Jump to content

மாவீரன் பால்ராஜ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

58202_369900196438883_780284221_n1-600x4

சிக்கலாகிவிட்ட களங்களில் தனிவீரம் காட்டி வெற்றிகளை எம்பக்கம் திருப்பிவிட்ட புலி வீரர்களை நான் கண்டுள்ளேன். நாங்கள் எதிர்பார்த்தபடி சண்டையின் போக்கு அமையாமல் எங்களுக்கு எதிராக எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்ட வேளைகளில், கட்டளைப்பீடத்தில் இருந்தபடி, சூழ்நிலைக்கேற்றவாறு சண்டை வியூகங்கள் அமைத்து தன்னம்பிக்கை தெறிக்கும் கட்டளைகளால் போராளிகளை வழிநடாத்திச் சண்டைகளை வென்ற தளபதிகளை நான் கண்டிருக்கின்றேன்.

 

ஒரு தாக்குதலுக்கு முன், சண்டைக்கான தயார்ப்படுத்தல்களை இரவு – பகல் பாராது ஓடியோடி உழைத்து – வெற்றிகளுக்கு அத்திவாரமாகத் திகழ்ந்த தளபதிகளை நான் கண்டிருக்கின்றேன்.

 

ஆனால் இந்த வீரதீர பண்புகள் அனைத்தையும் ஒருங்கே கொண்டிருந்த புலிவீரர்களில் ஒருவரை நான் கண்டிருக்கின்றேன். அது பால்ராச் அவர்கள் தான்.

கெரில்லா வீரனாக போராட்டத்தில் இணைந்து, சண்டைகளின் வளர்ச்சிக்கேற்ப தன்னையும் வளர்த்து, சிங்களப் படை முகாம்கள் மீது பெருந்தாக்குதல்களைத் தலைமையேற்று நடாத்தி-மரபுப்போர்களையும் வெற்றிகரமாக நடாத்தி வீரநாயகனாக பிரிகேடியர் பால்ராஜ் வலம் வந்திருந்தார்.

 

சண்டைகளுக்கு பால்ராச் அவர்கள் தலைமை தாங்குகின்றார் என்றால், களத்தில் நின்று போராளிகளுடன் ஒரு போராளியாகச் சண்டையிட்டபடி தலைமை கொடுப்பது அவரின் தனித்துவமான பாணி. களத்தில் அவர் நிற்கின்றார் என்றால் அங்கே இருக்கும் போராளிகள் அனைவருக்கும் இறக்கை முளைத்தது போல் உற்சாகத்தின் உச்சியில் நிற்பார்கள்.

 

தமிழீழப் போரரங்கில் காட்சி மாற்றங்களை தமிழினத்திற்குச் சார்பாக ஏற்படுத்திய களங்களின் அதிபதியாக பால்ராஜ் இருந்தார் என்பது வரலாற்று உண்மை.

எமது இயக்கம் நடாத்திய பாரிய படைத்தள அழிப்பான மாங்குளம் படை முகாம் தகர்ப்பில் இருந்து – ஆனையிறவுப் படைத் தளத்தின் அழிவுக்கு வித்திட்ட இத்தாவில் பெட்டிச் சண்டை வரை பிரிகேடியர் பால்ராச்சின் வீரச் செயற்பாடுகள் ஒரு வீரவரலாறாக விரிந்து செல்லும்.

 

தலைவரின் போரியல் திட்டங்களை போரியல் சிந்தனைகளை அச்சொட்டாக களத்தில் நடைமுறைப்படுத்திக்காட்டி ஒரு முன்னுதாரண வீரனாக – முன்னுதாரணத் தளபதியாக சாதித்துக் காட்டியவர்.

வெற்றியைத் தவிர வேறெதற்கும் இடமில்லாத சண்டைக் களங்களை வழி நடாத்த ஒரு தளபதியைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் எழுந்தால் தலைவரின் தேர்வாக எப்போதும் பால்ராச் அவர்கள் இருப்பார். தலைவர் சொன்னதை பால்ராச் செய்து காட்டுவார்.

*****

பால்ராஜ் அவர்களையும் – அவரின் வீரத்தையும் நான் முதன்; முதலில் அறிந்து கொண்டது 1986 இல். அப்போது கிளிநொச்சியில் இருந்த படைமுகாமை நாம் முற்றுகைக்குள் வைத்திருந்த காலம். ஒருநாள் திருநகர் பக்கமாக சிங்களப்படை ஒரு நகர்வைச் செய்து எமது முற்றுகையை உடைக்க முயற்சி எடுத்தது.

முற்றுகையை காவல் காத்த எங்களால் எதிரியின் நகர்வைத் தடுக்கமுடியாமல் போக – பசீலன் அண்ணையின் தலைமையிலான முல்லைத்தீவுப் படையணி உதவிக்கு வந்தது.

 

நகர்ந்த படையினர் மீது பசீலன் அண்ணை தலைமையிலான அணி வேகமான முறியடிப்புத் தாக்குதலை நிகழ்த்தியது. ஒரு கவச வாகனம் சிதைக்கப்பட்டு சில படையினர் கொல்லப்பட சிங்களப் படை மீண்டும் முகாம்களுக்குள்ளே தஞ்சம் புகுந்தது.

சண்டை முடிந்ததும் பால்ராஜ் என்ற பெயர் எல்லோர் வாய்களிலும் உச்சரிக்கப்பட்டது. அவரது முகம் தெரியாத நிலையிலும் அவரது பெயர் எனது மனதில் பதிந்து விட்டது. அந்தச்சண்டை வெற்றிக்கு பசீலண்ணையுடன் பால்ராச்சும் சேர்ந்து வெளிப்படுத்திய வீரம் தான் முக்கிய காரணமாக இருந்தது.

 

பசீலன் அண்ணை தான் தனக்கு சண்டை பழக்கியதாக பால்ராச் அவர்கள் அடிக்கடி சொல்வார். பால்ராச் என்ற வீரன் பசீலன் என்ற வீரனின் சண்டைத் திறனைப் புகழ்ந்து பேசும்போது இந்த வீரனும் – அந்த வீராதி வீரனும் எங்களது மனங்களில் புகுந்து நிலையெடுத்துக் கொள்வார்கள்.

 

இந்தியப் படையினர் யாழ்ப்பாணத்தில் சண்டையைத் தொடங்கிய போது பசீலன் அண்ணை தலைமையிலான முல்லைத்தீவு மாவட்டப் படையணி யாழ்ப்பாணம் வரவழைக்கப்பட்டது. அந்த அணியில் பால்ராச் அவர்களும் ஒருவராகச் சென்றார்.

கோப்பாய் சண்டைக்களம் இவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அந்தக் களத்தில் இந்தியரின் டாங்கி ஒன்று அழிக்கப்பட்டது. இந்த டாங்கி அழிப்பிற்கு பால்ராஜ் அவர்கள் காரணமாக இருந்தார் என்று நான் கேள்விப்பட்டேன்.

 

இந்தக் கோப்பாய்ச் சண்டைக்களத்தின் கடுமையை இந்தியப்படையின் கட்டளைத்தளபதி மேஐர் nஐனரல் கர்க்கிரத்சிங், தான் எழுதிய நூலிலும் சிறப்பிடம் கொடுத்துக் குறிப்பிட்டுள்ளார்.

 

கோப்பாய் சமரை முடித்துக்கொண்டு பசீலன் அண்ணை தலைமையிலான அணி முல்லைத்தீவு திரும்பியது. முல்லைத்தீவிலும் இந்தியப்படையுடன் ஒரு நேரடிச் சண்டை தொடங்கியது.

 

முல்லைத்தீவில் முகாம் அமைத்திருந்த இந்தியப்படைகள் நந்திக்கடலோர வெளிகளைத்தாண்டி தண்ணீர் ஊற்று மக்கள் குடிமனைக்குப் புக முயற்சி செய்த போது பசீலன் அண்ணை தலைமையிலான அணியினர் நடாத்திய மறிப்புச்சண்டைக் கதை விறு விறுப்பானது. அந்தச் சண்டையின் ஒரு கட்டத்தில் மேஐர் பசீலன் வீரச்சாவடைந்து விட்டார். படைத்தளபதியை இழந்த நிலையிலும் சண்டை அதே விறுவிறுப்புடன் நடந்துகொண்டிருந்தது. பசீலனின் இடத்தைப் பொறுப்பெடுத்த பால்ராஜ் அவர்கள் அந்தக்களத்தில் காட்டிய தலைமைத்துவ ஆற்றலும் சண்டைத்திறனும் ஒரு வீரத்தளபதியைத் தலைவருக்கு இனங்காட்டியிருந்தது.

மேஜர் பசீலன் வகித்த முல்லைத்தீவு மாவட்டத் தளபதி என்ற பொறுப்பை பால்ராஜ் ஏற்றார். முல்லைத்தீவு – கிளிநொச்சி – வவுனியா என்ற மூன்று மாவட்டங்களில் முல்லைத்தீவில் தான் இந்தியப் படைக்கெதிரான தாக்குதல்கள் அதிகம் நிகழ்ந்தன. அதற்கு பால்ராஜ் அவர்களின் முயற்சியும் ஆர்வமும் தான் காரணம். பால்ராச் அவர்களிடம் இருந்த இந்தத் தலைமைத்துவ ஆற்றல் தலைவரை வெகுவாகக் கவர்ந்தது.

 

தனது இடத்திற்கு அவரை அழைத்த தலைவர் அவர்கள் இந்தியப் படைக்கெதிரான தாக்குதல்களை வன்னியெங்கும் தீவிரப்படுத்த வேண்டும் என்று கட்டளையிட்டு – போரியல் ஆலோசனைகளையும் வழங்கி வன்னி மாவட்டத்தின் தளபதியாக பால்ராச்சை நியமித்தார்.

 

முல்லைத்தீவு – வவுனியா – கிளிநொச்சியை உள்ளடக்கிய வன்னி மாவட்டத்தில் தாக்குதல்களைத் தீவிரப்படுத்த ஒரு நடைப்பயணத்தைத் தொடங்கினார் பால்ராச்.

இந்தியப்படைக் காலத்தில் வாகனங்களில் போராளிகள் பயணிக்கக்கூடாது என்பது தலைவரின் கண்டிப்பான கட்டளை. தேவையற்ற வகையிலான இழப்புகளைத் தவிர்க்கவே அந்த உத்தரவு இதை பால்ராஜ் முழுமையாக நடைமுறைப்படுத்தினார்.

மணலாற்றின் மையப்பகுதியில் தலைவரைச் சந்தித்துவிட்டு முல்லைத்தீவு கிளிநொச்சி – வவுனியா என்று நடைப்பயணம் செய்து போராளிகளைச் சந்தித்து – அவர்களை ஊக்கப்படுத்தி – தாக்குதல் திட்டங்களையும் கொடுத்து – தலைவரின் கட்டளைகளையும் நினைவூட்டி ஒரு பம்பரம் போல் அவர் சுழன்று திரிந்தார்.

அவர் நடந்து போய் வருகின்றாரா! வாகனத்தில் போய் வருகின்றாரா! என்று எங்களுக்குள் பகிடி கதைப்பது வழமை. அந்தளவுக்குப் பயணத்தில் வேகம், வேலை முடிந்ததும் உடனடியாகவே அடுத்த பயணம், அவரின் முகத்தில் சோர்வும் தெரிவதில்லை, களைப்பும் தெரிவதில்லை.

 

படையினர் மீதான தாக்குதல் என்று வரும் போது வேவு பார்த்து – திட்டமிட்டுத் தாக்குவது ஒரு போரியல் வழமை. போகுமிடங்களில் எதிரிப்படை எதிர்ப்படும் போது உடனடியாகவே திட்டம் தீட்டித் தாக்குதல்களை நடாத்துவது கடினம்.

ஆனால் இது கடினமானது தவிர்க்கப்பட வேண்டியது என்று பால்ராஜ் நினைப்பதில்லை. எதிரி தென்பட்டால் உடனடியாகத் தாக்கு என்பது அவரின் கருத்து.

வன்னி மாவட்டத்திற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு; அக்கராயன் காட்டுப்பகுதியில் தரித்திருந்த ஒரு அணியைச் சந்திக்க அவர் தன் மெய்ப்பாதுகாவலர் அணியுடன் வந்திருந்தார். கொக்காவிலுக்கும் ஐயன்கன்குளப் பகுதிக்குமிடையே இந்தியர்களின் ஒரு ரோந்து அணியை எதிர்கொள்ள வேண்டி வந்தது. அந்த எதிரி அணிமீது தாக்குவோம், என்று பால்ராச் அவர்கள் புறப்பட்டார்.

பால்ராஜ் அவர்களின் மெய்க்காப்பாளர் தவிர நாங்கள் நான்கு, ஐந்து போராளிகள் மட்டும் அங்கு இருந்தோம். பால்ராஜ் அவர்களின் பாதுகாப்பை முன்னிட்டு அவரின் மெய்க்காப்பாளர் அணியை சண்டைக்கு எடுக்க நான் விரும்பவில்லை, சண்டையைத் தவிர்த்து எமது பயணத்தைத் தொடர்வோம் என்று அவருக்கு கூறினேன்.

ஆனால், அந்த ரோந்து அணி மீது தாக்குதல் நடாத்தியே தீரவேண்டும் என்று அவர் விரும்பினார். தானும் சண்டைக்கு வருவதாகக் கூறினார். ஆனால் அவரைப் பாதுகாக்க வேண்டிய கடமை எனக்கு இருந்ததால் நான்; மாற்றுத் திட்டம் ஒன்றை அவருக்குக் கூறினேன்.

 

இரண்டு மூன்று பேருடன் பால்ராச் அவர்கள் பாதுகாப்பாக நிற்க மற்ற அனைவரும் ஒரு அணியாகி பதுங்கித்தாக்குதலை நடாத்துவது என்ற முடிவெடுக்க பால்ராச் அவர்களும் சம்மதித்தார்.

 

வெற்றிகரமாகப் பதுங்கித் தாக்குதலை நடாத்தி 15 படையினரைக் கொன்று ஆயுதங்களையும் கைப்பற்றினோம். எங்களில் ஒருவர் வீரச்சாவு. நானும் காயப்பட்டு விட்டேன்.

 

அப்போது கொக்காவில் பகுதியில் இருந்து இந்திய அணியொன்று தனது அணிக்கு உதவவென விரைவாக மக்கள் மூலம் தகவல் கிடைக்க அந்த உதவிப் படையைத் தான் பார்த்துக் கொள்வதாகவும்; எமது அலுவல்களை விரைவாக முடிக்கும் படியும் பால்ராஜ் அவர்கள் தொலைத்தொடர்புக் கருவி மூலம் எமக்கு அறிவித்தார்.

 

பதுங்கித்தாக்குதலில் ஈடுபடுவது சில வேளைகளில் அவருக்கு ஆபத்தாக முடிந்துவிடும் என்று கருதி நாங்கள் அவரைப் பாதுகாக்க, அவரோ அதைவிட அபாயகரமான வழிமறிப்புத் தாக்குதலில் அதுவும் இரண்டு மூன்று போராளிகளுடன் தானே இறங்கிவிட்டார்.

ஆனாலும், அந்த எதிரிக்கான உதவி அணி வரவில்லை. அவ்விதம் வந்திருந்தால்; அந்த எதிரி அணியை அழித்தொழித்திருப்பார். அல்லது சண்டையில் இவர் வீரச்சாவடைந்தபின் அந்த எதிரி அணி வந்திருக்கும்.

 

எதிரி அணிவராமல் விட்டது இந்திய அணியின் அதிஸ்டமோ எங்;களது அதிஸ்டமோ தெரியவில்லை.

 

படை முகாம் மீதான ஒரு தாக்குதல் திட்டத்தைத் தலைவர் கொடுத்துவிட்டார் என்றால் பால்ராச் ஓய்வு – உறக்கம் கொள்ளமாட்டார். அதே சிந்தனையுடன் திரிவார். முற்தயாரிப்புகள் சரியாக நடைபெறுகின்றனவா என்று நேரே தேடிச்சென்று பார்ப்பார்.

வேவு நடவடிக்கைகளில் ஒரு சிறு சந்தேகம் ஏற்பட்டாலும், அந்த வேவுத் தகவலை உறுதிசெய்ய தானே ஒரு வேவு வீரனாகிக் கடமைக்குச் செல்வார். ஒரு கட்டளைத்தளபதி எதிரி முகாமின் கம்பிவேலி வரை இரவில் சென்று வேவுத் தகவல்களை உறுதிப்படுத்தும் தேவை ஏற்படும் போது பிரிகேடியர் பால்ராஜ் அதையும் செய்தார்.

 

ஒரு படைமுகாம் மீதான தாக்குதலுக்கு முன் நூற்றுக்கணக்கில் தயார்ப்படுத்தல் வேலைகளைச் செவ்வனே செய்து முடித்திருக்க வேண்டும். இந்த வேலைகளில் தாமதம் ஏற்பட்டால் அல்லது தவறுகள் ஏற்பட்டால் தூக்கம் மறந்து அவற்றைச் சீர்செய்ய உழைப்பார்.

 

முல்லைத்தள அழிப்பிற்காகத் தயார்ப்படுத்தல் கால வேளைகளில் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் உறக்கம் துறந்து ஓடியோடி உழைத்ததை நான் கண்டேன். நான்காம் நாள் அதிகாலை அவரை நான் கண்டபோது அவரின் முகத்தில் சோர்வு தென்படவேயில்லை. நித்திரை கொண்டு எழும்பியது போல சுறுசுறுப்புடன் காணப்பட்டார். நான் இவர் மீது கொண்ட ஆச்சரியங்களில் இதுவுமொன்று.

இந்தியப்படை வெளியேறிய பின் 1990 யூன் மாதம் சிங்களப் படைகளுடன் சண்டை தொடங்கியது. முதலில் மாங்குளம் முகாம் மீது தாக்குதலை நடாத்தினோம். அந்த முகாமின் ஒருபகுதி எம்மிடம் வீழ்ந்தது. எனினும் முழுமையாக முகாம் வரவில்லை. எமக்குப் பாதகமாக சண்டை நிலைமை இருந்ததால்; தாக்குதலில் இருந்து பின்வாங்கினோம்.

 

அன்று இரவே அங்கிருந்த போராளிகளை கிளிநொச்சிக்கு இடம் மாற்றினார். கிளிநொச்சி படை முகாம் மீது தாக்குதலை நடாத்த முடிவெடுத்தார். அடுத்த நாளே தாக்குதல் தொடங்கியது. இங்கேயும் அதே கதைதான். மாங்குளம் கிளிநொச்சி முகாம் தகர்ப்புகள் தோல்வியில் முடிந்துவிட்டன. எனவே, கொக்காவில் முகாமை எப்படியும் தாக்கியழித்துக் கைப்பற்ற வேண்டுமென்ற வேட்கையுடன் இருந்தார்.

வன்னி மாவட்டத்தின் தளபதியாக அவர் இருந்தபோது நான் துணைத் தளபதியாக இருந்தேன். கொக்காவில் படைமுகாம் தாக்கி அழிக்கப்பட வேண்டும் அல்லது நாங்கள் இருவரும் வீரச்சாவடைய வேண்டும். இரண்டில் ஒன்று நடக்க வேண்டும் என்று ஓர்மத்துடன் கூறினார். கொக்காவில் படைமுகாமை வெற்றியும் கொண்டார்.

களத்தில் உள்ள போராளிகளுக்கு நெருக்கடிகள் ஏற்பட்டால் அல்லது தாக்குதலில் வெற்றி தாமதப்பட்டால் தளபதிகளுக்கு உரித்தான போர் மரபை உதறிவிட்டு அவர் களத்தில் இறங்கிவிடுவார். அத்தகைய வேளைகளில் அவரை எவராலும் தடுத்துநிறுத்த முடியாது.

 

கொக்காவில் படைத்தள அழிப்பிலும் அதுதான் நடந்தது. அந்த முகாம் தாக்குதலில் தானும் சண்டை அணிகளுடன் இறங்க முடிவெடுத்தார். எப்படியோ அவரைத் தடுத்துவிட்டு நான் அதைச் செய்தேன். முதல்நாள் தாக்குதலில் முகாமின் சில பகுதிகள் மட்டுமே எம்மிடம் வீழ்ந்தன. காயமடைந்த போராளிகளுள் நானும் ஒருவன். எனவே, இரண்டாம் நாள் தாக்குதலில் தானே இறங்கிவிட்டார்.

களத்தினுள்ளே நின்றபடி சண் டையை நடாத்தினார். சில அரண்களைத் தாக்குவதில் அவரும் பங்கேற்றார். களத்தினுள்ளே நின்றபடி கொக்காவில் படை முகாமைத் துடைத்தெறிந்தார். வரலாற்றுச் சாதனை படைத்தார்.

 

அவ்விதம் பின்னர் மாங்குளம் படை முகாம் கரும்புலி போர்க்கின் வீரத் தாக்குதலுடன் அழித்தொழித்தார். ‘வன்னி விக்கிரம” படை நடவடிக்கையின் போதும் அது நடந்தது.

 

ஓமந்தை முன்னரங்கப் பகுதியிலிருந்து கொக்காவில் நோக்கிய படை நகர்வாக அது இருந்தது. மரபு வழியில் படையினர் படை நகர்த்தினர். டாங்கிகள் – கவச வாகனங்களுடன் சிங்களப்படை நகர்ந்தது.

 

பனிக்கநீராவிப்பகுதியில் எதிர்த்தாக்குதல் பால்ராச் அவர்கள் தலைமையில் நிகழ்ந்தது. சண்டை கடுமையாக நடந்தது. எமது போராளிகள் எதிர்கொண்ட பாரிய மரபுச்சமர் அது. எதிரியின் சூட்டுவலுவைக் கண்டு போராளிகள் திகைப்படைந்தனர். அப்போது பால்ராச் களத்தில் இறங்கினார். சண்டையிட்டபடி கட்டளைகளை வழங்கினார். அது போராளிகளை உற்சாகம் பெற வைத்தது. எதிர்த் தாக்குதலை ஓர்மத்துடன் தொடுத்தனர். வன்னிவிக்ரம படையை ஓமந்தைக்குள் விரட்டியடித்தனர்.

 

‘யாழ்தேவி” சமரிலும் அதுவே நடந்தது.

ஆனையிறவிலிருந்து கிளாலி நோக்கி நீரேரிப் பக்கமாக ஒரு படை நகர்வைச் சிங்களப்படை செய்தது. அதை முறியடிக்கும்படி பால்ராச்சிற்கு தலைவர் ஆணையிட்டார். வன்னி மாவட்டப் படையணி அங்கே விரைந்தது.

சண்டைத் திட்டத்தை பால்ராச் விளக்கினார். நகரும் படையணியை ஒரு வெட்டவெளியில் வைத்துத் தாக்குவது பிரதான திட்டம். துணிகரமானதும் – ஆபத்துக்கள் நிறைந்ததுமான அந்த பிரதான தாக்குதல் அணிக்கு நான் தலைமையேற்றேன். நாங்கள் தாக்குதலைத் தொடங்கியதும் இருபுறத்தின் பக்கவாட்டாலும் இரண்டு தாக்குதல் அணிகளை இறக்கத் தயாரிப்புகள் செய்திருந்தார்.

இரவு 2.00 மணிக்கு அந்த இடத்திற்கு விரைந்த எமது அணியினர் அதிகாலை 5.00 மணிக்கு முன்பாக குழிகள் வெட்டி உருமறைப்புச் செய்தபடி அந்த வெட்டவெளியில் அணிவகுத்தனர்.

 

அணிகள் சரியாக நிலையெடுத்துள்ளனவா! என்று பரிசோதிக்க பால்ராச் வந்தார். எனது நிலைக்கு வந்தவர் என்னிடம் சொன்னார், ‘தீபன் நீ இதை கவனமாகப்பார். நான் அடுத்த முனையில் எனது கட்டளைப்பீடத்தை நிறுவுறன்” என்று ஒப்பீட்டளவில் காப்பான ஒரு இடத்தைச் சுட்டிக்காட்டினார். ஆனால் சண்டை தொடங்கினால் அவர் அதில் நின்று கட்டளையிடமாட்டார். களத்தில் இறங்கியே கட்டளையிடுவார் என்று எனக்குத் தெரியும்.

 

அவரைக் களத்தினுள் இறங்க விடாது தடுக்கும்படி பால்ராச் அவர்களின் மெய்க்காப்பாளரிடம் கூறினேன். அது அவர்களால் முடியாது என்று தெரிந்தும் கூறினேன்.

 

காலை 7.30 க்கு சண்டை தொடங்கியது. ஒரு டாங்கிப் படையுடன் எதிரி நகர்ந்ததால் சண்டை கடுமையாக நடந்தது. வெட்டவெளிகளில் உருமறைப்புச் செய்யப்பட்டிருந்த குழிகளில் இருந்து போராளிகள் திடீரென முளைத்தெழுந்து – தாக்கிய போது படையினர் மிரண்டுவிட்டனர். டாங்கிகளை அழித்தபடி நாங்கள் சண்டையில் ஆதிக்கம் செலுத்தினோம்.

 

அப்போது வந்த செய்தி ஒன்று என்னை முதலில் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின்னர் கோபத்திற்குள்ளாக்கியது. பால்ராஜ் காயப்பட்டுவிட்டார், என்பதே அந்தச் செய்தி.

கட்டளைப்பீடத்திற்குள் இருந்த பால்ராச் சண்டை தீவிரம் பெற்றதும் களத்தினுள் இறங்கி – போராளிகளை உற்சாகப்படுத்தியபடி கட்டளைகளை வழங்கியிருக்கிறார். அதில் காயப்பட்டார். பல்வேறு களங்களில் அவர் அடைந்த விழுப்புண்களில் இது பெரியது. அவரை ஆறு மாதங்கள் வைத்தியசாலையில் முடக்கியது.

களத்தினுள் நின்றபடி சண்டைகளை வழிநடத்துவது பால்ராச் அவர்களின் தனித்துவமான இயல்பு. அது ஆபத்தானது என்று அந்தப் பெருந்தளபதிக்கு நன்கு தெரியும். வெற்றிக்காக அதை விரும்பிச் செய்தார். இவ்விதம் செய்ய வேண்டாமென்று தலைவர் அவருக்கு அறிவுறுத்தியதை நான் அறிவேன்.

‘சிறிய அணிகளுடன் களத்தில் நின்ற படி வெற்றிச் சண்டைகள் பல நீ செய்து விட்டாய். இனிமேல் பெரிய அணிகளை நெறிப்படுத்திச் சண்டைகளை வழிநடத்து. தேவை ஏற்படும் போது நான் சொல்வேன். அப்போது களத்தினுள் இறங்கிச் சண்டை செய்” என்று பால்ராச்சிடம் பல தடவைகள் தலைவர் சொல்லியுள்ளார். அதற்கான தருணங்களும் வந்தன.

 

சத்ஜெய என்ற பெயரில் ஆனையிறவிலிருந்து கிளிநொச்சி வரை நகர்ந்து நிலம் விழுங்கிய சிங்களப் படைகள் அங்கே நிலைகொண்டிருந்தனர். ஒரு விமானக் குண்டைப் போன்ற வடிவத்தில் அந்த ஆனையிறவு – பரந்தன் – கிளிநொச்சி படைத்தளம் நீண்டு – ஒடுங்கி இருந்தது. அதைக் குறுக்கறுத்து கிளிநொச்சித் தளத்தை அழித்தொழிக்க தலைவர் ஒரு அற்புதமான போர்த்திட்டத்தை வகுத்தார்.

பரந்தனுக்கும் – கரடிப்போக்கிற்கும் இடையே ஒரு குறுக்கறுப்புத் தாக்குதலை நடாத்துவது, கிளிநொச்சித் தளத்தை அழிப்பது என்று இரண்டு தாக்குதற் திட்டங்களை தலைவர் வகுத்தார்.

 

குறுக்கறுப்புத் தாக்குதலை பால்ராச்சிடம் கொடுத்தார். மற்றையதை என்னிடம் தந்தார்.

 

குறுக்கறுப்புத் தாக்குதல் முக்கியத்துவம் வாய்ந்ததும் – அபாயம் நிறைந்ததுமாகும். பால்ராஜ்சால் அதைச் செய்யமுடியும் என்பது தலைவரின் நம்பிக்கை. அதை திறமையாகச் செய்தார் பால்ராச்.

 

குறுக்கறுத்து உட்புகுந்த அணிகளுடன் பால்ராச் அவர்களும் சென்றார். அங்கே புகையிரதப்பாதை இருந்த இடத்திலுள்ள ஒரு மதகுக்குள் தனது கட்டளைப்பீடத்தை வைத்தார். அவரையும் அவரது அணியையும் வெளியேற்ற சிங்களப்படை பெரும் முயற்சி செய்தது. மரத்தில் அறைந்த ஆப்புப்போல அசையாது இருந்து அந்த நீண்ட தளத்தை இரண்டு துண்டுகளாகப் பிளப்பதில் வெற்றிகண்டார். பிளந்த துண்டில் ஒன்றை (கிளிநொச்சியை) நாங்கள் வெற்றிகரமாகத் துடைத்தழித்து 1200 சிங்களப்படையினரையும் கொன்று பெருந்தொகை ஆயுத தளபாடங்களையும் கைப்பற்றினோம். ஒரு வெற்றி வீரனாக பால்ராச் அவர்கள் வெளியில் வந்தார். அவருக்கு கைலாகு கொடுத்துப் பாராட்டினார் தலைவர்.

பால்ராச் அவர்களின் வீரத்திற்கு மகுடம் சூட்டியது போல் வந்தது இத்தாவில் பெட்டிச்சண்டை.

 

1991 இல் ஆனையிறவுத் தளத்தை அழித்தொழிக்க முற்பட்டு அறுநூறு போராளிகள் வீரச்சாவடைந்தும் அதைக் கைப்பற்ற முடியாமல் போன இயலாமைக்கு ஒரு சரியான பதிலடி கொடுக்கத் தலைவர் திடசங்கற்பம் பூண்டிருந்தார்.

 

ஆனையிறவுத் தளத்தின் பூகோள அமைவிடம் நேரடியாக முட்டி மோதி வெல்லத்தடையாக இருந்தது. ஒல்லாந்தரும் ஆங்கிலேயரும் கண்டறிந்து பயன்படுத்திய அந்தத் தற்காப்பிடத்தை சிங்களப்படைகளும் உபயோகித்துக் கொண்டன.

 

ஆனையிறவுப் பெருந்தளத்தை நேரடியாகத் தாக்காமலே அதைக் கைப்பற்ற தலைவர் திட்டம் போட்டார். அது எவருமே கற்பனை செய்து பார்க்காத துணிச்சலான திட்டம். அபாயமும் – வெற்றியும் ஒருங்கு சேர்ந்திருந்த ஆளுமையான திட்டம். புலிகளா! – சிங்களப்படைகளா! யார் வீரர்கள் என்பதை உறுதிசெய்வது போலிருந்த சவால்த் திட்டம்.

5 கிலோமீற்றர் நீளத்திற்கு படகின் மூலம் கடலால் போய் குடாரப்பில் தரையிறங்கி – அங்கே இரு புறமுள்ள படைமுகாம் பகுதிகளுக்கு இடையேயிருந்த சதுப்புநிலப் பகுதிகள் ஊடாக 10 கிலோமீற்றர் தூரம் நடந்து – கடந்து இத்தாவில் பகுதியில் பெட்டி வடிவில் வீரர்களை நிறுத்திவிட்டு ஒரு கிலோமீற்றர் நீளமும் ஒரு கிலோமீற்றர் அகலமும் கொண்ட அந்தப் பெட்டியின் நடுவில் அகழிவெட்டி நின்றார் பால்ராஜ். எதிரியின் இரண்டு கண்களுக்கும் நடுவே நெற்றிப்பொட்டில் கூடாரமடித்துக் குடிபுகுவது போல அது இருந்தது.

 

பால்ராச் அவர்களையும் அவர்களுடன் இருந்த 1200 புலி வீரர்களையும், அந்தப் பெட்டிக்குள் வைத்துச் சமாதிகட்டக் இணைவதும் பிரிவதுமாக எங்கள் போராட்டப் பயணம்.

 

2001 மார்ச் 25 எங்கள் நட்பு எங்கே பலமாகியதோ அந்தப் படைத்தளத்தை வீழ்த்தும் சுழற்பொறியை செயற்படுத்தும் பொறுப்பை தலைவர் அவர்கள் பால்ராச்சிடம் ஒப்படைக்க நாம் கட்டைக்காடு…. வெற்றிலைக்கேணி… சுண்டிக்குளம் கடற்கரை வெளிகளில் சேர்ந்து நடக்கத் தொடங்கினோம்.

 

போராட்டத்தின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க குடாரப்புத் தரையிறக்கம். கடலினூடான ஒரு பலப்பயணம். பால்ராச் உட்பட ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட போராளிகளையும் படையப் பொருட்களையும் தரையிறக்க வேண்டிய பொறுப்பு என்னிடம். போராளிகளோடு தரையிறங்கி ஆனையிறவை வீழ்த்த வேண்டிய பொறுப்பு பால்ராச்சிடம்.

 

ஒருவேளை ஒன்றாக அந்த வெற்றிலைக்கேணி கடற்கரை மணற்பரப்பில் அமர்ந்திருந்து கிடந்த உணவுப் பொதியைப்; பிரித்து ஒன்றாக உணவருந்தி எத்தி… எத்தி மேலெழுந்த அந்த அலைகளின் மடியில் மிதந்த சண்டைப் படகில் பால்ராச்சையும், ஏனைய படகுகளில் போராளிகளையும் ஏற்றி வழியனுப்பிவைத்தோம். பால்ராச் எப்போதும் போல இப்போதும் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையோடு.

 

குடாரப்பில் தரையிறங்கிய பால்ராச் இத்தாவில் பகுதியில் பெரும் சமரை வழிநடத்திக் கொண்டிருந்தார். எதிரி ஏவிய பல ஆயிரக்கணக்கான அந்த எறிகணை மழைக்கு மத்தியிலும் எப்போதாவது ஒரு சிறு பொழுதில் களம் அமைதி பெறும் பொழுதில் தொலைத்தொடர்புக் கருவியினூடாக என்னுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு களத்திற்கு வெளியில் நிற்பவர்களுக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் உரையாடினார்.

 

முப்பத்து நான்கு நாட்களின் முடிவில் எமது நம்பிக்கைக்கு எந்தப் பழுதுமில்லாது பால்ராச் மீண்டும் திரும்பி வந்தார். இலங்கைத் தீவை மட்டுமல்ல உலகத்தையே விழி திறந்து பார்க்கும் படி களத்தில் சாதித்துவிட்டு.

மீண்டும் சந்தித்தோம் பிரிந்தோம் மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையில்……

******

தன்னுடைய வாழ்நாளின் பெரும்பகுதியைக் களத்தில் கழித்த தளபதி பால்ராச் மக்களின் மீது பரிவு கொண்டவராகவும், அவர்கள் எதிர்கொள்ளும் அன்றாட நெருக்கடிகள் உடனடியாகவே களையப்பட வேண்டுமென்பதில் அதிக விருப்புக் கொண்டவராகவும் காணப்பட்டார்.

முன்பொரு முறை அளம்பில் பகுதி மக்களுக்கும் செம்மலை பகுதி மக்களுக்குமிடையே சிறிய அளவில் ஊர்ப்பிணக்கு ஒன்று ஏற்பட்டுவிட அதனைக் களைவதற்காகத் தன்னுடைய கடமைகளை ஒருபுறம் ஒதுக்கிவைத்து விட்டு தன்னுடைய ஒரு முழுநாள் பொழுதையும் அந்த மக்களுக்காக செலவிட்டு அந்தப் பிணக்கைத் தீர்த்து வைப்பதில் முன்னின்றதை என்றும் மறக்கமாட்டார்கள்.

அந்தளவுக்கு மக்களின் மீது ஆழமான அன்பை தளபதி பால்ராஜ் செலுத்தினார்.

உண்மையில் தளபதி பால்ராச் தன்னுடைய இலட்சியத்தில் எவ்வளவு தெளிவு கொண்டிருந்தாரோ அப்படித் தான் மக்களையும் நேசித்தார். அத்தோடு எங்கள் மக்கள் மீதான படை நடவடிக்கைகளை வழிநடத்திய எதிரிப் படைத்தள பகுதிகளையும் அவர்களின் பலம் – பலவீனம் என்பவற்றையும் அறிந்து அதற்கேற்ற வகையில் படை நடத்தும் சிறப்பாற்றலை அவர் கொண்டிருந்தார்.

 

எதிரிகளைப் பற்றி அறிந்து கொள்வதற்காகவும்; அவர்கள் குறித்த அறிவைப் பெருக்கிக்கொள்வதற்காகவும்; அதிகளவான நேரத்தை அவர் செலவிடுவார். இவரின் இந்த இயல்பு பல தளங்களில் அவர் சிறப்பாக செயற்பட உதவியது.

பின்னர் கடமைகளின் நிமித்தம் வேறு வேறு களங்களில் நாங்கள் இயங்கிக் கொண்டிருந்தோம். அதனால் பால்ராச்சை அடிக்கடி சந்திக்க முடியவில்லை. சுகவீனமுற்றிருந்த பால்ராச் அப்போதும் எப்போதும் போல இயங்கிக் கொண்டிருந்தார். சந்திப்போம் என்ற நம்பிக்கை இருந்ததால் எங்களுக்கிடையேயான அந்த பிரிவு எனக்கு பெரிதாகத் தெரியவில்லை.

 

22-05-2008 பால்ராச் சாவடைந்துவிட்டார். என்ற செய்தி எங்கும் பரவியது.

பல களங்களில் ஒன்றாக நடந்த அந்தப் பெருவீரன் பிரிந்துவிட்டான். என்பதை நம்ப முடியாமலிருந்தது நாம் பலமுறை பிரிந்தோம். ஆனால் மீண்டும்…. மீண்டும் சந்தித்திருந்தோம்.

 

ஆனால், 22-05-2008 இல் ஏற்பட்ட பால்ராச்சுடனான பிரிவு மீண்டும் எப்போதுமே நாம் சந்திக்கப்போகாத பிரிவு, அதனால் தான் என்னவோ சொல்லாமலே பிரிந்துவிட்டார் பால்ராச்.

 

- கேணல் தீபன்.

நன்றி: விடுதலைப் புலிகள்

 

” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “

 

http://thesakkaatu.com/doc3401.html

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த வீரவேங்கைக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த  இந்த வீரத்தளபதிக்கு எனது  வீரவணக்கங்கள் !!!

 

உமது காலத்தில் வாழ்ந்த பெருமை எனக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை எழுதியவரும் வீரமரணம் அடைந்துவிட்டார்.....என்ன உலகம் இது...நினைவுநாள் வணக்கங்கள்

Link to comment
Share on other sites

தளபதிகள் பால்ராஜ் அண்ணா, தீபன் போன்றவர்கள் வரலாற்றில் பொறிக்கப்பட்டுவிட்டவர்கள். ஏதாவது ஒரு வகையில் தமிழர் மனங்களில் தன்னம்பிக்கையை விதைத்துவிட்டவர்கள்..!

 

வீரவணக்கங்கள்!

Link to comment
Share on other sites

வீரவணக்கம் !

 

Link to comment
Share on other sites

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த  இந்த வீரத்தளபதிக்கு எனது  வீரவணக்கங்கள் !!!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தளபதி பால்ராஜ் அவர்களுக்கு  வீர வணக்கங்கள்.

 

Link to comment
Share on other sites

  • 4 years later...
  • கருத்துக்கள உறவுகள்

தேசம் துவண்டநாள் 20-05-2008

 

மரபுவழி தாக்குதலின் வெற்றி நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்

news_20-05-2013_56balraj.jpg

தமிழ்மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காகத் தமது உயிரையே அர்ப்பணித்த பல்லாயிரக் கணக்கான மாவீரர்களில், தலைமைத்துவப் பண்பினாலும் போரியல் நுட்பங்களாலும் போராட்டத்தைத் தோள்கொடுத்து முன்னெடுத்துச் சென்ற வெற்றித் தளபதிகள் பலர். அவர்களில் முதன்மையான ஒருவர் தான் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள்.

தலைவரின் போரியல் சிந்தனைக்கு அமைவாக, பல புதிய இராணுவத் தந்திரோபாயங்களையும் மூலோபாயங்களையும் வகுத்து, பல போரியல் வெற்றிகளை பெற்றுக்கொடுத்ததுடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் போரிடும் ஆற்றலை மேன்மைப்படுத்தியவர்களில் பிரதானமானவர். எல்லாவற்றுக்கும் மேலாக, “விடுதலைப்புலிகள் அமைப்பின் இமாலய வெற்றிகள் பலவற்றிற்கு நடுநாயகமாக நின்று செயற்பட்டவர்” என்று தேசியத்தலைவர் அவர்களால் புகழாரம் சூட்டப்பட்டவர்.

ஒப்பற்ற இராணுவத் தலைமைத்துவம், கடுமையான உழைப்பு என்பவற்றின் ஊடாக விடுதலைப்புலிகளின் இராணுவப்பிரிவை ஒரு மரபுவழி இராணுவமாக மாற்றிய பெருமைக்குரியவர். வெற்றி நாயகனாய் வலம் வந்த அந்த தளபதி வித்தாகி மூன்று ஆண்டுகள் மறைந்து விட்டாலும் அவருடன் நீண்டகாலமாக பயணித்த அந்த நாட்களின் நினைவுகள் என்றைக்குமே அழியாதவை. ஒவ்வொரு கணமும் வந்து போகும் அவரைப்பற்றிய நினைவுகள், தொடர் துன்பங்களால் துவண்டுபோன உணர்வுகளின் அடிநாளத்தை உரசிச் செல்கின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் அழகிய கரையோரக் கிராமங்களில் ஒன்றான கொக்குத்தொடுவாய்தான் வீரத்தளபதி பால்ராஜ் அவர்களை எமக்குக் கொடுத்தது. ஒருபக்கம் பெருங்கடல் மற்றைய பக்கம் சிறுகடல் சூழ்ந்திருக்க, வயல் வெளிகள் தென்னைத்தோப்புகள் அதனைத் தொடர்ந்து காடு என அழகான அமைதியான அந்தக் கிராமத்தில் கந்தையா கண்ணகி தம்பதியினருக்கு 1964 ம் ஆண்டு கார்த்திகை மாதம் 27 ம் திகதி (தமிழீழ மாவீரர் தினம் கொண்டாடும் நாள்) பிறந்த இவர் ஆரம்பகல்வியை கொக்குத்தொடுவாயிலும் பின்னர் புல்மோட்டையிலும் படித்தார்.

அவரது வாழ்வியல் சூழல் இளவயது முதலே வேட்டையாடுவதில் ஆர்வம் கொண்டவராக ஆக்கியது. அதனால் அப்பகுதி காடுகள், பிரதேசங்களை முழுமையாக தெரிந்து வைத்திருந்தார்.

வேட்டையாடுவதற்கு தேவையான அடிப்படை விடயங்களான அவதானிப்பு, கடுமையான முயற்சி, கடினங்களை தாங்கும் தன்மை, அலைந்து திரிதல், மிருகங்களின் தன்மைகளுக்கேற்ப தந்திரோபாய ரீதியல் வேட்டையாடல், பொறுமை, மிருகங்களின் தடையங்களை பின்தொடர்ந்து செல்லுதல் போன்ற பண்புகள் சிறுவயது முதல் இயற்கையாகவே அவருக்கு அமைந்திருந்தன. அது மட்டுமல்லாமல் வேட்டைக்கு சென்றால் ஒருபோதும் வேட்டையில்லாமல் திரும்பமாட்டார் என்னுமளவிற்கு ஓர்மம் மிக்க குணாதியசம் கொண்டவர்.

இவர் பிறந்து வளர்ந்த மணலாறு என அழைக்கப்படும் சிலோன் தியட்டர், மண்கிண்டிமலை முந்திரைக்குளம், கென்பாம், டொலர்பாம் கொக்குத்தொடுவாய், கொக்கிளாய் போன்ற தொழில் வாய்ப்புள்ள, வளம் மிக்க விளைநிலங்களை கொண்ட பகுதிகளில் இருந்த தமிழ்மக்களை விரட்டியடித்து, திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தி தமிழர் தாயகத்தை துண்டாடும் நோக்குடன் இலங்கை அரசானது செயற்பட்டது. இதனால் அவரது குடும்பம் உட்பட அங்கு வாழ்ந்த மக்களும் அவரது உறவினர்கள் பலரும் வாழ்விடங்கள் சொத்துக்களை இழந்து ஓரிரவில் அகதிகளாக்கப்பட்டனர். இச்சம்பவங்கள் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக ஆயுதப் போராட்டத்தினுடாகவே எமது பிரதேசங்களை பாதுகாக்க முடியும் என்று முடிவெடுத்தார். இவரது போக்கை உணர்ந்த தந்தையார் “நீ போராட தீர்மானித்தால் பிரபாகரன் இயக்கத்தில் இணைந்து போராடு, அந்த இயக்கம் தான் சரியான வழியில் போராடும்” என சொல்லி வழிகாட்டியதை பால்ராஜ் அவர்கள் நினைவுகூருவார்.

அவர் 1983ம் ஆண்டு விடுதலைப் விடுதலைப்புலிகள் அமைப்புடன் தன்னை இணைத்துக்கொண்டார். கொக்குத் தொடுவாயைப் பிறப்பிடமாகக் கொண்ட அவருக்கு மணலாறு, தென்னமரவடி, புல்மோட்டை உள்ளடங்கலாக அப்பிரதேசங்கள் முழுதும் பரீட்சயமாக இருந்தது. ஆரம்பத்தில் உள்ளுர் பயிற்சியுடன் வழிகாட்டியாகத் தனது பணியை செய்து கொண்டிருந்த காலத்தில் 1984ம் ஆண்டு ஒதியமலையில் உழவு இயந்திரத்தில் சென்று கொண்டிருந்தபோது இலங்கை இராணுவத்தின் பதுங்கித் தாக்குதலில் லெப் காண்டிபன் உட்பட 09 போராளிகள் வீரச்சாவடைந்தனர். இதில் தோள்பட்டையில் காயமடைந்து சிகிச்சைக்காக இந்தியா சென்றார். அதன் பின்னர் இந்தியா-09 பயிற்சி முகாமில் பயிற்சியை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார்.

மேஜர் பசீலன் அவர்களுடன்

நாடு திரும்பிய அவர் வன்னி அணியுடன் இணைந்து அணிக்கான சமையல் பணிகளை செய்து வந்தார். இவரது பல்வேறுபட்ட திறமைகளை அறிந்த முல்லைத்தீவு மாவட்ட தளபதியாகவிருந்த பசீலன் அவர்கள் முல்லைத்தீவு அணியுடன் இணைந்து பணியாற்ற அழைத்துச் சென்றார். அவரது செயற்பாடுகளினால் சில நாட்களிலேயே பசீலன் அவர்களின் நம்பிக்கைக்குரியவரானார்.

முந்திரிகைக்குளத்தில் மேற்கொள்ளப்பட்ட பதுங்கித் தாக்குதல், கிளிநொச்சி திருநகர் முறியடிப்புத் தாக்குதல், என பல தாக்குதல்களில் பசீலன் அண்ணையுடன் பங்கெடுத்திருந்தார். அது மட்டுமன்றி இந்திய இராணுவத்திற்கு எதிராக யாழ்ப்பாணம் கோப்பாயில் நடந்த சமரில் ஆர்.பி.ஜி யால் டாங்கி ஒன்றை தகர்த்து பன்முக ஆற்றலை வெளிப்படுத்தினார்.

1987 ம் ஆண்டு முல்லைத்தீவு முகாமிலிருந்து நந்திக்கடற்கரை வெளியினூடாக, தண்ணீரூற்று நகரப்பகுதியை கைப்பற்றும் நோக்குடன் நகர்ந்த இந்தியப்படைகளை வழிமறித்து தாக்குதலை மேற்கொண்டிருந்த போது பசீலன் அண்ணை வீரச்சாவடைந்தார். தளபதியை இழந்த நிலையில் உடனடியாக அக்களமுனை கட்டளையை பொறுப்பெடுத்த பால்ராஜ் அவர்கள், தனக்கேயுரிய தலைமைத்துவ ஆற்றலை வெளிப்படுத்தி தாக்குதலைத் தொடர்ந்து வழிநடத்தினார். பல சண்டைகளில் தனது சண்டைத்திறனை வெளிப்படுத்தினாலும் இச்சண்டையே அவரது தனித்துவமான தலைமைத்துவ ஆற்றலையும் சண்டைத்திறனையும் தலைவருக்கு வெளிக்காட்டியது.

தளபதி பசீலன் அண்ணையின் இழப்பினால் துயரமும் கோபமும் அடைந்த தளபதியும் போராளிகளும், பசீலன் அண்ணைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தாக்குதல் ஒன்றை செய்யும் நோக்குடன் ஓய்வின்றி திரிந்தனர். அவர்களின் முயற்சி வீணாகவில்லை. பழம் நழுவி பாலில் விழுவதைப்போல பசீலன் அண்ணையின் இழப்பிற்கு காரணமான இருந்த இந்திய அணியே தண்ணீரூற்று வித்தியானந்தாக் கல்லூரிக்குப் பின்னால் ரோந்தில் சென்று கொண்டிருந்த போது இவர்களின் தாக்குதல் எல்லைக்குள் வந்தது. கோபத்துடன் இருந்த போராளிகள் அனைவரும் ஆவேசமாக தாக்குதலை மேற்கொண்டு வந்த படையை நிர்மூலமாக்கினர். அத்துடன் உதவிக்கு வரும் அணியையும் அழிக்க வேண்டும் என பொருத்தமான இடத்தில் நிலையெடுத்துக் காத்திருந்தனர். எதிர்பார்த்ததைப் போலவே உதவிக்கு வந்த அணியையும் அழித்து மொத்தமாக இருபந்தைத்துக்கும் மேற்பட்ட இந்திய இராணுவத்தை கொன்று இழந்த தளபதிக்கு அஞ்சலியைச் செலுத்தினார்கள்.

பசீலன் அண்ணை “எல்லோரையும் மிரளவைக்கும் துணிச்சல்காரன், சிறந்த திட்டமிடலான பல தாக்குதல் உத்திகளையும் அவரிடம் அறிந்து கொண்டேன் அவருடனிருந்த நாட்கள் பசுமையானவை” என பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் கூறுவார்.

தலைவருடன்

தலைவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான பால்ராஜ் அவர்கள் இந்தியப்படையினர் மணலாற்றுக் காட்டை முற்றுகையிட்டு தலைவரை குறிவைத்துப் பல இராணுவ நடவடிக்கைகளைச் செய்து கொண்டிருந்தபோது தலைவரைப் பாதுகாக்கும் நடவடிக்கையிலும், தலைவரைச் சந்திக்க வருபவர்களை முற்றுகைக்குள்ளால் நகர்த்தும் பணிகளையும் செய்து வந்தார். இச்சமயத்தில், தலைவர் காட்டிலிருப்பது பாதுகாப்பில்லை எனவே வெளியேறி வேறு நாட்டுக்கு செல்லுமாறு சில விடுதலை விரும்பிகள் கேட்;டபோது “என்ர இனத்தின்ற கௌரவத்தையும் என்னையும் விற்கவேண்டாம் எனக்கு என்ன நடந்தாலும் அது இங்கேயே நடக்கட்டும் பிரபாகரன் தப்பி ஓடியதாக இருக்கக்கூடாது போராடி வென்றான் அல்லது வீரமரணமடைந்தான் என்றுதான் வரலாற்றில் இருக்க வேண்டும்” என்ற செய்தியை சொல்லும்படி தலைவர் ஆக்ரோசமாக கூறியதை போராளிகளுடன் பகிர்ந்து கொள்வார்.

வன்னிப்பிராந்திய தளபதியாக

முல்லைத்தீவு, நெடுங்கேணி பாடசாலையில் அமைந்திருந்த இந்தியப்படையினர் முகாம் மீதான தாக்குதல் நடவடிக்கையில் தளபதி லெப்.கேணல் நவம் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். இதன் பின்னர் பால்ராஜ் அவர்களை அழைத்த தலைவர் “இந்திய இராணுவத்திற்கெதிரான தாக்குதல்களை மேலும் பரவலாக்கும் போது தான் கூடுதலாக இராணுவத்தை மணலாற்றை நோக்கி ஒன்று சேர்க்கமுடியாது. அது தான் மணலாற்றை இறுக்கமான இராணுவ முற்றுகைக்குள்ளிருந்து தளர்த்துவதற்கான வழிமுறை” எனவே முல்லைத்தீவில் மட்டுமல்ல வன்னியெங்கும் தாக்குதலை தீவிரப்படுத்த வேண்டும் எனக்கூறி, வன்னி பெருநிலப்பரப்பின் தளபதியாக நியமித்தார்.

பால்ராஜ் அவர்கள் பசீலன் அண்ணையிடம் கற்றுக்கொண்ட சண்டை அனுபவம் மற்றும் தலைவருடன் இருந்த காலத்தில் அவரிடமிருந்து கற்றுக்கொண்ட தலைமைத்துவம், சண்டைத் தீர்மானங்கள், நிர்வாகம், அரசியல், போன்றன அவரின் தலைமைத்துவத்தை மேலும் செம்மைப்படுத்துவதற்கு வாய்ப்பளித்தது. பொறுப்பை ஏற்ற தளபதி பால்ராஜ் அவர்கள் முதலில் முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தும் நோக்குடன், அம்மாவட்டங்களில் இருந்த போராளிகளை சந்தித்து தலைவரின் எண்ணத்துடன் புதிய தாக்குதல் உத்திகளையும் அறிவுரைகளையும் வழங்குவதற்காக நடைப்பயணம் ஒன்றை மேற்கோண்டார். ஆனாலும் வெறும் நடைப்பயணம் என்ற நோக்கைத் தாண்டி சென்ற இடங்களிலெல்லாம் தென்படும் இராணுவத்தின் மீது உடனடி தாக்குதல்களை மேற்கொண்டார். இத்தாக்குதல்கள் போராளிகளுக்கு மேலும் தெம்பைக் கொடுத்தது.

பால்ராஜ் அவர்களை தனது போர் ஆசானாக கொண்ட தளபதி பிரிகேடியர் தீபன் அவர்கள் இந்திய இராணுவத்துக்கு எதிரான தாக்குதல் பற்றி தெரிவிக்கும் போது “மணலாற்றில் தலைவரிடத்தில் இருந்து வந்து மூன்று மாவட்டங்களிற்கும் நடைப்பயணம் செய்து போராளிகளைச் சந்தித்து ஊக்கப்படுத்தி, தாக்குதல் திட்டங்களையும் கொடுத்து, தலைவரின் கட்டளைகளையும் வழங்கி ஒரு பம்பரம் போல் சுழன்று திரிந்தார். அவர் நடந்து போய் வருகின்றாரா! வாகனத்தில் போய் வருகின்றாரா! என்று எங்களுக்குள் பேசுவது வழமை. அந்தளவுக்குப் பயணத்தில் வேகம், வேலை முடிந்ததும் உடனடியாகவே அடுத்த பயணம், அவரின் முகத்தில் சோர்வோ களைப்போ தெரிவதில்லை. படையினர் மீதான தாக்குதல் என்று வரும் போது வேவு பார்த்து – திட்டமிட்டுத் தாக்குவது வழமை. எதிரிப்படை எதிர்ப்படும் போது உடனடியாகவே திட்டம் தீட்டித் தாக்குதல்களை நடாத்துவது கடினம். ஆனால் இது கடினமானது என்பதால் தவிர்க்கப்பட வேண்டியது என்று பால்ராஜ் நினைப்பதில்லை. எதிரி தென்பட்டால் உடனடியாகத் தாக்கு என்பது அவரின் கருத்து”. என்று கூறியுள்ளார்.

இந்திய கொமாண்டோக்களின் பதுங்கித் தாக்குதலுக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதல்

தளபதி பால்ராஜ் அவர்களைப் பொறுத்தவரையில் சண்டைகளை சவாலாக எடுத்துச் செய்வது இயல்பு. மணலாற்றை இந்திய இராணுவம் இறுக்கமான முற்றுகைக்குள் வைத்திருந்த காலப்பகுதியில் முக்கிய பயணம் ஒன்றை மேற்கொண்டு நெடுங்கேணி பழம்பாசி காட்டுப்பகுதியில் சிறு அணியுடன் சென்று கொண்டிருந்தார். நகர வேண்டிய காட்டுப்பாதையில் இருந்த தடயங்களை வைத்து இந்தியப்படையின் விசேட கொமாண்டோக்களின் தடையம் என்பதை ஊகித்துக் கொண்டார். நாங்கள் செல்ல வேண்டிய பாதையில் ஏதோ ஒரு இடத்தில் எதிரி நிலையெடுத்திருப்பான் என்பதை புரிந்து கொண்ட தளபதி பயணத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, தாக்குதலை மேற்கொள்பவனுக்கெதிராக தாக்குதலை மேற்கொள்வோம் என முடிவெடுத்தார். எதிரியின் பதுங்கித்தாக்குதலை எதிர்கொள்ளக்கூடிய வகையில் உடனடித்திட்டம் ஒன்றை வகுத்தார்.

அதன்படி அணிகளை இரண்டாக பிரித்து, முன்னே லெப்.கேணல் நவநீதன் தலைமையில் ஒரு அணியும் குறிப்பிட்ட இடைவெளியில் மறுஅணியும் நகர வேண்டும். எதிரி எந்தப்பக்கத்திலிருந்தும் தாக்குதலை மேற்கொள்ளலாம். எனவே எதிரி தாக்குதலை மேற்கொண்டால்; முன்னால் செல்லும் அணி தாக்குதலை எதிர்கொள்ள மறு அணி பக்கவாட்டால் காட்டுக்குள் இறங்கி, வளைத்து பின்பக்கத்தால் தாக்க வேண்டும் என்பதை விளக்கிவிட்டு, எதிரியின் தாக்குதலை எதிர்பார்த்துக் கொண்டு அவதானமாகவும் மெதுவாகவும் நகரத் தொடங்கினார்கள். திடீரென, இயல்புக்கு மாறாக இருந்த பற்றைகள் மரங்ககளிற்கிடையில் எதிரி நிலையெடுத்திருப்பதை லெப்.கேணல் நவநீதன் திடீரென்று நின்று அவதானித்ததை குறிப்புணர்ந்த தளபதி மறுஅணியை பக்கவாட்டால் வளைக்குமாறு சைகை காட்ட, நவநீதன் தனக்கு அருகே இருந்த இராணுவத்தை சுட்டுக்கொண்டு வேகமாக எதிரிக்குள் நுழைந்து தாக்குதலை தொடர, மறு அணியும் பக்கவாட்டால் வளைத்து பின்பக்கமாக தாக்குதலை செய்தனர். எதிரி சுதாகரிப்பதற்குள் முழு இராணுவத்தையும் அவர்கள் நிலையெடுத்திருந்த இடங்களிலேயே கொன்று மயிர்கூச்செரியும் தாக்குதலை நடாத்தி முடித்தனர்.

இந்திய இராணுவத்தின் பதுங்கித்தாக்குதலை முறியடித்த சண்டையானது பால்ராஜ் அவர்களினது துணிவு, போர் உத்தி, சண்டையிடும் திறனை வெளிப்படுத்திய முக்கியமான சண்டைகளில் ஒன்று. குறிப்பாக இந்திய இராணுவத்தை அதிர்ச்சி, வியப்புக்குள்ளாக்கிய சண்டையாகும். ஏனெனில் பதுங்கித்தாக்குதலை மேற்கொள்ளும் போது நகரும் பாதை, எதிராளிகளின் ஆயுதபலம், ஆட்கள் தொகை போன்ற தகவல்களின் அடிப்படையில் பதுங்கித்தாக்குதல் திட்டமிடப்படும். பின்னர் தாக்குதலிற்கான கொலைவலயத்தை உருவாக்கி, பொருத்தமான ஆயுதங்களுடன் உருமறைத்து, நிலையெடுத்து தாக்குதலை மேற்கொள்வதுதான் தாக்குதலிற்கான அடிப்படை உத்தி. அத்துடன் உலகத்தின் நான்காவது வலிமையான இராணுவம் தனது சிறப்புப்படைகளை வைத்து திட்டமிடும் பதுங்கித்தாக்குதலை சாதாரண விடயமாக எடுத்து விட முடியாது. பல பதுங்கித் தாக்குதல்களை வெற்றிகரமாக செய்த அனுபவம் மிக்க பால்ராஜ் அவர்கள் அதிலிருக்கும் ஆபத்தை உணர்ந்து அப்பாதையைத் தவிர்த்து வேறுபாதையால் சென்று இருக்கக்கூடிய வாய்ப்பிருந்தது.

அப்படியிருந்தும் இந்தசந்தர்ப்பத்தில் பதுங்கித்தாக்குதலுக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதலை செய்வோம் என்று (அவருடைய மொழியில் இன்டைக்கு ரென்டில ஒன்டு பாப்பம் அவனா? நானா? எண்டு) தீர்க்கமாகவும் தற்துணிவாகவும் முடிவெடுத்து அப்பதுங்கித் தாக்குதலுக்கான முறியடிப்புத் தாக்குதலை எதிர்கொண்டு, வென்று காட்டி தனக்கென்று ஒரு தனிமுத்திரை பதித்தார். இத்தாக்குதல் நடவடிக்கை விடுதலைப்புலிகள் மீது இந்திய இராணுவத்திற்கு மேலும் அச்சத்தை கொடுத்ததுடன் போராளிகளுக்கு மேலதிக தெம்பையும் உத்வேகத்தையும் கொடுத்தது. இது போன்ற பல தாக்குதல் நடவடிக்கைகள் பால்ராஜ் அவர்களை சிறந்த தளபதியாக தனித்துவமாக அடையாளம் காட்டின.

இந்திய இராணுவ வெளியேற்றத்தின் பின்னர், வன்னியின் இராணுவம், அரசியல், அபிவிருத்தி போன்ற எல்லா பணிகளையும் ஒருங்கிணைத்தார். இந்திய இராணுவ காலத்தில் தங்களுக்கு உதவி செய்த வீடுகளுக்கெல்லாம் சென்றதுடன் அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்து இயன்றளவு அவர்களிற்கு உதவிகள் செய்தார். மக்களின் பிரச்சனைகள் அவர்களின் அத்தியாவசிய தேவைகளை அறிந்து உதவி செய்தார் அந்தளவிற்கு மக்களை நேசித்த தளபதியவர்.

கொக்காவில் முகாம் வலிந்ததாக்குதல்

இலங்கை இராணுவத்துடனான ஈழப்போர்-02, 1990 ம் ஆண்டு மத்தியில் தொடங்கியது. முதலில் மாங்குளம் இராணுவ முகாம் மீது தாக்குதலை ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அம்முகாமின் ஒரு பகுதி வீழ்ந்தாலும் சண்டையை தொடர்ந்து நடாத்துவதிலுள்ள பாதக நிலையை உணர்ந்து உடனடியாக சண்டையிலிருந்து பின்வாங்கினர். பின்னர் கிளிநொச்சி படைமுகாம் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் முயற்சியும் கைகூடவில்லை. தொடர்ந்து முல்லைத்தீவு முகாம் மீதான தாக்குதல் முயற்சியும் வெற்றியளிக்கவில்லை. இந்த முகாம்கள் அழிக்கப்படாவிட்டால் வன்னி பெருநிலப்பரப்பின் மேலாதிக்கம் விடுதலைப்புலிகளிடம் இல்லாமல் போவது மட்டுமல்லாமல் மக்களும் பாரிய சிரமத்தை எதிர்கொள்ள வேண்டி நேரிடும். அத்துடன் ஏற்கனவே மூன்று முகாம் தாக்குதல்களும் வெற்றியளிக்காத நிலையில் இந்த முகாமை எப்படியும் கைப்பற்றியே தீரவேண்டும் என்ற உறுதியான முடிவுடன் கொக்காவில் முகாமைத் கைப்பற்றுவதற்காக தாக்குதலை ஆரம்பித்தார்.

முதல் நாள் கடுமையான சண்டை, சில பகுதிகள் கைப்பற்றப்பட்டது அதேவேளை துணைத்தளபதியாகவிருந்த தளபதி தீபன் அவர்களும் வேறு சில தளபதிகளும் காயமடைந்திருந்தனர். கடுமையான சண்டை தொடர்ந்து கொண்டிருந்தது. நிலைமையினை உணர்ந்த பால்ராஜ் அவர்கள் ஏற்கனவே மாங்குளம், கிளிநொச்சி, முல்லைத்தீவு முகாம்களை கைப்பற்றமுடியவில்லை, இதிலும் தோல்விகண்டால் போராளிகளின் உளவுரண் பாதிப்படையலாம். அதுமட்டுமன்றி இராணுவத்தின் உளவுரண் அதிகரிக்கலாம். அத்தகைய வாய்ப்பை வழங்கக்கூடாது என்ற உத்வேகத்துடன் போராடினார். கொக்காவில் முகாமை எப்படியாவது கைப்பற்றியே தீர வேண்டும் என்ற தீர்மானமான முடிவிலிருந்தார். தளபதி தீபன் அவர்கள் காயமடைந்ததுடன் களமுனைக்கே சென்று அணிகளை மீள் ஒழுங்குபடுத்தி, கட்டளைகளை வழங்கிக் கொண்டு தானும் ஒரு பக்கமாக இறங்கி சண்டையில் ஈடுபட்டார். பால்ராஜ் அவர்களும் இறங்கி சண்டையிடுகின்றார் என்றவுடன் போராளிகள் மேலும் மூர்க்கத்தனமான தாக்குதலை மேற்கொள்ள, சில மணிகளில் முகாம் முற்றாக அழிக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றது. விடுதலைப்புலிகளின் போரியல் வரலாற்றில் முதன்முதலாக கைப்பற்றி அழிக்கப்பட்ட முகாம் தாக்குதலாக அது பதிவாகின்றது.

மாங்குளம் முகாம் வலிந்ததாக்குதல்

இதனைத் தொடர்ந்து மாங்குளம் முகாமை மீள தாக்கியழிக்க வேண்டும் என்று நோக்குடன் களப்பணிகளை முடுக்கிவிட்டார். ஏற்கனவே தாக்குதலை மேற்கொண்டு பின்வாங்கிய முகாம் என்பதால் அடுத்த முயற்சி தோல்வியடையக்கூடாது என்ற முடிவுடன் தாக்குதல் திட்டம் தயாரிக்கப்படுகின்றது. அம்முகாமின் இரு முனைகளில் தாக்குதலை நடாத்தி எதிரியை பலவீனப்படுத்தி கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டு முகாமை கைப்பற்றுவது என்று தீர்மானிக்கப்படுகின்றது. பசீலன் ஷெல் தாக்குதலுடன் ஆரம்பிக்கப்பட்ட தாக்குதலின் முகாமைச் சுற்றியிருந்த காவலரண்கள் முதலில் வீழ்ச்சியடைந்தன. அதன் பின்னர் கரும்புலித் தாக்குதலை கரும்புலி லெப்.கேணல் போர்க் மேற்கொள்ள, காவலரண்களையும் மினிமுகாம்களையும் உடைத்துக் கொண்டு முன்னேறிய அணிகள் பிரதான முகாமிற்கு அருகிலிருந்த ‘வானூர்தி’ இறங்குதளத்திற்கு அருகில் பலமான எதிர்த்தாக்குதலுக்கு முகம்கொடுத்தன. ஏனெனில் வானூர்தி தளத்தை தாம் இழந்தால் மேலதிக உதவியை எடுக்க முடியாமல் அழிந்துவிடுவோம் என்ற நிலைப்பாட்டில் இராணுவம் மூர்க்கத்தனமாக மோதியது.

அதேவேளை முகாமின் தென்பகுதி வயல் வெளியால் ஆரம்பிக்கப்பட்ட தாக்குதல் இழப்பின் காரணமாக பின்வாங்கப்படுகின்றது. அகோர விமானத்தாக்குதல்களிற்கு மத்தியிலும் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. இழப்புகளின் அளவும் கணிசமாக உயர்ந்து கொண்டிருந்தது. நிலைமைகளை அறித்த தலைவர் விரைவாக முகாமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருமாறு அறிவுறுத்தினார். சண்டையின் வியூகத்தை மாற்ற நினைத்த தளபதி, துணைத்தளபதி தீபன் அவர்களை கட்டளைமையத்தில் சண்டையை ஒழுங்குபடுத்தும்படி விட்டு விட்டு, வானூர்தித் தளத்தில் சண்டையிடும் எதிரியை சுற்றி வளைத்து தாக்கியழிக்க வேண்டும் என முடிவெடுத்தார். லெப்.கேணல் நவநீதன் தலைமையில் சிறப்பு அணியொன்றை ஒழுங்குபடுத்திக் கொண்டு சென்றார். பகல் வேளையாக இருந்த போதிலும் பொருத்தமான இடத்தில் தாக்குதலை மேற்கொண்டு வானூர்தித் தளத்தை கைப்பற்றினார். வானூர்தி தளம் கைப்பற்றப்பட்டவுடன் தமது தோல்வியை உணர்ந்த எஞ்சியிருந்த இராணுவத்தினர் பின்வாங்கி வவுனியாவில் அமைந்திருந்த இராணுவ முகாம் நோக்கி தற்பாதுகாப்புத் தாக்குதலை மேற்கொண்டு கொண்டு ஓடத்தொடங்கினர். அவர்களும் ஆங்காங்கே கொல்லப்பட்டனர். இச்சமரில் பெருந் தொகையான இராணுவத்தளபாடங்கள் கைப்பற்றப்பட்டன. குறிப்பாக 50 கலிபர் துப்பாக்கி முதன்முதலில் இத்தாக்குதலின் போது கைப்பற்றப்பட்டது.

சாள்ஸ் அன்ரனி படையணியின் தலைமைத் தளபதியாக

இரண்டாம் கட்ட ஈழப்போரில் இவரது தாக்குதல் வெற்றிகள் இராணுவ ரீதியில் பரிமாண வளர்ச்சியையும் நம்பிக்கையையும் கொடுத்ததுடன் போராளிகளின் உளவுரன், மனோதிடத்தை வளர்த்து சிங்களப்படையை கதிகலங்க வைத்தது. அக்காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் இராணுவத்தை ஒர் மரபுவழி இராணுவமாக வளர்த்தெடுக்க தீர்மானித்த தலைவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது மரபுவழிப்படையணியான சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையை 1991 ம் ஆண்டில் உருவாக்கினார். சண்டைகளின் தன்மைகளிற்கேற்ப புதிய புதிய உத்திகளை வகுக்கும் பண்பு, சண்டையிட்டுக்கொண்டே தாக்குதலை தலைமை தாங்கும் தலைமைத்துவப்பண்பு, தாக்குதலின் போது எல்லா களச்சூழல்களையும் தனக்கு சாதகமாக மாற்றும் திறமை, சிறந்த வேவு ஆற்றல், திட்டமிடல், நிர்வாகம் போன்றன அடிப்படை ஆற்றல்களைக் கொண்ட பால்ராஜ் அவர்களை சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் தளபதியாக்கினார். துணிவு, தந்திரம், கடும்பயிற்சி போன்றவற்றை தாரக மந்திரமாக கொண்டு தலைவரின் எதிர்பார்ப்பிற்கமைவாகவும், ஆலோசனைக்கமைவாகவும் வலிமை மிகுந்த படையணியாக உருவாக்க தலைவரது சிந்தனைகளையும் தனது போர் அனுபவங்களையும் போராளிகளுடன் பகிர்ந்து, சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியை ஒரு வலிமை மிகுந்த படையணியாக உருவாக்கினார்.

மரபுவழிப்படையணியாக உருவாக்கிய அப்படையணியிடம் இருந்த இலகு மற்றும் கனரக ஆயுதங்களை மட்டும் வைத்தே பல வெற்றிகரமான தாக்குதல்களையும் புதிய உத்திகளுடன் கூடிய மூலோபாயத் தாக்குதல்களையும் செய்து காட்டினார். குறிப்பாக வன்னி விக்கிரம எதிர்தாக்குதலில் 50 கலிபர் துப்பாக்கியை பயன்படுத்தி உலங்குவானூர்தி அழிக்கப்பட்டது. 1991 ம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பினால் பெயரிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட முதலாவது வலிந்த தாக்குதல் நடவடிக்கையான ஆ.க.வெ தாக்குதல் நடவடிக்கையில் கிளிநொச்சி உப்பளப்பக்கத்தால் தாக்குதலை வழிநடத்தும் பொறுப்பை ஏற்று வெற்றிகரமாக செய்து முடித்தார். பின்னர் மணலாற்றில் முன்னெடுக்கப்பட்ட மின்னல் எதிர்ச்சமர், அளம்பில் ஒப்பிறேசன் 7 பவர் எதிர்ச்சமர், கொக்குத்தொடுவாயில் இருந்து முன்னேறிய இராணுவத்தை தாக்கி பின்வாங்க வைத்ததுமல்லாமல் முதன்முதலில் ஆர்.சி.எல் கைப்பற்றிய சமர் போன்ற பல சமர்களை வெற்றிகரமாக நடாத்தினார்.

மூலோபாயத் தாக்குதல்கள்

தலைவர், தளபதியிடம் சண்டைகள் பற்றி ஆலோசித்துக்கொண்டிருக்கும் போது “இப்படியே ஒவ்வொரு காவலரணாக மட்டும் தாக்கியழித்துக் கொண்டிருந்தால் எப்படி நாம் இராணுவத்தை அப்புறப்படுத்த முடியும். பாரியளவில் இராணுவத்தை தாக்கும் திட்டங்களை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்” இதனை புரிந்து கொண்ட தளபதி கிளிநொச்சி, தட்டுவன்கொட்டியில் இருந்த இராணுவ காவலரண்களை வேவு பார்த்தார். இராணுவத்தின் பாதுகாப்பு நிலைகளை விரைவாக தாக்குவதற்கான புதிய மூலோபாயத்தை வகுத்து அதனடிப்படையில், இருபத்துநான்கு காவலரண்களைத் தாக்கியழிப்பதற்கான திட்டத்தை வகுத்து பயிற்சிகளை வழங்கினார்.

இத்தாக்குதலுக்கு செல்வதற்கு முன் போராளிகளை சந்தித்த தலைவர் அவர்கள் “புதிய மூலோபாயத்திட்டத்தில் தாக்குதலை ஒன்றை செய்யப் போகின்றீர்கள் இத்தாக்குதல் வெற்றி எதிர்காலத் தாக்குதல்களிற்கு அடிப்படையாக அமையும்” என்று கூறி வாழ்த்தியனுப்பினார். தாக்குதல் திட்டத்தின்படி இரகசிய நகர்வை மேற்கொண்டு நகர்ந்த அணிகள், எதிரியின் காவலரணுக்கு மிக அண்மையாகச் சென்று தாக்குதலை தொடங்கின. தாக்குதல் ஆரம்பித்த வேகத்திலேயே வேகமாக காவலரண்களை ஊடறுத்து பின்பக்கமாகச் சென்று இராணுவத்தை அழித்து ஆயுதங்களையும் கைப்பற்றினர். அத்தாக்குதல் உத்தியானது, குறைந்த இழப்புடன் விரைவாக எதிரியைத் தாக்கியழிப்பதற்கான மூலோபாய வெற்றியையும் நம்பிக்கையும் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து பல மாவட்டங்களிலும் நடந்த பல தாக்குதல் வெற்றிகளுக்கு அந்த உத்தி அடிப்படையாக அமைந்தது.

1991ம் ஆண்டு கரைநகர் பொன்னாலை பிரதான பாதையில் அமைந்திருந்த காவலரண்களை தாக்கியழித்த சமர் இன்னுமொருவகையான புதிய தாக்குதல் உத்தியாகும். ஏனெனில் காவலரண் வீதியில் அமைந்திருந்தது. வீதியின் இரண்டு பக்கமும் கடல். தாக்குதலை மேற்கொள்ள எந்த விதமான காப்பும் மறைப்பும் இல்லாத குறைந்த தண்ணீர் உள்ள கடற்பிரதேசம், அக்காவலரணை தாக்கி அழிக்க வேண்டும் என முடிவெடுத்து மேஜர் கிண்ணியின் தலைமையில் வேவு பார்த்து, தண்ணீருக்குள்ளால் காவலரணின் பின்பக்கமாக அணிகளை நகர்த்தி வெற்றிகரமாகத் தாக்குதலை செய்து முடித்தார். எப்போதுமே சவாலான சண்டைகளை தேர்ந்தெடுத்து வெற்றி கொள்வதும் இறுக்கமாக போர்க்களங்களில் செயற்பட்டு வெல்வதும் இவருடைய குணாதிசயங்களில் ஒன்று.

அதன் பின்னர் 1992 ன் ஆரம்பகாலப்பகுதியில் பூநகரி முகாமின் முன்னணி காவலரண்களில் அறுபத்து நான்கு காவலரண் தாக்கியழித்த தாக்குதல், அதனைத் தொடர்ந்து 1992 ன் பிற்காலப்பகுதியில் பலாலி வளலாய் பகுதியில் 150 காவலரண்களை அழித்த தாக்குதல் போன்றவற்றை தலைமையேற்றுச் செய்தார். குறிப்பாக 1992 ம் ஆண்டு பயிற்சித் தேவைகளுக்காக தலைவரிடம் ரவைகள் வேண்டும் என தளபதிகள் கேட்டபோது “சண்டைகளுக்கு மட்டுமே ரவைகள் இருக்கு, இப்ப உங்களுக்கு தேவையான ரவைகள் இராணுவத்திட்ட இருக்கு, அங்க போய் எடுங்கோ என கூறினார்” இதுவே பலாலி – வளலாயில் இருந்த 150 காவலரண்களை அழித்து ஒன்றறை இலட்சத்திற்கும் மேற்பட்ட ரவைகள் பல ஆயுத, வெடிபொருட்;களையும் கைப்பற்றி அடிப்படையானது.

காவலரண்களை உடைத்துக் கொண்டு உட்சென்று பின்பக்கத்தால் தாக்குதலை நடாத்தும் முறை, தரையால் படைகளை நகர்த்தும் சமநேரத்தில் கடலாலும் படைகளை நகர்த்தி எதிரியின் விநியோகம், ஆதரவுப்படைகளை அனுப்பும் வழிகளை தடுத்தல் கட்டளைமையங்கள் தகர்த்தல், தரைவழித் தாக்குதல் படையணிகள் உள் நுழைவதற்காக காவலரண்களை பின்பக்கத்தால் தகர்த்து பாதையேற்படுத்தல் என்பவற்றை உள்ளடக்கிய ஈரூடக தாக்குதல் முறை மூலம் எமது தாயகத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை அழித்தொழிக்க முடியும் என்ற உத்தியை தனது முன்னுதாரணமான செயற்பாட்டினூடாக வெளிப்படுத்தினார்.

1990 ஆண்டு ஈழப்போர் – 02 ஆரம்பித்திலிருந்து 1992 ம் ஆண்டு வளலாய் தாக்குதலை வரை தலைவரின் இராணுவ சிந்தனைக்கு உரியவடிவமும் அதற்கு பொருத்தமான மூலோபாயங்களையும் உத்திகளையும் வகுத்து பல பாதுகாப்பு, வலிந்த தாக்குதல்களை செய்து விடுதலைப்புலிகளின் இராணுவ பலத்தை மேன்மைப்படுத்தினார். இதுவே இவரை விடுதலைப்புலிகளின் இராணுவப்பிரிவின் துணைத்தளபதியாக 1992 ம் ஆண்டு தலைவர் நியமிக்க காரணமாகியது.

யாழ்தேவி முறியடிப்புத் தாக்குதல்

பின்னர் 1993 ல் பூநகரி முகாம் வேவு நடவடிக்கைகளை விசேட வேவு அணியை வைத்து செய்து முடித்தார். தொடர்ந்து அதை கைப்பற்றுவதற்கான தாக்குதல் திட்டத்தை வகுத்து, அணிகளை ஒன்றிணைத்து பயிற்சிகளையும் அதற்கான ஏனைய ஒழுங்குபடுத்தல்களை தயார்ப்படுத்துவதில் தீவிரமாக செயற்படடுக்கொண்டிருந்தார்;. இச்சமயத்தில் யாழ் குடாநாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் நோக்குடன், ஒரேயொரு போக்குவரத்து பாதையாக இருந்த கிளாலி கடற்கரை பாதையை மூடுவதை இலக்கு வைத்து ஆனையிறவிலிருந்து இராணுவம், ‘யாழ்தேவி’ என்ற இராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளப்போகின்றது என்ற செய்தி கிடைக்கின்றது.

தலைவரின் ஆலோசனைக்கமைவாக, தயார்ப்படுத்துவதற்கு கிடைத்த குறுகிய நேரத்தில் தந்திரோபாயத் தாக்குதல் திட்டத்தை வகுத்து, இராணுவத்தின் நகர்வை தடுப்பதற்கான தாக்குதலை மேற்கொண்டார். இராணுவத்திற்கெதிரான தாக்குதல் மிக மூர்க்கத்தனமாக நடைபெற்றுக்கொண்டிருந்தபோது களமுனையிலிருந்து தொடர்களில் சிக்கலடைந்தது. இச்சமயத்தில் நேரடியாக களமுனைக்குச் சென்று தாக்குதலை வெற்றி நோக்கி வழிநடத்தியபோது காலில் காயமடைந்தார். இந்த நடவடிக்கையில் படுதோல்வியுடன் இராணுவம் பின்வாங்கியது.

காயத்திலிருந்து மீண்டாலும் காலில் பாதிப்பிருந்தது. அப்படியிருந்தும் மீண்டும் தனது இராணுவப் பணிகளைத் தொடர்ந்தார். மண்டைதீவு தாக்குதலுக்கான வேவு, கொக்குத்தொடுவாய் 05 முகாம்களின் தாக்குதலுக்கான வேவு நடவடிக்கை மற்றும் தாக்குதலுக்கான களத்தலைமை, முன்னேறிப்பாய்தல் முறியடிப்புத் தாக்குதல், சூரியகதிர் ஒன்று தாக்குதல் நடவடிக்கை என பல இராணுவ நடவடிக்கைகளில் பங்கு கொண்டார்.

முல்லைத்தீவு முகாம் வலிந்ததாக்குதல்

1996ம் ஆண்டு யாழ் குடாநாட்டிலிருந்து தந்திரோபாய ரீதியில் பின்வாங்கி வன்னி பெருநிலப்பரப்பிற்குள் புலிகள் வந்த தருணத்தில் விடுதலைப்புலிகளின் இராணுவ வலிமை தொடர்பான பல வினாக்கள் முன்வைக்கப்பட்டன. சிங்களப்படைகள் விடுதலைப்புலிகளை விரைவில் அழித்துவிடுவோம் என மார்தட்டிக் கொண்டிருந்தவேளை விடுதலைப்புலிகளின் இராணுவ வலிமையை மீளநிரூபித்து இராணுவ வெற்றியினூடாக சிங்களத்திற்கு பதில் சொல்ல தீர்மானித்த தலைவர், முல்லைத்தீவு முகாமை அழிக்க முடிவெடுத்தார். இத்தாக்குதல் நடவடிக்கையை தளபதி பால்ராஜ் அவர்களிடம் பொறுப்பைக் கொடுத்து தாக்குதலுக்கான மூலோபாயத்தையும் வகுத்துக்கொடுத்தார். தலைவரின் சிந்தனைக்கமைவாக அத்தாக்குதல் வெற்றிக்காக கடுமையாக உழைத்தார். துல்லியமான திட்டமிடலுடன் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது. வேகமாக கடற்கரைப்பகுதி முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்பது பிரதான திட்டங்களில் ஒன்று. அதன்படி வெற்றிகரமாக நடைபெற்றதுடன் 122 கனரகப் பீரங்கிகளும் கைப்பற்றப்பட்டன, இருப்பினும் கடற்கரைப் பிரதேசத்தை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை.

கடற்கரையில் ஒரு பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலே தம்மால் உதவியை பெற முடியும் என்பதால் தேவாலயம் அமைந்திருந்த கடற்கரைப் பகுதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இராணுவம் கடுமையாகப் போரிட்டது. அப்பகுதியை கைப்பற்றும் நோக்குடன் தாக்குதல் நடவடிக்கைகள் முனைப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை அளம்பிலில் இராணுவத்தை தரையிறக்கி, முகாமிற்குள் போரிட்டுக் கொண்டிருக்கும் படையினருக்கு உதவ இராணுவம் முயன்றது. இச்சந்தர்ப்பத்தில் களத்திற்கு வந்து நிலைமையை மதிப்பிட்ட பால்ராஜ் அவர்கள் தலைவரிடம் நிலைமையும் உடனடித்திட்டத்தையும் தெரிவித்தார்.

தலைவர் அவர்கள் தளபதி பிரிகேடியர் பானு அவர்கள் தலைமையில் மேலதிக அணியை அனுப்பி வைத்தார். அத்திட்டத்தின்படி தேவாலயத்தின் முன்பக்கமாக நிலையெடுத்திருந்த படையினர் மீது விடுதலைப்புலிகளிடம் இருந்த டாங்கியால் தாக்குதலை ஆரம்பிக்க எதிரி நிலைகுலைந்தான், இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திய படையணி எதிரியின் பகுதியில் உள்நுழைந்து தாக்குதலை மேற்கொண்டு, கடற்கரையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, முகாம் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றது. அத்துடன் அளம்பிலில் தரையிறங்கிய இராணுவமும் எதிர்த்தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் பாரிய இழப்புகளுடன் கடல்வழி தப்பி ஓடியது.

சத்ஜெய முறியடிப்புப் தாக்குதல்

முல்லைத்தீவு படைமுகாம் வீழ்ச்சியை தொடர்ந்து ஆனையிறவில் நிலைகொண்டிருந்த சிங்கள இராணுவம் சத்ஜெய ஒன்று இராணுவ நடவடிக்கை மூலம் பரந்தன் பகுதியை கைப்பற்றியது. முன்னேறிய சிங்களப்படையைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கைக்கான தலைமையை தலைவர் பால்ராஜ் அவர்களிடம் கொடுத்தார். உடனடியாகப் படையணிகளை வேகமாக நிலைப்படுத்தினார். அத்துடன் இராணுவம் எமது நிலைகளை உடைத்து நகர்ந்தால் உடையும் பகுதியில் உள்ள படையணிகளை மட்டும் மீள் ஒழுங்குபடுத்தி, காவலரண்களை மீளக் கைப்பற்றினால் உடைத்த பாதையால் உள்வரும் இராணுவம் எமது பிடிக்குள் அகப்படும் இதனால் எதிரிக்கு பாரிய இழப்பை ஏற்படுத்த முடியும் என்ற திட்டத்தை வகுத்து, படையணிகளுக்கு விளக்கி, பயிற்சி கொடுத்து தயார்நிலையில் வைத்திருந்தார்.

சிங்களப்படை சத்ஜெய இரண்டு இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்தது. ஏ-09 பாதைக்கு வலதுபக்கமாகவும் இடதுபக்கமாகவும் தாக்குதலை தொடங்கிய இராணுவத்தின் தாக்குதல் முனையாக ஏ-09 பாதைக்கு வலதுபக்கம் பிரதானப்பட்டிருந்தது. டாங்கிகளுடன், துருப்புக்காவிகளில் இராணுவத்தை நகர்த்தி முன்னேறிய இராணுவம் விடுதலைப்புலிகளின் பாதுகாப்பு நிலைகளை ஊடறுத்து உள்நகர்ந்தது. நிலைமையை உணர்ந்த தளபதி, லெப்.கேணல் தனம், லெப்.கேணல் ராகவன் தலைமையில் அணிகளை மீள்ஒழுங்குபடுத்தி இரண்டு பக்கத்தாலும் எமது காவலரண் பகுதியால் தாக்குதலை தொடுத்து மீண்டும் பாதுகாப்பு நிலைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, இராணுவம் பாரிய இழப்பை சந்தித்துப் பின்வாங்கியது. விடுதலைப்புலிகளின் காவலரண்களுக்கு முன்பக்கமாகவும் பின்பக்கமாகவும் டாங்கிகள் அழிக்கப்பட்டு இருந்தது இந்த தாக்குதல் தந்திரோபாய, மனோதிட வெற்றிக்கு எடுத்துக்காட்டாகும்.

கிளிநொச்சி நகர் வலிந்த தாக்குதல்

ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்த இலங்கை இராணுவம் மாங்குளத்தை அண்மித்துக் கொண்டிருந்தது. அதேவேளை கிளிநொச்சியில் உள்ள இராணுவத்துடன் இணைந்து கொள்ள குறிப்பிட்ட தூரமே இருந்தது. இந்த நேரத்தில் கிளிநொச்சி நகரை மீளக் கைப்பற்ற தலைவர் முடிவெடுத்தார். இத்தாக்குதல் திட்டத்தில், கிளிநொச்சி நகரப்பகுதியை கைப்பற்ற வேண்டுமாயின் இராணுவத்திற்கு உதவி வருவதையும் இராணுவத்தின் பின்வாங்கி செல்வதையும் தடுக்க வேண்டும் என்பது பிரதான திட்டமான இருந்தது. எனவே பரந்தனுக்கும் கிளிநொச்சி நகரத்திற்க்குமிடையில் ஊடறுத்து மறிப்பு நடவடிக்கையை செய்யும் பொறுப்பை பால்ராஜ் அவர்களிடம் ஒப்படைத்த தலைவர் “உனது நடவடிக்கை தாக்குதலின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கப்போகின்றது. அத்துடன் இது உனக்கு ஒரு பரீட்சார்த்த தாக்குதல் நடவடிக்கையும் கூட” என தெரிவித்தார்.

தாக்குதல் நடவடிக்கையை பொறுப்பொடுத்த தளபதி மிகத்துல்லியமாகத் திட்டமிட்டு கடுமையாக பயிற்சிகளைக் கொடுத்து படையணிகளைத் தயார்ப்படுத்தினார் ஏனெனில் காவலரண்களை ஊடறுக்கின்ற சமநேரத்தில் கிளிநொச்சியிலிருந்து எதிரி ஓடாமலும் பரந்தனிலிருந்து எதிரியின் ஆதரவு கிடைக்கமாலும் இருக்கக்கூடிய வகையில் அணிகளை நிலைப்படுத்தி தாக்குதலுக்கு முகங்கொடுக்கின்ற அதேவேளை, அணிகளை நிலைப்படுத்தும் பகுதிக்கிடையில் இருக்கும் மினிமுகாம்கள், சிக்குப்படும் படையினரை அழித்து அப்பகுதியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து தயார்நிலையில் நிற்க வேண்டும். மற்றும் கிளிநொச்சி வெற்றியின் பிரதான பங்கு இவரது நடவடிக்கையில் தங்கியிருந்தது.

தாக்குதல் தொடங்கியவுடனேயே ஏ-09 வீதிக்கு அருகில் அதாவது களத்தில் மையத்திற்கு சென்ற பால்ராஜ் அவர்கள் அங்கிருந்து தாக்குதலை நெறிப்படுத்தினார். ஆனையிறவு பரந்தன் பகுதியிலிருந்த இராணுவத்தினர் கிளிநொச்சியில் சிக்குண்ட படையினருக்கு உதவ பல புதிய படையணிகள் டாங்கிகள் சகிதம் கடும் முயற்சியை மேற்கொண்டனர். முயற்சிகள் எதுவும் பலனளிக்காது போனது. மற்றும் தளபதி பால்ராஜ் தங்களிற்கு பின்னால் வந்து மறித்து நிற்கின்றார் அதனால் உதவி கிடைக்கவில்லை. இச் செய்தி கிளிநொச்சி நகரப்பகுதியில் சண்டையிட்ட சிங்களத்தளபதிகளுக்கு கிடைக்கின்றது. திகைத்த தளபதிகள் தப்பியோடுவதைத்தவிர வேறு வழியில்லை என்று முடிவெடுத்தனர். இராணுவம் எந்த வித ஒழுங்குபடுத்தலுமின்றி தப்பியோட தொடங்கியது. அங்கு ஓடும் இராணுவத்தை தடுக்கும் நோக்குடன் நிலைப்படுத்தப்பட்ட அணிகளின் உக்கிர தாக்குதலை எதிர்கொண்டது. இத்தாக்குதலை எதிர்பார்க்காத இராணுவம் முன்செல்பவர்கள் சாகச்சாக தப்பியோடும் முயற்சியில் மட்டும் ஈடுபட்டனர்.

குடாரப்பு ஊடறுப்புத்தாக்குதல்

வத்திராயன் பெட்டிச் சண்டையைப்பற்றி தளபதி கூறும் போது “ஆனையிறவுக்கான சண்டையை நீதான் நடத்தப்போகிறாய், நீ சண்டியன், எத்தனையோ சோதனைகளை உனக்குத் தந்திருக்கிறேன் இது நான் உனக்கு வைக்கின்ற பெரிய சோதனை இதற்கான பரீட்சார்த்தத்தை ஏற்கனவே கிளிநொச்சியில செய்து பாத்திட்டேன். எனவே நீ இதையும் வென்று தருவாய் என நம்பிறேன் 1500 பேருடன் தரையிறங்கி கண்டி வீதியை மறிச்சு விநியோகத்தை தடுத்து நிறுத்து, ஆனையிறவு தானாக விழும். சூசை உன்னை கடலால் இறக்கி விடுவான் நீ தரையால் தான் திரும்பி வரவேண்டும்” என்ற தலைவரின் திட்டத்தை நிறைவேற்றி ஆனையிறவின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

வத்திராயன் பெட்டிச் சண்டை என்பது தமிழ்மக்களின் வீரத்தின் வெளிப்பாடு உலக வரலாற்றில் முதன்மைத் தரையிறக்கச் சண்டையாக பதிவு செய்யுமளவிற்கு, உலக இராணுவ வல்லுனர்களையே வியக்க வைத்தது குடாரப்பு தரையிறக்க தாக்குதல் நடவடிக்கை ஆகும். இலங்கை இராணுவத்தின் ஆகாய விமானங்கள், நவீன கடற்படை, கனரக ஆயுதங்கள், டாங்கிகள் போன்றவற்றைக் கொண்ட பலம் வாய்ந்த 40,000 சிங்களப்படைகளின் நடுவே 1500 போராளிகளுடன் 34 நாட்கள் எதிரியை ஊடறுத்து நின்று துவம்சம் செய்தனர். சிங்களத்தின் முக்கிய இராணுவத்தளபதிகளையும் அவர்களின் தந்திரோபாயங்களையும் வெறும் இலகு, கனரக ஆயுதங்கள் மற்றும் ஆட்லறி பிரங்கிகளின் ஆதரவுச்சூட்டுடன் மட்டும் எதிர்கொண்டு வெற்றி பெற்று, தமிழ்மக்களின் போரிடும் ஆற்றலின், துணிச்சலின், வீரத்தை சர்வதேசம் வியக்கும் வகையில் வெளிப்படுத்தினார். இது தமிழ்மக்களின் வீரத்திற்கும் போர்க்குணத்திற்கும் கிடைத்த மகுடமாகும்.

சுனாமி ஆழிப்பேரலையின்

2004 ம் ஆண்டு வாகரையில் அமைந்திருந்த கடற்கரை முகாமில் இருந்தார். திடீரென கடல் உள்வாங்கப்பட்டு அலைகள் உயர்ந்து வேகமான வருவதை பார்த்த பால்ராஜ் அவர்கள், ஏதோ ஆபத்து வரப்போகின்றது என்பதை உணர்ந்து, உடனடியாக வானத்தை நோக்கிச் சுடுமாறு போராளிகளிடம் சொன்னார். திடீரென துப்பாக்கிச் சத்தத்தை கேட்ட மக்கள் பலர் வீட்டுக்கு வெளியே வந்து பார்க்க கடல் உள்நோக்கி வருவதை கண்டு ஓடித்தப்பினர் இதனால் பலர் காப்பாற்றப்பட்டனர். அதேவேளை கடற்கரையில் உள்ள முகாமில் நின்ற அவர் கடல் அலைகளுடன் கடுமையாக போராடி உயிர்தப்பினார். அத்துடன் உடனடியாக போராளிகளை ஒழுங்குபடுத்தி சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி உதவிகளை செய்தார்.

பால்ராஜ் அவர்களின் தலைமைத்துவப் பாங்கு

பால்ராஜ் அவர்கள் எப்போதும் களமுனையில் ஒவ்வொரு காவலரணுக்கும் சென்று போராளிகளிற்கு சண்டையிடும் முறையை சொல்லிக்கொடுப்பார், அடிக்கடி அவர்களை சென்று சந்தித்து அவர்களது தேவைகளை நிறைவேற்றி வைத்து போராளிகளை எப்போதும் உச்ச மனோதிடத்துடன் வைத்திருப்பார். இதனால் பால்ராஜ் அவர்கள் சண்டையை பொறுப்பெடுக்கின்றார் என்றால் போராளிகளிற்கிடையே தனித் தெம்பு ஏற்படுமளவிற்கு நம்பிக்கையான தளபதியாக விளங்கினார். திட்டமிட்ட சண்டைக்கான வேவு நடவடிக்கையை முழுமைப்படுத்த முன் வேவுகள் அனைத்தையும் நேரடியாக பார்த்தே தலைவரிடம் சண்டைத்திட்டத்தை கொடுப்பார். குறிப்பாக அவரது கால் சீராக இயங்காத போதும் கைத்தடியுடன் எதிரியின் முட்கம்பி வரை சென்று இந்த இடம் சண்டைக்கு பொருத்தமானதா? என முடிவெடுப்பது அவரது வழக்கம். சிலர் அவரிடம் ஏன் நீங்கள் போய் பார்க்கிறீர்கள் நாங்கள் பார்த்து வருகிறோம் என்றால் அதற்கு அவர் “சண்டையை தலைமைதாங்கும் போது தாக்குதலிடங்களும் தாக்குதல் பிரதேசம் தொடர்பான பூரண விளக்கம் மற்றும் நிலவரம் தெரிந்தாலே சண்டைக்கான கட்டளையை துல்லியமாக வழங்கலாம், அடுத்தது நான் நினைப்பதைப்போல ஒவ்வொரு தாக்குதல் இடமும் தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றதா! என எனக்கு தெரியவேண்டும். பாரிய படையை கொண்டு செல்லும் பாதையில் என்னை கொண்டு செல்ல முடியாது என்றால் எப்படி படையணிகளை சரியாக கொண்டு செல்வீர்கள்? அத்துடன் நான் உறுதிப்படுத்தி முடிவுகளை தலைவருக்கு சொல்லவேண்டும் எனவே நானும் பார்க்கவேண்டும்” என்பதே போர் அனுபவமும், போரியலில் மாற்றத்தையும் ஏற்படுத்திய தளபதியின் பதிலாக இருக்கும்.

தளபதி பால்ராஜ் அவர்களைப்பற்றி அவருடைய பல தாக்குதல்கள் பற்றி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். தேசியத்தலைவர் அவர்களால் என்னையும் விஞ்சிய போராளி என்று பாராட்டப்பட்ட தளபதி, உலக இராணுவ வல்லுனர்களின் தந்திரோபாயங்களை எல்லாம் வத்திராயன் பெட்டிச்சண்டையில் நிர்மூலமாக்கியவர் மற்றும் பால்ராஜ் ஒரு இடத்தில் வந்து இருந்திட்டால் அவரை வீழ்த்துவது அல்லது அப்புறப்படுத்துவது கடினம் என சிங்களப்படைகளின் மனோதிடத்தையே பலவீனப்படுத்திய தளபதி, போர்க்கலை வல்லுனர் தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள்.

இந்நினைவு நாளில் தமிழ்மக்களின் கவனத்திற்காக….

தழிழீழ விடுதலைப்புலிகளின் போரியல் வரலாற்றில் பல வீரத்தளபதிகளும் பல்லாயிரக்கணக்கான போராளிகளும் வீரச்சாவடைந்துள்ளனர். பல வியக்கத்தக்க மகத்தான போரியல் சாதனைகளை விடுதலைப்புலிகள் இயக்கம் சாதித்தது. போர்க்குணம் மிக்க தமிழினத்தின் வெற்றிகளே இவையாகும். ஆனால் முள்ளிவாய்க்கால் பின்னடைவு என்பது சர்வதேச நாடுகள் வழங்கிய தொழில்நுட்ப உதவி, ஆயுத வெடிபொருள் உதவி, மறைமுக இராணுவ உதவி மற்றும் புலனாய்வு உதவிகளின் விளைவாகவும், பூகோள அரசியல் போட்டி காரணமாக சிங்களத்திற்கு கிடைத்த உதவிகளின் அடிப்படையிலும் ஏற்பட்ட பின்னடைவே அன்றி, சிங்களம் தனித்து நின்று விடுதலைப்புலிகளை அழிக்கவில்லை. அவர்களால் அழிக்கவும் முடியாது. மேற்குறிப்பிட்ட காரணங்கள் அனைத்தையும் தாண்டி இப்பின்னடைவின் அடிப்படை வெடிபொருள் விநியோகம் தடைப்பட்டமையும் மலிந்து போன துரோகத்தனங்களுமே ஒழிய வேறு ஒன்றுமல்ல.

தாயக விடுதலையையும், தமது உயிர்களை விடுதலைக்காக நம்பிக்கையுடன் அர்ப்பணித்த பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் கனவுகளையும், மக்களின் பேரிழப்புகளையும் மனதில் நிறுத்தி நம்பிக்கையிழக்காமல், எம்மால் முடியும்! எமது அரசியல் விடுதலைக்காக இறுதிவரை உழைப்போம் என சிந்தனையில் நிறுத்துவதே இந்நாளில் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களிற்கும் மற்றும் மாவீரர்களிற்கும் கொல்லப்பட்ட அப்பாவிப் பொதுமக்களிற்கும் ஆத்மார்த்தமாக வழங்க வேண்டிய வாக்குறுதி.

அபிஷேகா

 

http://www.paristamil.com/mobile/details.php?newsid=27390

  • Like 1
Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆற்றல் மிக்க, ஆளுமை மிக்க இலட்சியப் போராளி பிரிகேடியர் பால்ராஜ்! – தேசியத் தலைவர்

 
 பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 12 ஆம் ஆண்டு  வீரவணக்க நாள் இன்றாகும் 
. அவர் குறித்து தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை மீள்பதிவு..

 
தலைமைச் செயலகம்,தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
மே 21, 2008.
 
எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே,
 
விடுதலைக்கான நீண்ட பயணத்திலே எமது சுதந்திர இயக்கம் எத்தனையோ அற்புதமான தியாகங்களைப் புரிந்திருக்கிறது. எத்தனையோ வீரகாவியங்களைப் படைத்திருக்கிறது. எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது. மகத்தான இராணுவ வெற்றிகளைக் குவித்திருக்கிறது. இந்த இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று, எமது சண்டையணிகளையும் மரபுப் படையணிகளையும் வழிப்படுத்தி, நெறிப்படுத்திச் சமராடிய எமது வீரத்தளபதி இன்று எம்முடன் இல்லை. இவரது இழப்பால் எமது தேசம் ஆற்றமுடியாத துயரத்திலும் ஆழ்ந்த வேதனையிலும் இன்று மூழ்கிக்கிடக்கிறது.
 
பொதுவாகவே, விடுதலை இலட்சியத்தில் பிடிப்பு ஏற்பட்டு விட்டால், எமக்கு துன்ப துயரங்கள் தெரிவதில்லை. வேதனைகள் புரிவதில்லை. உடல் உபாதைகள் அழுத்துவதில்லை. இயற்கைகூடக் குறுக்கே நிற்பதில்லை. எனது அன்புத் தளபதி பிரிகேடியர் பால்ராஜூக்கும் அப்படித்தான். ஓயாது குமுறும் சமர்க்களங்களையெல்லாம் அவன் ஓய்வில்லாது, உறக்கமில்லாது எதிர்கொண்டான். அங்கு இரவு, பகல் பாராது செயற்பட்டான். கொட்டும் மழையும் கோடையின் கொழுத்தும் வெய்யிலும் அவனைக் கட்டிப்போட்டது கிடையாது. கொடிய சண்டைக் களங்களில் எல்லாம் எத்தனையோ துன்பங்களைச் சுமந்தவாறு, எத்தனையோ நெருக்கடிகளைச் சமாளித்தவாறு, எத்தனையோ ஆபத்துக்களை எதிர்கொண்டவாறு அபாரமான மனவுறுதியோடு போராடினான்.
 
22_05_08_04.jpg
தலைசிறந்த போர்த்தளபதி என்ற வகையில் நான் அவனை ஆழமாக நேசித்தேன். அவன் மீது அளவுகடந்த அன்பும் பாசமும் கொண்டிருந்தேன். அவன் அறிமுகமாகிய நாளிலிருந்து அவனுள் அபூர்வ போர்ப் பண்புகளும் போர்க் குணங்களும் இயற்கையாகவே நிறைந்து கிடப்பதைக் கண்டுகொண்டேன். ஆற்றல் மிக்க, ஆளுமை மிக்க இலட்சியப் போராளியாக அவனை வளர்த்தெடுத்தேன். அபாரமான துணிவும், அசுர வேகமும், சிறந்த தாக்குதல் உத்திகளும், நேர்த்தியாகப் படை நகர்த்தும் ஆற்றலும், கூட்டுக்குலையாத குறிதவறாத செயற்பாடுகளுமாக அவன் வெளிப்படுத்திய போர்ப்பண்புகள், எமது எதிரிக்கு அச்சத்தைக் கொடுத்தன. அதேநேரம், எமது போராளிகளின் மனோதிடத்தையும் இலட்சிய உறுதியையும் மேலும் உரமாக்கின. எமது மக்களுக்கு பெரும் வெற்றிகளைத் தேடித்தந்தன.
 
22_05_08_01.jpgபிரிகேடியர் பால்ராஜ் எம்மைவிட்டு எங்கும் போய்விடவில்லை. எமது தேசத்தின் சுதந்திர மூச்சாக, எம்மையெல்லாம் உள்ளிருந்து இயக்குகின்ற இலட்சிய நெருப்பாக அவன் என்றும் எம்முள் எரிந்துகொண்டிருப்பான்.
 
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
 
வே.பிரபாகரன்
தலைவர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.
 
  • Like 1
Link to comment
Share on other sites

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

மாவீரருக்கு வீரவணக்கங்கள். . .

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.