Jump to content

யாழில் ஒரு காதல் - யாழ்கள உறவுகள் இணைந்து எழுதும் தொடர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

66051_375207292565109_1318920706_n.jpg
 
 
பதினாறு வயது என்பது எல்லோருக்கும் ஒரு அழகைக் கொடுக்கும் வயதுதான். இளம் காளையர்கள் எல்லாம் நின்று திரும்பிப் பார்க்கும் வயது. நின்று திரும்பிப் பார்க்கத் துணிவற்றவர்கள் கூட பதினாறு வயது மங்கையைக் கண்டால் கடைக்கண்ணால் தன்னும் பார்த்துக்கொண்டு போகும் அழகு. இயற்கையான அழகு இல்லாதவர் கூட அந்த வயதுக்கான ஒரு தளதளப்பில் ஒரு மினுக்கத்தில் அழகாகத் தெரிவர். தூக்கக் கலக்கத்தில் அவர்களைப் பார்த்தாலும் கூட அழகாகத்தான் தோன்றும்.
 
நிலாவும் அப்படித்தான். பேரழகி என்று கூற முடியாவிட்டாலும் கடந்து போகும் ஆண்கள் எல்லாம் அவளைத் திரும்பிப் பார்க்காது செல்ல முடியாது. அவளூரில் மிதியுந்தில் செல்பவர்கள் மிகச் சிலரே. அதிலும் அவள் மிதியுந்தில் செல்லும் வேகம் பார்த்து ஆண்களே, டேய் தள்ளி நில்லுங்கடா என்று கேலி பேசுவதும் உண்டு. அவள் அவர்களது கேலியை சட்டை செய்யாதவளாக அப்பாற் சென்றாலும் மனதுக்குள் அவர்களின் கேலிகள் எல்லாம் பிடித்துத்தான் இருந்தது.
 
அவள் பாடசாலைக்கு பள்ளிக்கூடப் பேரூந்தில் போய்வந்தாலும் இதுவரை எவரிடமும் மாட்டுப்பட்டதில்லை.  பாடசாலை முடிந்து வீடுவரும் போதெல்லாம் எத்தனையோபேர் பேருந்துக்குப் பின்னாலேயே மிதியுந்தில் வந்து, அவள் தரிப்பிடத்தில் இறங்கி பிரதான சாலையில் இருந்து வீட்டுக்குச் செல்லும் பாதை வரை காவலுக்கு வந்துவிட்டுச் செல்வார்கள். அவளுக்கு மனதில் ஒரு கிளுகிளுப்பும் பெருமிதமும் ஊற்றெடுக்கும். ஆனாலும் அவர்களை சட்டை செய்யாது நடப்பாள். அவளோடு வரும் நிரஞ்சி கூட அடிக்கடி எரிச்சல் படுவாள். இவங்களுக்கு வேறை வேலை இல்லை என்று. அப்போதெல்லாம் இவள் வேண்டுமென்றே நிரஞ்சியைச் சீண்டுவாள். பாவமப்பா அவர்கள் உமக்குப் பின்னால் வருகிறார்கள் என்று. எனக்குப் பின்னால வாறவங்கள்  என்ர வீடு வந்தவுடன திரும்பிப் போகாமல் ஏன் உம்மட வீடு வரையும் வாறாங்கள் என்பாள். இவளுக்கு உள்ளுக்குள் கர்வமாக இருந்தாலும், அவங்கள் எங்கள் வீட்டடியால போவது கிட்ட எண்டு வாறாங்கள் போல என்று இன்னும் நிரஞ்சிக்குக் கடுப்பேற்றுவாள்.
 
இந்த வருடம் ஓ லெவல் பரீட்சை வருகிறபடியால் இனி கொஞ்சம் கவனமாப் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவளும் இப்ப ஒன்றையும் விளையாட்டாய் எண்ணுவதில்லை. ஊரில் உள்ள நண்பி ஒருத்தியுடன் சேர்ந்து கணிதமும் விஞ்ஞானமும் ரியூசன் எடுக்க ஒரு வீட்டுக்குச் செல்ல வேண்டி இருந்தது. நிலாவும் தாரணியும் ஒன்றாகவே அங்கு போய் வருவார்கள். தாரணிக்கு தந்தை இல்லை. ஆனபடியால் தாய் அவளை மிகக் கட்டுப்பாட்டுடன் வளர்த்ததனால் அவளுக்கு நிலாவைப்போல் துணிவும் இல்லை. எந்தப் பெடியனையும் நிமிர்ந்தும் பார்க்க மாட்டாள். அதனால் அவளை நம்பி நிலாவை அவளுடன் அனுப்பிவிட்டு தாயார் நின்மதியாக இருப்பார்.  
 
அங்குதான் அவள் வாழ்வு திசை மாறப் போகிறது என்று அப்போது அவளுக்குத் தெரியாது. முதல் நாள் கொஞ்சம் சுவாரசியம் இல்லாது போய்க்கொண்டு இருந்தது. போகப்போக இவளுக்கு எல்லாம் எல்லோரும் பழகி அந்த வகுப்பில் இவளைப் பிடிக்காதவர் யாரும் இல்லாமல் செய்துவிட்டாள். விளங்காத எதையும் துணிவுடன் ஆசிரியர்களிடம் கேட்டதனால் அவர்களுக்கும் இவள் பிடித்த மாணவியானாள். மாலை ஐந்து மணியிலிருந்து ஆறரை மணிவரை விஞ்ஞானம். ஆறரையிலிருந்து எட்டு வரை கணிதம். கணித பாடம் முடிய இருட்டிவிடுவதால் அங்கே பயன்படுத்தும் பெற்றோல் மக்ஸ் விளக்கை மாணவர்கள் கொண்டுவந்து இவர்கள் போகும் பாதையில் பிடித்துக்கொண்டு நிற்பார்கள். இவளும் நண்பியும் கொஞ்சத் தூரம் போனதும் மீண்டும் உள்ளே கொண்டு செல்வார்கள். வீட்டுக்குப் போய்ச் சேரும் மட்டும் இருட்டில் தான்  போகவேண்டும் அது வேறு கதை. மாணவர்களுக்கு அதில் ஒரு சந்தோசம்.
 
ஒருமாதம் செல்ல இவர்களின் டியூசன் சென்டரின் பக்கத்து வீட்டுக்கு ஒரு குடும்பம் புதிதாகக் குடி வந்தது. அவர்களைப் பார்த்தாலே எதோ தடிப்புப் பிடிச்ச சனம் என்றே மற்றவர்களுக்கு எண்ணத் தோன்றியது. அந்த வீட்டில் இரண்டு ஆண்கள் ஒரு பெண். அடுத்தடுத்த நாள் பார்த்தால் இவர்கள் வரும் நேரம் எல்லாம் தம் வீட்டு வாசலில் இன்னும் இரண்டு மூன்று நண்பர்களுடன் அந்த வீட்டின் இரண்டாவது மகன் கதைத்துக்கொண்டு நிற்பான். இவளோ நண்பியோ அவர்களைக் கணக்கெடுப்பதே இல்லை. ஒரு மாதம் செல்ல இவர்கள் வீட்டுக்குப் போகும் நேரம் அவனும் தன் வீட்டு வாசலில் நண்பர்களுடன் நின்று சிரித்துப் பேசியபடி இருப்பான். இவளும் நண்பியும் இரட்டைச் சடைதான் போட்டிருப்பார்கள். அடுத்த சில நாட்களில் இவர்கள் வரும் நேரம் பார்த்து இரட்டைப் பின்னல் என்று கூறிச் சிரிப்பார்கள். இவளுக்குக் கடுப்பாகிவிடும். ஆனாலும் அவர்கள் யாரைச் சொல்கிறார்கள் என்று தெரியாமல் ஏசவும் முடியாமல் நண்பிக்கு ஏசியபடி வருவாள். அவங்கள் எங்கட பேரைச் சொல்லவில்லைத்தானே பேசாமல் வா என்று நண்பி நிலாவை அடக்கிவிடுவாள்.
 
இவளும் சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருந்தாள். எளியவங்கள் நக்கலா அடிக்கிறியள் என்று மனதினுள் கறுவிக்கொண்டாள். வகுப்பு முடிந்து இவர்கள் வெளியே வர மாணவர்கள் வழமைபோல் பெற்றோல் மக்ஸ் விளக்கைத் தூக்கிய படி வர, அந்தப் பக்கத்து வீட்டுக்காரன், ஏன்ரா நீங்கள் விளக்குப் பிடிக்காட்டி உவைக்குப் போகத் தெரியாதோ என்றான். நிலாவுக்கு வந்த கோவத்தில், ஏன்ரா உன்னை யாரும் விளக்குப் பிடிக்கச் சொன்னவையோ என்றாள் பலத்து. சுற்றிவர நிற பெடியள் எல்லாம் சிரிக்கத் தொடங்க அவன் அவமானமாக உணர்ந்தானோ என்னவோ உடனே, வாயை மூடிக்கொண்டு போடி என்றான்  இவளைப் பார்த்து. எனக்கு போகத் தெரியும் நீ முதல்ல வாயை மூடிக்கொண்டு போடா என்று இவள் சொல்ல,  தாரணி இவள் கையை இழுத்துக்கொண்டு வாயை மூடிக்கொண்டு வாடி என்று கூட்டிக்கொண்டு போனாள்.

நிலாவுக்கும் மனதுள் கொஞ்சம் பயம் எட்டிப் பார்த்ததுதான். அதையும் மீறி ஒரு சந்தோசமும் நிறைவும் மனதில் ஏற்பட்டது.

அடுத்தநாள் மாலை வகுப்புக்குப் போகும்போது முதலே தாரணி கூறிவிட்டாள். வாயை மூடிக்கொண்டு என்னோட வாறதெண்டால் வா. அல்லது நான் தனியப் போவிடுவன் என்று. நான் ஏனடி கதைக்கப்போறன் என்று இவள் சமாதானம் சொன்னாலும் மனது ஒரு இனம் தெரியாத உணர்வு எட்டிப் பார்த்தது. தூரத்தில் வரும் போதே அவன் வீட்டு வாசலில் தனியாக நிற்பது தெரிந்ததும் ஒரு பதட்டம் வந்தாலும் வேறு யாரும் இல்லை என்பதில் ஒரு நின்மதியும் எட்டிப் பார்த்தது .

நான் உனக்குப் பயப்படவில்லை என்று காட்டுவதற்கு இவள் நிமிர்ந்து பார்த்தபடியே வந்துகொண்டிருந்தாள். கிட்ட நெருங்க அவன் இவளையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது. இவளுக்கு மனதில் எதோ ஒரு உணர்வு வந்து போனது. இவள் தலையைக் குனிந்துகொண்டு நண்பியுடன் வந்து அமர்ந்தாள். அவனுக்கு என்னடி பெயர் என்று தாரணியைக் கேட்டாள். எனக்குத் தெரியுமே நானும் உன்னோடதானே வாறன். அவனுக்கு என்ன பெயர் எண்டால் என்ன பேசாமல் இரு என்று அவள்  கூறியபின் இவள் அவளிடம் எதுவும் கேட்கவில்லை.

பாடம் முடிந்து வீட்டுக்குப் போகும் போது இவள் கண்கள் அவன் நிற்கிறானா என்று தேடியது. அவனையோ நண்பர்களையோ காணவில்லை. இவளுக்கு கொஞ்சம் ஏமாற்றமாகவும் இருந்தது. தாரணியிடம் சொல்வோமோ என்று எண்ணிவிட்டுப் பின் ஒன்றும் சொல்லாமல் அவளுடன் நடந்தாள்.

அடுத்தநாள் வகுப்புக்கு வரும் போதும் அவனைக் காணவில்லை. நீ குடுத்தது நல்லது தானடி. இரண்டு நாளா ஆக்களைக் காணேல்லை என்று தாரணி கூற, ஓ நீயும் கவனிக்கிறாயா என்று மனதில் எண்ணியபடி ஓம் என்று மட்டும் சொன்னாள். அவனின் பெயர் மதுரன் என்றுவிட்டு நிலாவைப் பார்த்த தாரணி, அவளின் முகக் குறிப்பைப் பார்த்ததும் கனக்கக் கற்பனை செய்யாதே. என் அண்ணனின் வகுப்பில் சேர்ந்திருக்கிறானாம். அண்ணாவுடன் இன்று அவனைக் கண்டதும் கேட்டேன். அண்ணாதான் அவனைப் பற்றிச் சொன்னான் என்று நிறுத்தினாள். அப்ப யாழ் பல்கலைக் கழகம் போகிறானா என இவள் மனதுள் எண்ணிக்கொண்டாள்.

மதுரன், ஆளுக்கேற்ற பெயர்தான் என்று இவள் மனதுள் எண்ணினாலும் வெளியே சொல்லவில்லை. தூரத்தில் அவன் மதுரன் நிற்பது தெரிந்தது. இன்று இவனைப் பார்ப்பதில்லை என்று மனதில் எண்ணியபடியே வந்தாலும் அவன் தன்னையே பார்ப்பதுபோல தோன்றியதால் அவனைக் கடக்கும்போது தன்னை அறியாமலேயே தலை நிமிர்த்தி அவனைப் பாத்துவிட்டாள். அவன் இவளையே பார்ப்பது தெரிந்ததும் இவள் மனம் படபடக்கத் தொடங்கியது. என்ன இது எனக்கு அவன் மேல் கோபமே இல்லையா ??? அவனைப் பார்க்கவேண்டும் போல் மனம் சொல்கிறதே என்று தன்னைத்தானே மனதுள் திட்டியும் கொண்டாள்.

நல்ல காலம். தாரணி இவளைக் கண்டுகொள்ளவில்லை என்பது மனதுக்கு நின்மதியைத் தந்தது. அடுத்தநாள் காலை பள்ளி செல்லும்போது வீட்டிலிருந்து சிறிது தூரம் சென்றிருப்பாள். மோட்டார் சயிக்கிள் சத்தம் பின்னால் கேட்டது. இவளுக்கு அருகில் வந்ததும் சிறிது சத்தம் குறைய பார்த்தால் மதுரன். நிலா பகல்ல நடந்து போகுது என்று சிரித்தபடி கூறிவிட்டு இவளைக் கடந்து சென்றுவிட்டான் அவன்.

இவள் மனதெங்கும் மகிழ்வு பொங்கி வழிந்தது. ஆள் கம்பீரமாகத்தான் இருக்கிறான். என் பெயரைக் கண்டு பிடித்துவிட்டான் என்னும் உவகையும் ஏற்பட்டது. பள்ளிப் பேருந்தில் ஏறி பள்ளி சென்ற பின்னும் அவளால் மனக் கொந்தளிப்பை அடக்க முடியவில்லை. எப்ப பள்ளி முடிந்து வீட்டுக்குப் போவோம், இல்லை இல்லை டியூசனுக்குப் போவோம் என்றிருந்தது. மாலை தாரணி இவளின் மாற்றத்தைக் கண்டு பிடித்துவிட்டாள். என்னடி முகம் எல்லாம் பளிச் எண்டு இருக்கு. என்ன விஷயம் என்றதும் இவளுக்கும் தன் உணர்வை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் போல் இருந்ததுதான்.

இண்டைக்கு விடிய மதுரன் வந்த கதையையும் அவன் கூறியதையும் சொன்னவுடன், தாரணி அதைப் பெரிதாக எடுக்கவில்லை. அப்ப அவனுக்கு உன்னில் கோவம் இல்லை என்றதுடன் கதையை முடித்துக் கொண்டாள். இவளுக்கு மேற்கொண்டு என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை.

வகுப்புக்குப் போகும்போது அவன் நண்பர்களுடன் நின்று கதைத்துக்கொண்டு நிற்பது தெரிந்தது. இவள் பார்த்தும் பார்க்காதது போல் போனாலும் கூட அவன் இவளையே ஊடுருவிப் பார்ப்பது நன்றாகவே புரிந்தது.

வகுப்புக்குச் சென்று அமர்ந்தபின் கூட இவளால் மனதை ஒருமுகப்படுத்த முடியவில்லை. பாடம் எதுவும் மனதிலும் பதியவில்லை. பரீட்சை வேறு வருகிறது. என்ன இது என்று மனம் தவித்தது . அவனைப் பார்க்கவே வேண்டும் போல் மனதில் ஏற்படும் உந்துதலை அவளால் அடக்கவே முடியவில்லை.

காலையில் அவன் இவளைக் கடந்து போவது இப்பொழுதெல்லாம் நிரந்தரமாகியது. இருவரது பார்வைகள் பரிமாறப்படுவதும், பார்வையே ஆயிரம் வார்த்தைகளை அவனுடன் பேசுவது போல் இன்பத்தைக் கொடுப்பதும், தனக்குத்தானே அவனது நினைவில் கரைவதுமாக ஒரு மாதம் ஓடிப்போனது.

நண்பியிடம் கூட தன் உணர்வை மறைத்து ஒன்றும் தெரியாதவளாக இருக்க முயன்றாள். ஆனால் இவளின் மாற்றம் இத்தனை நாட்கள் பழகிய நன்பிக்குத் தெரியாதா என்ன?? என்னடி ஒழுங்காப் படிக்கிறியோ ???இன்னும் ஆறு மாதம் தானடி. படிப்பைக் கோட்டை விட்டுவிடப் போறாய் என்றுவிட்டு இவளைப் பார்த்தாள் தாரணி. நான் என்னடி செய்ய. மதுரன் ஒவ்வொரு நாளும் விடிய வாறார். இன்னும் வாய் திறந்து கதைக்கேல்லயடி. ஆனால் பாக்காமல் இருக்கவும் எல்லாதடி என்று இவள் அழுவாரைப் போல் கூறியதும், உன்ர அம்மா எனக்குத்தான் திட்டப்போறா. உதெல்லாத்தையும் விட்டுட்டு படி. உதெல்லாம் பிறகு பாக்கலாம் என்றாள்.

அவளுக்குச் சரியடி என்று கூறிவிட்டு போய் இரவு படுத்தாலும் தூக்கம் வர மறுத்தது. நாளைக்கு மதுரனிடம் இனிமேல் வரவேண்டாம் என்று கூறிவிட வேண்டும் என்று முடிவு எடுத்தபடி தூங்கி விட்டவள், காலையில் எழுந்து மதுரனிடம் எப்படிச் சொல்வது என மனதில் ஒத்திகை பார்த்துக்கொண்டு சென்றாள், அவனின் மோட்டார் சயிக்கிள் சத்தம் கேட்கவே மனம் தடதடத்து வேர்த்தது. அவன் தன்னைக் கடந்து சென்றாலும். அதற்கிடையில் சொல்லிவிட வேண்டும் என்று இரு வினாடி தரித்து நின்றவளுக்கு அருகே வண்டியை நிறுத்தியவன், உமக்கும் விளங்கி விட்டுதோ என்றபடி இவளின் கைகளை எடுத்து கடிதம் ஒன்றை வைத்து, வடிவா வாசிச்சுப்போட்டு முடிவைச் சொல்லும் நிலா என்றுவிட்டு உடனே சென்றுவிட்டான்.

இவள் இதை எதிர் பார்க்காததால் படபடப்புக் கூடிப்போய் யாராவது பார்க்கிறார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்தாள். வீதியில் யாரும் இல்லை. உடனே அக்கடிதத்தை தன் கொப்பி ஒன்றில் வைத்துவிட்டு சாதாரணாமாக நடந்து செல்ல முயன்றாள். கால்களை எடுத்து வைக்க முடியாமல் கால்கள் தடுமாறின. என்ன எழுதியிருப்பான் என்று உடனே பார்க்க வேண்டும் போல் இருந்தாலும் அது முடியாத காரணத்தால், திரும்ப வீட்டுக்குப் போவோமா என்று கூட ஒருகணம் யோசித்தாள். தாயாரின் கேள்விகளுக்குப் பதில் கூற முடியாது. எதற்கும் பள்ளிக்கே செல்வோம் என்று எண்ணி நடக்கத் தொடங்கினால் புத்தகப் பை பாறாங்கல்லாகக் கனத்தது. ஆனாலும் மனம் மட்டும் அந்தரத்தில் பறப்பதுபோல் உணர்ந்தது.

பள்ளியும் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. கடிதத்தை அடை காப்பதுபோல் கொப்பியுள்ளும் வைத்திருக்க முடியவில்லை. கொப்பியை விட்டுவிட்டு அங்கால் இங்காலும் போக முடியவில்லை. உணவு இடைவேளை வந்ததும் வயிற்றுவலி என்று ஆசிரியரிடம் கூறிவிட்டு நண்பிகளிடம் கூடச் சொல்லாமல் வீடுவந்து சேர்ந்தாள். நல்ல காலம் அவள் வீடு வந்தபோது யாரும் வீட்டில் இல்லை. அம்மம்மா மட்டும் பக்கத்து வீட்டில் இருந்தார். இவள் வயிற்றுவலி என்றதும் அவர் இஞ்சி குத்தி தேநீர் போட்டு இவளுக்குக் கொடுத்துவிட்டு முன் பக்கம் போய்விட்டார்.

யாருமற்ற வீட்டில் கூட கடிதத்தைப் பிரிக்க இவளுக்கு கைகளும் மனமும் நடுங்கியது.

அன்பே நிலா,

உன்னைப் பார்க்காது என்மனம் எதையும் பார்க்க மறுக்கிறது. உன் நினைவில் பித்துப் பிடித்தவனாகி விட்டேன் நான். நீயின்றி இனி நான் இல்லை என்று எனக்கு நன்றாகத் தெரிகிறது. உன்னிலையும் அதுதான் என்று நான் உணர்ந்தாலும், அதை உன் வாயால் கேட்க ஆசை.

உன் மதுரன்

நிலா கடிதத்தை மூன்று நான்கு தடவைகள் படித்துப் பார்த்தாள். மீண்டும் மீண்டும் படிக்கத் தோன்றியது. வானத்தில் பறப்பதுபோல் எழுந்த உணர்வை அடக்க முடியவில்லை. இதயத்துடிப்பு வேகமாக கால்கள் சோர, தன் கட்டிலில் இருந்து மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்தாள். எத்தனை தடவை வாசித்தாலும் அலுக்கவில்லை அவளுக்கு. இரவுமுழுதும் தூக்கமும் வரவில்லை. மாலை வகுப்புக்குப் போகவில்லை. வயிற்று வலி என்று கூறியபடி படுத்தே கிடந்தாள். என்ன செய்வது என்று இரவு முழுதும் யோசித்து விடியும் நேரம் அவள் மனதில் ஒரு தெளிவு பிறந்தது.

காலையில் கொஞ்சம் வெள்ளன எழுந்து தாரணியின் வீட்டுக்குச் சென்றபோது என்னடி விடிய வெள்ளன என்றபடி தாரணி இவளை உள்ளே வரும்படி அழைத்தாள். உள்ளுக்குள் வேண்டாமடி என்று சொல்லியபடி, எடி மதுரன் நேற்று கடிதம் ஒன்று தந்தவர் என்றதும் நீ வாங்க்கீட்டியோ என்றாள் தாரணி. ஓமடி இந்தா வாசிச்சுப் பாரடி என்றதும் வாங்கி வாசித்துவிட்டு, நல்லாத்தான் எழுதியிருக்கிறான். எதுக்கும் இரண்டு நாள் வடிவா யோசியடி. இது சும்மா விளையாட்டில்லை. அவசரப்படாதை என்றாள்.

அன்று மாலை டியூசனுக்குப் போகும்போது என்னடி யோசிச்சனியே என்று தாரணி கேட்டதற்கு, நிலா பதில் கூறாது தலை குனிந்தாள். என்னடி நான் சொன்னது உனக்குப் பிடிக்கேல்லையே. நான் உன்ர நன்மைக்குத்தான் சொல்லிறன் என்று கூறி முடிக்கமுதல், அடி நான் காலமை உன்னட்டை வந்துவிட்டுப் போகும்போது மதுரநிட்ட எனக்கு விருப்பம் என்று கடிதம் குடுத்திட்டன் என்று கூறும் நிலாவை வாய் பிளந்து பார்த்தபடி நின்றாள் தாரணி.

 

 

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் ஒரு காதல் (2)

 

 

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%

 

 

தாரணியின் கேள்விக்கு உடனடியாகப் பதிலளித்து விட்டாலும், தாரணியின் முகத்தில் தோன்றிய மாற்றங்களை நிலா அவதானிக்கத் தவறவில்லை!

‘நான் உன்ர நன்மைக்குத் தான் சொல்லுறன்’ என்று தாரணி கூறினாலும், அவள் உள்ளூரத் தன்மீது உள்ள  ‘எரிச்சலில்' தான் சொல்லுகின்றாள் என்றே நிலா நினைத்துக்கொண்டாள்!

 

ஏதோ ‘மதுரன்' என்பவன், காகங்களைக் கூவியழைக்காமல் விரதத்துக்கு வெளியில் வைக்கப்பட்ட சாப்பாடு மாதிரியும், மற்றைய காகங்கள் வந்துவிடும் முன்பே, தானே அதனைக் கவ்விக்கொள்ளவேண்டும் என்ற அவாவில் தான், அவசரப்பட்டுக் கடிதத்தைக் கொடுத்து விட்டது போல தாரணிக்குக் கூறியிருந்தாலும், அவள் எத்தனை கடிதங்களை முதல்நாள் இரவு எழுதினாள் என்று அவளுக்கே நினைவில்லை! அவளது குப்பைக்கூடை முழுவதும், கசங்கிப்போன காகிதப்பூக்களால் நிரம்பியது என்பது மட்டும் அவளுக்கு நினைவிருக்கின்றது! விடியும் முன்பே அம்மாவுக்குப் பயந்து, அவ்வளவு கடிதங்களையும் சின்னச் சின்னத் துண்டுகளாகக் கிழிதெறிந்த தனது முன்னெச்சரிக்கையை நினைக்க அவளுக்கே பெருமையாக இருந்தது!

 

ஆனால் அவளது செயலானது, அவளுக்கும் அவளைப் பெற்று வளர்த்ததுடன் நின்று விடாது, அவளுக்காகத் தங்கள் மனங்களில் பல நம்பிக்கைகளைச் சுமந்து கொண்டிருக்கும் பெற்றோர்களுக்குமிடையிலும், நிரந்தரமான ‘பள்ளம்' ஒன்றைக் கீறி விட்டதையும் அவளால் அப்போது புரிந்து கொள்ள முடியவில்லை! எல்லாவற்றை

யும் தூக்கியெறிந்து விட்டு, வானத்தில் சிறகடித்துப் பறக்கின்ற ஒரு சிட்டுக்குருவியின் ‘மனநிலை' அவளுக்கு வந்திருந்தது! ஓ' லெவல் பரீட்சை கூட, இப்போதெல்லாம் பெரிதாகத் தெரியவில்லை!

 

ஒரு காளியின் பக்தன், ‘யாதுமாகி நின்றாய் காளி' என நினைப்பதைப் போலவே, காதல் வயப்பட்ட அவளது மனம் முழுவதும், மதுரனே யாதுமாகி நின்றான்!

நாளை அவனைக் காணும்போது எப்படியிருப்பான், என்ன மாதிரியான உடை அணிந்திருப்பான், என்னை எவ்வாறு அழைக்கப் போகின்றான் என்றெல்லாம் அவளது மனது முழுவதும் கேள்விகளால் நிரம்பியிருந்தது! யாரிடமாவது மதுரனைப் பற்றிக் கதைக்க வேண்டும் போலவும், அவளது மனது அங்கலாய்த்தது!

 

மறு நாள்,’டியுசன்' முடிந்து வரும்போதே மதுரன் அவளுக்காக மற்றவர்களுடன்  காத்துக்கொண்டிருந்தான். பக்கத்தில் தாரணி வந்து கொண்டிருந்தாலும், அவளது கண்கள், மதுரனைப் பார்க்க நிமிர்ந்த வேளையில், அவனது கண்களும் கீழே குனிந்தன.ஒரே நேரத்தில் இருவர் பார்வைகளும் கலந்து, உடனேயே விடை பெற்றும் கொண்டன! அந்தப் பார்வைகளுக்குத் தான் எவ்வளவு ‘வலிமை'! இதைத் தான் ‘காதல் உணர்வு' க்கு வேலிகள் கிடையாது என்று சொல்கின்றார்களோ என ஒரு கணம் நினைத்துக்கொண்டாள்!

 

இன்னொரு தடவை அவள் தனியாக நடந்து வரும்போது, திடீரென மதுரன் ‘நிலா' என்று அழைக்கும் சத்தம் பின்னாலிருந்து கேட்டது. அன்றைக்கு மோட்டார் சைக்கிள் இல்லாமல், சாதாரண சைக்கிளில் வந்திருந்தான்! திடீரெனத் திரும்பியவள் அவன் மிகவும் அண்மையில் வந்து விட்டதையும், சைக்கிளிலிருந்து இறங்கிச் சைக்கிள் ‘ஹாண்லைப்' பிடித்த படி தன்னை நோக்கி நடந்து வருவதையும் அப்போது தான் அவதானித்தாள். அவளது உடம்பு முழுவதும் திடீரென மின்சாரம் தாக்கியது போல ஒரு உணர்வு அவளுக்கு ஏற்பட்டது! அருகில் நெருங்கியவன் ‘என்ன நிலா, கனக்கப் பயப்பிடுகிறீர் போல கிடக்கு' என, அவளுக்கு ஆறுதல் சொல்வது போல, கதையைத் துவக்கினான்.

 

பெண்களுக்கே இயல்பாக வருகின்ற ‘எச்சரிக்கை' உணர்வுடன், சுற்று முற்றும் பார்த்தவள், ஒருவரும் தங்களைக் கவனிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு ஒரு சிறு ஆறுதல் பெருமூச்சொன்றை விட்டாள்.

 

என்ன பெருமூச்சு விடுகிறீர் என மதுரன் கேட்டபோது தான், அவளுக்குத் தான் பெருமூச்சு விட்டதே தெரியவந்தது. ‘மதுரன், பின்னேரம் பிள்ளையார் கோவிலடிக்கு வாங்கோ' என்று கூறியவள், முகம் குனிந்த படியே மதுரனைக் கவனிக்காத மாதிரித் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தாள். யாழ்ப்பாணத்துக் காவோலை வேலிகளுக்கும், கிடுகு வேலிகளுக்கும் கூடக் கண்களும், காதுகளும் இருக்குமென்று அவளுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது!

 

அன்று பின்னேரமே, அம்மாவிடம் ‘ அம்மா, இண்டைக்கொருக்காப் பிள்ளையார் கோவிலுக்குப் போயிற்று வரவேணும் போல கிடக்கு’ என்று கூறினாள். அவள் சில வேளைகளில் கோவிலுக்குப் போய் வருவது வழக்கம் என்ற படியால்,’பிள்ளை, ஏலுமெண்டால் தாரணியையும் கூட்டிக்கொண்டு போவன்...ஆமிக்காரரும் அதுவுமா ஊரெல்லாம் கெட்டுப் போய்க்கிடக்குது...’ என்று கூறிவிட்டுத் தனது வேலைகளைக் கவனிக்கத் தொடங்கிவிட்டாள்!

 

தாரணியைக் கூட்டிக்கொண்டு போய் வைச்சுக்கொண்டு, நான் என்னத்தை ‘அவரோட' கதைக்கிறது என நினைத்த நிலா, தனியாகப் போவதென்றே முடிவெடுத்தாள்! அவளுக்கு மிகவும் விருப்பமான, ‘சல்வார் கமீசை' அணிந்த படி, முற்றத்தில் அப்போது தான் ‘முகிழ நினைத்துக்கொண்டிருந்த' மல்லிகை மொட்டுக்களை சிலவற்றையும், அப்படியே அவசரத்தில் பிடுங்கிக் கொத்தாகவே, தனது கூந்தலில் வைத்துக்கொண்டாள்! அதிலிருந்து சிந்திய ‘வாசம்' அவளையே கிறங்க வைத்தது!

 

கோவிலை அவள் நெருங்கும்போதே, தூரத்தில் மதுரனும் வேட்டியுடன் நிற்பதை அவள் அவதானித்தாள். சோடி சேரப்போகும் காதல் பறவைகள்  ஒன்றை ஒன்று கவர்வதற்காக எத்தனை விதமான ‘நடனங்களையும், நளினங்களையும்' காட்டுகின்றன என்பது இப்போது நினைத்துப் பார்க்கும் போது, அவளுக்கே சிரிப்பாக இருந்தது! இருவரும் கோவிலை நெருங்கியபோது அங்கு ‘ஐயர்' கூட வந்திருக்காதது, தங்கள் காதலுக்கான ஆண்டவனின் ஆசீர்வாதமே' என மனதுக்குள் நினைத்துக் கொண்டு, எல்லாம் சரிவந்தால் பிள்ளையாருக்கு ‘ஆயிரம் அடி' கழிப்பதாக, மானசீகப்பிரார்த்தனையும் செய்து கொண்டாள்!

 

மதுரன் நெருங்கி வரவும் அவளது உதடுகளிலிருந்த ‘ஈரம்' தானாகக் காய்ந்து போகவும், வலிந்து தனது உதடுகளை மீண்டும், மீண்டும் தனது நாக்கினால் நனைத்துக் கொண்டாள்! மதுரனும் நேரடியாகவே, தனது காதலை அவளிடம் தெரிவித்தபோது அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது! எவ்வளவு முயன்றும் அவளது கன்னங்களில் தோன்றிய ‘செம்மையை' அவளால் முற்றாக மறைத்து விட முடியவில்லை.

 

நிலா, நீங்கள் கவனமாகப் படிக்க வேண்டும், படிப்பு என்பது ‘சோறு' மாதிரி… மற்றதெல்லாம் வெறும் ‘கறிகள்' மாதிரி! சோறு இல்லாவிட்டால், கறிகள் எவ்வளவு இருந்தாலும் பசியாற முடியாது, ஆனபடியால் நீங்கள் படிப்பில கவனம் செலுத்த வேண்டும் என மதுரன் கூறி நிறுத்தினான்!

 

‘அப்ப, என்னில உண்மையில விருப்பமில்லை போல...என்று வழக்கமாகப் பெண்களுக்கு வரும் சந்தேகத்தை.. மெதுவாக மதுரனிடம் கூறினாள்! அது சந்தேகம் மட்டுமல்ல, கதையை நீட்டுவதட்கான ஒரு வெறும் சீண்டல் என்றும் அவளுக்குத் தெரிந்திருந்தது!

 

இஞ்சை பாரும் நிலா, உம்மிலை விருப்பமில்லாமலா விசரன் மாதிரி, உமக்குக் கடிதம் தந்தனான்?   எனச் சற்றுக் குரலை உயர்த்திய மதுரன், தங்கள் காதலை அவன் வெறும் ‘வயசுக் கோளாறாக' ப் பார்க்கவில்லை  என்பதைத் தெளிவு படுத்தினான்!  

 

கடிப்பதற்காகக் கனிகளைத் தேடித் திரிகின்ற உலகில்,  நிலாவுக்கு அவனை நினைக்கப் பெருமையாக இருந்தது. உண்மையிலேயே தனக்கு ஒரு நிரந்தரமான ‘வாழ்க்கைத் துணை' கிடைத்துவிட்டதாகவே மகிழ்ந்து போனாள்! அந்த நிமிடத்திலிருந்து அவனைத் தனது மானசீகக் கணவனாகவேஅவள் வரித்துக் கொண்டாள்!

 

இந்த உலகத்தில் தன்னை விடவும் ‘புண்ணியம்' செய்தவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது என்றும் ‘பிள்ளையாருக்குக்' கொடுத்த வாக்குறுதியைக் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் மனதினுள் நினைத்துக் கொண்டாள்.

 

உண்மையில் இனிக்கடுமையாகப் படிக்கத் தான் வேண்டும் என்னும் வைராக்கியம் ‘முதல் முறையாக' அவளது மனதில் வலிமையாக ஏற்பட்டது!

 

முன்னர் இருந்த படபடப்பும், பயமும் இப்போது அவளிடமிருந்து நிரந்தரமாகவே விடை பெற்றது போலவும், இவன் எனக்காகவே படைக்கப் பட்டவன் போலவும் ஒரு மனநிலை அவளுக்கு ஏற்பட்டது!

 

அப்போது கோவிலுக்குள் ‘ஐயர்' நுழைந்து கொண்டிருக்க, அவரைத் தொடர்ந்து இன்னும் சிலரும் பூசைக்காக உள்ளே வந்து கொண்டிருந்தார்கள். அப்போது எதிர்பாராத விதமாக, ஒரு காகிதச்சுருளை அவளது கைகளுக்குள் திணித்து விட்டு, அவளது கரங்களில் ஒரு சிறு ‘கிள்ளலுடன்’ மதுரன் கோவிலைச் சுற்றத் தொடங்கினான்.

 

வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாகக் காகிதச் சுருளை விரித்தாள்.

 

அதில் எழுதியிருந்த வரிகளின் அர்த்தம் அவளுக்கு முழுதாகப் புரியவில்லையாயினும், அந்த வரிகளே அவளுக்கு ஒரு விதமான கிறக்கத்தைத் தரப் போதியவையாய் இருந்தன!

 

பாலைவனத்து மணல் குன்றில்,

தினமும் பூக்கின்ற மலர் நீ,

உனது வாசனையால்,

எனது இரவுகளை நிரப்பிக் கொள்ளுகின்றேன்!

மறுநாள் காலையில்,

உன்னைக் காணும் வரை,

வாசனை தொலைத்த பூவோன்றில்,

மகரந்தம் தேடும் வண்டாகின்றேன்!

இன்னுமொரு காலைப் பொழுதொன்றில்,

உனது வாசனைக்காக ஏங்கியிருப்பேன்!

 

தொடரும்………..!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் ஒரு காதல் (3)

 

 

 

மதுரனின் மடலை வாசித்தவளுக்கு  இனம்புரியாத  இன்பத்தில்   பறப்பது  போன்று போன்று இருந்தாலும்... ஒ எல் சோதனை    அண்மிக்கிறதே என   ..பயம்  மெல்ல  எழத்தொடங்கியது
இரவு வீட்டுப் பாடங்கள்  அனைத்தையும்  முடித்தவள் ..அழகான  மெல்லிய நீல  வண்ணத்  தாளிலேழுத தொடங்கினாள்...

 

 

உயிராக  நினைக்கும் மதுரனுக்கு .... மரத்திலே ஆயிரம் மலர்கள் மலரும் இதயத்தில் ஒரு மலர் தான் மலரும் .. காலமும் விதியும் ஒத்துழைத்தால் நாம் வாழ்விலும் ஒன்றினைவோம். அது வரை எந்த சோதனை வந்தாலும் நான் தடுமாற மாட்டேன் .  விரைவில் l ஒ எல்  சோதனை வருகிறது .    நானும் நிறைய படிக்க வேண்டும்   புத்தகத்தி தூக்கினால் உங்கள்முகமே முன் வந்து நிற்கிறது

..எனக்கு ஒரு சத்தியம் செய்ய வேண்டும். ஒ எல் சோதனை முடியும்வரை என்ன குழப்ப கூடாது. அதி திறமை சித்திகளோடு ளோடு தான் உங்கள் ளுக்குமருமடல் வரைவேன்...அதுவரை உங்கள் நினைவுகளுடன் ..நிலா ....

 

 

கடிதத்தை எழுதி முடித்தவள் ..கவனமாக் டியூசன் கொப்பி யின்   கவரினுள் ஒழித்து வைத்தாள்.  ,,மாலையானதும் ..இவளது பாதையில் ..அவன்  வழி மேல் விழி வைத்து ஆவலோடு காத்திருந் தான் ...சுற்றும் முற்றும் பார்த்து விட்டு மெல்ல..அவனை வரும்படி ஜாடை காட்ட்  அவனும் சைக்கிளை மெதுவா க்கி ... வந்து கடிதத்தை ...பெற்றுக்கொண்டான் . 

 

சிறிது நேரத்தில்  தாரிணி வீடு வரவே ..அவளையும் வகுப்பு க்கு செல்ல அழைத்தால். என்ன நிலா இன்று நேர்துடனே வந்து  விட்டீர்  . யாரையும் சந்திக்க் தான் இந்த  ஐடியாவோ... சும் மா  போடி ..எனக்குபயமாய் இருக்கு...சொல்லிபோட்டன் ஒ எல் சோதனையில்  கோட்டை  விட்டியோ... பிறகு தெரியும். .அப்பரின் முகத்தில்  முழிக்க ஏலாது ... பிறகு நீ என்னை முந்திவிடாய் என்று ...கோவிக்கக் கூடாது ...போடி ..நான் எப்படியும் அதி திறமை சித்தி எடுத்துக் காட்டுவேன் என்று  சவால் விட்டாள். சில நாட்களாக  அவளைப்பின்  தொடர்வது குறைந்தது. எங்காவது கண்டால் சிரித்து விட்டு சென்று விடுவான்.

 

 

 

ஒரு நாள் ...இவள் வீட்டுமுற்றம்கூட்டிக்  கொண்டு நிற்கையில்.. ஒரு பெல் சத்தம் கேட்டது ...யாராக் இருக்கும் என்று ம் நிமிர்ந்தவள் ஆச்சரியத்தோடு பார்த்தல். மதுரன் நின்று இருந்தான்.  அவசரமாக் ஒரு காகிதத்தை  அவள் முன் போட்டு விட்டு சென்று விட்டான்.  அதை எடுத்து சென்று  .. குப்பைகளை  கொட்டுவது போல .. பின் வளவுக்கு  சென்று  வாசித்தாள்.   .............

 

என்   இனிய நிலாவே ... உன் சத்தியத்தை மீறக்  கூடாது என்றுதான் இதுவரை எழுதவில்லை. நான் அவசரமாக் கொழும்புக்கு செல்கிறன் இன்று இரவு...சென்று வந்ததும் உன்னை தொடர்பு கொள்வேன். அதுவரை .. என்னை கானவில் லை  என்று  உன் கண்கள் என்னை தேடும். கலங்காதே நல்ல சேதியுடன்  வருவேன் ...என்றும் உன் இனிய மதுரன்...

 

 

 

சற்றுக் கவலையாக  இருந்தாலும்.. செய்தி சொன்னானே என்பது ...அமைதியாக ... இருந்தது ....

 

 

 

 

எதோ என்னால் முடிந்தது... :D

Link to comment
Share on other sites

யாழில் ஒரு காதல் (4)

கடிதப் பரிமாற்றங்கள் நடந்தபோது காணாத கண்களுக்கு! அவை பறந்தபோது காண்பதற்குத் தடைகள் ஏற்படவில்லை!!. நிலா மதுரன் காதல் வளர்பிறையாக வளரத்தொடங்கியதும், அதன் ஒளி, ஊரிலுள்ள இளவட்டகளுக்கு முதலில் தெரிய ஆரம்பித்தது. நிலாக் காதல் குளிர்விப்பதற்குப் பதிலாக அவர்களை எரிக்க ஆரம்பித்தது. 'ஊருவிட்டு ஊருவந்து காதல் கீதல் பண்ணாதீங்க' பாட்டு அந்த வட்டங்களை உசுப்பேத்தியது. தங்களைக் காயாத நிலா ஊரானைக் காய்வதா? அது என்ன நியாயம்?. தவறணையில் சாராயம் அதற்கு மேலும் தூபம்போட்டது. ஓசிக்குடி நண்பர்களுக்கு பணம் தரும் தலைவன் பரஞ்சோதியின் மனம் பற்றி எரிவதற்கு வெண்சுருட்டையும் அவன் வாயில்வைத்துப் பற்றவைத்தார்கள். புகை மூட்டமும் பகையை வளர்த்தது. பல்கலைக் கழகத்திற்கு படிக்கவந்தானா? பாலியல் கலைகள் ஊட்டிப் பெண்களைக் கெடுக்க வந்தானா? தட்டிக்கேட்காது விட்டால் ஊர்மானம் என்னாவது?.

தவறணை பலரும் வந்துபோகும் இடமாகும். பெரும் செல்வந்தக் குடும்பமான மதுரன் குடும்பத்திடம், வட்டியின்றிப் பண உதவிபெற்ற சுப்பண்ணையின் கண்களும் காதும் கூர்மையடைந்தன. மதுரன் தம்பியை எச்சரிக்கை செய்வதற்கு மீதமிருந்த சாராயத்தை ஒரே உறுஞ்சில் உறுஞ்சிவிட்டுப் பறந்தார். இயக்கத்தில் இரகசியமாகப் பயிற்சி பெற்றிருந் மதுரனுக்கு அது தூசுபோல் தெரிந்தாலும், 'வீரம் விலைபோகாது விவேகம் தலைக்குவராவிட்டால்' என்ற சோக்கிட்டீசின் தத்துவத்தையும் மறக்கவில்லை. சுப்பண்ணையிடம் இருந்து அறிந்து கொண்ட ஒரு சம்பவத்தையே துருப்புச் சீட்டாகப் பாவிக்க விளைந்தான். தனது தந்தையின் செல்வாக்கின் மூலம் பரஞ்சோதியின் விருப்பத்தை நிறைவேற்றி வைக்கவே! ஒரு வாரத்துக்குள் பரஞ்சோதி லண்டன் போய்ச் சேர்ந்தான். பரஞ்சோதியின் சிபாரிசின் பேரில் அவனது நண்பர்கள் தற்போது மதுரன் நிலா காதலுக்கு பாதுகாப்புப் படைவீரர்களாகப் பண்புரிய முன்வந்ததால், மதுரன் நிலா காதல் வளர்வதற்கு கோவில் குளம் என்று மறைவிடம் தேடாது, நிலாவீட்டு முற்றமே அகலத்திறந்து வரவேற்றது.

நிலாவை, 'ஓ லெவல்' வரைக்கும் படிக்க வைக்கவே அவள் தாயார் ஓடி ஓடி வியர்த்து நின்றாள். ஆறுமாதங்களுக்கு முன்பாக அவர்கள் குடும்ப மானத்தைக் காப்பற்றத் தேவைப்பட்ட இரண்டாயிரம் ரூபா பணத்துக்குக் மாதாமாதம் கட்டவேண்டிய வட்டியும் வாட்டி எடுத்தது. இந்நிலையில் குறைந்த செலவில் ரியூசன் எடுக்க மதுரனை நிலா அறிமுகம் செய்தபோது தாயாரினால் அதனை மறுக்கமுடியவில்லை. இலவசம் என்றால் ஐயமும், மறுப்பும் வந்துவிடலாம் என்ற மதுரனின் ஆலோசனையே நிலாவை குறைந்த செலவு என சொல்லவைத்தது. ரியூசன் வகுப்பில் தாரணியும் சேர்ந்திருந்ததால் சந்தேகத்திற்கு இடமே எழவில்லை. காதல் பூத்து மலர்ந்து மணம்வீசக் காலத்தை நோக்கியிருந்தது. மதுரனின் தூய நடத்தையினால் கவரப்பட்டு அவன்மேல் ஒரு பாசமும் ஏற்படவே!, நிலாவைப் பெற்ற தாயின், அந்தத் தாயுள்ளத்தில், நிலாவையும் மதுரனையும் இணைத்துப்பார்க்கும் ஓர் எண்ணம் முளைவிடத் தொடங்கியது. அந்த நிலையைத் தாரணியின் மூக்கு வியர்த்து அவளுக்குக் காட்டியது. அவள் அதனை நிலாவுக்குத் தெரிவிக்கவே நிலா ஆனந்தக்கடலில் மூழ்கித் திண்டாடினாள். அந்த இன்ப மகிழ்ச்சியைத் தெரிவிக்க மதுரன் கொழும்பிவிருந்து வரும் நாள் எப்போ என்று எதிரிபார்த்துக் காத்திருந்தாள். ஆனால் நிலாவின் தாயோ! கவலையில் மூழ்கினாள்!!. செல்வந்தரான மதுரனின் குடும்பம், ஏழைகளான தங்களை ஏற்பார்களா? என்ன என்ற எண்ணம் அந்தத் தாயுள்ளத்தை வாட்டத்தொடங்கியது!.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் ஒரு காதல் (5)

 

 

நானொரு புது முகம்

என்னை  உங்களுக்கு தெரியாது
அவசரமாக தெரிய  வேண்டுமென்றால்
முடிவுரையைப்பார்த்திட்டு மேல  வாங்கோ...........
 
 
எனது பெயர்  குகன்
கடந்த 8  வருடங்களாக பிரான்சிலிருக்கின்றன்.இப்பத்தான் விசா கிடைத்திருக்கு. கொஞ்சம் ஆறுதல் ஆனால் இதுவரை  பட்ட பாடு இருக்கே சொன்னால்  அழுதுடுவீங்க  வேண்டாம்
என் குடும்பத்துக்கே  நான் இன்றுவரை  சொன்னதில்லை. வேலை என்ன என்றதுட்பட....
 
நல்ல  வசதியாக  வாழ்ந்த குடும்பம் எங்களது. அப்பர் பரம்பரை பணக்காறர். அத்துடன் சாதியிலும் உசத்தி. 
என்ர வீட்டில  நாவலர் படமொன்று பெரிதாக  இருக்கு. அப்பரிட்ட ஒருநாள் கேட்டன் ஏனப்பா  இவரது படம் மட்டும் பெரிதாக எங்கள் வீட்டில் என்று.  அதுக்கு அவர் சொன்னது நான் ராஐராஐ  கொம்பந்த முதலியாரின் வாரிசு தம்பி.  நாவலர்  என்னுக்குள் இருக்கிறார்.  போகப்போக  உனக்கு அது விளங்கும் என்று....
 
நான் வெளிநாடு வரவேண்டிய  தேவை  வந்ததே
சிறீலங்கா அரசின் அராஐகங்களாலும் இடம் பெயர்வுகளாலும்  எமது சொத்தெல்லாம் கரைந்து துலைந்து நடுவீதிக்கு வரத்தொடங்கினது தான். குடும்பத்தை  பழையநிலைக்கு கொண்டு வர நான் தேர்ந்தெடுத்து தான் இந்த வெளிநாடு. அப்பருக்கு கொஞ்சமும் இதில்  முதலில் ஈடுபாடில்லை. ஆனால் எப்படியோ  எல்லாம் வாழ்ந்த அவரை  அப்படியே  வைத்துப்பார்க்கணும் என்று நான் தான் படிப்பையும் நிறுத்தி  இங்க  வந்தனான்.
 
 
வந்ததிலிருந்து 2 வேலை தாங்க
ஒன்று காலையில 5  மணிக்கு எழும்பி  ஆறு மணிக்கு  வேலைக்கு நிற்கணும்.  அது 9 மணிக்கு முடிய  அடுத்தது பத்து மணிக்கு தொடங்கும்.  அது முடிய இரவு பன்னிரண்டு சிலவேளை ஒரு மணியும் ஆகும்.  அநேகமாக கடைசி  மெற்றோ தான்.  அதிலும் அப்படியே காலை நீட்டி சீற்றில் படுத்திடுவன்.  உடம்பெல்லாம் அவ்வளவு வலி  வலிக்கும்.  அப்படியே வரிசையாக அப்பா,  அம்மா ,அக்கா,  தம்பி  முகங்கள் வந்து போகும். கண்ணைத்துடைத்துக்கொண்டு  மீண்டும் எழும்பி நடக்கத்தொடங்குவன்.
 
என்னுக்குள்ள  நான் நாவலரை உணரத்தொடங்கியது  அக்காவுக்கு கலியாணம் பேசைக்குள்ள  தான்.  வடிவாகப்பாருங்கோ  வடிவாகப்பாருங்கோ  என்று ஒவ்வொரு நாளும் தொலைபேசி  எடுத்து வீட்டாருடன் கதைப்பன். குறிப்பைவிட குலம் கோத்திரம் தான் முக்கியம் என்று என் வாயால  வந்தபோது தான் நாவலர் என்னுக்குள் இருப்பதை நானே  உணர்ந்தன்.
 
நல்லதொரு  குடும்பத்தில் வைத்திய  மாப்பிள்ளை  சரிவந்து, அப்பர் சொன்னார்.  இதை முடித்திடுவம். ஒரு கோடி வேணும் என்று.  அப்படியே  தலை  சுத்தி கட்டிலில் விழுந்தது  அப்பருக்கு கேட்டிருக்கவேணும்.  என்ன  தம்பி  என்ற  அவரது குரல் தான் எழுப்பிவிட்டது.
ஏற்கனவே  வந்த  கடனுக்கு CETELEM கடன் வங்கியிடம் எடுத்தாச்சு.
அப்பருக்கு கார்
தம்பிக்கு  மோட்டார் சைக்கிள் இதுகளுக்கு சொந்தக்கணக்கு வங்கியில  கடன் எடுத்தாச்சு.
இப்ப  இதுக்கு.........
யோசித்துக்கொண்டிருக்கும் போதே
COFIDIS கடன் வங்கியிடம்  இருந்து கடன் வேண்டுமா என்று வந்த பத்திரம் கண்ணில் பட்டது.
இரண்டு கடன் வங்கியில ஒரே பெயரில் கடன் தரமாட்டார்கள் என்று சொல்லி அப்பர் பெயரை பின்னால என்  பெயரை முன்னால்  போட்டு பத்திரத்தை எழுதி அனுப்ப 2 நாள்ள  காசு வந்திட்டுது. அது காணாது என்று பல  வருடமாக 2 வேலைகளையும்  செய்தால SOFINGO  கடன்வங்கியிலயும் கொஞ்சம் வாங்கி அக்கான்ர  கல்யாணம் முடிய எனக்கு 30 ஆகிட்டுது என்றது எனக்கு நினைவுக்கு  வந்துது.  
இத்தனைக்கும்  தலையில  ஒரு முடியில்லை.  ஆனாலும் இப்ப வழிப்பது தான் மோடல் என்பதால் தலைக்குனிவு இல்லாமல் வாழ்க்கை போகுது...
 
அதுக்கு முதல்ல
 
தம்பி.
என்ர  படிப்பு போனதால  அவனை  படிப்பிக்கணும் என்றது தான் என்ர  லட்சியம்.  அவனும் இயக்கத்துக்கு போய் களவாக பயிற்சி  எடுத்தபோது பயந்திட்டன். அப்படியே  போயிடுவானோ என்று. ஆனால் அவன் திரும்பி வந்து படிப்பை  தொடங்கிட்டான் என்றதும் போன  உயிர் திரும்பி  வந்தது.  இதுவரை அவன் கேட்டது எல்லாவற்றையும் வாங்கி  கொடுத்திருக்கின்றன்.  ஏனென்றால் அவனால்தான் எங்கள் குடும்பம்  எல்லாவிதத்தாலும் நிமிரணும். தட்டுத்தடுமாறிக்கிடக்கும் எங்கள் குடும்பகௌரவம் நிமிரணும்.  வெளிநாட்டில் எவ்வளவு தான் பணம் வைத்திருந்தாலும்  படிப்பால் ஊரில் உயர்வது போல் வருமே..அக்காவுக்கு கொடுத்த சீதனக்காசை  இவனது கல்யாணத்தில் தான் எடுக்கணும்....
 
ஆனாலும் தம்பி  நல்ல வடிவு.  சிவலை.  அதற்கேற்ப உயரம்.  அத்துடன் நானும் அவன் கேட்டதெல்லாம் வாங்கிக்கொடுக்க ஒரு பெரும் பணக்காறன்  போல திரிகின்றான் என்று கேள்விப்பட  நெஞ்சு பக் பக்கென்று அடிக்குது....
 
என் தம்பி  பெயரைச்சொல்லவில்லை அல்லே
மதுரன்............
 
தொடரும்....
 

 

Link to comment
Share on other sites

யாழ் புகையிரத நிலையம் வழக்கம் போல இரவு ஏழு மணி மெயில் ரெயினுக்கு பச்சை கொடி காட்டியது. கோர்னர் சீட் கிடைத்த சந்தோஷத்தில் மதுரன் சூட்கேசை இருக்கைக்கு மேலே தள்ளிவிட்டு யன்னலை சற்று காற்றுவர உயர்தியவன் இரயிலின் நகர்வோடு யாழ்ப்பாணம் தன்னை நோக்கி கையை ஆட்டி சற்று கோபத்துடன் விடைபெறுவது போல உணர்ந்தான் . அவன் யாழை விட்டு போகும் போது கோபப்படுவதும் திரும்பி வரும்போது கட்டி அணைப்பதும் யாழ் செம்பாட்டு மண்ணுக்கும் அவனுக்குமான இந்த ஊடல் எவருக்கு புரிய போகின்றது .

 

ஏ எல் பரீட்சை முடிவுகள் மிக சிறப்பாக வந்து பல்கலைகழகத்தில் முதல்வருடம் முடிந்த நிலையில் நாட்டின் அரசியல் நிலை கருதி அவனது பெற்றோர் மதுரனை லண்டன் போக சொல்லி வற்புறுத்திவந்தார்கள் .மிக வசதியான குடும்பம் ,லண்டனில் அண்ணர் டாக்டராக இருக்கின்றார் , நீயும் அங்கு போய் உனது மேற்படிப்பை தொடர் என்று பெற்றோரே முடிவேடுத்துவிட்டார்கள் .

 

பாடசாலை அனுமதி ,லண்டனில் இருப்பிட கடிதம் ,ஸ்பொன்சர் கடிதம் இவையெல்லாம் கொண்டு கொழும்பில் மாமா வீட்டில் தங்கி அவருடன் சென்று இங்கிலாந்து விசா எடுக்க ஏற்பாடு செய்தாயிற்று .

 

“தம்பி என்ன கொழும்பிற்கோ “ என்ற குரல் கேட்டு தன்னிலை வந்தவன் திரும்ப அருகில் ஒரு பெரியவர் ,அவருக்கருகில் ஒரு இளம் பெண் .

 

“ஓம் நீங்களும் கொழும்பிற்கோ “

 

“தம்பி எனது மகளுக்கு ஒரு கொள்ளுபிட்டியில் இருக்கும் ஒரு  வங்கியில் இண்டர்வியுவிற்கு வந்திருக்கு கூட்டிக்கொண்டு போகின்றேன் ,அங்க எனக்கு வடிவாக இடங்களும் தெரியாது சிங்களமும் தெரியாது தம்பியை பார்த்தால் கொழும்பில வேலை செய்பவர் போல கிடக்கு உதவ முடியுமோ “

 

“நானும் எனது லண்டன் விசா விடயமாகத்தான் கொழும்பு போகின்றேன் பிரச்சனையில்லை உதவிசெய்கின்றேன் வாருங்கள் .” என்றபடி அருகில் இருக்கும் பெண்ணை பார்த்தான் .மிக அழகான ஓரளவு மேலைத்தைய உடையில் அவனை கவனிக்காதவள் போல ஒரு ஆங்கில நாவலை வாசித்துக்கொண்டிருந்தாள் .

 

“காலோ நான் மதுரன் ,எந்த வங்கியில் இன்டர்வியு”

 

“கிரின்லஸ் வங்கி,நான் தனிய வருவம் என்றிருந்தேன் அப்பா தான் இல்லை தானும் வாறன் என்று ஒட்டியபடி வருகின்றார் .நானும் இதுதான் கொழும்பிற்கு முதல் தடவை செல்லுகின்றேன்  அதுதான் அப்பா பயப்பிடுகின்றார் “

 

“பரவாயில்லை ,கிரின்லஸ் வங்கி சட்ட கல்லூரிக்கு முன்னால் தான் இருக்கு ,நான் நண்பர்களை சந்திக்க அடிக்கடி போகும் இடம் .புதன் காலை உங்களை உங்கள் இடத்திற்கு வந்து கூட்டிசெல்கின்றேன் “

“ஓ தாங்க்ஸ் “ என்றபடி திரும்ப புத்தகத்திற்குள் மூழ்கிவிட்டாள்.

 

மதுரன் இருக்கையில் சற்று சாய்ந்து கண் மூடியவன்,  இவளை போல எத்தனை அழகிகளை நேற்று ஒரு ஊர்வசி இன்று ஒரு மேனகை என்று பாடசாலை பல்கலைக்கழகம் டியுசன் என்று கண்டு கதைத்து பழகி நண்பர் என்ற வட்டத்தை மீறி ஏதும் இல்லாமல் இருந்தவன்.  யாழ் கச்சேரியில் இருந்து மாற்றலாகி உடுவிலுக்கு அப்பா வேலைக்கு வர இணுவிலில் புது வீட்டிற்கு வந்தவனை ஒரு வாரத்தில் கிறங்கடிதுவிட்ட நிலாவை  நினைத்து தான் தன்னை  இழந்த அந்த கணங்களை கண்ணை மூடி திரும்ப ஓடவிட்டான் .

எப்படி இது எனக்குள் நடந்தது எல்லாமே ஒரு கனவு போல இருந்தது .அவள் அப்படி ஒன்றும் அழகில்லை  ஆனால் ஒரு கல்லில் என் நெற்றிப் பொட்டில் அடித்து விழுத்திவிட்டாள்.  அது எப்படி சாத்தியமாகியது? நான் சும்மா விட்ட பகிடிக்கு சற்றும் சளைக்காமல் எதிர்ப்பதில் சொன்னதும் அதில் சூடேறிய ஆண் என்ற திமிர் அவளை போடி என்றதற்கு பதிலுக்கு அவள் தன்னை போடா என்றதுதான் அவன் மனதை துளைத்தது .எப்படியும் இவளை பழி வாங்கவேண்டும் என்ற நினைப்பில் அன்று இரவு தூங்கியவனுக்கு காலை எழ அவள் முகமே முதல் நினைவில் வந்தது .

 

தனது வாழ்வு பற்றி மிக தெளிவாக  இருப்பவன் மதுரன் .எக்காலமும் வெளிநாடு நாடு போவதில்லை படித்து முடிய மட்டும் காதல் ,தண்ணி சிகெரெட் என்ற சிற்றின்பங்களில் கவனம் சிதறவிடுவதில்லை. நாட்டில் இருந்தே தனது படிப்பை பயன்படுத்தவேண்டும் என்பதே அவன் முடிவு. இப்படி ஒரு தெளிவு அவனுக்குள் இருப்பது அவன் குடும்பத்திற்கே தெரியும் .அதனால் அவர்களுக்கு அவனில் ஒரு தனி மரியாதை வேறு இருந்தது .இவள் நினைப்பு அனைத்தையும் கெடுத்துவிடும் என்று நினைத்தவன் அவள் நினைப்பை மறந்துவிடுவம் என்ற எண்ணத்தில் தாயிடம் இரவு நண்பர்களுடன் தங்கிவிடுவேன் என்று வீட்டு பைக்கை எடுத்து பல்கலைக்கழகம் நோக்கி போய்விட்டான் .

 

இரண்டு நாட்கள் அவள் நினைவை மறந்திருந்தவன் அன்று மாலை வீட்டிலிருந்து  லைபிரரிக்கு போக வெளியே வரும் போது அவளை மீண்டும் பார்த்தான் .அவளில் தெரிந்த ஒரு உடல்மொழி தன்னை அவள் தேடியிருக்கின்றாள் என்பதை அவனுக்கு உணர்த்தியது .அதே நேரம் தானும் தொலைத்துவிட்ட ஒரு அரும்பொருள் ஒன்று மீண்டும் கிடைக்கும் சந்தோஷ உணர்வொன்று அவனுள் பரவுவதை உணர்ந்தான் .எத்தனை பெண் நண்பிகளிடம் பழகிய எனக்கு இது என்ன புது வித உணர்வு என்று அவனுக்கே வியப்பாக இருந்தது .பைக்கை விரைவாக செலுத்தி வீதி முனையில் திருப்பியவன் சற்று அவளை திரும்பி பார்க்க அவளும் மதுரன்  மறையும் தருணத்தை விட கூடாது என்று  அவனை திரும்பிப்பார்த்தாள் .இருவர் கண்ணும் கண்ணும் கலந்ததில் அவனுள் ஒரு புது மொழி பிறந்தது அதுதான் அவனை அந்த கடிதத்தை எழுத தூண்டியது.

கே கே எஸ் வீதியில் பைக் பறக்கின்றது .அவன் நெஞ்சமெல்லாம் அவள் அவனின்  அனுமதி இல்லாமலே நிரம்பிவிட்டாள். லைபிரரிக்கு சென்றவன் இனியும் தாங்காது என்று அவளுக்கு ஒரு கடிதம் எழுத தொடங்குகின்றான் .

அதற்கான அவளின் பதில் உடன் கிடைத்ததும் அதை தான் ஆயிரம் தடவைகள் வாசிதத்தையும் நினைக்க அவனுக்கே சிரிப்பாகவும் வெட்கமாகவும்  இருந்தது .

ரேயினில் அவளை நினைத்து மீண்டும் திரும்ப திரும்ப வாசிக்கவேண்டும் என்று கொண்டுவந்த அந்த கடிதத்தை எடுத்தான் .அதனுடன் சேர்ந்து இன்னொரு கடிதமும் வந்தது .அட லண்டன்   அண்ணரின் கடிதம் .

டியர் மதுரன் ( நண்பன்) அறிவது .

உனது கடிதம் கிடைத்தது .நீ பல்கலைக்கழக படிப்பை தொடர போவதுபற்றியும் அதன் பின் நாட்டில் இருந்தே வேலை செய்ய போவது பற்றியும் எழுதியிருந்தாய் . வெளிநாடு என்ற எண்ணமே எள்ளவும் இல்லை என்ற வரி எனக்கு ஒரு சின்ன மறை முக நக்கல் என்பதை நான்  அறிவேன் . உனது முடிவு  பற்றி மிக மிக சந்தோசம். இப்படி ஒரு தம்பி எனக்கு கிடைக்க நான் கொடுத்துவைத்திருக்கவேண்டும் பெற்றோரை விசா கிடைக்கவில்லை என்று ஏமாற்றிவிடு , வேறு வழி எனக்கு தெரியவில்லை .நானும் மதுரன் பல்கலை கழக படிப்பு முடிய லண்டன் வரலாம் என கடிதம் போடுகின்றேன் .அத்துடன் நீ கேட்டது மாதிரி மூன்று முடிச்சு படத்தில் கமல் போடுவது மாதிரி

குறுக்காக கட்டம் போட்ட இரண்டு செர்ட்டுகளும் பெரிய இரண்டு பெல் போட்டங்களும் வேறு சில உடுப்புகளும் அனைவருக்கும் அனுப்பியிருக்கின்றேன் ,கொழும்பில் நின்று அதையும் கஸ்டம்ஸில் போய் எடுத்துக்கொண்டு ஊருக்கு போகவும் .

அடுத்த என்ன கறுத்தகொழும்பான் என்று எதோ எழுதியிருந்தாய் . மாம்பழம் ஒன்று உன்னை மயக்கிவிட்டதா ? சில வருடங்களுக்கு முதல் நீ எழுதிய கடிதம் ஒன்று நினைவிற்கு வருகின்றது .ராணி தியேட்டரில் டே ஒப் தி ஜாக்ககோல் (DAY OF THE JACKAL)  படம் பார்த்துவிட்டு கொலை செய்யபோறவனே  அதற்கு முதல் ஒழுங்காக தான் செய்யப் போவதை இவ்வளவு திட்டமிடுகின்றான் .அதே போல நானும் எனது வாழ்கையில் ஒவ்வொரு அடியையும் திட்டமிட்டே வாழப் போகின்றேன் .படிப்பு வேலை கல்யாணம் எல்லாம் ஒரு ஒழுங்கில் அந்த அந்த வயதில் இருக்கவேண்டும் என்று தத்துவம் கதைத்த நீ இன்று இப்படி எழுதியது  சிரிப்பு வந்துவிட்டது , முடிந்தால் எனக்கும் உன்ர கறுத்த கொழும்பானின் படத்தை அனுப்பு .இப்போதைக்கு பெற்றோர் தம்பி தங்கைக்கு ஏதும் தெரியாமல் நடந்துகொள் .

அன்பின் அண்ணன்

 

அண்ணன் தன்னில் இவ்வளவு நம்பிக்கை வைத்திருப்பதை நினைக்க மதுரனுக்கு பெருமையாக இருந்தது .அக்கடிதத்துடன்  மடித்து வைக்கப்படிருந்த மற்ற கடிதத்தை சற்று படபடக்கும் கையோடு திறக்கின்றான் .

‘உயிராக நினைக்கும் மதுரனுக்கு .... மரத்திலே ஆயிரம் மலர்கள் மலரும் இதயத்தில் ஒரு மலர் தான் மலரும் .. காலமும் விதியும் ஒத்துழைத்தால் நாம் வாழ்விலும் ஒன்றினைவோம். அது வரை எந்த சோதனை வந்தாலும் நான் தடுமாற மாட்டேன் . விரைவில் l ஒ எல் சோதனை வருகிறது . நானும் நிறைய படிக்க வேண்டும் புத்தகத்தி தூக்கினால் உங்கள்முகமே முன் வந்து நிற்கிறது

..எனக்கு ஒரு சத்தியம் செய்ய வேண்டும். ஒ எல் சோதனை முடியும்வரை என்ன குழப்ப கூடாது. அதி திறமை சித்திகளோடு ளோடு தான் உங்கள் ளுக்குமருமடல் வரைவேன்...அதுவரை உங்கள் நினைவுகளுடன் ..நிலா ....(இது நிலாமதி அக்காவின் வரிகள் )

 

தனக்குள் சிரித்தபடி கடித்தை மடித்தவன் விசர் பெட்டைக்கு விளங்கவில்லை  இனி ஒரு நாளும் உன்னை காணாமல் என்னால் இருக்கமுடியாது என்று , நான் தான் இல்லையென்றாலும் நீ என்னை பார்க்காமல் இருந்துவிடுவாயா ? காதல் என்று வந்து விட்டால் கடக்கமுடியாத ஆற்றையும் கடக்க வைத்து  ஏறாமுடியாத மலையும் அது ஏற வைத்துவிடும்.  இதற்குள் ஓ எல் ஏ எல் பரீட்சை என்றுகொண்டு .

நான் வளர்ந்த இடமும் விதமும் உனது கிராமதுத்துடன் ஒப்பிடும் போது வித்தியாசம் தான் அதற்காக உன்னை பார்க்காமல் இருக்க முடியுமா என்ன ? அதற்கும் ஒரு பிளான் போட்டால் போச்சு என்று அவன் நினைக்க ,

"தம்பி வவுனியா வந்துவிட்டது ,குரங்குகள் ஏறப்போகின்றது மகளுக்கு உந்த கோர்னர் சீட்டை கொடுக்கமுடியுமா"

 

"நிச்சயம் "என்றபடி எழும்பியவனை

 

"இது கூடிப்போச்சு அப்பா ,அவர்தான் கொழுப்பில் இறங்கி உதவி செய்வதாக சொல்லியிருக்கினார் ,பிறகு ஏன் கஷ்டம் கொடுக்கின்றீர்கள் .நீங்கள் சொல்லும் குரங்குடன் இருந்துதான் நான் இனி வேலையும் செய்ய போகின்றேன் ,எனக்கு என்னை சமாளிக்க தெரியும்" என்று முழு ஆங்கிலத்தில் தந்தையை திட்டியவள்  மதுரனை நோக்கி

 

"நீங்கள் ஆவலாக சிரித்தபடியே வாசித்துக்கொண்டிருந்த கடிதத்தை தொடருங்கள் "என்றாள்.

 

அட இவள் சிட்னி செல்டன் வாசிப்பது மாதிரி என்னை அல்லவோ பார்த்துகொண்டு இருந்திருக்கின்றாள் என்று நினைத்தவன்

பரவாயில்லை வாருங்கள் என்றபடி அவளுக்கு கோர்னர் சீட்டை கொடுக்கின்றான் .

 

மதுரனது காதல் எத்தனை தடைகளை தாண்ட வேண்டி வரும் என்பதை அறியாமல் மெயில் ரெயின் வவுனியாவை தாண்டி வேகம் எடுக்கின்றது

(தொடரும் ).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு மூன்று நண்பர்களுடன் அந்த வீட்டின் இரண்டாவது மகன் கதைத்துக்கொண்டு நிற்பான். இவளோ நண்பியோ அவர்களைக் கணக்கெடுப்பதே இல்லை.

மதுரனின் நண்பர்கள் . சுரேஸ்,கண்ணன் .கண்ணனுக்கு பேராதெனிய பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீடத்தில் அனுமதி கிடைத்திருந்தது.சுரேஸ் அடுத்து என்ன செய்யலாம் வெளிநாடு போவதா அல்லது ஐ.சி.எம்.ஏ செய்து கொண்டு கொழும்பில் ஒடிட் ரெயினிக் எடுப்பதா என்று மனம் குழம்பி போயிருந்தான்.மதுரனின் பழைய வீட்டின் முன்னும் ஒன்று கூடி கதைப்பது வழக்கம்.சுரேஸ் அதிகமாக அரசியல் கதைப்பான்.மதுரன் படிப்பு சம்பந்தமான விடயங்களை பற்றி கதைப்பான்.கண்ணன் பெண்களைப்பற்றிதான் அதிகம் கதைப்பான்.மதுரன் புது வீடு மாறுவதற்கு பல விதத்தில் சுரேஸும் கண்ணனும் உதவினார்கள்.

"டெய் டியுசன் முடிஞ்சு சரக்குகள் வார நேரம் வாங்கோடா வெளியால போய் நிற்போம்" என கண்ணன் எல்லொரையும் கூப்பிட்டான்.சுரேசை தவிர மற்ற இருவருக்கும் வாழ்க்கையின் இருப்புக்கான அடுத்த படி தெளிவாக இருந்தது.

"அடே உடுப்பு சரியில்லை நான் வரவில்லை" என மதுரன் சொன்னான்.

" பெரிய கமலகாசன், பெட்டைகள் உன்னை பார்க்க போகுது என்ற எண்ணம்,சும்மா சேட்டை விடாமல் வாடா" என்றான் கண்ணன்.

"அடே யாரும் பொக்கட்டுக்குள் சீப்பு வைச்சிருக்கிறீங்களா"

"இல்லையடா வீட்டு சீப்பையும் எந்த பெட்டிக்குள்ள போட்டனோ தெரியவில்லை"

மூவரும் தலைமுடியை கையால் கொதிவிட்டு (சீவி),அணிந்திருந்த உடுப்புக்களை அழகுபண்ணி வெளியே வந்து நின்றார்கள்.

"டேய் நான் நேற்று ஒரு சுப்பர் காயை கண்டனான் "என்றான் மதுரன்.

"அடே இவனுக்கும் பெட்டைகளின்ட ஆசை வந்திட்டு"

"டேய் எங்களுக்கும் அது...... இருக்குடா" என்றான் மதுரன்.

டியுசன் முடிந்து பெண்கள் வெளியே வந்து கொண்டிருந்தார்கள்.

"மச்சான் நான் சொன்ன காய் அந்தா போகுது இரட்டை பின்னலுடன்"

"இரட்டை பின்னலுடன் இரண்டு பெட்டைகள் போகுதுடா...உயரமானவளோ ?"

"ஒமடா அவள் தான்"

"மச்சான் உந்த காய் எங்கன்ட ஊர்காய் பெயர் நிலா,"என்று சொன்ன சுரேஸ் எதையோ இழந்தவன் போல திகைத்து நின்றான்.

"அடேய் உத விட திறம் காய்களை நான் கொழும்பில கண்டனான்"என்றான் கண்ணன்.

"நான் கண்ட பெட்டைகளுக்குள்ள இவள் எனக்கு அழகாய் தெரிகின்றாள்,அத்துடன் என்னை அறியாமல் ஒருவித உணர்வு உண்டாகின்றது" தட்ஸ் இட்...என்றான் மதுரன்.

வழமையாக மூவரும் ஒன்றாகதான் பிரிந்து செல்வார்கள். அன்று சுரேஸ் உடனே நண்பர்களிடம் விடை பெற்று சென்று விட்டான்.

நிலாவை கண்டவுடன் "எதொ ஒர் உணர்வு"என்று மதுரன் சொன்ன வார்த்தை சுரேசை வெகுவாக பாதித்திருந்தது.

நிலாவை சிறு வயதுமுதல் கண்டிருக்கிறான் .ஊருக்குள் அவள் ஒரு யாழ் அழகி என்று சொல்லலாம். கலியாணம் கட்டினால் இவளை கட்ட வேணும் இல்லாவிடில் இவளை மாதிரி ஒருத்தியை கட்டவேணும் என்று எண்ணிக்கொண்டான்.அவள் ஒ.எல் முடிக்கட்டும் அதன்பின்பு அவளிடம் தனது விருப்பத்தை தெரிவிக்கலாம் என்று காத்திருந்தான்.ஆனால் அவளுக்காக அவன் கடிதமும் எழுதவில்லை கவிதையும் எழுதவில்லை.என்றாலும் அவனது மனவுலகில் அவளை பற்றிய பல பேசாப்பொருள் எண்ணங்ளையும் பல பேசுபொருள் எண்ணங்களையும் வளர்த்திருந்தான்.கோவிலில் பாவாடை தாவனியில் அவளை கண்ட பின்பு அவள் மீது அதிகமான காதல் அவனை அறியாமலேயே குடி கொண்டிருந்தது..இரண்டு நாட்களாக நண்பர்களை சந்திக்க அவன் செல்லவில்லை. மதுரனின் படலையடியில் கண்ணன் வந்து சைக்கிள் மணியை அடித்தான் .

"வாரன்டா நில்லு"என்றவாறு சேர்ட்டை மாட்டிகொண்டே வெளியெ வந்தான்.

"எங்கயடா சுரேஸ் இரண்டு,மூன்று நாளா ஆளை காணவில்லை"

"ஒமடா வாரீயோ வீட்டை போய் பார்ப்போம்"

"கொஞ்சம் இரு இப்ப டியுசன் முடிந்து பெட்டைகள் வருவாளைவையள் பார்த்து போட்டு போவம்"

பெட்டைகள் வர பெடியள் தங்கட நாயக விளையாட்டை காட்ட அவையள் நாயகி விளையாட்டை காட்டி விட்டு பஸ் தரிப்பிடத்திற்கு சென்று விட்டார்கள்.

இருவரும் சுரேஸின் வீட்டை சைக்கிளில் சென்றார்கள்.

"என்னடா வீட்டுப்பக்கம் காணவில்லை"

"இல்லை கொஞ்சம் வேலை கிடந்தது அதுதான்"

"டேய் சுரேஸ் இவனை நாங்கள் நல்ல பெடியன், புத்தக பூச்சி என்று நினைத்தோம் ஆனால் காய் சுழியன்டா மடக்கி போட்டான்டா அந்த இரட்டை பின்னல்காரியை இப்பவும் உன்னை பார்க்க வரவில்லை அவளின்ட வீடு தேடி வந்திருக்கிருக்கிறான்."என நக்கலடித்தான்.

டிங்....டொங்க்....இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்... நேரம் சரியாக 4 மணி----- இப்பொழுது முதல் தொடர்ந்து கேட்க இருப்பது தத்துவ முத்துக்கள் முதலாவது பாடலாக இதோ டி.எம் செளந்தரநாயகம் பாடிய "எங்கிருந்தாலும் வாழ்க"...... என்ற. அறிவிப்பு

பி.எச் அப்துல் ஹமீதின் குரலில் ஒலிபரப்பானது.....

வாங்கோடா அவளின்ட வீட்டை காட்டுறேன் .....என்று தனது சைக்கிளை எடுத்து கொண்டு முன்னே சென்றான்......

"மச்சான் இவன் அந்த பெட்டையை கண்டவுடன் காதல் கலியாணம் என்று புலம்புகிறான்...எனக்கு உதெல்லாம் சரி வராது பெட்டைகளை பார்த்தமா மடக்கின்மா மாறினமா என்று இருக்க வேணும்....கலியாணம் கட்டும் பொழுது வீட்டுக்காரர் பார்த்து வைச்ச பெண்ணைத்தான் கட்ட வேணும்.லவ் பண்ணப்போறன் என்கின்றாய் கவனம்"என்று கண்ணன் கூறினான்

"தொடரட்டோ.....விடட்டோ"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டேய் கண்ணன். உனக்கு இன்னும் ஒருத்தரிலையும் உண்மையாக் காதல் வரேல்லை. அதுதான் உப்பிடி விசர்க் கதை கதைக்கிறாய். நீ திருந்தவே போறதில்லை. என்னடா இன்னும் நிலாவின்ர வீடு வரேல்லையே என்றான். நீ சயிக்கிள்ள ஏறின உடன வீடு வந்திடுமே. டேய் அவன் என்னடா முன்னால போறான். மச்சான், நாங்கள் எப்பவும் பக்கத்தில பக்கத்தில தானே போறனாங்கள். என்ன உனக்குப் பிரச்சனை. நில்லடா என்று சயிக்கிளை இரண்டு மிதி மிதித்து சுரேசின் சயிக்கிள் கைபிடியைப் பற்றி நிறுத்தினான்.

 

எனக்கு ஒண்டும் இல்லையடா சரியான தலையிடி. ஏனெண்டு தெரியேல்ல மச்சான் அதுதான் என்று நிறுத்தியவனை நான் நம்பவில்லை என்பதுபோல் பார்த்தான் கண்ணன். மதுரனுக்கு நிலாவின் வீட்டைப் பார்க்கும் நினைப்பில் இவர்கள் பேசியது காதிலும் விழவில்லை.  வந்து கொஞ்ச நாளிலயே அவளை மடக்கீட்டான். ம்.. எண்டாலும் கெட்டிக்காரன் தான் என்று பெருமூச்சும் பெரிதாய் விட்டான். நான் பாத்தாலும் ஒருத்தியும் நிமிந்தும்  பாக்கிறாளவை இல்லை. எல்லாத்துக்கும் மச்சம் வேணும் என்றும் முடித்தான்.

 

எடேய் புலம்பாதை. உனக்கும் ஒண்டு கட்டாயம் மாட்டும் என்றுவிட்டு மச்சான் சுரேஷ் நீ ஒண்டிலையும் கண் போடேல்லையே  என்றுவிட்டு அவனின் பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்தான் மதுரன். என் ஆசையில மண்ணள்ளிப் போட்டுட்டு என்னையே கேட்கிறியோ என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டு, நானும் ஒருத்தியை கன நாளா மனதில வச்சு, கட்டினால் இவளைத்தான் கட்டவேணும் எண்டு பகலும் இரவும் அவளையே நினைச்சு வாழ்ந்துகொண்டிருந்தன். எடேய் நீ என்னட்டைக் கூட உத ஒருநாளும் சொல்லேல்லையே என்று ஆதங்கத்துடன் கேட்ட கண்ணனை பெருமூச்சுடன் பார்த்துவிட்டு காதலிச்சால் உடனேயே சொல்லிப்போட வேணுமடா. விட்டமோ வேற யாரும் கொண்டு போவிடுவாங்கள். இப்ப பாத்தா இன்னொருத்தன் போட்டிக்கு வந்திட்டான் என்று நிறுத்தினான்.

 

மதுரனுக்கு மண்டையில் யாரோ ஓங்கிக் குட்டியது போல் இருக்க ஒரு திடுக்கிடலோடு சுரேசைப் பார்த்தான். என்னையோடா சொல்லுறாய் என்று கேட்டான். ஓம் என்று எங்கே சொல்லிவிடுவானோ என்று நெஞ்சில் திகில் ஒன்று பரவியது. நல்ல வேளை சுரேஷ், இல்லையடா அது கொக்குவில் பெட்டை. இப்ப வேறை ஒருத்தன் அவளிண்ட மனதில் வந்திட்டான். என்ன செய்யிறது. விதி என்று கூறி நிறுத்தினாலும், ஏன் அப்படிச் சொன்னேன். ஓம் என்று மதுரனிடம் கூறியிருக்கலாமோ என்னும் எண்ணமும் தோன்றியது. எது என்னைத் தடுத்தது. நான் அவளில் ஆசை கொண்டிருந்தாலும் அவள் என்னை எப்பவும் ஏறெடுத்தும் பார்க்காததுதான் என் மனதில் ஒரு தாழ்வு மனப்பாங்கைக் கொண்டுவந்திருந்ததா?? அல்லது மதுரனில் ஏற்பட்டுள்ள ஆழமான நட்பா ?? அல்லது என் காதல் கூட ஆழமானது இல்லையா ?? எனத் தன்னைத்தானே கேட்டுக்கொண்டும் அவனுக்கு குழப்பம் தான் மிஞ்சியதே தவிர விடை கிடைக்கவில்லை.

 

எடேய் இந்த ஒழுங்க்கேக்குள்ளை எல்லே அவள் இருக்கிறாள். நீ எங்க நேராப்  போகிறாய் என்று சுரேசின் மனத்தை இழுத்து நிறுத்தினான் கண்ணன். ஓமடா நான் எதோ நினைப்பில் நேரா விட்டிட்டன் என்று நிலாவின் வீட்டு ஒழுங்கைக்கு மிதியுந்தைத்  திருப்பினான். அவளின் வீடு கடக்கும் போது ஆவலுடன் பார்த்த மதுரனின் கண்கள் ஏமாற்றம் அடைந்தன. என்னடா ஒருத்ரையும் காணேல்ல என்ற மதுரனுக்கு, நீ வருவாய் என்று எல்லாரும் வாசல்ல வந்து காவல் இருக்கினம் என நக்காலாகச் சொன்னான் கண்ணன். வேணுமெண்டால் போய் பெல் அடிச்சுப் பாரன் எல்லாரும் வெளியில வருவினம் என்றுவிட்டுச் சிரித்தான். சுரேசுக்குச் சினம் தான் ஏற்பட்டது. வீடு பாத்தாச்செல்லே இனிப் போவம் என்றான். 

 

போரடா வீடுவரையும் வந்திட்டு பாக்காமல் போறதே.??ஒருக்கா சயிக்கிலைத் திருப்புங்கோடா. பெல் அடிச்சுக்கொண்டு போவம் சிலவேளை வெளியில வருவாள் என்றான். அவளிண்ட அம்மம்மாக் கிழவி நெடுக முன்னுக்குத்தான் இருக்கிறது. பிறகு பிரச்சனையாப் போடும் என்று சுரேஷ் எச்சரித்ததைக் காதிலும் வாங்காமல் கண்ணன் சயிக்கிலைத் திருப்ப சுரேசும் திருப்பவேண்டியதாய்ப் போட்டுது. அவளின் வீட்டுக்கு மூன்று வீடுகள் முந்தியே பெல்லை பலமாக அடித்தபடி கண்ணன் சென்றான். மதுரன் எட்டி எட்டி மதிலால் பார்த்ததுதான். யாரையும் வீட்டில் காணவில்லை. சந்திவரை சென்றபின் இன்னும் ஒருதடவை போவம். இல்லாட்டா திரும்புவம் என்ற மதுரனுக்கு ஒன்றும் பதில் சொல்லாமல் மிதியுந்தைத் திருப்பினர்.

 

இம்முறை சுரேசும் தன் சயிக்கிள் பெல்லை தொடர்ந்து அடித்தபடி வர இவர்கள் வீட்டைக் கடக்க முதலே மதுரன் மெதுவாப் போங்கோடா என்றான். வீட்டுகுக் கிட்ட வர நிலா வீட்டு கேற் திறக்கும் சத்தம் கேட்டது. மதுரனுக்கோ நிலாதான் என்று அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்பட முகம் எங்கும் பிரகாசிக்க அழகான சிரிப்புடன் பார்த்தவன் பேயைக் கண்டதுபோல் முகம் மாற சடுதியாக முகத்தைத் திருப்பினான். கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தது  நிலாவின் அம்மம்மா.

 

மற்ற இருவருக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனாலும் கிழவிக்குக் கேட்டாலும் என்று அடக்கிக் கொண்டே வந்தவர்கள் சந்தி திரும்பியதும் மிதியுந்தை நிறுத்திவிட்டு சிரித்து முடித்தார்கள். உந்த வேலைக்கு இனி நான் வரமாட்டன். உனக்கு வீடு காட்டியாச்சு. நீயே வந்து கொள். மாட்டினாலும் அடியையும் வாங்கிக் கொள் என்றான் சுரேஷ். உப்பிடிப் பயந்து சாகிறாய். நீ எல்லாம் எப்பிடித்தான் காதலிக்கப் போறியோ என்று சலப்புடன் சொன்னான் கண்ணன். 

 

மீண்டும் அந்த வழியே செல்லாது சுத்திப் போவமடா என்றபடி மிதியுந்தை மித்தித்தபடி நண்பர்கள் வேறு வீதிக்கு மாறினார்கள். மதுரனின் அதிட்டமோ என்னவோ தூரத்தில் நிலா வந்துகொண்டிருப்பது தெரிந்தது. மதுரன் தூரத்திலேயே கண்டுவிட்டான். சுரேசும் கண்டுவிட்டான் தான். சரி நானும் அவளைப் பார்ப்போம். அவள் யாரைப் பாக்கிறாள் என்றுதான் பார்ப்போமே. சிலவேளை மதுரனுக்கு மட்டும்தான் அவளில் விருப்பம் இருந்து அவளுக்கு இல்லாமலும் இருக்கலாம் என்ற ஒரு நப்பாசையும் தோன்றியது. அவளை நெருங்க நெருங்க அவளை வைத்த கண்  வாங்காமல் பார்த்தபடியே வந்தான்.

 

நிலாவோ தூரத்தில் அவர்களைக் கண்டுவிட்டாள். இவர்கள் தற்செயலாக வருகிறார்களோ அல்லது எதுக்கு என்னும் கேள்வியும் மனத்தைக் குடைய ஆனாலும் மதுரனைக் கண்ட மகிழ்வு மனதில் பரவ, நெஞ்சு தடதடக்கத் துவங்கியது. இன்று இவரை நிமிர்ந்தும் பார்ப்பதில்லை என்று மனதில் கங்கணம் கட்டிக்கொண்டு தலையைக் குனிந்தவள் அவர்கள் அண்மித்ததும் தன்னை அறியாமலேயே தலையை நிமிர்த்தி மதுரனைப் பார்த்துவிட்டு அடுத்த கணம் தலையைக் குனிந்து கொண்டாள்

 

 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

யாழில் ஒரு காதல் 8

 

அங்கா பாருங்கோ…!

முள்ளுக்கிளுவைக் கதியால்கள் நெருக்கினாற்போல் அடைத்திருந்த வேலியோடு ஒட்டியிருந்த பச்சைத் தகரப் படலையடியில் குந்தியிருக்கிறாரே அவர்தான்.. அவரேதான்.. ஆத்தைப்பிள்ளை ஆச்சி.

‚உந்தக் கிழவிக்கு வேறை வேலை இல்லாட்டி வீட்டுக்கை போய் படுத்திருக்க வேண்டியதுதானே.. இண்டைக்கோ நாளைக்கோ எண்டு மண்டையைப்போடுற வயசில றோட்டாலை ஆர் போகினம், வருகினம் எண்டு விடுப்புப் பாத்துக் கொண்டு..‘

அந்த வீதியிலுள்ள சனம் முணுமுணுத்தாலும், நேரே ஆத்தைப்பிள்ளை ஆச்சியிடம் கூறத் துணிவில்லை. சொன்னால் அவ்வளவுதான் ஆச்சியின் வாயில் இருந்து உதிரும் சொற்களில் இருந்து இலகுவில் தப்ப முடியாது என்பது எல்லோரும் அறிந்த விடயம்.

‚உந்தக் கிழவியோடை அண்டக்கட்ட முடியாமைத்தான் அந்தாள் யாக்குறுக் கிழவன் நேரத்தோடை மண்டையைப் போட்டூட்டுது..‘

 

ஆத்தைப்பிள்ளை ஆச்சியின் கணவர்தான் யாக்குறு. இருவரின் மண வாழ்க்கைக்கு சாட்சியாக ஒரு மகள் அம்பிகா.. அவளுக்கு ஒரு மகன் நாகேந்திரன். கட்டிளம் காளை. படிப்பு ஏறாததால், சொந்தமாக உள்ள காணிகளில் வெங்காயம் மிளகாய் என்று தோட்டம் செய்து கொண்டிருந்தான்.

 

"பிள்ளை அங்கை பார்.. அந்தக் கோழியைக் கலை பிள்ளை.. காலங்கார்த்தால விறாந்தைல பீச்சப் போகுது" என்று கத்தினாள் தாய் பொன்னம்மா

"சும்மா இரணை.. நா பள்ளிக்கூடத்துக்கு நேரஞ்செண்டு போச்செண்டு அவதிப்படுறன்.. நீங்கள் அதுக்கை வேறை" என்று எரிச்சலுடன் கூறினாள் நிலா.

"ஓமோம்.. ஒண்டையும் ஒழுங்காய் வைக்கிறேல்லை.. அததை அங்கங்கை போடுறது.. பேந்து சுடூது மடியைப் பிடியெண்டு அந்தந்த நேரத்தில தேடினால் நேரம் போகும்தானே.. நான் என்ன சொன்னாலும் உனக்கு புறக்குடத்திலை ஊத்தின நீர்போலை.. சரி சரி.. கெதியா வெளிக்கிடு பிள்ளை.."

 

அவசர அவசரமாக தோள்வழி தவழ்ந்து புரண்டு நெளிந்த அந்த இரட்டைப் பின்னல்களை முன்னால் இழுத்து யன்னலில் இருந்த சின்ன கண்ணாடியில் அழகு பார்த்தவள் எதையோ நினைத்தவளாகக் குபுக்கென்று சிரித்துக் கொண்டாள்.

'ஏ.. இரட்டைப் பின்னலே.. பெயர் தெரியாத மதுரனுக்கு என் அடையாளப்படுத்தியது நீதானே?!’

பின்னல்களைப் பின்னால்விட்டு, நெற்றியில் சிறு கோடாக விபூதியை ஒரு விரலால் பூசியவாறு, "அம்மா.. போவிட்டு வாறன்.." என்று திண்ணையால் முற்றத்திற்கு இறங்கிணாள் நிலா.

"பொறு பிள்ளை.. இந்தா தேத்தண்ணிய ஒரு வாய் குடி.. நான் றோட்டிலை போய் ஆர் வரீனம் எண்டு பாக்கிறன்.. எதுக்காலை தப்பினாலும் எங்கடை சனத்தின்ரை முழுவியளத்துக்காலை தப்பேலாது.."

"உங்களூக்கு வேறை வேலை இல்லை முழுவியளம் அது இதெண்டு கொண்டு.. திருந்தமாட்டியள்.."

தாயிடம் இருந்து மூக்குப்பேணியை வாங்கி அண்ணாந்து வாய்க்குள் விட, விறுவிறென்று முகதலைப்பை இடுப்பில் செருகிக்கொண்டு வீதிக்கு விரைந்தாள் பொன்னம்மா.

 

சற்று தூரத்தில் ஆத்தப்பிள்ளை ஆச்சி தனது வீட்டு படலைக்கு முன்பாகக் குந்திக்கொண்டிருந்தார்.

 

"உந்தக் கிழவி வீட்டிலை அடங்கிக் கிடக்காது.. றோட்டாளாஇ போற வாறதுகளை ஆந்தைக் கண்ணாலை சுட்டுப் போடும்.."

நிலா றோட்டடிக்கு வர, "அங்கால திரும்பிப் பார்க்காதை பிள்ளை.. ஆத்தைப்பிள்ளை குந்திக் கொண்டிருக்குது.. அதீன்ரை முகத்திலை முழிச்சால் ஒண்டும் விடியாது.. இப்பிடியே நேர பாத்துக் கொண்டு போ…"

நிலாவுக்கு தாயின் அறியாமையை எண்ணிச் சிரிப்பு வந்தாலும்.. வழமைபோலவே தாயின் மனதைப் புண்ணாக்க விரும்பாமல் ஆத்தைப்பிள்ளை ஆச்சி இருந்த திசையை பார்ப்பதைத் தவிர்த்தவளாகச் செல்ல ஆரம்பிக்கும்போது ஆத்தைப்பிள்ளை பொன்னம்மாவைக் கூப்பிட்டார்.

 

"வேலியள் எல்லாம் கறையான் அரிச்சு உக்கிப் போட்டுது.. அதுதான் பாத்துக்கொண்டு நிக்குறன்..“

"ம்.. இதுக்கொண்டும் குறைச்சலில்லை.. விடுப்புப் பாக்கிறதுக்கெண்டு ஒரு வியாக்கியானம்.."

 

அப்போது

அந்த வழியால் சுரேஷும் மதுரனும் கண்ணனும் சைக்கிளில் வருவதைக் கண்டு, எதிர்பாராத இன்ப அதிர்ச்சியில் முகம் சிவக்க நடை தளரத் தடுமாறினாள் நிலா.

"அட.. உந்தா.. அதிஷ்டசாலிதான்.. ரட்டைப்பின்னலே முன்னலை வரூது.. இதுதான்போலை வீடு..“ என்று கிசுகிசுத்தான் கண்ணன்.

"ம்…“ - சுரேஷ்.

"டேய் மதுரா.. வீட்டை வடியாய் பார் மச்சான்.. இதுதான் சீதன வீடு.." என்று பெருங்குரலில் சிரித்தான்.

 

"ஆர் தம்பியவை நீங்கள்.. எங்கை போறியள்..“

ஆத்தப்பிள்ளை வார்த்தைகளால் கொழுவி இழுத்தார்.

"நாங்கள் சுரேஷிட்டை வந்தனாங்கள்.. இதாலை போறம்..“

 

"இப்ப காலம் கலியுகம்.. ஆரார் எங்கை போய் வரீனம் எண்டு ஆருக்கு தெரியும் உந்த குமரியளும் வீடு வாசலள்ளை அடங்கி ஒடுங்கிக் கிடக்கிறேல்லை.. பொடியளும் றோட்டுவழிய படங்காட்டிக் கொண்டு திரியுதுகள்…“

'சுரீர்‘ என்று தாக்கியது பொன்னம்மாவுக்கு.

விறுவிறென்று நடக்கலானாள் நிலா.

 

"கிழவி.. ஆரைச் சொல்லுறாய் எண்டு விளங்குது மரியாதைக்கு பேசாமை இருந்தா வர வர மேலை மேலை போய்க்கொண்டிருக்கிறாய் உன்னாலை றோட்டால பெட்டை பொடியள் போக வழியில்லை…“

பொன்னம்மா பொரிந்து கொட்டினாள்.

"ஓமடி ஓம்.. உண்மையைச் சொன்னால் பொத்துக் கொண்டு வரூதாக்கும்இண்டைக்கு மூண்டு பேர் போறாங்கள்.. போகப் போக எத்தினை பேர் போறாங்கள் எண்டு பாக்கத்தானே போறன்..

ஆத்தப்பிள்ளை ஆச்சியின் சத்தத்தில் வேலி ஓலைக்குள் இருந்து கரகரத்த கறையான்கூட அமைதி காத்தது.

 

(தொடரும்…)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுக்கு  வந்த  தாரணிக்கு

ஆத்தப்பிள்ளை  ஆச்சியின் குரல் எதிரொலித்தபடியே  இருந்தது.

இந்தக்கிழவியின் வாயில் ஏதாவது அம்பிட்டால் அவ்வளவு தான்.

இப்படித்தான்  போன  வருடம்  தாங்கள் உண்டு தங்கள் படிப்பு உண்டு என்று

பள்ளி  சென்று வந்த குகனையும் மைதிலியையும்  சேர்த்து ஒரு கதையைப்போட்டு

அவை  உண்மையாகவே காதலர்களாகி படிப்பைவிட்டு

ஊரைவிட்டு ஓடவேண்டிவந்தது அவளுக்கு பக்கென்று ஞாபகம் வந்தது.

 

ஒருவாறு  படுக்கைக்கு வந்த தாரணிக்கு நித்திரை வரவில்லை

ஏதோ  விபரீதம் நடக்கப்போவது போல் உள்ளுணர்வு  எச்சரித்தது

தனது நன்நடத்தை காரணமாகவே நிலாவின் தாயார் 

நிலாவை  தன்னுடன்  வெளியில் சென்றுவர  கொஞ்சம்  சுதந்திரம் கொடுத்திருந்தார்.

நாளைக்கு  நிலாவுக்கு ஏதும் பிரச்சினை  வந்தாலோ  அல்லது அவர்களது காதல் வெளியில் வந்தாலோ

தனக்கும் பிரச்சினைகளும் அவமானமும்  வரலாம்

ஏன் நிலாவின் அம்மா  கூட தன் பிள்ளையை  நல்லதாக்க  தன்னை  பலி  கொடுக்கலாம் என்று   யோசித்தவளுக்கு தலை  சுற்றியது.

 

ஆனால் நிலாவிடம் சாடை மாடையாக  எச்சரித்த போதும் அவள் அதை உணர்வதாக   தெரியவில்லை.

அவளது காதல் மிகவும் அவசரமாகவும் வேகமாகவும் செல்வதாக தாரணிக்கு பட்டது.   ஆனால் தொடர்ந்து நச்சரிப்பதால் தன்னை  பொறாமையால் சொல்கிறாள் என பிழையாக விளங்கிக்கொள்வாளோ  என்ற  பயமும் தாரணிக்கு இருந்தது.

 

மதுரன்  முதல் முதல்  பார்த்தபோது இருவரையுமே  பார்த்தான்.

தன்னையும் பலமுறை  அவனது பார்வை  ஊடறுத்தததை

கூசும் தனது உடலை  வைத்து தாரணி  புரிந்து கொண்டிருந்தாள்.

ஆனால்  அவள் அந்த பார்வை  வலையை நேரடியாக யாசிக்காமல் தவிர்த்திருந்தாள்.

காரணம் அவள் பெரிதாகியவுடன் அம்மா  சொன்ன  வார்த்தைகள்  தான் எப்பொழுதும் அவள் முன் வரும்.

அப்பா போனபின் எவ்வளவோ  சிரமத்துக்கும்  அசௌகரியங்களுக்கும் கழுகுக்கண்களுக்கும் நடுவில  நான் படும்  இன்னல்களுக்கிடையே  நீயும்  இந்த நிலைக்கு வந்திருக்கிறாய்.  பிள்ளை  ஒன்றை  மட்டும் ஞாபகம் வைத்துக்கொள் என்றைக்கும்

முள்ளில் சேலை  விழுந்தாலும்

சேலை முள்ளில் விழுந்தாலும் சேதம் சேலைக்குத்தான்

அதாவது நமக்குத்தான்.......

என்ற போது அம்மாவின்  கண்கள் கலங்கியிருப்பதை தாரணி  கண்டாள்.

அன்றிலிருந்து ஆண்கள் என்றாலே சில அடி தள்ளி  நிற்க  பழகிக்கொண்டாள்.

 

ஆனால் இந்த நிலாவின் போக்கு  பெரும்  அச்சுறுத்தலாக  இருந்தது.

காதலுக்கு இவ்வளவு ஆக்ரோசமிருக்குமா?

அது இப்படி ஆட்களை ஆட்டுவிக்குமா?

எப்படி இருந்த நிலா    சுற்றிவிட்ட பம்பரம் போல் எப்படி 

இப்படி ஆனாள்???

திடீர்க்காதலும்

முன் பின் தெரியாத ஒருவனை நம்பி..........

இவள் போகும் போக்கில் தன்னையே  இழந்துவிட்டால்......?

தூக்கிவாரிப்போட்டது  தாரணிக்கு....

 

காதலித்தவர்கள் கனவு கண்டு டூயட் பாட

கூடப்போன  குற்றத்துக்காக

தூங்கமுடியாது விழித்திருந்தாள் தாரணி...........

 

Link to comment
Share on other sites

யாழில் ஒரு காதல் (10)

நிலாவின் வதனம் வாடிக்கிடந்தது. மதுரனுடனான காதலை தாய் முறித்துவிடுவாளோ? அதனை நினைக்கவே அவள் நடுங்கினாள். ரியூசனைச் சாட்டாகக் காட்டி மதுரனை வீட்டுக்கே வரவழைத்துவிட்ட நிலையில், அம்மாவுக்கு மதுரன்மேல் ஏற்பட்ட நல்லபிப்பிராயமும் தெரியவரவே, நிலா அவன் தன்னை மணந்து மாப்பிள்ளையாக வீட்டுக்கே வந்துவிட்டதாக மனக் கோட்டையே கட்டியிருந்தாள். இந்த நிலையில்தான் மதுரனைப்பற்றி ஒரு செய்திபரவியது. மதுரன் முன்பு இருந்த ஊரில் ஒரு பெண்ணைக் காதலித்து, அவளைக் கெடுத்து ஏமாற்றிவிட்டதாகப் பரவிவந்த செய்திதான் அது. பரப்பியதும் வேறுயாருமல்ல, ஆத்தப்பிள்ளை ஆச்சி பாடிய பாட்டு, அவள் பாக்கிடிக்கும் தாளத்துடன் அந்தத் தெருவுக்கே கேட்டது. நிலாவுக்கு அந்தப் பாட்டைக் கேட்டதும் பாக்கிடிக்கும் சாவியால் ஆச்சியின் தலையில் போட்டுவிடலாமா? என்ற ஆத்திரம் ஏற்பட்டது. அவள் அதனை நம்பத் தயாரில்லை. ஆனால் அவள் தாய்தான் நொருங்கிப்போனாள். அதில் உண்மையில்லை என்று நிலா நம்பினாலும்! அவள் தாய் பயந்துபோனது உண்மை. அந்தப்பயம்... ரியூசனை நிறுத்தி, மதுரன் அவள் வீட்டுக்கு வருவதையும் தடுத்துவிட்டது.

மதுரன் அப்படிப்பட்டவனா..? அவனே வந்து, நான் கெட்டவன்தான் என்று அடித்துச் சொன்னாலும்! நிலா நம்பமாட்டாள்!! பழகிய சில நாட்களுக்குள்ளேயே அவனைப்பற்றி அவள் ஆழமாக அறிந்து உணர்ந்திருந்தாள். ஆனால்...! இப்போது வந்த கதை...! ஏன்? எதற்காக?.. ஏதோ மின்னல் கீற்றுப்போல் ஒரு ஒளி வந்து சென்றது. சுரேசு ஆத்தப்பிள்ளை ஆச்சிக்குப் வெத்திலை பாக்கு வாங்கிக்கொடுக்க அடிக்கடி அங்கு வந்துபோனதும். அதை உரலில் இடித்தும் கொடுத்ததும் அவள் ஞாபகத்திற்கு வந்தது. அவள் ஆத்திரம் அனைத்தும் சுரேசின்மீது திரும்பியது அவன்தான்! அவனேதான்!! இந்தக் கேவலமான அசிங்கமான செய்தியை ஆத்தப்பிள்ளை ஆச்சிமூலம் தண்டோரா போட்டுப் பரப்பியிருக்கிறான். ஏன் செய்தான்? எதற்குச் செய்தான்? ஒருவேளை அவனும் தன்னை காதலித்தானா? நான் மதுரனை விரும்பியதால் அவன் அடைந்த ஏமாற்றம்தான் அப்படி அவனைச் செய்ய வைத்ததா? அவளுக்குப் புரியவில்லை! ஆனாலும் அவன் செய்கையை நினைத்து நினைத்துப் பொருமினாள். அவனை அவள் அருவருத்தாள்.

சே! இந்தத் தாரணி கூட இதை நம்பியதுபோல் நடந்துகொள்கிறாளே! ஒருவேளை நான் சுரேசிற்கு கிடைக்கவில்லை என்ற ஆத்திரத்தில், சுரேசு மதுரனை பழிதீர்க்க முயல்வது போல்! இவளும் மதுரன் தனக்குக் கிடைக்கவில்லை என்ற ஆத்திரத்தில்! என்னைப் பழிதீர்க்க முயல்கிறாளோ..! மதுரன் அப்படிப்பட்டவனா..? மீண்டும் இந்தக் கேள்வியை யாரிடம் அவள் கேட்கமுடியும்?. தன்னிடமே அந்தக் கேள்வியைக் கேட்டுக்கொண்டால்! அவளால் அதனை நினைக்கவே முடியவில்லை!!. நீண்ட நெடிய நெடுமூச்சுடன் அவளின் எண்ணங்கள் பின்நோக்கிச் சென்றது. அன்று நிலாவுடன் கூடப்படிக்கும் கீர்த்திகாவின் அக்காவிற்குக் கல்யாணம். கீர்திகாவின் வீட்டிற்கு நிலா செல்லும்போது தனது சொந்தவீட்டிற்கே செல்வதுபோன்ற ஓர் உணர்வு. அவ்வளவு அன்னோன்னியம். மதுரனுடைய அப்பாவும் கீர்திகாவின் அப்பாவும் நெருங்கிய நண்பர்கள். மதுரனுடன் காதல் ஏற்படுமுன்னரே அவன் அப்பாவை அங்கு கண்டுள்ளாள். அவரை இன்னார் என்று அறியுமுன்னரே அவருக்கு அவள் ஓரிருதடவை அங்கு காப்பிபோட்டும் கொடுத்திருக்கிறாள்.

கல்யாணத்திற்கு கீர்த்திகாவோடு படிக்கும் நண்பிகள், நண்பர்கள் என அத்தனைபேரும் அங்கு சமூகமளித்திருந்தது மட்டுமன்றி, பணிகளையும் போட்டிபோட்டுச் செய்தனர். பருவவயதில் இந்தக் கல்யாணவீட்டுப் பணிகள் செய்வதைப்போன்ற ஒரு ஆனந்த அனுபவம் வேறெதிலும் கிடைப்பதில்லை. இள மங்கையரின் பாராட்டுகளிலும், கேலிகளிலும் இளைஞர்கள் கிறங்கிப்போய் இருப்பார்கள். "இந்த டிசைனிலை டெக்கிரேட் பண்ண எங்கை பழகினீர்கள்! சோ பியூற்ரிபுள்." சோடனையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் ஒரு இளைஞன் அப்போதுதான் அறிமுகமான அந்தத் தேன்மொழியாளின் இனிய கேள்வியில் கிறங்காவிட்டால் அவன் ஒரு இளைஞனா!!.... ஆவலுடன் இள மங்கையரை ஆசையோடு நோக்க, அவர்கள் சிந்தும் இளநகையும், புன்முறுவலும் ஆகாயத்தில் பறக்கவைக்கும், சிலதுகளின் வாய்ச்சுளிப்பும் முகச்சுளிப்பும் மனதை வருத்துவதும் உண்டு. அத்துடன் அந்தச் சுளிப்புக்களை யாராவது பார்த்துவிட்டார்களா? என்ற எண்ணம் ஏற்பட்டால்! அது அவர்களை மிகுந்த அவமானமானத்திற்கு உள்ளேயும் அழுத்திவிடுவதும் உண்டு.

ஒருவனின் கிண்டல், கேலி, நையாண்டி, என ஒரு மங்கையைச் சீற்றமடையச் செய்தாலும், அச் சீற்றம் பொய்யானது என்று அறியும்போது...! ஆகா! மடங்கிவிட்டது என்ற மகிழ்ச்சியில் அவன் பொங்கிப்போவதும்...., சில மங்கைகள் வெறுப்பை முகத்தில் காட்ட, அதனால் வெம்பி வளைந்து, நெளிந்து, குழைந்து அவமானப்பட்டதை மறைக்க முயலும் இளைஞர்கள் ஒருபுறமும்....,. நான் நல்லவன். மனித நாகரீகத்தின் பண்பாடு தெரிந்தவன். எந்த மங்கையைக் கண்டும் மயங்க மாட்டேன். என்று விறைப்பாக அங்குமிங்கும் திரியும் இளைஞர்கள் மத்தியில்.... நான் மாதர்குல மாணிக்கம். கண்ணகிக்குத் தங்கை. எனக்கு மாலையிட்டு மணாளனாகி வருபவனே என் தெய்வம் என, அம்மா பாட்டி என்று தாய்க்குலத்தின் பின்னால் ஒட்டிநின்று, ஏனைய இளசுகளின் லூட்டியை வெறுப்பது போல ரசித்துப் பார்க்கும் அழகிகள் எனக் கல்யாண வீடே களைகட்டியிருக்கும்.

இளசுகளின் தொடர்புகளை, நெருப்பும், பஞ்சும் என எதிர்க்கும் பெரிசுகளும் கல்யாண வீடு என்றால்.. அந்தச் சல்லாபக் காட்சிகளைக் கண்டு ரசித்து தாங்களும் லூட்டி அடிப்பார்கள். இளசுகளின் சல்லாபம் அவர்களுக்கு அவர்களின் அந்தநாள் ஞாபகங்களை மீட்டிவிட, கிழண்டிப்போன தங்கள் மனைவிகளைப் பார்த்துப் பெருமூச்செறிவார்கள். கிழவர்களைப் பார்த்து அவர்கள் மனைவிகளும்... நாரிக்கு தைலம் தேய்க்காது விட்டால் நிமிர முடியாத கிழட்டு மனிசன், குமரனைப்போல் துள்ளுவதைப் பார் என்று உள்ளக் கிளுகிளுப்புடன் முகவாயைத் தோளில் இடித்துக்கொள்வார்கள். அப்படி விளையாட்டுக்கள் நடந்த கீர்த்திகாவின் அக்காவுடைய கலியாண வீட்டில்தான், நிலாவுக்கும் மதுரனுக்கும் காதல் ஏற்பட்டபின்பு முதன்முதலாகத் தனிமையில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

கீர்த்திகா வீட்டில் தட்டுமுட்டுச் சாமான் வைக்கும் அறைக்குள் தட்டு ஒன்றைத் தேடி எடுத்துவர நிலா சென்றபோது, சந்தணக் கும்பா ஒன்றைத் தேடிக்கொண்டு மதுரன் நின்றான். ஒருவரை ஒருவர் பார்த்துத் திகைத்த வேளையில் அங்கு வேறெவருமே இல்லை என்ற எண்ணம் மனதை மகிழ்சிக் கடலில் ஆழ்த்தவும், இன்புற்ற அவர்கள் உள்ளங்களில் அன்பும் ஆசையும் பேரலையாக எழுந்து அலைமோதியது. மோதிய அலையில் மூழ்கிய நிலாவை நாணம் பற்றிக்கொள்ளவே, வந்தவேலையை மறந்து, அவள் கால்களில் ஒன்று தனது விரல்களால், தரையில் கோலமிட முயன்றது. அவளைக் கண்களால் விழுங்கி ரசித்தத மதுரனின் வாய் நிலா.... என்று மென்மையிலும் மென்மையகச் சொல்லியதோ அழைத்ததோ ம்.... என்று நிமிர்ந்த நிலாவின் பார்வை, அவன் பார்வையைத் தாளாது மீளவும் தாளவே கால் விரல்கள் மீண்டும் தரையில் கோலமிட முயன்றன. வியர்த்து விறுவிறுத்து உடலிலும் சிறிது நடுக்கமும் ஏற்பட்டது. அப்படி என்ன பயம்! என் மதுரன்தானே! அந்தச் சமாதானத்தை அவள் உள்ளம் சொன்னாலும் உடல் கேட்கவில்லை. இதுதான் பெண்மையின் இயல்போ? "அங்கிள் இந்தஅறையில்தான் சாவிப்பெட்டி இருக்கிறது வாங்கோ எடுத்துத்தாறன்." கீர்த்திகாவின் அண்ணனின் குரல் அது. "எனக்கு பதினேழு மில்லிமீற்றர் சாவிமட்டும் போதும்." ஐயையோ அது மதுரனின் தந்தையின்குரல்!... நிலாவின் நடுக்கத்திற்கு ஆறுதல் சொல்லப்போன மதுரன் இப்போது பயத்தினால் நடுங்கினான்.

மதுரன் நிலா காதல் சற்று வெளிச்சத்துக்கு வந்து, அவன் குடும்பத்தையும் எட்டியபோது! முறுகிய குடும்பத்தினரை அமைதிப்படுத்திய அவன் தந்தை, மதுரனை நேரிடையாகவே கேட்டார். திடீரெனக் கேட்டதால் தடுமாறிய மதுரன், "அது பெடியங்கள் பகிடிக்கு...." "அதுதானே பார்த்தேன், அது அது நடக்கவேண்டிய காலத்தில் நடக்கும் இப்போ படிப்புத்தான் முக்கியம். புரிந்ததா" இந்தச் சொற்கள் தந்தையின் கேள்வியல்ல. புத்திமதியுமல்ல. பலமான கண்டிப்பும், எச்சரிக்கையும்கூட.. "உன் படிப்பு முடிந்து உனக்கொரு வேலையை நீ தேடிக்கொண்டபிற்பாடு உன் வாழக்கையை நீயே அமைத்துக்கொள்ள விரும்பினால்.... அதற்கு யாரும் தடையாக இருக்கமாட்டார்கள்!!. அதுவரையில் படிப்புத்தான் முக்கியம்." அந்த வீட்டில் தந்தையின் சொல்லை யாருமே மீறியதில்லை மதுரனால் முடியுமா?? இப்போ தன்னோடு நிலாவையும் சேர்த்துப் பார்த்துவிட்டால்!.... அவன் பதறிப்போனான். தப்பிக்க எந்தவழியுமில்லை. பாய்ந்து நிலாவைப் பற்றியவன் அங்கிருந்த பழைய அலுமாரி ஒன்றின் பின்னால் அவளையும் இழுத்து மறைந்து கொண்டான். தந்தை வேண்டிய சாவியை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டது தெரிந்தது. ஆனல் கீர்த்திகாவின் அண்ணன் எதையோ கிண்டிக் கிளறி தேடிக்கொண்டிருந்தார். வெளியேறுவதாகத் தெரியவில்லை.

மதுரனும் நிலாவும் ஒழிந்திருந்த இடத்தில் ஒருவரே நிற்க முடியாது!... இருவருவரும் சேர்ந்து நிற்பதென்றால்!!.... மதுரனின் கை அணைப்பில் நிலா பின்னிக்கிடந்தாள். அவன் மூச்சுக்காற்றையே அவள் சுவாசிக்கும் அத்தனை நெருக்கம். அந்த சூடான காற்றில் அவள் உருகினாள். என்னதான் காதலனாக இருந்தாலும்! தன் அங்கங்கள்! அதுவும் அந்தரங்கமான அவளின் அங்கங்களும் அவனோடு உரசுவது..!! மணமாகாத தன்பெண்மைக்கு இழுக்கல்லவா??. மனம் நெருடினாலும் அவனிடம் இருந்து வெளிப்பட்ட ஆண்மைக்குரிய அந்த நெடியும், அதனோடு சேர்ந்துவந்த வெதுவெதுப்பான இளஞ்சூடும் அவளை மயக்கமுறச் செய்து, அவன் நெஞ்சோடு முகத்தைச் சாயவைத்தது. கிறங்கிய நிலையில் பாதி திறந்திருந்த இமைகளின் ஊடாக அவனை நிமிர்ந்து பார்த்த பார்வையில் ஏதோவொரு ஏக்கம் தெரிந்தது. மதுரன் அவளை எப்படி அள்ளிமுகர முயன்றாலும், அதனைத் தடையின்றி ஏற்றுக்கொள்ளும் நிலை!. அவளின் அந்த நிலை தவறு என்று உள்ளம் உணரவைத்தாலும், அவன் அணைப்புத் தந்த சுகம் அவளைச் சுற்றம், சூழல் அனைத்தையும் மறக்கச்செய்தது. உணர்ச்சியால் மயங்கிப் பூத்திருந்த அந்த மங்கையின் நாடி நரம்புகள் ஊடாக இரத்தம் இன்பவெள்ளமாகப் பாய, அவள் அவன் கையணைப்பில் துவண்டுகிடந்தாள்.

தனது கைக்குள் திரண்டிருந்த அந்த வாசமுள்ள அழகான மென்மையான பூமாலையைச், சிறிதும் கசங்கிவிடாது பற்றி வைத்திருப்பதற்கு, அவன் பெரும் பிரயத்தனப்பட்டான். அவளை அப்படியே மேலும் இறுகக் கட்டியணைத்து முத்தமிட்டு, அந்த ரகசிப் பெட்டகங்களைத் திறந்துபார்க்க அவன் முயன்றிருந்தாலும்! அவளால் தடுத்திருக்க முடியாது!. நிலா இருந்த நிலை அப்படி!. தெய்வம் தந்த வரப்பிரசாதமாக அந்தச் சந்திப்பை எண்ணி அரை மயக்கத்திலிருந்த அவளை மெதுவாகவே அணைத்து வருடியவன், காமத்தின் வடிகால்களுக்குச் செல்லும் வழிகளை தனது மனக்கட்டுப்பாட்டினால் அழுத்தி இறுக்கிப் பூட்டிவிட அவன் பட்ட சிரமங்களையும், வேதனைகளையும் அவள் அனுதாபத்துடன் உணர்ந்தாள். கீர்த்திகாவின் அண்ணனும் வெளியேறியது தெரிந்ததும், சிறிதும் தாமதம் செய்யாது அவளை மெதுவாக வெளியே மதுரன் கொண்டுவந்தபின் அவனிடம் நெடிய பெருமூச்சு ஒன்றும் வெளிப்பட்டது. அவனைப் பற்றியிருந்த பிடியை விடவே மனமின்றிக் கொடிபோல் துவண்டு இருந்தவளை மெதுவாக உயிர்ப்பித்து, தலையைக் கோதிவிட்டு நிலமையை உணர்த்தினான். வண்டு தேன்குடிக்கத் தயங்கியபோதும், வண்டுக்குத் தேனூட்டிவிட மலர் தயாராகத்தானே இருந்தது! எப்படி அவனால் அவன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடிந்தது? அவன் தன் குடும்பத்தில் பயின்ற பண்பா! அல்லது அவன் முன்னர் தெரிவித்ததுபோல், அமைப்பில் பயிற்சி பெற்ற நேரத்தில், அங்கு ஊட்டப்பட்ட பண்புகளா!!.

"எம் முன்னவர்கள் சொல்லிவைத்த மனித நாகரீ கத்தில் குறைகள் இருந்தால் அவற்றைக் களைய முற்படலாமே தவிர, நாகரீகத்தையே களைந்துவிடுவது கூடாது. எங்கள் முதலிரவுபற்றி எத்தனை இன்பமான கற்பனைகளை வளர்த்து வைத்துள்ளோம், அதனை முறைப்படி அணுகிச் சுவைப்பதிலேதான் பூரண இன்பம் கிடைக்கும். மரத்தில் பிடுங்கிப் பழுக்கவைத்த பழத்தைவிட, மரத்திலே தானாகக் கனியும் பழம்தான் பூரணமான சுவைதரும். அதுபோலவே சந்தர்ப்பத்தில் கிடைக்கும் இன்பத்தைவிடவும் முன்னவர்கள் வகுத்துவைத்த நாகரீகத்தின் வழிநின்று அனுபவிக்கும் இன்பமே பூரண இன்பத்தைத் தரும்." இத்தனையும் அவன் சொல்லினால் சொல்லி உணர்த்தவில்லை. பார்வையினாலேயே அவளுக்கு உணர்த்தினான், எதுவுமே நடவாததுபோல் அவளை வெளியே அனுப்பிவைத்த அன்றைய அவன் செயலை நினைவுகூர்ந்தாள். எவராலும் தடுக்கமுடியாத அந்தச் சந்தர்ப்பத்தையே அவன் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவன் சுண்டுவிரல் நகம்கூட அவளில் பட்டுவிடாமல் அத்தனை கவனமாக அவளை பாதுகாத்து அனுப்பிய அவனா ஒரு பெண்ணை ஏமாற்றுவான்? அவனா காமுகன்? அந்த உத்தமனையா! தவறானவன் என்று சொல்கிறார்கள்!... தன் இதயம் கவர்ந்த மதுரன்மீது இப்படி ஒரு அபாண்டமான பழியைச் சுமத்த எப்படி மனம் வந்தது?

அன்று நிலா தனது தோழிகள் இன்றித் தனியே வீட்டுக்குத் திரும்பவேண்டிய நிலை. அவள் வந்த வீதியின் எதிரே சுரேசுமட்டுமே வந்துகொண்டிருந்தான். கண்ணனையும் காணவில்லை. வழமைபோல் நிலாவைப்பார்த்து மலர்ச்சிப் புன்னகை ஒன்றைத் தவழவிட்ட சுரேசு, அவள் முகத்தைப்பார்த்ததும் அதிர்ந்துபோய்விட்டான். அப்படி ஒரு கொடூர வெறுப்புத் தெறிக்கும் முகத்தை அவன் ஆயுளுக்கும் பார்த்ததில்லை. நிலாவின் பார்வை எரித்தது. நிலவுக்கு எரிக்கும் சக்தியும் உண்டா?. உண்டு! அதுதான் கண்முன்னே தெரிகிறதே! சுரேசு புழுவாகத் துடித்தான். துடித்தவன் கண்ணனிடம் வந்து புலம்பினான்.
"நான் என்னடா செய்தேன்....?" ஒன்றும்தெரியாத அப்பாவிபோலக் கண்ணனிடம் கேட்டான். நண்பனின் புலம்பல் கண்ணனை இரக்கப்படத்தான் வைத்தது. "மதுரன் வருவதற்கு முதலே நீ நிலாவை விரும்புவதை எனக்குத் தெரிவித்தபோது!!.... அவளோடு பேசு, கதை, நீ விரும்புவதைத் தெரிவி" என்று உனக்கு எத்தனைதடவை படித்துப் படித்துச் சொல்லியிருப்பேன்!. நிலா என்னைப் புரிந்துகொள்ளாது கோபப்பட்டு விடுவாளோ என்று நீ பயந்ததையும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், இப்போ என்ன நடந்தது? மதுரனின் கிண்டல் நிலாவைக் கோபப்படுத்திய பின்புதானே! அவர்களுக்குள் காதல் வளர்ந்தது!!. அதுதான் போகட்டும் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு நிலா மதுரன் இணைய முடியாது போனால்.... அவளுக்கு வாழ்வுகொடுக்கிறேன் பேரே என்று அவளை மணந்துகொள்ள உனக்கொரு சந்தர்ப்பமாவது இருந்தது. அதையும் இப்போது கெடுத்துவந்து நிக்கிறியே."

"மதுரனைப்பற்றி இல்லாததையெல்லாம் ஆத்தப்பிள்ளை ஆச்சியிடம் சொன்னது நீதானே?. நீ ஆத்தப்பிள்ளை ஆச்சிக்கு வெத்திலை பாக்கு வாங்கி, அதை இடித்தும் கொடுத்து, மதுரனைப்பற்றிப் போட்டுக் குடுத்தது எல்லாமே நிலாவுக்குத் தெரிந்துவிட்டது." "சத்தியமாய் அப்படி இல்லை மச்சான். வெளியூர்க்காரன் எங்கடை ஊருக்கு வந்து பொம்பிளைப் பிள்ளைகளுக்கு பின்னாலை திரியிறதை யாருமே கண்டுகொள்வதில்லை என்றுமட்டும்தான் கிழவிக்குச் சொன்னனான். கிழவி இப்படி கண், காது, மூக்கு வைத்து மதுரன் பெயரையே இழுத்துவிடும் என்று எனக்குத் தெரியாதடா." 'திருப்பதிக்கே லட்டா?..' கண்ணன் தனக்குள் சிரித்துக்கொண்டான். இவன்தான் செய்தான்!..... கண்ணனுக்கு இருந்த சிறு சந்தேகமும் மனதிற்குள் இப்போ உறுதிப்பட்டது. "நிலா எனக்குக் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லையடா, அவள் முன்புபோல என்னுடன் சகசமாகக் கதைத்தாலே போதும்!. சாகுமட்டும் எனக்கு அது போதுமடா!!." சுரேசைப் பார்க்க கண்ணனுக்குப் பரிதாபமாக இருந்தது. நிலாவை அவன் உயிருக்கு உயிராகக் காதலித்தாலும் அது ஒருதலை ராகம் என்றும் கண்ணனுக்குத் தெரியும். அவள் இல்லையென்றால் வாழ்வே இல்லையென்று சுரேசு வாழ்வதும் தெரியும். ஆனாலும் என்ன செய்வது?? "மச்சான் நிலாவுக்கு உண்மை தெரியவேண்டும். அவள் மன்னிப்பை நான் பெறவேண்டும். நிலா என்னோடு பழையபடி கதைப்பாளாடா! சொல்லடா!" சுரேசின் கண்கள் குளமாயின. இதயத்தில் இரத்தம் வடிந்திருக்க வேண்டும். "நிலா உன்னை மன்னிக்கவே மாட்டாள். ஒரு புழுவைவிடக் கேவலமாகத்தான் உன்னைப் பார்க்கிறாள். ஆனாலும் ஒரு வழியுண்டு சுரேசு" "என்னடா! என்னடா! சொல்லடா!!." "அவள் உன்னை வெறுக்காது பழையபடி உந்னுடன் பழகவேண்டும் என்றால்!... உன் செயல் இனிமேல் நிலாவையும் மதுரனையும் சேர்த்துவைப்பதில் இருக்கவேண்டும்! அது அவளுக்கும் தெரியவேண்டும்!!"

பாவம் சுரேசின் காதல்இதயம் வாடிக் கருகித்தான் போய்விட்டது. ஆனாலும் அதன் முட்கள் குத்தும் வேதனையிலிருந்து விடுபட அவன் அதனைச் செய்துதான் ஆகவேண்டும். நிலாவை மகிழ்ச்சியாக வாழவைக்க அவன் தயாராகிவிட்டான். நிலா அவனுக்குக் கிடைக்கப் போவதில்லை. ஆனாலும் அவள் வெறுப்பின்றி அவனுடன் அன்பாக ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டாலே போதும் ஆயுள் முழுக்க அவன் அந்த மகிழ்ச்சியிலேயே வாழ்ந்துவிடுவான். தன் தவறுக்குப் பிராயச்சித்தத்தை உடனே ஆரம்பித்தும்விட்டான். கணக்குப் பாடத்தில் சற்றுத் தடுமாறும் மதுரனைக், கணக்கியல் பேராசிரியரான அவன் தந்தையிடம் எப்படியோ பாடம்கேட்க வைத்துவிட்டான்.

Link to comment
Share on other sites

கீர்த்திகாவின் அக்காவின் கல்யாணத்தில் நடந்த கலாட்டாவை நினைத்தபடியே படுக்கையில் விழுந்த மதுரன் தந்தையின் ஆவேசகுரல் கேட்டு கண் முழித்தான். நேரத்தை எட்டிப்பார்த்தால் காலை ஏழுமணி தான் ஆகுது ,குரலே உயர்த்திப்பேசாத அவன் தந்தை தாயை உரத்த குரலில் திட்டிக்கொண்டிருந்தது தெளிவாக கேட்டது.

 

“ஆரியகுளத்தடியில் இரண்டு பெடியங்களை ஆமி சுட்டுப்போட்டுக்கிடக்காம், யார் பெத்த பிள்ளைகளோ தெரியாது ,இவன் மதுரன் லண்டன் விசா கிடைக்கவில்லை என்று சந்தோசமாக சொல்லுகின்றான் .முகத்தில் விசா கிடைக்காதது பற்றி ஒரு மனவருத்ததையும் காணேலை, படிப்பு முடிய பார்ப்பம் என்று சிம்பிளாக சொல்லுறான் ,நாளைக்கு இவனையும் புலி என்று சுட்டு சிங்கள ஆமி சுட்டு மதவடியில் போடபோகின்றான் “

 

“உதுக்கு நான் என்ன செய்ய, அவனுக்கு விசா கிடைக்கவில்லை என்கின்றான் .,பல்கலைக்கழக படிப்பு முடிய கனடா பிரான்ஸ் என்றாலும் பிடிச்சு அனுப்பிவிடுவம் ,பிள்ளை படிப்பும் வீடும் என்று இருக்கின்றான் , அவன் ஒரு பிரச்சனைக்கும் போகமாட்டான். எனக்கு என்ரை பிள்ளையை பற்றி தெரியும், நீங்கள்  சும்மா ஏன் என்னோட கத்துறீங்கள் “

 

கட்டிலை விட்டு எழும்பி வெளியில் வந்த மதுரன்

 

“அப்பா இப்ப என்ன நடந்தது , ஆரியகுளத்தடியில் நடந்த கொலைக்கு நான் என்ன செய்வது, இப்ப நாட்டில் நடப்பது உங்களுக்கு தெரியும்தானே , நான் பல்கலைக்கழகம் ,லைபிரரி ,வீடு என்று தானே இருக்கின்றேன் .படிப்பு முடியட்டும் மிச்சத்தை பிறகு ஒருக்கா  பார்ப்பம்”

 

“இவன் என்ன படிப்பு முடிய வெளிநாடு போறன் என்றாமல் ஒருக்கா பார்ப்பம் என்கிறான் ,உனக்கும் இவங்கள் யாரோடும் தொடர்பு வைத்து நாட்டில் நிற்கும்  எண்ணமோ”

“முதல் படிப்பு முடியட்டும் ,அப்படி தொடர்பு வைத்தாலும் என்ன பிழையோ “

 

மகனை ஒரு பார்வை பார்த்தவாறு மதுரனின் தந்தை முற்றத்தில் இறங்கியபடியே

 

‘அப்ப ஒரு கொலை இங்குதான் முதல் விழும் “ என்கின்றார் .

 

மதுரனின் தாயார் ஓடிவந்து மதுரனின் தலையை கோதியபடியே

 

“மனுஷனுக்கு விசர்,  நீ உனக்கு சரியானதை செய் தம்பி “ என்கின்றார் .

 

எந்த நேரமும் குசினிக்குள் நின்று சமைத்தபடி தந்தையின் சொல்லுக்கு எதிர் சொல்லு சொல்லாத  தன் தாயின் மறைமுகமான பேச்சு இதைத்தான் தமிழ் காவியங்கள் வீரத்தாய் என்று பாடியதோ என்று நினைத்தபடியே அம்மா சொன்னதை கேட்டும் கேட்காதவன் போல ஆரியகுளத்தடியில் என்ன நடந்தது என அறியும் ஆவலில் வெளியில் புறப்படஆயத்தமாகின்றான் .

 

கண்ணனையும் ஏற்றிக்கொண்டு பல்கலைக்கழகம் போய் நடந்தை அறிவம் என்று  மோட்டார் சயிக்கிலை கண்ணன் வீட்டு பக்கம் விட நினைக்கையில் குயின்சியின் அழுதமுகம் ஏனோ மதுரனுக்கு வந்து போனது .முதலில் ஒருக்கா குயின்சி வீட்டில் எட்டி பார்த்துவிட்டு பின்னர் கண்ணனிடம் போவம் என்று திர்மானித்தவன் மானிப்பாயை நோக்கி மோட்டார் சயிக்கிளை திருப்புகின்றான்..

 

குயின்சி ஆசிர்வாதம் (QUINCY ASIRVAATHAM )

 

இவள்தான் மதுரன் விசாவிற்கு கொழும்பு போகும்போது மெயில் ரெயினில் சந்தித்த ஆங்கில அழகு தேவதை. மறக்கமுடியுமா அந்த சந்திப்பை ,

வவுனியாவில் கோர்னர் சீட்டை சிட்னி செல்டன் வாசகியிடம் கொடுத்தவன் அவள் புத்தகம் வாசிப்பது போல தன்னை அவதானித்தை உணர்ந்து அந்த தைரியத்தில்

 

“அங்கிளுக்கு எந்த இடம் “

 

“தம்பி நான் மானிப்பாய், யாழ்பாண சப்- போஸ்ட் மாஸ்டர் . மனுசி செத்து போய் பத்துவருடங்கள் ஆச்சுது. இவள்தான் என்ரை மூத்த பிள்ளை குயின்சி தம்பியார் டேவிட் ஏ எல் மானிப்பாய் இந்துவில் படிக்கின்றார் . இவள் ஏ எல் பாஸ் பண்ணிவிட்டு யாழ்ப்பாணம் ரிம்மர் ஹாலில் கேக் செய்வது, தைப்பது  படிப்பம் என்று சயிக்கிலிலை போக வெளிக்கிட்டுவிட்டாள் ,  நாடு இப்ப இருக்கின்ற நிலைமையில உது சரிவராது என்று என்ரை பழைய நண்பனை பிடித்து கிரின்லஸ் வங்கியில் வேலை குயின்சிக்கு  எடுத்துவிட்டன் , இப்ப சும்மா போர்மாலிற்டிக்குத்தான் இன்டர்வியுவிற்கு போறம். பிள்ளையை கொழும்பில வேலையில் விட்டிவிட்டு ஒரு கலியாணத்தை செய்துவைத்து விட்டன் என்றால் எனக்கு காணும் .மானிப்பாயிலை பொம்பிளை பிள்ளையை வைச்சிருக்க எனக்கு விருப்பமில்லை “

 

அங்கிள் விலாவாரியாக அனைத்தும் ஒப்பித்துவிட்டார்.  இவை அனைத்தையும் அவள் கேட்டும் கேட்காதமாதிரி காலுடன் இறுக்கிய தனது டெனிம் பான்ஸ்சை இன்னும் இறுக்க கூடியதாக தனது  காலை ஒன்றுக்கு மேல் ஒன்று போட்டாள். இந்த அவளது அசைவுடன் அவளை முழுதாக மதுரன் அளவெடுத்தான் .

யாழ்பாணத்தில் இந்த வகை பெண்களை காண்பது மிக அரிது , தோள் மட்டத்துடன் அலிஸ்டர் பான்ட் போட்டு விரித்துவிட்ட மயிர் , கை வைக்காத மேலுக்கு இன்னமும் இரண்டு பட்டன் வைக்கலாம் என்பது போல்  திறந்த விட்ட ஆனால் லூசான பிளவுஸ் , கீழே மிக இறுக்கிய டெனிம் பான்ஸ் .உயரமான் ஒரு கீல்ஸ் செருப்பு . ஆனால் அதை உடுத்திருந்த விதத்தில் எதுவித ஆபாசமுமில்லை. அது அவளுக்கு அழகாத்தான் இருந்தது .இந்த அழகுதான் இவளுக்கு உந்த செருக்கையும் கொடுக்கு போல என்று நினைத்தவன் இவவுக்கு தன்னை பற்றி தெரியாது என மனதில் சிரித்துக்கொண்டான் .

 

பொல்காவலை புகையிலை நிலையத்தில் சற்று நேரம் மெயில் நிற்கும் என்ற அறிவித்தலை மூன்று மொழியிலும் ஒரே மாதிரி அறிவித்துக்கொண்டிருந்தார்கள் . மதுரன் நேரத்தை பார்த்தான் அதிகாலை ஒரு இரண்டுமணி. சுட சுட ஒரு கோப்பி குடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தவன்,

 

“அங்கிள் கோப்பி வேண்டுமா “

 

“குயின்சி உனக்கு கோப்பி வேணுமா “

 

“ஓம் அப்பா ,நீங்களும் அவரோடு போட்டு வாங்கோ “

 

“அங்கிள் நீங்கள் இருங்கோ நான் வாங்கி வாறன் “

 

மதுரன் பொல்காவலையில் இறங்கி மூன்று கோப்பியும் பிஸ்கட்டும் வாங்கி வந்து ரெயின் யன்னலால் அவர்களுக்கு நீட்டியபடியே

 

“நான் ரெயின் கதவடியில் கொஞ்ச நேரம் நின்று காற்று வாங்க போறன் தேடாதையுங்கோ அங்கிள் “ என்றபடி போய் ரெயினில் ஏறி கம்பியில் பிடித்தபடி ரெயின்கதவுடன் சாய்கின்றான் .

 

மெயில் ரெயின் மெல்ல மெல்ல மூச்சு வாங்கி ஓட ஆரம்பிக்கின்றது. பின்னிரவு,  அரையும் குறையுமாக மறையும் நிலவு, மெல்ல வீசும்  குளிர்மையான காற்று , பச்சை பசேல் என்ற புல்வெளிகள். மதுரன் அந்த இயற்கை அழகில் தன்னை மறந்து மெல்லிய குரலில் பாட தொடங்குகின்றான் “ஆயிரம் கண் போதாது வண்ணகிளியே இந்த இயற்கை அழகை காண்பதற்கு ”

 

இயற்கை தான் எத்தனை அழகு என்று  சொக்கி நின்றவன் அருகில் ஒரு அரவம் கேட்டு திரும்புகின்றான் .

 

“இப்படி நிற்க பயமில்லையோ “ திரும்பி பார்க்கின்றான் மிக அருகில் குயின்சி,

 

“இதில் பயப்பட என்ன இருக்கு , எனது ரெயில் பயணங்களில் பகலேன்றாலும் இரவென்றாலும் ஓடும் ரெயினின் கதவின்  கம்பிகளை பிடித்துக்கொண்டு இயற்கையை ரசிப்பதில் இருக்கும் சுகம் வேறெதிலும் இல்லை . உண்மையில் இந்த கம்பிகளை கூட பிடிக்க தேவையில்லை படியில் இருந்தே ரசிக்கலாம் ஆனால் சிலவேளை வளைவுகளிலும் பாலங்களிலும் ரெயின் சற்று ஆடிவிட்டால் பலன்ஸ் தவறிவிடும்.அதனால் ஒரு முன்னெச்சரிக்கையாக கம்பியை பிடிப்பது ”

 

“அப்ப நானும் ஓடும் ரெயினில் இயற்கையை ரசிக்கலாமோ “

 

“அப்ப இஞ்சை முன்னுக்கு வாங்கோ ரசிக்கலாம் “

 

“நீங்கள் கையை அப்படியே முன்னுக்கு வைத்திருங்கோ எனக்கு பயமாக இருக்கு “

 

குயின்சி ஒரு கையால் ரெயின் கம்பியையும் மறுகையால் மதுரனின்  கரங்களையும் பற்றியபடி ஓடும் ரெயிலால் வெளியில் எட்டி பார்க்கின்றாள் .

“உண்மையாக சரியான வடிவாகதான் இருக்கு, நல்ல சந்தோசமாகவும் இருக்கு, ஆயுள் முழுக்க இப்படி நிற்க ஆசையாய் இருக்கு ,அதற்காக  என்னை பிழையாக நினைத்து போடாதயுங்கோ “

 

“உங்களை விட எனக்குத்தான் சந்தோசமாக இருக்கு ? சும்மா பகிடிக்கு சொன்னான் . ஆசை தீர பாருங்கோ “

 

“நான் பொல்காவலை தாண்ட உங்களை யன்னலால் பார்த்தேன் ,நீங்கள் ஏதோ பாடிய மாதிரி  இருந்தது  “

 

“இயற்கையை பார்த்ததும் பாடல் வந்துவிட்டது அதுதான் பாடினான் .”

 

“நல்லா பாடுவீங்களோ”

 

“அது தெரியாது, ஆனால் பல்கலைகழகத்தில் கலை நிகழ்சி என்றால் எனது பாடல் தான் கடைசி நிகழ்வு ,மாணவர்கள் கடைசி வரை இருக்க அந்த ஏற்பாடு “

 

“அப்ப எனக்காக ஒருக்கா எனக்கு மிகவும் பிடித்த பாட்டு “ வான் மேகங்களே வாழ்த்துங்கள் பாடுங்கள் “ புதிய வார்ப்புகள் பாடல்  பாட முடியுமா “

 

மதுரன் பாடதொடங்குகின்றான் .பாடல் முடிகையில் குயின்சி அழுதபடி  மதுரனின் கையை  கட்டிப்பிடித்து ,

 

“அப்பா எங்களை பற்றி முழுக்க எல்லாம் சொன்னவர் தானே ,ஆனால் அவர் தம்பியை பற்றி சொன்னது பொய்”

 

“என்ரை தம்பி டேவிட்  A/L  மூன்று A ஒரு B எடுத்தவன் , பல்கலைகழக அனுமதி வர முதல் எதோ இயக்கத்தில் சேர்ந்து இந்தியா போய்விட்டான் .நான் முன்னர் பௌதிக டியுசன் போன மித்திரனிடம்  நான்தான் அவனையும் நல்ல ஆசிரியர் என்று அப்பாவிடம் சொல்லி சேர்த்து விட்டானான். ஆனால் இப்ப அவர்தான் தம்பியை  இயக்கத்திற்கு அனுப்பியிருக்கின்றார் என்று கேள்விப்பட்டேன்  .மித்திரனுக்கும் எனக்கும் ஓரளவு புரிந்துணர்வு, காதல்  இருந்தது. கல்யாணம் வேறு செய்ய நினைத்து இருந்தோம். தம்பி இயக்கத்திற்கு போன  கோவம் எல்லாம் சேர்த்துத்தான் எனக்கு இப்ப  இந்த கொழும்பு வங்கி வேலை “

என்ன பேசுவதென்றே தெரியாமல் தடுமாறிய மதுரன்

 

“எல்லாம் நல்லா நடக்கும் யோசிக்க வேண்டாம் ,எனக்கு மித்திரனை தெரியும் நான் போய் அவருடன் கதைத்து உங்கட நிலைமையும் சொல்லுகின்றேன் .வாங்கோ போய் சீட்டில் இருப்பம் அங்கிள் தேடுவார்”

 

மதுரன்  குயின்சியை சீட்டிற்கு கூட்டி செல்கின்றான் .

 

ரெயின் தனக்கு இதில் ஏதும் சம்பந்தமில்லை என்றவாறு புகையை கக்கிக்கொண்டு  கோட்டையை நோக்கி போகுது .

 

தாவடி சந்தியில் வந்ததும் பழைய நினைவில் இருந்து மீண்ட மதுரன் கடவுளே குயின்சியின் சகோதரனாக இறந்தவர்கள் இருக்க கூடாது என்று மானிப்பாய் வீதியில் மோட்டார் சயிக்கிளை திருப்பியவன்,

 

உயிர் இழப்பு என்று வந்தவுடன் நிலாவின் காதலை விட குயுன்சியின் தம்பி பற்றிய எண்ணம் எப்படி  தன்னை அறியாமல் முன்னுக்கு வந்தது  என்று நினைக்க அவனுக்கே வியப்பாக இருந்தது .தனது நண்பர்கள் எத்தனை பேர்கள் காதலிகளை விட்டு காதலை துறந்து போராட்டத்திற்கு போனதை நினைக்க முதல் காதல் எப்பவும் சொந்த மண் மீதுதான் என்பது  உண்மையானதாக உணர்ந்தான் .

 

பிற்குறிப்பு –

மானிப்பாயில் குயின்சி விட்டிற்கு  சென்ற மதுரன் ஆரியகுளத்தில் கொல்லப்பட்டவர்களுக்கும் குயின்சியின் சகோதருக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்பதை அங்கிள் மூலம் உறுதிசெய்து கொண்டான் .

 

ஆனால் ஐந்து வருடங்களுக்கு பின் ஆனந்தி என்ற பெயரில் மாலைதீவை பிடிக்க  தலைமை தாங்கிப்போய் இறக்க போவது குயின்சியின் தம்பி  தான் என்பதையும் அப்போ மதுரன்  தெரிந்திருக்க நியாயம் இல்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் ஒரு காதல் (12)

 

இன்று மதுரன் நன்றாகக் களைத்துப் போயிருந்தான்!


அவனது மனம், வாடைக்காற்றின் போது வானத்தில் பறக்கும் எட்டுமூலைப் பட்டமொன்றின் நிலையில் இருந்தது….. !

 

 

கீழே இருந்து பார்ப்பவர்களுக்குப் ‘பட்டம்' ஒரே இடத்தில் ஆடாமல், அசையாமல் நிற்பது போலத் தோன்றினாலும், காற்றின்  அசைவுக்கேற்ப, அதுவும் உயர்ந்தும், தாழ்ந்தும், அசைந்தும், அசையாமலும் இயங்கிக்கொண்டிருப்பது எவருக்கும் தெரிவதில்லை.

 

 

அந்தப் பட்டத்தை, நிலத்தோடு தொடுத்திருக்கும் நூல் கயிறாகத், தற்போதைக்கு அவனது அப்பாவும், அம்மாவும்…!

 

அந்த நூல், அறுந்து விடுமெனில்,அவனது வாழ்வும்  திக்குத் திசை தெரியாமல், வீசும் காற்றில் திசையில் பறந்து, எங்காவது ஒரு கட்டாந்தரையிலோ அல்லது கடல் வெளியிலோ,வீழ்ந்து சிதைந்து போகப்போகும் பட்டத்தைப் போலவே, சிதைந்து போய் விடும். மதுரனுக்குப் பற்றிப் பிடிப்பதற்கு,ஒரு நூல் மட்டும் கிடைத்துவிட்டால், அப்பா என்ற அந்த நூலை விட்டு விட்டு, இன்னுமொரு நூலைப் பிடித்து விடலாம். ஆனால், இப்போது அவன் பிடித்துக் கொள்ளப் பல நூல்கள் கிடைத்துவிட்டன. எனினும் அந்த நூல்களை உடனே பிடித்து விடவும் முடியாது. தன்னை முதலில் 'நிலை நிறுத்த' வேண்டிய தேவை அவனுக்கு ஏற்பட்டிருந்தது. அதற்காகவாவது அவன் தனது 'பட்டப்படிப்பை' முதலில் முடித்தாக வேண்டும். அதன் பின்னர், பற்றிப்பிடிக்க வேண்டிய நூல்களைப் பின்வருமாறு வரிசைப் படுத்தினான்.   

 

ஒரு 'தீர்க்கமான முடிவொன்றை' எடுக்க வேண்டிய நிலையில் தான் இருப்பதாக 'மதுரன்' உணர்ந்திருந்தான்" !

 

முதலாவது, குயின்சி என்ற நூல்….

 

ஒரு சாதாரண புகையிரதப் பயணத்தின் மூலம், அவனது மனதில், ஒரே நாளில் மிகப்பெரிய சலனத்தை ஏற்படுத்தி விட்ட ஒரு உறவு….   கொழும்பிலேயே தனது இளமைக்காலத்தின் பெரும்பகுதியை வாழ்ந்து விட்டவனுக்கு, குயன்சியின் நாகரீக உடையும், நேரடியாகப் பேசாவிட்டாலும், தனது ‘மௌனத்தாலேயே’ உணர்வுகளை வெளிப்படுத்திய தன்மையும், ஆங்கிலம் கலந்த அவளது தமிழும், அவனை மிகவும் கவர்ந்து விட்டன என்பது உண்மை தான். அவளது தந்தையின் ‘திறந்த மனசும்' அவனுக்குக்குப் பிடித்திருந்தது. அந்தப் புகையிரதப் பயணத்தின், மெல்லியதாக உடல்களைத் தழுவும் ‘வசந்த காலத்துக் குளிரில்' வாசலின் குறுக்கே நீட்டிய அவனது ‘கரங்களில்' அவள் சாய்ந்து நின்ற விதமும், அவனது ‘வான் மேகங்களே… வாழ்த்துப் பாடுங்கள்...’ எனும் பாடலின் வரிகளில் மூழ்கிக் கண்களை மூடியிருந்த விதமும், அவனுக்கு மிகவும் பிடித்துக்கொண்டது. அவனது உடலின் உணர்வுகள் விழித்தெழுந்த போதும், எந்தச் சலனமும் இல்லாமல், தன்னைக்கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அவளது ‘திண்மை' அவனுக்குப் பிடித்துப் போய் இருந்தது. அவள் கூறிய  ‘ஆயுள் முழுவதும், இப்படியே நிற்க ஆசையாய் இருக்கு' என்ற வார்த்தைகள், நினைவுக்கு வரும்போதெல்லாம்,அவனுக்குள் ‘ஒரு சூறாவளியையே’ உருவாக்கி விடுகின்றமை அவனுக்கு மட்டும் தானே தெரியும்!

 

இரண்டாவது, நிலா என்ற நூல்…..

 

‘நிலா’வின் அழகு தன்னைக் கவர்ந்தது என்பதை விடவும், அவளது ‘அவனைத் தூக்கியெறிந்த' திமிர்த்தனமான பேச்சுத் தான், அவனைக்கவர்ந்தது என்று கூறலாம். ஆனாலும், அவளது ஒவ்வொரு பார்வையிலும், ஒரு விதமான ‘தாகம்' எப்போதும் தெரிந்த படியே இருக்கும். கீர்த்திகாவின் அக்காவின் திருமண வீட்டில், அந்த அறையில் நடந்த சம்பவம், அவனை ‘உணர்சிகளின் உச்சத்திற்கு' ஒரு கணம் கொண்டு சென்றது என்பதை அவன் மறுக்கவில்லை. அவனது ‘உடலின் ஒவ்வொரு அணுவும்' அந்தக் கணப்பொழுதில், அதிர்ந்தன என்பதும் உண்மை தான். ஆனாலும், அந்த ‘ அண்மையில்' எவ்வளவு விரைவாக அவள் கரைந்து போனாள், என்பதே அவனுக்குள் ஒரு ‘கேள்விக்குறியாகத்' தொங்கிப் போனது. பிள்ளையார் கோவிலில், நடந்த முதலாவது சந்திப்பிலேயே, மதுரன் அவளைப் புரிந்து கொண்டான். அதனாலேயே, அவளைப் படிப்பில் ‘கவனம்' எடுக்கும்படி,ஆலோசனையும் கூறியிருந்தான்.

 

மூன்றாவது ‘தாரிணி' என்ற நூல்…..

 

தாரிணியும் ஒரு நூலா,என்று வாசகர்கள் பெருமூச்சு விடுவது புரிகின்றது. நிலாவுக்குக் கிடைத்த, அவ்வளவு சந்தர்ப்பங்களும் தாரணிக்கும் கிடைத்தன. ‘நிலாவுக்கும்' அவனுக்கும் இடையே, நடந்த ‘பார்வைப் பரிமாற்றங்கள்' போலவே மதுரனுக்கும், தாரிணிக்கும் இடையிலான, பரிமாற்றங்களும் இருந்தன. ஆனால், தாரிணியின் கண்களில், ‘ஏக்கம்' தெரியவில்லை. எந்த விதமான ‘அவசரங்களும்' தெரியவில்லை.அவளுக்குக் கடிதம் கொடுத்திருந்தாலும், ‘பதில்' வராது என்றும் அவனுக்குத் தெரிந்திருந்தது. அவளது, கிட்ட நெருங்க விடாத குணம்' தான், மதுரனுக்கு அவளைப் பிடித்துப் போகவும் காரணமானது. விலகிச் செல்லும் ஒன்றைப் பிடிப்பதில், ஒரு ‘திரில்' இருப்பது போலவே, அவளின் மீதான விருப்பும், அதிகரித்துக் கொண்டே சென்றது.

 

நாலாவது ‘குடும்பம்' என்ற நூல்….

 

அப்பா கூறுவதில் ‘நியாயங்கள்' புதைந்து கிடப்பது மதுரனுக்கு நன்றாகவே புரிந்தது. நாட்டின் நிலவரமும், நாளுக்கு நாள் மோசமடைந்து செல்வது அவனுக்கும் தெரிந்தது. அத்துடன், மற்ற அப்பாக்களைப் போல இல்லாது, அவளைக் கட்டினால், எனக்குக் கொள்ளி வைக்கைக்கூடாது என்றோ, என்ர முகத்திலை முழிக்கக் கூடாது என்றோ அவர் ‘கட்டுப்பாடுகள்' போடாதது, அப்பாவின் பரந்த மனத்தை அவனுக்குத் திறந்து காட்டியது. அப்பாவின் மனம் கோண நடக்கக் கூடாது என்று தனக்குள் ‘சபதம்; என்று எடுத்துக்கொண்டான். எப்போதும் இந்த ‘நூலில்' தொங்கிக்கொண்டிருக்க முடியாது என்பதும், மதுரனுக்குப் புரிந்தே இருந்தது.

 

ஐந்தாவது ‘லண்டன்' விசா’ என்ற நூல்….

 

இப்போது உள்ள நிலையில், நாட்டு நிலைமை போகின்ற போக்கில், இந்த நூலைப் பிடித்துக் கொள்ளலாம் என்னும் ஆசை அவனுக்குள், நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே சென்றது. இந்த நூலைப் பிடித்துக்கொண்டால், மற்றைய நூல்களை என்ன செய்வது ‘என்பதைப் பற்றிச் சிந்திக்கக்' கொஞ்ச காலம் ‘அவகாசமும் கிடைப்பதுடன், ‘குடும்பம்' என்ற நூலில் தொங்கிக் கொண்டிருக்க வேண்டிய ‘தேவையும்' குறைந்து போகும்!

 

கடைசியாகப் ‘போராட்டத்தில் இணைவது ' என்னும் நூல்….

 

இதைப்பற்றி மதுரனுக்குத் தெளிவான ஒரு ‘கருத்து' இன்னும் ஏற்படவில்லை. ஆயினும், தனது மண்ணின் மீதான பற்றும், அதன் மீது தினம் தினம், நிகழ்த்தப்படும் கொடூரங்களும், இந்த நூலைப் பற்றிப் பிடித்தாலென்ன என்னும் எண்ணத்தை ஏற்படுத்தாமலில்லை. இளம் வயதில் எல்லோரும் ‘புரட்சியாளர்களே’ என்பதும் அவனுக்குப் புரிந்திருந்தது.

அதே வேளையில், இது உண்மையில், பற்றிப்பிடிக்கக் கூடிய ‘நூல்' தானா என்பதில், அவனுக்குச் சந்தேகமிருந்தது.  

 

எல்லாவற்றையும் தனித்தனியாக, அலசிப்பார்த்த பின்னர் ‘மதுரனுக்கு' ஒரு தெளிவு ஏற்பட்டது போல இருந்தது.

 

கண்ணனின் வீட்டுக்குச் சென்றவன், அங்கிருந்த அவனையும் அழைத்துக்கொண்டு சுரேசின் வீட்டுக்குச் சென்றான்.

 

அவனது திட்டம், தனது குழப்ப நிலைக்கு ‘அன்றே' ஒரு முடிவு கட்ட வேண்டும் என்பது தான்.இதற்குக் சரியான இடம், மொக்கன் கடை என அந்த நாளில் செல்லமாக அழைக்கப் பட்ட, ‘ஹமீதியா கபே' தான் என முடிவு செய்து கொண்டான்!

 

என்ன மச்சான் ‘ட்றீட்' போல கிடக்கு என்று எல்லோரும் அவனைச் சீண்டினார்கள்.

 

இல்லையடாப்பா, சும்மா மனுசர் ‘கொஞ்சநேரம் சந்தோசமாய் இருக்கலாம்' எண்டு தான்…..

 

ஐந்து லாம்படிச் சந்தியை நோக்கி, சைக்கிள்கள் பறந்து கொண்டிருந்தன….!

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் ஒரு காதல் (13)

 

ஐந்து லாம்படிச் சந்தியை நோக்கி, சைக்கிள்களில் பறந்து  வந்த அனைவரும் சந்தியிலுள்ள இசுலாமிய  உணவகத்தில் ஒன்று கூடினர்.

அநேகமாக அனைவரும் வந்திருந்தனர்.

வந்தவர்கள் தமக்குத்தேவையான உணவுகளையும் குடிபானங்களையும்  ஓடர் செய்வதிலேயே  மும்மரமாக இருந்தது  மயூரனுக்கு எரிச்சலைத்தந்தது.  முக்கிய  தலையிடியைப்பற்றி  பேசக்கூப்பிட்டால்  இவர்கள் வேறு வேலை  பார்க்கின்றார்களே  என.  இருந்தாலும்  தெரிந்த விடயம் தானே ஓசில  என்றால் இவர்கள் பொலிடோலும் குடிப்பார்கள் என நினைத்தபடி அமைதி  காத்தான். ஆனால் தனக்கு எதுவும் ஓடர் செய்யவில்லை. நேரம்  ஓடிக்கொண்டிருந்தது.  மயூரனின் மனமும்  அந்த 6 முடிச்சுக்களையே  அசை போட்டபடியிருந்தது.

 

சுரேசும் கண்ணனும்  அருகிலிருந்த  படி அவர்களுக்குள் ஏதோ  பேசிக்கொள்வதையும் தன்னைப்பற்றித்தான் இருக்கணும் என  ஊகித்து என்னடாப்பா என்று ஆரம்பித்து வைத்தான். ஆனால் மற்றைய  நண்பர்கள் சாப்பாட்டிலும் அடுத்ததாக Ice கிறீமிலும் ஆர்வமாக இருப்பதைப்பார்த்த மயூரனுக்கு தலை வெடித்துவிடும் போலிருந்தது. ஆனால் கூட்டத்துக்குள் இருக்கும் இருவர் முடிவை  ஏற்கனவே எடுத்துவிட்டிருந்தது மயூரனுக்கு தெரிய  வாய்ப்பில்லை.

சுரேசால் ஆரம்பிக்க முடியாது எனத்தெரிந்த கண்ணன் தானே ஆரம்பித்து வைத்தான்.  என்னத்துக்கு மச்சான் வரச்சொன்னனீ  அவசரமாக என.

 

இது தான் சந்தர்ப்பம் என  நினைத்த  மயூரன் தனது ஆறு முடிச்சுக்களையும் ஒன்றுவிடாமல் ஒரே மூச்சில் போட்டுடைத்தான்.  நண்பர்கள் எவரும் பதில் சொல்லும் நிலையிலில்லை. மயூரனைப்பற்றிய  தங்களது விம்பம் மாறுபட்டிருப்பதை அனைவரும் உணர்ந்தனர். ஆனாலும் வயதுக்கோளாறு அது இது என அவரவருக்குள் மனதுக்குள் ஆறுதல் சொல்லிக்கொண்டனரே தவிர  எவரும் பேசவில்லை. அமைதி  நிலவியது. 

சுரேசுக்கு அருகிலிருந்த  கண்ணன்  தான் சுரேசை  அவசரப்படுத்தினான்

இது தான் தருணம். நீ செய்த பாவத்துக்கு பரிகாரம் தேடிவிடு  என உதைக்கலானான்.

சுரேசுக்கும் இது தான் தருணம்

நிலாவிடம் நல்ல  பெயர் வாங்கவும்  தன் மீதிருக்கும் தப்பபிப்பிராயத்தை நிலா நீக்கிக்கொள்ளவும்  இந்த சந்தர்ப்பத்தை தான் கனமாக்கணும் என நினைத்தவன் பேசத்தொடங்கினான்.நிலாவுக்கு நீ வாக்குக்கொடுத்திருக்கிறாய்.  அவரது தாயாருக்கும் மற்றும் உறவுகளுக்கும் ஏன் எமது நண்பர்கள்  அனைவருக்கும் தெரிந்த விடயம் இது. எனவே  நிலாவுக்கு நீ  உனக்கு நிலா என்பது தான் முடிவு என  முழங்கி  ஓய்ந்தான். கண்ணனும் ரகசியமாக அவனது கையைக்குலுக்கி அனுசரணை  வணங்கினான்.  ஆனால் மயூரனுக்கு  முடிவு சரியாகப்படவில்லை. மற்றவர்களும் தனக்கு அனுசரணையாக பேசுவதாக தெரியாதபடியால்

நான் மீண்டும் நாளை  கொழும்பு போகின்றேன்.

வந்து மீண்டும் பேசலாம் என  எழுந்தான்.

உடனே குறுக்கிட்ட சுரேசும் எல்லோரையும் ஏமாற்றும் வேலை எதையும் செய்யமாட்டாய் என எதிர்பார்க்கின்றோம். அப்படி ஏதாவது முடிவெடுத்தால்  இது துரோகமாகவே  எம்மால் பார்க்கப்படும் என  ஒரு எச்சரிக்கையுடன்  புறப்பட்டான்..

 

 

.......................................................................................................................................................................................................

 

மயூரன் கொழும்பு  சென்று வந்ததன் பின் அவனது செயல்களிலும்

பார்வையிலும் ஒரு தள்ளி  நிற்றல் நிலாவுக்குத்தெரிந்தது

பலரும் எச்சரிக்கை  செய்தது   போல்

முக்கியமாக தாரணி  சொன்னது   போல்

களட்டப்பட்டு விடுவோமோ என்ற ஒரு பொறி  தட்டிச்சென்றது  முதன் முதலாக  அவளுக்கு.

 

பலவாறும் சிந்தித்தும் தடுமாற்றமான  சிக்னல்களே மனதுக்குள் வந்து   போயின.

ஏதோ  நடக்கிறது

நடக்கப்போகிறது என்று மட்டும்  மனசு அடித்துக்கொண்டது

இவ்வளவு தூரம் வந்தபின்

இளசு மட்டத்தில் அநேகமாக அனைவருக்கும் தெரிந்தபின்

தான் இதிலிருந்து ஒதுங்கவோ  பின் வாங்கவோ முடியாது என்பதை உணர்ந்த அவள்

ஏதாவது செய்யணும் என  முடிவெடுத்தாள்

 

கீர்த்திகாவின்  அக்காவின்  திருமணவீட்டில் அந்த அறையில் ஒரு முத்தம் வைச்சிருந்தாலும்

மயூரன் தனக்கு மட்டும்தான் என்ற நிலையை எட்டியிருக்கமுடியும்.

அதையும்  அவன் தவிர்த்தது

ஒரு புறம் அவன் மீது நம்பிக்கை வைக்க வழி அமைத்தாலும்

மறு  பக்கம் கேள்விகளையும் எழுப்பியிருந்தது.

 

புரண்டு புரண்டு படுத்தவளுக்கு

வேறு வழியில்லை 

எல்லோருக்கும் தெரிய  வைக்கணும்  என்ற  முடிவுக்கு வந்தாள்.

 

அதற்கான  சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தவளுக்கு

மயூரனே வழி செய்தான்

தான் நாளை  கொழும்பு போகவிருப்பதாக  சொன்னான்

பொறி  தட்டியது நிலாவுக்கு

இதைப்பயன்படுத்தணும்

அவனும் நானும் சேர்ந்து நடக்கணும்

பலரும் பார்க்கணும்

அவனுக்கு நான்

எனக்கு அவன் என்று  நாளையுடன் முற்றுப்புள்ளி  வைக்கணும்..........

 

மயூரன் வீட்டிலிருந்து கொழும்புக்கு போவதற்கு புறப்படும் நேரம்

ரயில் புறப்படும் நேரம் என்பனவற்றை  மயூரனிடம் தெளிவாக கேட்டறிந்து கொண்டதால்

அவனுக்கு தெரியாமலேயே  திட்டத்தை  செயற்படுத்த திட்டமிட்டாள் நிலா.

ஒரு முடிவுடன் நித்திரையாகிப்போனாள்.........

 

காலையில் எழும்பியதிலிருந்து ஒரு உற்சாகம் தொற்றிக்கொண்டது

வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு தன் வாழ்வு புறப்பட  இருப்பதை  உணர்ந்தவள் பூரித்துப்போனாள்.

தாய் தன்னைக்கவனிப்பதை உணர்ந்தவளாக 

சிரமப்பட்டு தன்னை அடக்கி அன்றைய  கடமைகளை  முடித்தாள்.

 

நேரத்தை பார்த்தபடி தயாரானாள்

கொஞ்சம் கவரும்படியாகவும்

பெரிய  பெண்ணாகத்தெரியக்கூடியதாகவும் உடுப்பை  தெரிவு செய்தாள்

அது ஒரு மணப்பெண்ணையும் தேவதை  போன்ற  ஒரு  தோற்றத்தையும் அவளுக்கு கொடுத்தது

அவளுக்கே குதூகலமாக இருந்தது.

மல்லிகைப்பூக்கள் சிலவற்றை  புடுங்கி தனது கூந்தலுக்குள் விட்டுக்கொண்டாள்

அது வாசம் வீச  ஆரம்பித்தது

மனம் மயூரன் இன்றுடன் எனது

எனக்கு மட்டும் தான் என கொண்டாடத்தொடங்கியது.

வீட்டிலிருந்து ரயில் நிலையம் நோக்கி  தனியாகப்புறப்பட்டாள்...

 

அவள் சைக்கிளை  விட்டு  இறங்கி  

ரயில் நிலையத்துக்கள் வரும்போது ஏற்கனவே ரயில் வந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்தது தெரிந்தது.

பயணிகள் பலரும் ஏறி  இருந்தனர்.

மயூரன்  ஏறிவிட்டானா? என தேடத்தொடங்கியவளுக்கு அதிக வேலை வைக்காமல் 

மயூரனே அவளுக்கு முன்னால் உள்ள  பெட்டியிலிருந்து கை  காட்டினான்.

தானாகவே  இவளைக்கண்டதும் இறங்கலானான்.

பக்கத்தில் போன நிலாவை  நோக்கி  குதித்து அருகில் வந்தான் மயூரன்.

 

பிளாட் பாரத்தில் தானும் நிலாவும்  தனியே நிற்பதை மயூரன் உணரவில்லை என்பதை உணர்ந்த நிலா 

மெல்ல பிளாட்பாரத்தில் நடக்க ஆரம்பித்தாள்

அவளைத்தொடர்ந்து மயூரனும் நடக்க ஆரம்பித்தான்.....

நடக்கத்தொடங்கியபடி மயூரனை  கடைக்கண்களால் கவனித்தாள்

அவன் முற்றாக மாறியிருப்பது தெரிந்தது

ஒரு மாப்பிள்ளைக்கான களை  அவனது முகத்தில் ஒட்டியிருப்பதையும்

அவனது நடையில்  ரஐனி வந்து தலையைக்கோதி  விடுவதையும்

முகத்தில் தேவர் மகன் கமல் வந்து மீசையை  முறுக்க துடிப்பதையும்  கண்டு அவளது முகம் நாணிப்போனது

பல  கண்கள் தங்களை ஊடறுப்பதையும்  தாங்கள் யோடியாக  பவனி  வருவதையும்

இனி எனக்குத்தான் நீ  என்ற வெற்றியோடு நிலா இன்னும் கொஞ்சம் அருகில்  வந்தபடி நடக்கலானாள்.........

feqg.jpg

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

யாழில் ஒரு காதல் -(14)

 

நிலா மதுரனுடன் மனம் விட்டு ரெயில்வே நிலையத்தில் பேசியதும் கீர்த்திகாவின் அக்காவின் கல்யாணத்தில் மதுரன் நடந்துகொண்ட பக்குவமும் இவன் தான் நான் கற்பனையில் வளர்த்தவன், இவனே இனி என்றும் என்னவன் என்ற நினைப்பு  நிலாவில் படர, இனி மற்றவர் சொல் கேட்டு தன்னிலை தழும்ப மனதில் இடம் கொடுக்கக்கூடாது என முடிவிற்கு வந்தவளாய் ஒரு பெரும்பாரம் மனதில் இருந்து இறங்கிய சந்தோஷத்தில் கட்டிலில் சரிந்தாள்.  பரீட்சை மட்டும் அளவுடன் காதல் அளவில்லா படிப்பு என்ற நினைப்பில் தூங்கியே போனாள்.

 

அடுத்தநாள் பாடசாலை பஸ்ஸில்  ஏறும்போது பஸ் வழக்கத்தை விட சற்று அமைதியாகவும் சில மாணவிகள் தமக்குள் ஏதோ குசுகுசுத்து சிரிப்பதுபோலவும் உணர்ந்தவள் சுன்னாகத்தில் இருந்தது வரும் வகுப்பு தோழி வாசுகியை கண்ணால் தேடினாள், அட இன்றைக்கு என்று வாசுகியை வேறு காணவில்லை என்று அலுத்துக்கொண்டவளாக இருக்கையில் அமர்ந்தாள்.

 

“ஒரு இடியில ஆள் நோக் அவிட்டாம்”

 

“ஓடத்தெரியாமல் மோட்டார் சைக்கிளில் வெட்டு காட்டி ஆள் பிரண்டுபோனாராம் “

 

“இல்லையடி அண்ணை சொன்னவர் ,கொஞ்ச நாளா அவற்றை சேட்டைகளை பார்த்துவிட்டு இருட்டடி போடவேணும் என்று முடிவு எடுத்தவர்களாம். கிராமத்திற்கு என்று ஒரு கட்டுப்பாடு இருக்கு ,சும்மா பல்கலைகழகம் என்றா போல பெட்டைகளை சுத்துறதும் மோட்டர் சயிக்கிலில விறுசு காட்டியும் திரிந்தால் எங்கடை ஆட்கள் ஒரு நாளைக்கு குடுப்பாங்கள் என்று எனக்கு தெரியும் “

 

“இனி அண்ணை வாலை சுருட்டிக்கொண்டுதான் திரியவேணும் “”

 

“உவருக்கு பின்னால அலையிறவைக்குதான் அடுத்த இருட்டடியாம் “

 

தன்னைவிட வயது குறைந்த மாணவிகள் பேசுவதை காதில் வாங்கிக்கொள்ளாதது போல நிலா நடித்தாலும் உடலெல்லாம் சற்று பதறதொடங்கிவிட்டது.

மதுரனுக்கு நேற்றிரவு என்னவோ நடந்திருக்கு .இப்ப திரும்பி வீட்டிற்கு போகவும் முடியாது . அப்படி போய் அம்மாவிற்கு எதுவும் சாக்கு போக்கு சொன்னாலும் மதுரனுக்கு என்ன நடந்தது என்று எப்படி அறிகின்றது .

 

இந்த நினைவிலேயே பாடசாலையை அடைந்தவளுக்கு அன்று ஆசிரியர்கள் படிப்பித்தது எதுவும் மனதில் ஏறவில்லை .மதுரனுக்கு என்னவாச்சோ ஏதுவச்சோ என்றே மனம் படபடவென அடித்துக்கொண்டேஇருந்தது .

 

கடவுளே அப்படி ஒன்றும் ஆகியிருக்ககூடாது என்று இறைவனை மனதில் வேண்டிக்கொண்டாள். மதுரனுக்கு அப்படி யாரும் அடித்திருந்தால் அது யாராக இருக்கும் .கோயிலடியில் நின்று வொலிபோல் அடிக்கும் கூட்டம்  தான் ஊரை திருத்துன்றோம் என்ற போர்வையில் சண்டித்தனம் செய்பவர்கள்.அவங்களா இருந்தால் மருதானாமடத்திற்கு பெரிய மாமாவை கொண்டு அவர்களை ஒரு கை பார்க்காமல் விடுவதில்லை என்று மனதில் பொருமிக்கொண்டாள்.

 

பாடசாலை முடிந்து நேரே வீட்டிற்கு வந்தவள் அம்மாவுடன் தாரிணி கதைத்துக்கொண்டு நிற்பதை கண்டாள்.

 

“விஷயம் தெரியுமோ நிலா ,நேற்றிரவு கோயிலடியில் பெடியங்கள் யாரோ மதுரனை மோட்டார் சயிக்கிளில் வரும்போது கம்பி கட்டி இழுத்து விழுத்திவிட்டு பொல்லால் மண்டையில் அடித்துவிட்டார்களாம், மண்டையுடைந்து நினைவிழந்த மதுரனை அப்படியே விட்டுவிட்டு ஓடிவிட்டார்களாம் .அயலவர் வந்து மயக்கத்தில் இருந்த மதுரனை இணுவில் ஆசுப்பத்திரியில் சேர்த்திருக்கின்றார்களாம்” என்று தாரணி சொல்லி முடிக்க முதல் வந்த அழுகையை தாங்கமுடியாமல் தனது அறைக்குள் ஓடிய நிலா கட்டிலில் விழுந்து அழாத்தொடங்கிவிட்டாள். அவளை தொடர்ந்து உள்ளே வந்த தாரிணி,

 

“அம்மாவிற்கு எல்லாம் தெரியும் யோசிக்காதை ,இப்ப தான் நீ நிதானமாக இருக்கவேண்டும் “

 

“எனக்கு இப்பயே மதுரனை பார்க்க வேணுமடி “

 

“சும்மா விசரி மாதிரி கதைக்காதே ,மதுரன் வீட்டில் விஷயம் தெரியவந்தால் டியுஷன் சொல்லி தர வாறததையும் நிற்பாட்டி போடுவினம்”

 

“நாளைக்கு எப்படியும் பார்க்க போறம் ,என்ன நடந்தாலும் எனக்கு பரவாயில்லை ,அடிச்சவங்கள் யாரென்று கேட்டு முதல் அவங்களுக்கு அலுவல் பார்க்கவேண்டும் “

“அப்ப நான் நாளைக்கு வாறன் ‘ என்றபடி தாரிணி நிலாவிடம் இருந்து விடைபெறுகின்றாள்.

 

அடுத்தநாள் இருவரும் இணுவில் வைத்தியசாலையில் நிலா கையில் ஒரு பிஸ்கெட் பெட்டியுடன் மதுரனை தேடியபடி ஒவ்வொரு வார்டாக வலம் வரும்போது  தலையிலும் கையிலும் கட்டுடன்  தலையணையில் சாய்ந்தபடி  ஒரு நேர்ஸ்சுடன் சிரித்து பேசியபடி இருக்கும் மதுரனை கண்டு நிலா பொய்க்கோபத்துடன்,

 

“அண்ணைக்கு நல்ல அடி சாக கிடக்கின்றார் என்று பார்க்கவந்தால் இஞ்சை அண்ணை நேர்ஸ்மாருடன் கும்மாளம் அடிக்கின்றார்.  போற இடமெல்லாம் ஒண்டு பிடித்துவிடுவீர்கள் போலிருக்கு “

 

“ஒரே நேர்ஸ்சா  ஊசியை போடவராமல் மாறி மாறி வாங்கோ என்று சொல்ல சிரிச்சுக்கொண்டு போறா “

 

“”அதுசரி என்ன நடந்தது “ தாரிணி

 

“ஏதோ புது ஊருக்கு வந்து அண்ணை ஹீரோ வேஷம் போடுகின்றார் என்று இளரத்தங்கள் கொஞ்சம் அவசர பட்டுவிட்டினம் ,மோட்டார் சயிக்கிலுக்கு நல்ல வேளை ஒன்றும் நடக்கவில்லை ,எனக்கும் ஒருவன் பின்னால் வந்து பிடரியில் அடித்துவிட்டான் ,மண்டை உடைந்ததும் பயந்து போட்டாங்கள் ஓடிவிட்டார்கள் “

 

“எனக்கு அடித்தது யாரெண்டு தெரியும் ,துரை மாமாவிடம் சொல்லி அவங்களுக்கு பாடம் படிப்பிக்காமல் விடமாட்டன் “

 

“தாரிணி  நிலாவிடம் சொல்லுங்கோ , இணுவிலார் சண்டியர் என்று எனக்கு தெரியும், இது எனது பிரச்சனை அவர்களை நான் பார்த்துக்கொள்கின்றேன். இப்ப நீங்கள் இருவரும் என்ரை பிரச்சனையை விட்டுவிட்டு பரீட்சைக்கு படியுங்கோ ,நான் அடுத்த கிழைமை வந்து டியுஷன் தொடருகின்றேன் “

 

“இனி நான் உங்களை பார்க்க வரமாட்டன், ஆசுப்பத்திரி  முழுக்க ஊர்சனம் நிக்குது, நீங்கள் எப்ப உங்கட வீடு திரும்பி எமது விட்டிற்கு டியுசனுக்கு வருவீங்கள் என்று பார்த்துக்கொண்டு இருப்பம் “

 

“வந்த நேரம் முதல் ஏதும் அன்பாய் கதைக்காமல் சண்டித்தன கதையிலேயே நிற்கிறீர் நிலா ,உந்த பிளாஸ்கில இருக்கின்ற கோப்பியை ஒருக்கா விட்டு தாரும் “

“ஐயோ அப்பா சொறி ,எனக்கிருந்த கோவத்தில உங்களை எப்படி என்று கூட விசாரிக்கவில்லை “

 

என்றபடி நிலா சுடுதண்ணி போத்தலை திறந்து அதன் மூடிக்குள் கோப்பியை விட்டு கட்டுப்போட்ட அவனது கையை பிடித்தவாறு கோப்பியை தானே மதுரன்  பருக கொடுத்தபடி,

 

“இப்ப சந்தோசம் தானே “

 

“இதை விட வேறு ஏதும் தந்தால் இன்னமும் சந்தோசமாக இருக்கும்” என்று கண்ணை சிமிட்டுகின்றான் மதுரன் .

 

“அடிச்சவங்களுக்கு அடிக்க வழியில்லை, என்னோட வழியிறார் பார் “

 

“அடிச்சவங்களுக்கு நான் அலுவல் பார்க்கின்றேன். என்ரை கையில அதுக்கு மருந்து இருக்கு “

 

“நான் சும்மா பகிடிக்கு சொன்னான்  ,இந்த பிரச்சனையை இப்படியே விட்டுவிடுவம் “

 

“அடுத்த நேர்ஸ் மருந்தோடைவர போகின்றார் நான் அவாவுடன் மினக்கெட வேண்டும் , நீங்கள் போட்டு வாங்கோ”

என்று நக்கலாக சொன்ன மதுரனிடம் பிரிய மனமில்லாமல் விடைபெறுகின்றாள் நிலா .

 

இரண்டு வாரங்கள் ஓடிவிட்டது . டியுசன் சொல்லித்தர இன்னமும் மதுரன் நிலா வீட்டிற்கு வரவில்லை ,ஆனால் வைத்தியசாலையில் இருந்து மூன்று நாட்களுக்கு முதல் மதுரன் வீடு திரும்பிய செய்தி நிலா அறிந்திருந்தாள்.

 

நாளை சனிக்கிழமை வழமையாக மதுரன் டியுசன் சொல்லி தரும் நாள் அதுவரை பொறுப்பம் என்று மனதிற்குள் நினைத்தவள்.

கடவுளே மதுரன் நினைப்பில் உன்னை கூட ஒரு மாதமாக மறந்துவிட்டன் என்றவள், ஏதோ தனக்குள் நினைத்தவளாய் தனக்கு மிகவும் பிடித்த வெளிர்பச்சை அரை பாவாடை தாவணியுடன் பொன்மஞ்சள் பிளவுசும்  அணிந்து எவர்சில்வர் அர்சனை தட்டை தூக்கி வீட்டில் மலர்ந்த செவ்வரத்தம் பூ ,தேங்காய் ,வாழைப்பழம் எல்லாம் வைத்து நாளை காண போகும் மதுரனுக்கு ஒரு பூஜை செய்ய கோவில் நோக்கி புறப்படுகின்றாள்.

 

வழக்கமாக தான் செல்லும் முருகன் கோயிலுக்கு செல்லாமல் மதுரனை அடித்தவர்கள் என்று நம்பும் பெடியங்கள் வொலிபோல் விளையாடும் மைதானத்தை ஒட்டிய பிள்ளையார் கோயிலுக்கு இன்று செல்ல மனதில்  முடிவெடுக்கின்றாள்.

 

பிள்ளையார் கோயிலை நோக்கி நடந்தவள் சற்று உறுத்தல் வர எதற்கும் தாரணியையும் கூட்டி செல்வம் என்று நினைத்தவள் தாரணியை அழைக்க அவள் வீட்டிற்கு செல்கின்றாள்.

 

“தாரிணி தாரிணி “

 

“என்னடி இப்படி அமர்களமாய் வெளிக்கிட்டு வந்திருக்கின்றாய் ,தளபதி படத்தில் சோபனா வந்த மாதிரி இருக்கு உன்னை பார்க்க “

“நாளைக்கு ரஜனி வர போறார் அதுதான் இந்த வேசம், போடி நீயும் உன்ரை சினிமா ஒப்பீடும் .உடன வெளிக்கிட்டு வா, நாங்கள் இப்ப பிள்ளையார் கோயில் போகின்றோம்”

“என்னடி யாரோடையும் கொழுவ போறியோ”

 

“சும்மா வாடி , அடுத்த இருட்டடி எனக்கு என்றவங்களாம் , பயந்து ஒழிக்காமல் நெஞ்சை நிமிர்த்தி அவங்கள் முன்னால் போகப்போறன் ,ஏலுமென்றால் செய்யுங்கோ என்று சொல்லத்தான் இந்த விளையாட்டு”

 

வெள்ளிக்கிழமை  மாலை ஆறு முப்பது . இணுவில் பிள்ளையார் கோவில் வீதி . இரண்டு அழகிய இளம் பெண்கள் அரைத்தாவணியுடன் அர்ச்னை தட்டுடன் வலம் வருகின்றார்கள்;

 

“மதுரன் உந்த அடியெல்லாம் எங்களுக்கு தெரியாது ,என்ன வொலிபோலை வெட்டி அடிக்கின்றீர் “

 

மதுரன் என்ற பெயர் கேட்டு தாரிணி திரும்பி பார்க்கின்றாள் .அங்கு வொலிபோல் மைதானத்தில் நடுவில் நின்று விளையாடும் மதுரனை கண்டு திகைத்தபடி ,

 

“நிலா உம்முடை ஆள் அரை காற்சட்டை பெனியனுடன் தலையில் பாண்ட் போட்ட படி கோயிலடி பெடியங்களோட வொலிபோல் விளையாடுகின்றார் “

தாரணி சொன்னதை நம்ப முடியாமல்  திரும்பிய நிலா ,

 

மைதானத்தின் நடுவில்  நீல நிற அரைகாற்சட்டை , வெள்ளை பெனியன் தலையில் வளர்ந்து விட்ட மயிரை ஒதுக்க சிவப்பு நிற பாண்ட். மதுரன் நிலத்தில் இருந்து இரண்டு அடி  எழும்பி பந்தை ஒற்றை கையால் பெருவீச்சுடன் அடிக்கின்றான் , அது அடுத்த பக்கம் போய் தடுத்தவர் கையில் பட்டு லைனை விட்டு தெறிக்கின்றது . ஒரே கை தட்டு,

 

மதுரனை அடித்தவர்கள் என்று தான் நினைத்த அவ்வளவு பெடியங்களும் கை தட்டி மதுரனை கட்டி அணைக்கின்றார்கள்.

சடுதியாக வீதியில் போகும் நிலாவை பார்த்த மதுரன்

 

“அடுத்த சேர்விசை உடனே போடுங்கோ தம்பி, வீதியில ரெண்டு பேர் போகினம் அவர்களிடம் தான்  அடுத்த டாஷ் போக போகுது “

 

இவனை எனக்கு காட்டிய இணுவில் பிள்ளையாருக்கு இன்று ஆயிரம் ரூபாயிற்கு அர்ச்சனை வைத்தாலும் தகும் என்று நினைத்தபடியே நிலா மீண்டும் மதுரனை பார்க்கத்  திரும்ப ,

 

மதுரன் தலை மயிர்கள் சிலிர்த்துப்பறக்க உடம்பை வலித்து ஒரு கையை உயர்த்திக்கொண்டு அடுத்த டாசிற்கு நெற்றிற்கு மேலே எழும்புகின்றான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டிஸ் கை கொமிசனுக்கு போக இன்னும் இரண்டு கிழமைதான் இருக்கு இப்ப போய் அடிபட்டு வந்து இருக்கின்றாய் உதுக்குத்தான் சொன்னனான் பெடியளொட கண்டபடி திரியாதே எண்டு. என மதுரனின் அப்பா கோபமாக கத்தினார் ..அதுஒன்றுமில்லை சும்மா சின்ன அடிதான் ஒருகிழமையில் எல்லாம் மாறிவிடும் என அம்மா சமாதானம் செய்தார்...

நானா மூன்று கொத்து போடுங்கோ என்று சொல்லியபடியே கண்ணன் உள்ளே சென்றான். அவனை தொடர்ந்து சுரேஸும் மதுரனும் சென்றனர்.வழமையாக அவர்கள் அமரும் இடத்தில் போய் அமர்ந்தார்கள்.அந்த இடத்தை அவர்கள் தெரிவுசெய்தமைக்கு முக்கிய காரணம் திருட்டு தம் அடிப்பதற்காக யாராவது அறிந்தவர்கள் உள் வந்தால் இலகுவாக பின் பக்கம் செல்லக்கூடியாதாக இருக்கும்.கண்ணன் மீண்டும் எழுந்து வந்து நானாவிடம் மூன்று பிரிஸ்டல் சிகரட்டை வாங்கி கடை வாசலில் தொங்கவிடப்பட்டிருந்த நெருப்புதனல் கயிற்றில் தனது வாயில் வைத்திருந்த சிகரட்டால் தீயை மூட்டினான்.புகையை வெளியே விட்டபடி உள் வந்து அமர்ந்தான்.மதுரனுக்கும் சுரேஸ்க்கும் மிகுதி இரண்டு சிகரட்டையும் கொடுத்தான்.மதுரன் வேண்டாம் என்றான்..

"அடே! இவன் என்னடா கலியாணம் கட்ட முதலே மனிசிக்கு பயந்து சாகிறான் "

"பயமென்றில்லை. .அவள் சொன்னவள் சிகரட் மனம் தனக்கு வ்யிற்றை பிரட்டுதென்று அது தான் மச்சான்.."

"சரி சரி ....வயிற்றில் ஒன்றையும் கொடுக்காமல் விட்டால் சரி"

" சும்மா போங்கடா உங்களுக்கு எந்த நேரமும் அந்த நினைப்புத்தான்"

"அதுக்குத்தானேயடா நாங்கள் பெண்களுக்கு பின்னால் திரிகின்றோம் சும்மா பெண்களை வைச்சு பூஜை பண்ணவா?" நானா கொத்துரொட்டியை கொண்டுவந்து மேசை மீது வைத்தார் .நானா குழம்பு கொஞ்சம் வேணும் .மஜீத்! தம்பியவையளுக்கு மட்டர்ன் ஆணத்தை கொண்டு வந்து கொடு.

"அல்லாஹு அக்பர்" பள்ளிவாசலில் குரல் ஒலிக்க "டேய் மஜீத் கடையை பார்த்துக்கோ நான் சலா செய்து போட்டு வாரன் ....நான் வந்த பிறகு நீ போ"

"சரி நானா"

கொத்து ரொட்டியை சுவைத்தபடியே இரண்டு நாளில் செல்ல வேண்டிய தங்களது பயணங்களை பற்றி கதைத்து கொண்டிருந்தார்கள்.

"விசா கிடைச்சா லண்டனுக்கு உடனே போய்விடுவியா"

"இல்லையடா யாழ்ப்பாணத்திற்கு வந்து நிலாவுடன் கொஞ்ச காலமிருந்துவிட்டுத்தான் செல்வேன் இன்னும் இரண்டுவருசம்தான் படிப்பு இருக்கு அதை முடிச்சுப்போட்டு போகலாம் என்றால் அப்பர் அவசரப்படுத்துகிறார்"

"உண்மையாக பட்டம் எடுக்க வேண்டும் என்ற ஆசையா அல்லது நிலாவை விட்டிடு போகமுடியாமல் இருக்கா"

"இரண்டும்தான்டா"

அப்பரின்ட கவலையிலும் நியாயம் இருக்குதானே போனகிழமைதானே இரண்டு பெடியளை சுட்டு போட்டு பயங்கரவாதியை சுட்டு போட்டம் என்று பத்திரிகையிலும் வானோலியிலும் லங்கா புவத்தின் செய்திகள் என்று சொன்னவங்கள். சுரேஸும் கொழும்புக்கு போறான் ,நானும் இனி அடிக்கடி யாழ்ப்பாணம் வரமாட்டன் போன முறை வந்திட்டு போனபொழுது சிங்கள பெடியள் நக்கல் அடிச்சவங்கள் நான் ஒரு கொட்டி என்று சொல்லி ஆனபடியால் இங்க வாரதை குறைக்க வேணும் படிக்க கணக்க கிடக்கு....உனக்கு விசா கிடைச்சா உடனே போடா என அறிவுரை சொன்னான் கண்ணன்.மூவரும் கையை கழுவினார்கள் மீண்டும் ஒரு சிகரட்டை பத்தவைத்தான் கண்ணன்.சுரேசும் அவனிடம் இருந்த மற்ற சிகரட்டை வாங்கி வாயில் வைத்தான் .கண்ணன் தனது சிகரட்டை சுரேஸின் சிகரட்டின் நுனியில் வைக்க சுரேஸ் உள்ளிழுத்து அதை மூட்டிகொண்டான்.மதுரன் டேய் இரண்டு இழு இழுத்திட்டு தாடா என சுரேஸ் தனது சிகரட்டை நீட்டினான்.வேண்டாம் என்று தவிர்த்தான்

சிகரட்டை வெளியெ எறிந்து விட்டு மூவரும் வீட்டுக்கு புறப்பட்டார்கள் .போகும் வழியில் சுரேஸ் வேண்டுமென்றே நிலாவின் கதையை தொடக்கினான்.

வழமையாக பெண்களை காய் என்று சொல்லும் சுரேஸ் நிலாவை மட்டும் பெயர் சொல்லி நண்பர்களுடன் கதைப்பான்....

" மதுரன் ...நீ லண்டனுக்கு விசா எடுக்கப்போறது நிலாவுக்கு தெரியுமோ"

" ஒம் தெரியும்டா"

"நீ போறெண்டு சொல்ல நிலா ஒன்றும் சொல்லவில்லயா"

"கண் கலங்கினவளடா"

"பாவம்டா நிலா"

"டேய்....டேய் சுரேஸ் நீ ஏன் கவலை படுகின்றாய் ....மதுரனே பேசாமல் இருகின்றான்....."என கண்ணன் அவர்களின் உரையாடலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து "எந்த ஸ்டேசனில போய் ஏறுவோம்" என்றான்

போயா விடுமுறை வந்தபடியால் கொழும்புக்கு போற சனம் அதிகமாக இருக்கும் யாழ்ப்பாணத்தில் போய் ஏறினால் இடமே கிடைக்காது.கோண்டாவில் ஸ்டேசனில் போய் ஏறுவோம்" என்றான் சுரேஸ்

"சுன்னாகத்தில் போய் ஏறுவோம் ...போன முறை நான் கோண்டாவிலில் போய் ஏறினனான் கோனர் சீட் கிடைக்கவில்லை"

"எங்கன்ட பெடியளை கேட்போம் சுன்னாகத்தில கொண்டு போய்விடச்சொல்லி"

ஐந்து சைக்கிளில் நண்பர்களுடன் சுன்னாகம் புகையிரத நிலயத்திற்கு சென்றார்கள் .கொழும்புக்கு போறிங்களடா எங்களுக்கு ஒரு ரிட்டும் தராமல் போறீங்கள் என எனைய நண்பர்கள் ஒன்றாக் குரலெழுப்பினர் .சுன்னாக சந்தியில வடையும் பிளேன் டீ யும் அடிப்பம் என்று கண்ணன் சொல்ல எல்லோரும் அமைதியானார்கள்.

சுன்னாகசந்தியில் இருந்த தேனீர் கடையில் சைக்கிளை ஒன்றன் மேல் ஒன்றாக சாத்திவைத்து விட்டு பிளேன் டீயும் ,வடையும் ஒரு பெட்டி பிரிஸ்டல் சிகரட்டும் வாங்கி கொண்டார்கள். கடையின் வெளியே வந்து டீயை குடித்தபடியே வடையை ரசித்து உண்டார்கள் .கடையின் முன் தொங்கிய வாழைக்குழையிலிருந்து இரண்டு பழங்களை முறித்து எடுத்த கண்ணன் டேய் பழத்தையும் வடையையும் கண்டவுடன் எனக்கு வேற யோசனை வருகின்றது என சொல்லி சிரித்தான்.

வாங்கோடா ரெயினுக்கு நேரம் போயிற்றுது என சொல்லி சுரேஸ் எல்லோரையும் அந்த கடையிலிருந்து புறப்பட வைத்தான்.

கொழும்புக்கு இரண்டு டிக்கட்டும்,பொல்காவேலக்கு ஒரு டிக்கட்டும் பெற்று கொண்டார்கள்.மூன்று பேர் போறதற்கு பத்து பேர் வந்திருக்கிறீர்கள் தம்பியவையள் எல்லோரும் உள்ளே போறது என்றால் பிளட்வொர்ம் டிக்கட் எடுக்க வேணும் .அண்ணே பிளட்வோர்ம் எல்லாபக்கதிலயும் திறந்து கிடக்கு என்னத்துக்கு டிக்கட்? எல்லோரும் கேட்டனர்.சுரேஸ் இரண்டு பிளட்வொர்ம் டிக்கட்டை எடுத்தான்.ஐந்து பேர் உள் வாசலால் பிளட்வோர்முக்குள் சென்றனர்.மிகுதி ஐந்து பேரும் கள்ளவழியால் பிளட்வொர்முக்குள் சென்றனர்.

.புகையிரதம் தூர வருவதை கண்ட கண்ணனும் மற்றும் அவனது இரு நண்பர்களும் பிளட்வொர்மின் எதிர்பக்கத்தில் போய்நின்றார்கள். எல்லோரும் கேட்டனர்.சுரேஸ் இரண்டு பிளட்வொர்ம் டிக்கட்டை எடுத்தான்.ஐந்து பேர் உள் வாசலால் பிளட்வோர்முக்குள் சென்றனர்.மிகுதி ஐந்து பேரும் கள்ளவழியால் பிளட்வொர்முக்குள் சென்றனர்.புகையிரதம் தூர வருவதை கண்ட கண்ணனும் மற்றும் அவனது இரு நண்பர்களும் பிளட்வொர்மின் எதிர்பக்கத்தில் போய்நின்றார்கள்.அவர்கள் உள் சென்ற சிறிது நேரத்தின் பின்பு புகையிரதம் நிலையத்தை வந்தடைந்தது. புகையிரதம் ஆடியாடி புகையை கக்கியபடியே வந்து நின்றது.சனம் அடிபட்டு கொனர் சீட் பிடிப்பதற்காக ஏறிக்கொண்டிருந்தார்கள்.கண்ணனும் அவனது நண்பர்களும் எதிர்பக்கமாக நின்று பாய்ந்து ஏறி நாலு பேர் இருக்ககூடிய சீட்டை பிடித்துகொண்டார்கள்.அதே கொம்பார்ட்மன்டில் சுரேஸும்,மதுரனும் ஏறிகொண்டார்கள். ஐந்து சீட்டை பிடித்து கொண்டார்கள்.புகையிரதம் புறப்படுவதற்காக ஒலியை எழுப்பியது.இந்த இரண்டு சீட்டையும் கோண்டாவில் மட்டும் பிடித்துகொண்டு போனால் யாராவது சரக்குகள் ஏறினால் கொடுக்கலாம் என கண்ணன் சொன்னான்.ஒம்மடா நல்ல ஐடியா என சுரேஸ் ஒத்து ஊதினான்.

பிரிட்டிஸ் கை கொமிசனுக்கு போக இன்னும் இரண்டு கிழமைதான் இருக்கு இப்ப போய் அடிபட்டு வந்து இருக்கின்றாய் உதுக்குத்தான் சொன்னனான் பெடியளொட கண்டபடி திரியாதே எண்டு. என மதுரனின் அப்பா கோபமாக கத்தினார் ..அதுஒன்றுமில்லை சும்மா சின்ன அடிதான் ஒருகிழமையில் எல்லாம் மாறிவிடும் என அம்மா சமாதானம் செய்தார்...

நானா மூன்று கொத்து போடுங்கோ என்று சொல்லியபடியே கண்ணன் உள்ளே சென்றான். அவனை தொடர்ந்து சுரேஸும் மதுரனும் சென்றனர்.வழமையாக அவர்கள் அமரும் இடத்தில் போய் அமர்ந்தார்கள்.அந்த இடத்தை அவர்கள் தெரிவுசெய்தமைக்கு முக்கிய காரணம் திருட்டு தம் அடிப்பதற்காக யாராவது அறிந்தவர்கள் உள் வந்தால் இலகுவாக பின் பக்கம் செல்லக்கூடியாதாக இருக்கும்.கண்ணன் மீண்டும் எழுந்து வந்து நானாவிடம் மூன்று பிரிஸ்டல் சிகரட்டை வாங்கி கடை வாசலில் தொங்கவிடப்பட்டிருந்த நெருப்புதனல் கயிற்றில் தனது வாயில் வைத்திருந்த சிகரட்டால் தீயை மூட்டினான்.புகையை வெளியே விட்டபடி உள் வந்து அமர்ந்தான்.மதுரனுக்கும் சுரேஸ்க்கும் மிகுதி இரண்டு சிகரட்டையும் கொடுத்தான்.மதுரன் வேண்டாம் என்றான்..

"அடே! இவன் என்னடா கலியாணம் கட்ட முதலே மனிசிக்கு பயந்து சாகிறான் "

"பயமென்றில்லை. .அவள் சொன்னவள் சிகரட் மனம் தனக்கு வ்யிற்றை பிரட்டுதென்று அது தான் மச்சான்.."

"சரி சரி ....வயிற்றில் ஒன்றையும் கொடுக்காமல் விட்டால் சரி"

" சும்மா போங்கடா உங்களுக்கு எந்த நேரமும் அந்த நினைப்புத்தான்"

"அதுக்குத்தானேயடா நாங்கள் பெண்களுக்கு பின்னால் திரிகின்றோம் சும்மா பெண்களை வைச்சு பூஜை பண்ணவா?" நானா கொத்துரொட்டியை கொண்டுவந்து மேசை மீது வைத்தார் .நானா குழம்பு கொஞ்சம் வேணும் .மஜீத்! தம்பியவையளுக்கு மட்டர்ன் ஆணத்தை கொண்டு வந்து கொடு.

"அல்லாஹு அக்பர்" பள்ளிவாசலில் குரல் ஒலிக்க "டேய் மஜீத் கடையை பார்த்துக்கோ நான் சலா செய்து போட்டு வாரன் ....நான் வந்த பிறகு நீ போ"

"சரி நானா"

கொத்து ரொட்டியை சுவைத்தபடியே இரண்டு நாளில் செல்ல வேண்டிய தங்களது பயணங்களை பற்றி கதைத்து கொண்டிருந்தார்கள்.

"விசா கிடைச்சா லண்டனுக்கு உடனே போய்விடுவியா"

"இல்லையடா யாழ்ப்பாணத்திற்கு வந்து நிலாவுடன் கொஞ்ச காலமிருந்துவிட்டுத்தான் செல்வேன் இன்னும் இரண்டுவருசம்தான் படிப்பு இருக்கு அதை முடிச்சுப்போட்டு போகலாம் என்றால் அப்பர் அவசரப்படுத்துகிறார்"

"உண்மையாக பட்டம் எடுக்க வேண்டும் என்ற ஆசையா அல்லது நிலாவை விட்டிடு போகமுடியாமல் இருக்கா"

"இரண்டும்தான்டா"

அப்பரின்ட கவலையிலும் நியாயம் இருக்குதானே போனகிழமைதானே இரண்டு பெடியளை சுட்டு போட்டு பயங்கரவாதியை சுட்டு போட்டம் என்று பத்திரிகையிலும் வானோலியிலும் லங்கா புவத்தின் செய்திகள் என்று சொன்னவங்கள். சுரேஸும் கொழும்புக்கு போறான் ,நானும் இனி அடிக்கடி யாழ்ப்பாணம் வரமாட்டன் போன முறை வந்திட்டு போனபொழுது சிங்கள பெடியள் நக்கல் அடிச்சவங்கள் நான் ஒரு கொட்டி என்று சொல்லி ஆனபடியால் இங்க வாரதை குறைக்க வேணும் படிக்க கணக்க கிடக்கு....உனக்கு விசா கிடைச்சா உடனே போடா என அறிவுரை சொன்னான் கண்ணன்.மூவரும் கையை கழுவினார்கள் மீண்டும் ஒரு சிகரட்டை பத்தவைத்தான் கண்ணன்.சுரேசும் அவனிடம் இருந்த மற்ற சிகரட்டை வாங்கி வாயில் வைத்தான் .கண்ணன் தனது சிகரட்டை சுரேஸின் சிகரட்டின் நுனியில் வைக்க சுரேஸ் உள்ளிழுத்து அதை மூட்டிகொண்டான்.மதுரன் டேய் இரண்டு இழு இழுத்திட்டு தாடா என சுரேஸ் தனது சிகரட்டை நீட்டினான்.வேண்டாம் என்று தவிர்த்தான்

சிகரட்டை வெளியெ எறிந்து விட்டு மூவரும் வீட்டுக்கு புறப்பட்டார்கள் .போகும் வழியில் சுரேஸ் வேண்டுமென்றே நிலாவின் கதையை தொடக்கினான்.

வழமையாக பெண்களை காய் என்று சொல்லும் சுரேஸ் நிலாவை மட்டும் பெயர் சொல்லி நண்பர்களுடன் கதைப்பான்....

" மதுரன் ...நீ லண்டனுக்கு விசா எடுக்கப்போறது நிலாவுக்கு தெரியுமோ"

" ஒம் தெரியும்டா"

"நீ போறெண்டு சொல்ல நிலா ஒன்றும் சொல்லவில்லயா"

"கண் கலங்கினவளடா"

"பாவம்டா நிலா"

"டேய்....டேய் சுரேஸ் நீ ஏன் கவலை படுகின்றாய் ....மதுரனே பேசாமல் இருகின்றான்....."என கண்ணன் அவர்களின் உரையாடலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து "எந்த ஸ்டேசனில போய் ஏறுவோம்" என்றான்

போயா விடுமுறை வந்தபடியால் கொழும்புக்கு போற சனம் அதிகமாக இருக்கும் யாழ்ப்பாணத்தில் போய் ஏறினால் இடமே கிடைக்காது.கோண்டாவில் ஸ்டேசனில் போய் ஏறுவோம்" என்றான் சுரேஸ்

"சுன்னாகத்தில் போய் ஏறுவோம் ...போன முறை நான் கோண்டாவிலில் போய் ஏறினனான் கோனர் சீட் கிடைக்கவில்லை"

"எங்கன்ட பெடியளை கேட்போம் சுன்னாகத்தில கொண்டு போய்விடச்சொல்லி"

ஐந்து சைக்கிளில் நண்பர்களுடன் சுன்னாகம் புகையிரத நிலயத்திற்கு சென்றார்கள் .கொழும்புக்கு போறிங்களடா எங்களுக்கு ஒரு ரிட்டும் தராமல் போறீங்கள் என எனைய நண்பர்கள் ஒன்றாக் குரலெழுப்பினர் .சுன்னாக சந்தியில வடையும் பிளேன் டீ யும் அடிப்பம் என்று கண்ணன் சொல்ல எல்லோரும் அமைதியானார்கள்.

சுன்னாகசந்தியில் இருந்த தேனீர் கடையில் சைக்கிளை ஒன்றன் மேல் ஒன்றாக சாத்திவைத்து விட்டு பிளேன் டீயும் ,வடையும் ஒரு பெட்டி பிரிஸ்டல் சிகரட்டும் வாங்கி கொண்டார்கள். கடையின் வெளியே வந்து டீயை குடித்தபடியே வடையை ரசித்து உண்டார்கள் .கடையின் முன் தொங்கிய வாழைக்குழையிலிருந்து இரண்டு பழங்களை முறித்து எடுத்த கண்ணன் டேய் பழத்தையும் வடையையும் கண்டவுடன் எனக்கு வேற யோசனை வருகின்றது என சொல்லி சிரித்தான்.

வாங்கோடா ரெயினுக்கு நேரம் போயிற்றுது என சொல்லி சுரேஸ் எல்லோரையும் அந்த கடையிலிருந்து புறப்பட வைத்தான்.

கொழும்புக்கு இரண்டு டிக்கட்டும்,பொல்காவேலக்கு ஒரு டிக்கட்டும் பெற்று கொண்டார்கள்.மூன்று பேர் போறதற்கு பத்து பேர் வந்திருக்கிறீர்கள் தம்பியவையள் எல்லோரும் உள்ளே போறது என்றால் பிளட்வொர்ம் டிக்கட் எடுக்க வேணும் .அண்ணே பிளட்வோர்ம் எல்லாபக்கதிலயும் திறந்து கிடக்கு என்னத்துக்கு டிக்கட்? எல்லோரும் கேட்டனர்.சுரேஸ் இரண்டு பிளட்வொர்ம் டிக்கட்டை எடுத்தான்.ஐந்து பேர் உள் வாசலால் பிளட்வோர்முக்குள் சென்றனர்.மிகுதி ஐந்து பேரும் கள்ளவழியால் பிளட்வொர்முக்குள் சென்றனர்.

.புகையிரதம் தூர வருவதை கண்ட கண்ணனும் மற்றும் அவனது இரு நண்பர்களும் பிளட்வொர்மின் எதிர்பக்கத்தில் போய்நின்றார்கள்.அவர்கள் உள் சென்ற சிறிது நேரத்தின் பின்பு புகையிரதம் நிலையத்தை வந்தடைந்தது. புகையிரதம் ஆடியாடி புகையை கக்கியபடியே வந்து நின்றது.சனம் அடிபட்டு கொனர் சீட் பிடிப்பதற்காக ஏறிக்கொண்டிருந்தார்கள்.கண்ணனும் அவனது நண்பர்களும் எதிர்பக்கமாக நின்று பாய்ந்து ஏறி நாலு பேர் இருக்ககூடிய சீட்டை பிடித்துகொண்டார்கள்.அதே கொம்பார்ட்மன்டில் சுரேஸும்,மதுரனும் ஏறிகொண்டார்கள். ஐந்து சீட்டை பிடித்து கொண்டார்கள்.புகையிரதம் புறப்படுவதற்காக ஒலியை எழுப்பியது.இந்த இரண்டு சீட்டையும் கோண்டாவில் மட்டும் பிடித்துகொண்டு போனால் யாராவது சரக்குகள் ஏறினால் கொடுக்கலாம் என கண்ணன் சொன்னான்.ஒம்மடா நல்ல ஐடியா என சுரேஸ் ஒத்து ஊதினான்.

Link to comment
Share on other sites

 யாழில் ஒரு காதல் 15

 

Copyrighted_Image_Reuse_Prohibited_43404

 

பொதுவாகவே " காதல் " என்ற வார்த்தை பலவித அர்த்தங்களை கொண்டிருக்கும். அம்மா குழந்தையிடம் வைக்கும் அன்பும் காதல்தான். அப்பா மகனிடம் வைக்கும் அக்கறை என்பதும் காதல்தான்.ஐந்தறிவு  உடைய விலங்குகளும் ஒருவர்மேல் ஒருவர் வைக்கும் அரவணைப்பும் காதல்தான் .ஆனால் பதின்ம வயதுகளில் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படுகின்ற காம ஈர்ப்பை காதல் என்ற வகையினுள் அடக்குவதுதான் இன்றுவரை புரியாத புதிராக இருக்கின்றது .

 

புகையிரதம் கொழும்பை நோக்கி விரைந்தது .சுன்னாகம் தூரத்தில் சிறு புள்ளியாக மறைந்து கொண்டு  இருந்தது .சுரேசும் மதுரனும் ஆளுக்கொரு யன்னல் இடத்தை பிடித்துக்கொண்டு காற்று வாங்கினார்கள் .அவர்கள் எதிரே நண்பர்கள் பிடித்துக்கொடுத்த இருக்கைகள் வெறுமையாகவே இருந்தன . அவர்களது எண்ண ஓட்டங்கள் யார் கோண்டாவிலில் தங்களுடன் பயணிக்கப் போகின்றார்கள் என்பதிலேயே  இருந்ததை அவர்களது முகங்கள் காட்டி கொடுத்தன . வாழைத் தோட்டங்கள் புகையிலை தோட்டங்கள் என்பவற்றை கோடு கிழித்து விரைந்த புகையிரதம் கோண்டாவிலில் நிற்பதற்காக அதன் வேகத்தை" கிறீச் " என்ற ஒலியுடன் குறைத்துக் கொண்டிருந்தது. மதுரனுக்கு கோண்டாவில் புகையிரத நிலையத்தில் ஓர் இன்ப அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. அங்கே குயின்சி இவர்களது புகையிரதப் பெட்டியில் ஏறிக்கொண்டிருப்பது மதுரனின் கண்களில் பட்டது . அவனது மனம் "உனக்கு மச்சம்டா " என்று உவகையில் குதியாட்டம் போட்டது . மதுரன் சுரேசிடம் இடம் மாறி இருக்கச் சொல்லிவிட்டு குயின்சியிடம் போய் அவளது பயணப்பொதிகளை வாங்கி கொண்டு மீண்டும் அவனது இருக்கை நோக்கி நகர்ந்தான் .

 

குயின்சி இந்த முறை கறுத்த மினி ஜூப் அணிந்திருந்தாள் . மேலே வெள்ளை நிற  தொளதொளத்த ரீ சேர்ட் அணிந்திருந்தாள். வெள்ளை நிறமான அவளுக்கு அவள் அணிந்திருந்த உடைகள் எடுப்பாகவும், அவளை கவர்ச்சியாகவும் காட்டிகொண்டிருந்தன.  அவளுடன் கூட யாருமே வந்திருக்கவில்லை . மதுரன் குயின்சியை பின்பு சந்திக்காததால் அவளையிட்டு அவனால் அதிகம் அறியமுடியவில்லை . குயின்சியின் தம்பியின் நிலைமையும் அறிய ஆவல் கொண்டவனாய் தன் குரலை செருமியவாறு குயின்சியிடம்  பேச்சை ஆரம்பித்தான். "அப்ப குயின்சி சொல்லுங்கோ இப்ப என்ன செய்யிறியள்? தம்பி என்ன செய்யிறார் ? இப்பவும் மித்திரனோடை தொடர்புகள் இருக்கோ ? என்று சரமாரியாக விழுந்த கேள்விகளை குயின்சியின் கலகல என்று பூ போல சிரித்த சிரிப்பு இடைவெட்டியது.  "நான் நல்ல சந்தோசமாய் இருக்கிறன். கொழும்பிலை அந்த பாங்கிலை தான் வேலை. மித்திரனும் கொழும்புக்கு வந்து படிப்பிகிறார். அவரும் நானும் ஒண்டா தான் இருக்கிறம். இன்னம் கலியாணம் கட்டேலை. ஆறுதலாய் வீட்டை சொல்லுவம் எண்டு இருக்கிறம். தம்பி டேவிட் இயக்கத்துக்கு போய் ஒரு வருசம் கழிச்சு எங்களை பாக்க வந்தவன். இப்ப ஆள் நல்லாய் வளந்திட்டான். ஜீசஸ் இந்த வேலையாலை எனக்கு நல்ல ஒரு கதவை திறந்து விட்டிருக்கின்றார்." என்று மடை திறந்த வெள்ளம் போல பேசிய குயின்சியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் மதுரன். இவர்களது உரையாடலினால் சலிப்புற்ற சுரேஸ் நித்திரையாகி விட்டிருந்தான்.

 

அவர்களது கதை பல இடங்களையும் தொட்டுச் சென்றது. இடையில் வவுனியாவில் குயின்சிக்காக தேநீரும் வடையும், தனக்கு கோல்ட் லீப் சிகரட்டும் வாங்கிகொண்டான் மதுரன். இந்த நேரத்தில் நித்திரையில் இருந்த சுரேசை ஏனோ மதுரனுக்கு எழுப்ப மனமில்லாது இருந்தது. தனக்கும் குயின்சிக்கும் இடையிலான இன்பகரமான பேச்சை கலைத்து விடுமோ என்பதும் ஒரு காரணமாக இருந்தது. வவுனியாவில் இருந்து புகையிரதம் கொழும்பை நோக்கி நாலு கால் பாய்ச்சலில் விரைந்தது. இருவரும் தேநீரை பருகி முடித்தவுடன் சிகரட் பத்துவதற்காக வாயில் பக்கம் வந்து நின்றான் மதுரன். குயின்சியும் அவனுடன் வந்து நின்று கொண்டாள். வெக்கைக்கு வீசிய காற்று அவளின் தொளதொளத்த ரீ சேர்ட்டை  உடலுடன் ஒட்டியபடி அவளின் முன்னழகை எடுப்பாகக் காட்டியது. அவளின் ரீ செர்ட்டிலிருந்து லேசான பெர்பியூம் அவனது நாசித்துவாரங்களை அடைத்தது. சிகரட் புகையும் குயின்சியினது அருகாமையும் மதுரனை  கிறுங்கடித்தன. இந்த வேளையில் நிலாவினது நினைவுகள் மதுரனுக்கு வானத்தில் ஒளிரும்  நிலாவாகவே  தெரிந்ததில் வியப்பேதும் இல்லை. ஏனெனில் காமம் என்ற காதலின் நிலையே அப்படிதான். இருக்கிறதை விட்டுவிட்டு இல்லாதை எப்பொழுதும் தேடிகொண்டிருக்கும் .இதற்கு மதுரன் மட்டும் விதிவிலக்கா என்ன ?இருவரும் பல கதைகளை பேசிக்கொண்டிருக்கும் பொழுதே யாழ் தேவி கோட்டே புகையிரத நிலையத்தினுள் ஆடிப்பாடி நுழைந்து கொண்டிருந்தது. குயின்சி தனது வீட்டிற்கும், மதுரன் தனது உறவினர் வீட்டிற்கும் பிரிந்தார்கள். சுரேஸ் பொல்காவலையில் இறங்கிக்கொண்டான்.

 

பிரிட்டிஷ் தூதரகத்தில் விசா வழங்கும் அதிகாரி முன்பு மதுரன் பவ்வியமாக அமர்ந்திருந்தான். அவனது பணச் செழிப்பும், அவனது  தமையனது தெளிவான ஸ்பொன்சரரும் அந்த அதிகாரிக்கு மதுரனுக்கு விசா குடுப்பதில் தடை ஒன்றையும் வைக்கவில்லை. எடுத்த எடுப்பிலேயே ஒரு மாத விசாவை அவனது கடவுசீட்டில் பதிந்து விட்டார் . அன்று மாலையே மதுரனது அண்ணையினதும், அண்ணியினதும்  தொலைபேசி அழைப்பு மதுரனை கிடுக்கிப் பிடியினுள் கொண்டு வந்தது. இறுதியில் மதுரன் யாழ்ப்பாணம் திரும்பி போகாமலேயே லண்டன் செல்வது என்று அண்ணியிடம் இருந்து கண்டிப்பான உத்தரவு அவனுக்கு கிடைத்தது. மதுரனால்  அண்ணியின்  கண்டிப்பான உத்தரவை மீற முடியவில்லை. இறுதியில் ஆடு திருடிய கள்ளன் போல மறு நாள் மாலை மதுரனை சுமந்து கொண்டு பிரிட்டிஷ் எயார் வேஸ் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி மேலே எழுந்தது . அதே வேளையில் தமிழகத்தின் தென்கோடி வேதாரணியத்தில் இருந்து ஆனந்தி தலமையில் நான்கு படகுகள் மாலைதீவை நோக்கிப் புறப்பட்டன.

 

தொடரும்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் ஒரு காதல் -16

 

EuroWinter_main_1221.jpg

 

ஒரு விதமாக விமானத்தில் ஏறி அமர்ந்தாலும், இது மதுரனுக்கு முதலாவது விமானப்பயணமும் ஆகும்! விமானத்தில் உள்ள இருக்கைகளும், சினிமாத் தியேட்டர்களில் உள்ள இருக்கைகள் மாதிரியே வரிசைப்படுத்தப்பட்டிருந்தன! காணொளிகள் மூலமும், நண்பர்கள் அனுப்பிய படங்கள் மூலமும், அவன் விமானத்தின் உட்பகுதியைப் பல தடவைகள் பார்த்திருந்தாலும், அந்தப் படங்களிலிருந்து, விமானத்தின் உட்புற வெப்பநிலையை, அவனால் தெரிந்து கொள்ள முடியவில்லை! இப்போது, குளிரூட்டபட்ட அதன் உட்பகுதியில், வாசலில் நின்றிருந்த விமானப் பணிப்பெண், காட்டிய திசையில் தனது இலக்கத்தைத் தேடி நடந்து கொண்டிருந்தான்! பழைய வின்ட்சர் தியேட்டரில், ட்ரெஸ் சேர்க்கிளிருந்து, கலரியை நோக்கி நடத்திச் செல்வது போலவே அவனுக்கு இருந்தது! ம்ம்…. பாவிகள் போற இடம் பள்ளமும் திட்டியும், என்று தனக்குள் முணுமுணுத்த படி நடந்தவன், தனது இலக்கத்தைக் கண்டதும், அந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான்! பக்கத்திலிருந்தவர், ஏதோ கதைக்க வேண்டும் என்பதற்காக, இது தான் உங்கள் முதலாவது பயணமா எனக் கேட்டு வைத்தார்! அவர் எப்படிக் கண்டுபிடித்தார் என்று அவனுக்கு விளங்காவிட்டாலும், ‘ஆம்’ என்ற விதத்தில் தலையை மட்டும் ஆட்டிவைத்தான்!

 

விமானம் புறப்படுவதற்கு முன்னர், நடை பெறும் வழமையான சம்பிரதாயங்கள் தொடங்கவும், எவ்வாறு ‘ஒக்சிஜன்' மூடிகளை அணிவது என்பதைக் கவனித்ததிலும் பார்க்க, அதைச் செய்துகாட்டிய விமானப் பணிப்பெண்ணைத் தான் முழுநேரமும் அவதானித்துக்கொண்டிருந்தான்!

 

சீ, இந்த மனம், ஏன் தான் இப்படி அலைகிறதோ என்று அவனுக்கே அவன் மீது கோபமும் வந்தது! திடீரென ஏதோ நினைத்துக்கொண்டவனாக, தன்னுடைய இருக்கையினடியில், அந்த விமானப்பணிப்பெண் சொன்ன ‘பொருள்' இருக்கிறதா எனத் தடவிப் பார்த்து, அது இருப்பதை உறுதி செய்து கொண்டான்! பக்கத்திலிருந்தவரின் ‘கடவாய் இதழ்கள்' கொஞ்சம் அசைந்ததையும் அவன் கவனிக்காமல் இருக்கவில்லை!


விமானம் ஒரு பின்னேரம் போலப் புறப்பட்டதால், அது ‘கட்டுநாயக்காவில்' இருந்து நேராக மேலெழுந்து, கற்பிட்டிப் பகுதிக்கு மேலாக நகர்ந்து, மன்னார்  வளைகுடாவின் மேல் பறக்கத் தொடங்கியது. லண்டனுக்குப் போக வேண்டும் என்ற ஆசை, அவனது மனதில் நீண்ட காலமாக இருந்திருந்தாலும், திடீரென எல்லாவற்றையும் விட்டுப் போட்டுத் தனியாகப் பறப்பது, மனதில் ஒரு விதமான அழுத்தத்தை ஏற்படுத்த, விமானத்தின் ஜன்னலினூடாக வெளியே எட்டிப் பார்த்தபடி பெருமூச்சொன்றை விட்டான்! அப்போது, மன்னார்க் கரையோரத்தின் பனைமரங்களின் வரிசையுடன், மாலை நேரத்தில் ‘பொன்னிறத்தில்' பளபளத்த மன்னாரின் அழிகிய கடற்கரையோரம், ஒரு விதமான ஏக்கத்தை அவனுள் ஏற்படுத்தியது! எனது அழகிய தேசத்தை, எப்போது தான் திரும்பப் பார்க்கபோகின்றேனோ என்ற ஏக்கம், இப்போதே அவனுக்குள் ஏற்பட்டது!


விமானப்பணிப்பெண் ஏதாவது தேவையா என அவனைக்கேட்டபோது, வெறும் தோடம்பழச்சாறு மட்டுமே தரும்படி கேட்டு வாங்கிக் கொண்டான்!


ஏதோ ஒன்றை இழந்து போவது போன்ற ஒரு வலி ஒன்று அவனுக்குள் ஏற்பட்டிருந்தது! தனது வாழ்வின், ஒரு நிலையான பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் அனைவரும், வரிசையாக நினைவில் வந்து போனார்கள்!

 

நிலாவும் நினைவில் வந்து போனாள்! உன்னைத் தானே, எனது உயிராக நினைத்திருந்தேன், இவ்வாறு சொல்லாமல் கொள்ளாமல் போய் விட்டாயே என்று அவள் குத்திக்காட்டுவது போல, அவளது ‘கவலையான முகம்' நினைவில் அடிக்கடி வந்து போனது!


சினிமாப் பாடல்களால் இயல்பாகவே கவரப்பட்ட மதுரனின் காதுகளில், ‘காவேரியோரம் கவி சொன்ன பாடல் …...’ அடிக்கடி நினைவுக்கு வந்து போனது! குறிப்பாக, ‘வளமான மங்கை, பொருளோடு வந்தால், மனம் மாறி உறவாடுவார்…” என்ற வரிகள், அவனது இதயத்தில் ஈட்டியைக் கொண்டு தைப்பது போல இருந்தது! இரவு உணவுக்குப் பின்னர் சிந்தனையில் ஆழ்ந்த படியே, தூங்கிப் போனவனுக்கு, விமானம் இறங்கப்போவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெறுவது தெரிந்தது! ஒரு நீண்ட விமானப்பயணம், அவனது உடலில் மிகுந்த அசதியை ஏற்படுத்தியிருந்தது! ஒரு காலத்தில், உலகத்தின் ‘சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியத்தின்' தலைநகரில் கால்வைக்கப் போகிறேன் என்ற பெருமை, அவனுக்குள் ஒரு முறை தோன்றி மறைந்ததும் உண்மை தான்! ஆனால், சிங்கத்தின் குகையின் வாசலில் நிற்கும் ஆட்டுக்குட்டியொன்று, சிங்கத்தைப் பார்க்கப்போகிறோம் என்று பெருமைப்படுவது போலத்தான், அவனது வாழ்வு மாறப்போகின்றது என்பது, அவனுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை!


ஒருவாறு ‘ஹீத்று' விமான நிலையத்தில் இறங்கி, ‘விசாக்களைப் பரிசோதித்து'  வெளியே விடுகின்ற பகுதிக்கு விரைவில் வந்து சேர்ந்தான்! தோளில் தொங்கிய ‘பயணப் பொதியின்' பாரம், தோள்பட்டையை வெட்டியது! அதற்குள், அத்தியாவசியமான பொருட்கள் மட்டுமன்றி, தேங்காய் துருவும் கருவி, இடியப்ப உரல், இடியப்பத் தட்டுக்கள் போன்ற மிகவும் ‘அத்தியாவசியமான' பொருட்களும் இருந்தன!


பிரித்தானிய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான வரிசை, மிகவும் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது! மதுரனும், வெள்ளைக்காரன் எப்பவுமே வெள்ளைக்காரன் தான் என நினைத்தபடி அந்த வரிசையில் போய் நின்றான்! அப்போது, மதுரனை அவதானித்த ஒரு ‘கறுப்பு இனத்தவன்' அவனிடம் வந்து, கடவுச் சீட்டைக் காட்டும்படி கேட்டு, இவனை இன்னொரு வரிசையில் கொண்டு போய் விட்டான்! விமானத்தில் ஏறிய போது பக்கத்திலிருந்தவர் இது உனக்கு முதலாவது பயணமா என்று கேட்டது போலவே, இவனுக்கு எப்படித் தெரியும் தன்னிடம் ‘பிரித்தானியக் கடவுச் சீட்டு' இல்லையென்பது என்று ஆச்சரியப்பட்டான்! ஒரு வேளை, தனது முகத்தில் தெரிகின்றதோ என நினைத்து, கை லேஞ்சியை வெளியே எடுத்து முகத்தை நன்றாகத் துடைத்துக் கொள்ளவும் மதுரன் தவறவில்லை!


எல்லா நாட்டுக் கடவுச் சீட்டுக்களையும், வரிசையின் வாசலில் நின்றவர் வாங்கிப்பார்த்து அவர்களைக் கவுண்டருக்கு அனுப்பிக்கொண்டிருந்தார்! அவனது முறை வந்ததும், அவனைச் சற்றுக் காத்திருக்குமாறு, அருகிலுள்ள கதிரைகளை நோக்கி அனுப்பினார்! அங்கு ஏற்கனவே இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் போன்ற நாட்டினர் அமர்ந்திருந்தனர்! ஒருவேளை, தாங்கள் பொதுநலவாய அமைப்பில் இருப்பதால், விசேட கவனிப்புக்காக இவ்வாறு பிரித்து விடுகிறார்கள் போலும் என்று தனக்குதானே ஆறுதல் சொல்லிக்கொண்டான்! பயணிகளின் வரிசை குறைந்த போது, அவர்களைக் கூப்பிடத் தொடங்கினார்கள். அவனது முறை வர, ஏறத்தாள இரண்டு மணித்தியாலங்கள் வரை, மதுரன் காத்திருக்கவேண்டியிருந்தது!


பின்னர் ஒருவாறு அவனைக்கூப்பிட்ட போது, அந்த வெள்ளைக்காரப் பெண் ஒரு வறண்ட புன்முறுவல் ஒன்றை உதிர்த்தாள்! அந்தப் புன்முறுவலைக் கண்டதும், மதுரனுக்கு முதல் முறையாக ஒரு பெண்ணின் புன்முறுவல் மீது வெறுப்பேற்பட்டது!

 

அவன் என்ன படிக்க வந்திருக்கிறான் என்பது முதல், எத்தனை வருடங்கள் படிக்கப்போகிறான், படித்த பின்பு என்ன திட்டங்கள் வைத்திருக்கிறான் என்ற படி அவளது கேள்விகள் தொடர்ந்து கொண்டிருந்தன! அவன் கூறுகின்ற ஒவ்வொரு மறுமொழியையும் அவள் ஒரு பேப்பரில் கவனமாக எழுதிக் கொண்டிருந்தாள். அப்போது அவன் சற்று இருமவும், அவளும் பேப்பரில், ஒரு நெளிந்த கோடொன்றைப் போடுவதையும் மதுரன் அவதானித்தான்! பின்னர் திரும்பவும், பழைய கேள்விகள் வேறு வடிவங்களில் கேட்கப்பட்டன! அவனது அண்ணனைப் பற்றியும், சில கேள்விகள் வந்தன! அட, என்ர அப்பா, அம்மாவுக்குக் கூட என்ர படிப்பில இல்லாத அக்கறை, அவளிடம் இருப்பது போல அவனுக்குத் தோன்றியது. பின்னர், ஏறத்தாள அரைமணி கழிந்தபின்பு,

 

‘வெல்கம் ரு லண்டன்’ என்று மீண்டும் ஒரு புன்னகையை உதித்தாள்! இந்த முறை அவளது புன்னகை, அவ்வளவு வரண்டாதாக இருக்கவில்லை!

 

ஒரு மாதிரிப் பயணப் பொதிகளைத் தூக்கி, தள்ளு வண்டிலில் வைத்து வெளியே தள்ளிக்கொண்டு வரும்போது, அண்ணர் வாசலில் நிண்டு, கையைக் காட்டினார்! அவனும் அண்ணனிடம் போய், அவரைக்கட்டிப்பிடித்த படி நிற்க, வழக்கமான நலம் விசாரிப்புக்களைத் அவர் தொடர்ந்தார்!

 

அப்போது எதேச்சையாக சுற்று முற்றும் பார்த்தவன், இது லண்டனா அல்லது இந்தியாவின் ஒரு நகரமா என்று யோசித்தான்! எங்கு பார்த்தாலும், இந்தியப் பெண்கள், தும்புத் தடியும் வாளியும் கொண்டு, விமான நிலையத்தில் தரையைத் துப்பரவு செய்து கொண்டிருந்தனர்! அங்குள்ள, தேநீர் நிலையத்திலும் ஒருவர் தலைப்பாகை கட்டியபடி. வருபவர்களிடம் ‘ஓடர்' எடுத்துக் கொண்டிருந்தார். அண்ணரும், சரி வாவன், தேத்தண்ணி ஒண்டு குடிச்சிட்டுப் போவம், குளிருக்கு நல்லாயிருக்கும் எண்டு கூப்பிட, அவரைப் பின்தொடர்ந்தான்!

 

தொடரும்……!      

 
Link to comment
Share on other sites

College_of_North_West_London_Kilburn_camவிமானநிலையத்தில் இருந்து அண்ணருடன் மோட்டார்வேயில் காரில் புறப்பட்ட மதுரன் விமான நிலையத்தில் பார்த்த காட்சிகள் மாறி பச்சை பசேலென இயற்கை அழகுடன் கூடிய லண்டனையும் அதன் வீதி ஒழுங்கையும் கடந்து செல்லும் கட்டிடங்களின் பிரமாண்டங்களையும் கண்டு வியந்தவன் அண்ணனை திரும்பி பார்க்கின்றான் .

மிக சாதாரண உடையில் மொட்டை விழுந்து அவர் வயதிற்கு மூப்பு விழுந்தவராக வோல்வோ காரை மெல்லியதாக ஜேசுதாசின் “அலை பாயுதே கண்ணா” கேட்டபடி லாவகமாக ஓட்டுகின்றார் .

“எப்படி இருந்தது பிரயாணம் “

“திடீரென்று வெளிக்கிட்டதில் கொஞ்சம் குழம்பிபோனேன் ,இப்ப ஓகே”

“நான் இருப்பது லண்டனில் இருந்து நல்ல தொலைவில் இருக்கும் ஸ்ரிவநேஜ் .அங்குதான் நான் வேலை செய்யும் வைத்தியசாலை இருக்கு .உனது பாடசாலை லண்டனுக்குள் ,அங்கிருந்து தான் நீ படிக்க வேண்டிவரும்”

“எனக்கு பிரச்சனையில்லை ,அண்ணி எப்படி இருக்கின்றார்?பிள்ளைகள் எப்படி இருக்கினம் ?”

“அண்ணி வேலைக்கு போவதில்லை ,பிள்ளைகளுடன் அவாவுக்கு பொழுது போகுது ,அவர்களும் இப்ப வளர்ந்திட்டினம் “

கார் ஒரு அழகிய வீட்டின் முன் நிற்கின்றது .தன்னை வந்து வரவேற்று உள்ளே அழைக்கும் அண்ணியையும் கட்டி பிடித்து தூக்கி எட்டுவயதான மருமகனையும் கொண்டு விட்டிற்குள் காலடி எடுத்துவைக்கின்றான் மதுரன் .

“உடுப்பை மாற்றி சவர் எடுத்துவிட்டு வாரும் கதைத்துக்கொண்டு சாப்பிடலாம்” அண்ணி .

தனக்கான அறைக்குள் நுழைந்தவன் மிக பெரிய வீடு.திரும்பிய திசையெங்கும் இந்திய இலங்கை அலங்கார பொருட்கள். எல்லாம் வைத்தது வைத்தபடி இருக்கு .நடு கூடத்தில் ஒரு பியானோ ,வீணை ,கிட்டார் எல்லாம் அடுக்கி இருக்கு .வாஷ்ரூமிற்கு போய் ஒரு சின்ன குளியல் அடித்தவன் திரும்ப கீழே வர

“விஸ்கியா பிராந்தியா “ என்றபடி அண்ணர் கையில் ஒரு கிளாசுடன் வருகின்றார் .

அண்ணரை பார்த்து சிரித்தபடி

“இன்னும் எதுவும் பழகவில்லை,பழகவும் மாட்டேன் “

“இதுதான் வந்த புதிதில் எல்லாரும் சொல்லுவது, பிறகு இப்ப இது இல்லாமல் அவர்களால் இருக்க முடியாமல் இருக்கு .ஒரு அளவுடன் அடித்து வெள்ளைக்காரன் மாதிரி இருக்க எங்கட ஆட்களுக்கு தெரியாது “

“நான் அப்படியல்ல ,நான் வெள்ளைக்காரன் ஆகவும் விரும்பவில்லை “

“சாப்பிட வாங்கோ “ அண்ணி அழைக்கின்றார் .

படிப்பு ,வேலை,கலியாணம் ,வீடு ,முதலீடு இதைதவிர எதுவும் சாப்பாட்டு மேசையில் பேசப்படவில்லை .

நாட்டுநிலைமை பற்றி பேசாவிட்டாலும் பரவாயில்லை. அம்மா அப்பாவை பற்றி ஒரு வரி ஊகும். அண்ணி எது சொன்னாலும் அண்ணா செக்கு மாடு மாதிரி தலையட்டுவதை பார்க்க மதுரனுக்கு அண்ணா மேல் கோபம் கோபம் ஆக வருகின்றது . மனவருத்தத்துடன் மதுரன் படுக்கைக்கு செல்கின்றான் .இரண்டு மருமக்களையும் கண்ணிலேயே பின்னர் காணவில்லை .

பயண களைப்பில் தூங்கி எழுந்தவன் நேரத்தை பார்த்தான் காலை பத்துமணி .மெதுவாக படிகளில் இறங்கி கீழே வந்தால் வீட்டின் பின்புறம் மிக அழகிய பூந்தோட்டம் .வெறும் காலுடன் புற்தரையில் நடந்து வந்தவன் பூக்கன்றுகளுக்கு தண்ணீர் விட்டுக்கொண்டிருக்கும் அண்ணியை பார்த்து

“நல்ல களை படுத்துவிட்டன்.பத்து மணியாகுது “

“அவர் வேலைக்கு போய்விட்டார் ,பிள்ளைகள் பாடசாலை ,எனக்கு மூன்று பிள்ளைகளை பார்ப்பதும் சமையலும் பூந்தோட்டமும் தான் வாழ்க்கை .”

“நல்ல விஷயம் தானே ,இலண்டனில இப்படி எல்லாம் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை “

“சிட்டியிக்க சும்மா எங்கட குப்பைகள் எல்லாம் வீடு வாங்க தொடங்கிவிட்டுதுகள் ,எங்களுக்கும் அவர்களுக்கும் ஒரு வித்தியாசம் வேணும் என்றுதான் அவரை நான் இஞ்சை இழுத்துக்கொண்டு வந்தனான் “

மதுரன் அண்ணி சொன்னதை புரிந்தும் புரியாமல் தலையாட்ட

“சாப்பிட வாரும் ,அவர் வந்ததும் நீர் இருக்கின்ற இடத்திற்கு போகவேண்டும் “

வெம்பிளியில் சிறியின் வீட்டில் அண்ணர் இறக்கிவிட்டு இனி இங்குதான் உனது அடுத்த கட்ட வாழ்வு .கவனமாக படித்தால் மூன்று வருடங்களில் என்ஜினியராக வெளிவதுவிடுவாய் . அண்ணரும் சிறியும் சிறிது நேரம் சிரித்து கதைத்தார்கள் பின்னர் அண்ணா உதவி தேவையென்றால் போன் பண்ணு என்று விட்டு போய்விட்டார் .

ஒரு அளவான வீடு .மேல் மாடியில் ஒரு ரூம் மதுரனுக்கு .அடுத்த பெரிய ரூமில் ஸ்ரீ ,மனைவி நந்தினி ,ஒரு கைக்குழந்தை. அடுத்த ரூமில் ஒரு மொரிசியஸ் தமிழன் ஆனால் தமிழ் தெரியாது . கீழே இன்னொரு ரூமில் சிறியின் தங்கை வதனி .

“நாங்கள் கிட்டடியில் தான் வீடு வாங்கினாங்கள், மோட்கேஜ் ,பில்ஸ் எல்லாம் கட்டவேண்டும் என்றுதான் ஆட்களை வாடகைக்கு வைத்திருக்கின்றம். நீர் நாப்பது பவுண்ட்ஸ் தாரும் சாப்பாடிற்கும் சேர்த்து. .காலையில் கோர்ன்பிளக்ஸ் அல்லது ரோஸ்ட் போட்டு சாப்பிடும் ,மதியம் எவரும் நிக்க மாட்டினம் பின்னேரம் ஆறு மணி போல சாப்பாடு இருக்கும் வந்து சாப்பிடாலாம் “

எதையும் கேட்கும் நிலையில் இல்லாத மதுரன் எல்லாவற்றிற்கும் தலையாட்டியபடியே தனிமை வேண்டி தனது ரூமிற்கு செல்கிறான்..கட்டிலில் போய் குப்பிற விழுந்து கண்ணை மூடியவன் கண்களில் அவனையும் அறியாமல் கண்ணீர் வழிகின்றது.

மதுரன் காலை நித்திரையால் எழும்பி கீழே வர சிரித்தபடியே வதனி

“உங்களுக்கும் ஒரு ரோஸ்ட் போடவோ “

“அதோட ஒரு பால்தேத்தண்ணியும் தந்தால் நல்லாயிருக்கும் “

“இண்டைக்கு மாத்திரம் தான் .இனிமேல் உங்களை காணுவனோ தெரியாது ,பாடசாலை வேலை வேலை ,இண்டைக்கு அண்ணர் சொன்னபடியா நின்றனான் “

“அண்ணை என்ன சொன்னவர் “

“உங்களை கூட்டிக்கொண்டு போய் உங்களது பாடசாலை ,பஸ் அல்லது டியுப் எடுத்து பயணம்செய்யும்விதம் ,வங்கி அலுவல் எல்லாம் முடிக்க சொன்னவர் .“

சொன்னமாதிரி அனைத்து அலுவல்களையும் முடித்தவிட்டு விட்டு என்னை வீட்டில் கொண்டுவந்து விட்டுவிட்டு வேலைக்கு போய்விட்டார் மதினி ஒரு பெண்ணாக இருந்தும் எனக்கு சற்றும் அந்த உணர்வு ஏற்பட்டாதவாறு எப்படி அண்ணர் சொன்னதில் மட்டும் கண்ணும் கருத்துமாக ஒரு பெண்ணால் இப்படி நடக்க முடிந்தது என்று வியந்தபடியே மீண்டும் ரூமிற்குள் அடைகின்றான் மதுரன் .

லண்டன் வந்து இரண்டு மாதங்களில் லண்டன் வாசியாகிவிட்டான் மதுரன் .ஐந்து நாட்கள் பாடசாலை, மூன்று நாட்கள் பாடசாலை முடிய கென்டக்கியில் வேலை .வார இறுதி இரண்டு நாட்கள் இரவு பெற்றோல் ஸ்டேசன் வேலை .

சனிக்கிழமை அதிகாலை ஒரு மணி பெற்றோல் ஸ்டேசன் வெறிச்சோடிக்கிடக்கின்றது . லண்டன் வந்ததற்கு அம்மாவுடன் ஒரு தொலைபேசி அழைப்பு ,நிலாவிற்கு லண்டன் வந்துவிட்டேன் விபரம் பின்னர் என்று ஒரு கடிதத்துடன் ஒரு தொடர்பும் இல்லாமல் நாட்கள் ஓடிவிட்டது .

இரவின் தனிமை சற்று மதுரனை வாட்ட லெட்டர் பாட்டை எடுத்து

முதலில் தாயிற்கு ஒரு கடிதம் எழுதுகின்றான் .

அன்பின் அம்மாவிற்கு ,

நல்லதூர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ

அன்புமகன்

மதுரன்.

வேறு எதுவும் எழுதும் நிலையில் அவன் மனம் இருக்கவில்லை .

 

இரண்டாவது நிலாவிற்கு முதல் கடிதத்திற்கு முற்றிலும் முரண்பட்டதாய் எழுதுகின்றான் ,

நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் நிலாவிற்கு ,

சொல்ல ஆயிரம் செய்தி இருக்கு எழுத்தில் வருகுதில்லை .மூன்று வருட படிப்பு முடிய நிலாவின் மடியில் தான் மதுரனின் மிச்ச வாழ்க்கை .

என்றும் உந்தன்

மதுரன் .

 

கடிதங்கள் எழுதிய கனவில் இருந்து விடுபடமுதல் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு விழித்தவன் வாசலில் ஒரு வெள்ளைக்காரன் கதவை திறக்க சொல்லி கை காட்டுவதை பார்த்தான் .

இரவு நேரம் மூடிய பெற்றோல் ஸ்டேசன் ஒரு சிறு கண்ணாடி கதுவுகளை மட்டும் திறந்திருக்க சொல்லி நிர்வாகத்தின் உத்தரவு .சிரித்தபடியே வந்த அந்த வெள்ளைக்காரன்

“ரகு உனக்கு சொல்லவில்லை போலிருக்கு ,நான் சார்லி. விமானநிலைய டாக்சி ஓடுபவன் .இரவில் இங்கு வந்து ரகுவுடன் தங்கி இன்று கோப்பி குடித்துவிட்டு போவேன் .அந்த நினைப்பில் வந்தேன் மன்னிக்கவும் “

கதவை திறந்து அவனை உள்ளே விடுகின்றான் மதுரன்.

தானே போய் கோப்பியை போட்டுக்கொண்டுவந்த சார்லி மதுரனிடம் ஒரு கப் கோப்பியையும் நீட்டி ஒரு சிகரெட்டையும் நீட்டுகின்றான் .தான் புகைப்பதில்லை என்றவனிடம் வெளியில் வா இந்த பின்னிரவில் கோப்பியும் சிகரெட்டும் ஒரு புத்துணர்வு தரும் என்கின்றான் .

நீல ரோத்மன்ஸ் சிகரெட்டில் இருந்து வரும் புகை மதுரன் வாயில் இருந்து லண்டனில் பனி புகாருடன் வானில் கலக்கின்றது

வில்ஸ்டன் பொலிடெக்னிக் காலேஜ் .பல்கலை கழகத்தில் படித்ததால் நேரே அதி உயர் படிப்பு .மூன்று வருடங்களைளில் எஞ்சினியராக வெளிவர கூடிய வசதி .சுற்றிவர பூஞ்சோலை போன்ற வளாகமும் மிக பெரிய மைதானமும் மதிய இடைவேளைக்கு சாப்பிட போக பலவகை உணவுடன் (சிக்கன்

மஸ்ரூம் பை ,ரோஸ் காம் சான்ட்விச் ,டேர்க்கி சலாட் ) கன்ரீனும் அவனுக்கு மிக பரீடசியமாகிவிட்டது. எங்கும் எப்போதும் நிறைந்திருக்கும் புகை பிடிப்பவர்களும் புகை மணமும் அவனுக்கு வியப்பாக இருந்தது .

வகுப்பில் உலகத்தில் இருக்கும் அனைத்து இனத்தவர்களும் ஆண்களும் பெண்களுமாக கலந்து இருக்கின்றார்கள் ,லண்டன் என்ற பேரை தக்க வைக்க நாலு வெள்ளைகாரர்களும் இருந்தார்கள் .

பாடங்களின் இடைவெளிகளில் சிகரெட்டை ஊதி தள்ளும் கூட்டங்களை சற்று விலத்தியே இருந்த மதுரன் அவர்களுக்கிடையில் வெள்ளையுமிலாமல் எங்களையும் மாதிரியுமிலாமல் ஒரு நிறத்துடன் மிக கறுப்பு தலைமயிர், புருவம்,இமை விழிக்களுடன் நெஞ்சை தள்ளும் இறுக்கிய டி சேர்ட் ஓட்டலான டெனிம் பாண்ட்சுடன் குதி உயர்ந்த சன்டில்ஸ் உடன் பவனி வருபவளையும் மதுரன் கவனிக்க தவறவில்லை .

 

முதல் முறை நடந்த பரிட்சை பேப்பர்களுடன் வந்த லேகசாரார் எல்லோருக்கும் பேப்பர்களை கொடுத்துவிட்டார் மதுரனுக்கு கொடுக்கவில்லை .என்ன நடந்திருக்கும் என்று மதுரன் நினைக்கையில்

 

"ஹாய் யூ "

எஸ் என்று கண்ணால் லேக்சறரை பார்க்கின்றான் .

 

"உனது நாட்டில் இதற்கு முதல் மத்ஸ் புரபசராக இருந்தியா "

 

என்றபடி அவனது பேப்பரை மேசையில் போட்டபடி முழுக்க முழுக்க சரியாக எழுதியிருக்கின்றாய் என்கின்றார் .

 

அனைத்து மாணவர்களும் அவனை தீரும்பி பார்க்க மதுரனுக்கு ஒரு வித சந்தோசமாகவும் வெட்கமாகவும் இருந்தது.

 

அடுத்த நாள் வகுப்பில் போய் இருந்தால் அந்த ஈரானிய குதிரை அவனுக்கு பக்கத்தில் வந்து இருக்கின்றது .

 

ஹாய் நான் அமானி இரானில் இருந்து படிக்க வந்திருக்கின்றேன் கணிதம் கொஞ்சம் மட்டம் ,இனி உனக்கு பக்கத்தில் தான் எப்பவும் இருக்க போகின்ற ன் "

 

"இப்படி ஒரு அழகான தேவைதைக்கு பக்கத்தில் இருக்க நான் தான் கொடுத்துவைத்திருக்கவேண்டும் .உனக்கு கணிதம் சொல்லித்தர எனக்கு முழு விருப்பம் "

பாடசாலை , இரண்டு வேலை நித்திரை என்று நாட்கள் ஓடுகின்றது .ஏனென்றே தெரியாமல் லண்டனில் காலை தொடங்கி இரவு வரை ஓடித்திரியும் ஒருவனாக மதுரனும் மாறிவிட்டான் .

லண்டனில் குளிர் தொடங்கிவிட்டது . மதுரனுக்கு உடுப்பு மேல் உடுப்பு போட்டு அதற்கு மேல் ஜாக்கெட் வேறு போடுவது புது அனுபவமாக இருந்தது.வகுப்பில் அன்று அமானி மிக இறுக்கமான ஸ்வெட்டர் போட்டு அழகான உடையில் இருந்தாள்.

 

"நீ இப்படி உடை அணிந்து எனக்கு பக்கத்தில் இருந்தால் எனக்கு படிப்பு வராது வேற எண்ணம் தான் வருகின்றது .முதலில் உன்னை காணும் போது சோபியா லோரனின் என்று நினைத்தேன்.அதுவும் குதிரையில் வருவது போல  "

 

"யார் அது சோபியா லோரன்?"

 

"எனது கனவு கன்னி "

 

"அப்படியென்றால் வகுப்பு முடிய எனது வீட்டிற்கு வாறியா நல்ல விருந்து சாப்பிடலாம் "

 

"நன்றாக சமைப்பியா "

 

"மடப்பயலே , விருந்து என்றால் சாப்பாடு மட்டும் தானா ? வீட்டிற்கு வா அதைவிட ஸ்பெஷலாக ஒன்று தாறன். "

 

அமானி சொல்வதை விளங்கி கொண்டாலும் விளங்காத மாதிரி மதுரன்

 

"இன்று எனக்கு வேலை வேறு இல்லை .அப்படி என்ன ஈரானிய விருந்து என்று பார்த்துவிடுவம் "

 

வகுப்பு முடிய தனது பாக்கை எடுத்துக்கொண்டு புறப்பட்ட மதுரனை பார்த்து அமானி

 

"நீ என்ன பகிடிக்கு சொன்னியா ,உண்மையில் வா என்னுடன் என்று தனது கையை மதுரனின் கையுடன் கோர்க்கின்றாள்"

 

அழகிய அந்த பாடசாலையை ஒட்டிய பூங்காவிநூடாக இருவரும் கை கோர்த்தபடி நடந்துசெல்கின்றார்கள் . இலையுதிர்காலம் தொடங்கியதால் வழியெங்கும் பூக்களும் இலைகளும் கொட்டிக்கிடக்கின்றது .இயற்கையின் அந்த அழகும் அமானியின் மிருதுவான கைகளால் உணரப்பட்ட வெப்பமும் மதுரனை

சற்று நிலைமாற வைக்க தன்னை மறந்தவனாக அமானியை தன் வசம் இழுத்து அவள் இதழ்களில் முத்தம் பதிக்கின்றான் . அமானி அவனை இறுக அணைத்தபடி முத்தத்தில் இருந்து விடுபட மனமில்லாதவளாக

 

"வா வீட்டிற்கு போய் தொடரலாம் " என்கின்றாள் .

 

அமானியின் இடுப்பை இறுக அணைத்தபடி இருவரும் அமானியின் வீடு நோக்கி நடக்கின்றார்கள் .

 

sophia-loren-1950s-everett.jpg

(முதலில் சிகரெட் இப்போ அமானி என்று லண்டன் மதுரனை மாற்றி விட்டதா யாரவது தொடருங்கள் )

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர் 18
வாடா இரண்டு நாள் எங்களுடைய பேராதனை யுனிவர்சிட்டியில் போய் இருந்து போட்டு கொழும்புக்கு போ என்று கண்ணன் சுரேசை கேட்டான்.சுரேஸுக்கு உடனடியாக கொழும்பில் அலுவல்கள் இல்லாதபடியால் பேராதேனியாவுக்கு போவதற்கு சம்மதித்தான்.
அடுத்த ஸ்டேசன் பொல்காவெல நாங்கள் இறங்க வேணும் பாக்கை எடுத்து கீழ வைப்போம் என கண்ணன் சொன்னான்.சுரேஸ் தன்னுடைய பாக்கை எடுத்து கீழேவைத்தான்.குயின்சியிடமும் மதுரனிடமும் இருவரும் விடை பெற்று கொண்டார்கள்.மதுரனை முடிந்தால் கொழும்பில் சந்திப்பதாக சுரேஸ் சொன்னான்.லண்டன் பயணம் வெற்றியடைய எமது வாழ்த்துக்கள் என கூறியபடி இருவரும் வாசலருகே போய் நின்றார்கள்.புகையிரதம் கீச் சத்தத்துடன் நின்றது.எல்லொரும் அடிபட்டு இறங்கினார்கள்.பாக் கவனமடா என மெல்லிய குரலில் கண்ணன் கூறினான்.

'----இரட்டை கயூ,வட...வட ...வடய்..,இஸ்சோ வட,பார்லி பார்லி,டி டி காப்பி----'....என வியாபாரிகள் தங்களது வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்தார்கள்.

என்னடா காற்சட்டையில் . என்னவோ பட்டிருக்கு என்று சொல்லியபடியே கையால் தட்டிய சுரேஸ் அடே இது பிலாக்காய்பாலடா என்றான்.நாசமபோச்சு எங்கன்ட சனம் ,செய்யிற வேலையால் பார், என்ட காற்சட்டை ஊத்தயாய் போச்சு ,உதுகள் திருந்ததாதுகள் ,கொழும்புக்கு போறதுகளுக்கு என்னத்திற்கு முருங்கைக்காயும்,பிலாக்காயும்."சினா"ஆக்களை பார் எவ்வளவு ஜாலியாக திரியுதுகள்,என திட்டித்தீர்த்தான்.
.பேராதனை செல்ல வேண்டிய புகையிரத பிளட்வோர்மில் ஒரே இளைஞர் கூட்டமாக இருக்க சிங்கள மொழி ஆட்சி செய்து கொண்டிருந்தது.சுரேஸுக்கு ஒரளவு அந்த மொழியில் பரீட்ச்சயம் இருந்தாலும்,அதை விரும்பி பேசமாட்டான்.இருவரும் பிளட்வோர்ம் மாறுவதற்காக படியெறினார்கள்.
"கண்ணன் கோமத" என்ற படியே ஒரு பெண் முதுகில்தட்டினாள்.
"ஹாய் சீராணி.. கொந்தாய்"இருவரும் சிரித்தபடியே ஆங்கிலத்திலும்,சிங்களத்திலும் பேசியபடி ஏறிக்கொண்டிருந்தனர்.

"ஏய ஹவுத... அலுத் அட்மிசந்தா...இதிங் ராக் கரண்ட புளுவாங்"
"ந ந ..மினியா மகெ ஆலுவாக் மை பிர்ண்ட்"என்று சொல்லி சீராணிக்கு சுரேசை அறிமுகம் செய்து ,தன்னுடன் இரண்டு நாள் பேராதேனியில் தங்குவான் என்றான் .சீராணி சுரேசை பார்த்து சிரித்தாள் பதிலுக்கு அவனும் சிரித்தான். நிலாவை பாவடை தாவணியில் பார்க்கும் பொழுது ஏற்பட்ட உணர்ச்சியைவிட சீராணியின் சிரிப்பும் உடையும் அதிகமாகவே உணர்ச்சியை கிளறியது. பல தமிழ் பெண்கள் ,ஆண்கள் புகையிரதநிலையத்தில் இருந்தும் சீராணியுடன் கண்ணன் அதிக நேரத்தை செலவளித்து கொண்டிருந்தான். ஊர் பெட்டைகளை விட உவளவைகள் கொஞ்சம் கலராகவும்,தூக்கலாகவும் இருக்கின்றாளவையள் என மனதில் எண்ணியபடி அவள் கதைக்கும் பொழுது ஏற்படும் அங்க அசைவுகளையும் அவளது சிரிப்பையும் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான் சுரேஸ்.

பொல்காவேல புகையிரதம் ஒரு சந்தி என்றபடியால் பல புகையிரதம் அங்கு வந்து செல்லும் அத்துடன் பல விதமான மக்களும் வந்து செல்வார்கள்.பேராதேணியா செல்ல வேண்டிய புகையிரதம் வரவே எல்லோரும் அடிபட்டு ஏறினார்கள்.சனம் அதிகமாக இருந்தபடியால் இவர்களுக்கு இருக்க இடம் கிடைக்கவில்லை. கண்ணனும் சிராணியும் மிகவும் நெருக்கமாக நின்று கதைத்துகொண்டிருந்தார்கள்.உவன் உவளை மடக்கிப்போட்டன், சுழியன் என எண்ணியபடியே பெருமூச்சுவிட்டான் சுரேஸ் .
கண்ணன் சிங்களவீட்டில் வாடகைக்கு அறையெடுத்து தங்கி படித்து கொண்டிருந்தான் . பல்கலைகழகத்திற்கு அருகாமையில் அந்த வீடு இருந்தமையால் வாடாகை அதிகமாக இருந்தாலும்,படிப்பின் முக்கியத்துவம் கருதி அந்த அறையை எடுத்திருந்தான்.இருவரும் வீட்டை வந்து குளித்துவிட்டு படுக்க சென்றவர்கள் ,பொல்காவேல்யிலிருந்து பெராதேணியா வரை வந்த பயண அனுபவங்களை பற்றி அலசி ஆராய்ந்து கொண்டு படுத்திருந்தார்கள். "மச்சான் அந்த சிங்களத்தியை மடக்கி போட்டாய் போல கிடக்கு,ஏன்டா உனக்கு எங்கன்ட தமிழ்பெட்டை ஒன்றை கட்டி குடும்ப நடத்திற யோசனை இல்லையோ"

"உனக்கு என்ன விசரா நான் சும்மா அவளை கொஞ்ச நாளைக்கு பாவிச்சு போட்டு ஊர் பெட்டையை கட்டி கொண்டு, அண்ணர் யூகே யில் இருக்கிறார் அவரிட்ட போற பிளான், மச்சான் நான் எங்கன்ட பெட்டைகளுக்கே டிமிக்கி விட்டனான் உவள் சிங்களத்திற்கு டாடா காட்டுறது பெரிய வேலை இல்லை"

"நீ கொஞ்சம் நெருக்கமாக ரயிலுக்குள் நின்றதை நான் கவனிச்சனான்"
"நீ கண்டதை விட நெருக்கமாக அவளுடன் இருந்திருக்கிறேன்
அவளுடன் எனது அந்த நெருக்கம்பற்றி உனக்கு சொல்லவா"

தொடரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்  -  19

 

குடும்பத்துக்காகவும்

சகோதரர்களுக்காகவும் 3 வேலை செய்து உழைத்து

அனுப்பிவரும் குகனுக்கு மதுரன் திடீரென லண்டன் வந்தது அதிர்ச்சி  தருகிறது.

இப்படித்தான் இவனது அண்ணனும் உழைத்து குடும்பத்தைப்பார்க்கின்றேன் என்று லண்டன் போய்

 

தானுண்டு

தனது படிப்புண்டு

காதல்

கல்யாணம்

வேலை

வீடு

கார்

பெரிய  இடத்து உறவுகள் மட்டும் என........  ஒதுங்கியதால்

தான் பட்ட வேதனைகள் இன்றும் முள்ளாய்க்குத்தின....

அதைவிட  திருமணம் முடித்தபின்

தலையணை  மந்திரத்துக்கு அடிமையான படித்த முட்டாள் தனது அண்ணர் என  நினைத்தபோது

கண்களைக்கசக்குவதைத்தவிர வேறு  ஒன்றும் செய்யமுடியவில்லை குகனால்.............

 

எதற்கும் மதுரன் வந்தவுடன் போகணும்

அவன் லண்டனுக்குள் அமுங்கிப்போகமுன் 

சிலவற்றை நேரடியாகச்சொல்லணும் என அவசரப்பட்டவனுக்கு

வேலைகளில் லீவெடுப்பது பெரும் சிரமமாக இருந்தது

ஒரு   வேலை என்றால் கதைச்சு  பேசி  செய்யலாம்

3 வேலைக்கும் ஒரே நேரத்தில்............?

முடிவாக

போயே ஆகணும் என முடிவெடுத்து

வைத்தியரிடம் சென்று 3 நாள் மெடிக்கல் (சுகயீன அத்தாட்சி) எடுத்து

3 வேலைக்கும் தபாலில் அனுப்பும்படி நண்பனிடம் கொடுத்துவிட்டு

அண்ணருக்கு தொலைபேசி  எடுத்தவனுக்கு

மதுரன் தனியே  போய் 5 மாதமாகிவிட்டது என்ற அண்ணரின் பதில் 

தலையில் சுத்தியலால்  அடித்தது போலிறங்கியது.....

 

எதற்கும் 

லீவும் எடுத்தாச்சு

மதுரனைக்கண்டு பேசணும்

நேரே அவனிடம் செல்லலாம் என அவனது முகவரியை  வாங்கிக்கொண்டு

லண்டன் செல்லும் ரயிலில் ஏறி  அமர்ந்து கொண்டான்.

 

குகன் பரிசுக்கு வந்தபின்

இது தான் அவன் செய்யும் முதல் வெளிநாட்டப்பயணம்.

இந்த ரயிலைப்பற்றி  கனக்க கேள்விப்பட்டுள்ளான்

அதில் ஏறணும்

பயணிக்கணும்

ரசிக்கணும் என்று முன்னர் நினைத்திருக்கின்றான்

ஆனால் இன்று மனம் முழுக்க அவனது குடும்பமும்

அண்ணனும் மதுரனும் மாறமாறி வந்து போயினரே தவிர

எதையும் ரசிக்கும் மனநிலையில்லை.

 

நினைவிலிருந்தவனை

விரைவுப்புகையிரதம் லண்டனை  வந்தடைகிறது என்ற அறிவிப்பே

சுயநினைவிற்கு  கொண்டு வந்தது

எவ்வளவு விரைவாக ஓடியிருக்கிறது என வியந்தவன்

அப்பொழுது  தான் குகன்  கவனித்தான்

வீதிப்போக்குவரத்துக்கள் மற்றும் சிக்னல்கள் கூட தலை கீழாக மாறியிருப்பதை......

 

நேராக வாடகைக்காரைப்பிடித்து

மதுரனின் வீட்டுக்கு சென்றவனை மதினி  தான் வரவேற்றாள்

அவளிடம் யூனியின் விலாசத்தைப்பெற்றுக்கொண்டு

அங்கு சென்றவன் 

அங்கிருந்த பார்க்கில் இருந்த கதிரையில் அமர்ந்தபடி  

மதுரனின் தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்தினான்.....

 

....................................................................................................................................................................................

 

அமானியின்

உதடுக்குள் கட்டுண்டு கிடந்த  மதுரனுக்கு

தொலைபேசி  மணி  அடித்தது எரிச்சலைத்தந்தது

எடுக்கவா  விடவா உதடுகளை  என யோசித்தவன்

இந்த நேரம் யாராவது அவசரமாகத்தான் இருக்கும் என நினைத்து

உதட்டை விடுத்து

அழைத்தவரின் பெயரைப்பார்த்தான்

சின்னண்ணா  என  அமானியிலிருந்து இரண்டடி தள்ளிச்சென்று

அண்ணா  சொல்லுங்கோ என்றான்

நான் உன்ர பல்கலைக்கழக பூங்காவில் நிற்கிறன்.

உனக்கு எப்ப வகுப்பு மடியும் என்ற  குகனின் குரல் பக்கத்திலிருந்து வருவதை மதுரன் உணர்ந்தான்

அமானிக்கு சைகையால் போகும்படி சைகை  செய்தவன்

சுற்றுமுற்றும் பார்த்தான்.

செடிகளுக்கு பின்புறம் பார்த்தவன்

அதிர்ந்து போனான்......

 

எனது சின்னண்ணனா இவர்?

ஊரில்  இருந்து வந்ததில் அரைவாசியும் இல்லாது

எலும்பும் தோலுமாக.............???

ஓடிச்சென்று கட்டிப்பிடித்தான்...

அண்ணா இது என்ன கோலம்?

உங்களது பொக்கைச்சொக்குகள் ஏன் இப்படி???

அழத்தொடங்கியவனை குகன் சாந்தப்படுத்தினான்

இது தான் வெளிநாடு தம்பி என...

பேசிக்கொண்டே

தமையனின் கையைப்பிடித்தவன் 

கையை பிடிங்கிக்கொண்டான்

தனது கை ஒரு முதலையைத்தடவியது போலிருந்தது மயூரனுக்கு.

அண்ணா  உங்கள் கையைக்காட்டுங்கள் என்றான்

குகன் மறுத்தான்

வலுக்கட்டாயமாக  குகனின் கையைப்பிடித்து பார்த்தவன் அதிர்ந்தான்

கை  முழுவதும்  வெடித்து 

கரடுமுரடாக 

அங்கங்கே ரத்தம் கட்டியபடி.....

அண்ணா இது என்ன? என்றவனிடம்

இது தான் நான் செய்யும் வேலையில் சாட்சி  என்ற

குகனை இறுகக்கட்டி பிடித்தபடி அழத்தொடங்கினான் மதுரன்.......

 

அவனைத்தேற்றி

சாதாரணநிலைக்கு கொண்டுவர  குகனால் முடியவில்லை

அரவணைத்தபடியே  இருவரும் பூங்காவிலிருந்து நடக்க  தொடங்கியபோது....

 

மதுரனின் மனதில் தெளிவு வந்திருந்தது

குடும்பம் மனசு முழுக்க நிரம்பியிருந்தது

அமானி  மட்டுமல்ல நிலாவும் தூரப்போயிருந்தனர்.....

படிப்பு

படிப்பு

படிப்பு............ என அவனது உதடுகள் முணுமுணுத்தன............

 

தொடரும்........

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பகுதி 20
 
கொஞ்ச நாட்களாக நிலாவின் மன நிலை மீண்டும் அமைதியடையத் தொடங்கிவிட்டது. எதுவுமே சொல்லாமல் மதுரன் லண்டன் சென்றுவிட்டான் என அறிந்து அவள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு கடிதம் தன்னும் போடாது சென்றுவிட்டானே என்ற வருத்தம் இருந்தாலும், சரி அங்கு சென்ற பின் போடுவார் தானே என மனதைத் தேற்றிக் கொண்டவள், அவன் சென்று மூன்று மாதங்களாகியும் எதுவும் தெரியாமல், அவன் நண்பர்களிடமும் கேட்க முடியாதவாறு அவர்களும் ஊர் பக்கம் வராது விட்டவுடன், தாரணிக்குச் சொல்லிச் சொல்லி அழுவதைத் தவிர வேறு எதுவுமே செய்ய முடியவில்லை.
 
தன் வாழ்வு இவனோடுதான் என்ற எண்ணத்தை, இறுதிவரை மதுரன் தன்னோடு வருவான் என்ற நம்பிக்கையை எத்தனை இலகுவாக அவன் உடைத்துவிட்டான். எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை என்று நேரே கூறியிருந்தாலாவது மனம் சிறிது ஆறுதலடைந்திருக்கும். இவன் எதுவுமே கூறாது கோளை போல ஒழித்து ஓடிவிட்டானே என்று மதுரன் மேல் அளவுகடந்த கோபம் ஏற்பட்டது. நேரே அவன் முன் சென்று நீ எல்லாம் எதற்கடா பெண்களிடம் காதல் என்று சொல்கிறாய் என்று கூறி அவன் கன்னத்தில் இரண்டு அறை கொடுத்துவிட்டு திரும்பிப் பாராது வந்துவிட வேண்டும் என்னும் ஆசை நிராசை தான் என்று தெரிந்தபின் மனம் இயலாமையில் அழுதது.
 
நிலா பரீட்சையில் கூட நல்ல புள்ளிகள் எடுக்கவில்லை. தாரணி அவளைத் தேற்றப் பெரும் பாடு படவேண்டி இருந்தது. உன்ர திறமைக்கு முன்னால அவனெல்லாம் தூசெடி. அவனை மறந்துவிட்டு படிக்கிறதில கவனத்தை வை. இந்தமுறை வடிவா படிச்சு நல்ல புள்ளிகளை எடு. கையோட லண்டன் எக்ஸாம் எடுத்து செடிபிக்கட் வாங்கு. student விசாவில அங்க போய் இறங்கி அவனுக்கு முன்னால வாழ்ந்து காட்டடி. அதைவிட்டுப்போட்டு அழுதுகொண்டு இருந்து பிரயோசனம் இல்லை என்று சொல்லும் தாரணியை கண்கள் மின்னப் பார்த்தாள் நிலா.
 
மதுரனைப் பழிவாங்க என் மனம் இடம் தராது. அவன் என்னை உண்மையாக நேசிக்கவில்லை ஆயினும் நான் அவனை மனதார என் உயிரினும் மேலாகவே நேசித்தேன். அவனை நேரில் மீண்டும் பார்க்கவாவது லண்டன் போகத்தான் வேணும் என்று எண்ணியவள், அது அத்தனை இலகுவில் சாத்தியமா என்றும் எண்ணிக் குழம்பியபடி தாரணிக்கும் வாய்விட்டுச் சொன்னாள். ஏன் எல்லாத்தையும் எதிர்மறையாகவே பார்க்கிறாய். ஒன்றை அடைவது எளிதல்ல. அதற்கு நாம் கடினமாக உழைக்கவேண்டும் என்று எங்கயோ வாசிச்சனான் நிலா. முயற்சி செய்து பாக்கிறதில என்ன தப்பு இருக்குச் சொல்லு என்றுவிட்டு நிலாவைப் பார்த்தாள்.
 
நான் என் பக்கத்தால முயற்சி செய்யலாம். லண்டன் போறதுக்கு பணவசதிக்கு எங்க போறது. யார் தரப்போயினம்?? அப்பிடித் தந்து நான் போனாலும் திரும்ப மதுரன் என்னிடம் திரும்ப வருவாரா ??? என்றெல்லாம் தாரணியிடம் கேட்டாள் நிலா. நீ உப்பிடி எல்லாம் மண்டையைப் போட்டு உடைக்காமல் இப்ப நடக்க வேண்டியதை மட்டும் பார். மற்றதுகளுக்கு வழி தானாக் கிடைக்குமடி என்று தோழியைச் செல்லமாகக் கோபித்துக் கொண்டாள் தாரணி.
 
 
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
 
நிலாவுக்கு இன்னும் நம்பமுடியாமல்த்தான் இருக்கிறது. ஆனாலும் அவள் நம்பும் படியாக லண்டனுக்கு எல்லோ வந்துவிட்டாள். நேற்று வரையும் நடந்தவை எல்லாம் கனவுதானோ என எண்ணும்படியாக இருக்கின்றன. அவள் பரீட்சைகளில் நன்றாகத் தேறியதும் தான் லண்டன் போய் படிக்கும் எண்ணத்தைத் தாய்க்கு வெளியிட்டாள். தாய் கலங்கிப் போனாலும் நிலாவின் உள்ளத்தை அவர் நன்றாக உணர்ந்ததால் மதுரனை இன்னும் அவளால் மறக்க முடியவில்லை என்பதையும் கண்டுகொண்டார்.
 
தன்னைப் போல தானே தன் மகளும் பிடிவாதக்காரி. கடைசிவரை காதலித்தவனை நினைத்துக்கொண்டு நான் இருப்பேனே ஒழிய வேறு ஒருவரையும் மனத்தால் கூட நினைக்க முடியவில்லை என்று கடந்த வருடம் கண்ணீரோடு நிலா கூறியது மறக்குமா அந்தத் தாய்க்க்கு?? பல ஆண்கள் இப்பிடித்தான் நிலா. சேறு கண்ட இடத்தில் உழக்கி தண்ணி கண்ட இடத்தில் கழுவிவிட்டுப் போய்விடுவார்கள். பாதிக்கப்படுவது நாம் தானம்மா. இது ஒன்றும் புதிதில்லை என்று கூட நிலாவுக்குப் புத்தி சொல்லிப் பார்த்தார். நிலா தன் நிலையிலிருந்து எள்ளளவும் மாறவே இல்லை. 
 

சரி கெட்டிக்காரப் பிள்ளை. இப்ப ஆமிக்கும் பயம் தான். இயக்கத்துக்குப் போனாலும் எனக்குத்தான் நட்டம். எதோ அங்க போய் பிள்ளை பத்திரமா இருக்கும் தானே என்ற ஆசை வெல்ல, தாயும் நிலா லண்டன் செல்லச் சம்மதித்தார். வீட்டை  சங்கக்கடை நடேசரிடம் ஈடுவைத்து  ஒருவாறு பணம் புரட்டினாலும், நிலா தனிய லண்டன் பொய் எங்கே தங்குவாள் யார் உதவுவார்கள் என்றெல்லாம் எண்ணியதில் கவலை பிடித்துக்கொண்டது தாய்க்கு. அவர்களின் நல்ல காலம் மேற்கு இணுவிலில் இருக்கும் ஆச்சியம்மாவின் சகோதரி மகள் குடும்பம் அங்கு இருப்பதாகவும், அவர்கள் உதவி செய்வார்கள் என்றும் ஆச்சியம்மா கூறி தொலை பேசியிலும் நிலாவைப் பற்றிக் கூறிய பிறகே தாய்க்கு நின்மதி ஏற்பட்டது.

தாயும் தாரணியும் கூட நிலாவை அனுப்ப கொழும்பு வந்தபோது பக்கத்து வீட்டுப் பிரசாந்தன் தான் அவர்களுக்குத் துணையாக வந்தான். பிரசாந்தனிடம் இருந்த தொடர்புகளை வைத்து சுரேசை ஒருவாறு தேடிப்பிடித்து அவனும் இவர்கள் தங்கியிருந்த இடத்துக்கு வந்திருந்தான். நிலாவுக்கு அவனைப் பார்த்ததும் அழுகை முட்டியது. பழைய நினைவுகள் எல்லாம் கோர்வையாக வந்து போயின.

நிலா அழாதேங்கோ. அதுதான் லண்டன் போகப் போகிறீர்களே. இப்ப போய் ஏன் அழுகிறீர்கள் என்று ஆறுதல் வார்த்தை கூறினான். அவள் அழுவதை அவனால் தாங்க முடியவில்லை. இவளைப் போய் கைவிட மதுரனால் எப்பிடி முடிந்தது என்று அவனுள் கேள்வி எழுந்தது. இப்ப கூட தனக்கு அவள் மேல் உள்ள காதல் மாறவே இல்லை. அவளின் மனம் தன்பால் எப்போதுமே வராது என்பதும் அவனுக்குத் தெரிந்ததால் நீண்ட ஒரு பெருமூச்சையும் விட்டான்.

நிலா இந்தாங்கோ மதுரனின் போன் நம்பர். அவன் ஒருத்தருக்கும் குடுக்க வேண்டாம் என்று கண்டிப்பாச் சொன்னதால நான் உங்களுக்குத் தரேல்ல. இப்ப தான் நீங்கள் போகப் போறியளே. நான் தந்தது எண்டு சொல்லாமல் வச்சிருங்கோ. உடன அவனுக்கு அடிக்காமல் கொஞ்ச நாள் கழிய நீங்கள் எல்லாம் செட்டில் பண்ணின பிறகு அடிச்சுப் பாருங்கோ என்று உண்மையான அக்கறையோடு கூறும் சுரேசை நன்றியுடன் பார்த்தாள் நிலா. சுரேஷ் தனக்குத் தெரிந்த வேறு குடும்பம் ஒன்றின் முகவரியுடன் தன்னோடு படிக்கும் ஒருவனின் அக்காவின் முகவரியும் தொலைபேசியும் கூட நிலாவுக்காக வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தது நிலாவுக்கு பெரிய ஒரு நின்மதியைக் கொடுத்தது.

இப்ப நினைத்தாலும் தாயும் தாரணியும் அழுததும் தானும் அவர்களோடு சேர்ந்து அழுததும் கண் முன்னே வந்தன. சுரேசின் கண்கள் கூடக் கலங்கி விட்டது. இந்தாங்கோ நிலா என்ர நம்பர் என்று ஒரு துண்டில் எழுதிய படி அவன் நீட்டியதை வாங்கி கைப்பையுள் பத்திரப்படுத்தியபடி எல்லோரிடமும் விடைபெற்றது இப்பபோல் இருந்தாலும் இரண்டு நாட்கள் ஆகிவிட்டன.

Link to comment
Share on other sites

பகுதி 21 
 
காலம் காலமாக உலகையே சுற்றிவரும் நிலாவின் பெயரைக்கொண்ட அவளுக்கு இலங்கையிலிருந்து லண்டன் வரும் விமானப்பயணம் அதிசயமாக இருந்தது. பயமும், படபடப்பும், அவதியும், ஆச்சரியமும், வியப்பும், வினோதமும். அதுவும் தன்னந்தனியாகப் புறப்பட்ட துணிவு...! இருக்கை, யன்னலோரமாகத்தான் கிடைத்திருந்தது. அவள் இருக்கையோடு இடப்பக்கம் இன்னொன்றாக இரு இருக்கைப் பகுதி. விமானக் கதவு சாத்தும் நேரம் ஒரு நடுத்தரவயது வாலிபனை அழைத்துவந்த விமானப் பணிப் பெண்மணி, அவள் இடப்பக்க இருக்கையைக் காட்டிவிட்டு அவன் கைப்பைகளை மேலே வைப்பதற்கு உதவியும் புரிந்துவிட்டுச் சென்றாள். அவன் அடிக்கடி பயணம் செய்பவனைப்போல் அலட்சியமாக வந்தவன், தனது இருக்கை அருகே நிலாப்போன்ற மங்கை ஒருத்தியைக் கண்டவுடன், ஒரு கணம் உலகக் கிண்ணத்தைச் சுவீகரித்த பந்தாட்ட வீரனைப்போல் ஆனந்தம் கொண்டு தடுமாறினான், சட்டென்று நிதானித்துக் "கலோ" என்றான். இவை எதையும் கவனிக்காது, வெளியே காட்சிகளைப் பார்க்கும் கவனத்தில் இருந்த நிலா, பக்கத்தில் அமர்ந்தவனின் கலோவிற்கு நாகரீகமாகத் தானும் "கலோ" சொல்லிவைத்தாள். 
 
முதலில் தயங்கி நெளிந்த நிலா, விமானப்பயனத்தின் நாகரீகம் தெரியாத பட்டிக்காடு என்று தன்னை நினைத்து விடுவார்களோ! என்ற பயத்தில் புன்முறுவல்காட்டவும், நிலவொளியில் மூழ்கிய அவன் தன் அதிட்டத்தை எண்ணி வியந்தான். அந்தப் புன்முறுவல் ஒன்றைவைத்தே நிலாவின் நிலை அனைத்தையும் அறிந்துகொண்டான். அவள் புதிது, பயணம் புதிது, போகும் இடம் புதிது. தேன்குடித்த நரிபோலானான். தலைமை விமானியும், பணிப்பெண்களும் அறிவிக்கப்போகும், தெரிவிக்கப்போகும் அனைத்தையும், அவன் அவளுக்கு அறிவித்தான். அறிவிக்கும்போது அவன் கைகள் அவள் அங்கங்களில் படுவதை அவள் இயல்பாகவே எடுத்துக்கொண்டாள். விமானம் நடுவானில் செல்லும்போது அது இயல்பல்ல என்று தோன்றியது. அவன் கைபட்ட இடங்களில் இப்போ கம்பளிப்பூச்சி ஊர்ந்தது. 
 
அச்சம் மடம் நாணமெல்லாம் வீட்டில் அடுப்படிக்குள் இருக்கும்வரையில்தான். அவள் தற்பொழுது விமானத்தில் பறக்கும் நாகரீக மங்கை. எப்படி அந்தத் துணிவு வந்தது அவளுக்கே விளங்கவில்லை. துணிவோடுதான் கூறினாள். "எனக்கு இதெல்லாம் பிடிக்காது!"  "மன்னித்துக் கொள்ளுங்கள்." அவன் ஒரு சொல்லில் மன்னிப்புக் கோரினான். எப்படி இத்தனை அமைதியானான்!!. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்று திரும்பத் திரும்பக்  குடைவார்களே! இவன் எப்படி இப்படி!! அவன் வெளியுலகில் பலகாலம் வாழ்பவன். எங்கள் கலாச்சாரத்துக்கு மாறான பல வெளியே இருந்தாலும் சில நல்லதுகளையும் எங்களவர்கள் பற்றியிருப்பது அவனில் தெரிந்தது. விருப்பம் இல்லை... சொன்னதும் விலகிவிட்டான்!. 
        
கடவுச்சீட்டுகளின் வேறுபாடு அதற்கான வரிசைகளை அமைத்திருந்தது. அவன் உதவினான். நிலவரங்களைப் புதிதாக அறிந்துகொள்ளும், சக பிரயாணிக்கு உதவுவதுபோல், மேற்கொண்டு அவள் விமான நிலயத்தில் எதிர்கொள்ள வேண்டி வரப்போவது பற்றியும் சொல்லி,  இயல்பாக அவன் உதவினான். நிலாவை அது ஈர்த்தது. பெயரோ முகவரியோ எதுவுமே பரிமாற்றம் அற்ற ஒரு உறவு, அவன்மீது ஒரு மதிப்பை அவளுக்கு ஏற்படுத்தியது. கண்களால் நன்றிசொல்லி வார்த்தையாலும் கூறினாள். அவன் புன்சிரிப்போடு தலையாட்டி விடைபெற்றான். ஒருவாறு விமானத் தளத்திலுள்ள குடிவரவுப் பரிசோதனை நிலையம், கடவுச்சீட்டு, விசாப் பரிசோதனை, என்று தனது பல கேள்விக் கணைகளால் அவளைத் துளைத்துவிட்டு, அங்கு அவள் தனது படிப்பை மேற்கொள்வதற்கான அத்தாட்சிப் பத்திரங்களையும் பார்வையிட்டு நல்வாழ்த்துச் சொல்லி அனுப்பியது. 
 
சோதனை நிலையம் விடைதர, நிலா வெளிப் பகுதிக்கு வந்து சேர்ந்தாள். படமொன்றை எடுத்து அதிலுள்ளதுபோல் ஒரு படத்தை அங்கு நிற்பவர்களில் தேடினாள். இணுவிலில்  ஆச்சியம்மாவின் சகோதரி மகள் அபியின் படம்தான் அது. நீங்கள்தானே நிலா, இனிய குரலொன்று அருகே கேட்டது. திரும்பியவள் முன் அபி நின்றாள். அவளின் படத்துடன். தனியே வந்த உங்கள் துணிவிற்கு என் வாழ்த்துக்கள் வரவேற்றாள். அவரிடம் மகிழுந்து இல்லை. தொடரூந்திலும் பேரூந்திலுமாக பயனித்து வந்திருந்தார். நிலாவின் பயனப் பொதியும் இரண்டே இரண்டுதான் கனதியும் இல்லை. ஆகவே அபியின் வீட்டிற்கு இருவரும் பயனிப்பது கடினமாக இருக்கவில்லை. ஆச்சியம்மா கூறியதுபோல் குறிப்பறிந்து உதவும் மனப்பாண்மை அபிக்கு இருந்ததால் அவரை நிலாவிற்கு உடனே பிடித்துவிட்டது. பலகாலம் பழகிய நண்பிகளைப்போல் பழகவும் தொடங்கிவிட்டனர். 
 
தொடரூந்து நிலையத்தில் அறிவிப்பு ஒன்று கிணற்றில் இருந்து வந்ததுபோல், சடுதியாக வந்துசென்றது. நிலாவுக்கு அது புரியவில்லை. "லண்டன்போகும் தொடரூந்து ஒருநிமிடம் முப்பது வினாடிகள் தாமதமாக வருமாம்." அபி தெரிவித்தாள். "வினாடிகளையும் அறிவிப்பார்களா!" அவள் ஆச்சரியத்துடன் கேட்டாள். அங்கு நின்றவர்கள் ஆரவாரப்பட்டனர். ஆச்சரியம்தான்! ஆனால் அதைவிடவும் ஆச்சரியம்!!. அங்கு நின்ற நம்முடைய நாட்டு ஆட்கள் போல் தெரிந்த சிலரும் ஆரவாரப்பட்டதுதான். "இதைவிட யேர்மனி திறம்" தமிழும் கேட்டது. நிலாவுக்கு ஊர்ஞாபகம் வந்தது. அங்கு உந்துகள் ஒன்று இரண்டு மணித்தியாலங்கள் அல்லது அன்று முழுவதுமே வரவே வராது. ஆனாலும் பயனிகள் அடுத்த நாள்வரை தாமதித்தும் பயணம் செய்வார்கள். இங்கு ஒரு வினாடி தாமதத்தை அவர்களால் தாங்கமுடியவில்லை...! மேற்குலக வாழ்வின் நல்லது கெட்டதுகள் நம்மவர்களை எப்படி மாற்றியமைத்துள்ளது!!. விமானப் பயனியையும் இவர்களையும் நினைத்துப் பார்த்தாள். 
 
தொடரூந்துப் பயணம் முடிந்து பேரூந்தில் பயனித்தபோது லண்டன் மாநகரின் அழகைக்காணும் வாய்ப்புக் கிடைத்தது. நீண்டு அகண்ட நெடும் சாலைகளும், அவற்றோடு ஒட்டி ஓடிய நதியும் பலதரப்பட்ட நவநாகரீக உடையணிந்த மக்களும், அதோ சில பெண்கள் சேலையுடன் ஆனால் ஆச்சரியம் அவர்கள் கால்களில் பாட்டா செருப்பு.... அதிசயித்தவள்! மேலும் யாரையோ கண்டு இடத்தையும் மறந்து "வண்டியை நிறுத்துங்கள்!" என்று கத்தினாள்!!. நல்லகாலம், அவள் தமிழிலே கத்தியதால் அதிசயமாகப் பார்த்த வெள்ளைகளுக்கு அவள் கத்தியது எதுவும் புரியவில்லை. அபி அவள் கையைப்பிடித்து இழுத்து இருத்தி "என்ன நிலா இது....!" என்றாள். அதற்கிடையில் தன்னையும் சுற்றம் சூழலையும் உணர்ந்தவள், திகைத்த கண்களுடன்! அதிர்ச்சியோடு! இடிவிழுந்ததுபோல் அதிர்ந்து இருக்கையில் விழுந்தாள்!!. அது மதுரன்தானோ..? யாரோ ஒரு மங்கை அவனைக் கட்டிப்பிடித்து! அவன் உதட்டை உறுஞ்சுகிறாளே.!! மறுபடியும் திரும்பிப் பார்பதற்கிடையில் பேரூந்து வெகுதூரம் வந்துவிட்டது. வெட்ட வெளியில் அத்தனைபேர் முன்பாக.... அவன் மதுரனாகவே அவளுக்குத் தெரிந்தான். பயணக்களைப்பால் அவள் கண்கள் மூடியதா. ஏமாற்றம் இதயத்தைத் தாக்கியதால் அறிவிழந்து மயங்கி மூடியதா.....
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள காதல் கதை- பகுதி 22

 

நிலாவும் ஒரு மாதிரி லண்டனுக்கு வந்து சேர்ந்து விட்டாள். அடுத்தது என்ன என்ற கேள்வியே இப்போது அவள் முன்பு பூதாகரமாக விரிந்து நின்றது!

 

அபியின் வீடு மூன்று அறைகள் கொண்ட ஒரு சராசரியான லண்டன் வீடாக இருந்தது. எல்லா லண்டன் வீடுகளையும் போலவே, வாசலில் இலக்கத் தகடும், தபால் போடுவதற்கான ஒரு நீள் சதுர வடிவமான ஒரு துவாரமும் இருந்தன!

 

ம்ம்.. தபால் கூட வீட்டுக்குள்ள வருமாக்கும் என்று அதிசயமாகக் கேட்டவளுக்கு, தபால் மட்டுமில்லை… பால் கூட இங்கு வாசலுக்கு வந்து குந்திக்கொண்டிருக்கும் என்று அபி சிரித்த படியே பதில் கூறினாள்! வீடுகள் அனைத்தும் ஒரே மாதிரியாக அமைந்திருந்ததும் ஒரு விதத்தில் அழகாகவே இருப்பதாக நிலா தனக்குள் நினைத்துக்கொண்டாள்!

 

வீட்டுக்குள் நுழைந்ததும் செருப்புக்கள், சப்பாத்துகள் எல்லாம் ஒரு வரிசையில் குந்திக்கொண்டிருப்பதை அவதானித்தவள், தனது சப்பாத்துக்களையும் அந்த வரிசையில் வைத்துவிட்டு, பக்கத்திலிருந்த வரவேற்பு அறைக்குள் செல்ல எத்தனித்தாள்.

 

அதுக்குள்ள போகாதீங்க நிலா.. அதை வாடகைக்குக் குடுத்திருக்கிறம். அதுக்கிள்ள அவை நித்திரை கொள்ளினம் என்று அபி கூறவும், நித்திரையோ… இந்த நேரத்திலோ என்று கொஞ்சம் ஆச்சரியத்துடன் அபியைப் பார்த்தாள்!

 

ஓம்.. நிலா… அவை படிக்கிற ஆக்கள். இரவில வேலை செய்வினம்.. பிறகு கொஞ்ச நேரம் நித்திரை கொண்டு போட்டு, எழும்பிப் பள்ளிக்கூடம் போயிருவினம். பிறகு வந்து தான், ஏதாவது சமைச்சுச் சாப்பிட்டுப் போட்டுத் திரும்பவும் வேலைக்குப் போயிருவினம். அவையால எங்களுக்கு ஒரு கரைச்சலும் இல்லை என்று கூறவும், அப்பச் சனி, ஞாயிறு தான் அவையைக் காணலாமாக்கும் என்று நிலா தனக்குள் நினைத்துக் கொண்டாள்!

 

மாணவ வாழ்க்கையில், சனிகளும், ஞாயிறுகளும் தான் முக்கியமான வேலை நாட்கள் என்பது அவளுக்குப் புரிந்திருக்க நியாயமில்லைத் தான்!

 

நிலா, நீங்கள் மேல இருக்கிற சின்ன அறையை இப்போதைக்குப் பாவியுங்கோ என்று அபி கூறவும், நிலா தனது சூட்கேசையும் தூக்கிக்கொண்டு, படிகளில் ஏறி, அந்த அறைக்குள் சென்றாள்! மிகவும் சின்னதாக இருந்தது அது! பொதுவாகக் குழந்தைகள் வளர்வதற்காக, நேர்சரி றூம் என்று அன்போடு அழைக்கப்படும் அறை தான் அது! ஒரு சிறிய யன்னலுடனும், அதற்கேற்ற அளவான சிறிய மேசை கதிரைகளுடனும், ஒரு சிறிய கட்டிலுடனும் அமைந்திருந்தது அது! கட்டில் மீது பூவேலைப்பாடுகள் நிறைந்த  ‘குயில்ற்' ஒன்றும் விரிக்கப்பட்டிருந்தது!  

 

அபி அழைக்கும் சத்தம் கேட்டுக் கீழே சென்றவளுக்குத் தேநீரும், இரண்டு பாண் துண்டுகளும் தயாராக இருந்தன!

 

இதைச் சாப்பிடுங்கோ, நிலா என்று கூறியபடி, அபி மீண்டும் வெளியே செல்லத் தன்னைத் தயார் படுத்தினாள்!  இதைச் சாப்பிட்டுக் கொஞ்சநேரம் படுங்கோ, நான் வேலைக்குப் போகவேணும் என்று கூறியபடி, ஜாக்கெற்றைப் போட்டபடி, வேலைக்குப் போக, அபி ஆயத்தமாகினாள்!

 

இந்த ஊரில நேரம் காலமில்லாமல் எல்லாரும் வேலை போல ...எனத் தனக்குள் நினைத்துகொண்ட நிலா, மேலே சென்று படுக்கையில் படுத்தபோது தான், படுக்கை சில்லென்று குளிர்ந்திருப்பதை அவதானித்தாள். தான் ஊரிலிருந்து கொண்டு வந்த போர்வையொன்றை எடுத்துப் போர்த்துககொண்டாள்! உடம்பு கொஞ்சம் வெடவெடக்கத் தொடங்கவே, கீழே இறங்கி வந்தாள்!

 

அப்போது, முன்னாலிருந்த அறையிலிருந்தவர் நித்திரையால் எழும்பிக் குசினிக்குள் கோப்பி போட்டுக்கொண்டிருந்தார்!  நிலாவை எதிர் பார்த்தவர் போல, நீங்களோ நிலா என்று கேட்டு, ஒரு சிரிப்பையும் உதிர்த்தார்! அத்துடன் அக்கா சொன்னவா நீங்கள் இண்டைக்கு வாறீங்கள் எண்டு சொன்னபடி, என்ர பெயர் குகன் என்று ஒரு குறுகிய அறிமுகத்தையும் செய்து வைத்தார்!

 

நிலாவும் இஞ்சை கொஞ்சம் குளிரும் போல கிடக்கு…. நான் நாளைக்குத் தான் நல்ல ‘கம்பிளிப்போர்வை' ஒரு வாங்க வேண்டும் என்றாள்! கம்பளி தேவையில்லையே, நீங்கள் அந்தக் குயில்ற்றைத் தூக்கிப்போட்டு, அதுக்குள்ள பூந்து படுங்கோ… கொஞ்ச நேரத்தில எல்லாம் சரியாப் போயிடும் என்று சொல்லிச் சிரித்தான்!

 

அவளை நினைக்க, இப்போது அவளுக்கே சிரிப்பு வந்தது! நன்றி என்று தமிழில் கூறிய படியே மேலே வந்து படுத்தவள் எவ்வளவு நேரம் தூங்கினாள் என்று அவளுக்கே தெரியாது!    

 

இந்தக்காலம் போல, அந்த நாட்களில் தொலைபேசி வசதிகள், வலைபேசி வசதிகள் எதுவும் மலிவாகக் கிடைப்பதில்லை. அம்மாவுடன் கதைக்க வேணுமெண்டாலும், ஆராவது தொலைபேசி இருக்கிற ஆக்களின் வீட்டுக்குச் சொல்லி வரச்சொல்லி விட்டுப் பிறகுதான் அவர்களுடன் கதைக்க முடியும்!

 

ஆனால்… உள்ளூருக்குள் கதை வேறு….!

 

அவள் லண்டனுக்கு வந்துவிட்ட செய்தி, மிகவும் விரைவாகக் காட்டுதீயைப்போல, அவளது ஊர்க்காரருக்கும், பள்ளிக்கூட நண்பர்களுக்கும்,பரவி விட்டது! ஊருக்குள் ஒருவரை ஒருவர் கண்டால், முகத்தைத் திருப்பிக்கொண்டு போறவர்கள் கூட, வேறு தேசம் ஒன்றில் சந்திக்கும் போது, அவ்வாறு செய்வதில்லை! நின்று ஆறுதலாக, நலம் விசாரித்துக் கொள்ளத் தயங்குவதில்லை! அத்துடன் ஒருவருக்கொருவர் உதவி செய்யவும் முன்னிற்பதும் வழக்கம்! மதுரனையும், அவள் வந்துவிட்ட செய்தி சென்றடைந்திருந்தது! அவனும் பெரிதாக அதிர்ச்சியடையவில்லை!

 

ஏன் என்பதற்கான காரணங்கள் கூட அவனுக்குக் தெரியவில்லை என்பது தான் உண்மையாகும்!

 

காலம் தான் எவ்வளவு வலியது….. காயங்களை ஆற்றும் வல்லமை அதனிடம் நிரம்பவே இருந்தது! புதிய சூழல், புதிய மனிதர்கள், புதிய உறவுகள், ஓய்வில்லாத வேலை, படிப்பு என்பவை அவனை ஒரு புதிய மனிதனாக மாற்றிவிட்டிருந்தன! படித்தவர்கள், பட்டதாரிகள் என்று ஊரில் மிகவும் நல்ல நிலையில் வாழ்ந்தவர்கள், நிஜ வாழ்வில், பிரச்சனைகளைச் சந்திக்கும் போது. எவ்வளவு துவண்டு போய் விடுகின்றார்கள் என்பதை நேரில் கண்டிருக்கிறான்!

 

அவர்களது போலிக் கவுரவங்கள் உடைந்து விழும்போது, அதைத் தாங்கச் சக்தியில்லாதவர்களாக அவர்களைக் காணும்போது, தனக்கு அப்படியொரு நிலை வரக்கூடாது என்னும் வைராக்கியம் மீண்டும் அவனுள் வலுப்பெறுவது வழக்கமாகிப் போனது!

 

ஆச்சியம்மாவின் மகளின் தொலைபேசி இலக்கம் அவனிடமும் இருந்தது!

 

இப்போதைய மதுரன், பிரச்சனைகளை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் பக்குவத்தை அடைந்திருந்தான்! எனவே, பக்கத்திலிருந்த தொலைபேசிக் கூட்டுக்குள் போனவன், சில்லறையைப் போட்டுவிட்டு, அபியின் இலக்கங்களைச் சுழட்டினான்! மறு முனையில், தொலைபேசி அடிக்கும் சத்தம் நீண்ட நேரமாகக் கேட்டுக்கொண்டிருந்தது!

 

தொலைபேசி நீண்ட நேரமாக அடிப்பதைக் கேட்ட நிலா, வீட்டில் வேறு ஒருவரும் இல்லாதபடியால், கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தாள்! அதுவும் நின்ற பாடாயில்லை! ஒரு வேளை, அபி தான் எடுக்கிறாளோ, என எண்ணித் தொலைபேசியின் ஒலிவாங்கியை எடுத்துக் காதருகில் கொண்டு போனாள்!

 

மறுமுனையில் ஹலோ என்ற குரல் கேட்டது….!

 

அப்படியே விக்கித்துப் போனாள், நிலா!

கால்கள் தாங்களாக துவண்டு போவது போல உணர்ந்து, பக்கத்திலிருந்த சுவரில், மறுகையால் தன்னை நிதானப்படுத்திகொண்டாள்!

 

ஹலோ, அபியக்கா இருக்கிறாவோ? நான் மதுரன் கதைக்கிறன்…..!

 

தொடரும்….! :D

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் ஒரு காதல்..23

 

21969_london_river_thames_cruises.jpg

 

தொலைபேசியின் ஒலிவாங்கியைக் காதில் பொருத்திய படி, எவ்வளவு நேரம் நின்றிருப்பாள் என்று அவளுக்கே தெரியாது! ஆனால், எதிர்முனையில், இருந்த மதுரனின் ஒலி வாங்கி அவளது மூச்சுக்காற்றின் ஆவேசத்தில் அதிர்ந்து கொண்டிருந்தது. அந்தக்கணமே, மறுமுனையில் இருப்பவர் யாரென்பது அவனுக்குப் புரிந்தும் போனது!

 

நிலா, எப்படியிருக்கிறீங்கள்?  பயணம் எப்படியிருந்தது? என்று கேள்விக்கணைகளை. அடுத்தடுத்துச் செலுத்தியபடியே இருந்தான்!

 

மதுரன் மீதான அவளது கோபம் ஒரு கணத்தில் மறைந்தது போலவும், அந்தப் பழைய ‘காதல் மதுரனின்' முகம் மீண்டும் அவனுக்கேயுரிய, அவளது சிம்மாசனத்தில் வந்து அமர்ந்து விட்டது போலவும், நிலா உணர்ந்தாள்!

 

அதே வேளை, மதுரன் நான் வாறனெண்டு தெரிஞ்சும், நீங்கள் என்னைப்பற்றி விசாரித்திருக்கலாம் தானே என்று கேட்டாள்! தனது தோல்வியை ஒப்புக்கொள்ளும் பெண்மை, அதை நெஞ்சை நிமிர்த்தி ஒருநாளும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதை அவன் அறிந்திருந்தான்!

 

நிலா, நாளைக்குச் சனிக்கிழமை! நீர் காலமை ஒரு ஏழுமணி போல, டூட்டிங் ஸ்டேசனுக்கு வாரும்! நான் உம்மை அங்கை சந்திக்கிறன்! மிச்சத்தை நேரில கதைப்பம்! என்று கூறவும்,

 

என்ன மதுரன், பகிடியா விடுகிறீங்கள்… காலமை தான் ஊரிலையிருந்து வந்திறங்கியிருக்கிறன்.. ஸ்டேசனுக்கு வாரும் எண்டால், நான் என்னண்டு தேடிப்பிடிக்கிறது?

 

ஏன் நிலா, நாங்கள் வந்த போது, எங்களுக்கு ஆரு ஸ்டேசன் காட்டிவிட்டது? நாங்க தானே எங்களுக்குத் தேவையானதைச் செய்து பழகவேண்டும். அப்பாவா அல்லது அம்மாவா எங்களுக்குப் பாதை காட்ட வரப்போகினம்? ஆரும் எங்களுக்கு உதவிசெய்ய விரும்பினாலும், அவைக்கு நிறைய வேலையிருக்கும். இந்த ஊர் வாழ்க்கை, நம்ம ஊர் மாதிரியில்லை. போகப்போகத் நீரே தெரிந்து கொள்ளுவீர். அபியக்காவின்ர வீட்டிலிருந்து இறங்கினீர் எண்டால், அப்படியே இடது பக்கம் திரும்பி, நேர நடந்து வாரும்! ஒரு நீலநிற வட்டத்துக்குள்ள, குறுக்கால ஒரு சிவப்புக்கோடு போட்ட வட்டம் ஒரு தெரியும். அது தான் ஸ்டேசன்… அங்க நான் உம்மைச் சந்திக்கிறன் என்று கூறிப், பயப்படாதையுங்கோ நிலா என்றும் ஆறுதலும் கூறினான்!

 

என்ன இருந்தாலும், மதுரனுக்கு என் மீது எவ்வளவு ஆசையும், அக்கறையும் இருக்கின்றது என்று ஒரு கணம் பூரித்துப் போனாள்! மனித மனம், எவ்வளவு விசித்திரமானது… சில நிமிடங்களுக்கு முன்பு கலங்கிப்போயிருந்த மனம், இப்போது மிகவும் தெளிவாகி இருந்தது! பணம், பொருள் என்பவற்றால் சாதிக்க முடியாத ஒன்றை, சில அன்பான வார்த்தைகள் சாதித்துவிடுவது மிகவும் ஆச்சரியமான ஒன்று தான்! நாம் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் அன்பான வார்த்தைகளுக்குகாகவும், தொடுகைகளுக்காகவும் ஏங்கிக் கொண்டேயிருக்கிறோம்!  

 

மறு நாள் காலை….!

 

அபியிடம் தனது நண்பியொருவரைச் சந்திக்கப்போவதாகக் கூறிய நிலாவை, ஒரு விதமான ஆச்சரியத்துடன் பார்த்த அபி, உனக்கு லண்டன் தெரியுமா என்றும் கேட்டாள்! அப்போது தான், தனது நண்பி, ஸ்டேசனில் தனக்காகக் காத்திருக்கப் போவதாகச் சொன்னதைக் கூறினாள்!  அபிக்கும் வேறு வேலை இருந்த படியால், நிலா இதை வைத்துக்கொள் என்று அவளிடம் ஒரு இருபது பவுண் தாளைக் கொடுத்ததுடன்,  கவனம் என்றும் சொல்லி வைத்தாள்!

 

மதுரன் சொன்னபடியே, நடந்து போனவளின் கண்களில் ஸ்டேசன் தட்டுப்பட்டது! அங்கே, அவளுக்காக மதுரன் காத்துக்கொண்டிருந்தான்! இருவரும் சந்தித்தபோது இருவராலுமே பேச முடியவில்லை! மதுரன் நன்றாக மாறிப்போயிருந்தான்! எண்ணெய் வைத்துச் சுருளாக இருந்த தலைமுடி, இப்போது காற்றில் அலைந்துகொண்டிருந்தது! பழைய ‘பெல்பொட்டம்' பாணியிலான நீளக்காச்சட்டையை ‘மார்க்ஸ் அண்ட் ஸ்பென்செர்' காச்சட்டை பிடித்திருந்தது! அத்துடன் ஒரு நீல நிற வரிகள் போட்ட ஒரு அழகிய ஜம்பரும் அவன் அணிந்திருந்தான்! கொஞ்சம் நிறம் மாறி, ஒரு மெல்லிய மினுமினுப்பும் அவனில் தோன்றியிருந்தது!

 

மௌனமாக நின்ற அவளைப்பார்த்து, என்ன நிலா அப்படிப்பார்க்கிரீர்? எனக்கு ஏதும் கொம்பு, கிம்பு முளைத்துவிட்டதா என்று கேட்டுச் சிரித்தவன், ‘யூ லுக் சோ பியூற்றி புல்’ என்று அவளது காதுக்கருகில் கூறினான்!

பின்னர் கையிலிருந்த A -Z  புத்தகமொன்றை அவளிடம் கொடுத்தான்!

 

அந்த நேரத்தில் சுற்றுமுற்றும் பார்த்த அவள் கண்களில் எல்லோருமே, அவசரமாக எதற்காகவோ ஓடிக்கொண்டிருப்பது போலவே இருந்தது! பக்கத்தில் ஒரு இளம் ஜோடி, ஒருவரை ஒருவர் இறுகக் கட்டிப்பிடித்த படி, குளிர் காய்ந்து கொண்டுருந்தது! ஊரில் என்றால், எல்லோரது கண்களும் அவர்கள் மீது தான் குவிந்திருக்கும் என நினைத்தவள், ஒருவர் கூட அந்தப் பக்கம் பார்வையைத் திருப்பாமல் சென்றதையும் அவதானிக்கத் தவறவில்லை!

 

பின்னர் நிலாவுக்கு, ஒரு முழுநாள் டிக்கட்டை வாங்கியவன், பக்கத்திலிருந்த தொலைபேசிக்குச் சென்று இலக்கங்களை அழுத்தினான்!

 

தொடர்பு கிடைத்ததும், மச்சான் இண்டைக்கு ஒரு உதவி செய்யவேணும்.. ஒரு அவசரம் ஒண்டு வந்திட்டுது… நீ ஒருக்கா வெளிக்கிட்டு வேலைக்குப் போக வேணும்.. மச்சான்.. அவசரமில்லாவிட்டால் நான் உன்னிட்டைக்கேட்க மாட்டன் எண்டு தெரியும் தானே என்று சொன்னான். மறுமுனையிலிருந்து சரிமச்சான் இண்டைக்கு மட்டும்தான், நாளைக்கு நீ போகவேணும் என்று பதில் வரவும், அவனுக்கு நன்றி தெரிவித்துவிட்டுப் போனை வைத்தான்!

 

மதுரன் எப்போது வேலைக்குப் போகாமல் விட முடிவெடுத்தான் என்பது அவளுக்குத் தெரியவில்லை. ஆனால் அவனது நண்பர்களுக்குள், நல்ல புரிந்துணர்வு இருப்பது அவளுக்குப் புரிந்தது!

 

பின்னர் அவளைக் கூட்டிக்கொண்டு, லண்டனின் பாராளுமன்றம், பிக்பென் போன்ற பகுதிகளைக் காட்டுவதற்காகக் கூட்டிச் சென்றான்! டியூப் ரெயினில் பயணிக்கும் போது, நிலா உமக்குக் கொஞ்சம் உடுப்புகள் வாங்க வேணும், பள்ளிக்கூடம் போறதெண்டால், கொஞ்சம் நல்ல உடுப்புக்களோட போனால் தான் சனம் மதிக்கும் என்று கூறியபடி என்ன ‘கோர்ஸ்' படிக்கிற பிளான் என்று கேட்டான்! அவளும் தயங்காமல், ரேடியோலோஜி செய்யிறதாய்த் தான் உத்தேசம் என்று கூற, மதுரன் ஒருகணம் ஆடிப்போனான்! கனக்கக் காசு வருமே, என்று அவன் கூற, அவளும் தனக்கு தெரிந்த ஒரு உறவினர் ‘ஹார்லி ஸ்றீற்’ ரில் வேலை செய்வதாகவும், அவரே தனக்கு இந்தக் கோர்சைப்பற்றிச் சொன்னதாகவும்,   தான் படிக்கும்போதே பகுதிநேரமாக அங்கு வேலை செய்யலாம் என்றும் கூறியதைக் கேட்ட மதுரன்  ‘ஹார்லி ஸ்றீற்’ என்ற பெயரைக் கேட்டதிலிருந்தே திறந்த வாய் மூடவில்லை!

 

கொஞ்ச உடுப்புக்களை வாங்கியதும், தேம்ஸ் நதிக்கரையில் உள்ள உல்லாசப் பயணிகளுக்கான ‘படகுகள்' புறப்படும் பகுதிக்கு வந்து, அங்குள்ள ஒரு கடையில் இரண்டு ‘சாண்ட்விச்சுக்களை' வாங்கி இருவரும் சாப்பிட்டார்கள்!

இப்போதெல்லாம் நிலாவுக்கு லண்டன் கொஞ்சம், கொஞ்சமாகப் பிடிக்க ஆரம்பித்திருந்தது!

 

இருவருக்கும், இரண்டு டிக்கட்டுகளை வாங்கிய மதுரன், படகினுள்ளே சென்று கீழ்த்தளத்தில் அமர்ந்து கொண்டான்! இருவரும் அருகருகே அமர்ந்திருக்கத், தேம்ஸ் நதியில் தவழ்ந்த குளிர்காற்று இருவரையுமே தழுவிச் சென்றது!

அவளருகில் அமர்ந்திருந்த மதுரன் சிறிது நேரம் வெளியே பார்த்துக்கொண்டிருந்தான்! அப்போது, அவர்களின் சீற்றுக்கருகில் நடந்து போன கொஞ்சம் வயதான வெள்ளையொன்று, அவர்களைப் பார்த்து ‘ நைஸ் கப்பிள்' என்று கூறியபடியே, ஒற்றைக்கண்ணையடித்த படியே நடந்து சென்றது!

 

நிலாவின் கன்னங்கள் திடீரெனச் சிவந்து போவதை மதுரன் அவதானிக்கத் தவறவில்லை!

அவனையறியாமலே நிலாவை நோக்கி நெருங்கியவன், தனது கரங்களை மாலையாக்கி , அவளது கழுத்தில் போட்டான்! நிலாவும், எதுவுமே பேசாமல், அவனை நோக்கி நெருங்கி அமர்ந்தாள்!

 

வார்த்தைகளின் தேவை,  அங்கு மரணித்துப் போயிருந்தது!

 

முடிவு சக எழுத்தாளர்களின் கைகளில்.....!

 

(பாவமப்பா, இரண்டும்....சின்னஞ்சிறுசுகள்.... சேர்த்து வையுங்கப்பா.. போற வழிக்குப் புண்ணியமாவது கிடைக்கும்!) :D

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1ஒருவருக்கு விருப்பமில்லாத விடயம் தங்களுக்கு உவப்பானதாக இருக்கிறது. ஒருவருக்கு சுதந்திரமாக இருக்க, சுயமாகச் சிந்தித்துத் செயற்பட ஆர்வம் ஆனால் தாங்களோ யாருக்கும் கீழ்ப்படிந்து, சொல்வதைக் கேட்டு வேலைசெய்ய,  கிடைப்பதையுண்டு வாழ சித்தமாயிருக்கிறீர்கள். இதுதான் வேறுபாடு.   
    • Lindsey Graham நேற்று உக்ரெய்ன் அதிபரைச் சந்தித்துள்ளார். இவர் ட்றம்பின் ஆதரவாளரும் உக்ரெயினுக்கான அமெரிக்க உதவியை எதிர்த்தவரும் ஆவார். இச் சந்திப்பின் பின் குறைந்த வட்டியின் அடிப்படையில் தடைபட்டுள்ள 60 பில்லியன் டொலர் உதவியை உக்ரெயினுக்கு வழங்க இவரின் ஆதரவு கிடைக்கும் போல் உள்ளது. தேர்தலில் வெல்வதற்காகவே ஒரு நாளில் யுத்தத்தை நிறுத்துவேன் என்று சொல்லி வந்த ட்றம்ப் ரஸ்யாவை ஆதரிக்க முடியாது என்ற யதார்த்தத்தைப் புரிந்திருப்பார்.
    • தமிழக அரசியல் எமக்கு  உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம். அதற்காக அவர்களைச் சீண்டத் தேவையில்லை.  👎🏿
    • நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு மற்றுமொரு தினம்!       சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கு மற்றுமொரு தினத்தை வழங்குவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. மேலும், விவசாயிகளின் நெல் கொள்வனவு தொடர்பான பிரச்சினைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று (19) பாராளுமன்றத்தில் ஆரம்பமானது. இதற்கமைய, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=185353
    • தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பா. மன்றின் நடுவில் 8 பேரின் விடுதலை வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.