Jump to content

ஈரமான ரோஜாவே....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நெடுஞ்சாலையின் அதிவேகத்தோடு வழுக்கியபடி ஓடிக்கொண்டிருந்த வாகனம் சற்று வேகத்தைக் மிதப்படுத்தி வெளிச்செல்லும் பாதையில் வளைவாக ஓடி சிவப்பு வெளிச்சத்தில் தரித்து நின்ற பொழுதில் வாகனத்துக்குள் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த அனாவிற்கு தான் போகுமிடத்தை அண்மித்துக்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு ஏற்பட்டது.
அனா, அழகு என்றால் அனா என்று சொல்லுமளவிற்கு அங்கங்கள் ஒவ்வொன்றும் அளந்து செய்த செப்புச் சிலை. உயரமும் உயரத்திற்கேற்ற உடல்வாகும் பொன்நிற முடியும் பொலிவான தோற்றமும் கொண்ட அழகி மட்டுமல்ல அறிவு, துணிவு, ஆளுமை, கொண்ட பெண்.
சிறு வயதிலேயே படிப்பில் மட்டுமல்லாது விளையாட்டுத் துறையிலும் கலைகளிலும் அனாவின் தனித்தன்மை பெற்றவர்களை மட்டுமல்ல ஆசிரியர்களையும் வியக்க வைத்திருக்கிறது. உயர்வகுப்பு படிக்கும்போதே பல மாணவர்களின் கண்வீச்சு அவளை உரசிச் சென்றாலும் யாரோடும் அவளுக்குக் காதல் ஏற்படவில்லை. படிப்பில் மட்டும் மிகுந்த அக்கறை காட்டினாள்.
பல்கலைக்கழகம் நுழைந்து இரண்டாண்டுகளின் பின்பு அதுவரை அவளது வகுப்புத் தோழனாக இருந்த அன்ரனி அவளுடன் சேர்ந்து படிப்பில் மட்டுமல்ல பாசத்தையும் வளர்த்துக் கொண்டான்.
காதலர் தினத்தன்று அன்ரனி அழகான காதலர் தின வாழ்த்து அட்டையுடனும் அன்றலர்ந்த சிவப்பு ரோஜாவுடனும் 'ஜ லவ் யூ அனா' என்று சொல்லி தன் அன்பை வெளிப்படுத்திய தருணம் அனாவின் மனதுக்குள்ளும் மத்தாப்பூவாய் அன்புப் பொறிகள் தூவத் தொடங்கின. 'அன்ரனி ஜ லவ் யூ ரூ'என்ற தன்னுள் மலர்ந்துவிட்ட காதலையும் பகிர்ந்து கொண்டாள்.   
மிகுதி இரு வருடங்களிலும் கல்வியும் காதலும் ஒரு ஸ்திரமான நிலையில் வளர்ந்து விருட்சமாகி இருவரும் பல்கலைக்கழகம் முடித்து வேலை தேட ஆரம்பித்தனர். அனாவுக்கு விமானப் பணிப்பெண்ணாக வேலை செய்ய வேண்டுமென்ற விருப்பம் நீண்ட நாட்களாக இருந்ததால் அதில் பயிற்சி பெற்று வேலைக்கு விண்ணப்பித்தாள். அழகும் இளமையும் மொழிவளமும் கொண்ட அனாவுக்கு உடனடியாக வேலை கிடைத்தது.
அவளது கனவு மெய்ப்பட்ட பொழுதுகளில் தினமும் வானத்திலே பறவைபோல பறந்து உலகைச் சுற்றிவருவது அவளுக்கு மிகவும் விருப்பமான பொழுதாக அமைந்ததுடன் கைநிறைய வருமானமும் கிடைத்தது. அன்ரனிக்கும்; நல்ல அலுவலகம் ஒன்றில் வேலை கிடைத்தது.
இரண்டு மூன்று வருடங்கள் இருவருமாக உழைத்து தங்களுக்கு சொந்தமாக இருப்பிடம் ஒன்றை வாங்கிக் கொண்டனர் பின்; பெற்றவர்களின் அனுமதியுடன் திருமணத்திற்கான நாள் குறிக்கப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட ஆலயத்தினுள் நீண்ட வெள்ளை உடையுடன் தேவதை போல நடந்து வந்த அனாவைப் பார்த்தவர் யாவரும் வியந்து போயினர். இதுவல்லவோ ஜோடிப்பொருத்தம் என்று அனைவரும் வாழ்த்தினர்.
அன்ரனியினதும் அனாவினதும் இல்லறம் மிக இனிதாக ஆரம்பமாகியது. இரு வருடங்கள் இருவரும் வாழ்வின் இன்பங்களை எல்லாம் வாரி வாரி வழங்கி மகிழ்ந்தனர். அனாவுக்கும்; அலுவலகம் ஒன்றில் வேலை கிடைத்ததால் இருவரும் ஒன்றாகவே வேலைக்கு போய் வருவார்கள்.
அனாவின் வயிற்றில் அவர்களது அன்பின் வித்து வளரத் தொடங்கியதும் அன்ரனியின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அவளை கையில் தாங்காத குறை. தன் அன்பு மனைவியை ஒரு பூவைப்போல பொத்திப் பொத்திப் பாதுகாத்தான். அனாமாதிரியே அழகான கொழு கொழு குழந்தை அஸ்லி பிறந்த பொழுதில் இவர்கள் மட்டுமல்ல இருவீட்டுப் பெற்றவரும் குழந்தையை ஆசையுடன் அள்ளி எடுத்து கொஞ்சி மகிழ்ந்தனர்.
அஸ்லியுடன் அனா அன்ரனியின் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக நண்பர்கள், விருந்து, வேடிக்கை, உல்லாசப் பயணங்கள் என்று மிகவும் ரம்யமாகத்தான் போய்க்கொண்டிருந்தது. அஸ்லியும் அழகோவியமாக வளரத் தொடங்கினாள். அஸ்லிக்கு மூன்று வயதாகியதும் அன்ரனி வேலைக்குப் போகுமுன் குழந்தையை காப்பகத்தில் ஒப்படைத்துவிட்டு அனாவையும் அலுவலகத்தில் இறக்கிவிட்டு தான் தனது அலுவலகம் செல்வது வழக்கம். பின்பு மாலை இருவருமாக குழந்தையை அழைத்துக்கொண்டு வீடு திரும்புவர்.
அன்று அவர்கள் வாழ்வில் இருண்ட நாள்.
காலை வழக்கம்போல இருவரும் காலை உணவருந்தியபின் குழந்தைக்கும் உடை அணிவித்து உணவூட்டியபின் வேலைக்குப் புறப்பட்டனர்.
அஸ்லியின் குழந்தைகள் காப்பகத்தில் அவளை ஒப்படைத்து விட்டு அனாவை அலுவலகத்தில் இறக்குவதற்காக நெடுஞ்சாலையில் வேகமாகப் போய்க்கொண்டிருந்த வாகனம்; வீதியை விட்டு விலகி..எப்படி? ஏன் இப்படி நடந்ததென்று எவருக்கும் இதுவரை புரியவில்லை. கண்மூடித் திறக்கும் நேரத்திற்குள் எல்லாமே நடந்து முடிந்து விட்டது.
அன்ரனிக்கு நினைவு திரும்பிய நிமிடத்தில் அவனது விழிகள் அனாவைத் தேடின.
ஆனா பக்கத்தில் இல்லை என்பதை அவதானித்தவன் 'அனா எங்கே?' என்று மிகவும் அங்கலாய்ப்புடன் வினாவினான். எவரும் உடனடியாகப் பதிலளிக்காததால் 'ஜயோ என் அனாவுக்கு என்ன நடந்தது?' என்று மீண்டும் மீண்டும் வினாவவும் 'அனா அவசர பிரிவில் அனுமதிக்கப்படடிருக்கிறாள்' என்று ஒரு தாதி மூலம் செய்தி கிடைத்தது.
அன்ரனியின் மனம் அடைந்த வேதனைக்கு அளவில்லை.
ஆறு மாதங்கள். ஆன்ரனியின் குடும்பத்திற்கு மிகவும் துன்பமான காலம். ஆன்ரனி வைத்தியசாலைக்கும் அஸ்லியைக் கவனிப்பதற்கும் அலைந்து அல்லாடிப் போனான். ஆனாவைப்பற்றி தினமும் வைத்தியர்கள் சொன்ன தகவல்கள் நம்பிக்கை தருவதாக இல்லை.
அனா கோமா நிலையிலிருந்து சிறிது சிறிதாக மீளத் தொடங்கினாள். கண் விழித்துப் பார்த்தாள். அன்ரனிக்கோ தாங்க முடியாத மகிழ்ச்சி. ஆனால் அனாவால் கை கால்களை அசைக்க முடியவில்லை. உணவு உண்ண முடியவில்லை. படுத்த படுக்கையாக இருக்கும் அனாவைப் பார்த்த அன்ரனிக்கு வேதனையாக இரந்தது.
'அனா, அனா நான்தானே காரை வேகமாக ஓட்டி உன்னை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டேன்.' என்று ஆயிரம்தடைவ அழுதழுது மன்னிப்புக் கேட்டும் அன்ரனிக்கு மனம் ஆறவில்லை.
ஆஸ்லியின் நிலமை அதைவிட மோசம் 'அம்மா, அம்மா என்று அழுதழுதே அவலப்படும் அவளுக்கு எப்படி ஆறுதல் கூறுவதென்றே தெரியவில்லை.
'அன்ரனி கவலைப்படவேணாம்.' என்று அவனை அணைத்து ஆறுதல் கூறவும் 'அஸ்லியை கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்க' என்றும் சொல்ல வேண்டுமென்ற எண்ணம் தொண்டைக்குழி வரை வந்து வந்து போனது. ஆனால் வார்த்தைகளுக்கு ஒலி கொடுக்க அவளால் முடியவில்லை. முடிவில் என்ன சொல்ல நினைத்தாளோ அதுவே கண்ணீர் என்னும் பிரளயமாக கன்னங்களில் வழியத் தொடங்கியது. அன்ரனி கண்ணீரைத் துடைத்து ஆறுதல் கூறினான். என்னகூறி என்ன பயன்.? அவளின் வேதனையைத் தணிக்க அவன் என்ன செய்வான்.
அனா தனக்குத் தானே சுமையானாள். படுக்கையிலேயே அவளது பொழுதைக் கழிக்க வேண்டிய பரிதாபநிலை. முள்ளந்தண்டில் அடிபட்டதால் செயலிழந்த உடல் உறுப்புக்களுடன் தினமும் போராடினாள். எல்லாவற்றிற்கும் அடுத்தவர் உதவியை எதிர்பார்க்க வேண்டி இருந்தது.
காது கேட்கிறது. சுற்றி நடப்பவற்றை பார்க்கவும் உணர்ந்து கொள்ளவும் முடிகிறது. ஆனால் உடம்பை அசைக்கவோ பேசவோ முடியாது.
நிரந்தர நோயாளியாகிவிட்ட அனாவை அன்ரனி மிகவும் அக்கறையுடன் கவனித்தான். அஸ்லியும் தன்னால் முடிந்தவரை உதவி செய்தாள். ஆனாவிற்கு பேசமுடியாவிட்டாலும் நினைப்பவற்றை எழுதிக் காட்டவாவது முடியாமல் கைகளும் செயலிழந்து போனது மிகவும் சங்கடமாக இருந்தது. ஏதாவது கேட்பதென்றாலும் தொண்டையிலிருந்து வரும்; சத்தம் வெறும் குழறலாகத்தான் வெளிப்படும். தலையை திருப்ப முடியாது. கழுத்து நிமிர்ந்து நிற்காமல் சாய்ந்தே கிடக்கும். அழகாக பூத்துக் குலுங்கிய இந்த அழகு மலர் வாடி வதங்கி கிடப்பதைப் பார்த்து அன்ரனியும் பெற்றவர்களும் மனதுக்குள் அழுதனர். ஆலயமெங்கும் அவளது நலனுக்காக வேண்டுதல் செய்தனர். என்ன செய்து என்ன பயன். அனா முப்பது வயதிலேயே மூப்படைந்து விட்டதான நிலை.
அடுத்து வந்த பல வருடங்கள் அன்ரனி தன் பொழுதுகளை அனாவுடனேயே கழித்தான். வேலைக்குச் செல்லாமல் எவ்வளவு காலம்தான் வீட்டிலிருக்க முடியும் பகல் வேளைகளில் ஒரு ஆயாவை வேலைக்கு அமர்த்தி அனாவை கவனிக்க வைத்துவிட்டு அன்ரனி பகுதிநேர வேலைக்குப் போனான். மாலை வேளைகளில் அனாவை சக்கரநாற்காலியில் வைத்து வெளியே கொண்டுபோய் வருவதுவும் அவளுக்குப் பக்கத்திலிருந்து தன் மன ஆதங்கங்களை பகிர்ந்து கொள்வதுவும் அன்ரனிக்கு தினமும் வழக்கமாயின.
காலம் உருண்டோடியது. அஸ்லிக்கு இப்பொழுது வயது இருபது. அவள் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவி. அவள் மார்க் என்ற வாலிபனை தனது காதலனாக தன் பெற்றவர்களிடம் அறிமுகம் செய்த பொழுது தனது கையை தூக்கி ஆசிகூறவோ அரவணைத்து அன்பைப் பகிர்ந்து கொள்ளவோ முடியாமல் தன் கண்களிலிருந்து பெருகிய ஆனந்தக் கண்ணீராலேயே தன் அன்பைத் தெரிவித்தாள் அந்த அன்புத் தாய்.
அஸ்லியின் படிப்பு முடிந்ததும் அவர்கள் தம் திருமணத்திற்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினர். தன் ஒரே மகளின் திருமணத்தை முன்நின்று நடத்தக்கூட முடியாத பாவியாகி விட்டேனே என்று எண்ணி எண்ணி இதயம் நொந்து போனாள்.
தினமும் காலையில் அனாவைக் குளிக்க வைத்து துடைத்து உடைமாற்றி உணவூட்டி சக்கரநாற்காலியில் இருத்தி அவளது தேவைகளை எல்லாம் கவனித்து மீண்டும் படுக்கைக்கு மாற்றி உடைகளை கழுவி அறை துப்பரவு செய்து என்று நாள் முழுவதும் ஓடிஓடி அன்ரனியும் களைத்துப் போய்விட்டான். இப்பொழுதெல்லாம் அன்ரனிக்கு இடுப்பு வலி. உடல் அசதியும் மனச் சோர்வும் வேறு அவனை வாட்டி எடுத்தது. அஸ்லிக்கும் திருமணமாகிவிட்டால் அவளுக்கும் குடும்பப் பொறுப்புகள் வந்து விடும்.
அதுதவிர இப்பொழுதெல்லாம் அனாவிற்கு உணவூட்டுவத்கு மிகவும் சிரமப்பட வேண்டி இருந்தது. சாதாரண உணவை அவளால் விழுங்க முடியவில்லை. வைத்தியரின் ஆலோசனைப்படி அவளிற்கு தடிப்பாக்கப்பட்ட திரவ உணவுகளே கொடுக்கலாம் என கூறப்பட்டது. சிறிது துகள் உணவுகள்கூட அவளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுத்தக் கூடிய வாய்ப்பளிக்கும் என்று வைத்தியர் எச்சரித்திருந்தார். அனாவிற்கும் அன்ரனியின் நிலையைப் பார்க்க மிகவும் மன வேதனையாக இருந்தது.
அனா இப்பொழுதெல்லாம் மன அழுத்தத்திற்கு ஆளானாள். உயிருடன் இருப்பதே மற்றவர்களுக்கு மட்டுமல்ல தனக்கே பெரும் சுமை என எண்ணத்தொடங்கினாள். நாள் முழுவதும் சக்கரநாற்காலியில் இருப்பதும் படுக்கையில் கை கால்கள் போட்டது போட்டபடி கிடப்பதும் உடல் வலியாக இருந்தது. தன் பிரத்தியேக தேவைகளுக்குக்கூட அடுத்தவர் உதவியை நாடவேண்டிய தன் நிலையை எண்ணி எண்ணி தன்னையே நொந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
அதனால் இப்பொழுதெல்லாம் காரணமின்றி குரலெடுத்து கத்தத் தொடங்கினாள். அவள் கத்துவது தொண்டைக்குழிக்குள் இருந்து பெரும் உறுமல் சத்தமாக பகலில் மட்டுமல்ல இரவிலும் வீட்டிலுள்ள மற்றவர்களின் அமைதியையும் குலைத்தது. அவளின் இயலாமையின் வெளிப்பாடுதான் இதுவென அன்ரனியால் உணரமுடிந்தாலும் தர்ம சங்கடமான நிலையாக இருந்தது.
அவளின் உடல்நிலையும் மோசமாகிக் கொண்டே போனது. இறுதியில் வைத்தியரின் ஆலோசனையாலும் அன்ரனியின் இயலாமையாலும் 24 மணிநேரமும் வைத்திய கண்காணிப்புள்ள ஒரு நர்சிங் கோமில் அனாவைச் சேர்ப்பதென்று முடிவாகியது. அன்ரனிக்கும் இது மிகப் பெரிய வேதனை. வாழ்நாள் முழுவதும் சிறுகச் சிறுக இறப்பதென்பது இதுதானோ?
இதோ நர்சிங்கோம் அண்மித்து விட்டது. அனா தன் கண்களிலிருந்து வழியும் கண்ணீரைக்கூட கைகளால் துடைக்க முடியாமல் அன்ரனியை நோக்கினாள். அன்ரனி தன் வேதனையை விழுங்கியபடி அனாவை அணைத்து அவள் கண்ணீரைத் துடைத்து விட்டான்.
அகன்ற பெரிய கண்ணாடி ஜன்னல்களை மறைத்திருந்த பெரிய திரைச்சீலைகளின் மெல்லிய இடுக்குகளின் வழி சூரிய வெளிச்சம் அறைக்குள் விழுந்தது.
விடிந்து விட்டது.
தாதி அறைக்குள் வந்து திரைச்சீலைகளை விலக்கி விடிவிளக்கை அணைத்து விடுகிறாள்.
வழக்கம் போல அவளது காலைக் கடமைகள் எல்லாம் முடிக்கப்பட்டு மீண்டும் சக்கர நாற்காலிக்கு மாற்றப்படுகிறாள். ஓவ்வொரு முறை இடம் மாற்றப்படும் போதும் அவள் படும் வேதனை வார்த்தைகளில் வடிக்க முடியாதவை. அவளது கண்களில் பக்கத்து மேசையில் வைக்கப்பட்டிருந்த தன் இளமைக்கால நிழற்படங்கள் தட்டுப்படுகின்றது. பார்க்கும் பொழுதெல்லாம் ஏக்கம்தான் மிஞ்சியது. ஏக்கத்துடன் சுவரை ஏறிட்டாள். அங்கு அவளும் அன்ரனியும் திருமணத்தன்று கண்களில் வழியும் ஆயிரம் கனவுகளுடன் ஒருவரை ஒருவர் அணைத்தபடி புன்னகை தவழும் வதனத்துடன் நிழற்படமாய். நெஞ்சு வெடித்துவிடும் அளவிற்கு சத்தம் போட்டு அழ வேண்டுமென நினைக்கிறாள். அதுகூட முடியாமல் இதுவென்ன வாழ்க்கை.
நானே எனக்குச் சிலுவையா? இறைவா இவ் வேள்வித்தீயில் நான் வேகுவது இன்னும் எத்தனை காலம்?
அவளது வாயில் இறுகிய திரவஉணவு ஏதோ ஊற்றுகிறார்கள். சுவை, சூடு, குளிர், எந்த உணர்வுமற்ற ஏதோ ஒன்று உணவாக ஊட்டப்படுகிறது. அதுகூட இடைக்கிடை தொண்டைக்குள் சிக்கி மூச்சை அடைக்கிறது.
இதோ அவளது ஆசைமகள் தன் காதலனுடன் பூங்கொத்தை கையிலேந்தியவாறு வந்த என்னை முத்தமிடுகிறாள்.  மார்க்கும் பார்ப்பதற்கு நல்ல பண்பான அன்பான இளைஞனாகத்தெரிகிறான். ஆனா அவர்களை அணைத்து முத்தமிடத் துடிக்கிறாள். முடியவில்லை.  அவள் நன்றாக சந்தோசமாக வாழ வேண்டும் என மனதால் வாழ்த்துகிறாள். அன்ரனிதான் பாவம். தனிமையில் துவளும் அவனிற்கு ஆறுதல் கூற யார் இருக்கிறார்கள்.
அவளால் முடியவில்லை. அமைதியாக இருக்க முடியவில்லை. மனம் எரிமலையாய் குமுறுகிறது. அவளது குரல்வளையில் இருந்து வெளிப்படும் குரல் அந்த அமைதியான நர்சிங்கோம் சுவர்களில் மோதி விகாரமாக ஒலிக்கிறது. தாதி விரைந்து வருகிறாள். அனாவின் சக்கர நாற்காலியை உருட்டிக்கொண்டு போகிறாள்.
அந்த நர்சிங்கோமின் ஒரு பகுதியில் அமைதியான ஓர் அறை இருக்கிறது. அதில் இப்படி அங்குள்ள மற்றவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் ; சந்தர்ப்பங்கள் நேரும் சமயங்களில் தனிமைப்படுத்தி வைப்பதற்காகவே அமைக்கப்பட்டுள்ளது.
அனைவை சக்கரநாற்காலியுடன் அந்த அறையினுள் இருத்திய தாதி ஓர் அமைதியான இசையை ஒலிக்க விடுகிறாள். மெல்லிய இசை அறையெங்கும் பரவுகிறது.
இசையில் வசமாகுமா அவள் இதயம்?......

 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கனதியான கதையல்ல நிஜம், எனக்கும் இதுபோன்ற நிலையிலுள்ள சிலரைத் தெரிந்திருப்பதால் , இது மிகவும் கொடுமையானது...!

 

கதைக்கு நன்றி கண்மனி...!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக நீண்ட நாட்களுக்குப்பின்  உங்கள் கதையை சுவைப்பதில்  மிக்கக் மகிழ்ச்சி .. ஆமாம் எவரின் வாழ்கையும் நிலையில்லை .  இறைவனா தரப்பட்ட  வாழ்கையை  ஏற்று  மகிழ்வாக  வாழ்வது  தான் வாழ்க்கை  நேரம்  கிடைக்கும்போதெல்லாம்  வாருங்கள் . நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனேகமாக இந்தக் கதையை வாசிப்பவர்கள் அனைவருக்கும் ஒரு சில நிமிடங்களாவது பேச்சு வராது என்று தான் நினைக்கிறன்....எதுவுமே நமது கட்டுப்பாட்டில் இல்லை. ஆனாலும் இப்படியானவர்கள் மேலும் இருந்து வாழ்வோடு போராடக் கூடாது..யாராக இருந்தாலும் ஒரு நாள்,இரு நாள்,ஒரு மாதம்,இரு மாதம் பராமரிப்பார்கள் அதன் பின் அவர்களுக்கும் கஸ்ரம்,இப்படியான நிலையில் இருப்பவர்களுக்கும் கஸ்ரம்..வாழ்வு முழுவதும் உடல் வலிகளோடு,மன வலிகளோடு வாழ்வது கொடுமையிலும், கொடுமை.பகிர்வுக்கு நன்றிகள் கண்மணி அக்கா.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதைக்கு நன்றி அக்கா...எழுத வார்த்தைகளே இல்லை.யாயினியின் கருத்து தான் என்னோடதும்

கதையில் வரும் பெயர்கள் ஆங்கிலப் பெயராக இருப்பது நெருடலாக உள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்கதை நிஜமான கதை என்பதால் எந்தவித கற்பனைகளையும் கலந்து எழுத முடியவில்லை. எனவேதான் பெயர்களைக்கூட மாற்றவில்லை. அனாவின் அன்றைய நிழற்படங்களைப் பார்த்த எனக்கு இன்றைய நிலையைப் பார்க்கும்பொழுது நிலையாமை கண்முன் நிழலாடியது.
கருத்தெழுதிய சுவி, நிலாமதி, யாயினி, ரதி அனைவருக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.