Jump to content

உனக்கு வரலாறு தெரியுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உனக்கு வரலாறு தெரியுமா?

வா. மணிகண்டன்

பெங்களூரிலிருந்து ஊருக்கு வரும்போதெல்லாம் நான்கைந்து சமணர்களையாவது பார்க்க நேரிடுகிறது. முன்பு திகம்பரர்கள் என்கிற நிர்வாண நிலையை அடைந்தவர்களும் நடந்து செல்வார்களாம். திராவிடர் கழகத்தினர் உள்ளிட்ட கலாச்சாரக்காவலர்கள் தாக்கத் துவங்கிய பிறகு அவர்களைப் பார்க்க முடிவதில்லை. இப்பொழுது வெண்ணிற உடையில் செருப்பில்லாமல் நடந்து செல்வபவர்கள் பெரும்பாலும் கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில்தான் கண்ணில் படுகிறார்கள். அதன் பிறகு எங்கே செல்கிறார்கள் என்று தெரியவில்லை. கர்நாடகாவில் இன்னமும் சமணம் உயிர் பிடித்திருக்கிறது. தமிழகத்தில்தான் காலியாகிவிட்டது.

வலுவுள்ளவன்தானே எப்பொழுதும் வரலாற்றை எழுதுகிறான்?

சமணர்கள் கெட்டவர்கள், அப்பரைக் கொடுமைப்படுத்தினார்கள் என்றெல்லாம் எழுதி வைத்திருக்கிறார்கள். ஆனால் இவை அனைத்துமே விருமாண்டி ஸ்டைல்தான்- சிவனை பரம்பொருளாக ஏற்றுக் கொண்ட சைவர்களால் எழுதப்பட்ட குறிப்புகள். இதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கும் என்று தெரியவில்லை. எழுத்தாளர் பெருமாள்முருகன் முன்பொருமுறை எழுதியிருந்த மின்னஞ்சலிலும் இதையேதான் சொல்லியிருந்தார்- சமணர்கள் வன்முறையாளர்கள் என்பதற்கு எந்தத் தரவும் இல்லை என்று. அவர் பொ.வேல்சாமியிடமும் பேசியிருக்கிறார். வேல்சாமி அவைதீகம் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டிருப்பவர் - சமணர்கள் வன்முறையாளர்கள் என்பதற்கான எந்தக் குறிப்பும் இல்லை என்றுதான் வேல்சாமியும் சொன்னாராம். பெரியவர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

சமணர்களை ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே திருஞானசம்பந்தர் தமிழகத்தில் வேட்டையாடத் துவங்கிவிட்டார் என்று யாராவது சொன்னால் சில இந்துக்கள் ஏற்றுக் கொள்வதில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் மதுரையில் எந்நூறு சமணர்களை கழுவில் ஏற்றிக் கொன்றார்கள் என்பதெல்லாம் கட்டுக்கதை. அப்படியே இருக்கட்டும்.

உண்மையோ பொய்யோ- சம்பந்தரின் வாழ்க்கை அதிசுவாரசியங்களால் நிறைந்தது. சம்பந்தரின் இயற்பெயர் வேறு என்னவோ. அவரது அப்பா சிவபாத இருதயர்- பிராமணர் - சீர்காழி கோவில் குளத்தில் குளிக்கச் செல்லும் போது சம்பந்தரையும் அழைத்துச் சென்றாராம். சம்பந்தரை குளக்கரையில் நிறுத்திவிட்டு அவர் நீருக்குள் மூழ்கி அகமருட மந்திரத்தை ஓதிக் கொண்டிருந்த போது சம்பந்தர் தனது அப்பாவைக் காணவில்லை என்று கதறியிருக்கிறார். அம்மந்திரத்தை எவ்வளவு நேரம் ஓதுவார்கள் என்று தெரியவில்லை. வெகுநேரம் கழித்து வெளியில் வந்த போது சம்பந்தரின் வாயோரத்தில் பால் இருந்திருக்கிறது. ‘எச்சி பால் குடிச்சயாடா படவா?’ என்று குச்சியைக் காட்டி மிரட்டினாராம். அசையாத சம்பந்தர் கடவுளை நோக்கி கை நீட்டியிருக்கிறார். அந்த ஈசனின் மனைவியே பால் கொடுத்தாள் என்று அவரது அப்பா நம்பிக் கொண்டார். இறைவியிடமே பால் குடித்து சம்பந்தம் உருவாக்கிக் கொண்டதால் அதன் பிறகு அவரது இயற்பெயர் மறைந்து ‘ஞான சம்பந்தம்’ என்றாகிவிட்டார். இதெல்லாம் நடந்த போது ஞான சம்பந்தருக்கு வயது ஜஸ்ட் மூன்றுதான்.

அதன் பிறகு தனது அப்பாவின் தோள் மீது ஏறி அமர்ந்து கொண்டு ஒவ்வொரு ஊராக தல யாத்திரை செல்லத் துவங்கினார். கூடவே நான்கைந்து பேர் வருவார்கள். ‘இத்துனூண்டு பையன் எவ்வளவு அருமையாக பாடுகிறான்’ என்று கூட்டம் சேரத் துவங்கியிருக்கிறது. சம்பந்தரின் புகழ் பரவத் தொடங்கியது.

இடையில், பையன் நன்றாக பாடுகிறானே என்று கடவுளே வந்து பொன்னால் செய்யப்பட்ட பொன் தாளம் கொடுத்தாராம், ஒரு வணிகர் தன் மகள் இறந்துவிட அவளது அஸ்தியை வீட்டில் வைத்திருந்தராம். சம்பந்தர் அந்த வீட்டுக்குச் சென்று பதிகம் பாடிய போது அந்தப் பெண் உயிர் பெற்று அஸ்திச் சட்டியை உடைத்துக் கொண்டு வெளியே வந்தாள் என்று சம்பந்தரின் வரலாற்றுக்குள் ஏகப்பட்ட குட்டிக் கதைகள் உண்டு. இதையெல்லாம் நம்புவதும் நம்பாததும் அவரவர் இஷ்டம்- நான் நம்பவில்லை.

அப்பர், சுந்தரர், சம்பந்தர் மற்றும் மாணிக்கவாசகரால் தமிழுக்கு தேவாரம் கிடைத்தது; அற்புதமான திருவாசகம் கிடைத்தது என்பதெல்லாம் சரிதான். ஆனால் இடையிடையே புகுத்தப்பட்ட இந்தப் புனைவுகள் எல்லாம் டூ மச். சம்பந்தர் சட்டிக்குள் சாம்பலாக இருந்த பெண்ணை உயிர்ப்பித்தார் என்றால், சுந்தரர் அவிநாசியில் முதலை விழுங்கிவிட்ட ஒரு குழந்தையை தனது வழிபாட்டால் மீட்டுக் கொடுத்தாராம். மதத்தை பரப்புவதற்காக செய்யும் அற்புத சுவிஷேசங்களுக்கு எந்தவிதத்திலும் சளைக்காத புனைவுகள்தான் இவை.

இந்த புனைவுகள் சம்பந்தர் காலத்திலேயே நல்ல பலன்களைக் கொடுக்க ஆரம்பித்துவிட்டது. அவரது காலத்திலேயே (கி.பி.ஏழாம் நூற்றாண்டு) சைவம் தழைக்கத் தொடங்கிவிட்டது. ஊர் ஊராகச் சென்று மக்களை மாற்றினார் பிறகு பாண்டிய மன்னனையும் சைவத்திற்கு மாற்றினார்.

பாண்டியன் சைவத்திற்கு மாறிய கதைதான் இன்னமும் சுவாரசியம். அதுவரை பாண்டியன் சமணத்தை தழுவியவனாக இருந்திருக்கிறான். பாண்டியன் வேறு யாரும் இல்லை- த பாப்புலர் கூன் பாண்டியன் தான். அவனது அரசியும் அமைச்சரும் சைவப் பிரியர்கள். அரசி சம்பந்தருக்கு தூது அனுப்பியிருக்கிறாள். ‘இங்க சமணம் கெட்ட ஆட்டம் போடுது...நீங்க வந்தால்தான் கொட்டத்தை அடக்க முடியும்’ என்று.

விடுவாரா சம்பந்தர்? வீறு கொண்டு கிளம்பினார்.

சம்பந்தர் மதுரையை அடைந்து ஒரு மடத்தில் தங்கியிருந்த போது சமணர்கள் அந்த மடத்திற்கு தீ வைத்துவிட்டார்கள். இந்த தீ வைப்பு சம்பவத்தில் பாண்டியனுக்கும் உடந்தை உண்டு. இது சம்பந்தருக்கு புரிந்துவிட்டது. ‘எனக்கா தீயை வைக்குறீங்க இருங்க’ என்று ஒரு பாடலை பாடிவிட்டார். சாபம்தான். பாண்டியனின் உடல் முழுவதும் கோடைக் கொப்புளம் மாதிரி ஏதோ ஒரு வெப்ப நோய் வந்துவிட்டது. நோயில் திணறிக் கொண்டிருக்கும் பாண்டியனின் உடலை சமணரும், சம்பந்தரும் பங்கு பிரித்துக் கொண்டார்கள். ‘இந்தப் பார்ட் எனக்கு. அந்தப் பார்ட் உனக்கு’ என்று.

ஞானசம்பந்தர்தான் தியாகராஜ பாகவதருக்கு முன்னோடி ஆயிற்றே. இந்த ஸீனில் ஒரு பாடல் வருகிறது. பாடலின் வீரியத்தால் சம்பந்தர் பிரித்துக் கொண்ட உடற்பகுதியில் இருந்த வெப்பு நோய் குணமடைந்துவிட்டது. ஆனால் சமணர்களின் பார்ட் அப்படியே இருந்திருக்கிறது. கூன் பாண்டியன் சம்பந்தர் பக்கமாக சாய்ந்துவிட்டான். ‘யப்பா சாமி நீயே சரி செய்துவிடு’ என்று சரணடைந்துவிட மிச்ச மீதி கொப்புளத்தையும் சம்பந்தர் நீக்கிவிட்டிருக்கிறார்.

அதன்பிறகுதான் கழுவிலேற்றும் படலம்.

‘சைவம் பற்றி நீ எழுது; சமணம் பற்றி நாங்கள் எழுதுகிறோம்’ அந்த ஏட்டை தீயில் வீசுவோம். எது எரியாமல் தப்பிக்கிறது என பார்க்கலாம் என்றார்களாம். என்ன நடந்திருக்கும் என்று யூகித்துவிடலாம். யெஸ். சமணர்கள் தோற்றுப் போனார்கள்.

‘சரி முதல் முறை நீ ஜெயிச்சுட்ட...இந்த முறை நெருப்புக்கு பதிலாக ஏடுகளை ஆற்று நீரில் விடலாம்..எது தப்பிக்கிறதோ அவர்கள் வென்றார்கள்’ என்றார்களாம்.

அரசிக்கு டென்ஷன் ஆகிவிட்டது. ‘இப்படியே போட்டிக்கு மேல போட்டி நடத்துனா எப்படி தம்பீகளா? இதுதான் கடைசிப் போட்டி. தோத்தாங்காளிக்கு பயங்கரமான தண்டனை’ என்று அறிவித்துவிட்டாள். ஆற்று நீர் போட்டியிலும் எதிர்பார்த்தபடியேதான் முடிவு அமைந்தது. சமணர்களின் ஏடு எங்கேயோ போய்விட்டது. சம்பந்தரின் ஏடு கரையேறிவிட்டது.

இதன் பிறகுதான் சமணர்கள் கழுவில் ஏற்றப்பட்டார்கள்.

குழந்தையாக இருந்த போது தனக்கு இறைவி பால் கொடுத்தது, அப்பா தோளில் அமர்ந்து திருத்தலங்களுக்குச் சென்றது என அனைத்தையும் துல்லியமாக பதிவு செய்த சம்பந்தர் இந்த நிகழ்வை மட்டும் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. அதை வைத்துத்தான் கழுவேற்றம் நடக்கவே இல்லை என்று சைவ ஆதரவாளர்கள் பேசுகிறார்கள். ஆனால் சம்பந்தர் வழியில் பின்னால் வந்த நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், ஒட்டக்கூத்தர் எல்லாம் கழுவிலேற்றிய நிகழ்வு நடந்ததாகவே எழுதி வைத்திருக்கிறார்கள்.

கழுவில் ஏற்றியது பொய்யாகவே இருக்கட்டும் ஆனால் தமிழகத்தில் சமணர்களை ஒடுக்கத் துவங்கியது சம்பந்தரின் காலத்தில்தான்.

சம்பந்தர் இறந்ததும் கூட சுவாரசியமான புனைவுதான். சம்பந்தருக்கு திருமண பந்தத்தில் பெரிய ஈர்ப்பு இல்லை. ஆனால் பெரியவர்கள் நிர்பந்திக்கிறார்களே என்று சம்மதித்துவிட்டார். திருமண நாளும் வந்தது. மணப்பெண்ணை கையில் பிடித்துக் கொண்டே ‘எனக்கு கல்யாணம் வேண்டாம் எனக்கு கல்யாணம் என வேண்டாம்’ என பாடியிருக்கிறார். ஒரு ரொமாண்டிக் பாடல் வர வேண்டிய இடத்தில் தத்துவப்பாடல். கடவுளுக்கே பொறுக்கவில்லை போலிருக்கிறது- திடீரென்று கோவிலில் தீ எரிந்திருக்கிறது. அதே சமயம் மேலிருந்து ஒரு குரல் கேட்டிருக்கிறது. ‘ சம்பந்தரே! நீங்க, உங்க வீட்டுக்காரம்மா மற்றும் இங்க இருக்கிறவங்க அத்தனை பேரும் ஜோதியில் கலந்து என்னிடம் வாருங்கள்’ என்று அந்தக் குரல் உத்தரவிட்டிருக்கிறது. அந்தக் குரல் சாட்சாத் சிவபெருமானுடையதுதான். மொத்தமாக அத்தனை பேரும் ஜோதியில் ஐக்கியமாகிவிட்டார்கள். சம்பந்தர் இறக்கும் போது அவருக்கு வயது வெறும் பதினாறுதான். பதினாறு வயதிலேயே செம கலக்கு கலக்கிவிட்டார். எழுபது அல்லது எண்பது வருடங்கள் வாழ்ந்திருந்தால் மொத்த வரலாற்றையும் புரட்டிப் போட்டிருப்பார்.

சம்பந்தர் இறந்துவிட்டார். அடுத்து என்ன செய்வது? திருமணத்தின் போது தீ விபத்து நடந்து சம்பந்தர் இறந்துவிட்டார் என்று எழுதி வைத்தால் பின்னால் வரும் சந்ததியினர் எப்படி அவரை முருகனின் அவதாரம் என்று சொல்வார்கள்? பார்த்தார்கள்- பதினாறு வயதிலேயே சம்பந்தர் சிவ பெருமானின் ஜோதியில் ஐக்கியமாகிவிட்டார் என்று எழுதி வைத்துவிட்டார்கள். சம்பந்தர் தனது பாடல்களை எல்லாம் தாண்டி அவதாரம் ஆகிவிட்டார்.

இதை நாம் சொன்னால் அடிக்க வருவார்கள்.

வல்லோன் வகுத்ததே வாய்க்கால் மட்டும் இல்லை வல்லோன் வகுத்ததுதான் வரலாறும்.

http://www.nisaptham.com/2014/06/blog-post_12.html

Link to comment
Share on other sites

மனித சிந்தனையை அறிவுலகம் ஜதார்த்தம்  நோக்கி தூண்டிவிடும் படைப்பு இது. இணைப்புக்கு நன்றி கிருபன்.

Link to comment
Share on other sites

சமயம், தமிழ் பாடங்கள் படிக்கும் போதே இவை நியத்தில் நடக்க சந்தர்ப்பம் இல்லை என்றாலும். பரீட்சையில் சித்தி அடைய வேண்டும் என்பதற்காக படிக்க வேண்டி இருந்தது.

Link to comment
Share on other sites

இதை எழுதியவருக்கு இதை தான் சொல்லலாம்

 

10494629_762076697157158_335823926406942

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.