Jump to content

இக்கரையும், அக்கரையும் ! ஒரு இரை மீட்டல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

278067174_96bbbc2f6b.jpg

 

அந்த வேப்ப மரத்தின் நிழலில், சாக்குக்கட்டிலில் படுத்திருந்த சந்திரனுக்குக் கொஞ்சம் ஆச்சரியமாகத் தான் இருந்தது! ஒரு நீண்ட காலச் சொகுசு வாழ்க்கை அவனது உடலை இன்னும் மாற்றிவிடவில்லை என நினைத்தபோது, தனது உடலைப்பற்றிக் கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது! பல வருடங்களுக்கு, முன்பும் இதே இடத்தில். பல தடவைகள் மதியச் சாப்பாட்டின் பின்பு படுத்து உறங்கியிருக்கிறான்! அப்போது, அருகே இருந்த தென்னம் பிள்ளையில், எட்டிப்பிடிக்கலாம் போலச் செவ்விளனிக் குலைகள் தொங்கும்! அவற்றின் அழைகைப் பல முறை பார்த்து வியந்திருக்கிறான்! ஒரு கவிஞனாக இருந்திருந்தால், அவனது அந்த வயதின் கற்பனைகள், அளவில்லாத, அர்த்தமில்லாத ஆயிரம் கவிதைகளையாவது  புனைந்திருக்கும் என்பதில் அவனுக்குச் சந்தேகம் இருக்கவில்லை! இப்போது அந்தத் தென்னம்பிள்ளை, தென்னை மரமாகி, ஏறிக் கூடப் பறிக்க முடியாத அளவுக்கு மேலே போய்விட்டது! அதனைப் போலவே, அந்த நேரத்தில் அருகில் இருந்தன போலவும், அவனால் இலகுவாக அடைந்திருக்கலாம் போலவும் இருந்த பல , அந்தத் தென்னைமரத்துத் தேங்காய்களைப்போலவே வெகு உயரத்துக்குப் போய் விட்டன!

 

அப்போது, வேப்பமரத்திலிருந்து காகம் ஒன்று பிடுங்கிப்போட்ட ஒரு வேப்பம்பழம் அவன் மேலே வந்து விழுந்தது! முந்திய சந்திரனாக இருந்திருந்தால், ‘யக்' என்று கூறியபடி,அதைத் தூக்கி எறிந்திருப்பான்! அத்துடன் ஒரு மூன்று ‘திசுக்களாலாவது' துடைத்து எறிந்து, அந்தக்காகத்தையும் நாலு ‘கெட்ட' ஆங்கில வார்த்தைகளால் திட்டித் தீர்த்திருந்தால் தான் அவனது ஆத்திரம் அடங்கியிருக்கும்! ஆனால் இப்போது, அவனது மனம் காகத்தின் பக்கமும் நியாயம் இருக்கின்றது என்ற விதத்தில் சிந்திக்கத் தொடங்கியது! நாலு பக்கமும் திரும்பிப் பார்த்துத் தன்னை ஒருவரும் கவனிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியவனுக்கு, அந்தப் பழத்தை வாயில் போட்டுச் சுவைக்கும் ஆசையும் வந்து விட்டது! அதனை வாயில் போட்டு உமிழ்ந்த போது, அந்த வேப்பங்கிளையில் ‘அன்ன ஊஞ்சல்' ஆடிய நினைவுகளும் பழைய நண்பர்களின் நினைவுகளும் வந்து போயின! எப்பவுமே ஒரு விதமான ‘அழுத்தநிலையில்' இருக்கும் அக்கரையின் மன நிலைக்கும், எந்த வித ‘அழுத்தமும்' இல்லாத இக்கரையின் மன நிலைக்கும் ஒரு நீண்ட இடைவெளி இருப்பது இப்போது தான் அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது!

 

ஒரு ஆசிரியக் குடும்பமாக இருந்த அவனது பெற்றோரினால், அவனையும், அவனது சகோதரர்களையும், எவ்வாறு அவர்களது சம்பளத்தில் வளர்த்தெடுக்க முடிந்தது  மட்டுமன்றி, படிப்பித்துக் கரையேற்றவும் முடிந்தது என்பது இன்னும் கூட அவனுக்குப் புரியாத புதிராகத் தான் இருந்தது! அது மட்டுமன்றி, உறவுகள், சொந்தங்கள் என்று ஒருவருடனும், பிரச்சனைகள் இல்லாமல் அவர்களால் எவ்வாறு வாழ முடிந்தது என்பதும் கூட அவனுக்கு இன்னும் விளங்கின பாடாயில்லை ! என்ன காரணமாக இருக்கலாம் எனக் காரணங்களைத் தேடியபோது, அவர்களிடம் ‘பகட்டு' என்பது இருக்கவில்லை என்பதும், ஏதாவது ஒரு அவசியமில்லாத தேவை வரும்போது, ‘அடுத்த சம்பளம்' வரட்டும் என, இலகுவாக அவர்களது தேவைகளைத் தள்ளி வைக்கும் மனப்பாங்கும் தான் காரணமாக இருக்கலாம் என்றும் நினைத்துக்கொண்டான்! ஒரு வேளை, அடுத்த சம்பளத்தில் மட்டுமல்ல, அதற்கடுத்தடுத்த சம்பளங்களிலும் வேறு தேவைகள் வரும்போது, இன்னொரு சம்பளத்துக்கு அந்தத் தேவையைத் தள்ளிப்போடுவது அவர்களுக்குப் பிரச்சனையாக இருக்கவில்லை! மற்றது, அவர்களிடமிருந்த, சந்தேகத்துக்கிடமில்லாத ‘தெய்வ நம்பிக்கை' யும் ஒரு காரணமாக இருக்கலாம்!

 

என்ன வாத்தியார், பொம்பிளைப் பிள்ளையள் எல்லாம் வளர்ந்து கொண்டு வருகுதுகள், ஏதாவது திட்டமேதும் இருக்கா எண்டு யாராவது சீண்டினால், ‘படைத்தவன் படியளப்பான்' என்ற படி கதையை முடிக்க அவர்களால் முடிந்திருக்கிறது! என்ன, இந்த மனுசனுக்குப் புத்தி, கித்தி ஏதும் பிசகி விட்டதா எனத் தாயார் சொல்லும்போது, சந்திரனும் அப்படித்தான் யோசித்திருக்கிறான்! ஆனால், இறுதியில் ஏதோ ஒரு விதத்தில் படைத்தவன் படியால் அல்ல, சாக்கு மூட்டையாலேயே அளந்தது வேற கதை!

 

ooooo ooooo ooooo ooooo ooooo ooooo ooooo ooooo

 

அவனது ஆரம்ப கால வாழ்க்கையை திரும்ப நினைத்துப்பார்க்கும் போது அவனுக்கே வெட்கமாக இருந்தது!  எவ்வளவு ‘சின்னப்பிள்ளைத் தனமாக' அவனும் உருத்திரனும் நடந்திருக்கின்றார்கள் என நினைக்கச் சிரிப்புத் தான் வந்தது! தன்னை மறந்து அவன் வாய் விட்டுச்சிரிக்கவும், தூரத்தில் படுத்திருந்த நாய், தன்னை யாரோ மல்லுக்குக் கூப்பிடுகின்றார்கள் என நினைத்து, உடலைச் சிலிர்த்தது! இங்கிலாத்துக்குப் போக வேண்டுமென்ற ஆசை ஏற்பட்டதே, அவனது நண்பன் உருத்திரனால் தான்! உருத்திரனது தமையன், ஏற்கெனவே இங்கிலாந்தில் படித்துக் கொண்டிருந்தான்! அவன் அனுப்புகின்ற ‘பிறை நைலோன்' சேட்டுக்களை இவன் கல்லூரிக்குப் போட்டுக்கொண்டு வந்து காட்டுகின்ற எடுப்புக்களும், அவனது தமையன் ஊருக்கு வரும்போது, அவருக்கு நடக்கின்ற அரச மரியாதைகளும், அவனது தமையனது வாயிலிருந்து வழுக்கி விழுகின்ற ஒரு விதமான ஆங்கிலமும் முக்கிய பங்கு வகித்திருக்க வேண்டும்!

 

சரி, கதையை வளத்திக்கொண்டு போகாமல், சந்திரனும் உருத்திரனும் லண்டனுக்கு வந்து சேர்ந்து, இருவரும் ஒரு தெரிந்த நண்பரின் வீட்டில்,ஒரு அறையை வாடகைக்கு எடுத்துப் படிக்கத் தொடங்கினார்கள்! நண்பரும், தன்னிடமுள்ள ‘ மைக்கிரோ வேவை' இருவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார்! அது என்னவோ ஒரு குமர்ப்பிள்ளை மாதிரியும், நாங்கள் தேவையில்லாமல் அதற்குக் கிட்டப்போகக் கூடாது எண்ட மாதிரியும் சொல்லியிருந்தார்! அதே நேரம், முன் பின் பழக்கமில்லாத லண்டன் குளிர் அவர்களை ஒரு பக்கம் வாட்டியெடுத்தது! நண்பர் வீட்டில், ‘சென்ட்ரல் ஹீற்றிங்’ இருந்தாலும் இவர்களிருந்த அறையான் மட்டும் கொஞ்ச நேரத்திலை தானாய் நிண்டு போயிரும்! சந்திரனும், உருத்திரனும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்த படி ஒரே கட்டிலில் படுப்பதால் கொஞ்சமாவது அந்தக்குளிரிலிருந்து தப்பிப்பிழைக்கக் கூடியதாயிருந்தது! இருவருக்கும், ஊரில் பல ‘பொறுப்புக்கள்' இருந்ததாலும், ‘வீட்டுக் கந்தோர்’ விசயத்தையும் கவனமாகக் கையாள வேண்டிய தேவை இருந்ததாலும், இருவருக்கும் கையில் ‘ காசு' மிஞ்சுவதில்லை! உருத்திரனின் அண்ணன்காரனின் நிலையும் இவர்களைப் போலத் தான் இருந்தது, அங்கு வந்த பின்னர் தான் புரிந்தது!

 

கொஞ்சம் தூரத்திலை போய் வேலை செய்தால், கொஞ்சம் உழைக்கலாம் என எண்ணிய உருத்திரன் மச்சான் ஒரு கார் வாங்கினால் என்னடா எண்டு சந்திரனுக்கு ஆசையை ஊட்டினான்! ஆனால் இருவருக்கும் கார் ஓடத் தெரியாது என்பது அப்போது பெரிய பிரச்சனையாகத் தெரியவில்லை! இரண்டு பேரிட்டையும், இருந்த காசெல்லாத்தையும் சேர்த்து ஒரு ‘டற்சன் செர்ரி' ஒண்டும் வாங்கின பிறகு, உருத்திரனின் அண்ணனின், ‘பிறந்த தினத்தை’, மனப்பாடமாக்கி வைத்து இருவரும் ஓடக்கூடியதாக இருந்தது! கொஞ்சக்காலம் ஓடின பிறகு, பின்னால வாற, கோண் சத்தங்கள், நீட்டப்படுகின்ற நடுவிரல்கள் எல்லாம் கொஞ்சம், கொஞ்சமாய்க் குறைஞ்சு போக,  ஒரு மாதிரி இருவரும் சாரதி அனுமதிப்பத்திரங்களையும் எடுத்தாச்சு!  அந்தக் கார் ஒரு ராசியான கார் தான்! போனட்டைத் திறந்து பார்த்தால் உள்ளுக்குள்ள கனக்க ஒண்டும் இருக்காது! அதுக்கு எண்ணெய், தண்ணி பார்க்கிறதெல்லாம் உருத்திரனும், சந்திரனும் தான்!

 

ஒரு நாள், உருத்திரன் ஒரு சேர்விஸ் ஸ்ரேசனில வேலை செய்யிற நேரம், விடியக்காலமை ஆரோ ஒருத்தன் தன்னுடைய புதிய ஹொண்டா கார் ஒண்டைக் கொண்டுவந்து கழுவியிருக்கிறான்! அப்போது, அவன் போனட்டையும் திறந்து, அதுக்குள்ளையும் ஹோஸ் பைப்பால, தண்ணியை அடிச்சுக் கழுவியிருக்கிறான்! அதைப்பாத்த உருத்திரனுக்குப் பொறுக்க முடியவில்லை! வேலை முடியத் தன்ர காரையும் அதே மாதிரிக் கழுவ, மிச்சம் உங்களுக்கு விளங்கியிருக்கும் என நினைக்கிறேன்!

 

இன்னொரு முறை, வீட்டிலிருக்கும் போது, முன்வீட்டு கிழவியொண்டு,தன்ர மகனோடு சேர்த்து ஒரு பெரிய தொலைக்காட்சிப் பெட்டியொன்றைக் கொண்டு வந்து வெளியில வைத்து விட்டுச் செல்வதை இரண்டு பேரும் அவதானித்தார்கள். அதை ஆரெண்டாலும் எடுக்கலாம் என்று அவர்களுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை! அந்தக் காலத்திலை ‘கலர் டிவி' என்பது பெரிய நினைக்கேலாத சாமான்! ஊரிலையே இரண்டு பேரும், சுப்பிரமணியம் பூங்காவுக்குப் போய், தேரில சாமி இருக்கிற மாதிரி ஒரு உயரமான இடத்தில  இருக்கிற டிவி யைத் தான் பார்த்திருக்கிறார்கள். அதில மேலிருந்து கீழ் நோக்கியோ, அல்லது கீழிருந்து மேல் நோக்கியோ கோடுகள் ஓடினது மட்டும் இன்னும் நினைவில இருக்குது! நல்ல இருட்டினாப்பிறகு, ஒரு மாதிரி அந்த டிவியைக் கொண்டு வந்து வீட்டில வைச்சாச்சு! அதில, ஜைரோ போஸ்ட் எண்டு ஒரு தபால் வந்கியின்ர விளம்பரம் ஒன்று போகும்! அப்போது ஒரு சிங்கம் ஒன்று மிகவும் வேகமாக ஓடிவரும்! எங்களது டிவியில் அந்தச் சிங்கத்துக்குப் பதிலாக ஒரு பூனைக்குட்டி ஒன்று 'கர்ச்சித்தபடி' ஓடிவரும்! கொஞ்ச நாளையில, இருவருக்கும் அது பூனைக்குட்டி தானோ என்ற சந்தேகமும் வராமலில்லை!! எல்லாமே நன்றாகப் போய்க்கொண்டிருந்த ஒரு நாளில், வீட்டுக்காரனின் பேரில் ஒரு கடிதம் வந்தது! அதில் அந்த வீட்டில் இரண்டு தொலைக்காட்சிப் பெட்டிகள் இருக்கின்றன என்றும் அதில் ஒன்றுக்கு மட்டும் ‘ லைசன்ஸ்' இருக்கெண்டும் மற்றதுக்குப் பணம் கட்டச் சொல்லியும் அந்தக் கடிதத்தில் கேட்கப்பட்டிருந்தது! எவ்வளவு பணம் கட்ட வேண்டுமெனக் கேட்ட இருவருக்கும், தொகையைக் கேட்டதும் தலை சுற்றத் தொடங்கி விட்டது! வீட்டுக்காரர் தான் போட்டுக்கொடுத்திருப்பார் என்று இருவரும் நினைத்துக் கொண்டு, ஒருவருமில்லாத நேரம் இருவருமே அதைத் தூக்கிக் கொண்டு போய் முந்தியிருந்த இடத்திலேயே வைத்து விட்டார்கள்!

 

இதே போலவே உருத்திரனுக்கு இன்னுமொரு ‘ஐடியா’ வந்தது! இந்த நேரத்தில் இருவருமே ஒரு இரண்டாம் மாடியிலுள்ள ஒரு சின்ன ‘பிளாற்றுக்கு' மாறியிருந்தார்கள்! ஒரு நாள், வேலை முடிந்து வரும்போது, ஒரு பிறீசர் ஒன்று வீதிக்கரையோரத்தில் கேட்பாரற்றுக் குந்திக்கொண்டிருந்தது! முந்திய டிவி அனுபவம் இருந்த படியால், அதை ஒரு மாதிரிக் காவிக்கொண்டு வந்தால், ஒவ்வொரு கிழமையும் மீன் கடைக்குப் போகத் தேவையில்லை என்ற வழியில் சிந்தித்தான்! ஏனெனில், அவர்களுக்குப் பிடித்த ‘ டொக்ரர் பிஷ்'  (ஒட்டி அல்லது ஓரா) தனிய ‘பில்லிங்ஸ் கேற்’ சந்தையில மட்டும் தான் விலைப்படும்! ஆரோ ஒரு வெள்ளைக்காரன் ஒட்டி மீன் முள்ளுக்குத்தின கடுப்பில அந்தப் பேரை வைச்சிருக்க வேணும்! அந்த ‘பிரீசரை’ ஒரு மாதிரி இழுத்துக்கொண்டு வந்து, ஒரு ‘கிறேன்' பிடிச்சு ஜன்னலுக்குள்ளால எத்தி, வீட்டை கொண்டு வந்தாச்சு! , இரண்டு பேரும் ஒரு மாதிரி, ஆறுதல் மூச்சு விட்ட நேரம்! நெடுக மீன் சாப்பிடற படியால், இரண்டு பேருக்குமே ‘ஊரில' இருக்கிற மாதிரி ஒரு உணர்வு! வாற போற ஆக்களும், தங்கட பங்குக்குக் 'கன காசு வந்திருக்குமே' எண்டு சொல்ல இரண்டு பேருக்கும் நல்ல புழுகம்! எல்லாமே, நல்லாய்ப் போய்க்கொண்டிருந்த வேளையில் ஒரு நாள், அவர்களது மின் கட்டண பில் வந்தது! வழமையா வாறதிலும் பார்க்க மூண்டு மடங்கு! தெரிஞ்ச ஆங்கிலத்தை வைச்சு, மின் சப்பிளை பண்ணுற கொம்பனியோட ஒரே சண்டை! அவனுக்கும் ஒண்டும் வடிவா விளங்கையில்லைப் போல! சரி, வாற முறை பார்க்கலாம் என்று சொல்லிப்போட்டு விட்டிட்டான்! இரண்டாவது ‘பில்' முந்தினதை விட இரண்டு மடங்காக இருந்தது! இந்த முறை ‘சண்டை' உச்சத்தில போக, மின் சப்பிளை பண்ணிற கொம்பனி ஆக்கள் நேரிலேயே வந்திட்டாங்கள்! இங்கை ஏதாவது 'புதிசா' வாங்கினீங்களோ எண்டு அவன் கேட்க, இவர்கள் இரண்டு பேரும் தலைகளை ஒரே நேரத்தில், இடமிருந்து வலமாக ஆட்டத் தற்செயலாக அவர்களது கண்கள் 'பிறீசரைப் பார்த்ததும், அவர்கள் கண்களில் அலாதியான ஒரு மலர்ச்சி ஏற்பட்டது! 'யூரேக்கா' ! பிறகென்ன, இரண்டு பெரும் பிறீ சருக்குப் பிரியாவிடை கொடுக்க வேண்டி வந்திட்டுது!

 

இந்த இனிய அனுபவங்கள், இருவருக்கும் திருமணமாகும் வரை தொடர்ந்தது!

 

(யாவும் கற்பனை) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
(யாவும் கற்பனை)
புங்கை என்ன கறபனையோ ...நம்பமுடியவில்லை :D
Link to comment
Share on other sites

கதையை வாசிக்கும்போது எங்கேயோ நடந்தது, கேள்விப்பட்டது மாதிரித்தான் தோன்றுதே ஒழிய

"யாவும் கற்பனை" என்றவாறு இல்லை.  :)  மிக அருமையாக..... கொஞ்சம் நகைச்சுவை இழையோட எழுதிய விதம் அருமை.

பாராட்டுக்கள் புங்கை.... வாசிக்க இனிமையாக இருந்தது. :)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை என்ன கறபனையோ ...நம்பமுடியவில்லை :D

கருத்துக்கும் வருகைக்கும் நன்றிகள், புத்தன்!

 

தமிழில் தான் பழ மொழிகளுக்குக் குறைவில்லையே! :D

 

' பாம்பின் கால், பாம்பறியும்"  :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது உங்கட அனுபவமாத்தான் இருக்கும். ஒத்துக்கொள்ளுங்கோ புங்கை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவா கற்பனை;  நான் இங்கு வந்தபோது கொஞ்சநாலில் மணைவி பிள்ளைகளும் வந்திட்டினம், சரி அவர்களுக்குப் பொழுது போக நண்பர்கள் கொண்டுவந்து தந்த தொலைக்காட்சிப் பெட்டி மட்டும் ஆறு வேட்டில் இருந்தது. ஒன்டு கண்சிமிட்டும், மற்றது காட்டில வச்ச கமரா மாதிரிஊளையிடும், இன்னொன்டு ஆஸ்பத்திரியில் கார்டியாக்குக்கு பொருத்திய  கணணி மாதிரி கோடு போட்டுக்கொண்டு போகும்,மற்றது வானவில்லின் அத்தனை வண்ணங்களும் இங்கேதான்  என்டு இளித்துக் கொண்டு இருக்கும், மற்றொன்டு ரயில்வே அட்டவனை போல அத்தனை சேனல்கலையும் தானியங்கியாக மாற்றி  மாற்றிக் காட்டிக் கொண்டிருக்கும், இதுதான் எல்லாத்திலையும் டாப் ... கல்லால மரத்தின் கீழ் சிவம் போல் நிசப்தமாய் ஆசையை அறு  அத்தனையும் உன்னிடம் .....!

 

என் மனைவி மட்டும் லேசுப்பட்டவளா, ஒவ்வொரு பெட்டியையும் ஜன்னலுக்குப் பக்கத்தில ,ஹோலுக்க, அங்கால இங்கால என்டு வைத்து ஒவ்வொன்ரின் மேலும் பூச்சாடிகள் வைத்து அவைகளுக்கு சாபவிமோசனம் அளித்து விட்டாள் .

அதன்பின் னான் டி.வீ வாங்கியது தனிக்கதை!!! இதில் சொல்லப்பட்ட அத்தனையும் 100%  உண்மை, உண்மையைத்தவிர வேறில்லை!!! :rolleyes: :rolleyes:

Link to comment
Share on other sites

இவ்வளவு அழகா கதையை கொண்டு போனபடியால் நிச்சயம் உங்களின் அனுபவமே புங்கை அண்ணே :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையை வாசிக்கும்போது எங்கேயோ நடந்தது, கேள்விப்பட்டது மாதிரித்தான் தோன்றுதே ஒழிய

"யாவும் கற்பனை" என்றவாறு இல்லை.  :)  மிக அருமையாக..... கொஞ்சம் நகைச்சுவை இழையோட எழுதிய விதம் அருமை.

பாராட்டுக்கள் புங்கை.... வாசிக்க இனிமையாக இருந்தது. :)

வணக்கம், கவிதை!

 

ஒரு இருபது வருட கால இடைவெளிக்குள் 'புலம் பெயர்ந்தவர்கள்' வாழ்வில் மிகப்பெரிய மாறுதல்கள் உள்ளன! வா என்று சொல்ல உறவுகளோ, ஊரவர்களோ இல்லாத ஒரு காலம்!

இருந்தவர்களும் தாங்கள் 'மீட்கப் பட்டவர்கள்' போலவும்  நாங்கள் மீட்கப்பட வேண்டியவர் போலவும், அறிவுரை மட்டுமே தந்த காலம்! ஒரு நண்பனுக்குத் திருமணம் செய்து வைப்பதற்க்குக் கூட 'குத்து விளக்கு' பேணித் தகரத்தை வெட்டி வடிவமைத்த காலம்!

ஆனால், அந்த வாழ்வில், நண்பர்கள் சேர்ந்து சுமைகளைப் பதிந்த அனுபவங்கள் பல உண்டு! அவற்றுள் சிலவற்றைப் பகிர்ந்து கொள்ள முயன்றேன்!

அவற்றை ஒரு அனுபவப் பகிர்வு என எழுதினால், யாவும் கற்பனை என்று போட வேண்டிய தேவை இல்லை! ஆனால், கதையாக எழுதும் போது, ஓரளவுக்குக் கற்பனை கலக்க வேண்டி வருவதால், எத்தனை வீதம் கற்பனை என்று கணக்குப் பார்க்காமல், யாவும் கற்பனை என்று போட்டேன்! :icon_idea: 

கற்பனை கலக்காமல் எழுதினால், வாச்சிக்கிற சனம் பின்வருமாறு பாட வெளிக்கிட்டிடும்!

 

'அட நீ தானா, அந்தக்  குயில்?' :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது உங்கட அனுபவமாத்தான் இருக்கும். ஒத்துக்கொள்ளுங்கோ புங்கை.

திரும்பத் திரும்ப, எல்லோரும் இதையே எழுதிற படியால, எல்லார் மனதிலையும் 'புங்கை' இப்பிடித் தான் இருப்பார் எண்டு ஒரு 'படம்' இருக்குது போல கிடக்கு! :D

 

உண்மையான 'புங்கை' ஒரு அப்பாவி!

 

இது சின்ன வயதில் எடுத்த படம்! :D

 

photo.jpg

Link to comment
Share on other sites

எப்பவுமே ஒரு விதமான ‘அழுத்தநிலையில்' இருக்கும் அக்கரையின் மன நிலைக்கும், எந்த வித ‘அழுத்தமும்' இல்லாத இக்கரையின் மன நிலைக்கும் ஒரு நீண்ட இடைவெளி இருப்பது இப்போது தான் அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது! ////

 

என்று உலகம் உலகமாக இருந்ததோ அன்று உலகத்தின் கிராமங்களில் இந்த அழுத்தங்கள் இல்லாது இருந்தன . ஆனால் உலகம் கிராமமாக மாறியபொழுது கிராமங்களிலும் அழுத்தம் இலகுவாக தொற்றிக் கொண்டது . அன்றைய கிராமத்தில் உனக்கு ஒன்று என்றால் அணைக்கப் பல கைகள் இருந்தால் அழுத்தம் இல்லை . அனால் இன்று அப்படி இல்லாதால் எங்கும் அழுத்தங்கள் கூட .  ஒரு சிறிய விடையத்தை திரித்த விதம் நன்றாகத்தான் உள்ளது . பாராட்டுக்கள் புங்கையூரான் :) :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவா கற்பனை;  நான் இங்கு வந்தபோது கொஞ்சநாலில் மணைவி பிள்ளைகளும் வந்திட்டினம், சரி அவர்களுக்குப் பொழுது போக நண்பர்கள் கொண்டுவந்து தந்த தொலைக்காட்சிப் பெட்டி மட்டும் ஆறு வேட்டில் இருந்தது. ஒன்டு கண்சிமிட்டும், மற்றது காட்டில வச்ச கமரா மாதிரிஊளையிடும், இன்னொன்டு ஆஸ்பத்திரியில் கார்டியாக்குக்கு பொருத்திய  கணணி மாதிரி கோடு போட்டுக்கொண்டு போகும்,மற்றது வானவில்லின் அத்தனை வண்ணங்களும் இங்கேதான்  என்டு இளித்துக் கொண்டு இருக்கும், மற்றொன்டு ரயில்வே அட்டவனை போல அத்தனை சேனல்கலையும் தானியங்கியாக மாற்றி  மாற்றிக் காட்டிக் கொண்டிருக்கும், இதுதான் எல்லாத்திலையும் டாப் ... கல்லால மரத்தின் கீழ் சிவம் போல் நிசப்தமாய் ஆசையை அறு  அத்தனையும் உன்னிடம் .....!

 

என் மனைவி மட்டும் லேசுப்பட்டவளா, ஒவ்வொரு பெட்டியையும் ஜன்னலுக்குப் பக்கத்தில ,ஹோலுக்க, அங்கால இங்கால என்டு வைத்து ஒவ்வொன்ரின் மேலும் பூச்சாடிகள் வைத்து அவைகளுக்கு சாபவிமோசனம் அளித்து விட்டாள் .

அதன்பின் னான் டி.வீ வாங்கியது தனிக்கதை!!! இதில் சொல்லப்பட்ட அத்தனையும் 100%  உண்மை, உண்மையைத்தவிர வேறில்லை!!! :rolleyes: :rolleyes:

சுவியர், உங்கட கதை என்ர கதையை விட நல்லாயிருக்கும் போல கிடக்குது!

 

உங்கட கதையையும் ஒருக்கா எடுத்து விடுறது தானே! :icon_idea:

 

சில அனுபவங்களை எழுதும் எண்ணம் உள்ளது! வரவேற்பு எப்படியிருக்கும் எண்டு ஒரு விதமான 'தயக்கம்' என்னிடம் உள்ளது!

 

விண்வெளிக்கு ' லைக்கா' வை அனுப்பிப் பாத்தது மாதிரி, ஆராவது முதலில் எழுதினால், எனக்கும் எழுத ஒரு துணிவு வரும் தானே!

 

கருத்துக்கு நன்றிகள், சுவியர்!

கதை நல்லாய் இருக்கு. இது நிட்சயமாகப் புங்கையின் அனுபவம் தான்!! :D

நீங்களே சொல்லீற்றுங்கோ, அலை! :D

 

இனி நான் என்னத்தைச் சொல்ல இருக்குது! நன்றிகள்!

இவ்வளவு அழகா கதையை கொண்டு போனபடியால் நிச்சயம் உங்களின் அனுபவமே புங்கை அண்ணே :icon_idea:

இந்தா அஞ்சரனும் தலையில அடிச்சுச் சத்தியம் பண்ணுது!

 

வரவுக்கு நன்றிகள், தம்பி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் தேசத்தில் ஆணிவேரை இழந்து வந்து  வேர்களைத்தேடி அலைந்த  தமிழர் நாம்

ஒவ்வொருவரிடமும்  ஓராயிரம் கதைகள்  உண்டு

ஒவ்வொரு நாள்  வாழ்க்கையையும்   கதைகளாக்ககூடியனவே.

அதற்குள்

சோகம்

பரிதாபம்

சமாளிப்பு

முற்றும் துறந்தநிலை

தன்நிலையை  மறைத்தல்

கண்ணில் பட்டவர்  எல்லோரும் நண்பர்கள்

ஒருவருக்கு ஒருவர் பக்கபலமாக இருத்தல்

இப்படி  எழுதிக்கொண்டே  போகலாம்.........

 

நன்றிகள் புங்கையர்

என்னையும் அன்றைய  நாட்களை நினைக்கவைத்தமைக்கு............

 

 

திரும்பத் திரும்ப, எல்லோரும் இதையே எழுதிற படியால, எல்லார் மனதிலையும் 'புங்கை' இப்பிடித் தான் இருப்பார் எண்டு ஒரு 'படம்' இருக்குது போல கிடக்கு! :D

 

உண்மையான 'புங்கை' ஒரு அப்பாவி!

 

இது சின்ன வயதில் எடுத்த படம்! :D

 

photo.jpg

 

  வாய் மூக்கு

அந்த கள்ளச்சிரிப்பு......அப்படியே நீங்கள்.

பேரனா..................??? :lol:  :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இக்கரையில் இருந்து அக்கரை நோக்கி அலசுவது ஒரு சுக   அனுபவம். மேலும் தொடர்க :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்பவுமே ஒரு விதமான ‘அழுத்தநிலையில்' இருக்கும் அக்கரையின் மன நிலைக்கும், எந்த வித ‘அழுத்தமும்' இல்லாத இக்கரையின் மன நிலைக்கும் ஒரு நீண்ட இடைவெளி இருப்பது இப்போது தான் அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது! ////

 

என்று உலகம் உலகமாக இருந்ததோ அன்று உலகத்தின் கிராமங்களில் இந்த அழுத்தங்கள் இல்லாது இருந்தன . ஆனால் உலகம் கிராமமாக மாறியபொழுது கிராமங்களிலும் அழுத்தம் இலகுவாக தொற்றிக் கொண்டது . அன்றைய கிராமத்தில் உனக்கு ஒன்று என்றால் அணைக்கப் பல கைகள் இருந்தால் அழுத்தம் இல்லை . அனால் இன்று அப்படி இல்லாதால் எங்கும் அழுத்தங்கள் கூட .  ஒரு சிறிய விடையத்தை திரித்த விதம் நன்றாகத்தான் உள்ளது . பாராட்டுக்கள் புங்கையூரான் :) :) .

நன்றிகள், கோமகன்!

 

ஒரு காலத்தில், வாழ்வின் அதியுச்ச மகிழ்ச்சிகளைத் தரக்கூடியதாக நான் நினைத்த பல விடயங்கள் உண்டு! ஆனால், அவை கைக்குக் கிடைத்த போது, மிகவும் சாதாரண விடயங்களாகவே தோன்றுகின்றன!

 

ஒரு ஓட்டைக்காரைப் பகிர்ந்து ஓடிய போது இருந்த நிறைவும், மகிழ்ச்சியும், இன்று ஒரு புதிய காரில் ஓடும்போது இல்லையென்றே கூறுவேன்!

 

வசதிகள் வரும்போது, மனித மனமும் சுருங்கிக் கொண்டு போவது போலவே உள்ளது! உறவுகளும், சொந்தங்களும் கொஞ்சம், கொஞ்சம் தூரத் தூர விலகிப் போவது போன்ற, ஒரு 'உணர்வு' ஏற்படுகின்றது!

 

'கோழியானது தந்து குஞ்சுகளை, அணைக்க முயன்றது போலவே, நான் உங்களை அணைக்க முயன்றேன்' ! என்ற யேசுநாதரின் வார்த்தைகள் தான் நினைவுக்கு வருகின்றன!

 

ஒரு வேளை, இது தான் வாழ்க்கையின் நியதியோ என்ற வகையில் சிந்தனை ஓடுகின்றது! :o

புலம் பெயர் தேசத்தில் ஆணிவேரை இழந்து வந்து  வேர்களைத்தேடி அலைந்த  தமிழர் நாம்

ஒவ்வொருவரிடமும்  ஓராயிரம் கதைகள்  உண்டு

ஒவ்வொரு நாள்  வாழ்க்கையையும்   கதைகளாக்ககூடியனவே.

அதற்குள்

சோகம்

பரிதாபம்

சமாளிப்பு

முற்றும் துறந்தநிலை

தன்நிலையை  மறைத்தல்

கண்ணில் பட்டவர்  எல்லோரும் நண்பர்கள்

ஒருவருக்கு ஒருவர் பக்கபலமாக இருத்தல்

இப்படி  எழுதிக்கொண்டே  போகலாம்.........

 

நன்றிகள் புங்கையர்

என்னையும் அன்றைய  நாட்களை நினைக்கவைத்தமைக்கு............

 

 

 

  வாய் மூக்கு

அந்த கள்ளச்சிரிப்பு......அப்படியே நீங்கள்.

பேரனா..................??? :lol:  :D  :D

விசுகர், படத்திலேயே தெரியுதே!

 

நாங்கள் 'பிளாஸ்டிக்' கும், கலர் போட்டோவும் வந்த பிறகு, பிறந்த ஆட்களாக்கும்! :D

 

வரவுக்கு நன்றிகள் !

இக்கரையில் இருந்து அக்கரை நோக்கி அலசுவது ஒரு சுக   அனுபவம். மேலும் தொடர்க :D

வணக்கம், நிலாக்கா!

 

அக்கரையில் தான் 'கடைசிக்காலத்தில்' போய் இருக்க வேணும் எண்டு மனதிலை ஒரு ஆசை ஒண்டு இருக்கு!

 

அதற்கு இந்தப் பாரதியின் பாடல் தான் காரணம்!

 

இந்தப் பாடல்,எந்த நேரமும் எனது காதில் ஒலித்த படியே இருக்கும்! :lol:

 

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி

இருந்ததும் இந்நாடே - அதன்

முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து

முடிந்ததும் இந்நாடே - அவர்

சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து

சிறந்ததும் இந்நாடே - இதை

வந்தனை கூறி மனதில் இருத்தி என்

வாயுற வாழ்த்தேனோ - இதை

வந்தே மாதரம் வந்தே மாதரம்

என்று வணங்கேனோ?

இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்தருள்

ஈந்ததும் இந்நாடே - எங்கள்

அன்னையர் தோன்றி மழலைகள் கூறி

அறிந்ததும் இந்நாடே - அவர்

கன்னியராகி நிலவினிலாடிக்

களித்ததும் இந்நாடே - தங்கள்

பொன்னுடல் இன்புற நீர் விளையாடி இல்

போந்ததும் இந்நாடே - இதை

வந்தே மாதரம் வந்தே மாதரம்

என்று வணங்கேனோ?

மங்கையராயவர் இல்லறம் நன்கு

வளர்த்ததும் இந்நாடே - அவர்

தங்க மதலைகள் ஈன்றமுதூட்டித்

தழுவியதிந்நாடே - மக்கள்

துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்

சூழ்ந்ததும் இந்நாடே - பின்னர்

அங்கவர் மாய அவருடல் பூந்துகள்

ஆர்ந்ததும் இந்நாடே - இதை

வந்தே மாதரம் வந்தே மாதரம்

என்று வணங்கேனோ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.