Jump to content

வழிகாட்டும் மனிதர்கள், முன்னுதாரண மானிடர்.


Recommended Posts

வெங்கடபூபதியின் வித்தியாசமான குருவந்தனம்...

 

gallerye_112844644_1091903.jpg

 

 

என் முதுகெலும்பு ஒடிந்தாலும் இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்தை விட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன் அதே நேரத்தில் என்னைப்போன்ற உடல் ஊனமுற்றவர்களுக்கு உறுதுணையாகவும் இருக்கிறேன் என்று சொல்லும் வெங்கடபூபதியின் கதையை கொஞ்சம் பார்ப்போமா.தேனி மாவட்டம் வடபுதுப்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடபூபதி.விவசாய குடும்பத்தில் பிறந்தவர்.
 
வீட்டின் மீதான பற்றைவிட நாட்டின் மீதான பற்று காரணமாக படிப்பு முடித்த கையோடு ராணுவத்திற்கு சென்று சிறிது காலம் பணியாற்றினார்.பின்னர் சொந்த ஊர் திரும்பியவருக்கு இயற்கை விவசாயத்தின் மீது நாட்டம் ஏற்பட்டது.இதற்காகவே உழவர் மன்றம் துவங்கி இயற்கை விவசாயம் தொடர்பான வேலைகளை மும்முரமாக செய்துவந்தார்.ஒத்தகருத்து கொண்ட விவசாயிகளை ஒருங்கிணைத்தார்.
 
 
இப்படி சுறுசுறுப்பாக இயங்கிவந்த வெங்கடபூபதி விவசாயத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் போதுதான் எதிர்பாரதவிதமாக அந்த விபத்து நடந்தது.
 
இரு சக்கரவாகனத்தில் சென்ற இவர் மீது பின்னால் வந்த பஸ் மோதியதில் இடுப்பு எலும்பு முறிந்தது.மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவோமோ இல்லையா என்பதை தெரிந்து கொள்ளவோ இவர் மருத்துவமனைக்கு பதினைந்து லட்ச ரூபாய் வரை இழக்கவேண்டி வந்தது.
 
நீங்கள் ஒரு முதுகு தண்டு வடம் பாதித்த நோயாளி இனி இடுப்புக்கு கீழ் உள்ள உங்கள் அவயங்கள் செயல்படாது என்று மருத்துவமனையில் சொல்லிவிட்டனர்.
 
இந்த வார்த்தையை ஜீரணிக்கமுடியவில்லையே இனிவரும் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என நொந்து போன வெங்கடபூபதி தற்கொலை முயற்சியை மேற்கொண்டார்.ஆஸ்பத்திரியில் இருந்ததால் சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார்.
 
மனபலம் பெறுவதற்கும் சக்கர நாற்காலியில் இருந்தபடி வாழப்பழகுவதற்கும் தென்காசியில் உள்ள அமர்சேவா சங்கத்திற்கு அனுப்பிவைத்தனர்.
 
அங்கே வாசலில் இருந்த ஒரு பெரியவர் வாங்க வெங்கடபூபதி நான்தான் ராமகிருஷ்ணன் என்று சொல்லி வரவேற்றார்.
 
வணக்கம் போட்டுவிட்டு உள்ளே போய் யார் இவர் என விசாரித்த போதுதான் இந்த அமர்சேவா சங்கத்தை தோற்றுவித்தவரே இவர்தான் என்று தெரிவித்தனர்.
 
நமக்காவது இரண்டு கைகள் இருக்கிறது ஆனால் இவருக்கு கால்கள் மட்டுமின்றி கைகளும் அல்லவா செயல்படவில்லை.இருந்தும் இவ்வளவு பேரை வாழவைக்கிறாரே என்று எண்ணியதும் திரும்ப வெளியே வந்து அவரை என் இருகைகூப்பி வணங்கினேன்.
 
என் வாழ்க்கையில் நம்பிக்கை வரும்படியாக நிறைய பேசியவர் உங்களால் இந்த சமூகத்திற்கு ஆகவேண்டியது நிறைய இருக்கிறது என்று சொல்லி ஆறு மாதகாலம் பயிற்சி கொடுத்தார்.
 
அது ஒரு குருகுலவாசமாகவும் அவரையே என் குருவாகவும் ஏற்றுக்கொண்டேன்.குருவின் வழியில் நின்று நாமும் நாலு பேருக்கு நல்லது செய்யவேண்டும் என்று உறுதி பூண்டேன்.
 
தேனி வடபுதுப்பட்டிக்கு நம்பிக்கையுடன் திரும்பினேன்.
 
சக்கர நாற்காலியும் என் தாய் சுப்புலட்சுமியும் துணை நிற்க குருநாதர் பெயரில் ராம்ஜி பொதுநல அறக்கட்டளையை துவங்கினேன்.
 
யாரிடமாவது நன்கொடை வாங்கினாலோ எதிர்பார்த்தாலோ இருக்கும் அன்பும் நட்பும் கெட்டுவிடும் என்பதால் யாரிடமும் பணம் எதிர்பார்ப்பது இல்லை என்பதை கொள்கையாக கொண்டேன்.
 
என் வீட்டையே பயிற்சி கூடமாக்கினேன் தையல் மெஷின்கள் மற்றும் கம்ப்யூட்டர் மெஷின்கள் வாங்கிப்போட்டு உடல் ஊனமுற்றவர்களுக்கும் மற்றம் ஏழை எளிய பெண்களுக்கும் பயிற்சி கொடுத்தேன்.
 
என் முதுகெலும்பு உடைந்தாலும் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை விட்டுவிடாமல் ஆள்வைத்து செய்துவருவததால் எனது அறக்கட்டளைக்கான செலவுகளை விவசாய வருமானம் ஈடுகட்டி வருகிறது.
 
விவசாயத்தை இன்னும் விரிவாக செய்யவேண்டும் இதன் மூலம் வரக்கூடிய வருமானத்தை கொண்டு அறக்கட்டளையை விரிவுபடுத்த வேண்டும்.
 
இதுவரை அறக்கட்டளையில் வழங்கப்பட்ட தையல் மற்றும் கணணி பயிற்சி பெற்ற இருநூறு பேர் வெளியேறி சுயமாக சம்பாதித்து கவுரமாக வாழ்ந்துவருகின்றனர். இப்போது இருநூறு பேர் பயிற்சி பெறுகின்றனர்.இந்த இருநூறு பேர் இரண்டாயிரம் பேராக மாறவேண்டும்,நடமாட முடியாதவர்கள் அறக்கட்டளை வளாக கட்டிடத்திலேயே தங்கி பயிற்சி பெறவேண்டும் இதுதான் என் கனவு என் குருவிற்கு செலுத்தும் காணிக்கை என்று சொல்லும் வெங்கடபூபதியிடம் பேசுவதற்கான எண்:7871367699.
 
 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • Replies 106
  • Created
  • Last Reply

லாட்டரி சீட்டு விற்றவர் இன்று ஐ.ஏ.எஸ்.,அமெரிக்க அதிபர் அளித்த கவுரவம்

 

Tamil_News_large_1100313.jpg

 

காரைக்குடி:“நான் கற்ற கல்வியால் தான் எனக்கு அமெரிக்க அதிபரின் மாளிகையில் கவுரவம் கிடைத்தது,” என காரைக்குடியில் வருமான வரி இணை கமிஷனர் நந்தகுமார் பேசினார்.

காரைக்குடி அருகே ஸ்ரீராம்நகர் யுனிவர்சல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவன ஆண்டு விழா நடந்தது.
 
இணை கமிஷனர் நந்தகுமார் பேசியதாவது:நாம் சாப்பிடுவதில் கூட நல்லவற்றை தேர்வு செய்கிறோம். ஆனால் படிப்பு விஷயத்தில் மட்டும் பிள்ளைகளின் விருப்பத்திற்கு ஏற்ற வாய்ப்பை தருவதில்லை. வாழ்க்கையை எட்டிப்பிடிக்கும் போது கிடைப்பதுடன் நின்று விடுகிறோம். சிறந்த கல்வியை தேர்வு செய்வது கட்டாயம்.
 
நான் எனது சிறுவயதில் வீட்டுப்பாடம் கொடுத்தால் எழுதத் தெரியாது. ஆறாம் வகுப்புடன் என் படிப்பு நின்றது. பின், லாட்டரி சீட்டுக்கள் விற்பனை, மெக்கானிக் ஷாப், ரேடியோ பழுதுபார்த்தல் பணிகளை செய்தேன். படிப்பை நிறுத்திய பின் தான் அதன் அருமை தெரிந்தது. பணி செய்து கொண்டே படித்தேன். அரசுக் கல்லுாரியில் பி.ஏ., (ஆங்கில இலக்கியம்) சேர்ந்தேன். கஷ்டப்பட்டு தேர்ச்சி பெற்றேன். கடந்த 2004ல் 12 லட்சம் பேர் எழுதிய சிவில் சர்வீஸ் தேர்வில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றேன்; ஐ.ஏ.எஸ்., பணியில் சேர்ந்து பின், விருப்பத்தின் அடிப்படையில் வருமான வரித்துறையில் பணிபுரிகிறேன்.
 
வீட்டிலிருந்து சாப்பிட ஓட்டலுக்கு 5 கி.மீ., நடந்தே சென்றேன். கல்வி தந்த வளர்ச்சியால் எனக்கு பிரதமர், ஜனாதிபதி அளித்த விருந்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. சாதாரண குடும்பத்தை சேர்ந்த நான் உத்தரபிரதேச தேர்தல் பார்வையாளராக இருந்தேன். என் பணியை அறிந்த அமெரிக்க அதிபர் ஒபாமா என்னை தேநீர் விருந்துக்கு அழைத்து கவுரவப்படுத்தினார். இந்த கவுரவம் அனைத்தும் என் கல்விக்கு தான் கிடைத்தது.இவ்வாறு பேசினார்.
 
பாரத் கல்வி குழும தலைவர் விஸ்வநாத கோபாலன், இணை ஒருங்கிணைப்பாளர் ஆதீனம், கேந்திர வித்யாலயா பள்ளி முதல்வர் கல்யாணராமன் பங்கேற்றனர்.
 
Link to comment
Share on other sites

முகம் நூறு: இவர்களும் மனிதர்களே!

 

roots_2174031g.jpg

 

roots1_2174030g.jpg

 

சென்னை வில்லிவாக்கம் காய்கறி மார்க்கெட்டுக்குள் நுழைந்து திரும்பியதுமே எதிர்ப்படுகிறது ‘ரூட்ஸ்’ என்கிற அந்தக் கடை. அமல்ராஜ், யோக அரசகுமாரன், மணிகண்டன் மூவரும் காய்கறிகளை அடுக்கிவைப்பதிலும் வாடிக்கையாளர்களைக் கவனிப்பதிலும் மும்முரமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவிபுரிய மணிகண்டனின் அம்மா கமலம்மாளும் ராஜசேகரின் அம்மா மல்லிகாவும் உடனிருக்கிறார்கள். தங்கள் கடையைக் கடந்து செல்கிற அனைவரையும் இன்முகத்துடன் அணுகுகிற இந்த மூவரும் Schizophrenia என்கிற மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, அதற்காக இப்போதும் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அவர்களே சொன்னாலும் நம்பமுடியவில்லை.
 
சமூகத்தின் பார்வையில்
 
மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து இந்தச் சமூகமும் ஊடகங்களும் ஏற்படுத்தி வைத்திருக்கும் பிம்பம்தான் இந்த நம்பகமின்மைக்குக் காரணம். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்றாலே சட்டையைக் கிழித்துக்கொண்டு ஓடுவதும் பார்க்கிறவர்களை எல்லாம் அடிப்பதுமாகவே சித்திரிக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் மனநலம் பாதிக்கப்பட்டால் அதற்குத் தகுந்த சிகிச்சை எடுத்துக் கொண்டு அவர்களும் மற்றவர்களைப் போல் இயல்பான வாழ்க்கையை வாழலாம். மனநலப் பாதிப்பின் உச்சத்தில் சிலர் இப்படி உக்கிரமாக நடந்துகொள்ளலாம். ஆனால் அதையும் மருந்து, மாத்திரைகளின் மூலமாகக் கட்டுக்குள் வைக்கலாம்.
 
“மற்ற நோய்களைச் சாதாரணமாக எதிர்கொள்கிற நாம், மனநலம் பாதிக்கப்பட்டவர்களைத் தீண்டத்தகாதவர்கள் போல் ஒதுக்கி வைப்பது எந்த விதத்தில் நியாயம்? அவர்களும் மனிதர்கள்தானே?” என்று கேட்கிற பொற்கொடி பழனியப்பன், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக சென்னையில் ‘பெட்டர் சான்ஸஸ்’ (better chances) என்கிற அமைப்பை நடத்திவருகிறார்.
 
தான் நடத்துகிற அமைப்பை மறுவாழ்வு மையம் என்று சொல்வதைப் பொற்கொடி விரும்புவதில்லை. காரணம் இங்கே மன நலம் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தும் அறைகள் இல்லை, அவர்களைக் கட்டிலோடு கட்டிப்போட்டுச் சிகிச்சையளிக்கும் முறைகள் இல்லை. அவர்களை அவர்களின் இயல்போடு செயல்பட அனுமதிப்பதுதான் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை விரைவில் குணப்படுத்தும் மருந்து என்கிறார் பொற்கொடி.
 
தேவை விழிப்புணர்வு
 
பொதுவாகத் தங்களுக்கு ஏற்படுகிற உடல் சார்ந்த நோய்களை வெளியே சொல்கிற மக்கள், மனநலம் சார்ந்த சிக்கல் என்றால் குடும்பத்துக்குள்ளேயே மறைத்துவிடுவார்கள். இன்னும் சிலர் சமூகத்துக்குப் பயந்து பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சையளிக்கவும் வெளியே அழைத்துவர மாட்டார்கள். இப்படியான அணுகுமுறை முற்றிலும் தவறு என்று சொல்லும் பொற்கொடி, தன்னிடம் வருகிறவர்களை மூன்றாவது கோணத்தில் இருந்து அணுகுகிறார். இதுவே அவர்களை மனதளவில் மீட்டெடுக்கும் என்று உறுதியுடன் நம்புகிறார்.
 
“மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் தருவதுடன் அவர்கள் மனதுக்குப் பிடித்தச் செயல்களைச் செய்யச் சொல்லி உற்சாகப்படுத்தலாம். அவர்களுக்குப் பிடித்த இடங்களுக்கு அழைத்துச் செல்லலாம். அவர்களின் கற்பனைத் திறனைச் செயல்படுத்துவதற்கு வழி ஏற்படுத்தித் தரலாம்” என்று வழிகாட்டும் பொற்கொடி, தன் அமைப்பில் இருக்கிறவர்களை உற்சாகப்படுத்தப் பூங்காக்களுக்கு அழைத்துச் செல்கிறார். படம் வரையவும், கவிதை எழுதவும் உற்சாகப்படுத்துகிறார். அவர்கள் மன நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அடிக்கடி நினைவுபடுத்தாமல் முடிந்தவரை அவர்களை இயல்பாக இருக்க அனுமதிக்கிறார்.
 
கைகொடுக்கும் காய்கறி கடை
 
மனநலம் பாதிக்கப்பட்டவர்களை இந்தச் சமூகத்துடன் பிணைக்கும்போதுதான் அவர்கள் தங்கள் சிக்கலில் இருந்து எளிதில் விடுபட முடியும். அதன் ஒரு கட்டமாகத் தன் அமைப்பில் இருக்கிற மூன்று பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களே சுயமாகக் காய்கறி கடை நடத்துகிற ஏற்பாட்டைப் பொற்கொடி செய்துகொடுத்திருக்கிறார்.
 
உடல் நலத்துடனும் தொடர்புடையது மன நலம். அதனால் தன்னிடம் இருக்கிற மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்குக் காய்கறி சூப் செய்துகொடுப்பது பொற்கொடியின் வழக்கம். அதற்காக அருகில் இருக்கும் வில்லிவாக்கம் காய்கறி மார்க்கெட்டுக்குச் சென்று அங்குக் கடை வைத்திருப்பவர்களிடம் காய்கறிகளைத் தானமாகப் பெறுவார்கள். அப்போது அந்தக் கடைகளை நிர்வகிப்பவரிடம் மன நலம் பாதிக்கப்பட்டவர்களை வைத்து ஒரு டீக்கடை நடத்தத் திட்டமிட்டிருப்பதாகப் பொற்கொடி சொன்னார். டீக்கடை நடத்துவது நடைமுறையில் சாத்தியம் இல்லை, அதற்குப் பதில் காய்கறி கடை நடத்தலாம் என்று அந்த நிர்வாகி சொல்ல, இனிதே தொடங்கியது வேர்களின் பயணம். ‘ரூட்ஸ்’ கடையில் இருக்கிறவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் என்று தெரிந்தும் அக்கம் பக்கத்துக் கடைக்காரர்கள் அவர்களை அன்புடன் அணுகுகிறார்கள். இந்த அன்பும் கனிவும் தங்களுக்குப் பிடித்திருப்பதாகச் சொல்கிறார் அமல்ராஜ்.
 
அரசியல் ஆர்வம்
 
அமல்ராஜின் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் விவாகரத்தாகிவிட்டது. அம்மாவுடன் வசிக்கும் அமல்ராஜுக்கு 24 வயது. பள்ளி சென்று கொண்டிருந்தவர் திடீரென மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார். எப்போதும் தனிமை, மாற்றி மாற்றி பேசுவது, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத செயல்பாடுகள் என்று இருந்தவர், தொடர்ச்சியான சிகிச்சையால் ஓரளவுக்குத் தேறிவந்தார். அப்போதுதான் ‘பெட்டர் சான்ஸஸ்’ பற்றி கேள்விப்பட்டுப் பொற்கொடியைச் சந்தித்தார். அப்போதும் அவருக்கு நம்பிக்கை இல்லாமல் முதலில் தனியாகவும் பிறகு தன் அம்மாவுடனும் வந்து அமைப்பின் செயல்பாடுகளைக் கவனித்திருக்கிறார். பிறகுதான் அமைப்பில் இணைந்தார். இப்போது இந்த அமைப்பின் நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்கிறார். காய்கறி கடையிலும் முழு ஈடுபாட்டுடன் பணிபுரிகிறார்.
 
“எனக்குப் படம் வரைவது பிடிக்கும். எங்கள் அமைப்பு இயங்கும் கட்டிடத்தில் இருக்கிற படங்கள் அனைத்தும் நான் வரைந்தவைதான்” என்று சொல்லும் அமல்ராஜுக்கு அரசியலில் ஈடுபடும் ஆசையும் இருக்கிறதாம்!
 
தொழிலதிபர்
 
கரையான்சாவடியைச் சேர்ந்த யோக அரசகுமாரனுக்குக் கவிதைகள் எழுதுவதில் அலாதிப் பிரியம். பள்ளி நாட்களில் நடந்த சில சம்பவங்களால் இவருக்குப் பேய் பிடித்துவிட்டது என்று சொல்லித் தனிமைப்படுத்தி இருக்கிறார்கள். பிறகு மன நல மையங்களில் சேர்க்க அங்குப் பூட்டிய அறைக்குள் தனிமைப்படுத்தப் பட்டிருக்கிறார். தொடர்ச்சியான சிகிச்சையால் அவற்றில் இருந்து மீண்டு வந்திருக்கும் யோகா, நிச்சயம் பெரிய தொழில்முனைவோராக மாறுவேன் என்கிறார்.
 
“நான் இதே போலப் பல கடைகளை நிர்வகிக்கும் முதலாளியாக மாறுவேன். என்னால் எதையும் சாதிக்க முடியும்” என்று சொல்கிற யோக அரசகுமாரனின் வார்த்தைகளில் அரச குமாரனின் கம்பீரம்!
 
நிலையான புன்னகை
 
ஐம்பது வயதாகும் மணிகண்டனுக்குப் பிளாட்பாரமே வீடு. அம்மா இருந்தாலும் எதிலுமே பற்றற்ற தன்மை. குளிக்காமல், வீட்டுக்கு வராமல் வருடக் கணக்கில் அலைந்துகொண்டிருந்தவர் இப்போது காய்கறி கடையைக் கவனித்துக் கொள்வதில் அவருடைய அம்மா கமலம்மாளுக்கு அத்தனை மகிழ்ச்சி. எதைக் கேட்டாலும் சிரிப்பைத்தான் பதிலாகத் தருகிறார் மணிகண்டன்.
 
“இந்தச் சிரிப்பு எப்போதும் நிலைத்திருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு. இப்படிச் சிரிக்கிற முகங்கள் அதிகரிக்க வேண்டும்” என்று பொறுப்போடும் அக்கறையோடும் சொல்கிறார் பொற்கொடி. கடையில் களைகட்டுகிறது காய்கறி வியாபாரம்!
 
Link to comment
Share on other sites

கல்லுப்பட்டி கோபாலய்யா...

 

Tamil_News_large_110175720141028200535.j

 

தான் பிறந்த மண்ணுக்கும், தான் சார்ந்த மனித சமூகத்திற்கும் நித்தமும் ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்துடன் இரவு பகல் பாராது செயல்படும் 83 வயது இளைஞர் ராஜகோபால் பற்றிய பதிவுதான் இது.
 
தங்களது வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் வழிகாட்டும் மனிதர் குல மாணிக்கமாக கருதும் அந்த பகுதி மக்கள் அவரை மிகவும் மரியாதையுடன் கோபாலய்யா என்றே குறிப்பிடுகின்றனர்.
 
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் தமிழாசிரியராகவும் தலைமையாசிரியராகவும் இருந்து ஒய்வு பெற்றவர்.விவசாயத்தை உயிராக நேசிக்கும் குடும்ப பின்னனி கொண்டவர் என்பதால் ஒய்வு பெற்றதுமே கலப்பையை எடுத்துக்கொண்டு களத்தில் இறங்கிவிட்டார்.
 
இவர் விவசாயத்தில் இறங்கிய போதுதான் ஒன்றை கவனித்தார்.
 
1955 -60 வது ஆண்டுகளில்தான் பசுமைப்புரட்சி என்ற பெயரிலும் நவீன விவசாயம் என்ற பெயரிலும் விவசாயம் ரசாயாணமாக்கப்பட்டது.விளை பொருட்கள் நஞ்சாக்கப்பட்டது.
 
அதுவரை பராம்பரிய விவசாயமே நடைபெற்றது.விதைத்துவிட்டு வந்தால் போதும் பிறகு அறுவடைக்கு மட்டுமே போய்க்கொண்டிருந்த காலமது.
 
மண்ணுக்குள் இருந்து நுண்ணுயிர்கள் எல்லாம் பூச்சிக்கொல்லி மருந்துகளால் தன் சக்தியையும் ஜீவனையும் இழந்திருந்தது.
 
இப்போது பராம்பரிய விவசாயம் செய்துவந்த அந்த தலைமுறை முடங்கிப் போய்விட்டது. இப்போது விவசாயம் செய்துவரும் மற்றும் செய்யவரும் புதியவர்களுக்கு பராம்பரிய விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாத நிலை.ரசாயண உரங்களுடன் மட்டுமே உறவாட தெரிந்த கொடுமை.
 
பூச்சிகளிடம் இருந்து காப்பாற்றுகிறோம் என்று சொல்லி திராட்சை,முட்டைகோஸ் போன்ற உணவு பொருட்களை பூச்சி கொல்லி மருந்தில் முக்கி முக்கி எடுக்கிறார்கள்.இதன் காரணமாக என்னதான் கழுவி சாப்பிட்டாலும் அதனுள் ஊடூருவிக்கிடக்கும் ரசாயண நஞ்சு நம் கணையத்தில் இருந்து கர்ப்பப்பை வரை பிரச்னையை ஏற்படுத்தத்தான் செய்யும்.
 
இது திராட்சைக்கு மட்டுமில்லை ரசாயணமருந்துகள் தெளித்து உருவாக்கப்படும் எல்லா விதமான காய்கறிகள் பழங்கள் என்று எல்லாவற்றுக்கும் பொதுவானதே.
 
இதன் காரணமாக எனக்கு சொந்தமான தோட்டத்தில் பழைய பராம்பரிய முறையிலான விவசாயத்தை மட்டுமே மேற்கொள்கிறேன்.வீரிய ரகங்களை விட்டுவிட்டு நாட்டு ரக காய்கறிகளை பயிர் செய்கிறேன்.விளை குறைவாக கிடைத்தாலும் பராவாயில்லை மக்களுக்கு நஞ்சில்லாத உணவுப்பொருளை கொடுக்கும் திருப்தி ஏற்படுகிறது.
 
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமான முறையில் இயற்கை விவசாயம் செய்வது எப்படி என்பதை சொல்லித்தருகிறேன் அன்று மதியமே இயற்கை உணவு விருந்தும் வழங்குகிறேன் அதன் செயல்முறையுைம் சொல்லித்தருகிறேன்.
 
இப்படி வார்த்தைக்கு வார்த்தை இயற்கையை போற்றும் ராஜகோபால் கடந்த 18 ஆண்டுகளாக மதுரை அரவிந்த மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண்சிகிச்சை முகாமினை நகர் நல கமிட்டி என்ற அமைப்பின் மூலமாக நடத்திவருகிறார்.இந்த முகாமின் மூலம் இதுவரை 26 ஆயிரம் பேர் பலன் பெற்றுள்ளனர்.14 ஆயிரம் பேர் அறுவை போன்ற சிகிச்சை பெற்றுள்ளனர்.
 
எந்த நேரமும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டு இருக்கும் இவரது அடுத்த கனவு கல்லுப்பட்டியில் இயற்கை வைத்தியசாலை அமைக்கவேண்டும் என்பதாகும்.இவருடன் பேசுவதற்கான எண்:98421 75940.
 
 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

குரோம்பேட்டையில் ஒரு வாழும் தெரசா!

 

Tamil_News_large_1110310.jpg

 

எந்திர வாழ்வின், தந்திர ஜாலங்களுக்கு நடுவே, நேசத்தின் நீள்விரல்களால், பாசத்தை புரியவைக்கும் பாரதியின் புதுமை பெண்... குரோம்பேட்டை செல்லம்மாள்.' அரசனாக இருந்தாலும், பணம் நகர்த்தாமல், நகராது அவன் பிணம்' என்னும் நிலை இருக்கும் நகரத்தில், நாதியற்று தவிக்கும் ஏழைகளின் ஈமக்காரியங்களுக்கு, 'நான் உண்டு, உனக்கென்று' நாடி வருபவர் தான் செல்லம்மாள்.'செல்லம்மாள் வந்தால், நாலு பேருடன் சேர்ந்து நம்பிக்கையும் கூடவரும்' என, பகுதிவாசிகள் கூறி, புல்லரிக்கின்றனர்.
குரோம்பேட்டையில் வசிக்கும் செல்லம்மாளை சந்தித்தோம்.
 
''எம்பெருமான் முருகன் விட்ட வழியிலே நான் போறேன். அவனோட கிருபை இல்லாம, என்னால என்ன செய்ய முடியும்?'' என, மேல் நோக்கி, கைகுவிக்கிறார்.அவன் கிருபை:''அப்போவெல்லாம்... நாங்க ரொம்ப வீரியத்தோட இருந்தோம். சாரதா வெங்கட்ராமன், கோமளா சீனிவாசன், சரோஜினி வரதப்பன்னு சில, சேவகிகள் எங்களோட தோள் சேர்ந்து, விவேகத்தோட நின்னாங்க. எங்களோட மாதர் சங்கம்னா, எங்க பகுதியில எல்லாருக்கும் தெரியும். நான் சொல்றது... 1975ல,'' என சொல்லி, தன் பழைய நினைவுகளில் மூழ்கினார்.
 
''அப்ப, துவங்குன சமூக வாழ்க்கை இன்றைக்கும் போய்க்கிட்டு இருக்கு. எங்க ஐயர் (தன் கணவரை இப்படி தான் சொல்கிறார்) இருந்த வரை, நான் பெரிதாக அலைந்த தில்லை. அவர் போன பின், நான் மனதால் செத்துக் கிடந்தேன். ஒருநாள், ஒரு சிறுவன் வந்தான். அவன் உடலெல்லாம் விபூதி.''நீ ஏன் என்னை வந்து பார்க்கவே இல்லை?'' என, கேட்டான்.''நீ தான் என்னை, அனாதையாக்கி விட்டாயே,'' என்றேன்.''நான் இருக்கிறேன் வா!'' என்றான்.விழித்து பார்த்தால் கனவு.
 
அதற்கு முன், பெருமாளை தான் வணங்கி வந்தேன். பின், மகா பெரியவா கூட, முருகனுக்கு கோவில் கட்ட சொன்னார். எல்லாம் அவன் கிருபை. அவன் விருப்பப்படியே, பகுதிவாசிகள் சேர்ந்து, அவனுக்கு 'குமரன் குன்றம்' எழுப்பினோம்.அன்று முதல், நிர்க்கதியாய் நிற்கும் யாரையாவது அழைத்து வந்து, என்னிடம் சேர்க்கிறான். என்னை இயக்க, அது தான் அவனுக்கு தெரிந்த வழி போலும்.என்னை சந்திப்பவர், உண்மை சொன்னால், என்னால் முடிந்தவற்றை, செய்கிறேன். பொய்யுரைத்தால், ஒருவேளை சாப்பாடு போட்டு, அனுப்பி வைத்து விடுவேன். நான் பெரிய பணக்காரி இல்லை. எனக்கு வரும் ஒரே வருமானம், 5,000 ரூபாய் வாடகை மட்டுமே.எங்க குமரன் குன்றத்துல கந்த சஷ்டி விழாவை, அன்ன தானத்தோட சிறப்பா நடத்தினேன். நான், ஒரு முதியோர் இல்லமும், பெண்கள் விடுதியும் நடத்துறேன். அவங்களுக்கு செலவாகிற தொகையை மட்டும் தான், அவங்க கிட்ட வசூலிக்கிறேன்.
 
எங்க பகுதியில, நிறைய பெண்கள் வேலைக்கு போறாங்க. அவங்களோட குழந்தைகளுக்காக, நானே ஒரு இலவச காப்பகம் நடத்துறேன். இப்போ, 60 குழந்தைகள், எங்க காப்பகத்துல இருக்காங்க. அவங்களை நல்வழிப்படுத்த, நாலு ஆசிரியைகளை சேர்த்திருக்கேன். இதுவரைக்கும், நான்கு ஏழைகளுக்கு, சீர் வரிசையோட, பெரிய மனிதர்கள் முன்னிலையில, திருமணம் செஞ்சு வைச்சிருக்கேன். அதுல ஒண்ணு கலப்பு திருமணம்,'' என, அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அந்த பகுதி சமூக சேவகர் சந்தானம் தொடர்ந்தார் இப்படி...
 
''செல்லம்மாவுக்கு, 78 வயதாகுது. இப்போதும், அதிகாலையிலேயே குளிச்சுட்டு, பூஜையெல்லாம் செஞ்சிடுவாங்க. விடிஞ்சதும், அவங்களை தேடி யாராவது வந்திடுவாங்க. அதுல, 'பகுதியில குப்பை கிடக்குது, தண்ணி வரலை'ங்கற மாதிரியான, பிரச்னைகளோட வர்றவங்க அதிகம். உடனே, ஆட்டோ எடுத்துட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்திச்சு பேசுவாங்க. அவங்களும், இவங்க வார்த்தைக்காக, குறைகளை நிவர்த்தி செய்திடுவாங்க. 
 
உணர்வை புரிஞ்சுக்கணும்: இந்த பகுதியில, யார் வீட்டுல சாவு நிகழ்ந்தாலும், முதல்ல செல்லம்மாவுக்கு தான் தகவல் வரும். உறவுகளுக்கு, தகவல் சொல்லி, குளிர்பதன பெட்டி, அமரர் ஊர்தி, மாநகராட்சி சான்று, போலீஸ், சுடுகாட்டுக்கு தகவல் சொல்வது என, அத்தனையையும் ஒருங்கிணைக்கிறது செல்லம்மா தான். சம்பந்தப்பட்டவரோட ஜாதி வழக்கப்படி, ஒரு குறையுமில்லாம ஈமக்காரியம் செஞ்சு, நல்லபடியா முடிச்சு வைப்பாங்க,'' என, நெகிழ்ந்தார்.
 
அதுபற்றி, செல்லம்மாள் சொல்லும் போது, ''இருபது ஆண்டுகளுக்கு முன், இறந்தவர்களை தோள்ல தான் துாக்கிக்கிட்டு போக வேண்டி இருக்கும். பெரும்பாலானவங்களுக்கு, சொந்தக்காரங்க இருக்க மாட்டாங்க. கொள்ளி போட ஆள் கிடைக்க மாட்டாங்க. சுடுகாட்டுல நிறைய பணம் கேட்பாங்க.அப்போவெல்லாம், ஒவ்வொரு வீடா போய், ஆம்பிளைகளை கூப்பிடுவேன். நல்லா அலங்காரம் பண்ணிட்டு, கல்யாண வீட்டுல போய் நிக்கிறது ஒண்ணும் பெரிய விஷய மில்லை. செத்த வீட்டுல நின்னு, அவங்களோட உணர்வுகள்ல பங்கெடுத்துக்கறது தான் புண்ணியம். அதுக்கு ஏன் வர மாட்டேங்கறீங்கன்னு கெஞ்சுவேன்.கடந்த மாதம் இறந்த நாலு பேர்ல, மூணு பேரை எரியூட்டி, ஒருத்தரை புதைச்சிருக்கேன். புதைக்கப்பட்டவர், ஒரு முஸ்லிம் பெரியவர்.இப்போவெல்லாம், ஞானவாபிங்கற அமைப்புல உள்ள ராகவன்ங்கறவர், இலவசமாகவே, ஊர்தி, குளிர்பதன பெட்டி எல்லாம் கொடுக்கிறார். அப்படி, பல பேரோட உதவியாலயும், முருகனோட வழி காட்டுதல்லயும் தான் இதெல்லாம் நடக்குது,'' என்றார். 
 
அவரது குடும்பத்தை பற்றி விசாரித்தபோது, சட்டென உடைந்தார்.முக கண்ணாடி சட்டத்தை விட்டு குதித்த கண்ணீரை துடைத்துவிட்டு,''எனக்கு, கஸ்துாரி என்ற ஒரு மகள் இருந்தாள். அவள், திருமண மாகி ஆறு மாதங்களில், எங்களை விட்டு பிரிந்தாள். அவள் பிரிந்த சோகத்தில், என்னவரும் பிரிந்தார். பின், எத்தனையோ பிள்ளைகளுக்கு, அம்மாவாக்கி, அவர்களுக்காக உழைக்கும்படி, எம்பெருமான் கட்டளையிட்டிருக்கிறான்,'' என, முடித்தவரை, தேடி, ஒருவர் வந்ததும், பிரச்னைகளில் கலந்தார்.
 
Link to comment
Share on other sites

சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு அதிபரான முன்னாள் பியூன்

 

Tamil_News_large_1115714.jpg

 

சண்டிகர்: ஒரு தனியார் நிறுவனத்தில் பகல் பொழுதில் அலுவலக உதவியாளராக (பியூன்) பணிபுரிந்தவர், தன் கடினமான உழைப்பால், இன்று இரண்டு சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு உரிமையாளராகி உள்ளார்.
 
இமாச்சல பிரதேசத்தில் பிறந்த சோட்டு சர்மா, அங்குள்ள கல்லூரியில் பி.ஏ., வரை படித்தார். படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால், அண்டை மாநில தலைநகர் சண்டிகருக்கு வேலை தேடி வந்தார். அங்குள்ள ஒரு தனியார் கம்ப்யூட்டர் மையத்தில், அலுவலக உதவியாளர் பணியில் சேர்ந்தார்.
 
கம்ப்யூட்டர் கல்வி படித்தால், நல்ல வேலை கிடைக்கும் என்பதை அறிந்து, பகல் பொழுதில் பியூன் வேலை செய்து, இரவு நேரத்தில், வெறும் வயிற்றுடன் கம்ப்யூட்டர் கல்வி பயின்றார். கம்ப்யூட்டர் மையத்தில் வேலை செய்ததால், வேலை நேரத்தின்போது காலியாக உள்ள கம்ப்யூட்டரில், தான் கற்றவற்றை செயல்முறையாக செய்து பார்த்தும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடியும், அறிவை வளர்த்துக் கொண்டார்.
 
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின், 'சாப்ட்வேர் டெவலப்பர்' படிப்பை முடித்ததும், தான் வேலை செய்த மையத்திலேயே, 'டாட் நெட்' ஆசிரியராக சேர்ந்தார். குறுகிய காலத்தில், மாணவர்களிடம் பிரபலமான சோட்டு, 2007ம் ஆண்டு, ஒரு கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தை துவக்கினார். இவரது அணுகுமுறை மற்றும் கற்பித்தலால், சண்டிகர் முழுவதும் சோட்டுவின் கம்ப்யூட்டர் மையம் பிரபலமடைந்தது. இவரது மையத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கம்ப்யூட்டர் கல்வி கற்கின்றனர். இங்கு கற்ற மாணவர்கள், முன்னணி நிறுவனங்களில் நல்ல ஊதியத்தில் பணிபுரிகின்றனர்.
 
கடந்த 2009ம் ஆண்டு மொகாலியில், சொந்தமாக இடம் வாங்கி, சாப்ட்வேர் நிறுவனத்தை துவக்கினார். இதில், 125க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். பெரிய நிறுவனங்களுக்குத் தேவையான மென்பொருள்களை இவரது நிறுவனம் தயாரித்து அளிக்கிறது. சண்டிகரில், 'மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப குரு' என்று சோட்டு சர்மா அழைக்கப்படுகிறார். இவருக்கு, 2007ம் ஆண்டு, இமாச்சல பிரதேசத்தின் கவுரவ விருதை, அப்போதைய இமாச்சல பிரதேச முதல்வர் பிரேம் குமார் தூமல் வழங்கினார்.
 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

அன்று பொட்டல் காடு; இன்று மூலிகை வனம் :இளைஞர்களின் தொலைநோக்கு பார்வைக்கு கிடைத்த வெற்றி

 

gallerye_003135956_1122813.jpg

 

gallerye_003139745_1122813.jpg

 

ஆர்.கே.பேட்டை: சுற்றுச்சூழலை பசுமையாக்க, கிராமத்து இளைஞர்கள் தொலைநோக்கு பார்வையுடன், காடு வளர்த்து வருகின்றனர். பொட்டல் காடாக கிடந்த இடம், இன்று மூலிகை வனமாக மாறியிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
 
ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பம் கிராமத்து பட்டதாரி இளைஞர்கள் ஒன்றிணைந்து, கிராமத்தை பசுமையாக்கும் முயற்சியில் கடந்த ஏழு ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளனர். அவர்களின் தன்னலமில்லாத சேவை மூலமாக, பொட்டல் காடாக இருந்த இடம் இன்று மூலிகை மரங்களால் நிறைந்துள்ளது. அம்மையார்குப்பம் கிராமத்தின் வடக்கு பகுதியில் அய்யப்பன் மலைக்கோவில் உள்ளது. அதன், அடிவாரத்தில் வாரியார் தியான மண்டபம் அமைந்துஉள்ளது.இதை ஒட்டிய சமூக காடு மற்றும் மலை பகுதி கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன், பொட்டல் காடாக வறண்டு கிடந்தது. பொழுதுபோக்க அங்கு சென்ற கிராமத்து பட்டதாரி இளைஞர்கள், அங்கு மரங்களை நட்டு வளர்க்க விரும்பினர். அதன் படி, விளையாட்டாக ஆரம்பித்த காடு வளர்ப்பு திட்டத்தில், இதுவரை ஐந்தாயிரம் மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன. இதில், பறவைகளுக்கு உணவு அளிக்கக்கூடிய, ஆலமரம், அரசு, அத்தி, நாவல், இலுப்பை மரங்கள் வளர்க்கப்படுகின்றன.
 
இவை பல்வேறு காலகட்டங்களில் காய்க்கக்கூடியவை. இதனால், இப்பகுதியில் உள்ள பறவைகளுக்கு, ஆண்டு முழுவதும் பழங்கள் கிடைக்கும். மேலும், இந்த மலைப்பகுதியில் கிரிவலம் துவங்கவும், கிராமவாசிகள் திட்டமிட்டுள்ளனர். இதையொட்டி, மகிழம், நெல்லி, சரக்கொன்றை, வில்வம், நாகலிங்கம், வேம்பு உள்ளிட்ட மூலிகை மரங்களும் இடம்பெற்று உள்ளன.இது தவிர, பயோ டீசல் தயாரிக்க உதவும், பின்னை, புங்கன் மரங்களும், ஆக்சிஜனை அதிகளவில் வெளியிடக்கூடிய, மரங்களும் நடப்பட்டு உள்ளன. கிராம இளைஞர்களின் இந்த ஆர்வ பணியால், பொட்டல் காடு, இன்று மூலிகை வனமாக காட்சியளிப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
 
Link to comment
Share on other sites

  • 1 month later...

பசுமைக் காதலர்கள்

 

green_2273553g.jpg

 

green2_2273552g.jpg

 

பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் எனச் சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் இளைஞர்களுக்கு மத்தியில் சமூகம் சார்ந்த செயல்பாடுகளால் வியக்க வைக்கிறார்கள் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சொக்கலிங்கபுரம் கிராம இளைஞர்கள். ஆச்சரியப் படும் அளவுக்கு அப்படி என்ன செய்து விட்டார்கள் என்றுதானே கேட்கிறீர்கள்?

 
பொறியியல் விவசாயி
 
மழை நீரைச் சேகரிப்பதற் காகவும், நிலத்தடி நீரைப் பாதுகாப்பதற்காகவும் சீமை கருவேல மரங்களை அழிப்பதில் தொடங்குகிறது இவர்களுடைய செயல்பாடு. மழை நீர் சேகரிப்புத் திட்டம் மட்டுமில்லாமல் சொட்டு நீர் பாசனம் மூலம் சாலையோர மரங்கள் வளர்ப்பு போன்ற திட்டங்களையும் இவர்கள் சத்தமில்லாமல் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர். விவசாயத்தைப் பாதுகாக்கும் இந்த யோசனைகள் எப்படி
 
வந்தது எனக் கேட்டதற்குப் பொறியாளர் வினோத் பாரதி இப்படிச் சொல்கிறார். “நான் பொறியியல் படித்திருந்தாலும் எனக்கு விவசாயம் செய்ய ஆசை. ஆனால் தண்ணீர் தட்டுப்பாட்டினால் விவசாயம் செய்ய முடியாமல் மிகவும் சிரமப்பட்டோம். அந்தச் சமயத்தில் தான் சீமை கருவேல மரங்கள் ஆபத்தானவை என்ற தகவலை இணையத்தில் படித்தேன். தொடர்ந்து ஆழமாக படித்தபோது, ஒரு வளர்ந்த கருவேல மரம் ஒரு நாளைக்கு 100 லிட்டர் தண்ணீரையும், காற்றில் இருக்கின்ற ஈரப்பதத்தையும் உறிஞ்சும் தன்மைகொண்டது என்பதைத் தெரிந்துகொண்டேன். அதற்குப் பிறகு கிராம மக்களின் உதவியோடு கருவேல மரங்களை அழித்து வருகிறோம்” என்றார்.
 
சொட்டு தண்ணீர் டோய்!
 
கருவேல மரங்களை அழித்தபிறகு அதற்கு மாற்றாகச் சாலையோரங்களில் மரம் வளர்க்கத் தொடங்கியிருக்கின்றனர் இந்த இளைஞர்கள். அதுவும் மரங்கள் வளர்ப்பதற்கு சொட்டு நீர்ப் பாசன முறையைத் தேர்ந்தெடுத்திருப்பதுதான் பாராட்டுக்குரிய விஷயம். மழைக்கு முக்கிய ஆதாரமே மரம் என்பதால் மரக்கன்றுகளை நட முடிவு செய்திருக்கிறார்கள்.
 
ஆனால், ஏற்கனவே தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால் மரத்துக்கு தண்ணீர் ஊற்றுவது எப்படி என யோசித்திருக்கிறார்கள். அத்தகைய நிலையில் தான், “சொட்டு நீர்ப் பாசன முறையை இணையத்தில் பார்த்துத் தெரிந்துகொண்டோம். எங்களுடைய இந்தத் திட்டத்தை வனத்துறையிடம் கூறியபோது 110 மரக்கன்றுகள் கொடுத்து உதவினார்கள். இந்த மரக்கன்றுகளை வீட்டுக்கொரு மரம் என ஊர் மக்களுக்கு வழங்கியிருக்கிறோம். மீதமிருந்த மரக் கன்றுகளைச் சாலையோரங்களில் வைத்துள்ளோம்” எனக் கூறுகிறார் முத்துக்குமார். இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சேமிப்பும் சேவையே
 
விவசாயத்தையும், மழைநீரையும் மேம்படுத்துவதற்கு இந்த இளைஞர்கள் எடுத்த முயற்சிகளுக்குத் தொடக்கத்தில் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லையாம். மரம் வளர்ப்பு, கருவேல மரங்கள் அழிப்பு போன்ற செயல்பாடுகளைத் தொடர்ந்து இவர்கள் மழைநீர் சேமிப்பு திட்டத்தையும் கிராமத்தில் செயல்படுத்தியிருக்கிறார்கள்.
 
“வரவேற்பு கிடைக்கவில்லை யென்றாலும் தொடர்ந்து நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தோம். ஒருகட்டத்தில் எங்களுடைய விடாமுயற்சியைப் பார்த்த கிராம மக்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க ஆரம்பித்தார்கள்” என்று சொல்கிறார் ராஜ்குமார். இந்த இளைஞர்களைத் தொடர்ந்து சொக்கலிங்கபுரத்துக்கு அருகில் இருக்கும் கிராமங்களான மீனாட்சிபுரம், பெருமாள் தேவன்பட்டியைச் சேர்ந்த இளைஞர்களும் இத்திட்டத்தைச் செயல்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இது போலவே மற்ற கிராம மக்களும் செயல்பட்டால் கூடிய விரைவில் குடிநீர் தட்டுப்பாடு நீங்கி விவசாயம் செழிக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
 
இளைய சமூகம் சரியான பாதையில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறது என்று நிரூபித்துக் கொண்டிருக்கும் இந்த இளைஞர்கள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்கள்தான்.
 
Link to comment
Share on other sites

40 ஆண்டுகளாக பிரியாணி பாபாவின் சேவை: ஒரு கோடி ஏழைகளுக்கு பிரியாணி தானம்

 

briyani_2283370f.jpg

 
 
ஆந்திர மாநிலத்தில் “பிரியாணி பாபா’ என்பவர் 40 ஆண்டுகளாக தினந்தோறும் ஏழை பக்தர்களுக்கு பிரியாணியை அன்னதானமாக வழங்கி வருகிறார். இதுவரை 1 கோடி ஏழைகளுக்கு தானமாக பிரியாணி வழங்கப்பட்டுள்ளது.
 
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மற்றும் கிருஷ்ணா மாவட்டம் சீமலபாடு ஆகிய பகுதிகளில் அதுல்லா ஷரீப் ஷடஜ் கதிரி பாபா (78) என்பவரை அப்பகுதி மக்கள் அன்புடன் ‘பிரியாணி பாபா’என்றழைக்கின்றனர். இவரது குருவான காதர் பாபா கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் சமாதி அடைந்ததாக கூறப்படுகிறது.
 
இவரது சிஷ்யரான பிரியாணி பாபா, குருவின் நினைவாக தினந்தோறும் அவரது தர்காவின் அருகே ஏழை பக்தர்களுக்கு பாசுமதி அரிசி, கோழி, ஆடு இறைச்சிகளால், நெய் சேர்த்து தயாரிக்கப்பட்ட பிரியாணியை அன்னதானமாக வழங்கி வருகிறார். இவரது பக்தர்கள் வழங்கும் நன்கொடை யிலிருந்து ஏழைகளுக்கு பிரியாணி வழங்கப்படுகிறது.
 
பிரியாணி தயாரிக்க ‘பிரியாணி பாபா’வே களத்தில் இறங்கி பணியாற்றுகிறார். இவருக்கு பக்தர்கள், நன்கொடையாளர்கள் உதவி புரிகின்றனர். தினந்தோறும் இந்த இரு பகுதிகளிலும் சுமார் 1,000 ஏழைகளுக்கு பிரியாணி பரிமாறப்படுகிறது. மேலும் விசேஷ நாட்களில் 8,000 முதல் 10,000 பக்தர்கள் வரை பிரியாணி வழங்கப்படுகிறது.
 
இது குறித்து ‘பிரியாணி பாபா’ கூறும்போது, “உணவு என்பது மிக அத்தியாவசியமானது. பக்தர்கள் நன்கொடை அளிப்பதின் மூலம் பல ஏழை மக்களின் பசியை போக்க முடிகிறது. கடந்த 40 ஆண்டு காலத்தில் சுமார் 1 கோடி பக்தர்களுக்கு பிரி யாணியை அன்னதானமாக வழங்கி யிருக்கிறோம். இது தொடர வேண் டும் என்பதே என் கோரிக்கை. நான் ஜாதி, மதங்களை நம்புவ தில்லை. ‘மக்கள் சேவையே மகேசன் சேவை’என்பதை நான் பரிபூரணமாக நம்புகிறேன். என் பக்தர்களுக்கும் ஏழைகளுக்கு சேவை செய்யும்படி அறிவுறுத்தி வருகிறேன்” என்றார்.
 

 

Link to comment
Share on other sites

படிக்கட்டாகும் இளைய தலைமுறை

 

padikkattugal_2287320g.jpg

 

padikkattugal1_2287319g.jpg

 

padikkattugal2_2287318g.jpg

ஆதரவற்றோர்களுக்கு உதவும் மனப்பான்மை நம்மில் பலருக்கு இருக்கும். ஆனால் அதற்கான நேரமும், சூழ்நிலையும் நமக்கு கிடைத்திருக்காது. எங்கே சென்று உதவுவது, யாருக்குச் செய்வது, நம்மை ஏமாற்றி விடுவார்களோ என்று பல விஷயங்களை யோசிப்போம்.

 
கடைசியாக சிக்னல்களிலும் தெரு ஓரங்களிலும் தட்டை நீட்டுபவர்களுக்கு ஒரு ரூபாயைப் போட்டுவிட்டு நம் கடமை முடிந்து விட்டதாக ஆத்ம திருப்தி அடைந்து விடுவோம். பணத்தால் வெல்ல முடியாத அன்பை, நாம் அனைவரும் இணைந்து மனதால் வெல்வோம் என்னும் குறிக்கோளோடு நடைபோட்டுக் கொண்டிருக்கிறது இளைஞர் சேவை அமைப்பான ‘படிக்கட்டுகள்’.
 
இணைந்த இளம் கைகள்
 
மதுரை சுற்றுவட்டாரத்தில் 2012-ல் கல்லூரிப் படிப்பை முடித்த சில இளைஞர்களும், படித்து கொண்டிருந் தவர்களும் ஒருங்கிணைந்து தோற்று வித்ததே ‘படிக்கட்டுகள்’ அமைப்பு. 25 பேர் மட்டுமே சேர்ந்து உருவாக்கிய இந்த அமைப்பில் இப்போது மதுரை, சென்னை, கோவை, ராஜபாளையம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த 150 பெண்கள் உள்ளிட்ட 350 உறுப்பினர்கள் உள்ளனர்.
 
பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் மென்பொருள் பொறியாளர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், கல்லூரி மாணவர்கள் என ஒட்டு மொத்தமாய் வேகம் கலந்த இளமைப் பட்டாளம்தான் இந்தப் படிக்கட்டுகளின் செங்கற்கள்! விருப்பப்படும் எவரும், படிக்கட்டுகளைப் பலப்படுத்தலாம்!
 
செயல் திட்டம்
 
முதியோர் இல்லங்களில், மனநலக் காப்பகங்களில், சாலையோரங்களில் இருக்கும் ஆதரவற்றவர்களுக்குத் தேவையான அடிப்படை உதவியைப் பணமாகவோ பொருளாகவோ அளிப்பது இவர்கள் வழக்கம். ஏழைக் குழந்தை களுக்குக் கல்வி உபகரணங்கள் வழங்கு கிறார்கள், வசதி இல்லாத குழந்தைகளைத் தேர்ந்தெடுத்துப் படிக்கவைக்கிறார்கள். கிராமப்புற, நகர்ப்புற அரசு மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், போட்டிகள், ஆலோசனைகள், கலந்தாய்வுக் கூட்டங்கள் ஆகியவற்றை நடத்துகிறார்கள்.
 
ரத்ததானம் வழங்குவது, ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவது போன்ற சேவைகளில் அதிகக் கவனம் செலுத்துகின்றனர். மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அடிப்படை விஷயங்களைக் கற்பித்தல், நடனப் பயிற்சிகள், சிறப்பு வகுப்புகள், பார்வையற்றோருக்குத் தேர்வு எழுத உதவது எனப் பொருளாதாரம் சாரா சேவைகளும் இவர்கள் பணியில் இடம் பெறுகின்றன.
 
உதவிய ஃபேஸ்புக்
 
சென்னை புழலில் உள்ள வள்ளலார் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் போதிய தண்ணீர் வசதி இல்லாததால் கஷ்டப்பட்டவர்களுக்கு போர்வெல் அமைக்க ரூ.50 ஆயிரம் தேவைப்பட்டிருக்கிறது.
 
https://www.facebook.com/Padikkattugalஎன்னும் முகநூல் பக்கத்தில் படிக்கட்டுகளின் சேவையையும் குழந்தைகளின் தேவையையும் பதிவிட, ஒரே வாரத்தில் ஐம்பதாயிரம் ரூபாய் கிடைத்துவிட்டது. அதை வைத்து, போர்வெல் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். படிக்கட்டுகளின் padikkattugal.org வலைத்தளம் இவர்களாலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது.
 
மாதச் சம்பளம் பெறுகிற 300 உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களது ஊதியத்திலிருந்து மாதம் ஐந்நூறிலிருந்து ஆயிரம் ரூபாய் வரை படிக்கட்டுக்குத் தந்துவிடுகிறார்கள். அதைக் கொண்டு மாதம் ஓர் ஆதரவற்றோர் இல்லத்துக்கும் முதியோர் இல்லத்துக்கும் தேவையானதைச் செய்து கொடுக்கிறார்கள்.
 
எதிர்காலப் பாதை
 
தங்களைப் போன்ற கல்லூரி மாணவர் களைப் பெரிய அணியாகத் திரட்டி ஒன்றிணைந்து ஆதரவற்றோருக்குச் சேவை செய்யும் ஒரே குறிக்கோளுடன் இருக்கிறார்கள் படிக்கட்டுகளின் அத்தனை உறுப்பினர்களும்.
 
ஏழைக் குழந்தைகளுக்கும், ஆதரவற்ற முதியவர்களுக்கும் உதவ ஆயிரமாயிரம் தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால் அவர்களுடன் உட்கார்ந்து நேரம் செலவிட, குழந்தைகளுக்குப் பாடம் போதிக்க, பொது அறிவு சொல்லித்தர, அவர்களின் தனித்திறனை வளர்க்க யாரும் முன்வருவதில்லை!
 
இது போன்ற துடிப்பான, சேவையில் ஆர்வமுள்ள இளைஞர் சமுதாயத்துடன் கைகோத்துப் பயணித்தாலே ஆதரவற்றோர்க்கான பாதைப் பூக்கள் அழகாய் மலரும்.
 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
மதுரையை புதுசாக்கும் இளைஞர் படை
 
 
ilaignar3_2302205g.jpg
முந்நூறு இளைஞர்கள் “வா நண்பா” என்ற இரண்டே வார்த்தையில் ஓரிடத்தில் அணி திரள்கிறார்கள். அரசு இயந்திரங்களால் ஆண்டுக்கணக்கில் கவனிக்கப்படாத பிரச்சினைகளை அரை மணி நேரத்தில் முடித்துவிடுகிறது இந்த இளைஞர் படை.
 
1981 உலகத் தமிழ் மாநாட்டின்போது, மதுரையில் நிறுவப்பட்ட தமிழறிஞர் சிலைகள் நீண்டகாலமாக அழுக்கடைந்து, புதர் மண்டிக்கிடந்தன. சிலைகளைச் சுத்தப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது, ‘சிலைகளை மாநகராட்சியின் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டோம்’ என்று பதிலளித்தது தமிழ் வளர்ச்சித்துறை. மாநகராட்சியோ, ‘இல்லவே இல்லை இன்னமும் தமிழ் வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது’ என்றது.
 
இது எங்கள் வேலை!
 
‘வா நண்பா! இந்த ஞாயிறு சிலைகளைச் சுத்தம் செய்வோம்’ என்று இந்த இளைஞர்கள் களமிறங்கியதும், அவசரமாக ஆவணங்களைத் தேடிய மாநகராட்சி நிர்வாகம் பழைய காகிதம் ஒன்றைக் கண்டுபிடித்து, ‘ஆமாம் தமிழ் வளர்ச்சித்துறை சிலைகளை எல்லாம் எங்களிடம் ஒப்படைத்துள்ளது உண்மைதான்’ என்று ஒப்புக்கொண்டு சுத்தப்படுத்தும் பணியில் இவர்களோடு சேர்ந்துகொண்டது. இப்போது மதுரையில் உள்ள தமிழறிஞர்கள் சிலைகள் எல்லாம் சுத்தமாக, புது வர்ணம் பூசப்பட்டு அழகாகக் காட்சி தருகின்றன.
 
‘வா நண்பா! இந்த ஞாயிறு சிலைகளைச் சுத்தம் செய்வோம்’ என்று இந்த இளைஞர்கள் களமிறங்கியதும், அவசரமாக ஆவணங்களைத் தேடிய மாநகராட்சி நிர்வாகம் பழைய காகிதம் ஒன்றைக் கண்டுபிடித்து, ‘ஆமாம் தமிழ் வளர்ச்சித்துறை சிலைகளை எல்லாம் எங்களிடம் ஒப்படைத்துள்ளது உண்மைதான்’ என்று ஒப்புக்கொண்டு சுத்தப்படுத்தும் பணியில் இவர்களோடு சேர்ந்துகொண்டது. இப்போது மதுரையில் உள்ள தமிழறிஞர்கள் சிலைகள் எல்லாம் சுத்தமாக, புது வர்ணம் பூசப்பட்டு அழகாகக் காட்சி தருகின்றன.
 
“சாதி மற்றும் அரசியல் தலைவர்களின் சிலைகளைச் சுத்தம் செய்யவும் பராமரிக்கவும் ஆட்கள் இருக்கிறார்கள். தமிழறிஞர்களைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்குத் தானே கடந்த தலைமுறை ஆட்கள் இந்தச் சிலைகளை அமைத்திருக்கிறார்கள். அப்படியானால் சிலைகளை நாங்கள் தானே பராமரிக்க வேண்டும்” என்று ரொம்ப எளிமையாகப் பதில் சொல்கிறார் ‘வா நண்பா’ குழுவின் செயலாளர் எம்.சி.சரவணன்.
 
வெறும் விளையாட்டல்ல
 
இந்த இளைஞர் குழு உருவானது எப்படி என்று கேட்டபோது, ரகுமான், காளி, சுந்தர் ஆகிய மூவரையும் ஒரு ஜிம்மில் பார்த்து பரிச்சயம் ஏற்பட்டதாகவும் பின்னர் ஞாயிறுதோறும் கிரிக்கெட், வாலிபால் விளையாடுவதற்காக ஒன்றுகூடியதாகவும் சரவணன் கூறினார். ஒரு கட்டத்தில், விளையாட்டுக்குப் பதில் தங்கள் உடல் உழைப்பு மற்றவர்களுக்குப் பயன்படும் வகையில் ஏதாவது செய்யலாமே என்று தோன்றியுள்ளது. பூங்காக்களைச் சுத்தம் செய்வது, மரம் நடுவது என்று இறங்கினார்கள். அந்தப் பணி பிடித்திருந்ததால், புதிய நண்பர்களும், நண்பர்களின் நண்பர்களும் இவர்களோடு சேர்ந்து வேலை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். “இங்கே தலைவர், செயலாளர் பதவி எல்லாம் சும்மா பெயருக்குத் தான். உறுப்பினர்களின் தன்னலமற்ற உழைப்புதான் பெரிது” என்கிறார் சரவணன்.
 
குப்பை போச்சு, மரம் வந்தாச்சு
 
மதுரை மாநகரில் கவனிக்கப்படாத குப்பைகளோ, புதர்களோ இருந்தால் அவற்றை அப்புறப்படுத்திவிட்டு, அங்கே மரக்கன்றுகளை ‘வா நண்பா’ குழுவினர் நடுகிறார்கள். அருகில் உள்ள குடியிருப்பு வாசிகளிடமும் கடைக்காரர்களிடமும் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இவர்கள் தவறுவதில்லை. இதனால் அந்த இடத்தைத் தொடர்ந்து பராமரித்து, மரக்கன்றுகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது போன்ற பணிகளைப் பொதுமக்களே கவனித்துக் கொள்கிறார்கள்.
 
எறும்புக் கூட்டம் போலச் சுறுசுறுப்பாக இவர்கள் செய்யும் வேலையால், ஒவ்வொரு வாரமும் மதுரையின் அவலங்களில் ஒன்று நீங்குகிறது. அன்னை சத்யா அரசு ஆதரவற்றோர் இல்லம், தல்லாகுளத்தில் உள்ள மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, தியாகராசர் பள்ளி, மதுரை மக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் ரேஸ்கோர்ஸ் சாலை, பூங்காக்கள் போன்றவற்றின் தோற்றத்தையே இந்தக் குழுவினர் மாற்றிவிட்டார்கள்.
 
நாங்களும் வரலாமா?
 
ஒவ்வொரு வாரமும் குறைந்தது 15 கல்லூரி மாணவர்கள் புதிதாகச் சேருகிறார்கள். தாங்களும் வரலாமா என்று பொதுஜனங்களும் கேட்கிறார்கள். துடிதுடிப்பான இந்தக் கூட்டத்துக்கு அடுத்த ஞாயிற்றுக்கிழமை என்ன வேலை கொடுக்கலாம் என்று யோசிப்பதற்கே இவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது. “வெள்ளிக்கிழமைக்குள் இடத்தை முடிவு செய்து, எஸ்.எம்.எஸ்., வாட்ஸ்அப், பேஸ்புக் வழியாகத் தகவலைத் தட்டிவிட்டால் போதும், மற்றதை இளைஞர்கள் பார்த்துக் கொள்வார்கள்” என்கிறார் குழுத் தலைவர் ரகுமான்.
 
இக்குழுவில் ஒருவரான அமெரிக்கன் கல்லூரி மாணவர் சிராஜ்தீன், “முன்னாடி எல்லாம் சண்டேன்னா பேஸ்புக், ட்விட்டர்தான் பொழுதுபோக்கு. ‘வா நண்பா’ பற்றி பேஸ்புக் மூலமாதான் தெரிஞ்சுக்கிட்டேன். அவங்களோடு சேர்ந்து வேலை பார்க்கிறது மனசுக்குச் சந்தோஷமாகவும், உடலுக்கு எனர்ஜியாவும் இருக்கு” என்றார்.
 
முதல் நாளில் குப்பையைச் சுத்தம் செய்யத் தயங்கிய சேது பொறியியல் கல்லூரி மாணவர் சிவராமகிருஷ்ணன், மற்றப் பசங்க எல்லாம் ஜாலியா வேலை செய்றதைப் பார்த்துத் தானும் உற்சாகத்துடன் வேலை செய்துள்ளார். ‘அந்த இடம் சுத்தமான பிறகு பார்க்கப் பார்க்க ஆசையா இருந்துச்சு. பெருசா சாதிச்ச மாதிரியான பீல் வந்துச்சு’ என்று சொன்ன அவர் “தொடர்ந்து 5 மாசமா வாரந்தோறும் போய்கிட்டு இருக்கேன். என் கிளாஸ் மேட்ஸ் 10 பேரும் வர ஆரம்பிச்சிருக்காங்க” என்கிறார்.
 
இவர்களின் பணியை ஊக்கப்படுத்தும் விதமாக மாவட்ட வனத்துறை இலவச மரக்கன்றுகளையும், மாநகராட்சி நிர்வாகம் குப்பை அள்ள வாகன உதவியையும் வழங்க முன்வந்திருக்கின்றன.
 
 
Link to comment
Share on other sites

அமைதியாக ஓரு சமூக சேவை: கோவையில் பரஸ்பரம் உதவும் மக்கள் இயக்கம்

 

kovai_1_2304222f.jpg

 

பிறருக்கு உதவ வசதியோ, பதவியோ தேவையில்லை. உதவ வேண்டுமென்ற எண்ணம் இருந்தால் போதும், நிச்சயம் நம்மால் முடிந்த உதவியை செய்ய முடியும் என்கிறது கோவையில் உள்ள பரஸ்பரம் மக்கள் அறக்கட்டளை.
 
சமீபத்தில், பொள்ளாச்சி அருகே உள்ள பழங்குடி மாணவர்கள் பயிலும் இல்லம் ஒன்றுக்கு இந்த அமைப்பு பல்வேறு உதவிகளைச் செய்தது.
 
பரஸ்பரம் அமைப்பினரிடம் கேட்டபோது, பதவி, வருமானம், பொறுப்பு, அந்தஸ்து என எதுவுமே நாங்கள் பார்ப்பதில்லை. உதவி செய்ய நினைத்தால் போதும், நம்மால் முடிந்த ஏதாவது ஒன்றை கொடுத்துதவ முடியும். அதைத்தான் அனைவரும் செய்கின்றனர். வசதி இருப்பவர் பொருளாக உதவுவார். தொழில் தெரிந்தவர் தொழிலாகவே உதவுவார். சிலர் தங்கள் உண்டியல் சேமிப்பைக் கூட எங்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.
 
எங்கள் அமைப்பில் துப்புரவுத் தொழிலாளி முதல் வங்கி மேலாளர் வரை உள்ளனர். இதுதான் பரஸ்பரம் என்பதன் அர்த்தம் என்றனர்.
 
25 வருடங்களுக்கு முன் ரத்த தானத்தை மையப்படுத்தி சில நண்பர்களால் இந்த அமைப்பு உருவானது. இன்று 140 உறுப்பினர்களுடன், கோவையில் மிகப்பெரிய அமைப்பாக மாறியுள்ளது. அமைப்பின் உறுப்பினர்களிடம் பேசும்போது, வேறு,வேறு தொழில்களைச் சேர்ந்த பலரும் ஒன்றாக இணைந்தபோது பெரிய தொகை சேரத் தொடங்கியது. 2005-ல் பரஸ்பரம் மக்கள் அறக்கட்டளையாக பதிவு பெற்றது. ஆதரவற்ற இல்லங்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருவது, கல்லூரியில் படிப்பைத் தொடர முடியாமல் தவிக்கும் மாணவ, மாணவிகளுக்கும் நிதியுதவி செய்வது, கண் தானம், உடல் தானம், உடல் உறுப்பு தானங்களை பெற்றுத்தருவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகளைச் செய்து வருகிறோம்.
 
உடல் தானம், உடல் உறுப்பு தானம், கண் தானம் ஆகியவை மிக முக்கியமானவை. விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் கூட 100-ல் 4 % தான் இதில் வெற்றி உண்டு. தெரிந்த வீடுகளில் துக்க நிகழ்வுகள் ஏற்படும்போது, உறுப்பினர்கள் அங்கு சென்று, அவர்களது மனநிலை அறிந்து, உடல் உறுப்பு தானத்தை எடுத்துக் கூறி சம்மதம் பெறுவர்.
 
அதேபோல கண்தானம் செய்தவர்களுக்கு விழா எடுத்து அங்கீகாரம் செய்கிறோம். இதுவரை சுமார் 350 கண் தானங்களில் எங்களது பங்கு உள்ளது. சுமார் 200 பேருக்கு உடல் தானப் பதிவு செய்து கொடுத்துள்ளோம். நேரடியாக 5 உடல் தானங்களை பெற்றுக் கொடுத்துள்ளோம்.
 
இந்த சமூகத்துக்கு நாம் அனைவருமே கடனாளிகள். அதை யாரும் முழுமையாக திருப்பிச் செலுத்துவதில்லை. குறைந்தபட்சம், கடனுக்கு வட்டியாவது செலுத்த வேண்டும். அதைத்தான் நாங்கள் செய்து வருகிறோம் என்கின்றனர் பரஸ்பரம் உறுப்பினர்கள்.
 
பெரிய பெரிய நோக்கங்களு டன், அவற்றை சத்தமில்லாமல் நிறைவேற்றி சமூக மாற்றத்தை நிகழ்த்தி வருகிறது இந்த மக்களின் இயக்கம்.
 
Link to comment
Share on other sites

  • 4 weeks later...
தந்தையை இழந்தாலும் மன உறுதியை இழக்காத இளைஞன்
 
safik%20965d.jpg
 
வறுமை, கல்வி முன்னேற்றமின்மை, இளம் வயதிலேயே தகப்பனை இழந்த நிலைமை ஏற்படும் போது இக்கால இளைஞர்கள் வேறு பாதைகளில் வழி தவறிச் செல்லும் சம்பவங்களை நாம் கண்டிருக்கிறோம். ஆனால் தன் இளம் வயதிலேயே தகப்பனை இழந்தை கல்முனைக் குடியைச் சேர்ந்த எம்.எஸ்.சபீக் எனும் இளைஞன் வாழ்கையோடு போராடவும் தன் சொந்தக் காலில் நின்று குடும்பத்தைக் காப்பாற்றவும் முனைந்துள்ளார் என்றால் ஆச்சரியப்படத்தக்க விடயமே.
 
இந்த இளைஞன் தன்சொந்தக் காலில் நிற்பதற்காக தெரிவு செய்த தொழில் எறிக்கும் கொடும் வெயிலிலும் ஊர் ஊராக, வீடு வீடாகச் சென்று கறிவேப்பிலைகளை விலைபேசி அவற்றை எடுத்துவந்து கல்முனை பொதுச் சந்தையில் மொத்தமாக விற்பனை செய்து நாளாந்த வருமானம் பெற்று வருகிறார்.
 
நான்கு ஆண்களையும் ஒரு பெண்ணையும் சகோதரர்களாகக் கொண்ட குடும்பத்தை இந்த உழைப்பின் மூலமே இவர் பராமரித்து வருகின்றார். குறைந்தது தினமும் ஒரு தடவை 500 ரூபா வருமானம் பெற்றுவருவருகிறார் எனக் கூறும் இவர் அதனைத் தன் தாயிடம் கொடுத்து விடுவதாகவும் விரைவில் தான் வெளிநாடு ஒன்றுக்கு தொழில் வாய்ப்பைப் பெற்றுச் செல்ல ஆர்வம் கொண்டுள்ளார் எனவும் தெரிவித்தார்.
 
இக்கா இளைஞர்கள் பிழையான வழிகளில் வழி தவறிச் செல்லும் இக்கால கட்டத்தில் தன் சுய உழைப்பின் மூலம் சொந்தக் காலில் வாழ்க்கை நடத்த முனைந்திருக்கும் வயதில் குறைந்த இந்த இளைஞனை பாராட்டாமல் இருக்க முடியாது. நம் நாட்டு இளைஞர்களுக்கு இவர் ஒரு வழிகாட்டி அல்லவா?
 
safik%20967d.jpg
 
safik%20968d.jpg
 
 
 
 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் 400 தடுப்பணைகள் கட்டி விவசாயி சாதனை

 

vi1_2345167f.jpg

 

தேனி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர 400-க்கும் மேற்பட்ட தடுப்பணைகளைக் கட்டி விவசாயி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

 
தேனி மாவட்டம், மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கோம்பை கிராமம். இந்த கிராமம் மலை அடிவாரத்தில் இருப்பதால், மழை மறைவு (மழை பெய்யாத) பிரதேசம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கிராமத்தில் பல இடங்கள் வானம் பார்த்த பூமியாக கிடந்தது. சில இடங்களில் சோளம், கம்பு, கேழ்வரகு என மானாவாரி சாகுபடி மட்டும் நடந்து வந்தது.
 
இந்நிலையில், கோம்பை பேரூராட்சித் தலைவராக கடந்த 1996-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பி.ராமராஜ் என்ற விவசாயி, அப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி மானாவாரி சாகுபடி தவிர, மற்ற காய்கறிகளை சாகுபடி செய்ய, தமிழக அரசுடன் இணைந்து தற்போது வரை சிறியதும், பெரியதுமான நானூறுக்கும் மேற்பட்ட தடுப்பணைகளைக் கட்டி சாதனை படைத்துள்ளார்.
 
தள்ளாத வயதிலும் சுறுசுறுப்பு
 
74 வயதானாலும் இளைஞரைப் போல சுறுசுறுப்புடன் வேலை செய்து வரும் பி. ராமராஜ் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
 
கோம்பை மேடான பகுதி என்பதால், முல்லை பெரியாறு அணையில் இருந்து 18-ம் கால்வாய் வழியாக தண்ணீரைக் கொண்டு வரமுடியில்லை. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டது. பல விவசாயிகள் பிழைப்பு தேடி, வேறு மாவட்டங்களுக்குச் செல்லத் தொடங்கியது எனக்கு வேதனை அளித்தது.
 
இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய நினைத்த நேரத்தில், அரசு 1997-ம் ஆண்டு நதி நீர் பள்ளத்தாக்கு திட்டத்தை, தேனி மாவட்டத்தில் கொண்டு வந்தது. இந்த திட்டத்தில் கோம்பை பேரூராட்சியையும் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டேன். இதனையடுத்து, செயற்கைக் கோள் மூலம் கோம்பை பகுதி வரைபடம் தயாரிக்கப்பட்டது. இதில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் ஓடைகளை கண்டறிந்து, அதன் குறுக்கே எனது பதவிக் காலத்திலேயே 240 தடுப்பணைகள் கட்டப்பட்டன. மானாவாரி காடுகளில் நீரை தேக்க 1500 ஏக்கருக்கு மண் கரைகள் அமைக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டது.
 
பின்னர், தேர்தலில் போட்டியிடாமல் மேற்குமலை தொடர்ச்சி மேம்பாட்டுத் திட்டம் என்ற சங்கத்தை தொடங்கி, அதன் தலைவராக இருந்துகொண்டு தோட்டக்கலை பொறியியல்துறை மூலம் ஆண்டுதோறும் 5 தடுப்பணைகள் வீதம் 10 ஆண்டுகளில் 50 தடுப்பணைகளும், வனத்துறை மூலமாக 48 தடுப்பணைகளும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் விவசாயிகள் பங்களிப்புடன் இரண்டு பெரிய தடுப்பணைகளும் என, இதுவரை 400-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.
 
மேலும் 36 தடுப்பணைகள்
 
தற்போது தோட்டக்கலை பொறியியல் துறை மூலம் 36 தடுப்பணைகள் கட்ட திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மழைநீர் சேமிப்பு, மண்வள பாதுகாப்பு விவசாயிகள் சங்கம் என்ற மற்றொரு புதிய சங்கத்தைத் தொடங்கி சேதமடைந்த தடுப்பணைகளை அரசு உதவியை எதிர்பார்க்காமல், இதுநாள் வரை விவசாயிகள் பங்களிப்புடன் சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
 
இப்பகுதியில் மானாவாரி விவசாயமே நடந்துவந்த நிலையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததால், கடந்த சில ஆண்டுகளாக தென்னை, வாழை, கொத்தமல்லி என மற்ற பயிர்களும் விளைவிக்கப்பட்டு வருகின்றன.
 
வெளியூர் சென்ற விவசாயிகளும் சொந்த ஊருக்குத் திரும்பிவந்து விவசாயத்தில் ஈடுபட தொடங்கி விட்டனர் என்றார்.
 
Link to comment
Share on other sites

ஆஸ்பத்திரியல்ல காந்திமதிநாதனின் ஆஸ்ரமம்...

 

உருக்கி நோய் நீக்கி நிலையம் என்றால் நிறைய பேருக்கு புரியாது காச நோய் ஆஸ்பத்திரி என்றால் சட்டென புரிந்துவிடும்.

 
தமிழகத்தின் முக முக்கியமான ஊர்களில் உள்ளது
 
மதுரை உள்பட ஒன்பது தென் மாவட்டங்களுக்கான காச நோய் ஆஸ்பத்திரி மதுரை தோப்பூரில் உள்ளது
 
காற்றில் பரவக்கூடிய தொற்று நோய் என்பதால் மக்கள் நடமாட்டம் இல்லாத காட்டுக்குள் இந்த ஆஸ்பத்திரி செயல்பட்டு வருவதால் காட்டாஸ்பத்திரி என்று அழைப்பவர்களும் உண்டு.
 
 
மதுரை அரசு ஆஸ்பத்திரியின் காசநோய் பிரிவிற்கு வரக்கூடிய நோயாளிகளில் தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்களை தோப்பூரில் உள்ள இந்த ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைப்பார்கள்.
 
இந்த ஆஸ்பத்திரிக்கு வந்த நோயாளிகளை உடனிருந்து கவனித்துக்கொள்ள உற்ற உறவினர்களே முன்வராத சூழலில் நோய் தின்றது போக மீதி உடம்பை தனிமையும் வெறுமையும் தின்று விரைவில் இறந்து போவார்கள்.
 
அரசாங்க பஸ்கூட அவுட்டரில் இறக்கிவிட்டுவிட்டு சிட்டாக பறந்துவிடுமே தவிர ஸ்டாப்பிங் இருந்தால் கூட ஆஸ்பத்திரிக்குள் வருவது கிடையாது.
 
ஆஸ்பத்திரியை சுற்றி புதர் மண்டிக்கிடக்கும், கண்களில் மட்டும் உயிரை சுமந்து கொண்டு எப்போது சாவோம் என்ற நோயாளிகள் நடைபிணமாக இருப்பார்கள்,ஊழியர்களும் மருத்துவர்களும் வந்த வேகத்தில் வேறு இடம் மாறி சென்றுவிடுவர்.
 
இப்படி பெயருக்கேற்றாற் போல காட்டாஸ்பத்திரியாக பெயருக்கு இயங்கிவந்த தோப்பூர் காசநோய் ஆஸ்பத்திரிக்கு நிலைய மருத்துவ அலுவலர் மற்றும் கண்காணிப்பாளராக காந்திமதிநாதன் நியமிக்கப்பட்டார்.
 
அதுவரை கதிர்இயக்க சிகிச்சை நிபுணராக தலைமை மருத்துவமனைகளில் செயல்பட்டு வந்தவருக்கு தோப்பூர் காசநோய் ஆஸ்பத்திரியில் நிலவிவந்த சூழல் பெரிதும் வேதனையை தந்தது.
 
ஒன்று இதிலிருந்து நாம் மீளவேண்டும் அல்லது இந்த ஆஸ்பத்திரியை இதன் அவல நிலையில் இருந்து மீட்டு எடுக்கவேண்டும்.முதல் விஷயத்தை யார் வேண்டுமானாலும் செய்யலாம் பொதுவாக அதைத்தான் யாரும் செய்வார்கள் ஆனால் இரண்டாவது விஷயத்தை யாரும் நினைத்துகூட பார்க்கமாட்டார்கள் அதை ஏன் நாம் எடுத்து செய்யக்கூடாது என்று எண்ணினார்,களத்தில் இறங்கினார்.
 
முதலில் நோயாளிகளோடு நீண்ட நேரம் பேசி அவர்களுடனே இருந்து உங்களின் மருத்துவன் மட்டுமல்ல உங்களின் நண்பன் உங்களின் சகோதரன் என்பதை உணர்த்தினார்.சுத்தம் சுகாதாரமே முக்கியம் என்பதை வலியுறுத்தினார்.
 
ஆஸ்பத்திரி கட்டிடத்தில் மண்டிக்கிடந்த குப்பை கூளங்களை சுத்தம் செய்து இடிபாடுகளை சீரமைத்து ஆண்டுக்கணக்கில் வெள்ளை அடிக்காமல் கிடந்த சுவர்களுக்கு வெள்ளை அடித்ததும் கட்டிடத்திற்கு கம்பீரமும் நோயாளிகளுக்கு நம்பிக்கையும் வந்தது.
 
ஆஸ்பத்திரியை சுற்றி இருந்த புதர்கள் செடி கொடிகளை வெட்டி அப்புறப்படுத்திவிட்டு சுமார் 2ஆயிரத்து500 மரக்கன்றுகளை நட்டு அதனை வளர்க்கும் பொறுப்பை நோயாளிகளிடம் கொடுத்தார். இரண்டு வருடங்களில் இப்போது அந்த மரங்கள் எல்லாம் வளர்ந்து இந்த இடத்தையே பசுஞ்சோலையாக்கியுள்ளது.
 
சுத்தமும் சுகாதராமும் எவ்வளவு முக்கியம் என்பதை அனைவருக்கும் உணர்த்தியபிறகு நோயாளிகள் எந்த இடத்தையும் அசுத்தப்படுத்துவது கிடையாது.மருந்து மாத்திரைகளைவிட மனநிம்மதிதான் அவர்களை விரைவில் குணப்படுத்தும் என்பதால் டி.வி.,எப்.எம்.ரேடியோ,கேரம் போர்டு,நுாலகம்,பெண்களுக்கு தாயம்,பல்லாங்குழி என்று எல்லாவிதமான பொழுபோக்கு விஷயங்களும் ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.இவர்களுக்கு முடிவெட்டிக்கொள்ள தனி சலுானும் இந்த வளாகத்திற்கு உள்ளேயே ஏற்படுத்தப்பட்டு உள்ளது.குடிப்பதற்கு 24 மணிநேர ஆர்வோ பிளாண்ட் போடப்பட்டு உள்ளது.
 
இந்த ஆஸ்பத்திரிக்கு இதை எல்லாம் செய்து கொடுங்கள் என்று மேலே உள்ள அதிகாரிகளிடம் கேட்கும் போது தயங்காமல் மட்டுமின்றி கூடுதலாகவும் நிதி ஒதுக்கி செய்து கொடுத்ததுடன் என்னை தட்டியும் கொடுத்து உற்சாகப்படுத்திவருகின்றனர் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் முதல் இப்போதைய டீன் ரேவதி கயிலைராஜன் அனைவருமே அந்தவகையில் நன்றிக்கு உரியவர்கள்.
 
நாங்கள் இந்த காசநோய் ஆஸ்பத்திரியை வைத்திருக்கும் நிலையை பார்த்துவிட்டு கப்பலுார் பென்குயின் அப்பாரல்ஸ் போன்ற நிறுவனங்கள் நோயாளிகளுக்கு தேவையான போர்வை முதல் ஆர்வோ பிளான்ட் வரை நன்கொடையாக கொடுத்து வருகின்றன.
 
முன்பெல்லாம் இங்கு சேரும் நோயாளிகள் பெரும்பாலும் பிணமாகத்தான் வீடு திரும்புவார்கள் என்று சொல்வார்கள் ஆனால் எங்களது அன்பு, அக்கறை, சுற்றுச்சுழல் மற்றும் நவீன மருத்துவம் காரணமாக தற்போது நோய் குணமாகி பலர் நலமுடன் வீடுதிரும்பி வருகின்றனர்.
 
குறைந்த பட்சமாக இவர்கள் இருக்கும் ஆறு மாதத்தில் அவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரையுடன் நேரம் தவறாமல் சாப்பாடு தருவது, கூட இருந்தே பார்த்துக்கொள்வது போன்ற விஷயங்களால் நான்கு மாதங்களிலேயே குணமாகிவிடுகின்றனர்.
 
முன்பு கூட இருக்க மறுத்த நோயாளிகளின் உறவினர்கள் பலர் இப்போது கூட இருந்து கவனித்துக்கொள்கின்றனர் நகர பஸ்கள் உள்ளே வந்து போகிறது ஆண்டு விழா நடத்தி பிரபலங்களை அழைத்து உற்சாகப்படுத்துகிறோம்.
 
இத்தனை விஷயங்கள் இங்கு நடக்கிறது என்றால் அதற்கு இங்குள்ள மருத்துவர்களும்,செவிலியர்களும், ஊழியர்களும்தான் மிக முக்கிய காரணம் அவர்களுக்குதான் நான் நன்றி சொல்ல நிறைய கடமைப்பட்டுள்ளேன்.
 
இன்னும் ஷட்டில்காக் மைதானம், தியான மையம் அமைக்கவேண்டும். ஆண்கள் மற்றும் பெண் நோயாளிகளுக்கு தெரிந்த கூடைமுடைதல் போன்ற கைவினைப்பொருட்களை தயாரிக்கவைத்து அவர்களுக்கு வருமானம் பெற வழிவகுக்க வேண்டும்.
 
என்னைப்பொறுத்தவரை இது ஆஸ்பத்திரி அல்ல ஆஸ்ரமம் இந்த ஆஸ்ரமம் வளர இன்னும் இன்னும் உழைக்கவேண்டும் என்று சொல்லிய டாக்டர் காந்திமதிநாதனை வாழ்த்துவதோடு நின்றுவிடாமல் கையெடுத்து வணங்கிவிட்டு விடைபெற்றேன்.
நீங்களும் வாழ்த்தவேண்டும் என்றால் தொடர்புகொள்ளவும்-9442091965.
 
gallerye_195733312_1214929.jpg
 
 
gallerye_19581227_1214929.jpg
 
gallerye_195819246_1214929.jpg
 
gallerye_195827932_1214929.jpg
 
gallerye_195842994_1214929.jpg
 
gallerye_195851275_1214929.jpg
 
gallerye_195858922_1214929.jpg
 
gallerye_195905463_1214929.jpg
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அவசியமான அக்கறையான விடயங்களைத் தொடர்ந்தும் இணைத்துக் கொண்டு வருகின்றீர்கள் ஆதவன்...!  வாழ்த்துக்கள்...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அவசியமான அக்கறையான விடயங்களைத் தொடர்ந்தும் இணைத்துக் கொண்டு வருகின்றீர்கள் ஆதவன்...!  வாழ்த்துக்கள்.

தொடருங்கள்

Link to comment
Share on other sites

மீண்டும் பிறந்தேன் : தன்னம்பிக்கை நாயகி மாளவிகா அய்யர்

 

Tamil_News_large_1217838.jpg

 

சிறுவயதில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் இரு கை, கால்களை இழந்த சிறுமி, இன்று பலருக்கு தன்னம்பிக்கை தந்து, சமூக சேவகியாய், தன்னம்பிக்கை பேச்சாளராய் திகழ்கிறார். அவர் தான் சென்னையின் மாளவிகா அய்யர். கும்பகோணத்தில் பிறந்து இன்று செயற்கை கை, கால்களுடன் பலரின் தன்னம்பிக்கைக்கு தூண்டுதலாக இருக்கும் மாளவிகா அய்யரை எத்தனை பேருக்கு தெரியும். உலகமே கொண்டாடும் இந்த நம்பிக்கை நாயகி 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த நேர்காணல்.

 

* உங்கள் இளம் வயது இனிமையானதாமே...

 

அந்த விபத்து நிகழும் வரை என் வாழ்க்கை இனிமையானது தான். கும்பகோணத்தில் பிறந்திருந்தாலும் அப்பாவின் பணி காரணமாக ராஜஸ்தான் மாநிலம் பிக்கானில் குடியேறினோம்.
விளையாட்டில் நான் சுட்டி. 'கதக்' நடனத்தில் கெட்டி. ஆனால் அது நீடிக்கவில்லை.
 
* உங்கள் வாழ்க்கையை புரட்டிய அந்த தருணத்தில் மனநிலை எப்படி இருந்தது.
 
நான் ஒன்பதாவது வகுப்பில் நுழைந்த பருவம். 2002 மே 26 ஞாயிறு அன்று வெளியில் கிடந்த ஒரு பொருளை என் அறைக்குள் எடுத்து வந்து விளையாடிய போது அது திடீர் என வெடித்தது. ஆறு மாதத்திற்கு முன், அருகில் நடந்த வெடிவிபத்தில் சிதறிய குண்டு அது. என் இரு கால்களும், கைகளும் சிதறின. என்னால் இனி நடக்க முடியாது என டாக்டர்கள் கை விரித்துவிட்டனர். குடும்பமே அதிர்ந்துவிட்டது. 80 சதவீதம் ரத்தத்தை இழந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தேன். சிகிச்சைக்காக ஜெய்ப்பூருக்கு மாறினோம். அங்கு இரண்டு ஆண்டு சிகிச்சை.
 
* தமிழக பிரவேசத்திற்கு காரணம்.
 
சென்னையில் சிகிச்சை நன்றாக இருக்கும் என்பதால் தமிழகத்தில் குடியேறினோம். சிகிச்சை முடிந்து 2003 டிசம்பரில் நடக்கத் தொடங்கினேன். நண்பர்கள் எல்லோரும் தேர்வுக்கு தயாரான போது நான் எழுத முடியாமல் தவித்தேன்.
 
*மீண்டும் கல்விப் பயணம் எப்படி.
 
அருகில் உள்ள பயிற்சி நிலையத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்தேன். நீண்ட இடைவெளிக்கு பின் அப்போது தான் வெளியே வரத் தொடங்கி இருந்தேன். அனைவரும் என்னை வினோதமாக பார்த்தது எனக்கு பிடிக்கவில்லை. மூன்று மாதத்தில் தேர்வு. முழுவீச்சில் தயாரானேன். முடிவு வந்த போது எனக்கான பாதை திறந்தது. அறிவியல் 100, இந்தியில் 99 மதிப்பெண் என முதலிடம் பிடித்தேன்.
 
*ஜனாதிபதி உங்களை கவுரவித்தாரே...
 
ஆமாம், அன்றைய ஜனாதிபதி அப்துல் கலாம், என் குடும்பத்தாருடன் என்னை வரவழைத்து பாராட்டினார். 98.5 'கட்ஆப்' மதிப்பெண் பெற்று, நான் விரும்பிய டில்லி செயின்ட் ஸ்டீபன் கல்லுாரியில் சேர்ந்தேன். தொடர்ந்து முதுநிலையில் சமூகப்பணி படிப்பு முடித்தேன்.
 
* பொது வாழ்வில் இறங்க தூண்டியது எது.
 
என்னைப் பற்றி தெரிந்து கொண்ட பலர், மெயில் வழியாக தொடர்பு கொண்டு பாராட்டினர்; கவுரவப்படுத்தினர். அவர்களின் வேண்டுகோள் படி தன்னம்பிக்கை உரையாற்றினேன்.
 
* உங்களின் இந்த பயணத்தில் துணையாக இருந்தது யார்
 
குடும்பத்தினர் ஆதரவாக இருந்தாலும் என் அம்மா தான் நிழலாக இருந்தார். நான் நடக்க முடியாது என டாக்டர்கள் கூறினர். இன்று நான் 'ஹை ஹீல்ஸ்' அணிந்து நடக்க காரணம் என் அம்மா. துன்பம் வரும் போது சிரிக்கும் கலையை கற்றுத் தந்தவர் அவர் தான்.
 
* என்றாவது இந்த நிலை கண்டு வருந்தியதுண்டா.
 
ஒருவேளை அந்த விபத்து நடைபெறாவிட்டால் இந்த நிலையை அடைந்திருக்க முடியாது. வாழ்க்கையில் சவால் வரும் போது அதை எதிர்கொள்ளும் ஆற்றல் இருந்தால் மீண்டு வர முடியும். ஆராய்ச்சி படிப்பிற்கு இடையே பிறருக்கு தன்னம்பிக்கை தரும் பணியையும் செய்து கொண்டிருக்கிறேன். இது தான் எனக்கு திருப்தி.
 
வாழ்த்த Malvika_iyer@yahoo.co.in
 
 
 
Link to comment
Share on other sites

'வீட்டுக்கு ஒரு பட்டதாரியை உருவாக்குவேன்'- ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியரின் லட்சியப் பயணம்

 

head_2364342f.jpg

 

“இன்னும் பத்து ஆண்டுக்குள் இந்த ஊரில் வீட்டுக்கு ஒரு பட்டதாரியையும் குறைந்தது ஐம்பது அரசு ஊழியர்களையும் உருவாக்கிவிட்டுத்தான் ஓய்வு பெறுவேன்” என்று உறுதிபடச் சொல்கிறார் தாமரைச்செல்வன்.
 
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகிலுள்ளது சித்தாதிக்காடு. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வன். 15 ஆண்டுகளுக்கு முன்பே தனியார் பள்ளிக் குழந்தைகளைப் போல இந்தப் பள்ளிக் குழந்தைகளையும் சீருடை, டை அணிந்து மிடுக்காக நடக்கவைத்து அவர்களுக்கு தன்னம்பிக்கையை தந்தவர்.
 
பொதுவாக கிராமத்துக் குழந்தைகளுக்கு பிறந்த நாள் கொண்டாட பெற்றோருக்கு நேரமும் இருக்காது; ஞாபகமும் வராது. இதனால் தனது பள்ளிக் குழந்தை களின் பிறந்த நாளுக்கு தனது செலவிலேயே கேக் வாங்கி வந்து குழந்தைகள் மத்தியில் அதை வெட்டவைத்து அவர்களை உற்சாகப்படுத்துகிறார் தாமரைச்செல்வன். இன்பச் சுற்றுலா, கல்விச் சுற்றுலா - இதெல்லாம் இந்தக் காலத்து பள்ளிக் குழந்தைகளுக்கு கனவாகிவிட்ட நிலையில் தாமரைச்செல்வனின் செலவில் இந்தப் பள்ளிக் குழந்தைகள் ஆண்டு தவறாமல் சுற்றுலா போகிறார்கள்.
 
“இங்க படிக்கிற பிள்ளைங்க எல்லாருமே வறுமைக் கோட்டுல இருப்பவங்க. பெத்தவங்கள கேட்டால் ‘ஆடி மாசம் பொறந்தான்’னு தான் சொல்லுவாங்க. இந்த நிலைமையை மாத்தி, பிள்ளைகளின் பிறந்த நாளை அனைத்துப் பெற்றோருக்கும் தெரியவெச்சேன். ஒருவாரம் முன்னாடியே பிறந்த நாள் தேதியை பெத்தவங்களுக்கு தெரிவிச்சிருவோம். ஆரம்பத்துல கேக் மாத்திரமில்லாமல் புத்தாடையும் நானே எடுத்துக் குடுத்தேன். இப்ப, ஒன்றிரண்டு பேர் தவிர மத்தவங்க புத்தாடை எடுத்துடுறாங்க. கேக், சாக்லேட் மட்டும்தான் நம்ம செலவு. பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடத்து மேல நாட்டம் வந்தாதான் படிப்புல ஆர்வம் காட்டுவாங்க. அதுக்காகத்தான் இப்படிச் சின்னச் சின்ன வேலைகளை செய்யுறோம். வீட்டில் நம்ம பிள்ளைகளுக்கு பிறந்த நாள் கொண்டாட மாட்டோமா? அப்படித்தான் நினைச்சுக்குவேன்.
 
வறுமையில இருந்தாலும் சில குடும்பங்களை குடி சீரழிக்குது. அதனாலேயே பிள்ளைகளை மேல்படிப்பு படிக்க வெக்க முடியாம திண்டாடுறாங்க. இன்னும் சிலருக்கு இயல்பாகவே வறுமை காரணமா படிப்பை தொடர முடியாம போயிடுது. அப்படி பாதியில் படிப்பை நிறுத்த வேண்டாம். மேலே படிக்க நான் உதவி செய்யுறேன்னு தைரியம் கொடுத்து பல பிள்ளைகளை கல்லூரி வரைக்கும் கொண்டு வந்துட்டேன்.
 
மது அருந்தும் தகப்பன்களிடம், ‘நீ குடியை விடுறதா இருந்தா உன் பிள்ளையை நான் படிக்க வைக்கிறேன்’ என்று சொல்லி அவங்கள குடியிலிருந்தும் மீட்க முயற்சிக் கிறேன். எனது முயற்சிக்கு நல்ல பலன் கிடைச் சிருக்கு. இப்ப இந்த ஊருல மொத்தம் 187 பட்டதாரிகள் இருக்காங்க. ஆனா அரசு ஊழியர் ஒருத்தர்கூட இல்லை.
 
எஞ்சி இருக்கிற எனது பத்தாண்டு பணிக் காலத்துக் குள்ள இந்த ஊருல வீட்டுக்கு ஒரு பட்டதாரியையும் குறைஞ்சது 50 அரசு ஊழியர்களையும் உருவாக்கிக் காட்டுவேன். அதுக்காக விரைவில் இளைஞர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுறதுக்கான பயிற்சி வகுப்புகளை தொடங்கலாம்னு இருக்கேன்” என்கிறார் தாமரைச்செல்வன்.
 
Link to comment
Share on other sites

  • 1 month later...

நிலத்தடி நீரை சேமிக்கலாம் வாங்க

 

கிராமங்களில் 15 வருடங்களுக்கு முன்புவரை தண்ணீர் தேவையென்றால் கிணற்றில் இறைக்கப்படும். அதிலும், ஒவ்வொரு ஊரிலும் நல்ல தண்ணிக் கிணறு-உப்புத்தண்ணி கிணறு என இரண்டு வகை கிணறுகள் இருக்கும். வீட்டிற்கு வந்தவர்களுக்கு தண்ணீர் கொண்டு வந்து வைத்தால், "நல்ல தண்ணி பானையிலதான மொண்டு வந்த...?" என்று கேட்டு ஐயம் தீர்த்த பின்பே தண்ணீரை குடிக்கக் கொடுப்பார்கள். 

 

இப்போது அந்த கேள்வியெல்லாம் வழக்கொழிந்து போய்விட்டது. ஒரு ஃபோன் செய்தால்போதும் மினரல் வாட்டர் கம்பெனியிலியிலிருந்து தண்ணீர் கேன்கள் வீடுதேடி வந்து விடுகின்றன. இது நாகரீக வளர்ச்சியையோ அல்லது பொருளாதார வளர்ச்சியையோ குறிப்பதாக இல்லை, இது நிலத்தடிநீர் இல்லாமல் போனதையும் உப்பாகிப் போனதயுமே காட்டுகிறது. 
 
முன்பு நகரமானாலும் கிராமமானாலும் வீட்டிற்கு பின்புறத்தில் கேணி அமைந்திருக்கும். இப்போதோ புதுவீடு கட்டப்படும்போது ஒரு போர்வெல் போடப்படுகிறது. அதுவும் குடிநீருக்காக என்று நினைத்தாலே பயமாக உள்ளது. பாத்திரங்கள் கழுவுவது, துணி துவைப்பது போன்ற பிற தேவைகளுக்காக மட்டுமே அந்த தண்ணீர்! ஆனால் எழுநூறு அடி துளைபோட்ட பின்னும் அந்த போர்வெல்லில் தண்ணீர் வருகிறதா, வெறும் காற்று மட்டுமே வருகிறதா என்பது அவரவர் அதிர்ஷ்டத்தைப் பொறுத்ததே! 
 
எப்படி வந்தது இந்நிலை?!
 
தண்ணீர் ஆவியாகி, மேகமாகி, பின் குளிர்ந்து மழையாகப் பொழிகிறது என்ற அறிவியலை நாம் ஆறாம் வகுப்பு பாடத்திலேயே படித்து விட்டோம். ஆனால், "நிற்க அதற்குத் தக" என்ற வள்ளுவரின் வாக்கை மறந்து, படித்ததை செயல்படுத்த தவறிவிடுகிறோம். மழையாகப் பொழியும் தண்ணீரை நாம் நமது நிலத்தடியில் சேமித்து வைக்க ஊடகமாக இருந்த மண் தரைகளையெல்லாம் சிமெண்ட் ரோடுகளாகவும் தார்ச்சாலைகளாகவும் மாற்றிவிட்டோம். தரையில் விழும் தண்ணீர் நிலத்தடிக்குச் செல்ல வழியில்லாமல், நேராக பள்ளத்தை நோக்கி ஓடிவிடுகிறது. நாம் பயன்படுத்தும் டாய்லெட் கழிவு நீரும் துணிதுவைத்த நீரும் மட்டுமே நிலத்தடிக்குச் செல்கிறது. இதனால் நமது நிலத்தடி நீர் குறைவதோடு, நிலத்தடி நீரின் உப்பளவு அதிகமாகி குடிப்பதற்கு உகந்ததாக இல்லாமல் போனது.
 
நமது நிலத்தடி நீர்மட்டம் என்பது வங்கியில் இருக்கும் பண இருப்பைப் போலத்தான். அதில் நாம் போட்டு வைத்தால்தான் திரும்ப எடுத்து செலவு செய்ய முடியும். நிலத்தடி நீர் சேகாரமாவதற்கான வழிகளையெல்லாம் நாம் மூடிவிட்டு, இயற்கையை குறை சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது?!
 
இதற்கு தீர்வுஎன்ன?
 
நமது வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பை உருவாக்கி, நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிப்பதே இதற்கு சரியான தீர்வாக இருக்கும். மழை நீரானது வீணாகி ஓடி சாக்கடையில் கலந்து விடாமல், வீட்டோரத்தில் மழைநீர் சேகரிப்பு தொட்டியில் சேரும்படி செய்தால், நமது நிலத்தடி நீர் மட்டம் உயர்வதோடு நிலத்தடி நீரின் உப்பளவு கணிசமாகக் குறையும். 
 
மழைநீர் பலநாட்களுக்குக் கெடாமல் இருக்குமென்பதால் குடிப்பதற்கும் பிற உபயோகங்களுக்கும் நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
 
தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில் சத்குரு அவர்களால் துவங்கப்பட்ட ஈஷா பசுமைக்கரங்கள் திட்டமானது, தமிழமெங்கும் நர்சரிகளை உருவாக்கி மரக்கன்றுகளை குறைவான விலையில் விநியோகித்து வருகிறது. ஆனால் என்னதான் மரக்கன்றுகள் உருவாக்க ஆர்வமும் தேவையான இடமும் இருந்தாலும் நிலத்தடி நீர் இல்லாததால் பல இடங்களில் நர்சரிகள் உருவாவது சிரமமாகவே உள்ளது. நமது வீட்டின் நலனும் நாட்டின் நலனும் நம் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதிலேயே உள்ளது. மழைநீர் சேகரிப்பே இதற்கு சரியான தீர்வாக இருக்கும்.
 
ஈஷா பசுமைக்கரங்கள்திட்டம்
 
தமிழகத்தில் மொத்தம் 37 நாற்றுப் பண்ணைகளை உருவாக்கியுள்ள பசுமைக் கரங்களின் தன்னார்வத் தொண்டர்கள், எளிதில் வளரக்கூடிய செண்பகம், மகிழம், மந்தாரை, ஜக்ரண்டா, அவலாண்டா, லகஸ்ட்ரோமியா போன்ற அழகிய வண்ணப்பூக்கள் பூக்கும் மரக்கன்றுகள் மற்றும் பலா, எலுமிச்சை, நாவல் போன்ற பழ மரக்கன்றுகளும் ஈஷா நாற்றுப்பண்ணைகளில் இதற்காகப் பிரத்யேகமாக தயார் செய்து வழங்குகிறார்கள். புங்கன், வாகை, தேக்கு, செஞ்சந்தனம் மற்றும் மலைவேம்பு போன்ற மரப்பயிர் வகைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவையனைத்தும் மிகக் குறைந்த விலையில் (ரூ.5) விநியோகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
 
உங்கள் ஊருக்கு அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் மரக்கன்றுகளைப் பெறுவதற்கும், மரம் நடுதல் தொடர்பான வழிகாட்டுதல்களைப் பெறுவதற்கும் கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவும். தொ. பே. 94425 90062
 
Link to comment
Share on other sites

நான்கு பேருக்கு கற்றுக் கொடுப்பது சந்தோஷம்!

 

Tamil_News_large_1260960.jpg

 

தெருவிளக்கு வெளிச்சத்தில் பாடம் எடுத்து, மாணவர்களிடம் ஒரு ரூபாய், 'டியூஷன் பீஸ்' வாங்கும், ஆசிரியர் கோமதி: திருச்சி ஸ்ரீனிவாசா நகரைச் சேர்ந்தவள் நான். திருச்சியில் இருக்கும் ஈ.வெ.ரா., கல்லுாரியில் தேர்வு நெறியாளர், அலுவலக கணக்காளராக இருக்கிறேன். 
 
குடிசைப்பகுதி மக்கள், பெரும்பாலும் தங்களின் பிள்ளைகளை டியூஷனுக்கு அனுப்பி, படிக்க வைக்க வசதி இல்லாதவர்கள். அதனால், பள்ளியில் படிப்பில் பின்தங்கி, படிப்பில் ஆர்வமில்லாமல், பாதியில் விட்டுட்டு கூலி வேலைக்கு செல்கின்றனர். இன்னும் சிலர், பெயிலாகி விட்டால், வீட்டில் திட்டுவரோ என்று அஞ்சி, வீட்டை விட்டு ஓடிப்போவது என, நிறைய பிரச்னைகள். இதற்கெல்லாம் ஒரே தீர்வு, குடிசைப் பகுதி மாணவர்களுக்கு கூடுதல் வகுப்பு எடுப்பது தான்.
 
ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம், கடந்த 2003ல், இந்த சேவைக்காக எனக்கு அழைப்பு விடுத்த போது, இந்தப் பணியில், மனதார என்னை ஈடுபடுத்திக் கொண்டேன்.
மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்க இடம் இல்லாததால், 11 ஆண்டு களாக, தெருவிளக்கு வெளிச்சத்தில் தான், டியூஷன் எடுத்து வருகிறேன். மழைக் காலம் வந்துவிட்டால், அக்கம்பக்கத்தில் இரண்டு வீடுகளில் அனுமதி வாங்கி, அங்கே சென்று டியூஷன் நடத்துவேன்.
 
 
இதுவரைக்கும், 1,000 மாணவர்களுக்கு மேல் டியூஷன் எடுத்திருப்பேன். என்னோட பீஸ், ஒரு மாணவனுக்கு, ஒரு மாசத்துக்கு, ஒரு ரூபாய் தான். தன்னார்வத் தொண்டு நிறுவனம் எனக்கு வழங்கும், 1,000 ரூபாயை, மாணவர்களுக்கான நோட்டு புத்தகங்கள் மற்றும் பரிசுப் பொருட்களுக்காக செலவழிப்பேன். என்னிடம், எல்.கே.ஜி., முதல், பிளஸ் 2 வரை மாணவர்கள் படிக்கின்றனர். இன்று என்னிடம் படிக்கும் மாணவர்கள், நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பதுடன், நாளைக்கு அவர்கள், ஒரு நான்கு பேருக்கு பாடம் சொல்லிக் கொடுத்தால் அல்லது அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தால், அது தான் எனக்குப் பெரிய சந்தோஷமாக இருக்கும்.
இப்போது நாங்கள் எதிர்பார்க்கும் ஒரே உதவி, மழைக்கு ஒதுங்க, எங்களுக்கு ஒரு கட்டடம் கிடைக்குமா என்பது தான்!
 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

தள்ளாத வயதில் 15 கி.மீ., சைக்கிள் தள்ளி மேட்டூரில் டீ விற்கும் 90 வயது முதியவர்

 

Tamil_News_large_1267671.jpg

 

மேட்டூர்: மேட்டூரை சேர்ந்த, 90 வயது முதியவர், தள்ளாத வயதில் தினமும், 14 கி.மீ., தூரம் சைக்கிளை தள்ளி சென்று, டீ விற்பனை செய்வது, வாடிக்கையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 
மேட்டூர், தொட்டில்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி, இவருக்கு வயது, 90. இவர் தினமும் அதிகாலை, 4 மணிக்கு எழுந்து, டீ தயாரித்து, சைக்கிளில், மேட்டூர் அனல்மின் நிலையத்தின் சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு எடுத்து சென்று விற்பனை செய்கிறார்.
 
ராமசாமி கூறியதாவது:எங்களது சொந்த ஊர் இடைப்பாடி தாலுகா, சீரங்கன்வளவு . நான், ஏழு வயது சிறுவனாக இருக்கும் போது, பெற்றோர், மேட்டூர், தொட்டில்பட்டியில் குடியேறினர். திருமணத்துக்கு பின், நான் தொட்டில்பட்டியில் டீக்கடை நடத்தினேன். முதல் மனைவி இறந்து விட்டதால், லட்சுமி என்பவரை, இரண்டாம் திருமணம் செய்து கொண்டேன்.முதல் மனைவிக்கு ஒரு மகனும், இரண்டாம் மனைவிக்கு இரு மகன்களும் உள்ளனர். என் இளைய மகன், லோகநாதன் தனியார் கல்லூரியில் டிப்ளமோ படிக்கிறான். குடும்பம் நடத்தவும், மகன்களை படிக்க வைக்கவும் டீக்கடையில் வரும் வருமானம் போதுமானதாக இல்லை.
 
இதனால், என் மனைவி டீ கடையை கவனித்து கொள்ள, நான் கடந்த, 10 ஆண்டாக, டீயை கேனில் நிரப்பி சைக்கிளில் எடுத்து சென்று விற்பனை செய்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன், சாலை விபத்தில் காலில் அடிபட்டதால், சைக்கிள் ஓட்ட முடியாது. சைக்கிளை தள்ளிக்கொண்டே மேட்டூர் அனல்மின் நிலையம் பின்புறம் உள்ள கிராமங்கள், மெயின்ரோட்டோரம் உள்ள கடைகளுக்கு சென்று டீ விற்பனை செய்து விட்டு, காலை, 10 மணிக்குள் வீட்டுக்கு சென்று விடுவேன்,அதுபோல மாலை, 4 மணிக்கு ஒரு முறை டீ விற்க செல்வேன். தினமும், இரு முறை, 15 கி.மீ., தூரம் நடந்து சென்று டீ விற்பனை செய்கிறேன். என் வருமானம் மகனது படிப்பு செலவுக்கு உதவுகிறது. பிறரை நம்பி வாழாமல் இறுதி வரை, டீ விற்பனை செய்து வாழ வேண்டும் என்பதே என் ஆசை.இவ்வாறு அவர் கூறினார்.
 
வீதிக்கு, வீதி, வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவங்கி, உழைக்காமல் சம்பாதிப்பது எப்படி என, "ரூம்' போட்டு யோசிக்கும், சில இளைஞர்களுக்கு மத்தியில், தன், 90 வயதில் தினமும், 15 கி.மீ., நடந்து சென்று, டீ விற்கும் முதியவர் ராமசாமியின் தன்னம்பிக்கை மற்றவர்களுக்கு பாடம்
 

 

 

Link to comment
Share on other sites

வித்யாவிற்கு வேலை கிடைச்சுடுச்சு...

 

gallerye_135750906_1272395.jpg

 

எளிமையானவர்களால் எளிமையாக நடத்தப்பட்ட உன்னத விழா அது.
 
வீட்டு வேலை செய்பவர்கள், மூடை சுமக்கும் தொழிலாளர்கள், கூலி வேலை செய்பவர்கள் ஆகியோரின் மற்றம் அம்மா அல்லது அப்பா அல்லது இருவரையும் இழந்த ஆதரவற்ற ஆனால் படிப்பில் ஆர்வம் உள்ள குழந்தைகளை தேர்வு செய்து நல்ல உள்ளங்களின் உதவியுடன் கடந்த 15 ஆண்டுகளாக படிக்கவைத்துவரும் அமைப்புதான் சென்னை உதவும் உள்ளங்கள் .
 
 
இதுவரை இருபதாயிரம் மாணவர்களுக்கு கிட்டத்தட்ட ரூபாய் 1,97,66,988 வரை செலவு செய்துள்ளனர்.நடப்பு 2015 வருடத்திற்கு 200 மாணவர்களுக்கு 15,15,000 ரூபாய் கல்வி கொடையாக வழங்கும் விழா சென்னை பர்கிட் ரோட்டில் உள்ள ராமகிருஷ்ண பள்ளியில் காவல்துறை உதவி ஆணையர் எஸ்.ராமசாமி தலைமையில் நடைபெற்றது.
 
பள்ளி மாணவ,மாணவிகள் ஒவ்வொருவரும் மேடையேறி தங்களுக்கான கல்வி உதவித்தொகையை பெற்று திரும்பும் போது தங்கள் கனவு நனவாகப்போவதன் மகிழ்ச்சி அவர்கள் முகத்தில் தெரிந்தது. அதே நேரம் மேடைக்கு கிழே இருந்த அவர்களின் பெற்றோர்கள் அல்லது ஆதரவாளர்கள் கண்களில் ஆனந்த கண்ணீர் அந்த ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணமுடிந்தது.
 
இந்த சூழ்நிலையில்தான் உதவும் உள்ளங்கள் அமைப்பின் நிறுவன அறங்காவலர் சங்கர் மகாதேவன் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.எங்கள் குழந்தைகளை படிக்கவைப்பதோடு எங்கள் பணி நிறைவடைவதில்லை படித்த பிள்ளைகள் வேலைக்கு சென்று சம்பாதித்து தன் குடும்பத்திற்கு உதவவேண்டும் அப்போதுதான் எங்கள் நோக்கம் நிறைவேறியதாக அர்த்தம் என்றவர் அந்த அர்த்தத்திற்கு அடையாளமாக இதோ போர்டு நிறுவனத்தில் வேலை கிடைத்த கையோடு மேடைக்கு வருகிறார் வித்யா என்றார்.
 
வித்யா மேடைக்கு வருவதற்குள் அவரைப்பற்றிய சிறு அறிமுகம்.
 
அரக்கோணத்தை சேர்ந்த கிரிநாதன்-காஞ்சனாதேவி தம்பதிக்கு நான்கு பெண் குழந்தைகள்.
கிழிந்த பிளாஸ்டிக் கோணிப்பைகளை தைத்து கொடுக்கும் வேலைதான் கிரிநாதன் பார்த்தது, மிக சொற்பவருமானத்தில் ஊரில் வாழமுடியாமல் சென்னை அயனாவரம் வந்து சிறிய வாடகை வீட்டில் பிள்ளைகளோடும் அதே தொழிலோடும் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டு இருக்கிறார்.
 
இவரது நான்கு பெண் குழந்தைகளில் ஒருவரான வித்யா கொஞ்சம் சூட்டிகையானவர் குடும்ப சூழ்நிலை புரிந்து கொண்டவர் எப்படியாவது அப்பா அம்மாவிற்கு நல்ல சாப்பாடு போட்டு சந்தோஷமாக பார்க்கவேண்டும் என்ற விருப்பம் மிக்கவர். இதற்கு கல்வியும் நல்ல வேலையுமே உதவும் ஆனால் பரம ஏழையான நமக்கு நாம் விரும்பும் கல்வி கிடைக்குமா? என நொந்து போயிருந்தார்.
 
இந்த சூழ்நிலையில்தான் இவருக்கு உதவும் உள்ளங்களின் தொடர்பு கிடைத்தது.பள்ளி கட்டணத்தை கட்டியதுடன் நன்றாக படிப்பதற்கான ஆலோசனைகளை வழங்கினர்.பள்ளியில் படித்த படிப்பைவிட உதவும் உள்ளங்கள் அமைப்பின் அண்ணன் அக்காக்களின் ஆக்க ஆலோசனை வகுப்பு வித்யாவிற்கு பெரிதும் உற்சாகம் தந்தது.இந்த வகுப்பில் படிப்பதற்காகவே அயனாவரத்தில் இருந்து ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் பஸ்சில் பயணம் மேற்கொண்டு வந்து செல்வார்.
 
இந்த ஆர்வம் உழைப்பு எல்லாம் பள்ளி பட்டய வகுப்பு வரை தொடர எலக்ட்ரானிக்ஸ் அண்ட் எலக்ட்ரிகல்ஸ் டிப்ளமோ படிப்பை முடித்தார், படிப்பை முடித்த கையோடு போர்டு கம்பெனியில் இருந்து நேர்முக தேர்வுக்கு அழைப்பு வர அதிலும் வெற்றி பெற்று நல்ல சம்பளத்தில் தற்போது பயிற்சியாளராக வேலையில் சேர்ந்துள்ளார்.
 
19 வயதே ஆன வித்யா மிக எளிமையான உடையோடு ஆனால் ஆனந்த சிரிப்போடு மேடையேறினார், சபை தயக்கம் இல்லாமல் மைக்கை பிடித்தவர் என்னுடைய இன்றைய இந்த நிலைக்கு காரணம் உதவும் உள்ளங்கள்தான் நான் என் கடுமையான புத்திசாலித்தனமான உழைப்பை கொடுத்து வேலை பார்க்கும் நிறுவனத்தில் பெரிய பதவியை அடைவேன், என் வருமானத்தை என் குடும்பத்திற்கு மட்டும் இல்லாமல் எப்படி நான் படிக்க பலர் உதவினார்களோ அதே போல பலர் படிக்கு நான் உதவுவேன் என்று அவர் சொல்லிய போது அரங்கில் இன்னமும் அதிக கைதட்டல்.
 
வித்யாவிற்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவிக்க விரும்புபவர்கள் உதவும் உள்ளங்கள் சங்கர் மகாதேவன் மூலம் தொடர்பு கொள்ளலாம்(044-24344743)
 
 
gallerye_135759436_1272395.jpg
 
Link to comment
Share on other sites

ஆண்டுக்கு ஒருநாள் மட்டுமே சாப்பாடு கிடையாது!

 

Tamil_News_large_127454820150615002703.j

 

முதியோர்களுக்காக,'வீடு தேடி வரும் நல் உணவு வழங்கும் திட்ட'த்தை செயல்படுத்தி வரும் துரை.தம்புராஜ்: தனிமையில் வாழும் முதியோர் மற்றும் முதுமை காரணமாக, தங்களின் உணவுத் தேவைகளை நிறைவேற்ற இயலாத மூத்த தம்பதியருக்கு, காரம், உப்பு குறைவான பத்திய சாப்பாடு ஓட்டல்களில் கிடைக்காது.
இப்படி உணவு கிடைப்பதிலேயே ஏகப்பட்ட பிரச்னைகள். இதைப் போக்கும் விதமாக, திருநெல்வேலி மாவட்டம், குற்றாலம் அடுத்த இலஞ்சி யில், தென்காசி மூத்த குடிமக்கள் மன்றத்தின் சார்பில், 2006ல், 'வீடு தேடி வரும் நல் உணவு வழங்கும் திட்டம்' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். இதற்காக, என் பங்க ளாவின் ஒரு பகுதியில் சமையலறை அமைத்து, அனுபவமிக்க சிறந்த சமையல் கலைஞர்களால் உணவு தயாரிக்கப்படுகிறது. அதிகாலை, 4:00 மணிக்கு சமையலை துவங்கி விடுவோம்.
 
டிபன் செய்து முடித்தவுடன், டிபன் கேரியர்களில் அடைத்து, காலை, 7:00 மணிக்கெல்லாம் பயனாளிகளின் வீடுகளுக்குப் போய் சேர்ந்துவிடும். மதியம், 12:00 மணிக்குள்ளாக மதிய உணவு தவறாமல் போய்விடும். இரவு சாப்பாடு எதுவும் கிடையாது. ஒரு நாளைக்கு, இரண்டு வேளை மட்டும் தான். மாதம் முழுக்க சாப்பாடு தவறாமல் வழங்கப்படுகிறது. ஆண்டிற்கு ஒரே ஒருநாள், கண்ணப்பர் குருபூஜையின் போது மட்டும், சாப்பாடு கிடையாது.
 
புயல், கடும் மழை, 'ஸ்டிரைக்' என, ஊரில் எது நடந்தாலும், சாப்பாடு வழங்கும் பணி பாதிக்காமல் நடக்கும். 'அப்பா - அம்மா சாப்பாடு' என்று பொதுமக்கள் இதற்குப் பெயரே வைத்துள்ளனர். அதேபோல், சாப்பாடு எடுத்துச் செல்லும் ஆட்டோக்காரர்களுக்கு, போக்குவரத்தில் தனி மரியாதை உண்டு. மளிகை, அரிசி, காய்கறி கடைக்காரர்களும், 5 சதவீத சலுகை விலையில் தரமான பொருட்களைத் தருகின்றனர்.
சாப்பாடு வழங்குவது, டிவைடிங் சிஸ்டம் முறையில் நடக்கிறது. மாத இறுதியில் மொத்த செலவுத் தொகையானது, அனைத்துப் பயனீட்டாளர்களும் பெற்ற உணவு எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு, அதற்கேற்ப பணம் பெறப்படும். சாப்பாடு பெறுபவர்களிடம் இருந்து, லாப நோக்கமின்றி, சேவை அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது.
 
ஆரம்பத்தில், 25 பேருடன் துவங்கப்பட்ட இத்திட்டத்தில், தற்போது, 125 பயனாளிகள் உள்ளனர். இப்போது கூட பலரும், தங்களையும் இத்திட்டத்தில் சேர்த்துக் கொள்ளும்படி கூறுகின்றனர். ஆனால், எங்களால் தான் சேர்ப்பதற்கு இயலவில்லை. என்னுடைய, 60 வயது வரை, மனைவி, பிள்ளைகளுக்காக உழைத்தேன். இதற்கு பிறகு இதுமாதிரி உதவி செய்வதில், மனதிற்கு ரொம்பவும் திருப்தியாக இருக்கிறது!
 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

'மகள்கள் மூலம் உலகைக் காண்கிறேன் ' - பனைமரம் ஏறி படிக்கவைக்கும் பார்வையற்ற ‘வைராக்கியக்காரர்’

  • குடும்பத்தினருடன் முருகாண்டி
    குடும்பத்தினருடன் முருகாண்டி
  • முருகாண்டி
    முருகாண்டி

பனை மரம் ஏறி, அதில் வரும் வருவாயைக் கொண்டு தனது இரு மகள்களையும் படிக்க வைத்து வருகிறார் பிறவியிலேயே பார்வையை இழந்த முருகாண்டி (53).

ராமநாதபுரத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உச்சிப்புளி அருகே உள்ளது கடலோர கிராமமான வெள்ளரி ஓடை. கிராமத்தைச் சுற்றி பனைமரக் காடுகள் சூழ்ந்திருக்க, ஒதுக்குப்புறமாக தனி குடிசையில் மனைவி கலாவதி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார் முருகாண்டி.

அவரை சந்திக்கச் சென்றபோது, பனை ஓலைகளை விறுவிறுவென இயந்திரம்போல சீவிக் கொண்டிருந்தவர், அதை நிறுத்திவிட்டு, ‘‘இப்போ பதநீர், நுங்கு சீசன். சாப்பிட்டுக்கிட்டே பேசுவோம்” என ஆரம்பித்தார்.

‘‘பிறவியிலேயே பார்வை கிடையாது. அப்பாவும், சிறுவயதிலேயே எங்களை விட்டுப் பிரிந்து இலங்கையில் போய் நிரந்தரமாக தங்கிவிட்டார். அம்மாதான் பாய், கூடை முடைந்து கஷ்டப்பட்டு என்னை வளர்த்துச்சு.

ஊரைச் சுத்தி பனங்காடுகளா இருந்தால, சின்ன வயசுலயே எனக்கு பனை மரம் ஏற, பாய் முடைய, நுங்கு சீவ, வேலி அடைக்க, ஓலை கிழிக்க அம்மா பழக்கினாங்க. 10 வயதில் இருந்து அம்மாவுடன் வேலைக்கும் போக ஆரம்பிச்சேன்.

அம்மாவுக்கு வயசானதால என்னை கவனிக்க முடியாம, கல்யாணம் பண்ணி வச்சாங்க. இப்ப, மூத்த மகள் சிம்புரா சாலினி 12-ம் வகுப்பும், இளைய மகள் லாவண்யா 10-வதும் படிக்குதுங்க.

என் மனைவியால சரியா நடக்க முடியாது. அதுக்கு மருத்துவச் செலவு, குடும்பச் செலவு, அத்துடன் எதுக்கு ரெண்டு புள்ளைகளையும் படிக்க வைக்குற? பேசாம, அவங்களையும் வேலைக்கு அனுப்பிடுன்னு ஊர்க்காரங்க சொல்றாங்க.

பார்வையில்லன்னு நான்தான் படிக்காம போயிட் டேன். ஆனால், நம்ம புள்ளைகள படிக்க வெச்சு பெரிய ஆளாக்கிடணுங்கிற வைராக்கியமா இருக்கேன்.

பனை மரம் கற்பக விருட்சம். அதோட வேரில் இருந்து உச்சி வரைக்கும் அனைத்தையும் பயன் படுத்தலாம். அதனால் எனக்கு வேலைவாய்ப்பு குறைஞ்சுடாது.

உடம்புல தெம்பு இருக்குற வரை ரெண்டு புள்ளைகளையும் படிக்க வைக்க எவ்வளவு வேணும் னாலும் கஷ்டப்படுவேன். இதுங்க படிச்சுதுனாத்தான், பின்னாடி அதுங்க புள்ளைகளையும் நல்லா படிக்க வைக்குங்க.

என் ரெண்டு மகள்களும்தான் என் ரெண்டு கண்கள். அவங்க மூலமாத்தான் இந்த உலகத்த பாக்குறேன்.’’ நம்பிக்கையோடு சொல்கிறார் முருகாண்டி.

முருகாண்டி

http://tamil.thehindu.com/opinion/reporter-page/மகள்கள்-மூலம்-உலகைக்-காண்கிறேன்-பனைமரம்-ஏறி-படிக்கவைக்கும்-பார்வையற்ற-வைராக்கியக்காரர்/article7366481.ece?homepage=true&relartwiz=true

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.