நகர்வலம் …..
எனது முகத்தில் அப்படி என்னதான் வித்தியாசமாக இருக்கின்றதோ நானறியேன். இதனை பற்றி கதை வரும் நேரங்களில் மேடம் வெகு தெளிவாக சொல்வார் " ஏமாளி என்று முகத்தில அப்பிடியே எழுதி ஒட்டி வைச்சிருக்கு , கண்ணை நல்லா துடைச்சிட்டு , ஆடியில வடிவா பாருங்க , தெரியும் " எண்டு ..
வேறொன்றுமில்லை, நீலம் தான் என் நிறம் என்று வானம் பல நாட்களுக்கு பிறகு சற்றே ஞாபகப்படுத்த , காலையில் எழுந்து அண்டை அயல் இடங்களில் சனி காலை என்னதான் நடக்கின்றது என பார்த்து விடலாம் என கிளம்பினேன் .
நடந்து கொண்டிருக்கையில் - நடை பாதை நடப்பதற்கே - எனும் மாநகராட்சியின் அறிவித்தலுக்கு விருந்தாளி நாமாவது மதிப்பு கொடுப்பேமே என்று - நண்பர் ஒருவர் வாட்(செ)ப்பினார்.
என்ன செய்து கொண்டிருக்கிறேன் என வினாவினார் .
நகர்வலம் பற்றி சொன்னேன். அவர் சென்னையில் பலகாலமாக இருக்கும் நண்பரொருவர் .
" இன்றைய பத்திரிகைகள் பார்த்தாயா " - நண்பர் .
"இல்லையே , ஏன் , என்ன விடயம் " - இது நான்
" இல்லை , சென்னை வெள்ளத்தில் நாய்கள் பல செத்து மிதக்கின்றன என்று போட்டிருக்கிறார்கள் , காரணம் தெரியுமோ " - என்று கேட்டார் நண்பர் .
" இல்லையே , தெரியவில்லையே " -நான்
" நடந்து போய்க்கொண்டிருக்கிறேன் என்று சொல்கின்றாயே , கண்ணை விரித்து ஏதாவது வித்தியாசமாக தெரிகின்றதா என்று பார்த்துச் சொல் " என்றார் நண்பர் .
கண்ணை விரித்தேன் , கண்ணாடியைக் கழற்றி துடைத்து மீண்டும் அணிந்து சுற்று முற்றும் பார்த்தேன் .
" ஆட்டோ வேணுங்களா சார் " - இடையில் பூஜை வேளையில் கரடி தொல்லை வேறு.
"இல்லையப்பா , இது வேறு பார்வை " என்று முதல் சொல்லை அவருக்கும் மீதியை எனக்குமாக சொல்லிக் கொண்டு , மீண்டும் மீண்டும் பார்த்தேன் .
கண்ணில் பட்டு வித்தியாசமான காட்சிகள் சில உண்மையிலேயும் மனத்தில் உறைத்தன.
மின் கம்பங்களும் , தந்திக் கம்பங்களும் .
அவற்றின் மீது சகட்டு மேனிக்கு மேலேயும் , கீழேயும் , குறுக்காகவும் , நெடுக்கிலும், பந்து பந்து போன்ற சுருள்களாக கம்பிகள் , வயர்கள் , பல வித நிறங்களில். நடைபாதையை குறுக்கறுத்து வெட்டி நிரப்பப்படாத கிடங்குகளுக்குள் அந்த கம்பிகள் போவதும் வருவதுமான , நமது ஊரில் ( அதாங்க அவுஸ்திரேலியா) காணக்கிடைக்காத காட்சிகள் கண் முன்னே விரிந்து நின்றன.
நண்பனிடம் கண்ட காட்சிகளை பற்றி சொன்னேன் .
' சென்னை வாசி ஆவதற்குரிய ஐம்பது வீத தகுதியை நீ அடைந்து விட்டாய் மகனே " என்ற நண்பர் தொடர்ந்தார் .
" அவற்றின் பக்கத்தில் போகாதே , போனாலும் தொட்டு விடாதே , எல்லாவற்றையும் விட மேலானது மழை காலங்களின் வெள்ளச் சாலைகளில் உல்லாச நடை தவிர்ப்பது" என்றார் நண்பர் .
இப்போதெல்லாம் மின்சக்தி காவு கம்பிகளை நிலத்தின் கீழ் மாற்றிக் கொண்டு வருகிறார்கள். இணைப்புகள் கொடுக்கும் இடங்களில் வரும் பொருத்துக்களை உரிய முறையில் மேற்கொள்ளாமையால் , மழை நேரம் நீர் அந்த பொருத்துகளினுள் உட்புகுந்து மின்கசிவு ஏற்படுகின்றது. மின்கசிவின் வீரியம் அந்த புள்ளியை மையமாக வைத்து ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் இருக்கும் . அந்த வரையறைக்குள் பிரவேசிக்கும் ஆட்களுக்கு ஏற்படும் அனுபவத்தைக் கொண்டு அந்த மின்கசிவை கண்டு கொள்கிறார்கள் . வாயில்லா சீவன்களின் செத்து மிதத்தலை கொண்டும் இதனை அறிந்து கொள்கின்றார்கள் , என்று சொல்லி முடித்தார் நண்பர்.
வேர்த்து விறு விறுத்துப் போனேன் .
"சரியப்பா, கவனமாக இருக்கிறேன்" என்று சொல்லி விட்டு , வீடு திரும்புவோம் என்று பக்கத்து சந்தியை நோக்கி நடந்து வீதியை கடப்பதற்காக நின்றேன்.
"சார் , ஒரு நிமிடம் , இங்கே வருகிறீர்களா " மோட்டார் சைக்கிளில் இருந்தபடி ஆபிஸர் மாதிரி மதிக்கக் கூடிய ஒருவர் என்னை அழைத்தார். சந்தி நோக்கி , கடப்பதற்காக பச்சை விளக்கை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்திருப்பார் போல தெரிந்தது.
‘குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருந்த மின்கம்பிகளை படம் எடுத்ததை பார்த்திருப்பாரோ. இவற்றையெல்லாம் படம் எடுக்கக் கூடாதோ ஒருவேளை’ என்றெல்லாம் யோசித்தபடி அவரை நெருங்கினேன்.
" ஷார்ட்டா சொல்லிடறேன் , நான் ஒரு டயபடிக் பேஷண்ட் சார் , காலையிலே நாஸ்தா பண்ணல இன்னும் , பர்ஸை வேற வீட்டில விட்டிட்டு வந்திட்டேன், ஏதாவது ஹெல்ப் பண்ணினீங்கன்னா நல்லா இருக்கும்" என்றாரே பார்க்கலாம் வாட்டசாட்டமாக இருந்த அந்த ஆபீசர் என்று நான் நினைத்த ஆசாமி.
சிறுவயதில் அம்புலிமாமா ஒழுங்காக வாசிப்பேன் . தன் முயற்சியில் சற்றும் தளராத .. என்று தொடங்கும் வரிகளில் எனக்கு அலாதிப் பிரியம் . அதில் ‘எள்ளி நகைத்தது ' என்றும் ஒரு வார்த்தைத் தொடர் வரும் .
எனக்கு இப்போது கேட்கத் தொடங்கியது.
எள்ளிய நகைப்பல்லஅது ; கெக்கட்டம் விட்டு வரும் சிரிப்பு. மெது மெதுவே ஆரம்பித்து , படிப்படியாக உரப்பு கூடி , எனது மனத்திரையெங்கும் மிகுந்த சத்தத்துடன் எதிரொலித்தது அந்த சிரிப்பு .
என்ன , பழக்கமான சிரிப்பாக இருக்கிறதே என்று குனிந்து பார்த்தால் ,
" கண்ணாடியை கழட்டி, நல்லா துடைச்சு , மீண்டும் போட்டிட்டு, பக்கத்தில இருக்கிற வெள்ளத்திலே உங்கட முகத்தைப் பாருங்க சார் , அங்கே ஏமாளி , அசடு அப்பிடீன்னு எதாவது வார்த்தைகள் உங்கட நெத்தியில எழுதி ஒட்டியிருக்கா எண்டு பாருங்க சார்” எண்டு சொல்லிக் கொண்டே அடக்க இயலாமல் பலத்த சத்தமாக கெக்கட்டம் விட்டு சிரித்துக் கொண்டிருந்தார் மேடம் ...
பொற்கரையோன்,
2 டிசம்பர் 2023