Jump to content

2ஜி முறைகேட்டிற்கு ராசாவே முழுப் பொறுப்பு: ஜே.பி.சி. அறிக்கை


Recommended Posts

2ஜிஅலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டில் பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் சிதம்பரத்திற்கும் தொடர்பில்லை என்றும் இந்த முறைகேட்டிற்கான முழுப்பொறுப்பும் அப்போதைய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவையே சாரும் என்றும் நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் வரைவு அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த ஊழல் விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் மேற்பார்வையில் சி.பி.ஐ. தனி நீதிமன்றம்  விசாரணை நடத்தி வருகிறது.

மேலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பி.சி.சாக்கோ தலைமையிலான பாராளுமன்ற கூட்டுக்குழுவும் தனியாக விசாரணை நடத்தியது. இந்த குழு, 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பல்வேறு நபர்களுக்கு ‘சம்மன்’ அனுப்பி அவர்களை அழைத்து விசாரணை நடத்தியது. அவர்கள் அளித்த சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

இந்த நிலையில் கூட்டுக்குழு தனது விசாரணையை முடித்து, வரைவு அறிக்கையை கூட்டுக்குழுவில் உள்ள 30 உறுப்பினர்களுக்கும் வழங்கி உள்ளது. அந்த அறிக்கையில் உள்ள விவரங்கள் வெளியாகி உள்ளன. அதில், 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமர் குற்றறமற்றவர் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

அந்த வரைவு அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய விவரங்கள் வருமாறு:

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டு இருப்பது ஏற்கக்கூடியதாக இல்லை. அந்த மதிப்பீடு சரியானது அல்ல.

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேட்டில் பிரதமர் மன்மோகன்சிங்குக்கும், நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. பிரதமருக்கு அப்போதைய தொலைத்தொடர்பு துறை மந்திரி ஆ.ராசா தவறாக வழிகாட்டி இருக்கிறார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டுக்கான கொள்கையை மாற்றியது பற்றி பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ஆ.ராசா தெரிவிக்கவில்லை. ஒதுக்கீட்டுக்கான விதிமுறைகள் மாற்றப்பட்டதில் மன்மோகன்சிங்குக்கும் ப.சிதம்பரத்துக்கும் எந்த பங்களிப்பும் கிடையாது. அலைவரிசை ஒதுக்கீட்டில் ஒளிவு மறைவற்ற தன்மையும் ஏற்கனவே இருந்த நடைமுறைகளும் விதிமுறைகளும் பின்பற்றப்படும் என்று பிரதமருக்கு ஆ.ராசா அளித்த வாக்குறுதி பொய்யாகி விட்டது.

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கையை அமல்படுத்தும் விஷயத்தில், உண்மைக்கு மாறாக ஏற்கனவே இருந்த சில நடைமுறைகள் மாற்றப்பட்டு உள்ளன. இதில் பிரதமருக்கும், நிதியமைச்சருக்கும் எந்த தொடர்பும் கிடையாது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்று இல்லாமல், தொலைத்தொடர்பு அமைச்சகம் ஏல முறையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஒதுக்கி இருக்க வேண்டும்.

அலைவரிசை ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை ஆ.ராசா மாற்றி இருக்கிறார். இது தொடர்பான 7.1.2008ஆம் தேதியிட்ட பத்திரிகை செய்திக்குறிப்பில் அவர் திருத்தம் செய்து இருக்கிறார். இது முறைகேட்டுக்கு வழிவகுத்து உள்ளது.

இது தொடர்பான பத்திரிகை குறிப்பு திருத்தத்துடன் ஒப்புதல் அளிக்கப்படுகிறது என்ற வாசகத்தை ஆ.ராசா சேர்த்து இருக்கிறார். இதற்கான தடய ஆதாரம் சிக்கி இருப்பதாக சி.பி.ஐ. தெரிவித்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் பெறுவதற்காக நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் கடைசி கூட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெறும் என்றும், அதன்பிறகு வருகிற மே மாதம் இறுதி வாரத்தின் முதல் வாரத்தில் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

 
 கூட்டுக்குழுவின் வரைவு அறிக்கையானது ஏமாற்றத்தை தருவதாகவும், பிரதமர் மற்றும் நிதி அமைச்சரை காப்பாற்றும் வகையிலேயே அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் பாரதிய ஜனதா, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

 

 

http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14125:2g-spectrum-raja&catid=36:tamilnadu&Itemid=102

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.