துபாயின் புதிய கவர்ச்சி அம்சமான "துபாய் ஃப்ரேம்" (Dubai Frame)கட்டிடம் வரும் சனவரி (2018) மாதம் முதல் மக்களின் பார்வைக்கு திறக்கப்பட உள்ளது.
துபாய். துபாய் 'சபீல் பார்க்'( Zaabeel Park ) அருகில் இந்த புகைப்பட ஃப்ரேம் போன்ற கட்டிடம் சுமார் 150 மீட்டர் உயரமும், 93 மீட்டர் அகலத்திலும் அமைந்துள்ளது. இந்த கட்டிடமானது பழைய துபாய் மற்றும் புதிய துபாயின் அழகினை தனித்தனியே ஒரு புகைப்பட ஃப்ரேமிற்குள் காண்பதுபோன்ற காட்சியைத் தரும் வகையில் அமைந்துள்ளது. மேலும் இதன் வாயிலாக ஒட்டு மொத்த துபாய் நகரின் ரம்யமான அழகையும் நம்மால் ரசிக்க முடியும் என்றும், இந்த முயற்சி சுற்றுலப்பயணிகளால் மிகவும் வரவேற்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கட்டிடத்தின் கடைசி மேல் தளத்தில் கண்ணாடியால் அமைந்துள்ள தளத்தின் மூலமாக ஒட்டு மொத்த துபாய் நகரின் எழில்மிகு அழகை பனோரமிக் காட்சியில் நம்மால் கண்டுகளிக்க முடியும் என இதன் வடிவமைப்பாளர்கள் தெரிவித்தனர். இந்த கட்டிடத்தின் ஒரு புறத்தில் கீழிருந்து மேல் செல்லும் வகையில் கண்ணாடியினால் அமையவுள்ள 'லிஃப்ட்' மூலம் பழைய துபாய் பகுதிகளான கராமா, பர் துபாய், தெய்ரா மற்றும் துபாய் கிரீக் போன்ற பகுதியினை காணமுடியும் எனவும் அதே போல மற்றொரு பக்கத்தில் உலகத்தின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா, புகழ் பெற்ற ஏழு நட்சத்திர ஹோட்டலான புர்ஜ் அல் அரப் போனற புது துபாயின் அழகினைக்காணலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கட்டிடத்தை பார்வையிட பெரியவர்களுக்கு திர்ஹாம் 50ம், சிறுவர்களுக்கு திர்ஹாம் 30ம் நுழைவுக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
செய்தி மூலம்: https://www.khaleejtimes.com/nation/dubai/dubai-frame-to-open-to-the-public-in-january