வுப்பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

     

    யாழ்மாவட்டம் மாதகல் ராஜன்  , வன்னிமாவட்டம் மல்லி , மட்டக்களப்பு மாவட்டம் நியூட்டன் , திருகோணமலை மாவட்டம் கபிலம்மான் ஆகியோர் நியமிக்கப்பட்டு மாவட்டங்களுக்கான புலனாய்வுத்துறை கட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.

    இக்காலமானது மிகுந்த சிக்கல் நிறைந்த காலமாக இருந்தது. அதுமட்டுமன்றி சகோதர இயக்கங்கள் , இந்திய இராணுவத்தோடு இணைந்து இயங்கியவர்கள் , இந்திய இராணுவ காலத்தில் நடந்த பல படுகொலைகளில் நேரடிப் பங்காளிகள்,  எதிரியின் உளவாளிகள் முகவர்கள் யாவரும் கலந்திருந்த சிக்கல்கள் நிறைந்த நேரமது. ஒவ்வொரு விடயத்தையும் சரியாக இனங்கண்டு ஆராய்ந்து விடுதலைப்பயணம் பயணிக்க வேண்டிய இக்கட்டான காலமும் இதுவே.

     

    இந்தக் காலத்தில் தான் புலனாய்வுத்துறையினரின் முக்கிய பணிகளில் ஒன்றாக தகவல் சேகரிப்பு விசாரணைப்பிரிவு உருவாக்கப்பட்டது. சேகரிக்கப்படும் தகவல்களின் நம்பகத்தன்மை , உறுதிப்படுத்தல் , சரியான வகையில் இனங்காணப்பட்ட விடயங்கள் அனைத்தும் சரியானவே என்பதனை ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பெரும் பொறுப்பு விசாரணைப் பிரிவின் கையிலேயே இருந்தது.

     

    இவ்விசாரணைப் பிரிவிற்கும் பொட்டு அம்மானுக்குமான இணைப்பாளராக மாதவன் மாஸ்ரர் நியமிக்கப்பட்டார். விடயங்களைச் சரியாக ஆராய்ந்து அவற்றை எழுத்து வடிவாக்கி அறிக்கைகள் தயாரித்து பொட்டு அம்மானுக்கு வழங்கும் பொறுப்பில் மாதவன் மாஸ்ரரின் பங்கு காத்திரமானது மட்டுமன்றி காலத்தின் தேவையாகவும் அமைந்தது.

     

    அறிக்கைகள் என்பது கடதாசிகளில் எழுதப்பட்டாலும் அக்கடதாசிகளிலேயே அனைத்து விடயங்களும் த(தே)ங்கியிருந்தது. ஒவ்வொரு சிறு சிறு விடயங்களிலும் சரிகளையும் ,தவறுகளையும் , நியாயங்களையும் , தீர்வுகளையும் இவ் அறிக்கைகளே தாங்கிக் கொண்டிருந்தது.

     

    ஒரு சிறு தவறுக்கும் ஒரு அறிக்கையே காரணமாகிவிடக்கூடிய ஆபத்தான பணி. ஆபத்தான பணியையும் அழகாக செய்து முடிக்கும் திறமை மாதவன் மாஸ்ரரிடமும் மாதவன் மாஸ்ரரால் உருவாக்கப்பட்ட புலனாய்வுத்துறைப் போராளிகளிடமுமே இருந்தது. போராளிகள் சேகரித்து வரும் அறிக்கைகள் யாவையும் தானே வாசித்து அவ்வறிக்கைகளை தொகுப்பாக்கி கோடிகளுக்கு நிகரான பெறுமதி மிக்க புலனாய்வுப்பணியின் தந்தையாகவே மாதவன் மாஸ்ரரின் தியாகம் அமைந்தது.

    000            000               000

    இக்காலத்தில் மாதவன் மாஸ்ரரிடம் கல்விக்குழுவினை உருவாக்குமாறு பொட்டு அம்மானால் பணிக்கப்பட்டது. ஒவ்வொரு சொல்லுக்கும் செயல்வடிவத்தையே காட்டும் திறமை மிக்கது புலிகளின் வரலாறு. பொட்டு அம்மானின்  எண்ணத்தில்  உருவாக்கப்பட்ட கல்விக்குழுவின் பொறுப்பாளராக மாதவன் மாஸ்ரர் நியமிக்கப்பட்டு கல்விக்குழுவின் செயற்பாட்டுக் குழு உருவாக்கம் காண்கிறது.

     

    கல்விக்குழு ஆசிரியர் குழுவில் 3பேர் நியமிக்கப்பட்டார்கள். இவர்கள் உலக புலனாய்வு அமைப்புகள் கட்டமைப்புகள் பற்றிய தரவுகளை சேகரித்தல் மற்றும் நூல்களை தருவித்துக் கொடுக்க வேண்டும். தருவிக்கப்படும் அனைத்துலக புலனாய்வு பிறமொழி நூல்களை ஓய்வுபெற்ற மொழிப்புலமையாளர்களுக்கு ஊதியம் வழங்கி நூல்களை தமிழில் மொழிமாற்றம் செய்யும் பொறுப்பையும் கண்காணிக்கும் பொறுப்பும் மாதவன் மாஸ்ரரிடமே இருந்தது. இப்பணிக்காக தனியாக இடமொன்றை ஒழுங்கு செய்து அங்கு வைத்தே இப்பணி மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்தது.

     

    இப்போதைப் போல அந்தக்காலம் இலகுவில் கணணியில் தட்டச்சு செய்து நூல்களை வடிவமைக்கவோ அல்லது அச்சுப்பதிக்கவோ இலகு வசதிகள் இல்லை. பிறேமதாச அரசின் பொருளாதாரத்தடை நடைமுறையில் இருந்த காலம். அடிப்படை தேவைகள் கூட மிகவும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அச்சடிக்கும் கடதாசியிலிருந்து அனைத்தும் தடைவிதிக்கப்பட்டிருந்தது.
    மொழிபெயர்க்கப்படும் புலனாய்வு நூல்களை அச்சுக்கோர்த்து நூல்வடிவாக்கி புலனாய்வுப் போராளிகளுக்கு கற்பித்தலுக்கு ஏற்ற வகையில் உருவாக்கும் பெரும் பொறுப்பை மாதவன் மாஸ்ரரே எற்றிருந்தார்.

     

    அத்தோடு இலங்கையில் வரும் செய்தித்தாள்களில் வரும் செய்திகளில் முக்கியமான செய்திகளை வெட்டி அவற்றை மட்டைகளில் ஒட்டி அச்சுப்பிரதியெடுத்து நூலுருவாக்கும் பொறுப்பானது ஒரு புலனாய்வுத்துறையின் போராளியிடம் வழங்கப்பட்டது.

    ஒவ்வொரு போராளியும் தனக்கு வழங்கப்படும் பொறுப்பையும் பணியையும் கவனமாகவும் கடமையுணர்வோடும் செய்து முடிக்கும் திறனை ஊட்டியது புலிகளின் பயிற்சிகளும் பாசறைகளும். இங்கும் மாதவன் மாஸ்ரரின் பங்கும் பணியும் பெரியது.

     

    மாதவன் மாஸ்ரரால் உருவாக்கப்பட்ட கல்விக்குழுவின் அபார வளர்ச்சியும் செயற்பாடும் வேகவேகமாய் மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் கொடுத்தது. இத்தனை வளர்ச்சியின் முதுகெலும்பாக மாதவன் மாஸ்ரரே நிமிர்ந்து நின்றார்.

    இத்தோடு பிறமொழிகளில் வெளியாகும் புலனாய்வு திரைப்படங்கள் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டு போராளிகளுக்கு காட்டப்பட்டது. அனைத்து துறைசார் போராளிகளுக்கும் கல்விக்குழுவினால் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களே கற்பித்தலில் பயன்படுத்தப்பட்டது. இக்கற்பித்தல் பொறுப்பும் ஒரு புலனாய்வுத்தறைப் போராளியிடம் வழங்கப்பட்டிருந்தது. கல்விக்குழுவே அனைத்து துறைசார் போராளிகளுக்கான விழிப்புணர்வையூட்டியும் புடம்போட்டு வளர்த்து பணிகளுக்கு அனுப்பினார்கள்.

     

    அதுபோல வெளிப்பணிகளுக்குச் செல்லும் ஆண் பெண் போராளிகளையும் கல்விக்குழுவே பயிற்றுவித்து அனுப்பியது. கல்விக்குழு உருவாக்கிய திறமையானவர்களை வைத்தே இதர துறைகளின் போராளிகளுக்கான பயிற்சிகளும் , இளநிலைப் போராளிகளுக்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டது. இத்தனைக்கும் ஆணிவேராக நின்ற மாதவன் மாஸ்ரரினால் உருவாக்கப்பட்டவர்கள் பலர் பின்னாட்களில் பெரும் பொறுப்புகளில் கடமைகளைத் தொடரவும் ஏணியாக நின்ற இமயம் மாதவன் மாஸ்ரர்.

     

    கல்விக்குழுவின் ஆரம்பமும் அதன் அடித்தளமுமே பின்னாளில் புலனாய்வுத்துறையின் வளர்ச்சியிலும் இதர துறைகளின் திறமையாளர்களை செயற்பாட்டாளர்களை உருவாக்கியதில் பெரும்பங்கு வகித்ததை வரலாறு தன் பதிவேட்டில் பதிவு செய்து கொண்டது. உலகம் புலிகளின் புலனாய்வுத்துறையை இன்றுவரை புதிர்களாயே பார்க்கும் வகையில் புலிகளின் புலனாய்வுத்துறையின் வளர்ச்சியானது மேம்படவும்  அதி உச்சதிறனுடன் வளரவும் காரணமான பலரை உலகம் காணாமல் அவர்கள் மௌனங்களாலே எழுதப்பட்டார்கள். அந்த மௌனம் எழுதிய வரிகளில் மாதவன் மாஸ்ரரும் அடங்குகிறார்.

    000            000               000

    1993காலம் தமிழீழப்போராட்ட வரலாற்றில் சவால் நிறைந்த நெருக்கடியை புலிகள் சந்தித்த காலம். எனினும் புலனாய்வுத்துறையின் நுண்ணிய அவதானிப்பு ஆற்றல் எல்லாத்தடைகளையும் உடைத்துக் கொண்டு நிமிர வைத்தது. இக்காலம் மாதவன் மாஸ்ரர் உருவாக்கிய போராளிகள் வௌ;வேறு துறைகளுக்கும் பணிகளுக்கும் சென்று கொண்டிருந்தார்கள். கல்விக்குழுவின் வளர்ச்சியானது மாதவன் மாஸ்ரருக்கு மேலும் பல பணிகளை வழங்கிய நேரம் கல்விக்குழுவிற்கான பொறுப்பாளராக பொஸ்கோ அவர்கள் நியமிக்கப்பட்டார்.

     

    மாதவன் மாஸ்ரர் பொட்டு அம்மான் அவர்களின் நேரடி அவதானத்திற்குள் உள்வாங்கப்பட்டார். இக்காலத்தில் வெளியக புலனாய்வுத்துறையின் ஆண்கள் பிரிவுக்கு தளபதி கேணல் சாள்ஸ் அவர்களும் , பெண்கள் பிரிவுக்கு தளபதி லெப்.கேணல் அகிலா அவர்களும் பொறுப்பில் இருந்தார்கள் அகிலா அவர்கள் வீரச்சாவடையும் வரையும் பெண்கள் புலனாய்வின் பொறுப்பாளராக அகிலா அவர்களே இருந்தார். அதிலும் அகிலா அவர்கள் வெளியகப்பொறுப்போடு  வெளியகப்பணியகத்தின் பொறுப்பையும் ஏற்றிருந்தார்.

    இவ்விரண்டு நிர்வாகங்களுக்கும் உட்படாத ஒரு பணியை பொட்டு அம்மான் அவர்கள் மாதவன் மாஸ்ரரிடம் வழங்கியிருந்தார். அந்த வேலைத்திட்டத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பையும் மாதவன் மாஸ்ரரிடமே வழங்கியிருந்தார். புலனாய்வுத்துறையின் பணிகள் இரகசியமானதாகவும் ஆழமானதாகவும் இருந்த போதிலும் இவை அனைத்திலும் மாதவன் மாஸ்ரருக்குப் பெரும் பங்கிருந்தது.

     

    000             000            000

    அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்கா அவர்களுடனான பேச்சுவார்த்தைகள் முறிவடைந்து 3ம் கட்ட ஈழப்போர் ஆரம்பமாகியிருந்தது. சமாதானத்தைக் கொண்டு வருவதாகச் சொல்லிக் கொண்ட சந்திரிகா அம்மையார் அவர்கள் தமிழர் தரப்புடன் போர் செய்யத் தக்க தனது முழுபலத்தையும் பயன்படுத்த முனைந்து யுத்தத்தில் ஈடுபடத்தொடங்கியது.

    குறிப்பாக தமிழர் தாயகப்பகுதிகளான வடகிழக்கில் யுத்தம் ஆரம்பித்திருந்தது. தொடர்ந்த விமானத் தாக்குதல்கள் எறிகணை வீச்சுக்கள் மரணத்தின் காலைகளையே தமிழர் நிலத்தில் பரவிவிட்டிருந்தது. அன்றாட விடியல் சாவுகளைக் கொண்டு வரும் பொழுதுகளாகவே விடியத் தொடங்கியது. எல்லா நம்பிக்கைகளும் போய் இனி யுத்தம்தான் என சந்திரிகா அரசு கடல், தரை, வான் படைகளை களத்தில் இறக்கியது.

     

    மாதவன் மாஸ்ரர் மிகவும் அவசியமான பொறுப்பொன்றை பொறுப்பேற்று தனது பணிகளில் நேர்த்தியும் கவனமுமாகியிருந்த வேளையில் சூரியக்கதிர் நடவடிக்கையை எதிரி மேற்கொண்ட நாட்களவை.

     

    யாழ்மண்ணைக் கைப்பற்றும் முயற்சியில் யாழ்மாவட்டத்தில் பலாலி ,காங்கேசன்துறை ஆகிய இடங்களில் முகாமிட்டிருந்த சிங்களப்படைகள் முற்றுமுழுதாக யாழ்மண்ணைக் கைப்பற்றும் நோக்கில் அனைத்து முனைகளிலிருந்தும் முன்னேறத் தொடங்கியது.

     

    09.07.1995அன்று பலாலியில் முகாமிட்டிருந்த சிங்களம் முன்னேறிப்பாய்தல் எனும் பெயரில் வலிகாமம் வடக்கு, மேற்கு பகுதிகளை நோக்கி படை நகர்வை மேற்கொண்டனர். தங்கள் வாழிடங்களைவிட்டு இடம்பெயர்ந்த மக்கள் தேவாலங்கள் கோவில்களில் தஞ்சமடைந்தனர்.

     

    முன்னேறும் படைகளுக்கு ஆதரவாக வான்படைகளின் புக்காரா விமானங்கள் தாக்குதலில் ஈடுபட்டிருந்தன. இதன் தொடக்கமாக நவாலி தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த மக்கள் மீது சிங்கள வான்படை நடாத்திய தாக்குதலில் படுகாயமடைந்தும் மரணித்துப் போனவர்களின் உறவுகளின் கண்ணீரால் நிறைந்தது.

     

    குழந்தைகள் பெண்கள் வயோதிபர்கள் என இக்குண்டு வீச்சில் இரத்தமும் சதையுமாக நவாலி தேவாலய வளாகம் மரண ஓலத்தால் நிறைந்தது. 3குண்டு வீச்சு விமானங்கள் ஒன்றாக நடாத்திய தாக்குதலில் இரத்தக்கறைபடிந்த துயரத்தை மக்கள் மனங்களில் பதிவாக்கியது. பேரவலத்தின் ஆரம்பம் அன்று தொடங்கியது.

     

    அதேதினத்தில் அளவெட்டி , சண்டிலிப்பாய் போன்ற பகுதிகள் நோக்கியும் பலாலியிலிருந்து எதிரியால் தொடுக்கப்பட்ட பீரங்கி , எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்ட எதிரி வலிகாமம் தென்மேற்கு , மேற்கு , தெற்கு பகுதிகள் நோக்கியும் மக்கள் வாழிடங்கள் நோக்கி தாக்குதலை மேற்கொண்டனர். உடுத்த உடைகளுடன் கைகளில் அகப்பட்டவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு மக்கள் இடம்பெயரத் தொடங்கினர்.

     

    வீதியெங்கும் மக்கள் வெள்ளம். மக்கள் நகரும் இடமெங்கும் எதிரியின் விமானத்தாக்குதலும்,  எறிகணை வீச்சுகளும் துரத்திக் கொண்டு போனது. மரணங்களும் , காயங்களும் சாவின் வாசனையை துயரத்தின் வேதனையை மக்கள் அனுபவித்தபடியே நடந்தார்கள். காயமடைந்தவர்களை காப்பாற்ற அவகாசமோ மரணித்தவர்களை அடக்கம் செய்ய ஆதரவோ கிடைக்கவில்லை. மருத்துவ வசதியோ காயமடைந்தோரை ஏற்றிச் செல்ல வாகன வசதியோ இல்லாமல் மரணம் மலிந்தது. மனங்கள் மட்டும் வலியோடு நடந்தது.

     

    நவாலிமண்மீது வீசப்பட்ட குண்டுகளால் அக்கிராமம் அமைதியை இழந்தது. அழுகையினாலும் மரண வலியினாலும் உயிர்கள் துடிக்க அன்று நவாலி சென்பீற்றர் தேவாலயம் மற்றும் நவாலி சின்னக்கதிர்காமம் முருகன் ஆலயத்திலும் வீழ்ந்த குண்டுகளால் 147இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து போக 360இற்கும்  மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சைக்கும் வழியின்றி பலரை இழக்கும் நிலமையை அன்றைய நாளில் அங்கிருந்த மக்களால் மறக்க முடியாத வடுவைத் தந்தது. இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கு உணவு, நீர் வசதிகளை வழங்கிய 48தொண்டர்களும் அன்று தங்கள் உயிர்களை அங்கே விதைத்து விழிமூடிக்கொண்டனர்.

     

    எதிரியின் வரவை எதிர்த்து சமராடிக் கொண்டிருந்தார்கள் புலிகள். நவாலி , நாகர்கோவில் ,நந்தாவில் அம்மன்கோவில் என இடம்பெயர்ந்து தஞ்சமடைந்திருந்த மக்கள் தங்கிடங்களிலெல்லாம் சிங்கள வான்படையின் தாக்குதல் பெரும் உயிரழிவைத் தந்தது.

    அநியாயமாக அழிக்கப்பட்ட நவாலி தேவாலயத்தை அரச ஊடகம் புலகளின் ஆயுதத் தொழிற்சாலை குண்டுவீச்சில் அழிக்கப்பட்டதென அறிவித்திருந்தது. உலகமும் இந்த அழிப்பை பெரிதுபடுத்தவில்லை. தேவாலயம் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் பற்றி யாழ் மறை மாவட்ட ஆயர் வத்திக்கானுக்கு அறிவித்திருந்தார். வத்திக்கானும் நாவாலித் தேவாலயத்தின் மீது வீசப்பட்ட குண்டுகளில் அழிந்த தேவாலயம் பற்றியோ உயிர்கள் பற்றியோ எவ்வித கவனத்தையும் காட்டவில்லை. என்றும் தமிழர் மீதான அழிவுகளை உலக நாடுகள் இப்படித்தான் மௌனிகளாக வெறும் பார்வையாளர்களாக நின்று பார்த்தது. புலிகளே மக்களின் அழிவுகளைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுதல் முதல் முன்னேறி வரும் இராணுவத்துடனான சமரையும் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

    எங்கள் மக்களைக் குண்டுவீசிக் கொன்றழித்த புக்காரா குண்டுவீச்சு விமானம் மீது 14.07.1995 சண்டிலிப்பாயில் வைத்து புலிகளின் ஏவுகணை மூலம்  புக்காரா சுட்டுவீழ்த்தப்பட்டது. கடற்புலிகளால் இதே காலம் எடித்தாரா கப்பல் மீது கடற்புலிகளால் தாக்குதல் நடாத்தப்பட்டு கடல் மூலமான எதிரியின் வழங்கலிலும் புலிகள் தடைய ஏற்படுத்தியிருந்தனர்.

     

    தரையால் முன்னெடுக்கப்பட்ட எதிரியின் முன்னேறிப் பாய்தல் நடவடிக்கைக்கு எதிராக புலிகளால் புலிப்பாய்ச்சல் நடவடிக்கையும் மேற்கொள்ளலுக்கு திட்டமிடப்பட்டது. புலிப்பாச்சல் நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்ட காலம் பௌர்ணமிகாலமாகும்.
    நிலவு காலத்தில் வலிந்த தாக்குதல்களைச் செய்வதில் அதிகளவு பாதகத்தையே சந்திக்க வேண்டிய நிலமை வரும். ஆனால் அந்த நிலவுகாலத்தில் எதிரியிடமிருந்து மண்ணையும் மக்களையும் காப்பாற்ற புலிப்பாய்ச்சல் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தைக் காலம் கொடுத்தது. புலிப்பாய்ச்சல் நடவடிக்கையில் புலிகளின் இராணுவத் திறனும் எதிரியுடனான சண்டையும் எதிரியால் எதிர்கொள்ள முடியாது போக கைப்பற்றிய பகுதிகளை விட்டு எதிரி பின்வாங்கிப் போனான்.  புலிப்பாய்ச்சல் மூலம் எதிரியின் கனவு சிதைக்கப்பட்டது.

    000               000              000

    17.10.1995 அன்று ரிவிரெச (சூரியக்கதிர்) என்ற பெயரில் யாழ்மண்ணை முற்றுகையிடும் கனவோடு சிங்களப்படைகள் முன்னேறத் தொடங்கியிருந்தது. வரலாறு காணாத அழிவையும் இழப்பையும் இடப்பெயர்வையும் கண்டது யாழ்மண்.

    காலம் காலமாய் சேர்த்த சொத்துகள் உடமைகள் யாவையும் இழந்து அகதியாக்கப்பட்டார்கள் மக்கள். சிங்களத்தின் கொலைக்கரங்கள் தமிழர்களின் உயிரையும் உடமைகளையும் கொன்று போட்டுக் கொண்டிருக்க கிடைத்ததைக் கைகளில் எடுத்துக் கொண்டு இடம்பெயரத் தொடங்கியவர்களை 30.10.1995அன்று மாபெரும் துயரில் வீழ்த்தியது காலம்.

    6லட்சம் தமிழர்களை ஒரேநாளில் துடைத்தெடுத்து சொந்த இடங்களிலிருந்து துரத்திய அந்த நாளின் துயரத்தை வார்த்தைகளுக்குள் கட்டி வைக்க தமிழில் வார்த்தைகளாலேயே முடியாது போனது. மழைவெள்ளத்தில் மக்கள் வெள்ளம் நிறைந்தது. ஒருநாளில் யாழ்மண்ணின் குடிகள் தங்கள் சொந்த ஊரைப் பிரிந்து சென்று கொண்டிருந்தது.

     

    30.10.1995அன்று புலனாய்வுத்துறையின் பணியகப்பொறுப்பாளரும் வெளியக பெண்கள் பிரிவு புலனாய்வுப் பொறுப்பாளருமான லெப்.கேணல்.அகிலா அவர்கள் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார். மண்ணை மீட்கும் சமரில் ஈடுபட்டு தங்கள் இன்னுயிர்களை ஈந்து கொண்டிருந்தவர்கள் வரிசையில் லெப்.கேணல்.அகிலா அவர்களும் வீரகாவியமானார். மாதவன் மாஸ்ரரின் வழிநடத்தலில் பாலமோட்டைக் காடுகளில் நடைபெற்ற முதல் புலனாய்வுப் பாசறையில் வளர்ந்த அகிலா அவர்களின் புலனாய்வுத்துறையின் பணிகளானது ஒரு தனி வரலாறு.

     

    புலிகள் பெரும் சவாலையும் நெருக்கடியையும் சந்தித்த காலங்களில் இக்காலமும் முக்கியமான காலமாகும். இப்போது லெப்.கேணல்.அகிலா அவர்களின் பொறுப்பிலிருந்த பணியகப் பொறுப்பு மாதவன் மாஸ்ரரிடம் பொட்டு அம்மானால் வழங்கப்பட்டது.

    இப்போதைய காலம் போல கையுக்குள் ஆவணங்களை சேமிக்கும் இலத்திரனியல் வசதியோ அல்லது சேமிப்பு வசதிகளோ இல்லாத காலம். அனைத்து கோவைகள் ஆவணங்கள் யாவுமே கையெழுத்து வடிவில் லட்சக்கணக்கான கடதாசிகளில் எழுதப்பட்டு கோவைப்படுத்தப்பட்டவை. ஒவ்வொரு ஆவணமும் விலைபேச முடியாத பெறுமதி மிக்கவை. உயிரை விடவும் பெறுமதி வாய்ந்தவை அத்தனை ஆவணங்களும்.

     

    எதிரி முன்னேறி வரவர அத்தனை ஆவணங்களையும் பின்னகர்த்திக் கொண்டு போக வேண்டிய பொறுப்பு மாதவன் மாஸ்ரரிடம் வந்தது. ஏற்கனவே ஒருவரின் நிர்வாகத்தின் கீழிருந்து அனைத்தையும் மீளச்சீர்படுத்தி வேகவேகமாய் அனைத்தையும் இடம் மாற்றி பாதுகாப்பாக வன்னிக்குக் கொண்டு செல்லும் பொறுப்பில் மாதவன் மாஸ்ரர் தனக்கு வழங்கப்பட்ட பணியைச் சக போராளிகளின் துணையோடு பாதுகாப்பாகவும் கொண்டு சென்று சேர்த்தார்.

     

    இதுவொரு சவாலான பணியாகவே இருந்தது. எல்லோரையும் உள்வாங்கி பொறுப்பைக் கொடுத்து ஆவணங்களை நகர்த்த முடியாத அவசரம். தனது பொறுப்பில் மாதவன் மாஸ்ரர் காட்டிய அர்ப்பணிப்பு , பொறுப்புணர்வு ஒரு போராளியின் கடமையை உணர்த்தியது. குறித்த போராளிகளை மட்டுமே நியமித்து குறித்த கால இடைவெளிக்குள் அனைத்தையும் பத்திரப்படுத்திய மாதவன் மாஸ்ரரின் பணியை பொட்டு அம்மான் பாராட்டி கௌரவித்திருந்தார்.

    000             000           000

    புலனாய்வுத்துறையின் வளர்ச்சியும் பணிகளின் விரிவாக்கமும் புலனாய்வுத்துறைப் போராளிகளின் பல்பரிமாண ஆற்றலும் எங்கும் சென்று வென்று வரும் வல்லமையை வளர்த்திருந்த காலத்தின் ஒரு பகுதியது. எதிரியைவிடவும் எம்மவர்களின் தொல்லைகள் காட்டிக்கொடுப்புகள் சகோதர இயக்கங்களின் அநியாயங்கள் எல்லைமீறியிருந்த காலம்.

     

    பணிகளுக்காக எதிரியின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இயங்கத் தொடங்கிய போராளிகளை எதிரி இனங்காண்கிறானோ இல்லையோ மற்றைய இயக்கங்கள்; இனம் கண்டு பணிகளில் நின்ற போராளிகளை ஆதரித்த குடும்பங்கள் அவர்களின் தங்கிடங்களை தேடி தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

     

    இந்த நிலமையிலிருந்து போராளிகளை பாதுகாப்பதோடு ஆதரவாளர்களின் குடும்பங்களையும் பாதுகாக்கும் சமவேளை சகோதர இயக்கங்களுடனான ஒற்றுமையையும் ஏற்படுத்த வேண்டிய காலத்தின் தேவையை உணர்ந்து கொண்ட பொட்டு அம்மான் அதற்காக ஒரு கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்தை மாதவன் மாஸ்ரரிடம் விளக்கி ஒரு நிர்வாக அலகை உருவாக்கும் பணியை ஒப்படைத்தார்.

     

    இவ்விடத்தில் அரசியல் போராளியாகவும் மாதவன் மாஸ்ரரின் ஆழுமை வெளிப்பட்டிருந்தது. புலனாய்வுத்துறையின் மூலவேரான மனிதர் அரசியல் பணியிலும் பணிகளை நகர்த்தவும் பணியாற்றவும் முடியுமென்ற உண்மையை ஒவ்வொருவரும் உணரும் வகையில் அவரது அரசியல் பணிகள் அமைந்தது.

     

    இப்பணியில் முக்கியமான பொறுப்புக்களில் இருந்த புலனாய்வுத்துறைப் போராளிகளையும் பொட்டு அம்மான் கொடுத்திருந்தார். இப்பணியில் மாதவன் மாஸ்ரரிற்குத் துணையாக ஞானவேல் அவர்கள் பணியாற்றத் தொடங்கியிருந்தார். இம்முயற்சியே பின்னாட்களில் சகோதர இயக்கங்கள் அரசியல்வாதிகளை புலிகளோடு ஒற்றுமைப்பட்டு அரசியல்பணிகளைச் செய்வதற்கான மூலவேராக இருந்தது.

     

    பின்னர் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஒருங்கிணைவு மற்றைய இயங்கங்களுடனான புரிந்துணர்வு செயற்பாடுகள் யாவுக்கும் பொட்டு அம்மானின் திட்டமிடல்களும் செயற்பாடுகளும் புலனாய்வுப் போராளிகளின் பணிகளும் மாதவன் மாஸ்ரரின் உழைப்புமே காரணம்.

    ஓவ்வொரு இயக்கங்களுடனும் தொடர்புகளைப் பேணவும் ஒவ்வொரு இயக்கங்களுடனும் இணைந்து பணியாற்றவும் கூடிய வகையில் ஒவ்வொரு இயக்கங்களுக்குமான தனித்தனியான புலனாய்வுக்கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அக்கட்டமைப்பு மூலம் அவர்களுடனான பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

     

    கடந்தகால தவறுகள் , புரிதலின்மைகளினால் ஏற்பட்ட கசப்புணர்வுகள் யாவையும் இந்தக் கட்டமைப்பு கணிசமான அளவு மறந்து பணிகளைச் செய்யவும் காரணமாகியது. எனினும் பழைய தவறுகளை மட்டுமே எண்ணையூற்றி வளர்த்து அதில் குளிர்காயத்துடித்தவர்களுக்கு மத்தியில் சகோதர இயக்கங்களுடனான தொடர்பாடல் பணிசார்ந்த வேலைகள் இறுக்கமடைந்தது.

    இதில் ரெலோ , ஈ.பீ.ஆர்.எல்.எவ் போன்ற இயக்க நிர்வாகங்களோடு ஆரம்பமே மிகவும் சிறந்த புரிதல் , தாயகம் எனும் ஒரே நோக்கத்திலான பணிகளும் செய்யும் வாய்ப்பை உருவாக்கியதில் கணிசமான பங்களிப்பையும் போராளிகளை உருவாக்கியதிலும் மாதவன் மாஸ்ரரின் பங்கென்பது அளப்பரியது.

     

    ஒருகாலம் எதிரும் புதிருமாக இருந்த நிலமையை மாற்றி புலிகளின் புலனாய்வுப் போராளிகளுக்கான தடைகள் இல்லாத ஆதரவை இராணுவ கட்டுப்பாட்டில் இயங்கிய இயக்கங்களும் , இயக்கப் பிரமுகர்களும் வழங்கி தங்களுக்கிடையிலான நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியதன் வெளிப்பாடே சமாதான காலத்தில் ஒரே மேசையில் அனைவரும் ஒன்றிணையக் காரணமாய் அமைந்தது. மாற்றம் ஒன்றே உலகில் மாறாதது. அந்த மாற்றம் புலிகளுக்கும் ,மற்றைய சகோதர இயக்கங்களுக்கும் இடையில் புதிய மாற்றங்களை உருவாக்கியது. இம்மாற்றத்தின் வேராக நின்றவர் பொட்டு அம்மான் அவர்கள்.

    000               000               000

    ஐக்கிய தேசியக்கட்சியின் ரணில் அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம் 2002 பெப்ரவரி 22ம் திகதி சமாதான ஒப்பந்தம் எழுதப்பட்டது. இவ்வொப்பந்தமானது கைச்சாத்திடப்பட்ட பின்னர் புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் நடைபெற்ற 6கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. அனைத்து பேச்சுவார்த்தைகளும் நோர்வேயின் மத்தியஸ்தத்தில் நடைபெற்றிருந்தது. இப்பேச்சுவார்தைகள் யாவும் இலங்கைக்கு வெளியில் வெளிநாடுகளில் நடைபெற்றிருந்தது.

     

    புலிகள் அனைத்துலக சமூகத்திற்கு தமது முழுமையான ஆதரவினை வழங்கி இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருந்தனர். ஆயுதங்களோடு போர்புரிந்த அமைப்பானது அரசியல் ரீதியான விடுதலையை விரும்பியதன் அடையாளமாக இப்பேச்சுவார்த்தைகளில் புலிகள் பங்கேற்றார்கள்.

     

    இக்காலத்தில் வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் தேசியச் செயற்பாட்டாளர்கள் தாயகத்திற்கு சென்று புலிகளின் அனைத்துதுறைசார் போராளிகளுடன் உறவுகளை வலுப்படுத்திக் கொண்டிருந்தார்கள். வெளிநாடுகளில் இருந்து  செல்லும் தமிழர்களுடன் தொடர்புகளைப் பேணி நிலத்தில் வாழும் போராளிகளுக்கும் மக்களுக்குமான இணைப்புப் பாலமாக மாதவன் மாஸ்ரர் ஆற்றிய பங்கானது புலத்திலிருந்து மாதவன் மாஸ்ரரின் நிர்வாக அலகின்கீழ் பணியாற்றியவர்கள் அனைவருமே மாதவன் என்ற மலையின் சிகரம் தொடவல்ல ஆற்றலை பண்பை அறிந்திருந்தனர்.

     

    இதேவேளை இலங்கையின் அனைத்து பாகங்களிலும் வாழ்ந்த அனைத்து சமூகங்களுடனும் நல்லுறவை வளர்த்து புலிகளுக்கும் அந்த மக்களுக்கும் இடையிலான நல்லுறவை ஏற்படுத்தியதிலும் மாதவன் மாஸ்ரரின் பங்கு வெளியில் வராத உண்மையாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது.

     

    நம்பியிருந்த சமாதான காலம் தமிழருக்கான விடுதலையை நிம்மதியான வாழ்வைத் தருமென்று நம்பிய நம்பிக்கைகள் எல்லாம் மெல்ல மெல்ல சிதையத் தொடங்கியது. அனைத்துலகமும் புலிகள் மீதே தங்கள் முழுமையான பலத்தையும் பயன்படுத்தத் தொடங்கியது. இலங்கையரசின் அத்துமீறல்கள் யாவற்றிற்கும் அனைத்துலக சமூகம் ஆதரவாகவே நடந்து கொண்டது.

    2009மேமாதம் எங்கள் கனவுகள் , இலட்சியப் பயணத்தின் நிமிர்வுகள் யாவுமே அனைத்துலகத்தின் ஆதரவோடு பலியெடுக்கப்பட்டு குறுகிய நிலப்பரப்பில் புலிகளின் பலம் முடக்கப்பட்டது. வாழ்வோமாயினும் போராடுவோம் இல்லை வீழ்வோமெனினும் இறுதிவரை போராடிச்சாவோம் என்ற நிலமையில் புலிகள் அனைத்துலக பலத்தோடு போராட வேண்டிய நிலமைக்குத் தள்ளியது உலகு.

     

    பெரும் பலங்களாக விளங்கிய தளபதிகளும் போராளிகளும் இறுதிச்சமரில் பங்கேற்றார்கள். எல்லாரையும் போல மாதவன் மாஸ்ரரும் தனது முடிவை களத்திலே எழுதும் முடிவையெடுத்தார். தனது துணைவியோடு இணைந்து தனக்கான பணிகளோடு களத்தில் நின்றார்.

    திருமண பந்தத்தில் இணைய மறுத்து தனது இலட்சியத்தில் மட்டுமே கவனமாக இருந்தவர் மாதவன் மாஸ்ரர். ஆனாலும் திருமண பந்தத்தில் இணைய வேண்டுமென பலமுறை தலைமையாலும் தளபதிகளாலும் தொடர்ந்து கேட்கப்பட்டுக் கொண்டேயிருந்தார். தேசம் விடியும் வரை தேசக்காதலை மட்டுமே சுமக்கப் போவதாய் விடாப்பிடியாக நின்றார்.

     

    எனினும் தலைமையின் தொடர்ந்த வேண்டுதலுக்கு மதிப்பழித்து நீண்டகால இழுத்தடிப்பின் பின்னரேயே திருமணம் செய்ய ஒப்புக் கொண்டார். குடும்ப பந்தத்தையும் விட தேசபந்தத்தையே ஆழமாக நேசித்த மனிதன். அவரது துணைவியாரும் புலனாய்வுத்துறைப் போராளியாகவே அமைந்தது அவரது பணிகளுக்கு மேலும் ஆதரவையும் வழங்கியது.

    தங்களது இறுதி முடிவு தப்பித்தல் அல்ல இறுதிவரை போராடிச் சாதல் என்ற முடிவைத் தனது அன்புக்கினிய தோழமைகளுக்கு அறிவித்துவிட்டு களத்தில் நின்றார்.

     

    18.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் கடற்கரையில் 30வருட விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்டு புலிகளின் ஆயுதங்களும் மௌனித்துக் கொண்டது. போராடியே தமிழினத்தின் அடையாளத்தை உலகின் மூலைமுடுக்கெங்கும் கொண்டு சேர்த்த புலிகளின் வரலாறு அந்தக் கடலைகளோடு கரைந்து கொண்டிருந்தது.

     

    ஆயிரக்கணக்கில் முள்ளிவாய்க்கால் அலைகளோடு உயிர்களின் துயரோசைகள் கலந்தது. இறுதிவரை இலட்சியம் சுமந்து ஒன்றாய் வாழ்ந்த தோழர்கள் தளபதிகள் போராளிகளோடு மாதவன் மாஸ்ரரும் தனது முடிவைத் தானே தேர்ந்து விழிமூடினார்.

    புலிகளின் புலனாய்வுத்துறையின் வளர்ச்சி , இராணுவ , அரசியல் வளர்ச்சி , சமூக பொருளாதார , உலக அரசியலுடனான மாற்றங்களுக்கு ஏற்ப புலிகளின் அனைத்து வளர்ச்சியிலும் மாற்றங்களிலும் மாதவன் மாஸ்ரர் என்ற மாபெரும் ஆற்றல் இருந்ததும் வளர்ந்ததும் வரலாறாக….!

     

    புலிகளின் போரியல் வெற்றிகளை வழிநடாத்திய தளபதிகள் பலருடனும் நட்பும் நெருக்கமும் கொண்டிருந்த மாதவன் மாஸ்ரரிடம் தங்கள் திட்டமிடல்களுக்கான ஆலோசனைகள் பெற்று தாக்குதல் வியூகங்கள் அமைத்து சண்டைகளை வழிநடாத்திய பல தளபதிகள் யாவரோடும் மாதவன் மாஸ்ரரும் அழியாத வரலாறாக மனங்களில் நிறைகிறார்.

     

    உலகம் தனது மூச்சை நிறுத்தும் வரையும் வாழும் விடுதலைப் போராட்ட வரலாறுகள் ஒவ்வொன்றிலும் புலிகளின் வரலாறும் வாழ்ந்து கொண்டேயிருக்கும். அந்த வரலாறுகள் ஒவ்வொன்றினுள்ளும் புலிகளும் மாவீரர்களும் பிறந்து கொண்டேயிருப்பார்கள். மாதவன் மாஸ்ரர்களாகவும் மரணத்தை வென்ற புலிவீரர்களாகவும் என்றென்றும் துளிர்த்துக் கொண்டேயிருப்பார்கள் புலிகள்.

     

    - நினைவுப்பகிர்வு - சாந்தி ரமேஷ் வவுனியன் -

     

    • Like 6
  6. சுண்டுவுக்கு இனிமையான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். பி.கு :- கெதியிலை திருமண வாழ்த்துச் சொல்லவும் காத்திருக்கிறோம் என்பதனை சுண்டுவுக்கு அறியத்தருகிறோம்.

    Milestones-Birthday-Wishes.jpg

  7. ஊடகனாய் , கவிஞனாய், கலைஞனாய் பிறந்த மண்ணின் கடமைகளில் தன் பணி செய்யும் காலத்தின்  கடன் உணர்ந்து பணியாற்றும் தமிழ்ப்பொடியனுக்கு இனிமையான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
    Birthday%2BWishes15.jpg
     
    மறக்காமல் பிறந்தநாள் பலகாரங்களை தபாலில் அனுப்பி வைக்கவும்.
  8. லெப்.கேணல் நீலன் (பிறந்தநாளில் உயிர் தந்த மாவீரன்)

    Lep.Kenal-Neelan-600x337.jpg

    வெற்றிகளின் பின்னால்….

    ” உருவங்கள் மட்டும் உள்ளார்ந்த சக்திகளை வெளிப்படுத்தப் போதுமானவை அல்ல ‘ என்பதற்கு எங்களிடம் உதாணரமாக அமைந்தவன் நீலன். ஐந்தரையடி உயரமும், ஒட்டிய வயிறும், ‘அஸ்மா’ நோயின் பாதிப்பை வெளிப்படுத்தும் நெஞ்சறையுமென பார்ப்பவர்களுக்கு கதாநாயக அந்தஸ்த்தை கொடுக்காத தோற்றம் கொண்டவன். என்னினும் இவனது துறுதுறுப்பான விழிகள் இவனின் தேடலிற்கான இயல்பினை வெளிப்படுத்தப் போதுமானவையாகும். வெற்றியின் அத்திவாரங்களினுள் மறைந்தவர்கள் பலர் வெளித்தெரிவதில்லை. அவர்களுள் ஒருவனாக நீலனும் இருக்கிறான். அவனது வாழ்வின் சில சம்பவங்களை மட்டும் கூருவதினூடாக இவனை வெளிக்காட்ட முயசிக்கிறோம்.

    அப்பொழுது இவன் சிறு பராயத்தினன். சிங்கள ஆக்கிரமிப்பாளர்களின் அச்சுறுத்தலுக்குள்ளான கிழக்கு மாகாணக் கிராமம் ஒன்றில் பிறந்தவன். பேரினவாதக் கோரங்கள் இவன் அயலினையும் தாக்கின. பல கிராமங்கள் காணாமல் போயின. ஆங்கில மருத்துவம் ஆரம்பப் படிகளையே கண்டிராதாஹ் பிரதேசம் அவனது. ஒருநாள் இவனின் வலக்கை மோதிரவிரலை அரவம் தீண்டிவிட்டது. அவசர அவசரமாக சில ஊர்கள் கடந்து ஊர்ப்பரியாரி ஒருவரின் வீட்டை வந்தடைகிறார்கள். தமிழர்கள் தமிழர்களிடையிலேயே தம்மை அடையாளம் காட்டப் பயந்த சூழல், ஒருவாறு இவர்கள் நிலைமையை விளங்கவைத்த்னர்.

    உடனடியாக ஊர்மருத்துவம் தொடங்கியது. பாம்புக் கடிக்குள்ளான அவனது விரல் சவர அழகினால் கீறிக் கிழிக்கப்பட்டு, இரத்தம் வெளியேற்றப்பட்டு, மரபுவழி மருத்துவம் கொடுக்கப்பட்டது. விவதங்களிற்கு அப்பால் இவன் உயிர் தப்பினான் என்பது உண்மையானது.

    தொடர்ந்த காலங்கள் இவனை ஒரு போராளியாக மாற்றியது. களங்கள் பலவற்றில் கால் பதித்தவனின் களச்செயற்ப்பாடுகள் பதிவற்றும் போனவற்றுள்  அடக்கம். பின்னர் நிதித்துறையில் கணக்காய்வாளனாக கடமையேற்றான். அதனைத் தொடர்ந்து மருத்துவப்பிரிவுப் போராளியாக மாறினான்.  இடைக்காலத்தில் இவன் உள்வாங்கியிருந்த வியாபார உலக அறிவும், பின்னர் பெற்றுக்கொண்ட மருத்துவ அறிவும் கைகொடுக்க போர்மருத்துவத்தை வளர்க்க பல திட்டங்களை தீட்டிச் செயற்பட்டான்.  பனி, மழை, வெயிலென இவன் பார்ப்பதுமில்லை,  ‘ அஸ்மா’ இவனை விட்டதுமில்லை. இவனை சேகுவராவுடன் ஒப்பிடுவதா இல்லை மூத்த உறுப்பினர் கப்டன் பண்டிதருடன் ஒப்பிடுவதா என எங்களிடையே ஒரு விவாதமே நடக்கும்.

    தமிழீழப் போர் வரலாறு அதீக நெருக்கடிகளைச் சந்தித்திருக்கிறது. வன்னியில் தமிழர் போர்வீரம் அடைகாக்கப்படுகிறது. எதிரி எமது தந்திரோபாயப் பின் வாங்கல்களை எங்களின் நிரந்தரத் தோல்வியாக்க முயற்சிக்கிறான். அயல் அரசோ பழிவாங்கும் படலத்தை இறுக்கமாகவே கடைபிடிக்கிறது. நாங்கள் மூச்சுவிடுவதற்காக மூச்சுபிடித்து அடித்த அடியில் முல்லைத்தீவு முகாம் வீழ்ந்துவிட்டது. முந்நூறு போராளிகள் வீரச்சாவடைய, ஆயிரத்திற்கு மேற்ப்பட்டவர்கள் காயமடைய எங்களின் மருத்துவ வளங்கள் வற்றிவிட்டன. எதிரி கிளிநொச்சி நோக்கி படைநகர்வை தொடங்கிவிட்டான்.  ‘ நீலன் நீ வந்தால் சண்டை வெல்லும், வராவிட்டால் சண்டை தோற்கும் ‘ துறைப் பொறுப்பாளரின் கூற்று ரீங்காரமிட தமிழீழத்தின் தொப்பிழ் கொடியூடு பயணத்தைத் தொடர்கிறான்.

    முன்பின் அறிமுகமிலாத அயல்தேசம், மொழி உச்சரிப்பு வித்தியாசமே ஏற்ற கடமைக்கு உலைவைத்துவிடும். கூட்டிச் சென்றவர்களுக்கும், இவன் கூட்டுச்சேர இருந்தவர்களும் கைதிகளாயினர், அல்லது காணாமல் போயினர். இவனது நிலையோ பரசூட்டில் சகாரா பாலைவனத்தில் குதித்தவன் போலாகி விட்டது. தாய்மொழி பேசுபவர்களிடையே கூட வாய்திறக்க முடியாமல் செயற்கை ஊமையாக்கினான். இங்கு காயமடைந்த சிலநூறு போராளிகளினதும், களத்தில் நிற்கும் சிலவாயிரம் போராளிகளினதும் நன்நிலையும், உயிரும் இவனது செயற்ப்பாட்டில் தங்கியுள்ளது. இவனின் நிலையோ..?

    ஊர்க்கோவில் ஒன்றின் முன்றலில் தாடிவளர்த்து, கந்தல் உடை உடுத்து, பதினைந்து நாட்களினுள் வயது அதிகரித்தவனாக, பிச்சைக்காரனாக, பசிவயிற்றைக் கிள்ள காத்திருக்கின்றான்.

    ‘ படைத்தவன் படியளப்பான் ‘ எங்கோ கேட்டது இவனுள் எதிரொலிக்கிறது. இவனுடன் போட்டிக்கு இன்னும் சில எழைசிறுவர்கள். பக்தனொருவன் உடைத்த தேங்காய்ச் சிதறல்களில் ஒன்றை அவர்களுடன் மல்லுக்கட்டி எடுக்கிறான். ஒட்டிய மண்ணை கையினால் தட்டிவிட்டு உண்கின்றான். தேசத்திற்காய் தேவனிடம் பிச்சை எடுக்கிறான்.

    ஈழத்தமிழ் கதைத்தால் உடன் கைதாவான். சரளமாகத் தாய்மொழியும், சாதாரமாக ஆங்கிலமும் கதைக்கத் தெரிந்திருக்கும் ஊமையாகவே நடக்கின்றான், நடிக்கிறான். மூட்டை சுமந்து சிறு கூலி பெறுகின்றான். சோற்றை மட்டும் கடையில் வாங்குகிறான். ‘ ஏன் தம்பி கரி வேண்டாமா ? ‘ கடைக்காரனின் கேள்விக்கு பதில் கூறாமலே சற்றுத் தள்ளிச்சென்று தண்ணீர் தெளித்து உண்கின்றான்.

    பிச்சை எடுப்பது, கூலி வேலைகள் செய்வது, பிரதேசங்களை படிப்பதென நாட்களைக் கடத்தியவன் ஒருவாறாக கடற்கரையை வந்தடைகின்றான். எப்படியோ ஈழப்போராட்ட அனுதாபியோருவரின் வள்ளத்தை அடையாளம் காண்கிறான். அவனுடன் தொடர்பு கொண்டு தன்னை இக்கரை சேர்க்கும்படி மன்றாடுகின்றான். நம்பிக்கையினத்துடன் இறங்கியவன் இவனை இக்கரையில் இறக்கி விடுகின்றான். மருந்து சேர்க்கச் சென்ற போராளி பல நாட்கள் பட்டினி கிடந்தது பரதேசியாக உருமாறி மீண்டும் சொந்தமண்ணில் கால் பதிக்கின்றான்.

    தேசத்தின் தேவை மீண்டும் இவனை அக்கறை அனுப்புகின்றது. ‘ நீலன் உன்னை நம்பித்தான் இருக்கிறம். நீ சாமான் ‘ அனுப்பிறியோ, இல்லையோ சண்டை நடக்கும், மருந்துகள் வந்தால் பலர் தப்புவர். இல்லை இறப்பர்’. பொறுப்பாளரின் வாசகத்தை இதயத்தில் வாங்கியவன் மீண்டும் பயணத்தை தொடர்கின்றான்.

    மீண்டும் பிரதேசங்களைப் படிக்கின்றான். நண்பர்களையும், முகாம்களையும் உருவாக்குகின்றான். பலநூறு மைல்கல் பயணம் சென்று சிறுசிறு அளவுகளில் பொருட்களை கொள்வனவு செய்கிறான். பாரிய அளவில் பொருட்களை கொள்வனவு செய்கிறான். பாரிய அளவில் ஒரு இடத்தில் வேண்டினால் பகைவனின் உலவுப்பிரிவிடம் சிக்கவேண்டிவரும் என்பதால், கணணிவலையினுள் புகுந்து வெவ்வேறு தேசங்களிலிருந்தும் தேவையானவற்றைத் தருவிக்கின்றான். தனியொருவனாக சில உள்ளூர் நண்பர்களுடன் மறைப்புக் கதைகளைக் கூறி மருத்துவப் பொருட்களை உரிய கடற்கரைக் கிராமங்களுக்கு கொண்டுவந்து என்பது விபரிப்பிற்கு அப்பாற்பட்ட கடினங்களையும், திட்டமிடல்களையும் கொண்டது. எது எப்படியோ ஆங்காங்கே பல தொன்போருட்கள் கரை சேர்க்கப்பட்டுவிட்டது.

     
     
    00:00
     
    00:00
     
     
     

    பல லட்சம் பெறுமதியான பொருட்களைச் சேர்ப்பதற்கு பன்மடங்கு செலவு. இவற்றை நீர் புகாவண்ணம் பொலித்தின் பைகளில் போட்டு வாயினால் காற்றை உறிஞ்சி வெளியேற்றி பொதிகளாக்க வேண்டும். சிலரே இதனைச் செய்வார்கள். சுவாசத்தை தொய்வுடையவர்களுக்கு இவ்வாறு செய்யும் பொது நெஞ்சு விம்மி வெடிப்பது போன்றிருக்கும். நீலன் இதனை அளட்சியன் செய்தே செயற்பட்டான். மீண்டும் அப்பொருட்களை கடல், மணல்தாண்டி தொடையளவு கடல்நீர் தாண்டி தூக்கிவந்து சிறு சிறு வள்ளங்களில் ஏற்றவேண்டும். கடல் ஈரலிப்பும், உப்புக்காற்றும் இவனது ‘ அஸ்மா ‘ நோயை உலுப்பிவிட அதற்குரிய ‘ பம்மை ‘ எடுத்து அடித்துவிட்டு மீண்டும் மீண்டும், மூச்சிரைக்க மூச்சிரைக்க, தோள்புண் எரிவெடுத்து  இரத்தம் கசியக்கசிய அவற்றை ஏற்றிவிடுவான். உரிய அளவு வந்தவுடன் வள்ளங்கள் புறப்பட்டுவிடும். மிகுதிப் பொருட்களை மறைவிடம் சேர்ப்பதென்பது….. ஏற்றியவை தமிழீழத்தை நோக்கி கொண்டுவரப்படும் சிலசமயங்களில் இடைவெளியில் கடற்படையினால் தாக்கப்பட்டு மருந்துப் பொருட்களும் மாவீரர் உடல்களும் கரையொதுங்கும். இதனைப் பத்திரிகைகளில் பார்த்து அறிந்து கொள்வார்கள். அப்பொழுதெல்லாம் அவன் நினைப்பான் இன்றில்லாவிட்டால் என்றோவொரு நாள் தனக்கு இப்படி நடக்குமென்று.

    மீண்டும் தாயகம் திரும்புகின்றான். இப்பொழுது பரதேசியாக அல்ல. பரந்துபட்ட அறிவுடனும் செயல்புரியும் திறனுடனும் பிரதம மருத்துவர்களுடனும் துறைப் பொறுப்பாளர்களுடனும் கலந்தாலோசனைகளை மேற்கொள்கிறான். திரும்பவும் களம் ஏறுகிறான். தேவையானவற்றை தேவையான நேரத்தில் தேவையான அளவில் அனுப்பி வைக்கின்றான்.

    அந்நாட்டு உளவு ஸ்தாபனங்களிற்கு தண்ணி காட்டிவிட்டு பிறமொழி நகரங்கள் எல்லாம் சென்று வருகிறான். செலவைப் பார்க்காமல் பொருட்கள் வேண்டி காலம் போய் இப்பொழுது லாபமும் தரமும் பார்த்து தேவைகுரியவற்றை கொள்வனவு செய்து அனுப்புகிறான். தனியொருவனின் விடுதலைப்போரின் மருத்துவச் செயற்ப்பாடு தங்கியிருப்பது என்பது பாரிய ஆபத்துக்களில் குறிப்பிடத்தக்கது என்பது வெளிப்படையானதே. தனக்குத் தெரிந்த தகவல்களையும், அனுபவங்களையும் இன்னும் சில போராளிகளுக்கு பகிர்ந்தளித்துப் பயிற்ருவிக்கிறான். இப்பொழுது நீலன் தனக்குப் பதிலாகச் செயரடக்கூடிய சிலரை உருவாக்கிவிட்டான். இவன் பற்றிய தகவல்களும் அந்நாட்டு உளவுத்துறைக்கு தேவையான அளவு கிடைத்துவிடாது. அவர்களும் இவனை நெருங்கத் தொடங்கிவிட்டனர்.

    Lep.Kenal-Nilan-600x849.jpg

    ‘” ஜெயசிக்குறு “‘ தனது இருதிமூச்சை விட்டுக்கொண்டிருக்கிறது. ‘ நீலன் தாயகம் வா ‘  சந்தேக பாசையில் தகவல் அவனைச் சென்றடைகின்றது. பலகோடி ரூபா பெறுமதியான பொருட்களுடன் உயிர்களைக் கொடுத்துப் பெற்ற அறிய அனுபவங்களுடன் தாய்ப்பசுவைக் கண்ணுற்ற கண்றென தாயகம் திரும்பிய நீலனை காலன் கடலில் வென்றுவிட்டான். அவன் சேர்த்துவந்த பொருட்களுடன், அவனினதும் அவனுடைய தோழர்களினதும் புகழுடல்கள் அக்கரையில் அலையில் மோதுவதாக பத்திரிகைகள் மீண்டும் செய்தி வெளியிட்டன. இங்கு இவன் மருத்துவப்பிரிவின் முதலாவது லெப். கேணலாக படமாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்றான். அடிப்படை மருத்துவ வசதிகளைக்கூட கண்டிராத கிராமத்தில் பிறந்தவன், உருவாகும் ஒரு தேசத்தின் மருத்துவக் கட்டுமானத்தை தாங்கியவனாக மாறியதும், இறுதி மூச்சுக்கு அவஸ்தைப்பட்டுக்கொண்டிருந்த மருத்துவப்பிரிவின் செயற்ப்பாட்டிற்க்கு மூச்சுக்காற்றை வழங்கியதும் ஓர் அதிசயமான உண்மையாகவே எங்களால் நோக்கப்படுகிறது.

    - தூயவன்.

      விடுதலைப்புலிகள் இதழ் ( பங்குனி – சித்திரை 2003 )

      இணைய  தட்டச்சு உரிமம் தேசக்காற்று.

    http://thesakkaatu.com/doc15301.html

     

    • Like 1
  9. மேஜர் அல்பேட்

    டிசம்பர் 21, 2013 | விழுதின் வேர்கள்.   Edit Post

    Mejar-Alped-600x849.jpg

    நாம் ஏராளமான மரணத்தைக் கண்டுவிட்டோம். தோழர்களின் சாவு எம்மைப் பாதிக்காது. வீரமரணம் எமக்குப் பரீட்சையமானது. சாவைச் சந்திக்கத் தயாராக இருக்கின்றோம் என்றுதான் நாம் இறுமாந்திருந்தோம். ஆனால் உன் மரணத்தைச் சந்தித்தபோது எம் இதயம் உருக்குலைந்து தளர்ந்து, எம் உள்ளம் சூனியமாகியதை நாம் எப்படி வெளிபடுத்த முடியும்.

     

    6 அடி 2 அங்குலமான உன் உயரமான (நீளமான)  உடல் அசையாது கிடந்த நிலைகண்டு மக்கள் பதறியதை,  உன் கிராமமே கலங்கியதைக் கண்டு உன்மரணம் தமிழ் மக்களை எந்த அளவுக்குப் பாதித்திருகின்றது என்பதை அறிந்து நாம் துடித்தோம்.

    எம் முகாம்களில் ஒன்று இராணுவத்தினால் தாக்கப்படுகிறது என்பதை அறிந்து எம்மை விடுவிக்க விரைந்த நீ எம் அன்புப் பிணைப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டாய். கிராமச் சனங்களோடு பழகும் போது அந்தச் சனங்களோடேயே ஒன்றிப்போகும் உன் எளிமையான தோற்றம், எம்மை எல்லாம் பிரமிக்கச்செய்தது.

     

    எம் புலம்பலை நிறுத்திவிட்டு அல்பேட்டைப் பற்றி….

     

    பண்டிதர் ஆயுதக் கிடங்குகளுக்குப்  பொறுப்பாக இருந்து வேலை செய்த காலத்தில் பண்டிதருக்கு அடுத்தபடியாக இருந்து வேலை செய்து இயக்கத்தின் நன் மதிப்பைப் பெற்றவன், ‘கந்தையா’ என்று செல்லமாக பண்டிதரால் அழைக்கப்பட்டவன். அச்சுவேலியில் நடைபெற்ற எம் தளம் மீதான இராணுவ முற்றுகையில் தன்னுடைய துப்பாக்கியில் இருந்த குண்டுகள் தீரும்வரை போராடி வெற்றிகரமாக வெளியேறியவன்.  பண்டிதரைப் பலிகொண்ட அந்தப் பெரிய முற்றுகையில் இருந்து வெற்றிகரமாக வெளியேறியதே அவனுடைய திறமைக்குச் சான்றாகும்.

     

    பண்டிதரின் மறைவுக்குப் பின் ஆயுதக் கிடங்குகளின் பொறுப்பாளராகப் பணியாற்றி பண்டிதர் இழப்புக்கு ஈடு செய்தவன்.  1982ம் ஆண்டு தொடக்கம் தன்னை எம் இன விடுதலைக்காக அர்பணித்துப் பணியாற்றியவன். அல்பேட்டை காணும் யாரும் போரிடுவதில் அனுபவம் மிக்கவன் என்பதை தவறின்றி ஊகிக்க முடியும். முதல் பார்வைக்கு அவன் வயது இருபதுக்கு மேல் இருபத்துநாலுக்கு உள்ளதாகவே இருக்கும் என்று தோன்றும். ஆனால் வெய்யிலிலும் காற்றிலும் அடிபட்டிருந்த அவன் முகத்தையும் கண்களின் அருகிலும் நெற்றியிலும், வாயின் பக்கங்களிலும் நுண்ணிய இழைகளாக விழுந்திருந்த சுருக்கங்களையும் சிந்தனையின் ஆழ்ந்தகளைத்த கருவிழிகளையும் உற்றுகவனித்தபின்  அவன் வயதில் இன்னும் பத்து  ஆண்டுகளைக் கூட்டலாம் போலிருக்கும்.

     

    அல்பேட் கோபித்ததை, கோபப்பட்டதை நாம் காணவில்லை என்றே கூறலாம். ஏனோ தெரியவில்லை அவனுக்குக் கோபம் வருவதில்லை. நாம் சிலவேளைகளில் வேண்டுமென்றே சீண்டுவோம். அப்போதுகூட அவன் எருமை மாட்டில் மழைபெய்வது போல இருப்பான். அன்பினால் வழிநடத்தி, அரவணைப்பால் பாதுகாத்து, அவன் வளர்த்த அவனுடைய வீரர்கள், அல்பேட்டைப் போலவே உருவாகி இருப்பதைக் கண்டு வியப்புடன் அல்பேட்டுக்குத் தலை வணங்குகின்றோம்.

     

    குழந்தைகள் என்றால் அல்பேட்டுக்கு அலாதி பிரியம். குழந்தைகளோடு பழகும்போது அவனும் ஒரு குழந்தையாகி மழலை மொழி பேசுவதைக் கண்டு நாம் சிரித்த பொழுதுகள் ஏராளம்.

     

    எமது முகாம்களில் அல்பேட்டைச் சுற்றி ஒரு மழலைப்பட்டாளமே  இருக்கும். அந்த சின்னஞ் சிறுசுகள், அல்பேட்டைக்  காணாமல் தவித்த தவிப்புக்கள், அவர்களைப் பொறுத்தவரையில், அவன் கோவிலுக்குப் போய்விட்டான். கோவிலிலிருந்து வருவான். வரும்போது அவர்கள் அடிக்கடி கேட்ட, சொல்லிவிட்ட சாமான்கள் வேண்டி வருவான். அல்பேட் அவர்களை ‘குட்டிச் சாத்தான்’ என்று அழைப்பது வழக்கம் அந்தக் குட்டிச் சாத்தான்கள் அல்பேட் கோவிலுக்குப் போய்விட்டதை, போய்விட்ட செய்தியை மிகவும் சந்தோஷத்துடனும் மிகுந்த குதூகலத்துடனும் தமக்குள்ள பரிமாறிக்கொண்டார்கள்.

     

    அவர்கள் அந்த மழலைகள், அல்பேட் கோவிலுக்குப் பொய் திரும்பி வருவான் என்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்….

    யாழ் பொலிஸ் நிலையத் தாக்குதலின் போது இராணுவத் தந்திரத்துக்கமைய கோட்டையில் இருந்து எதிரிகளை வெளியில் வராமல் தடுக்கும் பொறுப்பும் கோட்டை மீதான தொடர்ந்த தாக்குதலை நடத்தும் பொறுப்பும் அல்பேட்டிடம் கொடுக்கப்பட்டிருந்தது. தனது பணியைச் செவ்வனே செய்துமுடித்து எமது வெற்றிக்கு வழிவகுத்தவன்.

     

    ஒருநாள் விடியற்காலை அல்பேட் தன் முகாமில் உள்ள தோழர்களை தினசரி காலைப்பயிற்சிக்குத் தயார் படுத்திக் கொண்டிருக்கையில், தொலைத்தொடர்பு சாதனம் (வோக்கி ரோக்கி) அலறியது.  அவன் வோக்கியை இயக்கி அழைத்த இடத்துடன் தொடர்பை ஏற்படுத்தியபோது, சுதுமலையில் உள்ள எமது முகாம் ஒன்று இராணுவத்தினரால் முற்றுகையிடப்பட்டும் செய்தி கிடைத்தது. அல்பேட் தன் தோழர்களைப் பார்த்து உரக்க அழைத்து விரைந்து, ஆயுதங்களுடன் வானில் (வாகனம்) ஏறி விரைந்தான்.  வான் இணுவில் பகுதியால் சுதுமலையை அண்மித்தபோது மூன்று ‘பெல் ஏ,பி, 412′ ரக ஹெலிகாப்டர்கள் அப்பகுதியை சுற்றிச் சுற்றி மெசின் கண்ணினால் குண்டுமழை பொழிந்து கொண்டிருந்தது.

     

    மேலே வானத்திலே வட்டமிட்டுக்கொண்டிருந்த அலுமினியப் பறவைகளில் ஒன்று உயரத்தில் இருந்து பாய்ந்து மலையில் வழுகி வருவது போல மிகமிக வேகமாக வாகனத்தை நோக்கிப் பாய்ந்து வந்து ’50 கலிபர் மெசின் கண்’ணினால் சுட்டுத் தள்ளியது.  குண்டு வரிசைகள் வாகனத்திற்கு மிக அருகாக நிலத்திலே கோடிட்டுச் சென்றது. குறிதவறிவிட்டது. அல்பேட் தன் தோழர்களைப் பார்த்து ‘டே தும்பியில் இருந்து சுடுறாங்கள் கவனமாக இருங்கோ’  என்று கூறி முடிக்கவும், (பெல் ஏ,பி, 412 ஹெலிகாப்டர்களை நாங்கள் ‘தும்பிகள்’ என்று அழைப்பது வழக்கம்) உருமறைப்பு வர்ணம் பூசப்பட்ட இன்னொரு அலுமினியத் தும்பி பக்கவாட்டாக தாழப்பறந்து வந்தது. “சுடப்போறான்,  வானை எங்காவது ஒருபுறம் திருப்பி ஒதுக்கு” என்று கத்தினான் அல்பேட். வான் ஒதுங்க அல்பேட் தோழர்களுடன் கீழே பாய்ந்த போது விமான எஞ்சின் கடகடப்புச் சத்தத்துடன் மெசின் கண்ணின் இடைவிடாத குண்டுச்சத்தத்துடன் தும்பி தாழப்பறந்து சென்றது. வானுக்கு முன்பாக குறுக்குப்பாட்டாக குண்டு வரிசை மண்ணிலே கோடிட்டது. குறி தவறிவிட்டார்கள்.

     

    மறுபடியும் இன்னும் அருகாக அல்பேட்டும், வானும், சேதமின்றித் தப்பித்துக்கொண்டது.

    அல்பேட் தன் “வோக்கி ரோக்கியுடன்’ முகாமுக்குத் தொடர்பு கொண்டபோது,

    முகாமுக்கு பின்பாக ஹெலிகாப்டர்கள் இராணுவத்தினரை இறக்கிய தோட்டப்பகுதியான இடத்திற்குச் செல்லுமாறு பணிக்கப்பட்டது.  குழு அவ்விடத்தை அணுகியபோது இராணுவக் கமாண்டோக்கள் தாம் இறங்கிய இடத்தில் சிலரை நிலைப்படுத்திவிட்டு, மற்றும் சிலர் முகாமை நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.

     

    அல்பேட் கிளர்ச்சியுற்றான். ஆனால் அது சாவு குறித்த அச்சமில்ல. மிக, மிக வீரமுள்ள பதற்றமற்ற மனிதர்களுக்க இயல்பான ஒன்று. ஆபத்து பற்றிய முன்னுணர்வு தானும் இல்லை இது. அவன் கவலைப்பட்டது கமாண்டோக்களை எப்படியாவது தடுக்க வேண்டும்.

    தோட்டங்களில் சில சில இடங்களில் மரவள்ளிச் செடிகள் மிக அழகாக செழிப்பாக செறிவாக வளர்ந்திருந்தது. உயர்ந்து செழிப்பாக செறிவாக வளர்ந்திருந்த மரவள்ளிப் பற்றைகள் ஒளியைப் புகவிடாமல் இருட்டைக் கொடுத்துக்கொண்டிருந்தன.

     

    அல்பேட் தனது குழுவினர் சகிதம் அவர்களைத் தாக்கத் தொடங்கினான். இராணுவத்தினர் 2 அங்குல சிறிய மோட்டார் சகிதம் எதிர்த்தாக்குதல் நடத்தினர். முன்னேறிய இராணுவக் கொமாண்டோக்கள் மீதும் பலத்த தாக்குதல் நடத்தப்பட்டது. முன்னேறியவர்கள் மீதும் தாக்குதல், நிலைகொண்டு காவல் செய்துகொண்டிருப்பவர்கள் மீதும் தாக்குதல், வானத்தில் சுற்றிக்கொண்டிருந்து இவர்களுக்கு காவல் செய்யும் அலுமினியப் பறவைக்கும் தாக்குதல். பலமணி நேரம் இடைவிடாத தாக்குதல்.

     

    கமாண்டோக்கள் பின்வாங்கத் தொடங்கினார்கள் பின்புறத்தில் அவர்களை விமானம் ஏறவிடாமல் செய்வதற்காக யமனைப் போல் நின்றுகொண்டிருந்தான் அல்பேட் எனவே அல்பேட் குழுவின் மேல் பலத்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

     

    பலவர்ணம் பூசப்பட்ட பெல் ஏ,பி, 412′ ரக ஹெலிகாப்டர்கள் மூன்றும் தம்முடைய எம் 60 ரக மெசின் கண்ணாலும் வட்டமிட்டுத் தொடர்ந்து தாக்குதலை நடாத்தின. அல்பேட் குழுவினரை நோக்கி வந்த மோட்டார் குண்டுகள் வெடித்துக் கொண்டிருந்தன. திடீரென்று அல்பேட் சுருண்டு விழுந்தான். இடது கண்ணுக்கு கிழே பெரிய ஓட்டை அதிலிருந்து குருதி ஊற்றெடுத்துப் பாயும் நீர்த்தாரைகள் போல பாய்ந்தது.  அல்பேட்டைத் தூக்கிக் கொண்டு சிலர் பின் விரைகின்றனர். அல்பேட்டுக்கு சிகிச்சை அளிப்பதற்கு முன்பாகவே அவன் தன் உயிரை இந்த மண்ணின் விடுதலைக்காக அர்ப்பணித்துவிட்டான்.

    - கிட்டு.

     களத்தினில் இதழ் (தை, 1986)

    http://thesakkaatu.com/doc12893.html

     

  10. புலனாய்வுத்துறை மாவீரர்கள் (1990 – 1992)

    %E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%

    தமிழீழ விடுதலைக்காய்  02.09.1990 தொடக்கம் 04.01.1992 வரையிலான காலப்பகுதி வரை எங்கெங்கோ பணிமுடித்து காவியமான தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறை மாவீரர் விபரங்கள்.

    http://thesakkaatu.com/doc12593.html

  11. ஆதவன் றட்ணம்மாஸ்ரரின் நினைவுப்பகிர்வு ஏற்கனவே யாழ்களத்தில் பதிவாகியுள்ளது. இதோ அதன் இணைப்பு.

     

    http://www.yarl.com/forum3/index.php?showtopic=132420

    http://thesakkaatu.com/doc11990.html

    http://mullaimann.blogspot.de/2013/12/blog-post_8.html

    http://mullaimann.blogspot.de/2013/11/blog-post_20.html

  12. லெப். கேணல் ஜீவன் உட்பட போராளிகளின் வீரவணக்க நாள்

     

    டிசம்பர் 6, 2013 | வீரவணக்க நாள்.   

    ninavu_jeevan-copy-600x4321.jpg

    லெப். கேணல் ஜீவன் உட்பட போராளிகளின் வீரவணக்க நாள் இன்றாகும்.

    மட்டுநகர் வாகனேரிப் பகுதியில் 06.12.2001 அன்று சிறிலங்காப் படையினருடன் ஏற்ப்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவடைந்த மட்டு – அம்மாறை மாவட்ட தளபதி லெப். கேணல் ஜீவன் உட்பட ஏழு மாவீரர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

    தாய்மண்ணின் விடியலுக்காய் தீரமுடன் களமாடி வெற்றிக்கு வித்திட்டு கல்லறையில் உறங்கும் மாவீரச்செல்வங்கள்…

    Lt-Col-Jeevan.jpg

    கப்டன் சேகரன் (சண்முகம் காந்தரூபன் – மட்டக்களப்பு)
    வீரவேங்கை தயாபரன் (கிருஸ்ணபிள்ளை இராசு – மட்டக்களப்பு)
    வீரவேங்கை சுஜீவன் (நமசிவாயம் இராசா – மட்டக்களப்பு)
    வீரவேங்கை குகராஜ் (நல்லரத்தினம் சிவராஜ் – மட்டக்களப்பு)
    வீரவேங்கை திருமகன் (வடிவேல் மதியன் – மட்டக்களப்பு)
    வீரவேங்கை சதானந்தன் (தங்கராசா ரவிக்குமார் – மட்டக்களப்பு)
    வீரவேங்கை சங்கர் (அமிர்தலிங்கம் ராஜ்கரன் – மட்டக்களப்பு)

    இதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில் கடலிலும் -  தரையிலும் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

    “புலிகளின் தாகம் தமிழீழத் தா
    யகம்”

    http://thesakkaatu.com/doc12239.html

     

     


    ஜீவனுள்ள நினைவுகள்….லெப் கேணல் ஜீவன்

    டிசம்பர் 6, 2013 | வீரத்தளபதிகள்.   

    Lt-Col-Jeevan.jpg

    || ஜீவனுள்ள நினைவுகள்….

    கையெட்டும் தூரமே கண்ணுக்குத் துலங்காத மைசொட்டும் இரவு. உடலெங்கும் உரிமையோடு கை போட்டிருக்கும் முள் செடிகள். கொழும்பு ரோட் (மட்டு. – கொழும்பு நெடுஞ்சாலை) அண்மித்து விட்டதால் காலணிகள் கைக்கு ஏறுகின்றன. ரைபிள் சிலிங்குகள் சலசலக்காது இறுக்கிப் பிடிக்கப்படுகின்றன. ஆபத்தைத் தவிர்க்கும் அளவிற்கு தேவையான இடைவெளி விட்டு முன்னே செல்பவரின் சிறு அரவத்தைக் கொண்டு திசையறிந்து செல்வதே ஒரு கலை. தென் ஈழக் காடுகளிலே இந்தக் காலைதான் தேவையான அரிச்சுவடி. கத்தி வெட்டுப் போல் ஒரு நகர்வு… கை வீசும் தென்றல் போல் ஒரு நகர்வு… இப்படி புத்தியையும் பலத்தையும் எடைபோட்டு நடந்ததாலேயே அங்கு போராட்டம் தாக்குப்பிடித்து, தளிர்கொண்டது. கத்தியையும் புத்தியையும் இடம்மாறி வைத்தவர்களை காலம் மட்டுமல்ல, காடுகள் கூட கை கழுவி விடும்.

    ஒரு பத்தாண்டிற்கு மேலாக கொழும்பு ரோட்டிற்கு குறுக்காக நடந்த பெரும்பாலான நகர்வுகளை ஜீவன் தான் வழி நடத்தியிருக்கிறான். தவழ்ந்து திரிந்து வேவு பார்ப்பதும், தாக்குதல் செய்து தலை நிமிர்ந்ததும், தவறு செய்து தண்டனை பெற்றதும், உயிரைப் பணயம் வைத்து உறுதியை நாட்டியதும் எல்லாமே இந்த கொழும்பு ரோட்டில்தான். அதன் இரு மருங்கிலும் நிற்கும் மரங்கள், வயல் வரம்புகள், மின் கோபுரங்கள், மண் மேடுகள் என்று எல்லாமே ஜீவனின் மனதுக்குள் அடக்கம்.

    உச்சிவரை முகர்ந்து….

    அணியின் நகர்வு தடைப்படுகின்றது. பாதை தவறியது தெரியவருகிறது. பெரியதொரு காவு அணியையும் அதற்கேற்ற சண்டை அணியையும் கொண்ட அந்த நீண்ட மனிதக் கோடு மீண்டும் நகரத் தொடங்கியது. இப்போது அதன் முதல் ஆளாக ஜீவன் நடந்து கொண்டிருக்கிறான்.

    இது ஜீவனது வழமையான பாணி என்பதால் ஒரு தளபதியை முதல் ஆளாக விட்டு பின்னே செல்லும் போது உண்டாகும் கூச்சம் பலருக்கு ஏற்படுவதில்லை. ஆபத்தை நாடிச் செல்லும் ஜீவனின் இயல்பிற்கு சிங்கபுர நிகழ்வு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

    சிங்கபுர தங்கக பகுதி படையினருக்கு ஒரு சிம்ம சொப்பனமாகவே இருந்து வருகிறது. ஒரு இடத்தில் பல தடவை பதுங்கித் தாக்குதல் செய்யப்பட்டதே அதன் காரணம். அதிலே இரண்டாவது தாக்குதல் 1992ம் ஆண்டு இடம் பெற்றது அதிலே ஜீவன் களத்தளபதி.

    இதற்கு முன்பு நிகழ்ந்த தாக்குதலிலே கொல்லப்பட்ட எதிரிகளின் நினைவாக அமைக்கப்பட்ட சிறிய நினைவுத் தூபியை நிலையெடுத்த இடத்தில் இருந்தே பார்க்கக் கூடியதாக இருந்தது. எதிரி அதிலே காப்பு நிலையெடுத்து எம்மைத் தாக்கினாலே தவிர, அதைச் சேதப்படுத்த வேண்டாம் என்று இறுதி முதற் கொகுப்புரையில் எமக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
    தாக்குதல் தொடங்கியது.

    எதிரியின் கவச ஊர்தியை நோக்கி ஆர்.பி.ஜி. கணையொன்று சீறிச்சென்று வெடிக்க எங்கும் புகைமயம். பவள் உடைந்து விட்டதா? என்ற கூச்சலும் பொறிகளின் உறுமலுடன் வேட்டொலியுமாக சிறு குழப்பம் நிலவினாலும் ஆங்காங்கே தென்பட்ட எதிரிகள் சுட்டு விழுத்தப்பட்டுக் கொண்டிருந்தார்கள். புகை விலகிய போது பவலிற்கு மிக நெருக்கமாக ஜீவன் ரீ56 -2 உடன் நிற்பதையும் அவனின் தலையின் மேலாக 50 கலிபரால் சிவப்பாக தும்பியபடி பவல் பின்வாங்கி ஓடுவதையும் காணக் கூடியதாக இருந்தது. எந்தச் சமரின் போதும் இறுக்கமான பகுதிக்கே ஜீவன் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம், அந்தப் பகுதியிலும் மிக இறுக்கமான இடம் நோக்கியே ஜீவன் ஈர்க்கப்பட்டதற்கு அவனது போரார்வமும் மாசற்ற வீரமுமே காரணம். “எங்கும் செல்வோம்” என்று எம் படைகள் எழுந்து நடந்ததும் “எதிலும் வெல்வோம்” என்று சூழ் கொட்டி நிமிர்ந்ததும் ஜீவன்களாலே அன்றி வேறு வழிகளில் அல்ல.

    ஜீவனின் வாழ்க்கைத் தடத்தில் பயத்திற்கு மட்டுமல்லாது பகட்டிற்கும் இடமிருக்கவில்லை. தலைமைத்துவப் பாடநெறியொன்றில் எல்லோரையும் விட அதிக புள்ளிகளை ஜீவன் பெற்றபோது, பகட்டு ஏதுமின்றி தனிமையிலிருந்து ஜீவன் கற்றதையும் தலைவரின் பேச்சடங்கிய ஒலிநாடாக்களை பரபரப்பின்றி கேட்டு வந்ததையும் அறியாத பலர் மூக்கிலே விரல் வைத்தார்கள். நடையுடை பாவனைகளில் கூட ஜீவன் எளிமையானவன்.

    போராளிகளுடன் சேர்ந்து பதுங்கு அகழி வெட்டிக் கொண்டிருந்த ஜீவன் சற்றுக் களையாற, சராசரிப் போராளியின் உடையில் தனது தளபதி இருப்பார் என்பதைச் சற்றும் எதிர்பாராத புதிய போராளி தொடர்ந்து ஜீவனை ஏவியதும் அடுத்த தேனீர் இடைவேளை வரை ஜீவன் பதுங்கு அகழி வெட்டியதும் மங்கிப் போக முடியாத மனப்பதிவுகள்.

    வாகரையின் வாவி…

    வன்னியிலே நடந்த பல மறிப்புச் சமர்களிலே இறுக்கமானவை எனக் கருதப்பட்ட இடங்களிலும் ‘ஓயாத அலைகள் – 2′ நடவடிக்கையிலும் முக்கிய பங்கு வகித்து, பின் மட்டு – அம்பாறை மாவட்ட இணைத் தளபதியாகப் பொறுப்பேற்ற பின் – ஏறத்தாழ பதினைந்தாண்டு காலம் வெடிப்புகையையும், சமர்ப் புழுதியையும் சுவாசித்ததால் முப்பதாவது வயதில் முதற் தடவையாக ஈழை நோயால் பாதிக்கப்பட்ட பின் நிகழ்கிறது இச் சம்பவம். இந்த எளிமை கலந்த ஈகை உழைப்புக்களாலேயே பெரு வெற்றிகள் சாத்தியமாகின என்பதை எவரும் மறுப்பதற்கில்லை.

    87ன் தொடக்கத்தில் இயக்கத்தில் இணைந்து கொண்ட ஜீவன் 90ன் பிற்பகுதியில் ஒரு தனிச் சண்டை அணியின் தலைமையாளனாக வளர்ந்திருந்தான். தானே வேவு பார்த்து, திட்டமிட்டு, களத்தில் வழி நடத்துவதையே அவன் எப்போதும் விரும்பினான். வெற்றியும் அவனையே விரும்பியது.

    எதிரியின் மீது தாக்குதல், போர்க் கருவிகள் பறிப்பு என்ற செய்தி கிடைக்கும் போதெல்லாம், அத் தாக்குதல்களின் தன்மையை ஒப்பிட்டு இது ஜீவனுடைய பாணியில் அல்லவா அமைந்திருக்கிறது என்று பேசுகின்ற அளவிற்கு சிறு தாக்குதல்களில் தனி முத்திரை பதித்திருந்தான் ஜீவன். இது எந்த வீரனுக்கும் இலகுவில் கிடைத்துவிடாத மிகவுயர்ந்த பேறு.

    மூன்றாம் ஈழப்போர் தொடங்கி 97ன் தொடக்கத்திற்கும் இடையேயான காலத்தில் ஜீவன் வாகரை பிரதேச கட்டளை மேலாளராக இருந்த போதே பல சிறு தாக்குதல்களின் மூலம் கிடைக்கக் கூடிய பெரிய நன்மைகளை் அவனால் ஏற்படுத்தப்பட்ட . கதிரவெளி வரை பரவியிருந்த எதிரி முகாம்கள் ஐந்து காயான்கேணிப் பகுதியையும் கடந்து பின்வாங்கப்பட்டன. மக்களின் கல்வி பண்பாட்டு முறைகள் சீர் பெற்றன. மருத்துவமனை அடங்கலான எமது முகாம்கள் பல குடியிருப்புப் பகுதியில் அமைக்கப்பட்டன. வாகரை முதன்மைச் சாலைக்கு அருகே (திருமலை வீதி) மாவீரர் துயிலும் இல்லம் நிறுவப்பட்டது.

    அங்கே நிகழ்த்தப்பட்ட போர்ச் சாதனை பற்றி அக்காலத்தில் மாவட்ட அறிக்கைப் பிரிவின் மேலாளராகவிருந்த மேஜர் லோகசுந்தரம் (வீரச்சாவு: 05.03.1999 மாவடி முன்மாரிப் பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினருடனான மோதலில்) அவர்கள் கூறியது: “அந்த அறிக்கைகளை ஒப்பிடுவது ஒரு புதிய அனுபவம். 20 மாத காலத்தினுள் வாகரைப் பிரதேச ‘விசாலகன் படையணி’ சந்திவெளி, சித்தாண்டிப் பகுதிகளில் நிகழ்த்திய நான்கு பெரும் தாக்குதல்கள், மாவடி முன்மாரிப் பிரதேசத்தில் நிகழ்ந்த நடுத்தர அளவிலான சில தாக்குதல்களிலும் கலந்து கொண்டது போக தமது பகுதிகளில் மட்டும் தனியாகச் செய்த நடுத்தர மற்றும் சிறிய தாக்குதல்களில் 340ற்கும் மேற்பட்ட படைக்கலங்களைக் கைப்பற்றியிருக்கிறது. இப்படியொரு விடயத்தை இதற்கு முன் நான் கேள்விப்பட்டதில்லை.”

    சாதனைகள் பொதித்த ஜீவனின் போரியல் வாழ்வில் சோதனைகளுக்கும் குறைவில்லை. குடும்பிமலைப் பகுதியில் கொமாண்டோக்களுக்கு எதிரான தாக்குதலிலும், பூநகரித் தவளைச் சமரிலும் பின்பு கூமாஞ்சோலை முகாம் தாக்குதலிலும் உடலின் எடையில் ஈயமும் பங்கேற்கும் அளவிற்கு செம்மையாகக் காயப்பட்டிருந்தான்.
    “ஜீவன் உன்ர குப்பியையும், தகட்டையும் வாங்கிப் போட்டு தண்டித்து சமைக்க விடும்படி பொறுப்பாளர் சொல்லியிருக்கிறார்.”

    இதே கொழும்பு ரோட்டிலேயே, போராளிகளின் சுமைகருதி, தவிர்க்கவேண்டிய பாதையொன்றினூடாக வழி நடாத்தியதால் ஏற்பட்ட இழப்பிற்கான தண்டனை அறிவித்தலை தனது உணர்வுகளைச் சிரமப்பட்டு அடக்கியபடி இன்னுமொரு தளபதி ஜீவனிடம் கூறியபோது மிக அமைதியாகப் பதில் வந்தது. “சரி நிறைவேற்றுங்கள்”
    அதைத் தொடர்ந்து ஒரு புதியை போராளியைப் போல ‘புளுக்குணாவ’ முகாம் தகர்ப்பிற்கான தடையுடைப்புப் பயிற்சி பெறுகிறான் ஜீவன். தொட்டாற் சுருங்கி முட்கள் முழங்காலிலும், முழங்கையிலும் புண்களை ஏற்படுத்துகின்றன.
    தன்னைத் தோள் பிடித்து தூக்கி நிறுத்திய தளபதி, அரவணைத்து ஆறுதல் தந்த தோழன், முன் நடந்து வீரம் காட்டி விழுப்புண் சுமந்த பெருமகன் – மண் தேய்ந்த காயத்துடன் பயிற்சி பெறுவதைக் காண பயிற்சிப் பொறுப்பாளனின் மனம் விம்முகின்றது.

    “ஜீவண்ணன்…… நீங்கள் எழுந்து போய் சற்று ஓய்வெடுக்கலாம்.”
    புலிக்குறோளில் போய்க் கொண்டிருந்த ஜீவனிடமிருந்து நிமிர்ந்து பார்க்காமலே பதில் வருகின்றது.
    “எல்லோருக்கும் பொதுவான விதிகளே எனக்கும் பொருந்தும்”
    இறுக்கமான முகத்துடன் தொடர்ந்து நகரும் ஜீவனைப் பார்க்க பயிற்சி பொறுப்பாசிரியனின் உதடுகள் துடித்து வழிகள் பொங்க குரல் தளம்பாமல் சமாளித்தபடி கூறுகிறான்.
    “பயிற்சிப் புண் அதிகமாகி விட்ட போராளிகளுக்கு நாங்கள் பயிற்சி தருவதில்லை. இங்கு நானே பொறுப்பாளன். இது என்னுடைய கட்டளை. நீங்கள் எழும்பலாம்.”
    இதுவரை தங்கள் உணர்வுகளை மரக்க வைத்து ஜீவனுடன் நகர்ந்து கொண்டிருந்த அத்தனை போராளிகளும் நன்றிப் பெருக்கோடும் நிம்மதிப் பெருமூச்சோடும் பயிற்சிப் பொறுப்பாசிரியனை நிமிர்ந்து பார்க்கிறார்கள். ஒவ்வொரு சோடிக் கண்களிலும் ஒவ்வொரு சோடிக் கண்ணீர் துளிகள்.

    ஜீவனுடைய எளிமையையும் ஈகையும் போலவே குறும்புகைளையும் குறைவான பக்கங்களையும் கூடத் தலைவர் அறிந்திருந்தார். இருப்பினும் சுற்றாரைக், கற்றோரே காமுறுவர் என்பது போல, பலம் பலத்திற்கு மரியாதை செய்யும் என்பது போல வீரம் வீரத்தால் ஈர்க்கப்படுவதும் தவிர்க்க முடியாததது என்பதை ஜீவனின் சாவிற்குப் பின்னான தலைவனின் உணர்வு வெளிப்பாடுகள் திரைவிலக்கித் தெரியவைத்தன – தெளிய வைத்தன. சராசரிக்கும் மேலான ஜீவனின் போரியல் பண்புகளை தலைவர் அவதானித்தே வைத்திருக்கிறார்.

    சாலையில் ஜீவன் மிடுக்காய் கால்பாரவி நிற்க நிழல்போலக் கடந்து செல்கிறார்கள் போராளிகள். அந்த இருட்டிலும் ஆட்களை அடையாளம் கண்டு காதோடு நலம் விசாரித்து, தூரம் சொல்லி, தோள் தட்டி துரிதப்படுத்தி நிற்கிறான் ஜீவன். ஆபத்தை நோக்கி முதல் ஆளாய்ச் சென்று அதன் நடுவில் நின்று நம்பிக்கை தருவதும் கடைசி ஆளாகவே அவ்விடத்தை விட்டு அகலுவதும் போராளிகள் ஜீவன் மேல் பற்று வைப்பதற்கு முதன்மைக் காரணங்கள். வீரமுள்ள எவராலும் ஜீவனை வெறுக்க முடியாது.

    விழி சொரியும் கண்ணீரில்….

    “நாங்கள் சுமந்து திரியும் ரவைகளில் எந்தெந்த ரவை எந்தெந்தச் படையாளின் உடலுக்குரியதோ தெரியவில்லை. இதே போல எனக்குரிய ரவையையும் ஒரு படையாள் இப்போது சுமந்து திரிவான். அது எப்போது புறப்படும் என்பது எவருக்கும் தெரியாது.” சண்டைகளின் முன்னான நகைச்சுவைப் பொழுதுகளில் சிரித்தபடி ஜீவன் சொல்வதும வழக்கம். அன்று, கொழும்பு ரோட்டின் மையிருளிலே ஈழப்போரின் இன்னுமொரு அத்தியாயம் முடிய இருந்த சூழ்நிலையில், பதுங்கிக் கிடந்த படையாள் ஒருவனின் தொடக்க ரவையாக அது புறப்படும் என்பதையும் எவரும் அறிந்திருக்கவில்லை.

    ஜீவனின் நினைவுகளை மீட்கும் போது, தனக்குக் கீழுள்ள படைத் தலைவர்களின் உணவுத் தட்டுகளைக் கூட கழுவி வைத்து ஒழுக்கம் பழக்கும் எளிமையா? அல்லது முன் செல்லும் போது முதல்வனாகவும் பின் வலிக்கும் போது இறுதி ஆளாகவும் வரும் தலைமைத்துவமா? எது மேலோங்கி நிற்கிறது என்று அலசினால் அவையிரண்டையும் விட அவனின் களவீரமே எல்லோர் மனதிலும் ஆழப்பதிந்து கிடக்கிறது. பிறந்த போது குடிசையில் பிறந்த ஜீவன் இறந்தபோது ஈழத்தின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருந்ததற்கும் அவனது ஏழ்மையற்ற மிடுக்கே காரணம்.

    பிறப்பினால், எவருக்கும் பெருமைவருவதாக நாம் நம்புவதில்லை. ஜீவன் தன் நடப்பினால் தாய் மண்ணின் தலையைப் பலமுறை நிமிர வைத்திருக்கிறான். அவன் இழப்பினால் தாய் மண்ணே துயரம் ததும்பும் பெருமையுடன் ஒரு கணம் தலை குனிந்து நிற்கிறது.

    ஜீவனின் இரத்தம் தோய்ந்த கொழும்புச் சாலையில் இருக்கும் எதிரிச் சுவடுகள் ஒரு நாள் துடைத்தழிக்கப்படும். அந்த உன்னத விடுதலை திருநாளின் போது தாயகப் பெருஞ்சாலைகள் கருந்தாரிட்டு செவ்வனே மெழுகப்படும். ஆனால் ஜீவனின் உணர்வு சுமந்து நிற்கும் ஒவ்வொரு தோழனுக்கும் அது செஞ்சாலை.

    - இராசமைந்தன்.
      விடுதலைப்புலிகள் இதழ் ( தை – மாசி 2002 )

    “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

     

    http://thesakkaatu.com/doc1498.html

  13. கரும்புலி லெப்.கேணல் போர்க் உட்பட போராளிகளின் வீரவணக்கநாள்.

    நவம்பர் 23, 2013 | வீரவணக்க நாள்.   

    Karumpuli-Lep.Kenal-Pork-600x337.jpg

    கரும்புலி லெப்.கேணல் போர்க் மற்றும் லெப் கேணல் மாறன், கப்டன் கஜன் உட்பட 54 போராளிகளின் வீரவணக்கக் நாள் இன்றாகும்.

    || தாய்மண்ணின் விடியலுக்காக புயலான தேசத்தின்புயல்…

    மாங்குளத்தில் 23.11.1990 அன்று சிறிலங்கா இராணுவப் படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதலில் முகாமை தகர்த்து வெற்றிக்கு வித்திட்டு புயலான கரும்புலி லெப்.கேணல் போர்க்கின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

    Karumpuli-Lep.Kenal-Por-600x849.jpg

    கரும்புலி லெப் கேணல் போர்க் அவர்களின் தாக்குதல் திட்டம் பற்றி பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் ….

    Karumpuli-Lep-Kenal-Pork-600x401.jpg

    தாய்மண்ணின் விடியலுக்காக புயலான தேசத்தின்புயல் நினைவாக அதே தாக்குதல் நடந்த திடலில்  மாமனிதர் நாவண்ணனால் வடிக்கப்பட்ட கரும்புலி லெப். கேணல் போர் அவர்களின் நினைவுத் தூபம் நிறுவப்பட்டது தற்சமய சிங்கள ஆக்கிரமிப்பால் அடித்து உடைத்து அழிக்கப்பட்டு உள்ளது.

    http://thesakkaatu.com/doc12046.html

    கரும்புலி லெப் கேணல் போர்க்

    நவம்பர் 23, 2013 | உயிராயுதங்கள்.   

    Karumpuli-Lep.Kenal-Pork-600x337.jpg

    “நான் புறப்படுகின்றேன்….  இதோட மாங்குளம் முகாம் முடிஞ்சுது ” : கரும்புலி லெப் கேணல் போர்க்

    வன்னிப் பிராந்தியத்தின் மையத்தில் அதன் இருதயத்தில் மாங்குளம் சிங்களப்படை முகாம் இருந்தது. அது அங்கு பல அட்டூழியங்களைச் செய்து வந்தது.

    இரண்டாவது ஈழப்போர் தொடங்கிய நாட்களிலிருந்து இம்முகாம் விடுதலைப் புலிகளால் முற்றுகையிடப்பட்டிருந்தது. எமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அமைந்துள்ள இப்படை முகாம் மீது தாக்குவதற்கான திட்டம் தயாரிக்கப்படுகிறது. அப்படை முகாம்மீது கரும்புலித் தாக்குதல் நடத்தி அம்முகாமைக் கைப்பற்றுவது என்று தீர்மானிக்கப்படுகிறது. இத்தாக்குதலை தலைமைதங்கி வழிநடத்திய தளபதி பால்ராஜ் சொல்லும்போது. “நாங்கள் இம்முகாம் தாக்குதலுக்கான திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருந்தோம். அப்பொழுது மாங்குளம் முகாமைப்பற்றி எனக்குத்தான் அதிகம் தெரியும். எனவே நான்தான் சக்கை லொறி கொண்டு போகவேணும் என போர்க் சொன்னான்.

    Karumpuli-Lep-Kenal-Pork-600x401.jpg

    அந்தக் குரலில் உறுதி தெரிந்தது”போர்க் போராட்டத்திற்குப் புதியவரல்ல. அவர் மாவட்டப் பொறுப்பாளராக இருந்தவர். பல தாக்குதல்களை முன் நின்று வழிநடத்தியவர்”. தளபதி பால்ராஜ் மேலும் தொடர்கையில் “1990ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் நாள் அண்டைக்குத்தான் போர்க் கரும்புலியாய்ப் போனவர். புறப்படமுன் கடைசியாக என்னைக் கட்டியணைச்சு, “நான் புறப்படுறன் இதோட மாங்குளம் முகாம் முடிஞ்சுது” என்று சொல்லிப்போட்டு, வெடிமருந்து வாகனத்தை ஓட்டிச் சென்றார். கொஞ்ச நேரத்தில் பெரிய வெடிச்சத்தம் கேட்டுது. முகாம் தகர்ந்தது பிறகு சில மணி நேரத்தில்”முகாம் கைப்பற்றப்பட்டது” என்றார்.

    கரும்புலி லெப் கேணல் போர்க் அவர்களின் தாக்குதல் திட்டம் பற்றி பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் ….

    இந்தத் தாக்குதலுக்குச் சில நாட்களுக்கு முன்பு, போர்க் அண்ணை விடுமுறையில் வீட்டுக்குச் சென்றார்.

    அவரது கிராமம் சிங்கள எல்லையில் அமைந்துள்ளது. அது வன்னியிலுள்ள சேமமடு. சிறு வயது தொட்டு நடந்து திரிந்த, அக்கிராமத்தில் குளம், வயல், காடு என்று ஒவ்வொன்றையும் சுற்றி ரசித்தார். இல்லை அவற்றிடமிருந்து விடைபெற்றார். அந்த நாட்களில் ஒரு நாள் பக்கத்து வீட்டுச் சிறுவர்கள் மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவ்விடத்திற்குச் சென்று ஓர் மரக்குற்றியில் அமர்ந்தவாறு போர்க் அண்ணை கேட்டார்.

    “தம்பியவை, மாவீரர்நாள் வருதெல்லோ? தற்செயலா நான் செத்துப்போனா அண்டைக்கு என்ன செய்வியள்?” ‘ஏன் சாகப் போறியளோ’ பதில் கூறினர் பிள்ளைகள். போர்க் அண்ணையும் சிரித்தபடி “தப்பித்தவறி நான் செத்துப்போனா என்ர நினைவா ஆளுக்கொரு மரம் நட்டு வளவுங்கோ என்ன”

    அவர்கள் சிரித்தனர், போர்க் அண்ணையும் சேர்ந்து சிரித்தார். வீட்டிலிருந்து புறப்படும் இறுதி நாள் வந்தது. மதியம் உணவருந்திவிட்டு விறாந்தையில் பாயைப் போட்டுப்படுத்தார். சற்றுத்தள்ளி போர்க் அண்ணையின் அம்மாவும் படுப்பதற்காக, தரையில் பாயைப் போட்டார். “அம்மா இதில வந்து, எனக்குப் பக்கத்தில பாயைப் போடணை” போர்க்கண்ணை கேட்டார். அம்மாவும் வந்து அவரின் தலையை வருடியவாறு இருந்தார்.

    அன்று பின்னேரம் அப்பா, அண்ணன்மார், தம்பிமார், அன்புத் தங்கை என்று எல்லோரிடமும் விடைபெறுகிறார்.

    கடைசியாக தாயாரிடம் வந்து, “அம்மா எனக்கு உங்கட கையால ஒரு பொட்டு வைச்சுவிடுங்கோவன் ஆசையாயிருக்கு” என சாதாரணமாகக் கேட்டார். ஏதுமறியாத தாயுள்ளம் பிள்ளையின் விருப்பப்படி பொட்டிட்டு மகிழ்ந்தது. இவ்விதம் சிறுபிள்ளை போல் அவர் நடப்பது வழக்கம் எனத் தாயாரும் கூறினார்.

    சிரித்தபடியே விடைபெற்றவர், வீட்டுப் படலையில் நின்று ஒரு கணம் திரும்பிப் பார்த்தார். பின் போய்விட்டார்.

    சிறிது நேரத்தின் பின்

    தம்பி சாரத்தையும் ரீசேட்டையும் விட்டுட்டுப் போட்டானணை” என்று போர்க் அண்ணையின் சகோதரன் அவசரமாகக் குரல் கொடுத்தார்.

    Karumpuli-Lep.Kenal-Por-600x849.jpg

    பழசாக்கும், அதுதான் விட்டிட்டுப் போட்டான் போலக்கிடக்கு என்றார் அம்மா. இன்று போர்க் அண்ணையின் அம்மா சொல்கின்றார். “தம்பி அவன் அண்டைக்கு வித்தியாசமா நடந்ததை என்னால புரிஞ்சுகொள்ள முடியேல்லை. ஆனால் கரும்புலியாச் செத்த பிறகுதான், அவன் தன் பக்கத்தில படுக்கச்சொன்னது பொட்டு வைக்கச் சொன்னது உடுப்புகளை விட்டிட்டுப் போனது ஏனெண்டு விளங்குது” போர்க் அண்ணனின் அம்மாவின் நா தழு தழுத்தது.

    - உயிராயுததிலிருந்து ….

     

    http://thesakkaatu.com/doc1628.html

    ” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “

  14. கப்டன் மலரவன்

    Malaravan-2011-600x849.jpg

    “விடுதலைப்படைப்பாளி’ கப்டன் மலரவன்”

    போர் உலா, விடுதலைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரியல் வரலாற்றின் ஒரு அங்கமான அந்தப் படைப்பின் கர்த்தா – கப்டன் மலரவன். 1992 கார்த்திகை 23ம் நாள், பலாலி – வளலாயில் 150 காவலரண்களை தாக்கியழித்து பாரிய வெற்றியைப் பெற்ற தாக்குதலில் அந்த விடுதலைப் படைப்பாளி வித்தானான். கப்டன் மலரவனை விடுதலைப்போராட்டம் இழந்து பத்தொன்பது வருடங்கள் கடந்துவிட்டதன் நினைவுநாள் இன்று.

    கப்டன் மலரவன் ஒரு பன்முக ஆற்றலுள்ள போராளி. விடுதலைப்போராட்டத்தில் அவரது ஆளுமையும் பங்களிப்பும் காத்திரத்தன்மையும் நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்கும் என எண்ணியிருந்த போதும் குறுக்கிட்ட வீரமரணம் அது நிறைவேறத் தடையாகிவிட்டது. காலம் குறுகியிருந்தாலும் தனது களப்பணிகளிற்கு மத்தியில், தன்னுடைய அனுபவப் படைப்புகளினூடாக சிறந்த எழுத்தாளுமையை வெளிப்படுத்தியிருந்தது மட்டுமல்லாமல், மாங்குளம் முற்றுகைச் சமரின் அனுபவப் பார்வை கொண்ட சிறந்த பதிவையும் படைத்திருந்தார். அது போராளிகளுக்கான அனுபவத்தைக் கொடுத்தது. அவரது எழுத்துக்கள் பற்றிக் குறிப்பிட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப தமிழ்செல்வன் அவர்கள், ‘நீ எழுத்துருவில் தந்துவிட்டுப் போன படைப்புகள் நிச்சயமாக எமது சந்ததியின் மனங்களிலே ஆழப்பதியும் என்பதில் சந்தேகமில்லை’ என பதிவு செய்துள்ளார்.

    எழுத்துக்களுடன் வாழ்ந்த மலரவனின் படைப்புகள், அவரது வீரச்சாவிற்குப்பின் வெளியீடுகளாக வெளிவந்தன. அவற்றில் போர் உலா என்னும் படைப்பு இலங்கை இலக்கிய பேரவையின் அகில இலங்கை ரீதியான தேர்வில் முதல் பரிசு பெற்றமை அவரது படைப்பாளுமையின் தரத்தைச் சான்று பகர்ந்து நிற்கின்றது. மேலும், எனது கல்லறையில் தூவுங்கள் (சிறுகதை,கவிதைகளின் தொகுப்பு), மலரவனின் ஹைக்கூ கவிதைகள் (இலங்கையில் வெளியான நான்காவது ஹைக்கூ தொகுப்பாகும்), புயல் பறவை (நாவல்-வடகிழக்கு மாகாண சாகித்திய மண்டல பரிவு பெற்றது) என படைப்புகள் பல. இவை அத்தனையும் தனது இருபது வயதிற்குள் எழுதி முடித்தவர்.

    ஒவ்வொரு போராளியும் கொடுமைகளைக் கண்டு கொதித்தெழுகிறான், உணர்வுகள் ஊட்டி வளர்க்கப்படுகிறான் என்பதற்கு கப்டன் மலரவனின் வாழ்க்கையும் அதன் பின்னணியும் மிகச் சிறந்த சான்று. மலரவனின் தந்தை ஒரு வைத்தியர். கொழும்பில் வெடித்த 1958ம் ஆண்டு இனக்கலவரத்தில் சிக்குண்ட அவர் கடை ஒன்றுக்குள் புகுந்து பாதுகாப்புத் தேடியிருந்தார். அங்கும் வந்து அவரைத்தாக்க முற்பட்ட சிங்களக்காடையர்களை சோடாப்போத்தில்களால் தாக்கி விரட்டியடித்து தன்னை பாதுகாத்துக் கொண்டார். பின்னர் 1977ம் ஆண்டு கண்டி வைத்தியசாலையில் கடைமையாற்றிக் கொண்டிருந்த காலத்தில் நடைபெற்ற இனப்படுகொலையின் போது சிங்கள வைத்திய நிர்வாகம் தமிழ் வைத்தியர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தாமல் அலட்சியமாக இருந்ததைக் கண்டித்துத் தனது வேலையை இராஐpனாமா செய்துவிட்டு, மாங்குளத்தில் வந்து விவசாயம் செய்து தனது குடும்பத்தைக் காப்பாற்றினார். 1985ம் ஆண்டு கொக்கிளாய் முகாம் விடுதலைப்புலிகளால் தாக்குதலுக்குள்ளான போது போராளிகளுக்கான வைத்தியராகக் கடமையாற்றினார். தொடர்ந்து ஆ.க.வெ தாக்குதல் நடவடிக்கை, வவுனியாவில் எல் 3 எடுத்த தாக்குதல் என பல தாக்குதல்களின் போது களமுனை வைத்தியராக, காயமடைந்து வந்த  போராளிகளிற்குக் களத்திற்கு நெருக்கமாக நின்று சிகிச்சையளித்த ஒரு சிறந்த தேசப்பற்றாளர். மலரவனின் மற்றுமொரு அண்ணன்; மருத்துவபீடத்தில் படித்துக்கொண்டு, தியாகி திலீபன் அவர்களுடன் தொடங்கி விடுதலைப்போராட்டத்தில் பங்காற்றிக் கொண்டிருந்தார். தேசப்பற்றுக் கொண்ட அக்குடும்பத்தின் புறச்சூழல்கள் சிறுவயதிலிருந்தே மலரவனுக்குள் விடுதலைத்தீயை வளர்க்கத்தொடங்கின.

    யாழ்ப்பாணத்தின் முன்னணிப்பாடசாலைகளில் ஒன்றான சென் ஜோன்ஸ் பாடசாலையில் சிறந்த பெறுபேறுகளைக் கொண்ட மாணவனாக விளங்கிய அவர், உயர்தரத்தில் விஞ்ஞானத்துறையில் முதலாவது வருடத்தில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று பாடசாலையின் முதல் மாணவனாகத் தேர்வாகியிருந்தார்.  அந்த வேளையில்தான், இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து, சிங்கள அரசுடனான போர் முழு வீச்சில் தொடங்கியது. மலரவன், தனது கல்வியைத் துறந்துவிட்டு விடுதலைப்புலிகளுடன் இணைந்து கொண்டார். மணியந்தோட்டம் பயிற்சி முகாமில் தனக்கான அடிப்படைப்பயிற்சியைப் பெற்றுக்கொண்டார்.

    பயிற்சியை முடித்த பின், பசீலன் மோட்டார் பிரிவில் ஒரு மோட்டார் அணியின் பொறுப்பாளாராக நியமிக்கப்பட்டு மீண்டும் அதற்கான பயிற்சியை தொடங்குகின்றார். 1990களில் சண்டையின் வெற்றியைத் தீர்மானிக்கும் பிரதான பணி பசீலன் அணியையே சார்ந்திருந்தது. அந்த ஆயுதங்கள் அனைத்தும் உள்ளுரில் தயாரிக்கப்பட்டவை. அவற்றைக் கையாளுவதற்கும்; துல்லியமான சூட்டை வழங்குவதற்கும் துல்லியமான கணிப்பீடுகள் மிகமுக்கியமானவை. அந்தப் கணிப்பீட்டுப் பணியிலும் அதனை நேர்த்தியாக இயக்குவதிலும் பெரும்பங்கு மலரவனுக்கு உண்டு. அதற்காகக் கடுமையாக உழைத்தார். பீரங்கிகளின் வேகத்தையும் தூரத்தையும் கணிப்பது தொடர்பில் கணிதத்தில் உள்ள விதிமுறைகளை பயன்படுத்தி ஒவ்வொரு செல்லின் நிறையையும் கணித்து ஒவ்வொன்றும் என்ன வாசிப்பில் விட்டு செலுத்தினால் அது இலக்கைத் தாக்கும் என்பதைப்பற்றிய கணிப்பீடுகளில் தனது நேரத்தை செலவிட்டுத் துல்லியமாகக் கணித்தார். அதற்கும் மேலாக, ஏனைய மோட்டார் அணியின், எத்தரத்திலுள்ள வீரர்களிற்கும் சொல்லிக் கொடுக்கும் ஆற்றலும் அவருக்கிருந்தது.

    தனக்கு தரப்படும் பணியில் மிகுந்த அர்ப்பணிப்புடனும் அதை புதிய பரிமாணத்தில் அல்லது கோணத்தல் பார்க்கும் திறனும் அதைப்பற்றி மென்மேலும் சுயமாக அறிந்து மெருகேற்றும் திறனும் அவரை சிறந்த செயல்திறன்மிக்க போராளியாக இனங்காட்டியது. அதுவே குறுகிய காலத்தில் பசீலன் மோட்டார் பிரிவின் உதவிப் பொறுப்பாளர் என்னும் நிலைக்கு அவரை உயர வைத்தது.

    யாழ்கோட்டையில் இருந்து இராணுவம் தப்பியோடியது என்றால் அதன்பின்னணியில் பிரதானமான பங்கை வகித்தது பசீலன் படையணி. அந்தக்களமுனை தொடக்கம் மாங்குளம், சிலாவத்துறை, காரைநகர், ஆனையிறவு, மின்னல் என பல களமுனைகளில் வெற்றிகளில் பசீலன் மோட்டாருடன் பங்கு கொண்ட மலரவனின் பங்குகள் பெறுமதியானவை.

    சிங்களப்படைகளுக்கு எதிரான தாக்குதல்களில் சிங்களப்படைக்கு புளியைக் கரைப்பது பசீலன் செல்கள் என்பதனால் பசீலன் செல் அடிக்கப்படும் போது வெளிவரும் வெளிச்சத்தை கணிப்பிட்டு அப்பகுதியை நோக்கி கடுமையான செல்தாக்குதலை நடாத்தி பசீலன் தாக்குதலைக் கட்டுப்படுத்த சிங்களப்படை முயற்சிப்பது வழமை. அவ்வாறான சமயங்களில் மேற்கொள்ளப்படும் கடுமையான செல்த்தாக்குதல்களின் மத்தியிலும் இயல்பாகவும் தெளிவாகவும் செயற்படும் அவரது துணிச்சல் மற்றைய போராளிகளுக்கும் மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கும். என்றைக்கும் சோர்ந்து போனதில்லை.

    சிலாவத்துறை முகாம் தாக்குதலின் போது வெட்டவெளியில் விமானக் குண்டு வீச்சுக்களின் மத்தியில் எவ்வித தடையரண்களும் இல்லாமல் முகாமிற்கு நேருக்கு நேரே பசீலனை வைத்துப் தாக்குதலை நடாத்திக் கொண்டிருந்த அவர், செல் தாக்குதலில் காயப்பட்டு மரணத்தின் வாசல் வரை எட்டிப்பார்த்து, களமருத்துவமனையில் கடமையாற்றிக்கொண்டிருந்த அவரது அண்ணனின் கரங்களுக்குச் சென்று மீண்டுவந்தார்.

    ஆ.க.வெ சமரில் ஆனையிறவு பிரதான முகாம் தாக்கியழிப்பில் பசீலன் மோட்டார் அணிக்குத் தலைமைதாங்கி, முகாமின் மையத்திலிருந்த கோபுரத்தைத் தனது துல்லியமான கணிப்பால் தகர்த்து விழுத்தி தனிமுத்திரையைப் பதித்தார். இத்தாக்குதலில் இவரது தந்தையும் அண்ணனும் களமுனை மருத்துவர்களாகப் பணியாற்றினார்கள். இத்தாக்குதல் மட்டுமன்றி, மணலாற்றில் நடைபெற்ற மின்னல் எதிர்த்தாக்குதலிலும் குடும்பத்தில் மூன்று பேரும் பங்காற்றியது என்பது விடுதலைப் போராட்டத்தில் இக்குடும்பத்தின் பங்களிப்பிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகக் கூறமுடியும்.

    பசீலன் படையணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தபின்னர் யாழ்மாவட்டத்தின் மாணவர் அமைப்புப் பொறுப்பாளராக பொறுப்பெடுத்து தனது தனித்துவமான தலைமைத்துவ ஆற்றலை வெளிப்படுத்தயிருந்தார். மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் சிறந்த திட்டங்களை அறிமுகப்படுத்தி முந்நகர்த்தியதில் பெரும் பங்கு மலரவனுக்குண்டு. அவை, சமூகத்தின் மீதும் அதன் இளம் தலைமுறையின் கல்வி மீதும் அவர் கொண்ட தாகத்தின் வெளிப்பாடாக விளங்கின.

    பின்னர் யாழ்மாவட்டத்தளபதியாக இருந்த சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுடன் பணியாற்றினார். குறிப்பாக மாவட்ட இராணுவ அறிக்கைப் பொறுப்பாளராக இருந்தார். இதன்போது ஒவ்வொரு சண்டையிலும் பங்குபற்றுபவர்களிடம் சண்டையில் நடந்த சம்பவங்களை கேட்டறிந்து சண்டை எவ்வாறு நடந்தது, அதில் திறமையாக செயற்பட்டவர்கள், திட்டத்தில் ஏற்பட்ட சரி பிழைகள், அடுத்த சண்டையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் போன்ற ஒரு மதிப்பீட்டு இராணுவ அறிக்கையை செய்து, தளபதிக்கு சரியான நிலவரத்தைப் பரிந்துரைக்கும் பொறுப்பையும் செவ்வனே செய்தார்.

    அக்காலப்பகுதியில், தெல்லிப்பளையில் வேவு நடவடிக்கை ஒன்றிற்காக பணியாற்றிக் கொண்டிருந்தவேளை எதிரியின் பதுங்கித்தாக்குதலில் வேவுப் பொறுப்பாளர் காயமடைந்தபோதும் தொடர்ந்து எதிர்த்தாக்குதலை மேற்கொண்டு காயமடைந்தவரை கொண்டுவந்து சேர்த்தார். இது அவரது ஓர்மத்திற்கு எடுத்துக்காட்டு.

    அந்தநேரத்தில்தான் 1992ம் ஆண்டு பலாலி வளலாய் தாக்குதலுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அதில் சு.ப.தமிழ்க்செல்வன் அவர்களின் பகுதித் தாக்குதல் தொடர்பான சகலவிடயங்களையும் சரிபார்த்து உறுதிப்படுத்தி, அதுதொடர்பான விடயங்களை தளபதியுடன் பரிமாறும் வேலைகள் உட்பட தாக்குதலுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வேலைகளில் தளபதிக்கு உறுதுணையாக நின்று செயற்பட்டார்.

    எப்போதும் சண்டை நேரங்களில் மலரவணை கட்டுப்படுத்துவது கடினம். சண்டை தொடங்கினால் உடனே அங்கு செல்ல வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பார். அதில் அவரைக் கட்டுப்படுத்த முடியாது. அதுபோலத்தான், அன்றைக்கும் சண்டை தொடங்கும்வரை தளபதியுடன் நின்ற மலரவனை திடீரெனக் காணவில்லை. தளபதி கோபத்துடன் காத்திருந்தார். சிறிது நேரத்தில், களமுனைப்பகுதிக்குச் சென்று நிலமைகளை அவதானித்துவிட்டு தன்னால் இயன்றளவு ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு வந்த சேர்ந்த மலரவனைப் பார்த்த தளபதி, அவரது குணாதிசயத்தைக் கண்டு பொறுமையானார். நெகிழ்வாக, தன்னுடன் நின்று சிலவேலைகளை ஒழுங்குபடுத்துமாறு கூறினார். மேலும் சீற்றத்திற்கு ஆளாகக்கூடாது என்று நினைத்த மலரவன் அவர் குறிப்பிட்ட வேலைகளை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்.

    தாக்குதலில் பலத்த இழப்புகளைச் சந்தித்த இராணுவம், புலிகளுக்கு இழப்புகளைக் கொடுக்கும் நோக்குடன் பின்தளப்பகுதியை நோக்கி கடுமையான எறிகணைத்தாக்குதலை மேற்கொண்டது. அதில் ஒன்றன் பின் ஒன்றாக வீழ்ந்து வெடித்த மூன்று செல்களில் மலரவன் படுகாயமடைந்தார். அந்த இறுக்கமான நிமிடங்களை நினைவு கூர்ந்த தளபதி ‘காயப்பட்டவுடன் களமருத்துவனைக்கு அவசரமாக அனுப்பினோம். என்னோடு நின்ற ஒருவர் வந்து மலரவனுக்கு கொஞ்சம் கடுமையாக உள்ளது, கால்துண்டாடப்பட்டுவிட்டது என்று கூறினார். கால் கழற்றினாலும் பரவாயில்லை, உயிரோடு இருந்தால் அவன் இன்னும் எவ்வளவோ சாதனைகளைப் படைப்பான என்;று என் உள்ளுணர்வு அடிக்கடி வேண்டிக்கொள்கின்றது. ஏனெனில் பல நூற்றுக்கணக்கான போராளிகளில் ஒருசிலர், இப்படியான நிலையிலும் அபரிமிதமான திறமைகளையும் ஆற்றல்களையும் வெளிப்படுத்தி நிற்பார்கள். அந்த வரிசையில் மலரவனும் ஒருவன் என்று நன்றாகத் தெரியும். இவ்வேளையில் எமக்கு அடுத்த களமுனையில் மலரவனது அண்ணன் – அவர் மேல் உயிரையே வைத்திருந்த சகோதரன் – வைத்திய கலாநிதியும் போராளியுமான அவர், எமது மருத்துவமனையில் நின்று பல போராளிகளின் உயிர்களைக் காக்கும் கடமையில் துரிதமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தார். ஆனால்……. தாக்குதல்கள் முடிந்து எம் நிலைகளுக்கு நாம் வருகின்றபொழுது எங்கள் உள்ளத்தை உருகவைக்கும் பேரதிர்ச்சி தரும் அந்தச் செய்தியைச் சொன்னார்கள்’ என்று அந்தக் கணங்களை விவரித்தார். போர்க்களத்தில் ஆயுதங்களுடன் மட்டுமன்றி பேனாவுடனும் சுழன்று கொண்டிருந்த அந்த வீரன் மண்ணுக்காக வித்தாகி விட்டான். அதேவேளை, அவரது அண்ணன் அதிகாலை மூன்று மணிக்கு தம்பியின் வீரச்சாவுச் செய்தியை அறிந்திருந்த வேளையிலும் தொடர்ந்து அங்கு காயமடைந்து வந்துகொண்டிருந்த போராளிகளிற்கு சிகிச்சையளித்துக் கொண்டிருந்தார்.

    மலரவன் என்னும் ஒரு போராளியை தமிழன்னை அவரைப் பெற்ற மலரன்னையிடம் இருந்து பறித்து எடுத்துவிட்டாள். அந்தப் போராளியை, படைப்பாளியை சுமந்த தாயின் கரங்கள் போராட்டம் தொடர்பான பல பதிவுகளை செய்தது. தனது பிள்ளைக்கும் வீரமகனுக்கு தாயின் கவிதை அஞ்சலி! என்ற தலைப்பில் கவிதைகளைக் கண்ணீரோடு வரைந்தார் வீரத்தாய் மலரன்னை. அக்கவிதையின் இறுதி வரிகளில்

    மண்ணில் உதிர்த்திட்ட மைந்தனே! – இன்று

    விண்ணில் உயர்ந்திட்டாய் மா வீரனாய்

    விதையாய் வீழ்ந்திட்டாய் மண்ணிலே – இன்று

    கதையாகி விட்டதே உன் சரிதை.

    இருபதே வருடங்கள் வாழ்ந்தாலும்

    அர்த்தமாய் வாழ்ந்திட்டாய் வல்லமையால் – இந்த

    மண்ணின் விடியலே உன் கனவு – நீ

    விண்ணிலிருந்து நோக்குவாய் மலரும் தமிழீழமதை!

    மேலும் ‘மலரவனிடத்தில் குறுகியகால அனுபவத்திற்குள்ளேயே அவனிடம் ஓர் தளபதிக்கே உரித்தான திட்டமிடும் ஆற்றலைப் பார்த்தேன். அவன் கதைப்பது மிகவும் குறைவு. இதை செயல் வடிவம் நிறைவுபடுத்திற்று. இது எங்கள் தலைவரிடம் இருக்கும் தனித்துவமான ஒர் உயர்ந்த தன்மை’ என சு.ப தமிழ்ச்செல்வன் அவர்கள் பதிவு செய்கின்றார்.

    ஒற்றைவரியில் மலரவன் – போர்வீரன், வேவுப்போராளி, சிந்தனையாளன், தனக்குத் தரும் பணியை மெருகேற்றும் முயற்சியாளன், களத்தின் தேவையை விளங்கிச் சுயமாகச் செயற்படும் ஒருவன், சண்டையை மதிப்பீடு செய்யும் மதிப்பீட்டாளன், படைப்பாளி, தீவிர உழைப்பாளி, என நீண்டு செல்லும் அவரது ஆளுமை பன்முகத்தன்மை வாய்ந்தது.

    இத்தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் மலவரன் உட்பட 57 பேருக்கும் மற்றும் வீரச்சாவடைந்த அத்தனை மாவீரர்களிற்கும் நாட்டுப்பற்றாளார்களிற்கும் நினைவஞ்சலியை செலுத்துவோம். விடுதலை வீரர்களின் சுவாசமான சுதந்திர விடுதலை என்னும் அடைவை நோக்கி தளர்வில்லாமல் ஒன்றாகப் பயணிப்போம்.

    ‘ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது’  – தலைவர் பிரபாகரன் அவர்கள்.

    - அபிஷேகா.

    “மண்ணில் எங்கள் மைந்தனாய்

    மலர்ந்திட்ட இளையவன்-மலரவன்

    அண்ணர் மூவரின் அரும் பெரும்

    ஆருயிர்ச் சோதரனாகியவன்.

    குலம் விளங்க மலர்ந்தவன்

    குடும்பத்தின் ஒளி விளக்கானான்

    பாசத்தை உணர்த்திய பாலகன்-இவன்

    பண்பினால் பலரைக் கவர்ந்தவன்.

    “………………….”

    இலட்சியப் பயணங்கள் மேற்கொண்டு

    பசீலனை இயக்கிடும் பணி செய்தான்

    “……………….”

    இடை வழியில் அவனை இழந்திட்டோம்

    இராணுவ வேலியை அழித்திடவே

    இளம் வேங்கையவன் வேட்கை கொண்டதனால்

    களத்தில் காவியம் படைத்திட்டான்.

    - கப்டன் மலரவனின் பெற்றோர்.

    captanmalaravan_zps972c3332.jpg

    விடுதலைப்புலிகளின் அமைப்பில், பசீலன் பீரங்கிப் படைப்பிரிவில் பணிபுரிந்த, கேப்டன் மலரவன் (லியோ) என்றழைக்கப்பட்ட காசிலிங்கம் விஜித்தன் என்ற இளைஞனின் பயணக்குறிப்புகள்தான் இந்நூல். 1992ல் கேப்டன் மலரவன் ”வீரமரணமடைந்தார்.”

    அவருடைய மரணத்திற்கு பின்ப அவரது ”உடைப் பையிலிருநது” எடுக்கப்பட்ட கையெழுத்துப்பிரதி 1993ல் ”போர் உலா” என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டது. “போர் உலா” என்ற தமிழ் இலக்கிய மரபின் நிழல் படிந்த தலைப்பு, ஆயுதம் ஏந்திய விடுதலைப் போராட்டம் என்ற செயல்பாடு விடுதலைப்புலிகள் அமைப்பால் எந்தவொரு பரிமாணத்தில் உள்வாங்கப்பட்டது என்பதை நமக்குப் புலப்படுத்துவதாக அமைந்துள்ளது. தலைப்பின் நிலையும் கடந்து விரியும் மலரவனின் குறிப்புகள், மகிழ்ச்சியும் துக்கமம் திவிரமும் மரணமும் நிறைந்ததோர் நிலையில், போர் என்பது அன்றாட வாழ்வாக மாறி இருந்த ஒரு ஈழச்சூழலை கண்முன் நிறுத்துகின்றன. “குவேராவின் நினைவு ஒரு தழும்பல்ல/தொடர்வதற்காக தன்னைத்தானே கிழித்துக்கொள்ளும் ஒரு தொடர்ச்சி அது.“ மலரவனின் மரணமும் அப்படிப்பட்டதுதான்.

    அரசியல் சூழல் காரணமாக தமிழகத்தில் கவனிக்கப்படாமல் போயிருந்த ஈழப் பதிவுகளை மீண்டும் வெளிக்கொண்டு வரும் விடியலின் புதிய வெளியிட்டு வரிசையை தொடங்குவதாக அமைகிறது மலரவனின் இந்நூல்.

    “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

    http://thesakkaatu.com/doc11481.html

  15. தமிழீழ தேசிய மாவீரர் வாரம்

    ஜனவரி 15, 2013 | வழித்தடங்கள்.   

    Maaveerar-vaaram-copy-600x337.jpg

    களம் வீழ்ந்த முதல் வேங்கை மாவீரர் தினம் இதுதான்

    “தாயகத்திலும் தமிழ்கூறும் நல்லுலகு எங்கும் “தமிழீழத் தேசிய மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகிறது ”

    உலகமெலாம் தமிழர் ஒன்றுதிரளும் செய்தி விண்ணதிரக் கேட்கிறது.

    “இதய சுத்தி நிறைந்த போராளிகளே ஒரு விடுதலை இயக்கத்தின் தூய்மைக்குச் சாட்சியாக நிற்கிறார்கள்”

    1982 ம் ஆண்டு நவம்பர் 27 தாயகத்தின் முதல் வித்து 2ம் லெப்ரினன்ட் சங்கர் சத்திய நாதன் இந்தியாவில் தலைவர் மடியில் சாய்ந்தான் அந்த நாளே மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது 1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வாக, எழுச்சியாக, புனிதமாக உணர்வார்ந்த நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    மாவீரர் வாரத்தின் தொடக்க நாளான இன்று, மாவீரன் சங்கர் சார்ந்து தமிழீழத் தேசியத் தலைவர் குறிப்பிடுகையில்…

    ஒரு நாள் அதிகாலை, யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள ஒரு வீட்டைச் சுற்றிச் சிங்கள இராணுவம் முற்றுகையிடுகிறது. 1982ம் ஆண்டு அக்டோபர் மாதம் சாவகச்சேரியில் பொலிஸ் நிலையத்தைத் தாக்கியபோது காயமடைந்த விடுதலைப் புலிகளுக்கு அந்த வீட்டில் வைத்துச் சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து இராணுவத்தினரால் அந்த வீடு முற்றுகையிடப்படுகிறது.

    அவ வேளையில் அங்கிருந்த ஒரு இளைஞன் முற்றுகையிட்டவர்களை நோக்கி, தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சுட்டவாறே வீட்டு மதிலைத் தாண்டிக் குதித்து ஓடுகிறான். அவனை நோக்கிச் சிங்கள இராணுவத்தினரின் துப்பாக்கி வேட்டுக்கள் சரமாரியாகத் தீர்க்கப்படுகின்றன. அப்போது அந்த இளைஞனின் வயிற்றில் ஒரு குண்டு பாய்கிறது.

    படுகாயமுற்ற நிலையிலுங்கூட அவன் இராணுவத்தினரிடம் அகப்பட்டு விடக்கூடாது என்ற இலட்சிய உறுதியோடு இரண்டு மைல்தூரம் இடைவிடாமல் ஓடி தன் இயக்கத் தோழர்களின் இருப்பிடத்தை அடைகிறான். தோழர்களிடம் தன் கைத் துப்பாக்கியை ஒப்படைத்து விட்டு கீழே விழுந்து மூர்ச்சையாகிறான். வயிற்றில் ஏற்பட்ட காயத்திலிருந்து பெருமளவு இரத்தம் வெளியேறிமையினால் இரும்பையொத்த அவனது கட்டுடல் சோர்வடைகிறது.

    விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டமாகையால் அப்போது அங்கு போதிய மருத்துவ வசதி ஏற்படுத்தப்படவில்லை. அவசர அவசரமாக முதலுதவிகள் செய்யப்பட்ட நிலையில் அவனை தோழர்கள் விசைப்படகுமூலம் கடல் மார்க்கமாகத் தமிழகத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள். இராணுவத்தினரின் தேடுதல் நடவடிக்கை, முற்றுகை இவற்றைத்தாண்டி தமிழகம் செல்ல ஒரு வாரமாகிறது. தமிழகத்தில் தலைவர் பிரபாகரனைக் கண்டு பேசும்வரை அவன் நினைவு தப்பவில்லை. இருந்தபோதிலும் வயிற்றில் ஏற்பட்ட காயத்தின் நிலை மோசமடைந்தது. அவனைப் பிழைக்கவைக்க அவனது தோழர்கள் எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

    தேசியத்தலைவரும், தோழர்களும் கண்கலங்கி நிற்க (27-11-1982 அன்று மாலை 6.05 மணிக்கு) அந்த இளைஞன் இயக்கத்தில் முதற் களப்பலியாகும் பெருமையை அணைத்துக்கொள்கிறான். (இதே நாள் இதே நேரமே தமிழீழ மாவீரர் நாளாக நினைவு கூரப்பட்டு, மாவீரர் நினைவுச்சுடர் ஏற்றப்படுகிறது.) அவன்தான் வடமராட்சி கம்பர் மலையைப் பிறப்பிடமாக கொண்ட லெப்டினன்ட் சங்கர். சிங்கள இராணுவப்படையினர் வலைவிரித்துத் தேடிவந்த செ. சத்தியநாதன். சங்கர் அச்சம் என்றால் என்னவென்று அறியாத அடலேறு. இருபது வயதிலேயே தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்ட கெரில்லா வீரன். தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதற் பிரிவுத் தலைவன்..

    ஒரு சின்னப்பிசகு என்றாலும் கையோடு வெடித்து ஆளையே முடித்துவிடக்கூடிய வெடிகுண்டுகளின் தயாரிப்புகளிலும் அச்சமில்லாது ஈடுபடுவான். அரசபடைகளின் தீவிரக் கண்காணிப்புக்கு அவன் இலக்காகியிருந்தாலும் அச்சம் எதுவுமின்றி கிராமங்களில், வீதிகளில் சாதாரணமாக உலவி வருவான். அதே நேரத்தில் சுழன்றுகொண்டிருக்கும் அவன் விழிகள் சுற்றுப்புறச் சூழ்நிலைகளை நுணுக்கமாக அவதானித்தபடியே இருக்கும். தான் அறியாது செய்யும் சின்னத் தவறும்கூட ஒரு கெரில்லா வீரன் என்ற முறையில் தனக்கும் இயக்கத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதில் சங்கர் எப்போதும் விழிப்பாயிருப்பான். அரச படைகளின் கைகளில் சிக்க நேருமானால் எதிரிகளில் ஒருவனையாவது வீழ்த்திவிட்டுத் தானும் சாவது என்பதில் அவன் அசைந்தது கிடையாது. விடுதலைப்போராளிகள் எனப்படுபவர்கள், ஆயுதங்களோடு பிடிபடும் செய்திகளைப் பத்திரிக்கையில் வாசிக்கையில் குமுறுவான்.

    அமைதியான தன்மையும், அதிகம் பேசாத சுபாவமும் கொண்ட சங்கரின் இந்தக் குமுறலுக்கு ஆழ்ந்த அர்த்தமுண்டு. ஆயுதங்களையும் வைத்துக்கொண்டு, அரச படைகளின் கையில் எதிர்ப்பு எதுவுமில்லாமல் ஒரு விடுதலைப்போராளி சரணடைவது என்பது கோழைத்தனமானது என்பது சங்கரின் உறுதியான முடிவாக இருந்தது. குறிப்பாக, தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் ஆரம்பக் கட்டங்களில் விடுதலைப்போராளிகளை ஆயுதங்களோடு அரச படைகள் கைது செய்வதை அனுமதிக்கும் போக்கானது, அரச படைகளுக்கு விடுதலைப் போராட்டத்தை முறியடித்துவிடுவதில் நம்பிக்கையை ஊட்டி, அவர்களின் துணிச்சலைக் கூட்டிவிடும் என்று சங்கர் கருதினான்.

    இருபத்தொரு வயதில் அவன் சாதித்தவை தமிழீழப் போராட்ட வரலாற்றுக்குச் சொந்தமானவை. இனிமேல் சாரணர்களை அனுப்பி வடக்கில் புலிப்படையை அடக்கிவிட முடியும் என்று பாசிச சர்வாதிகாரி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா சிறீலங்காத் தலைநகரில் பிரகடனம் செய்தபோது, நெல்லியடியில் அரச படைகள் மீது சங்கர் நடத்திய கெரில்லாத் தாக்குதல் தமிழீழம் காணும்வரை தமிழீழப் போராட்டம் ஓயாது, ஓயாது என்பதை அரசுக்கு எடுத்துக்காட்டியது. ஜீப் சாரதியின் மீது வெற்றிகரமான முதல் தாக்குதலை நடத்தி, ஜீப் வண்டியை நிறுத்த வைத்து, கதவைத்திறந்து சாரதியை ஒரு கையில் வெளியே இழுத்து எறிந்தவாறு, மறு எதிரியை நோக்கிக் குண்டுகளைத் தீர்த்த லாவகம் சங்கருக்கே உரியது.

    இடுப்பிலிருந்து ரிவால்வரை எடுத்த மாத்திரத்தில் குறிவைக்கும் அவனது சாதுரியம் அலாதியானது. நெல்லியடியில் அரச படையினர் பீதியுற்ற நிலையில், சங்கர் கால்களை அகலவிரித்து பக்கவாட்டில் நின்று அரச படையினர் மீது குண்டுமாரி பொழிந்த காட்சி இப்போதும் நம் கண்களில் நிழலாடுகிறது.

    சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின்மீது சீலனின் தலைமையில் நடைபெற்ற கெரில்லாத்தாக்குதலின் வெற்றிக்கு சங்கரின் பங்கும் கணிசமானதாகும். அரசாங்கத்தால் பொலிஸ் நிலையங்கள் உஸார்ப்படுத்தப்பட்டிருந்தநிலையில், மாடிக்கட்டிடத்தோடு, பிரதான வீதியிலிருந்து சற்றுத்தள்ளி உள்ளே அமைந்திருந்த சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின் மீது முன்பக்க வாயிலூடாகத் தாக்குதல் நடத்துவது என்பது விஸப்பரீட்சைதான். ஆனால் உயிரைக் கடந்த காலத்திற்கு எழுதி வைத்துவிட்டு, புரட்சி வேள்வியில் குதித்திருக்கும் சங்கர், சீலன் போன்ற போராளிகளின் முன்னே அபாயங்களும், தடைகளும் என்ன செய்துவிடமுடியும்?

    ஜி.3 சகிதம் படுத்துக்கிடந்த சங்கர் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தாக்குதலில் ஒரு பகுதிக்குப் பொறுப்பாக இருந்து நடத்திய தாக்குதல் இப்பகுதி அரச படைகளை ஸ்தம்பிக்கச் செய்தது..

    பொன்னாலைக் குண்டு வெடிப்பு நடவடிக்கையிலும் சங்கர் கடுமையாக உழைத்தவன். ஐக்கிய தேசியக்கட்சி (ஜெயவர்த்தனா கட்சி) உறுப்பினர் புன்னாலைக்கட்டுவன் தம்பாபிள்ளை மீதான இயக்க நடவடிக்கைக்குச் சங்கரே பொறுப்பு வகித்தான்.

    எந்தவிதமான வாகனத்தையும் நேர்த்தியாகச் செலுத்தும் ஆற்றலும் சங்கரின் பன்முனைப்பட்ட ஆற்றலுக்குச் சான்றாகும். ஒரு கெரில்லா தாக்குதலையடுத்து ஏற்படுகிற பரபரப்பு, எதிரிப்படைகள் அந்த இடத்திற்கு வருமுன்னர் வெளியேற வேண்டிய பதைப்பு என்பவற்றிற்கும் மத்தியில் மிகுந்த வேகத்துடன் அதிக நிதானத்துடனும் வாகனத்தைச் செலுத்துவதில் சங்கர் வல்லவன்.

    சக போராளிகளுக்கு ஆயுதங்களைப் பயிற்றுவிக்கும்போது மிகுந்த கவனம் செலுத்துவான். தெளிவாக விளக்குவான். தனக்குத் தெரியாத விடயங்களை மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் கொண்டவன். அன்போடும் பணிவோடும் பழகுவதால் சகபோராளிகள் மத்தியில் தனி மதிப்பு வகித்து வந்தான்.

    தமிழீழ விடுதலையைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல், இராணுவத் தலைமையிலேதான் வென்றெடுக்க முடியும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்த சங்கர் இயக்கத்தில் தன்னையே கரைத்துக் கொண்டவன். விடுதலைப் போராட்டமே சங்கரின் முழுமூச்சாக இருந்தது. விடுதலைப் போராட்டத்திற்கென்றே ஆயுதமேந்திக் களத்திலே குதித்தவன் இந்த வீரன். சமூக விரோத நடவடிக்கைகளையும் சந்தாப்பவாதிகளையும் அவன் அறவே வெறுத்தான். அவன் மனது மிகவும் சுத்தமானது. இத்தகைய இதய சுத்தி நிறைந்த போராளிகளே ஒரு விடுதலை இயக்கத்தின் தூய்மைக்குச் சாட்சியாக நிற்கிறார்கள்.

    Viravanakka-Nigalvil-15.jpg

    இயக்கத்தலைவர் பிரபாகரனின் அரசியல் வழி காட்டலிலும், இராணுவக் கட்டுக் கோப்பிலும் சங்கர் ஊறி வளர்ந்தவன். பிரபாகரனின் அரசியல் தூய்மையில் அவன் எல்லையற்ற மதிப்பு வைத்திருந்தான். மலரப்போகும் தமிழீழம் தன்னலமற்ற-தூய்மைமிக்க விடுதலைப் போராளிகளால்தான் தலைமையேற்று நடத்தப்பட வேண்டும் என்று அவன் எப்போதுமே சொல்லி வந்திருக்கிறான். பதவிப் பித்தர்களும் துரோகிகளும் எங்கள் புனித இயக்கத்தின் மீது களங்கம் கற்பிக்க முனைந்த போதெல்லாம் அமைதியான இந்தப் போர் மறவன் சினங்கொண்டு எழுந்திருக்கிறான். சாகும்தறுவாயிற்கூட அவன் தன் உற்றார், பெற்றோரை நினைக்கவிலலை. தம்பி தம்பி என்றுதான் அந்த வீரனின் உதடுகள் வார்த்தைகளை உதிர்த்தன. தம்பியும், மற்ற இயக்கப்போராளிகளும் கண்கலங்கி நிற்க அந்த வீரமகன் சாவிலே வீழ்ந்து போனான்.

    ஒரு உண்மை மனிதனின் கதை என்ற ரஸ்ய நாவலைக் கடைசியாக வாசித்துக்கொண்டிருந்த சங்கர் அந்த நாவலை முழுதும் வாசித்து முடிக்கவில்லை. சங்கர் என்ற உண்மை மனிதனின் கதையே ஒரு வீர காவியம்தான்.

    தமிழீழத் தேசிய மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகிறது – எங்கள் வீரர்களுக்கு, எங்கள் காவல் தெய்வங்களுக்கு அவர்கள் புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்று சுதந்திரமாக வீர வணக்கம் செலுத்தும் நாள் இனி எப்போது வரும்? வரவேண்டும். வரும்.

    Viravanakka-Nigalvil-3-600x398.jpg

    || மாவீரர்கள் ஈகத்தில் நீளும் படைப்புகள்..

    மாவீரர் நினைவில் கட்டுரைகள்….

    மாவீரர் நினைவில் கவிதைகள்….

    மாவீரர் நினைவில் ஒளிப்பதிவு விபரணங்கள்..

    மாவீரர் நினைவுப் பாடல் இறுவெட்டுக்கள்…

    மேலதிக தமிழீழப் பாடல்களை “பாடல்” பகுதிக்குள் சென்று கேட்டு தாய்மண்ணின் உணர்வில் கேட்கலாம்.

    மாவீரர் தாகத்துடன் விரியும் நினைவு மலர்கள்…

    தேசியத்தலைவரின் மாவீரர் நாள் உரைகள்

    தமிழீழ மாவீரர் துயிலுமில்லங்கள் அந்நிய ஆதிக்க சக்திகளின் அராஜகத்தில் தமிழீழ தெய்வங்களின் தடம் சிதைக்கப்பட்டு சின்னாபின்னபக்கபடுகின்றது. கனக்கும் இதயங்களுடன்…

    Viravanakka-Nigalvil-21.jpg

    நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.

    - தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.

    “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

    http://thesakkaatu.com/doc11816.html

    • Like 2
  16. லெப்.சுடரொளி (சிம்மான்)

     

     

    வீட்டுக்கொரு ஆண் பிள்ளையாயிருந்தும் விடுதலையை நேசித்த வீரன்.

    கடல் அலைகளும் அதன் நுரைகளும் கால்தடவிச் சென்றோடும் மணற்கரைகளில் சிம்மானின் நினைவுகளை காலம் எழுதிச் செல்கிறது. ஆம் அவன் பிறந்த வடமராட்சி கிழக்கு சிம்மானின் வரலாற்றாலும் தனது வீரத்தை நிரப்பியிருக்கிறது. கடலோரக் கிராமத்தில் பிறந்தவன் அந்தக் கரைகளில் காலாற நடந்தவன் கடுமையான போராட்ட வாழ்வை நேசித்தானென்பது வியப்புக்குரியதே.

     

    ஓவ்வொரு வீரனின் இயல்பான வாழ்வினுள் ஒரு பெரிய வரலாறே புதைந்து கிடப்பதை அவர்களோடு வாழ்ந்தவர்களால் மட்டுமே அறியவும் ஆழமாய் உணரவும் முடியும். அத்தைகயவனாய் தான் சிம்மான் என்னோடு அறிமுகமானான்.

     

    1989ம் ஆண்டு வவுனியா பாலமோட்டை அடர்ந்த காட்டுப்பகுதியில் எங்களது பாசறையமைந்தது. அங்கேதான் உருவத்தில் சிறியவனான துடிப்பான அதே நேரம் நகைச்சுவையான ஒரு போராளியாக என்னுடன் அறிமுகமானான்.

     

    எங்கள் கிராமப்புற வாழ்விலிருந்து மாறுபட்ட பாலமோட்டை அடர்காடு எங்களுக்கு புதிய வாழ்வைத் தந்தது. ஒளிகாணாத இருளுமல்லாத பாதைகளால் நாங்கள் அடைய வேண்டிய இலக்கு நோக்கிய பயணத்தின் தொடக்கமாக அந்தப்பாசறை எங்களைப் புடம் போட்டெடுக்கும் முனைப்பில் ஒவ்வொரு போராளியின் மனவுறுதியையும் செயலுறுதியையும் பரீட்சிக்கும் களமாகவும் மாறியிருந்தது.

     

    பாலமோட்டைக் காடுகளே இந்திய இராணுவ காலத்தில் புலிகளின் வரலாற்றில் முக்கிய பங்கை வகித்த வரலாற்றைத் தன்னகத்தே தாங்கிக் கொண்டிருந்தது.

     

    கடுமையான காலகட்டமான இந்திய இராணுவ காலத்தில் புலிகளுக்கும் பிரேமதாச அரசுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக் காலம். எந்த நேரமும் இந்தியப்படைகளால் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட வழிதேடிக்கொண்டிருந்த காலமும் அதுவே. அந்த இறுக்கமான காலப்பகுதியில் அரசியல் போராளிகளை பாலமோட்டைக் காட்டில் உலங்கு வானூர்தியில் ஏற்றிச் செல்ல இலங்கையரச விமானப்படை வந்து செல்லும்.

    அந்த நேரத்தில் அரசியல் பேச்சுக்குச் சென்று திரும்பும் யோகியண்ணன் உள்ளிட்ட போராளிகளைப் பத்திரமாக வழியனுப்பி வைத்து மீளவும் கொண்டு வந்து இறக்கப்படும் இடத்தில் பாதுகாப்பபு வழங்கி அவர்களை எமது தங்கிடத்திற்கு கொண்டு வரும் பணியும் எமக்காயமைந்த பணிகளில் ஒன்று. அந்தப் பாதுகாப்புப் பணியில் நாங்கள் நித்திரை கொண்டு அதற்கான தண்டனையும் பெற்ற அனுபவம் கூட இனிமையான காலமே.

     

    வரலாற்றின் வெற்றியின் தடயங்களையும் இறுக்கமான கள நிலமையையும் கொண்டு மௌனமாகத் தனது பணியை ஆற்றிக் கொண்டிருந்த பாலமோட்டையில் நாங்கள் பயிற்சிக்காகத் தயாராகினோம்.

     

    கூடப்பயிற்சிக்காய் வந்திருந்தவர்களின் சொந்தப் பெயர்களையோ ஊர்களையோ அறிய ஆவலாயிருந்தாலும் அன்றைய இயக்கக்கட்டுப்பாடு கேட்டு அறிய முடியாததாகவே இருந்தது. எங்கள் பாசறையானது முற்றிலும் வித்தியாசமான கட்டுப்பாடுகளையும் விதிகளையும் கொண்டிருந்தது. புலிகளின் புலனாய்வுத்துறையின் வளர்ச்சியில் இந்தப் பயிற்சியின் தொடக்கமே புதிய பரிணாமங்களை உருவாக்கியதெனலாம்.

     

    அப்போதுதான் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த போராளிகள் ஆரம்ப பயிற்சியை முடித்து புலனாய்வுப் பயிற்சிக்கு எம்முடன் இணைக்கப்பட்டிருந்தார்கள்.

     

    அன்றைய காலம் இந்திய இராணுவத்தின் முற்றுகைக்குள் எமது விடுதலைப் போராட்டம் உட்பட்டிருந்தாலும் தேசியத்தலைவர் அவர்கள் அனைத்து முற்றுகையையும்    உடைத்து    போராட்டத்தையும்    போராளிகளையும் இயக்கக் கட்டமைப்புகளையும் சீர் செய்த வண்ணமே இருந்தார்.

     

    அவ்வாறான இறுக்கமான காலகட்டத்திலும் கூட அவரது சிந்தனையில் உதித்ததுதான் எமது புலனாய்வுப்பயிற்சிமுகாம். அப்போதைய பிரதித்தலைவர் மாத்தையா அவர்களின் நிருவாகத்தின் கீழ் சலீம் அவர்களின் பொறுப்புக்கு உட்பட்டு பிரிகேடியர் மாதவன் மாஸ்ரரின் கடும்பயிற்சிக்கு உட்படுத்தப்படுகிறோம் என்பதனை புரிந்து கொள்ள முடியவில்லை.

     

    எல்லா மாவட்டத்திலிருந்தும் ஐந்து ஐந்து போராளிகள் வந்திருந்தார்கள். யாழ்மாவட்டத்தில் இருந்து கூடுதலான போராளிகள் வந்திருந்தார்கள். முதலில் தனித்தனியாக மாத்தையா அவர்கள் வெளிமாவட்டங்களிலிருந்து வந்த போராளிகளை நேர்முகம் செய்திருந்தார்.

     

    அப்போது அவர் சொன்னார் :- நாம் எந்த ஒரு நிலைமையிலும் எக்கட்டளையையும் ஏற்றுச் செயற்படும் போராளியாகவே இருக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். எல்லாவிதமான கட்டுப்பாடுகளையும் ஏற்றுக் கொண்டால் மட்டுமே அந்தப் பயிற்சியில் நாங்கள் கலந்து கொள்ளலாமெனவும் கூறப்பட்டது.

     

    பயிற்சியின் கடினம் எதுவென்று பார்த்துவிடும் உறுதியோடு சிம்மான் உட்பட பயிற்சிக்கென வந்த அனைத்துப் போராளிகளும்   மாத்தையா அவர்களின் கட்டளைகள்  விளக்கவுரைகளை  ஏற்றுக்  கொண்டு  பயிற்சியின்  கடினம் தெரியாதவர்களாய் அனைத்துக்கும் தயரானோம்.

     

    இதில் என்னுடன் பயிற்சிக்கு வந்தவர்களுக்கும் எமது அணியோடு இணைத்துக் கொள்ளப்பட்ட  பெண்போராளிகளுக்கும்  இன்னும்  சில  போராளிகளுக்கும் ஏற்கனவே களச்சண்டை அனுபவம் இருந்தமையால் நடக்கப்போகும் பயிற்சியின் கடுமையை ஒரளவு உணர்ந்திருந்தனர்.

     

    ஆனால் அங்கேயே பயிற்சியை முடித்து பயிற்சி முடிந்தவுடன் இச்சிறப்பு பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்டு வந்தவர்ளுக்கு அதன் கடுமையைப் புரிந்து கொள்ள அவகாசம் தேவைப்பட்டது. அத்தைகயவர்களுள் சிம்மான் போன்ற சிலரும் உள்ளடங்கலாகினர்.

     

    விளையாட்டும் வீடும் உறவுகளும் தாளையடிக் கடற்கரையும் மட்டுமே உலகாயிருந்த சிம்மான் இயக்கத்தில் இணையும் போது மிகச்சிறியவனாகவே இருந்தான்.  அவன் தனது ஆரம்பக் கல்வியை தாளையடி  பாடசாலையில் பயின்றவன்.

     

    அவனது ஊர் அடிக்கடி இந்திய இராணுவத்தால் சுற்றிவளைப்புக்கு உட்படுத்தப்பட்டு திடீர் திடீரென அவனது கிராமமும் அமைதிய இழந்து போகிற தருணங்கள் அடிக்கடி நிகழ்ந்தது. இச்சுற்றிவளைப்பு இளைஞர்களை ஊரில் நிம்மதியாக இருக்கவிடாது தொல்லையாகவே இருந்தது. இதனால் சிம்மானை அவனது  பெற்றோர்  யாழ்நகரில்  உள்ள பற்றிக்கல்லுரியில்  இணைத்தார்கள். அத்தோடு விடுதியிருந்தே அவன் கல்வியைத் தொடர விடப்பட்டிருந்தான்.

     

    அந்த நாட்களில் தான் சிம்மானுக்கு சந்திரன் அறிமுகமாகிறான். சந்திரன் ஒரு அநாமதேயக் கரும்புலியாக கொழும்பு நகரில் காவியமானது ஒரு வரலாறு. சிலரால் மட்டுமே அறியப்பட்ட மறைமுகக்கரும்புலி சந்திரன் ஊடாக சிம்மான் போராளியாகினான். தாயகத்தின் விடுதலையை சிம்மான் உணர்ந்த காலமும் அதுவே.

    வீட்டில் ஒரேயொரு ஆண்பிள்ளையவன். அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் ஒரு செல்லப்பிள்ளையாகவே அவன் வாழ்ந்து வந்திருக்கிறான். அவனுக்கு உடன் பிறந்த இரு பெண் சகோதரிகள் இருந்தார்கள். அவன் மீது அவர்கள் அளவு கடந்த பாசத்தைக் காட்டி அவனைப் பார்த்து வந்தார்கள். அவனென்றால் உயிராகவே அவன் மீது பாசமாக இருந்தார்கள்.

     

    குட்டி இத்தாலி என அழைக்கப்படும் இவனது ஊரான தாழையடி செம்பியன்பற்று கிராமத்திலிருந்து இவனது உறவுமுறையான மாமாமார் தந்தையின் உறவுகள் யாவரும் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்திருந்தார்கள். நினைத்தால் அவனால் விரும்பும் வசதிகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வசதியோடு அவனது குடும்பச்சூழல் அமைந்திருந்தது.

     

    இத்தகைய வசதிகள் இருந்தும் தனது சிறிய வயதில் அனைத்து உறவுகளையும் வசதிகளையும் துறந்து சந்திரன் ஊடாக விடுதலைப்புலிகள் அமைப்பில் போராட்டத்தில் இணைந்து கொண்டான்.

     

    வவுனியாஅடர்ந்த காட்டுப் பகுதியில் அமீர் பயிற்சியாசிரியராக இருந்த பயிற்சி முகாமில் சிம்மான் பயிற்சியை முடித்திருந்தான். அன்றைய இந்திய இராணுவ காலகட்டத்தில் போராட்டம் என்பதும் பயிற்சிகள் என்பதும் நினைத்துப் பார்த்தால் இன்றும் மனசை ஒரு உறை நிலைக்குக் கொண்டு செல்லும் நிகழ்வுதான்.

     

    இந்திய முற்றுகைக்குள் அதிகாலை தொடக்கம் மதியம் வரையில் கடும் பயிற்சிகளையும் செய்து கொண்டு உணவுப் பொருட்களை எடுத்து வருவதென்பது மிகவும் கடினமான பணியாக இருந்தது அக்காலம். கடும் பயிற்சி நீண்டதூர நடைப்பயணத்தின் போது திசையறிகருவி மூலம் சென்று காடுகளை ஊடறுத்துத் தினம் ஒவ்வொரு பாதையை அமைத்துச் சென்று எம்மைவிடவும் பாரம் கூடிய உணவுப் பொதிகளைக் காவிவருவது என்பதும் அதன் வலியும் வேதனையும் அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியமுடியும்.

     

    கடுமையும் இனிமையும் நிறைந்த பயிற்சியை நிறைவு செய்து அடுத்த கடும் பயிற்சிக்கு இணைந்து கொண்டவன் தான் சிம்மானென்ற இனிமையானதொரு பாச உணர்வோடு நட்பை வளர்த்துக் கொண்ட தோழன் சிம்மான் என்ற சுடரொளி.

     

    பாலமோட்டை அடர்ந்தகாட்டில் அன்றைய பிரதித்தலைவரான மாத்தையாவின் 37 என்ற சுட்டுப்பெயரைக் கொண்டு இயங்கிய ஒரு முகாம் எமக்கான பயிற்சி முகாமாக அமைக்கப்பட்டிருந்தது.

     

    அனைத்து முகாம்களுக்குமான பொறுப்பாளராக லெப்.கெணல் கிறேசி அவர்கள் இருந்தார். எங்களது புலனாய்வுப்பகுதிக்கு சலீம் அவர்கள் பொறுப்பாக இருந்தார். நாம் அவருக்கு கீழ் தனியாக சண்டையணியுடன் கலக்கப்படாமல் பெண் போராளிகள் தனியாகவும் ஆண்போராளிகள் தனியாகவும் 37 முகாமில் ஒரு பகுதியில் தனித்துவமாக இருந்தோம். அந்தப்பகுதியின் காவல்கடமை யாவையும் நாமே கவனித்து வந்தோம்.

     

    எமக்கான முதல்நாள் கலந்துரையாடல் மாத்தையா அவர்களால் நடத்தப்பட்டது. பயிற்சியின் நோக்கம் கடுமை யாவற்றையும் விளக்கிக் கொண்டிருந்த மாத்தையா அவர்கள் தினமும் பயிற்சியின் போது 10கிலோ மண்மூடையை சுமந்தபடியே பயிற்சியை செய்ய வேண்டும். இரவு நித்திரைக்கு செல்லும் போது மட்டுமே அந்து மணல்மூடையைக் கழற்ற அனுமதிக்கப்படும் என்றார்;. அதுவரையும் நாங்கள் என்ன பணிகளைச் செய்தாலும் எம் முதுகில் அந்த 10கிலோ மண்மூடையைக் கழற்றவேகூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.

     

    இப்பயிற்சியினை சலீம் அவர்களும் மாதவன் மாஸ்ரர் அவர்களும் நெறிப்படுத்துவார்கள்; எனவும் குறிப்பிட்டார். இக்கடும் பயிற்சியைப் பெற விரும்பாதவர்கள் விலகிக் கொள்ளாம் எனவும் மீண்டும் கூறப்பட்டது. எனினும் யாரும் விலகாது பயிற்சியை முடிக்கவே தயாராக இருந்தார்கள்.

     

    இப்படியாகப் பயிற்சி தொடங்கிய நாளிலிருந்து நாம் யாரும் நிம்தியாகத் தூங்கியதில்லை. பயிற்சியின் கடுமை எந்த நேரமும் முதுகில் எம்மோடே காவப்பட்டுக் கொண்டிருந்த 10கிலோ மண்மூடையோடு இவ்வாறு தொடாந்த பயிற்சியின் கடினத்தின் அசதியில் நின்றபடியே சிம்மான் நித்திரைக்குச் சென்று விடுவான். எங்கு அவனுக்கு இடைவெளி கிடைக்கிறதோ அங்கே அவன் அவனது துப்பாக்கியோடும் மண்மூட்டையோடும் நித்திரையாகிவிடுவான்.

     

    மாதவன் மாஸ்ரர் முக்கியமான பாடங்களைப்   படிப்பிக்கும் போது கூட நித்திரையாகிவிடுவான். எங்களது முகாமில் தினம் தினம் தண்டனை பெறும் போராளியாகவே சிம்மான் இருந்தான்.

     

    தண்டனைக்காக சிறிய மரக்குற்றியொன்றில் மாதவன் மாஸ்ரர் எற்றிவிடுவார். அதில் இரு கால்களையும் வைத்துக் கொண்டு எத்துணையுமில்லாமல் துப்பாக்கியையும் பிடித்து நிற்பதென்பது கடினம். பலர் பலமுறை அந்த மரக்குற்றியிலிருந்து தவறி விழுந்து திரும்பத் திரும்ப ஏறிக் கொண்டிருப்பார்கள். ஆனால் சிம்மானோ அந்த கடினமான நிலமையிலும் மரக்குற்றியில் நின்றவாறு நித்திரையாகிவிடுவான்.  அந்த  நித்திரை  சிம்மானைத்  தவிர  யாராலுமே இயலாதது.அவனது அதிசயமாக நிலையும் நித்திரையும் காணுகிற யாவரும் சிரிப்பார்கள்.

     

    மாதவன் மாஸ்ரரை தனது குறும்புகளாலும் நின்றபடியான நித்திரையாலும் சினப்படுத்தியிருக்கிறான். எத்தனை தண்டனை கொடுத்தாலும் அத்தனையையும் சாதாரணமாக  செய்து  முடித்துவிட்டு  மாஸ்ரர்  முன்னால் சாதாரணமாகவே இருப்பான்.

     

    இனி கொடுப்பதற்கு தண்டனையே இல்லையென்ற நிலமையில் மாதவன் மாஸ்ரர் சொல்லுவார்….! மச்சான் சிம்மான் அம்மாவாணை இனி ஏலாது சொல்லீட்டு போமச்சான்….! என்பார். ஆனால் இவனோ அதனையும் சிரித்துக் கொண்டு ரசித்தான். ஆனால் கடினமான பயிற்சியை விட்டு விலகிப் போகவில்லை. பயிற்சியின் கடுமையைத் தாங்க முடியாமல் மன்னாரைச் சேர்ந்த பஸ்தியான் என்ற போராளி ஒருவர் சயனைட் கடித்து பின்னர் மருத்துவப் போராளிகளால் காப்பாற்றப்பட்டு உயிர் பிழைத்திருந்தான். அப்படியிருந்தும் சிம்மான் போன்ற இன்று மாவீரர்களான பல போராளிகள் உறுதியுடன் தங்கள் பயிற்சியை முடித்ததும் கடமைகளை முடித்ததும் வரலாற்றில் மறக்க முடியாதது.

     

    எமது புலனாய்வுப் பயிற்சியின் தொடர்ச்சி பலமாதங்களைக் கடந்த நிலையில் இந்திய ஆக்கிரமிப்புப்படைகளும் தேசவிரோதிகளும் எமது மண்ணைவிட்டு வெளியேறத் தொடங்கினார்கள். இவ்வேளையில் தாக்குதல் சம்பவங்களும் அதிகரித்த வண்ணமிருந்தது. எங்கள் அணிகளையும் தாக்குதலுக்குத் தயாராகும்படி தலைவர் அவர்களிடமிருந்து கட்டளை வந்தது. இதற்காக கிறேசி அவர்கள் சிறப்புப் பயிற்சியை ஆரம்பித்தார். எமது துறைப்போராளிகள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டனர்.

     

    ஒன்று கிளிநொச்சி பகுதியிலிருந்து வெளியேறிக் கொண்டியிருந்த ஈஎன்டிஎல்எவ் மீது மறிப்புத் தாக்குதல் அடுத்தது வவுனியா பகுதியிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்த  ஈபிஆர்எல்எவ்  புளட் மீது  வழிமறிப்புத்  தாக்குதல்.  இதில் நெளுக்குளம் பகுதியில் நடந்த மறிப்புச் சமரில் சிம்மானும் கலந்து கொண்டான்.

     

    இது வெற்றிகரமான தாக்குதலாக முடிந்திருந்த போதும் சமநேரத்தில் வவுனியா செட்டிகுளத்தில் உள்ள முசல்குத்தி பகுதியில் நிலைகொண்டிருந்த புளொட் மாணிக்கதாசனின் முகாம் மீதான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

     

    இத்தாக்குதல் தோல்வியில் முடிந்திருந்தது. இதனால் முசல்குத்தி புளட் முகாம் மீது பெரியளவிலான தாக்குதலை மேற்கொள்ள பல தளபதிகளும் பங்கேற்றனர் நடந்த சண்டையில் பெருமளவு ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டது. மாணிக்கதாசன் தப்பி சென்றிருந்தார்;. இவ்வெற்றிகரத் தாக்குலில் சிம்மானும் கலந்து கொண்டான்.

     

    இத்தாக்குதல் முடிவுற எமக்கான புலனாய்வுப் பணி காத்திருந்தது. இவ்வேளையில் மாத்தையா அவர்களிடமிருந்து புலானய்வுத்துறையின் பொறுப்பை பொட்டு அம்மான் பொறுப்பேற்கிறார். இவரே சிம்மானை இறுதிக்காலம் வரையும் வழிநடத்தினார். பொட்டு  அம்மான்  பொறுப்பேற்ற  பின்பு  மாதவன்  மாஸ்ரர்  வவுனியா

    நெழுக்குளத்திலும் சலீம் அவர்கள் துணுக்காயிலும் மாதகல் லெப்.கேணல் ராஜண்ணா லெப்.கேணல் சூட்டண்ணனுடனும் யாழ்ப்பாணத்திலும் லெப்.கேணல்.மல்லியண்ணன் கிளிநொச்சியிலும் புலனாய்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

     

    சிம்மான் வவுனியா நெளுக்குளத்தில் மாதவன் மாஸ்ரருடன் விசாரணைப்பணியில் ஈடுபட்டிருந்தான். அப்பணி முடிந்த கையோடு யாழ்ப்பாணத்தில் லெப்.கேணல்.பொஸ்கோ அண்ணனுடன் விடப்பட்டான். அவரோடு சிம்மான் தகவல் சேகரிப்பிலும் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டான். அப்போது தர்சன் என்ற பெயரிலும் புலனாய்வுப் பணியில் செயற்பட்டான்.

     

    கோப்பாய் பகுதியில் இருந்து புலனாய்வில் செயற்பட்ட சிம்மான் அங்கு நின்ற போது அவன் அனைத்து வாகனங்களையும் செலுத்த இலகுவாகக் கற்றிருந்தான்.

     

    இவ்வேளையில் பொறுப்பாளரின் அனுமதியின்றி வாகனத்தை ஓடி ஒரு விபத்தில் மாட்டியிருந்தான். இது பொறுப்பாளருக்குத் தெரியவர யாழ் கோட்டைப் பகுதியில் தண்டனைக்காக விடப்பட்டியிருந்தான். தண்டனைக்காலம் முடியும் போதே நான் வெளியகவேலை ஒன்றிலிருந்து மீண்டும் வந்திருந்தேன்.அன்றிலிருந்து என்னுடன் மீண்டும் நட்பினை வளர்த்தவன் வீரச்சாவு அடையும் வரை பிரியாத நண்பனாகவே இருந்தான்.

    அவ்வேளை நான் வடமராட்சி புலனாய்வுத்துறைக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தேன். இதன் போது இருவரும் குடும்ப உறவு போல அவன் மூலம் அவனது குடும்பத்தினருடன் பழகச் சந்தர்ப்பம் கிடைத்தது.

     

    நானும் அவனும் சில நாட்களில் சண்டை பிடித்து பலமாதங்கள் கதைக்காமலே இருந்த நினைவுகளையும் மீட்டுக் கொண்டான். இருவரும் சிறு சிறு சண்டைகள் பிடித்தாலும் அவன் தானாகவே வந்து என்னுடன் கதைப்பான். இப்படி அவனிடம் குழந்தைத்தனமும் அதேநேரம் அன்பாகவும் என்னுடன் பழகிய காலங்கள் நினைவுக்குள் இன்னும் பச்சையம் மாறாமல் இருக்கிறது….!

     

    சிம்மான் சிறந்த நண்பனாக இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் தோழனாக என்னோடு   உறவாகினான்.   இவ்வேளையில்   சிறுவயதில்   வழமையாக எல்லோருக்கும் வருவது போல ஒரு காதல் அவனுக்கும் வந்தியிருந்தது.

     

    அவனுடன் ஒன்றாகப் படித்த பெண்ணை அவன் நேசிக்கத் தொடங்கினான். காதல் அவனை மிகவும் நேசிக்க வைத்தது. தனது காதலியைச் சந்திக்க போகும் போதெல்லாம் என்னையும் அழைத்துக் கொண்டே போவான். நானும் அவன் எண்ணம் நிறைவேறி குடும்பமாகி வாழ்வான் என்றே நினைத்திருந்தேன். போராளிகளின் வாழ்க்கை அனைத்தையும் கடந்தது என்பதனை அவனது வீர மரணம் வரை நான் உணரவேயில்லை.

     

    பொஸ்கோ அண்ணன் நிருவாகத்திலிருந்து ராயு அண்ணனின் கண்காணிப்புப் பிரிவு நிருவாகத்தில் செயற்பட்டு வந்தான். அம்முகாமுக்கும் அவனே பொறுப்பாகவும் இருந்தான். எந்த வேளையிலும் இவன் பாடசாலை மாணவன் போன்றே தோற்றம் தருவான். ஒரு புலனாய்வாளனுக்குரிய மாற்றங்கள் இலகுத் தன்மை யாவையும் சிம்மான் பெற்றிருந்தான். காலத்திற்கும் கடமைக்கும் ஏற்ப அவன் தன்னை மாற்றியமைத்துத் தனது கடமையில் சிறந்தவனாகவே இருந்தான்.

     

    அவன் எப்போதும் தன்னோடு வைத்திருக்கும் பாக்கர் பேனையும், கொப்பியும் லுமாலா சயிக்கிளும் இன்னும் என் நினைவோடிருக்கிறது. இவனது குறும்புகளால் நான் மாதவன் மாஸ்ரரிடம் பலமுறை தண்டனை பெற்றிருக்கிறேன். மாஸ்ரருக்கு தெரியாமல் என்னை வெளியில் கூட்டிப்போகவே பிரயத்தனப்படுவான்.

    மாஸ்ரருக்கு தெரியும் அங்கே அவன் வந்தால் என்னைக் கூட்டிப்போவானென்று. இதனை உணர்ந்த மாஸ்ரர் அடிக்கடி கேட்பார். என்ன ஆளைக்கூட்டிக் கொண்டு போகப்போறிங்களே மச்சான் பகிடியாய் கேட்பார். சிம்மானுடன் கிடைக்கும் நேரமெல்லாம் யாழ்ப்பாணத்தில் உள்ள அவனது உறவினர்களின் வீடுகளிற்கெல்லாம் சென்று வருவோம்.

     

    இப்படியே நாட்கள் போக இயக்கத்தின் வளர்ச்சியும் செயற்பாடுகளும் வளர்ச்சி காண இவனுக்கும் பொறுப்புகள் வரத் தொடங்கியது. இந்தக் காலத்தில் திருநெல்வேலி பல்கலைக்கழகத்துக்கு பின்பாக அமைந்திருந்த இரகசிய முகாமுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டான். இம்முகாமில் தான் மாத்தையா அவர்கள் விசாரணை எதுவுமின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இவ்வேளையில் மாத்தையாவிற்கான சகல தேவைகளையும் இவனே கவனித்தான். பத்திரிகைகள், தொடக்கம் யாவையும் கொடுத்துக் கவனித்தான்.

     

    இக்காலப்பகுதியில் பூனகரி முகாம் தகர்ப்புக்கான ஆயுத்தங்கள் நடந்து கொண்டிருந்தது. தாக்குதலை வழிநடத்த வேண்டிய பொறுப்பு தளபதி பால்ராஜ் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த போதும் அவர் யாழ்தேவி சண்டையில் காயமடைந்திருந்ததால் பொட்டு அம்மான் அவர்கள் தாக்குதல் ஒருங்கிணைப்புத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

    இச்சண்டைக்காக  அனைவரும் தயார்படுத்தப்பட்டு பயிற்சிகள் ஆரம்பமாகின. இதன் போது மல்லியண்ணனும் சூட்டண்ணனும் புலானய்வுத்துறைப் போராளிகளுக்கான தளபதிகளாக நியமிக்கப்பட்டனர்.

     

    இச்சந்தர்ப்பத்தில் நான் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்திற்கு புலனாய்வுப் பொறுப்பாளராக பொறுப்பேற்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன். இதற்கான போராளிகள் தெரிவுகளைச் செய்யும்படி தலைவரும் பொட்டுஅம்மானும் கேட்டுக் கொண்டனர்.

     

    இதில் யாழ் மாவட்டப் புலனாய்வுப் போராளிகள் மட்டக்களப்பிற்கு வர ஆளுக்கு ஆள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இதனையறிந்த சிம்மான் என்னை இரவு பகலாக உன்னுடன் கூட்டிப்போய்விடு மச்சான் என கேட்டுக் கொண்டேயிருந்தான்.

     

    நானும் அவனை அம்மானுடன் கதைத்து அழைத்துப் போவதென்றே சொல்லியிருந்தேன். இதற்காக ஒருமுறை அம்மானுடன் கதைத்து பேச்சு வாங்கி பிறகு ஒரு வகையாக அம்மானை சமாளித்து அவனை என்னோடு கூட்டிப்போக அனுமதியும் பெற்றேன்.

     

    அம்மானுக்கு சிறு தயக்கம் இருந்து கொண்டேயிருந்தது. காரணம் சிம்மானின் குழப்படிகளை அறிந்திருந்தார்.

    ஒருமுறை நிகழ்ந்த சுவாரசியமான நிகழ்வொன்று :-

     

    ஒருமுறை அவனது தந்தையின் சகோதரர் அவுஸ்ரேலியாவில் இருந்து ஊரில் வந்து நின்றார். அப்போது சிம்மானும் விடுமுறையில் போயிருந்தான். அப்போது அந்தச் சித்தப்பா கொண்டு வந்த மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு உடுப்பிட்டியில் நின்ற என்னிடம் வந்திருந்தான். வா மச்சான் வீட்டை போய் வருவோமென அடம்பிடித்தான்.

     

    இருவரும் போவதை அறிந்தால் அம்மான் கோபப்படுவார் என நான் மறுக்க இவனோ பறாவயில்லை இருவரும் சேர்ந்து தண்டனையைச் செய்வோமெனச் சொன்னான். இன்று நீ வராது விட்டால் உன்னுடன் இனிமேல் ஒருபோதும் கதைக்கமாட்டேன் என்றான். அவனது அன்புக்கு முன்னால் தண்டனையொன்றும் பெரிதாகத் தெரியவில்லை. ஒருவாறு என்னை சமாளித்து மோட்டார் சயிக்கிளில் ஏற்றிக் கொண்டு தாளையடி நோக்கி புறப்பட்டான்.

     

    இவன் வளமையில் வேகமாகவே வாகனத்தைச் செலுத்துவான். அன்றும் நான் பின்னாலிருக்க அவன் வேகமாகவே மோட்டார் சைக்கிளை ஓடினான். உடுப்பிட்டியிலிருந்து நெல்லியடி நோக்கிப் போய்க்கொண்டிருக்கும் போது கடற்புலிகளின் முகாமைத் தாண்டி வரும் வீதி வளைவில் வந்த ஒரு பெண்ணோடு மோதி மூவரும் துக்கி எறியப்பட்டோம்.

     

    அதே சமயம் அவ்வழியால் வந்த கடற்புலி போராளிகளால் மீட்கப்பட்டு மந்திகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தோம். இச்சம்பவத்தால் அம்மான் என்னுடன் கோபத்திலிருந்தார். இந்த நிகழ்வை அவ்வேளையில் அம்மான் நினைத்திருக்கக் கூடும்.

     

    இவ்வேளையில் றொபேட்டிடம் இருந்த யாழ்மாவட்ட புலனாய்வுப் பொறுப்பு பூனகரி முகாம்தாக்குதல் முடியும் வரை என்னிடம் தரப்பட்டு யாழ்மாவட்ட புலனாய்வுப் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருந்தேன்.

    அம்மான் பூனகரி முகாம் தாக்குதல் ஒருங்கமைப்புக்குத் தயாராகியிருந்தார். இச்சந்தர்ப்பத்தில் புலனாய்வுத்துறை வெளிவேலை செய்யும் போராளிகளும் தாக்குதலின் தேவை கருதி தாக்குதல் அணிக்காக பெயர்கள் தயார் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது.

     

    நான் நினைத்துக்கூட பார்க்காத அந்தப்பெயர் அப்பட்டியலில் இணைக்கப்பட்டிருந்த நான் மட்டக்களப்புக்குக் கூட்டிப்போவதாக இருந்த சிம்மானின் பெயர். நான் அவனுக்காக வேலைகளை மனதில் திட்டமிட்டுக் கொண்டிருந்த போது அவனை இவ்வாறு உடன் சண்டையணியில் இணைத்தது கவலையைத் தந்தது. இதுவிடயம் பற்றி அவனும் அறிந்திருந்தான். அவன் என்னிடம் வந்த போது இதுபற்றி சொன்னான்.

     

    மட்டக்களப்பு வந்தும் சண்டைபிடிக்கத்தானே போறன்…இந்தச் சண்டைக்கு நான் போய் வந்தால் அனுபவமாகவே இருக்கும் உனக்கும் உதவியாயிருக்கும் என்றவன். ஆனால் நீ என்னை மட்டக்களப்புக்கு விட்டுவிட்டு போகாமல் இருந்தால் சரியென்றான்.

     

    இருந்தும் நான் றொபேட்டுன் கதைப்பதாக அவனிடம் சொல்லிவிட்டு அம்மானை சந்திக்க முயற்சித்து முடியாது போக றொபேட்டிடம் கேட்டேன். அவனை நான் கூட்டிப்போக  உள்ள  வேளையில்  கட்டாயம்  சண்டைக்கு  வர  வேணுமா

    எனக்கேட்டேன். றொபேட் சண்டையின் கடுமை பற்றியும் ஆட்கள் பற்றாக்குறை பற்றியும் விளக்கியதால் நானும் வேறு வழியில்லாமல் திரும்பிவிட்டேன்.

     

    சண்டைக்கான ஏற்பாடுகள் ஒழுங்கு செய்யப்பட்டு அணியணியாக போராளிகள் பிரிக்கபட்டார்கள். அப்போது எனது ஓய்வு நேரங்களில் இவன் என்னிடம் வந்துவிடுவான். கிடைத்த அந்த ஓய்வுகளில் தனது குடும்பம் , காதல் போராட்டப் பணிகள் பற்றியெல்லாம் பகிர்ந்து கொண்டான். தேசத்தின் விடுதலையைத் தேடிய கால்களின் வேகம் பூனகரியின் வெற்றியின் நாதமாக….! அணிகள் தயாராகின….!

     

    பூனகரி முகாம் தகர்;ப்புப் பயிற்சிக்காக பிரியும் நேரம் வந்தது. அந்த நாள் வந்த போது இது நிரந்தர பிரிவென்று நான் நினைக்கவேயில்லை. மாறாக திரும்பி வருவானென்றே நினைத்திருந்தேன். போருக்குப் போகும் போது ஒருவித கலக்கத்துடனேயே பார்த்தான். என்றுமில்லாத அவனது கலக்கம் அவன் என்ன நினைக்கிறான் என்பதை என்னால் ஊகிக்க முடியாதிருந்தது.

     

    சண்டைக்கான பயிற்சி தொண்டமானாறு , அச்சுவேலி பகுதிகளில் நடந்து கொண்டிருந்தது. அப்பயிற்சி முகாமுக்கு மல்லியண்ணன் யாரையும் அனுமதிப்பதில்லை. ஆனால் நான் அவனைத் தேடிப்போனேன். அவனைச் சந்திக்க வேண்டும் நிறையப் பேசவேண்டுமென அவனருகில் போனாலும் அவனது முகத்தைப் பார்த்த போது எல்லாம் மறந்துவிடும்.

    Sudaroli-4-600x924.jpg

    பயிற்சி நடந்து கொண்டிருக்கும் போது முகம் வாடியிருந்தது. மனசுக்குள் அவன் சொல்வதற்காய் பலவற்றைப் புதைத்து வைத்திருக்கிறான் என்பது மட்டும் புரிந்தது. அவனிடம் ஆற அமர எதையும் கேட்டறியும் நிலமையில் நிலமை இருக்கவில்லை.

     

    அப்போது பயிற்சியின் போது அவனுடன் பயிற்சியில் ஈடுபட்ட சக போராளிகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் தந்தான். தங்கைமார் அம்மா உறவினர்கள் காதலியென விசாரித்துவிட்டு அனைவரையும் சுகம் விசாரித்தாய் சொல்லு மச்சான் எனச்சொன்னான். அத்துடன் ஒரு கடிதத்தையும் தந்தான். அத்துடன் பாக்கர் பேiனையையும் தந்தான்.

     

    அவன் பழகிய ஒரு வீடு அது யாழ் பரமேஸ்வரா சந்திக்கு அண்மையில் இருந்தது. அவர்களின் வீட்டில் அவனுடன் நட்பினை வளர்த்திருந்த ஒரு பிள்ளை அவன் தூரம் போவதைத் தெரிந்து போகும் போது பாக்கர் பேனையொன்று கேட்டுள்ளது. அதையும் தந்து கடிதம் ஒன்றையும் தந்திருந்தான்.

    அந்தக் கடிதம்:-

    Sudaroli-1-600x631.jpg

    தனக்குச் சாவு வரும் என்பதைத் தெரிந்து கொண்டு ஒரு போராளி போருக்குப் போவது எப்படியான உள்ளுணர்வை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்து கொள்ளக் கூடியதாயிருக்கும். தான் சாகும் தருணத்திலும் தங்களை நேசித்தவர்களுக்காக எந்தக் குறையும் இருக்கக் கூடாது என்ற அவனது தியாகத்தினையே நான் கண்டு கொண்டேன்.

     

    அத்தோடு இத்தாக்குதலில் தான் மரணித்தால் தனது காதலிக்கு தனது வித்துடலைக் காட்டுமாறும் பூமாலை ஒன்றைக் கொடுத்து எனக்கு அணிவித்து விடு எனவும் வேண்டிக் கொண்டான்.

     

    இதனை நானோ வழமையான கதையாகவே நினைத்தேன். இவன் என்னுடன் மட்டக்களப்பு வருவான் என்ற திடமான நம்பிக்கையுடனே இருந்த என்னால் அவனது மரணத்தை நினைக்கவே தெரியாது போயிருந்தது.

    இரும்பாயிருக்கும் போராளிகளின் மனவுறுதியின் அடியிலும் ஈரமான நினைவுகளும் சின்னச் சின்ன ஆசைகளும் இருப்பதை யாராலும் உணர்ந்து கொள்ள முடிவதில்லை.

     

    பூனகரித் தளம் தேடிய புலிகளணி இறுதிப் பிரிவு நாளது. அன்றைய நாள் அவனுடன் கதைத்து பம்பல் அடித்து விட்டுப் போராளிகளிடம் விடைபெறும் நேரம் அவனுக்குச் சொன்னேன். தாக்குதல் வெல்லும் நீ திரும்பி வருவாய் நீ வந்த பிறகு மட்டக்களப்பு போவோம் என்றேன்.

     

    11.11.1993 அன்று இருளொடு இருளாக பூனகரி தவளைப்பாய்ச்சல் தாக்குதலுக்காக அணிகள் தயாரானது. (தவளை நடவடிக்கை நீரிலும் நிலத்திலும்…) நீரிலும் நிலத்திலும் எதிரியுடன் சமராட புலிகளணி தாக்குதலுக்குத் தயாராக இருந்தார்கள். அப்போது நானும் அவ்விடத்துpற்கு செல்ல அவர்கள் பூனகரி உப்புத்தணீருக்குள் இறங்கத் தயாராகி தாக்குதலணிப் போராளிகள் நின்றார்கள்.

     

    உப்பு நீரில் கால்நனைத்து உறுதியுடன் விடை தந்து வெற்றி பெற்று வர எங்கள் வீரர்கள் தயாரானார்கள். கரிய இருட் திரையைக் கரைத்தபடி புலிவீரர் அணியணியாய் தயாராகி உப்பு நீரில் நடந்தார்கள்.

     

    அந்த ஈரக்காற்று மேனிதடவி ஒவ்வொரு வீரனையும் வழியனுப்பிக் கொண்டிருந்தது. ஒவ்வொருவராய் விடைபெற்றுக் கொண்டிருந்தார்கள். மனசின் அடியில் அவர்களில் யாரை இழந்து விடப்போகிறோம் என்ற ஏக்கம் தானாகவே வந்துவிட சிரித்துக் கொண்டு போகிற அவர்களுக்காக சிரித்து விடைகொடுத்துக் கொண்டிருந்தேன்.

    அப்போது மச்சான் என்று கையைப்பிடித்த சிம்மான். மச்சான் நான் திரும்புவனோ தெரியாதெனச் சிரிப்புடன் பகிடி போன்று சொன்னான் சிம்மான்….நீ யோசிக்காதை நீ திரும்ப வருவாய் எனக்கூறியதும் அப்போது அவனது கையில் கட்டியிருந்த கோவில் நூலொன்றைக் கழற்றி எனது கையில் கட்டிவிட்டான்.

     

    அவனைப் பிரியப் பிரியப்படாத எனக்கு நம்பிக்கை தருபவனாய்…., இந்தச் சிங்கள இராணுவத்தினர்  இந்த  முகாமிலிருந்து  வெளியேற  வேண்டும்.  நாங்கள் இச்சண்டையில் வெல்வோம் நான் திரும்பி வருவேன் வந்ததும் உன்னுடன் மட்டக்களப்பு வருவேன் யோசிக்காதையென கடைசியாக எனக்கு தைரியம் சொல்லிவிட்டு உப்புத்தண்ணீரில் இறங்கினான்.

     

    தண்ணீரில் நடந்து கொண்டிருந்த போராளிகளோடு அவனும் நடக்கத் தொடங்கினான். அவன் மறையும் வரையும் கரையில் நின்ற நான் அவன் உருவம் மறைந்ததும் அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன். என் கண்களில் உப்பு நீர் உவர்த்தது. சிம்மானும் அச்சமருக்கு போய்க்கொண்டிருந்தவர்களையும் சுற்றியே மனசு அலைந்து கொண்டிருக்க திரும்பிக் கொண்டிருந்தேன்.

     

    சண்டை தொடங்கியது. கடும் வெடியோசைகளுடன் காதைப் பிளக்கும் அளவுக்கு தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. சண்டையின் நிலவரத்தைப் பற்றிய நிலமையைக் கட்டளை மையத்திலிருந்து வரும் வோக்கி அலை வரிசைகளை மாறி மாறிக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

    வீரச்சாவுகளும் காயங்களும் வெற்றிச் செய்தி அறிவிப்புக்களும் வந்து கொண்டிருந்தது. சிம்மானின் நினைவும் எனக்கு அடிக்கடி வந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு வீரச்சாவும், காயமென வரும் அறிவிப்பும் மனசை ஆயிரம் கத்திகள் கொண்டு அறுக்கும் வலியைத் தந்து கொண்டிருந்தது. அடுத்த பெயர் எனது நண்பனாக இருக்கக் கூடாதென்ற எண்ணமே வலுத்திருந்தது.

     

    லெப்.கேணல்.சூட் அவர்களின் பெயரை வோக்கி ரோக்கி கதைகளை வைத்து வீரச்சாவு என்பதை அறிந்து கொண்டதும் எனது இதயத்தில் பேரிடியைத் தந்தமாதிரி உணர்ந்தேன். நான் நேசித்த எனக்கு மிகவும் பிடித்த தளபதிகளுள் தளபதி சூட் அண்ணனும் ஒருவர். எனக்கும் சூட்டண்ணன் அவர்களுக்கும் இருந்த தனித்த நட்பு மிகவும் வித்தியாசமான அனுபவம். அந்த நேரம் சூட் அவர்களின் இழப்பானது எமது துறைக்கும் விடுதலைப்புலிகள் ஒட்டுமொத்த அமைப்புக்கும் பேரிழப்பாக இருந்தது. இப்படியாகப் பலநூறு போராளிகள் காயம் வீரச்சாவு அறிவிப்புகளும் வந்து கொண்டிருந்தது.

     

    தொடர் அறிவிப்புக்கள் மனசை அமைதியாக இருக்க முடியாதபடி அலைக்கழிந்தது. சிம்மான் பற்றி மல்லியண்ணனைத் தொடர்பு கொண்டு கேட்க வேண்டும் போலிருந்தது. அதேநேரம் தளபதி பால்ராஜ் அவர்களுக்கு பாதுகாப்புக்காகவும் நியமிக்கப்பட்டிருந்தேன். அப்போது தளபதி பால்ராஜ் அவர்களும் , காயமடைந்த போராளிகளும் யாழ் போதனா வைத்தியசாலையில் மருத்துவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். மருத்துமவனை என்று பார்க்காமல் சுப்பர் சொனிக் விமானங்கள் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தது. இப்படியான நிலமைகள் இருந்தும் வீதியோர தாக்குதலினையும் பொருட்படுத்தாமல் பூனகரிக்குச் சென்றேன்.

    அங்கு வழங்கல் பகுதிக்கு சென்ற போது என்னால் நம்பவே முடியாத அந்தத் துயர் வந்தது. எனது நண்பன் சிம்மானின் வீரச்சாவுச் செய்தியே என்னை வந்தடைந்தது. நம்ப முடியாத அந்தச் செய்தியை உறுதிப்படுத்த மீண்டும் தொடர்பெடுத்து கேட்டேன்.

     

    முதலில் காயம் என்றார்கள் , பின்னர் வீரச்சாவென்றார்கள். எனது துறை சார்ந்த நண்பர்களான மஞ்சு , சிம்மான் என புலனாய்வுத்துறை சார்ந்த போராளிகளின் சாவுச்செய்திகள் கிடைத்த வண்ணமிருந்தது.

     

    அந்தச் செய்தியோடு உடைந்து போனேன். ஒருகணம் எல்லா நம்பிக்கைகளும் போனது போன்ற பிரமையில் வெளியேறினேன். போன வழியெல்லாம் சிம்மானினதும் ஏனைய போராளி நண்பர்களினதும் நினைவுதான் வந்து வந்து போய்க் கொண்டிருந்தது. அப்போது நிகழ்ந்து கொண்டிருந்த விமானத்தாக்குதலையும் பொருட்படுத்தாது யாழ்ப்பாணம் திரும்பிக் கொண்டிருந்தேன். எனது சிந்தனை முழுவதும் சிம்மானின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதே எண்ணமாக இருந்தது.

     

    தான் இறந்தால் தனது காதலி தனக்கு மாலையணிவிக்க வேண்டுமென்ற அவனது ஆசையை நிறைவேற்ற அவனது காதலியைத் தேடிப்போனேன். அவனது வீரச்சாவுச் செய்தியை சொன்னதும் அவனது காதலி அழுத அழுகை இன்றும் கண்ணுக்குள் நிற்கிறது.

     

    ஒவ்வொரு மாவீரனையும் இழக்கும் எல்லாக் காதலிகளின் கண்ணீருக்கும் ஒரே கனம்தான் இருக்குமோ ? அந்தச் சமரில் மரணித்தவர்களின் காதலிகள் பெற்றோர்கள் நண்பர்கள் உறவினர்கள் கண்ணீரில் தொலைய அவர்களது வித்துடல்கள் வெற்றிகளைத் தந்துவிட்டு நிரந்தரமாய் பூனகரி மண்ணை மீட்ட நிமிர்வில் உறங்கிக் கொண்டிருந்தார்கள்.

    Sudaroli-3-600x221.jpg

    சிம்மானின் வீட்டுக்குப் போயிருந்தேன். அவனது வீரச்சாவுச்செய்தி அவர்களுக்கும் போயிருந்தது. எனினும் நான் போகும் போது வித்துடல் கொண்டு வரப்படவில்லை. அன்றைய மாலைப்பொழுதில் வித்துடல் வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. யாராலும் நம்ப முடியாதபடி வரிச்சீருடையில் வளர்த்தப்பட்டிருந்த சிம்மானின் வித்துடல் அடையாளம் காணமுடியாதளவு உருமாறியிருந்தது. அப்போது அவனது உறவினர் சகோதரிகள் தாயார் ஊரவர்கள் கதறி அழுதார்கள்.

     

    அவன் வித்துடலாய் கண் முன்னே கிடந்தான். அது சிம்மான் தான்; என்பதனை யாரும் உடன் அடையாளம் காணவில்லை. உப்பு நீரில் கிடந்த அவனது உடல் நிறமும் மாறி முகமும் மாறியிருந்தது.

    தம்பி உன்ர நண்பன் தானே அடையாளம் தெரியேல்ல ஒருக்கா பார் ! என அழுதார்கள். ஏற்கனவே அவனும் நானும் ஒன்றாக சென்ற போது ஏற்பட்ட விபத்தில் ஏற்பட்ட காயத்தின் அடையாளமும் அவனை என்னால் இனங்காண முடிந்தது.

     

    அன்றைய நாள் அவனது பிரிவினால் அவனை நேசித்தவர்கள் அவன்கூடப் பழிகியவர்கள் என அவனுக்காகக் கண்ணீர் விட்டழுது கொண்டிருந்தார்கள். அவனது வீட்டிலிருந்து வித்துடலை மக்கள் அஞ்சலிக்காக வல்வெட்டித்துறை வாசிகசாலையில் இரவு வைக்கப்பட்டது.

     

    அந்த இடத்திற்கே அவனது காதலியைத் தெரிந்த ஒரு வீட்டுகாரர் அழைத்து வந்திருந்தார்கள். அந்த நேரம் அவன் நேசித்த அவனது உயிர்க்காதலி உயிரற்ற அவன் உடலைக் காணும் போதும் அந்த மாலையை அழுதபடி அவனுக்கு அணிவித்த போதும் நான் கொண்ட துயருக்கு அழவேயில்லை. காதலின் மீதம் அவனுக்கான ஞாபகமாக அவனது கடைசி ஆசையாக அவளால் அணிவிக்கப்பட்ட மாலையின் பூவாசம் மட்டுமே நிரந்தரமானது. அவன் நித்தியமானவனாக வெற்றியுடன் துயின்று கொண்டிருந்தான்.

     

    இப்போதும் அந்த நாள் அழுத அந்தக் குரல்கள்கள் தான் ஒவ்வொரு இரவுகளும் வந்து போகும் நினைவுகளாகவுள்ளது. யாராலும் திரும்பி அழைத்துவர முடியாதவர்களின் இழப்புகளின் நினைவுகள் நிரந்தரமான துயரையே ஒவ்வொரு மாவீரரை இழந்தவர்களுக்கும் தந்துவிட்டுப் போனது. அந்த இழப்பின் வரிசையில் சிம்மான் இழக்காத மனவுறுதியோடு எங்களின் கைகளிலிருந்து எட்டாமல் போனான் மாவீரனாக மரணத்தை வென்றவனாக…..

    Sudaroli-2-600x799.jpg

    அவனை விதை குழியில் இறக்கி மண்போட்ட அவ்வேளையில் பலாலியில் நிலைகொண்டிருந்த எதிரியின் தளம் மீது கரும்புலிகள் தாக்குதல் அணி காவியமாகிக் கொண்டிருந்தார்கள். வெளிச்சங்களோடு வெடியோசையுடன் அதிர்ந்த வண்ணமிருந்தது.

    Lep-Sudaroli-600x849.jpg

    பூனகரி வெற்றியில் மீண்டும் நிமிர்ந்த தமிழர் வீரத்தின் உச்சம் பலாலியில் பேரொளியாய் கரும்புலிகள் எழுதிய காவியத்தின் வேர்கள் காற்றோடு சொன்ன சேதி காலமெல்லாம் தமிழர் வீரம் சொல்லிக் கரைந்து கொண்டிருந்தது.

    சிம்மான் தனது தாயகவிடுதலைக்காகத் தன்னைத் அர்ப்பணித்து ஆண்டுகள் பல ஆகியிருந்தாலும் அவனது கனவுகளை நெஞ்சில் சுமக்கின்றோம். இலட்சிய வீரர்கள் என்றும் வாழ்வார்கள். சிம்மானும் சுடரொளியாக ஜெகதீபமாக என்றும் கால    காலத்துக்கும்    ஏனைய    தாயக    விடுதலைக்காக    தம் இன்னுரையீர்ந்தவர்களுடன் இறவாமல் வாழ்ந்து கொண்டேயிருப்பான். எங்கள் நினைவோடும் கனவோடும் மாவீரர்களாய் குனிந்த தலைகளை நிமிர்த்தியெழ வைத்த வெற்றியின் கிரீடங்களாய்….

    மழை மேகம் துளியாகி…

    நினைவுப்பகிர்வு ….  
    - நிக்சன்.

    Email :- 2012.tamil@gmail.com (நிக்சன்)

     

    http://thesakkaatu.com/doc11294.html

    “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

  17. ஆயிரம் பச்சைப்புள்ளிகளை எடுத்த தமிழ்சிறி அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள்.மற்றும் 100எடுத்த சோழி அண்ணாச்சிக்கும் வாழ்த்துக்கள்.

  18. களத்தில் எல்லாவற்றையும் பார்க்க முடிவதில்லை. பச்சைப்புள்ளிகள் பெறுவோருக்கான திரியொன்று இருக்கிறதென்றது தெரியும். ஆனால் பச்சைப்புள்ளிகளை எங்கே பாக்கிறதெண்ட விவரம் தெரிந்திருக்கவில்லை. நேற்றைய தெரிவில் தெரிவான எனது சிறுகதையொன்றை வாசித்த நண்பர் ஒருவர் இந்தத் திரியையும் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். இதன் பின்னர் தான் இந்தத்திரியை வாசித்தேன்.

    என்னை நினைவு வைத்து ஊக்கம் தந்து உயர்த்திய கள உறவுகள் வாழ்த்திட்டு வரவேற்றுள்ளமைக்கு மிக்க நன்றிகள். இதுவரை நாளும் இந்தப்பக்கத்தை கவனிக்காமல் இருந்தமைக்காக அனைவரிடமும் மன்னிப்புக் கோருகிறேன்.


    நேற்று இப்பிடி எழுதிப்போட்டு.....நானும் என்ரை பாட்டிலை நித்திரைக்கு போட்டன்.....இரவுமுழுக்க ஒரு கறுப்பன் கத்தியோடை என்னை திரத்திக்கொண்டுவாரமாதிரி கனவுவந்தது.....ஆரும் கனவுப்பலன் தெரிஞ்சாக்கள் சொல்லுங்கோப்பா :o

     

    அந்தக்கறுப்பனின் கத்தி உங்களை விரைவில் வந்தடையவுள்ளதாக உங்கள் கனவின் பலன் சொல்கிறது. எதுக்கும் நீங்கள் இரவில் யாழ்களம் தனிய வராமல் விடுவதுதான் நல்லம். :lol:
     

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.