Jump to content

துன்னாலைப் பொடியன்


Recommended Posts

நடந்து முடிந்த ஆறாம் வகுப்புக் கணிதப்பரிட்சையில் வெறும் எண்பது புள்ளிகள் மட்டும் எடுத்திருந்தமை சிறுவனின் வீட்டில் கலம்பகமாகியிருந்தது. ஆர்ப்பாட்டங்கள், திட்டல்களின் பின்னர், கணக்கில் நூறு எடுக்கவேண்டியதன் அவசியம் எடுத்தியம்பப்பட்டு அன்றைய இரவு ஓய்ந்திருந்தது. விக்கிக்கொண்டு சிறுவன் தூங்க முயன்றுகொண்டிருந்தான். உலகை நோக்கி ஒரு ஆவேசம் அவனுள் உணரப்பட்டது. "நெற்றிக்கண் பெறுவதற்கு வழியிருப்பின்…" பெருமூச்சு விட்டபடி, நெற்றியினைச் சுருக்கி, அறையின் ஜன்னல் மீது தனது கற்பனைக் கண்ணைப் பிரயோகித்தான். வீடே அதிர்ந்தது. குறிப்பாக ஜன்னல் கண்ணாடி நொருங்கி விழுவது திண்ணம் என்பது போல் அந்த அதிர்வு இருந்தது. வீட்டை உடைத்துவிட்டோமோ என்ற பதைபதைபதைப்பில், மேலும் அடிவாங்காது தப்பிக்கொள்வதற்காக, கண்களை இறுக்க மூடிக்கொண்டு நித்திரை போல் பாசாங்கு செய்ய ஆரம்பித்தான்.
 
வீடு மீண்டும் களேபரப்பட்டது. கூடத்தில் அப்பாவும் அம்மாவும் தாத்தாவும் பரபரக்கப் பேசிக்கொண்டிருந்தார்கள். சில கணத்தில் வேறும் சில குரல்கள். பக்கத்து வீட்டு அன்ரியும் அம்மம்மாவும் வந்துவிட்டார்கள். முன்வீட்டு அண்ணையும் அவர்கள் பக்கத்துவீட்டு அண்ணையும் கூட வந்துவிட்டார்கள். அதிர்ந்தது இவர்கள் வீடு மட்டுமல்லவாம். அயலே அதிர்ந்ததாம். உடல் தெப்பமாய் நனைந்திருந்தது, உடலில் இருந்து பல்வேறு திரவங்கள் அவ்வெள்ளத்தை உருவாக்கியிருந்தன. குழறி அழுதுவிடவேண்டும் போல் தோன்றியது. வேண்டுமென்று நான் செய்யவில்லை என விம்மி அழவேண்டும் போலிருந்தது. இன்னமும் எவரும் தன்னை எழுப்ப வராதமை சற்று நம்பிக்கை தந்தபோதிலும், தனது அழிவுக்கான நேரம் நொடிகள் மட்டுமே என மனம் மிரட்டிக்கொண்டிருந்தது. "நாசமாப்போன கணிதம்" என்று பற்களை நறும்பிக்கொண்டு சிறுவன் குலுங்கி அழத் தொடங்கினான். அவனது அழுகையின் ஒலியினை இதற்குமெலால் அவனால் கட்டுப்படுத்தமுடியவில்லை. குரலெடுத்து அழத்தொடங்கினான். யாரோ ஓடி வருவது கேட்டது.
 
அம்மாவந்து அணைத்துக்கொண்டார். 
 
"அப்பன் அழாதை, சண்டை இஞ்சையில்லையப்பு, அது எங்கையோ தூர நடக்குது. நீ பயப்பிடாத."
 
அம்மா சமாதானப்படுத்தினார். சுவிட்ச்சைப் போட்டது போல் அழுகை நின்றது. அம்மாவிற்குத் தனது அணைப்பின் பெருமை தலைக்கனம் தந்தது. சிறுவன் எழுந்து அம்மாவுடன் கூடத்திற்கு வந்து கூட்டத்தில் சேர்ந்து கொண்டான். அடுத்த ஒரு மணிநேரம் வரை, மேலும் ஒலிகளிற்காய் காது குடுத்தபடி கூட்டம் கூடியிருந்தது. எதுவும் இல்லாது போக. இரவு தூக்கத்துள் புகுந்து கொண்டது.
 
கூடத்தில் பரபரப்புக்கேட்டு, சிறுவன் பதைத்து எழுந்தான். அப்பா பத்திரிகை வாங்கக்கடைக்குச் சென்று, பத்திரிகை தீர்ந்துபொனதால் தான் செய்தி காவிப் பத்திரிகையாய் மீண்டிருந்தார். 
 
"துன்னாலைப் பொடியனாம், நெல்லியடி அமோக வெற்றியாம்" என்பது சாராம்சயமாய இருந்தது.
 
----------------------------
 
சொந்தத் தோட்டத்தில் விளைந்த சின்ன வெங்காயத்தை, இரவில் தெரியும் நட்சத்திரங்கள் அளவிற்குச் சின்னதாய் வெட்டி, கொல்லையில் நின்ற செடியில் இருந்து அப்போது தான் பிடுங்கி வந்த பச்சை மிழகாயினை நீழக்கோடுகளாய் அரிந்து, வீட்டுக்கோழி போட்ட சிவத்தை முட்டையில் இரண்டை நல்லெண்ணையோடு சேர்த்துத் தான் சிறுமியின் அம்மா அவளிற்காய் எப்போதும் முட்டை பொரிப்பார். அதை அரிசிமாப் புட்டோடு சேர்த்து உண்பது சிறுமிக்கு மிகப்பிடித்த உணவு. உண்ணும் போது புராணக் கதைகளை அம்மா அவளிற்குச் சொல்லிக் கொண்டிருப்பாள். அருகே இருக்கும் அம்மம்மா ஒவ்வொரு கதைக்குள்ளும் உதிரிக்கதை சொல்லுவார். அன்றிரவும் அவ்வாறு தான் சிறுமிக்கு அவர்கள் உணவூட்டிக்கொண்டிருந்தார்கள். அநீதி எப்போதும் தோற்கும் என்று நரசிம்மன் கதை தத்ரூபமாகச் சொல்லப்பட்டுக்கொண்டிருந்தது. 
 
முகட்டில் எலி கலைத்துச் சென்ற பூனைக் குட்டி தவறிக் கோப்பைக்குள் விழுந்து சிறுமியின் புட்டும் முட்டைப்பொரியலும் கொட்டிப்போனது. ஆத்திரத்தில் சிறுமி நரசிம்மனாகி, இடுப்பில் கைவைத்த படி, பூனையினைப் பார்த்துக் கோரப்பார்வையினைப் பிரயோகித்தாள். பூனை தாவி ஜன்னலில் இருந்தது. சிறுமி பார்வையால் பூனையினைத் தொடர்ந்து ஜன்னலை அடைந்தபோது, வீடு அதிர்ந்தது. ஜன்னல் உடைந்து நொருங்கி விடும்போல் இருந்தது…
 
-----------------------------------------
 
ஆழ்மனதின் ஆழத்தில், எங்கோ ஒரு மூலையில், மில்லரின் வெடிப்பில் தன் நெற்றிக்கண் ஆற்றிய பங்கு நம்பிக்கையாய் சிறுவனிற்குள் வளர்ந்தது.
 
ஆழ்மனதில் ஆழத்தில், எங்கோ ஒரு மூலையில், மில்லரின் வெடிப்பில் தன் நரசிம்மன் அவதாரம் ஆற்றிய பங்கு நம்பிக்கையாய் சிறுமிக்குள் வளர்ந்தது.
 
------------------------
 
முதற்பனி தூவியிருந்த கனேடிய மாலை. பருவத்தின் மிழிர்ச்சிகள் அத்தனையும் உச்சத்தில் இருந்த பல்கலைக்கழக மண்டபம். தமிழ் மாணவர் மன்றத்தின் கலையிரவு ஆரம்பமாகியிருந்தது. என்னதான் வெள்ளச்சியாய் வாழினும் சேலைகட்டிப் பொட்டு வைத்ததும் தமிழிச்சிக்குள் ஏதோ ஒன்று நடந்து தான் விடுகிறது. “தந்தன தந்தன தாளம் வரும் ஒரு ராகம் வரும்" பாடல் ஏ.ஆர்.றகுமானால் றீமிக்ஸ் செய்யப்பட்டு அவளிற்குள் ஓலித்துக் கொண்டிருந்தது. விளக்குகள் அணைந்திருந்த அறைக்குள் யாரோ பிந்தி வந்தவர்கள் திறந்த கதவின் நீக்கலிற்குள்ளால் நுழைந்த ஒளி அவள் முகத்தில் பட்டபோது, கடைசி வரியில் நண்பர் மத்தியில் அமர்ந்திருந்த அவனின் கண்கள் பாலுமகேந்திராவின் கமராவாய் ஆகி அவள் முகத்தை மந்த ஒளியில் கவ்விக் கொண்டன. “வளையோசை கலகலகலவென…" பாடல் ஏ.ஆர்.றகுமானால் றீமிக்ஸ் செய்யப்பட்டு அவனிற்குள் ஒலிக்கத் துவங்கின.
 
“Excuse me, is that seat taken?”, மாதக்கணக்கில் மறைந்திருந்து பார்ப்பதற்கு அவனென்ன தண்ணியில்லாக் காட்டிலா இருக்கிறான். பின்வாங்குப் பையன் இப்போ அவளருகில் இருந்த ஆசனத்தில் அமர்ந்திருந்து கலைநிகழ்வு பார்க்கத் தொடங்கினான்.
 
-------------------------------------
 
"Grit தான் வாழ்வில் வெற்றிக்கு அத்தியாவசியம். அறிவு ஆற்றல் என்பனவெல்லாம் வெறும் அலட்டல்கள். Grit இல்லாத எவரும் வாழ்வில் அடையக்கூடிய அனைத்தையும் அடைந்துவிடுவதில்லை. கணக்கில் தொண்ணூற்றைந்து காணாது. நீ நூறு எடுப்பது முற்றிலும் சாத்தியம். அதற்கு நீ கடினமாய் சீராய் உழைக்கணும். "
 
ஆறாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த பையனிற்கு மேசையில் இருந்து அவன் அப்பா பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்.
 
“அம்மா I just can't get enough of your முட்டைப் பொரியல்"
 
 தாயால் உணவு தீத்ததப் பட்டுக்கொண்டிருந்த சிறுமி தாயோடு செல்லம் கொட்டிக்கொண்டிருந்தாள்.
 
ரொனேடோ ஒன்று எங்கோ கடந்து செல்வதன் குறியாய் காற்றுச் சுழன்று அடித்தது. திடீரென கோடை இடி முழங்கி வீடு அதிர்ந்தது. நெற்றிக்கண்ணனின் முகத்திலும் நரசிம்மியின் முகத்திலும் அதே யோசனை ரேகைகள், எப்போதும் போல் படர்ந்தன. 
 
துன்னாலை என்பது எங்கிருக்கிறது என்று தெரியாது வளர்கின்ற சிறுவனும் சிறுமிறும் என்றோ ஒரு நாள் வியந்து கேட்க இருக்கின்ற துன்னாலைப் பொடியனின் கதை பல்கலைக்கழக்க கலைவிழாவில் சந்தித்து அம்மா அப்பாவாகியிருக்கும் சிறுவனிற்குள்ளும் சிறுமிக்குள்ளும் அடைகாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன…
Link to comment
Share on other sites

இன்னுமொருவன்,

நான் இந்த கதையை ஒரு மூன்று அல்லது நான்கு நிமிடங்களுக்குள் வாசித்து முடித்துவிட்டேன்.

ஆனால் என்னமோ ஒரு மூன்று மணித்தியாலம் படம் பார்த்த உணர்வாக என்னுள் எழுகிறது. காலவேகம் மாறி மன உலகம் விரைவாக சுழலுகிறதோ.

கதையை (வடமராச்சி சிறுவனையும் சிறுமியையும்)இணைக்க போகிறீர்கள் என்பது முன்கூட்டியே தெரிந்தாலும், முடிவு அருமையாக இருந்தது.

நல்ல திரைகதைக்குரிய எழுத்து. ஒரு சிறுகதையிலேயே நேர்த்தியான எடிட்டிங் கதையை இன்னொரு படி நிலைக்கு எடுத்து செல்கிறது.

உங்கள் பதிவுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறிந்து தெரிந்த ஒரு விடயம் உங்களின் பார்வையூடாய்ப் பார்க்கும்போது இன்னுமொரு  இதமாய்  இருக்கின்றது...! :)

Link to comment
Share on other sites

வழமையான உங்கள் பாணியில் நல்லதொரு ஆக்கம்.

அடைகாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்று முடியும் இந்த படைப்பு சிந்திக்க ஒரு தொடக்கத்தை ஏற்படுத்துகின்றது. அந்தவகையில் இந்தப் படைப்பு தனது நோக்கத்தில் நேர்த்தியாக உள்ளது.

ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு காலம் விதையாய் புதைந்துள்ளது. அவை முளைத்தால் பெரும் விருட்சங்கள். அந்த உண்மைகளை உணர்ந்தாலே இக்காலத்தின் வெற்றியாக அது அமையும். இவ்வாறன ஆக்கங்கள் அதற்கு ஏதுவானது என்பதில் ஐயமில்லை. நன்றி

Link to comment
Share on other sites

கதை சிறிதாக, சுவையாக இருக்கின்றது.

 

 

 
-------------------------------------
 
"Grit தான் வாழ்வில் வெற்றிக்கு அத்தியாவசியம். அறிவு ஆற்றல் என்பனவெல்லாம் வெறும் அலட்டல்கள். Grit இல்லாத எவரும் வாழ்வில் அடையக்கூடிய அனைத்தையும் அடைந்துவிடுவதில்லை. கணக்கில் தொண்ணூற்றைந்து காணாது. நீ நூறு எடுப்பது முற்றிலும் சாத்தியம். அதற்கு நீ கடினமாய் சீராய் உழைக்கணும். "
 
ஆறாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த பையனிற்கு மேசையில் இருந்து அவன் அப்பா பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்.
 
“அம்மா I just can't get enough of your முட்டைப் பொரியல்"
 
 தாயால் உணவு தீத்ததப் பட்டுக்கொண்டிருந்த சிறுமி தாயோடு செல்லம் கொட்டிக்கொண்டிருந்தாள்.
 
ரொனேடோ ஒன்று எங்கோ கடந்து செல்வதன் குறியாய் காற்றுச் சுழன்று அடித்தது. திடீரென கோடை இடி முழங்கி வீடு அதிர்ந்தது. நெற்றிக்கண்ணனின் முகத்திலும் நரசிம்மியின் முகத்திலும் அதே யோசனை ரேகைகள், எப்போதும் போல் படர்ந்தன. 
 
துன்னாலை என்பது எங்கிருக்கிறது என்று தெரியாது வளர்கின்ற சிறுவனும் சிறுமிறும் என்றோ ஒரு நாள் வியந்து கேட்க இருக்கின்ற துன்னாலைப் பொடியனின் கதை பல்கலைக்கழக்க கலைவிழாவில் சந்தித்து அம்மா அப்பாவாகியிருக்கும் சிறுவனிற்குள்ளும் சிறுமிக்குள்ளும் அடைகாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன…

 

 

சில கேள்விகள் எழுகின்றன.

 

காலங்களும் தேசங்களும் கடந்தாலும் ஈழத் தமிழர்கள் தம் பிள்ளைகளை பாடங்களுக்கு 100 மார்க்ஸ் எடுச்சச் சொல்லி அழுத்தம் கொடுக்கும் மனநிலை மாறாது என்கின்றீர்களா? Grit பற்றிய அறிவுரையுனூடாக சொல்வது பிள்ளைகளை போட்டிக்கு தயார்படுத்தும் குதிரைகளாக வளர்க்கும் முறையில் தானே அமைகின்றது.

 

காலமும் தேசமும் மாறினாலும் முட்டைப் பொரியலும், 100 மார்க்ஸும் மாறவில்லை தமிழர்களும் மாறவில்லை. மாற்றங்களை உள் வாங்காத ஒரு மலட்டு சமூகமாகவா இருக்கின்றோம்?

 

அன்று ஊரில் சிறுமிக்கு அன்று அம்மா புராணக் கதைகளை முட்டைப் பொரியலுடன் சாப்பிடும் போது கூறுகின்றார். பின் கனடாவிலும் அவரது மகள் அதே முட்டைப் பொரியலை உண்கின்றார். இங்கு அவர் துன்னாலைப் பெடியனின் கதையை சொல்லும் சந்தர்ப்பம் வருகின்றதே? கதையின் கோட்டில் பயணித்தால் கனடாச் சிறுமியின் அம்மா இந்தக் கணத்தில் தானே தான் அடைகாத்து வைச்சு இருக்கும் துன்னாலை பெடியனின் கதையைச் சொல்லியிருப்பார்?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவனின் எழுத்தாற்றல் பலமுறை என்னைப் பிரமிக்க வைத்துள்ளது. அவ்வகையில் காலநதியின் வேகத்துடன் கதை சொல்வதின் புதிய பரிமாணம் இவரின் எழுத்தாற்றலுக்கு இன்னுமொரு மகுடமாய். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவனின் கதை பரிணாமங்களை சொல்லி நிற்கிறது.ஆனால் நான் முக்கியமாக விளங்கிக் கொண்டது நாம்[என்னையும் சேர்த்து]பலவீனமான நிலையில் இருக்கும் போது எமக்கு மீறிய சக்தியால் எம்மை காப்பாற்றிக் கொள்வது மாதிரி கனவு காண்கிறோம்.எமது எதிரிகளை அடிப்பது மாதிரி,ஒழிப்பது மாதிரி....நிஜத்தில் முடியாததை கனவிலாவது நடத்திப் பார்க்கிறோம்:)

Link to comment
Share on other sites

இன்னுமொருவன்,
துன்னாலை மில்லரை அப்படியே கதைக்குள் கொண்டு வந்து கனடாவிலும் அந்த வேரை பதியமிட்டுள்ளீர்கள். நிழலி சொன்னது போல 100புள்ளியும் முட்டைப்பொரியலும் அடுத்த அடியை நகர்ந்து செல்ல முடியாதபடி தமிழன் எங்கும் எப்போதும் சில இயல்புகளை அப்படியே சந்ததிக்கும் காவுவான் என்பது மீண்டும் நிரூபணமாகிறது. 
Link to comment
Share on other sites

வெள்ளைகரு மட்டும் உயிர்ப்புடன் மஞ்சள் கரு கூழாகிவிட்டது .அடை வைத்த முட்டை இனி பொரிக்காது.

Link to comment
Share on other sites

சுபேஸ், பகலவன், நிழலி, நொச்சி, சண்டமாருதன், வாத்தியார், நந்தன், ரதி. சாந்தி, காவலூர் கண்மணி உங்கள் அனைவரது வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.
 
பகலவன்,
எழுத்துப் படமாவது வாசகனில் பெரும்பங்கு தங்கியுள்ளது. உங்கள் ரசனைக்கு நன்றி.
 
சுகன்,
உங்கள் கருத்தோடு ஒத்த எனது கருத்தினை, நிழலியின் கேழ்வி சார்ந்து கீழே உள்ளடக்குகிறேன்.
 
காவலூர்கண்மணி அவர்களின் கனிவான கருத்திற்கு மிக்க நன்றி.
 
நன்றி ரதி மற்றும் சாந்தி. 
 
குறியீடுகள் பற்றி நானே பேசுவது ஒருவேளை வினைத்திறன் குறைப்பதாய் இருக்கலாம். இருப்பினும், ஒன்றுக்கு மேற்பட்டவர்களிற்குள் இக்கேள்வி எழுந்ததால் அதைச் செய்கிறேன்.
 
நிழலி,
முதலில் உங்கள் வாதத்திற்கு மிக்க நன்றி.
நூறு மாக்ஸ் விடயத்தைத் தனிப்பின்னூட்டமாகப் பதிகிறேன், ஏனெனில் அது சற்றுப் பெரியது. மற்றையவைக்கான எனது கருத்து இப்படி இருக்கிறது:
 
மில்லரின் வெடிப்பில் எனக்கும் உங்களிற்கும் உள்ளடங்கலாய் அனைவரிற்கும் பங்குண்டு. ஆனால், எங்கள் வாழ்வில் இதையெல்லாம் இருந்து சிந்திக்க எங்களிற்கு அவகாசம் அதிகம் கிடைப்பதில்லை.
 
நெற்றிக்கண்ணனும் நரசிம்மியும் அன்றைய இரவில் வெடிப்பிற்கு முன்னதாக அனுபவித்த விடயங்களை முற்றுமுழுதான குறியீடுகளாக மட்டும் எடுத்துக்கொள்ளின், ரதி சொன்னதைப் போல, இருவரது மனதிலும் அநீதி சார்ந்த சிந்தனை பூதாகரமாக இருந்தது. பூதாகரமான அநீதியினை எதிர்கொள்வதற்கு அவர்கள் பூதாகரமான ஆயுதங்களை விரும்பினார்கள்--ஒன்று நெற்றிக் கண், மற்றையது நரசிம்ம அவதாரம். அவர்களது விருப்பம் வெறும் விருப்பமாக மட்டும், சாத்தியப்படமுடியாதாகவே அவர்களிற்குள்ளாவும் நப்பப்பட்டு இருந்தபோதிலும், மில்லர் வெடித்த கணத்தில், அவர்களே அவர்களை நம்பமுடியாதபடி, தங்கள் ஆயுதங்கள் பிரயோகிக்கப்பட்டதன் விளைவினை உணரும் சந்தர்ப்பம் அவ்விருவரிற்கும் கிடைத்தது. அதனால், என்னையும் உங்களையும் போலன்றி, மில்லரின் வெடிப்பில் அவர்களின் பங்கு அவர்களிற்குள் மறக்கமுடியாப் பரிமாணத்தில் பதிவாகிப்போனது.
 
இவ்விரு சிறார்களும் அடைந்த மேற்படி உணர்விற்குக் காரணமான வெடிப்பின் காரணகர்த்தா மில்லரும் கூட, ஒரு வகையில் பார்க்கையில், அவர்களை ஒத்த மனநிலையிலேயே செயற்பட்டிருந்தார். அதாவது, மனமெங்கும் ஆக்கிரமித்து உறுத்திய பூதாகரமான அநீதிக்கு எதிரான பூதாகரமான ஆயுதமாகவே மில்லரின் தாக்குதல் இருந்தது.  அவ்வகையில், தனது வெடிப்பின் பின்னால் தனது பூதாகர ஆயுதத்தின் விளைவுசார்ந்து இரைமீட்கும் சாத்தியமிழந்த மில்லரிற்காகவும் இவ்விரு சிறார்களும் வாழத் தலைப்படுகின்றனர். இத்தகைய மனவொற்றுமையுடைய இருவர் உரிய நேரத்தில் சந்திப்பின், அவர்கள் கணவன் மனைவியாவதற்கான சாத்தியம் நிச்சயம் அதிகம்.
 
மில்லைரை வீரனாகப் புகழ்ந்து, கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் புகழ்பாடிக் கதைகூறிச் சென்றுவிடக்கூடிய என்னையும் உங்களையும் போன்று இவ்விருவராலும் அவர்கள் குழந்தைகளிற்குக் கதைசொல்ல முடியாது. தாமுள்ளுர உணர்ந்த வீரியத்தில், தத்ருபமாக, வானவில்லின் அனைத்து நிறங்களையும் உள்டக்கிக் கதைசொல்வதற்கு, அவர்களின் குழந்தைகளிற்கு இன்னும் வயதும் பக்குவமும் வந்து விடவில்லை. அதனால் தான், அவர்கள் வளரும் வரை உணர்வை அடைகாக்கிறார்கள். ஆனால் நிச்சயம் ஒருநாள் பேசுவார்கள்.
 
இனி கனடா வந்தபின்னும் அதே புட்டும் முட்டைப்பொரியலுந்தானா என்பது, ஒரு முனையில் பார்கும் போது பலத்த முற்போக்கான கோபமாகத் தெரியினும், உண்மையில் விமர்சனத்திற்குரியது. இன்று ஊடகங்களில் ஒரு செய்தி முன்னணியில் உலாவருகிறது: அதாவது, பத்து நாளைக்கு ஒரு மொழி என உலகில் மொழிகள் அழிந்துவருவதால் இலத்திரனியல் இம்முனையில் பாதுகாப்பாளனாய் பங்காற்ற விளையும் திட்டம் ஒன்று சார்ந்தே இன்று இந்தப் பேச்சு ஊடகங்களில் வலம்வருகிறது. இந்தக் கலந்துரையாடலில் வந்த ஒரு உதிரித் தகவல், பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகுதியினர் அப்பிரதேசக் காடுகளில் உள்ள நானூறுக்கு மேற்பட்ட தாவர வகைகளை சர்வசாதாரணமாக இனம்பிரித்து அடையாளப்படுத்துகிறார்களாம். மேற்கின் நன்கு கல்விகற்ற தாவரவியலாளரிற்குக் கூடச் சாத்தியப்படாதை இந்தக் கிராமமக்கள் செய்வதற்கு ஏதுவாய் இருக்கும் ஒரே காரணி அவர்களது மொழி. அந்த மொழி அத்தனை தாவரங்களையும் இலகுவில் இனம்பிரித்து அடையாளப்படுத்திப் பரிடசயமாய் வைத்திருக்கிறது. அந்த மொழி அழியின் அந்த அறிவும் அழிந்து போகும்.
 
உணவும் அப்படித்தான். புட்டையும் முட்டைப் பொரியலையும் பின்தங்கியவர்களின் மடைத்தனமாய்ப் பார்ப்பது ஏற்றுக்கொள்ளமுடியாது. மொழியினை உருவாக்கிய மூதாதையின் மூச்சு மொழிக்குள் இருப்பது போன்றே உணவிற்குள்ளும். ஆலங்கொழுக்கட்டை தருகின்ற கிறக்கத்தை ஆங்கிலத்தில் எந்தக்கொம்பனாலும் சித்தரிக்க முடியாது. புலம் பெயர்ந்த தமிழ் சந்ததியினை ஊரொடு பிணைத்து வைத்திருப்பதில் வாராந்த தமிழ் வகுப்புக்களிற்கு இல்லாத பங்கு வீட்டில் சமைக்கப்படும் தமிழ் உணவுகளிற்கு உள்ளது. எனக்குத் தெரியத் தக்கதாய், பிரஞ்சுக் காதலனுடன் கிளிமஞ்சாரோ ஏறச் சென்ற கனடாவில் பிறந்து வளர்ந்த ஒரு தமிழ் பெண் மருத்துவர், கறியும் சோறும் குழைத்து அடிக்கும்போது தான் மூச்சுவருவதாய்க் கூறுவார். இந்தப்பெண்ணில் நானறிந்தவரை லைற்றடிச்சுத் தேடினாலும் கட்டுப்பட்டித்தனத்தைக் காணமுடியாது. சோறு உண்பதனால் கிணற்றுத் தவளை என்றாகாது. அடையாளம் பல கோணங்களில் பரிணமிக்கும். பாதுகாப்புணர்வும் தன்னம்பிக்கையும பல காரணிகளால் வளர்க்கப்படும். 
 
புட்டும் முட்டைப்பொரியலும் கட்டுப்பட்டித் தனம் என்றால், எதை உண்ணலாம் என்று பரிந்துரைப்பீர்கள்? நீங்கள் பட்டியலிடும் ஆரோக்கியமான எந்தப் பதார்த்தமாகினும் கனடாவில் கிடைக்கிறது என்றால், அதைக் கொண்டுவந்தவன் கதை கூடவே கிடைக்கும். காட்டில் வேட்டையாடும் மூஸ் இறைச்சி முதல் நாகரிகத்தின் உச்சாணிக்கொப்பாய் எவரேனும் கருதக்கூடிய எந்த உணவாகினும் அதில் எமக்குச் சம்பந்தமே இல்லாத எவனோ ஒருவனுடைய பெருமை பொதிந்திருக்கும். தமிழன் யாழ்ப்பாணத்தின் உணவை உண்கிறான் என்றால் அதில் மலட்டுத் தனம் ஏதும் இல்லை. முற்றுமுழதான விழைச்சல் நிலமே வெளிப்படுகிறது என்பது எனது அபிப்பிராயம்.
 
ஏகப்பட்டதை எழுதவேண்டும் என்று தோன்றுகிறது, நீண்டுகொண்டே செல்வதால் நிறுத்திக்கொள்கிறேன்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை, இன்னுமொருவனின் தனித்துவத்தைச் சொல்லி நிற்கின்றது...!

 

அத்துடன் விடை பகல இயலாத வினாக்களையும் விட்டுச் செல்லுகின்றது....!

 

தொடர்ந்து எழுதுங்கள், இன்னுமொருவன்!

Link to comment
Share on other sites

நன்றி, சுவி, புங்கையூரான், சுவைப்பிரியன், தும்பளையான், அபராஜிதன் உங்கள் வருகைக்கும் ஊக்குவிப்பிற்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக நேர்த்தியாகக் கதை சொல்லப்பட்ட விதம் எனக்கும் இப்படி ஏன் எழுத வரவில்லை என்ற ஏக்கமே எழுகிறது. நீங்கள் எழுதுவதே அரிது. அதற்குள் நீண்டுவிட்டது என்று எழுதாமல் விடாது எழுத முடிந்தவற்றை எழுதுங்கள் இன்னுமொருவன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை ...தொடர்ந்து உங்கள் ஆக்கங்களை படையுங்கள்.....

Link to comment
Share on other sites

 

 

 
இனி கனடா வந்தபின்னும் அதே புட்டும் முட்டைப்பொரியலுந்தானா என்பது, ஒரு முனையில் பார்கும் போது பலத்த முற்போக்கான கோபமாகத் தெரியினும், உண்மையில் விமர்சனத்திற்குரியது. இன்று ஊடகங்களில் ஒரு செய்தி முன்னணியில் உலாவருகிறது: அதாவது, பத்து நாளைக்கு ஒரு மொழி என உலகில் மொழிகள் அழிந்துவருவதால் இலத்திரனியல் இம்முனையில் பாதுகாப்பாளனாய் பங்காற்ற விளையும் திட்டம் ஒன்று சார்ந்தே இன்று இந்தப் பேச்சு ஊடகங்களில் வலம்வருகிறது. இந்தக் கலந்துரையாடலில் வந்த ஒரு உதிரித் தகவல், பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகுதியினர் அப்பிரதேசக் காடுகளில் உள்ள நானூறுக்கு மேற்பட்ட தாவர வகைகளை சர்வசாதாரணமாக இனம்பிரித்து அடையாளப்படுத்துகிறார்களாம். மேற்கின் நன்கு கல்விகற்ற தாவரவியலாளரிற்குக் கூடச் சாத்தியப்படாதை இந்தக் கிராமமக்கள் செய்வதற்கு ஏதுவாய் இருக்கும் ஒரே காரணி அவர்களது மொழி. அந்த மொழி அத்தனை தாவரங்களையும் இலகுவில் இனம்பிரித்து அடையாளப்படுத்திப் பரிடசயமாய் வைத்திருக்கிறது. அந்த மொழி அழியின் அந்த அறிவும் அழிந்து போகும்.
 
உணவும் அப்படித்தான். புட்டையும் முட்டைப் பொரியலையும் பின்தங்கியவர்களின் மடைத்தனமாய்ப் பார்ப்பது ஏற்றுக்கொள்ளமுடியாது. மொழியினை உருவாக்கிய மூதாதையின் மூச்சு மொழிக்குள் இருப்பது போன்றே உணவிற்குள்ளும். ஆலங்கொழுக்கட்டை தருகின்ற கிறக்கத்தை ஆங்கிலத்தில் எந்தக்கொம்பனாலும் சித்தரிக்க முடியாது. புலம் பெயர்ந்த தமிழ் சந்ததியினை ஊரொடு பிணைத்து வைத்திருப்பதில் வாராந்த தமிழ் வகுப்புக்களிற்கு இல்லாத பங்கு வீட்டில் சமைக்கப்படும் தமிழ் உணவுகளிற்கு உள்ளது. எனக்குத் தெரியத் தக்கதாய், பிரஞ்சுக் காதலனுடன் கிளிமஞ்சாரோ ஏறச் சென்ற கனடாவில் பிறந்து வளர்ந்த ஒரு தமிழ் பெண் மருத்துவர், கறியும் சோறும் குழைத்து அடிக்கும்போது தான் மூச்சுவருவதாய்க் கூறுவார். இந்தப்பெண்ணில் நானறிந்தவரை லைற்றடிச்சுத் தேடினாலும் கட்டுப்பட்டித்தனத்தைக் காணமுடியாது. சோறு உண்பதனால் கிணற்றுத் தவளை என்றாகாது. அடையாளம் பல கோணங்களில் பரிணமிக்கும். பாதுகாப்புணர்வும் தன்னம்பிக்கையும பல காரணிகளால் வளர்க்கப்படும். 
 
புட்டும் முட்டைப்பொரியலும் கட்டுப்பட்டித் தனம் என்றால், எதை உண்ணலாம் என்று பரிந்துரைப்பீர்கள்? நீங்கள் பட்டியலிடும் ஆரோக்கியமான எந்தப் பதார்த்தமாகினும் கனடாவில் கிடைக்கிறது என்றால், அதைக் கொண்டுவந்தவன் கதை கூடவே கிடைக்கும். காட்டில் வேட்டையாடும் மூஸ் இறைச்சி முதல் நாகரிகத்தின் உச்சாணிக்கொப்பாய் எவரேனும் கருதக்கூடிய எந்த உணவாகினும் அதில் எமக்குச் சம்பந்தமே இல்லாத எவனோ ஒருவனுடைய பெருமை பொதிந்திருக்கும். தமிழன் யாழ்ப்பாணத்தின் உணவை உண்கிறான் என்றால் அதில் மலட்டுத் தனம் ஏதும் இல்லை. முற்றுமுழதான விழைச்சல் நிலமே வெளிப்படுகிறது என்பது எனது அபிப்பிராயம்.
 
ஏகப்பட்டதை எழுதவேண்டும் என்று தோன்றுகிறது, நீண்டுகொண்டே செல்வதால் நிறுத்திக்கொள்கிறேன்.

 

 

இன்னுமொருவன் நீங்கள் என் கேள்வியை புரிந்து கொண்ட கோணம் தவறாக இருக்கின்றது என்று நினைக்கின்றேன். முட்டைப்பொரியலை உண்பது பிற்போக்கானது என்ற பொருளில் அதை எழுதவில்லை.

 

இங்கு முட்டைப் பொரியல் என்பது வெறுமனே ஒரு உணவாக உங்கள் கதையில் காட்டப்படவில்லை. அதை இருமுறை குறிப்பிட்டுள்ளீர்கள். ஒன்று, ஊரில் சிறுமி சாப்பிடும் போதும், இன்னொரு முறை அதே சிறுமி வளர்ந்து தாயாகி தன் குழந்தைக்கு ஊட்டும் போதும் என்று இரு தடவைகள். இவ்விரு தடவைகளிலும் இதனை தனித்தே எழுதாமல் 100 மார்க்ஸ் எடுக்கும் விடயத்துடனும் இணைத்துள்ளீர்கள்.  இதனை Visualize பண்ணிப் பார்க்கும் போது (ஒரு காட்சியாக மனசுக்குள் கதையை விரித்துக் கொள்ளும் போது), அக் காட்சி இரு தடவைகள் வருகின்றன. இரு காட்சிகளின் வேறுபாடு காலமும், தேசமும் மட்டுமே.

 

வெறுமனே நீங்கள் முட்டைப் பொரியலை மட்டும் இரு தடவைகள் எழுதியிருந்தால் அதற்கான அர்த்தம் உணவும் அது தொடர்பான கலாச்சார பின்னனியும் பற்றி மட்டும் பிரக்ஞை கொண்டு இருந்திருக்கும். ஆனால் இதனுடன் கணிதத்துக்கு 100 மார்க்ஸ் எடுக்கும் விடயமும் வருகின்றது. இரண்டையும் பொருத்திப் பார்க்கும் போது விளைவாக தமிழர் சமூகம் தன்னை மாற்றத்துக்குள்ளாக்காமல் அப்படியே உறைந்து கிடக்கின்றதாக எழுதுகின்றீர்களோ என்ற கேள்வி வருகின்றது.

 

எனக்குத் தெரிந்து அநேக தமிழ் குடும்பங்கள் இங்கு கனடாவில் ஊரில் செய்தது போன்றே பிள்ளைகளை ஒன்றுக்கு இரண்டு ரியூசன் கிளாசுக்கு அனுப்புகின்றார்கள். பிள்ளைகள் பாடத்தில் B அல்லது B+ அல்லது A எடுத்தால் கூட "நீ ஏன் உன் நண்பனை மாதிரி A+ எடுக்கவில்லை என்ற கேள்விகளுடன் பிள்ளைகளுக்கு அழுத்தம் கொடுப்பதை காண்கின்றேன். இது நாம் ஊரில் இருந்து இங்கும் எடுத்துக் கொண்டு வந்த  'போட்டி' மனப்பான்மையுடனான ஒரு வெறி. இதை இன்னும் கைவிடாமல் இங்கும் பரப்பிக் கொண்டு இருக்கின்றோம்.

 

இதனடிப்படையில் பார்க்கும் போது தான் உங்கள் கதையில் வரும் இரு மாறாத நிகழ்வுகளும் ஒருங்கு சேர்ந்து என் கேள்வியை உருவாக்கின்றது.

 

நீங்கள் 100 மார்க்ஸ் எடுக்கும் விடயத்தினை இன்னொரு பின்னூட்டமாக எழுதப் போகின்றேன் என்று கூறிய பின்னும் அதனை இங்கு மீண்டும் குறிப்பிட வேண்டி வந்தமை அது ஒரு தனித்த நிகழ்வாக இல்லாமல் ஒரு கூட்டு நிகழ்வாக முட்டைப் பொரியலுடன் சேர்ந்துள்ளமையால்.

 

இவற்றுக்கும் மேலாக உணவு என்பதை கலாச்சார பின்னனியுடன் அணுகுவது தவறான வாதமாக எனக்கு படுகின்றது.

நானும் என் மனைவியும் இன்னும் புட்டும் மாம்பழமும் சாப்பிடுவதில் இன்புறுவது என்பதன் அடிப்படைக் காரணம் அது நாம் வளர்ந்த போது எமக்கு தரப்பட்ட ஆரம்ப கால உணவு என்பதால் தீராக் காதல் போன்று நாக்கின் அடியில் உறைந்து சுவையாக அது இருப்பதே ஆகும். அச் சுவையை தீர்மானித்தவை ஊரின் மண், ஊரின் கால நிலை, ஊரின் தட்ப வெட்பம், அது சார்ந்த தொழில் என்பனவாகும். "என்னதான் இருந்தாலும் ஊரில் சாப்பிட்ட புட்டும் மாம்பழமும் போல இங்கு வராது" என்று சலித்துக் கொளவதன் அடிப்படைக் காரணமும் இவைதான்.

 

ஆகவே உணவு என்பது அம் மண்ணின் காலநிலை, தட்ப வெட்பம், மண் மற்றும் அது சார்ந்த வாழ்க்கை முறையின் மூலம் தீர்மானிக்கப்படுவது. அதை அம் மண்ணுக்கு முற்றிலும் வேறான ஒரு மண்ணில் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கடத்துவது என்பது காலபோக்கில் சாத்தியமாகாமல் போய் வருடத்தில் ஒன்றிரண்டு நாட்களில் சாப்பிடும் உணவாகப் போய்விடும். உங்கள் கிளிமஞ்சாரோ ஏறச் செல்லும் நண்பி சோறும் கறியும் சாப்பிடுவது ஆச்சரியமான ஒரு விடயம் அல்ல. ஆனால் அவரது குழந்தையும் நாளை அல்ப்ஸ் மலையில் ஏறும் போது இதையே சாப்பிடும் நம்புவது பிழைத்துப் போகும் சந்தர்ப்பங்களே அதிகம்.

 

நெற்றிக்கண்ணனும் நரசிம்மியும் அன்றைய இரவில் வெடிப்பிற்கு முன்னதாக அனுபவித்த விடயங்களை முற்றுமுழுதான குறியீடுகளாக மட்டும் எடுத்துக்கொள்ளின், ரதி சொன்னதைப் போல, இருவரது மனதிலும் அநீதி சார்ந்த சிந்தனை பூதாகரமாக இருந்தது. பூதாகரமான அநீதியினை எதிர்கொள்வதற்கு அவர்கள் பூதாகரமான ஆயுதங்களை விரும்பினார்கள்--ஒன்று நெற்றிக் கண், மற்றையது நரசிம்ம அவதாரம். அவர்களது விருப்பம் வெறும் விருப்பமாக மட்டும், சாத்தியப்படமுடியாதாகவே அவர்களிற்குள்ளாவும் நப்பப்பட்டு இருந்தபோதிலும், மில்லர் வெடித்த கணத்தில், அவர்களே அவர்களை நம்பமுடியாதபடி, தங்கள் ஆயுதங்கள் பிரயோகிக்கப்பட்டதன் விளைவினை உணரும் சந்தர்ப்பம் அவ்விருவரிற்கும் கிடைத்தது. அதனால், என்னையும் உங்களையும் போலன்றி, மில்லரின் வெடிப்பில் அவர்களின் பங்கு அவர்களிற்குள் மறக்கமுடியாப் பரிமாணத்தில் பதிவாகிப்போனது.

 

 

அருமையாக இருக்கின்றது இது. நான் முதல் தரம் வாசிக்கும் போது, இதனை இப் பரிமாணத்தில் அணுகவே இல்லை. இதனை வாசித்த பின் மீண்டும் அதனூடாக அணுகும் போது புதிய புரிதல்களும் வாசித்தல்களும் கிடைக்கின்றன.

 

தொடர்ந்து உரையாடுங்கள்.

Link to comment
Share on other sites

இங்கு முட்டைப் பொரியல் என்பது வெறுமனே ஒரு உணவாக உங்கள் கதையில் காட்டப்படவில்லை. அதை இருமுறை குறிப்பிட்டுள்ளீர்கள். ஒன்று, ஊரில் சிறுமி சாப்பிடும் போதும், இன்னொரு முறை அதே சிறுமி வளர்ந்து தாயாகி தன் குழந்தைக்கு ஊட்டும் போதும் என்று இரு தடவைகள். இவ்விரு தடவைகளிலும் இதனை தனித்தே எழுதாமல் 100 மார்க்ஸ் எடுக்கும் விடயத்துடனும் இணைத்துள்ளீர்கள்.  இதனை Visualize பண்ணிப் பார்க்கும் போது (ஒரு காட்சியாக மனசுக்குள் கதையை விரித்துக் கொள்ளும் போது), அக் காட்சி இரு தடவைகள் வருகின்றன. இரு காட்சிகளின் வேறுபாடு காலமும், தேசமும் மட்டுமே.

 

வெறுமனே நீங்கள் முட்டைப் பொரியலை மட்டும் இரு தடவைகள் எழுதியிருந்தால் அதற்கான அர்த்தம் உணவும் அது தொடர்பான கலாச்சார பின்னனியும் பற்றி மட்டும் பிரக்ஞை கொண்டு இருந்திருக்கும். ஆனால் இதனுடன் கணிதத்துக்கு 100 மார்க்ஸ் எடுக்கும் விடயமும் வருகின்றது. இரண்டையும் பொருத்திப் பார்க்கும் போது விளைவாக தமிழர் சமூகம் தன்னை மாற்றத்துக்குள்ளாக்காமல் அப்படியே உறைந்து கிடக்கின்றதாக எழுதுகின்றீர்களோ என்ற கேள்வி வருகின்றது.

...

 

இதனடிப்படையில் பார்க்கும் போது தான் உங்கள் கதையில் வரும் இரு மாறாத நிகழ்வுகளும் ஒருங்கு சேர்ந்து என் கேள்வியை உருவாக்கின்றது.

...

 

இவற்றுக்கும் மேலாக உணவு என்பதை கலாச்சார பின்னனியுடன் அணுகுவது தவறான வாதமாக எனக்கு படுகின்றது.

நானும் என் மனைவியும் இன்னும் புட்டும் மாம்பழமும் சாப்பிடுவதில் இன்புறுவது என்பதன் அடிப்படைக் காரணம் அது நாம் வளர்ந்த போது எமக்கு தரப்பட்ட ஆரம்ப கால உணவு என்பதால் தீராக் காதல் போன்று நாக்கின் அடியில் உறைந்து சுவையாக அது இருப்பதே ஆகும். அச் சுவையை தீர்மானித்தவை ஊரின் மண், ஊரின் கால நிலை, ஊரின் தட்ப வெட்பம், அது சார்ந்த தொழில் என்பனவாகும். "என்னதான் இருந்தாலும் ஊரில் சாப்பிட்ட புட்டும் மாம்பழமும் போல இங்கு வராது" என்று சலித்துக் கொளவதன் அடிப்படைக் காரணமும் இவைதான்.

 

ஆகவே உணவு என்பது அம் மண்ணின் காலநிலை, தட்ப வெட்பம், மண் மற்றும் அது சார்ந்த வாழ்க்கை முறையின் மூலம் தீர்மானிக்கப்படுவது. அதை அம் மண்ணுக்கு முற்றிலும் வேறான ஒரு மண்ணில் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கடத்துவது என்பது காலபோக்கில் சாத்தியமாகாமல் போய் வருடத்தில் ஒன்றிரண்டு நாட்களில் சாப்பிடும் உணவாகப் போய்விடும். உங்கள் கிளிமஞ்சாரோ ஏறச் செல்லும் நண்பி சோறும் கறியும் சாப்பிடுவது ஆச்சரியமான ஒரு விடயம் அல்ல. ஆனால் அவரது குழந்தையும் நாளை அல்ப்ஸ் மலையில் ஏறும் போது இதையே சாப்பிடும் நம்புவது பிழைத்துப் போகும் சந்தர்ப்பங்களே அதிகம்.

 

நன்றி சாத்திரி, சுவைப்பிரியன், சுமேரியர், புத்தன், தமிழினி, இணையவன், நந்தன் உங்கள் வரவிற்கும் கருத்திற்கும்.

 
நிழலி,
இந்தப் பின்னூட்டமும் நீண்டுவிட்டதால், நூறுமாக்ஸ் பற்றி இன்னுமொரு பின்னூட்டம் தேவைப்படுகிறது, இப்போதைக்கு, உங்கள் கேள்விக்காகச் சேர்த்து அணுகின்:
 
நூறுமாக்சும் முட்டைப்பொரியலும் இரண்டு தடவை கதையில் வந்தமை, நேர அச்சின் தொடர்ச்சியில் அதே இரு மனிதர்களைத் தொடர்கிறோம் என்பதைக் காட்டவே. ஆனால், இது மாற்றமின்மையினையோ தேங்குநிலையினையோ குறிக்கவில்லை. தந்தை ஆறாம் வகுப்புப் படிக்கும் போது 80 புள்ளிகளை வாங்கியதால் நூறு மாக்ஸ் பற்றிய பிரச்சினை எழுந்தது. இன்று மகன் 95 புள்ளிகளை வாங்கி நூறு மாக்ஸ் உபதேசம் எழுகிறது. இந்தப் புள்றி வித்தியாசம் எதேச்சையாய் அமைந்ததில்லை. நூறு மாக்ஸ் ஏன் அவசியம் என்பது அன்று போல் வெறுமனே எடுத்தியம்பாமல் இன்று grit உள்நுழைக்கப்படுகிறது. முட்டைபொரியலின் வித்தியாசங்கள் தொக்கிநின்று பேசப்படுகின்றன. இவையில்லாமல் இந்த மனிதர்களிடம் மில்லரின் கதையினைக் காவும்படி எதிர்பாhக்க முடியாது.  'நாங்கள் எமது பெற்றோர்கள் ஆகிவிடுகிறோம்' என்பது கலாச்சாரங்களைக் கடந்து குழந்தைகள் உணர்ந்து கொண்டிருக்கும் ஒரு விடயம். ஆனால், அந்தக்கூற்று  மேலோட்டமாகப் பார்க்கப்படமுடியாதது. ஒவ்வொரு குழந்தையினதும் பெற்றோராய் மாறுதலில் ஏகப்பட்ட மாற்றங்கள் இருந்தே தீரும். எனவே தான் எடுத்த எடுப்பில் தேக்கநிலை, மலட்டுத்தன்மை, மாறிலிகள் என்ற கருத்தை நிராகரிக்கவேண்டியேற்படுகிறது.
 
ஊரிற்குப் போய்வந்த எனது பதிவில் குறிப்பிடப்பட்டது போன்று, ஞாபகவீதி உள்ளுரத் தான் இருக்கிறது. இது தான் கடத்தப்படுகிறது. எடுத்த எடுப்பில் இனந்தெரியா அளவிற்கு இந்த மருவல்கள் ஒவ்வொரு  iterationனிலும் மாறும் என்றபோதும், அறுத்துப் பார்த்தால் ஆணிவேரைக் காணமுடியும். உணவு கலாச்சாரத்தைக் காவும் இலத்திரனியல் chipபாக புலத்தின் ஒவ்வாhரு குழந்தைக்குள்ளும் இணைக்கப்படுகிறது. கலாச்சாரத்தைக் காவுவதில் உணவின் பங்கு அப்பட்டமானது.
 
தட்பவெட்பத்துடன் மட்டும் உணவு அடையாளப்படுத்தப்படுவதில்லை. ஒவ்வொரு கலாச்சாரமும் உடலின் தேவைகள் சார்ந்த ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கிய பதார்த்தங்களை உணவில் தேடிச் சேர்த்துக்கொண்டார்கள் என்பதும், காலநிலை சார்ந்து தேவைகள் மாறுபடும் என்பதும் உண்மைதான் என்றபோதும் அது உணவின் ஒரு அங்கம் மட்டுமே. கிடைத்ததை உண்டது தான் உணவுப் பழக்கத்தின் அடிப்படை. என்ன கிடைத்தது என்பது எங்கே இருந்தார்கள் என்ற தரவை உள்ளடக்கியே வெளிப்படும். எங்கே இருந்தார்க்ள் என்பதில் எப்படி வாழ்ந்தார்கள் என்ற செய்தி பொதிந்திருக்கும். 'கடத்தப்படும் பிரக்ஞை' என்பதை ஆன்மீகத்திற்கு அப்பால் ஆராய்வதற்கு உதவும். 
 
புட்டும் மாம்பழமும் கிடைத்தது இருந்த நிலத்தைப் பொறுத்ததாய் இருந்திருக்கலாம். ஆனால் அதை உண்டதும் அனுபவம் சிறைப்பட்டு விடும். புட்டும் மாம்பழமும் உண்ணும் அனுபவத்தை புட்டையும் மாம்பழத்தையும் அகற்றி உண்டவரால் எடுத்துச் செல்லமுடியும். 'கடந்த காலங்கள் தான் ஒருவனை உருவாக்கின' என்பதில் அனுபவங்கள் அடிப்படை. புட்டையும் மாம்பழத்தையும் உண்டவரைத் தூக்கி அலாஸ்க்காவில் வைத்தாலும் அனுபவம் கூடவே தான் செல்லும். அவர் தனது குழந்தைக்கு, கிடைத்தவரையில் அதைக்கொடுப்பதன் நோக்கம், தனது அனுபவத்தைக் கடத்துவதற்கான மொழியின் தேடலில் பிறக்கிறது. தன்னைத் தனது குழந்தைக்கு எடுத்தியம்புவதற்குத் தனது அனுபவத்தைப் பேசும் தேவை எழுகிறது. இதில் உணவு பெரும்பங்காற்றுகிறது.
 
மேலும் கனடாவில் நடு வின்ரறில் சறத்தோடு வீட்டிற்குள் இருக்க முடியும். சூரியன் தந்ததா தொழில்நுட்பம் தந்ததா என்பது இங்கு உதிரித் தகவல். குளிர் நாடு என்பதால் 24 மணிநேரமும் குளிருக்குள் முடியெல்லாம் பனியாகி எவரும் திரிவதில்லை. ஊரில் குளிரூட்டிகளும் சர்வசாதாரணமாகவே வந்துகொண்டிருக்கின்றன. உலகமயமாக்கலில் மனிதன் ஒவ்வொரு இஞ்சி நிலத்தையும் தான் வாழத் தகுதியானதாய் மாற்றுவது சார்ந்து முனைந்து கொண்டிருக்கிறான். உலகு துண்டாடிக்கிடந்து காலங்கள் பல. தோல் கண் தலைமுடி நிறம், உயரம் பருமன் போன்ற விடயங்கள் தாண்டி அடையாளம் இன்று அதிகப்படி உளவியல் பரப்பில் தான் தொங்குகிறது. ஒரு தெருவில் வசிக்கும் பத்து நாட்டுப் பிரசைகள் தங்களைத் தங்கள் குழந்தைகளிற்குக் கடத்திக்கொண்டு தான் இருக்pறார்கள். இக்கடத்தல்கள் அனைத்தும் நேரடி அனுபவங்களை மட்டும் உள்ளடக்கவில்லை. ஆறாம் ஏழாம் தலைமுறையினரும் முன்னையோர் கதைகளைக் காவித் தான் வாழ்கிறார்கள். கனடாவில் எந்நாட்டு உணவும் அதன் அடிப்படை நிலையில் இல்லை. ஞாபகவீதி போன்று உணவுகளும் மருவிக்கொண்டு தான் இருக்கின்றன. தேவையானவை சேர்க்கப்பட்டும் தவிர்க்கப்படவேண்டியன தவிர்க்கப்பட்டும் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால். அறுத்துப் பார்த்தால் ஆணிவேரைக் காணக்கூடிய வகையில் தான் தொடர்கின்றன.
 
கிளிமஞ்சாரோவிற்கு பிரெஞ்சுக்காதலனனுடன் சென்ற சோறு விரும்பியின் குழந்தை நாளை இரு பாரம்பரியத்ததாய்ப் பிறப்பின் கூட, அதற்குள் யாழ்ப்பாணத்தின் வேர் உணவுவழியாகத் தொடரும். இனம் புரியா ஈர்ப்பு சில சுவைகளை நோக்கி அதை ஈர்க்கும். கதைகளை விரும்பும். தொடர்ச்சி தொற்றிக் கொள்ளும்.
Link to comment
Share on other sites

நிழலி எழுப்பிய 'நூறுமாக்ஸ்' பிரச்சினை சார்ந்து இப்பின்னூட்டம்:
 
'சும்மாயிருப்பதே சுகம்' என்பது என்ன ஆழத்தில் எவ்வாறு எதற்காகச் சொல்லப்பட்டது என்ற ஆராய்ச்சிகள் எல்லாத்தையும் விட்டுவிட்டு ஒன்றை ஒத்துக்கொள்ளலாம். மேற்படி கூற்று அதன் மேலோட்டமான அர்த்தத்தில் இனம்புரியா மகிழ்ச்சியினை ஏகப்பட்டோரிற்குள் உருவாக்கத் தவறுவதில்லை. சதா கழைப்பினை உணரும் வாழ்வு பலரிற்கு வாய்த்துவிடுவதால், அந்தக் கூற்றிற்கு ஒரு மயக்குதிறன் இருக்கிறது. அந்தவகையில் வாழ்வில் கழைப்பு அதிகமதிகம் உணரப்படுகிறது என்பதை முதலில் ஏற்றுப் பதிவுசெய்து கொண்டு, நூறு மாக்ஸ் விடயத்திற்குள் வருகிறேன்.
 
நூறுமாக்ஸ் என்பது போட்டிதான். ஆனால், அது அடுத்தவருடனான போட்டி மட்டுமல்ல. தன்னுடனான தனது போட்டியும் கூட. சில மனிதர்கள் இருக்கிறார்கள், சதா சர்வகாலமும் படித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களது படிப்பு எதையும் வெளியீடு செய்வதாய் இருக்காது—அந்தவகையில் படிப்பு என்ற உள்ளீடும் சந்தேகத்திற்கிடமாகிறது. படிப்பது இலகு என்று படித்துக் கொண்டிருப்பார்கள். துறை துறையாய் மாறி மாறிப் பரிட்சை எழுதிப் பட்டங்கள் பெறுவார்கள். தாய்தந்தையினைத் தமது படிப்பிற்காய் காசு செலவழிக்கும் வகை கூறி, தாய் தந்தை இருக்கும் வீட்டை அடைமானம் வைத்துப் பணங்கொடுக்க, எந்த உருப்படியான வெளியீடும் தராத படிப்புக்களை சோதனைகள் வடிவில் எடுத்துக்கொண்டிருப்பார்கள். 
 
இப்போதெல்லாம் அநேகம் பார்க்கக் கூடிய ஒன்று, பொறியியலில் இளநிலை கற்பார்கள், சில மாதம் பொறியியல் வேலை செய்ய முனைவார்கள், பின்னர் விட்டுவிட்டு MBA செய்வார்கள், பின் CFA இற்குத் தாவுவார்கள். பின்னர் அனைத்தையும் றெசுமியில் போட்டுவிட்டு, சம்பந்தமே இல்லாத வேலைக்கு விண்ணப்பித்து நேர்முகத் தேர்வில் வந்து முழி பிதுங்கி வியர்த்து வெளியேறுவார்கள். படிப்பில் உத்தியோகத்தில் மட்டுமல்ல, காதலில் குடும்பத்தில் என்று பல பரிமாணங்களில் பலர் தப்பித்துக்கொள்வதை வாழ்வாக வாழ்வதைப் பார்க்க முடிகிறது. இதன் தார்ப்பரியம் என்ன?
 
அப்பா அம்மா இருக்கும் வரை, அடைமானம் வைப்பதற்கு அவர்களிடம் வீடு இருக்கும் வரை, தாவுகின்ற பரிட்சைகள், அதன் பிறகு என்னவாகும்?
 
sense of entitlement என்பது பல மட்டங்களில் எதிர்மறையாகவே தொழிற்படுகிறது. நீ விரும்பிய எதுவாயும் நீ வரலாம் என்று குழந்தைகளிற்குச் சொல்லி வழர்க்கும் பெற்றோர், கதையினைப் பாதியில் விடுவதால் ஏற்படும் விபரீதம் இது. அது மட்டுமல்ல, திறமை இருந்தால் மட்டும் உழைப்பு அவசியமில்லை என்றாகிவிடாது. இளையறாஜா தொட்டு மைக்கல் ஜாக்சன் ஊடாக, உலகில் திறமைகள் எல்லாம் உழைப்புடன் கூடியே வெளித்தெரிகின்றன. வைரம் என்பது பட்டைதீட்டப்பட்டபின்பே கவனம் பெறும். தவம் என்ற கீழைத்தேய சிந்தனையில் grit உள்ளடக்கம்.
 
போட்டி உலகில் தவிhக்க முடியாதது. அது தாவரங்கள்,சிங்கம், புலி தொட்டு மனிதன் வரை நாளாந்தம் வலுப்பெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. இது காலதிகாலமாக இருந்து தான் வருகிறது. மனிதன் யானையினைப் பார்த்துப் பெருமூச்சுவிடமுடியாது. ஆனால், ஒவ்வொரு மனிதனிற்குள்ளும் திறக்கப்படாத றங்குப்பெட்டிகள் இருக்கத்தான் செய்கின்றன. நூறுமாக்ஸ் என்பது முதற்படி தனது கருவிகளைத் தானறிவது. கழைப்பு என்பது ஓட்டத்தால் மட்டும் பிறப்பதல்ல. பயத்தால், மன உழைச்சலால், புரியாமையால், கோபத்தால் இன்னும் எத்தனையோ எதிர்மறை உணர்வுகளால் தான் கழைப்பு அதிகம் பிறக்கிறது. கழைப்பை எதிர்கொள்வது என்பது, எந்தப் பிரச்சினையினையும் போல, புரிதலில் இருந்து ஆரம்பிக்கப்படவேண்டியது. 'சும்மாயிருப்பதே சுகம்' என்பது அதன் மேலோட்டமான அர்த்தத்தில் தருகின்ற மகிழ்வு நிலைக்க முடியாதது. வாழ்வு என்பது நகர்வது. எந்த அச்சில் எந்தப் பரிமாணத்தில் என்பதை விட்டுவிடுவோம், நகர்தல் என்பது இருக்கும் வரை தான் அதை வாழ்தல் எனமுடியும்.
 
மேற்கிற்கும் கிழக்கிற்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் எவ்வாறு பிரச்சினைகள் அணுகப்படுகின்றன, கண்டறிதல்கள் எவ்வாறு ஆவணப்படுத்தப்படுகின்றன என்பதில் தான் இருக்கிறது. கிழக்கில் நிகழாத கண்டறிதல்களா என்ன. ஆனால். துரதிஸ்ரவசமாக, கிழக்குக் கண்டறிந்த பல விடயங்கள் மேற்கால் கிரமமாக விளக்கப்படும் போது தான் பலரிற்குச் சூட்சுமம் புரிகிறது. Grit என்பது யாழ்ப்பாணத்தானுடன் காலாதிகாலமாக இருந்தது. ஆனால், அதன் அனைத்துப் பரிமாணங்களும் பேசப்படுவதில்லை என்பதால் அது அநாகரிகமாக நிராகரிக்கப்படுகிறது. வளங்கள் முதலியன சார்ந்து முயற்சி மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், கீழத்தேய சிந்தனையில், தவம் முதலான பல விடயங்கள் ஒரு மனிதனிற்கு focus மற்றும் உழைப்பு சார்ந்த சாத்தியங்களைக் கூறித்தான் வந்துள்ளன.
 
ஒரு காலத்தில் இந்தியரும் சீனரும் தான் கோடி மக்களுடன் வாழ்வதற்காய்ப் போட்டிபோவேண்டியிருந்தது. இன்று உலகே ஏழு பில்லியன் மக்களுடன் ஒவ்வொரு விடயத்திற்கும் போட்டி போடத் தான் வேண்டி ஏற்படுகிறது. படிப்பு மட்டுமல்ல, வாழ்வு என்பது வாழ்வதற்கான முயல்தலாக, முடிவிடங்கள் மட்டுமன்றிப் பயணங்களும் அனுபவிக்கப்படவேண்டியது தவிர்க்கமுடியாததாகிறது.
 
B- எடுத்த பிள்ளையினை ஏன் திட்டுகிறார்கள் என்பது நேர்மையான கோபமாகத் தான் இருக்pறது. அன்பின் வெளிப்பாடாகத் தான் இருக்கிறது. ஆனால், இங்கு பி-மைனஸ் மட்டுமல்ல பிரச்சினை பல பரிமாணங்களில் பிரச்சினை இருக்கிறது:
 
ஓன்று, நீ முடிஞ்சவரை படிடா கண்ணா அப்பா பாத்துக் கொள்ளுறன் என்று சொல்வதற்கு ஒவ்வொரு தந்தையும் நிரந்தரத் தொழிலதிபர்கள் இல்லை. தலைமுறைகளிற்குச் சேர்த்துவைக்கப்பட்ட சொத்துக்களை ஒரு மனிதன் இழப்பது நடந்துகொண்டிருக்கிறது. தந்தை சூப்பர் ஸ்ரார் என்பதாலோ அல்லது பெரும் புறடியூசர் என்பதாலோ மகனிற்கு நடிப்பு சொறுபோடும் என்று விட முடியாது. அனிமேசன் நடிகனைத் தேவையின்றி ஆக்கலாம். தொழில்நுட்பம் தயாரிப்பாளரிற்குப் போதாமையினை உணர்த்தலாம். பரம்பரைத் தொழில் என்பதே டைனசோராகிக் கொண்டிருக்கிறது. நிலையின்மை மறுக்கப்படமுடியாது. 
 
ஆனால், எல்லாம் மாயை என்று அமர்ந்துவிட முடியாது. குண்டலினி சக்தியினைக் கிழப்பிப் பாயில் பறந்துசெல்லாம் என்று சொல்வது கேட்பதற்கு இனிக்கலாம், ஆனால் பி-மைனஸ் தான் நமக்குச் சாத்தியப்படுகிறது என்றால் குண்டலினி இருக்கோ இல்லையோ என்ற விவாதத்திற்கப்பால் இருந்தால் அதை அடையும் உழைப்பு நம்மிடம் இல்லை என்பது உறைக்கத் தான் செய்யும். நூறு மாக்ஸ் என்பதைத் தெரிந்தோ தெரியாதோ அனைத்துப் பெற்றோரும் குறியீடாகத் தான் பாவித்து வருகிறார்கள். போதாமைகள் தருகின்ற பயத்திலிருந்து எழுகின்ற கண்டுபிடிப்பிற்கான தேவையினைத் தான் இது குறியீடு செய்கிறது. அது குவியத்தையும், உழைப்பையும், தேடலினையும் பேசுவது.
 
நான்கு துறைகளில் எத்தனையோ பட்டங்களை அடுக்கி வைத்துக் கொண்டு உருப்படியா எந்தத் துறையிலும் வேலை செய்யமுடியாத மனிதன் அவனிற்கு மட்டுமல்ல, அவன் பெற்றோரிற்கு மட்டுமல்ல சமூகத்திற்கே ஒரு குயில் முட்டைதான். அந்த முட்டை கூட்டில் இருந்து உருட்டித் தள்ளப்படுவதற்கான சாத்தியம் நிஜமானது. எந்தப் பெற்றோரும் தமது குழந்தை நிலைக்க வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள் என்பதனால் போட்டி புதினமானது அல்ல. குழந்தையின் வெற்றிக்காய் உந்தும் பெற்றோரின் அனைத்து வெளிப்படைக் காரணங்களிற்கும் அப்பால், குழந்தை என்பது நாம் ஏற்கிறோமோ இல்லையோ பெற்றோர் தம்மை தம்மைக் கடந்து நிலைநாட்டி விட எடுக்கின்ற ஒரு முனைப்பும் கூடவே. தமது அனுபவங்கள் சார்ந்து, தம்மை தக்கனவாக்க நினைப்பது தான் போட்டி. வாழ ஆசைப்படின் அது அவசியம் தான். தேடலும் உழைப்பும் வெற்றிகளைக் குவிப்பதற்காக மட்டுமல்ல. உள்ளதை அனுபவிப்பதற்கும்  சரியான மனநிலை அவசியம்.
 
நாசமாப்போன படிப்பு என்று திட்டியபடியோ, பக்கத்துவீட்டுக் காரன் படிக்கிறானே என்பதற்காகவோ, பெருமூச்சுவிடும் பெற்றோரின் நச்சரிப்பிற்காகவோ படித்தால் நூறுமாக்ஸ் பிரச்சினைதான். ஏனெனில் முதலில் அது கைவராது. முதலில் படிப்பு என்ற சொல்லின் பொருளைப் புரிந்து கொள்ளவேண்டும்.
 
புலத்தில் பல பெற்றோர்கள், பல்கலைக்கழகம் செல்லமுடியாத தமது கனவினைத் தமது குழந்தைகள் வாயிலாக அடைந்து விட முனையும் நிலையிருக்கிறது. இந்தப் பின்னணியில் பல பிரச்சினைகள் எழுகின்றன. ஆனால், அருவருப்பு நமக்குள் பிற்கின்ற தருணங்களில் எல்லாம் நாம் ஒன்றை மனதிருத்த வேண்டும், அருவருப்பிற்குள் எப்போதும் அறியாமை இருந்தே தீரும்.
 
நூறுமாக்ஸ் என்பதை நாம் ஒரு விதத்தில் மட்டும் புரிந்து கொள்ள முடியாது. தனக்கு வழிநடத்தத் தெரியாத பெற்றோர் ரியூசனிற்குத் தான் அனுப்ப முடியும். ஆனால், ரியூசன் குடுப்பவர்கள் தக்கவர்களா என்பது அடுத்த பிரச்சினையாக நீட்டவே செய்கிறது. இம்முனையில் பல பிரச்சினைகள் உள்ளதை மறுக்கவில்லை. ஆனால், பிரச்சினைகளைக் கண்டு அருவருத்து, அதனால் நூறுமாக்ஸ் என்ற குறியீட்டை நாம் நிராகரித்து விட முடியாது. அது மிக முக்கியமானது.
 
இது வெறும் முகவுரை தான். இம்முனையில் ஒவ்வொன்றாய்ப்பேசின் நாட்கணக்கில் எழுதிக்கொண்டிருக்க நேரும். இது சொல்லி அறியப்பட்டால் கடிவாளம் இடப்பட்டதாகவே பார்க்கப்படும். எனவே அவரவர் தங்களிற்கு ஏற்ற முறையில் தேடித் தெரிந்துகொள்வது தான் சரியாய் இருக்கும் என்றே நினைக்கிறேன்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவனின் கதையில் சொல்லப்பட்ட விடயங்கள் எனக்கு மிகவும் பரிச்சயமானவை. மில்லர் லொறியோடு போய் வெடித்தபோது வந்த வெளிச்சத்தை ஒரு மைல் தொலைவில் உள்ள வீட்டில் இருந்து பார்த்ததும், இரவிரவாக வந்து விழுந்த ஆட்டிலறி, ஷெல் மழைகளுக்கும், ஹெலியில் இருந்து 50 கலிபர் அடிகளுக்குள் உறங்கிப் போய் அடுத்தநாள் ஆட்டிலறி அடியோடு திடுக்கிட்டு முழிப்பு வந்ததும், ஊரைவிட்டு அகதியாக தென்மராட்சி நோக்கி உப்புகழிக்குள்ளால் சைக்கிளில் போனதும், எமது ஊரையும் வீட்டையும் பார்க்கவேண்டும் என்ற உந்துதலால் வீட்டுக்காரருக்குக் சொல்லாமல் சைக்கிளில் மந்துவிலின் பின்பக்கமுள்ள சிறு பற்றைக்காடுகளுக்குள்ளால் அந்தணத்திடல் பகுதிக்கு வந்து பயத்துடனும் ஏக்கத்துடனும் ஊரின் திசையைப் பார்த்துத் திரும்புவதும் ஞாபகவீதியில் வந்து போயிற்று.

100 மார்க்ஸ் எடுக்கவேண்டும் என்பது cutoutக்கு மேலாக எடுக்காவிட்டால் எதிர்காலமே இல்லையென்ற இலங்கைத் தரப்படுத்துதல் நிலையால் தமிழர்களுக்குள் ஊடுருவிய விடயம். எஞ்சினியர், டொக்டர், அக்கவுண்டண்ட் ஆகாவிட்டால் மேற்படிப்பு என்று எதுவுமே அந்தக்காலத்தில் இருக்கவில்லை. தற்போது இவற்றையும் தாண்டிப் பல்வேறு விடயங்களைப் படிக்கும் நிலையில் மேற்குலக நாடுகளில் இருந்தாலும் தமிழர்களிடம் விதைக்கப்பட்டது நன்றாகவே வளர்ந்துவிட்டது. இயல்பாகவே படிப்புத்தான் ஒரே மூலதனம் என்று கருதும் தமிழர்கள் தமது பிள்ளைகளை எல்லாவற்றிலும் முதலாவதாக வரவேண்டும் என்று விரும்புவதும் அதற்காகத் தமது உழைப்பின் பெரும்பகுதியைச் செலவழிப்பதும் நாள்தோறும் கண்கூடாகப் பார்க்கும் விடயம்தான்.

பதின்ம வயதில் புலம்பெயர்ந்து வந்து திக்குத் திசை தெரியாமல் திணறிய இடங்களில் முயன்றால் முடியாது எதுவுமில்லை என்று காட்டிய தலைவர் பிரபாகரனும் அவர் வழிவந்த புலிகளும் என்னாலும் எதையும் செய்யமுடியும் என்ற மன வைராக்கியத்தையும் ஓர்மத்தையும் தந்ததால்தான் எவருக்கும் குனியாமல் நிமிர்ந்து நிற்கும் மனநிலையைத் தந்தது. அதையே எமது சந்ததிகளும் பின்பற்றவேண்டும் என்று ஒவ்வொரு தமிழனும் விரும்பத்தான் செய்வான்.

நான் மச்சம் மாமிசத்தைச் சாப்பிடாமல் ஊரில் வளர்ந்ததால் முட்டைப் பொரியலைப் பற்றி சொல்லத் தெரியவில்லை!

Link to comment
Share on other sites

நன்றி இசைக்கலைஞன், ஈசன் மற்றும் கிருபன்.
 
கிருபன் உங்கள் அனுபவத்திற்கு மிக்க நன்றி. எங்கள் வீடு தென்மராட்சியில் இருந்தும் கூட, இந்தத் தாக்குதலில் கண்ணாடிகள் நொருங்கும் அளவிற்கு வீடு அதிர்ந்தது இன்றுவரை ஞாபகத்தில் இருக்கிறது. 
 
ஆன்மீகம், தத்துவம் போன்றவற்றில் நான் என்பதன் எல்லை எதுவரை என்று பொதுவாக ஒரு விடயம் பேசப்படும். ஒரு துண்டு பாண் வெளியில் இருக்கும் போது அது எனக்குப் புறம்பானது, அதை எடுத்து நான் உண்டதும் அது நானாகிவிடுகிறது--பாண் என்ற சக்தி நான் என்பதற்குள் ஒன்றித்துப் போகிறது. மில்லர் வெடித்தபோது எழுந்த அதிர்வு, அந்த அதிர்வின் வீச்செல்லைக்குள் இருந்த எங்கள் எல்லோரிற்குள்ளும் பரவிக் கொண்டது. மில்லர் என்ற சக்தி எங்கள் எல்லோரிற்குள்ளும் அந்த அதிர்வால் ஒரு பாகமாகியது. இது மில்லரிற்கு மட்டுமல்ல, அந்த மண்ணும் அதில் நடந்த அனைத்தும் எங்களிற்குள் அங்கமாகவே இருக்கிறது. ஊரில் இருந்தவர்கள் உலகெலாம் பரவி யாழ்களம் போன்ற வேர்ச்சுவல் திண்ணையில் ஒருவர் சொல்லவதை மற்றையவர் அப்படியே புரிந்துகொள்ளும்வகை இருப்பது இதனால் தான்.
 
மேற்படி சிந்தனையில் தான் கதை பிறந்தது. உங்கள் பின்னூட்டம் அதை உறுதிப்படுத்தியுள்ளது. நன்றி.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.