Search the Community
Showing results for tags 'கண்களின் மொழிக்கு வார்த்தைகள் வெறும் சுமையே....!'.
-
உ பார்வை ஒன்றே போதுமே கண்கள் பேசும் காதல் மொழிக்கு வார்த்தைகள் வெறும் சுமையே. இருநாட்கள் தொடர்ந்து பெய்த மழையால் அந்த மண்சாலை குண்டும் குழியும் சேறும் சகதியுமாக இருந்தது.இரு மருங்கிலும் வயல்கள். கதிர்கள் அலைபோல் அசைய பச்சைபசேல் என்று குளிர்ச்சியாக இருந்தது. கதிர்களைத் தழுவிவரும் காற்றில் மண்மணம் கமழ்ந்து உடலுக்கு புத்துணர்சியைத் தருகின்றது. அந்தப் பாதையில் ஒரு மனிதர் தனது வீட்டை விட்டு வெளியேறி பல நாட்களாக இலக்கின்றி நடந்து கொண்டே இருக்கின்றார்.நாளும் கிழமையும் கூட அவருக்கு மறந்து விட்டது.தான் வாழ்ந்த நகரத்தையும் தனது சொகுசான வீடு, ஆடம்பரமான கார்கள்,அன்பான மனைவி வளர்ந்துவிட்ட அழகழகான ஆணும் பெண்ணுமாய் இரண்டு பிள்ளைகள் எல்லாவற்றையும் விட்டு விட்டு வந்தாயிற்று. மேலே அண்ணாந்து பார்க்கையில் சூரியன் மதியத்தை நெருங்கி வந்து கொண்டிருந்தது.இவ்வளவு நாளும் பசியும்,களைப்பும் தெரியவில்லை.ஆனால் இப்பொழுது வயிறு பசி பசி என்று ஓலமிடுகின்றது.பசி ஒன்றும் அவருக்கு புதிதல்ல.சிறுவயது மற்றும் இளமைப் பருவங்களில் பசியோடு பங்காளியாக இருந்தவர்தான்.கடந்த பதினைந்து இருபது வருடங்களுக்கும் மேலாக அவரது இடைவிடாத உழைப்பின் பயனாக அது அவரை விட்டு வெகுதூரம் விலகியே இருந்தது.ஆனால் இப்பொழுது அவருக்கு பசித்ததும் கூடவே சிரிப்பும் வந்தது. இப்பொழுதுதான் உடல் உபாதையும் தொடர்ந்து நன்றாகத் தோய்ந்து குளிக்கவேண்டும் என்ற எண்ணமும் வந்தது.எங்காவது வாய்க்காலோ, குளமோ தென்படுகின்றதா என்று சுற்றிவரப் பார்த்துக்கொண்டே நடக்கின்றார்.அவர் எதிர்பார்த்த படியே அங்கு ஒரு குளத்தைக் கண்டதும் ஸ்நானம் செய்வதற்காக தனது கோட்சூட் சேர்ட் பூட்ஸ் எல்லாவற்றையும் கழட்டி ஓரமாக வைத்துவிட்டு அருகில் இருந்த பற்றைக்குள் ஒதுங்கிவிட்டு வந்து குளத்தில் அலுப்புத்தீர நன்றாக முங்கி முங்கி தோய்ந்து விட்டு வெளியே வந்தார். அங்கே பார்த்தால் அவர் கரையில் கழட்டிவைத்த ஆடைகள், பொருட்கள் எதுவும் அங்கில்லை.யாரோ வீதியால் சென்றவர்கள் அவற்றை எடுத்து சென்றிருக்க வேண்டும். அவரது கைபேசி மட்டும் கீழே புல்லுக்குள் கிடந்தது. அவர்கள் அவசரத்தில் எடுக்கும்போது இது நழுவி கீழே விழுந்திருக்க வேண்டும். எடுத்துப் பத்திரப் படுத்திக் கொண்டார். இவ்வளவு நாளும் கோபத்தில் மழுங்கிக் கிடந்த மூளை இப்பொழுதுதான் தன் உணர்வடைந்திருந்தது. தான் இப்பொழுது எங்கிருக்கிறோம் என்பது கூட அவருக்குத் தெரியவில்லை.தன்னை ஒருமுறை நன்றாகப் பார்த்துக் கொண்டதும் மீண்டும் அவருக்கு சிரிப்பு வந்தது. இடுப்பில் ஒரு ஜட்டி, கழுத்தில் டாலருடன் கூடிய தடிமனான தங்கச் சங்கிலி,கையில் தங்கச் செயின் போட்ட கடிகாரம்,விரல்களில் வகைக்கொன்றாக நாலு மோதிரங்கள் இப்படி இருந்தால் யாருக்குத்தான் சிரிப்பு வராது. அப்படியே வயலுக்குள் இறங்கி வரப்புகளில் மேல் வெறுங் கால்களுடன் யாராவது தென்படுகினமா எனப் பார்த்துக் கொண்டு நடந்து போகிறார்......! பார்வை .....(1) 👁️ பார்ப்போம் இனி ......! ✍️