Jump to content

தடுப்பு முகாம் அகதித் தாயும் - குடியுரிமை கொண்ட குழந்தையும்: ஓர் அவுஸ்திரேலியா சிக்கல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ranjini-australia-story.jpg

அவுஸ்திரேலியா தனது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கருதி தடுப்பு முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 33 வயதான சிறிலங்காவைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான றஞ்சினி கடந்த செவ்வாயன்று பாரி என்கின்ற குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்துள்ளார். 

றஞ்சினி என்கின்ற இந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே ஆறு மற்றும் ஒன்பது வயதுகளில் இரு ஆண் பிள்ளைகள் உள்ளனர். சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தத்தின் விளைவாக பாதிக்கப்பட்ட இந்தப் பெண்ணும் இவரது இரு ஆண் பிள்ளைகளும் அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த நிலையில் இவர்களுக்கான அகதிக் கோரிக்கை 2011ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

இவ்வாறு அகதிக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்ட றஞ்சினி மற்றும் இவரது இரு பிள்ளைகளின் கோரிக்கை மறுபரிசீலிக்கப்பட்டு, இவர்கள் கடந்த மேயில் மீண்டும் விலாவூட் தடுப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த நிலையத்தில் அகதிக் கோரிக்கை கோரி விண்ணப்பித்தவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

றஞ்சினி தொடர்பாக அவுஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பான ASIO 'எதிர்மறை அறிக்கை' ஒன்றை வழங்கியிருப்பதாக றஞ்சினி தடுப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நாளன்று அவுஸ்திரேலிய குடிவரவு அதிகாரிகள் தெரிவித்ததாக றஞ்சினியின் கணவரான கணேஸ் கூறுகிறார். 

"எந்தவொரு தனிப்பட்ட விண்ணப்பம் தொடர்பாக நாங்கள் கருத்துக் கூறவிரும்பவில்லை. ஆனால் எமது பாதுகாப்பு புலனாய்வு நிறுவனத்தால் றஞ்சினி எனும் இப்பெண்மணி தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கலாம் என அடையாளங் காணப்பட்டுள்ளது. இந்த சமூகம் பாதுகாப்பாக இருக்க வேண்டியதை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு. இந்த வகையிலேயே நாங்கள் றஞ்சினியையும் அவரது இரு மகன்களையும் தடுப்பு நிலையத்தில் தடுத்து வைத்துள்ளோம்" என அவுஸ்திரேலியாவின் பிரதம வழக்கறிஞர் நிக்கொலா றொக்சன் அண்மையில் தெரிவித்திருந்தார். 

றஞ்சினி எந்தவகையில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளார் என்பதை குடிவரவு அதிகாரிகள் குறிப்பிடவில்லை என கணேஸ் கூறுகிறார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மேன்முறையீடு செய்வதற்கான உரிமை றஞ்சினிக்கு வழங்கப்படவில்லை என கணேஸ் கூறுகிறார். 

றஞ்சினியும் இரு பிள்ளைகளும் மெல்பேனிலிருந்து சிட்னி செல்வதற்கு முன்னர் கணேசிடம் விடைபெறுவதற்கு ஐந்து நிமிடங்கள் மட்டும் வழங்கப்பட்டதாகவும் இவர்கள் கண்ணீருடன் விடைபெற்றுச் சென்றதாகவும் கணேஸ் கூறுகிறார். இவர்கள் தற்போது எந்தவொரு வரையறையுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தடுப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட மறுநாள் றஞ்சினி கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டதாகவும் கணேஸ் கூறுகிறார். 

றஞ்சினியினதும் தனதும் நிலை தொடர்பாக CNN இடம் தெரிவித்த போதிலும் எந்தவொரு சட்ட ஆலோசனையையும் பெற்றுக் கொள்ள முடியவில்லை எனவும் கணேஸ் கூறுகிறார். றஞ்சினியின் நிலை தொடர்பாக CNN, அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் குடியுரிமைத் திணைக்களத்திடம் கேட்ட போதிலும் இத்திணைக்களம் தனிப்பட்டவர்களின் வழக்குகள் தொடர்பில் கருத்துக் கூறுவதில்லை எனத்தெரிவித்தது. 

"இது மிகவும் கடினமான ஒரு சூழலாகக் காணப்படுகிறது. இந்த விடயம் தொடர்பாக மக்கள் ஏன் குழப்பமடைகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இந்த நாட்டை அரசாங்கம் மிகப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய தேவையுள்ளதால் இதனைச் செய்ய வேண்டிய கடப்பாடு எமக்கு உள்ளதை மக்கள் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். றஞ்சினியின் விடயம் தொடர்பில் நாங்கள் நீதியான பாதுகாப்பு மதிப்பீடுகளை செய்துள்ளோம். இவற்றுக்கப்பால் மேலதிகமாக வேறெதனையும் எம்மால் செய்ய முடியாது" என றொக்சன் தெரிவித்துள்ளார். 

சிறிலங்காவில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் கொல்லப்பட்ட றஞ்சினியின் முதலாவது கணவர் தொடர்பில் றஞ்சினிக்கு ஏதும் பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம் என இவருக்கு ஆதரவாக குரல் கொடுப்போர் கூறுகின்றனர். ஆனால் இந்தச் செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை. 

"சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் யுத்தம் தீவிரம் பெற்றிருந்த 2008ல் றஞ்சினி தனது கணவரை இழந்திருந்தார். அப்போது இவர் தனது இரு மகன்களுடன் வன்னியில் வாழ்ந்தார்" என கணேஸ் கூறுகிறார். றஞ்சினியின் முதலாவது கணவர் 2006ல் இடம்பெற்ற போரின் போது கொல்லப்பட்டிருந்தார். 

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த றஞ்சினி முதலில் இந்தியாவில் தஞ்சம் கோரி பின்னர் தனக்கான புதிய வாழ்வொன்றை அமைத்துக் கொள்வதற்காக படகு மூலம் ஏப்ரல் 2010ல் அவுஸ்திரேலியாவை அடைந்திருந்தார். 

இதன் பின்னர் அவுஸ்திரேலிய கடற்படையினர் றஞ்சினியையும் பிள்ளைகள் இருவரையும் கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பியதாகவும் பின்னர் பேர்த், அடேலெயிட் மற்றும் பிறிஸ்பேன் போன்ற இடங்களிலும் மூன்று தடுப்பு நிலையங்களிலும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 2011ல் இவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் றஞ்சினி தன்னிடம் தெரிவித்த விடயத்தை கணேஸ் CNN இடம் கூறியுள்ளார். 

இதிலிருந்து ஐந்து மாதங்களின் பின்னர் இவர்களது அகதிக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவர்களுக்கான நிரந்தர நுழைவிசைவை வழங்குவதற்கு ஒரேயொரு சோதனை நடவடிக்கை மட்டுமே இருந்த நிலையில் இவர்கள் மீண்டும் தடுப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கணேஸ் கூறுகிறார். 

2011 நத்தார் தினமன்று தனது நண்பர் ஒருவரின் வீட்டில் றஞ்சினியை முதன்முதலில் சந்தித்ததாக கணேஸ் கூறுகிறார். றஞ்சினியின் இரு பிள்ளைகளும் மிகப் பணிவானவர்களாகவும் நல்ல பண்புகளைக் கொண்டிருந்ததாலும் றஞ்சினியை பிடித்திருந்ததாலும் ஏப்ரல் 2012ல் தாம் திருமணம் செய்துகொண்டதாக கணேஸ் கூறுகிறார். 

2004ல் சிறிலங்காவின் வடக்குப் பகுதியிலிருந்து மாணவர் நுழைவுவிசைவில் கணேஸ் அவுஸ்திரேலியா சென்றிருந்தார். இவர் அவுஸ்திரேலியாவில் தகவற் தொழினுட்பத் துறையில் கல்வி கற்று யூன் 2009ல் இத்துறையில் பட்டம் பெற்றார். 

இக்காலப்பகுதியில் சிறிலங்கா இராணுவம் புலிகள் அமைப்பைத் தோற்கடித்து யுத்த வெற்றியைப் பிரகடனப்படுத்தியதால் மீண்டும் தனது நாட்டுக்குத் திரும்பிச் செல்வதில் ஆபத்திருப்பதை உணர்ந்த கணேஸ், அவுஸ்திரேலியாவில் தொடர்ந்தும் தங்கியிருப்பதற்கான பாதுகாப்பு நுழைவுவிசைiவு விண்ணப்பத்தை வழங்கியிருந்தார். இறுதியில் கணேஸ் அவுஸ்திரேலியாவின் நிரந்தர குடியுரிமைக்கான நுழைவுவிசைவைப் பெற்றார். இவர் விரைவில் அவுஸ்திரேலிய குடியுரிமையையும் பெற்றுக்கொள்வார். 

தகவற் தொழினுட்ப ஆலோசகராக கடமையாற்றும் கணேஸ் ஏப்ரல் 2012ல் றஞ்சினியைத் திருமணம் செய்து கொண்டதன் பின்னர் றஞ்சினியும் இவரது இரு பிள்ளைகளும் மெல்பேனுக்கு குடிபெயர்ந்தனர். இவ்விரு சிறார்களும் கணேசை 'அப்பா' என அழைக்கத் தொடங்கினர். 

அவுஸ்திரேலியாவில் காலவரையற்ற நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளில் றஞ்சினி மட்டுமல்லாது வேறு 56 விண்ணப்பதாரிகள் உள்ளனர். இவர்களது வழக்குகளை ஓய்வுபெற்ற இணைப்பாட்சி நிர்வாக நீதிமன்ற நீதிபதி மார்கிறேற் ஸ்ரோன் மீளாய்வு செய்கிறார். ஸ்ரோன் இந்தப் பதவியில் ஒக்ரோபர் 2012ல் நியமிக்கப்பட்டார். றஞ்சினி தொடர்பான வழக்கையும் தற்போது ஸ்ரோன் ஆராய்ந்து வருகிறார். 

றஞ்சினியும் இவரது மகன்களும் தற்போது சிட்னியிலுள்ள விலாவூட் தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 'குறைந்தளவு பாதுகாப்பு' பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

இவரது மகன்கள் கூட விடுவிக்கப்படவில்லை. இவ்விரு பிள்ளைகளுக்கும் ஏற்கனவே அகதிக் கோரிக்கை வழங்கப்பட்டது, ஆனால் றஞ்சினிக்கான பாதுகாப்பு சோதனை வெற்றி தராததாலேயே இவ்விரு மகன்களும் மீண்டும் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக கணேஸ் கூறுகிறார். இவர்களை விடுவிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் கணேஸ் தெரிவித்தார். 

மிகவிரைவில் றஞ்சினி தற்போது பெற்றெடுத்த பாரி என்கின்ற குழந்தை கணேசுடன் சேர்க்கப்படுவார். ஏனெனில் இந்தக் குழந்தையின் தந்தையாருக்கு அவுஸ்திரேலிய நிரந்தர நுழைவுவிசை இருப்பதால் இக்குழந்தை தடுப்பு முகாமை விட்டு வெளியேற்றப்படுவார். ஆனால் இந்தக் குழந்தையின் தாயாரான றஞ்சினிக்கான அனுமதி வழங்கப்படாது. 

"உண்மையில் குழந்தையை விட்டு தாய் பிரிந்திருப்பதென்பது மிகவும் பயங்கரமானது. மனிதாபிமான அடிப்படையில் இவர்களின் நிலையை உறுதிப்படுத்தி றஞ்சினியையும் அவரது பிள்ளைகளையும் கணேசுடன் மீளவும் சேர்க்குமாறு அரசாங்கத்திடம் கோரியுள்ளேன்" என றஞ்சினி சார்பாக வாதிடும் சட்டவாளரான டேவிட் மன்னே தெரிவித்துள்ளார். 

"இந்த தடுப்பு முகாமில் பல சிறார்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அடிக்கடி பயங்கரக் கனவுகளைக் காண்கின்றனர். இதனால் இரவில் திடுக்கிட்டு விழிக்கின்றனர். இந்த தடுப்பு முகாமானது சிறார்களுக்கு பொருத்தமான சூழலைக் கொடுக்கவில்லை. இதனால் இது இவர்களின் உளவியலைப் பாதிக்கின்றது" என சிறார் பராமரிப்பு அமைப்பின் இயக்குனர் லெய்லா டியுறே தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் தற்போது தடுப்பிலுள்ள றஞ்சினியிடமிருந்து குழந்தை பிரிக்கப்பட்டு கணேசிடம் கொடுத்தால் றஞ்சினி பிள்ளைக்கு தாய்ப்பால் ஊட்ட முடியாது. இதனால் இந்தக் குழந்தை உடல் உள ரீதியாகப் பாதிக்கப்படுவதுடன், இது தாய் - சேய் இருவருக்கும் பல்வேறு பிரச்சினைகளைக் கொடுக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

பல நூற்றுக்கணக்கான மக்கள் றஞ்சினி விடுவிக்கப்பட வேண்டும் எனக் கோரி அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு இணையத்தளம் மூலம் கடிதங்களை அனுப்பிவருகின்றனர். 

தான் பிள்ளை ஒன்றுக்கு தந்தையாவதை எண்ணிப் பெருமையடையும் அதேவேளை தனது மகனின் எதிர்காலம் தொடர்பில் கவலை கொள்வதாக கணேஸ் கூறுகிறார். தனது மனைவி தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என்பதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் விரைவில் தனது குடும்பம் வீடு வந்து சேரவேண்டும் எனவும் கணேஸ் கூறுகிறார். 

வழிமூலம் : By Hilary Whiteman, CNN 
மொழியாக்கம் : நித்தியபாரதி

 

http://www.puthinappalakai.com/view.php?20130118107622

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.