Jump to content

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    11423
  • Joined

  • Days Won

    2

Everything posted by பிழம்பு

  1. Published on 2022-05-06 16:54:56 அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தலைநகர் கொழும்பும் முடங்கியது. தலைநகர் கொழும்பின் புறக்கோட்டைப் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் ஆகியன மூடப்பட்டு காணப்படுகின்றன. வத்தளைப் பகுதியில் அமைந்துள்ள பேலியகொட மொத்த மீன் விற்பனை நிலையம் மற்றும் மொத்த மரக்கறி விற்பனை நிலையம் ஆகியன வெறிச்சோடிக்காணப்படுகின்றது. இதேவேளை, அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கொழும்பு குணசிங்கபுர பகுதியில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தலைமையில் ஆர்ப்பாட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. படங்கள். :- எஸ். எம். சுரேந்திரன் தலைநகர் கொழும்பும் ஹர்த்தாலால் முடங்கியது | Virakesari.lk ஹர்த்தாலால் முடங்கியது யாழ்ப்பாணம் Published on 2022-05-06 11:05:50 நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஹர்த்தாலுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்திலும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு கோரியும் , அரசாங்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமாறும் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஹர்த்தாலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதற்கு ஆதரவு வழங்கும் வகையில் யாழ்ப்பாணத்திலும் வர்த்தக நிலையங்கள் , வங்கிகள் என்பன மூடப்பட்டு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. ஹர்த்தாலால் முடங்கியது யாழ்ப்பாணம் | Virakesari.lk
  2. ரணவிரு நினைவு மாதத்தைப் பிரகடனப்படுத்தி இன்று (06) ஜனாதிபதி மாளிகையில் தேசிய ரணவிரு கொடி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அணிவிக்கப்பட்டது. ரணவிரு சேவை அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர (ஓய்வுபெற்ற), முதலாவது ரணவிரு கொடியை ஜனாதிபதிக்கு அணிவித்தார். மூன்று தசாப்தங்களுக்கும் மேலான பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்து, சுதந்திரமான நாட்டிற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த, துணிச்சலான போர் வீரர்களை ரணவிரு மாதம் நினைவுகூருகிறது. ஜனாதிபதிக்கு தேசிய ரணவிரு கொடி அணிவிக்கப்பட்டது முதல் ரணவிரு நினைவேந்தல் மாதம் ஆரம்பமாகிறது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், ரணவிரு சேவை அதிகார சபையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கித்சிறி ஏக்கநாயக்க (ஓய்வுபெற்ற) ஆகியோர் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். தேசிய ரணவிரு கொடி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அணிவிப்பு | Virakesari.lk
  3. ரத்தம் தெறிக்க, அலறல் சத்தம் ஒலிக்க, வெறி அடங்கும் வரை தேடித் தேடி நடத்தப்படும் பழிவாங்கும் படலம்தான் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள 'சாணிக் காயிதம்' படத்தின் ஒன்லைன். கடலை வெறித்துப் பார்த்தபடி, பீடியை பற்றவைத்துக்கொண்டு ஆசுவாசமாக நின்றுகொண்டிருக்கிறார் சங்கய்யா (செல்வராகவன்). அருகிலிருந்த அறையிலிருந்து சங்கரய்யாவை நோக்கி பொறுமையாக நடந்து வருகிறார் பொன்னி (கீர்த்தி சுரேஷ்). எந்த வித பதற்றமும் இல்லாமல், 'உயிரோட எரிக்கணும் மண்ணெண்ணய கொடு' என கேட்கிறார். பொறுமையாக சம்பந்தபட்டவரை எரித்து முடித்து அவர்கள் அங்கிருந்து நடந்து செல்லும் வரை அந்த 'சிங்கிள் ஷாட்' நீண்டுகொண்டேயிருக்கிறது. திரையிலிருந்து அகலாமல் பார்த்துக்கொள்ளும் அந்த 'சிங்கிள் ஷாட்' மூலமாக நம்மை கைப்பிடித்து அவரது உலகத்திற்குள் அழைத்துச் செல்கிறார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். அவரது அந்த உலகத்தில் கத்தியும், தோட்டாவும், துப்பாக்கியும், ரத்தமும் நிரம்பிக் கிடக்கின்றன. அந்த உலகத்தில் காவல் துறை அதிகாரியான பொன்னியின் குடும்பம் தடயமேயில்லாமல் அழிக்ககப்படுகிறது. பொன்னியும் சிதைக்கப்படுகிறாள். அதேபோல சங்கரய்யாவின் குடும்பமும் அழிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணாக பழிவாங்கும் வேட்கையோடு இருக்கும் பொன்னியுடன் சங்கைய்யாவும் இணைகிறார். இருவரின் நோக்கமும் ஒன்றுதான். அது பழிவாங்குதல்! அந்தப் பழிவாங்கும் படலத்தை அவர்கள் எப்படி நிகழ்த்திக்காட்டுகிறார்கள் என்பதை 2.15 மணி நேரம் சினிமாவாக ரத்தமும் சதையுமாக திரைக்கதையால் எழுதியிருக்கிறார் அருண் மாதேஸ்வரன். பொன்னியாக கீர்த்தி சுரேஷ். இனி இழக்க ஒன்றுமில்லை என்ற நிலையில் இருக்கும் ஒருவராக உடல்மொழியாலும், அழுகையாலும், கோபத்தாலும், வெறியாலும் அந்த உணர்வுகளை நமக்கு கடத்துகிறார். இழப்பிற்கு முன் வேறொருவராகவும், இழந்த பின் மற்றொரு பொன்னியாகவும் இரு வேறு உணர்வுகளையும் கச்சிதமாக நமக்கு கடத்துகிறார். இவ்வளவு கொலை வெறியுடன் பெண் ஒருவர் கூர்தீட்டப்பட்ட கத்தியாக நடித்திருப்பது தமிழ் சினிமாவுக்கு புதிது. 'பழிவாங்குறதுன்னா என்னான்னு தெரியுமா?' என அவர் பேசும் சிங்கிள் ஷாட் காட்சி மிரட்டல் வடிவம். சங்கய்யாவாக செல்வராகவன். எல்லாமே கைமீறிவிட்டது என உணர்ந்து கதறி அழும் தருணத்தில், செல்வராகவன் எனும் நடிகரை தமிழ் சினிமா இத்தனைக் காலம் இழந்திருப்பதை உணர முடிகிறது. சண்டைக்காட்சிகளிலும், பொன்னியிடம் சண்டையிடும் காட்சிகளிலும், அசால்ட்டாக கொலை செய்வது என ஸ்கோர் செய்கிறார் செல்வராகவன். இரண்டு பேரும் இணைந்து முழுப்படத்தையும் சுமந்து செல்கின்றனர். இவர்களைத் தவிர, 'ஆடுகளம்' முருகதாஸ், வினோத் முன்னா,'அசுரன்' ஜேகே, விஜய் முருகன் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். நடிகர்களின் எதார்த்தமான நடிப்பு படத்துக்கு பெரும் பலம் சேர்த்துள்ளது. நான் லீனியர் பாணியில் பயணிக்கும் கதையை சின்ன சின்ன டைட்டில் மூலம் பாகம் பாகமாக விவரிக்கிறார் இயக்குநர். அத்தோடு பழிவாங்கும் உணர்வை நமக்கும் சேர்த்து கடத்துவதால் படத்துடன் எளிதாக ஒன்ற முடிகிறது. கீர்த்தி சுரேஷ் குற்றவாளிகளை கொல்லும் காட்சிகளில், நமக்கும் அவருக்கு இருக்கும் அதே பழிவாங்கும் உணர்ச்சி ஒட்டிக்கொள்வது திரைக்கதையின் பலம். வழக்கமான பழிவாங்கும் கதையை அதன் திரைக்கதை வாயிலாகவும், படத்தின் மேக்கிங் மூலமாகவும் கவனிக்கவைக்கிறார் இயக்குநர். இடையில் குவென்டின் டாரான்டினோ படத்தை பார்த்துக்கொண்டிருக்கும் உணர்வும் சிலருக்கு எழலாம். கதை சொல்லும் பாணியை அழகாக்குவதே அந்த ஃப்ரேம்கள்தான். அடிக்கடி வரும் சிங்கிள் ஷாட் காட்சிகள், ப்ளாக் அண்ட் ஒயிட் ஃப்ரேம்கள், ஒயிடு ஆங்கிள் ஷாட்ஸ் என யாமினி யக்ஞமூர்த்தியின் ஒளிப்பதிவு தரம். ரத்தம் தோய்ந்த கத்தியில் சாம் சிஎஸ்-சின் இசையும் ஒட்டிக்கொண்டு, காட்சிக்களுக்கான உணர்வை கடத்த உதவுகிறது. நாகூரான் ராமசந்திரன் எடிட்டிங், சவுண்ட் எஃபெக்ட் என தொழில்நுட்ப ரீதியாக எந்த குறையுமில்லாமல் படம் பயணிக்கிறது. சாதிய பாகுபாட்டை மையமாக வைத்து நகரும் இந்தப் படத்தில், ஒரு பெண் வேலைக்கு செல்வதையும், போலீஸாக இருப்பதையும் ஆண்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்ற ஆண், பெண் வேறுபாடும் பேசப்படுகிறது. கொலையாளிகளைப் பொறுத்தவரை, கீர்த்தி சுரேஷை பெண் என்ற அடிப்படையில், அசால்ட்டாக கடக்கும் ஆண்மையவாதிகளாக காட்சிப்படுத்தபடுகிறார்கள். ஆணாதிக்கம் மற்றும் சாதிவெறியின் இருமுனைச் சுமைகளை ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதையும் படம் விளக்குகிறது. மன உறுதிமிக்க அடல்ட் ஆடியன்ஸை குறிவைத்து அருண் மாதேஸ்வரன் தனது 'ராக்கி', 'சாணிக் காயிதம்' படங்கள் மூலமாக திரைத்துறையில் தனக்கான அடையாளத்தை நிறுவியிருக்கிறார். வன்முறையைக் காட்சிப்படுத்துவதில் தனித்துவ பாணியை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்துவதிலும் கவனமும் பெற்றிருக்கிறார். முதல் பார்வை | சாணிக் காயிதம் - ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு பழிவாங்கல் படலம் | Saani Kaayidham movie review - hindutamil.in
  4. General News தஞ்சாவூர் தேர்த் திருவிழாவில் திடீர் விபத்து தஞ்சாவூர் அருகேயுள்ள களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் ஏற்பட்ட மின் விபத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் அருகேயுள்ள களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் தேரின் மேல் பகுதி உயர் மின்அழுத்தக் கம்பியில் உரசி விழுந்ததால் ஏற்பட்ட மின் விபத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள களிமேடு கிராமத்தில் அப்பர் மடத்துக்கான கோயில் உள்ளது. ஆண்டுதோறும் அப்பர் பிறந்த நட்சத்திரமான சதய நட்சத்திர தினத்தில் இங்கே விமர்சையாக சித்திரைத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று காலை திருவிழா தொடங்கியிருக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இரவு 10 மணிக்கு ஆரம்பமாகியிருக்கிறது. உயர் மின்னழுத்த கம்பியில் மோதி தீப்பிடித்த தேர் சுமார் 15 அடி உயரம்கொண்ட பல்லக்கு எனப்படும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அப்பர் உற்சவர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தார். அலங்கார மின் விளக்குகள் எரிவதற்காகத் தேரின் பின்புறம் பெரிய ஜெனரேட்டர் வசதியும் செய்திருந்தனர். ஊர்ப் பெரியவர்கள், சிறுவர்கள் எனப் பலரும் தேரை வடம் பிடித்து ஊர் முழுக்க இழுத்துச் சென்றனர். ஒவ்வொரு வீட்டிலும் தேங்காய் உடைத்து வழிபட்டுள்ளனர். ஊர்ப் பொதுமக்கள் அனைவரும் இதை மகிழ்ச்சியாகக் கொண்டாடிவந்துள்ளனர். தேர் ஊர்வலம் கிட்டத்தட்ட முடியும் நிலைக்கு வந்திருக்கிறது. விபத்துக்குள்ளான தேர் இந்நிலையில் அப்பர் மடத்துக்குச் செல்வதற்காகச் சாலையின் வளைவில் தேரை இழுத்துள்ளனர். அப்போது அருகே இருந்த பள்ளத்தில் தேரின் சக்கரம் இறங்கியுள்ளது. தேர் நின்ற இடத்துக்கு மேற் பகுதியில் உயர் மின் அழுத்த கம்பி சென்றுள்ளது. தேர் சாய்ந்த நிலையில் அதன் மேல் பகுதி உயர் மின் அழுத்த மின் கம்பியில் உரசியது. மருத்துவமனையில் அதிகாரிகள் பார்வையிட்டனர் இதில் தேரில் மின்சாரம் பாய்ந்ததில் தேர் தீப்பிடித்து எரிந்துள்ளது. ஆண்கள் சிறுவர்கள் எனப் பலரும் அலறியடித்துக்கொண்டு ஓடினர். மின்சாரம் பாய்ந்த பலர் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தனர். தேர் வருவதற்காகச் சாலையில் தண்ணீர் ஊற்றியுள்ளனர் அதிலும் மின்சாரம் பாய்ந்திருக்கிறது. இரவு சுமார் 3 மணியளவில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், அந்த இடத்திலேயே 10 பேர் வரை உயிரிழந்தனர். மின் விபத்தில் கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவர், எஸ்.பி ரவளி பிரியா உள்ளிட்ட அதிகாரிகள் மருத்துவக் கல்லூரிக்கு வந்து பார்வையிட்டனர். மூன்று சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த சோகம் இந்த விபத்தில் மூன்று சிறுவர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த பத்துக்கும் மேற்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. ஊர் மக்கள் அனைவரும் மருத்துவமனை முன்பு திரண்டு கதறி அழுதது பார்ப்பவர்கள் மனதை உலுக்குவதாக இருந்தது. உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளையின் உடலைப் பார்த்துக் கதறினர். `ஒரு நிமிஷம்கூட என் மகனை விட்டுட்டு இருக்க மாட்டேனே... என் புள்ளை என்கூட இல்லையே’ என்று மார்பில் அடித்துக்கொண்டார் ஒரு தாய். 94-வது ஆண்டாக இந்தத் தேர்த் திருவிழா நடைபெற்றுவருகிறது. இதுவரை ஒரு சிறு அசம்பாவிதம்கூட ஏற்பட்டதில்லை. இந்த முறை ஆறாத வடுவை ஏற்படுத்தும் அளவு விபத்து ஏற்பட்டுவிட்டதாக ஊர்ப் பெரியவர்கள் கண்கலங்கியபடி பேசிக்கொண்டனர். தஞ்சாவூர் களிமேடு தேர்த் திருவிழா விபத்து: 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் பலி - நடந்தது எப்படி?| In Thanjavur, including 3 children, 11 people dead by Electrical accident during village festival (vikatan.com)
  5. தீவிரவாதி உமர் ஃபாருக்கை கைது செய்து அழைத்துவரும் ஸ்பெஷல் ஆபரேஷனில் ஈடுபடுகிறார் 'ரா' பிரிவு ஏஜெண்ட் வீரராகவன். கைது செய்யப்பட்ட உமர் பாரூக்கை விடுவிக்க வலியுறுத்தி மால் ஒன்றை தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர். மக்களை வீரராகவன் (விஜய்) மீட்டாரா? அவர் கையாண்ட உத்திகள் என்னென்ன? கைது செய்யப்பட்ட உமர் ஃபாருக் என்ன ஆனார்? - இப்படி பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறது 'பீஸ்ட்'. வீரராகவனாக விஜய். படத்துக்கு படம் வயதைக் குறைக்கும் மேஜிக்கை நிகழ்த்திக் கொண்டேயிருக்கிறார். அதே ஃபிட்னஸுடன் மிடுக்கும் கூடிக்கொண்டே செல்கிறது. தனது லுக்கில் ரசிகர்களைக் கவரும் விஜய், எனர்ஜியுடன் நடனக் காட்சிகளில் தெறிக்க விடுகிறார். ஒட்டுமொத்த படத்தையும் 'ஒன்மேன் ஆர்மி'யாக சுமந்து செல்கிறார். என்ன நடந்தாலும் பெரிய அளவில் முகத்தில் உணர்ச்சிகளை வெளிபடுத்தாத ஒரு கதாபாத்திரத்தில் பக்குவமாக வலம் வருகிறார். பிரீத்தியாக வரும் பூஜா ஹெக்டேவுக்கு விஜய்யை காதலிப்பதைத் தாண்டி பெரிய ரோல் இல்லை. சிலசமயம் எதிரிகளை அடிக்க 'டூல்' ஆகவும் பயன்படுகிறார். அழகிலும், நடனத்திலும் ரசிகர்களை ஈர்க்கிறார். கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் பூஜா. சில காட்சிகள் மட்டுமே வந்து செல்லும் அபர்ணா தாஸ் கவனம் பெறுகிறார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட செல்வராகவன், ஷைன் டாம் சாக்கோ கதாபாத்திரங்களுக்கு பெரிய ஸ்கோப் இல்லாதது ஏமாற்றம். விஜய்யை புகழ்வதையே தனது பார்ட் டைம் வேலையாக செய்கிறார் செல்வராகவன். மற்றபடி விடிவி கணேஷின் 'ராமா கொஞ்ச இர்ரா காமா' போன்ற டைமிங் காமெடிகள் படத்துக்கு பெரும் பலம் சேர்த்திருக்கின்றன. அதேசமயம், யோகி பாபு, ரெடின் கிங்க்ஸ் லீ-க்கு நெல்சனின் முந்தையப் படங்களைக் காட்டிலும், இந்தப் படத்தில் முக்கியத்துவம் குறைவுதான். முதல் பாதி முழுவதும் காமெடி, காதல், அவ்வப்போது வரும் சண்டைக் காட்சிகள் என கமர்ஷியல் சினிமாவுக்கே உண்டான பாணியில் படம் நகர்கிறது. சலிப்பை ஏற்படுத்தாத திரைக்கதை மூலம் முதல் பாதியை சிறப்பாகவே கொண்டுசென்றிருக்கிறார் நெல்சன். இரண்டாம் பாதியில் கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டிய இடத்தில் தடுமாற்றம் தெரிகிறது. தீவிரவாதிகளை டம்மி செய்து, நாயகனுக்கான வெயிட்டை கூட்டிருப்பது, படத்தில் சுவாரஸ்யமில்லா போக்கை உருவாக்கியிருக்கிறது. ஷைன் டாம் சாக்கோ போன்ற நல்ல நடிகரை பயன்படுத்தாமல் வீணடித்திருப்பது, காதபாத்திரங்களை எழுதிய விதத்தில் சொதப்பிருப்பதை உணர முடிகிறது. உமர் ஃபாருக் கதாபாத்திரம் நெகட்டிவ் ரோலுக்கு கொஞ்சம்கூட பொருந்தாத தேர்வு. முகமூடி அணிந்து பில்டப் கொடுக்கும் தீவிரவாதி குழுவின் தலைவன் எந்த விதத்திலும் அந்தக் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கவில்லை. மத்திய உள்துறை அமைச்சரை அவ்வளவு அசால்ட்டாக அதிகாரி டீல் செய்வது, ஒரு மாலில் சிறைபிடிக்கபட்ட பணயக்கைதிகளுக்காக, தோல்வியை ஒப்புக்கொள்ளும் வகையில் முக்கியமான தீவிரவாதி ஒருவரை விடுவிக்க அரசு முடிவெடுப்பது கதையின் கனத்தை குறைத்திருக்கிறது. விஜய் மாலுக்குள் கார் ஓட்டுவது, ஒரே கத்தியை வைத்துக்கொண்டு தீவிரவாதிகளின் துப்பாக்கிளுக்கு டஃப் கொடுப்பது, இரண்டு இரும்புக் கதவில் ஒளிந்துகொண்டு எல்லா தீவிரவாதிகளையும் துவம்சம் செய்வது, சில காட்சிகளில் விஜய்க்கு உதவுவதற்காக தீவிரவாதிகள் துப்பாக்கிகள் இல்லாமல் கத்தியுடன் வந்து சண்டையிடுவது என கமர்ஷியலுக்கு லாஜிக் தேவையில்லை என்றாலும், காட்சிகளுடன் ஒட்ட முடியவில்லை. அதுமட்டுமல்லாமல், பாகிஸ்தானுக்கு தனியாளாக சென்று தீவிரவாதியை மீட்டு, போர் விமானத்தில் நாடு திரும்வுது, இந்திய அரசாங்கமே விஜய் சொல்லுக்கு கட்டுப்படுவது, உள்துறை அமைச்சரை உள்ளூர் அரசியல்வாதி போல டீல் செய்வது... அவ்வ்வ்வ்... கொஞ்சம் கருணை காட்டியிருக்கலாமே நெல்சன்?! மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் தனித்து தெரிகின்றன. குறிப்பாக கத்தியால் விஜய் ஸ்கீரினை கிழிக்கும் ஃப்ரேம். பைக் ஓட்டும் காட்சிகள், சண்டைக் காட்சிகள் என கேமராவில் விருந்து படைத்திருக்கிறார். அனிருத் இசையில் பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன. பின்னணி இசை ஓகே. ஜானி மாஸ்டரின் நடனம் பாடல்களுக்கு உயிரூட்டுகிறது. மொத்ததில் கதையைத் தவிர்த்து, காமெடியின் துணையுடன் விஜய்யை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட'மாஸ் என்டர்டெயினர்' திரைப்படமாக எஞ்சி நிற்கிறது 'பீஸ்ட்'. முதல் பார்வை | பீஸ்ட் - கனமில்லாத கதை... கைகொடுத்த காமெடி! | Beast movie review - hindutamil.in
  6. காக்கா முட்டை', 'குற்றமே தண்டனை', 'ஆண்டவன் கட்டளை' வரிசையில் மணிகண்டனின் மற்றுமொரு சர்வதேச தரத்துக்கு இணையான நம்பிக்கை படைப்புதான் இந்த 'கடைசி விவசாயி'. பல வருடங்களுக்குப் பிறகு குலதெய்வ வழிபாட்டை நடத்த நினைக்கும் கிராமம். குல தெய்வத்துக்கு படைப்பதற்காக நெல் விளைவிக்கும் கிராமத்தின் கடைசி விவசாயி மாயாண்டி எதிர்பாராத ஒரு சிக்கலில் சிக்கிக்கொள்ள, அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார், கிராமத்தின் குலதெய்வ வழிபாடு எப்படி நடக்கிறது என்பதே ’கடைசி விவசாயி’ படத்தின் ஒன்லைன். முதியவர் மாயாண்டி கதாபாத்திரம்தான் கதையின் மையம். படத்தின் மிகப்பெரிய பலம் கதையின் நாயகன் விவசாயி மாயாண்டி கேரக்டரில் நடித்துள்ள நல்லாண்டி. மின்சார வசதிகூட இல்லாத வீட்டில், நவீன வாழ்க்கை அண்டாத ஒரு தனி மனிதனாக படம் முழுக்க வாழ்ந்திருக்கிறார். எந்தக் காட்சியிலும் அவர் மெனக்கெடுத்து நடிக்கவில்லை. விவசாயிக்கு ஏற்ற இயல்பிலேயே இருக்கிறார். அவர் மட்டுமல்ல, கதையின் மாந்தர்காளாக வரும் நிஜ கிராமத்து மக்களும் அப்படியே உள்ளார்கள். கிராமத்துக்கே உரிய பேச்சு வழக்கு, நையாண்டி என அனைவரும் புதுமுகங்கள் போல் இல்லாமல் கிராமங்களில் இருப்பதுபோலவே வாழ்ந்துள்ளனர். தன்னை கட்டிக்கொள்ள வேண்டிய முறைப்பெண் மறைவால் மனநிலை இழந்து சுற்றும் இளைஞன் கேரக்டர் விஜய்சேதுபதிக்கு. வித்தியாசமான பாத்திரமாக இது இருந்தாலும், கதையின் நகர்வுக்கு இந்த கேரக்டர் அவசியமா என தோன்ற வைக்கிறது. இதே எண்ணம் யோகி பாபுவின் கேரக்டரை பார்க்கும்போதும் தோன்ற வைக்கிறது. இருவருமே இரண்டு மூன்று காட்சிகளில் மட்டுமே வந்துபோகின்றனர். ஒருவேளை வணிக நோக்கோடு இருவரையும் நடிக்க வைத்துள்ளார்களா என்பது தெரியவில்லை. எனினும், விஜய் சேதுபதி தனது என்ட்ரி சீனில் ’பில்கேட்ஸை ரயில் கேட்டில் பார்த்தேன்’ எனச் சொல்வதில் தொடங்கி சாமியாரிடம் திருநீர் வாங்குவது போன்ற காட்சிகளில் தனக்கே உரிய பாணியில் பங்களிப்பை செய்துள்ளார். ’ஆண்டவன் கட்டளை’ திரைப்படத்தை போல இதிலும், நீதிமன்ற காட்சிகளை எதார்த்தமாக கொண்டுவந்துள்ளார் மணிகண்டன். நீதிபதியாக வரும் ரேச்சல் ரெபேகாவுக்கு முக்கியக் கதாப்பாத்திரம். இன்னும் சில காட்சிகள் அவருக்கு கொடுத்திருக்கலாம் என தோணவைக்கிறது அவரின் பாத்திர வடிவமைப்பு. சந்தோஷ் நாராயணன், ரிச்சர்டு ஹாவேயின் இசையில் பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன. பின்னணி இசைக்கு இருவரும் தங்கள் உழைப்பை கொடுத்துள்ளது படத்தின் முதல் சீனில் இருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. ஹைபிரிட் விதைகள், 100 நாள் வேலைத் திட்டம், ஆர்கானிக் விவசாயம் போன்றவற்றால் விவசாயம் எப்படி பாதிக்கப்படுகிறது என்பது தனது திரைக்கதையால் அசால்ட்டாக சொல்லி செல்கிறார் இயக்குநர் மணிகண்டன். ஒட்டுமொத்தமாக திரைக்கதை, இயக்கம், வசனம், ஒளிப்பதிவு என தனிமனிதனாக இந்தப் படைப்பை மணிகண்டன் செதுக்கியுள்ளார். . மற்ற படங்களில் கிராமங்கள் என்றால் பசுமை வயல் என்று கட்டப்பட்டிருந்த கட்டமைப்பை உடைத்து மணிகண்டனின் கேமரா கண்கள் அச்சு அசல் கிராமத்தை கண்முன்கொண்டுவந்து நிறுத்துகிறது. ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநர் ஆனதாலோ என்னவோ, மணிகண்டனின் கேமரா வசீகரம் செய்கிறது. சில இடங்களில் வெளிப்படும் புரியாத வசனங்கள், காட்சித் தொய்வுகள் போன்ற தேடிக் கண்டுபிடிக்கக் கூடிய ஒரு சில பின்னடைவுகளைத் தாண்டி, 'காக்கா முட்டை', 'குற்றமே தண்டனை', 'ஆண்டவன் கட்டளை' வரிசையில் மணிகண்டனின் மற்றுமொரு சர்வதேச தரத்துக்கு இணையான நம்பிக்கை படைப்பு இந்த 'கடைசி விவசாயி'. குறிப்பாக, ஆரம்பம் முதல் இறுதிவரை பார்வையாளர்களை அனுபவபூர்வமாக எங்கேஜிங்காக திரைக்குள் நுழைத்துக்கொண்ட வகையிலும் இப்படம் வெற்றி பெற்றிருக்கிறது. தமிழ் சினிமாவில் சமீபகாலத்தில், கார்ப்பரேட் வில்லன், அவரிடம் சிக்கி அல்லல்படும் விவசாயி, விவசாயிகளை காக்கும் நாயகன் என டெம்ப்ளேட் மாறாமல் விவசாயத்தை நெல் வயல்போல் தொழித்து எடுத்தார்கள். இதில் எந்த டெம்ப்ளேட்டுக்கும் சிக்காமல் விவசாயிகளின் வாழ்வியலையும், விவசாயம் எப்படி ஒரு விவசாயி வாழ்வில் கலந்திருக்கும் என்பதையும் மிக அழுத்தமாக, ஒரு நிஜ விவசாய ஊரில் வாழும் மனிதர்களை கொண்டு மணிகண்டன் கொடுத்திருக்கும் படைப்பே இந்த 'கடைசி விவசாயி'. முதல் பார்வை | கடைசி விவசாயி - டெம்ப்ளேட்களில் சிக்காத நல்லனுபவம் தரும் நம்பிக்கைப் படைப்பு | kadaisi vivasayi movie review - hindutamil.in
  7. 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இயேசு கிறிஸ்துவின் பிறப்பு பற்றிய பல்வேறு முரண்பட்ட தகவல்கள் வரலாறு நெடுகிலும் நிறைந்து கிடக்கின்றன. இவற்றில் இருந்து உண்மையைப் பிரித்துத் தர முயன்றிருக்கிறார் ஸ்பென்சர் மிசென். இன்றைக்கு உலகிலேயே அதிகமாகக் கொண்டாடப்படும் பண்டிகை கிறிஸ்துமஸ். இருநூறு கோடிக்கும் அதிகமான மக்கள் இந்தப் பண்டிகைக் காலத்தைத்தான் ஆண்டின் மிகப்பெரிய விடுமுறைக் காலமாகக் கருதுகிறார்கள். பூமியில் அதிகம் பேரால் கொண்டாடப்படும் பண்டிகை இது. உலக நாள்காட்டியில் அதிக விடுமுறை அளிக்கப்படும் காலமும் இதுதான். ஆனால் இந்தக் கொண்டாட்டங்களின் மையமாக இருக்கும் சுமார் 2 ஆயிரம் ஆண்டு பழமையான கதையைப் பற்றி நமக்கு எவ்வளவு தெரியும்? அது ஒரு திடமான வரலாற்று உண்மையா, இல்லை இறையியல் கதையா, அல்லது இவ்விரண்டுக்கும் இடையே உள்ள ஒன்றா? இயேசு கிறிஸ்துவின் பிறப்பு பற்றிய கதை பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்கும். யேசேப்புவும் கன்னி மேரியும் விடுதி அறை தேடுவது, அவர்களுக்கு குழந்தை பிறப்பது, மேய்ப்பர்கள் தங்கள் மந்தைகளை மேய்ப்பது, மூன்று ஞானிகள் பளபளக்கும் பரிசுகளை எடுத்துக் கொண்டு மாட்டுத் தொழுவத்திற்கு வருவது என பலரும் தெரிந்திருக்கும் கதைதான் இது. ஆனால் இந்த அத்தியாயங்கள் எல்லாம் மிக நீண்ட காலத்திற்கு முன்பு, சிறு சிறு ஆதாரங்களுடன் பதிவு செய்யப்பட்டவை. எல்லா இலக்கியங்களிலும் இயேசுவின் கதை கொண்டாடப்பட்டதாக இருக்கலாம். ஆனால் அதை வரலாற்று ஆதாரங்களைக் கொண்டது என்று திட்டவட்டமாக எடுத்துக் கொள்ள முடியுமா? இது பல நூற்றாண்டுகளாக அறிஞர்கள் சிந்திக்கும், அவர்களைத் துளைத்தெடுக்கும் ஒரு கேள்வி. சுவிசேஷங்கள் அல்லது நற்செய்திகள் என அழைக்கப்படும் முழு கிறிஸ்தவத்தின் அடிப்படையாக இருக்கக்கூடிய மிக முக்கியமான புத்தகங்களின் பக்கங்களில் இதற்கான பதிலைக் கண்டுபிடிக்க பெரும்பாலானவர்கள் முயன்றனர். சுவிசேஷங்களின் உண்மைகள் மத்தேயு (Matthew), மாற்கு(Mark), லூக்கா (Luke), யோவான் (John) ஆகிய நான்கு பேர்தான் இயேசுவின் வாழ்க்கை மற்றும் போதனைகளைப் பற்றிய நமக்குக் கிடைத்த அறிவின் பெரும்பகுதிக்குக் காரணமானவற்றை எழுதியவர்கள். ஆனால் கிறிஸ்துவின் பிறப்பு பற்றிய கதையை ஆராயும் வரலாற்றாசிரியர்களுக்கு, அவர்கள் அளித்திருக்கும் தகவல்கள் பற்றி இரண்டு முக்கியமான கேள்விகள் இருக்கின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நான்கு சுவிசேஷகர்கள் அதில் முதலாவது, மாற்கு மற்றும் யோவான் ஆகிய இருவரின் புத்தகங்களும் இயேசுவின் பிறப்பு பற்றி குறிப்பிடவில்லை. இரண்டாவது, மத்தேயுவும் லூக்காவும் அளித்திருக்கும் தகவல்கள் பல இடங்களில் முரண்பாடாக இருக்கின்றன. மத்தேயு மற்றும் லூக்கா இருவரும் இயேசு பெத்லகேமில் பிறந்தார் என்று குறிப்பிடுகிறார்கள். அவருடைய தாயார் மேரி பிரசவிக்கும் போது கன்னியாக இருந்ததாகவும் கூறுகிறார்கள். ஆனால் இயேசுவின் பிறப்பு பற்றிய அத்தியாயத்தில் இதில் மட்டுமே மத்தேயுவும் லூக்காவும் ஒருமித்திருக்கிறார்கள். யோசேப்பின் கனவில் ஒரு தேவதை தோன்றியது, கிழக்கிலிருந்து நட்சத்திரத்தைப் பின்தொடர்ந்து மூன்று ஞானிகள் வந்தார்கள், ஏரோது மன்னர் அப்பாவிகளை படுகொலை செய்தார் என்பன போன்ற தகவல்களை மத்தேயு கூறியிருக்கிறார். இவற்றில் எதையும் லூக்கா குறிப்பிடவில்லை. லூக்கா இந்தத் தருணத்தை வேறு வகையாகக் கூறியிருக்கிறார். "இரவில் தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்த" மேய்ப்பர்கள் முன் "கடவுளின் தேவதை" தோன்றியதாகவும், ரோமானிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் எண்ணப்படுவதற்காக பெத்லகேமுக்குச் செல்லும்படி மேரியும் யோசேப்பும் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், ஒரு தொழுவத்தில் இயேசு வைக்கப்பட்டிருந்தார் என்றும் லூக்கா கூறியிருக்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES லூக்கா மற்றும் மத்தேயுவின் தகவல்களுக்கு இடையிலான முரண்பாடுகள் இயேசுவின் பிறப்பு மீதான வரலாற்று நம்பகத்தன்மையில் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால் அனைவரும் சந்தேகம் கொள்ளவில்லை. "சுவிசேஷகர்கள் இயேசுவின் தோற்றம் பற்றி ஒரு விரிவான கதையை உருவாக்கி வைத்திருந்தால், அவற்றில் முரண்பாடுகள் இருக்கக்கூடாது என்று நீங்கள் எதிர்பார்க்கலாம்" என்று கென்டக்கியில் உள்ள அஸ்பரி இறையியல் அமைப்பின் புதிய ஏற்பாட்டு அறிஞர் பென் விதரிங்டன் வாதிடுகிறார். "இருவரும் ஒரு நிகழ்வைப் பற்றிக் கூறும் தனித்தனியான சாட்சியங்கள். அடிப்படையான அம்சத்தை இருவரும் உறுதிப்படுத்துகிறார்கள்." என்கிறார் அவர். இங்கே கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய மற்றொரு உண்மை உள்ளது. மத்தேயுவும் லூக்காவும் இயேசு பிறந்து சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகுதான் தங்களது நற்செய்திகளை எழுதினார்கள். அப்போது இயேசுவின் வாழ்க்கை நிகழ்வுகளை நேரில் கண்ட சாட்சிகள், வேகமாக இறந்து கொண்டிருந்தனர். அந்தக்கால கிறிஸ்தவ சமூகங்கள் ஒன்றுக்கொன்று தனித்திருந்தன. அரசியல் எழுச்சிகளால் சிதறடிக்கப்பட்டிருந்தன. இப்படியொரு காலத்தில், மத்தேயு மற்றும் லூக்காவின் தகவல்கள் ஒருமித்து இருந்தால் அது மிகப்பெரிய சாதனையாகவே இருந்திருக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இயேசு பிறப்பிடத் தேவாலயத்தில் அவர் பிறந்த இடமாகக் கருதப்படும் இடத்தில் உள்ள நட்சத்திரம் மத்தேயுவுக்கும் லூக்காவுக்கும் இடையேயான தகவல் முரண்பாடுகளை டியோனீசியஸ் 'தி ஹம்பிள்' பொருள்படுத்தவில்லை. இயேசு கி.பி. ஒன்றாம் ஆண்டில்தான் பிறந்தார் என்று இந்த ரோமானியத் துறவி கி.பி ஆறாம் நூற்றாண்டில் திட்டவட்டமாக அறிவித்தார். இவர்தான் அன்னோ டோமினி அல்லது கிறிஸ்து பிறப்புக்குப் பின் என்ற சகாப்தத்தை உருவாக்கியவர். இந்தத் துணிச்சலான அறிவிப்புதான், இன்று நாம் பயன்படுத்தும் நாள்காட்டி முறைக்குக் காரணமானது. டியோனீசியஸின் கணக்கீடுகள் வெறும் ஊகத்தைவிட மேம்பட்டதாக இருந்ததா? அவர் உண்மையில் இயேசு பிறந்த ஆண்டை துல்லியமாகக் கணித்திருக்க முடியுமா? இரண்டாயிரம் ஆண்டுத் தொலைவில் இருந்து கொண்டு தீர்க்க முடிகிற அளவுக்கு இது எளிமையான புதிர் அல்ல. ஆனால் சுவிசேஷகர்களின் சாட்சியங்களில் உள்ள மூன்று தகவல்கள் சில தடயங்களை நமக்கு வழங்குகின்றன. ரோமானிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, அப்பாவிகளின் படுகொலை, பெத்லகேமின் நட்சத்திரம் ஆகிய மூன்றும்தான் அந்த முக்கியத் தகவல்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES அனைத்து யூதர்களும் தங்கள் பூர்விக இடத்துக்குத் திரும்ப வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதுதான் ரோமானிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு. லூக்கா குறிப்பிட்டிருக்கும் மிகவும் பிரபலமான சம்பவங்களில் ஒன்று இது. சில வரலாற்றாசிரியர்கள் இந்தத் தகவலின் மீது சந்தேகம் எழுப்பியுள்ளனர். குடும்பங்களை இவ்வாறு வேரோடு மாற்றுவது ரோமானிய நடைமுறையல்ல என்று கூறுகின்றனர். இருப்பினும், மற்ற வரலாற்று ஆதாரங்களில் இருந்து சிரியாவின் ரோமானிய ஆளுநரான குய்ரினியஸ் கி.பி. ஆறாம் ஆண்டில் யூதேயாவின் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு உத்தரவிட்டார். இந்த வகையில், கணக்கெடுப்பு நடத்தப்பட்டது உண்மையெனில், இயேசு கிறிஸ்து இந்த ஆண்டில்தான் பிறந்தாரா? அதாவது இப்போது நம்பப்படுவதில் இருந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு. இருக்கலாம். ஆனால் மத்தேயு அளித்திருக்கும் அப்பாவிகளின் படுகொலைகள் பற்றிய தகவலால் இதை உறுதி செய்வது கடினமாகிறது. பெத்லகேமில் "யூதர்களின் ராஜா" பிறந்தார் என்ற செய்தியால், ஏரோது மன்னர் கலக்கமடைந்து, அந்த நகரத்தில் உள்ள இரண்டு வயதுக்குட்பட்ட அனைத்து ஆண் குழந்தைகளும் கொல்லப்பட வேண்டும் என்று கட்டளையிட்டார் என்கிறது மத்தேயுவின் சுவிசேஷம். பட மூலாதாரம்,GETTY IMAGES இது கசப்பான உண்மையா? அல்லது விரிவான புனைகதையா? மீண்டும் முரண்பாடுகள் தோன்றுகின்றன. ஏரோது மன்னர் உண்மையில் கொலைகளுக்கு உத்தரவிட்டிருந்தால், யூத மன்னரின் தீவிர விமர்சகரும் முதல் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்று ஆசிரிருமான ஜோசிஃபஸ் அவரைக் குறித்த கண்டனத்தைப் பதிவு செய்திருப்பார் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் அப்படி எதுவும் இல்லை. "ஆனால் பெத்லகேமில் 1,000 க்கும் குறைவான மக்களே இருந்ததால், அப்பாவிகளின் படுகொலை வரலாற்றில் ஒரு சிறிய விவரமாக மறைந்திருக்கும். அல்லது எண்ணிக்கையில் ஆறுக்கு மேற்படாத ஒரு சில குழந்தைகளை மட்டுமே உள்ளடக்கியதாக இருந்திருக்கும்" என்கிறார் விதரிங்டன். சிறியதோ பெரியதோ, வரலாற்றில் இடம்பெற்றதோ இடம்பெறாமல் போனதோ எவ்வாறாக இருந்தாலும் குய்ரினியஸின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட கி.பி. ஆறாம் ஆண்டில் குழந்தைகள் படுகொலை நடந்திருக்க வாய்ப்பில்லை. காரணம் மிகவும் எளிமையானது. தொடர்புடைய ஏரோது மன்னர் கி.மு. 4-ஆம் ஆண்டிலேயே இறந்துவிட்டார். அதாவது மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே. இப்போது இயேசு பிறப்பு பற்றிய தகவல் இன்னும் மங்கலாகவும் குழப்பமாகவும் ஆகிவிட்டது. பெரும் செல்வந்தர்களில் ஒருவரான ஏரோது, பெத்லஹேமில் உள்ள அனைத்து ஆண் குழந்தைகளையும் கொல்ல வேண்டும் என்று கட்டளையிட்டதன் மூலம் வரலாற்றில் இழிவான இடத்தைப் பெற்றவர். கி.மு. 37 முதல் கி.மு. 4-ஆம் ஆண்டு வரை யூதேயாவின் மன்னராக ஆட்சி செய்தவர். 2,000 ஆண்டுகளுக்குப் பிறகும் அவர் மோசமானவராகவே கருதப்படுகிறார். ஆனால் தனது பெயருடன் குறிப்பிடப்படும் 'மகா' என்ற பட்டத்துக்கு அவர் தகுதியானவர் என்று வாதிடும் வரலாற்றாசிரியர்களும் உள்ளனர். கட்டடக்கலை, வணிகம், அரசியல் சாதுர்யம் போன்றவற்றில் அவர் சிறந்தவர் என சில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். மத்திய தரைக்கடலை நோக்கியும் சாக்கடலை நோக்கியும் பிரமாண்டமான கோட்டைகளை எழுப்பியவர் அவர் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்கள். வரலாற்றாசிரியர்கள், கவிஞர்கள் மற்றும் தத்துவவாதிகள் அவரது அரசவையில் நிறைந்திருந்ததாகவும், பண்பாட்டுப் பொற்காலமாக அவரது ஆட்சிக்காலம் இருந்தது எனவும் குறிப்பிடுகிறார்கள். அதற்காக, நற்பெயர் இருந்துவிட்டால் அவர் கொடூரமானவராக இருந்திருக்க முடியாது என்று உத்தரவாதமில்லை. வயதுக்கு ஏற்ப அதிகரித்த பிரமை, மனத் தளர்ச்சி போன்ற குணங்கள், இறுதியில் அவரது மனைவியையும் இரண்டு குழந்தைகளையும் கொலை செய்வதற்கும் காரணமாகின என்பதையும் கவனிக்க வேண்டும். அதிசய நட்சத்திரம் ஆனால் பெத்லகேமின் நட்சத்திரம் எப்படித் தோன்றியது? மேகி எனப்படும் மூன்று ஞானிகள் யாவர்? இந்த விவரிக்க முடியாத புதிர்களை விடுவிக்க முடியுமா? கிறிஸ்து பிறப்பு பற்றி கதைகளிலேயே இதுதான் மிகவும் அதிகமாகக் கொண்டாடப்படக் கூடியது. பல நூற்றாண்டுகளாக, கல்வியாளர்கள் இந்த நட்சத்திரத்தை ஒரு வானியல் நிகழ்வுடன் இணைக்க முயன்றனர். இதன் மூலம் அந்த நாளை உறுதி செய்யலாம். 17 ஆம் நூற்றாண்டு அறிவியல் புரட்சியுடன் தொடர்புடைய முக்கிய விஞ்ஞானியான ஜோஹன்னஸ் கெப்லர், கிமு 7-ஆம் ஆண்டில் நிகழ்ந்த வியாழன் மற்றும் சனி கோள்களின் நேர்கோட்டு இணைப்பு நிகழ்வுகளை மூன்று ஞானிகளும் கண்டிருக்கலாம் என்று கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES கிமு 5-ஆம் ஆண்டில் சீன மற்றும் கொரியர்களால் அறிவிக்கப்பட்ட ஒரு வால் நட்சத்திரம் அல்லது நோவாவாக அந்த அதிசய நட்சத்திரம் இருக்கலாம் என்று வேறு சிலர் கூறியிருக்கிறார்கள். ஆனால் எதுவும் நிச்சயமாகத் தெரியாது. இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நட்சத்திரத்தை மூன்று ஞானிகள் பின்தொடர்ந்து பெத்லகேமுக்கு வந்திருந்தால் அவர்கள் யாவர்? மேகி அல்லது ஞானிகள் என்று அறியப்படும் மனிதர்கள் இயேசுவின் காலத்தில் நிச்சயமாக இருந்திருக்கிறார்கள். இயேசுவின் காலத்துக்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே வரலாற்று ஆசிரியர் ஹெரோடோடஸ் இவர்களைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். அவர்கள் தற்போது ஈரான் இருக்கும் பாரசீகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு வானியல் பற்றிய அறிவும் தீர்க்கதரிசனத்தின் விளக்கமும் இருந்திருக்கிறது. இதன் மூலம் இயேசு பிறப்புக்கான 'நேரம்' என்பதை அவர்கள் அறிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. "மேகி என்பவர்கள் ஜோதிடர்களாகவும், மன்னர்களுக்கு ஆலோசகர்களாகவும் இருந்தனர்" என்று விதரிங்டன் கூறுகிறார். "ஒரு பெரிய நிகழ்வு நடக்கிறது என்பதற்கு கடவுளின் அடையாளமாக அவர்கள் நட்சத்திரத்தை எடுத்திருப்பார்கள்." என்கிறார் அவர். இப்போது இயேசு பிறப்பிட தேவாலயம் அமைந்திருக்கும் இடத்தை நோக்கித்தான் அந்த மூன்று ஞானிகளும் சென்றார்கள் என்று பல நூற்றாண்டுகளாக கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். அவர் பிறந்த இடம் கால்நடைகள் அடைக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு குகையாக இருக்கலாம் அல்லது, கீழே கால்நடைகளும் மேலே தங்குமிடமும் அமைந்திருக்கும் விவசாயிகளின் வீடாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் அத்தகைய கட்டடங்கள் சிறியதாகவும், மண் பூசப்பட்ட சுவர்களுடன் இருளடைந்தும் இருந்ததாகக் கூறுகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பெத்லஹேமில் உள்ள இயேசு பிறப்பிடத் தேவாலயம் நிச்சயமாக, டிசம்பர் 25 அன்றுதான் இயேசுவின் பிறப்பைக் குறிக்கும் கொண்டாட்டங்கள் உச்சக்கட்டத்தை அடைகின்றன. லூக்கா மற்றும் மத்தேயு விவரித்த நிகழ்வுகள் நடந்த துல்லியமான தேதி இது என்று இப்போது சிலர் வாதிடுகின்றனர். ஆனால் "மந்தைகளை வயல்களில் மேய்ப்பவர்கள் பற்றிய கதையைக் கொண்டு இயேசுவின் பிறப்பு உண்மையில் வசந்த காலத்தில் நடந்தது என்றே கூறலாம்" என்கிறார் விதரிங்டன். அப்படியானால், டிசம்பர் 25 என்பது கிறிஸ்மஸ் பண்டிகையின் அதிகாரப்பூர்வ தேதியாக உலகளவில் எப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டது? ஐரோப்பா முழுவதும் உள்ள மக்கள் ஒவ்வோர் ஆண்டிலும் இந்தக் காலகட்டத்தில் தங்களது கொண்டாட்டங்களுக்குப் பழகி இருந்ததே காரணமாக இருக்கலாம். கி.பி நான்காம் நூற்றாண்டிற்குள், நடுக் குளிர்காலப் பண்டிகைகள் - சூரியன் மீண்டும் தோன்றத் தொடங்கிய தருணத்தைக் குறிப்பவை- நாட்காட்டியில் அங்கமாகி இருந்தன. பிரிட்டிஷ் தீவுகள், ஸ்காண்டிநேவியா, ரோம், போன்ற பகுதிகளில் இந்தக் காலகட்டத்தில் வெவ்வேறு வகையான பண்டிகைகள் வழக்கத்தில் இருந்தன. ஆக, கிறிஸ்துமஸ் நாள் என்பது முழுமையான அசல் இல்லை. ஆனால் அது அற்புதமான வெற்றியைப் பெற்றது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இயேசு பிறப்பிடத் தேவாலயத்தில் அவர் பிறந்த இடமாகக் கருதப்படும் இடத்தில் உள்ள நட்சத்திரம் முதன்முதலில் கிறிஸ்து பிறப்பு விருந்து என்று அழைக்கப்பட்ட இந்த திருவிழா கி.பி. 432 இல் எகிப்துக்கும் ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந்துக்கும் பரவியது. எட்டாம் நூற்றாண்டின் இறுதியில், இது ஸ்காண்டிநேவியா வரை கொண்டாடப்பட்டது. கி.பி. 800- இல் கிறிஸ்துமஸ் தினத்தன்று சார்லிமேன் 'ரோமானியர்களின் பேரரசராக' முடிசூட்டப்பட்ட பிறகுதான் நாட்காட்டியில் அந்த நாளின் முக்கியத்துவம் அதிகரித்தது. 1066 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று வெஸ்ட்மின்ஸ்டர் கோட்டையில் வில்லியம் தி கான்குவரர் இங்கிலாந்தின் மன்னராக முடிசூட்டப்பட்ட காலகட்டத்தில் "பண்பாட்டின் அடையாளம்" என்ற பாதையை நோக்கி விரைவாக செல்லத் தொடங்கியிருந்தது. அந்தக் காலகட்டத்தில் நேட்டிவிட்டி கதையின் வரலாற்று நம்பகத்தன்மையை வெகுசிலரே சந்தேகித்திருப்பார்கள். ஆனால், இது சந்தேகத்துக்கான காலம். அணுகுமுறைகள் நிச்சயமாக மாறிவிட்டன. இருப்பினும் பெத்லகேமின் மக்கள் தொகை கணக்கெடுப்பு, மூன்று ஞானிகள், அதிசய நட்சத்திரம் போன்றவை உண்மையா கற்பனையா என்று கண்டறிவதுதான் முக்கியமா? இல்லை இயேசுவின் பிறப்பைச் சுற்றியுள்ள நிகழ்வுகள் தெரிவிக்கும் செய்தியில் அக்கறை காட்ட வேண்டுமா ? இந்தக் கேள்விக்கான பதில், யாரைக் கேட்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. "வரலாறும் இறையியலும் விவிலிய வரலாற்றில் பின்னிப் பிணைந்துள்ளன என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். இயேசுவின் வாழ்க்கையைப் பற்றிய இறையியல் ரீதியான எதுவும் வரலாற்று ரீதியாக உண்மையாக இருக்க முடியாது" என்று பென் விதரிங்டன் கூறுகிறார். எடின்பரோ பல்கலைக்கழகத்தில் கிறிஸ்தவ வம்சாவளியின் பேராசிரியரான டாக்டர் ஹெலன் பாண்ட் வேறுபட்ட கருத்தைக் கொண்டுள்ளார். "அந்த விவரங்கள் அனைத்தும் வரலாற்றுப்பூர்வமானது என்று நம்புவது அவசியம் என்று நான் நினைக்கவில்லை" என்று அவர் 2013 இல் பிபிசி ஆவணப்படம் ஒன்றில் கூறினார். "இந்தக் கதைகளின் இறையியல்தான் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்" கிறிஸ்துமஸ் வரலாறு: இயேசு கிறிஸ்து பிறப்பு பற்றிய உண்மைகளும் கட்டுக்கதைகளும் - BBC News தமிழ்
  8. ராக்கி - திரை விமர்சனம் முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 25 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ROWDY PICTURES படக்குறிப்பு, ராக்கி திரைப்படம் நடிகர்கள்: பாரதிராஜா, வசந்த் ரவி, ரோகிணி, ரவீனா ரவி; ஒளிப்பதிவு: ஸ்ரேயாஸ் கிருஷ்ணா; இசை: தர்புகா சிவா; இயக்கம்: அருண் மாதேஸ்வரன். இந்த ஆண்டின் துவக்கத்தில் 'ராக்கி' படத்தின் டீஸர் வெளியானபோது தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ந்துதான் போனார்கள். அந்த டீசரில் நின்று கொண்டிருக்கும் ஒரு நபர், உட்கார்ந்திருக்கும் ஒரு நபரை துருப்பிடித்த ரம்பத்தை வைத்து நிதானமாக அறுக்கும் காட்சி பார்ப்பவர்களை நிலைகுலைய வைத்தது. டீஸரே இப்படியிருந்தால் முழுப் படமும் எப்படியிருக்கும் என்ற எண்ணமே அச்சமூட்டியது. படத்தின் கதை இதுதான்: சிறையில் இருந்து பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியில் வரும் ராக்கி (வசந்த் ரவி), தன் தாய் மல்லியையும் (ரோகிணி) தங்கை அமுதாவையும் (ரவீணா ரவி) தேடுகிறான். ஆனால், தாய் கொல்லப்பட்டிருக்கிறாள். தங்கையைக் காணவில்லை. ராக்கி வெளியே வந்த தகவல் அறிந்ததும் பழைய பகைவனான மணிமாறன் (பாரதிராஜா) இவனைப் பழிவாங்கத் துடிக்கிறான். இதற்குப் பிறகு நடக்கும் சம்பவங்களை குருதி கொப்பளிக்கச் சொல்கிறது இந்த 'ராக்கி'. படத்தின் துவக்கத்தில் நாயகன் சிறையில் இருந்து வெளிவந்ததைத் தொடர்ந்து வரும் காட்சிகள், 70களிலும் 80களிலும் வெளிவந்த 'கலைப்' படங்களின் பாணியில் எடுக்கப்பட்ட ஒரு படத்திற்கு வந்து விட்டோமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால், படம் கொஞ்சம் கொஞ்சமாக புரிபட ஆரம்பிக்கும்போது அட்டகாசமான உணர்வை ஏற்படுத்துகிறது. கதை என்று பார்த்தால், ஒரு கடத்தல் கும்பல், அவர்களுக்குள் நடக்கும் மோதல், பழிவாங்கல் என்ற சாதாரணமான கதைதான். ஆனால், அதனைப் படமாக்கியிருக்கும் விதத்திலும் கதையைச் சொல்லியிருக்கும் விதத்திலும் வேறு ஒரு உயரத்திற்குப் படத்தைக் கொண்டுபோயிருக்கிறார் அருண் மாதேஸ்வரன். ஒரு திரைப்படத்தில் 'நான் லீனியர்' பாணியில் கதை சொல்வது வழக்கமானதுதான். ஆனால், இந்தப் படம் ஒரு நான் - லீனியர் நாவலைப் படிப்பதைப் போல அமைந்திருக்கிறது. சில தருணங்களில் ஒரு கவிதையைப் படிப்பதைப் போல இருக்கிறது. ஒரே காட்சியில் அத்தனை அடுக்குகள். ஆனால், எல்லாப் பக்கங்களிலும் ரத்தத்தின் வாடை வீசுகிறது. இந்தக் கதையின் முக்கியமான முடிச்சுகள் ஒவ்வொன்றும் சீரான இடைவெளியில் ஃப்ளாஷ் - பேக் மூலம் அவிழ்ந்துகொண்டே வருவது சிறப்பாக இருக்கிறது.படத்தின் கடைசிக் காட்சிவரை ஆச்சரியத்தைத் தக்கவைக்கிறார் இயக்குநர். இந்தப் படத்தில் காட்டப்படும் வன்முறை, சாதாரண மனம் கொண்டவர்களால் சகித்துக்கொள்ளத் தக்கதல்ல. சுத்தியலால் மண்டை ஓடு நொறுங்கும்வரை அடித்துக் கொல்வது, குத்தூசியால் குத்திக் கொல்வது, ஆணியால் கண்களில் குத்துவது, சடலத்தை வைத்து அதன் மீது ரோடு ரோலரை ஏற்றுவது, குடலை உருவி மாலையாகப் போடுவது என வன்முறையை ரசித்து ரசித்து படமாக்கியிருக்கிறார் இயக்குனர். ஒரு கட்டத்தில் மெல்ல மெல்ல இந்த வன்முறை பார்வையாளர்களுக்கு பழக ஆரம்பிக்கிறது. கூடுதல் வன்முறையை மனம் எதிர்நோக்குகிறது. ஒரு வகையில் வன்முறையின் வாசனையையும் சுவையும் இந்தப் படத்தில் பழகத் தந்திருக்கிறார் இயக்குநர். நாயகனாக வரும் வசந்த் ரவியின் முகத்தில் பெரிய உணர்ச்சிகள் தென்படுவதில்லை. ஆனால், பாத்திரத்திற்கு பொருத்தமான நபராகவே இருக்கிறார். மணிமாறனாக வரும் பாரதிராஜா, கிட்டத்தட்ட இரண்டாவது ஹீரோவைப் போலவே தூள் கிளப்புகிறார் (டைட்டிலில் முதலில் இவர் பெயர்தான் வருகிறது). தன் மகனை வழிக்குக் கொண்டுவர துருப்பிடித்த பிளேடால், விரலை நறுக்கச் சொல்லும் காட்சியில், அவர் குரலை உயர்த்தும்போது திரையரங்கே அமைதியாகிவிடுகிறது. படத்தில் தன்ராஜ் என்று ஒரு பாத்திரம் வருகிறது. சடலங்களின் மீது புல்டோசர் ஏற்றி சகதியாக்கும் பாத்திரம் அது. சமீப காலத்தில் வேறு எந்தப் படத்திலும் இப்படி ஒரு பாத்திரத்தைப் பார்த்ததாக நினைவில்லை. இந்தப் படத்தில் வரும் சண்டைக் காட்சிகள் Old Boy போன்ற பல திரைப்படங்களை நினைவுபடுத்துகின்றன. முதலில் செய்த ஒரு கொலைக்காக பல ஆண்டுகள் சிறியிலிருந்துவிட்டு வரும் நாயகன், வெளியில் வந்ததும் கொடூரமாக பல ஆட்களைக் கொன்று குவிக்கிறார். காவல் துறையே கண்ணில் படுவதில்லை. அதேபோல, ஒரே நபர் 20, 30 பேரை அடித்துத் துவம்சம் செய்வதும் சற்று அதீதமாகப்படுகிறது. ஆனால், படத்தின் உச்சகட்ட காட்சி இருக்கிறதே, அந்தக் காட்சி இந்தக் குறைகள் எல்லாவற்றையும் மறக்கடித்துவிடுகிறது. அந்த ஒரு காட்சியில்தான் எத்தனை விஷயங்கள் தெரியவருகின்றன? இயக்குநர் அருண் மாதேஸ்வரனுக்கு இணையாகப் பாராட்டத்தக்கவர், ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் க்ருஷ்ணா. ஒவ்வொரு ஃப்ரேமையும் செதுக்கியிருக்கிறார் மனிதர். அதேபோல, தர்புகா சிவாவின் இசை, காட்சிகளுக்கு வேறொரு பரிமாணத்தைக் கொடுக்கிறது. ஒரு சண்டைக் காட்சியில் மிருதங்கம் ஒலிக்கிறது. வேறு பல காட்சிகளில் மௌனமே இசையாக அமைகிறது. ராக்கி - வன்முறையின் அழகியலை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்கிறது. ராக்கி - திரை விமர்சனம் - BBC News தமிழ்
  9. அகரம் அகழாய்வு தளத்தில ‌ ஒரே குழியில் முன்று‌ உறை கிணறுகள் கண்டுபிடிப்பு பிபிசிCopyright: பிபிசி சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி, மணலூர், அகரம், கொந்தகை ஆகிய இடங்களில் இதுவரை ஆறு கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றுள்ளன. தற்போது 7ம்கட்ட அகழாய்வுப் மணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அகரத்தில் நடைபெற்று வரும் அகழாய்வின் போது 8அடி ஆழத்தில் ஒரே குழியில் 2அடுக்கு மற்றும் 3அடுக்குகள்கொண்ட அருகே அருகே 3 உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ‌ இவ்வாறு கிடைப்பது இதுவே முதன் முறை ஆகும்.இது ஆராய்ச்சியாளர்களிடம் மிகுந்த ‌ஆர்வத்தை‌ ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து அகழாய்வுப் நடத்தும் பட்சத்தில் இதன் அகலம் உயரம் மற்றும் முழு பயன்பாடும் தெரியவரும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மேலும் அகரத்தில் கிடைத்துள்ள உறை கிணுறுகளை பற்றி ‌தொல்லியல்‌ துறை‌ அமைச்சர் தங்கம் தென்னரசு தனது ட்விட்டர் பக்கத்தில் அகரம் இப்போ சிகரம் ஆச்சு என‌ பதிவு செய்துள்ளார். மேலும் தொடர்ந்து கீழடி,கொந்தகை மணலூர் அகரம் ஆகிய நான்கு இடங்களில் அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அகரம் அகழாய்வு தளத்தில ‌ ஒரே குழியில் முன்று‌ உறை கிணறுகள் கண்டுபிடிப்பு - தமிழில் செய்திகள் (bbc.com)
  10. மேதகு - சினிமா விமர்சனம் மேதகு - சினிமா விமர்சனம் தெருக்கூத்து வடிவத்தில் முழுக்கதையையும் சொல்லியிருக்கும் உத்தி, சிறப்பு! பிரீமியம் ஸ்டோரி தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், எப்படி ஆயுதப்போராளியாக உருவெடுத்தார் என்பதைச் சொல்லும் வரலாற்றுப்படம் ‘மேதகு’, BS Value தளத்தில் வெளியாகியிருக்கிறது. பண்டாரநாயக்க காலத்திலிருந்து சிங்களர்களுக்கும் தமிழர்களுக்குமான பாரபட்சம் நிலவிவந்தது. தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன. ‘ஈழத்தந்தை’ என்றழைக்கப்படும் செல்வநாயகத்தின் அமைதிவழிப் போராட்டங்களை இலங்கை அரசும் அதை இயக்கும் பௌத்த பிக்குகளும் கண்டுகொள்ளவில்லை. பொறுமையிழந்து தமிழ் இளைஞர்கள் ஆயுதப்போராட்டத்தைக் கையிலெடுக்க, அதில் பிரபாகரன் எப்படிப் போராளியாக உருவானார் என்பதைச் சொல்கிறது படம். தெளிவான அரசியல் சார்புடன் உருவாகியிருக்கும் படம் என்றாலும் வெறுமனே பிரசாரமாக மட்டுமே இல்லாமல் கலைநேர்த்தி, அழகியல், தொழில்நுட்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டமை ஆகியவற்றைச் சிறப்பாக மேற்கொண்டிருக்கும் அறிமுக இயக்குநர் கிட்டுவுக்கு வாழ்த்துகள். தெருக்கூத்து வடிவத்தில் முழுக்கதையையும் சொல்லியிருக்கும் உத்தி, சிறப்பு! இளவயது பிரபாகரனின் உருவத்தோற்றத்தைக் கொண்டிருப்பதுடன் மிகவும் இயல்பான நடிப்பையும் வழங்கியிருக்கிறார் குட்டிமணி. ஈழத்தமிழர்கள் மீதான ஒடுக்குமுறை குறித்த ஆதங்கம், யாழ்ப்பாணம் உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு வன்முறை குறித்த கோபம், அரசியல் உரையாடல்கள் என அனைத்தையும் நேர்த்தியாகப் பிரதிபலித்திருக்கிறார். தெருக்கூத்துக் கலைஞர்களாக ராஜவேல் - பெருமாள், பிரபாகரன் தந்தை வேலுப்பிள்ளையாக ராஜா, மேயர் துரையப்பாவாக அரங்கநாதன் ஆகியோர் கவர்கிறார்கள். தமிழர்கள்மீதான வன்முறை யதார்த்துடன் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. ஆல்பிரட் துரையப்பா கொலைத்திட்டம் ஒரு மர்மப்படத்துக்குரிய விறுவிறுப்புடன் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ‘உரிமையைக் கேட்டால் அதற்கு விலை உயிரா’, ‘சுவாசிக்கக் கத்துக்கிட்டு இருக்கும்போது, ஏன் நுரையீரல்ல கத்தி பாய்ச்சுறாங்க’ எனக் கத்திமுனை வசனங்கள். உறுத்திக்கொண்டு தெரியாமல், நிகழ்வுகளின் கைபிடித்துக்கொண்டு பயணிக்கிறார் ஒளிப்பதிவாளர் ரியாஸ். மாயத்தை நிகழ்த்துகிற திரைக்கதையில், இறுதிவரை தன் பிடிமானத்தை விடாது தொடர்கிறது பிரவீன் குமாரின் இசை. யாழ்ப்பாணம் உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டின் பிரமாண்டத்தைக் காட்ட இயலாத பட்ஜெட் பலவீனம், தமிழீழத்தின் முதல் தற்கொலைப் போராளி சிவகுமரன் மரணம் பற்றிய தகவற்பிழை, 30 ஆண்டுக்கால ஆயுதப்போராட்டத்தின் சிறுகீற்று பற்றிய பதிவு மட்டுமே போன்ற சில குறைபாடுகள் இருந்தாலும் நம் கண்முன் வாழ்ந்த ஒரு தமிழ்ப்போராளியின் வாழ்க்கையைப் படைப்பாகச் சித்திரித்த வகையில் வெற்றிபெற்றிருக்கிறார் ‘மேதகு.’ Ananda Vikatan - 07 July 2021 - மேதகு - சினிமா விமர்சனம் | methagu cinema review
  11. புத்தாண்டு கொத்தணி ! ஒரு வாரத்தில் 7 ஆயித்திற்கும் அதிக கொரோனா தொற்றாளர்கள் : பல பிரதேசங்கள் முடக்கம் (எம்.மனோசித்ரா) நாட்டில் கொவிட் பரவல் மூன்றாம் அலை ஆரம்பித்துள்ள நிலையில் அதனை புத்தாண்டு கொத்தணி என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நாளாந்தம் இனங்காணப்படும் தொற்றாளர்களின் விபரங்களை அறிவிக்கும் ஊடக அறிக்கையில் இவ்வாறு 'புத்தாண்டு கொத்தணி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நாளாந்தம் ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்ற நிலையில் மே மாதம் 3 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் அடுத்த இரு வாரங்களுக்கு திருமணம் உள்ளிட்ட சகல மங்கள நிகழ்வுகளுக்கும் தடை விதித்துள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று வெள்ளிக்கிழமை அறிவித்தார். இதேவேளை இன்று வெள்ளிக்கிழமை மாத்தளை , குருணாகல் , மொனராகலை, களுத்துறை மற்றும் பொலன்னறுவை உள்ளிட்ட மாவட்டங்களிலும் பல கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன. அதற்கமைய நாட்டில் இன்று மாலை வரை 8 மாவட்டங்களில் 49 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இன்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை இரவு 10 மணி வரை 1636 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய நாட்டில் மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 108 120 ஆக உயர்வடைந்துள்ளது. இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 95 975 பேர் குணமடைந்துள்ள போதிலும் , 10 764 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் அத்தோடு இன்று வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் மாத்தளை , குருணாகல் மற்றும் மொனராகலை மாவட்டங்களில் சில பொலிஸ் பிரிவுகளும் , கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டன. அதற்கமைய மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ளை, கலேவெல, மாத்தளை மற்றும் நாவுல ஆகிய பொலிஸ் பிரிவுகளும் , குருணாகல் மாவட்டத்தில் பன்னல மற்றும் குருணாகல் பொலிஸ் பிரிவும் , உடபதலாவ கிராம உத்தியோகத்தர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதே போன்று மொனராகலை மாவட்டத்தில் சியம்பலாண்டுவ பொலிஸ் பிரிவில் கல்முனை மற்றும் ஹெலமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை இன்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் பொலன்னறுவை மாவட்டத்தில் எலஹெர மற்றும் சருபிம கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டன. களுத்துறை மாவட்டத்தில் பதுரலிய பொலிஸ் பிரிவில் பொலுன்ன , இங்குருடலுவ, மிடலான, மொரபிட்டிய, பெலெந்த, ஹெடிகல்ல மற்றும் மொரப்பிட்டிய வடக்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் , போதலவ, பஹல, ஹவெஸ்ஸ, மிரிஸ்வத்த, பெலேவத்த வடக்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் , தீனியாவெல கிராம உத்தியோகத்தர் பிரிவும் , மீகஹாதென்ன பொலிஸ் பிரிவில் வல்லவிட்ட தெற்கு, மாகந்தவல , கட்டுயகெலே, வெல்மீகொட ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் இன்று மாலை முதல் தனிமைப்படுத்தப்பட்டன. கடந்த 21 ஆம் திகதி முதல் இன்று மாலை வரை மாத்தளை , குருணாகல் ,மொனராகலை, களுத்துறை, கம்பஹா, திருகோணமலை, காலி மற்றும் பொலன்னறுவை ஆகிய 8 மாவட்டங்களில் 49 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் , 6 பொலிஸ் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. ஒரே நாளில் கொழும்பில் மாத்திரம் 500 இற்கும் அதிக தொற்றாளர்கள் நேற்று வியாழக்கிழமை நாட்டில் இனங்காணப்பட்ட 1531 தொற்றாளர்களில் 533 தொற்றாளர்கள் கொழும்பைச் சேர்ந்தவர்களாவர் என்பது சுட்டிக்காட்டத்தக்கதாகும். கொழும்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் 146 தொற்றாளர்களும் கொழும்பில் ஏனைய பகுதிகளில் 387 தொற்றாளர்களும் இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளனர். ஒருவாரத்தில் 7000 தொற்றாளர்கள் இம்மாதம் 23 ஆம் திகதி முதல் கொவிட் பரவல் 3 ஆம் அலை ஆரம்பித்தது. அன்றிலிருந்து நேற்று வரை நாடளாவிய ரீதியில் 7764 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கடந்த 23 ஆம் திகதி 969 , 24 ஆம் திகதி 895, 25 ஆம் திகதி 793 , 26 ஆம் திகதி 997 , 27 ஆம் திகதி 1111 , 28 ஆம் திகதி 1466 மற்றும் 29 ஆம் திகதி 1533 என கடந்த ஒரு வாரத்தில் இவ்வாறு 7000 இற்கும் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். மேலும் 6 மரணங்கள் கொவிட் தொற்றால் மேலும் 6 மரணங்கள் நேற்று அறிவிக்கப்பட்டன. பொரலஸ்கமுவ பிரதேசத்தை சேர்ந்த 49 வயதுடைய பெண்னொருவரும் , கண்டி பிரதேசத்தை சேர்ந்த 85 வயதுடைய பெண்னொருவரும் , வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய பெண்னொருவரும் , வெலிமட பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய பெண்னொருவரும், களுத்துறை பிரதேசத்தை சேர்ந்த 77 வயதுடைய ஆனொருவரும் , நாவலப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடைய பெண்னொருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். அதற்கமைய கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 667 ஆக அதிகரித்துள்ளது. புத்தாண்டு கொத்தணி ! ஒரு வாரத்தில் 7 ஆயித்திற்கும் அதிக கொரோனா தொற்றாளர்கள் : பல பிரதேசங்கள் முடக்கம் | Virakesari.lk
  12. கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வுப் பணிகள் துவக்கம் - மேலும் பல தொல்பொருட்கள் கண்டுபிடிக்க வாய்ப்பு பட மூலாதாரம்,TAMIL NADU STATE ARCHEOLOGY DEPARTMENT சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழக முதல்வர் காணொளிக்காட்சி மூலம் சென்னையிலிருந்து இன்று துவக்கிவைத்தார். கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் மேற்கொள்ளப்படவுள்ள ஏழாம் கட்ட அகழாய்வில் தமிழர் நாகரிகத்தை விளக்கும் வகையில் மேலும் பல்வேறு தொல்பொருட்கள் கண்டுபிடிக்க வாய்ப்புள்ளதாக தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்படுகிறது. வைகை நதி நாகரிகத்தை முழுமையான முறையில் ஆய்வு செய்யும் பொருட்டு கீழடி, கொந்தகை, அகரம் மற்றும் மணலூர் ஆகிய பகுதிகளில் தமிழக தொல்லியல் துறை அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. 2014 ஆம் ஆண்டு முதல் கீழடியில் அகழாய்வு ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்திய தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற முதல் மூன்று கட்ட ஆய்வுகளில் 7818 தொல்பொருட்கள் வெளிக்கொணரப்பட்டன. நான்காம் கட்ட அகழாய்வு முதல் தற்போது வரை தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை அகழாய்வுகளை மேற்கொண்டு வருகிறது. நான்காம் கட்ட அகழாய்வில் 5820 தொல்பொருட்களும், ஐந்தாம் கட்ட அகழாய்வில் 900 தொல்பொருட்களும், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கிய ஆறாம் கட்ட அகழாய்வில் 913 தொல்பொருட்களும் வெளிக்கொணரப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கீழடியில் நடைபெற்ற ஆறாம் கட்ட அகழாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட செவ்வண்ண பூச்சு பெற்ற மட்பாண்ட ஓடு, மணிகள், சுடுமண்ணால் ஆன முத்திரை, மாட்டினத்தைச் சார்ந்த விலங்கு ஒன்றின் விலா எலும்புடன் கூடிய முதுகெலும்பின் முழுமையான பகுதி, எடைக்கற்கள் மற்றும் செங்கல் கட்டுமானங்கள் ஆகியவை முக்கிய கண்டுபிடிப்புகளாக கருதப்படுகின்றன. கீழடி அருகே அமைந்துள்ள கொந்தகையில் முதுமக்கள் தாழி, மனித எலும்புக்கூடுகள் மற்றும் மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. அகரத்தில் மேற்கொண்ட அகழாய்வில் நுண் கற்காலத்தை சார்ந்த கத்திகள், 300 மில்லி கிராம் எடையுள்ள தங்க நாணயம், கரிமமயமான நெல், புகைப்பான் ஆகியவையும், மணலூரில் கட்டுமான அடையாளங்களும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அகழாய்வு பணிகளில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களின் காலத்தை அறிவதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாக தொல்லியல் துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த அகழாய்வில் தாதுக்கள் மற்றும் மண் பகுப்பாய்வு, காந்த அளவி மதிப்பாய்வு, புவிசார்வியல் மதிப்பாய்வு, ஆளில்லா வான்வழி வாகன மதிப்பாய்வு, தொல்லியல் கோட்பாடு மற்றும் முறைகள், உலோகவியல் ஆய்வுகள், தொல் மரபணு பகுப்பாய்வு, பரிணாம வளர்ச்சி மற்றும் மருத்துவ மரபியல், மகரந்த பகுப்பாய்வு, எலும்புகளுக்கான AMS காலக்கணக்கீடு ஆகிய பணிகள் பல்வேறு ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்களோடு இணைந்து தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டு வருகிறது. கீழடி மட்டுமின்றி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமணல் ஆகிய பகுதிகளிலும் விரைவில் அடுத்த கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வுப் பணிகள் துவக்கம் - மேலும் பல தொல்பொருட்கள் கண்டுபிடிக்க வாய்ப்பு - BBC News தமிழ்
  13. அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கும் கொரோனா நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கா கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை இன்றைய தினம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந் நிலையில் அவர் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக கொவிட்-19 சிகிச்சை நிலையத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளார். நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மூன்றாவது பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார ஆவர். முன்னதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமும் கொரோனா தொற்றுக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது. அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கும் கொரோனா | Virakesari.lk
  14. நாட்டில் 15 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்று! நாட்டில் மேலும் 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் மினுவாங்கொடை, பேலியகொடை கொத்தணி பரவல் தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 15,024 உயர்வடைந்துள்ளதுடன் 4,797 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 10,183 பேர் குணமடைந்துள்ளனர். இதேவேளை, கொரோனா தொற்று சந்தேகத்தில் 523 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்று காரணமாக இன்று மாலை நால்வர் உயிரிழந்ததையடுத்து உயிரழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44 ஆக உயர்வடைந்துள்ளது. https://www.virakesari.lk/article/94198
  15. கொடுமணல்: 100க்கும் மேற்பட்ட அரிய பொருட்கள் கண்டெடுப்பு – முக்கிய ஆவணம் என தகவல் மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், TN Archeology Department கொடுமணல் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியில் கிடைத்த மனித எலும்புகள் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தின் சென்னிமலை அருகே நொய்யல் நதிக்கரையில் அமைந்துள்ள கொடுமணல் பகுதியில், மே 27 ஆம் தேதி முதல் தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட நாற்பதுக்கும் மேற்பட்டோரைக் கொண்ட ஆராய்ச்சி குழுவினர் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பட மூலாதாரம், TN Archeology Department இதில் சுடுமண்ணால் ஆன மணிகள், சங்கு வளையல்கள், பளிங்கு கற்கள், நாணயங்கள், முதுமக்கள் தாழி, சுடுமண் அடுப்பு, இரும்பு பொருட்கள் மற்றும் கொள்ளுப்பட்டறைகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் மனிதர்கள் வாழ்ந்த காலத்தை கணிக்க உதவும் மனித எலும்புகளை கொண்ட முதுமக்கள் தாழிகள் மிகமுக்கிய தொல்லியல் ஆவணமாக கருதப்படுகின்றன. கொடுமணலில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுப் பணிகள் குறித்து தமிழக தொல்லியல்துறை திட்ட இயக்குனர் ரஞ்சித் பிபிசி யிடம் பேசினார். "கொடுமணலில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுப் பணியில் 100க்கும் மேற்பட்ட அரிய பொருட்கள் கிடைத்துள்ளன. இவற்றின் காலம் மற்றும் பிற தகவல்கள் உரிய ஆராய்ச்சிக்கு பின்னர் தான் தெரிய வரும். ஆனால், தற்போது கிடைத்துள்ள பொருட்களை ஆராயும்போது, இந்த பகுதியில் மக்கள் நாகரிகம் இருந்ததும், தொழிற்கூடங்கள் மற்றும் வர்த்தகம் நடைபெற்றதும் உறுதியாகியுள்ளது." பட மூலாதாரம், TN Archeology Department "பல்வேறு வடிவம் மற்றும் அளவிலான இரும்பு, எஃகு ஆயுதங்கள் மற்றும் நெசவுத் தொழிலுக்கான பொருட்கள் கிடைத்துள்ளன. எனவே, பண்டைய காலத்தில் இப்பகுதி வர்த்தகத்திற்கான முக்கிய நகரமாக விளங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது," என அவர் தெரிவித்தார். மேலும், சமீபத்திய அகழாய்வில் கிடைத்த பல்வேறு வகைகளைச் சேர்ந்த மூன்று முதுமக்கள் தாழிகளில், ஒன்றிலிருந்து கிடைக்கப்பெற்ற மனித மண்டை ஓடு, பல், கை மற்றும் கால் எலும்புகள் டி.என்.ஏ ஆய்விற்காக மதுரைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தார் ரஞ்சித். பட மூலாதாரம், TN Archeology Department "முதுமக்கள் தாழியில் கிடைத்த மனித எலும்புகள் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வு கூடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. அங்கு அவை பாதுகாப்பாக கையாளப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் கொடுமணலில் மக்கள் வாழ்ந்த காலம் கணக்கிடப்படும்," "பழுப்புசாயம் பூசப்பட்ட கருப்பு மற்றும் சிவப்பு நிற பானை ஓட்டின் மேல்பகுதியில் தமிழ் பிராமி எழுத்துகள் கிடைத்துள்ளன. 'சம்பன்' என்ற எழுத்து பொறிக்கப்பட்ட சிறிய குவளை அகழாய்வுக் குழியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது," "இதேபோன்று சுமார் 100 தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மட்கலங்கள் கிடைத்துள்ளன. இவற்றில் 'ஏகன்' என்றப் பெயர் சொல் பொறித்த மட்கலங்களின் ஓடுகள் இரண்டு கிடைத்துள்ளன. இங்கு கிடைத்துள்ள தமிழ் பிராமி எழுத்துகளில் மிகுதியானவை பெயர்ச்சொல்லாக கிடைத்துள்ளன. இவை சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது," என தொல்லியல் துறை அதிகாரி ரஞ்சித் தெரிவித்தார். முதுமக்கள் தாழி எனும் ஈமச்சின்னங்கள் பட மூலாதாரம், TN Archeology Department கொடுமணல் அகழாய்வில் கிடைத்த மனித எலும்புகளின் காலம் கி.மு 5 முதல் கி.மு 1ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என கணித்துள்ளார் மூத்த தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் ராஜன். "முதுமக்கள் தாழி என்பது இறந்தவர்களுக்காக வைக்கப்படும் ஈமச்சின்னங்கள். தற்போதுவரை, வாழ்விடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்களை ஆய்வு செய்தபோது கொடுமணலில் கி.மு. 5 முதல் கி.மு 1ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மனிதர்கள் இருந்தது தெரியவந்துள்ளது. இப்போது, உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் இடத்தில் கிடைக்கப்பெற்றுள்ள முதுமக்கள் தாழிகளும் இந்த காலத்தை சேர்ந்தவையாகத்தான் இருக்கும். எனவே, அதே காலகட்டத்தைச் சேர்ந்த மனிதர்களின் எலும்புகளாத்தான் இவை இருக்கக்கூடும்" என்கிறார் ராஜன். கொடுமணலில் செப்டம்பர் மாத இறுதிவரை அகழாய்வுப் பணிகள் நடைபெறவுள்ளது. இதில், மேலும் பல பழங்கால பொருட்கள் கிடைக்க வாய்ப்பிருப்பதாக தொல்லியல் துறையினர் தெரிவிக்கின்றனhttps://www.bbc.com/tamil/arts-and-culture-54189244
  16. தமிழர் வரலாறு: கீழடி கொந்தகை அகழாய்வில் கிடைத்த குழந்தையின் எலும்புக்கூடு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படத்தின் காப்புரிமை https://tnarch.gov.in/keeladi Image caption கொந்தகை, மணலூர், அகரம், கீழடி ஆகிய இடங்களில் இப்போது ஆறாம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. (கோப்புப்படம்) கீழடி அகழாய்வின் ஒரு பகுதியாக உள்ள கொந்தகையில் குழந்தை ஒன்றின் முழு அளவிலான எலும்புக்கூடு முதன் முறையாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. கீழடி அகழாய்வுத் திட்டத்தின் ஆறாம் கட்ட அகழாய்வு கொந்தகை, மணலூர், அகரம், கீழடி ஆகிய நான்கு இடங்களில் 40 லட்சம் ரூபாய் செலவில் தொடங்கப்பட்டு கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. ஏற்கனவே கொந்தகையில் சுரேஷ் என்பவரது நிலத்தில் நான்கு குழிகள் தோண்டப்பட்டு 10 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. இதில் மூன்று தாழிகளில் உள்ள எலும்புகள் வெளியே எடுக்கப்பட்டு மரபணு சோதனைக்காக அனுப்பட்டுள்ளன. நேற்று, வியாழக்கிழமை கொந்தகையில் மேலும் ஒரு குழி தோண்டப்பட்டு அகழாய்வு நடந்தது. இதில் இரண்டு முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. இன்று, வெள்ளிக்கிழமை காலையில் நடந்த அகழாய்வில் குழந்தையின் எலும்புக்கூடு ஒன்று முழு அளவில் கிடைத்துள்ளது. கொந்தகை ஈமக்காடாக இருந்த இடம் என்பதால் முதுமக்கள் தாழிகள் கொந்தகையில் அதிகளவில் கிடைத்து வருகின்றன. இது குறித்து கொந்தகை அகழாய்வு பணியில் ஈடுபட்டு வரும் தொல்லியல் ஆய்வாளர் ஒருவர் பிபிசி தமிழிடம் பேசினார். படத்தின் காப்புரிமை Tamil Nadu State Department of Archaeology Image caption இந்த எலும்புக்கூடு ஆண் குழந்தையுடையதா, பெண் குழந்தையுடையதா என்று தெரியவில்லை. "இன்று கொந்தகை அகழாய்வின்போது குழந்தையின் எலும்புக்கூடு முழு அளவில் கிடைத்துள்ளது. பெருங்கற்காலத்தில் இறந்தவர்களை மூன்று வெவ்வேறு வழிமுறைகளில் புதைக்கும் வழக்கம் இருந்தது. பூமியில் போட்டு மூடுவது, பள்ளம் தோண்டிப் புதைப்பது, தாழியில் வைத்துப் புதைப்பது ஆகிய வழக்கங்கள் இருந்தன. இன்று கொந்தகையில் கிடைத்துள்ள குழந்தையின் உடல் முதல் வழிமுறையில் புதைக்கப்பட்டது. ஏனனில், இன்று கிடைத்துள்ள குழந்தையின் எலும்புக்கூடு இருந்த பகுதியில் மணல் மிகவும் தளர்வாக இருந்தது, " என அவர் தெரிவித்தார். கொந்தகையில் கிடைத்துள்ள எலும்புக்கூட்டின் உயரம் 75 சென்டி மீட்டராக உள்ளது. ஆனால், அது ஆணா, பெண்ணா என்பது குறித்த தெரியவில்லை. பொதுவாக இடுப்பு எழும்பு 'V' வடிவத்தில் இருந்தால் அது ஆண். எலும்பு 'U' வடிவத்தில் இருந்தால் பெண். ஆனால் இந்த எலும்புக் கூட்டில் இடுப்பு எலும்புப் பகுதி சேதமாகியுள்ளதால் வடிவம் சரியாகத் தெரியவில்லை. அகழாய்வில் கிடைத்துள்ள எலும்புக்கூடு உயரம் 75 செ.மீ என்பதால் அது குழந்தையின் எலும்புக்கூடாகத்தான் இருக்கும். ஆனால், குழந்தை இறந்தபோது என்ன வயது என்பது தெரியவில்லை, என அவர் மேலும் தெரிவித்தார். தற்போது கிடைத்துள்ள மனித எலும்புக்கூட்டை கருப்பு கவரால் குளிக்குள் மூடி வைக்கப்பட்டுள்ளது. நாளை அல்லது நாளை மறு நாள் குழியில் இருந்து எலும்புக்கூடு எடுக்கப்பட்டு அதில் இருந்து தேவைப்படும் எலும்புகளை மரபணு சோதனைக்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயிரியல் துறையிடம் ஒப்படைக்கப்டும். உயிரியல் துறையின் மரபணு சோதனை முடிவின் அடிப்படையில் அடுத்தகட்ட தகவல்கள் கிடைக்கும். கொந்தகையில் அதிக அளவு மனிதர்கள் வாழ்ந்த சுவடுகள் கிடைத்து வருகின்றன. எதிர் வரும் காலங்களில் இன்னும் மக்கள் வாழ்ந்ததுக்கான கூடுதல் அடையாளங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இது தொல்லியல் துறைக்கு மிக பெரிய மைல்கல், என்றார் அந்தத் தொல்லியல் ஆய்வாளர்.https://www.bbc.com/tamil/india-53111714
  17. உண்மையை மறைத்த கொரோனா தொற்றாளி மீது வழக்கு பதிவு! இத்தாலியில் இருந்து நாடு திரும்பியதையும் கொரோனா அறிகுறிகளையும் மறைத்து நெஞ்சுவலி என கூறி ராகமை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா தொற்றாளிக்கு எதிராக பொலிஸாரினால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜா-எல பகுதியிலிருந்து நெஞ்சுவலிக்கு சிகிச்சை பெற வந்த குறித்த நோயாளியிடம் கொரோனாவிற்கான அறிகுறிகள் உள்ளனவா, அல்லது வௌிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்களுடன் தொடர்புகள் காணப்பட்டதா என அடிக்கடி வினவிய போதும், அவற்றை அவர் மறுத்துள்ளார். இதனால் இருதய நோய்க்கு தேவையான சிகிச்சையை வழங்குவதற்காக அவரை சாதாரண விடுதியில் வைத்தியர் அனுமதித்துள்ளார். எனினும், வைத்தியர்கள் அந்நபர் தொடர்பில் உறவினர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது, அவர் இத்தாலியில் இருந்து வருகை தந்தவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணியமை தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக அவர் தங்கியிருந்த விடுதியிலிருந்த விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், சிற்றூழியர்கள், தாதியர்கள், மருத்துவ உதவியாளர்கள், விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த நோயாளிகள், அவர்களை பார்வையிட வந்தவர்கள் என அனைவரையும் தனிமைப்படுத்த நேரிட்டுள்ளது. https://newuthayan.com/உண்மையை-மறைத்த1/
  18. நிமிர்ந்த பனை சிலந்திவலைப்பின்னலாகிப் படர்ந்திருந்த இந்தியர்களின் கையில், தமிழீழம் சிக்கிப் போயிருந்தது ஒரு காலம். மறக்க முடியாத அந்த நாட்களில் யாழ்ப்பாணத்தில் நின்று பிடித்து புலிகளின் சுவடுகளைப் பேணிக்காத்து நிலைநிறுத்தி வைத்திருந்த வீரர்கள், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சிலபேர்தான். அந்தச் சில பேருக்குள் நேற்றுவரையும் எஞ்சியிருந்தவன் தான் சூட். அவனை விளங்கிக்கொள்ள அந்த நேரத்து ‘இராணுவச்சூழ்நிலை’ யைப் புரிந்துகொள்ள வேண்டும். அந்தச் சூழ்நிலையைப் புரிந்து கொள்ள வலிகாமத்தின் தரையமைப்பைத் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழீழத்தில் வேறெங்கும் இல்லாதவிதமாக முற்றுமுழுதான நகரச்சூழலை பெரிய அளவில் கொண்ட புவியியல் அமைப்பையும், குறைந்தளவு நிலத்தில் கூடியளவு மக்கள் அடர்த்தியாக வாழும் குடியியல் நிலையையும் கொண்ட பிரதேசம் அது. பகைவனுக்கு முழுமையாக ஒத்துழைத்தது அந்த நில அமைப்பு. அது அவனுக்குச் சாதகமான ஒரு சூழல். அதே சமயத்தில் – இனங்காண முடியாமல் சனங்களோடு இரண்டறக் கலந்திருந்த துரோகிகள் வேறு. இந்தியர்கள் போட்ட எலும்புகளை நக்கிக்கொண்டிருந்தது. இயலுமான அளவுக்கு அவர்களுக்குத் துணைபோன கும்பல்களும் ஆட்களும். இதற்குள் இன்னொரு விடயம் என்னவென்றால் – யாழ்ப்பாண மாநகரத்தை தன்னகத்தே கொண்டிருக்கும் வலிகாமம் பிரதேசத்தைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதானது இராணுவ அரசியல்ரீதிகளில் மிகமிகப் பிரதானமான ஒன்றாக இந்திய – சிறீலங்காத் தளபதிகள் அப்போதும் இப்போதும் கருதுகிற அளவுக்கு முக்கியத்துவத்தையும் பெற்றிருந்த பகுதி இது. அந்தவகையில் – மணலாற்றுக்கு அடுத்தபடியாக இந்தியர்களின் அதிகூடிய கவனம் செலுத்தப்பட்ட மையமாகவும் வலிகாமம் பகுதி விளங்கியது. இத்தகைய ஒரு புற நிலைமைக்குள் – உயிர்வாழ்வே உத்தரவாதமற்ற இராணுவச் சூழ்நிலைக்குள் – புலிகள் இயக்கத்தை நிலைநிறுத்தி வைத்திருப்பதற்கு இடையறாது போராடிய வரலாற்று நாயகர்களில் எஞ்சியிருந்தவன் சூட் மட்டும்தான். ராஜன், சுபாஸ், லோலோ, தும்பன், ரெட்ணா, கட்டைசிவா, கரிகாலன்…… என எல்லோரும் அவனைவிட்டுப் போய்விட – அவர்களின் நினைவுகளைச் சுமந்து கொண்டு போராடியவன் இன்று எங்களை விட்டுப் போய்விட்டான். இப்போது…… அவனது நினைவுகளைச் சுமந்துகொண்டு நாங்கள்…… அந்த இருண்ட இரண்டரை வருடங்கள். அது மிக நெருக்கடியான ஒரு காலகட்டம். வர்ணித்துச் சொல்ல முடியாத ஒரு பயங்கரச் சூழ்நிலை அப்போது நிலவியது. பாசமிகு மக்கள் பாதுகாத்து இடமளிக்கத், தூங்கப்போகும் இரவுகள் தூக்கமற்றுப் போகும். ஓரோசையுமற்று அசையும் இரவில், தூரத்து நாயோசை இந்தியன் நகரும் சேதியைச் சொல்லும். திடீரென ஒரு பதற்றம் பற்றிக் கொள்ளும். அந்தச் சூழ்நிலையில் அது இயல்பானது. நாய் குரைப்புச் சத்தம் அகோரமாய் நெருங்கும். அது ஒரு அச்சமூட்டும் குறியீடு. விரிந்து நகர்ந்து வட்டமிட்டுச் சுருங்கி எதிரி முற்றுகையிடுகிறபோது, நாயோசை உச்சகட்டத்தில் இரையும். நெஞ்சு விறைத்துப் போகும். நள்ளிரவின் அமைதி சிதைய ஊர் துடித்து விழிக்கும். தங்களுக்காக வேண்டிக் கொள்ளும் மனங்கள் ‘பிள்ளைகளைக்’ காக்கச் சொல்லியும் இறைவனிடம் மன்றாடும். துப்பாக்கிகள் தயாராகும். தேர்வு நெம்பு, தானியங்கிக்கு மாற, சுட்டுவிரல் சுடுவில்லை வளைத்துக் கொள்ளும். இருளை ஊடறுத்து விழிகள் முன்னேறும். எதிரி எதிர்ப்படும் கணத்தில் சன்னங்கள் பாய முற்றுகை உடைபடும். தப்பித்து மீண்டு, சொல்லப்பட்ட இடமொன்றில் சந்திக்கின்ற போது தோழர்களில் ஒருவனோ இருவரோ வந்திருக்க மாட்டார்கள்……. ஆள் விட்டுப் பார்த்து ஆமி இல்லை என்ற பின் மெல்ல நடந்து வீதி கடக்கும் போது, சடுதியாய் எதிர்ப்படும் சிற்றூர்திக்குள்ளிருந்து துப்பாக்கிகள் உறுமும், ஆளையோ, அல்லது ஆடைகளையோகூட சன்னங்கள் துளையிடும். உரப்பைக்குள் இருக்கும் எங்கள் துப்பாக்கியின் சூடு தணியும்போது, நாலாவது வேலி கடந்து நாங்கள் ஓடிக்கொண்டிருப்பம். எம்மை முந்திக்கொண்டு எதிரியின் சன்னங்கள் சீறும். ‘முற்றுகையிடுகிறான் பகைவன்’ என நினைத்து அடித்து உடைத்துக்கொண்டோ, அல்லது வலு அவதானமாக நகர்ந்தோ அவனைக் கடந்து மறுபக்கம் போய் ‘தப்பி வெளியேறி விட்டோம்’ என மகிழும் வேளை இப்போதுதான் முற்றுகைக்குள்ளே வந்து சிக்கிப்போயுள்ளோம் என்பது தெரியவரும். நடந்த தவறு விளங்கும் போது தலை விறைக்கும். ‘பிரச்சினை இல்லாதவை’ எனக் கருதி இரவில் படுக்கப்போகும் இடங்கள், அதிகாலையில் எதேச்சையாகச் சுற்றிவளைக்கப்படுகின்ற துரதிஸ்டம் நிகழும். சந்தர்ப்பவசமாகச் சிக்கிக் கொண்டு விடுகிற அந்த விபரிக்க முடியாத சூழ்நிலைகளில் ‘வாழ்க்கை வெறுக்கும்’. “எல் ரீ ரீ” எனக் கத்திக்கொண்டு இந்தியன் எட்டிப் பிடிக்கும் போது, ‘கதை முடிந்தது’ என்று குப்பியைத் தொடும் வேளையிலும், இறுதி நேர முயற்சியாக உதறிப் பறித்துக் கொண்டு தப்பி ஓடுகிறபோது நெஞ்சுக்குள் தண்ணிவரும். இப்படியாக ஏராளமான மயிரிழைகள். சன்னம் துளைத்தவர்களையும், ‘சயனைட்’ அடித்தவர்களையும் தவறவிட்டு தப்பித்து வந்தபோதெல்லாம், அந்த ஆருயிர் நண்பன் ஓரமாய் இருந்து கண்ணீர் சொரிவான். ஆனால், ஒருபோதும் அந்தப் புலிவீரனின் உள்ளம் தளர்ந்து போனதில்லை. நெருக்கடிகள் கூடிக்கூடி அழுத்திய போதெல்லாம் இறுகிக்கொண்டே போனது அவனுடைய மனவுறுதி. கற்பாறையைப் பிளந்து முளையிடும் துளிராகி – இந்தியர்களின் கூடாரங்களுக்கு நடுவில் அவன் நிமிர்ந்தான். எதிரி வளைத்து நின்ற மண்ணில், கைவிடாத துப்பாக்கியோடு கடைசி வரைக்கும் வலம்வந்து போராட்டத்தை உயிர்த்துடிப்போடு உயர்த்திச் சென்ற வேங்கை அவன். மரணம் அவனது உயிரை உரசிச் சென்ற போதெல்லாம் தப்பித்து மீண்டுவந்து ‘என்ன நடந்ததோ……?’ என ஏங்கி நின்ற எங்களின் முன் கண்குளிரக் காட்சியளித்து ஆச்சரியப்படுத்திய வீரன். கட்டைக் காற்சட்டையும் சேட்டுமாக அந்தச் ‘சின்னப் பொடியன்’ தோற்றத்தில், இந்தியர்கள் பலதரம் ஏமாந்திருக்கிறார்கள். மூலைமுடுக்கெல்லாம் நுழைந்து இந்தியர்கள் ஒத்தியெடுத்த வேளைகளிலெல்லாம், அவன் நேசித்த மக்களால் பொத்திவைத்துப் பாதுகாக்கப்பட்ட குழந்தை. எப்படி அவனால் நின்றுபிடிக்க முடிந்தது……? அது அதிசயம் தான்! ஆனால், அவனைப் பாதுகாத்தது வெறும் அதிர்ஸ்டம் மட்டுமல்ல. விவேகம், புத்திக்கூர்மை, மக்கள் செல்வாக்கு அவனுடைய சின்ன உருவம் இவற்றுக்கு மேலாக அவனுடைய உறுதியும் துணிச்சலும். இவைதான் அவனை உயிர்வாழச் செய்வித்தன. அடுத்த காலை நிச்சயமற்றிருந்த அந்த நாட்களில் அவனோடுதான் நம்பிக்கையோடு தூங்கப் போகலாம். சாவு எங்களைத் தட்டி எழுப்பிய எத்தனையோ தடவைகளில் தப்பி வந்தது அவனால்தான் எனலாம். அப்போது யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த பொட்டம்மானும் தோழர்களும் அவனது ‘ஒழுங்கமைப்பு’ களால் பல சந்தர்ப்பங்களில் பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள். ‘மக்கள் நேசம்’ அவனது உயரிய குணாம்சங்களில் ஒன்று. அவன் அவர்களில் வைத்த அன்பு அவர்களை அவனில் பாசம் வைக்க வைத்தது. அந்த நெருக்கம் அலாதியானது; அதுதான் அவனுக்கு கவசமாகவும் இருந்தது. அந்த நேசத்தின் தொடக்கம் – அவன் போராளியான ஆரம்பம். அது 1984 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதி. தனது பதினேழாவது வயதில் இயக்கத்தில் சேர்ந்தவன்இ அப்போது முதல் அந்த மக்களுடனேயே வாழ்ந்தான். அந்த மக்களுக்குக் காவலாய் இருந்தான். அவன் மக்களை அணுகிய விதமே வித்தியசமானது அதனால்தான் அவர்கள் அவனை நெஞ்சிலிறுத்தி வைத்திருந்தார்கள். ‘மற்ற இயக்கங்களின் ஊர்கள்’ என்று ஒதுக்கிய கிராமங்களில்தான் தூக்கமும், வேலையும். ‘மற்ற இயக்கங்களின் ஆட்கள்’ எனப்பட்டவர்கள் வீடுகளில்தான் குளிப்பும், சாப்பாடும். எல்லா ஊரையும் எம்முடையதாக்கி, எல்லாப் பேரையும் எம்மவர்களாக்கினான். 31.05.1967 அன்று தனலட்சுமி அம்மாவுக்கும், நவரத்தினம் ஐயாவுக்கும் பிறந்தவனுக்கு விக்னராஜன் என்று பெயரிட்டார்கள். தனது 16 ஆவது வயதிலேயே ‘புலிப்படைப் பொடியளுக்குப் பின்னால்’ திரியத் துவங்கிவிட்டான். பாயில் தலையணை அடுக்கி ஆள்மாதிரிப் போர்த்துவிட்டு இரவில் காணாமல் போனவன்…… ஸ்ரான்லி கொலிச்சில் தம்பியையும், தங்கையையும் இறக்கிவிட்டு, உள்ளே வராமல் மிதிவண்டியைத் திருப்பிக்கொண்டு மற்றப்பக்கமாப் போனவன்…… போய்ப்போய் வந்தவன்…… ஒருநாள் ஒரேயடியாகப் போய்விட்டான். சூட் ஒரு அற்புதமான போராளி. தனது அழகான ஆளுமையால் தோழர்களைத் தன்னோடு இறுகப் பிணைத்திருந்த நண்பன். கண்டிப்போடும், பரிவோடும் அரவணைத்து வருடிய இனிய காற்று, அவர்களில் அவன் பொழிந்த பாசமே தனி. மனங்குழம்பிப்போகின்ற எந்தப் போராளியையும் ஆதரவோடு கதைத்துத் தெளிவூட்டுகிற போது, அவனொரு பேராசான். முழுமையாக என்று சொல்லாவிட்டாலும் – இயக்கத்தின் நீண்ட வரலாற்று ஓட்டத்தோடு பெருமளவு கலந்து, அமைதியாக, ஆரவாரமில்லாமல் – தனது செயலால் வளர்ந்து – மெல்ல மெல்ல உயர்ந்தவன். சூட் ஒரு சண்டைக்காரன் அல்ல, அதற்காக சண்டை தெரியாதவன் என்றும் சொல்லிவிட முடியாது. அதாவது அவன் தேர்ச்சிபெற்ற யுத்த வீரன் அல்ல. அப்படியானால் அவன் முன்னுக்கு வந்தது? அது சண்டைகளால் அல்ல; சண்டைக்கு வெளியில் நின்று அவன் போராட்டத்திற்கு ஆற்றிய அளப்பரிய பணிகளால். தான் பணியாற்றிய துறைகளிலெல்லாம் தனக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளில் பேர் சொல்லும் முத்திரைகளைப் பதித்து வளர்ந்த போராளி. சண்டைக்கு வெளியில் நின்ற எல்லாப் போராளிகளையும் போல அவனும் போர்க் களத்துக்குப் போகத்தான் துடித்தான். ஆனால், அவனது தேவை அவனை அதிலிருந்து தள்ளியே வைத்திருந்தது. ஒரு விடுதலை வீரனின் போராட்டப் பணியானது இராணுவ அளவுகோல் மட்டும் அளவிடப்பட முடியாதது. சண்டையிடுவதுதான் ஒரு விடுதலைப் போராட்டத்தில் பிரதான அம்சம். ஆனால், அது மட்டுமே போராட்டம் ஆகாது. சண்டை என்பது, போராட்டம் நகர்த்திச் செல்லப்படும் பல்வேறு பரிமாணங்களில் ஒன்று. சண்டைகளில் நிற்காத போதும் உண்மையான அர்ப்பண உணர்வோடு வாழ்ந்து – போராட்டத்தின் ஏனைய பரிமாணங்களோடு அபார திறமையாகக் காரியங்களைச் சாதித்த எத்தனையோ போராளிகளுள் அவனும் ஒருவன். இந்தியப்படை வெளியேற்றப்பட்டுவிட்டது. இப்போது அவன் புலனாய்வுத்துறையில். பொட்டம்மானின் உற்ற துணைவர்களாக நின்று, இயக்கத்தையும் – போராட்டத்தையும் – தேசத்தையும் பாதுகாத்த முதன்மையான போராளிகளுள் ஒருவனாக சூட் அல்லும் பகலும் ஓய்வற்றுச் சுழன்றான். துவக்கத்தில் யாழ். மாவட்ட புலனாய்வுத் துறைப் பொறுப்பாளனாகப் பணி. அவன் பொறுப்பை ஏற்றபோது அங்கு இருந்த சூழ்நிலை வித்தியாசமானது. அதனால் மிக்க அவதானமாகவும், மிக்க நிதானமாகவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அவன் எச்சரிக்கையோடு அடிகளை வைத்தான். நேற்றுவரை எதிரியினால் முற்றுகையிடப்பட்டிருந்த அந்தப் பிராந்தியம் இன்று திடீரென – ஒரேநாளில் எங்கள் கைகளுக்கு வந்துவிட்ட காலகட்டம் அது. இந்தியாவின் எச்சசொச்சங்கள் எங்கும் பரவியிருந்த நேரம். ‘மக்களே போல்வர் கயவர்’ என்று அன்றொரு நாள் வள்ளுவன் சொல்லியிருந்ததைப் போன்ற நிலைமை. எவரிலுமே சந்தேகம் எழக்கூடிய சூழல். மிகக் கவனமாக இனங்கண்டு பிரித்தறிய வேண்டும். எங்கள் புலனாய்வு நடவடிக்கைகளில் தவறு நேர்ந்து, அது மக்களைப் பாதித்துவிடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புலனாய்வுத் தவறுகளினால் மக்கள் எவ்விதத்திலும் துன்பப்பட்டுவிடக்கூடாது, அத்தகைய அவதானத்துடன் செயற்படும்போது நடவடிக்கைகளில் நாங்கள் காட்டும் நிதானமானது, துரோகிகளுக்கு வாய்ப்பளித்து அவர்கள் சுலபமாகச் செயற்பட இடமளிக்கவும்கூடாது. இப்படிப்பட்ட சிக்கலான ஒரு சூழ்நிலையில் பொறுப்பெடுத்து, மிக நேர்த்தியாகவும் சிறப்பாகவும் தனக்குரிய பணியை சூட் செய்து முடித்தான். நாட்கள் உருண்டன. புலனாய்வுத்துறையின் முக்கியமான ஒரு போராளியாக, அதன் தாக்குதற் படைப்பிரிவுக்குத் தளபதியாக, இயக்கத்தின் ‘கரும்புலிகள்’ அணி ஒன்றுக்குப் பொறுப்பாளனாக சூட் படிப்படியாக உச்சத்துக்கு வந்தான். இயக்கத் தலைமையினது அதீத நம்பிக்கைக்கு அவன் பாத்திரமானான். முக்கியத்துவம் மிக்க ஒரு கரும்புலித் தாக்குதல். இலக்குப் ‘பெரியது’ எனவே ஒழுங்கமைப்பும் பெரிதாக இருந்தது. திட்டம் தீட்டப்பட்டபோது பொட்டம்மான் சூட்டைத்தான் தெரிந்தெடுத்தார். தியாகமும், துணிச்சலும், இலட்சிய வேட்கையும் போக – மதிநுட்பமும், விவேகமும், செயற்றிறனும் அதிகமாகத் தேவை. இவையெல்லாம் ஒருங்கிணைந்தவன் சூட். ஆனால் தலைவரோ ஆளை மாற்றச் சொன்னார். இந்தப் பணியை விடவும் அதிகமாகப் போராட்டத்துக்கு அவன் பயன்படுவான் என்று அவருக்குத் தெரிந்தது; உண்மைதான் – ஆனாலும், தாக்குதலின் முக்கியத்துவத்தையும், அதன் பிசகாத – துல்லியமான – வெற்றியையும் கருத்திற்கொண்டு பொட்டம்மான் சூட்டைத்தான் வலியுறுத்தினார். இருந்தபோதும் – தலைவரது கருத்திற்கிணங்க கடைசியில் முடிவு மாற்றப்பட்டது. அதன்பின்னர் – எங்களது இன்னுமொரு கரும்புலிவீரன் அந்த ‘இலக்கை’ மிக வெற்றிகரமாகத் தாக்கி அழித்து வரலாற்றைப் படைத்தான். பூநகரிச் சமருக்குப் புறப்படும்போது சூட் தேர்ச்சிபெற்ற ஒரு சண்டைத் தளபதியாக விளங்கினான். ஆனால், அவன் இராணுவ ரீதியில் மேலோங்கியதானது நீண்டகால அனுபவத்தில் படிப்படியாக வளர்ச்சிகண்டு அல்ல. நன்றாக இனங்காணப்பட்டு, திடீரென அவனுக்குப் பொறுப்புக் கொடுக்கப்பட்டது. குறுகியகால இராணுவப் பணியையே அவன் ஆற்றினான். ஆனால், அந்தச் சொற்ப காலத்துக்குள்ளேயே, பெருந் தளபதிகளினது மதிப்பையும், பாராட்டையும் அவன் பெற்றுவிட்டிருந்தான். அது ஒரு இலேசான காரியமல்ல. அவனது குறுகியகால இராணுவ வளர்ச்சி அசாத்தியமான ஒரு சாதனை. பூநகரிப் பெரும் போர்க்களம். பல்வேறு படையணிகள், பல்வேறு சண்டைமுனைகள், பல்வேறு வழிமுறைகள். பரந்த ஒரு பிரதேசத்தில் எழுந்து நின்ற எதிரியின் பெரும் படைத்தளம் ஒன்றின்மீது – அதன் அரண்களிலும் சமநேரத்தில் தாக்கி – புலிகள் நிகழ்த்திய மிகப்பெரிய படையெடுப்பு. ஒரு முனையில் சூட்டின் படையணி. எதிரியின் அரண்தொகுதி ஒன்று, சூட்டினது படையணிக்குரிய இலக்கு. அதன் அருகிலிருந்த இன்னொரு அரண்தொகுதி லெப். கேணல் குணாவின் படையணிக்குரிய இலக்கு. இரண்டு அணிகளும் தமது இலக்குகளை வீழ்த்திய பின் ஒன்றிணைந்து பிரதான தாக்குதலணி ஒன்றுக்குத் தோள் கொடுக்கவேண்டுமென்பது திட்டம். ஆனால் விசயம் பிழைத்துவிட்டது. பூநகரி வெற்றியின் முதல் வித்தாக, சண்டையின் ஆரம்ப நாட்களிலேயே குணா வீழ்ந்து போக – அந்தப் பகுதியில் சண்டை திசை மாறிவிட்டது. தமது இலக்கைக் கைப்பற்றிய சூட்டினது அணி முன்னேறிய போது, குணாவினது பகுதி பிசகிவிட்டிருந்தது. எதிர்பார்த்தமாதிரி நடக்கவில்லை; எதிரி அங்கு தாக்குப்பிடித்துக் கொண்டிருந்தான். துணை சேரவேண்டிய அணிக்குத் துணை கொடுக்க வேண்டிய நிலை. மூர்க்கத்தனமான தாக்குதல் குணாவுக்குரிய பகுதிமீது ஆரம்பித்தது. இறுக்கமான சண்டை. ஆர்.பி.ஜி. குண்டின் சிதறல்பட்டு அவனது எம். 16 உடைந்து போக, அருகில் நின்ற தோழனிடம் ரி. 56 ஐ வாங்கிக்கொண்டு சூட் முன்னேறினான். கடுமையாகத் தாக்கிக் கொண்டிருந்த எதிரியின் பலமான அரணொன்றை சூட் ஆக்ரோசமாக நெருங்கினான்…… தனி ஆளாகப் பாய்ந்தான். எதிரிக்கு அருகில் அவன் முன்னேறினான்…… மிக அருகில்…… போய்விட்டான்…… போனவன் திரும்பி வரவில்லை. அன்பு, குணா, நவநீதன், பாமா, றூபன், கணேஸ், கோபி, அவன்…… என்று 458 தோழர்கள்…… வெற்றியைத் தந்தவிட்டு வராமலே போய்விட்டார்கள்! தமிழீழம் இப்போது தலைநிமிர்ந்து நிற்கிறது; அந்த மைந்தர்களின் நினைவோடு; அவர்கள் பெற்றுத் தந்த வெற்றியின் பெருமிதத்தோடு. இப்போது…… நம்பிக்கையோடு காத்திருக்கிறது…… அடுத்த வெற்றிக்காக! நன்றி: விடுதலைப்புலிகள் இதழ்
  19. கிட்டண்ணை எண்ண ஓட்டங்களுக்கு ஈடு கொடுப்பது கடினம் இயக்கத்தின் எந்த ஒரு பணியானாலும் புதிய புதிய எண்ணங்களை வெளிப்படுத்துவார்.ஒவ்வொரு துறையும் எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றி நீண்டவிரிவுரை நிகழ்த்தும் அளவிற்கு ஒவ்வொன்றையும் பற்றியும் ஆழ்ந்து சிந்தித்து வைத்திருந்தார். வெறுமனே சிந்தித்துவிட்டு, சொல்லிவிட்டு, எழுதிவிட்டு,அதனை மறந்துவிடும் அல்லது கைவிடும் சாதாரணமனிதர் அல்ல கிட்டண்ணை.அவரது எல்லா சிந்தனைகளும் செயல்வடிம் பெறவேண்டும் என்பதில் விடாபிடியானவர்.கிட்டண்ணையின் நிர்வாகத்திறன் வித்தியாசமானது தன்கீழ் பணியாற்றும் எல்லோரையும் தன் வசப்படுத்தும் தான்நினைத்ததைச் செய்ய வைக்கும் திறன் அவரதுதனித்துவமான வெற்றிகளுக்கு காரணமாக அமைந்தது. ஒவ்வொரு வேலைகளையும் தானே திட்டமிட்டு நேரில்நின்று சரிபார்த்து அவற்றைஒழுங்கமைப்பார் குட்டிசிறியின் மோட்டார்செல்லுக்கு கரி மருந்து அளவு பார்ப்பதிலிருந்து நண்டுக்கறிக்கு உள்ளி தட்டிப் போடுவதுவரை எதுவாயிருந்தாலும் தானே நின்று சரிபார்த்து ஆரம்பித்து வைத்தால்த்தான் அவருக்கு திருப்தி.கிட்டண்ணையின் இராணுவ நிர்வாகத்திறன் உலகறிந்த விடயமாகும் தானே சண்டைக்களங்களில் முன்நின்று வழிநடத்துவது அவரது தனிப்பண்பு.1987 க்கு முன்னைய காலங்களில் யாழ்க் குடாநாட்டிற்குள் இராணுவ நடமாட்டத்தை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு அவர் பயன்படுத்தியது தன்வசமிருந்த குறைந்த ஆயுதங்களையும் போராளிகளையும் மட்டுமல்ல எதிரியை முட்டாளாக்கும் தந்திரோபாயத்தையும் தனது மனவலிமையும் சேர்த்தே பயன்படுத்தினார்.நெருக்கடியான நேரங்களில் அவர்காட்டும் மனவலிமை நம்ப முடியாததாய் இருக்கும். அடையாளம் தெரியாத எதிரி அந்த வீரனுக்கு குறிவைத்த ஒரு மங்கலான மாலைப்பொழுது.வழமையாக எரிந்து கொண்டிருக்கும் மின்குமிழ் எரியவில்லை.அவரது கார் நிறுத்தப்பட்டு கதவைத் திறந்து இறங்க முற்படும் வேளையிலேயே அந்தநிழலான உருவத்தின் அசைவு உள் உணர்வுகளை எச்சரிக்கிறது.நிதானிப்பதற்கிடையில் வந்து விழுந்தது கிரனேட் தான் என்று அவசரமாக வெளியேற முற்பட்ட வேளையிலேயே அது வெடித்துவிட்டது.ஆசையாய் வைத்திருந்த சின்னக் காரின் ஸ்ரெயறிங் கிற்குள் சிக்குப்பட்ட காலை இழுத்து எடுப்பதற்கிடையில் வெடித்துவிட்டது.இதுவரை நிகழ்ந்தவை சாதாரணமானவைகள்.எந்த ஒருவருக்கும் ஏற்படகூடியவைதான் ஆனால் அதன்பின்னர் அவர்நடந்து கொண்டவிதம் கிட்டண்ணைக்கேஉரிய தனித்துவம்வாய்தது . முழங்களுடன் துண்டாகிப்போய் துடித்துக்கொண்டிருந்தது அவரது கால் கிரனேட் வந்த திசையைநேக்கி அவரது ரிவோல்வர் மூன்று சூடுகளைச்சுட்டு ஓய்ந்தது.அவரது நினைவு மங்குகிறது.முழுமையாய் இருந்த ஜீன்ஸ் பக்கத்தைக் கிழித்து துண்டாகிப்போன காலுக்குத்தானே கட்டுப்போட்டுக்கொண்டிருக்கையில் நினைவு மேலும் மங்குகிறது. உள் உணர்வு அவரை எச்சரித்தது. கிரனேட் எறிந்தவன் அருகில் வருவான் அவனைச் சுடவேண்டும் என்ற உணர்வு அவரை முழுமையாக மயங்கிப்போய்விடாமல் வைத்திருக்கிறது கிரனேட் எறிந்தவன் வருவான் வருவான் எனத்திரும்பத்திரும்ப நினைத்துத்தன்னை முழுமையாக மயங்கிப்போய்விடாமல் வைத்திருந்தார்.மூன்று சூடுகளைச் சுட்டு விட்டேன்.ரிவோல்வரில் இன்னும் மூன்று ரவைகள்தான் மிச்சமாய் உள்ளது.என்பது என்பது நினைவில் உறைக்கும்போது அவர் மயங்கிக்கொண்டிருந்தார். வைத்தியசாலை இவ்வளவுபக்கத்தில் இருந்தபடியால்தான் அவர் உயிர் தப்பினார் என்பதும் சந்திரசிகிச்சை அறைக்கு எடுத்துச்செல்லப்பட்ட கணத்தில் அவரது இதயத்துடிப்பு முற்றாகவே நின்றுவிட்டிருந்தது.என்பதும் அவர் உயிர் தப்பியது மருத்துவ உலகின் புதினம் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த விடயங்கள். அவர் காயப்பட்டு இரத்தவெள்ளத்தில் மயங்கிக்கிடந்த இடத்தில் தனது ரிவோல்வரை இறுகப்பற்றியபடி கிடந்தார் என்பதும் தனது ரிவோல்வரில் சுட்டுவிட்ட ரவைக்களுக்குப்பதிலாக புதிய ரவைகளை மாற்றிப் போட்டிருந்தார் என்பதும் ஆனால் நினைவு தப்பிய நிலையில் அவர் வெற்றுக் கோதுகளுக்குப் பதிலாக மீதியாய்இருந்த நல்லரவைகளை வெளியே எடுத்துவிட்டு அந்த இடத்யிற்கே புதிய ரவைகளை போட்டிருந்தார் என்பதும் அனேகம் பேருக்கு தெரியாத விடயங்கள் அன்று மட்டுமல்ல தனது போராட்ட வாழ்வின் ஒவ்வொரு நாட்களிலும் சந்தர்ப்பங்களிலும் அவர் தனது மனஉறுதியை வெளிப்படுத்தினார். அதுவரை காலமும் யுத்த முனைகளிலும் தாயக பூமியின் எல்லாப் பரப்பிலும் கம்பீரமாய் உலாவிவந்த வேங்கை கால்உடைந்து கட்டிலில் விழ்ந்தபோதும் தன்னைச் சோர்வு சூழவிடவில்லை.எந்தச்சந்தர்ப்பத்திலும் போராட்டத்திற்கான,போராளிகளுக்கான எந்தவொரு வேலையையும் பொறுப்பேற்றுச் செய்ய கிட்டண்ணை தயங்கியதில்லை தனக்கு ஒப்படைக்கப்படும் வேலை தனது தனிப்பட்ட நிலையினை எப்படித் தீர்மானிக்கும் என்பது பற்றி ஆராயாமல் இலட்சியத்திற்காக உழைத்தவர் .தலைவர் அவர்களின் தனிப்பட்ட மெய்க்காவலராக இருந்த போதிலும்சரி தலைவர் அவர்களுக்கு அடுத்தடுத்தபடியான தலைவனாக வளர்ந்து இருந்தபோதிலும்சரி அவர் இந்த நிலைப்பாட்டில் இருந்து மாறவே இல்லை. 1983 இன் ஆரம் நாட்கள் எம்மில் பன்னிருவருக்கான பயிற்சி. எல்லாமாக இருபத்தைந்துபேர்வரையில் உள்ளடங்கிய காட்டு வாழ்கை பஸ் ஸில் போய் கிளிநொச்சி அங்காலை எங்கையே இறங்கி இருளும்வரை ரோட்டில் நின்று ரைக்ரரில் ஏறி உள்ள காடெல்லாம் சுத்திச் சுழன்று நடுக்காட்டில் ஒரு சிறியகொட்டிலுக்குப்போய்ச் சேர்ந்தோம் வடக்கு எது கிழக்கு எது என்று தெரியாமல் குழம்பிக்கொண்டு நின்று அதிகாலை முடிந்து விடியும்போது பார்த்தால் சூரியன் மற்றப்பக்கத்தால் உதிக்கிறது.அனேகமாக உடையார்கட்டுப் பக்கமாக இருக்கவேண்டும். எமது பொறுப்பாளர்களில் அநேகரை தெரியும் சிலரை தெரியாது கிட்டண்ணையை நல்லாகவே தெரியும்.கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் படிப்பவர்கள் என்றுசொல்லி அவர்தான் எம்மில் இருவருக்கு ஒரு வீட்டில் அறை எடுத்துத்தந்துருந்தார்.தினமும் பின்னேரம் வந்து கோஸ் ரணிங் செய்யச் சொல்லிவிட்டு வாட்டத் தொடங்கினால் மனுசன் என்னத்தைச் சொல்ல வாழ்கை வெறுக்கும்... வேகம், வேகம்,இன்னும் இன்னும் என்று சொல்லி 5 மணிக்கு தொடங்கியது ஏழெட்டு மணிக்கு முடியும்போது அந்தப்பெரிய விராந்தை நிலம் வியர்வையால் நிரம்பி ஓடும் அதுவரை எதுவும் கதை இல்லை இங்கிலீசும் தமிழுமாய் செய் ,செய் ' என்பதுதான் இயலாது என்றால் அப்ப உனக்கு ரெயினிங் இல்லை போ என்னத்தைத்கதைப்பது அதற்குப் பிறகுதான் என்முடன் அன்பாகக் கதைப்பார். ரஷ்ய மொழிபெயர்ப்பான தாய் நாவலை முழுமையாகப்படிக்கும்படி தந்திருந்தார். அது பற்றிக் கேள்விகள் கேட்ப்பார்.பாவலின் நண்பர்களின் பெயர் கேட்ப்பார்.காதலி பெயர் கேட்ப்பார்.ஆரம்பத்தில் வாசிக்கும்போது பழக்கமின்மையால் கரடு முரடானதாகத் தெரியும் மொஸ்கோ மொழி பெயர்ப்பு நூல்களை வாசிப்பதில் எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியவர் அவர்தான்.இப்படி எமக்கு முன்னரே அறிமுகமாகி இருந்தவர் எமது காட்டுப் பயிற்சி முகாமில் இருக்கிறாரா என்று தேடினால் ஆள் வருகின்றார் கையில் அகப்பையுடன் எல்லோரும் நல்லாய்ச் செய்யச் செய்ய வேண்டும் என்றும் தான்தான் இங்கு சமையல் என்று குட்டியாய் லெக்சர் அடித்துக்கொண்டு நின்றுவிட்டுத் தலைவரை கண்டதும் ஓடி ஒழிந்தார்.பெரிய பொறுப்பாளனாய் ஒருவரை எமக்கானசமையல்காரராய்ச் சந்திப்பது நம்பமுடியாத அனுபவமாயும் புதிய பாடமாயும் அமைந்தது.எமது அந்த முகாமின் சமையல் வேலை என்பது அந்தக் காலத்தில் சுலபமானதல்ல குறுகிய காலம் பயிற்சி என்பதால் மிகவும் நெருக்கமான நேர அட்டவணை உடற்பயிற்சி ஆசிரியர் புலேந்தி அம்மான் போட்டு வாட்டிப்போட்டு விட்டால் அடுத்த சந்தோசம் மாஸ்டரின் வகுப்பிற்கு இடையில் உள்ள குறுகிய உணவு வேளையில் சமையல் கொட்டிலுக்குப் போவது நடந்து அல்ல போகும் வேகத்திற்கு அங்கே தடிகளால் கட்டிய சிறாம்பில் உணவு தட்டுகளில் போட்டு மூடி வைத்திருக்கும் கிட்டண்ணையும் ரஞ்சனும் இணைந்து சமையல் மூன்று வேளையும் நேரம் தவறாமல் உணவு கொடுக்க ஒருநாள்கூட நேரம் தவறியதாகவோ வேலையில் சினந்ததாகவோ நினைவில் இல்லை.ஆனால் தங்களது வேலைச்சுமையைக் குறைப்பதற்கான குறும்பு இருக்கும். உணவு தட்டுகளில் இலக்கம் இடப்பட்டுஇருக்கும்.தட்டுக்களை இலக்கம் மாறி எடுப்பவர்கள் அன்றைய சமையல்பாத்திரங்களைக் கழுவிக் கொடுக்க வேண்டும்.ஆரம்பத்தில் தட்டு இலக்க ஒழுங்கில் இருந்தன. பிரச்சனை இல்லை.இடையில் ஒருநாள் எல்லாம் மாறி இருந்தது. யார்பார்த்தது அன்று நாங்கள் பாத்திரம் கழுவினோம்.பார்த்து சிரித்தார்கள் ஆனால் பின்னர் நாங்கள் உசாராகிவிட்டோம்.றெஜிக்கு இலக்கம் ஆறு விக்ரருக்கு இலக்கம் ஒன்பது.அவர்கள் அடிக்கடி கழுவிக் கொடுத்தார்கள் அவர்கள் சரியாக எடுத்தாலும் இவர்கள் விட்டாதானே.இப்படி பம்பலும் குறும்புமாய்த் தான்.ஆனால் கடமை தவறியதில்லை.சமையலில் அலட்சியம் இருந்தது இல்லை. நீண்டகாலஓட்டத்தின்பின் ஒரு நாள் தலைவர் கூறுகிறார்-என்ன கடமையாக இருந்தாலும் அதைப்பொறுப்போற்றுச் செய்யப்பின் நிற்கக் கூடாது. கடமையில் உயர்ந்து தாழ்ந்தது என்றில்லை ஆரம்பகாலத்தில் ஒருமுறை எமது புதிய பயிற்சி முகாம் ஒன்றில் எல்லோரும் வேலைகள் பங்கிட்டு நிர்வாகத்தைச் சீர் செய்து கொண்டு இருந்தவேளை-கிட்டுதானே முன்வந்து அனைவருக்குமான சமையல் வேலையைப் பொறுப்பெடுத்து செய்தார். புதியபோராளிகளுக்கு தலைவர் எடுத்துச் சொல்லும் விடயத்தை அன்று நாங்கள் நேரே கண்டோம்.அது எமக்கு போராட்டம் பற்றியும் ஒரு பாடத்தை வித்தியாசமான முறையில் எடுத்துச் சொல்லியது .கிட்டண்ணை வேலைகள் பொறுப்பேற்பதிலும் அந்தஸ்தினை தரத்தினைப் பார்ப்பது இல்லை.ஆனால் அவர் வேலை ஒழுங்கு செய்யும் விதமும் செய்து முடிக்கும் பாங்கும் அந்த வேலைக்கு ஒரு அந்தஸ்தினை உயர்தரத்தினை ஏற்படுத்திவிடும் என்பதே உண்மை. கிட்டண்ணை இறுதியாக நாட்டைவிட்டுப் புறப்படும்போது காலத்தில் அவர் மிகவும் நொந்து போயிருந்தார்.இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட தன்னையும் சக போராளிகளையும் விடுவிக்கும்படி சிறையில் உண்ணாவிரதம் இருந்ததும் அதனைத் தொடர்ந்து அவர் யாழ்நகரில் விடுவிக்கப்பட்டதும் அதன் பின்னர் அவர் மணலாற்றுக் காடு சென்று தலைவருடன் இணைந்து கொண்டதும் தெரிந்தவைதான்.தன்னுடன்இறுதிவரை துணைநின்ற போராளிகள் சிறையில் வாடுவதையும் இந்தியர்கள் தன்னைமட்டும் விடுவித்துவிட்டு தன்தோழர்களை சிறையில் வாட்டுவதையும் சொல்லிச் சொல்லி வேதும்புவார் என்ரை கோஸ்டி எல்லாத்தையும் என்னட்டை இருந்து பிரிச்சுப் போட்டாங்கள் மச்சான் என்று சொல்லும்போது அந்த வீரனின் நெஞ்சின்ஈரம் கண்களில் வந்து நிற்கும்.கிட்டண்ணை சர்வதேச தொடர்பாளராக நாட்டை விட்டுப் புறப்படுவது என்பது முடிவு செய்யப்பட்டு விட்டது.எந்த வேலையாக இருந்தாலும் பொறுப்பேற்க வேண்டும் என்ற அவரது வழமையான நடைமுறைக்கு சோதனையாக வந்தது இம்முடிவு.எங்கோ ஒரு ஜரோப்பிய நாட்டில் எம் தாயக மண்ணை விட்டு வெகு தொலைவில் தான் உயிராய் நேசித்த போராளிகளை விட்டுப் பிரிந்து ..தன் மக்களை விட்டுப்பிரிந்து தாய் தந்தையாய் தன்னை வளர்த்த தலைவரை விட்டுப்பிரிந்து.... நினைத்து நினைத்துக் கலங்கினார். மணலாற்றுக்காடு.நான் அப்போது யாழ் மாவட்ட நிர்வாகத்தை பானுவிடம் ஒப்படைப்பதற்காக யாழ்ப்பாணம் புறப்பட இருந்தேன்.எம்மிடையே நீண்ட பிரிவு வரப்போகிறது என்பது தெரிகிறது.சிறிய வட்டக் கொட்டிலில் வைத்து கதைக்கத் தொடங்கினார்.இயக்கத்தில் ஒவ்வொருவரும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றி தலைவரின் எண்ணங்களுக்கு நாம் எப்படி செயல் வடிவம் கொடுக்க வேண்டும் என்பது பற்றி எமது போராட்டத்திற்காக என்ன வேலை ஒப்படைக்கப்பட்டாலும் அதில் தீவிரமாக ஈடுபட வேண்டும் .எமது கடமையை மேலும் மேலும் சிறப்பாகச் செய்வதற்கு வேண்டிய சகல முயற்சிகளிலும் இறங்க வேண்டும் எனக்கு என்ன வேலை எண்டாலும் செயவன் எங்களின்ரை பெடியளின் உடுப்பைத் தோய்த்து மடிக்கும் வேலை எண்டாலும் செய்வன்.அதை எப்படி வெள்ளையாய் தோய்ப்பது என்று ஆராய்ச்சி செய்வேன்.எனக்கு இது பிரச்சனை இல்லை. எனது பொறுப்பு மாற்றத்திற்காக சொன்னாரா?அல்லது தனது புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதில் தனது மனப் போராட்டத்திற்கு தனக்குத் தானே சொன்னாரோ தெரியாது. அவர் சொல்லிகொண்டே இருக்கின்றார்.தூரத்தே கேட்கும் சில் வண்டுச் சத்தத்தைவிட காடு நிசப்தமாய் இருக்கிறது நீண்ட கனத்த மௌனத்தின் பின் எங்கடை சனத்தையும் இந்த மண்ணையும் விட்டுட்டுப் போகப் போறன் மச்சான் இனி எந்தக் காலமோ சொல்லி முடிக்காமல் குமுறிக் குமுறிக் அழத் தொடங்கினார்.எமது தாயகத்தின் மீது எமது மக்களின் மீது எமது விடுதலைப் போராட்டத்தின் மீது எமது தலைவர் மீது அவர் வைத்திருந்த பாசம் பற்று அளவிடமுடியாதது ச.பொட்டு மாசி- 1993 இதழ் 11 வெளிச்சம் இதழில் வெளியானது.
  20. கீழடி நாகரிகம்: ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வு நடந்த இடம் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா? #GroundReport பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய தொல்லியல் துறையால் அகழ்வாய்வு செய்யப்பட்ட ஆதிச்சநல்லூர் கிராமத்தில் இருந்து பல முதுமக்கள் தாழிகள் மற்றும் மண்டைஓடுகள் கண்டெடுக்கப்பட்டு ஒரு தசாப்தத்திற்கு பிறகும் கண்டுபிடிப்புகள் உள்ளூரில் காட்சிப்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்னர் நூற்றுக்கணக்கான எலும்புக்கூடுகள், மண்டைஓடுகள் மற்றும் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்ட ஆதிச்சநல்லூரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு குறித்த முதல்கட்ட அறிக்கைகூட மத்திய அரசு வெளியிடாமல் உள்ளது என்கிறார்கள் பண்பாட்டு ஆர்வலர்கள். 'மத்திய,மாநில அரசுகளின் கவனமின்மை' தமிழக அரசால் ரூ.22லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள முதுமக்கள் தாழி தகவல் மையம் பயன்பாடு இல்லாமல், மதுஅருந்தும் இடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதை நேரில் பார்த்தபோது அறிந்துகொள்ள முடிந்தது. பிபிசிதமிழ் செய்திக்காக ஆதிச்சநல்லூர் கிராமத்தில் உள்ள அந்த மையத்திற்கு நாம் சென்றபோது அந்த மையத்தின் வெளிப்புற கதவுகள் திறந்தே இருந்தன. பாதுகாவலர் யாரும் இன்றி, பயன்பாட்டில் இல்லாத முதுமக்கள் தாழி மையத்தின் ஜன்னல் திறந்து இருந்தது. அதன் வழியாக பார்த்தபோது, சில உடைந்த பொருட்கள் அந்த அறையில் சிதறிக்கிடந்தன. முதுமக்கள் தாழி மையத்தின் தரை தளத்தில் மது பாட்டில்கள் கிடந்தன . மாலை நேரத்தில் சிலர் அந்த மையத்தில் வந்து மது அருந்துவதாகவும் உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். Image caption ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழி மையம் கீழடி விவகாரத்தில் அக்கறை காட்டுவதாக சொல்லும் தமிழக அரசு, ஆதிச்சநல்லூரை மறந்துவிட்டது என்கிறார் சமூக ஆர்வலர் ஜபார். ''முதுமக்கள் தாழி மையம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. ஒரு ஊரில் கிடைத்த பொருட்களை அந்த ஊரில் காட்சிப்படுத்தவேண்டும் என்பது விதி. பல ஆண்டுகள் ஆன பின்னரும் அதற்கான முயற்சிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கது. ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழிகள் காட்சிப்படுத்தப்பட்டால், இங்குள்ள மாணவர்களுக்கும் பயனளிக்கும் மையமாக இந்த இடத்தை மாற்றமுடியும்,'' என்றார். மாநில தொல்லியல் துறை அமைச்சரின் பதில் தொல்லியல் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜனிடம் கேட்டபோது உடனடியாக அந்த மையத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். ''முதுமக்கள் தாழி மையம் இருக்கும் நிலையை உணர்த்தும் படங்களை அனுப்புங்கள். உடனடியாக இந்த விவகாரத்தை கவனிப்பேன். தமிழகம் முழுவதும் அகழ்வாய்வு பணிகளில் கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்தும் வேலை நடந்துவருகிறது. நிச்சயம் இதை சரிசெய்யலாம்,'' என்று அமைச்சர் பாண்டியராஜன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார் ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கிய அகழ்வாய்வு ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு நடத்திவரும் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆதிச்சநல்லூரில் 1902ல் அலெக்சாண்டர் ரியா என்பவரால் அகழ்வுப் பணிகள் தொடங்கியது என்றார். ''ஆங்கிலேயர் காலத்தில் இருந்து இன்றுவரை உலகளவில் ஆதிச்சநல்லூர் பற்றி அறிந்துகொள்ள பலரும் ஆர்வமுடன் உள்ளனர். இந்த கிராமத்தில் கிடைத்த தொல்பொருட்கள் சிலவற்றை பெர்லின் நகரத்திற்கு ஒரு தொல்லியல் நிபுணர் கொண்டுசென்று அங்கு காட்சிப்படுத்தியுள்ளார். ஆனால் இந்தியாவில், அகழ்வு பணிகள் முடிந்து பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் கூட மத்திய அரசின் தொல்லியல் துறை முதல்கட்ட அறிக்கையைக்கூட வெளியிடவில்லை,'' என்றார் காமராசு. அகழ்வுப் பணிகளுக்காக 114 ஏக்கர் நிலம் ஆதிச்சநல்லூர் கிராமத்தில் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறிய அவர், ''2004 மற்றும் 2005ல் மத்திய அரசு நடத்திய அகழ்வு பணிகளில் என்ன தெரியவந்தது என்று எந்தத்தகவலும் வெளியிடப்படாமல் இருப்பதைக் சுட்டிக்காட்டி வழக்கு தொடர்ந்துள்ளேன்,'' என்றார். தொடர்ந்துள்ளேன்,'' என்றார். அறிக்கை சமர்ப்பிக்க ஏன் தாமதம்? அகழ்வுப்பணிகளை மேற்கொண்ட அதிகாரி சத்யமூர்த்தியை அணுகினோம். அவர் தான் ஓய்வு பெற்று பத்தாண்டுகள் ஆகின்றன என்றும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முதல் கட்ட கண்டுபிடிப்புகள் பற்றிய ஆவணத்தை தொல்லியல் துறையில் சமர்ப்பித்துவிட்டதாக கூறினார். அகழ்வாய்வு ஆவணங்களை தயாரிப்பதில் இருந்த தாமதம் பற்றிக்கேட்டபோது, ''ஆதிச்சநல்லூரில் அகழ்வு பணிகளின்போது நூற்றுக்கணக்கான எலும்புக் கூடுகள் மற்றும் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. எலும்புக்கூடுகளை ஆய்வு செய்து அதன் காலத்தை நிர்ணயம் செய்தவற்கு இந்தியாவில் நிபுணர்கள் இல்லாத காரணத்தால் இந்த ஆய்வு தகவல்களை வெளியிட தாமதம் நேர்ந்தது. நான் அனுப்பியுள்ள ஆவணத்தை சரிபார்க்க வெளிநாடுகளில் உள்ள நிபுணர்களிடம் அனுப்பியுள்ளார்கள்,'' என்று சத்யமூர்த்தி கூறினார். அகழ்வாய்வில் கிடைத்த துளையிட்ட மண்டைஓடு சத்யமூர்த்தி அகழ்வு செய்து கண்ட பொருட்கள் பற்றி கேட்டபோது,''ஆதிச்சநல்லூரில் இருந்தவர்கள் பலவகையான இனக்குழுக்களை சேர்ந்த மக்கள் என்றும் அவர்கள் அருகில் இருந்த துறைமுக நகரத்தில் வணிகர்களாக இருந்திருக்க வாய்ப்புள்ளது என்று தெரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் இதுபோன்ற தகவல்களை ஆராய நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள்,'' என்றார் சத்யமூர்த்தி. அவர் மேலும் ஐதராபாத்தில் உள்ள நரம்பியல் மருத்துவர் ராஜா ரெட்டி ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டை ஓடு ஒன்றில் துளை இடப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்கு சான்று இருப்பதாக கூறியுள்ளார். இந்திய தொல்லியல் துறையின் சென்னை அலுவலகத்தில் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பதில் உள்ள தாமதத்திற்கான காரணங்களைக் கேட்டபோது, அதற்கான காரணங்கள் எதையும் குறிப்பிடாமல், ஆய்வு அறிக்கை ஒய்வு பெற்ற அதிகாரி சத்தியமூர்த்தியிடம் உள்ளதாக மூத்த அதிகாரி ஏஎம்வி சுப்ரமணியம் தெரிவித்தார். மேலும் முதல்கட்ட தகவல்கள் தொல்லியல் துறையின் ஆண்டறிக்கை 2003-04, 2004-05 ஆவணங்களில் இருப்பதாக கூறினார். ஆய்வு குறித்த தகவல்களை சத்தியமூர்த்தியிடம்தான் கேட்கவேண்டும் என்றும் தெரிவித்தார். ஆனால் ஓய்வுபெற்ற அதிகாரி சத்யமூர்த்தி ஆய்வறிக்கை தன்னிடம் இல்லை என்றும், அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன என்றும் கூறினார். கடந்தாண்டு பிரசுரமான கட்டுரையை மீண்டும் பகிர்ந்துள்ளோம் https://www.bbc.com/tamil/india-41934390
  21. கீழடி - சிந்து சமவெளி - சங்க இலக்கியம்: இணைக்கும் புள்ளி எது? விவரிக்கிறார் ஆர். பாலகிருஷ்ணன் கீழடி அகழாய்வு முடிவுகள் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்திருக்கின்றன. இந்த நிலையில், சென்னை ரோஜா முத்தைய்யா நூலகத்தில் உள்ள சிந்துவெளி மையத்தின் கௌரவ ஆலோசகரும் சிந்துவெளி தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வருபவருமான ஆர். பாலகிருஷ்ணனிடம் கீழடி ஆய்வு முடிவுகளின் முக்கியத்துவம் குறித்து பேசியினார் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன். பேட்டியிலிருந்து: கே. கீழடி முடிவுகள் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. தற்போது தமிழக அரசு வெளியிட்டிருக்கும் முடிவுகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? ப. இப்படி பரபரப்பாக விவாதிக்கப்படுவதற்குக் காரணமே, சமீப காலமாக இம்மாதிரி அகழாய்வு முடிவுகள் எதுவும் வெளிவரவில்லை என்பதுதான். ஆதிச்ச நல்லூரில் 1904ல் அலெக்ஸாண்டர் ரீ ஆய்வு மேற்கொண்டதற்குப் பிறகு, மீண்டும் 2004ல்தான் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதனால், அதனுடைய விரிவான விளக்கங்கள் யாருக்கும் தெரியவில்லை. ஆனால், கீழடி துவக்கத்திலிருந்தே பொதுமக்களின் கவனத்தை ஈர்த்திருப்பதால், இப்போது வெளியாகியிருக்கும் முடிவுகள் எல்லோரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறது. 2010ல் கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்போலா முன்பாக நான் சிந்துவெளி தொடர்பாக ஒரு ஆய்வுக்கட்டுரையை முன்வைத்தேன். Image caption ஆர். பாலகிருஷ்ணன் கொற்கை - வஞ்சி - தொண்டி போன்ற தமிழகத்தில் உள்ள இடப்பெயர்கள், சிந்துவெளிப் பகுதியில் அடையாளம் தெரியாத இடப்பெயர்களாக இப்போதும் இருப்பதைக் கண்டறிந்து, என்னுடைய ஆய்வை அப்போது முன்வைத்தேன். அஸ்கோ பர்போலா, சங்காலியா, ஐராவதம் மகாதேவன், சவுத்வர்த் ஆகிய அறிஞர்கள் ஏற்கனவே இடப்பெயர்களை வைத்து சிந்துவெளி ஆய்வுகளை நடத்த முடியும் எனக் கூறியவர்கள்தான். அதைத்தான் நானும் பின்பற்றினேன். அப்போதுதான் கொற்கை - வஞ்சி - தொண்டி இடப்பெயர்கள் இருந்தன. ஆனால், அப்போதும்கூட வெறும் இடப்பெயர் சார்ந்த ஒரு ஆய்வாகத்தான் இது இருந்ததே தவிர, அகழ்வாராய்ச்சி சார்ந்த ஆதாரம் ஏதும் இருந்திருக்கவில்லை. அம்மாதிரியான ஒரு ஆதாரத்தை கீழடி கொடுத்திருக்கிறது. கே. கீழடியையும் சிந்து சமவெளி நாகரிகத்தையும் நீங்கள் எப்படி தொடர்புபடுத்துகிறீர்கள்? ப. சிந்து சமவெளி நாகரீகத்தின் முதிர்ச்சியான காலகட்டம் கி.மு. 2500. அது நலிவடைய ஆரம்பிப்பது கி.மு. 1900 காலகட்டத்தில். இப்போது கீழடியில் கிடைத்த தமிழி என்ற தமிழ் பிராமி எழுத்து கிட்டத்தட்ட கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆதிச்சநல்லூரில் செய்யப்பட்ட தெர்மோலூமிசென்ஸ் உள்ளிட்ட ஆய்வுகளில் அது கி.மு. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டிருக்கிறது. நாம் சங்ககாலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டு என வரையறுக்கிறோம். அதிலிருந்துதான் தமிழகத்தில் வரலாற்றுக் காலம் துவங்குகிறது. இப்போது ஒரு கேள்வி நியாயமாகவே எழுகிறது. சிந்துச் சமவெளி நாகரிகம் நலிவடைந்தது கி.மு. 1,900ல். தமிழக வரலாற்றுக் காலம் கி.மு. 600ல் துவங்குவதாக வைத்துக்கொள்வோம். அப்படியானால் கி.மு. 1,900க்கும் கி.மு. 600க்கும் இடையில் சுமார் 1,300 ஆண்டுகால இடைவெளி இருக்கிறது. அதேபோல, மொஹஞ்சதாரோ - ஹரப்பா போல, குஜராத்தில் சிந்துவெளி நகரங்களாக தேசல்பூர், லோதல், தோலாவிரா ஆகிய இடங்கள் இருக்கின்றன. அதற்குத் தெற்கே மகாராஷ்டிராவில் தைமாபாத் என்ற இடம் இருக்கிறது. 1960களின் துவக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இடம்தான் சிந்துவெளி நாகரிகத்தின் தெற்கு எல்லையாகக் கருதப்பட்டது. அதற்குத் தெற்கே சிந்துவெளி தொடர்பாக எந்த இடமும் இதுவரை கண்டறியப்படவில்லை. சிந்துவெளி லட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்த இடம். அவர்கள் எங்கே போனார்கள் என்பது முக்கியமான கேள்வி. அந்த நாகரீகம் ஏன் அழிந்தது, எப்படி அழிந்தது என்ற விவாதம் இப்போது தேவையில்லை. ஆனால், அங்கு வாழ்ந்தவர்கள் என்ன ஆனார்கள்? சிலர் அங்கேயே தங்கியிருந்திருப்பார்கள். சிலர் வேறு இடங்களுக்குப் போயிருப்பார்கள். வேறு மொழிகளைப் பேச ஆரம்பித்திருப்பார்கள். வேறு பண்பாடுகளைக் கடைப்பிடிக்க ஆரம்பித்திருப்பார்கள். அப்படி வெளியேறியவர்கள் அப்போதிருந்த அடையாளங்களைத் தொடர்ந்து தக்கவைத்திருப்பார்கள். அல்லது எடுத்துப் போயிருப்பார்கள். ஆனால், கட்டடங்களைஅவர்களால் எடுத்துச் சென்றிருக்க முடியாது. நினைவுகளையும் பெயர்களையும்தான், குறிப்பாக இடப்பெயர்களை எடுத்துப்போயிருப்பார்கள். நம்பிக்கைகள், பண்பாட்டுக் கூறுகள் ஆகியவையும் மாறாமல் இருந்திருக்கும். இந்தியாவில் ஆராய்ச்சியைப் பொறுத்தவரை இரண்டு விஷயங்கள் புரியாத புதிராக இருக்கிறது. முதல் கேள்வி, சிந்து வெளி மக்கள்பேசிய மொழி என்ன, அவர்கள் யார், அவர்கள் நாகரிகம் எப்படி அழிந்தது? இரண்டாவது கேள்வி, இந்தியாவைப் பொறுத்தவரை அவ்வளவு முக்கியமான கேள்வி இல்லையென்றாலும் தமிழர்களுக்கு முக்கியமான கேள்வி. தமிழர்களுக்கு எப்போதுமே தம்முடைய தோற்றம், தாம் எங்கிருந்து வந்தோம் என்ற கேள்வி இருந்துகொண்டேயிருக்கிறது. சிலர் மத்திய தரைக்கடல் என்று சொல்வார்கள். சிலர் குமரிக் கண்டம், லெமூரியாக் கண்டம் என்று சொல்வார்கள். ஆனால், தோற்றம் குறித்து தமிழர்களிடம் ஒரு கூட்டு மனநிலை இருந்துகொண்டே இருக்கிறது. முதல் சங்கம், கடைச் சங்கம், கடற்கோள், அழிவு, புலம்பெயர்வு என தங்கள் தோற்றம் குறித்த கேள்வி அவர்களுக்கு இருந்துகொண்டே இருக்கிறது. சிந்துவெளி எப்படி அழிந்தது, தமிழர்கள் எங்கிருந்து வந்தார்கள் ஆகிய இரண்டு கேள்விகளுமே வெவ்வேறான, தொடர்பில்லாத கேள்விகளைப் போல இருக்கின்றன. ஆனால், என்னைப் பொறுத்தவரை இந்த இரண்டு கேள்விகளுமே ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இதில் ஒரு புதிருக்கு தெளிவான விடை கிடைத்தால், இன்னொரு புதிருக்கும் விடை கிடைத்துவிடும். கே. இந்த ஆய்வு முடிவுகளை வைத்து, சங்க காலம் மூன்று நூற்றாண்டுகள் பின்னோக்கிச் செல்வதாகச் சொல்லப்படுகிறது. அவ்வாறு எப்படிச் சொல்ல முடியும்? ப. நாம் வரலாற்றுக் காலம், வரலாற்றுக்கு முந்தைய காலம் எனப் பிரிப்பது எழுத்து தோன்றியதைவைத்துதான். எழுத்தின் தோற்றம்தான் இரண்டையும் பிரிக்கிறது. தமிழகத்தில் வரலாற்றின் துவக்க காலம் என்பது தமிழ் பிராமி என்ற தமிழி எழுத்துகள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்ற கருதுகோள் இருந்தது. சங்க இலக்கியத்தையும் இந்த காலகட்டத்தைச் சேர்ந்ததாகத்தான் கருதினார்கள். ஆனால், இம்மாதிரி ஒரு இலக்கியம் எழுதப்படுவதற்குப் பின்னணியில் ஒரு சிறப்பான மரபு இருந்திருக்க வேண்டும். தொல்காப்பியத்தில் பல நூல்கள் மேற்கோள் காட்டப்படுகின்றன. அந்த நூல்கள் நமக்கு கிடைக்கவில்லை. ஒரு பெரிய இலக்கிய மரபு இருந்தால்தான் தொல்காப்பியம் போன்ற ஒரு நூலை எழுத முடியும். சங்க இலக்கியம்கூட திடீரெனத் தோன்ற முடியாது. சங்க இலக்கியத்தில் சொல்லப்படுவது நிகழ்காலப் பதிவுகள் அல்ல. கடையேழு வள்ளல்களைப் பற்றிப் பேசுகிறோம் என்றால், அவர்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்ததாக அர்த்தமல்ல. சமகாலப் பதிவாகவும் இருந்திருக்கலாம். அல்லது அதற்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த நினைவுகளாகவும் இருந்திருக்கலாம். ஆக, அந்த நிகழ்வுகளுக்கு, அது பற்றி இலக்கியத்திற்கு வயதை நிர்ணயிப்பது மிகக் கடினம். இப்போது கீழடியில் கிடைத்த பொருட்கள்,குறிப்பாக எழுத்துகள் கிடைத்த அதை படிவத்தில் கிடைத்த சில பொருட்கள் கரிம ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு அவற்றின் வயது கி.மு. 580 எனக் கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே எழுத்தறிவு இருந்த காலம் அல்லது சங்க காலம் என்பது கங்கைச் சமவெளியில் வரலாறு துவங்கிய காலத்திற்கு சமமாக இருக்கிறது. சிந்து சமவெளி நாகரிகத்தின் தொடர்ச்சியை இந்தியாவில் எந்த இலக்கியத்தில் அதிகமாக பார்த்தறிய முடியும் என்ற கேள்வியை முன்வைத்தால், அதாவது சிந்துவெளி தொடர்பான நினைவுகளைக் கொண்ட இலக்கியம் எங்கிருக்கிறது என்று பார்த்தால் சங்க இலக்கியத்தில்தான் இருக்கிறது. சங்க இலக்கியத்தைப் போல நகரங்களைக் கொண்டாடிய இலக்கியம் வேறு இல்லை. நகர வாழ்க்கை மட்டுமல்ல, ஒரு வகையான பல்லின மக்கள் சேர்ந்து வாழக்கூடிய ஒரு வாழ்க்கை, கடல் வணிக மரபு, தாய்த் தெய்வ வழிபாடு, விளையாட்டுக்கான முக்கியத்துவம் ஆகியவை அந்த நாகரீகத்தின் குணாதிசயங்களைக் குறிப்பிடும் குறீயீடாக நம் முன் நிற்கின்றன. அப்படி சிந்துவெளிக்கென்று சில விஷயங்களை நாம் அடையாளமாகக் குறிப்பிட்டால், அந்த நான்கைந்து விஷயங்கள் காத்திரமாகப் பேசப்பட்டது சங்க இலக்கியத்தில்தான். அதற்குப் பிறகு இதுபோன்ற குணாதிசயங்களுடன் பொருட்கள் கிடைப்பது கீழடியில்தான். அதனால்தான் சிந்துச் சமவெளி - சங்க இலக்கியம் - கீழடி ஆகிய மூன்றையும் ஒரு புள்ளியில் இணைக்கிறோம். பத்தாண்டுகளுக்கு முன்பாக கொற்கை - வஞ்சி - தொண்டி குறித்துப் பேச ஆரம்பிக்கும்போது இப்படி கீழடி போல ஒரு இடம் கிடைக்குமென யாரும் நினைக்கவில்லை. தவிர, கீழடி கிடைத்திருக்கும் இடத்தைப் பார்ப்போம். இந்த இடம் மதுரைக்கு அருகில் இருக்கிறது. மதுரை ஒரு சாதாரணமான நகரமல்ல. சங்க இலக்கியத்தில் மதுரைக் காஞ்சி என ஒரு தனி இலக்கியம் இருக்கிறது. அதில் மட்டுமல்லாமல் சங்க இலக்கியத்தின் பல இடங்களில் மதுரையும் நான்மாடக் கூடலும் பேசப்படுகிறது. பரிபாடல் வைகையைப் பற்றிப் பேசுகிறது. தமிழுக்கும் மதுரைக்கும் இடையிலான தொடர்பு சங்க இலக்கியத்தில் பேசப்படுகிறது. சங்கப் புலவர்களின் பெயர்கள் ஊர்களை வைத்தே அறியப்பட்டன. அப்படி அதிக புலவர்கள் இருந்தது மதுரையில்தான். "மாங்குடி மருதன் தலைவன் ஆக, - உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின் புலவர் பாடாதுவரைக என் நிலவரை" என புறநானூறில் ஒரு பாடல் வருகிறது. அப்படியானால், ஒரு புலவரை தலைவனாக வைத்து மற்ற புலவர்கள்கூடி, கவிதைகள் குறித்து பேசுவது, விவாதிப்பது என்பது சங்க இலக்கியத்தில் பதிவாகியிருக்கிறது. மதுரையைச் சுற்றி நிறைய இடங்களில் தமிழ் - பிராமி கல்வெட்டுகள் கிடைத்திருக்கின்றன. அந்த நகரம் இடைக்கால இலக்கியத்திலும் பக்தி இலக்கியத்திலும் வருகிறது. ஆகவே அந்த நகரத்திற்கு 2600 வருட தொடர்ச்சி இருக்கிறது. அப்படி ஒரு நகரத்திற்கு அருகில் அகழாய்வில் ஒரு நகர நாகரீகம் கிடைப்பது சாதாரணம் கிடையாது. ஆகவே, நம் தொன்மத்திலிருக்கும் சில மரபுகளை இந்த ஒற்றுமை இணைக்கிறது. அதுதான் இதில் முக்கியம். கே. கீழடியில் பெரும் எண்ணிக்கையில் பானை ஓடுகளில் கீறல்கள் கிடைத்திருக்கின்றன. 1001 பானை ஓடுகள் இப்படிக் கிடைத்திருக்கின்றன. இதற்கு என்ன முக்கியத்துவம்? ப. எழுத்து வடிவத்தை எடுத்துக்கொண்டால், இந்தியத் துணைக் கண்டத்திலேயே மிகப் பழைய எழுத்துவடிவம் சிந்துவெளி எழுத்துவடிவம்தான். சிந்துவெளி எழுத்துகளை இன்னும் நம்மால் படிக்க முடியவில்லை. பொதுவாக, படிக்க முடிந்த எழுத்துகளுக்கு அருகில், படித்தறிய முடியாத எழுத்துகள் கிடைத்தால், இதைவைத்து அதைப் படிக்க முடியும். சுமேரியாவில் அப்படித்தான் படிக்க முடிந்தது. ரொஸட்டா ஸ்டோன் என்ற இருமொழி கல்வெட்டின் உதவியுடன் அவை படிக்கப்பட்டன. ஆனால், சிந்துவெளியில் அப்படி ஒரு விஷயம் கிடைக்காததால், சிந்துவெளியைப் படிக்க முடியவில்லை. அதற்கடுத்து, அசோகன் பிராமியும் தமிழ் பிராமியும் கிடைத்திருக்கின்றன. இவற்றைப் படிக்க முடியும். இவை இரண்டுக்கும் நடுவில் ஒரு இணைப்புச் சங்கிலி இருந்திருக்க வேண்டும். அவைதான் பானையில் செய்யப்பட்ட கீறல்கள் (Graffiti markers). இந்தக் கிறுக்கல்கள் இரண்டுவிதமாக இருக்கும். பானையைச் செய்தவர் எழுதியிருப்பார். அது பானை ஈரமாக இருக்கும்போதே எழுதப்பட்டிருக்கும். வாங்கியவர் எழுதியிருந்தால், பானை சுடப்பட்ட பிறகு எழுதப்பட்டிருக்கும். கீழடியில் கிடைத்திருப்பது இரண்டாவது வகையைச் சேர்ந்தது. அப்படி எழுதக்கூடியவர்கள் நிறையப் பேர் இருந்திருக்க வேண்டும். அவர்கள் பெரிய அளவில் கற்றறிந்தவர்களாகவோ, புலவர்களாகவோ இருந்திருக்க வேண்டியதில்லை. சாதாரண மக்களாகவும் இருக்கலாம். இந்த பானைக் கீறல்களை சிந்துவெளி முத்திரைகளுக்கும் தமிழ் பிராமி எழுத்துகளுக்கும் இடையிலான ஒரு இணைப்புச் சங்கிலியாக நாம் பார்க்க முடியும். இந்தப் பானைக் கீறல்களில் சிந்துவெளியில் உள்ள கீறல்களைப் போன்ற கீறல்களும் சில பானை ஓடுகளில் கிடைத்திருக்கின்றன. ஆகவே அதன் தொடர்ச்சியாகவும் இதைப் பார்க்க முடியும். மேலும், இம்மாதிரி கீறல்களுடன் கூடிய பானை ஓடுகள், இந்தியாவின் பிற பகுதிகளிலும் தமிழகத்திலும் இலங்கையிலும் கிடைத்திருக்கின்றன. அவற்றில் 75 சதவீதம் தமிழகத்தில்தான் கிடைத்திருக்கிறது. கீழடியில் மட்டுமல்ல, கொற்கை, அழகன் குளம் ஆகியவற்றிலும் இம்மாதிரி பானை ஓடுகள் கீறல்களுடன் கிடைத்திருக்கின்றன. கீழடியில், தமிழ் பிராமி கிடைத்த படிநிலைக்குக் கீழே இவை கிடைத்திருக்கின்றன. ஆகவே, அவை தமிழ் பிராமிக்கு முந்தைய காலமாக இருக்கலாம். ஆகவே இந்தக் கீறல்கள் மிக முக்கியமானவை. கே. கீழடியில் சமய வழிபாடு சார்ந்த பொருட்கள் கிடைக்கவில்லையென ஆய்வறிக்கை கூறுகிறது. ஆகவே அங்கு வாழ்ந்த மக்கள் சமய நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் எனச் சொல்ல முடியுமா? ப. அப்படிச் சொல்ல முடியாது. கீழடியில் அகழாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இடம் 110 ஏக்கர். வைகை நதிக்கரையில் இதுபோல 293 இடங்கள் இப்படி அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் இதுவரை கீழடியில் மூன்று - நான்கு ஏக்கர்கள்தான் தோண்டப்பட்டிருக்கின்றன. மீதியைத் தோண்டும்போது என்ன கிடைக்குமெனத் தெரியாது. இப்போதுவரை வழிபாட்டுக்கூடம் போன்றவற்றுக்கான ஆதாரம் கிடைக்கவில்லை. ஆனால், இது சங்க காலத்துடன் தொடர்புடைய இடம் என்பதால் இதை எச்சரிக்கையுடன்தான் அணுக விரும்புவேன். சங்க கால மக்களை வழிபாடு அற்றவர்கள் எனச் சொல்ல முடியாது. சங்க இலக்கியமே, குறிஞ்சி, முல்லை, மருதம் என ஐவகையாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு இடத்திற்கு ஒரு கடவுள் இருந்தார்கள். தவிர, நடந்து செல்லும் பாதையைப் பாதுகாக்கும் தெய்வங்கள், மரத்தில் இருக்கும் தெய்வங்கள், காட்டில் உள்ள தெய்வங்கள் இருந்தன. பெரும்பாலும் தாய்த் தெய்வ வழிபாடு இருந்தது. இதற்கான ஆதாரம் பிறகு கிடைக்கலாம். ஆனால், நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது இம்மாதிரியான வழிபாடு அந்த சமூகத்தின் மையப்பொருளாக இல்லை என்பதைத்தான். சங்க இலக்கியத்தை முழுதாகப் படித்துப் பார்த்தால், அந்தக் கால வாழ்க்கை என்பது, Celebration of lifeஆகத்தான் இருந்திருக்கிறது. அந்த இலக்கியம் வாழ்க்கையைக் கொண்டாடுகிறது. தினசரி வாழ்வைக் கொண்டாடுகிறது. இப்போது கிடைத்திருக்கும் பொருட்கள் அந்த வாழ்வை உறுதிப்படுத்துகின்றன. ஆனால், எதிர்கால ஆகழாய்வுகள் என்ன சொல்கின்றன என்று பார்க்க வேண்டும். கே. கீழடியில் விளையாட்டுப் பொருட்கள் அதிகம் கிடைத்திருப்பது குறித்து அதிகம் பேசப்படுகிறது. அதில் என்ன முக்கியத்துவம்? ப. அதில் இரண்டு மூன்று விஷயங்கள் இருக்கின்றன. அந்த மக்கள் நிலையான வாழ்வை வாழ்ந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் பொருளாதாரம் உபரிப் பொருளாதாரமாக இருக்க வேண்டும். உள்நாட்டு வணிகம் - வெளிநாட்டு வணிகம் ஆகிய இரண்டுக்கும் கீழடியில் ஆதாரம் கிடைத்திருக்கிறது. ஆகவே, இங்கு வேளாண்மை சார்ந்த, கால்நடை வளர்ப்பு சார்ந்த, வணிகம் சார்ந்த ஒரு பொருளாதாரம் இருந்திருக்க வேண்டும். அதில் உபரி இருந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வரலாம். அப்போதுதான் விளையாட்டிற்கு நேரம் கிடைக்கும். அது நாகரிகத்திற்கான முக்கியமான அடையாளம். சிந்துவெளியிலும் இதுபோல விளையாட்டுப் பொருட்கள் கிடைத்திருக்கின்றன. தவிர, சங்க இலக்கியம் விளையாட்டுகள் குறித்து நிறையப் பேசுகிறது. அதை உறுதிப்படுத்துவது போல இந்தப் பொருட்கள் இருக்கின்றன. கே. கீழடி குறித்துப் பேசும்போது ஆதிச்சநல்லூர் பற்றியும் குறிப்பிடப்படுகிறது. அந்த இடம் தொல்லியல் ரீதியில் எவ்வளவு முக்கியமான இடம்? ப. அலெக்ஸாண்டர் ரீ முதன் முதலில் 1904ல் ஆதிச்சநல்லூரில் அகழாய்வைத் துவங்கியபோது, சிந்துச்சமவெளியே கண்டறியப்படவில்லை. 1920களில்தான் சிந்துவெளியில் ஆர்.டி. பேனர்ஜி, எம்.எஸ். வாட்ஸ் ஆகியோர் அகழாய்வில் ஈடுபட்ட பிறகு, சர் ஜான் மார்ஷல் சிந்துவெளி குறித்த ஒரு அறிக்கையை கொண்டுவருகிறார். அலெக்ஸாண்டர் ரீ அந்த காலகட்டத்தில் அதை ஒரு புதைமேடாகத்தான் பார்த்தார். அதாவது, இறந்தவர்களைப் புதைப்பதற்கான ஒரு இடமாகப் பார்த்தார். ஆனால், அப்போதே அவர் 30 இடங்களில் இங்கு அகழாய்வு மேற்கொள்ள முடியுமென கண்டறிந்தார். ஆனால், அதற்குப் பிறகு 100 வருடம் அங்கு ஏதும் ஆய்வுகள் செய்யப்படவில்லை என்பது ஆச்சரியகரமானது. 2004ல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும், ஆய்வு முடிவு தற்போதுவரை வெளியாகவில்லை. ஆனால், கீழடி, ஆதிச்சநல்லூர் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பார்க்க வேண்டியதில்லை. தமிழகத்தில் உள்ள பல நதிக்கரைகளில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. தமிழக அரசைப் பொறுத்தவரை ஆதிச்சநல்லூரிலும் ஆய்வுகள் நடக்குமெனச் சொல்லியிருக்கிறார்கள். அது மகிழ்ச்சியளிக்கிறது. https://www.bbc.com/tamil/india-49802510
  22. கீழடி நாகரிகம்: பூம்புகார், கொற்கை அடுத்து தமிழக கிரேக்க வணிகத் தொடர்பு குறித்து ஆய்வு செய்ய அரசு முடிவு முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் நான்காம் கட்ட கீழடி ஆய்வு முடிவுகள் பல்வேறு தரப்பிலும் பரபரப்பையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தற்போது நடந்துவரும் ஐந்தாம் கட்ட ஆய்வுகளில் தமிழக தொல்லியல் துறை பல நவீன முறைகளைப் பயன்படுத்தியிருக்கிறது. கடலடி ஆய்வுகளை நடத்தவும் மாநில தொல்லியல் துறை திட்டமிடுகிறது. மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைத்த முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்டன. அங்கே கிடைத்த பொருட்களையும் கட்டட அமைப்புகளையும் வைத்து, கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே நகர்ப்புற நாகரீகம், எழுத்தறிவு, வளர்ச்சியடைந்த கலாச்சாரம் ஆகியவை கீழடி பகுதியில் இருந்ததாகக் கணிக்கப்பட்டிருக்கிறது. தற்போது மாநில தொல்லியல் துறை கீழடியில் ஐந்தாம் கட்ட ஆய்வுகளை நடத்திவருகிறது. இந்த அகழாய்வில் பாரம்பரியமான முறைகளைத் தவிர, அகழாய்வுக்கான சரியான இடங்களைக் கண்டறிய பல புதிய தொழில்நுட்பங்களையும் மாநில தொல்லியல் துறை பயன்படுத்தியுள்ளது. கீழடி கிராமத்தைச் சுற்றி சுமார் 15 சதுர கி.மீ. பரப்புக்கு தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஆங்காங்கே பரவிக்கிக்கின்றன. ஆகவே, எந்த இடத்தில் அகழாய்வை நடத்துவது சரியாக இருக்கும் என்பதைத் தீர்மானிக்க வேண்டியது முதற்கட்டப் பணி. இதற்கு முன்பாக, தரைமேல் நடத்தப்படும் ஆய்வின் (survey) மூலமாகவே இந்த இடங்கள் தீர்மானிக்கப்படும். ஆனால், இந்த முறை அகழாய்வை துவங்குவதற்கு முன்பாக, செயற்கைக்கோள் மூலமாக எடுக்கப்பட்ட படங்கள் ஆராயப்பட்டன. அதற்குப் பிறகு மேக்னடோமீட்டர் (magnetometer)மற்றும் தெர்மோ மேப்பிங் (thermomapping)முறைகளை வைத்து நிலத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்குப் பிறகு நிலத்தை ஊடுருவிச் செல்லும் ரடார் (ground penetrating radar - GPR) ) மூலம் ஆய்வு நடத்தப்பட்டது. முதலில், கீழடி மற்றும் அதனை ஒட்டியுள்ள கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொள்ள முடிவுசெய்யப்பட்டது. இதற்கு முன்பாக மத்தியத் தொல்லியல் துறை நடத்திய ஆய்வில் பானை ஓடுகள், உலோகக் கருவிகள் ஆகியவை கிடைத்திருந்த நிலையில், நிலத்தடியில் உள்ள தனிமங்களை அடையாளம் கண்டுவிட்டு, பிறகு அங்கு அகழாய்வு நடத்த முடிவுசெய்யப்பட்டது. அதன்படி களிமண், பெரஸ் ஆக்ஸைடு ஆகியவற்றைக் கண்டறியும் வகையிலும் நிலத்தடியில் உள்ள சுவர்களை கண்டறியும் வகையிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டன. 450 ஏக்கர் பரப்பில் பத்து முக்கியமான இடங்கள் இதற்காக அடையாளம் காணப்பட்டன. இதற்குப் பிறகு, மும்பையில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் ஜியோமேக்னடிசத்தைச் சேர்ந்த அதிகாரிகள் அந்த இடத்தை மேக்னெடோமீட்டர் மூலம் தரைவழியாக ஆய்வுசெய்தனர். Image caption ஜிபிஆர் ராடார் மூலம் நிலத்தடியை ஆய்வுசெய்யும் அதிகாரிகள் இந்த மேக்னடோ மீட்டர்களை வைத்து, கீழடியில் பூமிக்கடியில் புதைந்திருந்த 350 மீட்டர் நீளச் சுவர் கண்டறியப்பட்டது. இதற்குப் பிறகு நிலத்தடியை ஆராயும் ground penetrating radar (GPR) மூலம், அகழாய்வுக்குச் சரியான இடம் கண்டறியப்பட்டது. இதிலிருந்து கிடைத்த முடிவுகளை வைத்துக்கொண்டு, தற்போது கீழடியில் நடந்துவரும் ஐந்தாம் கட்ட ஆய்வுகளில் கச்சிதமான இடங்களில் அகழாய்வுகள் செய்யப்படுகின்றன. தொடர்ந்து இந்தத் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டுவருவதால், அடுத்தடுத்த ஆய்வுகளில் இன்னும் சிறப்பான முடிவுகளைப் பெற முடியுமென தொல்லியல் துறை நம்புகிறது. கீழடியில் மட்டுமல்லாமல், தற்போது உலகம் முழுவதுமே அகழாய்வுகளைத் துவங்குவதற்கு முன்பாக, உள்ளே புதைந்திருக்கும் சுவர், கட்டட அமைப்புகள், பானைகள், செங்கல்கற்கள், கூரை ஓடுகள், தீமூட்டும் இடங்கள், பாதைகள், நினைவுக் கற்கள் ஆகியவற்றை கண்டறிய இம்மாதிரி மேக்னடோ மீட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. கீழடிக்கு அடுத்து என்ன? தமிழக அரசின் தொல்லியல் துறை வரும் 2019- 20 ஆண்டில் கீழடியிலும் அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் அகழாய்வைத் தொடரவிருப்பதோடு, தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், சிவகளை ஆகிய இடங்களிலும் ஈரோடு மாவட்டம் கொடுமணலிலும் அகழாய்வுகளை நடத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. விரைவிலேயே கடலடி ஆகழாய்வுகளையும் செய்யத் திட்டமிட்டிருக்கிறது. மேலும், வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, விழுப்பரம், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள வரலாற்றுக்கு முந்தைய, பழங்கற்காலத்தைச் சேர்ந்த இடங்கள் எவை என்பதை ஆராய்வதற்கான கள ஆய்வும் இந்த ஆண்டு நடத்தப்படவிருக்கிறது. Image caption மேக்னடோமீட்டர் மூலம் ஆய்வுசெய்ததில் நிலத்தடியில் உள்ள சுவர் கண்டறியப்பட்டது இதுதவிர, தாமிரபரணி ஆற்றின் இரு கரைகளிலும் தொல்லியல் தளங்களைக் கண்டறியும் ஆய்வும் நடத்தப்படவிருக்கிறது. இங்கு இடைக் கற்காலப் பகுதிகள் கண்டறியப்பட்டு, அவற்றில் ஆய்வுகளை மேற்கொள்ள மத்திய தொல்லியல் ஆலோசனை வாரியத்தின் நிலைக்குழு ஒப்புதல் அளித்த பிறகு பணிகள் துவங்கப்படவிருக்கின்றன. மதுரைக்கு அருகில் உள்ள கீழடி பகுதியில் தற்போது ஆய்வுகள் நடந்துவரும் நிலையில், அதற்கு அருகில் உள்ள கொந்தகை, மணலூர், அகரம் போன்ற பகுதிகளிலும் அகழ்வாய்வுப் பணிகளை நடத்த மாநில அரசு திட்டமிட்டிருக்கிறது ஆதிச்சநல்லூரில் தொடரவிருக்கும் ஆய்வு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் நீண்ட காலமாகவே தொல்லியல் ஆய்வுக்கான களமாக அடையாளம் காணப்பட்ட ஒரு இடம். இங்குள்ள புதைமேட்டில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1876ஆம் ஆண்டிலும் 1904ஆம் ஆண்டிலும் அகழாய்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. இதற்குப் பிறகு சமீபகாலத்தில், 2003 முதல் 2005ஆம் ஆண்டுவரை மத்திய தொல்லியல் துறை அகழாய்வுகளை மேற்கொண்டது. இருந்தபோதும் இது தொடர்பான ஆய்வறிக்கை இன்னும் மத்திய தொல்லியல் துறையிடம் சமர்ப்பிக்கவில்லை. இது தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டு, ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே செய்யப்பட்ட அகழாய்வுகளில் முதுமக்கள் தாழிகள், மனித எலும்புகள், வெங்கலப் பாத்திரங்கள், இரும்புப் பொருட்கள், மட்பாண்டங்கள் உள்ளிட்டவை கிடைத்திருக்கின்றன. இந்த நிலையில் ஆதிச்ச நல்லூர் பகுதியில் தொடர்ச்சியாக அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள தொல்லியல் துறை முடிவுசெய்துள்ளது. Image caption நிலத்தடியில் உள்ள களிமண், இரும்பு போன்ற கனமங்களைக் காட்டும் வரைபடம் கடந்த கால ஆய்வுகளில் தொல்லியல் கால மக்கள் புதைக்கப்பட்ட மேடுகளே ஆய்வுக்குள்ளாக்கப்பட்ட நிலையில், தொல்லியல்துறை இனி மேற்கொள்ளவிருக்கும் ஆய்வில், மக்கள் வாழ்ந்த பகுதிகள், தொழிற்கூடங்கள் ஆகியவற்றை நோக்கி இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. கொடுமணலில் மீண்டும் தொல்லியல் ஆய்வு ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டத்தில் நொய்யலாற்றின் கரையில் அமைந்துள்ள கொடுமணல் நீண்ட காலமாகவே தொல்லியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட ஒரு பகுதியாகும். 1985லிருந்தே மத்தியத் தொல்லியல் துறை, மாநில அரசின் தொல்லியல் துறை, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் ஆகியவை அகழ்வுகளைச் செய்திருக்கின்றன. அந்த அகழ்வுகளில் பெருங்கற்காலம், வரலாற்றுத் தொடக்ககாலம் ஆகியவற்றைச் சேர்ந்த பல பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டன. கல்மணிகள், இரும்பு உருக்குப் பொருட்களைத் தயாரிக்கும் தொழிற்கூடங்கள் இங்கு இருந்ததும் கண்டறியப்பட்டது. தமிழ் பிராமி எழுத்துகளுடன் கூடிய பானை ஓடுகளும் இங்கே கிடைத்துள்ளன. அதற்குப் பிறகு, இது தொடர்பான ஆய்வுகள் தொடராத நிலையில், இந்தப் பகுதியில் மீண்டும் ஆய்வுகளை நடத்த மாநில தொல்லியல் துறை முடிவுசெய்துள்ளது. Image caption ஆய்வுகளைத் துவங்குவதற்கு முன்பாக ட்ரோன்கள் மூலம் நிலத்தின் மேற்பரப்பு முழுமையாகப் படமெடுக்கப்பட்டது ஆழ்கடல் ஆய்வுகள் தொல்லியல் மேடுகளில் ஆய்வுகளை மேற்கொள்வது தவிர, ஆழ்கடல் பகுதிகளில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபடவும் மாநில தொல்லியல் துறை முடிவுசெய்துள்ளது. ஏற்கனவே பூம்புகார், கொற்கை, அழகன்குளம், வசவசமுத்திரம் ஆகிய பகுதிகளில் மாநில தொல்லியல் துறையால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில், கிரேக்கம், ரோம், அரபு நாடுகளுடன் தமிழகத்திற்கு இருந்த வணிகத் தொடர்புகளை ஆராயும் வகையில் சங்ககாலம் மற்றும் இடைக்காலங்களில் துறைமுகங்கள் அமைந்திருந்த பகுதிகளில் ஆழ்கடல் ஆய்வுகளை மேற்கொள்ள மாநிலத் தொல்லியல்துறை திட்டமிட்டுள்ளது. கடலியல் தேசிய நிறுவனத்துடன் இணைந்து இந்த ஆய்வுகள் நடத்தப்படவுள்ளன. https://www.bbc.com/tamil/india-49790302
  23. கீழடியில் கண்டெடுக்கப்பட்ட சங்க கால தண்ணீர்த்தொட்டி! கீழடியில் கண்டறியப்பட்ட தண்ணீர்த் தொட்டி போன்ற இடத்தில் நீர் சேகரித்து வீட்டுத் தேவைக்குப் பயன்படுத்தி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தண்ணீர்த்தொட்டி ( ஈ.ஜெ.நந்தகுமார் ) கீழடி 5-ம் கட்ட அகழாய்வுப் பணியில் தற்போது தண்ணீர் தொட்டி கிடைத்துள்ளது. இதை மாணவர்கள் பார்வையிட்டுச் செல்கின்றனர். கீழடி நந்தகுமார் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அடுத்த கீழடியில் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதத்தில், இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் அகழாய்வுப் பிரிவு கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு ஆய்வைத் தொடங்கியது. ஆய்வு மாதிரிகளைக் கரிம வேதியியல் சோதனைக்கு உட்படுத்தியதில் அவை, கி.மு. 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததென உறுதிப்படுத்தப்பட்டன. அதன்பின் அடுத்த, அடுத்த ஆய்வுப் பணிகள் முடிவடைந்து தற்போது 5-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. கீழடி அகழாய்வு நந்தகுமார் கீழடியில் தொன்மையான மனிதர்கள் ஏராளமானோர் கூடி வாழ்ந்ததற்கான முக்கியச் சான்றுகள் கிடைத்துள்ளதாக தொல்லியல்துறை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது மண்பாண்டம் குடுவைகள், தண்ணீர்த் தொட்டிகள், நீர் வழிப்பாதை போன்ற அமைப்பு என ஏராளமான சான்றுகள் கிடைத்துள்ளன. சென்ற வாரம் மழை பெய்தாலும் அகழாய்வுப் பணியில் தொய்வு எதுவும் ஏற்படாமல் மிகத் துரிதமாக அகழாய்வுப் பணியானது நடைபெற்று வந்துகொண்டிருக்கிறது. தற்போது கண்டறியப்பட்ட தண்ணீர்த் தொட்டி போன்ற இடத்தில் நீர் சேகரித்து வீட்டுத் தேவைக்குப் பயன்படுத்தி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. கீழடி அகழாய்வு அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ``தற்போது நடைபெறும் ஆய்வின் முடிவில் மட்டுமே எதையும் கூறமுடியும். சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட தண்ணீர்த் தொட்டி என்று தெரிகிறது. எங்களின் துறைத்தலைவர்கள்தான் வெளிப்படையாகக் கூற அதிகாரம் உள்ளது" என்றனர். https://www.vikatan.com/news/tamilnadu/sangam-era-water-tank-found-in-keezhadi-excavation
  24. கீழடி அகழாய்வில் வெளிநாட்டு அணிகலன்கள்; அகலமான செங்கல் சுவர் கட்டிடம் கண்டுபிடிப்பு சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வில் வெளிநாட்டில் அணியும் அகேட் (agate) வகை அணிகலன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் அங்கு கண்டறியப்பட்ட உறைகிணற்றின் உயரமும் தோண்டத்தோண்ட அதிகரித்து கொண்டே செல்கிறது. கீழடியில் 2015-ல் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. இதில் ஆயிரக்கணக்கான தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. இதை பரிசோதித்ததில் 2,500 ஆண்டுகள் பழமையான நகர நாகரீகம் கீழடியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து மத்திய தொல்லியல்துறை 2 மற்றும் 3-ம் கட்ட அகழாய்வோடு நிறுத்தி கொண்டது. இதையடுத்து தமிழக தொல்லியல்துறை 4-ம் கட்ட அகழாய்வை மேற்கொண்டது. தொடர்ந்து 5-ம் கட்ட அகழாய் ஜூன் 13-ம் தேதி தொடங்கியது. இதுவரை முருகேசன், கருப்பையா, மாரியம்மாள், போதகுரு ஆகியோரது நிலங்களில் 23 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. கடந்த மாதம் மண்பாண்ட ஓடுகள், இரட்டை சுவர், நீளமான சுவர், அகலமான சுவர், கல்லால் செய்யப்பட்ட மணிகள், உறைகிணறுகள், எலும்பாலான எழுத்தாணி உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன. இந்நிலையில் இன்று (புதன்கிழமை) போதகுரு என்பவரின் நிலத்தில் அகலமான செங்கல்களால் கட்டப்பட்ட கட்டிடம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட செங்கல்களைவிட இது அகலமானது. முருகேசன் நிலத்தில் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட உறைகிணற்றின் உயரம் நீண்டு கொண்டே செல்கிறது. இதுவரை 7 உறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு உறையும் ஒன்றரை அடி உயரம் உள்ளன. இதனால் தண்ணீர் பற்றாக்குறையால் அதிக ஆழத்தில் உறைகிணறு அமைக்கப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் இங்கு கிடைத்துள்ள அணிகலன்கள், வடஅமெரிக்கா, தென்அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட கண்டங்களில் உள்ள மலைகளில் வெட்டி எடுக்கப்படும் அகேட் (agate) வகை கல்லில் செய்யப்பட்டவை. இதனால் பழந்தமிழர்களுக்கும், வெளிநாட்டினருக்கும் தொடர்பு இருந்துள்ளது உறுதியாகியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். https://www.hindutamil.in/news/tamilnadu/510503-keeladi-excavation-2.html
  25. 'கீழடி ஆய்வில் சங்க காலமும், திராவிட செழுமையும் தெரிகிறது!' -நெகிழும் ஆய்வாளர் சிவகங்கை மாவட்டம் கீழடியில் இந்திய அகழ்வாராய்ச்சித் துறையினரின் ஆய்வில் புதையுண்ட ஒரு நகரம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஆய்வு மேலும் தொடர்வதற்குள் சட்டச் சிக்கல் எழவே, ஆய்வு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கீழடி ஆய்வின் திட்ட இயக்குநர் என்ன சொல்கிறார் கீழடி அகழ்வாய்வின் தலைமை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணனிடம் கேட்ட போது , "கிபி 300-ம் ஆண்டு தொடங்கி 10-ம் நூற்றாண்டு வரையிலான தடயங்கள் ஆய்வில் கிடைத்திருக்கின்றன. இதைத் பத்திரப்படுத்தி தமிழகத்திலேயே வைக்கதான் அரசிடம் இரண்டு ஏக்கர் நிலம் கேட்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு இதுவரை எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை" என்கிறார். சு.வெங்கடேசன் சொல்வது என்ன கீழடி ஆய்வுகளை தன்னுடைய கட்டுரைகளில் கொண்டு வந்து கொண்டிருக்கும் 'சாகித்திய அகாடமி' விருதாளர் சு.வெங்கடேசன், "கீழடியில் 110 ஏக்கர் நிலத்தில் 50 சென்ட் வரைதான் அகழாய்வு செய்திருக்கிறார்கள்.முழுவதையும் ஆராய்ச்சி செய்ய இன்னும் பத்துமுதல் இருபது வருடங்கள் தேவைப்படும். அதனால் இதில் தமிழக அரசும் தொல்லியல் துறையும் இணைந்து கொள்ள வேண்டியது அவசியம்" என்றார். சென்னை வட்டார தொல்லியல் கண்காணிப்பாளர், ஸ்ரீலட்சுமி , '' கீழடி ஆய்வில் ஏற்பட்டுள்ள தடைகுறித்து,டெல்லி, தலைமை இயக்குனருக்கு தெரிவித்துள்ளோம்; பதிலுக்காக காத்திருக்கிறோம்'' என்கிறார். கீழடி மக்கள் கருத்து என்ன ஆய்வாளர்களுடன் பொதுமக்களும், மக்கள் இயக்க சக்திகளும் கீழடி ஆய்வில் களம் இறங்கியுள்ளனர். அவர்களிடம் பேசியபோது, " கீழடியில் அகழாய்வு செய்துள்ள இடம், தனியாருக்கு சொந்தமானது. அகழாய்வுக்கு பின், தொல் பொருட்களை மட்டும் எடுத்து விட்டு, மீண்டும் நிலத்தை பழையபடியே மூடிக் கொடுப்பதாக, இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை ஒப்பந்தம் செய்துள்ளது.தாங்கள் போட்டுக் கொடுத்த ஒப்பந்தத்தை தாங்களே மீறுவது என்றால், எதிர்காலத்தில் அகழ்வாராய்வுக்கு நிலத்தைக் கொடுப்பதில் பொதுமக்கள் தயங்குவார்கள், கண்டிப்பாக முன்வர மாட்டார்கள் என்ற இக்கட்டான சூழலில் அகழ்வாய்வுத் துறையினர் உள்ளனர்." என்கின்றனர். மு.கருணாநிதியின் அறிக்கை தி.மு.க. தலைவர் கருணாநிதி, "கீழடி ஆய்வின் மூலம் சங்க காலத் தமிழகம் நகர்ப்புற நாகரீகத்தைக் கொண்டதல்ல என்ற கருத்துத் தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த அகழ்வாய்வில் கிடைத்த தமிழ் பிராமி எழுத்துக்கள் கொண்ட பானை ஓடுகளும் மற்றும் தொல்பொருட்களும் தமிழர் நாகரீகத்தின் தொன்மையைப் பறை சாற்றுகின்றன. சிந்து சமவெளி நாகரீகத்தைப் போல் இங்கும் ஒரு நகர்ப்புற நாகரீகம் இருந்ததற்கான தடயங்கள் ஏராளமாகக் கிடைத்துள்ளன. இதுவரை தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் கீழடியில் நடைபெற்றிருக்கும் ஆய்வுதான் மிகச் சிறப்பானது. புதிய தமிழ்ச் சொற்களும் இங்குதான் கிடைத்துள்ளன" என்று கூறியிருக்கிறார். கி.வீரமணியின் அறிக்கை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, "கி.மு. 3-ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.பி.10 ஆம் நூற்றாண்டுவரை தமிழர்கள் எத்தகைய நகர்ப்புற வாழ்க்கையை மேற்கொண்டனர் என்பதற்கான தடயங்கள், ஆய்வில் கிடைத்துள்ளன. தமிழக அரசு அதற்கான நிலம் ஒதுக்கி அதனை அருங்காட்சியகமாக உருவாக்க வேண்டும் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் அதற்கான தேவையான முயற்சியில் ஈடுபடும்" என்று அறிக்கையில் கூறியிருக்கிறார். ஆய்வாளரின் பெருமிதம் கீழடி ஆய்வில் பணியாற்றிய ஓய்வு துணை கண்காணிப்பாளர் கருப்பையாவிடம் பேசியதில், "பெருமையாக, கர்வமாக உணர்கிறோம். நைல் நதி நாகரீகம் போன்று வைகை ஆற்று நாகரீகம் இந்த கீழடியின் மூலம் உலகத்தின் கண்களுக்கு காணக் கிடைத்திருக்கிறது.பிராம்மி எழுத்து ஓடுகள் நிறைய கிடைத்துள்ளது ஒரு வரப் பிரசாதம்தான். வணிகர்கள் வாழ்வியலும், பெருவணிகர்கள் வாழ்ந்ததற்கான தடமும், தொல்காப்பிய இலக்கியம் சார்ந்த விஷயங்களுக்கான ஆதாரங்களும் கீழடியில் கொட்டிக் கிடைத்திருக்கின்றன. தமிழர்களுக்கான தொன்மை நாகரீக வாழ்க்கை திரும்பக் கிடைத்திருக்கிறது, திராவிட செழுமை தெரிகிறது. அரசாங்கம் கை விரித்தாலும், பொதுமக்கள் புரிந்து கொண்டு கை கொடுக்க முன் வந்துள்ளது நெகிழ வைக்கிறது. சங்ககாலம் என்ற ஒன்று இருந்ததற்கான சான்று ஏட்டளவில், எழுத்தளவில் என்பது போய் கண்ணெதிரே காட்சியளிக்கும் ஆவணமாக இந்த கீழடி ஆய்வு நிருபணம் செய்திருக்கிறது. ஆய்வின் ஒவ்வொரு அடியும் நம்முடைய நாகரீகம் பளிச்சிடுவதை காட்டிக் கொண்டே இருக்கிறது. விரைவில் மீண்டும் தொடர்வோம் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. கீழடி புரொஜக்ட் இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தான் கடைசிவரையில் உறுதியாக நின்று "இந்த இடத்தை தோண்டுங்க, விஷயம் இருக்கிறது" என்று சக்சஸ் செய்து கொடுத்தவர். அவரைத்தான் இங்கே பாராட்டியாக வேண்டும். தமிழர் வாழ்க்கையே அல்லவா, திரும்பக் கிடைச்சிருக்கு..." நெகிழ்கிறார் கருப்பசாமி. அன்றே முடிவெடுத்த மெக்காலே இங்கிலாந்து பாராளுமன்றத்தில் 2.2.1835 அன்று மெக்காலே ஆற்றிய உரையில், "இந்தியா வளமான நாடு. தார்மீக மதிப்பும், சிறப்பும் கொண்ட அந்த மக்களின் ஆன்மிக நம்பிக்கை, கலாசார பாரம்பரியம் ஆகியவற்றின் முதுகெலும்பை முறித்தால் அன்றி, அந்த நாட்டை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இயலும் என்று நான் நினைக்கவில்லை. அந்த நாட்டின் பழமையான கல்வி முறையையும் கலாசார முறையையும் மாற்ற வேண்டும் என்று நான் இங்கே முன்மொழிகிறேன். இந்தியர்கள் தங்களது சொந்த நாட்டைவிட அந்நிய நாடே மேல், சொந்த மொழியை விட ஆங்கில மொழியே மேலானது என்று நினைக்கும்போது, அவர்கள் தங்களது சுயமரியாதையையும், கலாசாரத்தையும் இழப்பார்கள். அப்போது நாம் விரும்பியவாறு அவர்களை உண்மையாக மேலாதிக்கம் செய்ய முடியும்" என்று 18-ம் நூற்றாண்டிலேயே தமிழர்களை என்ன செய்யலாம் என்ன முடிவில் உறுதியைக் காட்டிப் பேசியிருக்கிறார். மெக்காலே கல்வித்திட்டமும் இன்னும் மாறவில்லை, நம்முடைய பாரம்பர்ய மாண்பின் மீதான ஈர்ப்பும் நம்மிடம் இல்லை... மக்களிடம் அடிமைப் புத்தி தொடர அரசுகளே முக்கியக் காரணம். http://www.vikatan.com/news/tamilnadu/70376-keezhadi-excavation-and-sangam-era.art
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.