Jump to content

ஆசீவக நெறி - தமிழரின் அழிக்கப்பட்ட நெறி(ஆசீவகம் / Ajivika) #2


Recommended Posts

தமிழர்களின் அழிக்கப்பட்ட நெறி #4

முதல் மூன்று கட்டுரைகளைப் படிக்க, கீழுள்ள இணைப்பிற்குச் செல்லவும்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=130413

 

முருகன் எப்படி ஆசீவக நெறியின் தெய்வம்? – பகுதி #1

பல்லாயிரம் ஆண்டுகளாக இருக்கும் ஆசீவக நெறியின் அடையாளங்கள் அழிக்கப்பட்டாலும் மாற்றப்பட்டாலும் அதை முழுவதுமாக செய்ய முடியாது. அதேபோல் தான் ஆசீவக சித்தர்களின் அடையாளங்களும். முருகன் எப்படி தெய்வ நிலையை அடைந்த ஒரு ஆசீவக சித்தன் எனப் பார்க்கப் போகிறோம்.

 

விநாயகரை முழுமுதற்கடவுள், வினை(கட்டம்) தீர்த்தான் என நாம் அழைக்கிறோம். அதனால் தான், எந்தப் பெரிய கோயில்களுக்கும் சென்றால் முதலில் விநாயகரை வழிபட்டுவிட்டு தான் பின் மற்ற தெய்வங்களை வணங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. மேலும், எந்தச் செயலை தொடங்கும் முன்பும் திருமணத்திற்கு முன்பும் விநாயகரை வழிபடுவது நம் வழக்கமாக இருந்து வருகிறது.

 

       விநாயகர் ஆசீவக நெறியின் முழுமுதற் கடவுள் எனப் பார்த்தோம். ஏன் ஒரு ஆசீவக நெறியின் கடவுளை முருகன், சிவன், முதலிய தெய்வங்களை வணங்கும் முன்பு வணங்க வேண்டும் என நெறிகளை வகுக்கவேண்டும்?. ஏனென்றால், விநாயகர் ஆசீவக நெறியின் கடவுள். முருகன், சிவன், முதலியவர்கள் தெய்வ நிலையை அடைந்த சித்தர்கள்(ஆசீவக சித்தர்கள்). இதைப் பற்றி இப்பொழுது பார்ப்போம்.

 

       முதலில், சங்க இலக்கியங்கள் முருகன் எனும் அரசனைப் பற்றித் தரும் செய்திகளைப் பார்ப்போம்

  1. முருகன் என்னும் மன்னன் சங்ககாலத்தில் பொதினி என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். ஆறு மலைமுகடுகளைக் கொண்டது ஆனைமலை. அவற்றுள் ஒரு முகடு பொதினி. இந்தப் பொதினி இக்காலத்தில் பழநி என வழங்கப்படுகிது, அக்காலத்தில் இவ்வூரில் வயிரக் கற்களை அரக்கில் பதித்துப் பட்டை தீட்டும் தொழில் நடைபெற்றுவந்தது. இந்த முருகனைக் குதிரைமலைக் குடிமக்கள் மழவர் தாக்கினர். அரசன் முருகன் இவர்களை ஓட ஓட விரட்டியடித்தான். பொதினி குன்றம் மகளிர் மார்பக முகடு போல் பொலிவுடன் திகழ்ந்தது. அத்துடன் பொன்வளம் கொழிக்கும் ஊராகவும் விளங்கிற்று. இதன் அரசன் நெடுவேள் ஆவி. நெடுவேள் ஆவி என்பது முருகன் பெயர்களில் ஒன்று. இப்பெயரைக் கொண்டவன் இந்த அரசன். மற்றும் வையாவிக்கோப்பெரும் பேகன், வேளாவிக்கோமான் பதுமன் ஆகியோரும் இவ்வூர் ஆவியர் குடிமக்களின் அரசன்.
  2. முருகன் குறுஞ்சி நிலத்து(மலை) அரசன். அங்கு, வாழும் மக்கள் குறவர்(குறத்தி, குறவன்), பொருப்பன், வெற்பன், சிலம்பன், நாடன், கொடிச்சி, வேம்பன், கானவர்.
  3. ஆவியர் என்போர் சங்ககாலக் குடிமக்களில் ஒருசாரார். இவர்கள்(ஆவியர்குடி) வாழ்ந்த ஊர் ஆவினன்குடி என வழங்கப்பட்டது. பொதினியின்(பழநியின்) இன்னொரு பெயர் திருவாவினன்குடி(திரு+ஆவினன்குடி). ஆவியர் குடியினர் அருந்திறல் அணங்கின் ஆவியர்எனக் குறிப்பிடப்படுவதால் இவர்களின் உடல் தோற்றமே வலிமை மிக்கதாக அமைந்து பகைவரை அச்சுறுத்தியதை உணரமுடிகிறது. இவர்களது அரசன் ஆவிக்கோ, ஆவியர் பெருமகன் என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறான். முருகன் நற்பேர் ஆவிஎன்பவன் இவர்களில் குறிப்பிடத் தக்கவன். வையாவி என்பது இம்மக்கள் வாழ்ந்த மற்றொருபகுதி. இப்பகுதி அரசன் வையாவிக்கோ என்றும், வையாவிக்கோமான் என்றும் குறிப்பிடப்படுகின்றனர்.

இலக்கிய மேற்கோள்

அகநானூறு 1, 61

புறநானூறு 147

திருமுருகாற்றுப்படை 176

சிறுபாணாற்றுப்படை 85, 86

வழக்குரை காதை

பதிற்றுப்பத்து

 

ஆறு மலைமுகடுகளைக் கொண்டது ஆனைமலை. அவற்றுள் ஒரு முகடு பொதினி(பழநி). இந்த ஆறு முகடுகளை ஆறுமுகம்(ஆறு+முகம்(முகடு-மலை)) என அழைக்கிறோம். இதை ஆண்டதால், முருகனை ஆறுமுகன் என அழைக்கிறோம். ஆனால், தமிழ் மொழித் தெரியாத ஆரியர்கள் ஆறுமுகன் என்றால் ஆறு முகங்களைக் கொண்டுள்ளவன் என தவறாகக் கருதி முருகனுக்கு ஆறு தலைகள் உள்ளது போல கதைகளைப் புனைந்து ஷண்முகன்(ஷண் - சமஸ்கிருதத்தில் ஆறு) என உருவாக்கினர்.

 

முருகன், தன் மக்களைக் காக்கும் அரசனாக இருந்துகொண்டு ஆசீவக நெறியைப் பின்பற்றியவன். பின்பு தெய்வ நிலையை அடைந்தான். முருகனை ஆசீவக சித்தன் என நாம் நிரூபிக்க வேண்டுமென்றால், முதலில் முருகன் யார் என்பதை நாம் பார்க்க வேண்டும்.

 

முருகன் யார் என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், முதலில், படைவீடு, வேல், சேவல், மயில், காவடி, தண்டம், தலையில் மொட்டை அடிப்பது ஆகிய முருகனுக்குத் தொடர்புடைய விடயங்கள் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.

முதலில், முருகனின் அறுபடைவீடு என்பதை விளக்க வேண்டுமென்றால், முதலில், வீடு என்ற சொல்லின் பொருள் என்ன என்பதைப் பார்க்கவேண்டும்.

              வீடு – உயரத்தில் அமைந்துள்ள ஒரு தங்குமிடம்

                     ஒப்புநோக்குக:

                           வீ – உயர்வானது, பூவின் வாடும் நிலையைக் குறிக்கும்(வாடி மேலிருந்து கீழே விழும் நிலை)

                           வீழ் – உயரத்திலிருந்து விழுவது

                           விண் – மேல்(உயரத்தில்) இருக்கும் வானம்

                           அருவி – உயரத்திலிருந்து விழும் நீர்

       அதாவது, மலைமேல்(உயரமான இடம்) இருக்கும் வசிக்கும்/தங்கும் இடங்களை முதலில் வீடு என்றழைத்தனர். பின்பு அச்சொல், பொதுவான தங்குமிடங்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.

       படை என்ற சொல்லின் விளக்கம்,

படை – கொல்லும் தன்மை கொண்ட ஒன்று

முருகன் மலையின் கீழிருக்கும் எதிரிகளை மலையை அரணாகக் கொண்டு போர் புரிந்து விரட்டியமையால்(சங்க இலக்கியங்கள் குறிப்பிடுவதைப் போல), அம்மலைகளை நாம் படைவீடு என்றழைக்கிறோம்.

       படைவீடு – உயரத்தில் இருந்து கொல்லும் தன்மையைக் கொண்டது.

அறுபடைவீடுகளில் ஐந்து படைவீடுகள் மலை மேல் இருக்கின்றன. திருச்செந்தூர் மட்டும் விதிவிலக்கு. கோயில் மலை மேல் இல்லாமல் கடலோரம் இருக்கிறது என்றாலும், முருகன், அயலாரை போர் புரிந்து வெற்றி பெற்றதை இன்றும் சூரசம்ஹாரம் என இன்றுவரை கொண்டாடுகிறோம். படைவீடு எனும் சொல் காலப்போக்கில் பொதுவான படை இருக்கும் இடங்களைக் குறிக்கப் பயன்படுத்தியிருக்கலாம். அதாவது, வீடு எனும் சொல் பொதுவான தங்குமிடத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

                     சூரசம்ஹாரம் = சூரன்+சம்ஹாரம் = முருகன் சூரபத்மனை கொன்ற நிகழ்வு

                     சூரபத்மன் = சூரன்+பத்மன்

              சூரன் எனும் சொல் ஆரியர்களைக் குறிக்கும். எப்படி என்பதைக் கீழே பார்ப்போம்.

                     சுரா – ஆரியர்கள் அருந்திய ஒரு வகை மதுபானம்

                     சுரன்>சூரன் – ஆரியர்கள் இம்மதுவை அருந்துபவர்களை சுரன் என்றழைத்தனர்.

                     அசுரன் - ஆரியர்கள் இம்மதுவை அருந்தாதவர்களை அசுரன் என்றழைத்தனர்.

              இந்த, சுரன் என்ற வடசொல்தான் சூரன் என மருவியது.

       அப்பொழுது, முருகன் ஆரியர்களை எதிர்த்துப் போர் புரிந்தானா என்பது ஆயத்தக்க விடயம். இதைப் பற்றிப் பின்பு பார்ப்போம்.

 

முருகனின் அறுபடைவீடு என்றால், முருகன் போர் புரிந்து வென்ற இடங்களைக் குறிக்கும் என்பது தெளிவாகிறது.

அடுத்து, முருகனுக்கு அடையாளங்களாக வேல், மயில், சேவல் என்பன எப்படி வந்தன என்பதைப் பார்ப்போம்.

வேல் எப்படி வந்தது எனப் பார்ப்போம். வேல் எனும் தமிழ்ச்சொல்லின் பொருளைக் காண்போம்.

              மின்>மீன்(முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்) – மின்னும் தன்மையைத் தன்னுள் கொண்டது மீன். மின்னுவது மீன் எனப்பட்டது(கடல் மீன், விண் மீன்)

              புனை>பூனை – புனைவது(கண்டுபிடிப்பது – எலியை) பூனை எனப்பட்டது

              அனை>ஆனை – அனைப்பது ஆனை எனப்பட்டது

              மன்>மான் – மன்னுவது(நிலைபெறுதல், தங்குதல்) மான் எனப்பட்டது – ஒப்புநோக்குக : மன்னன், கோமான், சேரமான்

              உண்>ஊண் – உண்ணுவது ஊண்(உணவு) எனப்பட்டது

              அழி>ஆழி – அழிப்பது ஆழி எனப்பட்டது

              பேண்>பெண் – பேணுபவள்(விரும்பிக் காப்பாற்று) பெண் எனப்பட்டாள்

              காண்>கண் – காணுவது கண் எனப்பட்டது

              மாண்>மண் – மாணுவது(மாண்பு - மாட்சி, சிறப்பு, பெருமை, அழகு) மண் எனப்பட்டது

அதுபோல, வெல்>வேல் – வெல்லும் தன்மையைத் தன்னுள் கொண்டது வேல். வெல்லுவது வேல் எனப்பட்டது. அதாவது, போரில் வெற்றிபெறுவதற்கு உதவி செய்வது வேல் எனப்பட்டது. வெற்றியைத் தருவது வேல். ஆகையால், வேல் என்பது வெற்றி மற்றும் வீரத்தின் அடையாளம் எனவும் கூறலாம்.

 

வேல் என்ற உடனே நமக்கு முருகன் கையில் உள்ள வேலின் வடிவம் தான் நினைவுக்கு வரும். ஆனால், இதுமட்டும் வேல் அல்ல. சுமேரியாவில் பேல்(Bel) என்ற ஒரு சொல் உண்டு. அதைப் பார்த்தீர்களென்றால் சூலத்தை ஒரு கம்பின் இருபுறமும் வைத்ததைப் போல இருக்கும். இதை, ஆசீவகத்தில் ‘இருபுற முத்தலைக் கோல்’ என்பர். ஆசீவக நெறியின் அடையாளங்களுள் இதுவும் ஒன்று. வைணவத்தில் நாமமிடும் பழக்கம் இதிலிருந்துதான் தோன்றியது(நாமத்தின் நடுவில் இருக்கும் சிவப்பு நிறம் பகைவரின் குருதியைக் குறிக்கும்). இந்த ‘இருபுற முத்தலைக் கோல்’ம் வேல் தான். வேல் எனும் செந்தமிழ்ச்சொல்தான் பேல் என சுமேரியாவில் திரிந்தது.

 

வேல்(Vel)>பேல்(Bel) – Sumerian Tamil

ஒப்புநோக்குக:

       வெங்காலூர்>பெங்காலூர்>பெங்களூர்

       வங்காளம்>பங்காளம்>பெங்காளம்>பெங்கால்

       வேம்பாய்>பேம்பாய்>பம்பாய்

       வெள்ளை>பெள்ளை>பெலா – கன்னடம்

இதிலிருந்து, முருக வழிபாட்டின் தொன்மையை நம்மால் அறிய முடியும். இதைப் பற்றி பிறகு விளக்கமாகப் பார்ப்போம்.

மயிலும் சேவலும் எப்படி முருகனின் அடையாளங்களாகினவென்றால், இவை தன் எதிரிகளுடன் தந்திரமாகச் சண்டையிடும்(Martial Arts) தன்மையைக் கொண்டவை. ஆகையால், சேவலும் மயிலும் முருகனின் போர்த்திறனைக் குறிக்கும் அடையாளங்கள் ஆகின.

 

பொதினி மலையில்(பழநி மலையில்) மேல் உள்ள முருகனுக்கு தண்டாயுதபாணி எனப் பெயர். அதாவது, கையில் தண்டம் எனும் போர்க்கருவியை(சங்ககாலப் போர்க்கருவி) வைத்திருப்பவன் எனப் பொருள்படும்.

 

இதிலிருந்து, முருகன் என்பவன் சங்ககால அரசன். அவன் போர் புரிவதில் வல்லவன். போர் புரிந்து பல வெற்றிகளை பெற்றுள்ளான் என்பது தெளிவாகிறது. தமிழர்களுக்கு முருகன் வீரத்தின் அடையாளமாக உள்ளவன்.

 

அடுத்து, காவடி என்பது முருகனுடன் எப்படித் தொடர்புடையது என்பதைப் பார்ப்போம். காவடியாட்டம் என்பது முருக வழிபாட்டுடன் தொடர்புடைய ஒரு ஆட்டம் ஆகும். இந்த ஆட்டத்தில் ஆடுபவர் காவடி எனப்படும் பொருளைத் தோளில் வைத்துக்கொண்டு ஆடுவார். முதலில், காவடி என்ற சொல்லின் பொருளைப் பார்ப்போம். ‘காவடி’ என்ற சொல் ‘காவுதடி’ என்ற சொல்லின் திரிபு எனக் கூறுவர். கா என்பது இருபுறமும் தொங்கும் சுமை. சுமை காவுபவர்கள் இலகுவாகச் சுமப்பதற்காக, ஒரு நீண்ட தடியின் இரு முனைகளிலும் சுமைகளைத் தொங்கவிட்டு அத்தடியின் நடுப்பகுதி தோளில் இருக்குமாறு வைத்துச் சுமந்து செல்வர். காவுவதற்கான தடி என்னும் பொருள்பட இத் தடியைக் காவுதடி என அழைப்பர். முருகன் இந்தக் காவுதடியைப் பயன்படுத்துபவனாக இருந்திருக்க வேண்டும்.

 

பழனி மலைமேல் உள்ள தண்டாயுதபாணி(முருகன்) தலையில் மொட்டை அடித்துள்ளவர். முருகன் ஏன் தலையில் மொட்டை அடித்திருக்க வேண்டும் என நாம் ஆய்ந்தால், சமணர்கள்(ஆசீவகர், ஜைனர்) மற்றும் பௌத்த நெறியைச் சேர்ந்தவர்கள் தலையில் மொட்டை அடித்துக்கொள்ளும் வழக்கம் உள்ளவர்கள் என நமக்குப் புலப்படும். ஆரம்பக்காலத்தில் பழநி முருகன் கோயிலில் தலையில் மொட்டை அடிக்கும் வழக்கம் வந்தது, முருகன் ஆசீவக சித்தன் என்பதால் மட்டுமே என்பதும் புலப்படும். இதனால் தான், முருகனது பக்தர்கள் காவடி(காவுதடி) தூக்கும் வழக்கமும் தலையில் மொட்டை அடித்துக்கொள்ளும் வழக்கமும் வந்திருக்கலாம். இதற்குப் பொருள், முருகனை குருவாக ஏற்று, அவனிடம் சரணடைந்து கற்றுக்கொள்ள வருகிறோம் என்பதே(ஆசீவக சித்தர்களிடம் கற்றுக்கொள்ளும் மாணவர்களைப் போல்).

 

(சமணம்(ஆசீவகம், ஜைனம்) மற்றும் பௌத்தத்தில் ஏன் மொட்டை அடிக்கிறார்கள் அதாவது முருகன் ஏன் தலையில் மொட்டை அடித்துள்ளார் என்பதன் அறிவியல் விளக்கம் பற்றி சிறிது ஆயவேண்டும். திருமாலுக்கும் தலையில் மொட்டை அடிப்பதற்கும் உள்ள தொடர்பை பிறகு காண்போம்.)

 

ஆசீவக நெறியில் தீர்த்தங்கரர் என்றால் தீர்வைத் தருபவர் (அ) தீர்வு தருவதைக்(தீர்த்தம்) கையில் வைத்திருப்பவர் எனப் பொருள்.

தீர்த்தங்கரர் = தீர்த்தம் + கரர் = தீர்த்த + ங் + கரர்

       தீர்த்தம்(பண்புச்சொல்)=தீர்த்து+அம்(பண்புத்தொகை உருபு)<தீர்த்து(வினையெச்சம்)<தீர்த்தி+உ(வினையெச்சம் விகுதி)<தீர்த்தி(தொழிற்பெயர்)<தீர்+த்+தி<தீர்+தி(தொழிற்பெயர் விகுதி)<தீர்

திருத்தம் = திருத்து + அம் = திருத்தும் பண்பு(தன்மை) கொண்டது திருத்தம் எனப்பட்டது

இயக்கம்

பழக்கம்

விருப்பம் = விருப்பு + அம் = விருப்பும் பண்பு(தன்மை) கொண்டது விருப்பம் எனப்பட்டது

வருத்தம் = வருத்து + அம் = வருத்தும் பண்பு(தன்மை) கொண்டது வருத்தம் எனப்பட்டது

வணக்கம் = வணக்கு + அம் = வணக்கும் பண்பு(தன்மை) கொண்டது வணக்கம் எனப்பட்டது

              அதுபோல, தீர்த்தம் = தீர்த்து + அம் = தீர்த்தும்(வினை தீர்ப்பது) (அ) தீர்த்து வைக்கும் பண்பு(தன்மை) கொண்டது தீர்த்தம் எனப்பட்டது

              கரர் = கரு + அர் = ஒரு செயலை செய்பவர்

                     கர் = கரிய நிறத்தின் தன்மையைக் குறிக்கும் சொல்(கருப்பு நிறத்திற்கும் நாம் செய்யும் செயலுக்கும் தொடர்பு இருப்பதால், பிற்காலத்தில் செய்யும் செயலை அல்லது அதன் எதிர்வினையைக் குறிக்கப் பயன்பட்டது.)

                     கர்>கரு(கர்+உ) – உ(படர்க்கை விகுதி) = ஒரு செயலை ஒருவர் செய்வதால் தோன்றும் ஒன்று(எதிர்வினை/கருமம்)

                     கர்>கரு>கரம் = அந்தச் செயலைச் செய்வது

கரம் = கரு + அம் = ஒரு செயலை(கருமத்தை) செய்வது(கைக்கு கரம் என்ற சொல்லும் இப்படித்தான் வந்தது.)

                     கர்>கரு>கருப்பு

                     கர்>கரு>கருமம்>கர்மா(Karma) = நன்மையான/தீமையான செயல். எக்கருமத்திற்க்கும் அதற்கு இணையான கருமபலன் இருக்கும். இது ஆசீவகம் மற்றும் ஜைனம் இரண்டிலும் உள்ள கோட்பாடு. ஆனால், கருமபலனை பற்றிதான் இவ்விரு நெறிகளும் வேறுபடுகின்றன.

 

இதேச் சொல்லாடல் ஜைனத்திலும் உண்டு. இத்தீர்த்தங்கரரை அவர்கள் அருகன்(அருகன்>Arhat) எனவும் அழைப்பர். அதனாலேயே ஜைனர்களுக்கு, அருகர்/ஆருகதர் எனும் பெயரும் வந்தது. இப்பொழுது ஏன் இதைக் கூறுகிறேன் எனப் பார்க்கிறீர்களா?. அருகன் என்பது நம் முருகனின் வேறுபெயர்களுள் ஒன்று. நம் முருகனின் பெயரான அருகன் எனும் பெயர் ஜைனத்தில் அனைத்து தீர்த்தங்கரரைக் குறிக்கும் பொதுச்சொல். ஆசீவக முருகன் என்பவன் தீர்த்தங்கரர்(அருகன்) எனும் பெயரில் ஆசீவகத்திலும் ஜைனத்திலும் கந்தன்(ஸ்கந்தா/கந்தாஸ் – Skanda(Sanskrit)/Khandas(Pali)) எனும் பெயரில் பௌத்தத்திலும் உள்ளவன். இதனால் தான், கதிர்காமத்தில் உள்ள கந்தன் கோயிலை இந்துக்கள் மட்டுமல்லாது பௌத்தர்களும் வழிபடுகின்றனர். சீனாவிலும் பௌத்த நெறியில் Skanda(Skanda Bodhisattva/Wei Tuo) வழிபாடு உள்ளது. அங்கு, Skandaவை போதிசத்துவர்(Bodhisattva) எனக் குறிப்பிடுவர். போதிசத்துவர் என்பது ஆசீவக சித்தர்களின் வேறுபெயர்களுள் ஒன்று எனப் பார்த்தோம். இதன் பொருள் என்னவென்றால், ஆசீவகத் துறவிகள் வழிவழியாக (தலைமுறைகளாக) மக்களுக்கு நன்னெறிகளைப் போதித்து அவர்களை வழி நடத்தினர். போதனைகள் எனும் நன்னெறிகளை யீந்த இடமாகையால் போதி சத்துவர்எனப் பெயர் பெற்றனர். இங்கு நாம் புத்தர் ஞானம் அடைந்த போதி மரத்தையும் போதிதர்மரையும் ஒப்புநோக்கவேண்டும்(இதைப் பற்றி பிறகு பார்க்கலாம்).

 

ஆசீவக முருக வழிபாடு எப்படி இந்து(தற்போதைய) நெறியிலும் ஜைன பௌத்த நெறிகளிலும் வந்தது என நீங்கள் கேட்கலாம். விநாயகர் வழிபாடு எப்படி இந்து ஜைன பௌத்த நெறிகளில் வந்தது என குறிப்பிட்டிருந்தேனோ அப்படித்தான் முருக வழிபாடும் வந்தது. முருக வழிபாடு எப்படி ஜைன பௌத்த நெறிகளுக்கு வந்தது என்றால், ஜைனக் கோட்பாடுகளும் பௌத்தக் கோட்பாடுகளும் ஸ்ரமணம்(அமணம்>சமணம்>ஸ்ரமணம்) எனும் சமணத்தின் திரிபிலிருந்து தோன்றியவை. அதற்கு முன் சமணம் எனும் சொல் ஆசீவகத்தை மட்டுமேக் குறிக்கும். அதாவது, ஜைனம் தோன்றுவதற்கு முன்பு சமணம்(அமணம்) என்றால் ஆசீவகம், ஆசீவகம் என்றால் சமணம்(அமணம்) என்றே பொருள். ஜைனம் தோன்றிய பின்பு சமணம் எனும் சொல் ஆசீவகம் மற்றும் ஜைனம் ஆகிய இரண்டையுமே சேர்த்துக் குறிக்கும் பொதுச்சொல்லானது. ஏன் பொதுச்சொல்லாக வேண்டும்?. அதற்குக் காரணம், ஆசீவகத்திற்கும் ஜைனத்திற்க்கும் பொதுவாக உள்ள கோட்பாடுகளால் தான். ஜைனக் கோட்பாடுகள் ஆசீவகக் கோட்பாடுகளிலிருந்து உருவாக்கப்பட்ட கோட்பாடுகள். ஆனால், சிறிது வேறுபாடுகள் உண்டு. இதனால் தான், முருக வழிபாடு, ஜைனத்திலும் பௌத்தத்திலும் உள்ளது. சமணம் எனும் சொல் ஜைனம் தோன்றிய பின்பு ஆசீவகம் மற்றும் ஜைனம் ஆகிய நெறிகளைச் சேர்த்துக் குறிக்கும் பொதுச்சொல் என்று இருந்தால், பின்பு எப்படி சமணம் எனும் சொல் ஜைனம் எனும் சொல்லின் தமிழ்ச் சொல்லானது என நீங்கள் கேட்கலாம். இதற்கு விடை, முன்பு கூறப்பட்ட ஆசீவக நெறியின் சான்றுகளில் உள்ளது. அதாவது, இதற்குக் காரணம், ஆசீவகக் கோட்பாடுகள் மற்றும் வழிபாடுகள், ஆசீவகர்கள் நம்பிய, முன்பே முடிவு செய்யப்பட்ட விதி எனும் கொள்கையினாலும், வைதீக ஜைன பௌத்த நெறிகள் தங்கள் நெறியை புராணங்கள் மூலம் பரப்பியதாலும், வைதீக ஜைன பௌத்த நெறிகளால் ஆசீவகக் கோட்பாடுகளை இழுத்துக்கொள்ளப்பட்டதால் ஏற்ப்பட்ட குழப்பங்களாலும், ஆசீவகக் கோட்பாடுகள் வைதீக இந்து நெறிக்குச் சென்று பிற்கால வைதீக நெறியினர்களால் திரிக்கப்பட்டதாலும், பிற்காலத்தில் வைதீக இந்து நெறியின் செல்வாக்கு உயர்வாலும், மக்களிடம் வெகுவாகக் குறைந்த ஆசீவக நெறியின் செல்வாக்காலும், வழிவழியாக வந்த ஆசீவக நெறியைப் பற்றிய அறிவு குறைந்ததாலும், ஆரியர்களால் தமிழர்களின் வரலாற்று திரிப்புகளாலும் அழிப்புகளாலும், தற்காலத்தில் அப்படி ஒரு நெறியே இல்லை என்றளவிற்கு ஒரு நிலையை உருவாக்கிவிட்டது. அக்காலத்திலிருந்தே, ஜைன பௌத்த வைதீக நெறிகள் புராணங்கள் மூலம் தங்கள் நெறியை மக்களிடம் பரப்பின. ஏன், இந்நாட்களில் கூட தொலைக்காட்சிகளில் வைதீக இந்து நெறியினர், இராமாயணம் மகாபாரதம் முதலிய வைதீக இந்துக்களால் திரித்து(புனைந்து அல்ல) எழுதிய புராணங்களை திரையிடுகின்றனரே. ஏற்கனவே உள்ளவர்களிடம் மத நம்பிக்கையை வலுப்படுத்தவும் வழிவழியாக வரும் அடுத்த தலைமுறையினருக்கு தங்கள் மதத்தைப் பரப்புவதற்கும் பலப்படுத்துவதற்கும் தான் இந்த செயல். ஆசீவக வழிபாடுகள் வைதீக இந்து நெறிக்குச் சென்ற பின் வைதீக நெறியினர்களால் புராணங்களாகத் திரிக்கப்பட்டன.

 

இது மட்டுமல்ல, கீழுள்ள கோட்பாடுகள் ஆசீவக ஜைன பௌத்த இந்து நெறிகளில் பொதுவாக உள்ளதை நாம் பார்க்கலாம்.

  1. விநாயகர் வழிபாடு
  2. முருகன் வழிபாடு
  3. ஓம் எனும் மந்திரச் சொல்
  4. சுழற்றியம்(ஸ்வஸ்திகா)
  5. ஊன் உண்ணாமை
  6. உண்ணா நோன்பு
  7. தலையில் மொட்டை அடிப்பது

இன்னும் பல...

 

சமணம்(ஆசீவகம், ஜைனம்), பௌத்தம், தற்போதைய வைதீக இந்து நெறிகள் அனைத்திற்கும் இடையே இவ்வளவு ஒற்றுமைகள் இருக்கின்றதென்றால், தற்செயலாக இது நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. முருகன் ஆனைமலையை ஆண்ட அரசன் எனப் பார்த்தோம். முருகனின் அறுபடைவீடுகளில் மலைமேல் உள்ள ஐந்து படைவீடுகள் அனைத்திலும் சமண குகைகள் உள்ளன என்பது இங்கு நோக்கத்தக்கது. சமணர் என்றால் இங்கு ஜைனரா ஆசீவகரா என நாம் பார்க்கவேண்டும். ஜைன நெறியினருக்கும் ஆசீவக நெறியினருக்கும் உள்ள வேறுபாடுகளுள் ஒன்று, ஜைன நெறியினர் மலை மேல் தங்கமாட்டார். அவர்கள் மலையின் அடிவாரத்தில் உள்ள குகைகளில் தங்குபவர்கள். ஆனால், ஆசீவகர்கள் மலைமேல் கற்படுக்கைகள் அமைத்துத் தங்குபவர். இதன்மூலம், இக்குகைகள் ஆசீவக சித்தர்கள் தங்கிய இடங்கள் எனத் தெளிவாகிறது.

 

இதன்மூலம், முருகன் ஆசீவக நெறியின் தெய்வ நிலையை அடைந்த சித்தன் எனத் தெரிகிறது. மேலும், முருகனை சித்தன், ஐயன்(எடுத்துக்காட்டு: முருகையன், வேலையன், சுப்பையன்), ஐயா என ஆசீவக சித்தர்களைக் குறிப்பிடும் சொற்களை வைத்து அழைப்பதும் இங்கு நோக்கத்தக்கது. இதை மேலும் உறுதிபடுத்தும் தரவுகளை அடுத்தத் திரியில் காண்போம்.

 

(தொடரும்)

Link to comment
Share on other sites

முருகன் பற்றிய ஆய்வு இதுவரையில் நான் அறிந்து யாரும் இப்படி செய்ததில்லை . அதிலும் திரு ஆவினன்குடி என்ற பெயர் வரக் காரணம் புதுமையாக இருக்கின்றது. இதுவரை பசுக்கள் அங்கு அதிகமாக இருந்த காரணத்தினாலேயே அந்தப் பெயர் வந்தது என்று சில இடங்களில் படித்திருந்தேன் .உங்கள் ஆய்வு ஆவணப் படுத்தப் பட வேண்டியது தமிழ் வேந்தன் . தொடருங்கள் உங்கள் ஆய்வுகளை .

 

Link to comment
Share on other sites

நன்று தமிழ்வேந்தன்.  எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன. ..

> ஐந்திணை நிலங்களை பிரித்து அவைகளின் கடவுளாக முருகன் எங்கும் கூறப்படவில்லையே. குறிஞ்சி நிலக் கடவுகளாக கூறப்படும் சேயோனுக்கும் முருகனுக்கும் எதாவது தொடர்பு உண்டு என்று எண்ணுகிறீர்களா?

> வீரத்தின் அடையாளமாக கருதப்படும் கந்தனின் கையில் வேலும், அவன் செய்த போர்களையும் காண்கிறோம். போர்த்தொழிலை கொண்ட கந்தன் கொல்லாமையை போதிக்கும் சமண மதத்தின் மூலமாக பார்க்கலாமா?

> "கொடிநிலை கந்தழி வள்ளி என்னும்
வடுநீங்கு சிறப்பின் முதலன
மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே"

என்று தொல்காப்பியம் கூறும் கந்தழி வழிபாட்டு முறைக்கும் கந்தனுக்கும் தொடர்பு உண்டா ?

 

> சங்க இலக்கியம் முழுவதும் கூறப்படும் "வேலன் வெறியாட்டில்" வழிபடக்கூடியவன் இவனா?
 

Link to comment
Share on other sites

> வீரத்தின் அடையாளமாக கருதப்படும் கந்தனின் கையில் வேலும், அவன் செய்த போர்களையும் காண்கிறோம். போர்த்தொழிலை கொண்ட கந்தன் கொல்லாமையை போதிக்கும் சமண மதத்தின் மூலமாக பார்க்கலாமா?

 

உங்கள் கேள்வி நியாயமானதே. கொல்லாமையை போதிக்கும் சமண(ஆசீவகம், ஜைனம்) மதத்தில் எப்படி போர் புரிந்து பிற உயிர்களைக் கொன்ற அரசன் இருக்க முடியும்?.

 

போர் என்பதை எதிரியை அழிக்கும் தொழிலாகப் பார்ப்பதை விட தமிழர்கள் அதை ஒரு கலையாகப் பார்த்தனர் என்றேக் கூறவேண்டும். போர்க்கலையில் வெற்றி பெறுவது வீரத்தின் அடையாளமாகப் பார்க்கப்பட்டது எனலாம்.

 

ஆசீவக(சமணம்) நெறி என்றால் கொல்லாமை, விதி நம்பிக்கை, முதலிய கோட்பாடுகள் மட்டும் அல்ல. அப்படிப்பட்ட காட்சிதான் நம் மனதிற்கு முதலில் வரும். அப்படிப்பட்ட நிலைமையில் காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். ஆனால், கலைகளை(ஆயகலைகள் 64 - அறிவியல்கள்) உருவாக்கியவர்கள் தமிழ்ச் சித்தர்கள்(ஆசீவக சித்தர்கள்).

தமிழ் மொழி - ஒரு கலை

சோதியம் - ஒரு கலை

போர் - ஒரு கலை

சித்தம்(சித்த மருத்துவம்) - ஒரு கலை

ஓகம்(யோகம்) - ஒரு கலை

 

போர்புரியும் நோக்கத்தில் மூன்று வகை உண்டு. வீரத்திற்காக போர் புரிவது. பகைக்காக போர் புரிவது. போராமைக்காக(பொறாமை)/ஆக்கிரமிப்பிற்காக/தன் தேவைக்காக போர் புரிவது. முதல் வகையில் பகைவரை அழிக்க வேண்டிய தேவை இல்லை. ஆனால், இரண்டாம் மற்றும் மூன்றாம் வகையில் பகைவரை அழிக்கும் நோக்கம் கண்டிப்பாக இருக்கும். இந்த வேறுபாடு தமிழர்களுக்கு கண்டிப்பாகத் தெரிந்திருக்கும்.

 

தமிழர்களுக்குள்ளேயே முற்காலத்தில், வீரத்திற்காக போர் புரிந்தவர்கள், பிற்காலத்தில், பகைக்காக போர் புரிந்தனர் என்பது ஒன்று. ஆனால், தமிழர்களைத் தவிர பிற மக்கள் கூட்டங்களும் தமிழர்களின் மீது போர் தொடுத்து வந்தனர். அக்காலத்திலேயே, ஒரு நாடு கலைகள்(அறிவியல்கள்) மற்றும் செல்வங்கள் கொழிக்கும் நாடாக இருந்தால், பிற நாட்டு மக்கள்/பகைவர்கள்(தமிழகத்தைத் தவிர) போர் தொடுத்து(பண்பாட்டுப் போர்/அரசியல் போர்) வரத்தான் செய்வர்(இது நியதி). பகைவர்களிடமிருந்து மக்களைக் காக்க போர்க்கலைகளும் மற்ற சண்டையிடும் கலைகளும்(சிலம்பாட்டம், மல்யுத்தம், மற்றும் பல) தேவைப்பட்டிருக்க வேண்டும். இப்படிப் பட்ட கலைகளை உருவாக்கியவன்/பெறிதாக வளர்த்தவன் முருகனாக இருந்திருக்க வேண்டும். முருகன் போர்கள் செய்து தன் மக்களைக் காத்தான்(மக்களின் உயிரைக் காத்தான்). சங்க இலக்கியம் குறிப்பிடும் முருகன் செய்த போர் இரண்டாம் மற்றும் மூன்றாம் வகையைச் சார்ந்தவை. மேலும், இங்கு நோக்க வேண்டியதென்னவென்றால், சங்க இலக்கியங்கள் முருகன் பகைவரை அழித்தான் எனக் கூறவில்லை. மாறாக பகைவரை துரத்தியடித்தான் என்றேக் கூறுகிறது. இங்கு, நோக்கம் என்பது தன் நாட்டு மக்களைக் காப்பதேத் தவிர பகைவரை அழித்தல் ஆகாது. அப்படி அவன் செய்யவில்லையென்றால், கொல்லாமையை பின்பற்றும் அவன் நாட்டு மக்களும் அழிவர் என்கிற பொழுது, ஒரு நாட்டு அரசன் என்ற முறையில் அவன் போர் புரியாமல் இருக்க முடியாது.

 

கொல்லாமை என்பதை ஒரு கோணத்தில் பார்த்தால் உயிரைக் காப்பது(கொல்லாமல் காத்தல்) எனவும் பொருள் கொள்ளலாம். இன்னும் கூறப்போனால், ஒரு உயிரை கொல்லாமல்/கொல்லவிடாமல் தடுப்பதும் உயிரைக் காத்தல் எனப்படும்(அரசனின் தொழிலான மக்களைக் காத்தல்). இவ்வகையில் பார்த்தாலும், முருகன் பகைவரின் உயிரைக் காத்து அவர்களை அழிக்காமல் துரத்தியிருக்கிறானே.

 

> ஐந்திணை நிலங்களை பிரித்து அவைகளின் கடவுளாக முருகன் எங்கும் கூறப்படவில்லையே. குறிஞ்சி நிலக் கடவுகளாக கூறப்படும் சேயோனுக்கும் முருகனுக்கும் எதாவது தொடர்பு உண்டு என்று எண்ணுகிறீர்களா?

 

சேயோன் என்ற சொல் சிவந்தவன் எனப் பொருள்படும். சிவந்தவன் என்றால் சிவனா முருகனா என நாம் பார்க்கவேண்டும்.

குறுந்தொகையின் கடவுள் வாழ்த்துப் பாடல் முருகனை சிவப்பு நிறமுடையவன் எனக் குறிப்பிடுகிறது. இப்பாடலில் இன்னும் ஆய்வு தேவை. ஏனென்றால், இதேப்பாடலில் தான் 'உடுக்கைக் குன்று' எனும் சொல்லும் வருகிறது. 'உடுக்கை' என்பது சிவன் தொர்புடைய சொல்.

 

முருகனுக்கும் சிவப்பு நிறத்திற்கும் குறுஞ்சி நிலத்திற்கும் தொடர்புகள் இருந்தாலும் சேயோன் எனும் சொல் ஆய வேண்டிய ஒன்று.

 

ஐவகை நிலத்திற்கும் தொல்காப்பியர் கூறும் கடவுள்கள் முறையே

 

சேயோன்

மாயோன்

வேந்தன்

வருணன்

கொற்றவை

 

ஆகும். இதில், வேந்தன் எனும் சொல்லை நாம் எடுத்துக் கொண்டால், அது ஒரு பொதுச்சொல். அதாவது மருத நிலத்தை ஆளும் அரசனைக் குறிக்கும் பொதுச்சொல். ஆகையால், சேயோன் எனும் சொல் ஒரு பொதுச்சொல்லாகக் கூட இருக்கலாம். இச்சொல், சிவன் முருகன் இருவரையுமே குறிக்கப்பயன்பட்டிருக்கலாம். சங்ககாலத்தில் இருந்து இன்று வரை முருகனை சிவனின் ஒரு அம்சமாக பார்க்கப்பட்டிருப்பதும்(யாரால்?) இங்கு நோக்கத்தக்கது.

  • வேதங்களில் இந்திரன் என்ற தேவர்கள் அரசனின் படைகளான மருதகணங்களின் தலைவனாக ருத்ரன்(உருத்திரன்(சிவன்)>ருத்திரன்>ருத்ரன்) குறிப்பிடப்படுவது போன்றே வடமொழிப் புராணங்களில் தேவசேனாபதியாக முருகன் (ஸ்கந்தன்) குறிப்பிடப்படுகிறான்.
  • திருஞானசம்பந்தரை முருகன் அம்சம் என்றும், இளைய பிள்ளையார் என்றும் சொல்வர். கந்தசஷ்டிக்கு முருகனுக்கு மும்மூர்த்தி அலங்காரம் செய்யும் வழக்கம் உள்ளது. ஐப்பசியில் சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் காலையில் முருகன் சிவப்பு வஸ்திரம் அணிந்து (சிவப்பு சாத்தி) நடராஜராஜர்(சிவன்) அம்சமாகவும், மதியம் வெள்ளை (வெள்ளை சாத்தி) வஸ்திரத்துடன் பிரம்மா அம்சமாகவும், மாலையில் பச்சை (பச்சை சாத்தி) வஸ்திரம் அணிந்து திருமால் அம்சமாகவும் காட்சி தருவார். இந்த வழக்கத்தை நாம், சிவகிரியில்(திருநெல்வேலி) உள்ள முருகன் கோயிலிலும் மருங்கூரில்(கன்னியாகுமரி) உள்ள முருகன் கோயிலிலும் காணலாம்.
  • கீழுள்ள நம் மரபு வழிச்செய்தியையும் இங்கு நாம் பார்க்கவேண்டும்.

தமிழ் கற்றுக்கொடுத்தது

சிவன்->முருகன்->அகத்தியர்->அகத்தியர் சீடர்களுள் ஒருவரான தொல்காப்பியர்

முருகன் சிவனிடமிருந்து தமிழ் மொழியைக் கற்றுக்கொண்டார்.

 

 

இதைப் பற்றி சிறிது ஆய்ந்துவிட்டு மிகுதியை அடுத்தத் திரியில் எழுதுகிறேன். இப்போதைக்கு எனக்குத் தோன்றுவது,

 

சேயோன் -> சிவந்தவன்(சேயோன் பொருள்) -> சிவன், முருகன் <- சிவலிங்கம் <- கந்தழி

 

> "கொடிநிலை கந்தழி வள்ளி என்னும்

வடுநீங்கு சிறப்பின் முதலன

மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே"

என்று தொல்காப்பியம் கூறும் கந்தழி வழிபாட்டு முறைக்கும் கந்தனுக்கும் தொடர்பு உண்டா ?

 

> சங்க இலக்கியம் முழுவதும் கூறப்படும் "வேலன் வெறியாட்டில்" வழிபடக்கூடியவன் இவனா?

 

இதைப் பற்றி எனக்குத் தெரியவில்லை. என் பார்வைக்குக் கொண்டுவந்தமைக்கு நன்றி... :)

 

இதைப் பற்றி ஆய்ந்து, அடுத்தத் திரியில் இவைகளைப் பற்றிய என் ஆய்வை சேர்த்து எழுதுகிறேன்...

Link to comment
Share on other sites

தொடர்ந்து ஆய்ந்து எழுதுங்கள். ஆவலோடு வாசிக்கிறேன்.

Link to comment
Share on other sites

உங்கள் ஆய்வின்போது கீழ்க்கண்டவற்றையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
 
சங்க இலக்கியத்தில் மூன்று நிலைகளில் படிப்படியாக முருக வழிபாடு மாறுபடுகிறது. 
 
1. முதலில் குறிஞ்சிக் கடவுளாக குறவர் தெய்வமாக போற்றப்படுகிறார்.  அவருக்கு நிலையான ஆலயமோ வழிபாட்டு  இல்லை.வெறியாட்டு போன்ற விழாக்கள் இந்தக் காலகட்டத்தில் இருந்தது. 
 
2. ஆறுபடை வீடுகள் என்ற பெயரில் இருந்த ஆலயங்கள் முருகனின் தங்கும் இடமாக அமைத்தது. இது திருமுருகாற்றுப் படை காலம் 
 
3. வெறியாட்டு போன்ற விழாக்கள் தவிர்க்கப்பட்டு முற்றிலும் சமஸ்கிருத மொழியிலான மந்திரங்களை ஓதி செய்யப்பட்ட வழிபாடு. இது பரிபாடல் காலம் 
 
வேந்தன் என்னும் சொல் முதலில் மருத நிலத் தலைவருக்கே இருந்தது. காலப்போக்கில் அது பொதுவாக மாறியது.
 
கி.பி. 7ஆம் நூற்றாண்டு முதல் 10ஆம் நூற்றாண்டு வரையிலான முருகன் சிற்பங்களிலெல்லாம் முருகனின் வாகனமாக யானையே சித்திரிக்கப்படுகிறது என்று ஒரு கட்டுரையில் படித்தேன்.யானை வடிவெடுத்து வள்ளியை அச்சுறுத்தி முருகனிடம் அடைக்கலம் புகச் செய்து இருவரையும் மணம் புணரச் செய்தவர் விநாயகரே என்று கி.பி. 15ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த அருணகிரிநாதர் தமது திருப்புகழில் குறிப்பிடுகிறார்.  
 
ar0407064a.jpg
Link to comment
Share on other sites

  • 4 weeks later...

ஆதித்ய இளம்பிறையன் அவர்களே,

தமிழர்களின் சேயோனுக்கும் சிவப்பு இந்தியர்களுக்கும்(Red Indians) நிறைய பண்பாட்டு ஒற்றுமைகள் கிடைக்கிறது. அதேபோல, தமிழர்களின் மயோனுக்கும் மாயன்களுக்கும்(Mayans) நிறைய பண்பாட்டு ஒற்றுமைகள் கிடைக்கிறது. சேயோன், கந்தழி குறித்த உங்கள் ஆய்விற்கு உதவும் எனத் தோன்றுகிறது.

Link to comment
Share on other sites

தமிழ்வேந்தன் உங்களது அடுத்த ஆய்வுப் பகுதி எப்போது ??.

Link to comment
Share on other sites

தமிழ்வேந்தன் உங்களது அடுத்த ஆய்வுப் பகுதி எப்போது ??.

 

இன்னும் ஓரிரு வாரங்களில் அடுத்தக் கட்டுரை முடிந்துவிடும்...முடிந்தவுடன் பகிர்ந்துகொள்கிறேன்... :)

 

ஐயா ஆதி. சங்கரன் அவர்கள் ஆசீவகம் பற்றி இயற்றிய சிறுசிறு நூல்கள் சிலவற்றை அவரின் வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்(இணைப்புகள் கீழே)...இன்னும் பல கோட்பாடுகள் இந்நூல்களில் உள்ளன...

 

ஆதித் தமிழர் மெய்யியல், ஆதி. சங்கரன்

ஆசீவக மரபின் அழியாச் சின்னங்கள், ஆதி. சங்கரன்

ஐயனார் தந்த ஐகாரமும் ஐகாரம் தந்த வள்ளுவரும், ஆதி. சங்கரன்

 

நேரம் கிடைக்கும்பொழுது படிக்கவும்...

Link to comment
Share on other sites

  • 1 year later...

தமிழ்வேந்தன் அய்யா நான் உங்களை தொடர்புகொள்ள விரும்புகிறேன் தயவுசெய்து எப்படி தொடர்புகொள்வது என தெரியபடுத்துங்கள்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.