Jump to content

விஞ்ஞான வளர்ச்சியின் வளர்ச்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விஞ்ஞான வளர்ச்சியின் வளர்ச்சி

ரவி நடராஜன்

 

newton.jpg

”ஒரு குத்துமதிப்பாக 3 லட்சம் வாகனங்கள், 8 மணி நேரத்திற்குள் நாளொன்றுக்கு இந்த சந்திப்பைக் கடக்கின்றன. இது வெறும் குத்து மதிப்புதான். இதில் ஒன்றும் பெரிய விஞ்ஞானம் இல்லை” – இப்படிப்பட்ட வாக்கியங்களைச் சாதாரணமாக இன்று கேட்கிறோம். தோராயமாக மதிப்பிடுதல், விஞ்ஞானத்திற்கு ஒத்துவராது என்பது சாமானியருக்கும் புரிகிறது.

“அந்தப் பத்து நிமிடங்களில், எந்த விஷயம், எப்படி நடந்தது, அவற்றின் வரிசை என்ன என்று துல்லியமாக தெரியாது. அவ்வளவு சரியாக எல்லாவற்றையும் சொல்ல நான் என்ன விஞ்ஞானியா?” – இதையும சாதாரண வாழ்க்கையில் நாம், பல நேரங்களில் கேட்கிறோம். இரண்டு விஷயங்களை, அவற்றைக் குறித்த முழுக் கவனம் இல்லாமலே, நாம் இத்தகைய குறிப்புகளில் பதிவு செய்கிறோம்- துல்லியமாக அளக்க சரியான விஞ்ஞானப் பயிற்சி தேவை, மற்றும் அளவிடலைச் சரியாக விளக்கவும் விஞ்ஞான அறிவு/பயிற்சி தேவை.

“கேள்வி மேல் கேள்வி கேட்டால் என்னிடம் என்ன பெரிய theory –ஆ இருக்கிறது? எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன். அதற்கு மேல் சொல்ல, நான் ஒன்றும் பெரிய ஐன்ஸ்டீன் இல்லை” – இதுவும், சில எரிச்சலான நேரங்களில் நாம் உபயோகப்படுத்தும் சாதாரண வாக்கியம். முரண்பாடில்லாமல், எத்தனை கேள்வி கேட்டாலும், சரியாக ஒரு கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு பதிலளிப்பது என்பது விஞ்ஞானப் பயிற்சியிருந்தாலே சாத்தியம் என நினைக்கிறோம்.

பல தருணங்களில், நாம் விஞ்ஞானத்தையும் தொழில்நுட்பத்தையும், வித்தியாசம் பார்க்காமல், குழப்பிக் கொள்கிறோம். பெரும்பாலும், தொழில்நுட்ப வளர்ச்சியை, விஞ்ஞான வளர்ச்சி என்று வியக்கிறோம். உதாரணமாக, செல்பேசிகளின் புதிய அம்சங்களை விஞ்ஞான வளர்ச்சி என்று குழப்புகிறோம்.

சாதாரண மனிதர்கள் வியக்கும் (குழப்பும்) அளவிற்கு வளர்ந்துள்ள விஞ்ஞானம், எப்படி இந்நிலையை அடைந்தது என்பதை ஆராய்வது சுவாரசியமான விஷயம். கடந்த 500 வருடங்களில் மனித சிந்தனை எப்படியெல்லாம் மாறி இருக்கிறது என்பதை நினைத்தால் மிகவும் பிரமிப்பான விஷயம். ஏறக்குறைய 200,000 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் மனிதரிடையே , கடந்த 500 வருடங்களில் ஏற்பட்ட சிந்தனை மாற்றம் என்பது எத்தனை பிரமிப்பானதாக நமக்குத் தோன்றினாலும் ஒப்பீட்டில் அது மிகச் சிறிய மாறுதலே. பூமியின் ஆயுட்காலத்தில் இந்த 500 வருடங்கள் நம் தனிவாழ்வில் ஒரு நிமிடத்தை ஒத்தவை. இப்படி ஒரு சிறுகாலத்தின் மாறுதல் எப்படி நம் கவனத்தில் அத்தனை பெரும் இடத்தைப் பிடித்தது என்பதை நாம் யோசிக்கலாம்.

ஆரம்பத்தில், விஞ்ஞானி என்ற சொல்லே கிடையாது. இதுபோன்ற விஷயங்களில் ஈடுபாடு கொண்டவர்களைத் தத்துவாளர் (philosopher) என்றே சொல்லி வந்தனர். ஏன், பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த நியூட்டன் ஒரு தத்துவாளராகவே கருதப்பட்டார். இன்று, நாம் அவரை பெளதிக விஞ்ஞானி என்றே அனேகமாக அறிகிறோம். அவரென்னவோ பலகலை விற்பன்னராகவே இருந்திருக்கிறார்.

நியூட்டன் மற்றும் கலிலியோ, 16 மற்றும் 17 –ஆம் நூற்றாண்டு காலங்களில் வாழ்ந்த தத்துவ ஆராய்ச்சியாளர்கள். ஆரம்ப காலத்தில் லத்தீன் மொழிதான் தத்துவ ஆராய்ச்சியாளர்கள அதிகமாக உபயோகித்த மொழி. இன்றைய ஆங்கிலம் மிகவும் 16/17 –ஆம் நூற்றாண்டில் வளர்ந்திருந்தாலும் அவ்வளவாக உபயோகப் படுத்தப்படவில்லை. உதாரணத்திற்கு, நியூட்டன் ஒரு ஆங்கிலேயர்; அன்றைய துவக்க நிலை விஞ்ஞானத் தின் மேல் கொண்ட ஆர்வத்தால், லத்தீன் (Latin) மொழியை முழுமையாகக் கற்றுக் கொண்டார். அவருடைய பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் மற்றும் கணக்குகள், லத்தீன் மொழியிலேயே இருந்தன. ஆங்கிலம் படித்தால்தான் விஞ்ஞானம் கற்க முடியும் என்று சொல்பவர்களுக்கு, நியூட்டனின் வாழ்க்கை பற்றி தெரிந்திருக்க நியாயமில்லை!

isaacnewton_james.jpg

அதே நேரம் அன்று லத்தீன் மேலைச் சிந்தனைத் துறைகள் எல்லாவற்றுக்கும் பொது மொழியாக விளங்கியது. பன்மொழிக் கூட்டமாக அன்றும் இன்றும் விளங்கும் யூரோப்பியர் நடுவேயும், ஓரளவு பல கண்டங்களிடையேயும் அறிவுத்துறைகளில் கல்வி கற்கவும், ஆய்வுகள் நடத்திக் கிட்டிய முடிவுகளைப் பகிர்ந்து கொள்ளவும், பொதுவாக சிந்தனைப் பரிமாற்றத்துக்கொரு நல்ல பாதையாகவும் லத்தீன் விளங்கியது. இதற்கு இன்னொரு காரணம் யூரோப்பிய வரலாற்றுப் பாதை. ரோம சாம்ராஜ்யத்தின் அரசு மொழியாக, ஆட்சி மொழியாக, தவிர அரசால் போஷிக்கப்பட்ட பல கலைகளின் புழங்கு மொழியாக லத்தீன் விளங்கியதோடு நில்லாமல், அன்று மேலை உலகில் பெரும் சக்தியாக இயங்கிய ரோமன் கத்தோலிக்கக் கிருஸ்தவத்தின் புழங்கு மொழியாகவும் இருந்தது.

அன்று அரசுகளிலும், அரசியலிலும், சமூகங்களைக் கட்டுப்படுத்துவதிலும், மக்களிடையே நிலவிய மத நம்பிக்கைகளை ஒழுங்குக்குள் வைப்பதிலும் லத்தீன் மொழியே மைய மொழி, ஏனெனில் கத்தோலிக்க மத அமைப்பு பன்னாடுகளிலும் ஆட்சி மதமாக விளங்கியது.

இதே காரணங்கள் இன்றைய ஆங்கில மொழிக்கு இல்லை என்றாலும், சில காலம் முன்பு வரை உலகில் பெரும் சாம்ராஜய சக்தியாக விளங்கியது பிரிட்டிஷ் ஆட்சி. பல கண்டங்களில் பல நாடுகளை ஆண்ட பிரிட்டிஷ் அரசின் ஆட்சி மொழி ஆங்கிலம். இன்று உலகின் பெரும் சந்தை மொழியாகவும், ஆய்வுத்துறைகளுக்குப் புழங்கு மொழியாகவும், ஊடகங்களில் பெரும் பகுதியை ஆளும் மொழியாகவும், விளங்கும் ஆங்கிலம் உலகின் பெரும் சக்தியான அமெரிக்காவின் ஆட்சி மொழியும் கூட. தவிர உலக கல்வித் தளத்திலும், ஆய்வுத் தளத்திலும் அமெரிக்கப் பல்கலைகள் பிரதான இடத்தில் இருப்பதாலும் ஆங்கிலம் அறிவுத் துறைகளில் முக்கிய மொழியாக நிலவுகிறது. அந்த அளவில் அன்றைய லத்தீன் இருந்த இடத்தில் இன்று ஆங்கிலம் உள்ளது. என்றாலும் லத்தீன் மொழியை ஆங்கிலம் பிடித்துக் கொண்டதைப் போல இன்று வேறெந்த மொழியும் ஆங்கிலத்தின் இடத்தைப் பிடித்துக் கொள்ள தற்போதைக்கு வழியில்லை. ஆனால் பல நாடுகளின் பொருளாதார சக்தி கூடி அந்நாடுகள் மேலெழுந்து, கல்வி/ சிந்தனைத் துறையிலும் அந்நாடுகளின் பங்கு கூடும்போது அம்மொழிகள் மேலெழுந்து ஆய்வுத் துறைகளில் மாற்றுப் புழங்கு மொழியாகும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

நியூட்டனுக்கும் முன் வாழ்ந்த கலிலியோ ஒரு இத்தலியர். அவர் வாழ்ந்த 16-17 –ஆம் நூற்றாண்டுகளில் கத்தோலிக்கக் கிருஸ்தவ மத அமைப்பு, அனைத்து சிந்தனைகளின் பேரிலும் தன் கண்காணிப்பைச் செலுத்தி வந்தது என்பதோடு, எந்த மக்களும் சிந்தனை என்ற பெயரில் எதைப் பேசலாம், எதைப் போதிக்கலாம், பிரசுரிக்கலாம் என்பதை எல்லாம் கூடத் தீர்மானித்தது.

கலிலியோ தற்காலம் நாம் விஞ்ஞான முறைகள் என்று நம்பும் பல முறைகளுக்கு அடிகோலிய ஒரு சோதனை விஞ்ஞானி. இவர் பல வகைப் பொருட்களை உருட்டி, வீசி எறிந்து, நகர்த்தி, முதன் முதலாக அவ்வகை இயக்கங்களைத் துல்லியமாக அளவிட்டவர். அதாவது, காலப் போக்கின் ஒரு இயக்கத்திற்கு எத்தனை மணித்துளிகள் ஆகின்றன என்று அளவிட்டவர். சும்மா இருக்காமல், சூரியனை சுற்றி பூமி சுழல்கிறது என்ற கப்பர்னிகஸ் தத்துவத்தை இவர் ஆதரிக்கப் போய், இவரை கத்தோலிக்க சர்ச்சின் மேலாட்சி அமைப்பு மிகவும் இம்சைப் படுத்தி விட்டது. இவரது எழுத்துக்களை வெளியிடத் தடை, வீட்டுக்குள் சிறைவாசம் என்று பலவாறு இவருடைய சுதந்திரம் பறிக்கப்பட்டதோடு, கண்காணிப்பில் இருந்ததால், தன் கருத்துகளைப் பகிர்வதற்கு மிக்க அச்சப்பட்டிருந்தார். உலகைப் படைத்த கடவுளின் சர்வ வல்லமையைச் சந்தேகிக்க எவருக்கும் உரிமை இல்லை என்று நினைத்தது கத்தோலிக்கம்.

விஞ்ஞான முறை என்று கலிலியோ போன்றார் கருதியதோ எல்லாக் கருத்துகளையும் சோதித்துப் பார்த்து நிரூபணமான பின்னரே ஏற்பது என்ற துவக்க கால அறிவியல் முறைமை. அது சர்வ வல்லமையுள்ள இறையின் தீர்மானத்தைச் சந்தேகிப்பதாகத் தோன்றலாம் என்று கருதியது கத்தோலிக்கம் என்பதோடு, இறையின் எண்ணக் கிடக்கை இதுதான் என்று தீர்மானிக்கவும் தமக்கு மட்டுமே உரிமை இருப்பதாகவும் கருதியவர்கள் கத்தோலிக்க சர்ச்சின் மேலாளர்கள். இவர்கள் ஆண்டதோ இத்தலி நாட்டின் மையத்தில் இருந்த ரோம் மாநகரில். இதாலியை ஆண்டவர்கள் ரோமன் கத்தோலிக்க சர்ச்சின் அதிகாரத்தை, கருத்துகளை, தீர்ப்புகளை மீறிச் செல்லும் துணிச்சலோ, விருப்பமோ, பலமோ அற்றவர்கள். ஆக கலிலியோ தன் நிஜமான அறிவியல் கருத்துகளை வெளியிடத் துணிவின்றி வாழ்ந்து வந்ததோடு, தாம் செய்யும் சோதனைகளின் தன்மை பற்றிய கருத்துகள் கூட வெளியில் கசிந்து விடாமல் பாதுகாக்கும் நிலையில் இருந்தார். இப்படி இலை மறை, காய் மறைவாய் இருந்ததுதான் அன்றைய விஞ்ஞானம்.

இங்கிலாந்தில் வாழ்ந்த நியூட்டனின் நிலை மேலானதாக இருந்ததா என்றால், அப்படி ஒன்றும் இல்லை. ஆனால் கலிலியோவை விட அவருக்குச் சற்று மேலான வாய்ப்புகளும், கருத்து வெளியீட்டில் திறப்புகளும் கிட்டின. இருந்த போதும், முழுவதும் வெளிப்படையாக கருத்துப் பரிமாற்றம், மற்றும் அறிவார்ந்த சர்ச்சைகள் எழுந்தமை 19-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகே என்று சொல்லலாம். இதெல்லாம் நியூட்டனின் காலத்துக்கு வெகு காலம் பின்னரே கிட்டியவை.

 

newton-observation.jpg

நியூட்டன் சிக்கலான வாழ்வு வாழ்ந்தவர். ஒரு புறம், நாடாளுமன்ற உறுப்பினர், மற்றொரு புறம் நாணயசாலையின் தலைவர், வேறொரு புறம், ராயல் சொஸைடியின் தலைவர். பெளதிகத் துறையை புரட்டிப் போட்டவர் என்று எல்லோராலும் இன்று ஒப்புக்கொள்ளப்பட்ட மேதை இவர். ஆனால், இவரது முறைகள் முற்றிலும் திறந்த முறைகள் அல்ல. தலை சிறந்த விஞ்ஞானியாக இருந்த போதும், இவர் தன்னுடைய ஆராய்ச்சியை வெளியிடத் தயங்கியவர். பலரும் வற்புறுத்தியதால் இவர் ‘Principia Mathematica’ என்ற ஆராய்ச்சிப் புத்தகத்தைக் கைப்பட எழுதி வெளியிட்டார். இதை அச்சிட இவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை – இத்தனைக்கும், அன்றைய தத்துவ, அறிவியல் கருத்துகள் மேலும் பரிமாற்றங்களுக்கு என்று உருவாக்கப்பட்டதும், அவற்றின் உயர்பீடமாகக் கருதப்பட்டதுமான ராயல் சொஸைடியின் தலைவர் இவர்! மற்றவர்கள் இவருடைய மேதமையை புரிந்து கொள்ளப் பல வருடங்கள் ஆயிற்று ஐன்ஷ்டைனைப் போலவே, எளிதில் புரிந்து கொள்ள முடியாதவர் என்று பெயர் எடுத்தவர் நியூட்டன்.

இவர் கலிலியோ செய்ததைப் போல பல சோதனைகளைச் செய்து (ஒளி, ஈர்ப்புசக்தி, ரசாயனம்), முன்னிலைகளையும், சோதனைக்காளாகும் பொருட்களின் நிலைகளையும், மாறுதல் நிகழும் விதங்களையும், மாறுதலுக்கு அப்புறம் கிட்டும் விளைவுகளையும் துல்லியமாக அளக்க வேண்டும் எனவும் அப்படியே அளக்கவும் தெரிந்த விஞ்ஞானி. இவர் காலத்தில் விஞ்ஞானிகள் எப்படியாவது மற்ற உலோகங்களைத் தங்கமாக மாற்ற ரசாயன முறைகளைத் (Alchemy) தேடி வந்தனர். இவரும், பல சோதனைகளை செய்து, வெளியிடவே இல்லை. நியூட்டனின் வெளியிடாத, தொலைந்து போன ஆராய்ச்சிகள், வெளி வந்த ஆராய்ச்சிகளைவிடப் பல நூறு மடங்கு என்று கணக்கிடப் பட்டுள்ளது. அவர், இறந்த பல ஆண்டுகளுக்குப் பிறகு, வம்சாவளியாக வந்தவர்களிடம், அவரது எழுத்துக்களை சிலர் ஏலத்துக்கு வாங்கி சில எழுத்துக்கள் வெளியிட்டுள்ளனர்.

newton_memoirs_apple_books_manuscript_co

தன்னுடைய ஆராய்ச்சிகளை வெளியிட்டு, கண்டவர்கள் ஏளனம் செய்வதை இவரால் பொறுக்க முடியவில்லையாம். இதனால், தன்னுடைய ஆராய்ச்சியை வெளியிட வாழ்நாள் முழுவதும் தயங்கியவர் நியூட்டன். முதன் முறையாக, விஞ்ஞானத்தில் கணிதவியலுக்கு முக்கியப் பங்குண்டு என்று உலகிற்கு நிரூபித்தவர் நியூட்டன். இன்று உயர்நிலைப்பள்ளியில் எல்லோரும் படிக்கும் நுண்கணிதம் (calculus) இவரின் முக்கிய பங்கு. அதிலும், லைப்னிஸ் என்ற கணித மேதையுடன் மோதல் – யார் முதலில் நுண்கணிதத்தைக் கண்டுபிடித்தவர் என்று கடைசி வரை முடிவாகவே இல்லை.

நியூட்டன், கோட்பாடு மற்றும் சோதனை அறிவியலின் தந்தை என்று ஒப்புக் கொள்ளப்பட்டாலும், இவரது ரகசிய முறைகள், இன்றைய திறந்த விஞ்ஞான பரிமாற்ற முறைகளுக்கு முற்றிலும் மாறுபட்டவை. எந்தக் கட்டுரை, எப்படி வெளியாக வேண்டும் என்று சட்டதிட்டங்கள் தீட்டும் பணியையும் நியூட்டன் ஆரம்பித்து வைத்தார். அவர் துவக்கிய சில விஞ்ஞானச் சடங்குகள்அன்றிலிருந்து இன்றுவரை, இந்த திறந்த தகவல் உலகத்திலும் தொடர்கின்றன.

நியூட்டன், மாற்று கருத்துள்ளவர்களை துவைத்து எடுப்பதில் மிகவும் ஆரவம் கொண்டவர். பல தருணங்களில், இவர் தனிப்பட்ட தாக்குதல்களையும் விட்டு வைக்கவில்லை. ஹுக் (Robert Hooke) என்னும் சக விஞ்ஞானியுடன் இப்படிப்பட்ட கசப்பான விவாதம் நியூட்டனின் வாழ்க்கையின் ஒரு அம்சம். இன்று விஞ்ஞான கருத்துப் பரிமாறல்கள் தனிப்பட்ட எதிர்ப்புகளைத் தாண்டி நிற்கின்றன, இதற்கு எதிரான நிலையே நியூட்டன் காலத்தில் நிலவியது.

நியூட்டனின் ஆராய்ச்சிக்குச் சந்திரனின் துல்லியமான வான் நிலை (lunar positions) பற்றிய விவரம் (data) தேவைப்பட்டது. அவருடைய நாட்களில் சந்திரனின் துல்லிய நிலை, மாலுமிகளுக்கு மிகவும் தங்களுடைய பயணங்களுக்கு உபயோகப்படும் என்று கருதப்பட்டது. ஆனால், பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்த நியூட்டனுக்கு தகவல் சேகரிக்க நேரமில்லை. ஆனால், தன்னுடைய நாட்டு மாலுமிகளுக்கு உதவ வேண்டும் என்று ஆசைப்பட்டார். சந்திரனின் விண் நிலைகளை ஜான் ஃப்ளாம்ஸ்டீட் (John Flamsteed) என்னும் வானியல் விஞ்ஞானி பொறுமையாகக் கணித்துச் சேகரித்து வந்தார். நியூட்டன் ஜானை சந்தித்து, மாலுமிகளுக்கு உதவச் சந்திர நிலை பற்றிய விவரங்களைக் (data) கேட்டுள்ளார். ஜான் உடனே ஒப்புக் கொள்ளவில்லை. தன்னுடைய உழைப்பு, தனக்கு விருப்பமில்லாத விஷயங்களுக்கு உபயோகிக்கப் படும் என்ற அச்சம் அவருக்கு. மேலும், யாரோ செய்யும் தவறுக்கு, தான் உடந்தையாகி விடுவோமோ என்றும் கவலை அவருக்கு.

வெறுத்துப் போன நியூட்டன், தன்னுடைய பதவியைக் காட்டி மிரட்டவும் முயற்சித்தார். தயங்கிய வண்ணம் ஜான் விவரங்களைக் கொடுத்தாலும், இவர்களுக்குள் பகை வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது. ஒரு சோதனை விஞ்ஞானியும், ஒரு கோட்பாடு மேதையும் சேர்ந்து வேலை செய்ய எவ்வளவு தயங்கினார்கள் என்பதை இன்று சிலரே அறிவார்கள். நியூட்டனுக்குத் துல்லிய சோதனை விவரத்தின் மதிப்பு புரிந்தது. ஆனால், அவருக்கும் சில கௌரவப் பிரச்னைகளும் இருந்தன.

இதற்கு நேர் எதிரான விஷயம் ஒன்று, நியூட்டனுக்கு முன் வாழ்ந்த ஜெர்மானிய விஞ்ஞானி யொஹானெஸ் கெப்லரின் (Johannes Kepler) வாழ்வில் நடந்தது. இவர் வானியல் மற்றும் கணக்கியல் நிபுணர். இவர் வாழ்ந்த காலத்தில், டிக்கொ பிராஹி (Tyco Brahe) என்ற ஒரு விஞ்ஞானி உண்டு. இவர் ஒரு தீவுக்குச் சொந்தக்காரர். தன்னுடைய தீவில், நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் வானத்து நிலையைத் துல்லியமாக அளக்க ஒரு வான் ஆய்வகத்தை (observatory) நிறுவினார். இவருடைய துல்லிய அளவிடல்கள் கெப்லரின் கிரக இயக்க கோட்பாடுகள் உருவாக உதவின.. டிக்கோவிற்கு தன்னுடைய அளவீடுகளைக் கெப்லரிடம் தருவதில் எந்தத் தயக்கமும் இல்லை.

இன்று விஞ்ஞானத்தில் எந்த ஒரு கோட்பாடும் சரியான, துல்லியமான கண்காணிப்பினால் நிறுவப்பட வேண்டும் என்று சர்வ சாதாரணமாக ஒப்புக் கொள்கிறோம். ஆனால், கத்தோலிக்க/ ப்ரொடஸ்டண்ட் பிரிவுகள் போலக் கருத்து வேறுபாடுகளில், நம்பிக்கை வேறுபாடுகளில் தொடங்கிய விஷயமிது என்பதை மறக்கக் கூடாது. விஞ்ஞானிகள் கருத்துப் பரிமாற்றம் செய்ய எளிதாக இருக்க வேண்டும் என்று உருவான ஒரு கருவியே இணையம். மூடு மந்திரத்திலிருந்து இணையம் வரை எப்படி இந்த மாற்றம் பரவியுள்ளது என்று விரிவாக அடுத்த கட்டுரையில் பார்போம்.

References

Isaac Newton, by James Gleick; Published by Vintage, 2004

The character of Physical Law by Richard Feynman; Published by Modern Library, 1994

(தொடரும்)

 

 http://solvanam.com/?p=26791

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

விஞ்ஞான வளர்ச்சியின் வளர்ச்சி- 2

ரவி நடராஜன்

”செவ்வாய் கிரகத்தில் இந்த தேதிக்கு, இந்த நேரத்திற்கு விண்கலம் சென்றடையும் என்று சரியாகச் சொல்ல, அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு இணையே கிடையாது”. சாதாரணப் பேச்சிலே இப்படிச் சொல்பவரை நாம் பார்த்திருப்போம். இவர்களே, ”செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் உண்டா இல்லையா என்று திட்டவட்டமாக சொல்ல முடியவில்லையாம். அதற்குப் போதுமான சாத்தியங்கள் இல்லையாம்,” என்று சற்று நிராசையோடு சொல்வதையும் கவனிக்கிறோம்.

மேலே, முதல் குறிப்பு, 19-ஆம் நூற்றாண்டில் உருவாகிய விஞ்ஞான சிந்தனையின் இன்றைய வெளிப்பாடு. அதாவது, விஞ்ஞான முறைகளில் எதை செய்தாலும், மிகத் துல்லியமாகவும், சற்றும் கருத்து வேறுபாடுக்கு இடமில்லாமலும் இருக்க வேண்டும் என்ற கருத்து.

மேலே சொல்லப்பட்ட இரண்டாம் குறிப்பு, விஞ்ஞான முடிவுகள் சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் (சூதாட்டத்தைப் போல) இருக்கக் கூடாது என்ற 20-ஆம் நூற்றாண்டு ஆரம்பகால சிந்தனையின் வெளிப்பாடு. மேலே சொன்ன இரண்டு உதாரணங்களும் திட முடிவுகளின் மேல் (determinism) உள்ள இரு வெளிப்பாடுகள். சந்தேகத்திற்கு விஞ்ஞானத்தில் இடமில்லை என்ற கருத்து இன்றுவரை நிலவுகிறது.

19-ஆம் நூற்றாண்டில் , நியூட்டனின் கருத்துக்களை பல விதத்திலும் உபயோகித்த இயக்கவியல் வல்லுனர்கள், (mechanical engineers) ஏராளமான வெற்றிகளை, பல தொழில்களில் கண்டார்கள். முதலில் நீராவி சக்தி, பிறகு, திரவ சக்தி, என்று பல விதத்திலும் தொழிற்சாலைகளில் வெற்றி கண்டு, தொழிற் புரட்சி மூலம் இங்கிலாந்தை உலக வல்லரசாக உயர்த்துவதற்கு முக்கிய உந்துகோல், 19-ஆம் நூற்றாண்டின் விஞ்ஞானச் சிந்தனை மற்றும் அதன் பயன்பாடுகள் என்று சொல்லலாம்.

 

histsci.jpg

 

முதல் விஞ்ஞானிகள்

துவக்க கால நவீன விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் வளர வணிகம் முக்கிய காரணமானது. அரசாங்கத்தின் பங்கு அவ்வளவாக இல்லை. 19-ஆம் நூற்றாண்டில், ‘விஞ்ஞானி’ (scientist) என்ற சொல் புழக்கத்திற்கு வந்தது. இவர்கள் வெறும் கோட்பாட்டு விளக்கங்கள் கொண்ட நூல்கள் எழுதுவதுடன் நிற்காமல், பலவகைப் பரிசோதனை முறைகள் (experimental methods) மற்றும் பயன்பாடுகளில் வெற்றி கண்டதால், ‘தத்துவாளர்கள்’ என்ற பட்டம் விலகத் தொடங்கியது. (இன்றுகூட, பல்கலைக்கழகங்களில், விஞ்ஞானத் துறைகளில் மிக உயர்ந்த பட்டம், Doctor of Philosophy, அல்லது PhD, என்றிருப்பது பழைய வழக்கத்தின் எச்சமே.) இத்துடன் விஞ்ஞானிகளைப் பற்றிய சில எதிர்பார்ப்புகளும் வளரத் தொடங்கின. இந்த எதிர்பார்ப்புகளே இன்றும் பொது மக்களிடம் பரவலான கருத்துகளாகத் தொடர்கின்றன. அவை:

1. விஞ்ஞானம் சமூகத்திற்கு தேவையான ஒரு கண்டுபிடிப்பை உருவாக்க வேண்டும்

2. எந்த ஒரு நிகழ்வையும் சரித்திரத்தில் முதன்முறையாகத் துல்லியமாக கணிக்க வேண்டும்

3. வெறும் சிந்தனையோடு நில்லாமல், ஏதோ ஒரு பொருளை உருவாக்க வேண்டும்

4. எந்த ஒரு கண்டுபிடிப்பும் பல்வேறு புதிய உபயோகங்களையும் உருவாக்க வேண்டும்

5. விஞ்ஞானிகள் ஒரு மந்திரக்காரர் போல (magician) எல்லோரையும் திகைக்க வைக்க வேண்டும்

aa_edison_subj_e.jpg

Thomas Alva Edison

இன்றும் ஒரு அமெரிக்கருக்கு எடிசனைத் (Thomas Alva Edison) தெரியும்; ஆனால் ஃபைன்மேனைத் (Richard Feynman) தெரியாது. எடிசன் எல்லோருக்கும் தேவையான மின்குமிழ் (electric bulb) மற்றும் மின் உற்பத்தி போன்ற விஷயங்களில் ஈடுபட்டவர். ஆனால், ஃபைன்மேன் அப்படி ஒன்றும் சாதாரண வாழ்க்கைக்கு உபயோகமான பொருளை உருவாக்கவில்லை. இன்றுவரை, விஞ்ஞானி (scientist), மற்றும் கண்டுபிடிப்பாளர் (inventor) என இருவேறாகப் பிரித்துப் பார்ப்பது பொது அறிவாக எழவில்லை. இது 19-ஆம் நூற்றாண்டின் தாக்கம் என்றே சொல்லலாம். இந்தியர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம் – சி.வி. ராமன் பெரிய விஞ்ஞானி என்பதோடு நின்று விடுவார்கள். பலருக்கு அப்துல் கலாமுக்கும் (Dr. A.P.J. Abdul Kalam) விண் இயற்பியலாளர் சந்திரசேகருக்கும் (Dr. S. Chandrashekar) உள்ள வித்தியாசம் என்னவென்று தெரியாது.

 

Feynman.gif.jpg

Feynman

 

வளர்ச்சித் தூண்டுகோல்கள்

பொதுப் புரிதல் இப்படி இருக்கையில், மற்றொரு புறம் 19-ஆம் நூற்றாண்டின் விஞ்ஞான வளர்ச்சியின் மிகப் பெரிய தூண்டுகோல்கள்:

1. விஞ்ஞானப் புத்தகங்கள் பெரும் எண்ணிக்கையில் அச்சடிக்கப்பட்டுப் பரவலாகவும், ஓரளவு மலிவாகவும் கிட்டவே நிறைய மக்களால் படிக்கப்படுவது ஒரு பரவலான பண்பாடாகத் தொடங்கியது

2. மக்களுக்கு (அனேகமாக யூரோப்பில்) கல்வி என்பது ஒரே வகையாகத் தொகுக்கப்பட்டு, நாடெங்கும் சமமான வகையில் கொடுக்கப்படவும், பரந்த மக்களிடையே படிப்பறிவு வளரத் தொடங்கியது அத்தகைய அறிவு நாட்டின் பொருளாதார, தொழில் முறை உற்பத்தியின் வளர்ச்சிக்கு உதவும் என்பது அரசுகளுக்கும், ஆள்வோருக்கும் விளங்கத் தொடங்கியது.

3. மெதுவாக, அரசாங்கங்கள் விஞ்ஞானத்தில் முதலீடு செய்யத் தொடங்கின. ஆனால், அந்நாளைய அரசாங்கங்களின் நோக்கம், விஞ்ஞான வளர்ச்சியால் வியாபாரம் விரிவடையும் என்பது மட்டுமே (விஞ்ஞான முன்னோடி இங்கிலாந்தை ”கடைக்காரர்கள் தேசம்” என்று உலகம் சொல்லி வந்தது.)

4. விஞ்ஞான முன்னேற்றங்கள் ஒழுங்காக விஞ்ஞான வெளியீடுகளில் வெளியிடப்பட்டு, விவாதிக்கப்பட்டு, ஒழுங்காக படிப்படியாக வளரக் காரணம், இந்தக் கட்டத்தில் உருவாக்கப்பட்ட முறைகள். இந்த வகை வெளியீடுகளில் ஒரு முன்னோடியும் மிகவும் மதிக்கப்பட்டதொரு வெளியீடுமானது Royal Society –யின் Philosophical Transactions என்ற வெளியீடு. இது அமெரிக்க விஞ்ஞான வளர்ச்சி இன்னும் வளரத் தொடங்காத, துவக்கநிலையிலிருந்த காலம் எனலாம். 18 –ஆம் நூற்றாண்டில், மருத்துவம் பற்றிய முதல் வெளியீடான Medical Essays and Observations, ராயல் எடின்பரோ சங்கத்தால் (Royal Edinburg Society) வெளியிடப்பட்டது. அதே கால கட்டத்தில் American Philosophical Society (1743) உருவாக்கப்பட்டாலும், ஒரு நூற்றாண்டுக்கப்புறம், 1848 –ல் உருவாக்கப்பட்ட AAAS என்ற American Association for the Advancement of Science என்ற அமைப்புதான் மெதுவாக, ஆனால் தொடர்ச்சியாக வளர்ந்து, இன்று உலகின் மிகப் பெரிய விஞ்ஞான ஆய்வுகளை வெளியிடும் அமைப்பாக உள்ளது. அதே காலத்தில், இன்று உலகில் மிகவும் மதிக்கப்படுகின்ற அமெரிக்க விஞ்ஞான வெளியீடுகளான, Nature (1869) மற்றும் Science (1880) துவங்கின.

5. பிரிட்டிஷ் சிந்தனையாளர் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் (Bertrand Russel) விஞ்ஞான வளர்ச்சியைப் பற்றி சொன்னது 19 -ஆம் நூற்றாண்டின் சாரத்தையே விவரிப்பது போல இருக்கும். ரஸ்ஸல் சொல்கிறார், “எங்கோ இருக்கும் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களை ஆராயும் பணியில் விஞ்ஞான முயற்சிகள் தொடங்கின – நியூட்டன் காலம் வரை அப்படியே நடந்தது. அடுத்தபடியாக, நமக்கு நெருங்கிய மனித உடலைப் பற்றிய விஞ்ஞான ஆராய்ச்சி தீவிரமாகத் தொடங்கியது 19-ஆம் நூற்றாண்டில். அத்துடன், உயிரினங்கள் பற்றிய தெளிவு ஏற்பட்டது டார்வினின் 19-ஆம் நூற்றாண்டு பரிணாம கோட்பாட்டிற்குப் (theory of evolution) பிறகுதான். கடைசியில், எல்லோருக்கும் மிக நெருக்கமான மனித மனதைப் பற்றிய விஞ்ஞான ஆராய்ச்சி, 19-ஆம் நூற்றாண்டின் ஃப்ராய்டின் (Sigmund Freud) ஆராய்ச்சிக்குப் பிறகுதான்.”

 

nature.jpg

 

 

19-ஆம் நூற்றாண்டில் சோதனை அறிவியல் (experimental science) மற்றும் தொழில்நுட்பம், கோட்பாட்டு அறிவியலை (theoretical science) விட வேகமாக முன்னேறியது. பொதுவாக, ஒரு சோதனை முடிவை சரியாகப் புரிந்து கொள்வதற்குக் கோட்பாடுகள் உதவின. அத்துடன், இந்த நூற்றாண்டில், நியூட்டனின் சிந்தனைகள், பல்வேறு துறைகளில் மேலும் விரிவு படுத்தப் பட்டன. உதாரணமாக, வில்லியம் தாம்ஸன் (William Thomson or Lord Kelvin) என்பவர், நியூட்டனின் சிந்தனைகளை, வெப்ப இயக்கவியலுக்கு (thermodynamics) விரிவு படுத்தினார். பல வருடங்களாக, கண்ணுக்கு தெரிந்த விஷயங்களில் மட்டுமே விஞ்ஞானம் வளர்ந்து வந்தது. விஞ்ஞானச் சிந்தனைகள் மாறிவிட்டாலும், இன்றுவரை, பொதுமக்களால், கண்ணுக்குத் தெரிந்த விஷயத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இங்கிலாந்தில் நடந்த முதல் தொழில் புரட்சி, நியூட்டனின் கோட்பாடுகளை அன்றாடம் பயன்படுத்தக் கூடிய பொருள்களாக மக்களுக்கு அளித்தது. இன்றைய இணையம், இவ்வகை இடைவெளியைக் குறைப்பதில் நல்ல சேவையாற்றியுள்ளது. ஏதாவது புரியவில்லை என்றால், விக்கிபீடியா மற்றும் உல்ஃப்ராம் ஆல்ஃபா –விற்கு மக்கள் விரைவது நல்ல விஷயம்.

19-ஆம் நூற்றாண்டில் பல்வேறு அடிப்படை விஞ்ஞான சிந்தனை மாற்றங்கள் உருவாகியது மறுக்க முடியாத உண்மை. சில முக்கிய மாற்றங்கள்:

· எந்த ஒரு கோட்பாடும், சரியான சோதனை சாட்சியங்களுடன், சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட வேண்டும்

· விஞ்ஞானத்தில் வாதங்கள் முக்கியம். ஆனால், சோதனை முடிவுகள் அசைக்க முடியாத, எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட தர்க்கத்துடன் விளக்கப்பட வேண்டும். இதற்கு கணக்கியல் அடிப்படை அவசியம். சார்புடைமை (bias) என்பதை அகற்றக்கூடிய சக்தி கணக்கியலுக்கு உண்டு

· ஒரு கோட்பாடினை முன் வைக்க, அல்லது ஒரு சோதனையின் முடிவினை வெளியிட ஆராய்ச்சிக் கட்டுரை தகுந்த விஞ்ஞான வெளியீட்டில் முன் சொன்ன முறைகளோடு வெளியிடப் பட வேண்டும். அப்படி வெளியிடவோ, மறுக்கவோ முடிவு சொல்ல துறையில் வல்ல நிபுணர் குழு விவாதித்து ஒப்புக் கொள்ள வேண்டும்

· மனிதப் புலன்களால் அளக்கக்கூடிய அளவுகளைத் தாண்டி, பல விஞ்ஞான அளவிடல்கள் மறைமுகமானவை. உதாரணம், மின்னழுத்தம் – மனிதப் புலன்களால் அளக்க முடியாதது. இப்படிப்பட்ட அளவிடல்கள் விஞ்ஞான வளர்ச்சிக்கு அடிப்படைத் தேவை. இவற்றின் அடித்தளம், கணக்கியல் மற்றும் லாஜிக். இதை, inductive முறைகள் என்கிறார்கள்.

· எந்த ஒரு விஞ்ஞான வெளியீடும் முன்பே வெளியிடப்பட்ட எந்த ஒரு வெளியீட்டை, எந்த விதத்திலும் காப்பியடிக்கக் கூடாது. முன்பு வெளியிடப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளைச் சரியாக மேற்கோள் காட்டி வாதிடலாம். இவ்வாறு மேற்கோள் காட்டுவதை வெளியீட்டு முறை, மேற்கோள் அட்டவணை, ஆய்வுதவி நூல் பட்டியல் என்றெல்லாம் (bibliography)அழைக்கப்படுகிறது. இது மேலோட்டமாகப் பார்த்தால் மிகச் சாதாரண மாறுதலாகத் தெரியலாம். இதைக் கவனிப்பதென்ன அவசியம் என்றும் கேட்கத் தோன்றலாம். ஆனால் முந்தைய சிந்தனைகளின் தொடர்ச்சி ஒரு புதுச் சிந்தனை என்பது வெறும் மரபு நீட்சியைச் சுட்டுவதோடு, அந்தப் புதுச் சிந்தனையில் ஏதும் பழுதோ, அல்லது மேம்பட வாய்ப்போ இருப்பது தெரிய வந்தால், அந்த புதுச் சாத்தியப்பாடுகள் எங்கிருந்தெல்லாம் கிட்டின என்று அறிவது பல கிளைப்பாதைகளை மறுபடி பரிசீலிக்கச் செய்யும். இந்தப் பரிசீலனையில் பல முன்னர் கவனிக்கப் படாமல் விடப்பட்ட அரிய சிந்தனைகள், ஆலோசனைகள் மீண்டும் கவனிக்கப்பட்டு மேலெழலாம். உதாரணமாக சமீபத்தில் கண்டுபிடிக்கப்படும் பல தாவரங்களின் மருத்துவ குணங்கள் பண்டைக் காலத்திலிருந்து சாதாரண மக்களிடம் புழங்கிய கருத்துகளே. ஆனால் இன்று அக்கருத்துகள் சோதிக்கப்படுவதோடு, என்ன காரணிகளால் அந்தத் தாவரங்கள் தம் மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கின்றன, என்ன முறைகளால் அவை நம் உடலுக்கு நன்மையைச் செய்கின்றன என்ற காரண காரியச் சங்கிலியை முழுதாக விரித்துணர இப்போது நம்மிடம் சோதிப்பு முறைகளும், கருவிகளும் உள்ளன. பட்டறிவு (experiential knowledge) இப்போது சோதிக்கப்பட்டு கோட்பாட்டறிவாக (theoretical knowledge) உறுதி செய்யப்படுகிறது.

மேலே சொன்ன முறைகள் பல்வேறு நல்ல தாக்கங்களை உருவாக்கின. கண்ணிற்கு தெரியாத சக்திகளை அடிப்படையாகக் கொண்டிருந்தும், அவற்றின் விளைவுகள் சந்தேகத்துக்கு இடமின்றி காட்டப்பட முடிவதால், மின்னியல், காந்தவியல் போன்ற துறைகள் வளரத் தொடங்கின. ஆரம்பத்தில், சோதனையியலாக இருந்த இத்துறைகள் படிப்படியாகச் சிறந்த கோட்பாட்டியலாகவும் வளர்ந்தன. உதாரணத்திற்கு, ஃபாரடே (Michael Faraday) டைனமோ -வை உருவாக்கி மின்சக்தி உலகை தொடங்கி வைத்தார். மேக்ஸ்வெல் (James Clerk Maxwell) இதை மிக அழகான கோட்பாடாக மாற்றினார்.

 

விஞ்ஞான ஆய்வு முடிவுகளை வெளியிடும் முறைகள்

விஞ்ஞான ஆராய்ச்சிகளை வெளியிடுவதில் பல வகைகள் உண்டு. முறைகளுக்கேற்ப, அதன் மதிப்புரை (review methods) முறைகளும் வேறுபடும். விரிவாக, இதைப்பற்றி ஆராய்வதற்கு முன், இந்தக் கட்டுரை சொல்வனத்தில் நீங்கள் எப்படி படிக்கிறீர்கள் என்று படிப்படியாகப் பார்ப்போம்:

1. முதலில், விஞ்ஞானத்தின் இப்படிப்பட்ட ஒரு அம்சத்தை விளக்கி ஒரு கட்டுரை எழுதப் போவதாக சொல்வனம் ஆசிரியருக்கு எழுதி அவரது முடிவை எதிர்பார்ப்பேன். எத்தனைப் பக்க கட்டுரை, எத்தனை பகுதிகள் என்று ஒரு தோராயமாக சொல்லிவிடுவது வழக்கம்

2. ஆசிரியர், அவருடைய பதிவுக் குழுவுடன் கலந்து ஆலோசித்து, இரண்டில் ஒன்றைச் சொல்லி விடுவார். ‘ஆளை விடுங்கள். இதெல்லாம் ஒத்து வராது’, என்றால், அந்தக் கட்டுரை அத்தோடு விடப்படும். ‘தாராளமாக எழுதுங்கள்’ என்றால், அடுத்த கட்டமாக, ஆராய்ச்சி, மற்றும் எழுத்து தொடரும்

3. எழுதி முடித்து, சரி பார்த்து, சொல்வனம் ஆசிரியருக்கு கட்டுரையை அனுப்பி வைப்பேன்

4. சொல்வனம் ஆசிரியர் குழு, கட்டுரையை வாசித்து, பிரசுரத்திற்கு அது தகுந்ததா என்று ஆராய்கிறார்கள். கருத்துக்கள் முரணாக இருந்தால், மாற்றி எழுதும்படி திருப்பி விடுவார்கள்

5. கட்டுரையில் சொன்ன விஷயங்கள், மற்றொரு எழுத்தாளர் ஏற்கனவே ‘சொல்வனத்தில்’ எழுதியிருந்தால், அதை சுட்டிக்காட்டி, மீண்டும் மாற்றி எழுதும்படி (ஒரே விஷயங்களைப் பல கட்டுரைகளில் திரும்பத் திரும்ப சொன்னால், வாசகருக்கு அலுத்துவிடும்) திருப்பி விடுவார்கள்

6. இவ்வாறு, படி, 3, 4, மற்றும் 5, நல்ல கட்டுரையாக மாறும்வரை நல்ல வெளியீட்டாளர்கள் விடமாட்டார்கள். பிறகு, கட்டுரை பிரசுரிக்கப்படும்

7. வெளிவந்த கட்டுரையை, சில இணைத்தளங்கள், ‘சொல்வனத்தில்’, இப்படிப்பட்ட கட்டுரை வந்துள்ளது என்று போடுகிறார்கள், அல்லது ஃபேஸ்புக்கில் கட்டுரை இணைப்பைப் போடுகிறார்கள்.

அட, என்ன, இப்படி தெரிந்த விஷயத்தைப் பற்றி எழுதிறேனே என்று அலுத்துக் கொள்ளாதீர்கள். தெரியாததைப் புரிந்து கொள்ள தெரிந்தவை நல்ல ஆரம்பப் படிகள். மேற்சொன்ன முறையில், எனக்கு ஆசிரியர் யார் என்று தெரியும். மேலும் கட்டுரையை விமர்சிக்கும் பதிவுக்குழுவும் (முதல் கட்டுரையில் தெரியாது) தெரியும்.

உதாரணத்திற்கு, எனக்கு சொல்வனம் ஆசிரியரை மட்டுமே தெரியும் என்று வைத்துக் கொள்வோம். அவர் என் கட்டுரையை தன் பதிவுக் குழுவிற்கு அனுப்புகிறார். பதிவுக்குழுவின் பரிந்துரைகள் ஆசிரியருக்கு மட்டுமே அனுப்பப்படுவதாகக் கொள்வோம். ஆசிரியர், எனக்கு பதிவுக்குழுவின் விமர்சனத்தை மட்டுமே அனுப்புவார். அதாவது, எழுதுபவருக்கு, விமர்சகர்கள் (அல்லது, அத்துறையில் நிபுணர்கள்) யாரென்று தெரியாது. ஆனால், விமர்சகருக்கு, இது ரவி நடராஜன் எழுதிய கட்டுரை என்று தெரியும். இதை Single Blind முறை என்கிறார்கள். நியூட்டன் காலத்திலிருந்து, இன்றுவரை பல விஞ்ஞான வெளியீடுகளின் முறை இது.

இதன் அடுத்த கட்டம், செல்வனம் ஆசிரியர், இக்கட்டுரையை ரவி நடராஜன் எழுதியிருக்கிறார் என்றே தன் பதிவுக்குழுவிற்குச் சொல்ல மாட்டார். மதிப்பீடு செய்பவருக்கு எழுத்தாளர் யாரென்று தெரியாது. எழுத்தாளருக்கு மதிப்பீட்டாளர்கள் யாரென்றும் தெரியாது. இதை double blind முறை என்கிறார்கள். பல புள்ளியியல் மற்றும் மனோதத்ததுவ வெளியீடுகளில் இந்த double blind முறை அவசியமாகிறது. முக்கியமாக எந்த வகை சார்புத்தன்மையும் வராமல் இருக்க இந்த முறையைப் பயன்படுத்துகிறார்கள்.

விஞ்ஞான ஆராய்ச்சியில் சில முடிவுகளை வெளியிட அவசர அவசியம் இருக்கும். மற்ற கட்டங்களில் அவசரம் தேவையிருக்காது. அவசரமாக விஞ்ஞான முடிவுகளை மற்ற விஞ்ஞானிகளுடன் பகிர ‘விஞ்ஞானக் கடிதங்கள்’ (Scientific Letters) என்ற முறை உருவாக்கப்பட்டது. இதற்கான ஒரு உதாரணம், Physical Review Letters என்ற பதிப்பு. இதில், single blind முறை உபயோகிக்கப்படுகிறது. Research Notes என்பவை, ஒரு துறையின் ஆராய்ச்சிகளை சுருக்கமாக, அல்லது ஒரு பல்கலைக்கழகத்தின் ஒரு ஆராய்ச்சித் துறையைப் பற்றிய சுருக்கமான வெளியீடு. பெரும்பாலும், விஞ்ஞான வெளியீடுகளில் தங்கள் பங்கு, மற்றும் சில சார்ந்த நிகழ்வுகள் பற்றிய வெளியீடு. இணையம் பிரபலமான பிறகு, பல விஞ்ஞானிகளும் தங்கள் ஆராய்ச்சிசாலையின் இணைத்தளம், அல்லது பல்கலைக்கழகத்தின் இணைத்தளத்தில், பிளாக் (blog) செய்கிறார்கள். இம்முறையில் பிரசுரக் கட்டுப்பாடு அதிகம் கிடையாது. சுயக்கட்டுப்பாடே முக்கியம்.

எல்லாவற்றிற்கும் மேலான விஷயம், ஆய்வு (Journal) என்ற முறை. இம்முறையில், single அல்லது double blind முறைகள் உபயோகிக்கப்படும். மேலும், மதிப்புரைகள் பல மாதங்களாகும். நாம் முன்னே சொன்ன Nature போன்ற இதழ்கள் இப்படி இயங்குபவை. ஒவ்வொரு துறைக்கும், இப்படி இயங்கும் ஆய்விதழ்கள் (Journals) உண்டு. ஒவ்வொரு பெரிய விஞ்ஞான முன்னேற்றமும் இத்தகைய பதிப்பேடுகள் மூலம் வெளிவரும். இந்த அணுகுமுறை சமீபத்தில் பல காரணங்களால், சற்று மாறிக் கொண்டு வருகிறது; இதைப்பற்றி, இக்கட்டுரையில் விவரிக்கப் போவதில்லை. இத்தகைய பதிப்பேடுகளுக்கு ஒரு உதாரணம், புது இங்கிலாந்து மருத்துவ ஜெர்னல் மிகவும் பிரசித்தி பெற்ற மருத்துவ வெளியீடு.

இத்தகைய Journals மற்றும் Letters -களில் வெளீயீட்டிற்கு கறாரான சட்டதிட்டங்கள் உள்ளன. கட்டுரையின் வடிவமைப்பிற்கும் (format) வரையறைகள் உண்டு, மற்ற விஞ்ஞான வெளியீடுகளை மேற்கோள் காட்டும் (Citations) குறிப்புக்கும் வரையறைகள் உண்டு.

***

மேற்கோள்கள்

1. விஞ்ஞான வெளியீடுகளின் சரித்திரம்

2. விஞ்ஞான வெளியீடு பற்றிய தனியார் கட்டுரை

3. 19 –ஆம் நூற்றாண்டின் விஞ்ஞான சரித்திரம்

4. விஞ்ஞான ஆராய்ச்சியின் வரலாறு

5. விஞானச் சிந்தனையின் வரலாறு பற்றிய காட்சியளிப்பு

 

 

- See more at: http://solvanam.com/?p=27894#sthash.N2ayU65O.dpuf

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

விஞ்ஞான வளர்ச்சியின் வளர்ச்சி – 3

ரவி நடராஜன்

 

விஞ்ஞானக் கோட்பாட்டு முறைகள்

முந்தைய நூற்றாண்டுகள் போலல்லாமல், சென்ற நூற்றாண்டில் சோதனை மற்றும் கோட்பாடு விஞ்ஞானிகள் ஒருவரை ஒருவர் சார்ந்தும், சேர்ந்தும் பணி செய்யத் தொடங்கினர். 19-ஆம் நூற்றாண்டில், புள்ளியியல் துறை சார்ல்ஸ் பெர்ஸ் (Charles S Peirce) என்பவரால், பெரிதும் வளர்க்கப்பட்டது. பெளதிகத்தில் உடனே உபயோகிக்கப்படாவிட்டாலும், பல துறைகளும் இந்த புதிய முறைகளை உபயோகிக்கத் தொடங்கின. இதைப்பற்றிய ஒரு ஆரம்ப நிலைக் கட்டுரையை, சொல்வனத்தில் முன்பு எழுதியிருந்தேன். புள்ளியியல், தரவுகளில் (data) ஒரு கோலத்தைத் (pattern) தேடும் முறை. பல தருணங்களில், இக்கோலத்தை வைத்து, ஒரு நிகழ்வின் சாத்தியக்கூறுகளை (probability of occurrence) சொல்லிவிட முடிகிறது. பல நிஜ வாழ்க்கை நிகழ்வுகளுக்கு மிகவும் உபயோகமான துறை இந்த புள்ளியியல். சொல்வனத்தில், இதைப்பற்றி, விவரமாக எதிர்காலத்தில் ஒரு கட்டுரையை எதிர்பார்க்கலாம்.

400px-Charles-Sanders-Peirce.jpg

Charles S Peirce

விஞ்ஞான முறைகள்/சிந்தனைகள் பற்றிய முதல் புத்தகங்கள் இந்தக் காலத்தில் எழுதப்பட்டன. வில்லியம் ஸ்டான்லி ஜெவன்ஸ் (William Stanley Jevons) 1873-ல் எழுதிய The Principles of Science: a treatise on logic and scientific method (1873, 1877) என்ற புத்தகம் இன்றும் விஞ்ஞான ஆராய்ச்சியின் அடிப்படையாக உள்ளது. விஞ்ஞான கண்டுபிடிப்புகளை மூன்று முக்கிய கட்டங்களாக பிரிக்கிறார் ஜெவன்ஸ். இந்த மூன்று கட்டங்கள் எந்த ஒரு வெற்றிகரமான கோட்பாட்டிற்கும் பொருந்தும்.

முதல் கட்டம், இயற்கையின் ஒரு இயல்பைப் பற்றிய ஒரு பொது புனைகொள்கையை (hypothesis) முன் வைப்பது.

இரண்டாவது கட்டமாக, அந்த பொது புனைகொள்கையின் விளைவுகளை (consequences) ஆராய்வது

மூன்றாவது கட்டமாக, விளைவுகள் சோதனை முடிவுகளுடன் ஒத்து வருகிறதா என்று சரி பார்ப்பது எந்த ஒரு கோட்பாடும், அதன் விளைவுகளும் இந்த விஞ்ஞான சிந்தனை முறையில்தான் உருவாகின்றன.

20-ஆம் நூற்றாண்டின் பெளதிக விஞ்ஞானி, ரிச்சர்ட் ஃபைன்மேனும் இதே முறைகளையே சொல்கிறார்.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=J545tIw55bE 

இத்துடன், பல கட்டங்களில், இன்னொரு விஷயம் சரியாக புரிந்து கொள்ளப் படுவதில்லை. அதாவது, எந்த ஒரு கோட்பாட்டின் வாழ்நாளும், இந்த மூன்று விஷயங்களும் ஒத்து போகும் வரை தான். உதாரணத்திற்கு, நியூட்டனின் கோட்பாடுகள், கிட்டத்தட்ட, ஒரு 150 வருடம் தாக்கு பிடித்தன. ஆனால், மெர்குரி கிரகத்தின் சுழற்சி பற்றிய அளவுகள் கோட்பாட்டோடு ஒத்து போகவில்லை. ஐன்ஷ்டைனின் புதிய கோட்பாடு, மெர்குரியின் பாதையை துல்லியமாக அளந்து சொன்னதால், அதுவே புதிய (gravitational theory) ஈர்ப்புக் கோட்பாடாகியது.

19-ஆம் நூற்றாண்டின் இன்னொரு முக்கிய பங்கு, அணுக்களின் கனத்தை சரியாகக் கணித்து அணுவேதியியலை (atomic chemistry) ஆரம்பித்து வைத்த ஜான் டால்டனின் (John Dalton) அருமையான ஆராய்ச்சி. 20-ஆம் நூற்றாண்டின் அணு பெளதிகம் முன்னேற இது ஒரு அடிப்படைத் தேவையானது. ஆனாலும், 19-ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய தலையங்க விஞ்ஞான செய்தி என்றால், அது, X-கதிர் மற்றும் ரேடியம் என்ற கதிரியக்கப் பொருள். மற்ற விஷயங்கள் அந்நாளைய செய்தித்தாள்களால், பெரிது படுத்தப்படவில்லை. இந்த இரண்டு விஷயத்திலும், பத்திரிகைகளுக்கு வாசக ஈர்ப்புக்கு வேண்டிய ஜாலங்கள் ஏதும் இல்லாதது காரணமாக இருக்கலாம்!

விஞ்ஞானச் சிந்தனையின் இரு பெரும் மாற்றங்கள்

விஞ்ஞானச் சிந்தனை முறையின் அடிப்படை 19-ஆம் நூற்றாண்டில் உருவானாலும், அதன் உண்மையான தாக்கம், 20-ஆம் நூற்றாண்டில்தான் நிகழ்ந்தது. முதன் முறையாக, விஞ்ஞானக் கோட்பாடு, சோதனை அறிவியலைக் காட்டிலும், முன்னே சென்றது. இதற்கான முன்னோடி, ஐன்ஷ்டைன் அவருடைய ஒவ்வொரு கோட்பாடும், பல ஆண்டுகள் கழித்து, சோதனை முறையில் நிரூபிக்கப்பட்டது. சோதனை விஞ்ஞானி, கோட்பாட்டாளர் பின்னே செல்ல வேண்டிய ஒரு நிலை உருவானது. அத்துடன், சோதனை முறைகள் அதிகச் செலவாகும் விஷயமாகவும் மாறின. இந்த இரு பிரிவினரும் ஒன்று சேர்ந்தாலே விஞ்ஞானம் முன்னேறும் என்ற நிலை உருவானது, பழைய வேறுபாடுகள் மறக்கப்பட்டன. ஐன்ஷ்டைனுடன், போர் (Neils Bohr), டிராக் (Paul Dirac), ஹைசன்பர்க், (Werner Heisenberg) ஃபைன்மேன், (Richard Feynman) மற்றும் ஃபெர்மி (Enrico Fermi) போன்ற பெரும் விஞ்ஞானிகள் கோட்பாட்டியலை என்றும் இல்லாத அளவிற்கு முன்னே எடுத்துச் சென்றனர்.

இதற்கு, மிகச் சிறந்த உதாரணம், ஐன்ஷ்டைன் மற்றும் எடிங்க்டன் (Arthur Eddington) இருவரின் கூட்டுறவு. 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், ஐன்ஷ்டைன் பல புதிய விஞ்ஞானக் கோட்பாட்டுப் புரட்சிகளை உருவாக்கிய ஜெர்மானியர். எடிங்க்டன், இங்கிலாந்தைச் சேர்ந்த வானியல் மற்றும் கணக்கு நிபுணர் – அதுவும் அரச வான் ஆய்வகத்தில் (Royal Greenwich Laboratory) பணியாற்றியவர். எட்டிங்டன், 1919 –ல், ஐன்ஷ்டைனின் ஒப்புமைக் கொள்கையை நிரூபிப்பதற்கு, வட ஆப்பிரிக்காவுக்குச் சென்று, முழு சூர்ய கிரகணத்தின் போது, எப்படி ஒளியைக் கூட, ஒரு பெரிய நட்சத்திரத்தின் ஈர்ப்புசக்தி வளைத்து விடுகிறது என்று காட்டும் ஒரு நிகழ்வைப் படம் பிடித்து, விஞ்ஞான உலகிற்கு விளக்கினார். இந்த கோட்பாட்டை 1915-இல் ஐன்ஷ்டைன் முன் வைத்தார். எதிரி நாட்டின் கோட்பாட்டாளருக்காக, பிரிட்டிஷ் சோதனை விஞ்ஞானி ஒருவர் மெனக்கிட்டு உலகின் ஒரு கோடிக்குச் சென்று சோதனை நடத்தி, எதிரி நாட்டின் விஞ்ஞானியின் கோட்பாடு சரி என்று நிரூபித்தால், அவருடைய நாட்டில் யார் ஒப்புக் கொள்வார்கள்? ஜெர்மனியிலிருந்து வெளியேறிய ஐன்ஷ்டைன், உடனேயே எட்டிங்டனை சந்தித்து நன்றி தெரிவித்தது உலகறிந்த விஷயம்.

 

ase_einstein.png

20-ஆம் நூற்றாண்டில் இரு பெரும் விஞ்ஞான சிந்தனை புரட்சிகள் நிகழ்ந்தது. இதில் ஒன்றை ஆதரித்த ஐன்ஷ்டைன், இன்னொன்றை ஏற்றுக் கொள்ளத் தயங்கினார். முதலாவது, சிந்தனைச் சோதனைகள் (thought experiments). இதில் மிகப் பெரிய விற்பன்னர் ஐன்ஷ்டைன். இவருடைய ஒப்புமைக் கொள்கையில் பல விஷயங்களை மற்றவர்களுக்குப் புரிய வைக்க, சிந்தனைச் சோதனைகளைப் பயன்படுத்தினார். உதாரணத்திற்கு, ஒப்புமைக் கொள்கையில் பல விஷயங்கள் ஒளியின் வேகத்தில் அல்லது அதற்குச் சற்று குறைந்த வேகத்தில் நிகழக்கூடிய விஷயங்கள். எவருக்கும் இந்த வேகத்தில் பயணித்து அனுபவமிருக்கச் சாத்தியமில்லை. இவருடைய கோட்பாட்டை விளக்க, கற்பனை மின் தூக்கிகள் (imaginary lifts/elevators) ஒளியின் வேகத்தில் இரு வேறு திசைகளில் பயணிக்கும்போது, அதில் பயணம் செய்யும் மனிதருக்கு எப்படப்புவியீர்ப்புச் சக்தியை உணர்வார் என்று ஐன்ஷ்டைன் விளக்கினார். அவரது சிந்தனை, சோதனை விஞ்ஞானத்தை விட மிக முன்னேறியிருந்ததால், அப்படி செய்ய நேர்ந்தது. பிற்பாடு, அவருடைய ஒவ்வொரு கோட்பாடும், துல்லியமாக (சில 1915 கோட்பாடுகள், 1945 –இல் நிரூபிக்கப்பட்டன) நிரூபிக்கப் பட்டதால், விஞ்ஞான உலகம் சிந்தனைச் சோதனை முறைகளை (thought experiments) ஏற்றுக் கொண்டது சொல்வனத்தில் வெளியான ஷ்ரோடிங்கரின் பூனை இப்படிப்பட்ட ஒரு சிந்தனைச் சோதனையைப் பற்றிய கட்டுரை.

இன்றைய விஞ்ஞானம்

அணு பெளதிகம் ஏராளமான முன்னேற்றமடைந்தது 20-ஆம் நூற்றாண்டில். இன்றுவரை, இத்துறையில், கோட்பாட்டாளர்கள் முன்னே உள்ளார்கள். ஆனால், இத்துறையின் முக்கிய திருப்புமுனை, குவாண்டம் கோட்பாடு. பல அணு சம்பந்தப்பட்ட சோதனைகள் மிகவும் சிக்கலானவை. அதில் உள்ள அளவிடல்கள் நேர்முக அளவிடல்கள் அல்ல. அத்துடன், அவ்வளவு சிறிய உலகில், (ஒப்பீட்டில் தலை முடி பத்து லட்சம் முறை பெரிதானது!) நியூட்டனிய இயக்கவியல் நிபுணர்கள் போல, திட்டவட்டமாக எதையும் சொல்ல முடியாது. உதாரணத்திற்கு, அணுவில் ஒரு எலெக்ட்ரான் எங்கிருக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. ஒரு சமயத்தில், ஒரு இடத்தில், இருக்க இத்தனை சாத்தியக்கூறு என்று மட்டுமே சொல்ல முடியும்.

physics_desktop_1680x1050_wallpaper-3750

ஐன்ஷ்டைன் போன்ற விஞ்ஞானிகளாலேயே இதை முதலில் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஐன்ஷ்டைனைத் தாண்டி இவ்வுலகம், புள்ளியியல் சாத்தியக்கூறுகளை ஒப்புக் கொண்டு விட்டது. இன்றைக்கு ஹிக்ஸ் போஸான் உள்ளதா இல்லையா என்று செய்திகள் வரும்போதும், சோதனை முடிவுகள் பல எதிர்முக அளவிடல், மற்றும் சாத்தியக்கூறுகள் மூலமே நிரூபிக்கப் படுகின்றன.

இன்றைய 21-ஆம் நூற்றாண்டில், கோட்பாட்டாளர்களும், சோதனை விஞ்ஞானிகளும் கை கோர்த்து பல நாடுகளிலிருந்தும் ஒன்றாக அணுச் சோதனைகளை CERN – இல் செய்கிறார்கள் என்றால், அது, விஞ்ஞான முறைகளின் முதிர்ச்சியைக் காட்டுகிறது. முதிர்ச்சியோடு, பழைய விஞ்ஞான முறைகளையும் இன்றும் பின்பற்றுகிறார்கள்.

சோதனை முடிவுகள் கோட்பாடு சரி என்று நிரூபிக்கலாம், அல்லது, தவறு என்றும் நிரூபிக்கலாம். சோதனை முடிவுகள் முதலில் துல்லியமானதா என்று தனிப்பட்ட முறைகளில் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, CERN –ன் முடிவுகளுக்கு, இரு உணர்கருவயின் முடிவுகள் ஒத்துப் போக வேண்டும். மேலும், பல்லாயிரக் கணக்கான விஞ்ஞானிகள், கணிணிகள் மூலம் உருவாக்கும் மறைமுக அளவிடல்கள் ஒத்துப் போக வேண்டும். எல்லா முடிவுகளும், அடுத்த கோட்பாடு இந்த முடிவுகளைச் சரி என்று சொல்லும் வரைதான் நீடிக்கும். என்றாவது வேறொரு கோட்பாடு இம்முடிவுகளைச் சரியில்லை என்றோ, அல்லது மேலும் துப்புரவான, கறாரான முடிவுகளைக் காட்டவோ செய்தால் இம்முடிவுகள் கைவிடப்படும்.

எந்த ஒரு கோட்பாடும், சோதனை முடிவும் தகுந்த விஞ்ஞான வெளியீட்டில் சரியான மதிப்புரைக்குப் பிறகுதான் வெளியிடப்பட வேண்டும்.

விஞ்ஞான வெளியீடுகளின் கட்டுப்பாடுகள் இத்துறையின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டைகள் அல்ல. மாறாக, சரியான தரக்கக் கட்டுப்பாட்டு முறைகள்.

எந்த ஒரு கோட்பாடும் நிரந்தரமானது அல்ல. நமக்குத் தெரிந்த வரை சரியானது. எங்கோ ஒரு சோதனை இந்த கோட்பாடு சரியில்லை என்று நாம் முடிவுக்கு வருவது, ஒரு புதிய கோட்பாடு உருவாக வழி வகுக்கும். இப்படி சுழன்று கொண்டிருப்பதுதான் விஞ்ஞான உலகின் சிந்தனையின் மையம்.

கடந்த 60 ஆண்டுகளாக, விஞ்ஞான முன்னேற்றங்கள் பெரிய குழுக்களால் உருவாக்கப்பட்டவை. விஞ்ஞானச் சோதனைகளுக்கு மிக அதிகம் செலவாவதும் இந்த வகைக் கூட்டு முயற்சிகளுக்கு ஒரு காரணம். அத்துடன், விஞ்ஞானம் வளர வளர, மறைமுக அளவிடல்களின் சிக்கல்களும், அதற்கு தேவையான கணினி சக்தியும் கூடிக்கொண்டே போகிறது. இதை நாம் விஞ்ஞான முட்டி மோதல் என்ற கட்டுரைத் தொடரில் விவரமாக ஆராய்ந்தோம். இன்று, பல விஞ்ஞானக் கோட்பாடுகள் முன் வைத்து, எது சரியானது என்ற சர்ச்சை, சோதனை முறையில் விளக்குவத்ற்கு முன்னரே நடக்கிறது. உதாரணத்திற்கு, Super String theory என்ற கோட்பாடும், Super Symmetry (SUSE) என்ற கோட்பாடும் நம்மிடையே புழங்குகின்றன. நம்முடைய இன்றைய பொது விஞ்ஞானப் புரிதலுக்கு 20-ஆம் நூற்றாண்டின் கடைசி 30 ஆண்டுகள் ஒரு காரணம். சந்திரனில் கால் வைத்த மனிதன், சிலிகான் சில்லு விந்தைகள், இழை ஒளியியல் (fibre optics), லேசர்கள், இணையம் மற்றும் கணினிகள் நம் வரலாற்றுப் பார்வையை மிகவும் மழுங்கடிக்கும் தொழில்நுட்பங்கள். இவை அனைத்திற்கும் பின்னுள்ள பெளதிகம், குவாண்டம் இயக்கவியல்தான். அது ஏற்கப்பட்ட அறிவாகி 60 ஆண்டுகள் கழித்துத்தான் மேற்படிப் பயன்பாடுகள், தொழில்நுட்பங்கள் எல்லாம் உருவாயின என்பதை மறந்துவிடக் கூடாது. விஞ்ஞானக் கூட்டு முயற்சிக்காக உருவாக்கப்பட்ட ஒரு கருவி இணையம். இன்று அதுவே மறக்கப்பட்டு, விஞ்ஞானம் பற்றிய நம் புரிதல் எங்கோ 18-ஆம் நூற்றாண்டில் இன்னும் சிக்கிக் கிடப்பது மிகவும் சோகமான விஷயம்.

 

quantum-physics-lecture-1024x640.png

இது மாறி, பொதுப் புரிதலில் விஞ்ஞானம் என்பதைப் பற்றிய தற்கால அல்லது சமகால முறைமைகள் ஊறி எழுவதற்கு மிக அவசியம், இன்றைய விஞ்ஞானப் பள்ளி ஆசிரியர்கள், அடுத்த தலைமுறையினருக்கு சரியான விஞ்ஞான எதிர்பார்ப்புகள், முறைகளை கற்றுத் தருவதுதான். சில பள்ளியாசிரியர்களாவது , இது போன்ற கட்டுரைகளைத் தேடிப் படித்து, மாணவர்களின் சிந்தனையை மாற்றினால், அதுவே இக்கட்டுரையை எழுதுவதின் குறிக்கோளுக்கு வெற்றி.

 

****

தமிழ்ச் சொற்கள்

எல்லோருக்கும் புரிய வேண்டும் என்று சில ஆங்கிலச் சொற்களை கட்டுரையில் பயன்படுத்தியுள்ளேன். இச்சொற்களுக்கு நிகரான சில தமிழ்ச் சொற்களை இங்கு பரிசீலனைக்கென முன்வைக்கிறேன்.

ஆங்கிலச் சொல் தமிழ் பரிந்துரை

Scientific Letters விஞ்ஞான ஆராய்ச்சிக் கடிதங்கள்

Scientific journals விஞ்ஞான ஆராய்ச்சி குறிப்பேடுகள், (அல்லது) பதிப்பிதழ்கள்

Single-blind ஒர் மறை ஆய்வு

Double blind இரு மறை ஆய்வு

Thought experiment சிந்தனைச் சோதனை

****

மேற்கோள்கள்

1. விஞ்ஞான வெளியீடுகளின் சரித்திரம் – http://expertedge.journalexperts.com/2013/01/26/scholarly-publishing-a-brief-history/

2. விஞ்ஞான வெளியீடு பற்றிய தனியார் கட்டுரை

3. 19 –ஆம் நூற்றாண்டின் விஞ்ஞான சரித்திரம்

4. விஞ்ஞான ஆராய்ச்சியின் வரலாறு

5. விஞ்ஞானச் சிந்தனையின் வரலாறு பற்றிய காட்சியளிப்பு 

 

 

http://solvanam.com/?p=28530

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.