Jump to content

சிறுவர் பகுதி


Recommended Posts

காகமும் குயிலும்

 

 

வசந்த காலம் தொடங்கிவிட்டது. பறவைகளுக்குக் கொண்டாட்டம். அதிகாலையிலேயே எழுந்து பாடத் தொடங்கிவிட்டன. மாமரங்கள் துளிர்த்துப் பூத்தன. வேம்புகள் இலைகளைச் சொரித்து இளந்தளிர்களைச் சூடிக் கொண்டன. குளிர்மை சேர்த்தன. தளிர்களில் பூச்சூடி மகிழ்ந்தன. சில வேம்புகள் கொத்துக் கொத்தாய் காய்களைச் சுமந்தன. குளிர்மையைப் பரவவிட்டு நின்றன. பொதுவாக எல்லா மரங்களும் பூத்துக் காய்த்துக் கலகலத்தன. காகங்கள் ஆணும் பெண்ணுமாய் மரங்களிலே கூடுகளை அமைக்கத் தொடங்கி விட்டன.


மரங்களில் வசதியான கிளைகளைத் தெரிந்தெடுத்தன. பொருத்தமான சுள்ளிகளையும். தும்புகளையும் சேர்த்தன. தமது அலகால் மிக நேர்த்தியாகப் பின்னிக் கட்டின. குதிரைகள் பாய்ந்து திரிந்தன. குதிரைகளில் போய்க் குந்தின. தோழர்கள் தம்மைத் துப்பரவு செய்ய வந்துவிட்டார்கள் என்று சந்தோசித்தன. அவை உண்ணிகளைப் பிடுங்கின. அத்துடன் குதிரையின் மயிர்களையும் பிடுங்கின. அம்மயிர்களைக் கூடுகளில் பதமாய் வைத்துப் பின்னின. கூடு மெத்தையாக இருந்தது. தமது குஞ்சுகளுக்கு இதமளிக்கும் வண்ணம் கூடுகளை அமைத்தன.


காகக் கூடுகளைக் குயில்கள் பார்த்து வந்தன. எங்கும் குயில்களின் கூவல்கள். ஒவ்வொன்று ஒவ்வொரு திசையில் இருந்து கூவின. ஏட்டிக்குப் போட்டியாகக் கூவத்தொடங்கி விட்டன இரண்டு குயில்கள் பதுங்கியிருந்தன. “ஒரு கூட்டைப் பார்த்து வாங்க. பெண்குயில் கூறியது. நமக்கு முன்னால் இருக்கும் கூடு நல்லது. அந்தக் காகங்கள் அழகாகக் கூடுகள் கட்டியுள்ளன. கொஞ்சம் பொறு. அவை வெளியே போகும். அப்போது உள்ளே போய் முட்டையை வைத்துவிட்டு வா. அதுவரை பொறுமையாக இரு.” ஆண்குயில் கூறியது.


வேம்புகளில் காகங்களின் ஆட்சி. பெண்காகம் கூட்டில் இருக்கும். முட்டைகள் இடும். ஆண்காகம் உணவு தேடப்போகும். பெண்காகம் வெளியில் போனால் ஆண் காகம் முட்டைக்குக் காவல் இருக்கும். குயில்கள் குதூகலித்துப் பாடும். அந்தப் பாடல்களைக் காகங்கள் காது கொடுத்துக் கேட்கும்.


“கூட்டை விட்டு வெளியே வா? கொஞ்சநேரம் கதைத்து உறவாடுவோம்”. ஆண்காகம் வேறு கிளையில் இருந்து அழைத்தது. பெண்காகம் அக்கம் பக்கம் பார்த்தது. மெதுவாக ஆண்காகத்திடம் வந்தது. பக்கத்தில் இருந்தது. பெண்காகத்தின் இறக்கைகளைக் கொதிவிட்டது. கொஞ்சம் சுகமாக இருந்தது.


“இந்தக் குயில்களை நம்ப முடியாது. அவை நமது கூடுகளில் வந்து முட்டையிடும். அதன் முட்டைகளை அடையாளம் காணமுடியாது. அவற்றின் முட்டையும் எங்கட முட்டையைப்போல்தான் இருக்கும். நாம்தான் கஸ்டப்பட்டுக் குஞ்சுகளைப் பொரிக்க வேண்டும். அவற்றுக்கு உணவூட்டிக் காப்பாற்றவும் வேண்டும். குஞ்சுகளுக்குப் பறவை காட்டி வளர்க்கவும் வேண்டும். இது நமக்குத் தேவைதானா”? பெண்காகம் கேட்டது.

 

அப்போது குயிலின் கூவல் காற்றில் கலந்து வந்தது. காகங்கள் காது கொடுத்துக் கேட்டன. சற்றுநேரம் அமைதி காத்தன. பெண்காகத்துக்கு ஆறுதல் கூறியது.


“நீ ஏன் கவலைப்படுகிறாய். எல்லாம் புண்ணியம்தான். கடவுள் நமக்கு இட்ட கட்டளையாகக் கொள்வோம்”. ஆண்காகம் அறிவுரை கூறியது. கதையோடு கதையாக “ஏன் நமது குரல் இனிமையாக இல்லை”? ஆண்காகம் கேட்டது.? “யார் சொன்னது? நீங்க பாடினால்தான் எனக்குச் சந்தோசம். நமது பாடல் நமக்கு இனிக்கும். எங்க பாடுங்க”? பெண்காகம் கேட்டுத் தனது உடலைக் கோதிவிட்டுச் சிலிர்த்தது. ஆண்காகத்துக்கு உற்சாகம் பிறந்து விட்டது.


ஆண்காகம் குரலெழுப்பிப் பல்வேறு குரல்களில் பாடியது. ‘கா…ஆ…ஆ’ பாடியது. “சா… எவ்வளவு இனிமையாக இருக்கிறது”. பெண்காகம் பாராட்டியது.கதை நீடித்தது. மெல்லிய காற்று வீசியது. வேம்பின் இலைகள் சலசலத்தன.சந்தர்ப்பத்தைக் குயில்கள் பார்த்திருந்தன. ஆண்குயில் பெண்குயிலைத் தூண்டியது. பெண்குயில் மெதுவாகப் பறந்து வந்தது. சூழலைக் கவனித்தது. காகத்தின் கூட்டைப் பார்த்தது. சடுதியாகப் புகுந்தது. கண்ணிமைக்குமுன் முட்டையை விட்டதும் பறந்தது. ஆண்குயில் அதனைத் தொடர்ந்து பறந்தது.


அப்போதுதான் ஆண்காகம் கண்டது. தமது முட்டைகளைக் குடிப்பதற்குத்தான் குயில் வந்தது என்று எண்ணியது. குயிலைத் துரத்திக் கொண்டு போனது. ஆனால் குயில் பறந்து விட்டது.


அந்தக் கூட்டுக்குள் முட்டைகள் இருந்தன. எத்தனை முட்டைகளை விட்டோம் என்ற நினைவு காகத்துக்குத் இருப்பதில்லை. கூட்டில் முட்டைகளைப் பார்த்தது. முட்டைகள் இருந்தன. “சரி இனி நீ வெளியில் வராதே. நான் உனக்கு உணவு கொண்டு வருகிறேன்”;. கூறிக்கொண்டு ஆண்காகம் பறந்தது. பெண் காகம் கூட்டில் இருந்து அடை காத்தது. அடைகாப்பது இலகுவான செயலல்ல. பொறுமையாக இருந்து பாதுகாக்கவேண்டும். முனிவர்களின் தவம் போன்றது. ஒரு குழந்தையைப் பெறும் அவஸ்த்தையை ஒத்தது.
நாட்கள் உருண்டன. கூடு களைகட்டியது. குஞ்சுகள் முட்டைகளில் இருந்து எட்டிப்பார்த்தன. காகங்களுக்குக் கொண்டாட்டாம். விடியவும் எழுந்திருந்து குஞ்சுகளைப் பார்க்கும். அவற்றின் வளர்ச்சியைக் கண்டு களிக்கும். குஞ்சுகளின் சின்னஞ்சிறு இறக்கைகளைக் கோதிவிடும். அவற்றின் பசியைப் போக்குவதற்குப் பறந்து பறந்து உழைக்கும்.


கிடைக்கும் உணவைப் பதம் பார்த்துத் தேர்ந்து எடுக்கும். சிந்தாமல் வாயுனுள் பாதுகாப்பாகக் கொண்டு வரும். தாயும், தந்தையும் மாறி மாறி உணவை ஊட்டும். ஓய்வில்லாது உணவுதேடும் படலம் நடந்தது. குஞ்சுகள் இப்போது வளர்ந்து விட்டன.
குங்சுகள் கூட்டைவிட்டு வெளியில் வந்தன. கொப்புகளில் இருந்தன. ஒற்றுமையாகக் கூடிக் குலவின. காகங்கள் எந்தவித பேதமுமின்றிப் பாதுகாத்தன. அடிக்கடி உணவைக் கொண்டு வந்து ஊட்டின.


இரண்டு குஞ்சுகள் வித்தியாசமாக நடந்து கொண்டன. நிறத்திலும் குணத்திலும் மாற்றம். வளர்ந்த குஞ்சுகள் அதனை உணர்ந்து கொண்டன. இரண்டு குஞ்சுசுகளின் கண்கள் சிவப்பாக இருந்தன. நிறத்தில் ஓரு குஞ்சு வித்தியாசமாக இருந்தது. நாட்கள் செல்லச் செல்ல குரலிலும் வித்தியாசம் தெரிந்தது. காகம் உணவைக் கொண்டு வந்தது. பெரிய காகக்குஞ்சு தாயைப் பார்த்தது.

 

“அம்மா எனக்கொரு சந்தேகம். உண்மையில் அந்த இரண்டு குஞ்சுகளும் எனது சகோதரர்களா? எனக்குச் சந்தேகமாக இருக்கிறது.” உணவூட்டும் தாயிடம் கேட்டது.


“அம்மா ஓகு குஞ்சு நிறத்தில் வித்தியாசமாக இருக்கிறது. இது உங்களுக்கு விளங்கவில்லையா”? அடுத்த குஞ்சு புறுபுறுத்தது.

 

“பிள்ளைகளா! எனக்கு நீங்கள் எல்லாரும் பிள்ளைகள்தான். நான் அவர் வேறு, இவர்வேறு என்று பார்ப்பதில்லை. நான் அடைகாத்தேன். அடைகாப்பது தவம் செய்வதுபோலொரு விரதம். எனது உடல் சூட்டை முட்டைகளுக்கு ஊட்டவேண்டும். அந்தக் கணகணப்பில் உங்களின் உடலுறுப்புக்கள் உருவாகின்றன. முட்டைக் கோதுகளை உடைத்துக் கொண்டு நீங்கள் வெளிவருவீர்கள். எல்லோரும் எனக்குப் பிள்ளைகள்தான். பிள்ளைகள் எங்களுக்கு உதவவேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை. பருவம் வந்ததும் ஆளுக்கொரு திசையில் பறந்து விடுவீர்கள். என்னால் வளர்க்கப் படுகின்ற பிள்ளைகள் அனைவரும் எனது பிள்ளைகளே. நீங்கள் பேதம் பார்க்காது வாழப்பழகிக் கொள்ள வேண்டும்.” தாய்க்காகம் புத்திமதி கூறியது.


குயில் குஞ்சுகள் காது கொடுத்துக் கேட்டன. “நான் கறுப்பாக இருக்கிறேன். ஆனாலும் ஏன் எனது கண்கள் சிவப்பாக இருக்கின்றன. குரல் வித்தியாசமாக உள்ளது”? கறுத்த குயில்குஞ்சு மனதுக்குள் கேட்டுக் கொண்டது. புள்ளிக்குஞ்சு அவை பேசுவதை கேட்டது.


“எனக்கேன் புள்ளிகள் உள்ளன”.? கறுத்தக் குஞ்சுவிடம் கேட்டது. “நீ ஆண். அதனால் புள்ளிகள் உள்ளன. நான் பெண். அதனால் புள்ளிகள் இல்லை. நாம் காகத்தின் குஞ்சுகள் இல்லை. நாம் இருவரும் குயிலினம். “உண்மையில் நாங்க யார்? எங்கள் தாய் தந்தையர் யார்? எங்களுக்கு என்று ஒரு கூடு இல்லையா?” குஞ்சுகள் மனம் வெதும்பின.அந்த மரக்கிளையில் குயில்கள் வந்திருந்தன. அவற்றைக் குஞ்சுகள் கண்டு கொண்டன.

 

“ஏய்! அங்கே பார். நம்மைப் போல் உடலமைப்பு. அவங்கதான் நமது சொந்தக் காரர்ர்களோ? ஆண்குயிற் குஞ்சு பேசியது. அப்படிச் சொல்வதற்கே வெட்கமாயிருக்கு. முட்டையிடுவது அவங்க. அடைகாத்துக் குஞ்சு பொரித்து வளர்ப்பது இவங்களா? என்ன பிறவிகளோ? ஏன் பிறந்தோமென்று இருக்கிறது. பெண்குயில் குஞ்சு கூறியது.
தாய்க்காகம் உணவோடு வந்தது. குஞ்சுகள் சிறகுகளை விரித்தன. ஆர்வத்தோடு வாயைத்திறந்து நின்றன. காகம் உணவை வாய்க்குள் திணித்தது. குஞ்சுகள் உண்டன. அம்மா! “நாங்க உங்கட குஞ்சுகள் இல்லையா”? குயில் குஞ்சுகள் கேட்டன. நீங்களும் எங்கட குஞ்சுகள்தான். இவ்வளவு காலமும் அடைகாத்துப் பாதுகாத்தேன். இப்போது உணவு தேடி ஊட்டுகிறேன். நீங்கள் வளர்ந்து பெரியவர்களானதும் புரிந்து கொள்வீர்கள். இப்போது உண்ணுங்கள்”. உணவைக் கொடுத்தது.


குயில்கள் உற்றுக் கேட்டன. பெண்குயில் இயற்கையையின் நியதியை எண்ணி வருந்தியது. “கவலைப் படாதே. இதனை மாற்ற முடியாது. நமு சந்ததி இதனையே தொடரும். நமக்குப் பிள்ளைகளை வளர்க்கும் பாக்கியத்தை இறைவன்தான் தரவேண்டும். அதற்காகக் அவனை வேண்டுவோம். நான் முதற்குரலை எழுப்புகிறேக். இசைகூட்டிக் கூவியது.


குயிலின் கூவலைக் கேட்டதும் காகத்துக்குக் கொபம் வந்தது. கா..கா என கரைந்தது. சுற்றிவரக் காகக்கூட்டம் சேர்ந்து விட்டது. வா..போவோம். காகங்கள் கூடிவிட்டன. தப்ப முடியாது. கூறிக்கொண்டு பறந்தன. அவற்றகை; காகங்கள் பாதி வழிவரை துரத்தின. பின் திரும்பி விட்டன.


குஞ்சுகள் வளர்ந்து விட்டன. கூட்டுக்குள் அவை தங்குவதற்கான இடம் போதாதிருந்தது. குஞ்சுகளை கிளைகளில் தங்குவதற்குப் பழக்கின. கூடு வெறுமனே கிடந்தது. பறக்கத் தொடங்கி விட்டன. ஆளுக்கொரு திசையில் பறந்து பார்த்தன. தாய்க் காகம் போகும் இடங்களுக்குக் குஞ்சுகளும் சென்றன. காகக்குஞ்சுகள் குதூகலித்துக் “கா..கா” என்று இரைந்தன. குயில் குஞ்சுகளின் குரலில் வித்தியாசம் வந்தது. அவை கொஞ்ச நாட்கள் மௌனம் காத்தன.


ஒரு விடியற்காலை. ஆண் குயில் குஞ்சு கூவியது. கேட்பதற்கு இனிமையாக இருந்தது. பெண்காகம் அவற்றின் பக்கத்தில் வந்திருந்தது. “அம்மா” என்றன. காகம் அன்போடு அவற்றைப் பார்த்தன.


“இன்றிலிருந்து உங்கள் உணவை நீங்களே தேடிக் கொள்ளுங்கள். உங்களுக்கு விரும்பிய மரங்களில் தங்கலாம். என்னால் உணவு கொண்டு வர முடியாது. வயது போய்விட்டது. களைத்து வந்த காகம் கூறியது. தாய்க்காகம் ஒரு கிளையில் இருந்தது. ஆண்காகமும் வந்திருந்தது. கலங்கியவாறு குஞ்சுகள் பறந்தன. அவை அந்தப் பக்கம் வரவே இல்லை.
தாய்க்காகம் நோய்வாய்ப் பட்டது. ஆண்காகம் இரை கொண்டு வந்து கொடுத்தது. ஒரு நாள் தாய்க்காகம் மரத்தில் இருந்து கீழே விழுந்தது. விழுந்தது விழுந்ததுதான். அதன் கதை முடிந்து விட்டது. செய்தி காகங்களுக்குப் பரவியது. காகங்கள் கூட்டங்கூட்டமாக வந்தன. பறந்து பறந்து கரைந்தன. அந்தப் பிரதேசம் இரைந்து கொண்டிருந்தது. அந்தக் காகத்துக்கு இறுதிச் சடங்கு செய்வதற்கு யாருமில்லை. குயில்கள் அந்தப் பக்கமே வரவில்லை. காகங்கள் மட்டும் கரைந்தவாறு பறந்து திரிந்தன.

"என்ன தோட்டம் நிறைந்து காகங்கள் கரைகின்றன." கூறியவாறே கந்தப்பர் வந்தார். காகம் கீழே கிடப்பதைக் கண்டார். மண்வெட்டியைக் எடுத்துக் குழியைத் தோண்டினார். உடலைக் குழியில் போட்டு மூடினார். காகங்கள் பார்த்திருந்தன. அவை ஒவ்வொன்றாகக் கலைந்து போய்விட்டன. தூரத்தே மரக்கிளைகளில் இருந்து குயில்கள் கூவிக் கொண்டிருந்தன.

 

http://ananthavele.blogspot.fr/2011/04/blog-post_26.html

Link to comment
Share on other sites

ஒரே ஒரு மணி அரிசி

 

 

யோகேஷ் மித்ரா

grains-falling-on-a-pile-of-uncooked-whiஅந்த நாட்களில் முன்னொரு காலம். மக்கள் தாங்கள் பயிரிடும் நெல்லை அரிசியாக்கித் தாங்கள் கட்ட வேண்டிய வரிக்குப் பணமாகத் தராமல் அரிசியாக்கித் தந்து வந்தனர். பல ஆண்டுகள் கடந்தன.

ஓர் ஆண்டு நாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. மக்களுக்கே உண்பதற்கு அரிசியில்லை, நாட்டில் கடும் பஞ்சம். மக்கள் படும் அவதியைப் பார்த்து மந்திரிகள், “அரசே, கிடங்குகளைத் திறந்து விடுங்கள். மக்களுக்கு அரிசியைக் கொடுப்போம்” என்றனர்.

ஆனால் அரசனோ, “பஞ்சம் எத்தனை காலம் நீடிக்குமோ தெரியாது. அரண்மனையில் எப்போதும் அரிசி இருக்க வேண்டும். விருந்துகளும் அவ்வப்போது அளித்தாக வேண்டுமே!” என்று சொல்லி மறுத்து விட்டான்.

ஒருநாள் அரண்மனையில் பெரிய விருந்து. அதற்காகக் கிடங்கிலிருந்து அரிசி எடுக்கப்பட்டது.மூட்டை மூட்டையாக யானைகள் அரிசியை அரண்மனைக்குச் சுமந்து சென்றன

அப்போது சாலையில் விளையாடிக் கொண்டிருந்தாள் நிலா. யானைகள் அசைந்து அசைந்து நடந்தன. அதனால் அரிசி மணிகள் வழி எல்லாம் சிந்துவதை அவள் பார்த்தாள். அரிசிப் பஞ்சம் இருக்கும் போது கீழே சிந்தி அரிசி வீணாவது அவள் மனசைக் கலக்கிற்று. சிந்தும் அரிசியைத் தன் பாவாடையில் பிடித்தபடியே யானையுடன் நடந்தாள்.

யானை அரண்மனை வாசலை அடைந்தது. யானையின் பின்னால் வரும் நிலாவைக் காவலர்கள் பார்த்தனர்.

நிலாவை நிறுத்தி விசாரித்தனர்.

அவள் “மூட்டையில் இருந்து அரிசி கீழே சிந்திக் கொண்டிருந்தது. இது அரண்மனை அரிசி. அது மன்னருக்குச் சொந்தம். நான் அதை மன்னரிடம் கொடுக்கப் போகிறேன்” என்றாள்.

நிலாவின் நேர்மையைப் பற்றி அறிந்த மன்னர் அவளை அழைத்தார்.

“உன் நேர்மைக்கு நான் பரிசு அளிக்க விரும்புகிறேன். என்ன வேண்டுமோ கேள்!” என்றான்.

நிலா, “எனக்குப் பரிசு எதுவும் வேண்டாம். அப்படி நீங்கள் கொடுக்க விரும்பினால் எனக்கு ஒரே ஒரு மணி அரிசி கொடுங்கள்! அது போதும்!” என்றாள்.

மன்னர் அவளை ஆச்சரியத்துடன் பார்த்தார். பிறகு, “நான் ஓர் அரசன். என் தகுதிக்கு ஏற்ப உனக்குப் பரிசு கொடுக்க விரும்புகிறேன். இன்னும் ஏதாவது கேள்” என்றான்.

நிலா, “சரி! அப்படியானால் இன்று எனக்கு ஒரு மணி அரிசி தாருங்கள். நாளை இரண்டு அரிசி. அதற்கு அடுத்த நாள் நான்கு அரிசி. இப்படியே முப்பது நாட்களுக்கும் ஒவ்வொரு நாளும் முந்தைய நாள் கொடுத்ததை விட இரு மடங்கு அரிசி கொடுங்கள்” என்றாள்.

மன்னருக்கு இது ஒன்றும் பெரிதாகத் தோன்றவில்லை. உடனே ஒப்புக் கொண்டார். சிறுமிக்கு அன்று ஒரு அரிசி கொடுக்கப்பட்டது. மறுநாள் இரண்டு. அதற்கு அடுத்த நாள் நான்கு. பத்தாவது நாள் 512 அரிசி மணிகள் கொடுக்கப்பட்டன. இது ஒரு கையளவு இருந்தது.

பதினாறாவது நாள் அவளுக்கு இரண்டு கூடைகள் அளிக்கப்பட்டன. அதில் 32,768 அரிசி மணிகள் இருந்தன.

“இந்த இரு மடங்கு முறையில் நான் நினைத்ததை விட நிறைய அரிசிதான் கொடுக்க வேண்டியிருக்கிறது. ஆனாலும் பரவாயில்லை” என்று மன்னர் நினைத்தார்.

இருபத்து நான்காவது நாள் நிலாவுக்கு எட்டுக் கூடைகளில் 8,388,608 அரிசி கொடுக்கப்பட்டது. இருபத்து ஏழாவது நாள் 64 கூடை அரிசி, 32 காளைகளின் மேல் நிலா வீட்டுக்குச் சென்றது. அதில் 67,108,864 அரிசி மணிகள் இருந்தன. ‘ஒரு மணி அரிசியில் ஆரம்பித்து இவ்வளவு பெருகி விட்டதே!’ மன்னர் கலங்கினார்.

முப்பதாவது நாள். மன்னரின் கிடங்குகள் காலி ஆயின. 256 யானைகளின் மேல் 536,870,912 அரிசி மணிகள் கூடைகளில் நிலா வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. “இத்தனை அரிசியை என்ன செய்யப் போகிறாய்?” என்று மன்னர் நிலாவிடம் கேட்டார்.

“பசியுடன் உள்ள மக்களுக்குக் கொடுத்து விடுவேன். உங்களுக்கும் ஒரு கூடை அரிசி தருவேன். இனி நீங்கள் உங்களுக்குத் தேவையான அரிசியை மட்டுமே எடுத்துக் கொள்வேன் என்று உறுதி அளிக்கிறீர்களா?” என்றாள்.

“சரி! அப்படியே செய்கிறேன்!” என்றார் மன்னர்.

ஒரு காலண்டரை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு நாளுக்கும் அந்தந்தத் தேதிகளின் கீழ் எழுதிய அரிசியின் எண்ணிக்கையைக் கூட்டினால் நிலாவுக்குக் கிடைத்த மொத்த அரிசியின் எண்ணிக்கை கிடைத்து விடும். மொத்தமாக முப்பது நாள்களுக்கும் சேர்ந்து நிலாவுக்குக் கிடைத்த அரிசியின் எண்ணிக்கை 1,073,741,823.

குறிப்பு: இது ஓர் ஒரு இந்தியப் பழங்கதை.

 

படத்திற்கு நன்றி:http://libraryfunding.wordpress.com/2010/06/07/a-single-grain-of-rice-lessons-for-fundraising

Link to comment
Share on other sites

உண்மை நட்பு

 

வையவன்(யோகேஷ் மித்ரா)

2-squirrel-woodpecker-300x256.jpgஷீலூ சூட்கேசைப் படுக்கை மீது வைத்து பேக் செய்து கொண்டிருந்தாள். அவளது துணி மற்ற பொருட்களை அதில் அடைத்துத் திணித்துக் கொண்டு இருந்தாள்.

“டொக்.. டொக்.. ” அவளுக்குப் பின்னால் சத்தம் வந்தது அவளுக்குத் தெரியும். அது டுக்கி. மரங்கொத்தி. அவளது நல்ல நண்பன்.

அவள் திரும்பவில்லை.

மீண்டும் “டொக்.. டொக்..”

“பார்க்கிறே இல்லே. நான் பிசியா இருக்கேன், என்னைத் தொந்தரவு பண்ணாதே.”

டுக்கி. அவள் முனனால் வந்து தலையை ஆட்டியது.

“நீ சென்னைக்குப் போறயாமே!”

“யார் சொன்னது?”

“நம்ப ப்ரெண்டு கிட்டி அணில் தான்.”

“அவளுக்கு எப்படித் தெரியுமாம்?”

“நீ செல்போன்ல பேசறத அவ கேட்டாளாம்”

“ஆமாம். நான் லீவுக்கு அங்கே போறேன். மாமா வீட்டுக்கு. டிக்கெட் புக் பண்ணியாச்சு. தனியாத்தான் போறேன்”

ஷீலூ ஒரு தங்க நெக்லசைக் கழுத்தில் அணிந்தபடியே சொன்ணாள். அதற்குள் கிரீச் கிறீச்சென்று பின்னாலிருந்து ஓசை வந்தது. கிட்டி அணில்.

“இப்ப நீயும் வந்துட்டியா?”

“ஆமாம். உனக்கு எச்சரிக்கை குடுக்க”

“எனக்கு எச்சரிக்கையா? என்ன எச்சரிக்கை?”

“சென்னைலே செயின் பறிக்கறவங்க நடமாட்டம் ஜாஸ்தியா இருக்கு. நீ இவ்வளோ பெரிய செயின் போட்டுட்டுப் போனா அவங்களுக்குப் பறிக்கிறது ரொம்ப ஈசி!” கிட்டி தன் வலது பாதத்தைத் தூக்கிக் காட்டி எச்சரித்தது.

“எவனும் என்னை கிட்டே நெருங்க முடியாது. நான் கராத்தேவிலே ப்ளாக் பெல்ட் வாங்கியிருக்கேன், எவனும் என்னை டச் பண்ண முடியாது. பண்ணா அவன் தொலைஞ்சான். செம அடி வாங்குவான்.”

டுக்கியும் கிட்டியும் ஒன்றை ஒன்று பார்த்துக்கொண்டன. அது தான் ஷீலூ. அவளைத் திருத்த முடியாது.

“டொக்.. டொக்.. “டுக்கி சோகமாக ஒரு சவுண்ட் கொடுத்தது.

“கிக்கீ.. கிக்கீ” அணில் பெருமூச்சு விட்டது.

“ஒங்க ரெண்டு பேரையும் சென்னையிலே நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன். அங்கே உங்க மாதிரி யாரும் எனக்கு ப்ரெண்ட்ஸ் கெடைக்க மாட்டாங்க”

“நாங்களும் தான். எங்களோட மரத்துக்கிட்டே வந்து பேச யாரு இருக்கா?”

“நான் சீக்கிரமா வந்துடுவேன். குட்பை .”

“குட்பை” குரல் கனக்கச் சொன்னார்கள் டுக்கியும் கிட்டியும்.

அடுத்த நாள் ஷீலூ ரயில்வே ஸ்டேஷன் போனாள். டுக்கியும் கிட்டியும் கூடவே போனார்கள் வழியனுப்ப. ஷீலூ ரயில் பெட்டியில் ஏறிய பின் டுக்கி கிட்டியைப் பயத்தோடு பார்த்தது.

“டுக்கி, எனக்கு ஒரே கவலையாக இருக்கிறது. ஒருவேளை ஷீலூ தங்க நெக்லசைத் தொலைத்து விடுவாளோ என்று. அது மட்டுமல்ல செயின் பறிப்பவர்களால் அவளுக்கு ஏதாவது தொல்லையோ ஆபத்தோ வரலாம்”

“என்ன பண்ணலாம்?” கிட்டி கேட்டது.

“நம் அருமை சினேகிதியை நாம் காப்பாற்ற வேண்டும்”

“நானும் சென்னைக்குப் போகப்போறேன். இதே பெட்டியிலே. அவளுக்குத்தெரியாமே.. யாராவது ஷீலூ கிட்டே வால் ஆட்டினா என் அலகாலே ஒரே கொத்துக் கொத்தி அவன் மண்டையிலே ஓட்டை போட்டுடுவேன்.

“உன்னைப் பெட்டியிலே இருந்து விரட்டி விட்டுட்டாங்கன்னா?

“நான் சட்டுன்னு ரயில் டாப்புக்கு பறந்து போயிடுவேன். அப்புறம் என்னை விரட்டின ஆசாமி நகர்ந்தா மறுபடியும் பெட்டிக்குள்ளே பூந்துடுவேன்”

ரயில் விசில் கேட்டது. டுக்கிக்கும் கிட்டிக்கும் கை ஆட்டிட்டு ஷீலூ உள்ளே போனாள். யாருக்குமே அவள் டுக்கிக்கும் கிட்டிக்கும் கை ஆட்டினாள் என்று தெரியாது. சடாரென்று டுக்கி அவள் அறியாமல் அதே பெட்டியில் ஏறியது.

ஒரு மூலையில் போய் உட்கார்ந்தது. சில நிமிஷம் கழிந்தது. ஒரு கிழவர் டுக்கியைப் பார்த்தார். விரட்டினார். அது சட்டென்று ரயில் டாப்புக்குப் பறந்து போயிற்று. பிறகு இறங்கி வந்து ஜன்னல் கம்பி மீது உட்கார்ந்து எட்டிப் பார்த்தது. அவர் போய் விட்டிருந்தார். பிறகு மறுபடியும் பெட்டிக்குள் வந்து உட்கார்ந்தது.

இப்படியே சென்னை சென்ட்ரல் வந்தது. ஷீலூ ரயில் பெட்டியில் இருந்து கீழே இறங்கினாள். ஒரு போர்ட்டர் வந்தான். அவனிடம் சூட்கேசைத் தூக்கச் சொல்லி விட்டு வெளியே வந்தாள். டுக்கி அவள் அறியாமல் அவளுக்குப் பின்னே பறந்து சென்றது.

வெளியே ஒரு ஆட்டோக்காரன் வந்தான்.

“சிஸ்டர், ஆட்டோ வேணுமா?”

“அடையார் வருவீங்களா?”

“ஏறுங்க”

ஷீலூ ஏறி உட்கார்ந்தாள். டுக்கி ஆட்டோ கிளம்பியதும் பறந்து போய் ஆட்டோ டாப்பில் உட்காந்து கொண்டது.

அப்போது ஓர் இளைஞன் ஒரு மோட்டார் சைக்கிளில் ஆட்டோவைப் பின் தொடர்ந்து வந்தான். அவனைப் பார்த்ததுமே டுக்கிக்குச் சந்தேகம் வந்தது. அவன் நெருங்கி வர வர அந்தச் சந்தேகம் நிச்சயம் ஆகி விட்டது. அவன் ஏதோ செய்யப்போகிறான். அவன் ஷீலூ இருந்த பக்கமாக நெருங்கி நெருங்கி வந்தான். டுக்கி கூர்மையாக அவனைக் கவனித்துப் பார்த்துக்கொண்டே இருந்தது. ஆட்டோ இடது பக்கம் வளைந்த போது அவன் மோட்டார் சைக்கிள் சரேலென்று ஷீலூவை நெருங்கி அவள் கழுத்தில் தொங்கிய தங்க நெக்லசைப் பளிச்சென்று பறித்துக் கொண்டு வலது பக்கமாக பறந்து விட்டான்.

“என் நெக்லேஸ்.. என் நெக்லேஸ்.. என் நெக்லேஸ்..” என்று கத்தினாளே ஒழிய அவளால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. உடனே டுக்கி பறந்து போய் மோட்டார் சைக்கிள் ஓட்டும் அவன் தலை மீது உட்கார்ந்து இரண்டு கொத்துக் கொத்தியது. அவன் பாலன்ஸ் இழந்து தடுமாறி மோட்டார் சைக்கிள் சாலையில் சாய்ந்து விழுந்தது.

சட்டென்று கூட்டம் கூடி விட்டது. அது செயின் பறிப்பு என்று மக்கள் புரிந்து கொண்டனர். அவனை நெருங்கினர்.

டுக்கி அவன் கையில் பிடித்திருந்த தங்க நெக்லசைப் பளிச்சென்று பறித்துக் கொண்டு ஷீலூவை நெருங்கி அவள் கையில் வைத்தது.

“டுக்கீ.. நீயா?”

“ஆமாம்.”

“எப்படி வந்தே?”

“ஒன்னோடே, அதே பெட்டியிலே.”

“ஏன்?”

“உனக்கு ஏதாவது ஆகுமோன்னு பயமா இருந்தது ஷீலூ”

 

படத்திற்கு நன்றி:http://chippep.blogspot.in/2011/02/unusual-pairs.html

Link to comment
Share on other sites

குரங்கு அறிஞர் !
 

ஒரு அறிஞர் ஆராய்ச்சி நூல் ஒன்று எழுதுவதற்காக அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். அவர் அறியாமல், அரக்கர்கள் இருந்த பள்ளத்தாக்கை தன் இடமாகத் தேர்ந்தெடுத்தார். கோபமடைந்த ஒரு அரக்கன் அவரைப் பார்த்துக் கேட்டான்.

“”யார் நீ? இந்த அமைதியான பள்ளத்தாக்கை கெடுக்க வந்தாயா?” என்றான்.

“”தயவு செய்து என்னை மன்னித்து விடு. நான் ஒரு அறிஞன். அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். அதனால், இங்கு வந்தேன்!” என்றார்.

KuranguArijar.jpeg“”இதற்கு ஒரு விலை நீ கொடுக்க வேண்டும். நான் உன்னைக் குரங்காக மாற்றி விடுவேன். அதுதான் உனக்குத் தண்டனை!” என்று அந்த அரக்கன் கூறினான்.

அடுத்த கணம், அந்தக் அறிஞர் குரங்காக மாறிவிட்டார். அவர் விம்மி விம்மி அழுதார். ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்குத் தாவிக் கொண்டிருந்தார். குரங்குகளைப் போல் பழங்களைத் தின்று வந்தார்.

அவர் நகரத்தை அடைந்தார். அங்கு ஒரு கப்பல் பாக்தாத் பட்டணத்திற்குப் புறப்பட இருந்தது. அவர் அதில் தாவி ஏறினார். அதிலிருந்த பயணிகள் கூச்சலிட ஆரம்பித்தனர்.

“”குரங்கை வெளியே அனுப்புங்கள்; கொன்றுவிடுங்கள்!” என்று கத்தினர்.

கப்பலின் தலைவன் அந்த விலங்கிற்காக வருத்தப்பட்டுச் சொன்னார்.

“”வேண்டாம். அதுவும் நம்முடன் வரட்டும். யாருக்கும் அது தொந்தரவு தராதவாறு நான் பார்த்துக் கொள்கிறேன்!”

அந்தக் குரங்கு கப்பல் தலைவனுக்கு நன்றி உடையவனாய் இருந்தது. பாக்தாத்தில் ஒரு செய்தி பரவி இருந்தது. அரசருக்கு ஆலோசனை கூறுபவர் இறந்துவிட்டதாகவும், அரசர் அந்த இடத்திற்குத் தகுந்த ஆளைத் தேர்ந்தெடுக்க விரும்புவதாகவும் அறிவித்திருந்தார். இப்பதவியை விரும்புவோர் ஏதேனும் ஒரு செய்தியைத் தகுந்த முறையில் எழுதி அனுப்பலாம். அவற்றுள் எது மிகவும் நன்றாக உள்ளதோ, அதை எழுதியவர் ஆலோசகராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

அந்தக் குரங்கு அறிஞரும் செய்தியை எழுதினார். அரசருடைய சேவகர்களும், மற்றவர்களும் நகைத்தனர். “”இங்கே வேடிக்கையைப் பார். இந்தக் குரங்கு அரசருக்கு ஆலோசகராகப் போகிறதாம்!” என்று கேலி செய்தனர். ஆனால், எல்லாச் செய்திகளும் அரசரிடம் எடுத்துச் செல்லப்பட்டன. அரசர் எல்லாவற்றையும் படித்தார். அந்தக் குரங்கின் செய்தி மிகவும் நன்றாக இருந்தது.

அந்தக் குரங்கை நேர்முகத் தேர்விற்காக அரசர் வரச் சொன்னார். அக்குரங்கு நல்ல கம்பீரமாக உடையணிந்து குதிரைமேல் ஏறி, பாக்தாத் தெருக்களில் ஊர்வலமாக வந்து அரசரைச் சந்தித்தது. அரசவையில் அதனிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன. அது எல்லாக் கேள்விகளுக்கும் அறிவுப்பூர்வமான சரியான விடைகளைக் கூறியது. அரசருக்கு அதை மிகவும் பிடித்து விட்டது. ஆனால், மந்திரிகள் தடுத்தனர்.

“”எப்போதும் அதனால் பேச முடியாது. எப்படி ஒரு குரங்கு தலைமை ஆலோசகர் ஆகமுடியும்?” என்றனர்.

அரசர் தீர்மானமாக இருந்ததால் அவர் குரங்கையே தலைமை ஆலோசகராக நியமித்தார். அவருடைய புதல்வி, இளவரசி இந்தக் குரங்கு உண்மையில் குரங்கு அன்று. ஏதோ அரக்கர்களின் மாயத்தால் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்தாள். அரக்கர்கள், அவர்களின் மந்திர வித்தைகள் போன்றவற்றை அவள் படித்துள்ளாள். அந்த மந்திரத்தால் குரங்குத்தன்மை மாறும்படி செய்தாள். அறிஞர் தன் பழைய நிலையை அடைந்தார்.

அவர் இளவரசிக்கு நன்றி கூறினார். பல ஆண்டுகள் அங்குத் தங்கி நன்றியறிதலோடு அரசருக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்கினார்.

நீதி: அறிவுடையோர் எவ்வுருவில் இருந்தாலும் மதிக்கப்படுவர்.

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

23 முறை கேட்ட கேள்வி!

 

வசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது! 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். மூதாட்டியான அவரது மனைவி அவருக்கருகில் அமர்ந்து தனது இடுங்கியக் கண்களால் திருமறையை ஓதிக் கொண்டிருக்கிறார். நன்கு படித்து, பெரிய பதவியில் இருக்கும் 45 வயதுடைய அவர்களின் மகனும் தனது லேப்-டாப்பில் ஏதோ வேலை செய்துக் கொண்டிருக்கிறார்.

திடீரென ஒரு காகம் முதியவரின் அருகிலிருந்த சன்னலில் வந்து அமர்ந்தது.

“என்ன இது?” என்று கேட்டார் முதியவர்.

லேப்-டாப்பிலிருந்து கண்களை விளக்கிய மகன் சொன்னார், “அது ஒரு காகம்”

சில நிமிடங்கள் கழிந்தன. அந்த முதியவர் மீண்டும் கேட்டார், “என்ன இது?”

“இப்பத்தானே சொன்னேன், அது ஒரு காகம்” என்றார் மகன்.

சிறிது நேரம் கழித்து மூன்றாம் முறையாக அந்த முதியவர் தன் மகனிடம் கேட்டார், “என்ன இது?”

சற்று எரிச்சலான குரலில் மகன் பதிலளித்தார், “அது ஒரு காகம், காகம்!”

இன்னும் சிறிது நேரம் கழித்து அந்தத் தந்தை நான்காவது முறையாக அதே கேள்வியைக் கேட்டார், “என்ன இது?”

மகனோ பொறுமையை இழந்து விட்டார். தனது தந்தையைப் பார்த்து அவர் கத்தினார், “அதே கேள்வியை ஏன் திரும்பத் திரும்ப கேட்டுட்டே இருக்கீங்க? எத்தனை முறைதான் பதில் சொல்வது, ‘அது ஒரு காகம்’ என்று? இதைக்கூட உங்களால புரிஞ்சுக்க முடியலையா?”

முதுமை அடைந்து விட்டதால் மீண்டும் சிறு குழந்தை போல ஆனதாலோ என்னவோ, தந்தையின் முகத்தில் எந்தவித உணர்ச்சிகளும் தென்படவில்லை. அவருக்கருகில் அமர்ந்து அமைதியாகக் குர்ஆனை ஓதிக்கொண்டிருந்த அவரது மனைவி எழுந்து தமது அறைக்குச் சென்று திரும்பினார். அவரது கையில் மிகப் பழைய நாட்குறிப்பு ஒன்று இருந்தது.

அது அந்தத் தந்தையின் நாட்குறிப்பு. தன் மகன் பிறந்ததிலிருந்து அவர் அதில் எழுதி வந்தார். அதில் ஒரு பக்கத்தைத் திறந்தத் தாய் அதைத் தன் மகனிடம் கொடுத்து படிக்கச் சொன்னார்.

அந்தப் பக்கத்தில் இவ்வாறு எழுதப் பட்டிருந்தது;

“எனது சின்னஞ்சிறு மகன் என்னுடன் உட்கார்ந்திருக்கும்போது சன்னலில் ஒரு காகம் வந்தமர்ந்தது. என் மகன் ‘அது என்ன’ என்று 23 தடவைகள் கேட்டான். ‘அது ஒரு காகம்’ என்று நான் 23 தடவைகளும் பதில் சொன்னேன். அவன் ஒவ்வொரு முறை அந்தக் கேள்வியை கேட்டபோதும் நான் அவனை பாசத்துடன் அணைத்துக் கொண்டேன். அவன் திரும்பத் திரும்பக் கேட்ட அதே கேள்வி என்னை எரிச்சலடையச் செய்யவில்லை. அதற்கு மாறாக, கள்ளங்கபடமற்ற அச்சிறு குழந்தையின் மீது எனக்கு பிரியம்தான் அதிகமானது”.

இதைப் படித்த மகனின் கண்கள் பனித்து விட்டன. 23 தடவை அதே கேள்வியை கேட்டபோதும் தன் மீது பாசமழை பொழிந்த தன் தந்தை மீது எரிச்சலடைந்ததற்காக அவரது மனம் வருந்தியது.

**************

Thanks:http://musawir.ipcblogger.com/?cat=35

Link to comment
Share on other sites

  • 4 months later...
தங்கம்
 
முன்னொரு காலத்தில் மயிலூர் என்னும் சிற்றூரில் விவசாயி ஒருவர் வசித்துவந்தார். காலையில் எழுந்ததும் தனது மாடு, கன்றுகளை தோட்டத்திற்கு அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
 
அவர் தனது வீட்டில் தங்கம், வெள்ளி மற்றும் பித்தளைப் பாத்திரங்கள் சிலவற்றை வைத்திருந்தார். அவற்றில் தங்கப் பாத்திரத்தை மட்டும் தன்னிடமிருந்த அழகான பெட்டியொன்றில் வைத்துப் பாதுகாத்துவந்தார்.
 
சில நாட்களுக்குப் பிறகு தங்கப் பாத்திரங்களை மட்டும் தனியாக எடுத்து அருகில் இருந்த குப்பைத்தொட்டியில் வீசியெறிந்துவிட்டு, தங்கப் பாத்திரம் இருந்த பெட்டியில் பித்தளைப் பாத்திரத்தை எடுத்து வைத்துவிட்டு வழக்கம்போலவே தோட்டத்திற்குச் சென்றுவிட்டார்.
 
தன்னைத் தங்கம் இருந்த இடத்தில் வைத்ததற்கு பித்தளைக்கு ஆணவம் ஏற்பட்டது. தங்கத்தைப் பலவாறு ஏளனம் செய்தது. தங்கம் இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே கருதாமல் அமைதியாக இருந்தது.
 
பித்தளையின் இந்த ஏளனத்தை வெள்ளிப் பாத்திரம் கவனித்துக் கொண்டிருந்தது. அதுவும் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தது.
 
சிறிது நேரத்திற்கெல்லாம் அங்கே வந்த திருடன் அங்கிருந்த முக்கியமான பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பித்தளைப் பாத்திரத்தைத் தங்கப் பாத்திரமென நினைத்து, அதனைத் திருடிக்கொண்டு சென்றுவிட்டான்.
 
மாலையில் வீடு திரும்பிய அந்த விவசாயி தனது வீடு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்ததும், ஊரெல்லாம் பேசப்பட்ட அந்தத் திருடனின் வேலையாகத்தான் இருக்குமென்று ஊகித்துக் கொண்டு வேக வேகமாக வந்து குப்பைத் தொட்டியைப் பார்த்தார். 
 
அங்கே அவர் தூக்கி வீசிய தங்கப் பாத்திரம் அமைதியாகக் காத்திருந்தது. அதைப் பார்த்ததும் நிம்மதியடைந்தார் விவசாயி. இந்தத் தங்கப் பாத்திரத்தைப் பாதுகாப்பதற்காகத்தான் அவர் அதனைக் குப்பையில் வீசி எறிந்தார் என்பதை தங்கமும், வெள்ளியும் புரிந்துகொண்டன.
 

 

Link to comment
Share on other sites

ஒன்று ரெண்டு மூன்று நாலு

ஒன்று ரெண்டு மூன்று நாலு ஐந்து ஆறு ஏழு
எட்டு ஒன்பது பத்து என்று எண்ணு வோமே நாங்கள்.

ரெண்டு சதம் கொண்டு சென்று மூன்று கடை தேடி
நாலு பழம் வாங்கிக் கொண்டு நாங்கள் வரும் வழியில்
ஐந்து பெரும் நாய் கலைத்து ஓடி வர நம்மை
தேடி ஆறு கல் லெடுத்து தீட்டி விட்டோ மெல்லோ.

உருண்டு ருண்டு சிரித்துக் கொண்டு ஏழு பேரு மாக
எட்டு மணி வண்டி யிலே உல்லாச மாய் ஏறி
ஒன்ப துக்குள் வீடு சென்று உண வருந்தி நாமே
பத்து மணி அடிப்ப தற்குள் படுத் துறங்கி னோமே


http://paadal.blogspot.fr/

Link to comment
Share on other sites

மிருகக் காட்சி சாலை

12-17-2010-22-elephant-in-orang-national


அம்மா அப்பா அழைத்துச் சென்றார்
அங்கே ஓரிடம்
அங்கிருந்த குயிலும் மயிலும்
ஆடத் தொடங்கின
பொல்லா நரியும் புனுகுப் பூனையும்
எல்லாம் இருந்தன
குட்டி மான்கள் ஒட்டைச்சிவிங்கி
கூட நின்றன
குரங்கு என்னைப் பார்த்துப் பார்த்து
குர் குர் என்றது
யானை ஒன்று காதைக் காதை
ஆட்டி நின்றது
முதலைத் தலையைத் தூக்கிப் பார்த்து
மூச்சு விட்டது
கரடி கூட உறுமிக் கொண்டே
காலைத் தூக்கிற்று
சிங்கம் புலி எல்லாம் கண்டேன்
கண்டும் பயமில்லை
சூரனைப் போல் நின்றிருந்தேன்
சிறிதும் அஞ்சவில்லை
சென்று வந்த இடம் உனக்குத் தெரியவில்லையா?
மிருகக் காட்சி சாலைதானே வேறு ஒன்றுமில்லை!


http://paadal.blogspot.fr/

Link to comment
Share on other sites

கத்தரி வெருளி

 

121740.gif

 

 

கத்தரித் தோட்டத்து மத்தியிலே நின்று
காவல் புரிகின்ற சேவகா! - நின்று

காவல் புரிகின்ற சேவகா!
மெத்தக் கவனமாய்க் கூலியும் வாங்காமல்
வேலை புரிபவன் வேறுயார்! - உன்னைப்போல்
வேலை புரிபவன் வேறுயார்?


கண்ணு மிமையாமல் நித்திரை கொள்ளாமல்
காவல் புரிகின்ற சேவகா! - என்றும்

காவல் புரிகின்ற சேவகா!
எண்ணி உன்னைப்போல் இரவுபகலாக
ஏவல் புரிபவன் வேறுயார்? - என்றும்
ஏவல் புரிபவன் வேறுயார்?

வட்டமான பெரும் பூசினிக்காய் போல
மஞ்சள் நிற உறு மாலைப்பார்!- தலையில்
மஞ்சள் நிற உறு மாலைப்பார்!
கட்டியிறுக்கிய சட்டையைப் பாரங்கே
கைகளில் அம்பொடு வில்லைப்பார்!-இரு
கைகளில் அம்பொடு வில்லைப்பார்!

தொட்டு முறுக்காத மீசையைப்பார்! கறைச்
சோகிபோலே பெரும் பல்லைப்பார்! - கறைச்
சோகிபோலே பெரும் பல்லைப்பார்!
கட்டிய கச்சையில் விட்டுச் செருகிய
கட்டை உடைவாளின் தேசுபார்! - ஆகா
கட்டை உடைவாளின் தேசுபார்!

பூட்டிய வில்லுங் குறிவைத்த பாணமும்
பொல்லாத பார்வையுங் கண்டதோ ? - உன்றன்
பொல்லாத பார்வையுங் கண்டதோ ?
வாட்ட மில்லாப்பயிர் மேயவந்த பசு
வாலைக் கிளப்பிக்கொண் டோடுதே - வெடி
வாலைக் கிளப்பிக்கொண் டோடுதே

கள்ளக் குணமுள்ள காக்கை உன்னைக்கண்டு
கத்திக் கத்திக் கரைந்தோடுமே - கூடிக்
கத்திக் கத்திக் கரைந்தோடுமே
நள்ளிரவில் வருகள்வனுனைக் கண்டு
நடுநடுங்கி மனம் வாடுமே - ஏங்கி
நடுநடுங்கி மனம் வாடுமே

ஏழைக் கமக்காரன் வேளைக் குதவிசெய்
ஏவற்காரன் நீயே யென்னினும் - நல்ல
ஏவற்காரன் நீயே யென்னினும்
ஆளைப்போலப் போலி வேடக்காரன் நீயே
ஆவதறிந்தன னுண்மையே - போலி
ஆவதறிந்தன னுண்மையே

தூரத்திலே யுனைக் கண்டவுட னஞ்சித்
துண்ணென் றிடித்ததென் நெஞ்சகம் - மிகத்
துண்ணென் றிடித்ததென் நெஞ்சகம்
சேரச் சேரப் போலி வேடக்காரனென்று
தெரிய வந்ததுன் வஞ்சகம் - நன்று
தெரிய வந்ததுன் வஞ்சகம்


சிங்கத்தின் தோலினைப் போர்த்த கழுதைபோல்
தேசத்திலே பலர் உண்டுகாண் - இந்தத்
தேசத்திலே பலர் உண்டுகாண்

அங்கவர் தம்மைக்கண் டேமாந்து போகா
அறிவு படைத்தனன் இன்றுநான் - உன்னில்
அறிவு படைத்தனன் இன்றுநான்.

 

( நவாலியூர் சோமசுந்தரப்புலவர் )
http://paadal.blogsp.../blog-post.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

தாடியறுந்த வேடன்

 

somasuntharap_Pulavar_1.jpg

 

 

வீமா! வீமா! ஓடி வாவா - அணில்
வேட்டை ஆடிப்பிடித் தூட்டுவேன் வாவா
தேமா மரத்திற் பதுங்கி - மாங்காய்
தின்னும் அணிலைப் பிடிப்போம் ஒதுங்கி

மரத்தில் இருந்து குதித்தே - அடடா
வாலைக் கிளப்பிக்கொண் டோடுதே பார்பார்
துரத்திப் பிடிபிடி வீமா - உச்சு
சூச்சூஅணில் எம்மைத் தப்பியும் போமா?

பொந்துக்குட் புகுந்தது வீமா - உந்தப்
புறத்தில்நில் அந்தப் புறத்தினில் வருவேன்
அந்தோஎன் தாடியை விடுவாய் - அந்த
அணில்தப்பி ஓடிய தையையோ கெடுவாய்.

http://nallur.webs.c...harapulavar.htm

Link to comment
Share on other sites

கேள்விக் குறியாய்....

 
QUS.jpg

கேள்விக் குறியாய்
 
கெஞ்சிக் கெஞ்சிப் போகாதே!
கேள்விக் குறியாய் ஆகாதே!
அஞ்சி அஞ்சிச் சாகாதே!
அடிமைப் பட்டுப் போகாதே!
 
விதியை எண்ணி வாழாதே!
வெம்பி வெம்பி வீழாதே!
மதியைக் கொன்று தாழாதே!
மதிப்பை இழந்தே ஆழாதே!
 
அன்பால் எதையும் வென்றிடுவாய்!
அறிவால் இடரைக் கொன்றிடுவாய்!
பண்பால் உலகில் நின்றிடுவாய்!
பாரோர் புகழச் சென்றிடுவாய்!

 

http://bharathidasanfrance.blogspot.ca/search/label/%E0%AE%AE%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D

Link to comment
Share on other sites

அறிந்திடு பாப்பா அறிந்திடு ...

 

அறிந்திடு பாப்பா அறிந்திடு ...
யானையிடம் பலமுமுண்டு ...
பலத்துக்கேற்ற பொறுமையுண்டு ...
நீயும் அதை பெற்றுவிடு நீடூடி வாழ்ந்துவிடு ....

அறிந்திடு பாப்பா அறிந்திடு ...
குரங்கிடம் கொள்கையுண்டு ..
கொள்கைக்கேற்ற உறுதியுண்டு ..
நீயும் அதை பெற்றுவிடு நீடூடி வாழ்ந்துவிடு ....

அறிந்திடு பாப்பா அறிந்திடு ..
நரியிடம் புத்தியுண்டு ..
புத்திக்கேற்ற தந்திரமுண்டு ..
நீயும் அதை பெற்றுவிடு நீடூடி வாழ்ந்துவிடு ....

அறிந்திடு பாப்பா அறிந்திடு ..
புலியிடம் கூர்மையுண்டு ..
கூர்மைக்கேற்ற வேகமுண்டு ...
நீயும் அதை பெற்றுவிடு நீடூடி வாழ்ந்துவிடு ....

அறிந்திடு பாப்பா அறிந்திடு ..
ஐந்தறிவு ஜீவன்களும் ..
தந்திருக்கும் அறிவைப்பாரு ..
பேதமின்றி வாழ்ந்திடுவோம் ..உலகநீதி காத்திடுவோம் .....

(நன்றி : என் கற்பனை தாயே)

http://tamilnanbargal.com/node/49288

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.