கெசொனில் மீண்டும் பறந்தது புலிக்கொடி
1990 மாசி பிறந்தது,
என் நகரை விட்டு
நாசி படைகள் வெளியேற வழியும் திறந்தது.
தன்னைதானே வல்லரசுப் படை என பீற்றி கொண்ட ஒரு காட்டுக்கூட்டம்,
மூட்டை கட்டிக்கொண்டு ஓடியது.
கூடவே ஓடியது, கூட்டியும், காட்டியும் கொடுத்த
கொள்ளை கூட்டம்.
எங்கள் ஆட்டை, கோழியை, எலுமிச்சையை, மாம்பழத்தை ஆட்டையை போட்ட மிருகங்கள்.
எங்கள் மங்கையர் மானத்தை விலை பேசிய அரக்கர்கள்.
நாசி அரிக்கும் நாற்றத்துடன் அலைந்த வாழும்-பிணங்கள்.
கையில் கிடத்தைதை எல்லாம் அள்ளி கொண்டு ஓடிக்கொண்டிருந்தார்கள்.
எங்கள் நகரின் மத்தியில் அவர்கள் நாட்டு கொடி அலங்கோலமாய் கிழிந்து தொங்கியது.
கொடி மட்டும் அல்ல, உலகின் பெரும் இராணுவம் என்ற மதிப்பீடும்தான் அங்கே கிழிந்து தொங்கிகொண்டிருந்தது.
அவர்கள் எம் நாட்டில் கைப்பற்றிய முதலாவதும் கடைசியுமான ஒரே பிராந்தியத் தலைநகர் இதுதான்.
இங்கேதான் அசைக்கமுடியாத படை என்ற விம்பத்தையும் “வீரமும் களத்தே போட்டு, வெறுங்கையோடு” ஓடினார்கள்.
அல்லோலகல்லோல பட்டது என் நகர்.
பிள்ளைகள் வருகிறார்களாம்.
தேனீரும் கையுமாக அவர்களை தேடி இருந்தன இலட்சம் சோடி கண்கள்.
கைலாகுகளும் கட்டிப்பிடித்தல்களும் கணக்கு வழக்கின்றி இடம்மாறின.
எங்கள் மக்களின் ஆரவாரம் கண்டு அனுமானிற்கும், அவன் சேனைக்கும் வயிற்றில் பற்றியது நெருப்பு.
அனுமானின் வால்பிடிகளுக்கோ - நெருப்பு குதத்திலேயே குந்தி இருந்தது.
கோணேஸ்வரரும், அந்தோனியாரும் இனி சுதந்திரமாக சப்பாத்தி(து)க்காரர்களின் தலையீடின்றி கொடியேறலாம்.
மண்மூட்டைகளுக்கு பின்னால், குருதி குடிக்கும் மூட்டை பூச்சிகள் மறைந்திருந்த எங்கள் வீடுகளில் இனி நாம்சுதந்திரமாக குடியேறலாம்.
காட்டுக்குள் இருந்து எங்கள் காவல் தெய்வங்கள் வந்து விட்டார்கள்.
எங்கள் நாயகர்கள் நகர் மீண்டு விட்டார்கள்.
Kherson இல் மீண்டும் கம்பீரமாய் பறந்தது புலிக்கொடி.