சுதந்திரம் எம் சுவாசம்.
"சுதந்திரம் விரும்பி சுவாசத்தை நிறுத்திய அத்தனை வீரர்களுக்கும் வந்தனம்".
மரத்தினின்று வீழ்ந்த
பழுத்த சருகுகள்
வேருக்கு உரமாகின்றன
மரணித்த வீரனின்
பாச நினைவுகள்
மனதில் தடுமாறுகின்றன
சுதந்திரம் ஒரு பசுஞ்சுனைதான்
அதை நோக்கி நாம் கொடும்
பாலையில் அல்லவா நடக்கின்றோம்
கண்தொடும் தூரம் கானல் நீர்
நாம் எதைத் தொலைத்தோம்
எங்கே தொலைந்து போனோம்
எம் மூதாதையர் வாழ்ந்தார்களே
நிறைவாகவும் நிம்மதியாகவும் வாழ்ந்தார்களே
சுதந்திரமாய் வாழ நினைத்தோமே
சுவாசத்தை அடுத்த தலைமுறைக்கு
கடத்திவிட முயன்றோமே
யூதாசும்,ப்ரூட்டசும், எட்டப்பனும்
காக்கை வன்னியனும், கருணா நிதியும்
நிதிக்காகவே அலைவார்களா --- நிகரில்லா
சுதந்திரத்தை விற்பார்களா
காலங்கள் தோறும் பிறந்து வருவார்களா
ஓ ....வீரனே ......
திறந்திருக்கும் உன் விழிகளில்
இலட்சிய ஒளி மட்டுமல்ல --- களமாடி
விழுந்து கிடக்கும் உன் உடல்கூட
முட்களையும், கற்களையும்
ஓநாய்களையும், நரிகளையும் --- எமக்கு
இனம் காட்டி விட்டல்லவா விதையாகியது.......!
யாழ் அகவை 23 க்காக
ஆக்கம் சுவி.........!