Jump to content

நினைவழியாத் தடங்கள்


Recommended Posts

நெருடல்l இணையத்தளத்திலும் உங்கள் இந்த ஆக்கம் பிரசுரிக்கப்படுகின்றது .... வாழ்த்துக்கள்....

 

 

நன்றி  SUNDHAL

 

 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
நினைவழியாத்தடங்கள் - 01 (வீமன்காமம் காவலரன் தகர்ப்பு)
 
01.
 
1990 ம் ஆண்டு, இரண்டாம் கட்ட ஈழப்போரின் ஆரம்பகாலகட்டம். தாயகத்தின் சகல மாவட்டங்களிலும் சண்டைகள் பரவலாகவும் தீவிரமாகவும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன. யாழ்மாவட்டம் கோட்டையைச் சுற்றி தளபதி பிரிகேடியர் பானு அண்ணை தலைமையில் உருவாக்கப்பட்ட இறுக்கமான முற்றுகையைத் தகர்க்க முடியாமல் சிறிலங்காப்படை திணறிக்கொண்டிருந்தது. முற்றுகையை உடைக்கச் சிறிலங்கா தனது முப்படைகளின் முழுப்பலத்தையும் பிரயோகித்தது. நூற்றியேழு நாட்கள் கடுமையாகப் போரிட்ட சிறிலங்கா இராணுவம் இறுதியில் இரவோடிரவாக யாழ்; கோட்டையைக் கைவிட்டு ஒடிவிட்டது. 
 
யாழ்க்கோட்டையின் பின்னடைவை ஈடு செய்வதற்காக, ஒரு மாதத்திற்குள்ளாகவே பலாலி இராணுவத்தளத்தில் இருந்து பாரிய நகர்வைச் செய்தது சிங்கள இராணுவம். 
 
தாக்குதலணிகள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்திய போதும் காலநிலையும் எதிரியின் படைபலமும் சிறிலங்காப்படைக்கு வெற்றியையே தேடிக்கொடுத்துக்கொண்டிருந்தன. ஏற்கனவே தயார்ப்படுத்தப்பட்ட நிலைகளில் இருந்து பின்வாங்கிய எமதணிகள், புதிய நிலைகளை அமைத்து பாதுகாப்பு வேலியை ஏற்படுத்தியிருந்தன.   
 
அது மழைகாலம். தொடர்ச்சியாகக் கனத்த மழை பெய்து கொண்டிருந்தது. மாவிட்டபுரம் பகுதியில், வெற்றிலைத்தோட்டங்கள் அமைந்திருக்கும் பக்கமாக நிலையமைத்து இருந்தோம். சிரமமான வேலையாகவே அது அமைந்தது. மழைக்கு நடுவே பாதுகாப்பகழிகளை வெட்டுவது கடினமாக இருந்தாலும் புதிய நிலைகளை அமைத்து, தடுப்புச் சமருக்குத் தயாராகியிருந்தோம். 
 
உடனடியாகப் பாதுகாப்பு நிலைகளை அமைக்க வேண்டியிருந்ததால் பதுங்குகுழிகளை அமைப்பதற்கான மரக்குற்றிகள் தொடக்கம் எதுவும் கிடைக்கவில்லை. அருகில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே பதுங்கு அகழிகளை அமைக்கவேண்டியிருந்தது. அநேகமான நேரங்களில் பதுங்கு அகழிகள் தண்ணீராலேயே நிரம்பியிருக்கும், செம்மண் சேறு, அவதானமாகச் செல்லாவிட்டால் வழுக்கி விழவேண்டிவரும். அதுமட்டுமல்லாமல் ஆயுதமும் சேறாகி விடும்.  இராணுவத்தின் செல்லடிச்சத்தம் கேட்கும் போது பதுங்கு குழிக்குள் தான் பாய்ந்து காப்பெடுப்போம். 
 
ஆங்காங்கு கிடைத்த தகரம், கிடுகு, சீற்களைப் பயன்படுத்தி சிறிய கொட்டில்களை அமைத்து குந்தியிருந்தபடியேதான் நித்திரை கொள்ளுவோம். அரை அடிக்குக்  கிடங்கு வெட்டிப் பொலித்தீன் பைகளைப் போட்டு அதன்மேல் தான் படுக்கவேண்டும். அப்போது உடல் சூட்டிற்கு உடைகள் கொஞ்சம் கொஞ்சமாகக் காயத்தொடங்கும். உடைகள் காய்ந்து உடலில் இருந்து சிறிது சிறிதாகக் குளிர் நீங்கத் தொடங்க, கொஞ்சம் நிம்மதியாக அயரலாம் என்று நினைத்து சரியும்போது எதிரி எறிகணை ஏவும் சத்தம் கேட்கும். சென்றிக்கு (காவல்கடமை) நிற்பவன் ஓடிவந்து, ‘செல்லடிச்சிட்டான்  எல்லாரும் பங்கருக்கு வாங்கோ’ என தட்டியெழுப்ப, எங்கு விழுந்து வெடிக்குமோ என்று தெரியாத செல்லுக்காக மீண்டும் தண்ணி பங்கருக்குள் குதித்து நனைந்து எழுவோம். இப்படியேதான் அந்த நாட்களின் கடுமைகளை விடுதலைக்காகத் தாங்கிக் கொண்டனர் போராளிகள்.
 
இங்கு ஒரு சம்பவத்தை நினைவு கூறலாம் என நினைக்கின்றேன். வழமையாக அதிகாலை 4.30 மணிக்கு எல்லோரும் தயார் நிலையில் இருப்போம் (Alert position). ஏனெனில் இராணுவம் அதிகாலையில் நகர்ந்து சண்டையை ஆரம்பிப்பது வழமை. அதனால் எல்லோரும் தாக்குதலை எதிர்கொள்ளத் தயாராக இருப்போம்.
 
அது மாரிகாலம், அதிகாலையில் மிதமான குளிர் காற்று அடித்துக்கொண்டிருந்தது. காவல் நிலைகளில் இருப்பவர்கள் சிலவேளை அயர்ந்து தூங்கி விடுவார்கள். ஏனெனில் பகல் வேளைகளில் தூங்க முடியாது. அணியில் ஆட்கள் குறைவு, இரவுக்காவல்கடமை, கடுமையான வேலை என ஓய்விற்கோ உறக்கத்திற்கோ நேரம் இருக்காது. அதற்கான வாய்ப்பும் இல்லை. எனவே அடிக்கடி ஒவ்வொரு காவலரணுக்கும் சென்று, முழித்திருக்கிறார்களா? அவதானமாக இருக்கின்றார்களா? எனப் பார்ப்பது வழமை. 
 
அன்றைக்கு, இவ்வாறு சென்ற போது ஒரு நிலையில் இருந்த ஒரு போராளி, அவர் தென்தமிழீழத்தைச் சேர்ந்தவர்;, நிலையெடுத்திருந்தபடியே அயர்வில் நித்திரையாகிவிட்டார். அவரை எழுப்பிவிட்டு, அந்த நிலையில் நான் நின்று கொண்டு அவரை ரோந்து சென்று வருமாறு கூறினேன். கொஞ்சம் நடந்தால் நித்திரை தூக்கம் இல்லாமல் போகும் என்பதால் அவரை சுற்றிப்பார்த்து வருமாறு சொல்ல, அவரும் சென்றுவிட்டார். 
 
கனநேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. என்ன நடந்திருக்குமோ என்ற எண்ணம் ஏற்பட, அவர் சென்ற பக்கமாக நடந்து கொண்டிருந்தேன். அப்போது ’எனக்கு ஒன்னாதுடா, என்னை தூக்குங்கடா’ என மெலிதாக ஒரு சத்தம் கேட்டது. வெடிச்சத்தமோ அன்றி செல் சத்தமோ கேட்கவில்லை. யாருடைய குரல்? என்ன நடந்திருக்கும்? என்ற யோசனையோடு அந்தக்குரல் வந்த இடத்தை நெருங்கிக் கொண்டிருந்தேன். எனக்கு ஒன்னாதுடா (என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை) என்ற அந்தக்குரல் அவருடையதுதான் எனப் புரிந்தபோது, பல கேள்விகள் அந்தக் கணத்தில் மனதில் உதித்தாலும்,  எதுக்கும் தயாராக சத்தம் வந்த இடத்தை நோக்கி மெல்ல மெல்லச் சென்றேன்.
 
சத்தம் மூவிங் பங்கருக்குள் இருந்து வந்தது. அந்த இடத்திற்கு போய் பார்த்தபோது மூவிங் பங்கருக்குள் விழுந்து இறுகுப்பட்டுப்போய் இருந்தார். அவரிடம் என்ன நடந்தது என்று கேட்டேன். ”மூவிங் பங்கரின் அருகால் நித்திரைத்தூக்கத்துடன் நடந்து வந்தனான் அப்போது சறுக்கி பங்கறுக்குள் நிலைகுப்பற விழுந்துவிட்டேன்”; என்றார். பங்கரின் இருபக்கமும் ஈரமாக இருந்தது. அவரும் உடல் பருமனானவர். விழுந்த போது கை கால்களும் சுயமாக எழும்ப முடியாதபடி அச்சேற்றுக்குள் அகப்பட்டுவிட்டன. மேலும் அந்த நிலையில் இருந்து எதிரியின் நிலை மிகவும் அண்மையாக இருந்தது. இராணுவம் கதைப்பது கூடக் கேட்கும். எனவே அவர் பலமாகச் சத்தம் போட்டு உதவிக்கு கூப்பிட முடியாததால் அப்படியே இருந்தவாறு மெல்லிய சத்தத்தில் முனங்கிக் கொண்டிருந்தார். இப்படித்தான் அந்த நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.
 
(அந்த தாக்குதலுக்குப் பின்னர், நாங்கள் பிரிந்து விட்டோம். அந்த நண்பனைக் காணும் வாய்ப்பும் கிடைக்கவில்லை. மூன்று வருடங்கள் கழித்து ஒருநாள் பத்திரிகையில் அவனுடைய படம் இருந்தது. பூநகரி தவளை நடவடிக்கையில் வீரச்சாவடைந்த அவனுக்கு வீரவணக்கம் செலுத்தியிருந்தார்கள். ஒரு கணம் மௌனமாக அஞ்சலி செய்து விட்டு, அடுத்த பக்கத்தைப் புரட்டினேன்.) 
 
பலாலி இராணுவமுகாம் விஸ்தரிப்பை இராணுவம் செய்துவிட்டது. தளபதி பானு அண்ணை அணிகளை மீள் ஒழுங்குபடுத்தி, பாதுகாப்பு நிலைகளை அமைத்துத் தடுப்புச் சமருக்கான ஒழுங்குகளைச் செய்து கொண்டிருந்தார். பலாலிப்பகுதியில் இருந்து, இராணுவம் மேலும் பிரதேசங்களைக் கைப்பற்றி விடக்கூடாது என்ற தலைவரின் பணிப்பிற்கமைய பலாலிப்பகுதியிலேயே தங்கி நின்று சகல வேலைகளையும் ஒழுங்குபடுத்தினார். 
 
அதேவேளை சிங்கள இராணுவமும் தங்களது நிலைகளை அமைத்து பலப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தது. இந்த நேரத்தில் திடீர்த்தாக்குதல் ஒன்றை மாவிட்டபுரம் பகுதியில்  மூன்று முனைகளிலும் நடாத்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
 
02.
பலாலி இராணுவ முகாமிலிருந்து முன்னேறிய இராணுவம் மாவிட்டபுரம், கட்டுவன் உள்ளடங்கலான பகுதிகளைக் கைப்பற்றி நிலை கொண்டிருந்தது. மாவிட்டபுரம் கோயிலுக்கு வலது பக்கமாக புகையிரதப்பாதை அமைந்திருக்கின்றது. கோயிலை அண்மித்த பகுதியில் இருந்து புகையிரதப்பாதை வரை அமைந்திருந்த தொடர் காவலரண் மீது, மூன்று இடங்களில் வலிந்த தாக்குதலைத் தொடுத்து, அக்காவலரணைத் தாக்கியழிக்கும் தாக்குதல் நடவடிக்கை திட்டமிடப்பட்டது. காவலரணைத் தாக்கியழித்து இராணுவத்திற்கு உயிர்ச்சேதத்தை ஏற்படுத்துவதுடன், ஆயுதங்களையும் கைப்பற்றிக் கொண்டு பின்வாங்குவதுதான்  இத்தாக்குதலின் அடிப்படை நோக்கமாக இருந்தது.
 
விடுதலைப்புலிகளின் இராணுவ உத்திகள் வளரத்தொடங்கிய ஆரம்ப காலமது. அப்போதைய காலகட்டத்தில், எதிரியின் காவலரணுக்கு அண்மையாக நகரக்கூடிய தூரம் வரை நகர்ந்து, கடுமையான தாக்குதலை மேற்கொண்டு காவலரண்களைச் சிதைத்து, எதிரிக்கு இழப்பைக் கொடுத்து ஆயுதங்களைக் கைப்பற்றுவதுதான் தந்திரோபாயமாக இருந்தது.
 
நாங்கள் நின்ற பிரதேசத்தில் ஒரு தாக்குதல் முனை தீர்மானிக்கப்பட்டிருந்தது. அத்தாக்குதல் பிரதேசமானது ஒரு சிறிய பாதையையும், பாதைக்கு வலதுபக்கம் தோட்டக்காணியையும், இடதுபக்கம் வீடுகளையும் கொண்டமைந்திருந்தது. வீட்டுக்காணிக்குள் தென்னை, பலா, மாமரம், கிழுவை வேலிகள், வாழைமரங்கள், வீடுகளின் முற்றத்தில் பூமரங்கள், குறோட்டன்கள், வீடுகளுக்கிடையிலான குச்சொழுங்கைகள் போன்ற பௌதீக அமைப்பை கொண்ட, தாக்குதலுக்கு உவப்பான சூழலைக் கொண்டிருந்தது. இந்த மறைப்பைப் பயன்படுத்திதான் தாக்குதலணிகள் தாக்க வேண்டிய காவலரணின் எல்லை வரை நகர்ந்து தாக்குதலைத் தொடர வேண்டும். அதன்படி, திட்டம் தீட்டப்பட்டு, தாக்குதல் அணிகள் தயார்படுத்தப்பட்டன.
 
மேஐர் சஞ்சிகா, கப்டன் அருந்ததி ஆகியோரைக் கொண்ட மகளிர் அணி உட்பட, கப்டன் முகுந்தன் தலைமையிலான தாக்குதல் அணி தாக்குதல் நகர்வுக்கு தயார் நிலையில் இருந்தது. தாக்குதல் திட்டத்தின் படி மற்ற முனைகளில் தாக்குதல் ஆரம்பிக்கப்படும்போது. எமது முனையில் பசீலன் மோட்டார் தாக்குதல் ஆரம்பிக்கப்படும். தொடர்ந்து அணிகள் தாக்குதலைத் தொடங்கும்.
 
பசீலன் மோட்டரும் தாக்குதலன்று மாலையிலேயே காவலரணின் முன் இருந்த வீட்டிற்குள் காவலரணை நோக்கி நேரடிச்சூடு(Direct fire) வழங்கக்கூடிய வகையில் நிலைப்படுத்தப்பட்டிருந்தது. அத்தாக்குதல் அணிக்கு மேலதிக உதவி அணியாக செயற்படும் பொறுப்பு அங்கு லைனில் நின்ற அணிக்கு கொடுக்கப்பட்டிருந்தது.
 
தாக்குதலுக்கான நேரம் நெருங்கிக் கொண்டிருக்க அணிகள் நகரத் தொடங்கி விட்டன. காவலரண் பகுதில் மயான அமைதி. இராணுவம் காவலரணில் டோச் அடிக்கும் வெளிச்சம் இடையிடையே தெரிந்து கொண்டிருந்தது. 
அணிகள் எதிரியின் நிலைகளை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தன. சிறிது நேரத்தின் பின் “அற்வான்ஸ் மூவ்” என்ற சத்தம் கேட்டதைத் தொடர்ந்து பசீலன் மோட்டாரின் சத்தம் அந்தப்பகுதியை அதிரவைத்ததுடன் சண்டை ஆரம்பமாகிவிட்டது.
 
துப்பாக்கிகள் அனல் கக்கிக் கொண்டிருந்தன. எதிரியும் தனது எதிர்த்தாக்குதலை தீவிரப்படுத்தினான். அணிகள் நகர்ந்த பிரதேசத்தில் புகைமூட்டம், துப்பாக்கிகளில் இருந்து வெளிப்படும் வெளிச்சம் மட்டுமே  மின்னிக் கொண்டிருந்தது. வெடிச்சத்தங்களால் அந்தப்பகுதி அதிர்ந்துகொண்டிருந்தது. எதிரி ஏவிய பரா வெளிச்சம் இடையிடையெ அப்பிரதேசத்தில் வெளிச்சத்தைக் கொடுத்தாலும். அணிகள் நகர்ந்த பகுதியானது மரங்களால் மூடப்பட்டிருந்ததால் அது தாக்குதலணிகளிற்கு பாதமாக இருக்கவில்லை.
 
“மூவ்,மூவ்” என போராளிகள் சத்தமிட்டவாறு தீவிரமாகத் தாக்குதலை முன்னெடுத்தனர். ஒரு பக்கத்தால் மேஐர் சஞ்சிகா தலைமையிலும் மறுமுனையில் முகுந்தன் தலைமையிலும் அணிகள் தீவிரமாக தாக்குதலை முன்னெடுத்தவாறு நகர்ந்து கொண்டிருந்தன. எதிரியும் கடுமையான எதிர்த்தாக்குதலை மேற்கொண்டதில் அணிகள் இழப்புக்களைச் சந்திக்கத்தொடங்கின. இதனால், மேலதிக அணிகள் களத்தில் இறக்கப்பட்டன. 
 
தாக்குதல் பிரதேசத்திற்கு உள் நுழைந்து சென்றபோது ஒரே புகைமண்டலமும் துப்பாக்கியில் இருந்து வெளிப்படும் வெளிச்சங்களும் மட்டுமே தெரிந்தது. சண்டையிட்டுக்கொண்டிருந்த பகுதி ஒரு வீட்டின் முன்பக்கம். அங்கு மாமரங்களும் தென்னைமரங்களும் வாழைமரங்கள், ஆங்காங்கு நின்றன. வீட்டின் முன்பக்க வேலி ஓரம் எதிரியின் காவலரண் இருந்தது. வேலிக்கு இடது பக்கமாக இருந்த ஒழுங்கைக்குள்ளால் ஒரு அணி நகர்ந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தது. 
 
“காவலரணுக்காக அடித்த பசீலன் செல் காவலரணுக்குப் படாமல் பக்கவாட்டில் முன்னுக்கு இருந்த தென்னையில்  பட்டு, காவலரண் தாக்குதலுக்குள்ளாகதால் கள நிலமை எதிரிக்கு சாதகமாகப் போய்க்கொண்டிருக்கின்றது” என்றனர்.
 
ஏற்கனவே தாக்குதலைத் தொடுத்த அணிகள் எவ்விடம் வரை நகர்ந்துள்ளார்கள் என்பதை ஊகிக்க முடியாததால், குறோள்(தவண்டு) இழுத்துக் கொண்டு இராணுவத்தின் காவலரணை நோக்கி நகர்ந்து சென்று தாக்குதலை ஆரம்பித்தோம். 
 
எதிரி தயார்ப்படுவதற்கான நேரம் கிடைத்துவிட்டதாலோ என்னவோ அவனது தாக்குதல் இன்னும் மூர்க்கமடையத் தொடங்கியது. எதிரி தனது காவலரணுக்கு முன் பகுதிக்குள் கைக்குண்டுகளைச் சரமாரியாக வீசிக்கொண்டிருந்தான். எதிரியின் துப்பாக்கிச் சன்னம் பட்டு மாமரத்து இலைகளும் மரக்கிளைகளும் கொட்டுப்பட்டுக்கொண்டிருந்தன. தலைக்கு மேலால் ரவைகள் கூவிக்கொண்டு சென்றன. அந்தளவிற்கு கடுமையான தாக்குதலை எதிரி மேற்கொண்டு கொண்டிருந்தான்.
 
அங்கு காயப்பட்ட சிறு காயமடைந்தவர்கள் காயங்களை ‘பீல் கொம்பிறசரால்’ கட்டி விட்டு காயத்துடன் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். கடுமையான காயக்காரரை இழுத்து அவ்விடத்தில் இருந்த மரத்தின் மறைவில் கிடத்தி விட்டு தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருந்தது தாக்குதலணி. 
 
உடனடி வேலையாக அங்கு காயப்பட்ட, வீரச்சாவடைந்தவர்களை வெளியேற்ற வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. காப்புச்சூடுகளைத் தீவிரப்படுத்தி விட்டு, காயப்பட்ட போராளிகளில் தவண்டு போகக்கூடியவர்களிடம் பின்னால் போகுமாறு கூறிக்கொண்டிருந்தனர். ஆனால், அவர்களில் சிலர் தங்களால் இயலும் வரை சண்டையிடுகின்றோம் என்ற முடிவில் உறுதியாக நின்று போரிட்டனர். சிலரை வற்புறுத்திப் பின்னுக்கு அனுப்பிவிட்டு, முடியாதவர்களை இருவர் இருவராக தவண்டு கொண்டு  செல்ல வேண்டியிருந்தது. தலைக்கு மேலே துப்பாக்கிச் சன்னங்கள் சீறிப்பாய்ந்து கொண்டிருந்தன. சுpறிதாகத் தலையைத் தூக்கி எழும்பினாலும் காயப்பட அல்லது வீரச்சாவடைய வேண்டி வரும். எதிரி அந்தளவிற்கு கடுமையான எதிர்த்தாக்குதலை மேற்கொண்டிருந்தான். 
 
அந்த இருட்டில், எதிரியின் கடுமையான தாக்குதலுக்கு நடுவே, தாக்குதலைக் கட்டுப்படுத்தி, அதில் இருந்த போராளிகளை வெளியில் எடுப்பது என்பது கடுமையானதாகவே இருந்தது. சில போராளிகள் காயப்பட்டு அரை மயக்கத்தில் இருந்தனர். காயப்பட்டு அல்லது வீரச்சாவடைந்திருக்கும் ஒருவரையும் எதிரியிடம் விட்டு விடக்கூடாது என்ற ஆதங்கம். எதிரியின் கடுமையான தாக்குதலை வலுவிழக்கச் செய்யாமல் ஒன்றும் செய்யமுடியாது என்ற இக்கட்டு நிலை. மேலும் எதிரியை அழிக்கவேண்டும் என்ற நோக்கம். எல்லாச் சவால்களுக்கும் மத்தியில் தாக்குதலணிகள் தங்களது மூர்க்கமான தாக்குதலை முன்னெடுத்துக் கொண்டிருந்தனர். 
 
இராணுவம் பொயின்ரிலிருந்து சுடும் வெளிச்சத்தை இலக்காக வைத்து தாக்குதலை தொடுத்த வண்ணம் தவண்டு தவண்டு சுட்டுக் கொண்டு முன்னேறிக்கொண்டிருந்தோம். அப்போது இடையில் ஒரு சிறு குறுக்குவேலி குறுக்கிட்டது. அவ்வேலி முள்ளுக் கம்பியாலானது. கடக்க வேண்டும். இடது பக்கத்தில் இருந்தவர்கள் அவ்வேலிக்கரையில் இருந்து சுட்டுக்கொண்டிருக்க, வேலியின் மேல்பக்கம் இருந்த இடைவெளிக்குள்ளால் எழும்பிப்பாய்ந்து கடந்து மறுபக்கம் விழுந்தேன்.
 
கைகுறுகுறுத்தது மாதிரி இருந்தது. கையைத் தடவிப்பார்த்தேன். இரத்தம் வந்துகொண்டிருந்தது. காயப்பட்டு விட்டேன். கோள்சரில் இருந்த பில்கொம்பிறசரை காயப்பட்ட இடத்தின் மீது அழுத்திப் பிடித்துக் கொண்டேன். கை பலவீனப்பட்டுக் கொண்டு போனது. மறுவளமாகத் திரும்பி, காயப்பட்டதைச் சொன்னேன்.
 
அதில் இருந்தவர்கள் அப்படியே இருக்குமாறு கூறிவிட்டு வேலிக்கம்பியை ரைபிள் பட்டால் குத்தி, மரத்தில் அடித்திருந்த கம்பியாணியை பிய்த்து எடுத்தனர். வேலிக்கம்பி இழகியது. கம்பியை தூக்கிப் பிடித்துக் கொள்ள, அதில் இருந்த ஒருவரிடம் ரைபிளை கொடுத்து விட்டு தவண்டு வேலிக்கு மறுபுறம் வந்தேன். 
தொடர்ந்து சண்டையிட முடியாத நிலை, இரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தது. பீல் கொம்பிறசர்களை காயத்தை சுற்றி கட்டிவிட்டு, தவண்டு பின்னிக்கிருந்த வீட்டடிக்கு வந்தேன். அங்கு களமருந்துவப்போராளிகள் காயத்திற்கு கட்டுப்போட்டு இரத்தத்தைக் கட்டுப்படுத்தினார்கள்.
 
சண்டை தொடர்ந்த வண்ணமிருந்தது. வேறும் சில போராளிகளும் காயப்பட்டு வந்தனர். ஒரு கட்டத்தில் எமது இழப்புகள் கூடத்தொடங்கியதும் பாதுகாப்புத்தாக்குதலை மேற்கொண்டு அணிகள் பின்வாங்க வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டது.
 
அணிகள் பின்வாங்கத் தொடங்கின. காயக்காரரைத் தூக்கிச் செல்பவர்களின் துணையுடன் தற்காலிக மருத்துவமனைக்கு வந்து பின்னர் சிகிச்சைக்காக வந்து விட்டேன். 
 
வரும்போது “புகையிரதப்பாதை வழியாகச் சென்ற மற்றைய அணி காவலரணின் பக்கவாட்டிற்கு சைலன்றாக நகர்ந்து சென்று திடீர்த்தாக்குதலைத் தொடங்கியது. எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்த இராணுவம் பலத்த இழப்புகளைச் சந்தித்ததுடன் நிலைகளை விட்டுவிட்டு மீதமிருந்தோர் தப்பியோடி விட்டனர். இதில் பல இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் பல இராணுவத்தளபாடங்களும் கைப்பற்றப்பட்டன” என்று ஒரு போராளி சொன்னார்.
 
இந்த தாக்குதலில் பல போராளிகளை இழந்தோம். மேஐர் சஞ்சிகா, கப்டன் அருந்ததி ஆகியோரும் இந்தச் சண்டையிலேயே வீரச்சாவைத்தழுவிக் கொண்டனர்.

 

Link to comment
Share on other sites

நினைவழியாத் தடங்கள் - 02 (ஒரு போராளியின் இறுதிக்கணம்)

 

1995 ம் ஆண்டு, சாள்ஸ் அன்ரனி படையணி திருமலையில் செயற்பட்டுக் கொண்டிருந்த காலம். திரியாய்க் காட்டுப்பகுதியில் படையணியின் ஒரு பகுதி தங்கியிருந்தது. திருமலை மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் இருக்கும் மினிமுகாம் மீது தாக்குதல் நடாத்துவதற்கான திட்டமிடல்கள் பூர்த்தியாகி, அப்பகுதிக்கு செல்வதற்காக அணிகள் தயாராகிக் கொண்டிருந்தன.

 
நீண்ட தூரம் நடந்து சென்று, தங்கியிருந்து மறுநாள் தாக்குதலை நடாத்த வேண்டும், ஆகையால் தேவையான ஆயுதவெடிபொருட்கள், ஏனைய அத்தியாவசிய பொருட்கள், சமையல் உபகரணங்கள் என்பவற்றை ஒழுங்குபடுத்திக் கொண்டு எல்லோரும் தயாராகிக் கொண்டிருந்தனர்.
 
அந்த சமயத்தில் திடீரென ஒரு வெடிச்சத்தம் காட்டை அதிரவைத்தது. மரங்களில் இருந்து குருவிகள் கீச்சிட்டுக்கொண்டு பறந்தன. குரங்குகள் சத்தமிட்டபடி மரங்களில் தாவிச் சென்றன. 
 
காட்டுக்குள் சிறிலங்கா படையணியின் சிறப்புப்படைகள் வருவது வழமை. அப்படி வந்தவர்களால் முகாம் சுற்றிவளைக்கப்பட்டுவிட்டதா? என சிந்தித்துக் கொண்டிருந்தபோது ஒரு போராளி ஓடிவந்து ’அருள் 89 ரைபிள் கிரனைற் செல் மிஸ்சாகி விட்டது அதில் புகழரசன் காயமடைந்து விட்டார்’ என்றான்.
 
சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு சென்று பார்த்தபோது, அப்போராளியின் கால்கள்  கடுமையான காயத்திற்குள்ளாகியிருந்தது. இரத்தம் அதிகமாக வெளியேறிக் கொண்டிருந்தது. மருத்துவப்போராளி மேஐர் ஜெமினி உடனடிச் சிகிச்சையை வழங்கினார். சேலைனை ஏற்றி, இரத்தத்தை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்.
 
அவசர முதலுதவியைத்தவிர மேலதிக சிகிச்சை செய்வதற்கான வசதிகள் இல்லை. எனவே தாக்குதல் திட்டத்தை கைவிட்டு விட்டு, அவரை வன்னிக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர். 
 
வன்னியிலிருந்து வண்டி(படகு) வருவதாக தகவல் கிடைத்ததும் ஒரளவிற்கு நம்பிக்கை பிறந்தது.  புல்மோட்டைப்பகுதியில் வண்டி வரும் இடம் ஒன்று உள்ளது. அந்த இடத்திற்குக் காயப்பட்டவரைக் கொண்டு செல்ல வேண்டும். 
 
புல்மோட்டை பிரதான வீதியைக்கடந்து செல்லவேண்டியிருந்ததால், வீதியைக் கிளியர் பண்ணிக் கட்டவுட் போட்டு உறுதிப்படுத்துவதற்கான அணி சீக்கிரமே புறப்பட்டுச் சென்றது. சில குறிப்பிட்ட பகுதிகளால்தான் வீதியைக்கடந்து புலிகள் செல்கின்றவர்கள் என்ற விடயம் இராணுவத்திற்கு தெரியும். இதனால் அந்தப்பகுதிகளில் இராணுவம் இடையிடையே அம்புஸ் போட்டிருக்கின்றவன். எனவே செல்ல வேண்டிய பாதையை அணிகள் உறுதிப்படுத்திய பின்னரே காயக்காரரைக் கொண்டு செல்ல வேண்டும்.
 
கிளியர் பண்ணும் அணிகள் முன்செல்ல சிறிது இடைவெளி விட்டு காயக்காரரையும் தூக்கிக் கொண்டு அணிகள் நகர்ந்தன. வீதியைக்கடந்து படகில் ஏற்றும் இடம்வரை காயப்பட்டவரைக் கொண்டு சென்றாயிற்று. இனி படகு வந்தால் சரி என்ற திருப்தியில் அணியினர் காத்திருந்தனர். எப்படியும் சீக்கிரமாக காயக்காரரை அனுப்பினால்தான் அவரைக் கொண்டு சென்ற அணிகள் இரவே திரும்பி வர முடியும். எல்லோரும் பதட்டத்ததுடன் காத்திருந்தனர். 
 
செற்றில் (தொலை தொடர்பு சாதனம்) வன்னியிலிருந்து செய்தி வந்தது.  கடல் பகுதியில் கடற்படையின் டோறா பீரங்கிப்படகுகள் வந்து தரித்து நிற்பதால் ‘படகு இன்றைக்கு வராது’ என்றார்கள். மறுநாள் இரவு கடற்புலிகளின் துணையுடன் வந்து ஏற்றுவதாகத் தகவல் கிடைக்கின்றது.
 
புல்மோட்டைக் கடற்பரப்பில் பல மீன்பிடிப்படகுகள் இரவு வேளைகளில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சிறுபடகுகளில் தொழில் செய்யும் படகுபோல வந்து காயக்காரரை ஏற்றுவதோ சாமான்கள், அணிகள் வருவதோ வழமை. அன்றைய தினம் மீன்பிடிப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை. 
 
காயக்காரரை ஏற்ற வந்த படகினர் புல்மோட்டையை அண்மித்த பகுதிக்கு வரும்போது, இலங்கை கடற்படையின் டோறாப்படகு வந்து நிற்கின்றது என்ற தகவல் ராடர் நிலையத்திலிருந்து சொல்லப்பட்டதால் அவர்கள் திரும்பிச் சென்று விட்டனர். எனவே காயக்காரரைத் தூக்கிக் கொண்டு மீளவும் முகாமிற்குச் செல்ல வேண்டிய நிரப்பந்தம். 
 
நடுநிசி இரவு, வீசிய காற்றிற்கு இசைவாக அசைந்த மரக்கிளைகளின் மெல்லிய சத்தம், ஆங்காங்கே காட்டுக்குருவிகளின் ஓசை, இடையிடையே நரிகள் ஊளையிடும் சத்தம், மிகவும் அமைதியாக இருந்தது காடு. இரவு வேளைகளில் முகாம் பகுதி மிகவும் அமைதியாக இருக்கும். வெளிச்சங்கள் இருக்காது. சென்றி மாற்றுதல் தொடக்கம் எல்லாம் மிகவும் அமைதியாக நடக்கும், டோச் லைற்றைக்கூட கையால் பொத்தியே அடிப்பார்கள்.
 
காயக்காரரைக் கொண்டு சென்ற அணியினர் திரும்பி வந்துவிட்டனர். காயப்பட்டவரை ஒரு ஆலமரத்தின் பெரிய வேர்களுக்கிடையில் படுக்கவைத்தனர். ஆலமரத்தின் விழுதில் சேலைன் போத்தல் கட்டப்பட்டிருந்தது. அவர் வேதனையில் கத்திக் கொண்டிருந்தார். வலி நிவாரணியை சேலையினுடன் கலந்து விட்டிருந்தனர். இரண்டு கால்களினதும் முழங்காற்பகுதி சேதமடைந்திருந்ததால் இரத்தப்பெருக்கை நிறுத்துவது கடினமாயிருந்தது. தன்னால் முடிந்தளவு முயற்சி செய்து கொண்டிருந்தார் மருத்துவப்போராளி.; அருகில் இருந்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார். 
 
புகழரசனோ ‘எனக்கு கஷ்டமியிருக்கு, உடம்பெல்லாம் முறிக்கிறமாதிரி இருக்கு’ என முனகிக் கொண்டிருந்தார். ஜெமினியிடம் என்ன மாதிரியிருக்கு என்று கேட்டேன். இரத்தம் கணக்கப்போயிட்டுது. எங்களிடம் தற்போது உள்ள சேலைன்கள் அதை நிவர்த்தி செய்யக்கூடியமாதிரி இல்லை. இரத்தம் ஏற்றக்கூடிய வசதியும் இல்லை எனக்கூறி மௌனமாக கைகளை இறுகப்பிடித்து தலைகுனிந்தார். இருட்டில் அவரது முக ஓட்டத்தைக் அவதானிக்க முடியவில்லை.
 
பின்னர் ‘நான் முடிந்தளவு ஏதாவது செய்யப் பார்க்கின்றேன்’ என்று கூறிவிட்டுச் சென்றார். அவரது நிலை கவலைக்கிடமாக இருக்கின்றது என்பது விளங்கியது. அந்த இடத்திற்குப் பக்கமாக எனது நண்பனுக்கருகில் இருந்தேன். நித்தரை வரவில்லை. பகல் அலைச்சல், நித்திரையால் அயர்ந்தேனோ தெரியவில்லை. காயப்பட்ட போராளிக்கருகில் சத்தம் கேட்டது. திடுக்கிட்டு எழுந்து அருகில் சென்றுபார்த்தேன்.
 
புகழரசன் ‘எனக்கு ஏதோ செய்யுது’ என மெல்லிய குரலில் புலம்பிக் கொண்டிருந்தார். இரண்டு கைகளாலும் ஆலமர வேரைப்பிடித்துக்கொண்டு உடம்பை அங்கும் இங்குமாக வளைத்துக்கொண்டிருந்தார். ஜெமினியும் ஆறுதல் வார்த்தைகளை சொல்லிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் ஆலமரவேரை கைகளால் இறுக்கப்பிடித்துக் கொண்டு “ஆலமரவேரே என்னைவிடு நான் போப்போறன்” எனக்கூறி நெஞ்சைத் தூக்கினார், ஜெமினியும் நெஞ்சை வாஞ்சையுடன் தடவி, பிரச்சனையில்லையப்பன் என கூறிக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தின் பின் மீண்டும் புகழரசன் தனது முழுப்பலத்தையும் பயன்படுத்தி “ஆலமரவேரே என்னை விடு நான் போப்போறன்” என சிறிது உரத்த குரலில் கூறிக்கொண்டு நெஞ்சை உயர்த்தினார். அவரின் நெஞ்சைத் தடவியும் மட்டையை எடுத்து விசிறியும் ஏதேதோ செய்தனர். ஒன்றும் செய்யமுடியவில்லையே என்ற ஆதங்கம் எல்லோர் முகத்திலும் தெரிந்தது. மீண்டும் சிறிது உரத்த குரலில் “ஆலமரவேரே என்னைவிடு; நான் போப்போற…..!” என பலமாக நெஞ்சைத்தூக்கிய அவரின் உடல் சலனமற்று விழுந்து அடங்கியது. உடல் மட்டுமல்ல, அந்தப்போராளியின் விடுதலைக்கான பயணமும். ஒரு அமைதி, மௌனங்களையும் பெருமூச்சுக்களையும் தவிர வேறு சத்தங்களில்லை. அவரது உடலை துணியால் போர்த்திவிட்டு அருகில் அமர்ந்தான் ஜெமினி.
 
வீரச்சாவு போராட்டப்பாதையில் தவிர்க்கமுடியாததொன்று. ஆனால், இந்தச் சாவின் கணங்கள் கடினமானவை. எனது நண்பன் சொன்னான் ‘மச்சான் இங்க காயப்படுகிறதை விட ஓரேயடியா வீரச்சாவடைந்திடனும்’ என்று.
 
மறுநாள் அந்த முகாமிலேயே அவரது வித்துடலை விதைப்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டன. அக்காட்டுக்குள் கிடைத்த பூக்களைக் கொண்டு மலரஞ்சலி செலுத்திவிட்டு, நண்பர்கள் சேர்ந்து அவரை விதைத்தோம். சம்பிரதாயங்களோ, உறவுகளோ இன்றி அவருக்கான இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு, திரியாய் காட்டில் விதைக்கப்பட்டார். அதற்குப் பின்னர் திரியாயில் நடைபெற்ற மறிப்புச்சமரில் வீரச்சாவடைந்த மேஐர் கமல் மாஸ்டர் உட்பட பலர் அங்கு தான் விதைக்கப்பட்டனர்.
 
விடுதலைக்கான விதைகள் தாயகப்பரப்பில் எங்குமே விதைக்கப்பட்டிருக்கின்றன. தாயகத்தின் நிலப்பரப்பில் பாதம் பதிக்கும்போது, அந்த ஆத்மாக்களுடனான நினைவுகளுடன் சில நிமிடங்கள் கரைந்து செல்லும்.
 
வீரச்சாவு 10.05.1995
 
Link to comment
Share on other sites

நினைவழியாத்தடங்கள் - 03 (மேஜர் வீமனின் இறுதிச்சண்டை)
 
1998 ம் ஆண்டு, ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை மூலம் வன்னிப்பெருநிலப்பரப்பைத் துண்டாடத் தீவிரமாகப் போர் தொடுத்துக் கொண்டிருந்தது சிங்களப்படை. மாங்குளச் சந்தியைக் கைப்பற்றுவதற்காகப் பல பகுதிகளால் புதிய போர் முனைகளைத் திறந்து முன்னேற முயற்சித்தது. மறுபுறம், புலியணியும் புதிய முனைகளில் முன்னேறிய இராணுவத்தின் மீது உக்கிரமான மறிப்புத் தாக்குதலை முன்னெடுத்தது.
 
ஆனால், தினசரி வீரச்சாவும், காயப்பட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துச் சென்றதால், படையணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து கொண்டிருந்தது. மீண்டும் மீண்டும் காயப்பட்டு, காயம் ஆறி (முழுமையாகக் குணமடைவதற்கு முன்) களமுனைக்கு வந்து பணியாற்றியவர்கள் பலர். அதில் சிலர் வீரச்சாவடைந்து கூட இருக்கின்றனர். நிர்வாகத்திலிருந்தும் முடிந்தளவிற்கு ஆட்குறைப்புச் செய்து, லைன் போட்டு மறிப்புச் சண்டை செய்வதற்காக ஆட்கள் அனுப்பப்பட்டனர். அப்படியும் ஆட்பற்றாக்குறை தொடர, தென் -தமிழீழத்திலிருந்து மேலதிகமாக படையணிகள் உதவிக்கு அழைக்கப்பட்டன.
 
கிட்டத்தட்ட 600 பேரைக் கொண்ட படையணியை வாகரையில் இருந்து கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வாகரையில் இருந்து மூதூரைத் தாண்டி மூதூருக்கும் கிண்ணியாவிற்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள உப்பாற்றுக்கு அணிகள் வந்துவிட்டது, உப்பாற்றில் இருந்து புறப்பட்டு இரண்டு நாட்களில் பேராற்றுக்கு வந்துவிடும். பேராற்றில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து வன்னிக்கு வண்டியேறுவார்கள். அந்த இரண்டு நாட்களும் அணிகளுக்கான உணவு வசதிகளைச் செய்து கொடுத்து பாதுகாப்பாக வைத்திருந்து வண்டி ஏற்றி விடும்  பொறுப்பு திருகோணமலை மாவட்ட அணிக்கு வழங்கப்பட்டிருந்தது.
 
இதற்குரிய ஒழுங்குகளைச் செய்து விட்டு தயாராயிருக்க, அணிகளும் வந்து சேர்ந்தன (வாகரையில் இருந்து நான்கு இரவுகள் நடந்து பேராற்றுக்கு வந்து சேர்ந்திருந்தார்கள்).  இனி கடற்புலிகளின் படகுகள் வரும் இடத்திற்குக் கொண்டு சென்று அனுப்பும் வேலைகளை செய்தால் சரி என்றிருந்தனர்.
 
மறுநாள் தலைவரிடத்தில் இருந்து செய்தி வந்தது. அணிகளை ஏற்றுவதற்கான சாதகமான சூழல் இல்லாததால் இன்னும் இரண்டு வாரங்களுக்கு அணிகளை அங்கேயே வைத்திருக்க வேண்டும் என்ற தகவல் கிடைக்கின்றது.
அணிகளை வைத்திருப்பதில் மாவட்ட அணிக்குச் சிக்கல் இருக்கவில்லை. ஆனால் உணவு! அதுவும் 600 பேருக்கு எப்படிச் சமாளிப்பது? 
 
அன்றைய காலகட்டத்தில், பேராற்றில் இருந்த மாவட்ட அணி எதிர்கொண்ட கடினமான விடயங்களில் ஒன்று உணவு. அப்போது அங்கு 30 பேர் வரைதான் மாவட்ட அணியாக இருந்தது. அவர்களுக்கும் குறிப்பிட்ட நாட்களுக்குரிய உணவே இருப்பில் இருக்கும். (பொதுவாக அரிசி, மா, பருப்பு, மீன்ரின், சோயாமீற், கிறீம் கிறேக்கர் பிஸ்கற் போன்றவற்றை மரங்களின் மேல் பரண் அமைத்து பாதுகாத்து வைப்பார்கள்) திருகோணமலை, குச்சவெளி, சாம்பல்தீவு, கும்புறுப்பிட்டிப் பகுதியில் உள்ள சில ஆதரவாளர்களின் துணையுடன் சிறுகச் சிறுக சேகரிக்கும் உணவுகளே அங்கிருப்பவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும்.
 
அதை வைத்து 600 பேரைச் சமாளிக்க முடியாது. அதேவேளை திடீரென அவ்வளவு பேருக்கும் அதுவும் 600 பேரின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும். உணவு என்று பெரிய எதிர்பார்ப்பு ஏதும் இல்லை. அதிகபட்சம் கஞ்சி அல்லது சோற்றுக்கு அரிசி இருந்தால் சரி. அதுகூடக் இருப்பில் இல்லை என்பதால், இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குச் சென்று உணவுப் பொருட்கள் எடுத்து வருவதற்கான ஒழுங்குகளைச் செய்யத் தீர்மானித்தனர். 
 
அதைவிட, பிரதான சிக்கல் என்னவெனில் வாகரையில் இருந்து அணிகள் வரும்போது கொழும்பு வீதி, பன்குளம் வீதியைக் கடந்தே வரவேண்டும். பெரிய படையணிகள்  வீதியைக்கடக்கும் போது தடையங்கள் விழுவதற்கான சாத்தியக்கூறு அதிகம். இராணுவம் தடயங்களை அவதானித்து, அணிகள் நகர்ந்திருக்கின்றன என்பதை அறிந்து கொள்வான். உடனே கடற்படையை உசார்ப்படுத்தி விடுவான்.
 
கடற்படையின் கடற்கலன்கள் விடுதலைப்புலிகளின் படகுகளை எதிர்பார்த்து புல்மோட்டைக் கடற்பரப்பில் தரித்திருக்கும். படையணிகள் வன்னிக்கு ஏற்றப்படாதவிடத்து அணிகள் பேராறு, திரியாயை அண்மித்த பகுதிகளிலே இருக்கும் என்பதும் அவனுக்குத் தெரியும்.
 
இந்தவேளையில் சிங்களப்படையினர் இரண்டு விடயங்களில்; கவனத்தைச் செலுத்துவர். ஓன்று அணிகளை கடலில் அல்லது தரையில் சேதப்படுத்துவதனூடாக வன்னிக்கான ஆளணி உதவி கிடைக்காமல் செய்வது அல்லது செல்லவிடாமல் தடுப்பது. இரண்டு, தமது கட்டுப்பாட்டுப்பகுதியில் இருந்து உணவுகள் போகவிடாமல் செய்வதற்கான கூடுதல் முயற்சிகளை மேற்கொள்வது.
 
இந்த நேரத்தில் எப்படியும் உணவை எடுத்தேயாகவேணும் என்ற காட்டாய நிலையை உணர்ந்த வீமன் (குச்சவெளியைப் பிறப்பிடமாகக் கொண்டவன்), தான் குச்சவெளிக்குச் சென்று உணவை எடுத்துவருவதாகக் கூறினார். குச்சவெளியின் எல்லா இடங்களும் வீமனுக்கு அத்துப்படி. அதுமட்டுமல்ல திருகோணமலை மாவட்டத்தின் மூலை முடுக்குகள் கூட அவனுக்கு அத்துப்படி.
 
வீமன், ஒரு சிறந்த வழிகாட்டி, ஐீ.பி.எஸ், கொம்பாஸ் எல்லாத்தையும் தனது மனத்திரையில் பதிந்து வைத்திருப்பதைப் போல, சொல்லும் இடங்களிற்குக் கூட்டிச் செல்லும் நினைவுத்திறனுடைய ஒருவன். எங்கு இராணுவம் அம்புஸ் போடுவான்? ஆமி எங்கயிருந்து இறங்கினால் எந்தப்பாதையால் வருவான்? அப்போது எங்கே சென்றால் இராணுவத்தின் சுற்றி வளைப்பிற்குள் அகப்படாமல் இருக்கலாம்? என அறிந்தவன். காட்டிற்குள் சல்லடை போட்ட போதும், இராணுவத்தின் முற்றுகைக்குள் அகப்படாமல் தண்ணி காட்டியவர்களில் ஒருவன்.
 
குச்சவெளிக்கிராமத்தில் உள்ள ஆதரவாளர்கள் சிலருடன் வீமனுக்கு தொடர்பிருந்தது. விறகு பொறுக்குவதற்காக அல்லது கரைச்சியில் மீன் பிடிப்பதற்காக வருவதைப்போல் வந்து வீமனைச் சந்தித்து பலவிதமான தகவல்களையும் பரிமாறிச் செல்கின்றவர்கள். அவர்களே உணவுப்பொருட்களை ஒழுங்குபடுத்திக் கொடுக்கும் உதவிகளையும் செய்கின்றவர்கள். அவர்களிடம் அரிசி, மா, சீனி, பருப்பு, உப்பு போன்ற அத்தியாவசியமான உணவுப் பொருட்களை ஒழுங்குபடுத்துமாறு கேட்டுக்கொண்டான்.  அவை ஒழுங்குபடுத்தப்பட்டதை உறுதிப்படுத்திய வீமன் குறிப்பிட்ட போராளிகளை அழைத்துக் கொண்டு அவற்றை எடுப்பதற்காகச் சென்றான்.
 
காட்டிலிருந்து குச்சவெளி குடிமனைப்பகுதிக்குச் செல்லுவதற்கிடையில் கரைச்சி சதுப்புநில நீரேரியுடன் கூடிய வெளி உள்ளது. வெட்டையில் இருந்து நகரும் போது எதிரி தாக்கினால் பாதுகாப்பு எடுக்கமுடியாது.
 
அதைவிட்டால் நகருவதற்கு வாய்ப்பாக வேறுபாதைகள் இருக்கவில்லை. அதனால் ஆபத்தை எதிர்கொள்ளத் தயங்கவில்லை. சிங்களப்படைகளின் பதுங்கித்தாக்குதலை எதிர் கொள்ளத் தயாரான நிலையில் அணிகள் கரைச்சிக்குள் இறங்கி நகர்ந்து சென்றன.
 
வீமன் அவதானித்தபடி அணிகளைக் கூட்டிக்கொண்டு சென்றான். இராணுவத்தின் அசைவுகளை அவதானித்து, எதிரி பதுங்கித்தாக்குதலை செய்யக்கூடிய வாய்ப்பான இடங்களை தவிர்த்து கரைச்சியைத்தாண்டி ஊர்மனைக்குள் சென்று சாமான்களை எடுத்துவிட்டான்.
 
ஓரளவு திருப்தியுடன் முகாம் நோக்கித்  திரும்பினார்கள்.  சாமான் எடுக்கச் செல்லும் போது முன்னுக்குச் சென்ற வீமன் திரும்பி வரும்போது அணிகளை அனுப்பி விட்டு பின்னால் வந்து கொண்டிருந்தான். இருட்டில் அசைவு கேட்டு நாய்கள் குரைக்கத் தொடங்கிவிட்டன. சமான்களைச் சுமந்தபடி போராளிகளும் வேகமாக நடந்து கொண்டிருந்தார்கள். 
 
ஊர்மனையின் எல்லையோரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, அங்கு மறைந்திருந்த இராணுவம் திடீர் பதுங்கித்தாக்குதலை மேற்கொண்டான். சுதாகரித்துக் கொண்ட அணிகள், உணவு மூட்டைகளைப் போட்டுவிட்டு எதிர்த்தாக்குதலை தொடுத்தன. இராணுவத்தின் சிறிய அணியே பதுங்கித்தாக்குதலை மேற்கொண்டதால் புலியணிகள் கடுமையான எதிர்த்தாக்குதலைத் தொடுத்ததாலோ அன்றி இராணுவத்திற்கு இழப்புக்கள் ஏற்பட்டதோ என்னவோ இராணுவத்தின் தாக்குதல் சற்று நேரத்தில் நின்று விட்டது. போராளிகளிற்கு சேதம் ஏற்படவில்லை. மீண்டும் உணவுச்சாமான்களை எடுத்துக் கொண்டு வேகமாக திரும்பிக் கொண்டிருந்தனர்.
 
கரைச்சி வெட்டை வந்ததும் நான் கரையில் நிற்கின்றேன். நீங்கள் கரைச்சியைக் கடந்து செல்லுங்கள். பின்னர் வருகின்றேன் என்று வீமன் சொன்னதும் ஒரு போராளி ‘ஏன் நீங்களும் வாங்கோவன்’ எனக்கேட்டான். அதற்கு வீமன்; “அம்புஸ் போட்ட ஆமி, எப்படியும் மேலதிகமாக வேற ரீமையும் கூட்டிக்கொண்டு பின்னாலை தேடிக் கொண்டு வருவான். எங்களுக்கு இருக்கிறது கொஞ்ச நேரம், நீங்கள் வேகமாகக் கடவுங்கோ, பாதுகாப்பான பகுதிக்குள் நீங்க போனவுடன, நாங்கள் வருகிறம். தண்ணீக்கில வைச்சு அடிச்சா ஒருத்தரும் ஒன்டும் செய்ய இயலாது” எனக்கூறிவிட்டு, தன்னுடன் இரண்டு போராளிகளை மட்டும் வைத்துக் கொண்டு, மீதியாட்களை விரைவாக செல்லும்படி கூறியனுப்பினான். அங்கு நின்று சாப்பாட்டுச் சாமான்களுடன் சென்றவர்களுக்கு பாதுகாப்பை வழங்கினான்.
 
அணிகளும் கரைச்சிக்குள் இறங்கி சென்று கொண்டிருந்தன. பாரமான சாமான்கள், சதுப்பு நிலமான கரைச்சி நீரேரி, சாமான் நிறையுடன் காலை வைச்சால் கால் கணுக்கால் வரை புதைஞ்சு போகும். சாமானை வைக்கவும் முடியாது. மாற்றித் தூக்குவதற்கும் ஆட்கள் இல்லை. அத்தனை கடினங்களையும் சமாளித்துக் கொண்டு அணிகள் நீரேரியில் நடுப்பகுதிக்கு சென்று கொண்டிருக்கையில், வீமன் நின்ற இடத்தில் துப்பாக்கிச் சண்டை ஆரம்பமானது. வீமன் கணித்தவாறே அந்தப்பகுதியை நோக்கி இராணுவத்தினர் பின்தொடர்ந்து வர, அவர்கள் மீது எதிர்பாராத தாக்குதலைத் தொடங்கினார்கள்.
 
வீமன் அணி, உணவு தூக்கிச் சென்ற அணிகள் மீது இராணுவம் தாக்குதலை மேற்கொள்ளாத வண்ணம் எதிர்த்தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். இவர்களோ மூவர், எதிரியினர் பலர். என்றாலும் அணிகள் பாதுகாக்கப்படவேண்டும். உணவுப் பொருட்கள் போய்ச் சேரவேண்டும் என்பதில் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்து போரிட்டனர்.
 
அணிகளும் ஒருவாறு சமாளித்து கரைச்சியைத் தாண்டி மறுகரைக்கு வந்து விட்டன. கரையில் வந்தவர்கள் மறுகரையில் நடந்து கொண்டிருந்த துப்பாக்கி வெடிச்சத்தத்தின் வெளிச்சத்தை பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய இக்கட்டான நிலை. இராணுவத்துடன் தீவிரமான மோதலை வீமன் அணி தொடுத்துக் கொண்டிருக்கின்றது என்பதை துப்பாக்கியில் இருந்து வெளிவந்த வெளிச்சங்கள் உறுதிப்படுத்தின. சிறிது நேரத்தின் பின் துப்பாக்கிச் சண்டை நின்றுவிட்டது.
 
மறுகரையில் வீமன் அணியின் வருகைக்காகக் காத்திருந்தனர் ஏனைய போராளிகள். எதிரியை ஏமாற்றிவிட்டு பக்கவாட்டால் தப்பி வருவார் என்ற நம்பிக்கையிருந்தது. கரைச்சியின் கரைகளில் ஆங்காங்கு பிரிந்து நின்று நிலமட்டத்தில் தலையை வைத்து நிலவு வெளிச்சத்தில் தண்ணீர் மட்டத்தில் எங்காவது ஆள்வருவது தெரிகின்றதா? எனப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
 
நீண்ட நேரமாக எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ஆனால் யாரும் வரவில்லை. மேஐர் வீமனும் அவருடன்  நின்ற இருவரும் வீரச்சாவடைந்து விட்டனர் என்பதை அதிகாலை புலரும்போது உணரமுடிந்தது. உணவுப் பொருட்களைப் பத்திரமாக அனுப்பி வைத்துவிட்டு, அந்த மண்ணோடு கலந்துவிட்டார்கள்.
 
காலையில் அணிகள் தங்கியிருந்த பகுதிக்கு உணவுப் பொருட்களை கொண்டு வந்து சேர்த்தபோது, சாமான் வந்து விட்டது என்று அணி வீரர்களின் கண்களின் ஒரு புத்துயிர் ஏற்பட்டது. அதேவேளை “என்ன சண்டைபிடிச்சே எங்களுக்குச் சாமான் கொண்டுவந்தனீங்கள்;, ஒரே வெடிச்சத்தமாயிருந்தது. யாருக்கும் பிரச்சனையா?” எனக் கேட்டனர். மூவரின் வீரச்சாவைச் சொன்னபோது, அந்த இடம் ஒரு பாரிய அமைதிக்குள் மூழ்கிப்போனது. ‘எங்களுக்கு உணவு தர மூன்று உயிர்களின் தியாகமா!’ என்ற மனவோட்டத்தை இறுகிப்போன அவர்களின் முகங்களில் இருந்து புரியக்கூடியவாறு இருந்தது. ஜெயசிக்குறு வெற்றிக்காகப் பின்புலத்தில் நடைபெற்ற பல தியாகங்களில் இதுவும் ஒன்று.
Link to comment
Share on other sites

நினைவழியாத்தடங்கள் - 04 (காட்டுக்கோழியும் நாங்களும்)
 
நாங்கள் திருமலைக்காடுகளில் செயற்பட்டுக் கொண்டிருந்த காலம். காட்டு முகாம் ஒன்றில் தங்கியிருந்தோம். காட்டு வாழ்க்கையில் கடினமாக இருப்பது உணவுதான். பசிக்குச் சாப்பிடலாம் ஆனால் சுவைக்கு சாப்பிடுவது என்றால் சற்றுக்கடினம் தான். வேவுக்காகவோ அல்லது வேறு நடவடிக்கைக்காகவோ சிறு அணிகளாகப் பிரிந்து செல்லும் நேரம், இடையில் உடும்பு அகப்பட்டால் அன்றைக்கு நல்ல சாப்பாடுதான். அல்லது, ஆறு, குளம், என தண்ணீர் தேங்கி நின்று ஓடும் இடமாகப் பார்த்து ஓட்டை வலைகளை வைத்து மீன் பிடித்து சாப்பிடமுடியும்.
 
அணிகள் தங்கியிருந்த இடத்திலிருந்து சில மைல்களுக்கு அப்பால் சென்றால் பன்றி, மான், மரைகளை வேட்டையாடித் தூக்கி வந்து நல்ல இறைச்சியுடன் சாப்பாடு சாப்பிடலாம் என்ற நிலையும் இருந்தது. ஆனால், அந்த இடங்களில் இராணுவத்தின் தாக்குதல் ஆபத்துக்கள் இருந்ததால் கூடுமானவரை தவிர்த்து விடுவோம்.
 
காட்டுக்குள் முகாம்கள் அமைக்கும்போது, நடுவில் பிரதான முகாமை அமைத்து, அந்த முகாமைச்சுற்றி சின்ன சின்ன கொட்டில்களில்கள் அமைத்து, சிறு சிறு அணிகளாகப் பிரிந்து தங்கியிருப்போம். அப்படியிருக்கும்போது, சிலர் காட்டுக்கோழி பிடிப்பதற்கான பொறிகளை எங்கையாவது அருகில் வைத்துவிடுவார்கள்.  பொறியை எப்போதும் பார்வை எல்லைக்குள் வைத்துவிட்டு, இடையிடையே சென்று பார்ப்பார்கள். ஏனெனில் காட்டுக்கோழி பொறியில் அகப்பட்டால் கத்தாது என்பதால் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள்.
 
ஒருநாள், நானும் என்னுடைய நண்பனும் வேறொரு நண்பனைச் சந்திப்பதற்காக அவனிருந்த கொட்டிலுக்குப் போய்க் கொண்டிருந்தோம். இடையில், கொஞ்சம் வழிமாறிவிட்டோம். ஒருவாறு சமாளித்து, சுற்றி போய்க் கொண்டிருக்கும்போது வழியில் கோழியொன்று பொறியில் அகப்பட்டு தொங்கிக் கொண்டிருந்தது. உடனடியாக நாங்கள் நண்பனைச் சந்திக்கிறதை முடிவைக் கைவிட்டிட்டு, நைசா கோழியைச் சமைத்துச் சாப்பிடுவம் என்று முடிவெடுத்தம். 
 
மெதுவாகக் கோழியை கழற்றிக் கொண்டு, வேறு யாரும் எங்களைக் கண்டு பிடிக்க முடியாத இடம் ஒன்றை அருகில் தேடினோம். கனதூரம் போகவும் ஏலாது. பக்கத்தில் ஆற்றுப்பள்ளம் ஒன்று இருந்தது. அது எமது சமையல் வேலைக்கு மறைவாக, பொருத்தமாக இருக்கும் என்பதால் அதில வைச்சு சமைப்பம் என்று தீர்மானித்தோம்.
 
இனி சமைப்பதற்குச் சாமான்கள் எடுக்க வேணும். அது கடினமானதாக இருக்கவில்லை. காரணம், நண்பன் தான் முகாமின் ஸ்ரோர்(களஞ்சியம்) பொறுப்பாளர். நான் கோழியின் காலைத் துணியால் கட்டிவிட்டு பள்ளத்து மணலில் இருக்க, நண்பன் பொருட்களை எடுக்கச் சென்றுவிட்டான்.
 
கோழியின் காலைக் கட்டிவிட்டு ஒரு முனையைக் கையில் பிடித்துக் கொண்டு, கோழிக்கறி சாப்பிடுகின்ற சந்தோஷத்தோடு நண்பன் எப்போது திரும்பி வருவான் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். சில்லென்ற காற்று, நல்ல அமைதி, ஆற்றுமணல் என உடலுக்கு நல்ல இதமாக இருந்தது. கொஞ்சம் அசதி வேறு, கோழியைப் பிடித்தபடி ஆற்று மணலில் சாய்ந்திருந்தேன்.
 
சிறிது நேரத்தில், நண்பன் ஒருவருக்கும் தெரியாமல் சமைக்கிறத்துக்கான சட்டி, கத்தி, தூள், உப்பு எண்ணெய் என எல்லாத்தையும்; எடுத்துக் கொண்டு, தெரிந்தவர்களிற்கும் போக்குக் காட்டிவிட்டு வந்த சந்தோசத்தில், ‘டேய் மச்சான் சாமான் கொண்டு வந்திட்டேண்டா’ என்று சொல்லிக்கொண்டு, கொண்டு வந்த சாமான்களோட பள்ளத்திற்குள் பாய்ந்தான்.
 
இவன் பாய்ந்த அதிர்ச்சியில் பயந்துபோன கோழி திடீரென மேல துள்ளிப்பாய, நானும் திடுக்கிட்டு எழும்பிக் கையை விட்டிட்டன். கோழி பறந்திட்டுது. இரண்டு பேரும் எல்லாத்தையும் போட்டிட்டு, கோழியின் கால்கட்டியிருக்கு என்ற நம்பிக்கையில் கோழியைத் துரத்தினோம். அதை எங்க துரத்திறது?, கோழி தெத்தி தெத்தி ஓடிப்போய் நின்றது. அப்ப நான் சொன்னன் ‘மச்சான் நீ அந்தப்பக்கத்தால வா, நான் இதால வர்றன், அப்பிடியே அமுக்குவம் என்று’. அப்படியே மெதுவாய் மெதுவாய் கிட்டப்போக, கோழி பக்கென்று இன்னும் கொஞ்சத்தூரம் ஓடிச் சென்று கால்களை மாறி மாறி இழுத்து கழற்ற முயற்சி செய்து கொண்டிருந்தது. 
 
இவர் எங்க போப்போறார் பாப்பம் என நாங்களும் ‘மச்சான் எங்களுக்கு போக்கு காட்டுது, இன்டைக்கு விடக்கூடாது’ என எங்களுக்கும் கடுப்பேற, மீண்டும் கிட்ட நெருங்க இன்னும் கொஞ்சத்தூரம் ஓடிச் சென்று நின்றது. இறுசல்காடு வேற, முள்ளுக்கிளித்து கையில சில இடங்களில ரத்தக் கோடுகள் வேற, ‘தனது முயற்சியில் சிறிதும் மனந்தளராத விக்கிரமாதித்தன் மாதிரி’ இரண்டு மூன்று தடவைகள் முயற்சித்தம். நல்லாக் களைச்சும் போனம், ஆனால் கோழியைப் பிடிக்க முடியவில்லை. 
 
கையில துவக்கும் இல்லை. கோழித் துரத்திக் கொண்டு, முகாம் எல்லையை விட்டு சற்றுத் தள்ளியும் வந்திட்டம். ஆமி வந்தாலும் என்ற எண்ணமே மனதில் வரவேயில்லை. இருந்தாலும் கோழி ஆசை விடவில்லை. மீண்டும் கடைசியா மெது மெதுவா கிட்டச் செல்ல கோழி கழுத்தைத் திருப்பி எங்கட பக்கம் பாத்திச்சு, நாங்கள் கண்ணால் 240px-Flickr_-_Rainbirder_-_Ceylon_Junglசைகை செய்து கொண்டோம் கொஞ்சம் பொறுப்போம் என்று, கோழி எங்கட பக்கம் திரும்பிப்பார்த்து விட்டு பின்பக்கத்தை ஒரு ஆட்டு ஆட்டியிட்டு துள்ளிப் பறந்து மரங்களுக்குள்ள போய் மறைஞ்சிட்டுது.  நண்பன் என்னைப்பார்த்து கடுப்புடன் ‘மச்சான் கோழி திரும்பிப்பார்த்து பின்பக்கத்தை அசைச்சு “Bye” சொல்லிட்டுப் போகுது’ என்றான்.
 
களைச்சுப்போய், நான் அதில இருந்திட்டன். நண்பன் வந்து எனக்கு மேல ஏறி இருந்து ‘எவ்வளவு கஸ்டப்பட்டு இந்தச் சாமான்; எல்லாத்தையும் எடுத்து வந்தனான் என்று தெரியுமா’ என்று குத்தினான். காட்டுக்கோழி காலைக்கட்டியிருந்தாலும் எகிறிக் குதித்து நீண்ட தூரம் பறக்கும் என்பது அன்றைக்குத் தான் தெரியும். ஊரில கள்ளக்கோழி பிடிச்ச அனுபவ வேற இல்லை.
 
பிறகு என்ன செய்யிறது? கோழியிட்டப் பட்ட அவமானம் காணும் என்று சாமான்களை ஒருதருக்கும் தெரியாம கொண்டு போய் திருப்பி வைச்சிட்டு, திருப்பவும் நண்பனைச் சந்திக்க அவனுடைய கொட்டிலுக்குப் போனோம். அவனும்; ‘ஏண்டா இவ்வளவு லேட்’ என்று கேட்டான். ‘பாதையை மிஸ் பண்ணிட்டம் மச்சான்’ என்று கூறிவிட்டு கதைத்துக் கொண்டிருந்தோம். பசி வயித்தைக் கிள்ளியது.  அவனிடம் ‘என்ன மச்சான். எதாவது அயிற்றம் (சிறு சாப்பாடு) போட்டனியே’ என்று கேட்க, அவன் சொன்னான் ‘மிஸ் பண்ணியிட்டுதடா, பொறியில கோழி ஆப்பிட்ட தடயம் இருக்கு, ஆனால், கோழியைக் காணேல்ல எண்டு பொறி வைச்ச பெடியன் சொன்னான், அது கிடைச்சிருந்த நல்ல அயிட்டம் ஒன்று போட்டிருப்பன்டா’ என்றான்.
 
கோழியைக் கொண்டுபோய் வழியனுப்பி வைச்ச எங்கட வண்டவாளத்தை தண்டவாளத்தில ஏத்தக்கூடாது என கண்களால் பேசிக்கொண்டோம். நல்லகாலம், தெனாலிராமன் சபை கோழி விசாரணை மாதிரி போகாததால தப்பிச்சம். ஆனாலும் மனதின் ஓரத்தில் ஒரு நெருடல் ஊடுருவிச் சென்றது.
Link to comment
Share on other sites

நினைவழியாத்தடங்கள் - 05 (வலிகளை மட்டும் சுமந்து)
 
01
 
திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர்ப்பிரதேசம் விடுதலைப்போராட்டத்திற்கு மிக முக்கிய பங்காற்றிய பிரதேசங்களில் ஒன்றாகும். மேஜர் கணேஸ், லெப் கேணல் புலேந்தியம்மான் காலம் தொடக்கம் அந்த மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்புடன் நெருங்கிய தொடர்பை வைத்து, பல உதவிகளைச் செய்து, போராட்ட அமைப்பு வளர்ச்சியடைய காரணமாக இருந்திருக்கிறார்கள். அந்த கிராமத்தின் பெரும்பான்மையானோர் இறுதிவரை விடுதலைப்போராட்டத்தோடு பயணித்திருக்கின்றார்கள். அதற்காக அவர்கள் இழந்தது ஏராளம்.
 
இக்கிராமத்தில் ஒரு போராளி குடும்பம் இருந்தது. அக்குடும்பத்தில் தந்தை, தாய், மூன்று பெண்பிள்ளைகள் இரண்டு ஆண்கள் என ஏழுபேரைக் கொண்ட குடும்பம். அதில் மூன்றாவது மகன்தான் தன்னைப் போராட்டத்தில் (காந்தன் புனைபெயர்) இணைத்திருந்தான். 
 
2002 இற்குப் பின்னரான சமாதான காலப்பகுதி, போராளிகள் தங்களைத் அடுத்த கட்டத்திற்கு தயார்ப்படுத்திக் கொண்டிருந்த அதேவேளை தங்களுக்குத் தெரிந்த போராளிகளின், மாவீரர்களின் வீடுகளுக்குச் சென்று வருவார்கள்.
 
அவ்வாறே காந்தனின் வீட்டிற்கும் போராளிகள் சென்று வருவார்கள். அந்தக் குடும்பத்தினரும் போராளிகள் வரும்போது அன்பாக உபசரிப்பார்கள். அவ்வாறான சந்தர்ப்பத்தில் அக்குடும்பத்தின் மூத்த இரண்டு பெண்கள் மீது இரண்டு போராளிகள் காதல் வயப்பட்டனர். சம்பந்தப்பட்ட போராளிகளான வேலவன், குமரன் (புனைபெயர்) தலைமையிடம் தாம் காதலிப்பது பற்றிய விடயத்தைத் தெரியப்படுத்தினர். இயக்கத்தின் விதிமுறைகளுக்கு இணங்க காதலை ஏற்றுக்கொண்டதுடன் அவர்களுக்கு உரிய காலத்தில் திருமணம் செய்துவைப்பதாகவும் சொல்லப்பட்டது. 
 
காலம் நகர்ந்து கொண்டிருந்தது. 2006 ம் ஆண்டு நாலாம்கட்ட ஈழப்போர் திருமலையிலிருந்து தொடங்குகின்றது. சிங்களப்படை சம்பூர் பிரதேசத்தின் மீது கிபிர் விமானம், ஆட்லறிப் பீரங்கிகளைக் கொண்டு கடுமையான தாக்குதலை மேற்கொண்டது. இந்தக் கோரத்தாக்குதலில் பல மக்கள் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயமடைந்தனர். சம்பூர், கூனித்தீவு, ஈச்சிலம்பற்றை உள்ளடங்கலாக அப்பகுதியைச் சேர்ந்த நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்விடங்களை விட்டு இடம்பெயர்ந்து, வாகரையில் அமைந்திருந்த வைத்தியசாலையில் அடைக்கலம் தேடிக்கொண்டனர். அங்கு அடைக்கலம் தேடியவர்களில் காந்தனின் குடும்பமும் ஒன்று.
 
வாகரையிலும் அசாதாரண சூழலே நிலவிக் கொண்டிருந்தது. இராணுவம் வாகரைப்பகுதியைக் கைப்பற்றும் நோக்குடன் தாக்குதல்களை ஆரம்பித்தது. தொடர்ச்சியான செல்த்தாக்குதல்கள், உணவுத்தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு என இறுகிப்போயிருந்த அந்தச்சூழலில், நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வைத்தியசாலையின் குறுகிய நிலப்பரப்பிற்குள்  தொடர்ந்திருப்பது கடினமாகியது. தொற்று நோய் அபாயம் என பல அடிப்படை வாழ்வியல் அசௌகரியங்களைச் சந்தித்தனர். எனவே பலர் மீன்பிடி வள்ளங்களில் மட்டக்களப்பு வாழைச்சேனைப்பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்றனர்.
 
காந்தனின் குடும்பமும் மீன்பிடி வள்ளத்தில் இடம்பெயர்ந்து வாழைச்சேனைக்குச் செல்லத் தீர்மானித்தது. கடல் சீரற்று இருந்த போதும் உயிரைக்காப்பாற்ற வேறுவழியில்லாததால் ஆபத்தான கடற்பயணத்தை எதிர்கொள்ள தயாராகினர். 
 
எல்லோரையும் ஏற்றிக் கொண்டு வள்ளம் அலைகளுடன் போராடிச் சென்று கொண்டிருந்தது.  திடீரென எழும்பிய இராட்சத அலை வள்ளத்தை கவிட்டு விட்டது. பக்கத்தில் வந்தவர்கள் பாய்ந்து, கவிழந்துபோன வள்ளத்தில் இருந்தவர்களைக் காப்பாற்றினர்கள். ஆனால் காந்தனின் தந்தையும் தாயும் கடலுக்குள் மூழ்கிவிட்டனர். நீண்டு விரிந்துபோய் இருந்த அந்தக்கடலின் எந்தப்பகுதியிலும் அவர்களின் தலைதெரியவில்லை. அந்தக் குடும்பத்தில் மீதமிருந்த மூன்று பெண்களையும் ஒரு பையனையும் காப்பாற்றி வாழைச்சேனையில் விட்டுவிட்டனர்.
 
தந்தையையும் தாயையும் இழந்து திக்குத் திசை தெரியாமல் உறைந்துபோய் இருந்த அந்த நால்வரும் வாழைச்சேனையின் அகதிமுகாம் ஒன்றில் அடைக்கலம் தேடினர்கள். சம்பூரைச் சேர்ந்தவர்கள் அந்த நால்வரையும் அகதிமுகாமிற்கு அழைத்துச் சென்றிருந்தனர். அவர்களின் பாதுகாப்பில்தான் நால்வரும் முகாமில் இருந்தார்கள்.
 
தாய், தந்தையின் பாதுகாப்பில் வளர்ந்த அவர்களால் அநாதரவாக நிற்கின்றோம் என்பதை சீரணிக்க முடியவில்லை. பெற்றோர்கள் அற்ற நிலையில் அடுத்தகட்டம் என்ன செய்ய வேண்டும் என்பதை அறியாத ஒரு சூனியத்திற்குள் தள்ளப்பட்டிருந்தார்கள்.
 
அதேவேளை சம்பூர், வாகரைப் பகுதிகள் இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வந்ததைத் தொடர்ந்து, திருமலையில் இருந்த படையணிகள் பின்வாங்கி வன்னியை நோக்கிச் சென்று கொண்டிருந்தன. இதனால் காந்தனுடனோ அல்லது வேலவன் குமரனுடனோ தொடர்பு கொள்ள முடியவில்லை.
 
முகாமில் ஒரு பாதுகாப்பற்ற சூழலிலேயே வாழ வேண்டியிருந்தது. ஏனெனில் இராணுவப் புலனாய்வாளர்கள் போராளி, மாவீரர் குடும்பங்களை இனம் காணும் வேலைகளிலும் ஈடுபட்டனர். இதனால் யாராவது சொல்லிக்கொடுத்துவிடுவார்களோ என்ற பயத்தின் காரணமாக, நால்வரும் அவசியமற்று வெளியில் தலைகாட்டுவது கூட இல்லை. பெற்றோரின் இழப்பு ஒருபுறம், காந்தன், வேலவன், குமரன் எப்படியிருக்கிறார்கள் என்ற நிலைதெரியாது நிம்மதியற்று, உறக்கமற்று ஏக்கத்துடன் தவித்தார்கள். அவர்களைச் சந்திப்போமா? இல்லையா? இனி எப்படி எதிர்காலத்தைச் சந்திக்கப்போகின்றோம்? போன்ற கேள்விகளிற்கு விடை தெரியாமல் அவர்களின் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.
 
மறுபுறம், சம்பூர், வாகரையில் இருந்து புறப்பட்ட அணிகள் வன்னிக்கு வருவதில் பாரிய சவால்களைச் சந்தித்துக் கொண்டிருந்தன.  இரண்டு இரவுகள், இரண்டு பிரதான வீதிகளைக் கடந்து திரியாய்ப்பகுதிக்கு வந்து சேர்ந்தனர். திருமலை அணியுடன் மட்டக்களப்பு அணிகளும் வந்து சேர்ந்துவிட்டது. எனவே பெரியளவிலான அணிகள் வன்னிக்கு செல்வதைத் தடுப்பதற்கு கடற்படைக் கலன்களும் புல்மோட்டைக் கடற்பரப்பை நிறைத்திருந்தன. அணிகளை ஏற்ற வந்த கடற்புலிப்படகுகள் கடுமையாகச் சண்டையிட்டு அணிகளை ஏற்றி வன்னியில் இறக்கிக் கொண்டிருந்தன.
 
அதேவேளை, ராடர்களில் கடற்புலிகளின் படகுகள் எந்த இடங்களில் அணிகளை ஏற்றுகின்றன என்ற தகவலை எடுத்து அப்பகுதிகளுக்கு இடைவிடாத செல்தாக்குதலை நடாத்திக் கொண்டிருந்தது இராணுவம். இந்த இக்கட்டான கடற்பயணத்தில்தான் காந்தன், வேலவன், குமரன் ஆகியோரும் வன்னியை நோக்கிப் புறப்பட்டிருந்தார்கள். வேலவன் மற்றும் குமரன் பயணித்துக்கொண்டிருந்த கடற்புலிப்படகு இடையில் டோறாப்படகின் தாக்குதலை எதிர் கொண்டது. கடுமையாக சண்டையிட்டுக் கொண்டே வன்னிக்கடற்பரப்பிற்கு வந்துசேர்ந்துவிட்டனர்.
 
காந்தன் சொர்ணம் அண்ணையுடன் நின்றவர். அவர்களும் அதன் பின் புறப்பட்ட வண்டியில் கிளம்பிவிட்டார்கள். வழக்கம்போலவே அவர்களின் படகும் கடற்படையின் கடுமையான தாக்குதலை எதிர்கொண்டு வன்னியை வந்து கொண்டிருந்தது. இடையில் நடந்த உக்கிரமான கடற்சண்டையில் காந்தன் வீரச்சாவைத் தழுவிக்கொண்டான். தாயும் தந்தையும் உறங்கிப்போன கடலோடு காந்தனும் சங்கமமாகிவிட்டான்.
 
வன்னிக்கு வந்த பின்னர், காந்தனது குடும்பத்தின் நிலைமையை அறிந்த தளபதி சொர்ணம் அண்ணை, சில ஆதரவாளர்களைத் தொடர்பு கொண்டு அந்த நான்கு பேரையும் வன்னிக்கு வரவழைத்தார்.
 
அவர்களிற்கு ஒரு பாதுகாப்பான வாழ்க்கையை அமைந்துக் கொடுக்க வேண்டிய பொறுப்பு தளபதி சொர்ணம் அண்ணைக்கு ஏற்பட்டது. தாய், தந்தையை இழந்த அவர்களிடம் சகோதரன் காந்தனுக்கு என்ன நடந்தது? என்று சொல்ல முடியாத இக்கட்டான நிலை. எனவே, அவரையும் வேறு சிலரையும் திருமலைக் காட்டிற்குள் ஒருவேலையாக விட்டுவிட்டு வந்திருக்கிறன் என்று ஒரு பொய்யைச் சொல்லிவைக்கவேண்டிய கட்டாயம்.
 
பின்னர் தலைவருடன் கதைத்து அவர்கள் மூத்தவர்கள் இருவருக்கும் திருமணம் நடாத்தி வைக்கப்பட்டது. அது ஒரு வகையில் சிறிய ஆறுதலையும் பாதுகாப்பையும் கொடுத்தது. என்றாலும் அண்ணா எப்பவருவார் என திருமலைப் போராளிகளைக் காணும்போது மட்டுமல்ல தளபதி சொர்ணம் அண்ணையிடமும் கேட்டுக்கொண்டேயிருந்தார்கள். அந்தப் பொய்யைச் சிலகாலமே தக்கவைக்க முடிந்தது.
 
குடும்பத்தைப் பொறுப்பெடுத்த, வேலவன்  நிர்வாக வேலைத்திட்டத்திலும் குமரன் பயிற்சி வழங்கும் வேலைத்திட்டத்திலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். 
 
2008 போர் வன்னியிலும் உக்கிரமடையத் தொடங்கியது. மன்னாரில் சண்டையைத் தொடங்கிய இராணுவம் தொடர்ந்து முன்னேறி பூநகரி வரை கைப்பற்றி, பின் கிளிநொச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. பெரிய நிலப்பரப்பில் நகர்ந்த படையினரைத் தடுப்பதற்காக எல்லாப்போராளிகளும் களத்தில் இறக்கப்பட்டனர். 
 
அந்தச்சமயம் நிர்வாக வேலைத்திட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த வேலவனுக்கும் அறிவியல் நகர்ப்பகுதியில் இராணுவத்தை தடுத்து நிறுத்தும் அணியில் தளபதியுடன் இணைந்து செயற்படுதவற்கு அழைப்பு வருகின்றது. 
 
02
 
களத்தளபதியின் கட்டளைப்பீடம் பாதுகாப்பு வேலியில்(லைனில்) இருந்து வெகு அருகில் அமைந்திருந்தது. அடிக்கடி சண்டை நடக்கும் அந்த லைனுக்குரிய கள நிர்வாக வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தார் வேலவன். அப்போது அங்கு நடைபெற்ற ஒரு சண்டையில் எதிரியின் ஆர்.பி.ஜீ செல் இவர் இருந்த இடத்திற்கு அருகில் பட்டு வெடித்தது. அதில் பறந்த செல்லின் பீஸ் தலையில் பட்டு லெப் கேணல் வேலவன் வீரச்சாவடைந்தார்.
 
வழமையாக வேலவன் வெள்ளிக்கிழமை பிந்நேரம் வீட்டிற்குச் சென்று திங்கட்கிழமை அதிகாலை மீண்டும் பணிக்குத் திரும்புவார். சிலவேளைகளில், வேலை அதிகமாக இருந்தால் சனிக்கிழமை வீட்டிற்கு வருவார். வேலவன் வீரச்சாவடைந்தது வெள்ளிக்கிழமை. வேலவனது மனைவிதான் வீட்டிற்கு மூத்தவர். அவரது தங்கைகுடும்பமும் வேலவன் வீட்டிற்கு அருகிற்தான் வசித்துவந்தார்கள். அந்தக்கிழமை வேலவன், குமரன் இருவரும் வரவில்லை. எனவே ஏதோ முக்கிய வேலையாக வரவில்லை என நினைத்து எப்படியும் நாளை வருவார்கள் என்ற நம்பிக்கையில் நல்ல சாப்பாடு கொடுக்க எண்ணி சமைத்துக் கொண்டிருந்தார்கள். அந்தநேரங்களில் களமுனைகளில் சாப்பாடு சீராக இருக்காது
.
மதியச்சாப்பாட்டை தயார்செய்து கொண்டிருக்கும் போது குமரனும் வேறு சிலரும் வீட்டிற்கு வந்தனர். அங்கு வழமையாகப் போராளிகள் சென்று வருவதால் வழமையாக உபசரிப்பதைப்போல் ‘வாங்கோ என வரவேற்ற குமரனின் மனைவி எங்கை வேலவன் அத்தான் வரவில்லையோ? ஏன் ஏதேனும் வேலையாக நிற்கின்றரா?’ எனக் கேட்டார்.
 
குமரனும் வேலவனும் நல்ல நண்பர்கள். குமரனின் மௌனமும் அவரது கண்களில் பெருக்கெடுத்த கண்ணீரையும் பார்த்த வேலவனின் மனைவி அதிர்ச்சியடைந்து மூர்ச்சையாகி விழுந்து விட்டார். 
 
ஏனெனில் இது அவர்களுக்கு நாலாவது இழப்பு. அதுவும் இரண்டு ஆண்டுகளில். வேதனையில் துடித்தார். அடுத்தடுத்த மரணம், இடப்பெயர்வு, இழப்பு. அதுவும் தமிழ்ப் பெண்களில் சிலர் ஆண்களைச் சுற்றியே தங்களிற்கான வாழ்க்கையின் நம்பிக்கைகளையும் சந்தோசங்களையும் கட்டிவைத்திருப்பார்கள். அது உடையும்போது வெடிக்கும் அழுகையையும் வேதனையையும் துடைப்பதற்கு எந்த சக்தியாலும் முடியாது. அவருக்கு ஒரு குழந்தையுமிருந்தது. இந்த சமூகத்தில் தனதும், தனது குழந்தையினதும், தங்கை, தம்பியினதும் எதிர்காலம் என்ன? என்ற விடையில்லாக் கேள்விகள் அவரை மூர்ச்சையடைய வைத்துவிட்டது.  
 
ஆற்ற முடியாமல் அழுதுகொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் ‘எங்கட குடும்பத்தின்ர நிலை தெரிஞ்சும், ஏன் அவரை கொண்டு போய் சண்டையில விட்டனீங்கள், நாங்கள் என்ன செய்வோம்’ என்று ஆற்றாமையில் கதறியபோது, அவரின் தவிப்பின் உச்சம், அதில் இருந்த எல்லோரது மனங்களிலும் ஆழமாக இறங்கியது.
 
இராணுவம் தொடர்ந்து  முன்னெறிக் கொண்டிருந்தான். குமரன் மாஸ்டர் சண்டைக்களங்களில் நேரடியாக இல்லாவிட்டாலும் தொடந்து பணியாற்றிக் கொண்டிருந்தார்.
 
புதுக்குடியிருப்புப் பகுதியைத்தாண்டி, மாத்தளன் பகுதி இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் சென்று விட்டது. சண்டை இறுதிக்கட்டத்தை அண்மித்துக் கொண்டிருந்தது. இந்த தருணத்தில்  வேலவனின் மனைவி, பிள்ளை, தங்கையை திருலைக்கு கப்பலில் அனுப்பி வைத்தனர். அவர்கள் அங்கு முகாமில் தஞ்சமடைந்தனர். குமரனுடன் மனைவி பிள்ளை, தம்பியும் நின்றனர்.
 
அந்தச்சமயத்தில் திருமலைக்குச் சில படையணிகளை நகர்த்துவதற்கான திடீர் முடிவு எடுக்கப்பட்டது. படையணிகள் செல்லும் போது அணிகளை இறக்கும் ஒழுங்கு, தங்கவைப்பது, உணவுகள் ஒழுங்குபடுத்துவது போன்ற பணிகளை ஒழுங்கமைப்பதற்கு அனுப்பவிருந்த அணியில் குமரனும் இடம்பெற்றிருந்தார்.
 
குமரனுக்கும் அந்தக் குடும்பத்திற்கும் அது கடினமானதொரு தருணமாக இருந்தது. இப்போது அந்த குடும்பத்திற்கு இருக்கும் ஓரே ஆறுதல் அவர் மட்டுந்தான். குமரனுக்கும் ஒரு குழந்தை. முள்ளிவாய்க்காலை இராணுவம் நெருங்கிய நேரம் கடுமையான செல்லடி, பங்கருக்குள்ளேயே வாழ்க்கையை நடாத்தவேண்டியிருந்தது. பங்கரை விட்டு வெளியில் சென்று திரும்பி பங்கருக்கு வரும் வரையிலும் உயிர் இருக்குமா! என்பது உறுதிப்படுத்த முடியாத நிலையிருந்த காலப்பகுதி. 
 
குமரனுக்கும் சங்கடமான நிலை. நான் திருமலை போனால் இவர்கள் எவ்வாறு சமாளிப்பார்கள். ஏதாவது நடந்தாலும் உடனடியாக ஒன்றும் செய்ய முடியாது. தான் போகலாமா! வேண்டாமா! என்று முடிவெடிக்க முடியாமலிருந்தார். மனைவியின் கண்களில் ஏக்கம். காந்தனின் வீரச்சாவு சிலகாலத்தின் பின் தெரிவிக்கப்பட்டிருந்ததால், குமரனுக்கும் ஏதாவது ஆகிவிடுமோ? எனப்பயந்தார். 
 
ஆனால் சொர்ணம் அண்ணையோ தைரியமாக ‘நீ போ, இந்த வேலையை உன்னால மட்டும் தான் சரியாக ஒழுங்குபடுத்த முடியும், அதோட இங்க நிலைமை சிக்கலாகிக் கொண்டு போகுது, உன்ர குடும்பநிலைமையும் எனக்கு விளங்குது. நான் முயற்சி செய்து, அவர்களை வள்ளத்தில் ‘றிங்கோ’ அனுப்பி விடுறன்’ என்றார்.
 
முள்ளிவாய்க்காலின் இறுதி நாட்களில் விடுதலைப்போராட்டம் நின்று கொண்டிருந்தது. தனக்கான பொறுப்பின் அவசியத்தை உணர்ந்த குமரன் தனக்குத் தரப்பட்ட கட்டளையை நிறைவேற்றத் தயாரானார்.  கடலில் பயணித்து திருமலை செல்வது சுலபமானதல்ல என்பதும் தெரியும். அதேவேளை தனக்கான பணியை முதற்கடமையாகக் கொண்டார்.
 
எனவே குடும்பத்திற்கு நம்பிக்கையூட்டிவிட்டு  மனைவியிடம் விடைபெற்று, தாடியை இழுத்து விளையாடிக் கொண்டிருந்த கைக்குழந்தையிடம் முத்தத்தில் பிரிவைச் சொல்லிப் புறப்பட்டார். அவரை கண்ணீருடன் வழியனுப்பி விட்டு, கவனமாக போய்ச் சேரவேண்டும் என்று பங்கருக்குள் கோணேஸ்வரக் கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டு, தூக்கமற்றிருந்தன அந்த உயிர்கள்.
 
வழமையாகத் திருமலைக்குச் செல்லும்போது,  கடற்புலிகளின் தாக்குதல் படகுகளும் இணைந்து சென்று அணிகளை இறக்கி விட்டுவரும். அந்த நேரத்தில் அதற்கான வாய்ப்பு இருக்கவில்லை. முள்ளிவாய்க்காலின் இறுதிக்கிழமைகளில் நின்று கொண்டிருந்தன அணிகள். எனவே ராடரில் தெரியாது என நம்பப்படும் படகில் தான் அவர்கள் புறப்பட்டார்கள். அந்த நேரத்தில் பல மக்கள் மீன்பிடிப்படகுகளில் திருமலை மற்றும் யாழ்ப்பாணத்திற்குச் சென்று கொண்டிருந்தனர். எனவே சாதாரண படகிலேயே இவர்களும் புறப்பட்டார்கள். ஆனால், அடுத்தநாள் வரை படகுகளில் சென்ற போராளிகளின் தொடர்பு கிடைக்கவேயில்லை. லெப்.கேணல் குமரனும் ஏனையோரும் வீரச்சாவடைந்துவிட்டனர் என ஊகிக்க முடிந்தது. மறுநாள் காலை குமரனின் மனைவி குழந்தையை தம்பியுடன் விட்டு விட்டுகடுமையான செல்லடிக்கு மத்தியிலும் முகாமிற்கு வந்து, ‘குமரன் றிங்கோ போய்ச் சேர்ந்து விட்டாரா’ என பரிதவிப்புடன் கேட்டார்.
 
என்ன பதில் சொல்வது, சங்கடத்துடன் ‘போட் போயிட்டுது, இன்னும் தொடர்பு கிடைக்கவில்லை’ என்று சொன்னார்கள். அவர் அவர்களை ஆழமாகப்பார்த்தார். மௌனத்தைப் பதிலாக்கினாள். அவரின் பார்வையின் ஆழத்தையும் மௌனத்தையும் அவர்களால் எதிர் கொள்ள முடியவில்லை. கண்ணீர் கண்களை நிரப்ப, உதடுகள் துடிதுடிக்க, பெருமூச்சை விட்டு விட்டு, கீழே வெறித்துப்பார்த்தார். சாவுகள் மலிந்த பூமியாக விளங்கிய முள்ளிவாய்க்காலின் மரண ஓலங்கள் மனதைக் கடுமையாக்கியதோ என்னவோ மீண்டும் தலையை நிமிர்த்தி தழுதழுத்த குரலில் தமது இருப்பிடத்தைச் சொல்லி ‘தொடர்பு கிடைத்தவுடன் சொல்லுங்கோ அண்ணா’ என சொல்லிவிட்டுச் செல்லத்திரும்பினார். ‘செல் கடுமையாக அடிக்கிறான் பார்த்துப்போங்கோ’ எனகூறிய போது ‘சரி’ என விரக்தியுடன் தலையாட்டிச் சென்றார்.
 
தாய், தந்தையை இழந்த பின், நால்வரும் பெரிய கனவுகளோடும் எதிர்பார்ப்புக்களோடும் வன்னிக்கு வந்து வாழ்க்கையை ஆரம்பித்தார்கள். வன்னியில் இருந்து திரும்பும் போது முள்ளிவாய்க்கால் வரை பட்ட கடினங்கள், வேதனைகளுடன் இரண்டு கைக்குழந்தைகளையும் கொண்டு  அகதிமுகாமில் தஞ்சமடைந்தனர். குமரனுக்கு என்ன நடந்தது என்பதை  அறிந்து கொண்டபோது அழுவதற்கு கண்ணீரும், திராணியும் இருந்திருக்குமோ! தெரியவில்லை.
 
இன்று ஈழத்தின் ஒரு ஓரத்தில் தங்களது காதலின் அன்புப்பரிசாக, நினைவுகளாக இருக்கும் அந்தக் குழந்தைகளை வளர்த்துக் கொண்டிருக்கின்றனர் அந்தச் சிறுவயது விதவைகள். அவர்களின் அமைதியான ஆனந்தமான வாழ்க்கையை நான்காம் ஈழப்போர் நிரந்தரமானதொரு துன்பியல் நிலைக்குள் தள்ளிவிட்டது. தாய், தந்தையின் உடல்கள் வாகரைக்கடலிலும் காந்தன், குமரனது உடல்கள் புல்மோட்டைக்கடற்பரப்பிலும் சங்ககமாகிவிட்டன. வேலவனின் உடல் வன்னி மண்ணில் அடையாளமிழக்கப்பட்ட துயிலுமில்ல விதைகுழி மண்ணில் விதைக்கப்பட்டிருக்கின்றது.
 
ஒரு புலம் பெயர் தமிழ் உணர்வாளர் தன்னாலியன்ற உதவிகளைச் செய்து அந்தக் குடும்பத்தைப் பராமரிப்பதாக கேள்விப்படுகின்றேன். அந்த நல்ல உள்ளத்திற்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.
 
 
Link to comment
Share on other sites

நினைவழியாத்தடங்கள் - 06 (இருள் விலக்க ஒரு யுத்தம்)
 
வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர் புலிகளின் போரியல் வரலாற்றில் ஒரு மைற்கல் மட்டுமல்ல அது ஒரு திருப்புமுனை. 1997 ம் ஆண்டே, கிளிநொச்சி ஆனையிறவுப்பகுதிக்கான வேவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. கிளிநொச்சி ஆனையிறவு வேவு நடவடிக்கை கடினமானதாகவே இருந்தது. ஏற்கனவே ஒரு படைப்பிரிவு வேவு நடவடிக்கையை ஆரம்பித்தபோதும் எதிர்பார்த்த பெறுபேற்றை அடைய முடியவில்லை.
 
இதனால் செம்பியன் வேவு அணி, சாள்ஸ் அன்ரனி வேவு அணிகள் வேவு நடவடிக்கையைப் பொறுப்பெடுத்தன. பாரிய நிலப்பகுதியை உள்ளடக்கி, பல கட்டமைப்புக்களுடன் கூடிய காப்பரண்களைக் கொண்டு அமைந்த இப்படைத்தளங்களின் தாக்குதல் திட்டத்தை வகுப்பதற்கு உட்பகுதி வேவுத்தகவல்களே மிக அவசியம் ஆனவையாக இருந்தன. உட்பகுதி வேவுத்தகவல்கள் இன்றி திட்டத்தை தீட்டுவதோ வெற்றிகரமாக நகரத்துவதோ இயலாத காரியம். பல மாதங்களாக இதற்கான கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் எவையும் சாதகமாக அமையவில்லை.  
  
வேவுஅணிகளால் உள்நுழையக்கூடிய வழிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மறைப்பு வேலியில் இடைவெளிகள் இல்லை. காவலரணின் சூட்டு ஓட்டைகளிற்குள்ளாலும் புகுந்து செல்ல முடியாத வகையில் காவலரணின் சூட்டு ஓட்டைகள் விடப்பட்டிருந்தன. புலிகள் பயன்படுத்தும் அநேகமான வழிகளையும் மிக நுணுக்கமாக உள் நுழைய முடியாதவாறு கட்டுப்படுத்தியிருந்தான். 
 
காவலரண் வேலியில் இருக்கும் எல்லாக் காவலரணிலும் இராணுவம் நிற்பதில்லை. அநேகமாக ஒன்றுவிட்ட ஒரு காவலரணில்தான் இராணுவம் நிற்பான். இடையிடையே ரோந்துக்கு வரும் இராணுவம் இந்த ஆளில்லாக் கவலரணுக்கு வந்து டோச் அடித்துவிட்டு சிறிது நேரம் நின்று விட்டுச் செல்வான். அதன்பின் அக்காவலரணில் ஒருவரும் நிற்கமாட்டார்கள். அடுத்த ரோந்துக்காரன் வரும் நேர இடைவெளிக்குள் காவலரண் சூடும் ஓட்டைக்குள்ளால் புகுந்து உள்வேவு அணிகள் செல்லுவது வேவுக்கான ஒரு வழி.
 
ஏற்கனவே முல்லைத்தீவு முகாம் உள்வேவு எடுக்கச் சென்ற வேவு அணியினர் உள்நுழைவதில் சிரமத்தைச் சந்தித்தபோது, காவலரணின் சுடும் ஓட்டையையே முகாமினுள் நுழைவதற்கான வழியாக பயன்படுத்தினர். இது போன்று புலிகளின் வேவு உத்திகள் தொடர்பாக இராணுவம் தான் பெற்ற எல்லா அனுபவத்தையும் பயன்படுத்தி உள்வேவு நுழைவு வழிகளை இறுக்கமாகக்  கட்டுப்படுத்தியிருந்தான். இருந்தும் தொடர்ச்சியான கடும் முயற்சிகளை அணிகள் மேற்கொண்டுதான் இருந்தன.
 
இறுதியாக, வேவு அணிகளை உள் அனுப்புதற்கான மாற்றுத்திட்டம் ஒன்று வகுக்கப்பட்டது. அதன்படி தொடர்காவலரண் பகுதியில் நான்கு காவலரண்கள் மீது தாக்குதலை நடாத்துவது என்றும் அதேநேரத்தில் அந்தக் கால அவகாசத்தைப் பயன்படுத்தி,  வேவு அணியை உள் அனுப்புவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. காவலரண் மீது தாக்குதலை நடாத்தும் சமநேரத்தில் வேவு அணியை உள்நகர்த்துவதை எதிரி அனுமானிக்கமாட்டான். காவலரண் தாக்குதல் நடைபெற்றதாக எண்ணுவான். எனவே, இந்த வழிமுறையினூடாகப் பிரதான நோக்கத்தை நிறைவேற்றலாம் என்ற கணிப்பீட்டின் அடிப்படையில் இதற்கான முடிவு எட்டப்படுகின்றது.
 
லெப்.கேணல் வீரமணி, லெப்.கேணல் லூயின்(கலையழகன்) உட்பட ஐந்து பேரைக் கொண்ட உள்வேவு அணி தயார்ப்படுத்தப்பட்டது. காவலரண்களை தாக்கியழிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள, மேஜர் கார்முகிலனுடன் முப்பத்தைந்து பேரைக் கொண்ட அணி தயாரானது. கிளிநொச்சி உருத்திரபுரப்பகுதியில் உள்ள குஞ்சிப்பரந்தன் வீதிக்கு அருகாமையிலேயே தாக்குதலுக்கான காவலரண் வேலிஅமைந்திருந்தது.
 
இந்நடவடிக்கைக்கு வேவு நடவடிக்கையில் இருந்த போராளிகளை மட்டுமே பயன்படுத்துவத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது. இதனால் உள்வேவு அணியும் காவலரண் ஊடறுப்புத் தாக்குதலில் பங்கெடுத்துவிட்டு, தங்களது வேவு நடவடிக்கைக்கான பயணத்தைச் செய்வார்கள். இரகசியமான முயற்சியென்பதால் வேவு அணிகளே தாக்குதல் அணிகளாகவும் செயற்பட்டது. 
 
தடைகளிற்குள் நகரும் போது இடையில் எதிரி அடையாளம் கண்டு தாக்குதலைத் தொடங்கினால் டோப்பிட்டோவைப் பயன்படுத்தி மீதித்தடைகளை உடைத்து தாக்குதலை முன்னெடுப்பதுதான் வழமையான பாதையுடைப்புத் தந்திரோபாயம். பாதையுடைப்பிற்குச் செல்லும் போது டோப்பிட்டோவையும் கொண்டே பாதையுடைப்பு அணிகள் செல்லும். ஆனால் இங்கு டோப்பிட்டோ இல்லாமல் சைலன்றாகத் தடைகளைத் தாண்டி பண்டில் சண்டையைத் தொடங்கலாம் என்ற உறுதியான முடிவில் பாதையுடைப்புத்திட்டம் வகுக்கப்பட்டது. ஏனெனில்  சைலன்றாக காவரலண் சுடும் ஓட்டைக்குள்ளால்  உள்நுழைவதற்கு முயற்சிக்கப்பட்ட பகுதி என்பதால் பலதடவை பண்டிற்குச் (மண்அணை) சென்று வந்திருக்கின்றனர். எனவே,  தடையகற்றுவதற்கு வழமையாகக் கைக்கொள்ளும் பாணியைப் பின்பற்றவில்லை.
 
தாக்குதல் அணிகள் மெதுவாக நகர்ந்து தாக்குதல் பகுதிக்குச் சென்றுவிட்டன. பாதை உடைக்கும் அணி நகர்ந்து சண்டையைத் தொடக்கும் போது வலது, இடது பக்க காவலரண்களில் இருந்து, தடையுடைப்பு அணிகள் மீது எதிரி தாக்குதல் நடாத்துவதைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் காப்புச்சூட்டு அணிகளை வலது, இடது பக்கம் நிலைப்படுத்திவிட்டு சண்டைக்கான அணிகள் நகரத்தொடங்கின. 
 
முதலாவது, இரண்டாவது தடைகளை வெட்டிக்கொண்டு காவலரணை நோக்கி நகர்ந்தது பாதையுடைப்பு அணி. கடைசித்தடையைத்தாண்டி பண்டுக்கு நகர்ந்து கொண்டிருந்தபோது, வலது பக்க காலரணில் இருந்த இராணுவம் தாக்குதலை ஆரம்பித்தது. உடனே தடையில் இருந்தவர்கள் அக்காவலரண் மீது தாக்குதலை ஆரம்பித்த சமநேரத்தில் காப்புச்சூட்டணியும் தாக்குதலில் இணைந்தது. அதேநேரம் இடதுபக்க காவலரணிற்கு வீரமணி ஓடிச் சென்று குண்டை அடிக்க, இராணுவம் அக்காவலரன்களை விட்டு விட்டு ஓடத்தொடங்கினான்.
 
காவலரணுக்கு இடையில் இருந்த மறைப்புவேலியை பலமாக இருந்தது. என்றாலும் பிய்த்துக் கொண்டு உட்பக்கம் நுழைந்த அணிகள் இரண்டு பக்கமும் தாக்குதலை மேற்கொண்டன. அதேவேளை வேவு அணியினரும் வெற்றிகரமாக உள் அனுப்பப்பட்டனர். தாக்குதல் அணிகளும் அதில் இருந்த இராணுவத் தளபாடங்களை எடுத்துக் கொண்டு பின்வாங்கிக் கொண்டிருந்தபோது, வீரமணி திரும்பி ஒடிவந்து, வேவு அணியில் இருந்த ஒருவர் நைற் விசனை(இரவு  தொலைநோக்கி)அவசரத்தில் விட்டுவிட்டு வந்துவிட்டார் என்று அதை ஒடிப்போய் எடுக்கச் சென்றார். உடனே பின்வாங்கிய அணியை உள் எடுத்து மீள கட்டவுட் போட்டு நிற்க, வீரமணி அதை எடுத்துக் கொண்டு திரும்பி உள்ளுக்குச் சென்றுவிட்டார்.
 
அதனால், திட்டமிட்டதன்படி வேகமாகப் பின்வாங்க முடியவில்லை. இவ்வளவும் நடந்த நேரத்திற்குள், காவலரணில் இருந்து பின்வாங்கிய இராணுவம் அப்பகுதிக்குச் சகல ரக மோட்டர் ஆட்லறிகளையும் இணைத்துக் கடுமையான செல் மழை பொழியத் தொடங்கினான். போராளிகளும் மிக  வேகமாகப் பின்வாங்கத் தொடங்கினர். தடைக்கு வெளியில் செல் சரமாரியாக விழுந்து சிதறிக்கொண்டிருந்தது. மிகக்குறுகிய பகுதியில் செறிவாக, மழைபோல் தொடர்ச்சியாக செல்கள் வீழ்ந்து வெடிக்கத் தொடங்கியதால் பலர் காயமடைந்து விழுந்தார்கள். காயமடைந்தவர்களையும் இழுத்துக் கொண்டு தவண்டு தவண்டு பின்வாங்கிக் கொண்டிருந்தார்கள். தவண்டு வந்துகொண்டிருந்த சில போராளிகளின் மீது செல்விழுந்து வெடித்ததில் சிலர் வீரச்சாவைத் தழுவிக்கொண்டிருந்தனர்.
 
ஒரு சிறிய பிரதேசத்திற்குள் பொழிந்த செல் மழையில் அணிகள் பலத்த இழப்பைச் சந்தித்தன. கிட்டத்தட்டப் பத்துப் போராளிகள் காயப்பட்டதுடன் எட்டுப் பேர் வீரச்சாவடைந்தனர். கடுமையான செல் தாக்குதல் தொடர்ந்த போதும், மீதமிருந்த குறைந்தளவிலான போராளிகளே காயப்பட்ட, வீரச்சாவடைந்த எல்லோரையும் அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தினர். ஒருவர் அல்லது இருவராகவே ஒவ்வொரு போராளியையும் அங்கிருந்து, தவண்டவாறே அப்புறப்படுத்தினர். எதிரியின் செல்வீச்சு கடைசிவரை குறையவேயில்லை. அந்த செல்மழைக்கு நடுவே துணிச்சலாகச் செயற்பட்டு போராளிகளைக் கொண்டுவந்தது நினைத்துப் பார்க்க முடியாத செயலாகவே இருந்தது.
 
அதேசமயம், வேவு அணி பாதுகாப்பாக உள்ளே சென்றுவிட்டது. இராணுவம் உட்பகுதியில் கடுமையான தேடுதல் நடவடிக்கையை செய்தது. ஆனால், உள்வேவு அணிகள் அதிலிருந்து சாதுரியமாகத் தப்பித்தன. பின்னர் ஆனையிறவு,  கிளிநொச்சியின் வேவைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்குத் தேவையான முக்கியமான அடிப்படை வேவுத் தகவல்களுடனும் வெளியில் வந்தார்கள். அவர்களுடைய வேவுத் தகவல்கள், அப்பகுதி உள்வேவுக்கு எவ்வாறு, எந்தப்பகுதியால், எந்தப்பாதையால் செல்லவேண்டும் என்ற அனைத்து கேள்விகளுக்குமான பதிலைக் கொடுத்தன. தொடர்ந்து வேவு அணிகள் பல தடவை உள்ச் சென்று வேவை முழுமைப்படுத்தின.
 
கிளிநொச்சி ஊடறுப்பு நடவடிக்கை தொடக்கம் வரலாற்றுச் சாதனை எனப்பதியப்பட்ட ஆனையிறவுச் சமர் வரை, சரியான முறையில் தாக்குதலைத் திட்டமிடுவதற்கு இவ்வேவுத்தகவல்களே அடிப்படையாக விளங்கின. இதை பெறுவதற்கான ஆரம்ப முயற்சியில் எட்டுப்பேர் வீரமரணமடைய வேண்டியிருந்தாலும் அத்தகவல்களின் அடிப்படையில் எதிரிக்கு கொடுத்த பாரிய இழப்பானது வரலாற்றில் மறக்கமுடியாததாகும்.
 
இந்த நடவடிக்கையில் மேஜர் கார்முகிலனும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். சாள்ஸ் அன்ரனி படையணில் செயற்பட்ட கார்முகிலன், பல தாக்குதல் நடவடிக்கைகளில் பங்கெடுத்தவர். அவரின் துணிவும் அதிரடியான நடவடிக்கையும் பல தாக்குதல் வெற்றிகளுக்கு அடிப்படையாக அமைத்திருக்கின்றன.
 
ஆனையிறவு பரந்தன் ஊடறுப்புச் சமரில் ஆட்லறி முகாமிற்குள் நுழைந்த கார்முகிலன் தலைமையிலான அணி ஆட்லறி முகாமின் குறிப்பிட்ட பகுதியைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, ஆட்லறியை கைப்பற்றினர். ஆனால் முகாமின் மறுபக்கம் கட்டுப்பட்டுக்குள் வராமல் சண்டை தொடர்ந்தது. சண்டை மறுநாள் காலை வரை நீடித்தது. சண்டையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இராணுவத்திற்கு உதவிகள் கிடைத்து, சண்டை எதிரிக்கு சாதகமாகப் போகின்றது என்பதை உணர்ந்த கார்முகிலன், அந்த ஆட்லறிகளை கையாள்வதற்கு சென்ற போராளிகளைக் பயன்படுத்தி, ஆட்லறிகளைக் கொண்டு இராணுவத்தின் மீது நேரடித்தாக்குதலை தொடுத்து கணிசமான இழப்பை ஏற்படுத்தினார். ஏனைய முனைகளிலும் எதிர்பார்த்த வெற்றியிலக்கை அடைய முடியவில்லை. நிலைமையை உணர்ந்த கார்முகிலன், அத்தனை ஆட்லறிகளையும் உடைத்ததுடன் வெடிபொருள்கள், களஞ்சியங்கள் எல்லாவற்றையும் தகர்த்து, சமரில் பிரதானமாக செயற்பட்டவர். அத்தகைய மாவீரனையும் பலிகொடுத்து, ஆனையிறவுச சமருக்கான அடித்தளம் போடப்பட்டது. 
 
“எமது போராளிகளின் அபாரமான துணிவும், விடா முயற்சியும், தளராத உறுதியுமே இந்த வெற்றிகளுக்குக் காரணமாக இருந்திருக்கின்றன. எதற்கும் துணிந்தால், விடாது முயற்சிகளை எடுத்தால், உறுதியோடு இயங்கினால் எந்த சாதனையையும் சாதித்துவிடலாம். எமது இராணுவ வெற்றிகள் இந்த உண்மையையே எடுத்தியம்புகின்றன” – தலைவர் பிரபாகரன்
Link to comment
Share on other sites

நினைவழியாத்தடங்கள் - 07 (லெப்கேணல் சூட்டி நினைவுகளில்)

 

எனது நண்பர் ஒருவருடன் லெப் கேணல் மகேந்தியண்ணையைப் பற்றிய நினைவுகளைப் பரிமாறிக் கொண்டிருந்தோம்மகேந்தி அண்ணையின் தனிச்சண்டைகள் பற்றியும் அவருடைய துணிச்சலான சம்பவங்களைப் பற்றியும் கதைத்துக் கொண்டிருந்த போது,  மகேந்தி அண்ணையைப் போலத்தான் சூட்டியும் என்று சொன்ன நண்பர்அவர்களிருவரும் ஒன்றாக இருந்தபோது நடந்த சில சுவாருசியமான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

 

‘‘அது 1989 ம் ஆண்டு காலப்பகுதிஇந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் காலகட்டம்வன்னிக் காடுகளில் போராளிகள் அணி அணியாகப் பிரிந்து தங்கியிருந்தனர்இந்திய இராணுவம் காட்டுக்குள் இராணுவ நடவடிக்கைகளுக்காக இறங்கினாலன்றி போராளிகள் வழமையான பம்பலும் பகிடியுமாகத்தான் இருப்பார்கள்பல யாழ்மாவட்டப் போராளிகளுக்குக் காடு புதிதுகாட்டு மிருகங்களைப் பற்றிக் கேள்விப்பட்டாலும் அதைப்பற்றிய அனுபவமின்மையிருந்ததுவன்னிக் காடுபற்றித் தெரிந்த சிலர்யாழ்ப்பாணப் போராளிகளுக்கு காடுமிருகங்கள் தொடர்பில் சில போலியான கதைகளைக்கூட பகிடிக்காக கட்டிவிடுவார்கள்இதனால் இவை தொடர்பாக ஏதாவது உண்மைக் கதைகள் சொன்னால் பகிடிக்குச் சொல்வதாக நினைத்து நம்பமாட்டார்கள்.

‘‘ஒரு தடவை பாலமோட்டைக் காட்டுப்பகுதியில் ஒரு அணி தங்கியிருந்ததுஅப்போது அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் யானைகள் வந்து நிற்பதாக போராளி ஒருவர் சொன்னார்அப்ப சூட்டி உட்பட எங்களுக்கும் யானை பார்க்கும் ஆசை வந்ததுஎனவே நாங்கள் யானை நிற்கும் இடத்திற்குச் செல்ல முற்பட்டோம்வன்னியைச் சேர்ந்த போராளிகள் கவனம்யானை தூரத்தில் நிக்கிறமாதிரி இருக்கும் ஆனால் வேகமாக பக்கத்தில வந்திடும் என்று எச்சரித்தனர். ‘சும்மா கதைவிடாதைங்கோ’ என சொல்லிவிட்டுச் சென்றோம்.

‘‘முகாமிற்குப் பக்கத்தில் இருந்த வெட்டையிற்தான் யானை நின்றது என்பதால் சூட்டி சாரத்துடனே வந்தார்யானைக்கூட்டத்தின் பார்வை எல்லைக்குள் சென்றபின்சூட்டி எங்களில் இருந்து முன்னுக்குச் சென்றுபம்பலாக சாரத்தைப் பிடித்து முன்னுக்கும் பின்னுக்குமாக ஆட்டி,யானையைப் பார்த்து, ‘வா வா‘ என சொல்லிக்கொண்டிருந்தார்சூட்டி எப்பவும் ஏதாவது வம்பு பண்ணிக்கொண்டிருப்பார்அப்படிச் செய்து கொண்டிருக்கும் போது யானைக்கு என்ன நடந்ததோ என்னவோ தெரியவில்லைதிடீரென ஒரு யானை எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தது.  சூட்டி திரும்பி ஓடத் தொடங்கநாங்களும் வேகமாக பின்னுக்கு ஓடத்தொடங்கினோம்ஓடிவந்த பாதையில் முகாமிற்கு தடிவெட்டிய மரங்களின் அடிக்கம்புகள் ஆங்காங்கு நின்றனகட்டைகளில் தட்டுப்படாமல் ‘‘தலைதப்பினால் தம்பிரான புண்ணியம்” என்று நினைத்துக் கொண்டு ஓடிக்கொண்டிருந்தோம்.

 

சூட்டி எங்களிற்கு பின்னால கடைசியாத்தான் வந்துகொண்டிருந்தவர்ஓடிவரும் போது திரும்பிப் பார்க்கேக்கில ஓடிக்கொண்டு வந்த அவரின் சாரம் மரத்தின் அடிக்கம்பில்  தடக்குப்படஅப்படியே நிலைகுப்பற விழுந்து விட்டார்அவர் சுதாகரித்து எழும்பி ஓடுவதற்கு முன் யானை அவருக்குக் கிட்ட வந்துவிட்டது. வந்த யானை கால் ஒன்றைத் தூக்கி இவரின் மேல் மிதித்ததுநாங்கள் திகைத்துப் போய்ப்பார்த்தோம்ஆனால் யானையின் கால் இவரது கால் இடைவெளிக்குள்தான் மிதித்து நின்றதுசாரத்தில் மிதித்ததால் சூட்டி எழும்ப முடியாமல் திகைத்துப்போய் யானையின் காலுக்குள் கிடந்தார்பின்னர் யானை சூட்டியை தும்பிக்கையால் தூக்கிதும்பிக்கைக்குள் வைத்து உறுட்டித் தேய்க்கத் தொடங்கியது.சிலவேளை தூக்கி எறிவதற்காகத்தான் அப்படிச் செய்ததோ தெரியவில்லை.

‘‘சூட்டி ஒன்றும் செய்ய முடியாமல் தும்பிக்கைக்குள் இருந்து  உறுட்டுப்பட்டு, தேய்பட்டுக் கொண்டிருந்தார்அச்சமயத்தில் ஒருபோராளி முகாமிற்கு ஒடிச் சென்று துப்பாக்கியை எடுத்துவந்து வானத்தை நோக்கிச் சுடயானை சூட்டியைத் தூக்கி வீசாமல் அப்படியே போட்டு விட்டு ஓடிவிட்டது.

 

நாங்கள் ஒடி சூட்டிக்குக்கிட்டச் செல்லசுதாகரித்து எழும்பி நின்றார்முகம் வீங்கியிருந்ததுயானை நிலத்தில் தேய்த்ததால் முகத்தில் இரத்தக்காயங்களும்உடம்பில் தேய்த்த அடையாளங்களும் இருந்தனஆனால் சூட்டி சிரித்துக் கொண்டிருந்தார்இதுதான் சூட்டியின் குணவியல்வுஎந்த கடினமான சந்தர்ப்பங்களிலும் பதட்டத்தைக் காணமுடியாதுநிதானமாகவும் துணிவாகவும் செயற்படுவது அவரது இயல்பு.

‘‘பிறிதொரு சமயம் மணலாற்றுக் காட்டுப்பகுதியில் இந்திய இராணுவம் செக்மெய்ற்’ எனப் பெயரிடப்பட்ட இராணுவ நடவடிக்கையைதலைவரை இலக்கு வைத்து மேற்கொண்டதுஇதனால் தலைவரை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதுஅப்போது கேணல் சங்கர் அண்ணையுடன் ஒரு அணிதலைவரை மாற்றுவதற்காகத் தீர்மானித்த இடத்திற்கான உணவுகளைக் களஞ்சியப்படுத்துவதற்காகச் சென்றதுஅந்த அணியில் சூட்டியும் நானும் இடம்பெற்றிருந்தோம்சூட்டி காட்டிற்குள்ளால் பாதையை முறித்துக் கொண்டு முன்னுக்குச் சென்று கொண்டிருந்தார்.அப்போது இடையில் இருந்த கருங்குளவிக்கூடு தட்டுப்பட்டு குளவி கலையத்தொடங்கியதுசூட்டியையும் ஓடச்சொல்லிவிட்டுநாங்கள் எல்லாரும் கலைஞ்சு ஒடிவிட்டோம்பின்னர் எல்லோரும் ஒன்றாகிய பின் பார்த்தால் சூட்டியைக் காணவில்லைஅவரைத் தேடி குளவிக்கூட்டடிக்குச் சென்றோம்அந்த இடத்திலேயே சூட்டி குப்பறக்கிடந்தார்சூட்டிக்கு கருங்குளவி குத்தத் தொடங்கவேதனையில் அப்படியே விழுந்து கிடந்துவிட்டார்.

 

கருங்குளவிகள் தலையிலிருந்து கால் வரை உடலில் இருபத்துமூன்று இடங்களில் குத்திவிட்டு கலைந்து சென்று விட்டனவேதனையில் துடித்தார்ஒரு கருங்குளவி முறையாக் குத்தினாலே தப்புவது கடினம் என்பார்கள்மருத்துவமனைக்கும் கொண்டு செல்ல முடியாதுமுகாமிற்கு கொண்டு வந்து பழப்புளியைக்கரைத்து உடம்பு முழுவதும் ஊற்றிக்கொண்டிருந்தாம்ஒரு கிழமைவரைசாகிறாக்கள் சேடம் இழுக்கிறதைப்போல இழுத்துக் கொண்டு நடுங்கிக் கொண்டிருந்தார்பிறகு குளவி குத்திய இருபத்துமூன்று இடங்களிலும் பொட்டளவிற்குக் காயமாகியது.அதன்பின்னரே குளவி குத்தின இடங்களில் இருந்து குளவியின் ஆணிகளை எடுக்கக்கூடியவாறு இருந்ததுஅதுக்குப்பிறகுதான் முழுமையாகக் குணமடைந்தார்இந்தத்தடவை இரண்டாவது முறையாக சாவின்விளிம்புவரை சென்று திரும்பினார்.

 

பின்னர் ஒருதடவை மன்னாரில் அமைந்திருந்த எமது முகாம் ஒன்றிற்குச் சென்று கொண்டிருந்தோம்முகாமிலிருந்து கிட்டத்தட்ட மூன்று கிலோமீற்றர் தூரத்திற்கு முன் இந்திய இராணுவம் காடு முறித்துச் சென்ற தடையம் இருந்ததுபொறுப்பாளர் தடையத்தை பின்தொடர்ந்து எங்கு செல்கின்றது எனப் பார்க்குமாறு ஒரு போராளியிடம் கூறினார்ஆனால் சூட்டி நான் போறன் எனக்கூறிதன்னுடன் ஐந்து பேரைக்கூட்டிக் கொண்டு தடையத்தைப் பின்தொடர்ந்து சென்றார்இராணுவம் தடையத்தை ஏற்படுத்திவிட்டுதடையத்தின் இடையில்தடையம் சென்ற திசையை பார்த்து நிலையெடுத்திருந்தான்இவர்கள் தடையத்தைப் பின்தொடர்ந்து செல்லபதுங்கியிருந்த இராணுவம் தங்களைத் தாண்டிச் செல்லவிட்டு விட்டு இவர்கள் மீது பின்பக்கமாகத் தாக்குதலைத் தொடுத்தது.

 

திரும்பி இராணுவத்தின் மீது தாக்குதலைத் தொடுத்தவாறு காட்டுக்குள் பிரிந்து ஓடிவிட்டனர்பிறகு காடுமாறிஅப்பகுதியில் இருந்த சனத்திட்ட வழிகேட்டு இரண்டு நாட்களின் பின் முகாமிற்கு வந்து சேர்ந்தார் சூட்டி. பின்னர் குளிப்பதற்காக உடுப்பு எடுக்க பாக்கைத் (Bag) திறந்து பார்த்தால் முதுகில் போட்டிருந்த உடுப்புபாக்கில் மூன்று ரவைகள் பட்டு உடுப்பு கந்தலாகக் கிழிந்திருந்ததுஇந்த சம்பவத்திலும் மயிரிழையில் மூன்றாவது தடவையாக உயிர்தப்பியிருந்தார்.

 

மேலும் அவர் சூட்டி அண்ணையின் தனிப்பட்ட குணாதிசயங்களைப்பற்றிக் கூறும்போது ‘‘சூட்டி மூத்த உறுப்பினர் ஒருவருடைய நம்பிக்கைக்குரிய போராளியாகச் செயற்பட்டவர்சிறந்த நிர்வாகிநேரம் பாராது கடுமையாக உழைக்கக்கூடிய ஒருவர்எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் பண்பாளர்” என்றார்.

 

சூட்டியண்ணையின் இந்தக் குணாதியங்களை நான் புரிந்து கொண்டது ஆ..வே சண்ணடையின்போது. ‘‘1991 ம் ஆண்டு..வே சண்டைக்காக அணிகள் தயாராகிக் கொண்டிருந்தனகனரக அணியினரான எங்களுக்கு  வெற்றிலைக்கேணிக் கடற்கரைப்குதியில் கடற்படையின் தரையிறக்கத்தைத் தடுப்பதற்கான பணி தரப்பட்டதுஅந்தப்பகுதிக்குச் சூட்டியண்ணைதான் பொறுப்பாளர்வெற்றிலைக்கேணி கடற்கரைமணலில் நிலையமைத்துக் கொண்டருந்தபோது அருகில் நின்ற போராளி சூட்டியண்ணை வருகின்றார் எனச் சொன்னார்தலையை நிமிர்த்தி பார்த்தபோது சராசரி உயரம்சிரித்தமுகம்தலையில் பின்பக்கமாக திருப்பி விடப்பட்ட தொப்பியுடன் வந்தார் சூட்டியண்ணைஅவரைப்பார்த்தவுடன் உடனே நினைவிற்கு வந்தது லெப்கேணல் மகேந்தி அண்ணை தான்கிட்டத்தட்ட ஒத்த முகவமைப்பைக் கொண்டவர்கள்நாங்கள் கனரக ஆயுதங்களிற்கான பயிற்சி எடுத்த முகாமில் தான் 23.MM கனரகப்பீரங்கிக்கான பயிற்சியை மகேந்தியண்ணை எடுத்தார்அப்போது அவருடன் எனக்குச் சிநேகிதம் ஏற்பட்டதுஎனவே சூட்டியண்ணையுடன் முதல் சந்திப்பிலேயே இலகுவாகவே அணுகக்கூடியவாறு இருந்தது.

 

ஆனையிறவுத்தளத்தை முற்றுகையிட்டுத் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டதும் தரையிறக்கத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தன அணிகள்.  சூலை 14 ம் திகதி நீண்டு விரிந்த கடற்பரப்பில் அணிவகுந்து நின்றன கடற்படைக்கலங்கள்சூட்டி அண்ணையும் தனது பகுதியில் உள்ள அணிகளை தயார்ப்படுத்திக் காத்திருந்தார்.

 

விமானத்திலிருந்து வந்த குண்டுகள் கடற்கரைப்பகுதியில் கடற்படைத்தரையிறக்கத்திற்கான முன்னேற்பாட்டைச் செய்து கொண்டிருந்தன.பின்னேரம் கடற்படைக்கலங்கள் தரையை நோக்கி நகரத்தொடங்கினகனரக அணிகளும் முடிந்தளவிற்குத் தாக்குதலைத் தொடுத்து இழப்புக்களை ஏற்படுத்தினாலும் இராணுவம் தரையிறங்கி விட்டதுறோட்டுக் கரையால் இராணுவம் தரையிறங்கிய அந்தப்பகுதியை நோக்கி சூட்டி அண்ணை ஓடிச் செல்வது தெரிந்ததுநாங்கள் கடற்கலன்கள் மீதான தாக்குதல்களை தொடர்ந்து கொண்டிருந்தோம்.

 

இராணுவம் தரையிறங்கிய பகுதியில் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்து கொண்டிருந்ததுவோக்கியில் சூட்டியணையைத் தொடர்புகொள்வதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தார்கள்பின்னர் எங்களை அவ்விடத்திலிருந்து பின்வாங்குமாறு கட்டளை கிடைக்க பின்வாங்குகின்றோம்.

 

மறுநாள் ரவி அண்ணை அழுது கொண்டிருந்தார்சூட்டியண்ணை வீரச்சாவடைந்துவிட்டார் என்பது புலப்பட்டதுஎத்தனையோ சந்தர்ப்பங்களில் எல்லாம் உயிர் தப்பிய சூட்டியண்ணை ஆ..வெ சமரில் வெற்றிலைக்கேணி கடற்கரையில் தரையிறங்கிய இராணுவத்திற்கெதிரான சண்டையில் வீரச்சாவடைந்தார்.

 

அவரது குடும்பத்தில் நான்கு பிள்ளைகளில் மூன்று பேர் போராளிகளாக இருந்தனர்லெப்கேணல் சூட்டிஅவரது தம்பி லெப் கேணல் மகேந்தி.இருவரும் வீரச்சாவடைந்து விட்டனர்அவரது இன்னுமொரு சகோதரன் ரவி அண்ணைக்கு முள்ளிவாய்க்காலின் என்ன நடந்தது என்று இன்றுவரை தெரியாது.

Link to comment
Share on other sites

  • 3 months later...

வாணன்,

நினைவழியாத உங்கள் தடங்களில் பயணிக்கும் வாசகர்களை மறந்து போனீங்களோ ? நேரம் கிடைக்கிற போது வந்து எழுதுங்கோ.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.