Jump to content

41வது இலக்கியச் சந்திப்பு – யாழ்ப்பாணம் 2013 (குவர்னிகா – இலக்கியச் சந்திப்பு மலர் வெளியீடு)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

41வது இலக்கியச் சந்திப்பு – யாழ்ப்பாணம் 2013 (குவர்னிகா – இலக்கியச் சந்திப்பு மலர் வெளியீடு)

41வது இலக்கியச் சந்திப்பு  (இலங்கை – யாழ்ப்பாணம்) எதிர்வரும் யூலை 20 – 21ம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. கீழ்வரும் வகையில் இலங்கை இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சி உள்ளடக்கங்கள் அமையும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகம், பன்மைத்துவம், சமனிலை என்பவற்றின் அடிப்படையில் ஈழ இலக்கியத்தில் பேசுபொருளாக இருந்த – இருக்கின்ற அனைத்து விடயங்கள் பற்றியும் எத்தகைய சார்பு நிலைகளுமின்றி, பேசுவதற்கான அரங்குகள் திறந்துள்ளன.

1. பாரம்பரியக் கலைகள்

மலையக, முஸ்லிம், தமிழ்ச் சமூகங்களின்  கலை, பண்பாடு, மரபுரிமை மற்றும் அவற்றின் இன்றைய நிலை தொடர்பான அரங்கு.

2. சாதியம்

யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு, கிழக்கு, மலையகம், புலம்பெயர் சூழல் ஆகிய இடங்களில் சாதியம்.

3. சமூகச் செயற்பாட்டனுபவங்கள் மற்றும் சமகாலச் சவால்கள்

பொது மற்றும் சமூக சேவைகள், செயற்பாடுகளில் பணிசெய்தல் மற்றும் பணி செய்வோர் தொடர்பான விடயங்கள். (போர் மற்றும் போருக்குப் பிந்தியகால உளவியல்)

4. இலக்கியம்

மலையக, முஸ்லிம், தமிழ், தலித், விளிம்புப்பால்நிலை, புலம்பெயர் இலக்கியத்தளங்கள் மற்றும் கவின் கலைகள்.

5. தேசிய இனங்களின் பிரச்சினைகள்

மலையக, முஸ்லிம், தமிழ், சிங்களத் தேசியவாதங்கள், தேசியமும் பெண்களும், காணி தொடர்பான பிரச்சினைகள், தேசிய இனங்களுக்கு இடையிலான உறவுகள்.

மேற்கண்ட கருத்தாங்கங்களில்  பேசப்படுவதற்கான அரங்குகளில் பல்வேறு தரப்பைச் சேர்ந்த ஆளுமைகளும் செயற்பாட்டாளர்களும் பங்கேற்பர். ஒவ்வொரு தலைப்பினையும் பெண்ணிய நோக்கில் அவதானிக்கும் உரைகளும் இடம்பெறும். கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

 

——————————————————————————————————

குவர்னிகா – 41வது இலக்கியச் சந்திப்பு மலர் வெளியீடு

 

%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%

 

தேசிய இனப் பிரச்சினைப்பாடுகளையும் யுத்த மறுப்பையும் அமைதிக்கான வேட்கையையும் சாதிய எதிர்ப்பையும் பெண்விடுதலையையும் விளிம்புப் பால்நிலையினரின் குரலையும் வஞ்சிக்கப்பட்ட மாந்தரின் பாடுகளையும் பேசும் பெருந்தொகுப்பு.

கட்டுரைகள், சிறுகதைகள், நேர்காணல்கள், கவிதைகள் என நான்கு பகுப்புகள். பன்னிரெண்டு நாடுகளிலிருந்து எழுதப்பட்ட எழுபத்தைந்துக்கும் அதிகமான பனுவல்கள். இலக்கியச் சந்திப்பின் மரபுவழி கட்டற்ற கருத்துச் சுதந்திரத்திற்கான களம்.

நிலாந்தன், சோலைக்கிளி, யோ. கர்ணன், அ.முத்துலிங்கம், தமிழ்க்கவி, மு. நித்தியானந்தன், சண்முகம் சிவலிங்கம், ந.இரவீந்திரன், ஸர்மிளா ஸெய்யித், தேவகாந்தன், பொ.கருணாகரமூர்த்தி, ஏ.பி.எம். இத்ரீஸ், இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், கற்சுறா, செல்வம் அருளானந்தம், லெனின் மதிவானம், லிவிங் ஸ்மைல் வித்யா, றியாஸ் குரானா, எம் .ரிஷான் ஷெரீப், ம.நவீன், ஓட்டமாவடி அறபாத், ஹரி ராஜலட்சுமி, கருணாகரன், மா. சண்முகசிவா, கறுப்பி, மோனிகா, தமயந்தி, பூங்குழலி வீரன், எம்.ஆர்.ஸ்ராலின், திருக்கோவில் கவியுவன், இராகவன், லீனா மணிமேகலை, ராகவன், தேவ அபிரா, கே.பாலமுருகன், குமரன்தாஸ், விஜி, யாழன் ஆதி, லெ. முருகபூபதி, தர்மினி, ஆதவன் தீட்சண்யா, அகமது ஃபைசல், கலையரசன், அ. பாண்டியன், அஜித் சி. ஹேரத், ச.தில்லை நடேசன், எஸ்.எம்.எம்.பஷீர், மகேந்திரன் திருவரங்கன், மஹாத்மன், லதா, ஷாஜஹான், பானுபாரதி, யாழினி, விமல் குழந்தைவேல், மேகவண்ணன், அஷ்ரஃப் சிஹாப்தீன், மெலிஞ்சிமுத்தன், யோகி, அஸ்வகோஷ், ந. பெரியசாமி, தேவதாசன், ராஜன் குறை, ஷோபாசக்தி… மற்றும் பலரின் எழுத்துகளுடன் எண்ணூறுக்கும் அதிகமான பக்கங்கள், ‘கருப்புப் பிரதிகள்’ வெளியீடு.

2013 ஜுலை 20ம் தேதி யாழ்ப்பாண இலக்கியச் சந்திப்பில் மலர் வெளியிடப்படும்.

பிரதிகளைப் பெறுவதற்கு:

இலங்கை – கருணாகரன், poompoom2007@gmail.com / இந்தியா – கருப்புப் பிரதிகள், karuppupradhigal@gmail.com / மலேசியா – ம.நவீன், na_vin82@yahoo.com.sg / அவுஸ்திரேலியா – லெ. முருகபூபதி, letchumananm@gmail.com / கனடா – மெலிஞ்சிமுத்தன், melinchi10@gmail.com / பிரித்தானியா – ராகவன், raagaa@hotmail.com / நெதர்லாந்து – கலையரசன், kalaiy26@gmail.com / ஜேர்மனி – ஜீவமுரளி,  jsinnatham@aol.com / டென்மார்க் – கரவைதாசன், karavaithasan@yahoo.dk / நோர்வே – தமயந்தி, simon.vimal@yahoo.no / பிரான்ஸ் – ஷோபாசக்தி, shobasakthi@hotmail.com 

- 41வது இலக்கியச் சந்திப்பு ஏற்பாட்டுக்குழு, யாழ்ப்பாணம் -

 

 

http://vallinam.com.my/version2/blog/2013/07/10/41வது-இலக்கியச்-சந்திப்பு-2/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி

நம்மட யாழ்கள கறுப்பியா.....சொல்லவேயில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் 41வது இலக்கியச் சந்திப்பு : ஏற்றுமதியாகும் களைகள்

kuvanika-300x260.jpg

 

புலம் பெயர் நாடுகளில் இதுவரை நடைபெற்றுவந்த இலக்கியச் சந்திப்பின் ஒரு பகுதியினர் இணைந்து இலங்கையில் இச்சந்திப்பை நடத்துகின்றனர். 41 வது இலக்கியச் சந்திப்பு என்று அழைக்கப்பட்டு யாழ்ப்பாணத்தில் நடத்தப்படும் இந்த இலக்கியச் சந்திப்பில் குவர்னிகா என்ற நூலும் வெளியிடப்படுகிறது.

இலங்கை அரச ஆதரவாளர்கள், இலங்கை அரச துணைக்குழுக்களின் உறுப்பினர்கள், தன்னார்வ நிறுவனங்களின் உறுப்பினர்கள், தலித் அடையாள அமைப்புக்கள், பின்நவீனத்துவக் குழுக்களைச் சார்ந்தவர்கள் ஆகியோரின் ஒன்றுகூடலாக இந்த நிகழ்வு இலங்கையில் நடத்தப்படுகிறது.

வடக்கின் தேர்தாலாகட்டும், தமிழ்ப் பிரதேசங்களில் நடத்தப்படும் நிகழ்வுகளாகட்டும் இலங்கையில் இயல்பு நிலை திரும்பிவிட்டதான அறிவிப்புக்களாகவே வெளிக்காட்டப்படுகின்றன.

தமது இருப்பையும் அடையாளத்தையும் பேணிக்கொள்ளவும் அதனை முன்வைத்துப் பிழைப்பு நடத்தவும் புலம் பெயர் குழுக்கள், பல மக்களின் அவல வாழ்வைப் பயன்படுத்தி வருகின்றன. புலிகளின் அழிவின் பின்னர் அவசராவசரமாக உதித்த பல குழுக்கள் தமது அடையாளம் சார்ந்த ஒவ்வொரு தளத்திலும் தத்தமது வர்க்க நலன்களைச் சார்ந்து இயங்கிவருகின்றன.

புலியெதிர்ப்புக் கும்பல்களின் மேல்தட்டு வர்க்க நலன் சார்ந்து சிங்கள பௌத்த பேரினவாத அரசின் உயர்தட்டு வர்க்கங்களுடன் சமரசத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். புலி ஆதரவுப் பிழைப்புவாதிகள் இதே மேல்தட்டு வர்க்கத்துடன் கைகோர்த்துக்கொண்டுள்ளனர். இவர்களின் சமரசத்திற்குப் பாலமாக அமையும் தன்னார்வ நிறுவனங்கள் மனிதாபிமான முகமூடிகளோடு இலங்கையில் சனநாயகத்தை உருவாக்கப்போவதாக இந்த இரண்டு தரப்போடும் இரண்டறக் கலந்துள்ளனர்.

மனிதாபிமானம், இனவாததிற்கு எதிர்ப்பு, ஜனநாயகம், புரட்சி போன்ற அழகான முழக்கங்களோடு மக்கள் மத்தியில் முளைக்கும் இந்த நச்சுக் களைகள் ஈழத் தமிழர்களின் தன்னுரிமைக்கான போராட்டத்தை இன்னும் பல ஆண்டுகளுக்கு பின்னோக்கி இழுத்துச் செல்கின்றனர்.

முப்பதாயிரம் போராளிகளின் உடல்களால் உரமாகியிருக்கும் மண்ணில் இப்போது களைகள் மட்டுமே முளைக்கின்றன, அதன் வித்துக்கள் புலம் பெயர் மண்ணிலிருந்தும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

தமிழ்ப் பேசும் மக்கள் மீதான இனச்சுத்திகரிப்பு அவர்களின் தேசிய இன அடையாளத்தின் இருதயப் பகுதியான கலை பண்பாட்டுத் தளத்தில் மிருக வெறியோடு நடத்தப்படுகிறது. சந்திக்குச் சந்தி புத்தர் சிலைகளை நட்டுவைத்துவிட்டு சமாதானம் என்கிறார்கள். இராணுவம் நடத்தும் விளையாட்டுப் போட்டிகளில் பியர் போத்தல்களை வழங்கிவிட்டு இயல்பு வாழ்க்கை என்கிறார்கள். பள்ளி மாணவர்களுக்குப் போதைப் பொருட்களை வழங்கிவிட்டு மகிழ்ச்சி என்கிறார்கள். வறுமையைப் பாலியல் தொழிலாக்கிவிட்டு வளர்ச்சி என்கிறார்கள்.

இவை அனைத்தும் ஜனநாயகம் என்றும் எதிர்ப்போரை இனவாதிகள் என்றும் மகிந்த பாசிசத்தின் புதைகுழிகளை தாண்டி யாழ்ப்பாண மண்ணிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இலக்கியச் சந்திப்பு இனொரு அபாய ஒலி.

இதையெல்லாம் கட்டற்ற கருத்துச் சுதந்திரம் என்று கூறும் சந்திப்பின் அமைப்பாளர்கள், அக் கட்டற்ற கருத்துச் சுந்ததிரத்தில் கட்டுப்பட்டு கட்டுரை போட்டவர்கள் சிலரின் பெயரையும் வெளியிட்டுள்ளார்கள்:

ஆதவன் தீட்சண்யா, எம்.ஆர்.ஸ்ராலின், கலையரசன், லீனா மணிமேகலை, ராகவன், ஷோபாசக்தி, இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், எஸ்.எம்.எம்.பஷீர், கற்சுறா, நிலாந்தன், யோ. கர்ணன், அ.முத்துலிங்கம், மு. நித்தியானந்தன், ந.இரவீந்திரன், தேவகாந்தன், பொ.கருணாகரமூர்த்தி, ஏ.பி.எம். இத்ரீஸ், செல்வம் அருளானந்தம், றியாஸ் குரானா, கருணாகரன்கறுப்பி, மோனிகா, தமயந்தி, பூங்குழலி வீரன், விஜி, லெ. முருகபூபதி, தர்மினி, தேவதாசன், ராஜன் குறை.

பிரதிகளைப் பெற யாரையெல்லாம் தொடர்புகொள்ளவேண்டும் என்று அறிவித்துள்ளார்கள்:

இலங்கை – கருணாகரன், இந்தியா – கருப்புப் பிரதிகள்மலேசியா – ம.நவீன், அவுஸ்திரேலியா -லெ. முருகபூபதி, கனடா – மெலிஞ்சிமுத்தன், பிரித்தானியா -ராகவன், நெதர்லாந்து -கலையரசன், ஜேர்மனி -ஜீவமுரளி டென்மார்க் – கரவைதாசன், நோர்வே – தமயந்தி, பிரான்ஸ் – ஷோபாசக்தி.

இதுவரை இவர்கள் நடத்திய கட்டற்ற கருத்துப் போர் போருக்குப் பிந்திய அவலத்தை அழிவின் விழிம்புகளுக்குள் அமிழ்த்தியிருக்கின்றது.

 

http://inioru.com/?p=36465

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதவன் தீட்சண்யா, எம்.ஆர்.ஸ்ராலின், கலையரசன், லீனா மணிமேகலை, ராகவன், ஷோபாசக்தி, இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், எஸ்.எம்.எம்.பஷீர், கற்சுறா, நிலாந்தன், யோ. கர்ணன், அ.முத்துலிங்கம், மு. நித்தியானந்தன், ந.இரவீந்திரன், தேவகாந்தன், பொ.கருணாகரமூர்த்தி, ஏ.பி.எம். இத்ரீஸ், செல்வம் அருளானந்தம், றியாஸ் குரானா, கருணாகரன்கறுப்பி, மோனிகா, தமயந்தி, பூங்குழலி வீரன், விஜி, லெ. முருகபூபதி, தர்மினி, தேவதாசன், ராஜன் குறை

.

முற்போக்கு இலக்கியவாதிகள்......அதுசரி குவர்னிக்கா என்றால் என்ன?....நான் நினைக்கிறேன் கொக்டெயில்...(cocktail) என்று...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலக்கியச் சந்திப்பும் இல்லாத ஐக்கியமும்... குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக நறுமுகை ஞானம்.
19 ஜூலை 2013




அண்மைக்காலமாக யாழ்பாணத்தில் நடக்கவிருக்கும் இலக்கியச் சந்திப்புத் தொடர்பாகப் பல வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்து வருகின்றன.

பொதுவில் எந்தப் பொது நிகழ்வு நிகழும் போதும் அது தொடர்பானா விமர்சனங்கள் வரவே செய்யும். எந்தச்செயலையும் ஆரோக்கியமான திசையில் நகர்த்தவே விமர்சனங்கள் உதவ வேண்டும். அவ்வாறல்லாத நோக்குடன் வைக்கப்படும் விமர்சனங்கள் காற்றோடு கரைந்து விடும்.

எவ்வகையான சந்திப்பும் மனித விழுமியங்களுக்கு எதிரானதாக இல்லாதபோது யாருக்கும் எந்தச் சந்திப்பையும் எங்கேயும் நடத்துவதற்கும் உள்ள உரிமை சனநாயக உரிமையாகும்.

இந்த அடிப்படையில் இலக்கியக் கூட்டம் ஒன்றை அல்லது இலக்கியச் சந்திப்பொன்றை இலங்கையில் நடத்தக்கூடாது என்கின்ற மொட்டையான வாதம்அர்த்தமற்றதென்பதை யாவரும் உணர்வர்.

தனிமனித உணர்வுகளையும் கூட்டுணர்வுகளையும் இவற்றைப்பாதிக்கும் சமூக பொருளாதார அரசியற் கூறுகளையும் கலைப் பண்போடு வெளிப்படுத்துவதே ஒரு படைப்பாளியின் நோக்கம். இந் நோக்கத்தைக் கூட்டிணைக்கவே இலக்கியச் சந்திப்பு தேவைப்படுகிறது.

மோசமான இனப்படுகொலை ஒன்றை நிகழ்த்திய பின்னர் தொடர்ந்தும் இலங்கையின் சிறுபான்மை இனங்களைத் தனது அடக்குமுறையுள் வைத்திருக்கும் ஒரு அரசாங்கத்தின் நிழலில் ஆரோக்கியமான ஒரு இலக்கியச்சந்திப்பை நடத்த முடியுமா?

ஒடுக்குமுறையைப் பேணிக் கொண்டே தான் சனநாயகமாக இருப்பதாகக் காட்டிக் கொள்ள விளைகிற அரசாங்கமொன்றின் நிழலில் நடத்தப்படுகின்ற இலக்கியச் சந்திப்பு, படைப்பாளிகளுக்கு அவர்களது நியாயமான கோபங்களை வெளிப்படுத்தக் கூடிய சனநாயகச்சூழலை வழங்குமா? இந்தக் கேள்விகள் முக்கியமானவை.

இந்தக் கேள்விகளைக் கேட்டவுடன் புலிகள் காலத்தில் வாயைத்திறக்க முடியாமல் இருந்ததே என்று தொடங்கி விடுவார்கள்.

புலிகள் தற்போது இல்லை. தற்போது இருகிற ஒரே ஒரு அதிகாரம் இலங்கை அரசுதான். அது சரியோ தவறோ சட்டபூர்வமான ஒரு அரசு. சட்ட பூர்வமான அரசுகளால் ஓரளவுக்கு பேச்சுவெளியை அங்கீகரிக்க முடியும் என்கிற உண்மையை இங்கு மறந்து விட முடியாது. இலங்கையில் உங்களது நிலைமையைப் பொறுத்து உங்களால் இந்த அரசையும் அதன் செயற்பாடுகலையும் விமர்சிக்க முடியும். ஆனாலும் இப்படி விமர்சிப்பவர்களுக்கு இலங்கையில் என்ன நிகழ்ந்து வருகிறது என்பதைக் காண்பவர்கள், இலங்கையில் உண்மையான சனநாயகம் கோலோச்சுவதாகச் சொல்ல மாட்டார்கள். குறிப்பாகச் சமூகத்தையும் அரசியலையும் உன்னிப்பாக அவதானித்துப்புரிந்து கொள்ளும் திறன் மிக்க படைப்பாளிகள் இலங்கையில் சனநாயகம் நிலவுவதாகச் சொல்லவேமாட்டார்கள்.

உண்மையான சனநாயகம் நிலவாவிட்டால் இப்படியான இலக்கியச் சந்திப்புக்களை நடத்தக்கூடாதா என்ற கேள்வியும் எழுகிறது. பதில்: நடத்த வேண்டும் இருக்கிற வெளியை உணர்ந்து பிரக்ஞையுடன் நடத்த வேண்டும். எது சாத்தியமோ அதனைச் செய்யவேண்டும். எது சாத்தியமில்லையோ அதனைத் தவிர்த்துவிட வேண்டும் ஏனேனில் இலக்கியவாதிகள் தற்கொலைப்போராளிகள் அல்ல.

எவ்வாறாயினும் இலக்கிய கூட்டம் ஒன்றில் பல்வேறு கருத்துக்களைக் கொண்டவர்களுக்கும் கருத்துகளைத் தெரிவிப்பதற்குள்ள சனநாயக உரிமையை மறுத்தல் சனநாயகமில்லை.

இலங்கையில் நிகழவிருக்கும் இலக்கியச்சந்திப்பு அதிகாரங்களுக்கு எதிரானதென்கின்றனர் ஒருசாரார். இன்னொரு சாரார் அது ஒடுக்கு முறை அரசினை வெளிப்படையாக ஆதரிப்பவர்களினால் அவர்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு விட்டது என்கிறனர்.

இலங்கை பல்லினச் சமூகங்கள் வாழும் நாடு. சுதந்தரமடைந்த நாளில் இருந்தே இனங்களுக்கிடையிலான பிளவுகளை அரசியல்வாதிகள் ஆழப்படுத்தி வந்துள்ளனர். இன நல்லிணக்கம் என்பது பெரும்பான்மை இனத்தின் அபிலாசைகளுக்கு ஏற்ற படி எனைய இனங்களை வாழப்பழக்குதல் அல்லது பெரும்பான்மை இனத்தை அனுசரித்துப்போதல் என்பதாக ஆகிவிட்டது.

ஆனால் உண்மையான இன நல்லிணக்கம் என்பது ஒவ்வொரு இனமும் சமுகமும் தனது சுயாதீனத்தையும் மனித விழுமியங்களுக்கு ஆபத்தில்லாத தமது அடையாளங்களையும் பேணிக் கொண்டு ஒன்றுடன் ஒன்று இணைந்து பரஸ்பர புரிதலுடனும் மரியாதையுடனும் வாழ்வது என்பதாக இருந்திருக்கவேண்டும்.

துரதிஸ்டவசமாக இலங்கையில் இது நடக்கவில்லை. புலிகளையும் மக்களையும் கொடூரமாக அழித்த பின்னும் கூட உண்மையான இன நல்லிணக்கத்திற்கான முனைப்புக்கள் எதுவுமே நடக்க வில்லை. பதிலாக இனநல்லிணக்கம் என்ற போர்வையில் பேரினவாதத்தின் ஒடுக்குமுறைகள் நியாயப்படுத்தப்பட்டுவருகின்றன.

இத்தகைய ஒரு நியாயப்படுத்தலுக்கு இந்த இலக்கியச் சந்திப்பு துணைபோகும் எனில் அதில் பங்கு கொள்கின்ற படைப்பாளிகள் ஒடுக்குமுறைக்கெதிரான தமது குரலைத் தெளிவாகப் பதிவு செய்ய முடியாது போகும் எனில் ஒடுக்கு முறைக்கெதிராகக் குரல் எழுப்ப விரும்புபவர்கள் தாமாகவே தமது வாய்க்குப்பூட்டுப் போட்டுக் கொள்ளும் சூழ்நிலைகள் நிலவும் எனில் இந்தச் சந்திப்பிற்கு ஒடுக்கு முறைக்கு துணைபோதல் என்றொரு அர்த்தம் மட்டுமே இருக்கும்.

இந்தச்சந்திப்பை நடத்த விரும்புகிற எல்லோரையும் அல்லது அதில் பங்கு கொள்ளவிருக்கிற அல்லது பங்கு கொள்ள விரும்புகிற எல்லோரையும் அரச ஆதரவாளர்கள் அல்லது N.G.O களிடம் பணம் பெறுபவர்கள் எனக் சேறு பூசுவது எந்தளவுக்கு அபத்தமோ அந்த அளவுக்கு அபத்தம் இந்தச் சந்திப்பை எதிர்ப்பவர்களைக் குறுந்தமிழ்த் தேசியவாதிகள் என்றும் தலித்துக்களுக்கு எதிரானவர்கள் என்றும் குறுக்கிவிடுவது.

இலங்கையில் சாதிய முரண்பாடு இருப்பதை மறுக்க முடியாது. இலங்கையில் சாதியின் பேரால் மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்த் தேசியவாதிகளிற் பலர் இது தொடர்பில் இன்னமும் பிற்போக்கான நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறார்கள். தமிழ் தேசிய உணர்வினுள் உள்ளடங்கியிருக்கும் அதிகாரத்துவவாதம் உள்ளிட்ட ஏராளமான பிற்போக்குத் தனமான அம்சங்களை நாங்கள் கேள்விக்குட்படுத்தியே ஆகவேண்டும். தமிழ் தேசியத்தின் நியாயம் என்பதே முதலில் தனக்குள் உள்ள ஒடுக்கு முறை அம்சங்களை பிரக்ஞை பூர்வமாக்க களைவதில் இருந்துதான் ஆரம்பிக்கின்றது. இவ்வகையில் சாதிய ஒடுக்கு முறைக்கெதிராக எங்களது ஒவ்வொரு அணுவும் செயற்பட வேண்டும். இவற்றுக்கான ஒடுக்கு முறை அரசைச் சாராத ஆரோக்கியமான களங்களை இவ்விலக்கியச் சந்திப்பு ஏற்படுத்தித் தருமெனில் இந்த இலக்கியச்சந்திப்பு அதிகாரங்களுக் கெதிரானதாக இருக்கும். இதேவேளை இலங்கையில் இருக்கும் தலித்துக்கள் தங்களது விடுதலையை இலங்கையின் ஒடுக்குமுறை அரசகட்டமைப்பினதும் இனவாத அரசாங்கத்தினதும் உதவியுடன் பெற்றுக் கொள்ள முடியும் என நினைத்தால் அது மாபொரும் தவறாக இருக்கும்.( அதிஸ்டவசமாக எல்லாத்தலித்துகளும் அவ்வாறு நினைக்கவில்லை) சுதந்திரத்திற்குப் பின்னான இலங்கையில் அரச கட்டமைப்புக்களும் இனவாத அரசாங்கங்களும் எவ்வாறு தொழிற்பட்டு வந்துள்ளன என்பதை அறியாதவர்களும் தமது வசதிக்காக மறந்தவர்களும் மட்டுமே இவ்வாறு செயற்படுவார்கள்.

இலங்கையின் ஐக்கியத்தை வலியுறுத்திச் செயற்பட எவருக்கும் உள்ள உரிமையை நாங்கள் மறுக்க முடியாது ஆனால் அது எவ்வாறான ஐக்கியம் என்பதை மிக ஆழமாகவும் நுண்ணுணர்வாகவும் ஆராய்ந்து புரிந்து கொள்ள வேண்டிய தேவை சகல படைப்பாளிகளுக்கும் இருக்கின்றது. தற்போது இருக்கிற அரச கட்டமைப்புக்குள் இன நல்லிணக்கம் சாத்தியமில்லை என்பதை நாங்கள் உணர்ந்து 50 வருடங்களாகிவிட்டன. இந்த நிலையிற் இலங்கையின் பேரினவாத அரசு, எங்கள் மேற் மூடவிரும்புகின்ற இன நல்லிணக்கப் போர்வையைக் கிழித்து வெளியே வருவது தான் உண்மையான ஒரு படைப்பாளியின் நோக்கமாக இருக்க முடியும்.

முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலையைச் செய்த, சன நாயகமற்ற இன ஆக்கிரமிப்புப் போர்வையை இலங்கையின் சிறுபான்மை இனங்கள் மீது மூட விரும்புகிற ஒரு அரச கட்டமைப்பையும் அரசாங்கத்தையும் ஆதரிப்பவர்களிடம் படைப்பு மனது இருக்கும் என்று நான் நம்பவில்லை. ஆனால் இவர்கள் இலக்கியச் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு தங்களது நிலைப்பாட்டைக் கூற உள்ள உரிமையையும் மறுக்க முடியாது. ஆனால் இவர்களே இலக்கியச் சந்திப்பொன்றின் போக்கை தீர்மானிப்பவர்களாக இருந்தால்...
ஒடுக்கு முறையை நியாயப்படுத்துகின்ற எந்தப் படைப்பாளியும் தனது ஆத்மாவை இழந்துவிடுகிறார். ஆத்மாவை இழந்தவர்களே ஒடுக்கு முறையாளர்களாவும் அதனை ஆதரிப்பவர்களாகவும் ஆகிறார்கள்.


ஆக இப்பொழுது ஒரே ஒரு கேள்வியே எஞ்சியுள்ளது
நீங்கள் ஒடுக்குகிறவரின் பக்கம் நிற்கிறீர்களா இல்லை ஒடுக்கப்படுகின்றவரின் பக்கம் நிற்கிறீர்களா?


http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/94148/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

41வது இலக்கியச் சந்திப்பு - நிகழ்ச்சி நிரல்

யூரோவில் மண்டபம், 17- அக்றேறியன் லேன்,

யாழ்ப்பாணம்

 

சனிக்கிழமை, 20 ஜூலை 2013

--------------------------------

8.00-8.30 : காலை உணவு

8.30-8.45 : அறிமுகம்

8.45-9.00 : என் எழுத்து - ஐயாத்துரை சாந்தன்

 

9.00-10.30: பாரம்பரிய கலைகளும், பண்பாடும்

தலைமை: எம். எஸ். தேவகௌரி

1. முஸ்லீம்களின் பாரம்பரிய கலைகள் : சில கூறுகள் -எம். எஸ். எம். அனஸ்

2. பெண்களும் ஆன்மீக ரீதியிலான கலாசாரமும் -சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார்

3. அசன்பே சரித்திரத்தின் வரலாற்று விடுபடலும் முஸ்லிம் தேசிய இலக்கிய மரபின் தனித்துவமும் - எம். நவாஸ் சௌபி

4.மட்டக்களப்புப் பாரம்பரிய கலாச்சாரப் பண்புகள் - எஸ். தெய்வநாயகம்

5. முஸ்லிம் பண்பாட்டுருவாக்கங்களும் அண்மைக்கால நெருக்கடிகளும் -ஏ.பி.எம்.இத்ரீஸ்

 

10.30-10.45: தேநீர் இடைவேளை

 

10.45-12.00: கலந்துரையாடல் - பாரம்பரிய கலைகளும், பண்பாடும்

12.00-12.45 : 'பள்ளிக்கூடம்' அறிமுகம் : கந்தசாமி சுரேஷ்குமார் - மகேந்திரன் திருவரங்கன்

 

12.45-2.00 : மதிய உணவு

 

2.00-2.15 : குவர்னிகா- 41வது இலக்கியச் சந்திப்பு மலர் வெளியீடு

2.15-2.30 : குறும்படக் காட்சி :'மண்சோறு'

2.30- 2.45: நான் ஏன் எழுதுகிறேன் - விஜயலட்சுமி சேகர்

 

2.45 - 4.15: சாதியம்

தலைமை: ரெங்கன் தேவராஜன்

1. யாழ்ப்பாணமும் சாதியமும் - தெணியான்

2. மட்டக்களப்புச் சாதி அமைப்பும் அதன் இன்றைய நிலையும் - குமாரசாமி சண்முகம்

3. தலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறை - அகல்யா பிரான்சிஸ் கிளைன்

4. கல்வியும் சாதிய ஒடுக்குமுறையும் - ஏ. சீ. ஜோர்ஜ்

5. சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான ஜனநாயக ரீதியான செயற்பாடுகள் - சீனியர் குணநாயகம் (குணசிங்கம்)

 

4.15-4.30: தேநீர் இடைவேளை

 

4.30-5.30: கலந்துரையாடல் - சாதியம்

5.45- 6.15: கவிதா நிகழ்வு: வேலணையூர் தாஸ்

6.15: குறும்படங்கள் திரையிடல்

 

 

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜூலை 2013

-------------------------------------------

8.00-8.30: காலை உணவு

8.30-8.45 : கேட்டதற்காய் சொல்லுகிறேன் கைதட்டல் எதற்கு - சோலைக்கிளி

 

8.45- 10-30: இலக்கியம்

தலைமை : சோ. பத்மநாதன்

1. வெள்ளிவிரல்: சில கதையாடல்கள் - ரமீஸ் அப்துல்லா

2. அண்மைக்காலக் கவிதைகள் -சு. குணேஸ்வரன்

3. பெண்கள் சொல்லும் சேதிகள் - கால் நூற்றாண்டுக் கவிதைகளை முன்வைத்து -சித்ரலேகா மௌனகுரு

4. சிங்களப் புனைகதைகளில் தமிழ்க் கதாபாத்திரங்கள் - ஒரு சுருக்கமான ஆய்வு - லியனகே அமரகீர்த்தி

5. மலையகக் கவிதைச் செல்நெறியும் மலையகத் தேசியமும் - மல்லியப்புசந்தி திலகர்

6. எழுத்தியலின் அரசியலும் மொழிபெயர்ப்பாளரின் பணியும் - சிவமோகன் சுமதி

7. புகலிட இலக்கியம் - சில வரலாற்றுக் குறிப்புக்கள் - ஸ்ராலின்

 

10.30-10.45 : தேநீர் இடைவேளை

 

10.45-11.30: கலந்துரையாடல் - இலக்கியம்

 

11.30-12.45: சமூக செயற்பாட்டாளர்களின் அனுபவப் பகிர்வுகள்

தலைமை: துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை

1. ஆசிரியத்துவம், கலை ஊடாக மலையகத்தில் சமூக மேம்பாட்டினை ஏற்படுத்தல் -

எம். கருணாகரன்

2. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் பெண்கள் - கேஷாயினி எட்மண்ட்

3. போருக்குப் பிற்பட்ட காலத்தில் பெண்களின் நிலை - ரஜனி சந்திரசேகரம்

4. காணிப் பிரச்சினைகள் தொடர்பான செயற்பாடுகள் பற்றிய அனுமானங்கள் - மிராக் ரஹீம்

12.45-1.30:  கலந்துரையாடல்

 

1.30-2.30: மதிய உணவு

 

2.30-2.45 : நான் ஏன் எழுதுகிறேன் - அஷ்ற‌பா நூர்தீன்

2.45-2.50 : அடுத்த இலக்கியச் சந்திப்பு குறித்த தீர்மானம்

 

2.50 - 4.45 - தேசிய இனங்கள் - பிரச்சினைகள்

தலைமை : சிவா சுப்பிரமணியம்

1.விசாரணையில் தேசியம்: தமிழ்த் தேசியத்தின் கடந்தகால, நிகழ்கால போக்குகளை முன்னிறுத்தி ஒரு அவதானம் - ஆ. யதீந்திரா

2. தேசியவாத நிகழ்ச்சி நிரல்களும் நிலமும்: கிழக்கு மாகாணத்தின் அக்கரைப்பற்றுப் பிரதேசத்தினை மையமாகக் கொண்ட ஓர் ஆய்வு - பேராசிரியர். எஸ். எச். ஹஸ்புல்லாஹ்

3. மலையகத் தேசியம் பற்றிய ஒரு பதிகை : லெனின் மதிவான‌ம்

4. தேசிய விடுதலைப் போராட்ட இயக்கங்களில் பெண்களின் நிலைமைகள் - ஞானசக்தி நடராசா

5. தேசியவாத அரசியல் சூழமைவில் முஸ்லிம் பரிமாணம் - சிராஜ் மஷ்ஹூர்

6. தேசிய இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தில் குழுக்களின் பங்களிப்பு - கலாநிதி சுல்பிகா இஸ்மாயில்

7. சிங்களத் தேசியவாதமும் தமிழ்த் தேசிய அரசியற் கோரிக்கைகளும் - நிர்மால் ரஞ்சித் தேவசிறி

 

4.45 -5.00: நன்றியுரை - கருணாகரன்

5.00-6.30 : கலந்துரையாடல் - தேசிய இனங்கள் - பிரச்சினைகள்

6.30 : அகதிகள் (நாடகம் )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒடுக்கு முறையை நியாயப்படுத்துகின்ற எந்தப் படைப்பாளியும் தனது ஆத்மாவை இழந்துவிடுகிறார். ஆத்மாவை இழந்தவர்களே ஒடுக்கு முறையாளர்களாவும் அதனை ஆதரிப்பவர்களாகவும் ஆகிறார்கள்.
யாழ்கள படைப்பாளிகளின் கவனத்திற்க்கு ..:D
Link to comment
Share on other sites

சோ .பத்மநாதன் தலைமை தாங்குகின்றார் என்ற போது இந்த விழாவின் மதிப்பு இன்னமும் ஒரு படி உயர்ந்திருக்கு .

 

ஒடுக்குமுறை என்பது அரசுகளால் மட்டுமல்ல விடுதலையை இயக்கங்களாலும் மேற்கொள்ளுபடுவது ஏற்றுக்கொள்ளமுடியாது .

-------------------------------------------------.

Link to comment
Share on other sites

வீடென்பது பேறு

 

முன்னுரை - குவர்னிகா இலக்கியச் சந்திப்பு மலர் :

 

இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் எழுத்தாளர்கள் -கலைஞர்கள்- இலக்கிய வாசகர்களால் 1988ம் வருடம் ஜெர்மனியின் 'ஹேர்ண்' நகரத்தில் தொடங்கப்பட்ட இலக்கியச் சந்திப்பு இந்த இருபத்தைந்து வருடங்களில் நாற்பது சந்திப்புத் தொடர்களை மேற்கு அய்ரோப்பியத் தேசங்களிலும் கனடாவிலும் நிகழ்த்தி, அதனது நாற்பத்தியொராவது சந்திப்புத் தொடரைத் தாயகத்தில் நிகழ்த்தும் இந்தத் தருணம் உற்சாகமானதாகும்.

 

இலங்கையில் கொடிய போர் நடந்துகொண்டிருந்த காலங்களில், இலங்கையில் மிகக் கடுமையான கருத்துச் சுதந்திர அடக்குமுறைகள் நிலவிய காலங்களில், அந்த அடக்குமுறைகள் எல்லைகளைக் கடந்து புலம்பெயர்ந்த தேசங்களிற்கும் கடத்தப்பட்ட காலங்களில், இலக்கியச் சந்திப்பாளர்கள் தாயகத்தில் நடந்துகொண்டிருந்த யுத்தத்திற்கும் அனைத்து அடக்குமுறைகளிற்கும் அதிகாரங்களிற்கும் எதிரான தங்களது குரலை சுயாதீனமாக, யாருக்கும் பணியாத உறுதியுடன் தொடர்ச்சியாக ஒலித்துக்கொண்டிருந்தார்கள். யுத்தத்திற்குப் பின்னும் இந்த எதிர்க் குரலை இலக்கியச் சந்திப்புத் தன்னுடன் வைத்தேயிருக்கிறது. ஒடுக்குமுறைகள் இருக்கும்வரை இந்த எதிர்க்குரலும் ஒலித்துக்கொண்டேயிருக்கும். சிறுபத்திரிகைகளில் செயற்பட்டுக்கொண்டிருப்பவர்களையும் தீவிர இலக்கிய எழுத்தாளர்களையும் மாற்று அரசியற் செயற்பாட்டாளர்களையும்; மார்க்ஸியம், தலித்தியம், பெண்ணியம், பெரியாரியம், பின்நவீனத்துவம், உடலரசியல் போன்ற சிந்தனைப் போக்குகளையும் இணைக்கும் சுதந்திரக் களமாக இலக்கியச் சந்திப்பு இருந்துகொண்டேயிருக்கிறது.

 

யுத்தம் முடிந்த பின்பும் யுத்தத்தின் சுவடுகள் நம்முடனேயே இருக்கின்றன. இலங்கையில் பேச்சு - எழுத்துச் சுதந்திரம் இன்னும் அரசாங்கத்தாலும் பிற ஆயுதக் குழுக்களாலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிக்கொண்டேயிருக்கின்றது. அதேவேளையில் யுத்த காலத்தின் கடுமையான கெடுபிடிகள் சற்றே தளர்ந்து ஒரு இடைவெளி இலங்கையில் உருவாகியுமிருக்கிறது. இந்த இடைவெளியே இலக்கியச் சந்திப்புத் தொடரை இலங்கைக்கு நகர்த்தியிருக்கிறது.

 

இலங்கையின் படைப்பாளிகளும் புலம்பெயர்ந்த மற்றும் அயல் படைப்பாளிகளும் தங்களது இணைவையும் உறவையும் பலப்படுத்தவும் தங்களது சிந்தனைகளையும் கருத்துகளையும் எழுத்துகளையும் பரிமாறிக்கொள்ளவுமான திறந்த சனநாயகக் களமாக இலங்கை இலக்கியச் சந்திப்பு அமைகின்றது. இலங்கையின் இன்றைய அரசியல் -பண்பாட்டுப் பரிமாணங்களை நேரடியாக அறிந்துகொள்வதற்குப் புலம்பெயர்ந்த - அயலகப் படைப்பாளிகளிற்கான சிறியதொரு வாய்ப்பாகவும் இச்சந்திப்பு அமைகின்றது. இலக்கியச் சந்திப்புத் தொடரின் சுதந்திர மரபையும் அது இவ்வளவு காலமும் பரந்த சமூகப் புலங்களில் தேடிச் சுவீகரித்த இலக்கிய - அரசியல் செல்நெறிகளையும் தாயகத்துப் படைப்பாளிகளோடு பகிர்ந்துகொள்ளும் எத்தனமாகவும் இச்சந்திப்பு அமைகின்றது.

 

இனம் -சாதி - பால்நிலை - வர்க்கம்- அரசு என எந்த வடிவிலான அதிகாரங்களையும் அடக்குமுறைகளையும் இலக்கியம் தனக்கேயான அறம் சார்ந்த வீரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும். ஒடுக்கப்பட்டவர்களின் வரலாற்றோடு தன்னை இணைத்து நிற்பதே இலக்கியத்தின் பணி. கடந்தகால - நிகழ்கால வரலாற்றை இழந்த சமூகக் கூட்டத்திற்கு எதிர்காலமென ஒன்றிராது. இலக்கியம் வரலாற்றின் சாட்சியம். அந்த வகையில் இலக்கியம் சமூகத்தின் உப வரலாறு.

 

இலக்கியம் சமூக மாற்றத்திற்கான கூர்மையான நுண்கருவி என்பதில் எங்களுக்கு எப்போதுமே நன்நம்பிக்கையுண்டு. யுத்த மறுப்பையும் அமைதிக்கான வேட்கையையும் சாதிய எதிர்ப்பையும் பெண்விடுதலையையும் விளிம்புப் பால்நிலையினரின் குரலையும் வஞ்சிக்கப்பட்ட மாந்தரின் பாடுகளையும் இத்தொகுப்பு நூல் தன்னுள் கொண்டுள்ளது.

 

பன்னிரெண்டு நாடுகளிலிருந்து  எழுதப்பட்ட  எழுபத்தைந்துக்கும் மேற்பட்ட பனுவல்களைப் பெருந்தொகுப்பாக்கியிருக்கிறோம்.  பல்வேறு கருத்துநிலைகளில் உள்ளவர்களையும் இலக்கியச் சந்திப்பின் மரபின்வழியே  இணைத்திருக்கிறோம்.  பங்களித்த அனைவருக்கும் தோழமை நன்றிகளை உரித்தாக்குகின்றோம்.

 

தொகுப்புப் பணிகளை நிறைவு செய்கையில், தொகுப்பின் கடைசிப் பக்கத்தை எழுதியிருக்கும்  இளைய கவிஞனின்  வார்த்தை எங்களோடிருந்தது.

 

வீடென்பது  கிடைப்பதா  பெறுவதா ? என் மகனே வீடென்பது பேறு.

 

- குவர்னிகா

 

20 ஜுலை 2013, யாழ்ப்பாணம்.

 

 

 

vjjv.jpg

Link to comment
Share on other sites

thibaselvan.jpg
தாயகத்தில் உள்ள உண்மை நிலவரத்தை மறைப்பதற்காகவே இலக்கியச் சந்திப்பு திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றது என்று தெரிவித்துள்ள கவிஞர் தீபச்செல்வன் இச்சந்திப்பை புறக்கணித்தல் என்பது எமது மண்ணில் தொடரும் அநீதி குறித்து சாட்சியமளிக்கும் விதமாகவே அமையும் என்றும் தெரிவித்தார்.
தமிழினத்தையும் தாயகத்தையும் அழித்து வரும் அரசு, இங்கு மக்கள் சந்தோசமாக இருக்கின்றார்கள் என்று அறிவித்துக்கொண்டு தானே  சில நிகழ்வுகளை எமது மண்ணில் ஏற்பாடு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டது. அதன் தொடர்ச்சியாகவே இலக்கியச் சந்திப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தீபச்செல்வன்  குறிப்பிட்டார்.
கருத்துச் சுதந்திரத்தையும் படைப்புச் சுதந்திரத்தையும் குழி தோண்டிப் புதைத்த அநீதிக் காலத்தில் இலங்கை அரசு அவ்வாறான குற்றங்கள் எதிலும் ஈடுபடவில்லை என்பதை காட்டி இலங்கை அரசை காப்பாற்றும் அரசியலுக்காகவே இந்த சந்திப்பு அரசின் நிழலில் இயங்குபவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென்றும் குறிப்பிட்டார்.
இந்தச் சந்திப்பின் பின்னணியில் இருப்பவர்கள் வெளிநாடுகளிலிருந்து புலி எதிர்ப்புச் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு போராட்டத்தை அழிக்க முன்னின்னர் என்றும்  இலங்கை அரசை ஆதரிப்பவர்கள் அந்த அரசின் ஆதரவுடன் இச்சந்திப்பை இப்பொழுது நடத்துவதாகவும் தெரிவித்தார்.

தாயகத்தின் உண்மை நிலமையை மறைக்க திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் இந்த சந்திப்பை புறக்கணிப்பது என்பது எமது மண்ணில் தொடரும் அநீதி குறித்து சாட்சியமளிக்கும் விதமாகவே அமையும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
http://thisaikaddi.com/?p=19335


வணக்கம் லிவிங் ஸ்மைல் வித்யாவின் ஒப்பாரிக்கு நொந்து வீறுகொண்டெழுந்த மனிதநேயர்களுக்கும் களப்பணியாளர்களுக்கும்.

இதன் முழுதான கதை உங்களுக்குத் தெரியுமா? லிவிங் ஸ்மைல் வித்யாவின் கருத்திலே . |சாதிய கொலைகளுக்கு எதிராக குரல்கொடுக்க மறுக்கும், பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு குரல்கொடுக்காத, திருநங்கைகளின் போராட்ட்த்திற்கு குரல்குடுக்காத நீங்கள் | மற்றும் |சாதிய கொலைகளுக்கு எதிராக குரல்கொடுக்க மறுக்கும், பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு குரல்கொடுக்காத, திருநங்கைகளின் போராட்ட்த்திற்கு குரல்குடுக்காத நீங்கள் | என்பன யாரிடம் வைக்கப்படும் கேள்விகள்? இவரிடம் பேசிக்கொண்டிருக்கின்றவர்கள் இப்படியானவர்கள் என்பதை எப்படியாக நீங்கள் தீர்மானித்தீர்கள். உடனடியாக யாழ்ப்பாணப்பல்கலைக்கழத்திலே சாதி கற்கவிடவில்லை என்பதுவரை போய்வந்துவிட்ட முற்போடல்களிலிருந்து மறுபக்கத்தை வாசிக்காமலே "Well Said", "நச்! நச்!" போட்டு உச்சிட்டவர்கள் ஊடாக எத்தனை பேருக்கு

ஒருவர் திருநங்கை என்றால், அவர்தான் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதி என்று உடனடியே தீர்மானித்துவிடுவீர்களாக்கும். மற்றைய பக்கத்தினை வாசிக்கவோ திருநங்கைகள் திரிப்பதிலே எத்துணை உண்மையிருக்கின்றதென்றோ காணமாட்டீர்களாக்கும். மற்றையவர்களின் கருத்துகள் கேள்விகேட்பின் அவராலே அழிக்கப்படுவதைக் காணவும் மாட்டீர்களாக்கும் அப்படியானவர்கள் தடை செய்யப்படுவதைக் காணமாட்டீர்களாக்கும்.

|ஒரு நிகழ்வில் திருநங்கைகள் குறித்து பேச அழைக்கும் போதும் அதுவும் திருநங்கைகளை ஆண்கள் ஏன் புடவை கட்டி நிற்கிறீர்கள் என அவமான படுத்தி 5 திருநங்கைகளை பேருந்து நிலையத்தில் சுட்டுக்கொன்ற ஒரு தேசத்தில்| என்பதன் ஆதாரம் எதுவென்று நீங்களும் தொடர்ந்து நாட்டுநிலையை வாசித்துவருகின்றவர்தானே, கூறமுடியுமா? அல்லது திருநங்கை & அல்லது யாழ்ப்பாணம் Transphobic என்று Transphobia இல்லாத நாட்டிலிருந்து யாழ்ப்பாணம் சென்று மூன்று நாட்களிலே உணர்ந்து அறிக்கைவிடும் பேர்வழியிடம் கேட்டு வேறொன்றும் சொல்வதற்கில்லை.

உங்களுக்கு "ஒடுக்கப்பட்ட திருநங்கை"க்குக் குரல் கொடுத்தேன் என்ற திருப்தி உண்மையிலே பேசப்பட்டதென்ன நடந்ததென்ன என்பதிலும்விட முக்கியமானதா? நீங்கள் எல்லாம் நடுநிலைமனிதர்கள் என்று சொல்லிக்கொள்ளவிழைத்தால், வாழ்த்து. உங்களிடம் கொஞ்சம் ஆய்ந்து கருத்து எழுதுவீர்களென பதினைந்தாண்டு வாசிப்பினை வைத்து எதிர்பார்த்தது என் தவறுதான். அதற்காக மன்னித்து என்னைத் தங்கள் நண்பர் பட்டியலிருந்து விலக்கிக்கொள்ளுங்கள். நன்றி.

இன்று ராஜபக்சவின் படத்தினை எதற்கு முகப்பிலே போட்டேன் என்று அலறும் கூச்சமுறும் நண்பர்களுக்கு: யாழ்ப்பாணத்திலே இலக்கியச்சந்திப்பு என்பது எவ்வாறு எவராலே எக்காலகட்டத்திலே எவரெவரைமட்டும் தேர்ந்தெடுத்துக்கூப்பிட்டு (போகாமல் பகிஸ்கரித்தவர்களை விட்டுவிடலாம்) நிகழ்ந்ததென அறியாத சிறுபிள்ளைகள் அல்லர் நீங்கள். உங்களுக்குத் தனிப்பட்ட காரணங்களாலே விடுதலைப்புலிகள்மீதும் பொதுவான சமூக அமைப்பிலே யாழ்ப்பாண (சொல்லப்போனால், ஈழம் முழுதான) சாதியம்மீதும் இருக்கும் நியாயமான கோபம் உணரகூடியதே. ஆனால், குறைந்தளவேனும், இலக்கியச்சந்திப்பின் அடியும் அடியாட்களும் கொண்டிருக்கும் காரணங்களும் மறைநோக்கும் அறியாதவர்களல்லர்.

அதனாலேயே, எதற்கு இவர்கள் இடையிலிருந்து விருந்தினராக வெளிநாட்டிலிருந்தும் உள்நாட்டிலே குறித்துத் தேர்ந்தும் ஆட்களைக் கொண்டுவந்தும் நூலிட்டும் அரசின் நோக்கினை இடைப்பிரதிநிதிகளாயிருந்து நடத்தி வைத்து நாம் முற்போற்போட்டு, இவர்களுக்காக வருந்தி இவர்களின் உள்நோக்கினை நிறைவேற்றவேண்டும், நேரடியாகவே அண்ணல்/ன் ராஜபக்சவின் போட்டோவினை நாமே போட்டுக்கொண்டு, சிங்களத்திலே மட்டுமே தேசியகீதம் சென்னையிலும் பாடுவோம், வாசுதேவ நாணயகாரவுக்கு 2009 இனவழிப்புக்கு நன்றி சொல்வோம் என்றுவிட்டால், இடைத்தரகர்களின் தேவை ஒழிகின்றதல்லவா? அதுதான் நம் தர்மிஷ்ட பௌத்த சிங்கள ரட்டவின் தேசப்பிதாவின் படத்தை எம் படமாய்க் கொண்டு 1983 ஜூலையின் முப்பதாம் ஆண்டினை நினைவுகூர்ந்தோம் - இலக்கியச்சந்திப்பென்று கவனத்தினைத் திட்டமிட்டே திசைதிருப்பாது. 1983 இலே என்கூடவே இதே நாள் திருகோணமலையிலே கடற்படை தமிழர்பிரதேசமெல்லாம் எரித்தொழிக்கக் கண்ட நண்பர்கள் இருபது முப்பது பேர்களாவது இப்போது இப்பேஸ்புக்கிலே நான் எழுதும் இதை வாசித்துக்கொண்டிருக்கின்றீர்கள் அதன்பின்னே நீங்கள் போன இயக்கங்கள் வேறு; எதிலும் போகாது தப்பித்து என் கல்விமுன்னேற்றத்தைமட்டும் கண்டுகொண்ட என்னைப் போன்ற தன்னலன்விரும்பிகளும் இருக்கின்றோம். சீலன் அன்ரனிக்குப் பின்னாலே 1983 இலே இந்தியாவுக்குப் புளொட்டுக்குப் பயிற்சி எடுக்கப்போகையிலே படகு கவிழ்ந்து பாக்குநீரணையிலே செத்துப்போன கொடுத்துவைத்தவர்கள் முதல் 2009 இலே புலியின் மேல்மட்டத்தளபதிகளாகச் செத்துப்போனவர்கள்வரை சக வகுப்பினராகக் கொண்டவர்கள் நாம். இதுபோலத்தான் இதைவாசிக்கும் ஒவ்வொருவருக்கும் தெரிந்தார், அறிந்தார், இழந்தார் கதையுண்டு.

இந்நிலையிலே, திறந்த வெளிச்சிறைச்சாலையாக, குடியேற்றங்களும் இராணுவச்சூழலும் நிரம்பியிருக்கும் கனத்ததுக்கநிலப்பரப்பிலே மூன்று நாட்கள் போய் இறங்கிவிட்டு எடுத்தெறிந்து கருத்துகளை - அதுவும் சொல்லாத கருத்துகளை, அவற்றை ஆதரித்துத் தனக்குப் பின்னாலே வந்து அனுதாப விருப்பினையும் பகிர்வினையும் பெற்று - மெய்யாக இன்று அப்பூமியிலே இருப்பதெல்லாம் ||சாதி இந்துக்கள் தலித்துகளுக்கும், இஸ்லாமியர்களுக்கும், பெண்களுக்கும், மலையக தமிழர்களுக்கும் இழைத்த கொடுமைகளையும், தலித்துகளும்/இஸ்லாமியர்களும்/மலையகதமிழர்கள் பெண்களுக்கும், இவர்கள் எல்லோரும் சேர்ந்து திருநங்கைகளுக்கும், சம பால் ஈர்ப்புடையவரகளுக்கும் இழைத்த கொடுமைகளையும் || என்று அழைத்துச் சென்றவர்களின் குரலாக ஒருவரும் மூன்றாம்பாலினத்தவருக்கு இந்தியாவிலே-தமிழ்நாட்டிலே இழைக்கப்படும் கொடுமைகளையெல்லாம் வண்டிவண்டியாகத் தானே எழுதிவிட்டு- Jaffna is a transphobic land என்று எழுதும் விளம்பரம்தேடிக்கும் - பலத்தினைக் கொடுக்கும் நீங்கள், உண்மையிலே இழிவுசெய்வது இவர்களின் புரவலர்களும் போஷகர்களும் சொல்லமறுக்கும் அல்லது வாசுதேவ நாணயகார ஊடாக சிறிலங்கா அரசுக்கு நன்றி சொல்லும் கொடூரங்களையும் முஸ்லீம்கள்-யாழ்தமிழர்கள்-மலையகத்தமிழர்கள்-வன்னித்தமிழர்கள்-கிழக்குத்தமிழர்கள் என்று திட்டமிட்டே கடாமுட்டவைத்துத் தம் எசமானர்களின் வாழ்க்கையினை ஸ்திரப்படுத்தும் அநியாயத்துக்கு முட்டுக்கொடுத்து இம்மக்களை மீண்டும் அழுத்துவதே!

இப்படியான நாடகத்துக்கு திருநங்கை என்பதால்மட்டுமே அவர் சொல்வதெல்லாம் உண்மையென்று அப்படியே கொண்டு, மறுபக்கத்தினை வாசிக்காமலே இவரின் திரிபுகளை எப்படியாகக் கொள்ள உங்களாலே முடிகின்றது. இதே திருநங்கை மோடி ஒரு மத ஒற்றுமை மகாநாடு வைக்கிறேன் என்றோ ராமதாஸ் ஒரு சாதி ஒழிப்பு மகாநாடு வைக்கிறேன் என்றோ சொன்னால், போய் அங்கே இதுபோன்று திருநங்கைகள் ஐந்துபேரைப் பேரூந்திலே சுட்டுக்கொன்ற அவலத்தை இப்பூமியிலே கேட்டேன் என்று மண்டபத்திலே சொல்லிக்கொடுத்த எழுத்தாளரின் புனைகதையைச் சொல்வாரா? அப்படியே சொன்னால்மட்டுமே நீங்கள்தான் மோடி-ராமதாஸ் எதிர்ப்பாளர்கள்விட்டுவிடுவீர்களா? எதற்கு இலங்கையின் ஒடுக்கப்பட்டிருக்கும் தமிழ் பேசும் மக்கள் என்றால் மட்டும் உங்களுக்கு ஒரு திருநங்கை |சாதிய கொலைகளுக்கு எதிராக குரல்கொடுக்க மறுக்கும், பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு குரல்கொடுக்காத, திருநங்கைகளின் போராட்ட்த்திற்கு குரல்குடுக்காத நீங்கள் | மற்றும் |சாதிய கொலைகளுக்கு எதிராக குரல்கொடுக்க மறுக்கும், பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு குரல்கொடுக்காத, திருநங்கைகளின் போராட்ட்த்திற்கு குரல்குடுக்காத நீங்கள் | என்றெல்லாம் தானே தான் பேசும் தன் இலக்குவாசகர்களின் நொய்புள்ளியை, அச்சிலிச்சின் குதியை சென்று தாக்குமென்று குறிவைத்து புனைவு செய்து பேசுகின்றார் என்பதைப் புரிந்துகொள்ளமுடியவில்லை. தன்னைப் பேசவைத்தவருக்கு அறிவுரைகூறுகின்றார்; ஆனால், பேசவைத்தவரின் கருத்துகளை உடனடியே நீக்கியும் தடைசெய்துமிருக்கின்றார் என்ற பக்கத்தினை நீங்கள் உணரவில்லை? இதுவும் மூன்றுநாட்களின் உலர்மூளைச்சலவையிலே கற்றுக்கொடுக்கப்பட விரைகல்வியின் சுருக்கபாடத்துள்ளடக்கமா?

இத்திருநங்கை என்ற அடையாளத்தின் பின்னாலே முற்றிலும் அவ்வடையாளத்திற்குச் சம்பந்தமில்லாத ஒரு திட்டமிட்ட அரசியலை முன்னெடுக்கத் தெரிந்தோ தெரியாமலோ உதவிய ஒருவருக்கும் அவருக்குச் சார்பாக தெரிந்தே திட்டமிட்டு அரசியல் செய்யும் இன்னொருவரும் கூறுவதற்கு விருப்பும் பகிர்வும் செய்யும் இட்ட முஸ்லீம்கள், சாதியொழிப்புப்போராளிகள், பெண்கள் லைக் மோடி, ராமதாஸ் இவர்களின் கூட்டத்திலே இவர்கள் கலந்திருந்திருந்து சொல்லியிருந்தால் இடுவார்களா? அவ்வாறு இடமாட்டார்களெனில், தான் போய் உபசரிக்கப்படும் யாழ்ப்பாணத்தை இழிவுபடுத்தி ஒருவர் transphobic Jaffna எனவும் மற்றவர் நான் ஆகப் பேசமட்டுமே போனேன் எனவும் லைக் போடுகின்றார்கள்? (யாழ்ப்பாணத்தின் சாதியச்சீரழிவினை மறுக்கவோ மறைக்கவோ இங்கே நான் வரவில்லை. ஆனால், ஒட்டுமொத்தமாக, ஒரு பிரதேசத்தையே அமுக்க “இப்படிக்கு” ரோஸ் தாக்கப்பட்ட, வலியுடன் “சரவணனிலிருந்து வித்யா வரும்வரையான கதையெழுதிய, திருநங்கைக்குப் பிரான்ஸுக்கு விசா தராத பின்புலத்திலைமைந்த களபூமியிருந்து வந்த ஒருவருக்கு யாழ்ப்பாணத்தைப் பற்றி இப்படியாக மூன்று நாட்களிலே எழுத ஒரு அசட்டுத்துணிச்சலும் திமிருமிருக்கவேண்டும். ஆனால், அதை என்னைவிட வினவு சிறப்பாகப் பேசுவார்கள். அதுவல்ல என் நோக்கிங்கே! இத்தனைக்கும் புலம்பெயர்நாடுகளிலே இவரின் திரைப்படத்தை அகதிகள், மீனவர் குரல்களைத் தருமென திரையிட்டவர்களிலே கணிசமானவர்கள், யாழ்ப்பாணத்தைச் சார்ந்த புலம்பெயர்தமிழ்த்தேசியவாதிகள். நாய்விற்ற காசும் குரைக்கும்) இழந்துபோன அத்தனை ஈழத்து உயிர்களும் உங்கள் கதைக்கும் திரைப்படத்துக்கும் கட்டுரைக்கும் கவிதைக்குமான கச்சாப்பொருட்களா? இத்தனைக்கும் கருணாநிதியின் செம்மொழி மகாநாட்டுக்கும் கொழும்பு இலக்கியமகாநாட்டுக்கும் எதிர்ப்புத் தெரிவித்தவர்களும் இதற்குள்ளே அடக்கம் என்பது வெட்கக்கேடு!

இன்று ஒரு நண்பர் தனியே கேட்டார்; "உன் வயதுமுதிர்வுக்கும் கல்விக்கும் தொழிலுக்கும் பொறுப்பாகப் பேசாமல், எதற்காக விடலைப்பருவப்பையன்போல முதிர்ச்சியின்றி வினைகின்றாய்?" சிலவேளைகளிலே அதிர்ச்சிவைத்தியமே - கிரிக்கெட் மைதானத்திலே இறங்கி கொடியைப் பிடித்துக்கொண்டு ஓடுகின்றவன்போல- கவனிப்பினை, ஈர்ப்பினை மிகுதிப்படி கவனமே செலுத்தாது, தாம் வகுத்துக்கொண்ட உளநிலைக்கும் சிந்தைப்போக்குக்கும்மட்டுமே திருப்தியைத் தரும் செய்கைகளையும் கருத்துகளையும் கண்டு பாராட்டித் தம்மைப் பற்றிப் பெருமிதமும் அடைந்துபோகும் "பொதுப்புத்திச்சமூக"த்தைச் (இஃது என்பதமல்ல; மாற்றுக்கருத்தென்று பகிர்ந்துகொள்ளும் தமிழகத்தின் நண்பர்களின் பதம்) சலனப்படுத்தியோ தொந்தரவு செய்தோ சொல்லவரும் விடயத்தைக் கேட்கச்செய்யும்.

திருநங்கைகளை ஏளனம் செய்கின்ற கோலிவுட், பாலிவுட்சினிமாக்களை ரசிக்கும் உன்னத பாரதபூமியற்ற அட்ரான்ஸ்போபியா பிரதேசமான யாழ்ப்பாணத்திலே, யாழ்ப்பாணத்திலிருந்து எண்ணி வந்துசேர்ந்த பங்குதாரர்களைவிட்டு ஏனைய இடத்திலிருந்தும் தமக்குப் பொருந்தும் சிறிலங்கா தேச அரசியலைப் பேசும் ஆட்களை கறுப்பு ஜூலையின் முப்பதாம் ஆண்டின் நினைவினைப் பேசவிடாது, தமிழர்கள் மற்றையவர்களைச் சுரண்டினார்கள் என்பதாகவே பேசிப் புத்தகமாக விற்கும் முகவர்களாக வைத்திருக்க அழைத்து நிகழ்த்திய (புலம்பெயர்) இலக்கியச்சந்திப்பின் பின்புலத்திலே நின்றவர்களிலே குறிப்பிடத்தக்கவர்கள்:

ராகவன், நிர்மலா, சுமதி 1 & 2, வாசுகி, கீரன், ஷோபா சக்தி, ரங்கன், தேவதாசன், தமிழழகன், அன்னம் முரளி, சுகன், ஸ்டாலின், விஜி, கருணாகரன், ஷோபா சக்தி, கற்சுறா.

இவர்களின் மிகவும் தெளிந்த அரசியற்பின்புலத்தினை அறிந்தவகையிலே, இவர்களோடு கூடி முதலிலே இச்சந்திப்பிலே பங்குபெற இருந்த யோ. கர்ணன் போன்றவர்களே சிலரைப் (குமாரவடிவேல் குமரகுருபரன்) பேசவிடக்கூடாதென்று அரசின் பின்புலமுள்ள சிலர் நின்றாடிய நிலையைச் சுட்டிக்காட்டி விலகியபின்னாலே, வந்து அழைத்துப்போனவர்கள் வந்து சொல்கிறார்கள், “திறந்த சிறைச்சாலையிலே நொடிந்திருக்கும் மக்களையிட்டு, சாதி இந்துக்கள் தலித்துகளுக்கும், இஸ்லாமியர்களுக்கும், பெண்களுக்கும், மலையக தமிழர்களுக்கும் இழைத்த கொடுமைகளையும், தலித்துகளும்/இஸ்லாமியர்களும்/மலையகதமிழர்கள் பெண்களுக்கும், இவர்கள் எல்லோரும் சேர்ந்து திருநங்கைகளுக்கும், சம பால் ஈர்ப்புடையவரகளுக்கும் இழைத்த கொடுமைகளையும் கேட்டு ஜீரணிக்க முடியாமல் எல்லாவற்றிகும் சாட்சியமாய் அந்த இருநாட்களும் நான் இருந்தேன்." என்று. இவர்களினை அழைத்துப்போனவர்கள் அங்கும் கிழக்கிலும் கொழும்பிலும் இலண்டனிலும் பிரான்சிலும் கனடாவிலும் செய்யும் அரசியலையும் அதற்குப் பின்னாலுமான செயற்பாடுகளையும் இவர்கள் அறியமாட்டார்களா?

இவற்றைச் சுட்டினால், அங்கே எங்கே வந்தது பின்னான குற்றச்சாட்டுகள் கூறுகின்றவர் மீது?

"சாதியையும், ஆணாதிக்கத்தையும் தூக்கி பிடிக்கும் தேசியவாதிகள்" "சாதிய கொலைகளுக்கு எதிராக குரல்கொடுக்க மறுக்கும், பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு குரல்கொடுக்காத, திருநங்கைகளின் போராட்டத்திற்கு குரல்குடுக்காத நீங்கள் "

இதற்கான ஆதாரங்களை குற்றம் சாட்டுகின்றவர் காட்டமுடியுமா? தனக்குச் சார்பான "ஐயோ! திருநங்கையை அவமதித்துவிட்டார்கள்" என்பதுபோன்ற பொய்மையை உருவாக்கும் வகையிலே இதற்குப் பதிலைச் சொல்லமுடியாது அழித்தும் தடுத்தும் கருத்துமறுப்புச் செய்யும் அரசியலை இவர்க்கு விருப்புவாக்கும் பகிர்வும் செய்கின்றவர்களை என்ன சொல்வது?

நாளை உங்களிடம் கருணை பெற யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்கிளப்பு, வன்னி, அம்பாறை மக்கள் எல்லோருமே நாங்களும் பாதிக்கப்பட்ட பெண்கள்/ஆண்கள்/திருநங்கைகள்/ தாழ்த்திவைக்கப்பட்டோர்/ மதம் அற்றவர்கள் என்றெல்லாம் அடையாளத்தை வைத்தும் சொல்லப்படாத "சாதியையும், ஆணாதிக்கத்தையும் தூக்கி பிடிக்கும் தேசியவாதிகள்" "சாதிய கொலைகளுக்கு எதிராக குரல்கொடுக்க மறுக்கும், பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு குரல்கொடுக்காத, திருநங்கைகளின் போராட்டத்திற்கு குரல்குடுக்காத நீங்கள் " என்பனவற்றையெல்லாம் திரிபு பண்ணித்தான் பேசவேண்டுமா?

மஞ்சுளாக்களின் இறப்புக்கும் இசைப்பிரியாவின் இறப்புக்கும் அஃதமைந்த வகையிலே பேதம் தெரியாதவர்களிடம் பேசிக்கொண்டிருக்கின்றேனோவென எனக்குத் தோன்றுகின்றது.

தயவு செய்து இனியேனும், ஈழத்து இழப்புகளுக்கு உங்கள் உதவற்றகவிதைகளையும் கீழறுப்பு அஞ்சலிகளையும் செலுத்தாது, டெல்லியிலே தாமாகக்கூடின கவிஞர்களை நானேதான் கூட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினேன் என்றெல்லாம் சுயவிளம்பரம் செய்யாது, வாயையும் கைகால்களையும் மூடிக்கொண்டிருங்கள். கறுப்பு யூலைகளைப் பற்றி நீங்கள் கவலைப்பட்டது போதும். இப்படியான ஆய்ந்து பார்க்காமலே பாதிக்கப்பட்டவர்களைத் திட்டியும் வாயாலே வெட்டியும் கைகேயிக்கண்ணீருக்கும் கூனிக்குரல்களுக்கும் லைக் போடும் உங்களின் யோக்கியதை எதையும் சாதிக்கப்போவதில்லை. வேண்டுமானால், உங்கள் கவிதைக்கும் கட்டுரைக்கும் ஊர்வலங்களுக்கும் ஆண்டுக்கு எத்தனை ஈழநிலங்கள் இராணுவமயமாக்கப்படவேண்டும், ஆண்டுக்கு எத்தனை பெண்கள் வன்புணரப்படவேண்டும், ஆண்டுக்கு எத்தனை இளைஞர்கள் அவுஸ்திரேலியாவுக்கான படகுப்பயணத்திலே மூழ்கி இறக்கவேண்டுமென்று கூட்டம் நடத்தியவர்கள் ஊடாகவே ராஜபக்ஷவுக்கோ இந்திய மலையாளிநிர்வாகிகளுக்கோ ஒரு தொகையைக் கொடுத்து நிர்ணயித்துவிடுங்கள். அப்படியே நடக்க உங்கள் தொழில்சார்வாழ்க்கையை அங்கிருந்தே நடத்திப்போகலாம்.

விருப்பு வாக்குமிட்டு, பகிர்வும் செய்துகொண்டவர்கள் உங்கள் செயற்பாடுமீதான என்மேலிட்ட அவசரக்குறிப்புக்கான பதிலைச் சொல்லுங்கள். முடியாவிட்டால், என் நண்பர் பட்டியலிலிருந்தால், விலகிக்கொள்ளுங்கள். நேர்மைத்திறனும் உளசுத்தியுமில்லாமல், சும்மா ஒருவர் திருநங்கை என்பதற்காகமட்டுமே திறந்தசிறைச்சாலையிலே ஒடுக்கப்பட்டு நைந்து நொந்திருக்கும் அத்தனை தமிழ்பேசும் மக்களையும் சேற்றுப்புழுக்களாக நசித்துப்போகும் உங்களுடன் இனி வரும் காலத்திலும் அவமே பேசி ஏன் பொழுதைக் கழிக்கவேண்டும். இருபுறங்களுக்குமே விலகிக்கொள்வதாலே இழப்பேதுமில்லை; உளநிம்மதியேனும் மிஞ்சும்.

Ramanitharan Kandiah எழுதியது.from FB
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராகவன், நிர்மலா, சுமதி 1 & 2, வாசுகி, கீரன், ஷோபா சக்தி, ரங்கன், தேவதாசன், தமிழழகன், அன்னம் முரளி, சுகன், ஸ்டாலின், விஜி, கருணாகரன், ஷோபா சக்தி, கற்சுறா.

 

 

இவர்கள் தான் தமிழ் இலக்கிய ஆன்றோர்..! -------------.. இன்று எடுத்திருக்கும் இன்னொரு அதவாரம்.. இலக்கியவாதி. இவர்கள் பூசுவது சிங்கள அரச பயங்கரவாத்திற்கு ஜனநாயக முலாம். இதற்கு அது கூலி கொடுக்கிறது.

 

இதில.. தமிழ் வளர்ந்த மாதிரித்தான்..! இப்படியே போனால் தமிழர்கள் மட்டுமல்ல.. தமிழ் மெல்லச் சாகாது. கூடிய விரைவில் சாகும்..! :):lol:

இதேவேளை இலண்டனிலும் இலண்டன் தமிழியல் நடுவம்.. நடத்த உள்ள

 

உலகத் தமிழியல் ஆய்வு மாநாடு - 2013, இலண்டன்

 

கலாநிதி வண.தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டில்

 

http://worldtamilologyconference.org/

 

பற்றி நம்ம கிருபன் அண்ணா ஒட்டுவது கிடையாது. ஏனோ தெரியல்ல. அவருக்கும் இப்படியான இலக்கியவாதிகளில் தான் ஒரு ஈர்ப்புப் போல....!

 

Link to comment
Share on other sites

சுகன் என்பது எங்கள் சண்டமாருதனா? :huh:  அவருக்குத்தான் இங்கே பழைய பெயர் சுகன்.. :rolleyes:

Link to comment
Share on other sites

இலக்கிய சந்திப்பு மிக வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது .

பிரச்சனைகள் பல இருந்த போதும் (எங்குதான் பிரச்சனை இல்லை ) யாழ்பாணத்தில் பல புலம் பெயர்ந்தவர்களும் கலந்து கொண்டு  நடாத்தி முடித்தது பெரிய சாதனைதான் .

நாட்டில் இப்படியான நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறவேண்டும் .முப்பது வருட போர் சூழலில் இருந்த ஒரு இனம் அதைவிட்டு வெளியில் வந்து தமது மன உழைச்சல்களை தீர்க்க எந்த வித அரசியல் கலப்பற்ற நிகழ்வுகளா நடந்தாலும் அதற்கு ஆதரவு அழிக்கவேண்டும். நாட்டில்  அரசியல் செய்ய அரசியல்வாதிகள் இருக்கின்றார்கள் .

கனடாவில் கோடை வந்த பின் ஒவ்வொரு கிழமையும் ஏதாவது ஒரு நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக நடந்துகொண்டே இருக்கு ,பெரும்பாலானவை தேசியவாதிகள் என்று கத்தி குளறுபவர்களால் தான் நடாத்தபடுகின்றது .அதுவும் தமிழ் நாட்டில் இருந்து சினிமா பிரபலங்களை கூட்டிக்கொண்டு வந்துதான் நடக்குது .நாட்டில் இருந்த மக்கள் முப்பது வருடங்கள் ஒன்றும் பார்க்காமல் அனுபவிக்காமல் இருந்தவர்கள் இனி என்ன கோதாரிக்கு அப்படியே இருங்கோ என்கிறார்களோ தெரியவில்லை ?

தீபச்செல்வனுக்கு என்ன ஒரே  சுற்றியடிதான் .இடைக்கிடை பகிடியும் விடத்தான் வேண்டும் . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலக்கிய சந்திப்பு மிக வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது .

பிரச்சனைகள் பல இருந்த போதும் (எங்குதான் பிரச்சனை இல்லை ) யாழ்பாணத்தில் பல புலம் பெயர்ந்தவர்களும் கலந்து கொண்டு  நடாத்தி முடித்தது பெரிய சாதனைதான் .

நாட்டில் இப்படியான நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறவேண்டும் .முப்பது வருட போர் சூழலில் இருந்த ஒரு இனம் அதைவிட்டு வெளியில் வந்து தமது மன உழைச்சல்களை தீர்க்க எந்த வித அரசியல் கலப்பற்ற நிகழ்வுகளா நடந்தாலும் அதற்கு ஆதரவு அழிக்கவேண்டும். நாட்டில்  அரசியல் செய்ய அரசியல்வாதிகள் இருக்கின்றார்கள் .

கனடாவில் கோடை வந்த பின் ஒவ்வொரு கிழமையும் ஏதாவது ஒரு நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக நடந்துகொண்டே இருக்கு ,பெரும்பாலானவை தேசியவாதிகள் என்று கத்தி குளறுபவர்களால் தான் நடாத்தபடுகின்றது .அதுவும் தமிழ் நாட்டில் இருந்து சினிமா பிரபலங்களை கூட்டிக்கொண்டு வந்துதான் நடக்குது .நாட்டில் இருந்த மக்கள் முப்பது வருடங்கள் ஒன்றும் பார்க்காமல் அனுபவிக்காமல் இருந்தவர்கள் இனி என்ன கோதாரிக்கு அப்படியே இருங்கோ என்கிறார்களோ தெரியவில்லை ?

தீபச்செல்வனுக்கு என்ன ஒரே  சுற்றியடிதான் .இடைக்கிடை பகிடியும் விடத்தான் வேண்டும் . 

 

இதை  நான் ஆதரிக்கின்றேன் :D

Link to comment
Share on other sites

சுகன் என்பது எங்கள் சண்டமாருதனா? :huh:  அவருக்குத்தான் இங்கே பழைய பெயர் சுகன்.. :rolleyes:

 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள சுகன் சண்டமாருதன் சுகன் இல்லை இசை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"பறக்கும் மீன்" என்ற சிங்கள திரைபடம் சிறிலங்காவில் தடை செய்யப்பட்டுள்ளது...ஆனால் இலக்கிய சுதந்திரம் உண்டு என்று காட்ட இந்த அமைப்பினர் குத்தி முறியினம்....

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்திலிருந்து ஒரு கண்டனக் குரல்

தீபச்செல்வன்

"வெளிநாட்டிலிருந்து வந்து இலக்கியச் சந்திப் பெல்லாம் நடத்துறாங்களே, உங்கட நாட்டில் நிலைமை சரியாகிவிட்டதா?" என்று தமிழகத்திலிருந்து ஒரு நண்பர் கேட்டார். "தமிழகத்திலிருந்து உன்னிக் கிருஷ்ணன் வந்து கச்சேரி நடத்திய பொழுது மட்டுமல்ல, முள்ளிவாய்க்காலில் இனவழிப்பு நடந்தேறியவுடனேயே நிலைமை சுமுகமாகிவிட்டது" என்று அவருக்கு நான் பதில் அளித்தேன். இலங்கை அரசை ஆதரித்தால் அல்லது இணைந்தால் எந்த சந்திப்பும் நடத்தலாம். நடிகை அசினைப் போல இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மனைவியுடன் யாழ்ப்பாணம் வரை வரலாம். ஆனால் நடிகை அசின் இலங்கை அதிபருக்காகவோ அவரது அரசியலுக்காகவோ எதுவும் பேசவில்லை. ராஜபக்சேவின் மனைவியுடன் இணைந்து வந்தார் என்பது மட்டுமே நடந்தது.

‘எங்கள் நிலத்தில் நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் ‘வாழ்க்கை’யை மறைக்கவும் உண்மையை மூடி மறைக்கவுமே இலக்கியச் சந்திப்பு நடந்தது’ என்பதை நான் ஈழத்தில் இருந்துகொண்டே சொல்லியிருக்கிறேன். இலக்கியச் சந்திப்பைப் பொறுத்தவரையில் இலங்கை அரசின் ஆதரவுடனே அந்நிகழ்வு நடத்தப்பட்டது என்பது எல்லோருக்குமே தெரியும். வெளிநாடுகளில் உள்ள பல நண்பர்கள் ‘இலக்கியச் சந்திப்பை நீ எதிர்க்காதே. அவர்கள் அரசின் ஆட்கள்’ என்று வெளிப்படையாகவே எச்சரித்தார்கள். நான் எனது நிலத்தில் வாழ்ந்துகொண்டே சிங்கள அரசின் நடவடிக்கைகளை எதிர்த்துக்கொண்டே இருக்கிறேன். எனவே இலக்கியச் சந்திப்பு என்கிற பெயரில் எமது மண்ணில் செய்யப்பட்ட அநீதி குறித்துக் குரல் கொடுக்க வேண்டியது எனது கடமை.

சில ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில், ஜெர்மனியில் வசிக்கும் ஈழக் கவிஞரான மட்டுவில் ஞானக்குமரனின் புத்தகம் ஒன்றுக்கு அறிமுக நிகழ்வொன்றை நடத்தினோம். அந்தப் புத்தகத்தை அறிமுகப்படுத்தி வைக்கும்படி என்னிடம் கேட்கப்பட்டது. Ôதினக்குரல்Õ பத்திரிகையில் மாத்திரம் புத்தக வெளியீடு பற்றிய செய்தி வந்திருந்தது. நான் அறிமுகப்படுத்த சபைக்கு செல்லும் பொழுது அதற்கு முன்பே இலங்கை இராணுவப் புலனாய்வாளர்கள் வந்துவிட்டார்கள். ‘மட்டுவில் ஞானக்குமரன் என்பது அவரது பெயர். அவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தற்பொழுது ஜெர்மனியில் வாழ்கிறார்’ என்பதைத் தவிர வேறு எதையும் என்னால் பேச இயலவில்லை. நிகழ்ச்சி முடிந்த பிற்பாடு விடைபெற்றுக் கொள்ளாமலே ஞானக்குமரன் பேருந்து எடுத்துச் சென்று விட்டார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள கவிஞர் கு. றஜீவன் யாழ் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிக்கும்பொழுது சைவசித்தாந்தம் தொடர்பான ஆய்வைச் செய்தார். அந்த ஆய்வைப் பின்னர் நுலாக வெளியிட்டார். யாழ் நகரத்தில் உள்ள மண்டபம் ஒன்றில் "பெரியபுராணம்" என்ற புத்தகத்தை வெளியிட்டார். என்ன நடக்கிறது என்று பார்க்க வெளியீட்டு மண்டபத்திற்கு வந்து விசாரித்த இராணுவப் புலனாய்வுத்துறையினர் அந்தப் புத்தகத்தின் ஒரு பிரதியையும் வாங்கிக்கொண்டு சென்றிருக்கிறார்கள்.

நாங்கள் வாழும் வாழ்க்கையைக் குறித்து எழுதி, அதை வெளியிடவோ அது குறித்து விமர்சனக்கூட்டமோ சந்திப்போ நடத்தமுடியாத நிலைமையே இங்கு காணப்படுகிறது. சில புத்தகங்கள் தொடர்பான உரையாடல்கள் இலக்கிய நண்பர்களின் வீடுகளில் இடம்பெற்றிருக்கின்றன. அந்த சந்திப்புகள் எழுதக்கூடிய சிலருக்கு இடையில் மாத்திரம் நிகழ்ந்ததுடன் அதை ஒரு ஊடகத்தில் வெளியிட்டு தொடர்ச்சியாக நடத்தக் கூடிய சூழல் இல்லை. சயந்தனின் ஆறாவடு அறிமுகம், கர்ணனின் இரண்டு நூல்கள் அறிமுகம் என்பன இரகசிய சந்திப்புகளாக நடைபெற்றிருக்கின்றன. ஆனால் கர்ணனின் புத்தகப் பிரதிகள் இனந்தெரியா நபர்களினால் பறித்துச் செல்லப்பட்ட சம்பவமும் அப்பொழுது நடந்திருந்தது.

அண்மையில், கவிஞர் றஷ்மியின் இரண்டு கவிதை நூல்கள் பற்றிய விவாதம் கவிஞர் நிலாந்தனின் வீட்டில் இடம்பெற்றது. இதில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல படைப்பாளிகள் கலந்துகொண்டிருக்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் அரச பாராளுமன்ற உறுப்பினர் சந்திர குமாரும் வந்திருக்கிறார். ஈபிடிபி எனப்படும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த சந்திரகுமார் அரசாங்கத் தின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினராக இருக்கிறார். சந்திரகுமாரையே ஒரு படைப்பாளியாக்கக் கூடிய கவிஞரால் இலக்கியச் சந்திப்பு நடத்த முடியாதா என்ன? சந்திரகுமார் அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தார் என்று கேள்விப்பட்ட பொழுது இலக்கியச் சந்திப்பில் நாவல் பற்றிய அல்லது அரசியல் பற்றிய விவாதத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொள்ளக்கூடுமோ என நான் நினைத்தேன்.

தாயகத்தில் இலக்கியச் சந்திப்பை முன்னின்று நடத்திய பெருமை ஈழத்தின் முக்கிய கவிஞர்களில் ஒருவ ரான கருணாகரனையே சாரும். அவர் இல்லாவிட்டால் இந்தச் சந்திப்பு நடந்திருக்காது. நான் இலக்கியச் சந்திப்புக்குச் செல்லவில்லை. ஆனால் இலக்கியச் சந்திப்பு பற்றிய அறிவித்தல்களிலும் புகைப்படங்களிலும் கருணாகரனைக் கண்டேன். டக்ளஸ் தேவானந்தாவுடனும் சந்திரகுமாருடனும் இணைந்து செயற்படுவது குறித்துக் கேட்டால் கருணாகரன் தொடர்ந்து மறுப்பதுபோல இலக்கியச் சந்திப்பையும் தான் நடத்தவில்லை என்று கூறவும் கூடும்.

இலக்கியச் சந்திப்பு நடக்கும்பொழுது உடனுக்குடன் செய்திகளைப் பரபரப்பாக வெளியிட்டுக்கொண்டிருந்தார் சோபாசக்தி. கருணாகரனும் சோபாசக்தி போன்றவர்களும் இணைந்தால் இலக்கியச் சந்திப்பு சாத்தியமே. புலத்தில் நடந்த இலக்கியச் சந்திப்புக்கள் பலவும் புலி எதிர்ப்பு இலக்கியச் சந்திப்புகளாகவே நடந்திருக்கின்றன. எனினும் புலி எதிர்ப்பு அவதூறுகள்மீது பல படைப் பாளிகள் தமது விமர்சனங்களையும் கருத்துக்களையும் கூறியிருக்கிறார்கள். 2008இல் கனடாவில் நடந்த இலக்கியச் சந்திப்பில் தமிழ்நதி கலந்துகொண்டிருந்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்த பெண் போராளிகளை ‘மொக்குப் பெட்டையள்’ என்று விளித்த நிர்மலா ராஜசிங்கமும் கலந்துகொண்டிருந்தார். அ.யேசுராசா இலண்டனில் நடந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார். யாழ்ப்பாணத்திலிருந்து இலண்டனுக்கு அழைக்கப்பட்ட யேசுராசா, தான் வாழும் யாழ்ப்பாணத் தில் நடந்த இலக்கியச் சந்திப்புக்கு செல்லாமல் புறக்கணித்தது ஏன்? இலக்கியச் சந்திப்பை நடத்தும் ஆட்கள் கடுமையான புலி எதிர்ப்பாளர்கள் என்பதையும் அதன் மூலம் இலங்கை அரசுக்கு ஆதரவு தேடுபவர்க ளாகவுமே இருக்கிறார்கள் என்பதையும் பல தசாப்தங்களாக இலக்கியத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் அ.யேசுராசா அறிந்திருக்கக்கூடும். மேலும், இலண்டனில் நிலவிய கருத்துச் சுதந்திர வெளிப்பாட்டுச் சூழல் யாழ்ப்பாணத்தில் இல்லை என்பதை அவர் முற்றிலுமாக அறிந்திருந்தார்.

இலக்கியச் சந்திப்புகளில் புலி எதிர்ப்பு வன்மம் காரணமாக எல்லாக் கருத்துக்களையும் பகிரக்கூடிய சுதந்திரம் வழங்கப்படுவதில்லை. "சாத்திரியையும் யமுனா ராஜேந்திரனையும் தமிழ்நதியையும் ஏன் அழைத் தீர்கள்?" என்று கேட்டு உள்ளுக்குள் முரண்படக்கூடிய பலர் இலக்கியச் சந்திப்பு ஒழுங்கமைப்பாளர்களாக இருக்கிறார்கள். முன்பு விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டதாகப் புலம்பிய இத்தகையோர்தான், விடுதலைப்புலிகளுக்குச் சார்புடையவர்கள் என்று கருதக்கூடியவர்களின் கருத்து வெளிப்பாட்டினை மறுக்கிறார்கள். அது கருத்துச் சுதந்திர மறுப்பெனில் இதன் பெயர் என்ன? புலம்பெயர் நாடுகளில் புலிகளை எதிர்த்து அதையே ஒரு வன்ம யுத்தமாக சிங்களப் பேரினவாதத்திற்கு இணையாக செய்யக்கூடியவர்கள் தாயகத்தில் அதைச் செய்வதில் எந்தத் தடையும் இல்லை. ஒரே கத்தி இரண்டு உறைகளில் மாற்றி மாற்றி வைக்கப்படுகிறது. அவ்வளவுதான். சோபாசக்தி, ராகவன், நிர்மலா ராஜசிங்கம் இப்படியானவர்கள் இணைந்தால் இலங்கையில் ஒரு இலக்கியச் சந்திப்பை எந்தவிதத் தடையுமின்றி நிச்சயமாக நடத்த முடியும்.

புலிகள் மீதான நியாயமான விமர்சனங்களைச் செய்யும் உரிமை எல்லோருக்குமுண்டு. ஆனால், இங்கு புலி எதிர்ப்பாளர்கள் என்று சொல்லப்படக்கூடியவர்கள் புலியெதிர்ப்பு அரசியலுக்காக எதையும் செய்யக்கூடியவர் களாக இருக்கிறார்கள். அதனால் பாதிக்கப்படுவது தமிழ்மக்களானாலும் அதைக்குறித்து எந்தக் கவலையும் இல்லை. அதற்காக இலங்கை அரசிடம் தாமாகவே சென்று மண்டியிடக்கூடியவர்கள் அவர்கள்.அப்படிச் செயற்படுபவர்களின் கருத்தும் செயற்பாடும் எவ்வளவு மோசமானது? எவ்வளவு அநீதியானது? புலி எதிர்ப்பாளர்களில் பலர் அரச ஆதரவாளர்கள் என்பதற்கு இலக்கியச் சந்திப்புதான் சாட்சி. புலத்தில் இருந்துகொண்டு அதிகாரத்தை எதிர்க்கிறோம் என்பவர்களின் முகம் இதன்மூலம் அம்பலமாகியிருக்கிறது.

யுத்தம் முடிந்தவுடன் லண்டனில் உள்ள ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியனும், மருத்துவர் நடேசனும் ஆஸ்திரேலியாவில் உள்ள முருகபூபதியும் வந்தார்கள். யுத்த நாட்களில் சிங்கள அரசின் தொலைக்காட்சிகளில் என்ன காட்டுகிறார்கள் என்பதைத் தவறாமல் பார்த்துக்கொண்டு வந்தேன். ஒருநாள் ரூபவாகினி சிங்களத் தொலைக்காட்சியில் ராஜேஸ்வரி பால சுப்பிரமணிய பேசுகிறார்:‘பயங்கரவாதி’களின் பிடியிலி ருந்து மக்களை மீட்டு சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் இலங்கை ஜனாதிபதி வைத்திருக்கிறார்’ என்று பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். அவரால் குறிப்பிடப்பட்ட சுதந்திரந்தான் யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் இன்னபிற தமிழ் இடங்களிலும் துப்பாக்கிகளுடன் நின்றுகொண்டிருக்கிறது.

இவ்வாறு இலங்கை அரசின் அழைப்பில் இலங்கை அரசுக்கு ஆதரவாக இயங்க வந்த ராஜேஸ்வரி உள்ளிட்டவர்கள் யாழ்ப்பாணத்திற்கு இலக்கியவாதி களாக வந்தனர். அப்பொழுது ராஜேஸ்வரியிடம் நான் நேரடியாகவே கேட்டேன்:"முள்வேலி முகாம்கள் சுவர்க்கம் நற்சான்றிதழ் வழங்குவதற்காக உங்களை இலங்கை அரசு அழைத்திருக்கிறது. முள்வேலி முகாம் சுவர்க்கம் என்று கருணாகரனோ அல்லது முள்வேலிக்குள் இருந்த வேறு எழுத்தாளர்களோ சொல்லியிருக்கலாமே? எதற்காக நீங்கள் அங்கிருந்து அழைக்கப்பட்டு சொல்ல வைக்கப்படவேண்டும்?"என்று கேட்டேன். உடனே, கோபத்தோடு"நான் எழுதியதை நீ படித்தாயா? அப்பிடி இப்பிடி.?.." என்று கொந்தளித்தாரே தவிர, நான் கேட்ட கேள்விக்கு அவர் பதில் சொல்லவில்லை.

‘இலங்கையில் இலக்கியச் சந்திப்பை நடத்த முடியாது என்பதைப் பொய்யாக்கி இலங்கையிலும் நடத்தலாம்’ என்று இலக்கியச் சந்திப்புக்கு வந்த விஜி பி.பி.சி.க்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார். இவர்களின் பிரச்சினை இலங்கையில் ஒரு இலக்கியச் சந்திப்பை நடத்த வேண்டும் என்பதல்ல. இலக்கியச் சந்திப்பை இலங்கையில் நடத்துவதன் மூலம் இலங்கை அரசானது கருத்துச் சுதந்திரத்திற்கும் படைப்புச் சுதந்திரத்திற்கும் இடமளிக்கிறது என்று காட்டி இலங்கை அரசைக் குற்றச்சாட்டுகளிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதேயாகும்.

உண்மையில் உங்களால் ஒரு இலக்கியச் சந்திப்பை மட்டுமல்ல, பல இலக்கியச் சந்திப்புகளையும் நடத்த முடியும். ஏனெனில் உங்களைப்போலவே டக்ளஸ் தேவானந்தாவுக்கும் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. யுத்தம் முடிந்தவுடன் அரசு பல வகையான கூட்டங்களை ஏற்பாடு செய்கிறது. தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பாடல்களைப் பாடிய பாடகர் ஒருவரை அழைத்து வந்து யாழப்பாணத்தில் இசை நிகழ்ச்சி நடத்தி டக்ளஸ் தேவானந்தா கட்டியணைத்துப் பரிசு வழங்கினார். அ.மார்க்ஸ் போன்றவர்கள் இங்கு வந்த பின்னர் தமிழக இதழ்களில் பரபரப்புக் கட்டுரைகளை எல்லாம் எழுதியிருக்கிறார்கள்.

இலக்கியச் சந்திப்பு மிகச் சிறப்பாக நடந்தது என்று சந்திப்புக்கு வந்த சிலர் முகப்புத்தகத்தில் நிலைத்தகவல் போட்டிருக்கிறார்கள். உண்மையில் யுத்தம் முடிந்த பின்னர் இலங்கை அரசும் அரசப் படைகளும் அமைச்சர் டக்ளஸ் போன்றவர்களும் ஏற்பாடு செய்து நடத்திய நிகழ்ச்சிகள் போல இலக்கியச் சந்திப்பும் மிகவும் சிறப்பாகவே நடந்திருக்கிறது. இலங்கை அரசின் படைப்புச் சுதந்திர முகத்தைக் காட்டும் இலக்கை இலக்கியச் சந்திப்பு அடைந்திருக்கிறது.

இலக்கியச் சந்திப்பில் ஈழத்தின் முக்கிய எழுத்தாளர்கள் பலர் கலந்துகொள்ளவில்லை. அவர்கள் இந்த நிகழ்வைப் புறக்கணித்திருக்கிறார்கள். இலக்கியச் சந்திப்புக்கு வராதவர்களைப் பட்டியலிடுவது அவர்களுக்கு ஆபத்தானது. வெளிநாடுகளில் உள்ள புலியெதிர்ப்பு எழுத்தாளர்களே பெருமளவில் வந்து அரங்கை நிறைத்திருக்கிறார்கள். இவர்கள் எதைச் செய்தேனும் தாயகத்தில் வந்து இலக்கியச் சந்திப்பு நடத்திவிட்டு அதை வைத்துப் புலி எதிர்ப்பு புராணம் பாடும் நோக்கை கொண்டவர்கள். இந்த சந்திப்பில் சில முஸ்லிம் எழுத்தாளர்களும் மலையக எழுத்தாளர் களும் கலந்து கொண்டமை வருத்தத்திற்குரியது. புலி எதிர்ப்பாளர்களின் அரசியலுக்கு அவர்கள் பலி ஆகிவிட்டார்கள்.

இதில் கலந்து கொண்ட சில எழுத்தாளர்கள் தம்மை எழுத்தாளர்கள் என்று சொல்லிக்கொண்டே மாலைக்கும் விருதுக்கும் அலைபவர்கள். நாட்டில் ஈழத் தமிழனம் படுகொலை செய்யப்பட்டு இரத்த ஆறு பாய்ந்த பொழுதும் இவர்கள் வேறு ஒரு உலகத்தைப் பற்றி எழுதிக்கொண்டே இருந்தவர்கள். அரசின் விருதுகள், நலன்கள், பாராட்டுக்களைப் பெற்றவர்கள். இலக்கியத்தை வளர்ப்பது மட்டுமே தமது நோக்கம் என்று சொல்லிக்கொண்டே பிழைப்பவர்கள். இலக்கியச் சந்திப்பில் காணநேர்ந்த வேறு சிலர் புலிகளின் இதழ்களில் போராளி போல எழுதிவிட்டு அரச இதழ்களில் அரச அபிமானியாக எழுதக்கூடியவர்கள். இப்படிப் பார்க்கையில் இந்தக்கூட்டத்தில் அரைவாசிப் பேர் இலக்கியவாதிகள் என்று சொல்லிப் பிழைப்பவர்களே தவிர, படைப்பாளிகள் அல்ல. ஒரு படைப்பாளிக்குரிய சமூகப் பொறையும் நீதியும் இவர்களிடம் இல்லை.

இலக்கியச் சந்திப்புக்கு வந்தவர்கள் இரண்டு வகையினர். இலக்கியவாதிகள் என காட்டிப் பிழைப்பவர்கள் ஒரு அரைவாசிப் பேர். மற்றையவர்கள் புலம்பெயர்ந்த புலி எதிர்ப்பாளர்கள்.ஒரு கொலை அரசால் எதையும் செய்யமுடியும் என்பதன் வெளிப்பாடே இலக்கியச் சந்திப்பு. உலகில் உள்ள உன்னதமான படைப்பாளிகள் அதிகாரத்திற்கு எதிராகவே நிற்பார்கள். ஆனால் இவர்கள் புலிகளுக்கு மட்டுமே எதிராக நிற்பார்கள். அரசுக்கு இவர்கள் ஆதரவானவர்களே.

இலக்கியச் சந்திப்பு ஏற்பாட்டாளர்கள் இறுதி அரங்கில் சில சிங்களப் படைப்பாளிகளை அழைத்து இலங்கை அரசுக்கு எதிராகக் கொஞ்சம் பேச வைத்திருக் கிறார்கள். இலக்கியச் சந்திப்பை புனிதப்படுததுவதற்காக அதை சோபா சக்தி முகப்புத்தகத்தில் பகிர்ந்து கொண்டிருந்தார். இலக்கியச் சந்திப்பு வெற்றியளித்திருப்ப தாக மகிழச்சியடைந்த தமிழகக் கவிஞர் லீனா மணிமேகலை, இப்படியே தொடரும் எனில் இலங்கையில் தமிழர்களுக்கான அரசியல் சாத்தியம் என்று தெரிவித்திருக்கிறார்.

இரண்டு நாட்கள் சுற்றுலாப் பயணத்தில் வந்து அதுவும் இலக்கியச் சந்திப்புக்காக வந்து இவ்வாறான ஒரு கருத்தை லீனா மணிமேகலை சொல்ல வேண்டிய தேவை என்ன? ஈழத் தமிழர்களின் போராட்டத்திற்கு எதிராக கருத்துச் சொல்வதற்காகவே இலங்கை வரும் அ.மார்க்ஸ் போன்றவர்களின் அணுகுமுறையுடன் சேர்ந்ததே இதுவும்.புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து புலி எதிர்ப்பு வேலைகளைச் செய்பவர்களுக்கும் லீனா மணிமேகலை போன்றவர்களுக்கும் நாம் ஒன்றைத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. நாங்கள் கருணாகரன்கள் போல வாழவில்லை. நாங்கள் நாங்களாக வாழ விரும்புகிறோம்.

முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு சிங்களப் பேரின வாதமும் உலக வல்லாதிக்க கூட்டணியும் மட்டுமல்ல காரணம்,உங்களது புலி எதிர்ப்புச் செயற்பாடுகளும் காரணமே. இப்பொழுது புலிகள் இல்லை. நாங்கள் உறுதியாகச் சொல்கிறோம். இங்கு வாழ வேண்டுமெனில் கருணாகரன்கள் போல யாரும் வாழ முடியாது. எங்களுக்கு எந்த அரச எம்.பி.யும் உறவினரும் நண்பரும் அல்ல. எங்களுக்கு எந்த அமைச்சரும் உறவினரும் நண்பரும் அல்ல. தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் எந்த அரசியலின்கீழ் எந்தத் தயவின்கீழ் வந்து சென்றீர்களோ அந்த தயவில் நாங்கள் வாழ விரும்பவில்லை. நாங்களாய் வாழும் வாழ்க்கை குறித்து, எங்கள் வாழ்வு பற்றிய இலக்கியம் குறித்து நேர்மையாக நாங்கள் பேசும் சூழல் எங்களுக்கு வேண்டும்.

அதைச்செய்தால் எங்கள் வீட்டு நாய்கள் கொல்லப்பட்டு படலையில் தொங்கவிடப்படுகின்றன. இனந்தெரியாதவர்கள் என்ற போர்வையில் தாக்குதல் நடத்தப்படுகிறது. காணாமல் போகிறோம். கழிவு எண்ணெய் எங்கள்மீது ஊற்றப்படுகிறது. நாங்கள் இப்படியொரு அவல வாழ்க்கை வாழ்கையில் நீங்கள் சுதந்திரமாக இலக்கியச் சந்திப்பு நடத்தியது எப்படி?

உங்கள் அரசியலையும் உங்கள் அநீதியையும் புறக்கணித்து இந்த ஈழ மண்ணிலிருந்து கண்டித்தவனாகச் சொல்லுகிறேன். உங்கள் புலி எதிர்ப்பு வன்மத்திற்காகவும் உங்கள் நலனுக்காகவும் உங்கள் அரசியலுக்காவும் நீங்கள் எங்கள் வாழ்க்கையையும் நசுக்காதீர்கள். ஏனெனில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த வாழ்க்கையே இன்றெமது போராட்டம்!

 

http://www.uyirmmai.com/Contentdetails.aspx?cid=6334
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
உங்கள் அரசியலையும் உங்கள் அநீதியையும் புறக்கணித்து இந்த ஈழ மண்ணிலிருந்து கண்டித்தவனாகச் சொல்லுகிறேன். உங்கள் புலி எதிர்ப்பு வன்மத்திற்காகவும் உங்கள் நலனுக்காகவும் உங்கள் அரசியலுக்காவும் நீங்கள் எங்கள் வாழ்க்கையையும் நசுக்காதீர்கள். ஏனெனில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த வாழ்க்கையே இன்றெமது போராட்டம்!
நாங்கள் உசுப்பேத்தவில்லை தீபச்செல்வனை, அவராகவே குரல் கொடுக்கின்றார்.....வரும் காலங்களில் பல கண்டனக்குரல்கள் இந்த இலக்கியவாதிகளுக்கு எதிராக வரும்
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இலக்கியச் சந்திப்பு தீபச்செல்வனுக்கு மறுப்பு
கருணாகரன்

இலங்கை இலக்கியச் சந்திப்பின் அரசியல்: ஈழத்திலிருந்து ஒரு கண்டனக்குரல்' என்ற தலைப்பில் உயிர்மை - ஆகஸ்ட் 2013 இதழில் தாராளமாக வாரியிறைக்கப்பட்ட பொய்களால் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார்.

பொய் 01. இலக்கியச் சந்திப்பு இலங்கை நிலைமையையோ அல்லது இலங்கையில் தமிழ் முஸ்லிம் மலையக மக்களின் பிரச்சினைகளையோ மறைப்பதற்காக நடத்தப்படவில்லை. அது அவற்றைப் பேசவே நடத்தப்பட்டது. தமிழ், முஸ்லிம், மலையக மக்களை மட்டுமல்ல, சிங்கள மக்களின் பிரச்சினை களையும் பேசியது. அரசாங்கத்தின் மக்கள் விரோத, ஜனநாயக விரோதச் செயற்பாடுகளையும் அது தாராளமாக விமர்சனத்துக்குள்ளாக்கியது. கேள்விகளற்று அரசாங்கத்தையும் அதன் மக்கள் எதிர்ப்புச் செயற் பாடுகளையும் எந்தச் சந்தர்ப்பத்திலும் ஆதரிக்கவில்லை. அதில் பங்கேற்றவர்களும் அத்தகைய நோக்கத்தோடு இயங்கவில்லை.

பொய் 02. யாழ்ப்பாணத்தில் அல்லது இலங்கையில் புத்தக அறிமுகங்களையும் வெளியீடுகளையும் நடத்தக்கூடிய சூழல் இல்லை என்று தீபச்செல்வன் எழுதுகிறார். இதற்கு சில சம்பவங்களையும் முன்வைக் கிறார். அரசியல் சட்டங்கள் குறித்தும் பிரச்சினைகள் மற்றும் அரசியல் நிலைவரங்கள் குறித்தும் யாழ்ப்பாணத்தில் பல கருத்தரங்குகள் நடக்கின்றன. இலக்கியச் சந்திப்பு நடந்த அதே 'யுரோவில்' அரங்கில் இலக்கியச் சந்திப்புக்கு முதல்நாள்கூட அவ்வாறானதொரு கருத்தாடல் நிகழ்ச்சி நடந்தது. இதேவேளை இந்த நிகழ்ச்சிகளை நடத்தும்போது சிலருக்கு இது தொடர்பாக உள்ளூர அச்ச உணர்வு ஏற்படுவதுண்டு. அதைப் பல நண்பர்கள் பல சந்தர்ப்பங்களிலும் குறிப்பிட்டிருக் கிறார்கள். கடந்த கால (யுத்தகால) அனுபவங்கள் அப்படியானவை. இலக்கியச் சந்திப்பை நடத்தும் போது எமக்கும் அத்தகைய உள்ளுணர்வு ஏற்பட்டதுண்டு. ஏனெனில் நீண்ட காலமாக பல்வேறு தரப்பினரின் பல வகையான அச்சுறுத்தல் சூழலில் வாழ்ந்த அனுபவம் ஆழ்மனதில் இன்னும் பலமான நிலையில் உள்ளது. எனினும் இவற்றை எதிர்கொண்டுதான் புதிய நிலை மையை உருவாக்க வேண்டும் எனத் தீர்மானித்தோம்.

கடல் வலயச் சட்டம் அமலில் இருந்த போது கடலுக்குப்போய் மீனவர்கள் தொழில் செய்திருக்கிறார் கள். ஊரடங்குச்சட்டம் அமலில் இருந்தபோது மக்கள் அதற்குள்ளும் சுழித்துக்கொண்டு, மீறித் தங்கள் காரியங்களைப் பார்த்திருக்கிறார்கள். பொருளாதாரத் தடை நடைமுறையில் இருந்த போது அதற்குள்ளாலும் பொருட்களைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள். பாதைத்தடை இருந்த போது மிக அபாயமான வழிகளால் (கிளாலி போன்ற கடல்வழி) உயிரைத் துச்சமாக மதித்தே பயணங்களைச் செய்திருக்கிறார்கள். இதுபோல அதிகாரத்தின் பல தடைகளையும் கட்டுப்பாடுகளையும் சட்டங்களையும் கடந்ததே மனித இயக்கம். இதையெல்லாம் சமூகத்தின் தேவை, வாழ்க்கையின் தேவை எனக் கருதியே இங்கு வாழும் மக்கள் செய்திருக்கிறார்கள். இதை ஒத்ததே எமது இலக்கியச் சந்திப்பு முயற்சியும்.

தவிர, கொழும்பில் வாராவாரம் சமூக விஞ்ஞான வட்டத்தினர் பல நிகழ்ச்சிகளைச் செய்கின்றனர். அண்மையில் தேசிய கலை இலக்கியப்பேரவையின் இலக்கிய மாநாடும் 40 ஆவது ஆண்டு நிறைவுக் கூட்டமும் நடந்தது. இதன் தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்திலும் அது கூட்டங்களை நடத்தியது. அப்படியென்றால் தேசிய கலை இலக்கியப்பேரவை அரச ஆதரவு அமைப்பாகத் தொழிற்படுகிறது என தீபச்செல்வன் கருதுகிறாரா? இதுபோலப் பல நிகழ்ச்சிகள் அரசுக்கும் அரசாங்கத்துக்கும் சவாலாக நடக்கின்றன. இதைக் குறித்த தீபச்செல்வனின் அவதானம் என்ன? அபிப்பிராயம் என்ன? கிழக்கிலும் இதுபோல பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன இதைக் குறித்து?

மேலும் தீபச்செல்வன் ஈழ நிலவரம் குறித்து அரசாங்கத்துக்கு எதிராக எழுதும் எழுத்துகளும் அவர் போன்றவர்கள் எழுதுவதும் இன்று இலங்கையில் சாத்தியமாகியுள்ளது. அவற்றை இலங்கையின் பல தமிழ்ப் பத்திரிகைகள் மிகத் துணிச்சலுடன் தாராளமாகப் பிரசுரிக்கின்றன. அரசாங்கத்தையும் அதிபராக இருக்கும் மகிந்த ராஜபக்ஷவையும் இலங்கைப் படைகளையும் அரச பிரதானிகளையும் கடுமையாக விமர்சிக்கும் நிலை இன்று உருவாகியுள்ளது. இதன் அர்த்தம் இங்கே நிலைமை முற்றாகச் சாதாரண நிலைக்கு வந்து விட்டதென்பதல்ல. யுத்தகாலத்தில் நிலவிய நெருக்கடிச் சூழல் இன்றில்லை என்பதே. இல்லையெனில் (முன்னர் இருந்ததைப்போன்ற நெருக்கடி நிலை இருந்திருக்குமானால்) தீபச்செல்வன் தற்போது கொழும்பில் நின்று பணியாற்ற முடியாது. அவரும் அதை விரும்பியிருக்க மாட்டார். நிலைமையும் விட்டுக்கொடுத்திராது.

எனவே நிலைமையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது என்பதே உண்மையானது.

பொய் 03. நிலாந்தனின் வீட்டில் நடைபெற்ற, றஷ்மியின் இரண்டு கவிதை நூல்களின் விமர்சனக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எவரும் கலந்து கொள்ளவில்லை. தீபச்செல்வனோ அரச சார்பு பாராளுமன்ற உறுப்பினரான சந்திரகுமார் கலந்து கொண்டார் என பொறுப்பற்ற விதமாக எழுதியிருக்கிறார். பதிலாக அங்கே கலந்து கொண்டவர்களில் ஒருவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் பேராசிரியர் இரா. சிவச்சந்திரனே. அவரும் அரசியற் பிரதிநிதியாகக் கலந்து கொள்ளவில்லை. ஒரு இலக்கிய சமூகச் செயற்பாடுகளில் ஆர்வமுள்ள ஒருவர் என்ற வகையிலேயே.

பொய் 04. இலக்கியச் சந்திப்பு தனியே ஒருவரால் (கருணாகரனால்) நடத்தப்பட்டதல்ல. அது கூட்டுழைப்பின் விளைவு. பல்வேறு தரப்பையும் சேர்ந்த வெவ்வேறு அபிப்பிராயங்களையும் அரசியல் மற்றும் இலக்கிய பார்வை உடையவர்களும் கூடி நடத்திய நிகழ்வு. இதற்குத் தனியே ஒருவரைப் பொறுப்பாக்குவதும் அவரை உரிமை கொண்டாட வைப்பதும் தவறு. இலக்கியச் சந்திப்பு தொடர்பான அறிவிப்புகள் பகிரங்கமானவை. இலக்கியச் சந்திப்பின் ஏற்பாட்டுக்குழுவில் அவர்களுடைய பெயர்கள் உண்டு. நிகழ்விலும் ஏற்பாட்டாளர்களை அவதானித்திருக்கலாம்.

பொய் 05. அ.யேசுராசா லண்டனில் நடந்த இலக்கியச் சந்திப்புக்குச் செல்லவில்லை. நோர்வே - பேர்கன் நகரத்தில் நடந்த 28 வது இலக்கியச் சந்திப்பில் அ. யேசுராசாவும் சு. வில்வரெத்தினமும் கலந்துகொண்டனர் (வரலாறு குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என்கின்ற விதமாக தீபச்செல்வன் சோபா சக்திக்கு அளித்த நேர்காணலில் கூறியது இங்கே கவனிக்கத்தக்கது. பார்க்க: தீபச்செல்வனை ஷோபாசக்தி கண்ட நேர்காணல்).

பொய் 06. 'இலக்கியச் சந்திப்பை நடத்தும் ஆட்கள் கடுமை யான புலி எதிர்ப்பாளர்கள் என்பதையும் அதன்மூலம் இலங்கை அரசுக்கு ஆதரவு தேடுபவர்களாகவுமே இருக்கிறார்கள் என்பதை இலக்கியத்தில் பல தசாப்தங்களாகவே இயங்கிக் கொண்டிருக்கும் அ.யேசுராசா அறிந்திருக்கக்கூடும்' என்கிறார் தீபச்செல்வன். இதில் அ. யேசுராசாவைப்பற்றி தீபச்செல்வன் எவ்வளவு தவறாகக் கருதுகிறார்? இலக்கியச் சந்திப்பைப் பற்றி அதன் பின்னணி, அடிப்படைகள், அவற்றை யார் நடத்துகிறார்கள் என்பது பற்றியெல் லாம் நன்றாக அறிந்திருந்த நிலையிலேயே

அ.யேசுராசா இலக்கியச்சந்திப்பில் கலந்து கொண்டார். அப்பொழு தும் இலக்கியச் சந்திப்பு அடக்குமுறைகளுக்கு எதிராகவும் ஜனநாயகத்தைக் கோரியுமே நடத்தப்பட்டது. அப்போதும் புலிகளைப் பற்றிய - அரசைப்பற்றிய விமர்சனங்கள் இலக்கியச் சந்திப்பின் போது முன்வைக்கப்பட்டிருந்தன. ஆனால், தற்போது அதன் அடிப்படையும் இயங்கு முறையும் அப்படியே இருந்தாலும் யுத்தத்திற்குப் பின்னரான சூழலில் அதன் தன்மையில் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. சூழலில் உள்ள யதார்த்தமும் உண்மையும் அடிப் படையாகக் கொள்ளப்பட்டு இலக்கியச் சந்திப்பு நடந்தது. இலங்கை - யாழ்ப்பாண இலக்கியச் சந்திப்பு அதற்கு நல்ல உதாரணம்.

பொய் 07. இலங்கை இலக்கியச் சந்திப்பு எந்த நிலையிலும் புலி ஆதரவு புலி எதிர்ப்பு என்ற பிரச்சினைக்குள் சிக்கலுக்கு அடிப்படைக்குள் செல்லவில்லை. அதைப்பற்றி அந்த அரங்கு பொருட்படுத்தவே இல்லை. இலக்கியச் சந்திப்புக்கு அது தேவையு மல்ல. மாறாக, அது ‘ஜனநாயகம், பன்மைத்துவம், சமநிலை’ என்பவற்றின் அடிப்படையில் ஈழ இலக்கியத்தில் பேசு பொருளாக இருந்த, இருக்கின்ற அனைத்து விடயங்கள் பற்றியும் எத்தகைய சார்பு நிலைகளுமின்றி பேசும் அரங்காக இருந்தது. இதில் பல்வேறு அரசியல் நிலைப்பாடுடையவர்களும் இலக்கியக் கோட்பாடுகளை உடையவர்களும் இலக்கிய வகைகளைக் கொள்பவர்களும் ஆர்வத்தோடு பங்கேற்றனர்.

பொய் 08. நிச்சயமாக புலி எதிர்ப்பாளர்களால் அல்லது அரச ஆதரவாளர்களால் அல்லது அரச தரப்பினால் இலக்கியச் சந்திப்பு நடத்தப்படவில்லை. புலிகள் இல்லாத சூழலில் எப்படி புலிகளை எதிர்க்கமுடியும்? புலிகளின் கருத்துலகம் சார்பானவர்களைக் கூட இலக்கியச் சந்திப்பு நிராகரிக்கவில்லை.

(இலங்கையில் அரச தரப்பினால் நடத்தப்படுவது சாகித்திய இலக்கிய விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்வு மற்றும் மாகாணசபைகளால் நடத்தப்படும் இலக்கிய விழாக்கள் மற்றும் பிரதேச மட்டத்திலான கலாசார விழாக்கள் என்பவையே).


பொய் 09. இலங்கையில் இலக்கியச் சந்திப்பை நடத்த முடியாது என்பதைப் பொய்யாக்கி, இலங்கையிலும் நடத்தலாம் என இலக்கியச் சந்திப்புக்காக வந்திருந்த விஜி பி.பி.ஸி. வானொலிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்ததாக தீபச்செல்வன் கீழ்வருமாறு அர்த்தப்படுத்துகிறார்.

'இவர்களின் பிரச்சினை, இலங்கையில் ஒரு இலக்கியச் சந்திப்பை நடத்த வேண்டும் என்பதல்ல. இலக்கியச் சந்திப்பை இலங்கையில் நடத்துவதன் மூலம் இலங்கை அரசானது, கருத்துச் சுதந்திரத்துக்கும் படைப்புச் சுதந்திரத்துக்கும் இடமளிக்கிறது என்று காட்டி இலங்கை அரசைக் குற்றச்சாட்டுகளிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதேயாகும்'. இதைப் படிக்கும்போது சிரிப்புத்தான் வருகிறது. இலங்கை அரசுமீதும் தற்போது ஆட்சியிலிருக்கும் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் மீதும் ஏராளமான குற்றச் சாட்டுகளைப் பலரும் வைத்துள்ளனர். பலர் தங்கள் வசமுள்ள ஆதாரங்களையும் பகிரங்கப்படுத்தியுள்ளனர். இவற்றை அடிப்படை யாகக் கொண்டு, இதுவரை இந்த உலகம் எத்தகைய நடவடிக்கை களையும் எடுக்கவில்லை. பதிலாக சர்வதேச சமூகத்தின் வர்த்தக மற்றும் பொருளாதார, ராஜீய உறவுகள் இலங்கையுடன் தொடர்ந்தும் சீரான முறையிலேயே உள்ளன. இலங்கைக்கான பிற நாடுகளின் கொடைகளும் கடனுதவிகளும் இதைத் துல்லியப்படுத்துகின்றன. இந்த நிலையில் இலக்கியச் சந்திப்பு, அரசாங்கத்தைக் காப்பாற்ற முற்படுகிறது, அதனுடைய ஜனநாயகத் தன்மைக்கு சான்றாகச் செயற்பட முற்படுகிறது என்பது பெரும் வேடிக்கையே. உண்மையில் இலக்கியச் சந்திப்பையோ அல்லது அதில் கலந்து கொண்டவர்களையோ பற்றி அரசு பொருட்படுத்தும் நிலையில் இல்லை. அவர்களை அது எந்த நிலையிலும் பயன்படுத்த வேண்டியதும் இல்லை. இதற்கு சான்றாக - இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் தமிழ்ப்பத்திரிகைகளும் தீபச்செல்வன் போன்றவர்களும் எழுதும் அரச எதிர்ப்பு எழுத்துகளை அனுமதிப்பதன் மூலமாக இலங்கையில் தாராள ஜனநாயக நிலைமை உள்ளதாகக் காண்பிக்கிறது. இதை தீபச்செல்வன் போன்றோருடைய செயல்களே ஆதாரப்படுத்துகின்றன. எதையும் எழுத முடியாத, எதைப்பற்றியும் பேச வாய்திறக்க முடியாத சூழல் இருக்குமானால் இவர்கள் எழுதமுடியாதே. ஆகவே, இவர்களே அரசின் ஜனநாயகத்தன்மையை தங்களின் எழுத்துகளின் மூலமாக நிரூபிக்கிறார்கள். அந்த எதிர்ப்பு எழுத்துகளை பகிரங்கமாகப் பொதுவெளியில் வைப்பதன் மூலமாக.


இல்லையெனில், முன்னரே குறிப்பிட்டிருப்பதைப் போல இவ்வளவு தாக்கமான அரச எதிர்ப்பு எழுத்துகளைத் தொடர்ந்து பத்திரிகைகள் வெளியிட்டுக்கொண்டிருக்க இயலாது, எழுதுபவர்களும் எழுதிக்கொண்டு இந்த நாட்டிலேயே இயல்பாக வாழ்ந்துகொண்டிருக்க இயலாது.

பொய் 10. இலக்கியச் சந்திப்பில் கலந்து கொண்டவர்களையும் படைப்பாளிகளையும் மிகக் கீழான முறையில் விழித்திருக்கிறார் தீபச்செல்வன். சமூகப்பொறுப்புடையவர்கள், ஆளுமை மிக்க படைப்பாளிகள் எவரும் இலக்கியச் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறுகிறார். அத்துடன், புலம்பெயர் நாடுகளில் இருந்து வந்திருந்த புலி எதிர்ப்பாளர்களாலேயே இலக்கியச் சந்திப்புக் களம் நிரம்பியிருந்ததாகவும் கூறுகிறார். ஏனையவற்றைப்போல இதுவும் முழுத்தவறானது.

தொடர்ச்சியான படைப்புச் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் ஆளுமைகள், புதிய தலைமுறையைச் சேர்ந்த ஆற்றல் மிக்க படைப்பாளிகள், பன்முகத்தன்மையான சிந்தனையாளர்கள், இலங்கையில் மட்டுமல்ல அதற்கு வெளியிலும் முக்கியமானவர் களாகக் கொள்ளப்படுவோர், பல்மொழிப் படைப்பாளிகள் எனப் பலரின் பங்கேற்புடன் நடந்ததே இலக்கியச் சந்திப்பு. இலக்கியச் சந்திப்பில் கலந்து கொள்ள முன்வந்திருந்த பலரை தொலைபேசி மூலமாகவும் அநாமதேய மின்னஞ்சல் மற்றும் முகப்புத்தகத் தகவல் மூலமாகவும் தொடர்ச்சியாக மிரட்டி கலந்து கொள்ளாமல் தடுக்கப்பட்ட முயற்சிகள் தாரளமாக நடந்தன. சிலர் இந்த மிரட்டல்களுக்குப் பணிந்து தயங்கினர். சிலர் தொடர்ச்சியான மிரட்டல்களால் இறுதி நேரத்தில் விலகிக்கொண்டனர். ஏனையோர் இத்தகைய அவதூறுப்பிரச்சாரங்களையும் எதிர்ப்பையும் அச்சுறுத்தலையும் மீறி நிகழ்வில் கலந்து கொண்டனர்.

புலம்பெயர் நாடுகளில் இருந்து வந்திருந்தோர் பத்தில் ஒரு பங்கினரே. 200க்கு மேற்பட்டோர் கலந்து கொண்ட சந்திப்பில் புலம்பெயர் நாடுகளிலிருந்து வந்திருந்தோர் ஆக 20 வரையானவர்களே. ஆகவே, மிகத் தரக்குறைவான வகையில் பொய்களை வைத்துக் கட்டப்பட்ட தீபச்செல்வனின் அவதூறை இலக்கியச் சந்திப்பின் சார்பாக அதன் ஏற்பாட்டுக்குழுவில் ஒருவ ராகச் செயற்பட்டவர் என்ற வகையிலும் என்னை மையப்படுத்தி சில பொய்களை எழுதியதன் காரணத்தினாலும் இந்த மறுப்பை உடன் பதிவிடுகிறேன்.

http://www.uyirmmai.com/Contentdetails.aspx?cid=6359

Link to comment
Share on other sites

இப்போதெல்லாம் இலக்கிய் சந்திப்பகளில் ஏன் அரசியலை மட்டும் பேசுகிறார்கள்? :(  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதெல்லாம் இலக்கிய் சந்திப்பகளில் ஏன் அரசியலை மட்டும் பேசுகிறார்கள்? :(  :(

எப்போதும் அப்படித்தான். அரசியல் இல்லாத இலக்கியம் இல்லைத்தானே. அதோடு பல்வேறு குழுக்களாகப் பிரிந்து சண்டை பிடிப்பது முதன் முதலில் இலக்கிய உலகில்தான் ஆரம்பித்திருக்கவேண்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இலக்கியச் சந்திப்பு தீபச்செல்வனுக்கு மறுப்பு

கருணாகரன்

இலங்கை இலக்கியச் சந்திப்பின் அரசியல்: ஈழத்திலிருந்து ஒரு கண்டனக்குரல்' என்ற தலைப்பில் உயிர்மை - ஆகஸ்ட் 2013 இதழில் தாராளமாக வாரியிறைக்கப்பட்ட பொய்களால் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார்.

பொய் 01. இலக்கியச் சந்திப்பு இலங்கை நிலைமையையோ அல்லது இலங்கையில் தமிழ் முஸ்லிம் மலையக மக்களின் பிரச்சினைகளையோ மறைப்பதற்காக நடத்தப்படவில்லை. அது அவற்றைப் பேசவே நடத்தப்பட்டது. தமிழ், முஸ்லிம், மலையக மக்களை மட்டுமல்ல, சிங்கள மக்களின் பிரச்சினை களையும் பேசியது. அரசாங்கத்தின் மக்கள் விரோத, ஜனநாயக விரோதச் செயற்பாடுகளையும் அது தாராளமாக விமர்சனத்துக்குள்ளாக்கியது. கேள்விகளற்று அரசாங்கத்தையும் அதன் மக்கள் எதிர்ப்புச் செயற் பாடுகளையும் எந்தச் சந்தர்ப்பத்திலும் ஆதரிக்கவில்லை. அதில் பங்கேற்றவர்களும் அத்தகைய நோக்கத்தோடு இயங்கவில்லை.

பொய் 02. யாழ்ப்பாணத்தில் அல்லது இலங்கையில் புத்தக அறிமுகங்களையும் வெளியீடுகளையும் நடத்தக்கூடிய சூழல் இல்லை என்று தீபச்செல்வன் எழுதுகிறார். இதற்கு சில சம்பவங்களையும் முன்வைக் கிறார். அரசியல் சட்டங்கள் குறித்தும் பிரச்சினைகள் மற்றும் அரசியல் நிலைவரங்கள் குறித்தும் யாழ்ப்பாணத்தில் பல கருத்தரங்குகள் நடக்கின்றன. இலக்கியச் சந்திப்பு நடந்த அதே 'யுரோவில்' அரங்கில் இலக்கியச் சந்திப்புக்கு முதல்நாள்கூட அவ்வாறானதொரு கருத்தாடல் நிகழ்ச்சி நடந்தது. இதேவேளை இந்த நிகழ்ச்சிகளை நடத்தும்போது சிலருக்கு இது தொடர்பாக உள்ளூர அச்ச உணர்வு ஏற்படுவதுண்டு. அதைப் பல நண்பர்கள் பல சந்தர்ப்பங்களிலும் குறிப்பிட்டிருக் கிறார்கள். கடந்த கால (யுத்தகால) அனுபவங்கள் அப்படியானவை. இலக்கியச் சந்திப்பை நடத்தும் போது எமக்கும் அத்தகைய உள்ளுணர்வு ஏற்பட்டதுண்டு. ஏனெனில் நீண்ட காலமாக பல்வேறு தரப்பினரின் பல வகையான அச்சுறுத்தல் சூழலில் வாழ்ந்த அனுபவம் ஆழ்மனதில் இன்னும் பலமான நிலையில் உள்ளது. எனினும் இவற்றை எதிர்கொண்டுதான் புதிய நிலை மையை உருவாக்க வேண்டும் எனத் தீர்மானித்தோம்.

கடல் வலயச் சட்டம் அமலில் இருந்த போது கடலுக்குப்போய் மீனவர்கள் தொழில் செய்திருக்கிறார் கள். ஊரடங்குச்சட்டம் அமலில் இருந்தபோது மக்கள் அதற்குள்ளும் சுழித்துக்கொண்டு, மீறித் தங்கள் காரியங்களைப் பார்த்திருக்கிறார்கள். பொருளாதாரத் தடை நடைமுறையில் இருந்த போது அதற்குள்ளாலும் பொருட்களைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள். பாதைத்தடை இருந்த போது மிக அபாயமான வழிகளால் (கிளாலி போன்ற கடல்வழி) உயிரைத் துச்சமாக மதித்தே பயணங்களைச் செய்திருக்கிறார்கள். இதுபோல அதிகாரத்தின் பல தடைகளையும் கட்டுப்பாடுகளையும் சட்டங்களையும் கடந்ததே மனித இயக்கம். இதையெல்லாம் சமூகத்தின் தேவை, வாழ்க்கையின் தேவை எனக் கருதியே இங்கு வாழும் மக்கள் செய்திருக்கிறார்கள். இதை ஒத்ததே எமது இலக்கியச் சந்திப்பு முயற்சியும்.

தவிர, கொழும்பில் வாராவாரம் சமூக விஞ்ஞான வட்டத்தினர் பல நிகழ்ச்சிகளைச் செய்கின்றனர். அண்மையில் தேசிய கலை இலக்கியப்பேரவையின் இலக்கிய மாநாடும் 40 ஆவது ஆண்டு நிறைவுக் கூட்டமும் நடந்தது. இதன் தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்திலும் அது கூட்டங்களை நடத்தியது. அப்படியென்றால் தேசிய கலை இலக்கியப்பேரவை அரச ஆதரவு அமைப்பாகத் தொழிற்படுகிறது என தீபச்செல்வன் கருதுகிறாரா? இதுபோலப் பல நிகழ்ச்சிகள் அரசுக்கும் அரசாங்கத்துக்கும் சவாலாக நடக்கின்றன. இதைக் குறித்த தீபச்செல்வனின் அவதானம் என்ன? அபிப்பிராயம் என்ன? கிழக்கிலும் இதுபோல பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன இதைக் குறித்து?

மேலும் தீபச்செல்வன் ஈழ நிலவரம் குறித்து அரசாங்கத்துக்கு எதிராக எழுதும் எழுத்துகளும் அவர் போன்றவர்கள் எழுதுவதும் இன்று இலங்கையில் சாத்தியமாகியுள்ளது. அவற்றை இலங்கையின் பல தமிழ்ப் பத்திரிகைகள் மிகத் துணிச்சலுடன் தாராளமாகப் பிரசுரிக்கின்றன. அரசாங்கத்தையும் அதிபராக இருக்கும் மகிந்த ராஜபக்ஷவையும் இலங்கைப் படைகளையும் அரச பிரதானிகளையும் கடுமையாக விமர்சிக்கும் நிலை இன்று உருவாகியுள்ளது. இதன் அர்த்தம் இங்கே நிலைமை முற்றாகச் சாதாரண நிலைக்கு வந்து விட்டதென்பதல்ல. யுத்தகாலத்தில் நிலவிய நெருக்கடிச் சூழல் இன்றில்லை என்பதே. இல்லையெனில் (முன்னர் இருந்ததைப்போன்ற நெருக்கடி நிலை இருந்திருக்குமானால்) தீபச்செல்வன் தற்போது கொழும்பில் நின்று பணியாற்ற முடியாது. அவரும் அதை விரும்பியிருக்க மாட்டார். நிலைமையும் விட்டுக்கொடுத்திராது.

எனவே நிலைமையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது என்பதே உண்மையானது.

பொய் 03. நிலாந்தனின் வீட்டில் நடைபெற்ற, றஷ்மியின் இரண்டு கவிதை நூல்களின் விமர்சனக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எவரும் கலந்து கொள்ளவில்லை. தீபச்செல்வனோ அரச சார்பு பாராளுமன்ற உறுப்பினரான சந்திரகுமார் கலந்து கொண்டார் என பொறுப்பற்ற விதமாக எழுதியிருக்கிறார். பதிலாக அங்கே கலந்து கொண்டவர்களில் ஒருவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் பேராசிரியர் இரா. சிவச்சந்திரனே. அவரும் அரசியற் பிரதிநிதியாகக் கலந்து கொள்ளவில்லை. ஒரு இலக்கிய சமூகச் செயற்பாடுகளில் ஆர்வமுள்ள ஒருவர் என்ற வகையிலேயே.

பொய் 04. இலக்கியச் சந்திப்பு தனியே ஒருவரால் (கருணாகரனால்) நடத்தப்பட்டதல்ல. அது கூட்டுழைப்பின் விளைவு. பல்வேறு தரப்பையும் சேர்ந்த வெவ்வேறு அபிப்பிராயங்களையும் அரசியல் மற்றும் இலக்கிய பார்வை உடையவர்களும் கூடி நடத்திய நிகழ்வு. இதற்குத் தனியே ஒருவரைப் பொறுப்பாக்குவதும் அவரை உரிமை கொண்டாட வைப்பதும் தவறு. இலக்கியச் சந்திப்பு தொடர்பான அறிவிப்புகள் பகிரங்கமானவை. இலக்கியச் சந்திப்பின் ஏற்பாட்டுக்குழுவில் அவர்களுடைய பெயர்கள் உண்டு. நிகழ்விலும் ஏற்பாட்டாளர்களை அவதானித்திருக்கலாம்.

பொய் 05. அ.யேசுராசா லண்டனில் நடந்த இலக்கியச் சந்திப்புக்குச் செல்லவில்லை. நோர்வே - பேர்கன் நகரத்தில் நடந்த 28 வது இலக்கியச் சந்திப்பில் அ. யேசுராசாவும் சு. வில்வரெத்தினமும் கலந்துகொண்டனர் (வரலாறு குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என்கின்ற விதமாக தீபச்செல்வன் சோபா சக்திக்கு அளித்த நேர்காணலில் கூறியது இங்கே கவனிக்கத்தக்கது. பார்க்க: தீபச்செல்வனை ஷோபாசக்தி கண்ட நேர்காணல்).

பொய் 06. 'இலக்கியச் சந்திப்பை நடத்தும் ஆட்கள் கடுமை யான புலி எதிர்ப்பாளர்கள் என்பதையும் அதன்மூலம் இலங்கை அரசுக்கு ஆதரவு தேடுபவர்களாகவுமே இருக்கிறார்கள் என்பதை இலக்கியத்தில் பல தசாப்தங்களாகவே இயங்கிக் கொண்டிருக்கும் அ.யேசுராசா அறிந்திருக்கக்கூடும்' என்கிறார் தீபச்செல்வன். இதில் அ. யேசுராசாவைப்பற்றி தீபச்செல்வன் எவ்வளவு தவறாகக் கருதுகிறார்? இலக்கியச் சந்திப்பைப் பற்றி அதன் பின்னணி, அடிப்படைகள், அவற்றை யார் நடத்துகிறார்கள் என்பது பற்றியெல் லாம் நன்றாக அறிந்திருந்த நிலையிலேயே

அ.யேசுராசா இலக்கியச்சந்திப்பில் கலந்து கொண்டார். அப்பொழு தும் இலக்கியச் சந்திப்பு அடக்குமுறைகளுக்கு எதிராகவும் ஜனநாயகத்தைக் கோரியுமே நடத்தப்பட்டது. அப்போதும் புலிகளைப் பற்றிய - அரசைப்பற்றிய விமர்சனங்கள் இலக்கியச் சந்திப்பின் போது முன்வைக்கப்பட்டிருந்தன. ஆனால், தற்போது அதன் அடிப்படையும் இயங்கு முறையும் அப்படியே இருந்தாலும் யுத்தத்திற்குப் பின்னரான சூழலில் அதன் தன்மையில் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. சூழலில் உள்ள யதார்த்தமும் உண்மையும் அடிப் படையாகக் கொள்ளப்பட்டு இலக்கியச் சந்திப்பு நடந்தது. இலங்கை - யாழ்ப்பாண இலக்கியச் சந்திப்பு அதற்கு நல்ல உதாரணம்.

பொய் 07. இலங்கை இலக்கியச் சந்திப்பு எந்த நிலையிலும் புலி ஆதரவு புலி எதிர்ப்பு என்ற பிரச்சினைக்குள் சிக்கலுக்கு அடிப்படைக்குள் செல்லவில்லை. அதைப்பற்றி அந்த அரங்கு பொருட்படுத்தவே இல்லை. இலக்கியச் சந்திப்புக்கு அது தேவையு மல்ல. மாறாக, அது ‘ஜனநாயகம், பன்மைத்துவம், சமநிலை’ என்பவற்றின் அடிப்படையில் ஈழ இலக்கியத்தில் பேசு பொருளாக இருந்த, இருக்கின்ற அனைத்து விடயங்கள் பற்றியும் எத்தகைய சார்பு நிலைகளுமின்றி பேசும் அரங்காக இருந்தது. இதில் பல்வேறு அரசியல் நிலைப்பாடுடையவர்களும் இலக்கியக் கோட்பாடுகளை உடையவர்களும் இலக்கிய வகைகளைக் கொள்பவர்களும் ஆர்வத்தோடு பங்கேற்றனர்.

பொய் 08. நிச்சயமாக புலி எதிர்ப்பாளர்களால் அல்லது அரச ஆதரவாளர்களால் அல்லது அரச தரப்பினால் இலக்கியச் சந்திப்பு நடத்தப்படவில்லை. புலிகள் இல்லாத சூழலில் எப்படி புலிகளை எதிர்க்கமுடியும்? புலிகளின் கருத்துலகம் சார்பானவர்களைக் கூட இலக்கியச் சந்திப்பு நிராகரிக்கவில்லை.

(இலங்கையில் அரச தரப்பினால் நடத்தப்படுவது சாகித்திய இலக்கிய விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்வு மற்றும் மாகாணசபைகளால் நடத்தப்படும் இலக்கிய விழாக்கள் மற்றும் பிரதேச மட்டத்திலான கலாசார விழாக்கள் என்பவையே).

பொய் 09. இலங்கையில் இலக்கியச் சந்திப்பை நடத்த முடியாது என்பதைப் பொய்யாக்கி, இலங்கையிலும் நடத்தலாம் என இலக்கியச் சந்திப்புக்காக வந்திருந்த விஜி பி.பி.ஸி. வானொலிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்ததாக தீபச்செல்வன் கீழ்வருமாறு அர்த்தப்படுத்துகிறார்.

'இவர்களின் பிரச்சினை, இலங்கையில் ஒரு இலக்கியச் சந்திப்பை நடத்த வேண்டும் என்பதல்ல. இலக்கியச் சந்திப்பை இலங்கையில் நடத்துவதன் மூலம் இலங்கை அரசானது, கருத்துச் சுதந்திரத்துக்கும் படைப்புச் சுதந்திரத்துக்கும் இடமளிக்கிறது என்று காட்டி இலங்கை அரசைக் குற்றச்சாட்டுகளிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதேயாகும்'. இதைப் படிக்கும்போது சிரிப்புத்தான் வருகிறது. இலங்கை அரசுமீதும் தற்போது ஆட்சியிலிருக்கும் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் மீதும் ஏராளமான குற்றச் சாட்டுகளைப் பலரும் வைத்துள்ளனர். பலர் தங்கள் வசமுள்ள ஆதாரங்களையும் பகிரங்கப்படுத்தியுள்ளனர். இவற்றை அடிப்படை யாகக் கொண்டு, இதுவரை இந்த உலகம் எத்தகைய நடவடிக்கை களையும் எடுக்கவில்லை. பதிலாக சர்வதேச சமூகத்தின் வர்த்தக மற்றும் பொருளாதார, ராஜீய உறவுகள் இலங்கையுடன் தொடர்ந்தும் சீரான முறையிலேயே உள்ளன. இலங்கைக்கான பிற நாடுகளின் கொடைகளும் கடனுதவிகளும் இதைத் துல்லியப்படுத்துகின்றன. இந்த நிலையில் இலக்கியச் சந்திப்பு, அரசாங்கத்தைக் காப்பாற்ற முற்படுகிறது, அதனுடைய ஜனநாயகத் தன்மைக்கு சான்றாகச் செயற்பட முற்படுகிறது என்பது பெரும் வேடிக்கையே. உண்மையில் இலக்கியச் சந்திப்பையோ அல்லது அதில் கலந்து கொண்டவர்களையோ பற்றி அரசு பொருட்படுத்தும் நிலையில் இல்லை. அவர்களை அது எந்த நிலையிலும் பயன்படுத்த வேண்டியதும் இல்லை. இதற்கு சான்றாக - இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் தமிழ்ப்பத்திரிகைகளும் தீபச்செல்வன் போன்றவர்களும் எழுதும் அரச எதிர்ப்பு எழுத்துகளை அனுமதிப்பதன் மூலமாக இலங்கையில் தாராள ஜனநாயக நிலைமை உள்ளதாகக் காண்பிக்கிறது. இதை தீபச்செல்வன் போன்றோருடைய செயல்களே ஆதாரப்படுத்துகின்றன. எதையும் எழுத முடியாத, எதைப்பற்றியும் பேச வாய்திறக்க முடியாத சூழல் இருக்குமானால் இவர்கள் எழுதமுடியாதே. ஆகவே, இவர்களே அரசின் ஜனநாயகத்தன்மையை தங்களின் எழுத்துகளின் மூலமாக நிரூபிக்கிறார்கள். அந்த எதிர்ப்பு எழுத்துகளை பகிரங்கமாகப் பொதுவெளியில் வைப்பதன் மூலமாக.

இல்லையெனில், முன்னரே குறிப்பிட்டிருப்பதைப் போல இவ்வளவு தாக்கமான அரச எதிர்ப்பு எழுத்துகளைத் தொடர்ந்து பத்திரிகைகள் வெளியிட்டுக்கொண்டிருக்க இயலாது, எழுதுபவர்களும் எழுதிக்கொண்டு இந்த நாட்டிலேயே இயல்பாக வாழ்ந்துகொண்டிருக்க இயலாது.

பொய் 10. இலக்கியச் சந்திப்பில் கலந்து கொண்டவர்களையும் படைப்பாளிகளையும் மிகக் கீழான முறையில் விழித்திருக்கிறார் தீபச்செல்வன். சமூகப்பொறுப்புடையவர்கள், ஆளுமை மிக்க படைப்பாளிகள் எவரும் இலக்கியச் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறுகிறார். அத்துடன், புலம்பெயர் நாடுகளில் இருந்து வந்திருந்த புலி எதிர்ப்பாளர்களாலேயே இலக்கியச் சந்திப்புக் களம் நிரம்பியிருந்ததாகவும் கூறுகிறார். ஏனையவற்றைப்போல இதுவும் முழுத்தவறானது.

தொடர்ச்சியான படைப்புச் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் ஆளுமைகள், புதிய தலைமுறையைச் சேர்ந்த ஆற்றல் மிக்க படைப்பாளிகள், பன்முகத்தன்மையான சிந்தனையாளர்கள், இலங்கையில் மட்டுமல்ல அதற்கு வெளியிலும் முக்கியமானவர் களாகக் கொள்ளப்படுவோர், பல்மொழிப் படைப்பாளிகள் எனப் பலரின் பங்கேற்புடன் நடந்ததே இலக்கியச் சந்திப்பு. இலக்கியச் சந்திப்பில் கலந்து கொள்ள முன்வந்திருந்த பலரை தொலைபேசி மூலமாகவும் அநாமதேய மின்னஞ்சல் மற்றும் முகப்புத்தகத் தகவல் மூலமாகவும் தொடர்ச்சியாக மிரட்டி கலந்து கொள்ளாமல் தடுக்கப்பட்ட முயற்சிகள் தாரளமாக நடந்தன. சிலர் இந்த மிரட்டல்களுக்குப் பணிந்து தயங்கினர். சிலர் தொடர்ச்சியான மிரட்டல்களால் இறுதி நேரத்தில் விலகிக்கொண்டனர். ஏனையோர் இத்தகைய அவதூறுப்பிரச்சாரங்களையும் எதிர்ப்பையும் அச்சுறுத்தலையும் மீறி நிகழ்வில் கலந்து கொண்டனர்.

புலம்பெயர் நாடுகளில் இருந்து வந்திருந்தோர் பத்தில் ஒரு பங்கினரே. 200க்கு மேற்பட்டோர் கலந்து கொண்ட சந்திப்பில் புலம்பெயர் நாடுகளிலிருந்து வந்திருந்தோர் ஆக 20 வரையானவர்களே. ஆகவே, மிகத் தரக்குறைவான வகையில் பொய்களை வைத்துக் கட்டப்பட்ட தீபச்செல்வனின் அவதூறை இலக்கியச் சந்திப்பின் சார்பாக அதன் ஏற்பாட்டுக்குழுவில் ஒருவ ராகச் செயற்பட்டவர் என்ற வகையிலும் என்னை மையப்படுத்தி சில பொய்களை எழுதியதன் காரணத்தினாலும் இந்த மறுப்பை உடன் பதிவிடுகிறேன்.

http://www.uyirmmai.com/Contentdetails.aspx?cid=6359

 

எங்கே இதற்கு தீபச்செல்வனின் பதிலைக் காணோம் :unsure:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே இதற்கு தீபச்செல்வனின் பதிலைக் காணோம் :unsure:

தீபச்செல்வனின் கட்டுரைக்கு கருணாகரன் மறுப்புத் தெரிவித்திருக்கின்றார். அடுத்த மாதம் தீபச்செல்வன் விளக்கம் அளிக்கக்கூடும்!

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கருணாகரனுக்குப் பதில்

தீபச்செல்வன்


ஈழத்தில் நடந்த 41ஆவது இலக்கியச் சந்திப்பு பற்றி ஆகஸ்ட் மாத உயிர்மையில் நான் எழுதிய கட்டுரைக்கு செப்டம்பர் மாத இதழில் கருணாகரன் மறுப்பொன்றை எழுதியிருந்தார்.இலக்கியச் சந்திப்புக்கும் இலங்கை அரசுக்கும் தொடர்பில்லை என்பதைக் காட்டிலும் இலங்கையில் ஜனநாயகம் திரும்பிவிட்டது என்பதைத் தனது கள்ளத்தனத்தின் மூலம் அக்கறையோடு நிறுவியிருக்கிறார் கருணாகரன்.

கள்ளத்தனம் 01: இலக்கியச் சந்திப்பில் எல்லாத் தரப்பினரும் பேச அனுமதிக்கப்பட்டதாக கருணாகரன் குறிப்பிடுகின்றார். அப்படி எனில் குமாரவடிவேல் குருபரன் பேசுவதற்கு இடம் மறுக்கப்பட்டது ஏன்? இலங்கை அரசின் அமைச்சர் ஒருவருடன் தொடர்புடைய கருணாகரனும் ரங்கனும் கலந்துகொள்ள முடியும் என்றால் கஜேந்திரகுமார் தரப்புடன் தொடர்புடையதாகக் கருதப்பட்ட குமாரவடிவேல் குருபரனுக்குப் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன்?

கள்ளத்தனம் 02: நாட்டுக்கும் நிலவரத்திற்கும் சம்பந்தம் இல்லாத வகையில் எழுதியதை பிரமாண்டமாக வெளியிடலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால் எமது பிரச்சினைகளை மிகவும் கூர்மையாகப் பேசக்கூடிய படைப்புகளை வெளியிட இயலாது. அது தொடர்பான வெளிப்படையான விவாதங்களையும் நடத்தக்கூடிய சூழல் இல்லை. கருணாகரன் ஒரு கூட்டத்தை நடத்தி விட்டார் என்பதனால் கருத்துச் சுதந்திரம் திரும்பிவிட்டது என்று கூற முடியாது.

கொழும்பு நிலைமையை வைத்து வடக்கில் நிலைமை சரியாகிவிட்டது என்று சொல்ல முடியுமா? கொழும்பில் ஜே.வி.பி..யினரோ அல்லது காணாமல் போனவர்களோ ஒரு போராட்டத்தை நடத்த முடியும். அதையே யாழ்ப்பாணத்தில் அவர்கள் நடத்தினால் யாராக இருந்தாலும் இராணுவத்தால் தாக்குதல் நடத்தப்படும். உ-ம்:யாழில் ஜே.வி.பி. உறுப்பினர் ஹிந்துநெத்தி மீதான தாக்குதல். நவநீதம்பிள்ளையைச் சந்திக்க நின்றவர்கள்மீது பிரயோகித்த போலி ஆர்ப்பாட்டம்.

நான் எழுதுவதால் இயல்பு திரும்பிவிட்டது என்று கருணாகரன் நிறுவமுனைகிறார். நான் மட்டுமல்ல, இலங்கையில் இனப்பிரச்சினை ஆரம்பித்த காலம் தொட்டு பலர் எழுதி வருகிறார்கள். பத்திரிகைகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. பலர் அவ்வாறு அஞ்சாது எழுதி உயிரையும் இழந்திருக்கிறார்கள். அண்மையில் சிங்கள ஊடகவியலாளர் மந்தனாகூட இலங்கையை விட்டு வெளியேறினார்.

இரண்டு தகவல்கள் தவறுதலாக இடம்பெற்றிருந்தன. அதற்கான மறுப்பை நான் கடந்த இதழில் பதிவுசெய்தேன். ஆனால் இதை வைத்து ஒட்டுமொத்தமாகத் தனது செயற்பாடுகளை மறைக்கவும் தன் அரசைக் காப்பாற்றவும்தான் முயல்கிறார்.

கள்ளத்தனம் 03: நிலாந்தன் வீட்டில் நடந்த கூட்டத்திற்கு சந்திரகுமார் வந்தார் என்ற தகவல் தவறாக இடம்பெற்றது என்பதை நானே முகப்புத்தகத்திலும் உயிர்மையிலும் குறிப்பிட்டுவிட்டேன். தவிரவும் நிலாந்தன் வீட்டுக்கு சந்திரகுமாரை கருணாகரன் அழைத்துச் செல்லவில்லை என்பதனால் அவர் சந்திரகுமாருடன் இணைந்து செயற்படுவது பொய்யாகுமா? கருணாகரன் செய்யும் அரசியல் பொய்யாகுமா?

கள்ளத்தனம் 04: இலக்கியச் சந்திப்பு கருணாகரனால் மாத்திரம் நடந்ததல்ல என்று அவர் சொல்வது உண்மைதான். தேவதாசன் (போர் முடிந்ததும் ராஜபக்சேவை வாழ்த்தியவர்), விஜி, நிர்மலா இராஜசிங்கம் போன்ற இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவின் ஆட்களின் கூட்டு முயற்சியில்தான் இலக்கியச் சந்திப்பு நடந்தது.

கள்ளத்தனம் 05: யேசுராசா இலக்கியச் சந்திப்பில் கலந்துகொண்ட நாட்டின் பெயர் நார்வேக்குப் பதிலாக லண்டன் என்று இடம்பெற்றுவிட்டது. இதை நான் எனது மறுப்பில் பதிவு செய்திருக்கிறேன். இதையும் தனது அரசியலை மறைப்பதற்கான பொய்யாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

கள்ளத்தனம் 06: இலங்கையில் நடந்த இலக்கியச் சந்திப்பை யேசுராசா புறக்கணித்திருக்கிறார். அவரது புறக்கணிப்பை நார்வேக்குச் சென்ற முன்னைய இலக்கியச் சந்திப்பின் மூலம் கருணாகரன் மறைக்கப் பார்க்கிறார்.

அடக்குமுறைக்கு எதிராக ஜனநாயகத்தைக் கோரி இலக்கியச் சந்திப்பு நடந்ததாகக் கருணாகரன் சொல்லுகிறார். சிறுவர் படுகொலை (சாவகச்சேரி கபில்நாத் கொலை), சிறுமியர் பாலியல் வன்புணர்வுக் கொலை (நெடுந்தீவு லக்சினி),ஈழ ஆதரவாளர்கள், படைப்பாளிகள், ஊடகவியலாளர்களின் படுகொலையில் நேரடியான, மறைமுகமான தொடர்பு உள்ள ஒரு கட்சியில் இயங்குபவர் ஜனநாயகம், வன்முறை, அடக்குமுறை குறித்துப் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.

கள்ளத்தனம் 07: இலக்கியச் சந்திப்பில் பன்மைத்துவம் பேசுகிறார் கருணாகரன். அவரால் ஈழ ஆதரவுக் கருத்தையோ, இலங்கை அரச எதிர்ப்புக் கருத்தையோ, புலி ஆதரவையோ ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இது என்னவித பன்மைத்துவம்?

கள்ளத்தனம் 08: புலிகள் இல்லாத சூழலில் எப்படி எதிர்க்க இயலும் என்கிறார் கருணாகரன். இதைத்தான் கருணாகரன் போன்றவர்களிடம் நாமும் கேட்க வேண்டியுள்ளது. ஆனால் இதைத்தான் முழுநேரத் தொழிலாக அவர்கள் செய்கின்றனர்.

கள்ளத்தனம் 09: இலக்கியச் சந்திப்பில் கலந்து கொண்டவர் பற்றி அரசு பொருட்படுத்தவில்லை என்று கருணாகரன் குறிப்பிடுகின்றார். அரசால் அனுமதிக்கப்பட்ட இலக்கியச் சந்திப்பு குறித்து அரசு பொருட்படுத்தத் தேவையில்லை.நான் எப்படி எழுதுகிறேன் என்றுதான் அவர் கேள்வி எழுப்புகிறார்?அதனால்தான் ஒருவர் அதிகாரத்தின் உதவியின்றி வாழ முடியாது என்று கருதியே அவர் ஒரு அரசு தரப்பிடம் பாதுகாப்புக் கோரி சென்றிருக்கிறார்.

கள்ளத்தனம் 10: இலக்கியச் சந்திப்பில் கலந்துகொண்ட சமூகப் பொறுப்பு உடையவர்களைக் கீழாக விமர்சித்திருக்கிறேன் என்று கருணாகரன் சொல்கிறார்? விருதுக்கும் மாலைக்கும் புகழுக்கும் அரசியல்வாதிகளிடம் நலனுக்கும் அலையும் ஒரு பகுதியினர் வந்திருந்தனர் என்று குறிப்பிட்டேன். அதில் என்ன தவறு?

மிரட்டல்கள், பிரசாரங்கள் நடந்ததாகவும் கருணாகரன் சொல்கிறார். சிலர் இலக்கியச் சந்திப்பில் கலந்து கொள்ளத் தயங்கிய பொழுது தொலைபேசி வழியாக கடுமையான பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டு ஆட்களைச் சேர்த்தது கருணாகரன்தான்.



http://uyirmmai.com/contentdetails.aspx?cid=6389

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.