Jump to content

தளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 21 ம் ஆண்டு நினைவலைகளில்


Recommended Posts

நினைவழியாத்தடங்கள் - 09
 
காலை 9 மணியிருக்கும், தளபதி லக்ஸ்மன் அண்ணை(மன்னார்) முகாமிற்குள் அவசர அவசரமாக வந்து, தளபதி பால்ராஜ் அண்ணையை உடனடியாகச் சந்திக்க வேண்டும் எனத் தெரிவித்தார். பால்ராஜ் அண்ணை அப்பொழுது தான் வெளியில் செல்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்தார். உடனே லக்ஸ்மன் அண்ணையைத் தனது அறைக்கு வருமாறு அழைத்தார். சிறிது நேரத்தின் பின் அவசர அவசரமாக வெளியில் வந்தவர், உடனடியாக அங்கு இருந்தவர்களை புறப்படுமாறு கூறினார். இரண்டு வாகனங்களில் புறப்பட்டோம்.
 
லக்ஸ்மன் அண்ணையின் வாகனத்தில் ஏறிய பால்ராஜ் அண்ணை மற்றவர்களைப் ”பின்னால் வாங்கோ” எனக் கூறிவிட்டுப் புறப்பட்டார். வாகனம் பண்டத்தரிப்புப் பாதையில் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. எங்களுக்கு அவசரத்தின் காரணம் புரியவில்லை. 
 
இராணுவம் நகர்ந்ததாக செய்திகள் இல்லை, அராலிப்பகுதியால் இராணுவம் முன்னெடுப்புச் செய்யத் திட்டமிட்டுக்  கொண்டிருந்தான். அதை எதிர் கொள்ளவதற்கான தயார்ப்படுத்தல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. எனவே எதற்காக இந்த அவசரம் என்பதை அனுமானிப்பதற்குக் கடினமாக இருந்தது.
 
வாகனம் மாதகல் பகுதிக்குச் சென்று, ஓரிடத்தில் நின்றது. வாகனங்களில் இருந்து இறங்கியதும் சிறிய ஒழுங்கைக்குள்ளால் கூட்டிச் சென்றனர். எல்லோரும் சென்று கொண்டிருந்தோம். அந்த இடத்தில் ஆங்காங்கு போராளிகள் நின்றனர். அங்கிருந்த ஒரு வீட்டில் அப்போது யாழ்மாவட்டத்தளபதியாக இருந்த தினேஸ் அண்ணை (சு.ப.தமிழ்ச்செல்வன்) நின்றார். அந்த வீட்டின் பின்பக்கம் தோட்டம், தோட்டத்திற்கு அப்பால் குறுக்கு ஓழுங்கை, அதற்கு அப்பால் உள்ள பகுதிகளைப் பார்க்க முடியாமல் கிழுவைவேலி மறைத்தது. தளபதி பால்ராஜ் அண்ணை தினேஸ் அண்ணைக்கு அருகில் அமர்ந்து கதைத்தார்.
 
அங்கு நின்ற சில போராளிகளது உடல்களில் செம்மண் ஒட்டியிருந்தது, அவர்களின் முகங்களில் படபடப்பும் மௌனமும் தெரிந்தது. அவர்களிடம் ‘கடைசியாக எங்க கண்டனீங்கள்’ என்று வினவ ‘‘நாங்கள் பின்வாங்கி வரக்கில, கிணத்துக் கட்டோட படுத்திருந்து ஒருவர் சுட்டுக்கொண்டிருந்தவர். நாங்கள் அவரைக்கடந்து தான் வந்தனாங்கள். அவர் தான் றோமியோ நவம்பர் என்று எங்களுக்கு தெரியாது” என்றனர்.
 
யாழ்மாவட்டம் மற்றும் சாள்ஸ் அன்ரனி படையணியின் தளபதியாக இருந்த, அதிகாரிகள் கல்லூரிப்பயிற்சி பொறுப்பாளர் ராஜன் அண்ணையைப் பற்றித்தான் கதைக்கின்றார்கள் என்பதை புரிந்து கொண்டபோது தூக்கி வாரிப்போட்டது. அதுவும் றோமியோ நவம்பரைத் தெரியாது என்பது சற்றுத் திகைப்படைய வைத்தாலும் அவர்கள் புலனாய்வுத்துறையின் புதிய போராளிகள் என்பதால் அவரைக் கண்டிருக்க வாய்ப்பில்லை என்பதை உணரமுடிந்தது.
 
சிறிது நேரம் அமைதியாக அச்சண்டையில் இருந்து தப்பி வந்தவர்களை விசாரித்த தளபதி பால்ராஜ் அண்ணை கேட்டார் ‘‘கிணத்தடிக்குக் கூட்டிக் கொண்டு செல்லமுடியுமா’ அவர்கள் ‘ஆம்’ என்று தலையாட்ட லெப்கேணல் ரவி, லெப்கேணல் கில்மன் ஆகியோருடன் வேறு போராளிகளையும் ஒழுங்குபடுத்தி ‘றோமியோ நவம்பர் இருந்த இடத்தடிக்குச் சென்று  அப்பகுதியில் வித்துடல் இருக்கின்றதா?’ எனப் பார்க்குமாறு கூறினார்.
 
அவர்களும் வாழைத்தோட்டத்திற்குள்ளால் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு நகரத் தொடங்கினர். அப்போது அங்கு நின்ற ஒருவர்  சம்பவத்தைப்பற்றி விளங்கப்படுத்தினார். ‘நாங்கள் (புலனாய்வுத்துறை அணியினர்) அந்தப்பகுதியில் கிளியறிங் செய்து வரும் இராணுவத்தினர் மீது பதுங்கித்தாக்குதல் செய்வதற்கான வேவுபார்த்து, தாக்குதலுக்குத் தயாராகவிருந்தோம். அந்த நேரத்தில்தான் ராஜன் அண்ணை  எங்களைப்பார்க்க வந்தவர். கோபி அண்ணையாட்கள் இந்தப் பதுங்கித்தாக்குதல் பற்றிய திட்டத்தைப் பற்றி அவரிடம் கூறினர்கள். ராஜண்ணையும் இது ஒன்றும் கடினமான சண்டையில்லை என்று கூறினார். தாக்குதலுக்கான ஒழுங்குகள் இரவோடிரவாகச் செய்து முடிக்கப்பட்டன. இதில் சம்பந்தப்பட்டவர்களைத் தவிர வெளியில் யாருக்கும் தாக்குதலைப்பற்றித் தெரியாது. இரவு அணிகள் நிலையெடுத்துத் தயாராகின. மறுநாட்காலை கிளைமோர் வெடிச்சத்தத்துடன் சண்டை ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத வகையில் பக்கவாட்டால் வந்த இராணுவம்  தாக்குதலைத் தொடுத்தது. இதனால், சண்டை ஆமிக்குச் சாதகமாக மாறிவிட்டது, கோபியும் தலையில் காயப்பட்டுத் தொடர்பற்றுப்போக, சண்டையின் தலைமையை நேரடியாகப் பொறுப்பெடுக்கவேண்டிய நிலையில், தனது கோல்ட் கொமாண்டோ ஆயுதத்தை ஒருவரிடம் கொடுத்து விட்டு ஏ.கே ரகத்துப்பாக்கியைக் வாங்கிக் கொண்டு சண்டைப்பகுதிக்குள் தனித்துச் சென்றார். அணிகளைப் பின்னுக்கு எடுப்பதற்காகக் கிணற்றுக்கட்டைக் காப்பாகப்பயன்படுத்தி தனியே சண்டையிட்டார்’ எனத் தனக்குத் தெரிந்தவற்றைச் சொன்னார்.
 
சண்டை நடந்த இடத்தில் நிலவரங்களை அறிய வாழைத்தோட்டத்திற்குள்ளால் சென்றவர்களின் தகவலுக்காக எல்லோரும் காத்திருந்தனர். அவர்கள் திரும்பி வந்தனர். வரும்போது ராஜன் அண்ணையின் நோட்புக்கை எடுத்து வந்தனர். அவர்கள் ‘கிணற்றுக்கட்டிலிருந்து சண்டையிட்டிருக்கின்றார். பக்கவாட்டால் வந்த ஆமி அவரை கிணற்றடியில் வைத்து சுட்டிருக்கின்றான். அவர் சண்டையிட்ட இடத்து மண்ணில் இரத்தம் சிந்தியிருக்கின்றது. இழுத்துக் கொண்டு போன தடயம் இருக்கின்றது. தடையத்தை பின்தொடர்ந்து போனம் தடையம் அப்படியே இராணுவக்காவலரண் பக்கமாகச் செல்கின்றது எனச் சொன்னார்கள்.
 
வீரச்சாவும், அவரது உடலை இராணுவம் எடுத்துச் சென்று விட்டான் என்பதும் ஓரளவு உறுதிசெய்யப்பட்ட நிலையில் ‘இனிப் போவம்’ என தினேஸ் அண்ணை சொல்ல, பால்ராஜ் அண்ணை திருப்தியற்ற நிலையில் அங்கிருந்து வெளிக்கிட்டார். பின்னுக்கு வந்த அவர் தளபதி தினேஸ் அண்ணையிடம் ‘நீங்கள் போங்கோ நான் சண்டையில் பங்குபற்றின போராளிகளுடன் கதைத்துவிட்டு வருகின்றேன்’ எனச் சொல்லி விட்டுப் போய்விட்டார்.
 
சற்று நேரம் மீண்டும் அப்போராளிகளுடன் கதைத்துவிட்டு ‘நான் றோமியோ நவம்பர் வீரச்சாவடைந்த இடத்தைப் பார்க்கவேண்டும், போவம்’ என்றார். மீண்டும் அந்த வீட்டடிக்கு வந்து வாழைத்தோட்டத்திற்குள்ளால் தவண்டு கிணற்றடிக்குச் சென்றோம். அங்கு சென்று றோமியோ நவம்பர் சண்டையிட்ட இடம், எந்தப்பக்கத்தால் இராணுவம் இழுத்துக் கொண்டு சென்றான் என்பதையெல்லாம் பார்த்து விட்டு, என்ன பிரயாசையோ தெரியவில்லை. மீண்டும் அந்தப்பகுதிக்குள் ஒவ்வொரு திசைக்கும் ஆட்களை அனுப்பி எங்காவது உடல் இருக்க வாய்ப்பிருக்கிறதா? என மீண்டும் தேடச் சொன்னார் தளபதி பால்ராஜ் அண்ணை.
 
சாள்ஸ் அன்ரனி படையணியின் உருவாக்கத்தில் வலுவான பங்களிப்பைச் செய்த ஒரு தளபதி, அவரின் உடல் கிடைத்துவிடாதா! என்ற ஏக்கம் பால்ராஜ் அண்ணையிடம் வெளிப்பட்டது. ஒவ்வொரு பக்கமும் சென்றவர்கள் வரும்போது இரகசியமான குரலில் ‘என்னமாதிரி என்னமாதிரி’ என எதிர்பார்ப்புடன் கேட்டுக்கொண்டிருந்தார். இறுதியாக அவர் இரத்தப்படிவு இருந்த இடத்தில் கையை வைத்து சிறிது நேரம் மௌனமாக இருந்து விட்டுத் திரும்பினார்.
 
சாள்ஸ் அன்ரனி படையணி 1991 உருவாக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடங்கள் தான் இருவரும் முதன் முதலில் இணைந்து பணியாற்றினர்கள். அந்தக் குறுகிய காலத்திற்குள்  பால்ராஜ் அண்ணைக்கும் அவருக்குமிடையிலான அந்த நெருக்கமான நட்பு ஏற்பட்டது. ராஜண்ணையின் அற்புதமான, அர்ப்பணிப்பான, அன்பான, எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் குணவியல்பு இலகுவில் யாரையும் கவர்ந்திழுக்கும் தன்மை வாய்ந்தது.
 
அதனாலேயே எல்லா மாவட்டங்களிலும் இருந்து வந்த போராளிகளின் மனங்களை வென்று ஆளுமை செலுத்தி, சாள்ஸ் அன்ரனி படையணியின் வளர்ச்சியில் ஒரு முக்கிய பங்காற்றினார்.
 
சாள்ஸ் அன்ரனி படையணி  சந்தித்த முதற்சமரான  ‘வன்னி விக்கிரம’ முதல்நாள் எதிர்ச்சமரைத் தலைமை தாங்கி இராணுவத்திற்குப் பாரிய இழப்பை ஏற்படுத்தினார். ஒரு உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டது. சிறிது இடைவெளியின் பின்னர்  வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கி நகர்ந்த இராணுவத்துடனான கடுமையான மோதலில் கையில்  காயமடைந்தார்.
 
பின்னர் ஆ.க.வே சண்டையில் பிரதான பங்காற்றிய  ராஜண்ணையைப்பற்றி மூத்ததளபதி பொட்டம்மான் பதிவு செய்ததாவது ‘‘ஆனையிறவுப் பெரும் போர்க்களம், ஓய்வின்றிப் பம்பரமாய் ராஜன், சென்றி நிற்கும் பங்கருக்குள், பசீலன் பொயின்ரில், சமையற் கொட்டிலில், சந்தியில் இருந்த  மெடிக்ஸ் வீட்டில், எங்கும் நின்றான்- எல்லா நேரமும் நின்றான். கட்டைக்காட்டில் ஆமியின் கவசவாகனம் நகர்ந்தாலும் ஆர்.பி.ஜிக்கு றோமியோ நவம்பர். புல்லாவளியில் ஆட்லறி செல் விழுந்து இரண்டு பெர் செத்து ஐந்து பேர் காயம் என்றால், மெடிக்ஸ் வானுக்கு றோமியோ நவம்பர். மெடிக்ஸ் வானை போகவிடாமல் மேலே கெலி நின்றால் கலிபர் அனுப்பவும் றோமியோ நவம்பர். குணாவின் குறூப்புக்கு அனுப்பிய சாக்குகளுக்குச் சாக்கு ஊசி வேண்டும் என்றால், றோமியோ நவம்பர். வீரர் வீழ்ந்து வியூகம் உடைந்து எதிரிப்படை முன்னேறும் வேளையில், தனித்த வீரரை ஒன்றாய்ச் சேர்த்து எதிரியைத் தடுக்கும் வேலைக்கும் றோமியோ நவம்பர். எல்லாவற்றிற்கும் நின்றான். எல்லாப்பாரத்தையும் தானாய்ச் சுமந்தான். எப்படிப்பட்டவனை நாம் இழந்து விட்டோம்”
 
ராஜன் அண்ணை ஒரு இறுக்கமான தளபதியாகத் தெரிந்தாலும் போராளிகள் அவருடன் நட்பாகவே பழகுவார்கள். ஒரு தடவை அணிகளுக்கான பொருட்களை சீர் செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு அணித்தலைவர் தனக்கு ‘இன்னும் எத்தனை தருவீர்கள்’ எனக்கேட்க  அதற்கு ‘ஐந்து’ எனக்கூறினார். சத்தத்தில் அவரும் விளங்காமல் திருப்பிக்கேட்க , அவர் கையைத்தூக்கி ஐந்து எனக் காட்ட அந்தப்போராளி ‘என்ன அண்ணை ஐந்து என்றுவிட்டு மூன்றைக் காட்டுகின்றீர்கள்’ எனக் கேட்டான். சிரித்து விட்டு, மறுகையால் ஐந்தைக்காட்டினார். ஏனெனில் அவரது ஒரு கையில் இரண்டு விரல்கள் இல்லை.  இதனாலேயே அந்தப்போராளியும் அதை நகைச்சுவையாக அப்படிக் கேட்டார்’.
 
பின்னர் ராஜன் அண்ணை, தலைவரின் பெரும் கனவில் உருவான அதிகாரிகள் பயிற்சிக்கல்லூரிக்கு பொறுப்பாக நியமிக்கப்படுகின்றார். எல்லாமாவட்டங்களிலும் இருந்து தெரிவு செய்து எடுக்கப்பட்ட போராளிகளை பன்முக ஆற்றலுள்ள தளபதிகளாக வளர்த்தெடுக்கும் பணியினைச்  செய்தார். இந்தப்பணியைச் செய்து கொண்டிருந்த சமயத்தில் தான் மாதகலில் நடைபெற்ற பதுங்கித்தாக்குதல் சம்பவத்தில்   வீரச்சாவடைய நேரிட்டது.
 
1992 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அதிகாரிகள் பயிற்சிக்கல்லூரி, அவரது வீரச்சாவுடன் நிறுத்தப்பட்டது. பின்னர்  புதிய  அதிகாரிகள் பயிற்சிக்கல்லூரி 1994 ம் ஆண்டே பிரிகேடியர் பானு தலைமையில் மீள ஆரம்பிக்கப்பட்டது. ராஜண்ணையின் இழப்பின் பின் இரண்டு வருடங்கள் எடுத்தது  அதற்குப்  பொருத்தமான  ஒரு  பொறுப்பாளரைத் தெரிவு செய்ய என்பதில்  இருந்து  ராஜன்  அண்ணையின்  ஆற்றலை புரிந்து கொள்ளலாம்.
 
அத்தகைய  சிறந்த தளபதியை இழந்து 21 வருடங்கள் ஆகின்றன.  ஈழவிடுதலைப்போராட்டத்தில் அர்ப்பணிப்பான,  ஆற்றலுள்ள, ஆளுமைமிக்க தளபதிகளில் லெப்கேணல் ராஜன் அவர்களுக்கான தனியிடம் நினைவு கொள்ளப்பட்டுக்கொண்டேயிருக்கும்.
 
27.08.1992  அன்று யாழ். மாதகல் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம் பெற்ற மோதலில்
 

மேலாளர்கள்(அதிகாரிகள்) பயிற்சிக் கல்லூரிப் பொறுப்பாளர்
லெப்.கேணல் ராஜன் (றோமியோநவம்பர்)
(சோமசுந்தரம் சற்குணம் – மாதகல், யாழ்ப்பாணம்)

 

கப்டன் கணேசன் (கணேஸ்) 
(புண்ணியமூர்த்தி ரகு – கந்தளாய், திருகோணமலை)

 

கப்டன் வன்னியன் 
(கணபதிப்பிள்ளை கணநாதன் – துணுக்காய், முல்லைத்தீவு)

 

லெப்டினன்ட் தயாபரன் (பார்த்தீபன்)
(சிவசுப்பிரமணியம் சிவசொரூபன் – யோகபுரம், முல்லைத்தீவு)

 

லெப்டினன்ட் அருளையன் (பிரதீப்) 
(சாமித்தம்பி மகிந்தன் – புதுக்குடியிருப்பு, மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் இளங்கோ (யோகராஜா) 
(பாஸ்கரன் பிரபாகரன் – தையிட்டி,  யாழ்ப்பாணம்)

 

வீரவேங்கை கலைச்செல்வன் (குகன்) 
(இரமயநாதன் புனிதராசன் – பருத்தித்துறை, யாழ்ப்பாணம்)

 

வீரவேங்கை மதியழகன் 
(நடராசா பூவிலிங்கம் – புலோப்பளை,  யாழ்ப்பாணம்)

வீரவேங்கை அறிவழகன்
(நாகலிங்கம் சிவகுமார் – கும்பிழான்,  யாழ்ப்பாணம்)

 

ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

 
22-Lt-Col-Rajan-554x800.jpg
 
 
Link to comment
Share on other sites

மாவீரருக்கு வீரவணக்கம்..!

Link to comment
Share on other sites

நினைவழியாத் தடங்களில் நினைவுகளோடு நிறைந்த தளபதி ராஜண்ணாவை நினைவுகூர்ந்த பகிர்வுக்கு நன்றிகள் வாணன்.

Link to comment
Share on other sites

அஞ்சலிகள்... 

 

வீரச்சாவடையும் போது  ராஜன் அண்ணை  மூண்று  வேறுவகையான பொறுப்புகளில் இருந்தார்...   சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவின் தளபதி,  சமர் திட்டமிடல் தளபதி ,  அதிகாரிகள் பயிற்சி கல்லூரியின் தளபதி...  எனும் பொறுப்புக்கள் வகித்தார்... ! 

 

யாழ் கோட்டை  தாக்குதலின் போது ஏணி வைத்து மதில் ஏறிய போது மதில் மேல் நிண்ட இராணுவ வீரன் அவரின் தலையின் மேலை வைத்த துப்பாக்கியை பிடிங்கி எடுக்க முயண்ற போது உள்ளங்கையில் வெடிப்பட்டு  நடுவில் இருந்த இரண்டு விரலை இழந்து இருந்தார்...   அது அவர் பட்ட 27 வது காயம் எண்று  சிரித்த் படி சொல்லி க்கொள்வார்...   பொன்னியின் செல்வனில் வரும் பழுவேட்டையருக்கு  27 தழும்புக்கள் எண்று படிக்கும் போது எனக்கு ராஜன் அண்ணாதான் ஞாபகத்தில் வருவார்.... 

 

வலது கையில் நடு விரல்கள் இரண்டு இல்லாததால் கிணத்தில் தண்ணீர் அள்ளி குளிப்பதில் எப்பவும் சிரம படுவார்...  உதவிக்கு போனால் கடுப்பாயிடுவார்... காட்டமாக ஒரு பார்வையோடு நான் என்னடா வலசு (வலது குறைஞ்சவை) எண்டு நினைச்சியளோ என்பார்... 

 

போராளிகள் மீது மிகவும் அக்கறையான ஒருத்தர்...  ஒரு முறை  பெடியளுக்கு கட்டுவதுக்கு சாறம் இல்லை , தமிழேந்தி அண்ணை  பணம் இல்லை எண்டு விட்டார்...  பொருளாதார தடைக்காலம் அவரது தமயன் இந்தியாவில் இருந்து கடத்தி கொண்டு வந்து இருந்த சாறங்கள் அனைத்தையும் வாகனம் விட்டு அள்ளிக்கொண்டு வந்தார்... 

 

போர்களத்திலையும் நிகரில்லாத போர் வீரன்...  அதை அவரின் வீரத்தழும்புகளே சொல்லும்.. 

 

 

Link to comment
Share on other sites

குறிப்புகளுக்கு நன்றி தயா.. ஒவ்வொரு மாவீரர் குறிப்பு வரும்போதும் தெரிந்தவர்கள் ஓரிரு வரிகள் எழுதினீர்களாயின் செவிவழி வரலாறாவது மிஞ்சும். எத்தகைய போராளிகளையெல்லாம் நமது போராட்டம் உருவாக்கியது என்பதை அறியும்போது பெரும் மலைப்பாக உள்ளது..

Link to comment
Share on other sites

அவரின் ஆளுமை அவருடன் இருந்தவர்களுக்குதான் தெரியும். கண் முன்னால் நிற்கின்றார் அவரின் புன்னகையுடன்.  நன்றி வாணன் பகிர்வுக்கு

 

வீர வணக்கங்கள்

 

 

Link to comment
Share on other sites

குறிப்புகளுக்கு நன்றி தயா.. ஒவ்வொரு மாவீரர் குறிப்பு வரும்போதும் தெரிந்தவர்கள் ஓரிரு வரிகள் எழுதினீர்களாயின் செவிவழி வரலாறாவது மிஞ்சும். எத்தகைய போராளிகளையெல்லாம் நமது போராட்டம் உருவாக்கியது என்பதை அறியும்போது பெரும் மலைப்பாக உள்ளது..

 

 

1991ல் வன்னி விக்கிரம இரண்டு இராணுவ நடவடிக்கையின் போது  மன்னார் மடுவை நேக்கிய இராணுவ நடவடிக்கை கொப்பேகடுவ தலைமையின் நடந்தது...   எப்போதும் மெய்ப்பாதுகாவலர் வைத்துக்கொள்ள விரும்பாத ராஜன் அண்ணை தலைமை ஏற்கிறார்...   முதல்நாள் நடந்த பூவரசம்குளம் சண்டையில் எனது அணியில் அனேகர் காயம் அடைந்தும்  வீரச்சாவடைந்தும் இருந்தனர்...  அணி இல்லாமல் தனித்து நிண்ட என்னை பிடிச்சு பால்ராஜ் அண்ணை  ராஜனுக்கு பாதுக்காப்பாய் நில் அவனுக்கு  ஏதாவது எண்டால் துலைச்சு போடுவன் எண்டு சொல்லி காலையில் அனுப்பி வைக்கிறார்... 

 

காலையில் நடந்த சண்டையிலை  பெரியதம்பனை சந்தியில் வாகன அணியை எதிர்கொள்ளை நிண்ட சாள்ஸ் அன்ரனி பிரிவின் அணியை  சிங்கள படை சுற்றி வளைத்து விடுகிறார்கள்... ( இதுக்குமேலை விரிவாக விளங்கப்படுத்த இல்லை)   இராஜன் அண்ணைக்கு சந்திக்கும் இடையில் இராணுவம்  எங்களுக்கு அருகில் இருந்த ஒரு வெட்ட வெளியை கண்கணிக்க மேஜர் பிரசாத் அண்ணையின் (பின்னரான காலங்களில் சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவின் தளபதி ) ஒரு GPMG (MAG) 5 பேர் கொண்ட அணி மட்டுமே இருக்கிறது...    மிக துரிதமாக முடிவெடுத்த ராஜன் அண்ணை அணியை அழைத்து  அவருடன் சேர்த்து ஏழு பேருமாக  பக்கவாட்டான ஒரு தாக்குதலை இராணுவத்தின் மீது தொடுத்து  போராளிகள் எந்த இளப்பும் இல்லாமல் அனைவரையும்  முற்றுகையை உடைத்து  வெளியில் எடுத்து விடுகிறார்... 

 

அந்த சண்டையில் மோஜர்  பிரசாத் அண்ணையின் தந்திரோபாயமான MAG தாக்குல்  மிகவும் கை கொடுத்தது...    அந்த சண்டை  ராஜன் அண்ணையை ஒரு தளபதியாக எந்த சூழலிலும் போராளிகளை கைவிடாத ஒரு தளபதியாக நிலை நிறுத்தியது...  உளவியல் நிலையில் அவர் மீது ஒரு தன்னம்பிக்கையை கொடுத்தார் ராஜன் அண்ணை...  

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரர்களுக்கு வீரவணக்கம்

இவர்களின் காலத:தில்  வாழ்ந்த  பெருமையைத்தந்தார்கள்

 

நினைவழியாத் தடங்களில் நினைவுகளோடு நிறைந்த தளபதி ராஜண்ணாவை நினைவுகூர்ந்த பகிர்வுக்கு நன்றிகள் வாணன்.

 
குறிப்புகளுக்கு நன்றி தயா..
 
தொடர்ந்து  பதியுங்கள்
இவை பதியப்படணும்
எம்மினம் வாசிக்கணும்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரர்களுக்கு வீரவணக்கம்

இவர்களின் காலத:தில்  வாழ்ந்த  பெருமையைத்தந்தார்கள்

 

நினைவழியாத் தடங்களில் நினைவுகளோடு நிறைந்த தளபதி ராஜண்ணாவை நினைவுகூர்ந்த பகிர்வுக்கு நன்றிகள் வாணன்.

 
குறிப்புகளுக்கு நன்றி தயா..
 
தொடர்ந்து  பதியுங்கள்
இவை பதியப்படணும்
எம்மினம் வாசிக்கணும்
Link to comment
Share on other sites

நன்றி தயா குறிப்புகளுக்கு..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
வாணன்,உயிரோட்டமான பதிவு , தொடர்ந்து எங்கள் வரலாற்றை 
முடிந்தவரை பதிவு செய்யுங்கள் .
ராஜன் அவர்கள் யாழ் மாவட்ட தளபதியாகவும் பின் சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின்  தளபதியாகவும்,பின் அதிகாரிகள் பயிற்சிக்கல்லூரியின் பொறுப்பாளராகவும் இருந்தார்.
ராஜன் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் ஓட்டிகளாக இருந்து 
ஆரம்ப இயக்கவளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். 
கடலில் வீரச்சாவும் அடைந்திருக்கிறார்கள்.
ஒரு தடவை ராஜன், அண்ணையின்ர இடத்தில நிற்கைக்க  
கொஞ்சப்பேர் போய்  மாதகலில பால் முரல் புளியாணம் எல்லாம் அடிச்சிட்டு வந்திட்டினம் யாரோ ஒன்று அதை அண்ணையிட்ட போட்டு கொடுத்திட்டுது . அண்ணை அன்றையான்   சந்திப்பில சொன்னார்.உங்கை பாருங்கோ முரல் எல்லாம் அடிச்சிட்டு பம்மிக்கொண்டு இருக்கிறார்.
அப்பவும் நிலத்தை பார்த்து புன்சிரிப்புத்தான். 
எப்போதும் சண்டைக்களத்தை விரும்பும் ஒரு அழகான,அமைதியான வீரன்.  
Link to comment
Share on other sites

ராஜன் அண்ணையின் நினைவுப்பகிர்வில் தங்களது கருத்துக்களைப்பதிவு செய்தவர்களிற்கும்  வருகைதந்து அந்த நினைவுடன் சங்கமித்த அனைவருக்கும் நன்றி.

 

ராஜன் அண்ணை தொடர்பில் மேலதிக தகவல்களை பகிர்ந்து கொண்ட லியோ அண்ணை, தயா ஆகியோருக்கு நன்றிகள்

 

 

 

Link to comment
Share on other sites

முன்னாள் யாழ் மாவட்டத் தளபதி, சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதி, இறுதியாக அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிப் பொறுப்பாளராக இருந்த  லெப்.கேணல் ராஜன் அவர்கள் பற்றி பொட்டம்மான் எழுதிய கட்டுரை

 

அன்றையநாள் தமிழீழத்திற்குத் துயரந்தரும் நாளாய் விடிந்தது. அன்று காலைதான் ராஜன் எம்மைவிட்டுப் பிரிந்தான்.

 

முதல்நாள் மாலை, பண்டத்தரிப்பில் நின்ற போராளிகளைப் பார்க்க வந்த ராஜனிடம், எதிரியின் படையணி ஒன்றின் மீதான சிறியதாக்குதல் திட்டம் ஒன்றைக் கூறினர் கோபியும் தோழர்களும்.

 

எதிரியின் புதிய நில அக்கிரமிப்பை கண்டு குமுறிக்கொண்டிருந்த ராஜன் உடனடியாக ஒப்புதல் தந்துவிட, சிறிதாய்த் திட்டமிடப்பட்டிருந்த அந்தத் தாக்குதலுக்கான ஒழுங்குகள் இரவோடிரவாக நடந்து முடிந்தன.

திட்டம் மிகவும், சிறியதாகவும், சுலபமானதாகவும் எதிர்பார்க்கப்பட்டதால், திட்டம்பற்றி அதில் நின்றவர்களைத் தவிர வேறு எவருக்கும் எதுவுமே தெரியாது போய்விட்டது.

 

திட்டத்தின் வெற்றி பற்றிய “வோக்கி”ச் செய்தியை எதிர்பார்த்தபடி காந்திருந்தான் ராஜன்.

கிளைமோர் சத்தம் கேட்டவுடன் கோபி… கோபி… என்று கூப்பிட்டும் தொடர்பில்லாமற்போனது.

தலையில் காயத்துடன் கோபியைக் கண்டதும் அவன் வழமையான போர்க்களத்து ராஜனாய் மாறிப்போனான்.

என்ன நடந்ததோ? இரவு கிளைமோர் வைத்தவர்கள் கவனமின்றி நிற்க எதிரி கண்டானோ? இல்லை எம்மவர் ஏதேனும் “வோக்கி”யில் மாறிக் கதைத்துவிட்டனரோ? வேவு பார்த்தோர் தவறோ? வேறு பிழைகளோ?

கோபியின் அணியைச் சூழ்ந்து எதிரிகள். தனி ஆளாய் உள்ளே புகுந்த ராஜன், எல்லோரையும் பின்னுக்கு அனுப்பி விட்டு… அவன் வரவில்லை.

 

கணேஸ், கிங்ஸ்லி என்று எட்டுப் பேருடன் ஒன்பதாவது ஆளாய் ராஜனும் வரவில்லை.

ராஜன் இல்லை என்ற செய்தி மெல்லப்பரவ அதிர்ந்து துடித்தது தமிழீழம்.

அவன் மீது கொள்ளை அன்பை வைத்திருந்த தலைவர், உயிராய்ப் பழகிய நண்பர்கள், அவனால் உருவான போராளிகள், அவனைக் காத்த மக்கள் என்று தமிழீழம் அழுது துடித்தது.

 

ராஜன்-றோமியோ நவம்பர்.

எங்கள் போராளிகள் மனத்தில் நிறைந்துவிட்ட இனியபுயல், இறுகிய பாறை.

அடிக்கடி ரவைகளால் தைக்கப்பட்டு, பிய்பட்டு, இரத்தம் கொட்டி, தழும்புகளால் நிறைந்த தேகம்.

அவனது மனம் மட்டும் தளரவில்லை அது இறுகிப் பாறையாய் உருவாகியிருந்தது.

1987ன் தொடக்கப் பகுதியில் ஓர் இருண்டபொழுது. யாழ். காவல்துறைய நிலைய தங்ககமும் தொலைத்தொடர்புக் கட்டடமும் கோட்டைக்குத் துணைாய் நிமிர்ந்து நின்றன.

அதைநோக்கி இருளோடு இருளாய் நகரும் புலிவீரர்கள்

அதில் ஒருவானாய் ராஜன்.

 

தன் கை ஆயுதத்தைத் தான் பார்க்க முடியதாக காரிருள்.

பின்னால் நிற்பவரின் மூச்சுச் சுடும்.

வியர்வைாற் குளிக்கும் தேகம்.

தாகம் தண்ணீருக்காய் மட்டுமல்ல, அதற்கும் மேலாய், உயர்வாய்,

தாகம் தணிக்க உயிர்கொடுக்கத் தயங்காத வேகம், உறுதி,

இது எம் தாயகம், எங்கள் பூமி.

இங்கு அந்நியனுக்கு என்ன வேலை?

இன்று வெல்வோம்.

அந்நியன் பாடம் படிப்பான்.

 

அக்காலத்தில் அவன் காரைநகர் கடற்படைக் காவலரண் பொறுப்பாளன். அதற்கு முந்திய சண்டையிலெல்லாம் தன் முத்திரையை ஆழமாய்ப் பதித்திருந்தான். கிட்டண்ணை அவனைக் கவனித்து வைத்திருந்தார். இந்தச் சண்டைக்கென கிட்டண்ணையால் அழைக்கப்பட்டிருந்தான். ராதா அண்ணை தலைமையில் உள்நுழைந்த குழுவில் ராஜனும் ஒருவன்.

 

உள்நுழைந்தோருக்கு குறுகியதாயும், வெளியில் நிற்போருக்கு நீண்டதாயும் அமைந்த இரவு விடிந்தபோது…

தனது படைவீரர்களை “யாழ்ப்பாணக் காடுகளில்” தேடிக்கொண்டிருந்தது சிறிலங்கா அரசு.

யாழ்ப்பணத்திற் காடுகளைத் தேடிக்கொண்டிருந்தது உலகு.

 

தன் நண்பர்கள் சிலரையும் தன் கைவிரல்கள் இரண்டையும் இழந்த பின் மருத்துவமனையில் இருந்து அந்தச் சண்டையில் தனது பட்டறிவையும் மீட்டுக்கொண்டிருந்தான் ராஜன்.

 

இந்திய படைக் காலம், அந்த இரும்பை உருக்காக உருவாக்கிய நாட்கள்.

இந்தியக் காலத்தில் ராஜனின் நாட்கள் வீரம் செறிந்தவை. அவன் நின்று பிடித்த வெறும் குருட்டாம்போக்கு மட்டுமல்ல. வீரம், விவேகம், உச்ச வழிப்பு, அன்புக்கினிய எம்மக்களின் அரவணைப்பு இவைதான் அவனைக் காப்பாற்றிய கவசங்கள். தொடர்ச்சியான முற்றுகைக்குள் – தொடர்ந்த தூக்கமற்ற இரவுகள்.

 

முற்றுகை ஒன்றிலிருந்து பாய்ந்தோடித் தப்பித்து வந்த நாளின் மறுநாட்காலை ஒருவாரக் கசகசப்புத்தீர குளித்துவிட்டு நொண்டிக்கொண்டு வந்தான். அன்புத் தோழனின் மடியில் ஈரம் ஊறிய காலை முள்ளெடுக்கக் கொடுத்துவிட்டு இருந்தவன் அப்படியே தூங்கிப்போனான் பாவம்.

 

எத்தகு நெருக்கடிகளிற்கு நடுவிலும், உறுதிதளராத இரும்பு மனம். அதிகம் பேசாதவன். போர்க்களத்திற் பேசுபவான். உறுதியாய்த் தன்னம்பிக்கையுடன், சகபோராளிகளை இலகு நிலையில் வைத்திருக்கும் நகைச்சுவையுடன்.

 

இந்தியச் சண்டையின் தொடக்க நாட்கள். எமது பொன்னாலைப் பனைவெளியூடாக எதிரியின் பாதச்சுவடுவகள். பட்டறிவு குறைந்த எமது வீரன் ஒருவனிடம் இயந்திரத்துப்பாக்கி. அவனது சூடுகள் உயர்ந்து மேலாய், மிக மேலாய் வீணாகிப்போயின. இதைக்கண்ட ராஜன் “டேய் தம்பி ஆமி இன்னும் பனையிலை ஏறேல்லை. கொண்டா ஜிபிஎம்ஜி யை”. ஆயுதம் கைமாற ஒரு சூட்டுத் தழும்பினைப் பதித்து வைக்கிறது.

 

பொன்னாலையில் கால் கிழிந்து, இந்தியாவில் விழுப்புண் ஒழுங்காக மாறமுதல் நாட்டுக்கு என்று துடிதுடித்து புறப்பட்டு, மீன்பிடிப்படகில் தீவுக்கு வந்து, இங்கு வந்தால், எங்கும் இந்தியத் தலைகள் தடங்கள்.

“எங்கட ஆட்கள் எங்கே” என்று எல்லாச் சனத்தையும் கேட்டுத்திரிந்து சந்தித்தான்.

 

யாழ்ப்பாணத்தில் எங்கும் படை முகாம்கள் நிறைந்திருந்த காலத்தில் ராஜன் வந்து சேர்ந்ததும் இந்தியப் படையினர் பிரச்சினையை வேறுவிதமாகச் சந்தித்தார்கள். அவனது உறுதி அவர்களை திணறவைத்தது.

 

அரைத்தூக்கம் கலையாத அதிகாலைப்பொழுது, ஊரில் உள்ள நாய்கள் எல்லாம் குரைக்கத் தொடங்க, உடலில் உள்ள இரத்தம் எல்லாம் ஒன்றாகிச் சூடாகிப்பாயும்.

“டேய் தும்பன், வெற்றி, எழும்புங்கோடா”

“ரங்கன்”

“அண்ணை நான் முழிப்புத்தான்”

“வெளிக்கிடுங்கோ…”

சிரிப்புத்தான் வரும். என்னத்தை வெளிக்கிடுவது? ஜீன்ஸ் போட்டபடி, கோல்சர் கட்டியபடி வெறுநிலத்திற் படுக்கை, தலைமாட்டில் ஆயுதம் வைக்கவென விரித்திருக்கும் சாரத்தை எடுத்துச் சூருட்டி இடுப்பில் கட்டினால் சரி.

“சரி வெளிக்கிட்டாச்சு.”

 

நாய்கள் குரைக்கும் சத்தம் நகர நகர, அது படையினரின் நகர்வை நிழலாய்க்காட்டும்.

முன்படலை பிசகென்று பின்வேலியால் பாய, காலில் நெருஞ்சி குத்தும். முந்தநாள் வாங்கிய செருப்பு நேற்றைய ரவுண்டப்பில் தவறிப்போனது நினைவுக்கு வரும்.

 

விரைவாய் சத்தமின்ற – சத்தமின்றி விரைவாய் அல்லது உள்ளே ரவுண்டப்புக்குள்ளே.

ராஜன் அருகில் இருந்தால் அனைவருக்கும் நம்பிக்கை. எப்படியும் ரவுண்டப்பை உடைக்கலாம்.

“கட்டாயம் உடைக்கலாம். ஒருத்தரும் பயப்படாதேங்கோ”

“டேய் தும்பன் நீ முன்னுக்குப் போய் எத்தனை வாகனம் நிக்குதெண்டு பார். கண்டிட்டான் எண்டால் அடியாமல் வராத”

“ரங்கனும், வெற்றியும் அங்காலைபோய் அடுத்த சந்தியைப் பாருங்கோ. டேய் ரங்கன் ஜி-3 ரவுண்ஸ் தட்டுப்பாடு சும்மா அடிக்காதை”

“தம்பி நீங்கள் என்ன கிறனைட்டோ வைத்திருக்கிறியள். பயப்படாதேங்கோ. என்னோடை நில்லுங்கோ. நான் சொல்லேக்கை கிறனைட் அடிக்கவேணும்”

“அம்மா எல்லோரும் இதில குவிஞ்சு நிண்டால்தான் கட்டாயம் காணுவான். நீங்கள் பிள்ளையளைக் கூட்டிக்கொண்டு உள்ளுக்குப் போங்கோ, இந்தாங்கோ கோப்பையையும் கொண்டு போங்கோ.”

கொஞ்சநேரத்தின் பின் கேட்கும் வெடிச்சத்தங்கள் ஓயும்போது, தேநீர் கொடுத்த அம்மா “ஆர் பெத்த பிளையளோ முருகா காப்பாத்து” என வேண்டிக் கொண்டிருக்கும்போது,

இரண்டு றோட்டுக்கடந்து நின்று வரும் ஆட்களிடம் சைக்கிள் கேட்டுக்கொண்டிருப்பார்கள் ராஜனும் அவனின் ஆட்களும்.

 

கிறனைட்டுடன் வந்த சின்னப்பொடியன் “ராஜண்ணை நான் உண்மையாய்ப் பயந்திட்டன். இனிப்பயப்பட மாட்டன். நான் அடிச்ச கிறனைட்டில் ஆமி செத்திருப்பானே?” என்று கேட்டுக்கொண்டிருப்பான்.

அவர்களின் அநேக நாட்கள் இப்படித்தான் விடியும்.

 

இன்னொரு காலைவேளையில், படுத்திருந்த வீட்டு ஒழுங்கையால் தெருவுக்கு வர, முன்னால் இந்தியப் படை அணி. மற்றவர்கள் காணமுதல் ராஜன் கண்டுவிட்டான். “இண்டைக்குப் பொழுது சூடாகத்தான் விடிஞ்சிருக்கு. நான் இதில வைச்சுத் தொடங்கிறன். நீங்கள் இரண்டு பேரும்மற்றப் பக்கத்தாலை வாங்கோ”. இராணுவம் நிற்கும் செய்தியை அலாதியாய்ச் சொல்வதுடன், அந்தக் கணத்திலேயே திட்டமும் தாக்குதலும். எத்தகையை சூழ்நிலையிலும் ஆபத்தை எதிர்கொள்ள கொஞ்சமும் தயங்காத நெஞ்சுறுதி. பல கட்டங்களில் ராஜன் சாவின் விளிம்பில் ஏறி நடந்து வந்துள்ளான்.

 

எமது மண்ணில் அந்நியன் இயல்பாய்த் திரிவதா? அமைதியாய் வாழ்வதா? என்று குமுறுவான். அவன் அடிக்கடி கூறும் வார்த்தைகள். “மச்சான் உவங்களை இப்படியே விடக்கூடாது. இண்டைக்கு ரெண்டு ஆமி எண்டாலும் கொல்லவேணும்.”

 

ஒரு நாள் பண்டத்தரிப்பு முகாம். “என்ன வெடிச்சத்தம்?” என இந்தியப்படையினர் மக்களை விசாரித்துக் கொண்டிருக்கையில் ராஜனும் தும்பனும் தங்கள் பிஸ்டலை இடுப்பில் வைத்த பின்னர், இறந்த படையினரின் துப்பாக்கிகளை ஆளுக்கொன்றாய் எடுத்தபடி சைக்கிளில்…

சுழிபுரம் சந்தி முகாம் அருகே, இந்திய படையினர் ஜீப் ஊர்தியுடன் செத்தபடி கிடக்க….

எம் போராளி காசிமை இழந்த பின்னர், நடு நெஞ்சில் துப்பாக்கி ரவை துளைத்த ராஜனைத் தூக்கிக்கொண்டு வந்தனர் தும்பனுடன் நகுலனும், நித்தியும்.

 

இந்திய அடிவருடிகள் முகாமிட்டிருந்த சுன்னாகம். இருபுறமும் படைக் காவல். அதனுள்ளே கும்மாளமிட்டனர் எம்மினத்தின் அவமானச் சின்னங்கள். திட்டமிட்ட பெரிய தாக்குதல். அதிக ஆட்கள். முதல்நாள் சாலையைக்கடக்க முடியாமல் ஒத்திவைத்த தாக்குதல். அடுத்த நாள் முயற்சி செய்தபோது,

இரவு சுற்றுக்காவல் படையினரை எதிர்கொள்ள, எல்லாமே பாழ்.

 

ராஜனை இருட்டுக்குள்ளால் இழுத்தவந்து குப்பியைக் கழட்ட, வந்தது நூல்மட்டுமே.

“மச்சான் சுபாஸ் பிறண் அடி கொளுவியிட்டுது.” எனக்கு பெரிய காயம்… இந்தமுறை சரிவராது… எல்லோரும் சாகாமல் இவர்கள் இரண்டு பேரையும் கொண்டுபோங்கோ.

சொன்னவர் பின்னர் கரைச்சல் தாங்காமல் மயங்கிப்போனார்.

 

“ஐயோ ராஜண்ணை…” என்று சூட்டும் ரங்கனுமாய் வாய்க்குள் விரலைவிட்டுத் தோண்டி,

தேங்காய் எண்ணை பருக்கு, தேங்காய் உடைத்து பால் பிழிந்து பருக்கி, காரில் வைத்து, ஸ்ராட் ஆகவில்லை என்று கத்தி, பிறகு வேலிவெட்டி பாதை செய்து, தள்ளு தள்ளு என்று, தள்ளிக்கொண்டு போய். உள் ஒழுங்கை வீட்டில் வைத்து, நீர்வேலிச் சனத்தை காவலுக்கு விட்டு,

அந்தநாள் விட்டு அடுத்த நாள், வாதரவத்தைக்குப் போய்ச்சேர, ராஜனும், முரளியும் மயக்கம் தெளிய, லோலோ மயங்கிப்போய், பின்னர் போய்விட்டான். எம்மைவிட்டு போயேவிட்டான்…

அவனது தோழர்களின் இழப்புக்கள் ஒன்வொன்றின் போதும் அவன் அமைதியாய்க் குமுறுவான். கண்கள் வெறிக்க அவன் பாறையாய் இறுகுவான்.

 

ராஜனது இளமைக்கால நண்பன் தெய்வா, பள்ளிக் காலத்திலிருந்து ஒன்றாய்க் கடலுக்குத் தொழிலுக்குப் போய்வந்து…, படித்து பந்து விளையாடி…, இயக்கத்திற்கு வந்து…, ஒரே படகில் இந்தியா போய்…, கூமாட்டி பயிற்சி முகாமில் ஒன்றாய் இருந்து…, மலைக்கு மூட்டை சுமந்து…, கழுதை கலைத்தது…, பணிஸ்மன்ற் வாங்கி…., பயிற்சி முடித்து…, கரைக்கு வந்து…, எல்லாம்வரை ஒன்றாய் இருந்த தெய்வா பிரிந்துவிட்டான். கடலில் ஓட்டியாய்ப் போனவன் வரவில்லை. அவன் வரவில்லை என்று மாதகல் அழுதது. ராஜன் அழவில்லை. அந்தப் பாறை இறுகியது.

 

ராஜனும் தும்பனும் பிரிந்தது கிடையாது. ராஜன் என்றால் தும்பன். தும்பன் என்றால் ராஜன். துப்பாக்கிகள் பங்கிடும்போது “தும்பனுக்கு கையேலாது எம்-16 தான் வேணுமம்மான்.” ராஜன் சொல்ல சூடுபட்டு உடைந்து வளைந்த கையை தும்பன் மேலும் வளைத்து வந்து வாங்கிவிட்டு மறைவாய் போய் பெரிதாய்ச் சிரித்தார்கள்.

ஒன்றாய்ச் சாப்பிட்டு, அடிபட்டு, கலைபட்டு ராஜனின் உயிருடன் இணைந்த நட்பு. சுன்னாகத்தில் காலில் இரண்டு வெடிபட்டு காயம் மாறி இந்தியாவில் இருந்து வந்தபோது, தும்பன் இல்லை என்ற செய்தி அவனுக்குத் தெரிந்துதானிருந்தது.

 

இந்தியப் படையினரின் சூடுதானா? விபத்தா என எல்லோரையும் ஓடிஓடிக்கேட்டு ஓய்ந்திருந்தவேளையில், தும்பன் இல்லாத ஏழாலைக் கிணற்றுக்கட்டு, வாழைத்தோட்டங்கள், பனங்கூடல்கள், கலைபட்டு பாய்ந்தவேலிகள், துரையண்ணை வீட்டு ஊஞ்சல்கள் என்று எல்லாமே வெறுமையாய்த் தெரிய ரங்கன் அழுவான். ராஜன் அழமாட்டான். அந்தப் பாறை இறுகியது.

 

ரங்கன் சைக்கிள் உழக்க “பாரில்” ராஜன். சுட்டுவிரல் விசைவில்லையொட்டியபடி, கொஞ்சம் அழுத்தினால் ரவைபாயும், எங்கும் போகும் சைக்கிள். சடசட என்று வெடிகேட்கும், சைக்கிள் ஒன்றுடன் கொஞ்ச ரவையும் செலவாகும்.

 

“தப்பியது ரங்கனால்” என்பான் ராஜன். “ராஜண்ணை இல்லையென்றால் நானில்லை” என்பான் ரங்கன்.

மாவிட்டபுரத்தில் வைத்து வரிசையாய் வந்த மொட்டை ஜீப்புக்கு அடிக்க நல்லாய் நடந்த சண்டை நெடுமாறன் வீரச்சாவடைய, ரங்கன் காயம்பட திசைமாறியது.

 

திருச்சியில், “ராஜண்ணை… ராஜண்ணை” என்று ரங்கன் உரத்துக்கூவி அழுது துடித்து மௌனித்தபோதும் யாழ்ப்பாணத்தில் நின்ற ராஜன் அழவில்லை. பாறை இறுகியது.

 

மாதகலில் தன்னுடன் நின்ற ஏழுபேரை வைத்து பெருங்கூட்டமாய் வந்த இந்தியப் படையினரை அடித்துக்கொன்று, கலைத்து, பெருந்தொகையாய் ஆயுதங்கள் அள்ளிவந்தபோது, எல்லா நாளும் ராஜனுடன் திரிந்த வெற்றி திரும்பிவரவில்லை.

 

ஆயுதங்கள் எல்லாம் அப்படியே குவிந்து கிடக்க, காயப்பட்ட தம்பியையும், வெற்றியின் உடலையும் குப்பிளானில் பின்ற கிளியிடம் அனுப்பிவிட்டு, ஆயுதங்களிற்கு காவலாய் நின்றபோது ராஜன் அழவில்லை. அந்தப் பாறை இறுகியது.

 

இந்தியா போனது. தமிழீழ வீடெங்கும் மகிழ்ச்சிக் குரல்கள், தெருவெங்கும் புலிவீரர். மிச்சமாயிருந்தன இந்திய எச்சங்கள். புலனாய்வுப் பணியில் ராஜன்.

 

அவனது மனம் விடுதலைப் போரையும், அதனுடன் இணைந்தவற்றையும் தவிர வேறொன்றைப் பற்றியும் எண்ணியதே கிடையாது. இப்படித்தான் ஒரு நாள் பள்ளியில் அவனுடன் படித்தவள். இயக்கத் தொடர்பில் அறிமுகமாகி பழகிக் கடிதமொன்றில் என்னவோ எழுதி அவனிடம் அனுப்பிவிட்டு காந்திருந்தாள் பாவம்.

கடிதத்தைப் படித்தவன் பக்கத்தில் நின்றவனுடன் நேரே போய்க் கடிதத்தைக் கிழித்துக் கொடுத்துவிட்டு “போராட்டம் தவிர வேறொன்றும் நான் நினையேன்” என்றான்.

 

தன் ஆசைமகன் போகும் ஊர்தியையென்றாலும் பார்போமென்று தாய்க்கிழவி றோட்டில் கால்கடுக்க காந்து நிற்க, இவன் மாதகலில் தான் போன வேலையை முடித்து திரும்பி வருவான்.

 

சிறிலங்காவுடன் சண்டை தொடங்கியது. ராஜன் ஒய்வின்றிச் சுழன்றான். அடிக்கடி அண்ணைச் சந்தித்தான். எல்லா இடமும் திரிந்தான். ஒவ்வொரு பங்கருக்கும் ஒவ்வொரு மண்மூட்டைக்கும் இடம் சொன்னான்.

 

மயிலிட்டியில் பெருஞ்சமர். ராஜன் ஊண் உறக்கமின்று நின்று வழிநடத்தினான். மழையாய்ப் பொழியும் செல்கள் – ரவைகள். மயிலிட்டிச் சண்டையில் மட்டும் இரண்டு தடவைகள் குண்டுச்சிதறல்கள் அவனைத் துளைத்துச் சென்றன. ஓய்வில்லை – அங்கு நடந்து கொண்டிருந்த சண்டையில் இருந்து அவனால் ஒதுங்கியிருக்க முடியவில்லை.

 

கோட்டை முற்றுகை இறுக இறுக எங்கள் தளபதிகளின் தூக்கமற்ற இரவுகள் பெருகிக்கொண்டிருந்தன. மணியந்தோட்டத்திலிருந்து பொன்னாலைவரை நின்ற இளம் போராளிகள் ராஜனைக் கண்டு சிரிப்பர். இரவில்லை, பகலில்லை, ஓய்வில்லை, உணவில்லை, தன்னைப் பிழிந்து முற்றுகைக்கு உரம் கொடுத்தான். பாணுவின் உற்ற துணையாய் முற்றுகைக்குத் துணை நின்றான்.

 

எம்மால் உள்ளிறங்க முடியாமல்போய்விட்ட, இரண்டாவது கோட்டை உட்புகல் நடவடிக்கை முடிந்து விடிந்தபோது, “றோமியோ நவம்பர்” என்று பாணுவின் “வோக்கி” கூப்பிட்டபோதும் பதிலில்லை.

மானிப்பாய் மருத்துவமனையில் பேச்சு மூச்சின்றி கிளி, ஜவான் ஆகியோருக்கு இடையில் கந்தல் துணிபோற் சுருண்டு கிடந்தான்.

 

காயம் மாறி கொஞ்சம் தேறி எழும்பி வந்தவன். இப்போது சாள்ஸ் அன்ரனி சிறிப்புப் படையணியில்.

இந்தக் காலம் ராஜனை ஒரு சிறந்த நிர்வாகியாக உருவாக்கியது. பால்ராஜின் துணைவனாய் நின்று படைப்பிரிவை உருவாக்குவதில் பெரும்பங்காற்றினான். சகல போராளிகளுடனும் அன்புடன், கண்டிப்புடன் நடைபெற்ற கடுமையான பயிற்சிக் காலம்.

 

தமிழீழத்தின் எல்லா இடங்களிலிருந்தும் வந்திருந்த போராளிகள்.

குடும்பத்தைப் பிரிந்து வந்தவர்களிற்கு தாயாக, தந்தையாக, நண்பனாக ஆசானாக.

தமிழேந்தி அண்ணனிடம் காசுவாங்கி, இல்லையென்றால் ஊரில் கடன்வாங்கி, அதுவும் முடியாவிட்டால் வீட்டுக்குப் போய் பொருட்களைத் தூக்கி, அண்ணன் வணிகத்திற்கும் வைத்திருக்கும் பொருட்களை அள்ளி ஊர்தியில் ஏற்றி…

எப்படியோ போராளிகளைத் தனது பிள்ளைகளாய் உயிராய் பார்த்தான். கவனித்தான்.

 

வன்னி போர்க் களம். எங்கள் வன்னிக் காடுகளை எதிரியின் பல்லாயிரம் படைகள் ஊடறுத்துவர முற்பட்ட “வன்னிவிக்கிரம” பெரும் படைகொண்டு ராஜன் மோத எதிரிப்படை திணறியது. சுட்டுவீழ்த்தப்பட்ட ஹெலிகப்டர் துண்டுகளை அள்ளி எடுத்து அனுப்பிய பின்னரும் தொடர்ந்தது சண்டை.

 

எல்லாப் பக்கங்களாலும், பூவரசங்குளம் சந்திக்கு வந்து ஏறிய எதிரிகளை எதிர்கொண்டனர் எம்வீரர்கள். கடும் சண்டை.

வானை நோக்கி நின்றவைகளும் நிலம் நோக்க, அனைத்து ஆயுதங்களையும் ஏந்திய கரங்களும் உறுதியாய் நிற்க, ஓடினான் எதிரி.

கொஞ்ச நாள் இடைவெளியில் எதிரியின் இன்னொரு முயற்சி. வவுனியாவல் நகர்ந்து தோற்ற எதிரி, இம்முறை மன்னார் பக்கமாய்…

இம்முறை சண்டை கொஞ்சம் கடுமையாய்.. எமது வீரர்களை இருபுறமும் சூழ்ந்தபடி எதிரி. ராஜனை உணர்ச்சிவசப்பட வைக்கும் சண்டை.

 

எதைப்பற்றியும் யோசிக்காது எதிரியின் முகம் தெரியும் தூரத்தில் நின்று மோதிய, ராஜனின் விரல் இல்லாத உள்ளங்கையை உடைத்தபடி ஒரு ரவை, இன்னொரு ரவை அதே கையில் நடுவில்.

மிக அருகில் எதிரியின் துப்பாக்கிகள் சடசடக்க உறுதியாய் எதிர்த்து நின்றனர் தோழர்கள்.

உள்ள ஆயுதங்கள் எல்லாம் கொண்டுபோய், அடிஅடி என்று அடித்து ஆமியைக் கலைத்துவிட்டு, மயங்கிக்கிடந்தவனை, இழுந்து வந்து சேர்த்தான் ரூபராஜ்.

 

அன்று ராஜன் திரும்பி வந்தது, நம்பமுடியாத அதிசயம். அவன் மயங்கி வீழ்ந்து கிடந்தபோது, எதிரி மிக அருகில். மிக அருகிலேயே நின்றிருந்தான்.

 

ஆனையிறவு பெரும் போர்க்களம். ஒன்வின்றிப் பம்பரமாய் ராஜன்.

சென்றி நிற்கும் பங்கருக்குள், பசீலன் பொயின்ரில், சமையற் கொட்டிலில், சந்தியில் இருந்த மெடிக்ஸ் வீட்டில், எங்கும் நின்றான். எல்லா நேரமும் நின்றான்.

 

கட்டைக்காட்டில் ஆமியின் கவச ஊர்தி தகர்ந்தாலும், ஆர்.பி.ஜிக்கு ரோமியோ நவம்பர்.

புல்லாவெளியில் ஆட்டிலறி செல்விழுந்து இரண்டுபேர் செத்து ஐந்து பேர் காயமென்றால் மெடிக்ஸ் வானுக்கு றோமியோ நவம்பர்.

 

மெடிக்ஸ் வானை போகவிடாமல் கெலி நின்றால் கலிபர் அனுப்பவும் றோமியோ நவம்பர்.

குணாவின் குறூப்பிற்கு அனுப்பிய காக்குகளுக்கு சாக்குஊசி வேணுமெண்டால் றோமியோ நவம்பர்.

வீரர் வீழ்ந்து வியூகம் உடைந்து எதிரிப்படை முன்னேறும்வேளையில் தனித்த வீரரை ஒன்றாய்ச் சேர்நது எதிரியைத் தடுக்கும்வேலைக்கும் றோமியோ நவம்பர்.

 

எல்லாவற்றிற்கும் நின்றான். எல்லாப் பாரத்தையும் தானாய்ச் சுமந்தான்.

எப்படிப்பட்டவனை நாம் இழந்துவிட்டோம்.

 

பட்டறிவு மிக்க போர்த்தளபதியாய் ராஜன் நின்றபோதும் அவன் போர்க் களத்திலிருந்து தள்ளியே வைக்கப்பட்டிருந்தான். எங்கள் தலைவரின் பெருங்கனவுகளின் உறைவிடமாக ராஜன் இருந்தான். யாழ்ப்பாணச் சண்டையில் ஈடுபட்டிருந்த குழுக்களுக்கு உணவு வழங்கல் செய்யும் வேலையை அவனிடம் வலிந்து கொடுத்திருந்ததன் காரணம் அவனை யுத்த களத்திற்கு முன்முனையிலிருந்து எட்ட நிற்க வைப்பதற்கன்றி, வேறில்லை.

 

பட்டறிவு மிக்க வீரன்.

அவனது பட்டறிவுகள் மெய்சிலிர்க்கும் கதைகள்.

ஓய்வில்லாக் கடும் உழைப்பாளி.

 

அவன் மறையும்போது தலைவரின் பெரும் கனவில் உருவான மேலாளர்கள்(அதிகாரிகள்) பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பாளன். சிறந்த போர் பட்டறிவுகளை முன்னரே பெற்றிருந்த அவன். இங்கு எல்லா இடமும் இருந்து பொறுக்கி எடுத்த வீரர்களைப் பயிற்றுவித்தான். தன் அனுபவங்களை பிழிந்தெடுத்துக் கொடுத்தான். போர்க்கலை நுட்பங்களைக் கற்றான், கற்பித்தான். நேர்த்தியான வேலைத்திட்ட ஒழுங்கமைப்பை, கண்டிப்பை, அன்பை, கடும்பயிற்சியை,

வியூகங்கள், வழங்கல்கள், வரைபடம்… என்று எல்லாவறறையும் கற்றான். கற்பித்தான்.

ராஜன் அமைதியானவன். தன் செயல்களினால் மட்டும் தன்னை அடையாளம் காட்டியவன். ஆம் செயல்களினால் மட்டும்.

 

எந்த வேலையாக இருந்தாலும் ராஜன் அதிகம் பேசுபவனல்ல. ஏதாவது படையத் திட்டம் தீட்டப்படும் வேளைகளில், பேசாது பார்த்தடி, கேட்டபடி இருக்கும் ராஜன் , திட்டம் தீட்டப்படுவது நிறைவுறுவதற்கு முன்னால் உள்ள இடைவெளியில் பேசுவான். குறிப்பிட்ட திட்டம் செயல் வடிவம் பெறும்போது அவனது யுக்தியின் பெறுமதி தெரியும்.

 

தனது கடமையைச் முழுமைமாகச் செய்வதில் தன்னை வெளிப்படுத்துவான். எந்தச் வேளையிலும் மற்றைய ஒருவரைக் குறை செல்வதைக் காண்பதரிது. “கடமையைச் செய், பயனை எதிர்பாராதே” என்பதற்கு எடுத்துக்காட்டாய் கர்ம வீரனாய் விளங்கினான்.

 

அவனது வரலாறு முழுமையாக எழுதப்பட்டால், அது பெரும் காவியமாகும். படைய வல்லுநர்களால் மட்டுமல்ல, மருத்துவ வல்லுநர்களாலும் நம்பமுடியாத அதிசயமாய் அவன் வரலாறு திகழும்.

எண்ணற்ற தாக்குதல்கள்,  எண்ணற்ற தோழர்கள், அவன் செய்தவைகள், அவன் பெற்ற பட்டறிவுகள் எண்ணி முடியாதவை. எழுத்தில் அடங்காதவை.

 

ச.பொட்டு (பொட்டம்மான்)

புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர்

தமிழீழ விடுதலைப் புலிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தளபதி ராஜனின் வீரவரலாற்றை பகிர்ந்த வாணன், தயா, லியோ நன்றிகள்.   

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
    • அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி Published By: DIGITAL DESK 7   16 APR, 2024 | 02:42 PM   நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள ஊர்தியானது இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா. ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன் மற்றும் தாயார் மலர்மாலை அணிவித்து அடுத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/181216
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.