Jump to content

பண்டைய நாகரிகங்கள் - தொடர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 1

அறிமுகம் : உலகம் பிறந்தது எப்படி?

எஸ்.எல்.வி. மூர்த்தி

nuwa_comp.jpg

நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வயது இருக்கும் என்றாலும் மனித குலத்தின் (Homo sapiens) வயது என்று பார்த்தால் ஐந்து லட்சம் வருடங்கள். இரண்டு முதல் ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனித குலம் தோன்றியிருக்கவேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் (ஆன்த்ரோபாலஜிஸ்ட்ஸ்) மதிப்பிடுகிறார்கள்.

மனிதனின் பரிணாம வளர்ச்சி, புல்லாகிப் பூண்டாகி, புழுவாய், மரமாய், பல்மிருகமாகி, பறவையாகி, பாம்பாகி, கல்லாய், மனிதராய் வந்தது என்று மணிவாசகர் திருவாசகத்தில் சொல்கிறார். புல்லுக்கு முன்பாகவே உலகம் தோன்றியிருக்கவேண்டும். நம் உலகம் பிரபஞ்சத்தில் ஒரு பகுதி. உலகமும், பிரபஞ்சமும் எங்கே, எப்போது, எப்படிப் பிறந்தன?

கி.மு. 1700 – 1100 காலகட்டத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் ரிக் வேதம் இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்கிறது தெரியுமா?

படைப்பு எப்படி, எப்போது, எங்கே வந்தது என்று யாரால் சொல்லமுடியும்?
கடவுள்களே சிருஷ்டிக்கு அப்புறம்தானே உருவானார்கள்?
சிருஷ்டி எப்போது, எப்படித் தொடங்கியது என்று யாருக்குத் தெரியும்?
யாரால் நிச்சயமாகச் சொல்லமுடியும்?
கடவுள் இதைச் செய்தாரா, செய்யவில்லையா?
வானில் இருக்கும் அவருக்கு இதற்கு ஒருவேளை விடை தெரியலாம்,
அல்லது அவருக்கும் விடை தெரியாமலிருக்கலாம்.

( को अद्धा वेद क इह प्र वोचत् कुत आजाता कुत इयंविसृष्टिः
अर्वाग् देवा अस्य विसर्जनेनाथा को वेद यतआबभूव
इयं विसृष्टिर्यत आबभूव यदि वा दधे यदि वा न
यो अस्याध्यक्षः परमे व्योमन् सो अङ्ग वेद यदि वा नवेद )

இப்படிப் புதிர்போடும் ரிக்வேதம், இன்னொரு ஸ்லோகத்தில் தன் பதிலைச் சூசகமாகச் சொல்கிறது.

तम आसीत् तमसा गूळमग्रेऽप्रकेतं सलिलं सर्वमाइदम्
तुच्येनाभ्वपिहितं यदासीत् तपसस्तन्महिनाजायतैकम्

ஆரம்பத்தில், எங்கும் காரிருள். இன்று நம் கண்ணுக்குத் தெரியும் எல்லாமே, யாருக்கும் தெரியாத நிலை. தெரியாத இந்த உலகத்தை, எல்லாம் வல்ல அவன் சக்தி மட்டுமே நிறைத்திருந்தது. அந்த சக்தியின் வெப்பத்தில் உலகம் பிறந்தது.

ரிக்வேதம் அறிவுஜீவிகளின் ஊடகம். வேதங்கள் சொல்லும் கருத்தைப் புராணக் கதைகள் ஜனரஞ்சகமாகச் சொல்கின்றன. எல்லா நாடுகளிலும், எல்லா மதங்களிலும், எப்போது, எங்கே, எப்படிப் பிரபஞ்சம் பிறந்தது? என்னும் சிருஷ்டியின் ரகசியம் தேடும் கேள்விக்குப் பதில் சொல்லும் கதைகள் இருக்கின்றன. இந்தக் கதைகளின் அணுகுமுறைகள் மூன்றுவகை:

1. பிரபஞ்சம் ஒரு பெரிய முட்டையிலிருந்து வந்தது.
2. சில ஆண் – பெண் தேவதைகளின் சேர்க்கையால் பிறந்தது.
3. முழுமுதற்கடவுள் தன் கைப்பட உருவாக்கியது.

முதலில், முட்டைக்குள்ளிருந்து பிரபஞ்சம் வந்ததாகச் சொல்லும் கதைகளைப் பார்ப்போம். இந்துமத இதிகாசங்களில் தொடங்குவோம். சிவபெருமான் முழுமுதற் கடவுள். அழிப்பதும், மறுபடி படைப்பைத் தொடங்குவதும் அவர் தொழில். மரம், பறவை, மிருகம், மனிதர் என்று எந்தவொரு ஜீவராசிக்கும் தன் இனத்தைப் பெருக்க இரு பாலினங்கள் தேவைப்படும். இதை உணர்த்தும் வகையில் சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக இருக்கிறார். வலப்பக்கம் சிவன், இடப் பக்கம் பெண்மையின் பிரதிநிதித்துவமாக சக்தி!

சிவன் தவிர யாருமே இல்லை, ஒன்றுமே இல்லை. வானம் இல்லை, கடல்கள் இல்லை, மரங்கள் இல்லை, செடிகள் இல்லை, மீன்கள் இல்லை, பறவைகள் இல்லை, மிருகங்கள் இல்லை. மனிதர்கள் இல்லை, எந்த உயிரினமும் இல்லை. தகிக்கும் நெருப்பாய் அவர் மட்டுமே இருக்கிறார்.

சிவன் தன் உடுக்கையை அசைக்கிறார். மெல்லத் தொடங்கும் ‘ஓம்’ என்னும் ஒலி ஆரோஹணமாகி வெட்டவெளியை ரீங்காரமிட்டு நிறைக்கிறது. பிரணவ ஒலி – ஆதிபகவன் உருவாக்கும் முதல் சப்தம்.

சிவபெருமானின் லீலாவிநோதம், சிருஷ்டி தொடங்குகிறது. தன் சடாமுடிக் கங்கையைக் கவிழ்த்ததும், ஓடையாகத் தொடங்கும் வெள்ளம், ஊழிப் பிரளயமாகிறது. சிவபெருமான் ஒரு பெரிய தங்க முட்டையைத் தண்ணீரில் மிதக்கவிடுகிறார். அந்த முட்டை இரண்டாக வெடிக்கிறது. அதற்குள்ளிருந்து படைப்புக் கடவுளான பிரம்மா வெளியே வருகிறார்.

பிரம்மா தன் கடமையைத் தொடங்குகிறார். சொர்க்கலோகம், வானம், சூரியர், சந்திரர், நட்சத்திரங்கள் படைக்கிறார். அடுத்ததாகப் பூவுலகம், நம் உலகம் பிறக்கிறது. மலைகள், பள்ளத்தாக்குகள், கடல்கள், நதிகள், ஏரிகள்! ஆனால், உலகம் ஏன் இப்படி ஆண்டவன் இல்லாத ஆலயம்போல், குழந்தை இல்லாத வீடுபோல் வெறிச்சோடிக் கிடக்கிறது? மரம், செடி, கொடி, மீன், பறவை, மிருகம் , மனிதன் என்னும் எந்த ஜீவராசியுமே உலகத்தில் இல்லையே? பிறகு உயிர்த் துடிப்பு எப்படி இருக்கமுடியும்?

உயிர்த் துடிப்பு கொண்டுவரும் அனிமேஷன் வேலையில் பிரம்மா இறங்குகிறார். தன் உடலை, ஆண், பெண் என்று இரு பாகங்களாகப் பிரித்துக்கொள்கிறார். தலை, வாய், வயிறு, கால், கை என்று தன் உடலின் ஒவ்வொரு அவயவங்களிலிருந்தும் ஒவ்வொரு விதமான ஜீவராசியை உருவாக்குகிறார். முதலில் புல், அடுத்து பூக்கள், மரங்கள், பூச்சிகள், பறவைகள், மீன்கள் ஜனனமாகின்றன. கடைசியாக ஒரு ஆண், ஒரு பெண். இவர்கள் அனைவருக்கும், பார்க்கும், கேட்கும், நுகரும், உணரும், நடமாடும் சக்திகள் தருகிறார்.

உலகம் பிறந்துவிட்டது! விண்ணைத் தொடும் மலைகள், ஓங்கார ஒலியோடு பாயும் நீர்வீழ்ச்சிகள், அமைதியாக ஓடும் நதிகள், சலசலக்கும் நீரோடைகள், காற்றோடு கைகோத்து விளையாடும் கடல், ஆழ்கடலுக்குள் மறைந்துகிடக்கும் முத்து, பவளங்களை நாளும் தேடும் மீன்கள், திமிங்கிலங்கள், ராஜநடை சிங்கங்கள், சீறும் சிறுத்தைகள், மருள்விழி மான்கள், நம் சகோதரக் குரங்குகள், தோகை விரித்தாடும் மயில்கள், இன்னிசைக் குயில்கள், வண்ணக் கிளிகள் – பார்க்கும் இடமெல்லாம் அழகு.

0

ஃபின்லாந்து நாட்டின் காப்பியச் செய்யுள் கலேவாலா (Kalevala) சொல்லும் கதை இது.

பிரபஞ்சம் பிறப்பதற்கு முன்னால், வெட்ட வெளியும், காற்றும் மட்டுமே இருந்தன. நம் ஊரில் காற்றின் தெய்வம் வாயு பகவான். இதேபோல், ஃபின்லாந்தில், காற்றின் தெய்வம் இல்மட்டார் (Ilmatar) என்னும் கன்னிப் பெண் தேவதை. நீண்ட கூந்தல் கொண்ட அந்த அழகுக் கடவுள் தன் நேரத்தை எப்படிச் செலவிடுவாள் தெரியுமா? வர்ணஜாலம் செய்யும் வானவில்களை எண்ணுவாள், அல்லது, தன் நீண்ட கூந்தலைத் தவழ்ந்து வரும் காற்று தழுவவிட்டு ரசிப்பாள்.

ஒரு நாள், கிழக்குக் காற்று இல்மட்டாரின் கூந்தலைத் தொட்டு விளையாடியது. அவள் காதில் , கொஞ்சுமொழி பேசியது. இல்மட்டார் உடலெல்லாம் இதுவரை அனுபவித்தேயிராத புளகாங்கிதச் சிலிர்சிலிர்ப்பு. அவள் சலனம் கிழக்குக் காற்றுக்குப் புரிந்தது. சில்மிஷங்கள் தொடங்கினான். உடல்கள் தழுவின. உணர்ச்சிகள் எகிறின. வாயுவின் வாரிசு இல்மட்டார் வயிற்றில் வளரத் தொடங்கியது.

கருவை உருவாக்கிய காற்று காணாமல் போனான். எல்லாத் தாய்களையும்போல், வயிறு நிறையச் சுமையும், நெஞ்சு நிறைய ஆசைகளுமாக இல்மட்டார் காத்திருந்தாள். எழுநூறு ஆண்டுகள் ஓடின. இல்மட்டாரின் தலைக்கு மேலாக ஒரு தெய்வீகக் கழுகு பறந்தது. அவள் தலையைப் பலமுறை சுற்றிச் சுற்றி வந்தது. அந்தக் கழுகும் அவளைப் போலவே ஒரு கர்ப்பிணி. தன் வயிற்றில் சுமந்துகொண்டிருந்த ஆறு முட்டைகளை எங்கே பத்திரமாக இறக்கிவைக்கலாம் என்று தேடிக்கொண்டிருந்தது. இல்மட்டாரைப் பார்த்தவுடன், தன் குஞ்சுகளை அவள் தாயாகப் பாதுகாப்பாள் என்னும் நம்பிக்கை கழுகுக்கு வந்தது. ஆறு முட்டைகளையும் இல்மட்டார் காலடியில் போட்டுவிட்டு, எங்கோ பறந்து மறைந்தது.

நிறைகர்ப்பிணி இல்மட்டார் மெள்ள எழுந்தாள். ஏழு முட்டைகளும் அவள் காலடியிலிருந்து நழுவி, பத்திரமாய்க் கடலுக்குள் விழுந்தன. கழுகு ஆறு முட்டைகள்தானே போட்டது என்று கேட்கிறீர்களா? ஏழாவது முட்டை, அவள் வயிற்றில் இருந்த குழந்தை!

இல்மட்டார் குனிந்து பார்த்தாள். தான் பார்க்கும் காட்சிகளை அவளால் நம்பவே முடியவில்லை. கடலில் விழுந்த ஏழு முட்டைகளும் வெடித்தன. சொர்க்கலோகம், பூவுலகம் என ஏழு வகை உலகங்கள்* பிறந்தன. முட்டைகளின் வெள்ளைக் கரு சூரியனாகவும், மஞ்சள் கரு சந்திரனாகவும், முட்டைத் தோடுகள் நட்சத்திரங்களாகவும் உருவெடுத்தன. ஆமாம், பிரபஞ்சம் இப்படித்தான் பிறந்தது.

(*ஆச்சரியமாக, இந்துப் புராணங்களும், ஏழு உலகங்கள் இருப்பதாகச் சொல்கின்றன. அவை – பிரம்மா வாழும் சத்யலோகம், கடவுள்களின் தபாலோகம், பிரம்மாவின் வாரிசுகள் தங்கும் ஜனலோகம், ரிஷிகள் உறையும் மகர்லோகம், தேவர்களின் சுவர்க்கலோகம், பூமிக்கும் வானத்துக்கும் இடைப்பட்ட புவர்லோகம். மனிதர், மிருகங்கள், பறவைகள், நீர்வாழ் இனங்களின் பூலோகம்).

0

சீனப் புராணம் என்ன சொல்கிறது? ஆரம்பத்தில் வெற்றிடம் தவிர ஒன்றுமே இல்லை. யின் (yin), யாங் (yang) என்னும் மாறுபட்ட இரண்டு சக்திகள் எங்கிருந்தோ வந்தன. இவற்றை ஆண், பெண் சக்திகள் என்று வைத்துக்கொள்ளலாம். 18,000 ஆண்டுகளுக்குப் பின், இந்த இரண்டு சக்திகளும், ஒரு தெய்வீக முட்டையில் ஐக்கியமாயின. அந்த முட்டை வெடித்தது. அதற்குள்ளிருந்து பாங்கு (Phan Ku) என்னும் பிறவி வந்தான். பிரம்மாண்ட உருவம், உடல் முழுக்க முடி, தலையில் கொம்பு. அவன் கையில் கோடரி.

பாங்கு தன் கோடரியால் முட்டையை வெட்டினான். யின், யாங் ஆகிய இருவரும் தனித்தனியே எழுந்தார்கள். மந்திரக் கோல்போல், தன் கோடரியைக் காற்றில் வீசினான். உலகம் பிறந்தது. இன்னொரு வீச்சு – வானம் வந்தது. தன் கைகளால் வானத்தைத் தூக்கி உயரே நிறுத்தினான்.

இன்னொரு 18,000 ஆண்டுகள் ஓடின. பாங்கு மரணமடைந்தான். அவன் மூச்சு காற்றும், மேகங்களுமாக மாறியது. அவன் குரல் இடியாக வடிவெடுத்தது. அவன் வலது கண் சூரியன், இடது கண் சந்திரன், உடல் மயிர் நட்சத்திரங்கள். அவன் தலை மலைகள். ரத்தம் நதிகள். பாங்குவின் வியர்வை மழையானது. அவன் உடையில் ஒட்டியிருந்த தெள்ளுப் பூச்சிகள் (fleas) மீன், மிருகம், பறவை எனப் பல வடிவெடுத்தன. ஆண், பெண் என்னும் மனிதப் பிறவிகளை மட்டும் பாங்கு படைக்கவில்லை. இந்தப் படைப்பைச் செய்த கடவுள் தன் உடலில் பாதியைப் பெண்ணாகவும், மீதியைப் பாம்பாகவும் கொண்ட, நூவா (Nuwa) என்னும் தேவதை. -

பிரபஞ்சத்தின் ரிஷிமூலம் முட்டை என்று சொல்லும் இந்துமத மற்றும் ஃபின்லாந்து, சீன நாடுகளின் புராணக் கதைகளைப் பார்த்தோம். யுனிவர்ஸ் என்னும் ஆங்கில வார்த்தையின் பொருள் அண்டம் என்று அகராதி சொல்கிறது. தமிழ் அகராதியைப் புரட்டுங்கள். அண்டம் என்றால் இரண்டு அர்த்தங்கள் – பிரபஞ்சம், முட்டை. இந்த இரட்டை அர்த்தம் நிச்சயமாகத் தற்செயல் இணைவாக இருக்கமுடியாது. அறிவியல் மேதைகளைவிட தமிழ் அறிஞர்களுக்குப் பிரபஞ்ச சிருஷ்டி ரகசியம் இன்னும் தெளிவாகத் தெரிந்திருக்குமோ?

0

http://www.tamilpaper.net/?p=7909

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 2

பிரபஞ்சத்தின் கதைகள்

எஸ்.எல்.வி. மூர்த்தி

noahs-ark-zoom.jpg

முட்டைக்குள்ளிருந்து பிரபஞ்சம் பிறந்த கதைகளைப் பார்த்தோம். கிரேக்கம், எகிப்து, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் புராதனக் கதைகள் ஆண் – பெண் தேவதைகளின் சேர்க்கையால் பிரபஞ்சம் பிறந்ததாகச் சொல்கின்றன.

கிரேக்கம்

கிரேக்கம் சொல்லும் கதை இது. முதலில் எங்கும் வெட்ட வெளி. அதைச் சுற்றிப் பெருவெள்ளம். அந்த வெள்ளத்தில் வாழ்ந்தாள் ஓஷனஸ் (Oceanus) என்னும் கடல் தேவதை. அவளுக்கும், வடக்குக் காற்றுக்கும் காதல் வந்தது. இணந்தார்கள். ஈரினோம் (Eurynome) என்னும் பெண் குழந்தை பிறந்தது. ஈரினோம் காதல் கடவுள். தன் ஆசை மகளுக்காக ஓஷனஸ் பேரலைகளை உருவாக்கினாள். ஈரினோம் அவற்றின்மேல் ஏறி விளையாடினாள். அந்த ஆட்டத்தில் விண்ணுலகம், மண்ணுலகம், வானம், கடல், மிருகங்கள், பறவைகள், நீர்வாழ் இனங்கள் ஆகியவை பிறந்தன.

எகிப்து

எகிப்தியப் பழங்கதைகள் என்ன சொல்கின்றன? எங்கும் தண்ணீர். அங்கே ஆண் – பெண் ஜோடிகளாக எட்டுக் கடவுள்கள். இவர்கள் சேர்க்கை, முதலில் சூரியனையும் அடுத்து, பிற உயிரினங்களையும் படைக்கிறது.

ரோம்

கேலஸ் (Caelus) ரோமர்களின் வானக் கடவுள். அவருக்கும், உலகத்தின் கடவுள் கெயாவுக்கும் (Gaia) நெருக்கம் ஏற்படுகிறது. பிரபஞ்சத்தில் இருப்பவை அனைத்தும் இந்த ஜோடிகளின் வாரிசுகள்.

இந்தியா

இனி, முழுமுதற் கடவுள் பிரபஞ்சத்தை சிருஷ்டித்த கதைகளைப் பார்ப்போமா? சிவபெருமான் முட்டை மூலமாக பிரம்மாவைப் படைத்து, சிருஷ்டியைத் தொடங்கிவைத்ததைப் பார்த்தோம். இன்னொரு கதையில், முட்டை இல்லை. சிவபெருமான் தன் இடப்புறத்தை வருடுகிறார். விஷ்ணு அவதரிக்கிறார். அவர் காக்கும் கடவுள். அதுசரி, பிரபஞ்சமே இல்லையே, யாருமே இல்லையே, விஷ்ணு யாரைக் காப்பாற்றப் போகிறார்? என்றால், காக்கும் வேலை தொடங்கும் முன், ஒரு படைப்பு வேலையை சிவன் விஷ்ணுவுக்குக் கொடுத்திருக்கிறார். விஷ்ணு படைக்கவேண்டியது அந்தப் படைப்புக் கடவுளையே!

சிவபெருமானின் அடுத்த லீலை ஊழிப் பிரளயம். விஷ்ணு வெள்ளத்தில் மிதக்கிறார். ஆதிசேஷன் என்னும் பாம்பு அவருக்குப் படுக்கையாக விரிகிறது. பெருமாள் இப்போது வெள்ளத்தில், ஆதிசேஷன்மேல் ஆனந்தமான அனந்த சயனத்தில். அவர் நாபி திறக்கிறது, அதிலிருந்து ஆயிரம் இதழ்களோடு தெய்வீகத் தாமரை மலர் விரிகிறது. வெளியே வருகிறார் படைப்புக் கடவுள் பிரம்மா!

வெள்ளம் வடிகிறது. பிரம்மா தன் கடமையைத் தொடங்குகிறார். தாமரை மலரில் மூன்று இதழ்களைப் பிய்க்கிறார். முதல் இதழை மேலே வீசுகிறார்: சொர்க்கலோகம் பிறக்கிறது. இரண்டாம் இதழை பிரம்மா வீசுகிறார். பரந்த நீலவானம் படர்கிறது. இப்போது மூன்றாம் இதழைக் கீழே நழுவவிடுகிறார். உலகம், நம் உலகம் பிறக்கிறது.

நியூசிலாந்து

வெட்ட வெளியில், முழுமுதற் கடவுள் மட்டுமே இருக்கிறார். ரங்கினுயி (Ranginui) என்னும் வானக் கடவுள், பாப்பாட்டுவானுக்கு (Papatuanuku) என்னும் பூமித்தாய். இவர்கள் சேர்ந்து வாழ்கிறார்கள். இவர்களுக்கு ஏராளமான குழந்தைகள் பிறக்கின்றன. இந்த வம்சாவளிப் பெருக்கம்தான் நம் பிரபஞ்சம்.

பைபிள்

பைபிள்படி, நம் பிரபஞ்சம் முழுமுதற் கடவுளால் படைக்கப்பட்டது. அவர் ஆறு நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிருஷ்டி செய்தார்.

முதல் நாள்: வெளிச்சம் படைத்தார். அதை இருட்டிலிருந்து பிரித்தார். வெளிச்சத்தை நாள் என்றும், இருட்டை இரவு என்றும் அழைத்தார். இரண்டாம் நாள்: வானத்தை உருவாக்கினார். மூன்றாம் நாள்: பூமி, கடல்கள், மரங்கள், செடி கொடிகள். நான்காம் நாள்: சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள். ஐந்தாம் நாள்: மீன்கள் போன்ற நீர்வாழ் உயிரினங்கள், பறவைகள்.

(கடவுளின் நாள் நம்முடைய இன்றைய 24 மணிநேர நாள் அல்ல. ஏனென்றால், இதிகாசங்களின்படி, மத நம்பிக்கைகளின்படி, கடவுள் நம்முடைய காலக் கணக்குகளைத்

தாண்டியவர். உதாரணமாக, இந்து மத நம்பிக்கைகளின்படி, படைப்புக் கடவுள் பிரம்மாவின் ஒரு நாள் என்பது 864 கோடி வருடங்கள். பைபிள் சொல்லும் நாள் கணக்கையும், இந்த அடிப்படையில்தான் நாம் எடுத்துக்கொள்ளவேண்டும்.)

ஆறாம் நாள்: வகை வகையாய் மிருகங்கள். இதுவரை செய்த படைப்புகளின் உச்சமாயக ஆதாம், ஏவாள் முதல் ஆண், பெண்! ஏழாம் நாள்: தன் பணியைக் கச்சிதமாகச் செய்து முடித்த கடவுள் ஓய்வு எடுத்துக்கொண்டார்.

பைபிள் சொல்லும் இன்னொரு சிருஷ்டி ரகசியக் கதை நோவாவின் மரக்கலம்.

இந்துமத சிவபெருமானைப் போலவே, பைபிள் காட்டும் முழுமுதற் கடவுளின் வேலையும், அழிப்பதும், மறுபடி படைப்பைத் தொடங்குவதும்தாம். பிரபஞ்சத்தில் அதர்மம் பெருகிவிட்டது. கெட்டனவற்றை அழித்து, நல்லன காக்க ஆண்டவன் முடிவெடுத்துவிட்டார். நோவா என்னும் தர்மத்தின் தலைவனை அழைக்கிறார். அவனை ஒரு மரக்கலம் தயரிக்கச் சொல்கிறார். நீளம், அகலம், உயரம், உள் வெளி அமைப்பு, பயன்படுத்தவேண்டிய மரம் என அவன் பின்பற்றவேண்டிய அத்தனை வடிவமைப்பு விவரங்களையும் தருகிறார். மரக்கலம் தயார்.

கடவுளின் அடுத்த கட்டளை – பிரபஞ்சத்தில் இருக்கும் எல்ல வகை ஜீவராசிகளிலும், ஒரு ஆண், ஒரு பெண் என்று இரண்டு உயிரினங்களை கொண்டு வா. அவர்கள் எல்லோரையும் மரக்கலத்தில் பத்திரமாகத் தங்க வை.

சுமார் 45,000 வகை உயிரினங்கள் இப்போது மரக்கலத்தில் அடைக்கலம்.

அடுத்த கட்டளை – மரக்கலத்தில் இருக்கும் உயிரினங்களுக்குப் பல மாதங்கள் தேவையான உணவுப் பொருட்களைக் கொண்டு வா.

கடைசிக் கட்டளை – நீயும் மரக்கலத்தில் ஏறு. உள்ளே உட்கார்ந்துகொள். என்ன நடந்தாலும் பயப்படாதே. உங்கள் எல்லோரையும் காப்பாற்ற நான் இருக்கிறேன். நான் வெளியே வரச்சொல்லும்போது மட்டுமே, நீயும் உன்னோடு இருக்கும் ஜீவராசிகளும் வெளியே வரவேண்டும்.

நோவா மரக்கலத்தின் உள்ளே போனான். வெளியே, அண்டசராசரமே அதிரும் ஒலியோடு இடி. கண்பார்வையைப் பறித்திவிடும் பளிச் மின்னல். ஆனால், மரக்கலம் அமைதியின் உறைவிடமாக இருந்தது. நாற்பது நாட்கள் தொடர்ந்து மழை கொட்டியது. அடுத்த நூறு நாட்கள் ஊழி வெள்ளம். உலகம் மூழ்கியது. அங்கே வாழ்ந்த அத்தனை உயிரினங்களும் அழிந்தன.

வெள்ளத்தால் அடிக்கப்பட்ட மரக்கலம், அராரத் (Ararat) என்னும் மலையருகே ஒதுங்கியது. மழை நின்றது. ஒரு வருடத்துக்குப் பிறகு வெள்ளம் வடிந்தது. நோவாவையும், அவனோடு இருந்த அத்தனை உயிர்களையும் ஆண்டவன் வெளியே வரச் சொன்னார். தர்ம பூமியாக, நல்லவர்கள் வாழும் இடமாக, மறுபடியும் உலகம் தன் சுழற்சியைத் தொடங்கியது.

குர் ஆன்

தொடக்கத்தில் வானமும், பூமியும் சேர்ந்து ஒரே அமைப்பாக இருந்தன. அல்லா ஆணையின்படி, இவை இரண்டாகப் பிரிந்தன: ஆனால், ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து வாழ சம்மதித்தன. சொர்க்கம், உலகம், இவற்றுக்கு நடுவே இருப்பவை என அனைத்தையும் அல்லா படைத்தார். இந்தப் படைப்புக்கு அல்லா ஆறு நாட்கள் எடுத்துக்கொண்டார் என்று சில குறிப்புகள் சொல்கின்றன. இல்லை, உலகத்துக்கு இரண்டு நாட்கள், மலைகள், ஜீவராசிகள் ஆகியவற்றுக்கு நான்கு நாட்கள், வனம், சொர்க்கம் ஆகியவற்றுக்கு இரண்டு நாட்கள் என்று மொத்தம் எட்டு நாட்கள் என்கின்றன பிற சில குறிப்புகள்.

0

இந்தப் பழங்கதைகள் வெறும் கட்டுக்கதைகள் என்று பலர் நினைக்கிறோம். இந்தக் கதைகள் , பல்லாயிரம் மைல்கள் தூரத்தில் இருந்த எகிப்து, கிரேக்கம், ரோம், சீனா, நியூசிலாந்து, இந்தியா

போன்ற நாடுகளில் உருவானவை. பல்வேறு காலகட்டங்களின் கர்ணபரம்பரைக் கதைகள். அறிவியலும், தகவல் தொடர்புகளும், விண்வெளி ஆராய்ச்சிகளும், இருந்திருக்கவே முடியாது என்று நாம் நம்புகிற காலங்களின் கதைகள். ஆனால், ஒரு ஆச்சரியம், இந்தக் கதைகளுக்குள் பல பொதுத் தன்மைகள் இருக்கின்றன:

  • பிரபஞ்சத்தைப் படைத்த முழுமுதல் சக்தி நெருப்பாய்த் தகிக்கும் ஒரு சக்தி.
  • பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்னால், அற்புதமான ஒரு ஒலி (ஓம் ) எங்கும் நிறைந்திருந்தது.
  • சிருஷ்டியின் தொடக்கம் ஊழிப் பெருவெள்ளம்.
  • பிரபஞ்சத்தில் இருக்கும் அத்தனையும், அந்த முழுமுதல் சக்தியிலிருந்து தோன்றியவை. ஆகவே, ஜடம், ஜீவன் ஆகிய எல்லாமே முழுமுதல் சக்தியின் பல்வேறு வடிவங்கள்தாம்.
  • புல் அடுத்து பூக்கள், மரங்கள், பூச்சிகள், பறவைகள், மீன்கள், கடைசியாக ஆண், பெண் என்று ஜனனம் வரிசைக் கிரமத்தில் நடக்கிறது. அதாவது, படைப்பில் ஒரு பரிணாம வளர்ச்சி இருக்கிறது.
மெய்ஞ்ஞானம் சொல்லும் பழங்காலப் பிரபஞ்சப் படைப்புத் தத்துவங்கள் இவை. பல்லாயிரம் ஆண்டுகள் ஓடிவிட்டன. விஞ்ஞானம், வானியல் போன்ற துறைகளில் நாம் அபார வளர்ச்சி அடைந்துவிட்டோம். இயற்கைக் கோள்களோடு மனிதர் படைக்கும் செயற்கைக் கோள்களும் போட்டிப் போட்டு, பிரபஞ்ச வெளியில் உலா வருகின்றன. இந்தப் புதிய அளவுகோல்களுக்குப் புராணக் கதைகள் ஒத்துவருமா?

0

http://www.tamilpaper.net/?p=7938

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 3

விஞ்ஞானம் சொல்லும் பிரபஞ்ச ரகசியம்

எஸ்.எல்.வி. மூர்த்தி

Human-Evolution-300x208.jpg

பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்பதற்கு, பல்லாண்டுகால ஆராய்ச்சிகளின் அடிப்படையில், நாம் இன்று ஏற்றுக்கொண்டுள்ள அறிவியல் கொள்கை பெருவெடிப்புக் கோட்பாடு (Big Bang Theory).

உங்களைச் சுற்றி இருக்கும் உலகத்தை, வானத்தை, நட்சத்திரங்களை, வெட்ட வெளியை ஒருமுறை நன்றாகக் கவனியுங்கள். பார்த்துவிட்டீர்களா? இப்போது கண்களை மூடுங்கள். திறங்கள். இந்தக் ‘கண் சிமிட்டும் நேரம்’ சுமார் ஆறு விநாடிகள்.

இப்போது மறுபடியும், உலகத்தை, வானத்தை, நட்சத்திரங்களை, வெட்டவெளியை உற்றுக் கவனியுங்கள். வித்தியாசம் தெரிகிறதா? என்ன, ஒரு வேற்றுமையும் தெரியவில்லையா? நீங்கள் கண் மூடும் முன் பார்த்த பிரபஞ்சத்தைவிட, கண் திறந்தபின் பார்த்த சர்வலோகம் மிக மிகப் பெரியது. ஆமாம், ஒவ்வொரு விநாடித் துகளிலும், பிரபஞ்சம் பேரளவில் வளர்ந்து கொண்டிருக்கிறது, அதன் எல்லைக் கோடுகள் விரிவடைந்துகொண்டேயிருக்கின்றன. பிரபஞ்சத்தின் இந்தத் தொடர் வளர்ச்சிதான் பெருவெடிப்புக் கோட்பாட்டின் அடிப்படைத் தத்துவம்.

பெல்ஜிய நாட்டில் ஜார்ஜஸ் லெமட்ரே (Georges Lemaître) என்னும் கத்தோலிக்கப் பாதிரியார் இருந்தார். வேதாகமத்தில் மட்டுமல்ல, கணிதம், பௌதீகம், வானியல் ஆகிய துறைகளில் உயர் கல்வி பெற்றவர். பெல்ஜியப் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். அவர் உள்ளம் கணித வானியலில் லயித்தது. அமெரிக்கா சென்று ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் வான் ஆய்வுக்கூடத்தில் பணியாற்றினார். இதைத் தொடர்ந்து, அமெரிக்க எம்.ஐ.டி – இல் இயற்பியல் ஆராய்ச்சி, இரண்டாவது டாக்டர் பட்டம்.

அதுவரை, பிரபஞ்சம் வளர்ச்சி முற்றுப் பெற்றுவிட்ட பூகோள அமைப்பு என்று எல்லோரும் நினைத்தார்கள். 1931 – இல் லெமட்ரே, A homogeneous Universe of constant mass and growing radius accounting for the radial velocity of extragalactic nebulae என்னும் ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டார். பிரபஞ்சம் விரிவடைந்துகொண்டேயிருக்கிறது என்னும் புரட்சிகரமான கருத்தைக் கணித முறைகள் மூலமாக நிரூபித்தார். அறிவியல் உலகம் இந்தக் கருத்தை ஏற்கவில்லை, கேலி செய்தது. அறிவியல் மேதை ஐன்ஸ்டின், லெமட்ரே இருவரும் ஒரு கருத்தரங்கில் சந்தித்தார்கள். அப்போது ஐன்ஸ்டின் என்ன சொன்னார் தெரியுமா, ‘உங்கள் கணிப்பீடுகள் சரிதான், ஆனால், உங்கள் இயற்பியல் அறிவு வெறுக்கும்படியாக இருக்கிறது.’

அதே சமயம், எட்வர்ட் ஹபிள் (Edward Hubble) என்னும் அமெரிக்க வானியல் அறிஞரும் இதே ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். அவருடைய அணுகுமுறை கணிப்பீடு அல்ல, பரிசோதனைகள். டெலஸ்கோப்கள் மூலமாகப் பால் மண்டல (மில்கி வே) நட்சத்திரங்களின் போக்குகளைக் கவனித்துக்கொண்டிருந்த அவருக்கு, விண்மீன் மண்டலங்கள் விரிவடைந்துகொண்டே போவது சந்தேகமில்லாமல் நிரூபணமானது. தன் கண்டுபிடிப்பை Hubble Sequence என்னும் கொள்கையாக 1929 – இல் வெளியிட்டார்.

லெமட்ரே கணிப்பு + ஹபிள் பரிசோதனை, சர்வலோகம் வளர்கிறது என்பதை அறிவியல் உலகம் ஏற்றுக்கொண்டது. இந்த அடிப்படையில், கணக்கீடுகள், பரிசோதனைகள், ஆராய்ச்சிகள் தொடர்ந்தன. பெருவெடிப்புக் கோட்பாடு பிறந்தது. இந்தக் கொள்கை என்ன சொல்கிறது?

1380* கோடி வருடங்களுக்கு முன்னால், சில மி.மீ அளவில் கூழாங்கல்போல் ஒரு தீப்பிழம்பு எப்படியோ தோன்றியது. அது திடீரெனப் பல துண்டுகளாக வெடித்தது. இதுதான் பெருவெடிப்பு. துண்டுகள் அத்தனையும் நெருப்பாய்த் தகித்தன. பல நூறு கோடி வருடங்கள் ஓடின. துண்டுகள் குளிர்வடைந்தன.

(* சரியாகச் சொல்ல வேண்டுமானால், 1379. 90 + / – 3.70 வருடங்கள். 508

உயிரின வகை தொடக்கம்).

இந்தத் துண்டுகளிலிருந்து முதலில், எலெக்ட்ரான், ப்ரோட்டான், நியூட்ரான் என்னும் அணுவை உருவாக்கும் துகள்கள் (Subatomic particles) வந்தன: இத்துகள்களின் அடுத்த அவதாரம், ஹைட்ரஜன், ஹீலியம், லித்தியம் ஆகிய வாயுக்கள். இவை குளிர்ந்து, சூரியன், சந்திரன், கிரகங்கள், பூவுலகம், நட்சத்திரங்கள் எனப் பல வடிவெடுத்தன. ஒவ்வொரு அவதாரத்துக்குமிடையே பல நூறு கோடி வருடங்கள்! பிரபஞ்சம் பிறந்தது. பெருவெடிப்பு தொடங்கிவைத்த கைங்கரியத்தால்தான், பேரண்டம் தொடர்ந்து பே…ர….ண்…ட…மாகிக்கொண்டே வருகிறது.

பிரபஞ்சம் படைத்தது கடவுள் அல்ல, அது தானாகவே உருவானது என்று பெருவெடிப்புக் கோட்பாடு அடிப்படையில் பகுத்தறிவாளர்கள் வாதிடுகிறார்கள். இவர்களிடம் மதவாதிகள் கேட்கும் கேள்வி: ‘எல்லாவற்றுக்கும் ஆரம்பம், அந்தக் கூழாங்கல் சைஸ் தீப்பிழம்புதானே? அதை முழுமுதற் கடவுள் படைத்தார் என்று நாங்கள் நம்புகிறோம். இல்லை என்கிறீர்களா? அப்படியென்றால், அது எப்படி வந்தது? சொல்லுங்கள் பார்க்கலாம்?’

விஞ்ஞானிகளிடம் இந்த சவாலுக்கு பதில் கிடையாது. பிரபஞ்சம் எப்படிப் படைக்கப்பட்டது என்று சொல்லும் இந்தியா, ஃபின்லாந்து, சீனா, கிரேக்கம், எகிப்து, நியூசிலாந்து நாடுகளின் இதிகாசக் கதைகளை மனக்கண்ணில் ஓட்டுங்கள். தொடக்கப் புள்ளியான தீப்பிழம்பு விஞ்ஞானம், மெய்ஞ்ஞானம் இரண்டிலும் பொதுவானதாக இருக்கிறது. ஆகவே, இதிகாசங்கள் சொல்வது முழுக் கற்பனையல்ல.

ஆனால், ஜீவராசிகளும், மனிதர்களும் எப்படிப் படைக்கப்பட்டார்கள் என்பதில், அறிவியல், இதிகாசக் கதைகளிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது. இந்தப் புதிய பாதை போட்டவர் இங்கிலாந்தின் அறிவியல் மேதை சார்ல்ஸ் டார்வின். இந்தக் கொள்கை – பரிணாமக் கொள்கை. 1859 ல் வெளியானOn the Origin of Species 1871 ல் வெளியான The Descent of Man ஆகிய புத்தகங்கள் டார்வினின் பரிணாமக் கொள்கையை ஆதாரங்களோடு நிரூபித்தன.

எல்லாவகையான ஜீவராசிகளும் எப்படி உருவாயின என்கிற கொள்கை டார்வினுக்கு முன், டார்வினுக்குப் பின் என்று இரண்டு காலகட்டங்களாகப் பிரிக்கப்படவேண்டிய சித்தாந்தம்.

பிரம்மா உயிரினங்களை எப்படிப் படைத்தார்? தன் உடலின் ஒவ்வொரு வயவங்களிலிருந்தும் ஒவ்வொரு விதமான ஜீவராசியை உருவாக்கினார். முதலில் புல், அடுத்து பூக்கள், மரங்கள், பூச்சிகள், பறவைகள், மீன்கள் ஜனனமாகின்றன. கடைசியாக ஒரு ஆண், ஒரு பெண்.

இது உண்மையில்லை, உயிரினங்கள் படிப்படியாக உருவாயின என்கிறார் டார்வின். சுமார் 210 கோடி வருடங்களுக்கு முன்னால் தொடங்கிய இந்த வரலாற்றின் சில முக்கிய மைல்கற்களைப் பார்ப்போம்:

  • மரம், மிருகம் ஆகியவற்றின் மையக்கரு கொண்ட அணு (Cells with nucleus) : 210 கோடி வருடங்கள் முன்னால்.
  • முதுகெலும்புள்ள விலங்குகள் (மீன்கள், பல்லி, பாம்பு போன்ற ஊரும் பிராணிகள்) பறவைகள் – Vertebrates : 50.5 கோடி வருடங்களுக்கு முன்னால்.
  • குட்டியிட்டுப் பாலூட்டும் விலங்குகள் (Mammals) : 22 கோடி வருடங்களுக்கு முன்னால்
  • முயல்கள், எலிகள், அணில்கள் (Supraprimates) : 10 கோடி வருடங்களுக்கு முன்னால்
  • குரங்குகள் : 3 கோடி வருடங்களுக்கு முன்னால்.
  • மனிதக் குரங்குகள் (வாலுள்ள கொரிக்கலாக்கள். வால் இல்லாத சிம்பன்ஸிகள்) : 1.50 கோடி வருடங்களுக்கு முன்னால்.
  • மனிதர்கள் : 5 லட்சம் வருடங்களுக்கு முன்னால்
விண்மண்டலம், பூவுலகம், மரம், செடி கொடிகள். ஜீவராசிகள், ஆண், பெண் ஆகிய எல்லாம் ரெடி. இனி மனித வாழ்க்கை தொடங்குகிறது.

http://www.tamilpaper.net/?p=7967

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 4

மனிதன் கடந்து வந்த பாதை
எஸ்.எல்.வி. மூர்த்தி

mayan.jpg


முதல் ஆணுக்கும் பெண்ணுக்கும் மற்ற எல்லா உயிரினங்களையும்போல வயிற்றுப் பசியும், உடல் பசியும்தான் இருந்திருக்கும். இயற்கையில் கிடைக்கும் காய்களை, பழங்களைப் பச்சையாகச் சாப்பிட்டார்கள். பிற மிருகங்கள் தங்களைத் தாக்க வந்தால் ஓடித் தப்பினார்கள் அல்லது கைகளால் சண்டை போட்டார்கள் கைகள் மட்டுமே அவர்களின் கருவிகள், ஆயுதங்கள்.

சோம்பேறித் தனமும், ஆசைகளும்தாம் மனித முன்னேற்றத்தின் உந்துசக்திகள். காய்களையும், பழங்களையும் பறிக்க மரங்களில் ஏறவேண்டியிருந்தது. அதற்குப் பதிலாகக் கல்லை வீசி எறிந்தால், காயும் பழமும் கைகளில் வந்து விழுமே? மலைகளின் பெரிய பாறைகளை உடைத்துச் சிறு கற்களாக்கினான்.

ஒரு மனிதன் காட்டில் நடந்துகொண்டிருந்தான். ஒரு முயல்குட்டி அப்போதுதான் இறந்துபோயிருந்தது. அவனுக்கு அகோரப் பசி. சாப்பிட்டான். அந்த ருசி அவனுக்குப் பிடித்தது. தன் பெண் துணையிடம் கொடுத்தான். அவள் ரசித்துச் சாப்பிட்டாள். படைப்பின் அடிப்படையே இனக் கவர்ச்சிதானே? பெண்ணைத் திருப்திப்படுத்த, மிருகங்கள், பறவைகளின் சடலங்கள் தேடி அலைந்தான்.

அவனுக்குள் ஒரு பொறி – இப்படி ஏன் அலைந்து திரிந்து, உடல்கள் கிடைக்குமா என்று திண்டாடவேண்டும்? ஏதாவது கருவிகள் இருந்தால், மிருகங்கள், பறவைகளை வேட்டையாடிக் கொன்று, வேண்டும்போதெல்லாம் சாப்பிடலாமே? அவனுக்குத் தெரிந்த ஒரே மூலப்பொருள் கல்தான். மலைப் பிஞ்சுகளால் கருவிகள் செய்தான். இப்போது இன்னொரு பொறி, பிற மிருகங்களோடு ஏன் வெறும் கைகளால் மட்டுமே சண்டை போடவேண்டும்? கல்லால் ஆயுதங்கள் செய்துகொண்டான்.

இந்தக் காலகட்டத்தில், மனிதன் தன் உணவு, பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்திசெய்யப் பயன்படுத்தியவை தன் கைகள், கல்லால் ஆன கருவிகள், ஆயுதங்கள். எனவே, இந்தக் காலகட்டம் Palaeolithic Age என்று அகழ்வாராய்ச்சி நிபுணர்களாலும் கற்காலம் (Stone Age) என்று ஜனரஞ்சகமாகவும் அழைக்கப்படுகிறது. கி.மு. 2000000 வாக்கில் கற்காலம் தொடங்கியிருக்கவேண்டும் என்று நம்பப்படுகிறது.

சுமார் 10,000 ஆண்டுகள் ஓடின. சுமார் கி.மு. 10,000. மனித வாழ்வில் முக்கியத் திருப்பம். இதுவரை, காய்கள், பழங்களைப் பறித்தும், பறவைகள், விலங்குகளை வேட்டையாடியும் வாழ்ந்த மனிதன் உணவுவகைகளைப் பயிரிடத் தொடங்கினான். விவசாயம் ஆரம்பித்தது. பலவிதக் கருவிகள் படைக்கப்படுவதற்கு விவசாயம்தான் வித்திட்டது. கை சக்தியை மட்டுமே நம்பிப் பயிரிடத் தொடங்கியவன், கருவிகள் உதவியால், தன் குடும்பத் தேவைகளுக்கும்

அதிகமாக உற்பத்தி செய்தான். மெள்ள மெள்ள, இந்த உபரித் தயாரிப்பைப் பிறருக்குக்கொடுத்தான். பண்டமாற்றுமுறை தொடங்கியது, வியாபாரமாக வளர்ந்தது.

அடுத்ததாக வந்தது வெண்கலக் காலம் (Bronze Age). செம்பு, அதன் உலோகக் கலவையான வெண்கலம் ஆகியவற்றால் செய்யப்பட்ட பாத்திரங்கள், கருவிகள், ஆயுதங்கள், அலங்காரப் பொருட்கள் ஆகியவற்றை மனித இனம் பயன்படுத்திய நாட்கள். செம்பு தயாரிக்கவும், உருக்கவும், அதைப் பிற உலோகங்களோடு சேர்த்துக் கலவைகள் தயாரிக்கவும் அவர்கள் தெரிந்துகொண்டிருந்தார்கள்.

கி.மு. 3800 – இல் தொடங்கியதாகக் கணக்கிடப்படும் வெண்கலக் காலம் மனித வாழ்க்கை முன்னேற்றத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் உண்டு. உலோகங்களைப் பயன்படுத்தப் பலதுறை அறிவு வேண்டும் – தாதுப் பொருட்களைக் கண்டுபிடித்து அவற்றை வெட்டி எடுக்கவேண்டும், அவற்றை உருக்கவேண்டும், அவற்றிலிருந்து பொருட்கள் தயாரிக்கவேண்டும். இவற்றிற்கெல்லாம் ஏராளமான தொழிலாளிகளும், கைவினை வல்லுநர்களும் தேவை.

(கற்காலம், வெண்கலக் காலம், இரும்புக் காலம் ஆகியவற்றிற்கு இங்கே சொல்லப்படும் வருடங்கள் பொதுவானவை. பூகோளப் பகுதிகளுக்கு ஏற்ப இவை மாறுபடும்.)

இந்தப் பட்டியலில், மூன்றாவதாக, இறுதியாக வருகிறது இரும்புக் காலம் (Iron Age). கி.மு. 1200 -த்தில் தொடங்கிய இந்த நாட்களில் இரும்பும், உருக்கும் புழக்கத்துக்கு வந்தன. இரும்புக் காலம், வெண்கலக் காலத்தை புறம் தள்ளிவிட்டு, அதன் இடத்தைப் பிடிக்கவில்லை, இரண்டும் ஒருசேர இணைந்து இயங்கின.

இவறுக்கு நடுவே, மனிதர்களின் வாழ்க்கை முறைகளில் ஏராளமான மாற்றங்கள். ஆண் பெண்ணாக வாழ்வைத் தொடங்கியவர்களுக்குக் குழந்தைகள் பிறந்தன. காடுகளில் அலைந்து திரிந்த அவர்கள், கொளுத்தும் வெயில், கொட்டும் மழை, கொடிய மிருகங்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்புத் தேடினார்கள்.

ஒவ்வொரு மனிதனும், தன் குடும்பத்துக்குத் தேவையான உணவுவகைகளைப் பயிரிடத் தொடங்கினான். தன் இருப்பிடத்தை அவனே கட்டிக்கொண்டான். முதலில், தனித் தனியான தீவுகளாக வாழ்ந்தார்கள். விரைவிலேயே, சேர்ந்து இருந்தால் பாதுகாப்பு அதிகம் என்று உணர்ந்தார்கள். அருகருகே வீடுகள் கட்டிக்கொண்டார்கள்.

ஒவ்வொரு குடும்பத்தின் தேவைகளும் விரிவடைந்துகொண்டிருந்தன. தன்னுடைய எல்லாத் தேவைகளையும், தங்கள் குடும்ப அங்கத்தினர்கள் உழைப்பால் மட்டுமே பூர்த்திசெய்ய முடியாது, தான் பக்கத்து வீட்டுக்காரனுடைய சில அவசியங்களை நிறைவேற்றினால், தன்னுடைய சில தேவைகளை அவன் திருப்தி செய்வான் என்பதைத் தெர்ந்துகொண்டார்கள். ஒத்துழைப்பும், இணைந்து வாழ்தலும் தொடங்கின. தனிமரங்கள் தோப்பாயின, சமுதாய வாழ்க்கை ஆரம்பித்தது.

இந்தப் பயணத்தின் பல முக்கிய மைல்கற்கள் இதோ:

( கி.மு. காலத்தின் முக்கிய நிகழ்வுகள் மட்டுமே இங்கு தரப்பட்டுள்ளன. இது முழுமைப் பட்டியல் அல்ல. ஒவ்வொரு நாகரிகத்தையும் ஆராயும்போது, முழுமையாகப் பார்ப்போம்.)

கி.மு. 10500 – சிரியா, லெபனான் பகுதிகளில் விவசாயம்.

கி.மு. 7000 – இராக், சிரியா, துருக்கி பகுதிகளில் மண்பாண்டங்கள் - ஆடு மாடுகள் வளர்த்தல் – ஆப்பிரிக்கா.

கி.மு. 6200 – துருக்கியில் செம்பு உருக்குதல் - தெற்கு ஆசியாவில் பருத்தி பயிரிடல்.

கி.மு. 5500 – இரான், இராக் பகுதிகளில் நீர்ப்பாசனம்.

கி.மு. 5000 – சீனாவில் பட்டுப் புழு வளர்ப்பு, பட்டுத் தொழில்.

கி.மு. 4500 – இஸ்ரேல், லெபனான், ஜோர்டான், சிரியா, துருக்கி ஆகிய பகுதிகளில் விவசாயத்தில் கலப்பை உபயோகித்தல்.

கி.மு. 4300 – ஐரோப்பாவில் கல்லறைகள்.

கி.மு. 4000 – இந்து சமவெளியில் ஆடு, மாடுகள் வீட்டுப் பிராணிகளாக வளர்ப்பு - ஐரோப்பாவில் ஆடு மாடுகளோடு குதிரைகளையும் வீட்டுப் பிராணிகளாக வளர்க்கும் பழக்கம் - க்யூனிஃபார்ம் என்னும் எழுத்துவடிவ சுமேரிய மொழி-

கி.மு. 3800 – சுமேரியாவில் வெண்கலம் தயாரிப்பு.

கி.மு. 3500 – சுமேரியாவில் நகர வாழ்க்கை - எகிப்தின் நகரங்கள், அரசாட்சி முறை

கி.மு.3000 – மொகஞ்சதாரோவில் செங்கலால் கட்டப்பட்ட 12 மீட்டர் நீளமும், 7 மீட்டர் அகலமும், 2.4 மீட்டர் ஆழமும் கொண்ட பிரம்மாண்டக் குளியல் இடம்.

கி.மு. 2630 – எகிப்து பிரமிட்கள்.

கி.மு. 2600 – எகிப்தில் கோதுமை ரொட்டி தயாரிப்பு.

கி.மு.2350 – சுமேரியா, இந்து சமவெளி மக்களிடையே வியாபாரத் தொடர்புகள்.

கி.மு.2100 – சுமேரியாவின் Ziggurats எனப்படும் செங்கல்களால் கோட்டைகள்போல் கட்டப்பட்ட கோவில்கள்.

கி.மு. 1772 – சுமேரியா- ஹமுராபி அரசர் அமுல்படுத்திய சட்டங்களின் தொகுப்பு. (Hamurabi Code)

கி.மு. 1700 – சுமேரியா- குதிரைகள் இழுக்கும் வண்டிகள், தேர்கள்.

கி.மு. 1600 – இஸ்ரேல், லெபனான் பகுதிகளில் அகர வரிசை முறை (Alphabets).

கி.மு.1500 – துருக்கி. இரும்பு தயாரிப்பு.

கி.மு.776 — கிரேக்கத்தில் முதல் ஒலிம்பிக் போட்டிகள்.

கி.மு. 753 – மக்களவை, மேலவை என இரண்டு படிநிலைகளில் இருந்த ரோமாபுரியின் அரசியல் கட்டமைப்பு.

கி.மு.700 – பாபிலோனியன் ஜோதிடர்கள் ராசி மண்டலம் (Zodiac Signs) கண்டுபிடிக்கிறார்கள். துருக்கி மற்றும் அண்டைப் பகுதிகளில் நாணயம் - அமெரிக்காவில், செவ்விந்தியர் (மாயர்கள்) வசிக்கும் பகுதிகளில் படங்களை அடிப்படையாகக் கொண்ட சித்திர எழுத்து (Hieroglyph) –அகரவரிசை புழக்கத்துக்கு வருகிறது.

கி.மு.600 – உலக அதிசயங்களில் ஒன்றான பாபிலோன் தொங்கும் தோட்டங்கள் உருவாக்கம்.

கி.மு.580 – கி.மு. 500 – a2 + b2 = c2 என்னும் செங்கோண முக்கோணங்கள் பற்றிய தேற்றம் கண்டுபிடித்த கிரேக்கக் கணித மேதை பிதகோரஸ் வாழ்ந்த காலம்.

கி.மு.469 — கி.மு. 399 – கிரேக்கத் தத்துவ மேதை சாக்ரட்டீஸ் வாழந்த காலம்.

கி.மு.460 — கி.மு. 370 – நோய்கள் கடவுள்கள் உருவாக்குவதல்ல, சுற்றுச் சூழல்களால் வருகிறது என்று சொன்ன உலக மருத்துவத் தந்தை ஹிப்போகிரட்ஸ் கிரேக்கத்தில் வாழ்ந்த காலம்.

கி.மு. 450 – உலக நீதிமுறைகளுக்கு வழிகாட்டும் ரோமானியரின் Twelve Tables என்னும் சட்டமுறை.

கி.மு.400 – மாயர்களின் காலண்டர்.

கி.மு. 366 – சீனாவின் குகைக் கோவில்கள்.

கி.மு.300 – அரசர்கள், பிரபுக்கள், பூசாரிகள் என அதிகாரம் வரையறுக்கப்பட்ட மாயன் ஆட்சிமுறை.

கி.மு. 214 – உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெரும் சுவர் உருவாக்கம்.

கற்காலத்தில் முதல் அடி எடுத்துவைத்த நாம், இத்தனை சாதனைகளையும் தாண்டி, இன்று கம்ப்யூட்டர் யுகத்துக்கு வந்துவிட்டோம். இன்டர்நெட்டையும், இணையதளத்தையும் இருபது வருடங்களுக்கு முன் நினைத்தே பார்த்திருக்கமாட்டோம். இன்றோ, இவை இல்லாத வாழ்க்கையைக் கற்பனை செய்துபார்க்க முடிகிறதா? நாளை எந்தப் புதிய தொழில்நுட்பம் வரும், நம் வாழ்க்கையைப் புரட்டிப்போடும் என்று கணிக்கவே முடியவில்லை. நாகரிக வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது.


http://www.tamilpaper.net/?p=7997

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 5

நாகரிகம் என்றால் என்ன?

எஸ்.எல்.வி. மூர்த்தி

 

images1.jpg

நாகரிகம் – நாம் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை. அதே சமயம், அதன் முழுமையான அர்த்தம் அல்லது உண்மையான அர்த்தம் நமக்கு தெரியாது.

வரலாற்று அறிஞர்கள், அகழ்வாராய்ச்சி அறிஞர்கள் ஆகியோரையே திணற அடிக்கும் வார்த்தை இது. நாகரிகத்தை ஆங்கிலத்தில் Civilisation என்று சொல்கிறோம். Civilis என்னும் லத்தீன் வார்த்தை ஆங்கிலச் சொல்லின் அடிப்படை. Civilis என்றால், குடிமகன், நகரம். இந்த அடிப்படையில், மனிதன் சமுதாயமாக வாழ ஆரம்பித்ததுதான் நாகரிகத் தொடக்கம் என்று சிலர் சொல்கிறார்கள். லத்தீன் மிகப் புராதனமான மொழிதான். ஆனால், கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த மொழி அல்ல. மனித நாகரிகம் லத்தீன் மொழியைவிட முந்தையது. பின்னால் பிறந்த அளவுகோலால், முந்தைய வளர்ச்சியை அளப்பது தவறு. ஆகவே, இன்னும் சில வர்ணனைகளைப் பார்ப்போம்.

ஸ்காட்லாந்தின் தத்துவ மேதையும், வரலாற்று நிபுணருமான ஆடம் ஃபெர்கூஸன் (Adam Ferguson) 1767ல் எழுதிய An Essay on the History of Civil Society என்னும் புத்தகத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார். நாகரிகம் என்றால், ‘தனிமனிதன் குழந்தைப் பருவத்திலிருந்து மனிதத் தன்மை உடையவனாக வளர்ச்சியடைவது மட்டுமல்ல, மனித இனமே, முரட்டுத்தனத்திலிருந்து பண்பாட்டுக்கு முன்னேறுவது.’

மருத்துவம், மதம், தத்துவம் ஆகிய பல துறைகளில் அழியாக் கால்தடம் பதித்த ஜெர்மன் அறிஞர் ஆல்பர்ட் ஸ்விட்சர் (Albert Schweitzer) இன்னும் அற்புதமாக வர்ணிக்கிறார். நாகரிகம் என்பது ‘எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும், எந்தச் செயல்கள் மனித ஆன்மாவைச் செம்மைப்படுத்துகின்றனவோ, அவற்றின் ஒட்டுமொத்த முன்னேற்றம்.’

அமெரிக்கக் கார்னெல் பல்கலைக் கழகப் பௌதீகப் பேராசிரியர் ஸ்டீஃபன் ப்ளாஹா (Stephen Blaha) நாகரிகத்தை இப்படி வரையறுக்கிறார். ‘ஒரே வாழ்க்கைமுறை, ஒரே மொழி கொண்டு ஒரே பூகோளப் பிரதேசத்தில் குறைந்தது பல ஆயிரம்பேர் சேர்ந்து வாழவேண்டும். அங்கே நினைவுச் சின்னக் கட்டடங்களும், அரசியல் கட்டமைப்பும் இருக்கவேண்டும்.’

மேற்படி அறிஞர்கள் அளித்த விளக்கங்களை மட்டுமே வைத்து நாகரிகத்தைப் புரிந்துகொண்டுவிடமுடியாது என்று வேறு சிலர் வாதிட்டனர். நாகரிகம் என்பது என்ன என்பதற்குத் தெளிவான அளவுகோல்கள் தேவை என்பது இவர்கள் வாதம். வெறும் தத்துவார்த்த விளக்கங்களை மட்டும் வைத்துக்கொண்டு நாகரிகத்தை எடைபோடமுடியாது என்று அவர்கள் வேறு சில திட்டவட்டமான அளவுகோல்களை முன்வைக்க முனைந்தனர்.

1. மனிதகுலம் வேட்டையாடத் தொடங்கிய காலம்

வேட்டையாடத் தொடங்கியபிறகுதான், மனிதன் கல், வெண்கலம், இரும்பு என்று ஒவ்வோரு வகையான ஆயுதங்களைக் கண்டுபிடித்தான். இவற்றின் உதவியோடு விவசாயத்தில் இறங்கினான். உபரி உற்பத்தி மனிதன் பிறரோடு இணந்து வாழும் சமுதாய வாழ்க்கைக்கு அடிகோலியது. ஆட்சி முறை, சட்டத் திட்டங்கள், சமுதாய நெறிகள் ஆகியவை உருவாயின. ஆகவே, நாகரிகத்தின் தொடக்கப் புள்ளி வேட்டையாடுதல்தான்.

2. சமுதாய வாழ்க்கை

இதன் ஆதரவாளர்கள் கணிப்புப்படி, வேட்டையாடத் தொடங்கிய காலம்வரை பின்னோக்கிப் போக வேண்டியதில்லை. இந்த அணுகுமுறை நம்மைக் கற்காலத்துக்கே கூட்டிகொண்டுபோய்விடும். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று மனித குலம் உணர்ந்த நாள்தான், நாகரிகத்தின் பிறப்பு. அப்போதுதான், மனிதர்கள் தங்களுக்குள் ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்தார்கள், அவன் வழி நடந்தார்கள். தொழில் அடிப்படையிலான சமுதாயப் பிரிவுகள் வந்தன. ஒவ்வொரு பிரிவினரும் தங்கள் தொழிலில் கவனத்தை ஒருமுகப்படுத்தினார்கள். விவசாயம், வீடு கட்டுதல், கைவினைப் பொருட்கள் செய்தல், வியாபாரம் எனப் பல துறைகளில் வளர்ச்சியும், முன்னேற்றமும் வந்தன. ஆகவே, நாகரிக வளர்ச்சியை எடைபோடச் சிறந்த அடையாளம், மனிதர்கள் எப்போது கூடி வாழத் தொடங்கினார்கள் என்பதுதான்.

3. நகர வாழ்க்கை

இவர்கள் போவது இன்னும் ஒரு படி முன்னால். நகரங்கள் வந்தபிறகுதான் நாகரிகம் வந்தது என்னும் இவர்கள் வாதம், லத்தீன் வார்த்தையான Civilis -ன் அடிப்படையிலானது.

4. எழுத்துவடிவ மொழி

சுமேரியாவில் கி.மு. 4000ல் க்யூனிபார்ம் என்னும் சித்திர எழுத்து வந்தது. கி.மு. 3500ல் எகிப்திலும், கி.மு. 1600ல் இஸ்ரேல், லெபனான் பகுதிகளிலும் அகரவரிசை எழுத்து மொழியும் நடைமுறைக்கு வந்தன. மனிதன் தன் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள வழி வகுத்தது எழுத்து வடிவ மொழிதான், எனவே, எழுத்துவடிவ மொழிதான் நாகரிகத் தொடக்கம் என்பது இவர்கள் வாதம்.

இவை அனைத்தையும் அலசி ஆராய்ந்த கோர்டன் சைல்ட் (Gordon Childe) என்னும் இங்கிலாந்து நாட்டு வரலாற்று ஆசிரியர் பத்து அளவுகோல்களை முடிவு செய்தார். இவற்றின் அடிப்படையில்தான் நாகரிகங்களை அளக்கவும், ஒப்பிடவும் வேண்டும் என்று கூறினார். அவர் குறிப்பிடும் அம்சங்கள் இவைதாம்:

  • நகரக் குடியிருப்புகள்
  • தேர்ந்தெடுத்த சில தொழில்களில் தொழிலாளர்கள் வித்தகர்கள் ஆதல்
  • தேவைக்கு அதிகமான உற்பத்தி
  • வரையறுக்கப்பட்ட சமுதாயப் பிரிவுகள்
  • அரசாங்க அமைப்பு
  • பொதுமக்கள் பயன்படுத்துவதற்கான பெரிய கட்டடங்கள்
  • தொலைதூர வாணிபம்
  • கலைப் பொருட்கள்
  • எழுத்துக்கள், இலக்கியம்
  • கணிதம், வடிவியல் (Geometry) வானியல் ஆகிய துறைகளில் தேர்ச்சி.
அது சரி, ஒரு நாகரிகம் இந்த வரைமுறைகளுக்கு உட்படுகிறதா என்று எப்படி மதிப்பீடு செய்வது? இதற்குப் பயன்படும் முக்கிய முறை அகழ்வாராய்ச்சி. உடைந்த மண்சட்டி, உருக் குலைந்த கட்டடங்கள், புதைந்திருக்கும் மண்டை ஓடுகள், எலும்புக் கூடுகள், கல் பொறிப்புக்கள், பழைய லிபி எழுத்துகள் என ஒவ்வொரு புள்ளியாகத் தேட வேண்டும். இந்த ஆதாரங்கள் எந்தக் காலத்தைச் சேர்ந்தவை என்று துல்லியமாகக் கணிக்கும் அறிவியல் சோதனை முறைகள் பல உள்ளன.

கோர்டன் சைல்டின் அளவுகோல்கள். அகழ்வாராய்ச்சி ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், ஏழு பழங்கால நாகரிகங்களை முதிர்ச்சி பெற்றவைகளாகச் சொல்லலாம். அவை:

  • சுமேரியன் நாகரிகம் ( கி.மு 5500 – கி.மு. 2334 )
  • சீன நாகரிகம் ( கி.மு 5000 – கி.மு. 1912 )
  • எகிப்தியன் நாகரிகம் ( கி.மு 3150 – கி.மு. 332 )
  • சிந்து சமவெளி நாகரிகம் ( கி.மு 2500 – கி.மு. 1700 )
  • கிரேக்க நாகரிகம் ( கி.மு 2500 – கி.மு. 323 )
  • மாயன் நாகரிகம் ( கி.மு 2000 – கி.மு. 900 )
  • ரோமன் நாகரிகம் ( கி.மு 753 – கி.பி. 476 )
இந்தப் பழங்கால நாகரிகங்கள் ஒவ்வொன்றையும் இனி விரிவாகப் பார்ப்போம்.

0

 

http://www.tamilpaper.net/?p=8031

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 6

நாகரிகத்தின் தொட்டில்

எஸ்.எல்.வி. மூர்த்தி

reli01b.jpg

கீழே உள்ள குறிப்புகளின் அடிப்படையில், நாம் யாரைப் பற்றி பேசப்போகிறோம் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா என்று பாருங்கள்.

  • பல மொழிகள் பேசும், பலவகையான வாழ்க்கை முறைகளைக் கொண்டவர்கள் இந்த மக்கள். இந்தியா, எகிப்து போன்ற நாடுகளிடம் இந்தக் கலாசாரத்தின் தாக்கம் இருக்கிறது.
  • சுமார் 10,600 வருடங்களுக்கு முன்பாகவே, வீடுகளில் செடி, கொடி, மரங்கள், மிருகங்கள் வளர்த்தார்கள்.
  • சுமார் 5,000 வருடங்களுக்கு முன்பாகவே, மிருகங்களைத் தனியாக வளர்ப்பதிலிருந்து முன்னேறி, ஆட்டு, மாட்டு மந்தைகளைப் பராமரித்தார்கள்.
  • சுமார் 5,000 வருடங்களுக்கு முன்பாகவே, மீன் பிடிக்கும் வழக்கம் இருந்தது.
  • பேச்சு மொழி, ‘கல்தோன்றி, மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த’ மொழி. ஆனால், எழுத்து வடிவ மொழி சுமார் 6200 வருடங்களுக்கு முன்பாகவே நடைமுறையில் இருந்தது.
  • கி.மு. 6000ம் ஆண்டிலேயே மக்கள் வாழ்க்கையில் கணிதம் அங்கம் வகித்தது. நிலங்களை அளப்பதற்காகப் பெருவாரியாகப் பயன்படுத்தப்பட்டது. 60 இலக்கங்கள் (Numerals) இருந்தன.
கண்டறிய முடிந்ததா? இன்னும் ஒரு க்ளூ. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இத்தனை பிரமாண்ட முன்னேற்றங்களைக் கண்டுவிட்டதால் உலகின் எல்லா நாகரிகங்களையும்விட, இந்தப் பிரதேச மக்களின் வாழ்க்கை முறைதான் முந்தையது என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். இதனால், நாகரிகத்தின் தொட்டில் என்றும் இவர்கள் வாழ்ந்த பிரதேசம் அழைக்கப்படுகிறது.

ஆம், நாம் இங்கே முதலில் பார்க்கப்போவது மெசபடோமியா. இங்கே வாழ்ந்த மக்கள் சுமேரியர்கள்.

பூகோளம்

இன்றைய இராக் நாட்டோடு சிரியா, துருக்கி, இரான் ஆகிய நாடுகளின் பகுதிகளை இணைத்த நிலப்பரப்பே மெசபடோமியா. கிரேக்க மொழியில் மெசபடோமியா என்றால் இரண்டு நதிகளுக்கு நடுவே உள்ள இடம் என்று பொருள். அந்த இரு நதிகள், யூப்ரட்டீஸ் மற்றும் டைக்ரிஸ்.

வடக்குப் பாகம் மலைகளும் சமவெளிகளும் இருந்தன. பருவ மழை தவறாமல் பெய்ய, இந்த நில அமைப்பே காரணம். இதனால், காலம் பொய்த்தாலும், இந்த நதிகள் பொய்க்கவில்லை. வட பகுதியான மெசபடோமியா பொன் விளையும் பூமியாக இருந்தது.

உலகத்தில் எல்லா நாகரிகங்களும் தோன்றுவதும் வளர்வதும் நதிக்கரைகளில்தாம். இதற்குக் காரணம் உண்டு. மனிதனின் அடிப்படைத் தேவை உணவு. வயிறு நிறைந்திருந்தால்தான் அவனால் வாழ்க்கையின் பிற அம்சங்களில் கவனம் செலுத்தமுடியும். இசை, இலக்கியம், விளையாட்டு என்னும் கலைகளில் ஈடுபட முடியும், கலைகளை வளர்க்கமுடியும். இந்த வளர்ச்சிதானே நாகரிகம்! மெசபடோமிய நாகரிக வளர்ச்சிக்கும் ஜீவநாதம் யூப்ரட்டீஸ், டைக்ரிஸ் ஆறுகள்தாம்.

முக்கிய மன்னர்கள்

மெசபடோமியாவை மன்னர்கள் ஆண்டார்கள். இவர்களுள், முக்கியமானவர்கள்

மூவர்:

1. கில்காமேஷ் (Gilgamesh)

இவர் கி. மு 2600ல் வாழ்ந்தார். மெசபடோமியாவின் ஒரு பகுதியான உருக் (Uruk) என்கிற ஆற்றங்கரைப் பகுதியை 126 ஆண்டுகள் இவர் ஆட்சி செய்ததாகக் கூறப்படுகிறது. இவர் மறைந்து ஐந்து நூற்றாண்டுகளுக்குப்பின் அவருடைய வாழ்க்கை வரலாற்றை கில்காமேஷ் காவியம் என்று எழுதி வைத்தார்கள். உலகத்தின் மிகப் பழமையான இலக்கியப் படைப்பு இதுதான் என்பது அறிஞர்கள் கணிப்பு. இந்தக் காவியம் களிமண் பலகைகளில் 12 பாகங்களாக எழுதப்பட்டது. இந்த நூலின் பல பகுதிகள் கிடைத்துள்ளன. வீர சாகசம் நிறைந்தவராக, மனிதராகப் பிறந்த கடவுள் அவதாரமாக இந்தக் காவியம் கில்காமேஷை வர்ணிக்கிறது.

2. ஹம்முராபி (Hammurabi)

இவர் கி. மு. 1792 ல், தன் பதினெட்டாம் வயதில், மெசபடோமியாவின் பகுதியான பாபிலோன் சாம்ராஜ்ஜிய சக்கரவர்த்தியாகப் பதவியேற்றார். ஒன்றுபட்ட மெசபடோமியாவை உருவாக்கினார்.

அந்த நாட்களில் எது நியாயம், எது தவறு, எந்தக் குற்றங்கள் செய்தால் என்ன தண்டனைகள், என்பவை வரையறுக்கப்படவில்லை. இவற்றை ஒழுங்குபடுத்தியவர் ஹம்முராபி. 282 குற்றங்களும், ஒவ்வொன்றையும் செய்தால் என்னென்ன தண்டனை என்னும் விவரங்களும் பட்டியலிடப்பட்டன. பொதுமக்கள் அனைவரும் தெரிந்துகொள்வதற்காக, இவை 12 களிமண் பலகைகளில் எழுதப்பட்டு பிரம்மாண்டமான தூண்போன்ற அமைப்பில் பதிக்கப்பட்டன. இவை ஹம்முராபி சட்டங்கள் (Hammurabi Code) என்று அழைக்கப்படுகின்றன.

ஹம்முராபி சட்டங்கள் உள்ளடக்கியிருக்கும் அம்சங்கள் – மதம், ராணுவ சேவை, வியாபாரம், அடிமைகள், தொழிலாளர்களின் பொறுப்புகள் போன்றவை. இன்றைய சூழலில், சில சட்டங்கள் விநோதமாகத் தோன்றினாலும், அன்றைய வாழ்க்கை முறையைப் பிரதிபலிப்பவை என்னும் கண்ணோட்டத்தில் நாம் இந்தச் சட்டங்களைப் பார்க்கவேண்டும்.

யாராவது இன்னொருவர் மேல் குற்றம் சாட்டினால், இருவரும் நதிக்கரைக்குப் போகவேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர் நதியில் குதிக்கவேண்டும். மூழ்கினால், அவர் குற்றவாளி என்று அர்த்தம். அவருடைய மொத்த சொத்துக்களும் குற்றம் சாட்டியவருக்கு சொந்தம். தண்ணீரில் மூழ்காமல் தப்பித்தால், அவர் நிரபராதி. குற்றம் சாட்டியவருக்கு மரண தண்டனை. அவர் சொத்துகள் முழுக்க, பொய்க் குற்றம் சுமத்தப்பட்டவருக்கு அளிக்கப்படும்,

ஒரு வியாபாரி, வியாபாரத்தில் முதலீடு செய்ய, தரகரிடம் பணம் கொடுப்பதாக வைத்துக்கொள்வோம்.இந்தப் பணம் நஷ்டமானால், அதைத் தரகர் வியாபாரிக்கு ஈடு கட்டவேண்டும்.

3. நெபுகாட்நேஸர் (Nebuchadrezzar II)

கி. மு. 605 முதல் நாற்பது ஆண்டுகள் பாபிலோன் பகுதியை ஆண்டவர். சாலைகள் அமைத்தும், கால்வாய்கள் வெட்டியும், கோயில்களைப் புதுப்பித்தும், பல முன்னேற்றங்கள் செய்தவர். பழங்கால உலக அதிசயங்களில் ஒன்றான பாபிலோன் தொங்கு தோட்டம் இவருடைய உருவாக்கம்தான். கட்டடக் கலையில் மெசபடோமியரின் அற்புதமான திறமையைத் தொங்கு தோட்டம் பறை சாற்றுகிறது.

இது ஓர் அடுக்குத் தோட்டம். பெரிய பெரிய தூண்களை எழுப்பி அவற்றின்மேல் பல அடுக்குத் தளங்களை எழுப்பி ஒவ்வொரு அடுக்கிலும் தோட்டங்கள் போடப்பட்டன. செயின் பம்ப் (Chain Pump) என்கிற அமைப்பின் உதவியால் யூப்ரட்டீஸ் நதியின் தண்ணீர் தொங்கு தோட்டத்தின் உச்சிக்குக் கொண்டுபோகப்பட்டது. பின்னாளில் வந்த பூகம்பம் தொங்கு தோட்டத்தை அழித்துவிட்டது.

மத நம்பிக்கைகள்

கில்காமேஷ் மன்னர், மூன்றில் இரண்டு பங்கு தெய்வம், மூன்றில் ஒரு பங்கு மனிதர் என்று கில்காமேஷ் காவியம் வர்ணிக்கிறது. மன்னர்களுக்கும், மக்களுக்கும் அதீதக் கடவுள் நம்பிக்கை இருந்தது.

உலகம் தட்டையான வடிவம் கொண்டதாக சுமேரியர்கள் நம்பினார்கள். பூவுலகுக்கு மேலே, கடவுள்கள் வாழும் சொர்க்க லோகம். பூவுலகையும், சொர்க்கத்தையும் சுற்றி வளைத்து நான்கு பக்கங்களிலும் கடல். இந்தக் கடலிருந்துதான் பிரபஞ்சம் உருவானது.

நிலம், நீர், காற்று, நெருப்பு , ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்கள்தாம் முதல் கடவுள்கள்.

இவர்களுள் வாயு பகவான் பிறரைவிட அதிக சக்தி வாய்ந்தவர். பஞ்ச பூதங்களுக்கு எல்லா ஊர்களிலும் கோயில்கள் இருந்தன. ஆரம்பத்தில் கடவுள்களை ஊருக்கு நடுவே பெரிய மேடைவைத்து வழிபட்டார்கள். இந்த மேடையைச் சுற்றிக் கட்டடம் எழுப்பினார்கள்.

 

 

z.jpg

கிமு 2200 – 500 இடைப்பட்ட காலத்தில் ஸிகுரட்கள் (Ziggurats) என்னும் வழிபாட்டுத் தலங்கள் கட்டப்பட்டன. ஸிகுரட் என்றால் கடவுளின் மலை என்று பொருள். இவை வெறும் கட்டங்களல்ல, அழகு கொஞ்சும் பிரம்மாண்டங்கள். கோட்டைபோல் களிமண் செங்கல்லாலும் உட்பக்கம் சுட்ட செங்கற்களாலும் உருவாக்கப்பட்டவை. சுற்றிலும் பிரமிட்போல் சரிந்த சுவர்கள், அவற்றில் ஏராளமான படிகள். கோவிலுக்குள் மேடைமேல் கடவுள் சிலை. பிரம்மாண்ட வடிவம், சிறப்பான கட்டமைப்பு, சுவர்களில் கண்ணைக் கவரும் ஓவியங்கள், சிற்பங்கள், உலோகங்களால் உருவாக்கப்பட்ட கலைப்பொருட்கள், பளபளப்பும் வழவழப்புமான தரை ஆகியவை ஸிகுரட்களின் சிறப்புகள்.

கோயில்கள் மத குருக்களால் பராமரிக்கப்பட்டன. சமூகத்தில் அதிக மரியாதை பெற்றவர்கள் மதகுருக்கள்தாம். மக்கள் மட்டுமல்ல, அரசர்களும் இந்தப் பூசாரிகளை ஆண்டவனின் மறுவடிவமாக நம்பினார்கள். மன்னர்களும் மக்களும், எல்லாப் பிரச்னைகளுக்கும் மத குருக்களை நாடினார்கள். அவர்கள் முடிவுதான் இறுதியானது. குருமார்களின் தேவைகளுக்கும் கோயுலின் பூஜை, நைவேத்தியச் செலவுகளுக்குமாக அரசாங்கம் எல்லாக் கோவில்களுக்கும் விவசாய நிலங்கள் அளித்தது. இவற்றைப் பராமரித்து, கோயில்களுக்குத் தேவையான செலவுகள் செய்து, மிச்சத்தை மதகுருக்கள் வைத்துக்கொள்ளலாம். கணிசமான வருமானம், சமூக அந்தஸ்து ஆகிய காரணங்களால், பூசாரி ஆவதற்கு எக்கச்சக்கப் போட்டி இருந்தது.

0

http://www.tamilpaper.net/?p=8076

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • சுமேரியன் நாகரிகம் ( கி.மு 5500 – கி.மு. 2334 )
  • சீன நாகரிகம் ( கி.மு 5000 – கி.மு. 1912 )
  • எகிப்தியன் நாகரிகம் ( கி.மு 3150 – கி.மு. 332 )
  • சிந்து சமவெளி நாகரிகம் ( கி.மு 2500 – கி.மு. 1700 )
  • கிரேக்க நாகரிகம் ( கி.மு 2500 – கி.மு. 323 )
  • மாயன் நாகரிகம் ( கி.மு 2000 – கி.மு. 900 )
  • ரோமன் நாகரிகம் ( கி.மு 753 – கி.பி. 476 )

 

அப்படியானால் உலகத்திலே தமிழனே இல்லையா???????  இதில் மேலே குறிப்பிடப்பட்ட அத்தனை காலங்களிலும் தமிழும், தமிழரும், தமிழர் நாகரீகமும் இருந்தது. அதனைப் பற்றி ஆசிரியர் சிறிதும் குறிப்பிடாதது மிகவும் வருத்தம். உலக நாகரீகங்களுக்கெல்லாம் தொட்டிலாய் இருந்தது, இருப்பது, இருக்கப்போவது தமிழரின் நாக்ரீகமே. எ.டு: இந்திய நாகரீகம் என்று இன்று சொல்லிக்கொண்டிருப்பதின் முழுமையும் தமிழ் நாகரீகமே. தமிழ் நாகரீகத்தை எடுத்து விட்டால் இந்திய நாகரீகம் என்று ஒன்று இல்லவே இல்லை.

 

அப்படியிருக்க ஆசிரியர் தமிழ் நாகரீகத்தைப் பற்றி எதுவும் சொல்லாதது அவரின் அறியாமையா? அல்லது திட்டமிட்டு மறைக்கிறாரா????....... சிந்தியுங்கள் மக்களே....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனெனில் ஆசிரியருக்கே தமது தொன்மை பற்றிய தெளிவு இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் டார்வினின் கூர்ப்புக் கொள்கையின்படி பரிணாம வளர்ச்சி அடைந்து வருவதை விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப் பல சான்றுகள் இருந்தும், பலர் ஏற்றுக்கொண்ட போதிலும் இல்லையில்லை இப்பிரபஞ்சமும், பூமியில் வாழும் உயிரினங்களும் ஆண்டவரால் வடிவமைக்கப்பட்டவை என்று நம்புவர்களும் சிலர் இருக்கின்றார்கள். அவர்களின் நம்பிக்கையை அவர்கள் திடமாக நம்பும்வரை அவர்களை மாற்றுவது கடினம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 7

சுமேரியர் வாழ்க்கை முறை

எஸ்.எல்.வி. மூர்த்தி

sumerian-300x240.jpg

விவசாயம்

சுமேரியாவின் உயிர்நாடியே, யூப்ரேடீஸ், டைக்ரிஸ் நதிகள்தாம். எனவே, வாழ்க்கை விவசாயத்தை மையமாகக்கொண்டு சுழன்றது. வசந்த காலங்களில் இந்த இரண்டு ஆறுகளும் கரை புரண்டு ஓடும். நீரின் அளவும் வேகமும் அக்கம்பக்கக் குடிசைகளையே மூழ்கடிக்கும். பருவகாலம் முடிந்தபின், தண்ணீரைத் தேடித் தேடி அலையவேண்டும். சுமேரியர்கள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் விழவைக்கும் தீர்வு கண்டார்கள்.

வெள்ளம் வடியும்போது, மணல்மேடுகள் உருவாகும். சுமேரியர்கள் இந்த மேடுகளால், தண்ணீரைத் தடுத்து நிறுத்தி சேமிக்கும் பாதுகாப்புச் சுவர்களை உருவாக்கினார்கள். மழைக் காலங்களில், வெள்ளத்தின் ஒரு பகுதியை இந்த அணைகள் சேமித்து வைக்கும். மழைக்காலம் முடிந்தபின், இந்த மணல் படுகையில் துவாரங்கள் போடுவார்கள். சிறிய கால்வாய்கள் மூலமாக, தண்ணீரை விளைநிலங்களுக்குக் கொண்டுபோவார்கள். அணைகள் மூலமாக நீர் சேமித்தல், கால்வாய்கள் வழியாக நிலங்களுக்கு விநியோகம் ஆகியவை அடங்கிய நீர்ப்பாசனம் மனிதகுல வரலாற்றில் முக்கிய மைல்கல். இது முழுக்க முழுக்க சுமேரியர்கள் கி.மு. 6000 அளவில் நமக்குத் தந்த மாபெரும் அன்பளிப்பு!

மணல் அணைகளின் ஆயுட்காலம் குறுகியது என்பது விரைவில் தெரிந்தது. வெள்ளம் அதிக வேகமாக வந்தால் அணைகள் காணாமல் போயின. அதிக நாட்கள் நீடிக்கும் அணைகள் கட்டுவது எப்படி? சுமேரியாவில் கற்பாறைகளோ, மரங்களோ அதிகமில்லை. ஆற்றில் களிமண் கிடைத்தது. ஒட்டிக்கொள்ளும் தன்மைகொண்ட களிமண்ணால் அணை கட்டலாமே என்றான் ஒருவன்: ஆற்றோரம் ஏராளமாக நாணலும், கோரைப்புல்லும் வளர்கிறதே, அவற்றைக் களிமண்ணோடு சேர்த்துப் பிசைந்தால், ஒருவேளை அணையின் பலம் கூடுமோ என்றான் இன்னொருவன். பல சிந்தனைகளை ஆக்கபூர்வமாக ஒன்றிணைத்தார்கள். நாணலையும் கோரைப்புல்லையும் களிமண்ணோடு சேர்த்துக் குழைத்து அணைகள் கட்டினார்கள். உறுதியாக, கம்பீரமாக அணைகள் உயர்ந்து நின்றன.

நாள்கள் ஒடின. தயாராக இருந்த களிமண்ணை ஏதோ காரணங்களால், அவர்கள் பயன்படுத்தவில்லை. கொளுத்தும் வெய்யிலில் அது காய்ந்தது. சில நாள்களுக்குப் பின் மண்ணை எடுத்தார்கள். உடைக்கவே முடியவில்லை. அத்தனை உறுதி. உடனே களிமண்ணை எடுத்து, நாணல், கோரம்புல்லோடு சேர்த்துக் குழைத்தார்கள். சிறு சிறு வடிவங்களாக மாற்றினார்கள். (இன்று செங்கல் என்று நாம் அழைக்கும் வடிவங்களில்). வெய்யிலில் காயவைத்தார்கள். பிறகு இவற்றைக் கொண்டு அணை கட்டினார்கள்.

இந்த அணைகள் காலம் காலமாக இயற்கையின் சீற்றங்களைத் தாங்கி நின்றன. விவசாயத்துக்காகத் தொடங்கிய முயற்சி கட்டடக் கலையில் புதிய பரிமாணம் தோன்றவைத்தது. வெய்யிலுக்குப் பதில் நெருப்பு வெப்பத்தில் சூளைகளில் சுட வைத்ததும், செங்கல்கள் தோன்றியதும், அவற்றால் வீடுகள் கட்டியதும், இந்த வளர்ச்சியில் ஒரு கிளைக் கதை.

ஆரம்ப காலங்களில், குறுகிய நீர்ப்பாசன வசதிகளால், குறைந்த அளவு நிலப்பரப்பில் மட்டுமே பயிர் செய்தார்கள். அவர்களும், அவர்கள் குடும்பத்தினரும் மட்டுமே உழைத்தார்கள். கால்வாய்கள் வந்தபின், அதிகப்பட்ட நிலப்பரப்பில் பயிரிட முடிந்தது. ஒரே ஒரு பிரச்னைதான். ஆள் தட்டுப்பாடு. எப்போதும், தேவைகள்தாம் தீர்வுகளின் காரணங்கள். மாடுகள், குதிரைகள் ஆகிய மிருகங்கள் களத்தில் இறக்கப்பட்டன. அடுத்தபடியாக, இயந்திரங்கள் புழக்கத்துக்கு வந்தன. நிலம் உழும் ஏர் கண்டுபிடித்தவர்கள் சுமேரியர்கள்தாம்.

பாசன வசதிகள் பல முக்கிய சமுதாய மாற்றங்களுக்கு வித்திட்டன. குடும்ப அங்கத்தினர்களோடு, அக்கம் பக்கத்தாரும் அடுத்தவர் நிலங்களில் உழைக்கத் தொடங்கினார்கள். முதலாளி – தொழிலாளி சித்தாந்தம் ஆரம்பித்தது. இத்தோடு, தனிமனிதத் தொடர்புகளும், உறவுகளும் குடும்ப எல்லைகளைத் தாண்டி வளர்ந்தன. தனிமரங்கள் தோப்பாயின. மக்கள் சேர்ந்து வாழத் தொடங்கினார்கள். தனியாகச் சிதறிக் கிடந்த வீடுகள் கிராமங்களாயின. சமுதாய வாழ்க்கை தொடங்கியது.

சுமேரியர்கள் கோதுமை, பார்லி, எள், ஈச்சை, ஆளிவிதைச் செடிகள் (Flax)*, பல்வேறு காய்கறிகள் ஆகியவற்றைப் பயிரிட்டார்கள். பொன் விளையும் பூமி. அமோகமான விளைச்சல். தேவைக்கு அதிகமான தயாரிப்புகளைக் களிமண்ணால் கட்டிய கிடங்குகளில் சேமித்தார்கள்.

(* இவை குறுஞ்செடிகள். இவற்றின் இழைகள் ஆடைகள் தயாரிக்கப் பயன்படுகின்றன. இவற்றின் விதைகளிலிருந்து ஆழிவிதை நெய் (Linseed Oil) எடுக்கிறார்கள். உணவுகளிலும், லினோலியம் (Linoleum) என்னும் மேற்பரப்புத் தரை (Floor Covering) தயாரிக்கவும் இந்த நெய் பயன்படுத்தப்படுகிறது.

தொழில்கள்

விவசாயம்தான் முக்கியத் தொழிலாக இருந்தது. ஏர் மற்றும் விவசாயக் கருவிகள் தயாரிப்பிலும் பலர் ஈடுபட்டிருந்தார்கள். விவசாய வளம் வியாபார வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது. சுமேரியாவில் இயற்கை வளங்கள் குறைவாக இருந்தன. கல், மரம் போன்ற அத்தியாவசியப் பொருள்களுக்கே அண்டை நாடுகளை நம்பியிருக்கவேண்டும். அதே சமயம், விவசாயத்தில் உற்பத்தி பெருகியது. வியாபாரிகளுக்கு இது அற்புத வாய்ப்பு. கோதுமை, பார்லி ஆகியவற்றைப் பக்கத்து நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தார்கள். பண்டமாற்று முறை மூலமாக, தங்கள் நாட்டுக்குத் தேவையான பொருள்களைத் தாயகத்துக்குக் கொண்டுவந்தார்கள். யூப்ரடீஸ், டைக்ரிஸ் நதிகள் வழியாக இந்தச் சரக்குப் போக்குவரத்து நடந்தது. வெளிநாட்டுப் பயணத்துக்கும், சரக்குகளை அனுப்பவும், வியாபாரிகள் சிறு கப்பல்கள் வைத்திருந்தார்கள். இவை மரம், செடிகொடி, மிருகத்தோல் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டிருந்தன.

ஆடு, மாடுகள் வளர்த்தலும் பிரதானமான தொழில். மந்தைகள் வைத்திருந்தவர்கள் பால், மாமிசம் ஆகியவற்றை வியாபாரம் செய்தார்கள். வீடு கட்டும் கொத்தனார்கள், தச்சர்கள், ஆபரணங்கள் செய்வோர், மண் பாத்திரங்கள் செய்வோர், சிற்பிகள், ஓவியர்கள் எனப் பல்வேறு தொழில் விற்பன்னர்கள் இருந்தார்கள். நாகரிகம் வளர வளர, யுத்த வீரர்கள் , ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள், வியாபாரிகள் எனப் புதுப் புது தொழில்கள் மலர்ந்தன.

குடும்பம்

ஆரம்ப காலங்களில். வயதில் மூத்தவர் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அவரே குடும்பத் தலைவராகக் கருதப்பட்டார். நாளடைவில், ஆண்கள் இந்த உரிமையை எடுத்துக்கொண்டார்கள். நாடு ஆணாதிக்கச் சமுதாயமானது.

அரசர்கள், பணக்காரர்கள், எழுத்தாளர்கள், மருத்துவர்கள், கோவில் நிர்வாகிகள் ஆகியோரின் ஆண் வாரிசுகள் மட்டுமே கல்வி கற்கலாம். மற்றவர்களுக்கு அவர்கள் பெற்றோர் குலத் தொழில் பயிற்சி கொடுத்தார்கள். வர்ணாசிரம தர்மம் நிலவியது. பெண்கள் அவர்கள் எவ்வளவு வசதி படைத்தவர்களாக இருந்தாலும் கல்வி நிலையங்களுக்குப் போக அனுமதி கிடையாது. இவர்களுக்கு அவர்களுடைய தாயார் சமையல், வீட்டு வேலைகள் ஆகியவற்றில் பயிற்சி கொடுத்தார்கள்.

ஓர் ஆச்சரியம். இத்தனை அடிப்படை உரிமைகளும் மறுக்கப்பட்டன என்றாலும் பெண்களுக்குச் சொத்து உரிமை இருந்தது. மண வாழ்க்கை கசப்பாக இருந்தால், கணவனை விவாகரத்து செய்யும் சுதந்திரமும் இருந்தது. விந்தையான சமுதாயம்தான்!

சுமார் 4000 ஆண்டுகளாக, சுமேரியப் பெண்களுக்குக் கல்வி உரிமை மறுக்கப்பட்டிருந்தது. இந்தப் பழக்கத்தில் மாற்றம், முன்னேற்றம், கி.மு. 1894 காலகட்டத்தில் வந்தது. பாபிலோன் தனி நாடானது. ஏழை, பணக்காரர் என்னும் பாகுபாடு இல்லாமல் எல்லா ஆண்களுக்கும், எல்லாப் பெண்களுக்கும் கல்வி கற்கும் உரிமையும் வாய்ப்பும் வழங்கப்பட்டது.

பொழுதுபோக்குகள்

மன்னர்கள், பணக்காரர்கள் ஆகியோருக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு வேட்டையாடுதல். சாதாரண மக்களிடையே குத்துச் சண்டை, மல்யுத்தம் ஆகியவை பிரபலம். மஜோர் (Majore) என்னும் விளையாட்டில், ஆறிலிருந்து அறுபதுவரை எல்லா வயது ஆண்களும் ஈடுபட்டார்கள். ரக்பி போன்ற முரட்டு ஆட்டம் இது. ஒரு வித்தியாசம் – பந்து மரத்தால் செய்யப்பட்டது. வீட்டுக்குள் விளையாடும் Royal Game of Ur என்னும் விளையாட்டு இருந்தது. சதுரங்கம், தாயக்கட்டம் ஆகியவற்றின் கலவை போன்றது இந்த விளையாட்டு.

திருவிழாக்கள்

ஒவ்வொரு மாதமும் திருவிழாக்கள் இருந்தன. இந்தக் கொண்டாட்டங்களுக்கான நாட்கள் ஏழு அம்சங்களின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டன:

1.பௌர்ணமி, அமாவாசை. புது முயற்சிகளுக்கான சடங்குகள் வளர்பிறையிலும், துர்தேவதைகளைத் திருப்தி செய்யும் பரிகார விழாக்கள் தேய்பிறையிலும் நடத்தப்பட்டன.

2.சாகுபடிக் காலங்கள்

3.இரவும், பகலும் சமமான கால அளவாக இருக்கும் சமபங்கு நாட்கள் (Equinoxes)

4.அயன நாட்கள் (Solstices). சூரியன் பூமியின் நில நடுக்கோட்டிலிருந்து வடக்கே அல்லது தெற்கே மிகத் தொலைவில் இருக்கும் நாட்கள் இவை. உத்தராயணம், தட்சிணாயனம் என்று நம் இந்த நாட்களைச் சொல்லுவோம்.

5.உள்ளூர் தேவதைகளுக்கு முக்கியமான நாட்கள்.

6.மன்னர் பிறந்த நாள், அவர் முடிவு செய்யும் பிற நாட்கள்.

7.யுத்த வெற்றி விழாக்கள்.

இசை

சுமேரியர்கள் இசைப் பிரியர்கள். பெரும்பாலான பாடல்கள் ஆண்டவன் புகழ் பாடுபவை. ஒரு சில, மன்னரை வாழ்த்தியும், வரலாற்றுச் சிறப்பான நிகழ்ச்சிகளைப் போற்றியும் எழுதப்பட்டன. எல்லாமே, ராகத்தோடு பாடப்படுபவை. மன்னர்கள் சபையில் தினமும் இசைக் கச்சேரிகள் உண்டு. சாதாரண வீடுகளிலும், ஆண், பெண், குழந்தைகள் பண்ணோடு பாடுவார்கள். நாளடைவில் பாடலுடன் ஆடலும் இணைந்தது. பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்குச் சிறுவயதிலேயே வாய்ப்பாட்டும், நடனமும் கற்றுக் கொடுக்கத் தொடங்கினார்கள்.

எத்தனை விதமான இசைக் கருவிகள் இருந்தன என்று தெரியவில்லை. ஔத் (Oud) என்னும் வீணைபோன்ற மீட்டும் இசைக்கருவி கி.மு. 5000 – இலேயே இருந்ததாக ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

எழுத்துக்கள்

cuneiform.jpg

களிமண் பாளங்களில் விஷயங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். மிருகங்களின் எலும்புகள் எழுத்தாணிகளாகப் பயன்பட்டன. எழுத்துக்கள் கிடையாதே? ஆடு, மாடு என்று குறிப்பிட அவற்றின் படங்களை வரைந்தார்கள். இது சிரமமான வேலை. எனவே ஒவ்வொரு படத்துக்கும் குறியீடுகள் கண்டுபிடித்தார்கள். ஒரு வட்டம் போட்டு அதன் பக்கத்தில் நான்கு கோடு, இரண்டு புள்ளி வைத்தால் அதுதான் மாடு. ஆடு, பூனை, வீடு, கோவில், ஆண், பெண், என இப்படி ஒவ்வொரு குறியீடு.

மத விஷயங்கள், கணக்கு வழக்குகள், எல்லாமே பதிவு செய்யப்பட்டன. காகிதங்களைத் தொகுத்து ஃபைல் செய்வதுபோல் இந்தக் களிமண் பாளங்களைச் சேர்த்து அடுக்கியிருக்கிறார்கள். பின்னாளில் இந்த எழுத்துகளைப் புரிந்துகொண்டு படித்து, திரட்டப்பட்டவைதாம் பைபிளில் வரும் பல சம்பவங்கள்.

எழுத்துகளில் பல வட்டங்கள், வளைவுகள் இருந்தன. இவற்றைக் களிமண்ணில்

கொண்டுவருவது சிரமமாக இருந்தது. எனவே, கி.மு. நான்காம் நுற்றாண்டில் வட்டங்கள், வளைவுகளுக்குப் பதிலாக முக்கோண வடிவ எழுத்துக்களைக் கண்டுபிடித்தார்கள். உண்மையில் இவை முக்கோண வடிவம் அல்ல, உளி வடிவம். அதனால், இந்த எழுத்து வடிவத்துக்கு உளி வடிவ எழுத்துக்கள் என்று பொருள்படும் க்யூனிஃபார்ம் (Cuneiform) என்று பெயர் சூட்டினார்கள்.

cuneiform2.jpg

களிமண்ணில் சிறிய பொம்மைகள்போல் இந்த வடிவங்களைச் (எழுத்துகள்) செய்து வைத்திருந்தார்கள். கருத்துப் பரிமாற்றத்துக்கு இந்த வடிவங்களைப் பயன்படுத்தினார்கள். அகழ்வாராய்ச்சியில் கிடைத்த கி.மு. 2600ன் களிமண் பாளம் ஒன்று, பல்வேறு க்யூனிஃபார்ம் எழுத்துகளைக் காட்டுகிறது.

இலக்கியம்

கி.மு. 1894 ல் வந்த பாபிலோன் சாம்ராஜ்ஜியத்தில்தான் இலக்கணமும் இலக்கியமும் புது மலர்ச்சி பெற்றன. அகர வரிசை (Alphabets), இலக்கண விதிகள் ஆகியவை தொகுக்கப்பட்டன. ஏராளமான இலக்கியங்கள் படைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்பட்டாலும், நமக்குக் கிடைத்திருப்பது கில்காமேஷ் காவியம் மட்டும்தான்.

0

http://www.tamilpaper.net/?p=8114

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 8
சுமேரியர்களின் அறிவியல் முன்னேற்றம்
எஸ்.எல்.வி. மூர்த்தி

 



images-2.jpg

உழுவதற்கான ஏர், நீர்ப்பாசன முறைகள், செங்கல், வளைவுகள், நகரமைப்புத் திட்டங்கள் போன்ற மனித குல முன்னேற்றத்தை விரைவாக்கிய ஏராளமான கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர்கள் சுமேரியர்கள். இரும்பு, செம்பு, வெண்கலம் ஆகிய உலோகங்களைத் தயாரிக்கும் அறிவியல் முறை சுமேரியர்களுக்குப் பழக்கமானதாக இருந்தது. இந்த உலோகங்களால் விவசாயக் கருவிகள். வாள், ஈட்டி போன்ற யுத்த ஆயுதங்கள் தயாரித்தார்கள்.

கட்டடக் கலை, பொறியியல், வானியல், கணிதம் போன்ற பல்வேறு துறைகளில் சுமேரியர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்த்திய சாதனைகள் நம்மைப் பிரமிக்கவைக்கின்றன.

கட்டடக் கலை – வீடுகள்

விவசாயம் கல்லாவை நிரப்பியது. இந்த வருமானத்தால், சுமேரியர்கள் வசதியான வாழ்க்கை நடத்த முடிந்தது. களிமண்ணைப் பாளம் பாளமாகச் செய்து வெயிலில் காய வைத்து செங்கற்களால் வீடுகள் கட்டினார்கள். இவை சாதாரண வீடுகள் அல்ல. இரண்டு அல்லது மூன்று அறைகள் கொண்டவை. தங்கள் வசதிக்கும் தேவைகளுக்கும் ஏற்ப பலர் மாடி வீடுகள், பரந்து விரிந்த பங்களாக்கள் என வகை வகையாய்க் கட்டினார்கள். எல்லா வீடுகளின் நடுப்புறத்திலும் பெரிய முற்றம் இருக்கும். அறைகள் முற்றத்தை மையமாக வைத்துக் கட்டப்பட்டன. இதனால், வீடு வெயிலின் கடுமையால் பாதிக்கப்படாமல், குளிர்ச்சியாக இருக்கும் என்பது நம்பிக்கை. இது அறிவியல் ரீதியான உண்மைதான் என்று இன்றைய சுற்றுப்புறச் சூழல் அறிஞர்களும் ஒத்துக்கொள்கிறார்கள்.

எல்லா வீடுகளும் குழாய்கள் மூலம் குடிநீர் பெறும் வசதி கொண்டவை. வீடுகளில் உலோகங்களாலான சமையல் பாத்திரங்கள் பயன்படுத்தினார்கள். பண்டமாற்று முறையில் இறக்குமதி செய்த மர வகைகளால் செய்யப்பட்ட நாற்காலிகள், மேசைகள், தட்டு முட்டுச் சாமான்கள் இருந்தன.

கட்டடக் கலை – அரண்மனைகள்

சாமானியர்கள் வாழும் வீடுகளிலேயே இத்தனை வசதிகள் என்றால், மன்னர்கள் வாழும் அரண்மனைகள் எப்படி இருக்கும்? பரந்த நிலப்பரப்புகளில் உயர்ந்து நின்ற படாடோபப் படைப்புகள் அவை. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில், காஃபாஜா (Khafajah), டெல் அஸ்மார் (Tel Asmar) ஆகிய இரண்டு இடங்களிலும் கட்டப்பட்டிருந்த அரண்மனைகள் பிரம்மாண்டமானவை. ஓவியங்கள், கலைப் பொருட்கள் ஆகியவற்றால் அற்புதமாக அவை அலங்கரிக்கப்பட்டிருந்தன.

உர் (Ur), மாரி (Mari) ஆகிய நகரங்களில் நடந்த அகழ்வாராய்ச்சி தந்திருக்கும் சிதிலங்கள், அரண்மனைகளின் சிறப்புகளுக்குச் சான்றுகள்.

பிற்காலங்களில், பிற நாடுகளில் எழுந்த மன்னர்களின் உறைவிடங்களுக்கும், சுமேரிய அரண்மனைகளுக்குமிடையே மிகப் பெரிய வித்தியாசம் உண்டு. சுமேரிய அரண்மனைகளில் அரசர்களும், அவர்கள் குடும்பமும் மட்டும் சொகுசு வாழ்க்கை வாழவில்லை. இந்த வளாகத்தில், கட்டடப் பரமரிப்பாளர்கள், தச்சர்கள், கொத்தனார்கள், நீர்க்குழாய் பழுது பார்ப்பவர்கள், சிற்பிகள், ஓவியர்கள் ஆகியோரும் குடும்பத்துடன் தங்குவதற்கான வீடுகளை அரசர்கள் அளித்தார்கள். பட்டறைகள், உணவகங்கள், பொதுப் பொழுதுபோக்கு இடங்கள், அரங்கங்கள், கோவில்கள், இடுகாடுகள், ஆகியவையும் அமைக்கப்பட்டிருந்தன. மொத்தத்தில், அரண்மனை வளாகம் ஒரு வசதிகள் நிறைந்த நகரம்!

வாசல் கதவுகளிலும், முக்கிய கதவுகள் அருகிலும், பிரம்மாண்டமான கடவுள் சிலைகள் நிறுவப்பட்டன. உட்புறச் சுவர்கள் வரலாறு, கலை ஆகியவற்றின் பொக்கிஷங்கள். பெரிய கற்பாளங்களில், கலா நிகழ்ச்சிகள், அரச கட்டளைகள், அரசரின் போர் மற்றும் இதர வெற்றிகள் ஆகியவை செதுக்கப்பட்டு, சுவரில் பதிக்கப்பட்டன. அரண்மனையின் ஏராளமான இருக்கைகள் யானைத் தந்தங்களால் செய்யப்பட்டவை. அரியணை கலையம்சம் கொண்டதாக, தங்கம், முத்துகள் பதிக்கப்பட்டு காட்சியளித்தது. அரச சபை அருகே, பெரிய அரங்கம். முக்கிய நாட்களில், பொதுமக்களை மன்னர் இங்கே சந்திப்பார்.

கட்டடக் கலை – நகரங்கள்

மக்கள் கூடி வாழ்ந்த குடியிருப்புகள் நாளடைவில் நகரங்கள் ஆயின. இந்த நகரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு குட்டி ராஜா வந்தார். இப்படி, பல நகரங்களைத் தன்னுள் அடக்கிய நாடாக மெஸப்பொட்டேமியா உருவானது. உர் நகரம்தான் உலகின் பழமையான நகரம். இது தவிர பாபிலோனா, உருக் (Uruk), எரிடு (Eridu), ஸிப்பர் (Sippar), ஷுரூப்பக் (Shuruppak), லார்ஸா (Larsa), நிப்பூர் (Nippur) ஆகியவையும் முக்கிய நகரங்கள்.

நகரங்கள், வீடுகள், கடைகள், பொது இடங்கள் என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. வீடுகள், வீதிகள், கடைகள், பூங்காக்கள், பொழுதுபோக்கு இடங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் என ஒவ்வொன்றும் எங்கெங்கே, எப்படி எப்படி அமையவேண்டும் என்று வரையறுக்கும் தெளிவான சட்டங்கள் இருந்தன. இந்த விதிகளை மன்னர்கூட மீற முடியாது.

கி.மு. 2100 ல் எழுதப்பட்ட கில்காமேஷ் காவியம் உருக் நகரத்தின் ஒவ்வொரு அம்சமும், எவ்வாறு திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்பதைத் தெளிவாகச் சொல்கிறது. எல்லா நகரங்களின் அருகிலும், விவசாய நிலங்கள், சிறு கிராமங்கள், கால்வாய் ஆகியவை கட்டாயமாக இருக்கவேண்டும். குடிநீர்த்தேவை, சாமான்கள் போக்குவரத்து ஆகியவை ஒழுங்காக நடப்பதற்காக இந்த ஏற்பாடு.

கட்டடக் கலை – தெருக்கள்

நகரங்களில், தெருக்கள் ஒழுங்கான வரிசை முறையில் திட்டமிட்டு அமைக்கப்பட்டிருந்தன. வரிசை வரிசையாக வீடுகள், அவை முடியும் இடத்தில் பிரம்மாண்டமாகக் கோவில். இந்தக் கோவில்களிலும் வீடுகளிலும் ஏராளமான சிற்பங்கள், வண்ண ஓவியங்கள், விலை உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட உலோக வேலைப்பாடுகள் இருந்தன.

கட்டடக் கலை – பொறியியல்

கட்டக் கலைப் பொறியியலில் arch என்னும் வளைவுகள் மிக நுணுக்கமானவை, பல பிரம்மாண்டக் கட்டடங்கள், அணைகள், பாலங்கள் ஆகியவற்றுக்கு அடிப்படையானவை. இரண்டு தூண்கள் அல்லது தாங்கிகளுக்கு நடுவே இருக்கும் திறந்த இடைவெளியை இணைக்க, சாதாரணமாக, தூண் அல்லது உத்திரம் பயன்படும். வளைவான வடிவமைப்பைச் சுமேரியர்கள் கண்டுபிடித்தார்கள். பிற வடிவமைப்புகளைவிட, ஆர்ச் பன்மடங்கு அதிகமான சுமையைத் தாங்கும். எப்படிக் கண்டுபிடித்திருப்பார்கள் என்னும் கேள்வி, இன்றும் பொறியியல் வல்லுநர்கள் விடை காணாத வியப்புக் கேள்வி.

சக்கரங்கள்

சுழற்சி என்றால் அசைவு, அசைவு என்றால் முன்னேற்றம். சுழற்சியைத் தருபவை சக்கரங்கள். மனிதகுல முனேற்றத்தில், சக்கரம் மிக முக்கியமானது. உராய்வு (friction) இல்லாமல் அசைவை உண்டாக்கச் சக்கரங்கள் அத்தியாவசியம். களிமண்ணால் செங்கற்கள் செய்து அணைகளும், வீடுகளும் செய்த சுமேரியர்கள், அடுத்து மண்பாண்டங்கள் செய்ய ஆரம்பித்தார்கள். முதலில் கைகளால் தயாரித்தார்கள். இயந்திரம் ஒன்று இருந்தால் வேலை சுளுவாகுமே என்று ஒரு சுமேரியன் மனதில் விளக்கு எரிந்தது: குயவர் சக்கரம் (Potter’s Wheel) வேலையை எளிமையாக்கியது, உற்பத்தியைப் பெருக்கியது.

சக்கரங்களை வைத்து, மாடுகள், குதிரைகள் பூட்டிய வண்டிகள் தயாரித்தார்கள். போக்குவரத்து தொடங்கியது. புதுப் புது இடங்களுக்குப் பயணம் செய்வது, புதிய மனிதர்களை சந்திப்பது, அவர்களோடு சமுதாய மற்றும் வியாபாரத் தொடர்புகள் தொடங்குவது. அவர்கள் கலாசாரத்திலிருந்து கற்றுக்கொள்வது என்று நம் மன ஜன்னல்களைத் திறந்துவைப்பதும், விசாலமாக்குவதும், போக்குவரத்துதான். இதைச் சாத்தியமாக்குவது சக்கரங்கள். இந்தச் சக்கரங்களைச் சாத்தியமாக்கியவர்கள் சுமேரியர்கள்.

சக்கரங்கள் இல்லையென்றால், நம் வாழ்க்கையே ஸ்தம்பித்துவிடும். மாட்டு வண்டியால்தானே சைக்கிள் தோன்றியது, பிற இரட்டை சக்கர வாகனங்கள் வந்தன? கார்கள், விமானங்கள் வந்தன? இவை இல்லாத வாழ்க்கையைக் கற்பனை செய்துகூட நம்மால் பார்க்கமுடியுமா?

குயவர் சக்கரம் நம்மை எவ்வளவு தூரம் முன்னால் கொண்டுவந்திருக்கிறது தெரியுமா? எல்லா இயந்திரங்களின் உயிர்நாடியும் சக்கரங்கள்தாம். Gears எனப்படும் பற்சக்கரங்கள் இல்லாவிட்டால், தொழிற்சாலைகளே கிடையாது.

கணித அறிவு
 

Babylonian_symbols-300x187.gif

தீவாக வாழ்ந்த மக்கள் சேர்ந்து வாழத் தொடங்கினார்கள். சமுதாய வாழ்கையை நெறிப்படுத்த, தங்களுக்குள்ளேயே ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்தார்கள். தனி ஆளாக இவரால், நிர்வாகம் செய்ய முடியவில்லை. உதவியாளர்களைத் துணையாகச் சேர்த்துக்கொண்டார். நாள்பட நாள்பட, அரசாங்கம், அதிகாரிகள் என்னும் கட்டமைப்பு உருவானது. நிர்வாகச் செலவுக்குப் பணம் வேண்டுமே? ஒவ்வொரு குடும்பமும், அவர்களிடம் இருந்த நிலங்களுக்கு ஏற்றபடி. ஒரு குறிப்பட்ட தொகையை அரசாங்கத்துக்குச் செலுத்தவேண்டும். வரிகளின் ரிஷிமூலம், நதிமூலம் இதுதான். எல்லோரும் ஒரே அளவு வரி தருவது நியாமல்ல. அதிக அளவு நிலங்களின் உடைமையாளர்கள் அதிக வரி தரவேண்டும், நில அளவுக்கு ஏற்ப வரி என்னும் சிந்தனை தொடங்கியது. நிலங்களின் நீளம், அகலம் அளக்கவேண்டுமே? கணிதம் பயன்படத் தொடங்கியது. மிக அடிப்படை நிலையில் இருந்த கணிதம் மாபெரும் வளர்ச்சிகள் கண்டதற்கு முக்கிய காரணம் வரி!

60 இலக்கங்கள் கொண்ட கணித முறையை சுமேரியர்கள் கண்டுபிடித்தார்கள்.

60 வது இலக்கம் எங்கே என்று தேடுகிறீர்களா? 1, 60 ஆகிய இரண்டு எண்களுக்கும் ஒரே இலக்கம்தான்.

100 என்கிற எண்தானே சாதாரணமாகப் பிரபலமானது? சுமேரியர்கள் ஏன் 60 இலக்கங்கள் கொண்ட கணிதமுறையைப் பயன்படுத்தினார்கள்? காரணம் இருக்கிறது.

நாம் கணிதம் படிக்கத் தொடங்கும்போது, எப்படி எண்ணுகிறோம், கூட்டல், கழித்தல் எப்படிக் கணக்குப் போடுகிறோம்? கை விரல்களால். பத்து விரல்களால். இதனால்தான், உலகின் ஏராளமான கணித முறைகள் 10 என்பதை அடிப்படையாகக்கொண்ட தசாமிச முறையில் (Decimal System) உள்ளன. சுமேரியர்களின் அணுகுமுறை கொஞ்சம் வித்தியாசம். நம் ஒவ்வொரு கையிலும் 5 விரல்கள். நம் கட்டை விரலில் 2 மூட்டுக்களும், மற்ற நான்கு விரல்களிலும் தலா 4 மூட்டுக்களும் உள்ளன. அதாவது ஒரு கையில், மொத்தம் 14 மூட்டுக்கள். சுமேரியர்கள் இவற்றுள் 2 மூட்டுக்களைக் கண்டுபிடிக்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை, இரு கையில் 12 மூட்டுக்கள்தாம். 12 x 5 என்னும் அடிப்படையில் 60 இலக்கங்கள் கொண்டதாகக் கணித முறையை உருவாக்கினார்கள்.

நிலங்களை அளக்க மட்டுமல்ல, சதுரம், செவ்வகம், வட்டம் என நுணுக்கமான வடிவங்களின் பரப்பளவு காணவும் கணிதத்தைப் பயன்படுத்தும் தேர்ச்சி விரைவிலேயே அவர்களுக்கு வந்தது. ஒரு மணிநேரத்துக்கு 60 நிமிடங்கள் என்னும் கால அளவும், 60 இலக்க அடிப்படையில்தான் வந்திருக்கவேண்டும் என்பது அறிஞர்கள் கணிப்பு.

கணித அறிவு பொதுமக்களிடமும் பரவியிருந்தது. கூட்டல். கழித்தல், ஜியாமெட்ரி, ஆகிய கணக்கு வகைகளில் சாமானியருக்கும் தேர்ச்சி இருந்தது. பல கணிதச் சூத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. அன்றாட வாழ்க்கையிலும், கட்டக் கலையிலும் மக்கள் இந்தச் சூத்திரங்களைப் பயன்படுத்தினார்கள்.

0

http://www.tamilpaper.net/?p=8159

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 9

சுமேரியர் அறிவியல் முன்னேற்றம் – 2

எஸ்.எல்.வி. மூர்த்தி

sumerian.jpg

வானியல்

உலகத்தில் சில சங்கமங்கள் பிரமிக்கவைப்பவை, நம்ப முடியாதவை. ஆக்ஸிஜனும், ஹைட்ரஜனும் 1: 2 சதவிகிதத்தில் கலக்கும்போது, இன்னொரு வாயு பிறப்பதில்லை. இவை இரண்டின் வடிவங்களுக்கே தொடர்பில்லாத திரவ வடிவம் வருகிறது. அதே போல் இன்னொரு சங்கமம். சுமேரியர்களின் மத நம்பிக்கைகளும், கணித அறிவும் சங்கமித்தன. பிறந்தது ஒரு புத்தம் புதுத் துறை – வானியல்!

அடிக்கடி மழை பெய்தது. கண் பார்வையைப் பறித்துவிடுமோ என்று பயப்படவைக்கும் பளிச் மின்னல், காதுகளைச் செவிடாக்குமோ என மிரட்டும் இடி, பிரளய வெள்ளத்தில் மூழ்கிவிடுவோமோ என அஞ்சவைக்கும் மழை. என்ன செய்வதென்றே தெரியாத மக்கள் மழை, இடி, மின்னல் போன்ற தங்களால் கட்டுப்படுத்தமுடியாத அத்தனை இயற்கை சக்திகளையும் கடவுள்கள் ஆக்கினார்கள். தீங்குகள் செய்யாதிருக்கும்படியும், தங்களைக் காப்பாற்றும்படியும் இவர்களிடம் வேண்டிக்கொண்டார்கள். இந்தக் கடவுகள்கள் காண முடியாத தூரத்தில், விண்வெளியில் இருப்பதாகக் கற்பனை செய்தார்கள். இந்தக் கற்பனை, கர்ண பரம்பரைக் கதைகளானது. ஒரு கட்டத்தில் மக்கள் மனங்களில் நம்பிக்கைகளாகவும் இவை உருமாறின.

கடவுள்களைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்னும் ஆசை பலருக்கு வந்தது. பிரபஞ்சம், திசைகள், கிரகங்கள், நட்சத்திரங்கள் என்று பல்வேறு கோணங்களில் தேடல் தொடங்கியது. இந்தத் தேடலில் தங்கள் கணித அறிவைக் கலந்தார்கள். இந்தச் சங்கமத்தில் வானியல் பிறந்தது. பௌர்ணமி, அமாவாசை, கிரகண தினங்கள், இரவும், பகலும் சமமான கால அளவாக இருக்கும் சமபங்கு நாட்கள் (Equinoxes), சூரியன் பூமியின் நில நடுக்கோட்டிலிருந்து வடக்கே அல்லது தெற்கே மிகத் தொலைவில் இருக்கும் நாட்களான உத்தராயணம், தட்சிணாயனம் (Solstices) ஆகியவற்றைக் கண்டுபிடித்தார்கள்.

வரலாற்றின் ஆரம்ப காலங்களில், இரவும், பகலும் சந்திரச் சுழற்சியால் வருகின்றன என்று நம்பினார்கள். இதனால், சுமேரியர்கள், சந்திரச் சுழற்சியின் அடிப்படையில், நாட்காட்டிகளை அமைத்தனர். அதில் 354 நாட்களும், 12 மாதங்களும் இருந்தன. இவற்றுக்குச் சந்திர காலண்டர்கள் * என்று பெயர்.

(* இன்று உலகம் முழுவதும் சூரிய காலண்டர்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை சூரிய சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை. சந்திரக் காலண்டர்கள், சூரியக் காலண்டர்களாக மாறிய வளர்ச்சிக்குப் பின்னால், பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் அறிவியல் மேதைகளும் இருக்கிறார்கள். அவர்களுள் சிலர்:

டாலமி (Ptolemy)

கி.பி. 110 – கி.பி. 170 வரை வாழ்ந்த கிரேக்க நாட்டு விண்ணியலாளர், கணித மேதை. சூரியன், சந்திரன், கோள்கள், நட்சத்திரங்கள் யாவும் பூமியை மையமாகக்கொண்ட ஒரு கோணத்தில் பதிக்கப்பட்டிருப்பதாகவும், பகல், இரவு, மாதம் ஆகியவற்றை அளிக்கும் விதமாக இவை சுழல்வதாகவும் கூறினார். அடுத்த சுமார் 1500 ஆண்டுகளுக்கு, வானியலில் டாலமியின் கொள்கைதான் வேதம்.

நிக்கோலஸ் காப்பர்நிக்கஸ் (Nicholas Copernicus)

கி.பி. 1473 முதல் கி.பி. 1543 வரை வாழ்ந்த போலந்து நாட்டு வானியல் அறிவியலாளர். டாலமியின் கொள்கையிலிருந்து உலகத்தை மாற்றியவர். கிறிஸ்தவ மதப் பாதிரியாராக இருந்தவர். கணிதம், மருத்துவம், வானியல் ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்றவர். கோப்பர்நிக்க முறை என்று அழைக்கப்படும் இவருடைய கொள்கை சூரியமையக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. இதன்படி, பூமி தனது அச்சில் தினமும் சுழல்கிறது. நிலையாக இருக்கும் சூரியனை ஆண்டுக்கு ஒருமுறை சுற்றி வருகிறது. உலக வானியல் அறிஞர்கள் ஏற்றுக்கொண்டிருப்பதும், நாம் இன்றும் பின்பற்றுவதும், காப்பர்நிக்கஸ் போட்டுச் சென்றிருக்கும் ராஜபாட்டைதான்.

மருத்துவம்

சுமேரியர்கள் மருத்துவத் துறையில் கண்டிருந்த முன்னேற்றங்கள் பற்றி ஆணித்தரமான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. அஷூர்பானிப்பால் (Ashurbanipal) என்னும் மன்னர், மெசபடோமியாவின் ஒரு பகுதியான அஸிரியாவை (Assyria) கி.மு. 683 முதல் கி.மு. 627 வரை ஆட்சி செய்தார். இவர் அறிவுத் தேடல் கொண்டவர். தன் அரண்மனையில் பெரிய நூலகம் வைத்திருந்தார். இங்கே, 20,000 நூல்கள் வைத்திருந்தார். க்யூனிஃபார்ம் என்னும் உளி மொழியில் எழுதப்பட்ட களிமண் பாளங்கள் இவை.

எதிரிகள் அஸிரியா மீது போர் தொடுத்தார்கள். நூலகத்துக்குத் தீ வைத்தார்கள். ஓலைச் சுவடிகளாகவோ, காகிதமாகவோ இருந்திருந்தால், இந்த அறிவுப் பொக்கிஷம் முழுக்கச் சாம்பலாகியிருக்கும். மாறாக, நெருப்பில் சுடப்பட்ட இந்தப் பாளங்கள் ஓடுகளாயின. இருபதாயிரம் பாளங்களில், பல்லாயிரம் பாளங்கள் அகழ்வாராய்ச்சியில் ஓடுகளாகக் கிடைத்துள்ளன. இவற்றுள் 660 பாளங்கள் சுமேரியரின் மருத்துவ அறிவுக்கு அற்புத ஆதாரங்கள்.

சுமேரியரின் மருத்துவ அணுகுமுறையில் மூட நம்பிக்கைகளும் அறிவியலும் ஒன்றாகக் கலந்துள்ளன. உடலின் பாகங்கள் பற்றிய உடற்கூறு அமைப்பியல் (Anatomy) அவர்களுக்குத் தெரிந்திருந்தது. இதனால் தலைவலி, கழுத்து வலி, வயிற்று வலி, மூட்டு வலி ஆகிய உபாதைகள் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவை என்று கண்டுபிடித்தார்கள். ஆனால், இந்தச் சுகவீனங்கள் துர்தேவதைகளால் வருகின்றன என்று முடிவு கட்டினார்கள். தலைவலி, கழுத்துவலி, மூட்டு வலி போன்ற ஒவ்வொரு உபாதைக்கும் ஒவ்வொரு துர்தேவதை காரணம். அந்தந்த தேவதைக்குப் பரிகாரங்களும், பூசைகளும் நடத்தினார்கள். அதே சமயம், சடங்குகளோடு நிறுத்திக்கொள்ளாமல், செடிகள், பூக்கள் ஆகிய இயற்கைப் பொருட்களால் மருந்துகள் தயாரித்து நோயாளிகளுக்குக் கொடுத்தார்கள். இந்தக் கஷாயங்கள் வெறுமனே, நோயின் வெளிப்படை அடையாளங்களை நீக்கும் சிகிச்சைகளாக இல்லாமல், அடிப்படைக் காரணங்களைத் தீர்ப்பவையாக இருந்தன.

உடல் காயங்கள் அடிக்கடி மக்கள் சந்தித்த பிரச்னை. இதற்கு, சில மருந்து செடிகளின் சாறுகளையும், உப்புகளையும் சேர்த்து, ஒருவிதப் புண் கட்டுத் துணியைச் (Bandage) சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தினார்கள். ரத்தக் காயங்களுக்கு மூன்று படிநிலை சிகிச்சையைக் கையாண்டார்கள். முதலில் அடிபட்ட இடத்தைச் சுத்தம் செய்யவேண்டும். இரண்டாவதாக மருந்து போடவேண்டும். மூன்றாவதாகக் கட்டுத் துணியால் காயத்தை மூடவேண்டும்.

மருத்துவர்கள் இரண்டு வகையினர். மாந்திரீகங்களால் சிகிச்சை அளிப்பவர்கள் மந்திரவாதிகள். கஷாயமும் களிம்புகளும் தரும் அறிவியல் அணுகுமுறை கொண்ட மருத்துவர்கள் இரண்டாம் வகையினர். இந்த இரண்டு முறைகளையும் மக்கள் பின்பற்றினார்கள். ஆச்சரியமூட்டும் வகையில் அறுவை சிகிற்சைகளும் நடைமுறையில் இருந்தன. அதிலும், ஒரு களிமண் பாளம், மண்டையோட்டில் செய்யும் அறுவை சிகிச்சை பற்றி விவரிக்கிறது. கிருமி நாசினியாக அவர்கள் எதைப் பயன்படுத்தினார்கள் தெரியுமா? நல்லெண்ணெய்!

பொறியியல்

உழுவதற்கான ஏர், நீர்ப்பாசன முறைகள், வளைவுகள், நகரமைப்புத் திட்டங்கள், சக்கரங்கள் போன்ற மனித குல முன்னேற்றத்தை விரைவாக்கிய ஏராளமான கண்டுபிடிப்புகளுக்குச் சுமேரியர்கள் சொந்தக்காரர்கள். இரும்பு, செம்பு, வெண்கலம் ஆகிய உலோகங்களைத் தயாரிக்கும் அறிவியல் முறை சுமேரியர்களுக்குப் பழக்கமானதாக இருந்தது. இந்த உலோகங்களால் விவசாயக் கருவிகள். வாள், ஈட்டி போன்ற யுத்த ஆயுதங்கள், ஆபரணங்கள் ஆகியவற்றை உருவாக்கினார்கள்.

நாகரிக மறைவு

கி.மு. 6000 முதல், அதாவது 8000 ஆண்டுகளுக்கு முன்பு கொடி கட்டிப் பறந்த நாகரிகம், கற்பனையே செய்யமுடியாத அளவு முன்னேற்றங்கள் கண்டிருந்த கலாசாரம் கி.மு. 600 வாக்கில் காணாமல் போனது. நமக்குக் கிடைத்திருக்கும் சொற்ப சான்றுகளைக் கொண்டு பார்க்கும்போதே இந்நாகரிகம் எவ்வளவு பிரமாண்டமாக அப்போது இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்துகொள்ளலாம். உண்மையில் சுமேரியர்களின் வாழ்க்கைமுறை இன்றைய நாடுகளின் கலாசாரத்துக்கு சவால் விடும் வகையில் அமைந்திருக்கும்.

சுமேரிய நாகரிகம் எப்படி மறைந்திருக்கும்? சுமேரிய நாகரிகத்தை மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கலாம்.

1. ஆரம்ப காலம் – கி.மு. 6000 முதல் கி.மு. 2600 வரை

2. வளர்ச்சிக் காலம் – கி.மு. 2600 முதல் கி.மு. 1750 வரை

3. சரிவு / மறைவு காலம் – கி.மு. 1750 முதல் கி.மு. 600 வரை

சுமேரியர்கள் உருவாக்கிய நாடு, பல நகரங்களைத் தன்னுள் அடக்கிய நாடு. ஒவ்வொரு நகரத்துக்குமிடையே கால்வாய்கள் இருந்தன. இந்தக் கால்வாய்கள் பூகோள ரீதியாக மட்டுமல்லாமல், மனோரீதியாகவும் மக்கள் மனங்களில் தூரத்தை ஏற்படுத்தின. நாம் எல்லோரும் ஒரே நாடு என்னும் உணர்வு மறைந்து, என் நகரம், உன் நகரம் என்னும் மனப்பாங்கு தோன்றியது. இந்த ஒட்டுறவின்மையின் அடுத்த கட்டம் மன வேறுபாடுகள், சச்சரவுகள், சண்டைகள். பெரும்பாலான சச்சரவுகளுக்கு மண்ணாசையும், அடுத்தவர் கால்வாய்களைத் தம்முடையதாக்கும் ஆசையும்தான் காரணம்.

hammurabi.jpg

நகரங்களுக்கு நடுவிலான முதல் போர் கி.மு. 3200 வாக்கில் நடந்திருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கணிக்கிறார்கள். ஆனால், கி.மு. 2500ம் ஆண்டுக்குப் பிறகு, இந்தப் போர்கள் அடிக்கடி நடக்கும் நிகழ்வுகளாயின. நகரங்கள் அணி சேர்வதும், அணிகள் மாறுவதும் வாடிக்கையானது. பலசாலி நகரங்கள் வலிமை இல்லாதவர்களைத் தோற்கடித்தார்கள், தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார்கள். கி.மு. 2340 முதல் கி.மு. 2316 வரையிலான காலகட்டத்தில் கிஷ், உர், உருக், லகாஷ் ஆகிய நகரங்கள் போர் வெற்றிகளால் பரிணாம வளர்ச்சி பெற்று குட்டி சாம்ராஜ்ஜியங்களாயின.

இந்தக் குட்டி நகர சாம்ராஜ்ஜியங்களை இணைத்து ஒரே கொடியின்கீழ் கொண்டுவந்தவர் ஹமுராபி மன்னர். அவருக்குப் பின் வந்த மன்னர்களுக்கு, சாம்ராஜ்ஜியத்தைக் கட்டிக் காக்கும் திறமை இருக்கவில்லை. இதனால் உள்நாட்டுச் சண்டைகளும், வெளிநாடுகளின் படையெடுப்புகளும் ஏற்பட்டன. சுமேரியா சரியத் தொடங்கியது. கி.மு. 330ல் மாவீரன் அலெக்சாண்டர் மெசபடோமியாமீது போர் தொடுத்து வென்றார். சுமேரியர்களைக் கிரேக்க ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார். இன்னொரு பக்கம், சுமேரியாவை தாங்கிப் பிடித்து வந்த விவசாயமும் பருவ நிலை மாற்றங்களாலும் வெள்ளப் பெருக்கு போன்ற காரணங்களாலும் நசிவடையத் தொடங்கின. இருநூறு ஆண்டுகளுக்கு வறட்சி தொடர்ந்தது. சுமேரியா காணாமல் போகத் தொடங்கியது.

நம் வாழ்க்கையைச் செழுமையாக்கிய சுமேரியர்களுக்கு மனமார நன்றி கூறி விடை பெறுவோம். நம் வணக்கத்துக்குரிய மூதாதையர்களாக சீனர்களைச் சந்திக்கத் தயாராவோம்.

0

http://www.tamilpaper.net/?p=8198

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 10

சீன நாகரிகம்

எஸ்.எல்.வி. மூர்த்தி

அரசாட்சி ஆரம்பம்

chinazithermusic-300x160.jpg

சீனா என்றவுடன் சில காட்சிகள் நம் மனக்கண்ணில் தோன்றும். தொங்குமீசை வைத்த சினிமா வில்லன்கள், இந்தி – சீனி பாய், பாய் என்று பண்டித நேருவுக்கு சீனத் தலைவர்களோடு இருந்த ஒட்டுறவு, 1962ல் இந்தியாவோடு அவர்கள் நடத்திய போர், தொடர்கின்ற நட்பும், உரசலும் கலந்த வினோத உறவு, நம்பிக்கை வைக்க முடியாத தரத்தில், நம்பவே முடியாத விலையில் உலகச் சந்தையில் அவர்கள் கொண்டுவந்து கொட்டும் வகை வகையான பொருட்கள்.

கலைடாஸ்கோப் வைத்து கண்ணாடித் துண்டுகளைப் பார்ப்பதுபோல், இவை வண்ண மயமான பிம்பங்கள். ஆனால், சீனாவைப் பிரதிபலிக்கும் நிஜங்கள் அல்ல. இவை அனைத்தையும் தாண்டி, சீனா பிரம்மாண்டமானது, பாரம்பரியப் பெருமைகள் கொண்டது.

வீரியம் குறையாமல் தொடரும் பண்டைய நாகரிகங்கள் ஒரு சிலவே. அவற்றுள் முக்கியமானது சீன நாகரிகம். இதன் தொடக்கம் கி.மு. 5000, அதாவது சுமார் 7000 வருடங்களுக்கு முன்னால் என்று கருதப்படுகிறது. ஆனால், சீனாவில் மனித இனம் வாழத் தொடங்கி 14 லட்சம் வருடங்கள் ஆகிறது என்று சிலர் கருத்துத் தெரிவிக்கிறார்கள். இவை இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்கிறீர்களா? மனித வாழ்க்கை 14 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் ஆரம்பித்தது.

ஐந்தாம் அத்தியாயத்தில், கோர்டன் சைல்ட் என்னும் இங்கிலாந்து நாட்டு வரலாற்று ஆசிரியர் நகரக் கட்டமைப்பு, அரசாங்கம், தொலைதூர வாணிபம், கலை, எழுத்துக்கள், கணிதம் போன்ற பத்து அம்சங்கள்தாம் நாகரிகத்தின் பத்து அளவுகோல்கள் என்று சொன்னார். மனித வாழ்க்கை 14 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் ஆரம்பித்தாலும், நாகரிக அம்சங்கள் சீனாவில் வளரத் தொடங்கியது கி.மு. 5000 பிறகுதான்.

நாகரிக ஆதாரங்கள்

சீனாவின் பல பாகங்களிலும் நூற்றுக்கணக்கான கல்லறைகள் கண்டறியப்பட்டன. இவற்றில் கிடைத்த முக்கிய ஆதாரங்கள்; வெண்கலப் பொருட்கள், தந்தக் கைவினைப்பாடுகள், பச்சைக் கல் (Jade) நகைகள், எலும்பால் செய்யப்பட்ட கொண்டை ஊசிகள், மண் பாண்டங்கள், இசைக் கருவிகள் போன்றவை. இந்த அடிப்படையில்தான், நாகரிக முன்னேற்றங்களும், அவை நிகழ்ந்த காலங்களும் கணக்கிடப்பட்டுள்ளன.

மஞ்சள் ஆறு

சீன நாகரிகத்தில் மஞ்சள் ஆறு தனியிடம் பெறுகிறது, ஹூவாங் ஹே (Huang He) என்ற இந்த ஆறு திபெத் வழி பாய்ந்து வரும்போது, அங்குள்ள மணலால் மஞ்சள் நிறம் பெறுகிறது. இதுதான் பெயர்க் காரணம். இதன் பள்ளத்தாக்கு மிக வளமானது. எனவே சீன நாகரிகத் தொட்டில் என்று இப்பள்ளத்தாக்கைச் சொல்வார்கள். மஞ்சள் ஆற்றில் அடிக்கடி வெள்ளம் கரை புரண்டு ஒடி சீனாவின் நெற்களஞ்சியம் எனப்படும் பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை மூழ்கடிக்கும். இதனால் மஞ்சள் ஆறு சீனாவின் சோகம் (China’s Sorrow) என்றும் அழைக்கப்படும்.

சீன நாகரிகத்தின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் பதின்மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கலாம்,

1. ஆரம்ப நாட்கள் (கி.மு. 20,000 முதல் – கி.மு. 5000 வரை)

அகழ்வாராய்ச்சிகளில் மண் பாண்டங்கள் கிடைத்துள்ளன. இவை சுமார் கி.மு. 20,000 அல்லது கி.மு. 19,000 – த்தில் உருவான பாத்திரங்கள் என்று ஆய்வாளர்கள் கணக்கிடுகிறார்கள். இவை முழுக்க முழுக்கக் கைகளால் செயப்பட்ட களிமண் பாண்டங்கள்.

கி.மு. 7600 வாக்கில், வீடுகளில் மிருகங்கள் வளர்க்கும் பழக்கம் இருந்தது. பன்றிகள் வளர்க்கப்பட்டதற்கான ஆதாரங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. கி.மு. 6000 வாக்கில் நாய்களும் கோழிகளும் வீட்டுப் பிராணிகளாக இருந்தன.

கி.மு. 7500ல் விவசாயம் தொடங்கிவிட்டது. திணை (Millet) தான் முதற் பயிர். நெல் சாகுபடி பிறகு வந்தது.

2. கி. மு. 5000 முதல் கி. மு. 1800 வரை – புதிய கற்காலம் (Neolithic Age)

ஆரம்ப நாட்களில், ஆதிவாசிகள் தனிமரங்களாகத்தான் வாழ்ந்தார்கள். கி.மு. 5000 ல் திருப்பம் ஏற்பட்டது. தன்னுடைய பாதுகாப்பும் குடும்பத்தினரின் பாதுகாப்பும் முக்கியத்துவம் பெற்றது. வீடுகள் கட்டினார்கள், சேர்ந்து வாழத் தொடங்கினார்கள். சமூக வாழ்க்கை தொடங்கியது.

திணை, நெல் போன்ற பயிர் நாற்றுக்களை வரிசையாக நட்டால் அவை சிறப்பாக வளரும் என்று மேலை நாட்டு ஆராய்சியாளர்கள் பதினெட்டாம் நூற்றாண்டில் கண்டறிந்தார்கள். ஆனால், கி. மு 5000 – த்தில் சீனர்கள் இந்த முறையைப் பின்பற்றினார்கள்.

விவசாயத்தில் ஆண் பெண் ஆகியோரின் மனித சக்தி மட்டுமே பயன்படுத்தப்பட்டது. உடல் உழைப்பை எப்படிக் குறைக்கலாம் என்று சிந்தித்தார்கள். மாடுகளை வீட்டில் வளர்த்தார்கள். விவசாயத்துக்கும் பால் தரவும் இவை உதவின. அடுத்த கட்டமாக, விவசாய உபகரணங்கள் தயாரித்தார்கள். உலோகங்களை அவர்கள் அறியாத காலம். எனவே, அன்றைய ஆயுதங்கள் அத்தனையும் செய்யப்பட்டது கற்களால்.

தொடக்கத்தில், இலை, தழைகளும், மரப் பட்டைகளுமே, ஆண் பெண்களின் ஆடையாக இருந்தது. துணையாளின் அழகுக்கு அழகூட்ட என்ன செய்யலாம்? தேடியபோது பருத்தி நூல் கண்ணில் பட்டது, கைகளில் கிடைத்தது. காதல் பெண்கள் கடைக்கண் பார்வை நெசவுத் தொழிலுக்கு அச்சாரம் போட்டது. கி.மு. 3630 – இல் சீனப் பெருமகன் பட்டுப் புழுக்கள் வளர்க்கவும், நூல் எடுக்கவும், துணி நெய்து சாயம் பூசவும் கற்றுக்கொண்டான். காலம் காலமாக சீனாவின் முக்கிய தொழிலாகப்போகும் பட்டுத் தொழில் பிறந்து ஆழமாக வேரூன்றியது.

கி.மு. 5000 முதல், கி.மு. 1800 வரையிலான 3200 ஆண்டுகளில், பல முன்னேற்றங்கள். தனிமரங்களாக வாழ்ந்த மனிதர்கள் குடும்ப வாழ்வு தொடங்கினார்கள். கூட்டுக் குடும்பங்களாக வசித்தார்கள். சமூக வாழ்க்கை முறை பரவலாகத் தொடங்கியது. குடியிருப்புகளின் தொகுப்புகள் கிராமங்கள், ஊர் எனப் பரிணாம வளர்ச்சி கண்டன. முதலில், தடி எடுத்தவன் தண்டல்காரன் என்கிற மாதிரி, கைகளில் அதிகாரம் இருந்தவர்கள் எல்லோருமே தலைவர்கள் ஆனார்கள். ஆனால், மக்கள் தொகை பெருகப் பெருக, இது நடைமுறைக்கு ஒத்துவராது என்பது புரிந்தது. அவர்களாகவே, தங்களுக்குள் ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்தார்கள். இந்தத் தலைவன் தனக்கு உதவியாளர்களை அமர்த்திக்கொண்டான். அரசாங்கம், அதிகாரிகள் ஆகிய கட்டமைப்பு தொடங்கியது.

அதிகாரத்தைச் சுவைத்த தலைவன், பதவியைத் தானும் தன் குடும்பமும் மட்டுமே தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்று விரும்பினான். காய்களை நகர்த்தினான். தலைவன் அரசனானான். இவர்கள் சக்கரவர்த்திகள் என்று அழைக்கப்பட்டார்கள். கி.மு. 2852 -இல் ஃப்யூ க்ஸீ (Fu Xi) என்பவர் முதல் மன்னரானார். அடுத்து, பதின்மூன்று சக்கரவர்த்திகள் தொடர்ந்தார்கள். இவர்களைப் பற்றிய வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இல்லை: இதிகாசங்களை மட்டுமே நம்பவேண்டிய நிலை.

அறிவியல் முன்னேற்றமும் அட்டகாசமானது. கி.மு. 2500 – க்கு முன்னாலேயே மருத்துவ முறைகள் நடைமுறையில் இருந்தன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது, சீனர்களின் தனித்துவமான அக்யுபங்ச்சர். உடலின் பிரதான 12 இடங்களில் தோலிலும், தோலுக்கு அடியிலுள்ள திசுக்களிலும் ஊசிகள் சொருகுவார்கள். இதனால், நோய்த் தடுப்பு தரும் இயற்கைச் சுரப்பிகள் தூண்டிவிடப்படும் என்பது அடிப்படைக் கருத்து. உடல் அமைப்பு, நோய்கள் வரும் காரணங்கள், தடுப்பு முறைகள் ஆகியவை பற்றிய ஆழமான அறிவு இருந்தால்தானே இது சாத்தியம்? சீன டாக்டர்களே, உங்களுக்கு ஒரு சல்யூட்.

கி.மு. 2400 – த்திலேயே, வானியல் பற்றிய அறிவு இருந்தது. பல ஆய்வுக் கூடங்கள் இருந்தன.

3. கி. மு 1600 முதல் கி. மு 1046 வரை – ஷாங் வம்ச (Shang Dynasty) ஆட்சி

கி.மு. 1600 ல், டா யி (Da Yi ) என்னும் மன்னர், சீனாவின் வடக்கு மற்றும் மத்திய பாகங்களில் இருந்த பெரும்பாலான குட்டி ராஜாக்களைப் போரில் வென்றார். தெற்குப் பகுதி தவிர்த்த மிச்சச் சீனாவின் பெரும்பகுதி டா யி ஆட்சியின் கீழ் வந்தது. இவர் வம்சாவளியில் தொடர்ந்து 32 அரசர்கள் சீனாவை ஆண்டனர். ஷாங் என்றால் உயர்ந்த என்று பொருள். அந்த அடிப்படையில், ஷாங் என்னும் பெயர் வைக்கப்பட்டது. ஷாங் வம்சத்தில் மொத்தம் 33 மன்னர்கள். அன்றைய சீனப் பாரம்பரியப்படி, மன்னர் மரணமடைந்தால், அரியணை ஏறுவது அவர் மகனல்ல: அவருடைய அண்ணன் அல்லது தம்பி: இவர்கள் உயிரோடு இல்லாவிட்டால், சகோதரர்களின் மகன்கள் தலையில் கிரீடம் ஏறும்.

ஷாங் வம்ச மன்னர்கள் நல்லாட்சி நடத்தினார்கள். அவர்கள் தலைமையில் சீனா மாபெரும் முன்னேற்றங்கள் கண்டது. அந்தப் பாதையின் முக்கிய மைல்கற்கள் சில:

  • மண்பாண்டங்கள் பரவலாகப் பயன்பட்டன. இந்தப் பாத்திரங்களைத் தயாரிக்கத் திகிரி (Potter’s Wheel) பயன்படுத்தப்பட்டது.
  • வெண்கலம் தயாரிக்கும் கலை அன்றைய சீனர்களுக்குத் தெரிந்திருந்தது. வெண்கலப் பாத்திரங்களும், ஆயுதங்களும் புழக்கத்தில் இருந்தன.
  • கி.மு. 1500 – இல் எழுத்து வடிவ மொழி தொடங்கியது. ஆரம்பத்தில் ஆமை ஓடுகளில் எழுதினார்கள். பின்னாளில், களிமண் பாத்திரங்கள், மிருக எலும்புகள், கற்கள், வெண்கலப் பாளங்கள், பட்டுத் துணி ஆகியவற்றில் முக்கிய நிகழ்ச்சிகளைப் பதிவு செய்தார்கள். இவை அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்துள்ளன.
  • தசமக் கணித முறை (Decimal Arithmetic System) கண்டுபிடிக்கப்பட்டது. கூட்டல், கழித்தல் கணக்குகளுக்குக் குச்சிகள், எலும்புகள், மூங்கில் ஆகியவற்றைப் பயன்படுத்தினார்கள்.
  • வர்ணாசிரம முறை இருந்தது. அரசரும், பிரபுக்களும் உயர்ந்த ஜாதி: அடுத்து, மத குருக்கள், போர் வீரர்கள், கை வினைஞர்கள், விவசாயிகள் எனத் தர வரிசை. அடித்தட்டில் அடிமைகள்.
  • நகரங்களைச் சுற்றி கோட்டைகள் இருந்தன. அரசர், மத குருக்கள், போர் வீரர்கள் பூசாரிகள் ஆகியோரும் அவர்கள் குடும்பத்தினரும் மட்டுமே நகரத்துக்குள் வாழலாம். கை வினைஞர்கள், விவசாயிகள், அடிமைகள் நகரத்துக்கு வெளியேதான் வீடுகள் கட்டிக்கொள்ள வேண்டும்.
  • உயர் குடியினர் தங்கள் போக்குவரத்துக்குக் குதிரைகள் இழுக்கும் தேர்களைப் பயன்படுத்தினார்கள்.
  • மக்கள் ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டவர்கள். மறுபிறவியை நம்பினார்கள். மதச் சடங்குகளில் பலி கொடுக்கும் வழக்கம் இருந்தது. மனித பலியும் உண்டு.
  • விவசாயத்துக்கு அடுத்தபடியாக, மக்களின் முக்கியத் தொழில் வியாபாரம். ஆரம்ப காலங்களில் நத்தையின் மேலோடுகள் நாணயங்களாகப் பயன்பட்டன. பின்னாட்களில், வெண்கல நாணயங்கள் இந்த இடத்தைப் பிடித்தன.
  • வருடத்துக்கு 365 1/ 4 நாட்கள் என்று கண்டுபிடித்திருந்தார்கள். எந்த அடிப்படையில் இதைக் கண்டுபிடித்தார்கள் என்று தெரியவில்லை.
  • ஐநூறு ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்த ஷாங் குலத்துக்குக் கோடரிக் காம்பாய் வந்தார், 33- ம் அரசர் டி ஜின் (Di Xin). இவரும் நல்லபடியாகத்தான் ஆட்சியைத் தொடங்கினார். பெண் சபலம் கொண்ட இவர் சின்ன வீடு வைத்துக்கொண்டார். விரைவில் தலையணை மந்திரம் வேதமானது. தன் சொந்த மகனைக் கொன்றார். முக்கிய அமைச்சர்களைச் சித்திரவதை செய்து கழுவேற்றினார். மக்கள் கொதித்து எழுந்தார்கள். ஆட்சி கவிழ்ந்தது. டி ஜின் தற்கொலை செய்துகொண்டார்.
0

 

http://www.tamilpaper.net/?p=8219

Link to comment
Share on other sites

"சோம்பேறித் தனமும், ஆசைகளும்தாம் மனித முன்னேற்றத்தின் உந்துசக்திகள். காய்களையும், பழங்களையும் பறிக்க மரங்களில் ஏறவேண்டியிருந்தது. அதற்குப் பதிலாகக் கல்லை வீசி எறிந்தால், காயும் பழமும் கைகளில் வந்து விழுமே? மலைகளின் பெரிய பாறைகளை உடைத்துச் சிறு கற்களாக்கினான்."

Link to comment
Share on other sites

"வருடத்துக்கு 365 1/ 4 நாட்கள் என்று கண்டுபிடித்திருந்தார்கள். எந்த அடிப்படையில் இதைக் கண்டுபிடித்தார்கள் என்று தெரியவில்லை."

கண்டு பிடிக்கவில்லை. சொல்லி கொடுக்கபட்டது.

இது தான் அரை குறை விஞ்ஞானத்தின் பிரச்சினை. எல்லாம் தெரியும் ஆனால் தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 11

மரணத்தை வெல்ல விரும்பிய மன்னர்

எஸ்.எல்.வி. மூர்த்தி

Qinshihuang-178x300.jpg

சின் ஷி ஹூவாங்

4. கி. மு 1045 முதல் கி. மு.403 வரை – ஜோ வம்ச ஆட்சி

சீன வரலாற்றில் அதிக காலம், அதாவது 789 ஆண்டுகள் நீடித்த ஆட்சி இது. டி ஜின் தற்கொலைக்குப் பின் வூ ஜோ (Wu Zhou) என்னும் மன்னர் அரியணை ஏறினார். ஜோ வம்சாவளியைத் தொடங்கி வைத்தார். இவரைத் தொடர்ந்து 36 வாரிசுகள் சீனாவை ஆண்டனர். ஜோ வம்சாவளியில் சீனா கண்ட சில முக்கிய முன்னேற்றங்கள்:

ஷாங் ஆட்சிக் காலத்தில், சீனர்கள் வியாபாரத்தில் முதலில் நத்தையின் மேலோடுகளையும், அடுத்து வெண்கல நாணயங்களையும் பயன்படுத்தினார்கள் அல்லவா? கி.மு. 900 அல்லது கி.மு. 800 காலத்தில், நாணயங்களோடு கரன்சிகளும் சேர்ந்தன. இந்த நோட்டுக்கள் காகிதத்திலும், பட்டுத் துணிகளிலும் செய்யப்பட்டிருந்தன.

ஜோ வம்ச ஆட்சியில், அறிவுத் தேடலுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது. கன்ஃப்யூஷியஸ், லாவோஸி ஆகிய இரு தத்துவ மேதைகளின் சித்தாந்தங்களும் செழித்துத் தழைத்தது இப்போதுதான்.

கன்ஃப்யூஷியஸ் கி.மு. 551 முதல் கி.மு. 479 வரை, 72 ஆண்டுகள் வாழ்ந்தார். பிறரிடம் மரியாதை, பரந்த மனப்பான்மை, மன்னிக்கும் குணம், நன்றி காட்டுதல், விசுவாசம், தன்னம்பிக்கை, முன்னோரை வழிபடுதல் ஆகியவை இவருடைய முக்கிய கருத்துகள். கல்வியால் இந்தக் குணங்களை உருவாக்கலாம் என்று கன்ஃப்யூஷியஸ் நம்பினார். இதற்காக, ஒரு கல்விச் சாலையும் தொடங்கினார். இங்கே பட்டை தீட்டப்பட்டவர்கள் ஏராளம்.

லாவோஸி கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தார். இவரைப் பற்றி நிறையக் கதைகள் உள்ளன: ஆனால், ஆதாரங்கள் குறைவு. இவர் சித்தாந்தம் தாவோயிஸம் (Taoism) என்று அழைக்கப்படுகிறது. அனைத்து உயிர்களும், பொருள்களும் ஒரே இயற்கையின் பல வடிவங்கள். மனிதன் இயற்கையோடு ஒத்து வாழ வேண்டும் என்கிறது தாவோயிஸம்.

கி.மு. 543 – இல் ஜிக்கான் (Zichan) என்பவர் அரசரின் ஆலோசகராக இருந்தார். சீனாவின் விவசாயத்திலும், வியாபாரத்திலும் ஏராளமான சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். நாட்டின் எல்லைகளை வரையறுத்தல், ஆட்சி முறைகள், மந்திரிப் பதவிகளுக்குத் திறமைசாலிகளைத் தேர்ந்தெடுத்தல் ஆகியவற்றுக்கான நெறிமுறிமுறைகளைத் தொகுத்துச் சட்டங்களாக்கினர்.

ஆட்சியில் மக்களின் கருத்துகளுக்கு மதிப்பு கொடுத்து மாற்றங்கள் செய்யவேண்டும் என்று முதல் முதலாக உலக வரலாற்றில் ஜனநாயகக் குரல் கொடுத்தவர் ஜிக்கான்தான். இவர் உருவாக்கிய சட்டங்கள் வெண்கலப் பாளங்களில் பொறிக்கப்பட்டு, நாட்டின் பல பாகங்களிலும் வைக்கப்பட்டன, நடைமுறை வாழ்க்கையில் பின்பற்றப்பட்டன. ஒவ்வொரு ஊரிலும் ஒரு நீதிபதி இருந்தார். குற்றங்கள், குற்றவாளிகள் பற்றி அவரிடம் தெரிவிப்பது பொதுமக்கள் கடமை. கசையடி, சித்திரவதை போன்ற தண்டனைகளை, குற்றங்களுக்கு ஏற்றபடி நீதிபதிகள் விதித்தார்கள்.

கி.மு. 500 – இரும்பு உருக்குவதும், இரும்புக் கருவிகள் செய்வதும் சீனர்கள் வசப்பட்டது. அவர்கள் முதலில் உருவாக்கிய இரும்புக் கருவி, ஏர். வீட்டு சாமான்களையும், வாள், ஈட்டி போன்ற ஆயுதங்களையும் இரும்பில் வடிவமைப்பது விரைவில் தொடர்ந்தது.

பீஜிங், ஹாங்ஜோ (Beijing-Hangzhou) ஆகிய இரு நகரங்களை இணைக்கும் கிராண்ட் கேனல் (Grand Canal) இன்று 1776 கிலோ மீட்டர் தூரம் ஓடுகிறது. உலகின் மிகப் பெரிய செயற்கை நதி என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கால்வாய் முதலில் தோண்டப்பட்டது கி.மு. 486 – இல்.

5. கி. மு. 403 முதல் கி. மு.221 வரை – உள்நாட்டுப் போர்கள் (Warring States) காலம்

கி.மு. 403 வாக்கில், ஜோ பரம்பரை அரசர்களின் பிடி தளரத் தொடங்கியது. அவர்கள் ஆட்சி நீடித்தாலும், நாடு முழுக்கப் பல குறுநில மன்னர்கள் போர்க்கொடி தூக்கினார்கள். மன்னர்கள் மற்றும் மக்களுடைய மனங்களையும் நேரத்தையும் யுத்தங்களே ஆக்கிரமித்தன என்றபோதும், பிற துறைகளிலும் வளர்ச்சிகள் இருந்தன. குறிப்பாக வானியல் ஆராய்ச்சியில் பலர் ஈடுபட்டிருந்தார்கள். அவர்களின் கண்டுபிடிப்புகள் எதிர்பார்க்கவே முடியாதவை.

கன் டே (Gan De), ஷி ஷென் (Shi Shen) ஆகிய இரண்டு வானியல் அறிஞர்கள் விண்மீன்களின் பட்டியல் ஒன்று தயாரித்தார்கள். கி.மு. 350 வரலாற்று ஆவணங்களின் பொற்காலம். டா டே சிங் (Tao Te Ching) என்னும் வரலாற்றுப் புத்தகமும், சமுதாய அமைப்பு, நிர்வாகம், மதச் சடங்குகள் ஆகியவற்றை விவரிக்கும் நூலும் எழுதப்பட்டன. இந்த நூல் Record of Rites என்று இன்று அழைக்கப்படுகிறது. கி.மு. 300. எர்யா (Erya) என்னும் அகராதியும், கலைக் களஞ்சியமும் இணைந்த புத்தகம் தொகுக்கப்பட்டது. இந்த நூலின் சில பாகங்கள் இன்றும் நமக்குக் கிடைக்கின்றன.

கி.மு. 5, கி.மு. 6 நூற்றாண்டுகளில் வந்த கன்ஃப்யூஷனிஸம், தாவோயிஸம் போல், கி.மு. 305 – இல் உருவான பிரபல தத்துவம் யின் – யாங் (yin yang). மாறுபட்ட இயல்புகள் ஒன்றோடொன்று சார்ந்திருப்பதும் ஒத்துப்போவதும் இயற்கையின் நியதி, மனித வாழ்க்கையின் அடிப்படை என்று இந்தக் கொள்கை சொல்கிறது. யின் என்பது உலகம், பெண்கள், இருட்டு, பள்ளத்தாக்குகள், நீரோடைகள். யாங் வகையில் சொர்க்கம், ஆண்கள், வெளிச்சம், மலைகள்.

யின் – யாங் தத்துவம் யாரால் உருவாக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால், பிரபலமாக இருந்தது. இதைக் கற்றுத்ததரும் பிரத்தியேகப் பள்ளிகள் இருந்தன. யின் – யாங் மத சார்பான கொள்கையாக இருக்காமல், நடைமுறையிலும், குறிப்பாகச் சீனாவின் பாரம்பரிய மருத்துவ முறையான அக்குபஞ்சரின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது.

யின் – யாங் தத்துவப்படி, நம் உடலில் மார்பு, உள் அங்கங்கள், இடுப்புக்குக் கீழே இருக்கும் பாகங்கள், ரத்தம், உடல் சுரக்கும் திரவங்கள் யின் வகை: தலை, உடலின் பின்புறம், தோல், ஜீரண உறுப்புகள் யாங் வகை. எந்த நோய்க்குச் சிகிச்சை கொடுத்தாலும், யின் – யாங் சமநிலையில் இருக்க வேண்டும்.

நோயாளியிடம் அவர்களுடைய சுவை, நுகர்தல், கனவுகள் ஆகியவைபற்றி விலாவாரியாகக் கேள்விகள் கேட்பார்கள். அதே நேரத்தில், வெவ்வேறு அழுத்தங்கள் தந்து, உடலில் பல்வேறு பாகங்களில், பல்வேறு நேரங்களில் நாடித் துடிப்பைப் பரிசோதிப்பார்கள். ரத்த சோகை நோய்க்கு இரும்புச் சத்து அளித்தல், தொழுநோய்க்கு சால்முக்ரா எண்ணெய் தருதல் ஆகிய மேற்கத்திய மருத்துவ சிகிச்சைகள் சீனப் பாரம்பரியம் போட்ட பாதைகள்தாம்.

6. கி. மு. 221 முதல் கி. மு.206 வரை – சின் வம்ச ஆட்சிக் (Qin Dynasty) காலம்

உள்நாட்டுப் போர்கள் காலத்தில், ஏழு சிற்றரசர்கள் ஒருவரோடு ஒருவர் முட்டி மோதிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் சின் பிரதேச மன்னரான சின் ஷி ஹூவாங் (Qin Shi Huang) மற்ற ஆறு அரசர்களையும் வென்றார், ஏழு பிரதேசங்களையும் தன்னுள் அடக்கிய பிரம்மாண்ட சீனாவின் அதிபதியானார். சீனா பூகோளப் பரப்பு விரிந்த ஒரே நாடானது இப்போதுதான்.

சீனா என்னும் நாட்டுப் பெயரே, சின் என்னும் வம்சப்பெயரில் வந்ததுதான். பிரதேச மன்னர்கள் தங்களைப் பிரபுக்கள் என்று அழைத்துக்கொண்டார்கள். ஆனால், சின் ஷி ஹூவாங், இதிகாசங்களின்படி, தனக்குத் தானே, சக்கரவர்த்தி என்று பட்டம் சூட்டிக்கொண்டார். பட்டம், அதிகாரம் என்று அலைந்த இந்த விசித்திரமான மனிதர் செய்த நல்ல காரியங்களும் உண்டு, பைத்தியக்கார வேலைகளும் உண்டு.

சீன மொழியின் பேச்சு முறை ஏழு பிரதேசங்களிலும் ஒன்றாக இருந்தது. ஆனால், எழுத்து வடிவம் இடத்துக்கு இடம் மாறுபட்டது. சின் ஷி ஹூவாங் இதில் சீர்திருத்தம் கொண்டுவந்தார். ஒரே வடிவம், ஒரே அளவு கொண்ட எழுத்துகளை நாடு முழுக்கப் பயன்படுத்தவேண்டும் என்னும் அரசாணை பிறந்தது. தாம் எல்லோரும் ஒரே நாடு என்னும் உணர்வு சீனா முழுக்க உருவாவதற்கு இந்தச் சீர்திருத்தம் காரணமாக இருந்தது.

அதிகாரிகளை நியமிப்பதில் பாசம், பந்தம் ஆகியவற்றுக்கு இடமே கிடையாது, திறமை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும் என்னும் கொள்கை நடைமுறைக்கு வந்தது, கண்டிப்பாக அமுல் படுத்தப்பட்டது.

இன்று கடைவீதிகளுக்குப் போய்ப் பாருங்கள். பொம்மைகள், வீட்டு உபகரணங்கள், செல்போன்கள் எனச் சீனத் தயாரிப்புகள் வகை வகையாக, விதம் விதம் விதமாய், மலை மலையாய்க் குவிந்து கிடக்கின்றன. இன்றல்ல, காலம் காலமாகவே, சீனர்கள் கண்டுபிடிப்புக் கில்லாடிகள். அவர்களுடைய பல்லாயிரம் கண்டுபிடிப்புகளில், நான்கு கண்டுபிடிப்புகள் உலக அறிவியலைப் பெருமளவில் பாதித்தவையாகக் கருதப்படுகின்றன. அவை – திசைகாட்டி, வெடி மருந்து, காகிதத் தயாரிப்பு, அச்சுத்தொழில் ஆகியவை.

இவற்றுள், திசைகாட்டி, சின் வம்ச ஆட்சிக்காலத்தில், சுமார் கி.மு. 221 – 206 காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. காந்தக் கலை (Magnetism) இதன் அடிப்படைக் கொள்கை. கி.மு. 4-ம் நூற்றாண்டிலேயே, சீன சோதிடர்கள் காந்தக் கற்களைப் பயன்படுத்தினார்கள். ஆனால், திசைகாட்டிகளாகக் காந்தங்களை உபயோகப்படுத்தத் தொடங்கியது சின் ஆட்சியில்தான். முதல் திசைகாட்டியில், ஒரு கரண்டி, வெண்கலத் தட்டின்மேல் வைக்கப்பட்டிருந்தது.

இப்படிப் பல துறைகளில் முத்திரை பதித்த சக்கரவர்த்தியின் அடிமனதில் எப்போதும் பல பயங்கள் – தன்னை யாராவது கொலை செய்துவிடுவார்களோ, தான் போரில் வென்ற ஆறு அண்டைப் பிரதேசங்களும் ஒன்றாகக் கை கோர்த்துத் தனக்குக் குழி பறிப்பார்களோ? ஆகவே எதிரிகளின் தாக்குதலிலிருந்து தன்னையும் நட்டையும் பாதுகாக்க எல்லா நடவடிக்கைகளும் எடுக்கவேண்டும் என்பதில் சின் ஷி ஹூவாங் உறுதியாக இருந்தார். அவருடைய பயம், இன்றும் நீடிக்கும் அற்புதமான உலக அதிசயம் உருவாகக் காரணமாக இருந்தது. அந்த அதிசயம் – சீனப் பெரும் சுவர்.

இன்று சுமார் 8850 கிலோ மீட்டர் நீளத்துக்கு விரியும் பெரும் சுவரைத் தனித் தனிப் பதுகாப்புச் சுவர்களாக சின் ஷி ஹுவாங் முதலில் கட்டினார். பல்லாயிரம் தொழிலாளிகள் இந்தப் பணியில் ஈடுபட்டதாகவும், கணக்கில்லாதவர்கள் வேலைப் பளுவால் இறந்ததாகவும் குறிப்புகள் சொல்கின்றன. (கி.பி. 1400 – க்குப் பின் வந்த மன்னர்கள் தனிச் சுவர்களை இணைத்து ஒரே சுவராக மாற்றினார்கள்.)

தான் மட்டுமே புத்திசாலி, தன்னோடு ஒத்துப் போகாதவர்களை ஒழித்துக்கட்டவேண்டும் என்று சின் ஷி ஹூவாங் நினைத்தார். அவர் ஆட்சிக் காலத்தில், 460 – க்கும் அதிகமான அறிஞர்களுக்கு மரண தண்டனை விதித்தார். முந்தைய ஆட்சிகள் பற்றிய சில ஆவணங்கள் அவருக்குப் பிடிக்கவில்லை. அவற்றைத் தீயிட்டுக் கொளுத்தினார்.

 

picture_e7ed8f80204f136e95991848ac96aac2

தான் அழிவே இல்லாத நிரந்தர மனிதன் என்று சின் ஷி ஹூவாங் நினைத்தார். தனக்குச் சாவே வராமல் தடுக்கும் மருந்துகள் கண்டுபிடிக்க, நிரந்தர மருத்துவர் குழுவை நியமித்தார். அவர்கள் பாதரசம் கலந்த பல அமிர்தங்களை அவருக்குக் கொடுத்தார்கள். பாதரசம் உடலில் கலந்த முக்கிய காரணத்தால் தனது 49வது வயதில் மரணமடைந்தார்.

சாவை நினைத்துப்பார்க்கக்கூட பயந்த மாமன்னர், தன் கல்லறையையும் ஏற்பாடு செய்திருந்தது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். களிமண்ணால் செய்யப்பட்ட எட்டாயிரம் போர் வீரர் பொம்மைகள் (Terracota Army என்று இவற்றை அழைக்கிறார்கள்.) தன் உடலோடு சேர்த்துப் புதைக்கப்படவேண்டும் என்பது அவர் இறுதி ஆசையாக இருந்தது. அந்த பொம்மைகள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளன. கலைநயம் கொண்ட இந்த எட்டாயிரம் பொம்மைகளில், ஒரு பொம்மைகூட இன்னொன்றுபோல் இல்லை. தன் விபரீத ஆசையில்கூட, நிர்வாகத் திறமையையும், கலை ஆர்வத்தையும் காட்டியிருக்கும் சின் ஷி ஹூவாங் நம் புரிதலைத் தாண்டிய விசித்திர மனிதர்!

கி.மு. 210-ல் சின் ஷி ஹூவாங் மரணமடைந்தபின், அவர் வம்ச ஆட்சி வெறும் நான்கு ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. இவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் அரசு கட்டில் ஏறினார். அவருக்குத் தலைமை அமைச்சராக இருந்த தம்பி அண்ணனைக் கொன்றார். திறமையே இல்லாத அவரை, எதிரிப் படைகள் வீழ்த்தின. சின் வம்ச ஆட்சி பதினைந்தே வருடங்களில் அஸ்தமனமானது. அடுத்து வந்தது – ஹான் வம்ச ஆட்சி.

0

http://www.tamilpaper.net/?p=8240

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய நாகரிகங்கள் /அத்தியாயம் 12
சீனா என்றொரு அதிசயம்

எஸ்.எல்.வி. மூர்த்தி


images1.jpg

7. கி. மு. 206 முதல் கி.பி. 220 வரை – ஹான் வம்ச (Han Dynasty) ஆட்சிக் காலம்

ஹான் ஆட்சிக் காலத்தில் சீனாவின் பொருளாதாரமும் நாகரிகமும் மாபெரும் வளர்ச்சிகள் கண்டன. அவற்றில் சில முக்கிய மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் பார்ப்போம்.

அரசு விவசாயத்தில் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தது. பெரிய நிலச்சுவான்தாரர்களின் நிலங்களை அரசுடைமையாக்கி, ஏழைகளுக்குப் பங்கிட்டுக்கொடுத்தது. ஒரே ஒரு நிபந்தனை – அவர்களேதான் அந்த நிலங்களை உழுது பயிரிடவேண்டும், வேறு யாருக்கும் நிலத்தை விற்க முடியாது. விவசாயிகள், பயிர்ச் சுழற்சி, உரங்கள் பயன்படுத்துதல் ஆகிய முறைகளைப் பயன்படுத்தத் தூண்டப்பட்டார்கள். இவற்றால், உற்பத்தி பெருகியது. ஏரோட்டுபவர்கள் கையில் பணம் புழங்கியது. நெசவு, பட்டுத் தொழில் போன்ற உபதொழில்களில் பணத்தை முதலீடு செய்தார்கள். சிறு தொழில்கள் வளர்ந்தன.

பட்டுத் தொழிலில் சீனர்கள் முன்னோடிகளாக இருந்தார்கள். கி.மு. 3630 லேயே, பட்டுப் புழுக்கள் வளர்க்கவும், நூல் எடுக்கவும், துணி நெய்து சாயம் பூசவும் அவர்கள் தெரிந்துகொண்டிருந்தார்கள். காலப்போக்கில், பட்டுத் தொழில் பெண்களின் ஏகபோகமானது. இது வெறும் தொழில் மாற்றமாக இருக்காமல், ஆண்களும், பெண்களும் சரி நிகர் சமானமாகும் சமுதாயப் புரட்சிக்கு வித்திட்டது.

பட்டு தங்களுடைய தனித்திறமைகளுள் ஒன்று என்பதைச் சீனர்கள் உணர்ந்தார்கள். இந்தப் பலத்தை, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சாமர்த்தியமாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். சீனாவுக்கும், ஆப்கனிஸ்தானுக்கும் வியாபாரத் தொடர்புகள் இருந்தன. நீலக்கல், சிவப்புக் கல் ஆகியவற்றைச் சீனர்கள் ஆப்கானியர்களிடம் வாங்கினார்கள்: மாற்றாகப் பட்டு நூலும், ஆடைகளும் தந்தார்கள்.

உலக வியாபார சரித்திரத்தில், முக்கிய இடம் பிடிக்கிறது பட்டுச் சாலை (Silk Route). கி.மு. 190ல் ஹூயி (Hui) சக்கரவர்த்தியின் தொலைநோக்குப் பார்வையில் இது உருவாக்கப்பட்டது. சாதாரணமாக, பொதுமக்களின் போக்குவரத்துக்கும், ராணுவக் காரணங்களுக்காகவும்தான் அன்றைய அரசர்கள் சாலைகள் அமைப்பார்கள். இந்த இலக்கணங்களை மீறிய வணிகப் பாதை பட்டுச் சாலை. இது 6400 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. சீனாவின் சியானில் தொடங்கி, வடமேற்குத் திசையில் சீனப் பெரும் சுவர் வழியாகச் சென்று, பாமீர் மலைகளின் வழியாக ஆப்கனிஸ்தானைக் கடந்து மத்தியதரைக் கடலின் கிழக்குப் பகுதியில் முடிவடைகிறது. முதலில், சீன ஆப்கானிஸ்தான் வணிகப் பொருட்கள் ஒட்டகங்கள் மூலமாகப் பரிவர்த்தனம் செய்யப்பட்டன.

ஹான் மன்னர்கள் பட்டுக்குப் புதிய சந்தை கண்டார்கள். ரோம சாம்ராஜ்ஜியத்துடன் மிகப் பெரிய அளவில் வியாபாரத்தை வளர்த்தார்கள். ரோமாபுரி ஆண்களும், பெண்களும் சுகபோகப் பிரியர்கள். தங்களைச் சிங்காரித்துக்கொள்வதில் ஒருவரோடு ஒருவர் போட்டி போடுபவர்கள். இவர்களுக்குச் சீனப் பட்டின்மீது மோகம் வந்தது. ரோமாபுரி ஆப்கானிஸ்தானைப் பின் தள்ளி, சீனாவின் முக்கிய வணிகச் சந்தையானது. இதனால், இந்தப் பாதைக்கே பட்டுச் சாலை என்னும் பெயர் வந்தது.

கி.மு. 139 ல் வூ (Wu) சக்கரவர்த்தியாக இருந்தார். சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி தோன்றியது 1921ல் தான். ஆனால், இவர் பொதுவுடைமைக் கருத்துகளை கி.மு. 139ல் விதைத்துவிட்டார். அண்டைய பிரதேசங்களோடு வூ பல போர்கள் நடத்தினார். எக்கச்சக்கச் செலவு. கஜானா காலியாகிவிட்டது. நாட்டு மக்கள்மேல் வரிகளைச் சுமத்தி அவர்களுடைய வெறுப்பைச் சம்பாதித்துக்கொள்ள அவர் விரும்பவில்லை. நாட்டில் பல வியாபாரிகள் செல்வத்தில் கொழித்தார்கள். சக்கரவர்த்தி அந்த வியாபாரங்களை அரசுடைமையாக்கினார்.

வூ சக்கரவர்த்தி, சீனாவின் வெளிநாட்டு உறவுகளிலும், புதிய அணுகுமுறையைக் கொண்டு வந்தார். அதுவரை, சீனாவின் வெளியுலகத் தொடர்புகள் வெறும் வியாபார உறவுகள்தாம். இவற்றைத் தாண்டி, பிற நாடுகளின் ஆட்சி முறை, கலாசாரம் ஆகியவற்றைச் சீனாவின் முன்னேற்றத்துக்குப் பயன்படுத்த விரும்பினார். ஜாங் சியன் (Zhang Chien) என்னும் தம் நம்பிக்கைக்குப் பாத்திரமான அறிஞரை இதற்காகத் தேர்ந்தெடுத்தார். இவர் சீனாவின் அண்டைப் பிரதேசங்களுக்குப் பயணம் செய்தார். இவருடைய உதவியாளர் உஸ்பெக்கிஸ்தான், ஆப்கனிஸ்தான் நாடுகளுக்கு விஜயம் செய்தார். இந்தத் தேடல்களில் கிடைத்த விவரங்களையும், அனுபவங்களையும், சக்கரவர்த்திக்கு அறிக்கையாகச் சமர்ப்பித்தார். ஒவ்வொரு பிரதேசத்தைப் பற்றியும், இந்த அறிக்கை ஆழப்பார்வை பார்க்கிறது.

இவரோ, இவர் உதவியாளரோ, இந்தியாவுக்கு வரவில்லை. ஆனால், பல இடங்களில் இந்தியா பற்றிக் கேள்விப்பட்டார்கள். அதன் அடிப்படையில். இந்தியாவின் தட்ப வெட்ப நிலை, இந்தியப் போர் யானைகள் போன்றவை பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இவை மிகச் சரியான விவரங்கள்.

பட்டுத் தொழிலில் பெண்கள் முக்கிய இடம் வகித்ததைப் பார்த்தோம். மெள்ள, மெள்ள, சமுதாயத்தின் பல்வேறு துறைகளில் பெண்கள் முத்திரை பதிக்கத் தொடங்கினார்கள். கி.மு. 48 – இல், பான் (Ban) என்னும் கவிதாயினி இருந்தார். லியூ ஸியாங் (Liu Xiang) என்னும் அறிஞர், சக்கரவர்த்தியின் வழிகாட்டலில், சீன வரலாற்றில் சிகரங்கள் தொட்ட 125 பெண்மணிகளின் வாழ்க்கை வரலாறுகளைத் தொகுத்தார். எட்டு அத்தியாங்களாகப் பட்டுத் துணிகளில் எழுதப்பட்டுள்ள இந்தத் தொகுப்பின் பெயர், தலை சிறந்த பெண்மணிகளின் வரலாறுகள் (Biographies of exemplary women). சிறந்த தாய்மார்கள், கற்புத் திலகங்கள், உயர்ந்த கொள்கைகளைக் கடைப்பிடிப்பவர்கள், சொல்லின் செல்வர்களான பேச்சாளர்கள் என்று பல அத்தியாயங்கள். இந்தச் சாதனையாளர்களில் பலர் சாமானியர்கள். அன்றைய நாட்களிலேயே, ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம அந்தஸ்து, குடும்பப் பின்னணியைவிடத் திறமைக்கு அதிக மதிப்பு!

கி.மு. 124 லேயே, அரசுப் பதவிகளுக்குத் திறமைசாலிகளைத் தெர்ந்தெடுக்க, நாடு தழுவிய தேர்வுகள் நடத்தப்பட்டன. திறமையை மதித்த பண்டைய சீனா, நாட்டு முன்னேற்றத்துக்குக் கல்வி அறிவு அவசியம், எல்லோருக்கும் கல்வி அறிவு வழங்கவேண்டும் என்பதில் கண்டிப்பாக இருந்தது. கி.பி. 3 – இல் பிங் (Ping) சக்கரவர்த்தி நாடு தழுவிய கல்வித் திட்டம், பாட முறை, அரசுக் கல்விச் சாலைகள் ஆகியவற்றை அறிமுகம் செய்தார். சீனாவின் பிற்கால வளர்ச்சிகளுக்கு உறுதியான அடித்தளம் தந்தது இந்தக் கல்வி முறைதான்.

ஹான் ஆட்சியில் சீனா, அறிவியல், தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளிலும், பல உச்சங்கள் தொட்டது. கி.மு. 30 – இல் அவர்கள் சக்கரத் தள்ளுவண்டிகள் பயன்படுத்தினார்கள். கி.பி . 8 – ம் ஆண்டில், லியூ ஷீன் (Liu Xin) என்னும் வானியல் அறிஞர் நட்சத்திரங்களின் பட்டியல் தயாரித்தார். இவர் பட்டியலில் இருந்த விண்மீன்களின் எண்ணிக்கை 1080. ஒரு வருடத்தில் 365.25016 நாட்கள் என்று இவர் கணக்கிட்டார். 365.14016 என்று இன்றைய அறிவியல் சொல்கிறது. நவீன உபகரணங்கள் இல்லாமலே, இத்தனை துல்லியமாகக் கணக்கிட்ட சீனர்களின் திறமை பிரமிக்கவைக்கிறது.

சீனர்களின் பல்லாயிரம் கண்டுபிடிப்புகளில், உலக அறிவியலைப் பெருமளவில் பாதித்தவையாகக் கருதப்படும் நான்கு கண்டுபிடிப்புகள், திசைகாட்டி, வெடி மருந்து, காகிதத் தயாரிப்பு, அச்சுத்தொழில் என்று சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம், திசைகாட்டி சின் ஆட்சிக் காலத்தில் வந்தது. வெடி மருந்தும், காகிதத் தயாரிப்பும், ஹான் ஆட்சிக்காலத்தின் அறிவியல் பெருமைகள்.

சீனச் சக்கரவர்த்திகளும், மக்களும் மரணமே இல்லாத வாழ்க்கைக்கு ஆசைப்பட்டார்கள். அரச ஆதரவில், ஏராளமானவர்கள், சாவை வெல்லும் மருந்துகள் செய்யும் ஆராய்ச்சிகள் செய்துவந்தார்கள். கைகளில் கிடைக்கும் விநோதப் பொருட்களையெல்லாம் கலப்பார்கள். ஏதாவது மேஜிக் நடக்குமா என்று காத்திருப்பார்கள். கி.மு. 9 – ம் நூற்றாண்டில், அப்படிப்பட்ட ஒரு குழுவினர், வெடியுப்பு, கந்தகம், கரி ஆகிய மூன்றையும் ஏதோ விகிதத்தில் கலந்தார்கள். அதைப் பொடித்து, தேனில் குழைத்து வரும் லேகியம் தங்களை அமரர்கள் ஆக்கும் என்று அவர்கள் நம்பி பொடிக்கத் தொடங்கினார்கள். பொடி வெடித்தது. அமரர்கள் ஆக ஆசைப்பட்டவர்கள் இறந்துபோனார்கள். ஆனால், போர்க்க்கால ஆயுதமாக, அழிவின் மூலப்பொருளாக, வெடிமருந்தின் விபரீதக் கதை ஆரம்பமானது.

வெடிமருந்தை இப்படியொரு விபத்தில்தான் கண்டுபிடித்தார்கள். ஆனால், காகிதத் தயாரிப்பு திட்டமிட்ட அறிவியல் முன்னேற்றம். கி.பி. 100 வாக்கில் பட்டுத் துணிகளிலும், மூங்கில் தட்டிகளிலும் மக்கள் எழுதிவந்தார்கள். பட்டு அதிக விலை: மூங்கில் எடை அதிகமானது. இதற்கு ஒரு தீர்வு கண்டுபிடிக்கும் வேலையைச் சக்கரவர்த்தி, கே லுன் (Cai Lun) என்ற தன் ஆலோசகரிடம் ஒப்படைத்தார். சகலகலாவல்லவர் கே லுன், சணல், துணி, மீன் பிடிக்கும் வலைகள் ஆகியவற்றைச் சேர்த்துக் கூழாக்கினார். இந்தக் கூழை மெல்லிய பாளங்களாக்கினார். கி.பி. 105ல் காகிதம் பிறந்தது. மனித குலத்தின் அறிவுத் தேடலை ராஜபாட்டை ஆக்கிய மகா கண்டுபிடிப்பு!

கே லுன் ஒரு திருநங்கை. அன்று திருநங்கைகள் சக்கரவர்த்திகளின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாக இருந்தார்கள். அதிலும், குறிப்பாக, கி.பி. 75 முதல் கி.பி. 88 வரை சீனாவை ஆண்ட ஜாங் (Zhang) சக்கரவர்த்தி காலம் முதல், திருநங்கைகள் அரசுப் பதவிகள் வகிக்கவும், நிர்வாகத்தில் ஈடுபடவும் ஆரம்பித்தார்கள். பல நூற்றாண்டுகளுக்கு இந்தப் பாணி தொடர்ந்தது. இதன் ஒரு வெளிப்பாடுதான் கே லுன்!

கி.பி. 6 – ம் ஆண்டில், சில அரசியல் சதிராட்டங்கள் நடந்தன. ரூஸி யிங் (Ruzi Ying) என்பவர் சக்கரவர்த்தியானார். அப்போது அவர் வயது ஒன்று! ஆமாம், ஒரு சதிகாரக் கும்பல் தொட்டில் குழந்தையை டம்மி ராஜாவாக்கினார்கள். இரண்டே ஆண்டுகளில், ரூஸி யிங் ஆட்சி கவிழ்ந்தது. ஷின் வம்சாவளியினர் (Xin Dynasty) ஆட்சியைக் கைப்பற்றினார்கள். ஆனால், வெறும் 15 ஆண்டுகள் மட்டுமே ஷின் ஆட்சி நீடித்தது. கி.பி. 23 – இல் ஹான் வம்சத்தார் அரியணையை மறுபடியும் கைப்பற்றினார்கள்.

ஹான் வம்ச ஆட்சியில் சீனா அமைதிப் பிரதேசமாக இருந்தது, வியத்தகு முன்னேற்றங்கள் கண்டது. காரணம் – தொலைநோக்குப் பார்வை கொண்ட மன்னர்கள். கி.பி. 168 க்குப் பின் வந்த சக்கரவர்த்திகள் பரம்பரைக்குத் திருஷ்டி பரிகாரமானார்கள். நாடு மூன்று பகுதிகளாகப் பிரிந்தது. தொடர்ந்த ஆட்சி, கி.பி. 221 முதல் கி.பி. 280 வரை நீடித்தது: மூன்று அரசுகள் ஆட்சிக் காலம் (Three Kingdoms) என்று இது அழைக்கப்படுகிறது. தொடர்ந்த 300 ஆண்டுகள் நிலையில்லா ஆட்சிகள். கி.பி. 580 – இல், வென் டீ (Wen Di) என்னும் குறுநில அரசர் உள்நாட்டுக் குழப்பங்களை அடக்கி, சீனாவை மறுபடியும் ஒருங்கிணைத்தார். ஆனால், அவர் நிறுவிய ஸ்வீ வம்ச ஆட்சி (Sui Dynasty) கி. பி. 580 முதல் கி.பி. 618 வரை, ஆண்டுகள் மட்டுமே நீடித்தது, சீனாவில் மறுபடி வசந்தம் வந்தது கி.பி. 618 – இல் தொடங்கிய டாங் வம்ச ஆட்சியில்தான்.

0


http://www.tamilpaper.net/?p=8265

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 13

சீனாவின் அதிசயம் தொடர்கிறது

எஸ்.எல்.வி. மூர்த்தி

edu1.jpg

8. கி. பி. 618 முதல் கி.பி. 906 வரை – டாங் வம்ச (Tang dynasty) ஆட்சிக் காலம்

சீன வரலாற்றிலும், நாகரிக வளர்ச்சியிலும் டாங் ஆட்சியின் 288 வருடங்கள் பொற்காலம். பல்வேறு துறைகளில் நாடு முன்னேற்றம் கண்டது. குறிப்பாக, எழுத்து, இசை ஆகிய படைப்புக் கலைகளில் சீனா புதிய அடித்தடங்கள் பதித்தது.

கி.பி. 624. ஒயாங் ஜுன் (Ouyang Xun) என்னும் அறிஞர் யிவென் லெஜ்ஜூ* (Yiwen Leiju) என்னும் நூலை எழுதினார். அந்நாள்வரை சீனாவில் இருந்த முக்கிய இலக்கியங்களை 47 வரிசைகளாகத் தொகுத்துத் தரும் இந்தப் புத்தகம், இலக்கிய ரசிகர்களின் ரசனைக்கு மட்டுமல்ல, அன்றைய சீன வாழ்க்கைமுறையைத் தெரிந்துகொள்ள ஆசைப்படும் அனைவருக்கும் ஒரு பொக்கிஷம்.

(*வரிசைப்படுத்தப்பட்ட இலக்கியத் தொகுப்பு என்று பொருள்).

xuanzang-travels-mapBT-300x257.jpg

நம் எல்லோருக்கும் பரிச்சயமான ஒரு மனிதர் இதோ வருகிறார். அவர்தான் சுவான்ஸாங் எனப்படும் யுவான் சுவாங் (Xuanzang). இந்தியாவோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர். யுவான் சுவாங். சீன நாட்டுப் புத்தத் துறவி. புத்த மதத்தைப் பற்றி, அவருக்குள் பல கேள்விகள். தன் அறிவுத் தாகத்தை, இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் நாலந்தா மடாலயத் துறவிகள்தாம் தணிக்கமுடியும் என்று நினைத்தார். கி.பி. 629 – இல் சீனாவிலிருந்து கால்நடையாகப் புறப்பட்டார். நான்கு வருட நீண்ட நெடும் பயணம். புத்த மதத்தின் நடமாடும் பல்கலைக்கழகமாக அவர் தாயகம் திரும்பியபோது, சீனா பெருமித வரவேற்பளித்தது. கி.பி. 650 – இல், பியான்ஜி (Bianji) என்னும் புத்த பிட்சு, யுவான் சுவாங்கின் பயணக் குறிப்புகளைப் புத்தகமாகத் தொகுத்து எழுதினார்.

எழுத்து உலகில் வகை வகையான படைப்புகள் வந்தன. (இவற்றைப் புத்தகங்கள் என்று குறிப்பிட்டாலும், அச்சடிக்கும் கலை அப்போது கண்டுபிடிக்கப்படாததால், இவை காகிதம், மூங்கில் தகடுகள், பட்டுத் துணி போன்றவற்றில் எழுதப்பட்டன).

கி.பி. 648 – ஜின் வம்ச ஆட்சியை விவரிக்கும் புத்தகம் அரசாங்கத்தால் வெளியிடப்பட்டது. கி.பி. 265 முதல் கி.பி. 420 வரையிலான காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளின் அற்புத ஆணவம் இந்தப் புத்தகம்,

கி.பி. 657 – 833 வகை இயற்கை மருந்துகள் / மூலிகைகள் பற்றியப் புத்தகம் வெளியாகிறது.

கி.பி. 710 – 52 அத்தியாயங்கள் கொண்ட ஷிட்டாங் (Shitong) என்னும் வரலாற்று நிகழ்ச்சிகளின் தொகுப்பு நூல் அரசால் கொண்டுவரப்படுகிறது.

கி.பி. 713 – கையுவான் (Kaiyuan) என்னும் பட்டுத் துணியில் எழுதப்படும் நாளிதழ் அரசால் வெளியிடப்படுகிறது. அரசியல் அறிவிப்புகள், நாட்டு நடப்புகள் ஆகியவை முக்கிய அம்சங்கள்.

கி.பி. 719 – கௌதம சித்தா எழுதிய ஜோசியப் புத்தகம். இந்த வானியல் அறிஞர் இந்தியாவிலிருந்து சீனா சென்று குடியேறியவர்.

கி.பி. 785 – உலகின் பல நாடுகளைப் பூகோள ரீதியாக அறிமுகம் செய்யும் பிரம்மாண்ட ஆராய்ச்சிப் புத்தகம் எழுதத் தொடங்குகிறார், ஜியா டான் (Jia Dan). இவர் பூகோள மேதை, அரசு அதிகாரி. ஜப்பான், கொரியா, இந்தியா, ஸ்ரீலங்கா, ஈராக் ஆகிய நாடுகள்பற்றி, இவர் தந்திருக்கும் விவரங்கள் வியக்கவைக்கின்றன.

கொஞ்சம் பொறுங்கள். இன்னும் சில வியப்புகள் காத்திருக்கின்றன. கி.பி. 868 – இல், ஒரு பக்க புத்தமத ஞான நூலான வைர சூத்திரம் உலகத்திலேயே முதன் முறையாகக் காகிதத்தில் அச்சடிக்கப்பட்டது. இந்திய சம்ஸ்கிருத நூலின் மொழிபெயர்ப்பு இது என்பது நாம் பெருமைப்படக்கூடிய சமாச்சாரம்.

Woodblock Printing என்னும் அச்சுமுறை இதற்குப் பயன்படுத்தப்பட்டது. மரக்கட்டைகளில், அச்சிடப்படவேண்டிய விஷயங்களைச் செதுக்குவார்கள். கட்டையில் இவை மட்டும் பொருமி நிற்கும். மை போட்டுக் காகிதத்தில் அழுத்தும்போது, பொருமிய எழுத்துகள் காகிதத்தில் பதியும்.

கி.பி. 712 – ல் லியுயான் (லியுயான் என்றால், பேரிக்காய்த் தோட்டம் என்று அர்த்தம்) என்னும் பெயரில் இசை, நாடகம் ஆகியவற்றுக்காக அரசாங்கம் பயிற்சிக்கூடம் நிறுவியது. மக்களின் அமோக ஆதரவால், விரைவிலேயே நாடெங்கும் இதன் கிளைகள் திறந்தன.

செவிக்கு உணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்று நாம் பொன்மொழி உதிர்க்கலாம். ஆனால், ஒரு நாட்டில் கலைகள் வளர வேண்டுமானால், அங்கே மக்கள் பஞ்சம், பசி, பட்டினி என்னும் அன்றாடக் கவலைகள் இல்லாமல் சுக வாழ்க்கை வாழ வேண்டும். படைப்புக் கலைகள் செழித்து வளர்ந்ததால், டாங் ஆட்சியில் சீனர்கள் வளமாக, நலமாக இருந்தார்கள் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கணிப்பு. பிற சான்றுகளும், ஆவணங்களும், இந்தக் கணிப்புக்கு ஆதரவு தெரிவிக்கின்றன.

பெண்களுக்கு சமுதாயம் சம அந்தஸ்து அளித்தது. சீன வரலாற்றில் ஒரே ஒரு பெண்தான் சக்கரவர்த்தியாக நாட்டை வெற்றிகரமாக ஆட்சி செய்திருக்கிறார். அவர் கி.பி. 690 முதல் கி.பி. 701 வரை ஆண்ட வூ ஜேஷியன் (Wu Zetian). பலமான பணபுலம், அரசியல் தொடர்பு கொண்டவர்களாக இருந்தாலும், நுழைவுத் தேர்வில் தேறாவிட்டால், அவர்களுக்கு அரசுப் பதவிகள் கொடுக்கக்கூடாது என்னும் கொள்கையைக் கறாராக நிறைவேற்றினார் இந்தப் பெண் சிங்கம்.

பீங்கான் தொழில் அமோக வளர்ச்சி கண்டிருந்தது. சமையலறைப் பாத்திரங்கள், அழகு கொஞ்சும் பொம்மைகள் தயாரிக்கப்பட்டன. இவை சீனர்கள் வீடுகளை மட்டுமல்லாமல் கடல் தாண்டிய பல நாடுகளையும் அலங்கரித்தன. குவான்ஜோ நகரத்தில் இருக்கும் துறைமுகம் முக்கிய அந்நிய வியாபாரக் கேந்திரமாக விளங்கியது. அந்நியர்களுக்காகத் திறக்கப்பட்ட முதல் சீனத் துறைமுகம் இது. இந்திய, பாரசீக வியாபாரிகள் அடிக்கடி குவான்ஜோ வந்து போனார்கள்.

கி.பி. 758 – இல் பாரசீகக் கடல் கொள்ளைக்காரர்கள் குவான்ஜோ துறைமுகத்தைத் தாக்கி சூறையாடினார்கள். முக்கியப் பகுதிகளைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள். எக்கச்சக்கச் சேதம். சீன அரசு துறைமுகத்தை மூடவேண்டிய கட்டாயம். சேதங்களைச் சீர்படுத்தவும், மறுபடி வாணிப மையமாக்கவும் ஐம்பது வருடங்களாயின.

கி.பி. 635 – சீனர்களின் சமுதாய வாழ்வில் முக்கிய வருடம். நாட்டின் மத நம்பிக்கைக் கதவுகள் புதிய கருத்துகளுக்குத் திறக்கத் தொடங்கின. ஆரம்ப நாட்களில் மக்கள் இதிகாசங்களில் குறிப்பிடப்படும் பல தெய்வங்களை வணங்கினார்கள். இவை பெரும்பாலும், இடி, மின்னல், மழை போன்ற இயற்கை சக்திகளின் வடிவங்கள். கி.மு. 265 காலகட்டத்தில் மாமன்னர் அசோகர் புத்த பிட்சுக்களை நேபாளம், பூடான், சீனா ஆகிய நாடுகளுக்கு அனுப்பியதாகச் சொல்லப்படுகிறது. விரைவில், புத்த மதம் சீனாவின் பெரும்பகுதி மக்களை ஈர்த்துக்கொண்டது. பின்னாள்களில், கன்ஃபூஷியனிஸம், தாவோயிஸம் ஆகிய கொள்கைகளைப் பலர் பின்பற்றத் தொடங்கினார்கள்.

பாரசீகத்திலிருந்து நான்கு கிருஸ்தவப் பாதிரிமார்கள் கி.பி.635 – இல் சீனா வந்தார்கள், தங்கள் மத நம்பிக்கைகளுக்கு வித்திட்டார்கள். கி.பி.650- ல் அரேபியாவிலிருந்து இஸ்லாமிய மதகுருக்கள் சீனா வந்தார்கள். இந்த வருகை, சீனாவில் இஸ்லாமியத்தின் ஆரம்பம்.

பல்வேறு மதங்களும் ஆண்டாண்டு காலமாக ஒற்றுமையாக வாழ்ந்தார்கள். இந்தச் சூழல் கி.பி. 845 – இல் கெட்டது. உபயம், கி.பி. 840 முதல் கி.பி. 846 வரை சக்கரவர்த்தியாக இருந்த வூ ஜாங் (Wuzong). மண்ணாசை கொண்ட மாமன்னர் பல போர்கள் நடத்தினார். கஜானா காலியானது. எங்கே கை வைக்கலாம் என்று மன அரிப்பு. அவர் கண்களில் புத்தக் கோவில்கள் பட்டன. இன்றைய திருப்பதிபோல், அன்றைய புத்தக் கோவில்களில் பக்தர்கள் காணிக்கை மழை பொழிந்துகொண்டிருந்தனர். வூ ஜாங் 46,000 கோவில்களை அரசுடமையாக்கினார், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மத குருக்களை நடுத்தெருவில் நிற்கவைத்தார்.

அறிவுகெட்ட அரசர்கள் மட்டுமல்ல,இயற்கையும் தன் சோதனைகளைத் தொடங்கியது. சாங்கான் (Changan – இன்று Xian என்று அழைக்கப்படுகிறது) நகரம் டாங் ஆட்சியில் சீனாவின் தலைநகரம், இங்கே, கி.பி. 843- இல் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. 4000 வீடுகள், நூற்றுக் கணக்கான சரக்குக் கிடங்குகள், ஏராளம் கட்டடங்கள் அழிந்தன.

பதினைந்து வருடங்கள் ஓடின. அக்னிக்கு நான் என்ன இளைத்தவனா என்று போட்டிப் போட்டுக்கொண்டு வந்தது பெருவெள்ளம். பல்லாயிரம் வீடுகளையும் உயிர்களையும் பலிகொண்டு திருப்தி அடைந்தது.

சக்கரவர்த்திகளுக்கு நாட்டின் மீதிருந்த பிடியும் தளரத் தொடங்கியது. கி.பி. 874 – ல் மக்கள் அதிருப்தி வெடிக்கத் தயாராக இருக்கும் எரிமலையானது. இந்த எரிமலைக்கு வத்திக் குச்சி வைத்துப் பற்றி எரியவிட்டார் ஹூவாங் சாவோ (Huang Chao). அன்றைய சீனாவில், அத்தியாவசியப் பொருளான உப்பு விநியோகம் முழுக்க முழுக்க அரசாங்கத்தின் கையில் இருந்தது. அரசாங்க வருமானத்தில் பெரும்பகுதியை உப்பு வியாபாரம் தந்தது. பணம் கொட்டும் இடங்களில் லஞ்சம் தலை விரித்து ஆடவேண்டாமா? ஆடியது. ஏராளமானோர் உப்புக் கடத்தலிலும், கறுப்புச் சந்தையிலும் ஈடுபட்டனர்.

ஹூவாங் சாவோ அப்படிப்பட்ட உப்புக் கடத்தல்காரர். கை நிறையப் பணம் வந்தவுடன், அவர் அரசாங்கத்தை எதிர்த்தார். அரசுக்கு எதிரானவர்களும், அதிருப்தி கொண்டவர்களும் ஹூவாங் சாவோ பின்னால் அணி திரண்டார்கள். கலவரம் வெடித்தது. வீதிகள் எங்கும் அரசுப் படைகளும், கலவரக்காரர்களும் மோதினார்கள். ஹூவாங் சாவோ பல ஆரம்ப வெற்றிகள் கண்டார். தலைநகர் சாங்கான் அவர் கை வசமானது. அடுத்து அவர் கைப்பற்றியது வணிகத் தலைநகரான குவான்ஜோ. தன்னைச் சீனச் சக்கரவர்த்தியாக ஹூவாங் ஜோ அறிவித்துக்கொண்டார். ஆனால், பாவம் அவர் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. சீன அரசுப் படைகள் அவரைத் தோற்கடித்தன. அவர் முடிவு? மருமகனால் படுகொலை செய்யப்பட்டார் என்கிறார்கள் சிலர்: இல்லை, தோல்வியைத் தாங்கமுடியாமல் தற்கொலை செய்துகொண்டார் என்கிறார்கள் சிலர். எப்படி என்பது தெரியவில்லை. ஆனால், அவர் மரணமடைந்தது நிஜம்,

நிறைவேறாத ஆசைகளோடு மரணமடைந்த அவர் ஆத்மா, எட்டு வருடங்களுக்குப் பின் சாந்தி அடந்திருக்கும். கி.பி. 907 – இல் ஜூ வென் (Zhu Wen), ஐ (Ai) சக்கரவர்த்தியைப் போரில் வென்றார், அவரை அரியணையிலிருந்து கீழே இறக்கினார். டாங் வம்சம் முடிந்தது. சீன வரலாற்றில், நாகரிகத்தில் புதிய பக்கங்கள் விரியத் தொடங்கின.

0

பின்குறிப்பு:

இன்றைய சீனாவில் மத நம்பிக்கை எப்படி இருக்கிறது? எந்த மதக்கொள்கையையும் நம்பாத நாத்திகர்கள் – 42% பழங்கால மதங்கள் + தாவோயிஸம் - 30% புத்த மதம் – 18% கிறிஸ்தவ மதம் – 4 % இஸ்லாமியர் – 2% பிறர் – 4%.

http://www.tamilpaper.net/?p=8286

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 14

சாங் – யுவான் – மிங்

எஸ்.எல்.வி. மூர்த்தி

the-forbidden-city-009-b.jpg

9. கி. பி. 907 முதல் கி.பி. 1279 வரை - ஸாங் வம்ச (Song Dynasty) ஆட்சிக் காலம்

டாங் வம்சாவளி சரிந்தபின், அடுத்த 54 ஆண்டுகளுக்குச் சீனாவில் உள்நாட்டுக் கலவரங்களும், நிலையில்லா ஆட்சியும்தான். நாடு பத்துப் பகுதிகளாகச் சிதறுண்டது. ஐந்து வம்சாவளிகள் ஆண்டன. மறுபடியும் கி.பி. 960 – இல் தான் நிலைத்தன்மை வந்தது. அப்போது ஆட்சிக்கு வந்தது ஸாங் வம்சம். கி.பி. 1279 வரை ஆட்சி செய்த ஸாங் பரம்பரையினர் சீனாவைப் பாரம்பரியத்திலிருந்து நவீன காலத்துக்கு அழைத்து வந்தவர்கள் என்று கருதப்படுகிறார்கள்.

எல்லா நாகரிகங்களிலுமே, ஆரம்ப காலங்களில் விவசாயம்தான் ஒரே தொழிலாக இருக்கும். இயற்கையை நம்பிப் பிழைக்கும் இவர்கள் பொருளாதாரம் மழையின் வரவுக்கு ஏற்ப, ஏறும், இறங்கும். கையில் பணம் வைத்திருப்பவர்கள் இவர்களுக்குக் கடன் கொடுப்பார்கள், காலப்போக்கில் நிலங்களைத் தங்களுடையதாக்கிக்கொள்வார்கள். இத்தோடு, வியாபாரம் விதை விடத்தொடங்கும், வணிகர்களும், இடைத் தரகர்களும், விவசாயி உழைப்பில் பணம் பார்ப்பார்கள். பணக்காரர்கள், நடுத்தர வர்க்கம், ஏழைகள் என மூன்று பிரிவுகள் சமுதாயத்தில் உருவாகும்,

கி.பி. 960 காலகட்டத்தில், சீனாவில் நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை மற்ற இரு பிரிவினரையும்விட மிக அதிகமானது. கவிதை, கட்டடக் கலை ஆகியவற்றில் இவர்கள் ஆர்வம் காட்டினார்கள். இந்தத் துறைகள் அமோக வளர்ச்சி கண்டன.

தொழில்களைப் பொறுத்தவரை, இரும்புத் தயாரிப்பில் முக்கிய அறிவியல் மாற்றம் வந்தது. கி.பி. 1000 வரை, இரும்பை உருக்க, சாதாரணக் கரி பயன்பட்டது. ஆயிரம் ஆயிரம் மரங்களை எரித்து, சுற்றுப்புறச் சூழலைக் கெடுத்து, இந்தக் கரி எடுக்கவேண்டும். சீன அறிவியல் அறிஞர்கள், Bituminous Coke என்னும் நிலக்கரியைப் பயன்படுத்தும் முறையைக் கண்டுபிடித்தார்கள். சாதாரணக் கரியைவிட அதிக வெப்பசக்திகொண்ட இந்த நிலக்கரி, தொழில் புரட்சியை ஏற்படுத்தியது.

கி.பி. 1010. சக்கரவர்த்தி ஜென்ஜாங் (Zhenzong), சீனாவின் தேசப்படப் புத்தகம் (Atlas) வெளியிட்டார். நாட்டின் ஒவ்வொரு பகுதியையும், விலாவாரியாக விவரிக்கும் இந்தப் படப் புத்தகம், 39 ஆண்டுகள் பல்வேறு துறை அறிஞர்களின் கடுமையான உழைப்பில் உருவான 1,556 அத்தியாயங்கள் கொண்ட பிரம்மாண்ட அறிவுக் களஞ்சியம்.

மருத்துவ உலகின் மாபெரும் படைப்பான Bencao Tujing என்னும் நூல் கி.பி. 1070-ல் வெளியிடப்பட்டது. தாவரவியல், விலங்கியல், கனிப்பொருள் இயல் (மினராலஜி) ஆகிய பல்வேறு துறைகளின் அறிவைச் சாறாகப் பிழிந்து, சிகிச்சைக்கான மருந்துகளாக்கும் சீன மேஜிக் பிரமிக்கவைக்கும் மந்திரவாதம்!

பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு வருகிறது நம்மைத் திகைக்கவைக்கும் இன்னொரு வியப்பு. ஷென் குவோ (Shen Kuo) என்னும் உடல் முழுக்க மூளைகொண்ட சகலகலாவல்லவர் களத்துக்கு வருகிறார். இவருடைய சில பரிமாணங்கள் என்னென்ன தெரியுமா? நிதி அமைச்சர், கணித மேதை, வானியல் அறிஞர், தாவரவியல் நிபுணர், விலங்கியல் வித்தகர், மருத்துவர், அகழ்வாராய்ச்சியாளர், ராணுவத் தளபதி, கல்வியாளர், கண்டுபிடிப்பாளர்……கட்டுரைகள் மூலம் தன் அறிவைப் பொதுமக்களோடு இவர் பகிர்ந்துகொண்டார். கால்க்குலஸ், திரிகோணமிதி போன்ற நுணுக்கமான கணிதத் துறைகளில் இவர் காட்டும் புலமை நம்பமுடியாத திறமை!

இத்தனை சாதனைகள் கொண்ட ஸாங் ஆட்சிக்கு ஒரு கறுப்புப் புள்ளி உண்டு. நீண்ட நெடுங்காலமாகப் பெண்கள் ஆண்களுக்கு சரிநிகர் சமானமாக வாழந்தார்கள். அதை ஸாங் தகர்த்தார்கள். விதவைகள் மறுமணம் செய்யும் வழக்கம் சீனாவில் இருந்தது. அரசாங்கம் இதைத் தடை செய்தது. கோவில்களுக்கும், குறிப்பிட்ட சில திருவிழாக்களையும் தவிர, வேறு எதற்கும் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று சட்டம் வந்தது.

ஸாங் சக்கரவர்த்திகள் ஏனோ, ராணுவ பலத்தைப் பெருக்குவதில் கவனம் காட்டவில்லை. அண்டை நாடான மங்கோலியாவுக்குச் சீனாமேல் எபோதும் ஒரு கண் உண்டு. கி.பி. 1260 – ல் குப்ளாய் கான் (Kublai Khan) மங்கோலிய அரசரானார். கி.பி. 1265-ல் போர் தொடுத்து வந்த அவர், சீனப் படைகளைத் தோற்கடித்து, 146 ஸாங் கப்பல்களைச் சிறைப்பிடித்தார். தொடர்ந்தன பல யுத்தங்கள். கி.பி. 1279 – ல் ஸாங் ஆட்சி வீழ்ந்தது. குப்ளாய் கான் தலைமையில் யுவான் வம்ச ஆட்சி எழுந்தது.

10. கி. பி. 1279 முதல் கி.பி. 1368 வரை - யுவான் வம்ச (Yuan Dynasty) ஆட்சிக் காலம்

அரியணை ஏறிய குப்ளாய் கானுக்கு எல்லாப் பக்கங்களிலிருந்தும் எதிர்ப்புகள். தங்கள் நாட்டை ஜெயித்த அந்நியனைச் சீனர்கள் வெறுத்தார்கள். அதேசமயம், பிற மங்கோலியச் சிற்றரசர்களுக்கும் பொறாமை – தங்களுள் ஒருவனாக இருந்த சிற்றரசன் சீனச் சக்கரவர்த்தியாகிவிட்டானே என்று. இவை அத்தனையையும், குப்ளாய்கான் இரும்புக்கரத்தால் சமாளித்தார். பீரங்கிகள், ராக்கெட்கள் போன்ற நவீனப் போர் ஆயுதங்கள் அவரிடம் இருந்தன. அவற்றைச் சாமர்த்தியமாகப் பயன்படுத்தினார். எதிரிகளைக் கட்டுக்குள் வைத்தார். 1274 – ல் முதலில் சீனாவின் வடக்குப் பகுதியையும், அடுத்துத் தெற்குப் பகுதியையும் ஆண்ட அரசர்களை வென்று, சீனாவை ஒருங்கிணைத்தார்.

சொந்த மண்ணிலேயே சீன மக்களை அடக்கி, மங்கோலியர் ஆண்ட கொடுமைக்காலம் இது. குப்ளாய்கான் நான்கு அடுக்கிலான சமூக அமைப்பை உருவாக்கினார். மங்கோலியரும், மத்திய ஆசிய மக்களும் முதல் இரண்டு அடுக்குகளிலும், வட சீன மக்கள் மூன்றாவதிலும், தென் சீனாவினர் கடைசியான நான்காம் படிநிலையிலும் வைக்கப்பட்டனர். முதல் அடுக்கில் இருந்த மங்கோலியர்களுக்கு அரசு நிலங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

அரசாங்கத்தின் முக்கியப் பதவிகள் சீனர்களுக்கு மறுக்கப்பட்டன, வெளி நாட்டவர்களுக்கு வழங்கப்பட்டன. இதனால் பயனடைந்தவர் மார்க்கோ போலோ. இத்தாலியின் வெனிஸ் நகர வணிகரான இவர் கி.பி. 1274 – வாக்கில் குப்ளாய்கான் அரசவைக்கு வந்தார். சக்கரவர்த்திக்கு மார்க்கோ போலோவை மிகவும் பிடித்துவிட்டது. சீனாவிலேயே பதினேழு ஆண்டுகள் தங்கவைத்தார், உயர் பதவிகள் கொடுத்தார். தொலைதூர நாடுகளுக்குச் சீனாவின் பிரதிநிதியாக அனுப்பிவைத்தார்.

குப்ளாய்கானின் ஒரே குறிக்கோள் சீனாவைச் சுரண்டுவதிலேயே இருந்தது. வெளிநாட்டு, குறிப்பாக மங்கோலிய வியாபாரிகளுக்குச் சலுகைகளை அள்ளி அள்ளி வழங்கினார். சீனச் செல்வம் அந்நிய மண்களுக்குப் பறந்தது. ஆட்சி நடத்தப் பணம் வேண்டுமே? வரிச் சுமை எகிறியது.

மக்களின் அதிருப்தி வெடிக்கத் தொடங்கியது. ஜூ யுவான்ஜாங் (Zhu Yuanzhang) என்னும் விவசாயி தலைமையில் மக்கள் திரண்டார்கள். மங்கோலிய யுவான் வம்ச ஆட்சி முடிவுக்கு வந்தது. ஜூ யுவான் ஜாங் (Zhu Yuanzhang) என்னும் மண்ணின் மைந்தர் சக்கரவர்த்தியானார். அவருடைய மிங் வம்ச ஆட்சி தொடங்கியது.

11. கி. பி. 1368 முதல் கி.பி. 1644 வரை - மிங் வம்ச (Ming dynasty) ஆட்சிக் காலம்

1382-ல், சக்கரவர்த்தி, தனக்குப் பாதுகாப்பளிக்க, கறுப்புப் பூனைகள் போன்ற ஜினிவே என்னும் அமைப்பைத் தொடங்கினார். இவர்கள் விரைவிலேயே மன்னரின் ஐந்தாம் படை ஆனார்கள். அரசியல் எதிரிகள், பொது மக்கள் ஆகியோரின் நடவடிக்கைகளை நோட்டமிட ஆரம்பித்தார்கள். மக்கள் பயந்து வாழும் நிலை. அன்றைய அரசர் செயல் இன்றும் தொடர்கிறது. கம்யூனிஸ ஆட்சியிலும், தனி மனிதன் அரசின் கழுகுப் பார்வையின் கீழ்தான் வாழ்கிறான்.

மிங் ஆட்சியில் வந்த முக்கிய மாற்றம் – காலம் காலமாக, நாங்கிங் (Nanking) நகரம் சீன நாட்டின் தலைநகரமாக இருந்தது. மிங் சக்கரவர்த்திகள் பீக்கிங் (Beijing) நகருக்கு மாற்ற முடிவெடுத்தார்கள். அரண்மனை வளாகம் கட்டும் பணி 1406ல் தொடங்கியது. பதினான்கு வருடக் கட்டுமானம். ராஜா வாழப்போகும் இடம் அல்லவா? இழைத்து இழைத்துக் கட்டினார்கள். 980 கட்டடங்கள், 9000 அறைகள், 78 லட்சம் சதுர அடி. சுற்றிலும் அகழிகள், பிரம்மாண்ட அரண்மனைகள், அவற்றில் தங்க ஓடுகள் வேய்ந்த கூரை, உயர்ந்த மதில் சுவர்கள், நான்கு மூலைகளிலும் கோபுரங்கள். இந்த வளாகத்துக்குள் சாதாரண மக்கள் யாரும் நுழையக்கூடாது. இதனால், இந்த வளாகத்துக்குத் தடை செய்யப்பட்ட நகரம் (Forbidden State) என்றே பெயர் வைத்தார்கள்.

1420ல் சக்கரவர்த்திகள் இங்கே குடியேறினார்கள். பீக்கிங் சீனத் தலைநகரமானது. 1911 வரை சக்கரவர்த்திகள் இந்த வளாகத்தில் வசித்தார்கள். 1925-ல் வளாகம், அரசால் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. தடைகள் உடைந்தன. சாமானியன் உரிமையோடு இன்று உள்ளே நுழைகிறான். மிங் ஆட்சியில் பதினான்கு சக்கரவர்த்திகள் நாட்டை ஆண்டார்கள். ஆனால், மிங் ஆட்சியை நினைக்கும்போது,இன்று நம் நினைவுக்கு வருபவர் இவர்களில் யாரமில்லை, தன் அறிவாலும், உழைப்பாலும் சிகரம் தொட்ட ஜெங் ஹி என்னும் சாமானியர்தான்.

பிற நாடுகளோடு நட்பை வளர்ப்பதில் ஆர்வம் காட்டாமல், கிணற்றுத் தவளையாக இருந்த சீனா, தன் சுவர்களைத் தாண்டி வெளியுலகத்தைப் பார்க்கத் தொடங்கியது. நட்புக் கரங்களை மெள்ள மெள்ள அந்நியருக்கு நீட்டியது. சீனாவின் நட்புத் தூதராகச் சக்கரவர்த்தியால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஜெங் ஹி (Zheng He). இவர் ஒரு திருநங்கை. அன்றைய சீனாவில். ஏராளமான திருநங்கையர் நிர்வாகத்திலும், ராணுவத்திலும் முக்கிய பதவிகளில் இருந்தார்கள். அவர்களுள், மிக உயர்ந்த பதவியான கப்பற்படைத் தளபதி பதவியைத் தன் முப்பத்தைந்தாவது வயதிலேயே எட்டினார் இவர். ஹியின் திறமையில் வைத்த முழு நம்பிக்கையால்தான், சக்கரவர்த்தி நாட்டின் நட்புத் தூதராக இவரை நியமித்தார்.

ஜெங் ஹி மகா சாமர்த்தியசாலி. ஆகவே, அவருடைய பயணங்கள் வெறும் நட்புப் பயணங்களாக மட்டும் இருக்கவில்லை. சீனாவின் வணிகத்தை வளர்க்கவும், சீனாவின் பலத்தை அண்டை நாடுகளுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டவும் அவர் பயணங்களைப் பயன்படுத்திக்கொண்டார். 1405 தொடங்கி 1432 வரையிலான 27 வருடங்களில், ஜெங் ஹே ஏழு கடல் பயணங்கள் செய்தார். இவரோடு 317 கப்பல்களும், 27,000 ஆட்களும் பயணித்தார்கள். இவற்றுள் பல, சீனாவின் கட்டுமானத் திறமையைப் பறைசாற்றும் 400 அடி நீள பிரம்மாண்டக் கப்பல்கள்!

ஜெங் ஹி முப்பது ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளுக்கு விஜயம் செய்தார். இந்தப் பட்டியலில், இந்தியா, இந்தோனேஷியா, தாய்லாந்து, யேமன், சவுதி அரேபியா, சோமாலியா, கென்யா போன்ற நாடுகள் அடக்கம். இந்த உலகம் சுற்றும் வாலிபர் கப்பல்கள் நிறைய, சீனாவின் பிரசித்தி பெற்ற பட்டுத் துணிகளையும், பீங்கான் கலைப் பொருட்களையும் கொண்டு வந்திருந்தார். சீனச் சக்கரவர்த்தியின் பரிசுகளாக அவற்றை உள்ளூர் ராஜாக்களுக்குக் கொடுப்பார். அவர்கள் மறு மரியாதையாக, நகைகள், மர சாமான்கள், வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றைச் சீனச் சக்கரவர்த்திக்கு அன்புப் பரிசுகளாகக் கொடுப்பார்கள். நம் நாட்டு வங்காள அரசர் எல்லோரையும் மிஞ்சினார், வித்தியாசப் பரிசு கொடுத்தார். அவர் தந்த பரிசு என்ன தெரியுமா? கென்ய நாட்டிலிருந்து ஆசை ஆசையாக அவர் இறக்குமதி செய்துவைத்திருந்த ஒட்டகச் சிவிங்கி!

ஜெங் ஹி தென் இந்தியாவில் கொச்சி, கோழிக்கோடு ஆகிய இரண்டு இடங்களுக்கு வந்தார். நல்ல மிளகு, கிராம்பு, ஏலம், லவங்கம் போன்ற வாசனைத் திரவியங்கள் சீனர்களுக்கு மிகவும் பிடித்தமானவை. இவைதாம் அவரைக் கேரளத்துக்கு ஈர்த்திருக்கும் என்று நம்பப்படுகிறது.

கொச்சி, கோழிக்கோடு ஆகிய இரண்டு ஊர்களும் கொச்சி மன்னரின் ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசங்கள். கொச்சி மன்னர் ராஜ உபசாரம் தந்தார். ஜெங் ஹியின் கப்பல்கள் கொச்சித் துறைமுகத்தில் நங்கூரம் தட்டியவுடன், தாரை, தப்பட்டை, நாதஸ்வரம், செண்டை மேளம், நடனக் கலைஞர்கள் ஆட்டம் என அட்டகாச வரவேற்பு. ஜெங் ஹே சீனச் சக்கரவர்த்தி சார்பாகப் பட்டு ஆடைகள், பீங்கான் கலைப் பொருட்கள் தந்தார். பதிலாகக் கொச்சி ராஜா ஓர் அசத்தலான பரிசை அளித்தார்.

நாட்டின் தலை சிறந்த ஆச்சாரிகளிடம் 50 அவுன்ஸ் தங்கம் கொடுத்தார். பார்த்தோரைப் பிரமிக்கவைக்கும் அற்புதமான நகையை உருவாக்கச் சொன்னார். நகைக் கலைஞர்கள் தங்கத்தைத் தலைமுடிபோல் மெல்லிய இழைகளாக்கினார்கள். இந்த இழைகளில் விலை மதிப்பிடமுடியாத முத்துக்களும், வைர வைடூரியங்களும் கோத்தார்கள். இடுப்பில் அணியும் ஒட்டியாணம் போன்ற நகை உருவானது. ஆண்கள், பெண்கள் இரு பாலரும் அணியலாம், ஒட்டியாணத்தைப் பார்த்த ஜெங் ஹி அசந்தே போனார். அதை உருவாக்கிய பல ஆசாரிகளையும் அவர் தன்னோடு சீனாவுக்கு அழைத்துப்போனார். இந்திய சீன உறவில் புதிய அத்தியாயம் தொடங்கியது.

இந்தியாவைப்போல், சீனாவோடு நெருக்கம் வளர்ந்த இன்னொரு நாடு போர்ச்சுகல். 1517ல் இரு கிறிஸ்தவப் பாதிரியார்கள் சீனா வந்தார்கள். 1582 முதல் கிறிஸ்தவ மதம் வேரூன்றத் தொடங்கியது.

வெளிநாட்டு உறவுகளில் கவனம் காட்டிய சக்கரவர்த்திகள் உள்நாட்டை அத்தனை கவனமாகக் கண்காணிக்கவில்லையோ? பல உள்நாட்டுக் கலகங்கள் வெடித்தன. உள்நாட்டுப் புரட்சித் தலைவர்கள் சிலர், சீனாவின் வடகிழக்குப் பகுதியில் வசித்த மஞ்சூரியர்களின் உதவியை நாடினார்கள். ஆடுகள் சண்டையில் ஓநாய் நுழைந்தது. மஞ்சூரியா சீனாவை அடக்கியது. அரியணை ஏறியது கிங் வம்சாவளி.

0

http://www.tamilpaper.net/?p=8306

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 15

பதவி – போதை – போர்

எஸ்.எல்.வி. மூர்த்தி

OpiumWarCousinMontaubanCampaignOf1860Wik

12. கி. பி. 1644 முதல் கி.பி. 1911 வரை - கிங் வம்ச (Qing Dynasty) ஆட்சிக் காலம்

சீனாவின் முதல் மன்னராட்சி கி. மு. 1600 முதல் கி. மு 1046 வரை தொடர்ந்த ஷாங் வம்ச (Shang Dynasty) ஆட்சி. 3511 ஆண்டுகளுக்குப் பின், இந்தச் சகாப்தம் முடிந்தது. சீனாவின் கடைசி மன்னராட்சி தந்தவர்கள் என்னும் பெருமை இவர்ளைச் சாரும்.

சீனா இன்று உலகச் சந்தையில் வகை வகையான பொருள்களைக் கொண்டுவந்து குவிக்கிறது. இதற்கு முதல் புள்ளி வைத்தவர்கள் கிங் சக்கரவர்த்திகள். கி.பி. 1700-ல், வெளிநாட்டவர் சீனாவில் தொழிற்சாலைகள் தொடங்க அரசாங்கம் அனுமதி கொடுத்தது. அமெரிக்கா, இங்கிலாந்து, டென்மார்க், நெதர்லாந்து, ஸ்வீடன் போன்ற பல

நாடுகள் 13 தொழிற்சாலைகள் ஆரம்பித்தார்கள். சீன வணிக வரலாற்றில், இது ஒரு முக்கிய ஆரம்பம். இதன் அடுத்த கட்டமாக, கிழக்கு இந்திய கம்பெனி, குவான் ஜோ(Guangzhou) என்னும் துறைமுக நகரத்தில் கிளை திறந்தார்கள். ஏற்றுமதி, இறக்குமதி அமோகமாக வளரத் தொடங்கியது.

மஞ்சூ சக்கரவர்த்திகளில், சீனாவை உச்சத்துக்குக் கொண்டு போனவர்கள் இருவர். அவர்கள் ஒரு தாத்தாவும் அவர் பேரனும், தாத்தா - காங்ஸி பேரரசர் (Kangxi Emperor).இவர் கி.பி. 1667 முதல் கி.பி. 1722 வரை 55 ஆண்டுகள் நல்லாட்சி செய்தார். எதிரிகளிடமிருந்து சீனாவைப் பாதுகாக்க, எல்லைகளில் பாதுகாப்பைப் பலப்படுத்தினார். இலக்கிய வளர்ச்சியில் காங்ஸி பங்கு மகத்தானது. அறிஞர்கள் குழு அமைத்தார். சீன வரலாற்றையும், புராதனப் பெருமை கொண்ட இலக்கியங்களையும் புதிப்பித்து வெளியிடுவது இவர்கள் பணி. பழம்பெருமை போற்றியவர், சீனாவின்

கலாசார ஜன்னல்களையும் விசாலமாகத் திறந்தார். இங்கிலாந்து, ஸ்வீடன், டென்மார்க் போன்ற ஐரோப்பிய நாடுகளின் கல்விமுறைகளை அறிமுகம் செய்தார். 18 , 19 நூற்றாண்டுகளில், அற்புதமான புதினங்களும், நாடகங்களும் படைக்கப்பட்டன. காங்ஸி விதைத்த ஐரோப்பியத் தாக்கம் இதற்கு முக்கிய காரணம். சீனக் கதவுகள் வெளிநாட்டவர்களுக்காக அகலத் திறந்தன. 1793- ல், இங்கிலாந்தோடு அரசு முறையிலான உறவு தொடங்கியது, இங்கிலாந்து நாட்டுத் தூதர் சீனா வந்தார். ராஜாங்க மரியாதைகளோடு வரவேற்கப்பட்டார்.

பேரர் – கியன்லங் பேரரசர் (Qianlong Emperor). 1735 முதல் 1796 வரை 61 ஆண்டுகள் இவர் செங்கோல்தான் சீனாவின் தலைவிதியை நிர்ணயித்தது. ராணுவ யுக்திகளில் வித்தகரான இவர், பத்து முக்கியப் போர்கள் நடத்தினார், அனைத்திலும் வெற்றி. மங்கோலியா, திபெத், நேபாளம், மத்திய ஆசியப் பகுதிகள் எனப் பல நாடுகளை வென்று சீனாவை விரிந்த சாம்ராஜ்ஜியமாக்கினார்.

கியன்லங் போர்களில் மட்டும் தன் திறமையைக் காட்டவில்லை. இவர் மாபெரும் கலாரசிகர், இலக்கிய ஆர்வலர். ஓவியங்கள், பித்தளை, பீங்கான், இனாமல், அரக்குக் (lacquer) கலைப்பொருட்கள் என இவர் சேமித்துவைத்த பொக்கிஷங்கள் இன்றும் நம்மைப் பிரமிக்கவைக்கின்றன.

கியன்லங் ஒரு கவிஞர், எழுத்தாளர். 40,000 கவிதைகளும், 1300 கட்டுரைகளும் படைத்திருக்கிறார். இந்த ஆர்வம், மற்றொரு மாபெரும் சாதனை படைக்க அவரைத் தூண்டியது. சீனாவில் அதுவரை வெளியாகியிருந்த அத்தனை தத்துவ, வரலாற்று, இலக்கியப் படைப்புகளையும் தொகுப்புகளாக்கி வருங்கால சந்ததியினருக்கு அழியாச் சொத்துகளாக விட்டுப்போகவேண்டும் என்னும் பேராசை கியன்லங்குக்கு வந்தது. இதை நிறைவேற்றியும் காட்டினார்.

361 அறிஞர்கள் 1773 முதல் 1782 வரை ஒன்பது வருடங்கள் அயராது உழைத்து, இந்தத் தொகுப்பை உருவாக்கினார்கள். இதற்காக அவர்கள் 10,000 நூல்களைப் படித்தார்கள், அவற்றுள் 3461 நூல்களைத் தேர்ந்தெடுத்தார்கள். ஸிக்கு க்வான்ஷூ (இந்தச் சீன வார்த்தைக்கு, இலக்கியத்தின் நான்கு பகுதிகளின் மொத்த நூலகம் என்று பொருள்) என்ற தலைப்பில் அறிஞர் குழு தயாரித்த தொகுப்பு, 36,381 அத்தியாயங்களும், 23

லட்சம் பக்கங்களும் கொண்ட மாபெரும் நூல்! இதை வார்த்தைகளில் வடிக்க 15,000 எழுத்தர்கள் தேவைப்பட்டார்கள். இந்தத் தொகுப்புக்கு மட்டுமல்ல, பேரரசர் கியன்லங் அவர்களுக்கும் வரலாற்றில் அழியாத இடம் கிடைத்தது.

கலை, இலக்கிய தாகங்களும், தேடல்களும் அபாயகரமானவை. கட்டுப்பாட்டுக்குள் வைத்திராவிட்டால், இவை ஆள்களை விழுங்கிவிடும். பேரரசர் கியன்லங் விஷயத்திலும் இதுதான் நடந்தது. எழுத்தையும், கலைகளையும் பின் தொடர்ந்த சக்கரவர்த்தி ஆட்சியை, மக்களை மறந்தார். நாடு கை நழுவத் தொடங்கியது. சீனாவின் பல்வேறு பாகங்களில் உள்நாட்டுக் கலவரங்கள் ஆரம்பித்தன. இதன் வெளிப்பாடு, 1794-ல் தொடங்கி, பத்து வருடங்கள் நீடித்த வெள்ளைத் தாமரைக் கிளர்ச்சி (White Lotus Rebellion).

பேரரசர் தொடங்கியதால், தடி எடுத்தவர்கள் எலோரும் தண்டல்காரர்கள் ஆனார்கள். பொதுமக்களிடம் வரி என்ற பெயரில் பணம் வசூலித்தார்கள், கட்டைப் பஞ்சாயத்து நடத்தினார்கள். இதற்கு எதிராகப் பொதுமக்கள் வெள்ளைத் தாமரைச் சங்கம் என்னும் அமைப்பைத் தொடங்கினார்கள். நாட்டின் பல பாகங்களில் போராட்டங்கள் எழுந்தன.

அரசின் ராணுவம் கட்டுப்படுத்த முடியாமல் திணறியது. அடக்கப் பத்து வருடங்கள் எடுத்தது. ஜெயித்தாலும், எப்போது எரிமலை குமுறுமோ என்னும் பயம்! என்றும் கவிழ்ந்துவிடலாம் என்னும் கலக்கம் பேரரசர்கள் மனங்களில் முளைவிடத் தொடங்கிவிட்டது.

கிங் வம்ச ஆட்சியிலும், சீன வரலாற்றிலும், அபினிப் போர்கள் (Opium Wars) மிக முக்கியமானவை. இவை வர்த்தகப் போர்கள். முதல் அபினிப் போர் (1839 – 1842), சீனாவுக்கும், இங்கிலாந்துக்குமிடையே நடந்தது: இரண்டாம் அபினிப் போரில் (1856 – 1860), ஓரணியில் சீனா, மறு அணியில், பிரிட்டிஷ், பிரெஞ்சு நாட்டுப் படைகள் கை கோர்த்து நின்றன.

பிரிட்டிஷாரின் வியாபாரம் எப்போதுமே அவர்கள் அரசியல் ஆசைகளின் நுழைவாயிலாக இருந்தது. இந்தியாவில் வியாபாரிகளாகப் புகுந்த கிழக்கு இந்தியக் நாட்டையே அடிமைப்படுத்தவில்லையா? சீனாவிலும், இதே நாடகம் நடத்த முனைந்தார்கள்.

இங்கிலாந்தில், சீனப் பட்டுக்கு ஏகக் கிராக்கி. இங்கிலாந்தின் இறக்குமதி எக்கச்சக்கம். சீனர்களுக்கு இங்கிலாந்துத் தயாரிப்புகளில் அத்தனை மோகம் இருக்கவில்லை. சீனா தன் ஏற்றுமதிக்கு வெள்ளியைப் பண்டமாற்றாகக் கேட்டது. இந்த நிலை தொடர்ந்தால், தன் வெள்ளிக் கையிருப்பு சரியும் என இங்கிலாந்து பயந்தது. இதைச் சரிக்கட்ட, அவர்கள் கண்டுபிடித்த குறுக்கு வழி – அபினி.

சீனாவில், கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதலாகவே அபினி வீடுகளில் சர்வ சாதாரணமாக உபயோகப்படுத்தப்பட்ட மருந்து. பதினேழாம் நூற்றாண்டில், சீனா வந்த ஐரோப்பியர்கள், புகையிலையோடு அபினியைச் சேர்த்துப் புகைப்பதையும், சுகபோக மயக்கத்தில் புரள்வதையும் சீனர்கள் பார்த்தார்கள். அபினி மருந்து மட்டுமல்ல, போதைப் பொருளும்கூட, என்னும் பாலபாடம் ஆரம்பமானது. இந்த போதை ஆசையை பிரிட்டிஷார் தங்கள் வளர்ச்சிக்குப் பகடைக்காயாக்கினார்கள்.

இந்தியாவின் வங்காளத்திலும், காசியிலும் அபினித் தொழிற்சாலைகள் தொடங்கினார்கள். பிரிட்டீஷார் உபயத்தில், சீனக் கடைத்தெருக்களில், இந்திய அபினி குவிந்தது. சீனா அபினியைத் தடை செய்ய முயற்சித்தது. இந்தச் சலசலப்புக்கா இங்கிலாந்துக் குள்ளநரி பயப்படும்? நேர் வழிகளிலும், கடத்தல் மார்க்கங்களிலும், பிரிட்டிஷார் சீனாவில் போதைப்பொருளைக் கொண்டுவந்து கொட்டினார்கள்.

சீனாவின் சமுதாய வாழ்க்கையும், பொருளாதாரமும் சின்னாபின்னமாகத் தொடங்கின. நாட்டின் வருங்காலமே கேள்விக்குறியாவதைப் புரிந்துகொண்ட சீன அரசு, அபினி வர்த்தகத்தை நிறுத்துமாறும், கையிருப்பை அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறும், இங்கிலாந்து வியாபாரிகளுக்கு ஆணையிட்டது. அவர்கள் மறுத்தார்கள், அரசுத் தடையை மீறினார்கள். வியாபாரிகள் கைது செய்யப்பட்டார்கள், சீனச் சிறைகளுக்குள் தள்ளப்பட்டார்கள். சீனாவுக்கும், இங்கிலாந்துக்குமிடையே நடந்த பேச்சு வார்த்தைகள்

முறிந்தன. இதற்குத்தானே இங்கிலாந்து காத்திருந்தது? பெரும் கப்பற்படையை இந்தியாவிலிருந்து அனுப்பியது. சீனத் துறைமுகங்களைத் தாக்கியது. ஏராளமான சீனக் கப்பல்களைத் தீயிட்டுக் கொளுத்தியது. கியன்லங் ஆட்சிக்கால முடிவிலிருந்தே, சீனா பலவீன தேசமாக இருந்தது. ஆகவே, இங்கிலாந்திடம் தோற்றது, மண்டியிட்டது,

1842. பிரிட்டீஷார் கட்டளையிட்ட இடத்தில் சீனப் பேரரசர் கையெழுத்திட்டார். சீனா முழுக்க,தடைகளே இல்லாமல் அபினி வியாபாரம் நடத்தும் உரிமையைத் தந்தார். பதினான்கு வருடங்கள். தன்மானம் பறிபோய்விட்டதே என்று நாடு குமுறிக்கொண்டிருந்தது. 1856 – இல் இந்த ஆதங்கம் வெடித்தது. அபினி தாங்கிவந்த இங்கிலாந்துச் சரக்குக் கப்பலைச் சீன அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள். இப்போது இங்கிலாந்தோடு பிரெஞ்சுப் படைகளும் கை சேர்ந்தன. இரண்டாம் அபினிப் போர் நான்கு ஆண்டுகள் நடந்தது. சீனாவுக்குப் படு தோல்வி. அபினி வியாபாரம் அரசு ஒப்புதல் பெற்றது. சீனாவின் பல முக்கிய துறைமுகங்கள் அபினி மற்றும் பிற பொருட்களின் இறக்குமதிக்காக ஐரோப்பிய வியாபாரிகளுக்குத் திறந்துவிடப்பட்டன.

அடுத்த ஐம்பது வருடங்கள். ஐரோப்பியர்களின் தெனாவெட்டும், தாய்நாட்டின் கையலாகாத்தனமும், மக்களிடையே எதிர்ப்பு உணர்வுகளைத் தூண்டிவிட்டன. நாட்டின் பல்வேறு பாகங்களில் கலவரங்கள் வெடித்தன. விரைவில் அக்னிக் குஞ்சுகள் கொழுந்துவிடும் நெருப்பாயின. பேரசரசருக்கு எதிரான இயக்கங்கள் தோன்றின.

விரக்திக்குத் தீர்வுகாணும் நம்பிக்கை நட்சத்திரமாய் இப்போது தோன்றினார், சன் யாட்-சென் (Sun Yat-Sen). மருத்துவரான இவர் நாடு படும் அவமானங்களுக்கு முடிவுகட்ட விரும்பி, அரசியலில் நுழைந்தார். 1905 – இல், புரட்சி அணிகள் சன் யாட்-சென்னைத் தலைவராக ஏற்றுக்கொண்டன. ஒவ்வொரு மாகாணமாக, புரட்சியாளர்கள் கைகளில் விழுந்தது.

ஏழே வருடங்கள். 1912. கி.மு. 2852 -இல் ஃப்யூ க்ஸீ (Fu X) தொடங்கிவைத்த மன்னராட்சியை, கி.பி. 1912 – இல், பேரரசர் புயி (Puyi) முடித்துவைத்தார். மக்கள் பிரதிநிதியான சன் யாட்-சென்னிடம் ஆட்சியை ஒப்படைத்தார். மன்னராட்சி முடிந்தது, மக்களாட்சி மலர்ந்தது, சீன நாட்டின் வரலாற்றில் புத்தம் புதிய பாதை தொடங்கியது.

0

http://www.tamilpaper.net/?p=8343

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 16

அமெரிக்கப் புயலில் சீன நாகரிகம்

எஸ்.எல்.வி. மூர்த்தி

China-street-scene_small-300x225.jpg

13. கி. பி. 1912 முதல் இன்று வரை

தேசியம், மக்களாட்சி, மக்கள் நலம் ஆகிய மூன்று கொள்கைகளைத் தன் தாரக மந்திரங்களாக அறிவித்து, சன் யாட்-சென் ஆட்சியமைத்தார். முதல் உலகப் போர் தொடங்கியபோது, சன் யாட்-சென் சீன ஆதரவை நேச நாடுகளுக்கு வழங்கினார். அவர் போட்ட ஒரே நிபந்தனை – சீனாவின் சில பகுதிகளை ஜெர்மனி ஆக்கிரமித்து வைத்திருந்தது. போர் முடிந்தவுடன், நேச நாடுகள், அந்தப் பிரதேசங்களைச் சீனாவுக்குத் திரும்பப் பெற்றுத் தரவேண்டும். நேச நாடுகள் இந்த நிபந்தனையை ஏற்றன. போர் முடிந்தது. ஆனால், வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டன.

சீனாவுக்கு இது ஒரு முக்கியக் கட்டம். மாணவர்கள் களத்தில் குதித்தார்கள். மே 4, 1919. ஊடகம் மாணவர்கள் பின்னால் அணிவகுத்தன. வியாபாரிகளும், பொதுமக்களும் வரி கொடுக்க மறுத்தார்கள். நேச நாடுகளின் ஒப்பந்தத்தில் சீனா கையெழுத்திட மறுத்தது. அதே சமயம், மாணவர் கிளர்ச்சியையும், வன்முறையால் அரசு அடக்கியது.

ஜூலை 1, 1921. சீன வரலாற்றில் மிக முக்கியமான நாள். கம்யூனிஸ்ட் கட்சி பிறந்தது. சன் யாட் – சென்னோடு இவர்களுக்கு நல்ல உறவு இருந்தது. 1925 – இல் அவர் மறைந்து, சியான் கைஷேக் தலைவரானார். கம்யூனிஸ்ட் கட்சியை இவர் அடக்க நினைத்தார். அதற்குள் ஆலமரமாகத் தழைத்து வளர்ந்துவிட்ட கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தினார்கள். உண்மையில், இவை போராட்டங்களல்ல, சீன ராணுவத்தோடு நடத்திய போர்கள். தொடர்ந்து 1949ல் சீனா முழுக்க கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் வந்தது.

சியாங்கும் அவர் ஆதரவாளர்களும், சீனாவின் பகுதியான ஃபர்மோஸா தீவுக்கு ஓடிப் போனார்கள். தாங்கள்தாம் உண்மையான சீனக் குடியரசு என்று பிரகடனம் செய்துகொண்டார்கள். (அன்றைய ஃபர்மோஸாதான் இன்றைய தைவான்.) கம்யூனிஸ்ட் கட்சி தங்கள் நாட்டின் பெயரை சீன மக்கள் குடியரசு என்று மாற்றியது. உலகம் முழுக்க, சீனா என்று அங்கீகரிப்பது, சீன மக்கள் குடியரசைத்தான்.

கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராக இருந்த மா சே துங், சீன மக்கள் குடியரசின் முதல் தலைவராகப் பொறுப்பேற்றார். 1976 – இல் மறையும்வரை, 27 ஆண்டுகள் ஆட்சி நடத்தினார். மாவோ சீனாவின் பொருளாதாரம், வாழ்க்கை முறை, கலாசாரம் ஆகியவற்றில் அதிரடி மாற்றங்கள் ஏற்படுத்தினார். சீனா உலக வல்லரசாவதற்கு அடித்தளம் போட்டவர் இவர்தான். தன் கொள்கைகளையும், சீர்திருத்தங்களையும் நிறைவேற்ற இவர் பயன்படுத்தியது ஈவு இரக்கமேயில்லாத இரும்புக் கரம். அரசுக்கு எதிராக இருந்த அத்தனை பேரும் அடக்கப்பட்டனர். வாழ்நாள் முழுக்கச் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அல்லது ‘காணாமல் போனார்கள்’.

அதிரடி நிலச் சீர்திருத்தங்கள் அரங்கேறின. சுவான்தாரர்களிடமிருந்து நிலம் பிடுங்கப்பட்டு, ஏழைகளுக்கு விநியோகிக்கப்பட்டது. தன் நாடு தொழில்நுட்பத்திலும், தொழில் வளர்ச்சியிலும் பின் தகங்கியிருக்கிறது, உலகம் மதிக்கவேண்டுமானால், தொழிலிலும், தொழில்நுட்பத்திலும் அவசர கதியில் முன்னேறியாகவேண்டும் என்பதை மாவோ உணர்ந்தார். 1953 – இல் ஐந்தாண்டுத் திட்டங்களை உருவாக்கினார். ரஷ்ய உதவியோடு, பல கனரகத் தொழில்கள் நாடெங்கும் நிறுவப்பட்டன. சீனா தொழிற்பாதையில் முன்னேறத் தொடங்கியது.

1956. யாருமே எதிர்பாராத மாற்றத்தை மாவோ அறிவித்தார். அதுதான், நூறு மலர்கள் இயக்கம். ‘நூறு மலர்கள் மலர வேண்டும், நூறு வகையான சிந்தனைகள் உருவாகவேண்டும் என்கிற இந்தக் கொள்கை, கலைகளை வளர்க்கவும், அறிவியலை முன்னேற்றவும், நாம் தேர்ந்தெடுத்திருக்கும் பாதை.’

கம்யூனிச ஆட்சியில் கருத்து சுதந்திரமா? சீன மக்கள் சிலிர்த்தார்கள், உலகப் பொதுவுடமைவாதிகள் அதிர்ந்தார்கள். இந்த அறிவிப்பின்படி, பொதுமக்களில் எல்லோரும், பகிரங்கமாக அரசாங்கத்தை விமரிசிக்கலாம், குறை சொல்லலாம். ஆனால், விமரிசனங்கள் சுனாமியாக அடிக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. 1957 மே 1 முதல் ஜூன் 7 வரையிலான 37 நாட்களில் மட்டும், பத்து லட்சத்துக்கும் அதிகமான குறைப் பட்டியல்கள், வீதிகள் எங்கும் போஸ்டர்கள், மாணவர், பொதுமக்கள் ஊர்வலங்கள். தூங்கிக் கிடந்த சிங்கத்தை எழுப்பி விட்டுவிட்டோம், சீண்டிவிட்டோம் என்று மாவோ புரிந்துகொண்டார். அடுத்த சில மாதங்களில், நூறு மலர்கள் இயக்கம் பின்வாங்கப்பட்டது. கருத்து சுதந்தரத்தின் கதவுகள் சீனாவில் நிரந்தரமாக மூடப்பட்டன. இனிமேல், சீனாவும் உலகமும் பார்க்கப்போவது மாவோவின் சர்வாதிகார முகத்தை.

1958 – இல், மாவோ, மாபெரும் பாய்ச்சல் என்னும் தொழில் வளர்ச்சிக் கொள்கையை அமலாக்கினார். சீனா மக்கள் தொகை அதிகமான, ஏழை நாடு. மூலதனம் குறைவான, உடல் உழைப்பு அதிகம் தேவைப்படும் தொழில்களை உருவாக்கவேண்டும் என்பது பெரும் பாய்ச்சல் கொள்கையின் நோக்கம்.

கனரக இயந்திரங்கள் வாங்குவது நிறுத்தப்பட்டது. சிறு சிறு எஃகுத் தொழிற்சாலைகளும், குடிசைத் தொழில்களும் தொடங்கப்பட்டன. விவசாயிகள் தொழில் தொடங்க ஊக்குவிக்கப்பட்டார்கள். அவசரக் கோலமாகவும், அரசியலை முன்னணியாக்கியும் இந்தக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டது. பலன்? தொழில்கள் தோல்வி கண்டன. விவசாயம் அதல பாதாளத்தில் வீழ்ந்தது, பெரும் பஞ்சம் வந்தது. மூன்றே வருடங்களில் அரசாங்கம் பெரும் பாய்ச்சல் கொள்கையைப் பின் வாங்கியது.

மா சே துங்கின் இன்னோரு சீர்திருத்தம் பண்பாட்டுப் புரட்சி. பழைய உலகை அழிப்போம், புதிய உலகை உருவாக்குவோம் என்பது இதன் கோஷம். உண்மையில், தன் கொள்கைகளுக்கு எதிரானவர்களைத் தீர்த்துக்கட்ட மாவோ போட்ட திட்டம் இது. ஏழு லட்சம் பேருக்கு மேல் இந்தத் திட்டத்தின் கீழ் கொல்லப்பட்டதாக அவரே ஒத்துக்கொண்டுள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சியிலேயே, மாவோவுக்கு எதிர்ப்பு தோன்றியது. பிரதமராக இருந்த சூ என் லாய் வலதுசாரி நிலையை எடுத்தார். முதலாளித்துவம் இணைந்த பொதுவுடமைத் தத்துவம், அமெரிக்காவோடு உறவு, மக்களுக்கு கூடுதல் கருத்துச் சுதந்தரம் ஆகியவற்றை இவர் உயர்த்திப் பிடித்தார்.உதவிப் பிரதமர் டெங் சியோ பிங், சூ என் லாய்க்கு பக்கபலமாக நின்றார்.

ஜனவரி 1976. சூ என் லாய் மரணமடைந்தார். மாவோ அரசு அவர் மறைவுக்குச் சம்பிரதாய அஞ்சலி மட்டும் செலுத்தியது. தக்க அரசாங்க மரியாதைகளை மறுத்தது. மரபுப்படி, டெங் பிரதமராகவேண்டும். பதவி தரவில்லை. அவரை ஆட்சியிலிருந்து அகற்றினார்கள். கொந்தளித்த மக்கள் போராட்டங்கள் அடக்கப்பட்டன.

எட்டே மாதங்களில் கதை தலைகீழாக மாறியது. செப்டெம்பர் மாதம் மாவோ மரணடைந்தார். மக்கள் ஆதரவு டெங் பின்னால் திரண்டது. ஆனால் டெங், அதிகார பீடங்களான நாட்டுத் தலைமை, கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஆகிய எந்தப் பதவிகளையும் ஏற்கவில்லை. தன் ஆதரவாளர்களை அந்தப் பதவிகளில் அமர வைத்தார். திரைக்குப் பின்னால், அத்தனை முக்கிய முடிவுகளையும் எடுத்தவர் டெங்தான் என்பது உலகறிந்த உண்மை. டெங், கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களைக் கைவிட்டு சுதந்தரமான பொருளாதார, தொழில் வளர்ச்சிக் கொள்கைகளை அறிமுகப்படுத்தினார்.

கட்சியின் பழமைவாதிகளோடு போராடிக்கொண்டே, சீர்திருத்தங்கள் கொண்டுவந்துகொண்டிருந்த டெங், விரைவில் இருதலைக் கொள்ளி எறும்பானார். மேற்கத்திய (குறிப்பாக அமெரிக்க) தாக்கத்தால், வகை வகையான பொருட்கள் சீனச் சந்தைகளுக்கு வரத் தொடங்கின. இவற்றின் சுவை கண்ட இளைஞர்கள், இன்னும் இன்னும் என்று அவற்றுக்கு ஏங்கத் தொடங்கினார்கள். முதலளித்துவப் பாதையில் சீனா அதிவேகமாகப் பயணிக்கவேண்டும் என்பது இவர்கள் ஆதங்கம்.

1989ம் ஆண் மாணவர் அணி திரண்டது. தியானென்மென் சதுக்கம் என்னும் பீகிங் நகரின் மத்திய பகுதியில் பத்து லட்சம் மாணவர்களும், பொதுமக்களும் அணி திரண்டனர். சீனா ஜனநாயக நாடாகவேண்டும், தொழில், வியாபாரம் ஆகியவற்றை அரசின் பிடியிலிருந்து விடுவித்துத் தாராளமயமாக்கவேண்டும் என்பவை இவர்கள் கோரிக்கைகள். டெங் அரசு, அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டது. ராணுவமும், டாங்கிகளும் களத்தில் இறக்கப்பட்டன. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர், பல்லாயிரக்கணக்கானோர் சிறைகளில் தள்ளப்பட்டார்கள். உலகத் தலைவர்களும், ஊடகங்களும் ஒருமித்த குரலோடு டெங் ஆட்சியைக் கண்டித்தார்கள். இந்தக் கரும்புள்ளியோடு, உலகப் பார்வை வெளிச்சத்திலிருந்து டெங் ஒதுங்கிக்கொண்டார்.

அதிவேகப் பொருளாதார வளர்ச்சி வராவிட்டால், மக்கள் விரக்தி எல்லை தாண்டும் என்பதை உணர்ந்த அரசினர் உலகப் பொருளாதார நீரோட்டத்தில் கலக்கும் முயற்சிகளை முடுக்கிவிட்டார்கள். 1991ல் அமெரிக்காவின் பிரபலத் துரித உணவகமான மெக்டொனால்ட்ஸ் பெய்ஜிங் நகரில் கடை விரித்தது. இது சாதாரணக் கடைத் திறப்பல்ல, அமெரிக்க நாகரிகத்தை சீனா இருகரம் நீட்டி வரவேற்றதன் பிரதிபலிப்பு.

2001ல் சீனா உலக வர்த்தக நிறுவனத்தில் உறுப்பினரானது. சீனப் பொருட்கள் இன்று உலகச் சந்தைகளில் வந்து குவிகின்றன. குறைந்த உற்பத்திச் செலவில் பொருள்களைத் தயாரிப்பதால், ஆப்பிள், ரீபாக், டெல் கம்ப்யூட்டர், ஜெனரல் எலெக்ட்ரிக், மாட்டெல் பொம்மைகள் போன்ற அமெரிக்கக் கம்பெனிகள் தங்கள் உற்பத்தியைச் சீனாவுக்கு மாற்றிவிட்டார்கள். இதனால், சீனப் பொருளாதார வளர்ச்சி 8 சதவிகிதத்துக்கும் மேல் அதிகரித்தது. இன்னும் பத்தாண்டுகளில், சீனா மாபெரும் பொருளாதார வல்லரசாகும் என்று மேதைகள் கணிக்கிறார்கள்.

மற்றொரு பக்கம், பொருளாதார வளர்ச்சி, ஏழை, பணக்காரர் என்னும் இரு வர்க்கங்களை உருவாக்கிவருகிறது. அவர்களுக்கு இடையிலான இடைவெளி விரிவாகி வருகிறது. மெக்டொனால்ட் பர்கர், கேஎஃப்சி சிக்கன், ஸ்டார்பக்ஸ் காபி, கோகோ கோலா, ஐ ஃபோன் போன்ற அமெரிக்க நாகரிக அடையாளங்களைத் தேடி சீன இளைய தலைமுறையினர் அலையத் தொடங்கிவிட்டனர். கி.மு. 5000 தொடங்கி, 7000 வருடங்களுக்கும் அதிகமாக உலகத்துக்கே பெருமை சேர்க்கும் பாரம்பரியப் பெருமைகொண்ட சீன நாகரிகம், அமெரிக்கக் கலாசார சுனாமிக்கு பலியாகிவிடுமோ? காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

0

http://www.tamilpaper.net/?p=8360

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 17

எகிப்து நாகரிகம்

எஸ்.எல்.வி. மூர்த்தி

pharaoh-167129-285-400-213x300.jpg

எகிப்திய நாகரிகம் ( கி.மு 3150 – கி.மு. 332 )

ஆரம்ப நாள்கள்

கரை புரண்டு ஓடி வரும் உலகின் மிக நீளமான நைல் நதி. ஒட்டகங்கள் கம்பீர பவனிவரும் பரந்து விரிந்த சஹாரா பாலைவனம். உயர்ந்து நிற்கும் பிரம்மாண்ட பிரமிட்கள். சிங்க உடலும், மனித முகமுமாகப் பிரமிக்க வைக்கும் ஸ்ஃபிங்க்ஸ் (Sphinx) சிலைகள். தன் சுட்டுவிரல் அசைவில் சாம்ராஜ்ஜியங்களைச் சுழலவைத்த பேரழகி கிளியோபாட்ரா… எகிப்தின் வரலாற்றுக்கும் நாகரிகத்துக்கும் பல்வேறு முகங்கள் உள்ளன. இவை நமக்குத் தெரிந்த முகங்கள். இவை ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்தான். எகிப்தின் நாகரிக வளர்ச்சி சரித்திர சமுத்திரம்.

நில அமைப்பு

ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா ஆகிய மூன்று கண்டங்களும் சந்திக்கும் இடத்தில் எகிப்து அமைந்துள்ளது. இஸ்ரேல், ஜோர்டான், லிபியா, சவுதி அரேபியா, சூடான் ஆகியவை எகிப்தின் அண்டை நாடுகள். மூன்று பக்கங்களில் கடல் – வடக்கில் மத்தியதரைக் கடல், தெற்கிலும் கிழக்கிலும் செங்கடல், தெற்கில் லிபியப் பாலைவனம். இந்தப் பூகோள அமைப்பு, பக்கத்து நாடுகளிலிருந்து இயற்கை தந்த பாதுகாப்பு. இதனால், எகிப்தின் நாகரிகமும், தனித்துவத்தோடு வளர முடிந்தது.

எகிப்தின் இன்றைய அதிகாரபூர்வமான பெயர் எகிப்திய அரபுக் குடியரசு. இந்தப் பெயர்தான் எப்படியெல்லாம் மாறி வந்திருக்கிறது தெரியுமா? நாகரிக ஆரம்ப காலங்களில், கெமெட் (Kemet) என்று பெயர். கறுப்பு நிலம் என்பது இதன் பொருள். நைல் நதி அடிக்கடி வெள்ளப் பெருக்கெடுத்துப் பாய்ந்துவரும். பெருவெள்ளம் ஓயும்போது, கறுப்பு நிறக் கரிசல் மண்னை விட்டுச் செல்லும், அதனால், இந்தப் பெயர். சிவப்பு நிலம் என்று பொருள்படும் டெஷ்ரெட் (Deshret) என்றும் பலர் அழைத்தார்கள். எகிப்தின் நிலப்பரப்பில் 94.5 சதவிகிதம் பாலைவனம். இந்த நிலப்பரப்பு சிவப்பு மண் கொண்டது. அடுத்து வந்த பெயர் Hwt-ka-Ptah. நம் ஊர் கலைமகள்போல், எகிப்தியக் கலைஞர்களின் தெய்வம் Ptah. தங்கள் நாட்டுக் கலைகளிலும், கைவினைத் திறமைகளிலும் பெருமைகொண்ட குடிமக்கள் வைத்த பெயர். எகிப்துக்குப் பெருமளவில் கிரேக்கர்கள் வந்தார்கள். அவர்களுக்கு இந்தப் பெயர் வாயில் நுழையவில்லை. Aegyptus என்று உச்சரித்தார்கள். இதுவே மருவி, Egypt என்றாகிவிட்டது.

இதிகாச ரகசியம்

எகிப்து “ரகசியங்கள் நிறைந்த நாடு” என்று வரலாற்று அறிஞர்கள் சொல்கிறார்கள். அப்படி என்ன த்ரில்லர் ஸ்டோரி எகிப்துக்கு? “இயற்கை பாதுகாக்கிற நாடு மட்டுமல்ல, இறைவன் விரும்புகிற நாடும் எகிப்துதான், கடவுள் முதலில் படைத்ததும் எகிப்துதான்” என்று பெருமையோடு அந்த மண்ணின் மைந்தர்கள் மார் தட்டுகிறார்கள். தங்களுடைய சுவாரஸ்யமான புராணக் கதைகளை அவர்கள் ஆதாரம் காட்டுகிறார்கள்.

எகிப்து தோன்றுவதற்கு முன்னால், பிரபஞ்சம் எங்கும் ஒரே இருட்டு. நன் (Nun) என்கிற தண்ணீர்ப் பரப்பு மட்டுமே இருந்தது. நன் மிக சக்தி கொண்ட தண்ணீர். அது இருட்டிலிருந்து பளபளக்கும் ஒரு முட்டையை உருவாக்கியது. அந்த முட்டையின் பெயர் ரே (Re).

ரே மந்திர சக்தி கொண்ட முட்டை. ரேயால் எந்த சக்தியையும் படைக்க முடியும், எந்த மனித, மிருக உருவத்தையும் எடுக்க முடியும். அந்த சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு ரேயின் பெயர் மாறும். ரே தன் உண்மைப் பெயரை மட்டும் யாரிடமும் சொல்லக்கூடாது. ரேதான் முழு முதற் கடவுள், சூரியக் கடவுள்.

ரே முதலில் படைத்தது இரட்டைக் குழந்தைகள். ஷூ (Shu) என்கிற ஆண் குழந்தைதான் காற்றுக் கடவுள். அடுத்து வந்த டெஃப்னட் (Tefnut) என்ற பெண் குழந்தை மழைக் கடவுள். இவர்கள் இருவருக்கும் கெப் (Geb), நட் (Nut) என்ற இரண்டு குழந்தைகள் பிறந்தன.

கெப் பூமிக் கடவுள். நட் வானத்தின் கடவுள். இவர்களுக்கு ஐஸிஸ் (Isis), ஓஸிரிஸ்

(Osiris), நெப்திஸ் (Nephthys), ஸெட் (Set) என்ற நான்கு குழந்தைகள் பிறந்தார்கள்.

இந்தக் கடவுள்கள் அத்தனை பேரும் சேர்ந்து நைல் நதி எப்போதும் தண்ணீர் வரும்

ஜீவ நதியாக இருக்க வரம் கொடுத்தார்கள். எகிப்து நாடு வளங்கள் நிறைந்த பூமியானது. இந்தப் பொன் விளையும் பூமியில் வாழும் ஆண்கள், பெண்கள், மிருகங்கள். பறவைகள், மீன்கள் ஆகிய எல்லா ஜீவராசிகளையும் ரே படைத்தார்.

நாடு, மக்கள், மற்ற உயிரினங்கள், அத்தனையும் தயார். அவர்கள் நல்லவர்களாக, தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்ளாமல் ஒற்றுமையோடு, வாழ்ந்தால்தானே எகிப்து நாட்டின் வருங்காலம் சிறப்பாக இருக்க முடியும்? அதற்கு அவர்களுக்கு வழி காட்ட நல்ல அரசர் தேவை. தானே அந்த அரசராக ரே முடிவு செய்தார்.

ரே மனித வடிவம் எடுத்தார். எகிப்து நாட்டின் முதல் அரசர் ஆனார். இந்த ராஜா அவதாரத்தில் அவர் தனக்கு வைத்துக் கொண்ட பெயர் ஃபாரோ (Pharaoh). ரே ஆயிரம் ஆயிரம், பல்லாயிரம் ஆண்டுகள் எகிப்தை ஆண்டார். கடவுள்களின் நேரக் கணக்கு நம்மிடமிருந்து வித்தியாசமானது. நம் ஒரு வருடம் அவர்களுடைய ஒரு மணி நேரம், ஒரு நிமிட நேரமாகக்கூட இருக்கலாம்.

பல்லாயிரம் ஆண்டுகள் ஒடியபின் மெள்ள மெள்ள ரேக்கு முதுமை வரத் தொடங்கியது. வயதான அவருடைய கட்டளைகளை மக்கள் புறக்கணிக்க ஆரம்பித்தார்கள். எகிப்து நாடு அழிவுப் பாதையில் நடை எடுத்து வைத்தது.

ரே கவலைப்பட்டார். மற்றக் கடவுள்களிடம் ஆலோசனை கேட்டார்.

அவர்கள் சொன்னார்கள்.

‘உங்கள் கண் பார்வை மிக சக்தி கொண்டது. அயோக்கியர்கள் பக்கம் உங்கள் கண்களைக் காட்டுங்கள். அப்போது ஷெக்மத் என்று ஒரு பெண் தோன்றுவாள். அவள் அதர்மங்களை அழித்து தர்மத்தை நிலை நாட்டுவாள்.’

ரே தன் கண்களைக் கூர்மையாக்கினார். நம் ஊர்க் காளி சிலையோ, படமோ நினைவிருக்கிறதா? முகத்தில் ஆக்ரோஷம், நெருப்பாய்ச் சிவந்த கண்கள், கையில் ஒரு சூலாயுதம்!

ஷெக்மத் புறப்பட்டாள். ஈவு இரக்கம் இல்லாமல். அத்தனை அயோக்கியர்களையும் கொன்று தீர்த்தாள். எகிப்து மறுபடியும் நல்லவர்களின் நாடாயிற்று.

ரே தன் முடிவு நெருங்குகிறது என்பதை உணர்ந்தார். எகிப்தின் வருங்காலம் பாதுகாப்பாக இருக்க ஆட்சியை யாரிடம் நம்பிக்கையாக ஒப்படைக்கலாம் என்று சிந்தித்தார்.

ரேயின் பேத்தி ஐஸிஸ் மிக புத்திசாலி. தன் ரகசிய சக்திகளை ஐஸிஸுக்குக் கற்றுக் கொடுத்தார். அவள் கணவர் ஓஸிரிஸ் எகிப்தின் மன்னரானார். அவர்தான் இரண்டாவது ஃபாரோ.

சில ஆண்டுகளில் ரே மறைந்தார். அவர் வகுத்த பாதையில், ஓஸிரிஸின் நல்லாட்சி

தொடர்ந்தது. இதற்குப் பிறகு வந்த அரசர்கள் எல்லோருமே ஃபாரோக்கள் என்றுதான் அழைக்கப்பட்டார்கள். தாங்கள் ரே கடவுளின் அவதாரங்கள், தங்கள் எல்லோருள்ளும் கடவுளின் சக்தி இருக்கிறது என்பதற்காக இந்த அடைமொழியை அவர்கள் வைத்துக்கொண்டிருக்கலாம். ரே, ஓஸிரஸ் இருவர்தான் கடவுள்கள். பிறகு வந்த அரசர்கள் அத்தனைபேரும் மனிதர்கள்தாம். ஆனாலும், மக்கள் அவர்களைக் கடவுளின் அவதாரங்களாகக் கருதினார்கள், மதித்தார்கள், வணங்கினார்கள்.

இது இதிகாசம் சொல்லும் கதை. வரலாறு என்ன சொல்கிறது?

பழைய கற்காலத்தின் பிற்பகுதியில், அதாவது, சுமார் இரண்டரை அல்லது ஒன்றரை லட்சம் வருடங்களுக்கு முன்னால். ஆப்பிரிக்காவின் தென் பகுதியில் முதல் பெண் தோன்றினாள். ஆண் உதவி இல்லாமலே, வம்ச விருத்தி செய்யும் சக்தி இவர்களுக்கு இருந்தது. மனித இனம் பெருகியது. பழைய கற்காலத்தின் பிற்பகுதியில், பெரும்பாலும் பாலைவனமான ஆப்பிரிக்காவில் வெப்பம் அதிகமானது. காய்கறி, பழச் செடிகள் வாடின, வதங்கின, மறையத் தொடங்கின. பசுமை மறையும்போது, அவற்றை உணவாக நம்பி வாழ்ந்த விலங்குகள், பறவைகள் வேறு இடங்களுக்குப் போயின. மனிதர்களும் உணவு கிடைக்கும் இடங்களைத் தேடிப் போவார்கள். அவர்கள் பயணம், எகிப்து நாட்டின் செழிப்பு நிறைந்த நைல் நதிக் கரையில் சங்கமித்தது. இதுதான் எகிப்தின் சரித்திர, நாகரிக வளர்ச்சி ஆரம்பம்.

0

http://www.tamilpaper.net/?p=8383

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 18

எகிப்து நாகரிகம் – மம்மியின் சாபம்

எஸ்.எல்.வி. மூர்த்தி

king-tut-mummy-1068400-sw-300x225.jpg

எகிப்தின் நாகரிகம் பற்றிய அறிவுத் தேடல் எகிப்தியல் (Egyptology) என்று அழைக்கப்படுகிறது. இதைத் தொடங்கிவைத்தவர் ஹொவார்டு கார்ட்டர் (Howard Carter) என்கிற பிரிட்டீஷ் ஆராய்ச்சியாளர். சிறு வயது முதலே, எகிப்துக்குப் போக வேண்டும் என்று அவருக்கு வெறித்தனமான ஆசை.

பதினேழாம் வயதில், தன் கனவு தேசத்துக்குப் புறப்பட்டார். பதினான்கு ஆண்டுகள் பழங்கால நினைவுச் சின்னங்களைப் பராமரிக்கும் அரசாங்க வேலையில் ஈடுபட்டார். பிரெஞ்சு நாட்டிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகளோடு சின்னச் சண்டை ஏற்பட்டு வேலை பறிபோனது. அடுத்த நான்கு வருடங்கள் ஓவியம், பழங்கால சாமான்களை விற்பது என வயிற்றை நிறைத்து, மனத்தை நிறைக்காத பல வேலைகள் செய்தார்.

ஒரு கட்டத்தில் கார்ட்டருக்கு நல்ல காலம் பிறந்தது. கார்னர்வான் பிரபு (Lord Carnarvon) கார்ட்டரின் அகழ்வாராய்ச்சிக்கு முழுப் பண உதவி செய்ய முன் வந்தார். கார்ட்டர் தன் முயற்சியை 1909ல் தொடங்கினார். எகிப்து நாட்டின் பல பாகங்களில், பல ஆண்டுகள் அகழ்வாராய்ச்சி நடத்தினார். தோண்டிய இடங்களில் எல்லாம் ஒன்றுமே கிடைக்கவில்லை. தோல்வி, தோல்வி, தோல்வி. ஆனாலும், கார்ட்டர் அயராமல் தன் முயற்சிகளைத் தொடர்ந்தார்.

பன்னிரெண்டு ஆண்டுகள் ஓடின. கார்னர்வான் பிரபுவின் பொறுமை எல்லையை எட்டியது. ஒரு நாள் கார்ட்டரைக் கூப்பிட்டு கெடு கொடுத்தார். அடுத்த சில மாதங்களுக்கு மட்டுமே இந்த ஆராய்ச்சிக்குப் பணம் தருவதாக இருக்கிறேன். அதற்குள் ஆராயச்சிக்குப் பலன் கிடைக்கவேண்டும்.

கார்ட்டர் பயந்து நடுங்கினார். அவருக்குத் திருமணம் ஆகவில்லை. வீட்டின் தனிமை இந்த பயத்தை அதிகமாக்கியது. கார்ட்டர் ஒரு நாள் கடைக்குப் போனார். வழியில் ஒருவன் கானரி என்ற ஒரு வகைப் பறவையை விற்றுக் கொண்டிருந்தான். அந்தப் பறவை கூண்டில் அடைக்கப்பட்டிருந்தது. கானரிப் பறவைகள் நம் ஊர்க் குயில்கள் மாதிரி. இனிமையாகப் பாடும். ஆனால், குயில் மாதிரிக் கறுப்பு நிறமல்ல. மஞ்சள் நிறமாக அழகாக இருக்கும்.

வேலையின் பயத்திலிருந்து விடுபட, தன் தனிமையில் துணை தர கானரியின் பாட்டு உதவும் எனக் கார்ட்டர் நினைத்தார். கூண்டோடு கானரியை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார்.

அவருடைய வேலைக்காரன் எஜமானரின் கையில் இருந்த கானரியைப் பார்த்தான்.

அவன் சொன்னான், “கானரி அதிர்ஷ்டம் தரும் பறவை, தங்கப் பறவை. கடவுள் அருளால், நீங்கள் இந்த வருடம் தங்கம் கொட்டும் ஒரு கல்லறையைக் கண்டு பிடிப்பீர்கள்.”

அவன் வாக்கு பலிக்க வேண்டும் என்று கார்ட்டர் பிரார்த்தித்தார். வீட்டில் இருக்கும்போதெல்லாம் கார்ட்டர் கானரியைக் கொஞ்சிக் கொண்டிருப்பார், அதன் இனிமையான குரலைக் கேட்டு ரசித்துக் கொண்டிருப்பார். மற்ற வேளைகளில் அவருக்கு ஒரே கவலைதான். முப்பது வருடங்கள் கழிந்துவிட்டன. எப்படியாவது ஜெயிக்க வேண்டுமே!

தனக்குத் தெரிந்த கடவுள்கள், தேவதைகள், குட்டி தேவதைகள், எல்லோரிடமும் வேண்டினார். அவருடைய வேண்டுதல் பலித்தது. நவம்பர் 4, 1922. கி .மு. 1332 முதல் கி.மு. 1323 வரை ஆண்ட அரசர். துட்டன் காமுன் (Tutankhamun) என்ற மன்னனின் கல்லறையைக் கார்ட்டர் தோண்டினார். ஒரு படிக்கட்டு தெரிந்தது. கார்ட்டர் கீழே இறங்கினார்.

கார்ட்டர் சொல்கிறார், “படிக்கட்டில் இறங்கும்போது ஒரே இருட்டு. என் கையில் இருந்த மெழுகுவர்த்தி மட்டுமே வெளிச்சம், அதன் சுடர் காற்றில் ஆடியது. திடீரென, அறை முழுவதும் வெளிச்சம், அங்கே கொட்டிக் கிடந்த தங்க சாமான்களில் இருந்து வந்த வெளிச்சம்!”

வேலைக்காரனின் வார்த்தை பலித்துவிட்டது, அவருடைய கானரிப் பறவை வந்த நேரம், தங்கம் கொட்டும் கல்லறையைக் கார்ட்டர் கண்டுபிடித்துவிட்டார். மரத்தால் செய்யப்பட்ட கோவில். அதன்மேல் முழுக்கத் தங்கத் தகடுகள். கூரையில் பிரதானமாய் இரண்டு பாம்புச் சிற்பங்கள். துட்டன் காமுனின் தங்க சிம்மாசனம் பளபளத்தது. தன் கைப் பிடிகளில் இரண்டு நல்ல பாம்புகள் செதுக்கப்படிருந்தன. ஃபாரோ மன்னர்களைப் பாதுகாக்க அவர்கள் அருகே விஷப் பாம்புகள் இருக்கும் என்பது புராணக் கதை. அதன் அடிப்படையில் இருந்தன இந்தப் பாம்புகள்.

துட்டன் காமுனின் மம்மி (பதம் செய்யப்பட்ட உடல்) கிடைத்தது. தங்கத்தால் செய்யப்பட்ட முக, உடல் கவசங்கள் மம்மியைப் பாதுகாத்தன. தங்க நகைகள், அற்புதக் கலை நயம் கொண்ட சிலைகள், மன்னரின் லினன் ஆடைகள், முகம் பார்க்கும் கண்ணாடி, மதுக் கோப்பைகள், எழுதுகோல், என ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள்!

கார்ட்டருக்கு எக்கச்சக்க சந்தோஷம், பதின்மூன்று வருட உழைப்புக்குப் பலன் கிடைத்துவிட்டது. உலக அகழ்வு ஆராய்ச்சியில் கார்ட்டரின் இந்தக் கண்டுபிடிப்பை மிஞ்ச, இதற்கு முன்னும் பின்னும் யாருமே இல்லை.

எகிப்தில் கார்ட்டருக்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ஏனென்றால், எகிப்திய மத நம்பிக்கைகளின்படி, ஆராய்ச்சி என்ற பெயரில் மம்மிகளைத் தோண்டுதல், மிகப் பெரிய பாவ காரியம். அப்படிப் பாவம் செய்தவர்களைக் கடவுள் தண்டிப்பார் என்று அவர்கள் நம்பினார்கள். இந்தத் தண்டனைக்கு அவர்கள் வைத்த பெயர் மம்மியின் சாபம்.

பல ஆராய்ச்சியாளர்கள், மம்மியின் சாபம் தங்கள் மேல் விழுந்துவிடக் கூடாது என்று பயந்தார்கள். மம்மிகளைத் தொடுவது தவிரப் பிற ஆராய்ச்சிகள் செய்தார்கள். கார்ட்டருக்கு இந்த மூட நம்பிக்கை கிடையாது. தைரியமாக, துட்டன் காமுனின் மம்மியைப் பரிசோதித்தார்.

அன்று மாலை கார்ட்டர் வீடு திரும்பினார். வேலைக்காரர் அவசரமாக அவரிடம் ஓடிவந்தார். அவர் சுட்டிக்காட்டிய இடத்தில் கார்ட்டரின் அன்புக்குரிய கானரிப் பறவை சிதறிக் கிடந்தது.

“ஐயா, ஒரு நல்ல பாம்பு எங்கிருந்து வந்தது என்றே தெரியவில்லை. திடீரென அதைக் கானரியின் கூண்டுப் பக்கத்தில் பார்த்தேன். கூண்டுக்குல் நுழைந்தது. கானரியை ரண களமாக்கிவிட்டுத் தோட்டப் பக்கமாகக் காணாமல் போய்விட்டது.”

பாம்பா? கல்லறையில், துட்டன் காமுனின் சிம்மாசனத்தில், பார்த்த பாம்பா? மம்மியின் சாபம் பொய்யல்ல, நிஜம் என்று எனக்கு எச்சரிக்கப் பாம்பு வந்ததா? இனிமேல் மம்மிகளைச் சீண்டாதே. சீண்டினால் உனக்கும் கானரி கதைதான் என்று சொல்ல வந்ததா?

கார்ட்டருக்குப் புரியவில்லை. இந்தக் கண்டுபிடிப்பு நிகழ்ந்த சில மாதங்களில், ஆராய்ச்சிக்குப் பண உதவி செய்த கார்னர்வான் பிரபு மரணம் அடைந்தார். மம்மியின் சாபம் அவரைக் கொன்றது என்றார்கள் மத நம்பிக்கைவாதிகள்.

இந்த ஆராய்ச்சிக்குப் பிறகு கார்ட்டர் ஆராய்சிகளில் இருந்து ஓய்வு எடுத்தார். இங்கிலாந்துக்குத் திரும்பினார். பழங்காலப் பொருட்களை சேமிக்கத் தொடங்கினார். பதினேழு ஆண்டுகள், தம் 65ம் வயதுவரை வாழ்ந்தார். மம்மியின் சாபம் உண்மையானது என்றால், கார்ட்டர் உடல் நலமாக வாழ்ந்தது எப்படி என்று கேட்கிறார்கள் பகுத்தறிவாளர்கள்.

மம்மியின் சாபம் உண்மையா, பொய்யா? மர்மங்கள் நிறைந்த எகிப்து நாகரிகத்தில் விடை காண முடியாத புதிர்!

கார்ட்டர் ஒய்வு பெற்றபோதும் அவருடைய கண்டுபிடிப்பு, நூற்றுக்கணக்கான அகழ்வாராய்ச்சியாளர்களுக்கு மாபெரும் உந்து சக்தியானது.

பிற நாகரிகங்களோடு ஒப்பிடும்போது எகிப்தியல் எளிதானது. பிற நாகரிகங்களில் எங்கே தோண்ட வேண்டும் என்று நிர்ணயிப்பதே மிகக் கடினமான வேலை. பொக்கிஷங்கள் நாட்டில் எங்கேயும் புதைந்து கிடக்கலாம். எகிப்தில் பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கும் பிரமிட்கள் ஆராய்ச்சியாளர்களின் கலங்கரை விளக்கங்களாக இருந்தன. அப்புறம், பண்டைய தலைநகரங்கள் எல்லாமே நைல் நதிக்கரை ஓரமாக வரிசையாக இருந்தன. எனவே தேடுதல் கொஞ்சம் சுலபம்.

எகிப்தின் பண்டைய தலைநகரான தீப்ஸ் அருகே நடந்த அகழ்வுகள் நிஜப் புதையல்கள். அந்த ஏரியா முழுக்க, தோண்ட தோண்ட, அற்புதமான பழங்காலப் பொருட்கள் கிடைத்தன. அரச குடும்பத்தைச் சேர்ந்த அறுபத்தி இரண்டு பேரின் கல்லறைகள் இங்கே கண்டெடுக்கப்பட்டன. அதனால், இந்த இந்தச் சுற்றுப்புறத்துக்கே “சக்கரவர்த்திகளின் சமவெளி” என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பெயர் வைத்து விட்டார்கள்.

index.jpg

கல்லறைகளுக்குள் இத்தனை நகைகள், வைடூர்யங்கள் எனச் செல்வங்களைப் புதைத்து விட்டு செக்யூரிட்டியா போட முடியும்? கி. மு. 1200 – ல் இருந்து கி. மு. 20 வரையிலான கால கட்டத்தில் பல கொள்ளைக்காரர்கள் இவற்றைச் சூறையாடி இருக்கிறார்கள். இவர்களின் கொள்ளைகளுக்குப் பிறகு மிஞ்சிய தடயங்களே எகிப்தின் நாகரிக அடையாளங்கள்.

இந்த அடையாளங்கள் காட்டும் நாகரிகம், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், இப்படி ஒரு சமுதாயம் வாழ்ந்திருக்க முடியுமா? வாழ்க்கை முறை, அரசாட்சி, நிர்வாகம், கட்டடக் கலை, கணிதம், மருத்துவம், விவசாயம் ஆகிய பல்வேறு துறைகளில் இத்தனை சாதனைகளா?

0

http://www.tamilpaper.net/?p=8394

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 19

எகிப்து : கடவுள் போட்ட புதிர்

எஸ்எல்வி. மூர்த்தி

pyramids31.jpg

முக்கிய மன்னர்கள்

கி.மு. 3165. மெனிஸ் என்ற மன்னர் அரியணையில் அமர்ந்திருக்கிறார். அவருடைய மனசு அவருக்குச் சொல்கிறது. ‘மெனிஸ், நீ ஒரு மாவீரன். இத்தனை சிறிய ராஜ்ஜியம் உனக்கு எப்படிப் போதும்?’

கொட்டியது முரசு. புறப்பட்டது மெனிஸ் அரசரின் படை. பக்கத்து ராஜ்ஜியங்கள் மீது பாய்ந்தது. எகிப்து நாட்டின் மேற்பகுதி நைல் பள்ளத்தாக்கு என்றும், கீழ்ப்பகுதி நைல் டெல்ட்டா என்றும் அழைக்கப்பட்டன. ஆரம்ப நாள்களில் இவை இரண்டும் இரு தனி நாடுகளாக இருந்தன. கி. மு. 3150 -இல் மெனிஸ் மன்னர் நைல் பள்ளத்தாக்கு, நைல் டெல்ட்டா ஆகிய இரண்டு பகுதிகளையும் இணைத்து, எகிப்தை ஒரே நாடாக்கினார். பண்டைய எகிப்து நாகரிகம் தொடங்கியது இப்போதுதான்.

மெனிஸ் சரித்திரம் படைத்தார். அண்டை ராஜ்ஜியங்கள் மீது போர் தொடுத்து, அவற்றை அடி பணிய வைத்து, தன் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வந்த முதல் மன்னர் அவர்தான். அவற்றுள் சில ராஜ்ஜியங்களைப் பூசாரிகள் ஆண்டு வந்தனர். தங்களைக் கடவுளின் தூதர்கள் என அறிவித்துக் கொண்டு, அவர்கள் மக்களைப் பயமுறுத்தி வைத்திருந்தார்கள்.

‘கடவுளின் அவதாரம் பூசாரிகள் அல்ல, நான்தான்’ என்று மெனிஸ் அறிவித்தார். இன்னொரு முக்கிய மன்னர் மூன்றாம் துத்மோஸிஸ் (Tuthmosis III). கி.மு. 1479 முதல் கி.மு. 1425 வரை இவர் ஆட்சி செய்தார். இவர் பதவிக்கு வந்தவுடன், எகிப்தின் பாகங்களாக இருந்த பாலஸ்தீனம், சிரியா போன்ற பகுதிகள் புரட்சிக் கொடிகளை உயர்த்தின. தன் படைகளைத் தலைமை ஏற்று நடத்திய அவர் பாலஸ்தீன, சிரிய நாடுகளை அடக்கினார். ஒரு முறை ஆப்பிரிக்காவில் வேட்டைக்குப் போனபோது ஒரே நாளில் நூற்றி இருபது யானைகளைக் கொன்று வீழ்த்தினார் என்று ஒரு கல்வெட்டு சொல்கிறது. பதினேழு போர்களைத் தலைமை தாங்கி நடத்தினார். நாற்பத்து இரண்டு நகரங்களை ஜெயித்தார். எகிப்தைப் பெரிய சாம்ராஜ்ஜியமாக்கினார்.

இந்த மாவீரர் பெரும் கலா ரசிரும்கூட. காலம் காலமாக எகிப்தின் புகழ் சொல்லும் பல அரண்மனைகள், மாளிகைகள், கட்டடங்கள், பூங்காக்கள், சிற்பங்கள் இவர் ஆட்சியில் வந்தவைதாம். கார்னாக் (Karnak) என்ற இடத்தில் இருக்கும் இவர் கட்டிய கோயிலின் அமைப்பு, ஓவியங்கள் உலகப் புகழ் பெற்றவை.

இந்த மாவீரரை, கலா ரசிகரைச் சந்திக்க விரும்புகிறீர்களா? உடனே புறப்படுங்கள் எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவுக்கு. போக வேண்டிய இடம் கெய்ரோ மியூஸியம். 1881- இல் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஒரு கல்லறையில் மூன்றாம் தூத்மஸின் உடலைக் கண்டுபிடித்தார்கள். அதாவது, அவர் இறந்து சுமார் 3331 ஆண்டுகளுக்குப் பிறகும் உடல் பத்திரமாக இருந்தது. அவர் கெய்ரோ மியூஸியத்தில் பத்திரமாகக் காப்பாற்றப்பட்டு நமக்கு தரிசனம் தருகிறார்.

எகிப்திய மன்னர்களியே தலை சிறந்தவராகக் கருதப்படுபவர் இரண்டாம் ராம்சேஸ் (Rameses II). எகிப்தை அதிக காலம் ஆண்டவர் இவர் – 66 ஆண்டுகள் (கி.மு. 1279 – கி.மு. 1213). வயது மட்டும்தான் இவர் சாதனையா? இல்லை, இல்லை. தனக்கு முன்னால் வந்த ஃபாரோக்கள்போல் இவரும் பிரம்மாண்டமான கோயில்கள் கட்டினார். இவருடைய முக்கிய உருவாக்கம் அபூ ஸிம்பெல் ஆலயம் (Abu Simbel). மலைக்குள் 200 அடி நீளத்துக்குக் குடைந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் முகப்பில் 67 அடி உயர இரண்டாம் ராம்சேஸ் சிலை. அவர் காலடியில் ஆள் உயர ராணிகளின் சிலைகள். இவையும், கெய்ரோவில் 11 மீட்டர் உயரத்தில் தனக்காகவே இவர் அமைத்துக்கொண்ட கிரானைட் உருவச் சிலையும், ராம்சேஸ் படைப்புத் திறமையின் அடையாளங்கள். (யாரும் எளிதில் முறியடிக்க முடியாத சாதனைகள் இன்னும் பல இவருக்கு உண்டு - 8 மனைவிகள், 100 ஆசை நாயகிகள், 56 மகன்கள், 44 மகள்கள் என்று மொத்தம் 100 குழந்தைகள்!)

ஆனால், வரலாறு இரண்டாம் ராம்சேஸை நினைவு வைத்திருப்பது வேறு காரணங்களுக்காக. யூத இனத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்களை இரண்டாம் ராம்சேஸ் அடிமைகளாக நடத்தினார். யூதர்களின் தலைவரும் வழிகாட்டியுமான மோஸஸ் மன்னருக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கினார். இறைவனிடம் “பத்துக் கட்டளைகள்” பெற்ற அதே மோஸஸ் தான்!

அரசரின் அடக்குமுறை தாங்காத யூதர்கள் மோஸஸ் தலைமையில் எகிப்து நாட்டை விட்டுக் கூட்டமாக வெளியேறினார்கள். வழியில் செங்கடல் அவர்கள் எதிரே வழி மறித்தது. பின்னால் பார்த்தார்கள். பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது எகிப்துப் படை.

மாட்டிக் கொண்டு விட்டோமே என்று அவர்கள் பதறினார்கள். மோஸஸ் கடவுளை வேண்டிப் பிரார்த்தித்தார். அதிசயம் நடந்தது. செங்கடல் இரண்டாகப் பிரிந்தது. யூதர்கள் எகிப்தை விட்டுப் பத்திரமாக வெளியேறினார்கள். ஃபாரோக்கள் கடவுளின் அவதாரங்கள் என்ற நம்பிக்கை இருந்த காலம். கடவுளே ஃபாரோ இரண்டாம் ராம்சேஸஸைக் கை விட்டு விட்டார்!

இதற்குப் பிறகு ராம்சேஸுக்கு இறங்கு முகம்தான்!

(ஒரு துணுக்குச் செய்தி. எல்லா நாட்டு மன்னர்களுக்கும், விநோதப் பழக்க வழக்கங்கள் உண்டு. பண்டைய எகிப்தில் ஈக்களின் தொல்லை மிக அதிகம். ஈக்களை விரட்ட, ஒட்டகச் சிவிங்கிகளின் ரோமத்தால் செய்யப்பட்ட swatter (ஈக் கொல்லிக் கருவி) உபயோகித்தார்கள். ஒரு ராஜா சாமானியர்களின் இந்த முறையைப் பயன்படுத்தலாமா? ஒரு புத்திசாலி மன்னர்களுக்குத் தனிவழி சொன்னார் – நூற்றுக்கணக்கான அடிமைகள் நிர்வாணமாக நிறுத்தப்படுவார்கள். அவர்கள் உடல் முழுக்கத் தேன் தேய்க்கப்படும். தேனைத் தேடிவரும் ஈக்கள் அடிமைகளை மொய்க்கும், ராஜா எஸ்கேப்! )

மத நம்பிக்கை

எகிப்து நாகரிகத்தின் பலமான தூண்களில் முக்கியமானது மத நம்பிக்கை. கடவுள், மறுபிறப்பு என்ற இரண்டு தத்துவங்களும் எகிப்தியரின் ஆழ்ந்த நம்பிக்கைகள். நூற்றுக்கணக்கான கடவுள்களை அவர்கள் நம்பினார்கள், தங்கள் தெய்வங்களைத் தினமும் வணங்கினார்கள். இந்த வழிபாடு வீடுகளில்தான். ஏனென்றால், கோவில்களில் விழாக் காலங்களில் மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டார்கள். எல்லா நாட்களும் கோவில்களுக்குப் போனவர்கள் பூசாரிகளும், அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளும்தான்.

ரே என்கிற சூரியன்தான் முக்கிய கடவுள். ஆமன் (Aamon) வாயுதேவன். நம் ஊர் காதல் தெய்வம் மன்மதன் பசு வடிவில் காட்சி அளித்தார். ஹாதர் (Hather) என்று அழைக்கப்பட்டார்.

கடவுள்கள் இப்படி ஆண் வடிவங்களில் மட்டுமல்லாமல், பெண்களாகவும், எருதுகள், மான்கள், குரங்குகள், நரிகள், பாம்புகள், முதலைகள், பருந்துகள் போன்ற மிருக, பறவை வடிவுகளிலும் வணங்கப்பட்டார்கள்.

ஸ்ஃபிங்க்ஸ் (Sphinx) எகிப்தின் கற்பனை உயிரினம். நம் ஊர் கிராம எல்லைகளில், காவல் தெய்வங்களாக, முரட்டு உருவம், முறுக்கு மீசை என்று பயமுறுத்தும் தோற்றத்தோடு இருக்கும் ஐயனார் சிலைகளை ஒரு நிமிடம் கண்கள் முன்னால் கொண்டுவாருங்கள். ஸ்ஃபிங்க்ஸ் நம் ஊர் ஐயனார் போலத்தான். எகிப்தின் காவல் தெய்வங்கள். எகிப்தின் பலபாகங்களில் ஸ்ஃபிங்க்ஸ் சிலைகள் இருக்கின்றன. இவற்றின் முகம் மனித வடிவிலும், உடல் சிங்கம் போன்றும் இருக்கும்.

எகிப்தின் மிகப் பெரிய ஸ்ஃபிங்க்ஸ் கிஸா (Giza) நகரில் இருக்கிறது. இதைப் பெரிய ஸ்ஃபிங்க்ஸ் (The Great Sphinx) என்று அழைக்கிறார்கள். ஏன் தெரியுமா? இதன் ஸைஸ் அப்படி. 65 அடி உயரம். 260 அடி நீளம். 20 அடி அகலம்!

ஆரம்ப காலங்களில், ஸ்ஃபிங்க்ஸ் தலைக்கனம் கொண்ட கடவுளாக இருந்தது. தான் பிரபஞ்சத்தின் மகா பெரிய புத்திசாலி என்று நினைத்தது. நம் ஊரில் சரஸ்வதி மாதிரி எகிப்தில் ம்யூஸ் (Muse) படிப்பு தெய்வம். ஓர் நாள் ம்யூஸ் ஸ்ஃபிங்ஸுக்குப் புதிர் போட்டாள். அந்தப் புதிருக்குப் பதில் சொன்னால்தான், அதன் அறிவைத் தான் ஒத்துக் கொள்ள முடியும் என்றாள்.

புதிர் இதுதான். “உலகில் ஒரு உயிரினம் இருக்கிறது. அதற்குக் குரல் ஒன்றுதான். தன் வாழ்வில் அது முதலில் நான்கு கால்களில் நடக்கும். அடுத்ததாக இரண்டு கால்களில் நடக்கும். கடைசியாக மூன்று கால்களில் நடக்கும். அந்த உயிரினம் எது என்று நீ நாளைக்குள் கண்டுபிடிக்க வேண்டும்?”

ஸ்ஃபிங்க்ஸ் தன் மூளையைக் கசக்கியது. பதில் கிடைக்கவில்லை. எகிப்து மக்கள் புத்திசாலிகள் ஆயிற்றே? அவர்களிடம் உதவி கேட்க முடிவு செய்தது. எகிப்துக்குப் போனது. மக்களை சந்தித்தது. தன் சந்தேகத்துக்குப் பதில் கேட்டது.

ஒடிபஸ் (Oedipus) என்ற அறிஞர் கேட்டார். “ஸ்ஃபிங்க்ஸ், நான் உனக்குச் சரியான பதில் சொன்னால், நீ எங்களுக்கு என்ன தருவாய்?”

“உங்கள் பதில் கரெக்ட் என்று ம்யூஸ் ஒத்துக் கொண்டால், உலகம் இருக்கும்வரை உங்கள் நாட்டையும், மக்களையும் நான் பாதுகாப்பேன்”

“ஸ்ஃபிங்க்ஸ், ம்யூஸ் குறிப்பிட்ட உயிரினம் மனிதன்.”

“எப்படி?”

“மனிதன் குழந்தையாக இருக்கும்போது இரண்டு கைகள், இரண்டு கால்கள் என நான்கு கால்களில் தவழ்கிறான். வளர்கிறான். இரண்டு கால்களில் நடக்கிறான். வயதாகும்போது ஊன்றுகோல் என்கிற மூன்றாவது கால்.”

அவர் பதிலை ம்யூஸ் ஏற்றது. அன்று முதல் ஸ்ஃபிங்க்ஸ் எகிப்து நாட்டில் தங்கியது. என்றென்றும் , எகிப்தைப் பாதுகாத்து வருகிறது. பிரதி உபகாரமாக மக்களும் பிரம்மாண்டச் சிலைகள்வைத்து மதிப்பும், மரியாதையும் தருகிறார்கள்.

0

http://www.tamilpaper.net/?p=8408

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.