Jump to content

குடிக்கலாச்சாரமும் கலாச்சாரக்குடிகளும்


Recommended Posts

குடிக்கலாச்சாரமும் கலாச்சாரக்குடிகளும் – சுற்று-1.

alcohol_thumb%5B3%5D.jpg?imgmax=800----

இக்கட்டுரை 10-09-2008 ல் நண்பர் ஒருவரின் குடிக்கலாச்சாரம் பற்றிய

தொகுப்பு நூல் ஒன்றிற்காக எழுதப்பட்டது. அந்நூல் இதவரை வெளிவந்ததற்கான

குறிப்புகள் எதுவும் தெரியவில்லை. ஒருவேளை கட்டுரையின் அலுப்பூட்டும்

ஆய்வுமுறை ஏற்படுத்திய சுவராஸ்யமின்மை இதனை வெளியிடுவதற்கு அவருக்கு

தயக்கத்தை ஏற்படுத்தியருக்கலாம். அதனால் அதை சொல்லத்தயங்கி, நூல் வெளிவந்த

குறிப்பு தெரிவிக்கப்படாமல்கூட இருந்திருக்கலாம். எப்படியோ, இதனை இங்கு

வெளியிடுவதன் வழியாக 2 மாதங்கள் உழைப்பையும் நேரத்தையும் தின்ற

இக்கட்டுரையினை ஆர்வமுள்ளவர்கள் படிக்கட்டுமே. கட்டுரையின் நீளம் கருதி,

பகுதி பகுதியாக வெளியிடப்படுகிறது, படிப்பதற்கு வசதியாக. ----

“மருத்துவ

நிறுவனங்கள் ஆரோக்கியத்தின் மிகப்பெறும் அச்சுறுத்தலாக மாறிக்

கொண்டிருக்கின்றன.”- இவான் இலிச். (Limits to medicine: medical nemesis,

the expropriation of health. New edition. London: Boyars, 1976.)

சுற்று -1. அறிமுகம்

பதினைந்து

வயதில் கொள்ளையில் இறக்கப்பட்ட ஒரு மரத்து தென்னங்கள்ளை  பகிர்ந்து

கொண்டு காதலுடன் குடியைத் துவக்கி வைத்த  இனிய தோழியின் நினைவுடன் இதனை

எழுதத் துவங்குகிறேன். குடிக்கலாச்சாரம் என்பது ஒருவகையான சொல்முரணணி

(oxymoron) போலத் தொன்றலாம். காரணம் குடி அல்லது குடித்தல் என்பது

கலாச்சாரத்திற்கு எதிரானதாக குறியிடப்பட்ட ஒரு சமூக அமைப்பில் நாம்

வாழ்வதும், ஒன்றோடொன்று முரணாண இரண்டு சொற்களாக இவை பொருள்கொள்ளப்பட்ட

ஒரு மொழியமைப்பில் வசிப்பதுமே. ஆனால், குடி என்பது கலாச்சார வளர்ச்சியுடன்

இணைந்தே வளர்ந்து வந்துள்ளது. ஒவ்வொரு உடலும் பொருளுற்பத்தி என்கிற

உழைப்பிலும், சமூக உற்பத்தி என்கிற இனபெருக்க நடவடிக்கைகளிலும்

ஈடுபடுவதுடன் தனது எஞ்சிய நேரத்தை, தன்னை மறுஉற்பத்தி

செய்துகொள்வதற்காகவும், தன்னை புணரமைத்துக் கொள்வதற்குமான மகிழ்விற்கான

செயலில் ஈடுபடுவதை அதாவது ஓய்வு என்று இன்று அறியப்படும் ஒரு நிலையில்,

அந்த நேரத்தை இன்ப-நுகர்ச்சிக்கானதாக மாற்றுவதற்கான ஒரு நுட்பமாக

கண்டடையப்பட்டதே இந்த போதை தரும் குடித்தல் என்கிற செயல்.  சமூகத்

தோற்றத்திற்கு முன்பான ஆதிக்குடிகளாக வாழந்த குழுச் சமூகங்கள்

காலந்தொட்டே குடி என்பது இருந்து வந்துள்ளதை வரலாற்றில் படிக்கிறோம்.

இந்திய வரலாற்றில் வேதகாலம் முதல் குடி என்கிற பொருளில் பயன்படுத்தப்படும்

போதைதரும் அல்லது மயக்கமூட்டும் பானங்கள் இருந்து வந்துள்ளது. பண்டைய

தமிழர்களிடம் தேறல் எனப்படும் கள் என்கிற மதுவகையும், மற்றும் ரோம்,

கிரேக்கத்திலிருந்து தருவிக்கப்பட்ட மதுவகைகளும் இருந்து வந்துள்ளன.

போதை

என்கிற சொல் 'போதம்' என்கிற மனித உடலின் உணர்வுப் புள்ளியின் மையத்தைக்

குறிக்கும் சொல்லினடியாகத்தான் வந்திருக்க வேண்டும். இந்த போதம்

சிதைவுறும் ஒரு பித்துநிலையே போதை எனப்படுகிறது. இந்தவகை மெய்மறத்தல்

என்கிற போதையை தரும் பானங்கள் மற்றும் புளிக்கச் செய்யப்பட்ட

பதப்படுத்தப்பட்ட பழரசங்களை குடிக்கும் ஒரு வழக்கத்தை மற்றும் பழக்கத்தையே

குடிக்கலாச்சாரம் என்கிற சொல்லாக புரிந்துகொண்டு இங்கு பாவிக்கிறேன்.

குடிபானங்களை

தமிழில் மது என்கிற சொல்லால் குறிக்கிறோம். இச்சொல்

அர்த்தசாத்திரத்தில் சொல்லப்பட்ட 6 வகை குடிபானங்களில் ஒன்றான மது என்கிற

ஒரு பிரத்யேக வகையிலிருந்து ஆளப்பட்டு வந்திருக்கலாம். அல்லது

சமஸ்கிருதத்தில் இனிமையைக் குறிக்கும் “மதுரம்“ என்கிற சொல்லினடியாக

வந்திருக்கலாம். அல்லது வேதக்கடவுளர்களில் ஒருவனான உலகில் இன்பத்தை தரும்

மன்மதன் என்கிற காமக்கடவுளின் நினைவடிப்படையில் வந்திருக்கலாம்.  இதனுடன்

பாலின்பத்திற்கான பெண் உடலின் ஒரு பகுதியை “மதனபீடம்“ என்கிற சொல்லால்

குறிப்பதையும் இணைத்துக் காணலாம். மது என்பது அதன் சொற்பொருள்

அடிப்படையில் இன்பத்துடன் இணைந்தே அறியப்பட்டிருக்கிறது.  மது தயாரித்தல்

என்பதுதான் வேதியியலின் முதல் தொழில்நுட்பமாக இருந்திருக்கிறது. இந்திய

தத்துவ விவாத்தில் பஞசபூத கோட்பாட்டை முன்வைத்த லோகாயுதவாதிகள் உயிர்

தோற்றம் பற்றிய சான்றாக கள்ளின் அதாவது மதுவின் நொதித்தல் பற்றியும்

இயக்கமற்ற (அசேதனமான) ஒன்றிலிருந்து இயக்கமுள்ள (சேதனமான) ஒரு உயிர்

தோன்றுவதைப்பற்றியும் வியப்பூட்டும் விவதாங்களை முன்வைத்துள்ளதை

சட்டோபாத்யாவின் 'இந்திய தத்துவஞானத்தில் நிலைத்திருப்பனவும்

மறைந்துபோனவையம்' என்கிற நூல் விவரிக்கிறது. உயிரை படைக்க ஒரு படைப்பாளித்

தேவையில்லை, அது பொருட்களின் கூட்டிணைவால் உருவாகும் ஒன்றே என்பது

கடவுளின் படைப்புக் கொள்கைக்கான எதிர்-வாதமாக முன்வைக்கப்பட்டுள்ளதை

படிக்க முடிகிறது. நாள்பட்ட உணவுப்பொருட்கள் நொதித்து அதிலிருந்து

உயிருள்ள புழுக்கள் தோன்றுவதைப்போல, ஈஸ்ட் எனும் பொருள் நொதித்த

கள்ளில் உருவாகி மனித உடலுக்குள் சென்று மனிதனை தன்னிலை மறந்து இயங்க

வைப்பதை சான்றாக காட்டி இந்த விவாதம் முன்வைக்கப்பட்டது. 

குடியின் அடிப்படையான மதுபானங்களில் கலந்துள்ள ஆல்கஹால் எனப்படும் எத்தனால்4b0c2f94552f6481ccaff102884ae586-grande_

என்ற வேதிப்பொருளே ஒரு பானத்தை மதுவாகவும் மற்றதாகவும் மாற்றுகிறது.

ஆல்கஹால் என்ற சொல் அரேபிய மொழியில் வழங்கப்பட்ட ”அல்-கோஹல்”(al-kuhul)

எனப்படும் கண் மையாகப் பயன்படும் ஒருவிதப் பொடியைக் குறிக்கும்

சொல்லாகும்.  இதை இந்திய இஸ்லாமியர்கள் ”சுர்மா” என்பார்கள். பண்டிகை

நாட்களில் இதனை பயன்படுத்துவது சுன்னாவாகவும் (நபிவழியாக) கருதப்படுகிறது. 

சங்ககாலததில் தமிழிலும் 'பெண்கள் கண்ணுக்க மைதீட்டும் குச்சிக்கு 'கோல்'

என்ற பெயர் வழுங்கப்பட்டுள்ளது. (1) நுண்ணிய பொடிகளைக் குறிக்கும் இச்சொல்

மத்தியகால ஐரோப்பாவின் ரசவாதிகள் வடித்தெடுக்கும் எல்லாவித

வேதிப்பொருளுக்கும் பயன்படுத்தத் துவங்கினர். இதுவே தற்காலத்தில்

வடித்தெடுக்கப்படும் போதை துரும் வேதிமத்திற்கான பொதுச் சொல்லாக

பாவிக்கப்படுகிறது. இந்த ஆல்கஹாலில் ஒருவகையான “எத்தனால்“ என்பதுவே

மதுபானங்களில் பயன்படுத்தப்படுகிறது. பண்டைய காலங்களில் கரும்புச்

சாற்றிலிருந்து பிரிக்கப்படும் சர்க்கரையிலிருந்து இது பெறப்பட்டது.  சில

சமூகங்கள் பழங்கள், அரிசி, பார்லி, கோதுமை மற்றும் பால் போன்ற

பொருட்களைக்கூட நொதிக்கவைத்து அதிலிருந்து போதை தரும் மதுவகைகளை

தயாரித்துள்ளனர். அதன்பின் தேன் மற்றும் பழச்சாறுகளிலிருந்து மதுபானங்கள்

வடித்தெடுக்கப்பட்டன.

8-ஆம்

நூற்றாண்டில்தான் அரேபியர்கள் முதன்முதலாக ஒயின் தயாரிக்கும் ஒரு

வேதியியல் முறையை உருவாக்கினார்கள்.  இஸ்லாம் ஒயினை தடை

செய்திருந்தபோதிலும் அது குறித்த வேதியியலை வளர்த்தெடுத்தவர்கள் இஸ்லாமிய

அரேபியர்களே (2). வடித்தெடுக்கப்பட்ட ஒயினை அரபியில் “அராக்“ (araq) என்கிற

வியர்த்தல் எனகிற பொருள்தரும் சொல்லால் குறிப்பிட்டுள்ளனர். இந்த அராக்

என்கிற சொல்லே சாராயம் என்கிற பொருளில் இன்று பயன்பட்டு வருகிறது.

துளித்துளியாக வடித்தெடுக்கப்படும் சாராயம் என்பது 13 மற்றும் 14-ஆம்

நூற்றாண்டில் மேற்றிசை நாடுகளில் பரவியது் (3).  14-ஆம் நூற்றாண்டில்

அரேபியாவிலிந்து ஆல்கஹால் மத்தியதரைக்கடல் நாடுகள் முதல் ஐரோப்பியா வரை 

ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.  வடித்தெடுக்கப்பட்ட ஒயின் கிழக்கு மற்றும்

மேற்குலக நாடுகளால் அராக் என்கிற சொல்லாலேயே பாவிக்கப்பட்டது. இன்று

ஆங்கிலத்தில் சாராயத்தை குறிக்க அரபி மூலத்திலிருந்து பெறப்பட்ட அராக்

(arrack) என்கிற சொல்லே பயன்பட்டு வருகிறது. ஆக மேற்குலகிற்கு அரேபிய

ரசவாத மரபின் தொடர்ச்சியாக உருவான ஒயின் வடித்தெடுக்கும் தொழில்நுட்பம்

பரவியது (4)  இத் தொழில்நுட்பமே வேதியியலின் வளர்ச்சிக்கான அடிப்படையாக

அமைந்தது.

ஆல்கஹால் என்கிற

வேதிப்பொருளே மதுவின் அடிப்படையாக உள்ளது. பண்டைய சமூகங்களில் இது இயற்கை

முறைகளில் பெறப்பட்டது. தற்போதைய நவீன சமூகங்களில் இவை வேதியில்

தொழிற்கூடங்களினால் பெறப்படுகிறது. ஆல்கஹால் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது

என்பதற்கான வரலாறு இல்லை. புத்த ஜாதகக் கதை ஒன்றில் புத்தர் ஆல்கஹால்

இயற்கையில் தோன்றிய முறைப்பற்றி கூறுகிறார்.(5) ஆயினும், ஆல்கஹால் என்கிற

தொழில்நுட்பம் மனிதனின் உணவுக் கலாச்சார வளர்ச்சியின் ஒரு பண்புரீதியான

மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இயற்கையில் உள்ள பச்சை உணவை வேகவைத்து

கலாச்சாரமயப்படுத்தியும், சமூகவயப்படுத்தியும் உண்ணத் துவங்கியது எப்படி

தற்செயலாக அமைந்ததோ அதுப்போன்றே நொதித்தல் என்கிற செயலும் தற்செயலாக

கண்டைடைந்த ஒரு நுட்பம் எனலாம். நொதி்த்தல் என்கிற இச்செயலின் விளைவாக

உருவான மதுபானங்கள்,  உணவுடன்  கலாச்சாரமயப்படுத்தலுக்கும்,

சமூகவயப்படுத்தலுக்கும் உள்ளாகி மாறிவந்துள்ளது. உணவைப்போல மதுவும் உலகின்

எல்லாக் கலாச்சாரங்களிலும் ஒரு முக்கியமான அங்கம் வகித்து வந்துள்ளது.

மதங்களின் அப்பாலை உலகு பற்றிய கற்பிதமே குடிக்கலாச்சாரத்தின் அடிப்படையில்

புனையப்பட்டது என்பது மிகைக் கூற்றாகாது.

முதலில்

மதுவை கண்டடைந்த மனிதன் அதன் போதை தரும் எக்களிப்பினை, கட்டற்ற மகிழ்வை

இறைவனின் வரமாக கருதத் துவங்கி அதன்மேல் இறைசார்ந்த தொன்மங்களை உருவாக்கி

இருக்கவேண்டும். இறைவனின் கொடையாகக் கருதப்பட்ட மதுவே இறைவனின்

பிரியத்திற்கு உரியதாகவும், அதனை அருந்துவதன்மூலம் இறைவனின் அருகில் செல்ல

முடியும் என்கிற நம்பி்க்கையுமே இந்த தொன்மங்களின் அடிப்படை எனலாம். ஒரு

குழுத்தன்மையையும் கூட்டுவாழ்வின் உணர்வையும் தரும் இந்த மது அருந்தும்

நிகழ்வுகள் மனிதனின் இயற்கைமீதான அச்சத்தை போக்கக் கூடியதாகவும், இறைவன்

இம்மதுவின் வழியாக அவனுக்குள் இயங்குவதாகவும் ஆன தொன்மமாகவே, பண்டைய

சமூகங்களில் “சாமன்ஸ்“ எனப்படும் மந்திரவாதிகள் மது அருந்தி குறி சொல்வதும்

இறைவழிப்பாட்டை தலைமை ஏற்று நடத்துவதும் நிகழ்ந்துள்ளது. இந்த மதுவே மயக்க

மருந்தாகவும், வலிநிவாரணியாகவும், மருத்துவக்குணம் கொண்டதாக பயன்பட்டு

வந்துள்ளது. தன்னால் உணரமுடியாத ஒரு உலகிற்கு அழைத்துச் செல்லும் மதுவை

இறைவனின் கொடையாகவும், அதன் போதைதரும் எக்களிப்பால் தன்னை மறத்தலில்

இறைத்தன்மையையும் கண்டடைந்ததின் தர்க்கம் இதுவாகத்தான் இருக்க

முடியும்.     

ஆக,

ரொட்டி அல்லது உணவு தயாரிக்க கற்றுக்கொண்ட மனிதகுலம் அதனுடன் மதுவை

வடித்தெடுக்கும் முறையையும் அறிந்து வந்துள்ளது. தோன்றிய காலத்தில் மது

தெய்வீக அம்சம் பொருந்தியதாகவும் தெய்வ வழிப்பாட்டிற்குரியதாகவும் இருந்ததை

புராதன சிலைவழிப்பாட்டு சமூகம் (பேஜன்ஸ்) துவங்கி கிரேக்க, பாபிலோனிய,

ரோம, பாரசீக, எகிப்து மற்றும் இந்திய வேதகாலம் வரை காண்கிறோம். இது

நிறுவனமயப்படுத்தப்பட்ட மதங்களின் வளர்ச்சியில் ஒரு கட்டத்தில்

விலக்கப்பட்டதாகவும் பாவமாகவும் மாற்றப்படுகிறது. இம்மாற்றத்திற்கு முக்கிய

காரணங்கள் மதங்களும், மதங்களின் அதிகாரத்தைப் பிடித்த 18-19-ஆம்

நூற்றாண்டின் தொழிற்சமூகங்கள்தான் என்பதில் இரு கருத்துக்கள் இருக்க

வாய்ப்பில்லை. இம்மதங்கள் மற்றும் அரசதிகாரமும் இணைந்து குடியை ஒரு

பாவமாகவம் சட்ட சம்பந்தப்பட்டதாகவும் மாற்றுகிறது.  ஆக, குடிக்கலாச்சாரம்

மனித உடலின் குழு வாழ்க்கையுடன் துவங்கி நாகரீக சமூக வரலாற்றுடன் பல

வடிவெடுத்து வளர்ந்து வந்துள்ளது.

(சுற்று-2 மதங்களும் மதுவும். -  தொடரும்)

---------------

அடிக்குறிப்புகள்

1. டாக்டர் கே.கே. பிள்ளை - தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் (மறுபதிப்பு 2007) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - பக்.148.

2.

ஜாபிர் இபுன் ஹையன் (கி.பி. 721-815) என்பவர் குளிர்வித்தல் முறைமூலம்

ஆல்கஹாலை பிரித்தெடுக்கும் நுட்பம் பற்றி தனது நூலில் விவரித்துள்ளார்.

வடித்தெடுக்கப்பட்ட ஒயின் ஜாபரின் காலம் முதல் பல அரேபிய நூல்களிலும்

மற்றும் ரானுவ ஆய்வுக் கட்டுரைகளில் விவரிக்கப்பட்டுள்ளது.  வடித்தெடுத்தப்

பிறகு ஒயின் ஈரத்தன்மையுடன் ரோஸ்வாட்டரைப் போன்ற நிறத்தில் இருப்பதாக

அல்கிந்தி (கி.பி. 873) என்பவர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். 

அல்-பராபி (கி.பி. 878-950) என்பவர் சல்ப்பரை வடித்தெடு்க்கப்பட்ட ஒயினில்

சேர்ப்பதைப்பற்றி குறிப்பிட்டுள்ளார்.   வெள்ளை திராட்சையிலிருந்து வெனிகர்

வடித்தெடுக்கும் முறையிலிருந்து ஒயின் வடித்தெடுக்கும்முறை பற்றிக்

குறிப்பிட்டுள்ளார் அபு-அல்-கசீம்-ஜாக்ரவி (கி.பி. 1013).History of

Science and Technology in Islam (http://www.history-science-technology.com/Notes/Notes%207.htm)

3.

11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹிக்கயாத் அபு அல்-காசிம் அல்-பக்தாதி

என்பவர் அராக் என்கிற இச்சொல்லை முதன்முதலாக பயன்படுத்தி உள்ளார். சிரியா

நாட்டினர் அராக் என்கிற சொல்லையே ஒயினிற்கும் பயன்படுத்தியுள்ளனர்.

History of Science and Technology in Islam (http://www.history-science-technology.com/Notes/Notes%207.htm)

4. 

Islamic Technology, an illustrated history, Al-Hassan & Hill,

UNESCO CUP, 1986, and from The Different Aspects of Islamic Culture,

Science and Technology in Islam, Vol. 4, Part II, UNESCO, 2001.

பின்குறிப்பு: சமீபத்தில் காலச்சுவடில் சுகிர்தராணி எழுதிய குடிக்கலாச்சாரம் பற்றிய கட்டுரை facebook ல் டீசே வால் வெளியிடப்பட்டு  வளர்மதி

மற்றும் வெங்கடேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் அது குறித்து விவாதித்தனர்.

இடையில் நண்பர் வளர்மதி நம்மையும் இழுத்ததால் அவரிடம் கூறியபடி

இக்கட்டுரையை  இப்பதிவில் வெளியிடுகிறேன். எழுதத் தூண்டிய நணபர்

ராமானுஜத்திற்கும், எழுதும்போது படித்து கருத்துக்களைக் கூறி

ஊக்கப்படுத்திய முபாரக்கிற்கும் நன்றி.

- ஜமாலன் (13-08-2009)

 

குடிக்கலாச்சாரமும் கலாச்சாரக்குடிகளும் –பகுதி:2

குடிக்கலாச்சாரமும் கலாச்சாரக்குடிகளும் – பகுதி-1.

hetairae_thumb%5B2%5D.jpg?imgmax=800 ஆப்ரஹாமிய மதங்களான

யூத - கிறித்துவ - இஸ்லாமிய ஆதித்தொன்மமான ஆதாம் - ஏவால் கதையாடலை

எடுத்துக் கொள்வோம்.  இறைவன் ஆதாம் ஏவாலை படைத்தபின் அவர்களிடம் கூறும்

முதல் கட்டளை ஒருகுறிப்பிட்ட மரத்தில், அதாவது அறிதலைத் தருக்கூடிய

மரத்தில் (tree of knowledge) உள்ள கனியை உண்ணக்கூடாது என்பதுதான்.  இதில்

ஒரு கோட்பாட்டு உள்ளடக்கப் பட்டுள்ளது. அது மனிதமனம் எதிர்மறையில்தான்

கட்டமைக்கப்படுகிறது என்பதுடன், அறிவைப்பெறுதல் என்பதே இறைவனால்

விலக்கப்பட்டதாக குறியிடப்பட்டுள்ளது. அதாவது அறிவிலிருந்து விலகிச்செல்

என்பதுதான் இறைவனின் முதல் கட்டளை. செய் என்பதல்ல செய்யாதே என்பதுதான்.

இந்த தொன்மத்தின் மற்றொருக்கூறு அந்த விலக்கப்பட்ட கனியை சாத்தான் பாம்பு

உருவெடுத்து ஏவாலின் காதில் உண்ணும்படி சொல்கிறான். இங்கு சாத்தானின்

கட்டளை செய்யாதே என்பதல்ல, செய் என்பதுதான். இறைவன் விலக்கு என்றால்

சாத்தான் உடன்படு அதாவது ஏற்றுக்கொள் என்கிறது.

பாம்பு

ஆதிகாலந்தொட்டு வரும் எல்லா பெருமதங்களிலும் பல வடிவங்களில்

உள்ளடக்கப்பட்ட ஒரு தொன்மக் குறியீடாகும். பாம்பு என்பது லிங்கத்தைக்

குறிக்கும் அதிகாரத்திற்கான ஒரு தொல்மனப்படிவம் என்பதாகக் கொண்டு

ஏவாலிற்குள் ஏற்பட்ட இச்சையின் ஒரு குறியீட்டு வடிவமாக அதனை வாசிக்க 

முடியும். எது எப்படியானாலும், ஏவால் அக் கனியை உண்ணுகிறாள், அவளது அந்த

முதல் பாவத்தை ஆதாமும் ஏற்கிறான். உடனே அவர்களிடம் அம்மணம் பற்றிய வெட்க

உணர்வும் அதாவது இறைவனின் படைப்பான அவர்களிடம் தனித்ததான ஒரு தன்னுணர்வும்

வருகிறது. இங்கு அறிவும், பாலுந்தமும் நுட்பமாக இணைவதைக் காணலாம்.

இக்கணத்திலிருந்து அறிவு எந்திரம் என்பது இயங்கத் துவங்குகிறது.  அறிதல்

என்கிற மரத்தின் கனியை புசித்தபின் நல்லது கெட்டது பற்றிய அறிவு

ஏற்படுகிறது. இதன்பொருள் நல்லது கெட்டது என்பதை அறிவதே இறைவனால்

விலக்கப்பட்டுள்ளது என்பதும், அது சாத்தானின் சதிச்செயல் என்பதுமே. ஆக,

நல்லது, கெட்டது மற்றும் நன்மை, தீமை என்பதான எதிர்மைகள் எல்லாம் சாத்தனின்

செயல் என்பதான ஒரு உள்ளர்த்தம் இதில் உள்ளது. 

2009009_thumb%5B3%5D.jpg?imgmax=800

இந்த மீறலுக்காக இறைவனால் அவர்கள் சபிக்கப்படுகிறார்கள்.

சுவர்க்கத்திலிருந்து நீக்கப்பட்டு பூமியை அடைகிறார்கள். பசி,  பாலியல்

என்கிற இயல்புந்துங்கள் இயங்கத் துவங்குகிறது. இறைவனின சாபம் இவை இரண்டினை

அடைவதற்காக நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி உழைக்கும்படி அவர்களை

துரத்துகிறது. வாழ்க்கை எனும் ஆதித்துயர் இப்புள்ளியில்தான் துவங்குகிறது.

ஆக, வாழ்க்கையின் துவக்கம் இறைவனின் விலக்கத்திலிருந்தும், சாத்தானின்

உடன்படும் ஆற்றலிலிருந்தும் துவங்குவதாக இக்கதையாடல் உள்ளது. இறைவன்

உயிர்த்தலுக்கான மூலம் எனில் சாத்தான் வாழ்தலுக்கான மூலமாக உள்ளான். ஆக,

தன்னை உணர்தல், அறிதலைப் பெறுதல் ஆகியவற்றின் வழியாக வாழ்தல் என்கிற

தொழில்நுட்பம் இயங்கத் துவங்குகிறது. வேறுவிதமாகச் சொன்னால் இன்று நாம்

வாழ்வதே சாத்தானின் சதிச்செயலால் விளைந்தது என்பதே. ஆக, தன்னை அறிதல்

என்பதே இறைவனுக்கு எதிரான சாத்தனின் ஒரு சதித்திட்டம்போல சொல்லப்படுகிறது

இக்கதையாடலில்.  இதன் எதிர்நிலையில் தன்னை மறத்தல் என்பது இறைநிலை எனச்

சொல்லலாம். ஆதிச் சமூகங்களிலிருந்து இந்த இறைநிலைக்கான கூறுகளாகத்தான் மது

குடித்தல் என்கிற செயல் இறைவழிப்பாட்டுடன் இணைந்து வந்துள்ளது. இறையின்பம்

என்கிற தன்னை மறத்தல் என்கிற அந்த பேரின்ப நிலைக்கான உணர்வுக் கற்பிதம்

இந்த குடிக்கலாச்சாரத்திலிருந்தே வந்திருப்பதற்கான வாய்ப்பு ஒரு மிகைக்

கூற்றாகாது. பண்டைய சீனர்கள் மதுவை ஆன்மீக உணவு (spritual food) 

என்றதைப்போல (6) ஆன்மீக உணர்வின் ஒரு புனைவு வடிவமாக உள்ளது மது தரும்

தன்னை மறத்தல் எனும் போதை எனலாம். தன்னை மறத்தலுக்கு தள்ளும் இந்த

குடிக்கலாச்சாரம் மட்டும் ஏனோ சாத்தானின் நிலையாக ஒரு முரண்நிலைக்

கதையாடலாக கட்டமைக்கப் பட்டுள்ளது. தெளிவாக ஒரு கட்டத்தில் புனிதமறைகள் இநத

குடிக்கலாச்சாரத்தை பாவமாகவும், சாத்தானின் செயலாகவும் அறுதியிடுகின்றன.

"பாவம்" என்பது ஹீப்ரு மற்றும் கிரேக்கத்திலிருந்து பைபிள் வழியாக

கிறித்தவத்தில் அறிமுகமான கருத்தாக்கமாகும். இதற்கான பொருள் 'சிறப்பை

இழந்தது' (missing the mark) என்பதே. பாவம்-புண்ணியம் என்கிற

கருத்தாக்கமற்ற புத்தமதம் பாவம் என்பதை 'திறமையற்ற செயல்' (akusala

kamma-unskilled action) என்கிறது (7).

இந்திய வேதங்கள் 14 வகை மனுக்கள் தோன்றியதாகவும் ஒவ்வொரு மனுவின்6a00d8341c509553ef00e551cf6ba68834-800wi

தோற்றத்திலிருந்து மனிதகுலம் உருவானதாகவும், இன்றைய மனிதகுலம் 7-வது

மனுவிலிருந்தும் உருவானது என்கிறது.  இத்தொன்மத்தை எடுத்துக் கொண்டாலும்,

வேதகாலத்தில் அனுமதிக்கப்பட்ட குடி மனுவால் முன்வைக்கப்பட்ட தர்ம

சாத்திரத்தில் மறுக்கப்படுகிறது.  மக்களை அடிமையாக்கும் தன்மைகளைக்

கொண்டதாகவும் குறிப்பாக மன்னர்களை அது அடிமையாக்கும் பண்பு கொண்டது

என்கிறது. கெளடில்யரின் அர்த்தசாத்திரம் இக்குடிக்கலாச்சாரத்தின் தீமைகளைப்

பட்டியலிட்டவிட்டு அதை சமூக வெளியிலிருந்து சட்டத்தின் எல்லைக்குள்ளும்,

அரசமைப்பிற்குள்ளும் கொண்டு செல்கிறது. குடியை அற அடிப்படையில் மட்டும்

பார்க்காமல் அதன் பொருளாதாரம் பற்றிய நுட்பமாக சிந்தித்து அதனை அரசின்

கஜானாவை நிரப்பும் ஒரு வணிக நடவடிக்கையாக மாற்றுகிறது. குடி ஒரு "வியாஷனா"

(addiction) எனப்படும் அடிமையாக்கும் நடவடிக்கை என்றாலும் அதனை  வேரோடு

கிள்ளி எறிவது சாத்தியமில்லை என்பதால் சட்டம் மற்றும் அரசின்மூலம்

கட்டுப்படுத்த முடியம் என்கிறது அர்த்தசாத்திரம். மிகைக்குடியை தடைசெய்து

தண்டனைக்குரிய குற்றமாகவும், அதனை கண்காணிக்க சுராதயக்ஷா என ஒரு

கண்காணிப்பாளரையும் அவருக்குகீழ் அதயாக்ஷா எனப்படும் 30 பேர்கள் கொண்ட ஒரு

குழுவையும் அமைத்து சமூகமெங்கும் குடி குறித்த கண்காணிப்பு வலையை

விரிக்கிறது.

மதுபானங்கள

வடித்தெடுத்து அதனை கோட்டையிலும் மற்றும் நாடெங்கிலும் வணிகம் செய்யும்

உரிமை அரசுக்கு மட்டுமே என்று மதுவணிகத்தை அரசுடைமையாக்கியது. அரசுக்குத்

தெரியாமல் மது காய்ச்சி விற்பவர்களை கண்டடைவதற்கும் அவர்களக்கு தண்டனை

வழங்குவதும்தான் மேற்கணட குழுவின் பணி. இக்குழு சமுகமெங்கும்09_thumb%5B1%5D.jpg?imgmax=800

கண்காணித்து மது குடிப்பதை ஒழுங்கமைத்தது. மது அருந்தும் உயர்குடியினர்

(nobels) கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற்று வீட்டில் சேகரித்து வைத்துக்

கொள்ளலாம். மது அருந்துவதற்கு என அரசு கட்டுவித்துள்ள கட்டிடங்களில்

மட்டுமே மது அருந்த வேண்டும். அந்நியர்களுக்கு தங்கும் விடுதி வசதிகளும்

இருந்துள்ளது. இந்த இல்லங்களின் தலைவர் மது விற்பனை செய்யக்கூடாது. இன்றைய

“பார்“-கள் போன்று இயங்கி வந்துள்ள பகுதிகளில் மட்டுமே குடிக்க

அனுமதியிருந்துள்ளது.  பாழடைந்த மதுவை தனியாக பிரித்து விற்பதற்கு என

தனியிடங்கள் இருந்துள்ளன. இப் பாழடைந்த மது மக்களுக்கு வழங்கப்படுவதில்லை,

அது அடிமைகள் மற்றும் கூலிகளுக்கோ அல்லது பன்றிகளுக்கோ மட்டுமே

வழங்கப்பட்டது.  விழாக்காலங்களில் 4 நாட்களுக்கு மட்டும் மது காய்ச்சவும்

குடிக்கவும் தடை விலக்கப்பட்டுள்ளது. அந்த நாட்களில் வீடுகளில் காய்ச்சி

குடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்களிலும் அனுமதியில்லாமல் பொது

இடங்களில் மது காய்ச்சினால் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.  அர்த்தசாத்திரம்

மேதக்ஸ் (medaks), பிரசன்ன (prasanna), அஷாவா (asava), அரிஸ்த்தா (arista),

மைரிய்ய (maireya) மற்றும் மது (madhu-திராட்சை மது - ஒயின்) என்கிற

வகைகளைப்பற்றிப் பேசுகிறது. இவற்றை தயாரிக்கும் முறைகளைப்பற்றியும்

விளக்கியுள்ளது (8). இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தற்சமயம்

'டாஸ்மாக்' என்கிற மதுவிற்பனை அங்காடிகள் இந்த அடிப்படைகளில் நிலவுவதை

இதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

உலகின் பல கலாச்சாரங்களிலும் காணப்படும் இந்த குடி என்கிற செயல் ஒரு சமூகTWN_history_of_wine_ancient_jars_0309_01

நடவடிக்கையாக பண்பாட்டு நடவடிக்கையாக இருந்து வந்துள்ளது. இன்னொருபுறம்

அரசின் வருமானமாகவும், ஒற்றறிவதற்கான தொழில்நுட்பமாகவும் இருந்து

வந்துள்ளது. இன்றும்கூட இப்பண்பாடு மேற்றிசை நாடுகளில் பரவலாக உள்ளது.

இந்தியாவில் இப்பண்பாடு ஒரு கட்டுப்படுத்தப்பட்ட அளவில் நடைமுறையில்

உள்ளது. குடியில் சிறுபான்மையாக உள்ள மிகைக்குடி என்கிற செயலால் ஏற்படும்

சீரழிவுகளும், சமூக ஒழங்கு குலைவும் ஒட்டுமொத்தமாக குடிக்கலாச்சாரத்திற்கு

எதிரான வாதமாக முன்வைக்கப்படுகிறது. குடிப்பது ஒரு அறம் சார்ந்த

பிரச்சனையாக மாற்றப்பட்டுள்ளது. சமூக ஒழுங்கை காப்பதற்கு குடியைக்

கட்டுப்படுத்தும் நிலையை அரசதிகாரம் கையிலெடுக்கிறது. ஆக, குடிகலாச்சாரம்

ஒரு சமூக நடவடிக்கையாகவும், பண்பாட்டு நடவடிக்கையாகவும் இருப்பதால் அதன்

அரசியல் குறித்து சமூகவரலாற்றில் வைத்துப் புரிந்து கொள்வது அவசியம்.

--------------------------

அடிக்குறிப்புகள்.

5. Kumbha Jataka — The Fifth Precept (Jat 512) (http://www.accesstoinsight.org/lib/authors/kawasaki/bl142.html) - இக்கதையில் சுரா என்கிற வேடன் இயற்கையாக ஒரு மரத்தின் குழிவான பகுதியில் தேங்கிய மழைநீரில் பறவைகளால் போடப்பட்ட பழங்கள் மற்றும் தானியவகைகளால் ஊறலடைந்து வெயிலில் காய்ச்சப்பட்டு உருவான மது பற்றிய கதையும் அது வாரனாசி மற்றும் காசியில் பரவி ஒரு வியாபாரப்பொருளாக மாறியதும் பேசப்படுகிறது.

6. David J. Hanson, Ph.D.History of Alcohol and Drinking Around the World (HADW)

7. Buddhism and Sex by M. O’C. Walshe - Buddhist Publication Society

Wheel Publication No. 225 (Reprinted 1986)

8. Encyclopaedia of Hinduism - By Nagendra Kumar Singh- page-812-815.

(பகுதி:3 – மது குறித்து இந்திய மதங்கள் .. தொடரும்)

-ஜமாலன் (ஆகஸ்ட் 16  2009)

 

குடிக்கலாச்சாரமும் கலாச்சாரக்குடிகளும்.- பகுதி-3

குடிக்கலாச்சாரமும் கலாச்சாரக்குடிகளும் – பகுதி்:1.

குடிக்கலாச்சாரமும் கலாச்சாரக்குடிகளும் –பகுதி:2

002sf2224drinkingculture_thumb%5B2%5D.jp பண்டைய

மதமான வேதமதத்தின் ருக்வேதத்தில் ஸோமா என்ற தலைப்பின் கீழ் (ருக்வேதம்

8.48.3, 8.7.29, 8.64.10-11) ஸோமா (Soma) என்று ஒரு பானம் பற்றிப்

பேசப்படுகிறது. பார்சிய ஜெராஷ்டிரிய மதத்தின் புனிதமறையான அவஸ்த்தாவில்

இதையே ஹவ்மாHaoma) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸோமபானம் மதச்சடங்குடன்

இணைத்தே பேசப்படுகிறது. சதபதபிரமாணம் (Satapatha BrahmaNam: VI.1.3.10)

ஸோமபானம் பற்றி கூறும்போது உண்மை (சத்யம்), நற்பண்பு (ஸ்ரீ), ஒளி (ஜோதி)

ஆகியவற்றைத் தரக்கூடிய தெய்வீக அம்சம் பொருந்தியதாக வர்ணிக்கிறது. இதன்

எதிர்மறையாக சுராபானம் என்பது பொய் (அனுருதம்), துன்பம் (பாபமா), அறியாமை

(தாமா) கொண்டதாகவும் அது மனிதர்களுக்கானதாகவும் இருந்து வந்துள்ளது.

ஸோமபானம் ஞானத்தையும், ஆனந்தத்தையும் தருவதாக சொல்லப்பட்டது. ஸோம

யாகத்தில் இந்திரன், அக்னி உள்ளிட்ட தேவர்கள் குடிப்பதற்காக இது

அளிக்கப்பட்டுள்ளது. சுராபானம் கீழ்தட்டு மக்களுக்கானதாக

ஒதுக்கிவைக்கப்பட்டது. “புவியின் மனிதக் கடவுளான பார்ப்பனர்கள் அதை

அருந்துவது தடைசெய்யப்பட்டுள்ளது“ (9). அதை அருந்துவது பாவமாக

தர்மசாத்திரங்களால் அறிவிக்கப் பட்டது.

வேதக்கடவுளான ஸோமா, சந்திர வழிபாட்டுடன் உறவு கொண்டதாகும். இச்சந்திர வழிபாடு greek-wine-cup-kylix_thumb%5B2%5D.jpg?im

என்பது யூதமத வழிப்பாட்டுடன உறவுடையதாக சமர் அப்பாஸ் என்கிற ஆய்வாளர் 

தெரிவிக்கிறார் (10). ஆரிய - பிராமண மதமும் யூத மதமும் ஒரே மூலத்தைக்

கொண்டதாக விளக்கும் இவரது கருத்து, பண்டைய யூதர்களின் மதுவுடன் இந்த

ஸோமாவிற்கு ஒரு பூர்விகத் தொடர்பிருப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

ஸோமா-க் கடவுளுக்கு  27 நட்சத்திரங்கள் மனைவிகளாக இருப்பதாகவும், இவை

எல்லாம் இரவுடன் உறவு கொண்டதான ஒரு ஒப்புமையை தருவதாகவும் உள்ளது.

சமஸ்கிருதத்தில் திங்கள் கிழமையை ஸோமவார் என்று அழைப்பதும் இந்த சந்திர

வழிப்பாட்டுடன் அறியப்படும் ஸோமாவுடன் உறவுகொண்டதே. ஸோமா என்பதற்கு

சமஸ்கிருதத்தில் சந்திரன் அதாவது திங்கள் என்றே பொருள். சூரியன் x

சந்திரன், வெம்மை x குளிர்ச்சி, அக்னி x நீர் என்பதான எதிர்வுகள் இதன்

உள்ளடக்கப்பட்ட அமைப்பியல் விதிகளாக செயல்பட்டிருப்பதை அனுமானிக்கலாம்.

தொன்மம் என்பது பண்டைய சமூகங்களில் மனிதன் இயற்கையுடன் தன்னை

உறவுபடுத்திக்கொள்ள உருவாக்கிக்கொண்ட ஒரு கதையாடலே. இக் கதையாடல்கள்வழி

இயற்கையை தன்வயப்படுத்த முனையும் மனிதன்,  இயற்கையுடன் ஆன ஒருவித உறவை

ஏற்படுத்திக்கொள்ள முனைகிறான். ஸோமா என்பதுடன் உறவு கொண்டதாக ஆனந்தம்

மற்றும் சந்திரன் அதன் ஆதிக்கத்திற்கு உட்பட்ட இரவு ஆகியவற்றையும்

கவனத்தில் கொண்டால், மதுவுடன் இணைந்து ஒரு பேரின்பம் என்பதன்

உள்ளார்ந்துள்ள இரவு பற்றிய நினைவு முக்கியமானது.

halfcut_thumb%5B5%5D.jpg?imgmax=800

பார்சிய மதமான ஜொராஷ்டீரியத்தில் அகுரமஸ்தா என்கிற அவர்களது இறைவனுக்கு

ஹவ்மா என்கிற இந்த மது படைக்கப்பட்டுள்ளது. இம்மது ருக்வேதத்தில்

சொல்லப்பட்ட ஸோமாவின் அத்தனை நற்பண்புகளையும் கொண்டதாக

வர்ணிக்கப்பட்டுள்ளது. ஸோமபானம் என்பது நீர், தேன், ஆல்கஹால், புற்கள், 

ஒருவகை காளான் மற்றும் மலைகளில் வளரும் செடிவகைகளிலிருந்து

உருவாக்கப்பட்டது. ஸோமா என்பது ஒருவகை தாவரம் என்றும் அது காஷ்மீரி்ல்

அதிகம் விளைந்து வந்தாலும் காஷ்மீர் என்பது வேதகால பிராமணர்களின் ஒரு

முக்கிய வாழிடமாக இருந்து வந்ததற்கு ஒரு காரணமாக அமைந்ததை ஆய்வாளர்கள்

சுட்டிக்காட்டுகின்றனர். இது ஒருவகை காளான் என்றும் அக்காளான் பண்டைய

சைபீரியாவில் மாந்ரீகச் சடங்கில் பயன்பட்டதாகவும் ஆர். கோர்டன் வாஷன்

என்கிற ஆய்வாளர் கூறுகிறார் (11).

ஆக,

மதுவிலும் இந்த இறை-மனித வேறுபாடு், முன்வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

அதாவது வேதகால மதுவில் தெய்வாம்சம் பொருந்தியவர்களுக்கு ஸோமபானம், 

சாதாரண மக்களுக்கு சுராபானம் என்கிற பிரிவு சுவர்க்கத்தில் அளிக்கப்படும்

மது பேரின்பத்தையும், உயர் ஞானத்தையும் தரும் தெய்வாம்சம்

பொருந்தியதாகவும், மனிதர்களுக்கான மது பாவமானதாகவும் கருதப்படும் ஒரு

புனைவு நீட்சியாக இருப்பதை அனுமானிக்கலாம். 

சங்ககாலத்தில்

யவனர்கள் எனப்படும் கிரேக்க மற்றும் ரோமானியர்களிடமிருந்து தமிழகத்திற்கு

மது இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதைப் பார்க்கிறோம்.

புறநானூறு விவரிக்கும் ஒரு காட்சி "யவனர் நல்ல குப்பிகளில் கொணர்ந்து தந்த

நறுமணம் கமழும் குளிர்ந்த மதுவைப் பொன் வளையல்களை அணிந்த இளம் பெண்கள்

பூவேலை செய்யப்பட்ட பொற்கின்னங்களில் ஊட்டுவிக்கின்றனர்" (புறநானூறு - 56)

(12). யவனர்கள் இரட்டைப்பிடிக்கொண்ட ஒருவகை மதுச்சாடிகளில் (Amphorae)

உயர்வகைத் 'தன்கமழ் தேறல்'களைக் கொண்டுவந்து தமிழகத்தில் இறக்கினர்.

அவற்றுக்கீடாகத் தமிழகத்து மிளகு, இலவங்கம், கலிங்கம் முதலியவற்றை

ஏற்றிக்கொண்டு சென்றனர். அத்தகைய இரட்டைப்பிடி மதுச்சாடிகளின்

சிதைவுகளும், கண்ணாடியாலான மதுக்கிண்ணங்களும் அரிக்கமேட்டில் கிடைத்துள்ளன

(13) என்கிறார் தமிழாய்வு அறிஞரான கே.கே. பிள்ளை அவர்கள்.

'கள்ளுண்ணும்

வழக்கம் பழந்தமிழகத்தில் மிகவும் விரிவாகக் காணப்பட்டுள்ளது. மன்னர்,

பாணர், புலவர், கூத்தர், பொருநர், விறலியர் அனைவருமே மதுவுண்டு

களித்தனர்.  இயற்கையாகக் கிடைத்த பனங்கள், தென்னங்கள், ஈச்சங்கள்

ஆகியவற்றையும், அரிசி, புளித்த சோற்றுக்காடி முதலியவற்றையும் காய்ச்சி

இறக்கிய மதுவையும், யவனர்கள் கப்பலில் கொண்டவந்த தேறலையும் அவர்கள்

விருப்பத்துடன் குடித்தனர்'. (புறநானூறு 56: மலைபடுகடாம் 522). தேறலின்

சுவையையும் , அது கொடுக்கும் வெறியையும் தூண்டுவதற்காக மது வகைகளைக்

கண்ணாடி குப்பிகளிலும், மூங்கிற் குழாய்களிலும் நிரப்பி, நெடுநாள் மண்ணில்

புதைத்து வைப்பர். (புறம். 392. அகம். 348) அத்தகைய மது வகைகளின் வெறி

மிகவும் கடுமையாக இருக்கும். அக் கடுமையைப் பாம்பின் கடிக்கும், தேள்

கொட்டுக்கும் (சிறுபாணாற்றுப்படை 237) புலவர்கள் ஒப்பிட்டுள்ளனர்.

கள்ளுக்கு இன்சுவையும், நறுமணமும் ஊட்டுவதுண்டு. (பொருநராற்று்ப்படை 157).

(14) பெண்கள 'காமபானம்' என்ற தனிப்பட்ட மது ஒன்றை அருந்தினர்.(15)

சங்ககாலத்தின் இறுதியில் தமிழக மக்களிடையே குடிப்பழக்கம் அளவுக்கு மீறிக்

காணப்பட்டது. (16) பெண்கள் நாளங்காடிகளில் கள் விற்பனை செய்துள்ளனர். (17)

கரும்பும், அவலும், மான் ஊனுக்கும், கள்ளுக்கும் பண்டமாற்றாக

பயன்படுத்தப்பட்டுள்ளது. (பெரும்பாணாற்றுப்படை 161-5) (18). ஈழம் பூட்சி

என்கிற கள் இறக்குவதற்கான வரி வசூலிக்கப்பட்டுள்ளது. (19) சங்ககாலத்திற்கு

பிந்தைய களப்பிரர் காலத்தில் செழித்தோங்கிய புத்தம் மற்றும் சமணம்

ஆகியவற்றால் தமிழகத்தில் கள் அல்லது மது குடித்தல் தீமையாகவும்

ஒழுக்கக்கேடாகவும் வலியுறுத்தப்பட்டது. அறம் சார்ந்த இலக்கியங்களான

பதினென்கீழ்க்கணக்கு நூல்களும், ஐம்பெருங்காப்பியங்களும் உருவான ஒரு காலம்

ஆகும். இச் சூழலில்தான் வள்ளுவர் 'கள்ளுண்ணாமை" என்கிற அதிகாரத்தில் 10

குறட்களை கள்குடிக்கு எதிராக எழுதி உள்ளார்.

பொதுவாக

கள்குடி மற்றும் மது அருந்துதலில் புத்தம், சமணம் இரண்டும் அறம் சார்ந்த

நிலையைவிட உடல் மற்றும் மனநலம் சார்ந்த நிலையையே எடுக்கின்றன. குறிப்பாக

புத்தரால் துறவிகளுக்கு முன்வைக்கப்பட்ட பஞசசீலக் கொள்கையில் ஐந்தாவது

கொள்கை குடியை தீமையாக முன்வைக்கிறது. குறிப்பாக மனம் ஒருமை அடைந்து

நிர்வான (நிப்பான) நிலையை அடைவதற்கும் எதிரானதாகப் பார்க்கிறது.  சமூக

அந்தஸ்த்து சிதைந்து பிக்குகள் மயங்கி கிடக்கும் நிலையை உருவாக்குவதாலும்,

பேச்சில் முறையற்ற வெளிப்பாட்டை உருவாக்குவதும் குறிப்பாக மனம்

கட்டுப்பாடற்றதாக மாறிவிடுவதாலும் புத்தர்  பிக்குகளுக்கு குடியை தடையாக

அறிவித்தார். சுக்லோவதா சுத்தா (Sigalovada Sutta) வில் குடியின் தீமைகளாக

6 முக்கிய கருத்துக்களை ஆரியன் ஒருவனின் மகனான சிக்லோவதா என்பவனுக்கு

புத்தர் போதிக்கிறார் (20). இறுதியில் அந்த ஆரியன் புத்த பிக்குவாக

மாறுகிறான்.

புத்தர்

இரண்டு கடைக்கோடி நிலைகளுக்கும் போகாமல் நடுவழி என்கிற மத்திய

மார்க்கத்தை போதித்தவர் என்பதால் குடியில் குடியாமை மற்றும் மிகைக்

குடிக்கு நடுவில் ஒரு மத்திய வழியாக மிதமானக் குடியை ஏற்கலாம் என்பதான

வாதங்கள் முன்வைக்கப் படுகின்றன. இந்த அடிப்படையில் தைவான், இலங்கை போன்ற

நாடுகளில்கூட புத்தமதத்தை சேர்ந்தவர்களில் ஒரு சிலர் மது அருந்தும்

பழக்கத்தை கடைபிடிக்கிறார்கள். சுருக்கமாக 'ஒரு சாலையைக் கடக்கும்முன்

இருபுறமும் பார்' என்பதுதான் புத்தத்தின் நடுவழிப்பாதை  எனலாம். நன்மை,

தீமை துவங்கி எல்லா எதிர்வுகளிலும் இருக்கடைக்கோடியில் ஒரு முனையைச்

சாராமல் எது அமைதியை, ஊடுறுவிச் செல்வதை, அறிவொளியைத், விடுதலையைத்

தரக்கூடியதோ அந்த பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கண்மூடித்தனமான

நம்பிக்கைகளைவிட்டு தேர்வுகள அறிவார்ந்த தளத்தில் செய்யும் படி சொல்கிறது

புத்தம் (21). இதில் தனிமனித தேர்விற்கான முக்கியத்துவம்

வலியுறுத்தப்படுவதைக் காணலாம்.

புத்தர்

தனது போதனைகளை இரண்டு தளங்களில் நடத்திவந்தார். 1. பிக்குகளின்

நடைமுறைகள் சார்ந்த நடவடிக்கைகள் பற்றியவை 2. சாதாரண மனிதர்களின்

நடைமுறைகள் சார்ந்த நடவடிக்கைககள். பஞ்சசீலக் கொள்கை என்பது

பிக்குகளுக்காக போதிக்கப்பட்டது என்பதால் குடியை முழுமையான தீமையாக

போதிக்கிறது (22). குடி ஒரு தீமைக்கான வழிமுறையாக பாமரர்களக்கு

சுக்லொவ்தா சுத்தாவில் விளக்கப்படுகிறதே ஒழிய அதை தடைசெய்வதைப்பற்றி

பேசவில்லை என்பது கவனிக்கத்தக்கது.  தவிரவும் புத்தர் தனது பிரதான

நோக்கமாக முன்வைத்த சமூக மாற்றத்தில் அன்றைய சமூகம் குடியில் மூழ்கி

கிடந்த நிலையில் அதனை கடுமையாக எதிர்ப்பது அவரது கொள்கை அடிப்படையாக

மாறியதுடன், தனது மார்க்கத்தை அன்றைய பழங்குடி மற்றும் பிரதான மதமாக

விளங்கிய ஆரியமதத்திலிருந்து வித்தியாசப்படுத்த குடியை எதிர்ப்பதும்

அவசியமாகியது.

wine_6425t_thumb%5B3%5D.jpg?imgmax=800

குடிகுறிதது விவாதிக்கும் ஒரு புத்த ஜாதகக்கதையில் புத்த வழிப்பாட்டைக்

கொண்ட வைசாகா என்ற பெண் 500 பெண்கள் நடத்தும் ஒரு குடி-விழாவிற்கு

(drinking festival) புத்தரை அழைக்கிறாள். அவ்விழாவில் பெண்கள் குடித்து

புத்தரின் முன் ஆடிப்பாடியும், தன்னை மறந்த நிலையி்ல் குடித்து

கூத்தாடுகிறார்கள். புத்தரின் மடத்திற்கு வந்தபிறகும் தான்

எங்கிருக்கிறோம் என்பது அறியாமல் ஒருவரை ஒருவர் சண்டையிட்டும்

ஆடிப்பாடியும் களிக்கிறார்கள். இந்த சூழலில் புத்தரிடம் குடி பற்றி

கேட்கிறாள் வைசாகா. புத்தர் அதற்கு ஆல்கஹால் இயற்கையில் தோன்றிய

முறைப்பற்றிய கதை ஒன்றை சொல்வதாகச் செல்கிறது அக்கதை(5). இதில் முக்கிய

விடயம் என்னவென்றால், பெண்கள் 500 பேர்கொண்ட ஒரு குழு குடியை விழாவாக

கொண்டாடும் ஒரு வழக்கம் இருந்தது என்பதே. அதிலும் பெண்களின் இந்த

மெய்மறந்த நிலை என்பது புத்தரின் குடி பற்றிய முடிவிற்கு ஒரு காரணமாக

இருந்துள்ளதை உணரமுடியும். புத்த ஜாதகக்கதைகள் புனைவா? நடந்தவையா? என்கிற

விவாதத்தைவிட கதையில் நடந்த பெண்களின் இந்த கட்டற்ற களிப்பு ஒரு சமூக

சீர்திருத்தவாதியின், ஒரு புதிய வழிமுறையை உருவாக்கிய ஒருவரின் நடைமுறை

நிலைப்பாட்டில் ஏற்படுத்திய மாற்றமே முக்கியம். அடிப்படையில் புத்தம்

மனதின் விழிப்புநிலை பற்றி பேசுவதால், குடி என்பது மனஒருமைப்பாட்டை

சிதைப்பது என்றவகையில் எதிர்ப்பது அதன் அடிப்படை போதனைகளில் ஒன்றாகியதை

வரலாற்று அடிப்படையில் புரிந்துகொள்ள வேண்டி உள்ளது.

இவ்வுலகவாழ்வில்

(இம்மையில்) மது என்பதை விலக்கப்பட்டதாக (ஹராமாக) சொல்லும்  இஸ்லாமிய

புனித மறையான குரான் உயர்ந்த வகையிலான மயக்கமற்ற, தலைவலிவராத மது

சுவர்க்கத்தில் சிறுவர்களுக்கும்கூட அளிக்கப்படும் என்றும் வர்ணிக்கிறது.

(குரான்-76:15-19, 43:71-72,  76:5-6, 83:25-28, 56:17-19 மற்றும்

37:45,47). குரான் முன்வைக்கும் பானங்களில் கற்பூரம் கலந்தது மற்றும் இஞ்சி

கலந்ததும் என இரண்டுவகையான பானம் பேசப்படுகிறது.  இஞ்சி கலந்த அந்த

பானத்தை ஸன்ஜபில் (Zanjabil) என்றும் கஸ்தூரி மற்றும் கற்பூரம் கலந்த

முத்திரையிடப்பட்ட கஃபூர் (Kafur) மற்றொரு பானவகையாகவும்

சொல்லப்படுகிறது. (23)  இப்பானங்கள் சுவர்க்கத்தில் உள்ள தஸ்லிம் மற்றும்

ஸல்ஸபில் எனும் ஊற்றிலிருந்து சுவர்க்கவாசிகளுக்கு வழங்கப்படும் என்கிறது.

இதில் இஞ்சி (அரபியில் ஸன்ஜபில் என்பது இஞ்சியைக் குறிப்பதற்கான

சொல்லாகும்.) என்பது கீழ்திசை நாடுகளின் மருத்துவத்தில் ஒரு முக்கியமான

பொருளாகும். குரானில் இந்தவகைப் பானங்கள் சுவர்க்க வாசிகளுக்கானவையாக

முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் தர்க்கரீதியான நீட்சி இப்பானங்கள் இன்பத்தின்

அடையாளமாக குறியிடப்பட்டுள்ளது என்பதே. இல்வாழ்வில் மதம் முன்வைக்கும்

வாழ்வை வாழ்பவனுக்கு சுவர்க்கத்தில் தரப்படும் இன்பம் இந்த பானங்களே.

ஆனால், இன்றைய யதார்த்த வாழ்வில் இந்தவகை பானங்கள் பாவமாக

சொல்லப்பட்டுள்ளன. இந்த பாவம் இம்மத இறையியலின் மனித தோற்றத்துடன்

தொடர்ந்துவரும் ஒன்று. அடிப்படையில் மனிதவாழ்வே பாவத்தின் விளைவு,

இறைவனின் சாபத்தின் விளைவு என்கின்றன இம் மதங்கள்.

புராதன

சமூகங்களின் மதம் மற்றும் வழிப்பாட்டில் குடிபானங்கள் ஒரு முக்கியப்

பொருளாக இருந்து வந்துள்ளது. இன்றும் கூட கிறித்துவத்தில் திராட்சைரசம்

அதாவது ஒயினும், தமிழக நாட்டார் வழிப்பாட்டில் கள், சாராயம் போன்றவையும்

வழிப்பாட்டிற்குரிய பொருளாக இருந்து வருகிறது. குடிக்கலாச்சாரம் பல

பண்பாடுகளிலும் காணப்படுவதையும், கற்காலம் தொடங்கி இன்றைய நவீன காலம் வரை

குடியின் வரலாற்றையும் டேவிட். ஜே. ஹான்சன் (David J. Hanson, Ph.D.)

என்கிற ஆய்வாளர் தனது History of Alcohol and Drinking Around the World

(HADW) என்கிற கட்டுரையில் விரிவாக விவாதிக்கிறார். (அதன் தொகுப்பை

பிற்சேர்க்கையில் காண்க.)

------------------------

அடிக்குறிப்புகள்.

9. Studies in Kautilya, by M.V. Krishana Rao, Delhi-1979, quoted from Encylopedia of Hinduism by Nagendra Kumar Singh.

10. Hebrews And Vedic Brahmins -Dr. Samar Abbas, Aligarh, India. http://www.vnn.org/editorials/ET0307/ET14-8222.html.

11. Wasson, Robert Gordon (1968). "Soma: Divine Mushroom of Immortality". Ethno-Mycological Studies.

12. டாக்டர் கே.கே. பிள்ளை - தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் (மறுபதிப்பு 2007) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - பக்.60.

13. மேற்படி நூல் - பக். 84

14. மேற்படி நூல் - பக். 144. சுட்டப்பட்ட அனைத்து சங்க இலக்கியக் குறிப்புகளும் இந்நூலில் குறிப்பிடப்பட்டவையே.

15. மேற்படி நூல் - பக். 355

16. மேற்படி நூல் - பக். 144

17. மேற்படி நூல் - பக். 152

18. மேற்படி நூல் - பக். 153

19. மேற்படி நூல் - பக். 315

20. Sigalovada Sutta - The Discourse to Sigala - The Layperson's Code of Discipline Translated from the Pali by Narada Thera (http://www.accesstoinsight.org/tipitaka/dn/dn.31.0.nara.html)

21.Fundamentals of Buddhism Four Lectures by Nyanatiloka Mahåthera - The Wheel Publication No. 394/396

22.

The Bhikkhus' Rules - A Guide for Laypeople - The Theravadin Buddhist

Monk's Rules compiled and explained by Bhikkhu Ariyesako (http://www.accesstoinsight.org/lib/authors/ariyesako/layguide.html )

23.

சோழர்காலத் தமிழர்கள் பழச்சாற்றில் இஞ்சியை ஊறவைத்து குடித்துள்ளனர்

(கே.கே. பிள்ளை-பக். 348). கற்பூரத்தை வெற்றிலையுடன் மெல்லம் பழக்கமும்

இருந்துள்ளது (பக்.355)

பின் குறிப்பு:

நண்பர்களுக்கு..

இந்த தொடரை துவங்கியவுடன், குடிக்கலாச்சாரம் பற்றிய தொகுப்பு நூலை

வெளியிடும் புலம் பதிப்பகத்தின் நண்பர் லோகநாதன் அவர்கள், இந்நூல்

அச்சுப்பணிகள் முடிந்துவிட்டதால் ஓரிரு வாரங்களில் வெளிவருகிறது என்றும்,

எனக்கு நண்பர் மூலம் தகவல் வந்திருக்கும் என்று எண்ணியருந்ததாகவும் அஞ்சல்

ஒன்றை அனுப்பியுள்ளார். நூல் வெளிவருவதால், அடுத்த பகுதிகள் நூல்

வெளிவந்தபின் வெளியிடலாம் என்று தற்காலிகமாக நிறத்தப்படுகிறது. இதற்கு

பின்னோட்டம் இட்ட ஆர்வம் உள்ள நண்பர்கள் மற்றும் மெளனமாக வாசித்த

நண்பர்களுக்கும் இங்கு நூல் குறித்த குறிப்புகளை வெளியிடுகிறேன்.

இத்தொகுப்பு நூலில் மற்றும் சில நண்பர்கள், தமிழக அறிவுஜீவிகளால்

எழுதப்பட்ட கட்டுரைகள் வெளிவருகிறது என்பதையம் தெரிவித்துக் கொள்கிறேன்.

புத்தகத்தின் தலைப்பு : 'குடி'யின்றி அமையா உலகு

தொகுப்பாசிரியர்: முத்தையா வெள்ளையன்

வெளியீடு: புலம்

332/216, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,

திருவல்லிக்கேணி,

சென்னை 600 005

கைபேசி: 097898 64555.

- ஜமாலன் (ஆகஸ்ட் 24 2009)

 

குடிக்கலாச்சாரமும் கலாச்சாரக்குடிகளும் – பகுதி்-4

குடிக்கலாச்சாரம் பற்றிய எனது கட்டுரையின் 3-வது பகுதியை கீழ்கண்ட குறிப்புடன் முடித்திருந்தேன்.

நண்பர்களுக்கு..

இந்த தொடரை துவங்கியவுடன், குடிக்கலாச்சாரம் பற்றிய தொகுப்பு நூலை

வெளியிடும் புலம் பதிப்பகத்தின் நண்பர் லோகநாதன் அவர்கள், இந்நூல்

அச்சுப்பணிகள் முடிந்துவிட்டதால் ஓரிரு வாரங்களில் வெளிவருகிறது என்றும்,

எனக்கு நண்பர் மூலம் தகவல் வந்திருக்கும் என்று எண்ணியருந்ததாகவும் அஞ்சல்

ஒன்றை அனுப்பியுள்ளார். நூல் வெளிவருவதால், அடுத்த பகுதிகள் நூல்

வெளிவந்தபின் வெளியிடலாம் என்று தற்காலிகமாக நிறத்தப்படுகிறது. இதற்கு

பின்னோட்டம் இட்ட ஆர்வம் உள்ள நண்பர்கள் மற்றும் மெளனமாக வாசித்த

நண்பர்களுக்கும் இங்கு நூல் குறித்த குறிப்புகளை வெளியிடுகிறேன்.

இத்தொகுப்பு நூலில் மற்றும் சில நண்பர்கள், தமிழக அறிவுஜீவிகளால்

எழுதப்பட்ட கட்டுரைகள் வெளிவருகிறது என்பதையம் தெரிவித்துக் கொள்கிறேன்.

புத்தகத்தின் தலைப்பு :
'குடி'யின்றி அமையா உலகு

தொகுப்பாசிரியர்: முத்தையா வெள்ளையன்

வெளியீடு: புலம்

332/216, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,

திருவல்லிக்கேணி,

சென்னை 600 005

கைபேசி: 097898 64555.

நான்காவது பகுதி துவங்கி கட்டுரை தொடர்ச்சியாக இங்கு வெளியிடப்படகிறது. குடிக்கலாச்சாரமும் கலாச்சாரக்குடிகளும் – பகுதி்:1.

குடிக்கலாச்சாரமும் கலாச்சாரக்குடிகளும் –பகுதி:2

குடிக்கலாச்சாரமும் கலாச்சாரக்குடிகளும்.- பகுதி-3

கிறித்துவ

பரவாலாக்கம் மற்றும் புதிய ஏற்பாட்டின் பாதிப்பால் ஐரோப்பாவின்

குடிக்கும் வழக்கத்தில் மாற்றங்கள் நிகழ்ந்தன. ஏசு ஒயினின் (திராட்சை

மதுவின்) மிதமான குடியை அனுமதித்துள்ளார். அதேசமயம் மிகைக் குடியை அவர்

கடுமையாக எதிர்த்தார். தனது புகழ்பெற்ற கடைசி விருந்தில் ஏசு ஒயின்

அருந்தியது குறிப்பிடத்தக்கது ஆகும். புனித பவலின் பிந்தைய எழுத்துக்களில்

ஆல்கஹால் குறித்து கிறித்துவ இறையியல் அடிப்படையில் ஒரு முக்கியமான

பாடப்பொருளாக பேசப்பட்டுள்ளது. அவர் ஒயி்ன் கடவுளின் சிருஷ்டி அதனால்

சிறந்தது மருத்துவத்திற்கு பயன்படுத்தலாம் என்று கருதினார். அதேசமயம்

மிதமிஞ்சிய குடிப்பவர்களை பட்டினிப்போடுங்கள் என்றார். கி்.பி. 4 மற்றும் 5

ஆம் நூற்றாண்டில் தேவாலயங்கள் கடவுளின் சிறந்த பரிசாக ஒயினை அனுமதித்தன.

அதேநேரத்தில் மிகைக்குடியை பாவமாக அறிவித்தன. மேற்கு ஐரோப்பிய நாடுகளில்

கிறித்துவ மதத்துடன் திராட்சைப் பயிரிடுதலும் பரவத் துவங்கியது. சில

பாதிரியார்கள் சுவிசேஷப் பிரச்சாரத்துடன் திராட்சைப் பயிரிடலையும்

பரப்பினார்கள் (24). ஒருவகையில் பழங்குடிகளிடையே ஏற்பட்ட சமூக மாற்றமான

விவாசாய சமூக வளர்ச்சியில் முளைவிட்ட பெருமத நீரொட்டத்தில் பழங்குடி

மக்களை கலக்கச் செய்ததில் மதுவி்ற்கு ஒரு குறிப்பிடத்தக்கு பங்கு உண்டு.

அதனால்தான் மதங்கள் ஒரு கட்டத்தில் மிதமான குடியை அனுமதித்தும் அதன்

வளர்முகக் கட்டத்தில் பாவமாகவும் அறிக்கையிடுகின்றன.

கி.பி.

476-ல் ரோமப் பேரரசு வீழ்ந்தது.  மத்திய காலத்தில் (middle ages) ரோமப்

பேரரசு வீழ்ச்சிக்குப் பிறகு பீர் மற்றும் மதுவகைகள் தயாரிக்கும் கலை

துறவிகளிடமும், சேகரிப்பதற்கான இடங்களாக மடங்களும் இருந்து வந்துள்ளது

ஐரோப்பாவில் (25). துறவிகளும் மடங்களும் திராட்சைப் பயிரிடும் கலையை

பேணிவந்தனர். மது தயாரிக்க வடித்தெடுக்கும் முறைகளையே பின்பற்றினர். 

இம்முறைக் குறித்த அறிவை துறவிகள், மருத்தவர்கள் மற்றும் ரசவாதிகள்

அறிந்திருந்தனர். அக்காலத்தி்ல் ஒருவகை கடின-மதுவை “அக்வா விட்டே“ (aqua

vitae) எனப்படும் ”உயிர் நீர்” (water of life) என்ற சொல்லால்

குறிப்பிட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன (26). அதுவே பின்னாலில்

'பிராந்தி' என்கிற பெயரைப் பெற்றது. டச்சு மொழியில் பிராந்தி என்கிற சொல்

எரிக்கப்பட்ட அல்லது வடிக்கப்பட்ட மது என்கிற பொருளைக் கொண்ட ஒரு

சொல்லாகும் (27). ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு உருவான மறுமலர்ச்சிக்

காலத்தில் வாழ்க்கையின் வளர்ச்சியுடன் குடிக்கலாச்சாரமும் வளர்ந்து வந்தது.

அதன் பின்னான புதிய தொழில் வளர்ச்சிகள் மதுவகைகளையும் அதன்

நுட்பத்திட்பங்களையும் அதிகப்படுத்தியது.

1347-ல்

ஐரோப்பாவில் பரவிய பிளேக் நோயால் மக்களின் வாழ்க்கை மற்றும் இவ்வுலகில்

அவர்களது இடம் பற்றிய கண்ணொட்டங்கள் மாற்றமடைந்தன. உலகெங்கிலும் 75

மில்லியன் மக்கள் இறந்து போனதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 35-50

மில்லியன் மக்கள் ஐரோப்பியர்கள். 30-60 சதமானம்வரை ஐரொப்பிய மக்கள்தொகை

இதில் அழிந்துபோனதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது, ஐரோப்பியர்களில்

3-ல் 2 பங்கு மக்கள் அழிந்து போயினர் (28). மக்கள் இதனை எப்படிக்

கட்டுப்படுத்துவது என்பதறியாது திகைத்துப் போயினர். சில கிராமங்களில்

82-சதமானம் மக்கள் இறந்து போயினர். இந்த குழப்பநிலை மொத்த ஐரோப்பிய

வாழ்க்கை நிலையை பொருளாதாரத்தை பாதித்தது. இது மக்களின் மடமையையும்,

மூடத்தனத்தையும் கண்ட கடவுளின் சீற்றத்தின் விளைவாக கருதப்பட்டது. மக்கள்

மத்தியில் பரவலாகக் இவ்வெண்ணம் காணப்பட்டதை ஆய்வாளர்கள்

சுட்டிக்காட்டுகின்றனர் (29). இந்நிலையில் மிகையாகக் குடிப்பதன் மூலம்

இத்தகைய நோயிலிருந்து காப்பாற்றப்படலாம் என்று ஒரு சாரரும், மிதமான குடியே

காக்கும் என்று பிறதொரு சாரரும் கருதத் துவங்கியதாக சொல்கிறார் டேவிட்

ஹான்ச(30).  இது ஆல்கஹால் நுகர்வை அதிகப்படுத்தியது. மத்தியகாலத்தின்

இறுதிப் பகுதியில் இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஸ்காட்லாந் ஆகிய

நாடுகளில் பீர் பிரபலமடைந்தது. இங்கிலாந்தில் உருவான் பீ்ர் தயாரிப்பு

தொழிலகங்கள் அரசால் மற்றும் மக்களால் அங்கீகரிக்கப்பட்டன. போலியான பீர்கள்

தயாரிப்பது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டது (31). முக்கியம்

என்னவென்றால் மது ஒரு குடிபானமாக மாறியது. அதாவது ஐரோப்பாவில் மது ஒரு

உணவுப்பொருளாக மாறியது.

நவீன

காலத்தின் துவக்கத்தில் நகரங்கள், பெருநகர்கள் ஆகியவை தோன்றத்

துவங்கியது. அந்நிய நிலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவை காலனிகளாக

மாற்றப்பட்டன. உலகம் பற்றிய ஒரு புதிய பார்வை உருவாகியது. மத்தியகாலத்தில்

ஆதிக்கம் செய்த மதம்சார்ந்த வாழ்வும், அதன் சொர்க்கத்திற்காக

தயாரிக்கப்படும் உடல்கள் என்கிற பார்வையும் மாறியது. புரோட்டஸ்டன்ட்

மதசீர்திருத்தம் மற்றும் தேசிய அரசுகளின் தோற்றம் ஆகியவை புனித ரோம

அரசாட்சியின் கருத்தாக்கமான உலகலாவிய தேவாலயம் என்கிற கருத்தாக்கத்தை

சிதைத்தன. பகுத்தறிவு, தனிமனிதவாதம், அறிவியல் வளர்ச்சி ஆகியவை

கருத்தியலிலும், மரபான மதங்களின்மீது பெரும் தாக்கத்தை செலுத்தின.    நல்ல

கல்வி அறிவு, சொத்து போன்றவை சேர்ப்பதற்கான ஆர்வங்கள் அதிகரித்தது (32).

இவ்வுலக வாழ்க்கையும், இக்கணம் வாழ்வதற்கான ஊக்கமும் அதிகரித்தது.

இம்மாற்றங்கள் கிறித்துவ இறையியல் முன்வைத்த மது கடவுளின் கொடை மற்றும்

மிதமான குடி மகிழ்வை, உடல் ஆரோக்கியத்தை உருவாக்கும், ஆனால் மிகைகுடி

பாவமானது என்கிற கருத்தாக்கத்தை அப்படியே ஏற்றுக்கொண்டன (33).

இதிலிருந்து

18-ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் குடியின் பண்பாக மிதமானகுடி குறித்த

நேர்மறையான அனுகுமுறையும், மிகைக்குடி குறித்த எதிர்மறையான அனுகுமுறையே

நிலவிவந்ததை குறிப்பிடுகிறார் ஹான்சன் (34). மிகைக்குடி என்பது பொதுவாக

சுயத்தை இழப்பதாகவும், ஆன்மீக விடுதலைக்கும், சமூக ஒழுங்கமைப்பிற்கும்

எதிரானதாக பார்க்கப்பட்டது. போதை மனிதன் தன் சுயத்தின் அறிவை இழப்பதாகக்

கருதப்பட்டது. இருந்த போதிலும் ஆல்கஹால் நுகர்ச்சி ஐரோப்பிய நாடுகளில்

அதிகரித்துக் கொண்டே இருந்தது என்கிறார் ஹான்சன் (35). இது சமூக

ஒழங்கமைப்பிற்கு எதிராக தனிமனித சுயம் கண்டடைந்த ஒருவகை விடுதலை வெளியாக

செயல்பட்டிருப்பதையே அறிவுறுத்துகின்றது. பின் மது தயாரிப்பும்

பரவலாக்கமும் அதிகரித்தது. பிராவ்டல் என்கிற ஆய்வாளர் கூறுவதுபோல ஆல்கஹாலை

'16-ஆம் நூற்றாண்டு உற்பத்தி செய்தது, 17-ஆம்நூற்றாண்டு பலப்படுத்தியது,

18-ஆம் நூற்றாண்டு பரவலாக்கியது' (36).

19-ஆம்

நூற்றாண்டில் தொழில்மயமாதலின் வளர்ச்சியால் மனித உழைப்பு உழைப்புச்

சக்தியாவும், ஒரு பண்டமாகவும் மாற்றப்பட்டதால், மது குறித்த

கருத்தாக்கங்கள் பெரும் மாற்றங்கள் அடைந்து வந்ததைப் பார்க்கிறோம்.

நிலையான, நம்பத்தகுந்த, நேரந்தவறாத தொழிலாளிகளின் தேவை அதிகரித்ததை ஒட்டி

மது குடியை குறித்த அரசின், அதிகாரத்தின் கவனம் அதிகரித்தது. உழைப்பிற்கான

உடல்களை ஒழங்கமைப்பதற்காக உடல் குறித்த பல மருத்தவ மற்றும் உடலறிவியல்

ஆய்வுகள் அதிகமாக்கப்பட்டன. மதுவும் மிகைக்குடியும் பாவம் என்கிற

மதம்சார்ந்த கண்ணோட்டத்திலிருந்து ஆரோக்கியம் சார்ந்த முதலாளித்துவ

நலவாழ்வு கண்ணொட்டத்தில் மறுகட்டமைப்பு செய்யப்பட்டது.  மருத்துவமணை

என்கிற புதியநிலம் (new territory) உருவாக்கப்பட்டது. மருத்துவம் மனித

உடலின் மீது அதிகாரத்தை செலுத்தியது. ஒவ்வொரு தனிமனிதனும் இந்த அதிகாரத்தை

மனமுவந்து ஏற்றுக்கொள்வதற்கான தயாரிப்புகள் நடந்தன. ஒருவகையில் கடவுளின்

இடத்தை மருத்துவர்கள் கைப்பற்றினர். இயல்பான உடல்கள் மருத்துவ உடல்களாக

மாற்றப்பட்டன. தனிமனிதனின் சுயம் என்பது பகுத்தறிவின் வழியாக தன்னைத்தானே

கண்காணித்து சுயகட்டுப்பாடும், சுய தணிக்கையும் கொண்டதாக சுய ஒழுங்கின்

அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது. சுயம் சார்ந்த தொழில்நுட்பங்கள்,

பண்பாட்டுக் கருவிகள் கட்டமைக்கப்பட்டன. மதுக்குடி என்பது தொழில்மய

வளர்ச்சிக்கு ஒரு அச்சமூட்டும் எதிரியாக அறியப்பட்டது. காரணம் ஓய்வு என்பதை

குடியின் மூலம் மகிழ்விற்கானதாக மாற்றியமைப்பதால் ஏற்படும் தொழிலாளியின்

உடல் சோர்வும், அவனது சுயத்தின் தொழில்மய எந்திரவாழ்வின் ஒத்துப்போகாத்

தன்மையும் தொழிலாளியை தொழில் செய்வதற்கான மனோபாவத்தை சிதைப்பதை உணர்ந்த

முதலாளித்துவம் குடியை பாவமாக, நல்வாழ்விற்கு எதிரானதான ஒரு கருத்தியல்

கட்டமைப்பை உருவாக்கியது. அதற்காக மதப்பிரதிகள் மறுவாசிப்பு செய்யப்பட்டன.

ஒரு காலத்தில் மதுவை தயாரிக்கும் அறிவும், தொழிற்கூடங்களாகவும் இருந்த

மதபோதகர்களும், மடாலயங்களும் நல்லறம் போதிக்கும் கூடங்களாக மாறின.

ஒருநாளைக்கான

24 மணிநேரங்கள் 8 மணிநேர உழைப்பு, 8 மணிநேர ஓய்வு, 8 மணிநேரத் தூக்கம்

என்பதாக பங்கிடப்பட்டது. 8 மணிநேர உழைப்பிற்காக 8 மணிநேர ஓய்வும் 8

மணிநேரத் தூக்கமும் அளிக்கப்பட்டது. இவற்றின் மையமான நோக்கம் தொழிலாளியை

மறுநாள் உழைப்பதற்கான உழைப்புச் சக்தியாக மாற்றுவதே. அதாவது உழைப்புச்

சக்தியின் மறுஉற்பத்திக்கான நேரமாக இவை வழங்கப்பட்டன. மனித உடல் என்பது

உழைப்புச்சக்தியாக கட்டமைக்கபப்பட்டு தொழிற்சாலை எந்திரங்களின் ஒரு

உதிரிப்பாகமாக ஆக்கப்பட்டது. உலகம் எந்திரமயமான விதிகளால் விளக்கப்பட்டது.

எந்திரமயக் கருத்தியல் அடிப்படையிலான பொதுப்புத்திக் கட்டமைக்கப்பட்டது.

மனித உடல் எந்திரங்களின் விழைச்சுக்குள் சிக்கிக் கொண்டுவிட்ட இச்

சூழலில், தன்னைத்தானே சுயமாக ஒழங்கமைத்துக் கொள்ளும் எந்திரமாக  (self

regulated machines) மனித உடல் கட்டமைக்கப்பட்டது. மனித உடல் இந்த எந்திர

விழைச்சால் முற்றிலும் தன்னை அந்நியமாக உணரும் அதாவது மார்க்ஸ் சொன்ன

அந்நியமாதல் (Alienation) என்கிற நிலைக்கு ஆளானது. தனது மன அழுத்தங்களை

மடைமாற்ற பல பொழுதுபோக்கு மனமகிழ் நிகழ்வுகள் கட்டமைக்கப்பட்டன. மனிதனின்

மையயமாக உழைப்பும், விளிம்பாக பொழுதுபோக்கு என்கிற மன மகிழ்ச்சியும்

கட்டமைக்கப்பட்டது. மனிதனின் 8 மணிநேர ஓய்வை திரைப்படம், தகவல் தொடர்பு

ஊடகங்கள் ஆகியவற்றுடன் மதுக் குடியும் பங்கிட்டுக் கொண்டது. மது என்பது

உணவுப் பழக்கம் என்பதிலிருந்து பொழுதுபோக்கு மனமகிழ் நிகழ்வாக

மாற்றப்பட்டது. மனமகிழ்ச்சியின் ஒரு தற்காலிக பொய்ச் சுகமாக

மாற்றப்பட்டது.

தொழிற்சமூகத்துடன் உறவு கொண்ட நகர்மயமாதல்

ஆகியவற்றால் ஏற்படும் பக்க விளைவுகளான குற்றங்கள், வறுமை மற்றும்

குழந்தைகளின் இறப்புவீதம் போன்றவை மதுக்குடியின் விளைவாகக் காட்டப்பட்டன

என்கிறார் ஹான்சன். மக்கள்தொகை அதிகரிப்பும் மற்றும் வேலையில்லாத்

திண்டாட்டமும் மற்றும் தனிமனித, சமூக மற்றும் மதம்சார்ந்த அறவியல்

பிரச்சனைகள் எல்லாம் ஆல்கஹாலின் விளைவாக குற்றம் சாட்டப்பட்டன என்கிறார்

(37). மதுவை கட்டுப்படுத்தும் திட்டம் என்பது அரசு நடவடிக்கையாக இருந்த

போதிலும் அது வருமானம் தரும் ஒரு முக்கிய களமாகவும், அதே நேரத்தில்

முதலாளித்துவத்தின் ஒடுக்கமுறைகளை உணரமுடியாத அளவிற்கு மக்களை மனம்

மயக்கும் ஒன்றாகவும் இருக்கிறது. குடியை முறைப்படுத்துவது அரசின்

நோக்கமல்ல, குடியால் தினவாழ்வும் சமூக ஒழங்கும் சீர்குலைந்துவிடும் என்கிற

அச்சமே காரணம். 

(தொடரும்)

------------------------

அடிக்குறிப்புகள்.

24.

David J. Hanson, Ph.D.History of Alcohol and Drinking Around the World

(HADW) - Adapted from Hanson, David J. Preventing Alcohol Abuse:

Alcohol, Culture and Control. Wesport, CT: Praeger, 1995. (http://www2.potsdam.edu/hansondj/Controversies/1114796842.html)

25. மேற்படி கட்டுரை

26. மேற்படி கட்டுரை

27. மேற்படி கட்டுரை

28. PLAGUE AND PUBLIC HEALTH IN RENAISSANCE EUROPE -  http://www2.iath.virginia.edu/osheim/plaguein.html

29. David J. Hanson, Ph.D.History of Alcohol and Drinking Around the World (HADW)

30. மேற்படி கட்டுரை

31. மேற்படி கட்டுரை

32. மேற்படி கட்டுரை

33.Austin,

Gregory A. Alcohol in Western Society from Antiquity to 1800: A

Chronological History. Santa Barbara, CA: ABC - Clio, p. 194 quoted from

HADW

34.David J. Hanson, Ph.D.History of Alcohol and Drinking Around the World (HADW)

35.மேற்படிக் கட்டுரை.

36. Austin, 1985, p. 194 quoted from HADW

37. David J. Hanson, Ph.D.History of Alcohol and Drinking Around the World (HADW)

- ஜமாலன் (ஆகஸ்ட் 24 2009)

 

குடிக்கலாச்சாரமும் கலாச்சாரக்குடிகளும் – பகுதி்-5

kudi-wrapper01_thumb%5B4%5D.jpg?imgmax=8குடிக்கலாச்சாரமும் கலாச்சாரக்குடிகளும் – பகுதி்:1.

குடிக்கலாச்சாரமும் கலாச்சாரக்குடிகளும் –பகுதி:2

குடிக்கலாச்சாரமும் கலாச்சாரக்குடிகளும்.- பகுதி-3

குடிக்கலாச்சாரமும் கலாச்சாரக்குடிகளும் – பகுதி்-4

குடி மற்றும் மது என்பது ஒருhetairae_thumb%5B2%5D.jpg?imgmax=800

பண்பாட்டுக்காரணியாக வரலாற்றில் இருந்து வந்துள்ளதை பார்த்தோம். குடி

என்பது ஒவ்வொரு சமூக வளர்ச்சிக் கட்டத்திலும் பல்வேறுவிதமாக

அனுகப்பட்டுள்ளதைக் காண்கிறோம். பழுங்குடிகள் நிறைந்த ஒரு கணக்குழுச்

சமூகத்தில் குடி என்பது கடவுளின் கொடையாகவும், கடவுளுக்கு செலுத்தம்

நன்றிக்கடனாக அதையே வைத்து வழிப்படும் தெயவாம்சம் பொருந்தியதாகவும்

கருதப்பட்டது. அன்றைய மனிதனின் இயற்கையுடன் ஆன உரையாடலில், இவ்வுலக

வாழ்விற்கு அப்பாலான ஒரு வாழ்வை தருவதாக இருந்தது. கனவுகள் எப்படி ஒரு

அப்பாலை உலகை படைத்துக் காட்டுவதாக நம்பப்பட்டதோ அத்தகையதொரு உலகில்

வாழ்வதான உணர்வை தருவதாக இருந்ததால் குடி என்பது மனிதனின் இயற்கையுடன் ஆன

உரையாடலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. குடி என்பது பல கணக்குழுக்களின்

இறைவழிபாட்டுடன் கொண்டாட்டங்களையும் ஒருவரை ஒருவர் ஊடுறுவி

புரிந்துகொள்வதாற்கான வெளியையும் உருவாக்கியது. ஒருவகையில் கணக்குழுக்களின்

ஒன்று கலத்தலுக்கு இந்த நிகழ்வுகளும் குடியும் ஒரு காரணமாக அமைந்திருந்தன.

இங்கு பாவம் புண்ணியம் போன்ற மதம்சார்ந்த கருத்தாக்கங்கள் இல்லை. அதனால்,

அப்பாலை உலகு பற்றிய நம்பிக்கை என்பதற்கான அடிப்படைப் புனைவை இந்த குடிதான்

தந்திருக்க வேண்டும். சுவர்க்கம் என்பது பற்றிய புனைவையும் இந்த குடிதான்

தந்திருக்க வேண்டும். மனித அறிதலில் ஒரு இயல்கடந்த இருத்தலுக்கான அறிதலை

அல்லது கடந்துசெலல் என்பதான ஒரு மனோநிலையை தந்த முதல் ஆன்மீகப் பொருள்

மதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும். பின்னால் தோன்றிய மதங்கள் இந்த ஆன்மிக

உணர்வை தங்களது மூலதனமாக ஆக்கிக் கொண்டன ஆனால், குடியை பாவமாக

அறிக்கையிட்டன.

மதங்களின்

காலம் என்பது நாடோடிகளான மேய்ச்சல் சமூகத்திலிருந்து விவசாய சமூகத்திற்கான

மாற்றத்துடன் துவங்குகி்ன்றன. மதச் சமூகங்களில் குடி தரும் அப்பாலை உலகில்

சஞ்சரிப்பதான ஒருவகை போதையை மதங்கள் கருத்தியலான ஒரு அப்பாலை உலகு

இருப்பதாகவும் அதனை அடைய இவ்வாழ்வில் அறம் பேனும் உடல்களாக மாறவேண்டியதை

வலியுறுத்தி மது தரும் உணர்வை ஒருவகை ஆன்மீக உணர்வாக பதிலீடு செய்தன. மதுவை

மிதமான குடியில் அங்கீகரிப்பதும், மிகைக்குடியில் பாவம் என்பதாகவும்

தங்களது அறிக்கைகளை தயாரித்தன. உலகம் பாவம் புண்ணியம் என்கிற

கருத்தமைப்புகளால் கட்டமைக்கப்பட்டு உலகு பற்றிய பார்வை மற்றும் தினவாழ்வு

அத்துனையும் இந்த பாவ-புண்ணிய விளையாட்டுக்குள் உட்செலுத்தப்பட்டது. கணக்

குழுச்சமூகத்தில் தெய்வாம்சம் பொருந்தியதாக இருந்த மது மதச்சமூகங்களில்

பாவ-புண்ணியம் என்கிற கருத்தியலாக மாற்றப்பட்டது. உலகை

புரிந்துகொள்வதற்கான அடிப்படை சொல்லாடல்களமாக இந்த பாவ - புண்ணியம்

கட்டமைக்கப்பட்டது.

மதங்கள்

முற்றிலுமாக மதுவை தடை செய்வது, தனது வளர்ச்சிக்கு தடையாக இருக்கும்

என்பதால் குடி குறித்த இரட்டை நிலையை எடுக்கின்றன. குடியை மிதமானது மற்றும்

மிகையானது என்பதாக பிரித்து அவற்றுடன் பாவ-புண்ணியத்தை கட்டமைத்தன. இந்த

விளையாட்டின் உச்சமாக ஒடுக்கப்பட்ட பாவ உடல்கள் என்பது மிகைக்குடியின்

அதீதத்தில் திளைப்பதையும், மத எதிர்ப்புக் கொண்ட கருத்தாக்கங்கள் குடியை

ஒழிப்பதற்கு பதிலாக மதங்களின் நிலையையே எடுப்பதையும், சிலநேரங்களில்

மதங்களை தாண்டிய அறவொழுக்கம் பேசுபவையாக மாறி குடியை நிராகரிப்பதுமான

நிலைகளை எடுக்கின்றன. அதன்பின் வந்த தொழில் சமூகம் மதுவை

பாவ-புண்ணியத்திலிருந்து ஒருபடி மேலாக அறம் சார்ந்ததாக தனிமனித ஓழுக்கம்

சார்ந்ததாக நன்மை-தீமை என்கிற கட்டமைவிற்குள் கொண்டுவந்தது. இப்பொழுது

உலகை பார்ப்பதற்கான சொல்லாடல்களமாக நன்மை-தீமை என்பது கட்டமைக்கப்பட்டது.

குடிப்பது நன்மையா தீமையா என்பதான உடல்நலம் சார்ந்த கருத்தாக்கங்கள்

முன்வைக்கப்பட்டன.

தொழில்சமூகம்

குடியை நன்மை-தீமை என்பதன் அடிப்படையில் மருத்துவக் கருத்தாக்கமாக

மாற்றியது. குடி அதன் ஆன்மீகத் தன்மையிலிருந்தும், கட்டற்ற

களிப்பிலிருந்தும் நலம் சார்ந்த அல்லது ஆரோக்கியம் சார்ந்த கருத்தாக்கமாக

மாறியது. உலக வாழ்வு மற்றும் தினவாழ்வு என்பது பகுத்தறிவு சார்ந்த விஞ்ஞான

அறிதலை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட இச்சமூகத்தில் மருத்துவம்

என்கிற அறிவியல்துறை முக்கியமான, மையமயான சொல்லாடல்களமாக

கட்டமைக்கப்பட்டது. அரசு மற்றும் அதிகாரம் ஆகியவற்றின் வெளியே இருத்தலைக்

கொண்டதான தோற்றத்தை தரும் மருத்துவத் துறையின் வழியாக குடி பற்றிய

கருத்தாக்கங்கள் ஆய்வுகள் அறிக்கைகைள் செய்திகள் உருவாக்கிப்

பெருக்கப்பட்டது. மனித உடல் ஒரு மருத்தவ உடலாக மாற்றப்பட்டு அதில் குடி

என்பது ஆரோக்கிய கேடாக பொதுபுத்தியில் பதிவுறுத்தப் பட்டுள்ளது. மருத்துவ

துறையும் மருத்துவரும் அதிகார மையமயாக மாறினர்.  

பண்டைய

சமூகங்களில் குடி என்பது ஒரு சத்துணவாக உடல் ஆரோக்கியத்தைத் தரக்கூடியதாக

கருதப்பட்டது. காரணம், இயற்கையான பழங்கள் மற்றும் உணவுப்

பொருட்களிளிலிருந்து இயற்கையான முறையில் மது தயாரிக்கப்பட்டது. தற்சமயம்

கூட ஒரு மரத்திலிருந்து இறக்கப்படும் பனங்கள் மற்றும் தென்னங்கள்

சத்துணவாகவும், தினமும் அளவுடன் குடிக்கப்பட்டால் உடல் வலுவையும்

ஆரோக்கியத்தையும் தருவதாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிராமங்களில்

சத்துணவு அற்ற பெண்களுக்கும், சிறுவர், சிறுமிகளுக்கும் ஒரு மரத்துக் கள்

தினமும் தருவதைக் காணலாம். இயற்கையான பழச்சாறுகளும், கள்ளும் மற்றும்

தானியங்களான பார்லி, அரிசி, கோதுமை போன்றவற்றில் உருவாக்கப்படு்ம்

மதுவகைகள் சத்துணவாகப் பயன்படக் கூடியவையே. 'அமினோ அமிலங்கள் மற்றும்

வைட்டமின் ஆகியவற்றின் அளவு நொதித்தலால் அதிகரிக்கிறது' என்கின்றன

ஆய்வுகள்(38).

வீடுகளில்

தயாரித்த ரொட்டி என்கிற தொழில்நுட்பம் பேக்கரிகளாக மாறி வீடுகளை விட்டு

வெளியேறியதைப்போல மது தயாரிக்கும் தொழில்நுட்பமும் இயற்கையான வீட்டுத்

தயாரிப்பு முறைகளிலிருந்து வேதியியல் தொழிற்கூடங்களுக்கு மாறின. இந்த

மாற்றம் எப்படி ரொட்டிகளை ஒரு சரக்காக மாற்றியதோ, அதேபோன்று மதுவும் ஒரு

சரக்காக மாறியது. சரக்கு என்பது அதற்கான போட்டி மற்றும் கவர்ச்சியான பல

நுட்பங்களின் வழியாக மக்களின் நுகர்வை அடைவதைப்போல மதுவும் பலவிதமான

தயாரிப்புகளையும் அதற்கான பலவித நுட்பதிட்பங்களை கொண்ட எண்ணற்ற

'பிராண்டுகளாக' வெளிவருகின்றது. இவை அதிகமான ஆல்கஹால் அளவைக்

கொண்டிருப்பதன் மூலம் நெரடியாக உடலை பாதிக்கும் வேதிப்பொருளாக

மாறுகின்றன. ஆல்கஹாலின் மிக முக்கியமான பண்புகளில் ஒன்று அது நேரடியாக

இரத்தத்துடன் கலக்கும் தன்மை கொண்டது. எளிதில் சீரணிக்கும் திறன்

கொண்டதல்ல என்பதால் அது சீரண உறுப்புகளை பாதிக்கக் கூடியதாக உள்ளது.

'17-ஆம் நூற்றாண்டின் மத்திய காலத்திற்குப் பிறகுதான் ஐரோப்பிய நாடுகளில்

காப்பி மற்றும் தேயிலை தினசரி குடிக்கும் பழக்கம் துவங்கியது (39). அதற்கு

முன்பு பொதுவான குடிபானமாக இருந்துவந்தது மதுவே. அது ஆரொக்கியக் கேடாக

இருந்திருந்நதால் அது பரவலான பயன்பாட்டில் இருந்திருக்க வாய்ப்பில்லை.

ஆல்கஹாலிஸம்

எனப்படும் மிதமிஞ்சிய குடி என்பது ஒரு நோய் அல்ல. அது ஒரு உத்தேசம் அல்லது

ஊகமே என்கிறார் அமெரிக்க நியூயார்கில் உள்ள பால்டுவின் ஆய்வு நிறுவனத்தின்

ஆலோசகரான ஜெரால்ட் பிரவுன். 90 சதவீதம் மக்கள் அதை நோயாக நம்புகிறார்கள்.

நோய் என்கிற கருத்தாக்கமானது தோல்வியடைந்திருந்த பல மருந்து நிறுவனங்களின்

சஞ்சீவியாக அமைந்தது. பல கோடிக்கனக்கான பில்லியன் டாலர்களை

சம்பாரிப்பதற்கும், ஒரு மக்கள்திரள்-உளவியலை (pop-psychology) உருவாக்கவும்

உதவிகரமாக இருந்தது. ஆல்கஹாலிஸம் என்பது ஒரு தேர்வே ஒழிய நோய் அல்ல.

ஆல்கஹாலை தவறாக பயன்படுத்திக் கொள்வது அவர்களது தனிமனித தேர்வே. நொய்

என்கிற கருத்தாக்கத்தால் தனிமனித ஆரொக்கியம்பற்றிய பயமுறத்தல்

செய்யப்படுகிறது. 1800-ல்தான் பெஞ்சமின் ரஷ் என்பவரால் ஆல்கஹாலிஸம் ஒரு

நோய் என்கிற கருத்தாக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது. (40)

1956-ல்

அமேரிக்க மருத்துவக் கழகம் (American Medical Association (AMA))

ஆல்கஹாலிஸத்தை ஒரு உடல்நலக் குறைவாக (illness) அறிவி்த்தது. 1966-ல் அதை

ஒரு நோயாக (disease) அறிவித்தது. அதன்பின் NCA (National Counsel for

Alcoholism) மற்றும் NIAAA (National Institute for Alcoholism and Alcohol

Abuse) என்கிற அமைப்புகள் தங்களது நிதி உதவிகள் மூலம் நடத்திய ஆய்வுகள்

வழியாக அதை ஒரு முழுமையான நோயாக மாற்றின. அதன்பின் மருந்து நிறுவனங்களும்,

காப்பீட்டுக் கழகங்களும் இணைந்து இதனை நோயாகவும் அதனை தீர்ப்பதற்கான

வழிமுறைகளாக மருந்துகள் கண்டுபிடித்து பல மில்லியன் டாலர்கள் வருமானத்தைப்

பெற்றன. இதனை நோயாக மாற்றியவரான ஜெலின்க்ஸ் என்பவர் முன்வைத்து முதல்

ஆய்வுக் கட்டுரையான "Stages of the Alcoholic" என்பதுதான் இன்றுவரை

இந்நோய்க்கான நோய்தீர்ப்பு முறையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இக்கட்டுரையில் பல பிரச்சனைகள் விவாதித்திற்குரியதாக இருந்ததால் இதனை

ஜெலினக்ஸ் திரும்பப் பெற்றபோதும், இதுவே இன்றுவரை இந் நோய் தீர்க்கும்

வழிமுறைக்கான கையேடாக இருக்கிறது. ஆல்காஹாலிஸம் ஒரு நோய் என்பதும் அதற்கான

தீர்வு முறைகளும் அடிப்படையில் ஒரு மோசடியே என்கிறார் ஜெரால்ட். இதனை நோயாக

அறிவித்ததால், ஏற்படும் மற்றொரு விளைவு இதற்கான பொறுப்பை குடிப்பவர்

ஏற்பதில்லை, இப்பொறுப்பு மருத்துவத் துறையிடம் சென்றுவிடுவதால்

எற்படுத்தப்படும் நம்பிக்கை இம் மிகைக்குடியை அதிகரிக்கவே செய்கிறது.(41)

தனிமனித

வாழ்க்கையின்மீது குடும்பங்களின் செல்வாக்கு அதிகரித்த காலங்களில் அதாவது

முதலாளித்தவ சமூகம் குடும்பம் என்கிற தனி அலகை ஒரு சமூக அலகாக

உருவாக்கியப்பின்தான் குடி என்பது ஒரு தீமையாக மாறியது. குறிப்பாக

மிகைக்குடியில் ஆழ்ந்துபோன ஆண்களுக்கு எதிராகவும், குடும்பத்தின் வருமானம்

முழுவதும் குடிக்கே அழிவதையும் கண்டித்து குடியை எதிர்ப்பதற்காக பெண்கள்

இயக்கங்களாக போராட்டத்தில் குதிக்கத் துவங்கியவுடன் குடி என்பது ஒரு

சமூகத்தீமையாக மாறுகிறது. சிறுபான்மையினராக உள்ள இந்த மிகைக்குடியினரால்

பொதுவாக குடியே தீமை என்பதாக கட்டமைக்கப் பட்டுள்ளது.  குடி குறித்த

பெண்களின் கருத்தாக்கங்கள் நிச்சயமாக ஒரு ஆணாக நாம் உணருவதிலிருந்து

மாறுபட்ட பார்வையைத் தரக்கூடியதாக இருக்கும். அத்துறையில் பெண்ணிய

ஆய்வாளர்கள் கவனம் செலுத்தி குடி குறித்த பெண்ணிய நோக்கிலான பார்வைகள

முன்வைப்பது இத்துறைக்குறித்த உரையாடலை மேலெடுத்துச் செல்ல உதவும்.

குடியின்

மீதான ஈடுபாடு என்பதன் உளவியல் அம்சங்கள் இதன் முக்கியத்துவத்தை

வலியுறுத்தக்கூடியதாக உள்ளது. குடி என்பது அடையாள அரசியலுக்கு எதிரானதாக

உள்ளது. ஒரு தனிஉடலின் கட்டமைக்கப்பட்ட தன்னிலையிலிருந்து வெளியேறி ஒரு

இயல்நிலையை அடைவதை குடியின் போதை சாத்தியமாக்குகிறது. உடல்களின் இரண்டு

தன்மைகளான இயல் உடல்களுக்கும், கலாச்சார உடல்களுக்கும் இடையிலான முரணை

தீர்ககும் ஒரு தற்காலிக வெளியாக உள்ளது. இயற்கை உடலின்மீது கட்டப்பட்ட

கலாச்சார உடலிலிருந்த வெளியேறும் செயலை செய்வதாகிறது. மிகைக் குடி

ஏற்படுத்தும் 'ஹேங்-ஓவர்" எனப்படும் குடிக்கு பின்பான அவஸ்த்தைகள் மற்றும்

குடியினால் எற்படும் உடல் ஒவ்வாமையால் வரும் வாந்தி போன்ற உடலியல்

உபாதைகளுக்கு ஆட்பட்ட போதிலும் ஒரு உடல் திரும்ப திரும்ப குடியை நாடிச்

செல்வது இந்த இயல் உடலை கண்டடைவதில ஏற்படும் ஆனந்தத்தின் விளைவே. யதார்த்த

வாழ்க்கைச் சூழலில் ஏற்படும் குடும்பம், பணியிடம் மற்றும் அரசு சார்ந்த மன

அழுத்தங்கள் மற்றும் நெருக்கடிகள் ஆகியவற்றிலிருந்து விடுபடும் ஒரு தளமாக

இருப்பதும், அது ஏற்படுத்தும் கூட்டுணர்வும் ஒரு தற்காலிக விடுதலை உணர்வை

தருவதாக உள்ளது. இன்றைய தொழில்மய உலகின் எந்திரமயமாதலிலிருந்து உருவாகும்

அந்நியமாதலுக்கு எதிரான ஒரு கூட்டிணைவு மனநிலையை இது உருவாக்குகிறது. குடி

என்பது ஒரு உடலின் படைப்பூக்கமிக்க செயலாக இருப்பதுவே அதன் மீதான

நாட்டத்திற்கு அடிப்படை எனலாம். ஒருவனது ஆழ்மனதிலான வெட்கையை

வெளிப்படுத்தக் கூடியதாக இருப்பதும், இயல் வாழக்கையின் கவலையை மறந்து ஒரு

சுதந்திர வெளியில் செயல்படுவதுமான உணர்வே குடியை மீண்டும் மீண்டும் நாடிச்

செல்வதாக உள்ளது. குடி என்பது பன்னெடுங்கால மனித நினைவுகளில் ஒன்றாக உள்ளது

அதன் மீதான ஆழ்மனப் பிடிப்பிற்கான அடிப்படையாக உள்ளது.

மது

குறித்து மருத்துவம் கூறும் மற்றொரு கருத்து அது பலவிதமான நோய்களை

உருவாக்கும் தன்மை கொண்டது மற்றும் சீரண உறுப்புகள், நடு நரம்பு மண்டலம்

ஆகியவற்றை பாதிக்கும் என்பது. இக்கருத்து மிகையான குடியால் வருவதே. மிகையாக

உண்ணும் உணவும்கூட உடல்நலத்தை பாதிக்கக்கூடியது என்பதால் உணவை முற்றிலுமாக

ஒதுக்ககுவதோ எதிர்மறையாக அனுகுவதொ இல்லை. மிகைக் குடிக்கான காரணங்களில்

ஒன்று, மையமான உணவுப் பழக்கமாக இருந்த மது சமூகத்தின் விளிம்பிற்கு

தள்ளப்பட்டதே.  மிதமான குடி பற்றிய பரவலான ஆய்வுகள் குடிக்கு சாதகமான

விளைவுகளைப் பற்றியும் பேசுகின்றன. மிதமான குடி என்பது ஒரு பண்பாட்டு

நடடிக்கையாக ஒரு கூட்டுணர்வின் வெளிப்பாடாக ஒரு விழாக்காலக் கொண்டாட்டமாக

சிலவேளை தினசரி உணவுப்பழக்கமாக வரலாற்று நெடுகிலும் இருந்து வந்துள்ளது.

குடி என்பது மனிதனின் பன்னெடுங்கால நினைவில் இருந்து வரும் ஒரு ஆன்மீக

உணர்வுடன் தொடர்புடையது. அதனை மதவாதச் சொல்லாடலான பாவ - புண்ணித்துடனோ

அல்லது முதலாளித்துவ சொல்லாடலான நன்மை - தீமையுடனோ இணைத்துப் பார்க்க

வேண்டியதில்லை. ஒவ்வொரு தனித்த உடலினதும் உரிமையாக இருப்பது. ஒருவர் உடல்

நலம் பேணுவதற்காக குடியை மறுக்கலாம், மற்றறொருவர் குடியால் உடல் நலத்தை

பேண முயலலாம், இது அவரவர்களின் தேர்வு என்றபோதிலும், அரசியல்

மயமாக்கப்பட்ட அடையாளங்களின் குறிகளாக மாறிப்போன உடல்கள் தங்களது

தன்னிலைக் கரைந்த அதிகாரமற்ற ஒரு இயல்பு வெளியில் தன்னை ஒரு அடையாளமற்ற

கொண்டாட்ட உடலாக மாற்றிக்கொள்வதற்கான 'கார்னிவல்' திருவிழாவாக இருப்பது

குடிக்கலாச்சாரத்தின் ஒரு முக்கிய அரசியல் மற்றும் பண்பாட்டு நிகழ்வு

என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.

kudi-wrapper_thumb%5B2%5D.jpg?imgmax=800

(முத்தையா வெள்ளையனால் தொகுக்கப்பட்ட 'குடியின்றி அமையா உலகு" (2009) என்கிற தொகுப்பில் வெளியிடப்பட்டது.)

- ஜமாலன். 10 செப்டம்பர், 2008.

அடிக்குறிப்புகள்

38.Ferme

Ghaliounqui, Paul. Fermented Beverages in Antiquity. In:Gastineau,

Clifford F., Darby, William J., and Turner, Thomas B. (Eds.) Fermented

Food Beverages in Nutrition. New York: Academic Press, 1979. pp. 8-9

quoted from HADW

39.Austin, 1985, pp. 251, 254,351, 359,366 quoted from HADW

40.Alcoholism: A disease of speculation -Gerald Brown - http://www.baldwinresearch.com/alcoholism.cfm.

41. மேற்படி கட்டுரை.

பயன்பட்ட கட்டுரைகள், நூல்கள்.

1.Hanson, David J. Preventing Alcohol Abuse: Alcohol, Culture and Control. Wesport,

CT: Praeger, 1995.(http://www2.potsdam.edu/hansondj/Controversies/1114796842.html)

2. History of Science and Technology in Islam (http://www.history-science-technology.com/Notes/Notes%207.htm)

3.Social and Cultural Aspects of Drinking - Culture Chemistry and Consequence (http://www.sirc.org/publik/drinking6.html)

4.Alcohol And Health - http://www2.potsdam.edu/hansondj/AlcoholAndHealth.html

5.Encyclopaedia of Hinduism - By Nagendra Kumar Singh - Published by Anmol Publications PVT. LTD.- First Edititon - 2001

6. Encyclopedia Britanica 2007 edition

7. Wikipedia - Online Encyclopedia

8. Microsoft Encarta Encyclopedia

9. Biological Impacts Of Alcohol Use: An Overview By: Michaele P. Dunlap, Psy.D, Clinical Psychologist.  (http://www.oregoncounseling.org/ArticlesPapers/Documents/ETOHBIOFx.htm)

10.Beverage Alcohol Labeling: Public Opinion Strongly Supports Alcohol Content and Nutritional Labels.  (http://www2.potsdam.edu/hansondj/Controversies/20080523105322.html)

11. Global Status Report on Alcohol 2004 - World Health Organization (WHO).

12. Hebrews And Vedic Brahmins -Dr. Samar Abbas, Aligarh, India http://www.vnn.org/editorials/ET0307/ET14-8222.html

13. டாக்டர் கே.கே. பிள்ளை - தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் (மறுபதிப்பு 2007) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

14.

The Sigalovada in Pictures - Compiled by Venerabe Kandarapanguwe

Dhammasiri - First Edition 1995 - Budda Dharma Education Association

Inc.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குண்டன், உங்களை மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி!

 

ஆறுதலாக வாசித்தபின்பு கருத்தை எழுதுகின்றேன்!

 

பதிவுக்கு நன்றிகள்! :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.