Jump to content

அறிந்தும் அறியாமலும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அறிந்தும் அறியாமலும் - 1

ஒரு சிறுவனின் அடிப்படைக் கடமை என்ன? படிக்கும் பருவத்தில் படிப்பது. அதைவிட முக்கியமானதாக ஒரு கின்னஸ் சாதனையை அவன் கருதத் தூண்டியது எது? துவளச் செய்தது எது? கின்னஸ்க்காக உயிர் விடத் துணிந்த அவனுக்கு, படிப்பதற்காக உயிர் வாழ்வது அவசியம் என்று தோன்றாதது எதனால்?

எங்கோ ஏதோ சிக்கல் இருக்கிறது என்பது நம் எல்லாருக்கும் தெரிகிறது. ஆனால், அந்தச் சிக்கல் என்ன என்றும், அதன் சரியான உருவம் இன்னதென்றும் தெளிவாகப் பிடிபடவில்லை. யானை பார்த்த குருடர்கள் போல சிக்கலை விதவிதமாகவும் துண்டுதுண்டாகவும் புரிந்துகொள்கிறோம். சிக்கல், யானை சைஸில் பிரமாண்டமாக இருப்பது மட்டும் நிஜம். மற்றபடி, அதை அறிந்தும் அறியாமலுமே வாழ்கிறோம்.

உதாரணத்துக்கு எடுத்துக்கொண்ட மேற்படி மூன்று நிகழ்ச்சிகளிலும் ஒரு பொதுவான அம்சம் இருக்கிறது.அது என்ன?

குடும்பம்!

அப்பா - அம்மா - மகன் - மகள் அதன் பிறகுதான் கிரிக்கெட், சினிமா, கின்னஸ் இத்யாதிகள் எல்லாம்! சொல்லப்போனால், வெளி உலகத்தைப் புரிந்துகொள்ள நம்மை முதலில் தயார்செய்வதே நம் குடும்பம் தான். அது செய்யத் தவறியதையும், செய்யமுடியாததையும் அடுத்தபடியாக கல்விக்கூடங்களில் பெறமுயற்சிக்கிறோம். அவையும் தராதவற்றை வெளி உலக அனுபவங்களிலிருந்து பெற முயற்சிக்கிறோம். இந்த வெளி உலகத்தில் மீடியாவும் நண்பர்களும் அடக்கம்.

குடும்பம், பள்ளி, நண்பர்கள், மீடியா என்ற நான்கும் நம்மை ஒரே திசையில் அழைத்துச் செல்வதில்லை என்பதுதான் நடைமுறை நிஜம். சில நேரங்களில் ஒன்றுபடுகின்றன; பல நேரங்களில் மாறுபடுகின்றன. நடுவில் நாம்!

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நம் காதில் ஒலிக்கும் வாசகங்களில் இந்த முரண்பாடுகளைத் தரிசிக்கலாம். ‘அவன் சகவாசமே சரியில்ல!’, ‘வீட்டுக்குப் போகவே பிடிக்கலே!’, ‘த்ரிஷாவைப் பார்த்துக்கிட்டே உட்கார்ந்திருக்கலாம் போலிருக்கு!’

முரண்பாடுகள் முற்றும்போதெல்லாம் ஒரு பதில் வழக்கமாக நமக்குச் சொல்லப்படுகிறது... ‘என்ன ஆனாலும் குடும்பம்தான் முக்கியம். குடும்பத்தை மீறி எதுவும் செய்யாதே! எதுவும் சிந்திக்காதே!’

குடும்பம் என்பது என்ன? அப்பா, அம்மா, குழந்தைகள், ரத்த உறவுகள். அவ்வளவுதானா? இல்லை. குடும்பத்தில் இரு வகைகள் இருக்கின்றன.

ஒன்று, இயற்கையில் நமக்கு அமைந்த குடும்பம். இரண்டாவது நாம் நமக்கென்று தேர்ந்தெடுக்கும் குடும்பம்.

முதல் குடும்பத்தை நாம் தேர்ந்தெடுக்கவில்லை என்பது கசப்பான, ஆனால் மறுக்கமுடியாத உண்மை. எந்த சாதி, எந்த மதம், எந்த மொழி, எந்த நாடு, ஏழையா, பணக்காரரா, நடுத்தரமா என்ற எதையும் நாமாகத் தேர்ந்தெடுத்துப் பிறப்பதில்லை. பிறப்பு என்பது ஒரு விபத்து. பிறக்கும்போதே நம் மீது சாதி, மதம், மொழி, தேசம், வசதி/ வசதியின்மை எல்லாமே சுமத்தப் பட்டுவிட்டன.

இந்தச் சூழ்நிலையில் நாம் தேர்வு செய்ய மிஞ்சியிருப்பது என்ன?

எப்படி வாழப்போகிறோம் என்பது தான். ‘இன்றைய என் குடும்பத்தின் நிறைகுறைகளிலிருந்து என்ன கற்றுக் கொள்ளப்போகிறேன்’ என்பதுதான். ‘நாளை என் குடும்பத்தை நான் உருவாக்கும்போது, அதை எப்படி வடிவமைக்கப் போகிறேன்’ என்பது தான். எனக்கான நண்பர்கள் யார், எனக்கான மீடியா எது, எனக்கான அரசியல் எது, எனக்கான பண்பாடு எது... என இவை எல்லாமே என் தேர்வுக்கு மிஞ்சி இருப்பவைதான்.

இந்தத் தேர்வைச் செய்யும்போது மறுபடியும் முரண்பாடுகள் வரத்தான் செய்கின்றன. வளர்ப்பால் என்னைத் தன் போலவே ஆக்க முயற்சிக்கும் (பிறப்பால் எனக்கு அமைந்த) குடும்பத்துக்கும், என் தேர்வுகளுக்கும் இடையே முரண்பாடுகள் வரத்தான் செய்யும்.

இந்த முரண்பாடுகள்தான் சமூகத்தில் தனி மனித வன்முறை யாகவும், கூட்டு வன்முறையாகவும் வெடிக்கின்றன. இன்னும் வெடிக்காத குண்டுகள்தான், ‘எங்கம்மா பெரிய டார்ச்சர்!’, ‘பெத்த மனம் பித்து! அவன் நன்மைக்குதானே சொல்றேன். புரிஞ்சுக்க மாட்டேங்கறானே!’ என்ற முணுமுணுப்புகளாக எச்சரிக்கை விடுத்துக்கொண்டு இருக்கின்றன.

இவற்றைப் பற்றித்தான் இந்தத் தொடர்.

யாருக்காக?

குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்காகவும்தான். அப்பா, அம்மா, மகள், மகன், மாமா, சித்தப்பா, சித்தி அத்தனை பேருக்காகவும்தான்! அன்பு, காதல், காமம் வரை எல்லாவற்றையும் அறிந்தும் அறியாமலும் வாழ்ந்து கொண்டு இருக்கும் நம் எல்லாருக்காகவும்தான்!

அறிந்தும் அறியாமலும்... அ...அ!

தமிழுக்கு மட்டுமல்ல... தமிழ்நாட்டில் நாம் பயன்படுத்தும் பல சொற்களுக்கும் முதல் எழுத்து ‘அ’. அம்மா, அப்பா, அன்பு, அதிகாரம், அலட்சியம், அக்கறை, அகந்தை, அடக்கம், அல்லல், அறிவு, அலசல், அனுமதி, அவசியம், அர்த்தம், அபத்தம், அமைதி... பட்டியல் நீண்டுகொண்டே போகும். ஒரு கணம் யோசியுங்கள். இந்த ‘அ’ வரிசைச் சொற்கள் அத்தனையின் பொருளுமே நாம் அறிந்தும் அறியாமல் இருப்பவைதான் அல்லவா!

‘இல்லையில்லை. எல்லாமே எனக்குத் தெரியும். எவ்ரிதிங் இஸ் ஃபைன் வித் திஸ் வேர்ல்ட்!’ என்று நினைப்பவர்கள் இந்தத் தொடரிலிருந்து ஒதுங்கிக்கொள்ளுங்கள் என்று சொல்லமாட்டேன். நெருப்புக் கோழிபோல மணலில் தலை புதைத்து யாரும் வாழ முடியாது.

17 வயதுப் பெண்ணுக்கு முகமெல்லாம் பரு. ‘காரணம், அவளுக்கு ஏதோ ஆண் சக வாசம் இருப்பதுதான். எனவே கல்லூரிப் படிப்பே தேவையில்லை’ என்று தன் மகளைக் கல்லூரியிலிருந்து நிறுத்திய அப்பாவை உங்களுக்குத் தெரியுமா? தெரியாது இல்லையா?

சொந்த மகளைத் தன் இச்சைக்கு இணங்கக் கட்டாயப்படுத்தும் அப்பாவிடம் இருந்து மகளைக் காப்பாற்றப் போராடிக்கொண்டு இருக்கும் அம்மாவை உங்களுக்குத் தெரியுமா? தெரியாது இல்லையா?

அவர்களை நீங்களும் தெரிந்துகொள்வது அவசியம்.

அப்படிப்பட்ட ஒரு பெண் மாயா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அறிவுக்கூர்மையும் அபிலாஷைகளும் நிரம்பிய கல்லூரி மாணவி. வயது 19. அவளுடைய பிரச்னை என்ன? கேரியர் கைடன்ஸுக்காக அவள் சந்தித்த ஓர் 50 வயது உயர் அதிகாரியுடன் ஏற்பட்ட நட்பை, அவர் படுக்கையில் கொண்டு போய் முடித்தார். ஏற்கெனவே திருமணமான அந்த அதிகாரிக்கு இப்போது மாயா அலுத்துவிட்டது. கேரியர் கைடன்ஸ் தேடும் இன்னொரு பெண் அவருக்குக் கிடைத்துவிட்டாள். ஆனால், மாயாவால் அவரை மறக்கவும் பிரியவும் முடியவில்லை.

மாயாவுக்கு இது ஏன் நடந்தது? அவளுக்கான தீர்வுதான் என்ன?

இதுபோல், இன்னொரு வீட்டில் இப்போது துள்ளித் திரிகிற 5 வயது சாயாவுக்கு நாளை மாயாவின் நிலை வராமல் இருக்கவும், நம் வீட்டு 20 வயது அழகேசன் நாளை அந்த உயர் அதிகாரி போல் ஆகாமல் இருக்கவும் தடுப்பு மருந்து ஏதும் உண்டா?

அறிந்தும் அறியாமலும் - 2

வாய்விட்டு அழுதால், நோய் விட்டுப் போகும்!

அ - தமிழ் மொழியின் முதலெழுத்து.

தமிழ் கற்பதற்கு முன்பே நாம் கற்ற முதல் மொழி - அழுகை!

வாழ்க்கையின் தொடக்கமும் அழுகை. அங்கே தொடங்கும் நம் வாழ்க்கை அழுகையிலேயே முடிகிறது. ‘பிறக்கும்போதும் அழுகின்றாய், இறக்கும்போதும் அழுகின்றாய்... ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே’ என்று வருந்தி அழுகிறான் கவிஞன்.

குழந்தையாக இருந்தபோது நமது அழுகை அனிச்சைச் செயல். அறியாமலே அழுதோம். முதல் அழுகை, மூச்சு விடுவதற்கு நுரையீரல்களை ஒழுங்குபடுத்திக்கொள்ள! அடுத்தடுத்த அழுகைகள் பசியை அறிவிக்க!

வளரும்போதும், வளர்ந்த பிறகும் அழுவதை, அறிந்து அழுகிறோமா? எப்போது அழலாம், எப்படி அழலாம், எங்கே அழலாம் என்பதையெல்லாம் எப்படித் தீர்மானிக்கிறோம்? நாமே தீர்மானிக்கிறோமா, அல்லது மற்றவர்கள் நமக்காகத் தீர்மானிக்கிறார்களா?

யோசித்துப் பாருங்கள்... பொது வாழ்க்கையில் இருக்கும் பிரமுகர்கள் யாரையாவது அழுகிற தோற்றத்தில் நாம் பார்த்திருக்கிறோமா? கருணாநிதியோ ஜெயலலிதாவோ மன்மோகன்சிங்கோ சோனியாவோ வாழ்க்கையில் அழுததே இல்லையா என்ன? ஆனால், அழுகிற பிம்பம் அவர்களைப் பற்றி மக்கள் மனதில் என்ன கருத்தை ஏற்படுத்தும் என்ற எச்சரிக்கையோடு அவர்கள் வாழ வேண்டியிருக்கிறது. அதனால்தான், அபூர்வமாக வைகோவோ கபில்தேவோ மேடையிலோ, டி.வி. நிகழ்ச்சியிலோ பலர் அறிய அழுகிறபோது, அதுவே ஒரு வரலாற்று நிகழ்ச்சியாகி விடுகிறது.

நம் குடும்பங்களில், வீட்டுக்குள் யார் எப்போது அழுதோம் என்று யோசித்துப் பாருங்கள். அப்பா அழுதது நினைவிருக்கிறதா? அம்மா? அக்கா? தம்பி? நீங்கள்..?

பெண்கள் எதற்கெடுத்தாலும் அழுவார்கள். ஆண்கள் எதற்கும் அழமாட்டார்கள்... அழக் கூடாது! இது நம் புத்தியில் பதிக்கப்பட்டு இருக்கிற கற்பிதம். ஏன் அப்படி? அழுகை என்பது பலவீனம் என்ற கருத்துதான் இதற்கெல்லாம் அடிப்படை. அதையொட்டி பெண் பலவீனமானவள்; ஆண் வலிமையானவன். பலவீனமானவள் அழலாம், வலியவன் அழக் கூடாது என்று கற்பிதங்கள் நீளுகின்றன.

இதன் விளைவு... பெண்களின் அழுகை அவர்களுடைய பலவீனமாகவே புரிந்து கொள்ளப்படுகிறது. சில சமயங்களில் அது வருத்தமும் அல்ல, பலவீனமும் அல்ல; கோபத்தின் வெளிப்பாடு என்று புரிந்து கொள்ள எனக்குக் கொஞ்ச காலம் ஆயிற்று. ‘அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்’ என்று வள்ளுவன் சொல்வது, கோபத்தின் வெளிப் பாட்டைத்தான்! கோபம் வந்தால் அதை வெளிப்படுத்த ஆண் போல் வன்முறையில் இறங்கத் தயங்குவதால், ஆற்றாமையில் அழுகிறாள் பெண்.

அழுகைக்கு நாம் வைத்திருக்கும் இன்னொரு அ(ன)ர்த்தம் தோல்வி. தோற்றால் அழுவதும், ஜெயித்தால் எக்களிப்பதும் இயல்பென்று நாம் நம்புகிறோம். ஆழ்ந்து யோசித்தால்... எல்லா வருத்தங்களுக்கும் அழ வேண்டும் என்று அவசியமில்லை; எல்லா மகிழ்ச்சிகளுக்கும் எம்பிக் குதிக்கவும் தேவையில்லை!

எப்போது அழலாம், எதற்கெல்லாம் அழலாம் என்பதைப் பிறர் தீர்மானிக்கத் தேவையில்லை. நமக்காக நாம் தான் தீர்மானிக்க வேண்டும். நடைமுறையில் இதைத் தப்புத் தப்பாகத் தீர்மானிப் பதில்தான் அதிகச் சங்கடங்களை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்கிறோம்.

அதே சமயம், நம் அழுகையை மற்றவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள், அடுத்தவர் அழுகையை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதைப் பற்றிய தெளிவுகளும் நமக்குத் தேவைப்படுகின்றன.

உதாரணமாக, தியேட்டரில் ஒரு படம் பார்த்துக்கொண்டு இருக்கும்போது உணர்ச்சி பூர்வமான ஒரு காட்சி நம்மை நெகிழவைக்கிறது. என்ன செய்கிறோம்..? வீட்டில் டி.வி. தொடர் பார்க்கும்போதுகூட சிலர் நெகிழ்ந்து அழுகிறார்கள். அதில் பெண்களே அதிகம். அதே காட்சியைப் பார்த்து தானும் நெகிழ்ச்சி அடையும் ஆண்கள், பெண்ணைப் போல பகிரங்கமாக அழுவதில்லை. கண்ணில் நீர் துளிர்க்கும் முன்பே, வேறு ஏதோ வேலை இருப்பது போல சட்டென்று எழுந்து போய்விடுகிறார்கள்.

இருட்டு நிரம்பிய தியேட்டரில் எழுந்து போக வழியில்லை. கலங்கிய கண்களை, முகம் துடைப்பது போன்ற பாவனையில் ஆண் துடைத்துக்கொள்கிறான். பெண் இரு இடங்களிலும் பகிரங்கமாக அழுதுவிடும் வாய்ப்பே அதிகம்.

மற்றவர்கள் முன் அழாமல் இருந்தால்தான், தான் ஆண்மையுள்ளவன் என்று ஆண் நிஜமாகவே நம்ப ஆரம்பித்துவிடுகிறான். அதனால், அவன் அழ வேண்டிய சந்தர்ப்பங்களில்கூட அழாமல் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, உள்ளுக்குள்ளேயே அந்த வலியைப் புதைத்துவைக்கிறான். அசலாக அந்த வலி புதைக்கப்படுவதில்லை; தேவையற்ற மன அழுத்தமாக விதைக்கப்படுகிறது.

அழுகை என்பதும் சிறுநீர் கழிப்பது போலத்தான்! சிறுநீரை வெளியேற்றாமல் அடக்கி அடக்கி வைத்துக்கொண்டே இருந்தால் எப்படி உடல் பாதிக்கப்படுமோ, அதே போலத்தான் அழுகையை அடக்கி வைத்திருப்பதும் மனதைப் பாதிக்கும். மகன் இறந்ததற்கு வாய் விட்டு அழாத ஆண் பேராசிரியர் பாத்திரம் மன அழுத்தத்தால் புத்தி பேதலித்துப் போயி ருப்பதை ‘மொழி’ படத்தில் சித்திரித்திருந்தார்கள்.

வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில், ‘இந்தத் தருணத்தில் நான் அழுதிருக்கக் கூடாது; கோபம் தான் கொண்டிருக்க வேண்டும் என்று உணராமல் அழும் பெண், கோபப்பட்டு இருந்தால் தனக்குக் கிடைத்திருக்கக்கூடிய உரிமைகளைக் கூட, அழுததால் பெற்ற சலுகைகளாக நம்பத் தொடங்குகிறாள்.

இந்தச் சூழ்நிலையிலிருந்து பெண்ணுக்கும் விடுதலை வேண்டும்; ஆணுக்கும் வேண்டும். வாய் விட்டு அழும் உரிமை, இப்படி அழுதால் நம்மைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற கவலை இல்லாத தெளிவு இரண்டுமே வேண்டும்.

உண்மையில் அழுகை என்பது என்ன? ஒரு வெளிப்பாடு. மகிழ்ச்சி போல வருத்தம் என்பதும் ஓர் உணர்ச்சி. மகிழ்ச்சியை வெளிப்படுத்தப் பல வழிகள் இருப்பது போல, வருத்தத்தை வெளிக் காட்டப் பல வெளிப்பாடு கள் உள்ளன. அவற்றில் ஒன்று அழுகை. அவ்வளவு தான்!

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாடி ஜெயிக்க முயற்சித்து, தேர்வாகாமல் ‘தோற்று’ப்போகும் குழந்தைகள் அழுவதையும் அப்படியே காட்டுவது இப்போதைய ஃபேஷனாகியிருக்கிறது.

அந்தக் காட்சியைப் பார்க்கும் நாம் அது பற்றி என்ன நினைக்கிறோம்? அந்தக் குழந்தையைப் பற்றி என்ன நினைக்கிறோம்? எல்லாவற்றுக்கும் மேலாக, அந்தக் குழந்தை அதைப் பற்றி என்ன நினைக்கிறது? அதே வயதுடைய இதர குழந்தைகள், அழும் குழந்தையின் வகுப்பு நண்பர்கள் அந்த அழுகையைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்?

குழந்தையின் மன வளர்ச்சியில் அழுகையின் பங்கு என்ன என்று தொடர்ந்து விவாதிப்போம். அதைத் தொடரும் முன்னால், சில கேள்விகளுக்குப் பதில்களை எழுதிப் பார்த்துக் கொள்ளுங்கள்.

1. நினைவு தெரிந்து, என் முதல் அழுகை எப்போது?

2. அப்போது எதற்காக அழுதேன்?

3. இப்போதும் அதே காரணங்களுக்கு அழுவேனா?

4. மாட்டேன் என்றால், வேறு என்ன செய்வேன்?

5. இப்போதும் அழுவேன் என்றால், ஏன் அப்படி?

6. கடைசியாக நான் அழுதது எப்போது? எதற்காக?

7. நான் அழ விரும்பி, அழாமல் அடக்கிக் கொண்டது எப்போது?

8. இனி அழ நேரும் சந்தர்ப்பங்களில், நான் என்ன செய்ய விரும்புகிறேன்?

9. அழுகிற ஒருவரைப் பார்த்தால், நான் என்ன செய்கிறேன்? என்ன செய்ய விரும்புவேன்?

10. யாருடைய அழுகை என்னை பயப்படுத்துகிறது?

அறிந்தும் அறியாமலும் - 3

ஒவ்வொருவரையும் தங்கள் அழுகை அனுபவங்களை நினைத்துப் பார்க்கச் சொன்னபோது, யாருடைய அழுகை நம்மை மிகவும் பயப்படுத்துகிறது என்று ஒரு கேள்வியை முன்வைத்தேன். இதற்கான பதில் ஆளுக்கு ஆள் நிச்சயம் வேறுபடும். ஆனால், பொதுவாக நம் எல்லோரையுமே பயப் படுத்தும் அழுகை, குழந்தைகளுடையதுதான். ஏனென்றால், அந்த மொழி நமக்கு எளிதில் புரிவதில்லை.

மொழி பேசக் கற்றுக்கொள்வதற்கு முன், குழந்தையின் மொழியாக சிரிப்பும் அழுகையும் மட்டுமே இருக்கின்றன. பசியால் அழுகிறது, வலியால் அழுகிறது, தூக்கம் போதாமல் அழுகிறது, பரிச்சயமானவர்களின் தொடுதலின் மகிழ்ச்சியில் சிரிக்கிறது என்கிற அளவில் குழந்தையின் அழுகையையும் சிரிப்பையும் எளிமைப்படுத்திப் புரிந்துவைத்திருக்கிறோம்.

ஆனால் பசி இல்லை, வலி இல்லை, தூக்கமின்மையின் எரிச்சல் இல்லை என்ற சூழலில் ஒரு குழந்தை அழுதால், பயப்படவேண்டி இருக்கிறது. ஏன் அழுகிறது என்பது புரியாததால் ஏற்படுகிற பயம் அது.

பயங்கள் எல்லாமே, ஒன்றைப் புரிந்துகொள்ளாததால் ஏற்படுபவைதான். ஒரு விஷயம் புரிந்துவிட்டால், அதைப் பற்றிய பயங்களும் விலகிவிடும். இது எல்லா நேரமும் பொருந்தும் என்றாலும், விதிவிலக்கும் உண்டு. அதாவது, புரிந்ததாலேயே பயம் வருவதும் உண்டு!

எடுத்துக்காட்டாக, ஓர் உணவைச் சாப்பிட்டு முடித்த பிறகு, அதில் நச்சுப் பொருள் கலந்திருந்தது தெரியவந்தால், அப்போதுதான் பயம் ஆரம்பிக்கும். ஒருவரைப் பற்றிக் கடுமையாக இன்னொரு வரிடம் பேசி முடித்த பிறகு, இவருக்கு அவர் மிகவும் வேண்டியவர் என்று தெரியவந்தால், இனி என்ன ஆகப் போகிறதோ என்ற பயம் தொடங்குகிறது அல்லவா?

புரியாமல் வரும் பயம், புரிந்த பின் வரும் பயம், இந்த இரண்டு பயங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. முதல் பயம், உணர்ச்சி சார்ந்தது. இரண்டாவது பயம், அறிவு சார்ந்தது. முதலாவது, அறியாமையால் வந்தது. அடுத்தது, அறிந்ததால் வந்தது. ‘அஞ்சுவது அஞ்சாமை பேதமை’ என்றாரே வள்ளுவர், அந்த அச்சம் அறிந்ததால் வருகிற, வர வேண்டிய அச்சம். அறியாமையால் பயம் வருவது போலவே, அறியாமையால் பயம் இல்லாத நிலைமைகளும் உண்டு.

ஒரு நகைச்சுவைக் காட்சியில், புடலங்காய் என்று நினைத்து பாம்பைக் கையில் பிடித்துக்கொண்டு வீர நடை நடப்பார் ஜனகராஜ். அத்தகைய பயமற்ற நிலைகள் தற்காலிகமானவைதான். அறிந்தபின் பயப்படாமல் இருப்பது பேதமையாகி விடும்.

சிறியவர்களிடம் சொல்ல, பெரியவர்களுக்குப் பிடித்தமான அறிவுரை வாக்கியங்களில் ஒன்று... ‘‘எல்லாம் எங்களுக்குத் தெரியும். நீ இப்ப இருக்கியே, அந்த வயசுல இருந்துட்டுதான் நாங்கள் லாமும் இப்பிடி வந்திருக்கோம். நாங்க தாண்டி வந்த ரூட்டுதான் அது!’’

உண்மையில் நமக்கு நம்முடைய குழந்தைப் பருவத்தைப் பற்றித் தெரியுமா? என்னதான் மூளையைக் கசக்கினாலும், நான்கு வயதுக்கு முன் நடந்தது எதுவும் நினைவுக்கு வருவதில்லை. வராது என்பதுதான் அறிவியலாளர் கருத்து.

முதல் நான்கு வருடங்கள் நாம் எப்படி இருந்தோம் என்பது நமக்குத் தெரியாது. அதனால்தான் புத்தம் புதுசாகப் பிறந்த குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் நாம் ஆவலோடு பார்க்கிறோம். அது வளரும் ஒவ்வொரு கட்டத்தையும் பார்த்துப் பார்த்து ரசிக்கிறோம். உண்மையில், அப்போது நாம் நம் குழந்தைப் பருவத்தை இன்னொரு முறை பார்வையால் வாழ்ந்து பார்க்கிறோம்.

பிறந்தது முதல் அடுத்த பத்து ஆண்டுகள் ஒரு குழந்தைக்கு ஏற்படும் அனுபவங்கள்தான், வாழ்நாள் முழுவதும் அந்த நபரின் இயல்பைத் தீர்மானிப்பவையாக இருக்கின்றன. எப்படிப்பட்ட அனுபவங்களை நாம் குழந்தைகளாகப் பெற்றோம்? எப்படிப்பட்ட அனுபவங்களை நம் குழந்தைகளுக்குக் கொடுத்துக்கொண்டு இருக்கி றோம்? இந்த இரண்டு பெரிய கேள்விகளுக்கும் ஏராளமான பதில்கள் நம்மிடம் உள்ளன. அவற்றை நமக்குள் நாமே அசை போட்டுப் பார்ப்பது அவசியம்.

குழந்தைகளுக்கு முத்தம் கொடுப்பது நம் வழக்கம். அது குழந்தைகளுக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும்... சிலர், கன்னத்தில் முத்தமிடுவார்கள்; சிலர், நெற்றியில் முத்தமிடுவார்கள்; சிலர், உதட்டில் முத்தமிடுவார்கள். அப்படிச் செய்யாத பெற்றோரும் உண்டு. பெரும்பாலான பெற்றோர் களுக்குத் தங்களைத் தவிர வேறு எவரும் தங்கள் குழந்தைகளுக்கு உதட்டில் முத்தமிடுவது பிடிக்காது. குழந்தைக்கு உதட்டில் முத்தம் தருவதால் கிருமிகள் தொற்றும் ஆபத்தைப் பற்றிய பயம் ஒரு காரணம்.

இன்னொரு காரணம், முத்தத்தைப் பற்றிய கலாசாரக் கருத்துக்கள். உதட்டில் முத்தம் தருவதைக் காதலுடனும், அதைவிட அதிகமாகக் காமத்துடனும் மட்டுமே நாம் இணைத்துப் பார்க்கிறோம். ரயில் நிலையம், விமான நிலையம் போன்ற பொது இடங்களில் வழியனுப்பும் வேளையில் ஒருவருக்கொருவர் கன்னத்தில் முத்தமிட்டால் அதைப் பார்த்து ஏற்றுக்கொள்கிறவர்கள்கூட, அப்போது உதட்டில் முத்தமிட்டால் சமூகத்தின் கற்பு பறிபோய்விட்டதாகப் பதறுவார்கள்.

காரணம், உதட்டு முத்தம் இங்கே காமத்தின் அடையாளமாக மட்டுமே கருதப்படுவதுதான். வாழ்க்கைக் கல்வி வகுப்புகள் நடத்தும் என் நண்பர்களிடம், பல பள்ளிகளில் டீன் ஏஜ் வயதில் இருக்கும் பல சிறுமிகளும் சிறுவர்களும், ‘உதட்டில் முத்தம் கொடுத்தால் கர்ப்பம் ஏற்பட்டுவிடுமா?’ என்று பயம் கலந்த கேள்வியாகக் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

பள்ளிக்கூடங்கள் இருக்கட்டும்... கல்லூரி மாணவி ஒருவர் மிகுந்த கவலையுடன் கேட்ட கேள்வி இது... ‘‘இதற்கு முன்பு நான் காதலித்த இளைஞன் என்னை ஒரே ஒரு முறை முத்தமிட்டான். இருவருக்கும் பொருந்தி வராது என்று உணர்ந்து நாங்கள் பிரிந்துவிட்டோம். இப்போது நான் கல்யாணம் செய்ய இருப்பவரிடம், பழைய முத்த விஷயத்தைச் சொல்லலாமா, கூடாதா?’’

எத்தனை விசித்திரமான பயம்! குழந்தைப் பருவ முத்தங்களுக்கு மீண்டும் வருவோம். எனக்கு என் முதல் முத்தங்கள் எதுவும் நினைவில் இல்லை. ஆனால், ஒரு முத்தம் இன்னும் மறக்க முடியாமல் இருக்கிறது. 41 வருடங்களுக்கு முன், நான் ஏழாம் வகுப்பில் படித்துக்கொண்டு இருந்த போது, தினமும் எங்கள் வகுப்புக்குச் சீக்கிரமே போய்விடுவது என் வழக்கம்.அப்படிச் சீக்கிரம் சென்ற ஒரு நாள், பத்தாவது படிக்கும் ஒரு சீனியர் மாணவன் என்னை மறித்து, நான் அலற அலற என் உதட்டில் ஓர் அழுத்தமான முத்தம் கொடுத்தான். அது எனக்குப் பிடிக்காத அனுபவம் என்பதால், அந்த சீனியர் பெயர்கூட இன்னும் நினைவில் தங்கியிருக்கிறது.

ஒரே ஒரு நாள்தான் அது நடந்தது. ஆனால், அடுத்த ஒரு வாரத்துக்கு அது என்னைப் பாதித்தது. மறுநாள் சீக்கிரமாகப் பள்ளிக்குச் செல்லப் பயம். அவன் மறுபடியும் வந்தால்..? ஆனால், அந்த சீனியர் மறுபடியும் என்னிடம் வரவில்லை.

இது போல, குழந்தைகளிடம் அத்துமீறும் பெரியவர்கள் எப்போதும் சூழ்ந்திருக்கிறார்கள். அண்மையில் மத்திய அரசின் மகளிர் குழந்தை நலத்துறை ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, இந்தியாவில் மொத்தக் குழந்தைகளில் 53 சதவிகிதம் பேர், அதாவது பாதிக்கு மேற்பட்டவர்கள் இப்படிப்பட்ட அதிர்ச்சிகளுக்கு உள்ளாகிக்கொண்டு இருக்கிறார்கள். இதை நீங்கள் படிக்கும் நேரத்தில்கூட, எங்கோ ஒரு குழந்தையிடம் அத்து மீறல் நடந்துகொண்டு இருக்கிறது.

இந்த அத்துமீறல்களைச் செய்பவர்களில் மிகப் பெரும்பாலோர், குழந்தையின் நெருக்கமான சுற்றுப் புறத்தில் இருப்பவர்கள்தான் என்கிறது ஆய்வு. பக்கத்து வீட்டு நபர், பள்ளி ஆசிரியர், வாகன ஓட்டுநர், மாமா, சித்தப்பா, அத்தை, சித்தி, அண்ணன், அக்கா, அம்மா, அப்பா என்று பட்டியல் நீள்கிறது.

இதில் குழந்தையின் மனதில் ஏற்படும் பாதிப்பு என்ன? தொலை நோக்கில் நீடிக்கக்கூடிய பாதிப்பு என்ன? ஏதோ ஒரு முறை நிகழும் சம்பவத்தின் பாதிப்பிலிருந்து குழந்தை உடனடியாக வெளிவந்துவிடும். தனக்கு நம்பிக்கையும் பாதுகாப்பும் தரக்கூடியவர்கள் உடன் இருப்பதாக அது உணர்ந்தால், இது சுலபம். நீண்ட காலப் பாதிப்புகளும் இராது. ஆனால், அத்துமீறல் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்தாலும் சரி, ஒரேயடியாக தனக்குப் பாதுகாப்பற்ற சூழல்தான் இருப்பதாக குழந்தை வருந்தத் தொடங்கினாலும் சரி, அது தொடர் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்கிறார்கள் நிபுணர்கள்.

குழந்தையின் உதட்டில் வலுக்கட்டாயமாக முத்தமிடுவது மட்டுமல்ல அத்துமீறல். ஒரு போட்டியில் அது தோற்றுப்போய் மனம் உடைந்து தன் வருத்தத்துக்கு வடிகால் தேடுகிற காட்சியைப் பலர் அறியக் காட்டுவதும் அத்துமீறல்தான். இதைச் செய்யும் டி.வி. சேனல்கள் மட்டுமல்ல, இதை ஒரு பொருட்டாகக் கருதாமல் அனுமதிக்கும் பெற்றோர்களும்கூட குழந்தையின் உரிமையில் அத்துமீறுவதாகவே கருதப்பட வேண்டும். ஏனென் றால், தான் அழுவதை டி.வி யில் காட்டும்போது, அதைப் பார்க்கும் குழந்தைக்கு நீண்ட கால பாதிப்புக்கான வாய்ப்புகள் உள்ளன. தன்னைப் பற்றிய அவமான உணர்ச்சிக்கு அது வித்திடுகிறது.

தான் அழுவதை டி.வி யில் பார்த்துவிட்டு தன் சக வயதுக் குழந்தைகள் கேலி செய்வார்களோ என்று மன உளைச்சல் அடைந்தாலும், அதுவும் குழந்தையின் சுயமரியாதையைத் தொலைநோக்கில் பாதிக்கும் என்பது நிபுணர்கள் கருத்து.

ஒரு குழந்தைக்குத் தன் மீதான அத்துமீறலை உணரவும், தடுத்துக் கொள்ளவும் ஆற்றல் தேவைப்படுகிறது. அதைத் தருவது, குழந்தைகள் மீது அன்புள்ள எல்லோரின் கடமை!

எது ‘குட் டச்’, எது ‘பேட் டச்’ என்று குழந்தைக்குப் புரிந்து விட்டால், யாருடைய ‘டச்’சானாலும், அதைத் தானே கையாள அந்தக் குழந்தை கற்றுக் கொள்ளும். கற்றுத் தருவோமா..?

1. உங்கள் பயம் எதைப் பற்றி?

2. எதற்குப் பயப்படுகிறீர்களோ அதைப் பற்றித் தெரியாததால் பயப்படுகிறீர்களா? தெரிந்துவிட்டதால் பயப்படுகிறீர்களா?

3. பயத்திலிருந்து வெளியே வர முடியாமல் உங்களைத் தடுப்பது எது?

4. உங்கள் முதல் முத்தம் எது?

5. அது இனிப்பான நினைவா? கசப்பான நினைவா?

6. அதன் தாக்கம் இப்போதும் உங்கள் வாழ்க்கையில் இருப்பதாகத் தோன்றுகிறதா?

7. குழந்தையாக இருந்தபோது, உங்களிடம் யாரேனும் அத்துமீறல் செய்தார்களா? யார்?

8. எந்தக் குழந்தையாவது உங்களிடம் தன்னிடம் ஒருவர் செய்த அத்துமீறலைச் சொல்லியதுண்டா?

9. சொன்னால், அந்தக் குழந்தைக்கு எப்படி நம்பிக்கை தருவீர்கள்?

10. எந்தக் குழந்தையிடமேனும் அத்துமீறும் உணர்ச்சி உங்களுக்கு வந்து, உங்களை நீங்களே கட்டுப்படுத்திக்கொண்டது உண்டா?

மூலம்: www.keetru.com ,ஆனந்தவிகடன் தொடர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறிந்தும் அறியாமலும் - 4

டச்!

இந்த ஆங்கிலச் சொல் இன்று தமிழ்ச் சமூகத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. சினிமா பார்த்துவிட்டு வரும்போது, ‘படத்தில் ஒரு சில காட்சிகள் டச்சிங் ஆக இருந்தன’ என்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட பாணியை ‘அதுதான் இயக்குநரின் டச்’ என்கிறார்கள்.

உடலில் எங்கே இருக்கிறது என்று தெரியாத ஒன்று, மனம். அதை டச் பண்ணிவிட்டதாகப் பேசுகிறோம். தொட முடியாததையே தொட்டுவிட்டால் சாதனைதானே!

‘தொடு’ என்ற அருமையான தமிழ்வினைச் சொல்லுக்கு இரு முக்கியமான அர்த்தங்கள் உள்ளன. தொடுதல், தொடுத்தல் ஆகிய இரு செயல்களுக்குமான கட்டளைச் சொல் அது. ஒருவரைத் தொடும்போது, அவரோடு நாம் நம்மைத் தொடுத்துக்கொள்கிறோம். திருமணம் மீறிய ஆண் பெண் உறவில் இருவருக்கிடையே நெருக்கமான உறவாக அது ஆகிவிட்டதைத் ‘தொடுப்பு’ என்றே சொல் கிறார்கள்.

மௌனம் என்ற மகத்தான மொழியின் முக்கியமான வார்த்தைகளில் ஒன்று தொடுதல். வாய் பேசாமலே, பல விஷயங்களைத் தொடுதல் மூலம் பேசிவிட முடியும். நெருக்கமான ஒருவரை மரணத்தால் இழந்து வருத்தப்படும் நண்பரைச் சந்திக்கும்போது, அவர் தோளில் கை வைத்துத் தொட்ட ஒரு நொடியில் நம் பகிர்தலை உணர்த்தி விடுகிறோம். கைகளைப் பற்றிக்கொண்டதுமே வார்த்தைகள் மேற்கொண்டு தேவையற்றுப் போய்விடுகின்றன.

ஆண்களைவிட அதிகமாகப் பெண்கள் ஒருவரையருவர் தொட்டுக்கொள்கிறார்கள். இரு ஆண்கள் சந்தித்ததும் கைகளைப் பற்றிக்கொள்ளும் பழக்கம் அபூர்வமானது. சிறுவர்கள் ஒருவர் தோளில் மற்றவர் கை போட்டுக்கொண்டு நடப்பது வயதாக வயதாகக் குறைந்துவிடுகிறது. ஆனால் சிறுமிகளும், இளம் பெண்களும், முதிய பெண்களும்கூட தத்தம் சிநேகிதிகளுடன் கை கோத்துக் கொள்ளும் பழக்கம் இருக்கிறது.

நம்முடைய ஆண் பெண் பாலின அடையாள வளர்ப்பு முறையில் குழந்தைப்பருவம் முதலே ஆண் அதிகாரமுடையவனாகவும் பெண் அதிகாரத்துக்குக் கட்டுப்படுபவளாகவுமே பெரும்பாலும் வார்க்கப்பட்டு இருக்கிறார்கள். இதன் விளைவாகத் தான் ஆண் தன் உடலை அதிகாரத்தின் அடையாளமாகப் பார்க்கிறான்; பெண்ணின் உடலைத் தன் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்ட உடலாகப் பார்க்கிறான்.

அதிகாரத்தின் சின்னமான தன் உடலைத் தன் அனுமதியின்றி பிறர் தொட்டு அத்துமீறுவதை, ஆணின் அதிகார மனம் எளிதில் அனுமதிப்பது இல்லை. அதிகாரமற்றவளாகத் தன்னைக் கருதும் பெண் மனதுக்கு இன்னொரு பெண்ணைத் தொட்டுப் பேசுவது எளிதாக இருக்கிறது. பெண்ணின் உடல் சுய அதிகாரமற்றதாகவும் பகிர்வதற்காகவே உருவாக்கப்பட்ட தாகவும் ஒரு பொதுக் கருத்து எல்லா மனங்களுக்குள்ளும் விதைக்கப்பட்டு இருக்கிறது.

தொடுவது என்பது இன்னொரு உடலுடனும் அதன் வழியே மனதுடனும் உறவை ஏற்படுத்திக்கொள்ளும் செயல். ஒருவரைத் தொடும்போதே அது எப்படிப்பட்ட உறவின் அடிப் படையிலான தொடுதல் என்பது தொடப்பட்டவருக்குப் புரிந்துவிடும். புரிந்துவிட வேண்டும்.

துக்கத்தைப் பகிர்ந்துகொள்பவரின் தொடுதல் வேறு. சண்டைக்கு இழுக்க விரும்புபவரின் தொடுதல் வேறு. அன்பைக் காட்டும் தொடுதல் வேறு. காமத்தின் ஆரம்பமாக வரும் தொடுதல் வேறு.

அன்புக்கும் காமத்துக்குமான இடைவெளி எப்போதுமே மெலிதாகத்தான் இருக்கிறது. ஆனால் ஸ்பரிசம் இது அன்பா, காமமா என்பதை உணர்த்திவிடும். இந்த வேறுபாடுகளை வயதுவந்தவர்கள் எளிதாக அறிய முடியும்.

அலுவலகத்தில் மேல் அதிகாரி பெண் ஊழியரிடம் ஒரு கோப்பைக் கொடுக்கும்போதோ, வாங்கும்போதோ கைகள் உரசுவது தற்செயலா, உள் நோக்கத்துடனா என்பது தொடுதலிலேயே புரிந்து விடுகிறது. ஐம்பது வயது ஐ.ஏ.எஸ். அதிகாரியிடம் கேரியர் கைடன்ஸுக்காகச் சென்ற 18 வயதுக் கல்லூரி மாணவி மாயாவை அவர் கட்டில் துணையாக ஆக்கிக்கொண்ட வரலாற்றின் தொடக்கப் புள்ளி ஒரு தொடுதல் மட்டுமே!

அந்தத் தொடுதலின் தொனியை மாயா புரிந்துகொள்ளவில்லையா? புரிந்துகொண்டு இருந்தால் ஏன் அவருடைய அடுத்த தொடுதலைத் தவிர்க்க முயற்சிக்கவில்லை? ஒரு தொடுதல் அவளுக்குள்ளும் இருந்த வேட்கையைத் தூண்டிவிட்டு விட்டதா? அந்த வேட்கைக்கான வடிகால் தரவேண்டிய மனிதர் தன் அப்பா வயதில் இருக்கும் இவர் அல்ல என்று மாயா உணரத் தவறியது ஏன்? தொடுதல் ஏற்படுத்தும் பரவசங்கள், அறிவைத் தற்காலிகமாகவேனும் மழுங்கடிக்கக்கூடியவை என்பதுதான் காரணமா?

18 வயது மாயாவை... ஓரளவு சிந்திக்கும் வயதில் இருக்கும் மாயாவை ஒரு தொடுதல் எங்கெங்கோ அழைத்துச் சென்றுவிடும் என்றால், சிறு குழந்தைகளின் நிலை என்ன? தங்களுக்கு என்ன நிகழ்கிறது என்பதே தெரியாமலும் புரியாமலும் இருக்கும் குழந்தைகள், எப்போதும் ஆபத்தால் சூழப்பட்டே இருக்கிறார்கள்.

நன்கு அறிமுகமானவர்கள், நெருக்கமானவர்களிடமிருந்துதான் குழந்தைகளுக்கு ஆபத்து அதிகமாக இருக்கிறது என்று உலகம் முழுவதும் நடக்கும் ஒவ்வொரு ஆய்விலும் தெரிய வந்து கொண்டே இருக்கிறது. பெண் குழந்தைகளிடம் கூடுதலாக நிகழ்கிறது என்று மட்டுமே சொல்லலாமென்றாலும், அத்துமீறல்கள் ஆண் குழந்தை, பெண் குழந்தை என இருவருக்குமே நிகழ்கின்றன.

எது ‘குட் டச்’, எது ‘பேட் டச்’ என்று சொல்லித் தர வேண்டிய ஒரு அம்மாவே, தன்னை அறியாமல் குழந்தைக்கு ‘பேட் டச்’சை அளிக்க முடியும். ஆண் குழந்தை என்றால் அதிகமாகக் கொண்டாடும் மன நிலையில் இன்னும் இருக்கும் நம் சமூகத்தில், பல தாய்மார்கள் தங்கள் ஆண் குழந்தையின் பிறப்புறுப்பைத் தட்டி விளையாடிக் கொஞ்சும் காட்சியைப் பார்க்கலாம். குழந்தை கூச்சமும் மகிழ்ச்சியுமாகச் சிரிக்கச் சிரிக்க, தாயின் (விபரீத) விளையாட்டு அதிகமாகிறது.

இன்னொரு நாள் அதே குழந்தையிடம் வேறொருவர் அது பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ஆட்டோ டிரைவர் முதல் ஆசிரியர் வரை யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் அதே போல நடந்து கொண்டால், குழந்தை அதை மகிழ்ச்சியான அனு பவமாக உணரத் தொடங்கினால், விளைவுகள் என்ன?

அத்துமீறல்களை அது அனுமதிக்கிறது என்று உணரும் அத்துமீறுவோர் அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்வார்கள். குழந்தையை மகிழ்விக்க சாக்லெட்டில் தொடங்கி அதன் வயதுக்கேற்ப பரிசுகள் கொடுப்பார்கள். ஸ்பரிசத்துக்காக இல்லாவிட்டாலும் பரிசுகளுக்காக குழந்தை அவர்களை அனுமதிக்கத் தொடங்கும்.

எனக்குத் தெரிந்த ஒரு சிறுமி அவளிடம் இப்படி அத்துமீறியவர்களை (பதிலுக்கு) சுரண்டத் தொடங்கினாள். தன்னிடம் அத்து மீறும் அங்கிள்களிடம், தனக்கு வேண்டிய பொருட்களை வாங்கித் தரும்படி நச்சரிக்கத் தொடங்கினாள். தான் செய்வது வணிகரீதியிலான பாலியல் ஈர்ப்பு என்று உணராமலே, அதை நோக்கி அந்தச் சிறுமி நகர்த்தப்பட்டாள். காலமும் சூழல் மாற்றமும் மட்டுமே அவளைக் காப்பாற்றின.

எது ‘குட் டச்’, எது ‘பேட் டச்’ என்பதைக் கற்றுக்கொள்ளாத குழந்தைகள் அதை அறிகிறபோது பெரிய விலை தர வேண்டி வந்து விடலாம். சரி, இதைக் குழந்தை எந்த வயதில் கற்றுக்கொள்ள முடியும்? கற்றுத்தர வேண்டியது யார்?

எல்லாக் கல்வியும் குடும்பத்தில் தான் தொடங்குகிறது. தொடங்கப்பட வேண்டும். அதே சமயம், எல்லாக் கல்வியையும் குடும்பம் மட்டுமே கொடுத்துவிட முடியாது. ஆனால், அதற்குக் குழந்தையைத் தயார்படுத்தும் பொறுப்பு குடும்பத் துடையது!

1. யாரையாவது சந்தித்தால் உடனே கையைப் பற்றிக்கொள்ளும் பழக்கம் உங்களுக்கு உண்டா?

2. சிலரிடம் மட்டும் என்றால், யார் அந்த சிலர்?

3. யார் உங்கள் கையைப் பற்றுவதோ, உங்களைத் தொடுவதோ உங்களுக்குப் பிடிக்காது? ஏன்?

4. ஓர் ஆணும் பெண்ணும் சந்தித்ததும் கையைப் பற்றிக்கொண்டால், அதைப் பற்றி என்ன நினைப்பீர்கள்?

5. யார் உங்களைத் தொட்டால் உங்களுக்குப் பரவசம் ஏற்படுகிறது?

6. யார் உங்களைத் தொட்டால் உங்களுக்குக் கலவரம் ஏற்படுகிறது?

7. உங்கள் வீட்டுக் குழந்தைகள் விளையாடும்போது ஒருவரையருவர் தொட்டு விளையாடுவதைக் கவனித்திருக்கிறீர்களா?

8. தொட்டு விளையாடாதே என்று யாரைக் கண்டித்திருக்கிறீர்கள்? ஏன்?

9. அன்றாடம் காலை முதல் மாலைவரை எத்தனை முறை யார் யாரையெல்லாம் தொடுகிறீர்கள்?

10. அதில் தவிர்க்க முடியாதவை, தவிர்த்திருக்க வேண்டியவை, எந்தச் சலனமும் ஏற்படுத்தாதவை என்று வகைப்படுத்த முடியுமா?

மூலம்: www.keetru.com ,ஆனந்தவிகடன் தொடர்

Link to comment
Share on other sites

நல்லதொரு தேவையான இணைப்பு உடையார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பதிவு தொடர்ந்து இணையுங்கள் உடையார்...பொதுவாக பெற்றோர் வெளியாட்களோடு தங்கள் பிள்ளைகள் எப்படிப் பழகுறார்கள் என அவதானிப்பார்கள் ஆனால் தங்களை சுற்றி உள்ள சொந்தக்காரர்கள் தங்கள் பிள்ளைகளோடு எப்படிப் பழகுவார்கள் என்று அவதானிக்க மாட்டார்கள் அவ்வளவு நம்பிக்கை ஆனால் அது தான் ஆபத்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் ரதி, தப்பிலி, கோமகன் உங்கள் கருத்திற்கு

அறிந்தும் அறியாமலும் - 5

‘தொட்டால் பூ மலரும்’ என்கிறான் கவிஞன். கவிதைக்கு சரி... இன்றைக்கோ அது ஒரு ‘பேட் டச்’. தொடாமல் இயற்கையாக மலர வேண்டிய பூவைத் தொட்டு மலரவைக்க முயற்சித்தால், அது வாடியும் கருகியும்தான் போகும்.

குழந்தைகளும் அப்படித்தான்! பாலியல் உணர்வுகள் அவர்களுக்குக் குழந்தைப் பருவத்திலேயே தொடங்கிவிடுகின்றன. அவை ஒவ்வொரு பருவத்திலும் அந்தந்தப் பருவத்துக்கேற்ற பரிமாணத்தில் வளர்ச்சி பெற வேண்டியவை. ஆனால், அவை வயது வந்தவர்களின் பாலுணர்வுகள் போன்றவை அல்ல. குழந்தைகளின் பாலுணர்வை பெரியவர்களின் பாலுணர்வுடன் குழப்பிக்கொள்ளக் கூடாது.

ஐந்து வயது ஆண் குழந்தையையும் பெண் குழந்தையையும் காட்டி, ‘அறியாத வயசு... புரியாத மனசு... ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்’ என்று வர்ணித்தால், அது தவறானது! அது காதல் அல்ல, நட்பு! வயது வந்தவர்களின் பாலுணர்வைக் குழந்தைகள் மீது ஏற்றிச் சொல்வதாகும்.

குழந்தைகளுக்கு நல்ல ஸ்பரிசம், மோசமான ஸ்பரிசம், பாலியல் நோக்கத்துடனான ஸ்பரிசம் போன்றவற்றை எப்போது, எப்படி சொல்லித் தருவது என்பது எல்லா பெற்றோருக்கும் ஒரு குழப்பமான விஷயமாகும். இதைக் கற்றுக்கொள்வது சுலபம்தான். அதற்கு, நாம் ஏற்கெனவே நம் மனதில் நிரம்பி யிருக்கும் மரபுச் சுமைகள், கற்பிதங்கள், தவறான சில நம்பிக்கைகள் எல்லாவற்றையும் முதலில் காலி செய்ய வேண்டும்.

செக்ஸைப் பற்றிக் குழந்தைக்கு எப்போது சொல்லலாம் என்ற கேள்வி எழுந்ததுமே நம் மனதில் ஒரு நெருடலும், பயமும் தயக்கமும் தோன்றுவதற்கு என்ன காரணம்? செக்ஸ் என்பதற்கு நம் மனதில் வைத்திருக்கும் தவறான அர்த்தம்தான்! செக்ஸ் என்றதும், ஆண் பெண் உடல் உறவுகொள்ளும் பிம்பம்தான் நம் மனதில் தோன்றுகிறது.

ஆனால், செக்ஸ் என்பது பால் அடையாளம். தான் யார் என்பதை ஒவ்வொரு மனிதரும் உணரச் செய்யும் அம்சங்களில் ஒன்று.

நான் ஆணாகப் பிறந்திருக்கிறேன்; அல்லது, பெண்ணாகப் பிறந்திருக்கிறேன்; என் உடல் ஆண் உடல்; என் உடல் பெண் உடல்; என் உடல் இன்ன உடலாக இருப்பதால் அது இப்படிப்பட்ட அமைப்பில் இருக்கிறது. இன்ன அமைப்பில் இருப்பதால், அதை இப்படி அழைக்கிறோம். இன்ன உடலாக இருப்பதால், அதன் உணர்ச்சிகள், தேவைகள், பயன்கள் இத்தகையவை..! இப்படி ஒவ்வொரு ஆணும், ஒவ்வொரு பெண்ணும் தன்னைத்தானே உணரும் பயணத்தின்போது, ஒரு கட்டத்தில் வந்து போகும் ஓர் அம்சம் மட்டுமே உடல் உறவு.

உடல் உறவு என்பதை நம் இளைஞர்கள் புரிந்துகொள்ள, முதலில் அவர்கள் உடல் என்பது என்ன என்று சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்; உறவு என்பது என்ன என்று புரிந்துகொள்ள வேண்டும். இரண்டையும் குழந்தைப் பருவத்திலிருந்தே தனித்தனியே புரிந்து கொள்ளத் தொடங்கினால்தான், வளர்ந்த பின் உடல் உறவை வாழ்க்கையின் ஆரோக்கியமான அம்சங்களில் ஒன்றாக ஏற்று அதன் மகிழ்ச்சிகளைக் குற்ற உணர்ச்சி இல்லாமல் அனுபவிக்கவும், அதன் விளைவு களுக்குத் தெளிவுடன் பொறுப்பேற்கவும் அவர்களால் முடியும்.

ஒரு குழந்தைக்கு அதன் உடலைப் பற்றி எப்படி சொல்லிக் கொடுப்பது? எப்போது சொல்லிக் கொடுப்பது? அதைத் தீர்மானிக்க முதலில் எந்தெந்த வயதில் குழந்தைக்கு என்னென்ன தெரியும்/ புரியும் என்று பார்ப்போம்.

மூன்று வயதுக்குள் குழந்தையின் வளர்ச்சி என்னவெல்லாம் ஆகிறது தெரியுமா? பிறந்தபோது இருந்த உயரத்தைப் போல இரு மடங்கு உயரமாகிவிடும். எடை மூன்று மடங்காகியிருக்கும். கெட்டியான உணவுகளைக் கடித்துச் சாப்பிடத் தொடங்கி யிருக்கும். தவழ்தல் முடிந்து நடக்க ஆரம்பித்திருக்கும். ஓடும்; குதிக்கும்; படி ஏறும்; தானே உடை மாட்டவும், கழற்றவும் ஆரம்பிக்கும். கழிவறையைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டிருக்கும்; ங்கா, ம்மா போன்ற ஒற்றைச் சொற்களைத் தவிர்த்து, முழு வாக்கியமாகவே பேசத் தொடங்கியிருக்கும். தானாகவே எதையாவது கற்பனை செய்யும் திறமைகூட மூன்று வயதுக் குழந்தைக்கு வந்து விடும்.

கையைக் காலாக்கி நீங்கள் நடந்தால் ‘ஆனை’ என்று அது சொல்வது கூட, அதன் கற்பனைத் திறனில் ஏற்படுகிற முன்னேற்றம் தான். ஐந்து புலன்களையும் பயன்படுத்தி விஷயங்களைப் புரிந்து கொள்ளும்.

பெண் குழந்தையானால், அம்மாவைப் போலவே பாவனைகள் செய்யும். ஆண் குழந்தை அப்பாவைக் காப்பி அடிக்கும். ஆண் பெண் வித்தியாசங்கள் வீட்டில் எப்படிப் பின்பற்றப் படுகிறதோ, அதைத் தானும் பின்பற்றக் கற்றுக்கொள்ளும்.

கவிஞர் வெண்ணிலா சொன்னது போல, காலையில் வாசலில் விழும் பேப்பரை அப்பாவிடமும், பால் கவரை அம்மாவிடமும் கொடுக்க அது (காப்பியடித்துக்) கற்றுக்கொண்டு இருக்கும். தன்னிடம் பழகும் பெரியவர்களில் தனக்கு நம்பிக்கையானவர்கள் எல்லாரையும் மூன்று வயதுக் குழந்தை காப்பியடிக்கும். தன் தேவைகளைக் கவனிக்கும் பெரியவர்கள் மீது நம்பிக்கை வைக்கத் தொடங்கும்.

மூன்று வயதுக் குழந்தை உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் தொடங்கி விடும். அன்பைக் காட்ட முத்தமிடும். எரிச்சலைக் காட்ட, கை வீசி அடிக்கும்.

பாலியல் வளர்ச்சியும் மூன்று வயதுக் குழந்தைக்கு உண்டு. அதன் அடையாளங்கள் என்ன? தன் உடலைப் பற்றியும் மற்றவர் உடல்களைப் பற்றியும் அறியும் ஆவல் அதற்கு இப்போது ஏற்படுகிறது. அது மட்டுமல்ல... தன் பிறப்புறுப்புகளைத் தொட்டால் சுகமாக இருப்பதை உணரத் தொடங்கும். அடிக்கடி தொட்டுப் பார்க்கும். அப்போது ஆண் குழந்தைக்கு குறி விறைப்பும், பெண் குழந்தைக்கு யோனிக் குழாய் ஈரமும் ஏற்படும் அனுபவங்களும் நிகழும்.

இதில் ஆச்சர்யமோ அதிர்ச்சியோ அடைய ஏதுமில்லை. குழந்தை தாயிடம் பால் குடிக்கும்போது அதற்கு ஏற்படும் சுக அனுபவங்களில் பாலியல் அனுபவமும் கலந்தே இருக்கிறது என்பது உளவியல் அறிஞர் சிக்மண்ட் ஃபிராய்டின் ஆய்வு முடிவு. இரு உடல்களின் அணைப்பின் கதகதப்பு குழந்தைக்கு சுக அனுபவம் மட்டுமல்ல, பாதுகாப்பு உணர்ச்சி தருவதாகவும் அமைகிறது.

மூன்று வயதிலிருந்தே குழந்தைகளைப் பெருமளவு சுயேச்சையாக தங்கள் வேலைகளைத் தாங்களே செய்துகொள்ளக் கூடியவர்களாக வளர்க்க வேண்டும். தனக்கென்று தனி டம்ளர், தனி தட்டு போல தனி பாய், தனி மெத்தை, தனி கட்டில், முடியுமானால் தனி அறை என்ற சில்லறைப் பெருமைகளைக் கொண்டு அவர்களை மடைமாற்றும் முயற்சிகளைப் பெற்றோர் மேற்கொள்ள வேண்டும்.

மூன்று வயதுக் குழந்தைகளுக்கு, தங்கள் உடல் உறுப்புகளை அடையாளம் காட்டிப் பெயர் சொல்லும் ஆற்றல் வந்துவிட்டு இருக்கும். காது எங்கே, மூக்கு எங்கே என்றெல்லாம் கேட்டால், தொட்டுக் காட்டி பதில் சொல்லும். ஆனால், பிறப்புறுப்புகளை மட்டும் பெயர் சொல்லவோ அடையாளம் காட்டவோ நம்மில் பலர் தயங்குகிறோம்.

சொல்லித் தராதது மட்டுமல்ல; இடக்கரடக்கலாக வேறு பெயர்கள் வைத்து சொல்லித் தருகிறோம். சுசூ, மூச்சா என்று விதவிதமான வேற்று மொழிப் பெயர்கள் போல் ஒலிக்கும் பெயர்களையெல்லாம் சூட்டுகிறோம். இதன் விளைவாக, நம் தாய் மொழியில் இந்த உறுப்பு களுக்கு இருக்கும் பெயர்கள் ‘கெட்ட வார்த்தை’களாக மாற்றப்பட்டு விட்டன.

செக்ஸ் பற்றிய குற்ற உணர்ச்சி, அருவருப்பு உணர்ச்சி, கவர்ச்சி எல்லாமே இப்போதுதான் விதைக்கப்படுகின்றன. ஜட்டி போடாமல் இருக்கும் குழந்தையிடம் நாம் சொல்வது என்ன... ‘ஷேம் ஷேம் பப்பி ஷேம்.’

நம் உடலைப் பற்றி வெட்கப்படவோ, அவமானப்படவோ எதுவும் இல்லை. நம் செய்கைகளில் தான் அவமானமோ பெருமையோ இருக்க முடியும். செயலில் இருக்க வேண்டிய அவமான உணர்ச்சியை உடல் உறுப்பின் மீதே ஏற்றிவைத்து விட்டோம். அதனால்தான் அப்பா லஞ்சம் வாங்குவது அம்மாவுக்கு அவமானமாக இல்லை; குழந்தை ஜட்டி போடாதது அவமானமாக இருக்கிறது!

அப்படியானால் மூன்று வயதுக் குழந்தையின் இனம் தெரியாத பாலுணர்வை அதற்கு எப்படிக் கையாளக் கற்றுத் தருவது ? ‘அம்மா, செக்ஸ்னா என்னம்மா?’ என்று உங்கள் குழந்தை கேட்டால், என்ன பதில் சொல்வீர்கள்?

1. எந்த வயதில் ஏற்படுவது காதல்?

2. எத்தனை வயது வரை நீங்கள் தாய்ப் பால் குடித்தீர்கள் என்று தெரியுமா?

3. எந்த வயது வரை அம்மாவையோ அப்பாவையோ கட்டிக்கொண்டுதான் படுப்பேன் என்று பிடிவாதம் பிடித்தீர்கள்?

4. ‘ஷேம் ஷேம் பப்பி ஷேம்’ போன்ற வாசகங்களை முதன்முதலில் எப்போது கேட்டீர்கள்/சொன்னீர்கள் என்று நினைவிருக்கிறதா?

5. பிறப்பு உறுப்புகளின் சரியான பெயர்களை நீங்கள் முதலில் கேள்விப்பட்டது எப்போது? எந்த வயதில்? யாரிடமிருந்து? உங்களால் அந்தச் சொற் களைக் கூச்சமின்றி இப்போது சொல்ல முடியுமா?

அறிந்தும் அறியாமலும் - 6

‘செக்ஸ்னா என்ன?’ என்ற கேள்வியைத் தன்னிடம் குழந்தை கேட்டு விடக் கூடாதே என்ற பதற்றம் பெரும்பாலான அம்மா, அப்பாக்களுக்கு இருக்கிறது.

பதற்றத்துக்குக் காரணங்கள் பல. குழந்தையின் கவனம் செக்ஸ் விஷயங்கள் பக்கம் போய்விடக் கூடாது என்ற பயம் ஒரு காரணம். கேட்டால், என்ன பதில் சொல்வது, எப்படிச் சொல்வது என்ற அறியாமை இன்னொரு காரணம். தன்னிடம் கேட்கும் முன்பாகவே குழந்தை அது பற்றி என்ன தெரிந்துவைத்திருக்கிறதோ, எவ்வளவு தெரிந்துவைத்திருக்கிறதோ என்ற கவலை மற்றொரு காரணம்.

முதல் குழந்தைக்கு மூன்று வயதாகிறபோது, அடுத்துக் கருவுற்றிருக்கும் அம்மா சந்தித்தே தீர வேண்டிய கேள்வி ‘எப்பிடி உன் வயித்துக்குள்ள பாப்பா வந்துது?’

கேள்வி கேட்ட ஒரு பத்து வயதுக் குழந்தையிடம் அம்மா சொன்னாள்... ‘ராத்திரி சாமி வந்து வெச்சுட்டுப் போய்ட்டார்.’

அடுத்த கேள்வி ‘என்னைக்கூட சாமிதான் உன் வயித்துல வந்து வெச்சுட்டுப் போனாரா?’

அம்மா அதற்கும் ‘ஆமாம்’ என்றுதான் சொல்லியாக வேண்டும். அடுத்தடுத்த கேள்விகள்...

‘அப்பாகூட அப்படித்தான் பொறந்தாரா?’, ‘எதிர் வீட்டுப் பாப்பா?’, ‘எங்க டீச்சர்..?’

எல்லாவற்றுக்கும் அம்மாவின் பதில் ‘ஆமாம்’தான்!

குழந்தை கடைசியாகக் கேட்ட கேள்வியில் அம்மா மயக்கம் போட்டு விழுந்தாள். அப்படி என்ன கேட்டது குழந்தை? ‘எல்லாரையுமே சாமிதான் வந்து வயித்துல வெச்சுட்டுப் போனார்னா, ‘செக்ஸ்Õன’ சொல்றாங்களே.... அது என்ன? நம்ம நாட்டுல யாரும் செக்ஸே வெச்சுக்கறதில்லையா?’

இந்தக் கதைக் குழந்தை தந்த அதிர்ச்சியை எந்த அம்மா, அப்பாவும் சந்திக்க விரும்ப மாட்டார்கள்தான். இன்னொரு ஐந்து வயதுக் குழந்தை, ‘செக்ஸ்னா என்னம்மா?’ என்று கேட்டது. அம்மா உடனே, வண்டு, மகரந்தப் பொடி, பூ என்று தொடங்கிக் கடைசியில் ஆண் உடல், பெண் உடல் படங்களை வரைந்து காட்டி, இதுதான் செக்ஸ் என்று கஷ்டப்பட்டு விளக்கி முடித்ததும், குழந்தை கேட்டது... ‘எப்படிம்மா இத்தனையையும் இந்த ஒரு லைன்ல எழுதறது?’ குழந்தை காட்டிய பள்ளிக்கூட டயரியில் பெயர், வயது, செக்ஸ் (ஆணா - பெண்ணா?) என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு வரிதானே கொடுக்கப்பட்டு இருக்கிறது?!

எந்த வயதில் கேட்கிறார்கள், எந்தச் சூழலில் கேட்கிறார்கள் என்பதையெல்லாம் உணராமல் பதில் சொன்னால் அசடு வழிவதும், அதிர்ச்சி அடைவதும்தான் நிகழும்.

மூன்று வயதிலேயே உடல், மன உணர்ச்சி வளர்ச்சிகளுடன் பாலியல் வளர்ச்சியும் குழந்தைக்கு நிகழ்கிறது என்று பார்த்தோம். இந்தக் கட்டத்தில், குழந்தையின் பாலியல் வளர்ச்சியைக் குடும்பம் எப்படிக் கையாள வேண்டும்?

குழந்தை தன் உடலைப் பற்றி அருவருப்பாகவோ, அவமானமாகவோ கருதாமல், தன் உடலைத் தானே நேசிக்கவும், அதைப்பற்றி சந்தோஷப்படவும் உதவ வேண்டும். உடலின் எல்லா பாகங்களின் பெயர்களையும் இப்போது கற்றுத்தந்துவிட முடியும்.

ஆண் குழந்தையின் உடல் ஒரு மாதிரியாகவும், பெண் குழந்தையின் உடல் வேறு விதமாகவும் இருப்பதை இப்போது குழந்தை கவனித்திருக்கும். எதனால் அப்படி அமைந் திருக்கிறது என்று குழந்தைக்கு இப்போது புரியவைக்க முடியும். வெவ்வேறுவிதமாக இருப்பதால் ஒன்று உசத்தி, ஒன்று தாழ்த்தி என்பதில்லை; இருவரும் சமம்தான் என்பதைச் சொல்லித்தரவும் இதுவே சரியான தருணம்.

‘ஆண் குழந்தைக்கு இருப்பது போன்ற உறுப்பு சிறுநீர் கழிக்கத் தனக்கு இல்லை’ என்ற பொறாமை உணர்ச்சி பெண் குழந்தைக்கு ஏற்படுகிறது என்று ஒரு காலத்தில் உளவியல் அறிஞர்கள் சொன்ன கருத்துக்கள் காலாவதியாகிவிட்டன. இதே போல தனக்குப் பெரிய மார்பகம் இல்லையே என்ற பொறாமை உணர்ச்சி ஆணுக்கும் ஏற்படும் வாய்ப்பு உண்டா என்ற எதிர்க் கேள்வி, பழைய முடிவுகளை மறு பரிசீலனை செய்யவைத்தது.

இப்படிப்பட்ட பரஸ்பர பொறாமை உணர்ச்சிகள் இயல்பில் இல்லாதவை. ஒன்றை உயர்ந்த தாகவும், மற்றொன்றைத் தாழ்ந்ததாகவும் கருதும் சமூகப் பார்வை தான் பொறாமை உணர்ச்சிகளைத் தூண்டுகிறது. ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் உடலால் வித்தியாசமானவர்களாக இருந்தாலும், சமமானவர்களே என்ற பார்வையை குழந்தைப்பருவத்தி லேயே பெற்றுவிட்டால், பல ‘வயசுக் கோளாறுகள்’ உருவாகவே வழி இல்லாமல் போய்விடும்.

மூன்று வயதில் குழந்தைக்குப் பேசவும், நாம் பேசுவதைப் புரிந்து கொள்ளவும் தெரிந்தது முதலே, ‘குட் டச்’, ‘பேட் டச்’சின் ஆரம்பப் பாடத்தை நாம் சொல்லிக் கொடுத்துவிட முடியும். முதல் பாடம் - ‘‘யாராவது உன்னைத் தொடுவது பிடிக்கவில்லை என்றால், உடனே ‘என்னைத் தொடாதீங்க; அது எனக்குப் பிடிக்கலை’ என்று அவரிடம் சொல்லிவிடு’’ என்று கற்றுத் தருவதாகும்.

‘என் உடல் என்னுடையது’ என்ற உணர்ச்சியின் இன்னொரு பக்கம்தான், ‘இன்னொருவர் உடல் என் சொத்து அல்ல; என் உடல் இன்னொருவருக்காகத் தயார் செய்யப்பட்டு வைத்திருப்பது அல்ல’ என்ற தெளிவுகளையும் பின்னாளில் ஏற்படுத்த முடியும். கதாநாயகனுக்காகவென்றே ‘ஆளாகி’, ‘சமைஞ்சு’ காத்திருப்பவளாக கதாநாயகியைச் சித்திரிக்கும் அத்தனைப் பாடல்களும், காட்சிகளும், பெண் உடல் தன் சொத்து என்ற கருத்தை ஆண் மனதிலும், தன் உடல் தன்னுடையதல்ல; இன்னொருவனுக்கானது என்ற கருத்தை பெண் மனதிலும் ஓயாமல் விதைத்துக்கொண்டே இருக்கின்றன.

இப்படிப்பட்ட தவறான கருத்துப் பரப்பலால்தான், ‘தொட்டால் கற்பு போய்விட்டதாகுமா?’, ‘முத்தமிட்டால் கற்பு போனதாகச் சொல்லலாமா?’ அல்லது, ‘உடல் புணர்ச்சி மட்டுமே கற்பைத் தீர் மானிக்குமா?’ போன்ற விசித்திரப் பட்டிமன்ற விவாதங்கள், பல விடலை மனங்களில் பேயாட்டம் ஆடுகின்றன.

இளைஞர்கள் மனதில் செக்ஸ் தொடர்பாக ஏற்படும் பல குழப்பங்களின் அஸ்திவாரம், சிறு வயதில் உடல் பற்றிய தவறான பார்வையிலேயே போடப்பட்டுவிடுகிறது. அதனால்தான் மிகச் சிறு வயதிலேயே உடல் பற்றிய இயல்பான புரிதல் என்ன, வளர்ச்சியின் தன்மை என்ன, வழி காட்டுதல் எப்படிப் பட்டதாக இருக்க வேண்டும் என்பதை நாம் அறிய வேண்டியிருக்கிறது.

ஒவ்வொரு வயதுப் பிரிவிலும் பாலியல் வளர்ச்சி எப்படிப்பட்டது என்று நாம் அறிய வேண்டும். நான்காம் வயது, ஐந்தாம் வயது இரண்டும் ஒரு கட்டம். இந்தக் கட்டத்தில்தான் ஆம்பளைன்னா இப்படி இருக்கணும்; பொம்பளைன்னா இப்படி இருக்கணும் என்ற பார்வை உருப்பெறத் தொடங்கிவிடுகிறது!

1. ‘செக்ஸ்னா என்ன?’ என்று யாரிடமாவது நீங்கள் கேட்ட / உங்களிடம் யாராவது கேட்ட முதல் நிகழ்ச்சி ஞாபகம் இருக்கிறதா?

2. என்ன பதில் தரப்பட்டது?

3. உங்கள் உடலைப் பற்றியோ / உடலின் ஏதேனும் ஒரு பாகத்தைப் பற்றியோ அருவருப்பாக எப்போதேனும் நினைத்திருக்கிறீர்களா? எப்போது? ஏன்?

4. உங்கள் உடலின் எல்லா பாகங்களின் பெயர்களும் உங்களுக்குத் தெரியுமா? சரியாகப் பெயர் தெரியாத பாகங்கள் உண்டா? எவை?

5. தொடுதல்/ அணைத்தல்/ முத்தமிடுதல்/ புணர்ச்சி - இதில் எப்போது கற்பு ‘இழக்கப்படுவதாக’ நினைக்கிறீர்கள்?

அறிந்தும் அறியாமலும் - 7

‘முளைச்சு மூணு இலைகூட விடல... அதுக்குள்ள என்ன ஆட்டம்!’ என்று சிறிசுகளைப் பெரிசுகள் கடிந்துகொள்வது உண்டு.

அதென்ன மூணு இலை கணக்கு? ஒரு விதை முளைத்ததும், இனி செடி நிச்சயம் பிழைத்துவிடும் என்ற நிலைதான் அது! மூணாவது இலை விட்ட பிறகு, பராமரிப்பு ஒழுங்காக இருந்தால், மிகவும் எதிர்பாராத பேரிடர்கள் வந்தாலொழிய, செடி பிழைத்து நன்றாகவே வளரும்.

மனிதக் குழந்தையும் செடி போலத்தான்... முற்றிலும் எதிர்பாராத பேரிடர்கள் வந்தாலொழிய, தாய்ப்பால் முதல் அடிப்படைப் பராமரிப்புகள் யாவும் முதல் மூன்று வருடங்களில் ஒழுங்காக இருக்கும் எந்தக் குழந்தையும் தொடர்ந்து சீராக வளர்ந்து, ஆளாக முடியும்.

நான்கு வயதில் குழந்தைகளின் வெளி உடல் வளர்ச்சியைவிட உள் உறுப்புகள் எல்லாம் வேகமாக வளர்ச்சி அடைகின்றன. பெரியவன்(ள்) ஆகும்போது இருக்கக்கூடிய உயரத்தில் சரிபாதி இப்போது வந்துவிடும். பெரிய வயது எடையில் கால் பாகம் இப்போது இருக்கும்.

குழந்தையின் துறுதுறுப்பு அதிகரிக்கும் வயது இது. படிக்கட்டுகளில் வேகமாக ஏறி இறங்கும். ஸ்கிப்பிங் போன்று தாண்டிக் குதிக்க முடியும்.

விரல்களைப் பயன்படுத்தி சற்று நுட்பமான வேலைகளைச் செய்யப் பழகிவிடும். பார்த்தால் புரியும் அளவுக்கு மரம், காக்கா என்று சின்னச் சின்னப் படங்கள் வரைய இப்போது அந்தக் குழந்தையால் முடியும்.

ஷூ லேஸைத் தானே முடிச்சுப் போட்டுக் கட்டவும், அவிழ்க்கவும் தெரிந்துகொள்ளும். சட்டை பட்டன்களைச் சரியாக மாட்டும். கத்திரிக்கோலில் விரல் நுழைத்துப் பிடித்து, வெட்டக் கற்றுக்கொண்டுவிடும்.

இவையெல்லாம் உடல் வளர்ச்சி, ஆற்றல் தொடர்பானவை. மன வளர்ச்சி, பாலியல் உணர்ச்சி பற்றிப் பார்க்கும் முன்பு ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனிக்க வேண்டும்.

நான்கு வயதுக்கு முந்தைய நிகழ்ச்சிகள் பற்றிய ஞாபகங்கள் எதுவும் நம் மனதில் இல்லை என்று அறிவியல் ஆய்வுகள் சொல்லுகின்றன அல்லவா? அதன் இன்னொரு அர்த்தம் என்ன?

நான்கு வயது முதல் நடைபெறும் நிகழ்ச்சிகள், அனுபவங்கள் எல்லாமே ஆயுள் முழுக்க நினைவில் நிற்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதுதானே? இதுதான் நாம் அக்கறை செலுத்தவேண்டிய மறுபக்க உண்மை.

நான்கு வயது முதல் அடுத்த பத்துப் பதினைந்து ஆண்டுகளில் குழந்தையின் மனதில் பதியும் ஒவ்வொரு விஷயமும் ஆயுள் முழுக்க உடன்வரக் கூடியவை. சில ஆக்கபூர்வமாக வரும்; சில ஆபத்தாகவும் வரும். எனவே, இந்த வயதிலிருந்து குழந்தையின் பாலியல் அடையாளம், அதன் பர்சனாலிட்டி எனப்படும் தனி மனித ஆளுமையில் ஒரு முக்கியமான அம்சமாக இருக்கப்போகிறது.

ஆம்பளைன்னா இப்படி இருக்கணும், பொம்பளைன்னா இப்படி இருக்கணும் என்ற கருத்துக்கள் குழந்தை மனதில் சுரீரென்று தைக்கத் தொடங்கும் வயது இது.

இதை (வி)தைப்பவர்கள் யார்?

நாம் எல்லாரும்தான். நான்கு, ஐந்து வயதுக் குழந்தைகள் அப்பா, அம்மா, பாட்டி, தாத்தா என்று மிக நெருக்கமான உறவினர்கள் தவிர, இதர மனிதர்களுடனும் மெள்ள மெள்ள அதிகம் உறவாடத் தொடங்குகின்றன. ஒருவிதத்தில் 4-5 வயதுக் குழந்தை தன்னைப் பராமரிப்பவர்கள் கூட இல்லாமல், ஓரளவு சுதந்திரமாக இருப்பதையும்கூட அனுபவிக்கக் கற்றுக் கொள்ளத் தொடங்குகிறது.

குழந்தை யாருடன் அதிக நேரம் செலவிடுகிறதோ, அவர்களுடைய ஆண், பெண் கருத்துக்கள், அவர்களுடைய நடை, உடை, பாவனைகள் எல்லாமே மனதில் பதியத் தொடங்கும் வேளை இது. அப்பாவோ ஆயாவோ கோபத்தில் யாரிடமாவது ‘ராஸ்கல்’, ‘கசுமாலம்’ என்றால், குழந்தையும் கூட தன் கோபமான தருணத்தில் அந்தச் சொற்களைச் சொல்லப் பழகிவிடும்.

பொருட்களை, நபர்களை, செயல்களை உற்று நோக்கிப் பார்த்துப் புரிந்து கொள்ள குழந்தை இப்போது முயற்சி செய்கிறது. எது நல்லது, எது கெட்டது என்பதை அறிகிறது. ஆனால்... இது ஏன் நல்லது, அது ஏன் கெட்டது என்ற காரணங்களைப் புரிந்துகொள்ள இப்போது குழந்தைக்கு இயலாது.

இந்த வயதில் குழந்தை, தன் சம வயதுக் குழந்தைகளிலும் ஓரிரு வயது மூத்த குழந்தைகளிலும் தன் முன்னோடியாகச் சிலரைப் பின்பற்றத் தொடங்குவது இப்போது நிகழும். ஒருவிதத்தில் ஒவ்வொரு குழந்தையுமே இன்னொரு குழந்தைக்கு முன்னோடிதான்.

நான்கு, ஐந்து வயதுச் சிறுவர்களும் சிறுமிகளும் இப்போது நிறையவே சேர்ந்து விளையாடுவார்கள். தொட்டுப் பேசி, அடித்து உதைத்து, கட்டிப் புரண்டு விளையாடுவார்கள். இப்படிப்பட்ட சாதாரண உறவாடல்களைத் தடுக்க ஆரம்பிக்கும்போது பெரியவர்களாகிய நாம் குழந்தைகளுக்கு ஆண்பெண் வித்தியாசம் பற்றிய ஆரோக்கியமில்லாத பார்வையைக் குழந்தைகளுக்கும் புகட்டத் தொடங்கிவிடுகிறோம்.

அப்படியானால் சிறுவனும் சிறுமியும் கட்டிப் புரண்டு விளையாடுவதை எந்த வயதில் கைவிடச் செய்வது என்று கேட்கிறீர்களா? அவசரப்பட வேண்டாம். அதை இந்தத் தொடரில் பின்னால் பார்க்கப்போகிறோம். ஐந்து வயதில் இருவரும் தொட்டு விளையாடினால், எந்தக் கூரையும் இடிந்து விழுந்துவிடாது. விளையாடட்டும்.

இப்போது குழந்தைகள் விளையாடும் விளையாட்டில் பெரியவர்களாகிய நமது பார்வைகள் கலந்து பிரதிபலிக்கத் தொடங்குவதைப் பார்க்கலாம். உதாரணமாக, குழந்தைகள் டாக்டர் நோயாளி விளையாட்டை விளையாடுவார்கள். ஒரு குழந்தை ஸ்டெதாஸ்கோப் மாட்டிய டாக்டர் போலத் தன்னை பாவித்துக்கொண்டு இன்னொரு குழந்தையைப் பரிசோதிக்கும். ‘ஊசி போட்டால் சரியாகிவிடும்’ என்று அது சொல்வதுகூட நம் பார்வைதான். பெரும்பாலும் டாக்டராக ஆண் குழந்தையும், ஊசி போடும் நர்ஸாக பெண் குழந்தையும் நடிக்கும். இது நேர் மாறாக இருக்கும் வாய்ப்பு இல்லை. காரணம், நம்மிடமிருந்து தொற்றிக்கொண்ட பார்வைதான். எந்தெந்த வேலைகள் பெண்களுக்கு ஏற்றவை, எவையெல்லாம் ஆண்களுக்கு ஏற்றவை என்று சுற்றியிருக்கும் சமூகம் விதித்து வைத்திருப்பதை, தான் கற்றுக்கொண்டதை விளையாட்டின் மூலம் நமக்கு உணர்த்துகிறது குழந்தை.

குழந்தைகளுக்கு நாம் வாங்கித் தரும் பொம்மைகளும் அவர்களுக்கு ஆண்-பெண்பாலியல் பாத்திரம் முதல் ஆண்-பெண் உறவு விதிகள் வரை நம்முடைய அணுகுமுறையைக் கற்பிக்கின்றன. கார் பொம்மை சிறுவனுக்கு; சமையல் சொப்பு சிறுமிக்கு. கிரிக்கெட் பேட் சிறுவனுக்கு; பல்லாங்குழி சிறுமிக்கு. செஸ் போர்டு சிறுவனுக்கு; தாயக்கட்டம் சிறுமிக்கு!

சொப்பு வைத்து சமையல் செய்துகொண்டு இருக்கும் ஐந்து வயதுச் சிறுமியிடம், விர்ரென்று பைக்கில் வந்து வீட்டு வாசலில் இறங்குவதாக பாவனை செய்யும் சிறுவன், ‘இன்னுமா சமையல் ரெடி பண்ணலே?’ என்று கேட்கும் கேள்வி, இருவரையும் எதிர்காலத்தில் நம்மைப் போலவே ஆக்குவதற்குத் தயார் பண்ணிவிடுகிறது.

ஒரு பக்கம் இப்படிக் குழந்தைகளின் பாலினப் பாத்திரங்களை நாம் நம் வார்ப்பில் நம்மை அறியாமலே உருவாக்கத் தொடங்கியிருக்கும் அந்த ஐந்து வயதில், இன்னொரு பக்கம் குழந்தைகளின் மனதில் தன் உடல் பற்றி, தன் பிறப்பு உறுப்புகள் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வமும் முயற்சியும் ஆரம்பிக்கிறது.

இந்த வயதில்தான், ‘எங்கிருந்து குழந்தை வந்தது? அது எப்படி அம்மா தொப்பைக்குள் போயிற்று? எப்படி வெளியில் வரும்?’ என்ற அவர்களின் மூன்று கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய நிலையில் இருப்போம்.

எப்படிப் பதில் சொல்வது?

தினமும் காலையில் பல் தேய்க்கவும், சாப்பிடும் முன்பும் சாப்பிட்ட பின்பும் கைகளைக் கழுவவும் கற்றுக் கொடுத்திருப்போம் அல்லவா? அதுபோலவே மலம் கழித்த பின், தானே கழுவிக்கொள்ளக் குழந்தைக்குக் கற்றுத் தருவோம். அதைக் கற்றுத் தரும்போதே மேற்கண்ட கேள்விகளுக்கும் பதில் சொல்லித் தர முடியும். எப்படி?

1. நீங்கள்/உங்கள் குழந்தை, தானாகவே ஷூ லேஸைக் கட்டக் கற்றுக் கொண்டது எப்போது?

2. நீங்கள் குழந்தையாக இருந்தபோது கேட்ட முதல் கெட்ட வார்த்தை எது? சொன்னவர் யார்?

3. நீங்கள் குழந்தைகள் முன்னால் பயன்படுத்தும் கெட்ட, தடித்த வார்த்தைகள் எவை எவை? அவர்கள் இல்லாதபோது பயன்படுத்துபவை எவை எவை?

4. உங்களுக்கு முதலில் வாங்கித் தரப்பட்ட விளையாட்டு பொம்மைகள் என்ன? உங்கள் ஆண் குழந்தைக்கும் பெண் குழந்தைக்கும் நீங்கள் வாங்கித் தந்த பொம்மைகள் என்னென்ன?

5. ‘எங்கிருந்து குழந்தை வந்தது? அது எப்படி அம்மா தொப்பைக்குள் போயிற்று? எப்படி வெளியில் வரும்?’ என்ற மூன்று கேள்விகளுக்கும் என்ன பதில் சொல்லியிருக்கிறீர்கள்?

6. காலைக் கடன்களைக் கழித்ததும் எந்த வயதில் சுயமாகக் கழுவிக் கொள்ளக் கற்றுக்கொண்டீர்கள்? குழந்தைக்குக் கற்றுக் கொடுத்தீர்கள்?

மூலம்: www.keetru.com ,ஆனந்தவிகடன் தொடர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடையாரின் மிகவும் பயனுள்ள் பகிர்வு பாராட்டத்தக்கது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடையார் உங்களின் இணைப்புக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சகாறா & நிலாமதி அக்கா

அறிந்தும் அறியாமலும் - 8

ஐந்து வயதுக் குழந்தை, “எங்கிருந்து குழந்தை வந்தது? அது எப்படி அம்மா தொப்பைக்குள் போயிற்று? எப்படி வெளியில் வரும்?” என்ற மூன்று கேள்விகளையும் கேட்க ஆரம்பிக்கும்போது, அதற்குச் சரியாக பதில் சொல்ல வேண்டுமானால், பதில் சொல்கிறவர் ஆணுக்கும் பெண்ணுக்கும் உடல் அமைப்பில் உள்ள வித்தியாசங்கள் பற்றிச் சரியாகப் புரிந்து வைத்திருக்க வேண்டும். எல்லாருமே சிறு வயதிலேயே இதைப் புரிந்துகொள்ளத் தொடங்குவது நல்லது.

ஆனால், என்ன வித்தியாசம் என்பது தெரியாததாலும், அரைகுறையாகவும் தப்புத் தப்பாகவும் தெரிந்துகொள்வதாலும் குழப்பமடைகிறார்கள். பெரியவர்களான பின்னரும் இந்தக் குழப்பம் நீடிக்கிறது. அடுத்தபடியாக தங்கள் குழந்தைகளுக்கும் பரம்பரைச் சொத்தாக அந்தக் குழப்பத்தைக் கொடுத்துவிட்டுப் போய்விடுகிறோம். இதன் விளைவாக, விடலைப்பருவத்தில்கூட தன் உடலைப் பற்றிய புரிதல் இல்லாமல், நம் அடுத்த தலைமுறை மனக் குழப்பத்தில் சிக்கிக்கொள்கிறது.

அண்மையில், மகளிர் கல்லூரி ஒன்றில் வாழ்க்கைக் கல்வி வகுப்பு நடத்திய என் சிநேகிதி, ஒரு சாதாரண அன்றாட விஷயத்தைப் பற்றிக் கேட்ட கேள்விக்குப் பதில் தெரியாமல் ஏராளமான 18 வயதுப் பெண்கள் விழித்தார்கள். கேள்வி என்ன தெரியுமா? மலம் கழித்த பின், ஆசனவாய்ப் பகுதியைக் கழுவும்போது பெண்கள் எப்படிக் கழுவிக்கொள்ள வேண்டும்? முன்புறத்திலிருந்து பின்புறம் நோக்கிக் கழுவ வேண்டுமா?

‘எப்படிக் கழுவினால் என்ன?’ என்பதுதான் பரவலான பதிலாக இருந்தது. அப்படியல்ல..! உடலின் உறுப்புகள் அமைந்துள்ள விதத்துக்கும் கழுவும் முறைக்கும் தொடர்பு இருக்கிறது.

பொதுவாக, ஆண்களைவிடப் பெண்களுக்கு அதிகமாக சிறுநீர் தடத்தில் தொற்று ஏற்படும் பிரச்னைகள் அதிகம். இதற்கான காரணங்களில் ஒன்று, மலம் கழித்தபின் கழுவும் முறை.

பெண் உடலில் முதலில் இருப்பது சிறுநீர் வெளியேறுவதற்கான துளை. அடுத்து அமைந்திருப்பது, உடலுக்குள் இருக்கும் கருப்பையை நோக்கிச் செல்லும் யோனிக்குழாயின் நுழை வாயில். மூன்றாவதாக பின்புறத்தில் அமைந்திருப்பதுதான் ஆசனவாய்.

கழுவிக்கொள்ளும் போது பின்பக்கத்திலிருந்து முன்பக்கம் நோக்கிக் கையை வீசித் துடைத்தால், அசுத்த நீர், யோனிக் குழாய்க்குள்ளும் சிறுநீர்ப் பாதைக்குள்ளும் சென்று தொற்று ஏற்படுத்தும் ஆபத்து உண்டாகும். எனவே, கை முன்புறம் வராமல், பின்புறம் நோக்கியே செல்லும்விதமாகக் கழுவ வேண்டும்.

இந்தப் பிரச்னை ஆண் உடலுக்கு இல்லை. சிறுநீர், விந்து வெளியேறும் துளைகள் திறந்த அமைப்பில் இல்லாமல் குழாய் வடிவத்தில் இருப்பதால், தொற்று ஏற்படும் வாய்ப்பு இல்லை.

ஐந்து வயதுப் பெண் குழந்தைக்கு டாய்லெட் ஹேபிட்டுகளை ஏற்படுத்தும்போதே இந்த அடிப்படை ஆரோக்கிய வழிமுறையைச் சொல்லித் தர வேண்டும்.

தொடர்ந்து வேறு கேள்விகள் கேட்கத்தான் செய்வார்கள்.

‘அப்பா வயித்துல ஏன் குழந்தை இல்லே?’

‘அப்பாவும் உன் தம்பிப் பாப்பா மாதிரியே ஆம்பளை இல்லியா? அதனால, குழந்தை வெளில வர்றதுக்கு ஹோல் கிடையாது. அதனாலதான் அப்பா வயித்துல குழந்தை இருக்காது’ என்று பதில் சொல்லலாம்.

ஆறு வயது தொடங்கி எட்டு வயதாவதற்குள் குழந்தைகளுக்குப் பாலியலின் அடிப்படைகள் கொஞ்சம் புரியத் தொடங்கிவிடும். இப்போது இவர் களைக் குழந்தைகள் என்று வர்ணிப்பதே தவறான சொற்பிரயோகம்தான். சிறுவன், சிறுமி என்றே அழைக்கப்படவேண்டிய இவர்களுக்கு இப்போது ஆண்-பெண்வேறுபாடுகள் நன்றாகவே தெரியும்.

இருவருமே இப்போது தங்கள் பாலினரோடே அதிகம் பழகுவார்கள். எதிர் பாலினரைத் தவிர்ப்பார்கள். ஆம்பளைத்தனம் இல்லாத ஆணையும் பொம்பளைத்தனம் இல்லாத பெண்ணையும் கேலி செய்வதுகூட நடக்கும். எது ஆம்பளைத் தனம், எது பொம்பளைத் தனம் என்பதற்கான வரையறைகளை இவர்கள் உருவாக்கிக்கொண்டது எப்படி? சுற்றிலும் இருக்கும் பெரியவர்களான நம்மிடமிருந்துதான்!

செக்ஸ் பற்றி தங்களுக்கு நெருக்கமான பெரியவர்களிடம் சின்னச் சின்னதாகக் கேள்விகள் கேட்பார்கள் சிறுவர்கள். அவற்றைப் பெரியவர்களான நாம் இரண்டு விதமாக எதிர்கொள்கிறோம். கேள்வியே காதில் விழாதது போல நழுவிவிடுவோம். அல்லது, இந்த மாதிரி கெட்ட கெட்ட கேள்வியெல்லாம் கேட்காதே என்று கடிந்துகொள்வோம்.

தங்கள் கேள்விகள் எந்தெந்தப் பெரியவர்களுக்கெல்லாம் சங்கடமாக இருக்கிறது என்பது சிறுவர்களுக்குப் புரிந்துவிடும். அதன்பின், அந்தப் பெரிவர்களிடம் அந்தக் கேள்வி களை மறுபடி கேட்கவே மாட்டார் கள். அதிலிருந்துதான் ஆபத்து ஆரம்பிக்கும்!

ஏனென்றால், எட்டு வயதில் ஒரு சிறுவனுக்கும் சரி, சிறுமிக்கும் சரி... ஆணும் பெண்ணும் சேர்ந்து ‘ஏதோ’ ஒரு செயலால்தான் குழந்தை பிறக்கிறது என்பது நன்றாகவே தெரிந்திருக்கும். அந்த ‘ஏதோ’ என்ன என்பது பற்றித்தான் சரியாகத் தெரியவில்லை. ஆனால், அந்த ‘ஏதோ’வை தூண்டிவிடக்கூடிய ஹார்மோன்கள், அடுத்த ஓரிரு ஆண்டுகளில் அந்தச் சிறுவர்களின் உடலில் வேகமாக வேலை செய்யத் தொடங்கிவிடும்.

ஆணும் பெண்ணும் செய்யும் அந்த ‘ஏதோ’ என்ன என்பதைப் பற்றிய மனக் குறுகுறுப்புக்குப் பதில்களை வீட்டுக்கு வெளியில் தேடத்தொடங்குவது இந்த வயதில்தான். பள்ளிக்கூட வகுப்புத் தோழர்கள் முதல் மீடியா வரை ஏராளமான செக்ஸ் டீச்சர்கள்(?) பெற்றோரின் உதவி இல்லாமலே அவர்களுக்குக் கிடைத்துவிடுகிறார்கள்.

எட்டாம் வகுப்பு சிறுவன் ஒருவன் அண்மையில், வாழ்க்கைக் கல்விப் பயிலரங்கம் ஒன்றில் என்னிடம் சொன்னான்... ‘‘சார், இவனுக்கு மூணு விரைக்கொட்டை இருக்கு சார்!’’

சுட்டிக்காட்டப்பட்ட சிறுவன் வெட்கத்துடன் “ஆம்” என்று தலையாட்டினான். இன்னொருவன் கேட்டான்... ‘‘எங்களுக்கும் அப்படி முளைக்குமா சார்?’’

1. பெண் குழந்தைக்கு ஆசனவாயைக் கழுவிவிடும் முறை பற்றி உங்களுக்கு எப்போது முதன்முதல் தெரியவந்தது?

2. குழந்தை வெளிவரும் பாதையும் சிறுநீர்ப் பாதையும் வெவ்வேறானவை என்பதை எந்த வயதில் தெரிந்துகொண்டீர்கள்?

3. ‘அப்பா வயித்துல ஏன் குழந்தை இல்லே?’ என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்லியிருக்கிறீர்கள்?

4. ஆணும் பெண்ணும் சேர்ந்து ‘ஏதோ’ செய்வதால்தான் குழந்தை பிறக்கிறது என்பது முதலில் எப்போது உங்களுக்குத் தெரியவந்தது?

5. அந்த ‘ஏதோ’ என்பது என்ன என்று தெளிவாகத் தெரிந்துகொண்டது எப்போது?

அறிந்தும் அறியாமலும் - 9

எல்லாச் சிறுவர்களுக்கும் இருப்பதுபோல, தனக்கு இரண்டு விரைக் கொட்டைகள் இருப்பதற்குப் பதிலாக மூன்று உள்ளதாகப் பயிலரங்கில் தெரிவித்த சிறுவனிடம், ‘இப்படி ஒரு பிரச்னை இருப்பது, உன் பெற்றோருக்குத் தெரியுமா?’ என்று கேட்டேன். ‘தெரியாது. இதுவரை சொல்லவில்லை’ என்றான். முதலில் பெற்றோரிடம் தெரிவித்துவிட்டுப் பிறகு மருத்துவரிடம் ஆலோசிக்கும்படி சொன்னேன். இதுவரை அவன் பெற்றோருக்கு இது பற்றி ஏன் தெரியாமலே இருந்தது என்று யோசித்தேன். எல்லாருமே யோசிக்க வேண்டும்.

வகுப்புத் தோழனிடம் இதைச் சொன்ன சிறுவன், ஏன் தன் பெற்றோரிடம் சொல்லவில்லை? இதற்குப் பல காரணங்கள் உள்ளன.

முதல் காரணம், இப்படிப்பட்ட விஷயங்களை அப்பாவிடமோ, அம்மாவிடமோ பேசத் தயங்கும் சூழ்நிலை வீட்டுக்குள் இருப்பதுதான். செக்ஸ், பிறப்பு உறுப்புகள் தொடர்பான எந்த விஷயத்தைப் பற்றியும் லேசாக ஏதாவது பேசினாலே, அம்மாவும் அப்பாவும் எரிச்சல் அடைகிறார்கள்; அல்லது தர்மசங்கடமாக நெளிகிறார்கள்; பேச்சை மாற்றுகிறார்கள்; தவிர்க்கிறார்கள் என்பதையெல்லாம் எட்டு வயதுச் சிறுவனும் சிறுமியும் கூர்மையாகக் கவனிக்கிறார்கள். எனவே, அதையொட்டி தாங்களும் இவை தொடர்பான சின்னச் சின்னப் பிரச்னை களைக்கூட அப்பா, அம்மா மற்றும் வீட்டுப் பெரியவர்களிடம் பேசுவதைத் தவிர்த்துவிடுகிறார்கள். வகுப்புத்தோழன், தோழிகளிடம்தான் அடுத்து இதைப் பற்றி சங்கடமில்லாமல் பேச முடியும் என்று உணர்கிறார்கள்.

எட்டு வயதை அடையும்போது ஒரு சிறுவனும் சிறுமியும் முன்போல தங்கள் பெற்றோர் தங்களை முத்தம் கொடுத்துக் கொஞ்சுவது, அணைப்பது போன்றவற்றைத் தவிர்க்கத் தொடங்குகிறார்கள். அதிலும் பிறர் எதிரில் இப்படிக் கொஞ்சுவது, அவர்களை கூச்சப்படுத்துகிறது. இதற்கெல்லாம் காரணம், தங்கள் உடலைப் பற்றிய பிரக்ஞை அவர்களுக்கு அதிகரித்து வருவதுதான்.

கூடவே, இன்னொரு ஆற்றலும் இப்போது அவர்களுக்கு வந்துவிடுகிறது. அழுகை, சிரிப்பு, மகிழ்ச்சி, கோபம் என எல்லா உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்தவும், மறைக்கவும் கற்றுக் கொள்கிறார்கள்.

எட்டு வயதில் தனக்கென்று ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் ஒரு கருத்து சிறுவனுக்கும் சிறுமிக்கும் உருவாக ஆரம்பித்துவிடுகிறது. அது சரியா, தவறா என்பது முக்கியமல்ல. ஆனால், எதைப் பற்றியும் தன் கருத்து என்ற ஒன்றை உருவாக்கிக்கொள்ளும்போதுதான் ஒவ்வொருவருக்கும் அவருடைய தனிப்பட்ட பர்சனாலிட்டி எனப்படும் ஆளுமை உருவாக ஆரம்பிக்கும்.

அந்தப் பருவத்தில் தான் எட்டு வயதுச் சிறுவனும் சிறுமியும் இருக்கிறார்கள். படிப்பு, விளையாட்டு, எதிர்காலத்தில் டாக்டர் ஆவதா, தலைவர் ஆவதா, ரஜினி பிடிக்குமா, கமல் பிடிக்குமா, அசின் ரசிகனா, த்ரிஷா ரசிகனா, ஜெட்டெக்ஸா, போகோவா என்பதைப் பற்றியெல்லாம் கருத்து இருப்பது போல, செக்ஸ் எனப்படும் பாலியல் தொடர்பான விஷயங்கள் பற்றியும் அவர்களுடைய கருத்துக்கள் இப்போது உருவாகத் தொடங்குகின்றன.

எட்டு வயது முதல் சிறுவன்-சிறுமி மனதில் உருவாகும் செக்ஸ் பற்றிய கருத்துக்கள் எப்படி உருவா கின்றன என்பதைக் குடும்பமும், நண்பர்களும், மீடியாவும், அறிந்தும் அறியாமலும்(!) மிகப் பெரும் அளவில் முடிவு செய்கின்றன.

குடும்பம், செக்ஸ் பற்றிப் பேசுவதைத் தவிர்த்து சிறுவர்களை அந்நியப்படுத்துகிறது. மீடியாவோ அதைப் பற்றிக் கவர்ச்சியாகப் பேசி, சிறுவர்களுடன் நெருக்கமாகி விடுகிறது. நண்பர்கள் தங்களுடைய முழுக் குழப்பங்களையும், அரை அறிவுகளையும் பகிர்ந்துகொள்கிறார்கள். எங்கிருந்தும் சரியான, முறையான தகவல்கள் கிட்டாதவர்களாகவே நம் சிறுவர்கள் வளர்கிறார்கள்.

செக்ஸ் பற்றிய குடும்பத்தின் தயக்கத்துக்கும் மீடியாவின் கவர்ச்சிக்கும் அடிப்படையாக இருப்பது அருவருப்பு, ஆசை என்ற இரு உணர்ச்சிகள்தான். இயற்கையில் செக்ஸ் உறுப்புகள் மனித உடலில் கழிவு உறுப்புகளுக்கு அருகில் அமைக்கப்பட்டு இருக்கின்றன. எனவே சிறுநீர், மலம் ஆகிய கழிவுப் பொருட்களுக்கு நிகராகவே, இனப்பெருக்கம் தொடர்பான உடல் சுரப்புகளான ஆணின் விந்து, பெண்ணின் சினைமுட்டை வெளியேற்றமான மாத விலக்கு ஆகியவை இழிவான கழிவுகளாகத் தவறாகக் கருதப் படுகின்றன. ஆனால், இனப்பெருக்கம் என்பதும், உடல் உறவின் சுகம் என்பதும் மனித இனத்தின் தேவைகள். எனவே, கழிவு உறுப்புடன் தொடர்புபடுத்திய அருவருப்பு மனநிலையைக் கடந்து வர, மிகைப்படுத்தப்பட்ட கவர்ச்சி, செக்ஸுக்கு ஏற்றப்படுகிறது.

மனித வரலாற்றில், நாகரிக வளர்ச்சியில் முக்கிய பாத்திரம் வகிக்கும் மதங்கள் அனைத்துமே, செக்ஸைத் தவிர்க்க இயலாத பாவமாகவே கருதுகின்றன. அது கெட்ட விஷயம்; தப்புக் காரியம். ஆனால், மனித இனம் அழியாமல் இருக்க, வேறு வழியில்லாமல் அதைப் பின்பற்றியாக வேண்டி யிருக்கிறது என்ற அணுகுமுறையையே மதங்கள் முன்வைத்திருக்கின்றன.

குடும்பம், இந்த மன நிலையை சிறுவர்கள் மனதில் விதைக்கிறது. படிக்கிற வயதில் பையனும் பெண்ணும் ‘தீய’ சிந்தனைகள் வராமல் படிப்பில் கவனம் செலுத்துவது எப்படி என்ற பெற்றோரின் மனத் தவிப்புக்குப் பின்னால், ஆட்சி செலுத்தும் கோட்பாடு, செக்ஸ் ‘தீயது’ என்பதுதான். ஆனால் வயது வந்தபின், செக்ஸ் தரும் சுகத் துக்கான ஆசையும், நமது வம்சம் தழைக்க வேண்டும் என்ற விருப்ப மும் அருவருப்பு - பாவக் கருத்தி லிருந்து செக்ஸை மீட்க முயற்சிக் கின்றன. அங்கேதான் மீடியாவின் கவர்ச்சிப் பூச்சு உவந்து ஏற்கப் படுகிறது. இந்த இரு நிலைகளுக்கும் இடையே நமது சிறுவர்கள் சிக்கிக் கொண்டு இருக்கிறார்கள், நாம் நமது சின்ன வயதில் சிக்கியிருந்தது போல!

இன்று உண்மையில் இது டீன் ஏஜ் சிக்கல் அல்ல! டீன் ஏஜ் எனப்படும் 13 வயது தொடங்கும் முன்பே, 9 வயதிலிருந்தே உடலில் ரசாயன மாற்றங்கள் ஆரம்பித்துவிடுகின்றன. பல்வேறு சமூக, சுகாதார காரணங்களால், இன்று சிறுமிகள் பூப்பெய்தும் வயது 10, 9 எனக் குறைந்து வருகிறது.

9 வயதில் முதல் மனச் சிக்கல் - சுய இன்பம் எனப்படும் ‘மாஸ்ட்ரு பேஷன்’ பற்றியதுதான். ‘ஐயையே, எங்க பசங்க அதெல்லாம் செய்ய மாட்டாங்க’ என்று நம்பிக்கொண்டு இருக்கும் பெற்றோர் கவனிக்கவும் - நம் வீட்டு சிறுமியும், சிறுவனும் கோடியில் ஒருவராக இருந்தால்தான் அது சாத்தியம்!

சுய இன்பம் அனுபவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதில் மகிழ்ச்சி அடைந்து, மீண்டும் மீண்டும் அந்த அனுபவத்துக்கு முயற்சிக்கும் ஒவ்வொரு சிறுமியும் சிறுவனும் கூடவே கடுமையான மன உளைச்சலில் சிக்கித் தவிக்கிறார்கள்.

‘இது சரியா? தப்பா?’ என்பது ஒழுக்கம் சம்பந்தப்பட்ட மன உளைச்சல்.

‘இது ஆரோக்கியமானதா? ஆபத்தானதா?’ என்பது பயத்தின் அடிப்படையில் எழும் மன உளைச்சல்.

யாரைக் கேட்பார்கள் நம் சிறுவர்கள்?

1. பள்ளிக்கூடம் செல்லும்போது முத்தம் கொடுத்து அனுப்புவதை உங்கள் அம்மா நிறுத்தியது எந்த வயதில்?

2. அம்மா, அப்பா முத்தம் கொடுப்பதை நீங்கள் கூச்சமாக உணரத் தொடங்கியது எந்த வயதில்?

3. செக்ஸ் என்றால், அது ஏதோ தப்பான விஷயம் என்று முதன்முதலில் எந்த வயதில் உங்களுக்குத் தோன்றியது?

4. அது ஒன்றும் தப்பான விஷயம் அல்ல என்று எந்த வயதில் நினைக்கத் தொடங்கினீர்கள்?

5. சுய இன்பம் அடைய முயற்சித்தது உண்டா? ஆமெனில் எந்த வயதில்?

6. அது குறித்து பயம் இருந்ததா? அந்தப் பயம் எந்த வயதில் போயிற்று?

மூலம்: www.keetru.com ,ஆனந்தவிகடன் தொடர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நிழலி

அறிந்தும் அறியாமலும் - 10

செக்ஸ் என்றால் என்ன என்று அதன் முழுப் பொருளையும் தெரிந்துகொள்ளும் வயதும் அறிவும் அனுபவங்களும் வாய்க்கும் முன்பே, பிறப்பு உறுப்புகளைத் தானே தொட்டு சுய இன்பம் அனுபவிக்க முடியும் என்பது மட்டும் ஒன்பது வயதிலிருந்தே தெரிய ஆரம்பித்துவிடுகிறது!

அறிந்தும் அறியாமலும் அனுபவிக்கும் இந்த இன்பம், சரியா தப்பா, உடலுக்கு நல்லதா கெட்டதா என்ற கேள்விகள் இளம் மனங்களை வாட்டுகின்றன. இது பற்றி யாரைப் போய் கேட்பார்கள் நம் சிறுவர்கள்?

தொலைக்காட்சியைத் திருப்பினால், வைத்தியர்கள் சிலர் ஓயாமல் மிரட்டிக்கொண்டே இருக்கிறார்கள். எதிர்கால இந்தியாவின் தூண்கள் எல்லாமே சுய இன்பத்தால் உளுத்துப் போய் இற்று விழுந்துகொண்டு இருக்கின்றன... அதைக் காப்பாற்றியே தீர வேண்டும் என்பதே தங்கள் வாழ்க்கையின் லட்சியம் என்கிறார்கள்.

அவர்கள் சொல்வது சரியா தவறா என்று யாரிடம் சென்று கேட்பது? குடும்பமாக உட்கார்ந்து ‘தீப்பிடிக்க... தீப்பிடிக்க’ பார்க்கும் ‘பக்குவம்’ மட்டும்தான் நமக்கு வாய்த்திருக்கிறதே தவிர, சுய இன்பம் பற்றிக் கூடி விவாதிக்கும் சூழல் வரவில்லை. பள்ளி சகாக்களிடம் கேட்டால், இன்னும் குழப்புகிறார்கள். ஆசிரியர்களிடம் கேட்கலாமா?

ஆசிரியர்களின் இன்னொரு முகம் பெற்றோர் என்பதுதானே! எனவே, பெற்றோர்களுக்கு இது குறித்து இருக்கும் தயக்கம், பயம், எரிச்சல், எல்லாம் அவர்களுக்கும் உண்டு. விதிவிலக்கான மிகச் சில ஆசிரியர்கள் மட்டுமே சிறுவன் சிறுமிகளின் முக ஓட்டத்திலிருந்தே மனக் கிலேசத்தை அடையாளம் கண்டு, தனியே அழைத்து ஆறுதலாகப் பேசி, தெளிவுபடுத்தக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.

ஆனால், மிகப் பெரும்பான்மையான ஆசிரியர்கள் செக்ஸ் தொடர்பான சிறுவர்களின் ஐயங்களைக் களையும் பொறுப்பு தங்களுடையது அல்ல என்பதில் தீர்மானமாக இருக்கிறார்கள். இந்தச் சூழலில் சுய இன்பம் பற்றிய ஒன்பது வயதுச் சிறுவர்களின் கவலைகளை யார் தீர்ப்பது?

ஆசை வெட்கமறியாது என்பார்கள். அறிவும் வெட்கமறியாது என்று ஆக வேண்டும். எதையும் அறிந்து கொள்ள வேண்டுமானால், வெட்கமும் கூச்சமும் உதவாது. அதேபோல எதையும் சரியாகக் கற்பிக்கவும், வெட்கமும் கூச்சமும் கூடாது.

முதலில் 9-லிருந்து 12 வயதுக்குள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதைத் தெரிந்து கொள்வோம். அப்போதுதான், இந்த வயதில் தொடங்கும் சுய இன்பப் பழக்கம் பற்றியும் புரிந்துகொள்ள முடியும்.

‘நான் வளர்கிறேனே மம்மி’ என்று சொல்லிக் கவனிக்க வேண்டிய தேவையில்லாமல், கண்ணை உறுத்தும் வேகத்தில் இப்போது வளர்ச்சி நிகழ்கிறது. சிறுமிகளுக்கு முதலிலேயே தொடங்கி விடும்.சிறுவன்களுக்கு உடல் வளர்ச்சி அதிக வருடங்கள் நீடிக்கும். உடலில் இருக்கும் பிட்யூட்டரி எனப்படும் சுரப்பியிலிருந்து பையன்களுக்கு டெஸ்டோஸ்ட்ரோன் சுரக்கும். சிறுமிகளுக்கு ஈஸ்ட்ரோஜென்/ப்ரோஜெஸ்ட்ரோன் சுரப்புகள் ஆரம்பிக்கும். இந்தச் சுரப்புகள் பொதுவாகச் சிறுமிகளுக்கு 9 வயதிலும், பையன்களுக்கு 11 வயதிலும் தொடங்கும்.

பருவக் கோளாறு என்று தப்பாக இன்றும் சொல்லப்படும் பருக்கோளாறு ஆரம்பிப்பது இப்போது தான். முகத்தில் பருக்கள் உண்டானதும், ‘யார் மனசுல யாரு?’ என்ற அசட்டு ஆராய்ச்சிகள் வகுப்பறையிலும் வீட்டிலும் தொடங்கும். பருவுக்கும் மனசுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. செக்ஸ் ஹார்மோன் சுரப்புகளால் தோலில் எண்ணெய்ப் பசை அதிகரிப்பதுதான் பருவுக்கான காரணம். ஆளுக்கு ஆள் இது வேறுபடும். வாழ்க்கையில் பருவே வராத பெரும் காமுகர்களும் உண்டு.

வேர்வை அதிகமாகும். நம் உடலுக்கென்று ஒரு வாசனை அல்லது நாற்றம் அமையத் தொடங்குவதும் இந்த வயதில் தான். மீசை அரும்பும். அக்குளிலும் தொடை இடுக்கிலும் பிறப்புறுப்புகளைச் சுற்றிலும் முடி முளைக்கும். உடலின் கன பரிமாணங்கள் மாறும். பையன் களுக்குத் தோள் அகலமாகும். சிறுமிகளுக்கு இடுப்பு அகலமாகும். மார்பகங்கள் சற்றே பெரிதாகத் தொடங்கும். முலைக்காம்பைச் சுற்றிய வட்டம் கறுக்கும். இரு பாலாருக்கும் பிறப்பு உறுப்பைச் சுற்றிய பகுதி கறுக்கும்.

உடல் வளர்ச்சி வேகமாக இருப்பதால், சிறுவர்களுக்கு மூட்டு வலிகள் ஏற்படும். அடிக்கடி உடல் வலிக்கிறது. காலைப் பிடித்து விடு, கையைப் பிடித்து விடு என்று ‘குழந்தைகள்’ அம்மாவிடம் சொல்வார்கள். இந்த வயதில் ஏன் இவனு/ளுக்கு உடம்பு வலி என்று அம்மா மனம் பதறும்.

குளிக்கப் போனால் சீக்கிரம் வெளியே வருவதில்லை. பாத்ரூமிலிருந்து பாட்டு உற்சாகமாகக் கேட்கும். பாட்டு நின்ற பிறகும் கதவு திறப்பதில்லை. குளியலறையில் சுய இன்பத்தில் குழந்தைகள் ஈடுபடுகிறார்களோ என்ற சந்தேகம் அம்மாவுக்கு வலுக்கும். இப்படிக் ‘கெட்ட’ காரியங்கள் செய்வதால்தான் உடல் வலிக்கிறது என்ற முடிவுக்கு வரத் தோன்றும்.

இந்த வயதில் சிறுவர்கள் மேலும் சுதந்திரமாக இருக்க, சிந்திக்க, முடிவெடுக்க விரும்புவார்கள். விளையாட்டிலிருந்து படிப்பு பற்றிய அக்கறை அதிகமாகும். எதிர்காலத்தில் என்ன ஆகப்போகிறோம் என்பது பற்றியெல்லாம் யோசிக்கவும் பேசவும் தொடங்குவார்கள். குடும்பத்தினரை விட நண்பர் வட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் தர ஆரம்பிப்பார்கள். மற்ற ஆண்களைப் போல தானும் இருக்க வேண்டுமென்ற விருப்பம் சிறுவனுக்கும், இதர பெண்களைப் போல தானும் இருக்கும் ஆசை சிறுமிக்கும் அதிகரிக்கும். சமூகம் சார்ந்த பல நுட்பமான விஷயங்களைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் இப்போது தொடங்கிவிடும்.

இந்த வயதில் சின்னஞ்சிறு வீட்டுப் பொறுப்புகளையெல்லாம் கையில் ஒப்படைத்தால், சிறுவர்கள் கச்சிதமாகச் செய்து முடிப்பார்கள். ‘எல்லாம் எவ்வளவு பொறுப்பா செய்யுது பிள்ளை! ஆனா, எப்பப் பார்த்தாலும் ஃப்ரெண்ட்ஸோடவே சுத்தினா எப்படி?’ என்று அங்கலாய்க்க வைப்பார்கள்.

உண்மையில் இந்த வயதில் சிறுவர்களின் உடல் மட்டுமல்ல, மனமும் வேகமாக வளர்ச்சி அடை கிறது. சுயேச்சையான பெரிய மனிதர்களாக சீக்கிரம் ஆகிவிட வேண்டும் என்ற துடிப்பு இருக்கும். சட்டென்று எந்த உணர்ச்சிக்கும் ஆளாவார்கள். வெடிச் சிரிப்பு, திடீர்க் கோபம் இரண்டும் எங்கிருந்து வந்ததென்று வியக்கிற மாதிரி வரும். வீட்டில் எந்த அளவுக்கு தனக்குச் சுதந்திரம் இருக்கிறது என்பதைச் சின்னச் சின்னதாக சோதித்துப் பார்த்துக்கொண்டே இருப்பார்கள்.

திடீரென மாதவிலக்கு ஏற்பட்டு தன் உடலில் எதிர்பாராத இடத்தில் ரத்தத்தைச் சந்திக்கும் சிறுமியின் மன அதிர்ச்சியும், இரவு தூங்கி காலையில் விழிக்கையில் ஜட்டியும் பெட்ஷீட்டும் நனைந்திருப்பதை அம்மா கவனித்ததும், சிறுவனுக்கு ஏற்படும் பயம் கலந்த வெட்கமும் சாதாரணமானவை அல்ல. ஆனால், இவையெல்லாம் இயற்கையானவை; இயல்பானவை.

அவர்கள் ஆரோக் கியமாக இருக்கிறார்கள் என்பதன் அடையாளங்கள்தான் என்று அவர்கள் உணர்ந்துகொள்ளும் வரை மனக் குழப்பம் நீடிக்கத்தான் செய்யும்.

தாமாகவே உணர்வார்களா? அதற்கு எத்தனை காலம் பிடிக்கும்? அதுவரை எப்படிப்பட்ட குழப் பங்கள் எல்லாம் ஏற்படும்? நாம் உணர்த்துவது எப்படி? எப்போது?

1. டி.வி யில் செக்ஸ் பிரச்னைகளுக்கு மருந்துகள் சொல்லும் வைத்தியர்களிடம் எப்போதேனும் நீங்களோ, உங்களுக்குத் தெரிந்தவர்களோ சென்ற அனுபவம் உண்டா?

2. செக்ஸ் பற்றிய உங்கள் கருத்துக்களையும், அந்த வைத்தியர்களின் கருத்துக்களையும் ஒப்பிட்டுப் பார்த்தது உண்டா?

3. பள்ளிக்கூடத்தில் எந்த ஆசிரியராவது செக்ஸ் விஷயங்களைப் பற்றி உங்களிடம் பேசியது உண்டா?

4. ‘அந்த மாதிரி’ விஷயங்களை உங்களுடன் முதன்முதலில் பேசிய மூத்த மனிதர் யார்? அந்தப் பேச்சு உங்களுக்கு எப்படி இருந்தது?

5. முகப் பருவுக்கும், செக்ஸ் உணர்ச்சிக்கும், காதலுக்கும் சம்பந்தம் இருப்பதாக எப்போதேனும் நினைத்திருக்கிறீர்களா?

6. குளியலறையை செக்ஸ் சிந்தனை/செயல்களுக்கான இடமாக சிறுவராக இருந்தபோது பயன்படுத்தியிருக்கிறீர்களா? ஒருவேளை, அப்படிப் பயன்படுத்தியிருந்தால், அந்த அனுபவங்கள் எப்படிப்பட்டவையாக இருந்தன என்று இப்போது நினைக்கிறீர்கள்?

அறிந்தும் அறியாமலும் - 11

அண்மையில், இணையத்தில் ஓர் ஆங்கிலக் கவிதை படித்தேன். சென்னைத் தொலைக்காட்சிக்காக நான் இயக்கிய, எழுத்தாளர் சுஜாதாவின் ‘பூக்குட்டி’ டி.வி. படத்தில், விம்முவாக நடித்த ஆறு வயதுக் குழந்தை சம்யுக்தா, இப்போது 18 வயதுப் பெண். அவர் எழுதியிருந்த கவிதைதான் அது.

பல வருடங்களுக்குப் பின், அவரை இணையத்தின் வலைப்பூக்களில் இப்படிப் படிக்க நேர்ந்தபோது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அவருடைய கவிதை பூப்பெய்தியதைப் பற்றியது. இதோ என் சுமாரான மொழிபெயர்ப்பில்...

‘நவம்பர் காலை

ஒரு பெண்ணின் தலைவிதி

என்னைத் தாக்கியது.

நான்

ஆம்பளைத்தனமான அராத்துமல்ல

அழுமூஞ்சி உம்மணாமூஞ்சியுமல்ல

நான் நான்தான்.

நான் நிஜமாகவே புன்னகைத்தேன்.

ரொம்பவும் உற்சாகமாக இருந்தது.

நான் வளர்ந்துவிட்டேன்

கழிவறையிலிருந்து

சிரிப்பும் ஓட்டமுமாகப் போய்

என் சகோதரியிடம் சொன்னேன்

அவளும் அப்பாவும்

உதவிகள் செய்தார்கள்

குடும்பமே மகிழ்ச்சியில்.

அதிர்ஷ்டமோ இல்லையோ

எனக்கு முன்பே தெரியும்

அது ஏன் நிகழ்கிறது

எப்படி நிகழ்கிறது என்பதெல்லாம்.

ஒரு மகிழ்ச்சியான தினம்

கடும் வலிகளும்

குழப்பங்களும் இல்லை.

நான் ஓர் அதிர்ஷ்டசாலி என்று

நான் அறிந்துகொண்ட நாள்!’

இந்தக் கவிதையைப் படித்தவுடன், எனக்கு எழுத்தாளர் அம்பையின் ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’ சிறுகதை மனதில் எழுந்தது. முதல் மாதாந்திர ரத்தப்போக்கு ஏற்பட்டதும், இயல்பாக தாயிடம் ஆதரவு தேடுவாள் ஒரு சிறுமி. தகவல் கேட்டதும், தாய் வெளிப்படுத்திய அங்கலாய்ப்பில் சிறுமியின் மனம் சுருங்குவது பற்றிய அற்புதமான கதை. அந்தக் கதை வெளியாகி 30 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. மூன்று தலைமுறைகளுக்குப் பின் வந்த சம்யுக்தாவின் கவிதை நேர் எதிரான இன்னொரு மன நிலையைக் காட்டுகிறது.

சம்யுக்தாவின் கவிதையில் சொல்லப்படும் ‘அதிர்ஷ்டம்’தான் என்ன? தனக்கு என்ன நேர்கிறது என்பதை உணர்ந்திருக்கும், அறிந்திருக்கும் அதிர்ஷ்டம்தான். இன்றும் பெரும்பாலான குடும்பங்களில் சிறுமி பூப்பெய்துவது சடங்காக, விழாவாகக் கொண்டாடப்படுகிறது. சாதிக்கும் வசதிக்கும் ஏற்ப விழாவின் தன்மை இருக்கிறது.

9 லிருந்து 12 வயதுக்குள் சிறுமிகள் பூப்பெய்துவது இயற்கையானது. நமது மரபான சடங்குகளும், நவீனமான சினிமாவும் இந்த இயற்கையான நிகழ்ச்சியைப் பெண்ணுக்குச் சிக்கலானதாக ஆக்கிவைத்திருக்கின்றன. ஏதோ ஒரு ஆணுக்காக வேண்டியே இந்தச் சிறுமி சமைந்து, சடங்காகி, ‘ஆளாகி’த் தயாராக இருப்பதாக ஒரு கருத்தாக்கம் பலமாகத் தலைக்குள் ஏற்றப்படுகிறது.

ஆங்கிலத்தில் மென்ஸ்ட்ருவேஷன் எனப்படும் இந்த நிகழ்வுக்குத் தமிழில் இன்று சகஜமாகப் புழங்கும் சொற்களான ‘மாதவிலக்கு’, ‘தூரம்’, ‘தீட்டு’ என்பவை எதுவுமே சரியான சொற்கள் அல்ல. எல்லாமே மரபான பார்வையிலிருந்து வருபவை. அந்த நாட்களில் பெண் வீட்டிலிருந்து விலக்கிவைக்கப்பட வேண்டியவள், விலகி நிற்க வேண்டியவள் என்ற சடங்கு சார்ந்த கருத்தாக்கத்திலிருந்தே அந்தச் சொற்கள் வருகின்றன. மாதாந்திர ரத்தப்போக்கு அல்லது மாதக் கசிவு போன்ற சொற்களே ஓரளவு சரியானவை. இன்னும் பொருத்தமான சொற்கள் உருவாக்கப்பட வேண்டியுள்ளன.

இப்படிப்பட்ட சூழலில், முதல் மாதக் கசிவு ஏற்பட்ட சிறுமியைச் சுற்றிச் சடங்குகளும் விழாக்களும் நடக்கின்றனவே தவிர, அவள் உடலுக்குள் என்ன நடக்கிறது என்பதை அவளுக்குத் தெளிவாக எடுத்துச் சொல்வது மட்டும் நம் குடும்பங்களில் நடப்பது இல்லை. சத்தான உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும் என்று சிறுமிக்குச் சொல்லப்படுவதைத் தவிர, சடங்குகளில் அவளுக்குப் பயனுள்ள தகவல் அறிவு எதுவும் புகட்டப்படுவது இல்லை. தங்கள் பெண் திருமணத்துக்குத் தயார் என்று உறவுக்கும் ஊருக்கும் அறிவிக்கும் தேவை இருந்த அன்றைய காலச் சூழலில், சமூகச் சூழலில் உருவாக்கிக்கொள்ளப்பட்ட மஞ்சள் நீராட்டு விழா சடங்குகள், இன்றைய சிறுமிக்கு அதிக குழப்பத்தையும் சங்கடங்களையுமே ஏற்படுத்துகின்றன.

மூளையின் கீழ்ப் பகுதியில் வேர்க்கடலை சைஸில் பதுங்கியிருக்கும் பிட்யூட்டரி சுரப்பி, மாதாந்திர ரத்தப்போக்கு தொடங்குவதற்குச் சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தே இதற்கான ஆயத்தங்களைத் தொடங்கிவிடுகிறது. மூளையில் இருக்கும் ஹைப்போதாலமஸின் உத்தரவின்படிதான் பிட்யூட்டரி செக்ஸ் ஹார்மோன்களைச் சுரக்க ஆரம்பிக்கிறது.

முதல் உத்தரவு, சிறுமியின் உடலில் இருக்கும் சினைப்பைகளுக்கு! ‘நீ முட்டைகளைத் தயாரிக்க ஆரம்பி’ என்ற உத்தரவு சுரந்ததும், சினைப் பைகள் அதைச் செய்யத் தொடங்குகின்றன. இதன் தொடர் விளைவாக உருவாகும் இன்னொரு ஹார்மோன்தான், ஈஸ்ட்ரோஜன். ரத்தத்தில் ஈஸ்ட்ரோஜன் அதிகமானதும், அதன் தூண்டுதலில், இன்னொரு ஹார்மோனைச் சுரக்கும்படி பிட்யூட்டரிக்கு உத்தரவிடுகிறது ஹைப்போதாலமஸ். அதுதான் எல்.ஹெச் எனப்படும் லூட்டினைசிங் ஹார்மோன்.

சிறுமியின் சினைப்பையில் உருவாக்கப்பட்ட முட்டைகளைப் பத்திரமாகக் கருப்பைக்கு அனுப்பிவைப்பது எல்.ஹெச்சின் பொறுப்பு. எல்.ஹெச் சினைப்பைக்குப் போய், முட்டை பொதிந்திருக்கும் ஃபாலிக்கிள் எனப்படும் மெல்லிய உறையை உடைத்து, முட்டையைக் கருப்பை நோக்கிய பயணத்துக்கு அனுப்புகிறது.

உடைந்த ஃபாலிக்கிள் தன் கடமைப்படி இன்னொரு திரவத்தைச் சுரக்கிறது. அதுதான் ப்ரோஜெஸ்ட்ரான். கருப்பைக்குச் சென்று, அதன் உள் சுவரைப் பூசி மெழுகி வைப்பது இதன் வேலை. இளநீரில் வழுக்கை எப்படி உட்புறம் நெடுக ஒட்டியிருக்கிறதோ, அது போல உள்வரி சவ்வாக கருப்பையின் சுவரில் ஒட்டியிருக்கும் இந்த மெழுகல்! ஒவ்வொரு மாதமும் 15 நாட்கள் இந்த உட்புற சவ்வு மெதுவாக உப்பி தடிமனாகிக்கொண்டு இருக்கும்.

எதற்காக இந்த மெழுகும் வேலை தெரியுமா? ஆணின் உடலில் இருந்து பெண்ணின் உடலுக்குள் (உடல் உறவின்போது) செலுத்தப்படும் விந்தில் இருக்கும் உயிர் அணுக்களில் ஏதோ ஓர் உயிரணு ஒருவேளை ஏதேனும் ஒரு பெண் முட்டையைக் கருப்பையில் சந்தித்துவிட்டால், அந்த முட்டை ப்ளஸ் உயிரணு, கருவாக மாறும் அல்லவா? அந்தக் கருவைப் பத்திரமாக வைத்திருக்கத்தான் கருப்பையின் உட்சுவர் ‘ப்ரொ’வால் மெழுகித் தயாராக வைக்கப்படுகிறது.

உடல் உறவு இல்லை; விந்தின் வருகை இல்லை; உயிரணுவும் பெண் முட்டையும் சந்திக்கும் வாய்ப்பே இல்லை; எனவே, கருத்தரிக்கும் வாய்ப்பும் இல்லை என்கிற நிலையில், இந்த உட்புற சவ்வு கலையத் தொடங்குகிறது. அது கலைகையில், அதன் ரத்த நாளங்களிலிருந்து ரத்தம் கசிய ஆரம்பிக்கிறது.

இந்த ரத்தமும், கலைந்த உள்வரி சவ்வின் பகுதிகளும்தான் பெண்ணின் யோனிக் குழாய் வழியே வெளியேறுகின்றன. மாதந்தோறும் நிகழும் இந்த ரத்தப்போக்குதான் மென்ஸ்ட்ருவேஷன்.

தன் உடலுக்குள் இவையெல்லாம் நடப்பதை ஒரு சிறுமிக்கு சொல்லித் தருவதற்குப் பதில், அவளை அலங்கரித்து காட்சிப் பொருளாக உட்கார வைத்து, பணத்தை மொய்யாக எழுதி, பொய்களை சினிமாப் பாட்டாக எழுதி... லூட்டினைசிங் ஹார்மோன் பற்றிப் பேசாமல் வேறு ஏதோ லூட்டி அடித்துக்கொண்டு இருக்கிறோம் நாம்.

சாப்பிட்ட உணவு வயிறு, இரைப்பை, குடல்கள் வழியே பயணித்து, சக்தியை உடலுக்கு அளித்துவிட்டு, எஞ்சிய மலத்தை வெளியே அனுப்பி வைக்கும் ஜீரணப் பாதையின் செயல்வரிசையை விரிவாகப் படிப்பது போல, இனப்பெருக்க உறுப்புகளில் நிகழும் நிகழ்ச்சி நிரலைக் கற்பிக்க வேண்டாமா?

சிறுமியின் உடலில் இத்தனை மாற்றங்கள் மாதந்தோறும் நிகழ்வது போல சிறுவனின் உடலில் என்ன நிகழ்கிறது? எப்படி நிகழ்கிறது?

மூலம்: www.keetru.com ,ஆனந்தவிகடன் தொடர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து இணைப்பதற்கு நன்றி உடையார் :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி விசுகு

அறிந்தும் அறியாமலும் - 12

சிறுமிகளின் வாழ்க்கையில் 9 வயது முதல் 12 வயதுக்குள் ஏதோ ஒரு நாள், அவள் பூப்பெய்தியதை அவளுக்கும் உலகத்துக்கும் அறிவிக்கும் நாளாக அமைந்துவிடுகிறது. பெண்ணின் உடற்கூறு அமைப்பே இதற்குக் காரணம்.

ஆனால், ஒரு சிறுவன் வயதுக்கு வந்த நாளாக எதைக்கொள்வது? தன் உடலுக்குள் நிகழும் புதிய மாற்றங்களை அவன் உணர்ந்துகொண்ட நாளாகத்தான் அது இருக்க முடியும். அது எந்த நாள்? குரல் தடிப்பதையும் பிறப்பு உறுப்புகளைச் சுற்றிலும், தோள் குழியிலும், முகத்திலும் முடி முளைப்பதையும் அவன் கண்டுகொண்ட நாளா? அம்மாவைக் கட்டிப் பிடித்துக்கொண்டு படுப்பதற்குக் கூச்சமாக உணர்ந்த நாளா? தன் பிறப்பு உறுப்புகளைக் கையால் தடவிப் பார்க்கும்போது சுகமாக இருப்பதாக அறிந்த நாளா? அறிந்தோ அறியாமலோ தன் உடலில் இருந்து விந்து எனப்படும் ஆண் உயிர் திரவம் வெளிப்பட்டதை சிறுவன் அறியும் நாளா?

சிறுமி வயதுக்கு வந்ததை அவள் உடல் உணர்த்தியதும், அதை அம்மாவிடம் சொல்லி, அம்மாவும் அப்பாவுக்குச் சொல்லி, அதைக் கலாசாரச் சடங்காகக் கொண்டாடுவது போல, சிறுவன் தனக்கு விந்து வெளிப்பட்டதை அப்பாவிடம் சொல்லி, அது கொண்டாட்டச் சடங்காக ஆக்கப்படும் வாய்ப்பேது? ஒரு விபரீதக் கற்பனையாகவே கருதப்படும்.

தனக்கு விந்து வெளிப்பட்டதை யாரிடமும் போய்ச் சொல்ல ஒரு சிறுவன் கூச்சப்படும், வெட்கப்படும் நிலையில், அது ஏன் நடக்கிறது என்று சரியாக, அறிவியல்பூர்வமாக அறிந்துகொள்ள வழியில்லாமல் இருக்கிறது. ஒரு சிறுவனுக்குத் தன் உடல் பற்றி ஏற்படும் எண்ணற்ற சந்தேகங்களில் ஒன்று ஏன் தன்னைப் போன்ற ‘ஆம்பளை’களுக்கு மட்டும் சிறுநீர் கழிப்பதற்கான உறுப்பு உடலுக்கு வெளியில் தொங்குகிறது? இரு புறமும் இருக்கும் விரைப் பைகள் எதற்காக? அவற்றில்தான் சிறுநீர் உற்பத்தியாகி வெளிவருவதாகக் கருதும் சிறுவர்களும் உண்டு!

இனப் பெருக்க உறுப்புகள் குழந்தை கருவில் இருக்கும்போதே உருவாகிவிடுகின்றன. ஆண் குழந்தை, தாயின் கருப்பைக்குள் இருக்கும்போது அதன் விதை(ர)க் கொட்டைகள் முதலில் உடலுக்குள்ளேயே இருக்கின்றன. கரு வளரும் கடைசி இரண்டு மாதங்களில்தான் அவை வெளிப்புறம் உள்ள விதை(ர)ப் பைக்குள் பொருந்திக்கொள்கின்றன.

விதைப் பைகள் வெளிப்புறம் இருப்பதற்குக் காரணம், அவற்றில் இருக்கும் விதைகள்தான் உயிரணுத் திரவமான விந்துவைத் தயாரிக்கின்றன. இதற்குத் தேவைப்படும் வெப்ப நிலை, உடலின் வெப்பத்தைவிடக் குறைவாக இருக்க வேண்டும். அதற்காகத்தான் இயற்கை இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கிறது.

வெப்ப நிலையைச் சீராக வைத்திருப்பதற்காக, இந்த விதைப்பைகள், வெளி வெப்பம் அதிகமானால் விரிவடையும். வெளியில் குளிரானால் சுருங்கிக்கொள்ளும். இந்த மாற்றங்களை நம்மால் உணரக்கூட முடியாது. ஆனால், இவை தொடர்ந்து நடக்கின்றன.

எப்போதிலிருந்து சிறுவனின் உடலில் விந்து தயாராகத் தொடங்குகிறது? சுமாராகப் பத்து வயதுக்கு மேல்தான். சிறுமிகளுக்கு இனப்பெருக்க ஆயத்தங்கள் உடலுக்குள் தொடங்கும் வயதைவிட, சிறுவன்களுக்குச் சற்று தாமதமாகவே ஆரம்பிக்கும். இருவருக்கும் இதற்கான உத்தரவு வருவது மூளையில் ஹைப்போதலாமஸின் கீழ்ப் பகுதியில் பதுங்கியிருக்கும் வேர்க்கடலை அளவிலான பிட்யூட்டரி சுரப்பியிடமிருந்துதான்.

பிட்யூட்டரியிலிருந்து வரும் சுரப்புகள், விதைக் கொட்டைகளுக்கும் வந்து அவற்றை ஆண் ஹார்மோனாகிய டெஸ்டோஸ்டிரானைச் சுரக்கச் செய்கின்றன. இந்தச் சுரப்புதான் சிறுவன் உடலில் பல வளர்ச்சி மாற்றங்களைத் தொடர்ந்து ஏற்படுத்துகிறது.

முதல் கட்டத்தில் விதைப்பையும் விதைகளும் பெரிதாகின்றன. ஒவ்வொரு விதையும் முட்டை வடிவில் 5 செ.மீ. நீளமும் 3 செ.மீ. சுற்றளவும் உடையவை. எபிடிடிமிஸ் எனப்படும் சுருள் விந்துக் குழாய்கள் ஒவ்வொரு விதையின் பக்கவாட்டிலும் உள்ளன. இவை சுருள் சுருளாக இருக்கும்.

அவை வாஸ் டெஃபெரென்ஸ் எனப்படும் விந்துக் கடத்தி நாளங்களுடன் இணைந்திருக்கின்றன. இந்தத் தசை நாளங்கள் உடலின் கீழே தொங்கும் விதையிலிருந்து, உடலுக்குள் சிறுநீர்ப்பை எனப்படும் யூரினரி ப்ளாடரின் பக்கவாட்டில் இருக்கும் ப்ராஸ்டேட் சுரப்பி, விந்துச் சேகரப் பைகள் இரண்டுடனும் சென்று சேர்கின்றன. விதையில் உருவாகும் விந்து திரவத்தை இந்த நாளங்கள் கொண்டுவரும்போது ப்ராஸ்டேட் சுரப்பியும், விந்து சேகரப் பையும் மேலும் சில திரவங்களைச் சேர்த்து அனுப்புகின்றன.

இப்போது விந்து, சிறுநீர்ப் பையிலிருந்து சிறுநீரை வெளியேற்றி எடுத்துச் செல்லும் யுரீத்ரா எனப்படும் சிறுநீர்ப் பாதை வழியாகவேதான் ஆண் குறிக்குச் சென்று வெளியேற்றப்படும். சிறுநீரை அனுப்புவது ப்ளாடர். விந்துவை அனுப்புவது விதைப்பையும் அதன் துணைச் சுரப்பிகளும். இரண்டையும் வெளியேற்றுவது ஆண் குறி.

ஆண் குறி என்று நவீன மொழியிலும், லிங்கம் என்று மரபு மொழியிலும் சொல்லப்படும் வெளியேற்றுக் குழாயின் நுனிப் பகுதி சற்றே விரிந்து காணப்படும். க்ளான்ஸ் எனப்படும் இந்தப் பகுதியை மூடியிருக்கும் மேல் தோல் சுருளக்கூடியதாக இருக்கும். இந்த மேல் தோலை அறுவை சிகிச்சை செய்து நீக்குவதைத்தான் சுன்னத் (கல்யாணம்) செய்வது என்று இஸ்லாமிய மதச் சடங்காகக் குறிப்பிடுகிறோம். இப்படி ஆண் குறியின் மேல் தோலை நீக்கும் பழக்கம் உலகில் பல பகுதிகளில் பல்வேறு இனக் குழுக்களில் உண்டு.

ஆண் குறியில் தொற்றுக்கள் ஏற்படாமல் காப்பாற்ற, நுனிப் பகுதியில் மேல் தோலின் அடியில் அழுக்கு சேராமல், குளிக்கும்போது தூய்மைப்படுத்த வேண்டும் என்பதை பல அம்மாக்களும் அப்பாக்களும் சிறுவர்களும் அறியாமலே இருக்கிறார்கள் என்பதை அண்மையில் அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.

ஒரு பயிலரங்கில் குளிக்கும் முறை பற்றிக் கேட்டபோது, பல பத்து வயதுச் சிறுவர்கள் தங்கள் ஜட்டியைக் கழட்டாமலேதான் குளிப்போம் என்று சொன்னார்கள். கடைசியாக துவட்டிக்கொள்ளும்போது டவலைச் சுற்றிக்கொண்டு ஜட்டியைக் கழற்றி எறிவோம் என்றார்கள். அதாவது தங்கள் பிறப்புறுப்புப் பகுதியை தாங்கள் பார்ப்பதைக்கூட அவர்கள் விரும்பவில்லை. ஷேம் ஷேம் பப்பி ஷேமின் உச்சம் இது!

ஒவ்வொரு சிறுவனும் சிறுமியும் தங்கள் உடலை ஐயம் திரிபற அறிய வேண்டும். உடல் நமது கருவி. கருவி மட்டுமல்ல... அதுதான் நாம்! உடல் இல்லாமல் உள்ளம் இல்லை.

ஒரு சிறுமியின் உடலில் சினைப் பைகள் முட்டை தயாரிப்பதும், அதைக் கருப்பைக்கு அனுப்பிவைப்பதும், ஆண் உயிரணு வந்து அதை சந்தித்துக் கருத்தரித்தால், கருவை வளர்க்கத் தயார் நிலையில் கருப்பை இருப்பதும் அப்படி எதுவும் நிகழாவிட்டால், உதிரப்போக்காக எல்லாம் வெளியேற்றப்படுவதும், மாதம் தோறும் நடக்கிறது என்று பார்த்தோம்.

இதே போல, ஒரு சிறுவனின் உடலில் விந்து தயாராவதும் அது ஒரு பெண் உடலில் புகுந்து கருத்தரிப்புக்குச் செல்லாவிட்டால், சுய இன்பம் மூலமாகவோ தன்னிச்சையாக இரவுக் கனவுகளினாலோ வெளியேற்றப்படுவதும் எத்தனை நாளைக்கு ஒரு முறை நிகழ்கிறது? இதற்கும் காலக் கணக்கு உண்டா?

பெண்களுக்கு:

1. பூப்பெய்தியதும் அதை யாரிடம் சொன்னீர்கள்?

2. அவர்களுடைய பதில் வினைகள் உங்களுக்கு எந்த உணர்வை ஏற்படுத்தின?

3. இது தொடர்பாக வீட்டில் செய்யப்பட்ட சடங்குகள், கொண்டாட்டங்களின்போது உங்கள் மன நிலை என்னவாக இருந்தது?

4. ஏன் ரத்தப்போக்கு ஏற்படுகிறது என்பதற்கான முழு விளக்கத்தை எப்போது, எந்த வயதில், யாரிடமிருந்து தெரிந்துகொண்டீர்கள்?

5. ஆண்களின் இனப் பெருக்க உறுப்புகளைப் பற்றி முதலில் எப்போது தெரிந்துகொண்டீர்கள்? அந்த அனுபவம் அருவருப்பாக இருந்ததா? அறிவுபூர்வமாக இருந்ததா?

ஆண்களுக்கு:

1. பள்ளிப் பருவத்தில், உங்களுக்குத் தெரிந்த சிறுமி பூப்பெய்திய தகவல் கேட்டதும் அது பற்றி அப்போது என்ன உணர்வு ஏற்பட்டது?

2. பூப்புச் சடங்குகளில் கலந்துகொள்ளும்போது உங்கள் மன உணர்வுகள் என்ன?

3. உங்கள் வீட்டில் சகோதரி/அம்மா/மனைவி ஆகியோரின் மாதப்போக்கின்போது உங்கள் உதவிகள் என்ன?

4. ஏன் பெண்களுக்கு ரத்தப்போக்கு ஏற்படுகிறது என்பதற்கான முழு விளக்கத்தை எப்போது, எந்த வயதில், யாரிடமிருந்து தெரிந்துகொண்டீர்கள்?

5. முதன் முதலில் உங்கள் உடலிலிருந்து விந்து வெளியேறியது எப்போது, எப்படி என்பது நினைவிருக்கிறதா? அன்றைய மன நிலை என்ன? அது பற்றி இன்றைய மன நிலை என்ன?

மூலம்: www.keetru.com ,ஆனந்தவிகடன் தொடர்

அறிந்தும் அறியாமலும் - 13

இந்தியாவில் இன்று சிறுமிகள் பூப்பெய்தும் வயது குறைந்துகொண்டே வருகிறது. இதற்குப் பல மருத்துவ, சமூகவியல் காரணங்கள் சொல்லப்படுகின்றன. உணவு முதல் மீடியா வரை இதற்குப் பொறுப்பு என்கிறார்கள்.

டெலிவிஷனிலும், சினிமாவிலும், பத்திரிகைகளிலும் தொடர்ந்து பார்க்கக்கூடிய ஆண் & பெண் உறவு தொடர்பான பிம்பங்கள் மூளையின் பிட்யூட்டரி சுரப்பியைத் தூண்டி, செக்ஸ் ஹார்மோன்களை முன்கூட்டிச் சுரக்கச் செய்வதாகக் கருதப்படுகிறது. மீடியாவின் பொறுப்பு, தரம் எல்லாம் ஒருபுறம் நமது கவலைக்கும், அக்கறைக்கும், தலையீட்டுக்கும் உரியவை. என்றாலும், தங்கள் மனதுக்கும் உடலுக்கும் என்ன நிகழ்கிறது என்பதை அறிவுபூர்வமாக நமது சிறுவர்களை உணரச் செய்வதே உடனடியாகத் தேவைப்படும் தீர்வு.

ஒரு சிறுமியின் உடலில், சுமார் 10 வயது முதல் சினைமுட்டை தயாரிப்பு தொடங்கிவிடுகிறது. ஒரு சிறுவனின் உடலில் சுமார் 12 வயது முதல் உயிரணுக்கள் அடங்கிய விந்து தயாரிப்பு தொடங்கிவிடுகிறது. இருவரும் இந்த வயதில் செக்ஸ் தொடர்பான ஜோக்குகளை அரை குறையாகவேனும் புரிந்துகொள்ளும் ஆற்றலுடன் இருக்கிறார்கள். சுமார் 13 வயதில், உடலின் இனப்பெருக்க உறுப்புகள் எல்லாமே முழுமையான வளர்ச்சியடைந்துவிட்ட நிலையில் இருக்கும்.

பெண்ணுக்கு 40 முதல் 50 வயதுக்குள் உடலின் சினை முட்டைத் தயாரிப்பு பணி ஓய்ந்துவிடுகிறது. ஆணுக்கு சுமார் 70 வயதில்தான் விந்து உற்பத்தி குறைகிறது. விதிவிலக்குகளாக ஒரு சிலருக்கு 80, 90 வயதிலும் ஒரு பெண்ணைக் கருத்தரிக்க வைக்கும் ஆற்றலுடன் உள்ள உயிரணு உற்பத்தி நிகழலாம்.

சராசரி ஆயுட்காலம் இன்று 70 வயது என்று வைத்துக் கொண்டாலும், பெண்ணின் வாழ்க்கையில் சுமார் 40 வருடங்களும், ஆணின் வாழ்க்கையில் சுமார் 60 வருடங்களும் இடைவிடாமல் தொடரும் இந்தச் சினைமுட்டை/விந்து தயாரிப்பு உடலுக்குள் நடப்பதைப் பற்றி ஒவ்வொருவரும் அறிந்து வைத்துக்கொண்டு உடல் ஆரோக்கியத்தைக் காப்பது அவசியம்.

ஒரு சிறுமியின் உடலில் சினைமுட்டை தயாரிப்பு என்பது, 28 நாட்களுக்கொரு முறை நடக்கும் நிகழ்ச்சி! முதல் 7 நாட்களில் சினைப்பையில் முட்டை முதிர்ச்சி அடைகிறது. இதே சமயம் கருப்பையின் உட்சுவர் மெள்ள மெள்ளத் தடிமனாகிறது. அடுத்த மூன்று நாட்கள் சினைமுட்டை வெளிப்படுகிறது. அடுத்த 13 நாட்களில் சினைமுட்டை கருப்பைக்குச் சென்று, ஆணின் உயிரணுவைச் சந்திக்கத் தயாராகக் காத்திருக்கிறது. இந்த 13 நாட்களில் உயிரணுவை அது சந்திக்காத நிலையில், மெள்ளக் கரைகிறது. அடுத்த 5 நாட்கள் கரைந்த சினைமுட்டையும் கருப்பையின் உட்சுவர் பூச்சும் ரத்தப் போக்குடன் வெளியேறுகின்றன. இந்த 5 நாட்கள்தான் ‘அந்தக் கஷ்டமான நாட்கள்!’

28 நாட்களுக்கொரு முறை இந்த சுழற்சி, சிறுமியின் வாழ்க்கையில் அவள் கிழவியாகும் வரை நடக்கிறது. ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்தச் சுழற்சி நாட்களின் எண்ணிக்கை வேறுபடும். பத்துப் பன்னிரண்டு வயதில் பூப்படைந்ததும், உடனே சுழற்சியின் கால அளவு துல்லியமாக நிர்ணயமாகி விடுவதில்லை. பல வருடங்களுக்குப் பின்னர்தான் இந்த சுழற்சிக் காலம் ஒரு பெண்ணுக்கு நிச்சயமாகும்.

ஒவ்வொரு முறை மாதாந்திரப் போக்கு ஏற்படும் முன்னால், சிறுமியின் உடலுக்குள் நிகழும் மாற்றங்களின் விளைவாக, அவள் ‘மூட்’ மாறுகிறது. எரிச்சல், அசதி இரண்டும் ஏற்படுகின்றன.

ரத்தப்போக்கு ஏற்படும் நாட்களில் உடலுக்குள் தசைகள் சுருங்கி விரிவதால், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான விளைவுகள் ஏற்படுகின்றன. பிசைந்து எடுக்கும் வலி முதல், தலைவலி வரை வெவ்வேறுவிதமான உபாதைகள் ஏற்படுகின்றன. மிக அபூர்வமாக சிலருக்கே வலி எதுவும் இல்லாத நிலை இருக்கிறது.

சிறுமி இந்தச் சமயத்தில் ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட வேண்டும். குறிப்பாக, உணவில் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் உப்பு, உடலின் திரவங்களை அதிகமாக உறிஞ்சி வெளியேற்றும் தன்மையுடையது. எண்ணெயில் சமைக்கப்பட்ட பலகாரங்களையோ, செயற்கைக் குளிர்பானங்களையோ இந்தச் சமயத்தில் தவிர்ப்பது அவசியம்.

காரணம், அவை வயிற்றில் வாய்வுத் தொல்லையைக் கிளறிவிடக்கூடியவை. மாதாந்திர ரத்தப்போக்கு சமயத்தில் ஜீரணக் கோளாறுகளையும் சேர்த்துக்கொள்வது சிறுமிக்குச் சித்ரவதையாக இருக்கும்.

உடைகளில் ரத்தப்போக்கு படாமல் ஒற்றி நீக்க, இன்று வகை வகையான சானிட்டரி டவல்கள்/நாப்கின்கள் கிடைக்கின்றன. சானிட்டரி டவல்கள்/நாப்கின்கள் வாங்கும் பொருளாதாரச் சக்தி அற்ற ஏழைச் சிறுமிகள் நிறைந்திருக்கும் நாடு நம்முடையது. நம் பாட்டி காலத்தில் அவை இருக்கவும் இல்லை. நல்ல தூய்மையான துணித் துண்டுகளையே அவர்கள் பயன்படுத்தினார்கள்.

இன்று தமிழ்நாட்டில் பல மகளிர் சுய உதவிக் குழுக்கள் பஞ்சாலான நவீன சானிட்டரி நாப்கின்களை மலிவு விலையில் தயாரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு இருக்கின்றன என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி.

இவற்றையெல்லாம் எப்படிப் பயன்படுத்துவது என்பதை விமானத்தில் ஸீட் பெல்ட், ஆக்ஸிஜன் மாஸ்க் அணிவது பற்றியெல்லாம் ஏர்ஹோஸ்டஸ்கள் சொல்லித்தருவது போல, ஐந்தாம் வகுப்பிலேயே சிறுமிகளுக்குப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியைகள் சொல்லித் தர முடியும்.

பயன்படுத்திய நாப்கின்களை சுற்றுச்சூழலுக்கு சிக்கல் இல்லாமல் அழிக்கும் விதத்தையும் கற்பிக்க வேண்டும்.

சிறுமிகள் இப்படி மாதந்தோறும் உடல் அவதிகளுக்கு உள்ளாகிறார்கள் என்பது அதே வயதுச் சிறுவர்களுக்கு இன்று அரைகுறையாகத் தெரியும். தலைவலி, கால்வலி போன்ற உடல் உபாதைகளைப் போல இதையும் கருதும் மனப்பக்குவத்தை நம் வீட்டுச் சிறுவனுக்கு ஏற்படுத்த வேண்டும்.

பாலியல் கல்வித் துறையில் ஈடுபட்டு இருக்கும் என் சிநேகிதி பத்மா, தன் வாழ்க்கையின் மிகப் பெரிய மகிழ்ச்சிகளாக வகுப்புகளில் தெரிவிக்கும் இரு நிகழ்ச்சிகளை இங்கே குறிப்பிடுவது பொருத்தமானது. ஒன்று, தன் பிறந்த நாளன்று, 12 வயது மகன் அளித்த பரிசு. அம்மாவுக்கு என்ன பரிசு அளிப்பது என்று யோசித்த அந்தச் சிறுவன், கடைக்குப் போய் வாங்கி வந்து அளித்த பரிசு, சானிட்டரி நாப்கின் பொட்டலம். இன்னொன்று, அவனே தயாரித்து அம்மாவுக்கு அளித்த தேநீர். உலகத்தின் சிறந்த தேநீர் அது!

நம் குழந்தைகளுக்கு & குறிப்பாக, ஆண் குழந்தைகளுக்கு, ஒரு பெண்ணை சக மனுஷியாகக் கருதிச் சமமாக உறவாடப் பயிற்றுவிக்கும் முயற்சிகளில் இத்தகைய நிகழ்ச்சிகள் முக்கியமான மைல் கல்கள்.

அப்பாவுக்குக் கடையில் சிகரெட் வாங்கி வந்து தருவதில் சிறுவர் சிறுமிகளை ஈடுபடுத்துவதை தவறாகக் கருதாத சமூகம், அம்மாவுக்கோ, சகோதரிக்கோ வீட்டுச் சிறுவன் நாப்கின் வாங்கி வந்து தருவதை அருவருப்பாகக் கருதுவது நம் சீரழிந்த மனநிலையின் அடையாளம் அல்லவா?

இதற்கெல்லாம் காரணம், ஆணின் உடற்கூறு பற்றி பெண்ணுக்கும், பெண்ணின் உடற்கூறு பற்றி ஆணுக் கும், கவர்ச்சியும் போதையும் இருப் பதை ஊக்குவிக்கிறோமே தவிர, புரிதலும் அறிதலும் தேவை என்பதை நாம் ஊக்குவிக்கவில்லை.

இருவருக்கும் ஒருவரைப் பற்றி மற்றவருக்கு அரை-குறையாகவே தெரிந்திருக்கிறது. குறிப்பாக, சிறுமிக்கு மாதாந்திர உடல் சிக்கல் இருப்பது பற்றி ஒரு சிறுவனுக்குத் தெரிந்திருக்கக்கூடிய சொற்பமான தகவலைவிடவும் குறைவாகவே, ஒரு சிறுமிக்கு சிறுவனின் உடலில் என்னென்ன நிகழ்கிறது என்பது பற்றித் தெரியும்.

சிறுவனின் உடலில் இனப்பெருக்க உறுப்புகளில் தயாரிக்கப்படும் விந்து என்பது என்ன?

தொலைக்காட்சிகளில் தேச இளைஞர்களைக் காப்பாற்றக் கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கும் வைத்தியர்களின் நிகழ்ச்சிகளைப் பார்த்தால், தமிழ்ச் சிறுமியும் சிறுவனும் பெரும் கலக்கம் அடைவார்கள்.

ரத்தம்தான் விந்துவாகிறது... ஒரு சொட்டு விந்து, இருபது ரத்தத் துளிகளுக்குச் சமம் என்பதில் தொடங்கி, விந்து பற்றி ஏராளமான வதந்திகள் நம் சமூகத்தில் நிலவுகின்றன.

உண்மையில், விந்து என்பது என்ன?

இந்த வார ஹோம் வொர்க்!

1. உங்கள் மனதில் செக்ஸ் உணர்வைத் தூண்டிய முதல் பிம்பம்/காட்சி எது? ஓவியமா? சினிமா ஸ்டில்லா? அசையும் படமா?

2. நேரில் நீங்கள் பார்த்து, உங்கள் மனதைச் சலனப்படுத்திய நிகழ்ச்சி எது?

3. சானிட்டரி நாப்கின்னை காகிதத்தில் சுற்றித்தான் தரவேண்டும் என்று கடைக்காரரிடம் வலியுறுத்தியதுண்டா?

4. ரத்தம்தான் விந்து என்ற ரீதியில் உங்களிடம் யாரும் சொன்னதுண்டா?

5. உங்களுக்கு ட்ரீம் கேர்ள்/ட்ரீம் பாய் என யாரேனும் உண்டா? யார்? ஏன்?

மூலம்: www.keetru.com ,ஆனந்தவிகடன் தொடர்

அறிந்தும் அறியாமலும் - 14

ஒரு சிறுமி, தன் உடலிலிருந்து யோனி வழியே ரத்தம் வருவதை முதல் முறை கண்டதும் பயப்படுவது போலவே, ஒரு சிறுவனும் தன் ஆணுறுப்பிலிருந்து வெள்ளை நிறத்தில் ஒரு திரவம் வெளிவருவதை முதல் முறை காணும்போது மிரட்சி அடையத்தான் செய்வான்.

இந்த மிரட்சியைத்தான் பல போலி மருத்துவர்கள் தங்களுக்கு மூலதனமாக்கிக்கொள்கிறார்கள். சிறுமியும் சிறுவனும் தங்களுக்கு நிகழ்வது என்ன என்பதை அறிவியல்பூர்வமாக உணர்ந்துவிட்டால், பல தவறான கருத்துக்கள் தங்கள் தலையை ஆக்கிரமிக்காமல் தப்பிக்கலாம்.

இனப்பெருக்கத்துக்கான அடிப்படைத் தேவைகள் ஆணின் விந்துவும், பெண்ணின் சினைமுட்டையும் என்பதால், இவை அரைகுறையாகவோ முழுமையாகவோ ஆதி காலம் முதல் இலக்கியங்கள், புராணங்கள், இதிகாசங்கள், கர்ண பரம்பரைக் கதைகள் எனப்படும் வாய்மொழி இலக்கியம் என எல்லாவற்றிலும் பூடகமாகக் குறிப்பிடப்பட்டு வருகின்றன. சிவலிங்கம் என்ற கருத்தாக்கமே ஆண் & பெண் உறுப்புகளின் வடிவ அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒன்று என மானிடவியல் ஆய்வாளர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். ஆண் விதை, பெண் நிலம் என்பன போன்ற கவிதைக் குறியீடுகள் எல்லாமே விந்து முட்டையின் வெவ்வேறு வர்ணனைகள்தான்.

ஆணின் விந்துவை அதன் வெண்ணிற திரவத் தோற்றத்தால், பனித் துளியுடன் ஒப்பிடுவது மிகப் பழங்காலத்திலிருந்தே இருந்து வருகிறது. மழை தவிர, வானிலிருந்து பொழியும் பனிதான் நிலத்தை (மண்ணை) வளப்படுத்துவதாக ஓர் ஆதி நம்பிக்கை உண்டு. பைபிளில், எந்த அரசன் இளமையின் ‘பனி’ நிரம்பிய ஆண்மையுடன் இருக்கிறானோ, அவனையே மக்கள் பின்பற்ற வேண்டும் என்று ஒரு சங்கீதத்தில் வருகிறது. சம காலத் திரைப்படப் பாடல், ‘பனித் துளி ஒன்று சிப்பியில் விழுந்து வந்தது முத்து என் மன்னவன் சொத்து’ என்று சொல்வதெல்லாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலவும் இலக்கிய உருவகத்தின் தொடர்ச்சிதான்.

இலக்கியம் என்பது சுவையான கற்பனை. சமயத்தில் அதில் அறிவியலும் நிஜமும் கலந்திருக்கும். ஆனால், காலம் காலமாக நிலவும் எல்லா கற்பனைகளும் அறிவியல் பூர்வமானவை அல்ல.

அப்படிப்பட்ட ஒரு முழுக் கற்பனைதான்... ரத்தம்தான் விந்துவாக மாறுகிறது என்பதும்! ரத்தம் போன்று உடலுக்கு முக்கியமான இன்னொரு திரவம் விந்து என்பதற்கு மேல் இரண்டுக்கும் பொருத்தமில்லை. உடலில் இருக்கும் சிறுநீரும் முக்கியமான திரவம்தான். ஒழுங்காக சிறுநீர் உற்பத்தியாகி வராவிட்டால், ஜீரண உறுப்புகளும் சிறுநீரகமும் சரியாக வேலை செய்யவில்லை என்று பொருள். சிறுநீரும் விந்துவும் ரத்தமும் முக்கியமானவை. ஆனால், ஒன்றிலிருந்து இன்னொன்று உருவானவை அல்ல.

எனவே, விந்து என்பது ரத்தமும் அல்ல; பல சொட்டு ரத்தம் சேர்ந்து உருவானதும் அல்ல! அது உயிரணுக்கள் அடங்கிய ஒரு திரவம். அதில் இருப்பவை அமினோ ஆசிட்கள், சிட்ரேட், என்சைம்கள், சர்க்கரைப் பொருளான ஃபிரக்டோஸ், புரதங்கள், விட்டமின் சி, சிட்ரிக் ஆசிட், பாஸ்பேட்டுகள், துத்தநாகச் சத்து போன்றவை தான்.

உயிரணுவில் இருக்கும் டி.என்.ஏ வைப் பத்திரமாக வைத்திருப்பது, உயிரணு உறைந்துவிடாமல் அதைப் பெண்ணின் யோனிப் பாதை வழியே கருப்பை வரை எடுத்துச் செல்லும் ஒரு வாகனமாகப் பயன்படுவது, அப்படிச் செல்லும்போது அதைப் பெண் உடலில் உள்ள எதிர்ப்பு அணுக்கள் கொன்றுவிடாமல் காப்பாற்ற உதவுவது என விந்துவில் இருக்கும் பொருட்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நோக்கமும் பயனும் உடைய, நுட்பமான பல அம்சங்கள் உள்ளன.

ஒரு சிறுவனின் விதைப் பைகள் தினமும் உயிரணுக்களை உற்பத்தி செய்து கொண்டே இருக்கின்றன. எத்தனை உயிரணுக்கள் தெரியுமா? பல கோடி உயிரணுக்கள்! தினசரி!

அவற்றுடன் இதர சுரப்புகளும் சேர்ந்து, அவை முதிர்ச்சியடைய சில வாரங்கள் பிடிக்கும். முதிர்ந்த நிலையில், இதர இனப்பெருக்க உறுப்புகள் சுரக்கும் திரவங்கள் சேர்ந்து, விந்து சேகரப்பைக்குச் செல்லும் திரவத்தைதான் ‘செமென்’ எனப்படும் விந்து என்கிறோம்.

ஒரு சிறுவனின் உடலில் தினசரி தயாராகும் உயிரணுக்களும் விந்துவும் என்ன ஆகின்றன? சுய இன்பத்தின் மூலம் விந்து வெளியேறலாம். இரவு படுக்கையில் சுகமான கனவுகளின் விளைவாக வெளியேறலாம். இவை இரண்டுமே இல்லாமல், ஒரு சிறுமியின் உடலில் தயாராகும் சினைமுட்டையும், கருப்பையின் உட்புறப் பூச்சும் மாதாமாதம் வெளியேற்றப்படுவது போல, சிறுவனுக்கு இவை இயல்பாக வெளியேற வழிதான் என்ன?

அப்படி எதுவும் இல்லை. விந்துவில் இருக்கும் வெவ்வேறு பொருட்கள் உடலுக்குள்ளேயே கரைந்து கலந்துவிடு-கின்றன. புதிது புதிதாக உயிரணுக்களை சிறுவனின் விதைப் பைகள் தயாரித்து அனுப்ப அனுப்ப... புதிய விந்துவும் தயாராகிக்கொண்டே இருக்கிறது.

உடலுறவிலோ, சுய இன்பத்திலோ, இரவுக் கனவிலோ வெளியேற்றப்படும் விந்துவில் வெறும் ஒரு சதவிகிதம்தான் உயிரணுக்கள் எனப்படும் ‘ஸ்பெர்ம்’ இருக்கிறது. மீதி திரவம் எல்லாம், துணை செய்ய வந்த சுரப்புகள்தான்.

அதிகபட்சம் ஆறு வயது வரைதான் படுக்கையிலேயே சிறுநீர் கழிக்கும் தவறு நிகழும். அதற்குள் ‘டாய்லெட் ஹேபிட்’ எனப்படும், குறித்த நேரத்தில் கழிவறையைப் பயன்படுத்தும் பழக்கம் ஏற்பட்டு இருக்கும்; பெற்றோரால் ஏற்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். எனவே, அந்த வயதுக்குப் பிறகு படுக்கையை நனைப்பது என்பது, இரவில் விந்து வெளியேற்றத்தால் நிகழ்வதுதான்.

ஆங்கிலத்தில் நாக்டர்னல் எமிஷன்ஸ், வெட் ட்ரீம்ஸ் என்று குறிக்கப்படும் இந்த நிகழ்வு சகஜமானது.

10 வயது முதல் டீன் ஏஜ் தொடர்ச்சி-யாக, எதிரெதிர் பாலினர் இடையே இருக்கும் ஈர்ப்பு என்பது இயற்கையானது. இதே சமயத்தில், சிறுவர்கள் அன்றாட வாழ்க்கையில் தங்களைச் சுற்றிலும் பார்க்கும் விஷயங்களில் காதல், காமம் தொடர்பான ஏராளமான பிம்பங்கள் இருக்கின்றன. வீட்டுக்குள்ளேயே அப்பா & அம்மா, இதர பெரியவர்கள் ஒருவரோடொருவர் நடந்துகொள்ளும் விதத்தில் தொடங்கி, டி.வி., சினிமா, பத்திரிகைகள் போன்றவற்றில் காணும் பிம்பங்கள் வரை எல்லாவற்றிலும் ஆண் & பெண் உறவு பற்றிய ஈர்ப்பை சிறுவர் மனதில் தூண்டும் அம்சங்கள் இருக்கின்றன.

பெரியவர்கள், சிறுவர்கள் முன்னால் கட்டி அணைப்பது, முத்தமிடுவது, உடைகள் விலகிய நிலையில் ஒன்றாக இருப்பது போன்ற தோற்றங்களை மட்டும் இங்கே நாம் குறிப்பிடவில்லை. அத்தகைய நிலையை பெரும்பாலான பெரியவர்கள் தவிர்க்கத்தான் செய்வார்கள். வயது வந்தவர்களுக்கிடையே சகஜமாக நிகழும் பரிமாற்றங்கள்கூட, அந்த வயதை நோக்கி வந்துகொண்டு இருப்பவர்களுக்கு உதவும் எதிர்காலத் தயாரிப்புப் பாடங்கள்தான்.

இயற்கையான ஈர்ப்பும், சுற்றிலும் காணும் விதவிதமான ஆண் &பெண் உறவு பற்றிய பிம்பங்களும் சிறுவனையும் சிறுமியையும் தம்மையறியாமலே காமக் கனவுகள் காணவும், நனவில் சுய இன்பம் பெற முற்படவும் தூண்டுகின்றன. கனவுக் கன்னி, ட்ரீம் கேர்ள் என்ற சொற் பிரயோகங்கள் குறிப்பதெல்லாம் பையன்களின் ‘நாக்டர்னல் எமிஷன்ஸ§’க்கு ஆதாரமாக இருக்கக்கூடிய பிம்பங்களைத்தான்.

சுய இன்பத்தில் ஈடுபடாத சிறுவர்களையோ ஆண்களையோ விரல் விட்டு எண்ணிவிடலாம் என்பது, பலருக்கு அதிர்ச்சி தரக்கூடிய உண்மை. சிறுவர்களில் 90 சதவிகிதம் பேர் சுய இன்பம் அனுபவிக்கிறார்கள்.

சுய இன்பம் பற்றி நம் சமூகத்தில் இருக்கும் சில கருத்துக்களைப் பார்ப்போம்.

அது ஆபத்தானது; தவறானது; சுய இன்பத்தில் ஈடுபட்டால், கண் பார்வை போய்விடும்; சுய இன்பத்தில் ஈடுபடுவோருக்குக் கேன்சர் வரும்; உடல் நலிவு ஏற்படும்; பின்னாளில் திருமணத்துக்குப் பின் மனைவியுடன் மகிழ்ச்சியான உடல் உறவில் ஈடுபடும் சக்தி இல்லாமல் போய்விடும்; சுய இன்பத்தில் விந்துவை விரயம் செய்வதால், விந்து உற்பத்தி குறைந்துவிடும்; சுய இன்பம் செய்தோருக்கு குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு குறைந்துவிடும்; பெண் துணை கிடைக்காதவர்கள், திருமணமாகாதவர்கள்தான் சுய இன்பத்தில் ஈடுபடுவார்கள்; பையன்கள்தான் சுய இன்பத்தில் ஈடுபடுவார்கள்; சிறுமிகள் ஈடுபடுவதில்லை...

இவைதான் சுய இன்பம் பற்றி நம் சமூகத்தில் நிலவும் முக்கியமான கருத்துக்கள். இவை எந்த அளவுக்கு உண்மை? எந்த அளவுக்குப் பொய்?

இந்த வார ஹோம் வொர்க்:

1. உங்களுடைய ட்ரீம் கேர்ள்/ட்ரீம் பாய் யார்? ஏன்?

2. இரவுப் படுக்கை ‘வெட் ட்ரீம்’ஸில் நனைந்தது தெரியவந்ததும், உங்கள் உணர்ச்சி என்ன? வீட்டில் மற்றவர்களின் உணர்ச்சி என்ன?

3. முதன்முதலில் விந்துவைப் பார்த்தபோது, என்ன உணர்ச்சி ஏற்பட்டது?

4. விந்துவில் என்னென்ன பொருட்கள் இருக்கின்றன என்று உங்களுக்கு எப்போது முதலில் தெரிய வந்தது?

5. சுய இன்பம் பற்றி முதலில் உங்களுக்கு எப்போது தெரியும்?

பதில்கள் மற்றவர்களுக்காக அல்ல. உங்களுக்கானவை... உங்களுடையவை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதர்களின் மனதிற்குள் இருக்கும் பல கேள்விகளுக்குப்

பதில்கள் சுலபமாகக் கிடைக்காது.

மிகவும் பயனுள்ள திரி உடையார் வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வாத்தியார்

அறிந்தும் அறியாமலும் - 15

டீன் ஏஜ் தொடங்கும்போதே, எட்டாம் வகுப்பிலேயே பெரும்பாலான சிறுவர்கள் சுய இன்பம் அனுபவிக்கத் தொடங்கி விடுகிறார்கள். உலகத்தின் எல்லா சமூகங்களிலும் ஒரு கால கட்டத்தில், சுய இன்பம் பற்றி அறிவியல் ஆதாரம் இல்லாத கருத்துக்கள் நிலவியிருக்கின்றன. மனித உடற்கூறு பற்றிய அறிவு பெருகப் பெருகத்தான், அவற்றில் பல கருத்துக்கள் தவறானவை என்ற விழிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

தவறான கருத்துக்கள் ஆதிக்கம் செலுத்திய காலங்களில், சுய இன்பம் அனுபவிக்கும் சிறுவர்களையும் சிறுமிகளையும் பெரியவர்கள் மிரட்டவும், தண்டிக்கவும்கூட செய்திருக்கிறார்கள். சுமார் 200 வருடங்களுக்கு முன், சிலர் தங்கள் வீட்டு சிறுமிகள் சுய இன்பம் அனுபவிக்கவிடாமல் தடுப்பதற்காக, இரவு வேளையில் சிறுமியின் கைகளில் இரும்பு இழைகளாலான கையுறைகளை மாட்டிப் பூட்டியிருக்கிறார்கள். அவளுடைய பிறப்புறுப்பின் மீது, தொட்டால் எரிச்சல் ஏற்படுத்தக்கூடிய ரசாயனப் பொடி தூவியிருக்கிறார்கள். சிறுவனுக்கு பிறப்புறுப்பைத் தொட முடியாமலும், அது எழுச்சி அடைய முடியாத விதத்திலும் இறுக்கமான இரும்பு ஜட்டி அணிவித்துப் பூட்டினார்கள்.

நாகரிக வளர்ச்சியின் அடுத்த கட்டத்தில், இத்தகைய உடல் சித்ரவதை முறைகள் கைவிடப்பட்டு, மூளைச் சலவை செய்யும் மனச் சித்ரவதை முறை பின்பற்றப்பட்டது. சுய இன்பம் அனுபவித்தால் முடி கொட்டிவிடும், ஆண்மை அழிந்துவிடும், கண் குருடாகி விடும் போன்ற பிரசாரங்கள் இன்று வரை தொடர்கின்றன.

அமெரிக்க மருத்துவத் துறையின் உச்சபட்ச பதவியான சர்ஜன் ஜெனரலாக 1994ல் இருந்த டாக்டர் ஜோசலின் எல்டர்ஸ், பள்ளிக் கூடங்களில் மாணவர்களுக்கு சுய இன்பம் பற்றிக் கற்றுத் தர வேண்டும் என்று கருத்து தெரிவித்ததற்காகப் பதவியை இழந்தார். உண்மையில் அவர் சொன்னது, சுய இன்பம் பற்றிய தேவையற்ற குற்ற மனப்பான்மையை சிறுவயதிலேயே ஏற்படாமல் தடுக்க, அது குறித்த தவறான கருத்துக்களைக் களைந்து, சரியான தகவல்களை சிறுவர்களுக்குச் சொல்லித் தர வேண்டும் என்பதுதான்.

‘வகுப்பிலேயே ஒவ்வொரு மாணவரும் உடைகளை நீக்கி தன் பிறப்புறுப்பைத் தொட்டுப் பார்த்து சுய இன்ப வழிமுறைகளைக் கற்றுக்கொள்ள வகுப்பு நடத்தப் போகிறாயா’ என்று எதிர்ப்பு தெரிவித்த மத அடிப்படைவாதிகள் போட்ட கூச்சலில் ஜோசலின் சொன்னது திரிக்கப்பட்டு பிரச்னையாக்கப்பட்டது. இப்போதும் பள்ளிக் கூடத்தில் பாலியல் கல்வி என்றதும் இதே போன்ற கூக் குரல்களைத்தான் கேட்கிறோம்.

இன்னொரு பக்கம் இதற்கு எதிர் முனையில் அமெரிக்காவிலேயே, டாக்டர் பெட்டி டாட்சன் என்ற பெண் சுய இன்பம் அனுபவிப்பது எப்படி என்று பெண்களுக்குப் பிரத்யேக வகுப்புகள் எடுத்தார். ஒவ்வொரு பெண்ணும் (ஆணும்) தன் உடலைக் கொண்டாட வேண்டும்; குழந்தைகள் தங்கள் பிறப்பு உறுப்பைத் தொட்டாலே வானம் இடிந்து விழுந்துவிட்டதைப் போல அவர்களைக் கண்டித்து அவமான உணர்வை ஏற்படுத்தி வாழ்நாள் முழுவதும் குற்ற மனப்பான்மையுடன் வாழச் செய்வதை மாற்ற வேண்டும் என்று பெட்டி சொன்னார்.

சுய இன்பம் பற்றி இன்றும் சொல்லப்படும் ஒவ்வொரு கருத்தையும் பரிசீலிப்போம்.

1. ‘அது ஆபத்தானது; தவறானது; சுய இன்பத்தில் ஈடுபட்டால், கண் பார்வை போய்விடும்; சுய இன்பத்தில் ஈடுபடுவோருக்குக் கேன்சர் வரும்; உடல் நலிவு ஏற்படும்.’

எல்லாமே தவறு! உடல் நலிவு, பார்வை இழப்பு போன்றவை எல்லாம் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் இல்லாததால் ஏற்படுமே தவிர, சுய இன்பத்தால் அல்ல!

கேன்சரைப் பொறுத்தமட்டில், பிராஸ்ட்டேட் சுரப்பியில் கேன்சர் வரும் வாய்ப்பு சுய இன்பத்தில் ஈடுபடாத ஆண்களைவிட, ஈடுபட்ட ஆண்களுக்குக் குறைவு என்று 2004ல் ஆஸ்திரேலியாவில் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

விந்து திரவத்தில் இருக்கும் சில சுரப்புகள், நாளங்களிலேயே தேங்கிக் கிடக்கும்போது, அவை புற்று நோயை உருவாக்கும் வாய்ப்பு இருப்பதாகவும், அவ்வப்போது விந்துவை சுய இன்ப முறையிலோ உடலுறவிலோ வெளியேற்றிவிட்டால், இந்த வாய்ப்பு குறைவதாகவும் டாக்டர் கிரஹாம் கைல்ஸ் தெரிவித்திருக்கிறார். வெளியேற்றப்படாத விந்து உடலிலேயே கரைந்து விடும் என்றபோதும், விந்து திரவத்தில் உள்ள சில பொருட்களுக்கு ‘கார்சினோ ஜினிக்’ எனப்படும் புற்று நோயை உருவாக்கக்கூடிய தன்மை இருப்பதாக அவர் சொல்கிறார்.

2. ‘திருமணத்துக்குப் பின் மகிழ்ச்சியான உடல் உறவில் ஈடுபடும் சக்தி இல்லாமல் போய்விடும்; சுய இன்பத்தில் விந்துவை விரயம் செய்வதால், விந்து உற்பத்தி குறைந்துவிடும்; சுய இன்பம் செய்த ஆண்/பெண்களுக்குக் குழந்தை பிறக்கும் வாய்ப்பு குறைவு!’

இவை உண்மையானால், பூமியில் மக்கள் தொகை இந்த அளவு அதிகரித்திருக்கவே முடியாது. ஏனென்றால் 90 சதவிகிதம் பேர் சுய இன்பம் அனுபவிப்பவர்கள்தான்!

விந்து உற்பத்திக்கும் சுய இன்பத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆண்&பெண் உடல் உறவு மகிழ்ச்சி-யாக இருப்பதற்குத் தேவைப்படுவது இருவரின் ஆரோக்கியமும் உடல் உறவு பற்றிய உடல்கூறு/உளவியல் அறிவும்தான். குழந்தை பெற முடியாத மலட்டுத்தன்மை ஆணிடமோ, பெண்ணிடமோ இருப்பதற்கான மருத்துவக் காரணங்கள் வேறு. அதற்கும் சுய இன்பத்துக்கும் சம்பந்தம் இல்லை.

3. ‘ஆண்/பெண் துணை கிடைக்காதவர்கள், திருமணமாகாதவர்கள்தான் சுய இன்பத்தில் ஈடுபடுவார்கள்!’ தவறு. அவர்களும்கூட சுய இன்பத்-தில் ஈடுபடுகிறார்கள் என்பதுதான் யதார்த்தமான நிலை. உடலுறவின் போது இருவரின் உச்சமான மகிழ்ச்சியும் ஒரே சமயத்தில் நிகழாதபோதும், ஒருவர் நிறைவடைந்து மற்றவர் நிறைவடையாதபோதும், துணையின் உதவியுடனே சுய இன்பத்தில் ஈடுபட்டு நிறைவை அடைய முயற்சிப்பது சகஜமானது. அது, பாலியல் மருத்துவர்கள் பல ஜோடிகளுக்குத் தரும் ஆலோசனையுமாகும்!

4. ‘சிறுமிகள்/பெண்கள் ஈடுபடுவதில்லை.’

இதுவும் தவறான கருத்துதான். சமூகத்தில் ஒரு பெண் தன் பாலியல் பழக்க வழக்கங்கள், கருத்துக்கள் போன்றவற்றை வெளிப்படையாகத் தெரிவிப்பதில் இருக்கும் கலாசார சிக்கல்களால், அசல் எண்ணிக்கை தெரிய வருவதில்லை என்றே ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

அப்படியானால், சுய இன்பம் அனுபவிப்பதால் எந்தத் தீங்குமே இல்லையா?

சிறுவனுக்கும் சிறுமிக்கும் அதிகமாகக் கைகளால் பிறப்புறுப்பைத் தேய்த்ததனால் sஷீக்ஷீமீ sளீவீஸீ எனப்படும் தோல் அழற்சி ஏற்படலாம் என்ற சிறு அவதி தவிர, வேறு எந்த தீங்கும் இல்லை என்பதுதான் உறுதியான முடிவு. தோல் அழற்சிக்கும் தீர்வுகள் உள்ளன. தண்ணீரில் கரையக்கூடிய ஸ்கின்லோஷன்களை லூப்ரிகேஷ னுக்குப் பயன்படுத்தி சுய இன்பம் அனுபவிக்கலாம்.

சொல்லப்போனால், சுய இன்பத்தால் சில லாபங்கள்கூட இருக்கின்றன. சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பாலியல் கவர்ச்சி, ஆசை இயல்பாகவே இருந்தாலும், வடிகால் இல்லாத நிலையில் மன அழுத்தம் கடுமையாக ஏற்படுகிறது. சுய இன்பப் பழக்கத்தால் அந்த மன அழுத்தம் குறைகிறது என்பது மருத்துவர்களின் முடிவு. சுய இன்பத்தில் ஈடுபடும் சிறுமிகளுக்கு/பெண்களுக்கு மாதப்போக்கு நேரத்தில் ஏற்படும் தசைப் பிடிப்பு, விறைப்பு, வலிகள் குறைவதாகவும் கண்டறியப்பட்டு இருக்கிறது.

எந்த விஷயமும் அளவுக்கு மீறினால் பாதிப்புதான் என்ற பொது விதி & அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்ற கருத்து இதற்கும் பொருந்தும். படிப்பு, வேலை, விளையாட்டு, பொழுதுபோக்குகள் என்று வேறு பணிகளில் ஈடுபடாமல், இதிலேயே மூழ்கிக்கிடப்பதுதான் தவறானது. சுய இன்பம் மட்டுமல்ல; வாழ்க்கையில் எந்த ஒரு ஒற்றை விஷயத்தில் மட்டுமாக ஆழ்ந்து போவது என்கிற ஷீதீsமீssவீஷீஸீ உடல்/உள நலத்துக்குக் கேடானதுதான்!

பத்து வயதைத் தாண்டிய பின்னர், டீன் ஏஜை நோக்கிச் செல்லும் தங்கள் குழந்தைகளின் தேவைகள் என்னென்ன என்று பெற்றோர் கவலைப்படுவது இயல்பு. நல்ல உடை, சத்தான உணவு, நல்ல கல்வி, நேர்மை, பொய் சொல்லாமை போன்ற நல்ல பழக்க வழக்கங்கள் எல்லாம் குழந்தைகளுக்குத் தேவையானவை என்பதைப் புரிந்துகொள்வது போல, குழந்தைகளின் பாலியல் சார்ந்த தேவைகளில் சுய இன்பமும் ஒன்று என்பதை பெற்றோர் தங்கள் மனதுக்குள் ஏற்று அங்கீகரித்தாக வேண்டும்.

இந்த வார ஹோம் வொர்க்:

சுய இன்பம் பற்றிய உங்கள் நிலை என்ன?

அறிந்தும் அறியாமலும்..! (16)

சுமார் 9 முதல் 12 வயது காலகட்டத்தில் தங்கள் வீட்டுச் சிறுவனும் சிறுமியும் ஹார்மோன்களின் சுரப்பால் உடல் மாற்றங்களுக்கும், குடும்ப சமூகச் சூழலினால் உள மாற்றங்-களுக்கும் ஆளாகத் தொடங்குவதைப் பெரியவர்கள் உணர வேண்டும்; புரிந்துகொள்ள வேண்டும். அப்படிப் புரிந்துகொள்ளா விட்டால், அடுத்த கட்டத்தில் 13 முதல் 17 வயதுக்குள்ளேயே டீன்-ஏஜ் பருவத்தில் குழந்தைகள் ஏதோ வேற்றுக் கிரக மனிதர்கள் போலத்தான் தோன்ற ஆரம்பிப்பார்கள்.

நம் மரபிலே ஓர் அற்புதமான சொலவடை இருக்கிறது... ‘தோளுக்கு மிஞ்சினால் தோழன்’!

அப்பா-அம்மாவின் தோளைத் தாண்டி குழந்தைகள் உயரமாகிற வயது 10ல் இருந்து 14 வரைதான்! அந்தக் கட்டத்தில் அப்பாவும் அம்மாவும் குழந்தையின் நண்பராகிவிட வேண்டும். சிறந்த நண்பராக மனம்விட்டுக் குழந்தையுடன் அதன் சந்தோஷங்களையும் வருத்தங்களையும் கவலைகளையும் குழப்பங்களையும் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

ஓட்டப் பந்தயத்தில் தோற்றது, சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்ளும்போது முட்டியில் அடிபட்டது, ஓவியப் போட்டியில் பரிசு வாங்கியது போன்றவற்றைப் பெற்றோருடன் பகிர்வது போலவே தன் பாலியல் குழப்பங்களையும் பகிர முடியும் என்ற நம்பிக்கை குழந்தைக்கு எப்போது ஏற்படும்? அவர்கள் தன் மேல் அதிகாரம் செலுத்துபவர்களாக இல்லாமல், நண்பர்களாக இருப்பதாகக் குழந்தை உணரும் போதுதான்!

ஒரே வயதினர் நண்பர்களாக இருப்பதைவிட, பெரிய வயதினரும் சிறிய வயதினரும் நட்பு கொள்வது சற்றுக் கடினமானது. ஆனால், அப்படி ஒரு நட்பை ஏற்படுத்திவிட்டால், அதில் இருவரும் பெறும் பயன்கள் ஏராளம். இந்த நட்பை ஏற்படவிடாமல் தடுப்பது வயதின் அதிகாரமும், அதற்கான எதிர்ப்பும்தான்!

‘உன் வயதைத் தாண்டித்தான் நான் வந்திருக்கிறேன். எனக்குத் தெரியாதா?’ என்று மூத்தவர் சொல்லும் போது, அங்கே வயதின் அதிகாரம் தலைதூக்கிவிடுகிறது.

‘உங்களுக்கு வயசாயிடுச்சு. இதெல்லாம் புரியாது’ என்று இளைய குரல் ஒலிக்கும்-போது, அது உண்மையில் தலைமுறை இடை வெளியின் குரல் அல்ல; கருத்துப் பரிமாற்றத் தோல்வியின் குரல்தான்.

சிறுவர்களை, இளைஞர்களைப் புரிந்துகொள்ளவும் அவர்களின் தோழர்களாக மாறவும் பெற்றோர் செய்ய வேண்டிய முயற்சிகளில் முதன்மையானது, ஒவ்வொரு வயதிலும் சிறுவர்களின் உடலிலும் மனதிலும் ஏற்படும் மாற்றங்கள் பற்றி அறிவியல் பூர்வமாக அறிவதாகும்.

3ல் இருந்து 12 வயது வரை ஏற்படும் மாற்றங்களை முன்பே அலசினோம். இப்போது 13 முதல் 17 வரை என்னென்ன நிகழ்கின்றன என்று பார்ப்போம். சிறுமிகள், பெரியவர்கள் ஆக இருக்கும்போது இருக்கப்போகும் உயரத்தை இப்போது அடைந்து முடித்திருப்பார்கள். சிறுவர் கள் உயரம் மட்டும் அவர்கள் இருபதுகளைத் தொடும்வரை வளர்ந்துகொண்டே இருக்கும். குழந்தைப் பருவத்திலிருந்து வெளிவந்து இளைஞர்களாகியிருப்பார்கள்.

இப்போது ஒரு விஷயத்தின் வெவ்வேறு தன்மைகளை யோசித்து, எதைத் தேர்ந்தெடுப்பது என்று முடிவெடுப்பதற்குத் தேவையான அலசல் திறன் வந்துவிட்டு இருக்கும். சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள். சம வயதுக்கார முன்னோடிகளைப் பின்பற்றுவது தொடரும். ஆனால், வளர் இளம் பருவத்தில் இருந்த அளவு இந்தத் தாக்கம் இப்போது இராது. மீடியாக்களின் பாதிப்பு அதிகரித்திருக்கும். அதேசமயம், மீடியா சொல்லும் தகவல்களை அலசும் அறிவும் வந்தி ருக்கும். நண்பர்களுடனும் குடும்பத் தினருடனும் இருக்கும் உறவுகளில் முன்பைவிட முதிர்ச்சி காணப்படும்.

நீண்ட காலம் நீடித்திருக்கக்கூடிய நட்பை, உறவை இப்போது உருவாக்கிக் கொள்ளும் ஆற்றல் ஏற்பட்டு இருக்கும். பரஸ்பர நம்பிக்கை, அன்பைப் புரிந்துகொள்ளுதல் போன்ற குணங்கள் இதற்குள் உருவாகியிருந்தால், ஆரோக்கியமான நட்பை, உறவை ஏற்படுத்திக் கொள்வதும் சாத்தியப்படும்.

தங்கள் உணர்ச்சிகளைத் தாங்களே அலசி ஆராய்ந்து புரிந்துகொள்வதற்கான முயற்சியும் திறமையும் இந்த வயதில் ஏற்பட்டு இருக்கும். ஏன் இது எனக்குப் பிடிக்கிறது, ஏன் இது எனக்குப் பிடிக்கவில்லை, ஏன் எனக்குக் கோபம் வந்தது, ஏன் எனக்கு அழுகை வந்தது என்றெல்லாம் யோசித்துப் பார்க்கும் ஆற்றல் இது.

டீன்-ஏஜ் தொடக்க காலத்தில் இளைஞர்களுக்குத் தங்கள் தோற்றம் பற்றிய அதீத அக்கறை இருக்கும். உடை பற்றி ரொம்ப அலட்டிக்கொள்வார்கள். ஆனால், டீன்- ஏஜ் முடியும் வயதில் இந்த அக்கறை குறைய ஆரம்பித்துவிடும். தோற்றத்தைவிட தன் ஆளுமை (பர்சனாலிட்டி) இப்படிப்பட்டது என்று காட்டிக்கொள்ளவே விரும்புவார்கள்.

அதாவது ஆளுமை என்பது வேறு; அதன் பல அம்சங்களில் தோற்றப் பொலிவு என்பதும் ஒன்று எனப் புரிந்துகொள்ளத் தொடங்கியிருப்பார்கள்.

செக்ஸ் பற்றிய விருப்பங்கள் தங்களுக்கு ஏற்படுவதை இப்போது அவர்களே உணரத் தொடங்கியிருப்பார்கள். அதை எதிர்பாலாரிடம் தெரிவித்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பது பற்றியும் புரிந்துகொள்ளும் அறிவும் இப்போது இருக்கும். செக்ஸ் சார்ந்த உறவுகளில் சரியானது எது, ஆபத்தானது எது என்றெல்லாம் ஓரளவு இப்போது தெரியும். செக்ஸ் பற்றிய கருத்துக்களைத் தன் மனதில் ஏற்படுத்துவதில் மீடியாவின் பங்கு என்ன என்பதைப் புரிந்துகொள்ளும் அறிவும் இப்போது ஏற்பட்டிருக்கும்.

இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் டீன் ஏஜ் இளைஞர்களுடன் செக்ஸ் பற்றி பெற்றோர்கள் என்ன பேசலாம், எப்படிப் பேசலாம் என்பதை அலசுவோமா?

நம் சமூகத்தில் பெற்றோருக்கு இருக்கும் முதல் மனத் தடை, இதைப் பற்றியெல்லாம் எப்படி நாம் நம் குழந்தையிடம் போய்ப் பேசுவது என்பதுதான். இது ஓரளவு நியாயமான மனத் தடையும்கூட. ஆனால், இதை 13 வயதுக்குமேல் தொடங்க முடியாது. அதற்குள் அப்பா என்றால் இப்படி, அம்மா என்றால் இப்படி என்று இருவர் பற்றியும் திட்டவட்டமான மனச் சித்திரம் குழந்தைக்கு ஏற்பட்டுவிடும். பிறகு, அதை மாற்ற முயல்வது கடினம்.

எனவே, குழந்தையுடன் கருத்துப் பரிமாற்றங்களை அதற்குப் பேசத் தெரிந்த உடனே மிக சிறு வயதிலேயே தொடங்கிவிடுவது நல்லது. வளர வளர... சினிமா, அரசியல், பணம், படிப்பு, வேலை, கடவுள், சாதி, மதம், செக்ஸ் என எந்த விஷயத்தைப் பற்றியும் பெற்றோரிடம் விவாதிக்கலாம் என்ற நம்பிக்கை குழந்தைக்கு ஏற்பட வேண்டும்.

செக்ஸ் தொடர்பான ஒரு விஷயத்தைப் பற்றிக் குழந்தை கேள்வி கேட்கிறது என்றால், அதற்கான சரியான பதில்களையும் சரியான சொற்களையும் தெரிந்து கொள்ளும் வயதில் இருப்பதாகத்தான் அர்த்தம். குழந்தை என்ன கேட்கிறது என்பதை முதலில் நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு முறைக்கு இரு முறை அது என்ன சொல்கிறது என்பதை நாம் கேட்டுத் தெரிந்து கொண்டுவிட்டு பதில் சொல்வதுதான் சரி.

குழந்தை கேள்வி கேட்கும் சந்தர்ப்பம் சில சமயம் தர்மசங்கடமான சூழலாக இருக்கலாம். அப்போது உடன் இருக்கும் வேறு பெரியவர்கள் முன் இப்படிக் கேட்கிறதே என்று எரிச்சல்கூட வரலாம். ஆனால், அந்த விஷயம் பற்றிச் சரியான பதிலை குழந்தைக்கு தெரிவிக்கும் வாய்ப்பை விட்டுவிடக் கூடாது என்பதுதான் முக்கியம். ‘நல்ல கேள்வி கேட்டிருக்கே! ஒரு ஐஸ்க்ரீம் சாப்பிட்டுட்டே பேசுவோம்’ என்று வேறு இடத்துக்கு இருவருமாகப் போய் மனம்விட்டுப் பேசலாம்.

குழந்தைகளின் கேள்விகளுக்குப் பதில் சொல்லும்போது, அவர்களுக்குப் புரியும் அளவுக்குச் சற்று அதிகமாகவே பதில் சொல்லலாம். நாம் நினைத்ததைவிடவே கூடுதலாகப் புரிந்துகொள்ளும் நிலையில் குழந்தை ஒருவேளை இருக்கக்கூடும். தவிர, அப்போதுதான் மேலும் கேள்விகள் கேட்கக் குழந்தைக்குத் தூண்டுதலாக இருக்கும். எப்போதுமே, குழந்தைக்கு ஏற்கெனவே தெரிந்த விஷயத்திலிருந்து தொடங்கி தெரியாத விஷயத்துக்கு இட்டுச் செல்ல வேண்டும். எல்லா கற்பித்தலும் கற்றலும் அப்போதுதான் சாத்தியம்!

‘பையனுக்கும் பெண்ணுக்கும் என்ன வித்தியாசம்?’ என்று சிறு குழந்தை கேட்கும்போது சினைப்பை, கருப்பை, விந்து சேகரப்பைகளின் வரைபடங்களைக் காட்டி விளக்கத் தேவையில்லை. அதற்கு குழந்தை இன்னும் வளர வேண்டும். ஆனால், மூத்திரம் கழிப்பதற்கு இருவருக்கும் வெவ்வேறு உறுப்புகள் பையனுக்கு குஞ்சும், பெண்ணுக்கு யோனியும் இருக்கின்றன என்று சொன்னால் போதும். குஞ்சு, யோனி போன்ற சொற்களைச் சொல்லக் கூச்சப்படத் தேவையில்லை. இவையே சரியான, பொருத்தமான சொற்கள்.

இவற்றைக் குழந்தைக்குச் சொல்லித் தராவிட்டால், அது வெளியில் இதே உறுப்புகளுக்கான ‘கெட்ட’ வார்த்தைகளைக் கற்றுக்கொண்டு வரும். ஆங்கிலத்தில் ‘யூரின்’ என்று சொல்லத் தயங்காத நாம் தமிழில் மட்டும் மூத்திரம் என்று கூறத் தயங்குவதைக் கைவிடவேண்டும். மூத்திரத்தை மூத்திரம் என்று சொல்லாமல் ‘உச்சா’, ‘சுசு’ என்றெல்லாம் சொல்லிக்கொண்டே இருந்தால், மூத்திரம் என்பது கெட்ட வார்த்தையாக மாறிவிடுகிறது. இப்படித்தான் பிறப்பு உறுப்புகள் தொடர்பான எல்லா சரியான வார்த்தைகளும் கெட்ட வார்த்தைகளாகிவிட்டன.

குழந்தைக்குத் தன் உடலை அறியக் கற்பிப்பதில் முக்கியமான பங்கு வகிப்பது, முகம் பார்க்கும் கண்ணாடி. நம் இன்னொரு முகத்தைப் பார்க்கவும் கண்ணாடியைப் பயன்படுத்தலாம்.

இந்த வார ஹோம்வொர்க்:

1. உங்கள் பெற்றோர் எந்த வயதில் உங்கள் நண்பர்களாக ஆனார்கள்? (அல்லது, ஆகவே இல்லையா?)

2. நீங்கள் உங்கள் குழந்தையின் நண்பராக எந்த வயதில் ஆனீர்கள்? (அல்லது, ஆகவே இல்லையா?)

3. அப்பாவின் நண்பர்/அம்மாவின் சிநேகிதி/ மாமா, அத்தை போன்ற நெருங்கிய உறவினர் யாரேனும் உங்கள் நண்பராக இருந்ததுண்டா?

4. நீங்கள் உங்கள் மகன்/மகள் ஆகியோரின் நண்பர்களுக்கு அப்படிப்பட்ட நண்பராக இருக்க முயற்சித்தது உண்டா?

5. உங்கள் வீட்டில் வெளிப்படையாக விவாதிக்கும் விஷயங்களின் பட்டியலைப் போடுங்கள். குடும்ப வருமானம்/வேலை வாய்ப்புகள்/அரசியல்/சினிமா/பத்திரிகைச் செய்திகள்/சாதி/மதம்/கடவுள்/ சடங்குகள்/செக்ஸ்...

மூலம்: www.keetru.com ,ஆனந்தவிகடன் தொடர்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அறிந்தும் அறியாமலும்..! (17)

நடைமுறையில் பல இளைஞர்கள் முதலில் வரையக் கற்றுக் கொள்வதே பிறப்புறுப்புகளின் ‘ஆபாச’ படங்களைத்தான். பள்ளிகள், கல்லூரி, பஸ் நிலைய, ரயில் பெட்டிக் கழிப்பறைகளில் காணப்படும் கிறுக்கல் படங்களே இதற்கு சாட்சி! ஏன் நடக்கிறது இந்தத் தவறு?

பேசத் தெரிந்துவிட்ட குழந்தையிடம் இது கண், இது காது, இது மூக்கு என்று சொல்லித் தருகிறோம். குழந்தை தானே கண்ணாடி முன் போய் நின்றுகொண்டு தன் கண், காது, மூக்கு, உதடு, நெற்றி, முகவாய் என எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கிறது. ஆனால், தன் முதுகை குழந்தையால் மட்டுமல்ல, யாராலும் கண்ணாடியில் பார்த்துக்கொள்ள முடியாது.

முடி திருத்தகங்களில் எல்லாப் பக்கமும் கண்ணாடி வைத்திருப்பார்கள். தலையின் பின் பக்கம் எப்படி முடி வெட்டப்பட்டிருக்கிறது என்பதை முன்னும் பின்னுமாக உள்ள அந்தக் கண்ணாடிகள் வழியே பார்த்துத் தெரிந்துகொள்ள முடியும். அதில் முதுகையும் பார்க்கலாம்.

இதே போலத்தான், உடலின் இன்னும் சில பாகங்களை முழுமையாக அறிய கண்ணாடி தேவை.

தோள் இடுக்கான அக்குள் பகுதியில் எரிச்சலோ நமைச்சலோ இருந்தால், அக்குள் பகுதியை நேராகப் பார்ப்பதைவிட அதனருகே கண்ணாடி வைத்துப் பார்த்தால் தான், ஏதேனும் சிறு கொப்புளம் இருந்தாலும்கூட அறிய முடியும்.

அதுபோலத்தான் ஆணுறுப்பு, பெண்ணுறுப்பு போன்றவையும்! கண்ணாடி கொண்டு பார்க்கும் போதுதான் அதை முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியும். இதை ஒன்பது, பத்து வயதிலேயே குழந்தைக்குக் கற்றுத் தரலாம். சிறுவனோ சிறுமியோ தான் மட்டும் தனியே இருக்கக் கூடிய ஓர் அறையில் உடைகளைக் களைந்துவிட்டுத் தரையில் உட்கார்ந்து, கால்களுக்கு இடையே கண்ணாடியை நிறுத்தி, தன் பிறப்புறுப்பு எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.

தொப்புளுக்குக் கீழே இரு கால்கள் இணையும் பகுதியில் தொடை இடுக்குகள் வரை முடி முளைத்திருக்கிறது. அவற்றின் ஊடே, இருபுறமும் விரைப் பைகள் தொங்க, நடுவே லிங்கம்/குஞ்சு எனப்படும் குழாய்ப் பகுதி நீள்கிறது.

லிங்கத்தின் மேல் தோல் நுனியிலிருந்து சுருட்டினால் ஓரளவு சுருங்குகிறது. அதற்கு மேல் அது ஏன் சுருங்குவதில்லை என்று அறிய, கண்ணாடியை லிங்கத்தின் கீழ்ப்புறம் கொண்டுபோய்ப் பார்த்தால் புரியும். கீழ்ப்பகுதியில் ஓரளவுக்குமேல் தோல் பிரிய முடியாதபடி உடலுடன் இணைந்திருப்பது தெரியும். அதற்கும் மேல் தோலை இழுத்தால் வலிக்கும். காயம்கூட ஏற்படலாம்.

குளிக்கும்போது முன் தோலைநீக்கி எதுவரை சுத்தம் செய்ய வேண்டும் என்பது இப்போது புரிந்துவிடும். முன்தோலின் அடிப்பகுதி சுத்தம் செய்யப்படாமல் அழுக்கு சேர்ந்திருந்தால், தோலைப் பிரிப்பதே சிரமமாகி வலியை ஏற்படுத்தும். தொற்றுக் கிருமிகளால் நோய் உண்டாகும்.

விரைப்பைகள் வெளிப்புற தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப சுருங்கியோ, விரிந்தோ காணப்படுகின்றன. விரைப் பையை விரல்களால் உருட்டிப் பார்த்தால், உள்ளே விரைக் கொட்டை இருப்பதை உணரலாம். ஓடற்ற ஒரு கோழி முட்டையை உருட்டிப் பார்த்தது போல் இருக்கும். அதைச் சுற்றிலும் உட்புறம் இருக்கும் தசைகளில் ஏதேனும் கட்டிகள் இருந்தால், அதுவும் விரல்களுக்குப் புலப்படும். அப்படி எதுவும் தெரிந்தால் உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

கண்ணாடியின் உதவியுடன் தன்பிறப்புறுப்பைப் பார்க்கும் சிறுமி காண்பது என்ன?

அடிவயிற்றுக்குக் கீழே இரு தொடைகள் சேரும் பகுதியை நிதம்ப மேடு என்று தமிழிலும், ‘மவுன்ட் ஆஃப் வீனஸ்’ என்று ஆங்கிலத்திலும் சொல்கிறார்கள். இதற்குக் கீழே நெடுக்குவாட்டில் சில ஜோடி அடுக்குகளுடன் புறயோனி காட்சி தருகிறது. இதைச் சங்க இலக்கியம் மொத்தமாக ‘அல்குல்’ என்கிறது.

வெளிப்புறமாக இரு பக்கமும் பெரு உதடுகள் எனப்படும் ‘லேபியா மஜோரா’ உள்ளன. இந்த இரு பெரு உதடுகள் தொடங்கும் இடத்தில்மேற்புறத்தில் உள்ளே சிறு முத்து போல இருப்பது ‘கிளிட்டோரிஸ்’ எனப்படும் கந்து. இதன் இருபுறமும் உட்புறமாக கீழ் நோக்கிச் செல்பவை ‘சிறு உதடுகள்’ எனப்படும் ‘லேபியா மைனோரா’. இவற்றின் உள்ளே மேற்புறமாக சிறுநீர்த் துவாரமும், அதற்குச் சற்றுக் கீழே கருப்பைக்குச் செல்லும் யோனிக் குழாயின் வாசல் துவாரமும் உள்ளன.

யோனித் துவாரத்தை மூடிய சிறு படலமாக இருப்பது, கன்னித் திரை எனப்படும் ஹைமன். உடல் உறவின் போதுதான் இது கிழியும் என்றும், எனவே அது கிழிந்திருந்தால் அந்தப் பெண் கன்னித் தன்மையை இழந்தவள் என்றும் நம்பிய மரபுகள் உண்டு. முதல் இரவின்போது ஹைமன் கிழிந்து கசிந்த ரத்தம் படுக்கை விரிப்பில் இருந்தால்தான், அந்தப் பெண் ‘வர்ஜின்’ என்று கருதப்பட்ட காலமும் உண்டு.

ஆனால், அறிவியல் உண்மைகள் இதை நிராகரித்துவிட்டன. சைக்கிள் ஓட்டுவது முதல் ஓடிப் பிடித்து கிளித் தட்டு ஆடுவது வரை பல காரணங்களால் ‘ஹைமன்’ கிழியக்கூடும்.

யோனிப் பகுதி முழுவதும் பொதுவாக ஈரப்பசை இருக்கும். சிறுநீர் கழித்தபின் ஒழுங்காகக் கழுவி சுத்தம் செய்தாலும்கூட, இயல்பாகவே யோனிக் குழாயில் சுரக்கும் திரவத்தால் யோனிப் பகுதி முழுவதும் ஈரப்பசையாக இருக்கும். காம உணர்ச்சி ஏற்படும் போது சுரப்புகள் அதிகமாவதால், ஈரப்பசை அதிகரிக்கும்.

தன் யோனிப் பகுதியை தானே சோதித்துப் பார்க்கும் சிறுமி கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சங்கள் என்ன? புதிதாக ஏதேனும் மரு, மச்சம், கொப்புளம், சிறு வளர்ச்சி உருவாகியிருக்கிறதா? வழக்கமான நிறம் இல்லாமல் ஏதேனும் ஒரு பகுதியில் வெள்ளை, சிவப்பு நிறத்தில் தோல் நிற மாற்றம் அடைந்திருக்கிறதா? கட்டிகள், காயங்கள், புண்கள், எரிச்சல்கள், நமைச்சல்கள் ஏதேனும் உள்ளனவா? இவற்றைச் சோதித்து, தேவைப்பட்டால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

கண்ணாடியில் பார்த்த தங்கள் உடல் உறுப்பை தானே பின்னர் காகிதத்தில் வரைந்தும் பார்க்கலாம். உடல் உறுப்பின் படம் ஆபாசமானது என்ற மன நிலையிலிருந்து விடுபட, இது மிகவும் அவசியம்.

செக்ஸைப் பற்றிக் கற்றுத் தரப்போவது யார்? பெற்றோரா, பள்ளிக்கூடமா? தொடர்ந்து இது சர்ச்சையில்தான் நம் சமூகத்தில் இருக்கிறது. இதற்கான அடிப்படைக் காரணம், செக்ஸ் எஜு கேஷன் என்பதை கொச்சையாகவும் தவறாகவும் புரிந்து வைத்திருப்பதுதான். செக்ஸ் எஜுகேஷன் என்றால், வகுப்பறையில் ஆணும் பெண்ணும் உடல் உறவுகொள்வதைச் செய்து காட்டி, இப்படித்தான் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பதுபோல ஒரு தவறான, விஷமமான பிரசாரம் எப்போதும் நடக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில், நாம் செக்ஸ் பற்றிக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவது, முன்பே நாம் குறிப்பிட்டது போல உடலுறவு பற்றியல்ல. உடல் பற்றியும், உறவுகளைப் பற்றியுமே!

அவரவர் உடல்களைப் புரிந்துகொள்ளவும், அவரவர் உறவுகளைப் பற்றிப் புரிந்துகொள்ளவும் நம் குழந்தைகள் கற்றுக்கொண்டால்தான், நாளைய வாழ்க்கையில் அவர்க-ளுடைய உடலுறவு களும் ஆரோக்கியமாக இருக்கும்.

இந்தப் பொறுப்பை பெற்றோர், பள்ளிக்கூடம் இருவரும்தான் செய்ய வேண்டும். பல பெற்றோர்களுக்கு இது பற்றிய விருப்பம் இருந்தாலும், மனத் தடைகள் உள்ளன. அவற்றைக் கடக்க வேண்டும். அதற்கு முதலில் ஒவ்வொருவரும் ‘நான் எப்படிப்பட்ட பெற்றோர்’ என்று தன்னைப் பற்றித் தானே ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

நம்மை நாமே சில கேள்விகள் கேட்டுக்கொண்டு, அவற்றுக்கு நேர்மையான பதில்களையும் சொல்லிக்கொள்வோமா?

இந்த வார ஹோம் வொர்க்:

பொது:

1. முகம், பின் தலை, முதுகு தவிர வேறு உடல் பாகத்தைப் பார்க்கக் கண்ணாடியைப் பயன்படுத்தியது உண்டா?

2.கழிவறை சுவர் கிறுக்கல்களைப் பார்க்கும்போது என்ன தோன்றும்? நீங்களும் அப்படிக் கிறுக்கியதுண்டா?

ஆண்களுக்கு:

1. விரைப் பையைத் தொட்டுப் பார்த்து வீக்கமாக இருப்பதாக அறிந்து, மருத்துவரைச் சந்தித்த அனுபவம் உண்டா ?

2. அன்றாடம் குளிக்கும்போது லிங்கத்தின் மேல் தோலை நீக்கிச் சுத்தம் செய்யும் வழக்கம் உண்டா?

பெண்களுக்கு:

1. கன்னித் திரை கிழிந்திருந்தால், நாளைக்குத் திருமண வாழ்க்கையே சிக்கலாகிவிடும் என்று உங்களிடமோ உங்கள் சிநேகிதிகளிடமோ யாராவது சொல்லியிருக்கிறார்களா?

2. யோனிப் பகுதியின் பல்வேறு பாகங்களை முதன்முதலில் எப்போது நீங்களே பார்த்துத் தெரிந்து கொண்டீர்கள்?

அறிந்தும் அறியாமலும்..! (18)

பிள்ளைகளுடன் செக்ஸ் பற்றி எப்படிப் பேசுவது என்ற தயக்கமும் கவலையும் எல்லா பெற்றோர்களுக்கும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், செக்ஸ் பற்றித் தங்கள் பிள்ளைகள் சரியாகத் தெரிந்துகொள்ள வேண்டுமே என்ற அக்கறையும் கூடவே இருக்கிறது.

குறிப்பாக, டீன் ஏஜ் பெற்றோர்களின் முதல் கவலை, தேவையற்ற கர்ப்பத்தில் கொண்டுபோய் விட்டுவிடக்கூடிய உறவு எதிலும் தங்கள் பிள்ளைகள் சிக்கிவிடக் கூடாது என்பது தான். பாலியல் வன்முறை போன்ற பயங்கரம் தம் குழந்தைகளுக்கு நேர்ந்துவிடக் கூடாது என்பது இன்னொரு கவலை. விவரம் தெரியாமல் உறவுகளில் ஈடுபட்டு ஏதேனும் பால்வினை நோய்கள் அவர்களுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பது மற்றொரு கவலை. இவையெல்லாம் நியாயமான கவலைகள்தான்.

எந்தப் பெற்றோரும் தங்கள் குழந்தைகள் வாழ்க்கை முழுவதும் செக்ஸ் பற்றித் தெரியாதவர்களாகவே வளர வேண்டும் என்று நிச்சயம் நினைக்கமாட்டார்கள். அவர்கள் விரும்புவது எல்லாம்... குழந்தைகளுக்குத் தங்கள் உடலைப் பற்றிய தெளிவும் பொறுப்பும் ஏற்பட வேண்டும்; அன்பு, நெருக்கம் இவற்றை முறை-யான வழிகளில் வெளிப்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும்; உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான்! ஆனால், இதற்குத் தங்கள் குழந்தைகளைத் தயார்படுத்துவது எப்படி என்பதில்தான் அவர்களுக்குச் சிக்கல்.

இதற்கு முதல் காரணம், அவர்களுடைய பெற்றோர் அவர்களை அப்படித் தயார்படுத்தவில்லை. அதனால், தங்கள் குழந்தைகளும் தாங்களாகவே தயாராகிவிடுவார்கள் என்று சிலர் நம்புகிறார்கள். இன்னும் சிலருக்கு, தாங்களே எவ்வளவு விவரம் தெரியாதவர்களாக 60 வயதைக் கடந்துவிட்டோம் என்று வருத்தமும் ஆச்சர்யமும் இருக்கிறது. இந்தத் தொடருக்கு வரும் கடிதங்களில் பல அப்படிப்பட்டவை.

‘எனக்கு மாதவிலக்கு நின்று பத்து வருடமாகிறது. ஆனால், மாதவிலக்கு என்பது என்ன, அது ஏன் நிகழ்கிறது என்பதே இத்தனை வருடமாக எனக்குத் தெரியாது. இந்தத் தொடர் மூலம் தெரிந்துகொன்டு ஆச்சர்யப்பட்டேன்’ என்று ஒரு வாசகி எழுதுகிறார். ‘60 வருடங்களுக்கு முன், நான் டீன் ஏஜில் இருந்தபோது, சுய இன்பத்தைப் பற்றிக் கண்டபடி சொல்லி, என்னை மிரட்டி வைத்திருந்தார்கள். இப்போதுதான் உண்மைகள் புரிகின்றன’ என்று 75 வயது வாசகர் ஒருவர் தெரிவிக்கிறார்.

இன்றைய இளம், நடு வயதுப் பெற்றோர்கள், செக்ஸ் பற்றிய ஆரோக்கியமான புரிதலை தாங்களே குழந்தைகளுக்கு ஏற்படுத்தித் தர என்ன வழி என்பதில் மிகவும் அக்கறையோடு இருக்கிறார்கள். இவர்களை, பத்து வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் பெற்றோர், பருவம் எய்திய வயதில் இருக்கும் டீன் ஏஜ் விடலைகளின் பெற்றோர் என இரு வகையாகப் பிரிக்கலாம்.

செக்ஸ் சம்பந்தப்பட்ட ஒழுக்கப் பிரச்னைகளைப் பற்றிப் பெரியவர்களான பெற்றோருக்கே குழப்பங்கள் இருக்கின்றன. செக்ஸ் பற்றிய விவரங்களைச் சிறுவர்களிடம் சொன்னால், அவர்கள் உடனே அதில் ஈடுபடத் தூண்டப்பட்டு விடுவார்களோ என்ற தேவையற்ற பயமும் பலருக்கு இருக்கிறது. தூண்டுதலுக்கு இது காரணமாக முடியாது. அதேசமயம் செக்ஸ் பற்றிய புரிதலே இல்லாமல், பல புறக் காரணங்களால் தூண்டப்பட்டு, அதில் ஈடுபடுவதால் நேரக்கூடிய சிக்கல்களுக்கே வாய்ப்பு அதிகம்!

திடீரென்று குழந்தைகள் சில தர்மசங்கடமான கேள்விகளைக் கேட்டால் எப்படிப் பதில் சொல்வது என்ற அச்சமும் பலருக்கு இருக்கிறது. “அம்மா, உடல் உறவுன்னா என்ன?” என்று ஆறு வயதுச் சிறுமி நாலு பேர் முன் கேட்டு வைத்தால், “நல்லா இருக்கு நீ குழந்தையை வளர்த்திருக்கற லட்சணம்!” என்று நினைப்பார்களோ என்ற நினைப்பே பயப்படுத்தும். இன்னும் சிலருக்கோ, தனக்குச் சரிசமமாக இல்லாவிட்டாலும், அந்தத் தோரணையில் பேசக்கூடிய டீன் ஏஜ் மகனிடமோ மகளிடமோ செக்ஸ் பற்றி பேசத் தொடங்கினால், தன் சொந்த செக்ஸ் வாழ்க்கையைப் பற்றியும் பேசியாக வேண்டிய கட்டாயம் வந்துவிடுமோ என்ற பயமும் இருக்கிறது.

“’ஃப்ரெண்ட்ஸ’க்குள்ள தொட்டுப் பேசுங்க, பரவாயில்ல! ஆனா, கண்ட இடத்துல கைபடுது பார். உன் மனசுல ஒண்ணும் தப்பா இருக்காது. ஆனா, பார்க்கிறவங்க என்ன நினைச்சுக்கு வாங்க!” என்றெல்லாம் பேசினால், உடனே “நீங்க படிக்கும்போது க்ளாஸ்மேட்ஸை தொட்டுப் பேச மாட்டீங்களா?” என்று பதில் கேள்வி வந்தால்?

எட்டாங் கிளாஸில் மல்லிகாவின் கையைத் தொட, தான் துடித்துக்கொண்டு இருந்த கதையை எல்லாம் இப்போது மகனி/ளிடம் பகிர்ந்துகொள்வது சரியா, தப்பா, நல்லதா, விபரீதமானதா என்ற பயமும் குழப்பமும் வந்துவிடும்.

எத்தனை பயம் இருந்தாலும், எத்தனை தயக்கம் இருந்தாலும் நம் குழந்தைகளிடம் பாலியல் பற்றி நாம் பேசித்தான் ஆகவேண்டும். பள்ளிக்கூடத்தில் பாலியல் - வாழ்க்கைக் கல்வி நிச்சயம் தேவை. அதேசமயம், இன்றைய நிலையில் பள்ளிக்கூடத்தைவிட, வீடும் குடும்பமும்தான் குழந்தையின் வாழ்க்கைக்கான எதிர்கால மதிப்பீடுகளை உருவாக்க உதவும் சரியான அமைப்புகள்.

குழந்தைகளிடம் செக்ஸ் பற்றிப் பேச நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். நம் குழந்தைகளை நமக்கு எந்த அளவுக்குத் தெரியும் என்று கறாராக யோசித்துப் பார்க்க வேண்டும். அதன் பிறகுதான் குழந்தைகளிடம் என்ன பேசலாம், எப்படிப் பேசலாம், எப்போது பேசலாம் என்பதைத் தீர்மானிக்க முடியும்.

அப்பாவும் அம்மாவும் ஆளுக்கொரு தாளை எடுத்துக்கொண்டு, கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்குத் தனித்தனியே பதில் எழுத முயற்சியுங்கள். நேர்மையாக எழுதுங்கள். எழுதி முடித்த பின் ஒருவர் பதிலை மற்றவர் பதிலுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். இருவரின் பதிலும் சரியா என்று குழந்தையிடம் தாள்களைக் கொடுத்துச் சரிபாருங்கள்.

கேள்விகள் இதோ:

1. உங்கள் மகன்/ள் உயரம் என்ன? எடை என்ன?

2. அவர்களுக்குப் பிடித்த விளையாட்டு என்ன?

3. அவர்களுக்குப் பிடித்த டி.வி. நிகழ்ச்சி என்ன?

4. பிடித்த சினிமா நடிகர்/நடிகை யார்?

5. பிடித்த பள்ளி/கல்லூரி ஆசிரியர் யார்?

6. பிடித்த நிறம் எது?

7. பிடித்த உணவு எது?

8. கடைசியாகப் பார்த்த சினிமா எது?

9. பிடித்தமான பாட்டு எது?

10.பள்ளி/கல்லூரி முடித்து வந்ததும், உடனே அவர்கள் செய்ய விரும்புவது என்ன?

11. நெருக்கமான நண்பர் யார்?

12.நண்பர்கள் வட்டாரத்தில் செல்லப் பெயர் என்ன?

13. உங்களிடம் பெற விரும்பும் பிடித்தமான பிறந்த நாள் பரிசு என்ன?

14. தங்களைப் பற்றிப் பெருமையாக ஏதாவது சொல்லிக்கொள்ள வேண்டு மானால், எதைப் பற்றிப் பெருமைப் படுவார் உங்கள் மகன்/ள்?

15. உங்கள் உதவி கேட்டு ஒரு பிரச்னையுடன் அணுகியது கடைசியாக எப்போது? என்ன பிரச்னை?

மூலம்: www.keetru.com ,ஆனந்தவிகடன் தொடர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறிந்தும் அறியாமலும்..! (20)

இந்தத் தொடரின் தொடக்கத்தில் சில நிகழ்ச்சிகளைக் குறிப்பிட்டு ஒரு கேள்வியை எழுப்பியிருந்தோம். அந்தக் கேள்விக்கான பதிலைத் தான் இனி தேடப் போகிறோம். அந்த நிகழ்ச்சிகள் என்ன? அந்தக் கேள்வி என்ன? நினைவுபடுத்திக்கொள்வோமா?

கிரிக்கெட் மட்டை வாங்கித் தர மறுத்த அப்பாவைக் கொன்றான் மகன்; ‘என்னை விபசாரத்தில் ஈடுபடும்படி கட்டாயப்படுத்திய என் அப்பா, அம்மா மீது நடவடிக்கை எடுங்கள்’ என்று கோரினார் இளம் நடிகை; கின்னஸ் சாதனை செய்வதற்குத் தனக்குப் போதுமான ஆதரவு கிடைக்கவில்லை என்று தற்கொலை செய்துகொண்டான் ஒரு சிறுவன். இந்த நிகழ்ச்சிகள் உணர்த்துவது என்ன?

17 வயதுப் பெண்ணுக்கு முகமெல்லாம் பரு. ‘காரணம், அவளுக்கு ஏதோ ஆண் சகவாசம் இருப்பதுதான். எனவே, படிப்பே தேவையில்லை’ என்று தன் மகளைக் கல்லூரியிலிருந்து நிறுத்திய அப்பாவை உங்களுக்குத் தெரியுமா?

சொந்த மகளைத் தன் இச்சைக்கு இணங்கக் கட்டாயப்படுத்தும் அப்பாவிடம் இருந்து மகளைக் காப்பாற்றப் போராடிக்கொண்டு இருக்கும் அம்மாவை உங்களுக்குத் தெரியுமா?

மாயா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அறிவுக் கூர்மையும் அபிலாஷைகளும் நிரம்பிய கல்லூரி மாணவி. வயது 19. அவளுடைய பிரச்னை என்ன? கேரியர் கைடன்ஸிக்காக அவள் சந்தித்த ஓர் 50 வயது உயர்அதிகாரியுடன் ஏற்பட்ட நட்பை, அவர் படுக்கையில் கொண்டு போய் முடித்தார். ஏற்கெனவே திருமணமான அந்த அதிகாரிக்கு, இப்போது மாயா அலுத்துவிட்டது. கேரியர் கைடன்ஸ் தேடும் இன்னொரு பெண் அவருக்குக் கிடைத்துவிட்டாள். ஆனால், மாயாவால் அவரை மறக்கவும் பிரியவும் முடியவில்லை. மாயாவுக்கு இது ஏன் நடந்தது? அவளுக்கான தீர்வுதான் என்ன?

இது போல், இன்னொரு வீட்டில் இப்போது துள்ளித் திரிகிற 5 வயது சாயாவுக்கு நாளை மாயாவின் நிலை வராமல் இருக்கவும், நம் வீட்டு 20 வயது அழகேசன் நாளை அந்த உயர் அதிகாரி போல் ஆகாமல் இருக்கவும், தடுப்பு மருந்து ஏதும் உண்டா? உண்டு!

அதுதான் வாழ்க்கைக் கல்வியின் பத்துக் கட்டளைகள்!

நுட்பமும், ஆழமும், விரிவும் நிரம்பிய அந்தப் பத்துக் கட்டளைகளைச் சற்றே எளிமைப்படுத்திப் பட்டியலிடுவோமா?

இன்னொரு முறை இந்தப் பத்துக் கட்டளைகளையும் படித்துப் பாருங்கள்.

இவை வாழ்க்கையில் பெட்ரூம் முதல் போர்டு ரூம் வரை தொடர்ந்து பயன்படக் கூடியவை என்பது புரியும். இவை உணர்த்தும் பத்து ஆற்றல்கள்தான், வாழ்க்கைக் கல்வியின் ஆதாரமான அடிக்கல்கள்.

முதல் நான்கு கட்டளைகளை (self awareness, inter personal relation ships,effective communication,empathy) சமூகம் சார்ந்த திறன்கள் (social skills) என்று வகைப்படுத்துகிறோம்.

அடுத்த நான்கும் (critical thinking, creative thinking, problem solving, decision making) சிந்திக்கும் ஆற்றல் (thinking skills) தொடர்பானவை.

கடைசி இரண்டும் (coping with stress, coping with emotions) சூழலுக்கு ஈடுகொடுத்துத் தாக்குப்பிடிக்கும் ஆற்றல் (negotiating skills) தொடர்பானவை. இவை எல்லா மனிதர்களுக்கும், எப்போதும் தேவையானவை. ஆனால், இவற்றை வளர்த்துக் கொள்வது திடீரென்று ஓரிரவில் செய்துவிடக்கூடிய விஷயம் அல்ல. குழந்தைப் பருவத்திலிருந்தே இவற் றைப் பழகவும், பழக்கவும் வேண்டும்.

இது எதுவும் புதுமையானதோ, அந்நியமானதோ அல்ல. ஏற்கெனவே நாம் கையாண்டு வருபவைதான். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், தினசரி நடவடிக்கைகளில் இவற்றை நாம் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம் என்பது தெரியும். சில சமயம் சரியாகவும், சில சமயம் தவறாகவும், பல சமயம் அரைகுறையாகவும் பயன்படுத்திக் கொண்டு இருக்கக்கூடும்.

குழந்தைகளுக்கு இவற்றைச் சொல்லித் தருவது எப்படி? பெற்றோர்கள் வீட்டில் அன்றாடம் ஒவ்வொரு நடவடிக்கையின்போதும், இவற்றை அவர்களுக்கு உணர்த்தலாம். ஆசிரியர்கள், மாணவர்களிடம் குழுக் குழுக்களாக பயிலரங்குகளில் விதவிதமான விளையாட்டுகள் மூலம் கற்றுத் தர முடியும்.

ஒரு குட்டிக் கதையைப் பார்ப்போம். ஓர் ஆடு கடும் வெயிலில் நிழலும் உணவும் தேடித் திரிந்தது. வழியில் இன்னொரு ஆடு தன்னைப் போலவே பசியில் சோர்ந்து படுத்துக் கிடந்ததைப் பார்த்தது. இரண்டுமாக சேர்ந்து இரை தேடுவோம் என்று பேசிக்கொண்டு புறப்பட்டன. ஒரு மரத்தில் உண்ணு வதற்கான இலைகள் இருந்தன. ஆனால் எட்டவில்லை. கீழிருந்த ஒரு பெரிய கல்லைப் பார்த்த ஆடு, அதில் ஏறி எம்பிப் பார்த்தது. அப்போதும் எட்டவில்லை. இன்னொரு ஆடு தன் மீது ஏறி நின்று, இலையைத் தின்னச் சொல்லியது. அதன்படி ஒரு ஆடு தின்று முடித்ததும், அது மற்ற ஆட்டுக்கு தன் முதுகைக் காட்டி உதவியது. இரு ஆடுகளும் பசி தணிந்து மகிழ்ச்சியடைந்தன.

இந்தக் கதையில் ஆடுகள் வாழ்க்கைக் கல்வித் திறன்களை அற்புதமாகப் பயன்படுத்தியிருப்பதைக் கவனியுங்கள்.

தனக்குப் பசிக்கிறது; உணவும் நிழலும் தேவை என்பது தன் தேவையை உணர்ந்த நிலை. இன் னொரு ஆடும் தன்னைப் போலவே பசியில் இருக்கிறது என்பதைக் கவனித்தது ‘எம்ப்பதி’. அத்துடன் உறவாட ஆரம்பித்தது ‘இன்டர் பர்சனல் ரிலேஷன்ஷிப்’. இருவருமாக இரை தேடலாம் என்ற கருத்தைப் பகிர்ந்துகொண்டது ‘கம்யூனிகேஷன்’. மரத்தில் இலைகள் எட்டாமல் இருந்தது ‘பிராப்ளம்’. அதை அவிழ்க்க முதலில் யோசித்தது ‘க்ரிட்டிகல் திங்க்கிங்’. கல்லையும், பின்பு ஒன்றின் முதுகை மற்றதும் பயன்படுத்தியது ‘க்ரியேட்டிவ் திங்க்கிங்’. விளைவுதான் ‘பிராப்ளம் சால்விங்’. உணவும் நிழலும் கிடைக்காமல் அலைந்ததில் ஏற்பட்ட மன அழுத்தத்தை லேசாக்கிக்கொள்ளவும், வருத்த உணர்ச்சியைக் கையாளவும் தவறியிருந்தால், இவை எதுவும் சாத்தியம் இல்லை.

ஆடுகளைவிட எக்ஸ்ட்ராவாக அறிவும் ஆற்றலும் உள்ள நாம் எத்தனை அற்புதமாக வாழ முடியும்!

நான் யார் என்று உணர்வதுதான் முதல் படி.

நான் என்பது என் உடல். என் உள்ளம். இரண்டையும் எப்படி உணர்வது?

அறிந்தும் அறியாமலும்..! (21)

“அம்மா, நான் யாரும்மா?”

ஐந்து வயதுக் குழந்தை கேட்கும்போது என்ன பதில் சொல்கிறோம்?

“நீ என் செல்லக் கன்னுக்குட்டி!”

குழந்தை செல்லமாகச் சிணுங்குகிறது.

“போம்மா, நான் என்ன மாடா?”

குழந்தைக்கு தான் விலங்கு அல்ல என்பது தெரியும்; அது அம்மாவுக்கும் தெரியும் என்பதும் தெரியும்; அம்மா தன்னைக் கொஞ்சுகிறார் என்பதும் தெரியும்; அந்தக் கொஞ்சல் தனக்குப் பிடித்திருக்கிறது என்பதும் தெரியும்.

இந்த அன்றாட உரையாடலில் குழந்தை தன்னைப் பற்றி உணர்ந்திருப்பது என்ன? தன்னைச் சுற்றியுள்ள செடி, கொடி, புல் பூண்டு, ஆடு, மாடு, இவற்றிலிருந்து தான் வேறுபட்ட ஒரு மனித உயிர் என்பதை உணர்ந்திருக்கிறது. தன்னைக் கவனித்துக் கொள்ள, தன்னிடம் அன்பு காட்ட, தன்னைப் போன்ற இன்னும் பல மனித உயிர்கள் தன்னைச் சுற்றி இருப்பதை உணர்ந்திருக்கிறது.

இப்படிப் பலப்பல உரையாடல்கள், நிகழ்ச்சிகள் ஒரு குழந்தையைச் சுற்றி அன்றாடம் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் குழந்தைக்கு தான் யார் என்று உணரச் செய்துகொண்டே இருக்கின்றன.

இன்னொருவிதமாகச் சொல்வதானால், நீ யார் என்று நம்மைச் சுற்றி உள்ள மற்றவர்கள் நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறார்கள். அதாவது, நான் யார் என்று அவர்கள் கணிப்பதை, என் மீது அவர்கள் திணித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்.

குழந்தை வளர வளர, தான் யார் என்று தான் நினைப்பதும், உணர்வதும், தான் யார் என்று மற்றவர்கள் தனக்கு உணர்த்தியதும், ஒன்றா, வெவ்வேறா என்பதைச் சிந்திக்கும் ஆற்றலை அடைகிறது. இந்தச் சிந்திக்கும் ஆற்றல்தான், ஒருவருடைய ஆளுமை என்று சொல்லும் ‘பர்சனாலிட்டி’யை வடிவமைத்துக் கொள்ள உதவுகிறது.

நான் யார் என்று தன்னைத்தானே உணர்வது, ஒவ்வொரு மனிதருக்கும் தேவை. அது முற்றும் துறந்த ஞானிகளுக்கும், ஆன்மிகவாதிகளுக்கும் மட்டுமான விஷயம் அல்ல. ‘நான் யார்’ என்று நம்மை நாமே புரிந்துகொண்டால்தான் நம்மால் உணர்ச்சிகளைக் கையாள முடியும்; மன அழுத்தங்களுக்கு ஈடு கொடுக்கவும் முடியும்.

செக்ஸ், நம் வாழ்க்கையில் உணர்ச்சிகளுடனும் மன அழுத்தத்துடனும் மிகவும் சம்பந்தப்பட்டு இருக்கிறது. செக்ஸ் தேவைகள் உணர்ச்சி சார்ந்தவை. அவை பூர்த்தி செய்யப்படாத நிலைமை, மன அழுத்தத்தை அதிகரித்தே தீரும். ‘செக்ஸ்’ என்ற இடத்தில் அன்பு, பணம் என்று இன்னும் வேறு சில சொற்களைப் பொருத்திப் பார்த்தாலும், அவையும் பொருந்தும்.

தான் யார், தன் தேவைகள் என்ன என்பதை, குழந்தை ஒவ்வொரு கட்டத்தில் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துகிறது. பேசக் கற்பதற்கு முன்னால் இதை அழுகையில் தெரிவிக்கிறது குழந்தை. ‘அழுத பிள்ளை பால் குடிக்கும்’ என்பது மரபான சொலவடை. அழாத பிள்ளை, தன் பசியைப் பிறருக்கு உணர்த்தியிருக்க முடியாது.

பசியை உணர்ந்ததும், பெரியவர்களிடம் போய் தனக்குப் பசிக்கிறது என்று தெரிவிக்கக் கற்றுக்கொள்ளும் குழந்தையால்தான் பசியைத் தணித்துக் கொள்ள முடியும். வளர்ந்த பருவத்தில் ஏற்படும் இன்னொரு தேவையான செக்ஸ் உறவைப் பூர்த்தி செய்துகொள்ள, சரியான துணையைத் தேடி ‘ஐ லவ் யூ’ சொல்வதும், அதேபோன்ற வெளிப்பாடு தான்!

யாரிடம் போய் தன் பசியைத் தெரிவிக்க வேண்டும் என்று வீட்டில் இருக்கும் குழந்தை புரிந்துவைத்திருப்பது போல, வளர்ந்த இளைஞரும் தன் செக்ஸ் தேவையை யாரிடம், எப்படித் தெரிவிப்பது, யார் யாரிடம் தெரிவிக்கக் கூடாது என்ற பக்குவமான அறிவைப் பெற்றிருக்க வேண்டும். இந்த அறிவு ஒரு நாளில் வருவது அல்ல!

நான் யார் என்பதைப் படிப்படியாகப் புரிந்துகொண்டதிலிருந்து தான் வரவேண்டும். நம் உடலைப் புரிந்துகொள்வது, உள்ளத்தைப் புரிந்துகொள்வது என இதன் இரு அம்சங்களையும் பார்ப்போம்.

நான் யார் என்று உணர்வது என்பது, முதலில் நான் என்னவாக இருக்கிறேனோ அதை ஏற்றுக்கொள்வதில் தொடங்குகிறது.

கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்தால், எப்படி இருக்கிறேன்?

பிரமாண்டமாக அகன்று விரிந்து, முகத்தையே ஆதிக்கம் செலுத்தியபடி இருக்கிறது என் மூக்கு. சிறிதாக, கூராக, ரோமானியர்களைப் போல இருந்தால்தான் அழகான மூக்கு என்கிறார்களே, அந்த ‘அழகான’ மூக்கு இல்லை என்னுடையது. அப்படியானால் நான் அழகாக இல்லையா?

அப்படி இல்லை. என் மூக்கு அழகாக இல்லை என்று வேறு யாரோதான் நினைக்கிறார்கள். நான் எப்படி இருந்தால், நன்றாக இருக்கும் என்று அவர்கள் நினைக்கும் நினைப்பு அது.

அது என் நினைப்பு இல்லை.

எல்லோர் மூக்கும் ரோமானிய மூக்குபோல இருந்தால், எப்படி இருக்கும்? இப்படி இருந்தால்தான் அழகான உதடு; இப்படி இருந்தால் தான் அழகான கண்... இப்படி ஒவ்வொரு உறுப்புக்கும் ஓர் அழகு இலக்கணம் பிறர் வைத்திருக்கலாம். அந்த இலக்கணப்படியே அத்தனை முகங்களும் இருந்தால், எப்படி இருக்கும்?

அலுப்பாக இருக்கும் என்பதுதான் உண்மை! எல்லா மனிதர்களும் ஜெராக்ஸ் பிரதிகளாக இருந்தால், நமக்கு ஒருவரையருவர் பார்த்துப் பேசவே வெறுப்பாகிவிடக் கூடும். வகைவகையாக முகங்கள் இருப்பது தான், நம் வாழ்க்கையை சுவாரஸ்யமாக வைத்திருக்கிறது.

எனவே, எனக்கு என் மூக்கு, என் முகம் அழகாகத்தான் இருக்கிறது. அதுபோலவே என் மூக்கிலிருந்து, என் முகத்திலிருந்து வேறுபட்ட பிற விதவிதமான முகங்கள் எல்லாமே அழகாகத்தான் இருக்கின்றன.

கண்ணாடியில் என் முகத்தைப் பார்க்கிறேன். சோகமாக வைத்துக் கொள்கிறேன். அழுதபடி பார்க்கிறேன். அந்த முகம் எனக்குப் பிடிக்கவில்லை. சட்டென்று மாறிச் சிரிக்கிறேன். இந்த முகம் பிடித்திருக்கிறது. என் முகம் மட்டுமல்ல, எந்த முகமும் அழும்போது பிடிக்கவில்லை. அழுகையின் பின்னே இருக்கும் வலி உறைப்பதுதான் காரணம்.

நான் யார்? என் வலி, மற்றவர் வலி பிடிக்காத ஒரு மனிதன்.

குழந்தைகளைக் கவனியுங்கள். தங்களுக்கு வலிக்கும்போது மட்டும் அவர்கள் அழுவதில்லை. இன்னொரு குழந்தை அழுவதைப் பார்க்கும் குழந்தையும் சங்கடமாக உணர்கிறது. அதில்தான் ‘எம்ப்பதி’ எனப்படும், தன்னைப் போல் பிறரை நினைக்கும் உணர்ச்சியின் விதை இருக்கிறது.

எல்லா சந்தர்ப்பங்களிலும் நாம் தன்னைப் போல் பிறரை எண்ணிப் பார்க்கிறோமா?

இந்த வார ஹோம் வொர்க்:

1. என் உடலில் எனக்குப் பிடித்த பகுதி எது? ஏன்?

2. எனக்குப் பிடிக்காத பகுதி எது? ஏன்?

3. கண்ணாடியில் என்னைப் பார்க்கும்போது எனக்கு என்ன தோன்றுகிறது?

4. என் உடலில்/முகத்தில் மற்றவர்களுக்குப் பிடித்த, அழகான அம்சம் எது?

5. என் உடலில்/முகத்தில் மற்றவர்கள் விமர்சிக்கும் அம்சம் எது?

மூலம்: www.keetru.com ,ஆனந்தவிகடன் தொடர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பதிவு உடையார்.

பொறுமையாக ஒரு நாள், இருந்து... அனைத்து பதிவுகளையும் வாசித்து, கிரகிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழ் சிறி

அறிந்தும் அறியாமலும்..! (22)

‘தன்னைப் போல் பிறரை நினை!’ என்று சொல்வது எளிதானது; ஆனால், பின்பற்றுவதற்குச் சற்றுக் கடினமானது!

ஏனென்றால், நான் யார் என்று நம்மை நாமே உணரும் முயற்சியில், நமக்கு முதலில் புரிவதெல்லாம் நம்முடைய தேவைகள்தான்; நம்முடைய உணர்ச்சிகள்தான். ‘எனக்கு இது வேண்டும். எனக்கு இது பிடித்திருக்கிறது. எனக்கு இது வேண்டாம். எனக்கு இது பிடிக்கவில்லை’ என்பவைதான், நம்மை நாம் உணர்ந்ததன் அடையாளமாக, முதலில் நமக்கே சொல்லிக்கொள்ளும் விஷயங்கள்.

இந்த உணர்வு மட்டும்தான் நாம் என்று இருப்போமேயானால், நாம் முற்றிலும் சுயநலம் மட்டுமே உள்ள மனிதர்களாக ஆகிவிடுவோம். அப்படி ஆகிவிடுவதற்கான ஆபத்தின் அறிகுறிகளை, அன்றாட உரையாடல்களில் காண முடியும்.

“ரமேஷ் தினமும் ஸ்கூலுக்கு ஃபோர்ட் எண்டீவர் கார்ல வரான். இன்னும் என்னை ஓல்டு மாடல் மாருதில கொண்டு போய் விடறீங்க!”

“ஐஸ்வர்யாகிட்ட வீடியோ, டிஜிட்டல் செல்போன் இருக்கு. என்கிட்ட இன்னும் 1100 மாடல்தான்!”

இப்படிப்பட்ட உரையாடல்களைப் பணக்கார வீட்டுச் சிறுவர்கள் முதல் ஏழை வீட்டுக் குழந்தைகள் வரை பல தரப்பினரிடமும், அவரவர் வாழ்க்கை நிலைக்கேற்ப கேட்க முடியும்.

இவையெல்லாம் பிறரைப் போல் தன்னை நினைக்க விரும்புவதால் வருபவை. தன்னைப் போல் பிறரை கருதத் தொடங்கினால் மட்டுமே மாறக்கூடியவை. அதற்காக, ‘உனக்கும் கீழே உள்ளவர் கோடி. நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு’ என்று மாற்றம் நாடாத மனநிலைக்குச் செல்ல வேண்டும் என்று சொல்லவில்லை.

மனித வாழ்க்கையில், எந்த ஒரு தனி மனிதரும் சுயச்சார்புடன் மட்டுமே வாழ்ந்துவிட முடியாது. ஒவ்வொருவரும் மற்றவரை நேரடியாகவோ மறைமுகமாகவோ சார்ந்து தான் வாழ்ந்தாக வேண்டும். அப்படித் தான் வாழ்கிறோம். நாம் நம் தேவைகளுக்காகப் பலரைச் சார்ந்திருப்பதைப் போலவே, தங்கள் தேவைகளுக்காகப் பலர் நம்மைச் சார்ந்து இருக்கிறார்கள். இதையும் நாம் உணர வேண்டும். தன்னைத் தானே உணர்வதில், இதுவும் ஒரு முக்கியமான பகுதி. நம் மீது நமக்கே மதிப்பும் மரியாதையும் ஏற்படுவதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று.

எப்படியெல்லாம் மனிதர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கிறோம் என்பதை நம் குழந்தைகளுக்கு தினமும் சொல்லித்தர ஏராளமான சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. தட்டில் வந்து விழும் சாப்பாடு எங்கிருந்து வருகிறது என்பதை நாம் சொல்லுவதில்லை. காசு கொடுத்தால், கடையில் அரிசி கிடைக்கும். காசு கொடுத்தால், கேஸ் சிலிண்டர் வீட்டுக்கு வரும். காசு கொடுத்தால் காய், பழங்கள் நம் கூடையில் நிரம்பும். காசு கொடுத்தால், தனக்குப் பிடித்தமான உடை கிடைக்கும். இதை எல்லாக் குழந்தைகளும் நாம் எடுத்துச் சொல்லத் தேவையின்றி, தங்கள் அனுபவத்திலேயே நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள்.

காசு கொடுத்தால் நம்முடைய தேவைகள் பூர்த்தியாகிவிடும் என்று மட்டும் புரிந்துவைத்திருப்பது ஆபத்தானது. காசு கொடுத்து வாங்கும் ஒவ்வொரு பொருளின் உற்பத்தியிலும் காசு கொடுத்துப் பெறும் ஒவ்வொரு சேவையின் பின்னாலும், எத்தனை எத்தனை மனிதர்களின் அறிவும் உழைப்பும் இருந்தாக வேண்டியிருக்கிறது என்பதை நம் குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டும்.

‘பருப்புப் பாயசம் இன்னும் ஒரு டம்ளர் வேணும்!’

‘நல்லா இருக்கா?’

‘ம்..’

‘அதுல வெல்லம் போட்டிருக்கு. தெரிஞ்சுதா?’

‘சர்க்கரை போடலியா?’

‘இல்லே. ஆனா சர்க்கரை, வெல்லம் ரெண்டையும் கரும்பு லேர்ந்துதான் தயாரிக்கறாங்க, தெரியுமா?’

‘பின்னே எப்பிடி ரெண்டும் வேற வேறயா இருக்கு?’

‘முதல்ல கரும்பு எப்பிடி வெளையுதுனு உனக்குத் தெரியுமா?’

கரும்பு விவசாயம் முதல் சர்க்கரை ஆலைகளின் தொழில்நுட்பம் வரை, உழவர்கள் வேலை முதல் ஆலைத் தொழிலாளர் வேலை வரை, வேளாண் விஞ்ஞானி முதல் மெக்கானிக்கல் இன்ஜினீயர் வரை எப்படிப் பல விதமான மனிதர்களின் உழைப்பு பருப்புப் பாயசத்துக்குப் பின்னால் சம்பந்தப்பட்டு இருக்கிறது என்பதை எளிமையாக, அதே சமயம் சுவையான கதை போல் குழந்தையிடம் சொல்லிக் கொண்டே போக முடியும்.

பல மனிதர்கள் நம் தேவைகளுக்காகத் தங்கள் அறிவையும் உழைப்பையும் தருகிறார்கள். அந்த விவரங்களை அறிந்தால்தான், நாமும் அதுபோல அவர்களுடைய தேவைகளுக்காக நம் உழைப்பையும் அறிவையும் தர வேண்டும் என்ற உணர்ச்சி குழந்தை களுக்கு ஏற்படும்.

அதே சமயம், எல்லாமே உலகத்தில் காசுக்காக மட்டுமே நடப்பதில்லை. காசு வாங்கிக்கொள்ளாமல் நமக்காக எத்தனையோ பேர் உழைக்கிறார்களே, ஏன்? நம் மீது இருக்கும் அன்பினால்தான் என்பதைக் குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும். அன்பின் நிமித்தம் சக மனிதருக்குத் தேவையானதைத் தானும் செய்ய வேண்டும் என்ற உணர்ச்சியைக் குழந்தைக்கு ஏற்படுத்த வேண்டும்.

‘எம்ப்பதி’ எனப்படும் தன்னைப் போல் பிறரைக் கருதும் உணர்ச்சியைப் பழக, முதலில் வீட்டிலிருந்து தொடங்கலாம். தொடர்ந்து பள்ளிக்கூடத்தில், நண்பர்கள் வட்டாரத்தில், அடுத்தடுத்து எல்லா சக மனிதர்களிடமுமாக இதை விரிவுபடுத்தலாம்.

‘எம்ப்பதி’யின் தொடக்கப் புள்ளி, ‘என்னை நான் உணர்வதுபோல, அடுத்தவரை நான் புரிந்துகொள்ள முற்படுவது’தான்!

12 வயது பார்த்திபனுக்கு புது ரீபாக் ஷு வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. டூப்ளிகேட் உட்லண்ட்ஸ் வாங்குவதாயிருந்தால்கூட சுமார் 800 ரூபாய் தேவை. அப்பா இப்போது பணம் இல்லை என்று சொல்லிவிட்டார்.

எரிச்சலாக இருக்கிறது. ‘நான் என்ன மாதாமாதமா ஷூ கேட்கிறேன்? இந்த வாரம் மேட்ச்சுக்கு வரும்போது புது ஷூவுடன் வருவேன் என்று குரூப்பில் சொல்லி வைத்தது எல்லாம் வேஸ்ட்! நான் எப்படி அவர்கள் முகத்தில் விழிப்பேன்!’

கடுப்பில் சரியாகத் தூக்கம்கூட வரவில்லை. நடு ராத்திரியில் சட்டென்று விழிப்பு வருகிறது. யாரோ இருமும் சத்தம். யார்? அப்பாதான். வாஷ்பேஸினில் துப்பிக்கொண்டே இருமுகிறார்.

‘என்னப்பா ஆச்சு?’

‘ஒண்ணும் இல்லை. நீ போய்ப் படு!’

அடுத்த நாள்... அடுத்த வாரம்... இரவில் அப்பாவின் இருமல் தொடர்கிறது.

‘டாக்டரைப் போய்ப் பார்க்கலாம், வாங்களேன்!’ - அழைக்கிறாள் அம்மா.

‘போகலாம், போகலாம்!’ ஆனால், போகவில்லை.

‘ஏம்மா, அப்பா டாக்டர்கிட்டே போக மாட்டேங்கறார்?’

‘போனா, எக்ஸ்ரே எடுக்கச் சொல்லுவார். ஏராளமா மருந்து எழுதிக் கொடுப்பார். 600, 700 ரூபாய் செலவாகும். அதான் இப்ப வேணாம், அடுத்த மாசம் அரியர் பணம் வந்ததும் போறேங்கறார்!’

பார்த்திபனுக்கு ரீபாக் ஷூ ஒரு நொடி மனதில் தோன்றி மறைகிறது. அப்பா தன் ஷூவை மட்டும் மறுக்கவில்லை; தனக்கான மருத்துவத்தையும் மறுத்துக் கொண்டு இருக்கிறார். மகன் அப்பாவைப் புரிந்துகொள்ள ஆரம்பிக்கும் முதல் புள்ளி இது!

இந்த வார ஹோம் வொர்க்:

1. என் தேவை என்ன என்பதை எப்படித் தீர்மானிக்கிறேன்? மற்றவர்களிடம் இருப்பதை வைத்தா? எனக்குத் தேவை என்ற அடிப்படையிலா?

2. என் அன்றாடத் தேவைகளுக்கு நான் யார் யாரைச் சார்ந்திருக்கிறேன்?

3. தினமும் என்னைச் (என் பணியை) சார்ந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் யார் யார் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியுமா?

4. ஊதியம் பெறாமல் அன்பினால் என் தேவைகளை அளித்து வருபவர்கள் யார் யார்?

5. ஊதியம் வாங்காமல் அன்பின் காரணமாக நான் யார் யாருக்கு உதவிகரமாக இருக்கிறேன்?

மூலம்: www.keetru.com ,ஆனந்தவிகடன் தொடர்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.