Jump to content

வரப்புயர (விவசாயம்/கைத்தொழில் சார்ந்த பதிவுகள்)


Recommended Posts

அதிக மகசூல் கொடுக்கும் புதுவகை உருளை!

 

ஊட்டியிலுள்ள மத்தியஉருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிலையத் தலைவர் வெங்கடாசலம்: சிம்லாவில் இயங்கும், மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள், 2008ல், குப்ரி கிரிதாரி உருளை ரகத்தை கண்டுபிடித்து அறிமுகப்படுத்தினர்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் தரக் கூடிய, ஆண் உருளை கிழக்கு செடியிலிருந்தும், மகசூல் அதிகமாக வரக்கூடிய பெண் செடியிலிருந்தும், மகரந்தச் சேர்க்கையை ஏற்படுத்தி, அதிலிருந்து வரும் காயிலிருந்து உருளை விதை எடுத்து, இந்த ரகத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
 
பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு பின், இந்த ரகம் தற்போது, தமிழகத்துக்கு வந்துள்ளது.
எங்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில், 10 ஏக்கர் அளவில் இந்த ரக உருளையை வெற்றிகரமாக பயிரிட்டு, பரிசோதனை செய்து பார்த்த பின், விவசாயிகளுக்கு கொடுக்க ஆரம்பித்தோம்.
இதுவரை ஊட்டியிலுள்ள, 25 விவசாயிகளுக்கு, தமிழக அரசின் தோட்டக்கலை துறை மூலம், குப்ரி கிரிதாரி ரக விதைகளை கொடுத்துள்ளோம். பழைய உருளைக்கிழங்கு ரகங்களான குப்ரி ஜோதி, குப்ரி ஸ்வர்ணாவை விட, குப்ரி கிரிதாரி ரக உருளைக்கிழங்கு அதிக விளைச்சல் கொடுக்கும். இலைக்கருகல் நோயும், நுாற்புழுத் தாக்குதலும் தான் உருளைக்கிழங்கின் விளைச்சலைப் பாதிக்கக்கூடிய முக்கிய எதிரிகள். தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள, குப்ரி கிரிதாரி ரகம், இவை இரண்டுக்கும் மாற்றானது. பழைய உருளைகிழங்கு, ஒரு ஏக்கருக்கு, 12 டன் வரை தான் மகசூல் கொடுக்கும். ஆனால், குப்ரி கிரிதாரி, 18 டன் வரை கொடுக்கும்.
உற்பத்தி செலவு குறைவு; நிறைய மருந்து அடிக்கத் தேவையில்லை. இந்த ரக உருளை, மலைப்பகுதிகளில் மட்டும் தான் வளரும்; 120 நாட்களிலேயே மகசூல் எடுத்து விடலாம்.
 
தென்னிந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும், மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனம் அமைந்திருப்பது, விவசாயிகளுக்கு கூடுதல் சிறப்பம்சம். இங்கு, பல்வேறு ரக உருளைக் கிழங்குகளையும், எந்தெந்த ரகத்தை, எந்தெந்த நோய் தாக்கும் என்றும் குறிப்பிட்டு, தனி அருங்காட்சியகமே அமைத்துள்ளோம். கடந்த ஆண்டு, 10டன் உருளை விதையை உற்பத்தி செய்து, தோட்டக்கலைத் துறைக்கு கொடுத்தோம். தமிழக அரசின் மானியத்தோடு, உருளை விதைகளை, தோட்டக்கலைத் துறை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. தொடர்புக்கு: 0423-2550669
 
Link to comment
Share on other sites

  • Replies 162
  • Created
  • Last Reply

விவசாயிக்கு கை கொடுக்கும் கருணை!

 

ஒரே தண்ணீர், ஒரே பராமரிப்பில் இரண்டு பயிர்களுடன் இரட்டை லாபமும் ஈட்ட வழிகாட்டும் விவசாயி காந்தி: தஞ்சாவூர் அடுத்த வளப்பக்குடியை சேர்ந்தவன் நான். விதைப்பதற்கு முன் வயலை நன்கு தயார் செய்ய வேண்டும். பின் புழுதி அடித்து சமப்படுத்தி, பாத்திகள் பிரித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு பிரித்த பின், முதலில் கருணைக்கிழங்கை நடவு செய்ய வேண்டும்.

 

கருணைக்கிழங்கை பொறுத்தவரை, நல்ல விதை கிழங்குகளை தேர்வு செய்ய வேண்டும். அப்போது தான் நல்ல மகசூல் கிடைக்கும்; பூச்சித் தாக்குதலும் குறைவாக இருக்கும். அதைப் போலவே, பார் பிரித்து, வெங்காயத்தை ஊடு பயிராக நடவு செய்ய வேண்டும். வெங்காயம் 60 நாள் பயிர். இது குறைந்த நாட்களில் நிறைந்த லாபம் தரக்கூடியது. வெங்காயத்தை பொறுத்தவரை, வயலில் தண்ணீர் தேங்கி நிற்கக் கூடாது. அவ்வாறு தண்ணீர் தேங்கி நிற்கும் பட்சத்தில், வெங்காயம் அழுகி விடும். வெங்காயம் வயலில் இருக்கும் நேரத்தில், கருணைக் கிழங்குக்கு என, தனியாக பராமரிப்பு செய்ய தேவையில்லை.
 
வெங்காயத்திற்கு விடும் தண்ணீர் மற்றும் இடு பொருள்களை கொண்டே கருணைக் கிழங்கு நன்றாக வளர்ந்து விடும். வெங்காயத்தை அறுவடை செய்த பின், கருணைக் கிழங்கு மட்டும் வயலில் இருக்கும். அப்போது கருணைக் கிழங்குக்கு ஒரு களை கொத்தி விட வேண்டும். அப்போது இருக்கும் பயிர்களின் ஊக்கத்திற்கு ஏற்ப, ஏதேனும் இடுபொருள் இடலாம்.
 
கருணைக் கிழங்குக்கு ஐந்து நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினாலே போதுமானது. தண்ணீர் அதிகம் தேவையில்லாத பயிர். அதேபோல வெங்காயத்திற்கும், அதிக தண்ணீர் தேவையில்லை. ஒரே நேரத்தில் ஒரே தண்ணீரை பயன்படுத்தி, இரண்டு பயிர் செய்வதால் இரட்டை லாபம் ஈட்ட முடியும். வெங்காயம், 60 நாளில் அறுவடைக்கு வரும். அப்போது நாம், 5 டன் வெங்காயத்தை அறுவடை செய்யலாம்.
 
அதன்பின் ஆறு மாதம் கழித்து, கருணைக் கிழங்கை அறுவடை செய்யும் போது, 12 டன் வரை கருணைக் கிழங்கு கிடைக்கும். கருணைக் கிழங்குக்கு இப்போது நல்ல சந்தை இருக்கிறது. அதனால் விற்பனை குறித்த பயம் இல்லை. அதேபோல தண்ணீர் பிரச்னை, பூச்சி தாக்குதல் போன்ற பிரச்னைகள் இருந்தாலும் கூட, எப்படியாவது தாக்குப்பிடித்து கை கொடுப்பதில் கருணை, விவசாயிக்கு நல்ல நண்பன். கருணை மூலமாக மட்டும், ஏக்கருக்கு ஒரு பருவத்திற்கு ஒரு லட்ச ரூபாய் வரை லாபம் ஈட்ட முடியும். வெங்காயம் மூலமும் லாபம் ஈட்டலாம். கருணை, விவசாயிகளுக்கு கை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. தொடர்புக்கு: 99761-08280
 
Link to comment
Share on other sites

இயற்கை முறையில் தென்னை சாகுபடி: லட்சங்களைக் குவிக்கும் சாஃப்ட்வேர் இன்ஜினீயர்

 

6_2176547g.jpg

 

5_2176548g.jpg

இயற்கை விவசாய தென்னந்தோப்பு (உள்படம்) விவசாயி மருதமுத்து, அவரது மனைவி வாசுகி. படம்: என்.தங்கரெத்தினம் 
 
 
விவசாயத்தைக் கைவிட்டு நகர்ப்புறங்களுக்கு குடிபெயரும் இன்றைய சூழலில் சாஃப்ட்வேர் இன்ஜினியர் இப்போது விவசாயத்துக்குத் திரும்பியுள்ளார்.
 
அதுவும் இயற்கை வேளாண் முறையின்மூலம் லட்சங்களைக் குவிக்கும் லாபகரமான தொழிலாகவும் விவசாயத்தை மாற்றி மற்றவர்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறார் மருதமுத்து.
 
இயற்கை விவசாயத்தைக் கடைப்பிடித்து தென்னை சாகுபடி செய்தால் ஒரு தலைமுறை உட்கார்ந்து சாப்பிடலாம் என்பதை இவர் நிரூபித்துள்ளார். பட்டதாரி ஆசிரியரான தனது மனைவியுடன் கிராமத்தில் விவசாயத்தில் ஈடுபட்டு விவசாயமும் லாபகரமான தொழில்தான் என்பதை நிரூபித்துள்ளார்.
 
திண்டுக்கல் அருகே தவமடையில் 9 ஏக்கர் நிலத்தை வாங்கி அதில் இயற்கை முறையில் தனது மனைவி வாசுகியுடன் இணைந்து தென்னை, ரோஜா, சம்பங்கி மற்றும் காய்கறிகளை சாகுபடி செய்து வருகிறார்.
 
தனது அனுபவத்தைப் பற்றி அவர் கூறியது: "ஒவ்வொருஇளைஞர்களிடம் விவசாயி என்ற உள்ளுணர்வு தூங்கிக் கொண்டிருக்கிறது. அதைத்தட்டி எழுப்பினால் அவன் விவசாயியாகி விடுவான். சென்னையில் சாஃப்ட் வேர்இன்ஜினியராக லட்சக்கணக்கில் சம்பாதித்தாலும், மனைவி, குழந்தைகளுடன் நேரத்தை செலவிட முடியவில்லை.
 
ஓய்வே இல்லாமல் ஓடிய நகர்ப்புற வாழ்க்கை மீது எனக்கு ஒரு கட்டத்தில் சலிப்பு தட்டியது. இந்தத் தொழிலை விட்டால் அடுத்து விவசாயம்தான் என்னுடைய தேர்வாக இருந்தது. அன்றாடம் விவசாயிகள் தற்கொலைனு வரும் செய்திகள் என்னை மிரட்டின. விவசாயித்தில் கால் அனாகாசு கூட மிஞ்சாதுப்பா என்று பலர் கூறினர்.
 
இயற்கை விவசாயம் என்றதும்,அதுவெல்லாம் நம்ம நிலத்தில் சாத்தியமில்லைனு பயமுறுத்தினர். விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றி ஜெயித்துக் காட்ட வேண்டும் என்ற வெறி எனக்குள் இருந்தது. சொந்த ஊரில் 9 ஏக்கர் நிலம் வாங்கினேன். விவசாயம் செய்யத் தொடங்கினேன். படிச்ச படிப்புக்கு ஏற்ற வேலையை பார்க்காமல் விவசாயம் செய்ய வந்துட்டான்னு என்னை ஏளனம் செய்யாதவர்களே கிடையாது.
 
இன்று அவர்களே என்னிடம், என்ன பயிர் செய்யலாம், என்ன ரகம் பயிரிடலாம் என ஆலோசனை கேட்கின்றனர்.அந்த அளவுக்கு என்னுடைய தோட்டத்தில் இயற்கை முறையில் பயிரிட்ட தென்னை, சம்பங்கி, கால உணவு பயிர்களை ஒவ்வொன்றிலும் கைநிறைய வருமானம்கிடைக்கிறது.
 
கூலி வேலைக்கு ஆட்களை வைத்துக் கொள்வதில்லை. நானும்,எனது மனைவியுமே நாற்று நடுவோம். தண்ணீர் பாய்ச்சுவோம். அறுவடை செய்வோம். மார்க்கெட்டுக்கு எடுத்துச் செல்வோம். பெருமைக்காக சொல்லவில்லை. என்னை பார்த்து 100 இளைஞர்கள் விவசாயத்திற்கு வரனும்னு நினைச்சேன். இன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் 20, 30 படித்தவர்கள் விவசாயம்செய்கின்றனர். இது என்னுடைய இயற்கை விவசாயத்திற்கு கிடைத்த வெற்றி என்றார்.
 
திண்டுக்கல்லில் கடந்த 4 ஆண்டாக மழையே இல்லை. மாவட்டத்தில் 60 சதவீதம்தென்னை மரங்கள் அழிந்துவிட்டன. ஆனால், என்னுடைய தோட்டத்தில் ஒரு தென்னமரம் கூட பட்டுப் போகவில்லை. மொத்தம் 250 தென்னை மரங்கள் வைத்துள்ளேன். ஒரு மரத்தில் சாதாரணமாக 40 காய் கிடைக்கிறது. மாதம் 45 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இவ்வளவுக்கும் தண்ணீரே பாய்ச்சுவதில்லை.
 
பராமரிப்பு செலவே இல்லை. அதற்குக் காரணம், இயற்கை விவசாயம் முறையில் செய்த நடவுமுறை. 4-க்கு 4 அடி என்ற அளவில் குழி தோண்டி, அதில் கப்பி மணல் கொட்டினேன். மாட்டு சாணம், சிறுநீரை அடி உரமாக போட்டு தென்னை மரக்கன்றுகளை நட்டேன். தென்னை மரம் அதிக தண்ணீரை ஈர்க்கும். கப்பி மணல் போட்டதால் மழைக் காலத்தில் தண்ணீரை ஈர்த்து வைத்துக் கொண்டு 3 முதல் 6 மாதம் வரை மரத்திற்கு தண்ணீர் கொடுக்கிறது. ஒரு தென்னை மரத்தின் வயது 80 ஆண்டு.
 
மனிதனின் சராசரி ஆயுள் 60 ஆண்டு. இயற்கை விவசாயத்தில் தென்னை மரங்களைப் பயிரிட்டால் ஒரு தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம். 60 சென்ட் நிலத்தில் சம்பங்கி பயரிட்டுள்ளேன். இதிலும் ஆண்டுக்கு ரூ. 5.50 லட்சம் வருமானம்கிடைக்கிறது. செலவு போக மாதம் 30 ஆயிரம் லாபம் கிடைக்கிறது. என்னுடையஅடுத்த இலக்கு ரோஜா. இப்போதுதான் ரோஜாவை இயற்கை விவசாயத்தில் சாகுபடி செய்துள்ளேன். இதிலும் நிச்சயம் ஜெயிப்போம்'' என்றார் நம்பிக்கையுடன்.
 
அவருடைய அனுபவங்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள 9787642613 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.
 

 

Link to comment
Share on other sites

தொடர் வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணையம்

 

farmer1.jpg

காலிதண்டலம் கிராமத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் முறையில் உருவாக்கப்பட்ட அசோலா சாகுபடிக் குட்டை. 

 

farmer4.jpg

அதே ஊரில் விளைவிக்கப்பட்ட சிப்பிக் காளான்.

 

farmer3.jpg
கோழி வளர்ப்பு.
 
 
farmer2.jpg
பாக்குமுடையான்குப்பம் கிராம வயல்வெளியில் தீவனப்புல் வளர்ப்பில் ஆலோசனை வழங்கும் காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் பெ. முருகன்.
 
 

விவசாயத்துக்கான நிலப்பரப்பு நாளுக்கு நாள் குறுகிக் கொண்டே வருகிறது. எனவே விவசாய உற்பத்தியில் தன்னிறைவு அடையும் பொருட்டு முற்றிலும் ஒரு புதிய அணுகு முறை தேவைப்படுகிறது. இப்புதிய அணுகுமுறையே ஒருங்கிணைந்த பண்ணையமாகும்.

ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் உதவிப் பேராசிரியர் (உழவியல்) பெ. முருகன் கூறியதாவது: பயிர் சாகுபடியை மட்டும் நம்பி இருக்காமல் கறவை மாடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு, கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, காடை வளர்ப்பு, காளான் வளர்ப்பு ஆகிய உபதொழில்களை இணைத்து விவசாயத்தில் ஈடுபட்டால் கூடுதல் வருமானம் பெறலாம்.

ஒருங்கிணைந்த பண்ணையத்தின் முக்கியக் குறிக்கோள்கள்:பண்ணையத்தின் மொத்த வருமானத்தை அதிகரித்தல், ஆண்டு முழுவதும் தொடர்ந்து வருமானத்துக்கு வழி ஏற்படுத்துதல், விவசாயத் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு அளித்தல், பண்ணைப் பொருட்கள், பண்ணைக் கழிவுகளை சிறிய முறையில் சுழற்சி செய்தல், பண்ணையிலிருந்து கிடைக்கும் கழிவுப் பொருள்களை மீண்டும் வயலில் இட்டு நிலத்தின் வளம், மகசூலைப் பெருக்குவதோடு, உரச் செலவுகளைக் குறைப்பது போன்றவை.

ஒருங்கிணைந்த பண்ணையத்தின் அடிப்படைத் தத்துவங்கள்:ஒருங்கிணைந்த பண்ணை முறையில் பண்ணைத் திட்டம் வகுக்கும்போது நன்செய், தோட்டக்கால், புன்செய் நிலங்களுக்கு ஏற்ற பயிர்த் திட்டத்தை அமைத்தல் வேண்டும். பின்பு அந்தப் பயிர்த் திட்டத்துக்கு ஏற்ப பொருளாதார ரீதியில் பலன் தரக்கூடிய ஒன்று அல்லது இரண்டு உபதொழில்களை தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்ந்து எடுக்கும் உபதொழில்கள் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்க வேண்டும்.

அவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்ட உப தொழில்களுக்குத் தேவையான இடுபொருள்கள் அந்தப் பண்ணையிலேயே உற்பத்தி செய்ய வேண்டும். உபதொழிலுக்கு ஏற்ற இடுபொருள்கள் போதவில்லையெனில் அதற்கேற்றவாறு பயிர்த் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்.

மேலும் ஒரு உப தொழிலிருந்து கிடைக்கும் கழிவுப் பொருள்களை மற்றொரு உபதொழிலுக்கு இடுபொருளாக இருக்குமாறு உபதொழில்களைத் தேர்ந்து எடுக்க வேண்டும். பண்ணையில் விளையும் அல்லது தங்கள் ஊரில் கிடைக்கும் தானியங்களைக் கொண்டே தீவனக் கலவை தயார் செய்தல் வேண்டும். அப்போது தான் உபதொழில்களுக்கு ஆகும் உற்பத்தி செலவு குறைந்து அதிக லாபம் பெறலாம்.

ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் பயிர் சுழற்சியால் முதல் போகத்தில் நெல் பயிரிட்டு, இரண்டாம் போகத்தில் பயிறு, மூன்றாம் போகத்தில் பயிறு சாகுபடிக்கு மாற்றாக மக்காச்சோளம் ஆகியவற்றைப் பயிரிடலாம்.

கோழி வளர்ப்பு: ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் மீன் வளர்ப்பு ஒரு அங்கமாக இருப்பதால் 10 சென்ட் மீன் குட்டைக்கும், மீதமுள்ள 90 சென்ட் பயிர் சாகுபடிக்கு ஒதுக்கலாம். இதில் இரண்டு போக நெல்லில் கிடைத்த பதர் நெல் தவிடு ஆக்கப்பட்டு கோழிக்குத் தீவனமாக பயன்படுத்தப்படலாம். இதே போல் மூன்றாம் போகத்தில் சேர்க்கப்பட்ட மாற்றுப் பயிரில் ஒன்றான மக்காச்சோளத்தையும் கோழித் தீவனத்துக்குத் தேவையான அளவு எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு பயிர் சாகுபடியில் கிடைத்த சில விளைபொருள்கள், கழிவு உபயோகத்தால் கோழித் தீவனச் செலவை சுமார் 70 சதவீதம் குறைக்க முடியும்.

மீன் குட்டையில் கோழி வளர்ப்பு: கோழியின் கழிவு மீன்களுக்கு ஒரு சிறந்த உணவாகும். கோழியின் கழிவுகளில் 22 சதவீதம் புரதச் சத்தும், பாஸ்பரஸ், கந்தகம், தாமிரம், மாங்கனீசு போன்ற உலோகச் சத்துக்களும் 15 வகையான அமினோ அமிலங்களும் இருப்பதால் இது மீன் வளர்ச்சிக்கு உகந்ததாக உள்ளது. மீன்களின் எண்ணிக்கைக்குத் தக்கபடி கோழிகளின் எண்ணிக்கையை நிர்ணயிக்க வேண்டும். 400 கலப்பின மீன் குஞ்சுகளுக்கு 20 கோழிகள் போதுமானவையாகும்.

கோழிகளை 8-ஆவது வாரத்தில் விற்பனை செய்யலாம். மீன்கள் போதிய அளவிற்கு வளர்ச்சிப் பெற்று 6-வது மாதக் கடைசியில் விற்பனைக்குத் தயாராகும்.

சிப்பிக்காளான் வளர்ப்பு: நெற் பயிரிலிருந்து கிடைக்கும் வைக்கோல், மக்காச்சோளக் கதிர்ச்சக்கை காளான் வளர்ப்பிற்கு இடுபொருளாக உள்ளது. இதனால் குறைந்த செலவில் காளான் உற்பத்தி செய்து அதிக வருமானம் பெற வாய்ப்பு உள்ளது.

ஆனால் உற்பத்தி செய்யும் காளான்களை அன்றன்றே விற்பனை செய்து விட வேண்டும்.

கறவை மாடு வளர்ப்பு: மக்காச்சோளத்திலிருந்து கிடைக்கும் மணிகள், தட்டு மூலமாகவும் பசுந்தீவனங்கள் மூலமாகவும் விவசாயிகள் 2 முதல் 3 கறவை மாடு வளர்த்து அதிலிருந்து கிடைக்கும் பால் மூலம் அதிக வருமானம் பெறலாம்.

காடை வளர்ப்பு: 100 சதுர அடி பரப்பளவு கொண்ட அறைக்கு 500 காடைக் குஞ்சுகள் என்ற அளவில் வளர்த்தால் மாதம் ரூ. 4,000 முதல் ரூ. 5,000 வரை வருமானம் பெறலாம்.

நெல் வயலில் மீன் வளர்ப்பு: வடகிழக்கு பருவமழை காலத்தில் நடுத்தர, அதிக வயதுடைய ரகங்களான வெள்ளைப் பொன்னி, பாப்பட்லா, ஆடுதுறை 49 ஆகியவை சாகுபடி செய்யப்படுகின்றன.

ஒரு ஏக்கர் நெல் சாகுபடி செய்ய குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதல் 13 ஆயிரம் வரை செலவாகிறது.

நெல் சாகுபடியை ஊக்குவிப்பதற்கும், நெல் சாகுபடி செய்யும் நிலங்களில் அதிக வருமானம் பெற நெல் வயலில் மீன் வளர்ப்பு உதவிகரமாக இருக்கும்.

இந்தத் தொழில்நுட்பத்தைக் கடைப்பிடிப்பதால் நெல் வயலில் உள்ள களைகளை கட்டுப்படுத்துவதுடன் பூச்சிகளின் தாக்குதலையும் குறைக்கலாம்.

மீன் கழிவுகள் வயலுக்கு உரமாகவும், 10 முதல் 15 சதவீதம் வரை கூடுதல் மகசூல் கிடைக்கவும் வாய்ப்பை ஏற்படுத்தும். வடகிழக்கு பருவமழை காலத்துக்குப் பின் சம்பா, தாளடி பருவத்தில் இந்த தொழில்நுட்பத்தைக் கடைப்பிடிக்கலாம். நெல்லுடன் மீன்வளர்ப்புக்கு வெள்ளைப் பொன்னி, பாப்பட்லா, ஆடுதுறை 49 ரகங்கள் மிகவும் ஏற்றவை.

நெல் வயலின் வரப்பைச் சுற்றி 1 மீட்டர் ஆழமும், 1 மீட்டர் அகலமும் கொண்ட கால்வாய் அமைத்து அதில் மீன்களை வளர்க்கலாம்.

நெல் வயலில் கால்வாயை விட்டுவிட்டு மற்ற நடு பகுதியில் நெல்பயிர் நாற்றை வரிசைக்கு வரிசை 25 செ.மீ, செடிக்கு செடி 25 செ.மீ. இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். இவ்வாறு அதிக இடைவெளியில் நடவு செய்வதால் மீன்கள் வயலின் நடுபகுதிகளுக்கு சென்று இறைத் தேட வசதியாக இருக்கும். நெல் வயலில் நீர்விடும் பகுதி, நீர் வெளியேற்றம் பகுதியில் வலைகள் அமைத்து மீன்கள் தப்பிச் செல்வதைத் தடுக்க வேண்டும்.

நெற்பயிர் நடவு செய்தவுடன், நெல்வயலில் 5 செ.மீ. முதல் 10 செ.மீ. நீர் அளவு இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். நெல் நடவு செய்யப்பட்டு 5 நாள்கள் கழித்து ஏக்கருக்கு 100 கிலோ அசோலாவை வயலில் இடவேண்டும். இவ்வாறு செய்வதால் நெற்பயிறுக்கு தழைச்சத்து கிடைப்பதுடன், அது மீன்களுக்கு நல்ல உணவாகவும் இருக்கும்.

நெல் நடவுக்குப் பின் 15 நாள்கள் கழித்து ரோகு, கட்லா, மிர்கால் போன்ற மீன் குஞ்சுகளை ஏக்கர் ஒன்றுக்கு 1,000 முதல் 1,200 வரை கால்வாயில் இருப்பு செய்யலாம்.

வாரம் ஒரு முறை மாட்டுச் சாணம், கிளைரிசிடியா தழைக் கட்டுகளை நெல் வயலில் உள்ள கால்வாயில் போட வேண்டும். இது மீன்களுக்கு சிறந்த உணவாகும்.

மேலும் வயலில் உள்ள அசோலா, களைகள், நெற்பயிறுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகள் (விளக்கு பொறி வைப்பதால்) மீன்களுக்கு இறையாக கிடைக்கின்றன. நெல் வயலில் மீன்கள் வளர்க்கும்போது ரசாயன பூச்சிக் கொல்லிகள் தெளிக்க கூடாது. இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் மருந்துகளான வேப்ப எண்ணெய், பஞ்ச காவ்யா, இழைச்சாறு ஆகியவற்றை தெளிக்கலாம். நெல் முதிர்ச்சி பருவத்தில் நெற்பயிரின் நடுவே நீர் பாய்ச்சுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். இந்த சமயத்தில் கால்வாயில் மட்டுமே நீர் நிறுத்த வேண்டும். நெல் அறுவடை செய்தவுடன் கால்வாயில் உள்ள நீரை வடிகட்டி விட்டு மீன்களைப் பிடித்து விற்பனை செய்யலாம். நெல் வயலில் இருப்பு செய்யப்பட்ட மீன்கள் 5 மாதத்தில் 500 கிராம் முதல் 600 கிராம் வரை எடை கொண்டவையாக வளரும் வாய்ப்புள்ளது.

இவ்வாறு செய்வதால் ஒரு ஏக்கருக்கு 400 கிலோ முதல் 500 கிலோ வரை மீன்களைப் பெறலாம்.

மேலும், விவரங்களுக்கு, காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தை 044 - 2745237 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.

 

http://www.dinamani.com/agriculture/2014/10/30/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/article2499261.ece

 

Link to comment
Share on other sites

25 சென்ட் நிலத்தில் வெண்டை பயிரிட்டு ரூ.60 ஆயிரம் லாபம்

 

E_1414487262.jpeg

 

மதுரையில் 25 சென்ட் நிலத்தில் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வெண்டை பயரிட்ட விவசாயி ரூ.60 ஆயிரம் லாபம் ஈட்டியுள்ளார்.
மதுரை மாவட்டம் செல்லம்பட்டி அருகே உள்ள பொறுப்பு மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி நல்லு, 48. சிந்துபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் துணைத்தலைவராக உள்ளார். இவர் தனது 25 சென்ட் நிலத்தில் தோட்டக்கலை துறை மூலம் மானியத்தில் யு.எஸ். வீரிய ஒட்டு ரக வெண்டை நடவு செய்தார். வழக்கமாக வெண்டை பயிர் அறுவடை துவங்கி 15 எடுப்புகள் மட்டும் மகசூல் தரும். அதன் பின்னர் வெள்ளை நோய் தாக்கி செடிகள் அழிந்து விடும். ஆனால் இந்த புதிய ரக வெண்டை செடிகள் 45 எடுப்புகள் வரை மகசூல் தந்துள்ளன. ஒரு எடுப்புக்கு 80 கிலோ முதல் 140 கிலோ வரை மகசூல் கிடைத்தது. இவை உயர் தரத்தில் அளவில் பெரியதாக உள்ளன. இதனால் ஒரு கிலோவிற்கு சராசரியாக ரூ.20 என்ற அளவில் விலை கிடைக்கிறது.
 
ஆரம்பத்தில் இவற்றை உசிலம்பட்டி மார்க்கெட்டிற்கு கொண்டு சென்று நல்லு விற்பனை செய்தார். இவற்றின் தரம் அறிந்த தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த வியாபாரிகள் பொறுப்பு மேட்டுப்பட்டிக்கு நேரில் வந்து மார்க்கெட் விலையை விட கூடுதல் விலைக்கு வாங்கிக் கொள்கின்றனர். தொடர்ந்து அவர்களே வேலை ஆட்களை அழைத்து வந்து, வயலில் வைத்தே அட்டை பெட்டிகளில் "பேக்கிங்' செய்து திருச்சி, திருவனந்தபுரம் வழியாக மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.
விவசாயி நல்லு கூறுகையில், "செல்லம்பட்டி தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் மூலமாக தொழில் நுட்ப உதவி பெற்று வெண்டை பயிரிட்டேன். இதன் மூலம் 25 சென்ட் நிலத்தில் ரூ.60ஆயிரம் லாபம் ஈட்டியுள்ளேன்.
 
வியாபாரிகளே நேரில் வந்து கொள்முதல் செய்வதால் இடைத்தரகர்கள் இல்லாமல் நல்ல விலை கிடைக்கிறது. வியாபாரிகளுக்கும் லாபகரமாக உள்ளது' என்றார். தோட்டக்கலை உதவி இயக்குனர் முத்துதுரை கூறியதாவது: தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் உயர் தொழில் நுட்பத்தில் யு.எஸ்.ரக வெண்டை விதைகள், உரங்கள், பூச்சி மருந்துகள் மானியத்தில் வழங்கப்பட்டன. உழவு முதல் அறுவடை வரை சாகுபடி மற்றும் விற்பனை தொழில் நுட்ப உதவிகள் அளிக்கப்பட்டன. இவற்றை பயன்படுத்தி நல்லு சாதித்துள்ளார்.வழக்கமாக ஒரு ஹெக்டேரில் வெண்டை பயிரிட்டால் 3 மாதங்களில் 8 முதல் 10 டன் மகசூல் கிடைக்கும். ரூ.50ஆயிரம் லாபம் கிடைக்கும்.
 
நவீன தொழில் நுட்பத்தில் சாகுபடி செய்தால் 6 மாதங்கள் வரை மகசூல் கிடைக்கும். வெள்ளை நோய் தாக்குதல், சுனை, காயம் படுதல் கிடையாது. ஹெக்டேருக்கு 16 முதல் 20 டன் வரை மகசூல் கிடைக்கும். ரூ.3லட்சம் வரை லாபம் கிடைக்கும். நடப்பாண்டில் நவீன தொழில் நுட்பத்தில் பயிரிட விரும்பும் விவசாயிகள் செல்லம்பட்டி தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி முன்னுரிமை பதிவேட்டில் பதிவு செய்து, மானியத்தில் விதை, உரம், பூச்சி மருந்து, தொழில் நுட்ப உதவிகள் பெற்று பயனடையலாம்' என்றனர்.
 
மேலும் விபரங்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்குனர் முத்துதுரை (94421 24593), தோட்டக்கலை அலுவலர் மணிவேலு (94438 05968), உதவி வேளாண்மை அலுவலர் சொர்ணராஜன்(98949 28463) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
 
Link to comment
Share on other sites

தினை பயிரில் திருப்தியான லாபம்!

 

தினை போட்டால் திருப்தியான லாபம் பெறலாம் எனக்கூறும் விவசாயி சுப்பிரமணியன்: புதுவை விநாயகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவன் நான். வழக்கமாக எங்கள் பகுதியில் நெல், கரும்பு போன்ற பயிர்களைத் தான் பயிரிடுவோம்.

 

இந்நிலையில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் உயிரி கிராமத் திட்டத்தில், சிறு தானியங்களில் ஒன்றான தினைப் பயிரைப் பயிர் செய்யுமாறு அறிவுறுத்தினர்.
 
அது மட்டுமல்லாமல், சிறு தானியங்களைப் பயிர் செய்கிற பகுதிகளுக்கும் எங்களை அழைத்துச் சென்று, அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர். மேலும், தினை பயிரிடுவதற்கு தேவைப்படும் விதைகளையும், இலவசமாக எங்களுக்கு வழங்கினர். அதனடிப்படையில் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த, 14 விவசாயிகள் குழுவாக இணைந்து, 15 ஏக்கர் பரப்பளவில் தினை சாகுபடி செய்தோம். நானும், ஒரு ஏக்கர் நிலத்தில் தினைப் பயிர் செய்து அதிக லாபம் ஈட்டினேன்.
 
நிலத்தை நன்றாக உழுது, லேசான ஈரப்பதம் உள்ள நிலையில், தினை விதைகளை விதைக்க வேண்டும். மானாவாரியாக செய்ய வேண்டுமென்றால், மழைக்குப் பின் விதைக்க வேண்டும். ஒரு ஏக்கரில் பயிரிடுவதற்கு, 5 கிலோ விதைகள் தேவைப்படும். விதைத்த, 85 - 90 நாட்களுக்குள் தினைப் பயிர் அறுவடைக்குத் தயாராகி விடும். 15 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும். தினைப் பயிரை நோய் தாக்காது என்பதால், பூச்சிக் கொல்லியைப் பயன்படுத்த வேண்டியதில்லை. மானாவாரியாக பயிர் செய்தாலே போதும். துாறலும், பனிப்பொழிவும் உள்ள காலத்தில், பயிரிட்டு லாபம் பெறலாம்.
 
விதைப்பு முதல் அறுவடை வரை அனைத்து செலவுகளையும் சேர்த்து, 5,000 ரூபாய் செலவு செய்துள்ளேன். ஒரு ஏக்கரிலிருந்து, 1,000 கிலோ தினையை அறுவடை செய்திருந்தேன்.
அது மட்டுமல்லாது, 100 கிலோ அடங்கிய ஒரு மூட்டை விலை, 2,700 ரூபாய் வீதம், 10 மூட்டைகளை விற்பனை செய்ததன் மூலம், 27 ஆயிரம் ரூபாய் பெற்றேன்; 22 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டினேன். குறுகிய காலப் பயிர் மற்றும் செலவும் குறைவு என்பதால், குறு விவசாயிகள் பயிர் செய்து லாபம் பெறலாம்.
 
Link to comment
Share on other sites

வேம்பின் மகத்துவம்

 

neem_2187536h.jpg

 

வேம்பின் அனைத்து பாகங்களும் விவசாயி களுக்குப் பயன்படுகின்றது. வேப்பிலையில் தழைச்சத்து 2.5%, மணிச்சத்து 0.6% , சாம்பல் சத்து 2.0% உள்ளன.
 
இதனை நன்செய் நிலங் களுக்கு இடலாம். வேப்பந் தழை இட்ட நிலத்தில் கரையான் பாதிப்பு இருக்காது. நூற்புழுவின் தாக்குதல் குறைந்துவிடும். உலர்ந்த வேப்பிலைகளை நெல், சோளம் போன்ற தானியங் களுடன் கலந்து வைத்தால் வண்டுகள், அந்துப்பூச்சிகள் மற்றும் துளைப்பான்களின் தாக்குதலிலிருந்து தடுக்கலாம்.
 
வேப்பங்கொட்டைக் கரைசல்
 
10 கிலோ வேப்பங் கொட்டையை நன்கு தூளாக்கி அதை 20 லிட்டர் நீரில் கரைத்து ஒரு நாள் வைத்திருந்து வடிகட்டி 200 லிட்டர் நீர் சேர்த்து ஒட்டும் திரவம் 200 மில்லி அல்லது 100 கிராம் காதிபார் சோப்பு சேர்த்து கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.
 
இவ்வாறு தெளிப்பதன் மூலம் பயிர்களில் தோன்றும் கம்பளிப் புழுக்கள், அசுவி னிகள், தத்துப்பூச்சிகள், புகை யான், இலைச்சுருட்டுப்புழு, ஆணைக் கொம்பன், கதிர்நா வாய்ப் பூச்சி ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம். பயிர் களைத் தாக்கும் சாம்பல் நோய், மஞ்சள் வைரஸ் நோய் முதலியவைகளைக் கட்டுப்படுத்த வேப்பெண் ணெய்க் கரைசல் பயன்படும்.
 
வேப்பம் புண்ணாக்கு
 
வேப்பம் புண்ணாக்கில் தழைச்சத்து 5.2%, மணிச் சத்து 1.1%, சாம்பல் சத்து 1.5%உள்ளன. இதை நேரடியாக பயிருக்கு இடலாம்.
 
 
Link to comment
Share on other sites

பார்த்தீனியத்தை அழிக்கும் 'மெக்சிக்கன்' வண்டுகள்: காந்திகிராமத்தில் வினியோகம்
 
 
Link to comment
Share on other sites

உண்ண உகந்த வாழைப்பழ உலர் அத்தி!

 

வாழைப்பழ உலர் அத்தி தயாரிப்பது குறித்து விளக்கும், தொட்டியம் வாழை உற்பத்தியாளர் குழு நிர்வாகிகளில் ஒரு வரான சுப்பிரமணி: திருச்சி மாவட்டம் தொட்டியம், முசிறி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில், வாழை சாகுபடி அதிகம். தமிழகத்திலேயே மிக அதிகமாக வாழை உற்பத்தியாவது இந்தப் பகுதிகளில் தான்.

 

வாழை வணிகத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் நோக்கத்தில், உருவானது தான், தொட்டியம் வாழை உற்பத்தியாளர் குழு. அதில், 15 பேர் நிர்வாகிகள்; குழு உறுப்பினர்களாக, வாழை விவசாயிகள், 150 பேர் உள்ளனர். இங்கு உற்பத்தியாகும் வாழை ரகங்களான பூவன், ரஸ்தாளி, கற்பூரவல்லி, ஏலக்கி போன்ற வாழைப்பழக் குலைகளை, எங்கள் குழு உறுப்பினர்களிடமிருந்து, உரிய விலை கொடுத்து கொள்முதல் செய்வோம். அவ்வாறு வாங்கியவற்றை, தொட்டியம் அருகே வரதராஜபுரம் கிராமத்தில், அரசு அமைத்துள்ள கூட்டுறவு சங்கக் கிடங்கில் வைத்து, பழுக்க வைக்கிறோம்.
 
அதன்பின்னரே, தொட்டியத்தில் அமைக்கப்பட்டுள்ள இயற்கை சூரிய ஒளி உலரகத்திற்கு கொண்டு வருகிறோம். வாழைப்பழ உலர் அத்தி தயாரிப்பதற்கென, இந்தியாவில் அமைக்கப்
பட்டுள்ள முதல் உலரகம் இது தான்.பழுத்த வாழைப்பழங்களின் தோலை உரித்து, அதை சுத்தமான தேனில் நனைத்து எடுக்க வேண்டும். தேனில் நனைத்து எடுத்த வாழைப்பழங்களை, உலரகத்தின் உள்ளே அடுக்குவோம். 55 டிகிரி வெப்பத்தில், அந்தப் பழங்கள் மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் உலர்ந்து விடுகின்றன.
 
பாலி கார்பனேட் இழை கொண்டு உலரகம் மூடப்பட்டுள்ள தால், அதனுள்ளே, 55 டிகிரி வெப்பத்தை எப்போதும் தக்க வைத்துக் கொண்டிருக்கும். தேவைக்கு மேற்பட்ட அதிக வெப்பம், 'ஆட்டோமேட்டிக் சென்சார் பேன்' மூலமாக வெளியேற்றப்பட்டு விடும்; 300 கிலோ திறன் கொண்ட உலரகம் இது. இதில், 100 கிராம் பழமானது, உலர்ந்த பின், 25 கிராம் கொண்டதாகவே நமக்குக் கிடைக்கும். 300 கிலோ பழம் உள்ளே வைத்தால், 75 - 80 கிலோ உலர் அத்தி தான் கிடைக்கும். அதன்பின் அவற்றை எடுத்து, 'பேக்கிங்' செய்கிறாம். இந்த வகையான வாழைப்பழ உலர் அத்தி, ஆறு மாதங்கள் வரை உண்ண உகந்தவை.
 
வாழைப் பழங்களில் உள்ள நீர்ச்சத்து, 85 சதவீதம் ஆவியாக்கப்பட்டு விடுகிறது. வாழைப் பழங்களில் உள்ள நார்ச்சத்து மற்றும் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும் வைட்டமின் சத்துகள் மட்டுமே, வாழைப்பழ உலர் அத்தியில் தங்கியிருக்கும். பொட்டாசி யம், தாது சத்துகளும் அந்த அத்தியில் பாதுகாக்கப்பட்டிருக்கும். இந்த சூரிய ஒளி இயற்கை உலரகத்தில் மாதம், 1,000 கிலோ உற்பத்தி செய்யப்படுகிறது. மழை நாட்களில் இந்த உலரகம் செயல்படாது. ஜெர்மானிய நிறுவனம் இந்த உலரகத்தை, தொட்டியம் வாழை விவசாயிகளுக்கென, 100 சதவீத மானியத்தில் அமைத்துத்
தந்துள்ளது.
 
Link to comment
Share on other sites

மெத்தைலோ பாக்டீரியா நுண்ணுயிர் உரம்
 
 
E_1415090353.jpeg
 
 
மெத்தைலோ பாக்டீரியா நுண்ணுயிர் உரம்: இலைகளின் மேற்புறத்திலும் உட்புறத்திலும் வாழும் பாக்டீரியாக்களில் மெத்தைலோ பாக்டீரியா என்றும் நன்மை செய்யும் பாக்டீரியா மிக முக்கியமானது. இப்பாக்டீரியா செடிகளின் இலைப்பரப்பிலும் வேர் மண்டலத்திலும் காற்று, தண்ணீர், மண், கல் அனைத்து இடங்களிலும் (காற்று போகாத இடங்கள் தவிர) காணப்படுகிறது.
இலைகளில் வேதியல் கூறுகள் மூலம் பல கரிமப்பொருள்கள் உருவாகின்றன. அவைகளில் மெத்தனால் என்னும் கரிமப்பொருள் முக்கியம் வாய்ந்தது. இந்த மெத்தனால் இலைகளில் பெக்டின் எனப்படும் கரிமப்பொருள் உயிர்வேதியல் முறையில் சிதைவடையும் போது உருவாகிறது. மெத்தைலோ பாக்டீரியா இலைகளில் இருப்பதால் ஸ்டொமேட்டா மூலம் வெளியாகும் இந்த மெத்தனாலை உணவாக உட்கொண்டு வாழ்கிறது.
 
மாறாக மெத்தைலோ பாக்டீரியா செடிகளுக்கு பயிர் வளர்ச்சி ஊக்கிகளான சைட்டோகைனின் ஆக்ஸின்களை அளிப்பதன் மூலம் செடிகள் நன்கு வளர்ச்சியடைகின்றன. பிபிஎப்எம்ஐ திரவ நுண்ணுயிர் உரமாக பயன்படுத்தலாம். இந்த பாக்டீரியா ஆய்வகத்தில் வளரும்போது இளஞ் சிவப்பு நிறம் உடையதாக இருப்பதால் இது பொதுவாக பிபிஎப்எம் என்று அழைக்கப்படுகிறது. விதைகளை நடுவதற்கு முன்பாக விதைகளின் கடினத் தன்மையைப் பொறுத்து பிபிஎப்எம் நுண்ணுயிர் திரவ கரைசலில் 5 முதல் 15 நிமிடம் நன்கு ஊறவைத்து பின்பு நிழலில் 15 நிமிடம் உலர வைத்து நடுவதன் மூலம் விதைகளின் முளைப்புத்திறன் நாற்றுக்களின் வீரியம் மற்றும் வளர்ச்சி அதிகரிக்கிறது. மேலும் விதைகளின் முளைப்புக் காலம் ஒன்று முதல் இரண்டு நாட்கள் குறைக்கப்படுகிறது.
 
பிபிஎப்எம் திரவ நுண்ணுயிர் உரத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், பயிர்களின் வளர்ச்சி, வளர்ச்சி காலம், பூக்கும் காலம், காய்க்கும் காலம் 5 முதல் 7 நாட்கள் வரை குறைக்கப்படுகிறது. மேலும் காய்கள், பூக்கள், பழங்களின் நிறம், திடம், பருமன் அதிகரிக்கிறது. பூ, காய் பிடிக்கும் பருவத்தில் பிபிஎப்எம் தெளிப்பதன் மூலம் பூக்கள், காய்கள் உதிர்வதைத் தடுக்கலாம்.
 
தென்னை, மா, கொய்யா, பப்பாளி, முருங்கை, மாதுளை போன்ற பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் மூலமாக வேர்களுக்கு சென்று அடையுமாறு கொடுக்கலாம். அல்லது கைத்தெளிப்பான் அல்லது விதைத் தெளிப்பானைக் கொண்டு கைக்கு எட்டும் உயரம் வரை இலைகள் நன்கு நனையும்படி தெளிக்கலாம்.
நீர்ப்பற்றாக்குறை அல்லது வறட்சியால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு பிபிஎப்எம் தெளிப்பதன் மூலம் பயிர்கள் நீரின் தேவையின்றி 5 முதல் 10 நாட்கள் வரை (மண்ணின் ஈரப்பதம் பொறுத்து) வாடாமல் வறட்சியைத் தாங்கும் தன்மையைப் பெறுகின்றன. இந்த பிபிஎப்எம் ஐ இயற்கை பயிர் ஊக்கி என்றும் அழைக்கலாம். இந்த திரவ நுண்ணுயிர் உரத்தை உபயோகிக்கும் போது ஒட்டும் திரவம், அரிசி கஞ்சி ஆகியவற்றை சேர்க்க தேவையில்லை.
 
காவிரிடெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் நெல் சாகுபடியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட போது 1 லட்சத்து 25 ஏக்கர் நிலப்பரப்பில் வாடிய நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு 200மிலி பிபிஎப்எம் ஐ 200 லிட்டர் நீர் கலந்து விசைத்தெளிப்பான் மூலம் சென்ற ஆண்டு தெளிக்கப்பட்டதில் நெற்பயிர் 10 முதல் 15 நாட்கள் வரை தண்ணீர் இல்லாத நிலையிலும் வறட்சியை தாங்கும் தன்மை பெற்றது.
 
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் நுண்ணுயிரியல் துறையில் போர்க்கால அடிப்படையில் 25 ஆயிரம் லிட்டர் பிபிஎப்எம் திரவ நுண்ணுயிர் உரம் உற்பத்தி செய்து காவிரிடெல்டா பகுதியிலுள்ள நெற்பயிர்களுக்கு தெளித்து பயிர் காப்பாற்றப்பட்டது. (தகவல்: முனைவர் எம்.செந்தில்குமார், முனைவர் எஸ்.குணசேகரன், வேளாண் நுண்ணுயிரியல் துறை, த.வே.ப.கழகம்) கோயம்புத்தூர்-641 013. போன்: 0422 - 661 1294, 661 1394.
 
- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.
 
 
Link to comment
Share on other sites

திருச்சி டூ ஆஸ்திரேலியா! - பொள்ளாச்சி இளநீருக்கு புதிய வடிவம்

 

Untitled__2196879g.jpg

 

 

Untitled_2196877g.jpg

திருச்சி மன்னார்புரத்தில் உள்ள குடோனில் ஏற்றுமதிக்காக கார்விங் செய்யப்படும் இளநீர். (உள்படம்) மட்டை சீவப்பட்டு பேக்கிங் செய்யத் தயாராக உள்ள இளநீர்.

 

புதிதாக தொழில் தொடங்குபவர், பாரம்பரியமாக தொழில் செய்பவர் என யாராக இருந்தாலும் இன்றைய கால மாற்றத்துக்கு தகுந்தாற்போல ஏதாவது புதுமையான, அதிலும் எளிய வழியை கையாள வேண்டியது அவசியம் என்கிறார் திருச்சியில் இளநீர் மொத்த வியாபாரம் செய்துவரும் காஜாமுகமது (56).
 
தன்னுடைய தொழிலில் புகுத்திய புதுமையான முயற்சி குறித்து ‘தி இந்து’விடம் அவர் பகிர்ந்துகொண்டது:
 
கடந்த 25 ஆண்டுகளாக பொள்ளாச்சியில் இருந்து இளநீர் வாங்கி வியாபாரம் செய்கிறேன். இன்றைய இளம் தலைமுறையினர் குளிர்பானம் குடிப்பதை கவுரவமாக கருதுகிறார்கள். என்னதான் இளநீர் இயற்கை பானம் என்றாலும், மரத்தடியிலும் தள்ளு வண்டியிலும் மட்டுமே விற்கும் நிலை உள்ளது. அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் ஷாப்பிங் மால் முதல் சிறிய பெட்டிக்கடை வரை இளநீரை கொண்டுசெல்லவேண்டும் என்பது எனது நீண்டநாள் கனவாக இருந்தது.
 
அதற்கு வடிவம் கொடுக்கும் முதற்கட்ட முயற்சியாக இளநீர் மட்டையை கார்விங் செய்து நீக்கும் மூன்று இயந்திரங்களை கோவையிலிருந்து வாங்கினேன். மின் மோட்டார் உதவியுடன் இயங்கும் இந்த இயந்திரத்தின் நடுவே முழு இளநீரை வைத்து, சுழலச் செய்து கொண்டே மேல் மட்டையை நீக்கி, தலை மற்றும் அடிப்பகுதியை ரம்பம் போன்று சுழலும் இயந்திரத்தால் நறுக்கிவிடுவோம். பின்னர் சுத்தமாகக் கழுவி, மெல்லிய பாலித்தீன் பேக்கிங் செய்கிறோம். சராசரியாக 2 கிலோ எடையுள்ள இளநீர், இவ்வாறு மட்டை நீக்குவதால் 800 கிராமாக எடை குறைகிறது.
 
ஆரம்பத்தில் இதை, என்னிடம் இளநீர் வாங்கும் சில்லறை வியாபாரிகளிடம் விற்கக் கொடுத்தேன். முதலில் தயங்கியவர்கள், தற்போது தினமும் பச்சை இளநீருடன், இதையும் வாங்கி விற்கின்றனர். ஒரு பக்கெட்டில் 20 இளநீரை அடுக்கி பேக்கிங் செய்துள்ளேன். குளிர்பானம் விற்கும் எல்லா இடங்களிலும் இதை எளிதாக விற்கலாம். ஏற்கெனவே பாதிக்கும் மேல் மட்டை கார்விங் செய்துள்ளதால், இந்த இளநீரை துளையிட கத்தி அல்லது வீட்டில் இருக்கும் கரண்டி போதுமானது. ஃபிரிட்ஜில் வைத்தால் 20 நாட்கள் வரை கெடாது, இடத்தையும் அடைக்காது” என்றார்.
 
மேலும் அவர் கூறியபோது, “தாய்லாந்து நாட்டினர் இந்த வகையில் இளநீரை பேக் செய்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்கின்றனர். தற்போது ஆஸ்திரேலியாவில் இருந்து என்னிடம் இந்த வகையில் இளநீர் பேக் செய்து தர ஆர்டர் கொடுத்துள்ளனர். முதற்கட்டமாக இந்தமாதம் ஒரு கன்டெய்னரில் 6 ஆயிரம் இளநீர் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. சென்னையில் இருந்து கடல் வழியாக 20 நாட்களில் ஆஸ்திரேலியாவைச் சென்றடையும்” என்றார் அவர்.
 
சூழலுக்கு ஏற்றவாறு மாற்றி யோசித்து அதற்கு செயல் வடிவம் கொடுத்ததுடன் ஆஸ்திரேலியாவுக்கு நம் ஊர் இளநீரை ஏற்றுமதி செய்யும் காஜாமுகமதுவுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வளவு மெனக்கெட்டு உருவாக்கப்படும் இந்த இளநீரை மொத்தவிலைக்கு ரூ.20-க்கு விற்கிறார். சில்லறைக் கடைகளில் இதை ரூ.25-க்கு விற்கிறார்கள்.
 
Link to comment
Share on other sites

லாபம் தரும் நிலக்கடலை விதை உற்பத்தி

groundnut.jpg

மண்ணின் தன்மை, நீர்ப் பிடிப்பு ஆகியவற்றைப் பொருத்து பாத்திகள் அமைத்துக் கொள்ள வேண்டும். நிலக்கடலை ஒரு தன் மகரந்த சேர்க்கைப் பயிராகும். ஆகையால் ஒரு ரக நிலக்கடலை விதை பயிருக்கும், மற்றொரு ரக நிலக்கடலை விதை பயிருக்கும் குறைந்தபட்சம் 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.

 

நிலக்கடலை விதையைப் பயிரிட்டால் குறைந்த செலவில் அதிக லாபத்தை விவசாயிகள் பெறலாம்.

 
தமிழ்நாட்டில் நிலக்கடலை சுமார் 22.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 6 லட்சம் டன் உற்பத்தி செய்யப்படுகிறது.
 
இதில் திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், நாமக்கல், தருமபுரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நிலக்கடலை அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இதற்குத் தேவையான தரமான விதைகள் உரிய காலத்தில் கிடைப்பது இல்லை.
 
ஆகையால், நிலக்கடலை விதை உற்பத்தி செய்வதின் மூலம் விவசாயிகள் அதிக வருமானம் பெறலாம்.
 
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் பெ. முருகன் கூறியதாவது:
 
 
 
விதைப்பும், விளைநிலம் தேர்வு செய்தல்: நிலக்கடலை விதைப்புக்குச் சிறந்த பருவம் ஜுன் மாதம் முதல் ஜுலை வரையும் டிசம்பர் முதல் ஜனவரி வரையிலான மாதங்களே ஆகும். மேலும் இதற்கு நல்ல வளமான செம்மண்பாங்கான காற்றோட்டமும், வடிகால் வசதியும் உடைய நிலமாக இருக்க வேண்டும். மண்ணில் போரான், கால்சியம் குறைபாடு இல்லாமல் இருக்க வேண்டும்.
 
 
 
ரகம் மற்றும் விதைத் தேர்வு: டி.எம்.வி.-7, வி.ஆர்.ஐ.-2, டி.எம்.வி.-13, கோ - 6 விதைகளை வேளாண்மை பல்கலைக்கழகங்கள், மாநில விதை நிறுவனங்கள், மத்திய விதை நிறுவனங்கள், வேளாண்துறை இவைகளில் ஏதேனும் ஒன்றிலிருந்து பெற வேண்டும்.
 
விதைப்பதற்கு வெகுநாள் முன்னதாகவே விதைக்கடலையை தொலித்து வைக்கக்கூடாது. மேலும், கையினால் தொலிப்பது நல்லது. விதைப் பருப்புகளில் உடைந்த, நிறம் மாறிய, சுருங்கிய, சிறிய பருப்புகளை பிரித்து எடுத்து விட்டு நல்ல தரமான பருப்புகளையே விதைக்குப் பயன்படுத்த வேண்டும். விதைப்பதற்கு முன் முளைப்புத் திறனை சோதிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு சிறிய விதைகளை உடைய டி.எம்.வி.2, டி.எம்.வி.7, டி.எம்.வி.13 ஆகிய ரகங்கள் 50 கிலோ முதல் 55 கிலோ வரையும், பெரிய விதைகளை உடைய வி.ஆர்.ஐ.-2, ஜே.எல்.24, கோ - 6 ஆகிய ரகங்கள் 55 கிலோ முதல் 60 கிலோ வரையும் தேவைப்படும்.
 
 
 
விதை முளைகட்டுதல்: 2 கிலோ விதைக்கு 5 கிராம் கால்சியம் குளோரைடு எடுத்து இதனை 1 லிட்டர் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். அதுபோல 28 லிட்டர் கரைசல் தயார் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட கரைசலில் விதையை 6 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். பிறகு இக்கரைசலில் ஊற வைத்த விதைகளை ஈரச்சாக்கின் மீது பரப்ப வேண்டும்.
 
அதனை மற்றொரு ஈரச்சாக்குக் கொண்டு 12 மணி நேரம் மூடி வைக்க வேண்டும். அதற்குப் பிறகு விதையில் கருமுளை வெளிவந்திருக்கும். இவ்வாறு முளை கண்ட விதைகளை பிரித்தெடுத்து நிழலில் உலர்த்த வேண்டும். மிக நீளமாக முளைக்கரு வெளிவந்த விதைகளையும் இறந்த விதைகளையும் தனியே பிரித்து எடுத்து விடவும்.
 
 
 
விதை நேர்த்தி: நிலக்கடலையில் விதை மூலமும், மண்மூலமும் பரவும் வேர் அழுகல், தண்டு அழுகல், இலைப்புள்ளி நோய்களைக் கட்டுப்படுத்தவும், பயிர் எண்ணிக்கையைச் சீராகப் பராமரிக்கவும் உயிரியல் பூஞ்சாணக் கொல்லிகளான டிரைக்கோடெர்மா விரிடியைக் 1 கிலோ விதைக்கு 4 கிராம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
 
காற்றில் கரைந்துள்ள நைட்ரஜன் சத்தை பயிருக்கு அளிக்க டி.என்.ஏ.யூ.14 ரைசோபியம் (3 பாக்கெட் - 200 கிராம்) என்ற நுண்ணுயிரைக் கொண்டும் விதைக்கு, விதை நேர்த்தி செய்து பின்னர் விதைக்க வேண்டும்.
 
 
 
நிலம், பயிர் விலகு தூரம்: விதை உற்பத்திக்கு தேர்ந்தெடுத்த நிலத்தை 4 முதல் 5 முறை நன்கு உழவு செய்து மண் கட்டிகளை உடைக்க வேண்டும். கடைசி உழவுக்கு முன் ஒரு ஏக்கருக்கு 5 டன் மக்கிய தொழுஉரம் இடவேண்டும்.
 
மண்ணின் தன்மை, நீர்ப் பிடிப்பு ஆகியவற்றைப் பொருத்து பாத்திகள் அமைத்துக் கொள்ள வேண்டும். நிலக்கடலை ஒரு தன் மகரந்த சேர்க்கைப் பயிராகும்.
 
ஆகையால் ஒரு ரக நிலக்கடலை விதை பயிருக்கும், மற்றொரு ரக நிலக்கடலை விதை பயிருக்கும் குறைந்த பட்சம் 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.
 
 
 
பயிர் இடைவெளி: விதை விதைக்கும்போது வரிசைக்கு வரிசை 30 செ.மீ. செடிக்குச் செடி 10 செ.மீ. இடைவெளி இருக்குமாறு விதைக்க வேண்டும். விதைக்கப்படும் விதை 4 செ.மீ. ஆழத்துக்கு கீழே சென்றுவிடக் கூடாது. ஒரு சதுர அடிக்கு 33 செடிகள் இருக்குமாறு பயிர் எண்ணிக்கையை பராமரிக்க வேண்டும்.
 
 
 
உர நிர்வாகம்: ஒரு ஏக்கருக்கு ஜிப்சம் 80 கிலோ, தொழு உரம் 5 டன், அடியுரமாக தழைச்சத்து 10 கிலோ, மணிச்சத்து 20 கிலோ, சாம்பல் சத்து 30 கிலோ உரங்களை இடவேண்டும்.
 
இத்துடன் போராக்ஸ் 4 கிலோ, நுண்ணூட்டக் கலவை 5 கிலோவும் விதைப்பு முடிந்தவுடன் நிலத்தின் மேல் இடவேண்டும். செடிகள் நன்கு வளர்ந்து அதிக காய்கள் பிடித்து மகசூலை அதிகரிக்க விதைத்த 25-35 நாள்களில் பூக்கும் தருணத்தில் பசஅம நிலக்கடலை ரிச் 2.2 கிலோவுக்கு 200 லிட்டர் நீர் ஊட்டச்சத்து தெளிக்கவும்.
 
 
 
களை நிர்வாகம்: நிலத்தில் உள்ள பயிர்ச்சத்து வீணாகாமல் தவிர்க்கவும், களைகள் மூலம் மண், ஈரம் விரயமாவதைத் தவிர்க்கவும், பயிர்களுக்கு போதிய சூரிய ஒளி கிடைக்கவும், பூச்சி நோய்கள் பரவாமல் தடுத்து அதிக விளைச்சல் பெறுவதற்கும் ஒரு ஏக்கருக்கு புளுகுளோரலின் களைக் கொல்லியை 800 மில்லி என்ற அளவில் விதைத்த 3 நாள்களுக்குள் நிலத்தில் தெளித்து களைகளைக் கட்டுப்படுத்தலாம். விதைத்த 45-ஆம் நாள் மண் அணைக்க வேண்டும். மண் அணைப்பதால் விழுதுகள் எளிதில் மண்ணில் இறங்குவதற்கு ஏதுவாகி, செடியில் அதிக எண்ணிக்கையில் காய்கள் பிடிக்கும்.
 
 
 
ஜிப்சம் இடுதல்: ஒரு ஏக்கருக்கு 80 கிலோ ஜிப்சத்தை விதைக்க 40 முதல் 45-ஆம் நாள் கழித்து செடிகளைச் சுற்றி மண் அணைக்க வேண்டும். ஜிப்சத்தில் சுண்ணாம்புச் சத்தும், கந்தகச் சத்தும் அடங்கி உள்ளன. சுண்ணாம்புச் சத்து காய்கள் திறட்சியாகவும், அதிக எடை உடையதாகவும் உருவாக வழி செய்கிறது. கந்தகச் சத்து நிலக்கடலையில் எண்ணெய்ச் சத்தை அதிகரிக்கிறது.
 
 
 
நீர் நிர்வாகம்: விதை உற்பத்தியில் வயலில் களைகள் அதிகமாக பெருகுவதைத் தடுக்கவும், பூச்சி நோய் கட்டுப்பாட்டிற்கும் செடிகள் நன்கு வேரின்றி காய் உருவாகவும் நீர் நிர்வாகம் மிக முக்கியமாகும். நிலக்கடலை விதை உற்பத்தியில் நீர் பாய்ச்ச வேண்டிய முக்கிய நிலைகள் விதைக்கும் சமயம், உயிர்த் தண்ணீர் விதைத்த 4 முதல் 5-வது நாள், விதைத்த 20 முதல் 22-ஆம் நாள், விழுது இறங்கும் சமயம், காய்பிடிப்பு, முதிர்ச்சி தருணத்தில் நீர் பாய்ச்ச வேண்டும்.
 
 
 
பயிர்ப் பாதுகாப்பு: பூச்சி, நோய்களின் தாக்குதல் தென்பட்டவுடன் பூச்சி, பூஞ்சாணக் கொல்லி மருந்துகளை தெளித்துக் கட்டுப்படுத்துவதன் மூலம் மகசூல் இழப்பைத் தவிர்க்கலாம்.
 
 
 
பூச்சிக் கொல்லிகள், சாறு உறிஞ்சும் பூச்சிகள்: இலைப்பேன், தத்துப்பூச்சி, அசுவினி - இமிடாகுளோப்ரிட் - 100 மி.லி. (அ) டைமெத்தோயேட் - 1000 மி.லி. சுருள் பூச்சி -டைமெத்தோயேட் - 1000 மி.லி. இலைகளைக் கடித்து உண்ணும் பூச்சிகள் (புரோடினியா புழு, பச்சைப் புழு, சிகப்பு கம்பளிப்புழு) ஸ்பைனாசாட் - 150 மி.லி. (அ) இன்டாக்ஸாகார்ப் - 250 மி.லி. (அ) மெத்தோமில் - 100 கிராம்
 
துருநோய், இலைப்புள்ளி நோய் ஆகிய நோய்களுக்கு கார்பெண்டசிம் - 500 கிராம் (அ) மான்கோசெப் - 1000 கிராம் பூஞ்சாணக் கொல்லி ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும்.
 
 
 
கலவன் நீக்குதல்: 2 அல்லது 3 முறை கலவன் பயிர்களை நீக்க வேண்டும். மெலிந்த, நோய்கள் தாக்கிய, மாறுபட்ட குண அதிசயங்களைக் கொண்ட, வரிசையிலிருந்து தள்ளி முளைத்த செடிகளை அகற்ற வேண்டும்.
 
பூக்கும் தருணத்தில், மாறுபட்ட செடி அமைப்பு, மாறுபட்ட பூவிதழ்கள், மாறுபட்ட கிளை அமைப்பு கொண்ட செடிகளை அகற்ற வேண்டும். காலதாமதமாக பூக்கும் செடிகளையும் அகற்ற வேண்டும். அறுவடை செய்யும் போது, நோய்களினால் பாதிக்கப்பட்ட காய்கள் உள்ள செடிகள், மாறுபட்ட காய் அமைப்பு கொண்ட செடிகளை அகற்ற வேண்டும்.
 
 
 
விதை அறுவடை மற்றும் சேமிப்பு: சரியான தருணத்தில் அறுவடை செய்வது தரமான விதை உற்பத்தியில் மிக முக்கிமான பணியாகும். உரிய காலத்தில் திட்டமிட்டு அறுவடை செய்வதினால் நிலக்கடலையில் அறுவடை சேதாரத்தை கட்டுப்படுத்தலாம். நுனி இலை மஞ்சளாக மாறுதல், அடி இலைகள் காய்ந்து உதிர்வது பயிர் முதிர்ச்சி அடைந்தற்கு அறிகுறியாகும். சில செடிகளைப் பிடுங்கி காய்களை உடைத்துப் பார்த்தால் தோலின் உட்பாகம் கரும்பழுப்பு நிறமாக இருக்கும். பிறகு செடிகளை பிடுங்கி சேகரித்தவுடன், காய்களை செடியிலிருந்து பிரித்தெடுக்கவேண்டும்.
 
அறுவடையின்போது காய்களில் கிட்டத்தட்ட 35 சதவீதம் முதல் 40 சதவீத ஈரப்பதம் இருக்கும். காய்களை 2 அல்லது 3 நாட்கள் நன்கு வெயிலில் உலர்த்த வேண்டும். காய்களை 12 சதவீத ஈரப்பதம் வரும் வரை காய வைக்கலாம். இவ்வாறு உலர்த்திய காய்களை நல்ல பைகளில் சேமித்து வைக்க வேண்டும்.
 
 
 
விதை மகசூல்: இறவையில் ஒரு ஏக்கருக்கு நிலக்கடலை காய்கள் 900 கிலோ முதல் 1,100 கிலோ மகசூல் தரவல்லது. விதை உற்பத்திக்கு விதைச் சான்று, விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு உற்பத்தி செய்யப்படும் விதையின் இனத்தூய்மை பற்றியும் விதைத்தரம் பற்றியும் உத்தரவாதம் அளிப்பதே விதைச் சான்றளிப்பு ஆகும்.
 
மாநில விதைச்சான்று துறை அலுவலர்களைத் தொடர்பு கொண்டு விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும். பயிர் பூக்கும் பருவத்திலிருந்து அறுவடைக்குள் 2 முறை விதைச் சான்று அலுவலர்களால் வயல் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
 
ஆய்வின்போது பரிந்துரைக்கப்பட்ட வயல், விதைத் தரம் இருந்தால் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்ட விதைகளுக்கு சான்றளிக்கப்பட்டு அவை விற்பனைக்கு தயாராகும்.
 
எனவே உங்கள் விதை உற்பத்தி வயல்கள் விதைச் சான்றளிப்புக்கு உட்படுத்தி இனக்கலப்பற்ற தரமான விதைகளை உற்பத்தி செய்ய முடியும். விதைச்சான்று பெறுவதற்கு அருகாமையில் உள்ள விதைச் சான்றளிப்பு அலுவலர்களை அணுகி மேலும் விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
 
மேலும் விவரங்களுக்கு காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலையத்தை 044 - 2745 2371 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.
 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

மாடுகளுக்கு வரும் மடிநோய்க்கு மருந்து  (ஜனாதிபதி விருது பெற்ற சேலம் மாவட்ட விவசாயி கோவிந்தன்)

 

நோய் இன்றி பாதுகாக்கலாம்!

 
மாடுகளுக்கு வரும் மடிநோய்க்கு மருந்து கண்டுபிடித்து, ஜனாதிபதி விருது பெற்ற சேலம் மாவட்ட விவசாயி கோவிந்தன்: கடந்த, 30 ஆண்டுகளாக பால் விற்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். என்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. எங்க அப்பா, தாத்தா எல்லாருமே பால் கறக்கும் தொழிலில் ஈடுபட்டவர்கள். அதனால், பசுக்களை எப்படி அணுக வேண்டும் என, சிறு வயதிலேயே கற்றுக் கொண்டேன்.
 
பொதுவாக, மாடுகளுக்கு வயிற்றுப்போக்கு, எழுந்திருக்க முடியாமல் இருக்கும் குந்துநோய், பறவைகள் கொத்தினால் வரும் புண், கால்களில் ஏற்படும் புண் போன்ற பல நோய்கள் வந்தாலும், மாடுகளை அதிகமா தாக்கக்கூடியது மடிநோய் தான். இந்த நோய் பெரும்பாலும், அதிகமாக பால் கொடுக்கக்கூடிய, மடி பெரிதாக உள்ள மாடுகளைத் தான் குறிவைத்து தாக்குகிறது.
 
இந்த நோய் எதனால் வருகிறது என்பது தெரியவில்லை. நாம் சாப்பிடும் உளுந்து, சாப்பாடு போன்ற உணவுகளை, பசுக்களுக்குக் கொடுத்தாலும் மடிநோய் வரும். மடிநோய் வந்தாலே, பசுவோட நான்கு காம்புகளும் வெவ்வேறு விதமாக மாறிவிடும்.
 
ஒரு காம்பில் பால் வரும்; இன்னொரு காம்பு வீக்கமாக இருக்கும்; மற்றொரு காம்பில், ரோஸ் கலரில் பால் வரும்; நாலாவது காம்பில் ரத்தமே வர ஆரம்பிச்சிடும். மடியும் வீங்கிக் காணப்படும். இதெல்லாம் மடிநோய்க்கான அறிகுறிகள். தினமும், 60 பசுக்களுக்கு மேல பால் கறப்பதால், பசுக்கள் என்னென்ன நோய்களால் பாதிக்கப்படும் என்பதை தெரிந்து கொண்டுள்ளேன். மடிநோய்க்கு மருந்து கண்டு பிடிக்க முடிவு செய்தேன். நான் கண்டுபிடித்த மருத்துக்கு, பணமே செலவாகாது. சுற்றுப்புறங்களில் முளைக்கும் வேலிப்பறித்தழை, எருக்கம்பால், சுண்ணாம்பு இந்த மூன்றையும் கசக்கி, காலை, மாலை என, இரண்டு வேளை மாட்டின் மடியில் தடவி வந்தாலே போதும்.
 
வீக்கம் குறைய ஆரம்பித்து விடும். அந்த வீக்கத்தில் கெட்ட பால்கள் தங்கியிருக்கும். அதை மூன்று நாட்களுக்கு கறந்து சுத்தப்படுத்திய பின், வழக்கம் போல பால் கறக்கலாம். இந்த இயற்கை மருந்தை, கடந்த அஞ்சு வருஷத்துக்கு மேலாக, சேலம், ஈரோடு, நாமக்கல் போன்ற மாவட்டங்களிலிருந்தும் விவசாயிகள் இலவசமாகவே வாங்கிட்டுப் போய் பயன் படுத்துகின்றனர்.
 
அதுமட்டுமல்ல, செல்போனில் அழைத்தாலும் நேரில் சென்று, மருந்தை எப்படி மாட்டுக்கு தடவணும், மடிநோயை எப்படிக் குணப்படுத்தலாம் என்ற ஆலோசனையையும் சொல்லி, விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன். இதுவரை, 500க்கும் மேற்பட்ட மாடுகளை, என் மருந்தால் குணப்
படுத்தியிருக்கேன்.
 
மாடுகளை, விஷ ஜந்துக்கள் கடித்தாலும், அந்தந்தக் கடிக்கான மூலிகைச் செடிகள் என்னிடம் உள்ளன. ஒரு போன் பண்ணிக் கேட்டாலே போதும். என்ன மருந்து கொடுக்க வேண்டும் என, போனிலேயே சொல்லிடுவேன்.தொடர்புக்கு: 93642 22098
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

மாடுகளுக்கு வரும் மடிநோய்க்கு மருந்து  (ஜனாதிபதி விருது பெற்ற சேலம் மாவட்ட விவசாயி கோவிந்தன்)

 

நோய் இன்றி பாதுகாக்கலாம்!

 

 
இந்த நோய் எதனால் வருகிறது என்பது தெரியவில்லை. நாம் சாப்பிடும் உளுந்து, சாப்பாடு போன்ற உணவுகளை, பசுக்களுக்குக் கொடுத்தாலும் மடிநோய் வரும். மடிநோய் வந்தாலே, பசுவோட நான்கு காம்புகளும் வெவ்வேறு விதமாக மாறிவிடும்.
 
ஒரு காம்பில் பால் வரும்; இன்னொரு காம்பு வீக்கமாக இருக்கும்; மற்றொரு காம்பில், ரோஸ் கலரில் பால் வரும்; நாலாவது காம்பில் ரத்தமே வர ஆரம்பிச்சிடும். மடியும் வீங்கிக் காணப்படும். இதெல்லாம் மடிநோய்க்கான அறிகுறிகள்.

 

 

 

 

இதென்ன கொடுமை சரவணா! மடி நோய் வர பக்ரீறியா தான் காரணம்! அதுக்கு நூறு வருடங்கள் முன்பே மருந்து கண்டு பிடிச்சிட்டாங்களே? இந்தாளுக்கு இன்னும் தெரியாதா? :D

 

Link to comment
Share on other sites

இதென்ன கொடுமை சரவணா! மடி நோய் வர பக்ரீறியா தான் காரணம்! அதுக்கு நூறு வருடங்கள் முன்பே மருந்து கண்டு பிடிச்சிட்டாங்களே? இந்தாளுக்கு இன்னும் தெரியாதா? :D

 

 

இவர் கண்டுபிடித்தது இயற்கை மருந்தாக இருக்குமா?

Link to comment
Share on other sites

ஆண்டு முழுவதும் வருமானம் தரும் மரத் தோட்டம்: சாதிக்கும் இரண்டலப்பாறை விவசாயி அமலாதஸ்

 

maram_2221450f.jpg

 

“பெத்த பிள்ளை கைவிட்டாலும், வைச்ச பிள்ளை கைவிடாது, ‘’ என வழக்குச் சொல்லாக சொல்வார்கள் நம் முன்னோர்கள். ஒருவர் மரம் வளர்த்தால், அந்த மரம் அவரது வாழ்வின் இறுதிக் காலம் வரை உயிர் மூச்சாக, வாழ்வதாரமாக இருக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம் திண்டுக்கல் விவசாயி இரண்டலப்பாறை ஏ.அமலதாஸ் வளர்க்கும் மரங்கள்தான்.

 
அமலதாஸுக்குச் சொந்தமான 6½ ஏக்கர் விவசாயத் தோட்டம், இரண்டலப்பாறையில் உள்ளது. இவரது தோட்டத்தில் மற்ற விவசாயிகளைப் போல் காய்கறிகள், மலர்கள் உள்ளிட்ட குறுகியகால பயிர்களைப் பயிரிடவில்லை. தோட்டம் முழுவதும் வெறும் தென்னை, கொய்யா, தேக்கு, சப்போட்டா, பலா, மா, எலுமிச்சை மரங்களை நட்டு வைத்துள்ளார். காய்கறிகள், மலர்கள் உள்ளிட்ட மற்ற விவசாயப் பயிர்களுக்கு நீர்ப் பாசனம் அதிகம் தேவை. இந்த பயிர்களிடையே ஊடு பயிராக எதை நட்டாலும் பிரதான பயிருக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்பதால், இவர் தன்னுடைய தோட்டத்தில் அனைத்து மரங்களையுமே ஊடு பயிராக நட்டுள்ளார்.
 
அதனால், ஒவ்வொரு மரத்திலும் ஒவ்வொரு சீசனில் இவர் லட்சக்கணக்கில் வருமானத்தை ஈட்டி வருகிறார். இதற்காக இவர் பராமரிப்பு செலவு பெரிதாக எதுவும் செய்யவில்லை. தண்ணீரை மட்டும் பாய்ச்சுகிறார். அவ்வப்போது செடி, கொடிகளை கூலியாட்களை வைத்து வெட்டி அப்புறப்படுத்துகிறார். தனக்கு கிடைத்த இந்த மரத் தோட்ட விவசாய அனுபவங்களை மற்ற விவசாயிகளிடம் கூறி மரங்களை நடுமாறு விழிப்புணர்வு செய்து வருகிறார்.
 
இது குறித்து அமலதாஸ் "தி இந்து'விடம் கூறுகையில், "ஆரம்பத்தில் மற்ற விவசாயிகளைப் போல் நானும் காய்கறிகள் சாகுபடி செய்தேன். தண்ணீர் பிரச்சினை, கூலியாட்கள் சம்பளம், பராமரிப்புச்செலவு என பல பிரச்சினைகளால் லாபம் என எதுவும் கையில் மிஞ்சவில்லை. வெறுத்துபோய், கொய்யா சாகுபடி செய்தேன். தண்ணீர் குறைவாக தேவைப்படும் `லக்னோ 47' ரக கொய்யா செடிகளை குடிமியான்மலையில் வாங்கி வந்து நட்டேன். ஒரு ஏக்கருக்கு 60 மரங்கள் மட்டுமே நட்டேன். இந்த 60 மரங்களுக்கு இடையே ஊடு மரமாக எலுமிச்சை, மா, தென்னை, சப்போட்டா, பலா ஆகிய மரங்களை நட்டேன்.
 
ஒரு ஏக்கரில் 60 கொய்யா, 20 தென்னை, 60 எலுமிச்சை மற்றும் தேக்கு, பலா, வேம்பு, சப்போட்டா என மரங்கள் உள்ளன. கொய்யா ஆண்டுக்கு இரண்டு சீசன் என்பதால் 9 மாதங்கள் பழம் பறிக்கலாம். ஒரு கிலோ கொய்யாவுக்கு 25 ரூபாய்க்குக் குறையாமல் விலை கிடைக்கிறது. ஒரு மரத்தில் சாதாரணமாக 300 கிலோ கொய்யா கிடைக்கிறது.
 
தென்னையில் 40 நாட்களுக்கு ஒரு முறை காய் வெட்டலாம். பலாமரத்தில் ஆண்டுக்கு ஒரு முறை பாலாப்பழம் கிடைக்கும். எலுமிச்சையில் ஆண்டு முழுவதும் எலுமிச்சை பழங்களைப் பறிக்கலாம். சந்தையில் எலுமிச்சைக்கு எப்போதுமே மவுசுதான்.
 
எங்களுடைய நத்தம் "மா'வுக்கு சொல்லவே வேண்டாம். சந்தையில் கிராக்கிதான். சப்டோட்டா, ஆண்டுக்கு ஒரு சீசனிலும், மா மரத்தில் ஆண்டுக்கு இரண்டு சீசனிலும் மகசூல் கிடைக்கிறது.
 
இவை தவிர, இந்த மரங்களைச் சுற்றி வடக்கு தெற்காக இந்த மரங்களைப் பாதுகாக்கும் வகையில் வேலி மரமாக ஒரு ஏக்கருக்கு 20 மரம் வீதம் 400 தேக்கு மரங்களை நட்டேன். இதனால், தோட்டத்துக்கு சூரிய வெளிச்சம் கிடைப்பதில் எந்தச் சிக்கலும் இருக்காது. தேக்கு மரத்தை தோட்டத்துக்கே வந்து வாங்கி செல்கின்றனர்.
 
தோட்டத்தில் உள்ள ஒட்டு மொத்த மரங்களுக்கும் 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விட்டால் போதும். மாதந்தோறும் கைநிறைய வருமானம் கிடைக்கிறது.
 
இதற்காக தினசரி காலை ஒரு மணி நேரம்தான் செலவிடுகிறேன். மற்ற நேரங்களில் கடை வியாபாரத்தைப் பார்க்கிறேன். எனக்கு நேரமும் அதிகம் கிடைக்கிறது, இரட்டை வருமானமும் கிடைக்கிறது '' என்றார்.
 
மேலும் விபரங்களுக்கு 98942 41621
 
Link to comment
Share on other sites

கோகோ சாகுபடி செய்து அதிக வருவாய் ஈட்டும் தேனி விவசாயி

coco_2221453f.jpg

கோகோ தோட்டத்தில் கே.வி.காமராஜ்

தேனி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு போதிய மழையில்லாமல் தென்னை மரங்கள் கருகியது. இதன் காரணமாக தென்னை விவசாயத்தின் பரப்பளவு சுருங்கி கொண்டு வந்தது. லாரி, டிராக்டர்களில் கொண்டு வரப்படும் தண்ணீரை கூடுதல் விலை கொடுத்து வாங்கி நீர் பாய்ச்ச முடியாமல் சில விவசாயிகள் மரங்களை அழித்து விட்டு மாற்று விவசாயத்தில் ஈடுபட்டனர்.

 
இன்னும் சிலர் வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்து விட்டனர். இந்த நிலையில் பெரியகுளம் அருகே கெங்குவார் பட்டியை சேர்ந்த விவசாயி கே.வி.காமராஜ் இவர் தனக்கு சொந்தமான 15 ஏக்கர் தென்னந்தோப்பில் கோகோ சாகுபடி செய்து அதிக வருவாய் ஈட்டி வருகிறார். இது குறித்து ‘தி இந்து’விடம் விவசாயி காமராஜ் கூறுகையில், தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தென்னந்தோப்புகள் அழிக்கப்பட்டு வந்தது. என் தோட்டத்திலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டபோது மிகவும் வேதனையடைந்தேன். அந்த நேரத்தில் தோட்டக்கலை துறை அதிகாரிகள் என்னை சந்தித்து தென்னை மரங்களுக்கு ஊடுபயிராக கோகோ சாகுபடி செய்ய கோரினர். முதலில் எனக்கு தயக்கமாக இருந்தது. அவர்கள் என்னை உற்சாகப்படுத்தினர்.
 
இதனையடுத்து எனது 15 ஏக்கர் தென்னந்தோப்பில் கோகோ சாகுபடி செய்தேன். ஒரு ஏக்கருக்கு 200 கன்றுகள் நடவு செய்யப்பட்டது. சாகுபடி செய்த 3 ஆண்டுகளில் பலன் கிடைக்கத் தொடங்கியது. இதன் மூலம் சுமார் 40 ஆண்டுகள் வரை பயன்பெற முடியும். தோட்டக்கலை துறையினரால் ஒரு ஹெக்டேருக்கு ரூ. 25 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டது. சொட்டு நீர் பாசனத்தின் மூலம் சாகுபடி நடைபெற்று வருகிறது. கோகோ மரத்தில் இருந்து உதிர்ந்து விழுந்து இலைகள் நல்ல இயற்கை உரமாகிறது. தரைப்பகுதியில் காய்ந்த இலைகள் இருப்பதால் ஈரப்பதத்தினை தக்கவைத்துக் கொள்கிறது. வறட்சியை சமாளிக்க இந்த கோகோ சாகுபடியும், தென்னைமரத்திற்கு நல்ல வரப்பிரசாதமாகவும் அமைந்துள்ளது. மார்ச் மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரை சீசன் காலம் ஆகும். அப்போது விளைச்சல் அதிகமாக இருக்கும்.
 
சராசரியாக ஒரு மரத்தில் இருந்து ஒன்று முதல் இரண்டு கிலோ வரை கோகோ கிடைக்கிறது. தற்போது மார்க்கெட்டில் கிலோ ரூ.190 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆண்டுக்கு 400 கிலோ வரை விற்பனை செய்கிறேன். இதனை சந்தைபடுத்துதலும் மிகவும் எளிது கம்பம் பகுதிகளிலும் தற்போது கோகோ சாகுபடி தொடங்கியுள்ளது என்றார். கோகோ சாகுபடி செய்து அதிக வருவாய் ஈட்டி வரும் இவரை 8220627712 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வறண்ட பகுதியில் தென்னஞ்சோலை: சாதித்த உடுமலை விவசாயி

 

index_2235179g.jpg

 

தென்னை சாகுபடியில் இயற்கை விவசாயத்தைப் பின்பற்றி ஜீரோ பட்ஜெட்டில் ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வருவாய் ஈட்டி சாதித்திருக்கிறார் உடுமலை விவசாயி ஜி.செல்வராஜ் (55).
 
திருப்பூர் மாவட்டம், உடுமலை - பொள்ளாச்சி சாலையில் உள்ளது அந்தியூர் கிராமம். மெக்கானிக்கல் டிப்ளமோ படித்துவிட்டு, ஜவுளித் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார் செல்வராஜ். அதில் நஷ்டம் ஏற்பட்டத்தைத் தொடர்ந்து விவசாயத்துக்குத் திரும்பினார்.
 
வீழ்ந்த தென்னைகளைத் தன்னுடைய சகோதரர்கள் ஜி.வேலாயுதசாமி, ஜி.நாராயணசாமி துணையுடன் இயற்கை வேளாண்மையின் மூலம் கம்பீரமாக நிமிர வைத்தார் இவர்.
 
முன்னுதாரணம்
 
பாரம்பரிய வேளாண் முறையிலிருந்து அங்கக முறைக்கு மாறப் பல மாற்றங்கள் தேவைப்படுகின்றன. அதில் மிக முக்கியமானது விவசாயிகளின் மன உறுதி. இப்படி மாறும் தறுவாயில் பல இடையூறுகள் ஏற்பட வாய்ப்புண்டு. அங்கக வேளாண்மையில் புதிதாகக் கால் பதிக்க நினைக்கும் விவசாயிகளுக்கு அந்த இடையூறுகளை எப்படி எதிர்கொள்வது என்பதற்கு முன்னுதாரணமாக விளங்குகிறார் ஜி.செல்வராஜ்.
 
“சில ஆண்டுகளாகப் போதுமான மழை இல்லாததால், எங்கள் பகுதியைச் சேர்ந்த பல விவசாயிகளும், தனியார் காற்றாலை பண்ணைகளுக்கு நிலத்தை விற்றுவிட்டு நகரங்களில் குடியேறிவிட்டனர். எங்களது தென்னை மரங்களும் தண்ணீர் இன்றி காயத் தொடங்கின. 2002-ல் ஒரு மரத்தில் ஆண்டுக்கு 7 காய்கள் மட்டுமே காய்த்தன. பல்வேறு சிக்கல்கள் வந்தபோதும் ஒரு சொட்டு உரம், பூச்சிக்கொல்லி மருந்துகூடப் பயன்படுத்தக் கூடாது என்ற உறுதியோடு, அங்கக வேளாண்மையில் கவனம் செலுத்தினோம். இன்றைக்கு ஒரு தென்னை ஆண்டுக்கு 110 காய்களைத் தருகிறது.
 
இந்த விளைச்சல் படிப்படியாகக் கிடைத்தது. ஆயிரம் தென்னைகள் மூலம் ஆண்டுக்கு ரூ. 5 லட்சத்துக்கு மேல் வருமானம் கிடைத்தது. ஆனால், இதற்கான முதலீடோ எதுவுமில்லை” என்று செல்வராஜ் பெருமிதத்துடன் கூறுகிறார். அருகில் உள்ள தோப்புகள் வறண்டு காட்சியளிக்கும் நிலையில், இவரது தென்னந்தோப்பு சோலைவனமாக இருப்பதைக் காணும்போதே, அதை உணர முடிகிறது. சரி, எப்படி இதைச் சாதித்தார்?
 
அழிவைத் தடுக்க முடியும்
 
“இன்றைய நிலையில் ஒரு தென்னையிலிருந்து 150 காய்கள் கிடைக்கின்றன என்றால், அதில் 90 காய்கள் விளைச்சலுக்கும், பராமரிப்புக்குமே செலவாகிவிடுகின்றன. பின் எப்படி இதில் லாபம் சம்பாதிக்க முடியும்?
 
இதுவே இத்தொழிலின் அழிவுக்கு முதல் காரணம்" என்கிறார் செல்வராஜ். காட்டைச் சுத்தப்படுத்து வதற்காகப் பயன்படுத்தப்படும் டிராக்டர் மூலம் உழுதால், சொட்டுநீர் கருவிகள், பைப்புகள் சேதமடையும். அதை மாற்றுவதற்குத் தனியாகச் செலவு செய்ய வேண்டும். களை எடுத்தல், களைக் கொல்லிக்குச் செலவு, தொழுவுரம், உரம், பொட்டாசியம், சுமைக் கூலி, உரிகூலி என வியாபாரிகள்கூட விவசாயிகளைச் சுரண்டும் நிலை. இதுவே தென்னை விவசாயத்தின் தோல்விக்குக் காரணம்.
 
கழிவே உரம்
 
இவர்களது தோப்பில் கிடைக்கும் மட்டைகள், பாளை, தேங்காய் மட்டைகள், செடிகள் என எதையும் விற்பதில்லை. 4 தென்னைகளுக்கு நடுவே ஒரு ஸ்பிரிங்ளச் அமைத்து, அதன் மூலம் நீர் பாய்ச்சுகிறார்கள். ஸ்பிரிங்ளரைச் சுற்றிலும் தேங்காய் நார், பாளை ஆகியவற்றுடன் மண் புழுக்கள், அதற்கு மேல் தென்னை மட்டைகளைப் போட்டு மூடி வைத்துவிடுகிறார்கள். இவர்களது தோப்பில் உழுவதில்லை. களை எடுப்பதில்லை. அதற்கான ஆள் கூலி, டிராக்டர் செலவில்லை.
 
உரம், பூச்சிக்கொல்லிச் செலவும் இல்லை. 5 பசு மாடுகள் மூலம் கிடைக்கும் சாணம், கோமயமே உரமாகிறது. இவர்களே பஞ்சகவ்யா தயாரித்து மரங்களுக்கு இடுகிறார்கள்.
 
இவர்களது அங்கக வேளாண்மையைக் கேள்விப்பட்டு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் உள்பட உயர் அதிகாரிகள், விவசாயிகள், வேளாண் கல்வி பயிலும் மாணவர்கள் என இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தோப்பைப் பார்வையிட்டுப் பாராட்டிச் சென்றுள்ளனர். இவரது விவசாய அனுபவங்கள் பற்றி மேலும் அறிய 99768 07692 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
 
 
Link to comment
Share on other sites

வெங்காயம்,ஆமணக்கில்அதிக லாபம்! 

Tamil_News_large_1136489.jpg

 

வெங்காயத்தைக் காப்பாற்றுவதோடு, லாபத்தை யும் சேர்த்து தரும் ஆமணக்கு சாகுபடி குறித்து விளக்கும், சேலம் மாவட்டம் ஏத்தாபூர், மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையப் பேராசிரியர் மாணிக்கம்: ஆமணக்குச் செடிகள் இயற்கையாகவே பூச்சி விரட்டியாக செயல்படும் தன்மை கொண்டவை. சில விவசாயிகள், ஆமணக்கை வரப்புகளில் நட்டு வைத்து, தீமை செய்யும் பூச்சிகளை வயல்களுக்குள் இறங்க விடாமல் தடுப்பர்.வெங்காய ஊடுபயிர் ஆமணக்கு சாகுபடி யால், களைக்கொல்லி மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் தேவை குறைவதோடு, அதனால் ஏற்படும் செலவையும் தவிர்க்கலாம்.

 

ஆமணக்கு மற்றும் சின்ன வெங்காய விதைகளை, 1:2 என்ற விகிதத்தில், அதாவது ஒரு வரிசை ஆமணக்கு, இரண்டு வரிசை வெங்காயம் என்ற முறையில், வரிசைக்கு வரிசை, 1.5 மீ., செடிக்குச் செடி, 1 மீ., இடைவெளியில் விதைக்க வேண்டும். ஆமணக்கு விதைகளை விதைக்கும் முன், 24 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து விதைத்தால், முளைப்புத் திறன் அதிகரிக்கும். அதே போல், வெங்காய விதைகளை, அசோஸ்பைரில்லம் உயிர் உரத்தை, ஆறிய அரிசிக் கஞ்சியுடன் கலந்து, அரை மணி நேரம் நிழலில் உலர்த்தி, விதைக்க வேண்டும்.நட்டவுடன் ஒரு தண்ணீரும், மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீரும் பாய்ச்ச வேண்டும். அறுவடை வரை, 7 - 10 நாட்களுக்கு ஒருமுறையோ அல்லது தேவைப்படும்போது மட்டுமோ நீர் பாய்ச்சினால் போதும்.

 

அது மட்டுமின்றி, அறுவடைக்கு, 10 நாட்களுக்கு முன் நீர் பாய்ச்சுவதை நிறுத்தி விட வேண்டும்.வெங்காயத்தை, 100 நாளில் அறுவடை செய்யலாம். வெங்காயத் தாள்கள், 60லிருந்து, 75 சதவீதம் காயத் துவங்கியவுடன் அறுவடை செய்யலாம். தாள்களுடன் சேர்ந்து வெங்காயத்தைப் பிடுங்கிய பின், மேல் தாள்களை நீக்கி, சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப நிழலிலோ அல்லது அறுவடை செய்த வயல்களிலோ பதப்படுத்த வேண்டும். பின், நல்ல காற்றோட்டமுள்ள அறைகளில் சேமித்து வைக்கலாம்.

 

ஆமணக்கு அறுவடைக்கு, ஆறு மாதம் பிடிக்கும். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆமணக்கு முத்துகள் காய்ந்து இருந்தால், அறுவடை செய்ய லாம். முற்றிய விதைக் கொத்தை, இதரக் கொத்துகளைப் பாதிக்காதவாறு, அறுவடை செய்ய வேண்டும்.விதைகளை நிழலில் குவித்து வைக்காமல், சூரிய ஒளியில் உலர்த்த வேண்டும். பின், காய்ந்த கொத்தை குச்சி யால் அடித்து, விதை முத்துகளைப் பிரித்தெடுக்க வேண்டும். காற்றில் இட்டு துாசியை நீக்கலாம் அல்லது விதைகளைப் பிரித்தெடுக்கும் கருவி மூலமும் விதைகளைப் பிரித்தெடுக்கலாம்.எக்டேருக்கு, 2,000 கிலோ சின்ன வெங்காயம் மற்றும் 2,500 கிலோ ஆமணக்கு மகசூலாக கிடைக்கும். இதன் மூலம் விவசாயி கள், 1.40 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறலாம்.தொடர்புக்கு: 94434-99234

 

http://www.dinamalar.com/splpart_detail.asp?id=93

Link to comment
Share on other sites

தினசரி வருமானம் தரும் ஸ்பைருலினா சுருள்பாசி

 

a_2242990g.jpg

 

உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான புரதச் சத்தை மிகுதியாகக் கொண்டுள்ள ஸ்பைருலினா சுருள்பாசியைக் குறைந்த செலவில் வளர்த்து, அதிக வருமானத்தைப் பெறலாம்.
 
புரதச் சத்து மிகுந்த ஸ்பைருலினாவில் 15 வகைகள் உள்ளன. தமிழகச் சூழலுக்கு ஏற்றவை ஸ்பைருலினா மேக்ஸிமா, ஸ்பைருலினா பிளான்டெனிஸ். இயந்திரங்களைக் கொண்டு பெரு நிறுவனங்கள் மூலம் வளர்ப்பதற்கு மேக்ஸிமா வகை ஏற்றது. சிறு தொழில் மூலம் வளர்ப்பதற்கு பிளான்டெனிஸ் வகை உகந்தது.
 
ஊட்டம் அதிகம்
 
ஸ்பைருலினாவை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பிரதான உணவாக எடுத்துக்கொள்வது குறிப்பிடத்தக்கது. பாசியை உற்பத்தி செய்து பல வழிகளில் விற்பனை செய்யலாம். கால்நடைகளுக்குத் தீவனமாகக் கொடுப்பதன் மூலம் அதிக வருமானத்தை ஈட்ட முடியும். இதை மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாகவும் மாற்றலாம், தாய்ப்பாசியாகவும் விற்கலாம்.
 
ஸ்பைருலினாவால் மட்டுமே சத்துக் குறைபாட்டை முழுமையாக ஒழிக்க முடியும் என ஐ.நா. சபை கருத்து தெரிவித்துள்ளதால். எதிர்காலத்தில் ஸ்பைருலினாவுக்கு அமோக வரவேற்பு இருக்கும். ஸ்பைருலினாவைப் பெரு முதலாளிகள் தொழிற்சாலை மூலம் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வந்தாலும், விவசாயிகள் சிறுதொழிலாகச் செய்யவும் ஏற்றது.
 
தினசரி வருமானம் தரும் ஸ்பைருலினா பாசி வளர்ப்பு முறையை எளிமையாக விளக்குகிறார் புதுக்கோட்டையைச் சேர்ந்த தமிழ்நாடு அறிவியல் ஆராய்ச்சிக் கழக நிர்வாக இயக்குநர் ச. விஜிகுமார்:
 
வளர்க்கும் முறை
 
முதலில் சமமான இடத்தில் 18 அடி நீளம், 12 அடி அகலத்துக்குச் சுத்தம் செய்து, அதில் ஒரு இஞ்ச் உயரத்துக்கு மணல் இட வேண்டும். பின்னர், நான்கு புறங்களிலும் 2 அடி உயரத்துக்கு 12 கட்டைகளை ஊன்றி அதன் உள்பகுதியில் தார்ப்பாயை வைத்துக் கட்டைகளில் பாயை ஆணியால் அடித்துத் தொட்டியைத் தயார் செய்துகொள்ள வேண்டும். அரை கிலோ கல் உப்பைத் தண்ணீரில் கரைத்துத் தொட்டியில் தெளித்துத் தொட்டியைச் சுத்தம் செய்த பிறகு, ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்ட தண்ணீரைத் தொட்டியில் 23 செ.மீ. மீட்டருக்கு விட வேண்டும் (சுமார் 750 லிட்டர்).
 
பின்னர், 7,500 கிலோ பொட்டாசியம் பை கார்பனேடைத் தொட்டியில் இட்டுத் துடுப்பால் கலக்க வேண்டும். இதைத் தொடர்ந்து 4,750 கிலோ கல் உப்பு, 190 கிராம் யூரியாவை இட்டுக் கலக்க வேண்டும். ஒரு கிலோ ஃபெரஸ் சல்பேட், ஒரு லிட்டர் நீர்த்த ஹைட்ரோகுளோரிக் அமிலம் ஆகியவற்றை 10 லிட்டர் தண்ணீரில் கரைத்துத் தயாரிக்கப்பட்ட ஃபெரஸ் சல்பேட் கரைசலில் இருந்து 47.5 மி.லியும், 49.4 மி.லி. பாஸ்பாரிக் அமிலத்தையும் கையுறை அணிந்து தொட்டியில் கவனமாகத் தெளிக்க வேண்டும்.
 
தண்ணீரின் பி.எச். அளவு 10.5-ம், தண்ணீரின் அடர்த்தி 1.010-லிருந்து 1.020 வரை இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். பூனம் சேலையை இரண்டாக மடித்து அதில் 750 கிராம் உயிருள்ள தாய்ப்பாசியை இட்டுச் சுருட்டிப் பிடித்துக் கொண்டு, அதைத் தொட்டித் தண்ணீரில் ஆங்காங்கே மூழ்கச் செய்து பாசியை விடவேண்டும். தினமும் 10 முறை கலக்கி விடுவது அவசியம்.
 
பாசி எடுக்கும் முறை
 
தொட்டியில் படிந்துள்ள கழிவுகளை அகற்றத் தினமும் காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் சேலையைக் கொண்டு இருவர் தொட்டியின் அடிப்பகுதியிலிருந்து அரித்து எடுத்து (துண்டு மூலம் மீன் பிடிப்பது போல) சேலையின் மேல் பகுதியில் வெள்ளை நிறத்தில் படியும் கழிவுகளை அகற்ற வேண்டும்.
 
இறுதியாக 8 - 9-வது நாளில் அறுவடை செய்வதற்குத் தொட்டியின் மேற் பகுதியில் குறுக்காக இரண்டு கட்டைகளை வைத்து அதில் சல்லடையையும் அதன் மேல் சேலை யையும் விரித்து வைத்து, அதன்மீது தொட்டியின் மேல் பகுதியில் மிதக்கும் பாசியை ஜக் மூலம் தண்ணீரோடு எடுத்து ஊற்ற வேண்டும். அப்போது, கழிவுகள் சேலையிலும், பாசி சல்லடையிலும் தங்கிவிடும். தண்ணீர் மீண்டும் தொட்டிக்குச் சென்றுவிடும்.
 
இதேபோன்று தினமும் காலையில் சூரியன் உதிப்பதற்கு முன்னதாக அறுவடை செய்ய வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு நாளும் அறுவடை செய்த பிறகு, மீண்டும் முதல்முறையாக இடப்பட்ட ஊட்டத்தின் அளவில் பாதியை இடவேண்டும். அறுவடை செய்யப்பட்ட பாசியைத் தண்ணீர் விட்டுக் கழுவி நிழலில் உலர்த்திக் காயவைத்துப் பயன்படுத்தலாம்.
 
அறுவடை செய்யப்பட்ட பாசியில் புரதம் 65 சதவீதம் இருந்தால் மனிதப் பயன்பாட்டுக்கும், 65-50 சதவீதம்வரை இருந்தால் கால்நடைகளுக்கும், 50 சதவீதத்துக்குக் குறைவாக இருந்தால் மீனுக்கும் கொடுக்கலாம். பாசியை வேகவைக்கக் கூடாது. சிறுநீரக நோயாளிகளைத் தவிர அனைவரும் இதைச் சாப்பிடலாம்.
 
இவ்வாறு ஒரு நாளைக்குச் சுமார் 500 கிராம் அறுவடை செய்யலாம். கிலோ சுமார் ரூ. 3000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 
ச. விஜிகுமாரைத் தொடர்புகொள்ள: 99528 86637
j_2242994g.jpg
 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

குப்பையிலிருந்து கொட்டுகிறது பணம்!

 

Tamil_News_large_1145008.jpg

 

மாதம், 2.5 லட்சம் வருமானம் ஈட்டுவதோடு, வெளி மாநில பெண்களுக்கும் வழிகாட்டும், வல்லாரை சுயஉதவிக்குழு தலைவி சாந்தாமணி: கோவை மாவட்டம், குருடம்பாளையம் பஞ்சாயத்தில், 14வது வார்டு கவுன்சிலராக இருக்கிறேன். கிராமத்தைச் சுத்தப்படுத்த வேண்டும் என்பதற்காக, பெண்களை ஒன்றிணைத்து, வல்லாரை மகளிர் சுய உதவிக் குழுவை, கடந்த ஆண்டு ஆரம்பித்தேன்.

எங்கள் குழு, 12 பெண்கள் மூலம், பஞ்சாயத்தில் உள்ள ஆறு வார்டுகளில், 3,000 வீடுகளில் குப்பை எடுத்து வந்தோம். அப்போது, சேகரிக்கும் குப்பையை மதிப்புக்கூட்டி வீட்டுக்கும், விவசாயத்துக்கும் தேவையானவற்றைத் தயாரித்தால் என்ன எனத் தோன்றியது. இதையடுத்து, 12 பேராக இருந்த எங்களது பெண்கள் குழு எண்ணிக்கை, 42 ஆனது. இதற்காக, வேலுாரைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர், ஒரு வாரம் பயிற்சி கொடுத்தார்.
தினமும் காலை, 7:00 மணி மற்றும் மதியம், 3:00 மணி என, குப்பை சேகரித்ததில், ஒரு ளைக்கு, 300 கிலோ குப்பை கிடைத்தது. இதிலிருந்து, இரும்பு, அலுமினியம், தகரம், பிளாஸ்டிக் பிளாஸ்டிக் பைகள், பால், எண்ணெய் கவர்கள் போன்ற மக்காத குப்பைகளை, பிளாஸ்டிக் கம்பெனிகளுக்கு விற்று விடுகிறோம்.
மக்கும் குப்பைகளை சாக்குப்பையில் போட்டு, நிலத்தில், 45 நாட்கள் புதைத்தால், அது மக்கி, விளைநிலத்துக்கேற்ற நல்ல உரமாக மாறிவிடும். இந்த உரத்தை கிலோ, ஐந்து ரூபாய் என, விவசாயிகளுக்குக் கொடுக்கிறோம்.
 
அதேபோல், முட்டைஓடுகளை தனியாகக் கழுவி காய வைத்து, இடித்து, சலித்துப் பொடியாக்கி, ஜா தோட்டங்களில் துாவ, ஒரு கிலோ, 300 ரூபாய்க்கும் விற்கிறோம். எலுமிச்சை மற்றும் ஆரஞ்சுப் பழத்தோல், சோப்புக்கொட்டை போன்றவற்றைக் காய வைத்து அரைத்து, பாத்திரம் கழுவும் பவுடர் தயாரித்து, கிலோ, 80 ரூபாய்க்கு விற்கிறோம். இந்நிலையில், துாத்துக்குடியைச் சேர்ந்த ஒருவர், இலவசமாக 15 மாடுகளை கொடுத்து ஊக்கப்படுத்தினார். இந்த மாடுகளின் சாணம் மற்றும் கோமியத்திலிருந்து, இயற்கை உரமான பஞ்சகவ்யம் தயாரித்து, ஒரு லிட்டர், 70 ரூபாய்க்கு விற்கிறோம். அது மட்டுமின்றி, மாட்டுச் சாணத்திலிருந்து ஒரு நாளைக்கு, 450 கிலோ மண்புழு உரம் தயாரித்து, ஒரு கிலோ, 10 ரூபாய்க்கு கொடுக்கிறோம். மாட்டுச்சாணம், கோமியம் ஆகியவற்றிலிருந்து, ஆறு பயோ-காஸ் பிளான்ட் நிறுவி உள்ளோம். இதன் மூலம் சமையல் செய்து, விற்பனை செய்யும் ஓட்டல்களையும் நடத்திக் கொண்டிருக்கிறோம்.
தமிழகத்திலேயே திட திரவ மேலாண்மைக்காக, 23 லட்சம் ரூபாய் நிதியை, அரசு ஒதுக்கியது, எங்கள் குழுவுக்குத் தான். ஆனாலும், அந்த தொகை யூனிட் ஆரம்பிக்க போத வில்லை. அந்த சூழலில், எங்கள் ஊராட்சிமன்றத் தலைவர் ரவிதான், 40 லட்ச ரூபாய் கொடுத்து, 2 ஏக்கர் நிலத்தில் யூனிட் ஆரம்பிக்க உதவினார். அவரை எங்களது குழுவினர் எப்போதும் மறக்க ட்டோம்.
 
 
 
Link to comment
Share on other sites

சொட்டு நீர்ப் பாசனத்தில் செழிக்கும் வாழை - விருது வென்ற புதுவை விவசாயி

vaazhai_2258712g.jpg

 

muthu_vaenkatapath_2258713g.jpg

 

 

 

பட்டம் படித்திருந்தாலும் விவசாயத்தைத் தொழிலாகத் தேர்வு செய்து, சுய ஆர்வத்தால் நீர் பாசனத் தொழில்நுட்பம் மூலம் குறைந்த செலவில் அதிக மகசூல் பெற்றுச் சாதித்திருக்கிறார் புதுச்சேரி விவசாயி முத்து வெங்கடபதி. இதற்காகத் திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் விருதையும் அவர் பெற்றிருக்கிறார்.

 
புதுச்சேரி பண்டசோழநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து வெங்கடபதி (47). பி.எஸ்சி. கணிதப் பட்டதாரி. கடந்த பத்து ஆண்டுகளாக வாழை விவசாயம் செய்து வருகிறார்.
 
புதிய தொழில்நுட்பம்
 
"எங்கள் குடும்பம் விவசாயக் குடும்பம். பட்டப் படிப்பு முடித்திருந்தாலும் எனக்கு விவசாயத்துலதான் ஆர்வம். கத்தரி, மிளகாய், அவரை, தர்பூசணி, கிர்ணி, வாழை என்று பல பயிர்களை விளைவிக்கிறேன்.
 
பத்திரிகைகள்ல விவசாயம் தொடர்பா வரும் செய்திகளைப் பார்த்து, சம்பந்தப்பட்ட இடத்துக்குப் போய்ப் பார்ப்பேன். கோவை, கிருஷ்ணகிரி, தருமபுரி எனப் பல இடங்களுக்குப் போய் விவசாயிகளோட அனுபவங்களை நேரடியாகக் கற்று, புதிய தொழில்நுட்பத்தை தைரியமாகத் தேர்வு செய்தேன்" என்கிறார் முத்து வெங்கடபதி.
 
புதுச்சேரி அரசின் வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை அதிகாரிகளின் ஆலோசனைப்படி வாழை சாகுபடியில் சொட்டு நீர் பாசனத் தொழில்நுட்பத்தை கடந்த 2008-ல் புகுத்தினார். சொட்டு நீர் பாசனத்தில் நீரைச் சிறப்பாக நிர்வகிக்க முடிந்தது.
 
சொட்டு நீர் பாசனத்துக்குத் தேவையான சாதனங்கள் ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் வீதம், 3 ஏக்கருக்கு ரூ. 1.20 லட்சம் செலவாகியிருக்கிறது. சொட்டு நீர்ப் பாசன வசதி செய்தவுடன், அதற்கான நிதியுதவி கேட்டு அரசிடம் விண்ணப்பித்தார். இதையடுத்துக் காமராஜர் வேளாண் அறிவியல் மையத்தில் இருந்து ஆய்வு செய்து, நூறு சதவீத மானியமாக முழு தொகையும் தரப்பட்டது. சொட்டு நீர் பாசனத்துக்குத் தேவையான சாதனங்களைப் பொருத்த ரூ. 5,000 மட்டும் செலவானது. சொட்டு நீர் பாசனத்தில் குழாய் முனைகளில் மண் அடைக்காமலும் தூய்மையாகவும் பராமரித்தால் போதும். இம்முறை பொருத்தப்பட்டு ஆறாண்டுகள் ஆகின்றன. எந்தப் பெரிய பிரச்சினையும் இல்லை, தண்ணீர் செலவும் குறைவு என்கிறார்.
 
விருது அங்கீகாரம்
 
அத்துடன் உர மேலாண்மையும் செய்கிறார். நீரில் கரையும் உரங்களை மட்டுமே பயன்படுத்தத் தொடங்கினார். நுண்ணூட்ட சத்து பயன்பாடு, ஸ்பிரே பயன்பாடு என ஒவ்வொரு புதிய முறையையும் ஆர்வமாகச் செயல்படுத்தினார்.
 
சொட்டு நீர் பாசனத்தால் வாழை குலை முன்னதாக வரத் தொடங்கியிருக்கிறது. வழக்கமாக 210 நாட்களில்தான் குலை தள்ளும். ஆனால், 190 நாட்களில் வரத் தொடங்கியது. வாழைத் தாரின் நீளமும் 5 அடிக்கு மேல் இருந்தது.
 
தொடர் முயற்சி, உழைப்பு, ஆர்வத்தால் திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் சிறந்த வாழை விவசாயிக்கான விருது இந்த ஆண்டு அவருக்குக் கிடைத்துள்ளது.
 
அமோக லாபம்
 
"புயல், மழையால் பாதிப்பு ஏற்பட்டது. இப்படி வாழையால் பாதிப்பு ஏற்பட்டாலும்கூட அதில் சாதிக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். அதற்குக் காய்கறிகளும் பழங்களும் கைகொடுத்துவிடும்.
 
முதலில் மொந்தன் பயிரிட்டேன். இப்போ முதல்முறையா கற்பூரவல்லி போட்டிருக்கேன். தார்கள் நீளமாகவும் பழங்கள் ருசியாகவும் இருக்கின்றன. நவீனத் தொழில்நுட்பத்தால் கற்பூரவல்லியில் ஒவ்வொரு தாரிலும் 10 முதல் 14 சீப்புகள்வரை கிடைத்தன. நல்ல லாபமும் கிடைத்தது.
 
குறைந்த நீர், குறைந்த ஆள், குறைந்த உரம் ஆகியவற்றின் மூலம் அதிக உற்பத்தியும், வருவாயும் பெற முடிகிறது. ஒரு ஏக்கரில் கற்பூரவல்லி 32 டன் மகசூல் தந்தது. ஏக்கருக்கு ரூ. 2.70 லட்சம் கிடைத்தது. செலவு ரூ. 65 ஆயிரம் போக, லாபம் ரூ. 2.05 லட்சம்" என்கிறார் முத்து வெங்கடபதி.
 
கடலோரப் பகுதியில் இவற்றைச் செய்துள்ளதால், கோவையிலிருந்து வேளாண் பல்கலைக்கழகத்தினர் நேரடியாக வந்து பார்த்துள்ளனர். திருச்சி வாழை ஆராய்ச்சி மையம் சொன்னபடி வாழையில் அடர் நடவு முறையையும் பயன்படுத்த இருக்கிறார். பல புதிய எண்ணங்கள் உள்ளன. எதிர்காலத்தில் செயல்படுத்துவேன் என்கிறார். எல்லோரும் புதிய முயற்சிகளைச் செய்து பார்க்கலாம். லாபமும் பார்க்கலாம்.
 
முத்து வெங்கடபதி, தொடர்புக்கு: 9786852535
 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

எளிய காய்கறித் தோட்டம்

 

vegetable_2274891f.jpg

 

வீட்டில் சிறிய திறந்தவெளிப் பகுதி இருந்தாலும் நிறைய செடிகளை, ஆரோக்கியமாக வளர்க்க முடியும். வீட்டில் சிறிய அளவு மண் தரைதான் இருக்கிறது. அதில் பூச்செடி வளர்ப்பதில் ஆர்வம் உங்களுக்கு இருந்தாலும், வீட்டுக்குப் பயன் தரும் எளிய காய்கறிச் செடிகளையும் வளர்க்கலாம். எந்தச் செடியென்றாலும் ஆரோக்கியமாக வளர்க்க வீட்டுக் கழிவுகளைக் கொண்டு நாமே உரம் தயாரிக்கலாம்.
 
கீழே உள்ள முறைக்கு வளையத் தோட்டம் என்று பெயர்.
 
இதை எப்படித் தயாரிப்பது?
 
$ முதலில் நிலத்தை வட்டமாகத் தோண்டவும். இதன் சுற்றளவு 3 அடிவரை இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். நடுவில் மட்டும் ஒன்றரை அடி ஆழத்துக்குத் தோண்டிக் கொள்ள வேண்டும்.
 
$ தோண்டப்பட்ட குழி, பார்ப்பதற்கு வாணலிச் சட்டியைப் போல இருக்க வேண்டும். இதில் தோட்டம், சமையலறைக் கழிவுகள் என மக்கக்கூடிய எந்தக் கழிவாக இருந்தாலும் இடவும். மாட்டுச் சாணம் கிடைத்தாலும் சேர்க்கவும்.
 
$ இதன் மேல் தண்ணீர் தெளித்துவிட வேண்டும். இந்தக் குழிக்குள் அன்றாடம் கழிவுகளைக் கொட்டிவாருங்கள். அடியில் உள்ள கழிவு மக்க ஆரம்பிப்பதால், குழி சீக்கிரத்தில் நிறையாது.
 
$ பதினைந்து நாட்களுக்குப் பிறகு இதைச் சுற்றிலும் குவிந்திருக்கும் மண்ணில் வெண்டை, கத்தரி, தக்காளி, மிளகாய் போன்ற எளிய காய்கறிச் செடிகளை நட்டு வளர்க்கலாம். இயற்கை உரம் தரும் ஊட்டத்தில் அமோகமாக வளரும்.
 
நன்றி: பினாங்கு பயனீட்டாளர் சங்க இயற்கை வேளாண்மை வழிகாட்டி
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.