Jump to content

அரச புலிகளின் குழு இன்று ஒஸ்லோ பயணம் கடைசி செய்தியை சொல்லவே


Recommended Posts

அரச புலிகளின் குழு இன்று ஒஸ்லோ பயணம் கடைசி செய்தியை சொல்லவே செல்கிறோம் என்கிறார் புலித்தேவன்

சர்வதேசத்திற்கு கடைசி செய்தியை எடுத்துச் செல்வதற்காகவே தமிழீழ விடுதலைப் புலிகள் ஒஸ்லோவுக்கு செல்கின்றனர் என தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்துடன் ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியும் அப்பேச்சுக்களில் ஏற்றுக் கொண்ட உறுதிமொழிகள் எதனையும் அரசு நிறைவேற்றவில்லை. நிறைவேற்றுவதற்கான மனநிலையும் அதற்கு இல்லை. இதனை கடைசியாக சர்வதேச சமூகத்திற்கு சொல்வதற்காகவே ஒஸ்லோவுக்கு செல்கிறோம் என்றும் புலித்தேவன் மேலும் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒஸ்லோ பயணம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

இலங்கை அரசாங்கத்தின்மீது சர்வதேச சமூகம் தீவிரமான அழுத்தத்தைப் பிரயோகித்து தீர்வொன்றை எட்டுவதற்கு நிர்ப்பந்திக்காதவரை எந்தவிதமான ஒரு தீர்வும் இலங்கை இனப்பிரச்சினைக்குக் கிடைக்கப் போவதில்லை என்பதை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துரைக்கும் முயற்சியாகவே புலிகளின் ஒஸ்லோப்பயணம் அமையவுள்ளது.

தென்னிலங்கையில் காலங்காலமாக குழுக்கள் அமைப்பது, மாநாடுகள் கூட்டுவது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடைபெற்றுள்ளன.

ஆனால் அவையெதுவுமே உருப்படியான எந்தவிதமான தீர்வையும் தந்ததில்லை. அதேபோலவே இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் தற்போது அமைக்கப்படும் இரு குழுக்களும் எந்தவிதமான தீர்வையும் தரப் போவதில்லை.

அதேவேளை, மேற்படி குழுக்களிலும் அவை பற்றிய கூட்டங்களிலும் தமிழ்மக்களின் பிரதிநிதிகள் இணைக்கப்படாமை, தென்னிலங்கையும் தமிழீழமும் இரு துருவங்களாகப் பிரிந்து விட்டன என்பதையே தெளிவாகக் காட்டுகின்றன என புலித்தேவன் மேலும் தெரிவித்தார்.

அதேநேரம் நோர்வேயின் ஏற்பாட்டில் எதிர்வரும் 8 ஆம், 9 ஆம் திகதிகளில் ஒஸ்லோவில் இடம்பெறவுள்ள நோர்ட்டிக் நாடுகளின் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருக்கும் இலங்கை அரச தரப்பு குழுவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் குழுவும் இன்று ஒஸ்லோ நோக்கி பயணமாகவுள்ளன. இலங்கை அரச தரப்பு குழுவில் சமாதான செயலக பணிப்பாளர் பாலித கோஹன தலைமையிலான நால்வர் அடங்கிய குழுவினரும், தமிழீழ விடுதலைப் புலிகளின் குழுவில் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் தலைமையிலான நால்வர் அடங்கிய குழுவினரும் இந்த கூட்டத்தில் பங்கேற்பர். இலங்கை அரச தரப்புக்குழுவில் சமாதான செயலகப் பணிப்பாளர் பாலித கோஹன, சட்டத்தரணி கோமின் தயாசிறி, சந்திர ஜெயசேகர உட்பட மற்றுமொருவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் குழுவில் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன், சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன், காவல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் மற்றும் மொழி பெயர்ப்பாளர் ஜோர்ஜ் ஆகியோரும் ஒஸ்லோ பயணமாகவுள்ளனர். அதேநேரம், தற்போது அமெரிக்காவிலுள்ள புலிகளின் பிரமுகர் உருத்திரகுமாரனும் ஒஸ்லோவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் குழுவினரோடு இணைந்து கொள்வாரென்று தெரிய வருகிறது.

ஒஸ்லோ நோக்கி இன்று பயணமாகவுள்ள அரச தரப்பு குழுவும், புலிகள் தரப்பு குழுவும் வெவ்வேறு விமானங்களிலேயே பயணிக்கவுள்ளதாகவும் தெரிய வருகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் குழுவினர் இன்று மதியம் கிளிநொச்சியிலிருந்து விமானப் படை உலங்கு வானூர்தியில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்து அங்கிருந்து ஒஸ்லோ நோக்கி பயணமாவார்கள்.

கிளிநொச்சியிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் வரைக்குமான புலிகளின் போக்குவரத்துக்கு போர் நிறுத்த கண்காணிப்புக் குழு வழித்துணை வழங்குமென்று கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் ஹெலன் ஒலவ்ஸ் டொட்டாற் தெரிவித்தார். அதேநேரம், தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பான ஏற்பாடுகளை நோர்வே அனுசரணையாளர்கள் கவனிப்பர் என்றும் அவர் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்துள்ளதன் பின்னணியில் நோர்டிக் நாடுகளின் கூட்டம் ஒஸ்லோவில் இடம்பெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கூட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இறுக்கமான நிலைப்பாட்டை கடைப்பிடிக்கவுள்ளனர் என்று விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழீழ விடுதலைப் புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்திருப்பதால் போர்நிறுத்த கண்காணிப்புப் பணியில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஈடுபட முடியாது என்ற உறுதியான நிலைப்பாட்டை இந்த கூட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உயர்மட்ட குழு முன்வைக்கும் என்று தெரியவருகிறது. குறிப்பாக நோர்ட்டிக் நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கண்காணிப்புக் குழுவில் அங்கம் வகிப்பது பல்வேறு சிக்கல்களை தோற்றுவிக்கும் என்பதால் இது குறித்து தமது தலைமையின் நிலைப்பாட்டை புலிகளின் உயர்மட்டக்குழு அனுசரணையாளர்களான நோர்வேக்கு தெரியப்படுத்தும் என்றும் நோர்ட்டிக் நாடுகள் தவிர்ந்த பிரதிநிதிகள் கண்காணிப்புக் குழுவில் இடம்பெறலாம் என்றும் புலிகளின் உயர்மட்டக்குழு இந்த கூட்டத்தில் திட்டவட்டமாகத் தெரிவிக்கும் என்றும் தெரியவருகிறது.

virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வே சந்திப்பின் பின்னர் புலிகள் சுவிஸுக்கு செல்வர்

நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் நடைபெறும் சந்திப்பைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் சுவிற்சர்லாந்துக்குச் செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் 8 ஆம், 9 ஆம் திகதிகளில் ஒஸ்லோவில் நடைபெறவுள்ள சந்திப்புக்காக, விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழு நேற்று

ஞாயிற்றுக்கிழமை இரவு 12 மணியளவில் கட்டுநாயக்கா விமான நிலையமூடாக ஒஸ்லோவுக்கு புறப்பட்டது.

நேற்று நண்பகல் 12 மணியளவில் கிளிநொச்சியிலிருந்து கட்டுநாயக்காவுக்கு விமானப் படையின் ஹெலிகொப்டரில் புறப்பட்ட தமிழ்ச்செல்வன், புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன், காவல்துறைப் பொறுப்பாளர் ப.நடேசன் ஆகியோர் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு அருகிலுள்ள `ஏயார்போர்ட் கார்டன்' ஹோட்டலில் மிகப் பலத்த பாதுகாப்பின் மத்தியில் தங்க வைக்கப்பட்டனர்.

ஒஸ்லோ சந்திப்புகள் முடிவடைந்ததும் புலிகளின் முக்கியஸ்தர்கள் எதிர்வரும் 11 ஆம் திகதி ஒஸ்லோவிலிருந்து சுவிற்சர்லாந்துக்குச் செல்வர்.

அங்கு 12 ஆம் திகதி சுவிஸ் அதிகாரிகளுடன் முக்கிய சந்திப்புகளை நடத்திய பின் 13 ஆம் திகதி சுவிஸிலிருந்து இலங்கை திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

-தினக்குரல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அசௌகரியம்' குறித்து புலிகள் பிரஸ்தாபிப்பர்

ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளருடன் பணியாற்ற முடியுமா?

ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளைத் தடை செய்த நிலையில், அந்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சிலவும் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் அங்கம் வகிப்பதால் எதிர்காலத்தில் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுடன் நெருங்கிச் செயற்படுவதில் பல அசௌகரியங்களேற்படுமெனத் தாங்கள் கருதுவதாக விடுதலைப் புலிகளின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒஸ்லோவில் எதிர்வரும் 8 ஆம், 9 ஆம் திகதி களில் நடைபெறும் சந்திப்புகளில் கண்காணிப்புக் குழுவினரின் எதிர்காலம் மற்றும் செயற்பாடுகள் குறித்தும் அவர்களது பாதுகாப்பு குறித்தும் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து புலிகளின் அந்த உயர்மட்ட வட்டாரம் மேலும் கூறுகையில்;

ஐரோப்பிய ஒன்றியம் விதித்த இந்தத் தடையானது சமாதான முயற்சிகளையும் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பணிகளையும் பெரிதும் பாதிக்கவுள்ளது.

இதனை நாம் பல தடவைகள் சுட்டிக்காட்டியும் அவர்கள் அதனைப் பொருட்படுத்தாது ஒரு தலைப்பட்சமாக மேற்கொண்ட செயற்பாடானது இதுவரை காலமும் மேற்கொள்ளப்பட்டு வந்த முயற்சிகளை கேள்விக் குறியாக்கியுள்ளது.

தற்போதைய நிலையில் கண்காணிப்புக் குழுவில் அங்கம் வகிக்கும் சுவீடன், டென்மார்க், பின்லாந்து ஆகியன ஐரோப்பிய ஒன்றிய நாடுகளாகும்.

எனவே, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் அங்கம் வகிக்கும் கண்காணிப்புக் குழுவுடன் நாம் நெருங்கிச் செயற்படுவதில் பல அசௌகரியங்கள் ஏற்படும்.

அவ்வாறானதொரு நிலையில் அவர்கள் நடு நிலைமை வகிக்கும் சாத்தியங்கள் குறித்தும் கேள்வியெழும் என்பதால் இது பல நெருக்கடிகளை ஏற்படுத்தலாம்.

இது குறித்தெல்லாம் இந்த ஒஸ்லோ சந்திப்பில் நாம் விரிவாக ஆராய்ந்து முடிவுகளை மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளது.

இதைவிட கண்காணிப்புக் குழுவின் எதிர்காலம் அவர்களது செயற்பாடுகள் குறித்தெல்லாம் விரிவாக ஆராய வேண்டியுள்ளது.

இந்தச் சந்திப்பில் இலங்கை அரச பிரதிநிதிகளும் நோர்வே அனுசரணையாளர்களும் பங்குபற்றவுள்ளதால் இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமென நம்புகின்றோம்.

இதைவிட வடக்கு- கிழக்கில் அப்பாவித் தமிழ் மக்கள் மீதான படுகொலைகள், அவலங்கள் மற்றும் துன்பங்கள் குறித்தும் இங்கு விளக்கவுள்ளதாகவும் தெரிவித்தன.

-தினக்குரல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச சமூகத்துக்கு தமிழ் மக்களின் நிலைப்பாட்டை விளக்கவே ஒஸ்லோ பயணம்

புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன்

நோர்வேயின் அழைப்பை ஏற்று ஒஸ்லோ செல்வது ஏன் என்பது தொடர்பாக விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் விபரித்திருக்கிறார்.

ஒஸ்லோ செல்வதற்கு முன்பாக கிளிநொச்சியில் புலிகளின் குரல் வானொலிக்கு சு.ப.தமிழ்ச்செல்வன் கூறியிருப்பதாவது;

எமது ஒஸ்லோ பயணமானது தாயகத்தில் இன்று ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடி நிலைமையை சுமுகமான நிலைக்கு கொண்டுவரும் என்று நாங்கள் நம்பவில்லை.

உண்மையிலேயே நாம் ஒஸ்லோவுக்கு போவது என்பது, நோர்வேயினுடைய அழைப்பை ஏற்று, அதனை மதித்து இதுவரை காலமாக நோர்வேத் தரப்பு முன்னெடுத்து வந்த அமைதி முயற்சிகள், சமாதான முன்னெடுப்புகள், அனுசரணைப் பணிகளுக்கு மதிப்பளிக்கும் முகமாகத்தான் நோர்வே அழைப்பை எங்களுடைய தலைமைப்

பீடம் சாதகமாக பரிசீலித்து ஒஸ்லோப் பயணத்துக்கு எங்களைச் செல்லுமாறு எமது தலைவர் பணித்தார். அந்த வகையில் தான் ஒஸ்லோ செல்கின்றோம்.

தமிழர் தாயகத்தில் மிகமோசமாக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்ற இனப்படுகொலைகள், வன்முறைகள், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றை நாம் நோர்வேத் தரப்புக்கும் சர்வதேச சமூகத்திற்கும் தெளிவுப்படுத்துகின்ற ஒரு முயற்சியாகத்தான் எங்களுடைய பயணம் அமைகின்றது.

ஒரு பக்கம் சமாதான அழைப்பை விடுத்துக் கொண்டு, சமாதானத்துக்கு சாதகமாக பேசிக்கொண்டு, பேச்சளவில் ஒன்றையும், செயலளவிலும் முழு அளவில் தமிழர் தாயகத்தை சிதைப்பதும், தமிழர் தாயகத்தில் இனப்படுகொலையை கட்டவிழ்த்து விடுவதும் மிகக் கொடூரமான ஒரு யுத்தத்தை எதிர்நோக்கும் நோக்கோடுதான்ங இலங்கை அரசாங்கம் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது.

சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களைத் தணிப்பதற்காகவே பேச்சளவில் இப்படியான பேச்சுகளை பேசிக்கொண்டிருக்கின்றனர் என்பதால் செயற்பாட்டில் எதுவுமில்லை. இதனை அம்பலப்படுத்தும் நோக்கோடுதான் ஒஸ்லோவுக்குப் போகிறோம்.

ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அழுத்தங்கள் மற்றும் தீவிர முயற்சிகளினால் கட்டவிழ்த்துவிட்டிருக்கின்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒஸ்லோவில் விடுதலைப் புலிகள் - நோர்வே மக்கள் உற்சாக வரவேற்பு!

இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தொடர்பான பேச்சுக்களில் பங்கேற்பதற்காக நோர்வே தலைநகர் ஓஸ்லோவுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் சென்றடைந்தனர். ஓஸ்லோவில் விடுதலைப் புலிகளுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் நேற்று திங்கட்கிழமை நோர்வே நேரம் இரவு 10.30 மணிக்கு ஒஸ்லோ விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

பல நூற்றுக்கணக்கான நோர்வே வாழ் தமிழீழ மக்கள் விமான நிலையத்தில் ஒன்றுகூடி தமிழர் பிரதிநிதிகளுக்கு உற்சாக வரவேற்றபளித்தனர்.

ஓஸ்லோ விமான நிலையத்தில் ஒன்றுகூடிய மக்கள் தமிழீழத் தேசியக்கொடி, நோர்வே தேசியக்கொடிகளைத் தாங்கியிருந்தனர்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் குழுவினருக்கு மலர்க்கொத்துக்கள் வழங்கி மகிழ்ச்சி வரவேற்பளித்தனர்.

நோர்வேயின் வுஏ2 என்ற பிரபல தொலைக்காட்சி, விடுதலைப் புலிகளின் வருகையையும் மக்களின் வரவேற்பளிப்பபையும் பதிவு செய்ததோடு அரசியல்துறைப் பொறுப்பாளரிடம் செவ்வி கண்டது.

சமாதான முயற்சிகள் நெருக்கடியான நிலைக்குள் சென்றிருக்கின்ற சூழலிலும், விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ள நிலையிலும் ஓஸ்லோ சந்திப்பின் முக்கியத்துவம் குறித்து ஓஸ்லோ விமான நிலையத்தில் புதினத்திற்காக சு.ப. தமிழ்ச்செல்வனிடம் நாம் கேட்டபோது,

நோர்வேயின் அழைப்பை மதித்து நாங்கள் இந்தச் சந்திப்புக்களில் கலந்து கொள்ளவிருக்கின்றோம். தமிழர் தாயகத்தில் மிக மோசமான படுகொலைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. அங்குள்ள நிலைமைகளையும் எமது தலைமைப்பீடத்தின் நிலைப்பாடுகளையும் நேரடியாக நோர்வேக்கும் சர்வதேச சமூகத்திற்கும் எடுத்துச் சொல்லவுள்ளோம். அதேவேளை இந்தச் சந்திப்புகள் சிங்களப் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்தும் என்று நாங்கள் நம்பவில்லை என்றார்.

ஓஸ்லோ சந்திப்புக்கள் மூலம், மீண்டும் சமாதானப் பேச்சுக்கள் தொடங்கப்படுவதற்கான புறச்சூழல் ஏற்படுத்தப்படும் வாய்ப்புக்கள் உள்ளனவா என்று கேட்டபோது,

தமிழர் தாயகத்தில் கொடூர வன்முறைச்சூழலும் படுகொலைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நிலையில் அங்கு சுமூகநிலை இல்லை, மாற்றங்கள் இல்லை. எனவே இந்தச் சந்திப்புக்களால் பேச்சுவார்தைகளுக்கான புறச்சூழல் ஏற்படுமென்றோ அதற்கான மாற்றங்கள் ஏற்படுமென்றோ நாம் நம்பவில்லை. நோர்டிக் (ஸ்கன்டிநேவிய) நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்களின் செயற்பாடுகள் தொடர்பாக இச்சந்திப்புக்களில் ஆராயப்படவுள்ளது. அது விடயம் தொடர்பான எமது தலைமைப்பீடத்தின் உறுதியான நிலைப்பாட்டினை எடுத்து விளக்கவுள்ளோம் என்றார் சு.ப.தமிழ்ச்செல்வன்.

தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தலைமையில் தமிழீழ காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் ஆகியோர் நோர்வேக்கு வருகை தந்துள்ளனர்.

-புதினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓஸ்லோவில் கடல் இறைமை குறித்து விவாதிக்கப்பட்டால் நிலைப்பாடு என்ன?: சு.ப.தமிழ்ச்செல்வன் விளக்கம்

நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் விடுதலைப் புலிகளின் கடல் இறைமை குறித்து விவாதிக்கப்பட்டால் எத்தகைய நிலைப்பாட்டை வெளிப்படுத்துவோம் என்பது குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் விளக்கம் அளித்துள்ளார்.

ஓஸ்லோ பயணத்துக்கு முன்னதாக ஈழநாதம் நாளேட்டுக்கு அவர் அளித்த நேர்காணல்:

தமிழ் மக்களின் அமைதி முயற்சிகள், சமாதான முன்னெடுப்புக்கள், இணக்கப்பாடுகளுக்கான அனைத்தையும் மிக மோசமான முறையில் சீர்குலைத்தவர் சிறிலங்காவின் மகிந்த ராஜபக்ச. இதன் உச்சக் கட்டமாகப் பெரிய யுத்தத்தையும் இன அழிப்பு நடவடிக்கைகளையும் எமது மக்கள் மீதும், தேசத்தின் மீதும் கட்டவிழ்த்துவிடுகின்ற தந்திரோபாயமாகத்தான் அவர் இத்தகைய நடவடிக்கைகளைச் செய்து வருகிறார்.

சர்வதேச அரங்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஓரங்கட்டப்படுவதைத் தமிழ்மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். எனவே தமிழ் மக்கள் இதனால் ஆத்திரமடைந்து ஆக்கிரமிப்புப் படைகளை வெளியேற்றி போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்து தங்களது சுதந்திரத்துக்கான சுயநிர்ணய உரிமையை நிலைப்படுத்தும் போரில் தீவிர முயற்சி எடுப்பார்கள். இதனை மகிந்த நன்கு உணர வேண்டும். சர்வதேச அரங்கில் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தைத் தனிமைப்படுத்தி ஓரங்கட்டிப் பலவீனப்படுத்த முயற்சிப்பதே அவரின் இன்றைய நடவடிக்கையாகவுள்ளது. இது அவரது சதித்திட்டம் என்றுதான் நாங்கள் கருதுகிறோம்.

அவர் இன்று சிங்கள இனவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்து எமது தேசத்தின் மீதும் மக்கள் மீதும் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடுவார் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி எம்மால் உணரமுடிகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று பலமடங்கு பலத்தைப் பெற்றிருக்கிறார்கள் என்பதுடன் பெற்றுக் கொண்டும் இருக்கிறார்கள்.தமிழீழ மக்கள் இன்று முழு அளவில் ஒன்றுதிரண்டு நிற்கிறார்கள்.

ஆயிரக்கணக்கில் நாங்கள் பலம் பெறுகிறோம். ஆக்கிரமிப்புப் படைகளை விரட்டியடித்து எமது தேசத்தை விடுவித்துச் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்கு அவாக்கொண்டு செயற்படுகிறார்கள். இந்த நிலையில் புலிகள் பலவீனப்பட்டுவிட்டார்கள். தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் பலம் இழந்து, விட்டது என்று பேசப்படுவது உண்மையற்ற ஒன்று. இனிவரும் காலத்தில் சிங்கள ஆக்கிரமிப்பு படைகளும் அதன் அரசும் சந்திக்கப்போகின்ற நிலையை வைத்துத்தான் இந்தக் கேள்விக்கான விடையை அவதானிக்கலாம்.

எமது ஒஸ்லோப் பயணம் தொடர்பாகத் தமிழ் மக்களுக்கு உண்மையான தெளிவான செய்தியைச் சொல்லிவிட்டுத்தான் செல்கிறோம். புதுக்குடியிருப்பில் பத்தாயிரம் மக்கள்படை வீரர்கள் பயிற்சி முடித்து வெளியேறும் நிகழ்விற்கு நானும் கலந்து கொள்வதாக இருந்தது. பின்னர் இன்று திடீரென ஒஸ்லோ செல்ல வேண்டியிருந்ததால் அந்த எழுச்சிமிக்க நிகழ்வில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது.

எங்களின் பயணமானது ஒட்டு மொத்தத் தமிழ் மக்களும் எங்கள் தலைமையும் எடுக்கப்போகின்ற தீர்க்கமான முடிவுகளைச் சர்வதேச அரங்கில் நேரடியாகக் கொண்டு சென்று தெளிவாக்கும் நோக்குடன் தான் அமைகின்றது. இந்தப் பயணம் எங்கள் மக்கள் எழுச்சியையோ அன்றி அடுத்தகட்ட நகர்வுகளையோ எந்த வகையிலும் பாதித்து விடாது. இவற்றை எல்லாம் வலுப்படுத்தும் வகையில் தான் எங்களது பயணம் அமையும்.

தமிழர் பிரதேசத்தில் நிலை கொண்டிருக்கும் ஆக்கிரமிப்புப் படைகளை விரட்டியடித்து எமது தேசத்தை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எவையும் எமது இந்தப் பயணத்தால் பாதிப்படைந்து விடமாட்டாது.

நாங்கள் ஓஸ்லோவில் அரச தரப்பைச் சந்திக்கப்போவதில்லை. நோர்வேத் தரப்பு எங்களை பேசுவதற்காக அழைத்திருக்கிறது. இந்தப் பேச்சில் கண்காணிப்புக்குழுவின் நடைமுறைகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாகவும் ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் பேசுவதற்காக அழைத்திருக்கிறார்கள்.

அவர்களின் அழைப்பின் படி நோர்வேத் தரப்பையும் கண்காணிப்புப் பணியை மேற்கொள்ளும் நோட்டிக் நாடுகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து இன்றுள்ள நெருக்கடி நிலைமைகள் பற்றிப் பேசவே செல்கின்றோம். அரச தரப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு நாங்கள் செல்லவில்லை.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பதினெட்டாயிரம் வரையான மாவீரர்களையும் பல்லாயிரக்கணக்கான மக்களையும் இழந்திருக்கின்றோம். மிக நீண்ட உறுதியான போராட்டத்தினை முன்னெடுத்ததன் மூலம்தான் எங்களது தேசத்தின் பெரும்பாலான பகுதிகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து எமது இறைமையை மீட்டெடுத்தோம். அதன் மூலம் எமது மக்களுக்கான நல்லாட்சியை வழங்கியிருக்கின்றோம்.

இந்த நிலையில் எங்களால் மீட்கப்பட்ட உரிமையையோ அல்லது இறைமையையோ விட்டுக்கொடுக்கத் தயார் இல்லை. எங்களது கடல், வான், தரைப் பிரதேசம் அனைத்தும் தமிழீழத்திற்கே செந்தமானது. இதன் உரிமையாளர்கள் தமிழீழ மக்கள். தமிழீழத் தாயகம் முழுமையும் மக்களுக்கே உரிமையானது. ஆகவே இதில் நாங்கள் எந்த விட்டுக் கொடுப்பையும் செய்யத் தயாராகவில்லை.

இந்த நிலைகளில் இருந்து எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என்பதனை நாங்கள் சமாதான முன்னெடுப்புக்களை ஆரம்பித்த பொழுதே தெளிவாகக் குறிப்பிட்டிருந்தோம். இது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகவும் இருந்தது. ஆகவே இரண்டு தரப்பும் இந்த நிலைகளைப் பேண வேண்டும்.

நாங்கள் கடற்பிராந்தியத்தை எங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றோம். கடலில் தமிழீழத்தின் கடற்படை மிக வலிமையான ஒன்றாகக் கட்டி எழுப்பட்டு இருக்கிறது. பல மாவீரர்களின் உயிர்த் தியாகங்களினால்தான் நாங்கள் எங்கள் கடல் இறைமையைக் கூட மீட்டெடுத்திருந்தோம். இந்த நிலையில் எங்களது கடல் பிராந்தியத்தையோ அல்லது தரைப் பிராந்தியத்தையோ எங்களது பிரதேசங்களின் எந்த இறைமையையும் நாங்கள் விட்டுக்கொடுக்கத் தயார் இல்லை.

இந்த விடயம் பற்றிப் பேசப்பட்டால் எங்களது உறுதியான நிலைப்பாட்டை நாங்கள் தெளிவுபடுத்துவோம்.

தேசியத்தலைவர் எம்மிடம் இதுபற்றி மிக உறுதியாக எமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துமாறு வலியுறுத்தி இருக்கிறார். அதற்கமைவாக இது விடயம் தொடர்பில் நாம் எமது உறுதியான நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துவோம்.

ஐரோப்பிய ஒன்றியத் தடையானது ஒட்டுமொத்தமாகத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தைப் பலவீனப்படுத்துகின்ற கொச்சைப்படுத்தும் செயலாக அமைந்து விட்டது. இது துரதிஸ்டவசமானது. தமிழ் மக்களை மிகவும் நோகடிக்கச் செய்துள்ளது. இதனால் மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர். இந்நிலை காரணமாக எமது மக்கள் உறுதியான நிலைப்பாட்டை நோக்கி மிக வேகமாக அணிதிரண்டு கொண்டிருக்கிறார்கள். நாங்கள் எங்களது தேசத்தை மீட்டெடுக்கின்ற உறுதியான பயணத்தைத் தொடர்வது தான் ஒரேவழி.

சர்வதேச சமூகத்தை நம்பி இனியும் பொறுமை காக்க முடியாது என்ற நிலையை எமது மக்கள் அடைந்துவிட்டார்கள். இந்த நிலையை நாம் வெளிப்படுத்துவோம். எமது பயணம் தமிழ் மக்களின் தீர்மானங்களையோ அல்லது எமது தலைமைப்பீடத்தின் தீர்மானங்கள் எதையுமோ தள்ளிப்போடாது.

தமிழ் மக்கள் இன்று பூரண எழுச்சி கொண்டிருக்கிறார்கள். விடுதலைப் புலிகளின் பின்னால் அணி திரண்டு கொண்டிருக்கிறார்கள். எமது மக்கள் மீதும், தேசத்தின் மீதும் கட்டவிழ்த்து விட்டிருக்கின்ற வன்முறைகள் இனவழிப்பு நடவடிக்கைகளை எதிர்காலத்தில் இல்லாதொழிப்பதற்கு மக்கள் திடசங்கற்பம் பூண்டிருக்கிறார்கள். மக்களின் இந்த உறுதிப்பாட்டையும் தலைமையின் தீர்மானங்களையும் எங்களது பயணம் எந்த வகையிலும் பாதிப்புக்குள்ளாக்காது.

மக்கள் பூரண எழுச்சியை நோக்கி மிகவிரைவாக அணிதிரண்டு கொண்டிருக்கிறார்கள். தமிழீழத் தேசியத் தலைவரின் பின்னால் மக்களும் தமிழீழத் தேசமும் முழுமையாக அணிதிரண்டு தேசத்தின் மீது பீடித்திருக்கின்ற அடக்குமுறைமிக்க ஆக்கிரமிப்பை இல்லாதொழித்து மக்கள் சுதந்திரப்பூமியில் சுதந்திரக் காற்றைச்சுவாசிக்கும் காலத்தை நோக்கி விரைந்துகொண்டிருக்கிறார்கள

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒஸ்லோ சந்திப்பின்போது புலிகள்

கடும் போக்கைக் கடைப்பிடிப்பர்!

தலைவர் பிரபாவின் இறுக்கமான நிலைப்பாட்டை

பிரதிபலிப்போம் என்கின்றார் தமிழ்ச்செல்வன்

""போர் நிறுத்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பில் ஒஸ்லோவில் நாளை மறுதினம் நடைபெறவுள்ள பேச்சுகளின்போது கடுமையான நிலைப்பாட்டுடன் சில யோசனைகளை அரசுக்கு வெட்டு ஒன்று துண்டு இரண்டாக முன்வைப்போம். அரசு அதற்கு இணங்குமானால் அமைதி முயற்சிகள் தொடரும். இல்லையேல் அமைதி முயற்சிகள் தொடர்வதற்கான சாத்தியம் இல்லாமல் போகும்.''

இவ்வாறு திட்டவட்டமாகத் தெரிவித்தார் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன். ஒஸ்லோ சந்திப்பில் கலந்து கொள்வதற்காக கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து புறப்பட முன்னர் கொழும்பில் வைத்து "உதயன்'இற்குக் கருத்து வெளியிட்டபோதே தமிழ்ச்செல்வன் இதனைத் தெரிவித்தார்.

""ஒஸ்லோ சந்திப்புக்களில் நாம் இறுக்க மான நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்போம். ஐரோப்பிய ஒன்றியம் எமது இயக்கத்தைத் தடை செய்த பின்னர் இலங்கை போர் நிறுத் தக் கண்காணிப்புக் குழுவில் அங்கம் வகிக் கும் டென்மார்க், பின்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாட்டு உறுப்பினர்களின் நிலைமை என்ன? அவர்களிடமிருந்து பக்கச் சார்பற்ற, நடுநிலையான சேவையைப் பெற முடியுமா? என்பன கேள்விகள் எழுகின்றன.

இந்தப் பிரதிநிதிகள் தொடர்ந்து இதில் அங்கம் வகிப்பது போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுகளில்கூட சமதரப்பு அந் தஸ்தைப் பாதிக்கும். எனவே, இது தொடர்பான எமது நிலைப்பாட்டை உறுதியாகக் கூறவுள்ளோம் என்றும் தமிழ்ச்செல்வன் கூறினார்.

""கடல் போக்குவரத்து விடயத்தில் நாம் எந்த விட்டுக் கொடுப்பையும் செய்யப் போவ தில்லை. அந்தப் பேச்சுக்கே இடமில்லை. நாம் தலைவரின் விசேட செய்தி ஒன்றையே இந்தச் சந்திப்புக்கு எடுத்துச் செல்கிறோம். ஒஸ்லோவில் எமது நிலைப்பாட்டுக்கு அரசு இணங்கினால் அமைதிக்கான முயற்சிகள் தொட ரும். இல்லையேல் எல்லாம் அடைப்பட்டுப் போகும். தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்படும் அராஜகங்களை நிறுத்துமாறும் இங்கு வலியுறுத்தவுள்ளோம்.'' என்றார் தமிழ்ச்செல்வன்.

-உதயன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமதரப்பு அந்தஸ்தை வலியுறுத்தும்

நிகழ்வாக ஒஸ்லோ சந்திப்பு

யுத்தமா? சமாதானமா?

மென் தீவிரப் போரைத் தொடர்ந்தும் மேற்கொண்டு, அதை முழு யுத்தமாக வெடிக்க வைக்கப் போகின்றீர்களா? அல்லது அமைதித் தீர்வுகாண்பதற்கான சமாதானப் பேச்சுகளில் இதய சுத்தியுடன் ஈடுபட விரும்புகின்றீர்களா?

நாளை மறுதினம் நோர்வேயில் நடைபெறப் போகும் சந்திப்பின்போது இந்தக் கேள்வியைத்தான் இலங்கை அரச தூதுக் குழுவினரைப் பார்த்து விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் கேட்பார்கள் எனத் தெரிகின்றது.

வெட்டு ஒன்று, துண்டு இரண்டாக விடயத்தை முடித்து வருமாறு கூறித்தான் தனது பிரதிநிதிகளை ஒஸ்லோவுக்கு அனுப்பி வைத்திருக்கின்றார் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் என்று விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றன.

இவ்வாறு வெளியாகும் தகவல்களைப் பார்க்கும்போது ஒஸ்லோ சந்திப்பு மிகச் சூடாக இருக்கும் என்று கருத முடிகின்றது.

இனப்பிரச்சினைக்கு அமைதித் தீர்வுகாணும் தேடலில் இலங்கை அரசுத் தரப்பும், தமிழர்களின் பிரதிநிதிகளான புலிகள் தரப்பும் சம அந்தஸ்துடையவை என்ற அடிப்படை இணக்கப்பாட்டுக்கு அமையவே தற்போதைய சமாதான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. அந்த நிலைப்பாட்டை உறுதிப்படுத்திய பின்னர்தான் அமைதி முயற்சிகளுக்கே புலிகள் இணங்கினர்.

ஆனால், அந்த சமதரப்பு அந்தஸ்து இன்று தமிழர்களைப் பொறுத்தவரை பங்கப்பட்டு, பழிக்கப்பட்டுப் போய் நிற்கின்றன.

பௌத்த சிங்களப் பேரினவாதத்தில் ஊறித் திளைத்த தென்னிலங்கை சக்திகளின் ஆதரவோடு ஆட்சிப்பீடம் ஏறிய ஜனாதிபதி மஹிந்தரின் அரசு, அமைதி முயற்சிகளில் தமிழர் தரப்புக்கு சம அந்தஸ்து தருவதை அடியோடு மறுத்து நிற்கின்றது.

மறுபுறம், அமைதி முயற்சிகளில் ஈடுபட வேண்டிய தரப்புகளில் ஒன்றை மட்டும் தன்பாட்டில் தடைசெய்ததன் மூலம் பயங்கரவாத அமைப்பாகப் பிரகடனம் செய்ததன் வாயிலாக இந்த சமதரப்பு நிலைப்பாட்டுக்குக் குந்தகம் ஏற்படுத்தியிருக்கிறது ஐரோப்பிய ஒன்றியம்.

புலிகளின் மதியுரைஞர் அன்டன் பாலசிங்கம் சுட்டிக்காட்டியமை போன்று இந்தத் தடை அமைதி முயற்சிகளில் தமிழர்களின் சமதரப்பு அந்தஸ்தையும், அதன் மூலம் வலுவையும் வெகுவாகப் பாதித்து நிற்கின்றது.

ஆகவே, இந்தப் பாதிப்பிலிருந்து மீளுகின்ற மீட்சி பெறுகின்ற முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வேண்டிய தேவைப்பாடு தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.

அதற்காக இந்த ஒஸ்லோ சந்திப்பைப் புலிகளின் பிரதிநிதிகள் பயன்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த நோக்கம் கருதித்தான் ஒஸ்லோ கலந்துரையாடல்களின்போது புலிகளின் பிரதிநிதிகள் இறுக்கமாகவும், கடுமையாகவும், உறுதியாகவும் சில விடயங்களில் நிற்பார்கள் என உள்வீட்டுத் தகவல்கள் கூறுகின்றன.

கடற்போக்குவரத்து விவகாரமாகட்டும், புரிந்துணர்வு ஒப்பந்த விதிகளுக்கு அமைய வடக்கு கிழக்குத் தமிழர் தாயகப் பிரதேசத்துக்குக் கட்டுப்பாடில்லா பொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவது பற்றிய விடயமாகட்டும், கண்காணிப்புக் குழு உறுப்பினர்களின் செயற்பாடுகள் பற்றிய அம்சங்களாகட்டும் இவை ஒவ்வொன்றிலும் அரசுத் தரப்புடன் தமிழர் தரப்பும் சம அந்தஸ்துடையது என்பதை அடித்து, வலியுறுத்திக் கூறுவது போன்றதாக புலிகளின் நிலைப்பாடு ஒஸ்லோ சந்திப்புகளின் போது அமைந்திருக்கும் எனத் தெரிகின்றது.

ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் மீது தடைவிதித்துள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த சுவீடன், டென்மார்க், பின்லாந்து ஆகிய நாடுகளின் உறுப்பினர்கள் கண்காணிப்புக் குழுப் பிரதிநிதிகளாகத் தொடர்ந்து பணியாற்ற முடியுமா என்ற விவகாரத்தைக் கூட, அதனால் அமைதிச் செயற்பாடுகளில் தமிழர் தரப்பின் அந்தஸ்துப் பாதிப்பின் அடிப்படையிலேயே புலிகளின் பிரதிநிதிகள் அணுகுவர் என்றும் தெரிகின்றது.

புலிகளைத் தடைசெய்து, அவர்களின் சமதரப்பு அந்தஸ்துக்குப் பங்கம் ஏற்படுத்தும் நாடுகளின் பிரதிநிதிகள் நடுநிலையுடன் கூடிய கண்காணிப்புக் குழுவில் இடம்பெறுவது நியாயமா என்ற கேள்வியை மேற்படித் தடை வருவதற்கு முன்னரே இப்பத்தியில் எழுப்பியிருந்தோம். நமது கேள்வி எழுப்பப்பட்ட அதே அடிப்படையில்தான் புலிகள் ஒஸ்லோ சந்திப்பில் இந்த விடயத்தை ஆராய அணுக போகின்றார்கள் என்று தெரியவந்திருக்கின்றது.

ஒட்டுமொத்தத்தில் அமைதி முயற்சிகளில் தமிழர்களின் சமதரப்பு அந்தஸ்தை தூக்கி நிறுத்தி உறுதிப்படுத்துவதாக ஒஸ்லோ சந்திப்பு இடம்பெறப் போகின்றது. அந்த நிலைப்பாட்டை ஏற்று அங்கீகரித்துச் செயற்பட இலங்கை அரசுத் தரப்பு ஒஸ்லோவில் இணங்கி, அதன்படி செயற்படுமானால் ஒஸ்லோ சந்திப்பு வெற்றி பெறும். அல்லது வீண் விரயமாகும்.

-உதயன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.